Tuesday, August 5, 2025
முகப்பு பதிவு பக்கம் 339

“கற்பு” என்றால் என்ன… ? | பொ.வேல்சாமி

ண்பர்களே….

பொ.வேல்சாமி
மிகப் பழமையான காலத்திலிருந்து தமிழ்மொழி மக்களின் பேச்சு வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் தொடர்ந்து உயிர்ப்புடன் வாழ்ந்து வரும் தன்மையுடையதாக உள்ளதை அனைவரும் அறிவார்கள். இந்த நீண்ட கால வரலாற்றில் பல சொற்களின் பொருள் மாற்றம் அடைவதும் ஒரு சில சொற்களுக்கு பல அர்த்தங்கள் வழங்கி வருவதும் பல சொற்கள் வழக்கத்திலிருந்து மறைந்து வி்ட்ட வரலாற்றையும் நாம் பார்க்கிறோம். அப்படிப்பட்ட பண்புள்ள சொற்களில் “கற்பு” என்பதும் ஒன்று.

தொல்காப்பிய பொருளதிகாரத்தில் ஐந்தாவது அதிகாரமாகிய “பொருளியல்” அதிகாரத்தின் கடைசி நூற்பாவில் (234) சில சொற்களை எடுத்துப் பேசுகின்றார். அந்தச் சொற்களில் கற்பு என்பதும் ஒன்று.

இந்தச் சொல்லை தொல்காப்பியர் எத்தகைய பொருளில் கையாண்டார் என்பது நமக்குத் தெரியவில்லை. தொல்காப்பியத்தின் மிகப் பழைய உரையாசிரியராகிய “இளம்பூரணர்” தன்னுடைய விளக்கத்தில், “கற்பு என்பது – மகளிர்க்கு மாந்தர் மாட்டு நிகழும் மன நிகழ்ச்சி. அதுவும் மனத்தான் உணரக் கிடந்தது.” என்று கூறுகின்றார்.

இளம்பூரணர் கூறுகின்ற விளக்கத்தை இன்றைய மொழியில் சொன்னால் கற்பு என்பது பெண்கள் மற்றவர்களைப் பார்க்கும் போது அவர்கள் உள்ளத்தில் ஏற்படுகின்ற ஒரு உணர்ச்சி, இதனை வெளிப்படையாகக் காட்ட முடியாது என்பதாகக் கூறலாம்.

படிக்க :
♦ அச்சில் வராத தொல்காப்பிய இளம்பூரணர் எழுத்ததிகார உரை !
♦ உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன ? | ம.உ.பா.மை அறிக்கை !

இதே சொல்லுக்கு அடுத்து 300 ஆண்டுகள் கழித்து உரை எழுத வந்த நச்சினார்கினியர் “கற்பாவது : தன் கணவனைத் தெய்வமென்று உணர்வதொரு மேற்கோள்.” என்று பொருள் எழுதுகிறார்.

இருவருக்கும் இடையே உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ளதாக இருக்கிறது. இந்தச் சூத்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் CHASTITY என்று கூறி இன்றைய நிலையில் உள்ள பொருளைச் சுட்டுகின்றார்.

உண்மையில் கற்பு என்பதற்கு தொல்காப்பியர் என்ற பொருள் எது…? இளம்பூரணர் கூறும் பொருள் தொல்காப்பியர் கருத்தை சரியாக விளக்குவதாகக் கொள்ளலாம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.

வகுப்பறையில் குழந்தைகள் எண்ணிக்கை கூடினால் என்னதான் ஆகிவிடும் ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 8

குழந்தையுடைய மனதின் ஒவ்வொரு அம்சத்தையும் பேணிக் காத்தல்

திடீரென கதவு பெரும் சத்தத்துடன் திறக்கிறது. “அதிகாரத் தோரணையை உடைய” அம்மா, பகட்டான ஆடையணிந்த ஒரு சிறுவனை உள்ளுக்குள் தள்ளி, கையில் பையைத் திணித்து, என்னால் புரிந்து கொள்ள இயலா ஒரு அச்சுறுத்தல் குரலில் தொனிக்க, என்னைப் பார்த்து சத்தமிட்டுச் சொல்கிறாள்:

“என் மகனுக்கு வகுப்பில் இடம் கண்டுபிடித்துத் தாருங்கள்! அமைச்சரகத்திலிருந்து உங்களுக்கு போன் வரும்!…”

அப்பெண்மணி அதே சத்தத்துடன் கதவை இழுத்து மூடி, சிறுவனை வகுப்பில் விட்டுச் செல்கிறாள். அவளுடைய காலணி ஓசையிலிருந்து, அவள் இடைவழியில் எப்படி விரைவாக நடந்து செல்கிறாள் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது.

நான் என்ன செய்வது? அந்தத் தாயின் பின் ஓடிச் சென்று, குழந்தையைத் திருப்பி அழைத்துச் சொல்லும்படி கட்டாயப்படுத்துவதா? சிறுவனை வகுப்பை விட்டு வெளியேற்றி இடைவழியில் நிறுத்துவதா? வகுப்பறையில் குழந்தைகளின் எண்ணிக்கை 39 ஆகும். இன்னுமொரு பெஞ்சு தேவைப்படும். அதை எங்கே போடுவது? விஷயம் இதில் மட்டும் அடங்கியிருக்கவில்லை. மிக முக்கியமானது என்னவெனில் வகுப்பிலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் மிக அவசியமான எனது கவனம், அன்பு, அக்கறை, உதவியில் இன்னுமொரு பங்கு குறையும். உங்கள் குழந்தைக்கும் மற்ற குழந்தைகளுக்கும் நீங்கள் என்ன கேடிழைக்கின்றீர்கள் என்று தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், தாயே.

வகுப்பில் எவ்வளவு குழந்தைகள் இருந்தாலும் ஒரே விதமான பயனைத் தரவல்ல முறையியலோ, ஆசிரியரோ கிடையாது. அளவிற்கதிகமான பயணிகளையுடைய விமானத்திற்குப் பறக்க அனுமதி தருவது பெரிதும் ஆபத்தானது. விமானிகளைக் கேளுங்கள், இப்படிப்பட்ட பயணம் எப்படிப்பட்டது என்று கூறுவார்கள். “ஒருவர் அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால்தான் என்ன?” இல்லை, இதற்குப் பெரும் முக்கியத்துவம் உண்டு. நன்றாகவோ மோசமாகவோ வளர்க்கப்பட்ட ஒருவர் இருப்பதற்கு எவ்வித விளைவும் இருக்காதா என்ன! ஆயிரக்கணக்கான எனது சக ஆசிரியர்களைப் போன்றே நானும் ஒவ்வொரு குழந்தையையும் தனி நபராக வளர்க்கப் பாடுபடுகிறேன்.

ஆறு வயதுக் குழந்தைகளைக் கொண்ட ஒரு வகுப்பு என்பது ஒரே மாதிரியான கல்வியறிவையும் வளர்ப்பையும் கொண்ட குழந்தைகளைப் பெருமளவில் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைப் பிரிவல்ல. இங்கே குழந்தையுடைய மனதின் ஒவ்வொரு பகுதியையும் சீராட்டி வளர்க்க வேண்டும். சிறு இதயங்களின் ஒவ்வொரு ஜீவ அணுவிலும் மனித நேயத்தை ஊட்ட வேண்டும். 17-ம் நூற்றாண்டிலிருந்த யான் அமோஸ் கமேன்ஸ்கிதான் ஒரே சமயம் ஒரு வகுப்பில் 300 மாணவர்களுக்கு கல்வி போதிக்கலாம் என்று கருதினார். அந்த மேதையின் தவறுக்கு அவரை மன்னிப்போமாக. 21-ம் நூற்றாண்டு பிறக்கப் போகும் இத்தருணத்தில் “மொத்தமான வளர்ப்பு” எனும் முறை சரிப்பட்டு வருமா?

ஒரே ஒரு குழந்தை வகுப்பில் ஆசிரியருடன் இருப்பதும் சரியல்ல. ஏனெனில் அக்குழந்தைக்கு விரைவிலேயே சலிப்பேற்படும். அருகே தான் செய்யும் அதே காரியத்தில் ஈடுபடும் தன்னையொத்த சிறு குழந்தைகள் இல்லாவிடில் ஆர்வம் மிக்க விஷயங்கள் கூட அக்குழந்தைக்கு சலிப்பை ஏற்படுத்தும். ஒரு குழந்தை மற்ற குழந்தைகளுடன் கலந்து பழகிதான் வாழவும் அறியவும் விரும்புகிறான். அவன் அவர்கள் மத்தியில்தான் ஒரு தனி நபராக உருவெடுக்க வேண்டும். அவன் மட்டும் தனியாக இருக்கும் ஒரு வகுப்பிலோ, அளவிற்கு அதிகமான மாணவர்கள் உள்ள வகுப்பிலோ (இங்கே மாணவர்கள் எறும்புப் புற்றில் உள்ள எறும்புகளைப் போலிருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் காரியமே சரியாக இருக்கும். அவர்களுக்குப் பொது இலட்சியங்கள், நோக்கங்கள், மகிழ்ச்சிகள், கவலைகளே இருக்காது) அவன் இவ்வாறு ஆக முடியாது.

வகுப்பில் ஒரே ஒரு குழந்தை மட்டும் இருந்தால் அவன் யாருமேயில்லை, அவனுக்கு வாழ்வில் சலிப்பேற்படும். அவன் 25 குழந்தைகளின் மத்தியிலிருந்தால் மற்றவர்களைப் போன்றே அவனும் மற்றவர்களுக்கு அவசியமானவன் ஆவான். அவன் ஒரு தனி நபராகத் திகழுவான். அவனுக்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாகவும் சுவாரசியமானதாகவும் இருக்கும். அவன் வகுப்பில் 45 குழந்தைகள் இருந்தால், அவன் மற்றவர்களைப் போன்று வெறும் குழந்தை மட்டுமே. மற்றவர்களுக்கு இவனைப் பற்றி அதிகம் தெரியாது, இவனுக்கும் மற்றவர்களைப் பற்றி குறைவாகவே தெரியும். இவனுக்கு சலிப்பேற்படும், ஆர்வம் குறையும். இவனை மற்றவர்கள் அறிய, மதிக்க, இவன் தன்னாலியன்றவரை தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் பல வழிகளை நாடுகிறான்.

படிக்க:
இது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா ?
மே – 22 : அழுவதற்கும் அனுமதி மறுப்பு ! தடையை மீறி நினைவேந்துவோம் !

இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். ஒரு குழந்தை சாதாரணமாக வீட்டில் பெரியவர்களுக்கு அதிகம் இடையூறு விளைவிக்காமல் இருக்கும், குழந்தையை எளிதாக சமாதானப்படுத்தலாம். ஆனால், 3-4 குழந்தைகள் ஒன்று சேர்ந்தால் (மற்றவர்கள் விருந்தினர்களாக வந்தார்கள் என்று வைத்துக் கொள்வோமே), அவர்களை சரிவர கவனிக்காவிடில் “பூகம்பமே” ஏற்பட்டு விடும். 40-50 குழந்தைகள் ஒன்று சேர்ந்தால் (இவர்கள் புத்திசாலியான, அமைதியான, சாந்தமான குழந்தைகளாக இருந்தாலும்) பெரும் ரகளையும் கூச்சலும் ஏற்படும், வீட்டில் “மிகக் கடும் பூகம்பமே” ஏற்படும். சாதாரண குழந்தைக் குறும்பு பன்முக நடவடிக்கையின் மிகச் சிறந்த வடிவங்களாக மாறாது, அதற்குப் பதில் முரட்டுத்தனம், கவனமின்மை, அவசியப் பொருட்களை வீணாக்குதல் போன்ற மோசமான நடவடிக்கைகளாக மாறும்.

இதோ போன்தோ தன் காலணிகளைக் கழற்றி மேசை மீது வைத்து ரசிக்கிறான். அவனை அமைதியாக அணுகி, பாடவேளையின் போது இவ்வாறு செய்யக் கூடாது என்று விளக்க வேண்டும்.

ருசிக்கோ திடீரென எழுந்து கதவை நோக்கிச் செல்கிறாள். “ருசிக்கோ , நீ எங்கே போகிறாய்?”

அவள் பதில் சொல்லவில்லை. கதவைத் திறந்து வெளியில் பார்க்கிறாள். அங்கு தன் தாய் இல்லாததைக் கண்டதும் அழத் துவங்குகிறாள். அவளை சமாதானப்படுத்த வேண்டும்.

அடடா, இச்சிறுமிக்கு என்ன ஆயிற்று?

“குழந்தைகளே, விரைவாகத் தலையைத் தொங்கப் போடுங்கள்! கண்களை மூடுங்கள்! உங்கள் வாழ்க்கையில் நடந்த சிரிப்பு நிகழ்ச்சிகளை நினைத்துப் பாருங்கள்!”

வகுப்பிலேயே மிகச் சிறிய அப்பெண்ணைக் கரங்களில் ஏந்தி வகுப்பறைக்கு வெளியே வருகிறேன்.

“தயவு செய்து உதவி செய்யுங்கள், சிறுமிக்கு உடல் நிலை சரியில்லை” என்று வெளியில் நிற்கும் அம்மாமார்களைப் பார்த்துச் சொல்கிறேன்.

யாரோ ஒருவர் மருத்துவரைக் கூப்பிட ஓடுகிறார். இன்னொருவர் சிறு மேசை மீதுள்ள எல்லாவற்றையும் கீழே போட்டு விட்டு என் கைகளிலிருந்து சிறுமியை வாங்கி மேசை மீது படுக்க வைக்கிறார். மயக்கம் விரைவிலேயே தெளிகிறது. மருத்துவர் வந்து சிறுமியைத் தன்னறைக்குக் கூட்டிச் செல்கின்றார்.

இச்சிறுமியின் தாய் எங்கே? ஏன் அவள் இங்கு இல்லை? தன் மகளின் நோயைப் பற்றி அவள் ஏன் என்னை எச்சரிக்கவில்லை?

நடந்ததிலிருந்து இன்னமும் முற்றிலும் மீளாத ஒரு நிலையில் வகுப்பறைக்குள் திரும்புகிறேன். குழந்தைகள் அனைவரும் அதே போல் தலைகளைத் தொங்கப் போட்டு, கண்களை மூடியபடி உள்ளனர். அவர்கள் ஏற்கெனவே சிரித்துக் கொண்டிருந்தனர். “எங்கே, தலையைத் தூக்குங்கள்!”

அவர்கள் எதையாவது பார்த்தார்களா? இல்லை. ருசிக்கோ மட்டுமே எதையாவது பார்த்திருக்கக்கூடும், ஆனால், அவள் அழுதபடி அம்மாவைத் தேடிக் கொண்டிருந்ததால் எதையும் கவனிக்கவில்லை; இந்தப் புதுச் சிறுவன் ஒருவேளை பார்த்திருக்கலாம். நான் அவன் கரத்தைப் பற்றிக் குலுக்கி விட்டு நடுவரிசையில் மூன்றாவது இடத்தில் உட்கார வைக்கிறேன். ருசிக்கோவை சமாதானப்படுத்துகிறேன் (“வா, இருவரும் சேர்ந்து வகுப்பறையைச் சுற்றி வருவோம்”). போன்தோ விரைவாகக் காலணிகளை அணிய உதவுகிறேன்.

(“ஒரு குழந்தை அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால் என்ன ஆகிவிடும்!”)

“உங்களுடைய சிரிப்புச் சம்பவங்களை இடைவேளையின் போது சொல்லுங்கள்!” என்றபடியே கரும்பலகையில் உள்ள இரண்டாம் பகுதியைத் திறக்கிறேன். “இங்கே (வட்டங்களைச் சுட்டிக் காட்டுகிறேன்) எட்டு வட்டங்கள் உள்ளன என்று நினைக்கிறேன்!” என்று ஏதோ இன்னொரு முறை சரிபார்ப்பது போல் பாவனை செய்கிறேன். “நான் சொன்னது சரியா?”

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

ஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் ?

2

2017-ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, அதை நரேந்திர மோடியின் வெற்றியாகக் கொண்டாடிய இரண்டு வாரணாசி முசுலீம் பெண்கள் குறித்த செய்தி ஊடகங்களில் பிரதானமாக இடம்பெற்றிருந்தது. இந்த செய்தியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் அனைத்து ஊடகங்களுக்கும் அளித்து பரவலாக்கியது. சில புர்கா அணிந்த பெண்கள் மோடியை புகழ்ந்து பாடுவது, முசுலீம்கள்கூட தங்களுடைய சிறந்த தலைவரைக் கொண்டாடுவதாக இந்தப் படங்களைப் பார்த்த பலர் கருதினர்.

சில மாதங்கள் கழித்து, மே-2017-ம் ஆண்டு சில முசுலீம் பெண்கள் வாரணாசியில் உள்ள சங்கட் மோச்சன் தர்பாரில் முத்தலாக் என்னும் மோசமான பழக்கத்தை விரட்ட, 100 முறை அனுமன் சாலீசாவை சொன்னதாக அதே ஏ.என்.ஐ. நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

“அனுமன் கோயிலில் முத்தலாக்கிற்கு முடிவு கேட்கும் முசுலீம் பெண்கள்” என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது அமர் உஜாலா பத்திரிகை. ‘முத்தலாக்கிற்கு முடிவு கேட்கும் முசுலீம் பெண்கள்’ என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது டைம்ஸ் ஆஃப் இந்தியா.

தீபாவளியின் போது, வாரணாசியில் முசுலீம் பெண்கள் ராமருக்கு ஆரத்தி எடுப்பதாக தனது யூ-ட்யூப் சேனலில் செய்தி வெளியிட்டிருந்தது டைம்ஸ் ஆஃப் இந்தியா.  ஆறு மாதங்கள் கழித்து, ஏ.என். ஐ. முசுலீம் பெண்கள் மோடிக்கு ராக்கி அனுப்பத் தயாராகி வருவதாக செய்தி அனுப்பியது.  மோடிதான் தங்களை முத்தலாக்கிலிருந்து காப்பாற்றிய உண்மையான சகோதரன் என அவர்கள் சொன்னதாகவும் அந்த செய்தி கூறியது.

மிக சமீபத்தில் வாரணாசியில் மோடியின் வெற்றிக்கு முசுலீம் பெண்கள் உழைப்பதாகவும் செய்தி வெளியானது. பெரும்பாலான இந்த செய்திகள் ஏ.என்.ஐ. நிறுவனத்திடமிருந்து ஊடகங்களுக்கு அளிக்கப்பட்டவை.  இந்த முசுலீம் பெண்கள் குறித்த மேலதிக விவரங்கள் அந்த செய்திகளில் பெரும்பாலும் இடம் பெற்றிருக்காது. இந்தச் செய்திகளில் நான்கைந்து முசுலீம் பெண்கள் மட்டுமே இருப்பர். அனைத்து செய்திகளிலும் இருப்பதுவும் இதே பெண்கள்தான். இவர்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற முசுலீம் மகிளா பவுண்டேஷன் மற்றும் விஷால் பாரத் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் என்பது குறித்து இந்தச் செய்திகளில் எங்கேயும் சொல்லப்பட்டிருக்காது.

ஒட்டுமொத்த முசுலீம் பெண்களும் மோடியை ஆதரிக்கிறார்கள் என்கிற பிம்பத்தை ஊடகங்கள் கட்டமைக்க உதவிய இந்த நான்கைந்து முசுலீம் பெண்கள் யார்?

வாரணாசியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது விஷால் பாரத் சங்கம்.  இந்த சங்கத்தின் அலுவலகத்தின் பெயர் சுபாஷ் பவன். இரண்டு அடுக்கு கட்டத்தின் நுழைவாயிலில் சுபாஷ் சந்திர போஸின் சிலை வைக்கப்பட்டுள்ளது. அருகே பாஜக இலட்சிணையும், ஆர்.எஸ்.எஸ்-இன் முசுலீம் பிரிவான முசுலீம் ராஷ்டிரிய மஞ்ச்-ன் வழிகாட்டுநரான இந்திரேஷ் குமாரின் பெரிய படமும் நுழைவாயில் அருகே வைக்கப்பட்டிருந்தன.

விஷால் பாரத் சங்கத்தின் தலைவர் ராஜீவ் ஸ்ரீவத்சவா, கைவிடப்பட்ட தலித், முசுலீம் குழந்தைகள் உள்பட பலரை தத்தெடுத்து வளர்ப்பதாகக் கூறுகிறார்.  முசுலீம் குழந்தைகள் சுதந்திரமாக அவரவர் இறைவனை வழிபட அனுமதிக்கப்படுவதாக கூறுகிறார் இவர். இங்கே முசுலீம்கள்கூட சைவம் உண்பவர்களாக உள்ளதாகவும் அனைவருமே ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் என்றும் கூறுகிறார் இங்கே உள்ள ஒரு சிறுமி.

முசுலீம் குழந்தைகளுக்கு அரபுப் பெயர் வைக்கப்படுவதை தவிர்த்து அனைவருக்கும் ‘இந்திய’ பெயரை, உதாரணத்துக்கு சூரஜ் அன்சாரி, ப்ரிதிவி அன்சாரி போன்ற பெயர்களை வைத்துள்ளதாக சொல்கிறார் ஸ்ரீவத்சவா. முசுலீம் ராஷ்ட்ரிய மஞ்ச் உடன் இந்த அமைப்புக்கு தொடர்புள்ளதை மறுக்கிற இவர், அந்த அமைப்பின் தலைவர் படத்தை மரியாதை நிமித்தமாக வைத்துள்ளதாகக் கூறுகிறார்.

அதன்பின், இரண்டு முசுலீம் பெண்களை அறிமுகப்படுத்தி, “முசுலீம்கள்கூட ராமர் கோயில் கட்டப்படுவதை புரிந்துகொண்டு அதற்காக வேண்டிக் கொள்கிறார்கள்” என்கிறார்.  நஜ்மா, நஸ்னீன் ஆகிய இந்த இரண்டு பெண்கள்தான் ஏ.என்.ஐ. செய்திகளில் முசுலீம் பெண்களின் பிரதிநிதிகளாக வலம் வந்தவர்கள்.  புர்கா அணிந்த பின்பே படமெடுக்க அனுமதித்த நஜ்மா, புர்கா அணிந்தால்தான் தன்னை சரியான முசுலீம் பெண் என அடையாளம் காண்பார்கள் என்கிறார். இன்னொரு பெண் நஸ்னீன் புர்கா அணிவதில்லையாம்.

இரண்டு பெண்கள் நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார்கள். வறுமை காரணமாக படிக்க முடியாமல் தவித்த தன்னை ஸ்ரீவத்சவா, இந்த இல்லத்துக்கு அழைத்து வந்ததாகச் சொல்கிறார்.

தன் வீட்டின் அருகே இருந்த பூங்காவில் ஸ்ரீவத்சவா குழந்தைகளுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோது, நஜ்மாவுக்கு அவருடன் தொடர்பு உண்டானதாகவும், அப்போது அவர் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாகவும் சொல்கிறார். தனது பெற்றோர் அடுத்தடுத்து இறந்துவிட ஆதரவு இல்லாத நஜ்மாவும் அவருடைய சகோதரரும் ஸ்ரீவத்சவா நடத்தும் இல்லத்துக்கு வந்திருக்கிறார்கள்.

தற்போது பி.எச்.டி. படிக்கும் நஜ்மா, மோடி குறித்து ‘ஆய்வு’ செய்துகொண்டிருப்பதாக சொல்கிறார்.  இவரிடம் மோடியின் வெற்றியை எத்தனை பெண்கள் சேர்ந்து கொண்டாடினீர்கள் எனக் கேட்டபோது, சற்றே நிதானித்த இவர், ‘இந்த முறை நிறைய பெண்கள் கொண்டாடுவார்கள்’ என்கிறார்.

முசுலீம்களின் இறை தூதராக மோடியை நிறுத்துவதும் முசுலீம் பெண்கள் அயோத்தியில் ராமர் கோயிலை விரும்புகிறார்கள் என கட்டமைக்கப்படுவதும் இந்துத்துவ தேசியத்தின் ஒரு பகுதியாக உள்ளது. விஷால் பாரத் சங்கம் போன்ற அமைப்புகள் கடந்த பத்தாண்டுகளாக இதற்கெனவே உழைத்து நஜ்மா, நஸ்னீன் போன்ற பெண்கள், முசுலீம்களின் பிரதிநிதிகளாக உருவாக்கியுள்ளது.

இந்த இரண்டு பெண்களும் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலில் முசுலீம்கள் வழிபட வேண்டும் என்பதோடு, “நமது முன்னோர்கள் அங்கே ராமரை வழிபட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்கிறார்கள். மோடியும் அவருடைய கட்சியும் மட்டுமே கோயிலை கட்டுவார்கள் என்பதையும் ஒரே குரலில் இருவரும் சொல்கிறார்கள்.

படிக்க:
மே – 22 : அழுவதற்கும் அனுமதி மறுப்பு ! தடையை மீறி நினைவேந்துவோம் !
சமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ !

இந்த இரண்டு பெண்களின் கருத்துக்களையும் முசுலீம் சமூகம் விலகி நிற்கிறது. “இவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்கள். அவர்களுடைய அரசியல் மிகவும் ஆபத்தானது. இதைக் காட்டிலும் ஊடகங்களின் செயல் மிகவும் கீழ்த்தரமானது. நான்கைந்து பேரை முசுலீம்களின் பிரதிநிதிகளாகக் காட்டுகிறார்கள். இந்த இரண்டு ஆர்.எஸ்.எஸ். பெண்கள், ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிநிதிகளாக பேசாத ஒன்றை பேசுவதுதான் உண்மையில் மிக மிக ஆபத்தானது” என்கிறார்கள் வாரணாசியில் உள்ள முசுலீம் சமூகத்தின் பிரதிநிதிகள்.


கட்டுரையாளர் :  ராதிகா போர்டியா
தமிழாக்கம் : கலைமதி
நன்றி :  த வயர்

இது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா ?

‘அல்லும் பவலும் ரவ தூங்காம பச்ச புள்ள மாதிரி காவந்து பண்ணிக்கிட்டிருக்கோம்… நடவு நட்டு நாலு நாளு கூட ஆவல. அதுக்குள்ள நட்ட வயல்ல மிஷினை கொண்டாந்து ஏத்துறானுவொ… கேட்டாக்க, ஓஎன்ஜிசி காரனாம், கொழா பதிக்கிறானாம். நீ என்ன மயித்த வேணும்னாலும் பண்ணிக்க.. இது எங்க நிலம்டா… நாங்க பொண்டாட்டி தாலிய வித்து வெள்ளாமுட்டு வெப்போம், நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா? என் நிலத்துல கால் வைக்க என்கிட்ட கேட்டியா? உன் கம்பெனிக்குள்ள வந்து உன்னை கேட்காம அங்கருக்கிற மிஷினை தூக்கிட்டு வந்தா வுட்டுருவியா?’

அந்த விவசாயி கொலைவெறியில் பேசுகிறார். அதில் நியாயமும் இருக்கிறது. நடவு வயலில் பொக்லைன் இயந்திரங்கள் செல்லும் காட்சியே மனதை நடுங்கச் செய்கிறது.

பயிரில் ஆடு, மாடு தெரியாமல் வாய் வைத்துவிட்டாலே ரசாபசமாகும். வாய்ச் சண்டையில் ஆரம்பித்து, மம்புட்டியில் அடித்து மண்டை உடைவது வரை நிகழும். இவர்கள் ஓர் இயந்திரத்தையே உள்ளே விட்டு நாசம் செய்கிறார்கள். அந்த நிலத்தின் விவசாயியிடம் ஒரு வார்த்தைக் கேட்கவில்லை.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாரத்தில் இருக்கும் முடிகொண்டநல்லூர் என்ற கிராமத்தில் நேற்று (16-05-2019) இப்படி இரண்டு விவசாயிகளின் வயலில் பொக்லைன் இயந்திரத்தை இறக்கியுள்ளனர். மேமாத்தூர், காளகஸ்திநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களிலும் இந்த அட்டூழியம் தொடர்கிறது. இதற்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்களும் தொடர்கின்றன.

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சொந்தமான எரிவாயுவை குழாய் வழியாக மேமாத்தூர் கொண்டு சென்று சேர்ப்பதுதான் திட்டம். இதற்காக, மாதானம் முதல் மேமாத்தூர் வரையில் 29 கி.மீ தூரத்துக்கு குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்கிறது கெய்ல் நிறுவனம். தற்போதைய குழாய் பதிப்பு இதற்காகத்தான்.

படிக்க :
♦ டெல்டாவை நாசம் செய்யும் கெயில் – எதிர்த்தால் பொய் வழக்கு !
♦ ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா !

ஆனால் நிலத்துக்கு சொந்தக்கார விவசாயிகளிடம் கேட்க வேண்டாமா? அவர்களின் அனுமதி பெற வேண்டாமா? பத்து போலீஸ்காரர்களை துணைக்கு வைத்துக்கொண்டு என்ன வேண்டுமென்றாலும் அழிச்சாட்டியம் செய்யலாமா? இவர்கள் எந்த கேட்டு கேள்வியும் இல்லாமல் நிலத்துக்குள் மிஷினை விட்டு ஏற்றுவார்கள். விவசாயிகள் வக்கீலை பிடித்து கோர்ட்டுக்கு ஓடி தடையுத்தரவு வாங்க வேண்டுமா?

ஆனால், இந்தக் குழாய் பதிப்புக்கு வேறு சில, பரந்த – நீண்டகால நோக்கங்களும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மத்திய பெட்ரோலியத் துறையுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது வேதாந்தா நிறுவனம்.

தற்போது ஓ.என்.ஜி.சி.யும், கெய்லும் மேற்கொள்ளும் இந்த உள் கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் நாளை பயன்படப்போவது வேதாந்தாவுக்குதான். சொல்லப்போனால், ஓ.என்.ஜி.சி., கெய்ல் ஆகிய இரு அரசு நிறுவனங்களும், அரசின் நிதியையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி வேதாந்தாவுக்குத் தேவையான மாதிரி களத்தை செப்பனிடும் பணியைதான் செய்து கொண்டிருக்கின்றன.

இன்னும் வேதாந்தா வரவில்லை. வந்தால் இந்தப் போராட்டங்களை அரசு இத்தனை மென்மையாக எதிர்கொள்ளாது என்பது மட்டும் நிச்சயம்.

நன்றி : முகநூலில் – பாரதி தம்பி

மே – 22 : அழுவதற்கும் அனுமதி மறுப்பு ! தடையை மீறி நினைவேந்துவோம் !

பத்திரிகைச் செய்தி

20-5-2019

மே – 22 ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் நினைவு நாள் !
அழுவதற்கும் அனுமதி இல்லை ! ஆனால் இது ஜனநாயக நாடு !

அன்பார்ந்த நண்பர்களே !

கடந்த ஆண்டு மே 22 அன்று நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவது தமிழக மக்கள் அனைவரின் கடமையும் உரிமையுமாகும்.

மக்கள் அதிகாரம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த சென்னை, மதுரை ஆகிய இரு இடங்களில் அனுமதி கோரி இருந்தோம். போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

“மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும், பிறகு ஏதேனும் ஒரு நாளில் நடத்துவதற்கு அனுமதி கோரினால் பரிசீலிப்பதாகவும்” எடப்பாடி அரசின் காவல்துறை கூறியிருக்கிறது.

படிக்க:
♦ ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளை நினைவு கூர்வோம் ! அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அறைகூவல் !
♦ சமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ !

தேர்தல் காலத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா, கருணாநிதி, காமராஜர், காந்தி ஆகியோரின் நினைவு நாட்கள் வருமானால், அவற்றையும் வேறொரு தேதியில் நடத்திக் கொள்ளுமாறு எடப்பாடி அரசு உத்தரவிடுமா?

தூத்துக்குடி படுகொலை என்பது தனது சொந்த மக்களுக்கு எதிராக தமிழக அரசு நடத்தியிருக்கும் ஜாலியன் வாலாபாக் படுகொலை. பலம் பொருந்திய பன்னாட்டு நிறுவனமான வேதாந்தாவை எதிர்த்து அமைதி வழியில் போராடி வென்றிருக்கும் தூத்துக்குடி மக்களை உலகமே பாராட்டுகிறது. அந்த மக்களை தலையிலும் வாயிலும் சுட்டுக் கொன்றது மட்டுமல்ல, அந்தத் தியாகிகளின் நினைவையும் கூட கொன்றுவிட வேண்டும் என்று நினைக்கிறது இந்த அரசு.

மக்கள் அதிகாரம் சார்பில் மே 22 அன்று காலை 10-30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்திலும், மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் எதிரிலும் நினைவேந்தல் நடத்துகிறோம்.

அழுவதற்குக்கூட அனுமதி மறுக்கும் இந்த அடக்குமுறை அரசைக் கண்டிக்குமுகமாக, வாயில் கருப்புத்துணி கட்டியும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தவுள்ளோம்.

ஒவ்வோர் ஊரிலும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் புகைப்படங்களை வைத்து அனைவரும் அஞ்சலி செலுத்த வேண்டும் என மக்கள் அதிகாரம் சார்பில் தமிழக மக்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி !

தோழமையுடன்,


வழக்கறிஞர்.சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்

ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளை நினைவு கூர்வோம் ! அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அறைகூவல் !

மே-22ல், ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளை நினைவு கூர்வோம் !
அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் அறைகூவல் !

உயிரோடு இருந்து செய்யமுடியாததை நம் உணர்வோடு இருந்து செய்து கொண்டிருக்கிறார்கள்  ஸ்டெர்லைட் எதிர்ப்புத்  தியாகிகள். ”

மே-22, 2018 அன்றைய தினம், உலகமே தூத்துக்குடியை உற்றுக் கவனித்த நாள், கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான  தமிழகத்தின்  ஒட்டுமொத்த கோபமும்  தூத்துக்குடியில்  வெளிப்பட்ட நாள், ஸ்டெர்லைட் எனும் உயிர்க்கொல்லி ஆலையை தமிழகத்தில் இருந்து விரட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் ஒன்றிணைந்த நாள். “இலட்சம் மக்கள் கூடுவோம் ! ஸ்டெர்லைட்டை மூடுவோம் !” என விண்ணதிர முழக்கமிட்டுக்கொண்டு  அமைதியாக  மாவட்ட ஆட்சியரை சந்தித்து  மனுகொடுக்க சென்றார்கள் மக்கள்.

ஆனால்  கார்ப்பரேட் கைக்கூலியான மோடி அரசும், அடிமை எடப்பாடி அரசும், போலீசும் கூட்டுச் சேர்ந்துகொண்டு  துப்பாக்கிச்சூடு நடத்தி  15 அப்பாவி உயிர்களை  படுகொலை செய்தது. துப்பாக்கிச் சூடு நடத்தி ஓராண்டு கடந்த பின்பும் இன்றுவரையில் விசாரணை ஆணையம், நீதிமன்ற வழக்கு என நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

படிக்க:
♦ சமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ !
♦ உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன ? | ம.உ.பா.மை அறிக்கை !

சொந்த மண்ணில் எது வேண்டும், எது வேண்டாம் என முடிவெடுக்கும் உரிமை கூட நமக்கில்லை என்பதைத்தான்  நமது சொந்தங்களைப் பலிவாங்கிய துப்பாக்கிச்சூடு நமக்கு உணர்த்துகிறது.  15 உயிர்களைப் பறிகொடுத்த துயரம் நம் கண்ணிலிருந்து இன்னும் நீங்கவில்லை. அதற்குள்ளாகவே வேதாந்தாவின் கோரப்பசிக்கு  மோடியும், அடிமை எடப்பாடி அரசும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நமது தமிழன்னையை கூறுபோட்டு விற்றுவிட்டார்கள்.

தமிழகமே! “இலட்சம் மக்கள் கூடுவோம்! ஸ்டெர்லைட்டை மூடுவோம்!” என்று துணிச்சலோடு துப்பாக்கிச்சூட்டை எதிர்கொண்ட  மாணவி ஸ்னோலின் குரல் கேட்கவில்லையா? அக்குரல் இன்று மட்டுமல்ல, கொலைகாரச் ஸ்டெர்லைட்டை இம்மண்ணிலிருந்து விரட்டும் வரை என்றைக்கும் ஒலிக்கும். அடக்குமுறையாலும், அச்சுறுத்தல்களாலும் தூத்துக்குடியை முடக்கப்பார்க்கிறார்கள்.  தூக்கில் போட்டாலும் அடிபணிய மாட்டேன் என்று துணிவோடு நின்றான் கட்டபொம்மன். கட்டபொம்மனின் வாரிசுகள் நாம் வேதாந்தாவை இனியும் நம் மண்ணில் இயங்க விடக்கூடாது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்துவோம் !
அவர்களின் இலட்சியத்தை நிறைவேற்ற மே-22 ல் உறுதியேற்போம்!”

இழந்த உயிர்களுக்கு நீதி வேண்டாமா? அவர்களின் இலட்சியம் நிறைவேற வேண்டாமா? அதற்கான பொறுப்பை நம்மிடம் ஒப்படைத்துள்ளார்கள்  ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகள். அவற்றை நிறைவேற்றுவதே நம் அனைவரின் முழுமுதல் கடமை.

படிக்க :
♦ தூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி
♦ மே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை ! தொடரும் ஸ்டெர்லைட் அடக்குமுறை !

தூத்துக்குடியிலிருந்து ஸ்டெர்லைட்டை விரட்டுவது மட்டுமல்ல,  இரத்தவெறி பிடித்த வேதாந்தா குழுமத்தை இந்தியாவிலிருந்தே விரட்டுவதுதான், ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.

மாணவர்களே, இளைஞர்களே, பொதுமக்களே !

  • ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளை நினைவுகூரும் வகையில், மே 22 அன்று பொது இடங்கள், பூங்காக்களில் தியாகிகளின் உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்துவோம்!
  • கருஞ்சட்டை அணிந்து அந்நாளை கருப்பு தினமாக அனுசரிப்போம்!
  • ஜல்லிக்கட்டில் செய்தது போல மே-22 அன்று இரவு ஒவ்வொரு வீட்டு மாடியிலும்  செல்போன் டார்ச் மூலம் தியாகிகளை ஒளிரச்செய்வோம்!
  • மாணவர்கள், இளைஞர்கள் தியாகிகளின் நினைவாக இரத்த தானம் செய்வோம்!
  • தியாகிகளின் நினைவாக மரக்கன்றுகள் நடுவோம்!
  • துப்பாக்கிச்சூடு நடத்தி 15 உயிர்களைப் படுகொலை செய்த காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க குரல் கொடுப்போம் !
  • சிறப்புச்சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றவும், தியாகிகளுக்கு நினைவிடம் அமைக்கவும் தமிழக அரசை வலியுறுத்துவோம்!

இப்படிக்கு,
அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு (ACSF),
தூத்துக்குடி.

சமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ !

ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட தேர்தல் நடக்க இருந்த நிலையில் சனிக்கிழமை கேதார்நாத் ஆலயத்தில் வழிபாடு நடத்தினார் மோடி. தேர்தல் நடத்தை விதிகளை ‘பிரதமர்’ மோடியும் மதிக்கவில்லை; ‘பிரதமர்’ மோடியை தேர்தல் ஆணையமும் கண்டிக்கவில்லை. ஆனால், சமூக ஊடகங்களில் மக்கள் ஒரு பிரதமர் என்றும் பார்க்காமல், மோடியை கீழிறங்கி கேலி செய்துவருகிறார்கள். கடந்த மூன்று நாட்களாக மோடியின் குகை ‘தியானம்’ ட்ரெண்டிலேயே இருக்கிறது!

விளம்பர மோகியான மோடி, குகைக்குள் தியானம் செல்லும்போதும் கேமராவுடன் சென்றிருக்கிறார். தியானம் என்றால் கட்டாந்தரையில் செய்வார்கள். மோடி என்னும் யோகி, பஞ்சு மெத்தை மேல் அமர்ந்து தியானம் செய்கிறார்.  குகை என சொல்லப்படும் அந்த இடமும் குகை அல்ல; குகை போன்று வடிவமைக்கப்பட்ட தங்கும் அறை! உல்லாச தங்கும் அறைகளில் என்னென்ன வசதிகள் உண்டோ, அவை அத்தனையும் அந்த குகை போன்ற அறையில் உண்டு. நாள் வாடகை ரூ.990 லிருந்து ரூ. 3000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய குகையின் உரிமையாளர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

படிக்க:
மோடி பட்டப்படிப்பில் படித்த பாடங்கள் பாடத்திட்டத்திலேயே இல்லையாம் !
♦ ஏப்ரல் மாதத்தில் மோடியை 722 மணி நேரம் ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் !

முன்னதாக மோடியின் குகை தியானப் படங்கள் பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது. கேதார்நாத் குகையில் ‘கர்ம யோகி’ என்ற தலைப்பிட்டு படங்கள் பகிரப்பட்டிருந்தன.

பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர்வாசிகள் பிரதமர் என்றும் பாராமல் கேலி செய்யத் தொடங்கினர்.

சஞ்சய் ஜா, ‘கேமராவுடன் தியானம் சாத்தியமே’ என்கிறார்.

“ட்ரஸ் மாட்ட ஆங்கர், பஞ்சு மெத்தை, பின்னாடி தலையணை, இதை படம் புடிக்க கேமிரா.. கேட்டா குகையில் தியானம். மொத்தத்துல இத இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது!! ” என்கிறார் நிரஞ்சன்.

“உணர்ச்சிபூர்வமாக இருக்கிறேன், சிவாஜி தாத்தா நியாபகம் வருது” என்கிறார் பிரமோத்.

“என் மனைவி நடு இரவில் தண்ணீர் கேட்கும்போது, இப்படித்தான் இருப்பேன்” என்கிறார் கனோனி, மோடி தியானப் படத்தைப் பகிர்ந்து…

மோடியிடம் அரசியல் அல்லாத பேட்டி எடுத்த நடிகர் அக்‌ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கன்னா, “நண்பர்களே, கடந்த சில நாட்களாக ஏராளமான ஆன்மீக படங்களைப் பார்த்து வருவதால், தியானப் படங்கள் குறித்த ஒர்க்‌ஷாப் ஒன்றை நடத்த திட்டமிட்டிருக்கிறேன். திருமண புகைப்படங்களுக்குப் பிறகு, இது மிகப்பெரிய வெற்றி வாய்ப்புள்ள விஷயமாக இருக்கும் என நினைக்கிறேன்” என கேலியுடன் ட்விட்டியுள்ளார்.

“யாராவது இந்த பேரரசரிடம் நேற்றைய கேதார்நாத் படத்தைப் பார்த்து உலகமே சிரிக்கிறது என சொல்லி இருக்கிறார்களா? அல்லது அவருடைய முட்டாள்தனமான அமைச்சர்களிடமிருந்து வரும் புகழ்ச்சியான கருத்துக்களை மட்டும்தான் அவருக்கு அனுப்புவார்களா?” என கேட்கிறார் ப்ரீத்தி.

“கேதார்நாத்திலிருந்து வாத் நகருக்கு” தேர்தல் முடிவு வந்தால் மோடி தனது ஊரான வாத்நகருக்கு செல்வார் என்கிறார் ஆஸி.

“3.17 மணிக்கு மோடி தியானம் செய்கிறார். க்ளிக்.

4.10க்கு மோடி இன்னும் சில மணி நேரத்தில் தியானத்தைத் தொடங்குவார். ஏ.என்.ஐ-இன் வேண்டுகோளுக்கு இணங்க மோடி சில படங்களுக்கு போஸ் கொடுத்தார்.” பிரதிக் சின்ஹாவின் ட்விட் இது.

கேதார்நாத் சென்ற மோடிக்கு வேறு எந்த பக்தருக்கும் இல்லாத சிறப்பு ‘சிவப்பு கம்பள’ மரியாதை அளிக்கப்பட்டது. இது குறித்தும் பலர் கேலி செய்தனர்.

“சரியான உடை, சிவப்பு கம்பளம் மற்றும் ஜோடிக்கப்பட்ட புகைப்பட வாய்ப்பு இல்லாமல் எந்தவொரு தியானமும் முழுமையடையாது அல்லது பொருளற்றதாக இருக்காது.”

மோடியின் தியான குகையில் இருக்கும் “அந்த கொக்கிகள் ஒளிவட்டங்களை தொங்கவிடவா?” எனக் கேட்கிறார் மனு ஜோசப்.

“ஒளிப்பதிவாளர் பார்த்துக்கொண்டிருக்க மோடி தியானம் செய்கிறாரா?” என வினவுகிறார் ஸ்வாதி சதுர்வேதி.

கலைமதி
நன்றி: ஸ்க்ரால்


தவறாமல் பாருங்கள் …

புருடா மன்னன் – Cloudy மோடி | கலாய் காணொளி

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன ? | ம.உ.பா.மை அறிக்கை !

லைமை நீதிபதி திரு.ரஞ்சன் கோகோய் மீது உச்சநீதிமன்றப் பெண் ஊழியர் கொடுத்த புகார் தொடர்பான பிரச்சினை தற்போது மறக்கப்பட்டு வருகிறது.தேர்தல் முடிவுகள், அடுத்து ஆட்சி அமைப்பது யார்? என்று வரும் நாட்கள் நகரும்போது, நாமும் அடுத்தடுத்த பிரச்சினைகளுக்குத் தாவி விடுவோம். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பம் மட்டும், தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுமந்து கொண்டிருக்கும். கைகள், கால்களில் விலங்கிடப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டு, துரத்தித் துரத்தி வேட்டையாடப்பட்டது, கொடுங்கனவாக அவர்களைத் துரத்தும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, மகாராஷ்டிரா மாநிலம், கயர்லாஞ்சியில் துண்டு நிலம் வாங்கி, குழந்தைகளைப் படிக்க வைத்த குற்றத்திற்காக, சுரேகா போட்மாங்கே என்ற தலித் அம்மாவும், மகளும், மனநிலை பாதிக்கப்பட்ட மகனும் நிர்வாணப்படுத்தப்பட்டு, வன்புணர்வு செய்து கொல்லப்பட்டார்கள். தன் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளைத் தடுக்கமுடியாமல், மறைந்திருந்து பார்த்துவிட்டு தப்பித்து ஓடிய, பையலால் போட்மாங்கேவிற்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.கடந்த 2002-ல், குஜராத்தில் கும்பல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, தங்கள் குடும்பத்தினர்  கண்முன்னே கொல்லப்பட்டதைப் பார்த்து, மனநிலை பாதித்து, இன்றுவரை முகாம்களில் தங்கியுள்ள இசுலாமியப் பெண்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்கப்போவதில்லை. இவ்வாறு, கடந்த 70 ஆண்டுகளில் சாதி, மதம், இலாப வெறிக்காக இழைக்கப்பட்ட அநீதிகளின் கதையை எளிதில் விவரித்துவிட இயலாது.

படிக்க :
♦ தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்
♦ தூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தைரியமாகப் புகார் செய்த பெண்ணுக்கும் நிச்சயம் நீதி கிட்டாது. நீதி அல்ல, சரியான விசாரணை கூட நடக்காது.

எதிர்காலத்தில் தலைமை நீதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர் பொறுப்பில் உள்ளோர் மீது பாலியல் புகார்கள் வந்தால் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த ஒரு விவாதத்திற்காவது இப்பிரச்சினை வரவேண்டும். அதற்காவது மூத்த வழக்கறிஞர்கள்,வழக்கறிஞர் சங்கங்கள்,சமூக அக்கறை கொண்டோர் குரல் எழுப்புவது மிகவும் அவசியம். தமிழகத்தில் எந்த மூத்த வழக்கறிஞரும் தலைமை நீதிபதி விசயத்தில் பேசாதது மிகவும் வருத்தத்திற்குரியது.

தலைமை நீதிபதி பிரச்சினையில், முறையான விசாரணை நடத்தப்படுவதைத்  தடுப்பது எது? பிரச்சினை எங்குள்ளது?

வழக்கமாக பாலியல் புகார் காவல்துறையில் அளிக்கப்பட்டால் வழக்குப் பதியப்பட்டு, விசாரணை நடந்து இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது பாலியல் புகார் வந்தால் என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பது குறித்த தெளிவான சட்டமோ, விதிகளோ இல்லை. தலைமை நீதிபதி மீதே புகார் வந்தால், புகார் சட்டப்படியே குப்பைக் கூடைக்குத்தான் போகும். 1947-லிருந்து இன்றுவரை ஏராளமான உச்ச, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது பாலியல், லஞ்ச, ஊழல் புகார்கள் வந்துள்ளது. ஒரு நீதிபதி மீது கூட நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை. உள்ளக விசாரணை முறை (In house enquiry) நடைமுறைகள் பொதுவெளியில் தெரியாது. உள்ளக விசாரணையில் எந்த வழக்கறிஞரும் பங்கேற்றதே கிடையாது. ஒருவேளை உள்ளக விசாரணைக் குழு தலைமை நீதிபதி குற்றம் இழைத்துள்ளார் என அறிக்கை அளித்தாலும், அவ்வறிக்கை தலைமை நீதிபதியிடம்தான் செல்லும். அவர் மீது யார் நடவடிக்கை எடுப்பது? ஆகக் குற்றம் இழைத்தால், சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலைதான், நீதிபதிகள் தைரியமாக குற்றங்கள் இழைப்பதற்கான அடிப்படை.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்

மேலும், நீதிபதிகள் மீதான புகார்கள், விமர்சனங்களை பொதுவெளியில் சொன்னால், சம்மந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பாயும், அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் அவற்றை விவாதிக்க முடியாது.

இப்படி சட்டப்படி ஒரு நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க இயலாது, காவல்துறையில் புகார் அளிக்க முடியாது என்ற சூழலில்தான் பாதிக்கப்பட்ட பெண் அனைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் புகார் அனுப்புகிறார். புகாரை வாங்கி, அவர்கள் ஏதாவது செய்ய முடியுமா என்றால், முடியாது. சட்டத்தில் தலைமை நீதிபதியை விசாரிக்கும் நடைமுறை இதுவரை இல்லை.

இணையதள ஊடகங்களில் செய்தி வெளியாகி பல வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துப் போராட்டம் நடத்தியதால்தான் செய்தியாவது வெளியில் தெரிந்தது. இத்தனை நடந்த பின்னும் நாட்டின் பெரிய அரசியல் கட்சிகள் புகாருக்கு உள்ளானவர் தலைமை நீதிபதி என்பதால் கள்ள மவுனம் காக்கின்றன. பாஜக நேரடியாக தலைமை நீதிபதியை ஆதரிக்கிறது. முக்கியமாக மே 23 தேர்தல் முடிவுகளுக்குப் பின், பாஜக-காங்கிரசுக்குப் பெரும்பான்மை இல்லை என்றால், ஆட்சி அமைப்பது தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு வரும். அவ்வழக்கை  எந்த நீதிபதிகள் விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதிதான் தீர்மானிப்பார். மே 11 முதல் ஜீன் மாதம்வரை உச்சநீதிமன்றத்திற்கு கோடைகால விடுமுறை. வழக்கமாக இளம் நீதிபதிகள்தான் கோடைகால நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிப்பார்கள். இந்த ஆண்டு, தலைமை நீதிபதியே கோடைகால நீதிபதியாக அமர்கிறார். பாஜக தலைமை நீதிபதியை ஆதரிப்பதன் ரகசியம் புரிகிறதா?

வழக்கறிஞர் சமூகத்தை தலைகுனியச் செய்த இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர்

பிரச்சினை துவங்கும் முதல் நாளில், விடுமுறை நாளில் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டு, தன் மீதான வழக்கைத் தானே விசாரிக்கிறார் தலைமை நீதிபதி. இந்த விசாரணையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரும், இந்தியாவின் முன்னணி வழக்கறிஞருமான திரு.கே.கே.வேணுகோபாலும் பங்கேற்றுப் பேசுகிறார். கே.கே.வேணுகோபால் அவர்களுக்கும், சக நீதிபதிகளுக்கும், தலைமை நீதிபதி அவ்வழக்கை விசாரிப்பது தவறு எனத் தெரியாதா? தெரிந்தே தலைமை நீதிபதியின் தவறுக்குத் துணை போகிறார்கள். தலைமை நீதிபதியை விமர்சிக்கும் அனைவரும் தலைமை நீதிபதி பாலியல் ரீதியாக குற்றம் இழைத்துவிட்டார் எனச் சொல்லவில்லை.மாறாக, தலைமை நீதிபதி மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அளவில் நம்பகத் தன்மை கொண்ட புகார், உரிய ஆதாரங்களுடன் அளிக்கப்பட்டுள்ளது. அதை ஏன் விசாரிக்க மறுக்கிறார்கள்? அல்லது ஏன் இத்தனை குளறுபடிகள் செய்கிறார்கள்? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். தலைமை நீதிபதியின் பதட்டமும், விசாரணை நடந்த முறையும்தான் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

கே.கே. வேணுகோபால்

குறிப்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நீதிபதி பாப்டே குழு, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் முதலில் சமரசம் பேசுகிறது. அவர் மறுத்தவுடன், இறுக்கமான விசாரணை நடக்கிறது. சில நாட்களில் தலைமை நீதிபதி மீது தவறில்லை என அறிக்கையில் உள்ளதாகச் செய்தி வருகிறது. இந்த விசாரணை உள்ளக விசாரணை கூட அல்ல என்கிறது விசாரணைக்குழு. விசாரணைக் குழுவின் சட்ட ரீதியான நிலை என்ன? எனத் தெரியவில்லை. பொதுவெளியில் விசாரணை அறிக்கை இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கோ, மற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கோ வழங்கப்படவில்லை. இதைவிட கேலிக் கூத்தான விசாரணை முறை உலகில் எங்கும் இருக்காது.

 பாலியல் குற்றச்சாட்டு தவிர இதர குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்படவேண்டும்!

பாதிக்கப்பட்ட உச்சநீதிமன்றப் பணியாளர்  தெரிவித்த குற்றச்சாட்டில் முக்கியமானது, அவரது மற்றும் குடும்பத்தினரது பணிநீக்கம் தொடர்பானது. சர்வீஸ் சட்டங்களில் ஓரிரு ஆண்டுகள் அனுபவம் உள்ள எந்த வழக்கறிஞரும் சொல்லிவிடுவார், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை(நிரந்தரப் பணிநீக்கம்) மிக, மிக அதிகப்படியானது என்று. அப்பெண் உச்சநீதிமன்றப் பணியாளராக இல்லாமல், வேறு துறையில் பணிபுரிந்து, இத்தண்டனை வழங்கப்பட்டிருந்தால், இதே நீதிமன்றங்கள் உடனே தண்டனையை ரத்து செய்து விடும். உண்மையில் தன் பணியாளர்கள் மீதான நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொள்ளும் நிறுவனம்தான் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப்பெறும். நீதித்துறை எப்போதும் இதற்கு விதிவிலக்குதான். நீதித்துறை ஊழியர்களுக்கு, மற்ற அரசு ஊழியர்களுக்கு இருக்கும் சுதந்திரம் எப்போதும் இல்லை.

இதுதவிர, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குடும்பத்தினரை ராஜஸ்தான்வரை விரட்டிச் சென்று கைது செய்தது, கைவிலங்கிட்டது உச்சநீதிமன்றத்தின் டி.கே.பாசு மற்றும் அர்னேஸ்குமார் வழக்குகளின் தீர்ப்புகளுக்கு எதிரானது. மேலும், டெல்லி திலக் மார்க் காவல்நிலையத்திலிருந்து, தலைமை நீதிபதியின் வீட்டுக்கு புகார் அளித்த பணியாளர் அழைத்துச் செல்லப்பட்டு, தலைமை நீதிபதியின் மனைவி காலில் விழ வைக்கப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். குறைந்தபட்சம், திலக் மார்க் காவல்துறை அதிகாரிகளை விசாரணைக் குழு விசாரித்திருந்தால் உண்மை வெளிவந்திருக்கும். எனவே சரியான விசாரணை முறையை வரையறுக்கத்தான் முதலில் நாம்  போராட வேண்டியுள்ளது.

குறைந்தபட்சக் கோரிக்கை – தீர்வு என்ன?  

உச்சநீதிமன்றப் பணியாளரின் புகார் சரியான முறையில் விசாரிக்கப்பட இருமாத காலம் தலைமை நீதிபதி பணிவிடுப்பில் செல்ல வேண்டும். உச்சநீதிமன்றத்தின் மற்ற அனைத்து நீதிபதிகளும் சேர்ந்து தலைமை நீதிபதி மீதான புகாரை எப்படி விசாரிக்க வேண்டும் என்பதை வரையறுக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரனையில், புகாரில் சொல்லப்பட்ட அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணும், தலைமை நீதிபதியும், வழக்கறிஞர் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். விசாரணை முழுவதும் வெளிப்படையாக மக்கள் முன்பு திறந்த அரங்கில் நடத்தப்பட வேண்டும். விசாரணைக் குழு முடிவுகள் இரு தரப்புக்கும் வழங்கப்பட்டு, பதில் கேட்டு, உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் முன்பு வைக்கப்படவேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் உச்சநீதிமன்றம், பாராளுமன்றத்திற்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க(பணிநீக்கம்) வலியுறுத்த வேண்டும். பணிநீக்கம் செய்தபின் உரிய குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் பொய்யெனத் தெரிய வந்தால், சம்மந்தப்பட்ட பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

படிக்க:
♦ ரஞ்சன் கோகோய் : நீதி செத்துவிட்டது ! நீதிபதிகள் வாழ்க !
♦ ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ! உண்மையா ? பொய்யா ?

இவை நிலவும் நீதி-நிர்வாக அமைப்பு முறை இதுவரை சொல்லிவந்த நடைமுறைகள்தான். இவையெதுவும் நிச்சயம் நடக்காது. எனினும், இந்த நீதித்துறைத்தான் நிலவுகின்ற அரசுக் கட்டமைப்பில், மக்களின் கடைசி நம்பிக்கை என்று சொல்லப்படுகிறது. கடைசி நம்பிக்கையும் உள்ளுக்குள் சரிந்து நொறுங்கியிருக்கிறது என்பது நீதித்துறையைச் சேர்ந்த அனைவருக்கும் தெரியும். தலைமை நீதிபதிக்கும் தெரியும். ஏனென்றால் ஜனவரி 12,2018 அன்று, “ஜனநாயகத்துக்கு ஆபத்து” என்று முன்னாள் தலைமை நீதிபதி திரு. தீபக் மிஸ்ராவிற்கு எதிராக கலகக் குரல் எழுப்பி, உச்சநீதிமன்ற நிர்வாக முறையில் வெளிப்படைத்தன்மை கோரியவர் தற்போதைய தலைமை நீதிபதிதான். தற்போது அதைத் தடுத்துக் கொண்டிருப்பவரும் அவர்தான்.

இவண்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
தொடர்புக்கு : 94434 71003

சூத்திரருக்குத் தாழ்நிலைதான் தர்ம சாஸ்திரத் தீர்ப்பா ?

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 16


காட்சி : 24

இடம் : வீதி
உறுப்பினர்கள் : காகப்பட்டர், ரங்குப் பட்டர், வீரர்கள். கேசவப்பட்டர், பாலச்சந்திரப் பட்டர் வாத்திய கோஷ்டி

(கேசவப்பட்டரும், பாலச்சந்திரப்பட்டரும் எதிர்கொண்டு அழைக்கின்றனர். சீடர்கள் சாமரம் வீசுகின்றனர்)

காசிவாசி காகப்பட்டருக்கு ஜே! குரு மகாராஜன் குணசீலன் காகப்பட்டிருக்கு ஜே! சகல சாஸ்திர விற்பன்னர், வேத விற்பன்னர், வேதியகுல வேந்தர் காகப்பட்டருக்கு ஜே!’ என்ற கோஷம்.

தளபதிகள் மாலை மரியாதையுடன் வருகின்றனர். மாலைகளிலே ரங்குப் பட்டர் கங்கா தீர்த்தம் தெளித்து, பிறகு? பிறகு ஏற்றுக் கொள்கிறார். தளபதிகள் பல்லக்கு அருகே சென்று வீழ்ந்து பணிகிறார்கள். ரங்கு அவர்களை விலக்கிச் செல்கிறார். தளபதிகள் பயபக்தியுடன் பின்னால் செல்லுகிறார்கள். மீண்டும் கோஷம் – ஊர்வலம் செல்லுகிறது. ஊர்வலத்தின் கடைசியிலே பதிகள் செல்கின்றனர்.

♦ ♦ ♦ 

காட்சி : 25
இடம் : தர்பார்
உறுப்பினர்கள் : காகப்பட்டர், ரங்கு, பட்டர்கள், தளபதிகள், வீரர்கள், சிவாஜி,
மோரோபந்த், சிட்னீஸ்

(தளபதியிடம் )

காகப்பட்டர் : நாம் நமது சீடருடன் பேச வேண்டும். நீங்கள் போய் வெளியே இருக்கலாம்; பிறகு அழைப்போம்.

(தளபதி சென்ற பிறகு)

ரங்குப்பட்டர் : இப்ப என்ன சொல்றே! நமக்கு நடக்கும் இந்த ராஜோபசாரத்தைப் பார். நமது பாதத்திலே வீழ்ந்து வணங்கினவா ஒவ்வொருவனும் சாமான்யனில்லை. அசகாய சூரர்கள். யுத்தத்திலே ஜெய வீராளா இருப்பவர். அவாளுடைய அதிகாரமும் கீர்த்தியும் அமோகம். ஆனால் நமது அடி பணிந்தார் பார்த்தாயல்லவா?

ரங்குப்பட்டர் : தேவ தேவனைத் தொழும் பக்தனைப் போல் அல்லவா ஸ்வாமி அவர்கள் நடந்து கொண்டார்கள் !

காகப்பட்டர் : இதில் என்னடா ஆச்சரியம்? நாம் யார். பூதேவா! அவர்கள் சூத்திரர்கள். மனுவின் வாக்கியப்படி நமக்குச் சேவை செய்யவே பூலோகத்தில் பிறந்தவர்.

ரங்குப்பட்டர் : மனு நமக்காகச் செய்திருக்கும் ஏற்பாடு மகா மகத்துவம் வாய்ந்தது.

காகப்பட்டர் : சந்தேகமென்ன. சரி இனி இந்தப் பிராயச்சித்தக் காரியப்படி இரண்டு முக்கிய விஷயங்கள் பூர்த்தியாக வேண்டும்.

ரங்குப்பட்டர் : அவைகள்?

காகப்பட்டர் : ஒன்று வீராதி வீரனானாலும் விற்பன்னருக்கு அடங்கியே தீர வேண்டும் என்ற கொள்கையை நிலை நாட்ட வேண்டும். சிவாஜி என்னிடம் ஆசி பெற்று, அனுமதி பெற்று, அடிபணிந்த பிறகே சிம்மாசனம் ஏறுவான். ஆகவே அந்த அபிலாஷை சித்தியாகும்.

ரங்குப்பட்டர் : மற்றொன்று?

காகப்பட்டர் : நமது ஆரியச் சோதராளுக்கு இந்தச் சமயத்திலே கூடுமான சகாயம் செய்ய வேண்டும்.

ரங்குப்பட்டர் : எப்படி ஸ்வாமி, அது சாத்தியமாகும்?

காகப்பட்டர் : எப்படி ஆகாமல் போகிறது பார்ப்போம். நீ போய் வெளியே இரு. அந்தத் தளபதியை வரச்சொல் (ரங்கு போகிறான்)

(சிவாஜி வரக்கண்டு காகப்பட்டர்)
அமருக! அஞ்சாநெஞ்சுடைய ஆரிய சேவா சிம்மமே,
(சிவாஜி அமருகிறார்)

நமது கட்டளையை ஏற்றுக் கொண்டது கண்டு சித்தம் களித்தோம். ஏனெனில் அந்தக் கட்டளையை மீறினால் இம்மையில் இம்சையும், மறுமையில் மாபாவமும் சம்பவிக்கும் என்று மாந்தாதா திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்.

சிவாஜி : ஆரியவர்த்தனா! என் பட்டாபிஷேகம் சம்பந்தமாக ஆட்சேபனை கிளம்பிய போது கிளம்பிய புயல் இன்னும் அடங்கவில்லை.

காகப்பட்டர் : புயலா? சனாதன சத்காரியத்தை எதிர்த்திட எந்தச் சண்டமாருதத்தாலும் ஆகாதே.

சிவாஜி : தாங்கள் அறியமாட்டீர்கள் அந்தப் புயலின் வேகத்தை … சூத்திரருக்கு நாடாள ஏன் உரிமையில்லை ? சாஸ்திரம் தடுப்பது ஏன் என்று கேட்கின்றனர். என்னோடு
தோளோடு தோள் நின்று போரிட்ட வீரர்கள்.

காகப்பட்டர் : வீரர்கள் கேட்டனரா? பாவம்! அவர்கள் வீரர்கள் தானே? விவேகிகள் அல்ல பார்!

சிவாஜி : சூத்திரருக்குத் தாழ்நிலைதான் தர்ம சாஸ்திரத் தீர்ப்பா?

காகப்பட்டர் : இன்று நேற்று ஏற்பட்டதல்லவே. இகபர சுகம் இரண்டுக்கு மல்லவோ சாஸ்திரம். அது மனு, பராசரர், பாக்கிய வல்கியர் போன்ற ரிஷி ஸிரேஷ்டர்களின் பாஷ்யங்களோடு ஜொலிக்கின்றன.

ரங்குப்பட்டர் : விளக்கமாகக் கூற வேண்டுகிறேன். சூத்திரருக்கு ஏன் தாழ்நிலை?

காகப்பட்டர் : (புன்சிரிப்புடன்) குழந்தாய்! நீ ஆகமத்தின் அடிச்சுவடையும் அறியவில்லையே. சிருஷ்டிகளின் கர்த்தா பிரம்மதேவன், பிரம்மதேவன் பிரபஞ்சத்தை கிருஷ்டித்தான். அயன் படைப்பு நாலு ஜாதி. நான்முகனுடைய முகத்திலே தோன்றியோர் முப்பிரி தரித்த பூசுரர். தோளிலே தோன்றியோர் க்ஷத்திரியர். வைசியர் தொடையிலே தோன்றினர். பிரம்மனனின் பாதத்தில் தோன்றியோர் சூத்திரர். பிரமகுலம் தேவதாதராகவும், க்ஷத்திரிய குலம் அரச சேவை செய்துக் கொண்டும், வைசிய குலம் செல்வத்தைச் சேகரிக்கும் சேவை செய்துக் கொண்டும் வாழ வேண்டும். சூத்திர குலம் பிரம்ம குலத்துக்குத் தாசராகி சேவை செய்து வரவேண்டும். இது பிரம்மன் கட்டளை.

சிவாஜி : காலிலே தோன்றியதாலா இந்தக் கடும் தண்டனை? காடு, மேடு திருத்திக் கழனியாக்கி நாடு வாழ நற்பணி புரியும் எங்களுக்கு?

காகப்பட்டர் : தண்டனை என்று கூறுவது தவறு; தீர்ப்பு! தேவ கட்டளை; ஆண்டவன் ஆணை; தேவ சாஸ்திர விதி ; குலதர்மம் .

சிவாஜி : நல்ல தர்மம்! நல்ல கட்டளை ! நல்ல ஆணை!

காகப்பட்டர் : சிவாஜி என்னிடம் தர்க்கிக்கவா துணிகிறாய்?

சிவாஜி : நான் தர்கிக்கவில்லை; சந்தேக விளக்கம் கேட்டேன்.

காகப்பட்டர் : சாஸ்திரத்தை சந்தேகிப்பதே பாவம். தெரியுமா உனக்கு? அது கேவலம் நாஸ்திகாளின் செயல். நாஸ்திகளுக்கு என்ன நேரிடும் தெரியுமா? ரெளரவாதி நரகம் சம்பவிக்கும்.

சிவாஜி : அது இறந்த பிறகுதானே?

காகப்பட்டர் : ஆமாம் இங்கேயும் உண்டு இம்மை.

சிவாஜி : நான் பாடுபட்டேன். அதன் பலனை அனுபவிக்க நினைப்பது தவறா? பாவமா? அரசு அமைத்தேன், வாள் பலத்தால் ஆள்வதற்கு மட்டும் ஆரிய பலம் வேண்டுமா என்று கேட்கின்றனர்.

காகப்பட்டர் : நீயேதான் கேளேன் அதனால் என்ன? சிவாஜி வீரன்தான், போர் பல கண்டவன் தான். எதிரியின் மண்டைகள் சிதற, மலைகள் அதிரபோரிட்டவன் தான். ஆயினும் என்ன? அவன் பூசுரனல்லவே. நமது மதக் கோட்பாட்டின் படி க்ஷத்திரியனே மன்னனாக முடியும். சூத்திர சிவாஜி எங்ஙனம் முடிசூட முடியும் என்று நான்
கேட்டதாக நீ கேள்.

ஆட்சிக்கு வருவதென்பது அவ்வளவு கடினமானதல்ல. சதிபல புரிந்து, வாரிசுகளைச் சிதைத்துப் பலர் மன்னராயினர். மன்னரை மயக்கி ஒழித்து, மந்திரிகள் பலர் முடி சூடினர். மன்னரையும், மந்திரியையும் ராணுவத்தைக் காட்டி மிரட்டி, படைத்தலைவன் பீடத்தில் அமர்ந்திருக்கிறான்.

சிவாஜி : நான் சதி செய்தல்ல ராஜ்யம் பெற்றது. வீர வெற்றிகள் பெற்றிருக்கிறேன்.

காகப்பட்டர்: நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகவேதான் சூத்திர குலத்தில் பிறந்தாலும் உன்னை க்ஷத்திரியனாக்கத் தீர்மானித்திருக்கிறேன். உனக்குப் பெருமை தந்தேன்.

சிவாஜி : அந்தப் பெருமையை என் தளபதிகள் உணரவில்லை.

காகப்பட்டர் : சிவாஜி நீ க்ஷத்திரியனாக்கப்பட்டால் தான் பரத கண்டம் முழுவதும் உள்ள பிராமணோத்தமர்கள் உன்னை ஆசீர்வாதம் செய்வர். அந்த ஆசிர்வத பலம் இல்லாத அரசு ஆண்டவனால் அழிக்கப்பட்டு விடும். இதற்கு ஆதாரம் சாஸ்திரம். மூலம் வேதம், வேதம் அனாதி காலத்தது. தேவன் தந்தது. அதன் பாஷ்யம் கூறும். அருகதை பெற்றவரே ஆரியர். ஆரியர் தேவர்.

சிவாஜி, சாஸ்திரத்தின்படி நடக்கச் சம்மதம் இல்லாவிட்டால் கூறிவிடும். என் காலத்தை வீணாக்காதே. எனக்கு வேலை இருக்கிறது.

சிவாஜி : உமது யோசனையை ஏற்க மறுத்தால்?

காகப்பட்டர் : யோசனையல்ல, கட்டளை !

சிவாஜி : சிவாஜிக்கு கட்டளை பிறப்பிக்கும் துணிவு .. !

காகப்பட்டர் : ஆரியருக்கு உண்டு, அவர்கள் பூதேவரானதால்.

சிவாஜி : கட்டளையை மறுக்க முடியும் என்னால்.

காகப்பட்டர் : முடியாது. மறுத்தால் முடி கிடையாது.

சிவாஜி : முடியாதா? என்னால் முடியாதா? காகப்பட்டரே உற்றுப்பாரும், யார் என்று பாரும் !

காகப்பட்டர் : வீராதி வீரன் அதனால் என்ன? நீ சாஸ்திரத்துக்குச் சம்மதித்தே ஆகவேண்டும்.

சிவாஜி : முடியாது என்றால் என்ன செய்வீர்?

காகப்பட்டர் : நானா! என்ன செய்வேன்? சரி என்று கூறி விட்டுப் போய்விடுவேன். ஆனால் முடியாது என்று சொல்லி வாய்மூடுமுன் தெய்வத்தின் சாபம் உன்னைத் தீண்டும்.

சிவாஜி : என்னை மிரட்டுவது முடியாத காரியம். என் ராஜ்யத்திலே என் இஷ்டப்படி நடக்க எனக்கு உரிமை உண்டு.

காகப்பட்டர் : உண்மை. உதாரணமாக நீ என்னைக் கொன்றுவிடக்கூட அதிகாரம் உண்டு. செய்து பார்.

சிவாஜி : காகப்பட்டரே! சிவாஜியின் சித்தம் கலக்கத்தை அறியாதது. கொன்றால் என்ன நடந்துவிடும்?

காகப்பட்டர் : என்ன நடக்கும் என் உயிர் போகும். ஆனால், என் பிணம் வேகுமுன் உன் ராஜ்யம் சாம்பலாகும்.

சிவாஜி : எவ்வளவு ஆணவம்?

காகப்பட்டர் : யாருக்கு?

(சிவாஜி மெளனமாக)

சிவாஜி : என்னென்ன சடங்குகள் நடைபெறவேண்டும்?

காகப்பட்டர் : பரத கண்டத்திலே பல பாகங்களிலிருந்து பிராமணோத்தமர்களை வரவழைத்துச் சமாராதனை நடத்தி தட்சணை தர வேண்டும்.

சிவாஜி : சாஸ்திர விதிப்படிதானா அதுவும்?

காகப்பட்டர் : ஆம் தானாதி காரியமூலம் ஆசிர்வாதம் பெற உன் பாவத்தை நீ கழுவிக் கொள்ள வேண்டும்.

சிவாஜி : பாவமா? எனக்கா? நான் வஞ்சிக்க வில்லையே. பொய்யனல்லவே. புரட்டனல்லவே?

காகப்பட்டர் : நீ பஞ்சமா பாதகத்திலே மிஞ்சியதாம் கொலை பாதகத்தைச் செய்தவன்.

சிவாஜி : யாரை?

காகப்பட்டர் : களத்திலே பலரை.

சிவாஜி : சரி! பிறகு நடக்க வேண்டியதைக் கூறும்.

காகப்பட்டர்: ஹோமம்,

சிவாஜி : விறகு, நெய்.

காகப்பட்டர் : மலை உயரம் விறகு; மடு ஆழம் நெய்.

சிவாஜி : பிறகு?

படிக்க:
தூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி
அய்யர் சொல்லிட்டா அப்பீல் ஏது ?

காகப்பட்டர் : துலாபாரம்

சிவாஜி : துலாபாரமா?

காகப்பட்டர் : ஆம் உன் எடைக்கு எடை நவரத்தினங்கள், தங்கம், வெள்ளி முதலிய உலோகங்கள், பட்டு முதலியன நிறுத்தி தானம் செய்ய வேண்டும்.

சிவாஜி : யாருக்கு? ஏழைகளுக்கா?

காகப்பட்டர் : இல்லை … பிராமணர்களுக்கு.

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

நமது மக்கள் எஃகு உறுதி படைத்தவர்கள் !

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 15

மிஹாய்லா தாத்தா வீட்டில் அலெக்ஸேய் தங்கியிருந்த மூன்றாம் நாள் காலை, கிழவர் அவனிடம் தீர்மானமாகச் சொன்னார்:

“கேள், அலெக்ஸேய். உன்னைக் குளிப்பாட்ட ஏற்பாடு செய்கிறேன். உன் உடம்பைக் கழுவி ஆவியால் எலும்புகளுக்குச் சூடேற்றுகிறேன். நீ பட்டிருக்கும் பாட்டிற்கு, வென்னீரில் குளிப்பது ரொம்ப இதமாயிருக்கும். ஊம்? அப்படித்தானே?”

பின்பு அவர் வென்னீர் போடுவதற்கு ஏற்பாடு செய்தார். மூலையில் இருந்த கணப்பைப் பெரிதாக மூண்டு எரியச் செய்தார். அதன் சூட்டில் கற்கள் ஓசையுடன் பிளக்கலாயின. தெருவிலும் நெருப்பு எரிந்தது. பெரிய கற்பாளம் அதில் பழுக்கச் சூடேற்றப் பட்டது. வார்யா தண்ணீர் கொண்டு வந்து பழைய பீப்பாயில் நிரப்பினாள். தரைமீது பொன்னிற வைக்கோல் பரப்பப்பட்டது. அப்புறம் மிஹாய்லா தாத்தா மேலுடைகளைக் களைந்து விட்டு, உட்காற்சட்டை மட்டும் அணிந்தவாறு சிறு மரத் தொட்டியில் காரத்தை மளமளவென்று கரைத்தார், மரவுரிப் பாயைப் பிய்த்து, கோடை மணம் வீசும் தேய்ப்பு நார்க் கற்றை தயாரித்தார். நிலவரையில் விட்டத்திலிருந்து கனத்த குளிர் நீர்த் துளிகள் சொட்டும் அளவுக்குச் சூடு ஏறியதும் கிழவர் தெருவுக்குப் பாய்ந்து போய், சூட்டால் சிவந்திருந்த கற்பாளத்தை இரும்பு தகட்டில் தள்ளி அறைக்குள் கொண்டு வந்து பீப்பாயில் போட்டார். ரோவிப் படலம் குப்பென்று கிளம்பி விட்டத்தை நோக்கிச் சென்று வெண் சுருள்களாக அங்கே பரவியது. ஒன்றுமே கண்ணுக்குத் தெரியவில்லை. கிழவரின் லாவகமான கைகள் தன் உடலைக் களைவதை அலெக்ஸேய் உணர்ந்தான்.

வார்யா, மாமனாருக்கு ஒத்தாசை செய்தாள். வெக்கை காரணமாகத் தன் பஞ்சுவைத்த சட்டையையும் தலைக்குட்டை யையும் அவள் கழற்றிவிட்டாள். கனத்த பின்னல்கள் அவிழ்ந்து தோள்கள் மீது புரண்டன. கிழிந்த தலைக்குட்டைக்குள் அவை இருப்பதை அனுமானிப்பதே கடினமாயிருந்தது. லேசான, மெலிந்த மேனியும் பெரிய விழிகளும் கொண்ட வார்யா, கடவுளை வழிபடும் கிழவியிலிருந்து இளநங்கையாக எதிர்பாராத விதமாக மாறிவிட்டாள். இந்த உருமாற்றம் முற்றிலும் எதிர்பாராததாக இருந்தமையால், தொடக்கத்தில் அவள்பால் கவனமே செலுத்தாதிருந்த அலெக்ஸேய் தான் நிர்வாணமாக இருப்பது குறித்து நாணம் அடைந்தான்.

“கூச்சப்படாதே, அலெக்ஸேய்! ஆமாம், நண்பா, கூச்சப்படாதே. இப்போது நமது விவகாரம் அப்பேர்பட்டது. இவள் இருக்கிறாளே, வார்யா, சண்டையில் காயமடைந்தவனுக்கு முன் மருத்துவத்தாதி போல. ஆமாம். கூச்சப்படுவது கூடாது. இந்தா, இவனைப் பிடித்துக்கொள், நான் சட்டையைக் கழற்றுகிறேன். அடே, சட்டை எப்படி இற்றுப்போய்விட்டது! தானாகவே கிழிந்து போகிறதே!”

அப்போது இளநங்கையின் பெரிய கரு விழிகளில் அச்சம் தென்பட்டதை அலெக்ஸேய் கண்டான். அசையும் நீராவித் திரையின் ஊடாகத் தனது உடம்பை அவன் விபத்துக்குப் பின் முதன்முறையாக நோக்கினான். தங்க நிற வைக்கோல் மேல் கிடந்து பழுப்பேறிய தோலால் போர்த்தப்பட்ட எலும்புக்கூடு. முழங்கால் சில்லுகள் உருண்டையாகத் துருத்திக் கொண்டிருந்தன. இடுப் பெலும்புக் கட்டு உருண்டையாகவும் கூர்ந்தும் இருந்தது. வயிறு ஒரேடியாக ஒட்டிப் போயிருந்தது. பழுவெலும்புகள் கூரிய அரை வளையங்களாக இருந்தன.

கிழவர் சிறு தொட்டியில் காரத்தைக் கரைத்துக் கொண்டிருந்தார். சாம்பல் நிற எண்ணெய்ப் பசையுள்ள திரவத்தில் தேய்ப்பு நார்க் கற்றையை பிடித்திருந்த அவரது கை அப்படியே அந்தரத்தில் நின்றுவிட்டது.

“அடக் கஷ்டமே! உன் விவகாரம் ஆபத்தானது, தம்பி அலெக்ஸேய்! ஊம்? ஆபத்தானது என்கிறேன். ஜெர்மானியர்களிடமிருந்து நீ ஊர்ந்து தப்பிவிட்டாய், வாஸ்தவந்தான். ஆனால் காலனிடமிருந்தோ…” திடீரென அவர் அலெக்ஸேயைப் பின்புறம் தாங்கிக் கொண்டிருந்த வார்யா மீது பாய்ந்தார்: ”நீ என்ன அம்மணமான ஆண் பிள்ளை மீது சாய்ந்து கொண்டு விட்டாய், வெட்கங் கெட்டவளே, ஊம்? உதட்டை எதற்காகக் கடித்துக் கொள்கிறாய்? ஐயோ, நீங்கள் இருக்கிறீர்களே, பெண்கள், உளறுவாய் ஜன்மங்கள்! அலெக்ஸேய் நீ ஏதேனும் கெடுதலாக நினைக்காதே. என்னவானாலும் உன்னை நாங்கள் காலன் கொண்டு போக விட மாட்டோம், தம்பி. உனக்குச் சிகிச்சை செய்து குணப்படுத்தியே தீர்ப்போம், இது உண்மை! செளக்கியமாக இரு!”

அவர் லாவகமாகவும் பதமாகவும் குழந்தையைப் போல அலெக்ஸேயைக் காரத்தினால் தேய்த்துக் கழுவினார், புரட்டினார், வென்னீரால் குளிப்பாட்டினார், மறுபடி மறுபடி ஒரே உற்சாகத்துடன் தேய்த்தார். வார்யா பேசாமல் அவருக்கு உதவி செய்தாள்.

…அப்பறம் அலெக்ஸேய், குறுக்கும் நெடுக்கும் இழையெடுத்துத் தைக்கப்பட்டிருந்த, ஆனால் துப்பரவும் மென்மையுமான நீண்ட சட்டை – மிஹாய்லா தாத்தாவினது – அணிந்து, கோடிட்ட மெல்லிய மெத்தை மேல் படுத்துக் கொண்டான். அவன் உடம்பு முழுவதிலும் புத்துணர்ச்சியும் உற்சாகமும் பொங்கின. குளியலுக்குப் பிறகு, கணப்புக்கு மேல் விட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சாளரம் வழியாக நீராவி நிலவறையிலிருந்து வெளியேறிய பின் வார்யா அவனுக்குப் புகை மணம் வீசிய காட்டுப் பழத் தேநீர் பருகக் கொடுத்தாள். சிறுவர்கள் கொண்டு வந்த இரண்டு சர்க்கரைக் கட்டிகளை வார்யா அவனுக்காகச் சிறு சிறு துணுக்குகளாக வெள்ளை பிர்ச் பட்டை மேல் உதிர்த்து வைத்திருந்தாள். அந்த சர்க்கரையுடன்தான் அலெக்ஸேய் தேநீர் பருகினான். அப்புறம் அவன் உறங்கி விட்டான் – முதன் முறையாகக் கனவுகள் இன்றி ஆழ்ந்து தூங்கினான்.

உரத்த பேச்சுக்குரல் கேட்டு அவன் விழித்துக் கொண்டான். நிலவறையில் அனேகமாக இருட்டாயிருந்தது. சிறாய் விளக்கு மினுக்கு மினுக்கென்று எரிந்தது. இந்தப் புகை இருட்டில் மிஹாய்லா தாத்தாவின் சுரீரென்ற கீச்சுக்குரல் கணகணத்தது:

“பெண் புத்திக்காரி, உன் அறிவு எங்கே போயிற்று? மனிதன் இந்தப் பதினொரு நாட்களாக ஒரு பருக்கை தினைச் சோறு கூட வாயில் போட்டுக் கொள்ளாமல் இருக்கிறான், நீ என்னடா என்றால் முழு வேக்காடு முட்டையைத் தின்னச் சொல்கிறாய்…. இந்த முழு வேக்காடு முட்டை அவனுக்கு எமனாயிற்றே! திடீரென்றுக் கிழவனாரின் குரலில் வேண்டுகோள் ஒலித்தது.” வஸிலீஸா, இவனுக்கு இப்போது வேண்டியது முட்டை அல்ல. இவனுக்கு வேண்டியது என்ன தெரியுமா? கோழி சூப் வேண்டும் இவனுக்கு இப்போது. ஓ, அது தான் இவனுக்குத் தேவை. அது கிடைத்தால் இவனுக்கு உயிர் கிடைத்த மாதிரி. உன் கொரில்லாக் கோழியை அறுத்து, ஊம்?…

ஆனால் கடுமையும் கலவரமும் தொனித்த கிழவியின் குரல் அவரது பேச்சை இடை முறித்தது:

“தர மாட்டேன்! தர மாட்டேன் என்றால் தர மாட்டேன். நீயும் கேளாதே, கிழட்டுப் பேயே! நல்ல ஆள்தான் போ. இந்தப் பேச்சை மறுபடி எடுக்கத் துணியாதே. என் கொரில்லாக் கோழியை நான் அறுப்பதாம்…. சூப் வைத்துக் கொடுப்பதாம்… சூப்! இங்கே தான் ஊர்பட்டப் பண்டங்கள் நிறைந்து கிடக்கின்றனவே, கலியாண விருந்துக்குப் போல! நல்ல யோசனைதான் செய்தாய் போ!…”

கிழவியின் இருண்ட நிழலுரு வாயிலுக்கு வழுகிச் சென்றது. கதவு திறக்கப்பட்டதும் வசந்த காலப் பகலின் பளிச்சிடும் ஒளிக் கீற்று அறைக்குள் வந்து விழிகளைக் கூசச் செய்தது. அலெக்ஸேய் தான் அறியாமலே கண்களைச் சுருக்கிக் கொண்டு முனகினான். கிழவர் அவனருகே பாய்ந்து வந்தார்.

“அடே, நீ உறங்கவில்லையா, அலெக்ஸேய்? ஊம்? பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தயா? கேட்டுக் கொண்டிருந்தாய் அல்லவா? அவளை மோசமானவள் என்று எண்ணிவிடாதே. அவள் வார்த்தைகளை வைத்து எடை போடாதே, அப்பனே. உனக்காகக் கோழியை அறுக்க அவள் தயங்கினாள் என்று நினைக்கிறாயா? சே, சே, இல்லை, அலெக்ஸேய்! அவளுடைய குடும்பத்தார் எல்லோரையும் – குடும்பம் பெரிது, பத்து ஆட்கள் இருந்தார்கள் – ஜெர்மன்காரன் கொன்றுவிட்டான். மூத்த மகன் கர்னல். கர்னலின் குடும்பம் அது என்ற தகவல் கிடைத்ததும் ஜெர்மன்காரர்கள் வந்து வஸிலீஸா ஒருத்தி தவிர மற்றவர்களை எல்லாம் ஒரே நேரத்தில் கொன்று அகழியில் எறிந்து விட்டார்கள். சொத்து சாமான்களை எல்லாம் பாழ்படுத்திவிட்டார்கள். அட்டா, பெருந்துன்பம் இது, இவள் வயதில் சொந்தக்காரர் யாரும் இல்லாமல் ஒண்டிக் கட்டை ஆகிவிடுவது!

சொத்துக்களில் கடைசியாக மிஞ்சியது ஒரே ஒரு கோழி தான். படு தந்திரக்காரக் கோழி அலெக்ஸேய்! முதல் வாரத்திலேயே ஜெர்மானியர் எல்லாக் கோழிகளையும் வாத்துக்களையும் பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள், ஏனென்றால் ஜெர்மானியனுக்கு எல்லாவற்றையும் விடச் சுவையான உணவு அவை. ஆனால் வஸிலீஸாவின் கோழி தப்பிவிட்டது. பெருத்த நடிகைதான் போ, வெறும் கோழி அல்ல இது! ஜெர்மானியன் வீட்டு முகப்புக்கு வந்தால் இது முகட்டறையில் பதுங்கிக் கொள்ளும். அது இருப்பதே தெரியாது. தன்னவர்கள் வந்தாலோ, ஒன்றுமில்லை. முற்றத்தில் அதன் பாட்டில் திரிந்து கொண்டிருக்கும். எப்படித்தான் அடையாளம் தெரிந்து கொண்டதோ, சைத்தானுக்கே வெளிச்சம். எங்கள் கிராமம் பூராவுக்கும் இந்த ஒரு கோழி தான் மிஞ்சியிருக்கிறது. இதன் தந்திரத்திற்காகத் தான் கொரில்லாக் கோழி என்று நாங்கள் இதற்கு பெயர் வைத்தோம்.”

அலெக்ஸேய் திறந்த விழிகளுடன் உறங்கி வழிந்தான். இப்படி உறங்க அவன் காட்டில் பழகியிருந்தான். அவன் பேசாமல் இருந்தது மிஹாய்லா தாத்தாவுக்குக் கவலை அளித்தது. போலும். நிலவறையில் ஏதோ பரபரப்புடன் இங்குமங்கும் துருவிவிட்டு, மேஜை அருகே ஏதோ வேலையைச் செய்தபடியே அவர் மறுபடி இந்த விஷயத்துக்கு திரும்பினார்.

“அலெக்ஸேய், இந்தக் கிழவியை மோசமாக மதித்து விடாதே. விஷயத்தை ஆழ்ந்து ஆராய்ந்து பார், அருமை நண்பா. பெரிய காட்டில் பழங்கால பிர்ச் மரம் போல இருந்தாள் இவள், காற்றுக்கூட இவள் மேல் வீசவில்லை. இப்போதே மரங்கள் வெட்டப்பட்ட காட்டில் உளுத்த கட்டைப் போலத் துருத்திக் கொண்டிருக்கிறாள். இவளுக்கு ஒரே ஆறுதல் இந்தக் கோழிதான். என்ன, பேசாதிருக்கிறாய்? அடே, தூங்கிவிட்டாயா? … நல்லது, உறங்கு, தம்பி, உறங்கு.”

அலெக்ஸேய் உறங்கினான், உறங்காமலும் இருந்தான். அவன் உடல் இல்லாதது போலவும், வெதுவெதுப்பான பஞ்சு வைத்து அடைத்திருப்பது போலவும், அதில் இரத்தம் அதிர்ச்சியுடன் பாய்வது போலவும் இருந்தது. நொருங்கி வீங்கிய கால்கள் அனலாய் காந்தின. உள்ளேயிருந்து குடையும் வலி அவற்றை நோகச் செய்தது. ஆனால் திரும்பவோ அசையவோ திராணி இல்லை.

இந்த அரைத் தூக்கத்தில் நிலவறை வாழ்க்கை அலெக்ஸேயின் உள்ளத்தில் தனித்தனித் துண்டுகளாய்ப் பதிந்தது. இது எதார்த்தமான வாழ்க்கை அல்ல போன்றும், ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத, அசாதாரணமான காட்சிகள் அவனுக்கு முன் திரையில் அலெக்ஸேய் தோன்றி மறைவது போன்றும் இருந்தது.

வசந்த காலம். அகதிக் கிராமத்தினர் மிக கஷ்டமான நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தனர். விபத்து நேர்வதற்கு முன்பே பழைய கிராமத்திலே தரையில் புதைத்துப் பத்திரப்படுத்தி, எரிந்த ஊரிலிருந்து இரவில் இரகசியமாகத் தோண்டிக் காட்டுக்கு எடுத்து வந்திருந்த உணவுப்பண்டங்களில் கடைசியாக மிஞ்சியிருந்த பகுதியைத் தின்று தீர்த்துக் கொண்டிருந்தார்கள். தரைப் பனி அகன்று இளகலாயிற்று. அவசர அவசரமாகத் தோண்டியிருந்த வளைகள் “கண்ணீர் சிந்தி” ஈரமாயின. கிராமத்துக்கு மேற்கே ஒலேனினோக் காட்டில் கொரில்லாப் போர் புரிந்து கொண்டிருந்த ஆண்கள் முன்பு எப்போதாயினும் ஒரு தரம், தனிமையில், இரவில் தான் என்றாலும், நிலவறைக் கிராமத்துக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். இப்போது போர் முனை வரிசையால் அவர்கள் துணிக்கப்பட்டுவிட்டார்கள் போலத் தோன்றியது. அவர்களிடமிருந்து ஒரு தகவலும் கிடைக்கவில்லை. ஏற்கனவே துன்பத்தில் வதைபட்டுக் கொண்டிருந்த மாதர்களின் தோள்கள் மீது புதிய சுமை சார்ந்தது. வசந்தம் வந்துவிட்டது, வெண்பனி உருகலாயிற்று, விதைப்பைப் பற்றியும் காய்கறி தோட்டம் பற்றியும் கவலை எடுத்துக் கொள்ள வேண்டுமே.

ஒரு நாள் பகலில் கிழவனார் மனநிறைவுடனும் சிந்தனையில் ஆழ்ந்தவாறும் வீடு திரும்பினார். பசும்புல் செடி ஒன்றை அவர் கொண்டுவந்திருந்தார். கரடு தட்டிய உள்ளங்கையில் அதைப் பதபாகமாக வைத்து அலெக்ஸேய்க்குக் காட்டினார்:

“பார்த்தாயா? வயலிலிருந்து வருகிறேன். நிலம் விழித்துக் கொண்டுவிட்டது, பனிக்கால விதைப்பு, ஆண்டவன் அருளால், மோசமில்லாமல் முளைத்துவிட்டது. வெண்பனி ஏராளம். நான் பார்த்தேன். வசந்தகாலப் பயிர் விளைச்சல் பொய்த்து விட்டாலும் கூட, பனிக்காலப் பயிர் விளைச்சல் ஓரளவு உணவு தரும். நான் போய் பெண்களுக்கு சேதி சொல்கிறேன், சந்தோஷப்படட்டும், பாவங்கள்!”

வயலிலிருந்து எடுத்துவரப்பட்ட பசுந்தாள் மாதர்களுக்குப் புது நம்பிக்கையை ஊட்டிவிட்டது. நிலவறையின் அருகே அவர்கள் வசந்தகாலக் காக்கைக் கூட்டம்போல ஆராவாரித்தார்கள், கத்தினார்கள். மாலையில் மிஹாய்லா தாத்தா மன நிறைவுடன் கைகளைத் தேய்த்துக் கொண்டார்:

“என்னுடைய நீள் முடி மந்திரிகள் சரியாகவே தீர்மானித்திருக்கிறார்கள். கேட்டாயா, அலெக்ஸேய்? ஒரு வேலைக் குழு பசுக்களைக் கட்டி உழும். இந்த உழவு, நீர் தங்கிய தாழ் நிலத்தில் நடக்கும், அங்கே உழவு கடினமானது. பார்க்கப் போனால் நம்மிடம் மிஞ்சியிருப்பவை ஆறே பசுக்கள் தானே, எவ்வளவு உழுதுவிட முடியும்! இரண்டாவது வேலைக் குழுவுக்கு நீர் தங்காத நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மண்வாரிகளையும் மண்வெட்டிகளையும் கொண்டு பெண்கள் உழுவார்கள். அட ஒன்றுமில்லாவிட்டாலும் தோட்டத்தைக் கொத்திக் காய்கறிகளாவது பயிர் செய்யலாமே. மூன்றாவது வேலைக் குழுவுக்கு மேட்டில் மணற்பாங்கான நிலம் ஒதுக்கியிருக்கிறோம். அங்கே உருளைக் கிழங்கு பயிரிடுவதற்கு நிலத்தை சீர்படுத்துவோம். இந்த வேலை மொத்தத்தில் சுளுவானது. பயல்களை அங்கே மண்வெட்டியால் கொத்தச் செய்வோம். பலவீனமான பெண்களையும் அங்கே அனுப்புவோம். சர்க்காரிடமிருந்து நமக்கு உதவி கிடைக்கும் பார். கிடைக்காவிட்டாலும் ஒன்றும் குடிமுழுகிடாது. நாமே எப்படியாவது சமாளித்துக் கொள்வோம். நிலத்தை பயிரிடாமல் விட்டுவிட மாட்டோம். நல்ல வேளை, ஜெர்மான்காரனை இங்கிருந்து விரட்டியாயிற்று. இப்போது வாழ்க்கை ஒழுங்காக நடக்கும். நமது மக்கள் எஃகு உறுதி படைத்தவர்கள். எந்த சுமையையும் தாங்கிக்கொள்வார்கள்….”

அன்று இரவு அலெக்ஸேய்க்கு உடம்பு மோசமாகி விட்டது.

அவனுடைய உடல் மெதுவாக, மரத்துப் போய் அவிந்து விடும் நிலையில் இருந்தது. கிழவனார் நடத்திய குளியல் அதை உலுக்கி இந்த மரப்பு நிலையிலிருந்து வெளியே கொணர்ந்தது. சோர்வையும் மனித அனுபவத்துக்குப் புறம்பான களைப்பையும் கால்களில் வலியையும் அவன் முன் ஒருபோதும் இல்லாத வன்மையுடன் திடீரென உணர்ந்தான். ஜன்னி கண்ட அரைத் தூக்கத்தில் அவன் மெத்தை மேல் புரண்டான், முனகினான், பற்களை நெறுநெறுத்தான், யாரையோ அழைத்தான், யாருடனோ சச்சரவிட்டான், ஏதோ வேண்டுமென்று கேட்டான்.

படிக்க:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்
தூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி

பளபளவென்று விடியும் தறுவாயில் கிழவர் படுக்கையை விட்டு எழுந்தார். ஓரளவு அமைதி அடைந்து உறங்கி கொண்டிருந்த அலெக்ஸேய் மீது பார்வை செலுத்தினார், வார்யாவிடம் எதோ கிசுகிசுத்தார், பின்பு வழிச் செல்ல ஆயத்தமானார். மோட்டார் ட்யூபினால் தாமே செய்த பெரிய ரப்பர் காப்பு லோடுகளை நமுதா ஜோடுகள் மேல் மாட்டிக் கொண்டார். மேற்சட்டையை மரவுரி வாரினால் இறுக்கிக் கொண்டார். தம் கையால் இழைத்து மழமழப்பாக்கப்பட்ட ஜூனிப்பர் கழியை எடுத்துக் கொண்டார். நெடுந்தூர நடைப் பயணங்களில் இந்தக் கழி எப்போதும் கிழவருடன் செல்வது வழக்கம்.

அலெக்ஸேயிடம் ஒரு வார்த்தைக் கூடச் சொல்லாமல் கிழவனார் புறப்பட்டுப் போய்விட்டார்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

டெல்டாவை நாசம் செய்யும் கெயில் – எதிர்த்தால் பொய் வழக்கு !

மக்கள் அதிகாரம்
தஞ்சை மண்டலம்
எண் :1, அண்ணா நகர்,
சிவாஜிநகர் வழி, தஞ்சை-1
அலை பேசி: 9443188285

பத்திரிகைச் செய்தி

19-05-2019

நாகை மாவட்டத்தில் சீர்காழி மாதானம் முதல் செம்பனார் கோயில் மேமாத்தூர் வரை கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்க விவசாய நிலங்களையும், நெற்பயிர், பருத்தி போன்ற பயிர்களையும் விவசாயிகளின் ஒப்புதல் இன்றி நாசம் செய்து வருகிறது. இதனை எதிர்த்து சட்டப்பூர்வமாக புகார் கொடுத்தவர்கள் மீதே பொய் வழக்கு போட்டு, நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த இரணியனை செம்பனார் கோயில் போலீசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. கெயில் நிறுவனத்தின் சட்ட விரோத, மக்கள் விரோத, நடவடிக்கைக்குத் துணை போவது மட்டுமின்றி பொய் வழக்குப் போடும் காவல் துறையின் செயலை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது. பொய் வழக்கைத் திரும்பப்பெற்று தோழர் இரணியனை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது.

குழாய் பதிக்கவே இவ்வளவு நாசம் என்றால் வேதாந்தாவும், ஓஎன்ஜிசியும் தோண்டப் போகும் கிணறுகளால் எவ்வளவு நாசம் ஏற்படப் போகிறது என்பதை நினைக்கவே அச்சமாக இருக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதை விட கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபமே அரசின் குறிக்கோளாக மாறிவிட்டது. எடப்பாடி அரசு முற்றிலும் மக்கள் விரோத அரசாகச் சீரழிந்து விட்டது.

படிக்க:
♦ தூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி
♦ அய்யர் சொல்லிட்டா அப்பீல் ஏது ?

தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட்டைப் பாதுகாக்க 15 பேரை சுட்டுக் கொன்ற எடப்பாடி அரசு அதே வேதாந்தாவின் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக இப்போது டெல்டா விவசாயிகளை வேட்டையாடத் தொடங்கிவிட்டது. டெல்டாவைப் பாதுகாக்கப் பிரச்சாரம் செய்த மக்கள் அதிகாரம் மீது டெல்டா முழுவதும் ஏராளமான வழக்குகளைப் போட்டு முடக்குவதுடன், தொடர்ந்து கருத்துரிமையையும் தடுத்து வருகிறது காவல்துறை.

டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய்யும் ஹைட்ரோ கார்பன் திட்டம், குழாய் பதிப்பு இவற்றை எதிர்க்கும் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடினால் மட்டுமே இதனை முறியடிக்க முடியும். உதட்டளவிலான எதிர்ப்பு எந்தப் பலனையும் தராது. தனித்தனியாகப் போராடுவது மக்களை சிதறடிக்கவே பயன்படும். திட்டவட்டமாகக் கூட்டு சேர்ந்து தேர்தலில் போட்டியிடும் அமைப்புகள் டெல்டாவை பாதுகாப்பதில் அத்தகைய அக்கறையைக் காட்டாததும், முயற்சியில் ஈடுபடாதததும் கவலைக்குரிய ஒன்று. எனவே கருத்தொற்றுமையுள்ள அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும் ஒன்று சேர்ந்து மக்களைத் திரட்டிப் போராட வேண்டும். இதற்கான முயற்சியை தன்னளவில் மக்கள் அதிகாரம் மேற்கொள்ளும்.

தங்கள்
காளியப்பன்
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்

தூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி

மோடி அரசை தனது கைப்பாவையாக வைத்திருக்கும் நிறுவனமான வேதாந்தாவின், கொலைகார ஸ்டெர்லைட் ஆலையை தமது வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம் மூட வைத்தார்கள் தூத்துக்குடி மக்கள். அதற்காக தமது இன்னுயிரை ஈந்து தமிழகத்தையே தலை நிமிரச் செய்திருக்கிறார்கள் தூத்துக்குடி தியாகிகள் ! அந்தத் தியாகிகளை கவுரவிக்க, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சிக்கும் வேதாந்தா குழுமத்தை துரத்தியடித்திட உறுதி பூணுவோம்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த மே 22 நாளை நாம் மறக்க முடியாது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி அமைதிப் பேரணியாக வந்த மக்களை துப்பாக்கிச் சூடு மூலம் ஒடுக்கியது போலீசு. கொல்லப்பட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தக் கூட அனுமதி மறுக்கிறது அரசு!

  • மே 22 – ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத் தியாகிகள் நினைவு நாள்!
  • மக்கள் அதிகாரம் சார்பில் சென்னையிலும் மதுரையிலும் நடத்தவிருந்த தியாகிகள் நினைவஞ்சலிக் கூட்டத்துக்கு தடை விதித்திருக்கிறது தமிழக போலீஸ்.
  • வாயில் சுட்டுக் கொலை செய்தவர்கள், அழவும் கூடாது என்று நம் வாயை மூடுகிறார்கள். அழுது பயனில்லை.. தமிழகமே, ஆர்த்தெழு!

தூத்துக்குடி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் ம.க.இ.க கலைக்குழுவின் பாடல்..

பாருங்கள் ! பகிருங்கள் !

பாடல் வரிகள்:

தூத்துக்குடியின் … தியாகிகளே! – உயிர்
மூச்சை விதைத்த போராளிகளே …

நாங்கள்
சுவாசிக்கும் கா…ற்று – நீங்கள்
விட்டுச்சென்ற மூச்சு
உங்கள் மரணத்துக்கு – அணி
திரள்கிறோம் வீதியில்
நீதி கேட்டு

வேதாந்தா – அதை வென்றுவிட்டோமென்று
உலகம் புகழ்வது கேட்கிறது !
அந்தப் பெருமிதமெல்லாம் உங்களது …
நன்றி சொல்கிறோம் உங்களுக்கு …

அன்று – உங்களை துளைத்த
அந்த துப்பாக்கிகள்
இன்று – எங்களையும் குறி பார்க்கிறது
அன்று சுட்டுக்கொலை செய்ய
அனுமதி தேவையில்லை- இன்று
வாய்விட்டு அழதிட போலீஸ் அனுமதி

எத்தனை நேரம் அழுவீர்கள்?
எத்தனை பேர் கூடி அழுவீர்கள்?
எந்த இடத்தில் அழுவீர்கள்?
என்ன சொல்லி நீங்கள் அழுவீர்கள்?
அழுதிட ஆயிரம் கட்டளைகள்…
இடுவதோ வாயில் சுட்டவர்கள்…

கண்ணே வெனிஸ்டா, கண்ணே
ஸ்னோலின்- உன்
கனவுகள் இனி எங்கள் நெஞ்சில் …
நீங்கள் உயிர்விட்ட நாளில் …
நீங்கள் சரிந்திட்ட மண்ணில் …
நாங்கள் எழுவோம் ! மீண்டும் எழுவோம் !
தூத்துக்குடியின் தியாகிகளே!

வினவு செய்திப் பிரிவு

அய்யர் சொல்லிட்டா அப்பீல் ஏது ?

“அச்சத்தில் இந்திய இராணுவம்” என்ற தலைப்பில் 15.05.2019 தேதியிட்ட தினமணி நாளிதழில் தலையங்கம் வெளியாகியிருக்கிறது. தினமணி குறிப்பிடும் அச்சம், காஷ்மீர் போராளிகளோ அல்லது பாகிஸ்தானால் ஏவிவிடப்படும் எல்லை கடந்த பயங்கரவாதிகளோ இந்திய இராணுவத்தின் மீது தொடுத்துவரும் தாக்குதல்களால் ஏற்படும் அச்சம் அல்ல. மாறாக, இந்திய இராணுவத்தின் கைகளிலுள்ள “சரக்குகளால்” ஏற்பட்டுவரும் அச்சம் குறித்துப் பேசுகிறது, அத்தலையங்கம்.

அதாவது, இந்திய இராணுவம் பயன்படுத்தும் ரவைகள் மற்றும் பீரங்கி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதத் தளவாடங்கள் தரமற்றவையாகவும், காலாவதியாகிப் போனதாலும் இந்திய இராணுவச் சிப்பாய்களிடம் ஏற்பட்டுள்ள அச்சம் குறித்துப் பேசுகிறது, அத்தலையங்கம்.

“அரசின் இராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரவைகள், குண்டுகள் தொடர்பான விபத்துகள் அதிகரிப்பது இராணுவ வீரர்கள் மத்தியில் நம்பிக்கைக் குறைவை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் டாங்குகளில் பயன்படுத்தப்படும் 125 எம்.எம். அதிதிறன் கொண்ட குண்டுகளின் பயன்பாட்டில் 40-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நேர்ந்திருக்கின்றன. அது மட்டுமல்லாமல், எல்-70 என்கிற விமானங்களைத் தாக்கும் பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் அதிதிறன் கொண்ட 40 எம்.எம். குண்டுகளை இராணுவ வீரர்களின் பயிற்சியின்போது பயன்படுத்துவது அறவே நிறுத்தப்பட்டுவிட்டது. அதற்குக் காரணம், இதனால் ஏற்பட்ட எதிர்பாராத விபத்துகளால் பல இராணுவ வீரர்கள் பயிற்சியின் போது காயமடைந்தார்கள் என்பதுதான்.”

“சில குண்டுகள் வெடிக்காமல் போவதும், வேறு சில பயன்படுத்துவதற்கு முன்பே வெடித்து விடுவதும் இன்னும் சில தாமதமாக வெடிப்பதும் இராணுவ வீரர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கின்றன. தரமில்லாத தயாரிப்பாலும், முறையான பாதுகாப்புடன் வழங்கப்படாததாலும் விரைவிலேயே அவை செயலிழந்துவிடுகின்றன” என இராணுவமே பல்வேறு குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டுப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்திருப்பதாகக் கூறுகிறது, அத்தலையங்கம்.

“இந்திய அரசால் நடத்தப்படும் 41 இராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரவைகள், குண்டுகளைவிட, சிவகாசியில் தயாரிக்கப்படும் அணுகுண்டுகள் தரமானவை” என்பதுதான் இந்திய இராணுவம் எழுதியிருக்கும் கடிதத்தின் பொருள். இந்த ஒப்பீடை நாகரீகம் கருதிச் சொல்லாமல் விட்டுவிட்டது, தினமணி.

ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் ஊழலே நடக்கவில்லை என்று வாதாடி வந்தவர்கள், “இப்பொழுது அதில் ஊழல் நடந்தால்தான் என்ன? விமானத்தின் திறனை மட்டும் பாருங்கள்” என்ற இடத்திற்கு விவாதத்தை நகர்த்த முயலுகிறார்கள்.

நமத்துப் போன குண்டுகளை, ரவைகளை இந்திய இராணுவத்திடம் கொடுத்துச் சுடச் சொல்லுவதற்கு யாரைப் பொறுப்பாக்க வேண்டும்?

தற்பொழுது நாட்டை ஆளும் பா.ஜ.க. ஆட்சியாளர்களைப் பொருத்தவரை, முந்தைய காங்கிரசு ஆட்சியாளர்கள் தேசப் பாதுகாப்பு விடயத்தில் அக்கறையில்லாதவர்கள். இராணுவக் கொள்முதல் அனைத்திலும் ஊழல் செய்வதைத் தவிர, அவர்களுக்கு வேறு நோக்கம் கிடையாது.

ஆனால், 56 இஞ்ச் மார்பு கொண்ட மோடி அப்படிப்பட்டவர் அல்ல. பாகிஸ்தான் மற்றும் முசுலீம் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் அளவிற்கு நாட்டை வலிமைமிக்கதாக மாற்றுவது குறித்துத்தான் அவர் பிறந்த தினத்திலிருந்தே சிந்தித்துச் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். அதற்காகத்தான் மேக் இன் இந்தியா திட்டத்தைக் கொண்டுவந்தார் என்றெல்லாம் உச்சி முகரப்படும் மோடி ஆட்சியிலும் இந்திய இராணுவம் பலவீனமாக இருக்கிறதே, அது ஏன் என்று பரிசீலித்திருக்க வேண்டும். மாறாக, தினமணியின் தலையங்கம் இன்றைய ஆட்சியாளர்களையும், முந்தைய ஆட்சியாளர்களையும் ஒரே தட்டில் வைத்து “நடுநிலையாக” விமரிசிக்கிறது. தினமணியின் இந்த நடுநிலைக்கு, அரசாங்க விளம்பரம் தடையின்றிக் கிடைக்க வேண்டுமே என்ற அச்சம் காரணமாக இருக்கக்கூடும்.

இந்திய இராணுவம் தரமற்ற ரவைகளையும் குண்டுகளையும் பற்றி மூக்கைச் சிந்தினால், தினமணி தலையங்கமோ, அதற்கு அப்பாலும் சென்று, “இராணுவத் தளவாடங்களில் மட்டுமல்ல, நமது விமானப் படையும் பல சவால்களை எதிர்கொள்கிறது. பாலாகோட் தாக்குதல் இந்திய விமானப் படையின் பலவீனத்தை வெளிச்சம் போட்டதை நாம் உணர வேண்டும். பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானங்களுக்கு நமது பழமையான மிக்-21 போர் விமானங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. அதையும் மீறித்தான் நமது விமானப் படையினர் பாலாகோட்டில் துல்லியத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்” என்பதை நாம் மறந்துவிடக் கூடாது எனக் கண்ணீர் வடித்திருக்கிறது.

இப்படித் தனது வாசகர்களின் செண்டிமென்டை டச் செய்த பிறகுதான், தினமணிவாள் தனது புத்தியைக் காட்டியிருக்கிறார். இந்திய விமானப் படையின் பலவீனத்தை உடைத்து, அதை உடனடியாகப் பலமாக மாற்றும் நோக்கில்தான் மோடி அரசு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், அந்த விமானக் கொள்முதல் விவாதப் பொருளாகி இருப்பது இந்திய இராணுவத்தைக் கவலைக்குள்ளாகியிருப்பதாகவும் குறிப்பிடும் தினமணி, போஃபர்ஸ் ஊழலைக் காட்டி ரஃபேல் ஊழலை இப்படி நியாயப்படுத்தத் துணிகிறது:

“இதற்கு முன்னால் போஃபர்ஸ் வாங்கியது விவாதப் பொருளாக்கப்பட்டாலும், 1999 கார்கில் போரில் பாகிஸ்தானிய ஊடுருவிகளை அகற்ற அந்தப் பீரங்கிகள்தான் பயன்படுத்தப்பட்டன என்பதை அவர்கள் (இராணுவ அதிகாரிகள்) சுட்டிக் காட்டுகிறார்கள். விமர்சனங்களை எழுப்பி ரஃபேல் போன்ற அதிநவீன போர் விமானங்களை வாங்குவது தடுக்கப்பட்டால், அதனால் இந்தியாவின் பாதுகாப்பு பேராபத்தை எதிர்கொள்ளும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.”

“126 போர் விமானங்களை வாங்கும் முந்தைய ஒப்பந்தம் கைவிடப்பட்டு, 36 விமானங்களை மட்டுமே வாங்கும் புதிய ஒப்பந்தம் ஏன் போடப்பட்டது? இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தை ஓரங்கட்டிவிட்டு, பிரதமர் அலுவலகம் இந்த ஒப்பந்தத்தை முடிப்பதில் அதீத அக்கறை காட்டியது ஏன்? இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திற்குப் பதிலாக அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு ஏன் சலுகை காட்டப்பட்டது? டஸால்ட் நிறுவனம் வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டியதில்லை என்ற முடிவு ஏன் எடுக்கப்பட்டது?” என்றபடியான கேள்விகளை, விமர்சனங்களையெல்லாம் விட்டுவிட்டு, ரஃபேல் விமானம் திறன்மிக்கதா, இல்லையா என்பதை மட்டும்தான் பார்க்க வேண்டும் என மறைபொருளாக உபதேசிக்கிறது தினமணி.

படிக்க:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்
ஒரு ஏழை அப்பாவி முசுலீம் தற்கொலைப் படை பயங்கரவாதியாக ஆக்கப்பட்ட கதை !

“கோழி எப்படி இருந்தா என்னடா, குழம்பு ருசியா இருக்கான்னு மட்டும்தான் பார்க்கோணும்” என்ற கவுண்டமணியின் நகைச்சுவைக்கும் தினமணியின் தர்க்கத்திற்கும் அதிக வேறுபாடு கிடையாது.

ரஃபேல் விமானக் கொள்முதல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, “அவ்விமானத்தின் திறன், தகுதி குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பரிசீலிக்க முடியாது. ஏனென்றால், அத்தகைய தொழில்நுட்ப அறிவு மாண்புமிகு நீதிபதிகளுக்குக் கிடையாது” என வாதாடியது மோடி அரசு. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே அந்த உரிமை மறுக்கப்பட்ட பிறகு, சாமானிய மக்கள் ரஃபேல் விமானத்தின் தகுதி, திறன் குறித்து முடிவு செய்ய முடியுமா? எனவே, அவ்விமானத்தின் தகுதி, திறன் குறித்து சாமானிய மக்கள் அறிந்து கொள்ளுவதற்கு ஒரு போருக்காகக் காத்திருக்க வேண்டும் போலும். ஆனால், அந்த எதிர்காலப் போரை இந்திய அரசு யார் மீது தொடுக்கும்? பாகிஸ்தான் மீதா, அல்லது தமது சமூகப் பொருளாதார உரிமைகளுக்காகத் தெருவில் இறங்கி வரும் இந்திய மக்கள் மீதா?

குஜராத்தில்… “நீதியைக் கேட்காதீர்கள், வளர்ச்சியைப் பாருங்கள்” என்று அன்று எழுதிய வைத்தியநாத அய்யர்தான், “இன்று ஊழலைப் பார்க்காதீர்கள், திறனைப் பாருங்கள்” என எழுதி மோடியைத் தாங்கிப் பிடிக்கிறார்.

ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் ஊழலே நடக்கவில்லை என்று வாதாடி வந்தவர்கள், “இப்பொழுது அதில் ஊழல் நடந்தால்தான் என்ன? விமானத்தின் திறனை மட்டும் பாருங்கள்” என்ற இடத்திற்கு விவாதத்தை நகர்த்த முயலுகிறார்கள்.

குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியைப் பிரதமர் பதவிக்கான தகுதி வாய்ந்த வேட்பாளராகத் தரகு முதலாளிகளும் கார்ப்பரேட் ஊடகங்களும் முன்னிறுத்தியபோது, தினமணிவாள், “இன்னும் எத்துணை காலத்திற்குத்தான் குஜராத்தில் முசுலீம்கள் மீது நடத்தப்பட்ட மதவெறிப் படுகொலைகளைப் பற்றியே பேசி, மோடியைக் குற்றவாளியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? குஜராத்தில் அவர் கொண்டுவந்திருக்கும் வளர்ச்சியைப் பாருங்கள்” என வக்காலத்து வாங்கி தலையங்கம் தீட்டியிருந்தது.

“நீதியைக் கேட்காதீர்கள், வளர்ச்சியைப் பாருங்கள்” என்று அன்று எழுதிய வைத்தியநாத அய்யர்தான், “இன்று ஊழலைப் பார்க்காதீர்கள், திறனைப் பாருங்கள்” என எழுதி மோடியைத் தாங்கிப் பிடிக்கிறார்.

கீரன் 

அரசியல் கணிதம் : பெட்டியின் இரண்டாவது புத்தகம் ! | பொருளாதாரம் கற்போம் – 18

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 18

அரசியல் கணிதம்
அ.அனிக்கின்

ங்கிலாந்தின் அரசரான இரண்டாம் சார்ல்ஸ் தனது மேதகு உறவினரான பிரெஞ்சு மன்னர் பதினான்காம் லுயீயைக் காட்டிலும் ஏதாவதொரு வகையில் சிறந்து விளங்க விரும்பினார். இது அவருடைய வாழ்க்கையின் மாபெரும் ஆசையாகும். அவர் வெர்ஸேய் அரண்மனைக்குப் போட்டியாகக் கேளிக்கை நடனங்களையும் வான வேடிக்கைகளையும் நடத்தினார்.

ஆனால் பிரெஞ்சு மன்னரைக் காட்டிலும் அவரிடம் பணம் குறைவாகவே இருந்தது. அவர் தனக்கு முறைகேடாகப் பிறந்த ஆண் மக்களில் சிலருக்குக் கோமகன் பட்டம் கொடுத்திருந்தார். ஆனால் லுயீ தனது சோரப் பிள்ளைகளைப் பிரான்சின் மார்ஷல்களாக நியமித்திருந்தார். ஸ்டுவர்ட் மரபினரான இரண்டாம் சார்ல்ஸால் அந்த அளவுக்குப் போக முடியவில்லை. அவருடைய முடியாட்சி லுயீயின் முடியாட்சியைப் போல சர்வாதிகாரம் அல்ல.

அவருக்கு விஞ்ஞானம் மட்டுமே மிஞ்சியது. மறுவருகைக்குப் பிறகு அவருடைய தூண்டுதலினாலும் மொத்த அரச குடும்பத்தினரின் ஆதரவோடும் இராயல் சொஸைட்டி நிறுவப்பட்டது. அதைப் பற்றி சார்ல்ஸ் நியாயமாகப் பெருமைப்பட முடியும். ஏனென்றால் லுயீ அப்படி ஒன்றை ஏற்படுத்தவில்லை. அரசரே இரசாயனப் பரிசோதனைகள் செய்தார். கடற்பயணத்தைப் பற்றி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இது அந்தக் காலத்தின் உணர்ச்சிக்கு ஏற்றதாக இருந்தது. “மகிழ்ச்சியில் திளைத்த மன்னருக்கு” அது ஒரு பொழுதுபோக்கு; இராயல் சொஸைட்டியும் அப்படிப்பட்டதே.

இரண்டாம் சார்ல்ஸ்

இராயல் சொஸைட்டியின் அதிக சுவாரசியமும் நகைச்சுவை உணர்ச்சியும் நிறைந்த உறுப்பினர் சர் வில்லியம் பெட்டி. அரசரும், உயர்ந்த அந்தஸ்துடைய மேன்மக்களும் நண்பர்கள் தங்களோடிருக்கும் நேரங்களில் சுதந்திரமான சிந்தனையாளர்களாக நடந்து கொண்டார்கள்; சமய விதிகளை உறுதியாகப் பின்பற்றிய பலவிதமான மதப் பிரிவுகளையும் வேடிக்கையாகக் கேலி செய்து பேச பெட்டியைப் போல வேறு யாராலும் முடியாது.

ஒரு நாள் அயர்லாந்தின் ஆளுநரான ஓர் மான்ட் கோமகன் – நண்பர்களோடிருந்த பொழுது அவர்கள் எல்லோருமே அதிகமாகக் குடித்திருந்தபடியால் அதிகமான மகிழ்ச்சியோடிருந்தனர் -சர் வில்லியம் பெட்டியிடம் தம்முடைய திறமையைக் காட்டுமாறு கேட்டுக் கொண்டார். பெட்டி அங்கே போடப் பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றின் மீது ஏறி நின்று பல மதப்பிரிவுகளையும் சேர்ந்த மதகுருக்களைப் போல வேடிக்கையாகப் பேசினார். அங்கே இருந்தவர்கள் இதை மிகவும் ரசித்துச் சிரித்தார்கள். இதனால் அதிக உற்சாகமடைந்த பெட்டி, ஒரு மத குரு “இளவரசர்களையும் ஆளுநர்களையும்” அவர்களுடைய மோசமான ஆட்சிக்காக, பாரபட்சம் காட்டுவதற்காக, பேராசைக்காகக் கண்டிப்பது, போன்று பேச ஆரம்பித்தார். உடனே சிரிப்பு நின்று விட்டது என்று இதைப் பார்த்த ஒருவர் எழுதியிருக்கிறார். பெட்டியை நிறுத்துமாறு செய்வது கோமகனுக்குப் பெரும்பாடாகிவிட்டது.

படிக்க:
ஒரு விரல் புரட்சியால் ஈரானிடம் எண்ணெய் வாங்க முடியுமா ?
♦ சோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல | மார்க்ஸ் பிறந்தார் இறுதி பகுதி

அரசரும் அயர்லாந்தின் ஆளுநரும் பெட்டி அரசியலையும் வர்த்தகத்தையும் பற்றிப் பேச ஆரம்பிக்கும் வரையிலும் அவருடைய பல குரல் திறமையை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவரால் அந்த விஷயங்களைப் பற்றிப் பேசாமலிருக்க முடியாதே! அவருக்கு எல்லா உரையாடலுமே தன்னுடைய புதுப் பொருளாதாரத் திட்டத்தைப் பற்றி விளக்குவதற்கு ஒரு சாக்காக மட்டுமே இருந்தது. ஒவ்வொரு திட்டமும் அதற்கு முந்திய திட்டத்தைக் காட்டிலும் அதிகத் துணிச்சலாகவும் தீவிரமானதாகவும் இருந்தது. இது ஆபத்தானது; சலிப்பூட்டுவது; அவசியமில்லாதது.

அயர்லாந்தின் மற்றொரு ஆளுநரான எஸ்ஸெக்ஸ் பிரபு ”மூன்று இராஜ்யங்களிலுமே” (அதாவது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகியவை) “சர் வில்லியம் பெட்டிதான் அதிகக் கோபமூட்டுகிற நபர்” என்றார். “சிலர் உங்களை மாயவித்தைக்காரர் என்றும், மற்றவர்கள் உங்களைப் பைத்தியம் என்று சொல்லக் கூடிய அளவுக்குக் கற்பனை ஈடுபாடுடையவர், வெறியர் என்றும் சொல்கிறார்கள்” என்று ஓர் மான்ட் பிரபு பெட்டியிடம் வெளிப்படையாகவே சொன்னார்.

அவருடைய வாழ்க்கை சுலபமானதாக இருக்கவில்லை. அவர் எதிர்காலத்தின் மீது இயல்பான நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் சில சமயங்களில் அவர் வெடுவெடுப்பும் கவலையும் கொண்டவராக அல்லது ஒரு பயனுமில்லாமல் ஆத்திரப்படுபவராகத் தோன்றினார்.

இராயல் சொஸைட்டியின் முத்திரை

பெட்டியின் திட்டங்களில் அநேகமாக ஒன்றைக் கூட அரசவை விரும்பாதது ஏன்? அவருடைய ஆலோசனைகளில் சில- துணிச்சலும் மேதாவிலாசமும் கொண்டவையாக இருந்த போதிலும் வெறும் கற்பனாவாதத் திட்டங்களே. ஆனால் பல திட்டங்கள் அந்தக் காலத்துக்கு முற்றிலும் அறிவு மிகுந்தவையாகும். அவை துணிச்சலாகவும், உணர்வுப் பூர்வமாகவும் இங்கிலாந்திலும் அயர்லாந்திலும் முதலாளித்துவப் பொருளாதாரத்தை வளர்ப்பதை, நிலப்பிரபுத்துவ உறவுகளோடு அதிகத் தீர்மானமாக முறித்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டிருந்தன என்பதே முக்கியமாகும்.

ஆனால் இரண்டாம் சார்ல்ஸ், அவருடைய தம்பி இரண்டாம் ஜேம்ஸின் முடியாட்சி இந்த மரபெச்சங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தது. அல்லது, முதலாளித்துவ வர்க்கத்தின் நிர்ப்பந்தத்தினால் அதிகபட்சமாக சமரச நடவடிக்கைகளை எடுத்தது. அதனால்தான் அது (பெட்டியின் மரணத்துக்கு ஒரு வருடத்துக்குப் பிறகு) வீழ்ச்சியடைந்தது – பெட்டி இங்கிலாந்தின் செல்வத்தையும் வளத்தையும் மற்ற நாடுகளோடு ஒப்பிட்டுக் காண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஹாலந்து நாடு அவருக்கு ஒருவகையான அளவுகோலாக இருந்தது; அதன் வெற்றிகரமான வளர்ச்சிக்குக் காரணம் என்ன என்ற சிக்கலான கேள்வியை அவர் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார். பல வருடங்கள் கழிந்த பிறகு, இங்கிலாந்துக்கு நேரடியான ஆபத்து ஹாலந்தின் மூலம் ஏற்படாது, ஆனால் அதைக் காட்டிலும் பெரிய, சுறுசுறுப்பான நாட்டிலிருந்துதான் வரும், பிரான்சிலிருந்துதான் ஏற்படும் என்று மென்மேலும் அதிகமாக நம்பினார். அவருடைய பொருளாதாரக் கருத்துக்கள் பிரெஞ்சு எதிர்ப்பு அரசியல் தன்மையை மென்மேலும் அதிகமாகப் பெற்றன.

1676-ம் வருடத்தில் அரசியல் கணிதம் என்ற இரண்டாவது புத்தகத்தை அவர் எழுதி முடித்தார். ஆனால் அதை வெளியிடுவதற்குத் துணியவில்லை. பிரான்சோடு கூட்டணியில் சேர்வது , இரண்டாம் சார்ல்சின் வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையாகும். மேலும் இங்கிலாந்தின் அரசர் பிரெஞ்சு மன்னரிடமிருந்து இரகசியமாகப் பண உதவி பெற்றுக் கொண்டிருந்தார். இங்கிலாந்தில் வரிகள் அரசருக்கு வந்து சேருவதில்லை; நாடாளுமன்றம் பணத்தை இறுக்கி வைத்துக் கொண்டிருந்தது. எனவே அரசர் தன்னுடைய செலவுகளைச் சமாளிப்பதற்காக வேறு வழியைக் கண்டுபிடித்திருந்தார். சர் வில்லியம் பெட்டி கோழையல்ல; எனினும் அரசவையின் அதிருப்திக்கு ஆளாக அவர் விரும்பவில்லை .

அரசியல் கணிதம் கையெழுத்துப் பிரதியாகவே சுற்றி வந்தது. 1683 -ம் வருடத்தில் பெட்டிக்குத் தெரியாமல், ஆசிரியருடைய பெயர் இல்லாமல், வேறு தலைப்போடு அது வெளியிடப்பட்டது. 1688 – 89-ம் வருடங்களில் ‘மகத்தான புரட்சி’ நடைபெற்று அதனையொட்டி இங்கிலாந்தின் கொள்கையில் தீவிரமான மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு தான் பெட்டியின் மகன் (ஷெல்பர்ன் பிரபு) அந்தப் புத்தகத்தை முழுமையாகவும் தன் தகப்பனார் பெயரிலும் வெளியிட்டார். ”இந்தப் புத்தகத்திலுள்ள கருத்துக்கள் பிரான்சுக்கு விரோதமாக இருந்ததனால் ” காலஞ்சென்ற தன் தகப்பனார் எழுதிய புத்தகத்தை முன்பு வெளியிடுவதற்கு இயலவில்லை என்று அவர் தமது சமர்ப்பணத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பெட்டியின் பிரெஞ்சு எதிர்ப்புக் கருத்துக்கள் ஆங்கில முதலாளி வர்க்கத்தின் நலன்களினால் உந்தப்பட்டவையாகும். அடுத்த நூற்றாண்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை-இங்கிலாந்து பிரான்சை எதிர்த்துத் தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்தது; கடைசியில் உலகத்திலுள்ள தொழில்துறை வல்லரசுகளுக்கிடையே தனக்கு முதல் நிலையை உறுதிப்படுத்தியது. அரசியல் கணிதத்தில் தன்னுடைய வாதங்களை நிரூபிப்பதற்குப் பெட்டி பின்பற்றிய முறைகள் மிக முக்கியமானவையாகும். சமூக விஞ்ஞானங்களின் வரலாற்றில் பொருளாதாரப் புள்ளியியல் முறையை ஆதாரமாகக் கொண்ட முதல் புத்தகம் இதுவே.

இன்று புள்ளிவிவரம் இல்லாத நவீன அரசை ஒருவர் கற்பனை செய்ய முடியுமா? நிச்சயமாக முடியாது. புள்ளியியல் இல்லாத நவீன பொருளாதார ஆராய்ச்சியை ஒருவர் கற்பனை செய்ய முடியுமா? கற்பனை செய்யலாம். ஆனால் அது உண்மையாக இருக்காது. ஒரு ஆராய்ச்சியாளர் “கலப்பற்ற தத்துவத்தை” இலக்கிய அல்லது கணித வடிவத்தில் உபயோகித்து எவ்விதமான புள்ளி விவரங்களையும் பயன்படுத்தாவிட்டாலும், அவை கோட்பாட்டளவில் இருப்பதாகவும், வாசகர் அதைத் தெரிந்திருப்பதாகவும் அவர் ஒரே மாதிரியாக அனுமானித்துக் கொள்கிறார்.

இன்று புள்ளிவிவரம் இல்லாத நவீன அரசை ஒருவர் கற்பனை செய்ய முடியுமா?

17 -ம் நூற்றாண்டில் இந்த நிலை கிடையாது. புள்ளியியல் என்பதே அந்தக் காலத்தில் இல்லை (அந்த வார்த்தையும் 18-ம் நூற்றாண்டின் இறுதி வரையில் ஏற்படவில்லை). நாட்டிலுள்ள மக்கள் தொகையின் அளவு, வகை, வயது , தொழில்கள் ஆகியவற்றைப் பற்றி அன்று எந்த விவரமும் தெரியாதிருந்தனர். மேலும், அடிப்படையான பண்டங்களின் உற்பத்தி மற்றும் நுகர்வு, வருமானங்கள், செல்வம் வகைப்படுத்தப்பட்டிருக்கும் முறை ஆகிய ஆதாரமான பொருளாதார விவரங்களைப் பற்றியும் எதுவும் தெரியாது. வரி விதிப்பு, வெளி நாட்டு வர்த்தகம் ஆகியவற்றைப் பற்றிய சில புள்ளிவிவரங்களும் தகவல்களும் இருந்தன.

அரசாங்கத்தில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பதற்கென்று தனியாக ஒரு துறை இருக்க வேண்டும் என்று பெட்டி முதன்முதலாகக் கூறினார்; தகவல்களைச் சேகரிப்பதற்குரிய முக்கியமான வழிகளையும் அவர் விளக்கினார். அவர் செய்த மாபெரும் சேவை என்று இதைக் கூற வேண்டும். புள்ளியியல் துறையை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தைப் பற்றி அவர் அடிக்கடி எழுதினார், சிறிதும் மாறாமல் எழுதிக் கொண்டிருந்தார்.

இதற்கிடையில் அந்த அரசாங்கத்துறையின் தலைவராகவும் தம்மைக் கற்பனை செய்து கொண்டார். அவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பதவிக்கு அவர் அவ்வப்போது தம்முடைய உற்சாகத்துக்குத் தகுந்தவாறும், அந்தப் பதவி தமக்குத் தரப்படுமா என்ற சந்தேகங்களுக்குத் தகுந்தவாறும் பல பெயர்களைக் கொடுத்தார்; இவை அநேகமாக ஆடம்பரமான பெயர்களாகவே இருந்தன. மேலும் அவர் கணக்குப் போடுவது மட்டுமல்லாமல், ஓரளவுக்குத் திட்டம் தயாரிக்கவும் விரும்பினார்.

உதாரணமாக, அவர் ”உழைப்பு அணியின் சம நிலையைப் பற்றி” சில மதிப்பீடுகளைத் தொகுத்தது அன்றைய சூழ்நிலையில் குறிப்பிடத்தக்கதாகும். நாட்டுக்குத் தேவைப்படுகின்ற மருத்துவர்கள், வழக்குரைஞர்களின் (17 -ம் நூற்றாண்டில் உயர்கல்வி பெற்ற தொழில் நிபுணர்கள் வேறு யாரும் இல்லை) எண்ணிக்கையைக் கணக்கிட்டார்; அதிலிருந்து பல்கலைக்கழகங்கள் வருடந்தோறும் எவ்வளவு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.

படிக்க:
மே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை ! தொடரும் ஸ்டெர்லைட் அடக்குமுறை !
♦ ஐயோ அசைவையே காணோமே உயிரோடுதான் இருக்கிறானா ?

அவர் புள்ளியியலின் அவசியத்தைப் பற்றி ஓய்வில்லாது பிரச்சாரம் செய்தார். மேலும் அன்றைக்குக் கிடைத்த குறைவான, அதிகம் நம்ப முடியாத விவரங்களைத் தமது பொருளாதார வாதங்களுக்கு மிகவும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். பிரான்சைக் காட்டிலும் இங்கிலாந்து ஏழை நாடு அல்ல, பலவீனமான நாடுமல்ல என்பதைப் புள்ளிவிவரங்களின் மூலம் நிரூபிப்பதை அவர் தம்முடைய முக்கியமான கடமையாகக் கருதினார். இது இன்னும் விரிவான ஒரு கடமையை மேற்கொள்வதற்கு வழிவகுத்தது. அவர் காலத்தில் இங்கிலாந்தின் பொருளாதார நிலைமையைப் பற்றி அளவு ரீதியான மதிப்பீட்டைச் செய்வதே அது..

அவர் தம்முடைய புத்தகத்தின் முன்னுரையில் அரசியல் கணிதத்தின் முறையைப் பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார்: “இதற்கு நான் பின்பற்றியிருக்கும் முறை இன்னும் வழக்கத்துக்கு வரவில்லை. ஒப்புமை செய்கிற வார்த்தைகளையும் அறிவுப் பூர்வமான வாதங்களையும் உபயோகிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், இந்த முறையில் (நான் நெடுங்காலமாகப் பாடுபட்டிருக்கும் அரசியல் கணிதத்துக்கு ஒரு மாதிரி என்ற வகையில்) எண்கள், எடைகள், அளவுகள் மூலமாக என்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறேன்; கண்ணால் பார்க்கக் கூடிய வகையில் இயற்கையில் அடிப்படைகளைக் கொண்டவற்றையே ஆராய்ந்திருக்கிறேன்; குறிப்பிட்ட மனிதர்களுடைய மாறக் கூடிய அறிவு, கருத் துக்கள், பசிகள், உணர்ச்சிகள் ஆகியவற்றைச் சார்ந்திருப்பனவற்றை மற்றவர்களின் ஆராய்ச்சிக்கு விட்டுவிடுகிறேன்.” (1)

பெட்டியைப் பின்பற்றியவர்களில் புகழ் மிக்கவரான சார்ல்ஸ் டாவெனான்ட் பின்வரும் எளிமையான வரையறையைக் கூறியிருக்கிறார்; ”அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எண்களை ஆதாரமாகக் கொண்டு வாதிடும் கலையை அரசியல் கணிதம் என்று கூறுகிறோம்…” இந்தக் கலை மிகவும் பழமையானது என்பதில் சந்தேகமில்லை என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். ஆனால் பெட்டி ”அதற்குப் பெயரைக் கொடுத்தார்; விதிகளையும் முறைகளையும் வகுத்துக் கொடுத்தார்”.

சர் வில்லியம் பெட்டி

பெட்டியின் அரசியல் கணிதம் புள்ளியியலுக்கு முன் மாதிரியாக இருந்தது. அவர் தன்னுடைய முறையில் பொருளாதார விஞ்ஞானத்தின் முக்கியமான போக்குகளின் மொத்தத் தொடர்வரிசையையுமே முன்னூகித்தார். ஒரு நாட்டின் தேசிய வருமானம், தேசியச் செல்வம் ஆகியவற்றைக் கணக்கிடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி அவர் மதிநுட்பத்தோடு எழுதினார். இவை நவீன புள்ளியியலிலும் பொருளாதாரத்திலும் முக்கியமான பங்கு வகிக்கின்றன. இங்கிலாந்தின் தேசிய செல்வத்தைக் கணக்கிடுவதற்கு முதலில் முயற்சி செய்தவரும், அதைக் கணக்கிட்டவரும் அவர்தான்.

பெட்டியின் ஜனநாயக உணர்வையும் அசாதாரணமான துணிவையும் பின்வரும் பகுதியிலிருந்து நன்கு தெரிந்து கொள்ள முடியும். ”… மக்களின் செல்வத்தையும் சர்வாதிகாரம் செலுத்தும் மன்னரின் செல்வத்தையும் அதிகமான கவனத்தோடு வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்; மன்னர் தான் விரும்புவதை எங்கேயும், எப்பொழுதும், எந்த அளவிலும் மக்களிடமிருந்து எடுத்துக் கொள்கிறார். ”(2) அவர் இங்கே குறிப்பிட்டது பதினான்காம் லுயீயை. ஆனால் இந்தச் சொற்றொடரை இரண்டாம் சார்ல்ஸ் தனக்கும் ஒரு கண்டனமாகக் கருதியிருக்கலாம்.

இங்கிலாந்தின் பொருளாயதச் செல்வம் 250 மில்லியன் பவுன் என்று பெட்டி மதிப்பிட்டார்; இதனோடு நாட்டிலுள்ள மக்கள் தொகையின் பணவியல் மதிப்பாக இன்னொரு 417 மில்லியன் பவுனைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். இந்தப் புதிர் போன்ற கருத்து முதல் பார்வையில் தோன்றுவதைக் காட்டிலும் மிகவும் ஆழமானதாகும். உற்பத்திச் சக்திகளில் உள்ள மனிதக் கூறை -உழைப்புத் திறன், உத்திகள், ஏற்படக் கூடிய தொழில் நுட்ப வளர்ச்சி முதலியனவற்றை- அதன் பரிமாணத்தைக் கணக்கிடுவதற்குப் பெட்டி ஒரு வழியைத் தேடி முயற்சி செய்திருக்கிறார்.

பெட்டியின் மொத்த பொருளாதாரத் தத்துவமுமே மக்கள் தொகையின் அளவு, அதன் உள்ளமைப்போடு தொடங்குகிறது. பெட்டியைப் பற்றி மார்க்ஸ் பின்வரும் அம்சத்தைக் குறிப்பிட்டார்: “நமது நண்பர் பெட்டி மால்தஸிலிருந்து வேறுபட்ட ‘மக்கள் தொகைத் தத்துவத்தைக்’ கொண்டிருக்கிறார்……. அது மக்கள் – செல்வம் என்பதாகும்…” (3) மக்கள் தொகை வளர்ச்சியைப் பற்றி இத்தகைய நம்பிக்கையான கருத்து மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் ஆரம்பகர்த்தாக்களுக்கு மாதிரி எடுத்துக்காட்டாகும். 19 -ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மால்தஸ், உழைப்பாளிகளின் ஏழ்மைக்கு முக்கியமான காரணம் அவர்கள் அதிகமாக இனப்பெருக்கம் செய்கிறார்கள் என்ற இயற்கையான காரணமே என்றார் (இதைப் பற்றி இப்புத்தகத்தின் பதினான்காம் அத்தியாயத்தில் விரிவாகச் சொல்லப்படும்). அவர் இதன் மூலம் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தில் தவறை மழுப்புகின்ற போக்குகளில் ஒன்றைத் தொடங்கி வைத்தார்.

பெட்டி இங்கிலாந்தின் தேசிய வருமானத்தைக் கணக்கிட்டார். இதுதான் இன்றுள்ள தேசியக் கணக்கெடுப்பு என்ற நவீன முறையாக வளர்ச்சியடைந்தது. இதன் மூலம் ஒரு நாட்டின் உற்பத்தி அளவு, அதன் உற்பத்திகள் நுகர்வு, சேமிப்பு, ஏற்றுமதிக்கென்று பகிர்ந்து கொடுக்கப்படும் முறை, முக்கியமான சமூக வர்க்கங்கள், கோஷ்டிகளின் வருமானங்கள், இதரவற்றை சுமாராகக் கணக்கிடுவது சாத்தியமாகியிருக்கிறது .

பெட்டியின் கணக்குகளில் முக்கியமான தவறுகள் இருந்தன என்பது உண்மையே. அவர் தேசிய வருமானத்தை மக்கள் தொகையின் நுகர்வுச் செலவின் மொத்தம் என்று கருதி மதிப்பிட்டார். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் கட்டிடங்கள், இயந்திரங்கள், நிலச் சீர்திருத்தம் மற்றும் இதர முதலீடுகளில் வருமானம் செலவிடப்படுகிறது (இது பல வருடச் சேமிப்பின் திரட்சியாகும்), இதைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவருக்குத் தெரியவில்லை.

ஆனால் இந்தக் கருத்தும் 17-ம் நூற்றாண்டில் யதார்த்தமான ஒன்றுதான். ஏனென்றால் அன்று மூலதனத் திரட்சி மிகவும் கீழ்நிலையில் இருந்தது; நாட்டின் பொருளாயதச் செல்வம் மிகவும் மெதுவாகவே அதிகரித்து வந்தது. மேலும் அரசியல் கணிதத் துறையில் பெட்டியின் சீடர்கள் -குறிப்பாக கிரேகொரி கிங்- இந்தத் தவறைச் சீக்கிரமாகவே திருத்தினார்கள். 17 -ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தின் தேசிய வருமானத்தைப் பற்றி கிரே கொரி கிங் செய்த கணக்குகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு முழுமையாகவும் சரியாகவும் இருந்தன.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) Petty, Political Arithmetick, London, 1690, p. 244.
(2) W. Petty, The Economic Writings, Cambridge, 1899, Vol. 1, p. 272.

(3) K. Marx, Theories of Surplus-Value, Part 1, pp. 354, 355.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

நூல் அறிமுகம் : தனியார்மயமாக்கப்படும் தண்ணீர்

ந்திய ஒன்றியத்தின் தண்ணீர்க் கொள்கையில் இருக்கும் தனியார்மயப்படுத்தல் மற்றும் தண்ணீருக்கு விலை நிர்ணயித்தல் குறித்தும் அதனால் குடிமக்கள் பாதிக்கப்படுவது குறித்தான நூல் இது.

உலகவங்கி, பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வர்த்தக கழகத்தின் கட்டளைகளை தனக்கான சாசனமாக வரித்துக்கொண்டு செயல்படுகிறது இந்திய அரசு. மக்களை குடிமக்களாக இல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களின் நுகர்வோராக மட்டுமே பார்க்கிறது இந்த அரசு. அடிப்படை உரிமையான தண்ணீரையும் தனியார்மயமாக்கி கட்டணம் செலுத்தி வாங்க செய்யும் ”தண்ணீர் கொள்கை” மக்கள் விரோத கொள்கை என உரத்து சொல்கிறது இந்த நூல். (நூலின் பதிப்புரையிலிருந்து)

மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் தேசிய தண்ணீர்க் கொள்கை மூலம் நீர் வளங்களை தனியார்மயப்படுத்தி, நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொட்டு நீருக்கும் விலை நிர்ணயம் செய்யவிருக்கிறது, இந்திய ஒன்றிய அரசு. இதன்படி, இதுவரை இயற்கையாய் இருந்த தண்ணீர் மீதான மனிதனின் அடிப்படை உரிமையை மறுத்து, தண்ணீரை ஒரு வியாபாரப் பொருளாக (சரக்காக) மாற்றும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.

ஐநா – வின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (International Covenant on Economic, Social and Cultural Rights), “தண்ணீ ர் பொதுச் சொத்து, அது வாழ்வுக்கும் சுகாதாரத்துக்கும் அடிப்படை. கண்ணியமான மனித வாழ்வுக்கு நீரின் மீதான மனித உரிமை தவிர்க்க முடியாது. மேலும், தண்ணீர் மற்ற மனித உரிமைகளைவிட முதன்மையானது என்பதை ஒத்துக்கொள்கிறது. இந்தியா இதில் கையெழுத்திட்டிருக்கிறது. மேலும் ஐநா பொதுச் சபையின் ‘தண்ணீர் அடிப்படை உரிமை’ எனும் Right to Water தீர்மானத்திற்கு ஆதரவாக 2010-இல் இந்தியா வாக்களித்துள்ளது.

1987 இல் நீர் ஆதாரங்களுக்கான மத்திய, மாநில அரசுகள் தங்கள் திட்டங்களை வகுப்பதற்காக ‘தேசிய தண்ணீர்க் கொள்கையை நீர்வளத்துறை அமைச்சகம் முதன் முதலில் இயற்றி ஏற்றுக்கொண்டது. இதில் தண்ணீர் பற்றாக்குறையைப் பயனீட்டாளர்களுக்கு உணர்த்தவும், நீர் பயன்பாட்டில் பொருளாதார செயல்பாட்டை ஊக்குவிக்கவும் தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனச் சொல்கிறது. அதாவது, தண்ணீர் இயற்கையாக அமைந்த மனிதனுக்கான அடிப்படை உரிமை என்பதை மறுத்து, குடிமக்களைத் தண்ணீர் பயன்படுத்தும் நுகர்வோர்களாகப் பார்க்கிறது . இதனடிப்படையில் தண்ணீர் சார்ந்த தொழில்களை உருவாக்கி, நீரை வணிகமயப்படுத்தி, அதன் மீதான பொருளாதார செயல்பாடுகளை ஊக்குவிக்கச் சொல்கிறது. மேலும், இந்த விலை நிர்ணயித்தலை விவசாயப் பாசனத்துக்கும் விரிவுபடுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வலியுறுத்தப்பட்டுள்ளது.

படிக்க:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்
ரஞ்சன் கோகோய் : நீதி செத்துவிட்டது ! நீதிபதிகள் வாழ்க !

தண்ணீர்க் கொள்கை 2002 மற்றும் 2012 என இரண்டு முறை திருத்தப்பட்டுள்ளது. 2002இல் திருத்தியமைக்கப்பட்ட இந்தக் கொள்கையில், வெளிப்படையாக தனியார்மயப்படுத்துவது வலியுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு பயன்பாட்டுக்கான நீர்வளத் திட்டங்களின் ‘திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல்’ போன்றவற்றில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தனியாரின் பங்களிப்பை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளது. இதற்குக் காரணமாக நிதிச் சுமைகள் குறையும், புதுமையான திட்ட வடிவமைப்புகள் கிடைக்கும், பயனீட்டாளர்களுக்கு திறன்வாய்ந்த, வெளிப்படையான சேவையைத் தர முடியும்’ என்பனவற்றைக் கூறு கின் றது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் சமூக  செயல்பாட்டாளர்களிடமிருந்து வந்தாலும் , தனியார்மயப்படுத்தலுக்கு எதிரான சட்டிஸ்கர் சியோநாத் நதிக்கரை மக்களின் போராட்டம், கோக்கோகோலா ஆலைகளுக்கு எதிரான வைத்ரானா ஆற்று குடூஸ் மக்கள் போராட்டம் மற்றும் கேரளா பிளச்சிமடா போராட்டம் போன்றவற்றினாலும் 2012 இல் இக்கொள்கைத் திருத்தப்பட்டபோது, தனியார் பங்களிப்பு என்பதை அரசு-தனியார் கூட்டு (Public-Private Partnership) என மாற்றப்பட்ட து. இது நீர் மேலாண்மையில், உலக வங்கி – சர்வதேச நாணய நிதியம் (WB -IMF) பரிந்துரைத்த கொள்கையோடு ஒத்துப்போகும் வகையில் அரசு தனியார் கூட்டு என மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, அரசின் பங்கு வெறும் கண்காணிப்பது மட்டுமே; குடிமக்களுக்கு சேவை வழங்குவது அல்ல. இது தனியார் மயப்படுத்துதலின் வேறு வடிவம். (நூலிலிருந்து பக்.7-8)

தண்ணீர் வணிகத்தில் ஈடுபடும் பன்னாட்டு பிரெஞ்சு நிறுவனமான சூயஸ் தனது வலைத்தளத்தில் கோவை நகரத்தின் (60 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தத்தை பிப்ரவரி மாதம், 2018 ஆம் ஆண்டு பெற்றிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 400 மில்லியன் யூரோக்கள் (சுமார் ரூ. 3,200 கோடி). பத்தாண்டுகளுக்கு முன்பாகவே இந்திய மாநிலங்களின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை வணிக அடிப்படையில் செய்து வரும் சூயஸ் நிறுவனத்திற்கு கோவையில் கிடைத்திருக்கும் ஒப்பந்தம்தான் இந்தியளவில் மிகப் பெரிய ஒப்பந்தமாகும்.

24 மணி நேரமும் தங்குதடையற்ற குடிநீர் விநியோகத்திற்காகவே சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டாலும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் மக்கள் பயன்படுத்துகின்ற ஒரு துளி குடிநீரையும் கணக்கிட்டு அதற்கான கட்டணத்தை நிர்ணயிப்பதே ஆகும். தண்ணீர்க் குழாய்களில் மீட்டர்கள் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சொட்டுக் குடிநீரும் கணக்கிடப்படும். பயன்படுத்தப்படும் தண்ணீருக்கான கட்டணத்தை வசூல் செய்ய வேண்டியது சூயஸ் நிறுவனத்தின் பொறுப்பு.

இத்திட்டம் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கோவை நகராட்சி நிர்வாக இயக்குனர், ”இத்திட்டத்தின் முன் வைப்பு கட்டணமாக பயனாளிகளுக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை நிர்ணயிக்கப்படலாம்” என கூறினார். மிகக் குறிப்பாக தற்போது பயன்பாட்டிலுள்ள குடிநீர் பொதுக்குழாய்கள் அகற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் உரிமையுடைய, அனைவரும் அணுகும் விதத்திலிருக்கக் கூடிய, பொதுச் சொத்தான குடிநீர், தனியார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டு வணிகத்திற்கான தனிச்சொத்தாக மாற்றப்படுகிறது.

தமிழகத்தின் பல நகரங்கள் இருக்க, கோவையில் தண்ணீரை தனியார்மயமாக்குவதற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட அடிப்படைக் காரணம் இந்திய அரசு அறிவித்துள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகும். இந்திய நகரங்களை மேம்படுத்துகிறேன் என்ற பெயரில் நகரத்தின் நவீன கட்டமைப்பு உருவாக்கத்தை தனியாருக்கான வணிகமாக ஒப்பந்தம் எழுதித் தருவதே “ஸ்மார்ட் சிட்டி’ திட்டம். இத்திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் குடிநீர் விநியோகத்திற்கான நவீன கட்டமைப்புகளைத் தனியார் நிறுவனங்கள் ஏற்படுத்துவதும், குடிநீர் விநியோகம் செய்வதும் ஒரு அங்கமாகும். (நூலிலிருந்து பக்.23-24)

நூல்:தனியார்மயமாக்கப்படும் தண்ணீர்
ஆசிரியர்கள்: மயில்வாகனன், வீரைய்யன்

வெளியீடு: நிமிர் பதிப்பகம்,
புது எண்: 18, சுப்ரிதா பிளாட்ஸ், அவ்வையார் தெரு,
நங்கநல்லூர், சென்னை – 600 061.
தொலைபேசி எண்: 72999 68999
மின்னஞ்சல் : nimirpublications@gmail.com

பக்கங்கள்: 48
விலை: ரூ 40.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க: nimir | commonfolks