அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
இந்தியாவிலேயே யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவாகத் தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தேர்தல் முடிவு அமைந்துவிட்டது. பாசிச பா.ஜ.க. தமிழ்நாட்டிற்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகத் தி.மு.க-விற்கு ஆதரவு தெரிவித்த ஜனநாயக சக்திகள் பலருக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலருக்குக் குழப்பம், சிலருக்குக் கோபம், சிலருக்கு அவநம்பிக்கை, சிலருக்கோ, “அடுத்து தமிழ்நாட்டில் என்ன நடக்குமோ?”, “பா.ஜ.க. தமிழ்நாட்டில் கால் ஊன்றிவிடுமோ?” என்ற கவலை.
தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையிலும் இன்னும் பலர் இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
ஜனநாயக சக்திகளில் சிலர், “பா.ஜ.க. நேரடியாக ஆட்சிக்கு வர இயலவில்லை; அந்தவகையில் தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது; அதனால், தமிழக வெற்றிக் கழகத்தைப் பா.ஜ.க. நெருங்க விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்ற நோக்கில் த.வெ.க-விற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இன்னொரு பக்கம், விஜய்க்கு வாக்களித்த பெரும் பிரிவினர் இத்தேர்தல் முடிவை வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர். திரையில் விஜய்யை சில மணி நேரங்கள் மட்டுமே பார்த்த அவரது ரசிகர்கள், தற்போது முதலமைச்சராக விஜய் தினமும் என்ன செய்கிறார், என்ன பேசுகிறார் என்பதையும் புதிய அமைச்சர்களின் செயல்பாடுகளையும் பேச்சுகளையும் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். இதுவரை அரசியலையே கவனிக்காத இப்பெரும் பிரிவினர் அரசியலை கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.
இன்னொருபுறம், தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே, தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளிலேயே ஒரு கட்சி ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது என்றால், அது த.வெ.க.தான். அதிலும் 59 ஆண்டுகாலம் மாறிமாறி ஆண்டுவந்த திராவிடக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளித் தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி குறித்து பல்வேறு விதமான கருத்துகளும் பரிசீலனைகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டு மக்கள் திரைக் கவர்ச்சிக்கு அடிமையாகி விட்டார்கள்; விஜய் சமூக ஊடகங்களைக் கொண்டு பிரச்சாரம் செய்தார்; அரசியலற்ற உதிரி வர்க்கப் பின்னணி கொண்ட மக்களும், “ஜென்-சி” (Gen Z) தலைமுறையினரும் (தற்போது 14 – 29 வயது வரம்புள்ள இளந்தலைமுறையினர்) அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளனர் எனப் பல்வேறு தளங்களில் திராவிட இயக்கத்தினரும், அவர்களின் ஆதரவு ஊடகங்களும் குறிப்பிடுகின்றன.
சில முற்போக்கு இயக்கங்களும் ஜனநாயக சக்திகளும் ஏறக்குறைய இக்கருத்தை அங்கீகரிக்கும் அதேவேளையில், இக்கால இளைஞர்களை அரசியல்படுத்தத் தவறியது தம்மைப் போன்ற ஜனநாயக இயக்கங்களின் தவறுதான் என்று குறிப்பிடுகின்றனர். தி.மு.க-வும் சில தவறுகளை இழைத்துள்ளது என ஒப்புக்கொள்கின்றனர்.
எனினும், தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பெரும்பாலான கட்சிகள், தி.மு.க-வை ஆதரித்த சிறிய அமைப்புகள், இயக்கங்கள் தி.மு.க-வின் தவறுகள் குறித்துப் பெரிதும் வாய்திறப்பதில்லை. ஒரு ஆட்டத்தில் பங்கேற்கும் அனைத்து அணிகளையும் பரிசீலிக்காமல், ஒரு அணியை மட்டும் பரிசீலிக்கும் ஒருசார்பான போக்கையே இக்கட்சிகளும் அவற்றின் ஊடகங்களும் வெளிப்படுத்துகின்றன.
இச்சூழலில், இத்தேர்தல் முடிவுகளைப் புரிந்துகொள்வது எப்படி? தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் த.வெ.க-வின் அரசியல் தன்மை என்ன? பாசிச பா.ஜ.க-வைத் தமிழ்நாட்டில் காலூன்ற விடாமல் தடுப்பது எப்படி? போன்ற பிரச்சினைகளைப் பரிசீலிப்பதும், பாசிச எதிர்ப்பில் மக்களை அணிதிரட்டுவதும் நம்முன் உள்ள கடமையாகும்.

வெளியீடு :
தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி:
பாசிசத்தை வீழ்த்தும் திசை எது?
முதல் பதிப்பு : மே, 2026
வெளியிடுவோர் :
மக்கள் அதிகாரக் கழகம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மா.ஒ.கு.),
தமிழ்நாடு – புதுச்சேரி.
தொடர்புக்கு :
99623 66321 – 97916 53200
94448 36642 – 73974 04242
நன்கொடை : ₹ 30
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











