ல்வியை காவிமயமாக்குவது ஏன் என்று வியக்கும் அதேவேளையில் மெக்காலே கல்வி முறையை மொத்தமாக நிராகரிக்க வேண்டும் என்று துணை குடியரசுத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த மார்ச் 19 அன்று நடைபெற்ற ஹரித்வாரில் உள்ள தேவ் சமஸ்கிருதி விஷ்வ வித்யாலயாவில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான தெற்காசிய நிறுவனத்தைத் திறந்து வைத்த வெங்கையா, “கல்வியை காவி நிறமாக்குவதாக நாங்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளோம். ஆனால், காவிமயமாக்குவதில் என்ன தவறு?”. இந்தியர்கள் தங்கள் “காலனித்துவ மனநிலையை” கைவிட்டு தங்கள் இந்திய அடையாளத்தில் பெருமிதம் கொள்ள கற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
கல்வி முறையின் “தேசியமயமாக்கல்” இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையின் மையமாக உள்ளது என்றும் தாய்மொழிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
படிக்க :
கௌரவ விரிவுரையாளர்கள் : உயர்கல்வித் துறையின் நவீனக் கொத்தடிமைகள் !
தேசிய உயர்கல்வி தகுதிக் கட்டமைப்பின் (NHEQF) பரிந்துரைகளை கைவிடு! | CCCE
பல நூற்றாண்டு காலனிய ஆட்சி, நம்மை ஒரு தாழ்ந்த இனமாக பார்க்க கற்றுக்கொடுத்தது. எங்கள் சொந்த கலாச்சாரத்தை பாரம்பரிய ஞானத்தை இழிவுபடுத்த கற்றுக் கொடுக்கப்பட்டோம். இது ஒரு தேசமாக நமது வளர்ச்சியைக் குறைத்தது. அந்நிய மொழியை நமது கல்வி ஊடகமாக திணித்ததன் மூலம் சமுதாயத்தின் ஒரு சிறிய பிரிவினருக்கு மட்டுமே கல்வி வழங்கப்பட்டது. இது பரந்த மக்களின் கல்வி உரிமையை பறித்தது. சுதந்திரத்தின் 75வது ஆண்டில் மெக்காலே கல்வி முறையை நிராகரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தாமஸ் பாபிங்ட மெக்காலே ஒரு பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் ஆவார். அவர் இந்தியாவில் கல்விக்கான பயிற்றுவிக்கும் ஊடகமாக ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தியதில் பெரும் பங்கு வகித்தவர். ”நமது பாரம்பரியம், கலாச்சாரம், முன்னோர்கள் பற்றி நாம் பெருமைப்பட வேண்டும். நாம் நமது வேர்களுக்குத் திருப்ப வேண்டும். நாம் நமது காலனித்துவ மனப்பான்மையை கைவிட்டு நம் குழந்தைகளுக்கு அவர்களின் இந்திய அடையாளத்தில் பெருமிதம் கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும்; முடிந்தவரை இந்திய மொழிகளைக் கற்க வேண்டும். நாம் நம் தாய்மொழியை நேசிக்க வேண்டும். அறிவுப் பொக்கிஷமாக விளங்கும் நமது வேதங்களை அறிய சமஸ்கிருதத்தைக் கற்க வேண்டும்” என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.
“சர்வே பவந்து சுகினா (அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள்) மற்றும் வசுதைவ் குடும்பம் (உலகம் ஒரே குடும்பம்) ஆகியவை நமது பண்டைய நூல்களில் உள்ள தத்துவங்கள்; இன்றும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் வழிகாட்டும் கொள்கைகளாக உள்ளன” என்று வெங்கையா கூறினார்.
“பொதுவான வேர்களைக் கொண்ட கிட்டத்தட்ட அனைத்து தெற்காசிய நாடுகளுடனும் இந்தியா வலுவான உறவுகளைக் கொண்டுள்ளது. சிந்து சமவெளி நாகரீகம் ஆப்கானிஸ்தானில் இருந்து கங்கை சமவெளி வரை பரவியிருந்தது. எந்த நாட்டையும் முதலில் தாக்கக் கூடாது என்று நமது கொள்கை உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது. வன்முறையை விட அகிம்சையையும் அமைதியையும் தேர்ந்தெடுத்த மாவீரன் அசோகனின் நாடு இது.
“ஒரு காலத்தில் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் நாலந்தா மற்றூம் தஷிலாவின் பண்டைய இந்தியப் பல்கலைக் கழகங்களில் படித்து வந்தனர். ஆனால், அதன் செழிப்பின் உச்சத்தில் கூட இந்தியா எந்த நாட்டையும் தாக்க நினைத்ததில்லை. ஏனென்றால் உலகிற்கு அமைதி தேவை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று துணைத் தலைவர் கூறினார்.
கல்வியைத் தவிர இயற்கையோடு நெருங்கிப் பழகவும் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார் அவர். “இயற்கை ஒரு நல்ல ஆசிரியர். கோவிட் நெருக்கடியின்போது இயற்கையுடன் நெருக்கமாக வாழும் மக்கள் குறைவாகவே பாதிக்கப்படுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். சிறந்த எதிர்காலத்திற்காக இயற்கையும் கலாச்சாரமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே குறிக்கோள்” என்று பேசினார்.
ஆங்கிலேயன் வருவதற்கு முன்பு இந்தியாவில் குலக்கல்வி முறைதான் இருந்தது. அதன்மூலம் பார்ப்பனர்களும், உயர்சாதியினரும் மட்டுமே படிக்கமுடியும். மற்ற பெரும்பான்மை மக்களுக்கும் பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டது.
படிக்க :
NEP 2020 : கார்ப்பரேட்மயமாகும் கல்வி | பேரா வீ. அரசு உரை | காணொலி
தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை : ஆசிரியர் உமா மகேஷ்வரி உரை !
ஆனால், காலனிய ஆட்சியில் தனக்கு தேவையான வேலையாட்கள் சாதிரீதியாக மட்டும் இல்லாமல் அனைத்து மக்களும் தேவை என்று கருதிய ஆங்கிலேய அரசு, அனைத்து மக்களுக்கும் கல்வியை அளித்தது. அதன் மூலம்தான் தற்போது பெண்கள் உட்பட பலர் கல்வி பயின்றுள்ளனர். இந்த மெக்காலே கல்வி அப்போது அடிமைகளை உருவாக்கும் கல்வியாக இருந்தாலும்கூட அன்று அது அனைவருக்கு கல்வி வழங்கியது.
ஆனால், வெங்கையா தற்போது மீண்டும் ஓர் நவீன குலக்கல்வியை கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கையை அதாவது ’காவிக் கொள்கை’யை மனமுவந்து ஏற்றுக்கொள்ள சொல்கிறார். பல தேசிய இனங்களை கொண்ட நம் நாட்டில் சமஸ்கிருதத்தை தாய் மொழி என்றும் அதை அனைவரும் படிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் வேதங்களை கற்ற வேண்டும் என்றும் கூறுகிறார். காவியாக இருந்தால் என்ன தவறு என்று வெளிப்படையாக பேசுகிறார்.
ஆர்.எஸ்.எஸ் – பாஜக தலைமையிலான காவி பாசிசக் கும்பல், காவி – கார்ப்பரேட் பாசிசத்தின் மூலம் ஓர் இந்துராஷ்டிரத்தை நிறுவி நவீன குலக்கல்வியை கொண்டுவர எத்தனிக்கிறது. இவர்களின் சதித்திட்டத்தை தடுத்து அனைவருக்கும் அறிவியல் பூர்வமான கல்வியை உருவாக்க போராட்ட வேண்டியது அவசியம்.

சந்துரு
செய்தி ஆதாரம் : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க