Saturday, May 24, 2025
முகப்பு பதிவு பக்கம் 338

நீ ஒரு இஸ்லாமியனா ? வெளியே வந்து பதில் சொல் !

இஸ்லாமியர்கள் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டிய முறை!

 

யாரோ கொலை செய்கிறார்கள்
யாரோ ரத்தம் சிந்துகிறார்கள்
ரத்தம் சிந்துபவர்களுக்காக நானும் கண்ணீர் சிந்துகிறேன்
ரத்தம் சிந்த வைப்பவர்களை நானும் சபிக்கிறேன்

“நீ ஒரு இஸ்லாமியனா
வெளியே வந்து பதில் சொல்” என
வீட்டிற்கு வெளியே யாரோ கூச்சலிடுகிறார்கள்
கதவுகளையும் ஜன்னல்களையும் வேகமாக தட்டுகிறார்கள்

நான் அப்போது என் தொழுகைப் பாயில் இருந்தேன்
நான் இன்னும் என் இரவு உணவை அருந்தவில்லை
என் குழந்தைகள் பயப்படுகிறார்கள்
என் இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் கொண்டு
வெளியே வருகிறேன்…
என்னிடம் ஆயுதங்கள் இல்லை என்பதை
நான் தினமும் நிரூபிக்க வேண்டியிருக்கிறது
மேலும் ஒரு வெள்ளைக் கொடியை நான்
தூக்கிப்பிடித்துக்கொண்டு வெளியே வருகிறேன்
அந்தக் கொடியை தினமும் துவைத்துப்போட்டு
தயாராக வைத்திருக்கிறேன்
ஒரு சமாதானப் புறாவை
பறக்கவிட்டபடியே வெளியே வருகிறேன்
அதற்காகவே நிறைய வெண்புறாக்களை
வீட்டில் வளர்க்கிறேன்
ஒரு இஸ்லாமியனாக பிறப்பது மிகவும் சிக்கலானது
எப்போதும் ஒரு ஆயத்த நிலையில்
இருக்க வேண்டும்

“நீதான் அந்தக் குண்டுகளை வெடித்தாயா? என்கிறார்கள்
“இல்லை’’ என்கிறேன்..
“நீ அவர்களுக்கு தங்குமிடம் அளித்தாயா?’’ என்கிறார்கள்
“இல்லை’’ என்கிறேன்

“அவர்களுக்கு பணம் கொடுத்தாயா?’’ என்கிறார்கள்
“இல்லை’’ என்கிறேன்
“அவர்களை பார்த்திருக்கிறாயா?’’ என்கிறார்கள்
“இல்லை’’ என்கிறேன்

“இந்தக் கொலைகளை ஆதரிக்கிறாயா?’’ என்கிறார்கள்
“இல்லை’’ என்கிறேன்
“உன் மதம் அதை ஆதரிக்கிறதா?’ என்கிறார்கள்
“இல்லை’’ என்கிறேன்

“நீ வணங்கும் கடவுளைத்தான்
கொலைகாரர்களும் வணங்குகிறார்களா?’’ என்கிறார்கள்
“எனக்குத் தெரியாது’’ என்கிறேன்

“நீ பின்பற்றும் மதத்தைத்தான் கொலைகாரர்களும்
பின்பற்றுகிறார்களா?” என்கிறார்கள்
“எனக்குத் தெரியாது’’ என்கிறேன்

“கொலைகாரர்கள் ஏன் உன்னைபோலவே
தாடி வைத்திருக்கிறார்கள்?’’ என்கிறார்கள்
“எனக்குத் தெரியாது’’ என்கிறேன்

“நீ அந்தக் கொலைகாரர்களை கண்டிப்பதாக
உரத்துச் சொல்ல முடியுமா?’’ என்கிறார்கள்
“நான் இந்தக் கொலைகள் நடப்பதற்கு முன்பே
இந்தக் கொலைகளை கண்டித்துவிட்டேன்
நான் தினமும் ஐந்து வேலை தொழுகிறேன்
ஆனால் தினமும் பத்துமுறை
பயங்கரவாதிகளை கண்டிக்கிறேன்’’ என்றேன்

“நீ கண்டித்த பிறகும் அவர்கள் கொலை செய்கிறார்கள் என்றால்
நீ அவர்களை சரியாக கண்டிக்கவில்லை என்றுதானே அர்த்தம்?” என்கிறார்கள்
“நான் வேண்டுமானால் பத்து முறைக்குப் பதில்
இனி நூறு முறை கண்டிக்கட்டுமா?’’ என்கிறேன்

“நீயும் நாளை ஒரு இஸ்லாமிய பயங்கரவாதியாக மாறமாட்டாய்
என்று என்ன உத்திரவாதம்’’ என்கிறார்கள்
“எனக்கு ரத்தத்தைக் கண்டால் மிகவும் பயமாக இருக்கும்
மேலும் உயிரோடிருப்பதைத் தவிர
வாழ்க்கையில் எனக்கு வேறு எந்த இலட்சியமும் இல்லை’’ என்கிறேன்

“நீ இந்தக் கொலைகளுக்கு ஏன்
பொறுப்பேற்றுக்கொள்ள மறுக்கிறாய்’’ என்கிறார்கள்
“எனக்கு நிறைய குடும்பப் பொறுப்புகள் இருக்கின்றன
என் குழந்தைகளுக்கு நான் பொறுப்பாக இருக்கிறேன்
என் வேலைக்கு பொறுப்பாக இருக்கிறேன்
என் நோய்களுக்கு பொறுப்பாக இருக்கிறேன்
என் துயரமான தலைவிதிக்கு பொறுப்பாக இருக்கிறேன்
மேலும் இந்த தேசத்திற்கு வேறு பொறுப்பாக இருக்க வேண்டியிருக்கிறது
இதில் நான் கொலைகளுக்கு எங்கே பொறுப்பேற்பது?’’
என்கிறேன் விரக்தியோடு

“இவ்வளவு கொலைகளுக்குப் பிறகு
நீயும் உன் கடவுளும் இஸ்லாமியர்களாக
இருக்கத்தான் வேண்டுமா?’’ என்கிறார்கள்
“இருவரும் அதைப்பற்றி விரைவில்
பேசி ஒரு முடிவெடுக்கிறோம்’’
என்று வாக்குறுதி அளிக்கிறேன்

பிறகு அவர்கள் என் ஆடைகளை களைந்து சோதித்தார்கள்
நான் ஒரு இஸ்லாமியன் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டதும்
நிர்வாணமாக ஒரு மைதானத்திற்கு அழைத்துச் சென்றார்கள்
அங்கே இன்னும் நிறையபேர் நின்றுகொண்டிருந்தார்கள்
பயங்கரவாதத்திற்கு எதிரே கத்தும்படி கட்டளையிட்டார்கள்
நான் ஏற்கனவே கத்திவிட்டதை சொன்னேன்
மறுபடி கத்து என்றார்கள்
கத்தினேன்

“சத்தம் ஒழுங்காவே வரவில்லை’’
என்று தலையில் அடித்தார்கள்
நான் இன்னும் சத்தமாக கத்தினேன்
“பயங்கரவாதிகளுக்கு கேட்கும்படி கத்து’’ என்றார்கள்
இயற்கையாகவே நான் மென்மையான குரல் உடையவன்
என் தொண்டை கிழியும்படி கத்தினேன்
எல்லோரும் சேர்ந்து கத்தினோம்
அந்தக் காட்சி பயங்கரமானது
அந்தக் காட்சி அவலமானது

இந்த உலகத்தில்
சமாதானத்தைக்கொண்டு வரும் பொறுப்பு
எங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது
விடிய விடிய கத்திக்கொண்டே இருந்தோம்

நன்றி : மனுஷ்ய புத்திரன்

அண்ணாமலை பல்கலை : விடுதி கட்டண உயர்வுக்கு எதிராக மாணவிகளின் உறுதியான போராட்டம் !

0

ன்பார்ந்த மாணவர்களே, இளைஞர்களே, பேராசிரியர்களே..

கடந்த 10-04-2019 அன்றைய தேதியில் இருந்து இரவு, பகல் என மாணவ, மாணவிகள் நான்கு நாட்களாக அண்ணாமலை பல்கலைக்கழக விடுதிகளில் திடீரென ரூ.24,000 -ஆக உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர்.

அதில் துணை வேந்தர் முருகேசன் அவர்கள் உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்வதாக ஒத்துக்கொண்டார். இந்த உத்தரவை எழுத்து மூலமாக அனைத்து விடுதி தகவல் பலகையில் ஒட்டவேண்டும் என்று மாணவர்கள் கோரினார்கள்.

படிக்க:
விடுதிக் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய் | அண்ணாமலை பல்கலை மாணவர் போராட்டம் !
அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள் – நவீன சேரிகள் !

இதையெல்லாம் நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்ட துணை வேந்தரும் பல்கலைக்கழக நிர்வாகமும் மாணவர்களிடம் கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, மீண்டும் முன்னைவிட இரண்டு மடங்காக (ரூ.48000) -ஆக கட்டணத்தை உயர்த்தியுள்ளது. தற்போது பல்கலைக்கழக தேர்வு நெருங்கி வரும் நேரத்தில், பணம் கட்டச் சொல்லி மிரட்டுகிறது. உயர்த்தப்பட்ட இக்கட்டணத்தை கட்டத்தவறும் மாணவர்களுக்கு தேர்வுக்கான ஹால் டிக்கட் வழங்க முடியாது என்று பல்கலை நிர்வாகம் மாணவர்களை மிரட்டி வருகிறது. இதற்கு அடிபணியாத மாணவிகளோ மீண்டும் கடந்த 27-ம் தேதி அடுத்தகட்ட போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

முதற்கட்ட போராட்டத்தைப் போலவே, தற்பொழுதும் இரவிலும் தாமரை விடுதி மாணவிகள் தங்கள் உறுதியான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திவருகின்றனர்.

நைச்சியமாகப் பேசி மாணவர்களின் ஆரம்பகட்டப் போராட்டத்தைக் கலையச் செய்துவிட்டு, தேர்வின் விளிம்பில் மாணவர்களை இக்கட்டான சூழலில் நிறுத்து வைத்து பணம் பறிக்கத் திட்டமிடுகிறது பல்கலை நிர்வாகம். மாணவர்களின் எதிர்காலத்தை பணயமாக வைத்து பல்கலை நிர்வாகம் ஆடும் இந்த மோசமான ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மாணவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர்.


பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த. கணேசன் அவர்களின் கண்டனம் :

போராட்டத்தில் விடுதி மாணவிகள் (முகநூல் வீடியோக்கள்) :

 

குழந்தைகள் வார்த்தைகளின் கடலில் குளிக்கின்றனர் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 2

வார்த்தைகளின் படிகத்தன்மை !

இசை நயத்தோடு, இனிமையாக பள்ளி மணி ஒலிக்கிறது …

நான் கதவை மூடுகிறேன். கதவிற்கு வெளியே ஒரு சில அம்மாக்களும் பாட்டிகளும் உள்ளனர். வகுப்பறையில் ஐந்து அம்மாக்கள் உட்கார்ந்திருக்கின்றனர்.

”எழுந்து நில்லுங்கள், குழந்தைகளே!”

குழந்தைகள் துள்ளியெழுந்து நின்றபடியே ”அடுத்து என்ன நடக்கப் போகிறது?” என்று என்னைப் பார்க்கின்றனர்.

”குழந்தைகளே, வணக்கம்!”

அவர்கள் பலவாறாக முகமன் கூறுகின்றனர். பரவாயில்லை, சீக்கிரம் பழகிவிடுவீர்கள். ”குழந்தைகளே, வணக்கம்!” என்று நான் எனக்கே உரித்தான தொனியில் கூறுவது உங்களைச் சந்திப்பதில் எனக்குள்ள மகிழ்ச்சியை எப்படி குறிக்குமோ அதே போல் நீங்கள் கூறும் முகமன் என்னைச் சந்திப்பதில் உள்ள மகிழ்ச்சியைக் குறிக்கும். இன்று என் தொனியில் எனக்கு திருப்தியில்லை. வகுப்பு துவங்கும் முன் வந்த அந்த அதிகார தோரணையுள்ள பெண்மணி என் மனநிலையை மோசமாக்கி என்னைப் பதட்டமடைய செய்ததற்காக அவள் மீது குற்றஞ்சாட்டுகிறேன்.

”உட்காருங்கள்… நான் உங்கள் ஆசிரியர். உங்களுடைய பள்ளி வாழ்க்கை இன்று துவங்குவது குறித்து வாழ்த்துக்கள். பாடங்களை படிக்கத் துவங்க வேண்டுமென நீங்கள் துடித்துக் கொண்டிருப்பீர்கள். சரி, ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காது ஆரம்பிப்போம் வாருங்கள் … நமது முதல் பாடம் நம் தாய்மொழிப் பாடம். உங்கள் தாய் மொழி என்ன என்று தெரியுமா?”

”ஜார்ஜிய மொழி!”

”உங்கள் ஒவ்வொருவருக்கும் ஏராளமான ஜார்ஜியச் சொற்கள் தெரியும். எங்கே, இச்சொற்களை இந்த அட்டைப்பெட்டியில் சேகரிக்கலாம் வாருங்கள்!”

என் கரங்களில் அழகிய சிறு அட்டைப்பெட்டி இருக்கிறது. இதே போன்ற சிறு பெட்டிகள் குழந்தைகளின் முன் உள்ளன: நேற்றே நான் ஒவ்வொரு குழந்தையின் மேசையிலும் சிறு அட்டைப்பெட்டியை வைத்தேன். இந்த அட்டைப்பெட்டியில் பத்து நீல நிற அட்டைக் குறிவில்லைகளை வைத்தேன். இந்த நீல நிற செவ்வக அட்டைக் குறிவில்லை ஒவ்வொன்றும் ஒரு சொல்லைக் குறிக்கும். “ஒவ்வொரு சொல்லையும் தெட்டத்தெளிவாக, எல்லோருக்கும் கேட்கும்படி உச்சரிக்க வேண்டும்; ஒவ்வொரு சொல்லையும் உச்சரிக்கையில் இந்த அழகிய அட்டைப்பெட்டியில் ஒவ்வொரு குறிவில்லையையும் போட வேண்டும். இலிக்கோ இந்த அட்டைப்பெட்டியை எடுத்துச் சென்று உங்கள் சொற்களை சேகரிப்பான்”.

இலிக்கோ தயார். குழந்தைகள் தம் கரங்களில் குறிவில்லைகளை எடுத்துக் கொண்டனர்.

”முதல் சொற்களை நான் அட்டைப்பெட்டியில் போடட்டுமா?”

ஒவ்வொரு சொல்லையும் நான் தேர்ந்தெடுத்து உச்சரித்து இலிக்கோவின் அட்டைப்பெட்டியில் குறிவில்லைகளைப் போடுகிறேன்: தாய்நாடு… மகிழ்ச்சி…. அன்பு….

இலிக்கோ மெதுவாக குழந்தைகளின் வரிசைகள் ஊடாக நடக்கிறான். முதற்சொற்களையடுத்து குறிவில்லைகள் அட்டைப் பெட்டியில் குவிகின்றன: பந்து, பெஞ்சு, மேசை, பென்சில், புத்தகம், மிதிவண்டி, பொம்மை…

இல்லையில்லை, இவை சொற்கள் அல்ல, இவை பொருட்கள்! பொருட்களினால் குறிவில்லைகள் குவிகின்றனவே தவிர சொற்களால் அல்ல. வகுப்பில் தாம் பார்ப்பதை அல்லது வீட்டிலோ, வேறெங்கோ பார்த்ததை குழந்தைகள் கூறுகின்றனர். ”காற்று” எனும் சொல்லைப் பார்க்க முடியாது, ஆகையால் எனது 38 மாணவர்களில் ஒருவர் கூட இச்சொல்லை உச்சரிக்கவில்லை. இதோ சான்ட்ரிக்கோ எழுந்து நின்று, வாயைத் திறந்தபடி, கரும்பலகை, சாக்பீஸ் என்று உச்சரித்து இரண்டு குறிவில்லைகளைப் போடுகிறான். பின் இன்னும் எந்தப் பொருளை இப் பெட்டியில் போடலாம் என்று யோசித்தபடி அறையை சுற்றும் முற்றும் பார்க்கிறான். ருசிக்கோ ”வீடு” என்று சொல்லி குறிவில்லையைப் போட்டு விட்டு நிறுத்தினாள். விக்டர் இவ்வீட்டை சுவர், கூரை, தரை, பால்கனி…. மலர்கள்… என்று தனித்தனியே பிரித்துக் கூறினான்.

அவர்கள் வார்த்தைகளின் கடலில் குளிக்கின்றனர். ஆனால், வார்த்தைகளைப் பார்க்கவில்லை; காட்டில் விளையாடுகின்றனர். ஆனால் மரங்களைப் பார்க்கவில்லை. அவர்களைப் பொறுத்த மட்டில் யதார்த்தம் என்ற வகையில், விசேஷ உலகம் என்ற வகையில் வார்த்தைகள் இல்லை. குழந்தைகளுக்கு வார்த்தைகள் கண்ணாடியைப் போல் ஒளிபுகும் தன்மையுள்ளவை. இவற்றின் ஊடாகப் பொருட்கள் தெரியும் என்று விஞ்ஞானம் கூறுகிறது. ஆனால், அக்கண்ணாடி தனியே தெரிவதில்லை!

நான் இக்கண்ணாடியின் மீது அடர்த்தியான ”வண்ணம் பூசி” இதன் வழியாகப் பார்க்கையில் ஒன்றும் தெரியாத படி செய்கிறேன். அப்போது குழந்தை தன் பேச்சுப் பிரவாகத்தை நிறுத்தி, தனக்காக பல்வண்ண யதார்த்தத்தை திறப்பான், தன் பேச்சை செழுமைப்படுத்தி, மேம்படுத்தி, மெருகிடத் துவங்குவான். கண்ணுக்குத் தெரியும் பொருட்களிலிருந்து குழந்தைகளின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும். இந்த மந்திர வட்டத்திலிருந்து அவர்கள் விடுபட உதவ வேண்டும். இலிக்கோவுடன் சேர்ந்து நான் வகுப்பறையின் நடுவில் நின்று விடுகிறேன்.

”நான் இன்னும் சில சொற்களை சொல்லட்டுமா?”

நீல நிறக் குறிவில்லைகளைப் போட்டபடியே சொற்களைத் தேர்ந்தெடுத்து சொல்கிறேன்:

”அழகிய… நாளைய…”

இப்போது நானும் இலிக்கோவும் அட்டைப்பெட்டியைக் கையில் ஏந்தியபடி விரைந்து நடை போடுகின்றோம். அட்டைப்பெட்டியில் ”போடப்படும்” சொற்களைத் திரும்ப உச்சரிக்குமாறு நான் இலிக்கோவின் காதில் முணு முணுக்கிறேன்.

அவர்கள் வார்த்தைகளின் கடலில் குளிக்கின்றனர். ஆனால், வார்த்தைகளைப் பார்க்கவில்லை; காட்டில் விளையாடுகின்றனர். ஆனால் மரங்களைப் பார்க்கவில்லை. அவர்களைப் பொறுத்த மட்டில் யதார்த்தம் என்ற வகையில், விசேஷ உலகம் என்ற வகையில் வார்த்தைகள் இல்லை.

”அன்பு….. மென்மை … கனவு…..”

”நன்றி, மாயா!”

”நேற்று… வேண்டும். குதிக்கிறான். நிமிடம்…”

”நன்றி, சாஷா!”

”விருப்பம்… பறக்கின்றன…”

மாரிக்கா நீண்ட நேரம் யோசித்து, குறிவில்லையை எறிந்து விட்டு மகிழ்ச்சியாகக் கத்துகிறாள்:

”மூக்கு…”

கியோர்கியும் ருசுதானும் மனித உடலை மீண்டும் பகுதி – பகுதிகளாகப் ”பிரித்தனர்”:

”தலை….. முடி… காதுகள்… வாய்….. பற்கள்…” மீண்டும் இப்படியாகத் தொடர்ந்தது…

சரி. ”கண்ணாடிக்கு வண்ணம் பூசும் கடமையை” இன்று நிறைவேற்ற இயலாது. ஒரே ”வண்ணத்தைக்” கொண்டும் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது. வேறொரு ”வண்ணத்தை” பயன்படுத்த முயற்சிக்கிறேன். யாருக்கெல்லாம் நூறு வரை எண்ணத் தெரியுமெனக் கேட்கிறேன்: ”அட்டைப்பெட்டியில் நாம் எவ்வளவு சொற்களைச் சேர்த்துள்ளோம் என்று எண்ண வேண்டும்!” இலிக்கோ, தேன்கோ , மாயா மூவரும் இதைச் செய்யத் தயார். ”சரி, இடைவேளையின் போது இச்சொற்களை எண்ணி எனக்குச் சொல்லுங்கள்!” அடுத்த பயிற்சிக்கு வருகிறேன்.

”நான் மெதுவாக, சற்றே இழுத்தபடி, கிசுகிசுவென, ஒரு சொல்லை உச்சரிக்கப் போகிறேன். இது என்ன சொல் என்று கண்டுபிடியுங்கள்.”

மெதுவாகவும் இழுத்தபடியும் சொல்லக் காரணம், குழந்தைகள், வார்த்தையின் ஒலியமைப்பை ”நிறுத்தி”, அதை உற்றுக் கவனிக்க வேண்டும் என்பதாகும். மேலும் இவர்கள் சொல்லின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும், அரிச்சுவடிக் கட்டத்தில் இச்சொற்களை இவர்கள் இதே மாதிரி இழுத்தபடி உச்சரிப்பார்கள். கிசுகிசுவென சொல்லக் காரணம், கேட்கும் திறனை, ஒலி இயல் ரீதியான செவியுணர்வை வளர்ப்பது ஆகும். அதோடு கூட கவன உணர்வையும் அதே சமயம் சிறிது விளையாட்டு தன்மையையும் வளர்க்க வேண்டும். நான் கரும்பலகையருகே நின்று கொண்டு சற்றே முன்னுக்குச் சாய்ந்து ரகசியத்தை சொல்வது போல் முணு முணுக்கிறேன்:

”அஅஅஅம்ம்ம்ம்ம்மாமாமா…”

முதல் ஒலியாகிய ‘அ’விற்குப் பின் எழுத்தால் குறிக்கப்பட முடியாத ஏதோ ஒரு ஒலியை எழுப்புகிறேன்; இந்த குறிப்பிடப்பட முடியா ஒலியை 2-3 நொடிகளுக்கு இழுக்கிறேன். இதற்குப் பிந்தைய ஒலிகளையும் இதே போல் உச்சரிக்கிறேன். நான் ஒவ்வொரு ஒலியையும் தனித்தனியே பிரிப்பதில்லை. இவற்றைத் தனியான, சுயமான அலகுகளாகப் பிரித்துக் காட்டுவதில்லை.

”‘அம்மா’…. நீங்கள் ‘அம்மா’ என்று சொன்னீர்கள்!” குழந்தைகள் உரக்கக் கத்துகின்றனர். ஆனால், எல்லாக் குழந்தைகளும் இப்படிக் கத்தவில்லை. பலருக்கு யோசித்துப் பார்க்கவே நேரம் போதவில்லை, மற்றவர்கள் முந்தி விட்டனர். ஒவ்வொருவரும் தம் பதிலை என் காதில் மெதுவாகச் சொல்லும் முறையை அமல்படுத்த வேண்டும். முதலில், இம்முறை குழந்தைகளுக்குப் பிடிக்கும், இரண்டாவதாக, பலரின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யலாம்.

”இப்போது நான் வேறொரு வார்த்தையை உச்சரிப்பேன். யாருக்குப் பதில் தெரியுமோ அவர்கள் பதிலை என் காதில் மெதுவாகச் சொல்ல வேண்டும்! புரிந்ததா?” அதே போல் ரகசியமாக, இன்னமும் மெதுவாக, சரிவரக் கேட்காதபடி உச்சரிக்கிறேன்: ”தா…யயயயககககம்ம்ம்ம்.”

முதல் கரங்கள் உயர்ந்தன. ஒவ்வொருவரையும் அணுகி, குனிந்து காதை நீட்டுகிறேன். குழந்தைகள் இரு கரங்களாலும் என் கழுத்தைக் கட்டிப் பிடித்தபடி என் காதருகே வாயை வைத்துத் தம் பதில்களைச் சொல்கிறார்கள். ”நல்லது, நன்றி!” சரியான பதில் சொல்பவர்களைப் பார்த்து உரக்கச் சொல்கிறேன்.

மற்றவர்களிடம் ”நன்கு யோசி… தா…யயககம்ம்…. திரும்ப உன்னிடம் வருவேன்” என்று மெதுவாகக் கூறுகிறேன். கிட்டத்தட்ட அனைவரும் என் காதுகளில் தம் பதில்களைச் சொல்லிவிட்டனர். நான் மீண்டும் என் வலது கையை முன்னுக்கு நீட்டியபடி கரும்பலகையருகே நிற்கிறேன்.

”நான் கையை அசைத்ததும் நீங்களனைவரும் சேர்ந்து நமது ரகசியச் சொல்லைக் கூற வேண்டும்!… தயாரா… எங்கே, வார்த்தையை நாக்கிற்குக் கொண்டு வாருங்கள்…”

படிக்க:
பொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் !
மாட்டுக்கறி மக்கள் உணவு ! மோடி பருப்பு இங்கே வேகாது ! வீடியோ

காற்றில் எதையோ பிடிக்கப் போவது போல் நான் வேகமாகக் கையை வீசியதும் வகுப்பறையில் குழந்தைகளின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கிறது:

”தாயகம்!” நான் மீண்டும் ஏதோ ரகசியத்தைச் சொல்லும் பாணியில் நின்றபடி முணுமுணுக்கிறேன்:

”ரொட்ட்ட்ட்டிடிடிடி.”

உடனடியாக சாதாரண நிலைக்கு வந்து சொல்கிறேன்:

”யோசியுங்கள்!… வார்த்தையை நாக்கிற்குக் கொண்டு வாருங்கள்!.. எங்கே !..”

குழந்தைகள் மகிழ்ச்சியோடு உச்சரிக்கும் ”ரொட்டி” என்ற சொல்லை காற்றில் ”பிடிக்கிறேன்”. ஏதோ மந்திரத்தால் கட்டிப் போடப்பட்டதைப் போன்ற ஒரு நிலையில் அவர்கள் அடுத்த வார்த்தைக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர். ஒவ்வொரு பத்து வினாடிகள் கழிந்ததும் ”கனவு”, ”சூரியன்”, ”கோளம்” என்ற சொற்கள் உரக்க ஒலிக்கின்றன. பின்னர் விரைவாக எல்லோரையும் சுற்றி வருகிறேன், குழந்தைகளின் சுரங்கள் என்னைத் தம்மை நோக்கி இழுக்கின்றன, உதடுகள் பதில்களை முணு முணுக்கின்றன.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

பொன்பரப்பி வன்கொடுமை : தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு !

27.04.2019

பொன்பரப்பியில் தலித் மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து  மக்கள் அதிகாரம் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு  இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்யத் திட்டமிட்டு இருந்தோம். தமிழகம் முழுவதும் சொல்லி வைத்தாற்போல  ஆர்ப்பாட்டத்திற்கு முந்தைய நாள் அனுமதியை மறுத்திருக்கிறது போலீசு. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையான காரணங்களைக்கூறி அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்ட இடங்களில் போலீசு கூறியுள்ள காரணங்கள் :

திருச்சி போலீசு கூறியுள்ள காரணம்

“திருச்சிராப்பள்ளி மாவட்ட பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி பாராளுமன்றத் தொகுதி  மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக திருச்சிராப்பள்ளி தொகுதியில் 12.04.2019, 13.04.2019, 14.04.2019 ஆகிய நாட்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடத்துவதற்கு அனுமதி வழங்கக்கோரி மனு வரப்பெற்றுள்ளது.

காவல் துணை ஆணையர் கடிதத்தில் தெருமுனைக்கூட்டங்கள் நடத்தக்கோரும் இடங்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ள காரணத்தால் மேற்படி தெருமுனைக்கூட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நேர்வில் மனுதாரர் கோரியுள்ள 9 இடங்களில் 12.04.2019 முதல் 14.04.2019 வரை தெருமுனைக்கூட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது ”

திருச்சி, விக்னேஷ் ஓட்டல் அருகில் 29.04.109 அன்று மாலை 6.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டபோது போலீசு கூறிய காரணம்

“பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருவதால் தேர்தல் நடத்தை விதிகள் 23.05.2019 வரை நடைமுறையில் இருப்பதால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

தாங்கள் மனுவில் கோரியுள்ள படி ஆர்ப்பாட்டம் நடத்தும்பட்சத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் தங்களுக்கு 29.04.2019-ம் தேதி மாலை 18.30 மணிக்கு திருச்சி ஜங்சன் விக்னேஷ் ஹோட்டல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.”

சென்னைப்போலீசு கூறியுள்ள காரணம்

“சென்னை நகரில் பொது இடங்களில் குழுமி போராட்டம் நடத்துவதற்கு தமிழ்நாடு நகர காவல் சட்டம் விதி 41-ன்படி குறைந்தது ஐந்து தினங்களுக்கு முன்னதாக அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் , மனுதாரர் 25.04.2019 அன்று நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில்  ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி 22.04.2019 அன்று விண்ணப்பித்துள்ளார். நடத்துவதற்கு தமிழ்நாடு நகர காவல் சட்டம் விதி 41-ன்படி ஐந்து முழுதினங்களுக்கு முன்னதாக அனுமதி கோரிய மனு பெறப்படவில்லை.

மேற்குறிப்பிட்ட காரணத்தினால், பொதுமக்கள் நலன், சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை பேணிக்காக்க வேண்டியதன் அவசியத்தினாலும் மனுதாரர் 25.4.2019 அன்று மாலை 4.00 மணி  முதல் மாலை 5 மணிவரை , நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. ”

தருமபுரி மாவட்டப் போலீசு கூறியுள்ள காரணம்

“தாங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியது தொடர்பாக பரிசீலனை செய்ததில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதாலும், தற்போது நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், மேற்படி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியளிக்கும்பட்சத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதுவதாலும், தாங்கள் 25.04.2019-ம் தேதி மாலை 04.00 மணிக்கு தந்தி அலுவலகம் அருகில் நடத்தக்கோரிய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.”

விருதாச்சலம் போலீசு கூறியுள்ள காரணம்

“விருதாச்சலம் உதவி கண்காணிப்பாளர் கடிதத்தில் விருதாச்சலம் உட்கோட்ட காவல்நிலைய எல்லைகளில்30(2) காவல் சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது என்றும் மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வரும் நிலையில், கடலூர் மாவட்டம் அருகில் உள்ள அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தில் ஜாதியினருக்கிடையில் கட்சி ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும்  கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகிறது என்றும், மேற்படி பொன்பரப்பி பிரச்சினை தொடர்பாக உட்கோட்ட எல்லையான பெண்ணாடம் காவல் நிலைய எல்லை செளந்திரசோழபுரம் கிராமத்தில் இரு தரப்பினருக்கிடையில் ஜாதி மோதல் ஏற்பட்டு வழக்கு பதிவு செய்து,  தற்போது  மேற்படி கிராமம் விருத்தாசலம் காவல்நிலைய எல்லை மணலூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுத்தை சிவகுமார் (எ) சிவக்குமார் வயது 40, த/பெ ராஜாங்கம் என்பவர் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட சாதியினரைப்பற்றி அவதூறாகப்பேசி காணொலி வெளியிட்டதில் பல்வேறு இடங்களில் சர்ச்சை பரவியதால் மேற்படி நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் இரு ஜாதியினருக்கிடையே கருத்து மோதல்கள் உருவாகி மாவட்டத்தில் அசாதாரண  சூழ்நிலை ஏற்படும் நிலை உள்ளது என்றும், எனவே  பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக, மக்கள் அதிகாரம் அமைப்பினர், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட இயலாது என்று காவல்துறையினரால் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிக் கொடுத்துக்கொண்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று மனுதாரருக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.  ”

திருப்பூர் மாவட்டப் போலீசு கூறியுள்ள காரணம்

“தற்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வருவதால் ஒரு குறிப்பிட்ட அமைப்பிற்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியளிக்கும்பட்சத்தில் அந்த அமைப்பை எதிர்ப்பவர்கள் ஒன்றுகூடி  இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட  வாய்ப்பிருப்பதாக இரகசிய தகவல் உள்ளதாலும், நிகழ்ச்சி நடைபெறும் தேதிக்கு 5 நாட்களுக்கு முன்னதாக காவல்நிலையத்தில் மனு கொடுக்கப்படவில்லை என்பதாலும் நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியுள்ள இடம் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக இருப்பதாலும், அவ்விடம் பேருந்து நிறுத்தம்  இருப்பதாலும், இரயில் பயணிகள் மற்றும் பேருந்தில் பயணம் செல்வோர் குமரன் சிலை வழியாகத்தான் கடந்து செல்ல வேண்டி இருப்பதால்  பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு ஏற்படும் என்பதாலும், திருப்பூர் மாநகரில் தமிழ்நாடு மாநகர காவல் சட்டம்1888, சட்டப்பிரிவு 41 அமுலில்  உள்ளதாலும், மேற்படி இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது.”

கருத்து தெரிவிக்கும் உரிமை என்பதை அரசியலமைப்புச்சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுள் ஒன்று. மேற்கூறியுள்ளதைப் போன்ற காரணங்களைச் சொல்லி  ஜனநாயக உரிமையை மறுக்கக்கூடாது என்றுதான் சட்டம் சொல்கிறது. ஆனால் எவ்வித சட்டத்துக்கும் உட்படாமல் போலீசு செயல்பட்டு வருகிறது.

சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய போலீசு அதைச்செய்யாமல் குற்றவாளிகளோடு கூட்டு சேர்ந்து இருப்பதுதான் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்குக் காரணம். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பது பொய்.

ஒவ்வொரு இடத்திலும் ஏதாவது ஒரு காரணத்தைப் புனைந்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது  மக்கள் அதிகாரம் அமைப்புக்கு மட்டும் அனுமதி கொடுக்கக்கூடாது என்ற நவீன தீண்டாமையை போலீசு நடைமுறைப்படுத்தி வருகிறது. வாக்காளர் பெயர் நீக்கம், வீடு தேடி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது, கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியின் வாகனத்தை அடித்து நொறுக்கியது, தலித் மக்களை வாக்களிக்க விடாமல் செய்தது போன்ற எத்தனையோ வன்முறைகளுக்கு மத்தியில் தேர்தல் நிறுத்தப்படவில்லை. அதை நடத்தியே முடித்தது அரசு.  கேட்டால் அது ஜனநாயக கடமை என்கிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கு மட்டும் ஜனநாயக உரிமை இல்லை.  அதை மறுக்கும் இந்த போலீசுக்கும் பொன்பரப்பியில் தலித் மக்களை ஓட்டுப் போடவிடாமல் தடுத்தும் தாக்குதல் நடத்தியும்  அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்தவர்களுக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை.

படிக்க:
அரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்!
பொன்பரப்பி வன்கொடுமை : போலீசும் உடந்தை ! கடலூர் மக்கள் அதிகாரம் ரிப்போர்ட் !

விவசாயியின்  வாழ்வை அழிக்கும் ஹைட்ரோகார்பன், கெயில் – மீனவர்களின் வாழ்வை அழிக்கும் சாகர் மாலா- மாணவர்களின் வாழ்வை அழிக்கும் நீட் – வியாபாரிகள், தொழிலாளர்களின் வாழ்வை அழித்த ஜிஎஸ்டி, சிறுபான்மை தலித் மக்களை கொன்றுகுவிக்கும் காவி பாசிசம் இப்படி எதையும் பேசக்கூடாது என்கிறது போலீசு.

மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பறிக்கும் அரசு , அதற்கும் சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு என்று கூறி மக்கள் மீதே பழியைப்போடுகிறது. இந்த அராஜகத்துக்கு எதிராக நாம் ஓரணியில் திரண்டு போராடுவதே இப்போது நம் முன் உள்ள கடமை.


தோழமையுடன்,
சி.ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.

பாய்ங்க மட்டுந்தான் மாட்டுக்கறி சாப்பிடுறாங்களா .. வேற யாரும் இல்லையா | வீடியோ

குறைந்த விலையில் புரோட்டீன் சத்து கிடைக்கச் சிறந்த உணவு மாட்டுக்கறி. தமிழகத்தின் பெரும்பாலான உழைக்கும் மக்களையும் அவர்களது குழந்தைகளையும்  ஊட்டச்சத்துக் குறைவிலிருந்து காப்பாற்றுவதும் இந்த மாட்டுக்கறிதான்.

பசு – புனிதம் என்ற பெயரில் வட இந்தியாவில் மாட்டுக்கறியைத் தடை செய்வதில் வெற்றி கண்டிருக்கும் பாஜக மற்றும் சங்க பரிவாரக் கும்பல், தமிழகத்தில் அந்தப் பண்பாட்டை புகுத்த முயற்சிக்கிறது.

சங்க பரிவாரத்தின் இந்த முயற்சிகளுக்கு தமிழர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று அறிய சென்னை பட்டூரில் உள்ள மாட்டுக்கறி விற்பனைப் பகுதிக்கு வினவு செய்தியாளர்கள் சென்றனர். அங்கு வந்திருந்த  வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் … இதோ…

பாருங்கள் ! பகிருங்கள் !

இலங்கை குண்டுவெடிப்பும் – சவுதி வஹாபியிசமும் !

லங்கை குண்டுவெடிப்பு சம்பவம் உலகு தழுவிய அளவில் ஒரு பெருங்குழப்பத்தையும், பேரச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலை முகாந்திரமாகக் கொண்டு மொத்த இலங்கைக்கும் எதிரியாக இசுலாமியர்கள் காட்டப்படலாம்.

கடந்த தசாப்தங்களில் நிகழ்த்தப்பட்ட “அரபி மயமாக்கம்” மற்றும் வகாபியிச சோதனை முயற்சிகள் அதற்கான முகாந்திரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. இதனை பாரதூரமாக உணர்ந்து உடன் செய்ய வேண்டியது என்ன? பெரும்பான்மை அப்பாவி இசுலாமியர்கள் தாக்குதலுக்கு இலக்காகாமல் தடுக்க செய்யப்பட வேண்டியது என்ன ? என்பது குறித்த உரையாடலைத் தொடங்குகிறது இப்பதிவு.

*****

ஃபாத்திமா மஜிதா

நடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் அரசினை மட்டுமே நாங்கள் பொறுப்புக்கூறுவது ஒரு வித தப்பித்தல் முறை. ஒரு வித அச்சம் சார்ந்த முறை.

தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்கள் அல்ல, அவர்கள் பயங்கரவாதிகள், அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்று சப்பைக் கட்டுவதை நிறுத்துங்கள். கூட எங்களை நாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளாவிட்டால் எங்கேயோ போய் முட்டி மோதி விடுவோம்.

கிட்டத்தட்ட இரு சகாப்தத்தின் முன்னால் போய் நின்று பார்க்கின்றேன். என்னையும் என்னைச் சுற்றி இருந்தவர்களும் படித்த பாடசாலை, பல்கலைக்கழகங்கள், வேலை செய்த இடங்கள் எல்லாவற்றிலும் மனிதம் மட்டுமே இருந்தன. படிப்படியாக அரேபியக் கலாச்சாரம் தலைக்கு ஏறத் தொடங்கியது. முஸ்லிம் , காபிர் என்ற பிரிவினைவாதப் போக்கினை இந்த ஒற்றைக் கலாச்சாரம் ஏற்படுத்தி விட்டது.

அன்று நாம் சாப்பிட்ட நாரிசாச் சோறு , பராத் ரொட்டி , போன்ற எல்லாவற்றினையும் ஹராம் என்ற ஒற்றைக் கதவு போட்டு அடைத்து விட்டார்கள். ஒவ்வொருவரும் அடுத்த சமூகத்திலிருந்து பிரித்து விடப்பட்டுள்ளோம். நான் ஐந்து வயதாக இருக்கின்ற பொழுது எனது ஆடையை பற்றி கேள்வி எழுப்பாத மதரஸாக்கள் இன்று எனது எட்டு வயது மகள் கருப்பு ஹபாயாவினை (பர்கா) அணிந்து வந்தால் தான் ஓத முடியும் என்று சட்டம் வகுக்கின்றது.

பாவாடை சட்டை தாவணி அணிந்து பாடசாலை சென்ற ராத்தா பல்கலைக்கழகம் செல்கின்ற அவளது மகளுக்கு கண்கள் இரண்டு மட்டும் தெரியும் விதமாக ஹபாயாவினை போர்த்தி அனுப்பி வைக்கின்ற சூழல். தெருவுக்குத் தெரு பள்ளிவாசல், காபிர், ஷைத்தான் என்று கதறுகின்ற ஒலி பெருக்கிகள். போதாக்குறைக்கு நோன்பு , பெருநாள் காலங்களில் பேரீச்சம் பழமும் குர்பான் இறைச்சியும் கொடுத்து இந்த அப்பாவிச் சனங்களை போட்டோ எடுக்கின்ற சகிப்புத் தன்மையற்ற வகாபிசத்தின் கொடூரங்கள்.

எல்லாவற்றினையும் நாங்கள் பார்த்தும் பார்க்காமலும் இருந்த இந்த நோயின் கடைசித் தருணம் தீவிரவாதமாக மாறி உயிர்களை பலியெடுக்கின்ற நிலைமை. இந்த குறிப்பிட்ட தீவிரவாத அமைப்பின் நடவடிக்கைகளினால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இக்கட்டான நிலையில் நிற்கின்றது.

இனிமேலாவது சவுதியின் கைக்கூலிகளான இத்தீவிரவாதப் போக்கினை கண்டுகொள்ளாமல் விடுவது முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது. ஆனால் இந்த நிலைமையை விளங்கிக் கொள்ளாது நம்மை நாமே தப்பித்துக் கொள்ளவதை விட்டு இந்தத் தீவிரவாத நோயிலிருந்து எமது தலைமுறையை காப்பாற்ற முனையுங்கள்.

எங்களைச் சுற்றி என்ன நடந்தது எப்படியெல்லாம் நாங்கள் மூலைச் சலவை செய்யப்பட்டோம் என்பதை உணருங்கள்.

படிக்க:
♦ இலங்கை குண்டுவெடிப்பு
♦ இலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும் இலங்கை மக்கள் !

கலையரசன்

இல‌ங்கையில் ந‌ட‌ந்த‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ குண்டுவெடிப்பு ச‌ம்ப‌வ‌ங்க‌ள் தொட‌ர்பாக‌ எல்லோரும் ஒரு முக்கிய‌க் குற்ற‌வாளியை ப‌ற்றிப் பேச‌த் த‌ய‌ங்குகிறார்க‌ள். அதுதான் ச‌வூதி அரேபியா.

இல‌ங்கையில் இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாத‌ம் வ‌ள‌ர்வ‌த‌ற்கு முக்கிய‌க் கார‌ண‌ம் ச‌வூதி அரேபியா. பார‌ம்ப‌ரிய‌மாக‌ மித‌வாத‌த் த‌ன்மை கொண்ட‌ ஸூபி முஸ்லிம்க‌ளை, க‌டும்போக்கு வ‌ஹாபிய‌ர்க‌ளாக‌ மாற்றிய‌து ச‌வூதிப் ப‌ண‌ம்தான்.

கிழ‌க்கில‌ங்கையில் மாத்திர‌ம் ப‌ல‌ நூற்றுக் க‌ண‌க்கான‌ ப‌ள்ளிவாச‌ல்க‌ள், குரான் பாட‌சாலைக‌ள் ச‌வூதி நிதியில் க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. அங்கெல்லாம் ச‌வூதி பாணியிலான‌ வ‌ஹாபிச‌ இஸ்லாம் போதிக்க‌ப்ப‌ட்ட‌ நேர‌ம் யாராலும் த‌டுக்க‌ முடிய‌வில்லை.

இல‌ங்கைக்கு ச‌வூதி க‌லாச்சார‌ம் இற‌க்கும‌தி செய்ய‌ப்ப‌ட்ட‌ நேர‌ம் மித‌வாத‌ முஸ்லிம்க‌ள் அதை எதிர்க்காத‌ கார‌ண‌ம் என்ன‌? ஒரு கால‌த்தில் அபாயா அணிவ‌தை விசித்திர‌மாக‌க் க‌ருதிய‌, சேலை அணியும் இல‌ங்கை முஸ்லிம் பெண்க‌ள், எந்த‌ த‌ய‌க்க‌மும் இல்லாம‌ல் அபாயாவை ஏற்றுக் கொள்ளும் நிலைமை எப்ப‌டி உருவான‌து?

Arab wealthy princesஇந்த‌க் கேள்விக‌ளுக்கான ஒரே விடை ச‌வூதி அள்ளிக் கொடுத்த‌ ரியால்க‌ள் ப‌ல‌ர‌து வாய்க‌ளை அடைக்க‌ வைத்துள்ள‌ன‌. ச‌வூதியின் த‌லையீட்டை ச‌மூக‌ அபிவிருத்திக்கான‌ ப‌ங்க‌ளிப்பாக‌ க‌ருதிய‌ கால‌ம் ஒன்றிருந்த‌து. குறிப்பிட்ட‌ சில‌ முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ள் ச‌வூதி நிதியில் தான் த‌ம‌து தொகுதிக‌ளை அபிவிருத்தி செய்த‌ன‌ர் என்ப‌து அனைவ‌ருக்கும் தெரிந்த‌ விட‌ய‌ம்.

சோழிய‌ன் குடுமி சும்மா ஆடாது என்ப‌து போல‌ ச‌வூதி நிதியுத‌வியும் தான‌மாக‌ கிடைக்க‌வில்லை. அத‌ற்குப் பின்னால் ஒரு ம‌த‌ அடிப்ப‌டைவாத‌ வ‌ல்ல‌ர‌சின் மேலாதிக்க‌க் க‌ன‌வு இருந்த‌து. அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌த்தின் ஆசீர்வாத‌ம் இருந்த‌து.

இதைப் ப‌ற்றி எல்லாம் பேசாம‌ல் ந‌க‌ர்ந்து செல்லும் போக்கான‌து, எந்த‌க் கால‌த்திலும் பிர‌ச்சினையை தீர்க்க‌ உத‌வ‌ப் போவ‌தில்லை. மித‌வாத‌ முஸ்லிம்க‌ளுக்கும், இட‌துசாரிக‌ளுக்கும் சேர்த்து வ‌குப்பெடுக்கும் சில‌ முஸ்லிம் முற்போக்காள‌ர்க‌ள் கூட‌ இந்த‌ விட‌ய‌த்தை ப‌ற்றிப் பேசாம‌ல் க‌ட‌ந்து செல்கின்ற‌ன‌ர்.

ஃபாத்திமா மஜிதா

இலங்கையில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களையும் அடிப்படைவாத அமைப்புக்களாக பொதுமைப்படுத்திப் பார்த்தல் இன்னும் பிரச்சனைகளை அதிகரிக்கச் செய்யும் என்றொரு கருத்தை ஆண்கள் முன் வைக்கின்றனர்.

இங்கே நான் ஆண்கள் என்று குறிப்பிட்டுச் சொல்வது அவசியமானது. இவ்வமைப்புக்கள் அனைத்தின் மீதான எனது எதிர்மறையான விமர்சனப் பார்வை, தற்பொழுது நடைபெற்று முடிந்த பேரிழப்பிற்குப் பின்னர் மேலும் அதிகரித்துள்ளது.

தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கும் தங்களது அமைப்பிற்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபிப்பதிலேயே அனைவரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தனியே ஆண் மையச் சிந்தனையை மட்டும் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட இந்த அமைப்புக்களின் கடந்த காலச் செயற்பாடுகளை நோக்கினால் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருவிக்கப்பட்ட நிதிகளின் மூலம் கட்டிடங்கள் அமைப்பதும் இங்கே இருக்கின்ற இளைஞர்களை தங்களது சிந்தனைப் பள்ளியில் சேர்த்துக் கொள்வதிலுமே குறியாக இருந்தனர்.

பின்னர் இவ்வியக்கங்களிடையே யார் தூய்மையானவர் என்பதை நிரூபிப்பதற்கான போட்டி பின்னர் சில இடங்களில் வன்முறையை தோற்றுவித்தன. பிற சமூகங்களுடன் நல்லிணக்கம் பேணல், தமது சமூகத்திற்குள் இருக்கின்ற பொதுப் பிரச்சனைகள், ஆண் பெண் சமத்துவம், பெண்களின் நலன்கள் அவர்களுக்கெதிரான வன்முறைகள், எவற்றிலுமே இந்த இஸ்லாமிய அமைப்புக்களின் செயற்பாடுகள் பூச்சியமாக இருந்து வந்துள்ளன.

மாறாக, பெண்களின் நடத்தைகளையும், அவர்களது ஆடைகளை வரையறை செய்வதிலும் மட்டுமே கரிசனை செலுத்தினர். எநதவொரு சமூகத்தின் வளர்ச்சியிலும் திட்டமிடலிலும் பெண்களின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானது. அவ்வாறானதொரு பங்களிப்பற்ற எந்தவொரு சமூகச் செயற்பாடும் பின்னடைவுகளை எதிர்நோக்கும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவள். இதனை இன்றைய அனைத்து சம்பவங்களும் நிரூபித்து வருகின்றன.

வேதனை, ஆற்றாமை, குற்றவுணர்ச்சி, எதிர்காலம் பற்றிய கேள்வி எல்லாம் நிரம்பியவர்களாக ஆண்கள் மட்டுல்ல எமது முஸ்லிம் பெண்களும் உழன்று கொண்டிருக்கின்றார்கள். விட்டுக் கொடுப்பு, சகிப்புத் தன்மை கொண்ட சந்ததியை கட்டியெழுப்பத் தயாராக இருக்கின்றார்கள். பிற சமூகங்களுடனான சக வாழ்வினை விரும்புகின்றார்கள். சகவாழ்வுக்கான ஓர் அழைப்பிற்கு முஸ்லிம் பெண்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் மிக்க அவசியமாகும் .

இந்த வறட்டுத் தன்மை கொண்ட இஸ்லாமிய இயக்கங்கள் அற்ற ஆண், பெண் சமத்துவம் நிறைந்த ஒரு கூட்டு நல்லிணக்கம்தான் இன்றைய சூழலுக்கு உகந்தது. அதனை நோக்கியே நாம் அனைவரும் செயற்பட வேண்டும். உங்களுடைய சகிப்புத் தன்மையற்ற தீவிரவாத நோய்க்காக எங்களது குழந்தைகளை மீண்டும் பலியிட நாங்கள் விரும்பவில்லை.

அப்துல் வஹாப்

வெட்கி தலைகுனிஞ்சி அவமானத்துல கூனிக் குறுகி நிற்கும் போது பாதிக்கபட்டவங்களுக்கு ஆறுதல் சொல்லக் கூட முடியாத சமூகம்தான் இது. நியூசிலாந்து பள்ளிவாசல்ல லைவ்ல சுட்டு கொல்லும் போது அமைதியா இருந்தேன் அப்ப கருத்து சொன்னா என்ன உங்க ஆளுங்க சாகும் போது ரத்தமா,  உலகம் முழுக்க உங்க ஆளுங்க குண்டு வச்சி கொல்லுறாங்க அதென்ன சட்னியா கேப்பான்னு அமைதியா இருந்தேன்.

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களுக்காக எதோ எழுதலாம்னா இவரே வைப்பாராம் இவரே அழுவாறாம் அப்படின்னு சொல்வாங்கன்னு கடந்து போனேன் ஏன்னா பள்ளிவாசல் துப்பாக்கி சூடுல கன் மேனா தெரிந்தவன் இலங்கை பிரச்சனைல தீவிரவாதிகளா தெரிய மாட்டான். அழுத்தமாக சொல்லனும்னா இஸ்லாமிய தீவிரவாதியாகத் தெரிவான்.

ஒரே விசயம் இதுல சொல்லனும்னா நீங்க பார்க்கிற பெரும்பாலான இஸ்லாமியர்களுக்கு தீவிரவாதிகள் அது சம்பந்தமான பேச்சுகள் மூளைச்சலவை செய்யக்கூடிய அமைப்புகளை பார்த்தே இருக்க மாட்டாங்க. இங்க பள்ளிகளில், இஸ்லாமிய அமைப்புகளில், மதரஸாக்களில் என்ன சொல்லி கொடுக்காங்க.. என்ன பண்றாங்கன்னு வெளிய இருந்து பார்க்கும் மத்த மதங்களை விட எங்களுக்கு நன்றாகவே தெரியும்.

இது தமிழக இஸ்லாமியர்கள் நிலை மட்டும் அல்ல, மற்ற மாநில இஸ்லாமியர்கள் உலகில் வாழக் கூடிய மற்ற நாடுகளில் உள்ள இஸ்லாமியர்களுடன் நான் பழகிய வரை நானும் தீவிரவாத ஆதரவாளர்களைக் காணவில்லை. சில மத விசயங்களில் ஊறிப் போய் இருப்பார்கள். மாற்றுக் கருத்து, இல்லை மாற்று மதத்தாரிடம் இருந்து தூர விலகி இருப்பார்கள். அவர்கள் வளர்ந்த சூழல் புரிதல் அப்படி… ரொம்ப நல்லவங்க, புனிதமானவர்கள்னு சொல்லல.. அதே நேரம் பதிவு போட்டுதா மன நிலையயும் மனிதாபிமானத்தையும் காட்டணும்னு அவசியம் இல்ல…

சில நேரம் வேற கருத்து மோதல் பேசினாக் கூட, “என்ன பாய் குண்டு வச்சத மட மாத்தி விடதான் இதெல்லா பண்றீங்களான்”னு கேக்குற ஜனங்கள் வாழுற சமூக வலைத்தளம் இது. அப்பவும் கூனிக் குறுகி வலிகளோடதான் கடந்து போறோம். உச்சு கொட்டவும் கூட மதமும் சாதியும் பார்த்து பேச வேண்டி இருக்கு.

மேல சொன்னத திரும்பவும் சொல்லிக்கிறேன் அவமானத்துல கூனிக் குறுகி நிற்கும் போது ஆறுதல் வராது.

ரஸ்மி கல்லீ

இஸ்லாமிய சமூகம் தன்னை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணமிது.
இதை வேற்று மத அடையாளத்துடன் இடதுசாரிகள் செய்யும் போது உள்முரண்பாடுகள் பல உண்டாகும். ஆனால் களத்தில் இதைப்பற்றி பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். குறிப்பாக இஸ்லாமிய பாடசாலைகளுக்குள் மத அடிப்படைவாதத்தின் தாக்கம் பற்றி உரையாடல் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.

திறந்த மனதுடன் இஸ்லாமிய சமூகம் தன் மீதான சுய விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டும்.

….. குற்றம் எதுவும் செய்யாமலேயே குற்ற உணர்வோடும், குற்றவாளிகள் போன்றும் அந்நிய சமூகங்களுக்கு மத்தியில் எம்மை தலைகுனிந்து வாழ வைத்து விட்டார்கள் இந்த போலி ஜிஹாதிஸ்ட்டுகள். கிந்தோட்டைப் பிரச்சினையின் போதும், உணவுப் பொருட்களில் கருத்தடை மாத்திரை கலத்தல் தொடர்பான பிரச்சினையின் போதும் தமிழிலும், சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எமது சமூகத்தின் “கற்பின் தூய்மை” யைப் பறைசாட்டி பந்திக் கணக்கில் எழுதி, சிங்களவர்களுக்கும் பகிர்ந்து விட்டு இன்று வெட்கத்தோடு அலுவலகத்தில் சிங்கள சக ஊழியர்களை சந்திக்கின்றேன்.

ஐந்து வருடங்களுக்கு மேலாக நாம் சமூக வலைதளங்களில் இதைத்தான் வலியுறுத்தி வலியுறுத்தி எழுதி வந்தோம். ஆனால் பெரும்பாலானவர்கள் எம்மைக் கோழைகள் என்று எள்ளி நகையாடினார்கள். இன்று அந்த தைரியசாலிகள் முகநூலில் மன்னிப்புக் கேட்டு கெஞ்சி எழுதும் பதிவுகளைக் காணும் போது இந்த ஆழ்ந்த துக்கத்திலும் சிரிப்புத்தான் வருகின்றது.

சிங்கள வெகுமக்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ், தலிபான் போன்ற அமைப்புக்களின் உருவாக்கத்தின் பின்னணி, அதன் நோக்கம், இது போன்ற பயங்கரவாத இயக்கத்தின் உருவாக்கத்தில் உள்ள பிராந்திய அரசியல் நலன்கள், சியோனிஸ சதித்திட்டங்கள் பற்றி எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை.

ஏனெனில் அவர்கள் எம்மைப் போன்ற சர்வதேச இனமல்ல. இலங்கையில் மாத்திரமே அவர்கள் வாழ்கின்றார்கள். உண்டு, களித்து சந்தோசமாக வாழ விரும்புகின்றார்கள். இப்படியிருக்க, எமது அரபு நாட்டுப் பாணியிலான கலாச்சார மாற்றங்கள், எமது இயக்கச் சண்டைகள் போன்றவற்றை மத்திய கிழக்கில் அரங்கேறும் அவலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் பீதியடைவதில் நியாயம் இல்லாமல் இல்லை.

இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளை, இஸ்லாம் கடமையாக்கிய இபாதாக்கள் மூலம் அது எதிர்பார்க்கும் உன்னத சமூக மாற்றத்தை நாம் அந்நிய சமூகங்களுக்கு மத்தியில் எடுத்துச் செல்லவில்லை. மாற்றமாக அடையாள இஸ்லாத்திற்கே (Symbolic Islam) அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுத்து அந்நிய சமூகங்கள் மத்தியில் பீதிகளைக் கிளப்பினோம்.

எமக்கென்று ஒரு அழகான சோனக முஸ்லிம் கலாச்சாரம் இலங்கையில் இருந்தது. திடீர் திடீர் என்று புதிய புதிய மாற்றங்கள். பருவமடையாத பெண்களை எல்லாம் முகம் மூட வைத்தது, உலமாக்கள் மாத்திரம் அணிய வேண்டிய ஜூப்பா என்ற ஆடையினை கண்ட கண்ட காவாலிகள் எல்லாம் அணியத் தொடங்கியது, தெருவுக்குத் தெரு பள்ளிவாயல்கள், எல்லாப் பள்ளிகளிலும் போட்டிக்குப் போட்டி ஒலிபெருக்கிகள், இருக்கின்ற எல்லா ஆங்கிலப் பெயர்களிலும் இஸ்லாமிய ? இயக்கங்கள், புதுப்புது பத்வாக்கள், சுவர்க்கத்துக்கான அழைப்புக்கள், வழிகேட்டுப் பட்டங்கள்.

படிக்க:
♦ யார் பயங்கரவாதி ? சவுதி அரேபியாவை விமர்சிக்கும் அரபுலகம்
♦ ஐ.எஸ் – சவுதி கூட்டணி அமெரிக்காவுக்குத் தெரியும் !

கூடப் பிறந்த சகோதரனுக்கே ஆயிரம் ரூபா கொடுக்காத பச்ச உலோபிகளெல்லாம் ஹஜ்ஜூப் பெருநாள் அன்று பேருக்கும், புகழுக்கும் பெரிய மாடுகளை உள்ஹிய்யா கொடுத்தல், வருடாந்தம் பல உம்றாக்கள். புற்றீசல் போல் மத்ரஸாக்கள், இஸ்லாமிய இன்டர்நேசனல் ஸ்கூல்கள். முஸ்லிம் பாடசாலைகளின் ஒழுக்கம், தரம், பரீட்சைப் பெறுபேரு எந்தவித அக்கறையும் இல்லாவிட்டாலும் மாணவிகள் முகம் மூட வேண்டும், மாணவர்கள் தாடிவைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று சாரத்தினைத் தூக்கிக் கொண்டு மல்லுக்கு நிற்றல், கண்ட கண்ட பொருட்களுக்கெல்லாம் ஹலால் ஸர்டிபிகட்.

நாம் எப்படியான ஒரு நாட்டில், சூழலில் வாழ்கின்றோம் என்று விளங்கவில்லை. விளங்கிய உலமாக்கள் “பிக்ஹூல் அவ்லவியாத்” என்ற முன்னுரிமைப்படுத்த வேண்டிய விடயங்களைக் கற்பித்தார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்த பட்டம் “கோழைகள், பயந்தாங்கொல்லிகள், நவீன உலமாக்கள்”.

இதனாலேயே நாம் முகநூலில் எம்மால் முடிந்தளவில் எழுதினோம். நாம் ஒன்றும் ஆலிம்கள் இல்லை. மெத்தப் படித்த மேதாவிகளும் இல்லை. என்றாலும் பெரும்பான்மை சமூகத்தின் உளவியலை அப்போதே கற்று வரவிருக்கும் ஆபத்துக்கள் பற்றி முடிந்தளவில் எழுதினோம்.

சமூக வலைதளங்கள் ஆட்சி மாற்றத்தினையே ஏற்படுத்தும் வல்லமை படைத்தவை. ஆனால் எமது சமூகம் அதனை எதற்காகப் பயன்படுத்தியது?. ஆளுக்கால் சேற்றை வாரியிறைத்தோம். இயக்கங்களாகப் பிரிந்து சண்டை பிடித்தோம். சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் முர்த்த்த், முஷ்ரிக், காபிர் என்று முடிவுகளை வாரியிறைத்தோம்.

ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகள் என்று தெரிந்தும் அவர்களோடு எம்மவர்கள் கொஞ்சிக் குலாவினார்கள். எச்சரித்தும் கேட்கவில்லை. அந்த ஐ.எஸ். ஐ.எஸ் தரப்பில் உலமாக்கள் என்ற போர்வையில் இருந்து கொண்டு பெரிய வீராவசனம் பேசிய “ஆதார நாயகர்”களின் பதிவுகளுக்குச் சென்று ஏதோ அவர்கள் அல்லாமா குல்லிகள் போட்டு ஹார்டிங் போட்டார்கள். தாம் விரும்பாத இயக்கத்தினரின் தனிப்பட்ட பலவீனங்கள், குறைகளை எல்லாம் பகிரங்கப்படுத்தினார்கள். அல்ஹம்து சூறாவுக்குப் பொருள் தெரியாத விடலைப் பசங்கள் எல்லாம் பத்வா கொடுத்த்த் துணிந்தார்கள்.

சகவாழ்வைக் கேவலப்படுத்தி எழுதினார்கள். குட்மோனிங் சொல்வது ஹராம், அந்நியருக்கு புத்தாண்டு வாழ்த்துக் கூறுவது ஹராம், அவர்கள் தரும் பலகாரங்களைச் சாப்பிடுவது ஹராம். இப்படி அந்நிய சமூகங்கள் மீதான வெறுப்பினை இன்னும் இன்னும் அதிகப்படுத்தினார்கள். நிர்ப்பந்தமான ஒரு சூழலில் மங்கள விளக்கில் தீப்பந்தம் ஏற்ற நிர்ப்பந்திக்கப்பட்ட உலமாக்களை நாட்கணக்கில் முகநூலில் கழுவி ஊற்றினார்கள். எல்லாவற்றுக்கும் “மீம்ஸ்” என்றும் பகிடி என்றும், சிரிப்பும், கூத்துமாக இருந்தார்கள். சமூகத்தின் சீரியஸான பகுதியினை நாம் எழுதினால் எம்மை நாட்கணக்கில் சீண்டுவார்கள். இப்படிக் கூத்தும் கும்மாளமுமாக காலம் கழித்தவர்கள் இன்று முகநூலில் அழுதுபுலம்புகின்றார்கள். இனி வெள்ளம் தலைக்கு மேலால் சென்று விட்டது.

இனியாவது இருக்கின்ற கௌரவத்தினைப் பாதுகாத்து மியன்மார் அளவுக்கு நாம் சென்று விடாமல் புத்தி சாதூர்யமான முடிவுகளை எடுத்து ஆக்கபூர்வமான செயற்றிட்டங்களை முன்னெடுப்போம். தீவிரவாதம் இல்லாத நல்ல தலைவர்களை தெரிவு செய்வோம். அடையாள இஸ்லாத்திற்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுக்காமல் விழுமிய இஸ்லாத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

முஸ்லிம் பாடசாலைகளைக் கட்டியெழுப்பி கல்வித் துறையில் முன்னேறுவோம். உம்றாக்கள், ஆடம்பர வீடுகள், ஆடம்பரத் திருமணங்கள் என்று பணத்தினை விரயமாக்காமல் சமூகத்தினை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவோம்.

அகதிகளாக புலம் பெயரும் ரோஹிங்கியா முசுலீம்கள்.

இல்லாவிட்டால் மியன்மார் முஸ்லிம்கள் போன்று கப்பல்களில் நாடுகளைத் தேடித் தேடி தஞ்சம் அடைய நேரிடும். இதனை நான் சும்மா சொல்லவில்லை. நாளாந்தம் சிங்கள முகநூல் பக்கங்கள், வெப்சைட்டுக்களில் உள்ள ஆக்கங்கள், அதற்கு வரும் சிங்கள இளைஞர்களின் பின்னூட்டங்களை அடிப்படையாக வைத்து சொல்கின்றேன். அடித்துச் சொல்வேன், சிங்கள இளம் சமுதாயத்தில் நூற்றிற்கு தொன்னூறு வீதம் எம்மை மிகவுமே வெறுக்கின்றார்கள்.

எமது ஜிஹாதிக் குஞ்சுகளுக்கு நாம் தெரிவித்துக் கொள்வது, உங்கள் தியாகத்தினால் நாம் இப்போது மிகவும் கௌரவத்துடன் தலைநிமிர்ந்து ? வாழ்கின்றோம். அதற்குக் கூலியாக நீங்கள் சுவர்கங்களில் கன்னிகளோடு நன்கு சல்லாபியுங்கள். இங்கு எமது பெண்களுக்கு பாதையில் போக முடியவில்லை. பர்தா கொச்சைப்படுத்தப்படுகின்றது. வாழக்கையிலேயே கேட்காத தூசனங்களால் துவட்டி எடுக்கப்படுகின்றோம். எம்பெருமானார் இனி இல்லை என்ற அளவுக்கு வசைபாடப்படுகின்றார். ஒவ்வொரு முஸ்லிமையும் சந்தேகத்துடன் பார்க்கின்றார்கள். நீங்கள் சுவர்க்கத்தில் நன்கு அனுபவியுங்கள்.

அதே போன்று, காத்தான்குடி போன்ற தனி முஸ்லிம் ஊர் சகோதரர்களுக்கு நாம் மிக அன்போடு வேண்டிக் கொள்வது, உங்களையும், உங்கள் ஊர்களையும் நாம் நேசிக்கின்றோம். நீங்கள் மிகவும் நல்லவர்கள். மனிதாபிமானம் மிக்கவர்கள். ஆனால் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.

நாம் வாழும் ஊர்கள் உங்களைப் போன்று முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஊர்கள் இல்லை. சுற்றி வர சிங்கள ஊர்கள். எமக்கென்று பாராளுமன்ற உறுப்பினர் எப்படிப் போனாலும், மாகாண சபை ஏன் பிரதேச சபை உறுப்பினர்களே இல்லை. எல்லாம் சிங்களவர்கள். கிராம சேவகர் முதல் பிரதேச செயலாளர் காரியலாம், மாவட்ட செயலகம், கல்விக் காரியாலயங்கள், வைத்தியசாலைகள், அரச அலுவலகங்கள், வைத்தியசாலை டாக்டர்கள் முதல் நேர்ஸ் மார் எல்லாமே சிங்களவர்கள்.

ஆக, உங்கள் ஊர்களில் இருந்து சில செத்த மூளைகளால் உருவாக்கப்படும் இயக்கங்களின் குப்பைகளை எல்லா முஸ்லிம் ஊர்களுக்கும் நகர்த்துபவர்கள் தொடர்பில் அவதானமாக இருந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். இன்றோ, நாளை என்றோ எனது மனைவி பிள்ளை பெற்றெடுக்க தயாராக இருக்கின்றார். அரச வைத்தியசாலைக்குப் போகவே முடியாது. அங்கு எம்மை குத்திக் காட்டிக் கொண்டே இருப்பார்கள். தனியார் வைத்தியசாலைக்குப் போவோம் என்கின்றார். ஒரு சாதாரண அரச ஊழியர் எப்படி தனியார் வைத்தியசாலைக்கு இலட்சங்களைக் கட்டுவது? ஓரளவு படித்த எங்களுக்கே வைத்தியசாலைகளில் இந்தக் கதியென்றால் பெரும்பான்மையாக இருக்கும் பாமர முஸ்லிம் தாய்மார்களின் நிலை என்ன ? சற்று சிந்தித்து செயற்படுங்கள்.

கடைசியாக, இந்தக் கொடூரத் தாக்குதலை எம்மவர்கள் செய்திருக்கலாம். அல்லது வேறு பயங்கரவாத இயக்கங்கள், அல்லது அரசியல் குருகிய நோக்கம் கொண்டவர்கள் செய்திருக்கலாம். அல்லது பிராந்திய அரசியல் நலன்கள் பின்னணியாக இருக்கலாம். எப்படியிருந்தாலும், நாம் எமது சமூகத்தினை இனி வலுப்படுத்த வேண்டும்.

அதிக குருதி கொடை கொடுத்த சமூகம், அனர்த்தங்களின் போது எந்தவொரு இனமும் செய்யாத அளவு களப்பணி செய்ய சமூகம் இன்று கூனிக் குருகி நிற்கின்றது. நாம் எமது பிழையான செயற்பாடுகளால் படைத்த இறைவனுக்கும், எம்பெருமானாருக்கும் களங்கத்தினை, கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இதுவே சுதாகரித்து மீண்டும் எழும்புவதற்கான கடைசி சந்தர்ப்பம் என்பதனை புரிந்து கொள்வோம்….

தொகுப்பு :

காஷ்மீரில் வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள் ! | படக்கட்டுரை

2

எங்களுடைய இளம் தலைமுறையை கொன்ற அவர்களுக்கு எப்படி வாக்களிப்பது?” : காஷ்மீரில் வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள் !

நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் மக்களவை தேர்தலில் மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்திருக்கிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு சதவீதம் சராசரியாக ஐம்பது சதவீதத்துக்கு மேல் இருந்த நிலையில், காஷ்மீரின் அனந்த்நாக் தொகுதியில் நடந்த வாக்குப்பதிவு சதவீதம் வெறும் 13.61% மட்டுமே.

மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்திய இராணுவத்துக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அதிக அளவிலான மோதல்கள் தெற்கு காஷ்மீரில் நடந்தன. முன்னெப்போதும் இல்லாதவகையில் பொது மக்கள் மீது பெல்லட் குண்டுகளால் தாக்கியது இந்திய இராணுவம். பல இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

எனவே, இந்தியா மீது அப்பகுதி மக்கள் மிகுந்த வெறுப்புடன் உள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை அங்கு நடந்த தேர்தல் மூலம் அம்மக்கள் இதனை உணர்த்தியிருக்கிறார்கள். 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அனந்த்நாத் தொகுதியில் 39.37 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு, இப்போது 13.61 சதவீதமாக கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.

வாக்குப்பதிவு முடிந்த பின்னர் தேர்தல் ஆணையம் தெரிவித்த இறுதியான தகவலின்படி இங்கே 5,27,497 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,69,773 ஆண்களும் 2,57,713 பெண்களும் 11 மாற்று பாலினத்தாரும் அடங்குவர். இவர்களில் வாக்களித்தவர்கள் வெறும் 67,676 பேர் மட்டுமே. இதில் 4,101 வாக்குகளை புலம்பெயர்ந்த பண்டிட்டுகள் செலுத்தியிருக்கிறார்கள்.

அனந்த்நாத் தொகுதியில் உள்ள பகுதிகளில் மிகக்குறைந்த அளவான 2.04 % வாக்குகளே பதிவானது பிஜ்பிஹாரா-வில்தான். பாஜகவுடன் கூட்டணி அமைச்சரவை அமைத்திருந்த முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தியின் சொந்த ஊர் இது. அனந்த நாத் பிரிவில் 3.4%, டோரு – 17.2%, கோகெர்நாக் – 19.36%, ஷாங்கஸ் – 15.09% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தேர்தலை புறக்கணிக்கும்படி உள்ளூர் தலைவர்கள் விடுத்த அழைப்பினால், மக்கள் கூடும் இடங்கள் வெறுச்சோடி இருந்தன. சர்னால் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மூவர் மட்டுமே வாக்களித்தனர்.

தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தெற்கு காஷ்மீரில் வாக்குப்பதிவு நேரம் இரண்டு மணி நேரம் குறைக்கப்பட்டது. ஒருசில இடங்களில் நடந்த கல்வீச்சு சம்பவங்களைத் தவிர, பெரிய அளவிலான வன்முறை ஏதுமில்லாமல் வாக்குப்பதிவு சுமூகமாகவே நடந்ததாக தேர்தல் ஆணையம் கூறுகிறது.

வாக்குப்பதிவு நாளன்று அனந்த்நாக்கில் உள்ள பொதுப் பேருந்து நிலையம் வெறிச்சோடியிருந்தது.

அனந்த்நாக்கில் உள்ள கிராங்சோ கிராமத்தில் வாக்குச் சாவடிக்கு வெளியே அமர்ந்திருந்த கிராமத்தினர், “நாங்கள் வாக்களிக்கவில்லை; எதிர்காலத்திலும் வாக்களிக்கப்போவதில்லை. அவர்கள் எங்களுடைய இளைய தலைமுறையை கொன்றுவிட்டார்கள்” என ஒருசேர தெரிவித்தனர்.

பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் யாரும் வாக்களிக்க வராததால் தேர்தல் பணியாளர்கள் வெளியே வந்து அமர்ந்திருந்தனர்.

இந்த வாக்குச் சாவடியில் எட்டு பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். கடந்த காலத்தில் பிடிபி கட்சியின் செல்வாக்கான பகுதியாக இருந்தது கிராங்சோ. “இந்தியாவின் பிற மாநிலங்களில் தேர்தலின்போது வாக்களிக்கும் கூட்டத்தைத்தான் பார்த்திருக்கிறேன். ஆனால், காஷ்மீரில் மக்கள் வாக்களிப்பதில்லை. காலையிலிருந்து இரண்டு , மூன்று பேர்தான் வாக்களிக்க வந்தார்கள். இவர்களிடையே தேர்தல் ஆர்வமே இல்லை” என்கிறார் பீகாரிலிருந்து தேர்தல் பார்வையாளர் பணிக்கு வந்திருக்கும் நீல் கமல்.

பீகாரிலிருந்து தேர்தல் பார்வையாளர் பணிக்கு வந்திருக்கும் நீல் கமல்.

படிக்க:
தேர்தல் ஆணையமே … நடையைக் கட்டு !
♦ ”தந்தையர் இல்லா காஷ்மீர் ” – திரைப்படம் | கண்ணீர் பள்ளத்தாக்கின் கதை !

முகேஷ் பாட்டி என்ற பாதுகாப்பு அதிகாரி, “தேர்தலுக்காக அரசு பல கோடிகளை செலவழிக்கிறது. ஆனால், இங்கே ஒருசிலர் மட்டுமே வாக்களிக்க வருகிறார்கள். காஷ்மீர் மக்கள் பயமுறுத்தப்பட்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். நாம் இப்போது தொழிற்நுட்ப உலகில் இருக்கிறோம். அரசு காஷ்மீரில் வேறு சில மாற்றுகளை யோசிக்க வேண்டும். இல்லையென்றால், தேர்தல் நடைமுறை காஷ்மீரில் தோல்வியுற்ற ஒன்றாகிவிடும்” என்கிறார்.

எவரும் வராத வாக்குச் சாவடிக்கு காவல் காக்கிறார் இந்த போலீசு அதிகாரி.

டெஹ்ருனா கிராமத்தில் உள்ள 793 வாக்குகளில் மூன்றே மூன்று வாக்குகள் மட்டுமே பதிவாகின. அந்த கிராமத்தைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத ஒருவர், “எங்கள் ஊரில் எம்.பில் பட்டத்தாரியான ஒருவர் கிளர்ச்சியாளராக மாறிவிட்டார். ஒரு பக்கம் படித்த இளைஞர்கள் கிளர்ச்சி குழுக்களில் சேரும் நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இளைஞர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அது ஒருபோதும் முடியாது” என்கிறார் காட்டமாக.

மட்டான் உயர்நிலைப் பள்ளியில் நான்கு வாக்குச்சாவடிகள் வைக்கப்பட்டன. ஆனால். வாக்குச் சாவடிக்குச் செல்லும் வழி வெறிச்சோடிக்கிடக்கிறது.

அனந்த்நாக் தொகுதியில் வென்ற மெகபூபா முப்தி கடந்த ஜூன் 2016-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் முதல்வரானதை அடுத்து, மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். 2017-ல் ஸ்ரீநகர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலின் போது எட்டு பேர் கொல்லப்பட்டனர்.  இதனால் தேர்தல் ஆணையம் அனந்த்நாக் தொகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக இடைத்தேர்தலை நடத்தவேயில்லை.

793 வாக்காளர்கள் உள்ள கந்த் ஃபதேபுரா வாக்குச்சாவடியில் மூன்று பேர் மட்டுமே வாக்களித்தனர்.

நான்காம் கட்டமாக ஏப்ரல் 29-ம் தேதி குலாமில் வாக்குப்பதிவு நடக்கிறது. கிளர்ச்சியாளர்களின் தாக்கம் அதிகம் உள்ள புல்வாமா சோபியனில் ஐந்தாம் கட்டமாக மே 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.

மத்தியில் ஆட்சியமைத்துள்ள இந்துத்துவ அரசின் கொடுங்கோல் ஆட்சி காஷ்மீர் மக்களை மிகக் கடுமையாக பாதித்துள்ளது. மோடி ஆட்சி தாங்கள் இந்தியர்கள் அல்ல என்பதை காஷ்மீர் மக்களுக்கு ஆழமாக உணர்த்தியிருக்கிறது என்பதைத்தான் அவர்களின் தேர்தல் புறக்கணிப்பு எடுத்துக் காட்டுகிறது.


கட்டுரை, படங்கள்: அமீர் அலி பட்
தமிழாக்கம் : கலைமதி
நன்றி : வயர் 

வேலூர் மே நாள் பேரணி : ம.க.இ.க – புஜதொமு ஆர்ப்பாட்டம்

வேலூரில் மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம்

நிரந்தரத் தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டும் NEEM-FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்!

கூலி அடிமை முறையை தீவிரப்படுத்தும் கார்பரேட் (GATT) காட்டாட்சியை தூக்கியெறிவோம்!

நாள் : 01.05.2019, புதன் கிழமை

பேரணி தொடங்கும் இடம்:
மண்டி வீதி,  மாலை 4.00 மணி

தலைமை : தோழர் வாணி, ம.க.இ.க, வேலூர்

பேரணி நிறைவு மற்றும் ஆர்ப்பாட்டம் :
அண்ணா கலையரங்கம் அருகில், மாலை 5.00 மணி

தலைமை : தோழர் எஸ்.சுந்தர், மாவட்டச் செயலாளர், பு.ஜ.தொ.மு

சிறப்புரை : தோழர் பொன்.சேகர், மாவட்டத் தலைவர், பு.ஜ.தொ.மு

கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவு கட்ட அணிதிரள்வோம்! வாரீர்!

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர் மாவட்டம்

எதிர்பாராத ஆபத்துக்களும் சோதனைகளும் நிறைந்த பாதை !

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 8

டியை முன்னே ஊன்றுவதும் அதன் மேல் மோவாயை அழுத்திக்கொண்டு கால்களை அதனருகே இழுப்பதுமாக இன்னும் இரண்டு சாட்கள் அவன் வெண்பனிப்பாதையில் தளர் நடை போட்டான். பாதங்கள் மரத்துப் போய்விட்டன. அவை எதையும் உணரவில்லை. ஆனால், ஒவ்வோர் அடி வைப்பிலும் உடல் சுரீரென்று வலித்தது. பசியின் கொடுந்தொல்லை அடங்கி விட்டது. வயிற்றில் இசிவும் குடல்வலியும் நின்றுவிட்டது. வெற்றான இரைப்பை கட்டியாகிவிட்டது போலவும் பாங்கின்றி புரண்டு உள்உறுப்புகள் எல்லாவற்றையும் நசுக்குவது போலவும் ஊமை நோவு நிலையாக ஏற்படலாயிற்று.

அலெக்ஸேய் இளைப்பாறும்போது இளம் பைன்மரப் பட்டைகளைக் கட்டாரியால் உரித்து, அவற்றையும் பிர்ச், லின்டன் ஆகிய மரங்களின் இலை மொக்குகளையும் மென்மையான பாசியையும் உணவாகக் கொண்டான். வெண்பனிக்கு அடியிலிருந்து பாசியைத் தோண்டி எடுத்து இராத்தங்கலின் போது கொதிநீரில் வேகவைப்பான். வெண்பனி உருகிய இடங்களில் சிவப்பு பில்பெரிப் புதர்களின் மெருகேறிய இலைகளை சேகரித்து அவற்றால் “தேநீர் தயாரித்துப் பருகுவது அவனுக்கு மிக்க இன்பம் அளிக்கும். சூடான நீர் உடலுக்கு வெப்பம் ஊட்டி, வயிறு நிறைந்துவிட்டது போன்ற பிரமையைக் கூட உண்டாக்கும். புகை நெடியும் புல் வாடையும் வீசிய அந்தச் சுடு கஷாயத்தைப் பருகி அலெக்ஸேய் எப்படியோ முழு அமைதி அடைவான். இப்போது வழி அவ்வளவு முடிவற்றதாகவும் அச்சுறுத்துவதாகவும் அவனுக்குத் தோன்றியது.

ஆறாவது இரவை அவன் கிளைகள் பரந்த பிர் மர விதானத்தின் அடியில் மீண்டும் கழித்தான். அருகே இருந்த கீல் நிறைந்த பழைய அடிக் கட்டையைச் சுற்றி நெருப்பு மூட்டினான். இந்த அடிக்கட்டை இரவு முழுவதும் கணகணவென்று எரிய வேண்டும் என்று அவன் கணக்கிட்டான். இன்னும் இருட்டவில்லை. பிர்மர உச்சியில் ஓடிச் சாடியது கண்ணுக்குத் தெரியாத அணில். அது கூம்புக் கனிகளைக் கறவித் தோலுரித்தது. வெற்றென பிய்ந்த கூம்புக்கனிகளை அவ்வப்போது கீழே எறிந்தது. அலெக்ஸேயின் மனத்தினாலோ உணவைப் பற்றிய சிந்தனை இப்போது நிலையாகக் குடிகொண்டிருந்தது. எனவே கூம்புக் கனிகளில் அணிலுக்கு என்ன கிடைக்கிறது என்று அறிய அவனுக்கு ஆவல் உண்டாயிற்று. ஒரு கூம்புக் கனியை எடுத்து, கடிபடாத செதில் ஒன்றைப் பிய்த்து அகற்றினான். செதிலுக்கு அடியில் ஒற்றைச் சிறகுள்ள, தினை அளவான விதை இருக்கக்கண்டான். செடார் மரத்தின் மிகச்சிறு கொட்டை போலிருந்தது அது. பற்களுக்கு இடையில் அதை வைத்து நசுக்கினான். செடார் எண்ணெயின் இனிய மணம் வாயில் உண்டாயிற்று.

செதில்கள் விரியாத சில பச்சைப் பிர் கூம்புக்கனிகளைச் சுற்றிலுமிருந்து உடனேயே பொறுக்கிச் சேர்த்து, அவற்றை நெருப்பிற்கு அருகே போட்டு, கிளைகளை நெருப்பில் செருகினான் அலெக்ஸேய். கூம்புக்கனிகளின் செதில் பிரிந்தும் அவற்றிலிருந்து விதைகளைக் குலுக்கி எடுத்தான், உள்ளங் கைகளால் தேய்த்து அவற்றின் சிறகுகளை ஊதிப் போக்கினான், சிறு விதைகளை வாயில் போட்டுக் கொண்டான்.

படிக்க:
வெனிசுவேலா : ஆக்கிரமிப்புப் போருக்குத் தயாராகிறது அமெரிக்கா !
சாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ

நெருப்பில் இன்னும் சில கிளைகளைப் போட்டுவிட்டு, பிர் கூம்புக்கனிகளை மறுபடி சேகரிப்பதில் முனைந்தான். செடார் எண்ணெயின் மணம் நெடுங்காலமாக அவன் மறந்திருந்த குழந்தை பருவக் காட்சியை அவன் நினைவில் எழுப்பியது…

பழக்கமான பொருள்களால் செம்மை நிறைந்த சிறு அறை. தொங்கும் விளக்கிற்கு அடியே மேஜை. அம்மா உற்சவ உடை அணிந்து சர்ச்சிலிருந்து திரும்பியவள், பெட்டியிலிருந்து காகிதப் பொட்டலத்தை எடுத்து, செடார் கொட்டைகளைத் தட்டில் கொட்டுகிறாள். குடும்பத்தினர் – அம்மா, பாட்டி, இரு அண்ணன்கள், கடைக் குட்டி அலெக்ஸேய் – எல்லோரும் மேஜையைச் சுற்றி உட்கார்ந்து கொள்கிறார்கள் கொண்டாட்ட தின்பண்டமான கொட்டைகளை உடைக்கும் சடங்கு தொடங்குகிறது…

காடு இரைந்தது. முகத்தில் வெக்கை அடித்தது. ஆனால் முதுகுப் புறமிருந்து வந்தது முள்ளாய்க் குத்தும் குளிர். இருளில் கோட்டான் கூவிற்று, நரிகள் கத்தின…
பிரம்மாண்டமான இந்த அடர் காட்டில் அவன் தன்னந்தனியன்.

காடு இரைந்தது. முகத்தில் வெக்கை அடித்தது. ஆனால் முதுகுப் புறமிருந்து வந்தது முள்ளாய்க் குத்தும் குளிர். இருளில் கோட்டான் கூவிற்று, நரிகள் கத்தின. நெருப்பின் பக்கத்தில் அணையும் தருவாயில் கண்சிமிட்டிக் கொண்டிருந்த கங்குகளைச் சிந்தனையுடன் நோக்கியவாறு முடங்கியிருந்தான் பட்டினியான, நோயுற்ற, களைப்பால் செத்துச் சாவடைந்த மனிதன். பிரம்மாண்டமான இந்த அடர் காட்டில் அவன் தன்னந்தனியன். இருளில் அவன் முன்னே கண்டுகொள்ளமுடியாத, எதிர்பாராத ஆபத்துக்களும் சோதனைகளும் நிறைந்த பாதை.

“பரவாயில்லை , பரவாயில்லை, எல்லாம் நலமே முடியும்!” என்று திடீரெனச் சொன்னான் இந்த மனிதன். தனது ஏதோ பழைய நினைவால் தூண்டப்பட்டு வெடிப்புக்கண்ட உதடுகளால் அவன் புன்னகைத்தது நெருப்பின் கடைசிச் செவ்வொளிர் தென்பட்டது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

வெனிசுவேலா : ஆக்கிரமிப்புப் போருக்குத் தயாராகிறது அமெரிக்கா !

தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள  வெனிசுவேலா மீது அமெரிக்கா எந்நேரத்திலும் இராணுவத் தாக்குதல் தொடுக்கும் அபாயம் அதிகரித்திருக்கிறது. வெனிசுவேலாவிலிருந்து தனது தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெற்றது மட்டுமின்றி, அந்நாட்டுக்குச் சென்றுள்ள அமெரிக்கக் குடிமக்களை வெனிசுவேலாவை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தியிருக்கிறது, டிரம்ப் அரசு.

அமெரிக்காவின் ஓய்வு பெற்ற மூத்த இராணுவ அதிகாரிகள் பலர் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து டிரம்புக்கு ஏப்ரல் 4-ம் தேதியன்று பகிரங்கக் கடிதம் எழுதியிருக்கின்றனர். “அமெரிக்கா நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்குதல் தொடுக்குமானால், வெனிசுவேலா அடிபணியாது என்றும் ஆக்கிரமிப்பை எதிர்த்து சுமார் 2,35,000 பேரைக் கொண்ட வெனிசுவேலா இராணுவமும், சுமார் 16 இலட்சம் பேர்களைக் கொண்ட குடிமக்கள் இராணுவமும்  விடாப்பிடியாகப் போரிடும்” என்றும் நோம் சோம்ஸ்கி உள்ளிட்ட அறிஞர்கள் அமெரிக்க அரசை எச்சரித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.

வெனிசுவேலா மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் திணித்துவரும் மறைமுகப் போரை எதிர்த்து ஐ.நா. சபையின் தலைமைச் செயலகம் முன்பாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

ஏப்ரல் 7-ம் தேதியன்று, “ஏகாதிபத்தியத்தை எதிர்ப்போம்! தந்தையர் நாட்டைக் காத்து நிற்போம்!” என்ற முழக்கத்தினை முன்வைத்து வெனிசுவேலா அதிபர் மதுரோவின் தலைமையில் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் தலைநகர் காரகாஸில் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவுக்கு அடிபணிய மறுக்கின்ற ஒரே காரணத்துக்காக வெனிசுவேலா, கியூபா, நிகராகுவா ஆகிய நாடுகளைத் தீமையின் முக்கூட்டு என்று முத்திரை குத்தித் தாக்குதல் தொடுப்பதற்காகவே பொய்க் குற்றச்சாட்டுகளைப் புனைந்து வருகிறது அமெரிக்க அரசு.

கடந்த சில மாதங்களாகவே, சீர்குலைவு நடவடிக்கைகள் மூலம் மின்சாரம், தண்ணீரையும்; பொருளாதாரத் தடை மூலம் உணவு, மருந்துகளையும் தடுத்து வெனிசுவேலா மக்களைப் பட்டினிபோட்டுப் பணிய வைக்க முயலுகிறது, டிரம்ப் அரசு. அடிபணிய மறுத்துப் போராடுகிறார்கள் வெனிசுவேலாவின் வீரப்புதல்வர்கள்.

*****

டந்த மார்ச் 7-ம் தேதி வெனிசுவேலாவில் பரவலாக மின்சாரத் தடை ஏற்பட்டது. நாடெங்கும் மின் பகிர்மான வலைப்பின்னலும், பகிர்மான நிலையங்களும் அரச எதிர்ப்பு வன்முறையாளர்களால் தாக்கப்பட்டுச் செயலிழந்தன. மின்சாரம் தடைபட்டிருப்பதால், குடிநீர் விநியோகமும் பரவலாகப் பாதிக்கப்பட்டது. தவித்த வாய்க்குத் தண்ணீரின்றி, இருளில் பரிதவித்துக் கிடக்கும் அந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது அமெரிக்கா. நிவாரண டிரக்குகளை உள்ளே நுழைய அனுமதிக்காமல், எல்லையிலேயே தடுத்து நிறுத்திய வெனிசுவேலா மக்கள், டிரக்கில் இருந்த நிவாரணப் பொருள் பெட்டிகளைத் திறந்து சோதனையிட்டனர். அவற்றில் கம்பிச்சுருள்களும் சுள்ளாணிகளுமே இருந்தன.

பட்டினி கிடந்தாலும் பணிய மறுக்கின்ற காரணத்தினால் அம்மக்களுக்கு அமெரிக்கா வழங்கிய பரிசு அது. அமெரிக்காவின் இந்த ஆத்திரத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், வெனிசுவேலாவின் அரசியல் சூழலைப் புரிந்து கொள்வது அவசியம்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டியவரும் வெனிசுவேலா மக்களின் அன்பிற்குரிய மறைந்த அதிபருமான ஹியூகோ சாவேஸ்.

1999-ல் இருந்து 2013-ம் ஆண்டு வரை வெனிசுவேலாவை ஆட்சி செய்து வந்த ஹியூகோ சாவேஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொண்டையில் சிக்கிய முள்ளாக உறுத்திக் கொண்டிருந்தார். இடதுசாரி அரசியல், பொலிவேரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் ஆகியவற்றை முன்நிறுத்திய சாவேஸ், ஒரு மக்கள் நல அரசாக வெனிசுவேலாவை மறுநிர்மாணம் செய்தார். சாவேசின் நடவடிக்கைகள், அதுவரை வெனிசுவேலாவில் சர்வ சுதந்திரமாக அமெரிக்கா நடத்தி வந்த கார்ப்பரேட் சுரண்டல்களுக்குத் தடையாக நின்றன.

உலகிலேயே மிக அதிகமான நிரூபிக்கப்பட்ட எண்ணெய் வளம் கொண்ட நாடு வெனிசுவேலா. அதனை விழுங்குவதே அமெரிக்காவின் நோக்கம். ஆனால், அந்த நோக்கம் நிறைவேறவில்லை. வெனிசுவேலாவின் எண்ணெய் வளம் தேசியமயமாக்கப்பட்டதுடன், சில அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களும் சாவேஸால் தேசியமயமாக்கப்பட்டன.  கைவிடப்பட்ட ஆலைகளைத் தொழிலாளர்களே ஏற்று நடத்துவது, மக்கள் கம்யூன் என ஹியூகோ சாவேசின் காலத்தில் நிகழ்ந்த சில பரிசோதனைகள் வெற்றி பெற்றன. ஹியூகோவின் சீர்திருத்த நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்க ஆதிக்க எதிர்ப்பை மையமாகக் கொண்டிருந்தது, மக்களின் ஆதரவையும் பெற்றது.

படிக்க:
♦ வெனிசுலா குறித்து தி இந்துவில் ஒரு அபத்தக் கட்டுரை | கலையரசன்
♦ இலங்கை குண்டுவெடிப்பு

வெனிசுவேலாவின் முன்னுதாரணம் அமெரிக்காவின் இலத்தீன் அமெரிக்க ஆதிக்கத்துக்குப் பெரும் சவாலாக இருக்கவே, தனது ஆட்சிக்காலம் முழுவதும் எதிர்ப்புரட்சிகளையும், ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளையும் சாவேஸ் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 2013-ம் ஆண்டு சாவேஸ் மறைந்ததையடுத்து, அவரது கட்சியைச் சேர்ந்த நிகோலஸ் மதுரோ ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். வெனிசுவேலாவின் பொருளாதாரம் எண்ணெய் வளத்தை நம்பி இருந்த சூழலில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலைகளைச் செயற்கையாக வீழ்ச்சியடைய வைத்தது அமெரிக்கா. இதன் விளைவாக வெனிசுவேலா மட்டுமின்றி, ரஷ்யாவும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியதாயிற்று.

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுவரும் வெனிசுவேலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோ.

ஒருபுறம் பொருளாதாரத் தடைகள், எண்ணெய் வர்த்தகத்திற்குக் கட்டுப்பாடு என வெனிசுவேலாவின் பொருளாதாரத்தை நசுக்கிய அமெரிக்கா, மறுபுறம் ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளையும் அரங்கேற்றி வந்தது. இந்தச் சூழலில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட நிகோலஸ் மதுரோ, மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரோவுக்கு எதிரான, தனக்கு ஆதரவான அரசியல் கட்சிகளை வைத்து வெனிசுவேலாவின் தேர்தல் முறைப்படி நடக்கவில்லை என உள்ளூரில் பெரும் கலவரங்களைத் தூண்ட முயற்சித்தது அமெரிக்கா. எனினும், அம்முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

இதற்கிடையே வெனிசுவேலாவில் “ஜனநாயகம்” படுகொலை செய்யப்பட்டிருப்பதாகக் கடந்த பல மாதங்களாகச் சர்வதேச ஊடகங்கள் அமெரிக்காவின் குரலில் ஊளையிடத் தொடங்கின. வெனிசுவேலா மக்கள் பசி, பட்டினியில் வாடுவதாகவும், நிகோலஸ் மதுரோ அரசியல் படுகொலைகள் செய்வதாகவும், எதிர்ப்பாளர்கள் உயிரோடு கொளுத்தப்படுவதாகவும், இன்னும் இது போல் ஏராளமான பொய்ச் செய்திகளைச் சர்வதேச முதலாளித்துவ ஊடகங்களின் வாயிலாகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தது, அமெரிக்கா.

இந்த நிகழ்ச்சிப் போக்குகளின் வரிசையில் கடந்த ஜனவரி மாதம் ஜூவான் கௌடியோ என்பவரைத் தற்காலிக அதிபராக அறிவிக்கச் செய்தது, அமெரிக்கா. வெனிசுவேலா நாடாளுமன்றத்தின் அவைத் தலைவரான ஜூவான் கௌடியோ, அமெரிக்க ஆதரவாளராவார். இதில் வேடிக்கை என்னவென்றால், கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் ஜூவானோ, அவர் சார்ந்திருக்கும் “வெகுஜனங்களின் விருப்பம்” (Popular will) என்கிற கட்சியோ அதிபர் பதவிக்கு மதுரோவுடன் மோதவில்லை என்பதோடு, அவ்வாறு மோதும் அளவுக்கு மக்கள் ஆதரவு கொண்ட கட்சியும் அல்ல, அது. தன்னைத் தானே அதிபராக ஜூவான் அறிவித்துக் கொள்ளும் வரை அவர் வெனிசுவேலாவின் அரசியல் அரங்கில் பிரபலமாக அறியப்பட்டவரும் அல்ல.

அமெரிக்காவால் சட்டவிரோதமான முறையில் வெனிசுவேலா அதிபராக அறிவிக்கப்பட்டுள்ள ஜூவான் கௌடியோ.

ஜூவான் தன்னை அதிபராக அறிவித்துக் கொண்டவுடனே, அவரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது, அமெரிக்கா. அத்துடன், “இங்கிலாந்து வங்கி”யில் (Bank of England) வெனிசுவேலா அரசு வைத்திருந்த சுமார் ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தையும் பறித்துக் கொண்டது. அமெரிக்க வங்கிகளில் இருந்த வெனிசுவேலாவுக்குச் சொந்தமான சுமார் முப்பது பில்லியன் டாலரையும் அபகரித்துக் கொண்ட அமெரிக்கா, இவ்வாறு களவாடிய பணத்தை வெனிசுவேலாவில் தனது கைக்கூலிகளாகச் செயல்படும் எதிர்கட்சிகளுக்கு வாரி வழங்கியது.

இப்படி வெனிசுவேலா மக்களின் சொந்தப் பணத்தைக் கொண்டே அந்நாட்டில் தீவிரவாதச் செயல்களை அரங்கேற்றி வருகிறது, அமெரிக்கா. வெனிசுவேலாவின் கூரி நகரில் அமைந்துள்ள “சிமோன் பொலிவார் நீர்மின் நிலையத்தில்” அமெரிக்க ஆதரவுக் கூலிப் படைகள் கடந்த சில வாரங்களுக்கு முன் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கிறார், அந்நாட்டின் துணை அதிபர் ஜோர்ஜி ரோட்ரிக்ஸ்.

ஒரு பக்கம் பொருளாதாரத் தடைகளின் மூலமும், இன்னொரு பக்கம் உள்ளூர் குற்றக் கும்பல்களின் மூலமும் வெனிசுவேலாவின் கழுத்தை நெறிக்கும் அமெரிக்கா, தனது ஆதரவு பெற்ற கூலிப் படையினர் நிகழ்த்தும் வன்முறைகளின் காணொளிகளை சர்வதேச ஊடகங்களில் பரவச் செய்து, அவற்றை மதுரோவின் ஆதரவாளர்கள் செய்வதாகப் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் வெனிசுவேலாவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் ரசியா, அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனது தொழில்நுட்ப வல்லுனர்களையும், இராணுவ அதிகாரிகளையும், இரண்டு விமானப்படை விமானங்களையும் அனுப்பி வைத்துள்ளது. இதற்கெதிராக அமெரிக்கா போட்ட கூச்சல்களை ரசியா கண்டு கொள்ளவில்லை. வெனிசுவேலாவில் கணிசமான அளவு முதலீடு செய்துள்ள சீனா, சில தினங்களுக்கு முன் தனது இராணுவத்தினரையும் அனுப்பியிருக்கிறது. ஏறக்குறைய சிரியாவின் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது வெனிசுவேலா.

வெனிசுவேலா இழைத்த ஒரே குற்றம், அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் ஏகபோகச் சுரண்டலைத் தடுத்ததும், அதன் மேலாதிக்கத்தை எதிர்த்து நின்றதும் மட்டுமே. இத்தனைக்கும் அந்த நாடு ஒரு முழுமையான சோசலிசப் பொருளாதாரத்தை மேற்கொள்ளவும் இல்லை. எண்ணெய் வர்த்தகத்தில் காலங்காலமாகச் சுரண்டி வந்த அமெரிக்க மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளைத் தூக்கியெறிந்துவிட்டு, எண்ணெய் வயல்களைத் தேசியமயமாக்கினார் சாவேஸ். எண்ணெய் வர்த்தகத்தில் கிடைத்த பணத்தை மக்கள் நலத் திட்டங்களுக்கு திருப்பிவிட்டார்.

எண்ணெய் வர்த்தகம், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறைகளே முழுமையாக அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன. உணவு உற்பத்தி, ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறை, ஊடகங்கள் மற்றும் சில உற்பத்தித் துறைகளில் இன்றும் தனியார் மூலதனம் செயல்பட்டுக் கொண்டுதான் உள்ளது; இவற்றில் அந்நிய முதலீடும் அனுமதிக்கப்படுகின்றது. சொல்லப்போனால், உணவு உற்பத்தி தனியாரிடம் இருக்கின்ற காரணத்தினால்தான், உணவுப் பொருட்கள் பதுக்கப்பட்டுச் செயற்கையாகப் பஞ்சம் ஏற்படுத்தப்படுகின்றது.

வெனிசுவேலாவில் செயல்படும் தனியார் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் அனைத்துமே எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான பிரச்சார சாதனங்கள்தான். அவை அரசுக்கெதிரான செய்திகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த போதிலும், தடை செய்யப்பட வில்லை.

இதுமட்டுமல்ல. வெனிசுவேலாவின் உயிர் ஆதாரமான கச்சா எண்ணெய் வணிகத்தைத் தடுத்து, அந்நாட்டைப் பொருளாதாரரீதியில் திவாலாக்கும் பொருட்டு, அந்நாட்டுடன் பொருளாதார உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என உலக நாடுகளை அச்சுறுத்தித் தடுத்திருக்கிறது, அமெரிக்கா. கடந்த பிப்ரவரி மாதம் வரை வெனிசுவேலாவின் முதன்மையான எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியா இருந்து வந்தது. தற்போது மோடி அரசு அமெரிக்காவின் உத்தர வுக்கு அடிபணிந்து, இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்தி விட்டது.

*****

மெரிக்காவின் பன்முனைத் தாக்குதல்களை வெனிசுவேலா மக்கள் எதிர்கொள்ளும் முறை ஒரு கவிதை. வெனிசுவேலாவில் அமைதியற்ற சூழல் நிலவுவதாக அமெரிக்கா பரப்பிவரும் செய்திகளின் உண்மைத் தன்மையை நேரில் சென்று சோதித்தறிந்துள்ளார் பத்திரிகையாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான ஈவா பார்லெட். கொலம்பிய எல்லையில் நிலவிய சிறிய அளவிலான பதற்றத்தையும், அங்கொன்றும் இங்கொன்றுமாக அரச எதிர்ப்புக் கூலிப் படையினர் நிகழ்த்தும் வன்முறைகளையும் தவிர்த்துப் பெரும்பாலும் வெனிசுவேலாவில் அமைதியே நிலவுவதாகப் பதிவு செய்கிறார் ஈவா.

வெனிசுவேலாவின் உண்மை நிலை குறித்து உலகுக்கு உணர்த்தும் நோக்கில் கட்டுரைகளை எழுதிவரும் பத்திரிக்கையாளர் ஈவா பார்லெட்.

அமெரிக்க ஆதரவு உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கிலித் தொடர் சூப்பர் மார்கெட் முதலாளிகள் பதுக்கலில் ஈடுபட்டுச் செயற்கையான உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்த முனைந்துள்ள நிலையில், அரசு மக்கள் கூட்டுறவுகள் மூலம் உணவுப்பொருள் விநியோகத்தைத் துரிதப்படுத்தி வருகின்றது. ஊடகங்கள் மதுரோவுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில், மக்கள் பெருமளவில் அவருக்கு ஆதரவான ஊர்வலங்களை நடத்தி வருகின்றனர்.

சுமார் பத்து இலட்சம் மக்கள் தொகை கொண்ட ஃபேப்ரீசியோ ஒஜேடா (Fabricio Ojeda) என்கிற கம்யூன் சுயேச்சையாக உணவு உற்பத்தியில் ஈடுபடுவதுடன், உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களைச் சந்தை விலையில் இருந்து 30-40 சதவீதம் குறைந்த விலையில் விற்று வருகின்றது. மக்கள் வசிக்கும் ஒவ்வொரு பகுதிகளிலும் கலெக்டிவோஸ் (Colectivos) எனப்படும் சமூகக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மின் தடையினால் இறைச்சி உள்ளிட்ட பொருட்களை மையமாக ஒரே இடத்தில் சேமிப்பது, உணவுப் பொருள் விநியோகம், தண்ணீர் விநியோகம் என அத்தியாவசியப் பொருட்களை இந்த கலெக்டிவோஸ் குழு ஒருங்கிணைக்கிறது.

பத்திரிகையாளர் ஈவாவுக்கு பேட்டியளித்துள்ள கம்யூன் தலைவர் ஒருவர், “நாங்கள் உணவுப்பொருள் உற்பத்தியில் சுயசார்புத் தன்மையை அடைய முயற்சித்து வருகிறோம். எங்கள் மேல் தொடுக்கப்பட்டுள்ள பொருளாதாரப் போருக்கு எதிராக இதைத்தானே செய்ய முடியும்” எனக் குறிப்பிடுகிறார். பல்வேறு தரப்பு மக்களும் அமெரிக்காவின் பொருளாதாரப் போர் தங்களுக்குப் புதிதில்லை எனவும், ஒவ்வொரு முறை தங்கள் நாடு அமெரிக்காவால் பொருளாதார நெருக்கடிக்குள் திட்டமிட்டு தள்ளிவிடப்படும் போதும், அதை அமைதியுடன் எதிர்கொள்ளப் பழகியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

படிக்க:
♦ வெனிசுலா: அமெரிக்காவின் அடுத்த ஆக்கிரமிப்புப் போர் !
♦ வெனிசுவேலா : சாவேஸின் தோல்வி உணர்த்தும் உண்மைகள்!

ஏகாதிபத்திய எதிர்ப்புக் கலாச்சாரம் வெனிசுவேலா மக்களின் உணர்வுகளில் மிக அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. அவர்கள் சோறைவிடச் சுரணை முக்கியம் என்பதை உணர்ந்துள்ளனர். எனவே, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அமைதியுடனும் உறுதியுடனும் தீரத்தோடும் எதிர்த்து நிற்கிறார்கள்.

*****

ப்கான், ஈராக் போன்ற நாடுகளில் தலையிடுவதற்கான நியாயத்தை அல்கொய்தாவும் பின்லேடனும் சில நூறு அமெரிக்க உயிர்களும் இரட்டை கோபுரத் தகர்ப்பும் அமெரிக்காவுக்கு வழங்கின. சிரியாவில் தலையிட ஏ.கே. 47 துப்பாக்கி தரித்த சிலரின் மரணங்கள் அமெரிக்காவுக்குத் தேவைப்பட்டது. வெனிசுவேலாவில் அதன் தகிடுதத்தங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. உள்நாட்டுக் கலகம், வன்முறை, மதுரோவுக்கு எதிரான மக்கள் எழுச்சி என்று சர்வதேச ஊடகங்களில்தான் அமெரிக்காவால் பொய்ப்பிரச்சாரம் செய்ய முடிகிறதே தவிர, வெனிசுவேலாவுக்குள் எந்தச் சலசலப்பையும் உருவாக்க முடியவில்லை.

வெனிசுவேலாவில் மீண்டும் அமெரிக்க மேலாதிக்கத்தைத் திணிக்க முயன்றுவரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

வெனிசுவேலா தலைநகரில் மதுரோ எதிர்ப்பாளர்களின் ஆர்ப்பாட்டம் என்று உலக முழுவதும் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு நேரில் சென்றிருந்த ஈவா பார்லெட், அதைப் புகைப்படத்துடன் வெளியிட்டிருக்கிறார். பத்துப் பதினைந்து பேர் முழக்கம்கூட எழுப்பத் திராணியில்லாமல் சாலையில் நிற்கின்றனர். அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலோ இலட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக கருப்பின, கலப்பின உழைக்கும் மக்கள் திரண்டு நின்று முழங்குகிறார்கள்.

வெனிசுவேலா நமக்கு  இரண்டு செய்திகளைச் சொல்கிறது. புதிய தாராளவாதக் கொள்கைகளை மறுத்தும், ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை எதிர்த்தும் சுயசார்பாக நிற்கும் நாடுகளும் மக்களும் எத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது முதல் செய்தி.

ஆகப் பெரும்பான்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாக இருப்பினும், அந்த அரசு, அந்நாட்டு மக்களின் விருப்பப்படித் தனது பொருளாதார அரசியல் கொள்கைகளை வகுக்க விரும்பினால், ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போருக்கு தயாராக வேண்டும் என்பதும் அதற்கு மக்களைத் தயார்படுத்த வேண்டும் என்பதும் இரண்டாவது செய்தி.

சாக்கியன்

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

சாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ

சாதி ஆணவ வெறியாட்டங்கள் மீண்டும் தலை தூக்குகின்றன. ஆதிக்க சாதிச் சங்கங்கள், கட்சிகள் தங்களின் ஓட்டரசியலில் வாக்குப் பொறுக்குவதற்காக சாதிய வன்முறைகளைத் தூண்டி விடுகின்றன.

இதன் ஒரு வெளிப்பாடுதான் பாமக சாதி வெறியர்களும் இந்து முன்னணி பொறுக்கிகளும் இணைந்து நடத்திய சமீபத்திய பொன்பரப்பி வன்முறை !

கடந்த 1997-ம் ஆண்டு, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில், “ஆண்ட பரம்பரையா? அடிமைப் பரம்பரையா?” என்ற பாடல் ஒலித்தகடு வெளியிடப்பட்டது. அப்பாடல்கள் ஒவ்வொன்றும் அன்றுமுதல் இன்றுவரை ஆதிக்கச் சாதித் திமிரை நார்நாராய் கிழித்தெறிகின்றன.

நீங்களும் பாருங்கள் ! பகிருங்கள் !

பாடல் வரிகள் :

வெட்டுப்பட்டுச் செத்தோமடா மேலவளவிலே
வெந்து மடிந்தோமடா வெண்மணியிலே… (வெட்டுப்பட்டுச் செத்தோமடா)

வெட்டியாரப் பயலுன்னு
பட்டம் கெடச்சது எங்களுக்கு
கொட்டடிக்க மாடுதூக்க
கொடுப்பின வேறாருக்கு….?

செத்தா உன்ன வேக வைக்கும்
வெட்டியான் நான் உனக்கு… (வெட்டியான் நான் உனக்கு)

சேத்து
சாதியையும் வேக வைப்போம் – அப்ப
என்ன பேரு எங்களுக்கு …

வெட்டுப்பட்டுச் செத்தோமடா மேலவளவிலே…
வெந்துமடிந்தோமடா வெண்மணியிலே… (வெட்டுப்பட்டுச் செத்தோமடா)

குப்ப மலத்தை வாரி…
கொட்டும் வேலை எங்களுக்கு
கூடை பிஞ்சு மொகத்தில் வழிய
சுமந்திடறோம் உங்களுக்கு…

ஊர சுத்தம் செஞ்ச குத்தத்துக்கோ…
தோட்டிப் பட்டம் எங்களுக்கு… (தோட்டிப் பட்டம் எங்களுக்கு)

மல
சாக்கடையில் நீ எறங்கு – உன்
சாதி என்ன சொல் எனக்கு…

வெட்டுப்பட்டுச் செத்தோமடா மேலவளவிலே
வெந்து மடிந்தோமடா வெண்மணியிலே (வெட்டுப்பட்டுச் செத்தோமடா)

அழுகின பொணத்தக் கூட
மடியில் வச்சி வழிக்கிறோம்…
ஆனாலும் கூலி இல்ல…
எரந்து கஞ்சி குடிக்கிறோம்…

உன்ன ஊர் மதிக்க செஞ்சதுக்கோ….
அம்பட்டன்னு பேர் எடுத்தோம் (அம்பட்டன்னு பேர் எடுத்தோம்)

சாதி
ஆணவத்த வெட்டிடுறோம் – பேரு
என்ன வைப்ப… பாத்திடுறோம்…

வெட்டுப்பட்டுச் செத்தோமடா மேலவளவிலே
வெந்து மடிந்தோமடா வெண்மணியிலே … (வெட்டுப்பட்டுச் செத்தோமடா)

உன்னோட அழுக்குத் துணி
வெள்ளாவியிலே வேகுது …
எங்களோட முதுகுத்தோலு
வெய்யிலிலே தீயுது….

உன் துணிய தொவைக்கும்போது
வண்ணாரப் பய நான் உனக்கு …  (வண்ணாரப் பய நான் உனக்கு)

அடிச்சி
உன் திமிர வெளுப்போம்
அப்போ என்ன பேரு எங்களுக்கு ? …

– வினவு செய்திப் பிரிவு

நாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை

0

லைநகர் தில்லியைக் குறித்து நாம் அறிந்திருப்பது சொற்பமே. குடியரசு தினங்களின் போது அந்த அகன்ற சாலையில் பவனி வரும் படைவரிசைகள், திரைப்படங்களில் பார்த்திருக்கும் காந்தி குல்லாய் வைத்த அரசியல்வாதிகளும், அவர்கள் பயணிக்கும் சிவப்பு விளக்கு வைத்த அம்பாசிடர் கார்களும்… இது ஒரு சித்திரம். மற்றபடி அங்கே சென்று வருபவர்களோ, “வெயில் காலத்தில் தகிக்கும், குளிர் காலத்தில் உறைந்து போகும்” என்பது போல் சொல்லக் கேட்டிருப்போம்.

தில்லியின் வாழ்க்கை எப்படியிருக்கும் ?

அதிலும் குறிப்பாக நடுத்தர வர்க்க, உழைக்கும் மக்களின் வாழ்க்கையைக் குறித்து நாம் மிகச் சொற்பமாகவே வாசித்திருப்போம். தி வயர் இணையதளத்தில் வெளியாகி இருக்கும் இந்தக் கட்டுரை ( ‘At Night, Our Verandah Turns Into a Bedroom’: Life in Delhi’s Working-Class Settlement ) நமக்கு ஒரு புதிய சித்திரத்தை வழங்குகின்றது. தெற்கு தில்லியின் தக்‌ஷின்புரியைச் சேர்ந்த இக்‌ஷிதா என்கிற பெண் எழுதியுள்ள நூலின் ஒரு பகுதி இது. இந்தக் கட்டுரையில் அவர் தனது வீட்டை வருணிக்கிறார். அந்த வருணனையின் ஊடாக தங்கள் வாழ்க்கை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நமக்கு விளங்க வைக்கிறார்.

வயர் கட்டுரையின் சுருக்கமான தமிழாக்கம் இனி.

***

ரவு ஒன்பது மணி. நான் என் வீட்டில் கட்டிலின் மீது அமர்ந்துள்ளேன். எனக்கு நேர் எதிரே உள்ளது வாயிற் கதவு. கதவு பிங்க் நிறம்; சுவர்கள் நீல நிறம். எனக்கு இடது புறம் உள்ள சுவரில் துர்கா மாதாவின் பெரிய படம் ஒன்று தொங்கிக்கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக உள்ள சுவரில் எங்கள் குடும்ப உறுப்பினர்களின் படங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த சுவருக்கு பக்கத்திலேயே இரண்டு அலமாரிகள். ஒன்றில் பாட்டியின் பொருட்களும் மற்றொன்றில் அம்மாவின் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. அலமாரிகளுக்கு பக்கத்தில் படுதாக்களால் மூடப்பட்ட நான்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பெட்டிகளுக்கு பக்கத்திலேயே ஒரு குளிர்சாதனப் பெட்டி. பெட்டிகளுக்கு மேலும், குளிர்சாதனப் பெட்டியின் மேலும், அலமாரிகளின் மேலும் சில சில்லறைப் பொருட்கள். இவையனைத்தும் பூக்கள் அச்சிடப்பட்ட திரைச்சீலையால் மறைக்கப்பட்டிருக்கிறது. நான் அமர்ந்திருக்கும் கட்டிலை அடுத்து ஒரு வெள்ளை நிற மேசை உள்ளது. அதன் மேல் தான் எங்கள் பள்ளிப் பொதிகளை வைப்போம்.

கட்டிலின் மற்றொரு பக்கம் பிங்க் நிற விரிப்பால் மூடப்பட்ட தையல் இயந்திரம் உள்ளது. பாட்டி தனது சாய்வு நாற்காலியை கட்டிலுக்கு பக்கத்தில் தான் வைத்திருப்பாள். அப்படி வைத்திருக்கும் போது வாயிற்கதவை முழுவதுமாக திறக்க முடியாது; இடித்துக் கொள்ளும்.

எனக்கு நேர் எதிரே உள்ள சுவரில் மூன்று அடுக்கு கொண்ட அலமாரி ஒன்று உள்ளது. அதில் கீழ்ப்புறத்தில் இருக்கும் அடுக்கில் தான் காஸ் அடுப்பு உள்ளது. அது கொஞ்சம் அகலமான அடுக்கு. அதில் மசாலாப் பொருட்கள் போட்டு வைக்கும் இரண்டு கூடைகளும் திணித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு மேல் இருக்கும் அடுக்குகளில் சமயல் பாத்திரங்கள் இருக்கின்றன. அதில் ஒரு அடுக்கில் சற்றே பெரிய பாத்திரங்கள்.

dakshinpuri-new-delhi

அந்த அலமாரிக்கு கீழே காஸ் சிலிண்டர் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பக்கத்திலேயே அரிசி போட்டு வைக்கும் அண்டா ஒன்று. அந்த அலமாரிக்கு பக்கத்திலேயே தண்ணீர் கேன் உள்ளது. இந்த அலமாரியின் மேலிருந்து முதல் அடுக்கில் சமைத்த பண்டங்கள் வைக்கப்பட்டிருக்கும். அதே அடுக்கில் பெரிய பொரிக்கான் சட்டிகளும் இருக்கும். எப்போதாவது விருந்தாளிகள் வந்தால் மட்டும் அவற்றைப் பயன்படுத்துவோம். மற்ற நேரங்களில் அவை வெறும் காட்சிப் பொருட்கள் தாம். அதே அறையில்தான் சமையல் செய்வது, சமைத்த பாத்திரங்களைக் கழுவுவது எல்லாம்.

வாயிற்கதவுக்கு வெளியே பாத்ரூம் ஒன்று உள்ளது. யாராவது பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந்தால் பாத்ரூமிற்குச் செல்ல முடியாது. அதில் கழிவறையும், குளியலறையும் ஒன்றுதான். கழிவறையைப் பயன்படுத்துவதில் சிக்கல் இல்லை; ஆனால் குளிக்க வேண்டும் என்றால் கழிவறைக் கோப்பையின் மீது நிற்க வேண்டும். அந்த அறையில் ஒரே ஒரு சிறிய பக்கெட் தான் இருக்கும். பெரிய பக்கெட்டுக்கோ மற்றும் ஒரு பக்கெட்டுக்கோ அந்த அறையினுள் இடம் இருக்காது.

படிக்க:
வெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை
♦ டெல்லி பாலியல் வன்முறை – குற்றம் : தூண்டியது யார் ?

பாத்ரூமின் கதவு உட்புறமாக திறக்கும்; வாயிற்கதவு வெளிப்புறமாக திறக்கும். இரண்டு ஜன்னல்கள் உள்ளன ஒன்று வாயிற்கதவுக்கு மேல் மற்றொன்று கழிவறையின் உள் இருக்கும் சிறிய ஜன்னல். கழிவறையின் வழியே தான் காற்றோட்டம் வந்தாக வேண்டும். கழிவறைக் கதவறை மூடி விட்டால் வீட்டினுள் காற்றோட்டம் இருக்காது.

இரவு நேரங்களில் இந்த ஒரே தாழ்வாரம்தான் (வராண்டா) படுக்கை அறையாகவும் மாறும்.

இரவு எல்லோரும் சாப்பிட்ட பின், அம்மா ஒரு பெரிய தரை விரிப்பை விரிப்பாள். அறையின் தரை பல இடங்களில் பெயர்ந்து இருக்கும். அலமாரியின் கீழ் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் பெரிய தரை விரிப்பை அம்மாவால் முழுவதுமாக விரிக்க முடியாது. அதன் ஓரங்களை மடித்து சுருட்டிக் கொள்ள வேண்டும். அதன் ஒரு பகுதியை தையல் இயந்திரத்தின் கீழ் சொருகிக் கொள்ள வேண்டும்.

இனி நாங்கள் இந்த அறையை படுப்பதற்கோ  தொலைக்காட்சி பார்ப்பதற்கோ பயன்படுத்திக் கொள்ளலாம். பாட்டிக்கு கட்டில். எங்கள் மூவருக்கும் தரை. இரவு நான் புரண்டு படுத்து காலை நீட்டினால் தையல் இயந்திரத்தில் இடிக்கும். முதலில் இதனால் எனக்கு விழிப்பு வந்து விடும். பின்னர் சுருண்டு படுக்க பழகிக் கொண்டேன். ஒரு முறை அம்மா தூங்கும் போது காலை நீட்டி இருக்கிறாள். அவளது கால் அலமாரிக்கு கீழே சிக்கிக் கொண்டது. அவளால் இழுக்க முடியவில்லை. பின் நாங்கள் எல்லாம் சேர்ந்து அவளது காலை வெளியே இழுத்தோம். அப்போது நாங்கள் எங்கள் அம்மாவைப் பார்த்து சிரித்தது நினைவில் உள்ளது. அதன்பின் அவள் எச்சரிக்கையாக தூங்கப் பழகிக் கொண்டாள். நாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை.

எங்களது இளைய சகோதரன் எங்கள் மூவரோடுதான் உறங்குவான். இப்போது அவன் வளர்ந்து விட்டான். என்றாலும், வேறு வழியின்றி நெருக்கியடித்து தூங்க பழகிக் கொண்டோம். எப்போதாவது எங்கள் அத்தை வீட்டிற்கு வந்தால் நாங்கள் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு தூங்கச் சென்று விடுவோம்.

எங்கள் வீட்டில் இருக்கும் கட்டில் பாட்டிக்குத் தான் என்றாலும், அப்பா வரும் போது அவருக்குக் கொடுத்து விடுவோம். அவர் இரவு பாத்ரூமிற்கு செல்ல வேண்டுமென்றால் அவரது ஒரு காலை எனது தலையனையின் மீது வைத்து மற்றொரு காலால் இடையில் இருக்கும் போர்வைகளை நகர்த்தி வழி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதெல்லாம் நான் விழித்துக் கொள்வேன்.

ஒரு முறை நாங்கள் எல்லாம் கட்டிலின் மீது அமர்ந்து தொலைக்காட்சியின் குலாம் சீரியலை பார்த்துக் கொண்டிருந்தோம். கட்டிலின் மீது சாய்ந்து கொண்டே கீழே அமர்ந்திருந்த என் இளைய சகோதரி அமிஷா நகம் வெட்டிக் கொண்டிருந்தாள். அலமாரியின் மீது சாய்ந்து அமர்ந்திருந்த பாட்டி தனது தலை முக்காடை சரி செய்து கொண்டிருந்தாள்.

சீரியல் முடிந்த பின் அம்மா எழுந்து வெளியே சென்று பார்த்து விட்டு கதவுகளை அடைத்தாள். பின் எரிந்து கொண்டிருந்த குழல் விளக்கை அணைத்தாள். அரை இருளில் ஆழ்ந்தது. எல்லோரும் உறங்கச் செல்லும் முன் அம்மா கடைசியாகச் சொன்னாள் “காலை சீக்கிரம் எழுப்பி விடுங்கள். நீரு மேடம் என்னை சீக்கிரம் வரச் சொல்லி இருக்கிறார்” அத்துடன் அறை அமைதியானது; அந்த நாளும் முடிவுற்றது.


கட்டுரையாளர் : இக்‌ஷிதா
தமிழாக்கம்  : சாக்கியன்
நன்றி : தி வயர்

Reason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் !

0

தீவிரவாத இந்து தேசியவாதத்தை கூர்மையாக்கும் சங்பரிவாரத்தின் பின்னணியில் ஐந்தாண்டுகளாக எதேச்சதிகார ஆட்சியை நடத்தி வரும் நரேந்திர மோடி அரசு, மதச்சார்பற்ற-பன்முகத்தன்மை வாய்ந்த இந்தியா என்கிற கருத்தாக்கத்தை பலவிதங்களிலும் தீவிரமாக சவால் விடுத்துவருகிறது.

தனது ஆட்சியில் ‘பொருளாதார வளர்ச்சி’ இருக்கும் என வாக்குறுதி அளித்திருந்த மோடியின் ஆட்சியில் நாற்பதாண்டுகளில் இல்லாத கடுமையான வேலையில்லாத் திண்டாட்டமும் தேக்கமடைந்த வளர்ச்சியும் மட்டுமே மிஞ்சியதை இப்போது கண்டுவருகிறோம். ஆனால், எதேச்சதிகார ஆதரவு அலையில் மிதந்துகொண்டிருக்கும் பாஜகவை அசைக்குமா என்பது தெரியவில்லை.

செயல்பாட்டாளர், ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தனின் Reason என்ற சமீபத்திய ஆவணப்படம் தரும் ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, ஒரு தேர்தல் தோல்வியால் பாஜகவின் இந்துத்துவ அணிவகுப்பை நிறுத்திவிட முடியாது என்பது தெரிகிறது.

சமீப ஆண்டுகளாக இந்துத்துவத்தின் வளர்ச்சியை அதன் ரத்தம் தோய்ந்த பக்கங்களிலிருந்து ஐந்தாண்டு கால உருவாக்கத்தில், எட்டு பிரிவுகளாக விவரிக்கிறது இந்த ஆவணப்படம். பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகியோரின் படுகொலைகளையும் அவற்றின் பின்னணியில் தீவிரவாத இந்து அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் பங்கையும், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் முசுலீம்கள் மற்றும் தலித்துகள் மீதான வன்முறை தாக்குதல்களையும் சாதிய ஒடுக்குமுறை காரணமாக தற்கொலை செய்துகொண்ட ஆய்வு மாணவர் ரோஹித் வெமூலாவின் தற்கொலை, இன்னும் ஏராளமான  சிறியதும் பெரியதுமான தற்போது இந்தியா எதிர்கொண்டுள்ள வன்முறைகளைப் பற்றிப் பேசுகிறது இந்த ஆவணப்படம்.

இந்த வன்முறைகள் இந்தியாவின் கூட்டு மனசாட்சியின் மீது செலுத்திய தாக்கத்தை இந்த ஆவணப்படம் தேடுகிறது. இந்துத்துவம் மற்றும் இந்து தேசியவாதம் மக்களிடமும் அரசிடமும் ஆழமாக ஊடுருவி உள்ளன. இதை ஒரே ஒரு தேர்தலால் அழித்துவிட முடியும் என்பதை கற்பனைகூட செய்துபார்க்க முடியவில்லை. கடந்த மார்ச் மாதம் இந்தப் படத்தின் கரு குறித்து பேசும்போது, பட்வர்த்தன் இப்படி சொன்னார் : “மனிதநேயம் இல்லாதவரைக்கூட இந்தப் படம் அசைத்துவிடும். இது சிறப்பான படமாக்கலால் அல்ல, இதில் சொல்லப்பட்டிருப்பவை அனைத்தும் உண்மையானவை; துயரமானவை”.

கேள்வி: படுகொலைகள், பசு தொடர்புடைய வன்முறை, இந்து தீவிரவாதம் மற்றும் தலித் உள்ளிட்டவர்கள் மீதான தாக்குதல்கள் போன்ற எட்டுக்கும் அதிகமான பிரிவுகளில் படம் உள்ளது. சிவாஜி மற்றும் வி.டி. சவார்க்கர் போன்ற வலது இந்து வழிபாட்டாளர்களையும்கூட மீளாய்வு செய்திருக்கிறது. பரந்திருக்கும் காவி சித்திரத்தின் பின்னணியில் இருக்கும் தத்துவம் என்ன?

ஆனந்த் பட்வர்த்தன்:  பிரிட்டீஷ் காலனியாளர்களின் ‘பிரித்தாளும்’ கொள்கையை ஒட்டி இன்று உருவாகியுள்ள மத ரீதியிலான பிளவு குறித்த தடயங்களை தேடுகிறது ‘விவேக் அல்லது ரீசன்’. சுதந்திரத்துக்குப் பின், ஏகாதிபத்திய பிரிட்டீஷ்-க்கு பதிலாக மற்றொரு வல்லரசான அமெரிக்கா அந்த இடத்தைப் பிடித்தது. அது ஆப்கானிஸ்தானில் சோவியத்தின் தாக்கத்தை எதிர்த்து அந்நாட்டின் எல்லைப் பகுதிகளில் இசுலாமிய ஜிகாதிகளை உருவாக்கியது.

இதன் மேற்பரப்பை மட்டுமே விவரிக்கிற இந்தப் படம், இந்தியா மற்றும் பாகிஸ்தான், இந்துகள் மற்றும் முசுலீம்கள் உண்மையில் எங்கோ உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி நடக்கின்றன. இப்போது, இங்கே நடந்துகொண்டிருப்பவற்றுக்கு நாம் பொறுப்பல்ல என சொல்லவில்லை. எனவே, இந்தப் படத்தின் முதன்மையான கவனம், இந்தியாவில் பாசிசத்தின் எழுச்சியை சொல்வதும் பாசிசத்துடனான மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பகுத்தறிவாளர்களின் போர் குறித்ததுமாகும்.

படிக்க:
புனே : சினிமாவை காவிமயமாக்கத் துடிக்கும் மோடி
பொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் !

கேள்வி: நீங்கள் ஏராளமான கோபம் கொண்ட ஆண்களை இந்தப் படத்தில் நேர்கண்டிருக்கிறீர்கள். வர்ணனையாளர் அவர்களைபுயல் துருப்புகள்என்கிறார். அவர்கள் பார்ப்பனியத்தால் வேலையற்ற வர்க்கமாக காட்டப்பட்டவர்கள். புயல் துருப்பு என்போர் யார்? அவர்களின் லட்சியங்கள் நோக்கங்கள் என்ன?

ஆனந்த் பட்வர்த்தன்: படத்தில் சொல்லப்பட்டது இதுதான், “இன்று பார்ப்பனியம் தேசிய கொடியை போர்த்திக்கொண்டிருக்கிறது, புயல் துருப்புகள் அதனால் கைவிடப்பட்டவர்கள், வேலையில்லாமல் ஆக்கப்பட்டவர்கள்”.

ஆனந்த் பட்வர்தன்

இந்தப் படத்தின் தொடக்கத்தில் பகுத்தறிவாளர் தோழர் பன்சாரே, பார்ப்பனராக பிறந்தவருக்கும் பார்ப்பனிய சித்தாந்தத்துக்கும் உள்ள வேறுபாட்டை சொல்லியிருப்பார். பார்ப்பனர் தன்னுடைய பிறப்பின் அடிப்படையிலிருந்து வெளிவரலாம். ஆனால், பார்ப்பனிய சித்தாந்தம் என்பது விசத்தன்மையுள்ள மேலாதிக்க நோய். பன்சாரே அதை தொற்றுநோய் என்கிறார்.

ஹைதரபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் நடந்த ரோஹித் வெமுலாவின் தூண்டப்பட்ட தற்கொலைக்குப் பிறகு, ஒன்றிணைந்த தலித் மற்றும் இடதுசாரி இயக்க இளைஞர்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த இளைஞர் நச்சுத்தனமான இந்துத்துவ துஷ்பிரயோகத்தை செய்கிறார். இந்த வலதுசாரி புயல்துருப்புகள் வலுக்கட்டாயமாக தேசியக் கொடியை போர்த்திக்கொள்கின்றன. இவர்களுடைய தாய் அமைப்பு 1947-ல் இதே கொடியை எதிர்த்து, காவி இந்து கொடிதான் வேண்டும் என்று பிடிவாதமாக நின்றது.

அவர்களுடன் நடந்த விவாதத்தில், காந்தியை கொன்றவர்கள் குறித்த அவர்களுடைய உண்மையான அறிதல் என்பது அவர்கள் மழுங்கடிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. நம்முடைய கல்வி அமைப்பு வர்க்க உணர்வுடனே உள்ளது. அதே நேரத்தில் வேலை சாதியைச் சேர்ந்த பெருவாரியான இளைஞர்களை இயந்திரத்தனமாக உருவாக்கித் தள்ளுகிறது. இவர்களுடைய ஒரே லட்சியம் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்பதும் தனிப்பட்ட ஆடம்பர நுகர்வு வாழ்வை வாழ வேண்டும் என்பதுவுமே ஆகும். மற்றவர்கள் இழப்பின் மீதும்கூட இதை பெறவே அவர்கள் விரும்புகிறார்கள்.

சிறந்த உலகத்துக்கான காரணம், மனிதநேயம் மற்றும் சில கொள்கைகளுக்கு நம் கல்வி அமைப்பில் இடமில்லை. எந்த விலை கொடுத்தாவது வெற்றியை பெற வேண்டும். இளைஞர்கள் கனவென்பது, கல்வி வளாகங்களில் உறுதி செய்யப்படும் வேலை வாய்ப்பிலும் அலுவலங்களில் சேர்வது குறித்தும்தான். நம்முடைய முன்மாதிரி திருபாய் அம்பானிதான், கன்னையா குமாரோ, ஜிக்னேஷ் மேவானியோ அல்லது மேதா பட்கரோ அல்ல.  ஏனென்றால் சிந்தனை குறித்தோ விமர்சனம் குறித்தோ பரிவுணர்வு குறித்தோ எந்தவித உரையாடல் இங்கே இல்லை. இந்த அமைப்பு படித்தவர்களை உற்பத்தி செய்கிறது. ஆனால், அவர்கள் அறிவற்ற, நோக்கமற்ற, வேலை வாய்ப்பு பெற முடியாத உள்ளே தங்களுடைய எதிர்காலம் குறித்து சோகத்தாலும் கோபத்தாலும் அலைகழிக்கப்பட்ட இளைஞர்களாக இருக்கிறார்கள்- அதாவது மிகச் சிறப்பான புயல் துருப்புகள்.

கேள்வி: இந்துத்துவம் குறித்த உங்களுடைய முதல் படம்ராமின் பெயரால் Ram Ke Naam‘. 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு சற்று முன்னதாக வெளியானது. அப்போதிலிருந்து இந்துத்துவ இயக்கம் எப்படி பரிணாமம் அடைந்திருக்கிறது?

ஆனந்த் பட்வர்த்தன்: இந்து அடிப்படைவாதம் வளர்ந்துவருவதையும் அது நிலைகெட்டு ஓடிக்கொண்டிருப்பதையும் அதை கட்டுப்படுத்தாவிட்டால் மதச்சார்ப்பற்ற கலாச்சாரத்தால் அதை எதிர்கொள்ளாவிட்டால் பெரும் விபரீதம் நடக்கும் என்பதை அரசுக்கும் இந்திய மக்களுக்கும் சொல்வதாக ராம் கி நாம் இருந்தது.

இந்த எச்சரிக்கையை கேட்பதற்கு பதிலாக, ‘மதச்சார்பற்ற’ அரசுகள் தூர்தர்ஷனில் அதை ஒளிபரப்ப விடாமல் தடுத்தனர். ஐந்தாண்டுகால சட்ட போராட்டத்துக்குப் பிறகு, முதன்மையான நேரத்தில் அதை அரசு ஊடகம் ஒளிப்பரப்பியது. நம்முடைய மதச்சார்பற்ற அரசு, ராம் கி நாம்-ஐ ஒளிபரப்புவதற்கு பதிலாக ராமாயண டிவி சீரியலை ஒளிபரப்பி, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் விளம்பரப்படுத்தினார்கள்.

1990 -ல் தொடங்கப்பட்டது, பொருளாதார தாராளவாதத்துடன் தற்செயலாக இணைந்தது அல்ல. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கலவையான பொருளாதாரமாக இருந்த நேருவிய பொருளாதாரம், முற்றிலும் சந்தை பொருளாதாரமாக மாறியது, உண்மையில் இது இந்தியாவின் சதையினை கடிக்கத் தொடங்கியது. ஆம், சுதந்திரத்துக்கு பிறகான ஆரம்ப கட்டத்தைக் காட்டிலும் இன்றைய இந்தியா, சிறுபான்மையினர் மீது மிகுந்த வெறுப்பை உமிழ்கிறது. வெறுமனே பாலிவுட் படங்களைப் பாருங்கள், கடந்த பத்தாண்டுகளில் நடந்திருக்கும் மாற்றங்களை உணர்வீர்கள்.

கேள்வி: பன்சாரே, தபோல்கர் மற்றும் கௌரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலைகளில் தீவிரவாத இந்துத்துவ அமைப்பான சனாதன் சன்ஸ்தா தொடர்புபடுத்தப்பட்டது. பாஜக அந்த அமைப்புடன் தொடர்பில்லை என்கிறகிறது. அதுபோல சனாதன் சன்ஸ்தாவும் கொலையாளிகளுக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை என்கிறது. கொலையாளிகள் பிற இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் என அது சொல்கிறது. அவர்கள் அனைவருக்குமிடையேயான கருத்தியல் இணைப்பு தெளிவாக உள்ளது. அந்த சித்தாந்தத்தின் மூலமான ஆர்.எஸ்.எஸ்.க்கு எந்த பொறுப்பும் இல்லை.

ஆனந்த் பட்வர்த்தன்: பல சனாதானிகள் பிடிபட்டார்கள். ஆனால், இந்துத்துவ வழக்கறிஞர்களின் துணையோடு அவர்கள் வெளியே வந்தார்கள். 2002 முதல் 2008 வரை தொடர் குண்டுவெடிப்புகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் இந்த உண்மை பொருந்தும். இந்துத்துவ தீவிரவாதிகளை சிறையில் வைத்திருக்க முகாந்திரம் இல்லை என அரசியல் வர்க்கம் நினைக்கிறது. உறுதியான ஆதாரங்கள், பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலங்கள் இருந்தபோதும்கூட, அவர்களுடைய ஆழ்மனதில், அதை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள்.

இந்த குறுங்குழுக்களுக்கும் அவர்களுடைய தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-க்கும் உள்ள கருத்தியல் தொடர்பு வெளிப்படையானது. உண்மை என்னவெனில், இந்த அமைப்புகள் ஒருபோதும் தடை செய்யப்படாது. என்ன நடந்தாலும் அவர்கள் ஆதரவை ருசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

கேள்வி: மும்பை தாக்குதலின் போது உயிரிழந்த மும்பை தீவிரவாத தடுப்பு பிரிவின் தலைவர் ஹேமந்த் கார்கரே குறித்து முக்கியமான பகுதி ஒன்று படத்தில் வருகிறதுநவம்பர் 26-ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் அவர் பலியானது, அவரை கொல்லும் வகையில் திட்டமிடப்பட்ட சதியாக இருக்கலாம் என இந்தப் பகுதி உறுதியாக சொல்கிறது. ஏனென்றால் அவர் இந்தியாவில் நடந்த பல்வேறு தீவிரவாத தாக்குதலில் இந்துத்துவ அமைப்புகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வந்தார். ஆனால், இது ஆவணப்படம் குறித்த செய்திகளில் ஊடகங்களின் கவனத்தை பெறவில்லை. படத்தின் மிக முக்கியமான பகுதியே இதுதான். இது குறித்து விவரிக்க முடியுமா? இது ஏன் ஊடகங்களின் கவனம் பெறவில்லை?

ஆனந்த் பட்வர்த்தன்:  கார்கரே-வின் மரணம் என்பது ஒரு பொறியாக இருக்கலாம் என நீதிமன்ற விசாரணைகளிலிருந்து ஏராளமான ஆதாரங்கள் இந்த விசயத்தில் மலை போல் குவிந்துள்ளன. ஆனால் அவை மூடி மறைக்கப்பட்டன.  தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல நூல்கள் இதுகுறித்து எழுதப்பட்டுள்ளன.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான எஸ்.எம். முசரீஃப் (இவர் Who Killed Karkare? : The Real Face of Terrorism in India, 26/11: Why Judiciary Also Failed என இரு நூல்களை எழுதியிருக்கிறார்) எழுதிய நூலும் அடங்கும். இந்த ஆதாரங்களுக்கு என்னால் நீதி பெற்று தரமுடியாது எனினும் பார்வையாளர்கள் திறந்த மனதுடன் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். முரண்பட்ட, நம்பமுடியாத விசயங்கள் நம் நாட்டில் நடக்கின்றன. உள்ளூரில் வளர்க்கப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் வெளிநாட்டு சக்திகள் கைகோர்த்துக்கொண்டு, நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றுகின்றன. அவர்களுக்கு இந்திய குடிமக்களின் நிலைமை குறித்தோ பாதுகாப்பு குறித்தோ யாதொரு அக்கறையும் இல்லை.

கேள்வி: உனாவில் நடந்த தாக்குதல் மற்றும் வெமுலாவில் மரணத்துக்கு பின் தலித் மக்கள் வெகுண்டெழுந்ததை இந்தப்படம் சொல்லியிருக்கிறது. இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளுக்கிடையே இது மட்டுமே நம்பிக்கைக்குரிய கணமாக உள்ளது. ஆனால், தலித் எழுச்சி என்பது பெரும்பாலும் மதசார்பற்ற உயர்சாதி கருத்திலிருந்து வேறுபட்டதாகவே உள்ளது. ஆனால், இதை புறந்தள்ளும்விதமாக இந்தப் படத்தில் பகுத்தறிவுக்கு எதிரான நம்பிக்கையாக நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது?

ஆனந்த் பட்வர்த்தன்: சில நேரங்களில் மதசார்ப்பற்ற, உயர்சாதி கருத்தாடல்கள், தலித் கோபத்தை அபரிகரிக்கும்விதமாக முடிந்துவிடுகிறது என்ற புகார் உண்மையானது. ஆனால், வாய் அசைப்பிற்கும் இணக்கத்தை சொல்வதற்கு உள்ள வேறுபாட்டை நாம் உணர வேண்டும். சாதியை விமர்சிக்கும் தலித் அல்லாதவர்களுக்கும் ஒரே சாயத்தை பூசுவது, இணக்கம் என்ற கருத்தாக்கத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.

மனிதர்கள் இதைவிட அதிக திறன் உடையவர்கள் என்பதை அங்கீரிக்காமல் எல்லோரும் தங்களுடைய பிறப்பின் அடையாளத்துக்காக போராடுகிறவர்களாக இருக்கும்போது, சாதியை எப்படி ஒழிக்க முடியும்? அந்த விசயத்துக்காகத்தான் பகுத்தறிவாளர்களும் மனிதநேயர்களும் படத்தில் காட்டியதுபோல் துப்பாக்கிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அவர்கள் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பார்ப்பனிய இந்துத்துவத்தை எதிர்த்து மடிந்தார்கள்.

என்னுடைய பணியைப் பற்றி தவறான கருத்துள்ளவர்களை நான் பாராட்டுகிறேன். ஆமாம். நான் சாதிய சிறப்புரிமையில் ஆணாக பிறந்தவன். சாதி மற்றும் பாலின வன்முறை குறித்து கேள்வி எழுப்புவதை இது தடுக்கிறதா? இது ஒருவகையான அமில பரிசோதனை; இது யார் செய்த பணி என்பதைவிட, இது மக்களுக்கு பயனுள்ள பணி, இது மொத்த சமூகத்தைப் பற்றியது; சமூகத்துக்கானது.

படிக்க:
காஷ்மீர் : ஆவணப்படம் எடுத்த பிரெஞ்சு பத்திரிக்கையாளர் கைது !
♦ மோடியின் குஜராத்தில் தோல்வி முகம் காணும் பாஜக !

கேள்வி: இந்தியாவில் தற்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு மாற்றாக இளம் தலைவர்களான ஜிக்னேஷ் மேவானியும் கன்னையா குமாரும் முன்வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைத்துக்கொண்ட குமாரானாலும் காங்கிரசுடன் சேர்ந்து பணியாற்றும் மேவானியாக இருந்தாலும்சரி, அவர்களுடைய ஆரம்பகட்ட அரசியல் நகர்வுகள், தற்போதுள்ள அதிகார கட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ளது. அவர்களின் அரசியலாக நீங்கள் சொல்வது என்ன?

ஆனந்த் பட்வர்த்தன்: கன்னையா சிபிஐ-யில் இருக்கிறார். மேவானி சுயேட்சை; காங்கிரசுடன் தற்காலிகமாக கூட்டு வைத்திருந்தார். அலகாபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிச்சா சிங் போல பல இளைஞர்கள் படத்தில் உள்ளார். தற்போது இவர் சமாஜ்வாதி கட்சியில் உள்ளார். ஷெக்லா ரஷீத் காஷ்மீரில் புதிய கட்சியுடன் உள்ளார். வெமுலாவின் நண்பர்கள் அம்பேத்கர் மாணவர் சங்கத்துடன் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் எனக்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கிறார்கள். அவர்கள் தற்போதுள்ள கட்சிகளில் சேர்ந்தாலும், அவர்கள் நிச்சயம், என்னுடைய கருத்து இது, தங்களுடைய தனிப்பட்ட மதசார்பின்மை, ஜனநாயகம் என்ற பார்வையில் உண்மையாக இருப்பார்கள்.

கேள்வி: பத்திரிகையாளர் சந்திப்பின்போது சனாதன் சன்ஸ்தா செய்தி தொடர்பாளர் ஊடகங்களிடம், ஆனந்த் பட்வர்த்தனின் எலும்புகளை உடைக்க வேண்டும் என சொல்வதாக இந்தப் படத்தில் ஒரு காட்சி வருகிறது. கேமரா அப்படியே திரும்பி நீங்கள் அந்த அறையில் இருப்பதை, அவரை எதிர்கொள்ள இருப்பதைக் காட்டுகிறது. இதுபோல சில சம்பவங்கள் நீங்கள் படமாக்கும் நபர்களை எதிர்கொண்ட விதமாக உள்ளது. மறைந்திருக்கும் தருணத்தை வெளிப்படுத்தும்போது உண்டாகும் சிந்தனை செயல்முறையின் பின்னணி என்ன? நீங்கள் ஏதோ ஒரு புள்ளியில் தாக்கப்படக்கூடும் என கவலைப்பட்டிருக்கிறீர்களா?

ஆனந்த் பட்வர்த்தன்: நான் இந்த ஆபத்தை தனிப்பட்டதாக எடுத்துக்கொள்வதில்லை. நாம் எல்லோரும் ஆபத்தில் இருக்கிறோம். பாசிச எழுச்சியின் சாட்சிகளாக உடல் அளவிலோ அல்லது மனதளவிலோ ஆபத்தில் இருக்கிறோம். உரக்க பேசுவதால் உங்களுக்கு உடல் அளவில் ஆபத்தை உண்டாக்கலாம் அல்லது  உண்டாக்காமலும் இருக்கலாம். ஆனால் உரக்க பேசாமல் இருப்பது உங்கள் ஆன்மாவை நிச்சயம் கொன்றுவிடும்.

கேள்வி: நான்கு மணி நேர ஆவணப்படம் என்பதால் பார்ப்பது கடினமாக உள்ளது. நீங்கள் காரணத்தின்’  பக்கம் நின்றால் அது உங்களை பாதிக்கும். ஒருவர்நம்பிக்கையின் பக்கம் நின்றால் அது உங்களை புண்படுத்தக்கூடும். இந்தப் படம் எத்தகைய பார்வையாளர்களுக்கானது? வலதை எதிர்கொள்ளும் வகையில் சராசரி இந்தியரிடம் சேர்க்கும் விருப்பம் உங்களுக்கு இருக்கிறதா; அல்லது எதிர்கால சந்ததியினருக்கான வெறுமனே ஒரு வரலாற்று ஆவணமாக இது இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா?

ஆனந்த் பட்வர்த்தன்: மனிதநேயம் குறைவாக உள்ளவர்களைகூட இது, அசைக்கும் என நம்புகிறேன். இந்தப் படம் சிறப்பான படம் என்பதால் அல்ல, இதில் சொல்லப்பட்டிருப்பவை அனைத்து உண்மையானவை; துயரமானவை.  நாம் விழித்துக்கொள்ள முடிவெடுத்துவிட்டால் இந்த துயரம் நிறுத்தப்படும். இதை இங்கேயே இப்போதே காணவேண்டும். அல்லது எதிர்கால சந்ததியே இல்லாமல் போகும் – வெறுமனே கரப்பான் பூச்சிகள்தான் அணுகதிர் வீச்சில் உயிர்வாழக்கூடும். நான் தீவிரமாகத்தான் கேட்கிறேன்… நாம் அணு போரை தவிர்த்தாலும்கூட அமித் ஷா, நரேந்திர மோடி, அஜித் தோவல், மசூர் அசாத் மற்றும் ஹபீஸ் சயது போன்றோர் சர்வாதிகாரம் செலுத்தும் உலகம் வாழத் தகுதியானதுதானா?


நேர்காணல் : விஷ்வக்
தமிழாக்கம் : அனிதா
நன்றி : கேரவன் 

வெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை

2

யற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கும் வெனிசுலா நாட்டில், மக்கள் இதுவரை தண்ணீர் பிரச்சினையையே பார்த்திராத நிலையில் அரசியல் ஸ்திரத்தன்மை நொறுங்கி அரசு உறுப்புக்கள் சிதைந்து கிடப்பதால் குடிக்கத் தண்ணீரின்றி தவித்துவருகின்றனர்.

மின் விநியோக நிலையங்கள் கடந்த சில மாதங்களாக திரும்பத்திரும்ப பழுதடைந்து வருவதாலும், சரிசெய்ய முடியாத நிலை நிலவுவதாலும், குடிநீரேற்றும் இயந்திரங்கள் செயல்படமுடியாமல் இருப்பதால் தண்ணீர் தட்டுப்பாடு நாடு முழுவதும் நிலவுகிறது.

மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக நிலவும் நெருக்கடி நிலையை, வெனிசுலா மக்கள் துணிவுடன் எதிர்கொண்டு வருகின்றனர். தண்ணீரைத் தேடி அலைந்து திரிந்து, மலைப்பகுதிகளில் வழியும் நீர், பழுதடைந்த குழாய்களில் வரும் நீர், அரசாங்க லாரிகளின் மூலம் கிடைக்கும் தண்ணீர், தலைநகர் கராகஸ்-இல் ஓடும் குவைரே நதியில் வழிகின்ற தண்ணீர் என நீர் எங்கு கிடைத்தாலும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதுபோல, இயற்கை தண்ணீரை அள்ளிக்கொடுத்தாலும், நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை இவர்களை அலைகழித்து வருகிறது.

நாட்டில் ஏழ்மையான பகுதிகளில் வசித்துவரும் மக்கள்கூட பல வருடங்களாக  தண்ணீர் தட்டுப்பாட்டைப் பார்த்திராத நிலையில், இப்போது தண்ணீர் பிரச்சினையால் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.

மலைப்பகுதியிலிருந்து வழியும் சுத்தமான நீரைப் பிடிக்கக் காத்துக்கொண்டிருக்கிறேன். கடுமையான மனப்புழுக்கத்திலிருக்கிறேன் ஆனால் சமாளிப்பதைத் தவிர வேறுவழியில்லை என்கிறார் லூயிஸ்.

70 வயதான முதியவர் கார்மென் கூறும்போது ‘இன்று நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். காரணம் என் வயதல்ல, தண்ணீர் தட்டுப்பாடு, மின் தட்டுப்பாடு இவையெல்லாம் சேர்ந்து என்னை முடக்கி வைத்துவிட்டன.’ உலகின் மிகப்பெரிய சேரிப்பகுதிகளில் ஒன்றான பிட்டாரே என்ற இடத்தில் இவர் வசித்து வருகிறார்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, எதிர்க்கட்சிகள் மின் நிலையங்களை இயங்கவிடாமல் முடக்கிவைத்ததுதான் பிரதான காரணம் என்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் ஜுவன் குவைடா ஆளுங்கட்சியின் நிர்வாகத் திறமையின்மையே இதற்குக் காரணம் என்கிறார். குவைடா அமெரிக்காவின் ஆசிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் கராகஸ்-ல் மட்டும் ஒரு  நொடிக்கு 20,000 லிட்டர் தண்ணீர் தேவை இருக்கும் நிலையில், மின் பகிர்வு நிலையங்களை இயங்கவிடாமல் தடுக்கின்றன அமெரிக்க ஆதரவு பெற்ற எதிர்க்கட்சிகள். ஏற்கெனவே நிலவிவரும் அரசியல் பொருளாதார ஸ்திரமற்ற சூழ்நிலையில் தண்ணீர் பிரச்சினையும் சேர்ந்திருப்பது மக்களை மேலும் மன உளைச்சலில் தள்ளியுள்ளது.

தலைநகர் கராகஸ்-ல் தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருவதைக் கண்டித்து போராடும் மக்கள்.

கடந்த ஒரு மாதமாகவே தண்ணீர் சிக்கலை எதிர்கொண்டு வருகிறோம். நெருக்கடி நிலைக்கு முன்பே தண்ணீர் பிரச்சினை ஆரம்பித்துவிட்டது – யொலாண்டா.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வெனிசுலா மக்களின் மேல் அடுத்த இடியாக தண்ணீர் பிரச்சினையும் சேர்ந்து கொண்டுள்ளது.

நீரின்றி வாழப் பழகு என்பது தான் இப்போது வெனிசுலா மக்களுக்கான நியதியாகிவிட்டது. கடும் போராட்டத்திற்குப் பிறகுதான் இங்கு தண்ணீர் கிடைக்கிறது.

27 வருடங்களாக தண்ணீரை வீட்டிற்கு வெளியிலிருந்துதான் எடுத்து வருகிறேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் என் நிலைதான் என்கிறார் இந்தப் பெண்.

இது நாள் வரை என் வீட்டில் தண்ணீர் தாராளமாக கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போது சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்கவில்லை. ஒரு மாத காலமாகத் தண்ணீரின்றி தவித்துவருகிறேன் – கார்மென் – வயது 74.

தண்ணீர் கிடைக்கும் போது அதைக் கவனமாகச் சேர்த்து வைத்துக் கொள்ளும் வெனிசுலா மக்கள்.

உடல்நலம் பாதிக்கப்பட்டவன் நான். கடந்த 18 நாட்களாக தண்ணீரின்றி அவதிப்பட்டேன். மலை உச்சியில் வசிக்கும் நான் வீட்டில் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில், கீழிறங்கி வந்து தண்ணீர் பிடித்துச்செல்ல வேண்டும் – ஜூலியோ – வயது 65.

காலை 7 மணியிலிருந்து தண்ணீர் பிடிக்க ஆரம்பிப்பேன். கடந்த இரு மாதங்களாகத் தண்ணீரின்றி அவதிப்பட்டு வருகிறோம். என் வீட்டில் மொத்தம் 7 பேர், கழிவறை, சமையலறை மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் அத்தியாவசிய தேவையாயுள்ளது – ஜுவன் – வயது 41

எங்கள் நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. எல்லா வளங்களும் இருந்தாலும், எதையும் அனுபவிக்க முடியாத நிலைதான் உள்ளது. அமெரிக்கா உட்பட ஆதிக்க நாடுகள் எங்களைச் சுரண்டி அழிப்பதை கேட்க நாதியற்றுக் கிடக்கிறோம் – அசேல் பட்டியாஸ் – வயது 44.

கிடைக்கும் சொற்ப தண்ணீரும் சுத்தமானதாக இல்லை.


கட்டுரையாளர் : Elizabeth Melimopoulos
தமிழாக்கம்: வரதன்
நன்றி: aljazeera 

தியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் !

தியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் ! பாசிச அபாயத்தை முன்னுணர்ந்து முறியடிப்போம்!! 

ஜெர்மன் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ரோசா லுக்சம்பர்கும் கார்ல் லீப்னெக்டும் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வின் நூற்றாண்டையொட்டி, அவர்களது தியாகத்தை நினைவுகூர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் அரசியல் ஆர்ப்பாட்டங்களைக் கம்யூனிஸ்டு கட்சிகள் நடத்தி வருகின்றன.

முதல் உலகப் போரின் முடிவில் ஜெர்மனியில் நடைபெற்ற பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தளகர்த்தர்களாக இருவரும் செயல்பட்டு வந்ததால், ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி அரசின் இராணுவத்தால் இவ்விருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.

போலந்து நாட்டில் பிறந்த ரோசா லுக்சம்பர்க், தனது 15 வயதில் போலந்து பாட்டாளி வர்க்கக் கட்சியின் உறுப்பினரானார். கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதால், 18 வயதில் தலைமறைவாகி, ஸ்வீடன் நாட்டிற்குத் தப்பிச்சென்றார். ஜூரிச் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து முனைவர் பட்டம் பெற்றார். போலந்து மற்றும் லித்துவேனிய சமூக ஜனநாயகக் கட்சியைத் தோற்றுவித்தார். 28 வயதில் ஜெர்மனிக்கு வந்த லுக்சம்பர்க் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரானார்.

கார்ல் லீப்னெக்ட், ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான வில்ஹெல்ம் லீப்னெக்ட்டின் மகன். முதல் உலகப் போர் தொடங்கிய சமயத்தில் (1914-இல்) ஜெர்மன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருந்த சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் போர்ச் செலவுகளுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சக்கரவர்த்திக்கு ஆதரவாக வாக்களித்தபோதும், கட்சி உறுப்பினரான கார்ல் லீப்னெக்ட் மட்டும் அதற்கு எதிராக வாக்களித்தார்.

அதைத் தொடர்ந்து, ரோசா லுக்சம்பர்க்கும், லீப்னெக்ட்டும், கிளாரா ஜெட்கினுடன் இணைந்து சர்வதேசியவாதிகள் என்ற குழுவைத் தொடங்கினர். அதன் மூலம் சமூக ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்ததுடன், போர் எதிர்ப்புப் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டனர். இதுவே பின்னர் ஸ்பார்ட்டகஸ் குழு என்ற பெயரில் பாட்டாளி வர்க்க விடுதலைக்கான புரட்சியை முன்னெடுத்தது.

முதல் உலகப் போரின் முடிவில் ரஷ்யா மட்டுமல்ல, ஜெர்மனியும் புரட்சியின் விளிம்பில் இருந்தது. கீல் நகரில் 40,000 ஜெர்மன் கப்பல்படை மாலுமிகளும், இராணுவ வீரர்களும் போராட்டத்தில் குதித்தனர். நாடு முழுவதும் புரட்சிகர அலை ஓங்கி அடித்தது. கீல், ஹம்பர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய நகரங்களில் தொழிலாளர்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஜெர்மனியின் சக்கரவர்த்தி நாட்டைவிட்டு ஓடி ஒளிந்து கொண்டார்.

புரட்சிகரத் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றும் கார்ல் லீபனெக்ட் (1918 – கோப்புப் படம்)

இந்த மாபெரும் மக்கள் எழுச்சியின் பின்னால், புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டிருந்த ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சி இருந்தது. அதன் நிறுவனர்களான ரோசா லக்ங்ம்பர்க்கும், கார்ல் லீப்னெக்ட்டும் அப்புரட்சியின் தலைவர்களாகச் செயல்பட்டார்கள். அதே சமயம் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியோ, முதலாளிகளோடு கைகோர்த்துக் கொண்டு உழைக்கும் வர்க்கத்தின் எழுச்சியை நசுக்குவதற்கு வேலைசெய்தது. இதற்கென “ப்ரீடு கார்ப்ஸ்” என்ற பெயரில் முன்னாள் இராணுவத்தினரைக் கொண்ட ஒரு படை உருவாக்கப்பட்டது.

1919-ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று ரோசா லுக்சம்பர்க்கும், கார்ல் லீப்னெக்டும் ப்ரீடு கார்ப்ஸ் படையினரால் பெர்லினில் கைது செய்யப்பட்டனர். ரோசா லுக்சம்பர்க் தலையில் சுடப்பட்டுக்  கொல்லப்பட்டார். அடுத்த சில மணி நேரங்களிலேயே லீப்னெக்டும் இராணுவத்தால் ஒரு பூங்காவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தப் படுகொலைக்குப் பிறகு ஜெர்மனியில் முன்னேறிக் கொண்டிருந்த பாட்டாளி வர்க்கப் புரட்சி கொடூரமான முறையில் நசுக்கப்பட்டது. பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு சமூக ஜனநாயகவாதிகள் இழைத்த துரோகம், பின்னாளில் நாஜிக்கள் அதிகாரத்திற்கு வர அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. லுக்சம்பர்க்-லீப்னெக்ட் படுகொலையில் முக்கிய பங்காற்றியவர்கள் அனைவரும் பின்னர் ஹிட்லரின் கூட்டாளிகளாக வலம் வந்தனர். புரட்சியாளர்களை ஒழிக்க சமூக ஜனநாயகவாதிகள் உருவாக்கிய ப்ரீடு கார்ப்ஸ் படைதான் பின்னாளில் ஹிட்லரின் கொலைப்படை எஸ்.எஸ். ஆக உருவெடுத்தது.

படிக்க:
♦ ஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள் | கலையரசன்
♦ ரசியர்களிடம் அதிகரித்து வரும் ஸ்டாலின் செல்வாக்கு !

இந்த ஜெர்மன் அனுபவத்தோடு இந்தியாவின் அனுபவத்தை ஒப்பிடும்போது ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். இந்து மதவெறி பாசிஸ்டுகளை எதிர்ப்பதாகக் கூறிவரும் காங்கிரசு உள்ளிட்ட மதச்சார்பற்ற ஓட்டுக்கட்சிகளும், போலி கம்யூனிசக் கட்சிகளும் மிதவாத நடைமுறையைக் கொண்டிருப்பதைப் பயன்படுத்திக்கொண்டுதான், ஆர்.எஸ்.எஸ். இன்று அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித் தன்னைச் சமரசமின்றி எதிர்த்துப் போராடத் துணிந்த கௌரி லங்கேஷ், கல்புர்கி உள்ளிட்ட அறிவுத்துறையினரைப் படுகொலை செய்கிறது அல்லது சிறையில் தள்ளுகிறது.

இப்பாசிசக் கும்பலை தேர்தல்கள் மூலம் மிதவாத ஓட்டுக்கட்சிகளே முறியடித்துவிடுவார்கள் என இன்னமும் நாம் நம்பினோம் என்றால், ஆர்.எஸ்.எஸ். கார்ப்பரேட் இந்து ராஷ்டிரத்தை எதிர்வரும் ஆண்டுகளில் எளிதாகவே நிறுவிவிடும்.

அழகு

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart