Monday, August 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 513

நெடுவாசல்-ஹைட்ரோகார்பன் : மோடி அரசு திணிக்கும் கொள்ளிவாய்ப் பிசாசு !

0

’’வாடிவாசலை திறக்காமல் வீடு வாசல் இல்லை’’ என்று மாணவர்களும், இளைஞர்களும், மக்களும் மெரினாவில் லட்சக்கணக்கில் திரண்டு பார்ப்பன பாசிச மோடி அரசுக்கு எதிராக மூட்டிய போராட்டத் தீ இன்று நெடுவாசலிலும் கொழுந்துவிட்டு எரிகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விரட்டாமல் வீடு திரும்பமாட்டோம் என்று விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

மீண்டுமொரு மெரினா எழுச்சி நடந்துவிடக்கூடாது, காளையை அவிழ்த்துவிட்டது போல், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டுவிடக்கூடாது என்பதில் குறியாக உள்ள மோடி அரசோ, தனது எடுபிடியான எடப்பாடியின் போலீசை ஏவி விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்கிறது. இதனை முறியடித்து விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது

கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்கு தமிழகத்தை மின் உற்பத்திக் குவிமையமாக (Power Cluster) மாற்றும் மாபெரும் சதித்திட்டத்தின் ஒருபகுதி.
கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்கு தமிழகத்தை மின் உற்பத்திக் குவிமையமாக (Power Cluster) மாற்றும் மாபெரும் சதித்திட்டத்தின் ஒருபகுதி.

மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி மண்ணெணெய் எடுக்கப்போகிறோம் என்று பொய் சொல்லி விவசாயிகளிடம் குத்தகை பத்திரத்தில் வெறும் கைநாட்டு வாங்கிக்கொண்டு நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. அந்த நிலத்தில் சுமார் 10 ஆயிரம் அடிக்கு ஆழ்துளை பம்புகளை போட்டு ஹைட்ரோ கார்பன் எரிவாயு இருப்பதை கண்டுபிடித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 15 -ந் தேதி ஹைட்ரோ கார்பன் எடுக்கப்போவதாக அறிவித்தது மோடி அரசு. அதற்காக கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய ஜனதா எம்.பி சித்தேஸ்வராவிற்கு சொந்தமான ஜெம் லெபாரட்டரீஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தமும் போட்டுள்ளது.

மக்கள் குடியிருக்கும் கிராமப் பகுதியில், அதுவும் விவசாய நிலத்தில் ஹைட்ரோ கார்பன் போன்ற எரிவாயுக்களை எடுப்பது அந்தப் பகுதியையே சுடுகாடாக்கிவிடக் கூடியது. பல நாடுகள் இதுபோன்று பூமிக்கு அடியில் இருந்து எரிவாயு எடுக்கும் ஃபிராக்கிங் தொழிற்நுட்பத்தை கைவிட்டு, தடையும் விதித்துள்ளன. ஆனால், மோடி அரசோ நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில்  ஹைட்ரோகார்பன் எடுக்க கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதித்துள்ளது. இதற்குப் பெயர்தான் தேசநலனா? இல்லை. தேசதுரோகம்.

இந்நிறுவனங்கள் அடுத்த 15 ஆண்டுகளில் நாற்பது மில்லியன் டன் எண்ணெய், 22 பில்லியன் கண மீட்டர் எரிவாயுவை உறிஞ்சி எடுக்க இலக்கு வைத்துள்ளன. இது கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்கு தமிழகத்தை மின் உற்பத்திக் குவிமையமாக (Power Cluster)  மாற்றும் மாபெரும் சதித்திட்டத்தின் ஒருபகுதி.

இந்த சதியை மூடி மறைத்துக்கொண்டு ’’நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு மாநிலம் தியாகம் செய்ய வேண்டும்’’  என்கிறார் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி வானரக்கூட்டத்தை சார்ந்த இல.கணேசன். கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவெறிக்காக தமிழக மக்களை அழிப்பதற்கு பெயர் ‘வளர்ச்சியா?’. இல்லை. இது ஒரு வீழ்ச்சி. கார்ப்பரேட்டுகளுக்கான வளர்ச்சியை ஒட்டுமொத்த மக்களுக்கான வளர்ச்சியாகக் காட்டும் இந்த மக்கள் விரோதிகள்தான் தங்கள் மண்ணையும், மக்களையும் காக்க போராடும் விவசாயிகளை, மாணவர் – இளைஞர்களை, அவர்களுக்கு ஆதரவாக களத்தில் நிற்கும் புரட்சிகர, முற்போக்கு அமைப்பைச் சார்ந்தவர்களை தேசதுரோகிகள் என அவதூறு பரப்பி, பீதியூட்டி போராட்டத்தை சீர்குலைக்க பார்க்கிறார்கள். கார்ப்பரேட் முதலாளிகள் வாழ மக்களை தியாகம் செய்யச் சொல்லும் இந்த தேசவிரோதிகளை தமிழகத்தில் நடமாட அனுமதிக்கலாமா?

ஓட்டுக்கட்சிகளை நம்பக் கூடாது என்று உறுதியாக இருக்கும் நெடுவாசல் மக்கள், அதே போல போராட்டத்தில் புகுந்துள்ள  NGO குழுக்களையும்  நம்பக்கூடாது. பி.ஜே.பி மக்களின் எதிரி என்றால், NGO க்கள் மக்களின் துரோகி. இவைகள் கார்ப்பரேட்டுகள் பெற்றெடுத்த விசவித்துக்கள். இவைகளை புடுங்கியெறிவதோடு, வளர்ச்சியின் பெயரால் மக்களை கொல்ல வரும் கொள்ளிவாய்ப் பிசாசான ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும், தமிழக மக்கள் மீது நாசகரத்திட்டங்களை அன்றாடம் திணித்து வரும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலையும் தமிழகத்தில் இருந்தே விரட்டியடிப்போம்!

 

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை – 9445112675

அருணாச்சல பிரதேச அரசியலும் கலிகோ புல்லின் மரணமும் – பாகம் 1

0

தையெல்லாம் உங்களுக்குச் சொல்ல வேண்டுமென்கிற தனிப்பட்ட விருப்பமெதுவும் எனக்கில்லை. நான் யாருக்கும் அஞ்சவும் இல்லை. நான் பலவீனமானவனும் இல்லை, இந்த செயலைக் கோழைத்தனமான சரணாகதியாகவும் நான் பார்க்கவில்லை…”

”இதையெல்லாம் வெளிப்படையாகச் சொல்வதற்கு எனக்கு இருக்கும் ஒரே காரணம் – மக்களைத் தட்டியெழுப்ப வேண்டும்; இந்த மாநிலத்திலும் நாட்டிலும் நடந்து கொண்டிருக்கும் அசிங்கங்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதே. ஊழல் என்கிற எதார்த்தம் இந்த அமைப்புமுறை எங்கும் பற்றிப் படர்ந்துள்ளது. ஆனால், மக்களுக்கோ மறதி அதிகம்; அவர்கள் விரைவில் மறந்து விடுகிறார்கள். எனவே மக்களுடைய நினைவுகளை உலுக்கி அவர்களை தட்டியெழுப்பி பிரச்சினையின் ஆழத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டுமென்பதற்காகவே இந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன்…”

அருணாச்சல பிரதேச முன்னால் முதல்வர் கலிகோ புல்லின் அறுபது பக்க தற்கொலைக் குறிப்பிலிருந்து..

கலிகோ புல்
கலிகோ புல்

ருணாச்சல பிரதேச மாநிலத்தின் தலைநகர் இட்டாநகரில் முதல்வருக்கென ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இல்லத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ம் நாள் தூக்கில் தொங்கிய நிலையில் கலிகோ புல்லின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தனது இருபத்தாறு வயதில் (1995ல்) காங்கிரசு கட்சியின் சார்பாக சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கலிகோ புல். 1995 முதல் 2016 வரை 23 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், சுமார் 22 ஆண்டுகள் அமைச்சராகவும் பொறுப்பு வகித்த கலிக்கோ புல் தனது 47-வது வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்வதற்கு முந்தைய நாள் “என் பார்வையில்” எனத் தலைப்பிட்டு 60 பக்கங்களுக்கு தற்கொலைக் குறிப்பு ஒன்றை எழுதி அனைத்து பக்கங்களிலும் கையெழுத்திட்டுள்ளார் கலிகோ புல். தன்னுடைய பால்ய காலத்திய வாழ்கைக் விவரிப்புகளோடு துவங்கும் அந்த தற்கொலைக் குறிப்பில், அவர் அரசியலில் வளர்ந்த விதம், முதல்வர் பொறுப்புக்கு வந்தது, முதல்வர் பதவியைப் பறிகொடுத்தது குறித்த விவரங்கள் அவருடைய கோணத்திலிருந்து முன்வைக்கப்பட்டுள்ளன.

இறுதியாக, அரசியல் குத்துபிடி சண்டையில் பதவியை இழக்கும் கலிகோ புல், அதை மீண்டும் கைப்பற்ற எந்தெந்த கட்சித் தலைவர்கள், எத்தனை கோடிகளுக்கு தன்னிடம் பேரம் பேசினார்கள் என்பதோடு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தரப்பிலிருந்து தன்னிடம் பேரம் பேசப்பட்டது குறித்தும் விவரிக்கிறார்.

அந்தக் குறிப்பு நெடுக தன்னை நேர்மையின் மறுவடிவமாக கலிகோ புல் முன்னிறுத்திக் கொள்வது மட்டுமின்றி அதற்காக அவர் அடுக்கும் வாதங்களும் தர்க்க ஓர்மையற்று அபஸ்வரமாய் ஒலிக்கிறது. இருப்பினும் அதோடு சேர்த்து நாம் கவனிக்க வேண்டிய வேறு சில அம்சங்களும் உள்ளன. ஓட்டுக்கட்சி அரசியல் பன்றி மலத்தை விடக் கேவலமாய் நாறி வரும் நிலையில், அதையே சாதகமாக்கிக் கொண்டு இந்துத்துவ பாசிஸ்டுகளால் எப்படி அதிகாரத்தைப் புறவாசல் வழியாக சதித்தனமாக கைப்பற்ற முடிகிறது என்பதற்கு அருணாச்சல பிரதேச அரசியலும் கலிகோ புல்லின் மரணமும் ஒளிவீசும் உதாரணங்கள்.

அருணாச்சல பிரதேசத்தின் அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டியது கலிகோ புல்லின் மரணத்தின் நிமித்தமோ, இந்தியாவின் இன்னொரு மூலையில் அம்பலப்பட்டுப் போன பாரதிய ஜனதாவின் நரித்தனங்களை அறிந்து கொள்வதற்கோ மட்டும் அல்ல. அருணாச்சல பிரதேசத்தில் நடந்த அதே விசயங்கள் அதே வரிசைக் கிரமத்தில் தமிழ்நாட்டிலும் ஏன் இந்தியாவெங்கும் நடந்து வருகின்றன. சில இடங்களில் நேரடியாகவும், சில இடங்களில் ஏஜெண்டுகள் மூலமும் நடந்து வருகின்றன. இந்த அமைப்புமுறையை அம்பல்படுத்தும் ஆவணமாக இத்தற்கொலைக் குறிப்பு இருக்கின்றது.

வடகிழக்குக் குரங்காட்டம் :

மோடியுடன் கலிகோ புல்

அருணாச்சல பிரதேசத்தின் ஓட்டுக்கட்சி அரசியல் இந்திய அரசியலின் துலக்கமான உதாரணம் – எனவே, அம்மாநிலத்தின் கட்சித்தாவல் அரசியல் என்பது கிறுக்குப் பிடித்த பத்துக் குரங்குகள் மரக் கிளைகளில் மாறி மாறித் தாவுவதைக் கண்டதைப் போல் தலைசுற்ற வைக்கும். முடிந்த வரை அந்தக் காட்சிகளைப் புரிந்து கொள்வோம்.

இந்தியாவின் மேல் பீடை கவிந்த அதே 2014 ஏப்ரல் மாதம் தான் அருணாச்சல பிரதேசத்தின் அரசியல் வானில் இருள் சூழ்ந்தது. அந்த மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் காங்கிரசு 42 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற, பாரதிய ஜனதா கட்சிக்கு வெறும் 11 இடங்களே கிடைத்தன. நாடெங்கும் அடித்ததாக சொல்லப்பட்ட மோடி அலையில் அடித்துச் செல்லப்படாத வெகுசில மாநிலங்களில் அருணாச்சல பிரதேசமும் ஒன்று. அப்போதே அம்மாநிலத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் திட்டத்துடன் பாரதிய ஜனதா களமிறங்கியது.

தேர்தலில் வென்று காங்கிரசின் சார்பாக முதல்வரானார் நபாம் டுக்கி. நபாம் டுக்கியின் மேல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கலிகோ புல் அளித்தாரென 2015 ஏப்ரல் மாதத்தில் கட்சியிலிருந்து விலக்கப்படுகிறார். பாரதிய ஜனதா உடனடியாக கலிகோ புல்லை தத்தெடுத்துக் கொண்டு தமது விசுவாசியான ஜோதி பிரசாத் ராஜ்கோவாவை கவர்னராக அருணாச்சல பிரதேசத்திற்கு அனுப்புகிறது.

கவர்னர் ராஜ்கோவாவின் துணையோடு கட்சி கலைப்பு வேலைகளில் இறங்கிய பாரதிய ஜனதா, கலிகோ புல்லின் தலைமையில் பதினாறு சட்டமன்ற உறுப்பினர்களை வளைக்கிறது. குதிரை பேரத்துக்கு தோதான சூழல் ஏற்பட்டவுடன் ஜனவரி 2016-ல் கூடவிருந்த சட்டசபையை டிசம்பர் 2015-லேயே கூடச் செய்கிறார் கவர்னர். துணை சபாநாயகரை விலைக்கு வாங்கி, சபாநாயகரின் மேல் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு, காங்கிரசால் சட்டமன்றம் பூட்டபட்ட நிலையில் ஒரு சமூக நலக்கூடத்தில் சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டுகிறது கலிகோ புல் – பாரதிய ஜனதா கூட்டணி.

நடந்த பேரத்தில் புதிதாக வாங்கிய குதிரைகளோடு வெறும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டிருந்த அருணாச்சல மக்கள் மக்கள் கட்சியில் இணையும் கலிகோ புல், பாரதிய ஜனதாவின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் அவர்களின் ஆதரவுடன் ஒரு ‘காங்கிரசு’ அரசை அமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கிறார். அதன்படி டிசம்பர் 17-ம் தேதி ஒரு ஓட்டலில் கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் கலிகோ புல்லை முதல்வராக தேர்ந்தெடுக்கிறார்கள்.

இதற்கிடையே சட்டமன்றத்தை கலைத்து மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்புகிறார் ராஜ்கோவா – அதனை உடனே அமல்படுத்துகிறது மத்திய பாரதிய ஜனதா அரசு. பாரதிய ஜனதா உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் கலிகோ புல் பிப்ரவரி 19 தேதி முதல்வராக பதவியேற்கிறார். பாரதிய ஜனதா நடத்திய உள்குத்து விளையாட்டில் ஆட்சியை கலிகோ புல்லிடம் இழக்கும் நபாம் டுக்கி, உச்ச நீதிமன்றத்தை நாடுகிறார்.

வடகிழக்கு மாநிலங்களில் ’காங்கிரசு இல்லாத’ என்கிற பாரதி ஜனதாவின் செயல்திட்டத்திற்காக கழுதையாக உழைக்கிறார்
வடகிழக்கு மாநிலங்களில் ’காங்கிரசு இல்லாத’ என்கிற பாரதி ஜனதாவின் செயல்திட்டத்திற்காக கழுதையாக உழைக்கிறார்

இதற்கிடையே பாரதிய ஜனதாவின் ஆதரவுடன் ‘காங்கிரசு’ அரசை அமைத்து முதல்வராக பொறுப்பேற்கும் கலிகோ புல், வடகிழக்கு மாநிலங்களில் ’காங்கிரசு இல்லாத’ (Congress mukth North East) என்கிற பாரதி ஜனதாவின் செயல் திட்டத்திற்காக கழுதையாக உழைக்கிறார். வட கிழக்கில் உள்ள பாரதிய ஜனதா தலைவர்களையும், அதற்கு முகமூடிகளாகச் செயல்பட்டு வரும் மற்ற மாநில தலைவர்களையும் சந்தித்து ”வடகிழக்கு தேசிய கூட்டணி” (பா.ஜ.கவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் பங்காளி அமைப்பு) ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்குகிறார்.

ஒருவாறாக ஆட்களைப் பீறாய்ந்து தலைகளைத் தேற்றிய பின், 2016 ஜூலை 13-ம் தேதி அமித் ஷாவின் தலைமையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் “வடகிழக்கு தேசிய கூட்டணியின்” துவக்க விழா ஏற்பாடானது. கலிகோ புல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த அதே நேரத்தில் தான் உச்ச நீதிமன்றத்தில் காங்கிரசு தொடுத்த வழக்கின் தீர்ப்பும் வெளியானது. ராஜ்கோவாவின் நடவடிக்கையை ‘சட்டவிரோதமானது’ எனச் சாடிய உச்சநீதிமன்றம், டிசம்பர் 15 2015-க்கு முன் நபாம் டுக்கியின் தலைமையிலான ஆட்சி சட்டப்பூர்வமானது என்றும் அதுவே தொடர வேண்டுமெனவும் தீர்ப்பளித்து உத்தரவிடுகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து கலிகோ புல் ஆட்சியைப் பறிகொடுத்த நிலையில், ஜூலை 16-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு (உச்ச்சநீதிமன்ற உத்தரவின் மூலம் மீண்டும்) முதல்வரான நபாம் டுக்கியைப் பணிக்கிறார் பொறுப்பு கவர்னர் டதாகதா ராய். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு மூன்று மணி நேரம் முன்பு பதவியை ராஜினாமா செய்கிறார் நபாம் டுக்கி. அடுத்து கூடிய சட்டமன்றக் கூட்டத்தில் அருணாச்சல பிரதேசத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் டோர்ஜி கந்துவின் மகனும் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினருமான பெமா கந்து முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டு தனது பெரும்பான்மையை நிரூபிக்கிறார்.

ஆட்சியை இழந்த கலிகோ புல் ஆகஸ்டு மாதம் 9-ம் தேதி தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இதற்கிடையே காங்கிரசு சார்பாக ஆட்சியமைத்த பெமா கந்து, 2016-ம் ஆண்டு செப்டெம்பர் 16-ம் நாள் தன்னுடன் (நபாம் டுக்கியைத் தவிற மீதமுள்ள) 41 சட்டமன்ற உறுப்பினர்களை கடத்திக் கொண்டு அருணாச்சல் மக்கள் கட்சியில் ஐக்கியமாகிறார். மீண்டும் 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தன்னுடன் 33 உறுப்பினர்களைக் கடத்திக் கொண்டு நேரடியாக பாரதிய ஜனதாவிலேயே ஐக்கியமாகிறார். தற்போதைய நிலவரப்படி சுமார் 47 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பெமா கந்து முதல்வராகத் தொடர்ந்து வருகிறார். கடந்த தேர்தலில் வெறும் பதினோரு இடங்களை மட்டும் வென்ற பாரதிய ஜனதாவுக்கு தற்போது 47 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர். தேர்தல் ஜனநாயகம் வடகிழக்கு மாநிலங்களின் தெருக்களில் நிர்வாணமாகத் திரிந்து கொண்டிருக்கிறது.

கலிகோ புல்லுடன் முன்னாள் கவர்னர் ராஜ்கோவா

இதற்கிடையே உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட நிலையில் பதவி விலக மறுத்து வந்த ராஜ்கோவாவை கடந்த ஆண்டு செப்டெம்பர் 12-ம் தேதி பதவி நீக்கம் செய்கிறார் ஜனாதிபதி. ராஜ்கோவாவுக்கு பதில் பொறுப்பு கவர்னராக வந்து சேர்ந்த ‘அந்தப்புரம்’ புகழ் ஆர்.எஸ்.எஸ் சண்முகநாதன், மைனர்தனங்களில் ஈடுபட்டதாக புகார் வரவே பதவி 2017 ஜனவரி 26-ம் தேதி பதவி விலகுகிறார். சண்முகநாதனைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களின் பாரதிய ஜனதா பொறுப்பாளராக இருந்த பத்மநாப ஆச்சார்யா அருணாச்சல பிரதேசத்தின் கவர்னராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்தியா முழுவதையும் கபளீகரம் செய்து விட வேண்டுமென்கிற தொலைநோக்குத் திட்டம் பாரதிய ஜனதாவுக்கு உள்ளதென்றாலும், உடனடியாக வடகிழக்கில் கால் பதித்து விட வேண்டுமென்கிற வெறி கொஞ்சம் அதிகம். விசுவ இந்து பரிசத்தில் துவங்கி சேவா பாரதி வரை ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் மொத்த வானரப் படைகளையும் வெவ்வேறு பெயர்களில் இதற்கென களமிறக்கியிருக்கிறார்கள். வடகிழக்கு மாநில மக்களுக்கு “இந்திய தேசிய” உணர்வு குறைவு என்பதால் அங்கிருந்து பெண் குழந்தைகளைக் கடத்தி வந்து பிற மாநிலங்களில் வைத்து மூளைச்சலவை செய்த விவகாரம் சமீபத்தில் அம்பலமானது நினைவிருக்கும்.

ஒருபுறம் பரிவார அமைப்புகளின் வலைப்பின்னல் களத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே இன்னொரு புறம் பாரதிய ஜனதாவைக் களமிறக்கி அதற்குத் தெரிந்த அரசியல் தரகு வேலைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இந்து பாசிச அரசியலின் மிக நீண்ட நிகழ்ச்சி நிரலின் ஒரு சிறிய அத்தியாயம் தான் கலிகோ புல். அந்தத் தற்கொலைக் குறிப்பு நெடுக தன்னை ஒரு மக்கள் தலைவராகவும், நேர்மையின் உறைவிடமாகவும் கலிகோ புல்லினால் எவ்வாறு முன்வைக்க முடிந்தது? அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது? பாரதிய ஜனதா கலிகோ புல்லை ஏன் கைவிட்டது?

(தொடரும்)

– சாக்கியன்

சேச்சி கஷ்டப்படுதுன்னு யாரும் பிரச்சனை பண்ணமாட்டாங்க !

0

உழைக்கும் மகளிர் தினம் – புகைப்படக் கட்டுரை 1

ழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு பணிகள் புரியும் பெண்களை சென்னை நகரெங்கும் சந்தித்தோம். உழைப்பதற்கென்றே விதிக்கப்பட்ட அந்த பெண்களுக்கு வாழ்வில் வேலையன்றி வேறு எதுவும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. அனைவரிடமும் சொந்த வாழ்க்கை குறித்த அவலமான கதைகள் ஏராளமுண்டு. ஆண்களின் குடி, வருமானத்திற்காக விடாப்பிடியான போராட்டம், குடும்பத்தை தூக்கி நிறுத்தும் கடமை இறுதியில் செய்யும் பணிக்கேற்ற உடல் வலி… இருப்பினும் அவர்கள் அழகானவர்கள் – வலிமையான பெண்கள். மகளிர் தினம் என்னவென்றே அறியாத இப்பெண்களின் பங்கேற்பின்றி இங்கே என்ன சமூக மாற்றம் வந்து விடும்?

– வினவு


ராதா

40 வருசமா இந்த பூ வியாபாரம் பாக்குறேன். வீட்டுகாரரு இருக்கும் போது காய் வியாபாரம் செஞ்சிட்டு இருந்தோம். வயசு இப்போ 82 ஆவுது. ஏசப்பா ஆசீர்வாதத்துல நல்லா இருக்கேன்.

ஆண்டவர் கொடுத்த ஒடம்பு இன்னும் நல்லா இருக்கு, இப்ப வரைக்கும் என் உழப்புல தான் சோறு துன்னுறேன்.

இந்த வயசுலயும் ஏன் வேலை பாக்குறீங்க பாட்டி?

ஒரு நாள் கேக்கலாம். டேய் அன்பு டீ வாங்கி குடு, டே ஐசக்கு டீ வாங்கி குடு, தேவா டீ வாங்கி குடுன்னு தினக்கி கேக்க முடியுமா? யாராவது குடுப்பாங்களா? ஏன் நீ டீ வாங்கி குடுப்பியா? பேரப்புள்ளைங்களுக்கு நாம தா எதாவது செய்யனும் அவங்கள கேக்க முடியாது.

ரெண்டு நாளைக்கு ஒரு வாட்டி 500 ரூபாய்க்கி பூ வாங்குவேன், காலைல பாரிஸ் பூக்கட மார்கட்ல தான் ஆட்டோவுல போய் வாங்கியாருவேன். காலையில 7 மணிக்கெல்லாம் கடைய தொறந்துடுவேன். வூட்டுக்கு போக சாயந்தரம் 7 ஆயிடும். எங்க சக்காளத்தியார் வயித்து புள்ள வீட்டுலதான் இருக்கேன். அங்க இருந்து சோறு எடுத்தாருவாங்க. என் வூட்டுகாருக்கு அவங்க ரெண்டாவது தாரம். எனக்கு பொண்னுங்க தான் பையன் இல்ல அதனால அவரு அவங்கள கட்டிகிட்டாரு.

பூ வித்தா 100, 200 கைல நிக்கும். சில நாள் எதுவும் கிடைக்காது. ஒரு நா விக்கலனா தூக்கி போடரது தான். வச்சா புள்ளயாரு வழிச்சி போட்டா சாணி அவ்வளவு தான்.


 

மினியம்மா, வயது 40 சாலை பணியாளர், திருவண்ணாமலை.

ஊர்ல விவசாயம் இல்ல, சொந்தமா காடும் இல்ல அதனால இங்க வந்து வேல பாக்குறோம். காலைல 9 மணில இருந்து சாயங்காலம் 5 மணி வரை வேலை 300 ரூபா சம்பளம், நாங்க சித்தாளு. பெரியாளுக்கு 500 ரூவா சம்பளம், ஆம்பளைங்க பெரியாளு. அரும்பாக்கத்துல காண்ட்ராக்டர் கொட்டா போட்டு குடுத்துருக்காரு.

பொழுதுபோறதுக்கு என்ன செய்வீங்கக்கா?

பொழுதா போகமாட்டீங்குது? பஸ்சுக்கு காத்திருந்து போய் சேற எப்படியும் 7 – 8 மணி ஆயிடும். அதுக்கப்பறம் எங்க….. அசதியா இருக்கும் வீட்டு வேலை செஞ்சிட்டு தூங்க வேண்டியது தான்.

காலைல 7 மணிக்கே சமச்சி முடிச்சி மத்தியானத்துக்கும் சேத்து எடுத்துட்டு வந்துடுவேன். வீட்டு வேலைய நான் தான் செய்யனும். செய்யுறதுக்கு யாருமில்லைங்க.

வீட்டுக்காரரு இருக்காருங்களே அக்கா?

வீட்டுக்காரரு அதெல்லாம் செய்யமாட்டாரு.

இங்க வேலை முடிஞ்சுருச்சுன்னா ஊருக்கு போனாலும் அங்க காட்டு வேல எதாவது இருந்தா அத செய்வோம். மகளிர் தினமா அதெல்லாம் தெரியாது பா.

______________

குமாரி, வயது 50, சலவைக் கடை.

நானும் வீட்டுகாரும் அயன் கட தான் வச்சி இருக்கோம், அவரு புரசைவாக்கம் பக்கத்துல கட வச்சிருக்காரு. இங்க காலைல 7 மணில இருந்து 10 பத்தரை வர வேல பாப்பேன். அப்புறம் வீட்டுக்கு போய் அங்க இருக்குற வேலைய முடிச்சிட்டு திரும்ப சாயங்காலம் 4 மணிக்கு வருவேன்.

பொழுதுபோக்குன்னு கேட்டா என்ன மதியானத்துல வள்ளி சீரியல் மட்டும் பாப்பேன். வீட்டுகாரு இப்பலாம் தண்ணி அடிக்கிறத கம்மி பண்ணிட்டாரு. பசங்கல்லாம் வளந்துட்டாங்க இல்லயா. பையன் வேலைக்கு போறான் பொண்ணுக்கு கல்யாணம் செய்யனும். நர்சிங் முடிச்சிட்டு வீட்டுல தான் இருக்கு.

என்ன செய்ய வருமானம் பத்தல பொம்பளைங்க வெளியவும் வேலைக்கு போகனும், வீட்டு வேலையும் செய்யனும் அது அவங்க விதின்னு போவறது தான்.

இந்த வேலைல கழுத்து, கையெல்லாம் வலி எடுக்கும், மாத்திரய வாங்கி போட்டுகிட்டு வேலைய பாக்க வேண்டியது தான். டாக்டருகிட்ட போனாலே நேரத்துக்கு சாப்படனும்னு சொல்லுவாரு. எங்க காலைல தான் கொஞ்சம் வேல பரபரப்பா இருக்கும் அந்த நேரத்துல சாப்புட்டுகிட்டு இருக்க முடியாது. 10 மணிக்கு மேல தான் கால சாப்பாடே. மூணு வேளையும் சாப்பாடு நேரம் தள்ளிப்போயிடுது.

__________

பிரசன்னா, வயது 50 டீ கடை, ஊர் கேரளா. சேத்துப்பட்டு அம்பேத்கர் திடல் எதிரில் டீக்கடை.

சேத்துபட்டின் மையமான இடம் இந்த அம்பேத்கர் திடல். இன்று வரை அரசியல் கூட்டங்கள் எதுவென்றாலும் இந்த பகுதியில் தான் நடக்கும். தற்போதுள்ளது போல குறைந்த செலவில் முன்னர் ஜெனரேட்டர்கள் வாடகைக்கு கிடைக்காது. அந்த நேரங்களில் இவர் கடையில் இருந்து தான் மின்சாரம் தருவார்.

ஒரு பெண்ணாக இருந்துகிட்டு தன்னந்தனியா டீக்கடை வச்சிருக்கீங்களே, டீக்கடையில ஆயிரத்தெட்டு பிரச்சனை வருமே எப்படி சமாளிக்குறீங்க?

நாங்க இங்க 30 வருசமா கடை வச்சிருக்கோம். பத்து வருசத்துக்கு முன்னாடி வீட்டுக்காரரு இறந்துட்டாரு. அப்புறம் நா மட்டும் நடத்துறேன். எல்லாரும் இங்க தெரிஞ்சவங்க தான். சேச்சி கஷ்டப்படுதுன்னு யாரும் பிரச்சனை பண்ணமாட்டாங்க. துணைக்கு இதோ இப்ப போனானே அவன், என் தம்பி தான் அவன் இருக்கான். சொந்த ஊரு கேரளா.. திருச்சூர் பக்கத்துல.. அங்க கொஞ்சம் தென்னை இருக்கு.. அத சொந்தக்காரங்க கிட்ட பாத்துக்க சொல்லி விட்டிருக்கோம்.

காலையில எத்தனை மணிக்குகா கடை தொறப்பீங்க?

இப்ப எல்லாம் லேட்டா காலையில 4 மணிக்கு தான் கடை தொறக்குறேன்.

விடுமுறை நாட்களில் தோழர்கள் வேலைகளுக்கு கூப்பிடும் போது, 10 மணிக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு 11 மணிக்கு போய் கூசாமல் ”லேட்டாயிடுச்சுங்க தோழர்” என்று சொல்லும் எங்களுடைய காரணத்தைப் போலவே சட்டென ”4 மணியே லேட்டுங்களா அக்கா?” என்று கேட்டேன்.

ஆமங்க, முன்ன எல்லாம் 24 மணி நேரம் எங்க கடை இருக்கும். இப்ப போலீசுக்காரங்க 11 மணிக்கு கடைய மூட சொல்றாங்க. அது கூட பிரச்சனை இல்லை. எதுனா பிரச்சனைன்னா கேசுக்கு, சந்தேகக்கேசுக்கு, ஆள் காட்டி விடச் சொல்றாங்க. நம்ப புள்ளைங்கள நாம எப்படி காட்டிக் கொடுக்குறது சொல்லுங்க..

இப்படிப்பட்ட மக்களைத்தான் சில தமிழினவாதிகள் வந்தேறீகள் என்று சொல்லி இனவெறியைத் தூண்டுகின்றனர்.அதெல்லாம் சேச்சிக்கு மட்டும்ல, சேத்துப்பட்டு மக்களுக்கும் தெரியாது.

– வினவு செய்தியாளர்கள்

அடிக்கடி சிறைக்கு வருவோம் !

2
DCCver0077

ஜெயலலிதா குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு  ஊழல் செய்பவர்களுக்கெல்லாம் ஒரு பாடமாக அமையும் என்று ஊடகங்கள் எழுதுவது முரண்பாடானது. சந்தர்ப்பவாதமானது. நீதிபதி குன்ஹா  தீர்ப்பின் போது ஜெயா சிறையில் அடைக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் அதிமுக குண்டர்கள்  கலவரம் நடத்தினார்கள். இதற்கு அரசோ, நீதிமன்றமோ எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை பற்றி ஊடகங்கள் கண்டும் காணாமல் இருந்தன. ஆனால்  குமாரசாமி தீர்ப்பின் போது அதனை ஆரவாரமாக வரவேற்று பத்திரிகைகள் எழுதியதை நாம் மறக்க முடியாது.

இந்த சூழலில், மெரீனா கடற்கரையில் உள்ள குற்றவாளி ஜெயா சமாதியை அகற்ற வேண்டும், ஜெயாவின் படங்கள், அரசு அலுவலகம், பள்ளி பாடப்புத்தகம் உட்பட எங்கும் இருக்க கூடாது. இது எதிர்கால சமூகத்திற்கு ஒரு தவறான செய்தியாக மாறிவிடும்  என்று   சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் மக்கள் அதிகாரம் அறிவித்தது.

தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக 20.02.2017 அன்று விருத்தாசலம்  சட்டமன்ற அலுவலகத்தை தோழர் ராஜு  தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். தோழர்களை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தது காவல்துறை. பத்து நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் தோழர்களிடம் சிறை அனுபவத்தை கேட்டோம்.

தோழர் ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்.

டந்த 20ம் தேதி நாங்கள் விருத்தாசலம் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினோம். காவல்துறை எங்களை கைது செய்து  மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

உங்கள் போராட்டம் தமிழகத்தில் பரபரப்பு செய்தியாக மாறிவிட்டது. மேலதிகாரிகள் எங்களை கடிந்து கொள்கிறார்கள். அதனால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்கிறோம் என்றது காவல்துறை.  அதே சமயம் மண்டபத்திற்கு வெளியில் அதிமுக குண்டர்கள் இவர்களை கைது செய்ய வேண்டும், சட்டமன்ற பொருட்களை சேதப்படுத்தி விட்டனர் என்று கூறி சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயன்றனர். அதிமுகவினரை சமாதனப்படுத்தும் நோக்கிலே எங்கள் மீது பல்வேறு பிரிவுகளின் (IPC-506,353,447,158,147,148) கீழ் வழக்குகள்  பதிவு செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தது  காவல்துறை.

பத்து நாட்களுக்கு பிறகு மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை  பிணையுடன் விழுப்புரம் நகர காவல்நிலையத்தில் காலை 10.30 மணிக்கும்  மாலை 5.00 மணிக்கும் தவறாமல்  பதினைந்து நாட்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்று கூறியுள்ளது.

பிணை விவாதத்தில், மக்கள் அதிகாரத்தின் தோழர்களை பிணையில் விடுவித்தால் அவர்கள் நேராக நெடுவாசலுக்கு செல்வார்கள். எங்கு போனாலும் போராட்டம் நடத்துவார்கள். ஏற்கனவே அவர்கள் மீது டாஸ்மாக்கை உடைத்த வழக்கு இருக்கிறது. அதனால் அவரை விடுவிக்க கூடாது என கடுமையாக ஆட்சேபித்தார்  அரசு தரப்பு வழக்கறிஞர். உளவுப்பிரிவினரும் அங்கேயே முகாமிட்டிருந்தனர். அரசின் கடுமையான நெருக்கடி காரணமாக ஒரு நாள் தள்ளிவைத்து விட்டு வேறு வழி இல்லாமல் இந்த பிணை வழங்கியுள்ளது.

அதற்கு காரணம் வெளியில் மக்கள் அதிகாரம் தொடர் பிரச்சாரம், துண்டறிக்கை விநியோகம், தமிழகமெங்கும் போராட்டம் தொலைக்காட்சி விவாதங்கள், சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜெயா படத்தை  அகற்ற கோரி பல்வேறு வழக்குகள் என்று மக்களிடையே பிரச்சாரம் நடந்தது.  இதனை ஆயிரக்கணக்கான மக்களிடம் அரசியல் பிரச்சாரமாக மாற்றியது மக்கள் அதிகாரம். இல்லையென்றால் பிணை வழங்கியிருக்க மாட்டார்கள்.

அதே நேரத்தில் மக்கள் அதிகாரம் தோழர்களை ஒடுக்குவதற்கு காரணம், இது போன்ற போராட்டங்கள் மக்கள் மத்தியில் பரவி விடுகிறது என்ற அச்சம் தான்.  பல்வேறு  கட்சிகளும் இந்த சம்பவத்தை வரவேற்று ஆதரித்துள்ளனர். சில அரசு அலுவலகங்கில் தாங்களாகவே ஜெயா படத்தை எடுத்து விட்டு திருவள்ளுவர் படத்தை மாற்றியுள்ளனர். மாணவர்கள் மத்தியில் குற்றவாளி படத்தை வைத்து கொள்ள கூடாது என்ற சிந்தனையை விதைத்துள்ளது.

எங்களை  காவல்துறை கைது செய்த போதும், சிறையில் சென்ற போதும், மக்களை அதிகாரம் செய்தது  தவறு என்று எள்ளளவும் சொல்லவில்லை. சிலர் வெளிப்படையாக ஆதரித்து பேசினார்கள். எங்களின் போராட்டத்தில் நியாயம் உள்ளது. யாராலும் எங்களை வெறுக்கவும் முடியாது. எந்த சிறையும்  எங்களை ஒடுக்கவும் முடியாது.

தோழர் மணியரசன்

ங்களை முன்கூட்டியே கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வளாகத்தை சுற்றி  காவல்துறை இருந்தும், மக்கள் அதிகார தோழர்கள் அங்கு வசிக்க கூடிய பொதுமக்கள் வீடுகளில் தங்கியிருந்து சரியாக பத்து மணிக்கு அந்த வீடுகளில் இருந்து கொடி, பேனர், தட்டி மற்றும் தற்காப்பு உபகரங்களை எடுத்துக் கொண்டு யாரும் எதிர்பாராத நேரத்தில்,   மின்னல் வேகத்தில் சட்டமன்ற அலுவலகத்தில் புகுந்து ஜெயலலிதா படத்தை அகற்றினோம்.

தோழர் மணியரசன்

நாங்கள் ஜெயிலுக்குள் இரவில் சென்றதால் அங்கு உள்ள கைதிகள் யாருக்கும் நாங்கள் வந்தது தெரியவில்லை. காலை 6 மணிக்கு மேல்  நாங்கள் பனியனுடன் இருந்ததை  பார்த்து விட்டு சக கைதிகள் எங்களை தேனீக்கள் சூழ்வதை போல் சூழ்ந்து கொண்டு  மக்கள் அதிகாரம் என்றால் என்ன, என்று ஆர்வமாக கேட்க தொடங்கினார்கள். ஏன் வந்தீர்கள் என்று கேட்டனர். “நாங்கள் குற்றவாளி ஜெயா படத்தை அகற்ற வேண்டும் என்று போராடினோம். அதற்காக எங்களை கைது செய்தார்கள் என்று கூறியதும்  எங்களை  வாழ்த்தினார்கள்.

தொடர்ந்து கைதிகள் அனைவரும் எங்களுடன் பேசுவது, நாங்கள் பாடல் படும் பொழுது ஆர்வமாக வந்து கேட்டு அவர்களும் பாடுவது என்று அன்று முழுவதும் உற்சாகமாக இருந்தனர். நாங்கள் தொடந்து கைதிகளுக்கு அரசியல் கற்று கொடுத்ததை  கவனித்த சிறை நிர்வாகம் நாங்கள் இருந்தால் கைதிகளுக்கு உரிமையை கற்று கொடுத்து விடுவோம் என்று அஞ்சி அன்று மாலையே எங்களை தனிச்சிறைக்கு மாற்றியது.

அதனால் என்ன, அங்கே உள்ள தண்டனை கைதிகளிடம் அரசியல் பேசினோம்.

சிறையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை, எங்கள் பத்து பேருக்கும் போர்வை, தட்டு குறைவாக கொடுத்தனர்.  காலை உணவை மறுத்து போராடியதும் எங்கள் தேவையை நிறைவேற்றினார்கள். தினமும்  மருத்துவரையே எங்கள் அறைக்கு அழைத்து வந்து பரிசோதனை செய்தார்கள், மனு எழுதுவதற்கு தாள்கள், அஞ்சல் கடிதம் விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவை கேட்டோம், அனைத்தையும் தாமதிக்காமல் உடனடியாக செய்து கொடுத்தனர்.  விளையாடுவதற்கு மைதானத்தை சுத்தம் செய்து கொடுத்தனர்.

கழிப்பறை  மிக மோசமாக இருக்கும் அதை சுத்தம் செய்வதே கிடையாது. நீங்கள்  வந்த பிறகு தான் இதனை சுத்தம் செய்தார்கள், கொசு மருந்து அடித்தார்கள்.  நாங்கள் கேட்டால் எங்களை அடிப்பார்கள். உங்களோடு சேர்ந்து நாங்கள் கேட்டால் நீங்கள் சென்றதும் அடிப்பார்கள் என்று சீனியர் கைதிகள் ஆச்சரியமாக கூறினார்கள்.

சிறையில் ஏதேனும் ஒரு பேப்பர் தான் கொடுப்பார்கள். ஆனால் நாங்கள் தமிழ் உள்ளிட்ட ஆங்கில நாளிதழ்கள் அனைத்தும் வேண்டும் என்றோம். அத்தனை செய்தி தாள்களையும் வாங்கி வந்து  கொடுத்தார்கள். ஒரு கட்டத்தில் நாங்கள் கேட்காமலேயே சிறை நிர்வாகம் எங்களுக்கு  அத்தனையும் செய்து கொடுத்தது.

அதிக பாதுகாப்பு கொண்ட  சிறையில்அன்றாட செய்தி தாள்களை படித்து அதிலிருந்து ஒரு அரசியல் விவாதங்களை நடத்துவோம். மக்களிடம் எப்படி செல்வது, அவர்களை எப்படி அமைப்பாக்குவது என்ற முறையில் தினமும் விவாதிப்போம். அந்த வகையில் தான் கடந்த பதினோரு நாட்களையும் பயிற்சி பட்டறையாக கருதினோம்.

சிறை என்றால் நான் அச்சத்துடனே இருந்தேன். எங்கள் வீட்டில் இருந்து சிறைக்கு வந்து பார்த்த பொழுது அழுதார்கள்.  ஆனால் தோழர்கள் அவர்களுக்கு எங்கள் போராட்டத்தின் நியாயத்தை புரிய வைத்ததும் ஏற்றுக்கொண்டார்கள். கிராம மக்களும் சரியான விஷயத்திற்கு தானே சென்றுள்ளான் என்று ஆதரவாக பேசியது அவர்களுக்கு மேலும் நம்பிக்கை ஏற்பட்டது என்கிறார் மாணவர் மணியரசன்.

தோழர் செந்தாமரைக் கண்ணன்

நான் மக்கள் மத்தியில்  அமைப்பு வேலைகள் செய்தாலும் கிரமமாக உடற்பயிற்சி செய்வதில்லை. சிறை எனக்கு அதனை  கற்றுக் கொடுத்தது. போராட்டத்தின் போது காவல்துறையை எதிர்கொள்வதற்கு திடகாத்திரமான உடல்நிலை வேண்டும். அதற்கான பயிற்சியினை மேற்கொள்ள சிறை ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.

தோழர் செந்தாமரைக் கண்ணன்

காலையில் 6 மணிக்கு எழுந்திருப்போம். எனக்கு தெரிந்த உடற்பயிற்சிகளை மற்ற தோழர்களுக்கு கற்றுக் கொடுத்தேன். ஒவ்வொரு தோழரும் ஒரு கட்டுரை படித்து விட்டு கூடத்தில் விவாதிக்க வேண்டும்.

சிறை  எனக்கு  நிறைய கற்று கொடுத்துள்ளது. உண்மையில் நாங்கள் யாரும் பிணையை எதிர்பார்க்கவில்லை. எப்பொழுது வந்தாலும் வரட்டும் என்று தான் நாங்கள் இருந்தோம்.  என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் அந்த  45 வயது இளைஞர்.

தோழர் விநாயகம்

சிறைக்கு முதல்முறையாக சென்றுள்ளார். அவர்  கூறுகையில், காவல்துறை எங்களை கைது செய்து நீதிபதியிடம் அழைத்து செல்லும் பொது “ பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் வழக்கு உள்ளது” என்று கூறினார், ஜெயலிலிதா பொது சொத்தா என்று தோழர் ராஜு கேட்டது, திகைத்து போன நீதிபதி, அதெல்லாம் எனக்கு தெரியாது. உங்க மேல கேஸ் போட்டாச்சி. நீங்க ஜெயிலுக்கு போகணும் என்றார். நீதிபதியாக இருந்தாலும் நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்டதை பார்த்ததும் அதிர்ச்சியானேன். இது எனக்கு புதிய அனுபவமாக தான் இருந்தது.

“சிறையில் சட்டையை கழட்ட முடியாது” என்று உரிமையுடன் போராடியது, ஒரு தோழரை சிறை போலீசார் “டா” போட்டு மரியாதை குறைவாக பேசியதும்   மற்ற தோழர்கள் சண்டை போட்டதும் மன்னிப்பு கேட்டார். எங்கு சென்றாலும் நாம் உரிமைக்காக போராட வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்.

தோழர் முத்து

தோழர் முத்து.  நாங்கள் சிறையில் இருக்கிறோம் என்ற எண்ணமே எங்களுக்கு வரவில்லை. எங்களை பார்பதற்காக தோழர்கள், மக்கள் தொடர்ந்து வருவார்கள்.  அவர்களுடைய வருகை எங்களை மேலும் உற்சாகமூட்டியது.

தோழர் பாலு, 1987 இல் இருந்து சிறைக்கு சென்று வருகிறேன். இந்த ஆண்டுடன் முப்பதாவது வருடம் என்று நினைக்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. அப்பொழுதெல்லாம் சிறைக்குள்ளேயே ரவுடிகளுக்கிடையில் மோதல் நடக்கும். கஞ்சா அதிக அளவில் புழக்கத்தில் இருக்கும். சிறை நிர்வாகமும் இதற்கு உடந்தையாக இருக்கும். இப்ப குறைந்துள்ளது.

அப்பொழுது எங்களை தனியாக வைப்பார்கள். காரணம் நக்சலைட், மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தி அச்சமூட்டுவார்கள். ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகாலம் தொடர்ச்சியாக நமது அமைப்பு போராட்டத்தின் விளைவாக இன்று அப்படி அவர்களால் சொல்ல முடியவில்லை.

சென்ற  ஆண்டு முதல் மக்கள் அதிகாரம் நடத்திய போராட்டத்தின் விளைவு  இன்று முற்றிலும்  மாறியுள்ளது. நம் மீதான அச்சத்தின் காரணமாக தனி சிறையில் வைக்கிறார்கள். இருப்பினும் நமக்கான தேவைகள் அனைத்தும் நிறைவேற்றுகிறார்கள்.

தோழர் பாலு

திமுக காரர்களும் இப்பொழுது சிறைக்கு  வந்தார்கள். ஆனால்  அவர்களுக்கு நம்மை போன்று உரிய மரியாதை கிடைக்கவில்லை. காரணம்,  என்ன அமைப்பு, அவர்களுக்கு எந்த மாதியான பின்புலம் உள்ளது என்பதை எல்லாம் சிறை அதிகாரிகள்  தெரிந்து  அதற்கேற்றவாறு தான் மரியாதையை தருகிறார்கள்.

சிறைக்கு பலமுறை சென்றுள்ளதால் வீட்டில் ஒரு புரிதல் உள்ளது. எனக்கு இரண்டு பெண்பிள்ளைகள்.  தோழர்கள் தான் கவனித்துக் கொண்டார்கள். மக்களுக்காக போராடுறோம். போராளிகளுக்கு மக்கள் தான் பாதுகாப்பு.

நாங்கள் வெளியில் வரும் போது ஜெயிலரிடம் போயிட்டு வருகிறோம் என்றோம்.

என்ன இப்படி சொல்றிங்க. இங்க யாரும் வரக்கூடாதுன்னு தானே போவார்கள் என்றார் ஜெயிலர்.

அதற்கு நாங்கள்,  “மக்களுக்கு எதிரான அரசு இருக்கும் வரை போராடுவோம். அடிக்கடி சிறைக்கு வருவோம்” என்று கூறினோம்.

அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  சிரிப்புடன் எங்களையே வெறித்து பார்த்தார் ஜெயிலர்.

நேர்காணல் : வினவு செய்தியாளர்கள்.

நூல் அறிமுகம் : பாலஸ்தீனம் – வரலாறும் சினிமாவும்

0

பாலஸ்தீனம் – வரலாறும் சினிமாவும்

சில ஆண்டுகளுக்கு முன்புவரை பாலஸ்தீனம் என்றொரு ஊர் இருக்கிறது என்றும், அங்கே ஏதோ பிரச்சனை இருக்கிறது என்றும் மட்டுமே அறிந்துவைத்திருந்தேன். அதற்கு மேல் எதுவும் தெரியாத நிலைதான்.

பாலஸ்தீனத்திலிருந்து அகதிகளாக ஐரோப்பா வந்திருந்த சிலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் கதைகளைக் கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது. தூக்கத்தைப் பறித்துக்கொள்ளும் சக்திவாய்ந்த கதைகள் அவை. அதன்பிறகு சர்வதேச பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் சிலவற்றில் என்னை இணைத்துக்கொண்டேன். அம்மக்களின் பிரச்சனைகளை இவ்வுலகுக்கு எடுத்துச்சொல்லும் பணிகளில் சிறிதளவேனும் பங்குபெறமுடிந்தது. இந்நூலை எழுதியதும் அதன் ஒரு பகுதியாகத்தான்…

பாலஸ்தீனம் குறித்து எனக்கிருந்த கேள்விகளுக்கு பலநூல்களை வாசித்தும், பல பாலஸ்தீனர்களோடு உரையாடியும், நூற்றுக்கணக்கான திரைப்படங்களைப் பார்த்தும் சேகரித்த பதில்கள், இந்நூலை எழுதுவதற்கு பெருமளவில் உதவின…

பாலஸ்தீனத்தின் வரலாறு என்ன?
பாலஸ்தீனம் ஏன் நாடற்ற பகுதியானது?
இஸ்ரேல் உருவான கதையென்ன?
இன்றைய பாலஸ்தீனர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது?
பாலஸ்தீனப் போராட்டக்காரர்கள் பயங்கரவாதிகளா?
பாலஸ்தீனத்தின் எதிர்காலம்தான் என்ன?

என்கிற கேள்விகளுக்கு 147 பாலஸ்தீனத் திரைப்படங்களின் உதவியோடு எழுதப்பட்ட நூல் இது.

விருப்பமிருந்தால் ஆன்லைனில் வாங்க:
பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும் – thamizhbooks.com
பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும் – wecanshopping.com

-இ.பா.சிந்தன்

கோக் பெப்சியோடு பவண்டோவையும் எதிர்ப்பது சரியா ?

0
பெப்ஸி கோக்

“மாப்பிள்ளை விநாயகர்” என்ற பெயரை கேள்விப் பட்டிருக்கிறீர்களா? மதுரை சுற்று வட்டார இளைஞர்களுக்கு அது ஒரு திரையரங்கின் பெயராக நினைவிருக்கலாம். ஆனால் அதே பெயரில் ஒரு குளிர்பானமும் “பெப்சி – கோக்” வருகைக்கு முன்னர் மிகவும் பிரபலமாக இருந்தது. மாப்பிள்ளை விநாயகர் திரையரங்க உரிமையாளர்களே இந்த குளிர்பான நிறுவனத்தையும் நடத்தி வந்தனர்.

விற்பனையாளர்களுக்கு அதிக இலாபத்தைக் கொடுப்பது, குளிர்சாதனப் பெட்டியை விற்பனையாளர்களுக்கு குறைந்த மாதத் தவணையிலோ இல்லை இலவசமாகவோ கொடுத்து தமது கோலாக்களை மட்டும் விற்பனை செய்ய வற்புறுத்துவது, திரையரங்குகளில் பெரும் பணம் கொடுத்து விற்பனை செய்வது, சோடா பாட்டில் தயாரிப்பு நிறுவனங்களைக் கைப்பற்றுவது, சினிமா- கிரிக்கெட் நட்சத்திரங்களைக் கொண்டு விளம்பரம் செய்வது என ”பெப்சி – கோக்” நிறுவனங்கள் 1990-களில் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்தன.  ஒரு கட்டத்தில் மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கிலேயே வெறும் பெப்சி மட்டுமே விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிறுவனங்கள் எவ்வாறு, இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்களை ஒழித்துக் கட்டி வளர்ந்துள்ளன என்பதை 2001-ம் ஆண்டே மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !! என்னும் கட்டுரை மூலம் அம்பலப்படுத்தியது புதிய கலாச்சாரம்.

தமிழகத்தில் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் செயல்படத் துவங்கிய கோகோ கோலா ஆலைக்கு எதிராக கடந்த 2005-ம் ஆண்டு ம.க.இ.க, பு.மா.இ.மு. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் தொடர் பிரச்சாரங்களையும், ஆலை முற்றுகைப் போராட்டங்களையும் மேற்கொண்டன. இருப்பினும் போலீஸ் அடக்குமுறை, பொய் வழக்குகள், சிறை, பொதுமக்களை மிரட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் கோக் நிறுவனத்திற்கு அடியாள் வேலை பார்த்தது அரசு. அன்றைக்கு நெல்லை பேருந்து நிலையத்தில் கூட கோக்கை எதிர்த்து பிரச்சாரம் செய்ய முடியாது. மீறிய தோழர்கள் சிறை வைக்கப்பட்டார்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கவெறி

இப்புரட்சிகர அமைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாகக் களத்தில் நின்று அமெரிக்கக் கோலாக்களுக்கு எதிராகப் போராடிய போது வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் போன்றோர் இப்போராட்டங்களை ஆதரித்தாலும் சில்லறை வணிகர்கள் பலரும் வருமானம் கருதி அமெரிக்கக் கோலாக்களுக்கு எதிரான நிலையை எடுக்க முன்வரவில்லை. அமெரிக்க கோலாக்கள் தமிழகத்தின் நீர்நிலைகளையும், நிலத்தடி நீரையும் உறிஞ்சி, பல்வேறு உள்ளூர் குளிர்பான நிறுவனங்களை முடக்கி, தாமிரபரணி போன்ற ஜீவநதிகள் வற்றியதையும்தமிழக மக்களோடு சில்லறை வணிகர்களும் படிப்படியாக கண்டுணர்ந்தனர்.

இதன் தொடர்ச்சியாகத் தான் தமிழக மக்கள் இவ்வாண்டு (2017) ஜனவரி மாதம் மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, அயல்நாட்டு குளிர்பானங்களான ”பெப்சி, கோக்கைத் தடை செய்” என்பதை ஒரு முழக்கமாகவே முன் வைத்தனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அமெரிக்க கோலாக்களை தரையில் ஊற்றி தங்களது எதிர்ப்பினை மக்கள் பதிவு செய்தனர்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஜனவரி 26 முதல் தமது பேரவையின் கீழ் உள்ள பல்வேறு சங்கங்களின் கடைகளில் அமெரிக்க கோலாக்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து விக்கிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மார்ச் 1 முதல் விற்கமாட்டோம் என அறிவித்தது.

பெப்சி – கோக் அல்ல – அமெரிக்க மூத்திரம்இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கோக், பெப்சி விற்பனை கிட்டத்தட்ட 75% வரையில் குறைந்தது. ஒட்டு மொத்த இந்தியக் குளிர்பானச் சந்தையில் சுமார் 14,000 கோடியை ஒவ்வொரு ஆண்டும் சுருட்டிக் கொண்டிருக்கும் கோக், பெப்சி நிறுவனங்களுக்கு விழுந்த முதல் அடி இது. தமிழகத்தின் வணிகர் சங்கங்களின் இந்த நடவடிக்கை பெப்சி கோக்கிற்கு மட்டுமல்ல அரசியல் ரீதியாக ஏகாதிபத்தியங்களுக்கே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும். இந்தியாவிலேயே வெறெங்கும் இல்லாத வகையில் இப்படியானதொரு ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் போராட்டம் தமிழகத்தில் தொடங்கியிருக்கிறது.

இது ஒன்று போதாதா? உடனடியாக இந்திய முதலாளிகளின் சங்கங்களும், அவர்களின் விளம்பரங்களை வைத்து செய்திக்கடை விரிக்கும் ஊடகங்களும், இவர்களின் அமெரிக்க ஆண்டையிடம் நிதியும் அறிவும் இரவல் பெற்று ‘போராடும்’ தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் (என்.ஜி.ஓ) தற்போது குய்யோ முய்யோ என குதிக்கின்றன.

இது வெறுமனே தனித்த ஒரு அமைப்பின் நடவடிக்கையாக மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வாக இருப்பதால் இக்கூட்டத்தினரால் இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை அரசு அடக்குமுறையைக் கொண்டு நேரடியாக அடக்க முடியாது. ஆகவே அறிவியல், சூழலியல் மற்றும் ஜனநாயகத்தின் பெயரால் கூச்சலிடுகின்றனர்.

”இத்தகையத் தடை விவசாயிகள், வியாபாரிகள், விற்பனையாளர்களின் நலனிற்கு எதிரானது. பொருளாதார வளர்ச்சிக்கு நிறுவனங்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதாகவும் இந்தத் தடை அறிவிப்பு இருக்கிறது” என புலம்பியிருக்கிறார் இந்திய பானங்கள்- உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அரவிந்த் வர்மா. அதாவது பெப்சி – கோக்கின் உற்பத்திதான் இந்தியாவின் பொருளாதாரத்தை வளரச் செய்து விவசாயிகள் தற்கொலை, வேலையின்மை, கல்வி – சுகாதார பிரச்சினைகள், விலைவாசி உயர்வு ஆகியவற்றை தீர்த்து வருகிறதாம். கேழ்வரகில் நெய் அல்ல அமுதமே வடியும் என்று கூசாமல் பொய்யுரைக்கிறார்கள் இக்கோமான்கள்.

அடுத்ததாக இவர்கள் கையிலெடுத்திருக்கும் வாதம் “சுதந்திரச் சந்தை ஜனநாயகத்துக்கு” ஆபத்து என்பது தான்! அம்பானியின் ஃபர்ஸ்ட் போஸ்ட் என்னும் இணையதளம் கோக் பெப்சி மீதான தடை சுதந்திர சந்தை ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயலாக உள்ளது எனக் கூச்சலிடுகிறது. அதாவது பஞ்சத்தில் வெம்பிப் போயிருக்கும் ஆப்ரிக்கச் சிறுவர்களும், பிசா பர்கரால் பெருத்திருக்கும் மேட்டுக்குடி அமெரிக்க சிறுவர்களும் ஒரே மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டு திறமையை நிரூபிக்க வேண்டுமாம். இதுதான் ஜனநாயகமாம். காஞ்சிபுரம் பன்னீர் சோடாவை தயாரிக்கும் சிறு உற்பத்தியாளர்களும், ஒட்டுமொத்த சினிமா, கிரிக்கெட் நட்சத்திரங்களையும் விளம்பரத்தில் நடிக்க விட்டுத் தமது கோலாக்களை விற்பனைச் செய்யும் பெப்சி – கோக் நிறுவனங்களும் சந்தையில் ஒரே மாதிரியாக போட்டி போடும் உற்பத்தியாளர்களாம் ! இத்தகைய சுதந்திரச் சந்தை ஜனநாயகத்தைத்தான் இந்திய மக்கள் காப்பாற்ற வேண்டுமாம்.

நித்யானந்த் ஜெயராமன் – சூழலியளாலர்.
நித்யானந்த் ஜெயராமன் – என்ஜிவோ சூழலியலாளர்.

அடுத்ததாக இவர்கள் கையிலெடுக்கும் ஆயுதம், ’நீர்நிலைகள் மீதான அக்கறை’.  இதனைக் கையிலெடுத்திருப்பவர்கள் சூழலியல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (என்.ஜி.ஓ-க்கள்). பெப்சி , கோக் விற்பனையை புறக்கணித்திருக்கும் வணிகர் சங்கங்களின் முடிவை வரவேற்றிருக்கும் சூழலியல் ஆர்வலரான நித்யானந்த் ஜெயராமன், ”பன்னாட்டுக்  குளிர்பானங்களுக்கு பதில் உள்ளூர் குளிர்பானங்களை பயன்படுத்துவதால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை” என்றும் தண்ணீர் பஞ்சத்திற்கு பவண்டோ, காளிமார்க், டொரினோ உள்ளிட்ட உள்நாட்டு குளிர்பானத் தயாரிப்பாளர்களும் தான் காரணம் என்று கூறியிருக்கிறார். கொஞ்சம் விட்டால் அடுத்தபடியாக,  இளநீரும், பதநீரும், நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து விரயமாக்குவதால் மக்கள் வெறும் நீரை மட்டும் குடிக்க வேண்டும் என்று நித்தியானந்த் ஜெயராமன்  போராடுவார் என எதிர்பார்க்கலாம்.

மேலை நாடுகளில் மட்டுமல்ல, சிங்கப்பூர் போன்ற ’மாதிரி’ மேலை நாடுகளாக இருக்கும் நாடுகளிலும் இன்று தாகம் வந்தால் மக்கள் தண்ணீரைக் குடிப்பதில்லை. ஒரு உணவு விடுதிக்குச் சென்றால் கூட அங்கு நம்மூர் போல குடிநீர் வைக்கப்படுவதில்லை, கோலாக்கள் தான் வைக்கப்படுகின்றன. அமெரிக்க கோலா நிறுவனங்கள், ’மக்களுக்கு தாகம் வந்தால் தமது கோலாக்கள் தான் நினைவுக்கு வரவேண்டும்’ என்ற அளவிற்குத் கோலாக்களை அத்தியாவசியப் பண்டமாக மாற்றுவதை தமது இலக்கு என வெளிப்படையாகவே அறிவித்திருக்கின்றன. தண்ணீரை வியாபாரமயமாக்குவதையே இலக்காக வைத்திருக்கும் இந்நிறுவனங்களை உள்ளூர் கோலி சோடா நிறுவனங்களோடு ஒப்பிடுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும். மேலதிகமாக இன்று குடிநீர் கூட அரசால் அளிக்கப்படுவதற்கு பதில் தனியார் நிறுவனங்களால் விநியோகிக்கப்பட்டு மக்கள் அதற்கென மாதந்தோறும் கணிசமான பணம் ஒதுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

நெடுவாசல் போராட்டத்திற்கும் கூட ”காவிரி டெல்டாவில் விவசாயத்திற்கும் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுகிறது. அதுவும் சுற்றுச் சூழல் பாதிப்பே!, ஆகவே ஹைட்ரோ கார்பனை எதிர்ப்பவர்கள், விவசாயத்திற்கு நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப் படுவதையும் எதிர்க்க வேண்டும்” என்று சில அறிவுஜீவிகள் சமூக வலைத்தளங்களில் கண்டிசன் போடுகிறார்கள். சரி, நிலத்தடி நீரை எடுக்குமாறு விவசாயிகளை நிர்ப்பந்தித்த குற்றவாளிகள் யார்?  விவசாயிகளா ? காவிரியை மறுத்து, மணலைக் கொள்ளையடித்து, கார் கம்பெனிக்கும், கோலா கம்பெனிக்கும் ஆற்று நீரை அள்ளிக் கொடுத்த  முதலாளிகள் – அரசியல்வாதிகள் – அதிகாரிகள் கூட்டணியா?

ஏகாதிபத்தியங்களின் நிதியில் வளர்ந்து ஏகாதிபத்தியங்களின் நலனுகாக செயல்படும் இத்தகைய சூழலியல் என்.ஜி.வோ-க்கள் அனைவரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை திசை திருப்புவதோடு பன்னாட்டு நிறுவனங்களின் நலனை இறுதியில் வேறு காரணங்களை முன்வைத்து காப்பாற்ற உதவுகிறார்கள்.

இந்த ஏகாதிபத்தியங்கள் வடிவமைத்திருக்கும் நுகர்வுக் கலாச்சார வாழ்வின் அங்கங்களான மல்டி பிளக்ஸ், ஆடம்பர உடைகள், ஆடம்பர பொழுதுபோக்குக் கருவிகள், வாகனங்கள், உணவகங்கள், பிசா, பர்கர், கேஎப்சி வகையறாக்களில் முதன்மையான சின்னமே பெப்சியும் கோக்கும் தான். உள்ளூர் சோடாக்கள் எவையும் மேற்கண்ட நுகர்வுக் கலாச்சார ஆக்கிரமிப்பின் அங்கமாக அணிவகுப்பதில்லை. அவை விலையுயர்ந்த வாஷிங்டன் ஆப்பிளின் அருகே பரிதபமாய் சிதறிக் கிடக்கும்  இலந்தைப் பழம் போன்றவையாகவே இருக்கின்றன. அதனால்தான் உலகமெங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ஓர் குறியீடாக  கோக் இருக்கிறது. கோக், பெப்சிக்கு எதிராக பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. முக்கியமாக நீரை தனியார்மயமாக்க கூடாது என்று பல நாட்டு மக்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். என்ஜிவோ நிறுவனங்களோ தனியார்மயம், தாராளமயத்தை எதிர்ப்பதற்கு பதில் பெப்சி கோக்கை எதிர்த்தால் கோலி சோடாவையும் எதிர்க்க வேண்டுமென்று கூறி அமெரிக்க கோலாக்களுக்கு மறைமுகமாக வக்காலத்து வாங்குகிறார்கள்.

ஜல்லிக்கட்டு எதிர்ப்புப் போராட்டமல்ல – ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமே
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒரு முழக்க அட்டை. பெப்சி கோலாவை தமிழன் தடை செய்கிறான்!

கடைசியாக, அறிவியலை ஆயுதமாய் எடுத்துக் கொண்டு களத்தில் இறங்குகிறார்கள் சிலர். அமெரிக்க கோலாக்களில் இருக்கும் வேதிக் கரைசல்களைப் போன்றதே, உள்ளூர் சோடாக்களின் வேதிக் கரைசல்களும். ஆகவே பெப்சி- கோக் மட்டுமல்ல காளிமார்க் வகையறாக்களும் கெடுதியே என்று  இரண்டையும் தடை செய்யக் கோருவதும் அயோக்கியத்தனமே.

காளிமார்க் குடிப்பதால் வரும் உடல்நலக்கேட்டை, அமெரிக்க கோலாக்களால் வரும் சமூக – பொருளாதார – அரசியல் கேட்டோடு துளி கூட ஒப்பிட முடியாது. ஆகவே நீங்கள் அமெரிக்கக் கோலாவைக் குடிப்பதால் முழுகும் குடியை விட பவண்டோவைக் குடிப்பதால் ஒன்றும் பெரியதாகக் குடிமுழுகி விடாது. நீங்கள் பவண்டோவைக் குடித்தாலும் சரி, குடிக்காவிட்டாலும் சரி, நமது சமூக, பொருளாதார, அரசியல் சுய சார்பைப் பறிக்கும் அமெரிக்கக் கோலாக்களை எதிர்ப்பதில் ஒன்று சேருவதே முக்கியம்.

இன்னும் சிலர் வணிகர் சங்கத் தலைவர்கள் நாடார் சாதிக்காரர்களாக இருப்பதால் காளிமார்க் எனும் நாடார் சாதி முதலாளிக்கு ஆதரவாக பெப்சி கோக்கை எதிர்ப்பதாக ‘பயங்கரமான’ ஆய்வு செய்கிறார்கள். ஒரு பெட்டிக் கடைகாரருக்கோ இல்லை மளிகைக் கடைக் காரருக்கோ வாடிக்கையாளர் வாங்கும் அனைத்தையும் வைத்திருந்தால்தான் வருமானம் வரும். பெப்சி கோக்கை விற்பதால் வரும் வருமானத்தை விட காளிமார்க்கின் வருமானம் பல மடங்கு குறைவே. பொது மக்களின் பொதுக் கருத்து வலிமையினால்தான் அவர்கள் பெப்சி கோக் வருமானத்தை இழக்க முன்வந்திருக்கிறார்களே அன்றி சாதி நலனுக்காக அல்ல. மேலதிகமாக வணிகர்கள் அல்லாத பிரிவினர் மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், நட்சத்திர விடுதிகள், பெரும் தொடர் அங்காடிகள் போன்றோர் பெப்சி கோக்கை விற்பார்கள். எப்படிப் பார்த்தாலும் இது சிறு வணிகர்களுக்கு இழப்பே!

இன்னும் அரசு, போலீசு, நீதிமன்றம் மூலமாக சிறு வணிகர்களுக்கும் பெரும் நெருக்கடியும், ஏன் அடக்குமுறையும் கூட வரலாம். பெப்சி – கோக் எனும் அமெரிக்க கம்பெனிகளின் பொருட்களை விற்கமாட்டோம் என்று சொல்வது சாதாரணமான ஒன்றல்ல! இத்தகைய சூழலில் வணிகர்களின் முடிவை வரவேற்பதோடு, அவர்களது கடைகளைக்கு நேரில் சென்று வாழ்த்துவது, அரசு மூலம் பிரச்சினை வந்தால் அதை எதிர்த்து போராடுவது போன்றவற்றையும் நாம் செய்ய வேண்டும். கூடவே மாறுவேடம் போட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் அம்பலப்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க:
Pepsi, Coca-Cola boycott: Tamil Nadu trade bodies’ move unhealthy; goes against free-market spirit

சுத்தியால் அடித்துத்தான் முதலாளி எங்களை எழுப்புவார் !

0

மெல்லிய இசையுடன் துவங்கும் அந்த காணொளியில் இளம் சிறுவன் ஒருவன் மெல்ல நடக்கிறான். வயதுக்கேற்ற உடல்வாகுடன் இருந்தாலும் நடையோ 60 வயது முதியவர் போல இருக்கிறது. அவன் சென்ற இடத்தின் அருகிலேயே இன்னொரு சிறுவன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறான். அவனால் சூரிய வெளிச்சத்தை எதிர் கொள்ள முடியவில்லை. நான்கு வருடங்கள் சூரியனையே பார்க்காமல் இருந்ததன் விளைவால் கண் கூசுகிறது. அது மட்டுமன்றி அவர்கள் உடல்களில் பல இடங்களில் தழும்புகள் இருக்கின்றன. முன்னவன் ஷ்யாம் பிந்தையவன் லக்கி. இவ்விரு சிறுவர்களுக்கும் நோயெல்லாம் ஒன்றும் இல்லை. அவர்கள் இருவரும் குழந்தை தொழிலாளிகள்.

 முதலாளி சுத்தியலால் அடித்துதான் எங்களை ஏழு மணிக்கு எழுப்புவார்.
முதலாளி சுத்தியலால் அடித்துதான் எங்களை ஏழு மணிக்கு எழுப்புவார்.

இவர்கள் போலவே இன்னும் ஏராளமான சிறுவர்கள் அந்த சிறிய குடிலை சுற்றி இருந்தார்கள். அவர்கள் செல்வதுடன் அந்த காணொளி முடிகிறது. இவர்கள் அனைவரும் 2017 பிப்ரவரி மாதம் டெல்லி சீலம்பூரில் உள்ள ஒரு ஜீன்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து மீட்கப்பட்டவர்கள். மொத்தம் 26 சிறுவர்கள் அனைவரும் 8 லிருந்து 13 வயதிற்குட்பட்டவர்கள்.

அச்சிறுவர்களின் பணிச்சூழல் பற்றி அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்.

“நாங்கள் தினமும் காலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணி வரை மட்டுமே தூங்க அனுமதிக்கப்பட்டிருந்தோம். முதலாளி சுத்தியலால் அடித்துதான் எங்களை ஏழு மணிக்கு எழுப்புவார். கடந்த நான்கு வருடங்களாக தினசரி இரு வேலை உணவாக உருளைக்கிழங்கும் சோறும் மட்டுமே. இந்த உணவு மாறியதே இல்லை. அறையிலிருந்து ஒரு நொடி கூட வெளியே செல்ல எங்களுக்கு அனுமதி கிடையாது.” இதை சொல்வது வெறும் ஏழே ஏழு வயதான ரஹீம்.

இவர்களது வேலை ஜீன்ஸ் துண்டுகளை கத்தரித்து அதை பேக் செய்வது. பத்து நிமிடத்தில் பத்து எண்ணிக்கை. இதில் கடைசியாக முடிப்பவருக்கு சுத்தியல் அடி கட்டாயம். கொஞ்சம் அதிகமாக உணவு சமைத்தால் சுத்தியல் அடி. வேலை செய்கையில் தூங்கினால் சுத்தியல் அடி. கழிவறைக்கு சென்றால் கூட சுத்தியல் அடி என கிட்டத்தட்ட நரகத்திலிருந்து மீண்டுள்ளார்கள்.

அந்த சிறுவன் ஷியாம் மேற்கண்ட தொழிற்சாலைக்கு ஒவ்வொரு மாதமும் புதிதாக ஐந்து சிறுவர்கள் வருவதை பார்த்திருக்கிறான். நாங்கள் அவனை மீட்கையில் அவனால் நகரக் கூட முடியவில்லை. நாங்கள் அவனை தூக்க வேண்டியிருந்தது. இப்போது பிஸியோதெரபி சிகிச்சை தொடர தொடர கொஞ்சம் கொஞ்சமாக அடியெடுத்து வைக்கிறான். நாங்கள் அங்கு பார்த்த ஒவ்வொரு சிறுவனும் காயத்துடனும் ஊட்டச்சத்து குறைபாட்டுடனுமே இருந்தான் என்கிறார் மீட்புக் குழுவில் இருந்த தன்னார்வ தொண்டர் ஒருவர்.

“நாங்கள் மிகச்சிறிய அறை ஒன்றினுள் அடைக்கப்பட்டிருந்தோம். அங்கு சூரிய வெளிச்சம் என்பதே இல்லை. நான் மீட்கப்பட்ட பொழுது என்னால் கண்ணையே திறக்க முடியவில்லை. நாங்கள் குளிக்கவோ கழிவறை செல்லவோ கூட அனுமதிக்கப் படவில்லை. நாங்கள் தினமும் சுமார் 5000 எண்ணிக்கையில் துணிகளை பேக் செய்ய வேண்டியிருந்தது.” இதைக் கூறுவது லக்கி.

இவர்கள் அனைவரும் பீகாரை சேர்ந்த சிறுவர்கள். அதில் அறுவர் குழந்தை கடத்தல் கும்பலால் வந்தவர்கள். இப்போது அந்த தொழிற்சாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜூஹி சவுத்ரி

ஓரிரு நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜக-வின் துணை அமைப்பான மகிளா மோர்ச்சா வின் ஜல்பைகுரி மாவட்ட தலைவர் ஜூஹி சவுத்ரி குழந்தை கடத்தல் கும்பலில் முக்கிய புள்ளியென போலிசால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பின்னர் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். விசாரணையின் போது செல்வாக்கு மிக்க பாஜக தலைவர்கள் பலரது பெயரையும் கூறியிருப்பதோடு தான் ஒரு அப்பாவி எனவும் கூறியிருக்கிறார்.

இது மட்டுமன்றி பாஜக-வின் மாநிலத் தலைவர் திலீப் கோஷ், ஜூஹி சவுத்ரி குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்த குற்றவாளியுடன் கட்சி அனுமதி இல்லாமல் டெல்லி சென்று கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்திருக்கிறார் எனவே நாங்கள் அவரை கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

இவை மட்டுமல்லாமல் காவல்துறை விசாரணையில் முன்னுக்கு பின் உளறி கொட்டியுள்ளார்கள். பிறந்த குழந்தைகள் கடத்தலில் நேரடியாக ஜூஹி ஈடுபட்டுள்ளார் என சிஐடி துணை இயக்குனர் ராஜேஷ் குமார் கூறியுள்ளார்.

இவ்விரு செய்திகளும் நமக்கு அறியத்தருபவை எப்படிப்பட்ட ஒரு குற்றக் கும்பலின் ஆளுகையின் கீழ் எவ்வளவு ஒரு மோசமான முறையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத்தான். ஒரு ஜூஹி சவுத்ரி என நாம் இதை யோசிக்க முடியுமா…? கலவரங்கள், குற்றக் கும்பல்கள், ரவுடித் தலைவர்கள், குண்டு தயாரித்தல், அசீமானந்தா, பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பது தொடங்கி ரவுடிகளை நேரடியாக ரெக்ரூட் செய்வது முதல் சமீபத்தில் பினராயி விஜயன் தலைக்கு விலை வைத்தது வரை ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் க்ரைம் ரேட் மற்ற எல்லா கட்சியினரை விடவும் அதிகம்.

சுமங்கலி திட்டம்
சுமங்கலி திட்டம்

உலக ஆய்வறிக்கை ஒன்றின்படி அனைத்து உதிரி வேலைகள் பார்ப்பவர்களை உள்ளிட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட நவீன அடிமைகள் இந்தியாவில் அதிகமாம். சுமார் 18 மில்லியன் பேர். இது இந்திய மக்கள் தொகையில் 1.4% என்கிறார்கள். இந்த புள்ளிவிவரமே மிகக்குறைவு என்றே தோன்றுகிறது.

ஷியாம் லக்கியை போலவே தமிழகத்து பஞ்சாலைகளில் கேம்பஸ் கூலி என்ற பெயரிலும் சுமங்கலித் திட்டம் என்ற பெயரிலும் அன்றாடம் உழன்று கொண்டிருப்பவர்கள் ஏராளமான சிறுமிகள் மற்றும் சிறுவர்கள். அவர்கள் 14 என்கிற வயதைத் தாண்டி 15 -லும் 16 -லும் இருப்பதால் நம் சட்ட வரையறையில் அவர்கள் குழந்தை தொழிலாளர்கள் இல்லை.

சுமங்கலித் திட்டத்தில் பணிக்கு வரும் தொழிலாளிகள் மேலதிகாரிகளினால் அடையும் பாலியல் சீண்டல் துன்புறுத்தல்கள் சொல்லொணாத் துயரம் தோய்ந்தவை. இவையெல்லாம் கேள்விக்கு அப்பாற்றட்டவையாக மாறியிருக்கிறது. எட்டு மணி நேர வேலையும் அடுத்த சிப்டிற்கு ஆள் வரவில்லையெனில் அதையும் சேர்த்து பார்க்க வேண்டிய கட்டாயமும் இங்கு மிக இயல்பானதாக ஆக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இந்துத்துவமும் முதலாளித்துவமும் கலந்து நம் மக்களை கசக்கி பிழிகிறது. குழந்தை தொழிலாளர்களை மீட்பதோ அவர்களை சமூக நிலையில் உயர்த்துவதோ, பஞ்சை பராரிகளாய் இருக்கும் ஒப்பந்த தொழிலாளரை விடுதலை செய்வதோ பார்ப்பனியத்தையும், முதாளித்துவத்தையும் எதிர்த்து போராடுவதில் இருக்கிறது.

(ஹிந்துஸ்தான் டைம்ஸில் வந்த கட்டுரையை தழுவி எழுதப்பட்டது)

– விளவை இராமசாமி

செய்தி ஆதாரம்:
Delhi jeans factory horror: Kids hit with hammer, made to work for 22 hours
Bengal child trafficking: Arrested BJP woman leader names ‘political personalities’

நெடுவாசல் – தாமிரபரணி : கேலிச்சித்திரங்கள்

0

நெடுவாசல் எமது நிலம்

அம்பி பசங்களா.. நாங்கதாண்டா உண்மையான சென்னை பசங்க.

இந்து அமைப்புகள் தாமிரபரணியில் இறங்கி போராட்டம்

இவருதான் அந்த போராளிகளோட தலைவர்.

ஓவியம் : முகிலன்
palachennaitn@gmail.com
பேச: 95518 69588

இணையுங்கள்:

தடுப்பூசி உதவியுடன் மக்கள் தொகையை குறைக்க விரும்பும் பில்கேட்ஸ்

230

நான்காவது தொழிற்புரட்சியும், தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசித் திட்டமும்- பாகம் 3

கேட்ஸ் ஃபவுண்டேஷன்உதவியா? நான்காவது தொழிற்புரட்சியின் வெற்றிக்காக உலகப் பெரும்பணக்காரர்கள் நடத்தும் மனிதத் தன்மையற்ற நிறவெறிப்படுகொலையா?

பில் மெலிண்டா கேட்ஸ் ஜோடி மூன்றாம் உலக நாடுகளை குறிவைத்து நடத்தும் அனைத்து மானுடவிரோத மனிதத்தன்மையற்ற குற்றங்களுக்குப் பின்னாலும் வெறும் வணிக நோக்கம் மட்டுமே இருப்பதாகத் தான் இதுவரை புரிந்து கொள்ளப்பட்டிருகிறது.  ஆனால் ஃபிலந்த்ரோபி (Philanthropy) என்ற பெயரில் மூன்றாம் உலக நாடுகளில் இவர்கள் நடத்தும் வெறியாட்டம் வணிக இலாபங்களைத் தாண்டிய நோக்கங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது வெள்ளிடை மலையாகத் தெரிய ஆரம்பித்துள்ளது.

4-வது தொழிற்புரட்சியின் மிகப் பெரிய விளைவோ வேலையின்மை.
4-வது தொழிற்புரட்சியின் மிகப் பெரிய விளைவோ வேலையின்மை.

தாராளமயம், தனியார்மயம், உலகமயத்தின் இறுதி இலக்கான ”உலக பேரரசை ஆளம் தகுதி யாருக்கு?” என்பது தான் 2017 ஜனவரியில் சுவிட்சர்லாண்ட் டாவோஸில் உலக பொருளாதார நிறுவனத்தின் நிகழ்ச்சிநிரல்.  உலகெங்கும் ஊழல்மயப்பட்ட, ஆளத்தகுதியிழந்த, எதிர்நிலை சக்தியாக மாறியுள்ள அரசியல் நிறுவனங்களின் மீது மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக பறைசாற்றும் டாவோஸ் பணக்காரர்கள், மாற்றுத் தலைமையை முன்வைக்கிறார்கள்.  ஏன் மாற்றுத் தலைமை தேவை? யார் அந்த மாற்று?

உலகின் மக்கள்தொகை கட்டுக்கடங்காமல் பெருகிக் கொண்டு போவதாக குறைபடும் உலக மீப்பெரு பணக்காரர்கள், இதனால் ஏற்படப் போகும் காலநிலை மாற்றத்தைப் பற்றி கவலைப் படுகிறார்கள்.  காலநிலை மாற்றத்தால் பூமி அழியாமல் பாதுகாக்க வேண்டுமென்றால் அதற்கு காரணமான நான்கு முக்கிய காரணிகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என TED மாநாட்டில் 2010-ல் பில்கேட்ஸ் கூறுகிறார்.  இதற்கு அவர் கண்டுபிடித்த வாய்ப்பாடு CO2 =P * S * E * C.  P என்றால் மக்கட்த் தொகை.

2010-இல் 700 கோடியாக இருந்தது 2050-இல் 900 கோடியாகும் என கணக்கிடுகிறார். S என்றால் ஒரு நபருக்கான சேவைகள். அதாவது உணவு, நீர், காற்று, இருப்பிடம், போக்குவரத்து, கல்வி, மருத்துவம், இணையம் போன்றவை அனைத்தும். E என்றால் ஒருசேவைக்கு தேவைப்படும் ஆற்றல்/ மின்சாரம்.  C என்றால் மின்சாரம் தயாரிக்கும் போது வெளிப்படும் கரியமில வாயு.  பூமியின் காலநிலை மாற்றத்திற்கு காரணமான கரியமில வாயுவை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வர வேண்டுமென்றால் சேவைகளையோ, மின்சாரத்தையோ குறைப்பதன் வழி செய்ய முடியாது.  ஏனென்றால் நான்காவது தொழிற்புரட்சியை  உலக மீப்பெரு பணக்காரர்கள் கடந்த ஆண்டே அறிவித்து விட்டார்கள். நான்காவது தொழிற்புரட்சியின் அடிப்படையே மின்சாரம் தான். செயற்கை நுண்ணறிவு (AI); ஐஓடி (IoT) எனப்படும் டிஜிட்டல் உலகம்-பருப்பொருள் உலகம்- உயிரியல் உலகம் ஆகியவற்றின் இணையம்; டிசைனர் பீயிங்ஸ் (Designer beings) எனப்படும் ஆய்வகங்களில் வடிவமைக்கப்பட்ட மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள், நுண்கிருமிகள்; 3டி பிரிண்டிங்; ரோபோர்டிக்ஸ் ஆகியவை தான் நான்காவது தொழிற்புரட்சியின் முக்கியமான கூறுகள். இவற்றை மின்சாரமில்லாமல் நிறைவேற்ற முடியாது.

கூடவே 4-வது தொழிற்புரட்சியின் மிகப் பெரிய விளைவோ வேலையின்மை. அனைத்து துறைகளிலும் ஆட்டோமேஷன் கொண்டுவரப்பட்டால் உழைக்க மனிதர்கள் தேவையில்லை.  இயந்திரங்களே உற்பத்தியை பார்த்துக் கொள்ளும். இதில் கீழ்மட்ட வேலைகளுக்கு மட்டும் தான் ஆப்பு என நடுத்தர வர்க்கம் நினைக்கலாம். ஏனென்றால் இரண்டாவது தொழிற்புரட்சி என முதலாளித்துவ உலகம் கொண்டாடும் 1910-இல் உற்பத்தியில் கன்வேயர் பெல்ட் புகுத்திய கார் தொழிற்சாலைகள், கூடவே ஊட்டி வளர்க்கப்பட்ட நடுத்தரவர்க்கத்தையும் உருவாக்கியது. அதைப் போலன்றி 4 –வது தொழிற்புரட்சி விவசாயிகளையும், தொழிலாளர்களையும், முறைசாராத் தொழிலாளர்களையும், முதலாளிகளின் ஒரு பகுதியனரை மட்டுமன்றி, டாக்டர், வக்கீல், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஐடி தொழிலாளர்கள், எழுத்தாளர்கள், பொறியியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள்  என அனைவரின் வேலைகளையும் பறித்து ஏதிலியாக்குமென நான்காவது தொழிற்புரட்சியின் தந்தை கிளாஸ் ஷ்வாப் எச்ச்சரிக்கிறார்.

காலநிலை மாற்றத்தால் பூமி அழியாமல் பாதுகாக்க நான்கு முக்கிய காரணிகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று பில்கேட்ஸ் முன் வைக்கும் வாய்ப்பாடு CO2 =P * S * E * C. P
காலநிலை மாற்றத்தால் பூமி அழியாமல் பாதுகாக்க நான்கு முக்கிய காரணிகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று பில்கேட்ஸ் முன் வைக்கும் வாய்ப்பாடு CO2 =P * S * E * C. P

உலகின் வெறும் 5% பேருக்கு மட்டும் தான் வேலை வாய்ப்பு. ஏதிலிகளாக மாறப்போகும் மிச்ச 95% பேருக்கு மாற்று வேலை வாய்ப்பை வழங்க 4-வது தொழிற்புரட்சியின் சிற்பிகள் தயாராக இல்லை.  மாற்றாக எதை முன்வைக்கிறார்கள் தெரியுமா? அடிப்படை வருமானம் (Basic Income) எனப்படும் நூறுநாள் வேலைத்திட்டம்.  வேலையிழந்தவர்கள் புரட்சி செய்ய வாய்ப்பிருகிறதல்லவா? அதைத் தடுப்பதற்குத் தான் ஆதார் மற்றும் ட்ரோன் மூலம் கண்காணிப்பு.  ஆனால் அது போதாது. இங்கு தான் பில் கேட்சின் சூத்திரத்திற்கு வேலை.

பருவநிலை மாற்றத்திற்கும் கரியமில வாயு வெளியேற்றத்துக்குமான உறவில் முக்கிய பங்கு வகிக்கும் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பருவநிலை மாற்றத்திலிருந்து மட்டுமல்ல, ஏகபோகங்களின் மீப்பெரு வளர்ச்சியை தொடங்கி வைத்திருக்கும் 4-வது தொழிற்புரட்சியின் முக்கிய சவாலான வேலையற்ற 95% உலக மக்களை எப்படி ஒழித்துக் கட்டுவது என்பதற்கான உத்தியும் ஒளிந்துள்ளது.   உலக மக்கட்தொகையைக் 10-15% ஆகக் குறைக்க சிறந்த வழி தடுப்பூசிகள், இனப்பெருக்கக் கட்டுப்பாடு மற்றும் சுகாதார பாதுகாப்பு என்கிறார் பில்கேட்ஸ்.  மூன்று வழியில் இதை செய்ய முடியும்.

(அ) எயிட்ஸ், எபோலா போன்ற சிதைவு நோய்க்கிருமிகளை ஒவ்வொரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியங்களிலும் பரவச் செய்வது; (ஆ) கருத்தரிப்பு தடுப்பூசிகளை மூன்றாமுலக நாடுகளின் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போடுவதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் குழந்தைபெறும் வயதையெட்டும் ஒவ்வொரு மனிதனையும் மலடாக்குவது; (இ) டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற பெரும் பரவலாக தொற்றும் நோய்க்கிருமிகளை வெடித்துப் பரவ செய்வது போன்ற முறைகள் வழி உலகின் மக்கட்த் தொகையை வெறும் 10-15 % ஆகக் குறைக்கலாம்.  இது மாபெரும் நிறவெறிப் படுகொலையல்லவா?

இத்திட்டத்தை நம் நாட்டு அரசையே செய்ய வைக்க முடியுமா? ஆம். அதற்காக உருவாக்கப்பட்டது தான் கவி வாக்ஸின் அலையன்ஸ்.  இதில் ஐநாவின் உலக சுகாதார நிறுவனம், யூனிசெஃப், உலகவங்கி, ஐஎம்எஃப், மற்றும் ஏகாதிபத்திய மற்றும் மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள் ஆகியவை கேட்ஸ் ஜோடியின் தலைமையில் செயல்படுகின்றன. நமது அரசு இவர்களின் கைப்பாவை. ஏகாதிபத்தியத்தின் அடுத்த கட்ட நகர்விற்காக, நான்காவது தொழிற்புரட்சியின் சிற்பிகள், கவி வாக்ஸின் அலையன்ஸ் போலவே ஒவ்வொரு துறையிலும் உலகெங்கும் உள்ள நாடுகளை கட்டுப்படுத்த அரசு-தனியார் கூட்டு என்ற போர்வையில் ஆட்சிக் கூட்டணிகளை (governance alliance) உருவாக்கியுள்ளது. இது ஒவ்வொரு இறையாண்மையுள்ள நாட்டின் அரசையும் தனது கைப்பாவையாக்கி தனது போர்தந்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இதே கேட்ஸ் ஜோடி தலைமையில் இயங்கும் பெட்டர் தான் காஷ் அலயன்ஸ் (better than cash alliance) எனும் கூட்டணியின் பங்களிப்பு பத்திரிகைகளில் அம்பலப்பட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.  இவர்களைத் தான் இன்று அரசியல் மாற்றாக இவர்கள் முன்னிறுத்துகிறார்கள். ஆனால் உண்மையில் இந்தக் கூட்டணிகளெல்லாம் வெறும் தரகர்கள் தான். இவர்கள் பின்னாலிருந்து ஆட்டுவிப்பது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில உலகப் பெரும் பணக்காரர்களும், ஒட்டுமொத்த உலகையும் தனியே கபளீகரம் செய்யத்துடிக்கும் அவர்களின் பேராசை பிடித்த போர்தந்திரத் திட்டங்களும் தான்.

தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி இவர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் பங்களிப்பை செலுத்தும். 2009-இல் கனடாவில் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்ட போது டெட்டனஸ் தடுப்பூசி பரந்த அளவில் போடப்பட்டதால் 65% பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.   தமிழ்நாட்டில் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவியுள்ள நேரத்தில் பாரிய அளவிலான தடுப்பூசி இயக்கம், பெரும்பான்மையான குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கும்.  இதனால் பன்றிக்காய்ச்சல் தொற்று அதிகமாக ஏற்பட்டு மரண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அது போல இதுவரை சந்தைப்படுத்தப்படாத தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசியில் hCG போன்ற கருத்தரிப்பு தடுப்பு ஹார்மோன்கள் கலக்கப்படவில்லை என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டியுள்ளது.  ஏனென்றால் கென்யாவிலும் இந்தியாவிலும் உலகின் பல்வேறு ஏழை நாடுகளிலும் கேட்ஸ்-கவி கும்பல் இதற்குமுன் இழைத்திருக்கும் மானுட விரோத மனிதத் தன்மையற்ற குற்றங்களின் அனுபவங்கள் நம் முன்னே நிற்கின்றன.

01-03-2017 அன்று பெற்றோரின் அனுமதியின்றி ரூபெல்லா தடுப்பூசியைப் போடப் போவதாக அறிவித்துள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர். இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை காலடியில் போட்டு நசுக்கி, 15 வயதிற்குள்ளான பிஞ்சுக் குழந்தைகளுக்கு எதிராக ஒரு மீப்பெரு குற்றத்தை செய்யும் இதே அரசு, நெடுவாசலுக்கு ஆதரவாகப் போராடச் செல்லும் கல்லூரி மாணவர்கள் பெற்றோரின் அனுமதியைப் பெற்று தான் வரவேண்டும் என்ற வினோத சட்டத்தைக் கூறி போலீசை வைத்து விரட்டியடிக்கிறது.  பாங்க் வாசல், வாடி வாசல், நெடுவாசல், பள்ளிவாசல் எனத் தனித்தனியான போராட்டங்கள் தீர்வைத் தராது. தமிழினத்தை அழிக்கத் துடிக்கும் இக்குற்றக்கும்பலை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிக்காவிட்டால் நம் தமிழினமே அழிந்து போகும் அபாயம் தொலைதூரத்திலில்லை.

– முற்றும்.

கட்டுரை ஆக்கம்: ஆழிமதி

நான்காவது தொழிற்புரட்சியும், தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசித் திட்டமும்- பாகம் 1
நான்காவது தொழிற்புரட்சியும், தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசித் திட்டமும்- பாகம் 2

செய்தி ஆதாரம்:
ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட பள்ளி மாணவி பலி
தடுப்பூசியும் அதன் பின் இருக்கும் அரசியலும்…!
Gates Foundation may fund Pune institute
Bill & Melinda Gates Foundation Vaccine Empire on Trial in India
Calls in India for legal action against US charity
“Mass Sterilization”: Kenyan Doctors Find Anti-fertility Agent in UN Tetanus Vaccine
‘Can’t penalise US NGO for violating drug trial norms’
GAVI – The Vaccine Alliance
Gates Foundation continues to support national health mission, no links terminated: Govt
‘Conflict of interest’: NHM panel raises questions on Bill Gates Foundation
Nigeria: WHO Begins Vaccination of 4.7 Million Children in North-East

இராம அடையாளமும் தலித்துக்களின் நூற்றாண்டு துயரமும்

2

ட்டிஸ்கர் மாநிலத்தின் தலைநகர் இராய்பூரில் இருந்து 250 கி.மீ தொலைவிலுள்ள சில கிராமங்களில் நீல நிறம் பூசப்பட்ட சிதிலமடைந்த வீடுகளையும் அவற்றை இணைக்கும் உடைந்து போன சாலைகளையும் காணலாம். அங்கு வாழும் பெரும்பான்மை மக்கள் தலித்துக்கள் – பார்ப்பனிய இந்துமத சாதியமைப்பில் கடைக்கோடியிலிருக்கும் சாதிப்பிரிவினர்.

60 வயதான தானி ராம் சன்வானி, சார்போரா கிராமத்தில் ஒரு சிதிலமடைந்த வீட்டில் வசிக்கும் விவசாயி. “உரிமைகள் ஏதுமற்ற தலித்துக்கள் ஆதிக்கச்சாதியினரால் அடக்கியொடுக்கப்பட்டு நரகத்தில் தள்ளப்பட்டனர். நாங்கள் சமர் என்றும் “அக்கூட்” [தீண்டத்தகாதவர்கள்] என்றும் மோசமாக விளிக்கப்பட்டோம். எங்களது முன்னோர்கள் விலங்குகளை விட மோசமான நிலையில் நடத்தப்பட்டனர். கோயில்களிலும் அவர்களால் நுழைய முடியாது” என்று அவர் கூறுகிறார். இப்படிக் கூறும் சன்வானியின் முகத்திலும் உடலிலும் இந்துக் கடவுளான இராமனின் பெயர் பச்சை குத்தப்பட்டு இருக்கிறது. அவர் மட்டுமல்ல அவரது ஊரைச் சேர்ந்தவர்கள், பக்கத்து ஊர்க்காரர்கள் என்று இதில் பேதமேதுமில்லை.

“கடவுளின் பெயர் எங்கள் மீது பச்சைக் குத்தப்பட்டிருக்கும் போது எங்களுக்கு கோயில் எதுவும் தேவையில்லை. கோயிலில் மட்டுமல்ல கடவுள் எங்கும் இருக்கிறார். எங்களது ஊருக்கருகில் ஒரு கோயில் இருக்கிறது. எங்களது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரும் அதனுள்ளே ஒருபோதும் சென்றதில்லை. அந்தக் கோவிலில் எந்தக் கடவுளின் உருவம் இருக்கிறது என்பதே எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களது முன்னோர்கள் கொடுமைப்படுத்தப்பட்டது போல எங்களது நிலைமை தற்போது இல்லை தான் ஆனாலும் பார்ப்பனிய இந்துமதச் சாதியமைப்பின் ஏற்றத்தாழ்வு முற்றிலுமாக நீங்கும் வரை இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருக்கும்” என்கிறார்.

பரசுராம் பரத்வாஜ் என்பவரால் 1890-களில் தொடங்கப்பட்ட இராம்நமி சமாஜ் என்ற சமய மறுமலர்ச்சி இயக்கத்தை அங்கிருக்கும் தலித்துக்கள் பின்பற்றுகிறார்கள். சட்டிஸ்கரைச் சேர்ந்த ஒரு கிராமத்தின் கோயிலில் நுழைய அவர் மறுக்கப்பட்டதன் எதிர்வினையாகத் தான் இந்த இயக்கத்தை அவர் தொடங்கினார். இது குமரி மாவட்டத்தின் அய்யா வழிபாட்டின் மூலவர் வைகுண்டநாதரின் வரலாற்றைப் போன்றது.

1901 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட தலித் மக்களை ஒருங்கிணைத்து முதன்முறையாக இராம்நமி மேளாவைப் பரசுராம் தொடங்கினார். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பிலாஸ்பூர் மற்றும் இராய்பூர் மாவட்டங்களில் தலித் மக்களின் பங்கேற்புடன் இராம்நமி மேளா நடைபெறுகிறது.

வரலாறு நெடுகிலும் உழைக்கும் மக்களின் விழுமியங்களையும் கலாச்சராங்களையும் பார்ப்பனிய இந்து மதம் அங்கீகரித்ததில்லை மாறாக நசுக்கியே வந்துள்ளது. இராம்நமி மேளாவில் தலித்துக்கள் ஒன்றுகூடுவதை ஆதிக்கச்சாதி இந்துக்கள் வெறுத்தது மட்டுமல்லாமல் இராமனின் பெயரைப் பயன்படுத்துவதையும் எதிர்த்துக் கடுமையாக அவர்களைத் தாக்கியிருக்கின்றனர். இராமாயண புராணபுரட்டு இராமனல்ல எங்களது கடவுள், மாறாக நெருப்பு, சூரியன் மற்றும் சந்திரன் போன்ற இயற்கையின் கூட்டுத்துவம் தான் எங்கள் நாயகன் என்று பரசுராம் அறுதியிட்டு கூறினார். ஆனாலும் இராமனின் பெயரும் ஹரிஜன அடையாளமும் தலித் மக்களைப் பீடித்திருக்கும் நோய்கள் என்பதை ஏனையோரை விட தலித்மக்களே இன்று நன்கு உணர்ந்திருக்கின்றனர்.

உருவ வழிபாட்டில் நம்பிக்கையின்மை, இயற்கைக்கு மாறான எதிலும் நம்பிக்கை கொள்ளாமை, புனித கங்கை நீர் பாவத்தைப் போக்கும் போன்ற மூடப்பழக்கங்களில் நம்பிக்கைக் கொள்ளாமை, கோயிலுக்குச் சென்று இந்துக்கடவுளை வழிபடாமை, பார்ப்பனர்களின் மேலாதிக்கம் மற்றும் அவர்களது புனித நூல்களான மனுஸ்மிரிதி மற்றும் இராமசரிதமானஸ் போன்றவற்றை ஏற்காமை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தில் நம்பிக்கைக் கொள்ளல் போன்றவை இராம்நமி மகா சபாவின் கொள்கைகளாக இருந்தன.

முந்தையக் காலங்களில் இராம்நமி சமூக மக்கள் தங்களது திருமணத்திற்கு பிறகு பச்சைக் குத்தி கொண்டனர். முன்பு இச்சமூகத்தினருக்குப் பொதுவாக 11-14 வயதிற்குள் திருமணம் நடைபெறும். பச்சைக் குத்திக்கொள்ளும் இந்தக் கலாச்சாரம் இதேபோல இனி இருக்காது. ஏனெனில் பச்சைக் குத்திக்கொள்ளும் செயல்முறையானது மிகவும் வலி நிறைந்தது. புகைக்கரியுடன் தண்ணீரைச் சேர்த்து தயாரிக்கப்படும் மையைக்கொண்டு பச்சைக் குத்தப்படும் இந்த நடைமுறையைப் பெரும்பாலும் பெண்களே முன்பு செய்தார்கள்.

தனது 13 வது வயதில் திருமணம் நடந்த மறுகணமே தனக்கு பச்சைக் குத்தப்பட்டதை நினைவு கூறுகிறார் படே சிபட் என்ற கிராமத்தைச் சேர்ந்த 71 வயதான சாமுந்து பாய். “எனது கணவர் அவருடைய உடல் முழுவதும் பச்சைக் குத்திக் கொண்டிருந்தார். இராமனது பெயரைப் பச்சைக் குத்திக் கொள்ளுதல் எங்களது சமூகத்தின் சமயம் மற்றும் கலாச்சராம் தொடர்புடையது என்பதால் எனது முகத்தில் பச்சைக் குத்திக்கொள்ளுமாறு கணவர் என்னை வலியுறித்தினார். பச்சைக் குத்திக்கொள்ளும் போது ஏற்பட்ட வலியானது ஒரு கெட்ட கனவு. ஒரு ஆறு மாதத்திற்கு என்னால் சாப்பிடவும் தண்ணீர் குடிக்கவும் முடியவில்லை.” என்று அவர் கூறுகிறார்.

இராம்நமியைப் பின்பற்றும் இளைஞர்கள் இனி ஒருபோதும் பச்சைக் குத்திக்கொள்ள போவதில்லை. இன்றும் பெரும்பான்மையான இடங்களில் சாதி அடக்குமுறை கோலோச்சும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் பச்சைக் குத்திக்கொள்ளும் நடைமுறையானது அவர்களது சாதி அடையாளத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களைப் பின்னுக்கு இழுப்பதாகும் என்று ஜன் ஜக்ராம் சமிதி (மக்கள் விழிப்பு சமூகம்) அமைப்பின் தலைவரான விபிஷன் பட்ரே கூறுகிறார்.

தேசியகீதத்தைப் பாடினால் காவல்துறை அடிக்காது என்பது போல இராமன் பெயரை உடம்பில் பச்சைக் குத்திக்கொண்டால் தீண்டாமை ஒழிந்துவிடும் என்ற நம்பிக்கை ஒன்றும் அகண்ட பாரதத்தில் பயனளிக்காது என்பதைத் தலித் மக்கள் உணர்ந்தேயிருக்கிறார்கள்.

பார்ப்பன எதிர்ப்பை அடிநாதமாக கொண்டுத் தொடங்கப்பட்ட இராம்நமி இயக்கம் பின்னாளில் வெறுமனே பக்தி இயக்கமாக ஒடுங்கிவிட்டதில் யாதொரு வியப்புமில்லை. இராம்நமி சமாஜ் மட்டுமல்ல இந்திய வரலாற்றில் பார்ப்பனியத்தை எதிர்த்துக் கிளம்பிய சமய சீர்திருத்தங்கள் பெரும்பாலும் ஒன்று பார்ப்பனியத்தால் அழிந்துபடும் அல்லது அதனால் செரிக்கப்பட்டு பொருளற்ற வெற்றுச்சடங்குகளாகிவிடும். பார்ப்பனியத்தின் அடக்குமுறையால் தனிச்சமயமான அய்யாவழி வழிபாடும் இன்று வெறும் சடங்கு ரீதியாகவே தொடர்கின்றது.

இந்தியச் சமூகப் அமைப்பின் ஆணிவேரான சாதியமைப்பைக் கட்டிக்காக்கும் பார்ப்பனியத்தை வெட்டி வீழ்த்தாமல், நில உரிமையில் பங்கு இல்லாமல் தலித்துக்களுக்கு விடுதலை என்றுமே கிடையாது. இராம்நமி இயக்கமானது தொடங்கப்பட்டக் காலத்தில் இருந்து பார்ப்பனியத்திற்கு ஒரு பிரச்சினையாக அது இருந்ததில்லை.  அதாவது மையரீதியான பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தை எதிர்ப்பது சாத்தியமில்லை என்ற நிலையில் தனது அடையாளத்திற்கான தனி வழிபாடு, சடங்கு என மட்டும் ஏற்படுத்திக் கொண்டது. அதுவும் பின்னர் பக்தி பெருமூச்சாக மட்டுமே வரலாற்றில் தொடர்கிறது. இன்றைக்கு தமிழக நாட்டுப்புற  சாமிகளை செரிக்க  முயலும் இந்து மதவெறி அமைப்புக்கள் இத்தகைய சாதிக்கேற்ற தனிக்கடவுள், வழிபாடுகளை ஆதரிக்கின்றன. அப்போதுதான் பெருந்தெய்வ வழிபாட்டில் பார்ப்பனர்களை தவிர்த்து யாரும் உள்ளே நுழைய முடியாது.

பீமா-கரோகான் நினைவுத்தூனும் இராய்ப்பூரின் நீல நிற வீடுகளும் பார்ப்பனிய இந்துமத எதிர்ப்புச்சின்னங்களாக இன்றும் நம் கண்முண்ணே இருக்கின்றன. இவையிரண்டுமே பார்ப்பனியத்திற்கு எதிரான தலித் மக்களின் வெஞ்சினம் தான். ஆனால் முன்னது சமரசமில்லா வீரியமான போராட்டத்தினால் பார்ப்பனியத்தை வீழ்த்தி எதிர்காலத்திற்கு ஒரு வழிகாட்டியாகவும் உந்துசக்தியாகவும் காலத்தை வென்று நிற்கிறது. ஆனால் பின்னது பார்ப்பனியக் கொடுங்கோன்மைக்கு எதிராக தோன்றினாலும் தீண்டாமை அடையாளங்களுடன் சிதிலமடைந்த நீலநிற சுவர்களுடன் சேரிகளுக்குள் முடங்கிவிட்டது.

இருப்பினும் இந்தியாவின் பார்ப்பனிய எதிர்ப்பு வரலாற்றை அதுவும் மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

முதல் முறையாக ஐந்து வயதில் பச்சைக் குத்தப்பட்டதைப் பற்றி சரஸ் கேளா கிராமத்தைச சேர்ந்த 71 வயதான இராம் நிவாஸ் விவரிக்கிறார். “ராம் என்ற பெயரை என் நெற்றியில் எனது தந்தை 4 முறை பச்சைக் குத்தினார். எனக்கு 30 வயது முடிந்தபோது முகம், கைகள் மற்றும் கால்கள் அனைத்திலும் பச்சைக் குத்திக்கொண்டேன்” என்று அவர் கூறினார். அதே போல அவருடைய 4 பிள்ளைகளுக்கும் அவர்கள் இளம்வயதாக இருந்த போது 4 முறைப் பச்சைக் குத்தினார். “ஆனால் அவர்கள் நாட்டின் பிற மாநிலங்களில் வேலை செய்வதால் உடல் முழுவதும் பச்சைக் குத்திக்கொள்ள விரும்பவில்லை. பச்சைக் குத்திக்கொள்வது தீண்டத்தகாதச் சமூகத்தைச்[முன்பு இப்படி தான் தலித்துக்கள் அறியப்பட்டனர்] சேர்ந்தவர்கள் என்பதற்கான வெளிப்படையான அடையாளம் என்பதால் என் பிள்ளைகள் இதை விரும்பவில்லை” என்று அவர் விளக்கினார். “என் பேரக்குழந்தைகளுக்கு பச்சைக் குத்தப்படவே இல்லை” என்கிறார்.

ஜவாலி கிராமத்தில் தன்னுடைய வீட்டிற்கு வெளியே அமர்ந்திருக்கிறார் 60 வயதுடைய தன்பாய். தலித் உரிமைகளுக்கான இயக்கத்துடன் நீலநிறத்திற்கு தொடர்பிருப்பதால் இங்கே பெரும்பாலான வீடுகளுக்கு நீலநிறம் பூசப்பட்டு இருக்கிறது. நீலநிறம் என்பது அமைதி, வீடு பேறடைதல், தூய்மை மற்றும் தேற்றுதல் ஆகியவற்றைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. பல்கலைக்கழக பேராசிரியரான கோல்டி எம் ஜார்ஜைப் பொருத்தமட்டில் இந்த வண்ணப்பூச்சு கலாச்சாரம் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கருடன் தொடங்கியது. பாபாசாகேப் என்று பிரபலமாக அறியப்படும் அம்பேத்கர் ஒரு இந்தியச் சட்ட நிபுணர், பொருளாதாரவாதி, அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். தலித் புத்த இயக்கத்திற்கு (Dalit Buddhist Movement) ஊக்கமளித்த அவர் சமூக பாகுபாடுகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார்.

சாமுந்து பாய்க்கு 75 வயதாகிறது. கணவரின் வற்புறுத்தலினால் தன்னுடைய 13 வது வயதில் முகத்தில் பச்சைக் குத்திக்கொண்டார். அதனால் ஏற்பட்ட கடும் வலியினால் ஆறு மாத காலம் சாப்பிடவும் தண்ணீர் குடிக்கவும் முடியாமல் தவித்ததை அவர் நினைவு கூறுகிறார்.

என்னுடைய அப்பா மற்றும் தாத்தா இருவரும் தங்களது உடல் முழுவதும் கடவுள் இராமன் பெயரைப் பச்சைக் குத்திக்கொண்டார்கள். ஆனால் நான் வேலைக்குச் செல்ல என்னுடைய தந்தை விரும்பியதால் பள்ளிக்கு அனுப்பப்பட்டேன். அதனால் எனக்கு பச்சைக் குத்தவில்லை. நான் காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். நான் பச்சைக் குத்திக் கொள்ளவில்லை என்றாலும் என்னுடைய இராம்நமி (Ramnami) அடையாளத்தை நான் விரும்புகிறேன். இராம்நமி சமாஜ் இயக்கத்தை பின்பற்றுபவர்கள் அணியும் கலாச்சார உடையையே பெரும்பாலான நேரங்களில் நான் உடுத்துகிறேன். அந்த உடையில் இராமன் பெயர் எழுதப்பட்டு இருக்கிறது. நான் இந்த சமூகத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று 65 வயதான கோல்பரா இராம்நமி கூறுகிறார்.

“எங்களது உடலில் பச்சைக் குத்தியிருப்பதை மக்கள் பார்க்கும் போது எங்களைப் பெயர்சொல்லி (வயதான பெரியவர்கள் உட்பட) சில நேரங்களில் அழைப்பார்கள். ஆனால் வெளிப்படையாக சொல்வதானால் இது ஒரு பெரிய விடயமில்லை. என்னுடைய கடவுளின் பெயரை உடல் முழுவதும் பச்சைக் குத்திக்கொண்டதால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று 68 வயதான செட் பாய் கூறுகிறார்.

பெரும்பாலான இராம்நமி சமாஜ் சமூக மக்கள் வறியநிலையில் இருக்கிறார்கள். பிற நிலவுடைமை சாதியினரின் நிலங்களில் கூலி வேலை செய்கிறார்கள்.

“நான் கடவுள் இராமனுக்காக பஜனைகள் பாடுவதில் பெரும்பாலான நேரத்தைச் செலவழிக்கிறேன். என்னுடைய குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு பச்சைக் குத்தப்படாததில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இராம்நமி சமாஜ்ஜை எப்படி பின்பற்ற வேண்டுமென்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம்” என்று 64 வயதான சாகிப் இராம் குரே கூறுகிறார்.

85 வயதான படும் இராம் பாரதியின் கைகள் மற்றும் கால்களில் பச்சைக் குத்தப்பட்டுள்ளது. “நீங்கள் பார்த்ததிலேயே என்னுடைய மனைவிதான் மிகவும் அழகானவராக இருப்பார். என்னுடைய முகத்தில் நான் பச்சைக் குத்திக்கொண்டால் என்னை விட்டு விலகிவிடுவேன் என்று அவர் பயமுறுத்தியதாக கூறினார். அவருக்காகத் தான் என்னுடைய முகத்தில் நான் பச்சைக் குத்திக்கொள்ளவில்லை என்று கூறுகிறார்.

இராம்நமி சமாஜ்ஜை பின்பற்றுபவர்கள் உருவ வழிபாட்டை நம்புவது இல்லை. அவர்கள் இராமனின் பெயரைப் பாடி வழிபடுகிறார்கள்.

பச்சைக் குத்தப்பட்டதால் பேறுபெற்றதாக 76 வயதான நகு இராம் குர்ரே கூறுகிறார். அவருடைய நெற்றி, கைகள் மற்றும் கால்களில் பச்சைக் குத்தப்பட்டுள்ளது.

தலித் தலைவரான பரசுராம் பரத்வாஜ் மூலம் 1890 ஆம் ஆண்டுகளில் உடல்களில் பச்சைக் குத்திக்கொள்ளும் நடைமுறை இராம்நமி சமாஜ் சமூகத்தில் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

13 வயதான பூமிகா நிரலாவும் அவளுடைய 10 வயது தம்பியும் வீட்டிற்கு வெளியே இருக்கிறார்கள். “நான் என் உடலில் ஒருபோதும் பச்சைக் குத்திக் கொள்ளமாட்டேன். உயர்கல்வி கற்க கிராமத்தை விட்டு வெளியே செல்ல விரும்புகிறேன்” என்று பூமிகா கூறுகிறாள். “என்னுடைய சாதியை வைத்து மக்கள் என்னை அடையாளப்படுத்துவதை நான் விரும்பவில்லை. உடலில் பச்சைக் குத்திக்கொள்ளும் நடைமுறையில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் ஒரு ஆசிரியராக என் சமூகத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே விரும்புகிறேன்” என்று மேலும் கூறுகிறாள். பள்ளிக்குச் செல்லும் இவர்கள் இருவருக்கும் காலணிகள் கிடையாது.

தன்னுடைய இராம்நமி அடையாளம் குறித்து பெருமை கொள்கிறார் 70 வயதான இராம் பகத் மகிலேஞ்சு. சட்டீஸ்கர் மாநிலத்தின் வறுமைமிகு பகுதியியைச் சேர்ந்த அவர் தன்னுடைய 35 வது வயதில் முகம், காதுகள் உள்ளிட்டு உடல் முழுவதும் பச்சைக் குத்திக்கொண்டார்.

பெரும்பாலும் சட்டீஸ்கர் மாநிலத்தில் பின்பற்றப்படும் இராம்நமி சமாஜ் என்பது ஒரு சமய மற்றும் சமூக சீர்திருத்த இயக்கமாகும்..

“என்னுடைய உடலில் 50 ஆண்டுகளுக்கு மேலாக கடவுள் ராமனின் பெயரைப் பெருமையாக சுமந்து வருகிறேன். அவர் என்னோடு இருக்கிறார். நாங்கள் உள்ளே நுழைய கோயில்கள் தடுக்கலாம் ஆனால் எங்களுடன் கடவுள் இருப்பதை யாராலும் தடுக்க முடியாது” என்று ஜம்காஹா கிராமத்தில் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்திருக்கும் 77 வயதான மஹேத்தர் இராம் டாண்டன் கூறுகிறார்.

– நன்றி அல்ஜசிரா
தமிழாக்கம்: சுந்தரம்

மூலக்கட்டுரை: In the name of Ram: Tattoos in India’s Dalit community

திருச்சியில் உழைக்கும் மகளிர் தினக் கருத்தரங்கம் – அனைவரும் வருக !

0

குருதியில் மலர்ந்த அனைத்துலக உழைக்கும் பெண்கள் தினம் !

மார்ச் 8 ஆம் தேதியை அனைத்துலக மகளிர் தினமாக கடைபிடித்து வருகிறோம். வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த பெண்களை சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுத்திய வெற்றி தினமே இந்த மகளிர்தினம். ஆனால், இன்றைய சமூகத்தில் பெண்ணின் நிலையென்ன ? அரியலூர் நந்தினி, போரூர் ஹாசினி, எண்ணுர் ரித்திகா, பெங்களூர் விமானப்பணிப்பெண், நடிகை பாவனா…

ஒவ்வொருவருடமும் மகளிர் தினம்பற்றி பேச முற்படும்போது இப்படி ஒருபட்டியல் வரிசைகட்டிநிற்கிறது. காதலன் என்ற கயவனாலேயே கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டு அவரது பிறப்புறுப்பை பிளேடால் கிழித்து, கருவை உறுவி எரித்துக்கொன்று நிர்வாணமாய் பாழடைந்த கிணற்றில் வீசப்பட்டாள் அரியலூர் நந்தினி. காணாமல் போன அன்றே புகார் கொடுத்தும் 15 நாள் பொறுத்து பிணமாக  கண்டுபிடித்து கொடுத்தது காவல்துறை ! ஆணாதிக்க வெறியுடன் சாதி ஆதிக்க வெறி, இந்து மதவெறி தலைக்கேறிய மணிகண்டன் என்ற இந்து முன்னணி பொறுக்கிகளின் வக்கிரச்செயலின் விளைவுதான் சிறுமி நந்தினி.

நந்தினிக்கு நேர்ந்த கொடுமை இப்படியென்றால் 6 வயது பெண் ஹாசினிக்கும் 3 வயது குழந்தை ரித்திகாவுக்கும் நேர்ந்த கொடுமை நெஞ்சை பதற வைக்கிறது. தாழ்த்தப்பட்ட ஏழை குழந்தைகள் மட்டுமென்றில்லை, பெங்களூரு விமானப் பணிப்பெண்ணாக இருந்தாலும், பிரபல நடிகை பாவனாவாக இருந்தாலும்கூட பெண்ணாக பிறந்த யாரும் இந்த பொறுக்கித்தனத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. வாழத் தகுதியற்றதாக மாறிவிட்ட சமூக நிலையை துலக்கமாக எடுத்துக்காட்ட பெண்கள் மீதான இந்த வன்முறைகள் போதாதா ? நிர்பயா தொடங்கி நந்தினி வரை ஒவ்வொரு சம்பவத்தின்போதும் குற்றம் சாட்டப்படுவதோ கொடுமைக்குள்ளான பெண்கள்தான். வன்முறைக்கு ஆளான பெண்ணையே ஏன் 6 மணிக்குமேல் வெளியே சென்றாய் ? ஏன் ஆண்களுடன் இயல்பாய் பேசினாய் ? ஏன் சத்தம்போட்டு சிரித்தாய் ? என்று குற்றம் சாட்டுவது அவள் மீது சமூகம் தொடுக்கும் இரண்டாவது வன்முறை !

பாலியல் வன்முறை என்பது இத்துடன் அடங்கி விடுவதில்லை. பெண்பாலாய் பிறந்தாலே பிறந்தது முதல் குடும்பத்தில் தந்தை, சகோதரன், கணவன், கடைசியாய் மகனால், அண்டி வாழ நிர்பந்திக்கப்படுகிறோம். முதலாளியால், உயர் அதிகாரிகளால், சக ஆண் ஊழியர்களால், சக மாணவனால் … என பெண்கள் வன்முறைக்கு ஆளாவது தொடர்கதையாய் உள்ளது ! தனது வாழ்க்கையையும் வாழ்க்கைத் துணையையும் கூட வயதுக்கு வந்தபெண் தானே தேர்ந்தெடுக்க குடும்பமும், சமூகமும் அனுமதிப்பதில்லை. சாதி, மதம் மாறி திருமணம் செய்யும் பெண்கள் கவுரவத்தின் பெயரில் குடும்பத்தாலேயே கொலை செய்யப்படும் வக்கிரம். பெண்ணுரிமை சமூக உரிமைபற்றி பேசும்படங்களை தடைசெய்யும் அரசு ஆணாதிக்கம் சாதி ஆதிக்கம், ஆபாசம், ஆகியவற்றை சினிமா இணையங்களில் தடை செய்ய மறுக்கிறது.

அரசின் தனியார்மயம் – தாரளமயம் – உலகமயக் கொள்கைகளால் கல்வி, மருத்துவம், குடிநீர் மின்சாரம், … அனைத்தும் காசுக்கு என்றான நிலையில் பெண்களும் வேலைக்கு செல்லவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டு விட்டது. அங்கு அற்பக்கூலிக்கு கொத்தடிமைகளாக உறிஞ்சப்பட்டு எச்சில் இலைபோல வீசப்படுகிறோம். படித்த பெண்களும் கடைகளில் கால்கடுக்க, நாள் முழுக்க நின்று வேலை செய்து, வீடு திரும்பினால் அங்கும் வீட்டுவேலை அடித்து துவைக்கிறது. சமூகத்தின் மனப்போக்கு மட்டுமல்ல… போலீசு, நீதித்துறை, சட்டமன்ற, நாடாளுமன்றங்கள், செய்தி ஊடகங்கள் என அனைத்தும் ஆணாதிக்க தன்மையுடனே இயங்குகின்றன. மொத்த கட்டமைப்புமே பெண்களுக்கு எதிராக நிற்கும்போது இந்த சமூக கட்டமைப்புக்குள்ளேயே பெண் விடுதலை சாத்தியமாகுமா?

மெரினா எழுட்சியில் தமிழகமெங்கும் இரவு பகலாக, ஆண்களுக்கு நிகராக பெண்களும் போராடினோம், ஆண்களும் பெண்களும் ஆயிரக்கணக்கில் குழுமியிருந்தும் ஒரே ஒரு பாலியல் சீண்டலுக்குக்கூட பெண்கள் ஆளாகவில்லை. அழுகிப்போன இந்த சமூகத்தை தாக்கி தகர்த்துவிட்டு புதிய சமூகத்தை கட்டியமைக்கும் மாற்று அரசியலுக்கான எழுச்சியே பெண் விடுதலையை சாதிக்கும் என்பதற்கான துலக்கமான எடுத்துக்காட்டு இது ! உலக மகளிர் தினத்தை கடைபிடிக்கும் நிலையில் அத்தகைய மாற்றுஅரசியல் கலாச்சாரத்தை முன்னெடுக்க உறுதியேற்போம் !

குருதியில் மலர்ந்த மகள் தினம்

அரங்குக்கூட்டம்
புரட்சிகர பாடல்கள் | கவிதை | நாடகம்

8.3.2017 அன்று மாலை 6.00 மணி
சுமங்கலி மஹால்
ஹோட்டல் அருண்,
இரயில் நிலையம் அருகில்,
திருச்சி.

மெரினாவும் … நெடுவாசலும் உணர்த்துவது ஒன்றுதான், உரிமைகள் வேண்டுமா ? போராடு !

தலைமை :
தோழர் நிர்மலா
தலைவர், பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி.

சிறப்புரை :
தோழர் சிவானந்தம்
திருச்சி.

தோழர் கணேசன்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு

அனைவரும் வாரீர்

பெண்கள் விடுதலை முன்னணி,
திருச்சி
9750374810

வயக்காட்ட பாத்த எவனும் சோத்துல கை வைக்க முடியாது !

0

pongal paanai psவிவசாய உழைக்கும் மக்கள், உழைப்புக்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொண்டாடி மகிழும் விழா பொங்கல். ஆனால் எலிக்குக் கூட ஒரு பிடி நெல்லு இல்லாத நிலையில் புத்தரிசி பொங்கலிட எங்கே போவான் விவசாயி? விதைத்த பயிர் பருவமடைந்து தையில் அறுவடைக்கு வந்ததின் ஆனந்தத்தின் வெளிப்பாடான பொங்கல் விழா இவ்வருடம் எழவு வீட்டு விசேசமாகி விட்டது.

அதே தஞ்சையில் மன்னார்குடியின் பெயரைக் கெடுக்கும் சசிகலா நடராசனின் கும்பல் தஞ்சையில் மூன்று நாள் விழா நடத்தி கேளிக்கை நிகழ்ச்சிகள் காட்டி, அறுசுவை ஊட்டி விவசாயிகளை இழிவுபடுத்துகிறது. இந்நிலையில் தஞ்சை விவசாயிகளை சந்தித்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை எப்படி ஏன்று கேட்டோம்.

நடராஜன்:

“பொங்கலா” விரக்தியுடன் சிரித்தார். “என்னோட ஆயிசுக்கும் பாத்ததில்ல’’. வடிகாலுக்குக் கூட நாத்தங்கால்ல தண்ணி இல்லாத நெலமை. 6 பையி வெதை நெல்லு வாங்குனே, ஆத்துல தண்ணி வருமோ வராதோன்னு பயந்து போர்வல் தண்ணிய நம்பி 3 பையில உள்ள வெத நெல்ல மட்டும் நாத்து விட்டேன். எப்படியும் மழை பெய்யும், ஆத்துல பின்னகட்டியாவது(பின்னாடி) கொஞ்சம் தண்ணி வரும் பாத்துக்கலான்னு நம்புனேன். நம்பிக்கதான் மிச்சம் நாத்து பூத்துருச்சு. பக்கத்தூர் போர்வல்காரரு நாத்த வாங்கிக்கிறதா அட்வான்ஸ்சும் கொடுத்தாரு. நாத்து அரிச்சு சேறு அலம்பக் கூட தண்ணியில்லாம அதுவும் போச்சு. வெத நெல்ல கருதா அறுக்க மனசு வராம மாட்ட விட்டு மேச்சுட்டேன்.

மொத்தமா உழுதுட்டு மார்கழி பட்டம் பயிறு உளுந்து வெதச்சுருக்கேன். ஒரு மழை பேஞ்சா ஒரு பயிறு கருகினாலும் ஒன்னு துளுத்துக்கும். ஆண்டவன் கணக்கு எப்படியோ.? இந்தப் பொழப்பெல்லாம் நம்மோட போகட்டுமுன்னு 2 லட்சருவா 3 பைசா வட்டிக்கி வாங்கி பையன வெளிநாடு அனுப்பிச்சேன். கத்தார் போயி ரோட்டுக்கு தாரு போடுற வேலைங்கிறான். நெஞ்சு வெடிச்சுரும் போலிருக்கு.”

பானுமதி:

மன்னார்குடி மாஃபியாவின் பொங்கல்!

மூணு ஏக்கர் நெலமும் தரிசா கெடக்கு. ஊருக்கே மொதல் ஆளா நடவுநட்டு அறுப்பருப்பேன். அந்த அரிசியிலதான் பொங்கல் வப்பேன். பொங்கலுக்கு முன்ன அறுவடை செய்யாதவங்களுக்கு அறுப்பு முடிஞ்சதும் தாங்கன்னு நெல்லக் கடனா குடுப்பேன். இன்னைக்கி ஒரு பிடி நெல்லு இல்ல வீட்டுல. புதுப்பாணை, புது அரிசி, புது தவுடு எல்லாம் போயி ரேசனுல அம்மா குடுத்த புளுத்தரிசி பொங்கல்தான் இந்த வருசம். என்னத்த சொல்லன்னு சங்கடப்பட்டுதான் பொங்கப் பானைய அடுப்புல வச்சேன்.

நம்ம பாடுதான் திண்டாட்டமுன்னா 2 கறவமாடு நிக்குது. அதுக்கு வைக்கோலும் மில்ல மேச்சலுக்கு புல்லும்மில்ல. ஒரு மழத்தண்ணி பேஞ்சா கொஞ்சம் பயிர் பச்ச இருக்கும். வயக்காட்டுப் பக்கம் போயி பாத்தா விரிச்சான்னு கெடக்கு. காவிரித் தண்ணியும் வந்த பாடு இல்ல.மாட்டுக்கு பாலு கூடுமின்னு ஒரு படி அரிசி கஞ்சி வப்பேன். வெளிய சொன்னா வெக்கம் இப்ப இன்னும் ஒரு படி சேத்து வைக்கிறேன்.”

மாணிக்கம்:

“பொங்கலுக்கும் விவசாயிக்கும் எந்த சம்மந்தமும் இல்லாம போச்சுங்க. முன்னெல்லாம் மார்கழி மாசமே கொண்டாட்டம் ஆரம்பிச்சுரும். கருது அறுப்புக்கு வந்துரும். எந்த பக்கம் திரும்புனாலும் களத்துமேட்டுல முட்டு முட்டா நெல்லு குவிஞ்சு கெடக்கும். வெள்ளாம சிறுசோ பெருசோ வெளச்சல் சரியில்லனாலும் வருசம் பூரா உழைச்சவனுக்கு கையில நாளு காசிருக்குற சந்தோசம் தெரியும்.

இந்த நெலம அழிய ஆரம்பிச்சு பல வருசமாச்சு. அங்க கொஞ்சம் இங்க கொஞ்சமா அழிஞ்சது போயி இந்த வருசம் மொத்தமா விவசாயி பொழப்பு தரிசா போச்சு. பொங்கலப்ப தஞ்சாவூரு மார்கெட்டு போயி பாருங்க எள்ளு போட்டா எள்ளு தெரிக்கும் அப்படி ஒரு கூட்டம். வாழத்தாரு வெட்டுன கொண்டக்கட்டையில இடரி விழாதவன் இருக்கவே முடியாது. இந்த வருசம் வாழ, மஞ்ச, கரும்பு எல்லாமே பேருக்குதான் மார்கெட்டுக்கு வந்துருக்கு. அதையும் வாங்க ஆளில்லாம நாதியத்துக் கெடக்கு.

கலைராணி:

“பொங்கலா? பொங்கல் போலவா இருக்கு. ஊருல வேண்டா வெறுப்பா செய்ய வேண்டிருக்கு. இந்நேரம் ஊரே ஜெ ஜென்னு இருக்கும். டி.என்.சி(அரசு நெல் கொள்முதல் நிலையம்) நால்ரோட்டுல நாலாப் பக்கமும் நெல்லு கீயுகட்டி நிக்கும். காஞ்சது, காயாதது நாமுந்தி நீ முந்தின்னு நெல்ல வித்துட்டு பொங்கல் தடபுடலா கொண்டாடிருக்கும் மக்க.

நம்ம கையிலதான் காசு இல்ல கருது அறுத்தவங்க கிட்ட வாங்கிக்கலான்னா அதுக்கும் வழியில்ல. ஆத்துல தண்ணி வல்ல, விவசாயி வீட்டுல அரைக்காப்படி அரிசிக்கி வழியில்ல. இதைப்பத்தி ஆள்றவங்க யாருக்கும் கவலையுமில்ல. ‘யார் வீட்டு எழவோ பாய் போட்டு உறங்குன்னு’ இருந்தா நாங்க மட்டும் அழிய மாட்டோம் எங்களோட சேத்து மத்தவங்களும் அழிஞ்சுதான் ஆகனும்”

எங்களுக்கு மூனு ஏக்கர் சொந்த நெலம் இருந்துச்சு. 10 வருசத்துல படிபடியா எழந்து இன்னைக்கி ஒரு குழி நெலம் கெடையாது. உங்கத் தேவைக்குதானே வித்தீங்கன்னு நீங்க கேக்கலாம். உண்மைதான் ஆனா விவசாயி பொழப்பு இந்த நெலமையில இருந்தா விக்காம என்ன செய்ய முடியும். மூனு வருசமா சும்மாவே இருந்துட்டு இந்த வருசம் மாமா வீட்டு நெலத்து மேல சாப்தாரி போட்டு பேங்குல லோனு எடுத்து டிராக்டெர் வாங்குனோம். ஆத்துல தண்ணி வந்தாதானே ஏரு ஓட்டி சம்பாரிக்க முடியும். பேங்குக்காரன் சும்மா விடுவானா? பைனான்ஸ் எடுத்து தவணையக் கட்டுறோம். எந்த வகையில விவசாயத்துல நொழஞ்சாலும் முன்னேற முடியலையே?

கோபால்:

pongal padayal ps“பானை பொங்குச்சா காலு வீங்குச்சான்னு சொல்லுவாங்க”. விளைச்சலோட சந்தோசம்தான் பொங்கலோட வெளிப்பாடு. வெள்ளாமை இல்லாத இந்த வருச பொங்கல் சடங்குக்கான வெளிப்பாடு.

ஆத்துல தண்ணி வராம நடவு நட்டு என்ன பண்ண முடியும். 90 நாளு பயிருக்கு 60 நாளாவது தண்ணி கெடக்கனும். அரசாங்கத்து மேல நம்பிக்க வச்சு ஆண்டவன் மேல பாரத்த போட்டு நட்டுவச்சுட்டு கடங்கரான் ஆனதுதான் மிச்சம். ரெண்டு ஏக்கர் நெலமும் தரிசா போச்சு. இப்ப மீண்டும் உழுதுட்டு மானாவாரி பயிர வெதச்சு வச்சேன். பயிரப் பாத்தா நல்லாருக்கு களையெடுத்தா ரெண்டு எள்ளு, உளுந்து வெளையும் ஆனா களபுடுங்க மண்ணக் கொத்துனா இருக்க ஈரமும் காஞ்சுப்போயி பயிரெல்லாம் சருகாப் போயிடும். இந்த நெலையில பொங்கவச்சு மண்ணாப் போனேன் போங்க.

விவசாயி வீட்டு எருக்குழி, கட்டுத்தறி, வைக்கப்போரு இதப்பாத்து பொண்ணுக் கூடுன்னு சொல்லுவாங்க. அப்புடி பெருமையோட வாழ்ந்தவன் விவசாயி. இன்னைக்கி தரிசா கெடக்குற நெலத்த பாத்தா நாண்டுகிட்டு சாகலாம் போலிருக்கு. கடைமடை வரைக்கும் பாயும் காவேரி ஆத்துத்தண்ணி ஓடுன ஊருல குடிக்கத் தண்ணியில்லாமப் போவுது. பம்புச்செட்டுல குழாய் நெறையா வந்த தண்ணி இன்னைக்கி காக்குழாய்க் கூட வரல. இருக்குறத அழிச்சுட்டு அடுத்த நாட்டுக்கிட்ட சாப்பாட்டுக்கு கையேந்தப் போறோம். அதவிட அசிங்கம் வேறதுவும் இல்ல. வெள்ளக்கார அரசாங்கமாவது வாழ வழி செஞ்சு குடுத்து நம்மள அடிமையா வச்சிருந்தான். இன்னைக்கி இருக்கவனுங்க இருக்குறத புடிங்கிகிட்டு சாகுங்கடாங்குறான்.

நா எதுவும் தப்பா பேசுறதா நெனைக்க வேண்டாங்க. அம்புட்டு கோவம் வருது. எங்கயோ யாருக்கோ அப்புடின்னு இந்த பிரச்சனைய ஒதுக்க முடியாது. கவலைப்பட வேண்டியவனே விவசாயிங்க சாவு விதி வந்து முடிஞ்சதுங்கறான். ‘கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லைங்க’. வயக்காட்டுப் பக்கம் வந்து ஒரு தரம் பாத்துட்டு போவட்டும். மனசாட்சி உள்ள எவனா இருந்தாலும் சோத்துல கைய வைக்க முடியாது.

அரசு வேளாண்மைத் துறை அலுவலர்:

“பொங்கல் கொண்டாட்டம் நமக்கு சிறப்பா இருந்துச்சு. பொதுவா பாக்கும் போது மக்கள் கடமையேன்னுதான் செய்றாங்க. காரணம் விவசாயம் பொய்யாப் போனதுதான். பொன்னா விளையிற பூமி தரிசாவும், நட்டப் பயிரு தீஞ்சும் கெடக்குறத ஒரு விவசாயியா இருந்து பாக்கும் போது ரொம்ப கொடுமையா இருக்கு.

திருவாரூர் மன்னார்குடி விவசாய நிலம்தான் அதிக பாதிப்பு அதுக்கு காரணம் ONGC நிறுவனத்தால கேஸ் எடுக்கப்பட்ட துளைகள்தான். இதனால கடல் தண்ணி தாராளமா நிலப் பகுதிக்கு வந்துருச்சு. 150 அடிக்கு மேலயே உப்புத்தண்ணி இருக்கு. இதனால போர்வல் தண்ணிய பயன்படுத்த முடியாது. ஆத்துத் தண்ணிய முழுசா நம்பிதான் அந்தப் பகுதி விவசாயம். ஆத்துல வர்ர வண்டல் மண் ஈரப்பதத்த அதிகமா தக்கவச்சு பயிருக்கு பாதுகாப்பா இருக்கும். ஆத்துல அதிகமா மணல் அள்ளப்படுவதால வண்டல் மண்ணுக்கு வழியில்ல. இப்படியே தொட்டு தொட்டுப் பிரச்சனை போயிட்டே இருக்கு.

பாதிப்புக்கு உள்ளான நிலப் பகுதிய கணக்கு எடுத்து அனுப்பனும். வறட்சியால விவசாயம் பாதித்த ஊர்கள்ல நாலு பக்கம் 4 வயல தேர்ந்தெடுத்து 4-க்கு-4 என்ற கணக்குல அறுவடை செஞ்சு எத்தனைச் சதவீத அளவு விளைச்சல் என்பதை நிர்ணயித்து அது பயிர் காப்பீட்டு திட்டத்துக்குள் இருக்கான்னு கணக்கு கொடுக்கனும். பாதிச்சது ஒரு பக்கம் இருக்க கட்சித் தலையீடு குறுக்கிட்டு போர்வெல் பலத்துல விளைஞ்ச பகுதியையும் நிவாரணத்துல சேக்க சொல்லி கொடைச்சல் குடுக்குறாங்க. பொங்கல் ஒரு பக்கம் இருக்க இதுதான் அதிகமா மண்ட காயிது.”

– சரசம்மா

கோவில்பட்டி தரை டிக்கெட் கல்லூரியில் இருக்கைகள் வந்தது எப்படி ?

0

கோவில்பட்டி அரசுக் கல்லூரி மாணவர்களின் உறுதியான போராட்டம்
– துணை நிற்கும் புரட்சிகர மாணவர் இளைஞர முன்னணி RSYF

னோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் ஒன்றுதான் கோவில்பட்டி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு அரசுக் கல்லூரி இதுதான். கோவில்பட்டி நகரப் பகுதி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏறக்குறைய 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு வந்து படிக்கின்றனர்.

 40 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 15 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
40 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 15 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கல்லூரியின் நிலைமை அவலத்துக்குரியதாக உள்ளது. மொத்தம் ஐந்து பாடப்பிரிவுகளில் இளநிலைப் படிப்பு உள்ளது. ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் 8 பேராசிரியர் வீதம் 40 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது  மொத்தமாக 15 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதன் விளைவாக பாடங்கள் முழுமையாக முடிக்கப்படுவதில்லை. நடத்தப்படாத பாடங்கள் Asignment என்ற பெயரில் மாணவர்களின் மீது சுமையாக திணிக்கப்படுகிறது. இந்த நிலைமை மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. நன்றாக படிக்கும் மாணவர்களும் ‘அரியர்’ வைக்கும் நிலைமை அதிகரித்துள்ளது. இதன் மூலம் தகுந்த மதிப்பெண் எடுக்க முடியாமல் மாணவர்களுக்கு மன அழுத்தம் உருவாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல், கல்லூரியில் மாணவர்கள் உட்கார இருக்கை வசதியும் குறைவாகவே உள்ளது. 300 மாணவர்கள் தரையில் உட்கார்ந்து படிக்கின்ற நிலைமை. முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் அனைவரும் தரையில் உட்கார்ந்துதான் படிக்கின்றனர். விளையாட்டு மைதானம் கிடையாது. விளையாட்டுக் கென்று உடற்கல்வி ஆசிரியர் கிடையாது. கலை விழாக்கள் கிடையாது. கேண்டீன் கிடையாது. இயற்பியல் செய்முறை சொல்லித் தருவதற்கும் ஆள் இல்லை. இதனால் இயற்பியல் தொடர்பான கருவிகளின் பெயர்கள் கூட மாணவர்களுக்கு தெரியாத நிலைமைதான் உள்ளது.

கல்லூரியில் வகுப்புகள் முழுமையாக நடப்பதில்லை. ஒரு நாளைக்கு 5 வகுப்புகள் (hours) நடத்தப்பட வேண்டும். ஆனால் 3 வகுப்புகள்(hours) மட்டுமே நடத்தப்படுகின்றன. அதிலும் ஒரு நாள் பேராசிரியர்கள் வேறு ஏதாவது வேலையாக சென்று விட்டால் அவர் சம்பந்தப்பட்ட துறைக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இப்படி தான்தோன்றித்தனமாகவும், எந்த வித பொறுப்பும் இல்லாமல்தான் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

முதலில் போராட்டத்தில் கலந்து கொள்ளாத மாணவர்களும், மாணவிகளும் வகுப்பில் இருந்து முழக்கத்தைக் கேட்டு போராட்டத்திற்குள் இறங்கினர்.
முதலில் போராட்டத்தில் கலந்து கொள்ளாத மாணவர்களும், மாணவிகளும் வகுப்பில் இருந்து முழக்கத்தைக் கேட்டு போராட்டத்திற்குள் இறங்கினர்.

இதற்காக ஆறு மாதத்திற்கு முன்பே கல்லூரி நிர்வாகத்திடம் மனு அளித்தனர், மாணவர்கள். அதன் பிறகு உள்ளிருப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது. இது தொடர்பாக கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ வை பேராசிரியர்கள் சந்தித்துப் பேசியபோதும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.  அவரும் அலட்சியப் போக்குடனே செயல்படுகிறார். அதிகாரிகளும் என்ன ஏதென்று கண்டு கொள்ளவில்லை.

பிப்ரவரி இறுதியில் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளிவந்தது. அதில் பெரும்பாலான மாணவர்களுக்கு அரியர் விழுந்தது.

பேராசியர்கள் சம்பள உயர்வுக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், வெளியில் இருந்து தனியார் ஆட்கள் செமஸ்டர் பேப்பர் திருத்தியுள்ளனர்.  இதனாலும் அரியர் அதிகமாக விழுந்ததாக மாணவர்கள் கூறுகின்றனர்.

இது மாணவர்களிடையே கோபத்தை உருவாக்கியது. கோபம் போராட்டமாக மாறியது. பிப்.23 2017 வியாழக்கிழமை காலை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் மாரிமுத்து தலைமையில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.

வெல்லட்டும்! வெல்லட்டும்!
மாணவர் போராட்டம் வெல்லட்டும்!
ஓங்கட்டும்! ஓங்கட்டும்!
மாணவர் ஒற்றுமை ஓங்கட்டும்!

அஞ்சு ரூபா ஒடச்ச கடல!
காலேஜில பெஞ்சு இல்ல!
பத்து ரூபா ஒடச்ச கடல!
பேராசிரியர் பத்த வில்ல!

மனு கொடுத்தோம்! மனு கொடுத்தோம்!
ஆறு மாசம் முன்னாடியே
மனு கொடுத்தோம்! மனு கொடுத்தோம்!

இப்போராட்டத்தை ஆதரித்து RSYF சார்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டது.
இப்போராட்டத்தை ஆதரித்து RSYF சார்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டது.

அதிகாரியும் வரவில்ல!
அரசியல்வாதியும் வரவில்ல!
ரெண்டு பேரும் சேந்துகிட்டு
அடிக்கிறாங்க கொள்ள கொள்ள!

அவங்க வீட்டுப் பிள்ளைங்கெல்லாம்
தனியாருல படிக்குமாம்!
சொகுசாக படிக்குமாம்!
நாங்க என்ன இளிச்சவாயார்களா?

கல்வி கொடுக்க வக்கில்ல!
வேலை கொடுக்க துப்பில்ல!
டாஸ்மாக்குல சாராயத்த
ஊத்தி மட்டும் கொடுக்கிறான்!
தூ… மானங்கெட்ட கவர்மெண்டு!

பேராசிரியர் பணியிடத்துக்கு
லட்சக் கணக்கில் லஞ்சம்! லஞ்சம்!
மாணவர்கள் தேர்வுக் கட்டணத்தை
ஏத்துறான்! ஏத்துறான்!

கொள்ளையடிக்காதே! கொள்ளையடிக்காதே!
MSU வே கொள்ளையடிக்காதே!

காணோம்! காணோம்!
MLA வ காணோம்!
காணோம்! காணோம்!
அதிகாரிய காணோம்!

வரச்சொல்! வரச்சொல்!
MLA வை வரச்சொல்!
அதிகாரிய வரச்சொல்!

ஓட்டுக் கேட்க வருவல்ல!
வேட்டு வெப்போம் வேட்டியில!

கல்வி என்பது அடிப்படை உரிமை!
நீங்க போடும் பிச்சையல்ல!
பயனில்ல! பயனில்ல!
அரசியல்வாதியும் அதிகாரியும்
நம்புவதால பயனில்ல!

ஒன்றிணைப்போம்! ஒன்றிணைப்போம்!
அனைத்துக் கல்லூரி மாணவர்களையும்
ஒன்றிணைப்போம்! ஒன்றிணைப்போம்!

கையிலெடுப்போம்! கையிலெடுப்போம்!
அதிகாரத்தைக் கையிலெடுப்போம்!

உருவாக்குவோம்! உருவாக்குவோம்!
மெரினாவை உருவாக்குவோம்!

மண்ணை இழந்தால் மரமது இல்லை!
தன்மானத்தை இழந்தவன் மனிதனே இல்லை!

இம் முழக்கங்கள் மாணவர்களின் முழக்கங்களாக மாறின. உணர்வுபூர்வமாக முழக்கமிட்டனர். முதலில் போராட்டத்தில் கலந்து கொள்ளாத மாணவர்களும், மாணவிகளும் வகுப்பில் இருந்து முழக்கத்தைக் கேட்டு போராட்டத்திற்குள் இறங்கினர்.

கிரிமினல்களோடும், சமூக விரோதிகளோடும் இரண்டறக் கலந்து நிற்கும் போலீசுக்கு உரிமைக்காக உறுதியுடன் போராடுபவர்களை எப்படிப் பிடிக்கும்?
கிரிமினல்களோடும், சமூக விரோதிகளோடும் இரண்டறக் கலந்து நிற்கும் போலீசுக்கு உரிமைக்காக உறுதியுடன் போராடுபவர்களை எப்படிப் பிடிக்கும்?

போலீசு உடனே கல்லூரிக்கு வந்துவிட்டது. பயந்து கொண்டு சிறிது நேரத்தில் மாணவர்கள் கலைந்து விடுவார்கள் என்று நினைத்தது போலீசு.  எப்படியாவது மாணவர்களை மிரட்டி கலைத்து விடலாம் என்று முயற்சி செய்து பார்த்தனர். பேராசிரியர்களிடம் சென்று பேசிப் பார்த்தனர். நமது தோழரைப் பற்றி, அமைப்பைப் பற்றி அவதூறு செய்து பார்த்தனர். எதுவும் வேலையாகவில்லை. கிரிமினல்களோடும், சமூக விரோதிகளோடும் இரண்டறக் கலந்து நிற்கும் போலீசுக்கு உரிமைக்காக உறுதியுடன் போராடுபவர்களை எப்படிப் பிடிக்கும்?

பேராசிரியர்களை கூட்டி கல்லூரிக்குள்ளேயே போலீசு கூட்டம் போட்டு பேசியது. கல்லூரி முதல்வரின் அதிகாரத்தையே கேள்விக்குள்ளாக்கியது. பேராசிரியர்களுக்கு போலீசு உத்தரவிட்டுக் கொண்டிருந்தது. இதெல்லாம் எந்த சட்டத்தில் உள்ளது? உள்ளே வைத்து க்யூ பிரிவு போலிசு ஹரி என்பவர் எல்லோரையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். உடனே மாணவர்கள் அனைவரும் போட்டோ எடுக்காதே என்று ஒரே குரலில் கூறியதால் போட்டோ எடுப்பதை நிறுத்திவிட்டார்.

கல்லூரிக்கு  அன்றே விடுமுறை அளித்து எல்லோரையும் அனுப்பியது நிர்வாகம். வகுப்புகளில் இருந்த மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியே கொண்டு விட்டது நிர்வாகம். ஆனாலும் போராட்டக் களத்தில் இருந்த மாணவர்கள் யாரும் கலைந்து செல்லவில்லை.

போராடிய மாணவர்களின் உறுதியை குலைக்க முடியவில்லை. அடுத்தடுத்த கட்டங்களில் போராட்டத்தை நகர்த்தவும் மாணவர்கள் தயாராகவே இருந்தனர். மாணவர்களின் ஒற்றுமையைக் கண்டு பதறியது நிர்வாகம். அன்றே கல்லூரியின் துணை முதல்வர்  தூத்துக்குடி மாவட்ட கலெக்டரைச் சென்று சந்தித்து பேசினார். நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார் என்பதை மாணவர்கள் மத்தியில் வந்து கூறினார்.

இரண்டு நாட்களில் தீர்வு கிடைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் போராட்டத்தைத் தொடர்வோம் என்ற எச்சரிக்கையோடு மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

இப்போராட்டத்தை ஆதரித்து புரட்சடிகர மாணவர் இளைஞர் முன்னணி – RSYF சார்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டது.

பிப்ரவரி 28 இரவு மூன்று லாரிகளில் இருக்கைகள் கல்லூரிக்கு வந்து சேர்ந்துவிட்டன. மாணவர்களின் உறுதியான போராட்டத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி!

ஒரு கோரிக்கை நிறைவேறிவிட்டது. பேராசிரியர்களை நிரப்ப வேண்டும் என்ற மற்றொரு முக்கியமான கோரிக்கைக்கு என்ன தீர்வு?

தமிழ்நாடு முழுவதும் இருக்கக் கூடிய 93 அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. அடிப்படை வசதிகள் கிடையாது. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாக நீடிக்கிறது. இதைப் பற்றி அக்கறைப்பட வேண்டிய பல்கலைக்கழக நிர்வாகமோ சொரணையற்றும், ஊழல் மலிந்தும் கிடக்கிறது. துணைவேந்தர்களோ மன்னார்குடி மாஃபியாவின் காலில் சென்று விழுகின்றனர். ஒட்டுமொத்த கல்வித்துறையே சீர்குலைந்து, நிர்வாணமாக நிற்கிறது. கல்வியோ தனியார் முதலாளிகளின் கொள்ளைக்கான களமாக மாறிவிட்டது. எந்த இடத்திலும் உரிமைகளுக்காக போராடுவதற்கு மாணவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். மாணவர்களோடு நின்று உரிமைக்காக குரல் கொடுக்க நினைக்கும் பேராசிரியர்களும் அரசின் அடக்குமுறைக்கு ஆளாகின்றனர்.

மீண்டும் மெரினாவை உருவாக்குவதைத் தவிர வேறு என்ன தீர்வு இருக்க முடியும்?

பத்திரிகை செய்திகள் :

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
கோவில்ப்பட்டி

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குற்றவாளி ஜெயா பெயர் அகற்றும் போராட்டம்

0
குற்றவாளி ஜெயாவின் பெயர் தாங்கிய கல்வெட்டில் கருப்பு மை பூசினர்
குற்றவாளி ஜெயாவின் பெயர் தாங்கிய கல்வெட்டில் கருப்பு மை பூசினர்

குற்றவாளி ஜெயலலிதாவின் சமாதியை மெரினாவிலிருந்து அகற்ற வேண்டும், அவரது பெயரை பாட நூல்கள் மற்றும் இதர அரசு அறிவிப்புகளில் இருந்து நீக்க வேண்டும் என்று “மக்கள் அதிகாரம்” அமைப்பு தமிழகமெங்கும் போராடிக் கொண்டிருக்கிறது. பல ஊர்களில் பாட நூல்களில் ஜெயா படத்தை மறைத்து திருவள்ளுவர் படம் ஒட்டும் போராட்டம் மாணவர்களால் வரவேற்கப்பட்டிருக்கிறது. சில ஊர்களில் அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயா பெயர் கருப்பு மையால் மறைக்கப்பட்டிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று (மார்ச் 2, 2017) வியாழக்கிழமை அன்று மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டமும், சாலை மறியலும் நடந்தது. கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நூறடி சாலையில் இருக்கும் புறநகர் பேருந்து நிலையத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 300-க்கும் அதிகமானோர் திரண்டு மறியலை ஆரம்பித்தனர். புறநகர் நிலையத்திற்கு இரு வாயில் இருக்கிறது. ஒரு வாயிலில் மறியல் தொடங்கியதும் சில தோழர்கள் மற்றொரு வாயிலில் இருக்கும் குற்றவாளி ஜெயாவின் பெயர் தாங்கிய கல்வெட்டில் கருப்பு மை பூசினர்.

ஆர்ப்பட்டத்தால் கோயம்பேடு ஸ்தம்பித்தது. உடன் பெரும்படையுடன் வந்த போலீசு அனைவரையும் கைது செய்து அருகாமை மண்டபம் ஒன்றில் வைத்திருக்கிறது. குற்றவாளி ஜெயாவின் பெயரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக மக்களிடத்தில் இந்தப் போராட்டம் போர்க்குணமிக்க முறையில் கொண்டு சென்றிருக்கிறது. தொலைக்காட்சிகள் பல இந்தப் போராட்டத்தை நேரலையில் காண்பித்தன. மக்கள் அதிகாரம் சார்பில் ஊடகங்களுக்கு நேர்காணலும் வழங்கப்பட்டது.

 

தகவல்
மக்கள் அதிகாரம்
சென்னை

எதிர்த்து நில் ! புதிய கலாச்சாரம் மார்ச் 2017

0

யிரக்கணக்கான பிரச்சினைகளால் வதைபடும் உலகமிது. சுதந்திரத்தையும் உற்சாகத்தையும் பறிகொடுத்து, ஆயுள்தண்டனைக் கைதி போல நைந்து மடியும் வாழ்க்கை. சகிக்கவே முடியாத நிலையில் தற்கொலை.

இது மட்டும்தான் எதார்த்தமா? இல்லை.

மெரினாவில் மின்மினிப் பூச்சிகளாய் எழுந்த ஒளிமழையுடன் அலை அலையாய் எழுந்த முழக்கங்கள் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் ருமேனியாவின் புச்சாரெஸ்ட்டிலும் எதிரொலிக்கின்றன. ஆளும் வர்க்கங்களை அச்சுறுத்துகின்றன.

கொலைகார ராணா பிளாசா முதலாளிக்கு எதிராக அடக்குமுறைக்கு அஞ்சாமல் போராடுகிறார்கள் வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளிகள். பெங்களூரிலோ ஆயத்த ஆடைத் தொழிலாளிகளின் போராட்டத்தால் தொழிலகங்கள் நொறுங்கின, போலீசு நிலையம் எரிந்தது, மோடி அரசு பணிந்தது.

மோடியின் குஜராத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செத்த மாடுகளை வீசி, உன்னுடைய கோமாதாவை நீயே புதைத்துக்கொள் என்றனர் தலித் மக்கள். இது உனாவில் வெறியாட்டம் போட்ட பார்ப்பனியம் வாங்கிய பதிலடி.

மல்லையாவிடம் அபராதம் வசூல் செய்யத் துப்பில்லாத அரசுக்கு என்னி டம் அபராதம் வசூலிக்க என்ன அருகதை இருக்கிறது என்று ரயில்வே நிர்வாகத்திடம் கலகம் செய்து சிறை சென்றார் பிரேமலதா பன்சாலி எனும் மும்பைப் பெண். மக்கள் வறுமையில் வாடுகையில், உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்காக பல கோடிகளை வாரியிரைத்த அரசுக்கு எதிராக 2014-ஆம் ஆண்டில் பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் பிரம்மாண்டமான மக்கள் போராட்டங்கள் எழுந்தன.

2011-இல் நடந்த இலண்டன் கலகம் இன்றளவும் உலக முதலாளி வர்க்கம் மறக்க விரும்பும் கெட்ட கனவு. ஐந்து ஆண்டுகளில் 7,000-ம் பேர் தற்கொலை செய்து கொண்ட கிரீசில், எங்களுடன் இணைந்து போராடுங்கள் என்று அழைக்கிறார் ஒரு தொழிலாளி. பட்டினி கிடப்போரே பணக்காரனைத் தின்று பசியாறுங்கள், என்ற முழக்கம் வால்ஸ்ட்ரீட்டில் மட்டு மல்ல உலகமெங்கும் எதிரொலிக்கிறது.

சுரண்டலையும் ஆதிக்கத்தையும் சகித்துக் கொள்வது ஒரு நோய். சகித்துக் கொள்வதன் விளைவும் நோய்தான். எதிர்த்து நிற்பதுதான் ஆரோக்கியம். மகிழ்ச்சி என்றால் என்ன என்ற கேள்விக்கு போராட்டம் என்ற ஒரே சொல்லில் பதிலளித்தார் கார்ல் மார்க்ஸ்.

ஆம். உலகெங்கும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நாம்?

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

  • மகழ்ச்சி என்பது போராட்டமே: மெரினா முதல் புச்சாரெஸ்ட் வரை !
  • வெஞ்சினத்தோடு வங்கதேச தொழிலாளர் போராட்டம் !
  • கிரீஸ் : பிச்சை எடுப்பதை விட போராடுவதையே விரும்புவேன் !
  • இலண்டன்: ‘தற்குறிகளின்’ கலகமும் கனவான்களின் கலக்கமும் !
  • பிரேசில் கால்பந்து அணியை தோற்கடிக்கும் பிரேசில் மக்கள் !
  • பா.ஜ.க அரசைப் பணிய வைத்த இராஜஸ்தான் பள்ளி மாணவிகள் !
  • அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிய போராட்டங்கள் !
  • குஜராத் : நாறுகிறது உன் கோமாதா !
  • துனிசியா: சர்வாதிகார ஆட்சியை வீழ்த்திய உழைக்கும் மக்களின் பேரெழுச்சி !
  • இது மக்களின் போர் ! போலீசு சித்திரவதையில் தோழர்கள் !
  • நெடுவாசல் விவசாயிகளின் போராட்டம் வெல்லும் !
  • முதலாளித்துவத்தின் கருவறையில் அமெரிக்க மக்கள் முற்றுகை !
  • வால் ஸ்ட்ரீட் முற்றுகை: முன்னேற்றத்தின் முதல் தேவை புரட்சிகரக் கட்சி !
  • வண்ணப் புரட்சிகள்: “மேட் இன் அமெரிக்கா !”

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
 

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________