ஜல்லிக்கட்டில் சாதி வேறுபாட்டை கலைவது குறித்து – மீள்பதிவு

தலித் பின்னணி கொண்ட திறமையான வீரர்களை, ஆதிக்கச் சாதியினர் பெரும்பான்மையாக உள்ள அணிகளில் இணைத்து, அவர்களை முன்னணியில் வரவிடாமல் தடுப்பது; வெளியூரில் இருந்து வருகின்ற தலித் மக்களின் மாடுகளுக்கு அனுமதி கொடுக்காமல் தவிர்ப்பது; அனுமதி கொடுக்கப்பட்ட உள்ளூர் தலித் மக்களின் மாடுகளை இயன்றவரை போட்டியில் ஈடுபடுத்தாமல் விட்டுவிடுவது போன்ற வகைகளில் சாதி தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக மக்கள் வேதனைப்படுகின்றனர்.

மிழ்நாடு மக்கள் போராடி மீட்டெடுத்த ஜல்லிக்கட்டு விளையாட்டானது இந்தாண்டு பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக நடந்தேறியது. இருப்பினும், ஜல்லிக்கட்டு போட்டியில் பட்டியலின மக்களுக்கு எதிராக சாதித் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்தாண்டும் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு கடைப்பிடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி தலித் மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி ஜல்லிக்கட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் ஊடகங்களில் வெளிவராமல் பல்வேறு இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதித் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு விளையாட்டில் சாதி வேறுபாட்டை கலைந்து அதனை ஜனநாயகப்படுத்துவது குறித்து 2024 ஜனவரி மாத புதிய ஜனநாயகம் இதழின் “பு.ஜ. உடன் ஓர் உரையாடல்” பகுதியில் கேள்வி-பதில் கொண்டுவரப்பட்டது. பிப்ரவரி 15, 2024 அன்று வினவு தளத்தில் பதிவிடப்பட்ட இக்கேள்வி-பதில் பதிவு சில திருத்தங்களுடன் தற்போது மீள்பதிவு செய்யப்படுகிறது.

***

ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பின் ஜல்லிக்கட்டு போட்டியில்
என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ள
ன?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த ஜனவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: 2017 ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்து ஏழாண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது?

கோவில் வழிபாடு உள்ளிட்ட சமூக நடவடிக்கைகளில் நிலவும் சாதி ஆதிக்கத்தை எதிர்த்து சமத்துவத்திற்காகப் போராடுவதை போல ஜல்லிக்கட்டிலும் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கு போராட வேண்டும். தமிழ் தேசிய இனத்தின் பண்பாட்டு மரபில் தலையிட்டு ஜல்லிக்கட்டை தடை செய்த பாசிச ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு எதிராக தமிழ் மக்களின் மரபாக ஜல்லிக்கட்டு வரித்துக் கொள்ளப்பட்டதன் அடையாளம்தான் 2017 ஜல்லிக்கட்டுக்கான போராட்டம்.

ஆனால், அன்றைக்கும் கூட, அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும்தான் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டுமென்று, அ.தி.மு.க. அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனை மீறி தலித் மக்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முற்பட்டபோது, போலீசால் தாக்குதல்கள் நடத்தப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டன. இன்றும் அரசினால் அனுமதிக்கப்பட்ட இடங்களில்தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன. இதுவே, மிகப்பெரிய உரிமை பறிப்பாகும்.

அதேபோல், ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் அவதூறுகளைத் தவிர்த்து, போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக மாடுகளுக்கு போதையேற்றுவது, விளையாட்டு வீரர்கள் போதையில் கலந்து கொள்வதைத் தடுப்பது, விளையாட்டு வீரர்களுக்குப் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்வது, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது போன்ற அவசியமான கட்டுப்பாடுகளும் முறைப்படுத்துதல்களும் தேவையாக உள்ளது.

ஆனால், இவை மட்டுமே ஒரு விளையாட்டை ஜனநாயகப்படுத்தும் முறை அல்ல. பல இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சாதி ஆதிக்கம் வெவ்வேறு வகைகளில் வெளிப்படையாகக் கடைபிடிக்கப்படுகிறது. தலித் பின்னணி கொண்ட திறமையான வீரர்களை, ஆதிக்கச் சாதியினர் பெரும்பான்மையாக உள்ள அணிகளில் இணைத்து, அவர்களை முன்னணியில் வரவிடாமல் தடுப்பது; வெளியூரில் இருந்து வருகின்ற தலித் மக்களின் மாடுகளுக்கு அனுமதி கொடுக்காமல் தவிர்ப்பது; அனுமதி கொடுக்கப்பட்ட உள்ளூர் தலித் மக்களின் மாடுகளை இயன்றவரை போட்டியில் ஈடுபடுத்தாமல் விட்டுவிடுவது போன்ற வகைகளில் சாதி தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக மக்கள் வேதனைப்படுகின்றனர். இவையெல்லாம் களையப்பட வேண்டும்.

அரசு தலையிடத் தொடங்கிய பின்னர், இப்போட்டிக்கான விதிமுறைகள் பொதுத்தன்மை பெற்று வருகின்றன. இருப்பினும், இவை இன்னும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டியை நெறிப்படுத்துவது என்ற முகாந்திரத்தில், இப்போட்டியை உழைக்கும் மக்களிடமிருந்து பிரிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.

ஆகையால், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் மரபு ரீதியான பகுதிகளில் பாதுகாப்பான வகையில் விளையாட்டு மைதானங்களை அமைக்க வேண்டும். தற்போது தி.மு.க. அரசு மதுரையில் அமைத்திருக்கும் மைதானமும் (முதலாவது ஜல்லிக்கட்டு மைதானமாகும்), அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே அன்றி, கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் செல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.

சில மாடுகளின் உரிமையாளர்கள் வீரர்களைத் தாக்குவது, வீரர்கள் முறைமீறல்களில் ஈடுபட்டால், அவர்களை போலீசை கொண்டு தாக்குவது போன்றவை நடக்கின்றன. இதனை தடுக்க முறையான விளையாட்டு நெறியாளர்கள், கள நெறியாளர்கள் போன்ற முறைகள் உருவாக்கப்பட வேண்டியுள்ளது.

மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் யார், வெற்றி பெற்ற மாடு எது என்பதற்கான விதிமுறைகளில் பொதுவில் குழப்பங்கள் இல்லையெனினும், முறைப்படுத்தல் தேவைப்படுகிறது. வாடிவாசலில் இருந்து மாடுகளை அவிழ்த்துவிடுவது, அதனைப் பிடிப்பது, சில காளை மாடுகள் விளையாட்டு மைதானத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே சுற்றிவருவதால் வீரர்கள் காயமடைவது என பல அம்சங்களில் இம்முறைப்படுத்துதல் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டில் பரிசுப்பொருளாக வழங்கப்படும் மோட்டார் சைக்கிள், அண்டா, மின்விசிறி, மெத்தை, நாற்காலி, பானை போன்றவையெல்லாம் இன்றைய வீரர்களுக்கு பயனளிப்பவை அல்ல. முதலிடம் பெற்ற வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது. ஆனால், தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டியில் அதிக மாடுகளை அடக்கி முதலிடம் பெற்றுவரும் அபிசித்தர் என்ற வீரர் தனக்கு கார் வேண்டாம், அரசு வேலை வேண்டும் என்று கோருவதானது, நாட்டில் நிலவும் வேலையின்மையின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.

கிரிக்கெட் போன்ற விளையாட்டுப் போட்டிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றியிருக்கும் நிலையில், ஜல்லிக்கட்டையும் முறைப்படுத்துவது என்ற பெயரில் கார்ப்பரேட் ஆதிக்கம் புகுத்தப்படுவதற்கான முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும், மக்களின் பங்கேற்புடனான, சமத்துவத்தை வளர்க்கும் வகையிலான, மக்கள் பண்பாடாக அது தொடர்ந்து வளர்க்கப்பட வேண்டும்.

ஆனால், மக்கள் மத்தியில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், சாதி-மத வேறுபாடுகளை ஒழிக்காமல் விளையாட்டுப் போட்டிகளை மட்டும் ஜனநாயகப்படுத்துவது தனியாக நடந்தேறிவிடாது. மேற்கண்ட அளவுக்கு இவ்விளையாட்டு முறைப்படுத்தப்பட்டதற்கு காரணம் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்தவகையில், சமத்துவ சமுதாயத்தைப் படைக்கும் நோக்கிலான ஒரு மக்கள் எழுச்சிதான், விளையாட்டைப் போன்று பண்பாட்டு, கலை, இலக்கியங்களிலும் ஜனநாயக உணர்வை வளர்த்தெடுக்கும்.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க