நடந்து முடிந்த புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், என்.ஆர். காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 18-இல் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி ஆறு தொகுதிகளிலும், த.வெ.க – நே.ம.க கூட்டணி மூன்று தொகுதிகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம், என்.ஆர். காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி புதுச்சேரியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில், “புதுச்சேரியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சிப் பொறுப்பேற்றால், அங்கு ‘இரட்டை என்ஜின்’ வளர்ச்சி ஏற்படும்” என்று கூறி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க – ரங்கசாமி கூட்டணி, கடந்த ஐந்தாண்டுகளில் மக்கள் குறித்து எந்தக் கவலையுமின்றி கொள்ளையடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியது. புதுச்சேரியை “பெஸ்ட் புதுச்சேரியாக” (BEST – Business, Education, Spirituality, Tourism) மாற்றுவோம் எனப் பீற்றிக்கொண்டார்கள். ஆனால், இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் குடிநீர், சுகாதாரம், மருத்துவமனை, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை வசதிகள் கூட மேம்படுத்தப்படவில்லை. சாலைகள் தரம் குறைந்தும், வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்படாமலும், காற்று மாசு அதிகரித்தும், குடிப்பதற்குப் பாதுகாப்பான நீர் இன்றியும் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) விதிகளின்படி, குடிநீரின் டி.டி.எஸ் (TDS – Total Dissolved Solids) அளவு 500 பி.பி.எம்-க்கு (ppm) கீழ் இருக்க வேண்டும். ஆனால், புதுச்சேரியில் இது 1,000 முதல் 4,000 பி.பி.எம் வரை உயர்ந்து, நீர் குடிப்பதற்கே தகுதியற்ற நிலையில் உள்ளது. பாதுகாப்பான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கையை முன்வைத்துவரும் போதிலும், அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில்தான், காரைக்கால் கோவில்பத்து பகுதியில் 2023 செப்டம்பரில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நிவாரணம் கூட வழங்க மறுத்த ரங்கசாமி அரசு, “சுத்திகரிப்பு நிலையங்களில் மக்கள் குடும்ப அட்டை மூலம் இலவசமாக நீரைப் பெற்றுக்கொள்ளலாம்” எனத் திமிர்த்தனமாகக் கூறித் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தது.
இதேபோல், சுமார் 500 கோடி ரூபாய் செலவில் கொண்டு வரப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டம், முறையான சேகரிப்பு மையங்கள் (Sucking points) அமைக்கப்படாமல் அரைகுறையாகச் செயல்படுத்தப்பட்டதால், வீடுகளுக்குள் நச்சுவாயு கசிவு ஏற்படும் அபாயம் நேர்ந்துள்ளது. இதன் விளைவாக, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில், கழிப்பறையிலிருந்து வெளியேறிய நச்சுவாயுவைச் சுவாசித்ததால் ஒரு சிறுமி உட்பட மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தன் மகளின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேறிய அந்தச் சிறுமியின் தந்தை, இன்னும் வீடு திரும்பவில்லை என்பது நெஞ்சைப் பிளக்கும் சோகமாகும். தற்போதும் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் நச்சுவாயுவின் நெடி வீசுவதால், புதுச்சேரி மக்கள் எந்நேரமும் அச்சத்துடன் வசிக்கும் அவலநிலையே நீடிக்கிறது.
மழைக்காலங்களில் புதுச்சேரியின் ரெயின்போ நகர் மற்றும் கிருஷ்ணா நகர் போன்ற பகுதிகளில், மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்து பெரும் பொருட்சேதத்தை ஏற்படுத்துகிறது. ஒருபுறம் அடிப்படை வசதிகள் இவ்வாறிருக்க, மறுபுறம் மதுக்கடைகள், பார்கள் மற்றும் போதைப்பொருட்களின் விற்பனை கடந்த ஐந்து ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பெருகியுள்ளது.
மறுபுறம், புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதையும், ரங்கசாமியின் அடிமை ஆட்சியைப் பயன்படுத்திக்கொண்டும், பாசிச பா.ஜ.க கும்பல் தனது பாசிச திட்டங்களைத் தீவிரமாக நிறைவேற்றி வருகிறது. புதுச்சேரியில் தேசியக் கல்விக் கொள்கை (NEP) அப்பட்டமாகத் திணிக்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளிகளில் மூன்றாம் மொழியாக இந்தி அல்லது சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் ஏ.பி.வி.பி (ABVP) போன்ற காவி குண்டர் படைகளின் அட்டூழியம் அதிகரிப்பதோடு, கல்வி வளாகங்களின் ஜனநாயகம் வெட்டிச் சுருக்கப்படுகிறது.
சமீபத்தில் கூட புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது அம்பலமானது. குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தைக் கூட, காவல்துறையை ஏவி மிகக் கொடூரமாக ஒடுக்கியது இந்த அரசு. அதேபோல், ஜிப்மர் (JIPMER) போன்ற ஒன்றிய அரசின் நிறுவனங்களில் இந்தி மொழி திணிக்கப்படுகிறது. மின்சாரத் துறை கார்ப்பரேட்மயமாக்கப்படுவதும் அதற்கு எதிரான மின்சாரத்தொழிலாளர்கள் போராட்டமும் நடந்து வருகின்றன.
ஆனால், இதுபோன்ற முக்கியமான மக்கள் பிரச்சினைகளும் கோரிக்கைகளும் நடந்து முடிந்த புதுச்சேரி தேர்தலில் பேசுபொருளாகவே மாறவில்லை என்பதே அம்மக்களின் அவநிலை. குறிப்பாக, நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்” என்ற கோரிக்கை கூட இத்தேர்தலில் விவாதிக்கப்படவில்லை. புதுச்சேரியை இந்திய ஒன்றிய அரசின் காலனியைப் போலப் பாவிக்கும் போக்கிற்கும், பாசிச கும்பலின் ஆதிக்கத்திற்கும் எதிரான இக்கோரிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
மாறாக, இத்தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் இழிந்த கலாச்சாரம் புதுச்சேரியில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. குறிப்பாக, ‘லாட்டரி கிங்’ என அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் மகன் ஜோசப் சார்லஸ் மார்ட்டின், டிசம்பர் 2025-இல் ”லட்சிய ஜனநாயகக் கட்சி” என்ற ஒன்றைத் தொடங்கி, தேர்தலுக்கு முன்னதாகவே ஆளும் என்.ஆர். காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் (MLA) ஆகியுள்ளார். இவரும், மதுக்கடை உரிமையாளர்களும், ரியல் எஸ்டேட் முதலாளிகளும் இத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை பணத்தை வாரி இறைத்துள்ளனர்.
மொத்தத்தில் புதுச்சேரித் தேர்தல் முடிவுகள் காட்டுவது பணபலம் மற்றும் அதிகார பலத்தின் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் எவ்வாறெல்லாம் நசுக்கப்படுகின்றன என்பதையே. மக்களின் அடிப்படை வாழ்வாதாரக் கோரிக்கைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் இக்கோரிக்கைகளின் கீழ் மக்களை அணித்திரட்டி பா.ஜ.க கும்பலுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.
![]()
பானு
(புதிய ஜனநாயகம் – மே 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads










