மேற்குவங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சி செய்துவந்த திரிணாமுல் காங்கிரசு கட்சியை வீழ்த்தி, பாசிச பா.ஜ.க. கும்பல் அம்மாநில ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 207 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க. முதன்முறையாக அங்கு ஆட்சியமைத்துள்ளது.
இதனையடுத்து, “மேற்குவங்கத்தில் புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது”, “காங்கோத்ரி முதல் கங்கா சாகர் வரை தாமரை மலர்ந்துள்ளது”, “மேற்குவங்கத்தின் வெற்றி என்பது கிழக்கிற்கான நுழைவாயில்” என பாசிச கும்பல் வெறிக்கூச்சலிடுகிறது. மோடி அரசின் ஊதுகுழல் ஊடகங்களோ, காவிமயமான இந்திய வரைப்படத்தில் மேற்குவங்க மாநிலத்தையும் இணைத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பி புலங்காகிதம் அடைகின்றன.
மேற்குவங்கத் தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில், பிரதமர் மோடி தரையில் விழுந்து வணங்கியது, பாசிச கும்பல் இத்தேர்தல் முடிவை எவ்வளவு முக்கியத்துவமுடையதாகப் பார்க்கிறது என்பதை வெளிக்காட்டியது. அதேசமயம் களத்தில் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் குண்டர் படை இஸ்லாமியர்களின் கடைகளை அடித்து நொறுக்கியும் புல்டோசரைக் கொண்டு இடித்தும் மசூதிகளுக்குள் புகுந்தும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது; மேற்குவங்கம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் அமைந்திருந்த கம்யூனிச ஆசான் தோழர் லெனினின் சிலை காவி குண்டர்களால் உடைக்கப்பட்டது. இவற்றின் மூலம் இனி இதுதான் மேற்குவங்கத்தின் அரசியல் சூழல் என பாசிச கும்பல் கொக்கரிக்கிறது.
ஆனால், மேற்குவங்கத்தில் பாசிச பா.ஜ.க. கும்பல் பெற்ற இவ்வெற்றியானது அப்பட்டமான பார்ப்பனிய சூழ்ச்சிகள் மூலமும் தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டும் அதிகார வர்க்கத்தின் துணையுடன் கைப்பற்றப்பட்டதாகும். திரிணாமுல் காங்கிரசு ஆட்சியின் மீதான எதிர்ப்புணர்வு, மம்தாவின் கவர்ச்சிவாதம், மிதவாத இந்துத்துவம், கார்ப்பரேட் சேவை போன்றவை பரிசீலிக்கப்பட வேண்டியவை என்றாலும், தற்போது மேற்குவங்கத்தில் பா.ஜ.க. பெற்ற வெற்றியானது மோசடியான, திருடப்பட்ட வெற்றி என்ற அம்சத்தில் அதனை முதன்மையாக பரிசீலிக்க வேண்டியுள்ளது.
மேற்குவங்கத்தின் தேர்தல் நிலைமை குறித்து ஏப்ரல் 2026, புதிய ஜனநாயகம் இதழில், “வாக்குரிமைப் பறிப்பு முதல் இந்துமுனைவாக்கம் வரை: மேற்குவங்கத்தைக் கைப்பற்றத் துடிக்கும் பாசிச பா.ஜ.க.” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் மம்தா அரசின் மக்கள் விரோதத் தன்மை குறித்தும் மேற்குவங்கத்தின் அரசியல் சூழல் குறித்தும் விரிவாகப் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர். எனும் பாசிச ஆயுதம்
யூனியன் பிரதேசமான டெல்லியில் அதிகார வர்க்கத்தையும் ஆளுநரையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆம் ஆத்மி அரசை முடக்கி, அம்மாநில முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து சிறையிலடைத்து, அப்பட்டமான பாசிச ஒடுக்குமுறைகளை ஏவி கடந்தாண்டில் ஆட்சியை கைப்பற்றியது பா.ஜ.க. கும்பல். தற்போது ஒரு மாநிலத்தில் விரிந்தளவில் இப்பாசிச ஒடுக்குமுறைகளை ஏவி மோசடியாக தேர்தல் வெற்றியை சாதிப்பதற்கான மாதிரியை மேற்குவங்கத்தில் உருவாக்கியிருக்கிறது.

குறிப்பாக, 2021 மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் அதுவரை இல்லாத அளவிற்கு 77 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ.க. பிரதான எதிர்க்கட்சியாக மாறியதிலிருந்தே இதற்கான நகர்வுகளை தொடங்கிவிட்டது.
ஒன்றியத்தில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, மேற்குவங்க அரசுக்கு வழங்கப்பட வேண்டிய நூறு நாள் வேலைத்திட்ட நிதி, ரூ.10,000 கோடி கல்வி நிதி, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் திட்டத்திற்கான நிதி அனைத்தையும் முடக்கி மேற்குவங்க மக்களின் மீதும் அரசாங்கத்தின் மீதும் பாசிச தாக்குதல்களை தொடுத்தது. 2023-இல் கொல்கத்தா உயர்நீதிமன்ற சங்கி நீதிபதியின் துணையுடன் 32,000 தொடக்கப்பள்ளி ஆசிரியர் நியமனங்களை இரத்து செய்து மம்தா அரசின் மீது எதிர்ப்பைக் கிளப்பியது. இராம நவமி போன்ற இந்துப் பண்டிகைகளில் திட்டமிட்டு மதக்கலவரங்களில் ஈடுபட்டது.
இருப்பினும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மம்தா பேனர்ஜி அரசு அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து மேற்குவங்கத்தை கைப்பற்றுவதற்காக, தேர்தல் ஆணையத்தின் துணையுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எனும் பாசிச ஆயுதத்தை பா.ஜ.க. கும்பல் கையிலெடுத்தது.
இதன் மூலம், வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், மேற்குவங்கத்தில் சுமார் 91 லட்சம் வாக்காளர்களை, அதாவது 12 சதவிகித வாக்காளர்களை ஒரேயடியாக நீக்கியது. இதில், 58 லட்சம் வாக்காளர்களின் நீக்கத்திற்கு இடப்பெயர்வு, மரணம் என காரணங்கள் கூறப்பட்ட நிலையில், எழுத்துப்பிழைகள், வயது முரண்பாடு உள்ளிட்ட அற்ப காரணங்களுக்காக 27 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இஸ்லாமியர்கள் என்பதே பாசிச கும்பலின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்த போதுமானது.
இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, நீதித்துறையை சார்ந்த அதிகாரிகளின் கண்காணிப்பில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியை (Adjudication) உச்சநீதிமன்றமே மேற்கொண்டது. அதேசமயம், மேல்முறையீட்டில் நிலுவையில் உள்ள இலட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு இத்தேர்தலில் வாக்களிக்க உரிமை வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தை நாடிய போது, “இத்தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என்பதற்காக, ஒருவருக்கு அந்த உரிமை நிரந்தமாக மறுக்கப்பட்டது என்று அர்த்தமல்ல” என்று திமிர்த்தனமாகக் கூறியது.
அதாவது, வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தலுக்குள் முழுவதுமாக முடிக்க முடியாமல் போன தேர்தல் ஆணையத்தின் நிர்வாகத் தோல்வியால் இலட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமைப் பறிக்கப்படுகிறது. ஆனால், ஒரு தேர்தலில் வாக்களிக்காமல் போனால் என்ன கெட்டுவிடப் போகிறது என்கிற பொருளில் உச்சநீதிமன்றம் பதிலளிக்கிறது. இதைவிட இந்திய தேர்தல் ‘ஜனநாயகத்தின்’ இழிநிலையை யாராலும் அம்பலப்படுத்த முடியாது.
உண்மையில், அம்மாநிலத்தில் பா.ஜ.க-வின் வெற்றியை சாத்தியப்படுத்த இந்த 27 இலட்ச வாக்காளர்களின் வாக்குரிமைப் பறிக்கப்பட வேண்டுமென்ற பாசிச கும்பலின் சதித்திட்டத்திற்கு தேர்தல் ஆணையமும் உச்சநீதிமன்றமும் துணைபோயுள்ளன என்பதே நிதர்சனம். தேர்தல் முடிவுகள் இதனை நிரூபிக்கின்றன.
குறிப்பாக, பா.ஜ.க. வெற்றி பெற்ற 105 தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர். மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை விடக் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வென்றுள்ளது. அவற்றில், 86 தொகுதிகள் பா.ஜ.க. இதற்கு முன்னெப்போதும் வெற்றி பெறாத தொகுதிகளாகும். சான்றாக, எஸ்.ஐ.ஆர். மூலம் 51,022 வாக்காளர்கள் நீக்கப்பட்ட பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளார். 57,387 வாக்காளர்கள் நீக்கப்பட்ட அசன்சோல் உத்தர் தொகுதியில் போட்டியிட்ட பொதுப்பணித்துறை அமைச்சரான மோலோய் கட்டக் 11,615 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு, எஸ்.ஐ.ஆர். மூலம் இஸ்லாமியர்கள், இதர சிறுபான்மையின மக்களின் வாக்குரிமையைப் பறித்தும் திரிணாமுல் காங்கிரசின் வாக்குவங்கியை சிதைத்துமே பாசிச பா.ஜ.க. கும்பல் இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
இராணுவத்தின் பிடியில் மேற்குவங்கம்
மறுபுறம், இந்தியாவிலேயே வேறெந்த மாநிலமும் பார்க்காத பாசிச வகைப்பட்ட ஒரு தேர்தலை மேற்குவங்கத்தில் பா.ஜ.க. கும்பல் நடத்திக் காட்டியிருக்கிறது.
குறிப்பாக, இத்தேர்தல் சமயத்தில் அசாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகியவற்றில் மொத்தமாக 23 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், மேற்குவங்கத்தில் மட்டும் 483 நிர்வாக மற்றும் போலீசு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்தது. இதன் மூலம் தேர்தலுக்கு முன்னரே திரிணாமுல் காங்கிரசு அரசை பாசிச கும்பல் முடக்கியது.
மேற்குவங்கத்தின் மால்டா பகுதியில் ஏப்ரல் 1 அன்று, தங்களது வாக்குரிமைப் பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நீதித்துறை அதிகாரிகளை மக்கள் சிறைப்பிடித்தனர். இந்த முக்கியமான செய்தியைக்கூட மாநிலத்தின் தலைமை செயலாளர் தனக்கு தெரிவிக்கவில்லை என்றும் ஒரு பத்திரிகையாளர் மூலமே தெரிந்துகொண்டதாகவும் முதல்வர் மம்தா தெரிவித்தது நிர்வாகம் எந்தளவுக்கு முடக்கப்பட்டிருந்தது என்பதை நிரூபிக்கிறது.
அதைப்போல், மேற்குவங்கத் தேர்தலை ஒட்டி அம்மாநிலத்தில் 2.4 இலட்சத்திற்கும் அதிகமான மத்திய ஆயுதக் காவல் படையினரை (CAPF) பாசிச கும்பல் குவித்தது. இது கடந்த 2021 தேர்தலில் குவிக்கப்பட்ட படையினரின் எண்ணிக்கையை விட மும்மடங்கு அதிகமாகும். ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் கண்காணிப்பது, சத்தீஸ்கர் மற்றும் ஜம்மு-காஷ்மீரிலிருந்து கவச வாகனங்களை வரவழைப்பது, மேற்குவங்கத்திலேயே சி.ஏ.பி.எஃப்-க்கான பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறையை அமைப்பது என ஒட்டுமொத்த மாநிலத்தையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்து, மக்களை உளவியல் ரீதியாக அச்சுறுத்தியது. இதன் மூலம், ஜம்மு-காஷ்மீரைப் போன்றதொரு இராணுவப் பிடிக்குள்ளேயே மேற்குவங்கத் தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது.
மேற்குவங்கம் வன்முறைகள் அதிகம் நடக்கும் மாநிலம் எனக் காரணம் கூறி இத்தனை படைகள் குவிக்கப்பட்ட நிலையில், களத்தில் சி.ஏ.பி.எஃப். படையினர் பா.ஜ.க-விற்கு வாக்களிக்குமாறு மக்களை வற்புறுத்தி அத்துமீறலில் ஈடுபட்டது பாசிச கும்பலின் உண்மையான நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. மேலும், தேர்தல் முடிந்த பிறகும், மறு உத்தரவு வரும் வரை 70,000 படையினர் மேற்குவங்கத்திலேயே இருப்பார்கள் என அமித்ஷா அறிவித்துள்ளார். இது, தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழலிலும் பாசிச நலன்களுக்கு ஏற்ப மேற்குவங்க மக்களைப் பணியவைக்கத் தீட்டப்பட்ட சதித்திட்டமாகும்.
இவ்வாறாக, மேற்குவங்கத்தின் மீது சாம, தான, பேத, தண்டம் என அனைத்து வகையான சூழ்ச்சிகள், தாக்குதல்களின் மூலமே அம்மாநிலத்தில் பாசிச பா.ஜ.க கும்பல் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.
மறுபுறம், மம்தா பேனர்ஜி எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக பேரணிகளையும் சட்டப் போராட்டங்களையும் நடத்தினாலும், களத்தில் எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக இஸ்லாமிய மக்கள் நடத்திவந்த போராட்டங்களை பெருந்திரள் மக்கள் போராட்டமாக வளர்த்தெடுக்காமல் வரம்பிட்டுக் கொண்டார். அதைப்போல், பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் சி.பி.எம்., காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் திரிணாமுல் காங்கிரசுடன் இணைந்து செயல்படுவதற்கு பதிலாக, தனித்தனியாக பிரிந்து நின்று பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை சிதறடித்தன. இவையெல்லாம், பாசிச கும்பலுக்கு சாதமாகவே சென்றுள்ளன.
பாசிச பா.ஜ.க. கும்பல் ஆட்சியதிகாரத்தை விரிவுப்படுத்திக்கொள்ள மூர்க்கமாக செயல்பட்டுவரும் சூழலில், களத்தில் பாசிச எதிர்ப்பு மாற்று திட்டம் – சித்தாந்தமின்றி வலுவாகப் போராட முடியாது என்பதையே இது காட்டுகிறது.
மறுபுறம், பாசிச கும்பல் கொக்கரிக்கும் மேற்குவங்க வெற்றி என்பது அதிகார வர்க்கத்தின் துணையுடன் குறுக்குவழியில் கைப்பற்றப்பட்டதாகும். மேற்குவங்க மக்கள் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள போவதில்லை. ஏனெனில், தங்களது வாக்குரிமை பறிப்பிற்கு எதிராகவும் பா.ஜ.க. கும்பலுக்கு எதிராகவும் களத்தில் இஸ்லாமிய மக்கள் போராடி வருகின்றனர். பா.ஜ.க-வின் பாசிச – மக்கள்விரோத ஆட்சியால் விரைவில் இதர உழைக்கும் மக்களும் களத்தில் இறங்குவர். அந்தவகையில், கிழக்கின் நுழைவாயில் என பாசிச கும்பல் கொக்கரிக்கும் மேற்குவங்கம் பா.ஜ.க-வின் கல்லறையாகட்டும்.
![]()
துலிபா
(புதிய ஜனநாயகம் – மே 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











