மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 45

மாக்சிம் கார்க்கி
போலீசாரின் தலைவன் வந்து கொண்டிருந்தான். உருண்டை முகமும், கனத்த சரீரமும், நெடிய உருவமும் கொண்டவனாக இருந்தான் அவன். அவன் அணிந்திருந்த தொப்பி காது பக்கமாக நீண்டு கொண்டிருந்தது. மீசையின் ஒருபுறம் மேல்நோக்கித் திருகி நின்றது, மறுமுனை கீழ்நோக்கி வளைந்திருந்தது. எனவே அவனது தோற்றமே என்னவோ கோணங்கித்தனமாகத் தோன்றியது. மேலும் அவனது உதட்டில் பிறந்த உயிரற்ற புன்னகையால் அவனது முகமே கோரமாகத் தெரிந்தது. அவனது இடது கையில் ஒரு வாள் இருந்தது. வலது கையால் வீசி விளாசிச் சைகை காட்டிக்கொண்டே அவன் வந்தான். அவனது வருகையின் கனத்த காலடியோசையை எல்லோரும் கேட்டனர். கூட்டம் அவனுக்கு வழிவிட்டு ஒதுங்கியது. அவர்களது முகங்களிலெல்லாம் ஒரு சோர்வு நிறைந்த அழுத்த உணர்ச்சி குடியேறியது. அவர்களது குரல்கள் எல்லாம் பூமிக்குள்ளே மூழகுவது போல் உள்வாங்கிச் செத்து மடிந்தன. தாய்க்கு தன் கண்கள் எரிந்து கனல்வதாகத் தோன்றியது. நெற்றித் தசை நடுங்கிச் சிலிர்த்தது. மீண்டும் அவளுக்கு அந்தக் கூட்டத்தாரோடு கலந்து கொள்ளும் ஆசை உந்தியெழுந்தது. அவள் முன்னே செல்வதற்காக முண்டிப் பார்த்தாள். பிறகு அசைவற்று ஸ்திரமாக நின்று போனாள்.

“இதென்ன இது?” என்று ரீபினின் முன்னால் வந்து நின்று கொண்டே கேட்டான் அந்தத் தலைவன். ரீபினை ஏற இறங்க நோக்கி அளந்து பார்த்தான். ”இவன் கைகளை ஏன் கட்டவில்லை? போலீஸ்! இவன் கையைக் கட்டுங்கள்!”

அவனது குரல் உச்ச ஸ்தாயியில் கணீரென்று ஒலித்தது. என்றாலும் அதில் உணர்ச்சியில்லை.

‘’கட்டித்தான் இருந்தோம். ஜனங்கள் அவிழ்த்துவிட்டு விட்டார்கள்” என்று ஒரு போலீஸ்காரன் பதில் சொன்னான்.

“என்ன ஜனங்களா? எந்த ஜனங்கள்?”

அந்தப் போலீஸ் தலைவன் தன்னைச் சுற்றிப் பிறை வடிவமாகச் சூழ்ந்து நிற்கும் ஜனக்கூட்டத்தைச் சுற்று முற்றும் பார்த்தான்.

“யார் இந்த ஜனங்கள்?” என்று அவனது உணர்ச்சியற்ற வெளிறிய குரலை உயர்த்தாமலும் தாழ்த்தாமலும் கேட்டான். அவன் வாளின் கைப்பிடியால் அந்த நீலக்கண் முஜீக்கைத் தொட்டான்.

“அந்த ஜனங்கள் யார்? நீயா சுமகோவ்? வேறு யார்? நீயா, மீஷன்?”

அவன் அவர்களில் ஒருவனது தாடியை வலது கையால் பற்றிப் பிடித்தான்.

“இங்கிருந்து உடனே கலைந்து போய்விடுங்கள்! அயோக்கியப் பயல்களா! இல்லையென்றால் உங்களுக்கு வேண்டுமட்டும் உதை கொடுத்தனுப்புவேன். நான் யாரென்பதைக் காட்டிவிடுவேன்!”

அவன் முகத்தில் கோபமோ பயமுறுத்தலோ காணப்படவில்லை. அவன் அமைதியாகப் பேசினான். தனது நெடிய கரங்களால் ஜனங்களை வழக்கம்போல் ஓங்கியறைந்தான். ஜனங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டும் தலையைக் குனிந்து கொண்டும், பின்வாங்கத் தொடங்கினர்.

”சரி, நீங்கள் இங்கு எதற்கு நிற்கிறீர்கள்?” என்று போலீசாரைப் பார்த்துச் சொன்னான். ”நான் சொல்கிறேன். கட்டுங்கள் அவனை!”

அவன் ஏதேதோ வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு ரீபினை நோக்கினான்.

“உன் கையைப் பின்னால் கட்டு” என்று உரத்த குரலில் சொன்னான் அவன்.

“இவர்கள் என் கையை கட்ட வேண்டியதில்லை” என்றான் ரீபின்; “நான் ஒன்றும் ஓடிப்போக நினைக்கவில்லை. சண்டை போடவும் விரும்பவில்லை . பின் ஏன் கைகளைக் கட்டுகிறீர்கள்?”

“என்ன சொன்னாய்” என்று கேட்டுக்கொண்டே அவனை நோக்கி அடியெடுத்து வைத்தான். அந்தப் போலீஸ் தலைவன்.

”ஏ . மிருகங்களா! நீங்கள் மக்களைச் சித்திரவதை செய்தது போதும்” என்று தன் குரலை உயர்த்திக்கொண்டு சொன்னான் ரீபின். “உங்களுக்குச் சாவுமணி அடிக்கும் நாள் நெருங்கிவிட்டது!

துடிதுடிக்கும் மீசையோடு ரீபினின் முகத்தையே வெறித்துப் பார்த்தான் அந்தத் தலைவன். பிறகு ஒரு அடி பின் வாங்கி வெறிபிடித்த குரலில் கத்தினான்.

”நாய்க்குப் பிறந்த பயலே! என்னடா சொன்னாய்!” திடீரென்று அவன் ரீபினின் முகத்தில் பளார் என்று ஓங்கி அறைந்தான்.

“உன்னுடைய முஷ்டியால், நீ உண்மையைக் கொன்றுவிட முடியாது!” என்று அவனை நோக்கி முன்னேறிக்கொண்டே சத்தமிட்டான் ரீபின். “அட்டுப் பிடித்த நாயே! என்னை அடிப்பதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது?”

“எனக்கு உரிமை கிடையாதா? கிடையாதா?” என்று ஊளையிட்டுக் கத்தினான் அந்தத் தலைவன்.

மீண்டும் அவன் ரீபினின் தலையைக் குறிபார்த்துத் தன் கையை ஓங்கினான். பின் குனிந்து கொடுத்ததால் அந்த அடி தவறிப் போய், அந்தப் போலீஸ் தலைவனே நிலை தவறித் தடுமாறிப் போய்விட்டான். கூட்டத்தில் யாரோ கனைத்தார்கள். மீண்டும் ரீபினின் ஆக்ரோஷமான குரல் ஓங்கி ஒலித்தது:

“ஏ, பிசாசே! என்னை அடிக்க மட்டும் துணியாதே. ஆமாம் சொல்லிவிட்டேன்.”

அந்தப் போலீஸ் தலைவன் சுற்றுமுற்றும் பார்த்தான். ஜனங்கள் ஒன்றுகூடி இருண்ட வளையமாக நெருக்கமாய் நின்று கொண்டிருந்தார்கள்.

“நிகீதா! ஏ நிக்தா!’’ என்று கத்தினான் அந்தத் தலைவன்.

கம்பளிக்கோட்டு அணிந்து குட்டையும் குண்டுமாயிருந்த ஒரு முஜிக் கூட்டத்திலிருந்து வெளிவந்தான். அவனது கலைந்துபோன பெரிய தலை கவிழ்ந்து குனிந்திருந்தது.

”நிகீதா!’ என்று தன் மீசையை நிதானமாகத் திருகிக்கொண்டே சொன்னான் அந்தப் போலீஸ் தலைவன். அவன் செவிட்டில், ஓங்கி ஒரு சரியான குத்து விடு.”

அந்த முஜீக் ரீபினின் முன்னால் வந்து நின்று தலையை நிமிர்த்தினான். உடனே ரீபின் அவன் முன் கடுகடுத்த வார்த்தைகளை வீசியபடி உரத்த உறுதி வாய்ந்த குரலில் சொன்னான்.

அயோக்கியப் பதர்களா? இவன் ஓர் அரசியல் குற்றவாளி என்பது உங்களுக்குத் தெரியாதா? இவன் யார்? அரசுக்கு எதிராக, மக்களைத் தூண்டி விடுபவன் என்பது உங்களுக்குத் தெரியாதா? இவனையா நீங்கள் காப்பாற்றப் போகிறீர்கள். அப்படியானால் நீங்களும் கலகக்காரர்கள்தானா? அப்படித்தானே!”

”ஜனங்களே பார்த்தீர்களா? இந்த மிருகங்கள் நம் கைகளைக் கொண்டே நம் தொண்டையை நெரிப்பதை நன்றாகப் பாருங்கள்! சிந்தித்துப் பாருங்கள்!”

அந்த முஜீக் தன் கையை மெதுவாக உயர்த்தி ரீபினின் தலையில் லேசாக ஒரு குத்துவிட்டான்.

”ஏ, நாய்க்குப் பிறந்த பயலே! இப்படித்தான் அடிக்கிறதோ?” என்று அவனை நோக்கி அழுது விடிந்தான் அந்தத் தலைவன்.

“ஏய், நிகீதா!” என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. ”கடவுளை மறந்து காரியம் செய்யாதே!”

”நான் சொல்கிறேன், அவனை அடி” என்று முஜீக்கின் பிடரியைப் பிடித்துத் தள்ளிக்கொண்டே கத்தினான் தலைவன். ஆனால் அந்த முஜீக்கோ தன் தலையைக் குனிந்தவாறே ஒருபுறமாக ஒதுங்கிச் சென்றான்.

‘’என்னால் முடிந்தவரை அடித்தாயிற்று” என்று முனகினான்.

“என்ன?”

”அந்தப் போலீஸ் தலைவனின் முகத்தில் ஒரு நடுக்கம் பரவிப் பாய்ந்தது. அவன் தரையை எட்டி உதைத்தான். ஏதேதோ திட்டிக்கொண்டு ரீபினை நோக்கிப் பாய்ந்தான். திடீரென ஓங்கியறையும் சத்தம் கேட்டது. பின் கிறுகிறுத்துச் சுழன்றான். தன் கையை உயர்த்தினான். ஆனால் இரண்டாவதாக விழுந்த அறை அவனைக் கீழே தள்ளி வீழ்த்தியது. அந்தப் போலீஸ் அதிகாரி கீழே விழுந்த ரீபினின் நெஞ்சிலும் விலாவிலும் தலையிலும் உதைத்தான், மிதித்தான்.

கூட்டத்தினரிடையே கோபக் குமுறல் முரமுரத்து வெளிப்பட்டது. ஜனங்கள் அந்த அதிகாரியை நோக்கிச் சூழ ஆரம்பித்தார்கள். ஆனால் அவனோ இதைக் கண்டுகொண்டான். பின்னால் துள்ளிப் பாய்ந்து, தன் வாளின் கைப்பிடியைப் பற்றிப் பிடித்துச் சுழற்றி வீசினான்:

“என்ன இது? கலவரம் உண்டாக்கவா பார்க்கிறீர்கள்? ஆ ஹா ஹா! அப்படியா சேதி?”

அவனது குரல் உடைந்து கரகரத்து நடுங்கியது. திராணியற்ற சிறு கூச்சலைத்தான் அவனால் வெளியிட முடிந்தது. திடீரென்று அவனது குரலோடு அவனது பலமும் பறந்தோடிப் போய்விட்டது. தலையைத் தோள் மீது தொங்கவிட்டபடி அவன் தடுமாறி நிலைகுலைந்து கால்களாலேயே வழியை உணர்ந்து உயிரற்ற கண்களால் வெறித்துப் பார்த்தவாறே பின்வாங்கினான்.

”ரொம்ப நல்லது” என்று அவன் கரகரத்த குரலில் சத்தமிட்டான். ”அவனைக் கொண்டு போங்கள் – நான் அவனை விட்டுவிடுகிறேன். வாருங்கள். ஆனால் அயோக்கியப் பதர்களா? இவன் ஓர் அரசியல் குற்றவாளி என்பது உங்களுக்குத் தெரியாதா? இவன் யார்? அரசுக்கு எதிராக, மக்களைத் தூண்டி விடுபவன் என்பது உங்களுக்குத் தெரியாதா? இவனையா நீங்கள் காப்பாற்றப் போகிறீர்கள். அப்படியானால் நீங்களும் கலகக்காரர்கள்தானா? அப்படித்தானே!”

தாய் கொஞ்சங்கூட அசையாமல் நின்றாள். அவளது கண்கள்கூட இமைக்கவில்லை. சிந்தித்துப் பார்க்கும் சக்தியையும் பலத்தையும் இழந்துபோய் பயமும் அனுதாபமும் பிடித்த மனதோடு அவள் ஒரு கனவு நிலையில் நின்று கொண்டிருந்தாள். முறைப்பும் கோபமும் புண்பட்ட மக்களின் குரல்கள், கலைக்கப்பட்ட தேனீக்களின் மூர்க்க ரீங்காரத்தைப் போல் கும்மென்று அவள் காதுகளில் இரைந்தன. அந்த அதிகாரியின் குழறிய குரல் அவள் காதில் ஒலித்தது. அத்துடன் யாரோ குசுகுசுவெனப் பேசும் குரலும் சேர்ந்தது.

”அவன் குற்றவாளியென்றால், அவனை நீதிமன்றத்திற்குக் கொண்டு போ…”

”எஜமான்! அவன் மீது கருணை கொள்ளுங்கள்……”

”இதுதான் உண்மை. இந்த மாதிரி நடத்துவதற்கு எந்தச் சட்டமும் இடங்கொடுக்காது.”

”இது என்ன நியாயமா? இப்படி எல்லோரும் அடிக்கத் தொடங்கி விட்டால், அப்புறம் என்ன நடக்கும்?”

ஜனங்கள் இரு பிரிவினராகப் பிரிந்து நின்றார்கள். ஒருசிலர் அந்த அதிகாரியைச் சுற்றி நின்று அவனோடு சேர்ந்து கத்திக்கொண்டும் இரங்கிக் கேட்டுக்கொண்டுமிருந்தனர். அந்தப் பிரிவினரில் சிறுபான்மையோர் கீழே விழுந்து கிடக்கும் ரீபினின் பக்கமாக நின்று ஏதேதோ வன்மம் கூறினர். அவர்களில் சிலர் ரீபினைத் தரையிலிருந்து தூக்கி நிறுத்தினர். போலீஸ்காரர்கள் அவனது கைகளைக் கட்ட முன்வந்தபோது அவர்கள் கூச்சலிட்டார்கள்:

”ஏ, பிசாசுகளே! அவசரப்படாதீர்கள்!”

ரீபின் தனது முகத்திலும் தாடியிலும் படிந்திருந்த ரத்தத்தையும் புழுதியையும் துடைத்தான். வாய் பேசாது சுற்றுமுற்றும் பார்த்தான். அவனது பார்வை தாயின் மீது விழுந்தது. அவள் நடுங்கியபடி அவனை நோக்கித் தன்னையுமறியாமல் கையை ஆட்டிக்கொண்டே முன்வரக் குனிந்தாள். ஆனால் அவன் சட்டென்று அவள் பார்வையினின்றும் கண்களைத் திருப்பிக்கொண்டான். சில நிமிஷ நேரம் கழித்து அவனது கண்கள் மீண்டும் அவள் பக்கம் திரும்பின. அவன் நிமிர்ந்து நின்று தலையை உயர்த்திப் பார்ப்பதாகவும் ரத்தக்கறை படிந்த அவனது கன்னங்கள் நடுங்குவதாகவும் அவளுக்குத் தோன்றியது.

“அவன் என்னைக் கண்டு கொண்டான் – உண்மையிலேயே என்னை அவன் அடையாளம் கண்டுகொண்டானா?”

அவள் அவனை நோக்கி உடம்பெல்லாம் நடுங்க, அடக்கமுடியாத வருத்தம் நிறைந்த மகிழ்ச்சியோடு தலையை அசைத்தாள். மறுகணமே அந்த நீலக்கண் முஜீக் அருகே நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டுகொண்டாள். அவனது பார்வை தாயின் உள்ளத்தில் ஆபத்துக்கான எச்சரிக்கையுணர்வைக் கிளப்பிவிட்டது.

“நான் என்ன செய்கிறேன்? இப்படிச் செய்தால் என்னையும் அவர்கள் கொண்டு போய்விடுவார்கள்!”

அந்த முஜீக் ரீபினிடம் ஏதோ சொன்னான். பின் பதிலுக்கு ஏதோ கூறியவாறே தலையை அசைத்தான்.

“அது சரிதான்” என்றான் அவன். நடுக்கம் ஒருபுறமிருந்தாலும், அவனது குரல் தெளிவாகவும் துணிவாகவும் ஒலித்தது. ”இந்தப் பூமியில் நான் ஒருவன் மட்டும் அல்ல, உண்மை முழுவதையும் அவர்களால் அடக்கிப் பிடித்துவிட முடியாது. நான் எங்கெங்கு இருந்தேனோ அங்கெல்லாம் என்னைப் பற்றிய நினைவு நிலைத்திருக்கும். அவர்கள் எங்களது இருப்பிடங்களையெல்லாம் குலைத்து, எல்லாத் தோழர்களையும் கொண்டு போய்விட்டாலும்கூட…”

”அவன் இதை எனக்காகத்தான் சொல்லுகிறான்” என்று ஊகித்துக் கொண்டாள் தாய்.

“பறவைகள் சிறைவிட்டுப் பறக்கும். மக்கள் தளைவிட்டு நீங்கும் காலம் வரத்தான் போகிறது!”

படிக்க:
வினவை ஆதரிப்பது உங்கள் கடமை ! ஒரு நிமிடம் ஒதுக்குங்கள் !!
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் : படிப்பினை என்ன ?

ஒரு பெண்பிள்ளை ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவந்து ரீபினின் முகத்தைக் கழுவினாள். கழுவும்போது ‘ஆ — ஓ’ என்று புலம்பினாள். அவளது இரங்கிய கீச்சுக்குரல் மிகயீல் பேசிய பேச்சோடு சிக்கி முரணியது. எனவே அவன் பேச்சைத் தாயால் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை. போலீஸ் தலைவன் முன்னால் வர, ஒருசில முஜீக்குகள் முன்னேறி வந்தார்கள். அவர்களில் யாரோ ஒருவன் கத்தினான்:

“இந்தக் கைதியை ஒரு வண்டியில் போட்டுக் கொண்டு போவோம். சரி, இந்தத் தடவை யாருடைய முறைக்கட்டு?”

பிறகு அந்தப் போலீஸ் அதிகாரி தனக்கே புதிதான குரலில், புண்பட்டவனின் முனகல் குரலில் பேசினான்.

“ஏ, நாயே! நான் உன்னை அடிக்கலாம். ஆனால் நீ என்னை அடிக்க முடியாது!”

“அப்படியா? நீ உன்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் – கடவுள் என்றா?” என்று கத்தினான் ரீபின்.

உள்ளடங்கிப்போய்க் குழம்பிய கசமுசப்பு. அவனது குரலை மூழ்கடித்து விழுங்கிற்று.

“தம்பி, அவரோடு வம்பு பண்ணாதே. அவர் ஓர் அரசாங்க அதிகாரி.”

”நீங்கள் அவன் மீது கோபப்படக்கூடாது. எசமான் அவன் தன் நிலையிலேயே இல்லை.”

“ஏ புத்திசாலி! சும்மா கிட.”

”அவர்கள் உன்னை இப்போது நகருக்குக் கொண்டு போகப் போகிறார்கள்.”

“அங்கு, இங்கிருப்பதைவிட ஒழுங்கு முறை அதிகம்.”

ஜனங்களுடைய குரல்கள் கெஞ்சிக் கேட்பதுபோல் இருந்தன. அந்தக் குரல்கள் ஒரு சிறு நம்பிக்கையோடு முழங்கிக் கலந்து மங்கி ஒலித்தன. போலீஸ்காரர்கள் ரீபின் கையைப் பற்றி, அந்தக் கிராமச் சாவடியின் முகப்பை நோக்கி இழுத்துக் கொண்டு சென்றார்கள். அங்கு சென்றவுடன் அவர்கள் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று மறைந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அங்கு கூடி நின்ற முஜீக்குகள் கலைந்து சென்றார்கள். அந்த நீலக்கண் முஜீக் மட்டும் புருவத்துக்குக் கீழாகத் தன்னை உர்ரென்று பார்த்தவாறே தன்னை நோக்கி வருவதைக் கண்டாள் தாய். அவளது முழங்காலுக்குக் கீழே பலமிழந்து சுழலாடுவதுபோல் தோன்றியது. திகைப்பும் பயமும் அவளது இதயத்தை ஆட்கொண்டு, அவளுக்குக் குமட்டல் உணர்ச்சியைத் தந்தன.

“நான் போகக்கூடாது. போகவே கூடாது” என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

அவள் பக்கத்திலிருந்த கம்பியைப் பலமாக பிடித்தவாறே நின்றாள்.

அந்தப் போலீஸ் தலைவன் கட்டிடத்தின் முகப்பிலேயே நின்று கைகளை வீசி . கண்டிக்கும் குரலில் பேசினான். அவனது குரலில் மீண்டும் பழைய வறட்சியும் உணர்ச்சியின்மையும் குடிபுகுந்துவிட்டன.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க