தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு நினைவேந்தல் கூட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு 28/06/2018 அன்று கோவை மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அண்ணாமலை அரங்கத்தில் மாலை 6 மணிக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தை மக்கள் அதிகாரம் கோவை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் மூர்த்தி தலைமை ஏற்றி நடத்தினார். இதில், தோழர் கு.இராமகிருஷ்ணன் (பொது செயலர், த.பெ.தி.க.), தோழர் N.K.நடராஜன் (மாநிலக்குழு உறுப்பினர், CPI ML லிபேரசன்), தோழர் சுசி கலையரசன் (அமைப்பு செயலர், வி.சி.க., கோவை),தோழர் ச.பாலமுருகன் (PUCL), தோழர் துரைசாமி (CPI ML ரெட் ஸ்டார்), தோழர் சி. முருகேசன் (தமிழகம் காப்போம்), தோழர் மாணிக்கம் (தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை), தோழர் மு.கார்க்கி (சமத்துவ கழகம்), தோழர் ஜோதி குமார் (மாநிலகுழு உறுப்பினர் அ.இ.வ.சங்கம்), தோழர் சபாபதி (மாநில துணை பொதுச்செயலர் தமிழ்புலிகள் கட்சி), தோழர் பன்னீர்செல்வம் (சமூக நீதிக் கட்சி) ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
1 of 3
கூட்டத்தில் உரையாற்றிய அனைவரும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர். குறிப்பாக அரசின் பாசிச அடக்குமுறையை ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டிய அவசியத்தை பதிவு செய்தார்கள். மேலும் கோவையில் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்திருப்பதால் ஏற்பட்டுள்ள அபாயத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும் என்றனர்.
மேலும், மிசா காலகட்டங்களில் போராடும் கட்சிகள், இயக்கங்கள் எப்படி தங்களது சிவில் வீரத்தை காட்டினார்களோ அது போல இன்று இந்த அரசின் அடக்குமுறையை எதிர்த்து நாமும் நமது சிவில் வீரத்தை காட்ட வேண்டும். மேலும் மிசா காலகட்டங்களில் போராடுபவர்கள் வெளியில் இருந்தால் நாட்டிற்கு ஆபத்து என்று எங்களை சிறையில் அடைத்தார்கள். ஆனால் இன்று மக்கள் போராடுகிறார்கள். போராடும் மக்களை சமூக விரோதிகள் என்கிறார்கள் தூத்துக்குடிக்காக, சேலம் 8 வழிச்சாலைக்காக, மீத்தேன் திட்டங்களுக்காக. நாம் பேசுவது போல கோவையில் தனியார் நிறுவனத்தின் மூலமாக குடிநீர் விநியோகத்தால் ஏற்படவிருக்கும் பரிதாப நிலை குறித்து உலகமே பேசும் சூழல் வரலாம்.
எனவே நாம் அடங்க மறுக்க வேண்டும், அத்துமீற வேண்டும். கைதுக்கும் சிறைக்கும் தோட்டாக்களுக்கும் அஞ்சாமல் உயிர்நீத்த தியாகிகள் வழியில் போராடுவோம் என்று சூளுரைத்தனர்.
மக்கள் அதிகாரம், கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் சூர்யா தொகுப்புரை வழங்கினார். கோவை மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் கிருஷ்ணமூர்த்தி நன்றியுரை வழங்கினார்.
சமீபத்திய தமிழ் திரைப்படங்களின் ஆரம்பத்தில் வரும் பச்சை வண்ண லைக்கா (LYCA) நிறுவனத்தின் முத்திரை இப்போது பலருக்கும் பரிச்சயமாயிருக்கும். லைக்கா பிரபலமான இந்தக் காலத்தில்தான் கமல் – ரஜினி போன்றோர் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கும் அறிவிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். லைக்கா நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாக பணியாற்றிய ராஜு மகாலிங்கம், தற்போது ரஜினி துவக்க இருக்கும் அரசியல் கட்சியின் நிழல் பிரிவு தலைவராக பணியாற்றுகிறார்.
ரஜினி – கமல் பேசும் ஊழல் ஒழிப்பு – ஒரு மோசடி என்பதை இவர்களுக்கு படியளக்கும் லைக்காவின் கறை படிந்த வரலாறே தெள்ளத்தெளிவாக காட்டி விடுகிறது. ரஜினியின் மருமகன் தனுஷ் தயாரித்ததாகக் கூறப்படும் காலாவின் நிதி ஆதாரமே லைக்காவின் கைங்கரியம்தான்.
காலாவைத் தொடர்ந்து ரஜினியின் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் எந்திரன்-2 அல்லது 2.0. இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.550 கோடியை நெருங்கிவிட்டதாம். இந்திய திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவுடன் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது 2.0.
லைக்கா மொபைல்
கத்தி திரைப்படம் மூலம் தமிழ் திரைப்படத் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு வர்த்தகத்தில் நுழைந்தது லைக்கா. அதைத் தொடர்ந்து எனக்கு இன்னொரு பேர் இருக்கு, எமன், இப்படை வெல்லும், 2.0, சபாஷ் நாயுடு, தியா, வட சென்னை, செக்க சிவந்த வானம், இம்சை அரசன் 24-ம் புலிகேசி, இந்தியன்-2 என அடுத்தடுத்த படங்களையும் தயாரித்து வருகிறது. இவை தவிர வெற்றிமாறனின் விசாரணை, மகேஷ் பாபுவின் ஸ்பைடர், காலா, இரும்புத் திரை போன்ற படங்களை விநியோகஸ்தராக வெளியிட்டது. இதன் மூலம் தமிழ் திரைப்பட உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளது லைக்கா. இதோடு தமிழ்நாடு பிரிமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடரில் கோவை கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் இருக்கிறது.
எந்திரன்-2 அல்லது 2.0 வின் முதல் தோற்ற வெளியீட்டுவிழா சென்ற 2016-ம் ஆண்டு மோடி பணமதிப்பழிப்பு நடவடிக்கையை அறிவித்த சில நாட்களில் மும்பையில் நடைபெற்றது. இந்த வெளியீட்டு விழாவிற்கு மட்டும் செலவான தொகை சுமார் ஆறு கோடி ரூபாய்.
ஜெயமோகன்: லைக்கா படத்திற்கு வசனமெழுதியதும் பணமதிப்பழிப்பு நடவடிக்கையை ஆதரித்ததும் தற்செயலா?
அன்று 2.0-வின் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்த அப்படத்தின் வசனகர்த்தாவும் எழுத்தாளருமான ஜெயமோகன் பணமதிப்பழிப்பு நடவடிக்கை கருப்பு மற்றும் கள்ளப்பணத்தை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்டதென்று பொருளாதார அறிஞர்களே திடுக்கிடும் வண்ணம் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். அதில் உள்ளூர் கருப்புப் பணத்தின் மிகச்சிறு பகுதியே வெளிநாட்டுக் கருப்புப் பணமாக சென்று ஹவாலாவாக இங்கு திரும்புகிறது என்று ‘பயங்கரமான’ ஆய்வு ஒன்றையும் வெளியிட்டார்.
ஜெயமோகன் பணியாற்றும் 2.0 – திரைப்படத்தின் தயாரிப்பாளரும் வெளிநாட்டு நிறுவனமுமான லைக்காவின் சட்டவிரோத பணப் பறிமாற்றங்கள், மோசடிகள் குறித்து ஏற்கனவே வினவில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதன் இரண்டாம் பாகமாய் இந்தக் கட்டுரை வெளிவருகிறது.
பிரான்சில் வரிவிதிப்பை தவிர்க்க லைகா நிறுவனம் சட்டவிரோதமான முறையில் பணத்தை வரியில்லா சொர்க்கங்களில் உள்ள தனது கிளை நிறுவனங்களுக்கு கடத்துவதை “பஸ்ஃபீட்” BUZZFEED எனும் ஐரோப்பிய ஊடகம் அம்பலப்படுத்தியது.
லைக்கா நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாக பணியாற்றிய ராஜு மகாலிங்கம் ரஜினி கட்சியில் நிழல் பிரிவு தலைவர்
கருப்புப் பணத்தை வரியில்லா சொர்க்கங்களுக்கு கடத்தும் நிறுவனங்கள் அதை வெள்ளையாக்க மீண்டும் வேறு தொழிலில் முதலீடு செய்யும். அப்படி முதலீடு செய்யும் தொழிலே ஆடிட்டிங் மற்றும் கணக்கு வழக்குகளை சரிவர செய்யாததாகவும், லாபம் கொட்டுவதாகவும் இருந்தால்? லைக்கா தனது கருப்புப் பணத்தை வெள்ளையாக்க தேர்ந்தெடுத்த துறைதான் தமிழ் திரைப்பட தயாரிப்பு. ’தி இந்து’ பத்திரிகைக்கு நேர்காணல் அளித்த லைக்காவின் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா திரைப்படத் தயாரிப்புக்கு மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாக கூறியிருந்தார். மோடியின் பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட போது ரஜினி, கமல் போன்றோரும் கருப்புப் பண ஒழிப்பு என அதைக் கொண்டாடினர். ஜெயமோகன் ஒரு இலக்கியவாதி என்பதால் அந்தக் கொண்டாட்டத்தைத் தாண்டி ஒரு ‘ஆய்வு’ கட்டுரையே வெளியிட்டார்.
அதில் ஜெயமோகன் சொன்னபடி வரிகட்டாமல் கருப்புப்பணமாக வெளிநாடு சென்று திரும்பும் பணத்தில் தான் அவருக்கே லைக்கா படியளக்கிறது. அவருக்கு மட்டுமல்ல ரஜினி, கமல் போன்றோருக்கும், லைக்காவே படியளக்கிறது. லைக்காவைப் பொறுத்தவரை திரைப்படத் தயாரிப்பே ஹவாலாதான். அந்த ஹவாலாவில் பயன் பெறுபவர்கள்தான் கமல்- ரஜினி – ஷங்கர் – ஜெயமோகன் போன்றோர். இதை இன்னும் இழுத்தால் காலா படத்திற்கு பைனான்ஸ் செய்த லைக்காவின் பணம்தான் தனுஷின் கை வழியாக இயக்குநர் ரஞ்சித்திற்கும் ஊதியமாக போய்ச் சேர்ந்திருக்கிறது. இன்றைக்கு தமிழ் சினிமாவில் இயங்கும் அனேகம் பேர் லைக்காவை ஏற்று தொழுதால்தான் தொழில் செய்ய முடியும்!
தற்போது இங்கிலாந்தில் பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் மீண்டும் சிக்கியுள்ளது லைக்கா.
ஜூலை 2012 முதல் பிப்ரவரி 2016 வரையிலான இடைப்பட்ட காலத்தில் லைக்கா மொபைல்ஸ்-இன் இங்கிலாந்து பிரிவு தனது வர்த்தகத்தை குறைத்துக் காட்டி மதிப்பு கூட்டப்பட்ட வரியை (VAT) குறைவாக செலுத்தியது அம்பலமாகியுள்ளது. கட்ட வேண்டிய நிலுவை வரியை அபராதத்துடன் சேர்த்து 26 மில்லியன் பவுண்டுகள் வரை (சுமார் 235 கோடி இந்திய ரூபாய்) லைக்கா நிறுவனம் இங்கிலாந்தின் வருவாய் மற்றும் சுங்கவரித் துறைக்கு (HMRC) செலுத்த வேண்டிய நிலையில் இருப்பதாக கார்டியன் பத்திரிக்கை தெரிவிக்கிறது.
2016-ம் ஆண்டு மோடி பணமதிப்பழிப்பு நடவடிக்கையை அறிவித்த சில நாட்களில் மும்பையில் நடைபெற்ற எந்திரன்-2 முதல் தோற்ற வெளியீட்டு விழாவிற்கு மட்டும் செலவான தொகை சுமார் ஆறு கோடி ரூபாய்.
முன்னதாக 2017-ம் ஆண்டு லைக்கா மொபைல்சின் நிதி கணக்கை செய்து வந்த KPMG என்ற கணக்கு தணிக்கை நிறுவனம் அப்பணியிலிருந்து விலகிக் கொண்டது. ”போதுமான கணக்கியல் பதிவுகள் பராமரிக்கப்படாததையும், லைக்கா தனது கிளை நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகள் சரிவர பதிவு செய்யப்படாமலிருப்பதையும்” KPMG தனது அறிக்கையில் தெரிவித்தது. மேலும், லைக்காவும் அதன் கிளை நிறுவனங்களும் வரிவிதிப்பை தவிர்ப்பதற்காக தங்களுக்குள் சிக்கலான வலைப்பின்னலையும், பரிவர்த்தனைகளையும் கொண்டிருக்கின்றன என்றும் அந்நிறுவனம் கூறியது. ஒரு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை பார்க்கும் ஆடிட்டரே அது ஒரு ஃபிராடு நிறுவனம் என்று செல்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவை எவற்றையும் லைக்காவோ இல்லை அதன் ஊழல் பணத்தில் உண்டு களிக்கும் எவரும் மறுக்க முடியாது. அனைத்தும் சட்டப்பூர்வமான ஆவணங்கள் !
2016–ம் ஆண்டு ஜூன் மாதம் வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை (money laundering) நடவடிக்கைகள் தொடர்பாக பிரான்சில் லைக்காவின் 19 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக பிரான்சு நாடு கடந்த மார்ச் 2017-ல் இங்கிலாந்தின் வருவாய் மற்றும் சுங்கவரித் துறை (HMRC) அதிகாரிகளிடம், லைக்கா மொபைல் நிறுவனத்தில் சோதனை நடத்தி விசாரிக்க ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்தது. ஆனால் அதற்கு இங்கிலாந்து வருமானத்துறை மறுப்புக் கடிதம் எழுதியது.
பஸ்ஃபீட் (buzzfeed) என்னும் பத்திரிக்கை இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கட்சிக்கு அதிக நன்கொடை வழங்கும் நிறுவனம் லைக்கா என்பதை அம்பலப்படுத்தியது
“லைக்கா நிறுவனம், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே-யின் கன்சர்வேடிவ் கட்சிக்கு அதிக நன்கொடை வழங்கும் நிறுவனம் என்பதால், விசாரணை செய்ய அனுமதிக்க முடியாது” எனக் கூறிய அக்கடிதத்தை பஸ்ஃபீட் (buzzfeed) என்னும் பத்திரிகை அம்பலப்படுத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள லேபர் கட்சியின் ஜெரமி கோர்பைன், “இங்கிலாந்து வருவாய் மற்றும் சுங்கவரித் துறை என்பது ஒரு அரசு நிறுவனம், அது எவ்விதமான ஒளிவு மறைவுமின்றி, எதற்கும் அஞ்சாமல், அனைத்து நிறுவனங்களையும் விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
லைக்கா நிறுவனம் இரண்டாண்டுக்கு முன்பு வரை கன்சர்வேடிவ் கட்சிக்கு சுமார் 2.1 மில்லியன் பவுண்ட் பணத்தை நன்கொடையாக வழங்கியிருக்கிறது. ’பஸ் ஃபீட்’-ன் செய்திக்குப் பிறகு, இங்கிலாந்து கருவூலத்தால் தேர்வு செய்யப்பட்ட கமிட்டி மற்றும் பொதுக் கணக்குக் கமிட்டியின் உறுப்பினர்கள், இங்கிலாந்து வருவாய் மற்றும் சுங்கவரித் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவிருக்கின்றனர். இங்கிலாந்து எம்பிக்களும் இது குறித்து விசாரணை நடத்தவிருக்கின்றனர்.
ஆனால் இங்கிலாந்தின் வருமான மற்றும் சுங்கத்துறை இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது. தேடுதல் அனுமதி வழங்குவதற்கு போதுமான ஆவணங்களை பிரெஞ்சு வரித்துறை வழங்காததால்தான் அனுமதி வழங்கவில்லை என்று கூறியிருக்கிறது.
கன்சர்வேடிவ் (டோரி) கட்சி மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் தொடர்பும் லைக்காவின் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜாவுக்கு இருக்கிறது. இங்கிலாந்தின் ஆசிய தொழிலதிபர்கள் குழுமத்தால் துவக்கப்பட்ட பிரிட்டிஷ் ஏசியன் ட்ரஸ்ட் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் முக்கிய கொடையாளர்களில் ஒன்றாக லைக்கா குழுமம் இருக்கிறது. இத்தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ்.
சுபாஷ்கரன் அல்லிராஜாவுடன் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்
இந்த லைக்கா நிறுவனம் எப்படி இவ்வளவு பெரிய ஆளானது? ஈழ அகதியாக இங்கிலாந்து சென்ற சுபாஷ்கரன் அல்லிராஜா, ஒரு மெய்நிகர் அலைபேசி சேவை வழங்கும் நிறுவனத்தை துவங்குகிறார். ஒரு மெய்நிகர் அலைபேசி சேவை வழங்கும் நிறுவனம், அலைபேசி சேவை வழங்கலுக்கான செல்போன் டவர், அலைக்கற்றை ஸ்பெக்ட்ரம் உரிமம் போன்ற எந்த கட்டமைப்பு வசதியையும் வைத்திருக்க தேவையில்லை. ஏற்கனவே அலைபேசி சேவை வழங்கும் நிறுவனத்திடம் இருந்து அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் தொகுப்பை மொத்தமாக வாங்கி சில்லறைக்கு விற்றுக் கொள்ளலாம். மொத்தமாக பெற்ற அழைப்புகளை விற்கும் போது மறைமுகமான கட்டணங்கள் மற்றும் நிபந்தனைகளின் மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றவும் செய்யலாம்.
லைக்காவும் இந்த உத்தி அல்லது மோசடியில் தான் தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை கட்டியமைத்தது. தோழர் கலையரசன் அதை விரிவாக விவரிக்கிறார்.
“லைக்கா அதிபரின் வளர்ச்சியை ஒரு தமிழன் கோடிஸ்வரனாகிறான் என்று தமிழ் கூறும் நல்லுலகம் ஆரம்பத்தில் பெருமைப்பட்டது.
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக வாழும் மக்களின் சந்தையை Niche market அழைக்கிறார்கள். மத்திய தரைக்கடலில் மூழ்கிச் செத்தது போக கரையேறியவர்கள் ஐரோப்பாவின் கடுமுழைப்பு வேலைகளில் ஈடுபட்டு தமது வயிற்றை கழுவுகிறார்கள். அகதி பிரச்சினை, குடியுரிமை இல்லாத பிரச்சினை எல்லாம் சேர்ந்து இவர்களை எந்நேரமும் அச்சத்தில் வாழ வகை செய்கிறது. அப்பேற்பட்ட மக்களிடம் பொருள் விற்பதுதான் மேற்கண்ட Niche market .
இத்தகைய மக்கள் ஐரோப்பாவின் மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூட இருக்கமாட்டார்கள். இவர்களிடம்தான் தனது மொபைல் சேவையை ஆரம்பித்தது லைக்கா. லைக்கா, ஞானம், லைபரா போன்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் வெளிநாடுகளுக்கு பேசலாம் என்று இந்த அகதி மக்களிடம் விளம்பரம் செய்து கல்லா கட்டுகின்றன. லைக்கா, லெபராவின் தாய் நிறுவனமான ஞானம் இதில் முன்னோடி.”
இதில் லைக்காவின் திறமை அல்லது மோசடி என்ன?
பல்வேறு நாட்டு அகதிகளைக் கவர்வதற்காக அந்தந்த நாட்டு அகதிகளையே விற்பனை பிரதிநிதிகளாக அமர்த்தும் லைக்கா நிறுவனம்
“மலிவு விலையில் சேவையை வழங்கும் ஒரு நிறுவனம் நஷ்டமடைவதில்லை. மாறாக, பல கோடி இலாபம் சம்பாதிக்கின்றது என்ற உண்மை பலருக்கு உறைப்பதில்லை. ஒரு பொருளை மலிவு விலையில் வழங்கினால், அது பெருமளவில் விற்பனையாகும். ஆனால், என்றைக்குமே அதன் கொள்முதலுக்கு ஆகும் செலவு, அதை விடக் குறைவாகத் தான் இருக்கும். ஆனால், லைக்காவோ வேறு சில குறுக்கு வழிகளால், அதிக இலாபம் சம்பாதித்து வருகின்றது. லைக்கா நிறுவனத்தில் வேலை செய்யும் பலரை எனக்குத் தெரியும் என்பதால், அதைப் பற்றி விரிவாக எழுதி இருக்கிறேன். மற்றபடி, லெபரா, ஞானம் எல்லாம் இந்த மோசடிகளுக்கு எந்த வகையிலும் குறைந்தவை அல்ல.
லைக்கா நிறுவனத்தின் விளம்பரங்களில், எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு கட்டணம் என்று ஒரு பட்டியல் போட்டிருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து வாங்கும் அட்டையில், குறிப்பிட்டளவு நிமிடங்கள் முன் கூட்டியே ஒதுக்கப் பட்டிருக்கும். ஆனால், அந்த அட்டையை ஒரு தடவையில் பாவித்தால் மட்டுமே, அந்தளவு நிமிடங்களும் கிடைக்கும். அதற்குள்ளும், இணைப்பு வழங்குவதற்கான ஆரம்பக் கட்டணம். நீங்கள் அந்த அட்டையை வைத்திருந்து, வெவ்வேறு அழைப்புகளை எடுத்து, துண்டு துண்டாக பிரித்து பாவித்தால், கணிசமான அளவு ஒதுக்கப் பட்ட நிமிடங்கள் காணாமல் போய் விடும்!
லைக்காவின் அலுவலகங்கள் தங்களின் மோசடிக்கேற்ப எளிதில் கண்டுபிடிக்க முடியாத சந்து பொந்துகளில் இருப்பதோடு அடிக்கடி இடத்தையும் மாற்றிக் கொள்கிறார்கள்
நிமிடங்களை திருடுவதற்காக பயிற்றப்பட்ட ஊழியர்கள், லைக்கா தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றுகிறார்கள். எந்தெந்த நாட்டு அழைப்பிற்கு, எந்தெந்த தொகை வெட்டி எடுக்க வேண்டும் என்று, அதற்காக மென்பொருள் தயாரித்து வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான லைக்கா பாவனையாளர்களுக்கு இந்த உண்மை தெரியும்.” – என்கிறார் தோழர் கலையரசன்.
இத்தகைய மோசடிக்கேற்பவே லைக்காவின் அலுவலகங்கள் எளிதில் கண்டுபிடிக்க முடியாத சந்து பொந்துகளில் இருப்பதோடு அடிக்கடி இடத்தையும் மாற்றிக் கொள்கிறார்கள். இவர்களின் மோசடியை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்கும் போது லைக்காவின் தொலைபேசி அட்டைகளை விற்கும் சில்லறை வணிகர்கள்தான் மாட்டிக் கொள்கிறார்கள். பலர் மக்களிடம் அடியும் பட்டுள்ளனர்.
அந்த வகையில் லைக்கா வாடிக்கையாளர்களை மட்டுமல்ல, தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களையும் சுரண்டுகிறது. லைக்கா சிம் அட்டைகளை தெருவில் நின்று கூவிக் கூவி பத்து மணி நேரம் விற்க வேண்டும். லைக்காவின் மோசடியை அறிந்தவர் யாரும் வந்தால் அவர்களிடம் திட்டுக்களையும் வாங்கிக் கொள்ள வேண்டும். லைக்கா மற்றும் லெபரா நிறுவனங்களை கொள்ளைக் கோஷ்டிகள், மற்றும் மாஃபியா குழுக்கள் என்று மக்கள் திட்டுவதை தன் காதாலேயே கேட்டிருப்பதாக கலையரசன் கூறுகிறார்.
பல்வேறு நாட்டு அகதிகளைக் கவர்வதற்காக அந்தந்த நாட்டு அகதிகளையே விற்பனை பிரதிநிதிகளாக அமர்த்தும் லைக்கா நிறுவனம் அவர்களுக்கு பிரிட்டனின் குறைந்த பட்ச ஊதியத்தை கொடுப்பதற்கு பதில் அந்தந்த நாடுகளின் குறைந்த பட்ச ஊதியத்தையே கொடுக்கிறது. பத்து சிம்கார்டுகளை விற்றால்தான் அவர்களுக்கு போக்குவரத்து செலவு கிடைக்கும். விற்கவில்லை என்றால் கைக்காசை போட்டு அவர்கள் வீடு திரும்ப வேண்டும். அதாவது அவர்கள் சுபாஷ்கரனிடம் வேலை பார்ப்பதற்காக தமது பணத்தை செலவழிக்க வேண்டும்.
விற்பனைப் பிரதிநிதிகளை நேரடியாக லைக்கா அமர்த்தாமல் அதற்கென்றே பினாமி முகவர் நிறுவனங்களை பயன்படுத்துகிறது. இந்த திடீர் நிறுவனங்கள் ஒரிருவரைக் கொண்டு நடத்தப்பட்டு ஒரு வருடத்திற்குள்ளேயே மறைந்து போய்விடும். அதற்குள் அதில் பல மோசடிகள், வரி ஏய்ப்பு முடிந்து அதே நபர் புதிய இடத்தில் புதிய பெயருடன் திறப்பார்.
இப்படிச் சுரண்டப்பட்ட பணத்தைக் கொண்டு தமிழ்ப்படங்களைத் தயாரிப்பதோடு ராஜபக்சேவின் தொழில் கூட்டாளியாக இலங்கையிலும் முதலீடு செய்திருக்கிறது லைக்கா. அதைப் பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்!
லைக்காவின் கரம் இங்கிலாந்து கட்சிகள், அரச குடும்பம், தமிழ் சினிமா, கமல் – ரஜினி படங்கள் என்று இறுதியில் இலங்கையிலும் நீள்கிறது!
கடைசியாக நஸீம் தனது கணவர் காசிமிடம் வீட்டு விசயங்களைக் குறித்துப் பேசியுள்ளார். தினசரி செலவுகள், வாடகை மற்றும் குழந்தைகளுக்கான சாப்பாட்டுச் செலவுகள் பற்றி பேசி 100 ரூபாயை வாங்கிக் கொண்டார். நஸீம் மிக மெலிதான சரீரம் கொண்டவர், அகண்ட கண்களும் கொண்டவர். மறுமுறை சுமார் எட்டு மணி நேரம் கழித்து நஸீம் தனது கணவரை அந்த வீடியோ காணொளித் துண்டில்தான் பார்த்தார். அந்த வீடியோ அதற்குள் உத்திரபிரதேசத்தின் உள்ளொடுங்கிய சிறுநகரமான ஹபூரில் இருந்து நாடெங்கும் பரவியிருந்தது.
வெறும் ஒரு நிமிடம் ஓடும் அந்தக் காணொளி காசிமுக்கு நேர்ந்த கொடூரமான மரணத்தைப் பதிவு செய்து வைத்திருந்தது. முசுலீம்கள் அதிகம் வசிக்கும் மதூர்பூருக்கும் தாக்கூர் சாதி ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பஜேரா குர்த் கிராமத்துக்கும் இடையே உள்ள விவசாய நிலம் ஒன்றில் வைத்து காசிமைத் தாக்கியுள்ளனர் ஹிந்துக்கள். பசுமாடு ஒன்றை அறுப்புக்காகத் திருட வந்தார் என்று குற்றம் சாட்டியே காசிமைத் தாக்கினர்.
அடிபட்டு உடலெங்கும் காயங்களோடும், வழியும் இரத்தத்தோடும், உடைகள் கிழிக்கப்பட்டும், வலியில் அரற்றிக் கொண்டே தனது கணவர் வயலின் மத்தியில் விழுந்து கிடப்பதைப் பார்த்தார் நஸீம். மரணத்தின் தருவாயில் தாகத்தால் அலறிக் கொண்டிருந்த காசிமுக்கு அந்தக் கொலைகாரக் கூட்டம் தண்ணீர் கூட கொடுக்கவில்லை.
காசிமின் மனைவி நஸீம்
”எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நீங்கள் நேசிக்கும் யாருக்காவது இப்படி நடந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?” எனக் கேட்கிறார் நஸீம். “அந்தக் காணொளியும் புகைப்படங்களும் நாடெங்கும் பரவிவிட்டதாகப் பேசிக் கொள்கிறார்கள். இந்த நாடு அதைப் பார்க்கிறதா? உங்களுக்கெல்லாம் அதைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது என கேட்க நினைக்கிறேன்”
காசிம் குரேஷி இனத்தைச் சேர்ந்தவர். பாரம்பரியமாக கால்நடை வியாபாரமும், கசாப்பும் தான் இவர்களது தொழில். காசிம் தங்கள் மாடுகளைக் கடத்தப் போகிறார் என்கிற சந்தேகம் இருந்ததாகவும், இந்த நிலையில் வயலுக்குப் பக்கமாக காசிமைப் பார்க்கநேரவே ஆத்திரத்தில் கிராமவாசிகள் அவரை அடித்திருக்க வேண்டும் எனவும் சொல்கிறார்கள் பஜேரா குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், காசிமின் குடும்பம் இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுக்கிறது. காசிம், ஆடுகளையும் எருமைகளையும் தான் வியாபாரம் செய்தார் என்கிறார்கள் அவர்கள்.
”அப்படியே அவர்கள் எதையாவது சந்தேகப்பட்டிருந்தால் இரண்டு அடியைப் போட்டு காவல் துறையிடம் அல்லவா ஒப்படைத்திருக்க வேண்டும். அல்லது வெறுமனே காவல்துறையிடம் புகாரளித்திருக்க வேண்டும் தானே. இப்படி எங்கள் குடும்பத்தையே நாசமாக்க வேண்டுமா?” எனக் கேட்கிறார் நஸீம். ”அவர்கள் அவரை ஏற்கனவே அடித்து நொறுக்கி விட்டார்கள். அவர் செத்துக் கொண்டிருக்கிறார். அப்புறம் ஏன் நாய் பூனை மாதிரி மிருகங்களை இழுப்பதைப் போல் அவரது உடலை தெருத்தெருவாக இழுத்துக் கொண்டு போனார்கள்?” என்கிறார் நஸீம்.
சம்பவம் நடந்த இடத்தில் ஆம்புலன்சு வாகனங்கள் ஏதும் இல்லை என்பதால் சீக்கிரம் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய காசிமை போலீசு வாகனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்கிற அவசரத்தில் அந்த மூன்று காவலர்களும் பொறுப்பின்றி செயல்பட்டு விட்டதாக விளக்கமளித்துள்ள உத்திரபிரதேச மாநில காவல்துறை ‘மன்னிப்பு’ ஒன்றையும் தெரிவித்துள்ளது.
“ஏன் இப்படி நடப்பதை மோடி அனுமதிக்கிறார்? அவர்கள் எங்களுடைய வாழ்வாதாரத்தையே தாக்கிச் சிதைக்கிறார்கள். எங்கள் வீடுகளில் சுள்ளி விறகுகள் கூட எரிந்து விடக் கூடாது என்பதில் அவர்கள் குறியாக இருக்கிறார்கள்”
“மன்னிப்பா, யாருக்கு வேண்டும் இந்த மன்னிப்பு? வெறும் மன்னிப்பு மட்டும் போதுமென்றால் எனது கணவர் இந்நேரம் உயிரோடு இருந்திருப்பாரே. அவரும் கூட தன்னை அடிக்க வந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டிருப்பார். தன்னை போலீசிடம் ஒப்படைத்து விடுமாறு கேட்டிருப்பார். தண்ணீர் தாருங்கள் என்று கேட்டிருப்பார். ஆனால், தண்ணீர் கூடக் கொடுக்காமல் அடித்தே கொன்று விட்டார்களே” என்கிறார் நஸீம்.
அந்தப் புகைப்படங்களும் காணொளியும் வெளியானதில் இருந்து கொடுமையான நினைவுகளோடே வாழ்ந்து வருகிறார் நஸீம். “நான் அந்த வீடியோக்களைப் பார்க்க விரும்பவில்லை. ஆனால், எனது இதயம் கேட்க மறுக்கிறது. உங்கள் கணவரைப் பார்க்க வேண்டும் என்கிற விருப்பத்தை இதயம் கேட்டுக் கொண்டா இருக்கும்? அவரால் எப்படி அந்த வலியைப் பொறுத்துக் கொள்ள முடிந்தது என்பதை நான் பார்க்க வேண்டும். இறுதி நேரத்தில் அவர் என்ன வார்த்தைகளைச் சொன்னார் என்பதைக் கேட்க வேண்டும். மரணிக்கும் போது அவர் எதை நினைத்துக் கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரிய வேண்டும்” என்கிறார் நஸீம்.
இத்தனைக்கும் மோடி தான் காரணம்.
‘இந்தியாஸ்பெண்ட்’ இணையதளம் நடத்திய ஆய்வு ஒன்றின் படி 2010-ஆம் ஆண்டில் இருந்து பசு பயங்கரவாதத்தால் உயிரிழந்தவர்களில் 84 சதவீதம் பேர் இசுலாமியர்கள். இதில் 97 சதவீத தாக்குதல்கள் மோடியின் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பின் நடந்துள்ளன.
மரணத் தருவாயில் தண்ணீருக்காக மன்றாடும் காசிம்
”மோடி ஆட்சிக்கு வந்த பின் முசுலீம்கள் மாடுகளைக் கொல்வதாக குற்றம்சாட்டப்பட்டு கொல்லப்படுகின்றனர். இதெல்லாம் மோடியால் தான் நடக்கிறது. அவர் இந்துக்களை கட்டுப்படுத்த தவறிவிட்டார். அதனால் இசுலாமியர்கள் கொல்லப்படுகின்றனர்” என்கிறார் நஸீம். காசிமின் மரணத்தைத் தவிர பிரச்சினைக்குரிய எதையும் பேச வேண்டாம் எனத் தடுக்கும் மகளையும் மீறிப் பேசிக் கொண்டிருக்கிறார் நஸீம்.
இந்துக்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையே கால்நடை வியாபாரம் பல ஆண்டுகளாக நடந்து கொண்டு தான் இருப்பதாகக் குறிப்பிடும் நஸீம், தங்களது சமூகம் முன்னெப்போதும் இப்படி அஞ்சி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டதில்லை என்கிறார். “ஏன் இப்படி நடப்பதை மோடி அனுமதிக்கிறார்? இந்தக் கொலைகள் எல்லாம் பசுக்களை காப்பாற்றுவதற்காக நடக்கவில்லை. அவர்கள் எங்களுடைய வாழ்வாதாரத்தையே தாக்கிச் சிதைக்கிறார்கள். நாங்கள் ஏழ்மையிலும் வறுமையிலும் வாடுவதைப் பார்க்க விரும்புகிறார்கள். எங்கள் வீடுகளில் சுள்ளி விறகுகள் கூட எரிந்து விடக் கூடாது என்பதில் அவர்கள் குறியாக இருக்கிறார்கள்” என்கிறார் நஸீம்.
உ.பி போலீசு அடித்த பல்டி
இந்தக் கொடூர படுகொலை குறித்த செய்தி பரவுவதால் மக்கள் அதிருப்தி அடைவதை அறிந்த உத்திரபிரதேச போலீசு, நடந்த மரணத்திற்கு ‘சாலை விபத்தே’ காரணம் என்கிறது. போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் பசுக் காவலர்கள் பற்றியோ, கும்பல் கொலை பற்றியோ குறிப்பிடப்படவே இல்லை. ஆனால், கடந்த 23-ஆம் தேதி ஹஃபிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம் பேசிய ஹபூர் போலீசு சூப்பிரண்டு சர்மா, காசிமின் மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அதைப் பற்றி இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“எனக்கு அந்தக் குற்றவாளிகள் தூக்கிலேற்றப்பட வேண்டும். எனக்கு நீதி வேண்டும். அதற்காக நான் விடாமல் போராடுவேன். நீதி கிடைக்காவிட்டால் நான் யாரையும் சும்மா விடமாட்டேன்”
காசிம் தாக்கப்படும் காணொளியும் அதில் அவரைக் காப்பாற்ற தலையிடும் மதார்பூர் கிராமத்தைச் சேர்ந்த சமியுத்தீன் என்பவரும் தாக்கப்படும் காட்சிகளும் இந்த வழக்கில் மிக முக்கியமான சாட்சியங்கள். “நாங்கள் எல்லா கோணத்திலும் விசாரிக்கத் தயாராகவே இருக்கிறோம்” என்கிறார் சர்மா.
முதலில் வெளியான காணொளியில் காசிம் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடக்கிறார். அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் மாட்டைக் கொல்வது தொடர்பாக கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவன், ‘அடித்த வரை போதும். விளைவுகள் மோசமாகி விடப்போகிறது’ என்கிறான். அதற்கு பதிலளிக்கும் மற்றொருவன் “நாம் இரண்டு நிமிடம் தாமதமாக வந்திருந்தால் இவன் மாட்டைக் கொன்றிருப்பான்’ என்கிறான். “இவன் ஏன் மாட்டைக் கொல்கிறான்” என்கிறான் மற்றொருவன்.
சமியுத்தீன்
இரண்டாவதாக வெளியான காணொளி, உ.பி. போலீசாரின் கட்டுக்கதையை நொறுக்கிப் போடுவதாக இருக்கிறது. அதில் சமியுத்தீனை கொலைகார கும்பலைச் சேர்ந்த சிலர் மோசமாக ஏசுகின்றனர். உடலெங்கும் இரத்தம் வழிந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த வயதான மனிதரால் நிற்கக் கூட முடியவில்லை. கும்பலைச் சேர்ந்த ஒருவன் சமியுத்தீனின் நரைத்த தாடியைப் பற்றி இழுக்கிறான். அந்தக் கும்பல் இவர்களை மாட்டைத் திருட வந்ததாக ஒப்புக் கொள்ளச் சொல்லி மிரட்டுகிறது.
இந்தக் கொடூரத் தாக்குதலில் எப்படியோ பிழைத்துக் கொண்ட சமியுத்தீன் தற்போது ஹபூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பஜேரா குர்த் கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் சிசோதியா மற்றும் யுதிஷ்ட்ர சிங் எனும் இருவர் காசிமின் மரணத்தில் தொடர்புடையவர்கள் எனக் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 20-25 நபர்களைத் தேடிவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் மாடுகளையோ, கசாப்பு செய்யும் கத்திகளையோ போலீசார் கண்டெடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள சர்மா, பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே காவலர்கள் பார்த்ததாகச் சொல்கிறார்.
விரக்தியான சூழல்
நஸீம் பள்ளிக்குச் சென்றதேயில்லை. அவருக்கு 12 வயதாகும் போது தன்னை விட 15 வயது மூத்த காசிமைத் திருமணம் செய்து வைத்துள்ளனர். அவர்கள் மொத்தம் ஏழு பிள்ளைகள். அதில் ஒரே ஒரு ஆண் பிள்ளையைத் தவிர மற்ற யாரும் பள்ளிக்குச் செல்லவில்லை. தனது கணவர் தினசரி 200 இல் இருந்து 500 வரை கூலியாகச் சம்பாதிப்பார் என்றும், இதை வைத்துக் கொண்டு வீட்டுக்கு 1500 ரூபாய் வாடகையும் கொடுத்த பின் அத்தியாவசிய தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாது என்கிறார் நஸீம். “எங்களிடம் தொலைக்காட்சி கூட கிடையாது. எங்களால் எந்த ஆடம்பரச் செலவும் செய்ய முடியாது” என்கிறார், நஸீம்.
அந்த வீட்டுக்கு அக்கம் பக்கமாக உள்ளவர்கள் தாத்ரியில் கொல்லப்பட்ட முகமது அக்லக்கையும் தாசனா எனும் நகரில் கொல்லப்பட்ட மற்றொரு கால்நடை வியாபாரியையும் நினைவு கூர்ந்தனர். “எங்களுக்கு மூச்சு முட்டுகிறது. நாங்கள் பாதுகாப்பாகவே உணரவில்லை” என்கிறார் நஸீம். அங்கிருந்த மற்றொரு பெண்ணோ, “எங்களை இந்துக்கள் அடியோடு வெறுக்கிறார்கள் என்றால், ஏன் எங்களிடம் கால்நடைகளை விற்கிறார்கள்?” எனக் கேட்கிறார். “முசுலீம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு பதிலாக நாங்கள் பொறுமையையே காட்டிக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் புர்கா அணிந்த மற்றொரு பெண். “அவர்கள் காசிமைக் கொன்றதால் பெரிதாக சாதித்து விட்டதாக கருதிக் கொண்டிருக்கலாம். ஆனால், அல்லா அவர்களுக்கு கருணை காட்ட மாட்டான்” என்கிறார், ஒரு வயதான பெண்.
”நாங்கள் பொறியில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த அரசாங்கம் எங்களைப் பற்றியெல்லாம் கவலையே படாது என்பது தெரியும். ஆனாலும், இந்தச் சூழ்நிலையில் நாங்கள் அரசாங்கத்திடம் தான் உதவிக்காக ஓட வேண்டியிருக்கிறது. அவர்கள் காசிமைக் கொன்றவர்களை தண்டிக்க வேண்டும். இந்தக் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஏதாவது நட்ட ஈடு கொடுக்க வேண்டும்” என்கிறார், அருகில் உள்ள மதார்பூரில் இருந்து வந்திருந்த வயதான முசுலீம் பெண்மணி.
சமியுத்தீனின் மகள்கள், சையீதா, ஷாய்தா
பசு பயங்கரவாதிகளால் நிகழும் கொலைகளைக் குறித்து கேள்விபட்டிருந்தும் கால்நடை வியாபாரத்தைக் கைவிடுமாறு தனது கணவரிடம் நஸீம் கேட்கவில்லை. “எங்களுக்கு பயமாகத் தான் இருந்தது. ஆனால், நாங்கள் வேறு என்ன செய்ய முடியும்? வாழ்வதை நிறுத்தி விட முடியாதே” என்கிறார் நஸீம்.
மதார்பூரைச் சேர்ந்த ஷாய்தாவும் சையீதாவும் தங்களது வயதான தந்தை அடிவாங்குவதையும் அவரது தாடி இழுக்கப்படுவதையும் புகைப்படங்களாகப் பார்த்து இன்னமும் நடந்த சம்பவத்தை சீரணிக்க முடியாமல் தவிக்கின்றனர். இவர்கள் இருவரும் சமியுத்தீனின் மகள்கள். அந்தக் காணொளியில் இருந்த அனைத்துமே கொடூரமானவை எனக் குறிப்பிடும் அவர்கள் தங்கள் தந்தையின் தாடியைப் பிடித்து இழுத்த காட்சி தங்களை நொறுக்கி விட்டது என்கின்றனர்.
“அல்லாவுக்கே வெளிச்சம். தாடி என்பது பெரியவர்களுடைய மரியாதையின் அடையாளம். எனக்கு முன்பாக அப்படி நடந்திருந்தால் என் கையாலேயே அந்தக் கயவர்களைக் கொன்றிருப்பேன். அதற்குப் பின் எனக்கு என்ன ஆனாலும் கவலையில்லை” என்கிறார் சையீதா. 17 வயதான சையீதாவுக்கும், 20 வயதான ஷாய்தாவுக்கும் எழுதப்படிக்கத் தெரியாது. நடந்த சம்பவத்தை தனது உறவினர்கள் காட்டிய காணொளியின் மூலமே அறிந்து கொண்டனர். விவசாயம் செய்து கொண்டிருக்கும் தங்கள் தந்தையால் பசுமாடுகளைக் கொல்ல முடியாது என்கிறார்கள் அந்தச் சகோதரிகள்.
”அவருக்கு ரொம்பவே வயதாகிவிட்டது. ஒரு மாட்டை வெட்டிக் கொல்லும் அளவுக்கான ஒரு பொருளைப் பிடித்துத் தூக்கவே அவருக்கு சக்தியில்லை” என்கிறார் ஷாய்தா. மேலும், “அப்படியே அவர்கள் தப்பு செய்ய திட்டமிட்டார்கள் என்பது உண்மையாக இருந்தாலும், அவர்கள் போலீசிடம் தானே புகார் அளித்திருக்க வேண்டும்? இவர்களாக எப்படி அடித்துக் கொல்லாம்” என்கிறார்.
உ.பி. போலீசு பொய் சொல்கிறதா?
பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒரே ஒரு விசயம் மட்டும் பொதுவாக உள்ளது. அவர்கள் இருதரப்பினருமே உ.பி. போலீசாரின் விசாரணையை நம்பவில்லை. போலீசால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை காசிமையும் சமியுத்தீனையும் இருசக்கர வாகனம் ஒன்று இடித்து விட்டதாகவும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறு காரணமாகவே இருவரும் தாக்கப்பட்டர்கள் என்றும் குறிப்பிடுகிறது. சாலை விபத்து என வழக்கை முடிக்க போலீசார் முனையவில்லை என்றும், சமியுத்தீனின் சகோதரர் யாசின் சொன்னதன் பேரிலேயே அவ்வாறு அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்றும் சொல்கிறார் சூப்பிரெண்டு சர்மா.
ஆனால், கடந்த 21-ஆம் தேதி தில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சமியுத்தீனின் மற்றொரு சகோதரர் மெகருத்தீன், தனது சகோதரர் யாசின் எப்படி புகார் தரவேண்டும் என போலீசார் தான் சொல்லிக் கொடுத்தார்கள் என்கிறார். “எங்களுக்குத் தேவை நீதி. இப்படி புகார் கொடுத்தால் நியாயம் பெற்றுத் தருகிறோம் என்று போலீசார் சொன்னதாலேயே யாசின் கையெழுத்துப் போட்டார்” என்கிறார் அவர்.
கொல்லப்பட்ட காசிமை தலைகுப்புற தூக்கி இழுத்து வரும் காட்சி
அதே போல் கைது செய்யப்பட்டுள்ள ராகேஷ் சிசோதையாவின் சகோதரர் உதய், சம்பவம் நடப்பதற்கு முன்பே தனது சகோதரர் காவல் நிலையத்துக்கு தொலைபேசியில் அழைத்து வன்முறை நிகழப் போவது குறித்து எச்சரித்ததாக குறிப்பிடுகிறார். மேலும் பிரச்சினை தொடங்கியதற்கு ஒரு மணி நேரம் கழித்து தான் போலீசார் வந்ததாக குறிப்பிடும் உதய், “எனது சகோதரனின் தொலைபேசிப் பதிவுகளை போலீசார் வெளியிட வேண்டும். அப்படி வெளியிட்டால் எனது சகோதரன் போலீசாரை அழைத்ததும் அவர்கள் தாமதமாக வந்ததும் நிரூபணமாகும்” என்கிறார்.
குற்றம் நடந்த இடத்தில் ஒரு பசுவையும் கன்றையும் கைப்பற்றிய போலீசார், அவற்றை கிராமவாசி ஒருவரிடம் ஒப்படைத்ததாகவும், இப்போது அனைத்தையும் மூடி மறைக்க முயல்வதாகவும் பஜேரா குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் போலீசாரின் மேல் குற்றம் சாட்டுகின்றனர்.
ஹஃபிங்டன்போஸ்டின் நிருபர்கள் கிராமவாசிகளிடம் பேசிய போது தங்களது அடையாளத்தை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட ஒரு தந்தையும் மகனும், ஜூன் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அந்தப் பசுவும் கன்றும் தங்கள் பாதுகாப்பில் தான் இருந்ததாக குறிப்பிடுகின்றனர்.
நீதி எங்கே?
தனது கணவரின் மரணத்தை அடுத்து இசுலாமிய முறைப்படி நான்கு மாத துக்கம் அனுஷ்டிக்கும் நஸீம், இந்த வழக்கை தான் அத்தனை சுலபத்தில் விட்டு விடமாட்டேன் என்கிறார். தனது 17 வயது மகன் ஆசிஃபை இரண்டு வருடங்களுக்கு முன் விபத்து ஒன்றில் பறிகொடுத்த நஸீம் ஏற்கனவே மனதொடிந்து போயிருந்த நிலையில் தற்போது கணவரின் மரணத்தால் நிலைகுலைந்து போயிருக்கிறார்.
“எனக்கு அந்தக் குற்றவாளிகள் தூக்கிலேற்றப்பட வேண்டும். எனக்கு நீதி வேண்டும். அதற்காக நான் விடாமல் போராடுவேன். நீதி கிடைக்காவிட்டால் நான் யாரையும் சும்மா விடமாட்டேன்” என்கிறார் நஸீம்.
காசிமின் சடலம் போலீசாரின் முன்னிலையிலேயே இழுத்துச் செல்லப்படும் புகைப்படங்கள் பரவிய பின் போலீசார் ”வருத்தம்” தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் மேற்படி ‘வருத்தத்தை’ தெரிவிக்க எந்தப் போலீசாரும் நேரில் வரவில்லை என்கின்றனர் காசிமின் குடும்பத்தார். ”இதே போல் போலீசாரைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றால் அவர்களுக்கு எப்படி இருக்கும்? அவர்களது குழந்தைகளும் இதே போல் அனாதைகளாகி விட்டால் எப்படி உணர்வார்கள்? இந்தப் போலீஸ்காரர்களை என்ன தான் செய்வது? எங்கே இருக்கிறது நீதி” எனக் கேட்கும் நஸீம், “இனிமேல் எந்த முசுலீமுக்கும் இப்படி நடக்காது என்று மோடியே சொல்ல வேண்டும்” என்கிறார்.
ஜி.டி.பி மாயை : மதிப்புக் கூட்டலும் மதிப்பு கைப்பற்றலும் – ஜான் ஸ்மித்
பாகம் :2
ஐ-பாட்களும், ஐ-ஃபோன்களும்
ஆப்பிளின் ஐஃபோனும் அதனோடு தொடர்புடைய பொருட்களும் “சர்வதேச விற்பனை பண்டங்களுக்கான” கச்சிதமான பிரதிநிதிகள். உலகின் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள தொழிலாளர்களின் பல்வகைபட்ட திறமைகளிலான உழைப்பு வகைகளின் சிக்கலான இணைப்பின் விளைவாக அவை உற்பத்தியாகின்றன. ஒவ்வொரு கையடக்கக் கருவியிலும் தற்கால உலக முதலாளித்துவத்தின் சமூக உறவுகள் அடங்கியிருக்கின்றன. இந்தப் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் யார், இவற்றிலிருந்து லாபம் ஈட்டுபவர்கள் யார் என்பது குறித்த ஆய்வு பல விஷயங்களை வெளிப்படுத்துகிறது. உற்பத்தி நடைமுறைகள் குறைகூலி நாடுகளுக்கு மாற்றப்படுவதுதான் இதில் மிகவும் கவனத்தைக் கவருவதாகவும், முக்கியமானதாகவும் உள்ளது. வட அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாட்டு நிறுவனங்களும், அரசுகளும் இந்த குறைகூலி நாடுகளின் உழைப்பிலிருந்து பெறப்படும் அதீத லாபங்களை எவ்வளவு அதிகமாகச் சார்ந்திருக்கின்றன என்பதும் தெரிய வருகிறது.
ஒவ்வொரு கையடக்கக் கருவியிலும் தற்கால உலக முதலாளித்துவத்தின் சமூக உறவுகள் அடங்கியிருக்கின்றன
இந்த வகையில் 2007-ம் ஆண்டு கிரேக் லிண்டன், ஜேசன் டீட்ரிக், கென்னத் கிரேமர் ஆகியோர் வெளியிட்ட ஆய்வு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்குப் பின்னர் செய்யப்பட்ட பிற ஐஃபோன் ஆய்வுகளில் வெளிப்படாத இரண்டு விஷயங்களை அது வெளிப்படுத்துகிறது. (1) அவர்களது ஆய்வு ஐ-போனின் வடிவமைப்பு, உற்பத்தி, போக்குவரத்து, விற்பனை ஆகியவற்றில் நேரடியாக ஈடுபடும் உழைப்பை அளவீடு செய்கிறது. (2) இந்த வெவ்வேறு பிரிவு தொழிலாளர் குழுக்கள் பெறும் ஏற்றத்தாழ்வான கூலிகள் தொடர்பான விபரங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.4
2006-ம் ஆண்டு 30 GB ஆப்பிள் ஐ-பாட் $299 விலைக்கு விற்கப்பட்டது. வெளிநாடுகளிலேயே நடத்தி முடிக்கப்பட்ட அதன் உற்பத்திக்கான மொத்தச் செலவு $144.40. அதாவது, ஆப்பிள் அறுவடை செய்த மொத்த லாப வீதம் 52 சதவீதம். அதாவது விற்பனை விலையில் உற்பத்திச் செலவு போக எஞ்சிய $154.60 ஆப்பிளுக்கும், அதன் சில்லறை விற்பனையாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும், வரிகள் மூலம் அரசுக்கும் சென்று சேர்கிறது. இந்தத் தொகை அமெரிக்காவிற்குள் சேர்க்கப்பட்ட மதிப்பாக கருதப்பட்டு அமெரிக்காவின் ஜி.டி.பி-க்கு பங்களிக்கிறது. “2006-ம் ஆண்டு ஐ-பாட் மற்றும் அதன் துணை பாகங்கள் உலகம் முழுவதிலும் 41,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கின. அவற்றில் 27,000 பேர் அமெரிக்காவுக்கு வெளியிலும், 14,000 அமெரிக்காவுக்குள்ளும் பணி புரிந்தனர். வெளிநாட்டு வேலைகள் பெரும்பாலும் குறைகூலி அளிக்கும் உற்பத்தித் துறையிலும், அமெரிக்க வேலைகள் உயர் ஊதியம் பெறும் பொறியாளர்கள், மேலாளர்கள் மற்றும் பிற குறைகூலி சில்லறை விற்பனை உள்ளிட்ட தொழில்முறை அல்லாத தொழிலாளர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட சமமாக பிரிக்கப்பட்டிருந்தது.”5
ஃபாக்ஸ்கான் தொழிலாளி
13,920 அமெரிக்க ஊழியர்களில் முப்பது பேர் மட்டுமே உற்பத்தித் தொழிலாளர்கள் (சராசரியாக ஆண்டுக்கு $47,640 ஊதியம் பெறுபவர்கள்); 7,789 பேர் “சில்லறை விற்பனை மற்றும் பிற தொழில்முறை அல்லாத” தொழிலாளர்கள் (அவர்களது சராசரி ஊதியம் ஆண்டுக்கு $25,580); 6,101 பேர் தொழில்முறை ஊழியர்கள் அதாவது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள மேலாளர்களும் பொறியாளர்களும். கடைசி பிரிவினர் மொத்த அமெரிக்க ஊதியச் செலவில் மூன்றில் இரண்டு பங்கைக் கைப்பற்றினர்; அவர்கள் சராசரியாக ஆண்டுக்கு $85,000 ஈட்டினர். மறுபக்கத்தில், 12,250 சீன உற்பத்தித் தொழிலாளர்கள் ஆண்டுக்கு தலா $1,540 ஊதியம் பெற்றனர், அல்லது வாரத்துக்கு $30 — இது அமெரிக்காவில் சில்லறை விற்பனைத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் சராசரி ஊதியத்தில் 6 சதவீதம், உற்பத்தித் துறை தொழிலாளர்களின் ஊதியத்தில் 3.2 சதவீதம், தொழில்முறை ஊழியர்களின் சம்பளத்தில் 1.8 சதவீதம்.6 அமெரிக்காவிலும், சீனாவிலும் ஐ-பாட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை (முறையே 13,920 மற்றும் 12,250) சற்றேறக்குறைய சமமானதுதான். ஆனால், அமெரிக்க ஊழியர்கள் பெறும் மொத்த ஊதியத் தொகை $71.9 கோடி. சீனாவில் வழங்கப்படும் மொத்த ஊதியத் தொகை வெறும் $1.9 கோடி. [அமெரிக்க சராசரி சம்பளம் 35 மடங்கு அதிகம்]
ஐ-பாட்-க்கு பின் சந்தைப்படுத்தப்பட்ட ஆப்பிளின் ஐஃபோன் குறித்து 2010-ல் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) வெளியிட்ட ஆய்வறிக்கை இன்னும் பிரமாதமான லாபக் குவிப்பை வெளிப்படுத்துகிறது. “2007-ம் ஆண்டு பெரு்ம் பரபரப்புக்கு மத்தியில் அமெரிக்கச் சந்தையில் ஐ-போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றின் விற்பனை எண்ணிக்கை 2007-ம் ஆண்டில் 30 லட்சமாகவும், 2008-ல் 53 லட்சமாகவும், 2009-ல் 1.13 கோடியாகவும் இருந்ததாக மதிப்பிடப்பட்டது.” ஒவ்வொரு ஐ-ஃபோனின் மொத்த உற்பத்திச் செலவு $178.96, அதன் விற்பனை விலை $500; அதாவது ஆப்பிள் ஈட்டிய மொத்த லாபம் விற்பனை விலையில் 64 சதவீதம்; அந்த மொத்த லாபம் அதன் வினியோகஸ்தர்கள் மற்றும் அமெரிக்க அரசுக்கு இடையில் பகிர்ந்து கொள்ளப்பட்டது. பொருளாதாரவியல் தரவுகளில் இவை அனைத்தும் அமெரிக்காவுக்குள் சேர்க்கப்பட்ட “மதிப்புக் கூடுதல்” என்று பதிவு செய்யப்படுகின்றன. இந்த ஆய்வறிக்கையின் முக்கிய கவனம் அமெரிக்க-சீன வர்த்தகப் பற்றாக்குறையில் ஐ-ஃபோன் செய்யும் பங்களிப்பு பற்றியதாக இருந்தது. “ஐ-ஃபோன் மூலம் சீனாவின் கணக்கில் சேர்க்கப்படும் ஏற்றுமதி மதிப்பும் அதன் விளைவான வர்த்தகப் பற்றாக்குறையும் பெரும்பகுதி மூன்றாம் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாகங்கள் மற்றும் துணை பாகங்களிலிருந்து பெறப்பட்டவை” என்று இந்த ஆய்வு கண்டறிந்தது.
ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் தங்குமிடங்கள்
இருப்பினும் சீனத் தொழிலாளர்கள், “ஒவ்வொரு ஐ-போனுக்கும் $6.50 மட்டுமே பங்களிப்பு செய்கின்றனர், அதாவது மொத்த உற்பத்திச் செலவில் 3.6%”7 96 சதவீதத்துக்கும் அதிகமான ஐ-ஃபோனின் ஏற்றுமதி மதிப்பு மூன்றாம் நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட மறு-ஏற்றுமதியான பாகங்களால் ஆனது. அவை அனைத்தும் சீனா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் மதிப்பில் கணக்கிடப்படுகின்றன, ஆனால், அதில் எதுவும் சீனாவின் ஜி.டி.பி.ல் சேர்க்கப்படுவதில்லை. இந்த மொத்த லாபம் ஆப்பிள், சேவை அளிப்பாளர்கள் மற்றும் அமெரிக்க அரசுக்கு இடையே எப்படி பகிர்ந்து கொள்ளப்படுகின்றது என்பதை ஆய்வாளர்கள் விபரமாக புலனாய்வு செய்யவில்லை. ஆனால், அவற்றின் பிரமிக்கத்தக்க தாக்கம் பற்றி அவர்களால் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. “சந்தைப் போட்டி வலுவாக இருந்திருந்தால், எதிர்பார்க்கப்படும் லாபவீதம் பல மடங்கு குறைவாக இருந்திருக்க வேண்டும்…. விண்ணை முட்டும் விற்பனையும், உயர் லாபவீதமும் ஆப்பிள் ஒப்பீட்டளவில் ஏகபோக நிலையை பராமரிப்பதை சுட்டிக் காட்டுகின்றன. ஐ-ஃபோன்கள் அனைத்தையும் சீனாவில் உற்பத்தி செய்வது என்ற முடிவை ஆப்பிளின் லாப வேட்டைதான் தீர்மானிக்கிறது; சந்தைப் போட்டி அல்ல.”8
இதைத் தொடர்ந்து அந்த ஆசிய வளர்ச்சி வங்கி ஆய்வாளர்கள் ஆப்பிள் ஐ-போன்கள் உற்பத்தியை அமெரிக்காவுக்கு இடம் மாற்றினால் என்ன நடக்கும் என்று உருவகித்து பார்க்கிறார்கள். அமெரிக்க ஊதியங்கள் சீன ஊதியங்களை விட 10 மடங்கு அதிகமாக இருப்பதாகவும், இந்த உருவகிக்கப்பட்ட அமெரிக்க பொருத்தி தயாரிப்பு தொழிலாளர்கள் ஃபாக்ஸ்கானில் உழைக்கும் இப்போதைய தொழிலாளர்களைப் போலவே தீவிரமான உழைப்பில் ஈடுபடுகிறார்கள் என்றும் அவர்கள் வைத்துக் கொண்டார்கள். “ஐ-ஃபோன்கள் அமெரிக்காவில் பொருத்தி தயாரிக்கப்பட்டால் அவற்றின் மொத்த பொருத்தி தயாரிக்கும் செலவு $65-ஆக உயர்ந்து விடும் [சீனாவில் அந்தச் செலவு $6.50], அதன் பிறகும் ஆப்பிளுக்கு 50% லாபம் எஞ்சியிருக்கும்”9 என்று அவர்கள் கணக்கிட்டார்கள். “லாபத்தில் ஒரு சிறு பகுதியை தியாகம் செய்து, தொழில்முறை அல்லாத அமெரிக்கத் தொழிலாளர்களுடன் அதை பகிர்ந்து கொண்டு”, “நிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR)” காட்டுமாறு ஆப்பிளுக்கு வேண்டுகோள் விடுத்து அவர்கள் தம் அறிக்கையை முடிக்கிறார்கள்.10 அதை விட, சீனப் பொருளாதாரத்துக்கு அவசரமாக தேவைப்படும் வேண்டல் அதிகரிப்புக்கு உதவும் வகையில் அதன் $11,000 கோடி நிதிக் கையிருப்பை ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி ஆப்பிளை அவர்கள் கேட்டிருக்கலாம்.
அடிக்குறிப்புகள்:
4.Greg Linden, Kenneth L. Kraemer, and Jason Dedrick, Who Captures Value in a Global Innovation System? The Case of Apple’s iPod, Personal Computing Industry Center, UC Irvine, June 2007, http://signallake.com, 7. 5. Greg Linden, Jason Dedrick, and Kenneth L. Kraemer, Innovation and Job Creation in a Global Economy: The Case of Apple’s iPod, Personal Computing Industry Center, UC Irvine, January 2009, http://pcic.merage.uci.edu, 2. 6. The distribution of the resulting profits brings to mind words written by Lenin in 1907: “The British bourgeoisie, for example, derives more profit from the many millions of the population of India and other colonies than from the British workers. In certain countries this provides the material and economic basis for infecting the proletariat with colonial chauvinism.” V.I. Lenin, “The International Socialist Congress in Stuttgart,” http://marxists.org . 7.Yuqing Xing and Neal Detert, How the iPhone Widens the United States Trade Deficit with the People’s Republic of China, ADBI Working Paper Series No. 257, December 2010 (revised May 2011), http://adbi.org, 4–5. 8.Ibid, 8. 9.Ibid. 10.Ibid, 9.
மாவோயிஸ்டு என்று முத்திரை குத்தப்பட்டு போலிமோதல் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ராசு மாதவியின் சகோதரிகள் வஞ்சி (இடமிருந்து இரண்டாமவர்) மற்றும் ஜனோ (இடமிருந்து மூன்றாமவர்) .
திருமண நிகழ்ச்சிக்காக சென்ற சிறுவர் சிறுமியரை மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தி மராட்டிய போலீசு, போலி மோதல் படுகொலை செய்தது ஏற்கனவே வினவில்வந்துள்ளது. படுகொலை செய்யப்பட்டவர்களின் கிராமத்திற்கு சென்று ’தி வயர்’ ஊடகம் நடத்திய கள ஆய்வின் தமிழாக்கம் இங்கே.
“எங்களது குழந்தைகள் காணாமல் போய் இரண்டு மாதங்கள் ஆகின்றன. ஒவ்வொரு முறையும் எங்களது கிராமத்திற்கு போலீசு வரும் போதும் அல்லது எங்களை போலீசு நிலையத்திற்கு வரச் சொல்லும் போதும் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. இப்பொழுதாவது எங்களது குழந்தைகளுக்கு என்ன நடந்தது என போலீசு சொல்ல வேண்டும்” என கட்டெபள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர் ஒருவர் கடந்த ஜூன் 18 அன்று தி வயர் இணையதளத்திற்கு அளித்த தொலைபேசி பேட்டியில் கூறினார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, தமது கிராமத்திற்கு அருகே 40 ‘மாவோயிஸ்டுகளை’ சுட்டுக் கொன்றதாகக் கூறிய அதே காலகட்டத்தில் தனது பிள்ளையை இழந்த பெற்றோர் இவர்.
கட்ச்ரோலி, எடப்பள்ளி, கசன்சூர்
மராட்டியத்தின் எடப்பள்ளி (Etapalli) வட்டத்தின் கட்டெபள்ளி (Gattepalli) கிராமத்தைச் சேர்ந்த எட்டு சிறுவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக கசன்சூர் கிராமத்திற்கு சென்றிருந்தனர். அடுத்த நாள் (ஏப்ரல் 22) காலை கசன்சூர் கிராமத்துக்கு வெளியே இந்திராதேவி ஆற்றங்கரையில் முகாமிட்டிருந்தாகக் கூறப்படும் 50 ‘நக்சல்கள்’ கட்ச்ரோலி (Gadchiroli) கமாண்டோ படையினரால் சுடப்பட்டதில் 34 பேர் அங்கேயே பலியானார்கள். மேலும் அறுவர் இராஜாராம்-கான்ட்லா (Rajaram-Khandla) காட்டுப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஊடகங்களில் வெளியான செய்திகளும், மோதல் படுகொலை செய்த இடத்திலிருந்து போலீசு வெளியிட்ட புகைப்படங்களும் ஆற்றங்கரையினில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் குறைந்தது இரண்டு பேர் காணாமற் போன சிறுவர் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்தன. அவ்விரண்டு பேரில் ஒருவரது உடலை மட்டுமே போலீசு ஒப்படைத்துள்ளது. மற்றொரு சிறாரின் உடல் குறித்து போலீசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என்று கிராமத்துவாசிகள் கூறுகின்றனர்.
காணாமல் போன குழந்தைகள் பற்றிய புதிர் ஒருபுறம் தொடர, அவர்கள் மாவோயிச நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்று பொய்யாக புனையப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திடுமாறு பெற்றோர்கள் மிரட்டப்படுவதாகவும் கிராமத்துவாசிகள் தெரிவிக்கின்றனர். “எங்களைப் பயன்படுத்தி எங்கள் குழந்தைகளின் படுகொலைகளை போலீசு நியாயப்படுத்த முயல்கிறது” என்று பெற்றோர்களில் ஒருவர் ‘தி வயர்’ இணையதளத்திடம் தெரிவித்திருக்கிறார்.
கிராமத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரிமில்லி(Perimili) துணை போலீசு நிலையத்திற்கு ஜூன் 18-ம் தேதி அன்று 5 பேர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். காணாமல் போன தங்களது குழந்தைகள் பற்றி ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று அறிய அந்த ஐவருடன் மேலும் பத்துப் பேர்கள் துணைக்கு சென்றனர். போலீசு நிலையத்தை அடைந்தவுடன் அந்த ஐந்து பேர்களையும் பிடித்து வைத்துக்கொண்டு மீதி நபர்களை வெளியேறுமாறு போலீசார் மிரட்டினார்கள். “எங்களுக்கு என்ன நடந்தேன்றே தெரியவில்லை. ஒரு அறையில் அடைக்கப்பட்டதும் சத்தம் போடக்கூடாது என்று நாங்கள் மிரட்டப்பட்டோம்” என்று அவர்களில் ஒருவர் பின்னர் கூறினார். போலீசார் அவர்கள் ஐவரையும் மிரட்டி கையெழுத்து வாங்கினர்.
அந்த ஆவணங்கள் மராத்தி மொழியில் கையால் எழுதப்பட்டிருந்தன. கிராமத்திலிருந்து கிளம்பிய சிறுவர்கள் கசன்சூர் (Kasansur) கிராமத்திலிருந்து கமாண்டர் சாய்நாத்தை சந்திக்கச் சென்றதாக அந்த ஆவணம் கூறியது. “நான் கையெழுத்துப் போட மறுத்தவுடன் நீயும் சாக விரும்புகிறாயா? என்று அவர்கள் கேட்டனர்” என்று பெற்றோர்களில் ஒருவர் கூறினார். போலி மோதலில் படுகொலை செய்யப்பட்ட எட்டு சிறுவர்களில் கல்லூரிக்கு செல்லும் அவரது பதின்ம வயது மகனும் ஒருவனாக இருக்கக்கூடும் என்று அவர் அஞ்சுகிறார்.
இந்த எட்டு சிறுவர்களுக்கும் மாவோயிச கமாண்டர் சாய்நாத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்துது போல அந்த ஆவணங்களில் எழுதப்பட்டிருந்ததாக அந்த கிராமத்து மக்கள் கூறுகின்றனர். போலி மோதலில் படுகொலை செய்யப்பட மூன்று மாவோயிச கமாண்டர்களில் கட்டெபள்ளியைச் சேர்ந்த சாய்நாத்தும் ஒருவர். கொல்லப்பட்ட மற்ற இருவர் மாவோயிச கமிட்டி உறுப்பினர்களான ஸ்ரீநாத் மற்றும் நந்து. ஸ்ரீனு மற்றும் சாய்நாத் இருவரும் இந்திராதேவி ஆற்றங்கரையில் கொல்லப்பட்டனர். நந்து மற்றும் அவருடன் மேலும் ஐவர் இராஜாராம் கான்ட்லா காட்டுப்பகுதியில் ஏப்ரல் 23-ம் தேதி கொல்லப்பட்டனர்.
போலீசு நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது அங்கே ஆறு பேர் இருந்ததாகவும் அவர்களில் ஒருவர் சீருடையணிந்தும் மேலும் ஐவர் சீருடை அணியாமலும் இருந்ததாக கிராம மக்கள் கூறுகின்றனர். போலீசு நிலையத்தில் இருந்த அதிகாரிகளில் மகேஷ் மத்கார் மற்றும் மண்டிவார் ஆகிய இருவரை அவர்கள் அடையாளம் கூறுகின்றனர். “இந்த இருவர்தான் தொடர்ச்சியாக எங்களை கையெழுத்து போடுமாறு கட்டாயப்படுத்தினார்கள். ஒரு நான்கு மணி நேரம் கையெழுத்துப் போடுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் நாங்கள் பயத்தில் இருந்ததால் அதைத் தவிர கடைசியில் எங்களுக்கு வேறு வழியில்லை” என்று கூறினார் ஒரு கிராமத்துவாசி.
தாங்கள் கையெழுத்துப்போட்ட அந்த ஆவணங்களை விரைவில் போலீசார், நீதிபதி முன் வைத்து குற்றவியல் நடைமுறை சட்டம் 167-ன் படி வழக்குப்பதிவு செய்வார்கள் என்றும் எங்களால் அதை திரும்பப்பெற முடியாது என்றும் கிராம மக்கள் கூறினர். கையெழுத்துப் போட்ட அந்த ஆவணங்களின் நகலை கேட்டும் கொடுக்க முடியாது என்றும் வேண்டுமென்றால் நீதிமன்றத்தில் இருந்து அவற்றை பெற்றுக்கொள்ளுமாறு போலீசு எங்களிடம் கூறிவிட்டது என்று அவர்கள் கூறினார்கள்.
பெர்மிலி துணை போலீசு நிலையப் பொறுப்பாளரான கூடுதல் போலீசு கண்காணிப்பாளர் இராஜாவை தொடர்பு கொண்டபோது அவர் பதிலேதும் சொல்லவில்லை. கட்ச்ரோலி போலீசு கண்காணிப்பாளர் அபினவ் தேஷ்முக்கிடம் கிராம மக்களின் குற்றச்சாட்டைப் பற்றி கேட்ட போது அது ”தவறான தகவல்” என்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமே பதிலாகக் கூறியிருக்கிறார்.
நாக்பூரில் இருந்து 310 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் எடப்பள்ளி வட்டத்தை சேர்ந்த ஒரு சிறு கிராமம்தான் கட்டெபள்ளி. கட்ச்ரோலி பகுதியில் உள்ள பெரும்பாலான பழங்குடி மக்களைப் போல கட்டெபள்ளியின் 35 குடும்பங்கள் பீடி சுற்ற உதவும் ‘தெண்டு’ இலைகளை பறித்தும் காடுகளில் விளையும் ஏனைய பொருட்களை வைத்தும்தான் வாழ்க்கையை நடத்துகின்றனர். பெரும்பாலான கிராம மக்களுக்கு படிப்பதற்கான எந்த வாய்ப்பும் கிடையாது. அவர்களில் வெகு சிலருக்குத்தான் மராத்தி மொழியில் எழுதப்படிக்கத் தெரியும்.
போலீசால் பிடித்துச்செல்லப்பட்ட ஐவரில் மூவர் காணாமல் போன எட்டு சிறுவர்களுக்கு நேரடியாக தொடர்பு உள்ளவர்கள். அக்கிராமத்தின் கல்வியறிவு கொண்ட வெகு சிலரில் இந்த ஐந்து பேர்களும் உள்ளனர். அவர்களைப் பிடித்து சென்றதற்கு இதுதான் முதன்மையான காரணம் என்று கிராம மக்கள் சந்தேகிக்கின்றனர். “நாங்களாகவே போலீசுக்கு சாட்சியமளிக்க முன்வந்ததைப் போல், நீதிமன்றத்திற்கு காட்ட அவர்கள் விரும்புகிறார்கள். நாங்கள் அளித்த வாக்குமூலத்தை பின்னாளில் திரும்பப் பெற்றுக் கொள்வதை அவர்கள் விரும்பவில்லை” என்று அவர்களில் ஒருவர் கூறினார்.
தங்களது கிராமத்திலிருந்து வெறும் 15 கிலோமீட்டர் தொலைவேயுள்ள கசன்சூர் கிராமத்தில் நடந்த போலிமோதல் படுகொலைகள் குறித்து ஏப்ரல் 22 ம் தேதி மாலை வரை கட்டெபள்ளி கிராம மக்களுக்கு தெரியவில்லை. அந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய மற்ற கிராம மக்கள் மூலமாக தெரிய வந்த பிறகு தான் அவர்கள் போலீசு நிலையத்திற்கு விரைந்து சென்றார்கள். மேலும் காணாமல் போனது குறித்து ஒரு புகாரையும் கட்ச்ரோலி போலீசு நிலையத்தில் பதிவு செய்தனர். அடுத்த ஐந்து நாட்களுக்கு போலீசு நிலையத்தில் இருந்தோ ஊடகங்களிடம் இருந்தோ எந்த தகவலும் கிராமத்து மக்களுக்கு கிடைக்கவில்லை.
ஏப்ரல் 27-ம் தேதி அந்த கிராமத்தைப் பார்வையிடச் சென்ற முதல் ஊடகம் ’தி வயர்’. அங்கு நடந்த உரையாடலின் போது எதேச்சையாக வழக்குரைஞரும் மாவட்ட கவுன்சில் உறுப்பினருமான லால்சு சோமா நகோடியுடைய கைப்பேசியிலிருந்த சிறார்களின் படங்களில் ஒன்றைப் பார்த்ததும், அதுதான் காணாமற்போன சிறார்களில் ஒருவரான 16 வயதான ராசு சாக்கோ மாதவி என்று கண்டு கொண்டார் கிராமவாசி ஒருவர். அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அந்த செய்தியை கிராம மக்களுடன் பகிர்ந்து கொண்டார். நக்சலைட்டுகள் என்று சந்தேகிக்கப்பட்டு போலீசால் படுகொலை செய்யப்பட்ட 16 பேரில் அந்த சிறுமியின் புகைப்படமும் ஒன்று. தங்களது மகள் என்று அடையாளம் காட்டிய பின்னரும் மாதவியின் குடும்பத்தாரிடம் அவளது உடலை போலீசு இன்னமும் ஒப்படைக்கவில்லை.
சிறுவர்களை போலிமோதல் படுகொலை செய்துவிட்டு கிராம மக்களுக்கு துணிமணி, பாத்திரங்களை நன்கொடை தருவது போல நாடகமாடுகிறது மராட்டிய போலீசு
கிராமத்து மக்களிடம் பொய்யான வாக்குமூலங்களை வாங்கியது மட்டுமல்ல கிராம மக்களை திசை திருப்ப வேறு குறுக்குவழிகளையும் போலீசு மேற்கொள்கிறது. கிராம மக்களுடனான உறவினை மேம்படுத்துவதாக கூறிக்கொண்டு எட்டு சேலைகள், 20 சோடி செருப்புகள், 15 குடைகள் மற்றும் இரண்டு அலுமினிய பாத்திரங்களை கிராம மக்களிடம் நன்கொடையாக போலீசு வழங்கியது. “திடீரென்று அவர்கள் இங்கே வந்து இவற்றை கொடுக்க தொடங்கிவிட்டனர். சிலர் அதை எதிர்த்தனர். ஆனால் போலீசார் அதை கண்டுகொள்ளவில்லை” என்று கிராம பெரியவர் ஒருவர் கூறினார். வேறு வழியில்லாமல் கிராம மக்களும் அவற்றை வாங்கினாலும் பயன்படுத்தவில்லை. “அவர்கள் எங்களை கொலை செய்து பின்னர் பரிசுகளை தருவார்கள். எப்படி அவற்றை நாங்கள் பயன்படுத்துவது?” என்று கோபத்துடன் ஒரு கிராமவாசி கேட்டார்.
சட்டரீதியிலான ஆதரவின்மை:
படுகொலை செய்யப்பட்ட அனைவரும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு அமைப்பை சேர்ந்தவர்கள் என்று முதலில் போலீசின் கதையை பத்திரிகைகள் அப்படியே வெளியிட்டன. ஆனால் கிராம மக்கள் நடந்ததை சொல்ல தொடங்கிய பின்னர் போலீசின் கட்டுக்கதைகள் அம்பலமாக தொடங்கின.
சமூக ஆர்வலர்கள், வழக்குரைஞர்கள், ஊடகவியலாளர்கள் என 40 பேர்கள் அந்த கிராமத்திற்குள் உடனடியாக சென்று போலீசின் கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தினர். விளைவாக, படுகொலை செய்யப்பட சிறுவர்களின் குடும்பத்தாருக்கு உடனிருந்து உதவி செய்த மூத்த வழக்குரைஞர் சுரேந்திரா காட்லிங் மற்றும் நில உரிமை செயற்பாட்டாளர் மகேஷ் இரவுத் இருவரும் நக்சல் இயக்கத்தில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டு புனே போலீசால் கைது செய்யப்பட்டனர். “நாங்கள் போலீசின் கட்டுக்கதையை எதிர்த்து உயர்நீதி மன்றம் செல்ல இருந்தோம். சட்டரீதியான உத்திகளை முடிவு செய்து கொண்டிருந்த நேரத்தில்தான் காட்லிங் கைது செய்யப்பட்டார்” என்று நோகோட்டி கூறினார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு கடந்த 23-6-2018 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் நடைபெற்ற அன்று காலையில் கலைஞர் அறிவாலத்திற்கு வந்த போலீசு, ”மக்கள் அதிகார அமைப்பிற்கு ஏன் அனுமதி கொடுத்தீர்கள், அவர்கள் குண்டு வைப்பார்கள். அவர்களுடைய அனுமதியை உடனே ரத்து செய்யுங்கள். இல்லையென்றால் உங்களை கைதுசெய்ய நேரிடும்” என்று மிரட்டியுள்ளனர். அதற்கு மண்டப மேலாளர் ”என்னால் ரத்து செய்ய முடியாது, வேண்டும் என்றால் மேலிடத்தில் பேசிக் கொள்ளுங்கள்” என்று கூறியதால் வேறுவழியின்றி திரும்பிச் சென்றனர்.
மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மக்கள் அதிகார மண்டல ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். சி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் A.V. சரவணன், ம.தி.மு.க மாநில துணை பொதுச்செயலாளர் A.K. மணி, வி.சி.க. மாநில துணை செயலாளர் சே.சேரலாதன், ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் V.பாபு கோவிந்தராஜ், வி.சி.க. மாவட்ட செய்தி தொடர்பாளர் சுரேந்தர், மருதம் ஒருங்கிணைப்பாளர் ரவி கார்த்திகேயன், வழக்கறிஞர் செம்மலை, வி.வி.மு. விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர், ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.
1 of 12
வழக்கறிஞர் செம்மலை
A.K. மணி
தோழர் அம்பேத்கர்
தோழர் A.V. சரவணன்
மோகன்ராஜ்
கலைக்குழுவினர் பாடல்
ரவிகார்த்திகேயன்
செல்வகுமார்
சே.சேரலாதன்
சுரேந்தர்
உரையாற்றிய அனைவரும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு தங்களது வன்மையான கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும், மக்கள் அதிகாரம் சரியான பாதையில் பயணிக்கிறது. மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கும் மக்கள் அதிகாரம் அமைப்பினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வது கண்டிக்கத்தக்கது என்றனர். இப்போதுள்ள அரசியல் சூழலில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக கும்பலின் ஜனநாயக விரோத அடக்குமுறைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணையவேண்டும் என அறைகூவல் விடுத்தனர். மேலும் அரசின் சமீபத்திய மக்கள் விரோத திட்டங்கள் குறித்தும், மக்கள் போராட்டங்களின் மீதான காட்டுத்தனமான ஒடுக்குமுறை குறித்தும் பேசினர்.
விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
தாம்ஸன் ராய்டர்ஸ் பவுண்டேஷன் எனும் அமைப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து மார்ச் 26 முதல் மே 4-ம் தேதிவரை, 550 அறிஞர்கள் – வல்லுநர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஆய்வில் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
கருத்துக்கணிப்பு முடிவின்படி உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு, ஆபத்தான நாடு இந்தியாதான் என்பது தெரியவந்துள்ளது. இதில் முதல் 10 இடங்களில் 9 இடங்களில் ஆசிய நாடுகளும், பத்தாவதாக அமெரிக்காவும் இடம் பெற்றுள்ளன.
பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் வன்புணர்ச்சி, வீட்டு வேலை, கொத்தடிமை வேலைகளுக்கு கடத்துதல், கட்டாயத் திருமணம், விபச்சாரத்தில் தள்ளப்படுதல் போன்றவற்றில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.
இது போக ஆசிட் வீச்சு, உடல் உறுப்புகளை சிதைத்தல், குழந்தை திருமணம், உடல் ரீதியாகத் துன்புறுத்துதல் போன்றவைகளும் இந்தியாவில் அதிகம்.
கடந்த 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட இதே ஆய்வில் பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் 4-வது இடத்தில் இருந்த இந்தியா, இன்று முதலிடத்தில் இருக்கிறது. நாலாவது இடமே மோசம் என்றால் முதல் இடம் படுமோசம் என்ற பட்டத்தை வழங்கியிருக்கிறது.
உள்நாட்டுப் போரில் சிதையும் ஆப்கானிஸ்தான் 2-வது இடத்திலும், சிரியா 3-வது இடத்திலும் உள்ளன. நான்காவது இடத்தில் சோமாலியாவும், 5-வதில் சவுதி அரேபியாவும் பெண்களுக்கு ஆபத்து மிகுந்த நாடுகளாக இருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் பெண்களுக்கு காரோட்டும் உரிமை வழங்கிய முஸ்லீம் நாடு, பெண்களை ‘தெய்வமாக’ மதிக்கும் பாரதத்தை முந்திவிட்டது.
இந்த தரங்கெட்ட தரவரிசையில் வல்லரசு நாடான அமெரிக்கா 10-வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. என்னதான் முன்னேறிய நாடாக இருந்தாலும், பெண்கள் மீதான வன்முறையில் அமெரிக்காவை விஞ்சுவதற்கு ஆளில்லை.
கதுவா, உன்னாவ் வன்புணர்வு சம்பவங்களை கண்டித்து ஹைதராபாத்தில் நடந்த போரட்டம்!
கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்ட சம்பவம், சமீபத்தில் காஷ்மீர் கதுவாவில் 8 வயது சிறுமி வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்டது, உ.பியில் 16 வயது சிறுமி மீதான பாலியல் வன்முறை ஆகியவை உலக அளவில் இந்தியாவின் தற்போதைய முதல் இடத்தை பெற்றுத் தந்துள்ளது.
மத்திய அரசின் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, கடந்த 2007 மற்றும் 2016-ம் ஆண்டுக்கு இடையே பெண்களுக்கு எதிரான வன்முறை 83 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மணிநேரத்துக்கும் 4 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் . ஒவ்வொரு நாளும் 100 பாலியல் வழக்குகள் பதிவாகின்றன, கடந்த 2016-ம் ஆண்டு பெண்களுக்கு எதிராக 39 ஆயிரம் தாக்குதல்கள் நடந்துள்ளது. இது கடந்த 2015-ம் ஆண்டைக் காட்டிலும் 12 சதவீதம் அதிகம்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் பெண்ணடிமைத்தனத்தை போற்றும் வண்ணம் சங்கராச்சாரி முதல் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வரை அவ்வப்போது பெண்கள் ஏன் வெளியே வேலைக்கு போகிறார்கள் என்று கேட்பார்கள். நிர்பயா கொலையைக் கூட பல்வேறு இந்துத்துவத் தலைவர்கள் இப்படித்தான் நியாயப்படுத்தினர். வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்படும் ஒரு பெண் மரியாதைக்குரிய ஆடையை அணியவில்லை என்றும் இவர்கள் புத்திமதி செய்வார்கள். மறுபுறம் சாதி, மத, கிராம வட்டாரங்களில் இத்தகைய வன்புணர்ச்சிகளை கட்டவிழ்த்து விடுவதும் இவர்கள்தான்.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த கண்ணோட்டத்திற்கு ஒரு அரசு மரியாதை கிடைத்திருப்பதால் இந்தக் கொடுமைகளை முன்னிலும் அதிகமாய் நடக்கின்றன. அரியலூர் நந்தினி முதல் கதுவா சிறுமி வரை ஆர்.எஸ்.எஸ் கூட்டமே நேரடி குற்றவாளிகளாய் முன் நிற்கிறது. முசுலீம்களை கொல்வது, தலித்துக்களை அடிப்பது, பெண்களை வன்புணர்வது என்பதே இந்துத்துவத்தின் திரிசூல திட்டமென்றால் மிகையில்லை.
மோடி ஆளும் வரை இந்தியா இத்தகைய முதலிடத்தில் இருந்தே தீர வேண்டும்!
(பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் முதல் 10 நாடுகள் பட்டியல்: 1. இந்தியா, 2.ஆப்கானிஸ்தான், 3. சிரியா, 4.சோமாலியா, 5.சவுதிஅரேபியா, 6. பாகிஸ்தான், 7. காங்கோ, 8. ஏமன், 9. நைஜிரியா, 10. அமெரிக்கா.)
கேள்வி: பெண்களுக்கு மிக ஆபத்தான நாடு இந்தியா ! ஏன் ?
மோடி – பாஜக ஆட்சிதான் முதன்மையான காரணம்
பெண்கள் வேலைக்கு போவது அதிகரித்திருப்பதே காரணம்
உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை குறைக்க அமெரிக்க சதி
முசுலீம்கள் என்றாலே தீவிரவாதிகள், வெறுக்கப்படவேண்டியவர்கள், இந்த நாட்டின் குடிமக்களாக கருதப்படக் கூடாதவர்கள் என்றொரு பொதுக்கருத்து சங்கிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. பாஜக-வின் அடித்தளமான வடமாநிலங்களில் இந்த நிலைமை இன்னும் மோசம். சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தில் ஒரு பாஸ்போர்ட் அதிகாரி, ஒரு கலப்பு மண தம்பதியினரை, ”மதம் மாறினால்தான் பாஸ்போர்ட் தரமுடியும்” எனக் கூறி கடுமையாகச் சாடிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த முகமது அனஸ் சித்திக்கும், தன்வி சேத்தும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார். நொய்டாவில் உள்ள தனியார் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் இருவரும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதைத் தொடர்ந்து நேர்காணலுக்காக இருவரும் லக்னோ பாஸ்போர்ட் கிளை அலுவலகத்துக்கு கடந்த 20-ஆம் தேதி (20.06.2018) அழைக்கப்பட்டனர். இதில் 3-வது சுற்று நேர்காணலின் போது தன்வியை நேர்காணல் செய்த அதிகாரி விகாஸ் மிஸ்ரா என்பவர் தன்வியின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
தன்வி சேத், முகமது அனஸ் சித்திக் தம்பதியினர்
”இரண்டு சுற்று நேர்காணல்கள் முடிவுற்ற நிலையில், மூன்றாவது சுற்று நேர்காணலுக்காக முதலில் தன்வி அழைக்கப்பட்டார். தன்வியின் ஆவணங்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்த பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஸ்ரா, கணவர் என்ற இடத்தில் என்னுடைய பெயர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்று, என் மனைவி தன்வியிடம் ’உன் பெயரை மாற்றிவிடு, இல்லாவிட்டால் உன்னுடைய விண்ணப்பப் படிவம் நிராகரிக்கப்படும்’ என்று மிரட்டியுள்ளார்” என்கிறார் முகமது அனஸ் சித்திக்.
மேலும் முகமது அனஸ் சித்திக் இந்து மதத்துக்கு மாறி, பெயர் மாற்றம் செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார் விகாஸ் மிஸ்ரா. தனது பெயரை மாற்ற முடியாது என்று கூறிய தன்வி, “எனது கணவர் முசுலீமாக இருப்பதில் எனது குடும்பத்திற்கே எந்த பிரச்சினையும் இல்லை. எனவே நான் ஏன் பெயரை மாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த பதிலால் ஆத்திரமடைந்த பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஸ்ரா, அங்கிருந்தவர்கள் முன்னிலையிலும் சப்தம் போட்டு தன்வியை திட்டி அவமதித்துள்ளார். அவமானம் தாங்காமல் தன்வி அழ ஆரம்பித்திருக்கிறார்.
அடுத்ததாக முகமது அனஸ் சித்திக்கை அழைத்த விகாஸ் மிஸ்ரா, அவரையும் கடுமையான வார்த்தைகளால் அவமதித்திருக்கிறார். இது குறித்து முகமது அனஸ் கூறுகையில், “அவர் என்னை நோக்கி, ‘நீங்கள் இந்து மதத்திற்கு மாறிவிட வேண்டும், இல்லையெனில் உங்கள் திருமணம் செல்லுபடி ஆகாது; எனவே இந்துமத முறைப்படி தன்வியைத் திருமணம் செய்து அதற்கான ஆதாரங்களைத் துணை பாஸ்போர்ட் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று கூறி என்னுடைய விண்ணப்பத்தையும் நிராகரித்தார்” என்றார்.
பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஸ்ரா
இதையடுத்து இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து நிகழ்ந்தது குறித்து வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டனர், அதில் தன்வி குறிப்பிடுகையில், “ஆதங்கத்துடன் இதைப் பதிவிடுகிறேன், எனது கணவர் முசுலீம் என்பதால் எனது பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது. 12 வருட திருமண வாழ்க்கையில், இதுபோன்று ஒரு அவமானத்தை வேறு எங்கும் சந்தித்ததில்லை. பாஸ்போர்ட் அலுவலகத்தில் இதுபோன்று நிகழும் என எதிர்பார்க்கவில்லை” என குறிப்பிட்டிருந்தார்.
ஊடகங்களில் இந்த சம்பவம் அம்பலப்பட்ட சில மணி நேரத்தில் வெளிவிவகார அமைச்சகம் இந்த விசயத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டது. முகமது அனஸ் சித்திக் மற்றும் தன்வி இருவரும் வியாழக்கிழமை (21.06.2018) பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இவர்களால் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி விகாஸ் மிஸ்ரா இப்போது தண்டனை ஏதுமின்றி வெறுமனே இடமாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளார்.
பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஸ்ரா, இந்தக் கணம் வரை தான் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்றே சொல்லி வருகிறார். தான் சட்ட விதிகளின் படியே நடந்து கொண்டதாகவும், மேலும் போலி பாஸ்போர்ட்டுகளைத் தடுப்பதற்காகவே இப்படி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் நியாயப்படுத்தியுள்ளார். இவருக்கு ஆதரவாக டெல்லி ஆர்.எஸ்.எஸ். வானரங்களும் களமிறங்கியுள்ளன.
பாஸ்போர்ட் அதிகாரியின் வேலை என்பது விண்ணப்பதாரரின் ஆவணங்களைச் சரிபார்ப்பதேயன்றி அவர் யாரைத் திருமணம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கருத்து சொல்வதல்ல.
டிவிட்டரில் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பாக விளம்பரம் தேடும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாஸ்போர்ட் அதிகாரியின் இடமாற்றதை குறிப்பிட்டு உடன் பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாக கூறியதும், சங்கிகளின் ட்ரோல் இராணுவம் சுஷ்மாவை உண்டு இல்லை என பின்னி எடுத்து விட்டது. இதனால் தனது ஃபேஸ்புக் பக்கத்தின் ரேட்டிங் ஸ்டார் ஆப்சனை எடுத்து விட்ட சுஷ்மா இஞ்சி தின்ற சங்கி போல திணறுகிறார்.
போராடி கிடைக்கப்பெற்ற பாஸ்போர்ட்
முசுலீம் என்ற பெயரைப் பார்த்தவுடனேயே அந்த பாஸ்போர்ட் அதிகாரிக்கு ஏன் இத்தனை வெறுப்பு ஏற்பட்டது? ஒருவரையொருவர் காதலித்து, அவரவர் தத்தமது மத நம்பிக்கைகளை கடைபிடித்துக் கொண்டே மதக் கலப்புத் திருமணம் புரிந்து வாழ்வதென்பது, ஜனநாயக உரிமையின் ஒரு பகுதியே. இங்கு இந்த அடிப்படை ஜனநாயக உரிமையைத்தான் மதவெறி பிடித்த விகாஸ் மிஸ்ரா மறுத்துள்ளார். இதையேதான் நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் ‘லவ் ஜிகாத்’ என்ற போலிச் சொல்லாடலை பயன்படுத்தி செய்துவருகிறது.
’லவ் ஜிகாத்’ என்ற பெயரில் முசுலீம் இளைஞர்கள் இந்துப் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து இசுலாத்திற்கு மதம் மாற்றுவதாக இதே பொய்யைக் கூறிதான் உத்திரப் பிரதேசத்தில் ஒரு இந்துவெறிச் சாமியாரான யோகி ஆதித்யநாத், முதல்வர் பதவியையும் பிடித்து விட்டார்.
இதே லவ் ஜிகாத்தை முன்னிறுத்திதான், உ.பி மாநிலம் காசியாபாத்தில் 22.12.2017 அன்று நடக்கவிருந்த இந்து-முஸ்லீம் மதக்கலப்புத் திருமண விழாவில் புகுந்து ஆர்.எஸ்.எஸ் – பார்ப்பன மதவெறியர்கள் கலவரம் செய்தனர். அப்போது மணப்பெண்ணின் தந்தை புஷ்பேந்திர குமார் கூறியதுதான் இங்கு முக்கியமானது. “இது எனது தனிப்பட்ட விவகாரம். உங்களது குறுக்கீடு எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு மனிதர்கள்தான் முக்கியம். மதம் இரண்டாம்பட்சமானதுதான். ஒரு மனிதரை எனக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பதுதான் முக்கியம், அந்த நபர் இந்துவா அல்லது முஸ்லீமா என்று நான் பார்க்கவில்லை” என்று இந்துத்துவக் கிரிமினல் கும்பலுக்கு அப்போதே பதிலடி கொடுத்தார் புஷ்பேந்திர குமார்.
இந்தி நடிகர் சையப் அலிகான் – கரீனா கபூர் திருமணத்தின் போதும், இதே லவ் ஜிகாத்தை முன்னிறுத்தி அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடப்பட்டது.
எங்கு பார்க்கிலும் இசுலாமிய எதிர்ப்பு, தாழ்த்தப்பட்டோருக்கெதிரான தாக்குதல், பெண்களுக்கெதிரான வன்முறை என்பது தான் இந்துத்துவ பாசிச அரசியலின் அடிப்படை. ’இந்துப்’ பெண்கள் தமது வாழ்க்கைத் துணையாக யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸ் எனும் வன்முறைக் கூட்டமா முடிவு செய்வது?
”நான் ஐந்து வயிறுகளுக்குச் சோறு போட வேண்டும். ஒரு வேலைக்காரியின் சம்பளத்தை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி முடியும்” என்கிறார் ஷபானா மேமோன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). முப்பத்தோரு வயதான ஷபானா மும்பையைச் சேர்ந்தவர்; மும்பையை அடுத்துள்ள வடாலாவில் வசிக்கிறார். மூன்று குழந்தைகளும், வாய்ப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட கணவரையும் ஷபானா தான் கவனித்துக் கொள்ள வேண்டும்; ஏழ்மையான குடும்பம். தனது குடும்பத்தின் பணத் தேவையை சமாளிக்க தன்னார்வக் கருமுட்டைக் கொடையாளியாக இருக்கிறார் ஷபானா.
கடந்த 2009-ஆம் ஆண்டு துவங்கி இதுவரை எட்டுமுறை கருமுட்டைகளைக் கொடையளித்துள்ள ஷபானா, எட்டாவது முறையாகக் கொடையளித்ததற்கு 28,000 ரூபாயைக் கட்டணமாகப் பெற்றுள்ளார். கருமுட்டைகளைக் கொடையளிப்பது இரத்த தானம் போல் அத்தனை எளிதான காரியமல்ல; மிகச் சிக்கலான மருத்துவ நடைமுறைக்கு கொடையாளியின் உடல் ஆட்படுத்தப்படும். இதன் காரணமாகப் பல்வேறு பின்விளைவுகளும் உடல்ரீதியான சீர்கேடுகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த முறை பெற்ற கட்டணத்தில் சுமார் பத்தாயிரம் ரூபாயை கொடையளித்ததால் உண்டான மருத்துவப் பிரச்சினைகளைச் சரி செய்ய செலவிட்டுள்ள ஷபானா, இனிமேல் கொடையளிப்பதில்லை என முடிவெடுத்துள்ளார்.
”தாங்க முடியாத துன்பத்தில் நான் இதைச் செய்கிறேன். ஆனால், எனது மோசமான எதிரிக்கும் கூட இந்த நிலை ஏற்படக் கூடாது” என்கிறார் ஷபானா மேமோன்.
ஷீலா படேல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தானேயிலுள்ள தனது வீட்டில்.
ஆனால், அதே மும்பையைச் சேர்ந்த 26 வயது ஷகீதா கானின் கதை வேறு. கடந்த எட்டாண்டுகளில் ஐந்து முறை கருமுட்டைக் கொடையளித்துள்ளார் ஷகீதா. ஐந்து முறையும் வெற்றிகரமாக கருத்தரிப்பு நடந்துள்ளது. எனவே ஷகீதாவுக்கான கிராக்கி அதிகரித்துள்ளது. முதல் முறை 15 ஆயிரம் ரூபாய் கட்டணமாகப் பெற்ற ஷகீதா, இறுதியாக கொடையளித்த போது 45 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். ஒன்பதாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள ஷகீதா இரண்டு பிள்ளைகளின் தாய். புத்தகம் பைண்ட் செய்யும் கம்பெனிக்கு கூலி வேலைக்குச் செல்லும் ஷகீதாவின் கனவருக்கு பெரும்பாலான நாட்கள் வேலை கிடைப்பதில்லை. வேலை கிடைக்கும் நாட்களில் 300ல் இருந்து 400 ரூபாய் வரை கூலி கிடைக்கலாம்.
“மும்பையில் இரண்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது மிகவும் சிரமம்” எனக் குறிப்பிடும் ஷகீதா, தனது மூத்த மகளின் கல்விக் கட்டணத்தைக் கட்டும் வழி தெரியாமல் அவளை மதரஸா பள்ளிக்கு அனுப்பியுள்ளார். இரண்டாவது மகனின் கல்விச் செலவும் கையைக் கடிக்க ஆரம்பித்துள்ளதால் அவனையும் மதரசாவுக்கே அனுப்பும் முடிவில் இருக்கிறார். “எனது உறவினர்கள் நான் சுலபமாக பணம் சம்பாதிக்கிறேன் என நினைக்கின்றனர். நான் சம்பாதிப்பதை எல்லாம் உறவினர்களுக்கே கொடுக்க வேண்டியுள்ளது… கடைசியில் எனக்கென்று எந்தச் சேமிப்பும் இல்லை” எனக்கூறும் ஷகீதா ஒன்பதாம் வகுப்பு வரையே படித்துள்ளார்.
***
‘வெளிச் சோதனை முறை கருக்கட்டல்’ (In Vitro Fertilisation-IVF) எனப்படும் செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவத்தின் உலகளாவிய சந்தையின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் (15 பில்லியன் டாலர்). கருமுட்டைகளைக் கொடையாளிகளிடம் இருந்து பெற்று சோதனைச் சாலைகளில் வைத்து அதனுள் உயிரணுக்களைச் செலுத்துவது, பின்னர் கரு (அல்லது முளையம் – Embryo) வளர்ந்த பின் அதை இயற்கையாக கருத்தரிப்பதில் பிரச்சினை உள்ள பெண்களின் கருப்பையிலோ அல்லது வாடகைத் தாய்களின் கருப்பையிலோ வைத்து வளரச் செய்வார்கள். இந்த மருத்துவ (அல்லது வியாபார) நடைமுறையின் மிக முக்கியமான இடத்தில் இருப்பவர்கள் கருமுட்டைக் கொடையாளிகள்.
பெரும்பாலும் வறுமையான பின்னணியில் இருந்து வருபவர்களுக்கு இந்தச் சிக்கலான மருத்துவ நடைமுறைகளைக் குறித்து எதுவும் தெரியாது என்பதோடு மருத்துவர்களும் விளக்கிச் சொல்வதில்லை. கருமுட்டைகளைக் கொடையளிக்க முன்வருகிறவர் மாதவிடாய் துவங்கிய இரண்டாம் நாளில் இருந்தே ஹார்மோன் ஊசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், சாதாரணமாக ஆரோக்கியமான ஒரு பெண்ணின் சினைப்பையில் ஓரிரு கருமுட்டைகளே உருவாகும்; ஹார்மோன்களை உடலில் ஏற்றிக் கொள்ளும் போது குறைந்தபட்சம் மூன்றில் இருந்து அதிகபட்சம் 15 கருமுட்டைகள் வரும் உருவாகும். அடுத்து, முட்டைகளின் வளர்ச்சியை தொடர்ந்து மீயொலிச் சோதனைகளின் (Ultrasound) மூலம் மருத்துவர்கள் கண்காணித்து வருவார்கள்.
கருமுட்டைகள் ‘அறுவடைக்கு’ தயாரானவுடன், அவற்றை சேகரிக்கும் மருத்துவ நடைமுறையை ’பிக்-அப்’ என மருத்துவர்கள் அழைக்கின்றனர். கொடையாளிகளுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மீயொலி உணர்வியால் (Ultrasound sensor) வழிநடத்தப்படும் மெல்லிய ஊசி ஒன்று பெண்ணுறுப்பினுள் செலுத்தப்பட்டு அதன் மூலம் கருமுட்டைகள் சேகரிக்கப்படும். சுமார் முப்பது நிமிடங்கள் மேற்கொள்ளப்படும் இந்த மருத்துவ நடைமுறைக்குப் பின் அதே நாளில் கொடையாளியை மருத்துவர்கள் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்.
தொடர்ந்து உடலில் ஹார்மோன்களை ஏற்றுவதாலும், உட்கொள்ளப்படும் மருந்துகளின் வீரியத்தின் விளைவாலும் பெரும்பாலான கருமுட்டைக் கொடையாளிகளுக்கு சினைப்பை வீக்கம் (Ovarian Hhyperstimulation Syndrome – OHSS) ஏற்படும். கருமுட்டைகளைக் கொடையளித்த பின் 48 மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு மீயொலிச் சோதனை மேற்கொண்டு சினைப்பை வீக்க நிலையையும் இரத்தக் கசிவையும் கண்காணிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான கொடையாளிகள் செலவைத் தவிர்க்க இந்தச் சோதனையை மேற்கொள்வதில்லை. மேலும், கருமுட்டை சேகரிப்பு முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றால் சினைப்பை கிழிந்து இரத்தக் கசிவு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதீத ஊக்க மருந்துகளின் எதிர்விளைவுகள் குறித்து கொடையாளிகளுக்கு எந்தவிதமான விழிப்புணர்வும் இல்லை; மருத்துவர்களும் அவ்வாறாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்லை. இந்தியச் சட்டங்களின் படி, இவ்வாறு கொடையளிக்க முன்வரும் பெண்களிடம் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், இந்த நடைமுறை வெறும் சடங்காகவே பின்பற்றப்படுகின்றது. மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் தன்னிடம் ஒரு தாளில் கையெழுத்தையும் வாக்காளர் அடையாள அட்டையின் நகல் ஒன்றையும் வாங்கிக் கொண்டார்கள் என்றும், அதில் என்ன இருந்ததென்று தனக்குத் தெரியாதென்றும் குறிப்பிடுகிறார் ஷீலா பாட்டீல் (மாற்றுப் பெயர்) எனும் கொடையாளி.
***
கருமுட்டைக் கொடை என அழைத்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை இது மொத்தமும் ஒழுங்கமைக்கப்பட்ட வியாபாரமாகவே நடந்து வருகிறது. பெரும் செலவு பிடிக்கும் செயற்கைக் கருத்தரிப்புச் சிகிச்சையை மேல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும், பணக்காரர்களுமே மேற்கொள்கின்றனர். நடுத்தர வயது வரை பிள்ளை பெறுவதைத் தள்ளிப் போடும் இவர்கள், இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்புகள் அருகிப் போகும் வயதில் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சையை மேற்கொள்கின்றனர். இந்தியாவில் கருத்தரிப்புச் சிக்கல் எத்தனை பேரிடம் உள்ளது என்பதைக் குறித்த அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் ஏதும் இல்லை. எனினும், சந்தை ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்களின் படி(Indian IVF & PGD Market, By Structure) 2016-ஆம் ஆண்டில் 1,078 கோடியாக இருந்த செயற்கைக் கருவூட்டல் தொழில் 2022-இல் 2,600 கோடியாக உயரும் எனத் தெரிவிக்கிறது (15.8 சதவீத ஆண்டு வளர்ச்சி)
கருமுட்டைக் கொடையாளிகளை இதற்காக மனதளவில் ’தயாரிக்க’ இடைத்தரகர்களும் உண்டு. அதே போல், இந்தியச் சட்டங்களின் படி கருமுட்டைக் கொடை அளிப்பவர்களை பயனாளிகள் சந்திக்க கூடாது; ஆனால், எதார்த்தத்தில் இது மீறப்படுவதாக குறிப்பிடுகிறார் இதற்காகவே தரகு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் கவுரவ் வான்கடே. பணக்கார பயனாளிகள் தமக்கு கருமுட்டை தானம் செய்பவர்கள் சிவந்த நிறத்தில் இருக்க வேண்டும் எனவும், படித்தவர்களாக இருக்க வேண்டும் எனவும், கல்லூரி மாணவிகளாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைப்பதாகச் சொல்கிறார் வான்கடே. ஒரு சில சந்தர்பங்களில் வெளிநாடுகளில் இருந்து காகாசிய இனத்தைச் (வெள்ளையினம்) சேர்ந்த கொடையாளிகளையும் தான் ஏற்பாடு செய்திருப்பதாக குறிப்பிடுகிறார் வான்கடே.
2005-ஆம் ஆண்டு இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி, கொடையளிக்க முன்வருகிறவர்கள் 21 இல் இருந்து முப்பத்தைந்து வயதுக்குள் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது – ஆனால், ஒரு பெண் எத்தனை முறை கொடையளிக்கலாம், ஒருமுறைக்கும் மறுமுறைக்கும் என்ன இடைவெளி இருக்க வேண்டும் என்பதைக் குறித்து எந்த விளக்கமும் இல்லை. 2012ம் ஆண்டு சுஷ்மா பாண்டே எனும் 17 வயதே நிரம்பிய கருமுட்டை கொடையாளி அதீத ஊக்க மருந்துகளின் எதிர்விளைவால் மரணமடைந்தார்.
ஊக்க மருந்துகளின் எதிர்விளைவால் சினைப்பை வீக்கம், இரத்தக் கசிவு மட்டுமின்றி கான்சர் பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கருதுகின்றனர் – இதைக் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 2017 ஆம் ஆண்டு ரீப்ரொடக்டிவ் பயோமெடிக்கல் ஆன்லைன் எனும் அறிவியல் இதழில் ஐந்து செயற்கைக் கருவுறுதல் மற்றும் கருமுட்டை வளர்ச்சிக்காக ஊக்க மருந்துகளை எடுத்துக் கொண்ட ஐந்து பெண்களின் மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தது. இந்த ஐந்து பெண்களுமே சிகிச்சைக்குப் பின் சினைப்பை வீக்கப் பிரச்சினையைச் சந்தித்ததும், பின்னர் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானதும் தெரியவந்தது.
வறுமையின் கொடுமை தாளாமல் கருமுட்டைக் கொடையாளிகளாக முன்வரும் பெண்களுக்கு, மருத்துவ அலட்சியத்தால் பாதிப்புக்கு ஆளான பின் எந்த நிவாரணமும் கிடைப்பதில்லை. சுஷ்மா பாண்டேவின் தாயார் தனது மகளின் மரணத்தைத் தொடர்ந்து 2013ம் ஆண்டு சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மேல் தொடர்ந்த வழக்கு இதுநாள் வரை எந்த முன்னேற்றமும் இன்றி அப்படியே தேங்கி நிற்கிறது. வழக்கின் நிலை குறித்து 2016ம் ஆண்டு மகாராஷ்டிரா மனித உரிமை கமிஷனில் செய்யப்பட்ட முறையீடும் எந்த முன்னேற்றமும் இன்றியே உள்ளது.
ஆரோக்கியமான ஒரு பெண் அதிக கருமுட்டைகள் உருவாவதற்கான ஊக்க மருந்துகள் எடுத்துக் கொள்வதை அப்பெண்ணின் உடல் ஏற்றுக் கொள்வதில்லை. கருமுட்டைக் கொடையாளிகளாக முன்வருகிறவர்களை மருந்துகளைப் பரிசோதிக்க முன்வரும் தன்னார்வலர்களைப் போல் கருத வேண்டும் என்றும் அவர்களுக்கு வழங்கப்படும் தொகையைக் கட்டனமாக அல்லாமல் இழப்பீடாக உயர்த்திக் கொடுக்க வேண்டும் எனவும், அவர்களுக்குப் போதிய மருத்துவ வசதிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார் மருத்துவர் ஆனந்த் பாஹ்ன்.
எவ்வாறாயினும், ஒருபக்கம் வறுமையும் , இன்னொரு புறம் காகிதத்தில் மட்டுமே உயிர்வாழும் சட்டங்களும், மற்றொருபுறம் ஏழைகளின் உயிர்களை புழுக்களைப் போல் மதிக்கும் அதிகார வர்க்கம் கைகோர்த்துக் கொள்கின்றன. எப்படியாவது குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும் என்கிற நெருக்கடியில் உள்ள அப்பாவி ஏழைப் பெண்கள் இந்தச் சூழலுக்குப் பலியாகின்றனர்.
நன்றி: scroll.in (ஸ்க்ரோல் இணையதளத்தில் Priyanka Vora எழுதிய கட்டுரைகளின் சுருக்கப்பட்ட வடிவம்.)
கதிராமங்கலம், நெடுவாசல் தொடங்கி ’பசுமை’ வழிச்சாலை வரை, மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகிறது மோடி அரசு. எதிர்த்துக் கேட்பவர்களின் குரல்வளையை இறுகப் பிடிக்கிறது அடிமை எடப்பாடி அரசு. இனி என்ன செய்யப் போகிறோம்? எதிர்வரும் தேர்தல் களத்தினை வைத்து இப்பிரச்சினைகளை முடிவு செய்ய முடியமா? இல்லை, போராட்டக் களத்தில்தான் தீர்வு கிடைக்கும் என்பதை உரக்கச் சொல்கிறது இப்பாடல்.
1998-ம் ஆண்டில் மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளியிட்ட “ஓட்டு போடாதே புரட்சி செய்” என்ற பாடல் தொகுப்பில் இடம்பெற்ற பாடல் இது.
பாடல் வரிகள்
காலங்கள் மாறும் ! கரங்கள் ஒன்று சேரும் !
மழை காளான்கள் போல் தேர்தல் மாயங்கள் சாகும் !
இது போராட்டக்காலம் .. புரட்சி வெற்றி கொள்ளும் !!
நாணல்கள் போலே வளைந்த நாட்கள் போதும் !
ஓநாய்கள் பின்னே நடந்து என்ன இலாபம் ?
தேர்தல்கள் போகும் .. ஏமாற்றம் நெஞ்சில் தேங்கும் ..
வேறென்ன மார்க்கம் ? வினாக்கள் நெஞ்சை தாக்கும் ..
உடல் நோகாமல் சாகாமல் வாராது மாற்றம் ..
இது போராட்டக்காலம் .. புரட்சி வெற்றி கொள்ளும் !!
அதிகாரம் இன்று இல்லை !
அடையாமல் வாழ்க்கை இல்லை !
புதுவாழ்க்கை, நீதி, பண்பாடு ..
வாக்கு சீட்டாலே மாற்றம் வராது !
மணல் கோபுரம் போல் பணநாயகம் வீழும் !
இது போராட்டக்காலம் .. புரட்சி வெற்றி கொள்ளும் !!
தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்களாக இருந்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் செயலாளர் வழக்கறிஞர் அரிராகவன் ஆகியோர் மீது பல்வேறு பொய் வழக்குகளை ஜோடித்தது போலீசு. அதன் தொடர்ச்சியாக கடந்த 20.06.2018 அன்று நள்ளிரவில் வழக்கறிஞர் வாஞ்சிநாதனை கைது செய்தது . இக்கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
26.06.2018 செவ்வாய் அன்று சிதம்பரம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைதைக் கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிதம்பரம் ஆர்.டி.ஓ அலுவலக வாயில் அருகில், வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் எவ்வாறு மக்கள் போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார் என்பதை விளக்கிப் பேசினார். டாஸ்மாக் போராட்டம், சிதம்பரம் கோவிலில் தமிழ் பாடும் உரிமைப் போராட்டம், காவிரி உரிமைப் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம் உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு எவ்வாறு முன்நின்று, சமரசமற்ற வகையில் போராட்டம் நடத்தினார் என்பதை விவரித்துப் பேசினார். போராடும் மக்களுக்கு எந்நேரமும் உடன் நிற்கக் கூடியவர் வாஞ்சிநாதன் என்றும் அவரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றும் கூறி தனது தலைமை உரையை முடித்துக் கொண்டார்.
அடுத்ததாக மூத்த வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் அவர்களின் கண்டன உரையில், கார்ப்பரேட்டுகளின் அடிமை மத்திய அரசும், எடப்பாடி அரசும் எவ்வாறு மக்கள் விரோதமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன என்பதை விவரித்துப் பேசினார். போராடும் மக்களின் மீதான அரசின் ஒடுக்குமுறையின் போது மக்களுக்காக சட்ட காவலராக வாஞ்சிநாதன் செயல்பட்டார் என்பதால்தான் அவரை இந்த அரசு கைது செய்திருக்கிறது என்றும் இந்தக் கைது கடும் கண்டனத்திற்கு உரியது கண்டன உரையாற்றினார்.
1 of 4
அதன் பின்னர் வழக்கறிஞர் மணிவண்ணன் கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினார். தொடர்ந்து அவர் பேசுகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களின் தன்னெழுச்சியையும், அதற்கு உறுதுணையாக நின்ற மக்கள் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களின் தன்னலமற்ற போராட்டத்தைப் பற்றியும் பேசினார். அவரைக் கைது செய்வதன் மூலம் போராட்டங்களை முடக்கிவிடலாம் என அரசு நினைக்கிறது. வாஞ்சிநாதனைக் கைது செய்தது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என கண்டனம் தெரிவித்தார்.
வழக்கறிஞர் தயாநிதி அவர்கள் பேசுகையில், மத்திய அரசும், அடிமை மாநில அரசும் எவ்வாறு தமிழக மக்களையும் அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையும் அழிக்க நினைக்கின்றன என்பதை விவரித்துப் பேசினார். மத்திய அரசு தமிழகத்தை மற்றுமொரு காஷ்மீராக எவ்வாறு மாற்ற நினைக்கிறது என்பதைக் குறித்தும் பேசினார். மக்களின் போராட்டங்களுக்கு உடன் நின்று சட்ட உதவியளித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும், இந்தக் கைது நடவடிக்கை என்பது அடக்குமுறையின் உச்சகட்டம் என்றும் உரையாற்றினார்.
இறுதியாக வழக்கறிஞர் செந்தில், கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, நின்று கவனித்த பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
தகவல்: – மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சிதம்பரம்
ஸ்விக்கி, சோமேட்டோ, உபர் ஈட். ஃபுட் பண்டா, ஜஸ்ட் ஈட், டேஸ்டி கண்ணா, டோமினோ, பிட்ஸா ஹட். இப்படி 10-க்கும் மேற்பட்ட ஆன்லைன் ஃபுட் டெலிவரி சர்விஸ் இணைய டப்பா வாலாக்கள் சென்னை நகர சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக பறந்து கொண்டிருக்கிறார்கள். சிவப்பு, ஆரஞ்சு, கறுப்பு வண்ண உடைகளில் உணவு பெட்டிகளை சுமந்துகொண்டு மூச்சு விட முடியாத வாகன நெருக்கடியில் முகத்தை முழுவதும் மூடிக் கொண்டு இரண்டு சக்கர வாகனங்களில் காற்றாய் பறந்து வாடிக்கையாளர்களுக்கு சுடச்சுட உணவுகளை கொடுக்கிறார்கள். ”டெலிவரி பாய்ஸ்” என்று மேட்டுக்குடி நுகர்வோரால் அழைக்கப்படும் இவ்வூழியர்களின் ஒரு நாள் உழைப்பு, சக்கரமாக சாலையில் தேய்ந்து ஓய்கிறது.
சென்னை வடபழனி அருகே உள்ள முருகன் இட்லிக்கடை என்ற சங்கிலி உணவு நிறுவனத்தின் வாசலில் 10 க்கும் மேற்பட்ட ”ஸ்விக்கி ஊழியர்கள்” பரபரவென தங்கள் ஸ்மார்ட் போனில் ஆர்டர் கால்களை எதிர்பார்த்து காத்திருந்தவர்களிடம் பேச்சு கொடுத்தோம். அவர்கள் நம் கேள்வியில் நாட்டமின்றி தந்தி பாணியில் பதில் பேசினர்.
ஜெய்சங்கர்
முதலில் பேசிய ஜெய்சங்கர் ஸ்விக்கியின் விளம்பர வீடியோவாக பேசினார்.
“சென்னையில் ஸ்விக்கி தான் நம்பர் ஒன் ஆன்லைன் புட் சப்ளையர். டெல்லியில் இருந்து கோயம்பத்தூர் வரை பதினாறு கிளைகள், முப்பத்தைந்தாயிரம் ரெஸ்டாரண்டுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான உணவுகளை ஸ்விக்கியில் ஆர்டர் செய்யலாம்.
ஆர்டர் செய்த அரைமணி நேரத்தில் அவர்கள் முன் உணவுடன் இருப்போம். எந்த நேரத்தில் ஆர்டர் கொடுத்தாலும் அவர்கள் விரும்பிய உணவுகளை உடனடியாக கொடுத்து விடுவோம். குழந்தைகளுக்கு என்று இரண்டு இட்லி மட்டும் ஆர்டர் கொடுத்தாலும் எடுத்துக் கொண்டு ஓடுவோம். முதியவர்கள் சிங்கிள் காபி மட்டும் ஆர்டர் சொன்னாலும் சுட சுட அங்கு நிற்போம்.
வெஜ்ஜா, நான் வெஜ்ஜா, சைனிசா, தந்தூரியா, இபாக்கோ ஐஸ்கிரீமா, சாக்லெட்டா, பிரட் டோஸ்ட் என்ன வேண்டும் எங்கிருந்து வேண்டும் என்று மட்டும் சொன்னால் போதும். சரவணபவனில் இருந்து தலப்பாக்கட்டு பிரியாணி வரை – இபாக்கோ ஐஸ்கிரீமிலிருந்து ஹைவே கடை வரை நுழைந்து வாங்கி எடுத்துக்கொண்டு ஓடுவோம்” என்று ரேடியோ ஜாக்கி போல வேகமாக பேசினார் ஜெய்சங்கர்.
***
சுலோஜன்
வீடியோகிராபராக இருக்கும் சுலோஜன், “இந்த வேலையை பார்ட் டைம்மா செய்யுறேன். வீடியோ புரோகிராம் ஏதாவது வரும்போது ஒரு லெட்டர் எழுதி கொடுத்து விட்டு போயிடுவேன். நாங்க எவ்ளோ ஆர்டர் எடுக்கிறோமோ அதற்கான அமெளண்ட் எங்களுக்கு ஆட் ஆகும். இப்ப நாங்க நாலு கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் ஆர்டர் எடுத்துட்டு போனா 36 ரூபாய் கிடைக்கும். அதற்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் எக்ஸ்ட்ரா கொடுப்பார்கள். அதேபோல ரெஸ்டாரண்டுகளில் வெயிட்டிங் சார்ஜ் ஆட் ஆகும்.பார்ட் டைமா வேலை செய்யிறதால ஒரு நாளைக்கு 8 முதல் 10 ஆர்டர் வரை எடுப்பேன். ஆர்டருக்கு ஏத்த மாதிரி இன்சென்டிவ் கிடைக்கும்” என்றார்.
கணேஷ்
அருகில் இருந்த கணேஷ், “இந்த வேலையில் ’டைமிங்’ ரொம்ப முக்கியம். அதாவது ஒரு ரெஸ்டாரெண்டில் இருந்து ஆர்டர் எடுக்கிறோம் என்றால் முப்பது நிமிடம் டைம் கொடுப்பார்கள். அதற்குள் வாடிக்கையாளரிடம் சென்று ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் இன்சென்டிவ் ஆட் ஆகும். அதிகமாக எங்களுக்கு ஆர்டர் கொடுக்கிறவங்க பேச்சுலர்ஸ், மாணவர்கள், வயதானவர்கள், போன்றோர்களிடம் இருந்து தான் ஆர்டர்கள் குவியும்” என்று சொல்லி முடித்தவுடன் மீண்டும் சுலோஜன் ஆரம்பித்தார்.
கணேஷ்
“ட்ராபிக் இல்லாத நேரம் தான் எங்களுக்கு மகிழ்ச்சியா இருக்கும்…. எவ்வளவு மழையாக இருந்தாலும் நாங்க சமாளிச்சிடுவோம். கஸ்டமருக்கு உடனேயே டெலிவரி பண்ணா எங்கள பாராட்டுவாங்க. எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஏன்னா எங்களுக்கும் ”ரேட்டிங் ஸ்டார்ஸ்” உண்டு. நாங்க சீக்கிரமாக டெலிவரி செய்தால் ”ஃபைவ் ஸ்டார்” கொடுப்பாங்க. இதனால எங்களுக்கு இன்சென்டிவ் கிடைக்கும். அதேமாதிரி எங்க கிட்ட அன்பா அணுசரனையா நடந்துக்கிற கஸ்டமருக்கு நாங்களும் ”ரேட்டிங் ஸ்டார்” கொடுப்போம். அந்த கஸ்டமர் மீண்டும் எதாவது ஆர்டர் கொடுத்தால் அவர்களுக்கு பத்து முதல் பதினைந்து சதவீதம் வரை ஆஃபர் கொடுப்பார்கள். பல நேரம் கஸ்டமரோட நச்சரிப்புதான் அதிகமா இருக்கும். ட்ராபிக்ல மாட்டிப்போம்…போனையும் எடுக்க முடியாது அத புரிஞ்சிக்கவே மாட்டாங்க…”என்று பொறிந்து தள்ளினார்.!
முத்து தன் சக ஊழியர்களுடன்.
அருகாமையில் இருந்த ஊழியர் முத்து, “அவர்களுக்கு பிடித்த விதவிதமான உணவுகளை சொன்ன நேரத்தில் எடுத்துக் கொண்டு ஓடினாலும் பல வாடிக்கையாளர்கள் கதவு ஓட்டை வழியாக வாங்கி இயந்திரம் போல் எங்களை அனுப்பி விடுவார். சிலர் ஆர்டர் கொடுத்த அரைமணி நேரத்தில் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விடுவார்கள். போனில் கூப்பிட்டால் ஏன் இவ்வளவு லேட் இப்பதான் வெளியே போனேன்” என்பார்கள்.
“ஆர்டரை முறையாக கேன்சல் செய்ய மாட்டார்கள். குறை கூறி முறைத்துக் கொண்டுதான் திருப்பி அனுப்புவார்கள். மதியம் பீக் ஹவரில் பன்னிரண்டு டூ இரண்டு உணவு ஆர்டர்கள் குவியும். அப்போது எடுத்து செல்லும் உணவு பார்சல்களை ஒவ்வொன்றாக பிரித்து பார்த்து பிறகு கையெழுத்து போடுவார்கள். இப்படி ஒவ்வோரிடமும் அரை மணி நேரம் வீணாகும். இதனால் ஆர்டர்கள் பல கேன்சல் ஆகும். அன்றைக்கு எங்கள் சம்பளமும் குறையும்.”
டோமினோஸ் பீட்சா, ஃபோரம் மால்.
“எடுத்து சென்ற உணவுப்பொருட்கள் ஒவ்வொன்றையும் குறை சொல்வார்கள். காப்பியா இது சூடு இல்ல, ஐஸ்கிரீம் இப்படி ஒழிவிடுதே, ஏன்? எக்ஸ்டரா சாம்பார் கேட்டேன் இல்லையே. நான் கையெழுத்து போட மாட்டேன் உங்க ஆபிசுக்கு போன் பண்ணு என்பார்கள். வெகு சிலர் தான் தண்ணீர் குடிக்கிறீர்களா? நீங்கள் சாப்பிட்டீர்களா என்று விசாரிப்பார்கள்.”
“சிலர் ஐம்பது ரூபாய் பில்லுக்கு இரண்டாயிரம் ரூபாய் நீட்டுவார்கள். சில்லறை இல்லன்னா பார்சலை எடுத்துக்கினு போங்க என்று எரிந்து விழுவார்கள். சிலர் இருநூத்தி ஐந்து ரூபாய் பில்லுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்து சில்லறை ஐந்து கேட்டால் இல்லை என்று சொல்வார்கள். மீதி முன்னூறு ரூபாயை வாங்கிக்கொண்டு பட்டுனு கதவை மூடுவார்கள்”என்றார்.
பாம்பேஸ்தான், ஃபோரம் மால்.
ஆர்டர் முடித்து திரும்பி வந்த கணேசன், “சார்…..! ஆயிரம் குறை இருந்தாலும் இந்த வேலை எங்களுக்கு நிம்மதியை தருது சார். ஆபிஸ் மாதிரி இங்க எங்களுக்கு யாரும் மேய்க்கிறதுக்கு இல்ல. நானே ராஜா, வேலை செய்யணும்னு நெனச்சா ஆஃப்பை ஓப்பன் பண்ணி ஆர்டர் எடுப்பேன். உடம்பு சரியில்ல ரெஸ்ட் வேணும்னா ஆப்பை ஆப் பண்ணிடுவேன்.
திடீர்னு வீட்டுக்கு போணும்னா உடனே ஆப்பை குளோஸ் பண்ணிட்டு போயிடுவேன். அடுத்த வாரம் வீட்டு செலவுக்கு பணம் தேவைன்னா, இரவு பகல் பார்க்காம வேலை செய்வோம். திங்கள் டூ வெள்ளி அஞ்சு நாள் என்பத்தி ஐந்து ஆர்டர் விடாமல் செஞ்சி சம்பளம் கூட இன்சென்டிவ் ஆயிரம் கிடைக்கும். சனி, ஞாயிறு இரண்டு நாள்ல வீக் எண்டு ஆர்டர் இருபத்தி ஐந்து எடுத்தா ரூபாய் எழுநூத்தி ஐம்பது தனியா இன்சென்டிவ் கிடைக்கும். இப்படி ஒரு வாரத்துல திடீர்னு ஏழாயிரம் எட்டாயிரம் சம்பாதிப்போம்” என்று சொல்லிக்கொண்டு இருந்தவர் அடுத்த ஆர்டர் வந்து விட்டது என்று ஓடினார்.
கே.எஃப்.சி., ஃபோரம் மால்.
அங்கிருந்த வெங்கட், “சார் இங்க இன்ஜினியர் ஐ.டி.ஐ. டிகிரி டிப்ளமோ படிச்சவங்க எல்லோரும் வேலை செய்யிறாங்க. ஒரு ஸ்மார்ட் போனும், ஒரு டூ வீலரும் இருந்தா போதும் இந்த வேலைய செய்யலாம். குறைந்த பட்சம் மொபைல்ல வர இங்கிலீஸ் அட்ரஸை படிக்க தெரியனும். வெய்யிலு மழை தூசு தும்பு ரோடு டிராபிக்கினு பாக்காம வண்டியில அலையனும். தினமும் நூத்தி ஐம்பது கிலோ மீட்டருக்கு குறையாம வண்டிக்கு பெட்ரோல் போட்டுக்கினு தெருவுல சுத்தணும். பெட்ரோலுக்கு இருநூறு ரூபா, சாப்பாடு மேல் செலவு இருநூறு ரூபா போக வீட்டுக்கு வாரம் நாலாயிரம் ஐயாயிரம் நிக்கும். இரண்டு வாரம் தொடர்ச்சியா நிக்காம வேலை செய்வோம்.
அடுத்து உடம்பு அடிச்சி போட்ட மாதிரி ஆயிடும். நம்ம பேச்ச நம்ம உடம்பு கேக்காது. உடம்பு பச்சை புண்ணா நோவும். லீவு போட்டு ரெஸ்ட் எடுப்போம். இதுல அடிக்கடி பல பேருக்கு ஆக்சிடென்ட் ஆகும். அந்த செலவை நாம தான் பார்த்துக்கணும். இரண்டு மாசம் முன்ன அரி என்ற பையனுக்கு ஆக்சிடென்ட் ஆகி கையை எடுத்துட்டாங்க. என்ன செய்யறது?
டிராபிக் எவ்ளோ இருந்தாலும் பேய் மாதிரி பாரப்போம். அப்ப சேஃப்டியா போகணும்னு தோணாது. இதை பாருங்க போனை கஸ்டமருங்க ஆர்டர் கொடுக்கும்போது ரெக்வஸ்ட்ல பல கண்டிஷன் போடுவாங்க. பாஸ்ட்டா (வேகமா) குயிக்கா ( சீக்கிரமா) ஹாட்டா (சூடா) ஸ்பைசியா (காரமா) எக்ட்ஸ்ரா (சட்னி-சாம்பார்) ஃபிரீசா (ஐஸ்) இப்படி இங்கிலீஷிலே டைப் பண்ணிட்டு ஒரு நிமிஷம் லேட்டா போனாலும் ஆயிரம் கேள்வி கேட்பாங்க. ஆர்டர் கேன்சல்னு சப்ளையர் டேபிள்ல கத்துற மாதிரி கதவை மூடிடுவாங்க. இருந்தாலும் இந்த வேலை எங்களுக்கு புடிச்சி இருக்கு. அதான் இங்க இவ்ளோ பேர் வேலைக்கு வர்றாங்க.
இங்க சுதந்திரமா (?) இருக்கலாம். ஆபிஸ்ல ஒருநாள் லீவ் எடுத்தாலும் ஒருமணி நேரம் தலையை சொரியணும். இங்க அது இல்ல. ஆஃப்பை ஆப் பண்ணினா லீவு. ஆஃப்ப ஆன் பண்ணி ராவும் பகலும் காலை லாக் பண்ணி ஆர்டர் எடுத்தா எக்ஸ்டரா பணம் இன்சென்டிவ் கிடைக்கும்.
சொந்தமா பிசினஸ் பண்ணி லாஸ் ஆனவங்க, ஆபிஸ் வேலை பிடிக்காதவங்க, பார்ட் டைமா பணம் சம்பாதிக்க நெனைக்கிறவங்க.. ஸ்டூடென்ட்ஸ் எல்லாரும் இங்க வராங்க… முடிஞ்ச வரைக்கும் வேலை செய்யலாம். முடியலண்ணா போயிடலாம். இந்த சுதந்திரம் வேற எங்க கிடைக்கும். சார் நான் வர்றேன்……” கஸ்டமர் ஆர்டர் ரிங் சவுண்டு கேட்டு 108 ஆம்புலன்ஸ் சவுண்டு மாதிரி பதட்டத்தோடு வண்டியை நோக்கி ஓடினார்.
குறிப்பு: உணவு டெலிவரி சந்தையில் இந்தியா முழுவதும் எண்ணற்ற ஊழியர்களின் கடினமான உழைப்பில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை அடைந்துள்ளது ஸ்விக்கி. அந்த வளர்ச்சியின் குறியீடாக மைக்ரோ டெலிவரி என்று அழைக்கப்படும் பால், மருந்து, மளிகை சாமான்கள், செய்தி தாள்கள் போன்றவற்றை தற்போது வழங்கி வரும் ”ஸ்பர் டெய்லி(Spur Daily)” நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த ” ஸ்பர் டெய்லி” நிறுவனத்தில் பல ”வெஞ்சர் கேப்பிடல்” நிறுவனங்கள் பல லட்சங்களில் முதலீடு செய்துள்ளன.
பத்திருபது வருடங்களுக்கு முன்னர் விற்பனையாளர் பிரதிநிதிகள் வேலை போல தற்போது இந்த உணவு விநியோக வேலை இளைஞர்களை இழுக்கிறது. ஆனால் யாரும் இங்கே நிரந்தரமாக வேலை பார்க்க இயலாது. குறிப்பிட்ட ஆண்டுகளில் கடும் உடல் வலி, இடுப்பு வலியுடன் வண்டியே ஓட்ட முடியாது என்ற நிலையை இவர்கள் அடைகிறார்கள்.
மேலும் இன்சென்டிவ் என்ற பெயரில் இவர்களது சம்பளம் பல்வேறு நிபந்தனைகளோடு பிணைக்கப்பட்டிருப்பதால் இவர்களும் ஓலா, உபர் ஓட்டுநர்கள் போல அதிக சவாரிகளுக்குகாக அபாயகரமாக ஓட்டுகிறார்கள். சென்னையில் மேல்தட்டு நடுத்தர வர்க்கத்திடம் அதிகரித்து வரும் தீனி வெறியும், சோம்பேறித்தனமும் இத்தகைய விநியோக வேலைகளுக்கான கிராக்கியை அதிகரித்து வந்தாலும் இதை ஒரு “வளர்ச்சி” என்று பார்க்க முடியாது. உட்கார்ந்து தின்பவர்களுக்காக ரிஸ்க் எடுத்துக் கொண்டு ஓடுகிறார்கள் இந்த ஸ்விக்கி இளைஞர்கள்!
“எங்களது தொழில் செய்தித் தாள்கள் நடத்துவதல்ல; நாங்கள் விளம்பரத் தொழில் செய்து கொண்டிருக்கிறோம்” (We are not in the newspaper business, we are in the advertising business) – 2012 ஆம் ஆண்டு நியூயார்க்கர் பத்திரிகையின் செய்தியாளர் கென் ஔலெட்டாவுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார் வினீத் ஜெயின். வினீத் ஜெயின் இந்தியாவின் மிகப் பெரிய ஊடக நிறுவனமான டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை குழுமத்தின் முதலாளி.
முன்பெல்லாம் பத்திரிகைகள் அறிவுத்துறையினருக்கானதாக நடத்தப்பட்டு வந்ததென்றும் அப்போதெல்லாம் அத்தொழில் காத்திரமானதாக இருந்ததென்றும் குறிப்பிடும் வினீத் ஜெயின் தங்களது வாசகர்களைப் பொருத்தவரை இவையெல்லாம் அனாவசியமானவை என்கிறார். பென்னட் கோல்மன் குழுமத்துச் சொந்தமான டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை இந்தியாவின் மிகப் பெரிய ஊடகம். கடந்தாண்டு டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் மொத்த வருவாய் 10,000 கோடி. இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும் ஆங்கிலப் பத்திரிகையான டைம்ஸ் ஆப் இந்தியாவின் சார்பாக வெளியாகும் எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை, மிக அதிகமாக விற்பனையாகும் பொருளாதாரப் பத்திரிகையாக உள்ளது.
அச்சு ஊடகங்கள் தவிர ரேடியோ மிர்ச்சி எனும் பண்பலை வானொலியும், டைம்ஸ் நௌ மற்றும் மிரர் நௌ ஆகிய ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகளும், மூவீஸ் நௌ எனும் ஆங்கிலத் திரைப்படச் சேனலும் இக்குழுமத்திற்குச் சொந்தமானதாகும். நடுத்தர வர்க்கத்திடையே கருத்துருவாக்கம் செய்வது மாத்திரமின்றி அரசியல் அரங்கின் நிகழ்ச்சி நிரல்களையே தீர்மானிக்கும் வல்லமை டைம்ஸ் குழுமப் பத்திரிகைகளை நடத்தும் பென்னட் கோல்மன் நிறுவனத்திற்கும் அதன் உரிமையாளர்களான ஜெயின் சகோதரர்களுக்கும் உண்டு. ராலேகான் சித்தி எனும் வரப்பட்டிக்காட்டில் யாரும் சீந்தாமல் கிடந்த அன்னா ஹசாரேவை தேசத்தின் அரசியல் அரங்கின் மத்தியில் நிறுத்தியதாகட்டும், பாபா ராம்தேவ், கேஜ்ரிவால் உள்ளிட்டவர்களை ‘ஆளுமைகள்” ஆக்கியதாகட்டும், தில்லி மாணவி நிர்பயா பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதற்கு எதிராக தேசத்தின் மனசாட்சியை உலுக்கியதாகட்டும் – இவை தவிற ஏராளமான சந்தர்பங்களில் டைம்ஸ் குழுமப் பத்திரிகைகளால் முன்னெடுக்கப்பட்ட விசயங்கள் அந்தந்த காலகட்டத்தின் பேசு பொருளாக இருந்துள்ளன.
டைம்ஸ் குழுமம் தலையிட்ட பிரச்சினைகள் அனைத்தையும் மக்கள் பார்த்த கண்ணோட்டம் வேறு அப்பத்திரிகை முதலாளி பார்த்த கண்ணோட்டம் வேறு என்பதையே நியூயார்க்கர் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி உணர்த்துகின்றது. முதலாளித்துவ பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவின் செயல்பாடுகளும் அந்தப் பத்திரிகைகளின் விளம்பரப் பிரிவுக்கும் இடையே நிலவிய எல்லைக் கோட்டின் பின் மற்ற பத்திரிகைகள் ஒளிந்து கொண்டு பம்மாத்து செய்து கொண்டிருந்த போது அதை பகிரங்கமாக மீறி – அப்படி மீறுவதற்கான முன்னுதாரணத்தை நிறுவிக் காட்டியது டைம்ஸ் குழுமப் பத்திரிகைகள். எது செய்தி, எது விளம்பரம் என்பதற்கான அளவீடுகள் அனைத்தையும் தூக்கியெறிந்து விட்டு முற்றும் துறந்த நிர்வாண நிலையை ஏற்கனவே அடைந்திருந்த டைம்ஸ் ஆப் இந்தியாவைத் தனது ஆப்பரேஷன்-136 இன் ஒரு பகுதியாகச் சந்திக்கிறார் ‘ஆச்சார்யா அடல்’.
***
’ஆச்சார்யா அடல்’
‘ஆச்சார்யா அடல்’ அணிந்து கொண்ட முகமூடியும் அவிழ்த்து விட்ட கதைகளிலும் எந்த மாறுபாடும் இல்லை. இந்துத்துவத்தை ஆன்மீக முகமூடியுடன் களமிறக்குவது, அதற்கு பகவத் கீதையை பயன்படுத்திக் கொள்வது, இந்தப் பிரச்சாரத்தை ’செய்திகளாகவும்’,’விளம்பரங்களாகவும்’ மறைமுகமாகவும் நுட்பமாகவும் செய்வது, இதனால் உருவாகும் ஒருவிதமான ’ஆன்மீக சூழலை’ ஓட்டுக்களாக அறுவடை செய்வது, அரசியல் ரீதியிலான எதிர்தரப்பு ஆளுமைகளை கிண்டல் கேலி செய்து மக்களிடம் அவர்களின் மேல் அதிருப்தியை உண்டாக்குவது – இது தான் புஷ்ப ஷர்மா எனும் கோப்ராபோஸ்ட் இணையதளத்தின் பத்திரிகையாளர் முன்வைத்த திட்டம்.
புஷ்ப ஷர்மா
தனது மறைபுலனாய்வின் (Sting operation) அங்கமாக மற்ற பத்திரிகைகளை அணுகியது போலவே இரகசிய கேமராவுடன் டைம்ஸ் பத்திரிகையையும் அணுகியுள்ளார் புஷ்ப ஷர்மா. தான் முன்வைக்கும் திட்டம் ‘நாக்பூரில்’ தயாரானது என்றும் இதற்காக 500 கோடி வரை செலவிடத் தயார் என்றும் டைம்ஸ் குழுமத்தை நம்பவைத்துள்ளார். ஐநூறு கோடி என்பது கடந்தாண்டில் டைம்ஸ் குழுமம் ஈட்டிய மொத்த வருவாயில் (10,000 கோடி) ஐந்து சதவீதம் என்பதால் ஆச்சார்ய அடலுக்கு பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.
’ஆச்சார்ய அடலின்’ நன்மதிப்பையும் அவரது வியாபாரத்தையும் பெற மற்ற ஊடகங்களை விட பல படிகள் இறங்கி வந்த டைம்ஸ் குழுமம், செய்தித் தாள் மட்டுமின்றி அவற்றோடு தாம் இலவசமாக வழங்கும் பேஜ் 3 பக்கங்களிலும் ’ஆன்மீக விழிப்புணர்வை’ ஊட்டுவதற்குத் தயார் என முன்வந்துள்ளனர். மேலும், தமது குழுமத்தைச் சேர்ந்த பிற பத்திரிகைகளான பெமினா, ஹெலோ, க்ரேஸியா, டாப் கியர், குட் ஹோம்ஸ் போன்ற பத்திரிகைகளையும் இதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இதில் டாப் கியர் என்பது மோட்டார் வாகனங்களுக்காகவும், குட் ஹோம்ஸ் என்பது ரியல் எஸ்டேட் தொழிலுக்காகவும் பிரத்யேகமாக நடத்தப்படும் பத்திரிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/FD40oqV3fhk
இவை தவிர தாம் நடத்தி வரும் 12 தொலைக்காட்சி சேனல்களின் மூலம் ஒருகோடியே இருபது லட்சம் நேயர்களையும், பண்பலை ரேடியோ மூலம் 13 கோடி நேயர்களையும் அடைய முடியும் என எடுத்துக் கொடுக்கிறார்கள். தவிர ’ஆச்சார்ய அடல்’ வழங்கும் நிகழ்ச்சிக்கான விளம்பரங்களையும் தாமே பார்த்துக் கொள்வதாகவும், முக்கிய நகரங்களில் விளம்பரப் பதாகைகளை தாமே நிறுவிக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர். போலவே தாம் நடத்தும் பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டிகள், எகனாமிக் டைம்ஸ் மற்றும் ரேடியோ மிர்ச்சி நடத்தும் விருது நிகழ்ச்சிகள் உள்ளிட்டு எல்லா தளங்களையும் இந்துத்துவ பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என கதவுகளை அகலத் திறந்து வைத்துள்ளனர். மட்டுமின்றி, இந்துத்துவ பிரச்சார வீடியோக்களை தயாரிக்க வேறெங்கும் அலைந்து சிரமப்பட வேண்டாமென்றும் தங்களது பிரத்யேகமான நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் டைம்ஸ் ஸ்டூடியோவையே பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
***
வினீத் ஜெயின்
’ஆச்சார்ய அடல்’ டைம்ஸ் குழும உயரதிகாரிகளோடும் முதலாளி வினீத் ஜெயினுடனும் நடத்திய இரண்டாவது சந்திப்பின் போது பணப்பரிவர்த்தனை குறித்து விவாதிக்கப்படுகிறது. அப்போது ஆரம்ப கட்டமாக 10 சதவீத தொகையை (50 கோடி) பணமாகத் தான் தரமுடியும் என்கிறார். இதற்கு ஆரம்பத்தில் தயங்கிய வினீத் ஜெயின், பின்னர் பணமாகவே பெற்றுக் கொள்ள சம்மதிக்கிறார். அடுத்து, இந்தப் பணத்தை நேர் வழியில் அல்லாமல் முறைகேடாக பெற்றுக் கொள்ளும் வழிகளை விவாதிக்கின்றனர். அதன்படி, டால்மியா, அதானி, அம்பானி அல்லது எஸ்ஸார் குழுமத்திடம் பணமாகக் கொடுத்து விட்டால் அவர்கள் அதை டைம்ஸ் நிறுவனத்திற்கு மாற்றிக் கொடுத்து விடுவார்கள் என ஆச்சார்யா முன்வைக்கும் ஆலோசனையை ஜெயின் ஏற்றுக் கொண்டு இன்னொரு பெயரையும் பரிந்துரைக்கிறார்.
கரீனா கபூருடன் வினீத் ஜெயின்.
அதாவது டைம்ஸ் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கட்டனத்தை மேற்சொன்ன நிறுவனங்களுக்கு கருப்பில் கொடுத்தால் அதை வெள்ளையாக மாற்றிக் கொடுக்கும் வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பதே பணப்பரிவர்த்தனை குறித்து நடந்த ஆலோசனைகளின் சாரம். பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் நாடே துன்பத்தில் கதறிக் கொண்டிருந்த போது அந்த நடவடிக்கை கருப்புப் பணத்தை ஒழித்து விடும் என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளே நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்க கூடியது என்றும் டைம்ஸ் குழுமப் பத்திரிகைகள் ஒரு பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறதா?
அது மட்டுமின்றி ஐந்தாண்டுகளுக்கு முன் அன்னா ஹசாரேவும், பாபா ராம் தேவும் ஊழல் மற்றும் கருப்புப் பண பிரச்சினையை முன்வைத்து புழுதியைக் கிளப்பிக் கொண்டிருந்த போது அவர்கள் சார்பாக பிரச்சாரம் மேற்கொண்டது மட்டுமின்றி கருப்புப் பண மீட்பு என்பதை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குக் கொண்டு வந்ததிலும் டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் டைம்ஸ் நௌ சேனலுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. கார்ப்பரேட்மயமாகிப் போன ஊடகங்களிடம் இருந்து அற மதிப்பீடுகளை எதிர்பார்ப்பதோ, இந்துத்துவ விசமப் பிரச்சாரங்களுக்கு எதிர்த்து நிற்கும் யோக்கியதையையோ எதிர்ப்பார்ப்பதைக் கூட முட்டாள்தனம் எனச் சொல்லலாம். ஆனால், வருமானத்திற்காக கருப்புப் பணத்திலும் கூட கை நனைக்க தயாராக இருப்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது?
***
கோப்ராபோஸ்ட் இணையதளத்தின் புலனாய்வு முக்கியமான சில உண்மைகளை மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளது. முதலில், ஊடகங்களுக்கென்று இருப்பதாக ஊடகவியலாளர்கள் சொல்லிக் கொள்ளும் அறம், கடமை, பொறுப்புணர்வு உள்ளிட்ட கந்தாயங்கள் அனைத்தும் பணம் என்கிற வஸ்துவின் முன் உருகிக் காணாமல் போய் விடும் என்பது. பல்வேறு விவாதங்களில் கலந்து கொள்ளும் பத்திரிகையாளர்கள் இந்த பிரபஞ்சத்தில் உள்ள சகலத்தையும் குறித்து கருத்து சொல்வதற்கான யோக்கியதையை (High Moral Ground) அந்த ஆண்டவனே தமக்கு அளித்திருப்பதைப் போல் நடந்து கொள்வது அறுவெறுப்பான நடிப்பு என்பதை இந்த அம்பலப்படுத்தல் உறுதிப்படுத்தியுள்ளது.
இரண்டாவதாக, செய்தி ஊடகங்களை வழிநடத்துவது ஆசிரியக் குழுவின் சுதந்திரம் (Editorial freedom) அல்ல; மாறாக அந்த ஊடக நிறுவனத்தின் விளம்பரப் பிரிவும் அதன் தலைவரும் தான். சில ஆண்டுகளுக்கு முன் டைம்ஸ் ஆப் இந்தியா தனது முகப்பு இலட்சினையை (Mast) விளம்பரங்களுக்காக வாடகைக்கு விட்டது பெரும் விவாதங்களைக் கிளப்பியது நினைவிருக்கலாம். ஆனால், வெகு சில ஆண்டுகளுக்குள்ளாகவே மொத்த பத்திரிகையையும் விளம்பர பேனராக மாற்றும் அளவுக்கு ஆசிரியக் குழுவின் மீது விளம்பரப் பிரிவின் ஆதிக்கம் வளர்ந்துள்ளது.
மூன்றாவதாக, ஏற்கனவே பலமுறை அம்பலமான பத்திரிகைகள் ஜனநாயகத்தின் மூன்றாவது தூண்கள் என்கிற மாயை மீண்டும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது. நான்காவதாக, பாசிசம் என்பது இனிமேல் ஆர்.எஸ்.எஸ். அல்லது அதன் துணை அமைப்புகளால் உண்டாகும் அச்சுறுத்தல் எனும் நிலையைக் கடந்து அரசு இயந்திரம் மட்டுமின்றி ‘ஜனநாயகத்தின் நான்காவது தூணும்’ அதற்கு உடந்தை என்கிற உண்மை அம்பலமாகியுள்ளது. டைம்ஸ் குழும முதலாளி மட்டுமின்றி தனது இரகசிய புலனாய்வின் அங்கமாக கோப்ராபோஸ்ட் பத்திரிகையாளர் சந்தித்த அனேக ஊடகங்கள் தமது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் இருந்தே இந்துத்துவ பிரச்சாரத்துக்கு முன்வந்துள்ளன.
பத்திரிகைகள் மட்டுமல்ல; பொதுமக்களின் நிதி விவகாரங்களைக் கையாளும் சில தனியார் நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இருப்பது குறித்து அடுத்து பார்க்கலாம்.
கடந்த 14.06.2018 அன்று மதுரையிலிருந்து குருவாயூர் வரை செல்லும் ரயிலில் மணப்பாறை மக்கள் அதிகாரம் தோழர்கள், ஸ்டெர்லைட் அரசின் படுகொலையை கண்டித்து திருச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கான பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் மேற்கொண்டனர். அதனை பயணிகளும் ஆர்வமாக வாங்கி படித்து நிதியளித்தனர்.
பொதுமக்கள் ஆர்வமாக படிப்பதையும் வாங்குவதும் நிதியளிப்பதையும் கவனித்துக் கொண்டிருந்த இருவர் திடீரென எழுந்து கத்தத் துவங்கினர். பொது இடத்தில் அரசை விமர்சித்துப் பேசுவது, பிரசுரம் தருவது தவறு என்றும் கூறி பிரச்சாரத்தைத் தடுத்தனர். ”உங்களுக்கு பிடிக்கலைனா வாங்காதீங்க, இதை கேட்பவர்களுக்கு கொடுக்கிறோம் உங்களுக்கு என்ன பிரச்சனை?“ என்று மக்கள் அதிகாரம் தோழர்கள் கேள்வி கேட்டதும், அவர்கள் மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் என்றும் சிலை கடத்தலில் தொடர்புடையவர்கள் என்றும் பேசினர். இவர்களின் காவி நிறத்தைப் புரிந்து கொண்ட தோழர்கள், ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் முகத்தை அம்பலப்படுத்தி பேசினர். உடனே தோழர்களின் முகத்க்தை வீடியோ எடுத்து, ”உங்களை என்ன செய்கிறேன் பார்” என மிரட்டிப் பணிய வைக்க முயன்றனர். அதைப் பற்றி கவலைப்படாமல் பிரச்சார வேலையில் கவனம் செலுத்தத் துவங்கினர் மக்கள் அதிகாரம் தோழர்கள்.
காவிகள் இருவரும் முகநூலில் பரப்பிய செய்தி மக்களுக்கு முன்னதாகவே போலீசாருக்கு போனதுதான் மிக ஆச்சரியம். இறுதியாக அச்செய்தி, மணப்பாறை கியூ பிரிவு போலீசுக்கும் போய்ச் சேர்ந்தது போலும். மணப்பாறை கியூ பிரிவு போலீசு தமது பங்குக்கு புகைப்படத்தையும் வீடியோவையும் காட்டி பூச்சாண்டி காட்டியது.
கடந்த 22-ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் மதுரை ரயில்வே ஆய்வாளர் உட்பட 6 போலீசார் மணப்பாறை உள் கிராமம் வரை தேடித் துலாவி சிவகுமார் என்ற தோழரைக் கைது செய்தனர். பிரச்சாரத்தில் ஈடுபட்ட மற்றொரு தோழரான முரளியை பிடிக்க பெரும் பாடுபட்டனர். பகல் 12 மணி வரை அவரை பிடிப்பதற்கு பெருமுயற்சி செய்தனர். ஆனால் அவர் தனது உறவினர் இறப்புக்காக வெளியூர் சென்றிருந்ததால் கைது செய்ய முடியவில்லை. வேறு வழியின்றி மாலை 3 மணியளவில் கடத்தி செல்லப்பட்ட தோழர் சிவகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
வழக்கை விசாரித்த பெண் நீதிபதியிடம் ஏற்கனவே ஆர்எஸ்எஸ்-காரர்கள் எடுத்த வீடியோவை போட்டு காட்டினர். வீடியோவை பார்த்த நீதிபதி புகார் பெறபட்டதா என கேள்வி எழுப்பினார். புகார் எதுவும் இல்லை என்ற போலீசு, ”மேடம், இவர்கள் அரசின் ஸ்டெர்லைட் கொள்கையை எதிர்த்து பிரச்சாரம் செய்தனர்” என்று மிகப்பெரிய ஒரு கண்டுபிடிப்பை நீதிபதியிடம் கூறினர்.
அதற்கு அந்த நீதிபதி ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்கள் அரசின் கொள்கையை விமர்சிக்கவும் தனக்குப் பிடிக்காத கொள்கையின் மீது கருத்து சொல்லவும் உரிமை இல்லையா என்று வினவினார். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் அடுத்த விஷயத்திற்கு தாவினர்.
“மேடம், இவர்கள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தனர்” என்று பொய்யான தகவலைக் கூறினர். உடனே நமது தோழர் ரயிலில் பயணம் செய்ததற்கான டிக்கெட் தம்மிடமுள்ளது என்றும் அவசியமானால் மறுநாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிபதாகவும் கூறி போலிசாரின் பொய் முகத்தைக் கிழித்தெறிந்தார்.
நீதிபதி போலீசிடம், ”பிரிவு 153 B-ல் கைது செய்து இருக்கிறீர்கள், எந்த அடிப்படையில் கைது செய்தீர்கள்?, எப்போது கைது செய்திர்கள்?” என கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தார். அப்போதும் திருந்தாத போலீசு மதுரை பேருந்து நிலையத்தில் பதுங்கி இருந்தபோது பாய்ந்து சென்று பிடித்ததாக ஒரு கதையை கட்டியது. அதனை மறுத்த நமது தோழர், நடந்த சம்பவத்தைக் கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ”இவர்கள் எப்போதுமே இப்படித்தான் கூறுவார்கள். ஆகவே இந்த வழக்கை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இதில் எந்தவிதமான அடிப்படையுமில்லை சிறைக்கு அனுப்புவதற்கான முகாந்திரமும் இல்லை. ஆகவே நீங்கள் வெளியே செல்லலாம். தேவைப்படும் போது உங்களுக்கு சம்மன் அனுப்புகிறோம். அப்போது மட்டும் வந்தால் போதும்” எனக் கூறி நமது தோழரை வெளியே அனுப்பி வைத்தார் நீதிபதி.
அதோடு நிற்காமல் இந்த வழக்கு சம்பந்தமாக மேலும் ஆதாரங்கள், ஆவணங்கள் கிடைக்கும் பட்சத்தில் வேறு நீதிபதியிடம் செல்லக்கூடாது என்றும் தன்னிடமே வர வேண்டும் என்றும் கறாராகவும் கண்டிப்போடும் எச்சரித்து அனுப்பி வைத்தார்.
இறுகிய முகத்தோடு வெளியே வந்த போலீசாரை விரட்டிப் பிடித்த தோழர், ”அப்படியே விட்டுட்டு போனா என்ன அர்த்தம்? எப்படி அழைத்துக் கொண்டு வந்தீர்களோ அதேபோல திரும்பவும் என்னை ஊரில் கொண்டு போய் விட வேண்டும்” என்றார். ”எங்கள் வண்டி கைது செய்யத்தான் இருக்கிறது. திரும்ப அழைத்துச் செல்ல முடியாது” என்றனர். இதை ஏற்காமல் விடாப்பிடியாக நின்று போராடினார் வேறு வழியில்லாமல் தோழரின் போக்குவரத்திற்கு தனது சொந்தப் பணத்தை வாழ்க்கையில் முதன்முதலாக கொடுத்து அனுப்பியது போலீசு.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பாதுகாப்புக்கு வந்த போலீசார், காலையிலிருந்து தோழர் சிவக்குமாருக்கும், அதிகாரிக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தையும், விசாரணையின் போது நமது தோழர்கள் எதிர்கொண்ட துணிச்சலையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இடையில், தோழரிடம் தொலைபேசியில் பேசிய DSP, புரட்சிகர அமைப்பில் இருக்காதீர்கள் அதிலிருந்து வெளியேறுங்கள்” என வகுப்பெடுத்தார். ” நாங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும் சேர்த்துதான் போராடுகிறோம். நாளைய தேவைக்கு சுத்தமான காற்று, தண்ணீர் வேண்டுமென்றுதான் போராடுகிறோம்” என DSP-க்கு மக்கள் அதிகாரம் தோழர் வகுப்பெடுத்தார். அதை அங்கிருந்த போலீசார் கவனித்துக் கொண்டிருந்தனர். நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து வெளியே வந்தவுடன், ”நீங்கள் ஜெயிச்சிட்டீங்க தம்பி, வாழ்த்துக்கள்” என்று கைகுலுக்கி வெளியே அனுப்பி வைத்தனர்.
ரயிலில் பயணிகள் கொடுத்த ஆதரவு காவிகளுக்கும், போலீசு கும்பலுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
”சமூகவிரோதிகள்-பட்டியல்துறை அமைச்சர்” பொன்னார் நாளை, “சமூகவிரோதிகள் காவல்துறையில் மட்டுமல்ல, நீதித்துறையிலும் புகுந்து விட்டனர் என்றும் அறிக்கை விடலாம். நல்ல முன்னேற்றம் தான்!
ஆளுகின்ற மோடி எடப்பாடி அரசுகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக நமது கருத்துரிமையை பறிக்கும் வகையில் செயல்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. க்கு அடியாட்களாக காவல் துறை செயல்பட்டு வருகிறது. இந்த கும்பலை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருப்பதோடு, மக்களின் ஒன்றிணைந்த போராட்டத்தின் தேவையையும் உணர்த்தியிருக்கிறது, இந்த சம்பவம்.
தமிழகமே அஞ்சாதே!!!
எதிர்த்து நில்!!!
தகவல்: மக்கள் அதிகாரம், மணப்பாறை.
தொடர்புக்கு : 98431 30911
ராம ராஜ்ய ரத யாத்திரை தமிழகத்திற்குள் நுழைந்தபோது ஏற்பட்ட எதிர்ப்பு குறித்துச் சரியான புரிதல் இன்றி, அவர்கள் மதத்தை அவர்கள் பரப்பக்கூடாதா என்று சிலர் கேட்டனர். ராம ராஜ்யம் என்பது வெறும் ஆன்மீகப் பரப்புரை அன்று, அது ஓர் அரசியல் முழக்கம். ராம ராஜ்யம் ஏற்படுமானால் அது எப்படி இருக்கும் என்பதை விளக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இப்போது அது காலத்தின் பெரும் தேவையாக உருவெடுத்துள்ளது.
சங் பரிவாரத்தின் முதன்மையான நோக்கமே, ‘பாரத வர்ஷத்தில் ராம ராஜ்யத்தை’ அமைப்பதுதான். அவர்களின் முதல் எதிரியான காந்தியாரின் வேட்கையும் ராமராஜ்யத்தை உருவாக்குவதுதான். எனவே ராமராஜ்யம் என்பது, இரு துருவங்களின் ஒரு கனவு.
எனவே, அந்த ராமராஜ்யம் எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள நமக்கு ஆவல் ஏற்பட்டது. அந்த ஆசையைக் கம்பராமாயணம் நிறைவேற்றாது. இராமன் முடிசூடி, எல்லோர்க்கும் பரிசுகளை நல்குவதோடு கம்பராமாயணம் முடிந்துவிடுகிறது.
மௌலி (மகுடம்) புனைந்தப்பின் இராமன் எவ்வாறு ஆட்சி நடத்தினான் என்னும் செய்திகள் கம்பர் நூலில் இல்லை.
பாலகாண்டம் தொடங்கி, உத்தரகாண்டம் வரை ஏழு காண்டங்களை வால்மீகி ராமாயணம் கொண்டிருக்க, கம்பரோ, ஆறாவது காண்டமான யுத்த காண்டத்தோடு, தன் காப்பியத்தை நிறைவு செய்துவிட்டார். ஏழாவது காண்டத்தை ஏன் தமிழிலே படைக்கவில்லை என்பது தெரியவில்லை.
ஆதலால், ராமராஜ்யம் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால், வால்மீகியின் உத்தரகாண்டத்தையோ, அதைத் தமிழில் ஆக்கியிருக்கின்ற ஒட்டக்கூத்தரின் படைப்பையோ படிக்க வேண்டும். வழிநூலைக் காட்டிலும், மூல நூலிலிருந்தே செய்திகளைத் தொகுக்கலாம் என்று தோன்றியது…
வால்மீகி எழுதிய உத்திரகாண்டத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு எங்கும் கிடைக்கவில்லை. அதனை வெளியிட்ட ‘தி லிட்டில் பிளவர்’ பதிப்பகத்திலேயே அது இல்லை.
ஆனால், அங்குதான் ஒரு செய்தி கிடைத்தது. 1963 ஆம் ஆண்டிற்குப் பிறகு, உத்தரகாண்டத்தை மறுபதிப்புச் செய்வதில்லை என்பதே அச்செய்தி. ஏன் என்று கேட்டோம். ‘’உத்தரகாண்டம் படிப்பது குடும்பத்துக்கு நல்லதில்லேன்னு பெரியவா சொல்லிட்டா’’ என்றார்கள்.
பொதுவாகவே, நம்மவர்களிடம் படிக்கும் பழக்கம் குறைந்துகொண்டு வருகிறது. இதில் ‘குடும்பத்துக்கு நல்லதில்லை’ என்று வேறு சொல்லிவிட்டால், பிறகு யார் படிக்கப் போகிறார்கள்.
ஒன்று மட்டும் புரிந்தது, அந்த நூல் திட்டமிட்டே மறைக்கப்படுகிறது.
நேராகப் பெரியார் திடல் நூலகத்திற்குச் சென்றோம். அடடா, பலரது உரைகளோடு உத்தரகாண்டம் அங்கே பத்திரமாக இருந்தது. பண்டித இ.மு. சுப்பிரமணிய பிள்ளை (சந்திரசேகரப் பாவலர்) எழுதிய, ‘இராமயண ஆராய்ச்சி – உத்தரகாண்டம்’ என்னும் நூலும் கிடைத்தது.
படி எடுத்து வந்து, மொத்த உத்தரகாண்டத்தையும் படித்தபோது, தலை சுற்றியது. பொருளற்ற, ஆபாசமான பல புராணக் கதைகள் நிரம்பி வழிந்தன. அந்நூலைப் படிப்பது குடும்பத்திற்கு நல்லதோ இல்லையோ, மூளைக்கு நல்லதில்லை என்று புரிந்தது.
படித்து முடித்தபோதுதான், ஏன் அதை மறைக்கின்றனர் என்பது தெளிவானது.
அந்நூலிலிருந்து சில துளிகளை மட்டும் இங்கு எடுத்து தந்துள்ளேன். படியுங்கள் ராமராஜ்யம் எப்படிப் பட்டதென்று எல்லோருக்கும் புரியும். (சுப.வீரபாண்டியன், நூல் முன்னுரையில்…)
நூல்: இதுதான் ராமராஜ்யம் ஆசிரியர்:சுப.வீரபாண்டியன் வெளியீடு: திராவிட இயக்கத் தமிழர் பேரவை, 122/130, என்.டி.ஆர். தெரு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை 600 024. தொலைபேசி: 044 – 42047162
பக்கங்கள்: 24 விலை: ரூ.20.00
சென்னையில் கிடைக்குமிடம்: கீழைக்காற்று, (கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. பேச : 99623 90277