ருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல் ஆட்சேபணைக்குரியது என பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பெருகிவரும் கும்பல் வன்முறைகள் குறித்து நடிகர் நஸ்ருதின் ஷா கவலை தெரிவித்திருந்தார். இதனால் இந்துத்துவ ட்ரோல்களின் கடுமையான தாக்குதலை சமூக ஊடகங்களில் எதிர்கொண்டார் ஷா. அம்னெஸ்டி இந்தியா அமைப்பு வெளியிட்டிருக்கும் வீடியோவில் தோன்றிய ஷா, மத்திய அரசு என்.ஜி.ஓ-க்களை திட்டமிட்டு ஒடுக்கி வருவதாகவும் தன்னை தொந்தரவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

அமர்த்தியா சென்

ஷாவின் குற்றச்சாட்டு குறித்து அமர்த்தியா சென்னிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர், “மூத்த நடிகரை தொந்திரவுக்குள்ளாக்கும் நடவடிக்கைகளை நாம் கண்டிக்க வேண்டும். நம் நாட்டில் நிகழ்ந்துகொண்டிருக்கும் விசயங்கள் நிறுத்தப்பட வேண்டும். நிச்சயம் நிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்.

நாட்டின் முக்கியமான அமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அந்த அமைப்புகளின் சுதந்திரம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கும் அமர்த்தியா சென், பத்திரிகையாளர்களும்கூட வன்முறைகளை எதிர்கொள்கிறார்கள் என்கிறார்.

படிக்க:
♦ பாகிஸ்தானும் சிறுபான்மையினரும் : மோடிக்கு பாடம் நடத்தும் இம்ரான் கான் !
♦ ஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து ! பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் !!

எதிர்க்கருத்து தெரிவிக்கும் நஸ்ருதின் ஷா போன்ற பிரபலங்கள் மீது இந்துத்துவ ட்ரோல்களின் அராஜகங்கள் குறித்து பேசும் சென், “மற்றவர்கள் கருத்தை சகித்துக் கொள்ள முடியாத தன்மை கவலைக்குரியது. சிந்திப்பதற்கும் திறனாய்வதற்குமான திறனை இவர்கள் இழந்துவருவதையே இது காட்டுகிறது” என்கிறார்.

அம்னெஸ்டி அமைப்பு இந்தியாவில் கருத்து சுதந்திரத்தின் மீதும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதும்  மிகப்பெரும் தாக்குதல் நடந்துவருவதைக் கண்டித்து ட்விட்டரில் பரப்புரை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நஸ்ருதின் ஷா-வின் வீடியோவை வெளியிட்டுள்ளது.

Naseeruddin Shah
நஸ்ருதின் ஷா

இந்த வீடியோவில் ஷா,  “கலைஞர்கள், நடிகர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் மௌனிக்கப்படுகிறார்கள். பத்திரிகையாளர்களின் குரல்களும்கூட ஒடுக்கப்படுகின்றன. மதத்தின் பெயரால், வெறுப்பின் சுவர்கள் கட்டியெழுப்பப் படுகின்றன. அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள். இந்த நாடு மோசமான வெறுப்புணர்வுக்கும் கொடூரத்துக்கும் ஆளாகியிருக்கிறது” எனப் பேசியிருக்கிறார்.

கடந்த மாதம் புலந்தசாகரில் நடந்த காவிகளின் வன்முறையால் ஒரு போலீசு அதிகாரி கொல்லப்பட்டார். அதுகுறித்து கருத்து சொன்ன ஷா, ஒரு போலீசு அதிகாரியின் மரணத்தைவிட, பசுவின் சாவு அதிக கவனத்துக்கு உள்ளாகிறது என்றார். அதனைத் தொடர்ந்தே காவிகளால் சமூக ஊடக தாக்குதலுக்கு ஆளானார் ஷா. அவர் பங்கேற்க இருந்த இலக்கிய விழா நிகழ்வும் ரத்து செய்யப்பட்டது.

நேரடியாக அரசியல் கருத்துக்களை தெரிவிக்காத பல லிபரல் சிந்தனையாளர்கள், கலைஞர்கள்கூட மோடியின் ஆட்சிக்குப் பின், அடிப்படை சுதந்திரம் பறிபோயுள்ளதை உணர்கிறார்கள்; உணர்வதோடு மட்டுமல்லாமல் அதை எதிர்க்கவும் தொடங்கியிருக்கிறார்கள். அடிப்படைவாதிகளின் ஆட்சி, மக்கள் நலனை மட்டுமல்ல சுதந்திரத்தையும் குழிதோண்டி புதைத்துவிடும் என்பதை அமர்த்தியா சென், நஸ்ருதின் ஷா போன்றோரின் குரல் வலியுறுத்துகிறது.


கலைமதி
செய்தி ஆதாரம் :  Amartya Sen Backs Naseeruddin Shah, Says ‘What’s Happening In Our Country Is Objectionable’