Sunday, June 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 428

போலீசைக் கைது செய் – மக்களை விடுதலை செய் ! நெல்லை-திருச்சி-மதுரை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !

திருநெல்வேலி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் நீதிமன்ற புறக்கணிப்பு !

ஜூலை 02, 2018 அன்று தோழர் வாஞ்சிநாதன் கைதை கண்டித்து திருநெல்வேலியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் கலந்துக்கொண்ட திருநெல்வேலி வழக்கறிஞர்கள் “போலி வழக்குகள் பதிவு செய்து, மக்களை கைது செய்யாதே!”, ” போராடும் மக்களுக்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வாஞ்சிநாதன் மற்றும் பிற‌ வழக்கறிஞர்களை கைது செய்யாதே!” என தொடர் முழக்கங்களை எழுப்பினர்.

    • தகவல்: திருநெல்வேலி வழக்கறிஞர்கள்
      திருநெல்வேலி.

டந்த ஜீலை 02, 2018 அன்று ‍திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தோழர் வாஞ்சிநாதன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் ”தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட நபரை கண்டறிந்து வழக்கில் முதல் குற்றவாளியாக்கு” என்கிற முழக்கங்களை முன்வைத்தும் போராட்டம் நடைப்பெற்றது.

நேற்று (02/07/2018) நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலிருந்து…

  • ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்களுக்கு
    சட்ட உதவி செய்த
    வழக்கறிஞர் வாஞ்சிநாதனை விடுதலை செய்!
  • சுட்டுக்கொன்ற போலீஸ் மீது
    கொலை வழக்கை பதிவு செய்!
  • போராடிய மக்கள் மீது
    பொய் வழக்குகளை
    வாபஸ் வாங்கு!

 

– ‍திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம்,
திருச்சி.

***

”வழக்கறிஞர் வாஞ்சிநாதனை நிபந்தனையின்றி விடுதலை செய்!” – என்கிற முழக்கத்தை முன்வைத்து உயர்நீதிமன்றம் – மதுரை கிளை வழக்கறிஞர் சங்க  வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டமானது நச்சு ஆலை ஸ்டெர்லைட்க்கு எதிராக போராடிய மக்களுக்கு சட்ட உதவி செய்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைதை கண்டித்தும், நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரியும் நடைபெற்றது.

– உயர்நீதிமன்றம் – மதுரை கிளை வழக்கறிஞர் சங்கம்
மதுரை

மக்கள் அதிகாரம் மீது அடக்குமுறை ! காவியும் காக்கியும் ஒரணியில் !!

3-7-2018

பத்திரிக்கை செய்தி

தூத்துக்குடி, திரேஸ்புரம் மீனவ சங்க பிரதிநிதி ராபர்ட் வில்லவராயர் உட்பட ஒரு சிலர் கொடுத்த புகார் மனுவில்……

“காவல் துறையினரால் மீனவ மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். மீனவ மக்கள் மீது வழக்குகள் பதிய தேடுதல் என்ற பெயரில் நெருக்கடிகள் கொடுத்து இதனால் அமைதியற்ற சூழலில் பய உணர்வுடன் வாழ்ந்து வருகிறோம்.

தற்போது அந்த இரு வழக்கறிஞர்களும் தங்களை காத்துக்கொள்வதற்காக உயர் நீதிமன்றத்தில் மீனவ அமைப்புகளே மே 22 போராட்டத்தை முன்னெடுத்து சென்றன என்றும், தங்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தவறான வாதங்களை முன்வைப்பதாக அறிகிறோம்.

‘‘தூத்துக்குடி வன்முறை சம்பவத்துக்கும் மீனவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மக்கள் அதிகாரம் அமைப்பினர்தான் இளைஞர்களை மூளைச் சலவை செய்து, உணர்வுகளைத் தூண்டி மே 22 போராட்டத்தில் பங்கேற்க செய்தனர்’’ என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரிடம் மீனவர் அமைப்பு நிர்வாகிகள் 29-6-2018 அன்று மனு அளித்தனர்“ மேற்கண்ட சில வரிகள்தான், மொத்த மனுவின் சாரம்.

2-7-2018 அன்று மடத்தூரை சேர்ந்த பொன்பாண்டி என்பவர் தந்திருக்கும் மனுவில் “ மே22 ல் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் நோக்கில் எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் அரசு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டபோது நாங்களும் மேற்படி கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு வணிகர்கள் மற்றும் இதர தொழில் அமைப்புகளோடு இணைந்து செயல்படுவோம் என்று எங்கள் மடத்தூர் கிராம முக்கியஸ்தர்களும் உறுதியளித்து அதன்படியே கையொப்பமிட்டு வந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது” என குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவின் சட்ட ஆலோசகர்களான இரு வழக்கறிஞர்களும் தங்கள் தரப்பை சொல்ல முடியாமல் தடுக்கப்பட்ட நிலையில் இந்த புகார் மனு தற்போது வருவதன் பின்னால் போலீசின் அச்சுறுத்தலும் சதித்திட்டமும் உள்ளதைப் புரிந்து கொள்ள முடியும். மே 22 போராட்டத்தை மீனவ அமைப்புகள் முன்னெடுத்தார்கள் என எந்த நீதிமன்றத்திலும் யாரும் சொல்லவில்லை. மீனவ சங்க பிரதிநிதிகள், மடத்தூர் பொன்பாண்டி ஆகியோரின் மனுவிலும் போலீசின் தற்போதைய அடக்குமுறையைக் கண்டித்தோ, துப்பாக்கிச்சூடு படுகொலையைக் கண்டித்தோ ஒரு வரிகூட கிடையாது. அவர்கள் சுதந்திரமாக இந்தப் புகாரை கொடுக்கவில்லை. ஒரே அச்சில் வந்த இரு புகார்கள்.

மக்களை மூளைச்சலவை செய்து போராடத் தூண்டினார்கள்; அதில் பங்கேற்றார்கள் என்ற குற்றச்சாட்டில் யாரும் கைது செய்யப்படவில்லை. வழக்கறிஞர் வாஞ்சிநாதன் 20 க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். வழக்கறிஞர் அரிராகவனை எண்ணற்ற வழக்குகளில் கைது செய்ய போலீசு தேடுகிறது. மக்கள் அதிகாரத் தோழர்கள் ஆறு பேர் தேசிய பாதுபாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மக்கள் அதிகார உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என எழுபதுக்கும் மேற்பட்டவர்களை பொய்யாக ஒப்புதல் வாக்குமூலத்தில் சேர்த்து எழுதி வைத்துக்கொண்டு தென் மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது, போலீசு. பேருந்துகளை சேதப்படுத்தியது, வாகனங்களுக்கு தீ வைத்தது, ஸ்டெர்லைட் குடியிருப்புக்கு தீ வைத்தது என மே 22 இல் தூத்துக்குடியில் காலை 10-00 மணிமுதல் மாலை 3-00 மணி வரை நடந்த அனைத்து சம்பவங்களையும் இரு வழக்கறிஞர்கள் நேரடியாக நின்று கேங் லீடர் போல் வழி நடத்தி சென்று நடத்தினார்கள் என்று ஜோடித்து வைத்துக்கொண்டு கைது செய்துள்ளனர். போலீசின் இந்த வஞ்சக செயல் மனு கொடுத்த மடத்தூர், திரேஸ்புரம் மக்களுக்குத்  தெரிய வாய்ப்பில்லை.

தமிழகத்தில் எந்த போராட்டத்திலும் வெளியில் இருந்து ஆதரவு தந்தாலோ பங்கேற்றாலோ, தூத்துக்குடியில் நடந்ததைப் போல் வன்முறை செய்ய வருகிறீர்களா என அச்சுறுத்தி போலீசார் அடக்குமுறையை ஏவுகின்றனர். இதை அப்படியே உயிர்ப்போடு வைத்திருக்க மீனவர்  சங்கம், மடத்தூர் பொன்பாண்டி போன்றோரின் புகார்கள் மூலம் அவதூறு பிரச்சாரத்தை கிளப்பி போலீசின் செயல்களை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். இதை அனைவரும் எதிர்த்து போராட வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்து சுமார் 40 நாட்கள் கடந்து விட்டன.  இந்தியாவிலேயே வேறு எங்கும் நடந்திராத வகையில் போராட்டத்தில் பங்கேற்றவர்களை  குறிபார்த்து சுட்டுக் கொன்ற இந்த சட்டவிரோதமான துப்பாக்கிச் சூடு குறித்த பின்னணி இன்று வரை மர்மமாகவே இருந்து வருகிறது. துப்பாக்கிச்சூடு நடந்தவுடன் தனக்கே தெரியாது என்று முதல்வர் பேசினார். உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு பத்து நாட்களுக்கு விடை கிடைக்கவில்லை.

அதற்குப் பின் மூன்று துணைத் தாசில்தார்கள்தான் உத்தரவிட்டதாக அரசுத் தரப்பு கூறியது. அந்த துணை தாசில்தார்களை இதுவரை எந்த ஊடகமும் பேட்டி எடுக்க முடியவில்லை. ஒரு துணை தாசில்தார், தான் புகாரை கொடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மே 22 அன்று இந்தப் போராட்டத்தால் தங்களுக்கு எந்த பாதிப்பும்  ஏற்படவில்லை என்றும் அவ்வாறு அச்சுறுத்தப்பட்டதாக புகார் கொடுக்குமாறு போலீசு நிர்ப்பந்திப்பதாகவும் கூறியிருக்கின்றனர். துப்பாக்கிச்சூடு படுகொலை குறித்து  மே 22 முதல் நேற்று டி.ஜி.பி. சொன்னது வரை அனைத்தும் முரண்பாடுகளாகவும் உண்மைக்கு புறம்பானவையாகவும் இருப்பதைக் காணமுடியும்.  144 தடை உத்தரவு இன்று வரை வெளியிடப்படாத மர்மம் என்ன? அன்றைக்கு மாவட்ட ஆட்சியர் ஏன் தூத்துக்குடியில் இல்லை?

துப்பாக்கிச் சூட்டிற்காக குற்றவாளிக் கூண்டில் நிற்கும் தூத்துக்குடி போலீசார், இன்று போராடிய மக்களை அச்சுறுத்தி வருகிறார்கள். இதன் மூலம் தங்களுக்கு எதிராக யாரும் சாட்சியம் அளிக்கக்கூடாது என்பதை உத்தரவாதப்படுத்திக் கொள்கிறார்கள்.  மக்களை மிரட்டிப் பணிய வைத்து விட்டு, மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதுதான் இவர்களது நோக்கம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகராக செயல்பட்ட மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மீதும் சுமார் 20 வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. அவர் சொன்னதாக போலீசே ஒரு ஒப்புதல் வாக்குமூலம் தயாரித்து அதில் தமிழகம் முழுவதும் போராடுபவர்களின் தந்தை பெயர் உட்பட முகவரியோடு எண்ணற்றவர்களை வழக்கில் சேர்த்துள்ளது. அதன் நகலை இத்துடன் இணைத்துள்ளோம். இதனை, படிப்பவர்கள் யாரும் இந்த குற்றவிசாரணை எந்தத் திசையில் கொண்டு செல்லப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

அதாவது,  மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர்கள் மட்டுமின்றி கடந்த மூன்றாண்டுகளில் அதன் கூட்டங்களில் பங்கேற்ற பேச்சாளர்கள், தமிழகத்தில் காவிரி உள்ளிட்ட பிரச்சினைகளில் போராட்டம் நடத்தியவர்கள், இதற்கு கருத்து ரீதியாக ஆதரவு தந்த அறிவுத்துறையினர் அனைவரையும் மே 22 கலவரம் மற்றும் தீவைப்பு சம்பவங்களில் கூட்டுக்குற்றவாளிகளாக சேர்த்து வருகிறது, தமிழக போலீசு.

போலீசின் இத்தகைய நடவடிக்கைகள் மக்கள் அதிகாரத்தின் மீது மட்டும் தொடுக்கப்படும் தாக்குதல்கள் அல்ல. தமிழகத்தில் மக்கள் போராட்டங்களில் பங்கேற்கின்ற அமைப்புகள் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இவ்வாறு இனி ஒடுக்கப்படுவார்கள் என்பதையே இந்த தூத்துக்குடி மாடல் ஒடுக்குமுறை காட்டுகிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் வெளியூர்காரர்களுக்கு என்ன வேலை  என்ற கோணத்தில் பிரச்சாரம் செய்த போலீசு, தற்போது எட்டுவழிச்சாலை விவகாரத்தில் பக்கத்து நிலத்தைச் சேர்ந்தவர்கள் சக விவசாயிக்கு ஆதரவாக வந்தால் உனக்கென்ன வேலை என்று அவர்களையும் மிரட்டுகிறது. இந்த அடக்குமுறையை செய்திகளாகத் தரும் ஊடகங்களும் மிரட்டப்படுகின்றன.

மொத்தத்தில்  போலீசு, எத்தகைய பொய்வழக்கையும் போடலாம், யாரையும் கைது செய்யலாம், தேவைப்பட்டால் சுட்டுக் கொல்லலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டு வருகிறது.

அப்படியொரு தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கின்ற சூழலில் சட்டவிரோதமான தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமான கொலைக்குற்றவாளிகளை ஒருபோதும் தண்டிக்க இயலாது. எனவே, மே 22 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறை தொடர்பான குற்ற விசாரணையை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் ஒரு சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும்; தற்போது, துப்பாக்கிச் சூட்டின் குற்றவாளிகளான தூத்துக்குடி போலீசால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருக்கும் அனைவரையும் விடுவிக்க வேண்டுமென்றும் கோருகிறோம்.

தமிழக மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் நோக்கத்துடன் பயங்கரவாதம், தீவிரவாதம்  என்ற பூச்சாண்டிகளை பாரதிய ஜனதா கட்சியினர் திட்டமிட்டே பரப்பி வருகிறார்கள். தற்போது, தமிழகத்தில் நடப்பது, காவியும் காக்கியும் இணைந்த ஒரு கொடுங்கோலாட்சி. இதனை எதிர்த்து போராடுவதற்கு எல்லா கட்சிகளும் இயக்கங்களும் தமிழ்ச்சமூகமும் ஓரணியில் திரள வேண்டுமென்று கோருகிறோம்.

இப்படிக்கு
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.
பேச – 99623 66321

வன்முறையில் ஈடுபட்டது போலீசா – மக்கள் அதிகாரமா ? உரை | வீடியோ

க்கள் அதிகாரத்தின் மீது அரசு ஒடுக்குமுறை ஏன்?

  • தூத்துக்குடி மாடல் ஒடுக்குமுறை என்றால் என்ன?
  • மக்கள் அதிகாரம் அமைப்பை பின்னிருந்து இயக்குவது மாவோயிஸ்டுகளா?
  • ஓய்வு பெற்ற டிஜிபி அலெக்சாண்டர் தூத்துக்குடிக்கு 23-ந்தேதி எதற்கு சென்றார் ?
  • ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் பங்கு என்ன?
  • ஸ்டெர்லைட் படுகொலை குறித்து மோடி மவுனம் ஏன்?

– இது போன்ற பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராஜூ. முன்னர் வினவு தளத்தில் நேரலையாக பேசிய உரையின் வீடியோ, HD தரத்துடன் மூன்று பாகங்ககளாக தயாரிக்கப்பட்டுள்ளது.

பாருங்கள் ! அதிகமாகப் பகிருங்கள் !

யூ-டியூபில் காண :

பாகம் – 1

பாகம் – 2

பாகம் – 3

ஃபேஸ்புக் வீடியோ:

பாகம் – 1

பாகம் – 2

பாகம் – 3

வேர்ட் பிர்ஸ்-ல் காண:
பாகம் – 1:

பாகம் – 2:

பாகம் – 3:

பாருங்கள் ! பகிருங்கள் !

ஒரு பா.ஜ.க பொதுக்கூட்டம் – ஒரு நாய் – சில புலம்பல்கள் !

சமீபத்தில் தமிழக மீம்ஸ் படைப்பாளிகள் மத்தியில் ஒரு நாய் பிரபலமானது. யார் அவர்? பா.ஜ.க-வின் தெருமுனைக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. பேச்சாளர் ஒருவர் நின்றவாரே பேசுகிறார். அவர் பேச்சைக் கேட்பதற்கு தொண்டர்கள், மக்கள் யாருமில்லை. அவருக்கு பின்னே கூட்டத்தில் பேசுபவர்கள், உள்ளூர்க் கிளை நிர்வாகிகள் சிலர் அமர்ந்திருக்க, ஒரு நாயார் மட்டும் முன்னே சோம்பலாய் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். இதுதான் அந்தப் படம். அதை பா.ஜ.கவின் பிரமுகரான (தற்போது கோஷ்டி தகராறால் நீக்கப்பட்டவர்) பாலசுப்பரமணிய ஆதித்தன் அவரது ஃபேஸ்புக் பககத்தில் பகிர்கிறார். அதற்கு பா.ஜ.க தொண்டர்களின் எதிர்வினைகளே பாருங்கள். பா.ஜ.க வை எதிர்ப்பவர்களின் கருத்துக்களை விட ஆதரிபபவர்களின் கருத்துக்கள் ’உள்ளபடியே நன்றாக’ இருப்பதால் அவற்றை இங்கே பகிர்கிறோம்.

Balasubramania Adityan T

இது எந்த பெருங்கோட்ட பொறுப்பாளரின் உணர்ச்சி மிகு பகுதி?…
தெரிந்தவர்கள் ப்ளீஸ் சொல்லிருங்கப்பா.


Comments :

Paramasivam Pa : தமிழகம் முழுக்கவே இதே நிலைதான் ஜி.
இந்தநிலை தொடர தேசியதலைமையும் மாநில தலைமையும் மாடாய் உழைக்கின்றன.

Selva Kumar : மீட்டிங் நடத்த வேற இடமே கிடைக்கலையா. மத்திய ஆளும் கட்சியின் நிலை இது தானா

இராஜகுரு பாண்டியன் : இது தேனி மாவட்டம் கம்பத்தில் கடந்த 26ம்தேதி நடந்த பொதுக்கூட்டம்… விளைத்தால் தான் விளையும்..

Vannavil Raji Iyyappan : ஜி நம்ப டிசைன் அப்பிடி

Sai Sree Iyer Sreedharan :

Stephen Sathyaraj : Saravanan Swamy S எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!

Sonaiah Baskaran : இவரு எப்ப பார்த்தாலும் இப்படித்தான் எந்த உண்மையை போட்டு உடைச்சுகிட்டே இருப்பாரு,,ஜீ உஷ்,,,,

Balasubramania Adityan T: ஒருத்தனுக்கு கூட சுரணை இல்லையே ஜி.

Cherukoor BarathKumar Prabakaran : சூடு சொரணையா அப்படின்னா

Sonaiah Baskaran : Balasubramania Adityan T இதெல்லாம் ஓவரா தெரியலியா உங்களுக்கு ..  சுரனையை பார்த்தால் பதவி,பணம் எப்படி சம்பாதிப்பது,, ஜீ

Dakshinamoorthy Bjptnj : காலத்தோட அதை அதை பார்த்துக்கணும்;
இனி ஒரு சந்தர்ப்பம் வராது என்ற உண்மை அறிந்தவர்கள் !

Sundararaman C S Jayasankar : Adityanji did u hear the statement of Muralidhar Rao “ No change in TN party president post “ she will continue. I saw it in polimar TV

Ramesh Krishna : அடுத்த முதலமைச்சர்
அக்கா தமிழிசை வாழ்க

விவசாயி :

Thandapani : இது போல ஆட்கள் இருக்கும் வரை , தமிழகத்தில் தாமரை காம்பு கூட காய்ந்து போகும்…..

Tamil Priyan: இது தெருமுனை பிரச்சாரம்!! நாய் துலுக்கனின் போட்டோஷாப் கைவண்ணம்.

Dakshinamoorthy Bjptnj : வேற வழி இப்படி சொல்லி சமாளிச்சிக்குவோம் !

Karthikai Selvam இந்த 5 பேரை பாராட்டலாமே. குவாட்டர் கோழி பிரியாணி போடுவதாக , தலைக்கு 500 தருவதாக சொல்லாமல் வந்து இருப்பவர்கள் இவர்கள் மட்டுமே.

Suresh Kumar P : சொரணையில்லா தமிழா இதனால்தான் நீ இன்னும் அடிமையாக இருக்கிறாய்

Krish Murari : கூட்ட முன் வரிசையில் இருந்த நபர் எடுத்த படம் இது என்பது சின்ன பிள்ளைக்குக்கூடத்தெரியும். மற்றவர்களுக்கு இதை வைத்து பாஜகவை அசிங்கப்படுத்த காரணம் உண்டு. உங்களுக்கு என்ன அவசியம் என தெரியவில்லை சார்

Balasubramania Adityan T : நாற்காலியையாவது தவிர்த்து இருக்கலாமே.
இது எந்த ஊர்?

Krish Murari : கிராமமாகக்கூட இருக்கலாம். நாய் மட்டும் படுத்திருக்கும் காட்சியே தெளிவாக சொல்கிறது, எவனோ வயித்தெரிச்ச புடிச்சவன் செஞ்ச வேலைன்னு

 

கிராமப்புற தபால் சேவை ஊழியர் போராட்டத்தை ஆதரிப்போம் !

மூன்று மத்திய தொழிற்சங்கங்கள் தலைமையில் கிராமப்புற தபால் சேவை ஊழியர்கள் 16 நாட்களாக நடத்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஜூன் 7-ம் தேதி முடிவுக்கு வந்திருக்கிறது. தொழிலாளர்கள் அமல்படுத்தக் கோரிய ”கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கை”க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

மே 22-ம் தேதி தொடங்கிய இந்த வேலை நிறுத்தத்தில், நாடு முழுவதும் உள்ள 2.76 லட்சம் கிராமப்புற தபால் சேவை ஊழியர்கள் பங்கேற்றனர். அரசு ஊழியர்களிலேயே மிகவும் மோசமாக சுரண்டப்படும் பிரிவினர்களில் உள்ள கிராமப் புற தபால் சேவை ஊழியர்கள், அரசின் மோசடி பிரச்சாரங்களையும் மிரட்டல்களையும் மீறி 16 நாட்கள் உறுதியாக போராடி அரசை பணிய வைத்திருக்கின்றனர்.

வேலை நிறுத்தத்தை கைவிட்டால்தான் பேச்சு வார்த்தை நடத்துவோம் என்ற அச்சுறுத்தலுக்கு பணியாமல், பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காமல் நாடெங்கிலும் உள்ள 1.29 லட்சம் கிராமப் புற தபால் நிலைய கிளைகளில் பணி புரியும் இந்த ஊழியர்கள் போராட்டத்தை வெற்றி பெறச் செய்திருக்கின்றனர்.

தபால் துறையில் 150 ஆண்டுகளுக்கு முன்பு காலனிய ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட “துறைக்கு வெளியிலான முறை” கிராமப்புற தபால் சேவை ஊழியர் என்று பெயர் மாற்றப்பட்டு இன்றும் தொடர்கிறது. இந்த ஊழியர்கள் வேறு ஏதாவது தொழில் செய்து கொண்டே ஒரு நாளைக்கு 3 – 5 மணி நேரம் தபால் சேவைக்கான வேலைகளை செய்ய வேண்டும் என்பது இந்த வேலை வாய்ப்பின் அடிப்படை. ஆனால், நிர்ணயிக்கப்படும் இலக்குகளை எட்டுவதற்கு 8 – 10 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருப்பதால், இதையே முழுநேரமாகத்தான் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், முழு நேர வேலைக்கேற்ற ஊதியம் கொடுக்கப்படுவதில்லை.

இந்த இலட்சணத்தில் தரப்பட்டுள்ள வேலை நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கை எட்டாத தபால் நிலையங்கள், வேலை நேரத்துக்கு அப்பால் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் தபால் நிலையத்தை இயக்க வேண்டும் என்று சொல்கிறது கமலேஷ் சந்திரா அறிக்கை. ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதிய உரிமைகள், குழந்தைப் பேறு விடுப்பை 3 மாதத்திலிருந்து 6 மாதமாக அதிகரித்தல் உள்ளிட்ட கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரைகளைக் கூட நிறைவேற்றாமல் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இழுத்தடித்து வந்த அரசு வேலை நேரத்தை மட்டும் அதிகரிப்பது அயோக்கியத்தனமல்லவா?

ஆறு மாதங்களுக்கு முன்பு இது போன்ற வேலை நிறுத்தத்தின் போது 2 மாதங்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தபால் துறை இயக்குனர் வாக்குறுதி அளித்தும் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்துதான் சமீபத்திய வேலை நிறுத்தம் நடத்தப்பட்டு மத்திய அரசு கோரிக்கைகளை ஏற்பதாக பணிந்திருக்கிறது. இந்தத் துறையால் கிடைக்கும் பலன்களே இவ்வாறு பணிந்திருப்பதற்குக் காரணம்.

கிராமப் புறங்களில் தகவல் தொடர்புக்கும் நிதி சேவைகளுக்கும் அடிப்படையாக இந்த தபால் நிலையங்கள் இருப்பதாக மத்திய அரசின் தகவல் குறிப்பு தெரிவிக்கிறது. கிராமப் புற மக்களை வங்கி வளையத்துக்குள் கொண்டு வருவதற்கான இந்தியா தபால்துறை பணப் பட்டுவாடா வங்கி (India Post Payment Bank) திட்டத்துக்கு இந்த தபால் நிலைய வலைப்பின்னல் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அது குறிப்பிடுகிறது.

நாடெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளையும், கிராமப்புற தொழிலாளர்களையும் வங்கித் துறைக்குள் கொண்டு வருவது, அதன் மூலம் மக்களின் சேமிப்புகளையும், பண பரிவர்த்தனைகளையும் நிதித்துறை சூதாட்டத்துக்குள் ஈடுபடுத்த வசதி செய்வது என்ற மோடி அரசின் திட்டத்தை அமல்படுத்துவதற்கான காலாட்படையாக அரசு இந்தத் துறை ஊழியர்களை அரசு பார்க்கிறது.

எனவே, இந்த வேலை நிறுத்தத்தின் வெற்றி தொழிலாளி வர்க்கத்தின் நீண்ட போராட்ட பயணத்தின் ஒரு சிறிய அடிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கார்ப்பரேட், நிதி மூலதன ஆட்சியானது இவர்களை பயன்படுத்துவதும், தேவைகள் முடிந்த பின்னர் தூக்கி எறிந்து விடுவதும் எப்போதும் நடக்கக் கூடியவை. இந்த வேலை நிறுத்த அனுபவத்தை தொகுத்துக் கொண்டு அவர்கள் தமது அடுத்த போராட்டத்துக்குத் தயாராக வேண்டும்.

குமார்
புதிய தொழிலாளி, ஜூன் 2018 இதழில் வெளியானது

நன்றி: புஜதொமு – ஐ.டி. ஊழியர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை

இன்று மதியம் மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு | நேரலை | Live streaming

மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்புபத்திரிகையாளர் சந்திப்பு

02-07-2018

பெறுநர்,
ஆசிரியர் / நிர்வாகி அவர்கள்,
பத்திரிக்கை / தொலைக்காட்சி ஊடகம்

அன்புடையீர் வணக்கம்,

# மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது தூத்துக்குடி மீனவப் பிரதிநிதிகள் சொல்லும் குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

# துப்பாக்கிச்சூடு படுகொலை – தேசிய பாதுகாப்புச் சட்டம் – நூற்றுக்கணக்கான வழக்குகள் – கைது – சிறை!

# தூத்துக்குடி மாடல் போலீசு அடக்குமுறை!

இவைகள் குறித்து 03-07-2018, செவ்வாய்க்கிழமை, காலை 12:30 மணியளவில் சென்னை, சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த உள்ளோம். தங்கள் நிருபரையும், தொலைக்காட்சி ஊடகத்தினரையும் அனுப்பி செய்தி வெளியிடுமாறு கோருகிறோம்!

இவண்,
சி. வெற்றிவேல் செழியன்
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்
9176801656

தகவல்:
மக்கள் அதிகாரம்,
சென்னை

இந்த பத்திரிகையாளர் சந்திப்பு வினவு இணையதளத்திலும், வினவு ஃபேஸ்புக் பக்கத்திலும், வினவு யூடியூப் சேனலிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும். பாருங்கள், பகிருங்கள்.

 

அவள் விகடன் அறிய விரும்பாத சாதனைப் பெண்கள் – படக்கட்டுரை

” பொம்மிஸ் பெருமையுடன் வழங்கும் ’அவள் விருதுகள்’
பெண்ணென்று கொட்டு முரசே! இது மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நிறைந்த சாதனைப் பெண்களின் சங்கமம்! அனைவரும் வருக! ”

டந்த மார்ச் 14, 2018, அன்று சென்னை வர்த்தக மையத்தில் விகடன் குழுமம் நடத்திய ’அவள் விருதுகள்’ – ’சாதனை பெண்களின் சங்கமம்’ என்ற நிகழ்ச்சியின் பேனர் தாங்கி நின்ற வாசகம்தான் இது.

கிண்டி கத்திப்பாரா தொடங்கி நிகழ்ச்சி நடக்கும் வர்த்தக மைய கட்டிடம் வரை வழி நெடுக ஒரே கட்டவுட்டாக இருந்தது. விளம்பரத்துக்கான கட்டவுட்டின் ஒரு பகுதியில் சாதனை பெண்களான நடிகை, பாடகி, அரசியல்வாதி, சமூக சேவகி, இன்னும் பிற அறியப்படாத முகங்களும் புகைப்படங்களாக இருந்தன. மறு பகுதியில் இந்நிகழ்ச்சியை வழங்கும் விளம்பர நிறுவனங்களின் பெயர்களும் இருந்தன.

விளம்பர பேனரில் சாதனைப் பெண்களின் எண்ணிக்கையை விட விளம்பரங்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதிலும் பெண்கள் பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள்தான் இந்நிகழ்ச்சியை வழங்குகின்றன.

உள்ளே வரும் கார்களுக்கு வணக்கம் வைத்து வரவழைத்தவர்களிடம் “சார் நானும் நிகழ்ச்சிய பாக்கணும், உள்ள போக ஏதாவது வரைமுறை இருக்கா?” என விசாரித்தேன். ”பாஸ் இருக்கணும்” என்றனர்.

பாஸா!…. இல்லாத பாஸ எங்கிட்டு தேட? விழாக் கூடத்தின் வாசல் வரை முயற்சி செஞ்சும் ’சாதனை பெண்களின் சங்கமத்தை’ பாக்க முடியல.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை ’ஓவியா ஆர்மி’யையே உருவாக்க வைத்தற்காக ஓவியா, பதினெட்டு வருடம் திரையுலகில் நீங்கா இடம் பிடித்தற்காக ஜோதிகா, அழுகை ஆர்பாட்டம் இல்லாத நவீன நடிப்பை தருவதற்காக ஆன்ட்ரியா, இந்த அடிப்படையில் சாதனை பெண்களை அடையாளம் கண்டுள்ளது ’அவள் விகடன்’.

இவர்கள் எல்லாம் ஒளி வெளிச்சத்தில் மின்னும் மின்மினிகள். உழைப்பின் வலியோடு போராடும் வாழ்க்கையோடும் சாகும் வரை உறுதிபட எதிர் கொள்பவர்களே நம் பார்வையில் சாதனைப் பெண்கள். இதெல்லாம் “அவள் விகடனு”க்குத் தெரியாததல்ல. முன்னோடிப் பெண்கள் என்று அவர்கள் காட்ட விரும்புவது எளிய மக்களை அல்ல!

எத்தனை திறமை இருந்தாலும் ஏழ்மையை எதிர் கொள்வதிலேயே பல பேருக்கு முழு வாழ்க்கையும் போராட்டமாக அமைந்து விடும். அன்றாட பசியை போக்குவதே சாதனையாகிவிடும். கத்தியில் நடப்பது போலான இந்த வாழ்க்கையில் ஒரு நாள் பொழுது கழிவதே பெரும்பாடு. நாளைக்கேனும் சோறு கிடைக்குமா என்ற ஏக்கத்தோடு இன்றைய இரவை கழிப்போர் எத்தனையோ பேர்.

இவர்களையெல்லாம் வலை வீசி தேடிப் பார்க்க வேண்டியது கிடையாது. அவர்கள் நம் அருகே எல்லா இடங்களிலும் எப்போதும் வாழ்கிறார்கள். “அவள் விகடன்” பேனர் தாங்கிய சென்னை நகரம் முழுவதும் அவர்கள் ஊடக உலகம் அங்கீகரிக்க மறுக்கும் சாதனையை ஒவ்வொரு நிமிடமும் நிகழ்த்தி வருகிறார்கள். இவர்களெல்லாம் நாடாண்டால்தான் இந்தியா சாதனை படைக்கும்! ஓவியா, ஜோதிகா சாதனைகளால் என்ன கிடைக்கும்?

பாஞ்சாலி பாட்டி – ஆடு மேய்ப்பவர்
இந்த கிண்டிய ஒட்டின பகுதிலதான் ஆடு மேச்சுகினு என் பொழப்பு ஓடுது. பொறந்ததும் இங்கதான், வாக்கப்பட்டதும் இங்கதான். ஆடு மாடுதேன் எங்க சொத்து. கிண்டியாண்ட ஆரம்பிச்சு தாம்பரம் தாண்டி மேச்சுகினே போலாம். இப்ப மில்ட்ரி, ஏர்போட்டு, பெரிய ஆபிசுங்கன்னு அடைச்சிட்டதால செரமாமாருக்கு.

ரெண்டு வருசத்துக்கு முன்ன வெள்ளம் வந்துது பாரு, அப்ப செத்துருக்க வேண்டியது நானு. நடு ராத்திரி திடீர்னு தண்ணி வந்து வீட்டு சாமானெல்லாம் அடிச்சுகினு போவுது. வா பக்கத்தூட்டு மாடி மேல போயிர்லான்னு இழுக்குறான் எம்புள்ள. மனுசாளப் போலதானே ஆடு, அதுகள விட்டுட்டு வரமாட்டேனுட்டேன். ஆடு எல்லாத்தையும் மாடி மேல ஏத்துன பிறகுதான் நானும் போனேன்.

அரசாங்கம் குடுத்த அரிசிப் பருப்பும் பாயும் தலையணையும் வச்சுகிட்டு இன்னைக்கி வரைக்கும் குடும்பம் நடத்த முடியுமா?

பவானி, தாம்பரம். துப்புரவு தொழிலாளி
எங்க வீட்டுக்காரு வேலையதான் நான் பாக்குறே. அவருக்கு ஒடம்புக்கு முடியல. லீவு போட்டா சம்பளம் தரமாட்டாக. அதனால அவருக்கு பதிலா நானு வந்து வேலை செய்றேன். அவருக்கு வேலை போச்சுன்னா எங்குடும்பத்துல அஞ்சு பேரும் பட்டினிதான்.

எனக்கு ரத்தப் போக்கு அதிகமா இருக்கும். தலைக்கு ஊத்திகினா 20 நாளைக்காவது தீட்டு வந்துகினே இருக்கும். என்னால எந்த வேலைக்கும் போக முடியாது. எம்புருசன் சம்பாத்தியம் மட்டும் தான். அவரு லீவு போட்டா நானு வந்து செய்வேன். இல்லன்னா வீட்டு வேலைய பாத்துகினு இருந்துருவேன்.

அறிவுச்செல்வி மேடவாக்கம். சோளம் விற்பவர்.
எனக்கு மூனு பசங்க. மூத்தப் பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு குடுத்துட்டேன். அடுத்து பையன் 11-வது படிக்கிறான். அடுத்த பொண்ணு 9-வது படிக்கிறா. எங்கூட்டுக்காரு வேற ஏறியாவுல கடை போட்டுருக்காரு.

மூத்த பொண்ணுக்கு கல்யாணம் முடிக்கிற வரைக்கும் நான் எங்கையும் வேலைக்கி போனதில்ல. எங்கூட்டுக்காரு சாம்பாதிச்சுட்டு வருவாரு, நான் வீட்ட பாத்துப்பேன். எம்பொண்ணுக்கு வாங்குன கல்யாண கடனுக்கு வட்டி கட்டி எங்களால மீண்டு வரமுடியல. அதனாலதான் நானும் தொழிலுக்கு வந்துட்டேன். இந்த கடன அடைக்கிறதுக்குள்ள, அடுத்து பொண்ணு கல்யாணம், பய படிப்புன்னு என்ன செய்யப் போறேன்னே தெரியல.

விஜயா கோடம்பாக்கம். வீட்டு வேலை செய்பவர்.
இன்னைக்கி நான் சந்தோசமா இருக்கேன் இனிப்பு எடுத்துக்குங்க. (மிட்டாய் கொடுத்தார்) எம் பொண்ணு பி.இ முடிச்சுட்டு வேலைக்கி போயி நேத்துதான் முதல் மாசம் பதினஞ்சாயிரம் சம்பளம் வாங்கிட்டு வந்தா. என்னோட கவலையெல்லாம் தீந்துட்டு. இருவது வருசத்துக்கு முன்ன அறியாத பிள்ளைய வச்சுகிட்டு திண்டாடி நின்னேன். நம்பிக்கைய எழந்துட்டமின்னா எழுந்திருக்கவே முடியாது போயிருமுன்னு மனசுல தைரியத்த வளத்துகிட்டு எம்பிள்ளைய படிக்க வச்சு சாதிச்சுட்டேன்.

எம்பொண்ணு அஞ்சு வயசாருக்கும் போது என்ன புடிக்கலன்னு சொல்லிட்டு வேற ஒருத்திக்கூட ஓடிட்டான் எம்புருசன். ஏழட்டு பேரோட பொறந்த நான் வசதி வாய்ப்பு இல்லாமெ ஒம்பது வயசுல வீட்டு வேலை பாக்க ஆரம்பிச்சேன். இன்னைக்கி வரைக்கும் பாத்துகிட்டே இருக்கேன். பத்து வருசமா ஆபீஸ்ல ஆயா வேல பாக்குறேன். அது போக ரெண்டு வீட்டுலயும் பாக்குறேன். கடன் வாங்கி சீட்டு போட்டு எப்படியோ படிக்க வச்சுட்டேன். பாதி கடனையும் அடச்சுட்டேன். மறுபடியும் சொல்றேன் இன்னைக்கி நான் சந்தோசமா இருக்கேன்.

ஜோதியம்மா,பழம் விற்பவர், நுங்கம்பாக்கம்.
எனக்கு எழு பிள்ளைங்க. எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்ளேருந்து இந்த யாவரம்தான். இப்ப எம்பிள்ளைங்க பேரப்பிள்ளைங்க எல்லாருமே இந்த மார்கெட்டுலதான் வியாபாரம் பாக்குறோம். பூ, பழம், வேர்க்கடலை, கீரை ஆளுக்கொன்னா விப்போம். வித்து முடிச்ச ஆளுங்க விக்காதத எடுத்துட்டு போயி விக்கணும். எம்பிள்ளைங்களுக்கு தொணையா குந்திகினுருக்கேன்.

முனியம்மா, கிண்டி, பூ விற்பவர். (உள்படம் – காப்பு காய்ச்சிய அவரது கைகள்)
எனக்கு ரெண்டு பொண்ணுங்க. ரொம்ப வருசத்துக்கு முன்னயே வீட்டுக்காரு செத்துட்டாரு. இந்த பூக்கட்டிதான் பொண்ணுங்கள கர சேத்தேன். ஒரு மருமகன் குடிகாரன் வாழ வைக்காமெ வெரட்டி விட்டுட்டான். பேத்தியோட வந்து எங்கூடதான் இருக்கா. 12 வருசமா நான்தான் பாத்துக்கிறேன். இப்ப பேத்திய பொண்ணு பாத்துட்டு போயிருக்காங்க. கல்யாணத்துக்கு 50,000 ரூவா செலவாகும். வட்டிக்கிதான் கேட்டிருக்கேன். பூக்கட்டி கட்டி கையெல்லாம் காச்சுருந்தாலும் ஒரு நாள் ஒடம்புக்கு முடிலன்னு படுக்க மாட்டேன். அதனால நம்பி பணம் குடுப்பாங்கன்னு காத்துருக்கேன்.

சரோஜா, மடுவாங்கரை, தர்பூசணி விற்பவர்.
ரெண்டு பிள்ளைங்கள பெத்தேன். ரெண்டும் கைவிட்டுட்டுதுங்க. பத்து வருசத்துக்கு முன்னமே புருசன் போயி சேந்துட்டாரு. இப்ப யாரும் இல்லாத அனாதையா இருக்கேன். கடன் தொல்லை எதுவும் இல்ல. வர்ற வருமானத்துல 1000 ரூபா வீட்டு வாடகை போக சாப்பாட்டுக்கு வந்துரும். ஒடம்புக்கு முடியலன்னா ஒரு சுடுதண்ணி வச்சுக் குடுக்கவோ ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போகவோ யாருமே கெடையாது.

  • வினவு புகைப்படச் செய்தியாளர்.

ஐஃபோன் – ஆயத்த ஆடை : சீன – வங்கதேச தொழிலாளரைச் சுரண்டும் அமெரிக்கா – ஜெர்மனி !

h&m shirt and workers protest
ஜி.டி.பி மாயை : மதிப்புக் கூட்டலும் மதிப்பு கைப்பற்றலும் – ஜான் ஸ்மித்

பாகம் :3

ஜான் ஸ்மித் லண்டனில் உள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல், அரசியல் பொருளாதாரம், மனித உரிமைகள், இனப்படுகொலை துறைகளின் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். ஏகாதிபத்தியமும் உலகமயமாக்கலும் பற்றிய அவரது எதிர்வரும் புத்தகத்தை மன்த்லி ரிவியூ பிரஸ் வெளியிடவிருக்கிறது.

ப்பிள் ஐ-ஃபோன் உலகமயமாக்கப்பட்ட உற்பத்தியின் பொதுவான போக்குகளையும், அடிப்படை உறவுகளையும் மிகைப்படுத்தப்பட்ட அதீத வடிவில் வெளிப்படுத்துகிறது. 2010-ல் ஹோன் ஹாய் ஒரு ஊழியருக்கு $2,400 என்ற வீதத்தில் மொத்தம் $240 கோடி லாபம் ஈட்டியது. ஹோன் ஹாயின் லாபத்தை ஆப்பிளின் லாபத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆப்பிள் தனது 63,000 ஊழியர்கள் (அவர்களில் 43,000 பேர் அமெரிக்காவில் உள்ளனர்) ஒவ்வொருவருக்கும் தலா $2.63 லட்சம் லாபம் ஈட்டியது. 2012-ல் ஆப்பிளின் ஒரு ஊழியருக்கான லாபத் தொகை $4.05 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 11, 2011ல் ஹோன் ஹாயின் பங்கு விலை அடிப்படையிலான சந்தை மதிப்பு $3,690 கோடி. தனது பெயரில் ஒரு தொழிற்சாலை கூட இல்லாத ஆப்பிளின் பங்குச் சந்தை மதிப்பு $32,430 கோடி. 11

apple head office
தனது பெயரில் ஒரு தொழிற்சாலை கூட இல்லாத ஆப்பிளின் பங்குச் சந்தை மதிப்பு $32,430 கோடி

அதற்குப் பிந்தைய ஒரு ஆண்டில் ஆப்பிளின் பங்கு விலை இன்னும் பல மடங்கு அதிகரித்து அதன் பங்குச் சந்தை மதிப்பு $60,000 கோடியை தாண்டியது. அதன் மூலம் எக்சான் மொபில் நிறுவனத்தை தாண்டி உலகின் மிக அதிக பங்குச்சந்தை மதிப்புடைய நிறுவனம் என்ற பெருமையைக் கைப்பற்றியது ஆப்பிள். அதன் பங்கு விலையை மேலும் அதிகரிக்கச் செய்யும் விதமாக, ஆப்பிள் $11,000 கோடி நிதிக் கையிருப்பை குவித்திருக்கிறது, அந்த நிதியை ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் எந்த வழிமுறையும் அதனிடம் இல்லை.

“அதிகரித்து வந்த தொழிலாளர் போராட்டங்களைத் தொடர்ந்த சீன கூலி அதிகரிப்பு, ஆப்பிள் (மற்றும் பிற நிறுவனங்களின்) உற்பத்தி செய்ய வேண்டிய பொருட்களின் சிக்கல் அதிகரிப்பதால் தேவைப்படும் கூடுதல் உற்பத்தி நேரம், கடுமையான ஒப்பந்த நிபந்தனைகள்” ஆகிய இரட்டைத் தாக்குதலுக்கு ஹோன் ஹாயின் லாபங்களும், பங்கு விலையும் கடும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளன.12 இதை “உற்பத்தியாளரின் துயரநிலையும், வணிகமுத்திரையின் வளமும்” என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. 2005-க்குப் பிறகு ஆப்பிளின் பங்கு விலை 10 மடங்கு அதிகரித்த நிலையில், அக்டோபர் 2006-க்கும் ஜனவரி 2011-க்கும் இடையே ஹோன் ஹாயின் பங்கு விலை கிட்டத்தட்ட 80% வீழ்ச்சியடைந்தது. “முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு ஊழியருக்குமான செலவு சரியாக மூன்றில் ஒரு பங்கு அதிகரித்து $2,900-க்கு சற்றுக் குறைவாக இருந்தது. மொத்த ஊதியச் செலவு $27.2 கோடி; இது மொத்த லாபத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு… சீனாவில் அதிகரித்து வரும் ஊதிய அளவு மின்னணு பொருட்களுக்கான உலகின் மிகப்பெரிய ஒப்பந்த உற்பத்தி நிறுவனத்தின் மொத்த லாபத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு 4-5% என்பதிலிருந்து இப்போது 1.2% அளவுக்குக் குறைத்திருக்கிறது.”13

foxconn
“உற்பத்தியாளரின் துயரநிலையும், வணிகமுத்திரையின் வளமும்” – Hon Hai

இன்னும் மலிவான உழைப்பைத் தேடியும், மேலும் மேலும் போராட்ட குணம் அதிகமாகும் ஷென்சென் தொழிலாளர்களை சார்ந்திருப்பதை குறைப்பதற்காகவும், ஹோன் ஹாய் “சீனாவின் கடலோர பிரதேசங்களிலிருந்து உள்நாட்டுக்கு உற்பத்தியை மாற்றுவதற்காக கணிசமான அளவு முதலீடு செய்திருக்கிறது. மேலும், அதன் தொழிற்சாலைகளில் எந்திரமயமாக்கலை அதிகரித்து வருகிறது. இவற்றின் விளைவாக ஏற்கனவே பலவீனமாக இருக்கும் ஹோன் ஹாயின் லாப வீதம் சென்ற ஆண்டு மேலும் சுருங்கியது..”14 என்று பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையாளர் ராபின் க்வாங் தகவல் தெரிவிக்கிறார். கணிசமாக அதிகரிக்கும் ஊதியச் செலவுகள், பெருமளவு முதலீட்டுச் செலவு, ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து தமது செலவுகளைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகள் (அதாவது ஏற்றுமதி விலை வீழ்ச்சி) ஆகியவை மட்டும் போதாது என்று, ஹோன் ஹாய்க்கும் சீனாவுக்கும் பிரதானமாக உள்ள மேற்கத்திய ஏற்றுமதி சந்தைகளில் வேண்டல் குறைந்து அவை நெருக்கடியில் உள்ளன. இது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. “சீனாவில் அத்தனை தொழிற்சாலைகளை கட்டியிருக்கும் இந்நிலையில் கோவ் எதிர்கொள்ள விரும்பாத ஒரு விஷயம் வேண்டல் வீழ்ச்சி” என்று முடிக்கிறார் குவாங். 15

சட்டை

ஐ-ஃபோனின் கண்ணைக் கவரும் கவர்ச்சியும், போற்றப்படும் அதன் வணிகமுத்திரை (பிராண்ட்) அந்தஸ்தும் அதன் உற்பத்தி உலகளாவிய சமூக பொருளாதார உறவுகளில் சுரண்டலும் ஏகாதிபத்தியமும் அடங்கியிருப்பதைப் பார்க்க முடியாதபடி நம்மை மயக்கி விடலாம். ஆனால், இந்த அடிப்படையிலான உறவுகள், பல்வேறு வகையான நுகர்வு பண்டங்கள் அனைத்தின் உற்பத்தியிலும் செயல்படுகின்றன. உதாரணமாக, ஒரு எளிய சட்டையை எடுத்துக் கொள்வோம். “சீன விலையின் உண்மையான பொருள் என்ன?” என்ற கட்டுரையில் டோனி நார்ஃபீல்ட் வங்கதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்டு ஸ்வீடனைச் சேர்ந்த நுகர்பொருள் விற்பனையாளர் ஹென்னஸ் & மவுரிட்ஸ் (H&M) ஜெர்மனியில் விற்கும் ஒரு சட்டையின் கதையைச் சொல்கிறார். H&M வங்கதேச உற்பத்தியாளருக்கு ஒவ்வொரு சட்டைக்கும் €1.35 விலை கொடுக்கிறது. அது இறுதி விற்பனை விலையில் 28 சதவீதம் ஆகும். இந்த விலையில் 0.40 யூரோ அமெரிக்காவிலிருந்து வங்கதேசத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் 400 கிராம் பருத்தி மூலப்பொருளுக்குப் செலவழிக்கப்பட்டு விடுகிறது.

h&m
ஏழை நாடுகளில் தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவது, பணக்கார நாடுகளின் மக்களுக்கு நேரடி பொருளாதார ஆதாயத்தை அளிக்கிறது

இந்த €1.35-க்கு மேல் சட்டையை ஹாம்பர்க் நகருக்கு அனுப்புவதற்கு 0.06 யூரோ செலவாகிறது. விற்பனை விலையான €4.95-ல் எஞ்சிய €3.54 சட்டை நுகரப்படும் ஜெர்மனியின் ஜி.டி.பி-ல் சேர்க்கப்படுகிறது. அந்தத் தொகை பின்வருமாறு பிரித்துக் கொள்ளப்படுகிறது:

  • ஜெர்மன் போக்குவரத்து நிறுவனங்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனைக் கடைகள், விளம்பரதாரர்கள் ஆகியோருக்கான செலவுகளுக்கும் லாபத்துக்கும் €2.05 (அவற்றில் சிறுபகுதி பல்வேறு வரிகள் மூலமாக அரசுக்கு திருப்பி விடப்படுகிறது).
  • ஒவ்வொரு சட்டைக்கும் H&M 0.60 யூரோ லாபம் சம்பாதிக்கிறது.
  • ஜெர்மன் அரசு 19 சதவீதம் மதிப்புக் கூடுதல் வரி (வாட்) மூலம் விற்பனை விலையில் 0.79 யூரோக்களை கைப்பற்றுகிறது;
  • எஞ்சிய 0.16 யூரோ இதர செலவுகளுக்கு செல்கிறது.16

இவ்வாறாக, “விற்பனை விலையிலிருந்து பெறப்படும் வருமானத்தில் பெரும்பகுதி, வரிகளாக அரசுக்கும், ஜெர்மனியின் பலதரப்பட்ட தொழிலாளர்கள், மேலாளர்கள், கட்டட உரிமையாளர்கள், மற்றும் நிறுவனங்களுக்கு செல்கின்றது“. மலிவான சட்டைகளும், இறக்குமதி செய்யப்பட்ட பலவகையான பண்டங்களும், ஏகாதிபத்திய நாடுகளின் நுகர்வோருக்குக் குறைந்த விலையில் கிடைப்பதோடு, அந்நாடுகளின் அரசுக்கும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வருமானத்துக்கான முக்கிய தோற்றுவாயாகவும் உள்ளன.”

bangaladesh workers protest
குறைந்த கூலியை எதிர்த்து போராடும் வங்கதேச தொழிலாளர்கள்

வங்கதேச தொழிற்சாலை ஒரு நாளைக்கு 1.25 லட்சம் சட்டைகளை உற்பத்தி செய்கிறது. அவற்றில் பாதி H&M-க்கும் எஞ்சியவை பிற மேற்கத்திய நுகர்பொருள் விற்பனை நிறுவனங்களுக்கும் விற்கப்படுகின்றன. 85 சதவீதம் பெண்களால் வேலை செய்யும் அந்தத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் 10-12 மணி நேரத்திலான ஒரு வேலை நாளுக்கு €1.36 கூலி பெறுகின்றனர். ஒவ்வொரு தொழிலாளியும் இயக்கும் எந்திரம் மணிக்கு 250 சட்டைகளை உற்பத்தி செய்கிறது, அல்லது தொழிலாளியின் கூலியில் ஒவ்வொரு 0.01 யூரோவுக்கும் 18 சட்டைகள் உற்பத்தியாகின்றன.

இந்த ஆலை வங்க தேசத்தில் உள்ள 35 லட்சம் பேரை உற்பத்தியில் ஈடுபடுத்தியுள்ள 4,500 ஆடை நிறுவனங்களில் ஒன்று. “ஏகாதிபத்திய நாடுகளில் பல தரப்பட்ட விற்பனை உதவியாளர்கள், சுமை வண்டி ஓட்டுனர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், கணக்காளர்கள், விளம்பர அலுவலர்கள் மற்றும் விரிவான மக்கள் நல வழங்கல்கள், மற்றும் பலவும் எப்படி சாத்தியமாகின்றன என்பதற்கு இந்தக் குறைந்த கூலிகள் பகுதியளவு விளக்கம் தருகின்றன” என்று கூறுகிறார் நார்ஃபீல்ட். வங்கதேசத்தின் கூலி அளவுகள் குறிப்பிடத்தக்க அளவு குறைவுதான், ஆனால் ஒப்பீட்டளவில் அதிகக் கூலி மட்டம் நிலவும் மற்ற மூன்றாம் உலக நாடுகள் பற்றிய ஆய்வுகளும் இதே மாதிரியான முடிவுக்கே நம்மை இட்டுச் செல்கின்றன : ஒப்பீட்டளவில் ஏழை நாடுகளில் தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவது, பணக்கார நாடுகளின் மக்களுக்கு நேரடி பொருளாதார ஆதாயத்தை அளிக்கிறது.17

11.Source for Hon Hai and Apple’s profits is “The World’s Biggest Public Companies,” Forbes, April 2012, http://forbes.com.
12.Julie Froud, et. al., Apple Business Model—Financialization Across the Pacific, CRESC Working Paper No. 111, April 2012, http://cresc.ac.uk , 20.
13.Lex, “Hon Hai / Foxconn: wage slaves,” Financial Times, August 30, 2011, http://ft.com.
14.Robin Kwong, “Hon Hai Bracing for Recession,” Beyond Brics (Financial Times blog), January 10, 2012, http://blogs.ft.com.
15.Ibid.
16.Tony Norfield, “What the ‘China Price’ Really Means,” June 4, 2011, http://economicsofimperialism.blogspot.com. His source for this data is “Das Welthemd” [“The World Shirt”], December 17, 2010, http://zeit.de.
17.Ibid.

– தொடரும்

முந்தைய பாகங்கள்:

  1. ஆப்பிள் ஐஃபோன் தரமும் ஷென்சென் நகர தொழிலாளிகளின் தற்கொலையும் !
  2. ஆப்பிள் நிறுவனம் சீனாவிலிருந்து திருடுவது எவ்வளவு ?

மொழிபெயர்ப்பு : குமார்
ஆங்கில மூலம் : Value Added versus Value Capture by John Smith
நன்றி : Monthly Review

நன்றி: புஜதொமு – ஐ.டி. ஊழியர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை.

பொய் வழக்குகளுக்கு எதிராக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கலகம் !

1
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கலகம்

ம் மீது போடப்பட்ட பொய் வழக்குகளுக்கு எதிராக போலீசு காவலில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கலகம் ! வேறு வழியின்றி நீதிமன்றக் காவலுக்கு திருப்பி அனுப்பியது போலீசு !

கடந்த 29.06.2018 அன்று, தூத்துக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 3-ல், வழக்கறிஞர் வாஞ்சிநாதனை போலீசு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு தூத்துக்குடி போலீசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, குற்ற எண் 317/ 2018 – ஸ்டெர்லைட் குடியிருப்பில் ஹோண்டா சிட்டி கார் எரிப்பு வழக்கில், வழக்கறிஞர் வாஞ்சிநாதனை போலீசு காவலில் எடுத்து விசாரிக்க, அன்றைய தினம் (29.06.2018) மாலை 4 மணி முதல் திங்கள்கிழமை (02.07.2018) காலை 11 மணி வரையில் அனுமதி அளித்தது.

இதனைத் தொடர்ந்து, போலீசு காவல் விசாரணையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதனை, டி.எஸ்.பி. முத்தமிழ், ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் கணேஷ்குமார் ஆகியோர், வேறு சில வழக்கறிஞர்களோடு அவர் பேசியதாக ஒத்துக் கொள்ளக் கூறி வற்புறுத்தியிருக்கின்றனர். மேலும் இந்த வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத வகையில், அவரை மதுரையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றிருக்கின்றனர்.

இந்த வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து ஒத்துழைக்க மறுத்திருக்கிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். தனி நபராக தமது ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கியுள்ளார். மேலும் கடந்த சனிக்கிழமை (30.06.2018) அன்று காலை 7 மணி முதல் சிப்பி போலீசு நிலையத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன் காரணமாக வழக்கறிஞர் வாஞ்சிநாதனை (30.06.2018) அன்று தூத்துக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 2-ல் நேர்நிலைப்படுத்தி, அவரை மீண்டும் நீதிமன்றக் காவலுக்கே இரவு 8 மணிக்கு திருப்பி அனுப்பி வைத்தது.

தகவல்:
ஜிம்ராஜ் மில்டன்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

மக்கள் அதிகாரத்திற்கு எதிராக புகார் கொடுக்குமாறு மீனவ சங்க பிரதிநிதிகளை மிரட்டிய போலீசு !

பத்திரிகைச் செய்தி

02.07.2018

 மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி மீனவ சங்க பிரதிநிதிகள் புகார் மனு கொடுக்க போலீசின் அச்சுறுத்தலே காரணம்.

மேற்படி மனுவை சாக்காக வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பைப் பற்றி தீவிரவாதி, பயங்கரவாதி, என  பா.ஜ.க. அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் பேச்சு கண்டிக்க தக்கது. பாசிச இந்துத்வா கொள்கையை வைத்துக்கொண்டு மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி தீவிரவாதம், பயங்கரவாதம் என பேசுவது, வேடிக்கையானது.

மீனவ பிரதிநிதிகள் கொடுத்த புகார் மனுவில்……

“காவல் துறையினரால் மீனவ மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். மீனவ மக்கள் மீது வழக்குகள் பதிய தேடுதல் என்ற பெயரில் நெருக்கடிகள் கொடுத்து இதனால் அமைதியற்ற சூழலில் பய உணர்வுடன் வாழ்ந்து வருகிறோம்.

தற்போது அந்த 2 வழக்கறிஞர்களும் தங்களை காத்துக்கொள்வதற்காக உயர் நீதிமன்றத்தில் மீனவ அமைப்புகளே மே22 போராட்டத்தை முன்னெடுத்து சென்றன என்றும், தங்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தவறான வாதங்களை முன்வைப்பதாக அறிகிறோம்.

‘‘தூத்துக்குடி வன்முறை சம்பவத்துக்கும் மீனவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மக்கள் அதிகாரம் அமைப்பினர்தான் இளைஞர்களை மூளைச் சலவை செய்து, உணர்வுகளைத் தூண்டி மே 22 போராட்டத்தில் பங்கேற்க செய்தனர்’’ என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரிடம் மீனவர் அமைப்பு நிர்வாகிகள் 29-6-2018 அன்று மனு அளித்தனர்“.

மொத்த மனுவின் சாரம் மேற்கண்ட சில வரிகள்தான்.

நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்து, யாரை வேண்டுமானாலும் கைது செய்கிறது போலீசு. ஸ்டெர்லைட்டைவிட அதிக ஆபத்து போலீசின் இந்த அடக்குமுறைதான். ஒரு சில மீனவ சங்க நிர்வாகிகளை அச்சுறுத்தி மூளைச்சலவை செய்து, இரண்டு வழக்கறிஞர்கள் மீதும், மக்கள் அதிகார அமைப்பின் மீதும் அவதூறு பிரச்சாரத்தை போலீசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. மே 22 போராட்டம் மீனவ அமைப்புகள் முன்னெடுத்தார்கள் என எந்த நீதிமன்றத்திலும் யாரும் சொல்லவில்லை. மீனவ சங்க பிரதிநிதிகள் கொடுத்த மனுவில் போலீசின் தற்போதைய அடக்குமுறையை கண்டித்து, துப்பாக்கிச்சூடு படுகொலையை கண்டித்து ஒரு வரிகூட கிடையாது. அவர்கள் சுதந்திரமாக இந்த புகாரை கொடுக்கவில்லை. இரு வழக்கறிஞர்களும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் அல்ல. போலீசு தனது பித்தலாட்ட நடவடிக்கையை நியாயப்படுத்த அவ்வாறு இட்டுகட்டி பரப்பி வருகிறது.

போராடும் மக்களுக்கு உண்மையாக உதவியதற்காக இன்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் எண்ணற்ற வழக்குகளில் போலீசின் சித்ரவதையில் பாளையம் கோட்டை சிறையில் உள்ளார். எப்போது வெளியே வருவார் என தெரியாது. எதையும் செய்யத் தயங்காத போலீசார் உயிரோடு விடுவார்களா என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. பல கோடிகள் புரளும் மதுரை பல்கலைகழக துணைவேந்தரை உச்சநீதிமன்றம் வரை சென்று பணி நீக்கம் செய்தவர் வாஞ்சிநாதன். வழக்கறிஞர் தொழிலில் பல லட்சங்கள் சம்பாதிக்கும் திறமை உடையவர்.

வழக்கறிஞர் அரிராகவன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார். நீதிமன்றத்தில் அவரை பற்றி விசாரித்துப் பாருங்கள். மக்கள் அதிகாரம் அமைப்பின் கொள்கை செயல்பாடு பற்றி தமிழக மக்கள் அறிவார்கள். இந்நிலையில் போலீசார் சொல்வதை வேறு வழியில்லாமல் புகாராக கொடுத்த மீனவ பிரதிநிதிகளின் மனுவை அப்படியே அனைத்து பத்திரிக்கைகளும் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு போல் வெளியிட்டதன் நோக்கம் நேர்மையற்றது.

மே 22 போராட்டம் தூத்துக்குடி மக்கள் நடத்திய மாபெரும் தன்னெழுச்சி போராட்டம். ஜல்லிகட்டுபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதியாக பெரும் மக்கள்திரள் அமர்ந்து விட்டால் என்ன செய்வது?. அதனால்தான் ஸ்டெர்லைட்டும், போலீசாரும் திட்டமிட்டு வன்முறை வெறியாட்டத்தை நடத்தி போராட்டத்தை முடித்து உள்ளனர். தமிழகத்தில் இனி யாரும் எதற்கும் போராடக்கூடாது என்பதன் அச்சுறுத்தல்தான் தூத்துக்குடி மாடல் துப்பாக்கிசூடு படுகொலை மற்றும் அதன்பிறகான போலீசின் அடக்குமுறைகள்.

இந்த படுகொலை குற்றத்தை திசை திருப்ப யார்மீது பழிபோடுவது என ‘பொறியில் அகபட்ட எலி’யாக தூத்துக்குடி போலீசு துடிக்கிறது. தென் மாவட்டங்களில் மக்கள் அதிகார அமைப்புத் தோழர்களை, ஏறத்தாழ அனைவரையும் மோசடியாக ஒப்புதல் வாக்குமூலத்தில் ஜோடித்து எழுதி வைத்துக்கொண்டு வீடுவீடாக வேட்டையாடி வருகிறது. 19 வயதுடைய இரண்டு மாணவர்கள் உள்ளிட்டு ஆறு தோழர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், இரண்டு தோழர்கள் மீது 52-க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைது. என்.எஸ்.ஏ. சரவணன் என்ற கூலித்தொழிலாளி, வலிப்பு நோயால் அவதி பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சையின்றி சித்ரவதையை அனுபவத்து வருகிறார். அவரை ஈவு இரக்கமின்றி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்துள்ளார்கள்.

மக்கள் அதிகாரத் தோழர்கள் எந்த வன்முறை தீ வைப்பு சம்பவத்திலும் ஈடுபடவில்லை. எந்த ஆதாரத்தையும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யோ, அல்லது பா.ஜ.க அமைச்சர் பொன்னாரோ காட்ட முடியாது. தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை பா.ஜ.க. அதிமுக தவிர தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் அங்கு சென்று ஆதரித்தார்கள். எந்தப் பாகுபாடு, வேறுபாடுமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து போராடினார்கள். இதில் மூளைச்சலவை எங்கு வருகிறது? வெளியிலிருந்து தூண்டுவது எங்கு வருகிறது? இதில் யார் சமூக விரோதிகள்? ஸ்டெர்லைட்டை மூடி விட்டார்கள் என்ற ஆத்திரத்தின் வெளிப்பாடுதான் பா.ஜ.க பொன்னாருக்கு ஒருவிதமாகவும், ஜக்கி வாசுதேவ், பாபா ராம் தேவ் சாமியாருக்கு வேறுவிதமாகவும் வெளிப்படுகிறது.

பா.ஜ.க. அமைச்சர் “ பயங்கரவாதிகள் சமூக வலைதளங்கள், ஊடகங்கள் மூலமாக வலம் வருகின்றனா். அரசியல் கட்சிகளிலும் பயங்கரவாதிகள் நுழைந்து இருக்கிறார்கள். பயங்கரவாத அமைப்புகளை தடை செய்தால் வேறு பெயரில் செயல்படுவார்கள் அதனால் அவா்களை கரு அறுக்க வேண்டும். வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்” என தூக்கத்தில் நடக்கும் வியாதி போல் பிதற்றிவருகிறார்.

மீத்தேன், கெயில், சேலம் விமான நிலைய விரிவாக்கம், எட்டுவழிச்சாலை, சாகர்மாலா, ஆகியவற்றால் பாதிக்கபட்ட மக்கள் போராடுகிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை நேரடியாக சென்று ஆதரிக்கவோ, எதிர்க்கவோ முடியாத இந்த பாசிச கோழைகள்தான், மக்களோடு மக்களாக நின்று போலீசின் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்புகளை பற்றி தீவிரவாதி, பயங்கரவாதி என பீதியூட்ட முயல்கிறார்கள்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் சதி வழக்கை உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்கட்டும். கொலைகார போலீசே கொலைக்கான காரணத்தை விசாரிக்கிறது. ஸ்டெர்லைட்டிடம் கோடிகணக்கில் பணம் பெற்ற பா.ஜ.க கட்சியை சார்ந்த அமைச்சர் தீவிரவாதம், பயங்கரவாதம் என போலீசை உசுப்பேற்றி விடுகிறார். இதன்மூலம் அனைத்து மக்கள் போராட்டங்களையும் போலீசு அடக்கி ஒடுக்க வேண்டும் என பிரச்சாரம் செய்கிறார்கள். பொது அமைதிக்கு, பொது ஒழுங்குக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தால்தான் தமிழகத்தில் அமைதி நிலவும். அதற்காக அனைவரும் போராட வேண்டும்.

இப்படிக்கு,
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
பேச: 99623 66321

தருமபுரி : 8 வழிச்சாலையை எதிர்த்துப் பிரச்சாரம் | மக்கள் அதிகாரம் 8 தோழர்கள் சிறை

டந்த ஜூன் 18-ம் தேதியன்று சேலம் 8 வழிச்சாலை பற்றி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 7 தோழர்களை பென்னாகர போலீசு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட தோழர்கள் மீது, மக்களை வன்முறைக்குத் தூண்டியதாகவும், மிரட்டி பணம் வசூலித்ததாகவும் பொய் குற்றச்சாட்டைக் கூறி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் பத்திரிகைகள் மூலமாகவும் இந்த அவதூறுகளைப் பரப்புகிறது போலீசு .

மக்கள் அதிகாரம், மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்காகவும், அரசிடம் அனுமதி பெற்று ஜனநாயக ரீதியில் தொடர்ந்து பிரசாரமும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தும் ஓர் ஜனநாயக அமைப்பு; அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வினை மக்களிடத்தில் தெளிவாக எடுத்துரைக்கின்ற அமைப்பு.

சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக கதறியழும் மக்கள்

பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்கு அடிபணிந்து, அதனால் சொந்த நாட்டு மக்களையே காவு வாங்கும் அரசை எதிர்த்து மக்கள் அதிகாரம் மட்டுமல்ல, அனைத்து ஜனநாயக அமைப்புகள், முற்போக்கு சக்திகளுமே கேள்வி எழுப்புவார்கள். இந்திய அரசியல் சாசன சட்டப்படி, கருத்துகளை வெளியிட முழு உரிமையும், சுதந்திரமும் நாட்டு மக்களுக்கு உண்டு. அதைத்தான் மக்கள் அதிகாரம் செய்து வருகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதல் இப்பொழுது சேலத்தில் வலுக்கட்டாயமாக நிலங்களை பறித்து அமைக்கப்படவிருக்கும் எட்டுவழி சாலை வரை மக்கள் அதிகாரம் உள்ளிட்டு அனைத்து முற்போக்கு, ஜனநாயக அமைப்புகளும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் தொடர்ச்சியாக நடத்தி வருகிறன்றன.

ஆனால், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சார்ந்தவர்களை மட்டும் வலுக்கட்டாயமாக கைது செய்து பொய் வழக்கில் சிறையில் அடைத்து மக்களிடத்தில் ஒரு பீதியை உண்டாக்குகிறது போலீசு.

கடந்த மாதம் மே22-ல் தூத்துக்குடியில் போலீசால் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். எதற்காக இவர்கள் கொலை செய்யப்பட்டார்கள், யாருக்காக கொல்லப்பட்டார்கள்?, ஆகிய கேள்விகளை மக்கள் முன் வைக்கின்றனர். புற்றுநோயை உண்டாக்கும் இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தை இழுத்து மூட வேண்டுமென 22 வருடங்களாக மக்கள்தான் போராட்டம் நடத்துகிறார்கள். மக்களுக்கு ஒரு பிரச்சினை எனில் அவர்களுடன் கைகோர்க்க வேண்டியது அனைத்து முற்போக்கு அமைப்புகளின் கடமை. அவ்வாறு கைகோர்த்தால் தேசிய பாதுகாப்பு சட்டமும், பயங்கரவாத தடுப்பு சட்டமும் பாய்கிறது எனில், இந்த அரசு யாருக்காக இருக்கிறது?

சேலத்தில் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், எட்டு மலைகள், நூற்றுக்கணக்கான ஏரிகள், குளங்களை அழித்து விட்டு எட்டு வழிச்சாலையை அமைக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதனால் மக்களின் நிலங்கள் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டு வருகின்றன.

பல இலட்சம் மரங்கள் அழியப் போவதை கருத்தில் கொண்டு 277 கிமீ தொலைவிற்கு 3 இலட்சம் மரக்கன்றுகள் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலைக்காக பல லட்ச மரங்கள் அழிக்கப்பட்டன. அதற்காக இன்னும் ஒரு செடியைக்கூட இந்த அரசு நடவில்லை. அதே போல திண்டிவனம்-செஞ்சி-கிருஷ்ணகிரி வழி நெடுஞ்சாலை அமைக்க வேண்டி நீண்ட நாட்களாக போராடி வரும் மக்களிடம் நிதி இல்லை எனும் அரசு, தற்போது 10 ஆயிரம் கோடி செலவில் யாருக்காக இயற்கை வளங்களை எல்லாம் அழித்து யாருடைய நலனுக்காக இந்த எட்டு வழி சாலையை அமைக்க போகிறது?

நில ஆக்கிரமிப்பை முன்நின்று நடத்தும் ’யோக்கியர்’ சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி

ஜிண்டால் நிறுவனத்தின் இரும்புத்தாது கொள்ளைக்காக தன் சொந்த நாட்டு மக்களை கதறவிட்டு வேடிக்கை பார்க்கிறது அரசு. கடந்த 11.06.2018 அன்று குறைதீர்ப்பு கூட்டம் நடத்தாமல், மக்களிடம் கருத்துக் கேட்காமல் சட்டம் கூறும் அனைத்து அரசு சட்டவிதிமுறைகள் மீறி சேலத்தில் நில அளவிடும் பணியை மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமையில் நடத்தியது, சேலம் மாவட்ட நிர்வாகம்.

கண்ணீர் விட்டு கதறும் மக்களை நாயைப் போல விரட்டுகிறது. அரசுக்கு எதிராக யார் போராடினாலும் தன் அதிகாரத் திமிரைக் காட்டி ஒடுக்குகிறது. அதன் அடிப்படையிலேயே நடிகர் மன்சூர் அலிகான், மாணவி வளர்மதி ஆகியோரை சிறை பிடித்திருக்கிறது.

போராடும் மக்களிடத்தில் யார் நெருங்குகிறார்களோ, யார் அவர்களுக்காக நிற்கிறார்களோ, அவர்களை கூண்டோடு ஒழித்துக்கட்டும் வேலையைச் செய்கிறது, போலீசு. அந்த அடிப்படையில்தான் பென்னாகரம் மக்கள் அதிகாரம் தோழர்களை, ”சமூகவிரோதிகள்” போன்ற தோற்றத்தை உண்டாக்கி கைது செய்திருக்கிறது. மேலும் பத்திரிகைகளிடமும் தனது அதிகாரத்தை காட்டியிருக்கிறது போலீசு.

கடந்த 18.06.2018 அன்று, மாலையில் வெளிவந்த தமிழ் முரசு, மாலை மலர், அதற்கு அடுத்த நாள் வெளியான ’தி இந்து’ தமிழ் நாளேட்டிலும் மக்கள் அதிகார அமைப்பினர் மக்களை மிரட்டி பணம் வசூலித்ததாகவும் அதனால் பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யபட்டதாகவும் தகவலை வெளியிடும்படி மிரட்டியுள்ளது. அந்த ஊடகங்களும் வெட்கங்கெட்ட முறையில் அந்த அவதூறுகளை வெளியிட்டுள்ளனர்.

மக்கள் அதிகார அமைப்பு மக்களிடத்தில் நன்கு செல்வாக்கு பெற்று வரும் அமைப்பு. அனைத்து முற்போக்கு அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் ஆதரவைப் பெற்ற அமைப்பு. இதனால்தான் காவல்துறை பொறுத்துக் கொள்ள முடியாமல் மக்களிடம் நெருங்குவதை தாங்க முடியாமல் இவர்கள் சமூக விரோதிகள் என்று பீதியை பரப்புகின்றனர். பத்திரிக்கைகளிலும் அப்படி செய்தி வெளியிடக் கூறி மிரட்டுகின்றனர்.

மக்கள் அதிகாரம் அமைப்பு மக்களுக்காக உயிரையும் தியாகம் செய்கிற அமைப்பு. தொடர்ச்சியாக மக்களுக்காக போராடக் கூடிய முற்போக்கான அமைப்பு. பத்திரிகைகள் மக்களைத் தாங்கும் பாலம் போன்றவை. ஆகவே, அரசு தவறிழைக்கும்போது அதை அரசிற்கு எடுத்துக் கூறும் கடமை பத்திரிகைகளுக்கு உள்ளது. மக்கள் அதிகாரம் பற்றி போலீசு தரும் தவறான செய்திகளை வெளியிட வேண்டாமென கேட்டுக் கொள்கிறோம். போலீசின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் மக்களின் பக்கம் நிற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்:
முத்து குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்
பேச: 90477 85572

சென்னை பட்டினப்பாக்கம் : கரையிலும் வாழ முடியல கடலிலும் பிழைக்க வழி்யில்ல ! படக்கட்டுரை

சென்னை பட்டினப்பாக்கம், சாந்தோம் கடற்கரையை ஒட்டியுள்ள சீனிவாசபுரம் மீனவர் குடியிருப்பில் கடல் சீற்றத்தால் கடந்த பத்து நாளில் (ஜூன் 2018) ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகி இருக்கின்றன. மீனவர்கள் வீடிழந்து பல நாட்களாகியும் அமைச்சர்களோ, அதிகாரிகளோ எட்டிக் கூட பார்க்கவில்லை. அங்கிருந்து கூப்பிடும் தூரத்தில்தான் தமிழகத்தின் மொத்த அ.தி.மு.க. அமைச்சர்களும், அதிகாரிகளும், நீதிபதிகளும் வசிக்கும் கிரீன்வேஸ் சாலை உள்ளது. ஆனாலும் மீனவர்களின் ஓலம் யாருக்கும் கேட்காமல் கடலோடு கரைந்து போனது. அதை நாமாவது கேட்போம்!

குமுதா:
“வருஷா வருஷம் எங்களை கடல் காவு வாங்குது. குடிச வீட்ல குடியிருந்தப்ப எங்கள அக்னிதேவன் வந்து அள்ளிக்கினு போனான். அப்புறம் அங்க இங்கனு ஓடி கடன-உடன வாங்கி ஓடு போட்டோம்………இப்ப ஓட்டு வீட்டையும் கடலம்மா விட்டு வெக்கல. நாங்க வாழத் தகுதி இல்லாதவங்கன்னு தெரிஞ்சிருச்சி போல. அதான் கடலு இப்பிடி வாரிக்கினு போவுது” என்று படபடவென பேசினார் மீனவ மூதாட்டி குமுதா.

பட்டினப்பாக்கம் சீனுவாசபுரம் என்பதெல்லாம் இப்ப வந்த பேரு. அதுக்கு முன்ன முல்லைக்குப்பம், பத்து மோடு கிராமம். முதல்ல குவாட்டர்ஸ் காமராஜர் காலத்துல கட்டினது. 70-ல கலைஞரும் இங்க குடியிருப்பு கட்டினாரு. அதுக்கப்பால இப்ப ஐம்பது வருஷம் ஆவுது.  நானே இங்க மூனு தலைமுறை பார்த்துட்டேன். 5 பேரு 6 பேரு இருந்த குடும்பம் இப்ப 30 பேரு ஆயிட்டோம். கொள்ளுபேரன், பேத்தினு அவங்க கல்யாணத்தயும் பார்த்துட்டேன். இவ்வளவு பேருக்கும் யாரு வேல கொடுக்கிறான். கவர்மெண்ட்டா? கடலம்மா தான் எங்களுக்கு சோறு போடுறா… வலை எடுத்து கடலுக்கு போனாத்தான் பொழப்பு. அதான் கடல் மடியிலயே வாழறோம்.

எங்க பேரே பிஷர்மேன் தானே. கடல்ல இல்லாத கரையில எங்களுக்கு என்ன வேலை. ஆனா கடலும் இப்ப கைவிரிச்சுடுச்சி! எங்களுக்கும் வீடு கொடுத்து கவருமெண்டு வேலை கொடுத்தா கரைக்கு வரதுக்கு கசக்குமா என்ன?

தொழிலு இல்ல. பேர பசங்கள படிக்க வைக்க முடியல. பேத்திங்கள கட்டிக் கொடுக்க முடியல. நான் சோறு போட்டு வளர்த்த பசங்க எனக்கு சோறு போட முடியாம தவிக்கிறாங்க. இட்லி கடை போட்டு ஏதோ காலத்த ஓட்டுறேன்.

இந்திரா:
ரேசன் பொருளக்கூட வாங்க வழி இல்லாம கெடக்குறோம். அரிசிதான் ஓசி. பருப்பு, பாமாயிலு பணம் கொடுத்தா தானே வரும். இரண்டு லிட்டர் கிருஸ்னாயிலுக்கு 28 ரூபா பணம் இல்லாம வாங்காம விட்டுட்டேன். பசங்களும் வீட்டுல சும்மா இல்ல. கடல்ல தொழில் இல்லன்னு ஆட்டோ ஓட்டுறதுக்கு, கம்பனி வேலைக்கு, செக்குரிட்டி வேலைக்கினு எங்க போனாலும் பத்தல.

தேவி:
காசிமேட்டுக்கு போயி மீனு வாங்கியாந்து தெருவுக்கு போவோம். இருநூறு, முந்நூறு கெடைக்கும். குடும்ப செலவு, பசங்க செலவுன்னு தள்ளிக்கினு போவும். இப்ப கடல் சீற்றத்துல வீடு இடிஞ்சி விழுந்துடுச்சி. நாலு நாளா தூக்கம் இல்ல…… சோறும் எறங்கல..… என்ன பன்றதுன்னு தெரியாம பித்து புடிச்சி அலையுறோம். கலெக்டர் ஆபிஸ், மந்திரி ஜெயக்குமார் ஆபிசுன்னு ஓடுறோம். எங்க போயும் வழிதான் பொறக்கல.

மாரி:
கடல்ல தொழிலு இல்லாதப்ப. டெலிவரி வேலை செஞ்சேன். மில்கி பிரட் பிஸ்கட் கடை கடையா போடுவேன். ஜிம்முக்கும் போவேன். பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேன். உடம்பு இருந்தாலும் போலிசு வேலைக்கு போறதுக்கு எனக்கு பிடிக்கல. காதுல கம்மல் போடக்கூடாது, ஸ்டைலா முடி வெட்டக்கூடாதுன்னு அங்க போடுற கண்டிஷன்லாம் நமக்கு ஒத்து வராது. டிரைவர் வேலை மேல ஆசை. ஆனா, டச் இல்ல. சீக்கிரம் போயிடுவேன். சுனாமி வந்தப்ப எங்க ஆயாதான் என்ன இடுப்புல வச்சிக்கினு கூரமோட்ட புடிச்சி காப்பாத்துச்சி. எங்க அம்மா இல்ல.. செத்துடுச்சி….. எல்லாம் ஆயாவுக்காத்தான்….!

ரோசம்மா:
சுனாமில தப்பிச்சவ நான். இப்பவும் என் பேரன் பேத்திங்களுக்காகத்தான் வாழரேன். வீடு விழுந்ததால பக்கத்து அக்கத்து வீடுகள்ல ஒண்டிக்கினு வாழுறோம். யாரும் வர்ல. எதுவும் செய்யல.. குழந்தைங்க பசி தாங்குமா? அதான் வெளியில கல்லு வச்சி சோறு ஆக்குறேன். நல்லவேல வீடு பகல்ல விழுந்துச்சி.. ராத்திரின்னா கொழந்தைங்க எல்லாம் செத்திருக்கும். வயசான காலத்துல எ….. வூட்டுக்காரு அம்பது வருசமா கடலுக்கு போனவரு……. இப்ப மாவு அரைக்குர எடத்துக்கு வேலைக்கு போயி.. ஏதோ..கொடுத்தாரு… மிசின்ல அடிபட்டு காலு எல்லாம் புண்ணு. வைத்தியம் பாக்க முடியல…..அதுக்குள்ள இன்னொரு வேதனை வந்துடுச்சி !

செந்தில்:
கடலுக்கு போயி பல மாசம் ஆவுது. தொழிலு சரியா இல்ல. அதனால இப்ப பெயிண்டிங் வேலைக்கு போறேன். அதுவும் வாரத்துல இரண்டு நாள் கூட கிடைக்க மாட்டேன்னுது.. அதுக்கும் வட நாட்டுக்காரங்க வந்துட்டாங்க. 7,8 பேரு ஒரு ரூம்ல தங்கிக்கினு 350 ரூபா கொடுத்தாலே போதும்னு செய்யுறாங்க. கரையிலயும் வாழ முடியல.

முத்துமணி:
சீற்றத்துல இடிஞ்ச வீட்ல இருந்து கட்டிக்க துணி கூட எடுக்க முடியில. சட்டுனு எல்லாம் அலையில இழுத்துக்கிச்சு. கொஞ்ச நேரத்துல மண்ணும் மூடிப்போச்சி. இதுவரைக்கும் அதிகாரிங்க யாரும் வரல. இங்க ஒரு சமூதாயக் கூடம் இருக்கு. அதைக்கூட தொறந்து விடல. நாங்க மொத்தமா அங்க தங்கினா வெளியில தெரியும். அது பத்திரிக்கையில வரும் டிவியில போடுவாங்க. அதனால எங்கள தனித்தனியா அலைய விட்டுட்டாங்க. படுக்க இடம் இல்ல.

சரவணன்:
கடல்ல வேல இல்லாததால கரையோரத்துலயே அலையில அடிச்சிகினு வர வெள்ள நண்டுகளையும், எலி பூச்சியையும் புடிச்சி விப்பேன். புள்ளதாச்சி பொம்பளைங்களுக்கு அது டானிக் மாதிரி மருந்து. கடல் சீற்றத்துல வீடுங்க விழுந்து போனதால ஜனங்க அலை மோதுதுங்க. வாடகை இருந்தவங்க திடீர்னு எங்க போறதுன்னு தெரியாம குழந்தைங்களோட ரோட்டுல நிக்குறாங்க. நீங்கதான் எதாவது வழி பண்ணனும்.

வெண்ணிலா:
பொறந்ததுல இருந்து கடல்தான் எங்களுக்கு. இங்கதான் எங்களுக்கு உழைக்க தெரியும். வெளியுலகத்துக்கு போயி பொழக்கிற தெறம எங்களுக்கு கிடையாது. ஓட்டுக்கேட்டு MLA, MP-ன்னு எவ்ளோ பேர் வந்தானுங்க. இப்ப காப்பாத்த எவனும் வர்ல… வரவனுங்களும் பிச்சை போடுறதுக்குதான் வருவானுங்க. பண்ணு, பழம் எடுத்துக்கினு நோயாளிங்கள வந்து பாக்கிற மாதிரி பார்ப்பானுங்க. வேற ஒன்னும் செய்ய மாட்டானுங்க.

ஆயிஷா, அம்மு, மலர், விஸ்வநாதன்:
எங்களுக்கு தெரிஞ்சது கடல்தான். இங்க ரொம்ப பாதுகாப்பு இல்லன்னாலும் கெடக்கிறத வச்சி புள்ள குட்டிகளோட வாழ்ந்தோம். இப்ப தெருவுக்கு வந்துட்டோம். வீடும் போயிடுச்சி. தொழிலு இல்லாம அரை வயிறு கஞ்சி குடிச்சாலும் குழந்தை குட்டிகளோட இங்கயே நிம்மதியா செத்துடலாம்னு பார்த்தோம். அதுக்கும் வழி இல்ல.

நடிகர் கமலகாசன் திடீர்னு வந்து “இங்க கரயில கல்லு போடலாமா”ன்னு நடுத்தெருவுல நிக்கிற எங்ககிட்ட கேக்குறாரு. அதை எங்க தலையில போட்டா ரொம்ப நல்லாயிருக்கும். தூண்டில்ல மீனு புடிக்க அதுக்கு இரை வக்கிறதைத்தான் இதுவரைக்கும் பார்த்திருக்கோம். இவனுங்க எங்கள இரையாக்கி அவனுங்க பதவிய புடிக்க பாக்குறானுங்க. ஒருபிடி சோத்த கையிலு புடிச்சி சாப்பிட முடியல. இந்த பிளாஸ்டிக் படுதாவுக்கு கீழ தூக்கம் வராம குழந்தைங்க அலறுதுங்க. ஏசியில தூங்குறவனுங்களுக்கு எங்கத் தெரியப் போவுது!

கடல் அரிப்பில் தரைமட்டமான வீட்டின் வழியாக கடல் அலைகளை பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள்..

பத்துக்கு பத்து அறையில் மொத்தம் குடும்பமும்….. சிறைக்கைதிகளைப் போன்றுதான் மீனவர்களின் வாழ்க்கை. குழந்தை வெங்கடேஷ்.

பராமரிப்பின்றி சிதிலமடைந்திருக்கும் கடற்கரையை ஒட்டி இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள்!

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு : ஜூலை – 1 மணப்பாறையில் இரங்கல் கூட்டம் !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் வரும் ஜூலை 1,2018 அன்று (ஞாயிற்றுக் கிழமை) மணப்பாறையில் உள்ள மகாலட்சுமி திருமண மண்டபத்தில் இரங்கல் கூட்டம் நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு இரங்கல் கூட்டம்

நாள்: ஜூலை 1, 2018, மாலை 5.30 மணி.
இடம் : மகாலட்சுமி திருமண மண்டபம், விராலிமலை ரோடு, மணப்பாறை.

தலைமை : தோழர். வை.கண்ணன், மக்கள் அதிகாரம், மணப்பாறை.

உரையாற்றுவோர் :

திரு. துரை காசிநாதன், தலைமைக் கழக பேச்சாளர், திமுக.
தோழர் த.இந்திரஜித், MA.,LLB., மாநில நிர்வாக குழு உறுப்பினர். CPI.
தோழர் இரும்பொறை ச.பிச்சை, நகர தலைவர். திராவிடர் கழகம், மணவை.
வழக்கறிஞர் ஆனந்த் முனிராஜ் BABL., சாதி பகைவன் நண்பர்கள் குழு.
திண்டுக்கல் திரு. சூர்யா சுப்பிரமணியம், சூர்யா கேட்ரிங் கல்லூரி, வையம்பட்டி.
திரு. மணவை தமிழ் மாணிக்கம், MA, மாநில மாணவரணி செயலாளர், மதிமுக.
திரு. MP. ஆறுமுகம், நகர செயலாளர், ஆதி தமிழர் பேரவை, மணவை.
வழக்கறிஞர் தமிழ்மணி, BABL, சமூக ஆர்வலர், மணவை.
வழக்கறிஞர் சதாசிவம், BABL, சமூக ஆர்வலர்.

ம.க.இ.க கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி

தொகுப்புரை :
தோழர் ராஜா, மக்கள் அதிகாரம், திருச்சி

நன்றியுரை :
தோழர் முரளி,
மக்கள் அதிகாரம், மணவை.

அனைவரும் வருக !

தகவல்:
மக்கள் அதிகாரம், மணப்பாறை.
தொடர்புக்கு: 98431 30911

கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !

மார்க்ஸ் பிறந்தார் – 14
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

6. “யதார்த்தத்தை இரக்கமற்ற முறையில் விமர்சனம் செய்தல்”

ஒரு அரசாங்கம் மக்களுக்கு விரோதமாக இருக்குமானால் அதன் நடவடிக்கைகள் அனைத்தும் – “நல்லவை” கூட- எதிரானவையாக மாறிவிடுகின்றன. “சட்டத்தை” அமுலாக்க முயற்சிக்கின்ற பொழுது அது அராஜகத்தை, சட்டத்தை மீறலைத் துணையாகக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறது. அது தான்தோன்றித் தனத்தைச் சட்டத்தின் நிலைக்கு உயர்த்துகிறது.

பத்திரிகைகள் விமர்சனம் செய்கின்ற உரிமையை அது பறிப்பதனால் அரசாங்க அதிகாரிகளின் மீது விமர்சனக் கடமையைச் சுமத்துகிறது, “தனிநபர்களே” ஆதரிப்பதன் மூலம் அது தனிநபரைக் கீழிறக்குகிறது; அந்தத் தனிநபர் சொந்தக் கருத்தை வைத்துக் கொள்கின்ற உரிமையைக் கூடப் பறித்து விடுகிறது.

தேசிய உணர்ச்சியை அதிகப்படுத்த முயற்சிக்கும் பொழுது அது “தேசிய இனத்தை அவமதிக்கின்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.” அரசாங்க ஆணை “அதிகாரிகளிடம் அளவுக்கு மீறிய நம்பிக்கையைக்” கோருகிறது; “அதிகாரிகள் அல்லாதவர்களிடம் அளவுக்கு மீறிய அவநம்பிக்கையிலிருந்து முன்னே செல்கிறது”.

பிரஷ்ய அதிகாரி “பாதுகாவலர்” என்ற பாத்திரத்தில் செயல்படுகிறார், “மூளையைக் கட்டுப்படுத்துகின்ற” பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. விஞ்ஞானத் தகுதியுடைய விஷயங்களைப் பற்றித் தீர்ப்பு வழங்குவதற்கு அவருக்கு விஞ்ஞானத் தகுதி இருக்கிறதா என்பதைப் பற்றி மிகச் சிறிதளவு சந்தேகம் கூட ஏற்படுவதில்லை.(1)

இந்த அதிகாரவர்க்கக் கோட்பாட்டில் அமைந்திருக்கும் கிண்டலை மார்க்ஸ் எடுத்துக்காட்டுகிறார். சிந்தனையாளர்களைப் பற்றித் தகுதியுடன் மதிப்பிடுவதற்கு அதிகாரி எல்லாத் துறைகளிலும் அவர்களைக் காட்டிலும் உயர்ந்த தகுதியுடையவராக இருக்க வேண்டும்.

ஒரு வேளை “அரசாங்கத்துக்குத் தெரிந்த சர்வாம்ச மேதைகள் கூட்டம்” உண்மையாகவே பிரஷ்யாவில் வசிக்கலாம். அப்படியானால் இந்தக் “கலைக்களஞ்சிய மேதைகள்” எழுத்தாளர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் ஏன் முன்வருவதில்லை?

எண்ணிக்கையில் ஏராளமாகவும் விஞ்ஞான அறிவினாலும் மேதாவிலாசத்தினாலும் மாபெரும் பலமுடையவர்களாகவும் இருக்கின்ற இந்த அதிகாரிகள் சமூக மேடையில் தோன்றி பரிதாபகரமான எழுத்தாளர்களைத் தங்களுடைய கணத்தினால் ஏன் நசுக்கவில்லை?

சிந்தனைத் துறையில் ஒழுங்கை பாதுகாப்பவர்களை நியமித்து, அவர்களையும் கண்காணித்துக் கொண்டிருக்கின்ற இந்த அதிகாரிகளின் மேதாவிலாசம் இன்னும் எவ்வளவு அதிகமாக இருக்க வேண்டும்? “இந்த அறிவின் அதிகாரவர்க்கத்தில் எவ்வளவு மேலே நாம் போகிறோமோ அந்த அளவுக்கு நாம் சந்திக்கின்ற மூளைகளும் மிகவும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன.”(2)

ஒரு அதிகாரவர்க்க, போலீஸ் அரசில் எல்லாத் தணிக்கைக்கும் மேலே இன்னொரு உயர்ந்த தணிக்கை இருக்கிறது; ஒவ்வொரு அதிகாரியின் எதேச்சாதிகாரமும் அவருக்கு மேலே இருக்கின்ற அதிகாரியின் எதேச்சாதிகாரத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது.

அத்தகைய அமைப்பில் “மூன்றாவது அல்லது தொண்ணூற்று ஒன்பதாவது கட்டத்தில் சட்டத்தை மீறல் தொடங்குவது”(3) தவிர்க்க முடியாதது. அதிகாரவர்க்க அரசு இந்தத் துறையை நம் கண்களுக்குத் தெரியாமலிருக்கும்படி மிகவும் உயரத்தில் வைப்பதற்கு முயற்சி செய்கிறது.

“தணிக்கை முறையை ஒழிப்பதே அதற்குத் தீவிரமான மருந்து; ஏனென்றால் அந்த அமைப்பே மோசமானதாகும்.”(4) என்ற இயற்கையான முடிவுக்கு இந்தப் பகுப்பாய்வு மார்க்சை இட்டுச் சென்றது.

முதலாளித்துவ அரசின் “அதிகாரவர்க்க” இயந்திரத்தை அழிக்க வேண்டிய அவசியத்தை மார்க்ஸ் இங்கே போதிக்கவில்லை; ஆனால் அந்தக் கருத்தை மிகவும் நெருங்கி வருகிறார்.

மார்க்ஸ் தன் முதிர்ச்சிக் காலத்தில் தணிக்கை அரசாணையைப் பற்றிய இந்தக் கட்டுரையை மிக உயர்வாக மதிப்பிட்டார் என்பது 1851ம் வருடத்தில் வெளிவரத் தொடங்கிய அவருடைய கட்டுரைகளின் தொகுப்பில் முதல் கட்டுரையாக அதை வைத்தார் என்பதிலிருந்து விளங்கும் (முதல் தொகுதி வெளியான பிறகு அரசாங்க நிர்ப்பந்தம் காரணமாக இப்பதிப்பு நிறுத்தப்பட்டது).

அக்கட்டுரை மிகவும் தீவிரமான முறையில் எழுதப்பட்டிருந்தபடியால் அதை ஜெர்மனியில் அச்சடிக்கின்ற பேச்சுக்கே இடமில்லை. மார்க்ஸ் எதிர்பார்த்ததைப் போல தணிக்கை முறை அக்கட்டுரையைத் தடை செய்தது; அதன் மூலம் அக்கட்டுரையில் அதைப் பற்றி எழுதப்பட்டிருந்த வர்ணனை எவ்வளவு துல்லியமானது என்பதை நிரூபித்தது. அக்கட்டுரை முதல் தடவையாக 1843-இல் ஸ்விட்சர்லாந்தில் வெளியிடப்பட்டது.

ஆனால் 1842ம் வருடத்தின் வசந்தகாலத்தில் Rheinische Zeitung பத்திரிகையில் ரைன் மாநில சட்டசபையில் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றிய விவாதங்களைப் பற்றிக் கட்டுரை எழுதினார். அதில் இப்பிரச்சினையை வேறொரு கோணத்திலிருந்து அணுகினார்.

பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றி சபையின் உறுப்பினர்கள் தெரிவித்த பல்வேறு கருத்துக்களுக்கும் அவர்களுடைய சமூக-வர்க்க அந்தஸ்துக்கும் இடையிலுள்ள நேரடியான இணைப்பை மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். அவர் பின்பற்றிய புதிய அணுகுமுறை இந்த உண்மையில் அடங்கியிருக்கிறது. இது முன்னே வைக்கப்பட்ட முக்கியமான காலடியாகும்.

பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றிய விவாதத்தில் “சமூகக் குழுக்களின்” நலன்கள் சமரசப்படுத்த முடியாதபடி மோதுவதால், “பொதுவான” சுதந்திரம் இல்லை என்பது தெளிவாயிற்று, ஒவ்வொரு சமூகப் பிரிவும் தன்னுடைய “சொந்த” சுதந்திரத்தை ஆதரிக்கிறது.

முதலாளி வர்க்க, விவசாய வர்க்கக் குழுக்கள் கூட பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றித் தங்களுடைய கோரிக்கைகளின் குறுகிய தன்மையை விளக்கிவிட்டார்கள் என்று மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். முதலாளி வர்க்க பத்திரிகைச் சுதந்திரம்-அது அப்பொழுது பிரான்சில் இருந்த வடிவத்தில்கூட- போதுமான சுதந்திரத்தைக் கொண்டிருப்பதாக மார்க்ஸ் கருதவில்லை.

பிரெஞ்சுப் பத்திரிகைகள் “ஆன்மிகத் தணிக்கைக்கு உட்பட்டிருக்காவிட்டாலும்… அவை பெருந்தொகைகளைப் பிணையாகக் கட்ட வேண்டியிருப்பதால் பொருளாயதத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன”, அவை “பெரும் வர்த்தக சூதாட்டத் துறைக்குள் இழுக்கப்பட்டிருக்கின்றன.”(5)

இங்கே ஒரு புதிய கருத்து தோன்றுவதைத் தெளிவாகப் பார்க்கிறோம்: “ஆன்மிகத் தணிக்கை” “பொருளாயதத் தணிக்கையை”, முதலாளித்துவச் சமூகத்தின் வர்த்தக – பணவியல் உறவுகளைச் சார்ந்திருக்கின்றது. இக்கருத்து மார்க்ஸ் அடுத்தடுத்து எழுதிய ஒவ்வொரு புத்தகத்திலும் மேலும் வளர்த்துக் கூறப்படுவதை நாம் காண்கிறோம்.

ஜெர்மானிய மிதவாத அறிவுஜீவிகள் முதலாளித்துவ சுதந்திரங்களைத் தம்முடைய இலட்சியமாகக் கொண்டிருந்தனர்; ஆனால் மார்க்ஸ் அவற்றைத் தன் இலட்சியமாக ஒருக்காலும் கருதவில்லை என்பதை அவருடைய முதல் பத்திரிகைக் கட்டுரையே எடுத்துக்காட்டுகிறது. அவர் ஆரம்பத்திலேயே புரட்சிகர ஜனநாயகவாதியாகத் தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். மிகவும் தீவிரமான முதலாளிவர்க்க மிதவாதிகள் செய்ய முடிந்ததைக் காட்டிலும் அதிக ஆழமான, முரணில்லாத முறையில் ஜெர்மானிய யதார்த்தத்தை விமர்சனம் செய்தார்.

ஒரு முறை சுதந்திரத்தை அனுபவித்த பிறகு ஒரு நபர் அதற்காக “ஈட்டிகளை மட்டுமல்லாமல் கோடரிகளையும் உபயோகித்துப்” போராட வேண்டும் என்று ஹெரடோடஸ் கூறியதை மேற்கோளாகக் காட்டி பத்திரிகைச் சுதந்திரத்தின் மீது விவாதத்தைப் பற்றிய தன்னுடைய கட்டுரையை மார்க்ஸ் முடிக்கிறார்.

Rheinische Zeitung பத்திரிகையில் மார்க்ஸ் மேதாவிலாசத்துடன் எழுதத் தொடங்கிய பொழுது அது உண்மையிலேயே பரபரப்பூட்டியது. மார்க்ஸ் தன்னுடைய திறமைகளை நிரூபிக்க வேண்டும் என்று நெடுங்காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நண்பர்கள் திருப்தியடைந்தனர். பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றியும் அதை ஆதரித்தும் இப்படி மிக ஆழமான, நன்கு வாதிக்கப்பட்ட முறையில் இதற்கு முன்பு ஒருபோதும் எழுதப்படவில்லை என்று அ. ரூகே கூறினார்.

Rheinische Zeitung பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் மார்க்சின் செல்வாக்கு இதற்கு முன்பு கணிசமாக இருந்தது. அது இக்கட்டுரைத் தொடருக்குப் பிறகு மிகவும் அதிகரித்துவிட்டபடியால் மார்க்ஸ் அதன் தலைவர்களில் ஒருவரானார். சிறிது காலத்துக்குப் பிறகு அப்பத்திரிகையின் தலைமை ஆசிரியராக அவர் நியமிக்கப்பட்டார். ரைன் மாநில சட்டசபையில் மரங்கள் திருடப்படுவதைத் தடுக்கும் சட்டத்தின் மீது நடைபெற்ற விவாதங்களைப் பற்றி இப்பத்திரிகை 1842 அக்டோபரில் ஒரு புதிய கட்டுரைத் தொடரை வெளியிட்டது.

மார்க்சின் படைப்பாற்றல் நிறைந்த வாழ்க்கையில் இக்கட்டுரைகள் முக்கியமானவையாகும். முதல் தடவையாக அவர் சூக்குமக் கருத்தாக்கம் என்ற வானத்திலிருந்து “உறுதியான பூமிக்கு” வரும்படி, அதாவது ஹெகலின் தத்துவஞான அமைப்பில் இடம்பெறாத பொருளாயத நலன்களைப் பற்றி எழுதும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்.

இந்தச் சமயத்திலிருந்து மார்க்சினுடைய சிந்தனை சமூகத்தின் வர்க்க மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பைப் பகுத்தாராய்கின்ற திசையில் செலுத்தப்பட்டது. மரம் திருடப்படுவதைப் பற்றிய விவாதங்களைப் பற்றிய கட்டுரையைப் படிக்கின்ற பொழுது புதிய கருத்துக்களின் “உதயத்தை” அறிவிக்கின்ற முதல் “மின்னல் வீச்சுக்களை” நாம் கற்பனை செய்ய முடிகிறது.

மரங்கள் திருடப்படுவதும் வேட்டையாடுதல் மற்றும் காடுகளைப் பாதுகாத்தலைப் பற்றிய சட்டங்கள் மீறப்படுவதும் பொருளாதார வாழ்க்கையில் அற்பமான விஷயமாகத் தோன்றும். ஆனால் அவற்றுடன் தொடர்புடைய சந்தர்ப்பங்களைப் பற்றி செய்யப்பட்ட ஆராய்ச்சி பெருந்திரளான ஏழை மக்களின் வறுமை நிலையையும் அவர்களுக்கு எல்லாவிதமான உரிமைகளும் மறுக்கப்பட்டிருப்பதையும் முழுமையாக எடுத்துக் காட்டியது.

பெரிய நிலவுடைமையாளர்களின் நலன்களுக்குச் சாதகமான முறையில் அடிப்படை மனித உரிமைகள் எவ்வளவு அவமானகரமான முறையில் மீறப்பட்டன, தனிச் சொத்துடைமைக்காக மக்கள் எப்படி பலியிடப்பட்டார்கள் என்பதை மார்க்ஸ் கண்டார்.

“தனிச் சொத்துடைமை” மனித விரோதமானது, அது தனி நபருக்கு எதிராக இருக்கிறது, தனி நபருக்கு எதிராக எல்லாவிதமான குற்றங்களையும் நியாயப்படுத்துகிறது, அது மனிதனை மிருகத்தின் நிலைக்குத் தாழ்த்திவிடுகிறது என்பவை அவருக்கு மிகவும் தெளிவாயிற்று.

குறிப்புகள் :

(1) Ibid., p. 126.
(2) Ibid.
(3)Ibid., p. 131.
(4) Ibid.
(5)Ibid., p. 167.

தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
  8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
  9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
  10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
  11. தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !
  12. ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?
  13. கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !

ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிராக மதுரையில் கருத்தரங்கம் ! வினவு நேரலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை படுகொலை செய்தது போலீசு. மேலும் துப்பாக்கிச் சூட்டிற்கு பின்னர், அந்த மக்களுக்காக  சட்டரீதியில் உதவி புரிந்த பல்வேறு ஜனநாயக சக்திகளையும், வழக்கறிஞர்களையும் பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளது போலீசு.

ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பினரின் சட்ட ஆலோசகராக செயல்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது பல்வேறு பொய் வழக்குகளை புனைந்து அவரைக் கைது செய்துள்ளது போலீசு. இது போக மக்கள் அதிகாரம் தோழர்கள் அறுவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டு சிறை வைத்துள்ளது. தூத்துக்குடி வட்டாரத்தில் இன்றும் இளைஞர்களை கைது செய்வதும், வீடு புகுந்து மிரட்டுவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்த பச்சைப் படுகொலையைக் கண்டித்தும், கைது நடவடிக்கைகளைக் கண்டித்தும், பல்வேறு அமைப்புகளும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

”ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பினர்” இன்று (29-04-2018) சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் மதுரை, கே.கே. நகரில் உள்ள வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கத்தில் ஸ்டெர்லைட் படுகொலையைக் கண்டித்தும், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மற்றும் போராடிய மக்கள் மீதான கைது மற்றும் அடக்குமுறையைக் கண்டித்தும் கருத்தரங்கம் நடத்தவிருக்கின்றனர்.

இந்தக் கருத்தரங்கத்தை வழக்கறிஞர் கனகவேல் அவர்கள் நெறிப்படுத்தி நடத்தவிருக்கிறார். இக்கூட்டத்தில்
முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி திரு அரிபரந்தாமன்,
மூத்த வழக்கறிஞர்கள் பா.பா.மோகன், அஜ்மல்கான், ஹென்றி திபேன்
ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கின்றனர்.

மேலும் பேராசிரியர்கள் முரளி, சீனிவாசன்,
வழக்கறிஞர்கள் மோகன்குமார், லஜபதிராய், ராமமூர்த்தி,
திருநாவுக்கரசு, அக்பர்பாட்சா, தமிழரசன், ஜான் வின்சென்ட்,
மாணிக்கம், சாரங்கன், சுப்பு, சந்திரசேகரன், ஜிம்ராஜ் மில்டன்,
பாரதி, பார்வேந்தன், நாகை திருவள்ளுவன், இன்குலாப்,
பானுமதி, செந்தில்குமார், பால்ராஜ், ஆனந்த முனிராஜ், முகமது அப்பாஸ்
ஆகியோர் உரையாற்றவிருக்கின்றனர்.

முக்கியமாக, போலீசு பயங்கரவாத நடவடிக்கைகளால் உயிரிழந்த / கொடுங்காயமடைந்த / சிறைவக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர் நேருரையும் இடம்பெறவிருக்கிறது.

கருத்தரங்க தீர்மானங்களை வழக்கறிஞர் பழனியாண்டி மொழிவார். வழக்கறிஞர் ராசேந்திரன் நன்றியுரையாற்றவிருக்கிறார்.

பொதுமக்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் தவறாமல் கலந்து கொண்டு தங்களது வலுவான கண்டனக் குரலை பதிவு செய்யுமாறு ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பினர் அறைகூவல் விடுத்துள்ளனர்.

தொழில்நுட்பப் பிரச்சினைகள் இல்லாதபட்சத்தில் இன்று இந்நிகழ்வு வினவு இணையதளத்திலும், யூ-டியூப் சேனலிலும், ”வினவின் பக்கம்” ஃபேஸ்புக் பக்கத்திலும் நேரலையாக மாலை 4.30 முதல் ஒளிபரப்பப்படும்.

தொடர்புக்கு : ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பு
பேச: 97903 17864, 98421 59078, 63822 11441, 98948 40093, 98949 13820

  • வினவு களச் செய்தியாளர்