குருதி விதைகள்!
ஈராயிரம் ஆண்டுகள்
பழமையான அந்தக்
கொல்லர் பட்டறையில்
விடிய விடியத் தயாராகின்றன
பட்டாக்கத்திகள்!
இரும்பை உருக்க,
மனுவின் சூழ்ச்சிகரச் சூட்சுமங்களால்,
ஓமகுண்டத்தில்
இரவும் பகலும்
தகதகவென எரிந்து கொண்டிருக்கிறது
சாதியத் தீ!
வேதங்களின்
இரைச்சல்களுக்கு நடுவில்,
சாதியத் தீயில் இழைக்கப்பட்டு,
காவிக் கைப்பிடியுடனும்
ஸ்வஸ்திக் முத்திரையுடனும்,
சுடச்சுடத் தயாராகும்
பட்டாக்கத்திகள் யாவும்
பகிரப்படுகின்றன
சாதிவெறி மூடர்களுக்கு,
காதல் மலர்களைக்
கொய்திட…
கொய்யப்பட்ட பூக்களிலிருந்து
தேனுக்குப் பதிலாய்
வரலாறு நெடுகிலும் வழிந்தோடுகிறது
செங்குருதியாய் —
காதல்!
எனினும்,
பட்டாக்கத்திகளில் படிந்து படிந்து
துருவேறிய,
பல நூறு உயிர்களின்
குருதிப் படிமங்களிலிருந்து,
ஈராயிரம் ஆண்டுகளாய்
அடங்கா அன்பின்
தீபம் ஏந்தி,
தொடர்ந்து முளைத்துக்கொண்டே
இருக்கின்றன
காதலின் விதைகள்!
![]()
இஸ்க்ரா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











