கடந்த பத்தாண்டுகளாக அசாம் மாநிலத்தை ஆட்சி செய்துவந்த பாசிச பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையான அசாமில் இஸ்லாமிய, கிறித்தவ சிறுபான்மையினரும், உழைக்கும் மக்களும் மிகக் கடுமையான பாசிச ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர். திட்டமிடப்பட்ட இன, மத வெறுப்புப் பிரச்சாரங்களின் மூலம் அம்மாநில மக்கள் பிளவுபடுத்தப்பட்டுள்ளனர். அசாம் இஸ்லாமிய மக்கள் ஓர் இனப்படுகொலையின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இத்தகைய சூழலில் கடந்த இரண்டு முறையும் கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைத்த பா.ஜ.க., இந்தத் தேர்தலில் 82 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க இருப்பது, ஒட்டுமொத்த அசாம் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள பெரும் சவாலாகும்.
பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில்
அசாம் மக்களின் அவலநிலை
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம், ஆண்டுதோறும் வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாகும். மே முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை ஒருபுறமிருக்க, கிழக்கு அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேச அணைக்கட்டுகளில் இருந்து முன்னறிவிப்பின்றித் திறந்துவிடப்படும் உபரி நீர், பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திப் பேரழிவை விளைவிக்கிறது. கடந்த 2025 ஜூன் மாத வெள்ளத்தில் மட்டும் 22 மாவட்டங்களைச் சேர்ந்த 5.15 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக, இந்த பேரிடர்களால் அசாமின் ஏழை எளிய மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிப் பயிர்கள் நாசமாவதுடன், வீடுகள், கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன. இதன் விளைவாக, ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த மாநிலத்திற்குள்ளேயே ‘உள்நாட்டு அகதிகளாக’ மாறுகின்றனர். இத்தகைய தொடர் பேரழிவுகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கோ அல்லது இடப்பெயர்வுக்கு உள்ளானவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கோ ஒன்றிய-மாநில அரசுகள் ஆக்கப்பூர்வமான எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக, ‘வெள்ள ஜிகாத்’ எனும் பெயரில் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தை காவிக் கும்பல் முன்னெடுக்கிறது. அரசின் அலட்சியத்தால் முறையாகப் பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்த மதகுகளை, இஸ்லாமியர்கள் குண்டு வைத்து தகர்த்துவிட்டதாகப் பொய்க் குற்றஞ்சாட்டு சுமத்தி, கைது செய்து அவர்களை சிறையிலடைக்கிறது பாசிச பா.ஜ.க. அரசு.
விவசாய நிலங்கள் அழிப்பு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக, அசாம் இளைஞர்கள் வாழ்வாதாரம் தேடி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கும், குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களுக்கும் புலம்பெயர்கின்றனர். அங்கு மிக மோசமான பணிச்சூழலில், அற்பக் கூலிக்கு அவர்கள் சுரண்டப்படுகின்றனர். செப்டம்பர் 2025 முதல் பிப்ரவரி 2026 வரையிலான ஆறு மாதங்களில் மட்டும் 162 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அசாம் அரசு கூறுகிறது. உண்மை எண்ணிக்கை இதைவிடப் பலமடங்கு அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.
இதேபோல், இந்தியாவின் மொத்த தேயிலை உற்பத்தியில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்களிப்பை அசாம் வழங்குகிறது. சுமார் 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்துறையை நம்பியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள். அட்டை பூச்சிகளாலும் முதலாளிகளின் இலாபவெறியாலும் தினந்தோறும் இரத்தம் உறிஞ்சப்படும் இத்தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.200 – 250 என்ற மிகச் சொற்பக் கூலியே வழங்கப்படுகிறது. வறுமையின் காரணமாகப் பெண் குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் தோட்ட வேலைக்குச் செல்லும் அவலநிலை நீடிக்கிறது. நாளொன்றுக்கான கூலியை ரூ.351 ஆக உயர்த்துவது, நிலப்பட்டா வழங்குவது போன்ற இத்தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை பாசிச பா.ஜ.க. அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
முக்கியமாக, அசாமில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டங்களுக்காக, சிறுபான்மையினரின் வீடுகள் இடிக்கப்பட்டு நிலங்கள் அபகரிக்கப்படுவது தீவிரமடைந்துள்ளது. 2025 ஜூலையில் அதானியின் 3,400 மெகாவாட் அனல்மின் நிலையத் திட்டத்திற்காக துப்ரி மற்றும் கோல்பாரா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களின் வீடுகள் புல்டோசர்கள் மூலம் தரைமட்டமாக்கப்பட்டன. ‘ஆக்கிரமிப்பு அகற்றம்’ என்ற பெயரில் வங்க மொழி பேசும் இஸ்லாமியர்களைக் குறிவைத்து நடத்தப்படும் இத்தாக்குதல்கள், அவர்களை நிலமற்றவர்களாக மாற்றுகின்றன. “தி நியூ ஹியூமனிடேரியன்” (The New Humanitarian) அறிக்கையின்படி, மே 2021 முதல் ஜனவரி 2026 வரை 22,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை அரசு இடித்துத் தள்ளியுள்ளது. வீடுகளை இடிப்பதற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடும் இஸ்லாமிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்வது அசாமில் புதிய இயல்புநிலையாக்கப்பட்டுள்ளது. இத்தகைய பாசிச தாக்குதல்களால் அம்மாநிலத்தில் ஏற்கெனவே வறிய நிலையில் வாழ்ந்துவரும் வங்கமொழி பேசும் இஸ்லாமிய மக்களின் வாழ்நிலை மேலும் மோசமடைந்து அகதிகளாக மாற்றப்படுகின்றனர்.
மேலும், அசாமின் பூர்வீகப் பழங்குடியின மக்களின் நிலங்களும் ‘வளர்ச்சி’ என்ற போர்வையில் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. அதானி, அம்பானி மற்றும் பாபா ராம்தேவ் ஆகிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சுமார் 40,000 பிகா (7.5 பிகா என்பது 1 ஹெக்டேருக்குச் சமம்) நிலங்கள் தாரைவார்க்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. கடந்த 2025 ஆகஸ்ட் மாதம், திமா ஹசாவோ மாவட்டத்தில் 3,000 பிகா நிலத்தை மகாபால் சிமெண்ட் நிறுவனத்திற்கு அரசு வழங்கியதைக் கௌஹாத்தி உயர்நீதிமன்றமே கண்டித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், அசாமில் கர்பி ஆங்லாங், போடோலாந்து, திமா ஹசாவோ போன்ற பழங்குடியின மக்கள் வாழும் தன்னாட்சிப் பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் பழங்குடி மக்களின் கால்நடை மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில் உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலிருந்து பழங்குடியினர் அல்லாத இந்தி மொழி பேசும் மக்கள் குடியேறி வணிகங்களை நடத்தி வருகின்றனர். 1970-களுக்குப் பிறகு அப்பகுதியில் குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்று அம்மக்கள் கோரிக்கை வைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பா.ஜ.க. அரசு அப்போராட்டங்களை போலீசு மூலம் கொடூரமாக ஒடுக்குகிறது.
இனப்படுகொலையின் விளிம்பில்
இஸ்லாமிய மக்கள்
இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் அதிக சதவிகிதத்தில் (38 – 40 சதவிகிதம்) வாழும் மாநிலங்களில் அசாம் முதன்மையானது. இவர்களில் பெரும்பான்மையானோர் வங்கதேசத்திலிருந்து குடிபெயர்ந்து வந்த இஸ்லாமிய மக்கள் ஆவர். வங்கப் பிரிவினை, மதக்கலவரங்கள், பிரம்மபுத்திரா நதிப்படுகையில் விவசாயம் செய்வதற்காக ஆங்கிலேய அரசு மேற்கொண்ட குடியேற்றம் என பல்வேறு காலகட்டங்களில் வங்கதேச மக்கள் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் குடிபெயர்ந்தனர்.
இம்மக்கள் மீதான வெறுப்பானது அசாம் மக்களிடையே விதைக்கப்பட்டிருந்தது. 1979-1985 காலகட்டத்தில் நடைபெற்ற அசாம் போராட்டம் என்பது அடிப்படையில் அசாமியர்களுக்கும் வங்காளிகளுக்கும் (இந்து இஸ்லாமியர்களை உள்ளடக்கிய வங்காளிகள்) இடையிலான மொழி மற்றும் இனப் போராட்டமாகும்.
ஆனால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல், வங்காள இந்து மக்களை தனது அடித்தளமாக்கிக் கொள்வதற்கும், இஸ்லாமிய மக்களை எதிரியாகச் சித்தரித்து மத முனைவாக்கம் செய்வதற்கும் இந்த உள்ளூர் இன முரண்பாட்டைத் மத முரண்பாடாக மாற்றியது. இந்த மத வெறுப்பானது பல தலைமுறைகளாக அசாமிலேயே பிறந்து விவசாயம் செய்து வாழ்கின்ற இந்திய இஸ்லாமிய மக்கள் மீது கட்டமைக்கப்படுகிறது.
இந்நிலையில், அசாமில் வசிக்கும் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்கள் மீதும் பாசிச பயங்கரவாதத்தை நிறுவனமயப்படுத்திய நடவடிக்கைதான் அசாமில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகும்.
குறிப்பாக, அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட்டு 2019-இல் அதன் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 19 இலட்சம் மக்கள் “வெளிநாட்டினர்” என்று முத்திரைக் குத்தப்பட்டு நீக்கப்பட்டிருந்தனர். இவர்களில் கணிசமானோர் வங்க மொழி பேசும் இஸ்லாமியர்கள். இம்மக்களில் பலர் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வெளிநாட்டு தீர்ப்பாயங்களில் வழக்கு நடத்திக் கொண்டிருக்கின்றனர். இவ்வழக்குகளில் வெளிநாட்டினர் என்று தீர்ப்பு வழங்கியும், வழக்கு நிலுவையில் உள்ள போதிலும், அம்மக்களை கைது செய்து தடுப்பு முகாம்களில் (Detention camps) அடைத்து சித்திரவதை செய்து படுகொலை செய்து வருகிறது பாசிச அசாம் அரசு.
இதற்காக, 3,000 பேரை அடைத்து வைக்கக்கூடிய வகையிலான நாட்டிலேயே மிகப்பெரிய “மத்தியா தடுப்பு முகாம்”-ஐ (Matia detention camp) கடந்த 2021-ஆம் ஆண்டில் அசாம் அரசு செயல்பாட்டுக்கு கொண்டுவந்தது. இம்முகாமில் நோயுற்ற இஸ்லாமியர்களுக்கு சிகிச்சையளிக்க மறுத்து படுகொலை செய்கிறது. குடும்பத்தினரை பிரித்து அடைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கி வருகிறது. இம்முகாம்களில் மிக மோசமான, சுகாதாரமற்ற நிலையில் அடைத்து வைக்கப்படுவதாலும், விலங்குகள் உண்பதற்குக் கூட தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாலும் மக்கள் எளிதில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகின்றனர். ஜெர்மனியில் ஹிட்லரின் வதைமுகாம்களை போல இத்தடுப்பு முகாம்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

மறுபுறத்தில், வங்க மொழி பேசும் இஸ்லாமிய மக்கள் சட்டவிரோதமாக அசாமின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்கள் என்று கூறி, அவர்களின் வீடுகளையும் மசூதிகளையும் புல்டோசர் மூலம் இடித்து, அம்மக்களை தற்காலிக தங்குமிட முகாம்களுக்கு (Makeshift Shelter Camps) விரட்டியடித்துக் கொண்டிருக்கிறது அசாம் பா.ஜ.க. அரசு. நீல நிற தார்ப்பாயால் குடிசைகள் அமைக்கப்பட்ட, எந்த அடிப்படை வசதிகளுமற்ற இம்முகாம்களில் இம்மக்கள் இறுத்தப்படுகின்றனர்.
அசாமில் ஹிமந்த பிஸ்வா சர்மா முதலமைச்சராக பதவியேற்ற 2021, மே மாதத்திலிருந்து 160 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான நிலத்திலிருந்து 50,000 மக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த புல்டோசர் பயங்கரவாதத்தின் மூலம் வங்க மொழி பேசும் இஸ்லாமிய மக்களை மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் அடைத்து, எந்த உரிமைகளுமற்ற இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
மேலும், காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு “ஆபரேஷன் புஷ்பேக்” எனும் பாசிச நடவடிக்கையை தீவிரப்படுத்தி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்க மொழி பேசும் இஸ்லாமியர்களை திடீரென கைது செய்து சட்டவிரோதமாக வங்கதேசத்திற்குள் விரட்டியடித்து வருகிறது. அசாம் புவியியல் ரீதியாக வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்திருப்பதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, வங்கதேச இஸ்லாமியர்கள் மீது ‘சட்டவிரோதக் குடியேறியர்கள்’, ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ போன்ற இந்துமத – தேசியவெறியை தூண்டிவிடுகிறது.
இந்நிலையில், இந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து மக்களின் வாக்குகளை கவர்ந்து வெற்றி பெறுவதற்காக இஸ்லாமிய பீதியூட்டி, இந்துமத-தேசவெறியை தூண்டிவிடும் பிரச்சாரங்கள், நடவடிக்கைகளை பா.ஜ.க. கும்பல் முக்கிய ஆயுதமாக கையிலெடுத்தது. இதனை முன்னின்று செய்த அசாம் முதல்வர், “கடந்த ஐந்து ஆண்டுகளில் எனது அரசாங்கம் மியாக்களின் கைகளையும் கால்களையும் அரசியல் ரீதியாக முறித்துவிட்டது. இந்தமுறை அவர்களின் முதுகெலும்பையே முறிப்போம்” என்று வெறுப்பைத் தூண்டினார். அதேபோல், கடந்த பிப்ரவரியில் அசாம் பா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அசாம் முதல்வர் துப்பாக்கியால் இஸ்லாமிய மக்களை குறிவைப்பது போன்ற செயற்கை நுண்ணறிவு காணொளி பகிரப்பட்டிருந்தது.
இவையெல்லாம் வெறுமனே தேர்தல் பிரச்சாரங்கள் அல்ல, அசாமில் இஸ்லாமிய மக்களை இனப்படுகொலை செய்வதற்கு பாசிச கும்பல் விடுக்கும் அறைகூவல்களாகும். இந்த இனப்படுகொலை தயாரிப்பிற்கு தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், மனித உரிமை அமைப்புகள், சிறுபான்மை ஆணையம் உள்ளிட்ட அரசின் அனைத்து உறுப்புகளும் பக்கபலமாக உள்ளன. தற்போது பா.ஜ.க. மூன்றாவது முறை வெற்றி பெற்றிருப்பது இந்த இனப்படுகொலை அபாயத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
தொகுதி மறுவரையறை மூலம் ஒழித்துக்கட்டப்பட்ட
இஸ்லாமிய மக்களின் பிரதிநிதித்துவம்
அசாமின் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 35 தொகுதிகள் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிப்பவை. இதன் காரணமாக, ஒவ்வொரு தேர்தலிலும் சராசரியாக 30 இஸ்லாமிய உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குத் தேர்வாகி வந்தனர். இஸ்லாமிய மக்களின் இந்தப் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்டத் துடித்த பா.ஜ.க. அரசு, 2023-இல் தொகுதி மறுவரையறையை (Delimitation) நடைமுறைப்படுத்தியது.
இதற்காக, 18-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் இனரீதியாகத் தொகுதிகளைப் பிரிக்கப் பயன்படுத்தப்பட்ட “ஜெர்ரிமாண்டரிங்” (Gerrymandering) எனும் தந்திரத்தை அசாம் அரசு கையில் எடுத்தது. “பிரித்தல், அடுக்குதல், குவித்தல்” ஆகிய உத்திகளின் மூலம் தொகுதிகள் மதரீதியாக மாற்றியமைக்கப்பட்டன. இதன் விளைவாக, அண்மையில் நடந்த தேர்தலில் இஸ்லாமிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 22-ஆகச் சரிந்தது மட்டுமன்றி, எதிர்க்கட்சிக் கூட்டணியும் முன்னெப்போதும் இல்லாத வகையில் 24 தொகுதிகளுக்குள் சுருக்கப்பட்டது.
குறிப்பாக, இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளில் இஸ்லாமியர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க வேண்டுமென்பதற்காகவே, பெரும்பாலானவற்றை பட்டியல், பழங்குடியின தனித்தொகுதிகளாக மாற்றியது பாசிச கும்பல். சான்றாக, பார்பேட்டா மற்றும் கோல்பாரா மேற்கு ஆகிய இரண்டும் வங்க மொழிப் பேசும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற, வழக்கமாக இஸ்லாமியர்களே எம்.எல்.ஏ-களாக தேர்வாகின்ற தொகுதிகளாகும். தொகுதி மறுவரையறையில், இத்தொகுதிகளிலிருந்த இஸ்லாமியர்களை பிற தொகுதிகளுக்கு பிரித்துவிட்டு, இந்துக்களின் விகிதாச்சாரத்தை அதிகரிக்கும் வகையில் மறுநிர்ணயம் செய்ததுடன், இவை தனித்தொகுதிகளாகவும் மாற்றப்பட்டன. இதன் விளைவாக, 2021 சட்டமன்றத் தேர்தலில் இவ்விரு தொகுதிகளிலும் காங்கிரசு கட்சியை சார்ந்த இஸ்லாமிய எம்.எல்.ஏ-கள் வென்ற நிலையில் இம்முறை இத்தொகுதிகள் பா.ஜ.க. கூட்டணியிடம் சென்றுள்ளன.

இவ்வாறு தொகுதி மறுவரையறை மூலம் பழங்குடியினர் பகுதிகளில் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட ஐந்து தொகுதிகளிலும் பா.ஜ.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே வெற்றி பெற்றுள்ளன.
அதைப்போல், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன. சான்றாக, பராக் பள்ளத்தாக்கில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 15-லிருந்து 13-ஆக குறைக்கப்பட்டது.
அதைப்போல், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் வேண்டுமென்றே அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சான்றாக, பா.ஜ.க-வின் அடித்தளமாக உள்ள மேல் அசாம் சட்டமன்றத் தொகுதிகளில் 1.4 இலட்சம் முதல் 1.8 இலட்சம் வரை வாக்காளர்கள் உள்ள நிலையில், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள பார்பேட்டா மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 2.4 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, ஒரு தொகுதியின் பகுதிகள் துண்டிக்கப்படாமல் எல்லைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆனால், இக்கோட்பாடு அப்பட்டமாக மீறப்பட்டது. உதாரணத்திற்கு, ‘கடிகோரா’ தொகுதியை இந்துப் பெரும்பான்மைத் தொகுதியாக மாற்றுவதற்காக, அதனுடன் தொடர்பில்லாத வெகு தொலைவிலுள்ள ‘பதர்பூர்’ பகுதிகள் அதனுடன் இணைக்கப்பட்டன.
இவ்வாறு தொகுதி மறுவரையறையின் போது தீவிர மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட்ட பராக் பள்ளத்தாக்கின் மூன்று தொகுதிகள், கீழ் அசாமில் ஆறு, மத்திய அசாமில் இரண்டு மற்றும் மேல் அசாமில் ஒரு தொகுதி என மொத்தம் 12 தொகுதிகள் பா.ஜ.க. கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளதாக “தி ஸ்க்ரோல்” ஊடகம் பகுப்பாய்வு செய்துள்ளது.
இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள்
வாக்காளர் பட்டியலிருந்து நீக்கம்!
நாடுமுழுவதும் சிறப்பு தீவிர மறு ஆய்வு எனும் பாசிச நடவடிக்கையின் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையை பறித்துவரும் பாசிச பா.ஜ.க. கும்பல் அசாமில் மட்டும் எஸ்.ஐ.ஆர்-யை அமல்படுத்தவில்லை. மாறாக, ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்னதாக வழமையாக மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை (SR) அசாமில் செயல்படுத்தியுள்ளது.
2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 12 இலட்சம் இந்துக்கள் நீக்கப்பட்ட நிலையில், சிறப்பு தீவிர மறு ஆய்வு செயல்படுத்தப்பட்டால் அவர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் நிலைமை உருவாகும். இது அம்மக்களிடையே பா.ஜ.க-வின் மீதான எதிர்ப்புணர்வை ஏற்படுத்தும் என்ற அச்சத்திலேயே எஸ்.ஐ.ஆர். அசாமில் செயல்படுத்தப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த’ (SR) நடவடிக்கையும் இலட்சக்கணக்கான இஸ்லாமியர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதையே இலக்காகக் கொண்டுள்ளது. டிசம்பர் 27-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 10 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்களாவர்.
குறிப்பாக, சட்டவிரோத ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீடுகள் இடிக்கப்பட்டு, அகதிகளாக்கப்பட்ட இஸ்லாமிய மக்களின் வாக்குரிமை திட்டமிட்டுப் பறிக்கப்பட்டுள்ளது. சான்றாக, துப்ரி மற்றும் உரியம்காட்டில் வீடிழந்தவர்களில் 5,700 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை ‘ஸ்க்ரோல்’ (The Scroll) ஊடகத்தின் கள ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. இடம்பெயர்ந்த இம்மக்கள் புதிய இடங்களில் வாக்காளர்களாகச் சேர வழங்கிய ‘படிவம் 6’ விண்ணப்பங்கள், தேர்தல் அதிகாரிகளால் பெருமளவில் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதேபோல, பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் மேலும் 2.4 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அவர்களிலும் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்களே ஆவர். இதற்கு காரணம் பா.ஜ.க-வினர் அதிகார வர்க்கத்தின் துணையுடன் ‘படிவம் 7’-ஐப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான போலிப் புகார்களைத் தாக்கல் செய்ததுதான்.
ஒரு வாக்காளரின் பெயரை நீக்கக் கோரும் ‘படிவம் 7’-ஐத் தவறாகப் பயன்படுத்தி, ஒருவருடைய பெயரிலேயே நூற்றுக்கணக்கான இஸ்லாமிய வாக்காளர்களுக்கு எதிராகப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகாரளித்ததாகக் கூறப்படும் நபர்களில் பலர், தாங்கள் அத்தகைய புகாரை அளிக்கவே இல்லை என மறுக்கின்றனர். ரங்கனாடி தொகுதியில் மட்டும் 200 பேருக்கு எதிரான புகார்களில், மூன்று நபர்களின் அடையாள அட்டைகளும் தொலைபேசி எண்களும் அவர்களின் அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளதை ஸ்க்ரோல் தன்னுடைய கள ஆய்வில் கண்டறிந்துள்ளது.
இந்தச் சதி நடவடிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக, “மியாக்களுக்கு (இஸ்லாமியர்களுக்கு) எதிராகத் தொடர்ந்து புகார்களை அளிக்க வேண்டும் என்று நானே பா.ஜ.க-வினரிடம் கூறியுள்ளேன்” என்று அசாம் முதல்வர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இவ்வளவு பகிரங்கமான வெறுப்புப் பேச்சிற்குப் பிறகும் தேர்தல் ஆணையம் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கெனவே ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ‘டி-வாக்காளர்கள்’ (Doubtful Voters) என முத்திரை குத்தப்பட்டு வாக்குரிமையை இழந்துள்ள நிலையில், தற்போது இலட்சக்கணக்கானோரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. இது தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமல்லாமல், வருங்காலங்களில் அவர்களின் குடியுரிமையை முழுமையாகப் பறித்து பாசிச தாக்குதலைத் தொடுப்பதற்கான ஒரு முன்னோட்டமே ஆகும்.
000
மொத்தத்தில், பாசிசமயமாகிவரும் அரசுக் கட்டமைப்பைப் பயன்படுத்தி, தொகுதி மறுவரையறை, வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் போன்ற நிறுவனமயப்பட்ட சதிச் செயல்கள் மூலம் இஸ்லாமியர்களின் வாக்குரிமையை பறித்தும், மத வெறுப்புப் பிரச்சாரங்கள், இந்து முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தியும் அசாமில் பா.ஜ.க. மூன்றாவது முறை ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
பாசிச பா.ஜ.க-வின் இவ்வெற்றியை தடுக்கும் நிலையில் அங்குள்ள எதிர்க்கட்சிகள் இல்லை. காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்கள் மீதான புல்டோசர் பயங்கரவாதம் உள்ளிட்ட பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில்லை. சிறுபான்மையினருக்காகப் பேசினால் தங்களின் ‘இந்து வாக்கு வங்கி’ சரிந்துவிடுமோ என்று அஞ்சுகின்றன. “மேல் அசாமில் வாக்குகள் குறைந்துவிடும் என்பதால் காங்கிரசின் உயர்மட்டத் தலைவர்கள் கூட எங்கள் உரிமைகளைப் பேசப் பயப்படுகிறார்கள்” என்று பார்பெட்டா மருத்துவர் ஏ.கான் எதிர்க்கட்சிகளின் இரட்டை முகத்தை திரைக்கிழிக்கிறார். ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் பாசிச நடவடிக்கைகளைத் தடுக்கத் தவறிய காங்கிரசு தலைவர்களை மக்கள் விரட்டியடித்த சம்பவங்களும் கடந்த ஆண்டில் நிகழ்ந்துள்ளன.
மேலும், வேலைவாய்ப்பின்மை, வெள்ளப் பாதிப்பு, கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கப்படும் பழங்குடியின நிலங்கள் போன்ற மக்கள் பிரச்சினைகளில், எதிர்க்கட்சிகள் தங்களின் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கையினால் பெயரளவிலான எதிர்ப்பையே காட்டுகின்றன. பா.ஜ.க-வின் பாதையிலேயே பெண்களுக்கான மாதாந்திர நிதியுதவி, மருத்துவக் காப்பீடு போன்ற கவர்ச்சிவாதத் திட்டங்களை அறிவித்த போதிலும், பா.ஜ.க-வின் ”அருனோதய்” (Orunodoi) திட்டத்தின் பணபலத்திற்கு முன்னால் இவை எடுபடவில்லை. பா.ஜ.க. அரசானது மக்களின் வறுமையைச் சாதகமாக்கி, அருனோதய் திட்டத்தின் கீழ் 40 இலட்சம் பெண்களுக்குத் தலா ரூ.9,000 வரை வழங்கித் தனது செல்வாக்கை உறுதிப்படுத்தியுள்ளது. அதேசமயம், இந்த நிதியுதவிகள் இஸ்லாமியப் பெண்களுக்குப் பெருமளவில் மறுக்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க-வை வீழ்த்துவது என்ற ஒற்றைப் புள்ளியில் கூட எதிர்க்கட்சிகளால் ஒன்றிணைய முடியவில்லை. குறிப்பாக, இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் காங்கிரசு மற்றும் ”ராய்ஜோர் தளம்” இடையே தொகுதி பங்கீட்டில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. மேலும், பா.ஜ.க. தனது குதிரை பேரம் மூலம் காங்கிரசின் முக்கியத் தலைவர்களான பூபென் போரா மற்றும் பிரத்யுத் போர்டோலோய் போன்றோரை விலைக்கு வாங்கி, அக்கட்சியின் கட்டமைப்பையே சிதைத்து வருகிறது.
இச்சூழலில், அசாமில் இஸ்லாமிய மக்கள் எதிர்கொண்டிருக்கும் இனப்படுகொலை அபாயத்தையும், உழைக்கும் மக்கள் மீதான பாசிச தாக்குதல்களையும் தடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமை அங்குள்ள பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் மீது சுமத்தப்பட்டுள்ளது. குடியுரிமைப் பறிப்பிற்கு எதிராகப் போராடும் சிறுபான்மையினர், கார்ப்பரேட் நில அபகரிப்பிற்கு எதிராகப் போராடும் பழங்குடியின மக்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் என ஒடுக்கப்படும் அனைத்துப்பிரிவு மக்களையும் பாசிச பா.ஜ.க-விற்கு எதிராக ஓரணியில் திரட்ட வேண்டும். பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு எனும் மாற்று அதிகாரக் கட்டமைப்பை நோக்கிய மக்கள் திரள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். சாதி, மத, இன, மொழிப் பிளவுகளைக் கடந்து வர்க்க ரீதியாகக் கட்டியெழுப்பப்படும் இப்போராட்டங்களே, இனப்படுகொலையின் விளிம்பில் நிற்கும் இஸ்லாமிய மக்களைப் பாதுகாக்கும்.
![]()
அமீர்
(புதிய ஜனநாயகம் – மே 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











