Saturday, August 2, 2025
முகப்பு பதிவு பக்கம் 337

பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி

மீண்டும் வெற்றி பெற்றுவிட்டது பாஜக ! உற்சாக வெள்ளத்தில் கூத்தாடுகின்றனர் சங்கிகள் ! முற்போக்காளர்களும் ஜனநாயகவாதிகளும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். தமிழக மக்களோ அச்சத்திலும் ஆத்திரத்திலும் இருக்கிறார்கள். எப்படி சாத்தியமானது மோடியின் வெற்றி ?

இந்த வீழ்ச்சியிலிருந்து நாம் மீள வழி என்ன ? இந்தக் காணொளியைக் காணுங்கள் ! பகிருங்கள் !

வினவு செய்திப் பிரிவு

தேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா ? இந்தியாவின் வெற்றியா ?

4

டந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், கடந்த 2014-ம் ஆண்டைவிட அதிகமான ஓட்டுக்கள் பெற்றதோடு சுமார் 300 இடங்களையும் பெற்றிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. பிரதமர் நரேந்திர மோடி முழுத் திருப்தியடைவதற்கான அனைத்து நியாயங்களும் இந்த தேர்தல் முடிவுகளில் உள்ளன.

இத்தேர்தல் முடிவுகள் எப்படி உருவாக்கப்பட்டன என்பது குறித்து மற்ற அனைவரையும்விட மோடிக்கு நன்றாகத் தெரியும். கடந்த தேர்தல் பரப்புரையின் போது தாம் அளித்த வளர்ச்சி குறித்த வாக்குறுதிகள் குறித்து தனது தற்போதைய பரப்புரையில் பேசுவதை மிகக் கவனமாகத் தவிர்த்தார். அதற்குப் பதிலாக இந்துக்களின் மனதில் முசுலீம்களைப் பற்றிய பயத்தை விதைப்பது, பயங்கரவாதத்தை வீழ்த்தக் கூடிய தகுதி கொண்ட ஒரே தலைவனாகத் தம்மையே விளம்பரப்படுத்திக் கொள்வது என்ற வகையிலேயே அவரது பரப்புரை அமைந்தது.

இரட்டை நாக்கு மோடி

மேலும், புல்வாமா தற்கொலைத் தாக்குதலில் பலியான துணை இராணுவப் படையினரை தனது தேர்தல் ஆயுதமாகப் பயன்படுத்தி அவர்கள் பெயரில் வாக்குகளைச் சேகரிக்கும் அளவிற்குத் தரமிறங்கினார். இந்த இழிவான தந்திரத்தை எப்படி எதிர்கொள்வது என்பது பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசுக்குத் தெரியவில்லை. இது பாஜகவுக்கு கை கொடுத்தது.

வார்தா-வில், மோடி நேரடியாக மதத்தின் அடிப்படையில் இந்து வாக்காளர்களிடமிருந்து வாக்குச் சேகரித்தார். குறிப்பாக மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்கூரை பயங்கரவாதக் குற்றங்களுக்காக விசாரித்ததன் மூலம் இந்துக்களின் நம்பிக்கைகள் இழிவுபடுத்தப்பட்டதாகக் கூறி வாக்கு சேகரித்தார். வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தியை, “சிறுபான்மையினர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதியிலிருந்து போட்டியிடுகிறார்” என்று கூறி ஏளனம் செய்தார் மோடி. முசுலீம்கள் இந்தியாவின் சரிசமமான குடிமக்கள் இல்லை என்பதாக சித்தரித்தார்.

மோடியின் இத்தகைய முனையாக்கம் செய்யப்பட்ட அறிக்கைகள் தொலைக்காட்சிகளில் நேரலையாகக் காட்டப்பட்டன. அவை பாஜக-வின் பிரச்சார இயந்திரத்தால் நாடு முழுவதும் பரப்பப்பட்டது, அந்த நஞ்சு பரவலாகவும், விரிவாகவும் மக்களுக்குச் சென்றடைவது உறுதிசெய்யப்பட்டது. அஸ்ஸாமிலும் மேற்கு வங்கத்திலும், வங்கதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வருபவர்களுக்கு மதத்தை அடிப்படையாகக் கொண்ட குடியுரிமை வழங்குவது குறித்த பாஜக-வின் பரப்புரைக்கு இது வலு சேர்க்க உதவியது.

படிக்க:
4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். !
♦ மோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் !

இந்தியாவின் தேர்தல் பரப்புரை சட்டங்களை பகிரங்கமாக மீறும் இது போன்ற நடவடிக்கைகளிலிருந்து மோடியைத் தடுப்பது குறித்தோ, கண்டிப்பது குறித்தோ தனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியிருந்தது. இது இவ்வாறிருக்க, மோடியும் அமித்ஷாவும் குண்டுவெடிப்புக் குற்றவாளி பிரக்யாசிங்கை போபாலில் வேட்பாளராக நிறுத்துமளவுக்குச் சென்றனர். அவரை வேட்பாளராக்கியது, இந்துத்துவ ஆதிக்கத்தை மட்டும் குறியீடாகக் காட்டவில்லை, கூடுதலாக முசுலீம்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பயங்கரவாதத்தையும் குறியீடாகக் காட்டியது.

(பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட) மூத்த போலீசு அதிகாரி ஹேமந்த் கார்கரேவின் படுகொலையை, போபால் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்ட பின்னர் பிரக்யாசிங் ஆதரித்தார். ஏனெனில் கார்கரேதான் முசுலீம்களைக் கொல்ல வெடிகுண்டு வைத்த வழக்கில் பிரக்யாசிங்கைக் கைது செய்தவர். அடுத்ததாக காந்தி படுகொலையை ஆதரித்து இவர் விட்ட அறிக்கை, மோடியையே மிரளச் செய்தது. மோடி பிரக்யாசிங்கிடமிருந்து தன்னை விலக்கிக் காட்டிக்கொண்டார்.

அப்போதும்கூட கோட்சே பிரதிநிதித்துவப்படுத்திய அரசியலின் மீதான விமர்சனத்தை மட்டும் கவனமாகத் தவிர்த்துக் கொண்டார் மோடி. பிரக்யா சிங்கைப் போல மோடிக்கும் காந்திக்காகவோ அவரது கொள்கைகளுக்காகவோ ஒதுக்குவதற்கு நேரம் கிடையாது. ஆனால் காந்தியை களமிறக்கச் சாத்தியமான இடங்களில் அவரைப் பயன்படுத்துவது மற்றும் காந்தி கொலையை நியாயப்படுத்துவதை தவிர்ப்பதையும் தனது நடைமுறைத் தந்திரமாகக் கொண்டுள்ளார் மோடி.

மோடி விரும்புவது போல, பாஜக-வின் இந்த தேர்தல் வெற்றியை பாரதத்தின் வெற்றி என்று யாராவது அழைக்க முடியுமா ? அப்படி அழைப்பது போபாலில் பிரக்யாசிங் தாக்கூரின் வெற்றியை இந்தியாவின் வெற்றி என்று ஏற்றுக் கொள்வது போல்  ஆகிவிடும் அல்லவா ? மோடி தேர்தலுக்கு முன்னரே பிரக்யாசிங்கிடமிருந்து விலகியிருந்ததை விட  இனி இன்னும் அதிகமாக விலகி இருப்பார் என்று அனுமானித்துக் கூறுகின்றனர்.

எனினும் அதனால் ஒருபலனும் இல்லை. குஜராத்தில் பிரவின் தொகாடியா ஒதுக்கப்பட்டதைப் போல பிரக்யாசிங் ஒதுக்கி வைக்கப்படலாம் அல்லது அவர் ஒரு அமைச்சராகக் கூட நியமிக்கப்படலாம். மோடியின் நோக்கம், இந்த நாட்டின் இரத்த ஓட்டத்திற்குள் ஒரு நச்சுக் கிருமியைச் செலுத்துவதுதான். அந்த வேலை நிறைவேறிய பின்னர், ஒவ்வொரு நோய் பரப்பிகளின் தலையெழுத்தும் கவனத்தில் கொள்ளத்தக்கவையல்ல..

மோடியின் கண்கவர் வெற்றியின் மூன்று பிற அம்சங்கள் குறித்து நாம் கவலை கொள்ளவேண்டும். நினைத்துப் பார்க்கமுடியாத அளவிலான பணபலத்தை பயன்படுத்தியிருப்பதுதான் முதல் அம்சம். இந்த மிகப்பெரும் பணபலம் பயன்படுத்தப்படுவதற்கு ஏற்றாற்போல அவரது பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நண்பர்களின் அடையாளத்தை பொதுமக்களிடமிருந்து மறைப்பதற்கேற்ற புதிய விதிமுறைகளை தாமே எழுதிக் கொண்டார்.

இந்தக் கார்ப்பரேட்டுகள்தான் இந்தத் தேர்தலில்  பாஜகவின் பகட்டான பிரச்சாரத்திற்கு பின்னிருந்து படியளந்தவர்கள். இதன் மூலம்தான் எக்கச்சக்கமான விளம்பரங்கள், சட்ட விதிகளை மீறி தேர்தல் சமயத்தில் திடீரென முளைத்து, தேர்தல் ஆணையத்தால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு,  தேர்தலுக்குப் பின் மறைந்து போன 24 X 7 பிரச்சாரச் சேனல் என்று பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டது பாஜக.  பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு யார் படியளந்தார்கள் என்பது நமக்கு நேரடியாக தெரிய வாய்ப்பில்லையாதலால், (பொருளாதார) கொள்கைகளின் மூலமாக எவ்விதத்தில் அவை திருப்பி செலுத்தப்படும் என்பது குறித்து குறிப்பிட்டுக் கூறுவதும் கடினமானது.

இரண்டாவதாக, ஊடகங்களின் பெரும் பிரிவு மோடி வழிபாட்டை சந்தைப்படுத்தியதோடு, மோடி அரசாங்கத்தின் பல்வேறு ‘திட்டங்களின்’ சாதனைகளை மிகைப்படுத்தி விற்பனை செய்தனர். மோடி மற்றும் அமித்ஷா நடத்திய பேரணிகளுக்கு அளவுக்கதிகமான நேரத்தை தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒதுக்கினர்.

இதைத்தாண்டி கடந்த ஐந்தாண்டுகளாகவே, பாஜகவின் பிரிவினைவாத மற்றும் வேற்றுமைவாத நிகழ்ச்சி நிரலை சந்தைப்படுத்த உதவியதன் மூலம், பொதுமக்களை சீரழித்ததோடு, அரசாங்கத்தின் தோல்வியுற்ற கொள்கைகளின் மீதான விமர்சனக் கண்ணோட்டத்தை மழுங்கடிக்கச் செய்வதில் பெரும் ஊடகங்கள் பாஜகவுக்கு பேருதவி செய்தன. ஊடகத்தின்  இப்பிரிவினர்தான் லவ் ஜிகாத் முதல் அயோத்தி பிரச்சினை வரையிலான சங்கப் பரிவாரத்தின் மதவாதக் கருத்துக்களையும், தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் பாஜக-வின் மிகைப்படுத்தப்பட்ட சுயபிரச்சாரத்தையும் கடத்தும் குழலாகச் செயல்பட்டனர்.

”மோடியின் ஆட்சிக்காலத்தில் தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்களே நடந்ததில்லை” என்பது போன்ற நிர்மலா சீதாராமனின் சவடாலைப் போன்று, அமைச்சர்களின் அப்பட்டமான பொய்களும் கேள்விக்கிடமற்றுக் கடந்து போக அனுமதிக்கப்பட்டன. புல்வாமாவில் நடந்த பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தோல்வி குறித்து எவ்விதக் கடுமையான கேள்விகளும் கேட்கப்படவில்லை.  அதேபோல இந்திய விமானப்படையின் மிக் ரக விமானத்தை இழந்து, இந்திய விமானி பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு, சொந்த ஹெலிகாப்டரையே சுட்டு வீழ்த்திய அவலங்களை உள்ளடக்கிய பாலகோட் பதிலடித் தாக்குதல் குறித்தும் எவ்விதக் கேள்விகளும் கேட்கப்படவில்லை.

மோடி அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலுக்கு ஒத்துழைக்க மறுக்கும் ஊடகங்கள் அவதூறு வழக்குகளாலும், சிபிஐ அல்லது வரி விசாரணை போன்றவைகளாலும் குறி வைக்கப்பட்டன. சில பத்திரிகையாளர்களும், பத்திரிகை ஆசிரியர்களும் தங்கள் பணியை இழந்தனர். வேறெங்கும் வெளிப்படுத்த முடியாத விமர்சனங்களின் மூலமாக இருக்கும் சமூக வலைத்தளங்களை மிரட்ட, இந்த நாட்டின் கணிணி சட்டங்கள் தொடர்ச்சியாக கட்சி செயல்பாட்டாளர்களாலும் போலீசாராலும் நாடு முழுவதும் தவறான முறையில் பிரயோகிக்கப்பட்டன.

மூன்றாவதாக, தேர்தல் கமிசனின் செயல்பாடுகள் நினைவு தெரிந்தவரையில் மிகவும் அதிகமான அளவிற்கு கட்சி சார்பானதாக இருந்தது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் நடத்தை விதிகளை மோடியும் பாஜகவும் பகிரங்கமாக மீறியதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்குக்கு அபாயம் இருப்பதாகக் கூறி அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 324 -ஐப் பிரயோகித்து பிரச்சாரத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது மட்டுமல்லாமல், அங்கு பிரதமரின் பேரணிகளை அனுமதிக்கும் வகையில் நேரத்தை வெட்டிச் சுருக்கிக் கொண்டது தேர்தல் ஆணையம்.

இவையனைத்தையும் இணைத்துப் பார்த்தால், இவ்வகையான வெற்றியால் இந்தியாவிற்கு என்ன பலன் ? மோடியும் பாஜகவும் கடந்த ஐந்தாண்டுகளாக சாதித்ததாகச் சொல்லிக் கொள்ளும் ஒவ்வொன்றும் தேர்தலால் தற்போது அங்கீகரிக்கப்பட்டிருப்பதோடு, நாட்டை மதவாதமாக்குவதற்கான அடித்தளமும் இடப்பட்டுள்ளது.

மேலும் மையப்படுத்தப்பட்ட முடிவெடுத்தல் (Centralised Decision Making),  தான்தோன்றித்தனமான கொள்கை முடிவுகள், பெரும் கார்ப்பரேட்டுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான பெரும் சலுகைகள், சுதந்திர ஊடகங்களின் மீதான பெரும் வெறுப்பு மற்றும் மாற்றுக் கருத்துக் கொண்டோரின் மீதான சகிப்பின்மை ஆகியவற்றிற்கும் அடித்தளமிடப்பட்டு உறுதியாக்கப்பட்டுள்ளது.

படிக்க:
மோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்
♦ காவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் ! வெற்றி உரையில் மோடி பெருமிதம் !

தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேச விரோத நடவடிக்கைகள் மீது கூடுதலான, கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் என்று கூறியிருக்கிறார். இது ஒரு உதாரணம்தான். இனி வரும்காலங்களில் அரசு இயந்திரத்தின் உறுப்புகள் மீதான மோடி அரசாங்கத்தின் போர் அடுத்தகட்டத்திற்குச் செல்லும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

மத்திய – மாநில உறவுகள், நீதித்துறை ஆகிய இரண்டு அரண்கள்தான் மோடியின் பல்வேறு முயற்சிகளையும் தாண்டி கடந்த ஆட்சியில் ஓரளவு தப்பின. இந்த இரண்டு அரண்களை நோக்கிதான் இனி மோடி திரும்புவார். “தனது புதிய பெரும்பான்மையைப் பயன்படுத்தி மாநிலங்களில் பணிகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை மத்திய அரசிற்கு வழங்க முயற்சிப்பார். இதனைச் செய்து முடிக்க நிதிக் கமிசனை தனது  ஒடுக்கும் தடியாக உபயோகிப்பார்” என்று பிரபல பொருளாதார நிபுணர் நிதின் தேசாய் தனது அச்சத்தை வெளிப்படுத்துகிறார். நீதிபதிகள் நியமனத்தில் தலையிடுவதன் மூலம், அடுத்த ஐந்தாண்டுகளில் நீதித்துறையில் தனது தடத்தைப் பதிப்பார்.

எதிர்க்கட்சிகள் வீரியமான பரப்புரைகளைச் செய்தால்மட்டுமே, இந்த பயங்கரமான நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகப் போராட முடியும். அமித்ஷா அமைத்திருக்கும் இந்த தேர்தல் பொறியை வெறுமனே சாதிய மற்றும் குழு அடிப்படையிலான கூட்டணிகள் மூலம் போரிட முடியாது.

பாஜகவின் நடைமுறைத் தந்திரமானது, துருத்தி நிற்கும் சாதியப் பற்றுறுதியை உடைத்து, அனைத்து சாதியினரையும்  இந்துக்களாக மாற்றுவதாக இருக்கிறது. இதற்கு முன்னர், மண்டல் கமிசன் அரசியல் இந்த கமண்டல அரசியலுக்கு எதிராக அறிவார்ந்த சாதியக் கணக்கீட்டை வைத்து முறியடித்தது. ஆனால் இன்றைய நிலைமையில் அப்படிச் சாத்தியமில்லை.

பாஜக வாக்காளர்களை இந்துக்களாக (மற்றும் முசுலிம்களாகப்) பார்த்தால், எதிர்க்கட்சிகள் வாக்காளர்கள் மத்தியில் இருக்கும் விவசாயிகளிடம், பெண்களிடம், இளைஞர்களிடம் தம்மைக் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இது இன்னுமொரு விவாதத்திற்குரிய விசயமே!


கட்டுரையாளர் : சித்தார்த் வரதராஜன்
தமிழாக்கம் :நந்தன்
நன்றி : தி வயர் 

பாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன ?

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | பாகம் – 2

டோக்ளியாட்டி

முன்னுரை ( தொடர்ச்சி…)

டோக்ளியாட்டி சொற்பொழிவாற்றிய வருடங்களில் அமெரிக்காவிலிருந்த சோசலிஸ்டுக் கட்சி, அக்கட்சியினுள் ஊடுருவி, பெருமளவில் தலைமையைக் கைப்பற்றியிருந்த டிராட்ஸ்கியவாதிகளின் செல்வாக்கு காரணமாக, எவ்வகையான பாசிச – எதிர்ப்பு இயக்கத்திலும் பங்கேற்க மறுத்தது.

இப்போது நமது கடமை பாசிசத்திற்கெதிராக ஒரு பரந்துபட்ட ஒற்றுமையைக் காட்டுவதல்ல, மாறாக “வர்க்கத்திற்கெதிராக வர்க்கம்” என்னும் போராட்டத்தை நடத்துவதே நமது பணி என்னும் இடதுசாரி வாய்ச்சவடால் மூலம் பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் தான் சேர மறுத்ததை மூடிமறைத்தது. எதிர்பார்க்கப்பட்டதுபோல், ஆளும் வர்க்கமானது இத்தகைய வார்த்தை ஜாலங்களைப் பற்றி கவலைப்படவில்லை; ஏனென்றால் ஏகபோக மூலதனம், தன்னுடைய அப்பட்டமான சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தும் முயற்சிகளிலிருந்து அதைத் தடுக்கக்கூடிய திறனைப் பெற்றிருக்கக் கூடிய சக்திகளைப் பிளவுபடுத்துவதில் இத்தகைய இடதுசாரி வார்த்தை ஜாலமும் ஒரு அம்சமாகும்.

“வர்க்கத்திற்கெதிராக வர்க்கம்” என்பதானது, தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கான ஒரு கொள்கை அல்ல. அது முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்குத் தீங்கானதும் அல்ல. அது வெற்றுவேட்டு வார்த்தை ஜாலமே தவிர வேறன்று. ஆனால், அது சீர்குலைவுத்தன்மை வாய்ந்தது.

ஜார்ஜ் டிமிட்ரோவ், பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சி.

பாசிசம் என்பது “ஏகபோக மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான பகுதிகளின் அப்பட்டமான சர்வாதிகாரம்” என்ற சரியான கம்யூனிஸ்டு நிர்ணயிப்பும் விளக்கமும் பாசிச – எதிர்ப்புக் கூட்டணி அமைப்பதற்கான அடித்தளத்தை அளித்தன. தொடர்ச்சியான ஆய்வுகள். பிறகு கூட்டு விவாதங்கள் போன்றவை ஒரு சுற்று முழுமையடைந்ததன் விளைவாக ஒரு விஞ்ஞானப்பூர்வமான சரியான நிர்ணயிப்பு தோன்றியது. 1935-ம் ஆண்டில் நடைபெற்ற கம்யூனிஸ்டு அகிலத்தின் ஏழாவது உலக காங்கிரசுக்கு அளித்த தன்னுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையில் ஜார்ஜ் டிமிட்ரோவ், பாசிசம் என்பது “நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட மிக மோசமான ஏகாதிபத்திய சக்திகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்” என்று விளக்கம் அளித்தார்.

அமெரிக்காவிலுள்ள நமக்கு மிக முக்கியமான வரலாற்றுப் படிப்பினையாக இருக்கக் கூடியது எதுவென்றால் நம்மிடையே இன்று காணப்படுகின்ற சில அம்சங்கள் பாசிசத்தின் வளர்ச்சிக்குத் தளமாக மாறக்கூடிய அபாயம் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்பதேயாகும்.

இங்குச் சில சிறிய பாசிச குழுக்கள் இருந்து வருவதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இதைவிட பாசிசத்திற்கு ஒரு வெகுஜன அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதற்காக அரசியல் மற்றும் தத்துவார்த்த தயாரிப்பு தற்போது நடைபெற்று வருவதைப் பற்றிதான் நாம் மிகவும் கவலைப்பட வேண்டும். இத்தாலி மற்றும் ஜெர்மனியின் படிப்பினைகளிலிருந்து தெளிவாகத் தெரிவது எதுவென்றால் அங்கெல்லாம் தத்துவார்த்த அரசியல் சூழ்நிலைமை என்பது முதலாளித்துவத்தின் பொதுவான தத்துவார்த்த சக்திகளால்தான் உருவாக்கப்படுகிறது என்பதாகும். “பிற்போக்குத்தனம் நோக்கிய போக்கு” பாசிசத்திற்கான இத்தகைய தத்துவார்த்த தயாரிப்புகளில் பிரதிபலிக்கின்றது.

“நடுத்தரவர்க்கத்தினராகிய நாம் பெரிய அரசாங்கத்தாலும் பெரும் தொழிலாளர்களாலும் மற்றும் பெரும் முதலாளிகளாலும் வரி விதிக்கப்பட்டு கசக்கிப் பிழியப்படுகின்றோம்.” இனவெறி கொண்ட அலபாமா ஆளுநர் ஜார்ஜ் வாலஸ், அதிதீவிர பிற்போக்குவாதியும் அலபாமாவின் முன்னாள் ஆளுநருமான ரோனால்ட் ரீகன் மற்றும் இதரர்களால் முழங்கப்படும் இத்தகைய கோஷங்கள் நடுத்தர வர்க்கத்தினரின் செவிகளில் தேனாகப் பாய்கின்றன. “பெரும் முதலாளிகள்” என்ற வார்த்தைகள் வெறும் ஒப்புக்காகச் சொல்லப்பட்டவை, தூண்டில் இரை. அவை, தொழிலாளி வர்க்கம் மற்றும் தொழிற் சங்கங்களுக்கெதிராக ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கான அவர்களுடைய முயற்சிகளுக்கு ஒரு மூடு திரை. “பெரிய அரசாங்கம்” என்று அவர்கள் குறிப்பிடுவது பொதுமக்கள் எந்தவொரு செல்வாக்கையும் பிரயோகிக்கக்கூடிய ஆட்சி அமைப்பையே ஆகும். இத்தாலியைப் போன்று அமெரிக்க பாசிசம் என்பதும் பெரும் முதலாளிகளின் அப்பட்டமான சர்வாதிகாரமாகத்தானிருக்கும்.

பாசிசம் என்பது “நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட மிக மோசமான ஏகாதிபத்திய சக்திகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்”
– டிமிட்ரோவ்.

“பிரித்தாள்வது” என்பது ஒரு சிறுபான்மையினர், பெரும்பான்மையோரை அடக்கி ஆண்டு சுரண்டும் அதிகாரத்தின் மிகவும் அடிப்படையான அம்சமாகும். அது முதலாளித்துவ ஆட்சியின் துவக்கத்திலிருந்தே ஒரு அம்சமாக இருந்து வருகிறது. வரலாறு முழுவதிலும் திட்டவட்டமான சூழ்நிலைமைகளைப் பொருத்து அதனுடைய பயன்பாடும் வடிவங்களும் மாறிக்கொண்டிருக்கின்றன. பெரும் முதலாளித்துவ நாடுகளில் கம்யூனிச எதிர்ப்பு, பேரரசு இனவாதம், வெள்ளை நிறத்தவர் மேலாதிக்கம் மற்றும் யூத-எதிர்ப்பு என்பவை “பிரித்தாளும்” பிரதான கருவிகளாக உள்ளன. அரசியல் மற்றும் சித்தாந்தத் துறைகளில் இந்தக் கருவியானது கம்யூனிஸ எதிர்ப்பு என்னும் வடிவத்தில் இருந்து வந்துள்ளது, இருந்தும் வருகின்றது.

பாசிசமானது, முதலாளித்துவத்தின் இத்தகைய தத்துவார்த்தக் கருவிகளை எடுத்துக்கொண்டு அவற்றைப் பெரும் ஆயுதங்களாக ஆக்கியுள்ளது. ஜெர்மனியில் இட்லரின் பாசிசம், கம்யூனிச எதிர்ப்பையும் யூத-எதிர்ப்பையும் தன்னுடைய பிரதான அரசியல், தத்துவார்த்தக் கருவிகளாக ஆக்கிக் கொண்டுள்ளது. இத்தாலிய பாசிசமானது கம்யூனிச எதிர்ப்பையும் இனவெறியையும் அதனுடைய பிரதான கருவிகளாகப் பயன்படுத்தி வருகிறது. எத்தியோப்பிய கிராமங்கள் மற்றும் நகரங்கள் மீது இத்தாலிய விமானங்களின் மிருகத்தனமான குண்டு வீச்சுத் தாக்குதலோடு சேர்த்து மிகவும் வன்முறைப்பட்ட இழிவான இனவெறிப் பிரச்சாரமும் தொடர்ந்து வந்தது.

இன்று பெரும் முதலாளிகள் “பிரித்தாள்வதற்காக” இனவெறியைப் பயன்படுத்துவதால், அமெரிக்காவிலுள்ள நாம், அந்த இனவெறியைப் “பிரித்தாளும் தத்துவார்த்த விஷயமாகவே” காணவேண்டும். அதே சமயம் பாசிசம் தனது வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய மிகவும் ஆபத்தான சாதனமாகவும் அதைக் காண வேண்டும். அமெரிக்காவில் பாசிசத்திற்கான பாதையைத் தடுப்பதில் நாம் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், இனவெறியை ஒழித்துக்கட்ட போராட வேண்டும் என்ற அடிப்படையான படிப்பினையை நாம் பெற வேண்டும்.

பாஸ்டனில் கருப்பு இன மக்களது வீடுகள் மீது தாக்குதல் தொடுக்கும் கும்பல்கள் இனவெறி கழிசடைப் பேர்வழிகளே. ஆனால், அவர்கள் ஒரு பாசிச இயக்கத்தின் உட்கருவுமாக இருக்கிறார்கள். இதனால்தான் அவர்கள் கறுப்பு இன அமெரிக்கர்களின் வீடுகளைத் தாக்குவதை விடுத்து தொழிற்சங்கங்களைத் தாக்கி வருகின்றனர்.

இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது, யூத எதிர்ப்புச் சக்திகள் கண்ணுக்குத் தென்படவில்லை என்பதை வைத்து நாம் தவறான முடிவுக்கு இட்டுச் செல்லப்படக்கூடாது. யூத எதிர்ப்பு என்பது அமெரிக்க அரங்கில் உயிரோடுள்ள விஷக்கிருமியாக இருந்து வருகிறது. பாசிச அபாயத்தை எதிர்த்துப் போராடுவதென்பது யூத எதிர்ப்பையும் எதிர்த்துப் போராடுவதாகும்.

பாசிச அபாயம் அதிகரிப்பதைத் தொடர்ந்து கம்யூனிச-எதிர்ப்பு, இனவெறி, பேரரசு இனவாதம் மற்றும் யூத எதிர்ப்பு போன்ற இயக்கங்களும் பிரச்சாரங்களும் அதிகரிக்கும்.

முதலாளித்துவமானது அது தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டுவதால் மட்டுமே வாழ முடிகிறது என்ற உண்மையை மூடிமறைக்கவே எப்பொழுதும் முயற்சிக்கிறது. பாசிசம் இந்த மூடிமறைத்தலை ஒருபடி முன்னெடுத்துச் செல்கிறது. பாசிசத்திற்கு முன்னர் முதலாளித்துவத்தின் பாதுகாவலர்கள் “வர்க்கக் கூட்டு” பற்றி பேசி வந்தனர். பாசிசம் அதிகாரத்திலிருக்கும்பொழுது அவர்கள் “வர்க்க முரண்பாட்டை ஒழித்துக்கட்டி விடுவது” என்று பேசினர். ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு இதுதான் அடிப்படை. சொல்லப்போனால் இது வெறும் வார்த்தை ஜாலம் என்பதுடன் பொருளற்றதுமாகும். ஏனென்றால் முதலாளித்துவம் இருக்கும் வரை வர்க்க முரண்பாடும் வர்க்கப் போராட்டமும் இருந்தே தீரும். பாசிச அபாயத்தின் இந்தக் கட்டுக்கோப்பிற்குள் மீனி மற்றும் ஏ.எப்.எல் – சி.ஐ.ஓ தலைமையின் வர்க்கக் கூட்டுக் கொள்கைகள் ஒரு கூடுதல் பரிமாணத்தை எடுக்கின்றன.

இவ்வாறு, பாசிச அபாயத்திற்கெதிரான போராட்டமென்பது இன்று வர்க்கக் கூட்டு கொள்கைகளுக்கெதிரான போராட்டத்தையே குறிக்கிறது. வர்க்கக் கூட்டு வேண்டுமென்று கூறுகின்ற தொழிற்சங்கத் தலைவர்களுக்குக்கூட டோக்ளியாட்டியின் சொற்பொழிவுகளில் ஒரு மிகவும் அடிப்படையான படிப்பினை உள்ளது. பாசிசமானது ஒருமுறை வேரூன்றிவிட்டால் அது வர்க்கக்கூட்டுக் கொள்கைகளைக் கொண்டுள்ள சங்கங்கள் உள்ளிட்டு அனைத்துத் தொழிற்சங்கங்களையும் நாசம் செய்துவிடும். அவைகளிருந்த இடத்தில் பாசிஸ்டுகள் தங்களுடைய சொந்த பாசிச தொழிலாளர் முன்னணி அமைப்புகளை உருவாக்குவார்கள்.

ஜெர்மனியிலும் இத்தாலியிலும் பாசிசத்திற்கெதிரான போராட்ட படிப்பினைகளைப் படிக்கும்பொழுதும் அமெரிக்காவில் முதலாளித்துவத்தின் பிரச்சினைகள் சம்பந்தமாகத் தோன்றும் பல புதிய “தீர்வுகளின்” தொலைதூரத்திய தாத்பரியங்களைக் காண்பதும் அவசியமாகிறது. “திட்டமிடுதல்” என்பது ஒரு கோட்பாடு என்ற முறையில் தான்தோன்றித்தனமான தன்னிச்சைப் போக்கை தலைமுழுகிவிட்டது. இந்த நோக்கங்கள் யாவும் வர்க்கக் கூட்டு என்ற “திட்ட” அடிப்படையிலானதாகும். ”பொருளாதாரத் திட்டமிடுதல்” என்பது ஏகபோக மூலதனத்தின் சேவைக்காக உள்ளது. அது சுரண்டல் மற்றும் பெரும் ஆதாயங்களுக்கான “திட்டமிடல்” ஆகும். பாசிசமும் “திட்டமிடுதல்” குறித்துப் பெரிதாகப் பேசுகிறது என்பதுடன் பெரும் முதலாளிகளின் நலனுக்காக அது திட்டமிடுகிறது.

“பிரித்தாள்வது” என்பது ஒரு சிறுபான்மையினர், பெரும்பான்மையோரை அடக்கி ஆண்டு சுரண்டும் அதிகாரத்தின் மிகவும் அடிப்படையான அம்சமாகும். அது முதலாளித்துவ ஆட்சியின் துவக்கத்திலிருந்தே ஒரு அம்சமாக இருந்து வருகிறது.

போர்த்துக்கல், இந்தியா மற்றும் இதர பல நாடுகளில் சமூக ஜனநாயகம் எதிர்மறையான பங்காற்றியுள்ள நிலைமையில் பாசிசம் தோன்றுவதற்கு முன்னரும் தோன்றியிருந்த சமயத்திலும் சோசலிஸ்டு கட்சியினுடைய தலைமை கடைபிடித்த கொள்கைகள் குறித்து டோக்ளியாட்டியின் விவாதமானது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இத்தாலியிலும் அதைப் போன்றே ஜெர்மனியிலும் பாசிசத்தை அதிகாரத்தில் ஏற்றுவதற்கான தயாரிப்பில் சமூக ஜனநாயகம் ஒரு காரணமாக இருந்துள்ளது. அதற்கான தயாரிப்புகளிலும் அது ஈடுபட்டிருந்தது. இதனால், டோக்ளியாட்டியினுடைய குறிப்புகளைப் படியெடுத்தவர் சமூக ஜனநாயகத்தின் பங்கைக் குறித்து அவர் விவாதித்த சில பகுதிகளை நீக்கியது துரதிருஷ்டவசமானதே.

பாசிசமானது முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை வெற்றிகொள்ள முடியவில்லை. பல காலம் வரை அது அவற்றை மூடிமறைத்திருந்தது. ஆனால், ஏதாவதொரு வழியில் அவை தொடர்ந்து தலைதூக்க ஆரம்பித்தன. இவ்வாறு பாசிசத்திற்கெதிரான போராட்டங்களுக்குப் புதிய வாய்ப்புகள் தோன்றின. போராட்டத்திற்கான சாத்தியப்பாட்டை முரண்பாடுகள் திறந்துவிட்டன. ஆனால் பாசிசத்தின் தோல்வியானது அணி திரட்டப்பட்ட வெகுஜன போராட்டத்தின் விளைவாக மட்டுமே வரமுடியும்.

“முடிவாக” டோக்ளியாட்டி கூறுகிறார் :

“பாசிஸ்டுகளால் ஒழுங்கமைக்கப்பட்டு அணி திரட்டப்பட்டு அவர்களின் செல்வாக்குக்கு உட்பட்ட மக்கள் ஒருநாள் காலையில் தாங்களாகவே பாசிசத்திலிருந்து விலகி, பாட்டாளி வர்க்கப் புரட்சியில் கலந்து கொள்ள நம்மிடம் வந்துவிடுவார்கள் என்று யாரும் நினைக்கக் கூடாது. அந்த மக்கள் வெளியே வருவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். நமது பக்கம் அவர்கள் வந்து சேருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.”

படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
♦  காவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் ! வெற்றி உரையில் மோடி பெருமிதம் !

பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பல அடிப்படையான கொள்கைகள் குறித்து டோக்ளியாட்டி பல நிர்ணயிப்புகளை உருவாக்கியுள்ளார். “கோட்பாடு குறித்த சரியான நிலைப்பாட்டிற்கும்” சக்திகளின் உறவு குறித்த ஒரு சரியான மதிப்பீட்டிற்கும், “நடைமுறைக் கொள்கைப் பிரச்சினைகளில் சரியான தீர்வுகளுக்கும்” அவர் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார். “நடைமுறைக் கொள்கைப் பிரச்சினை”களுக்கான சரியான தீர்வுகளுக்கு அடிப்படையாக “சரியான கோட்பாட்டு நிலைப்பாட்டை” மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அழுத்தமாகக் கூறுவதானது சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளில் தவறி விழுவதற்கு எதிரான எச்சரிக்கையாகும்.

உலக அனுபவம் என்ற பெட்டகத்தில் இருந்து குவிக்கப்பட்டிருக்கும் ஏராளமான சான்றாதாரங்களின் அடிப்படையில் டோக்ளியாட்டி பின்வரும் முடிவுகளுக்கு வருகிறார் :

• பாசிசம் என்பது முதலாளித்துவ நாடுகளில் ஒரு அபாயமாக உள்ளது. ஆனால், அது தவிர்க்க முடியாததொரு வளர்ச்சிக் கட்டமல்ல.

• பாசிசமானது, முதலாளித்துவத்தின் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் அடிப்படையில் தீர்க்க முடியாது. இதனால் அடிப்படையான வர்க்க முரண்பாடும் வர்க்கப் போராட்டமும் தொடரும்.

• பாசிசம் அதிகாரத்திலிருக்கும் பொழுது, மிக மோசமான நிலைமைகளிலும் கூட ஒரு வெகுஜன இயக்கத்தை உருவாக்கி பாசிசத்தைத் தோற்கடிப்பதற்குப் போராடுவது சாத்தியமே.

• பாசிசமானது தன்னுடைய சொந்த உள் முரண்பாடுகளால் நொறுங்கி விழுந்துவிடாது. ஆனால், அதை தோல்வியுறச் செய்ய அந்த முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

 டோக்ளியாட்டி இந்தச் சொற்பொழிவுகளில் கம்யூனிஸ்டு அகிலத்தின் குழுக்கள் 1934 -ம் ஆண்டுவரை பெறப்பட்ட முடிவுகளையும், அனுபவங்களையும் பிரதிபலித்தார். 1935-ம் ஆண்டில் கம்யூனிஸ்டு அகிலமானது வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஏழாவது உலக மாநாட்டைக் கூட்டியது. கைதியாக இருந்து இட்லருடைய பாசிசத்திற்கு சவால்விட்ட வீரஞ்செறிந்த கம்யூனிஸ்டுத் தலைவரான ஜார்ஜ் டிமிட்ரோவ், காங்கிரசுக்கு சமர்ப்பித்த பிரதான அறிக்கையில் அந்நாள் வரையிலான அனைத்து அனுபவங்களையும் முடிவுகளையும் கொடுத்திருந்தார். “பாசிசத்திற்கெதிரான ஒற்றுமை” – என்ற அறைகூவல் அகிலத்தின் ஏழாவது காங்கிரசிலிருந்து வெளிப்பட்டது.

கஸ் ஹால், பொதுச் செயலாளர், அமெரிக்க கம்யூனிஸ்டுக் கட்சி.

டோக்ளியாட்டியின் இந்தச் சொற்பொழிவுகள் ஏழாவது உலக காங்கிரசிற்கான கூட்டுத் தயாரிப்புகளில் ஒரு முக்கியமான அம்சமாக இருந்தன. உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்டு இயக்கமானது தனது பணியின் காரணமாக பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் தன்னுடைய முன்னணிப் படைப் பாத்திரத்தைப் பூர்த்தி செய்ய முடிந்தது. கம்யூனிஸ்டுக் கட்சிகளும், பாசிச-எதிர்ப்பு ஒற்றுமை என்ற அதனுடைய கொள்கைகளும்தாம் பாசிச சவாலை முறியடித்து பாசிச-எதிர்ப்புக்கு வெகுஜன அடித்தளத்தை உருவாக்கித் தந்தன.

இத்தகைய சொற்பொழிவுகள் சோவியத் யூனியனில் நிகழ்த்தப்பட்டது வரலாற்று விபத்து அல்ல. ஒரு புரட்சிகர தொழிலாளி வர்க்க சோசலிச அரசான சோவியத் யூனியன்தான் பாசிசத்திற்கான பாதையைத் தடுத்து நிறுத்திய மைய சக்தியாகும். இரண்டாவது உலக யுத்தத்தில் பாசிச சக்திகளை இராணுவ ரீதியாக தோற்கடித்ததில் சோவியத் யூனியன் பிரதான சக்தியாக திகழ்ந்ததும் வரலாற்று விபத்து அல்ல. சோவியத் யூனியனும் இதர சோசலிச நாடுகளும் இன்று உலக ஏகாதிபத்திய பாதைக்கு பிரதான தடைக்கல்லாகவும், பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் பிரதான தளமாகவும் இருப்பதும் வரலாற்றின் விபத்து அல்ல.

இந்த நூலிலுள்ள சொற்பொழிவுகள் வரலாற்றுப் படிப்பினைகள் மட்டுமல்ல. அவை மார்க்சிய – லெனினியத்தைப் பயன்படுத்துவதற்கான படிப்பினைகளும் ஆகும். அவை, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தொழிலாளி வர்க்க அணுகுமுறைக்கான படிப்பினைகள் ஆகும்.

 22 ஆகஸ்டு 1975

கஸ் ஹால்,
பொதுச் செயலாளர்,
அமெரிக்க கம்யூனிஸ்டுக் கட்சி.

(தொடரும்)

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

இவன் சாகாமல் எப்படித் தப்பினான் ?

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 16 (தொடர்ச்சி…)

லெக்ஸேய் தன் கால்களை முதல் தடவையாகக் கவனித்துப் பார்த்தான். பாதங்கள் விகாரமாக வீங்கிக் கறுத்திருந்தன. அவற்றை தொட்ட போதெல்லாம் சுரீரென்ற வலி மின்னோட்டம் போல உடல் முழுதிலும் பாய்ந்தது. ஆனால் லேனச்காவுக்கு முக்கியமாக கவலை ஏற்படுத்திய விஷயம் விரல் நுனிகள் கறுத்துப்போய் அடியோடு உணர்விழந்து விட்டிருந்தது தான் என்பது புலப்பட்டது.

மிஹாய்லா தாத்தாவும் தெத்தியாரென்கோவும் மேஜை அருகே உட்கார்ந்திருந்தார்கள். விமானியின் பிளாஸ்க்கிலிருந்து மதுவை இரகசியமாக ஊற்றிப் பருகிவிட்டு இருவரும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். மிஹாய்லா தாத்தாவின் கிழக் கீச்சுக்குரல், ஏற்கனவே எத்தனையோ தடவை சொல்லிவிட்ட கதையைத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது:

“ஆக, எங்கள் பையன்கள் காடு வெட்டிய திறப்பு வெளியிலிருந்து அவனைத் தேடிக் கண்டுபிடித்தார்கள். காப்பரண்கள் அமைப்பதற்காக ஜெர்மானியர் அங்கே மரங்களை வெட்டியிருந்தார்கள். இந்தப் பயல்களின் தாய், அதாவது என் மகள், சிறாய் பொறுக்கி வர இவன்களை அங்கே அனுப்பியிருக்கிறாள். அங்கே தான் பயல்கள் இவனைப் பார்த்தார்களாம். ஆகா, எப்பேர்பட்ட அற்புதம் தெரியுமா? முதலில் அது கரடி என்று நினைத்தார்களாம் குண்டடிப்பட்டு எப்படியோ புரள்கிறது என்று எண்ணினார்கள். ஓடிப்போய்விட நினைத்தார்களாம், ஆனால் ஆவலை அடக்க முடியவில்லையாம். இது என்ன கரடி, ஏன் இப்படிப் புரள்கிறது என்று தெரிந்து கொள்வதற்காகத் திரும்பி வந்தார்களாம். ஆகா, அப்படியா? பார்த்தார்களாம், விலாவுக்கு விலா புரண்டதாம், முனகிற்றாம்….”

“ ’புரண்டதாம்’ என்பது எப்படி?” என்று சந்தேகம் கிளப்பினான் தெத்தியாரென்கோ.

“இவன் எப்படிப் புரண்டான் என்று இவனிடமே கேள். நான் பார்க்கவில்லை. பையன்கள் சொல்லுகிறார்கள் – முதுகுப் புறமிருந்து வயிற்றுப் புறத்திற்கும் வயிற்றுப் புறமிருந்து முதுகுப் புறத்திற்குமாகப் புரண்டானாம். வெண்பனியில் ஊர்ந்து செல்வதற்கு இவனிடம் வலு இல்லையே, அதனால் அப்பேர்பட்டவனாக்கும் இவன்!” என்றார் கிழவர்.

தெத்தியாரென்கோ துள்ளி எழுந்து நண்பனைப் பார்க்கத் துடித்தான். அலெக்ஸேயின் அருகே மாதர்கள் வேலையில் முனைந்தார்கள். மருத்துவத்தாதி கொண்டுவந்திருந்த சாம்பல் நிற இராணுவக் கம்பளங்களால் அவனைச் சுற்றிப் போர்த்தார்கள்.

“நீ உட்கார் தம்பி, உட்கார். துணி உடுத்துவதும் போர்த்துவதும் நம் வேலை அல்ல, ஆண்களின் காரியம் அல்ல. நீ பதற்றப்படாமல் உட்கார்ந்து நான் சொல்வதைக் கேள். அப்புறம் உன் மேலதிகாரிகளுக்குச் சொல்லு இதை எல்லாம்… இந்த ஆள் பெரிய வீரச் செயல் செய்திருக்கிறான்! எப்பேர்பட்டவன் பார்! இந்த ஒரு வாரமாக நாங்கள் கூட்டுப்பண்ணைக்காரர்கள் எல்லோரும் இவனுக்கு பணிவிடை செய்கிறோம். இவனாலோ அசையக்கூட முடியவில்லை. ஆனால் தன் சக்தியை எல்லாம் திரட்டி எங்கள் காடு வழியாகவும் ஊர்ந்திருக்கிறான். எத்தனை பேரால் இப்படிச் செய்ய முடியும், தம்பி!”

தெத்தியாரென்கோவின் காதருகே குனிந்து கிழவர் தமது அடர்ந்த மென் தாடியால் அவனுக்குக் கிச்சுகிச்சு மூட்டினார்:

“ஒன்றுதான் எனக்குப் பிடிபடமாட்டேன் என்கிறது. இவன் சாகாமல் எப்படித் தப்பினான், ஊம்..? ஜெர்மன்காரன்களிடமிருந்து ஊர்ந்து தப்பிவிட்டான், சரிதான், ஆனால் காலனிடமிருந்து தப்பிவிட முடியுமா எங்கேயாவது? வேறும் எலும்புக் கூடு இவன், எப்படி ஊர்ந்து வந்தான் என்பது எனக்கு விளங்கவில்லை. தன்னவர்களுக்காக ரொம்ப ஏங்கி போயிருப்பான், விமான நிலையம், விமான நிலையம் என்று. இன்னும் விதம்விதமான சொற்கள். யாரோ ஒல்கா என்பவள் பெயர். அப்படி யாராவது உங்கள் ரெஜிமெண்டில் இருக்கிறார்களா? அல்லது வீட்டுக்காரியோ ஒருவேளை? நான் சொல்வதை நீ கேட்கிறாயா இல்லையா, விமானித் தம்பி, ஏய் விமானித் தம்பி, கேட்கிறாயா? அடே…

தெத்தியாரென்கோ, கிழவனாரின் பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இந்த ஆள், தன் நண்பன், ரெஜிமெண்டில் மிகவும் சாதாரண இளைஞனாகக் கருதப்பட்டவன், குளிரில் மறுத்தோ அல்லது அடிபட்டு நொறுங்கியோ போயிருந்த கால்களுடன், இளகிய வெண்பனி மீதாக இரவும் பகலும் ஊர்ந்து காட்டையும் சதுப்பு நிலத்தையும் கடந்தான்; வலிவை இழந்த பிறகும் விடாது ஊர்ந்தான், உருண்டான் – பகைவரிடமிருந்து அப்பால் சென்றுவிட வேண்டும், தன்னவர்களிடமிருந்து சேர்ந்து விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் – இது எப்படி முடிந்தது என்று அனுமானிக்க முயன்று கொண்டிருந்தான் தெத்தியாரென்கோ. சண்டை விமானியின் தொழில். தெக்தியாரென்கோவை ஆபத்துக்குப் பழக்கப்படுத்தியிருந்தது. விமான சண்டையில் ஈடுபடும்போது அவன் சாவைப்பற்றி எண்ணியதே கிடையாது, மாறாக ஏதோ தனி வகைப்பட்ட, களிபொங்கும் உள்ளக் கிளர்ச்சி கூட ஏற்படுவது உண்டு. ஆனால் இந்த மாதிரி, காடு வழியாக, தன்னந்தனியாக….

“எப்போது இவனைக் கண்டுபிடித்தீர்கள்?”

“எப்போதா?” கிழவர் உதடுகளை அசைத்தார். “எப்போது? ஆமாம், சனிக்கிழமை, போன ஞாயிற்றுக் கிழமைக்கு முந்தி ஆகவே ஒரு வாரத்துக்கு முன்பு.”

தெத்தியாரென்கோ மனதுக்குள் கணக்கிட்டுப் பார்த்தான். அலெக்ஸேய் மெரேஸ்யேவ் பதினெட்டு நாட்கள் ஊர்ந்திருக்கிறான் என்று தெரிய வந்தது. காயமுற்றவன், உணவு இல்லாமல் இவ்வளவு நீண்ட காலம் தவழ்ந்தான், ஊர்ந்தான் என்பது நம்பவே முடியாததாக இருந்தது….

இதற்குள் லேனச்கா, அலெக்ஸேயைப் போர்த்தி மூடிவிட்டாள்.

“ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள், சீனியர் லெப்டினன்ட். மாஸ்கோவில் சில நாட்களில் உங்கள் காயத்தைக் குணப்படுத்தி நடமாடச் செய்து விடுவார்கள். மாஸ்கோ பெரிய நகரமாயிற்றே! இன்னும் மோசமான காயங்களைக் கூட அங்கே குணப்படுத்தி விடுவார்கள்!” என்ற சொற்களைத் தெளிவாக, தனித் தனியாக, கடலைப்போல் உதிர்ந்தாள் லேனச்கா.

அவள் மட்டுமீறி உற்சாகக் கிளர்ச்சி கொண்டிருப்பதையும் மாஸ்கோ மருத்துவர்கள் அலெக்ஸேயை ஒரு நொடியில் குணப்படுத்தி விடுவார்கள் என்று அவள் வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டு போனதையும் கண்டு, மருத்துவப் பரிசோதனையின் விளைவுகள் மகிழ்ச்சி தருபவை அல்ல, நண்பனின் நிலைமை மோசம் என்பதை தெத்தியாரென்கோ புரிந்து கொண்டான்…

தங்கள் எதிர்பாராத விருந்தாளியை வழியனுப்புவதற்குப் ப்ளாவ்னி கிராமத்தில் இருந்தவர்கள் எல்லோரும் திரண்டு வந்தார்கள். காட்டு ஏரி பனிக்கட்டியாக உறைந்து போயிருந்தது. அதன் விளிம்புகள் இளகத் தொடங்கிவிட்டன, எனினும் நடுவில் அது சமமான உறுதியுள்ள பனிப் பாளமாக இருந்தது. விமானம் இந்தப் பனிப் பாளத்தின் மேல் நின்றது. அங்கே போவதற்குப் பாதை இல்லை. ஒரு மணி நேரத்திற்கு முன் மிஹாய்லா தாத்தாவும் தெக்தியாரென்கோவும் லேனக்சாவும் பதித்திருந்த அடித்தடம், பொருபொருத்த மணல் போன்ற கன்னிவெண்பனி மீது கொடிவழியாகச் சென்றது. இப்போது இந்தச் சுவடு வழியாக உறைந்த ஏரியை நோக்கி விரைந்தது ஆட்கள் கூட்டம். கூட்டத்திற்கு முன்னே சென்றார்கள் சிறுவர்கள். ஆழ்ந்த போக்குடைய செர்யோன்காவும் கிளர்ச்சி பொங்கும் பேத்யாவும் முன்வரிசையில் நடந்தார்கள்.

படிக்க:
இது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா ?
குஜராத் : தலித் திருமணங்களை எதிர்க்கும் ஆதிக்க சாதி வெறி !

விமானியைக் காட்டில் தேடிக் கண்ட பழைய நண்பன் என்ற உரிமையுடன் செர்யோன்கா ஸ்டிரெச்சருக்கு முன்னால் கம்பீரமாக நடந்தான். கொல்லப்பட்ட தகப்பனாரின் பிரம்மாண்டமான நமுதா ஜோடுகளைப் போட்டுக் கொண்டிருந்தான் அவன், எனவே அவை வெண்பனியில் சிக்கிக் கொள்ளாதபடி ஜாக்கிரதையாக நடக்க முயன்றான். அழுக்கு மயமான முகங்களும் பளிச்சிடும் வெண்பற்களுமாக, நம்ப முடியாத அளவு விந்தையான கந்தல்கள் அணிந்திருந்த சிறுவர் கூட்டத்தை அதிகார தோரணையுடன் அதட்டியவாறு சென்றான் சொயோன்கா. தெத்தியாரென்கோவும் மிஹாய்லா தாத்தாவும் டிரெச்சரை முன்னும் பின்னும் தாங்கிக் கொண்டு நடந்தார்கள். அலெக்ஸேயின் போர்வையைச் சரிசெய்வதும் தன் மப்ளரை அவன் தலைக்குக் காப்பாகக் கட்டுவதுமாக லேனச்கா பக்கவாட்டில் கன்னி வெண்பனி மீது ஓடினாள். பெண்களும், சிறுமிகளும், கிழவிகளும் பின்னே சென்றார்கள்.

“ஆஸ்பத்திரியிலிருந்து எங்களுக்குக் கட்டாயம் எழுது! முகவரியை நினைவு வைத்துக் கொள்: கலீனின் பிராந்தியம், பொலொகோவ்ஸ்கிய் மாவட்டம், வருங்கால கிராமம் ப்ளாவ்னி, ஊம்? வருங்கால கிராமம், தெரிந்ததா? கவலைப் படாதே, கடிதம் வந்து சேர்ந்துவிடும், முகவரி சரியானது” என்றார் மிஹாய்லா தாத்தா.

ஸ்டிரெச்சர் விமானத்தில் ஏற்றப்பட்டது. விமானப் பெட்ரோலின் சுள்ளென்ற நெடியை முகர்ந்ததுமே மகிழ்ச்சி ஊற்றெடுப்பதை அலெக்ஸேய் உணர்ந்தான். அவனுக்கு உயரே ஸெல்லூலாய்டு முகடு இழுத்து மூடப்பட்டது. வழியனுப்ப வந்தவர்கள் கைகளை வீசி ஆட்டினார்கள். சாம்பல் நிறத் தலைகுட்டை அணிந்து காக்கை போன்று தோற்றம் அளித்த நீள்மூக்குக் கிழவி அச்சத்தை விட்டுவிட்டு, விமானச் சுழல் விசிறியால் கிளப்பப்பட்ட காற்றையும் பொருட்படுத்தாமல் விமானத்தின் அருகே பாய்ந்து சென்று விமானி அறையில் உட்கார்ந்திருந்த தெக்தியாரென்கோவை நெருங்கி, அலெக்ஸேய் சாப்பிடாமல் மிச்சம் வைத்திருந்த கோழிக் கறிப் பொட்டலத்தை அவன் கையில் திணித்தாள்.

மிஹாய்லா தாத்தா பெண்டிரை அதட்டுவதும் சிறுவர்களை விரட்டுவதுமாக விமானத்தைச் சுற்றி ஓடிச்சாடினார். காற்று அவருடைய தொப்பியைப் பிய்த்து அகற்றிப் பனிக்கட்டியில் உருட்டிச் சென்றது. அவர் வெறுந்தலையாக நின்றார். அவருடைய வழுக்கையும் காற்றால் பரத்தப்பட்ட அடர்த்தியற்ற நரை மயிரும் பளிச்சிட்டன. ஆனால் அலெக்ஸேய் இந்தக் காட்சிகளில் எதையும் பார்க்கவில்லை. விமானம் கிளம்பி ஓடத் தொடங்கியதும் மிஹாய்லா தாத்தா கையை வீசி ஆட்டினார். அந்தப் பல்வண்ண மாதர்கள் கூட்டத்தில் இருந்த ஒரே ஒரு ஆடவர் அவர் மட்டுமே.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

பட்டாபிஷேகம் பாப காரியம் சாஸ்திரம் சம்மதம் இல்லை !

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 18


காட்சி : 25 (தொடர்ச்சி…)

இடம் : தர்பார்
உறுப்பினர்கள் : காகப்பட்டர், ரங்கு பட்டர், தளபதிகள், வீரர்கள், சிவாஜி, மோரோபந்த், சிட்னீஸ்.

காகப்பட்டர் : பட்டாபிஷேகம் பாப காரியம் சாஸ்திரம் சம்மதம் இல்லை துளியும் துருவி துருவிப் பார்த்தும் பலனில்லை. நான் சம்மதிக்க முடியாது சிட்னீஸ்.

சிட்னீஸ் : ஏன்? ஏன் சம்மதிக்க முடியாது? தாங்களே கூறினீரே, சாஸ்திர முறைப்படி பட்டாபிஷேகம் செய்யலாமென்று. இப்போது தாங்களே மறுக்கிறீரே! மராட்டியரின் களிப்பைச் சிதைக்கிறீரே!

காகப்பட்டர் : சாஸ்திரத்தை மீண்டும் பார்த்தேன். சாங்கோ பாங்கமாக தீர்க்கமாக யோசித்தேன். என்ன செய்வேன் சிட்னீஸ்? சிவாஜிக்கு மகுடாபிஷேகம் செய்வது பாபகாரியம் என்றே தோன்றுகிறது. நான் சம்மதிக்க முடியாது.

சிட்னீஸ் : வீணையைக் காட்டி நரம்பை ஒடிக்கிறீரே!

காகப்பட்டர் : ஆர்வம் மிக்கவனே ! ராஜபக்தி, சினேக பக்தி, உனக்கு முக்கியமான குணங்கள் அவை. ஆனால் தேவ பக்தியை நான் இழக்கலாமோ? இவ்வளவு ஏடுகளும் கூறுகின்றனவே பாப காரியம். பாப காரியம் என்று. நான் என்ன செய்ய?

சிட்னீஸ் : இந்த ஏடுகளையெல்லாம் நாடு, ஏற்காது ஸ்வாமி. மராட்டிய மணிமுடியை அவர் தரித்தே ஆக வேண்டும். கண் இருக்கும் போதே அதைக் காண வேண்டும் என்று துடிக்கிறது மராட்டியம்.

காகப்பட்டர் : பரிதாபமாகத்தான் இருக்கு. நான் என்னத்தைச் செய்ய? பாலைவனத்திலே புகுந்த பிறகு தாகவிடாய் ஏற்பட்டால் கஷ்டந்தான்.

சிட்னீஸ் : உவமை கூற இதுவா ஸ்வாமி சமயம்?

காகப்பட்டர் : என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? உன் நாட்டு மக்களை மகிழ்விப்பதற்காக என்னைப் பாபி ஆகும் படி சொல்கிறாயா? என் தவம், ஞானம், நேமம், நிஷ்டை , அருள் இவைகளையெல்லாம் நாசம் செய்து கொள்ளச் சொல்கிறாயா? சிட்னீஸ்! நீ காகப்பட்டரை நன்னா அறிய மாட்டாய். சாஸ்திர சம்மதமற்றக் காரியத்தைச் செய்யச் சொல்லி சர்வேஸ்வரனே வந்து சொன்னால் கூடச் செய்ய மாட்டேன். ஆகமாதிகளை மேலும் ஆராய்ந்த பிறகுதான் இந்த முடிவுக்கு வந்தேன். மேலும் இந்த மண்டலத்தின் முதன் மந்திரி. முதல் மந்திரி முறையிலே இருக்கிற மோரோ பண்டிதர் என்னும் பிராமணோத்தமர் கூட இதை எதிர்த்தாராமே?

சிட்னீஸ் : ஓஹோ! அவருடைய வேலையா இது? மோரோ பண்டிதரைச் சந்தித்ததின் விளைவா இது?

காகப்பட்டர் : பைத்தியக்காரா? ஏண்டா வீணா அவர் மேலே சந்தேகப்பட்டு பாபத்தை தேடிக் கொள்றே இதோ பார்! டே ரங்கு கொஞ்சம் வெளியே போய் இரு. யாரும் இங்கே வரப்படாது. ஜாக்கிரதை, போ! இதோ பார், சிட்னீஸ் நீ காயஸ்த குலம், க்ஷத்திரியனாகலாம். சிவாஜி க்ஷத்திரியனாக முடியாது. இப்போது சம்மதம்னு சொல்லு. ராஜ்யாபிஷேகம் செய்து வைக்கிறேன். உனக்கு முடி தரித்துக் கொள். மராட்டியத்துக்கு மகாராஜனாக்குகிறேன்.

(பதறி)

சிட்னீஸ் : என்ன, என்ன? எனக்குப் பட்டமா? சிவாஜி சிருஷ்டித்த ராஜ்யத்துக்கு நான் ராஜனாவதா?

காகப்பட்டர் : நான் ஆக்றேண்டா ராஜனா?

சிட்னீஸ்: (ஆத்திரமடைந்து ) சாஸ்திரம் இதற்குச் சம்மதிக்கிறதா? நியாயம், நீதி இதிலே இருக்கிறதா? ஆகமம் இந்த அக்கிரமத்துக்கு ஆதரவு தருகிறதா? ஸ்வாமி! என்னைப் பரீட்சிக்கிறீரா?

காகப்பட்டர் : பைத்தியக்காரா? உண்மையைத் தாண்டா சொல்றேன். உனக்குப் புத்தியிருந்தா பூபதியாகலாம். முறையல்ல, நெறியல்ல, தர்மமல்ல என்றெல்லாம் தயங்கினா பலன் இல்லையே. தர்மம் எது? அதை நான் கவனித்துக் கொள்கிறேன். உனக்குச் சம்மதமா?

சிட்னீஸ் : இந்தச் சதிக்கா? சண்டாளச் செயலுக்கா?

காகப்பட்டர் : மந்த மதியடா உனக்கு.

சிட்னீஸ் : நொந்து கிடக்கும் மனதிலே தீ மூட்டாதீர். சிவாஜிக்கு மகுடாபிஷேகம் செய்ய வந்து, சிவாஜியின் மாளிகையிலே இருந்து கொண்டே, சிவாஜிக்கு உரிய ராஜ்யத்தை, சிவாஜிக்கு சேவை செய்யும் எனக்கு, ஆஹா என்னால் கேட்டுச் சகிக்கவும் முடியவில்லை. இந்தச் செயலால் சிட்னீஸைத் துரோகியாகும்படிச் சொல்கிறீர். தூபமிடுகிறீர். இவ்வளவு ஏடுகளும் உமக்கு இந்த அநீதியையா காட்டுகின்றன?

காகப்பட்டர் : சிட்னீஸ்! சித்தத்திலே சீற்றம் குடிபுகுந்தால் பலன் என்ன? கலக்கம், குழப்பம். இப்படிப்பட்ட சமயத்திலே வரத்தான் செய்யும். தர்மமா? அதர்மமா? பாபமா? புண்ணியமா? என்றெல்லாம் எண்ணிக் குழப்பம் அடையறே. சிவாஜி நம்முடைய உயிர்த் தோழனாயிற்றே, அவனுக்குத் துரோகம் செய்யலாமான்னு எண்ணித் திகைப்பு அடையறே.. குருக்ஷேத்திர பூமியிலே இதே நிலை அர்ச்சுனனுக்கு ஏற்பட்டது. காண்டீபத்தைக் கீழே போட்டுவிட்டான். பரந்தாமன் சொன்னார் ‘பார்த்திபா அண்ணன் தம்பிகள் என்றும், பந்து மித்திரர்கள் என்றும் எண்ணிக் கலங்காதே, என் மேலே பாரத்தைப் போட்டுவிடு, ஆரம்பி யுத்தத்தை என்று. கீதா வாக்கியம் தெரியுமா சிட்னீஸ் உனக்கு? என் மீது பாரத்தைப் போட்டுவிட்டு தைரியமாகச் சம்மதித்துவிடு.

சிட்னீஸ் : வேதியரே! எனக்கு உம்மைப் பார்க்கவும் கூசுகிறது.

காகப்பட்டர் : முட்டாளே! முடியடா முடி மராட்டிய மண்டலத்தின் மணிமுடி . சாம்ராஜ்யம், செங்கோல், சிம்மாசனம். ராஜயோகம் மன்னனாக வேண்டிய சிவாஜியும், அவனைச் சேர்ந்தவாளும் எதிர்ப்பாரே என்ற பயமா? நானிருக்கப் பயமேன்? நாட்டு மக்களைக் கூட்டி உன் பக்கம் நிற்கச் செய்கிறேன்.

சிட்னீஸ்: போதுமையா உமது போதனை. சிங்கத்தின் உணவைத் திருடும் சிறுநரி என்று எண்ணினீரோ என்னை?

காகப்பட்டர் : நரிக்குப் புத்தி உண்டு நீ மகா மண்டு போடா.

சிட்னீஸ் : உன் எதிரே நிற்பது கூடப் பாபம். என் வாழ்நாளில் நான் இப்படிப்பட்ட வஞ்சகத்தைக் கண்டதே இல்லை.

(போகிறான்; ரங்கு வருதல்)

ரங்கு : என்ன ஸ்வாமி இது? புயல் கிளப்பி விட்டீரோ?

காகப்பட்டர் : புயல் என் கோபம் ; தென்றல் என் சிரிப்பு ; மண்டலம் நம் கமண்டலத்துக்குள் அடக்கம்.

ரங்குப்பட்டர் : ஸ்வாமி, சிட்னீஸ் உம்முடைய திட்டத்தை ஏற்றுக் கொள்ளமாட்டேன்னு பிடிவாதமா சொல்லி விட்டானே?

காகப்பட்டர் : ஆமாம் அவனுக்கு என்ன ஆத்திரம், அழுகை வந்தது தெரியுமோ? சரியான பயல்களெல்லாம் கிடைத்திருக்காண்டா இந்த சிவாஜிக்கு.

படிக்க:
குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் !
பேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் !

ரங்குப்பட்டர் : இப்ப அவன் இருக்கிற நிலையை கவனிச்சா அவனாலே ஏதாவது வம்பு வருமோன்னு தோன்றது ஸ்வாமி.

காகப்பட்டர் : நானும் கூடத்தான் அப்படி எண்றேன். இனி நாமும் முடிவுக்கு வந்தாகணும்.

ரங்குப்பட்டர் : ஆமாம் ஸ்வாமி இப்படிச் சதா ஊஞ்சல் ஆடுகிற மாதிரி இருந்தா ……

காகப்பட்டர் : திடீர்னு அறுந்து போனாலும் போகும்.

ரங்குப்பட்டர் : ஆமாம், சிட்னீஸ் சீறினதைப் பார்த்தா இனித் தங்களுடைய சம்மதத்தைக் கேட்காமலே கூட பட்டாபிஷேகத்தை நடத்திவிடுவான் போல இருக்கு.

காகப்பட்டர் : அப்படிச் செய்யமாட்டான்! சரி, எதற்கும் இனி கால தாமதம் செய்யக்கூடாது. நீ சென்று மோரோபந்தைக் கண்டு அவரிடம் சொல்லிவிடு . குரு பலமான சாஸ்திர விசாரணைக்குப் பிறகு சிவாஜிக்குப் பட்டம் சூட்டிவிடுவதுண்ணு தீர்மானித்து விட்டார். ஆரிய தர்மத்தைக் காப்பற்ற அதுதான் சிறந்த மார்க்கம் என்று குரு நம்பறார். உம்மிடம் சொல்லச் சொன்னார். விசாரப்பட வேண்டாம்; பயமும் வேண்டாம்ணு. அவரிடம் வினயமாய்ச் சொல்லிவிடு. டே ரங்கு என் ஏற்பாட்டிற்கு அவரையும் சம்மதிக்கச் சொல்லு.

ரங்குப்பட்டர் : ஆகட்டும். இதோ போகிறேன்.

காகப்பட்டர் : அங்கு எங்காவது அழுது கொண்டிருப்பான். அந்த அசட்டுச் சிட்னீஸ். அவனிடம் சொல்லு. உன் ராஜ் விசுவாசத்தையும், திடமனதையும் உத்தம் குணத்தையும் மெச்சிண்டிருக்கிறார். உன்னைக் குரு சோதிச்சுப் பார்த்தார். நீ துளி கூட சத்தியத்திலே இருந்து தவறாமல், துளி கூட மனமயக்கமே காட்டாததைப் பார்த்து பூரிச்சுப் போனார். பட்டாபிஷேகத்துக்கான காரியத்தைத் துரிதப்படுத்தப் சொன்னார். அப்படீன்னு சொல்லுடா.

ரங்குப்பட்டர் : ஸ்வாமி! இப்ப முடிவான தீர்மானமாயிடுத்துன்னு அர்த்தமோ?

காகப்பட்டர் : ஆமா! சிவாஜிக்குத்தாண்டா பட்டாபிஷேகம்.

ரங்குப்பட்டர் : குருதேவர் முதலில் முடியாது என்றீர். பிறகு சம்மதம்ணு சொன்னீர். மறுபடியும் முடியாதுண்ணு சொல்லி விட்டீர். இப்படி மறுபடியும் சம்மதம்ணு சொல்றா.

காகப்பட்டர் : நாலு முறை கர்ணம் அடித்தேன்னு சொல்றியோ!

ரங்குப்பட்டர் : கர்ணம் போட்டதாகச் சொல்வேனா குரு

காகப்பட்டர் : சீடனல்லவா சொல்லமாட்ட டே ரங்கு! நாலு கர்ணம்தான் அடித்தேன். அதிலேதப்பு என்னடா? நமக்கு இருப்பது நாலு வேதம்டா, நாலு. தெரியுமோ? போ, போ போய்ச் சொன்னதைச் செய்யடா.

(போகிறான்)

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

முதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்

டோக்ளியாட்டி

மிழில் பாசிசம் என்ற சொல் குறித்து பொதுவில் “சர்வாதிகாரம்” என்று மட்டும் புரிந்து கொள்கிறோம். ஆனால் பாசிசம் என்பது ஒரு நாட்டின் குறிப்பிட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து தவிர்க்கவியலாமல் எழுகிறது. பாசிசத்தின் அடிப்படையாக முதலாளித்துவத்தின் நெருக்கடி இருந்தாலும், வடிவத்தில் அது ஒவ்வொரு நாட்டிற்கேற்ற அவதாரத்தை எடுத்துக் கொள்ளும். இந்தியாவில் அது தற்போது பார்ப்பனிய பாசிச அல்லது காவி கார்ப்பரேட் பாசிச அபாயமாக எழுந்து வருகிறது.

பிரக்யா சிங் தாக்கூர், ஆனந்த்குமார் ஹெக்டே, கிரிராஜ் கிஷோர், சாக்ஷி மகாராஜ் போன்ற பாஜகவின் நாடறிந்த மதவெறியர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்பதும், பாஜகவின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியப் பங்கு சந்தை துள்ளிக் குதிப்பதும் வேறு வேறு அல்ல! முதலாளித்துவ ஜனநாயகம் தனது கட்டுமானத்தைக் கலைத்து போலியான ஜனநாயக வேடத்தை அம்மணமாக்கி நேரடியாக போராடும் மக்களை ஒடுக்குவதில் முனைந்து நிற்கிறது. அதே நேரம் இன்னொரு பிரிவு மக்களை தனது காலாட்படையாக திரட்டிக் கொள்கிறது. காவி கார்ப்பரேட் பாசிச அபாயம் என்பதை ஆழமாக புரிந்து கொள்ள இந்த தொடர் நமக்கு உதவும். தொடர்ந்து படியுங்கள்!

பால்மிரோ டோக்ளியாட்டி – அறிமுகக் குறிப்பு :

இத்தாலியில் முசோலினியின் பாசிச ஆட்சிக் காலகட்டத்தில் (1922 – 1943) கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளான அமைப்புகளில் ஒன்று இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி. இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் பால்மிரோ டோக்ளியாட்டி.

இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் உறுப்பினராகப் பணிபுரிந்த 1934 – 1938 காலகட்டத்தைத் தவிர்த்து, இவர் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகப் பதவி வகித்தார். பாசிச ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு அமைக்கப்பட்ட அரசாங்கத்தில், 1944 – 1945 காலகட்டத்தில் இத்தாலியின் துணைப் பிரதமராகவும், 1945 -1946 காலகட்டத்தில் இத்தாலியின் நீதித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

1935-ம் ஆண்டு சோவியத் ரசியாவில் உள்ள லெனின் பள்ளியின் இத்தாலியப் பிரிவில் பால்மிரோ டோக்ளியாட்டி ”எதிரிகள்” என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் பிரதான பகுதியை “Lectures on Fascism” என்ற பெயரில் அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி 1976-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிட்டது. நியூ யார்க்கைச் சேர்ந்த சர்வதேச வெளியீட்டகம் இந்நூலை வெளியிட்டது. கடந்த 1998-ம் ஆண்டு செப்டெம்பரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 17-வது அகில இந்திய மாநாட்டுச் சிறப்பிதழாக இந்நூல் தமிழில் வெளியிடப்பட்டது. இதனை NCBH வெளியீட்டகம் வெளியிட்டது. இனி நூலுக்குள் செல்லலாம்.

****

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | பாகம் – 1

முன்னுரை:

பால்மிரோ டோக்ளியாட்டியின் இத்தகைய உரைகளை வெளியிடுவதன் மூலம் இண்டர்நேஷனல் பப்ளிஷர்ஸ் பிற்போக்கு சக்திகளுக்கும் பாசிச சக்திகளுக்குமெதிரான போராட்டத்திற்கு ஒரு முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளனர். வரலாற்றுக் கண்ணோட்டத்திலிருந்து காணும்பொழுது சிலருக்கு இது ஆர்வத்தைத் தூண்டும் புத்தகமாக இருக்கக்கூடும். ஆனால், அமெரிக்காவிலுள்ள மக்களுக்கு இத்தகைய சொற்பொழிவுகள் நாம் படித்துப் பயன்படுத்தப்பட வேண்டிய வரலாற்றுப் படிப்பினைகளாக இருக்கும்.

கோட்பாடு, அரசியல் மற்றும் தத்துவார்த்த சிந்தனை என்ற வடிவத்தில் வைத்துக் காணும் பொழுது அனுபவம் என்ற முக்கிய அம்சத்திற்கு மாற்று எதுவும் இருக்க முடியாது.

பால்மிரோ டோக்ளியாட்டி.

அனுபவம் அதிகரிக்கும் பொழுது அதிலிருந்து பெறப்படும் முடிவுகளும் படிப்பினைகளும் ஆழமானதாகும், விளக்கமானதாகவும் இருக்கும். ஒருவருடைய நேரடி பங்கேற்பும் அனுபவங்களும் வெகுஜனங்களின் பொதுவான அனுபவம் என்ற இழையில் ஊடும் பாவுமாக இருக்கும்பொழுது சிந்தனைகள் மேலும் தெளிவாக இருக்கும். ஒவ்வொரு நாட்டின் தொழிலாளி வர்க்கத்தின் மற்றும் மக்களின் அனுபவக் குவியல் மிகுந்த முக்கியத்துவமுடையதாகும். ஆனால், அதிலிருந்தே பொதுமைப்படுத்தப்பட்ட கோட்பாடு, நீண்ட கால மற்றும் உடனடி நடைமுறைக் கொள்கை, முடிவுகளுக்கு வருவதற்குப் போதுமானதாக இருக்காது. முடிவுகள் என்பவை பல நாடுகளின் அனுபவங்களை பரிசோதித்து, மதிப்பீடு செய்யப்படும் பொழுது மட்டுமே அவை ஏற்றுக் கொள்ளப்பட்ட பாடங்களாக விளங்கும்.

பொதுமைப்படுத்தப்பட்ட முடிவுகளைப் பெறுவது. கோட்பாட்டை மேலும் வளர்ப்பது போன்றவை இன்றியமையாத ஒரு கூட்டு நிகழ்வுப் போக்காகும்.

இந்த அம்சமானது டோக்ளியாட்டியின் பாடங்கள் ஒவ்வொன்றிலும் தெளிவாகவும் கூர்மையாகவும் தனிச்சிறப்புடனும் விளங்குகிறது. இத்தாலியில் 12 வருடங்களாகப் பாசிசத்திற்கெதிராக நடைபெற்ற போராட்ட அனுபவங்களிலிருந்து இவற்றைக் கூறுகிறார். இந்தப் “பாடங்கள்” மேலும் விரிவாக இருப்பதற்குக் காரணம் இந்தப் போராட்டத்தில் அவருக்கு இருந்த நேரடி அனுபவத்தையும் அவர் இவற்றில் சேர்த்திருப்பதுதான்.

ஆனால், டோக்ளியாட்டி மற்றொரு பரந்துபட்ட அனுபவக் குவியலையும் பயன்படுத்தியிருக்கிறார். தொடர்ச்சியான விவாதங்களிலும், பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் உலக முழுமையிலிருந்து கிடைக்கும் அனுபவங்களை ஆராய்வதிலும் மிகுந்த செயலூக்கத்துடன் பங்கேற்றவர் அவர். இத்தகைய விவாதங்கள் கம்யூனிஸ்டு அகிலத்தின் குழுக்களில் தொடர்ந்து நடந்தன. கம்யூனிஸ்டு அகிலம் என்பது உலகின் ஒவ்வொரு மூலையிலுமிருந்து கிட்டும் அனுபவங்களும் ஒவ்வொரு நாட்டின் அனுபவங்களும் பொதுமைப்படுத்தப்படும் ஒரு மையமாகும். டோக்ளியாட்டி, அவருடைய சொற்பொழிவுகளை நிகழ்த்தும் நேரத்தில் இட்லரின் பாசிசம் அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்களாகி விட்டன. எனவே இட்லருடைய பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் ஜெர்மன் மக்களும், ஜெர்மன் கம்யூனிஸ்டுகளும் பெற்ற அனுபவங்களை அவர் விசேஷமாகப் பயன்படுத்திக் கொண்டது முற்றிலும் இயல்பானதே. கம்யூனிஸ்டு அகிலத்தின் குழுக்களில் உள்ளவர்கள் தொழிலாளி வர்க்க அரசியல் கட்சிகளிலிருந்து வந்தவர்கள். தம்முடைய செயல்பாட்டையும், நிர்ணயிப்புகளையும் மார்க்சியம் – லெனினியம் என்ற புரட்சிகர விஞ்ஞானத்தின் அடிப்படையில் அமைத்துக் கொண்டுள்ள கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். ஆகையால் கம்யூனிஸ்டு அகிலத்தின் குழுக்கள், அனைத்துப் பிரச்சினைகளையும் தொழிலாளி வர்க்க மற்றும் மார்க்சிய – லெனினிய கண்ணோட்டத்தில் அணுகின. இந்த அணுகுமுறையானது டோக்ளியாட்டியின் சொற்பொழிவுகள் முழுவதிலும் உருக்குக் கம்பியாக ஊடுருவிச் செல்லுகிறது.

ஏகபோக மூலதனத்தின் சவால் தன்மை காரணமாக அமெரிக்காவிலுள்ள நாம் இத்தகைய சொற்பொழிவுகள் சுவையான வரலாறே தவிர குறிப்பாக நமக்குச் சம்பந்தப்பட்டதல்ல என்று மெத்தனமாகப் படிக்கும் போக்கிற்கு இடமளிக்கக் கூடாது. உண்மை என்னவென்றால், பாசிசத்திற்கு எதிரான போராட்டப் படிப்பினைகள் வேறெந்த மக்களையும்விட நமக்குத்தான் அதிகம் தேவைப்படுகின்றன. ஏனென்றால், வேறெந்த மக்களையும்விட அமெரிக்காவிலுள்ள நாம் பாசிச அபாயத்தை ஒரு தொடர்ச்சியான சவாலாக சந்திக்க வேண்டியுள்ளது. இந்த அபாயத்தை தற்பொழுது நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்; அது மட்டுமல்ல, ஏகபோக முதலாளித்துவம் நம்மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் காலம் வரை பாசிசத்திற்கெதிராக போராடும்படி நாம் நிர்ப்பந்திக்கப்பட்டே தீருவோம். மிக அதிகபட்ச இலாபங்களை அடையும் தனது பாதையில் இதர வடிவங்களில் அமைந்த ஆட்சி தடைக்கற்களாக மாறும்பொழுது ஏகபோக முதலாளித்துவம் பாசிசத்தை ஆதரிக்க சற்றும் தயங்காது.

ஆனால், டோக்ளியாட்டி விவரித்து திட்டவட்டமாகக் கூறுவதுபோல வரலாற்றின் படிப்பினைகளை நாம் கற்றோமானால், “அது இங்கே நடக்காது” என்று தீர்மானிப்பதற்கான போராட்டத்தில் மக்களோடு நாமும் ஒரு முக்கியமான அம்சமாக இருப்போம்.

நாம் முதன் முதலாகக் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினையானது முதலாளித்துவத்தின் உள் கட்டமைப்புதான் ஜனநாயக  –  விரோதப் போக்கிற்கு வழி பிறக்கச் செய்கிறது என்பதும், அந்தப் போக்குதான் பாசிசத்தை நோக்கிச் செல்லும் இயக்கங்களுக்குத் தீனி போடுகிறது என்பதுமாகும். முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் சரிவு காலகட்டத்தில் “பிற்போக்கான கொள்கைகளை நோக்கிச் செல்லும் போக்கு முதலாளித்துவத்தில்” தலைதூக்கும் என்று டோக்ளியாட்டி கூறுகிறார். ஏகபோக முதலாளித்துவம், அதனுடைய பொதுவான நெருக்கடி காலகட்டத்தில் மிக உச்சபட்ச தொழில் இலாபமடையும் கொள்கைகளை பின்பற்ற முடியாது. இத்தகைய கொள்கைகளுக்கெதிராக மக்கள் தலையிடும்படியான மிகக் குறைந்தபட்ச சாத்தியப்பாட்டை ஜனநாயக அமைப்புகள் ஏற்படுத்தினால்கூட ஏகபோக முதலாளித்துவம் அத்தகைய அமைப்புகளை ஒழித்துக்கட்டுவதில் இறங்கும். அது, ஜனநாயக ஆட்சிக்குப் பதிலாகப் பிற்போக்கான இராணுவ ஆட்சிகளைக் கொண்டு வருவதற்கு முற்படும். பாசிசம் என்பது இத்தகைய பெரும் தொழில் வர்த்தக சர்வாதிகாரங்களின் மிகவும் கொடூரமான, நாசகரமான, வளர்ச்சியடைந்த வடிவமேயாகும்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ரிச்சர்டு எம். நிக்சன்.

தோழர் டோக்ளியாட்டியின் சொற்பொழிவுகள் வாட்டர்கேட் சம்பவம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிப் போக்குகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கின்றன. ஏனென்றால் நிக்சனுடைய நிர்வாகமும் வாட்டர்கேட் சம்பவமும் ஒரு பாசிச கட்டமைப்பு உருவாவதற்கு இட்டுச்செல்லக்கூடிய ஓர் அமைப்பைத் தோற்றுவிக்கத் திட்டமிட்ட சதி நடந்திருப்பதை அம்பலப்படுத்துகின்றன.

இந்த நிகழ்ச்சிப் போக்கானது நிக்சனிலிருந்து தொடங்கவில்லை. இதற்கு முன்பாகவே இந்த வடிவமைப்பானது மிகவும் நன்கு திட்டமிடப்பட்டிருந்தது. அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார சக்தியானது நிர்வாகப் பிரிவின் கரங்களில் படிப்படியாகக் குவிக்கப்பட்டு வந்தது. இந்த நிர்வாகப் பிரிவானது பெரு முதலாளித்துவ முதலைகள் தவிர வேறு எவராலும் அணுக முடியாதது. அமெரிக்க காங்கிரசும் ஜனாதிபதியினுடைய அமைச்சரவையும்கூட மெல்ல மெல்லப் புறக்கணிக்கப்படலாயின. எஃப்பிஐயும் சிஐஏயும் சர்வாதிகார ஆட்சியின் கருவிகளாயின; இவை ஜெர்மனி மற்றும் இத்தாலிய பாசிசத்தின் கையேடுகளில் கூறப்பட்டிருப்பவற்றை ஆதாரமாகக் கொண்டு செயல்படலாயின. பெருமுதலாளித்துவ பிற்போக்குக் கொள்கைகளை எதிர்ப்பவர்கள் அனைவரையும் பெரும் எண்ணிக்கையில் கைது செய்வதற்காக நிக்சன் நிர்வாகம் நிர்வாக உத்தரவுகளைத் தயாரித்திருந்தது. எந்தவொரு பிரச்சினையிலும் எதிர்த்து ஒரு வார்த்தை கூறினாலும் கூட இப்படி எதிர்ப்பவர்களின் பெயர்களும் அவர்களின் வாழ்க்கை விபரங்களும் மிகப் பெருமளவில் கணிப்பொறியில் பதிவு செய்யப்பட்டு நிக்சன் நிர்வாகத்திற்குக் கிடைத்திருப்பது போன்று இட்லருக்கும் முசோலினிக்கும் கூட கிடைத்திருக்கவில்லை எனலாம். இத்தகைய பெயர் பட்டியல்கள் இன்றும் போர்டு நிர்வாகத்திடம் இருப்பதைக் காணலாம். இத்தகைய “பிற்போக்கான பாதை” பாசிசத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

டோக்ளியாட்டி சுட்டிக்காட்டியுள்ள படிப்பினைகள் நமக்கு மிகுந்த முக்கியத்துவமுடையவையாகும். ஏனென்றால் வாட்டர்கேட் சம்பவம் நிக்சனை அம்பலப்படுத்தி அவரை ராஜினாமா செய்யும்படி நிர்ப்பந்தித்ததானது இத்தகைய பிற்போக்கு சக்திகளுக்கு ஒரு பெரும் அடியாகும். ஆனாலும் அது ஏகபோக முதலாளித்துவத்தின் “உள்ளார்ந்த பிற்போக்குத்தனத்துக்கு” ஒரு முடிவு கட்டவில்லை. “இந்தப் பிற்போக்குத்தனம்” இன்னும் உயிரோடுதான் உள்ளது.

பாசிசமானது எப்பொழுதும் பொய்யான மற்றும் வாய்ச்சவடால் வடிவங்களிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக பாசிசம் என்பது ஏகபோக மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான பகுதியின் அப்பட்டமான சர்வாதிகாரம் என்பதை அது மூடிமறைக்கவே முயற்சிக்கிறது.

பின்னோக்கிக் காணும் பொழுது, பாசிசம் என்பதற்கான விளக்கம் குறித்து இதற்கு முன்னர் நடைபெற்ற எத்தனை எத்தனையோ விவாதங்களும், வாதப் பிரதிவாதங்களும் தற்பொழுது அருவமானதாகவே தோன்றுகின்றன.

அதற்குக் காரணம் பாசிசத்தின் அடிப்படை இயல்பு தற்பொழுது எல்லோருக்கும் நன்கு தெரிந்துவிட்டதேயாகும். கம்யூனிஸ்டு வட்டாரங்களில் நடத்தப்பட்ட விவாதமானது இதர இடதுசாரி – மிதவாதி வட்டாரங்கள் கொண்டிருந்த தவறான கருத்துக்களைக் குறித்த விவாதமாகவே இருந்தது. இந்தக் கருத்துக்களில் பெரும்பாலானவை வார்த்தை ஜாலங்களின் தாக்கத்தைப் பிரதிபலித்தன என்பதுடன் பாசிசம் பரப்பிய பொய்ம்மையை மூடிமறைப்பதாகவும் இருந்தன.

பாசிசம் என்பது “ஒரு நடுத்தரவர்க்க குட்டி பூர்ஷ்வா இயக்கம்” என்ற தவறான கூற்றை அம்பலப்படுத்துவது அவசியமாகும். குட்டி பூர்ஷ்வா பகுதியானது பாசிசத்தின் வெகுஜன அடித்தளமாக இருந்தது, இருந்து வருகிறது என்ற அம்சத்தைக் கூறவேண்டியது அவசியம். ஆனால் பாசிசத்தின் அரசியல் சாராம்சம் என்பது அதுவல்ல.

படிக்க:
காவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் ! வெற்றி உரையில் மோடி பெருமிதம் !
பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !

டிராட்ஸ்கியவாதிகள் இந்தப் பிரச்சினைகளை குழப்புவதற்கு முயற்சிக்கிறார்கள்; “போனபார்ட்டிச இயக்கம்” என்று பாசிசத்தை அழைப்பதன் மூலம், பாசிசத்தின் வர்க்க வேர்களை மறைக்க எத்தனிக்கிறார்கள். வலதுசாரி சோசலிஸ்டுகளோ, பாசிசத்தில் சில சாதகமான அம்சங்களைக் கண்டுபிடித்து அவற்றைப் பரப்ப முயற்சிக்கிறார்கள்.

பாசிசம் என்பது ஏகபோக மூலதனத்தின் மேல்தட்டு வட்டாரங்களின் மிகவும் பிற்போக்கான பகுதியினருடைய அப்பட்டமான, மிகக் கொடூரமான சர்வாதிகாரம் என்று விளக்க வேண்டியது அவசியமாகும்: அவ்வாறு செய்தால்தான் உண்மையான பகைவனைத் திட்டவட்டமாக சுட்டிக்காட்டி அவனுக்கெதிரான போராட்டத்தை நடத்துவது சாத்தியமாகும். அதன்பிறகே பாசிசத்திற்கெதிராகப் பரந்துபட்ட இயக்கத்தை அணிதிரட்டுவது சாத்தியமாகும்.

(தொடரும்)

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை !

மே 22, 2019 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் முதலாமாண்டு நினைவேந்தல்

நிலம், நீர், காற்று என மனித வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைகளை நஞ்சாக்கி தங்களது வாழ்வையே சூறையாடிய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராடிய தூத்துக்குடி மக்கள் 13 பேரை சுட்டுக் கொன்றது தமிழக அரசு.

போலீசின் வன்முறை வெறியாட்டத்திற்கு 2 பேர் பலியாயினர். தூத்துக்குடியில் மட்டுமல்ல, ஹைட்ரோகார்பன், எட்டு வழிச்சாலை, நியூட்ரினோ என இயற்கையையும், மக்களையும் நாசமாக்கும் திட்டங்கள் விவசாயிகள், உழைக்கும் மக்களின் எதிர்ப்பையும் மீறி தமிழக அரசின் உதவியுடன் திணிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. எனவே, மண்ணையும் மக்களையும் பாதுகாக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்தி அவர்களின் வழியில் போராட வேண்டும் என்பதை மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக புதுச்சேரி மக்கள் அதிகாரம் சார்பில் சமூக ஜனநாயக சக்திகள் பெரியாரிய இயக்கங்கள் பங்கேற்கும் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பேரணியை புதுச்சேரி மக்கள் அதிகாரத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சாந்தகுமார்
உரையாற்றி தொடங்கி வைத்தார். புதுச்சேரி பகுதியின் பெரியார் சிந்தனையாளர் இயக்கம், திராவிடர் கழகம், மீனவர் விடுதலை வேங்கைகள், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், புதுச்சேரி தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட இயக்கங்களின் தலைவர்கள், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள், தோழர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களுடனும், திரளான மக்கள் பங்கேற்புடன் பேரணி மக்கள் நெருக்கமான புதுச்சேரியின் முக்கிய சாலைகள் வழியாக சென்றது.

புதுச்சேரி சாரம் அவ்வை திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை புதுச்சேரி மக்கள்
அதிகாரத்தின் மதகடிப்பட்டு பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் சங்கர் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டம் துவங்கியதுமே வந்த போலீசு நடுரோட்டில் நிகழ்ச்சி நடத்துவதாகச் சொல்லி, பதில் கூட பேச விடாமல் தடுத்தது. வழக்கறிஞர்கள் தலையிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், தொடரும் அரசின் அடக்குமுறையைக் கண்டிக்கும் வகையில் வாயில் கறுப்புத்துணி கட்டியும், உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் அமைப்பாளர் தோழர் தீனா, திராவிடர் கழகத் தலைவர் தோழர் சிவ. வீரமணி, புதுச்சேரி தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் தோழர் பிரகாஷ், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் திருவண்ணாமலை மாவட்ட அமைப்பாளர் தோழர் கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். மக்கள் அதிகாரத்தின் விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன், கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு ஆகியோர் இறுதியுரை ஆற்றினர்.

தூத்துக்குடி படுகொலையை கண்டிக்கும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் இருந்தும் மக்கள் அதிகாரம் அமைப்பின் முன்னெடுப்பில், ஜனநாயக இயக்கங்கள், பெரியாரிய அமைப்புகள் பங்கேற்புடன் நடத்தப்பட்ட இவ்வியக்கம் பல்வேறு தரப்பு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி.

***

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு முதலாமாண்டு நினைவையொட்டி கோ.பூவனூர் கிளை சார்பாக 21.05.2019 அன்று மாலை 6 மணி அளவில் பேனருக்கு மாலை அணிவித்து மெழுகு வர்த்தி ஏந்தி நினைவேந்தல் செலுத்தப்பட்டது. இதில் பொது மக்கள், கடை வியாபாரிகள், மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.

நினைவேந்தல் கூட்டத்தை பகுதி ஒருங்கிணைப்பாளர் வழிநடத்தினார். அக்கூட்டம் முடிந்த பின்னர், இதனைப் பொறுக்காத போலீசு மக்கள் அதிகாரம் பகுதி் ஒருங்கிணைப்பாளர் பாலாஜியை மிரட்டி பேனரை எடுக்குமாறு எச்சரித்தது. உங்களை குண்டாசில் கைது செய்து விடுவோம் என்று சி.பி.சி.ஐ.டி ஆறுமுகம் மிரட்டினார். தோழர்களைக் இல்லாதபோது அவரும் அவர் உடனிருந்த காவல்துறையினரும் பேனரைக் கிழித்துவிட்டு போஸ்டரையும் கிழித்தனர். மக்கள் அதிகாரம் தோழர்கள் அங்கு சென்று பார்க்கும்போது, பேனர் கிழிக்கப்பட்ட நிலையில் இருந்தது.

இத்தகைய போலீசு அராஜகத்தை  மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளுக்கான நினைவேந்தல் கூட்டத்தை வருடா வருடம் மக்கள் அதிகாரம் கடைபிடிக்கும்.

இவண்,
மக்கள் அதிகாரம்

***

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளுக்கு 22.05.2019 அன்று காலை வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கிளைச் சங்கத் தோழர்கள் மற்றும் ம.க.இ.க தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்..

தகவல்
புதிய ஜனநாயகத் தொலழிலாளர் முன்னணி
வேலூர்

***

புதுச்சேரியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

கடந்த ஆண்டு மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள். மக்களின் ஒற்றுமை மிக்க உறுதி குலையாத போராட்டத்தை ஒடுக்க போராட்டத்தில் முன்னணியாக நின்ற மக்களைத் திட்டமிட்டு தலையிலும் வாயிலும் சுட்டு 13 பேரைக் கொன்றது. தொடர்ச்சியாக போலீசு கட்டவிழ்த்த அடக்குமுறை வெறியாட்டங்களுக்கு 2 பேர் பலியாகினர். ஓராண்டு கழிந்த பின்பும் மக்கள் மீதான அடக்குமுறைகள் இன்றும் ஓய்ந்தபாடில்லை.

ஸ்டெர்லைட் என்கிற கார்ப்பரேட் நிறுவனத்திற்காக சொந்த நாட்டு மக்களையே ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்ற அரசு, கார்ப்பரேட் நிறுவனத்திற்காக தூத்துக்குடியில் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தை இறக்கிவிட்டு மக்களை அச்சுறுத்தி மீண்டும் ஆலையை திறக்க முயற்சித்து வருகிறது. தங்களது வாழ்வாதாரத்தை அழித்த ஸ்டெர்லைட் நச்சு ஆலையை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக நின்று எதிர்கொண்டு வருகின்றனர் தூத்துக்குடி மக்கள்.

தூத்துக்குடியில் மட்டுமல்ல, தற்போது விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி, ஸ்டெர்லைட்டின் தலைமை நிறுவனமான வேதாந்தா, ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் ஒட்டுமொத்த தமிழகத்தின் கடற்கரையையும் முழுங்க காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கான அத்தனை வேலைகளையும் மோடியும், அடிமை எடப்பாடி அரசும் செய்து கொடுக்கிறது. ஏற்கெனவே வேதாந்தா நிறுவனத்திற்காக, இரும்புச் சுரங்கம் அமைக்கப்படுவதை எதிர்த்த நியாம்கிரி மலைவாழ் பழங்குடி மக்களை சுட்டுக் கொன்றது மத்திய மாநில அரசுகள். ஒரிஸ்ஸா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் காட்டு வேட்டை என்ற பெயரில் அரசின் படைகளை ஏவிவிட்டு பழங்குடி மக்களை சித்திரவதைக்கு உள்ளாக்கி அச்சுறுத்தியது. இன்று காடுகளை பாதுகாப்பது என்ற பெயரில் பழங்குடி மக்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டு காட்டின் வளத்தை கார்ப்பரேட்டுக்களுக்கு அள்ளிக் கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம்.

ஸ்டெர்லைட் பிரச்சினை என்பது தூத்துக்குடி மக்களின் பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சனை. இந்த நாடும், நாட்டின் வளமும், இயற்கையும் அனைத்துமே கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே சொந்தம் என பட்டா போட்டு கொடுக்கிறது அரசு. இந்த அரசு மக்களுக்கானது அல்ல கார்ப்பரேட்டுகளுக்கானது. எனவே, நாட்டையும் மக்களையும் இயற்கையையும் பாதுகாக்க வேண்டும் எனில், மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களே தீர்வு அதற்கு நம் கண் முன்னே உள்ள சாட்சியே தூத்துக்குடி.

எனவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை முன்மாதிரியான பாடமாக கொண்டு அந்தப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்தி அவர்களது வழியில் போராடுவோம்! என்பதை வலியுறுத்தும் விதமாக புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிளை மற்றும் இணைப்பு சங்கங்களான கோத்ரேஜ் கன்ஸ்யூமர், ரானே பிரேக் லைனிங், மதர்பிளாஸ்ட், வேல் பிஸ்கட்ஸ், பால்மேட்டோ, ஸ்வஸ்திக், சுப்ரீம் பிளாஸ்டிக்ஸ் என சங்கங்கள் செயல்படும் ஆலைவாயில்களிலும், புதுச்சேரியின் முக்கிய தொழிற்பேட்டையான திருபுவனை பகுதியிலும் திரளான தொழிலாளர் பங்கேற்புடன் தூத்துக்குடி தியாகிகளின் படத்தை வைத்து மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் வீரவணக்கம் செலுத்தி நினைவேந்தல் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

தூத்துக்குடி மக்கள் படுகொலை செய்யப்பட்டதை, சென்ற மே-22 அன்றைய ஒரு நாள் நிகழ்வாக சங்கங்கள் கடந்து விட்ட சூழலில், அரசின் அறிவிக்கப்படாத அவசரநிலைக் காலம் போன்று அடக்குமுறைகளை அம்மக்கள் மீதும் இன்றும்  செலுத்தி வரும் அரசு, தொழிலாளர் உள்ளிட்ட உழைக்கும் மக்களுக்கான அரசு அல்ல, மக்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்ட, ஒன்றுபட்ட போராட்டங்களை தூத்துக்குடி மக்கள் வழியில் நடத்த வேண்டும். அதற்கு உழைக்கும் வர்க்கம் என்ற முறையில் தொழிலாளர்களும் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்ற வகையில் நடத்தப்பட்ட இவ்வியக்கம், தொழிலாளர் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான தூண்டுகோலாக அமைந்தது.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி தொடர்புக்கு: 95977 89801.

நூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …

வேறுபட்ட பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய இந்திய சூழலின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டியதாகும். அது ஜனநாயகத்திற்கான போராட்டமும் கூட…

சமூகத்தளத்தில், ஆளும் வர்க்கங்களுக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் இடையறாது நடந்து வருகிறது. அதே போன்று முற்போக்கு, உழைக்கும் வர்க்கப் பண்பாட்டுக் கூறுகளுக்கும், பிற்போக்கான பண்பாட்டு கூறுகளுக்கும் இடையேயான போராட்டங்கள் எப்போதும் நடந்தே வருகின்றன.

அதே சமயம், மக்களிடையே மத நல்லிணக்கமும், இயல்பான மதச்சார்பின்மை உணர்வுகளும் உயிர்ப்புடன் நீடிக்கின்றன. இவற்றைக் குலைத்திட சங் பரிவாரங்களும், மதவெறி சக்திகளும் தீவிரமாக முயன்று வருகின்றன. ஆட்சி அதிகாரம் தங்களிடம் கிடைத்துள்ளதால் இந்திய பண்பாட்டு இயக்கத்தை பிற்போக்கு திசையில் இழுத்துச் செல்ல ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் முயற்சித்து வருகின்றன.

இருபதாண்டுகளுக்கு மேலாக பொருளாதாரத்தில் பின்பற்றப்படும் நவீன தாராளமயம், மேற்கண்ட நிகழ்விற்கு, உரம் சேர்த்து வளர்த்து வருகிறது. பழமை சிந்தனைகள் உயிர்ப்பிக்கப்படுகின்றன. தீண்டாமையும், தலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளும், புதிய வடிவமும், புதிய உத்வேகமும் பெற்றுள்ளன.

இவற்றுக்கு எதிராக பண்பாட்டுத் துறையில் எதிர்ப்புப் போராட்டம் வலுப்படுத்த வேண்டும். இது எதிர்ப்பு போராட்டமாக மட்டுமல்லாது, மாற்று பண்பாட்டு நிகழ்ச்சி நிரலைக் கொண்டதாகவும் இருந்திட வேண்டும்.

… இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் வலதுசாரித் திருப்பம், ஆர்.எஸ். எஸ் தலைமையிலான வகுப்புவாத சக்திகளுக்கு சாதகமாகியிருக்கின்றன. அரசு அதிகாரத்தை முழுமூச்சில் பயன்படுத்தி தங்கள் திட்டங்களை செயல்படுத்த அவர்கள் முனைகிறார்கள். மேலும், அவர்கள் தீவிரமாகக் கடைப்பிடிக்கும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள், சுரண்டலைத் தீவிரப்படுத்துகின்றன. பிற்போக்கு நியாயங்கள் பரவலாவதையும், சுரண்டல் தீவிரப்படுவதையும் தடுக்கும் கடமை – ஒவ்வொரு மனிதனுக்கும் எழுந்திருக்கிறது.

உண்மையில் பாஜக ஆட்சிக்கு வருவதும், ஆர்.எஸ்.எஸ். வலிமையடைவதும் ஆட்சி மாற்றத்தால் மட்டும் அல்ல. தேர்தல் வெற்றி தோல்விகளைப் போன்ற வழக்கமான செய்தியாக அதனைப் பார்க்க முடியாது. அவர்களின் செயல்திட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது. அது நாடாளுமன்ற ஜனநாயகம் என்னும் அமைப்பை பலவீனப்படுத்துகிறது. அந்த இடத்தில் சகிப்புத் தன்மையற்ற குருமார்களின் சித்தாந்தத்தைக் கொண்ட வெளிப்படையான பயங்கரவாத சர்வாதிகார அமைப்பு ஒன்றால் மாற்றி அமைக்கப்படுகிறது. இத்தகைய அபாயத்தை எதிர்கொள்ள தேவையான தெளிவை இந்த நூலில் உள்ள கட்டுரைகள் வழங்கிடும். (நூலின் முன்னுரையிலிருந்து…)

உலகமயமாக்கலுக்கும், தாரளயமயமாக்கலுக்கும் ஆதரவான நிலைப்பாடு பண்பாட்டின் வழியாக மிகப்பெரிய அளவில் நுழைந்து சமூகச் சீரழிவை வேகப்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில்தான் நாம் இன்று வாழ்கிறோம்.

பண்பாடு, உலகமயமாக்கலின் முகமூடியாகவும் அதே நேரத்தில் அதன் வாளாகவும் செயல்படுகிறது. முதல் பால் அது மேலாதிக்கம் செலுத்தும் வகையிலும், இரண்டாவதாக அது பன்னாட்டு மூலதன விரிவாக்கத்திற்கு உதவிடும் வகையிலும் செயல்படுகிறது.

மேலும், இதைப் புரிந்து கொள்வதற்கு பண்ப்பாடு என்பது எந்தப் பொருளில் இங்கே குறிக்கப்படுகிறது என்பதையும், மேலாதிக்கம் என்பதன் பொருள் என்ன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பண்பாடு என்பது என்ன?

பண்பாடு என்பது இங்கே கலை, இலக்கியம் மட்டுமே அல்ல, அது மக்கள் சமூகத்தின் வாழ்வு முறைகள் அனைத்தையும் குறிக்கிறது. நமது உடைகள், உணவுப் பழக்கங்கள், தாம் வாழும் வீடு என எல்லாமே பண்பாட்டின் வெளிப்பாடுகள் ஆகும்.

வாழ்க்கையின் வெற்றி, அழகு பற்றிய தமது கருத்துக்கள் எல்லாமே பண்பாட்டின் வெளிப்பாடுகள். கலையும், இலக்கியமும் இந்த அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றன. அவற்றிற்கு உருவம் கொடுக்கின்றன. நல்ல கலையும் இலக்கியமும் இந்த அர்த்தங்களைக் கேள்விக்கு உட்படுத்துகிறது.

மேலும், பண்பாடு தம்முடைய குடும்பங்களிலும், சமூகக் குழுக்களிலும், கல்வி நிலையங்களிலும் தொடர்பு ஊடகங்களின் மூலமாகவும் – விமர்சனமற்ற முறையில், உணர்வுப்பூர்வமில்லாமல் நம்மை வந்தடைகிறது.

இதனை மேலும் புரிந்துகொள்வதற்கு பயன்பாட்டிற்கும், அரசின் கொள்கைக்கும், மேலாதிக்கத்திற்கும் இடையேயுள்ள உறவைப் புரிந்துகொள்ள வேண்டும்.

படிக்க:
பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !
வைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் !

கிராம்சி அரசைப் பற்றிக் குறிப்பிடும்போது கூறுகிறார்; ” ஆளும் வர்க்கங்கள் அதன் அதிகாரத்தை முழுச் சமூகத்தின் மீதும் இரண்டு விதங்களில் செலுத்துகின்றன. ஒன்று – ஆளும் வர்க்கங்களின் அரசு மற்றும் அதன் அங்கங்களான காவல்துறை இராணுவம், சட்டங்கள் மூலமாக பலாத்காரத்தை பிரயோகிக்கின்றன. ஆளும் வர்க்கங்களின் பொருளாதார பலம், அரசை அவற்றின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளத் துணையாகின்றன.

இரண்டாவதாக, ஆளும் வர்க்கங்களின் அதிகாரம், ஆளப்படுபடுபவரின் ஒப்புதலோடு செலுத்தப்படுகிறது. முதலாளித்துவ சமூகத்தின் உறவுகளை அதன் அடிப்படைக் கூறுகளான மூலதனத்திற்கும் உழைப்பிற்குமான இடைவினையைப் புரிந்துகொள்வதன் வழியாகத்தான் உணர முடியும். இந்த சமூக உறவுகள் பல்வேறு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், சுகாதார அமைப்புகள், பண்பாட்டு ஸ்தாபனங்கள் போன்றவற்றில் வேர்விட்டுள்ளன. (நூலிருந்து பக். 43-44)

நூல் : பண்பாட்டுக் களத்தில் …
ஆசிரியர்கள் : ஆசிரியர் குழு, மார்க்சிஸ்ட் மாத இதழ்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண்: 044 – 2433 2424.
மின்னஞ்சல் : thamizhbooks@gmail.com

பக்கங்கள்: 64
விலை: ரூ 50.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

நான் சிறுவனாக இருந்தபோது … குழந்தைகளின் நினைவுகள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 9

வளர்ச்சியில் ஒரு படி

“நான் சிறுமியாக இருந்த பொழுது ஒரு பெரிய நாய் என்னைத் துரத்தி வந்தது. நான் பயந்து போய் ஓடினேன், நாயும் என் பின்னாலேயே ஓடி வந்தது. ‘காப்பாற்றுங்கள்!’ என்று நான் கத்தினேன். திடீரென நான் தடுக்கி விழுந்தேன். நாய் என்னை நெருங்கி வந்தது, நான் பயத்தால் உறைந்து போனேன். நாயோ என் ஆடையை அன்போடு கவ்வி, நான் எழ உதவியது…”

“நான் என் நாயை பனிச்சறுக்கு வண்டியில் வைத்து சிறு குன்றிலிருந்து தள்ளினேன். நாய் குலைத்தது, பனிச் சறுக்கு வண்டி கவிழ்ந்து, நாய் தலைகீழாக வெண் பனியில் கீழே விழுந்தது. அது நாயா, வெண்பனிக் கட்டியா என்று கண்டுபிடிப்பதே கடினமாக இருந்தது…”

“ஒரு நாள் என் சகோதரன் குளியலறையில் குளித்தபடியே பாடிக் கொண்டிருந்தான். என்ன பாடுகிறான் என்று கவனித்தேன். குளியலறைக் கதவைத் திறந்தேன். அவன் உடல் முழுவதும் சோப்பு போடப்பட்ட நிலையில் கண்களை மூடியபடி தண்ணீரின் கீழ் நின்று தன் பாட்டைத் தொடர்ந்தான். நான் ‘வள் வள்’ என்று குலைத்துக் காட்டினேன். அவன் பயந்து நடுங்கி ‘அம்மா!’ என்று கத்தினான்.”

“நான் சிறுமியாக இருந்த போது என்னை சர்க்கசிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே கோமாளிகள் செய்ததைப் பார்த்து நான் மிகவும் சிரித்து ரசித்தேன்.”

“நான் சிறுமியாக இருந்தபோது தம்பியோடு கூட நர்சரிப் பள்ளிக்குச் சென்று வந்தேன். ஒரு நாள் என் அம்மா எங்களை கூட்டிச் செல்ல வந்தார். மழை பெய்ததால் நடைபாதையில் தண்ணீர் தேங்கியிருந்தது. ‘காலைத் தூக்கு!’ என்றார் அம்மா. நான் காலைத் தூக்கி நேரே அக்குட்டையில் விழுந்தேன்.”

“நான் சிறுவனாக இருந்தபோது ஒரு சிறுவன் குளிர்ந்த நீரைக் குடிப்பதற்காக என்னை ஒரு நீரூற்றிற்கு இட்டுச் சென்றான். தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது, தொண்டையே கட்டிவிடும் போலிருந்தது. நான் பாறை மீது சற்று உயரே சென்று பார்த்தேன், அங்கு தண்ணீர் இன்னமும் குளிர்ச்சியாக இருந்தது, நான் குளிர் தாங்காது நேரடியாக என் தோழனின் தலை மீது விழ, அவன் குட்டையில் வீழ்ந்தான்.”

“ஒரு நாள் நானும் என் சகோதரனும் ஒரு மாவு மூட்டையை எடுத்து, மூட்டையைக் கிழித்து ஒருவர் மீது ஒருவர் மாவை வாரி இறைக்க ஆரம்பித்தோம்.”

”நீங்கள் எல்லாம் இப்போது வளர்ந்து பெரியவர்களாகி விட்டீர்கள். சிறு குழந்தைகளைப் பார்க்க விரும்புகின்றீர்களா!”

“எங்கே அவர்கள்?”

நர்சரிப் பள்ளியில் இருக்கின்றனர். நான் உங்களை அங்கு கூட்டிச் செல்லட்டுமா? நீங்கள் அவர்களை கவனித்துப் பாருங்கள். பின் அவர்கள் எப்படி நடந்து கொண்டனர் என்று ஒருவருக்கொருவர் கூறிக் கொள்வோம்!… தயாரா!.. இரண்டு இரண்டு பேராக நில்லுங்கள்… இப்படித்தான்! ஆளுக்கொரு கொடியை எடுத்துக் கொள்ளுங்கள், எப்போதும் தெருவில் செல்லும்போது கொடிகளுடன்தான் செல்வோம். வாருங்கள் போவோம்! அம்மாமார்களே, தயவுசெய்து எங்களுடன் கூட வாருங்கள்!…”

படிக்க:
பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !
குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் !

நர்சரிப் பள்ளி, பள்ளிக்கு அருகே, வேலிக்கு அப்பால் உள்ளது. வேலியோரமாக செடிகளும் மரங்களும் நடப்பட்டுள்ளன. நர்சரிப் பள்ளியில் குழந்தைகள் இப்போது வெளியே விளையாடுகின்றனர். செடிகளுக்குப் பின்னால் ஒளிந்த படி நின்று, அச்சிறுவர் சிறுமியர் என்ன செய்கின்றார்கள் என்று கவனிக்கும்படி என் வகுப்புக் குழந்தைகளிடம் சொல்கிறேன்.

குழந்தைகள் வேலியோரமாக அமருகின்றனர். சிலர் புல் தரையில் உட்காருகின்றனர், சிலர் முழங்காலிட்டுப் பார்க்கின்றனர். ஒவ்வொருவரும் செடிகளின் மத்தியில் சிறு ஓட்டையைக் கண்டுபிடித்து அதன் வழியாகப் பார்க்கின்றனர். நான், பதுங்குகுழியில் உள்ள கமாண்டரைப் போல் ஒவ்வொரு சிறு கூட்டத்தையும் அணுகி, விவரங்களைச் சேகரிக்கிறேன், அவர்களோடு சேர்ந்து கவனிக்கிறேன்…

சிறு குழந்தைகளின் குறும்புகளையும் விளையாட்டுகளையும் பார்த்ததும் என் வகுப்பினருக்கு சிரிப்பு தாளவில்லை. அவர்கள் தம்மைப் பெரியவர்களாகக் கருதினர். நான் அவர்களை ஒருபுறமாக கூட்டிச் சென்றதும் அவர்கள் சகல விதமான வெளிப்பாடுகளின் மூலமாயும், இந்தச் சிறுவர்கள் எவ்வளவு ஆனந்தமானவர்கள் என்று எனக்கும் பரஸ்பரம் ஒவ்வொருவருக்கும் கூறுகின்றனர்.

“ஒருவன் சிறு விளையாட்டுச் சம்மட்டியால் மணலை வாளியினுள் எடுத்துப் போட்டு, உடனேயே எல்லாவற்றையும் கொட்டினான், என்ன முட்டாள் தனம்!”

“சிறுவன் சிறுமியைத் துரத்திக் கொண்டு சென்றான். அவள் கல்லையெடுத்து அவன் மீது வீச விரும்பினாள். ஆனால், நல்ல வேளையாக தாதி ஆசிரியை சரியான சமயத்தில் வந்தாள்…”

“அங்கே, ஒரு சிறு விளையாட்டு வீட்டினுள் ஐந்து சிறுவர்கள் நுழைந்தனர், பின்னர் மிகக் கஷ்டப்பட்டுதான் அவர்களால் வெளிவர முடிந்தது…”

“ஒரு சிறுமி ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு தானும் விளையாடவில்லை, மற்றவர்களுக்கும் விளையாடத் தரவில்லை. பொம்மையைப் பிடுங்க ஆரம்பித்ததில் தலைபிய்ந்து வந்தது…”

“ஒரு சிறுவன் கார் செல்வதைப் போல் ஓடிக் கொண்டேயிருந்தான், மிகச் சிரிப்பாக இருந்தது…”

“இரண்டு சிறுவர்கள் ஓடியதில் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டு கீழே விழுந்தனர். ஒருவன் எப்படிக் கத்தினான் தெரியுமா! ‘அம்மா!’ ”

“அவர்கள் எவ்வளவு முட்டாள்தனமானவர்கள். நீங்கள் எங்களை மீண்டும் இங்கே கூட்டி வருவீர்களா?”

”கண்டிப்பாகக் கூட்டி வருவேன். உங்களுக்குத் தான் பெரியவர்களாக இருக்க அவ்வளவு விருப்பமாக உள்ளதே! உங்களை விடச் சிறியவர்களாக உள்ள குழந்தைகளின் நடவடிக்கைகளை கவனிக்கும் போது, அவர்கள் மீது அக்கறை காட்டுகையில் நீங்கள் பெரியவர்களின் கடமையை உணருகின்றீர்கள், இந்த உணர்வு எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு விரைவாக நீங்கள் பெரியவர்களாவீர்கள்! ஆனால் இப்பாதை நீண்டது, பெரியது. நீங்கள் பெரியவர்களாக உதவும் பொருட்டு நானும் மற்ற ஆசிரியர்களும் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டிவரும்!…”

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

வைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் !

ங்கி சேமிப்பு கணக்கு பற்றியும் வைப்பு நிதி (fixed deposit) பற்றியும் நமக்கு தெரியும். சேமிப்புக் கணக்கு, வைப்பு நிதி ஆகியவற்றில் கிடைக்கும் வட்டி போதவில்லை என்றால், பணத்தை முதலீடு செய்ய வேறு வழிகளும் உள்ளன.

பங்குசந்தையில் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது ஒரு வகை. வங்கி முதலீடுகளில் வட்டிதான் நமக்குக் கிடைக்கும் இலாபம். பங்குகளைப் பொறுத்தவரை நாம் வாங்கும் பங்கின் விலை உயர்ந்தாலோ அல்லது நாம் பங்கு வைத்திருக்கும் நிறுவனம் dividend எனப்படும் ஈவுத்தொகை தந்தாலோ அதுதான் நமக்கு இலாபம். வங்கி வைப்பு நிதியில் நாம் முதலீடு செய்யும் பணம் குறைய வாய்ப்பு இல்லை, எத்தனை சதவீதம் வட்டி தருவார்கள் என்று நமக்கு முன்கூட்டியே தெரியும். பங்குகள் அவ்வாறு அல்ல, நாம் வாங்கும் பங்கின் விலை குறையலாம். 100 ரூபாய்க்கு நாம் வாங்கும் பங்கு சில நாட்களிலேயே ரூ. 90-ஆக குறையலாம். Dividend எவ்வளவு தருவார்கள் என்று முதலிலேயே தெரியாது. இருந்தாலும், பொதுவாக மக்கள் எதற்காக பங்குகளில் முதலீடு செய்ய விரும்புவார்கள் என்றால், வங்கிகள் தரும் வட்டியைவிட பங்குகளின் மூலம் கிடைக்கும் இலாபம் மிகவும் அதிகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

ஆனாலும், பங்குசந்தையில் முதலீடு செய்ய, எந்த நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்வது, எந்த நிறுவனம் அதிகப்படியான இலாபத்தைத் தரும் என்றெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். தவறான பங்குகளை வாங்கினால் மூலதனத்துக்கு ஆபத்து வர நேரிடும். அதாவது, நாம் தவறான பங்குகளை வாங்கினால் அந்த பங்குகளின் விலை குறைந்து நாம் முதலீடு செய்த பணத்தை விட குறைவான தொகையே நமக்குக் கிடைக்கும் அபாயம் உள்ளது. பங்குகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததாலும், அதைவிட, பங்குகளில் முதலீடு செய்தால் முதலுக்கே ஆபத்து வரலாம் என்ற பயம் இருப்பதாலும் பெரும்பாலும் நடுத்தர வர்க்க மக்கள் பங்குகளில் முதலீடு செய்வது இல்லை.

வங்கிகளில் முதலீடு செய்தால் பணம் பத்திரமாக இருக்கும். ஆனால், கிடைக்கும் இலாபம் குறைவு, பங்குகளில் இலாபம் அதிகம் கிடைக்க வாய்ப்பு அதிகம். ஆனால், முதலுக்கே ஆபத்து வரவும் வாய்ப்புகள் அதிகம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்டவை என்று சொல்லப்பட்டவைதான் மியூச்சுவல் ஃபண்ட்கள் (mutual fund).

மியூச்சுவல் ஃபண்ட்கள் என்றால் என்ன ?

மியூச்சுவல் ஃபண்ட்கள் என்பவை ஒரு வகையான கூட்டு நிதியகங்கள். இவை பொதுமக்களிடம் பணத்தை முதலீடாகப் பெற்று நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து அந்த முதலீடு மூலம் வரும் இலாபத்தை முதலீட்டாளர்களுக்கு பிரித்துத் தருபவை. இந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சொல்லப்படும் காரணம் – இவற்றில் பங்குச்சந்தையைப் பற்றி நன்கு அறிந்த நிபுணர்கள் இருப்பார்கள். அவர்கள் உரிய ஆராய்ச்சிக்கு பிறகே நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் பங்குகளில் இருந்து அதிகப்படியான இலாபத்தை அவர்களால் ஈட்ட முடியும். பிறகு அந்த இலாபத்தை முதலீட்டாளர்களுக்கு பிரித்துத் தந்துவிடுவார்கள். இந்த சேவையை செய்ய மியூச்சுவல் ஃபண்ட்கள் சிறு கட்டணத்தை வசூல் செய்துகொள்கின்றன. மியூச்சுவல் ஃபண்ட்கள் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதால் இங்கேயும் நஷ்டம் வர வாய்ப்புகள் உண்டு. ஆனாலும், நிபுணர்கள் ஈடுபடுவதால் நாம் செய்யும் பங்கு முதலீடுகளை விட மியூச்சுவல் ஃபண்ட்கள் செய்யும் முதலீடுகளில் நஷ்டம் வர வாய்ப்புகள் குறைவு. இதனால்தான் பங்குகளில் முதலீடு செய்ய முடியாதவர்கள் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்கின்றனர்.

மியூச்சுவல் ஃபண்ட்களிலும் பல வகைகள் உள்ளன. நிபுணர்கள் முதலீடு செய்தாலும் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்தால் முதலுக்கு ஆபத்து வரும் அபாயம் இருப்பதால் மியூச்சுவல் ஃபண்ட்கள் முதலீட்டாளர்களிடம் வாங்கும் முதலீடுகளைப் பிரித்து முதலீடு செய்கின்றன, முதலீட்டின் ஒரு பகுதியை பங்குகளிலும் இன்னொரு பகுதியை கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கின்றன.

கடன் பத்திரம் என்பது குறைந்த காலத்தில் நிதி தேவைப்படும் பட்சத்தில் நிறுவனங்களால் வெளியிடப்படும் பத்திரம். இந்த பத்திரங்கள் வைத்திருப்பவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட வட்டி தருவதாகவும் அந்த குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு அசலைத் திருப்பி தருவதாகவும் அந்த பத்திரங்களை வெளியிடும் நிறுவனங்கள் உறுதி அளிக்கின்றன. பொதுவாக நிறுவனங்கள் தரும் வட்டி விகிதம் வங்கிகள் தரும் வட்டி விகிதத்தை விட அதிகமாகவும் பங்குகளில் வரக்கூடிய இலாபத்தை விட குறைவாகவும் இருக்கும். இந்த பத்திரங்களிலும் முதலீட்டை இழக்கும் அபாயம் உண்டு. நாம் எந்த நிறுவனத்தின் பத்திரத்தை வாங்குகிறோமோ அந்த நிறுவனம் திவால் ஆகும் பட்சத்தில் நமது முதலீடு நமக்குக் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக பெரிய நிறுவனங்கள் திவால் ஆவது குறைவு. ஆகையால் நிறுவனங்களின் கடன் பத்திரங்கள் ஒரு பாதுகாப்பான அதே சமயம் வங்கி முதலீட்டை விட நல்ல இலாபத்தைத் தரக்கூடிய முதலீடாக கருதப்படுகிறது. கடன் பத்திரங்களிலும் சாதாரண மக்கள் முதலீடு செய்வது எளிது அல்ல, அதனால்தான் மக்கள் மியூச்சுவல் ஃபண்ட்களை நாடிச் செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் முதலீடுகள் மூலம் வாங்கும் பங்குகளையும் கடன் பத்திரங்களையும் – Assets Under Management (AUM) – நிர்வகிக்கும் சொத்துகள் – என்று கூறப்படுகிறது, அதாவது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மொத்த சொத்துகள் என்று அர்த்தம். 2009-ல் சுமார் 10 இலட்சம் கோடியாக இருந்து இந்த AUM 2019-ல் 25 இலட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்த மியூச்சுவல் ஃபண்ட் சேவையை SBI, HDFC போன்ற உள்நாட்டு வங்கிகளும், பிராங்கிளின் டெம்பிள்டன் போன்ற வெளிநாட்டு வங்கிகளும் வழங்கி வருகின்றன.

மியூச்சுவல் ஃபண்ட்கள், முதலீடுகளின் ஒரு பகுதியை இலாபம் அதிகம் வரக்கூடிய அதே சமயம் பாதுகாப்பு குறைவான பங்குகளிலும் மீதியை பாதுகாப்பான அதே சமயம் ஒரு அளவு இலாபம் வரக்கூடிய நிறுவனக் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கின்றன. எத்தனை சதவீதம் பங்குகளில் எத்தனை சதவீதம் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது என்பது மியூச்சுவல் ஃபண்ட்க்கு – மியூச்சுவல் ஃபண்ட் வேறுபடுகிறது.

ஒரே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பல விதமான திட்டங்களை (scheme) வழங்க முடியும். எடுத்துக்காட்டாக SBI பல நிறுவன பங்குகளில் அதிக முதலீடு செய்யும் திட்டம் ஒன்றை வழங்குகிறது. அதே போல் பல நிறுவன கடன் பத்திரங்களில் அதிகம் முதலீடு செய்யும் திட்டத்தையும் வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய திட்டத்தை தேர்வுசெய்து கொள்ளலாம். மேலே கூறியது போல, அதிக இலாபம் அதே சமயம் குறைவான பாதுகாப்பை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் பங்குகளில் அதிகம் முதலீடு செய்யும் திட்டங்களை தேர்வு செய்வார்கள். அதே போல், ஓரளவு இலாபத்துடன் அதிக பாதுகாப்பை எதிர்பார்ப்பவர்கள் கடன் பத்திரங்களில் அதிகம் முதலீடு செய்யும் திட்டங்களை தேர்வு செய்வார்கள்.

இதில் நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், வங்கி வைப்பு நிதியை விட அதிக இலாபம் – ஆனால் மிகுந்த பாதுகாப்பு தேவை என்று விரும்புபவர்கள் கடன் பத்திரங்களில் அதிகம் முதலீடு செய்யும் திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். இவர்கள் எண்ணம் என்னவென்றால், இலாபம் குறைவாக இருந்தாலும் முதலுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதுதான். கடன் பத்திரங்களில் அதிகம் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை வழக்கில் டெப்ட் பண்ட் (debt fund) என்று அழைக்கிறார்கள். இந்த டெப்ட் பண்டுகள் வாடிக்கையாளர்கள் தங்களிடம் முதலீடு செய்யும் தொகையில் பெரும்பகுதியை (70% மேல்), பல நிறுவனங்களின் கடன் பத்திரங்களிலும் பல நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதிலும் முதலீடு செய்கிறார்கள்.

இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்யும்போது ஒரே நிறுவனத்தின் பங்குகளிலோ அல்லது ஒரே நிறுவனத்தின் கடன் பத்திரத்திலோ முதலீடு செய்வது இல்லை. பங்குகளில் முதலீடு செய்வதாக இருந்தால் பல நிறுவனங்களின் பங்குகளிலும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதாக இருந்தால் பல நிறுவனங்களின் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கின்றன. முதலீடு செய்திருக்கும் எதாவது ஒரு நிறுவனம் திவால் ஆனாலும் மொத்த முதலீடு இழப்பு ஏற்படாமல் இருக்கவே இவ்வாறு செய்யப்படுகிறது.

ஜீ டிவி (Zee TV) பற்றி நமக்கு தெரியும்; இந்த தொலைக்காட்சியை நடத்தும் நிறுவனத்தின் பெயர் எஸ்செல் குழுமம் (Essel group). இந்த எஸ்செல் குழுமம் ஜீ டிவி போல பல தொலைக்காட்சி சேனல்களை நடத்தி வருகிறது. இது போக டிஷ் டிவி (Dish TV) என்கிற DTH சேவையையும் வழங்கி வருகிறது. இன்னும், கட்டுமானம் போன்ற பல துறைகளிலும் செயல்பட்டு வருகிறது இந்த எஸ்செல் குழுமம்.

எஸ்செல் குழுமம் கடன் சுமையில் தத்தளிக்கிறது என ஜனவரி 2019 முதலே செய்திகள் வர தொடங்கின. கடனை அடைப்பதற்காக அதனுடைய சில நிறுவனங்களின் பங்குகளை விற்க இருப்பதாக 2019 ஜனவரி மாத துவக்கத்தில் செய்திகள் வெளியாயின. இந்த திட்டம் நிறைவேறாததால், எஸ்செல் குழுமத்தின் முக்கிய சொத்தான ஜீ தொலைக்காட்சி நிறுவனத்தில் 50% பங்குகளை விற்க இருப்பதாக 2019 பிப்ரவரி துவக்கத்தில் செய்திகள் வெளியாயின. இந்த திட்டமும் நிறைவேறவில்லை.

மார்ச் ஏப்ரல் என நாட்கள் கடக்க கடக்க தான் இன்னும் செய்திகள் வெளியாக தொடங்கின. நாட்டில் உள்ள ஏறத்தாழ அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் எஸ்செல் குழுமத்தின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளன. இந்த கடன் பத்திரங்களில் சில ஏப்ரல் 15-ம் தேதி முதிர்ச்சி அடைய உள்ள நிலையில், அதற்கு செலுத்தவேண்டிய தொகை எஸ்செல் குழுமத்திடம் இல்லை. (கடன் பத்திரம் முதிர்ச்சி அடைவது என்றால் அந்த பத்திரத்தின் பெயரில் வாங்கிய கடனை, அதாவது, அசலை கொடுத்துவிட வேண்டும் என்று பொருள்). கடனை திருப்பி செலுத்த பணம் கையிருப்பு இல்லாததால் தான் பணத்தை திரட்ட எஸ்செல் குழுமம் கடும் முயற்சி எடுத்து வந்தது.

மியூச்சுவல் ஃபண்ட் குறித்த மேற்கூறிய விவரங்களுடன் இந்த செய்தி எவ்வாறு சம்பந்தப்படுகிறது என்று பார்ப்போம் …

மார்ச் 2019 நிலவரப்படி இந்தியாவில் உள்ள மியூச்சுவல் ஃபண்ட்கள் எஸ்செல் குழுமத்தின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருக்கும் மொத்த தொகை ரூ. 7500 கோடி. இந்த கடன் பத்திரங்களில் சில ஏப்ரல் 2019-ல் முதிர்ச்சி அடையும் நிலையில் உள்ளது. எஸ்செல் நிறுவனம் கடன் சுமையில் தத்தளிப்பதால் அதன் கடன் பாத்திரங்களில் முதிலீடு செய்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு வட்டி மட்டுமல்ல அசலே திரும்ப கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட்களில் பல வகை திட்டங்கள் உண்டு. முதல் வகையில், நாம் ஒரு திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்துகொண்டே இருக்கலாம், நமது முதலீடு பங்குகளிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும், அந்த முதலீட்டின் மதிப்பு ஏறுவது இறங்குவதை பொறுத்து மியூச்சுவல் ஃபண்ட்களில் நாம் செய்துள்ள முதலீட்டின் மதிப்பும் ஏறும் இறங்கும். நமக்கு எப்போது தேவையோ அப்போது நமது முதலீட்டை திரும்ப எடுத்துக்கொள்ளலாம், நமது முதலீட்டின் அப்போதைய மதிப்பு என்னவோ அதை பொறுத்து நமக்கு இலாபமோ நட்டமோ ஏற்படும். இரண்டாவது வகை LIC முதலீடு போன்றது, நாம் முதலீடு செய்யும் பணம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு உயரும் என்று கூறி முதலீடுகளை பெறுவார்கள். எடுத்துக்காட்டாக, நாம் 1000 ரூபாய் முதலீடு செய்கிறோம் என்றால் அது ஒரு வருடத்தில் 1100 ரூபாயாக ஆகும் என்று உத்தரவாதம் தந்து முதலீடு பெறுவார்கள். இது கிட்டதட்ட வங்கி வைப்பு நிதியை போன்றது. குறிப்பிட்ட காலம் முடிந்ததும் நமக்கு பணத்தை தந்துவிடுவார்கள். இவ்வாறான திட்டங்களுக்கு பெயர் fixed maturity plan (FMP), அதாவது, குறிப்பிட்ட காலத்தில் முதிர்ச்சியடையும் திட்டம்.

பொதுவாக கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களே FMP திட்டங்களை நடத்துவார்கள். ஏனென்றால், கடன்பத்திரங்களில்தான் குறிப்பிட்ட காலத்தில் எவ்வளவு இலாபம் வரும் என்று உறுதியாக சொல்ல முடியும்.

படிக்க:
குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் !
மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி !

எஸ்செல் குழுமத்தின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பெரும்பாலும் FMP திட்டங்களில் வந்த பணத்தையே கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருந்தன. இந்த FMP திட்டங்கள் சில ஏப்ரல் மாதத்தில் முதிர்ச்சியடையும் திட்டங்கள். மேலே கூறியது போல, எஸ்செல் குழுமத்தின் சில கடன் பத்திரங்களும் ஏப்ரல் மாதத்தில் முதிர்ச்சியடையும் நிலையில் இருந்தது. எஸ்செல் குழுமத்திடம் இருந்து சரியாக பணம் வந்து சேர்ந்திருந்தால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் ஏப்ரலில் முதிர்ச்சி அடையும் தங்களது FMP திட்டங்களுக்கு சரியாக பணத்தை திருப்பி தந்திருப்பார்கள். எஸ்செல் குழுமத்திடம் இருந்து வர வேண்டிய பணம் வராததால் இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு பணத்தை சரியான நேரத்தில் திருப்பி தர இயலாத நிலையில் உள்ளனர். இது போல் ஒரு நிலைமை வரலாற்றில் இதுவே முதல்முறை என்று கூறுகிறார்கள்.

கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் 6 FMP திட்டங்களும், HDFC மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஒரு FMP திட்டமும் ஏப்ரலில் முதிர்ச்சி அடைய இருந்தன. ஆனால், இவர்கள் எஸ்செல் குழும கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருந்ததால் முதிர்ச்சி அடைந்தவுடன் பணத்தை திரும்பத் தர இயலவில்லை. திரும்பத் தர இயலவில்லை என்றால் முழுவதுமாக அல்ல, எடுத்துக்கட்டாக ஒரு முதலீட்டாளர் 1000 ரூபாய் முதலீடு செய்து 6 மாதங்களுக்கு பிறகு 1100 ரூபாய் கிடைக்கும் என்ற திட்டமாக இருந்திருந்தால் இப்போது அந்த முதலீட்டாளருக்கு 1100 க்கு பதிலாக 950 ரூபாயோ அதற்கு குறைவாகவோதான் கிடைக்கும். ஏனென்றால் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஒரு நிறுவனத்தின் கடன் பத்திரத்தில் மட்டும் தன்னிடம் இருக்கும் அனைத்து பணத்தையும் முதலீடு செய்வது இல்லை, பல நிறுவனங்களின் பத்திரங்களில் பிரித்து முதலீடு செய்கிறது.

இது எவ்வளவு பெரிய அதிர்ச்சி என்று நாம் யோசித்து பார்த்தால் புரியும். வங்கியில் போட்டு வைத்திருந்த பணம் குறைந்தால் வங்கி என்ற அமைப்பின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை எவ்வாறு குறையுமோ அதே போல்தான் இதுவும். இன்னொரு விந்தை என்னவென்றால், எஸ்செல் குழுமம் ஒன்றும் உப்புமா கம்பெனி அல்ல, அது பங்குச் சந்தைகளில் நல்ல மதிப்பை பெற்றிருந்த நம்பகமான கம்பெனி. அதற்கே இந்த நிலை என்றால் பொருளாதாரம் எந்த நிலையில் உள்ளது என்று நமக்கு லேசாகப் புரியும்.

இது எஸ்செல் நிறுவனத்துக்கு மட்டும் வந்திருக்கும் நிலை அல்ல, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், IL&FS என்ற நிறுவனம் – இது போன்ற பல பெரிய நிறுவனங்கள் இதே நிலையில்தான் உள்ளன.

முதலாளித்துவம் எப்பேர்ப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது என்பதின் ஒரு அறிகுறிதான் பெரிய நிறுவனங்களுக்கும், அதன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களுக்கும் வந்திருக்கும் இந்த நிலைமை.

இதற்கு நமக்கு இரண்டு விதமான தீர்வுகள் கூறப்படுகின்றன. ஒன்று, ஒரு விரல் புரட்சி, இன்னொன்று, புல்வாமா, மோடி vs ராகுல், பால்கோட், பாரத் மாதா, இந்து மதம், இன்னும் பல!

—————–
** இந்த கட்டுரையின் வரைவை படித்து கருத்து தெரிவித்த தோழர்கள் பிரதீப்குமார் மற்றும் சக்திவேலுக்கு நன்றி.

செய்தி ஆதாரங்கள் :

Essel Group in talks to raise $400 million to refinance debt
Essel promoters open to selling over 50% of their stake in ZEEL, in talks with over 2 buyers
Zee horror show: Mutual fund investors in 6 Kotak debt plans get a scare

– அருண் கார்த்திக்

குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் !

ன்னாட்டு நிறுவனமான பெப்சி, தன்னுடைய FC5 என்ற அறிவுசார் சொத்துடைமைப் பெற்ற உருளைக்கிழங்கு விதையைப் பயிரிட்டதற்காக  Protection of Plant Varieties and Farmers’ Rights (PPV&FR) Act, 2001 என்ற  அறிவுசார் சொத்துடைமை சட்டப் பிரிவின் கீழ் ஒன்பது விவசாயிகளின் மீது அகமதாபாத் வர்த்தக கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்தது.

இதில் 4 விவசாயிகள் தனக்கு இழப்பீடாக ஒவ்வொருவரும் சுமார் 1.04 கோடி வழங்க வேண்டும் என்றும், மீதி 5 விவசாயிகள் மீது தலா 20 இலட்சம் நட்ட ஈடு வேண்டும் என்றும் வழக்காடியது.

இந்த நீர்ச்சத்து குறைவாக உள்ள FC5 ரக விதையானது, லேஸ் சிப்ஸ்க்காக தயார் செய்யப்படுகிறது இந்த ரக விதையின் மூலம் பயிரிடப்படும் உருளைக்கிழங்கானது பெப்சியின் லேஸ் சிப்ஸ்க்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் மூலம் ஒப்பந்த விவசாய முறை மூலம் பயிரிடப்பட்டு வருகிறது.

இந்த  FC5 என்ற உருளைக் கிழங்கு விதை நாங்கள் உருவாக்கியது, ஆகவே எங்களிடம் தான் இந்த விதையை பயிர் செய்யும் விவசாயிகள் உருளைக் கிழங்குகளை விற்பனை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து இருக்கிறது.

PPVR சட்டப்படி அறிவுசார் சொத்துடைமையின் படி காப்புரிமை பெற்ற விதையானது பொதுச் சந்தைக்கு வரக்கூடாது. எப்படி இந்த விதைகள் பொதுச்சந்தைக்கு வந்தது? விவசாயிகள் பொதுச் சந்தையில் FC5 விதைகளை வாங்கி அதிக மகசூல் தரும் என்று பயிரிட்டு இருக்கிறார்கள். ஏதோ பெப்சி நிறுவனத்திற்கு தெரியாமல் இந்த விதைகளை வாங்கிப் பயிரிடவில்லை. ஒவ்வொரு மகசூல் முடிவிலும் விதைகளைப் பாதுகாப்பதும், விதைகளை விவசாயிகள் பரிமாறிக் கொள்வது இயற்கையே. இந்திய விவசாயிகளைக் கேட்டு, அவர்களின் ஒப்புதல் பெற்று இந்திய அரசு FC5 போன்ற விதைகளுக்கு அறிவுசார் உரிமை கொடுப்பதில்லை.

வழக்கை திரும்ப பெற காரணம் :

தன்  நிறுவனத்தின் அனைத்து பொருட்களையும் புறக்கணிக்கப் போவதாக விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் மூலம் வந்த அறிவிப்பின் காரணமாக அது பின் வாங்கியது. அதே சமயத்தில் கோர்ட்டில் தன் விதைகள் பயன்படுத்தும் விவசாயிகள் தன் நிறுவனத்தின் ஒப்பந்த விவசாய முறையின் மூலம் மட்டுமே பயிர் செய்ய வேண்டும். தனக்குதான் தன்னுடைய  FC5 உருளைக்கிழங்கை விற்க வேண்டும், என்று நிபந்தனையை விதித்தது.

ஆனந்த் யாக்னிக் என்ற  விவசாயிகள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் இதை தன் விவசாயிகளிடம் கேட்டு அடுத்த வழக்கு விசாரணையின் போது (ஜீன் 12) கூறுவதாக தெரிவித்துள்ளார். மேலும்  அடுத்த விசாரணை வரும்வரை இந்த விதை பயிரிடுவதற்கு இருக்கும் தடையை நீடிப்பதாக நீதிபதி MC தியாகி கூறியுள்ளார்.

படிக்க :
♦ உருளைக் கிழங்கு விவசாயிகளை அழிக்கும் சுதந்திரச் சந்தை !
♦ நூல் அறிமுகம் : ஸ்டெர்லைட் போராட்டம் அரசு வன்முறை

மேலும் பெப்சி  நிறுவனம் திமிராக தன்னுடைய நிறுவனத்தின் ஒப்பந்த விவசாயமுறை மூலம் இந்த விவசாயிகள் பயிர் செய்யலாம் என்றும் இதன் மூலம் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட விவசாயிகள் அதிகமான உற்பத்தி, நல்ல தரத்தில் மற்றும் நல்ல விலையில் விற்க முடியும் என்றும், விவசாயிகள் தரமான விவசாய முறையின் மூலம் பயிர் செய்ய பயிற்சியும் பெற முடியும் என்றும் பத்திரிகைகளில் தெரிவித்து இருக்கிறது.

இந்த வழக்கு உருளையின் விதைகளுக்கானதா? இல்லை உருளைக்கிழங்கின் ஏகபோக உரிமைக்கானதா?

நொறுக்குத்தீனி (ஸ்னாக்ஸ்) சந்தையில்  2010-ம் ஆண்டு பெப்சியின் பங்கு 34% ஆதிக்கமாக இருந்தது. அதுவே 2015-ல் 30% ஆதிக்கமாக உள்ளது.

சிப்ஸ் மார்க்கெட்டில் பெப்சியின் பங்கு 2010-ல் 65% ஆகவும் 2015-ல் 51% ஆகவும் உள்ளது.

இதன் மூலம் இது ஏனோ உருளைக்கிழங்கு விதைக்காக நடைப்பெற்ற வழக்காக இல்லை. இது சந்தைக்கான போராட்டமாக பெப்சி பார்க்கிறது.

இந்த வழக்கை திரும்ப பெற்றது ஏதோ விவசாயிகளிடம் பெப்சி நிறுவனம் பணிந்து போனதற்கான முகாந்திரம் இல்லை. குஜராத் அரசு, பெப்சி நிறுவனத்துடன் திரைமறைவு பேச்சுவார்தை மூலம் வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டதாகக் கூறுவதும், இதன்மூலம் விவசாய உரிமை பாதுகாக்கப்பட்டதாகக் கூறுவதும் ஏமாற்று வேலையாகும்.

The Protection of Plant varities And Farmers Right  Act (PPVFRA) என்ற அறிவுசார் சொத்துடைமை ஆனது விவசாயிகளை பாதுகாப்பது போல் ஒரு தோற்றத்தை பத்திரிகைகள் இந்த விசயத்தில்  செய்தி வெளியிடுகின்றன. FC5 என்ற பெப்சியின் உரிமம் பெற்ற விதையை, வேறொரு பெயரில்தான் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வதில்தான் PPVFRA என்ற சட்டத்தில் தடை உள்ளது. விவசாயிகள் பயிர் செய்வதில் தடை இல்லை என்று விவசாயிகளுக்குப் பரிந்து பேசுவது போல் ஒரு தோற்றம் உள்ளது. 1995 உலக வர்த்தகக் கழகத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் TRIPS எனும் அறிவுசார் சொத்துடைமைக்கு இந்தியா பலியாகி வருகிறது.

இந்த வழக்கில் பெப்சி நிறுவனம் தெளிவாகக் கூறுவது என்ன?

விவசாயிகள், ஒன்று என்னுடன் சேர்ந்து நான் கொடுக்கிற விதையை பயிர் செய்து அதன் மூலம் உங்கள் பிழைப்பை நடத்துங்கள். அல்லது, எங்கள் விதையைப் பயிர் செய்யாதீர்கள். தனியாக உருளைக்கிழங்கை பயிர் செய்து கொள்ளுங்கள் என்று கூறுகிறது. தனியாகப் பயிர் செய்து சந்தையில் நல்ல விலைக்கு உருளைக் கிழங்கு விலை போவது  இல்லை. அதற்கான வழியே இல்லாமல் பன்னாட்டு நிறுவனங்கள் பார்த்துக் கொள்கின்றன.

நாளுக்கு நாள், உருளையின் விளைச்சல் அதிகமாக இருந்தாலும், மக்கள் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும் உருளையின் அளவு குறைவாக உள்ளது.

குஜராத் மண்டலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தன்னிடம்தான் விவசாயம் செய்ய வேண்டும். இதுதான் பெப்சி கூற வரும் செய்தி.

இது உருளைக்கிழங்கை பயிர் செய்யக்கூடிய விவசாயிகள் அனைவரும் தன்னுடைய விதையைத்தான் பயன்படுத்த வேண்டும், தனக்குத்தான் உருளையை விற்பனை செய்ய வேண்டும் என்கிறது பெப்சி நிறுவனத்தின் மிரட்டல். இதன் மூலம் இந்தியர்களின் முக்கிய  உணவுப் பொருளான உருளை சந்தையில் தனக்கான ஏகபோகத்தை நிறுவ அது முயற்சிக்கிறது.

படிக்க :
♦ களைக் கொல்லி மருந்து கேட்டால் புற்று நோயைத் தரும் மான்சாண்டோ !
♦ டெல்டாவை நாசம் செய்யும் கெயில் – எதிர்த்தால் பொய் வழக்கு !

இந்த ஏகபோகமானது முதலாளித்துவம் அறிவுசார் சொத்துடைமை என்ற  பெயரில் TRIPS எனும் சர்வதேச ஒப்பந்தம் மூலம் WTO மூலம் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தம் மூலம் ஏற்பட்டது.

உருளைக்கிழங்கு விதை ஒன்றும் பெப்சியின் அப்பன் வீட்டு சொத்தல்ல. உருளைக்கிழங்கு ஒன்றும் பெப்சி கண்டுபிடித்ததும் அல்ல. அது விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பெற்ற அனுபவத்திலிருந்து வந்தது. விதையின் தொழில்நுட்பத்தில் ஒரு சிறு மாற்றத்தைப் புகுத்திவிட்டு விவசாயிகள் பல பத்தாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெற்ற அனுபவ அறிவைத் திருடிக்கொண்டு, இப்போது விவசாயிகள் எங்கள் விதையைத் திருடி விதைக்கிறார்கள் என்று கூறுகிறது முதலாளித்துவ அறிவு ஏகபோகம்.

இது ஒன்பது விவசாயிகளுக்கான பிரச்சினை மட்டும் அல்ல. ஒட்டும் மொத்த விவசாயிகளுக்கானது, மக்களுக்கானது. இனி FC5 உருளைக்கிழங்கை பெப்சிக்கு தெரியாமல் வைத்திருந்தால் நீங்கள் குற்றவாளி என்று கூட வழக்கு போடும் அந்நிறுவனம்.

ஒரு பயிரின் ஏகபோக உரிமையைக் கைப்பற்றத் துடிக்கும் பெப்சி போன்ற ஏகபோக நிறுவனத்தை விரட்டுவது என்பது அகமதாபாத் வர்த்தக கோர்ட்டுக்குள்ளே அல்ல. அதற்கு வெளியேதான் சாத்தியம். அதற்கு ஒன்பது விவசாயிகள் மட்டும் போதாதது ! நாமும் சேர வேண்டும் !!

பரணிதரன்

சூத்திர சிவாஜியை சத்திரியனாக்கினால் நாடே நாசமாகும் !

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 17


காட்சி : 25 (தொடர்ச்சி…)

இடம் : தர்பார்
உறுப்பினர்கள் : காகப்பட்டர், ரங்கு பட்டர், தளபதிகள், வீரர்கள், சிவாஜி, மோரோபந்த், சிட்னீஸ்.

சிவாஜி : மராட்டியர் ராஜ்யம் சம்பாதிக்க உழைத்தனர்; பிராமணர்கள் பட்டாபிஷேக வைபவத்திலே உண்டு களிப்பதா? இது எந்த வகையான நியாயம்?

காகப்பட்டர் : சாமான்யாளுக்கும் தெரியாத நியாயம் இது. இது நியதி. சாஸ்திரம்.

சிவாஜி : இவைகளுக்குப் பிறகு?

காகப்பட்டர் : பூணூல் தரிக்கப்படும். பூபதி ஆகலாம்.

சிவாஜி : (ஆட்களை அழைத்து) இவர் கட்டளைப் படி நடவுங்கள்.

காகப்பட்டர் : சிவாஜி! நீ இன்றே புறப்பட்டுப் போய் திவ்ய க்ஷேத்திரங்களைத் தரித்து, ஆங்காங்கு அர்ச்சனைகள் செய்துவிட்டு வரவேண்டும். அதற்குள் நான் இங்கு ஆக வேண்டிய ஆரம்பச் சடங்குகளைச் செய்து வைக்கிறேன்.

சிவாஜி : அவ்விதமே செய்கிறேன். திவ்ய க்ஷேத்திரங்களிலே என்னென்ன வகையான பூஜைகள் செய்ய வேண்டும்?

காகப்பட்டர் : பூஜைகள் இஷ்டம் போல் செய்யலாம். அந்தந்த திவ்ய க்ஷேத்திரங்களிலும் அனுஷ்டிக்க வேண்டிய பொதுவான ஒரு பூஜை முறை இருக்கிறது.

சிவாஜி : என்ன ஸ்வாமி அது?

காகப்பட்டர் : பிராமணனுக்குத் தானம் செய்வது விட்டலன் கோயிலானாலும், விநாயகர் ஆலயமானாலும், வேலேந்தி கோயிலானாலும், திரிசூல் கோயிலானாலும், கோயிலுள்ள மூர்த்தியாக இருப்பினும் பிராமணனுக்குத் தானம் தர வேண்டும். கோயிலைப் பற்றிய வித்தியாசம் பார்க்காமல்…

சிவாஜி : சென்று வருகிறேன். குருஜி…

காகப்பட்டர் : போய் வா போ போ, புண்ணியத்தைத் தேடு

(சிவாஜி போகிறான்) (சிவாஜி போன பிறகு ரங்கு வருதல்)

ரங்குப்பட்டர் : குருதேவா! இந்த மண்டலத்துக்கு முதல் அமைச்சராம்! நம்மளவராம். தங்களைக் காண …

காகப்பட்டர் : அழைத்து வாயேண்டா நம்மவா வருவதற்குமா தடை? போடா! போய் அழைத்து வா! அப்படியே அங்கு – மிங்கும் உலவிக் கொண்டிருக்கும் வாள் தூக்கிகளை, சந்தடி செய்யாமல் சற்று தூரமாகவே இருக்கச் சொல்லு. அவர் ஏதோ அந்தரங்கமான விஷயந்தான் பேச வருவார்.

(ரங்கு மோரோபந்த்தை அழைத்துவர)

மோரோபந்த் : நமஸ்தே, குருஜீ! நமஸ்தே !

காகப்பட்டர் : வருக பிரதம மந்திரியாரே! அமருக இப்படி அருகில், அடே, ரங்கு! பாலும் பழமும்.

மோரோபந்த் : வேண்டாம் ஸ்வாமி! நான் வந்திருப்பது…

காகப்பட்டர் : முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும் என்று யூகிக்கிறேன்.

மோரோபந்த் : குருதேவா! இவர்?

காகப்பட்டர் : நமது சீடன்! பரம சீடன் தாராளமாகப் பேசலாம்.

மோரோபந்த் : தாங்கள் தயவு செய்து கோபியாமல் என் வார்த்தையைக் கேட்டருள வேண்டும். சிவாஜியை க்ஷத்திரியனாக்க, மகுடாபிஷேகம் செய்ய தாங்கள் வந்திருப்பது அவ்வளவு உத்கிருஷ்டமான காரியம் அல்ல என்பது என் அபிப்பிராயம்.

காகப்பட்டர் : தீர்க்க ஆலோசனைக்குப் பிறகே வரச் சம்மதித்தேன். மோரோ பண்டிதரே ஏன் தாங்கள் கலங்கக் காரணம்?

மோரோபந்த் : இந்தப் பட்டாபிஷேகம் பாவ காரியம் என்று சொல்லி இந்த முயற்சியைப் பலமாக எதிர்த்தவன் நான்.

காகப்பட்டர் : அப்படியா, ஏன் ?

மோரோபந்த் : சாஸ்திர விரோதம், புது சம்பிரதாயம் எதிர்கால ஆபத்து இந்த ஏற்பாடு என்பதால் தான். தாங்கள் அறியமாட்டீர்கள், மராட்டியத்தில் நடைபெற்று வரும் செயல்களை, பழைய ஐதீகங்களைப் பாழ்படுத்தும் ஓர் பயங்கர முயற்சியை சாது சன்யாசிகள் என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பவர்கள் செய்து வருகிறார்கள். இப்போது ஜாதி ஆச்சாரம், மத ஆச்சாரம் யாவும் நாசமாகும். அவர்கள் எண்ணத்தின்படி காரியம் நடைபெற்றால், தாங்கள் சூத்திர சிவாஜியை க்ஷத்திரிய சிவாஜியாக்கினால், அவர்கள் வீசும் வலையில் நாடு விழுகிறது என்றுதான் அர்த்தம். வைதீக மார்க்கம் மங்கி மடியும். ஆரிய குலோத்தமா! இந்த அக்கிரமத்துக்குத் தாங்கள் சம்மதிக்கலாமா?

காகப்பட்டர் : மோரோ பண்டிதரே ! என் சிந்தனையைக் குழப்பி விட்டீரே! நான் சிவாஜிக்கு முடி சூட்டுவதுதான் நமது சனாதன மார்க்கத்துக்குப் புதிய பலம் என்று எண்ணியல்லவா இதற்குச் சம்மதித்தேன். கற்பாதித்தேன்.

மோரோபந்த் : பொதுப்படையாகப் பார்க்கும்போது தாங்கள் சொல்வது சரி. ஆனால் மராட்டியத்தின் இன்றைய நிலையை மட்டுமல்ல; எதிர்காலத்தையும் பற்றிக் கவனிக்கும்போது …

காகப்பட்டர் : கவனித்தாக வேண்டுமே மோரோ பண்டிதரே! நாம் செய்கிற காரியம் காலா காலத்துக்கும் பலன் அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டுமே. ஆமாம், அவசரக் கோலத்தில் நாம் நடந்துக் கொள்ளக் கூடாதே. தாங்கள் சொல்லியிருப்பது புதியதோர் சிக்கல். நான் எதிர்பாராதது.

மோரோபந்த் : சிவாஜி ராஜனாகட்டும். அதாவது, ராஜா வேலை பார்க்கட்டும். குருதேவா! ஆனால் அது அவனுடைய ஆற்றலுக்குக் கிடைத்த பரிசாக இருக்க வேண்டும். உரிமையாக்குவதும், தருமமாக்குவதும், வேத ஆகமச் சம்மதம் தருவதும், சாஸ்திரமுறைப்படி மகுடாபிஷேகம் செய்விப்பதும் க்ஷத்திரியனாக்குவதும் தான் ஆபத்து என்று கருதுகிறேன். சிவாஜியைச் க்ஷத்திரியனாக்கினால் குருஜீ, ஒரு புதிய பரம்பரையை உருவாக்குகிறார் என்றல்லவா பொருள். சிவாஜியின் மகன், பேரன், அவன் மகன் இப்படிப் பரம்பரையாய் ராஜாக்கள் ஆவர்; க்ஷத்திரியராவர்.

காகப்பட்டர் : புரிகிறது, மோரோ பண்டிதரே! நன்றாகப் புரிகிறது. இதற்காகத்தான் என் சம்மதம் பெற இவ்வளவு துடித்தனரோ? தந்திரக்காரர்கள். மோரோபந்த்! கவலைப்படாதீர். என் தீர்ப்பை மாற்றிக் கொள்கிறேன். பட்டாபிஷேகத்திற்குச் சம்மதிக்க மாட்டேன் என்று கூறிவிடுகிறேன்.

மோரோபந்த் : ஏதோ எனக்குத் தெரிந்ததைக் கூறினேன். க்ஷமிக்கணும். மகா பண்டிதரான தங்களிடம் தர்க்கித்ததாக எண்ணிவிடக்கூடாது.

காகப்பட்டர் : மோரோபந்து நமக்குள் ஏன் இந்த வித்தியாசம்? உபச்சாரம் இருவருக்கும் ஒரே அபிலாஷை என்று இப்போது சொல்லுகிறேன். எந்தக் காரியத்தைச் செய்தாலும் அது ஆரிய தர்மத்துக்கு லாபகரமானதா குலதர்மத்துக்கு ஏற்றதா என்பதைக் கவனித்துதான் செய்வேன்.

மோரோபந்த் : அதிலென்ன சந்தேகம்? ஆரிய தர்ம ரட்சகராகிய தங்களுக்குத் தெரியாததும் உண்டோ.

காகப்பட்டர் : போய் வாரும் சிவாஜிக்குப் பட்டமில்லை. போய்வாரும்.

மோரோபந்த் : எப்படிச் செய்தால் யுத்தம் என்று தங்களுக்குத் தோன்றுகிறதோ அவ்விதம் செய்யுங்கள் ஸ்வாமி. நான் வருகிறேன்.

(மோரோ போகிறார்)

ரங்குப்பட்டர் : என்ன ஸ்வாமி இது கிணறு வெட்ட புதுப்புது பூதங்களாகக் கிளம்பிண்டே வர்றதே. சிவாஜிக்குப் பட்டாபிஷேகம் கூடாதுன்னு இந்தப் பண்டிதர் சொல்றார். சிவாஜியிடமோ பேசி வாதாடி ஒரு முடிவுக்கு வந்தாச்சு. ஊர் பூராவும் அமர்க்களப்படறது, மகுடாபிஷேக வைபவ விஷயமா!

படிக்க:
பேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் !
மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி !

காகப்பட்டர் : அதனாலே நம் தலையிலேயே நாம் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதா? மோரோ பண்டிதர் சொன்னதைத் தள்ளிவிட முடியுமா?

ரங்குப்பட்டர் : அப்படியானா சிவாஜிக்கும், சிட்னீசுக்கும் கொடுத்த வாக்கு?

காகப்பட்டர் : வேதவாக்கு மிஞ்சியாடா இதெல்லாம். மோரோ பண்டிதர் சொல்றார் பட்டம் கூடாதுண்ணு. தகுந்த காரணமும் காட்டறார்.

ரங்குப்பட்டர் : விபரீதமாகிப் போகும் ஸ்வாமி இப்போது நாம் மாத்திப் பேசினா.

காகப்பட்டர் : விபரீதமும் ஆகாது; வினாசமும் நேராது; தீர்க்கமாக யோசிக்க வேண்டும்.

ரங்குப்பட்டர் : ஆமாம் ஸ்வாமி நம்மவர் சொன்னா என்பதற்காக
அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரப்படாது பாருங்கோ .

காகப்பட்டர் : எது செய்தாலும் சிலாக்கியம்? சிவாஜிக்கு முடிசூட்டுவது நல்லதா? மோரோ பண்டிதர் சொல்கிறபடி பட்டாபிஷேகத்தைத் தடுத்தால் நல்லதா என்பதை யோசிக்க வேணும். சாங்கோபாங்கமாக. நம்ம தர்மம் பாழாகக் கூடாது.

ரங்குப்பட்டர் : ஸ்வாமி நாம் சொன்ன எல்லா நிபந்தனைகளுக்கும் சிவாஜி சம்மதித்து விட்டார். ஹோமம், சமாராதனை, பிராமணாளுக்குத் தானம், துலாபாரம், சகலத்துக்கும் – சம்மதிக்கிறார். பாடம் உண்டு!

காகப்பட்டர் : பாடம் இருக்கோன்னோ ? இருந்தும் சமாராதனை செய்யறானே! தட்சணை தருகிறானேண்ணு பூரிச்சுப் போறே. என்னடா பிரமாதம் இதிலே. ஸ்ரீராமச் சந்திரருக்குப் பட்டாபிஷேகம் ஏற்பாடு ஆச்சேன்னோ ?

ரங்குப்பட்டர் : ஆமாம். ஏற்பாடாச்சு.

காகப்பட்டர் : கைகேயி செய்த காரியத்தாலே தடைப்பட்டு, ஸ்ரீராமச்சந்திரர் கானக வாசத்துக்குக் கிளம்ப நேரிட்டு விட்டதே! அப்போ அவரோடு கூடவே போயாகணும்னு சீதாப் பிராட்டியாரும், கிளம்பற போது, என்னடா நடந்தது?

ரங்குப்பட்டர் : ஸ்ரீராமச்சந்திரர் வைதேகி கானகத்திலே கொடிய துஷ்ட மிருகங்களெல்லாம் உலவும். நீ வரப்படாதுண்ணு ..

காகப்பட்டர் : மண்டு அந்தக் கட்டத்தைத் தாண்டுடா ! சீதாப்பிராட்டியாரைத் தன் கூட அழைச்சிண்டு போக ராமபிரான் சம்மதித்து விடுகிறார். பிறகு அதற்குப் பின்னாலே…

ரங்குப்பட்டர் : ஊர் முழுதும் புலம்பறது.

காகப்பட்டர் : தேசம் பூராவும் தானே அழறது. எவ்வளவு சோகமான கட்டம். பட்டத்துக்கு வர வேண்டிய இளவரசன் ராமபிரான். அதே நாளிலே, அரண்மனை நந்தவனத்திலே உலவ வேண்டிய ராணியை அழைச்சுண்டு ஆரண்யம் போறதுண்ணா அதைவிடச் சோகமான – துக்கமான சம்பவம் வேறே இருக்க முடியுமா?

ரங்குப்பட்டர் : முடியாது ஸ்வாமி முடியாது. இப்ப கூட பக்தா இந்தச் சம்பவத்தைப் படிச்சா கதறுராளே.

காகப்பட்டர் : அப்படிப்பட்ட சமயத்திலே ஸ்ரீராமச்சந்திரர் சீதாப்பிராட்டியாரைப் பார்த்து, திருவாபரணங்களை எல்லாம் கழற்றி பிராமணாளுக்குத் தானம் செய்துட்டு வாண்ணு சொன்னாரடா. எப்படிப்பட்ட சமயம்! ஊரே புலம்பிண்டிருக்கு. சீதாப்பிராட்டியாருக்கும் ராம பிரானுக்கும் பதினான்கு ஆண்டு கானக வாசம். அப்படிப்பட்ட கஷ்ட காலத்திலேயும் பிராமணாளுக்குத் தானம் கொடு, ஆபரணங்களைக் கழற்றிக் கொடுண்ணு சீதாப்பிராட்டியாருக்கு ராமபிரான் சொன்னதாகவும், சீதாப்பிராட்டி அது போலவே செய்ததாகவும் ராமாயணம் சொல்றது அசட்டு ரங்கு! நீ ராமாயணத்தைப் பாராயணம் செய்ததாகவும் சொல்றே. இந்த சிவாஜி செய்த தானாதிகளைப் பார்த்து, ஒரே ஆனந்தக் கூத்தாடுகிறாயே. ஆரண்யம் போகும் பொழுது அழுத கண்ணோடு இருந்த சீதா தேவியே பிராமணாளுக்குத் தானம் செய்திருக்கா. பட்டத்துக்கு வரப்போகிற சிவாஜி தானம் கொடுக்கிறதிலே என்னடாப்பா ஆச்சரியம். சமயம் எதுவாக இருந்தாலும், ஆனந்தமோ, துக்கமோ, எப்படிப்பட்ட சமயமானாலும் பிராமணாளுக்குத் தானம் தர வேணுமடா. அதுதானே சாஸ்திரம். சந்தோஷமான சமயத்திலே தானம் தருகிறாண்ணா அவாளோட சந்தோஷம் பல மடங்கு அதிகமாக வேணும்னு அர்த்தம். இதெல்லாம் நம்ம சாஸ்திரத்திலே இருக்குடா.

ரங்குப்பட்டர் : இருக்கு ஸ்வாமி, இருக்கு.

காகப்பட்டர் : ரங்கு ஒரு யோசனை. அபூர்வமான யோசனை உதிச்சிருக்கு. எடு, சுவடிகளை கொடு இப்படி.

(ரங்கு சுவடிகளைக் கொடுக்க, காகப்பட்டர் அதை வீச, ரங்கு எடுக்க)

டேமண்டு! அவைகள் அங்கேயே கிடக்கட்டும். ஒடு! போய் அந்த சிட்னீஸை வரச்சொல் உடனே.

(ரங்கு போதல், சிட்னீஸ் வருதல்)

காகப்பட்டர் : வாப்பா சிட்னீஸ்

சிட்னீஸ் : குருஜி ஏன் முகவாட்டமாய் இருக்கிறீர்! ஏடுகள் ஏன்
இப்படி ?

காகப்பட்டர் : ஏடுகள் என்னை வாட்ட, அவை போதும்டாப்பா சிட்னீஸ்! தேடித் தேடிப் பார்க்கிறேன். தெளிவு இல்லை; திகைப்புத்தான் அதிகமாயிண்டிருக்கு.

சிட்னீஸ் : எதற்கு ஸ்வாமி?

காகப்பட்டர் : எதற்கா? சிட்னீஸ் விஷயத்தை வீணாக வளர்த்த இஷ்டப்படவில்லை. பட்டாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடைபெற்றுவிட்டனவா?

சிட்னீஸ் : ஆகா! தாமதம் இராது குருஜி. நூற்றுக்கணக்கானவர்கள் பணி செய்தபடி இருக்கிறார்கள்.

காகப்பட்டர் : பாபம்.. குழந்தை மனசு அவாளுக்கு..

சிட்னீஸ் : கொற்றவனிடத்தில் அவர்களுக்கு அவ்வளவு பக்தி குருதேவா!

காகப்பட்டர் : பரிதாபம் எல்லாவற்றையும் பாழ் செய்கின்றன இந்த ஏடுகள்.

சிட்னீஸ் : ஸ்வாமி! தாங்கள் சொல்லுவது?

காகப்பட்டர் : புரியவில்லையா சிட்னீஸ், பட்டாபிஷேக ஏற்பாட்டை நிறுத்திவிடு.

சிட்னீஸ் : நிறுத்திவிடுவதா? ஏன்?

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

படுபாவிப் பயலே ! இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய் ?

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 16

வீட்டுக்காரர் சென்று விட்டதைக்கூடக் கவனிக்காதபடி அவ்வளவு தன்னுணர்வு அற்ற நிலையில் கிடந்தான் அலெக்ஸேய் மெராஸ்யேவ். அடுத்த நாள் முழுவதும் அவன் நினைவிழந்து கிடந்தான். மூன்றாம் நாள்தான் அவனுக்கு உணர்வு வந்தது. அப்போது சூரியன் வெகு உயரே கிளம்பிவிட்டிருந்தது. விட்டத்தில் இருந்த சாளரத்தின் வழியாகச் சூரிய கிரணங்களின் பெருந்தம்பம் நிலவறை முழுவதையும் கடந்து, பல படிவிகளாகக் குமைந்த நீலக்கணப்புப் புகையை ஊடுருவி, அலெக்ஸேயின் கால்கள் வரை நீண்டிருந்தது.

நிலவறை வெறுமையாக இருந்தது. மேலே கதவுப் புறமிருந்து கேட்டன இரு குரல்கள். ஒன்று வார்யாவினுடையது. மற்றொன்று ஒரு கிழவியின் குரல், அதுவும் அலெக்ஸேய்க்கு அறிமுகமானது. அவர்கள் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.

“சாப்பிடமாட்டேன் என்கிறானா?”

“சாப்பிடுவது எங்கே?… சாயங்காலம் தோசை ஒரு விள்ளல் வாயில் போட்டுக் கொண்டார். அவ்வளவு தான், அதையும் வாந்தி எடுத்துவிட்டார். இதுவும் ஒரு சாப்பாடு ஆகுமா? பால்தான் கொஞ்சம் போல் குடிக்கிறார்.”

“நான் சூப் கொண்டு வந்திருக்கிறேன் பார் … ஒரு வேளை சூப் அவனுக்கு ஏற்றுக் கொள்ளும்.”

“வஸிலீஸா மாமி!” என்று கத்தினாள் வார்யா. “நீங்கள் என்ன…”

“ஆமாம் கோழி சூப். என்ன திடுக்கிடுகிறாய்? சர்வ சாதாரணமான விஷயம் இது. அவனைத் தட்டி எழுப்பு. ஒரு வேளை சாப்பிடுவான்.”

அரை உணர்வில் அதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அலெக்ஸேய் கண்களைத் திறப்பதற்குள் வார்யா அவனை வலுவாக, கூச்சப்படாமல், சந்தோஷம் பொங்க ஆட்டி அசைத்தாள்.

“அலெக்ஸேய் பெத்ராவிச், விழித்துக்கொள்ளுங்கள்! … வஸிலீஸா மாமி கோழி சூப் கொண்டு வந்திருக்கிறாள்! எழுந்திருங்கள்!”

வாயில் அருகே சுவற்றில் செருகப்பட்டிருந்த சிறாய் விளக்கு சடசடத்து எரிந்தது. அதன் புகை மண்டிய ஒழுங்கற்ற வெளிச்சத்தில் சிறு கூடான, கூனற் கிழவியை அலெக்ஸேய் கண்டான். சுருக்கம் விழுந்த, நீண்ட மூக்குள்ள அவள் முகம் கடு கடு வென்றிருந்தது.

“இதோ கொண்டு வந்திருக்கிறேன். கூச்சப்படாதீர்கள். வயிறாரச் சாப்பிடுங்கள். ஆண்டவன் அருளால் இது நன்மை பண்ணலாம்..” என்றாள் கிழவி.

அவளுடைய குடும்பத்தினரின் துயரக் கதையும் கொரில்லாக் கோழி என்ற வேடிக்கை பெயர் கொண்ட கோழியின் கதையும் அலெக்ஸேய் நினைவுக்கு வந்தன. கிழவியும் வார்யாவும் மேஜை மேல் கமகமவென்று ஆவி விட்ட பாத்திரமும் எல்லாமே கண்ணீர் திரையின் மங்கலில் குழம்பின. கிழவியின் கண்டிப்புள்ள விழிகள் கடுமையுடன், அதே சமயம் அளவற்ற பரிவும் அனுதாபமும் பொங்க அவனை நோக்குவது கண்ணீருக்கிடையே அவனுக்குத் தெரிந்தது.

கிழவி வாயிலை நோக்கி நடக்கையில், “நன்றி, பாட்டி!“ என்று மட்டுமே சொல்ல அவனுக்கு இயன்றது.

அதற்குள் கிழவி கதவருகே போய்விட்டாள்.

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நன்றி சொல்வதற்கு அப்படி என்ன செய்துவிட்டேன் நான்? சொஸ்தமாகுங்கள்” என்று அங்கிருந்து கூறினாள்.

“பாட்டீ, பாட்டீ!” என்று கூவி அவளை நோக்கிப் பாய்ந்து செல்ல எழுந்தான் அலெக்ஸேய். ஆனால், வார்யாவின் கைகள் அவனைப் பிடித்துத் தடுத்து மெத்தை மேல் கிடத்தின.

“நீங்கள் படுத்திருங்கள், படுத்திருங்கள்! சூப் சாப்பிடுங்கள்” என்றாள் வார்யா.

“மிஹாய்லா தாத்தா எங்கே?

“அவர் போயிருக்கிறார் காரியமாக. நமது படை முகாமைத் தேடப் போயிருக்கிறார். வரத் தாமதமாகும். நீங்கள் சாப்பிடுங்கள். இதோ“

ஒரு கரண்டி சூப் சாப்பிட்டதுமே அலெக்ஸேய்க்கு வயிற்றில் வலியெடுக்கும்படி, இசிவு காணும் அளவுக்கு ஓநாய்ப் பசி எடுத்து விட்டது. எனினும் அவன் பத்துக் கரண்டிகள் சூப் மட்டுமே பருகிவிட்டு, வெண்மையும் மென்மையுமான கோழி இறைச்சியின் சில இழைகளை சாப்பிட்டதுடன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். வயிறு என்னவோ இன்னும் கொண்டா கொண்டா என்று நச்சரித்தது. ஆனால், தனது நிலைமையில் அளவுக்கு மேல் உணவு நஞ்சு ஆகிவிடக்கூடும் என்பதை அறிந்திருந்த அலெக்ஸேய் பாத்திரத்தை தீர்மானத்துடன் அப்பால் நகர்த்திவிட்டான்.

கிழவி கொணர்ந்த சூப் மந்திர சக்தி உள்ளதாக இருந்தது. சாப்பிட்டதுமே அலெக்ஸேய் உறங்கிவிட்டான் – உணர்வு இழக்கவில்லை, ஆரோக்கியமான நல்ல தூக்கத்தில் ஆழ்ந்தான். தூங்கி எழுந்ததும் மறுபடி சாப்பிட்டு விட்டு மீண்டும் உறங்கிப் போனான். கணப்புப்புகையோ, மாதர்களின் பேச்சோ, வார்யாவின் கரங்களின் ஸ்பரிசமோ, எதுவும் அவனை எழுப்பவில்லை. அவன் இறந்துவிட்டானோ என்ற அச்சத்தால் வார்யா அவன் இதயம் துடிக்கிறதா என்று உற்றுக் கேட்டாள். அப்படியும் அவன் தூக்கம் கலையவில்லை.

அவன் உயிரோடிருந்தான், ஒரு சீராக, ஆழ்ந்து மூச்சு விட்டான். எஞ்சிய பகல் பொழுதையும் இரவையும் அவன் உறக்கத்திலேயே கழித்தான். உலகத்தில் எந்தச் சக்தியும் அவனுடைய தூக்கத்தைக் கலைக்க முடியாது போலிருந்தது அவன் விடாது உறங்கிய விதம்.

அதிகாலையில் எங்கோ வெகுதொலைவில் கேட்டது ஒரு சத்தம். காட்டில் நிறைந்திருந்த மற்ற ஒலிகளிலிருந்து சற்று பிரித்தறிய முடியாத சத்தம். வெகு தொலைவில் கேட்டது, புறா கத்துவது போன்ற ஒரு சீரான ஒலி அது. அலெக்ஸேய் திடுக்குற்று விழித்துக் கொண்டான், காதைக் கூராக்கிக் கொண்டு தலையணையிலிருந்து சிரத்தை நிமிர்த்தினான். ஒரு சீராக கடகடப்பு காதில் பட்டது. “ஊ-ஊ” விமானத்தின் எஞ்சின் இரையும் சத்தமே அது என்று அலெக்ஸேய் புரிந்து கொண்டான். சத்தம் ஒரு சமயம் அருகே நெருங்கி மிகுந்து கொண்டு போயிற்று, மறு சமயம் மந்தமாகக் கேட்டது. எனினும் அப்பால் போய் விடவில்லை. அலெக்ஸேய்க்கு மூச்சு நின்று விடும் போல் ஆகி விட்டது. விமானம் எங்கோ அருகாமையில் இருக்கிறது, காட்டுக்கு மேலே வட்டமிடுகிறது, எதையோ ஆராய்ந்து பார்க்கிறது அல்லது இறங்குவதற்கு இடம் தேடுகிறது என்பது தெளிவாயிருந்தது.

அலெக்ஸேய் கடும் முயற்சி செய்து உட்கார்ந்து கொண்டான். விமானம் இடும் வட்டங்களை எண்ணினான். ஒன்று, இரண்டு, மூன்று வட்டங்களை எண்ணியவன் பதற்ற மிகுதியால் நிலை குலைந்து மெத்தையில் சாய்ந்து விட்டான். சர்வ வல்லமையுள்ள, நோய் தீர்க்கும் அதே உறக்கம் மீண்டும் அவனை ஆட்கொண்டு விட்டது.

இளமையும் உற்சாகமும் பொங்க அதிர்ந்தொலிந்த கட்டைக் குரலைக் கேட்டு அவன் விழித்துக் கொண்டான். வேறு எத்தனை குரல்களுக்கிடையேயும் இந்தக் குரலை அவன் இனங்கண்டு கொண்டிருப்பான். சண்டை விமான ரெஜிமெண்டில் இந்த மாதிரிக் குரல் ஸ்குவாட்ரன் கமாண்டர் அந்திரேய் தெக்தியாரென்கோ ஒருவனுக்கு மட்டுமே உண்டு.

அலெக்ஸேய் கண்களைத் திறந்தான். ஆனால், தான் தொடர்ந்து தூங்குவது போன்றும், நெற்றியில் சிவப்புத் தழும்பு உள்ள, நல்லியல்பு ததும்பும் நண்பனின் முகம் தனக்குக் கனவில் தெரிவது போன்றும் அவனுக்குத் தோன்றியது. நண்பனின் நீல விழிகள் புகை சூழ்ந்த அரை இருளில் விளங்காமையுடன் கூர்ந்து நோக்கின.

“எங்கே, தாத்தா, உங்கள் வெற்றிப் பரிசைக் காட்டுங்கள் பார்ப்போம்” என்று முழங்கினான் தெத்தியாரென்கோ.

காட்சி மறைந்து விடவில்லை. அவன் மெய்யாகவே தெத்தியாரென்கோதான். ஆனால், நடுக்காட்டில், நிலவறைக் கிராமத்தில் தன்னை நண்பனால் எப்படி தேடிக் காண முடிந்தது என்பது நம்ப முடியாததாகத் தோன்றியது அலெக்ஸேய்க்கு. பெரிய உடலும் அகன்ற தோட்களுமாக, வழக்கம் போல காலர் பொத்தான்களைக் கழற்றிய கோலத்தில் நின்றான் தெத்தியா ரென்கோ. ரேடியோ போன் கம்பிகளுடன் தலைக் காப்பும் வேறு ஏதோ பொட்டலங்களும் கைகளில் பிடித்திருந்தான்.

தெத்தியாரென்கோவின் முதுகுக்குப் பின்னால் மிஹாய்லா தாத்தாவின் வெளிறிய, ஒரேயடியாகக் களைத்துச் சோர்ந்த முகம் தெரிந்தது. கிளர்ச்சிப் பெருக்கினால் அவருடைய கண்கள் பரக்க விழித்தன. அவருக்கு அருகே நின்றாள் மருத்துவத்தாதி லேனச்கா. செஞ்சிலுவைப்பொறித்த பருத்த கித்தான் பையை அவள் கக்கத்தில் இடுக்கியிருந்தாள். விசித்திரமான ஏதோ பூக்களை மார்போடு சேர்த்து வைத்துக் கொண்டிருந்தாள்.

கரிந்து போனது போன்று கறுத்த தோலால் இழுத்து மூடப்பட்டிருந்த இந்த உயிருள்ள எலும்புக் கூட்டை விமானி தெத்தியாரென்கோ இன்னும் ஒரு கணம் நோட்டமிட்டான். தனது நண்பனின் குதூகலம் பொங்கும் முகம்தான் அது என ஒப்புக் கொள்ள அவன் முயன்றான்.

முழங்கைகளை ஊன்றி எழுதுவதற்கு முயன்றவாறு, “அந்திரெய்!” என்றான் அலெக்ஸேய்.

அந்திரெயோ, விளங்காமையையும் துலக்கமாகத் தெரிந்த திகிலும் தோன்ற அவனை நோக்கினான்.

“அந்திரெய், என்னை அடையாளம் தெரியவில்லையா?” என்று கிசுகிசுத்தான் அலெக்ஸேய். தன் உடம்பு முழுதும் நடுங்கத் தொடங்குவதை அவன் உணர்ந்தான்.

கரிந்து போனது போன்று கறுத்த தோலால் இழுத்து மூடப்பட்டிருந்த இந்த உயிருள்ள எலும்புக் கூட்டை விமானி தெத்தியாரென்கோ இன்னும் ஒரு கணம் நோட்டமிட்டான். தனது நண்பனின் குதூகலம் பொங்கும் முகம்தான் அது என ஒப்புக் கொள்ள அவன் முயன்றான். மிகப்பெரிய, அனேகமான வட்டமான விழிகளில் மட்டுமே அலெக்ஸேய்க்கு இயல்பானதும் தனக்குக் தெரிந்ததுமான, பிடிவாதமும் ஒளிவு மறைவின்மையும் உள்ள பாவம் அவனுக்குப் புலப்பட்டது.

அவன் கைகளை முன்னே நீட்டினான். தரையில் விழுந்தது தலைக்காப்பு, பொட்டலங்கள் சிதறின, ஆப்பிள்களும் , கிச்சிலிப் பழங்களும் பிஸ்கோத்துக்களும் உருண்டன.

“அலெக்ஸேய், நீ தானா?” – விமானியின் குரல் தழுதழுத்தது. நிறமற்ற நீண்ட இமை மயிர்கள் ஒட்டிக் கொண்டன. “அலெக்ஸேய், அலெக்ஸேய்!” என்று, நோயுற்ற, குழந்தையினது போன்ற லேசான அந்த உடலைக் கட்டிலிலிருந்து வாரி எடுத்துச் சிறுவன் போல அணைத்துக் கொண்டான். “அலெக்ஸேய், நண்பா, அலெக்ஸேய்!” என இடைவிடாது மொழிந்தான்.

அவனுடைய வலிய கரடிக் கையிலிருந்து குற்றுயிரான அந்த உடலை விடுவிக்க வார்யாவும் மருத்துவத்தாதி லேனச்காவும் முயன்றார்கள்.

விமானியோ, கறுத்து, கிழடுதட்டிப்போன இந்த எடையற்ற மனிதன் தனது படைத் தோழனும் நண்பனுமான அலெக்ஸேய் மெரேஸ்யேவ் தான், தானும் ரெஜிமெண்ட்காரர்கள் அனைவரும் எவனை வெகுநாட்களுக்கு முன்பே இறந்தவனாகக் கருதி அடக்கம் செய்துவிட்டார்களோ அவனேதான் என்று முடிவில் நம்பிக்கை அடைந்து தலையைப் பிடித்துக் கொண்டான். காட்டுத்தனமான வெற்றி முழக்கம் செய்தான், பின்பு அலெக்ஸேயின் தோட்களைப் பற்றி, வட்டமான கண் குழிகளின் ஆழத்திலிருந்து களியுடன் சுடர்ந்த அவனுடைய கரிய விழிகளை நிலைக்குத்திட்டு நோக்கியவாறு கர்சித்தான்:

“உயிரோடிருக்கிறான்! அட என் தாயே! உயிரோடிருக்கிறான், படுபாவிப் பயல்! இத்தனை நாட்களாக எங்கேயடா இருந்தாய்? எப்படி உனக்கு இந்த மாதிரி நேர்ந்தது?”

ஆனால் மருத்துவத்தாதி – தூக்கிய மூக்கும் குட்டையான பருத்த உடலும் கொண்டவள் அவள். ரெஜிமெண்டில் எல்லோரும் அவளை லெப்டினண்டு என்பதைப் பொருட்படுத்தாமல் செல்லமாக லேனச்கா என்று அவளை அழைத்தார்கள் – அவள் எல்லைமீறிக் குதிபோட்ட விமானியைக் கண்டிப்பும் உறுதியுமாக அப்பால் விலக்கி விட்டாள்.

படிக்க:
இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி !
செவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா !

“தோழர் காப்டன், நோயாளியிடமிருந்து விலகி நில்லுங்கள்!”

பூச்செண்டை மேஜை மீது எறிந்தாள். (இந்தப் பூச்செண்டுக்காக முந்தின நாள் தான் பிரதேசத் தலைநகருக்கு அவர்கள் விமானத்தில் சென்றார்கள். இப்போதோ அது சற்றும் தேவையற்றது ஆகிவிட்டது) செஞ்சிலுவை பொறித்த கித்தான் பையைத் திறந்து நோயாளியைப் பார்வையிடுவதில் காரியப் பாங்குடன் முனைந்தாள். லேனச்கா அவளுடைய குட்டை விரல்கள் அலெக்ஸேயின் கால்களை லாவகமாக வருடின.

“வலிக்கிறதா? இப்போது? இப்போது?” என்று கேட்ட வண்ணமாயிருந்தாள்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி !

மே – 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் முதலாம் ஆண்டு நினைவு நாள் !

ந்த நாளில் தங்கள் மண்ணைக் காக்க உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தக்கூட முடியாது என்ற நிலைதான் தமிழகத்தில் உள்ளது.

பல இடங்களில் மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் தடுப்புக் காவல் என கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசு தோழர்களை நள்ளிரவில் கைது செய்து தனது அராஜகத்தை நிகழ்த்தியுள்ளது. பல இடங்களில் மக்கள் அதிகாரம் நடத்தவிருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிகளை போலீசு தடை செய்துள்ளது.

ஆனால் இந்த தடைகளைத் தாண்டி பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் ஆர்ப்பாட்டம் – போராட்டங்களை நடத்தியுள்ளனர். அவற்றின் தொகுப்பு.

***

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 11:00 மணிக்கு மக்கள் அதிகாரம் சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு தோழர்கள் திரளுவதற்கு முன்பே போலீசு குவிந்துவிட்டது. அதுமட்டுமல்லாது கைது செய்து அழைத்துப் போவதற்காக வாகனங்களையும் தயார் நிலையில் வைத்திருந்தது.

இந்நிலையில் சரியாக 11:00 மணிக்கு மக்கள் அதிகாரம் தோழர்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் படங்களை ஏந்தி; முழக்கமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தை துவங்கினர். அதைத் தொடர்ந்து தோழர் வெற்றிவேல் செழியன் ஊடகங்களுக்கு பேட்டியளிததார்.

அதன் பின் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றது போலீசு.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள், மாணவர் – இளைஞர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை.

***

விருத்தாசலத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு, மக்கள் அதிகாரம் அலுவலகத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்
விருத்தாசலம் வட்டாரம்
9791286994

***

டலூரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு, கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சேத்தியாத்தோப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத் தியாகிகளின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள பெரிய குப்பம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சார்ந்த தோழர் மணிகண்டன் தலைமையில் நடந்தது. இதில் விசிக வை சார்ந்த ரஜினிவளவன், காங்கிரஸ் கட்சியை சார்ந்த மாதவர், சாரங்கபாணி ஆகியோரும் இறுதியாக தோழர் மணியரசன் (மாவட்ட செயலாளர், புமாஇமு) ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

இதில் 1) கொலைகார நிறுவனமான ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்தை அகற்ற தனிசட்டம் இயற்று (2) படுகொலைக்குப் காரணமான போலீசாருக்கு கொலை குற்றத்தில் தண்டனை வழங்கு (3) ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு நினைவிடம் அமை! என்ற மூன்று கோரிக்கையை வலியுறுத்தியும் வேதாந்தா குழுமத்திற்கு பிஜேபி மோடி அரசு தடை விதிக்காமல் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, நாகை மாவட்டங்களில் விவசாய நிலங்களில் திறந்த வெளியில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் இலட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பறிபோகும் என்ற நிலைமை உருவாகும் என்பதை கண்டித்தும் பேசப்பட்டது. மேலும் நம் மண்ணை, காற்றை, நீரை பாதுகாக்க ஸ்டெர்லைட்டை போன்ற வீரசெறிந்த போராட்டத்தை நடத்த வேண்டும் என்று கிராம மக்கள் சார்பாக அறைகூவல் விடப்பட்டது.

தகவல் :
மக்கள் அதிகாரம்
கடலூர்.

***

துரையில் பெரியார் நிலைம் அருகில் உள்ள கட்டபொம்மன் சிலையருகில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் “ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று ! படுகொலை செய்த போலீசாரை கைது செய் ! தியாகிகளுக்கு நினைவிடம் அமைத்துக் கொடு !” ஆகிய முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசு கைது செய்தது. கைது செய்யப்பட்ட 62 பேரில் மூன்று பேர் பெண்கள் ஆவர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
மதுரை.

***

டுமலை வட்டம், ஆண்டியூரில் மே-22 தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மக்கள் அதிகாரம் சார்பாக, அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
உடுமலை.

***

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு, மண்ணை காக்கும் போராட்டத்தில் 14 பேர் துப்பாக்கி சூட்டில் இறந்து தியாகி ஆனார்கள். இந்த நிகழ்வின் முதல் வருட நினைவை குறிக்கும் வகையில்;

காலை 10.00 மணிக்கு திருவாரூர் மாவட்டத்தில்; திருவாரூர் புதிய ரயில்வே நிலையம் வாயிலில் தியாகிகளின் படங்களை வைத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் அதிகாரத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர். தங்கசண்முக சுந்தரம் தலைமை தாங்கினார்.

இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் :

  • தோழர் ஜி.வரதராஜன். மாற்றத்திற்கான மக்கள் கழக அமைப்பாளர்
  • தோழர் எஸ்.டி.ஜெயராமன். B.S.P. பொருப்பாளர்.
  • தோழர் சீமா.மகேந்திரன். விடுதலை சிறுத்தை கட்சியின் பொருப்பாளர்.
  • தோழர் கா.கோ.கார்த்திக். மக்கள் சனநாயக குடியரசு கட்சி.
  • திரு எஸ்.ரஜினிகாந்த். தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றியச் செயலாளர்.
  • தோழர் கே.ஆர்.சிவா . D.Y.F.I.
  • தோழர் ஜே. வானதீபன். D.Y.F.I.
  • தோழர் தாஜீதீன். வி.சி.க வழக்கறிஞர்.
  • தோழர் அ.லூர்துசாமி. அம்பேத்கார், பெரியார் மார்க்ஸ் படிப்பு வட்டம்.
  • தோழர் கோ.வேதராஜ். 108 தொழிலாளர் சங்கம்.
  • திரு ஆர்.ரமேஷ். நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம்.
  • தோழர் தா.கலைவாணன். வி.சி.க.
  • திரு சுதாகர். தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட துணைச் செயலாளர்.

ஆகியோர் கலந்து கொண்டார்கள். இதே போன்று குளிக்கரை கடை வீதியிலும், ஆணை தென்பாதியிலும், மக்கள் அதிகாரம் ஏற்பாட்டில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்ட அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.
தொடர்புக்கு : 82207 16242.

***

திருச்சியில், மே 22 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு மக்கள் அதிகாரம் சார்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில்  நினைவஞ்சலி  மற்றும்   தடையை மீறி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

தூத்துகுடி நச்சு ஆலை  ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு நினைவஞ்சலி  நடத்த சென்னை, மதுரையில்  காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகாரத்தின் சார்பாக திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் லெ.செழியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தபட்டது. தோழமை அமைப்பான ம.க.இ.க தோழர் ம. ஜீவா, தோழர் கோவன் மற்றும் விவசாய சங்கத் தலைவர் சின்னதுரை ஆகியோர் கலந்துகொண்டனர். பிற கட்சியினர், பொதுமக்களைத் திரட்டி தடையை மீறி பெண்கள், சிறுவர்கள், தோழர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்நிகழ்வை தடுக்கவும் முடியாமல் கைது செய்யவும் முடியாமல் காவல்துறை சிறிது நேரம் தவித்தது.

ஆயிரக்கனக்கான மக்கள் மத்தியில் நாம் தியாகிகளுக்கு ஒரு நிமிடம்  மௌன அஞ்சலி செலுத்த பட்டது,அதை அடுத்து ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிர்நீத்த தியாகிகளுக்கு நினைவிடம் அமைத்தது போல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கும் நினைவிடம் அமைக்க வேண்டும், சுட்டுக் கொன்ற போலீசைக் கொலை வழக்கில் தூக்கிலிட வேண்டும்; ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கண்டன முழக்கம்  எழுப்பபட்டது. இதனை தொடர்ந்து முன்னணித் தோழர்களை காவல்துறை கைது செய்து இரண்டு வேனில் கொண்டு சென்றது. திருச்சியின் பிரதான பேருந்து நிலயைத்தில் தோழர்கள் நடத்திய போராட்டத்தை ஆதரித்தும் பிரசுரங்களை மக்கள் தானாக பெற்று சென்றனர்.

மேலும் மக்கள் அதிகாரம் அமைப்பு செயல்படும் பகுதியிலும் ஸ்டெர்லைட் மூட வலியுறுத்தி தூத்துக்குடி போராட்ட தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கல்லாங்காடு,காஜாப்பேட்டை ,மாரனேரி ,லால்குடி  பகுதியில் மக்கள் மத்தியில் பிரசுரம் கொடுத்து ,பகுதியில் பிளக்ஸ் பேனர் வைத்து பொதுமக்கள் மற்றும் தோழர்கள் உணர்வுப்பூர்வமாக கலந்து கொண்டு மலர்தூவி , மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்தினர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

***

தூத்துக்குடியில் மண்ணைக் காக்க உயிர் ஈந்த தியாகிகளின் வீடுகளுக்கு சென்று வழக்கறிஞர்கள் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

புனித சகாய மாதா ஆலயத்தில், ஸ்னோலின் பெயரில் அமைக்கப்பட் அரங்கில் அஞ்சலி செலுத்தும் வழக்கறிஞர்கள் :

 

( படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஸ்டெர்லைட் எதிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த கிளஸ்டன் அவர்களின் கல்லறையில் வீரவணக்கம் செலுத்தும் வழக்கறிஞர்கள் :

ஸ்டெர்லைட் எதிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த ஜான்சி அவர்களின் கல்லறையில் வீரவணக்கம் செலுத்தும் வழக்கறிஞர்கள் :

ஸ்டெர்லைட் எதிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த மணிராஜ் அவர்களின் வீட்டிற்கு வழக்கறிஞர்கள் சென்று அஞ்சலி செலுத்தினர்:

மணிராஜ்

ஸ்டெர்லைட் எதிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த கார்த்திக் அவர்களின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தும் வழக்கறிஞர்கள் :

கார்த்திக்

ஸ்டெர்லைட் எதிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த ரஞ்சித் அவர்களின் வீட்டிற்கு வழக்கறிஞர்கள் அஞ்சலி செலுத்த சென்றபோது, அவரது இழப்பை தாங்காத அவரது தாயார் புகைப்படத்தையும்; அவர் இறந்த மே 22-ஐ சுட்டும் நாள்காட்டியையும் திருப்பு வைத்துள்ளார். மேலும் காலையில் இருந்து தொடர்ந்து அழுது மயக்க நிலைக்கு சென்றுள்ளார் ரஞ்சித்தின் தாயார்.

திருநெல்வேலியிலும் வழக்கறிஞர்கள் தூத்துக்குடி தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்தும் விதமாக அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் : 
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு,
தூத்துக்குடி.

பெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் ? | பொருளாதாரம் கற்போம் – 19

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 19

பெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் ?
அ.அனிக்கின்

பெட்டி பிற்காலத்தில் பிரதானமாக மக்கள் தொகை, அதன் வளர்ச்சி, பகிர்ந்தளிப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பற்றியே எழுதினார். அவரும் அவருடைய நண்பர் ஜான் கிரெளன்ட்டும் மக்கள் தொகையின் புள்ளியியலை நிறுவியவர்கள் என்ற கௌரவத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த முன்னோடிகளின் எளிமையான முயற்சிகளிலிருந்து தான் இந்த விஞ்ஞானத்தின் வன்மையான நவீன நுட்பங்கள் வளர்ச்சியடைந்தன.

ஒவ்வொரு விஞ்ஞானத்திலும் ஏதாவதொன்றை முதலில் கண்டுபிடித்தது யார், அவருடைய முன்னுரிமை என்ன என்ற விவாதங்கள் இருக்கின்றன. சில சமயங்களில் இந்த விவாதங்கள் பயனற்றவையாகவும் அந்த விஞ்ஞானத்துக்குக் கேடு விளைவிப்பனவாகவும் இருக்கின்றன. சில சமயங்களில் இவை அந்த விஞ்ஞானத்தின் வரலாற்றைத் தெளிவுபடுத்துபவையாகவும் அதன் காரணமாகப் பயனுள்ளவையாகவும் இருக்கின்றன. புள்ளியியலின் வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு விவாதம் “பெட்டி-கிரௌன்ட் பிரச்சினையின்” வடிவத்தில் ஏற்பட்டது. அந்த விவாதத்தின் சுருக்கம் கீழே தரப்படுகிறது.

ஜான் கிரெளன்ட்

1662-ம் வருடத்தில் லண்டனில் மரணச் சட்டத்தைப் பற்றிய… இயற்கை மற்றும் அரசியல் கருத்துக்கள்(1) என்ற தலைப்பில் ஒரு சிறு பிரசுரம் வெளிவந்தது . ஜான் கிரெளன்ட் என்பவர் அதை எழுதியிருந்தார். அதன் தலைப்பு வினோதமாக, இருளடர்ந்ததாக இருந்தாலும் அந்தப் பிரசுரத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. சில வருடங்களுக்குள்ளாகவே ஐந்து பதிப்புகள் வெளியிடப்பட்டன; இரண்டாவது பதிப்பு முதல் வருடத்திலேயே வெளிவந்தது. அந்தப் பிரசுரத்தைப் பற்றி அரசரும் அக்கறை காட்டினார்; அவருடைய விருப்பத்தின் பேரில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட இராயல் சொஸைட்டியில் கிரௌன்ட் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

இந்தப் பிரசுரத்தில் மக்கள் இயல்பாகவே அக்கறை கொண்ட முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி அன்றைக்குக் கிடைத்த குறைவான புள்ளி விவரங்களை ஆதாரமாகக் கொண்டு மதிநுட்பத்தோடு ஆராயப்பட்டிருந்தது. பிறப்பு, இறப்பு வீதங்கள், ஆண்கள் பெண்களுக்கிடையே உள்ள வீதப் பொருத்தம், சராசரியாக உயிரோடிருக்கும் வருடங்கள், மக்கள் தொகை இடம் பெயர்தல், மரணத்துக்கு முக்கியமான காரணங்கள் ஆகியவற்றைப் பற்றி இந்தப் பிரசுரத்தில் எழுதப்பட்டிருந்தது.

அவர் புள்ளியியலின் மிக முக்கியமான கோட்பாட்டை நோக்கி முன்னேறுவதற்குரிய முதல் முயற்சிகளை பயந்துகொண்டே செய்தார். தனித்தனியான பொருளாதார நிகழ்வுகளைப் பற்றி – அவை ஒவ்வொன்றும் தற்செயலாகவே நடைபெறுகின்றன – போதுமான அளவுக்கு அதிகமான புள்ளி விவரங்களைச் சேகரித்துக் கொண்டு அவற்றை ஆராய்ந்தால், அவை பொது முறையில் அதிகக் கறாரான, முறையான விதிகளுக்கு உட்பட்டவை என்று அறிகிறோம்.

ஒவ்வொரு தனி நபரின் பிறப்பும் இறப்பும் தற்செயலானதே; ஆனால் ஒரு குறிப்பிட்ட நாட்டில் (அல்லது பிரதேசத்தில், பெரிய நகரத்தில்) பிறப்பு, இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க வகையில் திட்டவட்டமானதாக இருக்கிறது; மேலும் அது மெதுவாகவே மாறுகிறது. அந்த மாற்றங்கள் ஏற்பட்டது ஏன் என்பதையும் விஞ்ஞான ரீதியாக விளக்க முடியும்; சில சமயங்களில் அதை முன் கூட்டியே சொல்ல முடியும்.

இதற்கு அடுத்து வந்த 18-ம் நூற்றாண்டில் மாபெரும் கணித மேதைகள் நிகழக் கூடியவை பற்றிய தங்களுடைய தத்துவத்தின் மூலம் புள்ளியியலுக்குக் கறாரான, கணித அடிப்படையைக் கொடுத்தனர். ஆனால் அறிமுகமில்லாத ஜான் கிரௌன்ட் எழுதிய இந்தச் சிறிய புத்தகத்தில் புள்ளியியலின் சில ஆரம்பக் கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தன.

அவர் 1620-ம் வருடத்தில் பிறந்து 1674-ம் வருடத்தில் இறந்தார்; லண்டன் நகரத்தின் வர்த்தகப் பகுதியில் சில்லறைச் சாமான்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார். அவர் சுயமாகக் கல்வி கற்றிருந்ததோடு ”தமது ஓய்வு நேரத்தில்” தமது ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து செய்து வந்தார். நாற்பதுக்களின் கடைசியில் பெட்டி அவரோடு நட்புக் கொண்டார்; அப்பொழுது கிரெளன்ட் பெட்டிக்கு ஆசானாக இருந்தார். அறுபதுக்களில் இந்த நிலைமை மாறிவிட்டது என்றாலும் அது அவர்களுடைய நட்பை பாதிக்கவில்லை. இப்பொழுது கிரெளன்ட் பெட்டியின் நெருங்கிய நண்பராகவும், லண்டன் நகரத்தில் அவருடைய பிரதிநிதியாகவும், இராயல் சொஸைட்டிக்கும் அவருக்கும் இணைப்புத்தருகின்ற நபராகவும் இருந்தார்.

படிக்க:
நாடாளுமன்றத் தேர்தல் : காவிமயமான போபால் !
♦ பொருளாதார அறிஞர்களின் நகரம் இலண்டன் : பொருளாதாரம் கற்போம் – 11

கிரெளன்டின் பிரசுரம் விரிவான அளவுக்கு அக்கறை ஏற்படுத்திய பொழுது லண்டன் நகரத்தின் விஞ்ஞான வட்டாரங்களில், அந்தப் பிரசுரத்தை உண்மையில் எழுதியவர் சர் வில்லியம் பெட்டி, சில காரணங்களுக்காக அவர் அறிமுகமில்லாத ஒரு நபரின் பெயருக்குப் பின்னால் மறைந்திருக்கிறார் என்ற வதந்தி பரவியது. கிரெளன்டின் மரணத்துக்குப் பிறகு இத்தகைய வதந்திகள் பலமடைந்தன. பெட்டியின் எழுத்துக்களிலும் கடிதங்களிலும் காணப்படுகின்ற சில பகுதிகள் இந்த வதந்திக்கு ஆதரவு கொடுப்பது போலத் தோன்றுகின்றன. ஆனால் இதற்கு மாறான வகையில், ”நமது நண்பர் கிரௌன்ட் எழுதிய புத்தகம்” என்று அவர் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டும் எழுதியிருக்கிறார்.

19-ம் நூற்றாண்டில் இந்தப் பிரசுரத்தின் உண்மையான ஆசிரியர் யார் என்ற பிரச்சினை ஆங்கில விஞ்ஞான உலகத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. “பெட்டி – கிரெளன்ட் பிரச்சினை” என்பது தீர்க்கப்பட்டுவிட்டதாக இன்று நாம் கருதலாம். இப்புத்தகத்தையும் அதிலுள்ள அடிப்படையான புள்ளியியல் கருத்துக்கள், முறைகள் ஆகியவற்றையும் எழுதியது பிரதானமாக ஜான் கிரௌன்ட். ஆனால் சமூக-பொருளாதாரக் கருத்துக்களைப் பொறுத்தவரை அவர் பெட்டியின் தாக்கத்துக்கு உட்பட்டிருந்தார் என்பது தெளிவாகும். இப்புத்தகத்தின் முன்னுரையையும் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கும் முடிவுரையையும் பெட்டி எழுதியிருக்கக்கூடும். புத்தகத்தின் பொதுவான கருத்து பெட்டிக்கு உரியதாக இருக்கலாம்; அதை எழுதியவர் ஜான் கிரௌன்ட் என்பதில் சந்தேகமில்லை.(2)

1666-ம் வருடத்தில் லண்டன் தீப்பிடித்து எரிந்ததில் கிரெளன்ட் அதிகமாக பாதிக்கப்பட்டார். இதற்குச் சிறிது காலத்துக்குப் பிறகு அவர் கத்தோலிக்கராக மாறினார்; இது அவருடைய சமூக அந்தஸ்தைப் பாதித்தது. இவை எல்லாமே அவர் சீக்கிரமாக மரணமடைவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். பெட்டியின் நண்பரும் அவருடைய வாழ்க்கைச் சரிதத்தை எழுதிய முதல் ஆசிரியருமான ஜான் ஒபிரீ கிரெளன்டின் சவ அடக்கத்தின் போது, “மதிநுட்பம் நிறைந்தவரும் பல்கலைச் செல்வருமான மாபெரும் சர் வில்லியம் பெட்டி, கிரெளன்டின் பழைய நண்பர், அவருக்கு மிக நெருக்கமானவர், அவர் கண்ணீர் வடிய நின்ற காட்சியைப்” பற்றி எழுதியிருக்கிறார்.(3)

அந்த மாபெரும் தீவிபத்து மத்தியகால லண்டன் நகரத்தில் பாதியை அழித்துப் புதிய லண்டனை உருவாக்குவதற்கு தளத்தை சுத்தப்படுத்தியது. பெட்டி, ஒரு துணிச்சலான திட்டத்தை உருவாக்கும் சந்தர்ப்பத்தைக் கொடுத்தது. சோர்வில்லாமல் திட்டங்களைத் தயாரிக்கும் நிபுணரான பெட்டி லண்டன் நகரத்தைச் சுத்தப்படுத்திப் புனர் நிர்மாணம் செய்வதற்கு ஒரு திட்டத்தை உருவாக்கி அரசாங்கத்திடம் கொடுத்தார்.

அதன் முன்னுரையில் “பூமியும் அதன் மீது கிடக்கின்ற இடிபாடுகளும் யாருக்குச் சொந்தமோ அவரிடம் இந்தப் புனர் நிர்மாண வேலையைச் செய்வதற்கு ரொக்கப் பணவசதியும், எல்லா விதமான சிக்கல்களையும் வெட்டியெறியக் கூடிய சட்டமன்ற அதிகாரமும் இருக்கிறது” (4) என்ற அனுமானத்தின் பேரில் இந்தத் திட்டம் தயாரிக்கப் பட்டிருக்கிறது என்று அவர் எழுதியிருந்தார், வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் நகர்ப்புற வளர்ச்சிக்கு அந்தக் காலத்திலேயே தடையாக இருந்த தனிச் சொத்துடைமைக்கு எதிராக, நிலமும் கட்டிடங்களும் அரசுக்கு அல்லது நகராட்சிக்குச் சொந்தம் என்ற கருத்தை அவர் அனுமானித்தார் என்பது தெளிவு.

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்ட இந்தக் கருத்தை முழுமையாகப் பாராட்டுவதற்கு, இன்று லண்டன், பாரிஸ், நியூயார்க், டோக்கியோ போன்ற நகரங்களின் வளர்ச்சிக்கு முதலாளித்துவத் தனிச் சொத்துடைமைமுறை எத்தகைய சிக்கல்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது என்பதை நினைவுபடுத்திக் கொள்வதே போதுமானதாகும்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) அந்த புத்தகத்தின் தலைப்பு மிக நீளமானதால் இங்கே சுருக்கப்பட்டிருக்கிறது.
(2) எம். ப்டுகா, 17, 18ம் நூற்றாண்டுகளின் புள்ளியியல் வரலாற்றில் சில ஆராய்ச்சிகள், மாஸ்கோ , 1945, பக்கம் 45 (ருஷ்ய மொழிப் பதிப்பு).
(3) E. Strauss, Sir William Petty. Portrait of a Genius, London, 1954, p. 160.
(4) The Petty Papers. Some Unpublished Writings of Sir William Petty, ed. by the Marquis of Lansdowne, London, 1927, Vol. 1, p. 28.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983