Saturday, June 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 430

சேலம் – சென்னை எட்டு வழிச் சாலை : வளர்ச்சியின் பெயரில் காட்டாட்சி !

சேலம் – சென்னை எட்டுவழி பசுமை விரைவுச் சாலை அமைப்பதை எதிர்த்து சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை தமிழக மக்கள் முழுமையாக ஆதரித்து வருகிறார்கள். போராட்டத்தை ஒடுக்கும் விதமாக கைது, சிறை, பொய் வழக்கு, மிரட்டல் என்று ரவுடி ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறது அடிமை எடப்பாடி அரசு.

salem chennai 8 ways road2
2 மணி நேரத்தை குறைக்க மலைகளை, காடுகளை, நீராதாரத்தை, விவசாயத்தை அழித்து மத்திய மாநில அரசால் கொண்டுவரப்படும் இந்த திட்டம் யாருக்கானது ?

“கடந்த 25.2.2018 அன்று, மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை திட்டம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்திட்டம் 277.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டு அதற்காக 2,200 ஹெக்டேர் பரப்பளவு நிலம் கையகப்படுத்த அரசு ஆணைப் பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த 8 வழி பசுமை விரைவுச்சாலை சென்னை அருகேயுள்ள தாம்பரம் முதல் சேலம் நகரம் அரியானூர் வரையில், காஞ்சிபுரத்தில் 59.1 கி.மீ., திருவண்ணாமலையில் 123.9 கி.மீ., கிருஷ்ணகிரியில் 2 கி.மீ., தருமபுரியில் 56 கி.மீ., மற்றும் சேலத்தில் 36.3 கி.மீ., என இம்மாவட்டங்கள் வழியாக அமைக்கப்பட உள்ளன. இந்த பசுமைவழிப் பாதைக்கு சேலம் முதல் அரூர் வரை என்.ஹெச் 179A என்றும், அரூர் முதல் சென்னை வரை என்.ஹெச் 179B என்றும் எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களுக்கு செல்வதற்கு தற்போதுள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை, வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி வழியாக சுமார் 360 கிலோமீட்டரிலும்,  சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் ஆத்தூர் வழியாக சுமார் 350 கிலோமீட்டர் பயணித்து சேலம் செல்ல வேண்டும். தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணித்தால் பயண நேரம் சுமார் 5 மணிநேரமாகும். ஆனால் எட்டு வழிசாலையில் வெறும் மூன்று மணி நேரத்தில் சென்னையை சென்றடையலாம் என்று கொக்கரிக்கிறார்கள்.

உட்கட்டமைப்புதான் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது என்று பேசுபவர்கள் யாருடைய வளர்ச்சி என்பதை பேச மறுக்கிறார்கள்.

நரேந்திர மோடி பிரதமரானதிலிருந்து 28,000 கி.மீ. நெடுஞ்சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. சாலைப் பணிகளுக்காக மட்டுமே ரூ.3 லட்சம் கோடி செலவிடப்பட்டிருக்கிறது. சராசரிக் கணக்கில் நாளொன்றுக்கு 27 கி.மீ. சாலை போடப்படுகிறது என்கிறார் நிதின் கட்கரி. உட்கட்டமைப்புதான் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது என்று பேசுபவர்கள் யாருடைய வளர்ச்சி என்பதை பேச மறுக்கிறார்கள். மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு விவசாயத்திற்கு ஒதுக்கியிருக்கும் தொகை வெறும் 2.12 லட்சம் கோடி. பெரும்பான்மை மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வி்வசாயத்தை திட்டமிட்டு புறக்கணித்ததின் விளைவுதான் நாடெங்கும் தொடரும் விவசாயி தற்கொலைகள்!

இந்த சேலம் – சென்னை எட்டுவழி பசுமை விரைவுச் சாலையால் பயன் யாருக்கு?

“தற்போது இருக்கும் இரு தேசிய நெடுஞ்சாலைகளிலும் இதன் கொள்ளளவை விட 130 சதவீதம் மற்றும் 160 சதவீதம் அதிகமாக போக்குவரத்து செறிவு உள்ள காரணத்தினால், இச்சாலையில் விபத்துகள் மிகவும் அதிகமாக நடைபெறுகின்றன. இன்னும் 10 வருடங்களில், இவ்விரு தேசிய நெடுஞ்சாலைகளிலும், போக்குவரத்தானது 1,50,000 பி.சி.யு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு சாலைகளையும் விரிவுபடுத்தினால், போக்குவரத்து செறிவு 60 ஆயிரம் பி.சி.யு. ( Passenger Car Unit- PCU) விலிருந்து 1 லட்சம் பி.சி.யு. வரை மட்டுமே அதிகப்படுத்தலாம்.

தமிழகத்தில் நிகழும் சாலை விபத்துகளுக்கான முக்கிய காரணங்களுள் ஒன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவது என்பது தெரிந்திருந்தும் மது விற்பனையை தீவிரப்படுத்தும் இந்த அடிமை அரசுக்கு மக்கள் உயிரின் மீது திடீரென பிறந்திருக்கும் பாசம் கேலிக்கூத்தானது.

ஆனால், இந்த புதிய எட்டு வழிச்சாலையின் போக்குவரத்து கொள்ளளவு 80,000 போக்குவரத்து செறிவாக இருந்தாலும், இச்சாலையானது விரைவு நெடுஞ்சாலையாக உள்ளதால், இதன் போக்குவரத்து கொள்ளளவு 1,50,000 போக்குவரத்து செறிவு ஆகும். எனவே, தற்போதுள்ள இரண்டு நெடுஞ்சாலைகளின் 1 லட்சம் பி.சி.யு. உடன் சேர்த்து 2 லட்சத்து 50 ஆயிரம் பி.சி.யு. கொள்ளளவு பயன்பாட்டிற்கு வரும். மேலும், இந்த பசுமைவழி விரைவுச் சாலையுடன் நேரடியாக பிற குறுக்கு சாலையில் இணைவது முறைப்படுத்தப்பட்டு அணுகுசாலை மூலமாக அல்லது கீழ்மட்ட பாலங்களின் வழியாக கடப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதால், விபத்துகள் பெருமளவு குறையும். அதே நேரத்தில், பெருகிவரும் போக்குவரத்து செறிவையும் தாங்கி பயன் அளிக்கும்” என்று எடப்பாடி 11 ஜுன் அன்று சட்டமன்றத்தில் விளக்கமளித்தார்.

தமிழகம் சாலை விபத்தில் முதலிடம் வகிக்கிறது என்பது உன்மைதான். ஆனால், இந்த விபத்துக்கள் பெரும்பாலும் சென்னையிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் தான் அதிகமாக நடந்துள்ளது. இன்னும் சொல்லப்போனாலும் விபத்திற்கு முக்கிய காரணம் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும், ஓட்டுநர்களின் அதீத பணிச்சுமையும்தான் காரணமென பல்வேறு ஆதாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அதனை எல்லாம் சிறிதளவும் மதிக்காமல், மது விற்பனையை தீவிரப்படுத்தும் இந்த அடிமை அரசுக்கு  மக்கள் உயிரின் மீது திடீரென பிறந்திருக்கும் பாசம் கேலிக்கூத்தானது.

இது ஒருபுறம் இருக்கட்டும், இந்த விரைவு சாலையில் யார் பயணிக்கிறார்கள்? அதிகம் யார் பயன்படுத்துகிறார்கள்? பெரும்பாலும் கார்ப்பரேட் கம்பெனிகளின் உற்பத்தி பொருட்களை ஏற்றிச் செல்லவும், அதிகார வர்க்க-போலீசு-இராணுவம் மற்றும் பணக்கார மேட்டுக்குடி மக்கள் தங்கு தடையின்றி விரைவான பயணம் மேற்கொள்ளவும்தான் பயன்படுகிறது என்பது யாவரும் அறிந்த உண்மை.

நாசகார திட்டங்களை தொடர்ந்து தமிழக மக்கள் மீது திணித்து வரும் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளின் ஓரணி

இந்தத்திட்டம் தங்களுக்கு எந்த வகையிலும் உதவாது என்பதை நன்கு உணர்ந்த மக்கள் எதிர்க்கிறார்கள். வளர்ச்சி என்ற பொய்யான கோசத்தை நம்பி ஏற்கனவே நிலங்களை இழந்த மக்கள் இந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

“பசுமை வழிச்சாலை என்ற பெயரில் கையகப்படுத்தி, சொந்த ஊரிலேயே எங்களை அகதிகளாக ஆக்காதீர்கள். அதை விட, இந்த மண்ணிலேயே குழி தோண்டி புதைத்து விடுங்கள்” என்று கதறுகிறார்கள் பெண்கள்.

தமிழகத்தை இராணுவ தளவாட உற்பத்தியின் பின்களமாக்கி செயல்படுவதற்கு இந்த 8 வழிச்சாலை அவசியம் என்கிறார்கள். ஆவடியில் உள்ள பீரங்கி தொழிற்சாலையில் இருந்து  இதுவரை உருப்படியாக  ஒரு சுதேசி பீரங்கி கூட வெளிவந்ததில்லை.தற்போது இந்திய இராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களில் 90 % வெளிநாடுகளில் வாங்கியவைதான்.

இந்நிலையில் தமிழகத்தில் உருவாக்கப்படும் இராணுவ வளையம் என்பது இறக்குமடி செய்யப்படும் எந்திரங்களை கோர்ப்பதற்கும், அல்லது அவற்றை கிட்டங்கிகளில் வைப்பதற்கும்தான் பயன்படும். மற்றபடி இதில் வேலை வாய்ப்பு, வளர்ச்சி என்பதில் துளியும் உண்மை இல்லை. மேலும் இராணுவ தளவாட தொழிலுக்காக சாலை போடுவது என்பது அழிவுக்கான வேலையே அன்றி வளர்ச்சிக்கான வேலை அல்ல.

கடலின் ஆழத்தில் உள்ள ராமர் பாலம் எனும் புரட்டுக்காக சேது சமுத்திர திட்டத்தை நிறுத்தியவர்கள், பசுமை வழிச்சாலை என்ற பெயரில் மழை தரக்கூடிய வனப்பகுதிகளையும் விவசாயத்தையும் அழித்து, மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து புதிய சாலை அமைப்பது யாருடையை வளர்ச்சிக்கானது என்று பதில் சொல்லட்டும்!

சென்னை- பெங்களூரு இடையே தொழில் வழித்தடம் (Industrial Corridor) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. ஆனால், சேலம்- சென்னைக்கு 8 வழிச்சாலை அமைக்கும் அளவுக்கு முக்கிய வர்த்தக காரணங்கள், வேலைவாய்ப்பு காரணங்கள், சாலையோர தொழிற்சாலைகள் என எவ்வித தேவையும், மக்களிடம் கோரிக்கையும் இல்லாதபோது ரூ.10 ஆயிரம் கோடி செலவு செய்து, இயற்கை சமநிலையை சீர்குலைத்து பசுமை வழிச்சாலை அமைக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது?

கதறும் கிராம மக்கள்:

த்திட்டத்தால் 30 ஆயிரம் ஏழை விவசாய குடும்பத்தினர், 72,273 விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இச்சாலையை அமைக்க 8,000 ஏக்கர் விளைநிலம், 500 ஏக்கர் வனப்பகுதி, 8 மலைகள் அழிக்கப்படவுள்ளது.  மக்களின் வீடுகள், விவசாய நிலங்கள், 10 ஆயிரம் கிணறுகள், 100-க்கும் மேற்பட்ட ஏரி-குளங்கள், குட்டைகள், லட்சக்கணக்கான மா, தென்னை, வாழை, பாக்கு போன்ற மரங்கள் அழிக்கப்படும். 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள், இடிக்கப்படவுள்ளது. இந்த படுபாதக செயலை “வளர்ச்சி” என்கிறார்கள்.

சேலம் அருகே இராமலிங்கபுரத்தில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அந்த நிலத்தில் அளவீடு செய்ய சென்ற அதிகாரிகளிடம் தோட்டத்து உரிமையாளரின் குடும்பத்தினர்,

ஊருக்கே சோறுடைத்த விவசாயின் நிலை

மாதக்கணக்கில் உழைத்து, உருவாக்கிய இந்த மரவள்ளி தோட்டம் தான் எங்கள் வாழ்வாதாரம். அது பறிபோகும் போது, உயிரை மாய்ப்பதை தவிர வழியில்லை. பயிரை காக்க உயிரை இழக்க தயார் என்று கதறினர். இதை அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை.

மின்னாம்பள்ளி, சின்னகவுண்டாபுரம் பகுதிகளில் மரவள்ளி தோட்டத்தில் முட்டுக்கல் நட்டபோது, நிலத்திற்கு சொந்தமான கவிதா மற்றும் அவரது குடும்பத்தினர், ஒருவரையொருவர் கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுதனர். அனைத்து இடங்களிலும் ஆண்களை விட பெண்களே அதிகளவில் திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். “இது நாங்கள் வாக்கப்பட்ட பூமி. தலைமுறைகள் கடந்து எங்களது நல்லது, கெட்டது எல்லாம் இந்த மண்ணில் தான் நடக்கிறது” என்ற மக்களை மயிரளவுக்கு கூட மதிக்கவில்லை.

“பசுமை வழிச்சாலை என்ற பெயரில் கையகப்படுத்தி, சொந்த ஊரிலேயே எங்களை அகதிகளாக ஆக்காதீர்கள். அதை விட, இந்த மண்ணிலேயே குழி தோண்டி புதைத்து விடுங்கள்” என்று பெண்கள் கண்ணீர் விட்டு கதறியது மக்களின் எதிர்ப்பையும் மீறி  நிலத்தை  அளந்து, முட்டுக்கல்லை அதிகாரிகள்  நட்டனர்.

அதேபோல இத்திட்டத்துக்காக தருமபுரி மாவட்டத்தில் 1846 விவசாயிகளிடம் இருந்து 439 ஹெக்டேர் விளைநிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, வேடகட்டமடுவு, தீர்த்தமலை, பாளையம், வீரப்பநாயக்கன்பட்டி, எம்.தாதம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, சுமைதாங்கிமேடு, அச்சல்வாடி, பேதாதம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் நில அளவைப் பணி முடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை (எமர்ஜென்சி) அமல்படுத்தப்பட்டுள்ளது என்று விவசாயிகள் சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த இருளப்பட்டியில் நிலத்தை அளவீடு செய்து கல் நடும் பணிகளை அதிகாரிகள் தொடங்கினர். இதற்கு, அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரகுமார் என்பவர் தனது விளைநிலத்தில் கருப்புக் கொடி நட்டு வைத்து அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனைப் பொருட்படுத்தாமல் போலீஸாருடன் வந்த அலுவலர்கள், நிலத்தை அளவிட்டு கற்களை நட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரகுமார், அதே பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மனோகரன், வேலன் ஆகியோர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப் போவதாக தெரிவித்தனர்.

அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், 3 விவசாயிகளின் நிலத்தை அளவீடு செய்யாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். அங்கிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவுக்குப் பின்னர் அளவீடு செய்யும் பணிகளை அரூர் டி.எஸ்.பி. செல்லபாண்டியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார், நில அளவீட்டுப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கார்ப்பரேட் கொள்ளைக்காக அழிக்கப்படவிருக்கும் மலைகள்!

5 மாவட்டங்களில் 8 மலைகளை அழிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் ஜருகுமலை, அருநூற்றுமலை, சேர்வராயன் மலை, சின்ன கல்வராயன்மலை, பெரிய கல்வராயன்மலை, தர்மபுரி மாவட்டத்தில் சித்தேரி மலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் கவுத்திமலை, வேதிமலைகள் உடைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்காக இயற்கை வளங்களை அழித்ததால், நாம் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறோம். எனவே, இயற்கை கொடுத்த கொடையான மலை வளத்தை அழிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என இயற்கை ஆர்வலர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

வட தமிழகத்தின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க காத்திருக்கும் கார்ப்பரேட்டுகள்

மலைகளை அழிப்பதால், அங்கு வாழும் உயிரினங்கள் மடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  மலைகளில் இருந்து வரும் நீர் வழித்தடங்கள் முற்றிலும் காணாமல் போகும் நிலையும் உருவாகியுள்ளது.

இச்சாலையை கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைக்க முடிவு செய்துள்ளனர். இந்த மலைத்தொடரில் ஜருகுமலையின் பகுதியான சேலம் நிலவாரப்பட்டியில் இருந்து அயோத்தியாப்பட்டணத்திற்கு இடைப்பட்ட இடங்களில் மூன்று இடங்களில் மலையை குடைந்து சுரங்கபாதை அமைக்கப்படுகிறது.

இதுதவிர அருநூற்றுமலை, சேர்வராயன்மலை, கல்வராயன் மலையையொட்டி சாலை அமைக்கப்படுகிறது. இதில், 16 வனப்பகுதிகள் உள்ளன. சுமார் ஆயிரம் ஏக்கர் வன நிலங்கள் பாதிக்கப்படும். இவ்வனப்பகுதிகளில் கரடி, மான், காட்டெருமை, நரி, காட்டுபன்றி உள்ள விலங்குகளும், பறவையினங்களும் உள்ளன. குறிப்பாக சேர்வராயன் மலைத்தொடரில், அரிய வகை பறவையினங்கள் வாழ்கின்றன. இந்த உயிரினங்கள் பெருமளவு அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் ராவண்டவாடி, அனந்தவாடி ஆகிய இடங்களும் பெரிய வனப்பகுதியாகும். அதேபோல், செங்கல்பட்டில் நம்பேடு, சிறுவாச்சூர் என்ற இடங்களும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. செய்யாறு பகுதியில் சிறு மலைகள் இருக்கின்றன. இங்கு வாழும் உயிரினங்களும் மடியும் நிலை உள்ளது. இம்மலைகளில் உற்பத்தியாகும் நீர்வழித்தடங்கள் கடுமையாக பாதிக்கும். வன நிலங்களை கையகப்படுத்தும்போது, வனத்தில் இருக்கும் விலங்குகள் ரோட்டுக்கு வந்து வாகனங்களில் அடிப்பட்டு இறக்கும் சம்பவம் நிகழும்.

மேலும், வாகனங்களின் இரைச்சல் சத்தம் அதிகரிக்கும்போது, பறவைகள் இடம் பெயர்ந்துவிடும். ஜருகுமலை, அருநூற்று மலை, சேர்வராயன்மலை, கல்வராயன்மலை, சித்தேரிமலை, கவுத்திமலை, வேதிமலையில் ஏராளமான மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும்.

இத்திட்டத்தை நடைமுறை படுத்தியே தீருவேன் என்று தூத்துக்குடி மாடலை முன்னிறுத்தி கொக்கரிக்கிறது அடிமை எடப்பாடி அரசு. இந்த அடக்குமுறைக்கெல்லாம் பாடம் கற்பிக்கும் விதமாக நாமும் ஜல்லிக்கட்டு மாடலை தொடங்குவோம் !

கடந்த 1990-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலையில் வனப்பகுதிகள் அழிப்பால் 50 சதவீத மழைப்பொழிவு குறைந்துள்ளது. தற்போது 8 வழிச்சாலை அமைத்தால், இயற்கை வளம் முழுமையாக பாதிக்கும். இதனால் மழைப்பொழிவு குறைந்து வறண்ட பூமியாக இந்த 5 மாவட்டங்களும் மாறும். வெயிலின் தாக்கம் அதிகரித்து தட்பவெட்ப நிலையும் நிரந்தரமாக மாற வாய்ப்புள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் சேர்வராயன்மலை அடிவாரத்தில் வாணியாறு அணை உள்ளது. இந்த அணையையொட்டி 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதனால் சேர்வராயன்மலையில் இருந்து வழிந்தோடும் நீர், வாணியாறு அணைக்கு வந்து சேராது. இப்படி பல்வேறு வகையில் விவசாயிகள், மலைகளில் வாழும் பழங்குடியின மக்கள், விலங்கினங்கள் பாதிக்கும் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சேலம் எருமபாளையம், நிலவாரப்பட்டியில் விவசாயிகள், பொதுமக்கள் கடந்த சில நாட்களாக சாலை மறியல், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரமாகும் மக்கள் போராட்டங்களும்- அரசின் ஒடுக்குமுறையும்:

மிகப்பெரும் அழிவுத்திட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்த சேலம் சமூக ஆர்வலர் பியுஸ் மானுஸ், மாணவி வளர்மதி மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் இருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புரட்சிகர அமைப்பினரை கைது செய்து வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை சொல்லியே மக்களை அச்சுறுத்துகிறது.

துத்துக்குடிக்கு பிறகு மக்களின் பிரச்சினைக்களுக்கு குரல் கொடுப்பவர்கள் மீது ஏவப்படும் அடக்குமுறைகள்.

சேலம், தர்மபுரியைத் தவிர பசுமை வழிச்சாலை திட்டத்தினால், திருவண்ணாமலை, செங்கம்,  கலசபாக்கம், சேத்துப்பட்டு, போளூர், செய்யாறு, வந்தவாசி ஆகிய தாலுகாவில்,  122 கிமீ தொலைவு சாலை அமைவதால், இம்மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்படும்  நிலை உருவாகியிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 ஆயிரம்  குடும்பங்களுக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்தப்படும் அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பசுமை  வழிச்சாலைத் திட்டம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் கடந்த ஜூன் 20-ஆம் தேதி  வட ஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மணிலா ஆலையில் ஏற்பாடு செய்யப்பட்டது. முன்பே அங்கு குவிந்திருந்த போலீசார், இங்கு கூட்டம்  நடத்த அனுமதியில்லை, மணிலா ஆலைக்குள் யாரும் செல்லக்கூடாது என்று கூறி விவசாய  சங்க நிர்வாகிகள் வெங்கடேசன், பலராமன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மணிலா ஆலை உரிமையாளரை கூட்டம் நடத்த அனுமதித்தால் கைது  செய்வோம் என மிரட்டியுள்ளனர். மேலும், அந்த பகுதியில் விவசாயிகள் யாரையும்  அனுமதிக்கவில்லை. கூட்டத்துக்கு வந்த விவசாயிகளை விரட்டி, விரட்டி போலீசு கைது செய்துள்ளது.

தற்போது ஆங்காங்கே விவசாயிகள் மண்ணெண்ணெய் டின்னுடன் தீக்குளிப்பதாக அதிகாரிகளுடன் போராடி வருகின்றனர். தற்போது ஆசிரியர் ராமலிங்கம் என்பவர் தனது மகன்களுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவற்றை தமிழக ஊடகங்கள் முற்றிலும் காண்பிப்பதில்லை. எடப்பாடி அரசின் மிரட்டலை ஏற்று போராடும் விவசாயிகளது குரலை இருட்டடிப்பு செய்கின்றனர். இந்த எட்டு வழிசாலை திட்டத்திற்கு எடப்பாடியின் உறவினர்களும் இதர அதிமுக-வினரும் ஒப்பந்ததாரர்கள் என்பதால் எடப்பாடி அரசு இந்த ஒடுக்குமுறையை தனது சொந்த குடும்ப வேலையாகவும் செய்து வருகிறது.

“தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை (எமர்ஜென்சி)  அமல்படுத்தப்பட்டுள்ளது என்று விவசாயிகள் சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டியுள்ளனர். முக்கியமாக இத்திட்டத்தை எதிர்த்து நாங்கள் கோர்ட்டுக்கு செல்ல மாட்டோம். ஐந்து மாவட்ட விவசாயிகளையும் ஒன்றிணைத்து களத்தில் போராட்டம் நடத்துவோம்” என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

இத்திட்டத்தை நடைமுறை படுத்தக் கூடாது என்று தமிழம் குரல் கொடுத்தாலும் இத்திட்டத்தை நடைமுறை்ப்படுத்தியே தீருவேன் என்று தூத்துக்குடி மாடலை முன்னிறுத்தி கொக்கரிக்கிறது அடிமை எடப்பாடி அரசு. இந்த அடக்குமுறைக்கெல்லாம் அஞ்சாமல் தமிழக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்!

– வினவு செய்திப் பிரிவு

தஞ்சையில் கார்ல் மார்க்ஸ் 200-வது பிறந்தநாள் கருத்தரங்கம் ! அனைவரும் வருக !

மாமேதை கார்ல் மார்க்ஸ் 200வது பிறந்தநாள் கருத்தரங்கம்

நாள்: 30.06.2018 சனிக்கிழமை, மாலை 5.30 மணி
இடம் : பெசண்ட் அரங்கம், தஞ்சாவூர்

சிறப்புரை:
தோழர் தியாகு
, ஆசிரியர், தமிழ்த்தேசம்.
தோழர் காளியப்பன், மாநில இணைச்செயலர், ம.க.இ.க.

ன்பார்ந்த பெரியோர்களே,
உலகம் எவ்வளவோ தத்துவ ஞானிகளைக் கண்டிருக்கிறது. மேலை நாடுகளில் அரிஸ்டாட்டில், பிளாட்டோ, வால்டேர், ரூசோ, சீனத்தில் கன்பியூசியஸ், இந்தியாவில் புத்தர் முதல் சித்தர்கள் வரை மனித வாழ்கையை விளக்கினார்கள். அரசனுக்கு அறிவுரை கூறினார்கள். ஆட்சிக்கு இலக்கணம் வகுத்தார்கள். எல்லோரும் இன்புற்றிருக்க எண்ணினர் பலர். தனியொருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திட ஆவேசம் கொண்டோரும் உண்டு. ஆனால் மனித குல வரலாற்றில் இன்றுவரை உழைப்பாளி மக்களின் வறுமை, துயரம், அடிமைத்தனம், ஒடுக்குமுறை, சுரண்டல் என்ற கொடுமை ஒழியவில்லையே, ஏன்?

நவீன குடியாட்சிக் கோட்பாடுகள் வந்ததும் மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சியை நிலைநாட்டிவிட்டதாக எக்காளமிடுகிறார்களே! மக்கள் வாழ்க்கை மாறியதா? நிலம், நீர், காற்றை நஞ்சாக்காதே எனக் கேட்டதற்காக, அரசே 13 பேரை தூத்துக்குடியில் படுகொலை செய்ததே ஏன்?

அறிவியல் வளர்ச்சி, முன் எப்போதுமில்லா விந்தைகளை நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது. செல்போன் என்ற கையடக்கக் கருவி உலகத்தை உங்களிடமும் உங்களை உலகத்திற்கும் நொடியில் கொண்டு சேர்க்கிறது. ஆனால் அண்டை வீட்டானை அயலானாக மாற்றிவிட்டதே எப்படி?

“மக்களால் மக்களுக்காக” நடத்தப்படும் ஒரு அரசாங்கத்தையே விலைக்கு வாங்கும் ஆற்றலை ஸ்டெர்லைட் முதலாளியின் பணம் எப்படிப் பெற்றது? உற்பத்திப் பெருகினால் பொருளாதாரம் வளரும், வறுமை நீங்கும் என்கிறார்களே? விவசாயம், தொழில் அனைத்திலும் உற்பத்தி அசுர வேகத்தில் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது. பால், பழம் முதல் கட்டில், மெத்தை வரை கண்ணாடிக்குவளை முதல் கார், பைக் வரை வீதியோரங்களில் விலை போகாமல் சீந்துவாரின்றி கிடக்கின்றனவே ஏன்? விவசாயிகளும், தொழிலாளிகளும் மேலும் மேலும் வறுமையிலல்லவா தள்ளப்படுகிறார்கள். பட்டினிச் சாவுகள் தொடர்கின்றனவே ஏன்?

கோவை பகுதியில் இவ்வாண்டு 50,000 தொழில்கள் அழிந்து ஐந்து லட்சம் பேர் வேலை இழந்தல்லவா நிற்கிறார்கள், எப்படி? படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள். படித்துவிட்டுத்தான் வேலையின்றி கோடிக்கணக்கில் அலைகிறார்கள். கடுமையாக உழைத்தால் முன்னேறலாம் என்கிறார்கள். 12, 14 மணிநேரம் உழைப்பவன்தான் நிரந்தரக் கடனில் உழல்கிறான். ஏன் இந்த முரண்பாடு?

மண்டையைக் குடையும் இந்த கேள்விகளுக்கு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தீர்வுகாண முடியாத இந்த சிக்கல்களுக்கு முரணற்ற வகையில் விடை கண்டவர்தான் கார்ல் மார்க்ஸ். அதுதான் பொது உடைமைக் கோட்பாடு. உலக வரலாற்றை மாற்றியமைத்த மகத்தான தத்துவம். மார்க்சியம் வறட்டுத்தத்துவம் அல்ல; அது நடைமுறைக்கான அறிவியல். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து வந்த, மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமையை ஒழித்து மனித வாழ்க்கையைப் பேரழகு மிக்கதாக மாற்றிக்காட்டிய ஒரே தத்துவம்.

சூழ்ச்சி, வஞ்சகம், பொய், பித்தலாட்டம், கொலை, கொள்ளை, பிச்சையெடுத்தல், விபச்சாரம், வறுமை, வளங்களைக் கொள்ளையடிக்கும் கழுத்தறுப்புப் போட்டி, யுத்தங்கள், சுற்றுச்சூழல் நாசம் என உலகையே சிதைத்துச் சின்னாபின்னமாக்கி அழித்துக்கொண்டிருப்பது முதலாளித்துவம். அது ஒரு நாசகார சக்தி! அதை அழிக்காமல் உழைப்பாளி மக்களுக்கு வாழ்வில்லை.

மார்க்சியம் தோற்றுவிட்டதாகப் பிதற்றும் வெற்று மனிதர்களுக்கும், சூதுமதியாளர்களுக்கும் சொல்வோம், மார்க்சியம் வெல்லப்பட முடியாததென்று! மார்க்சை போற்றுவோம்! மார்க்சியம் கற்போம்!

“புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதையெங்கள் உயிரென்று காப்போம்”
– பாவேந்தர்.

அனைவரும் வருக!

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சாவூர்.
தொடர்புக்கு : 9443188285

தொடரும் மக்கள் அதிகாரம் மீதான அடக்குமுறைகள் | வழக்கு நிதி தாரீர் !

ன்புடையீர் வணக்கம்!
தமிழக போராட்ட வரலாற்றில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, பெரும் மக்கள் பங்கேற்று போராடி, அரசை பணிய வைத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தூத்துக்குடி மக்களின் வீரம்செறிந்த அர்ப்பணிப்பான போராட்டம் முக்கியமானது. சாகர்மாலா, மீத்தேன், ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை போராட்டங்களுக்கு இது முன்னுதாரணமாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான், போராடிய மக்கள் மீது பெரும் வன்முறையை − படுகொலையை திட்டமிட்டு நடத்தியுள்ளது போலீசு.

துப்பாக்கிச் சூடு படுகொலை, குண்டடிபட்டு காயம், நூற்றுக்கணக்கான வழக்குகள், கைது, சிறை, அடக்குமுறை என ஒரு மாத காலமாக தூத்துக்குடி மக்கள் நிம்மதி இழந்து நிற்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆபத்தைவிட போலீசு ஆபத்து அவர்களுக்கு சவாலாக உள்ளது. ஆண்கள், இளைஞர்கள், மாணவர்கள் வீட்டில் தங்க முடியவில்லை. பெண்களும் இரவில் மாதா கோவிலில் தஞ்சமடைகிறார்கள். மக்கள் அதிகாரம் மட்டுமல்ல போராடிய மக்கள் பலரையும் தூத்துக்குடி போலீசு கைது செய்து மிரட்டி வருகிறது. போராடுவதை குற்றமாக – தீவிரவாத நடவடிக்கையைப் போல சித்தரித்து கைது செய்வது, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைப்பது அடக்குமுறையின் உச்சம்.

துப்பாக்கிச் சூடு படுகொலை நடத்திய குற்றவாளிகளை தண்டிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  • 144 தடை உத்திரவு போட்டது யார்?
  • அதன் நகலை ஏன் வெளியிடவில்லை?
  • முற்றுகைப் போராட்டம் நடந்த அன்று கலெக்டர் எங்கே போனார்?
  • தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. துப்பாக்கி சூடு நடந்தபோது என்ன செய்தார்?
  • துணை ஆட்சியர் பிராசாந்த் நியமித்த கண்காணிப்பு அதிகாரிகள் இல்லாமல் யாரோ மூன்று ஊழல் பேர்வழி துணை தாசில்தாரை வைத்து துப்பாக்கி சூடு நடத்தியதாக ஏன் சொன்னார்கள்?
  • துப்பாக்கிச் சூட்டில் எனக்கு சம்பந்தமில்லை என்பதை ஒரு தாசில்தார் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
  • ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் ஏன் தனிச்சட்டம் போடவில்லை?
  • நூறு நாட்களாக பெருமளவில் நடந்த மக்கள் போராட்டத்தை வைத்து முன்பே ஏன் ஸ்டெர்லைட் ஆலையை மூடி இருக்கக் கூடாது?
  • முதல்வர் எடப்பாடியும், டி.ஜி.பி. ராஜேந்திரனும் சதித்திட்டம் தீட்டிதான் இந்த படுகொலை நடந்துள்ளது.

– எனவே, இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். இவை எதற்கும் உரிய முடிவு காணாமல், போராடிய மக்களை, பங்கேற்ற மக்கள் அதிகார தோழர்களைத் துரத்தி கைது செய்வது ஏன்?

அனைத்து காவல் நிலையத்திலும் 200-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து வைத்துக் கொண்டு தூத்துக்குடி போலீசார், மதுரை, உசிலம்பட்டி, கோவில்பட்டி, ஆலங்குளம், நெல்லை ஆகிய ஊர்களில் உள்ள மக்கள் அதிகாரம் தோழர்களை நள்ளிரவில் தேடுதல் வேட்டை நடத்தி, கைது செய்யப்பட்டவர்களை அனைத்து வழக்குளிலும் சேர்க்கிறது. மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ஆரியபட்டி தோழர் ஜெயராமன் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். அவர் கூட இருந்தார் என்பதற்காகவே கோட்டையன் என்பவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளது.கலிலூர் ரகுமான், அவரது மகன்கள் முகம்மது அனஸ், நான்காம் ஆண்டு ஹோமியோ மருத்துவம் படிக்கிறார். முகம்மது இர்ஷாத் எம்.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படிக்கிறார். மேலும் கோட்டையன், முருகன், சரவணன் இவர்கள் சாதாரண கூலித் தொழிலாளிகள். இவர்கள் ஆறு பேரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது எடப்பாடி அரசு. இவர்களால் இந்த தேசத்திற்கு என்ன ஆபத்து?

தமிழகத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் எந்த மக்கள் பிரச்சினைக்கும் போஸ்டர் ஒட்டினால், பிரச்சாரம் செய்தால் கூட கைது –  சிறை; பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தத் தடை. நீதிமன்ற அனுமதி பெற்று நடத்தும்  கூட்டங்களுக்குக் கூட அதிக அளவில் போலீசாரை குவித்து, மக்கள் அனைவரையும் வீடியோ எடுப்பது, அச்சுறுத்துவது என பிரிட்டிஷ் காலனி ஆட்சியை கண்ணில் நிறுத்துகிறார்கள். மக்கள் அதிகாரம் வைக்கும் அரசியல் இந்த அரசை – அதிகார வர்க்கத்தை அச்சுறுத்துகிறது. போராடும் மக்களுக்கோ உற்சாகத்தை, நம்பிக்கையைக் கொடுக்கிறது. எனவே மக்கள் அதிகாரத்தை எப்படி முடக்குவது என மோடி, எடப்பாடி அரசு தீவிரமாக செயல்படுகிறது. தடை செய்யப் போவதாக பத்திரிக்கைகளில் வதந்தியை பரப்புகிறது. தமிழக மக்கள் மத்தியில் போலீசின் இந்த அச்சுறுத்தல், பொய் பிரச்சாரம் தோற்றுவிட்டது.

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் போராடும் மக்களை, முன்னணியாளர்களை குறிபார்த்து சுட்டுக் கொல்வது என்ற வகையில் தூத்துக்குடி மாடல் படுகொலை” நடத்தப்பட்டுள்ளது.

எடப்பாடி – மோடி அரசுகளின் இத்தகைய ஒடுக்குமுறையால் அர்ப்பணிப்போடு மக்களுக்காகப் போராடும் இயக்கங்களை பணிய வைக்க முடியாது. மக்கள் போராட்டங்களில் முன் வரிசையில் நிற்பதிலிருந்து சற்றும் மக்கள் அதிகாரம் பின் வாங்காது. ஆனால், எங்களுடைய பணியை தொடர, கொள்கை உறுதியும் மனவலிமையும் மட்டுமே போதாது. உங்கள் ஆதரவுக்கரம் எங்களுக்கு வேண்டும்.

தேசிய பாதுகாப்பு சட்டத்திலிருந்து தோழர்களை மீட்க, எண்ணற்ற வழக்குகளை எதிர்கொள்ள, சிறையில் இருப்பவர்களின் குடும்பங்களை பராமரிக்க மற்றும் அரசியல் பணிகளை தடையின்றி தொடர ஏராளமான நிதி தேவைப்படுகிறது. போலீசின் துப்பாக்கியும் சிறையும் எம்மை அச்சுறுத்தியதில்லை. ஆனால் நிதி நெருக்கடிதான் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

உங்கள் பங்களிப்பாக பெரும் தொகையாக நிதி தாருங்கள்! உங்கள் நண்பர்கள், உறவினர்களையும் நிதி கொடுக்க உதவுங்கள். நீங்கள் தரும் நிதி நமது எதிரிகளை வீழ்த்தும் போராட்டத்திற்கு பெரிதும் உதவும். நன்றி!

வழக்குநிதி அனுப்ப வேண்டிய முகவரி:

C. VETRIVEL CHEZHIYAN,
SB A/C NO:62432032779,
STATE  BANK OF INDIA,
POZHICHALUR BRANCH,
CHENNAI.
IFSC: SBIN0021334

தகவல்: மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

சமூக விரோதிகள் – நம் காலத்தின் சிறந்த பெயர் ! மனுஷ்யபுத்திரன்

ஒரு நக்சலைட்டாகிய நான் . .

ன்று ஒரு தொலைகாட்சி நடிகையை கைது செய்தார்கள்
கைதுகள் இடைவெளியின்றி தொடர்கின்றன
நேற்று ஒரு வழக்கறிஞனை
நேற்றைக்கு முந்தைய தினம் ஒருதிரைப்பட நடிகனை
அதற்கு முந்தைய தினம் ஒரு பத்திரிகையாளனை
அதற்கு முந்தைய தினம் ஒரு சமூக செயல்பாட்டாளனை
அதற்கு முந்தைய தினம் ஒரு மாணவியை
அதற்கு முந்தைய தினம் ஒரு மூதாட்டியை
அதற்கு முந்தைய தினம் சில விவசாயிகளை

கைதான வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

அவர்களிடம் ஒரு பட்டியல் இருக்கிறது
எப்படி நம்மிடம்
எதிர்க்கப்படவேண்டியவர்கள் என்று
ஒரு பட்டியல் இருக்கிறதோ அதேபோல

ஒருவரை கைது செய்யும் முன்
அவர்களுக்கு ஒரு பெயரிட வேண்டியிருக்கிறது
அவர்கள் கைது செய்வது மனிதர்களை அல்ல
அந்தப் பெயர்களை
அவை அவர்களை நடுங்கச் செய்யும் பெயர்கள்
சட்டத்தைப் பற்றியோ நீதியைப்பற்றியோ கவலைப்படாமல்
ஒருவரை அழிக்கவேண்டும் என்றால்
அவருக்கு அந்தப்பெயரை சூட்ட வேண்டும்

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும்
முதலில் அதை ஒரு விளையாட்டு என்றே நினைத்தார்கள்
பிறகு அவர்கள் புரிந்து கொண்டார்கள்
அதற்குப் பின்னால் ஒரு பயங்கர திட்டம் இருப்பதை
அவர்கள் எல்லோரும் ஒரே குற்றத்தை செய்தார்கள்
அநீதிக்கு எதிராக பேசினார்கள்
அநீதி இழைக்கப்பட்டவர்களுக்காக பேசினார்கள்
நீதிதான் நமது காலத்தின் பயங்கரவாதம் என்று
அவர்களுக்கு இப்போது சொல்லபடுகிறது

கைதுகள் இப்படி ஒரு திட்டமிட்ட ஒழுங்கில்
நடைபெறும் என்று நான் நினைத்ததில்லை
நெருக்கடி நிலை அறிவிக்கபட்டபோது
எனக்கு ஏழு வயது
நன்றாக நினைவிருக்கிறது
சுவரெங்கும் குடும்பக்கட்டுப்பாடு விளம்பரங்கள்
இருபதம்ச திட்ட விளம்பரங்கள்
இந்திராவே இந்தியா இந்தியாவே இந்திரா
அப்போது எனக்கு தெரியாது
நெருக்கடிகால தொடர் கைதுகள் பற்றி
பின்னர் படித்துத் தெரிந்து கொண்டேன்
இப்போது பார்த்துத் தெரிந்துகொள்கிறேன்
நாம் இருண்ட காலத்தின் வாசற்படியில்
நின்று கொண்டிருக்கிறோம்

கைதுகள் இத்தோடு நிற்கப்போவது இல்லை
அடுத்தது நானாக இருக்கலாம்
அல்லது நீங்களாக இருக்கலாம்
பயப்படுகிறீர்களா?
அதுதான் அவர்கள் விரும்புவது
அவர்கள் விரும்புவதை
தயவு செய்து அவர்களுக்குத் தராதீர்கள்
அவர்கள் நம் இதயத்தில்
எதை அழிக்க விரும்புகிறார்களோ
அதை நாம் இன்னும் பெரிதாக்க வேண்டும்

ரத்தம் சிந்தி சேர்த்த நிலத்தை தர மாட்டேன் – சேலம் மூதாட்டி உண்ணாமலை

நிலங்களை பறிகொடுத்தவர்களின்
ஓலங்கள் சமூக வலைத்தளங்களில்
நெருப்பைப் போல பரவிக் கொண்டிருக்கின்றன
இது நான் ரத்தம் சிந்தி வாங்கிய நிலம்
என்று அழுகிறாள் ஒருத்தி
நிலத்திற்காக ரத்தம் சிந்தியவர்கள்
மறுபடியும் அந்த நிலத்தில்
ரத்தம் சிந்தத்தான் வேண்டும்
இதைக் கண்டு சிரிப்பவர்கள் இருக்கிறார்கள்
அவர்கள் மனங்கள் சிதைந்திருக்கின்றன
அவர்களால் இதைப் புரிந்து கொள்ள முடியாது
ஒரு மாதம் ஊதியம் வராவிட்டால்
அவர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள்

மாண்புமிகு நீதியரசர்கள்
தங்கள் தீர்ப்புகளை அவமதிப்பவர்களை
தேடிக்கண்டு பிடித்து
கொண்டு வரும்படி உத்தரவிடுகிறார்கள்
தங்கள் மீதான கேள்விகள்
அவர்களை பதட்டமடைய வைக்கின்றன
அவர்கள் தங்கள் தீர்ப்புகளை
கடவுளின் தீர்ப்பு என்று நம்புகிறார்கள்
அரசனின் தீர்ப்பு என்று நம்புகிறார்கள்
முன்னர் ஒருமுறை அரசி ஒருத்திக்கு
தண்டனையை அறிவித்த
நீதி தவறாத நீதிபதியின் தலையை
பன்றியின் உடலின் வரைந்தனர்
தண்டிக்கப்பட்ட அரசியின் பரிவாரங்கள்
அப்போது நமது நீதியரசர்கள்
தியானத்தில் இருந்தனர்
ப்போது எளிய மனிதர்கள் மேல்
அவர்கள் கோபம் திரும்புகிறது

நீதியரசர்களே
உங்கள் மீது ஒரே ஒரு வருத்தம்தான் உண்டு
நீதியின் பெயரால் நீங்கள்
நீதியை கொல்கிறீர்கள் என்பதுதான் அது
மக்கள் தெருக்களில் நாய்களைபோல கொல்லப்படுகிறார்கள்
அவர்களின் ரத்தம் தெருக்களில் ஓடுகிறது
நீங்கள் சலனமற்று இருக்கிறீர்கள்
உங்கள் ஆடையில் சிறு கறைபடிகிறது
அதை உங்களால் தாங்க முடியவில்லை

நீதியரசர்களே
நீங்கள் கடவுளைப் போலவே தவறுகள் செய்யக் கூடியவர்கள்தான்
அரசர்களைப் போலவே அநீதி இழைக்கக் கூடியவர்கள்தான்
உங்களால் தண்டிக்கப்படுபவர்களைப் போலவே
நீங்களும் குற்றமிழைக்கக்கூடியவர்கள்தான்
இருபத்தோறாம் நூற்றாண்டில்
நீங்கள் கேள்வியற்ற அதிகாரத்தை கோர முடியாது

தூத்துகுடியில் குழுமிய ‘சமூக விரோதிகள்’

சமூகவிரோதிகளின் பட்டியல்
நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே போகிறது
அவர்கள் மலைகளில் இருக்கிறார்கள்
காடுகளில் இருக்கிறார்கள்
பத்திரிகை அலுவலகங்களில் இருக்கிறார்கள்
அவர்கள் நம் அனைவரையுமே
சமூகவிரோதிகள் என்று அழைக்கிறார்கள்
அது நம் காலத்தின் சிறந்த பெயர்
நாம் அதை ஒருபோதும் மறுக்கவேண்டாம்

நேற்று என் இளம் நண்பன் ஒருவன்
தொலைகாட்சியில் தோன்றி
நான் ஒரு சமூகவிரோதிஎன்று
அறிவித்துக் கொண்டான்
இந்தப் பெயரை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறோம்
நாம் சரியாக சிந்திக்கிறோம்
சரியாக செயல்படுகிறோம் என்பதன்
அடையாளம் அது
இன்று மாலை கடற்கரையிலும்
பூங்காகளிலும் கூடுவோம்
‘’ ஒரு சமுக விரோதியாக நான்….
ஒரு பயங்கரவாதியான நான்
ஒரு நக்சலைட்டாகிய நான்..’’
என்று வரிசையாக உறுதிமொழி ஏற்றுகொள்வோம்
அங்கிருந்து நம் அதிகாரம் பிறக்கிறது

நமது பெயர்களை நாம் முடிவு செய்வதில்லை
நமது பெற்றோர்கள் முடிவு செய்வதில்லை
நமது காலம்தான் முடிவு செய்கிறது

நன்றி: மனுஷ்யபுத்திரன்

ஜெயங்கொண்டம் மக்கள் அதிகாரம் தோழர் கதிரவன் தேசத் துரோக வழக்கில் கைது !

ஜெயங்கொண்டம் மக்கள் அதிகாரம்  தோழர் கதிரவன்  என்ற கொளஞ்சியை தேசதுரோக வழக்கில் கைது செய்துள்ளது போலீசு.

கடலூர், சீர்காழி பகுதிகளில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை முழுமையாக அமல்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது மத்திய அரசு.  இத்திட்டத்திற்கு எதிராக அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும் போராடி வருகின்றனர்.

கடலூர், ஜெயங்கொண்டம் பகுதியில் இப்பிரச்சினையைக் கையில் எடுத்துப் போராட அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு போராட்ட முன்னணியை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த அடிப்படையில் கடந்த 20/06/2018 அன்று மக்கள் அதிகாரம், சி.பி.எம்., சி.பி.ஐ., ஒ.வி.மு.,  ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒருங்கிணைப்புக் கமிட்டி உருவாக்குவது பற்றி கூடிப் பேசியுள்ளனர். அதில் மஃப்டியில் கலந்து  கொண்ட போலீசு, அந்நிகழ்வுக்குப் பிறகு ஒருங்கிணைப்புக் கமிட்டியைச் சேர்ந்த பிரதிநிதிகளிடம் இப்போராட்டக் கூட்டமைப்பில் இருந்து மக்கள் அதிகாரத்தை வெளியேற்றுமாறு மிரட்டியிருக்கிறது. அதற்கு அவர்கள் மறுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த போலீசு, மக்கள் அதிகாரம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த தோழர் கொளஞ்சி என்ற கதிரவனைக் கைது செய்ய அவரது வீட்டிற்குச் சென்றுள்ளது. அச்சமயத்தில் அவர் அங்கு இல்லாததால், அவரது வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் கலைத்துப் போட்டு, அங்கிருந்த பிரசுரங்களை வீசியெறிந்து அவ்விடத்தையே களேபரமாக்கியது. அங்கு கூடிய ஊர் மக்கள், இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அங்கிருந்து ஓடியது போலீசு.

இந்நிலையில், கடந்த 22/06/2018 அன்று மதியம் தனது வீட்டில் குழந்தைகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த தோழர் கொளஞ்சியை, 10-க்கும் மேற்பட்ட போலீசு சூழந்து கொண்டு சாப்பிட்டு முடிக்கக்கூட விடாமல், கையோடு இழுத்துச் சென்றுள்ளது.

எதிர்த்துக் கேட்ட ஊர்க்காரர்களையும், உறவினர்களையும் மிரட்டி விட்டுச் சென்றிருக்கிறது போலீசு. “ஓ.என்.ஜி.சி.-க்கு எதிராக நோட்டீசு கொடுத்தார், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார்” எனக் கூறி அவர்மீது, இந்திய தண்டனைச் சட்டம் 153 A, 124 A, ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது மோடி – எடப்பாடிகளின் எடுபிடி போலீசு.

மண்ணின் விடுதலைக்காக போராடுபவன் தேசதுரோகி என்றால், அதை மீண்டும் மீண்டும் செய்வோம். தொடரும் அரசு அடக்குமுறைகளுக்கு எதிராக கரம் கோப்போம்!

தகவல்: மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

நள்ளிரவில் ரெய்டு | நெற்றியில் கைத்துப்பாக்கி | இரவில் சித்திரவதை | மக்கள் அதிகாரம் மீது போலீசின் வெறியாட்டம் !

டந்த மே (2018) மாதம் இறுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நெல்லை பகுதி ஒருங்கிணைப்பாளரும் நெல்லை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞருமான தங்கபாண்டியன், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக, போலீசு மக்களின் வீடுகளுக்கு இரவில் சென்று தேடுதல் வேட்டை செய்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார். சம்மன் அனுப்பியே விசாரிக்க வேண்டும் சந்தேகப்படுவோரின் வீடுகளுக்கு சென்று தொந்தரவு செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்தது. இந்த உத்தரவை போலீசு எப்படி மதிக்கிறது என்பதற்கு சில உதாரணங்கள்.

சம்பவம் 1 (இடம் : கோவில்பட்டி)

டந்த வாரம் (தீர்ப்பு வழங்கி 20 நாட்களுக்குப் பின்னர்) கோவில் பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து என்ற மக்கள் அதிகாரம் உறுப்பினரின் வீட்டுக்கு இரவு இரண்டு மணிக்கு பத்துக்கும் மேற்பட்ட போலீசு திடீரென நுழைகிறது. உறங்கிக்கொண்டு இருந்த அவரின் அம்மாவைப் பார்த்து “தூங்கறீயா, ஒழுங்கா எந்திரி, தலையிலேயே பூட்ஸ்கால்ல மிதிச்சுடுவேன்” என்று மிரட்டுகிறார் ஒரு போலீசு. “என்ன புள்ளய வளர்த்து வச்சுருக்க, தூத்துக்குடியில 13 பேரை கொன்னுருக்கான், இவனை பெத்ததுக்கு நீ சாவணும்” என்று கண்டபடி கத்துகிறார். மற்ற போலீசு சேர்ந்து கொண்டு வசை பாடுகிறது. பள்ளியில் படிக்கும் அவரது தம்பியின் முகவரியை வாங்கிக்கொண்டு “டேய்… மாரி வரல உன்னை நாளைக்கு தூக்கிக்கிட்டு போயிடுவோம்” என்று மிரட்டல் விடுக்கிறது. வீட்டில் உள்ள பொருட்களை கலைத்துப்போடுகிறது. தொடர்ந்து வந்து வீட்டில் மிரட்டிக்கொண்டே இருக்கிறது. “எந்த கெட்டப்பழக்கமும் இல்லாமத்தான நான் எம் மவன வளர்த்தேன், அவனை கொலைகாரன்னு சொல்றாங்களே” என்று கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கிறார் அந்தத் தாய். துப்பாக்கியால் 13 பேர்களை சுட்டுக் கொன்ற போலீசு கூச்சநாச்சமே இல்லாமல் எப்படி பச்சையாக புளுகுகிறது பாருங்கள!

“தூங்கறீயா, ஒழுங்கா எந்திரி, தலையிலேயே பூட்ஸ்கால்ல மிதிச்சுடுவேன்” என்று மிரட்டுகிறார் ஒரு போலீசு. “என்ன புள்ளய வளர்த்து வச்சுருக்க, தூத்துக்குடியில 13 பேரை கொன்னுருக்கான், இவனை பெத்ததுக்கு நீ சாவணும்”

சம்பவம் 2 (தூத்துக்குடி இலுப்பையூரணி)

ராமர் என்பவர் மக்கள் அதிகாரம் அமைப்பின் ஆதரவாளர். ராமரின் மனைவியும் அவரின் தம்பி மனைவியும் மற்றும் அவர்களது சிறு வயது குழந்தைகளும் வீட்டில் உறங்கிக் கொண்டு இருக்கும் போது, (ஜூன் 10ஆம் தேதி இரவு 3 மணிக்கு) சுமார் 40 போலீசுக்காரர்கள் சுவரேறி குதிக்கிறார்கள். பெண்கள் உறங்கிக் கொண்டு இருக்கும் போது டார்ச் லைட் அடித்துப் பார்க்கிறார்கள். கதவுகளை ஓங்கி டமால் டமால் என்று அடிக்கிறார்கள். பதறி எழுந்த பெண்களை வெளியே வரச்சொல்லி வீடுகளுக்குள் சென்று துழாவுகிறார்கள். சுவரேறிக் குதித்து வந்த போலீசு வெளியே செல்வதற்கு கதவை திறந்து விடச் சொல்லியிருக்கிறது. “எதுக்கு இந்த நேரத்துக்கு வந்தீங்க, பகல்ல தினமும் வர்ரீங்க, பதில் சொல்றோமா இல்லையா, சுவரேறிக் குதிச்சு வர்ரீங்கலே இதெல்லாம் சரியா இருக்கா” என்று இரு பெண்களும் கேட்க, “சரிம்மா இனிமேல் கேட்டை பூட்டாம வச்சிரு நாங்க வர வசதியாக இருக்கும்” என்று தெனாவெட்டாக பேசியிருக்கிறது போலீசு. “நாங்க எல்லாம் தெருவில படுத்துக்கிறோம் கேட்சாவி, வீட்டுசாவி எல்லாத்தையும் பூட்டாம வெக்கிறோம்” என்று பதிலளித்து இருக்கிறார்கள், அந்தப் பெண்கள்.

அடுத்த இரு நாட்கள் கழித்து மாறு வேடத்தில் வந்த போலீசு “வண்டி வாடகை எடுத்துட்டு காசு தராம இருக்கான் உன் வீட்டுக்காரன், போனும் எடுக்க மாட்டேங்கிறான்” என்று காலையில் சத்தம் போட்டு இருக்கிறது. பின்னர் குழந்தைகளை கூட்டிக் கொண்டு போய் தனியே விசாரிக்க ஆரம்பித்தவுடன், போலீசுதான் என்பது உறுதிப்படுத்தியதையடுத்து கேள்வியெழுப்புகின்றனர் பெண்கள். தப்பிச் செல்கிறது, போலீசு. எப்போது போலீசு வீட்டுக்கு வருமோ என்ற பயத்தில் இரவெல்லாம் உறங்காமல் இருக்கிறார்கள் பெண்களும் குழந்தைகளும்.

“சரிம்மா இனிமேல் கேட்டை பூட்டாம வச்சிரு நாங்க வர வசதியாக இருக்கும்” என்று தெனாவெட்டாக பேசியிருக்கிறது போலீசு. “நாங்க எல்லாம் தெருவில படுத்துக்கிறோம் கேட்சாவி, வீட்டுசாவி எல்லாத்தையும் பூட்டாம வெக்கிறோம்” என்று பதிலளித்து இருக்கிறார்கள்.

இச்சம்பவம் நடந்த அடுத்த நாளில் ராமரின் வீட்டுக்கு 10 வீடு தள்ளி இருக்கும் ஜெபமாலை என்பவரை பிடித்துச்சென்று சித்தரவதை செய்திருக்கிறது. அதனால் உடலெல்லாம் காயங்கள் ஏற்படுகின்றன. அவரை ரிமாண்ட் செய்திருக்கிறது.

சம்பவம் : 3 (இடம் : ஒத்தகடை)

இப்பகுதியில் உள்ள எவர்சில்வர் பட்டறையில் பணியாற்றும் தொழிலாளரான சரவணன் என்பவரது வீட்டின் கதவை இரவு 3 மணிக்கு ஓங்கி பலமாக அடிக்கிறது போலீசு. சரவணனின் மனைவி “யார்” என்று கேட்கிறார். “போலீசு வந்திருக்கோம், கதவைத்திற என்கிறார்கள்.” “நைட் 3 மணிக்கு வந்தா கதவைத்திறக்க முடியாது, பகல்ல வாங்க” என்கிறார். ஒரு மணி நேரம் அந்த ஏரியாவையே அதகளப்படுத்திவிட்டு செல்கிறது போலீசு.

தொடர்ந்து பக்கத்து வீட்டில் சரவணனின் போட்டோவை காட்டி “யார் தெரியுமா” என்று பீதியூட்டிக்கொண்டு இருக்கிறது போலீசு.

சம்பவம் : 4 (இடம் : ஒத்தகடை)

அதிகாலை மூன்று மணிக்கு ஒத்தக்கடைக்கு அருகே உள்ள காயாம்பட்டி ஊரைச் சேர்ந்த ஒரு தொழிலாளியின் வீட்டுக் கதவைத் தட்டி, மக்கள் அதிகாரம் தோழர் முருகேசன் வீட்டைக் காட்டச் சொல்லி அழைத்துச் சென்று உள்ளனர். தோழர் முருகேசனின் துணைவியார், ” நள்ளிரவில் கதவை திறக்க முடியாது” எனக் கூறியதும், கதவை உடைக்க முயன்று உள்ளது போலீசு.

பக்கத்திலிருக்கும் தோழர் ஒருவர் வீட்டிலிருந்து கதவைத் திறந்து வெளியே வந்த தோழர் முருகேசனை. லத்திக் கம்பு, சீருடை அணிந்த 10 போலீசு மிரட்டி ஜீப்பில் ஏற்றி, அருகில் இருந்த மலம்பட்டியில் உள்ள தோழர் சதீஷின் வீட்டிற்குச் சென்று, அவரையும் கைது செய்து உள்ளனர். பின்பு பகுதியில் வாழும் பிற தோழர்களையும் கைது செய்ய தோழர் வீட்டில், உறவினர்கள் போலீசுடன் வாக்குவாதம் செய்ததால், அண்டை வீட்டு மாடிகளில் எல்லாம் ஏறி இறங்கி அனைவரையும் மிரட்டி உள்ளனர்.

வேறு உறவினர் ஒருவரை அழைத்து அவரது உறவினர்களின் வீடுகளை காட்டுமாறும், தோழரை பிடிக்க வேண்டும் எனவும் கூறி உள்ளனர். அதற்கு அவர், ” நீங்க தான் போலீசு, நீங்களே கண்டு பிடிச்சுக்கோங்க. நான் வரமாட்டேன்” என உறுதியாக பதிலளித்து உள்ளார். வேறி வழியில்லாமல் பின் வாங்கியுள்ளது போலீசு.

மற்றொரு தோழரின் வீட்டில் கதவை திறக்கச் சொன்ன போது, “ஆம்பள இல்லாத வீட்டுக்கு ஏன்யா வர்ரீங்க. காலேல பொம்பள போலீச கூட்டிட்டு வாங்க” என்று கூறி உள்ளனர். உடன், ” நாங்க ஒத்தக்கடை போலீசு தான்மா. சும்மா அவர பாக்கணும்னு தான் வந்தோம்” என நைச்சியமாக பேசி உள்ளனர். அதற்கு, “ஒத்தக்கடை போலீசா? இந்த ஊர்ல உங்கள பாத்ததே இல்லையே” என பதிலடி கொடுத்ததால், இங்கும் அண்டை வீடுகளின் மாடிகளில் தேடிச் சென்று உள்ளனர்.

அதன் பின் மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து நள்ளிரவில் தோழர்களின் வீடுகளுக்கு படை எடுத்துள்ளது போலீசு. தோழர்களின் குழந்தைகளையும் விடாமல் நள்ளிரவில், “அப்பா எங்கே?” என விசாரித்து உள்ளனர்.

தோழர் பரமன்.

சம்பவம் : 5

(இடம்: திருமங்கலம்)
பரமன் வயது 55, மக்கள் அதிகாரம் அமைப்பின் ஆதரவாளராக இருக்கிறார். இவரை கடந்த 15 நாட்களுக்கு முன் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசு ஒரு நாள் முழுக்க விசாரித்துவிட்டு தூத்துக்குடிக்கு செல்லவில்லை என்பதை தெரிந்து கொண்டு விடுவித்தது. இந்த நிலையில் 22.06.2018 அன்று காலை 9 மணிக்கு தூத்துக்குடி போலீசு 7 பேர் அவரின் வீட்டில் இருந்து கடத்திக் கொண்டு செல்கின்றனர். போலீசு வேனில் வைத்து பலமாக அடித்துள்ளனர்.

பின்னர் கண்ணில் துணியைக் கட்டி ஒரு காட்டில் இறக்கிவிட்டு துப்பாக்கியை கையால் தொட்டுப் பார்க்கச்சொல்லி அங்கேயும் அடித்துள்ளனர். “டேய் அவுசாரி மவனே இந்தத் துப்பாக்கியிலதான் உன்னை சுடப்போறோம், எங்கடா குருசாமி (உசிலம்பட்டி தோழர்)” என்று தொடர்ந்து அடித்துள்ளனர். இரவுவரை வண்டியில் தூக்கிக்கொண்டு சென்ற போலீசு பின்னர் ஒரு லாட்ஜில் வைத்து இரவு 9 வரை அடித்துள்ளனர். பிறகு திருமங்கலம் தாண்டி ஒரு காட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். கிளம்பும் போது “உன்னை பாவம்னு மன்னிச்சுட்டேன், குருசாமி போன் செஞ்சா இந்த நம்பருக்கு சொல்லு என்று” ராஜமாணிக்கம் என்ற எஸ்.ஐ. சொல்லி விட்டு சென்றுள்ளார். மகனோ இராணுவத்தில் உள்ள நிலையில் மாடு கன்றை பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ள அவரால் வீட்டை விட்டும் போக முடியாத நிலை. வீட்டில் இருந்தாலும் எப்போது வந்து போலீசு கடத்திக்கொண்டு செல்லும் என்ற நிலை.

இதுபோன்ற நள்ளிரவு தேடுதல்கள் ப‌ற்றி செய்தி அறிந்த வழக்கறிஞர் ஒருவர், ஒத்தக்கடை காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, உச்ச நீதி மன்ற உத்தரவை மீறி இது போல் வீடுகளுக்குச் சென்று மிரட்டுவது பற்றி கேட்டுள்ளார். அதற்கு, ” நாங்க யாரும் வரல சார். எங்களுக்கு தெரியாது” என கூறி உள்ளனர். அந்த வழக்கறிஞர், “உங்க லிமிட்ல தான் இப்படி நடக்குது. உங்க மேல தான் கேஸ் போடுவோம்” என கூறிய பின். “மேலிடத்து பிரஷர் சார்” என கூறிவிட்டு தொடர்பை துண்டித்து உள்ளனர்.

உறவினர்களை மிரட்டியது போலவே, தோழர்களின் நண்பர்களையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று, “ஒழுங்கா அவன் (தோழர்) எங்க இருக்கான்னு சொல்லு, இல்ல நீயும் தூத்துக்குடில கலவரம் பண்ணினன்னு கேஸ் போட்டு உள்ள தள்ளிருவேன். அப்பறம் எத்தன வருசம்ன்னு சொல்லமுடியாது” என மிரட்டி உள்ளனர். கைபேசிகளை வாங்கி சோதித்து உள்ளனர். “உள்ள போடறதுன்னா போட்டுக்கங்க சார். எங்களுக்கு ஒன்னும் தெரியாதுங்கறது தான் உண்மை” என உறுதியாக தெரிவித்து உள்ளனர். மேலும் தோழர்களின் சாதியைக் குறிப்பிட்டு அந்த அடிப்படையில் விசாரித்து உள்ளனர்.

நாம் விசாரித்தவரை, அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்ட போலீசு அனைவரும் தூத்துக்குடி, நெல்லை பேச்சு வழக்கில் பேசியதாக உறுதியாக கூறுகின்றனர்.

சில நண்பர்களை 12 மணி நேரம் வரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து உள்ளனர். தோழர் ஒருவரின் நண்பரையும் அவரது தகப்பனாரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்று 2 நாட்கள் எந்த ஒரு இடத்திற்கும் அழைத்துச் சென்று விசாரிக்காமல், வாகனத்திலேயே வைத்து ஊர் முழுவதும் சுற்றி விசாரித்து உள்ளனர்.
கைது செய்யப்பட்ட தோழர்களின் உறவினர்களையும் கைது செய்யப் போவதாக மிரட்டி உள்ளனர்.

மேலும், ஜூன் 9-ஆம் தேதி முதல் தற்போது வரை தோழர்களின் வீடுகள், உறவினர்கள் நண்பர்களின் வீடுகளை எல்லாம் நாள் முழுவதும் உளவுப்பிரிவும், மற்றவர்களும் மாறி மாறி கண்காணித்து வருகின்றனர்.

தென் மாவட்டங்களில் அறிவிக்கப்படாத போலீசு காட்டு தர்பார் நடந்தேறி வருகிறது. இந்த அடக்குமுறைகளுக்கு மக்கள் அதிகாரம் ஒருபோதும் பணியாது. தமிழக மக்கள் போலீசின் காட்டுதர்பாருக்கு விரைவிலேயே முடிவு கட்டுவார்கள்!

தகவல்:
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

யோகா யோகா யோகா ! நாடே ஆகுது ஸ்வாஹா | ம.க.இ.க பாடல் !

லக யோகா தினத்தை முன்னிட்டு, மோடியின் ’யோகா’ நாடகத்தை துகிலுரித்து அம்பலப்படுத்துகிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இந்தப் பாடல்
காணொளியை பாருங்கள் ! பாடுங்கள் ! பகிருங்கள் !

பாடல் வரிகள்
யோகா யோகா யோகா
நாடே ஆகுது ஸ்வாகா – 2

நீ கண்ண மூடி செய்யிற யோகா – மோடி
கார்ப்பரேட்டுக்கு கொடுக்குறார் நேக்கா

யோகா யோகா யோகா
நாடே ஆகுது ஸ்வாகா – 2

மோடிக்கு கார்ப்பரேட் சேவை – அதுக்கு
பாடுபட லேபர் தேவை -2

பதினெட்டு மணி நேரம் உழைக்க
பலமான ஒடம்பு தேவை
பலமான ஒடம்பு தேவை – நீ
ஒடம்ப வளச்சி தரையில உருள –
அது ஒனக்கு இல்ல கார்ப்பரேட் வளர

யோகா யோகா யோகா
நாடே ஆகுது ஸ்வாகா – 2

ஜமுக்காளம் வேணும் விரிக்க
சம்மணம் போட்டு குந்தணும் கெழக்கே
மோதிர விரலில் மூடணும் மூக்க
மூனு நிமிசம் அடக்கணும் மூச்ச – நீ
அடக்கி அடக்கி விடணும் மூச்ச – மோடி
ஸ்டெர்லைட்டால அழிக்கணும் நாட்ட.

யோகா யோகா யோகா
நாடே ஆகுது ஸ்வாகா – 2

இதயத்துக்கு புஜங்காசனம்
மூளைக்கு சிரசாசனம்
வயித்த கொறைக்க தனுசாசனம்
வயச கொறைக்க வஜ்ராசனம்
டாசுமாக்கு சரக்கடிச்சி – மக்கள்
பாதி பேரு சவாசனம்

யோகா யோகா யோகா
நாடே ஆகுது ஸ்வாகா – 2

ஊட்டச்சத்து குறைபாடு
வறுமையிலே இந்திய நாடு -2
முப்பது கோடி மக்களுக்கு
இல்லை நாட்டில் ராச்சோறு

வறுமையை ஒழிச்சிடுமா
மோடியோட யோகாசனம்
கார்ப்பரேட்டு திட்டங்கள
ஒழிச்சாத்தான் விமோசனம்.

யோகா யோகா யோகா
நாடே ஆகுது ஸ்வாகா – 2

நீ – கண்ண மூடி செய்யிற யோகா
மோடி கார்ப்பரேட்டுக்கு கொடுக்குறார் நேக்கா

யோகா யோகா யோகா
நாடே ஆகுது ஸ்வாகா – 2

எத்தன பேர சுட்டாலும் தூத்துக்குடிக்கு வருவோம் ! ஆரியப்பட்டி செல்வி !

தோழர் கோட்டையன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது !
மக்கள் அதிகாரத்தை ஒடுக்க நினைக்கும் தமிழக அரசு !

கடந்த மே22, 2018 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக, 25, மே, 2108 அன்று இரவில் தோழர் கோட்டையனை உசிலம்பட்டிக்கு அருகில் இருக்கும் ஆரியப்பட்டியில் கைது செய்தது போலீசு.

இந்தக் கைதுக்கான, காரணம் கேட்டிருக்கிறார் கோட்டையனின் மனைவி செல்வி. தூத்துக்குடி போராட்டத்திற்கு சென்றதால் கைது செய்கிறோம் என்று பதிலளித்திருக்கிறது போலீசு. அப்படியெனில் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பேரையுமல்லவா கைது செய்திருக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். கைதிற்குப் பின்னர் ஒருநாள் கடிதம் கொடுக்க வந்ததாகக் கூறி நள்ளிரவில் வந்து தொல்லை கொடுத்திருக்கிறது போலீசு.

“எங்க அப்பா எந்தத் தப்புமே செய்யல. பொதுமக்களுக்காக கண்டிப்பா போராடணும். அவர் என்ன கொலையா செஞ்சார்?, அவரை எதுக்கு கைது பண்ணீங்க?” என அதிகாரவர்க்கத்தை நோக்கி வினவுகிறார் அவரது மகள் நிவேதா.

”ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால், மீண்டும் அங்கு போய் நாங்கள் போராடுவோம். நீ எத்தனை பேரை சுட்டாலும் சரி, எத்தனை பேரைக் கைது செய்தாலும் சரி நாங்கள் எங்கள் வேலையை தொடர்ந்து செய்வோம்” என உறுதியோடு கூறுகிறார் செல்வி !

பாருங்கள் , பகிருங்கள் !

NSA -வில் தோழர் வேல்முருகன் கைது ! இரண்டு குழந்தைகளோடு தீக்குளிக்கவா ? அமுதாவின் கேள்வி !

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் வேல்முருகனை கடந்த மே 25 அன்று நள்ளிரவு வீடு புகுந்து கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது போலீசு. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை அரங்கேற்றிய போலீசு அதனைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பை முடக்க வெறிகொண்டு திரிந்து, அவ்வமைப்பின் தோழர்களை வீடு புகுந்து கைது செய்தது.

தோழர் வேல்முருகனை நள்ளிரவில் வீடுபுகுந்து கடத்திய போலீசு கும்பலின் நடவடிக்கைகளையும், குழந்தைகளை வைத்து போலீசு மிரட்டியதையும் விவரிக்கிறார்கள் வேல்முருகனின் மனைவி அமுதா, தாயார் மற்றும் உறவினர் ஆனந்தராஜ்.

பாருங்கள் ! பகிருங்கள் !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : கடலூரில் தடைபல தாண்டி மக்கள் அதிகாரம் கூட்டம் !

தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை அநியாயமாக திட்டமிட்டு சுட்டுக் கொன்றது அரசு. அதனைத் தொடர்ந்து, நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கான பழியை மக்கள் அதிகாரத்தின் மேல் போடும் முயற்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொய் வழக்குகள் பதிவு செய்தது போலீசு.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக எந்த ஒரு நிகழ்வுக்கும் அனுமதி கொடுக்காமல் மறுத்தது அடிமை எடப்பாடி அரசு. அதனைத் தொடர்ந்து சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு மக்கள் அதிகாரம் கடலூர் பகுதியின் சார்பாக எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (24.06.2018) மாலை 4 மணியளவில் இரங்கற் கூட்டம் நடைபெறவுள்ளது.

இடம்:நகர அரங்கம் (டவுன் ஹால்) கடலூர்.

நிகழ்ச்சி நிரல்:
தலைமை: தோழர் முருகானந்தம் (மண்டலக் குழு உறுப்பினர், மக்கள் அதிகாரம், விருதாச்சலம்)

இரங்கல் உரை:
திரு இள.புகழேந்தி
(வழக்கறிஞர், திமுக மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர்)
திரு ஏ.எஸ். சந்திர சேகர் (வழக்கறிஞர், உறுப்பினர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி)
திரு பா. தாமரைச்செல்வன் (வழக்கறிஞர், கடலூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர், சேலம் மாவட்ட நெறியாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி)
தோழர் குலோப் (மா.இ. செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கடலூர்)
தோழர் அமர்நாத் (நகர செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கடலூர்)
திரு என்.இராமலிங்கம் (மாவட்ட செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கடலூர்)

திரு தென். சிவகுமார் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம், கடலூர்)
திரு ஆனந்த் (மாவட்ட செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கடலூர்)
தோழர் ஸ்ரீதர் (பொறியாளர், மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மின் ஊழியர் ஜனநாயக முன்னணி)
திரு இரா. மங்கையர்செல்வன் (மாநிலத் தலைவர், மீனவர் விடுதலை வேங்கைகள், தமிழ்நாடு, புதுச்சேரி)
திரு C.குமார் (ஒருங்கிணைப்பாளர், அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு, கடலூர்)
திரு பூங்குன்றன் (மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம், பெரியப்பட்டு)
திரு செந்தில்குமார் (வழக்கறிஞர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், கடலூர்)

நிறைவுரை:
தோழர் பாலு (மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், கடலூர்)

அனைவரும் வாரீர் !

தகவல்:
மக்கள் அதிகாரம், கடலூர்
பேச: 81108 15963

நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது ! தொடரும் போலீசு ராஜ்ஜியம் !

தோழர் வாஞ்சிநாதன்
பத்திரிகை செய்தி

தமிழகத்தில் போலீசு ராஜ்ஜியம் !

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு சட்ட ஆலோசகரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் கைது!

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில், மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை பணி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், செல்லத்துரை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு 20-06-2018 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கிற்காக மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் டெல்லி சென்றார். வழக்கை முடித்து விட்டு வரும் போது சென்னை விமான நிலையத்தில் 20-6-2018 அன்று இரவு 12 மணியளவில் மப்டியில் வந்த போலீசாரால் கைது செய்யப்பட்டு போலீசு வேனில் தூத்துக்குடி அழைத்துச் செல்லப்பட்டார்.

ஸ்டெர்லைட் பாதிப்பே பரவாயில்லை என நினைக்கும் அளவிற்கு தூத்துக்குடி மக்களுக்கு போலீசு தொல்லை, அச்சுறுத்தல் தொடர்கிறது. கிராம போராட்டக்குழுவினர் பலர் இன்றுவரை தலைமறைவாக உள்ளனர். கிராமங்களில் ஆண்கள், இளைஞர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. பெண்கள் இரவில் போலீசுக்கு பயந்து மாதா கோவிலில் தங்குகின்றனர். உயர்நீதி மன்றம் இப்படி சட்ட விரோத கைதுகளை செய்யக்கூடாது என உத்தரவிட்டும் அதை மதிக்காமல் தொடர்ந்து போலீசார் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவிற்கு சட்ட உதவிகளை செய்ததற்காக பழிவாங்கும் நோக்கில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலர் வழக்கறிஞர் அரிராகவன் மீதும், மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதும் இருபதுக்கும் மேற்பட்ட பொய்வழக்குகளை புனைந்துள்ளனர். இதை அம்பலப்படுத்தி இருவரும் சமீபத்தில் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர்.

மக்கள் தங்கள் உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராடும் பொழுதெல்லாம், அவர்களுக்கு பாதுகாப்பு கேடயமாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் களத்திலும், சட்ட ரீதியாகவும் போராடியுள்ளது. வாழ்வுரிமைகளுக்காக போராடும் மக்களுக்கு சட்ட உதவிகளையும் போராட்டத்திற்கு ஆதரவையும் தருவது குற்றமல்ல. அது வழக்கறிஞர்களின் கடமை. அதற்காக கைது, சிறை, பொய் வழக்கு என்றால் அதை அனைவரும் ஒன்று திரண்டு போராடி முறியடிக்க வேண்டும்.

நடப்பது போலீசு ஆட்சி, கிரிமினல்களின் ஆட்சி. சட்டம், நேர்மை, நியாயம், மக்கள் நலன் எதற்கு மதிப்பில்லை. போராட்டம் ஒன்றே தீர்வு. அதைதான் தூத்துக்குடி மக்கள் செய்தார்கள். தமிழக மக்களும் செய்வார்கள்.

தகவல்:
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
9962366321

ஓசூர் வட்டார அரசுப் பள்ளியில் 100% தோல்வி : 5 நிமிடத்தில் நடவடிக்கை எடுத்த ‘சமூக விரோதிகள்’ !

ரசுப்பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்தால் படிக்க மாட்டார்கள், கெட்ட பழக்கங்கள் வரும், வாழ்க்கையே நாசமாகிவிடும் என்ற கருத்தும் காசு கொடுத்தாலும் தனியார் பள்ளிக்கூடம்தான் தரமானது, அங்கு படித்தால் வாழ்க்கையே மாறிவிடும் என்பதும் பெரும்பாலான மக்களின் மனநிலையாக இருக்கிறது.  இதெல்லாம் தானாகவே நடக்கிறதா? இல்லை, இல்லை. ஒரு சினிமாப்படம் போல திட்டமிட்டு, சீன் சீனாக நடந்து கொண்டிருக்கிறது.

அதில் ஒரு சீன் தான் ஓசூர் அருகே உள்ள மாசிநாயக்கன்பள்ளி கிராமத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆம், தெலுங்குவழி மேல்நிலைப்பள்ளியான இங்கு +2 படித்த 29 மாணவர்களும் பெயிலாகியிருக்கிறார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால், மாணவர்கள் எண்ணிக்கை 12 வருடத்தில் 1100 – லிருந்து 130 பேராக குறைந்திருக்கிறது.

சென்ற மே மாதம் +2 தேர்வு முடிவு வெளியானது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் 87.13% தேர்ச்சி பெற்று மாநில அளவில் 26 வது இடத்தை பிடித்தது. இங்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 177 பள்ளிகள் இயங்குகின்றன. ஓசூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட மாசிநாயக்கன்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 25 மாணவர்கள், 4 மாணவிகள் என மொத்தம் 29 பேர் +2 தேர்வு எழுதினார்கள். இதில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.

புதர் மண்டிக் கிடக்கும் கழிப்பறைகள்

மாணவர்கள் தேர்ச்சி பெறாததைக் குறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டால்  ஆசிரியர்கள் பற்றாக்குறைதான் காரணம் என்கிறார். அப்படியானால் ஆசிரியர் இருக்கும் பாடப்பிரிவுகளில் 100% தேர்ச்சிப்பெற்று உள்ளனரா? எனக் கேட்டால் மாணவர்கள் ஒழுக்கம் இல்லை எனவும், பெற்றோர்களுக்குப் பிள்ளைகள் மீது அக்கறையில்லை எனவும் மாணவர்களையும் பெற்றோர்களையும் குற்றம் சொல்கிறார்கள் சில ஆசிரியர்கள். இப்பள்ளியை சுற்றியுள்ள 15 கிராமங்களில் வசிக்கும் விவசாயி வீட்டுப்பிள்ளைகள், உதிரித் தொழிலாளி, அடித்தட்டு உழைக்கும் மக்களின் குழந்தைகள்தான் இப்பள்ளியில் படித்துவருகின்றனர். இவர்களில் ஆகப் பெரும்பான்மையோர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்.

2004-ம் ஆண்டு 1100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிலும் பள்ளியாக பிரம்மாண்டமாக இருந்தது. 2010-11-ல் +2 ஆரம்பிக்கப்பட்டு மேல்நிலைப்பள்ளியாக உயர்ந்தது. ஆனால் பல ஆண்டுகளாக 11 மற்றும் 12 வகுப்பில் கணிதம், உயிரியல், வேதியியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. 2004-ம் ஆண்டில் 1100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தநிலை மாறி,  படிப்படியாக குறைந்து 2014-15 ல் 200 மாணவர்களும் 2016-17-ல் 230 மாணவர்களும், 2017-18-ல் 130 மாணவர்களும் என்ற நிலை உள்ளது. குறைந்த மாணவர்களே உள்ளனர் என கணக்குக்காட்டி இழுத்து மூடும் அபாய நிலைக்கு வந்துள்ளது இப்பள்ளி.

இந்நிலையில்தான் 2017- 18 ஆண்டின் பொதுத்தேர்வில் +1 வகுப்பில் கணிதம் 22/24, உயிரியல் 22/24, வேதியியல் 21/24, இயற்பியல் 12/24, கம்ப்யூட்டர் சயின்ஸ் 12/24 என  தோல்வி அடைந்துள்ளனர். +2 தேர்வில் கணிதம் 29/29, வேதியியல் 22/29, இயற்பியல் 25/29, உயிரியியல் 11/13, கம்யூட்டர் சயின்ஸ் 6/16 பேர் தோல்வியடைந்துள்ளனர். ஆசிரியர்கள் இருக்கும் பாடத்தில் கூட +2-வில் 29 பேர்களுக்கும் +1 ல் 24 பேர்களுக்கும் பாடத்தை நடத்தி தேர்ச்சியடைய வைக்கவில்லை. மக்களின் வரிப்பணத்தில் வாங்கும் சம்பளத்திற்கு குறைந்தபட்ச நேர்மையுடன் கூட வேலை செய்யவில்லை. இங்கு, உடற்கல்வி ஆசிரியர் கணிதப் பாடம் நடத்துகிறார். ஆனால், இப்பள்ளியில் +2 வகுப்பில் இல்லாத பாடப்பிரிவிற்கு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வேலையே செய்யாமல் மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஏழு வருடமாக இப்பள்ளி, பெரும்பான்மையான ஆதிக்க சாதி பின்னணி கொண்ட ஆசிரியர்கள், அவர்களுக்கு ஆதரவான தலைமை ஆசிரியர் என மாணவர் நலனில் அக்கறையே இல்லாமல் இயங்கியது. இப்போது உள்ள தலைமை ஆசிரியர், 12 மணிக்கு பள்ளிக்கு வந்து 3 மணிக்கு சென்று விடுவார். ஒரு சில ஆசிரியர் தவிர பெரும்பான்மை ஆசிரியர்கள் 11 மணிக்கு வந்து 3.30 மணிக்கு வீட்டிற்கு புறப்பட்டு விடுவார்கள். மதியம் சாப்பிட்ட பிறகு ஆசிரியர் வகுப்பறைக்கு வருவது கடினம், வந்தாலும் பாடம் நடத்துவதில்லை என்கிறாகள் மாணவர்கள்.

குறிப்பாக ரெட்டி சாதியை சேர்ந்த ஒரு ஆசிரியை தொடர்ந்து தாமதமாக வருவது குறித்து முன்பிருந்த தலைமை ஆசிரியர் கேட்டதற்கு, இந்தப் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் எனக்கு சொந்தக்காரர்தான் என்று மிரட்டியுள்ளார். இதற்குமேல் பேசமுடியாது என்ற நிலையில், வேறு ஊருக்கு பணிமாறுதல் வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார் அந்த தலைமை ஆசிரியர். ஆதிக்கசாதி பின்புலம் கொண்ட ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மத்தியில், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் படித்து என்ன கிழிக்கப் போகிறார்கள் என்ற கருத்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பதை நாம் சந்தித்த பலரும் கூறுகின்றனர்.

இப்பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கும். மொத்தமாக தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்வில் தோல்வியடைந்ததற்கும் முழு பொறுப்பு, கடமையை செய்யாத ஆசிரியர்களும், இதனை கண்டுகொள்ளாத கல்வித்துறை அதிகாரிகளும்தான். அதனால்தான் சொல்கிறோம், தோற்றுக் கொண்டிருப்பது மாணவர்கள் அல்ல, ஒட்டுமொத்த கல்வித்துறையும்தான்.

ஆசிரியர்கள் முறையாக பாடம் நடத்தவில்லை என்பதைத் தாண்டி, மாணவர்கள் இப்பள்ளியில் படிக்கும் சூழலே இல்லை என்பதுதான் இன்னும் மோசமானது. இதை இப்பள்ளியின் புகைப்படங்களை பார்த்தாலே உணர முடியும்.

கட்டப்பட்ட 6 வருடங்களுக்குள்ளாகவே முறையான பராமரிப்பில்லாமல் பாழடைந்து, புதர்கள் மண்டி பயன்படுத்தவே முடியாத நிலையில் பாம்புகளின் கூடாரமாக மாறியிருக்கின்றன கழிவறைகள். இந்த நிலையால் பாதிக்கப்படுவது குறிப்பாக மாணவிகள்தான். எந்த நம்பிக்கையில் இங்கு வந்து படிக்க முடியும்? பெற்றோர்கள் எப்படி அனுப்புவார்கள்? 1100 பேரிலிருந்து 130 பேராக குறைந்ததன் காரணம் இங்குதான் அடங்கியிருக்கிறது.

கட்டப்பட்ட காலம் முதல் பராமரிப்பில்லாமல் இருக்கும் வகுப்பறைகள், கழிவறைகள், போதிய ஆசிரியர்கள் இல்லை, இருப்பவர்களும் ஒழுங்காக வகுப்புகளுக்கே வருவதில்லை, பாதுகாப்பற்ற சூழல், வேதியியல், இயற்பியல் ஆய்வுக் கூடத்தில் தேவையான பயிற்சி உபகரணங்கள் இல்லை என எல்லாப் பிரச்சினைகளும் குடிகொண்ட கூடாரமாக இருக்கிறது இப்பள்ளி. இது எதுவும் தனக்குத் தெரியாத மாதிரி கண்ணை மூடிக் கொண்டு நாடகமாடுகிறது பள்ளி கல்வித்துறை.

100% தேர்ச்சி விகிதம் கொடுக்கும் பள்ளியைப் போலவே மோசமான தேர்ச்சி விகிதம் தரும் பள்ளியும் எந்த நேரமும் அதிகாரிகளின் கவனத்தில் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனாலும், யார் எக்கேடு கெட்டால் என்ன?, நமக்கு மாதமானால் சம்பளம் வந்தால் சரி; பினாமி மூலம் தாம் நடத்தும் தனியார் பள்ளியில் ஆள் சேர்ந்தால் சரி; கந்து வட்டிக்கு பணம் வந்தால் சரி என கல்வித்துறையின் ஒவ்வொரு அதிகாரியும், அவர்களின் செல்லப்பிள்ளைகளான ஆசிரியர்களுமாக சேர்ந்து கல்வித்துறையை சீரழித்து வருகின்றனர். இதற்கு மாசிநாயக்கன்பள்ளி கிராமத்தின் மேல்நிலைப் பள்ளியே சிறந்த உதாரணமாக இருக்கிறது.

இங்கு வேலை செய்யும் ஆசிரியர்களுக்கான சம்பளம் மட்டுமே தோராயமாக ஆண்டுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய். அத்தனையும் மக்களின் வரிப்பணம். ஆனால், வரிப்பணம் கட்டும் மக்களின் பிள்ளைகளுக்கு முறையான கல்வி கிடைக்கிறதா? கல்வி கொடுத்து, நல்ல குடிமகனாக, சமூக மனிதனாக மாற்ற வேண்டிய அரசுதான் இம்மாணவர்கள் சீரழிய காரணமாக மாறியுள்ளது. தான் செய்ய வேண்டிய வேலைக்கு நேர் எதிரான வேலையை செய்து வருகிறது.

இந்த மோசமான நிலைமையை மாற்ற வேண்டும் என, சமூக அக்கறை கொண்ட சிலர் தொடர்ந்து மனுக்கள் அனுப்பி வந்துள்ளனர். இந்த ஆண்டு அனைவரும் தோல்வியடைந்ததைக் கண்டு, வேதனையடைந்த ஜனநாயக சக்திகள், பெற்றோர் சிலர் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதற்கு முன்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் சிலர், பத்திரிக்கை செய்தி அடிப்படையில் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருக்கின்றனர். எங்கள் ஊர் பிரச்சினைக்கு எங்கிருந்தோ வந்து அக்கறை காட்டுகிறீர்களே என மக்கள் நெகிழ்ந்துள்ளனர். இன்னாரைப் பாருங்கள் என சிலரை கை காட்டியுள்ளனர்.

குறைவான மாணவர்கள் இருப்பதும், பல்வேறு கிராமங்களில் இருந்து வருவதும், சட்டென ஒருங்கிணைக்க முடியாத நிலையும் இருக்கும்போதுதான், இரண்டு நாட்கள் பிரச்சாரமும், ஆய்வும் நடத்திய நிலையில் கண்டன ஆர்ப்பாட்ட செய்தி வந்ததாக நம்மிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த 04.06.2018 அன்று பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி முன்னாள் மாணவர்கள், கிராமப் பொது மக்கள் என அனைவரும் தனது பணியை ஒழுங்காக செய்யாத ஆசிரியர் மீதும், கல்வி முதன்மை அதிகாரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், 12 ம் வகுப்பு தேர்வில் நூறு சதவீத தோல்வியைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் என அறிவித்து நோட்டீஸ் விநியோகம் செய்து பள்ளி முன்பு திரண்டனர். இச் ‘சமூக விரோதிகளை’ கண்காணிக்ககவும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும் காலை 8 மணிக்கே பள்ளி முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்தும் பெற்றோர் ஆசிரியர் சங்க குழுவினரிடமும், மக்களிடமும், சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்க முடியாது எங்களுக்கு கலெக்டர் நேரடியாக வரும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என்ற பிறகு 10.30 க்கு தாசில்தார் வந்தார். அவரும் சமரசம் பேசினார். உடனடியாக ஆசிரியர்களை நியமனம் செய்கிறேன், துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் மக்களும் ஆர்ப்பாட்ட குழுவும் ஏற்றுக் கொள்ளவில்லை. 11.30 மணி அளவில் சி.இ.ஓ மகேஸ்வரி வந்தார்.

ஓசூர் கல்வி மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருக்கிறது; நான் இந்தப் பகுதிக்கு வந்து நான்கு மாதம் தான் ஆகிறது; அரசுப்பள்ளி பற்றியும் இங்கு படிக்கும் மாணவர்கள் மீதும் எனக்கு அக்கறை உண்டு; இந்த பள்ளி பற்றி எனக்கு இவ்வளவு நாள் தெரியாது; தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; ஆசிரியர் இல்லாத பாடத்திற்கு உடனடியாக ஆசிரியர் நியமனம்  செய்கிறேன்; இத்துடன் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள் என்றார்.

இவருக்கு வேண்டுமானால் அப்பள்ளி குறித்து தெரியாமல் இருந்திருக்கலாம் அல்லது இதை விடவும் ‘முக்கியமான’ வேலைகள் இருந்திருக்கலாம். இத்தனை ஆண்டுகளாகவே 25 – 30% அளவுக்கே தேர்ச்சி விகிதம் இருந்துவரும் இந்தப் பள்ளியின் அவலநிலை பற்றி ஏன் எந்த அதிகாரிக்கும் தெரியாதா? அல்லது தெரியாதது போல நடிக்கிறார்களா?

மக்கள் இதனை ஏற்க மறுத்து கடந்த சில வருடமாக வரும் எல்லா சி.இ.ஓ.வும் இதனை தான் கூறுகின்றனர், ஆனால் செய்யவில்லை. இதன் விளைவு 12 -ம் வகுப்பில் 100% தோல்வி என்கிற நிலைமை. 1100 மாணவர்கள் படித்த இப்பள்ளி தற்போது 130 மாணவர்கள் என்ற மூடும் நிலைக்கு வந்துவிட்டது. இப்பள்ளியை மூட அரசுக்கு திட்டம் இருக்கிறதா? சொல்லுங்கள் என்று பெற்றோர்கள் குரல் எழுப்பினர். அடிப்படை வசதி கூட இல்லை என மாணவர்களும் புகார் கூறினர்.

இதனைக் கேட்ட சி.இ.ஓ மகேஸ்வரி, உடனடியாக உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடத்திற்கு ஆசிரியர்களை நியமித்தார். தற்காலிகமாக தேன்கனிக்கோட்டை தலைமை ஆசிரியரை பொறுப்பேற்று இப்பள்ளியை நடைமுறைப்படுத்த கூறுகிறேன் என்று உறுதி அளித்தார். மாசிநாயகன்பள்ளி தலைமையாசிரியரை இடமாற்றம் செய்யவும் உத்தரவிட்டார். 5 நிமிடத்தில் கையெழுத்துப் போட்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்றால், இத்தனை வருடமாக ஏன செய்யவில்லை? இத்தனை நாள் மனு கொடுத்தவர்கள், இன்று உத்தரவு போட்டுள்ளனர், அதனால்தான் வேலை நடக்கிறது.

போராடத் திரண்ட சமூக விரோதிகள்

12-ம் வகுப்பில் 100% தோல்வி அடைந்ததை கண்டித்து ‘சமூக விரோதிகள்’ போராடிய பிறகு தான் ஆசிரியர்கள் நியமித்தல், பள்ளி மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க பள்ளியை தொடர்ந்து நடத்த மாவட்டப் பள்ளிக் கல்வித்துறை இப்பள்ளியை தத்தெடுத்து செயல்படுத்தும் என உறுதி அளித்தார், சி.இ.ஓ. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று,  மக்களுக்கு கல்வியை சொல்லி கொடுக்காமல், ஏற்றுக்கொண்ட கடமையை நிறைவேற்றாமல் இருக்கும் அரசு மக்களுக்கான அரசா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பினார்கள்.

தமிழக அளவில் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு, மாணவர்கள் தங்களின் பாடங்களை செல்போனில் படிக்க நடவடிக்கை என சீன் போட்டுக் கொண்டே, பின்தங்கிய கிராமங்களில் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பள்ளிகளை ஒன்றாக இணைப்பது, மாசிநாயக்கன்பள்ளியில் நடப்பதைப் போல படிப்படியாக அழிந்துபோக அனுமதிப்பது என அரசுப் பள்ளிகளை இழுத்து மூடி தனியார் பள்ளிகளை ஊக்குவித்து வருகிறது தமிழக அரசு.

தமிழிசை சௌந்தரராசனை ஆபாசமாக ஒரு பெண் திட்டியதும் தனிப்படை அமைத்து இரண்டு நாளில் கைது செய்கிறது அரசு. ஆனால், இந்தப் பள்ளியில் ஆசிரியர் இல்லை எனவும் பள்ளி நிர்வாகம் ஒழுங்காக இல்லை எனவும் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதையும் தெரிந்து கொள்ள வைக்க 7 ஆண்டுகளாகியுள்ளது. இந்த ஏழு வருடமாக இந்த பள்ளிக்கு சுண்ணாம்பு கூட அடிக்கவில்லை என்பதில் இருந்தே அரசின் நோக்கமும் இலட்சணமும் பளிச்செனப் புரிகிறது.

இத்தனை வருடங்களாக மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் என சகல அதிகாரிகளிடமும், அவர்களின் அலுவலகங்களுக்கே சென்று மனு கொடுத்தார்கள் மக்கள். அவர்களோ மனுக்களை வாங்கி, அடியில் போட்டு உட்கார்ந்து கொண்டு, அசைய மறுத்தார்கள். தனியார் பள்ளிகளே தரமானவை என்ற சினிமாவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. இன்றோ, பள்ளிக்கூட வாசலுக்கு வந்த மக்கள், அதிகாரிகளை அங்கேயே வர வைத்தார்கள், வேலை வாங்கினார்கள், மாற்றத்தைத் தொடங்கி வைத்தார்கள்.

அரசுப்பள்ளி மோசம் – தனியார் பள்ளிதான் தரம் என்ற சினிமாவுக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்கள் இப்பள்ளியில். தமிழகம் முழுவதும், நாடு முழுவதும் மக்கள் தங்களது வேலைக்காரர்களை வேலை வாங்கும் நாள் வரும். நூறு சதவீத வெற்றி எல்லா அரசுப் பள்ளியிலும் சாத்தியமாகும் நாளும் வரும்.

தகவல் : புதிய ஜனநாயகம் செய்தியாளர், ஓசூர்.

NSA சட்டத்தில் தோழர் சரவணன் கைது ! சுப்புலட்சுமியின் கண்ணீருக்கு என்ன பதில்?

”மக்கள் அதிகாரத்தை ஒடுக்க நினைக்கும் தமிழக அரசு! தோழர் சரவணன் NSA -ல் கைது!”

தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை அநியாயமாக திட்டமிட்டுக் கொன்ற அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போராடும் மக்களை பயமுறுத்தும் விதமாகவும், மக்களோடு துணை நிற்கும் மக்கள் அதிகாரம் அமைப்பை தடை செய்யும் முனைப்போடும், பல்வேறு பொய்வழக்குகளைப் புனைந்து வந்தது போலீசு.

கடந்த மே 25, அன்று கோவில்பட்டியில் தோழர் சரவணனை அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் ஏறிக் குதித்து கைது செய்தது போலீசு. அவருக்கு வலிப்பு நோய் வரும் என்பது குறித்து கைது செய்த போலீசிடம் எடுத்துக் கூறிய அவரது மனைவி சுப்புலட்சுமியை எகத்தாளமாக கேலி பேசியுள்ளது கிரிமினல் போலீசு.

மக்கள் அதிகாரம் தோழர்களை விடுதலை செய்ய வேண்டும், பொய் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும். மக்கள் அதிகாரம் என்றும் மக்களோடு நிற்கும் என்று  கூறுகிறார் சுப்புலட்சுமி.

திருடன் போல வீட்டின் கதவை உடைத்து வீட்டில் உள்ள பொருட்களை போலீசு எடுத்துச் சென்றதையும், உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது கணவர் குறித்தும், சுப்புலட்சுமி கண்ணீர் மல்க விவரிக்கிறார். சுப்புலட்சுமியின் கண்ணீருக்கு என்ன பதில்?

பாருங்கள் பகிருங்கள் !

ஆப்பிள் ஐஃபோன் தரமும் ஷென்சென் நகர தொழிலாளிகளின் தற்கொலையும் !

ஜி.டி.பி மாயை : மதிப்புக் கூட்டலும் மதிப்பு கைப்பற்றலும் – ஜான் ஸ்மித்

ஜான் ஸ்மித் லண்டனில் உள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல், அரசியல் பொருளாதாரம், மனித உரிமைகள், இனப்படுகொலை துறைகளின் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். ஏகாதிபத்தியமும் உலகமயமாக்கலும் பற்றிய அவரது எதிர்வரும் புத்தகத்தை மன்த்லி ரிவியூ பிரஸ் வெளியிடவிருக்கிறது.

*****

முன்னுரை

“ஜி.டி.பி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) மாயை” என்பது பயன்பாட்டில் உள்ள பொருளாதாரத் தரவுகள் திரட்டப்படுவதிலும், பொருள் கொள்ளப்படுவதிலும் உள்ள குறைபாடுகளின் காரணமாக ஏற்படும் தவறான புரிதலே. மூன்றாம் உலக நாடுகளின் குறைந்த கூலி பெறும் தொழிலாளர்கள் உலக வருமானத்துக்கு அளிக்கும் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதும், அமெரிக்க மற்றும் பிற ஏகாதிபத்திய நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியை மிகைப்படுத்துவதும் இதன் முக்கிய விளைவு ஆகும்.

இந்தக் குறைபாடுகளும், உருக்குலைக்கப்பட்ட புரிதல்களும் ஜி.டி.பி, வர்த்தகம், உற்பத்தித் திறன் போன்றவை தொடர்பான புள்ளிவிபரங்கள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன, எவ்வாறு விளக்கப்படுகின்றன என்பதைத் தீர்மானிக்கும், விலை, மதிப்பு, மதிப்புக் கூடுதல் ஆகியவை குறித்த புதிய தாராளவாத கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக ஜி.டி.பி, உற்பத்தித் திறன், வர்த்தகம் ஆகியவை தொடர்பான அடிப்படை தரவுகள் பருண்மையானதாகவோ குறைகளற்றதாகவோ இல்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.

இந்தப் புள்ளி விபரங்களின் அடிப்படையிலான பொருளாதாரவியல் விளக்கங்கள், உலகப் பொருளாதாரத்தில் மதிப்பும் லாபமும் எங்கிருந்து தோன்றுகின்றன என்பதைப் பற்றி தெளிவுபடுத்துவதை விட அதிகமாக மறைக்கவே செய்கின்றன.

“சர்வதேச விற்பனை பண்டங்களுக்கான” மூன்று பொருத்தமான உதாரணங்களாக ஐஃபோன், சட்டை, ஒரு கப் காஃபி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பொருட்கள் மேலே சொன்ன வாதத்தை விளக்குவதாகவும், உறுதி செய்வதாகவும் உள்ளன. இந்தப் பொருட்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவையாக இருப்பது அவற்றுக்கும், சர்வதேச உற்பத்தி நடைமுறையில் உள்ள மற்ற அனைத்து பொருட்களுக்கும் இடையே உள்ள பொதுவான அம்சங்களை தெளிவுபடுத்த உதவுகின்றது.

பொருளாதாரவியல் தரவுகள் அல்லாது நமக்குக் கிடைக்கும் பிற தரவுகளும், நமது சொந்த அனுபவங்களும் குறைந்த கூலிக்கு நீண்ட நேரம் கடுமையாக உழைத்து பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் ஆப்பிள் போன்ற மேற்கத்திய நிறுவனங்களின் லாபத்துக்கு கணிசமான பங்களிப்பு செய்கின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. இருப்பினும், பொருளாதாரவியல் தரவுகள் அத்தகைய பங்களிப்புக்கான எந்த ஒரு அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை.

மாறாக, இந்தப் பொருட்களின் விற்பனையில் பெறப்படும் மதிப்பில் பெரும்பகுதியும், ஆப்பிள், ஸ்டார்பக்ஸ் போன்ற நிறுவனங்கள் அவற்றிலிருந்து அறுவடை செய்யும் லாபங்களும் அந்தப் பொருட்கள் நுகரப்படும் நாட்டில் உருவானது போன்ற தோற்றத்தை அவை ஏற்படுத்துகின்றன. இந்த மூன்று சர்வதேச விற்பனை பண்டங்களும் முதலாளித்துவ உற்பத்தியில் பரவலாக ஏற்பட்டுள்ள உருமாற்றத்தின் உண்மையான பிரதிநிதிகளாக உள்ளன.

பொருளாதாரவியல் புள்ளிவிவரங்களும் அவற்றின் அடிப்படையில் முன்வைக்கப்படும் விளக்கங்களும் ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மூன்றாம் உலக நாடுகளின் ஆலை உற்பத்தியாளர்களுக்கும் இடையேயான சுரண்டல் அடிப்படையிலான உறவுகளை குழப்பி மறைக்கின்றன. இருப்பினும் இந்தச் சுரண்டல் உறவு முற்றிலும் நம் கவனத்திலிருந்து தப்பி விடுவதில்லை.

மாறாக, சர்வதேச அரசியல் பொருளியலின் பயன்பாட்டில் உள்ள கணக்கீடுகளை பீடித்திருக்கும் சுயமுரண்களிலும், விதிவிலக்குகளிலும் அவை வெளிப்படுகின்றன. இத்தகைய சுயமுரண்களும், விதிவிலக்குகளும் உருவத்தை திரித்துக் காட்டும் கண்ணாடியில் உள்ள குறைபாடுகளை போலவே தமது இருப்பை அறிவித்துக் கொண்டிருக்கின்றன; இது இந்த உருமாற்றத்தை அடையாளம் கண்டு வகைப்படுத்த வேண்டியதை அவசியமாக்குகின்றது. மதிப்பு கைப்பற்றலையும், மதிப்பு கூட்டலையும் தவறாக பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த உருமாற்றத்தை சரியாகப் புரிந்து கொண்டால்தான் உள்ளது உள்ளபடியே உலகை புரிந்து கொள்வது சாத்தியமாகும்.

பகுதி ஒன்று : ஆப்பிள், டெல் போன்ற நிறுவனங்களின் லாபத்துக்கு ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் என்ன பங்களிப்பு செய்கிறார்கள்?

சீனாவின் ஷென்செனில் பாக்ஸ்கான் இன்டர்நேஷனல் வேலைக்கு அமர்த்தியுள்ள மூன்று லட்சம் தொழிலாளர்கள் டெல் மடிக் கணினிகளையும், ஆப்பிள் ஐஃபோன்களையும் உற்பத்தி செய்கின்றனர். அவர்களைப் போலவே மூன்றாம் உலக நாடுகளின் கோடிக்கணக்கான குறைகூலி தொழிலாளர்கள் மேற்கத்திய சந்தைகளுக்காக இடைநிலை பொருட்களையும் நுகர்வுப் பொருட்களையும் குறைந்த செலவில் உற்பத்தி செய்கின்றனர்.

இந்தத் தொழிலாளர்கள் டெல், ஆப்பிள் மற்றும் பிற முன்னணி மேற்கத்திய நிறுவனங்களுக்கும், அவர்களது பொருட்களை விற்பதற்கான சில்லறை விற்பனை நிறுவனங்களுக்கும் லாபத்திலும், வருமானத்திலும் என்ன பங்களிக்கின்றனர்? ஜி.டி.பி, வர்த்தகம் மற்றும் நிதி பாய்ச்சல்கள் தொடர்பான புள்ளிவிபரங்களின் படியும், பயன்பாட்டில் உள்ள பொருளாதாரவியல் கோட்பாட்டின்படியும் அவர்கள் எந்தப் பங்களிப்பும் செய்வதில்லை.

அதன் பொருட்களை உற்பத்தி செய்து பொருத்தி தயாரிக்கும் சீன, மலேசிய மற்றும் பிற உற்பத்தி நிலையங்கள் ஆப்பிள் நிறுவனத்துக்கு சொந்தமானவை அல்ல. முன்பு வழக்கமாக பயன்படுத்தப்பட்ட ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலான, அன்னிய நேரடி முதலீட்டின் அடிப்படையிலான சர்வதேச உறவுக்கு மாறாக இப்போது ஆப்பிள் தனது பொருட்களை செய்து வாங்கும் ‘கைக்கு எட்டிய உறவிலான’ உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து லாபம் நாடு கடந்து எடுத்துச் செல்வதாக புள்ளிவிபரங்கள் பதிவு செய்வதில்லை.

சந்தை பரிமாற்றங்களின் விளைவுகளை மட்டும் பதிவு செய்யும் பொருளாதாரவியல் புள்ளி விவரங்களுக்கான விளக்கங்கள் அனைத்தும் ஐஃபோனின் இறுதி விற்பனை விலையில் ஒவ்வொரு அமெரிக்க அல்லது சீன நிறுவனம் கைப்பற்றும் பங்கு, அவை ஒவ்வொன்றும் பங்களிக்கும் மதிப்பு கூடுதலுக்கு சமமானது என்று கருதுகின்றன. ஆப்பிள் மற்றும் அதன் பொருட்களை உற்பத்தி செய்து தரும் பல்வேறு உற்பத்தியாளர்களின் லாபங்கள் மீது அந்தப் பரிவர்த்தனைகள் செலுத்தும் தாக்கம் பற்றி எந்த தடயத்தையும் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துவதில்லை. ஆப்பிளின் லாபத்தில் சீனாவிலிருந்து கிடைக்கும் ஒரே பகுதி ஆப்பிள் பொருட்கள் சீனாவில் விற்கப்படுவதன் மூலம் கிடைப்பது மட்டுமே என்று தோன்றுகிறது.

ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள்

பொருளாதாரத் தரவுகள் பற்றிய நடப்பில் உள்ள விளக்கத்தின்படி, பொருட்களின் மதிப்பு “சுற்றோட்டத்தில் பெறப்படுவது போல மட்டுமின்றி, அதிலிருந்து உருவாவது போல தோன்றுகிறது”1 (காரல் மார்க்ஸ்). எனவே சீன மற்றும் பிற குறைகூலி தொழிலாளர்களிடமிருந்து ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் கடத்தப்படும் மதிப்பு, பொருளாதாரத் தரவுகளிலும், பொருளியலாளர்களின் மூளைகளிலும் மாயமாக மறைந்து விடுகிறது.

ஆப்பிள், டெல், மோட்டரோலா, பிற அமெரிக்க, ஐரோப்பிய, தென் கொரிய, ஜப்பானிய நிறுவனங்களின் பொருட்கள் தாய்வானைச் சேர்ந்த ஹோன் ஹாய் பிரிசிசன் இண்டஸ்ட்ரீசின் பிரதான துணை நிறுவனமான ஃபாக்ஸ் கானால் பொருத்தி தயாரிக்கப்படுகின்றன. ஃபாக்ஸ்கானின் 10 லட்சம் ஊழியர்கள், “உலகின் நுகர்வு மின்னணு பொருட்களில் 40%-ஐ” உற்பத்தி செய்வதாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது2.

தென் சீனாவின் ஷென்செனில் (Shenzhen) உள்ள பதினான்கு தொழிற்சாலைகள் கொண்ட அதன் கட்டமைப்பு 2010-ம் ஆண்டு அதன் பிரம்மாண்டத்திற்காகவும், தொழிலாளர்கள் மத்தியில் அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலைகளுக்காகவும் உலக அளவில் பேசப்பட்டது. அந்த ஆண்டு ஃபாக்ஸ்கான் ஷென்செனில் அமர்த்தியிருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 4.3 லட்சத்தை எட்டியது. தற்போது சீனாவின் பிற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு உற்பத்தி நகர்த்தப்படுவதன் மூலமாக அந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது.

ஜனவரி 2012-ல் ஹோன் ஹாயின் சேர்மன் டெரி கோவ், தாய்பே உயிரியல் பூங்காவுக்கு சென்றிருந்த போது “மனிதர்களும் விலங்குகள்தான் என்பதால் 10 லட்சம் விலங்குகளை நிர்வகிப்பது எனக்கு தலைவலியை தருகிறது” என்று கூறினார். தொடர்ந்து இந்த “விலங்குகளை” எப்படி நிர்வகிப்பது என்று அறிவுரை சொல்லுமாறு உயிரியல் பூங்கா காப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தார். அவரது இந்தக் கருத்து கடும் எதிர்ப்புகளை சந்தித்தது. ”வான்ட் சைனா டைம்ஸ்” பத்திரிகை, “கோவ் வார்த்தைகளை கொஞ்சம் கவனமாக பயன்படுத்தியிருக்கலாம். [ஃபாக்ஸ்கானின் பிரம்மாண்டமான சீன ஆலைகளில்] வேலைச் சூழலும், தங்குமிட சூழலும் பராமரிக்கப்படும் நிலைமையில், அதன் சீன ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் தாம் விலங்குகள் போல நடத்தப்படுவதாக ஒத்துக் கொள்வார்கள்” என்று எழுதியது3 .

  1. Karl Marx, Capital, vol. 3 (London: Penguin, 1991), 966.
  2. Charles Duhigg and Keith Bradsher, “How U.S. Lost Out on iPhone Work,” New York Times, January 21, 2012, http://nytimes.com.
  3. Foxconn Chairman Likens His Workforce to Animals,” Want China Times, January 21, 2012, http://wantchinatimes.com.

(தொடரும்)

மொழிபெயர்ப்பு : குமார்
ஆங்கில மூலம் : Value Added versus Value Capture by John Smith
நன்றி : Monthly Review

நன்றி: புஜதொமு – ஐ.டி. ஊழியர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை.

பிக்பாஸ் இன்று என்ன பொய் சொல்வார் ? மனுஷ்யபுத்திரன்

பிக்பாஸை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் !

ல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த
பிக்பாஸை இப்போது எல்லோரும்
பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

பிக்பாஸ் சீசன் 2-வின் முக்கிய மாற்றம்
எல்லோரும் கண்டுபயந்த பிக்பாஸ்
இப்போது எல்லோரையும் கண்டு
பயப்படுகிறார்

பிக்பாஸ்
எதிரிகள் தன்னைக்கொல்ல வருகிறார்கள்
என்று துர்க்கனவு கண்டு அலறுகிறார்
இது எத்தனையாவது முறை
என்று மக்கள் காது குடைந்தபடி
அதை கவனமின்றி கேட்கிறார்கள்

தான் தந்திரமாக
ஆட்டத்திலிருந்து வெளியேற்றிய
பழைய பங்கேற்பாளர்களை
தேடிப்போகிறார் பிக் பாஸ்
அவர்கள் குறுவாள்களுடன்
பிக்பாஸை கட்டித்தழுவுகிறார்கள்

பிக்பாஸ்
ரகசியக் கதவுகள் வழியாக
வீட்டின் ஒவ்வொரு அறையிலும் நுழைந்து
தன் அதிகாரத்தை விரிவுபடுத்திக்கொண்டேயிருந்தார்
இப்போது எதிரிகள்
அவரது அறைக்குள் நுழைய
நூறு ரகசிய வழிகளை உண்டாக்கி விட்டனர்

56 இன்ச் ’மார்பன்’

தனது ஆட்டத்தின்
ஒவ்வொரு விதியும்
இப்போது சுலபமாக மாற்றப்படுவதை
பிக்பாஸ் பார்க்கிறார்
அவரது விதியின் திசைகளில்
ஏன் திடீரெனெ காற்று
மாற்றியடிக்கிறது என்று குழம்புகிறார்.

அகன்ற மார்புகளுடன்
உரத்த குரலுடன்
அவர் தன் உத்தரவுகளை
எந்த மறுப்பும் இன்றி
பிறப்பித்துக்கொண்டிருந்தார்
இப்போது முகம் தெரியாதவர்கள்
அவரை வெல்கிறார்கள்
எந்த வெளிச்சமும் இல்லாதவர்களால்
அவர் வழிமறிக்கப்படுகிறார்

பிக்பாஸ் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும்
வேறு வேறு முகமூடிகள்
அணிந்துவரக் கூடியவர்
தேச பக்த முகமூடி
வளர்ச்சியின் முகமூடி
கடைக்கோடி மனிதனின் முகமூடி
கனவானின் முகமூடி
எதேச்சதிகாரியின் முகமூடி
பரிசுத்தத்தின் முகமூடி
கடவுளின் முகமூடி

பிக்பாஸ் இல்லத்தின் பொழுதுபோக்கே
தினமும் ஒவ்வொருவரும் இந்த முகமூடிகளை
அணிந்து கேலி நாடகங்கள் நடத்துவதுதான்
பிக்பாஸ் தான் எவ்வளவு திட்டமிட்டு தயாரித்த முகமூடிகள்
மாறுவேட போட்டிகளின் ஆடைகளாவதை
அவரால் நம்ப முடியவில்லை

வழக்கம்போல
ஒரு ஆவேசமான பிரசங்கத்தை
நிகழ்த்துவதுதான் எல்லாவற்றையும்
சரி செய்யும் என பிக்பாஸ்
முடிவு செய்கிறார்
பேசத்தொடங்கியதும்
கூட்டத்திலிருந்து ஒரு பெண் கத்துகிறாள்
அவசரத்தில் மறந்துவிட்டீர்கள்
ஜிப்பை ஒழுங்காக போடுங்கள்

பிக்பாஸ் இல்லத்தின்
ஒழுங்கீனங்களை மாற்ற
தியான வகுப்பின்
ஆசிரியராக அமர்கிறார் பிக்பாஸ்
அவர் கண்களை மூடினால்
மக்கள் கண்களை திறந்துகொள்கிறார்கள்
அவர் ஆசனத்தில் அமர்ந்தால்
மக்கள் தலைகீழாக நிற்கிறார்கள்

பிக்பாஸ் இல்லத்தின் அதிருப்தியை சமாளிக்க
சிறப்புச் சலுகையாக
பெட்ரோல் விலையில்
ஒரு பைசா குறைக்கிறார்
பிக்பாஸ்
அதை மணியார்டரில்
அவருக்கே திருப்பியனுப்புகிறார்கள்

பிக்பாஸ் எல்லோர் தலையிலும்
ஒரு ரகசிய கேமிராவை வைத்துவிட்டோம்
என்று நிம்மதியாக இருந்தார்
எல்லாக் கேமிராக்களும்
இப்போது அவர் தலை நோக்கி திரும்பியிருக்கின்றன
அவர் ஒரு பழைய பொய்யை சொல்லும்போது
போரடிக்கிறது
புதியபொய் ஏதேனும் சொல்லுங்களேன்‘ ‘
என்கிறார்கள் செல்லமாக
அவர் ஒருபெயரை தவறாக சொல்கிறார்
ஒரு சம்பவத்தை தவறாக சொல்கிறார்
ஒரு வரலாற்றை தவறாகச் சொல்கிறார்
அவர் அந்த வாக்கியத்தை முடிக்கும் முன்
தேசமெங்கும்
அலை அலையாக சிரிப்பொலி பரவுகிறது
பிக்பாஸ் இல்லத்தில்
பிக்பாஸ் இன்று என்ன பொய் சொல்வார் என
பந்தயம் கட்டி விளையாடுகிறார்கள்

பிக்பாஸ் எதிரிகளைப் பார்த்து
கேலியாக சிரிப்பதை
ஒரு பொழுதுபோக்காக வைத்திருந்தார்
இப்போது பிக் பாஸ் இல்லத்தின்
சுவர்களெங்கும் தன்னைப்பற்றிய
கேலிச்சித்திரங்கள் நிறைந்திருப்பதைக் கண்டு
அதிர்ச்சியடைகிறார்.

பிக் பாஸ் இல்லத்தில் தான் உருவாக்கிய குழப்பங்களை
தன்னால் இனி ஒருபோதும் சரிசெய்ய முடியாது என்பது
பிக்பாஸிற்கு இப்போது புரியத்தொடங்கியிருக்கிறது
அது அவரை நிம்மதியற்றவராக்குகிறது
அவர் தனக்குத்தானே ஆகாயத்தில்
ஒரு பறக்கும் விமானத்தில்
தனக்கான பிக்பாஸ் இல்லத்தை உருவாக்குகிறார்
எந்நேரமும் அதிலேயே குடியிருக்கிறார்
ஜன்னலின் வழியே
ஆகாய நீலத்தின் அச்சுறுத்தும்
வெறுமையை காண்கிறார்
தரையிரங்கும்போது
என்ன நடக்கும் என்ற சஞ்சலங்கள்
அவரை ஆட்கொள்கின்றன

பிக்பாஸ் இல்லத்திற்கு
பிக் பாஸ்
முதல்முறை வந்தபோது
அதன் வாசலில் மண்டியிட்டு
மண்ணை முத்தமிட்டார்
அதன்பிறகு
அவர் ஒருபோதும் அந்த வீட்டில் நுழைய
விரும்பியதே இல்லை

இப்போது இந்த சீசன் 2 வின் முடிவில்
அந்த வீட்டின் கதவுகள்
தனக்கு இனி
நிரந்தரமாக மூடப்பட்டுவிடுமோ
என்று அவ்வளவு பயப்படுகிறார்

பிக்பாஸ் இல்லத்தில்
சீசன் 2 வில்
பிக்பாஸிற்கு எதிராக
விரிவான ரகசிய திட்டங்கள் தீட்டப்படுகின்றன
பிக்பாஸ் இப்போது பாதுகாப்பற்று உணர்வதுபோல
வேறெப்போதும் உணர்ந்ததில்லை.

நன்றி: மனுஷ்யபுத்திரன்