Sunday, June 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 427

அமித்ஷாவை விரட்டும் டிவிட்டர் : டிரண்டிங்கில் #GoBackAmitShah

2

டிவிட்டரில் வந்த செய்திகள் – படங்களை தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம்.

சொராபுதீன், கவுசர்பீ கொலை வழக்கில் சிறைவாசத்திலிருந்து எப்படி தப்பினார் அமித்ஷா?

சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடக்கையில்:

முதல் நீதிபதி ஜே.டி. உத்பத் : ஜூன் 26. 2014 அன்று நீதிமன்றத்தின் முன்னால் அமித்ஷா ஆஜராகவேண்டும் என்றார். ஆனால் ஜூன் 25, 2014 அன்று புனே செசன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றல் செய்யப்பட்டார்.

இரண்டாவது நீதிபதி ப்ரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா: டிசம்பர்1, 2014-ல் சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமடைந்தார். அவரது குடும்பத்தினர் அவர் கொலைசெய்யப்பட்டார் என்கின்றனர். மேலும் அமித்ஷாவை வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு ரூ.100 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டதாகவும் தெரிவித்தனர். எவ்வித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.

மூன்றாவது நீதிபதி எம்.பி. கோசாவி: இவ்வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும்படி அமித்ஷா முன்வைத்த மனுவை டிசம்பர் 15, 2014 அன்றுதான் விசாரிக்க ஆரம்பித்தார். டிசம்பர் 17, 2014 அன்று வழக்கு விசாரணையை முடித்தார். 10000 பக்க குற்றப்பத்திரிகையை படிக்காமலேயே அமித்ஷாவை அவ்வழக்கிலிருந்து விடுவித்தார்.

@Jokin Jeyapaul
பாஜக-வின் கப்பார் சிங் #GoBackAmitShah #GetOutAmitshah

@Sanjeevee sadagopan
இந்தியா அளவிலும், சென்னை அளவிலும் (ட்விட்டர் ட்ரெண்டிங்கில்) மூன்றாவது இடத்தை இன்று காலையிலேயே பிடித்துவிட்டது #GobackAmitShah. காலை 11 மணிக்கு தமது கட்சித்தலைவர்களை சந்தித்துப் பேசும் அமித்ஷா, மாலையில் தமது கட்சித் தொண்டர்களை சந்திக்கிறார்.

@Roshan Rai
தமிழர்கள் #GobackAmitShah என்பதை ட்ரெண்ட் ஆக்குவதை காண்கிறேன். ஒரு வட இந்தியனாக தமிழக சகோதர சகோதரிகளின் வலியை நானும் பகிர்ந்துகொள்கிறேன். ஜம்முவிலிருந்து கேரளாவரை அமித்ஷாவினால் வெறுப்பு உமிழப்படாத மாநிலம் ஒன்று கூட இல்லை. நாம் அனைவரும் இணைந்து மதவாதத்தை எதிர்க்கவேண்டிய நேரம் இது.

@dr.madas
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து அமித்ஷா ஏதேனும் கருத்துக் கூறினாரா ? ஒரு தேசிய கட்சியின் தலைவர் என்ற வகையில் அவருக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு கிடையாதா?! #GoBackAmitShah

@Boopathy Narendran
நாங்கள் வடக்கு, கிழக்கு, வட கிழக்கு, நேபாள் தொழிலாளர்கள் அனைவரையும் எங்கள் மண்ணிற்கு வரவேற்கிறோம். ஆனால் உங்களை நாங்கள் இங்கு வரவேற்கமாட்டோம்.  #GoBackAmitShah

@Jokin Jeyapaul
#GoBackAmitShah  #GetOutAmitshah  உங்க பாட்ஷா இங்கே பலிக்காது.  நீங்கள் பசு பாதுகாவலர்களின் ஆதிக்கப்பகுதிகளில் வேண்டுமானாலும் பாட்ஷா வாக இருக்கலாம். ஆனால் இங்கு நீங்கள் மோசமான ஷா (’பேட்’ ஷா)

@Keerthi
செய்தி: அமித்ஷா தமிழ்நாட்டில் 2019 தேர்தல் உபாயங்கள் குறித்து விவாதிக்க வருகிறார். பக்தாள்கள் எல்லாம், அவரது வருகை, பாஜக ஓட்டு எண்ணிக்கையை நோட்டாவை விட அதிகரிக்கும் என நினைக்கின்றனர். பரிதாப பக்தாள்களே, அமித்ஷா இல்ல, அவரோட தாத்தாவே தமிழ்நாட்டுக்கு வந்தாலும் உங்களுக்கு 108 ஓட்டுகள் மட்டும்தான் கிடைக்கும். #GobackAmitShah

@Ashish Vivek Merukar‏ 
தமிழ்நாடு பிற மாநிலங்களை விட முழுமையாக வேறுபட்டது. அங்கு பாஜக-வால் ஒரு போதும் காலடி பதிக்க முடியாது. பிற மாநிலங்களில் பெரியார் இல்லாத காரணத்தினால்தான் பாஜக அங்கு ஜெயித்திருக்கிறது. #GobackAmitShah

Krish
#GobackAmitShah உங்களது பிரிவினைவாத, விசமத்தனமான, சாதிய, மத வெறுப்பின் மூலம் தமிழ்நாட்டு மக்களை பிரிக்காதீர்கள். தென்னிந்தியாவில் நாங்கள் அனைவரையும் சமமாக நடத்துகிறோம். நாங்கள் மக்களை அவர்கள் விரும்பியதை உண்டு, தங்களது நம்பிக்கையோடு வாழவிடுகிறோம்.

நாங்கள் எதையும் வற்புறுத்துவதில்லை. நாங்கள் கொலைகளையும் கற்பழிப்புகளையும் ஆதரிப்பதில்லை. நாங்கள் கொள்ளைக்காரர்களை ஆதரிப்பதில்லை.

@Pirai Kannan
அருண், ஆரிஃப், அகஸ்டின் – நாங்கள் அனைவரும் சகோதரர்கள். நாங்கள் ஒன்றாக வாழ்கிறோம். இது அமித்ஷா, நரேந்திரமோடி போன்ற மதப் பிரிவினைவாதிகளுக்கான இடம் அல்ல.  #GobackAmitShah

@faiz
தமிழர்களே, மிகப் பழமையான நாகரீகத்திலிருந்து வந்த நீங்கள்தான்  #GoBackModi என்ற முழக்கத்தை தந்தீர்கள். வீர மாவீரர்களே, இது திருவள்ளுவர், ராஜராஜன், பாரதியார் வாழ்ந்த பூமி. இந்த தயாள மண்ணில், இழிவான எண்ணம் கொண்டவர்களை விடாதீர்கள். நாம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய் என்பதை உரக்கச் சொல்லுங்கள். #GoBackAmitShah

2002-ம் ஆண்டிலிருந்து இருவரும் முதல்பக்கத்தை அலங்கரிக்கிறார்கள். #GoBackAmitShah

@Dr. J Aslam Basha
வளர்ச்சி என்று சொல்லிக் கொள்ளப்படும் சேலம் நெடுஞ்சாலை கட்டுமானத்தில், பாஜகவின் நலனுக்காக, ஏழை மக்களிடமிருந்து நிலம் பிடுங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அழிக்கப்பட்டுள்ளது. #GoBackAmitShah

@Rachit Seth
ஜெயலலிதாவுக்குப் பிறகு, தமிழகத்தில் உள்ள அரசியல் சூழ்நிலையை சீர்குலைக்க, கேடாக முயற்சித்தது. தமிழ்நாட்டு மக்கள் அவர்களை எதிர்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் 2019-ல், இந்திய மக்கள் அமித்ஷாவையும், நரேந்திர மோடியையும் அவர்கள் தமிழகத்திற்கு செய்த தீமைகளுக்காக மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்  #GobackAmitShah

@தொல்காப்பியன்
தமிழகம் சமத்துவத்துக்கான மண். நாங்கள் உன்னைப் போன்ற தீவிரவாதிகளை அனுமதிக்க மாட்டோம். #GobackAmitshah

கார்த்திக்தாண்டவன்
ஆமையை வீட்டுக்குள் விடு, ஏன் அமினாவை கூட விடு, பட் அமித் ஷாவை மட்டும் விடாத, பூட்ட கேஸ் ஆய்டுவ #GoBackAmitShah

@Karthikeyan P
வட இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள், சாணக்கியன் என பாராட்டும் போது தமிழகம் மட்டும் ஏன் அமித்ஷாவை, #GoBackAmitShah என வரவேற்கிறது (மன்னிக்கவும், திருப்பியனுப்புகிறது). இது எந்த ஒரு ஐடி செல்களின் மூலமோ, பணம் கொடுக்கப்பட்டோ ட்ரெண்டாக்கப்படவில்லை. மதத்தின் பெயராலான பிரிவினையை தமிழகம் என்றுமே எதிர்த்திருக்கிறது.

@Pirai Kannan
பல இந்தி பேசும் இடம்பெயர்ந்தவர்களை தமிழகத்திற்கு வரவேற்றிருக்கிறோம். அவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு அனுமதித்திருக்கிறோம். அதற்காக நாங்கள் குஜராத் இனப்படுகொலையாளர்களையும் #Genocider அனுமதிப்போம் என்று பொருள் கொள்ளக்கூடாது #GoBackAmitShah #GetOutAmitShah
இதுதான் தமிழ்நாடு #GoBackAmitShah

@Siddharth siddu
உங்களை வரவேற்காதவர்கள் இடத்திற்கு நீங்கள் செல்லக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியாதா ?  #GobackAmitShah

@amutharasan
சட்டவிரோத நுழைவு #GobackAmitShah

@நாஞ்சில் வள்ளுவன்
இது தமிழ்நாடு! ராவணன்களின் நிலம்! புலிகளின் குகை! #GobackAmitShah

@Purushothaman
#GobackAmitShah இது எப்படி இருக்கு ?
#GoBackAmitShah@Mirath
தமிழகத்தில் பாஜகவிற்கு கிடைப்பது எல்லாம் எப்போதுமே செருப்படி  மட்டும்தான்.. . #GobackAmitShah

#GoBackAmitShah

@Ragu_Tweets
தமிழகத்தை ஒரு பூதம் ஆட்டுவிக்கிறது. அது பெரியார் எனும் பூதம் #GobackAmitShah

@Ramesh
இந்தியா முழுவதும் #GobackAmitShah ட்ரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது. நான் உண்மையிலேயே ஒரு தமிழனாக பெருமை கொள்கிறேம். ஏனெனில் நாங்கள் எப்போதுமே ஒருவருக்கொருவர் மீதான வெறுப்பை வளர்க்கும் மதம் சார்ந்த கட்சிகளை ஆதரிப்பதில்லை.

@Naren
காலை 9 மணி தான் ஆகிறது,. அதற்குள் இந்திய அளவில் #GobackAmitShah 4வது இடத்தில் ட்ரெண்டிங் ஆகியிருக்கிறது. மக்களின் பார்வை குறித்த ஒரு தெளிவான செய்தி.

@Seeman Army
அனைத்து மீடியாக்களும் க்ளோசப் சாட் மட்டுமே காட்டுகிறார்கள், லாங் சாட் காட்டுவதில்லை. #GobackAmitShah

@srikanth sarma
பணமதிப்பழிப்பு முறைகேட்டாளனே திரும்பிப் போ! #GobackAmitShah

@Yasir Arafat
நாங்கள் சகிப்புத்தன்மை கொண்ட மக்கள். நாங்கள் மனிதத்தன்மை கொண்ட மக்கள். நாங்கள் சகோதரத்துவம் கொண்ட மக்கள். தமிழ்நாடு, தற்போதும், எப்போதுமே உங்களை வரவேற்காது. ஆகவே #GobackAmitShah

@whatever..
#GobackAmitShah – காரணம் எதுவும் கிடையாது. எங்கள் மண்ணிலிருந்து வெளியேறு, அவ்வளவுதான்.

@Ramesh
#GobackAmitShah  தென் கோடியில், மத அடிப்படைவாதத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கான கொடுங்கனவு. மிகவும் முற்போக்கான ஒரு மாநிலத்திலிருந்து ஒருவனாக நான் பெருமை கொள்கிறேன். அருமையாகச் செய்திருக்கிறோம் தமிழகமே!

@SanghiLiveWire
அமித்ஷாவிற்கு சென்னை – உதவிய போது: #GobackAmitShah
#GoBackAmitShah@நிஷா
இறுதியாக பாஜக தலைவர் தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் இருக்கிறது என்று உணர்ந்திருக்கிறார். #GobackAmitShah. எங்களுக்கு நீ தேவையில்லை.
#GoBackAmitShah@A.Vimal
#GoBackAmitShah பணமதிப்பழிப்பின் போது மக்கள் தங்கள் உயிரை இழந்திருக்கின்றனர். ஆனால் உங்கள் கூட்டம் ????

ரோலக்ஸ் வாட்ச் – தூக்கக் கலக்கம் : ஓலாவில் இருவேறு அனுபவங்கள் !

0

“உங்கள் முகவரியைக் கண்டுபிடிக்க தாமதமாகிறது. கூகிள் மேப் சரியான வழியைக் காட்டவில்லை. வேண்டுமென்றால் பதிவு செய்திருப்பதை இரத்து செய்யுங்கள் அல்லது பத்து பதினைந்து நிமிடம் காத்திருங்கள்” என்பதை அவர் உடைந்த ஆங்கிலத்தில் உரைக்க வெகுவாக சிரத்தை எடுத்துக் கொண்டார். நான் தமிழில் பேசிய போதும் பிடிவாதமாக ஆங்கிலத்தில் பேச முயற்சித்தது வினோதமாக இருந்தது. ‘ஒருவேளை தமிழரல்லாதவராக இருப்பாரோ’ என நினைத்துக் கொண்டு வேறு வழியின்றிக் காத்திருக்கத் துவங்கினேன்.

ஓலா ஓட்டுநர்களோடு எப்போதுமே சுவாரசியத்துக்குப் பஞ்சமிருப்பதில்லை. ஆட்டோ ஓட்டநர்களும் அப்படித்தான் என்றாலும், மேட்டுக்குடியினரின் அல்பத்தனங்களை ஓலா ஓட்டுநர்கள் போல் அவ்வளவு தத்ரூபமாக விவரிக்கும் ‘திறன்’, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வாய்ப்பதில்லை. பெரும்பாலும் வாடிக்கையாளரோடு ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இல்லை என்பதால் மேட்டுக்குடி ’மேன்மக்களை’ அவர்கள் ‘வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு’ கணக்கில் இடது கையாலேயே ’டீல்’ செய்து விடுகிறார்கள் என்பது எனது துணிபு.

அரிதான சந்தர்ப்பங்களில் வாய்க்கும் ‘சுவாரசியத்தை’ தவற விட விரும்பாததால் காத்திருக்கத் தீர்மானித்தேன். இருபது நிமிடங்கள் கழித்து வண்டி வந்தது – சுசுகி டிசையர். “தம்பி, நான் செடான் புக் செய்யலையே. மினி தானே கேட்டிருந்தேன்” என்றேன்.

“அதெல்லாம் ஆட்டோ அப்கிரேடு ஆயிருக்கும். நீங்க மினிக்கான வாடகையே கொடுத்தால் போதும்” பதிலளித்தவர் இருபதுகளின் துவக்கத்தில் இருந்தார். தலையின் இருபக்கங்களிலும் பின்புறத்திலும் கேசத்தை ஒட்ட வெட்டிருந்தவர் உச்சி மண்டையில் நீளமாக விட்டு அதை பின்புறக் குடுமியாக்கி இருந்தார். கட்டம் போட்ட பருத்திச் சட்டையின் பித்தான்கள் பாதி வரை அவிழ்த்து விட்டு உள்ளே அணிந்திருந்த டீ சர்ட்டின் எழுத்துக்களின் ஒரு பகுதி மட்டும் தெரியுமாறு விட்டிருந்தார்; ஏதோ ஆங்கிலக் கெட்ட வார்த்தை எனப் புரிந்தது. இடக் கையில் ரோலக்ஸ் கடிகாரம்; வலக் கையில் பல வண்ணக் கயிறுகள்.

எனக்குக் கடிகாரங்களின் மேல் கொஞ்சம் கிறுக்கு உண்டு. மட்டுமின்றி பேச்சுக் கொடுக்க அப்போதைக்கு அதில் தான் வாய்ப்பிருந்தது என்பதால் மெல்லத் துவங்கினேன், “தம்பி, இது ஒரிஜினல் ரோலக்சா?”“ஆமா ப்ரோ.. ஒரிஜினல்”

“விலை அதிகமா இருக்குமே?”

“ஒன்றரை லட்சம்”

“இல்லையே இன்னும் கூட இருக்குமே. எங்கே வாங்கினீங்க?”

“ம்ம்… இது ரிஃபர்பிஷ்டு. ஆன்லைன்லே வாங்கினேன். இதே மாடல் புத்தம் புதுசுன்னா மூனு லட்சம்” சாலையில் கவனம் செலுத்தத் துவங்கினார்.

ஓலாவில் ஓரளவுக்கு சம்பாதிக்க முடியும் எனப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதற்கு நேரங்காலம் பார்க்காமல் டூட்டி பார்க்க வேண்டும். இவரைப் பார்த்தால் அப்படி உழைப்பவர் போலவும் தெரியவில்லை. இருந்தாலும், “ஒன்றரை லட்சம் சேர்க்க எத்தனை மாசம் டூட்டி பார்த்திருப்பீங்க?” என்றேன்.

”ச்சேச்சே.. இது சொந்த வண்டி ப்ரோ. ட்ரைவர் லீவ்ல போயிருக்கார் அதான் நான் டூட்டி பார்த்திட்டு இருக்கேன்”

“சொந்த வண்டின்னா தவணையா இல்லை முழுசும் சொந்தமா?”

“சொந்த வண்டின்னா.. அப்படியே சொந்த வண்டி இல்லே இது மம்மியோடது. மம்மிக்கு மொத்தம் பதினோரு வண்டி ஓடுது. எல்லாமே ஓலாவில் அட்டாச் பண்ணிருக்காங்க.. நான் சினிமாவுல சான்சுக்காக ட்ரை பண்ணிட்டு இருக்கேன். மம்மி கிட்டே ’கே.டி.எம் ட்யூக் 390’ வாங்கித்தரக் கேட்டேன். அவங்க ட்ரைவருங்க லீவ்ல போகும் போது டூட்டி பார்த்தா ஒரு லட்சம் டவுன் பேமண்ட் தருவேன்னு சொல்லிருக்காங்க.. அதான்”

“அம்மா தான் வசதியாச்சே.. முழு காசையும் கூட தரலாமே”

“ம்ஹூம்… அப்டிலாம் தரமாட்டாங்க. அப்பப்ப டூட்டி பாத்தா ட்யூ கட்றதுக்கு காசு தர்றேன்னு சொல்லிட்டாங்க. எனக்கும் சினிமால சான்ஸ் வந்துட்டு இருக்கு…” என்றவர், தான் திரையின் ஓரங்களில் இடம்பிடித்த சில படங்களின் பெயர்களைச் சொன்னார் – அதில் ஒன்றைக் கூட நான் கேள்விப்பட்டதில்லை. உப்புமா படங்கள்.

தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். வீட்டுக்கு ஒரே பிள்ளை. சிறுவயதிலேயே கணவரை இழந்த இவரது தாயார் தன்னந்தனியாக வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். அந்தக் காலத்தில் சாப்பாட்டுக்கே சிரமப்படும் ஏழைக் குடும்பமாக இருந்துள்ளது. கணவரின் மரணத்திற்குப் பின் முதலில் தெரிந்தவர்களிடம் சீட்டுப் பிடித்து பின் வட்டிக்கு கடன் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தை மேலேற்றி இருக்கிறார். இவரது தாயார். ஓலா அறிமுகமான போது பழைய கார் ஒன்றை வாங்கி ஓலாவில் இணைத்து ஆள் போட்டு ஓட்டியிருக்கிறார். பின் வெகு சில ஆண்டுகளிலேயே பத்து கார்களுக்கு மேல் வாங்கி விட்டுள்ளார். கார்கள் ஒவ்வொன்றுக்கும் மாற்று ஓட்டுனர்கள் போட்டு இரவு பகலாக ஓடிக் கொண்டிருந்தாலும் வட்டித் தொழிலை இன்னும் விடவில்லை. ஒரே பிள்ளை என்பதால் செல்லம் அதிகம் என்பதை இவரோடு பேசியதில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

இறங்கும் இடம் வந்தது. “இங்கேருந்து திரும்பிப் போக உங்களுக்கு சவாரி கிடைக்கும் தானே?”

“ப்ரோ மணி எட்டு ஆயிடிச்சி. இதுக்கு மேல எவன் ஓட்டுவான்? பிரண்டுக்கு இன்னிக்கு பர்த்டே பார்டி.. அப்டியே போயிட்டு அங்கேயே தங்கிடுவேன்”

வாடகையைக் கொடுத்து விட்டு இறங்கினேன்.

0o0o0o0

வேலை முடிந்து திரும்பும் போதும் ’ஓலா’தான். இந்த முறை நடுத்தர வயதுக்காரர். மோடியில் ஆரம்பித்து டொனால்ட் ட்ரம்ப் வரை போகிற போக்கில் துவைத்துக் காயப் போட்டுக் கொண்டே வந்தார். என்னுடைய பதிலைக் கூட எதிர்பார்க்காமல் சடார் சடாரென பேச்சின் பொருளை மாற்றிக் கொண்டே வந்தார். குறுக்கிட்டுப் பேச வாய்ப்பே இல்லாத கடுப்பில் கொஞ்சம் கண்ணயரலாம் என இருக்கையை பின்னுக்கு இழுத்து சாய்ந்தேன். திரும்பிப் பார்த்தவர்,

“சார் தப்பா நினைச்சிக்காதீங்க.. மணி பதினொன்னு ஆயிடிச்சி… நீங்க தூங்கறத பார்த்தா எனக்கும் தூக்கம் வந்துடும்.. கொஞ்சம் பேசிட்டே வாங்களேன் ” என்றார்

ஒருவழியாக பேச வாய்ப்புக் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கையை மீண்டும் முன்னுக்கு இழுத்துக் கொண்டே, “பதினொன்னு தானே ஆச்சி.. அதுக்குள்ளே தூக்கமா?” என்றேன்.

”நேத்திக்கு காலைல வண்டில ஏறுனேன். இப்ப வரைக்கும் சாப்பிடவும் கக்கூசும் தான் இறங்கியிருக்கேன். தொடர்ந்து சவாரி ஓடிட்டு இருக்கு.. இனிமே ஏர்போர்ட் சவாரி மாட்டும்.. எப்படியும் விடியற வரைக்கும் ஓட வேண்டியிருக்கும்” என்றார்.

48 மணி நேரம். எப்படி ஒரு மனிதனால் தூங்காமல் வேலை பார்க்க முடிகிறதென்று ஆச்சர்யமானேன். “உடம்புக்கு எதுனா ஆயிடப் போகுதுங்க.. இடையில ரெஸ்ட் எடுத்துட்டு ஓட்டலாமே”

“ரெஸ்ட்டெல்லாம் எடுக்கிற நிலைமைல இல்ல சார்.. இன்னும் ஒரு மாசத்துக்குள்ளே ரெண்டு  லட்சம் சேர்க்க வேண்டியிருக்கு.. என்னா பன்றதுன்னே தெரியலை” என்றார்.

”ஏன் வண்டி வாங்கின கடனை அடைக்கிறதுக்கா”

“இல்லைங்க.. அதெல்லாம் ரெண்டு மாசம் முன்னவே அடைச்சிட்டேன்.. இது வேற விசயத்துக்காக” என்றவர் விவரங்களைச் சொன்னார்.

இவர் ஊட்டியைச் சேர்ந்தவர். இவரின் மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன் அரசுப் பள்ளியில் ஆசிரியப் பணி கிடைத்துள்ளது. முதலில் மேட்டுப்பாளையத்தில் பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. வேலை வாங்கவே சில லட்சங்களை வட்டிக்கு வாங்கி லஞ்சமாக கொடுத்துள்ளார். அந்தக் கடனை அடைப்பதற்கே மனைவியின் நகைகளும், ஊட்டியில் இருந்த சிறிய வீட்டையும் விற்றுள்ளனர். அதில் எஞ்சிய சொற்ப தொகையைக் கொண்டு தவணையில் கார் ஒன்றை வாங்கி மேட்டுப்பாளையத்தில் ஓட்டி வந்துள்ளார்.

அந்தக் கடன் அடைந்து கொண்டிருந்த போதே திடீரென கும்மிடிப்பூண்டிக்கு அருகே இருக்கும் கிராமம் ஒன்றுக்கு இவரது மனைவியை பணியிட மாற்றம் செய்துள்ளனர். படித்துக் கொண்டிருந்த பிள்ளைகளை  மேட்டுப்பாளையத்தில் உள்ள உறவினர் பொறுப்பில் விட்டுவிட்டு மனைவியோடு சென்னை வந்துள்ளார். மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கே பணியிட மாற்றம் வேண்டுமென்றால் இரண்டு லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர் அதிகாரிகள். அதற்காகவே நேரங்காலம் தெரியாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

”சரி பிள்ளைகளையும் சென்னைக்கே கூட்டி வந்திருக்கலாமே”

“இந்த ஊரு செலவு நமக்கு கட்டுப்படி ஆகாதுங்க. பசங்க படிப்பு… வீட்டு வாடகை எல்லாம் கொடுத்த பின்னே கையில் சல்லிக்காசு மிஞ்சாது. ரெண்டும் பொட்டைப் பிள்ளைங்க.. மூத்தது வேற வயசுக்கு வந்துடிச்சி.. நாளை பின்னே ஒரு நகை நட்டு சேர்க்க வேண்டாமா? இங்கே பத்தாயிரம் கொடுத்தா கிடைக்கிற அதே வீடு எங்க ஊர்ல மூவாயிரம் கொடுத்தாலே கிடைக்கும். சாப்பாட்டு செலவுக்கு இங்கே மாசம் பத்தாயிரம்னா ஊர்லே நாலஞ்சாயிரத்துல முடியும். அதும் போக அலைச்சல். எல்லா சொந்தமும் ஊர்ல இருக்காங்க. ஒரு நல்லது கெட்டதுக்கு குடும்பத்தோட போயி வரணும்னா பத்தாயிரம் காலி ஆவுது. இந்த ஊரு நமக்கு சரிப்படாதுங்க.” என்றார்.

இறங்கும் இடம் வந்தது. வாடகையைக் கொடுத்து விட்டு இறங்கினேன்.

– தமிழ்  கார்க்கி
( உண்மைச் சம்பவம்)

திருப்பதி கோவிலில் சமூக விரோதிகள் ! கருத்துப்படம்

2

சொன்னாலும் சொல்லுவார் பொன்னார் !

நான் கடந்த 2 வருடங்களாகவே சொல்லிக் கொண்டிருக்கிறேன் .. ஏழுமலையானுக்கு பூஜை செய்பவர்களில்கூட சமூகவிரோதிகள் ஊடுருவி விட்டார்கள் !
– சொன்னாலும் சொல்லுவார் பொன்னார்

கருத்துப் படம்: வேலன்

இணையுங்கள்:

மதுரையில் இரு தோழர்கள் கடத்தல் ! விருதையில் இரு தோழர்கள் மீது தேசத் துரோக வழக்கு !

மதுரை – ம.க.இ.க, மக்கள் அதிகாரம் தோழர்களை கடத்திய போலீசு !

துரை ம.க.இ.க வை சேர்ந்த சமயநல்லூர் தோழர் விஜயரங்கன் மற்றும் மக்கள் அதிகாரம் செக்கானூரணி தோழர் ஆசையன் (எ) ஆசை ஆகிய இருவரும் 08.07.2018 அன்று காலை போலீசாரால் கடத்தப்பட்டுள்ளனர்.

மக்கள் அதிகாரம் தோழர் ஆசையன்

மக்கள் அதிகாரத்தில் செயல்பட்டு வருபவர் தோழர் ஆசையன் (எ) ஆசை. சில நாட்கள் முன்பு தோழரின் வயதான தந்தையார் மற்றும் அண்ணனை அழைத்துச் சென்ற போலீசார், “தூத்துக்குடில கலவரம் பண்ணி இருக்கான். ஒழுங்கா அவன (ஆசையை) ஒப்படை. இல்ல உங்கள உள்ள தூக்கி வெச்சுருவோம்.” என மிரட்டி உள்ளனர்.

இந்நிலையில் தனது நண்பர் ஒருவரை பார்க்கச் சென்ற தோழர் ஆசையை அங்கேயே வைத்து கைது செய்துள்ளது போலீசு. தோழர் ஆசையை எங்கே கொண்டு சென்று உள்ளனர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

ம.க.இ.க தோழர் விஜயரங்கன்

தோழர் விஜயரங்கன் நீண்ட காலமாக மதுரை ம.க.இ.க -வில் செயல்பட்டு வருகிறார். இதய நோய் மற்றும் கடுமையான உயர் இரத்த அழுத்த நோயும் தோழரின் உடலை கடுமையாக பாதித்து உள்ள நிலையில் நேற்று அவரை கைது செய்துள்ளது போலீசு.

08.07.2018 அன்று காலை 9 மணியளவில் தோழரின் சிறிய கடைக்கு வந்த போலீசார், சப் – இன்ஸ்பெக்டர் விசாரிக்க அழைப்பதாக கூறி உடன் வருமாறு சொல்லி உள்ளனர். தோழர் உடன் வழக்கறிஞரை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். உடன், “இந்தா இருக்குற ஸ்டேஷனுக்கு வந்து பதில் சொல்லிட்டு திரும்பி வரப் போறீங்க, சீக்கிரம் வாங்க” என அவசரப் படுத்தி உள்ளனர்.

தோழரும் உடன் சென்று உள்ளார். ஆனால், உள்ளூர் காவல் நிலையத்திற்கு செல்லாமல், வாகனம் நான்கு வழிச் சாலை நோக்கி திரும்புவதைக் கண்டு தோழர் கேட்டதற்கு, “தூத்துக்குடி போறோம்” என கூறி உள்ளனர். தோழர் உடன் தனது கைபேசி மூலம் தனது துணைவியாரை தொடர்பு கொண்டு விசயத்தை கூறி உள்ளார். அதன் பின் தோழரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

கை பேசி அணைத்து வைக்கப்பட்டது. அன்றைய நாள் முழுக்க தோழரை போலீசு எங்கே கொண்டு சென்றனர் என்ற விவரமும் தெரியவில்லை. இந்நிலையில் நேற்று இரவு 11.00 மணி அளவில் இரண்டு போலீசார் தோழரை அழைத்து வந்து விட்டுச் சென்றுள்ளனர்.

போலீஸ் விசாரணை குறித்தும், தோழரை போலீசு சட்டவிரோதமாக கடத்திச் சென்றது குறித்தும் மேலதிக விவரங்களை அறிய வழக்கறிஞர்கள் விரைந்துள்ளனர்.

-வினவு செய்தியாளர்,
மதுரை.

*****

விருதை மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது தேசத்துரோக வழக்கு!

தூத்துக்குடி மக்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து 07.07.2018 அன்று கள்ளக்குறிச்சியில் பேருந்தில் பிரச்சாரம் செய்த தோழர்கள் கணேஷ் மற்றும் வினாயகம் ஆகியோர் மீது தேசத் துரோக வழக்கு (124a) மற்றும் 204b,353,505/1b ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது போலீசு. அதன் அடிப்படையில் தோழர்கள் இருவரும் தற்போது கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
விருதை.

அவர்கள் ஒரு கோப்பை காஃபியைக் கூட விட்டு வைக்கவில்லை !

ஜி.டி.பி மாயை : மதிப்புக் கூட்டலும் மதிப்பு கைப்பற்றலும் – ஜான் ஸ்மித்

பாகம் :4

ஜான் ஸ்மித் லண்டனில் உள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல், அரசியல் பொருளாதாரம், மனித உரிமைகள், இனப்படுகொலை துறைகளின் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். ஏகாதிபத்தியமும் உலகமயமாக்கலும் பற்றிய அவரது எதிர்வரும் புத்தகத்தை மன்த்லி ரிவியூ பிரஸ் வெளியிடவிருக்கிறது.

ஒரு கோப்பை காஃபி

லகளாவிய சரக்கு வர்த்தகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்றாவது முத்திரைப் பொருளாக ஒரு கோப்பை காஃபியை எடுத்துக் கொள்வோம். உலகளாவிய உற்பத்தி நடைமுறை பற்றிய இந்த சித்திரத்தை அது முழுமையடையச் செய்கிறது. கையில் ஒரு கோப்பை காஃபியுடன் இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கலாம். (இதைப் படித்த அதிர்ச்சியில் காஃபியை உங்கள் சட்டையிலோ, ஸ்மார்ட் ஃபோனிலோ சிந்தி விடாதீர்கள்!).

coffee farmers
காஃபியை பயிரிட்டு அறுவடை செய்பவர்கள் இறுதி விற்பனை விலையில் 2 சதவீதத்தை விடக் குறைவாகவே பெறுகின்றனர்

பிற பொருட்களுடன் ஒப்பிடும் போது காஃபிக்கு குறிப்பிடத்தக்க சிறப்புத் தன்மை ஒன்று உள்ளது. பெரிய அளவில் சர்வதேச வர்த்தகம் செய்யப்படும் விவசாயப் பொருட்களில் காஃபி மட்டும்தான் – ஹவாயில் வளர்க்கப்படும் மிகச் சிறிய அளவைத் தவிர – எந்த ஏகாதிபத்திய நாடுகளிலும் விளைவதில்லை. எனவே, பருத்தி, சர்க்கரை போன்ற பொருட்களுக்கு ஏகாதிபத்திய நாடுகள் வழங்கும் வர்த்தகத்தை திசைதிருப்பும் மானியங்களால் காஃபிக்கு வழங்கப்படுவதில்லை, எனவே அதன் சந்தைவிலை இதனால் பாதிக்கப்படுவதில்லை.

இருப்பினும் காஃபி விவசாயிகளின் வாழ்க்கை நிலைமை பிற விவசாயப் பண்டங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் அளவுக்கு மோசமாக அல்லது அவர்களை விட மோசமாகத்தான் உள்ளது. உலகத்தின் காஃபியில் பெரும்பகுதி சிறிய குடும்பப் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றது. சுமார் 2.5 கோடி விவசாய குடும்பங்கள் காஃபி விவசாயத்தைச் சார்ந்து உள்ளனர். அதே நேரம் இரண்டு அமெரிக்க மற்றும் இரண்டு ஐரோப்பிய நிறுவனங்கள் (சாரா லீ, கிராஃப்ட், நெஸ்லே, ப்ராக்டர் & கேம்பிள்) உலக காஃபி வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. காஃபியை பயிரிட்டு அறுவடை செய்பவர்கள் இறுதி விற்பனை விலையில் 2 சதவீதத்தை விடக் குறைவாகவே பெறுகின்றனர்.18 சர்வதேச காஃபி நிறுவனத்தின் தரவுகளின் படி 2009-ம் ஆண்டு காஃபி வறுத்தல், சந்தைப்படுத்தல், விற்பனை செய்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் உலகின் ஒன்பது முக்கிய காஃபி இறக்குமதி செய்யும் நாடுகளின் ஜி.டி.பி-ல் $3,100 கோடி சேர்க்கப்பட்டது. இது, காஃபி உற்பத்தி செய்யும் அனைத்து நாடுகளின் மொத்த ஏற்றுமதி வருமானத்தை விட இரண்டு மடங்குக்கும் அதிகம்.

பிற சர்வதேச வர்த்தக பண்டங்களைப் போலவே, ஒரு காஃபி கோப்பைக்கான விலையில் காஃபி அருந்தும் நாடுகளில் கணக்கிடப்படும் மதிப்புக் கூடுதல் ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது. அவற்றில் மிகப் பிரமிக்கத்தக்க உதாரணமாக பிரிட்டனை எடுத்துக் கொள்ளலாம். 1975-க்கும் 1989-க்கும் இடையே காஃபியின் இறக்குமதி விலை சில்லறை விற்பனை விலையில் சராசரியாக 43 சதவீதம் இருந்தது. 2000-க்கும் 2009-க்கும் இடையே இந்த சராசரி 14 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.19

branded coffee
ஸ்டார்பக்ஸின், அல்லது கஃபே நீரோவின் லாபத்தின் ஊற்றுவாய் எது?

எவ்வாறு ஆப்பிளின் லாபத்தில் ஒரு பைசா கூட சீன தொழிலாளர்களிடமிருந்து வரவில்லை என்றும், எவ்வாறு H&M-ன் லாபத்துக்கு அதீதமாக சுரண்டப்படும் வங்கதேச தொழிலாளர்களின் பங்களிப்பு எதுவும் இல்லை என்றும் பொருளியலாளர்களும், கணக்கியலாளர்களும் கூறுகின்றனரோ, அதைப் போல ஸ்டார்பக்ஸின், அல்லது கஃபே நீரோவின் லாபங்கள் அவற்றின் சொந்த சந்தைப்படுத்தல், வணிக முத்திரை நடவடிக்கைகள் மற்றும் சில்லறை விற்பனை நிபுணத்துவத்திலிருந்து எழுவது போல தோன்றுகிறது. அதில் ஒரு பைசா கூட கையால், “பசுமையான காஃபி கொட்டைகளை” பறிக்கும் காஃபி விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டது இல்லை என்கின்றன அவை. நமது உலகளாவிய பரிமாற்ற பண்டங்களுக்கான மூன்று உதாரணங்களிலும், மொத்த லாபம், அதாவது அவற்றின் உற்பத்திச் செலவுக்கும், சில்லறை விற்பனை விலைக்கும் இடையேயான வேறுபாடு 50 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. அது ஏகாதிபத்திய நிறுவனங்களின் லாபங்களை அதிகப்படுத்திக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், ஏகாதிபத்திய நாடுகளின் ஜி.டி.பி-யையும் அதிகரித்துக் காட்டுகின்றது.20

சீனா மட்டுமில்லை…

ஸ்மார்ட் ஃபோன்கள், சட்டைகள், காஃபி கோப்பைகள் ஆகியவை பிரதிநிதித்துவப்படுத்தும் பரந்துபட்ட மாற்றங்களை தொகுத்து பார்ப்பதோடு இந்தப் பகுதியை நிறைவு செய்கிறோம்.

உற்பத்திப் பொருட்களின் முக்கியமான ஏற்றுமதி நாடான சீனாவின் அதிசயிக்கத்தக்க வளர்ச்சி பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால், 1990-க்கும் 2004-க்கும் இடையே இன்னும் 40 “வளரும் நாடுகளின்” ஏற்றுமதி வளர்ச்சியில் உற்பத்திப் பொருட்களின் பங்களிப்பு 50 சதவீதத்துக்கு அதிகமாக இருந்தது. அவற்றின் மொத்த மக்கள்தொகை சீனாவின் மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு. அவற்றில் மூன்றாம் உலகநாடுகளின் மொத்த மக்கள் தொகையில் 76 சதவீதத்தைக் கொண்ட, 10 அதிக மக்கள் தொகை கொண்டுள்ள நாடுகள் உள்ளிட்ட 23 நாடுகள், 2004-ம் ஆண்டு தமது பாதிக்கும் அதிகமான ஏற்றுமதி வருவாயை ஆலை உற்பத்திப் பொருட்கள் மூலம் ஈட்டின21

workers
1990-க்கும் 2004-க்கும் இடையே இன்னும் 40 “வளரும் நாடுகளின்” ஏற்றுமதி வளர்ச்சியில் உற்பத்திப் பொருட்களின் பங்களிப்பு 50 சதவீதத்துக்கு அதிகமாக இருந்தது.

இவற்றுடன் கூடவே, மேலும் பல சிறிய நாடுகள், தமது பொருளாதாரங்களை உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதியை சார்ந்து இருக்கும்படி மாற்றும் சாகச முயற்சியில் இறங்கின. அதற்காக, அவற்றின் தேசிய பொருளாதாரங்களில் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் பொருளாதாரத்தையே மாற்றி அமைக்கும் உற்பத்தி சிறப்புப் பொருளாதார மண்டலங்களை தமது நாட்டில் அனுமதித்துள்ளன. மூன்றாம் உலக நாடுகளில் தொழில்துறை வளர்ச்சி மிகவும் சமனற்ற வகையில் பரவியுள்ளது என்பது உண்மைதான். ஆனால், அது மிகவும் பரவலாக உள்ளது என்பது ஏற்றுமதி உற்பத்தி மண்டலங்களின் (EPZ-கள்) எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பல மடங்கு வளர்ச்சியின் மூலம் தெரியவருகிறது. புள்ளிவிபரங்கள் கிடைக்கும் கடைசி ஆண்டான 2006-ஐப் பொறுத்தவரை, 130 நாடுகளில் உள்ள 2,700 ஏற்றுமதி உற்பத்தி மண்டலங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட மூன்று மடங்கு அதிகமாக 6.3 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஏகாதிபத்திய நாடுகளின் சந்தைகளில் நுகர்வதற்கான பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். 23

பல பத்து கோடி தொழிலாளர்களையும் விவசாயிகளையும் நிலத்திலிருந்து அல்லது பாதுகாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து “விடுவித்ததன்” மூலம், புதிய தாராளவாத உலகமயமாக்கம் மூன்றாம் உலக நாடுகளில் அதீத சுரண்டலுக்குள்ளாகத் தயாரான உழைப்பாளர்களின் எண்ணிக்கையை பெரும் அளவில் விரிவுபடுத்தியிருக்கிறது. இதைப் பயன்படுத்தி அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய நிறுவனங்கள் தமது உற்பத்தியை குறைகூலி நாடுகளுக்கு பெருமளவில் இடம் மாற்றியிருக்கின்றனர். அது அந்நிய நேரடி முதலீடு (FDI) வழியிலாகவோ, அல்லது நேரடி தொடர்பில்லாத வழங்கல் நிறுவனங்களுடன் கைக்கெட்டிய உறவின் மூலமாகவோ செய்யப்படுகிறது. இதன் விளைவாக தோன்றிய அயலக உற்பத்தி நிகழ்முறை ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதாரங்களை மாற்றியமைத்திருக்கின்றது; அவற்றின் ஜி.டி.பி-ல் உற்பத்தித் துறையின் பங்களிப்பு குறைவதை வேகப்படுத்தியிருக்கின்றது. சர்வதேச உழைக்கும் வர்க்கத்தை மிக முக்கியத்துவம் வாய்த்ததாக உருமாற்றியிருக்கிறது :

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாம் உலக நாடுகளின் தொழில்துறை தொழிலாளர்களின் எண்ணிக்கை “தொழில்மயமான நாடுகளின்” தொழிலாளர் எண்ணிக்கைக்கு சமமாக இருந்தது. இப்போது உலகத் தொழிலாளர் படையில் 80 சதவீதம் மூன்றாம் உலக நாடுகளில் உள்ளனர். “தற்போதைய உலகமயமாக்கலின் அதிகக் கவனத்தைக் கவரும் ஒரு தன்மை பல உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளின் உழைப்பாளர் படையில் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களின் பங்கு மேலும் மேலும் அதிகரித்து வருவது ஆகும். சுருக்கமாகச் சொல்வதென்றால், உலகின் தொழில்துறை உற்பத்தியின் ஈர்ப்பு மையம் உலகப் பொருளாதாரத்தின் வடக்கிலிருந்து தெற்குக்கு நகர்ந்திருக்கிறது.” என்று கேரி கெரஃபி கூறுகிறார்.24

workers
130 நாடுகளில் உள்ள 2,700 ஏற்றுமதி உற்பத்தி மண்டலங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட மூன்று மடங்கு அதிகமாக 6.3 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஏகாதிபத்திய நாடுகளின் சந்தைகளில் நுகர்வதற்கான பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்

2004-ம் ஆண்டு மன்த்லி ரிவியூ ஆசிரியர்கள் கூறியது போல, “புவியியல் ரீதியாக நகர முடியாததாகவும், அதனால் ஒன்று கலக்க முடியாததாகவும் உள்ள தொழிலாளர் திரள்கள் மேலும் மேலும் வலி மிகுந்த போட்டியில் ஈடுபடும்படி பன்னாட்டு மூலதனம் செயல்படுகிறது. அதற்கு சர்வதேச சமனற்ற நிலைகளை ஆதாயமாகக் பயன்படுத்திக் கொள்கிறது”25 இந்த “உலகளாவிய சமநிலையின்மை”க்கு மையமாக இருப்பது, எல்லை தாண்டி சுதந்திரமாக தொழிலாளர்கள் நகர்வற்கு போடப்பட்டுள்ள தடைகள் ஆகும். ஏகாதிபத்திய நாடுகளின் நிரந்தரமாக பராமரித்து வரும் பெரும் ராணுவ, அரசியல் கட்டமைப்பு மூலம் இது அமல்படுத்தப்படுகிறது. இனவாதம் மற்றும் தேசிய ஒடுக்குமுறைக்கான பரந்துபட்ட கட்டமைப்பின் ஒரு பகுதியாகவும் இந்த அணிதிரட்டல் உள்ளது. இந்தச் சமநிலையின்மைகள் தொழிலாளர்கள் ஒரு சர்வதேச இயக்கத்தில் இணைவதற்கு தடை போடுகின்றன. மேலும் இந்த நிலைமை மூன்றாம் உலக நாடுகளில் பெருமளவு அதிகரித்துள்ள உழைப்பாளர் பட்டாளத்தை பயன்படுத்தி சர்வதேச கூலி வேறுபாடுகளை பிரமிக்கத்தக்க அளவு அதிகரிக்கச் செய்துள்ளது. அனைத்து விதமான பிற சர்வதேச சந்தைகளில் விலை வித்தியாசங்களை விட இது மிக அதிகமாக உள்ளது.

இதன் விளைவாக ஏகாதிபத்திய மற்றும் மூன்றாம் உலக பொருளாதாரங்களில் கூலிகளுக்கிடையே வேறுபாடு பெருமளவு அதிகரிக்கிறது. இது ஏகாதிபத்திய நிறுவனங்கள் தமது லாபத்தை அதிகரிக்க இரண்டு வேறுபட்ட வழிகளை வழங்குகின்றது:
(1) உற்பத்தி நிகழ்முறைகளை குறைகூலி நாடுகளுக்கு மாற்றி, அதன் அனைத்துக் கட்டங்களிலும் குறைகூலி தொழிலாளர்கள் மீதான சுரண்டுதலை விரிவுபடுத்துவது
(2) “சொந்த நாட்டில்” குறைகூலி புலம் பெயர் தொழிலாளர்களை அதீத சுரண்டலுக்கு உள்ளாக்குவது.

ஐ.எம்.எஃப்-ன் “உலகப் பொருளாதார கண்ணோட்டம் 2007” இந்தத் தொடர்பை “வளர்ந்த பொருளாதாரங்கள் சர்வதேச தொழிலாளர் படையை இறக்குமதி மூலமாகவோ, புலம் பெயர்தல் மூலமாகவோ பயன்படுத்திக் கொள்ள முடியும்” என்று கூர்மையாக முன்வைக்கிறது. மேலும், “நாடு விட்டு நாடு புலம் பெயர்தல் பல நாடுகளில் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், வர்த்தகம்தான் ஒப்பீட்டளவில் முக்கியமான, வேகமாக விரிவடையும் பாதையாக உள்ளது.” என்பதை சுட்டிக் காட்டுகிறது26. மார்கன் ஸ்டான்லியைச் சேர்ந்த மூத்த பொருளாதாராவியல் நிபுணர் ஸ்டீபன் ரோச், இந்த புதிய தாராளவாத உலகமயமாக்கலை இயக்கும் உந்து சக்தி எது என்பதை, பொதுவில் அரிதாகவே காணக் கிடைக்கும் கூர்மையான வடிவில் வெளிப்படுத்துகிறார்: “மிகை உற்பத்தி சகாப்தத்தில் முன்னெப்போதும் இல்லாத முறையில் நிறுவனங்கள் தமது பொருட்களுக்கான விலையை நிர்ணயிக்கும் சக்தியை இழந்திருக்கின்றன. எனவே, அவை புதிய திறன் மேம்படுத்தல்களை (அதாவது குறைகூலி உற்பத்தி முறைகளை) தேடுவதில் விடாப்பிடியாக இருக்க வேண்டும். வளரும் நாடுகளின் குறைகூலி தொழிலாளர்களிடமிருந்து மதிப்பைக் கறக்கும் அயலக உற்பத்தி முறை மூலமாகத்தான் வளர்ந்த நாடுகளின் நிறுவனங்கள் தாக்குப் பிடிக்க முடியும் என்ற நிலைமை மேலும் மேலும் வலுப்பெறுகிறது.27

18. Karen St Jean-Kufuor, Coffee Value Chain, 2002, http://maketradefair.com.
19. Denis Seudieu, Coffee Value Chain in Selected Importing Countries, International Coffee Council, March 2011, http://dev.ico.org . The nine coffee-importing countries are France, Germany, Italy, Japan, Netherlands, Spain, Sweden, United Kingdom, and the United States.
20. Galina Hale and Bart Hobijn calculate that “on average, of every dollar spent on an item labelled ‘Made in China’, 55 cents go for services produced in the United States.” See their “The U.S. Content of ‘Made in China’,” FRBSF Economic Letter, Federal Reserve Bank of San Francisco, August 8, 2011, http://frbsf.org.
21. The twenty-three nations are Argentina, Bangladesh, Brazil, China (including Hong Kong), Egypt, India, Indonesia, Malaysia, Malta, Mauritius, Mexico, Morocco, Pakistan, Philippines, Singapore, South Africa, South Korea, Sri Lanka, Taiwan, Thailand, Tunisia, Turkey, and Vietnam. See Table 4.4 “Structure of Merchandise Exports” in World Bank, World Development Indicators 2006 (Washington, DC: Development Data Center, World Bank, 2006), http://books.google.co.uk.
22. The ILO reports that “Women make up the majority of workers in the vast majority of zones, reaching up to 90% in some of them.” Employment and Social Policy in Respect of Export Processing Zones (EPZs) (ILO: Geneva, March 2003), http://ilo.org, 6.
23. To put this in perspective, 150 million industrial workers were employed in the Triad countries. See “EPZ Employment Statistics” in Jean-Pierre Singa Boyenge, ILO Database on Export Processing Zones (Revised), Sectoral Activities Programme Working Paper WP.251, April 2007, http://ilo.org, 1.
24. Gary Gereffi, The New Offshoring of Jobs and Global Development, ILO Social Policy Lectures (Geneva: ILO Publications, 2006), 5.
25. John Bellamy Foster, Harry Magdoff, and Robert W. McChesney, “The Stagnation of Employment,” Monthly Review 55, no. 11 (April 2004): 11.
26. IMF, World Economic Outlook 2007—Spillovers and Cycles in the Global Economy, International Monetary Fund, Washington, D.C, 2007, http://imf.org,180.
27. Stephen Roach, Outsourcing, Protectionism, and the Global Labor Arbitrage, Morgan Stanley Special Economic Study, November 11, 2003, http://neogroup.com, 5–6.

(தொடரும் …)

முந்தைய பாகங்கள்:

  1. ஆப்பிள் ஐஃபோன் தரமும் ஷென்சென் நகர தொழிலாளிகளின் தற்கொலையும் !
  2. ஆப்பிள் நிறுவனம் சீனாவிலிருந்து திருடுவது எவ்வளவு ?
  3. ஐஃபோன் – ஆயத்த ஆடை : சீன – வங்கதேச தொழிலாளரைச் சுரண்டும் அமெரிக்கா – ஜெர்மனி !

மொழிபெயர்ப்பு : குமார்
ஆங்கில மூலம் : Value Added versus Value Capture by John Smith
நன்றி : Monthly Review

நன்றி: புஜதொமு – ஐ.டி. ஊழியர்கள் 

காலாவை தோல்வியுறச் செய்த தமிழ் மக்கள் ! சினிமா ஒரு வரிச்செய்திகள்

மசாலா: ‘காலா’ படத்தின் தோல்வி அப் படத்தில் நாயகியாக நடித்த ஹூமா குரேஷிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தியில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லையென்பதால், ரஜினியின் காதலியாக வயதான கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தார். ரஜினி படம் என்பதால் தென்னிந்தியாவில் வாய்ப்புகள் வரும் என்று நினைத்தார். ஆனால் காலாவின் தோல்வியால் வாய்ப்புகள் வரவில்லையாம்.

மருந்து: காலாவில் ஹுமா குரேஷியின் பாத்திரம் பெண்களின் முன்னோடி பாத்திரம் என்று சில அப்பாவிகள் சொன்ன தத்துவ விளக்கத்தின் கவித்துவ முடிவு இதுதான்! என்ன இருந்தாலும் ரஜினியும், காலாவும் ‘ஆம்பளைதான்’ என்பதற்கு இதை விட என்ன வேண்டும்?

~~~~~~~~~

மசாலா: நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் பிரவேசிக்கப்போவதாக அறிவித்து விட்டு ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி உறுப்பினர் சேர்க்கை பணிகளை தொடங்கினார். கூடவே 165-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவரது மனைவியான லதா ரஜினி, மகாராஷ்டிரா சென்றபோது, மராட்டிய நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே மற்றும் அவரது மனைவி சார்மிளாவை சந்தித்து பேசியுள்ளார். அரசியல், சினிமா, சமூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை லதா ரஜினியுடன் பேசியதாக ராஜ் தாக்கரே டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

மருந்து: காலாவின் உண்மையான முகம் காவி என்பதை இதற்கு மேலும் ஒத்துக் கொள்ளாதவர்கள் யாருப்பா?

~~~~~~~~~

மசாலா: கடந்த ஜூலை 4ஆம் தேதி பிரபல நடிகை சோனாலி பிந்த்ரே தனது ட்விட்டர் பக்கத்தில் “வாழ்கை விசித்திரமானது. நீங்கள் எதிர்பார்க்காதது திடீரென நடந்துவிடும். ஆம், என்னை சோதித்த மருத்துவர் நான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகர் மருத்துவமனையில் சிகிச்சையை மேற்கொண்டு வருகிறேன். புற்று நோய்க்கு எதிராக போராடிக்கொண்டு இருக்கிறேன், நிச்சயம் வென்று விடுவேன். எனக்கு பக்கபலமாக என் குடும்பத்தினரும் நண்பர்களும் இருக்கிறார்கள்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் 43 வயதாகும் சோனாலி பிந்த்ரே.

மருந்து: சோனாலியின் உருக்கத்தை தலைப்புச் செய்தியாக்கிய ஊடகங்கள்தான் இதே மண்ணில் பிரசவம் துவங்கி மார்பக – கர்பப்பை புற்றுநோய் வரை அன்றாடம் மரிக்கும் ஏழைப் பெண்களை துணுக்குச் செய்தியாக கூட போடுவதில்லை! சிவப்பா இருக்குறவனுக்கு வந்தாதன் அது நோயா?

~~~~~~~~~

மசாலா: ரஜினிகாந்தின் ’காலா’ படம் கடுமையான நட்டத்தைச் சந்தித்திருப்பதால், அந்த நஷ்டத்தை நடிகர் தனுஷ் திருப்பிக் கொடுப்பதற்கு உறுதியளித்துள்ளார். இப்படத்தை ’டிஸ்ட்ரிபியூஷன்’ கொடுத்திருப்பதால் அவர் கண்டிப்பாக நட்டத்தைத் திருப்பிக் கொடுத்துதான் ஆக வேண்டும். ’காலா’ நட்டத்தை – சுமார் 40 கோடி ரூபாய் – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கொடுப்பதாகவும் அதற்காக தனுஷ் அவருக்கு மூன்று படங்களில் நடித்துக்கொடுக்க சம்மதித்துள்ளார்’என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

மருந்து:  தூத்துக்குடியில் போராடிய மக்களை சமூக விரோதிகள் என்று இழிவுபடுத்திய ரஜினியின் “காலா” படத்தை புறக்கணித்து, மெகா தோல்வியடைச் செய்த தமிழக மக்களுக்கு கோடான கோடி நன்றிகள்!

~~~~~~~~~

மசாலா: கமல்ஹாசன் தனது “வணக்கம் ட்விட்டர்” பகுதியில் ஒரு ரசிகர் “உங்களின் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால், நீங்கள் வரவேற்பீகளா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்” என்று கூறியிருந்தார். வெளிப்படையாக தனக்கு அழைப்புக் கொடுத்த கமல்ஹாசனை தொலைபேசியில் அழைத்து நடிகர் விஜய் நன்றி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மருந்து: கைப்பிள்ள கமலே அரசியல்ல பலரை தூக்கி கடாசியத பாக்கும் போது தம்பி அணில் என்ன செய்யப் போவுதோன்னு தமிழ்நாடே திகில்ல இருக்காம்ல! நான்சென்ஸ்!

~~~~~~~~~

மசாலா: ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான என்.டி.ராமராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு தற்போது பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது. “என்.டி.ஆர் பயோபிக்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கிறார். என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கிறார்.

மருந்து: என்.டி.ராமாராவை அரசியலில் குளோஸ் செய்த மருமகன் சந்திரபாபு நாயுடு வேடத்தில் யார் நடிப்பார்? சந்திரபாபுவின் மகனா?

~~~~~~~~~

மசாலா:  ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்த மஞ்சுமா மோகன் பெரிய அளவுக்கு பேசப்பட்டாலும் அப்படம், அதிக வாய்ப்புக்களை ஏற்படுத்தி தரவில்லை. இந்நிலையில் அவரிடம் யாருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என கேட்கப்பட்ட போது, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில், அவர் வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். அவர் ஒரு அயர்ன் லேடி. தைரியசாலி. படத்தில் நடிப்பதன் மூலம் அவரது வாழ்க்கையை அப்படியே அனுபவிக்கலாம் இல்லையா?” என்று கூறியிருக்கிறார் மஞ்சுமா.

மருந்து: அயர்ன் லேடி அப்பல்லோவில் அல்வா சாப்பிட்டு கந்தல் கோலமான கதை அம்மணிக்குத் தெரியாதா? இல்லை உயிரோடு இருந்தால் உயிர்த்தோழியோடு பரப்பன அக்ரஹாரத்தின் மோட்டு வளைப் பல்லியைப் பார்த்தவாறே கொட்டாவி விட வேண்டும் என்ற விசயமும் தெரியாதா?

~~~~~~~~~

மசாலா: சர்கார் பட போஸ்டரில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை, நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸ்க்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. சுகாதாரத்துறையின் நோட்டீஸிற்கு சர்கார் படக்குழு பணிந்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் விஜய் புகைப்பிடித்த சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நீக்கப்பட்டுள்ளது.

மருந்து: சிகரெட் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சுகாதாரத் துறை இதே மாதிரி சரக்கு குடிக்கும் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா? மீறித் தெரிவித்தாலும் எடப்பாடி ஆட்சி உடனே உச்சநீதிமன்றம் சென்று அது சரக்கு இல்லை தாக சாந்தி என்று பெயர் மாற்றம் செய்து விடுமே!

~~~~~~~~~

மசாலா: நடிகர் தனுஷ் தனது நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவராக சுப்ரமணியம் சிவாவையும், செயலாளராக ராஜாவையும் நியமித்துள்ளார். இந்த சுப்ரமணியம் சிவாதான், தனுஷின் திருடா திருடி, சீடன் மற்றும் அமீரின் யோகி படங்களை இயக்கியவர்.

மருந்து: லைக்காவின் மேலாண்மை நிர்வாகி ராஜு மகாலிங்கம், ரஜினி கட்சியின் மேனேஜராகும் போது, மருமகன் தனுசுக்கு மார்கெட் போன ஒரு திரைப்பட இயக்குநர்தான் கிடைத்தாரா? ஐ.நா சபையிலேயே பரதம் ஆடிய பரம்பரையின் ஸ்டெட்டஸ் என்ன ஆனது?

~~~~~~~~~

மசாலா: பிரேமம் படத்தில் நடித்து பின்னர் தமிழில் தனுசுடன் கொடி படத்தில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் வாய்ப்பில்லை என்றபோதும், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். “கிளாமராக நடிக்க மாட்டேன் என்று நான் எந்த இயக்குனரிடமும் சொன்னதில்லை. அதோடு, எனக்கு பிடித்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன். கதைக்கு அவசியப்பட்டால் ஆபாசமாக இல்லாமல் கிளாமராக நடிப்பதில் எந்த தவறும் இல்லை என்பதே எனது கருத்து” என்று அனுபமா கூறியுள்ளார்.

மருந்து: கிளாமர் மற்றும் ஆபாசத்தை பிரிக்கும் எல்லைக்கோடு மங்கலாக இருக்கும் தைரியத்தில் மார்கெட் போன நடிகைகள் பலரும் இப்படி தெளிவாக கதைக்கிறார்கள்!

~~~~~~~~~

மசாலா: 1965ம் ஆண்டு வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகமான மூர்த்தி அன்று முதல் வெண்ணிற ஆடை மூர்த்தி என்றே அழைக்கப்பட்டார்.50 ஆண்டுக்களில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக முதுமை காரணமாக நடிப்பதை நிறுத்திக் கொண்டார். சமீபத்தில் தனது 80வது பிறந்த நாளை மனைவி மணிமாலாவுடன் எளிமையாக கொண்டாடினார் வெண்ணிற ஆடை மூர்த்தி.

மருந்து: சினிமா வரலாற்றில் இவர் வெறும் வெண்ணிற ஆடை மூர்த்தி என்று அழைக்கப்படுவாரா? டபுள் மீனிங் வெண்ணிற ஆடை மூர்த்தி என்று அழைக்கப்படுவாரா?

~~~~~~~~~

மசாலா: ‘கோச்சடையான்’ பட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் ஆட் பீரோ நிறுவனத்திற்கு பணத்தைத் தரவில்லை. இதனால், உச்சநீதி மன்றம் அவருக்கு கெடு விதித்து, ஜூலை  10-ம் தேதிக்குள் பணத்தைச் செலுத்த வேண்டும் என்று எச்சரித்தது.

மருந்து: வாங்கிய கடனை அடைக்க முடியாதவனெல்லாம், அதுவும் உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டும் அடைக்காதவனெல்லாம், சட்டத்தை மதிச்சு நடக்கணும்னு புத்திமதி சொல்றானுகளே! கடுப்பேத்துறாங்க மை லார்ட்!

~~~~~~~~~

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார்?

  • ரசு மக்கள் அதிகாரத்தை மட்டும் குறி வைத்து தாக்குவது ஏன்?
  • போலீசால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு யார் காரணம் ? பின்னணியில் யார் இருக்கிறார்கள் ?
  • தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார்?
  • மக்கள் அதிகாரம் தடை செய்யப்பட்டால், என்ன செய்யப் போகிறீர்கள்?

– பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு!

பாருங்கள், பகிருங்கள் !

பி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி !

.டி துறை என்றாலே 50 ஆயிரம், ஒரு லட்சம் சம்பளம், வெளிநாட்டு பயணம், மேட்டுக்குடி வாழ்க்கை என்றுதான் பொதுவாக நினைக்கிறோம். ஆனால், இந்திய ஐ.டி துறையில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பி.பி.ஓ/கால் சென்டர் எனப்படும் ஐ.டி சேவைத் துறையில் பணிபுரிகிறார்கள் என்பது தெரியுமா? அவர்களது வேலை நிலையும் வாழ்நிலையும் என்னவென்று தெரியுமா?

கால் சென்டர், மெடிக்கல் கோடிங், கஸ்டமர் சப்போர்ட் என்று ஆலைத் தொழிலாளரை போல கசக்கிப் பிழியப்பட்டு அற்ப கூலி கொடுக்கப்படும் படித்த இளைஞர்களின் கதை தெரியுமா?

கால் சென்டர் வேலையில் வெளிநாட்டு கால் சென்டர், உள்நாட்டு கால் சென்டர், அதிலும் தமிழ் கால் சென்டர், ஆங்கில கால்சென்டர் என்று பலவகை உண்டு. சர்வதேச பி.பி.ஓ வேலை செய்ய வேண்டுமெனில், அதற்கு ஆங்கில புலமை தேவை, டிகிரி வாங்கி இருக்க வேண்டும். ஆங்கில புலமை இல்லாதவர்களுக்கு உள்நாட்டு பி.பி.ஓ தான் கிடைக்கும்.

இந்த Domestic BPO வேலை செய்பவர்களுக்கு சம்பளம் குறைவு. அதிலும் முதல் மூன்று மாதம் பாதி சம்பளம்தான் கொடுப்பார்கள். மூன்று மாதம் பிறகு தான் முழு சம்பளமும் பழைய பாக்கியும் கிடைக்கும். முதல் மாதம் பயிற்சி, முதல் மாத இறுதிக்குள் அந்தப் பயிற்சியில் தேர்ச்சி பெற வேண்டும் இல்லை எனில் அனுப்பி விடுவார்கள்.

வேலை செய்யும் பெரும்பான்மையருக்கு, வரும் கால்களுக்கு தீர்வு முழுமையாக கொடுக்க முடியாது என்று தெரியும். ஏனெனில், பேசுவதற்கான வழிகாட்டல் படிவத்தில் இருக்கும் தீர்வுகள் பிரச்சனையை சரி செய்யும் விதமாக இருக்காது. கொஞ்சம் விபரம் தெரிந்த வாடிக்கையாளர்களுக்கு அந்தத் தீர்வு அபத்தமாக இருக்கும்.

ஃபோன் ஆப் செய்து ஆன் செய்யவும், manual Setting செய்யவும், பிறகு புதிய Sim வாங்கச் சொல்லுவது என்று அழைத்த வாடிக்கையாளரை சுற்றி விட வேண்டும். அதாவது, இவற்றில் 40% முதல் 60% வழிமுறைகள் வேலை செய்யாது. நிறுவனத்தின் Signal மற்றும் Tower பிரச்சனையை மறைக்க இதனை செய்ய சொல்லுவார்கள்.

மேற்கூறிய தீர்வுகளை சொன்னால், விபரம் தெரியாத மக்கள் ஏற்று கொள்ளுவார்கள், அனுபவம் உடையவர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். எந்தத் தீர்வு பற்றி பேச வாய் எடுத்தாலும் அதனை செய்து முடித்தாகிவிட்டது என்று குறிப்பிடுவார்கள்; புகார் எடுக்கச் சொல்லுவார்கள், ஆனால் Team Lead தவிர்க்க இயலாத பட்சத்தில் மட்டும் புகார் எடு, பேசி மழுப்பி விடு என்று குறிப்பிடுவார்கள்.

அதிகம் புகார் எடுக்க ஆரம்பித்தால் மேலாளர் அழைத்து புகார் அதிகம், எடுக்காதே என்று ‘அன்பாக’ கூறுவார். முதல் மாதம் மட்டும் இப்படி, பிறகு கடுமையான வார்தைகளில் திட்டுவார்கள். வரும் கால்கள் 90% தீர்வு கிடைக்காத மாதிரிதான் வரும், அதனை 2½ நிமிடத்தில் முடிக்க வேண்டும். இல்லை எனில் திட்டு வாங்க வேண்டி இருக்கும். இவ்வாறு ஒரு நிமிடம் கூட வீணாகி விடாதபடி ஊழியர்களை இறுக்கிப் பிடிக்கிறார்கள்.

பெரும்பாலும் வாடிக்கையாளர் 2½ நிமிடத்தில் முடிக்க மாட்டார், அது எப்படி, இது எப்படி என்று குறைந்தது 4 நிமிடம் எடுக்கும். கால்கள் காலை 8 முதல் 11 மணியும் மாலை 5 முதல் இரவு 11 வரை அதிகம் இருக்கும். இந்த நேரத்தில் அதிகம் அழுத்தம் கொடுப்பார்கள். “அழைப்பை சீக்கிரம் முடி, அழைப்புகள் வந்து கொண்டு இருக்கின்றது”, என்று கத்துவார்கள். பெண்கள் என்றால் வாடிக்கையாளர் வசவு அதிகமாக இருக்கும், சில பெண்கள் அழுது விடுவார்கள்.

ஏனெனில் நிறுவனம் அதிக அழைப்புகளை எடுத்து பேசி முடிக்க வேண்டும். ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் ஒப்பந்த முறையில் வேலையை நான்கு, ஐந்து நிறுவனங்களுக்கு பிரித்து கொடுப்பார்கள். குறிப்பிட்ட நிறுவனத்தின் லாபமே எத்தனை கால்கள் இந்த கால் சென்டருக்கு வந்தது என்பதை பொறுத்து தான் இருக்கின்றது.

கணினியில் தரவுகளை உள்ளிடும் ஒரு வேலையை எடுத்துக் கொள்வோம். ஒரு மெடிக்கல் கோடிங் (மருத்துவ தரவுகளை தொகுத்தல்) நிறுவனத்தில், ஒவ்வொரு ஊழியரும் அமெரிக்க மருத்துவமனைகளிலிருந்து வரும் 150 நோயாளி தரவுகளை இனம் பிரித்து தொகுக்க வேண்டும். ஆனால், தினமும் காலையில் முடிக்க வேண்டிய 150 தரவுகளை ஒதுக்கிக் கொடுக்க மாட்டார்கள். மொத்தமாக, சென்னை அலுவலகத்தில் 100 பேர், பிலிப்பைன்ஸ் அலுவலகத்தில் 100 பேர் என்று எல்லோருக்கும் சேர்த்து திறந்து விடுவார்கள். மொத்தமாக ஆயிரக்கணக்கில் திறந்து விட்டதும், அதிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து தொகுக்க வேண்டும். ஒவ்வொரு ஊழியரும் சக ஊழியருடன் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்ய வேண்டும். ரொட்டித் துண்டுகளை வீசி எறிந்ததும் ஓடும் நாய்கள் கூட்டம் போல ஓட வேண்டியிருக்கும், சில நேரம் இணைய சண்டை கூட போட வேண்டியிருக்கும். இது தோற்றுவிக்கும் பதட்டமும், மன அழுத்தமும் ஒவ்வொரு நாளையும் நரகமாக மாற்றி விடும்.

ஒரு நாளில் போதுமான தரவுகள் வாடிக்கையாளரிடமிருந்து வரா விட்டால் பாதியில் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அதற்கு பதிலாக, சனி/ஞாயிறு விடுமுறை நாளில் வந்து வேலை செய்ய வேண்டும். இதை எல்லாம் எதிர்த்து கேள்வி கேட்டால் வேலையை விட்டு அனுப்பி விடுவார்கள்.

இவ்வாறு ஏர்டெல், வோடஃபோன் என்று உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கும், அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கும் குறைந்த கூலியில் உழைத்துக் கொட்டுவதற்காக அந்நிறுவனங்களின் காண்டிராக்டுகளை எடுக்கும் தரகு நிறுவனங்கள் தொழிலாளர்களை கசக்கிப் பிழிகின்றன.

ஐ.டி துறையிலேயே பி.பி.ஓ ஊழியர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். ஒரே நிறுவனம் மென்பொருள் பராமரிப்பு பிரிவையும், பி.பி.ஓ-வையும் நடத்தினால், பி.பி.ஓ அலுவலகத்தில் கழிப்பறை வசதி, உணவக வசதி கூட கேவலமாக பராமரிக்கப்படும். ஐ.டி அலுவலகத்தில் 4 மணி நேரத்துக்கு ஒருமுறை டாய்லெட் சுத்தம் செய்யப்பட்டால் அதே நிறுவனத்தின் பி.பி.ஓ அலுவலகத்தில் 12 மணி நேரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படுகிறது. பி.பி.ஓ-வில் வேலை செய்யும் நூற்றுக் கணக்கான ஊழியர்கள், மின்னஞ்சல் பார்க்க, லீவ் அப்ளை செய்ய பயன்படுத்துவதற்கு 4 லேப்டாப் மட்டும் வைத்திருப்பார்கள். அதற்கு வரிசையில் நின்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடக்கத்தில் மாதச் சம்பளம் ரூ 4,000 அதிலும் பாதியை பிடித்து வைத்துக் கொள்வது என்று சுரண்டுவார்கள். மாதச் சம்பளம் ரூ 7,000 ஆரம்பித்து அதிக பட்சமாக ரூ 30,000 வரை போகிறது. சம்பளத்தை 1-ம் தேதி கொடுக்காமல் 15-ம் தேதி கொடுப்பது, வெள்ளி விடுமுறை எடுத்தால் சனி, ஞாயிறையும் விடுமுறை கணக்கில் சேர்ப்பது என்று பல கொடுமைகள் உள்ளன.

உண்மையில், இந்தத் துறையில் லே ஆஃப் என்பது இல்லை. குறைந்த சம்பளம், அதிக பணிச் சுமை என்று பல ஊழியர்கள் ஓரிரு ஆண்டுகளில் உடலும், மூளையும் தளர்ந்து போய் வேலையை விட்டு வெளியேறி விடுகிறார்கள். முதலாளிகள் புதிதாக வேலைச் சந்தைக்கு வரும் லட்சக்கணக்கான இளைஞர்களை வைத்து தமது உழைப்புச் சுரண்டலை தொடர்கிறார்கள்.

இவ்வாறு சைபர் கூலிகள் என்று அழைக்கப்படும் ஐ.டி/ஐ.டி சேவைத் துறை ஊழியர்களில் அதற்கேற்ற ஊதியமும் இல்லாமல் கடுமையாக சுரண்டப்படுபவர்கள் இந்த பி.பி.ஓ/கால் சென்டர் துறை ஊழியர்கள். ஐ.டி ஊழியர்களிலேயே தனி வகைப்பட்ட ‘கீழ்ச்சாதி’யாக வைக்கப்பட்டிருக்கின்ற இந்த ஊழியர்களது அவலங்கள் வெளியில் வருவதில்லை. முதலாளிகளைப் பொறுத்தவரை வெள்ளை சட்டை போட்டாலும், நீல சட்டை போட்டாலும் அவர்களுக்கு வேண்டியது தொழிலாளர்களின் ரத்தம், அதை உறிஞ்சி பெருகிக் கொண்டே போவதுதான் முதலாளித்துவத்தின் சாராம்சம். தொழிலாளி வர்க்கம் அப்படி பிரித்துப் பார்க்க முடியுமா? நாம் எந்த சட்ட போட்டாலும், சிவப்புச் சட்டைக்காரர்கள்தானே, தோழர்களே?

– ஹரிகரன்
புதிய தொழிலாளி, ஜூன் 2018
நன்றி: புஜதொமு – ஐ.டி. ஊழியர்கள் 

கடவுளைக் களவாடும் கபோதிகள் யார் ? உண்மை இதழ் கட்டுரை !

1983 -இல் காசி விசுவநாதர் கோயில் திருட்டுப்பற்றி பிரபலமாகப் பேசப்பட்டது.

காசி விஸ்வநாதர் கோவில் திருட்டு, சிவலிங்கம் பதிக்கப்பட்ட அடித்தளத்தில் உள்ள 2 கிலோ தங்கம் சுரண்டி எடுக்கப்பட்டுவிட்டது. திருடர்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு பிடிபட்டார்கள். மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டனர். டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் பல்பீங்சிங்பேடி கோவிலின் உள்ளே இருப்பவர்கள் உதவி இல்லாமல் வெளியிலிருந்து வந்து திருட முடியாது என்று கூறுகிறார்.

காசி விஸ்வநாதர் கோயில்

திவாரி என்ற பார்ப்பனர் கோவிலில் ஒரு மகன்ட். மகன்ட் என்றால் தர்மகர்த்தா. இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் வெளிவந்தவர். கோவிலின் கர்ப்பக்கிரக கதவின் பூட்டு உடைக்கப்படாமலே திறக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னால் இரண்டு மிகப்பெரிய இரும்பு கதவுகள் உள்ளன. அவைகள் திறந்தே வைக்கப்பட்டிருக்கிறது. இரவு முழுவதும் காவல் காக்க வேண்டிய பார்ப்பன இரண்டு அர்ச்சகர்கள் இரவு தூங்கிவிட்டதாக கூறுகிறார்கள். எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?

அப்போதே நாராயணக் கடவுளின் வெள்ளி கிரீடமும் களவாடப்பட்டிருக்கிறது. இதன் மொத்த மதிப்பு 4 லட்சம் ரூபாயாகும். இந்த மிகப்பெரிய திருட்டு கோவிலின் உள்ளேயே கருவறைக்குள்ளேயே எந்த சேதமும் இல்லாமல் நடந்திருக்கிறது. இது புதியதல்ல. இந்த மாதிரி திருட்டுகள் பலமுறை இந்த கோவிலில் நடந்து இருக்கிறது. இது ஆறாவது திருட்டு ஆகும். ஒவ்வொரு தடவையும் திருட்டு நடந்த பிறகு அங்குள்ள பார்ப்பன அர்ச்சகர்கள் சம்பந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் போலீசாரால் கைது செய்யப்படுவார்கள். பிறகு கோவில் நிர்வாகம் அவர்களை வேலை நீக்கம் செய்யும். ஆனால் அப்படி வேலை நீக்கம் செய்யப்பட்ட, திருட்டு குற்றம் சுமத்தப்பட்ட அர்ச்சகர்கள் பிறகு திரும்பவும் அர்ச்சகராக வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அதுவும் யாரால்? அந்த தர்மகர்த்தா குழுவின் ஒரு அங்கத்தினரால் அவர்கள் மீண்டும் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்படுவர். இதில் எங்கே நியாயம் நீதி நேர்மை இருக்கிறது? திருட்டு பார்ப்பனர்களைத் திரும்பவும் வேலைக்கு எடுத்துக் கொண்டால் தர்மகர்த்தாக் குழுவும் திருட்டுக்கு உடந்தைதானே!

சிலை திருட்டு, கடத்தல் எல்லாம் அதனை பாதுகாக்கும் பொறுப்பை வைத்துள்ள தர்மகத்தாவின் கூட்டு சதியுடன் தான் நடைபெறுகிறது

கோவிலுக்கு மிக நெருங்கியவர்கள் சொல்லுகிறார்கள். பெரிய பெரிய கொள்ளைகள் திருட்டுக்கள் இந்தக் கோவிலின் உள்ளே நடந்து கொண்டிருக்கிறது. கோவிலின் கதவின் விளிம்பில் உள்ள வெள்ளியைச் சுரண்டி எடுத்து விட்டார்கள். கோவில் துவஜ ஸ்தம்பத்தில் உள்ள தங்கத்தை எடுத்து விட்டார்கள். வெள்ளி நாணயங்கள் பதிக்கப்பட்டிருந்ததைக் காணோம். நந்திக்கு உள்ள விலை உயர்ந்த வெள்ளி நகைகளைக் காணோம். இதை எல்லாம் யாரைப் போய்க் கேட்க? என்கிறார்கள்.

ஊழல்:

மாதம் 60,000 ரூபாய் வருமானம் உள்ள கோவில் அது. ஆனால் இதற்கு ஆதாரங்களோ தஸ்தாவேஜுகளோ எதுவும் இல்லை. வரவு செலவுக்கு ஆதாரபூர்வமான ரசீதுகள் இல்லை. அந்தக் கோவிலுக்கு என்ன நகைகள், சொத்துக்கள் உள்ளன என்பதற்கு ஆதாரம் இல்லை. எத்தனை பேர் அங்கே வேலையிலிருக்கிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது. ஆனால் பார்ப்பன தர்மகர்த்தா குழுவினர் சொல்லுகிறார்கள் தின வருமானம் கோவிலுக்கு 70 ரூபாய் மட்டும்தானாம்.

அந்தக் கோவிலே தனிப்பட்ட நான்கு பேருக்கு சொந்தமாம். ராமசங்கர், கிருஷ்ணசங்கர், விஜயசங்கர், கைலாசபதி என்கிற நால்வர்தான் அந்தக் கோவிலின் சொத்துக்காரர்கள். யார் நிர்வாகத்தை நடத்துவது என்று இவர்களுக்குள்ளேயே தகராறு. உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நான்கு பார்ப்பனர்களுக்கும் வழக்கு முடியும் வரை கோவில் வருமானத்தில் சமபங்கு உண்டு. இப்படி நடக்கின்றது காசி விஸ்வநாதர் கோவில் நிர்வாகம்.

இவர்களுக்குள்ளே உள்ள தகராறினால் உத்தரப்பிரதேச அரசு தனி அதிகாரி ஒருவரை போட்டு நிர்வாகத்தை நடத்துகிறது.

திரிபாதிக்கு சொந்தம்

கைது செய்யப்பட்ட கைலாசபதி என்ற பார்ப்பனர் (தர்மகர்த்தா) உத்தரப் பிரதேச நல்வாழ்வுத்துறை அமைச்சர் (இவர் கமலாபதி திரிபாதியின் மகன்) லோக்பதி திரிபாதிக்கு உறவுக்காரராம். சிறையில் இருக்கும் தர்மகர்த்தா கைலாசபதியின் வீட்டுக் கொல்லையில் பாழடைந்த கிணற்றில்தான் தங்கத்தட்டு (திருட்டுப்போனது கோவிலில்) கண்டெடுக்கப்பட்டது. இன்னும் போலீஸ் நிறைய ஆட்களை கிணற்றில் மூழ்கச் சொல்லி இன்னும் ஏதாவது திருட்டுப் போன தங்கம், வெள்ளி சாமான்கள் இருக்கிறதா என்று பார்க்க சொல்லி இருக்கிறது.

ஏன் கோவிலில் புகைப்படம் எடுக்கக்கூட தடைவிதிக்கிறது இந்த பார்ப்பன கும்பல்? அவர்கள் செய்யும் திருட்டுகளுக்கு ஆதாரம் இருக்கக்கூடாது என்பதால் தான்.

அரசு எடுத்தது ஒரு மாதத்திற்கு முன்னால் மாநில அரசு ஒரு சட்டத்தை போட்டு கோவில் நிர்வாகத்தை எடுத்துக்கொண்டது. மாநில கவர்னர் சி.பி.என்.சிங் முன்னிலையிலேயே கைலாசபதியும் இன்னொரு தர்மகர்த்தாவும் அடித்துக் கொண்டார்கள்.

இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டுக் கோவில்களில் கடவுளர் சிலைகளும் நகைகளும் திருட்டுப் போகிறது. இதற்கு என்ன காரணம்? அர்ச்சகர்களின் உதவியினால்தான் பெரும்பாலான இந்த திருட்டுகள் நடைபெறுகின்றன.

திருச்செந்தூர் உண்டியல் விவகாரத்தில் ஒரு கொலையே நடந்திருக்கிறதே. முருகன் சந்நிதானத்தில் கடவுளின் சொத்துக்களை அறங்காவலர் குழுவினரே கொள்ளை அடித்திருக்கிறார்களே. நடந்து முடிந்த தேர்தலில் கூட ஆளும் கட்சியைச் சேர்ந்த அந்த அறங்காவலர் குழுவினர் வெளியே தலைக்காட்டவே இல்லையே. உத்திரப் பிரதேசத்தில் கடவுளின் சொத்து திருடப்பட்டதற்காக அறங்காவலர் கைது செய்யப்படுகிறார். ஆனால் இங்கே திருச்செந்தூரில் கண்டும் காணாததுபோல் இருக்கிறது அரசு. குற்றம் என்று தெரிந்தால் யாராயிருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. அரசியல் எந்தளவுக்கு மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது பார்த்தீர்களா? அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல்தான் என்று தந்தை பெரியார் சொன்னது இப்பொழுது நமக்கு நினைவுக்கு வருவதில் ஒன்றும் தவறில்லை என்றே தோன்றுகிறது.

திருப்பதி தேவஸ்தானத்து நிதியை அரசு கஜானாவில்தான் செலுத்த வேண்டும் என்று தெலுங்கு நாடு முதல்வர் என்.டி.ராமாராவ் உத்தரவிட்டதை எதிர்த்து சங்கராச்சாரியார் முதல் சனாதன பார்ப்பனர் வரை ஓநாய் ஓலம் இடுகிறார்களே என்ன நியாயம் இது. 5 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நம்பவில்லை என்ற ஒன்றைத் தவிர வேறு என்ன இருக்கிறது அதில்?

(மேலும்)

கடவுளைக் களவாடும் களவாடும் கபோதிகள் யார்?

(முழுக்கட்டுரையை மேற்கண்ட ‘உண்மை’ இணையதளத்தின் இணைப்பில் சென்று படிக்கவும்)

மக்களைக் கொல்லும் வாட்சப் வதந்திகளின் முன்னோடி பாரதிய ஜனதா !

0

தோழர்களே, வடுகன் ராமசாமி நாயக்கன் ஒரு ஆங்கிலேய அடிவருடி என்பதற்கு ஏதாவது நல்ல ஆதாரம் கிடைக்குமா?” எனக் கேட்டார் ஒரு தம்பி. அது சீமானின் தம்பிகள் கொண்ட வாட்சப் குழுமம். உடனடியாக தனது ஐரோப்பா பயணத்தின் போது நிர்வாண சங்கத்திற்கு பெரியார் சென்ற சமயம் எடுத்த புகைப்படங்களை எங்கிருந்தோ பீறாய்ந்து வந்து பதிவிட்ட இன்னொரு தம்பி, “இதை விடப் பெரிய ஆதாரம் தேவையில்லை” என பதில் கொடுத்தார்.

”அதுக்கு இது பதில் இல்லையே” என தலை சுற்றியது. உற்ற நண்பர்கள் சிலருடைய ’சதியின்’ விளைவாக எனது தொலைபேசி எண் மேற்படி வாட்சப் குழுமத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.  பெரும்பான்மையான வாட்சப் குழுமங்கள் இவ்வாறு எந்த அடிப்படையோ, ஆதாரமோ அற்ற தகவல்களாலேயே நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. திருநள்ளாரு சனீஸ்வரன் கோவிலின் மேல் சுழல மறுக்கும் செயற்கைக்கோளில் துவங்கி ஹீலர் பாஸ்கர் வகையறாக்களின் இலுமினாட்டி சதிக் கோட்பாடுகள் வரை வாட்சப்பில் அலசப்படாத இகலோக மற்றும் பரலோக விசயங்கள் ஏதும் இல்லை.

இவையெல்லாம் வெறும் முட்டாள்தனங்கள் என சிரித்துக் கடந்து கொண்டிருந்த வாட்சப் பொய் தொழிற்சாலை தற்போது அபாயகரமான எல்லைகளைத் தொட்டிருக்கிறது. வாட்சப் வதந்திகளின் விளைவாய் நாடெங்கும் கடந்த சில மாதங்களில் சுமார் 29 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி துணுக்குற வைக்கிறது.

***

“உங்கள் குழந்தைகளை வீட்டை விட்டுத் தனியே அனுப்பாதீர்கள். இது வரை இம்மாவட்டத்தில் 52 குழந்தைகளைக் கடத்தியிருக்கிறார்கள். போலீசார் அந்தப் புகார்களைப் பற்றி வெளிப்படையாகத் தெரிவிக்காமல் மறைக்கிறார்கள்”

“ராஜஸ்தானில் இருந்து வந்த குழந்தைக் கொள்ளையர்கள் வந்தவாசிக்கு பக்கத்தில் குழந்தைகளைக் கடத்தும் போது போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்”

”ஆந்திராவில் இருந்து குழந்தைகளைக் கடந்த 400 பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்துள்ளது”

  • இவையெல்லாம் வாட்சப்பில் பரவி வரும் வதந்திகளின் மாதிரிகள்.
வாட்சப் வதந்தியால் 65 வயது மூதாட்டியை பிள்ளை புடிக்கும் கும்பல் என தாக்கும் பொதுமக்கள்

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் ருக்மணி. வயது 65. கடந்த மே மாதம் மலேசியாவில் இருந்து  வந்த உறவினர்களுடன் குலதெய்வக் கோயிலைத் தேடி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள அதிராமூர் கிராமத்துக்கு காரில் சென்றுள்ளார். குலதெய்வக் கோவிலுக்குச் சென்று பல வருடங்கள் ஆகி விட்டபடியால் பாதையை மறந்து விட்ட அந்தக் குடும்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்களிடம் வழி விசாரித்துள்ளனர். அப்போது அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்துள்ளார் ருக்மணி. இதைக் கண்ட பெண் ஒருவர் குழந்தைக் கடத்தல் கும்பல் என சந்தேகப்பட்டு கூச்சலிட்டுள்ளார்.

உடனே கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200 பேர் கொண்ட கும்பல் அந்தக் குடும்பத்தைச் சூழ்ந்து கொண்டு அடித்துத் துவைத்துள்ளது. தாக்குதலில் ருக்மணி அதே இடத்தில் மரணமடைந்துள்ளார். அவரோடு சென்ற குடும்பத்தினரும் கார் ஓட்டுனரும் படு மோசமாக காயமடைந்துள்ளனர். பின்னர் போலீசார் விசாரித்த போது குழந்தைக் கடத்தல் கும்பல் குறித்து வாட்சப் மூலம் வதந்திகள் பரவியதையும் அதை நம்பிய கிராமவாசிகள் இக்குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தியதையும் கண்டறிந்து சிலரைக் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலையை அடுத்து வேலூரிலும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவில் இருந்து ‘பிள்ளை பிடிக்கும்’ கும்பல் வந்துள்ளதாக வாட்சப் மூலம் பரவிய வதந்தியை அடுத்து வேலூரை அடுத்த கிராமம் ஒன்றில் இளைஞர்கள் கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து இரவு நேரங்களில் ரோந்து சுற்றி வந்துள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் நடமாடிய வட இந்தியர் ஒருவரைப் பிடித்து விசாரித்துள்ளனர். தமிழ் தெரியாமல் இந்தியில் பதிலளித்தவரை ’பிள்ளை பிடிப்பவன்’ என சந்தேகப்பட்டு தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அப்பாவி இளைஞர் போலீசாரால் மீட்கப்பட்டு பின்னர் சி.எம்.சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

கோவையை அடுத்த வடவள்ளி பகுதியில் சில மாதங்களுக்கு முன் வட இந்திய கொள்ளையர்கள் வீடு புகுந்து திருடுகின்றனர் என்றும், ஏ.டி.எம் இயந்திரங்களைக் கொள்ளையடிக்கிறார்கள் என்றும் பரவிய வதந்தியை அடுத்து அப்பகுதியில் வாடகைக்கு அறையெடுத்துத் தங்கியிருந்த வடமாநில கூலித் தொழிலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

***

மாலேகானில் கூலி வேலைக்காக சென்ற 2 ஆண்கள் 2 பெண்கள் ஒரு இரண்டு வயது குழந்தை உள்பட 5 பேரை குழந்தை கடத்துபவர்கள் என தாக்கும் பொதுமக்கள்.

மிழகத்தில் இந்த நிலை என்றால், கும்பல் கொலைகளுக்கு பெயர்பெற்ற வடமாநிலங்களில் இதே போன்ற சம்பவங்கள் சமீப காலத்தில் புயல் வேகத்தில் அதிகரித்து வருகின்றன.  மராட்டிய மாநிலம் தூலே மாவட்டத்தை அடுத்த சாக்ரி எனும் சிறு நகரத்தில் நாடோடி இனத்தைச் சேர்ந்த ஐந்து பேரை குழந்தைகளைக் கடத்த வந்தவர்கள் என சந்தேகித்து அடித்தே கொன்றுள்ளனர். இதைத் தடுக்கச் சென்ற போலீசாரையும் அக் கும்பல் தாக்கியதில் இரண்டு போலீசார் படுகாயமடைந்துள்ளனர். சிறுநீரகங்களுக்காக குழந்தைகளைக் கடத்தும் கும்பல் ஒன்று ஊருக்குள் புகுந்திருப்பதாக வாட்சப் மூலம் பரவிய வதந்தியை அடுத்தே இச்சம்பவம் நடந்துள்ளது.

அது போலவே மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில், கடந்த சில வாரங்களாக வீடியோ ஒன்று வாட்சப் மூலம் பரவி வந்துள்ளது. பெங்களூருவில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், சாதாரண உடையில் வரும் பெண் ஒருவர் அந்த உடைக்கு மேல் இசுலாமியர்கள் அணியும் புர்காவை அணிகிறார். இவர்கள் குழந்தைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என மராத்தியில் எழுதப்பட்ட வாசகங்களோடு இந்த வீடியோ பரவியுள்ளது. இதே போன்ற மற்றொரு வீடியோ உருது வாசகங்களோடு இசுலாமியர்கள் மத்தியில் பரவியுள்ளது.

இந்நிலையில் கடந்த ஜூலை 1-ம் தேதி மாலேகானுக்கு ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று வந்துள்ளது.  கூலித் தொழிலாளர்களான இவர்களை குழந்தைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்தேகித்த உள்ளூர்வாசிகள் ஆயிரக்கணக்கில் திரண்டு சுற்றிவளைத்து தாக்கியுள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரின் மேலும் தாக்குதல் தொடுத்த கும்பல், போலீசாரின் வாகனங்களையும் உடைத்து தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக படுகாயங்களோடு சம்பந்தப்பட்ட குடும்பம் காப்பாற்றப்பட்டுள்ளது.

தூலே மாவட்டத்திற்கு பிச்சையெடுக்க வந்த பழங்குடியினர்கள் வாட்சப் வதந்தியால் அடித்துக்கொள்ளப்பட்டனர். கணவனை, பிள்ளையை இழந்த நிலையில் அவர்களுடைய குடும்பம்…

அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் விடுமுறையைக் கழிக்க கார்பி அங்லோங் எனும் பகுதிக்குச் சென்ற போது ‘சந்தேகத்துக்குரிய’ தோற்றத்தில் இருந்ததால் உள்ளூர்வாசிகளின் கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 28-ம் தேதி திரிபுராவில் மூன்று பேர் இதே போல் தாக்கி கொல்லப்பட்டுள்ளனர். வதந்திகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திரிபுரா அரசு தெரு நாடக கலைஞர்களை ஏற்பாடு செய்திருந்தது; அதன்படி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யச் சென்ற நாடகக் கலைஞர் ஒருவரையே ‘குழந்தைக் கடத்தல் பேர்வழி’ என சந்தேகித்து தாக்கியுள்ளனர்.

***

சமூக வலைத்தள வதந்திகளால் ஒரு அரசையே அமைக்க முடியும் என்பதற்கு இந்தியாவே உதாரணம். இந்தியா படிப்பறிவற்றவர்கள் நிரம்பிய ஒரு மூன்றாம் உலக நாடு என்றால், ’படித்தவர்கள்’ நிறைந்த முதலாம் உலக நாடான அமெரிக்கத் தேர்தலின் முடிவுகளையே கூட இத்தகைய வதந்திகளால் திருத்த முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது.

அரசியல் அரங்கில் பெரும் தலைக்குடைச்சலாக இருந்த சமூக வலைத்தள வதந்திகளுக்கு சாதாரண மக்களை பலியாக்கும் வல்லமை இருப்பதையே மேற்படி நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

கல்வியறிவும் விழிப்புணர்வும் குறைவாக இருப்பதே இதற்கெல்லாம் காரணம் எனவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினால் இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க முடியும் எனவும் சில என்.ஜி.ஓ அறிவுஜீவிகள் முன்வைக்கின்றனர். ஆனால், வதந்திகளுக்கும் பொய்களுக்கும் பலியாவது கல்வியறிவு தொடர்புடைய பிரச்சினை அல்ல. கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது திருவாளர் மோடி அவர்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நினைவுள்ளதா? ”15 லட்சம்” “2 கோடி” ”1ரூபாய் = 1 டாலர்” “மலிவு விலைப் பெட்ரோல்” ”கருப்புப் பண மீட்பு”… இவற்றையெல்லாம் கேள்விகளே இல்லாமல் ஆதரித்தவர்களில் பெரும்பாலானோர் ‘படித்தவர்கள்’ தாம்.

பாஜக-வால் ஊதிப்பெருக்கப்பட்ட மோடி

ஏன் நம்பினார்கள்? அன்றைக்கு மோடி எதைச் சொன்னாலும் நம்புவதற்கு தோதான ஒரு அரசியல் பொருளாதார சூழல் நிலவியது. தொடர்ச்சியாக வெளி வந்து கொண்டிருந்த காங்கிரசின் ஊழல்கள் குறித்த செய்திகள், கருப்புப் பண மீட்புக்காக ராம்தேவும் – லோக்பாலுக்காக அன்னா ஹசாரேவும் நடத்திய ‘போராட்டங்கள்’, வேலை வாய்ப்புகள் அருகி வந்த நிலைமை – இவை எல்லாமுமாகச் சேர்ந்து ஒருவிதமான நம்பிக்கையற்ற விரக்தியான அதிருப்தி மனநிலை மக்களிடையே உருவாகியிருந்தது. மக்களிடம் ஏற்பட்டிருந்த அதிருப்தியை மேலும் மேலும் கொழுந்து விட்டு எரியச் செய்யும் வேலையை ஊடகங்களின் மூலம் வெற்றிகரமாக நடத்தியது பாரதிய ஜனதா.

அந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா அடைந்த மாபெரும் வெற்றிக்குப் பின்னே சமூக வலைத்தளங்களுக்கும், அதில் பரப்பப்பட்ட வதந்திகளுக்கும் மிக முக்கிய பங்கிருந்தது என்பதை இன்று பலரும் ஒப்புக் கொள்கின்றனர்; அகமதாபாத்தில் உதித்த சீன மேம்பாலத்தை மறக்க முடியுமா என்ன? அதே நேரம் அந்த வதந்திகளுக்குப் பலியாகத் தயாராக இருந்த சமூகச் சூழலையும் நாம் கருத்தில் கொண்டாக வேண்டும். எப்படியிருந்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரை சமூக வலைத்தளங்களை முதன் முறையாக வெற்றிகரமான பிரச்சார ஆயுதமாக பயன்படுத்திய கட்சி என்கிற பெருமை பாரதிய ஜனதாவையே சாரும்.

திண்ணை அரட்டைக் கச்சேரிகளின் மெய்நிகர் வடிவமான சமூக வலைத்தளங்களின் பரவலும், வதந்திகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரமிக்கத்தக்க முறையில் வேகமெடுத்த நிகழ்வும் ஏறத்தாழ அக்கம் பக்கமாகவே நடந்தேறின. இதில் கோழி முதலா முட்டை முதலா என்கிற ஆய்வுகளுக்குள் நாம் செல்ல வேண்டியதில்லை.  நான்காண்டுகள் கழித்து இப்போது நிலைமை ஒரு புதிய கட்டத்தை அடைந்துள்ளது. மோடியின் வாக்குறுதிகள் அனைத்தும் வாயைப் பிளந்து விட்ட நிலையில் நான்காண்டுகளுக்கு முன்பிருந்த அதே விரக்தி மனப்பான்மையின் வீரியம் கூடியுள்ளது. தோற்றுப் போன பொருளாதாரம் வேலையற்றவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ள நிலையில், வண்டியின் அச்சு முறிவதற்கான கடைசி மயிலிறகுகளாக பணமதிப்பழிப்பும், ஜி.எஸ்.டியும் வந்து சேர்ந்தன.

இன்றுவரை மக்களிடையே வதந்திகளையும் பொய்களையும் மட்டுமே பரப்பி வரும் தமிழக பாஜக கும்பல்

இப்போதும், தனது தோல்விகளை சமூக வலைத்தளங்களின் மூலம் பரவ விடும் பொய்களின் மூலமே பாரதிய ஜனதா எதிர்கொண்டு வருகிறது. அவுரங்கசீப்பில் இருந்து ஜவகர்லால் நேரு வரை அனைவரையும் வில்லன்கள் பட்டியலில் அடைத்து விட்ட பாரதிய ஜனதாவின் இணையப் போராளிகள், கேள்வி கேட்கும் அனைவருக்கும் ‘நக்சலைட்டுகள்’ என ஞானஸ்நானம் வழங்கி வருகின்றனர். உண்மை எது பொய் எது என்று பிரித்துப் பார்க்க முடியாத ஒரு சமூகம் உருவாகியிருப்பதில் பாரதிய ஜனதாவின் பங்கு கணிசமானது.

***

வாட்சப் வதந்திகளின் விளைவாய் நடக்கும் கும்பல் படுகொலைகளை பாரதிய ஜனதாவின் கணக்கில் எழுதுவதல்ல எமது நோக்கம். ஆனால், வதந்திகளை சரளமாக ஏற்றுக் கொள்ளும் படிக்கு இந்தியச் சமூகத்தை ‘கட்டமைத்த’ பெருமையை மட்டும் அக்கட்சிக்கு விட்டுத் தருவதுதான் முறை.

தோழர் ஒருவரிடம் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் குறித்து சில வருடங்களுக்கு முன் பேசியது நினைவுக்கு வருகிறது.  பல்லாண்டுகளாய் நிலபிரபுத்துவ மதிப்பீடுகளில் மூழ்கிக் கிடந்த பிற்போக்கான இந்திய சமூகத்திற்கு இணையத்தின் பயனாய் திடீரெனக் கிடைத்துள்ள சுதந்திரத்தை எப்படிக் கையாள்வதெனத் தெரியவில்லை என்றவர், எப்படியும் அதை எதிர்கொண்டு மேற்குலகைப் போல் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதைக் கற்று கொள்ள சில காலம் பிடிக்கும் என்றார்.

இப்போதைக்கு அந்த சில காலத்திற்காக காத்திருப்பதைத் தவிற வேறென்ன செய்வதெனத் தெரியவில்லை.

– சாக்கியன்

செய்தி மூலம் :

எடப்பாடி ஆட்சியில் ஒரு பேருந்தின் விலை என்ன ? கருத்துப்படம்

ஆசிரியர்: எடப்பாடி அரசு, ரூ.134 கோடியில் 515 பேருந்துகள் வாங்கியுள்ளது. ஒரு பேருந்தின் விலை என்ன ?
மாணவன்: 40% கமிஷனோட சொல்லணுமா, கமிஷன் இல்லாம சொல்லணுமா சார் ?

கருத்துப் படம்: வேலன்

இணையுங்கள்:

மீனவர்களே போலீசின் சூழ்ச்சிக்குப் பலியாகாதீர்கள் – வழக்கறிஞர் மில்டன் !

தூத்துக்குடி படுகொலையில் 13 பேரைக் கொலை செய்த குற்றவாளியான போலீசு, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தூத்துக்குடியில் வன்முறையைத் தூண்டியது மக்கள் அதிகாரம் அமைப்பு மற்றும் வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன் ஆகியோர்தான் என்று ஜோடிக்க முயற்சித்து வருகிறது. அதற்கேற்றாற் போல பல்வேறு பொய்வழக்குகளை மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன் ஆகியோரின் மீது போட்டுள்ளது.
 
இந்த பொய்வழக்குகள் எதுவும் மக்கள் மத்தியில் மக்கள் அதிகாரத்திற்கோ அல்லது வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கோ எதிரான கருத்தை உருவாக்க முடியாத காரணத்தால், தூத்துக்குடி மக்களையே தற்போது ஆயுதமாக உபயோகிக்கத் தயாராகிவிட்டது போலீசு.
 
மூன்று நாட்களுக்கு முன் தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவர் சங்கப் பிரதிநிதிகளை வைத்து மாநில சட்டப்பணிகள் ஆணையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், மக்கள் அதிகாரம் அமைப்பினர் தான் மக்களை வன்முறையில் ஈடுபடத் தூண்டினர் என்று கூறியுள்ளனர். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதும் அதன் பின்னரும் வழக்கறிஞர் வாஞ்சிநாதனும், அரிராகவனும் எங்கு சென்றார்கள் என்றும் கேட்டிருக்கின்றனர்.
 
கூடுதலாக, வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன் மற்றும் அரிராகவன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மீனவர்கள்தான் போராட்டத்தைத் தூண்டியதாக எழுதிக் கொடுத்திருப்பதாகத் தாங்கள் அறிய வருவதாகக் கூறியிருக்கின்றனர் மீனவர்கள்.
 
இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை செயலாலர் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன்.
 
மீனவர்களின் மனுவில் இனி வரும் காலங்களில் போலீசு தங்களை தொல்லை செய்யக் கூடாது என்று கோரியிருப்பதில் தொடங்கி, போலீசின் வன்முறைச் செயல்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படாமலிருப்பது வரை அனைத்தையும் விரிவாக அலசுகிறார் மில்டன்.
 
மேலும் வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதனும், அரிராகவனும் போராட்டக் களத்தில் இருந்ததையும், துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னும் அங்கு அவர்கள் அப்பாவி மக்கள் மீதான வழக்குகள் முறியடிக்கும் விதமாக செயல்பட்டதையும் விளக்குகிறார் மில்டன்.
 
கூடுதலாக, அந்த மனுவின் சாரம் எப்படி தொடக்கத்திலிருந்து போலீசு கூறும் பொய்களுக்கு துணை போவதாக இருக்கிறது என்பதையும், இது போன்ற புகார்கள், எப்படி மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உதவும் என்பதையும் விளக்கிப் பேசி, மீனவர்கள் இது போன்ற போலீசின் மிரட்டலுக்குப் பலியாக வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறார் மில்டன்.
 
பாருங்கள், பகிருங்கள்

 

ஒரு கனவுப் பணிக்கான நேர்முகத் தேர்வு – அன்னா

1

ண்மையில், ” மூத்த மருத்துவ மரபியல்” நிரந்தர விரிவுரையாளருக்கான விளம்பரம் எதேச்சையாகக் காணக் கிடைத்தது.  இந்த வேலையில் எதிர்பார்க்கப்பட்டவற்றிற்கும், என்னிடம் இருக்கும் திறன்களுக்கும் கிட்டத்தட்ட நன்கு ஒத்துப் போவதாகப்பட்டது. சரி விண்ணப்பித்துத்தான் பார்ப்போமே என்று விண்ணப்பித்தேன்.

அதற்கடுத்த நாள் மனிதவளத் திணைக்களத்திலிருந்து ‘உனது விண்ணப்பத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடிவெடுத்துள்ளோம் அதனால் உனது பரிந்துரையாளர்களின் விவரங்களைத் தரமுடியுமா’ என மின்னஞ்சல் வந்தது. சரியென விவரங்களை அனுப்பிவிட்டுத் திரும்பவும் நேர்முகத் தேர்வுக்கான நிகழ்ச்சி நிரலைப் பார்த்தேன். 30 நிமிட ஆய்வுரை, 30 நிமிடம் முதலாம் ஆண்டு பல்கலைக்கழக மாணவ‌ர்களுக்கு மரபியல் கருத்துகளை அறிமுகப்படுத்தும் ஒரு குறும் விரிவுரை, ஒரு மணித்தியாள பேட்டி மற்றும் வேறு சிலருடன் சந்திப்புகள். இதுவரைக்கும் இவ்வளவு நெடிய நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்ட அனுபவமில்லை.

ஆயத்தம் செய்ய நீண்ட கால இடைவெளியும் இல்லை. அத்தோடு இருந்த இருவாரங்களில் வழக்கமான வேலைகளுடன் வேறு சில வேலைகளும் சேர்ந்தே இருந்தன. எப்படியாவது அந்த 30 நிமிட விரிவுரையை முடித்துவிட வேண்டும். ஆய்வுரை அடிக்கடி செய்வதால் எதோ பார்த்துக் கொள்ளலாம் என்று தொடங்கியது, விரிவுரையைத் தயார் செய்யச் சில நாட்களாவது பிடித்தது. அதன் பின் அதை ஒரு நாலைந்து பேரிடமாவது காட்டிப் பயிற்சி செய்து, அவர்கள் சொன்ன கருத்துகளையும் இயலுமானவரை உள்வாங்கினேன்.

இதையெல்லாம் தாண்டி இங்கும் ஏனைய மேலை நாடுகளிலும் பல்கலைக்கழகக் கலாச்சாரத்தில் பல பிரச்சினைகள் உண்டு. சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.

1.பல்கலைக் கழகங்களில் நிரந்தர கல்வியாளர் பணிக்கு ஆள் எடுப்பது கடினம். அத்தகையோர் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே உண்டு. அநேகமான ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் ஏதாவது உதவித்தொகை அல்லது ஏதாவது ஒரு குறுப்பிட்ட விடயத்தை ஆராய்வதற்குக் கொடுக்கப்பெறும் நிதியிலேயே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வேலைக்கு அமர்த்தப்படுவர். அது முடியும் தருவாயில், மீண்டும் வேறு இடங்களில் பணத்திற்கு விண்ணப்பித்துக் கொண்டிருக்க வேண்டும்.

2. அநேகமான உயிரியல் துறைகளில், ஆரம்ப நிலையில் வேலை பெறும் ஆராய்ச்சியாளர்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எண்ணிக்கையில் பெரிதாக வித்தியாசம் இல்லை. ஆனால் ஆரம்ப நிலையிலிருந்து அடுத்தடுத்த படிநிலைகளுக்குப் போகும் போது படிப்படியாக பெண்களின் எண்ணிக்கை குறைந்து பேராசிரியர்கள் / துறைத்தலைவர்கள் ஸ்தானங்களில் 20%-க்கும் குறைவான பெண்களே இருக்கின்றனர். இதிலும் அநேகமாக எல்லோரும் வெள்ளையினத்தவரே.

3. பல நாடுகளில் உயர் கல்வி என்பது இன்னும் ஆண்களின் தளமாகவே உள்ளது. நிரந்தர வேலைகளை விட தற்காலிக வேலைகளில் பெண்களும் எல்லா நிறத்தவரும் மிகையாகவே இருக்கின்றனர். இன்னும் பல திணைக்களங்கள் வயதானவர்களின் சங்கங்கள்தான்.

4. அனுபவக் கல்வியை விட பட்டம் படித்துப் பெறப்பட்ட முறையான படிப்பையே கூடுதலாக மதிக்கின்றனர். அதனால் சில திணைக்களங்களில் உள்ள குறிப்பாக அனுபவம் மிக்க / பூர்விகக் குடிமக்களைப் பற்றிய அறிவு கொண்ட‌, பூர்விகக் குடிமக்களின் பணிகள் எப்போதுமே பாதுகாப்பற்றவை.

5. மேலும் ஆசியப் பிராந்தியத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள், உள்நாட்டு மக்களை விட கல்வி, சமுதாய, பொருளாதார வெற்றியைப் பெறுபவர்கள் என்ற ஒரு மிகத் தவறான உணர்தல் இங்கு உண்டு. ஆசியர்களுக்கு எதிராக இனவாதம் பல்வேறு தளங்களில் இருந்தாலும் மேற்சொன்ன எண்ணம் பலரிடம் உண்டு. இந்த தவறான புரிதலை வைத்தே பூர்விக மக்களை இன்னும் ஒடுக்கும் தன்மை எல்லா மேலை நாடுகளிலும் உண்டு. ஆசியர்களை ”முன்மாதிரி சிறுபான்மையினர்” என்பர்.
அதனால் நாமும் காலனியவாதிகளால் நடத்தப்படும் பூர்வீக மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கு ஒத்துழைப்பதுடன் நம்மில் பலரும் அதையே நம்புகின்றனர். நம்மில் பலருக்கு நாம் பூர்வீக மக்களிடமிருந்து திருடப்பட்ட நாடுகளில் வாழ்கிறோம் என்பது மட்டுமல்ல, அம்மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து ஒடுக்குமுறை நடந்து கொண்டே (சில சமயங்களில் எம்மை உதாரணமாகக் காட்டியே) இருக்கிறது என்ற புரிதலும் இல்லை.

6. அநேகமாக ஆசியாவிலிருந்து 40-50 வருடங்களுக்கு முன் மேலை நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்கள் அநேகமானோர் படித்த / பணக்காரக் குடும்பங்களே. அதை வைத்தே இந்த ”முன்மாதிரி சிறுபான்மையின கட்டுக்கதை”  தோன்றியிருக்கலாம். இந்த தவறான புரிதலால் அண்மைக்காலங்களில் போராலோ வேறு விதத்தாலோ பாதிக்கப்பட்டு ஆசியாவிலிருந்து இங்கு வந்தவர்களும் சிரமப்படுகிறார்கள்.

கடந்த ஆண்டு, ”அறிவியல் பெற்றோர்கள்” என்ற தலைப்பில் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலில், ஒருவர் “இன்னும் பேராசிரியர் என்றால் 50-களில் இருந்த ஆண் பேராசிரியர் போல் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 50-களில் அவர்களுக்கு வீட்டில் எல்லாம் செய்து கொடுக்க முழு நேர வேலைக்காரியாக மனைவி இருந்திருப்பார். இப்போதும் அப்படி அக்காலத்தில் இருந்த பேராசிரியர்கள் மாதிரி எப்போதும் வேலையிலேயே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு பிழையானது” என்றார்.

இது போன்ற பிரச்சினைகளை பல்கலைக்கழகங்களில் முன்பு கதைப்பதற்குக் கூட பெரிதாகச் சந்தர்ப்பங்கள் இருந்ததில்லை. கொஞ்சம் கொஞ்சமாக பெண்களும் நிறத்தவரும் சில பதவிகளால் உள்ளுக்குள் வந்து கதைக்கத் தொடங்கியதால் இப்போது அநேகமான இந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கலந்துரையாடல்களாவது நடைபெறுகின்றன.

எப்படி பல்கலைக்கழகத்தின் பன்முகத் தன்மையைக் கூட்டுவது, காலனியாக்கத்தின் விளைவுகள், தலைமைப் பண்பு நிகழ்வுகளில் பெண்கள், பிள்ளை வளர்ப்பையும் வேலையையும் ஒன்றாகக் கையாள்வது பற்றிய கலந்துரையாடல்கள், நெகிழ்வான வேலை நேரங்கள், சமத்துவ அலுவலகம் என மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்பிரச்சினைகள் எல்லாவற்றையும் அகற்ற இன்னும் எத்தனையோ காலம் வேண்டும். ஆனால் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முதற்படி, அப்பிரச்சினைகள் உள்ளன என்ற புரிதல்தான் என்ற வகையில் பல பிரச்சினைகளுக்கு முதற்படியையாவது எட்டி விட்டோம் என்று நினைக்கிறேன்.

மீண்டும் எனது நேர்காணல் அனுபவத்திற்கு திரும்புகிறேன்.

பல்கலைக்கழகம் (மாதிரிப் படம்)

நேர்முகத் தேர்வுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் ‘நேர்முகத் தேர்விற்குப் பின் எம்முடன் இரவுச் சாப்பாட்டிற்கு வர முடியுமா?, இது நேர்முகத் தேர்வின் ஒரு பகுதியல்ல, அதனால் நீங்கள் வர வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் நேர்முகத்தேர்வு செய்பவர்கள், இத்துறையில் வேலை செய்யும் வேறு சிலருடனும் தனிப்பட்டரீதியில் பழக ஒரு சந்தர்ப்பம்’ என்று மின்னஞ்சல் வந்தது. அதற்கும் ”சரி வருகிறேன்” என்றாயிற்று. இன்னும் சிலருடன் தனித்தனியாக குறைந்தது 45 நிமிடங்களாவது சந்திப்பு, ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அரிதாகக் கிடைக்கும் இந்த நிரந்தர விரிவுரையாளர் பதவி, ஒருவேளை கிடைத்தால் அநேகமாக அடுத்த 30-35 வருடங்கள் அல்லது ஓய்வெடுக்க முடிவு செய்யும்வரை, அதே திணைக்களத்தில் இருக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதால் இதை ஒரு பெரிய கிடைத்தற்கரிய விசயமாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவர்களுடன் ஒத்துவருமா?, எனது குணாம்சங்கள் என்ன?, அவர்களின் வேலைக் கலாச்சாரத்திற்கு நான் என்ன கொண்டு வருவேன்?, போன்றவற்றைக் கணிப்பதற்காகவே இவ்வளவு மெனக்கடல் எனப் புரிந்தது. அதனால் பதட்டமும் கூடியது.

தனித்தனி சந்திப்புகளின் போது கதைக்க எதுவும் இல்லையெனில் என்ன செய்வது? ஆய்வுரையையும் விரிவுரையையும் சொதப்பினேன் என்றால் அந்நாள் முழுதும் எவ்வளவு உறுத்தலாக இருக்கும்? தற்சமயம் முழுதாகச் சொதப்பினால் பிறகு இந்தப் பல்கலைக்கழகத்தில் எதிர்காலத்தில் வேறெதாவது வேலைவாய்ப்புகள் வந்தாலும் விண்ணப்பிக்க முடியுமா? அதோடு சேர்ந்து நாம் தகுதியற்றவரோ என்ற பய உணர்வும் (imposter syndrome) சேர்ந்து கொண்டது.

மற்றைய வேலைகளுடன் ஆய்வுரைக்கு, அண்மையில் செய்த ஆய்வுரைகளில் இருந்து பவர் பாயிண்ட் வழங்கலை எடுத்து உபயோகித்து எதோ தயாரித்தாலும் ஒரு மணித்தியாள பேட்டியைப் பற்றிப் பெரிதாக யோசிக்கவில்லை.

‘Pursuit of Happiness’ படத்தின் இறுதிகட்டத்தில் ஒரு காட்சி

நேர்முகத்தேர்வு, கடந்த செவ்வாய்க்கிழமை (26.06.2018) நடந்தது. உண்மையில் விடியத் தயாராகும் போது ’Pursuit of Happiness’ படத்தில், ’வில் ஸ்மித்தின்’ கதாபாத்திரம் தனது கனவுத் தொழில் கிடைக்குமா, கிடைக்காதா என அறிய இறுதியாகப் போன காட்சியில் எப்படி இருந்ததோ அப்படியே உணர்வதாகப் பட்டது.

நேரத்திற்கே போய்விட்டேன். தேர்வுக் குழுவின் தலைவர் வந்தார். ஆரம்ப அறிமுகம் முடிந்ததும் எப்படி உணர்கிறீர்கள்? என்றதற்கு மேற்சொன்னதையே சொல்ல, அவர் தான் அந்தப் படம் பார்க்கவில்லை என்றார். அதன் பின் வேறொருவருடன் சந்திப்பு. அவரும் எப்படி உணர்கிறீர்கள்? என்று கேட்டதற்கு,

நான்: நான் வில் ஸ்மித்தைப் போல உணர்கிறேன். ம்ம்… நீங்கள் ”Pursuit of Happiness” படம் பார்த்திருக்கிறீர்களா?

அவர்: இல்லை ! அது எதைப் பற்றிய படம் ?

நான்: ஓ! பரவாயில்லை .. நான் கொஞ்சம் பதட்டமாகவும், எதிர்பார்ப்புடனும் இருக்கிறேன், அவ்வளவுதான். (என் மைண்ட் வாய்ஸ்: அம்மா தாயே, மொதல்ல உன் நெனப்புல இருந்து வில் ஸ்மித்த வெளிய தூக்கிப் போடு!)

(Pursuit of happiness, திரைப்படம் கிரிஸ் கார்ட்னர் என்ற தரகரது வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்பட்ட படம். ஒரு கறுப்பினத்தவராக, ஒரு தனியாக வாழும் தந்தையாக மிகவும் வறுமை மேலோங்கியிருந்த வாழ்க்கையில்,  கிரிஸ் கார்ட்னர்  எவ்வாறு ஒரு சம்பளமற்ற பயிற்சியாளராக ஒரு பங்குச் சந்தை தரகு நிறுவனத்தில் சேர்ந்தார் என்பதையும், அவர் எந்த அளவிற்குக் சிரமப்பட்டு அந்தப் பயிற்சியை முடித்து அதன் பின் அந்த வேலையை எப்படிப் பெறுகிறார்? என்பதுமே அப்படத்தின் சாராம்சம்.)

https://youtu.be/x8-7mHT9edg

ஆய்வுரைக்கும் விரிவுரைக்குமான நேரம் கொஞ்சம் பதட்டமாகவே வந்தது.  கிட்டத்தட்ட எல்லோருமே வெள்ளையராக இருப்பது சிறிது ஆச்சரியத்தை அளித்தாலும், என்னை அறிமுகம் செய்ததும் எழுந்து, ‘கியா ஓரா கவுடவ்’ (’Kia ora koutou’) (அயோத்தியரோஆ நியூசிலாந்தின் பூர்வீகக் குடிகளான மஓரி மக்களின் மொழியில் வணக்கம்) என்று தொடங்கினேன்.

எனது ஆய்வுரை, கர்ப்பக் காலத்தில் மட்டுமே வரும் நீரிழிவு நோயில், நான் மேற்கொண்ட ஆய்வு பற்றியது.  மனிதரின் சூல்வித்தகத்தைப் பற்றி விளக்கும் போது எப்படிக் கருவிலிருந்து தாயின் கருப்பையை ஊடுருவும் செல்கள் தாயின் ஒடுங்கிய அதிகத் தடையுடைய (resistance) கருப்பை இரத்த நாளங்களை, சூல்வித்தகத்திற்கு இரத்த ஓட்டத்தைக் கூட்டுவதற்காக அகன்ற‌ குறைந்த தடையுடைய இரத்த நாளங்களாக மாற்றும் (transforming the narrow, high resistance blood vessels to wide low resistance vessels) என விளக்கும் போது அந்த ’resistance’ என்ற சொல் மூளையை விட்டு வெளியே வருவதாய் இல்லை.

இதையே பல நூறு தடவைகள் பலருக்கு விளக்கியிருக்கிறேன். அங்கு விளக்குகையில், “”From narrow/ high ummmm…. to wide, low ummmm… ” என சில விநாடிகள் நிறுத்திவிட்டேன். மூளை வேலை செய்யவில்லை. அதன் பின் தடித்த/ ஒடுங்கிய நாளங்களை, மெல்லிய/அகன்ற நாளங்களாக மாற்றி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறதெனச் சொல்லி வைத்தேன். முற்றிலும் சொதப்பவில்லை.  முடிந்த பின் பலர் மேலும் தெரிந்து கொள்ள பல கேள்விகள் கேட்டுக் கலந்துரையாடும் வாய்ப்பு இருந்தது.

அதன் பின் விரிவுரை.

“இப்போது நீங்கள் உங்களை முதலாமாண்டு மாணவர்களாக எண்ணிக் கொள்ளுங்கள். நானும் உங்களை ஆவல் மிகுந்த‌ 17 / 18 வயதானவர்களாகக் கற்பனை பண்ண முயற்சி செய்கிறேன்” எனத் தொடங்கினேன். எனது விரிவுரையின் தலைப்பு ” டி.என்.ஏ., மரபணுக்கள் மற்றும் குரோமோசோம்கள்”.

மரபியல்/ மரபுவழி என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள் எனத்தொடங்கி மரபுவழி கடத்தும் ஆற்றல் / வாகபபா (whakapapa) (மரபியலுக்கான மஓரி மொழி வார்த்தை) என்றால் நீங்கள் எவ்வாறு விளங்கிக் கொள்கிறீர்கள்?

மவுரிஸ் வில்கின்ஸ், ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின்

எம் முன்னோர்கள் காலம் காலமாக தமது முன்னோர்கள் பற்றிய கதைகளை எமக்குச் சொல்லிக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால் மரபு பற்றிய சிந்தனை மிகப் பழமையானது. ஆனால் மரபு பற்றிய பழைய சிந்தனைகள் பல மிகப் பிழையானவை. உதாரணத்திற்கு அரிஸ்டாட்டில், பெற்றோரின் இயல்புகளின் கலவையே பிள்ளைகள் என்று கூறியிருக்கிறார். மேலும், தந்தை உயிரையும், தாய் உடல் கட்டுமானத் தொகுதிகளையும் வழங்கியே புது மனிதர் உருவாக்கப்படுகின்றனர் என்றும் விந்து சுத்திகரிக்கப்பட்ட மாதவிடாய் இரத்தம் என்றும் கூறினார். அதனாலேயே இன்றும் மரபு வழி உறவுகளை இரத்த உறவுகள் என்கிறோம் எனத்தொடங்கி, பின்னர் தொடக்கத்திலிருந்து டி.என்.ஏ (DNA) கட்டமைப்பைக் கண்டறியும் வரை ஆய்வாளர்கள் செய்த சில குறிப்பிட்ட பரிசோதனைகளை விளக்கி எவ்வாறு படிப்படியாக DNA-வின் கட்டமைப்பைக் கண்டறிந்தார்கள் என விளக்கினேன்.

இடையில் பல ஆண் ஆய்வாளர்களின் ஆய்வுகளுக்குப் பின் முதன் முதலில் ஒரு பெண் ஆய்வாளரைக் குறிப்பிட்ட போது “உங்கள் காதுகள் தவறாக கேட்கவில்லை – இந்த ஆண்களின் வரலாற்றில் முதன் முதலில் ஒரு பெண்ணின் பெயரை நான் உண்மையில் சொன்னேன்.” என்றபோது விளங்கிப் புன்னகைத்தனர்.

ஃப்ராங்க் க்ரிக், ஜேம்ஸ் வாட்சன்

பின் DNA கட்டமைப்பைக் கண்டறிந்தவர்களில் நால்வரைப் பற்றிச் சொல்கிறேன் என ”ஜேம்ஸ் வாட்சன், ஃப்ராங்க் க்ரிக், மவுரிஸ் வில்கின்ஸ் மற்றும் ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின்” (James Watson, Frank Crick, Maurice Wilkins and Rosalind Franklin) ஆகியோரைப் பற்றிக் கூறினேன்.  ரோசாலிண்ட் எடுத்த டி.என்.ஏ-வின் X-ray படத்தை மவுரிஸும் ரோசாலிண்டும், ஜேம்ஸ் வாட்சனுக்கும், ஃப்ராங்க் க்ரிக்குக்கும் கொடுத்ததாலேயே  அவர்களால் அந்தக் கட்டமைப்பைக் கண்டறிய முடிந்ததெனவும் கூறினேன்.

நான் கதைத்த இடத்திலேயே மவுரிஸ் வில்கின்ஸ் ஆராய்ச்சி மையம் (Maurice Wilkins Research Centre) உள்ளது. ஏனெனில் அவர் இங்கே பிறந்தார். இதைச் சொல்லாமா வேண்டாமா என முதலில் ஒரு நொடி யோசித்தாலும் என்னால் சொல்லாமல் இருக்க முடியாதென உணர்ந்து சொன்னேன்.

கடைசியில் மனிதரின் நிறவுருக்களைப் பற்றிச் சொல்லும் போது நான் போட்ட படத்தில் ஒரு X குரோமோசோமும் ஒரு Y குரோமோசோமும் இருந்தன. எமக்கு 22 சோடி ஒத்த நிறவுருக்கள் உண்டு. இப்படத்தில் கடைசி இரு நிறவுருக்களும் ஒத்தவை அல்ல. இவற்றை பால் குரோமோசோம் எனக் கூறுவர். உங்களுக்கு Y நிறவுரு இருந்து அதில்  SRY என்ற மரபணு இருக்குமானால் அநேகமாக (எப்போதுமல்ல) நீங்கள் பிறந்திருக்கும் போது உங்களை ஆண் என்று சொல்வார்கள். அதுவே உங்களுக்கு இரண்டு X நிறவுருக்கள் இருப்பின் அநேகமாக (எப்போதுமல்ல) உங்களைப் பெண் என்பர். ஆனால் நீங்கள் எப்படி உணர்வீர்கள் என்பது வேறு பல காரணிகளால் மாறுபடலாம். பால் நிறவுருக்களின் அர்த்தம் அவ்வளவே.

விரிவுரை எல்லோருக்கும் மிகவும் பிடித்திருந்ததென நினைக்கிறேன். ”வாவ், நான் புதிதாகப் சில விடயங்கள் தெரிந்து கொண்டேன்”, “நீங்கள் இடைக்கிடை கேள்விகள் கேட்டுக் கேட்டுச் சொன்னது நன்றாக இருந்தது”, ”எனக்கு உங்களது விரிவுரையிலிருந்த உள்ளடக்கிக் கூறும் தன்மையைக் (inclusive aspects) கேட்டு கிட்டத்தட்ட அழுகையே வந்தது” என்றார் ஒருவர். அந்த மாதிரி எதிர்வினை கிடைக்குமென எதிர்பார்க்கவில்லை.

பின் மதியச் சாப்பாடு. ஒரு மணிநேர பேட்டி. நேர்காணலைப் பற்றி அதிகம் யோசிக்க எனக்கு நேரமிருக்கவில்லை. ஆனாலும் சும்மா ஒரு கலந்துரையாடல் மாதிரி அவர்கள் கேட்டவற்றிற்கு பதிலளித்தேன். குறிப்பாக ஒரு கேள்விக்கு இன்னும் சிறப்பாகப் பதிலளித்திருக்கலாம். கற்றுக் கொடுப்பதில் என்ன மாதிரியான தத்துவம் உங்களது? எனக் கேட்ட போது, “என் தத்துவம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் …” என்று தொடங்கி பல விடயங்கள் சொன்னேன். ஆனால் பூர்வீக மக்களின் மொழி / மரபறிவுகளை, பால் வாதம், இனவாதம் தொடர்பான‌ தன்மைகளை உள்ளடக்குதல் போன்றவற்றை எனது ”மாதிரி விரிவுரையில்” தெரிந்தே புகுத்திய போதும், அது எனக்கு முக்கியம் என இந்தக் கேள்வியை அவர்கள் கேட்டபோது சொல்லவில்லை.

பின் யோசிக்க ஒரு சில நிமிடங்கள் கிடைத்தபோது அதை உணர்ந்து அதன் பின் அவர்களைச் சந்தித்த போது கூறினேன். அவர்கள் எனது விரிவுரையிலேயே தாம் அதைக் குறித்துக் கொண்டதாகக் கூறினார்கள்.

அதன் பின் நடந்த 45 நிமிட சந்திப்புகளில் நான் நினைத்தமாதிரி கதைக்க விடயங்கள் இல்லாமல் போகவில்லை; கதைத்துக் கொண்டிருந்ததில் நேரம் போனது தான் தெரியவில்லை. அதிகப்பிரசங்கியாக இருந்தேனா தெரியவில்லை. 🙂  பின் இரவுச் சாப்பாடும் மிக நன்றாகவே சென்றது.

எனக்கு இந்த வேலை கிடைக்குமா இல்லையா தெரியாது. ஏனெனில் இன்னும் மூவருக்கு இவ்வேலைக்கான நேர்காணல் தேர்வு செய்கிறார்கள். அதனால் நால்வரில் யாரை எடுக்கிறார்களோ தெரியவில்லை. மற்றவர்கள் யாரென எனக்குத் தெரியாது. ஆனால் வேலை கிடைக்காவிட்டாலும் இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

– அன்னா
(கட்டுரையாளர் குறிப்பு :  மாதவிடாய், கருப்பை, கருத்தரித்தல் தொடர்பாக உயிரியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் உயிரியலாளர் மற்றும் பெண்ணியவாதி. கருத்தாடல் பக்கத்தில் “அறிவியல்-பெண்ணியம்-சமூகம்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்)

மேலும் :

பொழப்பா இது ? எதோ பசங்கள காப்பத்துணுமேன்னு சாவாம வாழறோம் !

ராஜவேணி

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள டோபிகானா பகுதி, சலவைத் தொழிலாளர்கள் அதிகமாக வாழும் பகுதியாகும். மூன்று தலைமுறைகளாக சென்னை மக்களின் துணிகளின் அழுக்கை நீக்கி வருபவர்கள், இப்போது வீசி எறியப்பட்ட கந்தல் துணியைப் போன்ற அவல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

கனகசபை

கனகசபை, சலவைத் தொழிலாளி :
புத்தி தெரிஞ்ச காலத்துல இருந்தே இந்த சலவைத் தொழில்தான் செய்யுறேன். இந்த துணி துவைக்கிற வண்ணாந்துரை ஐம்பது வருசத்துக்கு முன்ன ரொம்ப பேமஸ். கவர்மென்ட் ஆபிசருங்க துணியை இங்கதான் துவைப்போம். திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, ஐஸ்ஹவுஸ் மொத்த லாண்டரி கடையில இருக்க அழுக்கும் இங்கதான் வரும்.

இப்போ வெள்ள சொக்காய எல்லோரும் போடுறாங்க. கேடி, முள்ளமாரி, முடிச்சவிக்கி, பிக்பாக்கெட், இவங்கெல்லாந்தான் வெள்ளையும் சொள்ளையுமா இருக்கானுங்க. செயின் அருக்கிறவனுக்குன்னு தனியா ட்ரெஸ் இருக்கான்ன? வெள்ள சட்ட போடுறவன் எல்லாம் விஐபி இல்ல. காக்கி சட்டை போடுறவன் போலீசும் இல்ல. பெருசா பட்டை அடிக்கிறவனுங்க எல்லாம் பக்திமானும் இல்ல.  ஆனா இந்த வெள்ள சட்டைதான் அதிகம் வருது.

இந்த தொழில நம்பிதான் இங்க இருநூறு குடும்பம் இருக்கு. தண்ணிதான் எங்க தொழிலுக்கு ஆதாரமே. கவர்மென்ட் குடிக்கிற தண்ணியே இல்லன்னு கைய விரிச்சிட்டான். பெரிய போராட்டத்துக்கு அப்புறம் ஒரு நாளைக்கு இரண்டு லாரி தண்ணி கொடுக்கிறேன்னு சொன்னானுங்க. அதுவும் ஒழுங்கா வர்றது இல்ல. இப்ப நாங்க அழுக்குத்துணியே எடுக்கிறது இல்ல. தெரிஞ்ச ஒன்னு ரெண்டு கஸ்டமருக்கு தான் தொவச்சி தரேன். பொழப்பு கொறஞ்சி போச்சி. கார்த்திகை ஐப்பசி மழைக்காலத்துல வேலை இருக்காது. வயித்துல ஈரத்துணியதான் சுத்திக்கணும்.

சாப்பாடுன்னா நமக்கென்ன ஆட்டுக்கறியா சாப்பிடமுடியும்? அந்த காலத்துல ஒரு தூக்கு ஆட்டுக்கறி (ஒன்னரை கிலோ) ரெண்டு ரூபா. முழு ஆடு இருபத்தி அஞ்சி ரூபாதான். இப்ப ஒருகிலோ ஆட்டுக்கறி ஆறுநூறு ரூபா விக்கிது. எங்க கறி சாப்பிடறது? ரசம் சோறு தான் நமக்கு நிரந்தரம். அதுவுமில்லனா பட்டினிதான்.

சாந்தா

சாந்தா, சலவைத் தொழிலாளி :
நான் பொறந்த ஊரு ராமநாதபுரம். மெட்ராசுல வாக்கப்பட்டேன் வீட்டுக்காரு பேரு பூமிநாதன். அப்பவே எட்டாவது படிச்சவரு. தண்ணி கஷ்டத்துல இப்ப நாங்க அதிகமா துணி எடுக்கிறது இல்ல. சில பேரு நிரந்தரமா நம்ம விட்டு போக மாட்டாங்க. விஜயகாந்த் ரசிகர் மன்ற தலைவர் தி.நகர்ல இருக்காரு. அவரமாதிரி ஒரு பத்து, இருபது பேருதான் இப்ப எங்களுக்கு கஸ்டமரு. வெள்ள துணியை மட்டும் புதுசு மாதிரி தோச்சி, தேச்சி கொடுப்போம்.

தேவி

தேவி, சலவைத் தொழிலாளி:
வீட்டுக்காரரு மணி. அவரு வேலையா வெளிய போயிருக்காரு. சொந்த ஊரு  மதுரை பக்கம். நாங்க மொத்தமா வெளியாளுங்க கிட்ட இருந்து துணி எடுத்து குறைஞ்ச கூலிக்கு செய்யுறோம். ஆஸ்பிட்டல், லாட்ஜ் இவங்க எல்லாம் மொத்தமா போடுவாங்க. பெட்சிட், போர்வை, தலையணையுறை, மிதியடி, இப்படி எல்லாமே தூக்க முடியாத கனத்துல இருக்கும். அதை தூக்கி அடிக்கணும். அடிவயிறு நோவும்.

துணிக்கு போடுற மருந்து, ஈரத்துணி உடம்புல ஊறும். ஆசிட், வெங்காரம், காஸ்டிக் சோடா, கரை எடுக்கிற மருந்து இப்படி எட்டுக்கு மேல பொருள் போட்டுதான் அழுக்கு துணியை துவைப்போம். நாள் முழுக்க ஈரத்துல நிக்கிறதால உடம்பே சல்லாத்துணி மாதிரி ஆகும். நைட்டுல தூக்கம் வராது. உடம்பே அரிக்கும்.

பொழப்பா இது? எதோ பசங்கள காப்பத்துணுமேன்னு சாவாம வாழறோம்.

ராஜவேணி

ராஜவேணி, சலவைத் தொழிலாளி :
தோ….. பாருங்க… கை….. மொத்த உடம்பும் இப்படித்தான் வெந்து கெடக்கு. உடம்ப துணியால மறச்சிகினு இருக்கதால எங்க நோவு உங்களுக்கு தெரியாது. துணிய அடிச்சி துவைக்கும்போது ஆசிட் தண்ணி உடம்பு மேல பாயும். அந்த எரிச்சலும் மொட்ட வெயிலும் சேர்ந்து உடம்பு தீயும். படுத்தா சட்டுன்னு தூக்கம் வராது. என்னத்த சொல்லுறது.

உடம்புல தெம்பு இருந்து வயசு இருந்தா ஒரு குடும்பத்துல ரெண்டு பேர் துணி துவச்சா நூத்தியம்பது உருப்படி துவைப்போம். வயசானவங்க அம்பது உருப்படி துவைக்கிறதே கஷ்டம். கலர் துணி, வெள்ள துணி, உறைப்பு துணி, லேசு துணி இப்படி ரகவாரியா துணிய துவச்சி ஊற வக்கணும். அதுஅதுக்கு தேவையான காரம், சோப்பு, அளவா போடணும். பிறகு ரகத்துக்கு ஏத்த மாதிரி கும்மனும், அடிக்கணும், தொவைக்கணும். வாசனைக்கு கம்போர்ட் போடணும். விரைப்புக்கு ஜவ்வரிசி கஞ்சி காச்சி நனைக்கணும். கடைசியில காத்துக்கயிருல காய வக்கணும்.

நூறு உருப்படிக்கு அழுக்கு எடுக்கிறதுக்கு மேல் செலவே இருநூறு ரூபாய் ஆகும். எங்க உழைப்புக்கு கணக்கு போட்டா எதுவும் இருக்காது. இப்படி உழைச்சாலும், நாங்க பலநாள் நல்ல சோறு சாப்பிட முடியாது.

குப்பன், சலவைத் தொழிலாளி:
என் வாய கெளராதிங்க. கொடுங்கோல் ஆட்சி இது. இங்கதான் பொறந்தேன். இங்கதான் வளந்தேன். நாங்க வாழறதுக்கு வீடு கேட்டா, எங்கள ஒதுக்கி வச்சி ஓய்வறைன்னு ஒன்னு கட்டி அதுல தள்ளிட்டானுங்க.

தோபிகானா வாழ்க்கைபத்துக்கு பத்து ரூமுல மொத்த குடும்பமும் தூங்கனும். அங்கேயே சமைக்கணும். அங்கேயே துணி மாத்திக்கணும். வயசு பசங்க பொம்பள ஆம்பளைன்னு எப்படி பொழங்கறது? துணி துவைக்கிற அழுக்கு தண்ணி அப்படியே நிக்குது. சாக்கடை போறதுக்கு கால்வாய் கட்டல. கொசு புடுங்குது. துணி வெளுக்கும்போது வெயிலுக்கு கூரை கேட்டோம். எவனுக்கும் காது கேட்கல. டோபிகானா என்கிற இந்த நூறு வருசத்து இந்த வண்ணாந்துரையை எப்படி இடிக்கிறதுன்னு இப்ப பிளான் பண்ணுறானுங்க மொள்ளமாரிங்க.

  • வினவு புகைப்படச் செய்தியாளர்கள்.

வேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் ?

பெருகி வரும் வேலைபறிப்புகள், அடக்குமுறைகள் : கோபத்தை காட்டும் இடம் எது?

ஜூன் மாதம் முதல் வாரம் புது டெல்லிக்கு அருகில் குருகிராம் (குர்கான்) பகுதியில், மிட்சுபிசி ஆலை தொழிலாளி ஒருவர் தன்னை வேலைநீக்கம் செய்த மனிதவள மேம்பாட்டு அதிகாரியைத் (HR) துப்பாக்கியால் சுட்டுள்ளார். வேலைநீக்கம் செய்யப்படும் தொழிலாளர்கள் இது போல் தங்களது மேலாளரை, அல்லது மனிதவள அதிகாரியைத் தாக்குவது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

  • 2008-ம் ஆண்டு டெல்லிக்கு அருகில் நோய்டாவில் இத்தாலிய நிறுவனமான கிராசியானோவின் நிர்வாக இயக்குனர் வேலை நீக்கம் செய்யப்பட்ட 200 தொழிலாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
  • 2009-ம் ஆண்டு கோவையில் செயல்படும் பிரிக்கால் நிறுவனத்தில் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்த மோதலில் அதன் எச்.ஆர் அதிகாரி ராய் ஜார்ஜ் கொல்லப்பட்டார்.
  • 2012-ம் ஆண்டு டெல்லி மானேசரில் உள்ள மாருதி தொழிற்சாலையில் நடந்த மோதலில் ஒரு எச்.ஆர் அதிகாரி தீயில் சிக்கி உயிரிழந்தார்.

இத்தகைய தாக்குதல்களுக்கான அடிப்படை என்ன? முதலாளித்துவ லாப வெறி அதிகரிக்க அதிகரிக்க, தொழிலாளர்கள் மீதான உழைப்புச் சுரண்டல் தீவிரமாகிறது; வேலைச்சுமையும் அதிகரிக்கிறது. ஆலைக்குள் நுழையும் தொழிலாளி வெளியே செல்லும்வரை ஒவ்வொரு நிமிடத்தையும் கணக்குப் போட்டு வேலைவாங்குவது, உணவு இடைவேளையைக் குறைப்பது, ஏன் கழிவறைக்குச் செல்லும் நேரத்தைக் கூட கணக்கிட்டுக் கட்டுப்படுத்துவது என ஒரு தொழிலாளியை எப்படியெல்லாம் பிழிய முடியுமோ அப்படியெல்லாம் பிழிந்து உற்பத்தி வேகத்தை அதிகரிக்கின்றனர்.

இதற்கு உதாரணமாக மாருதி மானேசர் தொழிற்சாலையில் 2012-ம் ஆண்டு பணி நிலைமை பற்றிய ஒரு விவரிப்பை பார்க்கலாம்.

“மானேசர் ஆலையை பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமானால் அது 50 விநாடிகளில் ஒரு கார் உற்பத்தியாகும் இடம். மாருதி சுசுகி காரின் மூன்று அடிப்படை மாடல்களுடைய 180 வேறுபட்ட வடிவங்கள் இந்த ஆலையில் உற்பத்தி ஆகின்றன. கன்வேயர் பெல்ட்டில் நகர்ந்து வரும் ஒரு கார் எந்த வகையைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம்.

அதன் ஸ்டியரிங் வலது புறமா, இடது புறமா, அதன் எரிபொருள் பெட்ரோலா, டீசலா, எரிவாயுவா, ஏ.சி உள்ளதா இல்லாததா, இருக்கைகளில் என்ன ரகம், டயர்கள் மற்றும் வீல் அசெம்பிளிகளில் எந்த வகை, கதவுகள், பூட்டுகள், கியர் பாக்ஸ்கள், டாஷ் போர்டுகள் போன்ற காரின் அனைத்து அங்க அவயங்களின் பட்டியலையும் தாங்கி அந்தக் கார் கன்வேயர் பெல்ட்டில் நகர்ந்து வரும். அந்தப் பட்டியலைப் பார்த்து, காரின் இனத்தை புரிந்து கொண்டு, தொழிலாளி அதன் மீது வினையாற்ற வேண்டும். ஒரு நொடி அதிகமானாலும் விளக்கு எரியும். எந்தத் தொழிலாளியினால் உற்பத்தி இழப்பு என்று பதிவாகும். நரம்புகள் முறுக்கேறித் தெறிக்கும் பதட்டத்துடனும், கை நடுக்கம் இல்லாத நிதானத்துடனும் ஐம்புலன்களையும் குவித்து தொழிலாளி தனது பணியை செய்து முடிக்க வேண்டும். முடித்ததும் அடுத்த கார் வந்து நிற்கும்.

தொழிலாளியின் இயற்கைத் தேவைகளான தண்ணீர் குடிப்பது, சிறுநீர் கழிப்பது, பணி இடையில் சிறிது ஓய்வு போன்றவையெல்லாம் வீணாகும் நேரம் என்று கருதும் நிர்வாகம்.

மதிய உணவுக்கென ஒதுக்கப்படும் 30 நிமிடங்களுக்குள் 400 மீட்டர் தொலைவிலுள்ள உணவகத்துக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று உணவு பெற்று, அவசர அவசரமாக விழுங்கிவிட்டுத் தாமதமின்றி பணிக்குத் திரும்பிடவேண்டும். ஒரு நிமிடத் தாமதத்துக்குக் கூடச் சம்பளம் வெட்டப்படும். ஒவ்வொரு ஷிப்டிலும் இரண்டு முறை கழிவறைக்கும் கேண்டினுக்கும் சென்று திரும்ப ஏழரை நிமிடங்கள் என்ற வீதம் 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும். அடுத்த ஷிப்டிற்கான ஆள் வராவிட்டால் 16 மணிநேர வேலை கட்டாயமாகப் பார்க்க வேண்டும்.

தொழிலாளி ஒருநாள் விடுப்பெடுத்தால் ஊக்கத் தொகையில் ரூ.1,500/ ம், இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்தால் ஊக்கத்தொகை முழுவதும் வெட்டப்படும்.”

ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட பலமடங்கு அதிகமான லாப வீதத்தை எட்டிவிட வேண்டும் என்பதை இலக்காக முதலாளிகள் வைக்கின்றனர்; அதற்கு ஏற்றாற் போல திட்டமிட்டு, தொழிலாளர்களின் வேலைப் பளுவை அதிகரித்து திட்டமிட வேண்டியது மேலாளர்களின் வேலை. அதை அமல்படுத்தி தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தும் கங்காணிகளாக அவர்கள் செயல்படுகின்றனர். எச்.ஆர் அதிகாரிகள் இந்த உபரி கறத்தலை கண்காணித்து, தொழிற்சாலை ‘சட்ட ஒழுங்கை’ நிலைநாட்டும் தொழிற்சாலை போலீஸ்காரர்கள்.

லாப வீதத்தை அதிகரிக்க இன்னொரு வழி செலவைக் குறைப்பது, தொழிலாளர்களை தனித்தனியாகவோ கொத்து கொத்தாகவோ, ஒட்டு மொத்தமாகவோ வீட்டுக்கு அனுப்பி விட்டு புதிய இளம் தொழிலாளர்களை குறைந்த கூலியில் அமர்த்துவது பிரத்யேக உத்தி. இவ்வாறு முதலாளித்துவ இலாபவெறிக்கு இரையாக தீவிர உழைப்புச் சுரண்டலுக்கும் வேலை இழப்புக்கும் உள்ளாகும் தொழிலாளர்கள் தமது கோபத்தை வெளிப்படுத்தும் போது அவர்களது கண்முன் நிற்பது எச்.ஆர் அதிகாரிகளும் தொழிற்சாலை மேலாளர்களும்தான். கோபத்தை எச்.ஆர் அதிகாரிகளை தாக்குவதில் வெளிப்படுத்துவதன் மூலம் தொழிலாளர்கள் படும் இன்னல்கள் தீர்ந்துவிடப் போவதில்லை.

லட்டைட்
புதிய தொழில்நுட்பங்களை எதிர்க்கும் குழுவினர் லட்டைட்

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து தொழிலாளர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எந்திரங்களை தமது வேலை இழப்புக்கு காரணமானவையாக கருதி தாக்கி உடைத்தனர். அவ்வாறு புதிய தொழில்நுட்பங்களை எதிர்க்கும் குழுவினர் லட்டைட் (luddite) என்று அழைக்கப்பட்டனர். இந்தப் போராட்டங்களை அரசு ராணுவத்தைக் கொண்டு ஒடுக்கியது. தொழிலாளர்கள், பின்னர் வேலை இழப்புக்குக் காரணம் எந்திரங்கள் இல்லை, எந்திரங்களை கொண்டு வந்து வைத்து வேலையை பிடுங்கும் முதலாளி வர்க்கமே என்று உணர்ந்து தங்களது போராட்டத்தை முதலாளி வர்க்கத்துக்கு எதிராக திருப்பினர்.

“எய்தவன் இருக்க அம்பை நோவானேன்” என்று ஒரு பழமொழி உண்டு. தொழிலாளி வர்க்கம் தனது துன்பங்களுக்குக் காரணத்தை கண்டறிய எச்.ஆர் அதிகாரிகளையும், எந்திரங்களையும் தாண்டி இரண்டு மூன்று திரை தாண்டி நிற்கும் முதலாளித்துவ வர்க்கத்தையும் அதன் அடியாள் படையாகிய அரசு எந்திரத்தையும் குறி வைக்க வேண்டும்; முதலாளிகளால், முதலாளிகளுக்காக இயக்கப்படும் இந்த அரசுகள், கார்ப்பரேட்டுகளுக்கு மானியம், வரிச் சலுகை, வங்கிக் கடன் தள்ளுபடி என்று குளிப்பாட்டுகின்றன. அவர்களது சுரண்டலை அதிகரிக்க வசதியாக தொழிலாளர் சட்டங்களை திருத்துகின்றன; வேலை நேரம், பணி பாதுகாப்பு, சங்கம் அமைக்கும் உரிமை ஆகியவற்றை பறிக்கின்றன. அதை எதிர்த்து போராடும் தொழிலாளர்கள் மீது போலீசையும், நீதித்துறையையும் அவிழ்த்து விடுகின்றன. வேலைப் பறிப்பு துவங்கி உயிர்வாழும் உரிமை பறிப்புவரை முதலாளிகளது ஏவல் படையாகவே அரசுக் கட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.

2012-ம் ஆண்டில் 148 மாருதி மானேசர் தொழிலாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தது, போலீஸ். 5 ஆண்டுகளை சிறையில் கழித்த பிறகு 117 தொழிலாளர்கள் நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டனர். 13 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனையும், 4 பேருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. பிரிக்கால் நிறுவனத்தின் 2 தொழிற்சங்க தலைவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை உயர்நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மற்ற தொழிலாளர்கள் பல ஆண்டுகள் சிறைக்குப் பிறகு குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வழக்குகளிலும் விடுவிக்கப்பட்டவர்களை நிரபராதிகள் என்று ஒத்துக் கொள்ள மறுத்து மேல்முறையீடு செய்திருக்கிறது, முதலாளி வர்க்கம்.

இது இரண்டு எதிரெதிர் வர்க்கங்களுக்கிடையேயான போர். அரசு என்கிற அதிகார அமைப்பு முதலாளிகள் கையில் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றனர். எனவே, தனிநபர் மீது தாக்குதல், தனித்தனியாக போராடுதல், சட்டப் போராட்டங்களை நடத்துவது ஆகியவற்றின் மூலமாக மட்டும் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலையை சாதிக்க முடியாது. தனிப்பட்ட முதலாளிகளை எதிர்த்த போராட்டங்களை , முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகார அரசை தூக்கி எறிந்து உழைக்கும் மக்களது சர்வாதிகாரத்தை நிலைநாட்டுகின்ற புரட்சிகர இயக்கத்தோடு இணைக்க வேண்டும். அதுதான் தொழிலாளி வர்க்கத்துக்கு மட்டுமின்றி, சுரண்டப்படும் அனைத்து வர்க்கங்களின் விடுதலைக்கான பாதை.

– ராஜா
புதிய தொழிலாளி, ஜூன் 2018 (பு.ஜ.தொ.மு-வின் மாத இதழ்)
நன்றி
: புஜதொமு – ஐ.டி. ஊழியர்கள் இணையதளம்.