லகம் முழுதும் இல்லாது ஒழிக்கப்பட்ட இளம்பிள்ளை வாத வைரஸ் வகை 2 கிருமி (poliomyelitis  2 vaccine-virus) சமீபத்தில் தனியார் மருந்து நிறுவனம் ஒன்றின் மருந்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உத்திரப்பிரதேச மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த பயோமெட் (Bio-Med Pvt Ltd) எனும் நிறுவனம் தயாரித்த போலியோ மருந்தில் இந்த கிருமி இருந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் மருந்து தரக்கட்டுப்பாட்டு வழிமுறைகளின் மோசமான நிலையை இது வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.

இளம்பிள்ளை வாத நோயை முற்றிலுமாக ஒழிக்க ஆண்டுதோறும் அரசின் சார்பில் விலையில்லா போலியோ மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக இந்நிறுவனம் தடுப்பு மருந்துகளை தயாரித்து கொடுத்தது. உலக அளவில் போலியோ வைரஸ் P2 கிருமி ஏற்கனவே ஒழிக்கப்பட்ட நிலையில் அந்நிறுவனம் தயாரித்த மருந்தில் அக்கிருமி இருந்தது தெரிய வந்தது.

படிக்க :
போலியோ மருந்து கலப்பட விவகாரம் : தமிழகத்துக்கு என்ன ஆபத்து ?
ஐந்து வயதிற்குள் இறந்த குழந்தைகள் 2017-ம் ஆண்டில் 54 இலட்சம் !

உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ஷமிலா சர்மா, “இந்திய அரசின் போலியோ நோய்த்தடுப்பு பரந்த அளவில் இருப்பதால் குழந்தைகளுக்கு இம்மருந்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறைந்தபட்சமானதுதான்” என்று கூறியுள்ளார்.

பயோமெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் இம்மாத (அக்டோபர்) தொடக்கத்தில் கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுருந்தன. தொடர்ச்சியான விசாரணைக்கு பின்னர் அந்நிறுவனம் போலியோ வகை 2 தடுப்பு வைரஸ் கொண்ட மருந்துகளை சுமார் 1,50,000 -க்கும் அதிகமான புட்டிகள் தயாரித்து அனுப்பியிருந்தது தெரிய வந்தது.
வழக்கொழிந்த தடுப்பு மருந்துகளை இன்னும் எதற்கு தயாரித்தது என்று விசாரிக்கப்பட்டதாகவும், விசாரணைக்குப் பிறகு அந்நிறுவனம் தயாரித்த மருந்துகளில் ஒருப்பகுதி திரும்ப பெறப்பட்டதாகவும் டெல்லியை சேர்ந்த சுகாதார அதிகாரிகள் கூறினார்கள்.

நான்கு ஆண்டுகள் போலியோ தாக்குதல் இல்லை என்று உறுதி செய்த பிறகு 2014-ம் ஆண்டில் இந்தியாவை போலியோ அற்ற நாடு என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இந்திய அரசும் போலியோ வைரஸ் P2-க்கான தடுப்பு மருந்துகளை தயாரிக்கக்கூடாது என கடந்த 2016-ம் ஆண்டில் உத்தரவிட்டிருந்தது.

மருந்துகளையும் தடுப்பூசிகளையும் உலக சந்தைக்காக தயாரிக்க ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இருக்கும் இந்தியாவில்தான் மருந்து தயாரிப்பதற்கான தரக்கட்டுப்பாடுகள் என்பது மிகவும் மோசமாக உள்ளது. சமீப காலமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் இந்திய மருந்து தொழிற்சாலைகளின் தவறான உற்பத்தி பழக்கவழக்கங்கள் காரணமாக எச்சரிக்கைகளையும் சில நேரங்களில் மருந்துகளுக்கு தடையும் போடுகின்றன.

“நம்மிடம் நல்ல தரமான கட்டுப்பாட்டு வழிமுறைகள் இல்லை” என்று புதுடெல்லியை சேர்ந்த அப்சர்வர் ஆய்வு அறக்கட்டளையின்(Observer Research Foundation) சுகாதார ஆராய்ச்சியாளர் ஓம்மன் குரியன் கூறுயுள்ளார். மேலும் கட்டுப்பாட்டு வழிமுறைகளை நடைமுறைப்படுத்தும் அளவிற்கான கட்டமைப்பும் இந்தியாவில் இல்லை என்றும் கூறினார்.

இது தொடர்பான கேள்விகளுக்கும் பயோமெட் நிறுவனமும் மைய மருந்து தரக்கட்டுப்பாடு வாரியமும் எந்த பதிலும் சொல்லவில்லை. மேலும் ஏற்கனவே பயோமெட் நிறுவனம் தயாரித்த டைபாய்டு நோய்க்கான மருந்து தயாரிப்பிலும் தரக்கட்டுப்பாடு வழிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்று இதே வாரியம் 2018, மார்ச் 14-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இளம்பிள்ளை வாத நோய் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை தாக்கி உறுப்புகளை சிதைப்பதன் மூலம் அவர்களை ஊனமாக்குகிறது. சில சமயங்களில் சுவாச தசைகளை பாதித்து மூச்சு விட முடியாமல் மரணமடையவும் வாய்ப்புண்டு. இந்த நோயை ஏற்படுத்தும் மூன்று வகை கிருமிகளில் (P1,P2,P3) P2 கிருமி முற்றிலுமாக உலக அளவில் 1999-ம் ஆண்டு வாக்கில் ஒழிக்கப்பட்டுவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

உலக அளவில் தற்போது போலியோ நோய்க்கு தயாரிக்கப்படும் மருந்துகளில் P1 மற்றும் P3 என்ற இருவகை கிருமி மட்டுமே இருக்கும். ஏனெனில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே இன்னமும் P1 மற்றும் P3 கிருமிகள் உள்ளன.

எனவே இவ்விரு கிருமிகளுக்கு மட்டுமே மருந்து தயாரித்தால் போதுமானது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் தான் பயோமெட் நிறுவனம் தயாரித்த தடுப்பு மருந்தில் P2 வகை கிருமி இருந்தது. இவ்வகை தடுப்பு மருந்தினால் 2 இலட்சத்தில் ஒருவர் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

எனவே அது ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்பது போல உலக சுகாதார நிறுவனமும், ஊடகங்களும் கூறுகின்றன. ஆனால் வழக்கொழிந்த அந்த தடுப்பு மருந்தினை அந்நிறுவனம் ஏன் தயாரித்தது என்ற கேள்விக்கும், அதை கண்காணிக்க வேண்டிய இந்த அரசு தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் ஏன் அதை கண்டுபிடிக்கவில்லை என்ற கேள்வி பதிலளிக்கப்படாமலேயே விடப்பட்டுள்ளது.

ஏனெனில் இங்கு மனிதர்களின் உயிரைவிட இலாபம் மதிப்புமிக்கது.

மேலும் :
♦ WHO plays down risk to Indian children from tainted polio vaccine

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க