Wednesday, June 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 593

மலியானா படுகொலை வழக்கு : முசுலீம்களோடு நீதியையும் கொல்கிறார்கள்

0

த்திரப்பிரதேசத்தின் ஹாசிம்புரா மற்றும் மலியானா கிராமங்களில் 1987 மே 18 முதல் 23 வரை இந்துவெறியர்களும் அரசும், போலீசும், பிரதேச ஆயுதப் படை(PAC) எனும் துணை ராணுவப்படையும் கைகோர்த்துக் கொண்டு முஸ்லிம்கள் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனமான நரவேட்டையானது, நாட்டையும் மக்களையும் உலுக்கிய ஒரு கொடூர நிகழ்வாகும். 1987 மே 23-ம்தேதியன்று மலியானா கிராமத்தில் 73 முஸ்லிம்கள் பிரதேச ஆயுதப்படையினராலும், இந்துவெறி பாசிச பயங்கரவாதிகளாலும் சுட்டுக் கொல்லப்பட்டும் தீயிட்டு எரிக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் 28 ஆண்டுகளுக்குப் பின்னரும் குற்றவாளிகளைத் தண்டிக்கக்கூட இந்திய அரசும் நீதித்துறையும் முன்வரவில்லை.

08-maliana-survivorsஉ.பி.யின் மீரட் மாவட்டத்திலுள்ள ஹாசிம்புராவில் 42 அப்பாவி இசுலாமியரைப் பச்சைப் படுகொலை செய்த பிரதேச ஆயுதப் படையினர், மீரட்டின் அருகிலுள்ள மலியானா கிராமத்தைச் சுற்றிவளைத்தனர். குடியிருப்புகளை விட்டு எவரும் வெளியேறிச் செல்ல முடியாதபடி இந்துவெறி குண்டர்கள் தடுப்பரணாக நின்றனர். அன்று தொழுகை முடிந்து வெளியே வந்த இசுலாமியரைக் குறிவைத்த ஆயுதப் படையினர், கண்ணிமைக்கும் நேரத்தில் 20-க்கும் மேற்பட்டோரைச் சுட்டுக் கொன்றனர். பீதியில் மிரண்டு சிதறி ஓடியவர்களைத் துரத்திச் சுட்டுக்கொண்டே சென்றது ஆயுதப்படை. மொட்டை மாடிகளில் இருந்து பறந்து வந்த தோட்டாக்கள் தப்பியோடியவர்களைக் குறிவைத்துத் தாக்க, அவர்கள் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மாண்டு போயினர். அதைத் தொடர்ந்து இந்துவெறி குண்டர்கள் வீடுகளின் மீது மண்ணெண்ணையை ஊற்றி ஒளிந்திருந்த மக்களை உயிருடன் எரித்துக் கொன்றனர். அவர்களது கையில் அகப்பட்டவர்கள் அரிவாளால் வெட்டப்பட்டு எரியும் நெருப்பில் தூக்கிவீசப்பட்டனர்.

இப்படுகொலையை மறைக்க, கொல்லப்பட்டவர்கள் அனைவரும் மூட்டைகளாகக் கட்டப்பட்டு காசியாபாத்தின் மேல்கங்கையாற்றிலும், ஹிண்டான் நதியிலும் வீசப்பட்டனர். இருப்பினும், கொல்லப்பட்டோரின் பிணங்கள் சாட்சியங்களாக அடுத்த இரண்டு நாட்களில் ஆறுகளில் மிதக்கத் தொடங்கின. இறந்து போனவர்கள் 73 பேர் என அன்றைய உ.பி. அரசு தெரிவித்தாலும், நூற்றுக்கும் மேற்பட்ட பிணங்களைப் பார்த்ததாக மீனவர்களும் கிராம மக்களும் உறுதிப்படுத்தினர்.

“எங்கள் கிராமத்தைச் சுற்றிலும் இந்துக்கள் நிறைந்த கிராமங்கள் உள்ளன. அவர்கள் கிராமத்தின் ஐந்து நுழைவுப் பாதைகளிலிருந்தும் தாக்கினர். இதனால் நாங்கள் எந்தத் திசையிலும் தப்பியோட முடியாதபடி சிக்கிக் கொண்டோம். அவர்கள் எனது கால்களையும் கைகளையும் அடித்து உடைத்து விட்டனர். அவர்கள் எனது பெற்றோரை கட்டிலில் கட்டிப்போட்டு உயிரோடு எரித்துக் கொன்றதை நான் பார்த்தேன்” என்று மிரட்சியுடன் கூறும் முகம்மது நவாப், “பிரதேச ஆயுதப் படையையோ, போலீசையோ குற்றம் சாட்டினால் இந்தப் படுகொலை பற்றி விசாரணையோ, நீதியோ கிடைக்காது என்று ஆட்சியாளர்கள் எங்களை எச்சரித்தார்கள். படுகொலைகளுக்குப் பிறகு போலீசார் தயாரித்த முதல் தகவல் அறிக்கையில் இப்படுகொலையை முன்னின்று நடத்திய ஆயுதப் படையினரின் பெயர் திட்டமிட்டு மறைக்கப்பட்டது. 95 இந்துமத வெறியர்கள் குற்றவாளிகளாகவும், கலவரத்தை நேரில் பார்த்த 75 இசுலாமியர்கள் சாட்சியங்களாகவும் சேர்க்கப்பட்டு போலீசாரால் தயாரிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் நாங்கள் கையெழுத்திடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டோம்” என்கிறார்.

இப்படுகொலைகளைக் கண்டித்து பொதுக்கருத்தும் பொதுமக்கள் நிர்ப்பந்தமும் வலுத்ததால், அன்றைய உ.பி. முதல்வர் வீர்பகதூர் சிங், ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.எல்.சிறீவத்சவா தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார். அக்குழு மீரட் நகரத்தில் தனது விசாரணையைத் துவக்கிய சமயத்தில், இப்படுகொலையின் மிக முக்கிய சாட்சியான ரிக்சா தொழிலாளி மாஷால்லா மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், போலீசாரால் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டு சிறைக் கொட்டடியில் கொலை செய்யப்பட்டார். சிறீவத்சவா குழுவின் விசாரணையின்போது அவர் உயிரோடிருந்தால், பிரதேச ஆயுதப் படையினரின் கொலைவெறியாட்டம் அம்பலமாகியிருக்கும் என்கிறது “சனநாயக உரிமைக்கான மக்கள் அமைப்பு” வெளியிட்டுள்ள அறிக்கை. சிறீவத்சவா குழு தனது அறிக்கையை 1989-லேயே சமர்ப்பித்த போதிலும், அது இன்றுவரை வெளியிடப்படாமல் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகிறது.

08-maliana-cow1987 முதல் இன்றுவரை, ஒப்பிற்கு கூட அரசு தரப்பில் வழக்குரைஞர் நியமிக்கப்படாததால், இவ்விசாரணை ஓரடிகூட முன்னே நகரவில்லை. வழக்கு விசாரணை 2010-ல் மீரட் நகர நீதிமன்றத்திற்கு வந்தபொழுது, முதல் தகவலறிக்கை காணாமல் போய்விட்டதாக போலீசார் தெரிவித்தனர். முதல் தகவலறிக்கை இல்லாததைச் சாக்காக வைத்து இவ்வழக்கை மேற்கொண்டு விசாரிக்க மறுத்தது மீரட் அமர்வு நீதிமன்றம். முதல் தகவலறிக்கையில் ஆயுதப் படையினர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படாமல் தப்புவிக்கப்பட்டதைப் போலவே, இப்போது முதல் தகவல் அறிக்கையையே காணவில்லை என்று கூறி, அதில் குற்றம் சாட்டப்பட்ட இந்துவெறி குண்டர்கள் தப்புவிக்கப்பட்டுள்ளனர்.

08-maliana-captionமுதல் தகவல் அறிக்கை இல்லாததைக் காரணம் காட்டியே விசாரணை முடக்கப்பட்டு வந்த சமயத்தில், இவ்வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. முதல் தகவலறிக்கைக்குப் பதிலாக, தனிநபர்களின் சாட்சியங்களை அடிப்படையாக வைத்து வழக்கை விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், ஆண்டுக்கு ஒரு சாட்சியம் என இரண்டாண்டுகளில் மொத்தம் இரண்டு பேரின் சாட்சியங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 75 பேரின் வாக்குமூலத்தைப் பதிவு இன்னும் எத்துணை ஆண்டுகளாகுமோ, தெரியவில்லை. கால்நூற்றாண்டிற்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற இவ்வழக்கில், இதுவரை 800 நாட்கள் விசாரணைக்காக அறிவிக்கப்பட்டு மொத்தத்தில் மூன்று பேரின் வாக்குமூலங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன.

இக்கொலைவெறியாட்டத்தில் தனது குடும்பத்தில் மூவரைப் பறிகொடுத்துள்ள முகம்மது யாகூப், “இன்றைய ஒட்டுமொத்த அரசியல் அமைப்பே கூட்டு சேர்ந்து கொண்டு எங்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை நீர்த்துப்போகவும், மறுக்கவும், தாமதிக்கவும் செய்கின்றன; அதுவும் நாங்கள் முசுலீம்கள் என்பதால் அவை திட்டமிட்டு நடத்தப்படுகின்றன” என்று குமுறுகிறார். அலாவுதீன் சித்திக் என்கிற அப்பகுதி வழக்குரைஞர், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் சார்பாக வழக்கை இன்றுவரை நடத்தி வருகிறார். “தேவையற்ற காரணங்களால் ஏற்படுகிற தாமதமே நீதியைச் சாகடிக்க வாய்ப்பாக அமைந்து விடுகிறது. இப்படுகொலை நடந்தபொழுது நேரில் கண்ட சாட்சியங்கள், இறந்தவர்களின் உறவினர்கள் – என சுமார் 25 முதல் 30 பேர் முக்கிய சாட்சிகளாக இருந்தபோதிலும், விசாரணை முடங்கிக் கிடக்கிறது. அரசு தரப்பிலும் ஒரு வக்கீல் கூட நியமிக்கப்படவில்லை” என விரக்தியுடன் கூறுகிறார்.

உ.பி. ஆட்சியாளர்களால் ஒரு புனிதப் பசுவாகப் பராமரிக்கப்படும் பிரதேச ஆயுதப் படை (PAC) என்ற துணை ராணுவப் படையானது, இந்துவெறியும் சாதிவெறியும் ஆணாதிக்க வெறியும் கொண்ட ஒரு சட்டபூர்வ வன்முறைக் கும்பலாகவே இன்னமும் நீடித்து வருகிறது. கைப்புண்ணிற்குக் கண்ணாடி தேவையற்றதைப் போல, பிரதேச ஆயுதப் படையினராலும் இந்துவெறி குண்டர்களாலும் நடத்தப்பட்ட இப்பச்சைப்படுகொலையில் ஒட்டுமொத்த விசாரணையும் திட்டமிட்டு ஒழிக்கப்பட்டு கொலைகாரர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். ஹாசிம்புரா வழக்கிலாவது “நீதி”விசாரணை நடத்தப்படுவதைப் போன்ற பாவனைகள் இருந்தன. ஆனால் மலியானா வழக்கு விசாரணையில், அந்த குறைந்தபட்ச பாவனைகூட இல்லாமல் கொலைகார ஆயுதப்படையினரும், காவிக் கிரிமினல்களும் தப்புவிக்கப்பட்டு, இந்தியாவில் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களல்ல என்பதை ஆட்சியாளர்கள் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

– அன்பு
____________________________
புதிய ஜனநாயகம், மே 2015
____________________________

அம்மா குடிநீர், உணவகம், உப்பு…. அம்மா தீர்ப்பு – கேலிச்சித்திரங்கள்

2
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா விடுதலை கார்ட்டூன்
படம் : ஓவியர் முகிலன்

 

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா விடுதலை கார்ட்டூன்
படம் : ஓவியர் முகிலன்
கைப்புள்ள நீதித்துறை
படம் : ஓவியர் முகிலன்

 

jaya-acquittal-rsyf-poster

ஜெயா விடுதலை எதிர்ப்பு சுவரொட்டி – போலீஸ் வழக்கு

1

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
கன்னியாகுமரி மாவட்ட கிளை

169, தாம்ஸன் தெரு, அரண்மனை சாலை,
நாகர்கோவில் – 629 001

க. சிவராஜபூபதி, செயலாளர், 94866 43116

பத்திரிகை செய்தி

  • ஜெயா விடுதலை ! பார்ப்பனீயத்திற்கும் பணத்திற்கும் சோரம் போன நீதித் துறை!
  • பொதுமக்களே! நீதிமன்றங்களை நம்பாதீர்! ஊழல்வாதிகளை அச்சுறுத்தும் மக்கள் போராட்டமே தீர்வு!

என்ற முழக்கங்களோடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக குமரி மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் எமது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

ஜெயலலிதா விடுதலை தொடர்பாக அவமதிப்பு வாசகங்கள் இந்த சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டு நாகர்கோவில் கோட்டாறு மற்றும் வடசேரி காவல் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் புகார் கொடுத்துள்ளனர்.

கோட்டாறு மற்றும் வடசேரி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் எமது அமைப்பின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2014 செப்டம்பர் 27-ம் தேதியன்று கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்த போது தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் செய்த ரவுடித்தனங்கள் நாடறிந்த விசயம். அப்போது நீதிபதி குன்ஹாவை கன்னட வெறியனென்றும், பணத்திற்கு சோரம் போனவன் என்றும் ஆபாச வார்த்தைகளாலும், ஒருமையிலும் திட்டி தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. குமரி மாவட்டத்திலும் இதே போல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

உதாரணத்திற்கு சில வரிகள் அவற்றிலிருந்து,

  • பொறுமை காக்க வேண்டிய எருமை நீதிபதியே!
  • சட்டதிட்டத்தை சரியாக படிக்கத் தெரியாத சனியனே!
  • தமிழ் நாட்டு மக்கள் கண்களை கடலாக மாற்றிய கருமாந்திர நீதிபதியே!
  • அம்மாவுக்கு தவறான தீர்ப்பு கூறிய திருட்டு முண்டமே!
  • கன்னட வெறியனே!
  • காங்கிரசு பாஜக வின் கைக்கூலியே1நீதித்துறையின் களங்கமே!
  • கேடுகெட்ட இழி பிறவியே!

-மேற்குறிப்பிட்ட வாசகங்களை நீதிமன்றத்தை மற்றும் நீதிபதியின் மாண்பை போற்றிப் புகழ்ந்து கூறப்பட்ட வாசகங்களாக அ.தி.மு.க.வினருக்கு தெரிகின்றதோ என்னவோ?

எந்த ஒரு தனி மனிதனுக்கோ ஒரு அமைப்புக்கோ, ஒரு குறிப்பிட்ட விசயம் குறித்தோ ஒரு நீதிமன்ற தீர்ப்பு குறித்தோ வெளிப்படையாக விமர்சனம் செய்ய அரசியல் அமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது.

அ.தி.மு.க.வினர் நீதிபதியை “பன்றி”, “எருமை” என்று திட்டுவதற்கே ‘உரிமை’ வழங்கியுள்ள அரசியல் அமைப்புச் சட்டம், “பார்ப்பனீயத்திற்கும், பணத்துக்கும் விலை போனது நீதிமன்றம்” என்று விமர்சிக்கவும் உரிமை வழங்கியுள்ளது.

அ.தி.மு.க போஸ்டர்
நீதிபதி குன்ஹாவை கன்னட வெறியனென்றும், பணத்திற்கு சோரம் போனவன் என்றும் ஆபாச வார்த்தைகளாலும், ஒருமையிலும் திட்டி தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டிய அ.தி.மு.க.-வினர் நீதித்துறை சார்பாக வரிந்து கட்டிக் கொண்டு ஒட்டிய சுவரொட்டி.

இரண்டு மணி நேரத்தில் நடிகர் சல்மான் கானுக்கு பிணை, மூன்று மாதங்களில் ஜெயலலிதாவின் மேல்முறையீடு விசாரித்து முடிக்கப்பட வேண்டுமென்ற உத்தரவுகள், “பவானி சிங் ஜெயா தரப்புக்கு ஆதரவாக செயல்படுகிறார் அவரது நியமனம் செல்லாது” எனக் கூறிய பிறகும் அரசு தரப்பில் புதிதாக வழக்கறிஞர் ஆஜராகி வாதிட அனுமதி மறுத்து உத்தரவிட்ட உச்சநீதி மன்றம் என நீதித்துறையின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலமாகி வருகின்றன.

  • “கடந்த மாதம் ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தனபாலனின் சட்டப்படிப்பு செல்லாது”
  • “நீதிபதி மணிக்குமார் தனக்குக் கீழ் பணிபுரிந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்”
  • “சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தன்னை சாதிரீதியாக நடத்துகிறார்” என்று SC/ST ஆணையத்தில் புகார்.

மேற்கூறிய புகார்களைக் கூறியுள்ளது வேறு யாருமல்ல, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன்.

நீதிபதி கர்ணனின் புகார் கடிதம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மேலும், “உச்சநீதி மன்றத்தில் ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கியதில் பல கோடி ரூபாய் கைமாறியுள்ளது” என்று டிராபிக் ராமசாமி உச்சநீதி மன்றத்தில் புகார் மனு கொடுத்தது இன்று வரை நிலுவையில் உள்ளது. இதற்கு உச்சநீதி மன்றம் மௌனம் காக்கிறது.

[supreme-courtபடங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இதுவரை இந்தியாவின் தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல் பேர்வழிகள் என்று முன்னாள் சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்திபூஷண் உச்சநீதி மன்றத்திலேயே பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதிலும் உச்சநீதி மன்றம் இன்று வரை மௌனம் காக்கிறது. அது மட்டுமல்ல, மக்களுக்கு பதில் சொல்ல மறுக்கிறது. சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டிய நீதித்துறை  அமித்ஷா விடுதலைக்குப் பிறகு சதாசிவத்திற்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டதன் மூலம் ஏழை, தாழ்த்தப்பட்ட, இசுலாமிய மக்களுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இவ்வாறு எவ்விதத்திலும் மாண்புடனும், வெளிப்படையாகவும் இல்லாமல் அநீதியாக தீர்ப்புகளை வழங்கிவரும் நீதிபதிகளை தண்டிக்கும் அதிகாரம் சட்டத்திற்கு இல்லை. நாடாளுமன்றத்தில் 3/2 பங்கு பெரும்பான்மையுடன் பதவிநீக்க மட்டுமே முடியும். இதுவரை எத்தனை நீதிபதிகள் இவ்வாறு பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்? ஊழல் மற்றும் குற்றக் கறைபடிந்த அரசியல்வாதிகளால் ஆளப்படும் இந்நாட்டில் நீதிபதிகள் பதவிநீக்கம் சாத்தியமா?

மக்கள் போராட்டம் நடத்தி மட்டுமே தங்களுக்கான நீதியைப் பெற முடியும்.

சல்மான் கான் வழக்கு நிலுவையில் உள்ளபோது, தீர்ப்பு விரைவில் கூறப்படும் என்று தெரிந்தும் சல்மான்கானை வைத்து ரூ 200 கோடி முதலீடு செய்துள்ளனர், வட இந்திய திரைத்துறையினர். சல்மான்கானை சிறை செல்ல விடாமல் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையில்லாமல் இது சாத்தியமா? இந்த நம்பிக்கையை திரைத்துறை சார்ந்த முதலாளிகளுக்கு கொடுத்தது யார்? முதலாளிகள் தாங்கள் கொண்ட நம்பிக்கையை நிறைவேற்றியது நீதிமன்றம் தானே!

ஊழல் வழக்கில் சிறை சென்ற பீகாரின் முன்னாள் முதல்வர் லல்லுவுக்கு 8 மாதங்கள் கழித்து பிணை வழங்கியது உச்சநீதி மன்றம். மேலும், ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் முதல்வர் சௌதாலா உடல்நிலை சரியில்லை என்று பிணையில் வெளிவந்து தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்று விட்டார் என்பதற்காக பிணையை ரத்து செய்து கடுமையாக நடந்து கொள்கிறது உயர் நீதிமன்றம். ஊழல் வழக்கில் கடுமையாக நடந்துகொள்ள வேண்டுமென்று கூறியுள்ளன நீதிமன்றங்கள்.

ஆனால், ஜெயலலிதாவுக்கு 26 நாட்களில் தாங்கள் கூறியுள்ள தீர்ப்புகளுக்கு முரணாக பிணை வழங்கியும், வெளிப்படையாக கூச்சமின்றி அவருக்கு ஆதரவாக பல்வேறு வழிகளில் நடந்து கொண்டுள்ளது. இதற்கு காரணம் ஜெயலலிதா பார்ப்பன சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் மட்டுமே அன்று வேறு என்ன இருக்க முடியும்? அவர், “தான் ஒரு பாப்பாத்தி” என்று சட்டசபையிலேயே அறிவித்தார். பார்ப்பனீய மனுதர்மத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டது என்பதற்காக எமது அமைப்பின் சார்பாக தமிழ் நாட்டில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வழக்கறிஞர்களிடம் கையெழுத்து வாங்கி குடியரசுத் தலைவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

கைப்புள்ள நீதித்துறை
படம் : ஓவியர் முகிலன்

மக்கள் போராட்டத்தின் விளைவாக மூடப்பட்ட சூரியூர் பெப்சி ஆலையை நீதிமன்றம் திறக்க உத்தரவிட்டுள்ளது என்றால் நீதிமன்றம் யார் பக்கம் உள்ளது?

நீதிமன்றங்களை நம்பாமல், நீதிமன்றம் செல்லாமல் தொடர்ச்சியாக விடாப்பிடியாக உறுதியுடன் போராடியதன் விளைவாக கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் கார்மாங்குடி பகுதியில் வெள்ளாற்றில் உள்ள பொதுப்பணித் துறை மணல் குவாரியை வேறுவழியில்லாமல் அரசு மூடியுள்ளது. மக்கள் சொந்த அனுபவத்தின் மூலம் நீதிமன்றங்களை நம்பத் தயாராக இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

ஜெயலலிதா மேல்முறையீட்டுத் தீர்ப்பில் கூட்டுத்தொகையை முறைகேடாக குறைத்து குறிப்பிட்டதால் மட்டுமே இந்த விடுதலை வழங்கப்பட்டுள்ளது என்பது நாடறிந்த விசயம் மட்டுமல்ல. தமிழ் நாட்டின் கடைகோடி மக்களும் காறி உமிழ்கிறார்கள் இந்த தீர்ப்பை, தீர்ப்பை மட்டுமல் நீதிமன்றங்களையும் தான்.

மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தில் தெரிந்து கொண்ட ஒன்றையே நாங்கள் சுவரொட்டி மூலம் வெளிப்படுத்தியுள்ளோம்.

மக்கள் தங்கள் சொந்த பிரச்சனைகளுக்கு அன்றாடம் கொடுக்கும் மனுக்கள் மீது, மனு ரசீது கூட கொடுக்க மறுக்கும் காவல்துறை, குன்ஹாவை பன்றி, எருமை, கருமாந்திரம் என்று அதிமுகவினர் சுவரொட்டி அடித்து ரவுடித்தனம் செய்தபோதும் வழக்குப்பதிவு செய்யாத காவல்துறை இப்போது விரைந்து எங்கள் அமைப்பின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. காவல்துறை ஆளும் வர்க்கத்துக்கும், பணக்கார வர்க்கத்துக்கும் சேவை செய்வதும், சாதாரண பொதுமக்களுக்கு எதிராகவே இருக்கும் என்பதும் நிரூபணமாகி வருகிறது.

ஜனநாயகத்திற்கு எதிராக நடந்து கொள்ளும் ஊழல், அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக நடந்துகொள்ளும் காவல்துறையை பொதுமக்களும், ஜனநாயக இயக்கங்களும் கண்டிக்கவும்,புறக்கணிக்கவும் வேண்டுமென்று இந்த பத்திரிகை செய்தி மூலம் கோரிக்கை வைக்கின்றோம்.

இப்படிக்கு

க. சிவராஜ பூபதி
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
கன்னியாகுமரி மாவட்டக் கிளை

இது தொடர்பான செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பகத்சிங் – சோசலிசப் புரட்சியாளனா தீவிர தேசியவாதியா ?

2

“பகத்சிங், ஏகாதிபத்திய எதிர்ப்பு சோசலிசப் புரட்சியாளனே தவிர, தீவிர தேசியவாதி அல்ல!”

கத்சிங்கின் 84-வது நினைவு தினத்தையொட்டி சென்னை ஐ. ஐ. டி. மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரைநிகழ்த்திய பேராசிரியர் சமன்லால் அவர்களிடம் எடுக்கப்பட்ட நேர்காணலைச் சுருக்கித் தருகிறோம். பேராசிரியர் சமன் லால் ஐவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்திய மொழியியல் துறையில் 31 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்திய விடுதலை வரலாற்றில் புரட்சியாளர்களின் பங்கு திட்டமிட்டு மறைக்கப்படுவதற்கு எதிராக, புரட்சியாளர்களின் வரலாற்றை வெளிக்கொண்டுவருவதில் முக்கியப் பங்காற்றியவர். பகத்சிங்கை பற்றி 10- க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது சமீபத்திய நூலாக “பகத்சிங்கைப் புரிந்துகொள்வது” வெளிவந்திருக்கிறது. பகத்சிங் குறித்த விழிப்புணர்வு பேருரைகள் நிகழ்த்துவது, முன்னணி நாளேடுகளில் கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதுவது என்று முனைப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

மறுகாலனியாக்கச் சுரண்டலும் அடிமைத்தனமும், சாதிவெறி, பார்ப்பன இந்து மதவெறி உள்ளிட்ட எல்லா வகையான பிற்போக்குத்தனங்களும் தலைவிரித்தாடும் இன்றைய சூழலில் பகத்சிங்கின் அரசியல் கண்ணோட்டத்தை விளக்குகிறார் சமன் லால்.

ஏன் பகத்சிங்கை தங்களது ஆய்விற்கு தேர்ந்தெடுத்தீர்கள்? குறிப்பிட்ட காரணங்கள் ஏதேனும் உள்ளதா?

பேராசிரியர் சமன் லால்
பகத் சிங் குறித்து பத்துக்கும் மேற்பட்ட ஆய்வுநூல்களை எழுதி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பகத் சிங்கின் புரட்சிகர பாத்திரத்தை நிறுவிய பேராசிரியர் சமன் லால்.

எனக்கு இருபது வயதாக இருக்கும் பொழுது மன்மதநாத் குப்தாவின் They Lived Dangerously – Reminiscences of a Revolutionary என்ற நூலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மன்மதநாத் குப்தா இந்தியப் புரட்சியாளர்களுடன் விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்தவருள் முக்கியமானவர். 1925 ககோரி சம்பவத்தில் பங்கெடுத்த பொழுது அவர் சிறுவனாக இருந்தார். இச்சம்பவத்திற்குப் பின்னர் புரட்சிகர முன்னணியாளர்களான அஷ்பகுல்லா கான், ராம்பிரசாத் பிஸ்மில், ரோசன் சிங், ராஜேந்திர லஹிரி போன்றோர் தூக்கிலிடப்பட்டனர். மன்மதநாத்திற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் மன்மதநாத் குப்தா இந்தியா புரட்சியாளர்களின் வரலாற்றை மிகச்சிறப்பாக எழுதினார். நான் 1960-70-களில் ஹிந்தி பாக்கெட் புக் கிளப்பின் உறுப்பினராக இருந்த பொழுது, மன்மதநாத் குப்தாவின் “பாரத் கி கிராந்திகாரி”யை வாசிக்க நேர்ந்தது. இப்புத்தகத்தில் இருந்து பல்வேறு புரட்சியாளர்களின் வரலாற்றை எனது தாந்மொழியான பஞ்சாபியில் மொழிபெயர்த்தேன். எனது மொழிபெயர்ப்பு பஞ்சாபின் பல்வேறு இதழ்களில் வெளிவந்தன. குறிப்பாக, கத்தர் பார்ட்டியின் ஜலந்தர் பகுதி இதழான “தேஷ்பகத் யாதான்” இல் வெளிவந்தது.

தேஷ்பகத் யாதானில் ஆரம்பகால மொழிபெயர்ப்புகளுடன் தான் பகத்சிங்கைப் பற்றிய எனது பணி தொடங்கியது. (குறிப்பு; தேஷ்பகத் யாதானின் ஆரம்பகால வெளியீடுகளை துரதிருஷ்டவசமாக தான் தொலைத்துவிட்டதாகவும், ஜலந்தர் பகுதியிலேயே இதன் வெளியீடுகளை திரும்பப் பெறமுடியவில்லையெனவும் பேராசிரியர் குறிப்பிட்டார். 1970-களில் தேஷ்பகத் யாதான் நக்சல் எழுச்சியோடு தொடர்பு கொண்டிருந்ததன் காரணமாக ஆளும் வர்க்கம் இவ்விதழைத் தடைசெய்திருந்தது இதற்கான காரணங்களுள் ஒன்றாகும்).

பகத்சிங்கை அக்காலத்தில் உள்ளவர்கள் பார்க்கிற பார்வைக்கும் தற்பொழுதைய தலைமுறைகள் பார்க்கிற பார்வைக்கும் மாறுபாடுகள் உள்ளதா?

அன்றைய ஆளும் கட்சியான காங்கிரசின் பார்வை பகத்சிங் ஒரு தேசியவாதி; அதிலும் தீவிர தேசியவாதி என்பதாக இருந்தது. பகத்சிங்கின் புரட்சிகர சிந்தனைகளோ, மதங்களைப் பற்றிய நிலைப்பாடுகளோ ஒருபோதும் வெளியில் கொண்டுவரப்படவில்லை. குறிப்பாக, பள்ளிப்பாட புத்தகங்களிலும் பொதுவெளியிலும் பகத்சிங் ஒரு பிம்பமாக மட்டுமே முன்னிறுத்தப்பட்டார். இதன் காரணமாக பொதுமக்கள், பகத்சிங் ஒரு இலட்சியவாதி என்ற அளவில் மட்டுமே புரிந்து வைத்திருக்கின்றனர்.

தோழர் பகத்சிங்
காங்கிரசின் சரணடைவு, துரோகப் பாதைக்கு மாற்றாக, இந்திய விடுதலைக்குப் புரட்சிகரப் பாதையைக் காட்டிய தோழர் பகத்சிங்

பகத்சிங் ஒரு காத்திரமான எழுத்தாளர். அவர் கீர்த்தி இதழில் புனைபெயரில் எழுதியுள்ளார். கீர்த்தி, பஞ்சாபில் செயல்பட்ட இடதுசாரி பத்திரிகையாகும். பகத்சிங்கின் தேர்ந்த படைப்பான “நான் ஏன் நாத்திகன்?” போன்றவை இதில் வெளிவந்திருக்கின்றன. எனினும், தேசியவாதி என்ற பிம்பம் பகத்சிங்கின் இதர மதிப்பீடுகளையும் கொள்கைகளையும் திட்டமிட்டு மறைக்க பல்வேறு குழுக்களுக்குப் பயன்படுகிறது.

பஞ்சாபை விட பஞ்சாபுக்கு வெளியேதான் பகத்சிங் சரியான விதத்தில் இனங்கண்டுகொள்ளப்பட்டு புகழப்பட்டார். சான்றாக, தமிழ்நாட்டில் பெரியாரின் இயக்கம் பகத்சிங் பற்றிய புரிதலை மக்களுக்குக் கொண்டு சென்றதில் இதர மாநிலங்களைவிட முன்னோடியாக இருந்தது. “நான் ஏன் நாத்திகன்?” படைப்பு தமிழிலும், பகத்சிங் குறித்து குடியரசு இதழில் தலையங்கமும் வெளியிடப்பட்டன. ஆக, தமிழ்நாட்டையும் பஞ்சாபையும் ஒப்பிடுகிற பொழுது பஞ்சாபில் உணர்ச்சி ரீதியிலான பிம்பமே மேலோங்கியிருக்கிறது என்று கருதுகிறேன்.

10-chamanlal-captionகம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்தவரை பகத்சிங்கின் பங்களிப்பைப் பெருமளவில் எடுத்துச் செல்லாதவர்கள் என்றே சோல்லலாம். பகத்சிங் ஒருபோதும் புரட்சியாளராக இவர்களால் முன்னிறுத்தப்பட்டதில்லை. இத்துணைக்கும் அஜய் கோஷ் போன்றவர்கள் பகத்சிங்குடன் உடனிருந்தவர்கள். இவர்களுக்குப் பகத்சிங்கைப் பற்றி நமக்கு தெரிந்ததைவிட அதிகம் தெரியும். இருப்பினும், பொதுமக்களிடம் பகத்சிங்கை எடுத்துச் செல்வதில் இவர்கள் பெரிய முனைப்பு காட்டவில்லை. பகத்சிங் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சோசலிசத்திற்காகப் போராடிய புரட்சியாளன் என்பதை எடுத்துச் சென்றிருந்தால் பொதுமக்களிடம் பகத்சிங்கைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருக்கும். நக்சல்பாரி இயக்கமும் புரட்சியாளர்களும்தான் 1960-70-களில் பகத்சிங்கை சரியான முறையில் மக்களிடம் எடுத்துச் சென்றனர்.

1980 வரையிலும்கூட பகத்சிங்கைக் குறித்த தொகுப்பான வெளியீடு என்று ஒன்றுகூட இல்லை. அதற்கு முன்பு சிறுசிறு வெளியீடுகள் பல்வேறு மொழிகளில் வெளிவந்திருக்கின்றன. இதில் “நான் ஏன் நாத்திகன்?” தமிழில் வெளிவந்திருப்பினும் பிற மொழிகளில் மிகமிகக் காலம் தாழ்த்தியே வெளிக்கொண்டுவரப்பட்டன. இதில் சிவ் வர்மா, அஜய் கோஷ் போன்றவர்கள் பகத்சிங் குறித்து எழுதினாலும், பிபின் சந்திராவின் “நான் ஏன் நாத்திகன்?” மொழிபெயர்ப்பு 1980-களில்தான் பல்கலைக்கழக, ஆராச்சி மாணவர்களிடமும் அறிவுத்துறையினரிடமும் முன்வைக்கப்பட்டன. இதற்குப் பிறகுதான் “பகத்சிங் மார்க்சிஸ்ட்டா?” “மதங்களைப் பற்றிய பார்வை என்ன?” போன்ற தலைப்புகளில் விவாதமும் விமர்சனங்களும் தொடங்கப்பட்டன. 1970-கள் வரை பகத்சிங்கை பற்றி யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நிலைதான் இருந்தது. குறிப்பாக இந்துத்துவ சக்திகள், பகத்சிங் ஆர்.எஸ்.எஸ்.க்கு நெருக்கமானவர் என்று பல கதைகளை சோடித்தனர்; இன்றும் சோடிக்கின்றனர்.

"நான் நாத்திகன் - ஏன்?" என்ற தமிழ் மொழி பெயர்ப்பு நூலின் முகப்பு அட்டை
பகத் சிங்கின் தேர்ந்த படைப்பான “நான் நாத்திகன் – ஏன்?” என்ற தமிழ் மொழி பெயர்ப்பு நூலின் முகப்பு அட்டை.

இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு பகத்சிங் வழங்கிய அறிவுத்துறை பங்களிப்பு பற்றி..

பகத்சிங் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்புவரை, மக்களுக்கு பகத்சிங்கைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. அதற்குமுன் மக்கள், இந்தியாவை பாரதமாதா என்று போற்றிக் கொண்டிருந்தனர். சேலை அணிவிக்கப்பட்ட பாரதமாதா சிலையெல்லாம் கூட இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் 18-12-1928-ல் சாண்டர்ஸ் கொல்லப்பட்ட பொழுது லாகூரின் சுவரெங்கும் ஒட்டப்பட்ட சிவப்புச் சுவரொட்டிகள் மக்களின் கவனத்தைப் பரவலாக ஈர்த்தன. பகத்சிங், நாட்டின் அடையாளமாகக் கருதப்பட்டார். வெள்ளையர்களின் பாராளுமன்றத்தில் குண்டு வீசப்பட்ட பிறகு, அதை விளக்கி வெளியிடப்பட்ட “செவிடர்களைக் கேட்க வைப்பதற்கு” எனும் தலைப்பிலான பிரசுரம் மிகவும் பிரபலமான ஒன்று. அது ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராட வேண்டும் என்ற உந்துதலை உருவாக்கியது. வழக்கிற்காக பகத்சிங் நீதிமன்றத்திற்கு ஒவ்வொரு முறை வரும் பொழுதும் விண்ணதிரும் புரட்சிகர முழக்கங்கள் மக்களால் முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு முறையும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதம் பாடப்பட்டது.

10-chamanlal-caption-2நீதிமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 06-06-1929 உரை பகத்சிங்கின் பங்களிப்பிற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இங்குதான் அவர் “பாராளுமன்ற தாக்குதல், தனிபட்ட நபர் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் அன்று; அது ஏகாதிபத்திய நிறுவனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்” என்பதைத் தெளிவுபடுத்தினார். புரட்சி குறித்த கண்ணோட்டத்தையும், இந்திய விடுதலையையும் உரத்துக் கூறிய பகத்சிங்கின் வார்த்தைகள் மிக முக்கியமானவை.

ஆனால், பகத்சிங்கின் இத்தகைய பங்களிப்புகள் பொதுமக்கள் மத்தியில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. பொதுவுடைமைக் கட்சிகள் (போலி கம்யூனிஸ்டுகள் ) பகத்சிங்கின் இத்தகைய பங்களிப்பை அங்கீகரிக்கவும் இல்லை; மக்களிடம் எடுத்துச் செல்லவும் இல்லை. ஒருவேளை இவையெல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டிருந்தால் மக்கள் மேலும் அரசியல்படுத்தப்பட்டிருப்பார்கள்.

பகத்சிங்கின் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது திட்டமிடப்பட்டது என்று கருதுகிறீர்களா?

ஆம். இந்தியா என்றில்லை, எல்லா நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கொள்கைகளைத்தான் விரும்புகின்றன. கல்வியமைப்பின் மூலமாக அவர்கள் இளைஞர்களை அடிமைகளாகக் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். பாடப் புத்தகங்களில் பகத்சிங்கின் வாழ்வை உள்ளது உள்ளபடி சொன்னால் மக்கள் முன் அம்பலப்பட்டுபோவோம் என்பது ஆளும் வர்க்கங்களுக்கு நன்றாகவே தெரியும். அதேசமயம், அவர்களால் பகத்சிங்கின் புகழைத் தடுத்து நிறுத்த இயலாது. இதன் காரணமாகவே பகத்சிங்கை தேசியவாதி, வீரதீரமானவர் என்ற அளவுடன் நிறுத்திக் கொள்கின்றன. பகத்சிங்கின் கம்யூனிசக் கொள்கைகள் முழுவதுமாக இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன.

நரேந்திர மோடி உரை
பகத் சிங்கைத் தமது ஆளாகக் காட்ட முயலும் இந்து மதவெறிக் கும்பல் : பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவுநாளையொட்டி பஞ்சாபிலுள்ள ஹூசைனிவாலா கிராமத்தில் அமைந்துள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்தில் உரையாற்றும் ஏகாதிபத்திய விசுவாசி நரேந்திர மோடி.

பகத்சிங் எது போன்ற இந்தியாவை இலட்சியமாகக் கொண்டிருந்தார்?

இது மிகவும் தெளிவானது. சோவியத் யூனியன் போன்ற புரட்சிகர நாட்டை பகத்சிங் விரும்பினார் என்று கருதுகிறேன். பகத்சிங் 23 வயதிலேயே கொல்லப்பட்டார். அவர் வாழ்ந்த காலத்தில் தன் கண் முன்னே இருந்த தீர்வான 1917-ல் நடந்த புரட்சி போன்றதொரு சமூக மாற்றம் இந்தியாவிலும் வரவேண்டுமென்று விரும்பினார். பகத்சிங்கிற்கு லெனின் ஒரு வழிகாட்டியாகவும் ஆசானாகவும் இருந்தார். எனது எழுத்துக்களில் பகத்சிங் உயிரோடு இருந்திருந்தால் இந்தியாவின் லெனினாக வரக்கூடும் என்றே பலமுறை மதிப்பிட்டிருக்கிறேன். லெனின், மாவோ, ஹோசிமின், பிடல் காஸ்ட்ரோ, சே குவரா போன்று பகத்சிங்கும் ஒரு சிறந்த கம்யூனிச ஆளுமை ஆவார்.

சாதிக்குழுக்கள் கட்டபொம்மன் எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்; மருது சகோதரர்கள் எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார்கள். இதே போன்றதொரு நிலை பஞ்சாபிலும் நிலவுகிறதா?

ஆம். அடிப்படையில் இது மிகவும் இழிவான ஒன்று. இது பஞ்சாபிலும் நடைபெறுகிறது. சான்றாக உத்தம் சிங், பகத்சிங்கைப் பின்பற்றிய விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவர். இவர் ஜெனரல் டயரைக் கொன்றதற்காக லண்டனில் கொல்லப்பட்டார். ஆனால், இவர் நினைவு கூரப்படுவது விடுதலைப் போராட்ட வீரர் என்ற அடிப்படையில் இல்லாமல், அவர் கம்போஜ் என்கிற உட்சாதிப் பிரிவின் நாயகனாக முன்வைக்கப்படுகிறார். மறுகாலனியாக்கக் கொள்கைகளால் இன்றைக்கு மக்கள் சகல துறைகளிலும் நலிவுற்று இருக்கின்றனர். இதில் இருந்து திசை திருப்புவதற்கு, சாதி ரீதியான முன்னெடுப்புகள் ஆளும் வர்க்கங்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கின்றது.

எங்கெல்லாம் முற்போக்கு இயக்கங்களின் தீவிரம் குறைவாக இருக்கிறதோ, அங்கெல்லாம் இதன் தாக்கம் அதிகம் இருக்கிறது

பி.ஜே.பி. அரசு பதவியேற்றவுடனேயே சமஸ்கிருத வாரம் கொண்டினார்கள். இந்து-இந்தி-இந்தியா எனும் கொள்கைகளை வேகமாகத் திணித்து வருகின்றனர். இதுபற்றிய தங்களது கருத்து என்ன?

சமஸ்கிருதம் யாராலும் பேசப்படவில்லை. சமஸ்கிருதம் ஒரு வழக்காடு மொழியன்று. மாறாக, கிரேக்கமும் அரபும் இன்றளவும் வழக்காடு மொழிகளாக இருக்கின்றன. சீனம் மிகப் பழமையான மொழியாக இருப்பினும் இன்றளவும் வழக்காடு மொழியாக இருந்து வருகிறது. ஆனால் சமஸ்கிருதமோ பழமையான மொழி மட்டுமே. இன்னும் கடுமையாகச் சொல்வதானால், சமஸ்கிருதம் ஒரு செத்த மொழியாகும். இந்து வேதங்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தாலும் அது யாராலும் வாசிக்கப்படாத ஒன்றாகத்தான் இருக்கிறது. இதன் பொருட்டே சமஸ்கிருதம் திட்டமிட்டுத் திணிக்கப்பட்டு வருகின்றது. இதைத்தாண்டி சமஸ்கிருதத்தில் இருக்கிற ஒரே ஆரோக்கியமான விசயம் ஆயுர்வேதம் ஆகும். சமஸ்கிருதத்திற்கு செலவிடுவதற்குப் பதில் 100 செயல்பாட்டு மொழிகளின் மீது கவனம் செலுத்தினால், அது ஆக்கப்பூர்வமான ஒன்றாக இருக்கும்.

ஒப்பிட்டுப் பார்த்தால் ஓர் உண்மை தெரியும். நம் நாட்டில் ஏழைகளின் மொழிக்கு அரசு எந்தவித மரியாதையையும் தருவதில்லை. பணக்காரர்கள் அல்லது குறிப்பிட்ட குழுக்களின் மொழிக்கு மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. இந்த வகையில் பார்ப்பனியமே கோலோச்சி வருகிறது. பார்ப்பனமயமாதல் சமஸ்கிருதத்தின் மூலமாக முன்நகர்த்திக் கொண்டு செல்லப்படுகிறது. சமஸ்கிருதம் உண்மையில் ஓர் ஒட்டுண்ணியாகும். பிற மொழிகளுடன் ஒப்பிடும் பொழுது அது ஒட்டுண்ணியாகத்தான் இருக்கிறது. ஒட்டுண்ணிகள் எதைச் சார்ந்து வாழ்கிறதோ அவ்வுயிரிகளிடமிருந்தே சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதைப்போல சமஸ்கிருதமும் பிற மொழிகளை உறிஞ்சி ஒட்டுண்ணியாக இருந்திருக்கிறது. அது பல இந்திய மொழிகளைத் தின்று செரித்திருக்கிறது. தத்துவார்த்த ரீதியாக பார்ப்பனியமும் சமஸ்கிருதத்தைப் போன்றே ஒட்டுண்ணியாகும். மற்ற இந்திய மொழிகளைப் பாதுகாக்க வேண்டுமெனில், இந்த ஒட்டுண்ணிகள் களையப்பட வேண்டும்.

தீண்டாமை மற்றும் சாதியைப் பற்றி பகத்சிங் கொண்டிருந்த கண்ணோட்டம் என்னவாக இருந்தது?

பகத்சிங், தன்னுடைய கட்டுரைகளில் தீண்டாமை மற்றும் சாதியைப் பற்றி எள்ளி நகையாடவே செய்வார். குறிப்பாக, “மேல்சாதிக்காரருடைய வீட்டின் அடுப்பங்கரைக்குள் நாய் நுழைய முடியும்; ஆனால் மனிதர்கள் போகமுடியாது” எனக் கூறுகிறார். தாழ்த்தப்பட்டோரின் ஒடுக்குமுறைக்கெதிராக பேசும் போது “ஓ, ஒடுக்கப்பட்டவர்களே! நீங்கள் சிங்கம் போன்றவர்கள்! விழித்தெழுங்கள்! உங்கள் உரிமைகளை நீங்களே பறித்துக் கொள்ளுங்கள்” என்கிறார். மேலும் புரட்சியின் மூலமே சாதியை ஒழிக்க முடியும் என்பது பகத்சிங்கின் எண்ணம்.
(குறிப்பு: 1926 அல்லது 1928 -இல் பிக்ரிதி பத்திரிகையில் “தீண்டாமை பற்றி” என்ற கட்டுரையை பகத்சிங் எழுதியுள்ளார். சாதி பற்றிய தன்னுடைய கட்டுரை ஒன்றில் அன்றைய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், மோடி அரசால் பாரத ரத்னா வழங்கி கவுரவிக்கப் பட்டிருப்பவருமான, இந்துத்துவ பாசிஸ்டுகளின் வழிகாட்டி, மதன் மோகன் மாளவியா தீண்டாமை குறித்து இரட்டை வேடம் போடுவதை அம்பலப்படுத்தியிருக்கிறார்.)

இன்றைய நிலையில் இந்திய இளைஞர்களுக்கு பகத்சிங்கின் போராட்டமும் கொள்கைகளும் எந்தளவு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

உரிமைகளுக்காகப் பிச்சையெடுக்க வேண்டும் என்பதை பகத்சிங் ஒருபோதும் கோரியதில்லை. எந்த வழிமுறைகளானாலும் மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். அது இல்லாதபொழுது பகத்சிங் கூறியபடி உரிமைகளைப் பறித்துக் கொள்வதுதான் நம் வழிமுறையாக இருக்க முடியும்.

நாம் சிறுவயதில் இருந்தே தொடர்ச்சியாக இரண்டு பெயர்களைக் கேட்டு வருகிறோம். அது டாட்டா மற்றும் பிர்லா ஆகும். இதுதவிர, இருபது பெரிய குடும்பங்களைப் பற்றி அறிவோம். ஆனால் தற்பொழுதோ புதுப்புது பெயர்களை அறிகிறோம். அதானி, அம்பானி என்று நூற்றுக்கணக்கான புதுப்புது அதானிகளும் அம்பானிகளும் வந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட பில்லினியர்கள் இந்தியாவில் இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்கிற தேசத்தில்தான், இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது? இந்த ஆளும் அமைப்பு முற்றிலும் தோற்றுவிட்டதைக் காட்டுகிறது.

மக்கள் இந்த அமைப்பிற்கு எதிராகப் போராட வேண்டும். அப்படி போராடுவது இந்த அமைப்பை நொறுக்கி புதிய அமைப்பைக் கட்டமைப்பதற்குத்தானே தவிர, இந்த அமைப்பைச் சீர்திருத்துவதற்கல்ல.

– நேர்காணல்: அழகு
___________________________
புதிய ஜனநாயகம், மே 2015
___________________________

தலைமை நீதிபதி தத்து மீதான ஊழல் குற்றச்சாட்டு மறைக்கப்பட்டது ஏன் ?

5

ற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் எச்.எல். தத்து. தலைமை நீதிபதி ஆவதற்கு முன் அவர் சட்ட விரோதமாக சொத்து குவித்தது தொடர்பான ஆவண ஆதாரங்களின் தொகுப்பு ஒன்று அப்போது ஊடக கவுன்சில் தலைவராக இருந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூவின் கைக்கு போயிருக்கிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்படவில்லை.

கட்ஜூ இந்த ஆவணங்களை உச்சநீதி மன்ற மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷண், பிரஷாந்த் பூஷண், டைம்ஸ் ஆஃப் இந்தியா – தி ஹிந்து – இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கிறார். யாரும் இந்த முக்கியமான ஆதாரத்தை பொது வெளியில் அம்பலப்படுத்தவில்லை.

ஏன் அம்பலப்படுத்த வில்லை? மற்ற அரசியல்வாதிகள், அதிகாரிகள், முதலாளிகள் போல நீதித்துறை ஊழலும் மக்களிடையே பிரபலமாகிவிட்டால் பிறகு எதைக்காட்டி அச்சுறுத்துவது? இங்கே கட்ஜு கூறியிருப்தைப் பார்த்தால் பிரபல வழக்கறிஞர்கள், பிரபல ஊடக நிறுவனங்கள் எவையும் இது குறித்து பேசுவதற்கு தயாராக இல்லை.

இது தொடர்பாக எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் எழுப்பிய கேள்விக்கு கட்ஜூ பதிலளித்துள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையாளர் மகாபத்ரா என்பவர், கட்ஜூ அந்தத் தகவல் தொகுப்பை சரியாகக் கையாளவில்லை என குற்றம் சாட்ட, அதற்கும் பதிலளித்திருக்கிறார் கட்ஜூ.

இனி அவரது விளக்கத்தை பார்ப்போம்.

1. தத்துவின் பதிவு – தத்து மீது விசாரணை நடத்த வேண்டும் – முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ

எகனாமிக் டைம்ஸ் நாளிதழிலிருந்து இன்று எனக்கு (கட்ஜு) வந்த மின்னஞ்சல் இது

தேதி : மே 12, 2015 8:43:44 pm IST
To: justicekatju@gmail.com
பொருள் : உடனடியாக கருத்து கோரி

ஐயா,

  1. தி எகனாமிக் டைம்ஸ் சார்பாக தலைமை நீதிபதி தத்து தொடர்பாக ஒரு ஆய்வு செய்து வருகிறோம். நீதிபதி தத்து மற்றும் அவரது மனைவிக்கு எதிரான புகார் ஒன்று உங்களுக்கு அனுப்பப்பட்டதாக எனக்கு தெரிய வந்தது. அது தொடர்பாக நீங்கள் ஏதாவது நடவடிக்கைகள் எடுத்திருந்தால் அவற்றையும், இது தொடர்பான உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
  2. அந்த புகார் பண்டிட் நரேந்திர சர்மா என்பவரின் பெயரில் அனுப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 2014-ல் குற்றச்சாட்டு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இணைத்து, தேவையான நடவடிக்கை எடுக்கும்படி உங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது.
    மேலே குறிப்பிட்ட விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை கூடிய விரைவில் அனுப்பினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

பணிவுடன்,
தி எகனாமிக் டைம்ஸ், டெல்லி

மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷண், அவரது மகன் பிரஷாந்த்
தத்து ஊழல் குற்றச்சாட்டு ஆவணங்களை பெற்று நடவடிக்கை எடுக்காத உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷண், அவரது மகன் பிரஷாந்த்

என்னுடைய பதில்

From: mark_katju@yahoo.co.in
Sent: Wednesday, May 13, 2015 7:05

அன்புள்ள ஐயா,

உங்கள் மின்னஞ்சல் வரப்பெற்றேன்.

தற்போது நான் வான்கூவரில் உள்ளேன். ஜூலை மத்தியில்தான் இந்தியாவுக்குத் திரும்ப உள்ளேன்.

நீதிபதி தத்து அவரது நீதித்துறை வாழ்க்கையின் போது குவித்த சொத்துக்கள் தொடர்பான ஆவணச் சான்றுகள் அடங்கிய ஒரு தொகுப்பு எனக்கு வந்தது உண்மை. இது அவர் தலைமை நீதிபதி ஆவதற்கு முன்பு நடந்தது.

அந்தத் தொகுப்பை பல பிரதிகள் எடுக்க வைத்து, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷண், அவரது மகன் பிரஷாந்த், டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் தனஞ்சய் மகாபத்ரா (அவர் என்னுடைய வீட்டுக்கு பிரதியை வாங்க வந்திருந்தார். அவரோடு இது தொடர்பாக விரிவாக பேசியிருந்தேன்), இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிந்து பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு தலா ஒரு பிரதி அனுப்பி வைத்தேன். வருத்தப்படும் விஷயம் என்னவென்றால், அவர்கள் யாரும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தத் தொகுப்பில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், தத்து தலைமை நீதிபதியாக ஆக்கப்பட்டிருக்கவே கூடாது என்பதால்தான் நான் அவர்களை விசாரிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தேன்.

அந்தத் தொகுப்பின் நகல் என் கைவசம் இப்போது இல்லை. ஆனால், நோய்டாவில் இருக்கும் எனது வீட்டில் வைத்திருக்கிறேன். நான் நாடு திரும்பியதும் அதை உங்களுக்குத் தர முடியும். இருப்பினும், நான் கவனமாக படித்திருந்த அந்த தொகுப்பின் உள்ளடக்கம் பற்றி எனது நினைவிலிருந்து கூறுகிறேன் :

நீதிபதி தத்துவின் அரண்மனை போன்ற வீடு
பெங்களூருவில் உள்ள தத்துவின் அரண்மனை போன்ற வீடு (கட்ஜூ பேஸ்புக்கில் பகிர்ந்த புகைப்படம்).

நீதிபதி தத்துவின் மனைவி காயத்ரியின் பெயரில் பெரு எண்ணிக்கையிலான வீட்டு மனைகள் பெங்களூருவிலும், சுற்று வட்டார பகுதிகளிலும் வாங்கப்பட்டிருந்தன. அவை வாங்கப்பட்டது தொடர்பான விற்பனைப் பத்திரங்களின் நகல்கள் அந்தத் தொகுப்பில் இருந்தன. இந்த விற்பனைப் பத்திரங்கள் நீதிபதி தத்துவின் மனைவி காயத்ரியின் பெயரில் இருந்தாலும், அவரை குருவாயூரின் மகள் என்றுதான் குறிப்பிடுகின்றன (அவரது தந்தையின் பெயராக இருக்கலாம்), தத்துவின் மனைவி என்று குறிப்பிடவில்லை. இது விசித்திரமானது, ஏனென்றால், அந்த வீட்டுமனைகள் அவரது திருமணத்துக்கு வெகு காலத்துக்குப் பிறகு வாங்கப்பட்டிருந்தன. இந்த பரிமாற்றங்களை மறைப்பதற்குத்தான் இது செய்யப்பட்டிருந்ததா என்ற கேள்வி எழுகிறது.

1. இந்த வீட்டுமனைகளில் பெரும்பாலானவை கர்நாடகா நிலச் சீர்திருத்த சட்டத்திற்கு விரோதமாக வாங்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சட்டத்தின்படி குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ 2 லட்சத்துக்கு அதிகம் உடைய ஒரு நபர் கர்நாடகாவின் ஊரகப் பகுதிகளில் எந்த நிலத்தையும் வாங்க முடியாது. இந்த மனைகள் வாங்கப்படும் போது, அவை அனைத்தும் நடைமுறையில் விரிவாகி வந்த (இந்தியாவின் மற்ற நகரங்களைப் போலவே) பெங்களூரு நகரத்தில் இணைந்து விட்டாலும், அதிகாரபூர்வமாக ஊரகப் பகுதிகளாகவே இருந்தன. இந்த மனைகள் வாங்குதல் நடைபெற்ற காலகட்டத்தில் நீதிபதி தத்துவின் வருமானம் ஆண்டுக்கு ரூ 15 லட்சம் (உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம்). எனவே, அவரது மனைவி சட்டவிரோதமாக இந்த மனைகளை வாங்கியிருக்கிறார்.

2. நீதிபதி தத்து பெங்களூருவில், 1,200 சதுரமீட்டர் (13,450 சதுர அடி) பரப்புடையதாக சொல்லப்பட்ட நிலத்தில் ஒரு அரண்மனை போன்ற வீட்டை கட்டியிருக்கிறார். அந்த வீடு மட்டுமே ரூ 50 கோடி அல்லது அதற்கும் மேல் மதிப்புடையதாக இருக்கும். யாரோ அந்த வீட்டின் புகைப்படங்களை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்கள், அவற்றை தேடி உங்களுக்கு அனுப்ப முயற்சிக்கிறேன்.

தத்துவின் அரண்மனை வீடு படங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

3. பெங்களூருவில் ஒரு வீட்டு மனை தத்துவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தத் திட்டத்தின் கீழ் உயர்நீதிமன்ற ஊழியர்களுக்கு மட்டும்தான் மனை ஒதுக்கப்பட முடியும், எனவே தத்துவுக்கு மனை ஒதுக்கப்பட்டிருக்க முடியாது. உயர்நீதிமன்ற நீதிபதி ஒரு ஊழியர் இல்லை (அவர் ஒரு அரசியல் சட்ட ரீதியான பதவி வகிக்கிறார், அவர் யாருடைய ஊழியரும் இல்லை). நீதிபதி தத்து அந்த நேரத்தில் கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்தார்.

4. ஏற்கனவே பெங்களூருவில் வீட்டு மனை சொந்தமாக உள்ள ஒருவருக்கு ஒதுக்கப்பட முடியாத திட்டத்தின் கீழ் நீதிபதி தத்துவுக்கு ஒரு மனை கொடுக்கப்பட்டிருந்தது. நீதிபதி தத்துவுக்கு அவரது சொந்த பெயரிலோ, மனைவி பெயரிலோ, குழந்தைகள் பெயரிலோ ஏற்கனவே பெங்களூருவில் மனைகள் சொந்தமாக இருந்தன.

நீதிபதி தத்து சட்டமீறல்
வீட்டு மனை வாங்குதல் தொடர்பான கர்நாடகா சட்டங்களை நீதிபதி தத்து மீறினார்.

தத்து இழைத்த இன்னும் பல சட்ட விரோத செயல்கள் அந்தத் தொகுப்பில் இருந்தன. அவை அனைத்தும் எனக்கு நினைவில் இல்லை. சுமார் 100 பக்கங்கள் கொண்ட அந்தத் தொகுப்பில் பெரும்பாலும், விற்பனை பத்திரங்கள், பிற ஆவணங்களின் நகல்கள் இருந்தன.

இந்தத் தொகுப்பை பெற்றவுடன், நான் திரு சாந்தி பூஷணுடன் தொலைபேசியில் பேசினேன். அவர் தொகுப்பின் நகலை வாங்குவதற்கு தனது மகன் பிரஷாந்தை என் வீட்டுக்கு அனுப்பினார். அந்தத் தொகுப்பை பல நகல்கள் எடுத்து, என் வீட்டுக்கு வந்த பிரஷாந்துக்கு ஒன்றை கொடுத்தேன்; அதில் அடங்கியிருந்த குற்றச்சாட்டுகள் பற்றி அவருடன் விவாதித்தேன்.

அடுத்த நாள் சாந்தி பூஷண் என்னை தொலைபேசியில் அழைத்து “அந்தத் தொகுப்பில் உள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை” என்று கருத்து தெரிவித்தார். “அப்படி என்றால், மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களும், ஓய்வு பெற்ற நீதிபதிகளும் உறுப்பினர்களாக உள்ள, நானும் பிரஷாந்தும் கூட அதன் உறுப்பினர்கள், நீதித்துறை பொறுப்புணர்வுக்கான குழு இது தொடர்பாக ஒரு விசாரணை நடத்த வேண்டும்” என்றும் “அதே நேரத்தில் அந்த விசாரணை முடிவது வரை தத்துவை முழுமையான தலைமை நீதிபதியாக நியமிக்காமல் பொறுப்பு தலைமை நீதிபதியாக மட்டும் நியமிக்கும்படி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுத வேண்டும்” என்றும் கூறினேன். அந்தத் தொகுப்பில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தவறாக இருந்தால் அவரை தலைமை நீதிபதியாக உறுதி செய்யலாம்.

ஊடகம்
“நான் அந்தத் தொகுப்பின் நகல்களை அனுப்பிய நபர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு அது தொடர்பாக விசாரிக்கக் கூடத் தயாராக இல்லை. ஊடகம் பயந்திருக்கிறதா?”

வருத்தம் தருவது என்னவென்றால், நான் தொகுப்பை அனுப்பி வைத்த சாந்தி பூஷணோ மற்ற யாருமோ அது தொடர்பாக எதையும் செய்யவில்லை.

எனக்கு தத்துவுக்கு எதிராக எந்த சொந்த விரோதமும் இல்லை என்பதையும், நான் செய்ததற்கான ஒரே நோக்கம், நீதித்துறையின் தலைமை பொறுப்பு வகிப்பவர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே கடிதத்தை முடிப்பதற்கு முன்பு கூறிக் கொள்கிறேன். குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று மட்டும்தான் வேண்டினேன், அந்த குற்றச்சாட்டுகள் சரிதான் என்று கூறவில்லை (ஆனால், அந்தத் தொகுப்பில் இருந்த ஆவண ஆதாரங்கள் தீவிரமான மோசடிகளை சுட்டிக் காட்டின).

ஆனால், நான் அந்தத் தொகுப்பின் நகல்களை அனுப்பிய நபர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு அது தொடர்பாக விசாரிக்கக் கூடத் தயாராக இல்லை. ஊடகம் பயந்திருக்கிறதா?

நீதிபதி காட்ஜூ

2. “நீதிபதிகள் பற்றி விவாதிக்கலாமா” என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கட்ஜூவின் பதில்

கணேசன் ஐசக் – மரியாதைக்குரிய நீதிபதி அவர்களே, தற்போதைய தலைமை நீதிபதியின் சொந்த விவகாரங்களை வைத்து அவரது நேர்மையை விவாதிப்பது சரிதானா

மார்க்கண்டேய கட்ஜூ – ஏன் கூடாது? ஒரு ஜனநாயகத்தில் பொது பதவி வகிப்பவர்களின் நடத்தை கண்டிப்பாக விவாதிக்கப்பட வேண்டும்.

(பல்வேறு தருணங்களில் கட்ஜு அவர்கள் இதைப்பற்றி விரிவாக விளக்கியிருப்பார். தந்தி டி.வியின் பாண்டே “இது போன்று நீதித்துறையை விமரிசிப்பது சரியா” என்று கேட்ட கேள்விக்கு கோபத்துடன் பதிலளித்திருப்பார் கட்ஜு. நிலப்பிரபுத்துவ அமைப்பில்தான் மன்னன் எஜமானனாகவும், மக்கள் கட்டுப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஜனநாயக அமைப்பில் இது தலைகீழாக மாறுகிறது. இங்கே மக்கள் எஜமானர்களாகவும், அரசு, பிரதமர், ஜனாதிபதி, நீதிபதிகள் அனைவரும் மக்களின் சேவகர்களாகவும் இருக்கிறார்கள். அந்த வகையில் மக்களுக்குத்தான் விமரிசிக்கும் உரிமை இருக்கிறது என்கிறார்.

மேலும் நீதித்துறையில் மலிந்து விட்ட ஊழல் குறித்து பேசுவதுதான் நீதித்துறையை மதிக்கும் விசயமே அன்றி, அதை அம்பலப்படுத்தக் கூடாது என்றால் நீதித்துறை ஊழல் செய்வதற்கே உதவும் என்கிறார்.)

3. டைம்ஸ் ஆஃப் இந்தியா நிருபர் மகாபத்ராவின் பதிலும், கட்ஜூவின் எதிர்வினையும

எனது முந்தைய பதிவில், இப்போதைய தலைமை நீதிபதி தத்து பெருமளவில் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக முதல் பார்வையில் கூறும் ஆவணங்கள் அடங்கிய தகவல் தொகுப்பை நான் கொடுத்தவர்களில் ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த திரு தனஞ்சய் மகாபத்ரா என்ற பத்திரிகையாளர் என்று குறிப்பிட்டிருந்தேன். என்னுடைய பதிவை அவருக்கு மின்னஞ்சலிலும் அனுப்பியிருந்தேன்.

அதற்கு பதிலாக மே 14, 2015 அன்று தனஞ்சய் மகாபத்ரா எனக்கு இந்த மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்.

திரு. கட்ஜூவின் மின்னஞ்சல் தொடர்பாக சில விளக்கங்கள்

தனஞ்சய் மகாபத்ரா
நீதிபதி தத்து மீதான குற்றச்சாட்டில் ஆர்வமற்ற, டைம்ஸ் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த தனஞ்சய் மகாபத்ரா என்ற பத்திரிகையாளர்

நீதிபதி தத்து தலைமை நீதிபதியாக பதவி உயர்வு அடைவதற்கு 10 நாட்களுக்கு முன்பு, நீதிபதி கட்ஜூ, முக்கியமான விஷயம் ஒன்றை சொல்லவிருப்பதாகக் கூறி என்னை அவரது வீட்டுக்கு அழைத்தார். அப்போது இந்திய ஊடக கழகத்தின் தலைவராக இருந்த அவரது வீட்டை நான் அடைந்ததும் என்னிடம், “நீதிபதி தத்து தொடர்பான நில விவகாரங்களில் முறைகேடு பற்றி” என்று குறிப்பிட்டு சில காகிதங்களை என்னிடம் கொடுத்தார்.

அது தொடர்பாக பத்திரிகையில் உடனடியாக எழுதும்படி என்னை வலியுறுத்தினார். “பத்திரிகை கட்டுரைகள் அப்படி எல்லாம் எழுதப்படுவதில்லை” என்று அவரிடம் கூறினேன். மேலும், “அந்தத் தகவல் தொகுப்பில் இருக்கும் ஆவணங்கள் களத்தில் தரவுகளோடு சரி பார்க்கப்பட வேண்டும், அதற்கு நேரம் பிடிக்கும்” என்று கூறினேன். சில நாட்களுக்குப் பிறகு, அந்த காகிதக் கட்டை திருப்பித் தரும்படி அவர் கேட்டார், நானும் கொடுத்து விட்டேன்.

தனஞ்சய் மகாபத்ராவுக்கு நான் அனுப்பிய பதில்

அன்புள்ள திரு மகாபத்ரா,

நான் உங்கள் மின்னஞ்சலை படித்தேன். நீங்கள் உண்மையை அரைகுறையாக கூறியிருக்கிறீர்கள் என்று வருத்தத்துடன் கூறிக் கொள்கிறேன்.

முதலாவதாக, இந்த தகவல் தொகுப்பு பற்றி சொல்வதற்கு நான் உங்களை தொலைபேசியில் அழைத்தது, தத்து தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு ஒரு மாதம் முன்பு, நீங்கள் சொல்வது போல 10 நாட்களுக்கு முன்பு அல்ல.

இரண்டாவதாக, உடனடியாக அதைப் பற்றி எழுதும்படி நான் உங்களை வலியுறுத்தவில்லை. தத்து உண்மையிலேயே ஏதாவது தவறுகள் செய்திருந்தால் அந்த விஷயம் பொதுவில் வைக்கப்பட வேண்டும், ஒரு தவறான நபர் தலைமை நீதிபதி ஆகி விடக் கூடாது என்பதற்காக இந்த விஷயத்தை விசாரிக்கும்படி கேட்டுக் கொண்டேன்.

மூன்றாவதாக, அந்தத் தகவல் தொகுப்பு (நீங்கள் சொல்வது போல, சில காகிதங்களின் கத்தை அல்ல) உங்களிடம் சில நாட்கள் இருந்ததாக நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்கள். ஏனென்றால், நான் உங்களுக்கு அவற்றைக் கொடுத்த சில நாட்களுக்குப் பிறகு திரும்பத் தரும்படி கேட்டதாக உங்கள் மின்னஞ்சலில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இடைப்பட்ட காலத்தில், தகவல் தொகுப்பில் இருந்த ஆவணங்களை சரி பார்ப்பதற்கு நீங்கள் என்ன முயற்சிகள் எடுத்தீர்கள்?

நான்காவதாக, நீங்கள் அந்த தொகுப்பை என்னிடம் திருப்பித் தந்து விட்டதாகக் கூறுகிறீர்கள். அதை நீங்கள் திரும்பி தந்ததாக எனக்கு நினைவில்லை. உண்மையில், என்னிடம் பல பிரதிகள் இருந்ததால், அது எனக்கு தேவையும் படவில்லை.

ஆனால், நீங்கள் கூறுவதே சரி என்றே வைத்துக் கொள்வோம். இருப்பினும், சில கேள்விகள் எஞ்சுகின்றன. உங்கள் வசம் சில நாட்கள் வைத்திருந்ததாக நீங்கள் சொல்லும், நான் கொடுத்த தொகுப்பை நீங்கள் நகல் எடுத்துக் கொண்டீர்களா? அது மிகவும் பரபரப்பான செய்தி மதிப்புடையதால் எந்த ஒரு துடிப்பான பத்திரிகையாளரும் அதைச் செய்திருப்பார்.

ஐந்தாவதாக, நீங்கள் இந்தத் தகவல் தொகுப்பைப் பற்றி உங்கள் மேலாளர்களிடம் தெரிவித்தீர்களா? அவர்களிடம் காண்பித்தீர்களா?

ஆறாவதாக, அதை அவர்களுக்கு நீங்கள் காண்பித்திருந்தால், அவர்களது எதிர்வினை என்ன?

இந்த விஷயங்களைப் பற்றி நீங்கள் தெளிவுபடுத்தா விட்டால், ஒரு பத்திரிகையாளராக உங்கள் கடமையில் தவறி விட்டீர்கள் என்று வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கும்.

நீதிபதி கட்ஜூ

__________________________________

காங்கிரசு கூட்டணி ஆட்சி புரிந்த முதல் ஐந்தாண்டு காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக கட்ஜு அவர்கள் ஒரு வருடம் பதவி வகித்தார். அப்போது அசோக் குமார் எனும் ஊழல் நீதிபதியை நியமிக்க தி.மு.க சார்பாக அளிக்கப்பட்ட நிர்ப்பந்தத்தை அவர் சமீப ஆண்டுகளாக வெளிப்படையாக பேசிவருகிறார். இது உண்மையாக இருக்கும் என்பதற்கு ஆதாரம் தேவையில்லை.

தனக்கு வேண்டிய துறைகள் வேண்டும் என்று தில்லியிலேயே அடம்பிடித்த கருணாநிதி அது போன்றதொரு உறுதியை முள்ளிவாய்க்கால் தொடர்பாக இந்திய அரசிடம் காட்டவில்லை என்பதை நாம் அறிவோம். இதை வைத்து கட்ஜுவை அ.தி.மு.க ஆதரவு ஊடகங்கள் (தமிழ் ஊடகங்களில் பெரும்பான்மை) நன்கு பயன்படுத்திக் கொண்டன. மேலும் கட்ஜு அவர்கள் அவர் சென்னையில் இருந்த போது ஜெயலலிதா நேரடியாக இப்படி நிர்ப்பந்திக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

அதே நேரம் அ.தி.மு.க நபர்கள் தன்னை அணுகியதாக ஒத்துக் கொண்ட அவர் இது ஜெயலலிதாவுக்கு தெரியாமல் இருந்திருக்கும் என்று நம்புகிறார். போகட்டும், ஓராண்டில் சென்னையில் இருந்தவருக்கு இங்கே தி.மு.க மட்டுமல்ல, அ.தி.முகவும் அப்படித்தான் என்பதை அறிய முடியாதது ஆச்சரியம்தான். ஆனால் பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா தரப்பு செய்த தில்லுமுல்லுகளை அவர் இன்னும் ஏன் அறியவில்லை என்பதும் ஆச்சரியத்திற்குரியது.

எனினும் ஜெயாவுக்கு ஆதரவாக பிணை வழங்கி பின்னர் பல்வேறு சலுகைகளை செய்திருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து குறித்து அவர் இறக்கியிருக்கும் அணுகுண்டு அம்மாவையும், அடிமைகளையும் நிலைகுலைய வைத்திருக்கும். அந்த வகையில் இது ஒரு ‘கவித்துவ பழிவாங்கல்’.

கட்ஜு கூறியிருப்பது போல தலைமை நீதிபதி மீதான இந்த குற்றச்சாட்டு இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இந்த குற்றச்சாட்டை விசாரிக்கவே மாட்டோம் என்று ஆளும் வர்க்கம் முடிவு செய்திருப்பதுதான் முக்கியமானது. ஊடகங்களின் கள்ள மவுனம், நீதிமன்ற அவமதிப்பு எனும் மிரட்டல், மூத்த வழக்கறிஞர்களின் அமைதி அனைத்தும் இதைத்தான் காட்டுகிறது.

எனவே ஜெயலலிதா விடுதலை என்பது ஏதோ அவரது சொந்த முயற்சி மட்டுமல்ல. அது ஒட்டு மொத்த நீதித்துறையின் செல்வாக்கில் நடந்திருக்கிறது. குமாரசாமி கூட்டல் தவறு மட்டும் இல்லை என்றால் இவை எதுவும் பேசப்பட்டிருக்காது.

எனினும் நாம் பேசுவோம். இப்போது பேசவில்லை என்றால் பின் எப்போதும் நம்மை வாயடைக்கவே செய்வார்கள்.

உழைப்பாளிகளை ஒழிக்கும் அரசின் ஒப்பந்த சேவை

1
அரசு ஒப்பந்த வேலைகள்  (OUTSOURCING) :

மக்கள் பணத்தைக்
கொள்ளையிடும் குறுக்கு வழிகள்

பொள்ளாச்சி வட்டாட்சியார், கோட்டாட்சியர் அலுவலக அரசு வாகன ஓட்டுநர்கள் கடந்த மாதம் போராட்டத்தில் குதித்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணத்தைக் கேட்ட அரசியல் அறியாத மக்கள் பலருக்கும் இப்படியெல்லாம் நடக்குமா என்று வியப்பாக இருக்கும். அரசியல் அறிந்தவர்களோ, “இதெல்லாம் சகஜமப்பா” என்று எடுத்துக் கொள்வார்கள். அரசு அலுவலகங்களுக்கென்று நன்கு ஓடும் நிலையில் அரசு வாகனங்கள் இருந்தபோதும், அதிகாரிகள் அவற்றைப் பயன்படுத்தாமல் வெளியாருக்குச் சொந்தமான வாகனங்களை ஒப்பந்த சேவை அடிப்படையில் அமர்த்திக் கொள்கிறார்கள். இதனால் பணி எதுமின்றி தாங்கள் சும்மாகவே இருப்பதாகவும், பிற்காலத்தில் இதையே காரணங்காட்டித் தமது வேலை பறிக்கப்படும் என்று அஞ்சுவதாகவும் பொள்ளாச்சி அரசு வாகன ஓட்டுனர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பொள்ளாச்சி அரசு வாகன ஓட்டுநர்கள் எழுப்பியிருக்கும் இந்தப் பிரச்சினை அரசின் எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். போலீசு, தொலைத் தொடர்புத் துறை (பி.எஸ்.என்.எல்.), மின்துறை போன்றவற்றிலும் இதே கதைதான்!

இதனால், அரசுக்கோ இரட்டை நட்டம். வேலை வழங்கப்படாத அரசு வாகன ஓட்டுநர்களுக்கு ஊதியம் மற்றும் தனியார் வாகனங்கள் ஒப்பந்த சேவைக்காக அமர்த்துவதால் செலவு என்று மக்கள் பணம் வீணடிக்கப்படுகின்றது. மக்கள் நலப் பணிகளுக்காகவும் இலவசமாகவும், குறிப்பாக விவசாயிகளுக்கு மானியமாகவும், கடன்-வட்டி தள்ளுபடியாகவும் அரசுப் பணம் செலவழிக்கப்படுவது குறித்து மண்டை வீங்கிப்போகும் பார்ப்பனியக் குட்டி முதலாளிய அறிவுஜீவிகள் இந்த வகையிலான அரச ஒப்பந்தச் சேவைகள் அமர்த்தம் (OUTSOURCING) காரணமாக நாட்டிலேயே மிகப்பெரும் கொள்ளையாக மேலிருந்து கீழ்வரை கட்டமைக்கப்பட்டிருப்பது குறித்துக் கண்டுகொள்வதே கிடையாது.

குடிநீர் வினியோகம்
ஒப்பந்தச் சேவைகள் அமர்த்தம் என்ற முறையின் கீழ் நடக்கும் குடிநீர் வியாபாரக் கொள்ளை.

அரசுப் பணிகளில் ஒப்பந்தச் சேவைகள் அமர்த்தம் (OUT SOURCING) என்பது நமது நாட்டில் புதிதல்ல; காலனிய காலத்திலேயே புகுத்தப்பட்டதுதான். முக்கியமாக முதலாம், இரண்டாம் உலகப் போர்களின் போதே ஏகாதிபத்தியங்களின் நாடுபிடிக்கும் போர்களில் இராணுவத்திற்கான ஒப்பந்தச் சேவைகளில் ஈடுபட்ட இந்தியத் தரகு முதலாளிகள் தோன்றி, அப்போதே கோடி கோடியாக செல்வங்களைக் குவித்தனர். இவர்கள் மத்தியிலிருந்து நவீன இந்தியாவின் ஆளும் வர்க்கமாகத் தரகு முதலாளிகள் வலுப்பெற்றனர்.

காலனிய ஏகாதிபத்தியங்களின் தேவைக்காகக் கொண்டுவரப்பட்ட ஒப்பந்தச் சேவைகள் அமர்த்தமுறை (OUTSOURCING) அவர்கள் புகுத்திய தனியார்மயம்-தாராளமயம்-உலகமயமாக்கம் ஆகிய புதிய பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாக 1980-களில் பன்முகமானதாக விரிவாக்கப்பட்டு, உள்நாட்டில் ஒப்பந்தச் சேவைகள் அமர்த்தமுறையோடு (OUT SOURCING) வெளிநாடுகளில் அயலக ஒப்பந்தச் சேவை அமர்த்தம் (OFF SHORING) என்று விரிவாக்கப்பட்டது. பொதுவில், ஒப்பந்தச் சேவை அமர்த்தம் எதுவானாலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் பிற செலவுகளைக் குறைத்து இலாபங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக செய்யப்படுவது.

குறிப்பாக, உலகின் மக்கள்தொகை மிகுந்த இரு பெரும் நாடுகளான இந்தியா, சீனா உள்ளிட்ட கீழை நாடுகள் மலிவான உழைப்புச் சந்தையைப் பெற்றுள்ளன. ஏராளமான மனிதவள ஆதாரங்களையும் உற்பத்தித் திறனையும் கொண்டுள்ளன. இந்தியாவும் சீனாவும், ஒவ்வொரு ஆண்டும் 2,00,000 பொறியாளர்கள் மற்றும் அறிவியல் பட்டதாரிகளை உருவாக்குகின்றன. மேலும், இரண்டு நாடுகளும் குறைந்த செலவு பிடிக்கும் ஒப்பந்தச் சேவையளிக்கும் நாடுகளாக உள்ளன. ஆகவே, இங்கு வெளிநாடுகளின் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கும் உள்நாட்டுக் கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களுக்கும் அயலக ஒப்பந்தச் சேவை அமர்த்தமுறையோடு (OFF SHORING) உள்நாட்டில் ஒப்பந்தச் சேவைகள் அமர்த்தமுறையும் (OUTSOURCING) முக்கியமானவையாகி விட்டன. இதனால், பல்வேறு வகையிலான சிறிய, பெரிய புதிய தரகு முதலாளிகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றனர். மேலும், ஏகாதிபத்தியங்களுக்கு சேவகஞ்செய்யும் சமூக ஆதரவு சக்திகளும் பெருகிக்கொண்டே போகின்றன.

ஆதார் அடையாள அட்டை தயாரிக்கும் பணி
தனியார் முதலாளிகளின் கொள்ளைக்காக ஒப்பந்தச் சேவை மூலம் நடக்கும் ஆதார் அடையாள அட்டை தயாரிக்கும் பணி.

ஏகாதிபத்தியங்கள், அவற்றின் ஏகபோகக் கார்ப்பரேட் நிறுவனங்கள், அயல்நாடுகளிலும் உள்நாட்டிலும் இலாப நோக்கத்தில் ஒப்பந்தச் சேவைகளை அமர்த்திக்கொள்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், மக்களின் நலனுக்காக, மக்கள் சேவைகளுக்காக செயல்படுவதாகச் சொல்லிக்கொள்ளும் அரசுகள் எதற்காக, எந்த நோக்கில் வெளியில் தனியாரிடம், அந்நியரிடம் ஒப்பந்தச் சேவைகள் அமர்த்திக் கொள்ள வேண்டும்? மக்களுக்கான நலன்கள், சேவைகள் செய்வதை நோக்கமாகக்கொண்டோ, தனது அரசு செலவுகளைக் குறைப்பதற்காகவோ இவ்வாறு செய்யவில்லை. அரசுப் பணத்தை, மக்கள் சொத்தை ஒப்பந்தச் சேவைகளுக்காக அரசு அமர்த்தும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களும், இவ்வாறான ஒப்பந்தங்கள் போடும் அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் கொள்ளையடிப்பதற்காகவே இந்த ஒப்பந்த முறை எல்லா அரசுத் துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

நமது நாட்டில் பார்ப்பன குட்டி முதலாளிய அறிவுஜீவிகளின் அவதாரக் கடவுள், ராஜாஜி எனப்படும் சிறீமான் ராஜகோபாலாச்சாரியார். அமெரிக்கத் தாசனான இவர், 1950-களிலேயே தனியார்மயம், தாராளமயம் கொள்கைக்காக வாதாடி, பார்ப்பன – பனியா கும்பலின் ஆதரவு பெற்ற (இன்றைய பா.ஜ.க.வின் பொருளாதாரப் பதிலி) சுதந்திரா கட்சியைத் தொடங்கி, நிலைநாட்ட எத்தனித்தவர். நேருவின் கலப்புப் பொருளாதாரக் கொள்கையைக் கடுமையாகச் சாடினார். காங்கிரசு ஆட்சியை லைசென்ஸ்-பர்மிட்-கோட்டா ராஜ்ஜியம் என்று ஏளனம் செய்தார். சோவியத் ஒன்றியத்தின் உதவியுடன் வந்த அரசுத் துறைத் தொழில்களை வெள்ளை யானைகளைக் கட்டி மேய்க்கும் வேலை என்று கேலி பேசினார். எதற்கு? எல்லாம் பார்ப்பன-பனியா-மார்வாரி-பார்சி தரகு முதலாளிகளின் கொள்ளைக்கு முழுமையாகத் திறந்து விடவேண்டும் என்பதற்காக! எல்லாம் தனியார்மயமாக்க வேண்டும் என்பதற்காக!

ஆவின் பால் ஊழல் பேர்வழி வைத்தியநாதன்
ஆவின் பால் ஊழல் பேர்வழி வைத்தியநாதன்

இப்போது அதனால்தான் தனியார்மயமாக்கம் அதற்குமேலே போய் நாலுகால் பாய்ச்சலில் நடக்கிறது. அரசுத்துறை தொழில்கள் எல்லாம் பார்ப்பன – பனியா – மார்வாரி – பார்சி தரகு முதலாளிகளின் கொள்ளைக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. அரச ஒப்பந்தச் சேவைகள் அமர்த்தம் (OUTSOURCING) என்பது இப்போது பலபரிமாணங்களைக் கொண்டதாகவும் பூதாகரமானதாகவும் எங்கும் விரவி ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மக்கள் பணத்தை விழுங்கி ஏப்பம் விடுவதாகவும் வளர்ந்து விட்டது.

தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கம் முதலிய புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்டபிறகு கட்டுமான மறுசீரமைப்பு, சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அரசின் மக்கள் நலப் பணிகள் அனைத்துக்கும் மூடுவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இருந்தாலும், நமது நாட்டில் ஜனநாயகம் என்ற பெயரில் சட்டமன்ற, நாடாளுமன்ற அமைப்பு முறைகளும் ஓட்டுக் கட்சி அரசியலும் இன்னமும் நீடிக்கின்றன. ஆகவேதான், மக்களின் அடிப்படைத் தேவைகளான குடியிருப்பு, கழிப்பிடம், உணவு-குடிதண்ணீர், அடிப்படைக் கல்வி, சுகாதாரம், மருத்துவம், சாலை-நடைபாதை, இடுகாடு, இயற்கைப் பேரிடர்-போர்கள் நிகழும்போது நிவாரணங்கள், கொள்ளை நோய்கள் தாக்கும்போது தடுப்பு நடவடிக்கைகள் போன்ற குறைந்தபட்ச மக்கள் நலச் சேவைகளை, தேவைகளை செய்து கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசு இருக்கிறது.

ஆனால், புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகு, பொதுவில் அரசுப் பணிகளுக்கும், குறிப்பாக மேற்கண்டவாறான மக்கள் நலப் பணிகளுக்கும், அடிப்படைத் தேவைகளுக்குமான பழைய அரசுக் கட்டுமான அமைப்புகள் எல்லாம் சிறுகச் சிறுகக் கலைக்கப்படுகின்றன. ஆட்குறைப்பும் வேலைச் சுமை ஏற்றமும் செய்யப்படுகின்றன. அல்லது புதிதாக வேலைக்கு ஆட்சேர்ப்பதில்லை; பல அரசுப் பணிகளுக்கான இடங்கள் காலியாக விடப்படுகின்றன. பல அரசுப் பணிகளுக்கு ஆட்சேர்ப்புக்கே தடை விதித்துள்ளனர்.

மேல்மட்ட அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், துணை இராணுவம் முதலிய அரச வன்முறை அமைப்புகள் தவிர, பிற எல்லா துறைகளிலும் எலும்புக்கூடு போன்ற வலைப் பின்னலாக அரசு மாற்றப்படுகின்றது. இந்த நிலையில், இனி மேற்கண்ட மக்கள் நலச் சேவைகளை, மக்களின் அடிப்படைத் தேவைகளை செய்து கொடுப்பது எந்த அமைப்புகள்?! இந்தக் கேள்விக்குப் பதிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான், அரச ஒப்பந்தச் சேவைகள் அமர்த்தம் என்ற முறை.

குடிதண்ணீர் தேடி மக்கள் தெருத்தெருவாய் அலைந்து கடைசியில் காலிக்குடங்களோடு சாலை மறியலில் இறங்கி தடியடிபட்டுக் கலைகிறார்கள். செய்தியாளர்கள் கேட்டால், மந்திரிகள் சொல்கிறார்கள்: “தெருவுக்குத் தெரு லாரிகளில் குடிதண்ணீர் சப்ளை செய்ய ஏற்பாடாகியுள்ளது.” குடம் தண்ணீர் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்காவது கிடைத்ததே என்று அன்றைய பொழுதுக்குப் பெருமூச்சு விடும் மக்களுக்குத் தெரியாது; இதெல்லாம் அரசின் ஒப்பந்தச் சேவைகள் அமர்த்தம் என்ற முறையின் கீழ் ஏற்பாடாகியுள்ளது. ஒருபுறம், பழைய குடிநீர்த் திட்டங்கள் பாழடைந்து போகின்றன. அவற்றைச் சரிசெய்து பராமரிப் பதற்கான நிதி ஒதுக்கீடுகளும் முயற்சிகளும் ஏதுமில்லை. புதிய திட்டங்களுக்கான ஏற்பாடுகளுமில்லை. மறுபுறம், ஆளும் கட்சிப் பொறுக்கி வியாபாரிகள் – முதலாளிகள் முதல் அந்நிய கார்ப்பரேட் வரை தனியார் தண்ணீர் வியாபாரிகளின் கொள்ளை கொடிகட்டிப் பறக்கிறது.

கிராமப்புறங்களில் இருந்து அரசின் ஆவின் பால் நிறுவனத்துக்கு லோடுகள் எடுத்துவரும் ஒப்பந்தச் சேவைக்கு ஆளுங்கட்சிப் பிரமுகர் வைத்தியநாதன் அமர்த்தப்பட்டார். பால் லோடுகள் எடுத்துவரும் வழியில் அவர் ஆட்களை வைத்து ஒரு நாளுக்குப் பல இலட்சம் லிட்டர் வீதம் பத்தாண்டுகளாகப் பாலைத் திருடி வெளிக்கம்பெனிக்கு விற்றுவிட்டு, ஆவின்பாலில் தண்ணீரைக் கலந்து பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளார். (அவர் பிடிபட்டு உச்சநீதிமன்றத்துக்கு பிணை கோரிப்போன வழக்கில் லோடுலாரி ஓட்டுநர்தான் குற்றவாளி என்று அரசே வாதாடியது.) தமிழ்நாட்டில் ஆற்றுமணல் தொழிலை ஏகபோகமாக அரசே எடுத்துக்கொண்ட பிறகு, மணல் வாருவதையும் லோடு செய்வதையும் தமிழகத்தின் ஏகபோக ஆற்றுமணற் கொள்ளை மஃபியா தலைவர்களான ஆறுமுகசாமியும் படிக்காசுவும் அரச ஒப்பந்தச் சேவைக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அரசு அனுமதியை மீறி ஆற்று மணலைக் கொள்ளையிட்டு பலமடங்கு விலைக்கு விற்று அம்மாவுக்குக் கப்பமும் கட்டுகின்றனர்.

இவை ஒருசில எடுத்துக்காட்டுகள்தாம். இன்னும் அதிர்ச்சியூட்டும் ஏராளமான அரசு ஒப்பந்தச் சேவை அமர்த்தங்கள் நடக்கின்றன. வாக்காளர் சேர்ப்பு, வாக்காளர் அடையாள அட்டைகள், பட்டியல் தயாரிப்பு, ஆதார் அடையாள அட்டை தயாரிப்பு, கட்டணக் கழிப்பறைகள் நடத்துவது, டாஸ்மாக் பார்கள் நடத்துவது, நகரங்களில் குப்பை அள்ளுவது முதல் வங்கிகளில் தானியங்கி பணம் வழங்கு இயந்திரங்களுக்கு ரொக்கப்பணம் லோடுசெய்வது (அதிலும் ஒப்பந்தச் சேவைகள் அமர்த்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள், கள்ளநோட்டுக்களை வைக்கின்றன) வரை பலப்பல அரசுப் பணிகளுக்கும் ஒப்பந்தச் சேவை அமர்த்தங்கள் நடக்கின்றன.

அரசுப் போக்குவரத்துப் பேருந்துகளில் நடத்துநர்கள் பயணச்சீட்டு வழங்கப் பயன்படுத்தும் கையடக்க இயந்திரங்கள்கூட நாள் வாடகை அடிப்படையில் ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்யப்பட்டுள்ளது. அது பழுதானால்கூட அதற்கும் ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்யப்பட்டுள்ளது. அம்மாதிரியான பயணச்சீட்டு வழங்கு இயந்திரங்கள் கால்நூற்றாண்டுக்கு முன்பே கோவை ஜி.டி.நாயுடு கண்டுபிடித்துப் பயன்படுத்தியிருக்கிறார். பயணச்சீட்டு வழங்கு இயந்திரங்களைச் சொந்தமாக வாங்குதைவிடப் பன்மடங்கு தொகையை ஆண்டாண்டு சேவை ஒப்பந்ததாரர்களுக்கு அரசு கொட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவுக்குப் பேசப்பட்ட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டு ஊழல்கள் இந்த வகையிலானவைதாம். அப்போட்டியின்போது ஏ.சி.க்கள், நாற்காலிகள், மின் விசிறிகள் அவற்றின் முழுவிலையைவிடக் கூடுதலான நாள் வாடகைக்கு ஒப்பந்தச் சேவை அடிப்டையில் அமர்த்தப்பட்டன. இதனால் ஐயாயிரம் கோடி ரூபாய்வரை ஊழல்கள் நடந்தன.

இம்மாதிரியான ஒப்பந்தச் சேவைகளுக்கு அரசு அமர்த்தும் செலவுத் தொகையை வைத்து அவற்றுக்கான எல்லாச் சாதனங்களையும் சொந்தமாக வாங்கிக் கொள்ளவும் முடியும். பல இலட்சம் பேருக்கு அரசு வேலையளிக்கவும் முடியும். இதெல்லாம் அரசு அதிகாரத்தை மக்களே கைப்பற்றிக் கொள்ளும்போது மட்டுமே நடக்கும். மக்கள் நலனுக்கு எதிராகக் கொள்ளையடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் பெரும் கார்ப்பரேட் தரகு முதலாளிகளிடம் அதிகாரம் இருக்கும்வரை நடக்காது.

____________________________
புதிய ஜனநாயகம், மே 2015
____________________________

தினமணி மேல் நம்பிக்கையில்லை – தினமணி வாசகர்கள்

15

த்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? நடுநிலை வேடம் போட்டு நமது எம்.ஜி.ஆருக்கு போட்டியாக எழுதி வந்த தினமணியை அம்பலப்படுத்தி வினவு தளத்தில் சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தற்போது தினமணி இணைய தளத்தில், ஜெயாவை ஆதரித்து ஆசிரியர் வைத்தி எழுதிய தலையங்கங்களின் கீழேயே தினமணி வாசகர்கள் கண்டித்து எழுதியிருக்கின்றனர்.

தினமணி கண்டிக்கப்பட்டது
வைத்தி அவர்களின் வேடம் இனியும் தெரியாது என்று யாரும் கருத முடியாது

ஆகவே வைத்தி அவர்களின் வேடம் இனியும் மறைக்க முடியாத ஒன்று. ஒரு சில வாசகர்கள் வினவு தளத்தில் வந்த கட்டுரைகளையே அங்கு பகுதி பகுதியாக போட்டிருக்கின்றனர். தினமணியின் இரு தலையங்கங்களுக்கு இணையத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்களை இங்கே தொகுத்து தருகிறோம்.

தமிழ் இணைய உலகில் பெரும் பத்திரிகைகளை அம்பலப்படுத்தி எழுதும் பணியினை நாம் மட்டும் செய்யவில்லை என்பதை இவ்வாசகர்கள் நிரூபித்திருக்கின்றனர். அவர்களின் உதவியோடு கைக்கூலிகளை தொடர்ந்து தோலுரிப்போம்.

இனி தினமணி என்பது நமது எம்.ஜி.ஆரின் இரண்டாவது பதிப்பு என்றே அறியப்படும். இதை சாதித்த இணைய  தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்கள்!

வினவு ஃபேஸ்புக்கில் பதியப்பட்ட கருத்துக்கள்

Balakrishnan Ammaiappan
நிமிர்ந்த நன்னடை,நேர்கொண்ட பார்வை,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்!!! தினமணி இப்படியா மாறவேண்டும்! அம்மாவிற்கு வாழ்த்துக் கூறுவதில் தவறில்லை. ஆனால்,நிமிர்ந்த நன்னடை கூனிக் குறுகிய நடையாக மாறிவிட்டதே! தினமணியின் நீண்ட கால வாசகன் என்ற முறையில் வருந்துகிறேன்.

May 12 at 4:16pm

வைத்தி
“தினமணி மேல் நம்பிக்கை இழந்து விட்டேன்… கடவுளே…..”

Muthaiah Muthusamy
I feel shame that I have purchased Dinamon (e) y..in 1960s itself

(1960களிலிருந்து தினமணியை வாங்கி படிப்பதற்கு வெட்கப்படுகிறேன்.)

இது ஜெயா விடுதலையை ஒட்டி வைத்தி எழுதிய தலையங்கத்திற்கு தினமணி இணையத் தளத்தில் வந்த கருத்துக்கள்.

Ram 12-05-2015 | 21:41:37

Shocking review by dinamani…. Lost faith on dinamani for first time….good…good…oh my god

(தினமணியின் அதிர்ச்சியூட்டும் விமர்சனம்….. முதன்முறையாக தினமணி மேல் நம்பிக்கை இழந்து விட்டேன்… கடவுளே…..)

____________

செ.நாராயணசாமி 12-05-2015 | 21:10:04

அவரவு செல்வுக் கணகில் கூட்டல் கழித்தலில் ஏற்பட்ட வெளிப்படையான தவற்றைக் கருநாடக அரசு வழக்குரைஞ்சர் ஆச்சாரியார் சுட்டிக் காட்டியுள்ளார். அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு மறு ஆய்விற்கு உரியது.

_____

M.Guna 12-05-2015 | 20:21:07

என்னடா பத்திரிகை நடத்துரிங்க? ஊழல் அரசியல்வாதியும் ,கூட்டாளிகளும் ஒரு ஊழல் நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டதை பாராட்டுகிராய்? உன் இனத்தை சேர்ந்தவன் ஊழல் செய்தால் அது சரி. ஆனால் மற்றவர்கள் ஊழல் செய்தால் தவறு. இந்த நிலை எடுக்கும் நீ வேறு தொழில் செய்து பணம் சேர்க்கலாம்.
______________

வைத்தி - ஜெயா
உன் இனத்தை சேர்ந்தவன் ஊழல் செய்தால் அது சரி. ஆனால் மற்றவர்கள் ஊழல் செய்தால் தவறு. இந்த நிலை எடுக்கும் நீ வேறு தொழில் செய்து பணம் சேர்க்கலாம்.

mohanan 12-05-2015 | 18:58:11

மீண்டும் தினமணி பதிவு செய்யும், ஜெயலலிதா குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும்பொழுது. சங்கரராமன் கொலை வழக்கு போன்ற இந்த தீர்ப்பும் வளைக்கபட்டுள்ளது ஒரு குறிப்பிட்ட இனத்தினரால். இந்த தீர்ப்பு நீதிக்கு ஒரு பெரிய பின்னடைவு.
______________

babu 12-05-2015 | 18:06:57

தினமணியே நீ பத்திரிகை தொழில் செய்வதைவிட வேறு ………….தொழில் செய்வது நல்லது

______________

nontha indian 12-05-2015 | 17:34:17

தினமணி அவசரப்பட்டு தலையங்கம் தீட்டியிருக்கிறது. இன்று , திரு. ஆச்சார்யா அவர்கள் தீர்ப்பை எல்லாம் படித்து பார்த்து, கூட்டலில் ஒரு தவறை கண்டு பிடித்திருக்கிறார். குமாரசாமி ,ஒரு கூட்டலை கூட சரியாக verify செய்ய வில்லையா? ஒரு சாதாரண ஐந்தாம் வகுப்பு பையன் கூட இதை சரியாக கூட்டுவானே. கேவலம்.

Devar 12-05-2015 | 16:11:16

மீண்டும் முதல்வராவதன் மூலம் ஜெயலலிதா சமன் செய்தால் வியப்படையத் தேவையில்லை’ என்பதுதான் அது. மீண்டும் ஜயிலுக்கு போவது உறுதி. எனென்றால் தவறான தீர்ப்பு. இந்தியாவே திகைப்பில் உள்ளது. கோடிக்கும் ஜெயாவுக்கு திருமணம் என பத்திரிக்கைகள் ஏளனம் செய்கிறது. குருட்டு தினமணி மட்டும் ______ காட்டுகிறது . இனத்தின் பற்று . மீண்டும் ஜெயில் உறுதி.

siva sydeny 12-05-2015 | 15:55:37

is this dinamani or namathu mgr. இது தினமணியா இல்லை நமது எம்.ஜி.ஆரா? (நமது எம்.ஜி.ஆர் – அ.தி.மு.கவின் தினசரி.)

ஜெயாவுக்கு வைத்தி ஆதரவு
“முதலில் தீர்ப்பை படித்து விட்டு பேசலாமே? தினமணியின் பெயரை கெடுக்காதீர்கள். “

selvanathan 12-05-2015 | 18:58:37

After seeing the Judgment copy, you must give your comments. How many years you are in the field of publication. Do not say in hurry manner to give your open comments. Please apply your mind in the judgment copy and tell your open comments. Do not spoil your name of the publication. Please Publish your apologies in the next edition, otherwise, you will loose your name.

(தீர்ப்பை நேரடியாக படித்து விட்டே நீங்கள் உங்களது விமரிசனங்களை தெரிவிக்க வேண்டும். ஊடகத்துறையில் நீங்கள் எவ்வளவு ஆண்டுகளாக இருக்கிறீர்கள்? அவசர அவசரமான கருத்துக்களை வெளியிடாதீர். முதலில் தீர்ப்பை நிதானமாக படித்து விட்டு பேசலாமே? தினமணியின் பெயரை கெடுக்காதீர்கள். அடுத்த நாளாவது உங்களது மன்னிப்பை வெளியிடுங்கள், இல்லையேல் உங்களது பெயர் கெட்டுப் போகும்.)

Ranganathan Thirunavukkarasu 12-05-2015 | 13:26:40

ஏண்டா மானகெட்ட மாங்கா நீ எல்லாம் திருந்தமாட்டியா? நடுநிலை நாளேடு என்று கூறாமல் அ.தி.மு.க நாளிதழ் என்று மாற்றிகொண்டால் என்போன்றோர் கவலைபடமாட்டோம். இங்கேதான் ஜாதிபுத்தி தெரிகின்றது.

Ravanan Ramachandran 12-05-2015 | 12:34:32

10 ரூபாய் வாங்கினாலும் 100 ரூபாய் வாங்கினாலும் குற்றம் குற்றமே. இதே மாதிரி திருடன் ஒரு வீட்டில் புகுந்து சிறிய பொருட்களை திருடினால் நீதிமன்றம் அவனை விடுதலை செய்து விடுமா? வசதி படைத்தவர்களுக்கு ஒரு நீதி …ஏழை பாமரனுக்கு ஒரு நீதியா?. நமது இந்திய நாட்டில் தான் இந்த மாதிரி தீர்ப்புகள் எல்லாம் வரும். கர்நாடக அரசு நீதிபதி கூறியது போல அவருக்கு விளக்கமளிக்க ஏன் ஒரே ஒரு நாள் வழங்கப்பட்டது?. கலைஞர் கூறியது போல எல்லா முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டு முடிவுகள் கிடைக்க பெற்றனவா?

வைத்தி குற்றக் கூண்டில்
entha ஒரு மாநில முதல்வரும் இதுவரையில் படைக்காத சாதனையை இந்த முன்னாள் முதல்வர் படைத்ததை தினமணி ஆசரியர் ஏன் மறைத்து vittaar?

குமாரசாமி ஜனவரி மாதத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் விடைகள் கிடைத்துவிட்டதா?. மாத சம்பளம் 1 ரூபாய் வாங்கிய முதல்வருக்கு இவ்வளவு சொத்துக்கள் எப்படி கிடைத்தது என்று நீதிபதி கணிக்க தவறியது ஏன்?, இந்தியாவில் உள்ள அனைத்து சட்ட நிபுணர்களும் எதிர்பார்க்காத அளவுக்கு இந்த மாதிரி தீர்ப்பு எப்படி இவரால் மட்டும் வழங்க முடிந்தது?. இடையில் நடந்தது என்ன?.

entha ஒரு மாநில முதல்வரும் இதுவரையில் படைக்காத சாதனையை இந்த முன்னாள் முதல்வர் படைத்ததை தினமணி ஆசரியர் ஏன் மறைத்து vittaar? . பதவியில் இருக்கும்போதே ஊழலுக்கு தண்டிக்கபட்டு சிறை சென்ற முதல் முதல்வர் என்ற சாதனையை. இதற்கு பெயர்தான் நமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையோ?.ஊழலுக்கு குற்றம் சாற்றபட்டவர் வேறு ஒருவருக்கு இந்த மாதிரி தீர்ப்பு வெளி வந்தால் ஆசிரியர் இதே மாதிரி தலையங்கம் எழுத முன் வருவாரா? எழுத மனம் இடம் கொடுக்குமா? dinamaniyaal இந்த மாதிரியாக தான் தலைஅங்கம் எழுத mudiyum என்று அனைத்து வாசகர்களுக்கும் தெரிந்த ஒன்றுதான்.

KUMAR 12-05-2015 | 11:49:01

SIR, YOUR DAILY USED TO HAVE A GOOD RESPECT AND VALUE AMONG PEOPLE. BUT TODAY THE WAY YOU WROTE THE EDITORS COLUMN,IT IS REALLY PATHETIC TO WATCH YOUR SUBMISSION. IT SEEMS THAT YOU WANT TO SAVE YOUR SKIN FOR ANY BACKLASH YOU STARTRED APPEASEMENT. IT HAS BECOME A TREND. LONG LIVE .SUCH DEVOTION TO CONTINUE AND MAKE THE COUNTRY FOOL.

(ஐயா, உங்கள் பத்திரிகை மக்களால் மரியாதையுடன் மதிக்கப்பட்டு வந்த ஒரு இதழ். ஆனால் இன்று உங்களால் எழுதப்பட்டிருக்கும் தலையங்கத்தின் வாத முறைகளை பார்க்கும் போது, உங்கள் அடிபணிதலைக் கண்டு பரிதாபமாக இருக்கிறது. இதைப் பார்க்கும் போது உங்களது தோலை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியிலேயே இந்த சரணடைதல் ஆரம்பிக்கிறது போலும். இதுதான் இன்றைய பாணி போலும். வாழ்க. இந்த அர்ப்பணிப்பு இந்த நாட்டை நாசமாக்கட்டும்!

தினமணியை புறக்கணிக்க...
“ஆக மொத்தம் தினமணியை புறக்கணிக்கும் தருணம் வந்து விட்டது.”

Manoharan Iyyadurai 12-05-2015 | 11:07:31

நண்பர் சீனிவாசன் கருத்தை வரவேற்கிறேன். அ.தி.மு.க பிரச்சார பீரங்கியாகவே மாறிவிட்டது. ஒரு வேளை மனு தர்மம் வேலை செய்கிறதோ என்னவோ. ஆக மொத்தம் தினமணியை புறக்கணிக்கும் தருணம் வந்து விட்டது.

Jothikrishnan 12-05-2015 | 10:25:32

யாரெல்லாம் இதுவரைக்கும் இந்த பத்திரிக்கைக்கு ஆதரவு குடுதிங்கலோ…..இனிமே இந்த குப்பைய தூக்கி எறியுங்கள் ….. வெக்கமே இல்லாம ஒரு தலையங்கம் வேற…

Jothikrishnan 12-05-2015 | 10:22:40

இந்த ஒரு பத்திரிக்கை தான் உருப்படின்னு நெனச்சேன்…..__ங்க எல்லாருக்குமே ஊழல்ங்கறது சாதரணமா போச்சு….கேவலமான தலையங்கம்… இதுக்கு நீகல்லாம் போயி பிச்சை எடுங்க__….நிரபராதி அம்மா தான் 18 வருசமா வாய்தா வாங்கி இழுத்தடிச்சுதா….தூ …

sk 12-05-2015 | 10:16:51

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை — இதை முதலில் தூக்கி எறியுங்கள் …தினமணியிடம் இந்த மாதிரி ஒரு கேவலமான தலையங்கத்தை நாம் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் குன்ஹா அவர்கள் கொடுத்த தீர்ப்பு சரியில்லை என்று எந்த விதத்தில் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை…இவ்வளவு காலம் தினமணி என்ற பத்திரிகையை படித்ததற்கு வேதனை படுகிறேன் …பணத்திருக்கு பிணம் தின்னும் கூட்டத்தில் தினமணியும் ஒன்று இப்போது புரிகிறது ….

FIRTHOUSE ALI 12-05-2015 | 10:14:36

ஊடகங்கள்
திரு வைத்தியநாதன் அய்யா அவர்களே! பலே! பலே! …. என்ன ஒரு அற்புதமான தலையங்கம்…….. மிக்க மகிழ்ச்சி…

திரு வைத்தியநாதன் அய்யா அவர்களே! பலே! பலே! …. என்ன ஒரு அற்புதமான தலையங்கம்…….. மிக்க மகிழ்ச்சி… கருணாநிதியும், ஜெயாவும் ஊழல் பேர்வழிகள் அவர்கள் மட்டுமல்ல இந்த இந்த இந்தியாவில் உள்ள 95 % அரசியல்வாதிகள் ஊழல் பேர்வழிகள் தான்.. என்ன ஒரு வித்தியாசம் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் தன்னுடைய கட்சிகாரர்கள் ஆதாயம் அடைய உதவுகிறார்….. கலைஞர் அவர்கள் தன்னுடைய குடும்பம் ஆதாயம் அடைய உதவுகிறார்….. 18 ஆண்டு காலம் ஒரு வழக்கை ஏன் இழுத்தடித்தார் அந்த அம்மையார் இது ஒரு அரசியல் பழிவாங்கும் வழக்காக இருந்து இருந்தால்…. வழக்கை சீக்கிரம் முடித்து இருந்தால் அது அவருக்குத்தானே நன்மையாக அமைந்து இருக்கும்………. பின் தேதியிட்ட சட்டத்தால் பாதிக்கபட்டது அந்த அம்மையார் தானே!!!! தலையங்கத்தை கட்சிகளுக்காக எழுதாமல் மக்களுக்கு பயன்பெறும் வகையில் எழுந்துங்கள்………. ஒரு அரசு மக்கள் நலப்பணிகள் எதையும் செய்யாமல் ஆறு மாதம் வாழ இருந்தந்தை குறை இல்லை என்று கூற ஒரு மதிப்பு மிகுந்த பத்திரிக்கையின் ஆசிரியரான உங்களுக்கு எப்படி மனது வந்தது…………….

srinivasan 12-05-2015 | 10:14:22

தினமணி என்பதை நமது எம்ஜிஆர்,என்று மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்

Muthukumaran 12-05-2015 | 09:33:56

” ஒருதலைபட்சமான விசாரணை, தீர்ப்பு: அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து ” – இதுக்கு பெயர்தான் தினமணியின் நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையா !!!???

கீழ்க்கண்ட கருத்துக்கள் பவானி சிங் நீக்கத்தை ஒட்டி தினமணி எழுதிய தலையங்கத்தை ஒட்டி வாசகர்கள் எழுதியவை.

A.ARUNAGIRI 13-05-2015 | 17:16:09

mannikkavum ithupondra oruthalai patchamaana thalaiyangathai dinamaniyil ethirpaarkkavillai, nadunilamai thavariyathaal eni dinamani vendaam ena enathu paperkaararidam sollivitten. dinamanin peyaaaaaaaril karuppu,vellai sigappu saayam

poosikollavendiyathuthane innum thayakkam. aasiriyarukku viravil maavatta seyalaalar pathavi kidaikkum.

தினமணி கார்ட்டூன்
ஜெயாவுக்கு தண்டனை வழங்கிய தீர்ப்பு வெளியானதும் தினமணி வெளியிட்ட கார்ட்டூன்

மன்னிக்கவும் இதுபோன்ற ஒருதலைபட்ச்சமான தலையங்கத்தை தினமணியில் எதிர்பார்க்கவில்லை. நடுநிலைமை தவறியதால் இனி தினமணி வேண்டாம் என எனது பேப்பர்காரரிடம் சொல்லிவிட்டேன். தினமணியில் கருப்பு வெள்ளை சிவப்பு சாயம் (அ.தி.மு.க வண்ணம்) பூசிக் கொள்ள வேண்டியதுதானே இன்னும் தயக்கம் ஏன். ஆசிரியருக்கு விரைவில் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும்.

GOTHANDARAMAN R 29-04-2015 | 14:59:12

மட்டமான தலையங்கம். தினமணி தரம் தாழ்ந்து வருகிறது.

சிவ.தணிகாசலம், நாமக்கல்கவிஞர் பேரவை, நாமக்கல் 28-04-2015 | 21:14:53

மாநில அரசின் விளம்பரம் வேண்டுமெனில், அதை நேரடியாக மக்களின் முதல்வர் அம்மா அவர்களைச் சந்தித்தே, தினமணி ஆசிரியர் கேட்டுக் கொண்டிருக்கலாமே? அதை விடுத்து.., நீதிபதியை மற்றும் நீதிமன்றத் தீர்ப்பைத் தினமணி விமரிசிப்பது எங்கே போய்முடியப் போகிறதோ? பாரதியாரின் வரிகளைத் தினமணியின் முகப்பில் அச்சிடுவதை தயவு செய்து முதலில் நிறுத்திவிட்டு எதை வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள்!

KARTHIKEYAN 28-04-2015 | 19:02:25

தலையங்கம் எழுதிய ஆசிரியர்க்கு தெரியாதா, ஜெயலலிதா இந்த வழக்கு நீர்த்து போக எத்தனை ரிட், எத்தனை பெடிசென், எத்தனை வாய்தா போட்டார் என்று. பொது மனிதராக யோசியுங்கள் , உங்கள் வாசகரை முட்டாள் ஆக்காதீர்கள் . மனசாட்சி படி எழுகுங்கள் .

Mohanan 28-04-2015 | 17:46:45

இது தலைமை நீதி மன்றத்தை அவமதிக்கும் செயல். பவானி சிங் தவறாக வழக்கை வழிநடத்தும் போதோ அல்லது TANSI வழக்கின் தீர்ப்பின் போதோ இதுபோல் தலையங்கம் வந்திருந்தால் உங்கள் தலையங்கம் நடு நிலையானது என்று ஏற்க்கலாம். இது ஒரு சார்பான, ஜெயலலிதாவிற்கு சாதகமான தலையங்கம்.

Deivasahayam 28-04-2015 | 16:36:51

ஆசிரியரின் வாதம் ” ஜெயலலிதா வழக்கை இழுத்தடிக்கிறார் என்று எதிக்கட்சிகள் குற்றம் சாட்டினர் ” என்பது . அறிவுஜீவி ஆசிரியரே நீங்கள் அப்படி எண்ணவில்லையா அல்லது எண்ண விருப்பம் இல்லையா அல்லது தாங்கள் அ.தி. மு. க வில் உறுப்பினரா?

மரமண்டை 29-04-2015 | 10:44:33

என்ன தீர்ப்பு சொல்றீங்களா? நீங்க எப்ப  லா படிச்சி முடிச்சீங்க? இல்லை கோர்ட்லே ஒரு டவாலியாவது இருந்திருக்கிறீங்களா? உச்ச நீதி மன்றத்துக்கே அறிவுரை சொல்லுமளவுக்கு நம்ம வைத்தி வளர்ந்துள்ளதை பார்த்து ரொம்ப பெருமையா இருக்குங்க.

Ranganathan Thirunavukkarasu 28-04-2015 | 13:42:10

நீதிபதிகள் குறிபிட்ட கருத்தை தவிர்த்திருக்கலாம் என்று தலையங்கம் எழுதி ஜால்ரா என்பதை அப்பட்டமாக காட்டிகொள்ளும் நீங்கள் இந்தபணிக்கு தகுதியுடையவர்கள்தானா?

devar 28-04-2015 | 12:24:21

அதாவது என்ன சொல்கிறான் இந்த தினமணி. குற்றவாளி ஜெயலலிதா எதை செய்தாலும் அதை கண்டிக்க கூடாது. எதிர்களைமட்டுமே கண்டிக்கனும். முட்டபய தினமணிக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளி (தமிழ்நாடு ) அவர்களை எதிர்க்க அவர்களே வக்கிலை நியமிக்க வேண்டுமாம். என்னே நீதி. இந்த பாவாடை சிங்க ஏற்கனவே எத்தனை முறை கண்டித்தார்கள் அடங்கினான இந்த பவானி. ஜெயலலிதா அட்டுழியம் செய்யவில்லையா . அதற்குதானே இதே ஜெய குற்றவாளி தேர்தலிலும் தொற்கடிக்கபட்டார். அடிபட்டும் புத்தி வராத தினமணி. எவ்வளவு முறை கலைஞர் மீது வேண்டும் என்றே ஊழல் குற்ற சாட்டு சொன்ன கும்பல் எதையும் நிருபிக்க வில்லை .

ஜெயா – சசி கும்பல் மீதான குற்றப் பட்டியல் – 1996 ம.க.இ.க ஆவணம்

17

1991-1995 முதலாவது ஆட்சிக்காலத்தில் ஜெயா-சசி கும்பல் ஆற்றிய ‘சாதனையின்’ ஆவணத் (ஆணவத்) தொகுப்பு இது. முழு தமிழகத்தையே கேட்பார் கேள்வியின்றி கொள்ளையடித்தன் விளைவாக அடுத்து வந்த சட்ட மன்ற தேர்தலில் ஜெயா-சசி கும்பல் மக்களால் செருப்படியுடன் துரத்தப்பட்டது.

இந்த ஆட்சிக்காலம் முழுவதிலும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் பாசிச ஜெயா கும்பலை எதிர்த்து போர்க்குணத்துடன் போராடி வந்தன. அதன் முத்தாய்ப்பாக 1996-ல், “ஜெயா-சசி கும்பல் மீதான குற்றப் பட்டியல்” என்ற தலைப்பில் ரூ 2 விலையில் இச்சிறு வெளியீடு கொண்டு வரப்பட்டது.  அன்றைய காலத்திலேயே ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் மக்களிடையே விற்கப்பட்டன.

இதன் இறுதியாக ஜெயா சசி கும்பலின் சொத்துக்களை கைப்பற்றுவோம், நீதிமன்றமும், சட்ட மன்றமும் அக்கும்பலை தண்டிக்காது எனும் முழக்கங்களுடன் தஞ்சை வினோதகன் மருத்துவமனை (ஜெயா-சசி கும்பலின் சொத்துக்களில் ஒன்று) கைப்பற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஆவணத்தை இங்கே வெளியிடுகிறோம்.

– வினவு

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

ஜெயலலிதா சசிகலா கும்பலிடமிருந்து ஆட்சியதிகாரத்தைப் பிடுங்கி விட்டார்கள், தமிழக மக்கள். ஆனால், கோடி கோடியாய் அவர்கள் கொள்ளையடித்த மக்கள் சொத்துக்களை யார் பிடுங்குவது? என்றைக்குப் பிடுங்குவது? அவர்கள் புரிந்த கிரிமினல் குற்றங்களுக்கு எப்போதுதான் தண்டனை வழங்குவது?

5 ஆண்டுகள் ஆளலாம், அகப்பட்டதைச் சுருட்டலாம். தேர்தலில் தோற்றுவிட்டால் கொள்ளையடித்த காசை வைத்து உல்லாசமாக அனுபவித்து விட்டு, ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் தேர்தலில் போட்டியிடலாம்; இதுதான் ஓட்டுச்சீட்டு அரசியலில் இன்றுவரை உள்ள நடைமுறை. இந்த நடைமுறையைப் பின்பற்றி தாங்களும் அடித்த கொள்ளையுடன் தப்பி விடலாம் என்று கணக்குப் போடுகிறது, ஜெயா – சசி கும்பல்.

அதனால்தான் ஜெ.ஜெ. டி.வி.யின் அந்நிய செலவாணி மோசடி பற்றி பத்திரிகை நிருபர் கேள்வி கேட்டபோது, ’’யார் செய்யவில்லை?’’ என்று திமிராகத் திருப்பிக் கேட்கிறார், ஜெயலலிதா. ’’என்னைப் பழிவாங்கத் திட்டம் போடுகிறார், கருணாநிதி’’ என்று கூறி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

சசிகலா நீக்கம்: பாசிச ஜெயாவை போற்றும் பார்ப்பன ஊடகங்கள்!’’பழிவாங்க மாட்டோம்’’ ’’சட்டம் அதன் கடமையைச் செய்யும்’’ என்று வாக்குறுதியளிக்கிறார் முதல்வர் கருணாநிதி. சட்டம் தன்னுடைய கடமையைச் செய்த லட்சணத்தை நாம் பார்க்கவில்லையா என்ன? கடந்த 5 ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள் ஜெயலலிதா மீது நீதிமன்றத்தில் போட்ட வழக்குகள் எத்தனை? கவர்னருக்கு அளித்த மனுக்கள் எத்தனை? அவற்றால் விளைந்த பயன் என்ன?

நூறும், இருநூறும் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு போகப்பட்ட சிறுவர்கள் வழக்கு, விசாரணை எதுவுமின்றி லாக் அப்பில் வைத்து அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார்கள், ஜெயலலிதாவின் ஆட்சியில்.

ஜேப்படி திருடனுக்கு ஒரு நீதி. ஜெயலலிதாவுக்கு ஒரு நீதியா? நம்பி வாக்களித்த மக்களை மோசடி செய்து தமிழகத்தையே தங்கள் பரம்பரை சொத்தாகவும், அரசு கஜானாவை தங்கள் சொந்த பணப்பெட்டியாகவும் மாற்றிக்கொண்ட ஜெயா – சசி கும்பலுக்கு என்ன தண்டனை? தேர்தல் தோல்விதான் தண்டனையா?

மறக்க முடியுமா? மன்னிக்க முடியுமா?

ஜெயா – சசி கும்பல் நிலத்தை வளைக்காத ஊர் ஒன்று உண்டா? அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் திருடாத அரசுத் திட்டம் ஒன்று உண்டா? அ.தி.மு.க. கொள்ளைக் கூட்டத்திற்கு கப்பம் கட்டாமல் அரசுத் துறையில் வேலை வாங்கிய ஆள் ஒருவர் உண்டா? பத்திரிகைகளில் ஊழல் செய்தி வெளிவராத நாள் ஒன்று உண்டா?

ஜெயா – சசி கும்பல் அடித்த கொள்ளை பற்றி சில விவரங்களை மட்டும் தொகுத்துத் தருகிறோம். அடித்த கொள்ளையில் அரைப்பங்கு கூட பத்திரிகைகளில் அம்பலமாகவில்லை. அவ்வாறு அம்பலமானவற்றில் அரைப்பங்கைக் கூட நாங்கள் தற்போது வெளியிடவில்லை. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சிப் பிரமுகர்கள், அதிகாரிகள், பினாமி முதலாளிகள் ஆகியோர் அடங்கிய கொள்ளைக் கூட்டம் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தை சூறையாடிய விவரங்கள் அனைத்தையும் வெளியிட்டால், அது அளவில் ’ஆக்ஸ்போடு’ அகராதிக்கு இணையாக இருக்கும். அவ்வாறு அச்சிடக் கூட எங்களிடம் காசு இல்லை.

ஜெயா - ச்சி - சோ : அதிகாரச் சூதாட்டம்’’அவசரப்பட்டு பழிவாங்க மாட்டோம்’’ என்று சட்டசபையில் பேசியிருக்கிறார், அமைச்சர் அன்பழகன். அவசர நடவடிக்கை அவசியமா இல்லையா என்பதை இவ்வெளியீட்டைப் படித்த பின் நீங்கள் முடிவு செய்யுங்கள்!

1. வாங்கிக் குவிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்கள்

2. ஆடம்பர அடுக்கு மாளிகைகள் – வீட்டு மனைகள்

3. ஆலைகள் – தொழில்களில் முதலீடு

4. அந்நிய நாடுகளில் போடப்பட்டுள்ள முதலீடுகள்

5. ஊழல்கள் – மோசடிகள் – முறைகேடுகள்

6. ஊழலுக்குத் துணைநின்ற உயர் அதிகாரிகள்

7. பினாமி முதலாளிகள்

8. பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பாய் விரிப்பு

9. கோயில் கொள்ளைகள்

10. ஜெயா ஆட்சியில் போலீசின் கற்பழிப்பு லாக்-அப் கொலைகள்

11. நியாயம் கேட்போருக்கு எதிராக அ.தி.மு.க ரவுடிகளின் தாக்குதல்

(விபரங்கள் பதிவின் இறுதியில்)

நீங்கள் படித்தது ஜெயா – சசி கும்பல் அடித்த கொள்ளை மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளின் அரைகுறை பட்டியல். கடந்த 5 ஆண்டுகளில் கோடீசுவரன் ஆகாத அமைச்சனோ, எம்.எல்.ஏ-யோ யாரும் கிடையாது. குறைந்தபட்சம் லட்சாதிபதி ஆகாத வட்டச் செயலர்கள் கிடையாது.

’’கடைசிக் காசு வரை பறிமுதல் செய்து கஜானாவில் சேர்ப்போம்’’ என்ற தனது தேர்தல் வாக்குறுதிக்கு விசுவாசமாகவும், நாணயமாகவும் தி.மு.க அரசு நடந்து கொள்ளுமேயானால், அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் பல்லாயிரம் கோடி பணத்தையும், தங்கத்தையும், வைரத்தையும் பாதுகாப்பாக வைப்பதற்கென்றே புதிய கருவூலங்களைக் கட்ட வேண்டியிருக்கும். அ.தி.மு.க என்ற பெயர் கொண்ட கிரிமினல் கும்பலை அடைப்பதற்கென்றே புதிய சிறைச்சாலைகள் கட்ட வேண்டியிருக்கும்.

எத்தனை நூறு கோடி கொள்ளையடிக்கப்பட்டது, எத்தனை ஏக்கர் நிலம் வளைக்கப்பட்டது என்ற பொருளாதார புள்ளி விவரம் மட்டும் போதாது. அத்தகைய லஞ்ச, ஊழல், அதிகார முறைகேடுகளால் எத்தனை ஆயிரம் விவசாயிகள் நிலத்தை இழந்தனர், எத்தனை ஆயிரம் ஏழைகள் வீடுகளை இழந்தனர், எத்தனை ஏழைகள் அரசு மருத்துவமனையில் சரியான மருந்தின்றி உயிரை இழந்தனர், எத்தனை குழந்தைகள் கல்வி இழந்தனர், விஷ சாராயத்திற்கு கணவனைப் பறிகொடுத்து எத்தனை பெண்கள் தாலி அறுத்தனர் – என்ற விவரங்கள் வேண்டும். அவை தெரியவரும்போது புதிதாக பல தூக்குமரங்கள் நிறுவ வேண்டியிருக்கும்.

ஜெயா - ச்சி - சோ : அதிகாரச் சூதாட்டம்நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றி அவர்களின் வாழ்க்கையை சூறையாடும் ’பொருளாதாரக் குற்றம்’, தனிப்பட்ட பகைமையினால் செய்யப்படும் கொலையைக் காட்டிலும் கொடிய குற்றமல்லவா?

ஊழல் பட்டியலைக் கொஞ்சம் பாருங்கள் – காடுகள், மலைகள், ஆறுகள், கனி வளங்கள், கட்டிடங்கள், காலி மனைகள், கோவில்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சத்துணவு, முட்டை, இலவச சேலை, சுடுகாட்டுக் கூரை… எதை விட்டு வைத்தார்கள்?

‘பொதுச்சொத்தைக் கொள்ளையடிப்பது பொது வாழ்வில் ஈடுபடும் அரசியல்வாதியின் அடிப்படை உரிமை’ என்ற இலக்கணத்தையே உருவாக்கி, தமிழகத்தின் அரசியல் பண்பாட்டையே அருவருக்கத்தக்கதாக மாற்றிய இந்தக் கூட்டத்தை பொது வாழ்வில் நீடிக்க அனுமதிக்கலாமா?

அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும், கட்சிக்காரர்களும் எதில் கொள்ளையடிக்கிறார்கள், எவ்வளவு கொள்ளையடிக்கிறார்கள் என்று போலீசை வைத்து வேவு பார்த்து அதில் தமக்குரிய பங்கை போலீசை வைத்தே மிரட்டியும், அடித்தும் வசூல் செய்த மாஃபியா கும்பல் தலைவி, ’முன்னாள் முதல்வர்’ என்ற அடைமொழிக்குப் பின்னே ஒளிந்துகொள்ள அனுமதிக்கலாமா?

சட்டத்தின் காவலர்கள் என்று கூறிக்கொண்டு, வழக்கறிஞர்களையும், பத்திரிகையாளர்களையும், எதிர்க்கட்சிக்காரர்களையும் தாக்குவதற்கும், கொலை செய்வதற்கும் அ.தி.மு.க ரவுடிகளுக்கு பாதுகாப்பு வழங்கிய போலீசு அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படுமா? காவல் நிலையங்களை கற்பழிப்புக் கூடங்களாகவும், லாக்-அப்-களைத் தூக்கு மேடைகளாகவும் மாற்றிய காவல் மிருகங்கள் தண்டிக்கப்படுவார்களா?

அண்ணாமலை நகர் காவல் நிலையக் கொலையும், வாச்சாத்தி கற்பழிப்பையும் விளம்பரம் செய்து ஓட்டு வாங்கிய தி.மு.க ஆட்சி பதில் சொல்லியாக வேண்டும்.

அந்நியச் செலாவணித் திருடனுக்கும், ஆதி ராஜாராமுக்கும் ’நெஞ்சு வலி’ என்று போலிச் சான்றிதழ் தந்து, அரசு மருத்துவமனையில் குளுகுளு அறையில் வைத்துப் பாதுகாத்த மருத்துவ அதிகாரியை ’பெருந்தன்மையாக’ மன்னித்து விட்டுவிடப் போகிறதா திமுக அரசு? ஜெயா – சசி கும்பலின் அனைத்து கிரிமினல் நடவடிக்கைகளுக்கும் திட்டம் தீட்டிக் கொடுத்து, துணையாகவும் நின்ற தேவாரத்திற்கும், ஹரிபாஸ்கருக்கும் பதவி மாற்றம் தான் தண்டனையா? அவசர நிலைக் காலத்தில் கொலைவெறியாட்டம் நடத்திய அதிகாரிகளைப் போலவே இவர்களையும் தப்ப விடுவதுதான் நீதியா?

கருணா - ஜெயா கார்ட்டூன்“ஆளும் கட்சி சொன்னதை அதிகாரிகள் செய்தார்கள். அதற்காக அதிகாரிகளை எப்படி குற்றம் சொல்ல முடியும்” என்று வாதிடுவதாக இருந்தால், ’’அவன் சொன்னதால் திருடினேன், இவன் சொன்னதைக் கேட்டுத்தான் கொலை செய்தேன்’’ என்று கூறும் குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அதற்கேற்றபடி ’இந்திய தண்டனைச் சட்டம்’ திருத்தப்பட வேண்டும். ’ஐ.ஏ.எஸ் குடிமகனுக்கு’ப் பொருந்தும் சட்டம் அத்தனை குடிமக்களுக்கும் பொருந்த வேண்டும். தேவாரத்தின் மீதும், ஹரிபாஸ்கர் மீதும் கிரிமினல் வழக்கு தொடரப் படாது என்றால் இன்பசாகரனையும், தியானேசுவரனையும் கூட விடுதலை செய்து விடலாமே!

நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை லஞ்சமாக வாங்கிய ஜெயா – சசி கும்பலும், அமைச்சர்களும் தண்டிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், நூற்றுக்கணக்கான கோடிகளை லஞ்சமாக கொடுத்து, ஆயிரக்கணக்கான கோடிகளை ஆதாயமாகப் பெற்ற முதலாளிகளுக்கு என்ன தண்டனை?

தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் 50 கோடி லஞ்சம் வாங்கிக் கொண்டு, கிராமப்புற வழித்தடங்களில் ஓடிக் கொண்டிருந்த தனியார் பேருந்துகளை நெடுஞ்சாலை வழித்தடங்களில் ஓட்ட அனுமதித்திருக்கிறது, ஜெயா – சசி கும்பல்.

தனியார் பேருந்து முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட இச்சலுகையை ரத்து செய்யும் சட்டத் திருத்தத்தை சட்டப் பேரவையில் நிறைவேற்றியிருக்கிறது, திமுக அரசு. லஞ்சம் கொடுத்த தனியார் பேருந்து உரிமையாளரான ஒரு சட்டசபை உறுப்பினர் ’65 லட்சம் போயிற்றே’ என்று வருந்தினாராம். எனவே தனியார் பேருந்து உரிமையாளர்கள் கொடுத்த லஞ்சப் பணம் அனைத்தையும் ஜெயா – சசி கும்பலிடமிருந்து வசூலித்து முதலாளிகளுக்கு தர வேண்டும் என்று கோரியிருக்கிறார் த.மா.கா தலைவர் பாலகிருஷ்ணன். எவ்வளவு கொடுத்தோம், யாரிடம் கொடுத்தோம் என்று தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார் போக்குவரத்து அமைச்சர்.

jayalalitha-imsaiஇது எந்த ஊர் நியாயம்? எந்த நாட்டு சட்டம்? லஞ்சம் கொடுத்து லாபம் அடைபவர்களும் லாபமடைய முனைபவர்களும் 163-வது பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றவாளிகள் என்கிறது இந்திய தண்டனைச் சட்டம்.

கிராமப்புற மக்களைப் பேருந்து இல்லாமல் தவிக்க விட்டு, அரசு போக்குவரத்துக் கழகங்களைத் திவாலாக்கி அதன் மூலம் கோடி கோடியாய் லாபம் அடிக்கத் திட்டம் போட்ட தனியார் முதலாளிகள் சட்டத்தின்படியே கூட கிரிமினல் குற்றவாளிகள். கறியைத் தின்பதற்காக எலும்பை எறிந்த எத்தர்களுக்கு அவர்கள் கொடுத்த லஞ்சப் பணம் திரும்ப வசூலித்துத் தரப்படுமென்றால்,

ஸ்பிக் நிறுவனத்தில் தமிழக அரசுக்குச் சொந்தமான பங்குகளை விழுங்குவதற்காக முத்தையா செட்டியார் ஜெயலலிதாவுக்கு கொடுத்த பல கோடி லஞ்சமும், தாபர் – டூபாண்ட், ஃபோர்டு மோட்டார் நிறுவனங்கள் கொடுத்த லஞ்சமும், நெய்வேலி ஜீரோ யூனிட் அனல் மின்நிலையத்தை விழுங்க அமெரிக்க நிறுவனம் கொடுத்த லஞ்சமும், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை போன்ற பல துறைகளில் கொள்ளையடித்த காண்டிராக்டர்கள், அதற்காக அமைச்சர்களுக்குக் கொடுத்த லஞ்சமும்… அவரவர்களுக்கே திருப்பித் தரப்படுமா?

மக்கள் சொத்தைக் கொள்ளையடிப்பதற்காகவே லஞ்சம் கொடுத்த குற்றவாளிகளான தரகு முதலாளிகள், காண்டிராக்டர்கள் மீது நடவடிக்கை கிடையாது என்பதுடன், ஊக்க போனசும் வழங்கும் உலக அதிசயத்தை நீங்கள் எங்கேயாவது கேள்விப்பட்டதுண்டா? இந்த அநீதியை நாம் அனுமதிக்க முடியாது. இந்த அவமானத்தை நாம் சகித்துக்கொள்ள முடியாது.

  • ஜெயா – சசி கும்பலுக்கு கையூட்டு கொடுத்து தாபர் – டூபாண்ட், ஃபோர்டு மோட்டார் போன்ற அமெரிக்க தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் பெற்றுள்ள உரிமங்களும், நெய்வேலி ஜீரோ யூனிட் அனல் மின்நிலைய ஒப்பந்தமும், ஸ்பிக் நிறுவன பங்கு விற்பனையும் உடனே ரத்து செய்யப்பட வேண்டும். நாட்டை மீண்டும் காலனியாக்கும் அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட வேண்டும்.
  • ஜெயா – சசி கும்பலை உடனே கைது செய்து சிறையில் வைத்து விட்டு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர்கள் குவித்து வைத்துள்ள அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.
  • ஜெயா – சசிகலா கும்பல் உருவாக்கிய ’போலீசு – பினாமி முதலாளிகள் – அதிகார வர்க்கம் – கிரிமினல்கள்’ அடங்கிய கும்பல் பகிரங்கமாக விசாரித்துத் தண்டிக்கப்பட வேண்டும். இரண்டாம் உலகப் போருக்குப் பின் இட்லரின் நாஜி கட்சியினர் மீது நடத்தப்பட்ட ’நூரம்பர்க் விசாரணை’யைப் போல சிறப்பு நீதிமன்றம் அமைத்து தண்டனை வழங்க வேண்டும். இனி மக்கள் சொத்தைக் கொள்ளையடிக்க எண்ணும் எவனுக்கும் ஜெ – சசி கும்பலுக்கு வழங்கப்படும் தண்டனை ஒரு பாடமாக அமைய வேண்டும். இன்று இதை நாம் செய்யத் தவறினால், எத்தகைய அட்டூழியங்களும் செய்துவிட்டு தப்பித்துக் கொள்ளலாம், அது தமது உரிமை என்கிற அளவுக்கு அரசியல் கிரிமினல்கள் துணிந்து விடுவார்கள்.

jaya-police“தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் கடந்த 5 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள ரூ. 5 லட்சத்திற்கு மேல் மதிப்பு கொண்ட சொத்துக்கள் அனைத்தையும் ஆராய்ந்தால் அ.தி.மு.க கொள்ளையர்களும், அவர்களது பினாமிகளும் பிடிபட்டு விடுவார்கள்” என்று சட்டசபையில் பேசியிருக்கிறார் ஒரு உறுப்பினர்.

தேர்தலில் அ.தி.மு.க.வைத் துடைத்தெறிந்தது மட்டுமின்றி, வேட்பாளர்களை அடித்து விரட்டியதன் மூலம் தங்களது ஆத்திரத்தை வெளியிட்டிருக்கிறார்கள், தமிழக மக்கள். திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகளையும், மக்கள் விரோதிகளையும், ஊழல் பேர்வழிகளையும் நேரடியாக தண்டிக்கும் உரிமை வேண்டும் என்ற தங்களது விருப்பத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

சட்டம் தானாகவே தன் கடமையைச் செய்ததாக வரலாறில்லை. கொள்ளையடிக்கப்பட்ட தமது சொத்துக்களை மீட்கும் உரிமையும் குற்றவாளிகளைத் தண்டிக்கும் உரிமையும் மக்களுக்கு உண்டு. இதை நிறுவுவதற்கான ஒரு முன்மாதிரி நடவடிக்கை தான் ஜெ – சசி கும்பலின் பினாமி சொத்தான தஞ்சை வினோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றும் போராட்டம்.

அணிதிரண்டு வாருங்கள்!

“ஜெயா – சசி கும்பல் கொள்ளையிட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய் ! ”
என்ற முழக்கத்துடன் அந்த ஆண்டு ஜூலை 10-ம் தேதி  தஞ்சை வினோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழக அரசே,

  • மக்கள் சொத்துக்களைக் கொள்ளையடித்த ஜெயா – சசி கும்பலின் சொத்துக்களைப் பறிமுதல் செய் ! கைது செய் ! தண்டனை கொடு !
  • சட்டம் – வழக்கு – வாய்தா என்று ஜெயா – சசி கும்பலைத் தப்பிக்க விடாதே!
  • கும்மிடிப்பூண்டி தாபர் – டூபாண்ட், நெய்வேலி-ஜீரோ யூனிட் அனல்மின் நிலையம், சென்னை ஃபோர்டு மோட்டார் போன்ற நிறுவனங்களுடன் ஜெயா – சசி கும்பல் போட்ட நாட்டை மறுகாலனியாக்கும் ஒப்பந்தங்களை ரத்து செய்!

ஜெயா – சசி கும்பலின் ஊழல் சாம்ராஜ்யம் குறித்த விபரங்கள்

வாங்கிக் குவிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்கள்

  • subramaniam-swamy-and-jayaமன்னார்குடி அருகே ரிஷியூரில் முப்போகம் விளையக்கூடிய 80 ஏக்கர் பூமி; இதில் ஜெயா – சசிகலா வகையறாக்கள் ஓய்வெடுத்துத் தங்கிச்செல்ல பண்ணை வீடு
  • வாழாச்சேரியில் 21 ஏக்கர் நஞ்சை நிலம்
  • மூவாநல்லூரில் 15 ஏக்கர் தென்னந்தோப்பு
  • இலஞ்சிக்குடியில் மா, பலா, தென்னை மரங்கள் கொண்ட 250 ஏக்கர் தோப்பு
  • வல்லத்திற்கு அருகிலுள்ள ஆலக்குடி கிராமத்தில் சிறு விவசாயிகளை மிரட்டி வளைக்கப்பட்ட 250 ஏக்கர் நிலம்
  • சிதம்பரனார் மாவட்டத்தில் அரசகுளம், வல்லக்குளம், கிளாங்குளம், கால்வாய், மீரான்குளம், சேரங்குளம் கிராமங்களில் பாமாயில் விதை விவசாயத்திற்காக 2000 ஏக்கர் நிலம்
  • பசும்பொன் மாவட்டத்தில் மாங்குளம், விளாக்குளம், புளியங்குளம், எஸ். காரைக்குடி, தெற்கு சந்தனூர், வடக்கு சந்தனூர் உள்ளிட்ட 25 கிராமங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு அரசு கொடுத்த நிலங்கள், மற்றும் களம் புறம்போக்கு, கால்வாய் ஓடை புறம்போக்கு, மேய்ச்சல் காடுகள் என கிராம பொது நிலங்கள் உள்ளிட்ட 13,000 ஏக்கர் பூமி
  • பட்டுக்கோட்டை – அதிராம்பட்டிணம் சாலையில் பள்ளிக்கொண்டான் கிராமத்தில் 15 பம்ப் செட் கொண்ட 60 ஏக்கர் தென்னந் தோப்பும், நீச்சல் குளத்துடன் உள்ள மாளிகையும்,
  • அதிராம்பட்டிணம் – மதுக்கூர் சாலையில் ராசியங்காட்டில் 6 பம்ப் செட் கொண்ட 20 ஏக்கர் தென்னந்தோப்பு
  • சென்னைக்கு அருகே பூண்டி ஏரியை ஒட்டியுள்ள வேளகாபுரம் கிராமத்தில் 50 ஏக்கரில் மாந்தோப்பு
  • தஞ்சை – குருங்குளம் வட்டத்தில், உடையான்பட்டி கிராமத்தில் 230 ஏக்கர் முந்திரித் தோப்பு.
  • கும்பகோணம் – ஒரத்தநாடு சாலையில் தட்டுமால் படுகை கிராமத்தில் 15 ஏக்கரில் தென்னந்தோப்பு

ஆடம்பர அடுக்கு மாளிகைகள் – வீட்டு மனைகள்

  • தஞ்சையில் அருளானந்த நகருக்கும், பிலோமினா நகருக்கும் இடையே சசிகலாவின் கணவன் நடராசனுக்கும், சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனுக்கும் சொந்தமான பளிங்குக்கல் பதித்த இரு மாளிகைகள்
  • நாகை – வெளிப்பாளையத்திலுள்ள 89 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள மேட்டு பங்களா
  • ஜெயலலிதா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயபல்சுகள்சென்னைக்கு அருகே கொரட்டூரில் 8 கோடி ரூபாய் செலவில் வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பர மாளிகை
  • சென்னையில் கிண்டி தொழிற்பேட்டையில் 3 கோடி மதிப்புள்ள 2 அடுக்கு பட்டை தீட்டிய கருங்கல் கிரானைட் மாளிகைகள்
  • மதுரையில் உள்ள பிரமாண்டமான தங்கம் தியேட்டர்
  • சென்னை – லஸ் பகுதியிலுள்ள 1 கோடியே 13 லட்சம் மதிப்பு கொண்ட நாகேஸ்வரராவ் மாளிகை.
  • மதுரை கிருஷ்ணராய தெருவில் உள்ள 18 கோடி ரூபாய் மதிப்புடைய 37,114 சதுர அடி பரப்பு கொண்ட காலி மனையும், அடுக்கு மாடி கட்டிடங்களும்
  • மன்னார்குடியில் திவான் பங்களா
  • மகாபலிபுரத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் திருப்போரூர் செல்லும் வழியில் பையனூர் கிராமத்தில் 50 ஏக்கர் தோப்பில் மையமாக அமைந்த நவீன வசதிகள் கொண்ட ஆடம்பர பங்களா
  • ஹைதராபாத்தில் 100 ஏக்கர் திராட்சை தோட்டம். அதன் நடுவில் கோட்டை போன்று வடிவமைக்கப்பட்ட ஆடம்பர பண்ணை வீடு; செகந்திராபாத் – மேற்கு மர்ரேட்பள்ளி பகுதியில் இரண்டு அடுக்கு மாளிகை. இவ்விரண்டு மாளிகைகளிலும் பாதுகாப்பு வசதிக்காக நவீன மின்னணு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆலைகள் – தொழில்களில் முதலீடு

  • தஞ்சையில் நவீன வசதிகள் கொண்ட விநோதகன் மருத்துவமனை
  • திருவாரூர் அருகே வண்டாம்பாளையம் எனுமிடத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நெல் அரவை ஆலை. ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் என்ற இவ்வாலை சசிகலாவின் கணவர் நடராசனின் சகோதரர் சம்பந்த மூர்த்தி பெயரில் உள்ளது. இங்கிருந்து தான் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் சமீபத்தில் கைப்பற்றப்பட்டன.
  • தஞ்சை அருகே விளாரில் நடராசனின் மூத்த அண்ணன் சாமிநாதனின் பெயரிலுள்ள ’’மருதப்ப மன்னையார் ஆலை’’.
  • தஞ்சை மேம்பாலம் அருகே சிறுவர் சீர்திருத்தப் பள்ளி மைதானத்தில் எஸ்.டி.எஸ்-ன் பினாமி சொத்தாக ’’டெம்பிள் டவர்’’ என்ற பெயரில் ஆடம்பர நட்சத்திர விடுதி.
  • நாகையில் 6 கோடி ரூபாய் மூலதனம் கொண்ட ’’இந்தியன் ஸ்டீல் ரோலிங் மில்’’.
  • ஸ்ரீ பெரும்புதூர் அருகேயுள்ள மாம்பாக்கத்தில் 15 கோடி ரூபாய் மூலதனம் கொண்ட ’’மைக்கம் லெதர் எக்ஸ்போர்ட்ஸ்’’ என்ற தோல் ஏற்றுமதி நிறுவனம்
  • திருத்துறைப்பூண்டியில் இராஜஸ்தான் பளிங்கு கற்களால் அழகு செய்யப்பட்ட மூற்று அடுக்குகள் கொண்ட அன்னை சந்தியா திருமண மண்டபம்.
  • சென்னை – மகாபலிபுரம் சாலையில் பண்டிதமேடு எனுமிடத்தில் 255 ஏக்கர் பரப்பில் கட்டப்படும் ’’பரணி பீச் ரிசார்ட்ஸ் லிட்’’ எனும் சுற்றுலா ஓய்வு விடுதி.
  • ஊட்டியில் 1264.01 ஏக்கர் பரப்பு கொண்ட 45 கோடி ரூபாய் மதிப்புடைய கிரேக்மோர் எஸ்டேட்; கோத்தகிரிக்கு அருகில் 7.60 கோடி ரூபாய் மதிப்புடைய கோடநாடு தேயிலைப் பண்ணை.
  • மன்னார்குடிக்கு அருகில் சுந்தரக்கோட்டையிலுள்ள செங்கமலத் தாயார் மகளிர் கல்லூரி
  • கிண்டி தொழிற்பேட்டையிலுள்ள பத்து கோடி ரூபாய் மூலதனம் கொண்ட ’’ஜெயா பப்ளிகேஷன்ஸ்’’.
  • வினோத் வீடியோ விஷன், மெட்டல் கிங், ஃபிரஷ் மஷ்ரூம்ஸ், மார்பிள் மார்வல், ஜெயா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், ஜெ.எஸ். ஹவுசிங் டெவலப்மெண்ட், ஜெ. ரியல் எஸ்டேட், ஜெ. ஃபார்ம் ஹவுஸ், க்ரீன் ஃபார்ம் ஹவுஸ், ஜெ.ஜெ. லீசிங் அண்ட் மெயின்டனென்ஸ், விக்னேஷ்வர் பில்டர்ஸ், லட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், கோபால் புரமோட்டர்ஸ், நமசிவாயம் ஹவுசிங் டெவலப்மெண்ட், ஐயப்பா பிராப்பர்டி டெவலப்மெண்ட், சீ என்க்ளேவ், நவசக்தி கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் பில்டர்ஸ், ஓசியானிக் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், க்ரீன் கார்டன் அபார்ட்மெண்ட்ஸ், சசி எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட 21 நிறுவனங்கள்
  • அந்நிய நாடுகளுடன் தொடர்புடைய ஜெ.ஜெ. டி.வி மற்றும் சூப்பர் – டூப்பர் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்கள்.

அந்நிய நாடுகளில் போடப்பட்டுள்ள முதலீடுகள்

  • ஜெ.ஜெ. டி.வி. நிகழ்ச்சிகளை செயற்கைக்கோள் மூலம் ஒளிபரப்புவதற்காக 10 லட்சம் அமெரிக்க டாலர் (4 கோடி ரூபாய்) ரிம்சாட் என்ற அமெரிக்க நிறுவனத்தில் முன்பணமாக செலுத்தப்பட்டுள்ளது.
  • சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கிக் கிளையில் மலேசியாவில் வசிக்கும் சுசீலா என்பவர், அந்நிய நாட்டில் வசிக்கும் இந்தியர் என்ற தகுதியில் 3.35 கோடி ரூபாய் முதலீடு செய்தார். இந்த தொகை பின்னர் இவ்வங்கியில் சசிகலாவின் நிறுவனமான பரணி பீச் ரிசார்ட்ஸ் லிட். வாங்கியிருந்த மூன்று கோடி ரூபாய்க்கு ஈடு செய்யப்பட்டது.
  • அந்நியச் செலவாணி மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள தினகரன் ’’டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆஃப் விர்ஜின் இந்தியா’’ எனும் பெயரில் 35 கோடி ரூபாயை இங்கிலாந்திலுள்ள பார்க்ளெஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளார்.
  • நிலக்கரி இறக்குமதி ஊழலில் கிடைத்த பணத்தில் ’வெர்ஜின் தீவு’ என்றொரு தீவை விலைக்கு வாங்கி அங்கே ரூ.300 கோடியை டெபாசிட் செய்துள்ளதாகவும், அத்தீவை அரசுக்கு சொந்தமாக்க வேண்டும் என்றும் த.மா.கா தலைவர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஊழல்கள் – மோசடிகள் – முறைகேடுகள்

  • 22jaya2பத்து கோடி ரூபாய் லஞ்சம் பெற்று, 176 புதிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அனுமதியை உயர்நீதி மன்றம் முறைகேடானது எனக் கூறி ரத்து செய்தது. இந்நிறுவனங்களில் பயிற்சி முடித்த 50,000 மாணவர்கள் தெருவில் நிற்கின்றனர்.
  • தரமற்ற நிலக்கரியை இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியதில் 31 கோடி ரூபாய் ஊழல்.
  • தென் இந்திய கப்பல் போக்குவரத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் விற்பனை மதிப்பு கொண்ட பங்குகளை 47 கோடி ரூபாய்க்கு ’’எஸ்ஸார் ஷிப்பிங் கார்ப்பரேஷனுக்கு’’ விற்றதில் 50 கோடி ரூபாய் முறைகேடுகள்
  • தூத்துக்குடியில் இயங்கும் ஸ்பிக் உர நிறுவனத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான 50 லட்சம் பங்குகளை தரகு முதலாளி ஏ.சி. முத்தையாவுக்கு அடிமாட்டு விலைக்கு விற்றதில், கிட்டத்தட்ட 49 கோடி ரூபாய் முதல் 77 கோடி ரூபாய் வரை கமிஷன். இதில் கையெழுத்திட மறுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகாவின் முகத்தில் திராவகம் வீசப்பட்டது. மதுசூதனன், சாராய உடையார், எம்.ஏ. சிதம்பரம், ஜெயா – சசிகலா ஆகியோர்தான் இதற்கு சூத்திரதாரிகள் என்று திராவகம் வீசிய சுர்லா நீதிமன்றத்திலேயே கூச்சலிட்டான். அவனுக்கு பைத்தியம் என்று முத்திரை குத்தி தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டப்பட்டது.
  • ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான மயானங்களில் மேற்கூரைகள் அமைப்பதில் 10.5 லட்ச ரூபாய் கையாடல். இப்படி எல்லா மாவட்டங்களிலும் நடந்தது.
  • இலவச வேட்டி – சேலை மற்றும் சீருடை வழங்குவதில் பலவித மோசடிகள் செய்தும், வேட்டி – சேலைகளைப் பதுக்கி வைத்தும் 34 கோடி ரூபாய் ஊழல்
  • கர்ப்பிணிப் பெண்களுக்கான சொட்டு மருந்துகள் வாங்கியதில் ஐந்து கோடி ரூபாய் ஊழல்
  • தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் உபகரணங்கள் வாங்க ஏலம் விட்டதில் 400 கோடி ரூபாய்க்கு முறைகேடுகள்
  • தனியார் (ஆம்னி) பேருந்துகளுக்கு வரி குறைத்ததில் 6 கோடி ஊழல்
  • கிராமங்களுக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்துகளுக்கு, நகரங்களுக்கு திருப்பி விட்டு, உரிமங்களை மாற்றி உத்திரவிட்டதில் 50 கோடி ரூபாய் தனியார் பஸ் முதலாளிகளிடமிருந்து லஞ்சம். இதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட நட்டம் 170 கோடி ரூபாய்.
  • கிராமப்புறங்களுக்கு வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கியதில், ஒரு பெட்டிக்கு 4300 ரூபாய் வீதம் கமிஷன் அடித்ததில் 19.48 கோடி ரூபாய் ஊழல்
  • அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர் / நடத்துனர் நியமனத்தில் ஊழல். 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலிகளாக வேலை செய்யும் நடத்துனர்கள், ஓட்டுநர்களுக்குக் கூட வேலை தராமல், பதவி ஒன்றுக்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை கொடுத்தவர்களுக்கு மட்டுமே வேலை தரப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் இவ்வாறு வேலை ‘வாங்கியவர்கள்’ பல ஆயிரம் பேர்.
  • தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளர்கள் பணி நியமனம், 2000 தட்டச்சர்கள், இளநிலை உதவியாளர்கள் நியமனம், 500 விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டிலும் பேரங்கள் – முறைகேடுகள்
  • 8000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்காக பதவி ஒன்றுக்கு 50,000 ரூபாய் விலை
  • சென்னை புழலேரியில் போதுமான அளவு நீர் இருந்தும், அந்நீரைப் பொதுமக்களுக்கு வழங்காது ஏரியில் தண்ணீர் சப்ளை வால்வுகளை அடைத்து விட்டு, லாரிகளின் மூலம் தண்ணீர் வழங்கியதில் நாளொன்றுக்கு 8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் சூறையாடல்
  • ’டான்சி’க்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தையும், கட்டிடத்தையும் ஏலம் விடாது ’’ஜெயா பப்ளிகேஷன்ஸ்’’ நிறுவனத்திற்காக சுருட்டியதில் 3 கோடி ரூபாய் ஊழல் மற்றும் முறைகேடுகள். இதுவன்றி தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் நூல்களை இங்கு அச்சிட்ட அதிகார முறைகேடு
  • சென்னையில் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சொந்தமான 47.36 ஏக்கர் காலி மனையை ஜெ.ஜெ. டி.வி.-க்கு வளைத்துப் போடுவதற்கு வசதியாக, தரமணி திரைப்பட நகருக்கு மாற்றி அரசு ஆணை வெளியிட்டதில் அதிகார முறைகேடுகள்.

ஊழலுக்கு துணை நின்ற உயர் அதிகாரிகள்

தியானேசுவரன், ..எஸ்: தமிழ்நாடு கனிம வள வாரியத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்து, இவ்வாரியத்தில் ஜெயா – சசி கும்பல் அடித்த 100 கோடி ரூபாய் மோசடிகளுக்கு துணை நின்றவர்; தான் சுருட்டிய பணத்தை ’’நமச்சிவாயம் – தர்மாம்பாள் டிரஸ்ட்’’ என்ற பெயரில் முடக்கியுள்ளார். வருமான வரித்துறை அதிகாரிகள் இவரது அண்ணா நகர் வீட்டை சோதனையிட்ட பொழுது, 80 லட்சம் பெறுமான 16 கிலோ தங்க நகைகள் – வைரங்கள், 21 லட்ச ரூபாய்க்கான வங்கி முதலீடுகள், ரொக்கமாக இந்திய பணம் 1.7 கோடி ரூபாய், அமெரிக்க டாலர் 5000 (2 லட்ச ரூபாய்) முதலியவற்றைக் கைப்பற்றினர். அந்நியச் செலாவணி மோசடி தொடர்பான விசாரணைக்கு வராமலேயே, தலைமறைவாக சுற்றித் திரிகிறார்.

இன்பசாகரன், ..எஸ்: தமிழக அரசின் மருத்துவத் துறைச் செயலாளராக இன்பசாகரன் இருந்த பொழுது, அத்துறையில் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து வாங்கியதில் 56 கோடி ரூபாய் ஊழல் நடந்தது. தரக்குறைவான மருந்துகளை, அரசு அங்கீகாரம் பெறாத கம்பெனிகளிலிருந்து தன் மனைவியின் பெயருக்கு வாங்கி மருத்துவமனைகளுக்கு வழங்கிய முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. இன்பசாகரன் வீட்டில் இருந்து 80 லட்சம் பெறுமான பணம் – நகைகள், 40,000 ரூபாய் பெறுமான அமெரிக்க டாலர்களை வருமான வரித்துறையினர் சோதனையிட்டுக் கைப்பற்றினர். வேறு வழியின்றி இவரைத் தற்காலிக வேலை நீக்கம் மட்டும் செய்தது ஜெயா அரசு.

பாண்டா, ..எஸ்: தமிழக அரசின் வேளாண்துறைச் செயலர். 2.6.94 அன்று சென்னை அண்ணா நகரிலுள்ள இவரது பங்களாவினுள் நுழைந்த ஒரு ‘கொள்ளைக் கும்பல்’ ஒரு கோடி ரூபாயை அவரிடமிருந்து பறித்துக் கொண்டதோடு, சில பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு தப்பிச் சென்றது. 55 கோடி ரூபாய்க்கு உரங்கள் – டிராக்டர்கள் வாங்கியதில் ஜெயா – சசி கும்பலுக்கு சேர வேண்டிய தரகுத் தொகைதான் ஒரு கோடி ரூபாய் என்பதும், ’கொள்ளைக் கும்பல்’ மாநில புலனாய்வுத்துறைப் போலீசு அதிகாரிகள் என்பதும் பின்னர் அம்பலமாகி சந்தி சிரித்தது.

இராசகோபாலன்: பதிவுத் துறையின் உதவித் தலைவர். சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் மாளிகை, மதுரை தங்கம் தியேட்டர் இரண்டையும் சசிகலா கும்பல் வாங்கிய பொழுது, கிரய மதிப்பைக் குறைத்துக் காட்டி பத்திரப் பதிவு செய்து, அரசுக்கு சேர வேண்டிய வருமானத்தை மோசடி செய்தவர். சென்னை சைதாப்பேட்டை பகுதியில் 1 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட மூன்று காலி மனைகளும், மேற்கு மாம்பலத்தில் உள்ள சீனிவாசா திரையரங்கும் இவரின் மோசடிகளுக்கு ‘பம்பர்’ பரிசாக கிடைத்தவை.

சி.ராமச்சந்திரன், ..எஸ்: தமிழக அரசின் தொழில் துறையின் முன்னாள் முதன்மைச் செயலர். கிரானைட் ஏற்றுமதி ஊழல், ஸ்பிக் நிறுவன பங்குகள் விற்பனை ஊழல், மற்றும் ஹவாலா மோசடிகளில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. தி.மு.க அரசால் தற்பொழுது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சி.என். ராமதாசு, ..எஸ்: ஜெயாவின் ஹவாலா மோசடி தொடர்பாக, அரசின் அனுமதி பெறாமலேயே பத்து தடவைகளுக்கு மேல் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

ஹரிபாஸ்கர், ..எஸ்: தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர். ஜெயா – சசிகலா கும்பலின் அனைத்து கிரிமினல் நடவடிக்கைகளுக்கும் ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் இருந்த தலைமை கிரிமினல். மின்வாரிய தலைவராக இருந்தபொழுது நிலக்கரி இறக்குமதி ஊழலிலும், மின் உபகரணங்கள் வாங்கிய 400 கோடி ரூபாய் ஊழலிலும் இவரின் பங்குண்டு. வக்கீல் விஜயன் தாக்குதலில் போலியான குற்றவாளிகளைப் பிடித்து சிறைக்குள் தள்ளி வழக்கை திசைதிருப்ப முயன்ற போலீசு அதிகாரிகளுக்கு உடந்தையாக இருந்தவர். ’’சசி டிஸ்டில்லர்ஸ்’’ எனும் சாராய ஆலையின் அதிபர் வேலு முதலியார் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு எரி சாராயத்தைக் கடத்துவதற்கு உறுதுணையாக இருந்தவர்.

ராஜரத்தினம்: 1992-க்கு முன்னால் இன்னாரென்று தெரியாத நபர். 1992-லிருந்து 96-க்குள் 100 கோடி ரூபாய் மூலதனம் கொண்ட 11 தொழில் நிறுவனங்களுக்கு அதிபதி. ஏற்கெனவே இயங்கிவரும் பிரபலமான தொழில், வர்த்தக, நிதி நிறுவனங்களைக் கைப்பற்றுவதுதான் இவரது பாணி. பெரிய பெரிய நிறுவனங்களை விலை பேசும் இந்த ’திடீர் முதலாளி’ யார் என்று துப்பறிந்த பம்பாய் பத்திரிகைகள், ராஜரத்தினம் ஜெயலலிதாவின் பினாமி என்பதை அம்பலப்படுத்தின. சிங்கப்பூரில் இருந்து கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை ஸ்ரீதரன் எம்.பி கடத்தி வந்ததில் இவருக்கும் பங்குண்டு. ’’துங்கபத்ரா ஷுகர் ஒர்க்ஸ், ஈ.பி.எஃப் பைனான்ஸ், சியர்ஸ் எல்காட், இண்டர் கான்டினேண்டல் லெதர்ஸ், பனாரஸ் ஸ்டேட் பேங்க், அப்போலோ டியூப்ஸ், மெட்ராஸ் மோட்டார் பைனான்ஸ் அண்ட் கியாரண்டி கம்பெனி, கோவை அன்னபூர்ணா புட்ஸ் அண்ட் பீவரெஜஸ், ராஜாதிராஜ் ஆயில் இண்டஸ்ட்ரீஸ், கார்வார் பெயிண்ட்ஸ், ராஜ் ஏர், தேவே ஷுகர் – இவை அனைத்தும் ராஜரத்தினத்தின் தலைமையில் செயல்படும் நிறுவனங்கள்.

ரெங்கேஷ்: எம்.ஜி.ஆரின் குடும்ப வக்கீல் ரங்காச்சாரியின் மகன். ஜெயா – சசிகலாவின் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ’’மைக்கம் லெதர் எக்ஸ்போர்ட்ஸ்’’ நிறுவனத்தின் ஒரு பங்குதாரர். சிங்கப்பூரில் இருந்துகொண்டு, ஜெயாவின் ஹவாலா மோசடிகளுக்கு உடந்தையாக இருந்து வந்தவர்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு பாய் விரிப்பு

  • நரசிம்ம ராவ் – மன்மோகன் சிங் கும்பல் அறிமுகப்படுத்திய நாட்டை மறுகாலனியாக்கும் புதிய பொருளாதார கொள்கை, ஜெயா – சசி கும்பலின் கொள்ளைக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. கோடிக்கணக்கில் கையூட்டு வாங்கிக் கொண்டு தொழில் துறையை வளர்க்கிறோம், அந்நியச் செலவாணியைப் பெருக்குகிறோம் என்ற பெயரில் தமிழ் நாட்டையே கூறுபோட்டு அந்நிய நிறுவனங்களுக்கு விற்று விட்டது இந்தக் கும்பல்
  • காடுகளில் பழத் தோட்டங்கள், விளை நிலங்களில் இறால் பண்ணைகள், மலைகளில் சுற்றுலா விடுதிகள் ஆகியவை அமைப்பதற்காக பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் தாரை வார்க்கப்பட்டு விட்டன.
  • நெய்வேலியில் புதிய அனல் மின் நிலையம் அமைக்க பெல் நிறுவனம் கோரிய தொகையைக் காட்டிலும் இரு மடங்கு தொகை கேட்ட அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதியளித்ததில் ஜெயா – ராவ் கூட்டணி பல கோடிகளை விழுங்கியுள்ளது.
  • தூத்துக்குடி மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு இடையே சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • சென்னையில் அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஃபோர்டு கார் தொழிற்சாலை அமைப்பதற்காக, சென்னைக்கு அருகே கீழ்கரனை, சித்தமலூர், செங்குன்றம் கிராமப் பகுதிகளில் 400 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தி, 200 ஏக்கர் நிலம் ஃபோர்டு கம்பெனிக்கு வழங்கப்பட்டது. இதற்கு எதிரான அக்கிராம மக்களின் போராட்டம் கொடூரமாக ஒடுக்கப்பட்டது. ஃபோர்டு போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்காக விற்பனை வசதி, மூலதன வரி, மற்றும் மின்சார கட்டணச் சலுகைகளை அளித்து அரசாணை வெளியிடப்பட்டது.
  • சென்னை – கும்மிடிப்பூண்டியில் அமையவுள்ள தாபர் – டியூபாண்ட் ஆலை சுற்றுச்சூழலைப் பாதிக்கக் கூடியது. புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய கழிவுகளை இவ்வாலை வெளியிடும். இதன் காரணமாகவே இவ்வாலை கோவா மக்களினால் துரத்தியடிக்கப்பட்டது. ஆனாலும் ஜெயா அரசு இவ்வாலை கும்மிடிப்பூண்டியில் அமைய தொழிற்பேட்டையில் இடம் ஒதுக்கிக் கொடுத்ததோடு, ஆரணி ஆற்றில் இருந்தும், நிலத்தடி நீரையும் தேவையான அளவு எடுத்துக்கொள்ள சலுகை வழங்கியுள்ளது.

கோவில் கொள்ளைகள்

  • மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோவில் நகைகள் கொள்ளை போனது.
  • திருக்காரவாசல் தியாகராசர் சுவாமி கோவிலில் மரகத லிங்கம் திருட்டு
  • நாகப்பட்டினம் நீலயதாட்சி அம்மன் கோவிலில் கோமேதக லிங்கம் திருட்டு
  • மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவிலில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை
  • கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் கோவிலில் 1 கோடி ரூபாய் பெறுமான நகைகள் கொள்ளை
  • சிதம்பரம் கோவில் நடராசர் காலில் இருந்த வைரக் கொலுசும், 2.25 கிலோ வெள்ளிக் கிரீடமும் களவு போனது.
  • கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் ரூபாய் 5 கோடி பெறுமான நகைகள் திருட்டு. மன்னார்குடி குடும்பத்திற்கு நெருக்கமான மதுசூதனன் என்பவனுக்கு இக்கொள்ளையில் தொடர்பிருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது.
  • தென் மாவட்டங்களில் மட்டும் சிறிதும், பெரிதுமான 400 கோவில்களில் திருட்டு நடந்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன.
  • எந்தவொரு கோவில் கொள்ளையிலும், திருட்டுப்போன தங்க, வைர நகைகள் முழுமையாக மீட்கப்படவில்லை. குற்றவாளிகளும் தண்டிக்கப்படவில்லை. கோவில் கொள்ளையர்களுக்கும், கோட்டைக் கொள்ளையர்களுக்கும் இருந்த தொடர்புக்கு இன்னும் என்ன ஆதாரம் வேண்டும்?

ஜெயா ஆட்சியில் போலீசின் கற்பழிப்பு, லாக்-அப் கொலைகள்

போலீசு அராஜகத்தில் இந்தியாவிலேயே பஞ்சாபுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடம் தமிழ் நாட்டுக்குத்தான் என்று கூறுகிறது தேசிய மனித உரிமை கமிஷனின் அறிக்கை.

வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பெயரில் சின்னாம்பதியிலும், வாச்சாத்தியிலும் கும்பல் கும்பலாக பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்; கைது செய்யப்பட்ட கணவனைத் தேடி காவல் நிலையத்திற்கு வந்த சிதம்பரம் பத்மினி போன்ற எண்ணற்ற பெண்களும், பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண்களும் காவல் நிலையத்தில் வைத்துக் கற்பழிக்கப்பட்டனர்.

திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு 15 வயது சிறுவன் கூட காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டான். சாராயம் விற்க மறுத்த பலர் அடித்துக் கொல்லப்பட்டனர்.

கொலை அல்லது கற்பழிப்புக்காக எந்தவொரு போலீசுக்காரனும் தண்டிக்கப்படவில்லை. மாறாக ’நிவாரணம் வாங்குவதற்காக கற்பழிக்கப்பட்டதாக புளுகுகிறார்கள்’ என்று பேசி காமவெறி கொண்ட போலீசு நாய்களுக்கு வக்காலத்து வாங்கினார், ஜெயலலிதா. அ.தி.மு.க ரவுடிகளுக்கும், கிரிமினல்களுக்கும் போலீசு துணை நின்றனர். போலீசுக்கோ ஜெயலலிதா துணை நின்றார்.

நியாயம் கேட்போருக்கு எதிராக அ.தி.மு.க ரவுடிகளின் தாக்குதல்

ஜெயா ஆட்சியில் தாக்கப்படாத பத்திரிகை நிருபர்கள் வெகு குறைவு. நக்கீரன் நிருபர்கள் பலர் தாக்கப்பட்டனர்; அச்சக உரிமையாளர் கணேசன் போலீசு சித்திரவதையால் இறந்தார்; தராசு அலுவலகம் தாக்கப்பட்டு, இரு ஊழியர்கள் கொல்லப்பட்டனர்; தினகரன், தினமலர் நிருபர்களும், சன் டிவி தொழில்நுட்ப மேலாளரும் தாக்கப்பட்டனர்; இல்லஸ்டிரேடட் வீக்லி, மாலை முரசு, முரசொலி பத்திரிகையாளர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார், சபாநாயகர்.

தி.மு.க. வழக்கறிஞர் சண்முக சுந்தரம், பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் ஆகியோர் தாக்கப்பட்டனர். கொடியன் குளம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல் எதிர்ப்பு ஊர்வலத்தில் போலீசு வேடமிட்ட அ.தி.மு.க குண்டர்கள் புகுந்து இரண்டு பேரை சுட்டுக் கொன்றனர்.

ஜெயா – சசி கும்பலுக்கெதிராக பேச முனைபவர்கள் யாராக இருந்தாலும், தமிழகத்தில் எந்த ஊராக இருந்தாலும், அவர்களைத் தாக்குவதற்கும் பின்னர் தப்பிச் செல்வதற்கும் அ.தி.மு.க ரவுடிகளுக்கு முழு பாதுகாப்பும் அளித்தது போலீசு.

வெளியிட்டவர்கள்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

மனு நீதி மன்றம் : சொத்துக் குவிப்பு வழக்கு உணர்த்தும் உண்மைகள் !

15

உச்ச நீதி மன்றம்: மனுவின் மறு அவதாரம்! – சொத்துக் குவிப்பு வழக்கு உணர்த்தும் உண்மைகள்!

ர்நாடகா உயர்நீதி மன்றத்தில் நடந்துவரும் ஜெயா-சசி கும்பல் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்குரைஞராக பவானி சிங்கைத் தமிழக அரசு நியமித்ததை ரத்து செய்யக் கோரி தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு (டிவிஷன் பெஞ்ச்) அவ்வழக்கில் நீதி வழங்கப்பட்டதைப் போல ஒரு ஜோடனையைக் காட்டியிருக்கிறதேயொழிய, உண்மையில் அந்த அமர்வு பணம், அதிகாரம், பார்ப்பன சாதி செல்வாக்கு கொண்ட குற்றவாளியான ஜெயாவிற்குச் சாதகமான தீர்ப்பைத்தான் அளித்திருக்கிறது.

உச்சநீதிமன்ற அமர்வு
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் மறுவிசாரணை தேவையில்லை என உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், பிரஃபுல்லா சி. பந்த் மற்றும் தீபக் மிஸ்ரா

“பவானி சிங்கின் நியமனம் சட்டப்படி தவறானது. மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்குரைஞரை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசின் இலஞ்ச ஒழிப்பு துறைக்குக் கிடையாது. அந்த அதிகாரம் கர்நாடகா அரசுக்குத்தான் உள்ளது. தமிழக அரசு மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங்கை அரசு வழக்குரைஞராக வைத்துக் கொள்வதில் அதீத ஆர்வம் காட்டியிருக்கிறது” எனக் குறிப்பிட்டு பவானி சிங்கின் நியமனத்தை ரத்து செய்துள்ள அந்த அமர்வு, தமது தீர்ப்பில் ஐந்து உத்தரவுகளைப் பிறப்பித்து, அதில் ஒன்றாக, “சட்டத்திற்குப் புறம்பாக அவசர அவசரமாக வழக்கை விசாரித்த நீதிபதி, இது ஊழல் தொடர்பான வழக்கு என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது” எனக் கூறியிருக்கிறது.

உச்சநீதி மன்ற நீதிபதி மதன் லோகூர்
மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்குரைஞர் பவானி சிங் நியமனத்தை ரத்து செய்ய வேண்டுமென உத்தரவிட்ட உச்சநீதி மன்ற நீதிபதி மதன் லோகூர்

“அரசு வழக்குரைஞரும் சட்டப்படி நியமிக்கப்படவில்லை, வழக்கு விசாரணையும் சட்டப்படி நடக்கவில்லை எனக் கூறும் இந்தத் தீர்ப்பின் தர்க்கரீதியான முடிவு, இந்த வழக்கில் வேறொரு அரசு வழக்குரைஞரை, வேறொரு நீதிபதியை நியமித்து மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும்” என்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும்; இருந்திருக்க முடியும். ஆனால், அந்த அமர்வு பொது அறிவுக்கு எதிரான, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் மறுவிசாரணை நடத்தத் தேவையில்லை என்ற முடிவை அறிவிக்கிறது.

உச்சநீதி மன்றத்தில் அன்பழகன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இந்த அமர்வுக்கு முன் விசாரித்த இரண்டு நீதிபதிகளுள் ஒருவரான நீதிபதி மதன் லோகூர், பவானி சிங்கின் நியமனத்தை ரத்து செய்து, இவ்வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். “நீதிபதி லோகூரின் முடிவை நாங்கள் ஏற்கவில்லை” என்றும் டிவிஷன் பெஞ்ச் தனது தீர்ப்பில் அறிவித்திருக்கிறது.

03-justice-caption-2

சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டிலும் பவானி சிங்தான் அரசு வழக்குரைஞராகத் தொடர வேண்டும் என ஜெயா கும்பல் விரும்பியதற்கு, அவர் குற்றவாளிகள் தரப்புக்கு விலை போனார் என்பது தவிர வேறு காரணம் கிடையாது. குற்றவாளிகள் தரப்பு தமது மேல்முறையீட்டு வழக்கில் தமக்கு எதிராக – அதாவது அரசு வழக்குரைஞராக யார் வாதாட வேண்டும் என்பதைச் சட்டவிரோதமாக நியமித்துக் கொண்டதோடு, இம்மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடகா அரசை எதிர்வாதியாகச் சேர்க்காமலும் தவிர்த்துள்ளனர்.

தற்பொழுது கர்நாடக அரசால் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ள ஆச்சார்யா, நீதிபதி குமாரசாமியிடம் தாக்கல் செய்துள்ள எழுத்துபூர்வமான வாதத்தில், “இந்த வழக்கை நடத்தியது கர்நாடகா அரசு. எனவே, வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டுக்குப் போவது என்றால் எதிர்மனுதாரராக கர்நாடகா அரசைச் சேர்த்து அவர்களது பதிலை வாங்கியிருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசுக்குத் தெரியாமல் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து விசாரணையை முடித்திருக்கிறார்கள். எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவே செல்லாது” என்றும் சொல்லியிருக்கிறார்.

தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளான ஜெயா கும்பல் மேல்முறையீட்டு வழக்கைச் சட்டவிரோதமாகவும் சதித்தனமாகவும் நடத்தி வந்துள்ளது. இதற்கு கர்நாடகா உயர்நீதி மன்றமும் தலையாட்டியிருக்கிறது என்பதுதான் இதன் பொருள். ஆனால், உச்சநீதி மன்ற டிவிஷன் பெஞ்சோ, பவானி சிங்கைத் தமிழக அரசு நியமனம் செய்தது சட்டப்படி செல்லுமா, செல்லாதா என்பதைத் தாண்டி, ஜெயாவின் இந்த கிரிமனல்தனங்களுக்குள் தலையிட மறுத்துவிட்டது.

நீதிபதி குமாரசாமி
சொத்துக் குவிப்பு வழக்கில் தமக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யக் கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயா-சசி கும்பல் தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி குமாரசாமி

சிறப்பு நீதிமன்றத்திலும், மேல்முறையீட்டு வழக்கிலும் பவானி சிங் எப்படியெல்லாம் குற்றவாளிகள் தரப்புக்குச் சாதகமாக நடந்துகொண்டார் என்பது ஊரறிந்த உண்மை. ஆனால், கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதிகளும், உச்சநீதி மன்ற நீதிபதிகளும் இந்த உண்மையைப் பார்க்க மறுத்து சட்டத்திற்குள் தங்கள் முகத்தைப் புதைத்துக் கொண்டார்கள். வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்கக்கூட மறுத்துவிட்டு, பவானி சிங் அரசு வழக்குரைஞராகத் தொடரும் அநீதியை அனுமதித்து வந்தனர். பவானி சிங்கின் நடத்தை குறித்து நாங்கள் கருத்துக் கூற விரும்பவில்லை என வெளிப்படையாகவே அறிவித்தது, உச்சநீதி மன்றத்தின் டிவிஷன் பெஞ்ச்.

ஆச்சார்யா தாக்கல் செய்துள்ள எழுத்துபூர்வமான வாதத்தின்படி பார்த்தால், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடந்துவரும் மேல்முறையீட்டு விசாரணையை மட்டுமல்ல, ஜெயா-சசி கும்பலுக்கு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருக்கும் பிணையையும் ரத்து செய்ய வேண்டியிருக்கும். ஏனென்றால், உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு, கர்நாடகா அரசின் வாதங்களைக் கேட்டு ஜெயா கும்பலுக்குப் பிணை வழங்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் இந்த இரண்டு முடிவுகளுமே பொது அறிவுக்கோ, சட்டபூர்வ வாதங்களுக்கோ இடமின்றி, கட்டப் பஞ்சாயத்து முறையிலேயே எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டு வழக்கை மறுவிசாரணை செய்யத் தேவையில்லை என உத்தரவிட்டுள்ளதற்கு, ஜெயா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதை ஒரு காரணமாக உச்சநீதி மன்ற நீதிபதிகள் காட்டியுள்ளனர். உச்சநீதி மன்றத்தின் இந்த அக்கறை முதலைக் கண்ணீரைவிட மோசடியானது. ஏனென்றால், ஜெயா-சசி கும்பல், சொத்துக் குவிப்பு வழக்கில் தாம் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் காரணமாகவே, அவ்வழக்கில் விரைந்து தீர்ப்பு வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் வழக்கை இழுத்தடித்தது. இப்பொழுது தண்டனையிலிருந்து விரைந்து தப்பித்து மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் குந்த வேண்டும் என்பதற்காகவே மேல்முறையீட்டு வழக்கை விரைந்து முடிக்க எத்தனிக்கிறது. இந்த இரண்டு நிலைமையிலும் உச்சநீதி மன்றம் ஜெயாவின் அல்லக்கையாகவே நடந்து வருகிறது.

03-justice-caption-1சொத்துக் குவிப்பு வழக்கை பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்ட தீர்ப்பில், “இந்த வழக்கை தினந்தோறும் விசாரிக்க வேண்டும்; இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும்” என்றெல்லாம் நிபந்தனைகளை விதித்திருந்தது, உச்சநீதி மன்றம். ஜெயா கும்பல் இந்த நிபந்தனைகளை மீறி வழக்கை இழுத்தடித்த பல்வேறு சந்தர்ப்பங்களில், அவருக்கு ஆதரவாக பல தீர்ப்புகளை அளித்த உச்சநீதி மன்றம், இதன் மூலம் தான் விதித்த நிபந்தனைகளைத் தானே குப்பையில் வீசியது. சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயா தண்டிக்கப்பட்ட பிறகு, அவருக்குப் பிணையும் வழங்கி, அவரது மேல்முறையீட்டு மனுவை 90 நாட்களுக்குள் முடித்துக் கொடுக்கும் ஏஜெண்டாகச் செயல்பட்டது. இந்த 90 நாள் கெடுவைக் காட்டியே மேல்முறையீட்டு வழக்கில் ஜெயா கும்பல் செய்துள்ள அத்துணை முறைகேடுகளும் பூசி மெழுகப்பட்டன. சட்டவிரோதமான முறையில்தான் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றுள்ளது என்பது நிரூபணமான பிறகும், வழக்கை மறுவிசாரணையின்றி முடித்துக் கொடுக்க கூச்சநாச்சமின்றி ஆலாய்ப் பறக்கிறது. “வழக்கைத் தாமதப்படுத்துவது நீதியை மறுப்பதாகும் என்பது போல வழக்கை அவசர அவசரமாக விசாரித்து முடிக்க உத்தரவிடுவது நீதியைப் புதைப்பதற்குச் சமமானது” என்கிறார், முன்னாள் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சந்துரு.

“இதுவொரு ஊழல் வழக்கு என்பதை நினைவில் கொண்டு நீதிபதி குமாரசாமி அச்சமின்றியும் ஊசலாட்டமின்றியும் தீர்ப்பு எழுத வேண்டும்” எனத் தமது தீர்ப்பில் அறிவுரை வழங்கியிருக்கும் நீதிபதிகள், ஊழல் குறித்து ஒரு நீண்ட பிரசங்கமே நடத்தியுள்ளனர். ஊருக்கு உபதேசம் செய்துள்ள உச்சநீதி மன்றம் இச்சொத்துக்குவிப்பு வழக்கில் எப்பொழுதுமே அப்படி கறாராக, நேர்மையாக நடந்துகொண்டதில்லை. குற்றவாளி ஜெயா பாப்பாத்தி என்பதாலேயே, தீர்ப்பு என்ற பெயரில் அவரது கிரிமினல் குற்றங்களுக்குப் பரிகாரம் செய்யும் புரோகிதராகத்தான் உச்சநீதி மன்றம் நடந்து வருகிறது.

வழக்குரைஞர் பவானிசிங்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயா-சசி கும்பலுக்கு விசுவாசமாக நடந்துகொண்ட வழக்குரைஞர் பவானிசிங்.

குறிப்பாக, சிறப்பு நீதிமன்றத்தில் பவானி சிங் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டதை கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதி வகேலா ரத்து செய்ததை எதிர்த்து ஜெயா கும்பல் உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில், அவர் விரும்பியபடியே பவானி சிங்கின் நியமனத்தை உறுதிப்படுத்தியது, நீதிபதி சௌஹான் அமர்வு. சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்ட ஜெயாவிற்கு 21 நாட்களில் பிணை வழங்கி அவருக்குப் பரிகாரம் அளித்தார் தலைமை நீதிபதி தத்து. மேல்முறையீட்டு வழக்கில் சட்டவிரோதமாக பவானி சிங் நியமிக்கப்பட்டதை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பரிகாரமாக மேல்முறையீட்டு வழக்கில் மறுவிசாரணை தேவையில்லை என்ற சலுகை ஜெயா கும்பலுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. “மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்குரைஞர் இல்லாமல் நீதிபதி குமாரசாமியைத் தீர்ப்பெழுத அனுமதிப்பது சட்டப்படியான நடைமுறை கிடையாது” என வாதிடுபவர்களின் வாயை அடைக்கும் விதத்தில், “அதுதான் அன்பழகனையும், கர்நாடகா அரசையும் எழுத்துப்பூர்வமாக வாதத்தை முன்வைக்க அனுமதித்திருக்கிறோமே” என்ற பரிகாரத்தைக் காட்டுகிறது, உச்சநீதி மன்றம்.

ஜெயா, 1991-96-ல் தமிழக முதல்வராக இருந்தபொழுது, தனது வருமானத்தை மீறி முறைகேடான வழிகளின் மூலம் 66 கோடி ரூபாய் அளவிற்குச் சொத்துக்களை வாங்கிக் குவித்தார் என்பதுதான் இந்த வழக்கு. ஜெயா-சசி கும்பல் தண்டிக்கப்படுவதற்கு முன்பும், தண்டிக்கப்பட்ட பிறகும் இந்த வழக்கிலிருந்து விடுபடுவதற்கு நேர்மையான வழிகளைப் பின்பற்றியதேயில்லை. பல்வேறு குறுக்கு வழிகள், முறைகேடுகள், சட்டவிரோதமான நடவடிக்கைகள், குதர்க்கமான வழக்குகள் ஆகியவற்றின் வழியாக இந்த வழக்கையே குழிதோண்டிப் புதைக்க முயன்றார், முயன்று வருகிறார். இதற்காக அவர் செலவழித்த, செலவழித்து வரும் தொகையைக் கணக்கிட்டால், அது இந்த 66 கோடி ரூபாயைவிட நிச்சயம் பல மடங்கு தேறும். இப்படி வழக்கை இழுத்தடிக்கவும், குழிதோண்டிப் புதைக்கவும் கோடிகோடியாகச் செலவழிக்க அவருக்குப் பணம் எங்கிருந்து வருகிறது என்ற கேள்வியை முன்நிறுத்தினாலே, ஜெயா கும்பல் அடித்திருக்கும் கொள்ளையின் பரிமாணத்தைப் புரிந்துகொண்டுவிடலாம்; அவரைக் குற்றவாளியென்றே தீர்மானித்துவிடலாம்.

03-jaya-cartoonஇந்தச் சட்டவிரோத, குறுக்குவழிகளுக்கு அப்பால் இந்த வழக்கிலிருந்து விடுபட அவர் தெய்வத்தையும், ஜோசியத்தையும் நம்புகிறார். இங்கேயும் இலஞ்சத்தைக் (பணத்தை) கொட்டிதான் தெய்வத்தைத் தன் பக்கம் இழுக்க முயலுகிறது, ஜெயா கும்பல். அவரது ‘வேண்டுதலுக்கு’ தெய்வம் வருகிறதோ இல்லையோ, அவரைக் காக்க தெய்வ ரூபத்தில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் குதித்திருக்கிறார்கள். ஓட்டுக்கட்சிகளும், அரசின் பிற உறுப்புகளும் சீரழிந்து மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றம்தான் மக்களின் விடிவெள்ளியாகக் காட்டப்படுகிறது. அப்படியான நம்பகத்தன்மைக்கே வேட்டு வைக்கும் வகையில், ஜெயாவைக் காப்பாற்றும் நோக்கில் சொத்துக் குவிப்பு வழக்கில் சுயமுரண்பாடான, மழுப்பலான, சட்டம் – நீதிமன்ற நெறிமுறைகளுக்கு எதிரான தீர்ப்புகளை அளித்து வருகிறது, உச்சநீதி மன்றம்.

இதற்கும் மேலாக, “இலஞ்சம், ஊழல், முறைகேடுகள் மூலமாக சொத்துக்குவித்த வழக்குகளில், குற்றவாளிகளுக்குச் சாதகமாக அவரது சொத்து மதிப்பில் 20 சதவீதம் வரை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து கொள்ளலாம் என்று உச்சநீதி மன்றம் கூறியிருக்கிறது. இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு ஆயிரக்கணக்கான அதிகாரிகள் ஊழல் வழக்கில் தண்டிக்கப்படாமல் ஏற்கெனவே தப்பித்துள்ளனர்” எனச் சுட்டிக் காட்டுகிறார், முன்னாள் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சந்துரு. இந்த முன்மாதிரியைப் பயன்படுத்தி, ஜெயாவையும் உச்சநீதி மன்றம் வழக்கிலிருந்தும் தண்டனையிலிருந்தும் விடுதலை செய்யக்கூடும்.

“பிராமணன் கொடிய குற்றம் செய்தவன் ஆயினும் அவனைக் கொலை செய்யாமலும், துன்பப்படுத்தாமலும் அவனுக்குப் பொருளைக் கொடுத்து அயலூருக்கு அனுப்ப வேண்டும்” என்கிறது மனுநீதி. சொத்துக்குவிப்பு வழக்கில் இந்தப் பார்ப்பன நீதிப்படிதான் உச்சநீதி மன்றம் நடந்து வருகிறது என்பதை இவ்வழக்கில் அடுத்தடுத்து அது தரும் தீர்ப்புகளே எடுத்துக்காட்டுகின்றன.

– செல்வம்

‘தத்து இருக்க பயமேன்!’

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து
ஜெயாவின் ஏஜெண்டாக செயல்பட்டு வரும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து

சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட ஜெயா-சசி கும்பலுக்கு 21-ஆவது நாளிலேயே நிபந்தனையற்ற பிணை அளித்து, சிறையிலிருந்து போயசு தோட்டத்துக்கு அனுப்பி வைத்தது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து அமர்வு. இந்த வழக்கின் எதிர்த்தரப்பான கர்நாடகா அரசின் வாதங்களைக் கேட்காமலும்; ஜெயாவிற்குப் பிணை வழங்க மறுத்த கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதி சந்திரசேகராவின் வாதுரைகளுக்குப் பதிலேதும் சொல்லாமலும் நீதிபதி தத்து தன்னிச்சையாக, கட்டப்பஞ்சாயத்து முறையில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்குப் பிணை வழங்கினார்.

ஜெயா-சசி கும்பல் பிணை கோரி மட்டும்தான் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால், நீதிபதி தத்துவோ அவர்களின் மேல்முறையீட்டு மனுவை விரைந்து முடிக்குமாறு கர்நாடக உயர்நீதி மன்றத்திற்கு உத்தரவிட்டு, பார்ப்பன ஜெயாவிற்குத் தனிச் சலுகை காட்டினார்.

இந்தப் பிணை, சட்டத்திற்கும் நீதிமன்ற நெறிமுறைகளுக்கும் எதிரானது என ராஜீவ் தவான் உள்ளிட்ட பல மூத்த வழக்குரைஞர்கள் வெளிப்படையாகவே விமர்சித்துள்ளனர். மேலும், சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி, ஜெயாவிற்குப் பிணை வழங்குவதற்கு ஏறத்தாழ நூறு கோடி ரூபாய் இலஞ்சப் பணம் கைமாறியிருக்கிறது என்ற குற்றச்சாட்டை நீதிபதி தத்துவிடமே முன்வைத்தார்.

நீதிபதி வகேலா
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையில் உள்ள நியமனக் குழுவால் சந்தேகத்திற்கிடமான முறையில் கர்நாடகா உயர்நீதிமன்றத்திலிருந்து ஒரிசா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட கர்நாடகத் தலைமை நீதிபதி வகேலா.

இப்படிப்பட்ட விமர்சனங்கள், சந்தேகங்கள் நீதிபதிகள் மீது எழுப்பப்படும்பொழுது அவ்வழக்கை விசாரிப்பதிலிருந்து தாமே விலகிக் கொள்வது மரபாகப் பின்பற்றப்படுகிறது. ஆனால், தலைமை நீதிபதி தத்துவோ ஜெயா-சசிக்குப் பிணை வழங்கிய பிறகும், அவர்களது பிணை மனுவை முடித்து வைக்காமல், அதனை நீட்டித்து அடுத்தடுத்து உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.

ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவிற்கு வழங்கப்பட்ட பிணை, அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது உறுதியானவுடனேயே டெல்லி உயர்நீதி மன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் பிணையில் வந்திருக்கும் ஜெயாவோ போயசு தோட்டத்திலிருந்தபடியே தமிழக அரசை ஆண்டு வருகிறார். இந்த பினாமி ஆட்சி குறித்து அசைக்கமுடியாத ஆதாரங்கள் இருந்தும், அவரது பிணையை ரத்து செய்ய மறுத்து வருகிறார், தத்து.

பவானி சிங்கை நீக்கக் கோரும் அன்பழகன் மனுவை விசாரித்து வந்த நீதிபதிகள் மதன் லோகூர்-பானுமதி அமர்வு 15-04-2015 அன்று தீர்ப்பை வெளியிட இருந்த நேரத்தில், அதற்கு மூன்று நாட்கள் முன்னதாக 12-04-2015 ஞாயிறு அன்று கர்நாடக உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி வகேலாவை ஒரிசா உயர்நீதி மன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது, நீதிபதி தத்து தலைமையில் அமைந்துள்ள நீதிபதிகள் குழு. தேசிய நீதித்துறை நியமன கமிசனுக்கான அறிவிக்கை 13-0402015 அன்று வெளியிடப்படவிருந்த நிலையில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை எதிர்த்த வழக்கை 15-04-2015 அன்று உச்சநீதி மன்றம் விசாரிக்கவிருந்த நிலையில் வகேலா அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

மூத்த வழக்குரைஞர் ஆச்சார்யா
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயாவின் சிம்ம சொப்பனமான மூத்த வழக்குரைஞர் ஆச்சார்யா.

சிறப்பு நீதிமன்றத்தில் பவானி சிங் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டதை ரத்து செய்து தீர்ப்பளித்தவர் நீதிபதி வகேலா. மேலும், மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் அரசு வழக்குரைஞராகத் தமிழக அரசால் நியமிக்கப்பட்டது சட்டப்படி தவறானது என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இவை அனைத்தும் அவரது மாறுதல் உள்நோக்கத்துடன், அதாவது ஜெயாவின் மேல்முறையீட்டு வழக்கில் அவர் இடையூறாக இருக்கக் கூடாது என்ற திட்டத்துடன் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துகின்றன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செவது தொடர்பான வழக்கு உள்ளிட்ட 30 வழக்குகள் அரசியல் சாசன அமர்வு விசாரணைக்காக உச்சநீதி மன்றத்தில் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் உள்ளன. ஆனால், நீதிபதிகள் லோகூர்-பானுமதி அமர்வு பவானி சிங் நியமனம் தொடர்பான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை வெளியிட்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே (16-04-2015) இவ்வழக்கை 21-04-2015 அன்று டிவிஷன் பெஞ்ச் விசாரிக்கும் என்ற அறிவிப்பை வெளியிடுகிறது, உச்ச நீதிமன்றம். அதற்கடுத்த இரண்டாவது நாளில் (18-04-2015) அந்த அமர்விற்கான நீதிபதிகளின் பெயர்கள் அறிவிக்கப்படுகின்றன. “முக்கியமான ஒருவரே உச்சநீதி மன்ற பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று நேரடியாக ஏற்பாடுகளைச் செய்தார்” என தி.மு.க. தலைவர் கருணாநிதி சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த முக்கியமான நபர் தலைமை நீதிபதி தத்துவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

தலைமை நீதிபதி தத்து, தான் ஓய்வு பெற்றுப் போவதற்குள் சொத்துக்குவிப்பு வழக்கை ஜெயாவிற்குச் சாதகமாக முடித்துக் கொடுக்கும் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார் என்பதற்கு இவையெல்லாம் அசைக்க முடியாத ஆதாரங்களாக உள்ளன. அந்த நம்பிக்கையில்தான் ஜெயா-சசி கும்பல் போயசு தோட்டத்து பங்களாவில் பதுங்கிக் கிடக்கிறது.

-குப்பன்
____________________________

புதிய ஜனநாயகம், மே 2015
____________________________

வாடி ராசாத்தி… புதிய தலைமுறை மாலனின் குத்தாட்டம்

12

குமாரசாமி தீர்ப்பை மானே தேனே என்று பாராட்டி தினமணியின் வைத்தி மட்டும் எழுதவில்லை. யாரெல்லாம் எழுதினார்கள் என்று பட்டியல் இட்டால் அதற்கு ஒரு ஆயுள் போதாது. ‘அம்மாவின்’ பவர் அப்படி. அல்லது பரிசு வாங்கிய நன்றிக் கடனில் மக்கள் கடனை கொன்று தின்னும் ஊடக பிரபலங்கள் இங்கே அதிகம்.

புதிய தலைமுறை மாலன்
டிவிட்டர், ஃபேஸ்புக்கில் மனந்திறந்து பூரித்த புதிய தலைமுறை மாலன்

நாளிதழுக்கு இருக்கின்ற அன்றாடம் செய்தி வெளியிடும் வாய்ப்பு வார இதழகளுக்கு இல்லை என்பதால் புதிய தலைமுறை வார இதழின் ஆசிரியர் மாலன் கொஞ்சம் வருந்தியிருப்பார் போலும். அதனாலென்ன? டிவிட்டர், ஃபேஸ்புக்கில் அவர் மனந்திறந்து பூரித்திருக்கும் செய்திகளையும் அவற்றின் உட்கிடக்கையையும் இங்கே தொகுத்து தருகிறோம்.

(தீர்ப்பு வெளிவரும் அன்று மே 11 காலையிலிருந்து மாலன் பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருக்கிறார். சரியாக 11.010க்கு வெற்றி செய்தி அவர் காதுக்குள் போக கைகளிலிருந்து டிவிட்டர் அறிவிப்பு பாய்கிறது.)

மாலன் நாராயணன் May 11 at 11:01am · Twitter ·

jaya is aquitted

(சரி, ஒரு செய்தியை ஒரு பத்திரிகையாசிரியர் வெளயிடுவதில் தவறு என்ன என்று விசாரிப்போர் பொறுமையாக மேலே போக…)
___________

(அடுத்த இரண்டு நிமிடத்தில் தமிழிலும் குதூகல அறிவிப்பு முழங்குகிறது)

மாலன் நாராயணன் May 11 at 11:03am · Twitter ·

ஜெயலலிதா விடுதலை
____________

மாலன் நாராயணன் May 11 at 11:20am · Twitter ·

not going for appeal -Dr.Swamy மேல் முறையீடு செய்யப் போவதில்லை –சுவாமி

(அடுத்த 15 நிமிடங்களில் சுவாமியின் செய்தி வெளிவருகிறது. இதில் செய்தியின் மதிப்பை விட மாலனின் பயமும், விருப்பமும் முக்கியம். இந்த வழக்கை ஆரம்பத்தில் போட்ட இந்த போக்கிரி மீண்டும் உ.நீதிமன்றம் சென்று பிழைப்புக்கு ஆப்பு வைப்பாரா என்பது பயம். அவர் அப்படி போகவில்லை என்றதும் அம்மாவின் விடுதலை உத்தரவாதமாகிவிடும் என்பது விருப்பம். ஆனால் சு.சாமி பேச்சிலும், எழுத்திலும் மேல் முறையீடு போவேன், கர்நாடக அரசு போகாவிட்டால் எனக்கு பவர் இருக்கிறது என்றே அனைத்து ஊடகங்களிலும் பேசினார். இது ஏன் மாலனுக்கு மாற்றி கேட்டது என்பதும் குமாரசாமி ஏன் கணக்கை மாற்றி போட்டார் என்று கேட்பதும் ஒன்று)
_____________

மாலன் நாராயணன் May 11 at 11:20am · Twitter ·

Retweeted Dhanya Rajendran (@dhanyarajendran):

Prosecution had failed to prove the charges. Appellants source of income has clearly established. ‪#‎JayaVerdict

(அடுத்ததாக மாலன் , நியூஸ்மினிட் செய்தி நிறுவனத்தில் வேலை செய்யும் தன்யா ராஜேந்திரனின் செய்தியை வெளியிடுகிறார். அதன்படி அரசுத் தரப்பு குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை, ஜெயா தரப்பு தெரிவித்த சட்டபூர்வ வருமானம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிலைநாட்டப்பட்டது என்பதை மாலன் தெரிவிக்கிறார். அதையும் ஒரு ஆங்கில செய்தியாளரின் மூலம் தெரிவிப்பதால், வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் எனும் வடிவேலுவின் தத்துவத்தை திறமையாக பயன்படுத்திக் கொள்கிறார்.

ஆனால்……)

Dhanya Rajendran @dhanyarajendran :  Plugging our big story today. Are there glaring mathematical errors in Jayalalithaa case judgement? http://bit.ly/1JE89zv

(அடுத்த நாள் அதே தன்யா, நீதிபதி குமாரசாமியின் கணக்கு தவறை வைத்து முக்கியமான கட்டுரையை வெளியிடப் போவதாக தெரிவிக்கிறார். இதை மாலன் ஏன் வெளியிடவில்லை? இப்போதும் வடிவேலு தத்துவத்தையே நம்புகிறார். அதாவது சிவப்பாக இருப்பவன் சொல்வதை மக்கள் நம்பிவிட்டால்…..?)
____________

தரகர் மாலன்
பச்சமுத்துவின் முதல் ஊடக ஆசிரியர் சொன்னால் அறுதி உண்மை என்று நினைப்பு.

(அடுத்த ஒரு மணிநேரத்தில் மாலன் அவர்கள் வரலாற்றில் மூழ்கினாரோ இல்லை ஏற்கனவே எடுத்து வைத்திருந்தாரோ, இல்லை இத்தகைய ஆவண ரெடிமேடுகளை போயஸ்தோட்டமே கூட பார்சல்கூட அனுப்பியிருக்கலாம். இதில் இதற்கு முன்னர் போடப்பட்ட பல்வேறு வழக்குகளில் ஜெயா எப்படி வென்றார் என்பதை பட்டியல் இடுகிறார். அதைப் பார்த்தால் பல பத்து ஊழல் வழக்குகளில் இருந்து அம்மையார் ஏற்கனவே விடுதலை ஆனவர் என்பதால் இந்த வழக்கெல்லாம் ஒரு ஜுஜுபி என்ற நக்கல் இருக்கும். ஊரறிந்த ஒரு ஊழல் வழக்கில் பல்வேறு தகிடுதத்தங்கள் செய்யப்பட்டதையெல்லாம் மாலன் அவர்கள் இங்கே ஆவணப்படுத்தி முன்வைக்கவில்லை. எனினும் இந்த நிலைத்தகவலை எதிர்த்து பலரும் அவரிடம் கேள்வி எழுப்புகின்றனர்.)

மாலன் நாராயணன் May 11 at 11:30am

ஜெயலலிதா சந்தித்த/வென்ற/விடுவிக்கப்பட்ட வழக்குகள்

பிறந்தநாள் பரிசு வழக்கு
2011-ம் ஆண்டு இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

டான்சி
2002-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு விடுதலை செய்தது. மேல்முறையீட்டு வழக்கிலும் விடுதலை உறுதி செய்யப்பட்டது.

கலர் டி.வி.
இந்த வழக்கிலும் ஜெயலலிதா விடுதலைசெய்யப்பட்டார்.

கொடைக்கானல் ஓட்டல்
மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு அவரை விடுதலை செய்தது.

நிலக்கரி
இந்த வழக்கில் இருந்தும் பின்பு ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார்.

ஸ்பிக் நிறுவன பங்குகள்
2004-ம் ஆண்டு ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார்.

திராட்சை தோட்டம்
இந்த புகார் 2013-ல் முடித்து வைக்கப்பட்டது. இதுபோல் திராட்சை தோட்டம் மூலம் ரூ 60 லட்ச அளவிற்கு வருமானம் ஈட்டிய வழக்கில் வருமானவரி கட்டவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.

தெற்காசிய விளையாட்டு போட்டி
இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

டாமின் நிறுவன உரிமம்
வழக்கு சிறப்பு கோர்ட்டிலேயே முடித்து வைக்கப்பட்டது. (எப்படி மாலன் சார்?)

வருமான வரி
எழும்பூர் கோர்ட்டில் முடித்து வைக்கப்பட்டது. (வரியை கட்டுவதாக ஒத்துக் கொண்டு அதாவது கணக்கில் காட்டாத வருமானத்திற்குரிய வரி….இதெல்லாம் மாலன் சாருக்கு முக்கியமில்லை)

லண்டன் ஓட்டல்
இந்த வழக்கை திரும்பப்பெற சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியது.

புதிய தலைமுறை அட்டை
புதிய தலைமுறை அட்டையில் ‘அம்மா’வுக்கு மாலன் வைத்த காணிக்கை

(இந்த நிலைத்தகவல் குறித்த மக்கள் கருத்துக்கள்)

விருதை ஜே. கே :
பணம் மட்டுமே பத்தும் செய்யும்..!! கூடுதலாக அதிகாரமும் சேர்ந்து கொண்டால் நூத்தி பத்தும் செய்யும் !!

Yuva Krishna:
’சந்தித்த’ ஓக்கே. ‘வென்ற’ என்பது சரியானதா சார்?

மாலன் நாராயணன்:
விடுவிக்கப்பட்ட என்றும் போட்டிருக்கிறேனே

Yuva Krishna:
’விடுவிக்கப்பட்ட’ என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ஜெயலலிதாவின் வெற்றி என்பதை மக்கள் களத்தில் 91, 01, 11 ஆண்டுகளில் பெற்றவற்றை மனமுவந்து ஏற்றுக் கொள்ளலாம். நீதிமன்றங்களில் ஜெ வென்றார் என்று சொன்னால், நாளை சல்மான்கானும் வெல்லப்போகிறார் என்று சொல்ல வேண்டியிருக்கும்.

Suresh Kumar Jaganathan:
Super sir.. நீதி : எவ்ளோ பண்ணாலும் தப்பிச்சிடலாம்

Pandian Govindarajan:
ஒருபத்திரிக்கையாளனாக ஏற்பட்ட சந்தோஷமும் மனநிறைவும் புரிகிறது.

Selvan Senthilkumar:
தீர்ப்புக்கு பிறகான பதிவு….. (பத்திரிகைகள் தான்அப்படின்னா…………….நீங்களும்…………?)

Madurai Veeran: அப்புறம் என்ன ஜேக்கு பாரத ரத்னா கொடுத்திடலாம்

_____________

(அடுத்து மாலன் அவர்கள் மதிய இடைவெளிக்கு முன்னர் நாத்திகம் பேசும் முட்டாள்களை அம்பலப்படுத்துகிறார். அதில் பொதுவில் திராவிட, இடதுசாரி, முற்போக்கு முகாம்களை கேலிசெய்யும் தொனி உள்ளது என்றாலும் மாலனது பத்திரிகை ஆசிரியர் என்ற பீடத்தின் பயம் காரணமாக பல பத்திரிகையாளர்கள் இதன் உட்குத்தை கண்டு கொள்ளவில்லை. மேலும் ஜெயா கும்பல் காசு கொடுத்து செய்த நேர்த்திக் கடன்களின் உண்மை சுயரூபத்தை பள்ளி செல்லும் பிள்ளைகள் கூட அறிவார்கள் என்றாலும் மாலனது கணக்கு வேறு. இருப்பினும் மாலனது நோக்கத்திற்கு எதிராகவே பலரும் பதில் அளித்திருக்கின்றனர்.)

மாலன் நாராயணன் May 11 at 1:10pm ·

பிரார்த்தனைகளை நேர்த்திக் கடன்களை கேலி பேசியவர்கள் இனி என்ன சொல்வார்கள்? தமிழகத்தில் இறை நம்பிக்கை அதிகரிக்குமோ?

Dhandapani Sakkarapani:
என்ன தவறு செய்தாலும் நேர்த்திக்கடன் செய்து தப்பித்துவிடலாம் என்ற நம்பிக்கை அதிகரித்துவிட்டால் என்ன செய்வது? தவறே செய்யாமல் இருந்தால் எதுவும் செய்யாமலே கடவுள் காப்பாற்றுவார் என நம்புவதுதானே உண்மையான கடவுள் நம்பிக்கை?

Rajee Sankar:
இறை நம்பிக்கைகள் அதிகரிக்குதோ இல்லையோ முட்டாள்தனமான துதிபாடல்கள் நிச்சயம் அதிகரிக்கும் .

மணி மணிவண்ணன்:
அப்போ, கடவுளும் ஊழல் பேர்வழிதான்னு மக்கள் நம்புவது கூடிவிடும்னு சொல்கிறீர்களா?

Yuva Krishna:
தமிழக மக்கள் அனைவருக்கும் குமாரசாமி, மொட்டை போட்டு காது குத்தியிருக்கிறார். இறைநம்பிக்கை இல்லாமலா இது நடந்திருக்கும்?

Nagore Rumi :
இதில் உங்களுக்கு வருத்தமோ?!

Rk Rudhran :
சிலதுகள் நிஜமாகவே சிலுவையில் அறைந்து கொள்ளும்..ப்ராத்தனைகள் போஸ்டர்களாகும் போயஸ் தோட்ட வழியில்

Bala Mukundhan :
அந்த ‘நேர்த்திக் கடன்களில்’ எவ்வளவு, நிஜமாகவே மனமுருகி வேண்டி நேர்ந்து கொண்டது?, நேர வைக்கப்பட்டது? நேரம் காலம் பார்த்து நேர்த்தியான முறையில் செய்யபப்ட்டது?

Sivakkumar Sethuraman:
நல்ல எண்ணங்கள் கொண்ட பிராத்தனைகள்.. பலிக்கும்..! இதைத்தான் எல்லா மதத்திலுள்ள உண்மையான இறை நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் இங்கே நிஜத்தைவிட போலிகள் தான் மிக அதிகம்.. இதை செய்து காட்டுவதன் மூலம் பிரபலமாகவும் ஆதரவு டிவியில் அதிக நேரம் முகத்தை காட்டி பப்ளிசிட்டி + கட்சி பதவிகள் + சட்டமன்ற சீட் காத்திருப்பதாக உறுதி படுத்தும்..?! இதன் மூலம் சொல்லாமல் சொல்லும் செய்திகள் …உணர்த்தும் உண்மைகள்..! என்னவென்றால் இவைகள் மூலம் கட்சியில் புதுப்புது டெக்னிக் + டார்கட் +அரசியல் எதிரிகளுக்கு வைக்கும் வேட்டு மோகத்திற்காக மட்டுமே.. அக்கறையாக காட்டிக்கொள்ளும் பச்சையாய் அரசியல் ஆதாயம்..?? இதுவே யதார்த்தம்.. மிக விரைவில் பரிசுகளாய் பதவிகள் உண்டு..உண்டு..கண்டிப்பாக உண்டு.. என்பது தான்.. சிலுவை சுமப்பும்.. காவடிகளும்.. பால் குடங்களும்.. ஹோமங்க்களும்.. அபிஷேகங்களும்.. உணர்த்தும் செய்தி.. மிக விரைவில் மாதாவும் அம்மன்களின் வடிவங்களும் புதுப்புதுசாய் தெய்வபிறவி எடுத்து வண்ணத்தில் சாலை முழுவதும் ஆக்கிரமித்து ஜொளிக்கும்… தமிழகத்தின் ஆண்மீக அரசியல் பிராத்தனைகள் கின்னஸ் ரெக்கார்டு செய்யும் ..?! உலகம்மே வியக்கும் தமிழன் புகழ் கோமாளியாகும் நாள் வெகு தொலைவில் இல்லை..

புதிய தலைமுறை மாலன்
தீர்ப்பு வந்த நாள் அன்று மாலை நேரத்தில் கொண்டாட்ட மனநிலைக்கு வந்திருந்தார் மாலன்.

Madurai Veeran:
அம்மாவுக்கு கோவில் கட்டவேண்டியதுதான் … அர்ச்சகர்களை தமிழக அரசு நியமிக்கும்

Nsm Shahul Hameed:
ஒரு விசயம் கவனித்தீர்களா சார்!, ஜெயலலிதாவுக்காக தமிழகத்தில் அநேகர் பிரார்த்தனை செய்தனர். ஆனால் நமக்குத் தெரிந்து பெரியளவில் யாரும் பிரார்த்தனை செய்யாமலேயே மற்ற மூவருக்கும் விடுதலை கிடைக்கவும் இறைவன் வழிசெய்துவிட்டாரே!. அதான் ‘வேண்டுதல் வேண்டாமை இலான்” என்றாரோ வள்ளுவர்?
____________

(அடுத்தபடியாக ஜெயா விடுதலை ஆனதன் காரணங்களை தீர்ப்பிலிருந்து எடுத்துரைக்கிறார். அவரது பதவி, வயது, பச்சமுத்துவின் முதல் ஊடக ஆசிரியர், மிரட்டலான புள்ளிவிவரங்கள் என்று பலவும் சேர்ந்து மாலன் சொன்னால் அதுவே அறுதி உண்மை என்பதை நிலைநாட்டும் என நம்புகிறார்.)

மாலன் நாராயணன் May 11 at 3:28pm

விடுதலை ஏன்?

சொத்து மதிப்பு: ரூ. 37,59,02,466
வருமானம்: 34,76,65,654
வருமானத்திற்கு அதிகமான சொத்து: 2,82, 36,812
வருமானத்திற்கு அதிகமான சொத்து சதவீதத்தில்: 8.12%
10 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதால் விடுதலை
(தீர்ப்பிலிருந்து)

Yuva Krishna: கொஞ்சம் முன்னே பின்னே இருப்பதால் அட்ஜஸ்ட் பண்ணி வெளியே விட்டுட்டாங்க .

(யுவகிருஷ்ணாவின் இந்த ‘மேலோட்டமான’ நக்கல் மாலனுக்கு கோபத்தை வரவழைத்திருந்தாலும் உடனே ஆதாரத்தை போட்டு தனது இமேஜை தூக்குகிறார்.)

மாலன் நாராயணன்:

Yuva Krishna கிருஷ்ணானந் அக்னிஹோத்ரி என்பவர் வழக்கில் உச்ச நீதிமன்றம் 10 சதவீதத்திற்குக்குறைவான மதிப்பு அதிகரிப்பு தண்டனைக்குரியதல்ல எனத் தீர்ப்பளித்திருக்கிறது அந்தத் தீர்ப்பை இங்கே காணலாம்: http://indiankanoon.org/doc/1919354/

Yuva Krishna:
அப்படியெனில்“நாட்டில் ஊழல் என்பது மிகப்பெரிய நோயாக உள்ளது. அந்த ஊழல் நோய் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை அவர் மனதில் வைத்துக் கொண்டு தீர்ப்பை வெளியிட வேண்டும். ஊழல் நடவடிக்கைகள் ஒரு நாட்டை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு அமைய வேண்டும்.”
– இப்படியெல்லாம் உச்சநீதிமன்றம் சொன்னது சும்மா லுலுவாயிக்குதான் போல

Mageshwar Anbazhagan:
இந்த விஷயம் 10 வருஷத்துக்கும் மேல விசாரணை செஞ்ச அய்யாங்களுக்கு தெரியலையா ?

Bala Kannan:
அப்பறம் பிட்பாக்கெட் அடிக்கரவனையும், செயின் திருடுருவனையும் ஜெயில்ல போடுறாங்க, ஒரு வீட்டுல பூந்து திருடுரது தப்பா என்னா ? அப்போ பேங்க்அ கொள்ளை அடிக்கலாமானு ஜட்ஜு ஐயாவ கேட்டுச் சொல்லுங்க…

_______________

(தீர்ப்பு வந்த தினத்தின் மாலை நேரம். எனவே மாலன் அவர்கள் ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிடுகிறார்.)

மாலன் நாராயணன் May 11 at 4:59 pm

எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதோ?

வாடி ராசாத்தி, புதுசா, விரசா, ரவுசா என்ற பாடல்வரிகள் கொண்ட திரைப்பட விளம்பரம் ஒன்று இன்று வழக்கத்தைவிட அதிக முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாவதைப் போலத் தோன்றுகிற்து. பிரமையோ!

மாலன்
ஜெயா விடுதலை கொண்டாட்டங்களை பார்த்து மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போனார் மாலன்.

(ஜெயா விடுதலையானதை அவர் மட்டுமல்ல, அ.தி.மு.க அடிமைகள் மட்டுமல்ல, தொலைக்காட்சி விளம்பரங்கள், பாடல்கள், டிரெயிலர்கள் கூட கொண்டாடுவதைப் பார்த்து அவரால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போகிறார்.)
___________

மாலன் நாராயணன் May 11 at 6:00pm

//எமகண்டத்தை வென்ற ஜெயலலிதா… சுக்கிர ஓரையில் சுகமான தீர்ப்பு// செய்தி இணைய தளம் ஒன்றில் இப்படி ஒரு தலைப்பு. ஹும்ம்ம்… தமிழ் இதழியல் எங்கேயோ போயிட்டது!

(அறிவுப்பூர்வமான ஒரு தீர்ப்பை, அம்மாவின் விடுதலையை மகிழ்ந்தாலும் தன் போல நுணுக்கமாக எழுதாமல் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதுவது சாதா இதழியல் என்று தனது சூப்பர் இதழியலை நிறுவிக் கொள்கிறார்.)
____________

(அடுத்த நாள் காலை அலுவலகம் வந்ததும் முதல் செய்தியாக தினத்தந்தியின் பீஸை எடுத்து போடுகிறார். நீதிபதி குன்ஹா எங்கு தவறு செய்தார் என்று நீதிபதி குமாரசாமி எடுத்து வைக்கும் லா பாயிண்டுகளை லாலா பாடிக் கொண்டே காப்பி பேஸ்டு செய்கிறார்.)

மாலன் நாராயணன் Yesterday at 9:23am

குன்ஹா எங்கு தவறு செய்தார் என்பதை நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் விளக்கியுள்ளார்:

இந்த வழக்கில் ஆதாரங்களை ஆய்வு செய்யும் போது கீழ்க்கோர்ட்டு ஒரு தவறான முடிவுக்கு வந்துள்ளது தெளிவாக தெரிகிறது. இதில் சட்ட தடைகள் இல்லாதது மட்டுமல்ல, நீதியின் நலன் கருதி குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டியது அவசியமாகிறது. இந்த வழக்கில் வருமான வரி விவகாரங்களை ஒரு குறைந்தபட்ச மதிப்பாக கூட எடுத்துக்கொள்ள கீழ்க்கோர்ட்டு மறுத்துவிட்டது.

திருமண செலவு
சுதாகரன் திருமண செலவு ரூ 3 கோடி என்று கீழ்க்கோர்ட்டு மதிப்பிட்டு இருக்கிறது. இந்த செலவை ஜெயலலிதா செய்ததாக எந்த ஆதாரமும் இல்லாமல் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

ஆதாரங்கள் இல்லை

சாட்சிகள் பல்வேறு கட்டங்களில் பலவிதமான சாட்சியங்களை அளித்ததால் அது நம்ப தகுந்தது அல்ல. ஒட்டுமொத்த விஷயங்களையும், ஆவணங்களையும் கவனத்தில் கொள்ளும் போது, கீழ்க்கோர்ட்டின் தீர்ப்பும், அதற்கான ஆதாரமும் பலம் குறைந்து காணப்படுகிறது என்பது எனது கருத்து. கீழ்க்கோர்ட்டு கூறிய ஆதாரங்கள் சட்டப்படி வலிமையாக இல்லை.

நன்றி: இன்றைய தினத் தந்தி

குன்ஹா தீர்ப்பு வெளியானபோதே அது சட்டத்தின் பார்வையில் பிழைகள் கொண்டது எனக் கூறியிருந்த்தேன். என் கருத்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

( நீதிபதி குன்ஹா தீர்ப்பை அப்போதே தவறு என்று சட்டத்தின் பார்வையில் தான் தொலைநோக்காக கூறியிருந்ததை இங்கே மாலன் அவர்கள் பெருமை பொங்க கூறுகிறார். இதையே சோ அவர்களும்  கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக நீதிபதி குமாரசாமி அவர்கள் வேண்டுமென்றே கணக்கை தவறாக போட்டு போங்காட்டம் ஆடித்தான் மாலன் அவர்களது கணிப்பை நிரூபிக்க வேண்டும் என்றால் இங்கே நாம் ‘அம்மாவை’யோ இல்லை, குமாரசாமியையோ குற்றம் சொல்வது சரியல்லவே?)

மனேஸ் நமசிவாயம்:
நல்லா ஜால்ரா அடிக்கீரீங்க, திருட்டு கேசுக்கு…

Jayaseelan Ganapathy:
அதெல்லாம் சரி சார்… இதெல்லாம் மாதம் ஒரு ரூபாய் சம்பளத்தில் வந்தது என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதா?

Hemanathan Kumar:
நீதியரசர் குமாரசாமியின் கணக்குப்படி இரண்டரை கோடி கணக்கில்வராத தொகைக்கு என்ன தண்டனை ??? அது பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளா???

Thirumurthi Ranganathan:
“சாட்சிகள் பல்வேறு கட்டங்களில் பலவிதமான சாட்சியங்களை அளித்ததால் அது நம்ப தகுந்தது அல்ல.” – அரசியலில் பலம் படைத்தோர், அல்லது பண பலம் படைத்தோர், அல்லது அடியாட்கள் பலம் படைத்தோர்கள் மீது நடைபெறும் வழக்குகளில் சாட்சிகள் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு விதமாக சாட்சி சொல்லும்படி ‘அன்பாக’, அல்லது ‘ஆட்டோவில் கூட்டிச் சென்று’ என்று விதவிதமாக கவனிக்கப் பட்டு பிறழ் சாட்சிகளாவதைத்தான் கால காலமாகப் பார்க்கிறோமே. எனவே மேற்சொன்ன கருத்தை (“சாட்சிகள் பல்வேறு கட்டங்களில் பலவிதமான சாட்சியங்களை அளித்ததால் அது நம்ப தகுந்தது அல்ல.”) நீதிமன்றங்கள் முன்வைத்துத் தீர்ப்புச் சொன்னால், அது எப்போதுமே , பலம் படைத்த, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதாயமாக முடியாதா மாலன் நாராயணன் சார்?

Rajiv Gandhi:
இது ரொம்ப ஓவர்

Suresh Kumar Jaganathan:
இவ்ளோ நியாயத்த வெச்சுகிட்டு எதுக்கு சார் 18 வருசம் போட்டு இந்த இழுஇழுத்தாங்க…

Komandur Kannan:
ஒருவர் கூட உங்களுக்கு ஆதரவான நிலையை எடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.

Anbu Jaya:
இதெல்லாம் ஒரு கண் துடைப்பு. எல்லோரும் அறிந்த ரகசியம்.

Jeeva Manickam:
நீங்கள் குமுதத்தில் ஆசிரியராக இருந்தபோதுதானே வளர்ப்பு மகன் கலியாணம் உட்பட பல சம்பவங்கள் நடந்தன. திமுக ஆட்சிக்கு வந்ததும் சுற்றமும் நட்பும் என்று ஜெயலலிதாவை சுற்றி இருக்கும் மன்னார் குடி கும்பலைப் பற்றி நீங்கள் குமுதத்தில் பரபரப்பாய் தொடர் எழுதினீர்கள். ஜெயலலிதாவும் சசிகலாவும் நகை அணிந்த படங்களை நடுப்பக்கத்தில் வெளியிட்டு கருணாநிதியின் நண்பனாய் காட்டிக் கொண்டீர்கள், இன்று ஆட்சி மாறி விட்டது. காட்சி மாறிவிட்டது. தங்களின் ம்னசாட்சியும் மாறிவிட்டது.

(கவனியுங்கள், துக்ளக் சோ, சு.சுவாமி போல இன்னும் பல பார்ப்பனர்களைப் போல மன்னார்குடி கும்பலை தனிமைப்படுத்தி, அதாவது சசிகலா வந்த பிறகே ஜெயாவுக்கு பிரச்சினைகள் வந்தன என்ற கண்ணோட்டத்தில் மாலன் அவர்களும் அப்போது எழுதியிருக்கிறார்.)

Chandrasekar Nallusamy:
Mr Malan Sir we are (common people) not stupid, within 6 month cat will come out. Don’t try to make us fool. Better we will put vote for nota. All political parties are in same platform.

Jayaseelan Ganapathy:
நீதி வென்றது…சத்தியம் ஜெயித்தது…அப்புறமென்ன வழக்கம் போல மக்கள் தோற்றார்கள்…! நீதியரசர்.குமாரசாமியையே 2ஜி வழக்கிற்கும் நீதிபதியாக நியமித்து ஒரு அரசியல்(சமூக நீதி)சமத்துவத்தை பாஜக அரசு நிலைநாட்ட வேண்டும். இதன் மூலம் மக்கள் நீதிமன்றத்திற்கும் நீதிக்கும் சம்பந்தமே இல்லை என உணர்வர். மைசூர் போண்டாவில் மைசூரைத் தேடுவது, திருநெல்வேலி அல்வாவில் திருநெல்வேலியை தேடுவது போன்றது தான் நீதிமன்றத்தில் நீதியை தேடுவதும்.

Karthick Karu:
இதெல்லாம் தெரிஞ்சும் புதிய தலைமுறைல ஏன் சார் இறங்குமுகம்னு முதல் பக்கத்துல போட்டாங்க. 8%ஆல்கஹால் கலந்த பீர் அடிச்சிட்டு வண்டி ஓட்டுனா தப்பு இல்லையா சார்.

U S Aurro Bindhan:
நீங்களும் இப்படி மாறீட்டங்களே தப்பு செய்றவனுக்கு ஆதரவா சட்டம் வந்தா அவன் தப்பு செய்யலேன்னு ஆயிடுமா?

Abdul Hameed:
சாரே…. நீங்கள் ரொம்பத் தான் மெனக்கெடுரீங்க. பூணூல் பாசமா?

Balachandar Muruganantham:
i thought you are unbiased. are you?

Pandian Govindarajan:
கொஞ்சம் கொஞ்மாக பூனைக்குட்டி வெளியே வருகிறது. சந்தர்பவாதம் !

Vaidheeswaran Bharathy:
பாசம் இருக்கவேண்டியதுதான் தவறில்லை.. மாலன் ஒன்றும் குண்டு வைப்பவர்களுக்கு மெனக்கெடவில்லையே?

Senthilkumar Jayaprakash:
நான்கு பேரும் உத்தமர்களா?

உதயகுமார்:
கணக்கையே தப்பா போட்டிருக்கிற நீதிபதி நீதியை மட்டும் சரியா கொடுத்திருப்பாரோ?

Madurai Veeran:
குமாரசாமி எங்கு தவறுகள் செய்துள்ளார் என்று அறிய உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தால் தெரிய வரும்.

சக்தி விக்னேஷ்வர்:
ஒரு உயர்ந்த பத்திரிக்கையாளர் உங்களுக்கு ஒவ்வாத கருத்தை சொல்லிவிட்டால் உடனே இல்லாததையும் பொல்லாததையும் அவர் மீது வைப்பது தான் உங்கள் டிசைனா? பூணூல் பாசம்–எவ்வளவு அபத்தமான வார்த்தை?

எத்தனை நாட்களுக்கு தான் இந்த பிராமண துவேஷ விளையாட்டை விளையாடப் போகிறீர்களோ? இதையெல்லாம் சொன்னால் நான் ஒரு ஜால்ரா என்பீர்கள். ஜால்ராக்கள் மனதில் ஜால்ரா மணி லகலகவென்று ஆடிக்கொண்டுதான் இருக்கும்.

அவரின் எழுத்தை தொடர்ந்து வாசித்து வருபவன் என்ற முறையில் எனக்கு அவரின் பால் ஏற்பட்ட உண்மையில் சொல்கிறேன்–பார்த்து பேசுங்கள். உணர்ச்சி பெருக்கில் ஒரு நடுநிலையாளரிடம் உளறி கொட்டாதீர்கள்.

பாரதியையே பார்ப்பன வண்ணம் பூச துடிக்கும் மனப்பாங்கையே இது காட்டுகிறது.

(அய்யா சக்தி விக்னேஷ்வர், இங்கே மாலன் அவர்கள் அவருக்கு ஒவ்வுவதை மட்டும் ஏன் விசமத்தனமாக எடுத்து வைக்கிறார் என்பதே கேள்வி. அவரின் பால் உங்களுக்கு ஏற்பட்ட உண்மையின் இலட்சணம் இப்போதாவது புரிகிறதா? அவர் நடுநிலையாளர் என்று உணர்ச்சி பெருக்கில் உளறுவது சரியா?)

Bharathi Mithran:
Mr.maalan everyone knows how grand her foster sons marriage was held..how kumarasamy holds that jaya didn’t spend much…as long as people like support her under pretext of a neutral journalist its only a dream that corruption is eradicated in public life

Raja Sekaran:
Mr.Malan..go through the judgement.. blind mathematical error in total amount of credits..குன்ஹா தப்புனு குமாரசாமி சொல்றார்…குமாரசாமி தப்புனு மக்களே சொல்றாங்க…

Kavi Kkavin:
மாலன் sir இப்ப என்ன சொல்ல வரீங்க அந்த பெண் அரசியல்வாதி அப்பழுக்கற்ற தூய்மையானவர் என தானே . சரி விடுங்க .

Rangaraju Raju:
மாலன் நீங்கள் என்ன சொல்லவருகின்றீர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். ஏன் என்றும்தெரியும். ஆனந்தத்தில் நரி ஊளையிடாமல் இருந்தால்தான் வியப்பு!

(ஆனந்தத்தில் நரி ஊளையிடாமல் இருந்தால்தான் வியப்பு……….என்னா ஒரு பன்ஞ்)

______________________

(இதன் பிறகு நீதிபதி குமாரசாமியின் கூட்டல் அயோக்கியத்தனத்தை ஊரே கண்டுபிடித்து காறித்துப்பிக் கொண்டிருக்கும் போது, குன்ஹா தீர்ப்பு தவறு என்று அன்றே சொன்ன மாலன் இப்போது என்ன செய்கிறார்?)

மாலன் நாராயணன் shared புதிய தலைமுறை வார இதழ்’s photo.

நேற்று தில்லியில் நில நடுக்கம். சென்னையில் நில அதிர்வு. அதற்கு முன்

சென்ற வெள்ளிக்கிழமை (8.5.2015) அன்று வெளியான புதிய தலைமுறை இதழில் நிலநடுக்கம் பற்றிய எச்சரிக்கை

(ஜெயா விடுதலை என்று தீர்ப்பு வந்ததும், பாரிவேந்தர் உடன் அறிக்கை வெளியிட்டு ஆனந்தப்பட்டார். அவரிடம் குப்பை கொட்டாவிட்டாலும் மாலன் அவர்கள் இப்படித்தான் எழுதுவார். எனினும் தற்போது நடந்த இந்த ‘கணக்கு’ பிரச்சினைக்காக மாலன் அவர்கள் அசடு வழிவதை பார்த்து பரம்பொருள் சும்மா இருப்பாரா? இருக்கவே இருக்கிறார் நீதியரசர் தத்து. நாளைக்கே உச்சநீதிமன்ற வழக்கில் அம்மா விடுதலை ஆகும் போது இதைத்தான் நான் அன்றே சொன்னேன் என்று மாலன் நெஞ்சு நிமிர்த்தி கூற முடியாது என்று சொல்ல முடியாதில்லையா?)

புதிய ஜனநாயகம் – மே 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

0

புதிய ஜனநாயகம் மே 2015

புதிய ஜனநாயகம் மே 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. ஆற்றுமணல் கொள்ளையர்களை விரட்டியடித்த வீரம் செறிந்த போராட்டம்

2. அரசு ஒப்பந்த வேலைகள் (OUTSOURCING) மக்கள் பணத்தைக் கொள்ளையிடும் குறுக்கு வழிகள்

3. உச்சநீதி மன்றம் : மனுவின் மறுஅவதாரம்
சொத்துக்குவிப்பு வழக்கு உணர்த்தும் உண்மைகள்

4. ‘தத்து இருக்க பயமேன்!’

5. “தோழர் லெனின் காட்டிய வழியில் மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!” – புரட்சிகர அமைப்புகளின் அறைகூவல்

6. செம்மரக் கடத்தல் : ஆந்திர அரசின் இரட்டை வேடம்!
செம்மரம் கடத்தும் உரிமை அரசுக்கு மட்டுமே உரியது எனக் காட்டுவதற்குத்தான் இருபது தமிழர்களைப் படுகொலை செய்திருக்கிறது சந்திரபாபு நாயுடு அரசு.

7. முத்ரா வங்கித் திட்டம் : கந்துவட்டிக் கும்பலுக்குச் சிவப்புக் கம்பளம்!
குறுந்தொழிலுக்கு நிதியுதவி அளிப்பது என்ற போர்வையில் கந்துவட்டித் தொழிலை அமைப்புரீதியாகத் திரட்டி, பராமரிக்கத் திட்டம் தீட்டியிருக்கிறது மோடி அரசு.

8. குறுந்தொழிலுக்குச் சாவுமணி!

9. மலியானா படுகொலை வழக்கு : முசுலீம்களைக் கொன்ற கரங்கள் நீதியையும் கொல்கின்றன!
மோசடியான முதல் தகவல் அறிக்கை, 28 ஆண்டு கால வழக்கு இழுத்தடிப்பு போன்ற சதிகளின் மூலம் முசுலீம்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி திட்டமிட்டு மறுக்கப்படுகிறது.

10. குஜராத் : அரசமைப்பையே குற்றக்கும்பலாக்கும் சட்டம்!

11. “பகத் சிங், ஏகாதிபத்திய எதிர்ப்பு சோசலிசப் புரட்சியாளனே தவிர, தீவிர தேசியவாதி அல்ல!”
பேராசிரியர் சமன்லால் பேட்டி

12. அரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!

13. மேக்கேதாட்டு அணை : மீண்டும் அநீதி
கர்நாடகா அரசு காவிரி நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் சட்டங்களையும் தீர்ப்புகளையும் மதிக்காமல் அடாவடித்தனமாக நடந்து கொள்ளும்போது தமிழக விவசாயிகள் மட்டும் சட்டத்திற்கு உட்பட்டு ஏன் போராட வேண்டும்?

14. “வனவிலங்கு சரணாலயத் திட்டதைத் தடுத்து நிறுத்துவோம்!” – கொடைக்கானல் வட்டார மக்களின் போர்க்கோலம்!

15. “ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்துவோம்!
மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!!”
மே நாள் சூளுரை!

புதிய ஜனநாயகம் மே 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

சல்மான் கான் கொன்று பழக ஏழைகள் தேவை

2

”ஒரு நாய் சாலையில் தூங்கினால் அதற்கு நாயின் சாவு தான் கிடைக்கும். சாலைகள் ஒன்றும் ஏழைகளின் அப்பன் வீட்டு சொத்தல்ல”

”சாலைகள் கார்களுக்கும் நாய்களுக்குமானது.. அதில் தூங்கும் மக்களுக்கானதல்ல”

– மேற்படி வக்கிர உபதேச முத்துக்களை உதிர்த்திருப்பவர் பாலிவுட் பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா.

”ரெயில் பாதையைக் கடக்க முயற்சிப்பவரின் மேல் ரெயில் மோதிக் கொன்றால் அதற்கு அதன் ஓட்டுனரைக் கைது செய்ய முடியுமா?”

“வேண்டுமானால் நாம் சாலையில் கோடு கிழித்து வீடற்றவர்கள், கார் ஏறிக் கொல்லும் என்ற அச்சமின்றித் தூங்குவதற்கு ஏற்பாடு செய்யலாம்”

– மேற்படி முத்துக்கள் பாலிவுட் நடிகர் சஞ்சய் கானின் சீமந்த புத்திரி ஃபாரா அலி கானுடையது

சல்மான்கான் கைது (2003)
தனது டயோட்டா லேண்ட் க்ரூசரை (Toyota Land Cruiser ) சாலையோர நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த வீடற்ற ஏழை உழைக்கும் மக்களின் மேல் ஏற்றி ஒருவரைக் கொன்று மேலும் நான்கு பேர்களை படுகாயப்படுத்தி விட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய சல்மான்.

மொத்த பாலிவுட்டும் கடந்த 6-ம் தேதியன்று தங்கள் சக நடிகர் சல்மான் கானின் பின்னே அணி திரண்டது. மற்ற இரண்டு கான்களும் சல்மானின் வீட்டுக்கே நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர். சிவ சேனையின் தலைவரும் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனாவின் தலைவரும் நேரில் ஆஜராகியுள்ளனர்.

விசயம் வேறொன்றும் இல்லை, 2002-ம் ஆண்டு, செப்டம்பர் 28 அன்று இரவு முழு போதையுடன் தனது டயோட்டா லேண்ட் க்ரூசரை (Toyota Land Cruiser ) சாலையோர நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த வீடற்ற ஏழை உழைக்கும் மக்களின் மேல் ஏற்றி ஒருவரைக் கொன்று மேலும் நான்கு பேர்களை படுகாயப்படுத்தி விட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய சல்மான் மீதான வழக்கில் கடந்த 6-ம் தேதியன்று கீழமை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

குடி போதையில் ஓட்டுநர் உரிமம் கூட இல்லாமல் வண்டியை ஓட்டி அநியாயமான முறையில் ஒரு உயிரைக் கொன்ற குற்றச்சாட்டுக்கு கிடைத்த தண்டனை வெறும் ஐந்தாண்டுகள் தான். அதுவும் தீர்ப்பை வாசித்த கையோடு சல்மான் கான் மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக இரண்டு நாட்கள் ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டுள்ளார் நீதிபதி. இந்த மொக்கைத் தீர்ப்பை வழங்க கீழமை நீதிமன்றம் எடுத்துக் கொண்ட வருடங்கள் 13.

கிடைத்த இரண்டு நாள் இடைவெளியில் உயர் நீதிமன்றத்தை நாடிய சல்மான் கான் உடனடியாக மேல் முறையீடு செய்துள்ளார். சல்மான்கானின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்து, கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது உயர்நீதி மன்றம்.

கொலைச் சம்பவம் நடந்த போது பாதுகாப்பிற்காக சல்மானுடன் காரில் இருந்த ரவீந்திர பாட்டீல் என்ற போலீசு கான்ஸ்டபிள்தான் சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தவர். சல்மான் குடி போதையில் காரை ஓட்டியதையும், வேகத்தைக் குறைக்கச் சொல்லி தான் அறிவுருத்தியதையும் மீறி காரின் கட்டுப்பாடு கைமீறிப் போகும் அளவுக்கு வேகமாக ஓட்டியதையும் ரவீந்திர பாட்டீல் வாக்குமூலமாக அளித்திருந்தார்.

ரவீந்திர பாட்டீல்
உண்மையைச் சொன்ன ஒரே காரணத்திற்காக ரவீந்திர பாட்டீல் கிட்டத்தட்ட வேட்டையாடப்பட்டார்.

நடந்த உண்மையைச் சொன்ன ஒரே காரணத்திற்காக ரவீந்திர பாட்டீல் கிட்டத்தட்ட வேட்டையாடப்பட்டார். வாக்குமூலத்தை மாற்றச் சொல்லி உயரதிகாரிகளின் அழுத்தம், சல்மான் கான் தரப்பிலிருந்து வந்த மிரட்டல்கள் அனைத்தையும் எதிர் கொண்டவர் இறுதியில் வேலையை இழந்து காசநோய் தாக்கி குடும்பத்தாராலும் கைவிடப்பட்ட நிலையில் பரிதாபமான முறையில் இறந்தும் போனார்.

வழக்கின் இறுதிக் கட்டம் வரையில் தப்பிப்பதற்கான சகல முயற்சிகளையும் சல்மான் கான் மேற்கொண்டு வந்தார். குறிப்பாக, பதிமூன்று ஆண்டுகள் கழித்து சமீபத்தில் “இவர் தான் சம்பவத்தின் போது காரை ஓட்டினார்” என்று போலியாக ஒருவரைத் தயாரித்து நீதி மன்றத்தின் முன் நிறுத்திய கூத்தும் நடந்தது. இவ்வளவு எத்து வேலைகளையும் மீறி கீழமை நீதி மன்றம் சல்மான் கானுக்கு வழங்கிய மயிலிறகால் வருடும் தீர்ப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் பாலிவுட் கொந்தளித்துப் போயுள்ளது.

ஜெசிகா லாலை சுட்டுக் கொன்ற மனு சர்மா பரோலில் வந்து கேளிக்கை விடுதிகளில் குடித்து கும்மாளமிட்ட செய்தியோ அல்லது சஞ்சய் தத் தனது பெண்டாட்டிக்கு உடம்பு சரியில்லை என்று விண்ணப்பித்து பரோலில் வந்து குடும்பத்தோடு தான் நடித்த படத்தின் புரமோசன் விழாவுக்கு சென்றதாகட்டும் – ஒவ்வொரு முறையும் மேட்டுக்குடியினரின் மைனர்தனத்தை விவரித்து டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்திக் கொள்வது ஒன்றே முதலாளித்துவ ஊடகங்களின் ஒற்றைக் குறிக்கோள்.

சல்மான் கான்
“சம்பவம் நடந்த போது எனக்கு 22 வயது. எனது கால் உடைக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பில் எதையும் எதிர்பார்க்கவில்லை” – சல்மான் கான் காரை ஏற்றி தப்பிப் பிழைத்தவர்களில் ஒருவர்

சல்மான் கான் வழக்கிலும் அதன் திடுக்கிடும் திருப்பங்களை மர்ம நாவலின் சுவையோடு விவரிப்பதில் காட்டிய ஆர்வத்தை பாதிக்கப்பட்ட மக்களின் பால் இந்த ஊடகங்கள் தமது கவனத்தைத் திருப்பவே இல்லை. முக்கியமாக நகரமயமாக்கத்தைக் மையமாக கொண்டு நடந்து வரும் மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக விவசாயம் பாதிக்கப்பட்டு ஊரகப் பகுதிகளில் இருந்து விசிறியடிக்கப்பட்டு நகரங்களில் குவிந்து வீடற்றவர்களாய் சாலையோரங்களில் ஒதுங்கும் மக்கள் மேட்டுக்குடியினர் கலந்து கொள்ளும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் சோகத்தின் குறியீடாக வெறும் செட் பிராபர்ட்டி போலவே பயன்படுத்தப்படுகிறார்கள்.

காட்சி ஊடகங்களிடையே நடந்த போட்டியில் என்.டி.டி.வி ஒரு படி மேலே போனது. பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் உத்திர பிரதேசத்தின் கிராமத்துக்கே தனது குழுவை அனுப்பி காயமடைந்த ஒருவரை தனது விவாத நிகழ்ச்சியில் இடம் பெறச் செய்தது. மேன்மக்கள் நுனிநாக்கு ஆங்கிலத்தில் தனது சோகத்தைக் குறித்து ‘உச்சு’ கொட்டுவதைப் பற்றிய பிரக்ஞை இன்றி பரிதாபமாக அமர்ந்திருந்த அவர்,”உங்கள் சோகத்தைக் குறித்து என்ன சொல்ல நினைக்கிறீர்கள்” என்ற பாணியில் கேள்விகள் கேட்கப்பட்ட போது திணறினார்.

சல்மான் கானுக்கு வழங்கப்பட்ட ‘தண்டனையை’ ஒட்டி நிகழ்த்தப்பட்ட தொலைக்காட்சி விவாதங்கள் சிலவற்றில் பங்கேற்ற பேஜ் 3 பார்ட்டிக்களின் நாயகியான மேட்டுக்குடி சீமாட்டி ஷோபா டே உதட்டுச் சாயம் கலையாமல் “ஏழைகள் பாவம் தான்… ஆனால் பாருங்க” என்று இழுத்த இழுப்பு இருக்கிறதே – அருவருப்பின் உச்சம்.

வீடற்றவர்கள்
லட்சக்கணக்கானவர்கள் நடை பாதையிலோ, ரயில்வே நிலைய பிளாட்பாரம்களிலோ, கடற்கரை மணலிலோதான் இரவு உறங்குகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த பதிமூன்று ஆண்டுகளாக தம்பிடி பைசா கூட இழப்பீடாக வழங்கப்படாத நிலையில் அவர்களின் இழப்புகளுக்கு யார் காரணம்?

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின் படி, மும்பை பெருநகர் மற்றும் புறநகருக்கு உட்பட்ட மக்கள் தொகை சுமார் 1.8 கோடி. சமீத்தில் உலக வங்கி எடுத்த கணக்கெடுப்பு ஒன்றின் படி, மும்பை மக்களில் 54 சதவீதம் பேர் சேரிகளில் வசிப்பவர்கள். சுமார் 30 சதவீதம்பேர் நடை பாதையிலோ சாலிலோ (Chawl) வசிப்பவர்கள். சால் எனப்படுவது ஒற்றை அறை வீடுகளைக் (Kholi) கொண்ட கட்டிடம். சுமார் பத்துக்குப் பத்து அளவுள்ள ஒரே அறைக்குள் அடுக்கடுக்காக படுக்கைகள் போடப்பட்டு ஒரு அறையில் சுமார் நான்கு அல்லது ஐந்து பேர் வரை பதுங்கிக் கொள்ள வேண்டும். மாதம் சுமார் ஆயிரம் ரூபாய் வரை வாடகையாக கொடுக்க வேண்டும்.

இதற்கும் வழியின்றி லட்சக்கணக்கானவர்கள் நடை பாதையிலோ, ரயில்வே நிலைய பிளாட்பாரம்களிலோ, கடற்கரை மணலிலோதான் இரவு உறங்குகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 300 – 500 குடும்பங்கள் மும்பை நகருக்கு இடம் பெயர்ந்து வந்திறங்குகின்றன. உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஒரிசா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் பிழைக்க வழியின்றி அத்துக் கூலிகளாய் மும்பையில் வந்து விழும் இவர்களின் உடனடிப் புகலிடம் சாலையோரங்கள் தான்.

சல்மான் கான் கார்
”இந்த மக்களைச் சாலையில் உறங்க விட்டதற்காக அரசைத் தான் குற்றம் சொல்ல வேண்டுமே தவிர சல்மானைப் பொறுப்பாக்குவது என்ன நியாயம்?”

வேறு போக்கற்ற இவர்களைத் தான் நாயினும் கீழாக தம் வார்த்தைகளால் மென்று துப்புகின்றனர் பாலிவுட் பொறுக்கிகள். ”இந்த மக்களைச் சாலையில் உறங்க விட்டதற்காக அரசைத் தான் குற்றம் சொல்ல வேண்டுமே தவிர சல்மானைப் பொறுப்பாக்குவது என்ன நியாயம்?” என்று கூசாமல் கேட்கிறார். விவாதத்தில் பங்கேற்ற இன்னொரு மேட்டுக்குடி கனவான், “வீடற்றவர்கள் மற்றும் சேரி வாழ் மக்களுக்கு விரைவில் அரசு ஒரு வழி செய்ய வேண்டும். அவர்களை மீள் குடியமர்த்தும் வேலைகளை உடனடியாக துவங்க வேண்டும்” என்கிறார்.

அதாவது, அபிஜித் பட்டாச்சார்யா நேரடியாகச் சொன்னதை இவர்கள் மறைமுகமாகச் சொல்கிறார்கள். நகரங்களைத் தூய்மைப் படுத்துவது, சேரிவாழ் மக்களை மீள் குடியமர்த்துவது என்ற அலங்காரச் வார்த்தைகளின் பின்னே நடப்பதென்ன? உழைக்கும் மக்களை நகரங்களில் இருந்து பிய்த்தெறிந்து நகரங்களுக்கு வெளியே ஆள் அண்டா பிரதேசங்களுக்குத் தூக்கியடிப்பது தான். உலக வங்கி மூன்றாம் உலக நாடுகளுக்கு வழங்கியுள்ள உத்தரவும் அது தான்.

சல்மான்கான்
மேட்டுக்குடி பொறுக்கிகள் கொல்வதற்குத்தான் ஏழை மக்களா?

காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது தில்லி நகரைத் ’தூய்மையாக்கும்’ திட்டத்தின் அடிப்படையில் நடந்ததும், பிற பெருநகர வளர்ச்சிக் குழுமங்களின் திட்ட நிகழ்ச்சி நிரலில் இருப்பதும் இதுதான். நகரங்களை கட்டியமைக்க ஏழைகளின் உழைப்பை ஒட்டச் சுரண்டிக் கொள்வது, மற்றும் நகரின் ’அழகைப்’ பராமரிக்கும் வேலைகளில் அவர்களை கூலிகளாக ஈடுபடுத்திக் கொள்வது என்று உழைக்கும் ஏழை மக்களை முடிந்த வரைக்கும் பயன்படுத்திக் கொண்டு வேலை ஆனதும் தூக்கியெறியும் மேட்டுக்குடித் திமிரின் இன்னொரு பெயர்தான் மீள்குடியேற்றம்.

நகர்ப்புற சேரிகளில் வசிக்கும் மக்கள் விருப்பத்தோடும் மன மகிழ்வோடும் சேரிகளில் வசிப்பதில்லை – அவர்களின் வேலை போக்குவரத்துக்கு தோதான இடமாக இருப்பதாலேயே நகரங்களுக்குள் கிடைக்கும் இடுக்குகளில் ஒண்டிக் கொள்கிறார்கள்.

சல்மான் கான் வழக்கின் மர்மத் திருப்பங்களை சுவைபட விவரிப்பதோடு ஏழைகளுக்கு நீலிக் கண்ணீர் வடிப்பதாக நடிக்கும் முதலாளித்துவ ஊடகங்களின் உண்மையான உள்ளக் கிடக்கை இது தான். நகர்ப்புற மேட்டுக்குடியினர் விரும்பும் ’அழகிய’ நகரங்களில் உழைக்கும் மக்களைப் பொருத்தவரையில் அவர்கள், ஒன்று தெருவில் வைத்து கொல்லப்படுவார்கள் அல்லது பயன்படுத்திக் கொண்டு தூக்கியெறியப்படுவார்கள்.

இந்தியாவில் ஏழை உழைக்கும் மக்களுடைய உயிர்களின் மதிப்பும் கிள்ளுக்கீரையின் மதிப்பும் ஒன்று தான். சல்மான் கான் ஒரு நடிகராக வளரவும் கோடிகளில் புரளும் பாலிவுட்டின் கொழுப்பு அதிகரிக்கவும் இதே ஊடகங்கள் தான் காரணம். பேஜ் 3 பக்கங்களில் பாலிவுட் பொறுக்கிகளின் கேளிக்கைக் கொண்டாட்டங்களை விவரித்து கல்லா கட்டுவதற்கும் முதல் பக்கத்தில் சல்மானின் தண்டனை விவரங்களை யோக்கியர்களைப் போல் அச்சிட்டு “சட்டம் எல்லோருக்கும் சமம்” என்று பீற்றிக் கொள்வதற்கும் சாராம்சத்தில் என்ன வேறுபாடு இருக்கிறது?

பேஜ் 3 என்பது பாலியல் ரசனைக்கானது என்றால், சல்மான் கான் வழக்கு கண நேர அதிர்ச்சி மதிப்பீட்டிற்கானது. ஜாமீன் பெற்ற கையோடு விமானத்தைப் பிடித்து காஷ்மீர் பறந்துள்ள சல்மான் கான், தனது அடுத்த சினிமாவிற்கான படப்பிடிப்பில் மும்முரமாகி விட்டார். விபத்தில் பலியான நூருல்லாவும், காயமுற்ற மற்ற நான்கு பேரும் கடந்த பதிமூன்றாண்டுகளாக இடைக்கால நிவாரணம் கூட கிடைக்காமல் உத்தரப் பிரதேசத்தின் ஏதோவொரு மூலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சல்மானின் அடுத்த படம் திரைக்கு வரும் போது இதே ஊடகங்கள் அவரை மீண்டும் பேஜ் 3 பக்கங்களுக்கு இழுத்து வந்து விடும். அவரும் கூடிய விரைவில் சட்டப்படியே முழுமையாக விடுதலை செய்யப்படுவார்.

எனில், மேட்டுக்குடி பொறுக்கிகள் கொல்வதற்குத்தான் ஏழை மக்களா?

– தமிழரசன்

நீதிபதி குமாரசாமி – நீதிபதி தத்து எவ்வளவு வாங்குனீங்க ?

29
குமாரசாமி நீதிபதியா, நிதி வாங்கிய சதியா?
குமாரசாமி நீதிபதியா, நிதி வாங்கிய சதியா?

நேற்று தீர்ப்பை ஒட்டி நடந்த விவாதங்களில் அருவெறுப்பான ஜால்ராச் சத்தம் தந்தி டி.வியின் பாண்டேயின் வாயிலிருந்து இடைவிடாமல் வந்து கொண்டே இருந்தது.

பத்திரிகையாளர் ஞாநியிடம் கேள்வி கேட்ட பாண்டே தான் 900 சொச்சம் பக்கங்களை படித்து விட்டதாக கூறி மடக்கிக் கொண்டே இருந்தார். ஞாநியும் வேறு வழியின்றி பொய்களையே அதிரடியாக கூறும் பாண்டேவிடம் புலியிடம் சிக்கிய ஆட்டுக் குட்டி போல மாட்டிக் கொண்டார். பாண்டே உரைத்த பொய்களில் முதன்மையானது ஜெயாவும் அவரது பினாமிகளும் வங்கிகளில் வாங்கிய கடன் தொகை. அதை வரவு என்று வைத்து சொத்து குவித்ததாக வழக்கு போட்டு தவறு செய்து விட்டார்கள் என்ற தொனியில் பாண்டே அலறலைக் கிளப்பிக் கொண்டிருந்தார்.

இப்படியாக ஜெயலலிதாவுக்கு நீதித்துறையும், பா.ஜ.கவும், ஊடகங்களும் பக்க பலமாக இருக்கலாம். ஆனாலும் ஒரு கூட்டல் கழித்தல் விவகாரம் கொள்ளைக் கூட்டத்தின் பேராசையில் மண்ணை அள்ளி போட்டுவிட்டது.

சரி, அப்படியானால் இது ஏதோ கணக்கு போடும்போது நடந்த மனித தவறா? இல்லை. தீர்ப்பை ஏற்கனவே எழுதிவிட்டு, அப்படி எழுதுவதற்கு வாங்கி விட்டு பின்னர் எண்களை பார்க்கும் போது அவை அப்படி கூட்டச் செய்திருக்கின்றன.

விலை போன நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு ஆணையின் 852- ஆவது பக்கத்தில் ஜெயா, சசிகலா, சுதாகரன், இளவரசி கும்பலுக்குச் சொந்தமான நிறுவனங்கள் இந்தியன் வங்கியிருந்து 10 கடன்களை வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடன்களின் மதிப்பு முறையே ரூ.1.50 கோடி, ரூ.3.75 கோடி, ரூ. 90 லட்சம்,  ரூ.25 லட்சம், ரூ.12.46 லட்சம், ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம்,  ரூ.1.57 கோடி, ரூ.1.65 கோடி, ரூ.17 லட்சத்து 85,274 ஆகும்.

இதைக் கூட்டினால் ரூ.10 கோடியே 67 லட்சத்து 31,274 மட்டுமே வருகிறது. ஆனால் இதன் மதிப்பு ரூ.24 கோடியே 17 லட்சத்து 31,274 என்றும் இதை ஜெயாவின் வருவாயாக கருத வேண்டும் என்றும் நீதிபதி குமாரசாமி ஒரே போடாக போட்டுத் தெரிவித்துள்ளார். அதாவது இந்த போடுதலில் ஜெயாவின் வருவாய் மதிப்பில் ரூ.13.50 கோடி தவறுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஜெயா கும்பலின் வருவாயை அடிப்படையாக வைத்துப் பார்த்தாலும் அதற்கும், அவர்கள் தரப்பு சொத்துக்களுக்கும் இடையிலான வித்தியாசம் ரூ. 16 கோடியே 32 லட்சத்து 36 ஆயிரத்து 812 ஆகும். இது ஜெயா தரப்பு வருவாயை விட 76.75% அதிகம். இந்த இலட்சணத்தில் குமாரசாமியால் சுட்டிக்காட்டப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு அல்லது ஆந்திர அரசின் சுற்றறிக்கைப்படி பார்த்தால் கூட ஜெயா கும்பலை விடுவிக்க முடியாது.

இது போக வளர்ப்பு மகன் திருமணச் செலவுகளில் குமாரசாமி சொல்லியிருக்கும் பொய்கள், கட்டுமானச் செலவுகளில் அவரே ஒரு பொறியாளர் போன்று ஒரு சதுர அடிக்கு இவ்வளவு ரூபாய்தான் செலவு என்று அடித்து விட்டிருக்கும் பொய்கள், அதற்காக அவர் கூறியிருக்கும் அபத்தமான விளக்கங்கள், நமது எம்.ஜி.ஆர் பத்திரிகைக்கு வந்த கொள்ளைத் தொகை பதினாலு கோடியை சந்தா என்று ஏற்றுக் கொண்ட மோசடி என்று ஏராளம் உள்ளன.

நீதிபதி குன்ஹா அளித்த நேர்மையான தீர்ப்பு இப்படித்தான் குமாரசாமியால் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறது.

ஆகவே இதற்கு குமாரசாமி எவ்வளவு வாங்கினார் என்பதை உடனடியாக அவர் நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும். அவர் மட்டுமல்ல அவரது குருநாதரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுமான தத்துவும் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

தி இந்துவில் வந்த செய்தியின் படி,

“உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய போது அவருடன் நெருங்கிப் பழகியுள்ளார். இருவரும் நெருக்க மான நண்பர்கள் என்பதால் விடுமுறை காலங்களில் சிருங்கேரி கோயிலுக்கும், முல்பாகல் சிக்கு திருப்பதி கோயிலுக்கும் சென்று பூஜை செய்து வருவார்கள்.”

-இருவருக்கிடையிலான நட்பு உண்மை என்று தெரிகிறது.

அதே போல தத்துவும் ஜெயாவுக்கு அளித்த பிணை, குறுகிய காலத்தில் மேல் முறையீட்டு விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என ஏராளமான உதவிகளை சட்டவிரோதமாக செய்திருக்கிறார். அதற்கு சட்டபூர்வமாக விளக்கமும் கொடுத்திருக்கிறார்.

மேலும் தி இந்துவில் வந்திருக்கும் தகவல்களை பாருங்கள்:

“ஆயிரம் வழக்குகளுக்கு மேல் விசாரித்துள்ள அவர் அதில் சரிபாதி வழக்குகளில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்துள்ளார். ஆனால் பெரிய வழக்குகளிலும், பிரபல வழக்கு களிலும் விசாரணை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பையே வழங்கியுள்ளார்.

இதற்கு உதாரணமாக முத்திரைத்தாள் மோசடி மன்னன் கரீம் தெல்கி, சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, பி.டி. பருத்தி போன்ற வழக்குகளை கூறலாம். அதே போல நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கம்பாளப்பள்ளி கிராமத்தில் 7 தலித்துகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ‘தலித் படுகொலைக்கு போதிய ஆதாரங்கள் இல்லை’ எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்தார்.

வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வு பெறுகிற குமாரசாமி மீது இதுவரை பெரிய அளவிலான குற்றச்சாட்டுகள் இல்லை. இருப்பினும் தவறான ஆவணங்களை தாக்கல் செய்து இரு வீடுகள் பெற்றதாக புகார் எழுந்தது. அப்போது இவருடன் சர்ச்சையில் இடம்பிடித்த‌ ஹெச்.எல். தத்து, குமாரசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தார்.”

இதிலிருந்து நீதிபதி குமாரசாமியின் யோக்கியதையை நாம் அறிய முடியும்.

pujaகர்நாடகா அரசால் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ள ஆச்சார்யா, நீதிபதி குமாரசாமியிடம் தாக்கல் செய்துள்ள எழுத்துபூர்வமான வாதத்தில் “இந்த வழக்கை நடத்தியது கர்நாடக அரசு. எனவே, வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டுக்குப் போவது என்றால் எதிர்மனுதாரராக கர்நாடகா அரசை சேர்த்து அவர்களது பதிலை வாங்கியிருக்கவேண்டும். ஆனால், கர்நாடக அரசுக்குத் தெரியாமல் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து விசாரணையை முடித்திருக்கிறார்கள். எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவே செல்லாது” என்றும் சொல்லியிருக்கிறார்.

இந்த வாதத்தின்படி பார்த்தால், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடந்துவரும் மேல்முறையீட்டு விசாரணையை மட்டுமல்ல, ஜெயா‍‍ சசி கும்பலுக்கு உச்சநீதி மன்றத்தால் வழங்கப்பட்டிருக்கும் பிணையையும் ரத்து செய்யவேண்டியிருக்கும். ஏனென்றால், உச்சநீதிமன்ற நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு, கர்நாடகா அரசின் வாதங்களைக் கேட்டு ஜெயா கும்பலுக்குப் பிணை வழங்கவில்லை. உச்ச நீதி மன்றத்தின் இந்த இரண்டு முடிவுகளுமே பொது அறிவுக்கோ, சட்டபூர்வ வாதங்களுக்கோ இடமின்றி, கட்டப் பஞ்சாயத்து முறையிலேயே எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. (“உச்சநீதி மன்றம் : மனுவின் மறு அவதாரம்” கட்டுரையிலிருந்து….புதிய ஜனநாயகம் ‍ மே இதழ்!)

ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால் நீதிபதி குமாரசாமி, நீதிபதி தத்து இருவரும் எவ்வளவு வாங்கியிருப்பார்கள்? தொலைபேசியில் முதலில் வாழ்த்துச் சொன்ன மோடி இதற்காக என்னவெல்லாம் ஏற்பாடு செய்தார்?

இவர்களுக்கு எவ்வளவு கொடுத்தார் என்று அம்மாவிடம் நாம் கேட்கப் போவதில்லை. ஆனால் இந்திய நீதித்துறையின் தராதரத்தையும், அயோக்கியத்தனத்தையும் நாம் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் மக்களை நம்ப வைப்பது கடினம்.

அந்த கடினமான வேலையை போகிற போக்கில் சாதித்திருக்கின்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..நன்றி..நன்றி…!

jaya-acquittal-justice-in-toilet

ஜெயா விடுதலை – சீறும் ஃபேஸ்புக்

2

facebookAlagappan Abdul Kareem

“ஜெயலலிதா உள்ளே இருக்குறதால அனுதாப அலை காரணமா அவரே வெற்றி பெறுவார்”னு சொன்னவய்ங்க இப்ப “ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் அவரே வெற்றி பெறுவார்”னு சொல்வாய்ங்க.

மொத்தத்துல அவய்ங்களுக்குத் தேவை ஜெயலலிதா ஜெயிக்கணும். அம்புட்டுதேன்.
______

Mohammed Siraj

ஜெயலலிதா ,

சல்மான் கான்,
குஜராத்,
அப்சல் குரு,
அமீத் ஷா,
பாபரி மஸ்ஜித்.

#‎இந்திய_அநீதி_மன்றம்‬
_________________

Madhan Sendhil

ஜெயலலிதா தப்பு பண்ணாங்களா இல்லையான்னு சட்டத்துக்கு தெரியாம இருக்கலாம்.. ஆனா மக்களுக்குத் தெரியும்..
__________________

Thananjayan Venkatraman

இனியும் ஜெயலலிதா போன்ற அப்பாவிகள் 20 வருடம் அலைக்கழிக்கப்படுவதை தடுக்க, குற்றம்சாட்டப்பட்டவரே தனக்கும் ஏதிர்தரப்புக்கும் சேர்த்து வழக்கறிஞரை உடனடியாக நியமிக்கும் படி சட்டம் மாற்றப்பட வேண்டும்,

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
___________________

Yuva Krishna

1991 – 96 ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா சொத்து குவித்தார் என்பது தெரியாமல் கீழ்க்கண்ட கட்சிகள் அதிமுகவோடு கூட்டணி வைத்தன என்பதை தமிழக மக்கள் நம்பவேண்டும்.

1996ல் காங்கிரஸ்

1998ல் மதிமுக, பாமக, பாஜக

1999ல் காங்கிரஸ், இ.கம்யூ, மா.கம்யூ

2001ல் காங்கிரஸ் (தமாகாவையும் சேர்த்து), பாமக, இ.கம்யூ, மா.கம்யூ

2004ல் பாஜக

2006ல் மதிமுக, விசிக

2009ல் இ.கம்யூ, மா.கம்யூ, மதிமுக, பாமக

2011ல் தேமுதிக, இ.கம்யூ, மா.கம்யூ, ம.ம.க., புதிய தமிழகம்

(சில்லறை கட்சிகளை பட்டியலில் கணக்கில் சேர்க்கவில்லை)
______________

Raja Prabhu V K

ஜெயலலிதா தீர்ப்புக்கு முன்னாடி சல்மான் தீர்ப்பு கண்ணு முன்னாடி வந்து போனா….. நீயும் .நண்பனே …
______________

Manushya Puthiran

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக பா.ஜ.க ஹெச்.ராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.- செய்தி

மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்களை சந்தித்து ஜெயலலிதா விடுதலை குறித்து வாழ்த்து தெவித்தார். – செய்தி

எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது.

______________

Thiru Yo

இரண்டு காட்சிகள்.

வருமானத்திற்கு அதிகமான பல கோடி சொத்து முறைகேடாக சேர்த்த வழக்கின் தண்டனை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு வழக்கில் ஜெயலலிதா விடுதலை. பட்டாசு வெடித்தும், தொலைக்காட்சியை ஊதியும் கொண்டாடுகிறார்கள்.

பத்தோ, ஐம்பதோ லஞ்சம் வாங்கியதன் விளைவில் ஒருவர் உயிரிழந்ததற்கு பொறுப்பேற்க போக்குவரத்து காவலரை கூட்டமாக கும்மாங்குத்து. அதிகாரமில்லாத/குறைந்த இடங்களில் கரம் எளிதாக நீண்டுவிடுகிறது.

ஊழலால் உயிரிழப்பு ஏற்படுவதில்லை என்று வியாக்கியானம் வேறு. நேர்மையானவர்களை தற்கொலைக்கு தள்ளியதும், பணியாதவர்களை மிரட்டி கொலை செய்ததும்… உழல், லஞ்ச கொலைகளில்லையா? ஒப்பந்தமுறைகேடுகளினால் ஏற்படுகிற சாலையின் தரம் மோசமாகி விபத்தில் கொல்லப்படுதல் உயிரிழப்பில்லையா?

_____

Yuva Krishna

பத்து சதவிகிதம் வரை சுடலாம் : நீதியரசர் அனுமதி!

_____

ஞாயிறு ஞாயிறு ஞாயிறு

சங்கரமட கொலை வழக்கு மேல் முறையீடு செய்யவில்லை….
அதன் பாதகமான அம்சங்கள் கவனிக்கப்படவில்லை…..
*
அந்துலே லாலு . ஓம்பிரகாஷ் , ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டனர்….
*
ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார்…
*
நாளை 2ஜி வழக்கில் தண்டனை உண்டு….
*
இந்தியாவில் எப்பவுமே இரண்டுவகையாகத்தான்…
சட்டமும் நீதியும் செயல்படும்….
*
ஒன்று ஆரிய நீதி….
மற்றொன்று சூத்திர நீதி…
________________

Alayam Suresh

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை: கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

தப்பித்தது கர்நாடக பேருந்து கண்ணாடிகள்.

இன்று அம்மாவின் விடுதலையை முன்னிட்டு அடுத்த வருடம் முதல் மே 11ம் தேதி அம்மா தினமாக அறிவிக்கப்படலாம் என எதிர்பாக்கபடுகிறது.
_________________

income totalசிவசங்கர் எஸ் எஸ்

கொழப்பிட்டியே கொமாரு !

கேட்டிருந்தா கால்குலேட்டர் வாங்கிக் கொடுத்திருப்போமே. தப்பு தப்பா கூட்டி இருக்கியே.

இத எல்லாம் கூட்டுனா 10,67,31,274.00 தான் வருது.

ஆனா கனம் கோர்ட்டாருக்கு 24,17,31,274.00 வருது.

சைடுல 13,50,00,000.00 எங்க இருந்து பூந்துது ?

ஒதுங்குச்சா ? ஒதுக்குச்சா ?

கொமாரு கணக்குப்படி அதிகப்படி வருவாய் 10% இருக்கலாம், இல்லன்னா 20% இருக்கலாம்.

இது கூட போவுதே ….

மறுபடியும் கூட்டு கொமாரு !

________

அதிஷா அதிஷா

“என்னண்ணே முந்தாநேத்து சல்மான்கான், நேத்து மதர் சுப்பீரியர், இன்னைக்கு ராமலிங்கராஜூ நம்ம நீதிமன்றங்களுக்கு என்னதாண்ணே ஆச்சு”

”அடேய் கோனிகா கோமுட்டிதலையா மைசூர் பாக்குல எப்படி மைசூர் இருக்காதோ அதே மாதிரிதான் நம்ம ஊர் நீதிமன்றத்துல…”

‪#‎அம்மாவாழ்க‬

‪#‎theend‬
________________

Mahendra Kumar

தமிழ்நாட்டில் ஒரு 6-7 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு!

ஒரு அரசு ஊழியர் (ஊர் பெயர், துறையின் பெயர் நினைவில்லை) ஒரு தடவை லஞ்சம் வாங்கி பிடிபட்டார். அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. விசாரித்த கீழ் நீதிமன்றம் அவரை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டது.

அந்த ஊழியர் கடும் அதிர்ச்சி அடைந்தார். காரணம், அவர் லஞ்சமாக பெற்ற தொகை வெறும் 1,500 ரூபாய் தான். அவர் நீதிமன்றத்திடம் மன்றாடினார். ‘ஒரு சிறிய தொகைக்கு ஏன் இவ்வளவு கடுமையான தண்டனை? சஸ்பெண்டு செய்திருக்கலாமே!’ என்று கெஞ்சிப்பார்த்தார். நீதிபதி சொன்னது என்ன தெரியுமா?

“தொகை சிறியதோ பெரியதோ… அதை வாங்கவேண்டும் என்ற எண்ணம் ஒரு அரசு ஊழியருக்கு தோன்றியது தவறு! உங்கள் கடமையிலிருந்து நீங்கள் தவறி விட்டீர்கள். அதற்காகவே இந்த தண்டனை!”

அதன் பிறகு அவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மேல் முறையீடு செய்தார். மேல் முறையீட்டில் எப்படியோ குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அதற்குள் அவர் படாத பாடுபட்டு, தன் சேமிப்பை எல்லாம் இழந்துவிட்டார். அப்போது அவர் ஓய்வு பெற ஒருசில வருடங்களே இருந்தன.

நீதிமன்றம் அவரை விடுவித்த பிறகு, அவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதற்குள் அவரது வேலையை எவன் பிடித்தானோ தெரியவில்லை. அவருக்கு வேலையை மீண்டும் கொடுக்காமல் அலைக்கழித்தது நிர்வாகம்.

ஒரு கட்டத்துக்கு மேல், அவர் சோர்ந்து விட்டார். அவரது நண்பர்கள் சிலர், ‘நீங்கள் நிர்வாகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுங்கள்! நியாயமாக அவர்கள் உங்களுக்கு வேலை கொடுக்கவேண்டும்!’ என்று யோசனை சொன்னார்கள்.

“இனியும் வழக்கு போட்டு அலைவதற்கு என் மனசிலும் உடம்பிலும் தெம்பு இல்லை… வழக்கு செலவுக்கு என்னிடம் பணமும் இல்லை” என்று சொல்லிவிட்டார் அந்த ஊழியர்.

கடைசிவரை அவருக்கு வேலையும் கிடைக்கவில்லை. வேலையில் இருந்தபோது லஞ்சப்புகாரில் கைதானதால், பணி ஓய்வுக்கு பிறகு கிடைக்கவேண்டிய பலன்கள் எதுவும் சுத்தமாக வரவே இல்லை. இப்போது கஷ்ட ஜீவனம் நடத்தி வருகிறார் அவர்.

சாமானியர்கள் எந்தவகையிலும் தப்பிவிட முடியாத இதே சட்டத்தில்தான், பணக்கார பெருச்சாளிகள் நுழைந்து வெளியே வர எண்ணற்ற ஓட்டைகளும் இருக்கிறது. பணம் இருப்பவர்கள் இந்த ஓட்டைகளை பயன்படுத்தி தப்பித்துக்கொள்ள முடிகிறது. மற்றவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்.

இதுவே நம் பெருமை மிகு Indian Penal Code!
___________________

Appanasamy Apps

இன்றைய நாளை இவ்வளவு
அமைதியானதாக்கிய நீதிதேவனுக்கு நன்றி!

இன்று காலையில்கூட ஏதோ ஊரடங்கு தேசத்தில் இருப்பது போன்ற உணர்வோடுதான் பால், பேப்பர் இன்னபிற பொருட்களை வாங்கி வந்தோம்.
நீதிதேவதையின் நேரமான அந்த 11.05 வரைகூட
அதே பதற்றம் தான்! அட, 11 மணிக்கு சற்று வெளியே போய்வர ஆசை!
ஆனால், ஏதாவது பிரச்சனை என்றால் ஓடித் தப்பிக்கக்கூட இயலாதவனாக இருந்தேன். எங்கே வெளியே போவது!

ஆனால் அந்த மந்திர நொடிகள் வந்தன
பத்தே பத்து நொடிகள்! அவ்வளவுதான்!
நமது தேசமே கட்டுக்குள் வந்து விட்டது!
தமிழகம் அமைதிப்பூங்காவானது!
யாரால்!
நீதிதேவதையின் கருணையினால்

சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டது.
சாலைகளில் போக்குவரத்து பாதிக்கவில்லை;
திரையரங்குகள் செல்லவோ
மதுபானக்கடை போகவோ ஒரு இடையூறும் இல்லை
விபச்சாரங்களும் நடந்தன

எல்லா அலைவரிசைகளும் தெளிவாகத் தெரிந்தன.
எந்தச் சேனல்களுல் இருட்டடிப்பு செய்யப்படவில்லை
கேபிள்கள் பிடுங்கப்பவில்லை
மின்விநியோகம் நிறுத்தப்படவில்லை;
கறிக்கோழிகள், மீன்கள் தாராளமாகக் கிடைத்தன.
கடற்கரை, பூங்காக்களில்
காதலர்களும் கொழுப்பைக் குறைப்பவர்களும்
சுதந்திரமாக இயங்கினர்;

இப்படியாக இந்த நாள் இனிய நாளாகக்
கழிந்தது என்றால் அது
நீதி தேவதையின் கருணையினால் தான்!

புரிகிறது! நீதிதேவனின் முகத்தில் சிறு கவலை ரேகை படிவது தெரிகிறது.
இந்த முகநூல் புரட்சிப்புடுங்கிகளின் முணுமுணுப்பு
நீதிதேவதையின் காதுகளில் அபசுரமாக விழத்தான் செய்கின்றன.
நீங்கள் நினைத்தால் இதெல்லாம் ஜுசூபி, கனவானே!

ஆனால், ஒன்றுமட்டும் உறுதி
நமது தேசத்தின் நீதி வரலாற்றில்
இந்த நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்!

__________

பிர்தவ்ஸ் ராஜகுமாரன்

ஒரே ஒரு சந்தேகம் ….!

உச்ச நீதி மன்ற மூவர் அமர்வு என்னன்னவோ
நிபந்தனைகளைச் சொல்லி தீர்ப்பு சொல்லும் முன்
நீதிபதி குமாரசாமி இதையெல்லாம்
கவனத்தில் கொள்ளவேண்டும் என்று
உதார் விட்டாய்ங்களே …….!

அதையெல்லாம் இவர் ஏன்
கவனத்தில் கொள்ளவே இல்லை…?
அப்ப , உச்ச நீதிமன்ற நீதிபதிகளின்
நிபந்தனை ,அறிவுறுத்தல் …?
இதற்கெல்லாம்
இவ்வளவுதான் மதிப்பா …?

# அதெல்லாம் சங்கேத வார்த்தைகள் ….!
என்பது இப்போது புரிந்து விட்டது ..!!!
____________

ஜ்யோவ்ராம் சுந்தர்

தீர்ப்பைக் கூட தாங்கிக்கலாம் போலிருக்கு, இந்தத் ‘தர்மத்தின் வாழ்வுதனை…’ தான் தாங்க முடியலை. இன்னைக்கு எல்லா பேப்பர்லயும் இதே வசனம். அப்புறம், எல்லாரும் அம்மாவின் உண்மையான விசுவாசின்னு போட்டுக்கறாங்க. பொய் விசுவாசில்லாம்கூட அதிமுகல உண்டு போல
_________
Gold King

தீர்ப்பு இப்படிதான் இருக்கும் என்று எதிர்பார்த ஒன்றுதான்.

முன் ஜாமீன் தருவதில் குற்வாளிகளை விடவும் நீதிபதி தத்து அதிகமாக காட்டிய அக்கரை.

நாடே ஏதிர்த்த நிலம் அபகரிக்கும் மசோதவை மத்திய அரசு கொண்டு வருவதற்கு அதிமுக வரிஞ்சிகட்டினு ஆதரவு தெரிவித்தது.

கருப்பு பணம் மீட்பர் மோடியின் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஜெயலலிதாவை போயஸ் தோட்டதிற்கு சென்று சந்தித்தது.

அதிமுக வானரங்கள் தீர்ப்பு தேதி அறிவித்த பின்பும் வாலை சுருட்டி கொண்டு இருந்தது.

இவை எல்லாம் கணித்து பார்க்கும்போதே தெள்ள தெளிவாக தெரிந்தது தீர்ப்பு ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது என்று.

இந்த தீர்ப்பை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைவதாக பா.ஜ.க வின் தமிழ் மாநிலதலைவர் தமிழிசை சொல்கிறார்!

இந்த தீர்ப்பு மக்களுக்குத்தான் அதிர்ச்சியாக இருக்கவேண்டும். உங்களுக்கு ஏன் அதிர்ச்சியாக உள்ளது. இந்த தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்று உங்கள் தலைமை உங்களுக்கு சொல்லவில்லையா?

தமிழிசை இந்த தீர்ப்பு அதிர்ச்சி தருவதாக சொல்கிறார்
எஜ்.ராஜா, அம்மா விடுதலைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பா.ஜ.க.தலைமை தமிழிசையிடம் சொல்லாத தீர்ப்பின் ரகசியத்தை எஜ்.ராஜவிடம் சொல்லி இருக்குமோ!

தீர்ப்பு வந்த நிமிடத்தில் இருந்து கேப்டனை எந்த டிவியிலும் ஆளே காணோம்… அண்ணன் வைகோ இப்பவே அடி வருட ஆரம்பித்துவிட்டார்…..

கலைஞர் தீர்ப்பு பற்றி வெளிப்படையாக கருத்து சொல்ல தயங்குகிறார் .

இவளவுதான் தீர்ப்புக்கு தமிழக ஏதிர்க் கட்ச்சிகளின் ஏதிர்ப்பு…
____________________

corruptionMathivanan Bala

எல்லாருக்கும் தெரிஞ்ச கதை தான்…. , இன்னைக்கு இந்த கதை சரியா பொருந்தும் நினைக்கிறேன்…

“பயமலிதா “ன்னு ஒருத்தர் அவங்களோட கூட்டாளிங்களோட ஒரு பெரிய நட்சத்திர ஓட்டலுக்கு சாப்பிட போனாராம் . அங்கு அவருக்கு விருப்பமான எல்லாத்தையும் அனுபவித்து சாப்பிட்டு முடிச்ச பிறகு, அங்குள்ள சர்வரு அவருகிட்ட அவர் சாப்பிட்டதற்கான 3000 ருபாய் ரசிது கொடுத்தாராம்.

ஆனா அந்த “பயமலிதா ” கிட்ட இருந்தது வெறும் 100 ரூபாய்தான்; ஏமாத்தி சாப்பிட்டு 3000 ரூபாயும் கொடுக்க மறுத்த “பயமலிதா ” வை காவல்துறைகிட்ட ஒப்படைத்தாராம் ஓட்டல் உரிமையாளர் .

“பயமலிதா “க்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்தா, தான் கையில் வைத்திருந்த 100 ரூபாயை காவல்துறை அதிகாரிக்கிட்ட லஞ்சமா கொடுத்தாராம் அந்த “பயமலிதா “. 100 ரூபாய வாங்குன, அந்த காவல்துறை அதிகாரி “பயமலிதா ” எந்த தப்புமே பண்ணலேன்னு விடுதலை பண்ணிடாராம்…!
____________________

அபு ரய்யான்

மக்கள் மன்றம்…. நீதி மன்றம் என அணைத்து மன்றங்களின் மீதான நம்பிக்கையும் நசுங்கி போய்விட்டது… இனிமேலும் நீதி நேர்மை நியாயமெல்லாம் பேசி பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை…. ஆகவே முகநூலுக்கு ஒரு ஸலாம் போட்டுடலாம்னு இருக்கேன்….

Lost the faith in India’s Democracy and Judiciary…
____________

Thiru Yo

“7 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜு உள்பட 10 பேருக்கு ஹைதராபாத் மாநகர அமர்வு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. மேலும் அவர்கள் 10 பேருக்கும் வழங்கப்பட்ட 7 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.”

மோடி, அமித்ஷா, சல்மான்கான், ஜெயலலிதா, ராமலிங்கராஜூ… இந்திய நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளும் பொய்த்துவிடவில்லை.
________________

குமாரசாமி ராமாயணத்தில் யாரெல்லாம் நோக்கினார்கள் ?

9
குமாரசாமி தீர்ப்பு
குமாரசாமி ராமாயணத்தில் “அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்”

ட்டம் சமம்
சட்டம் பொது
சந்தேகமே வேண்டாம்
தீர்ப்புதான் தனித் தனி!

லாலு, சவுதாலா…
ஜெயலலிதா
சாதி வேறு
நீதி வேறு!

மகாபாரதம்
ராமாயணம் மட்டுமல்ல
அரசியல் சட்டத்தையும்
ஆளுக்கு ஏற்ற மாதிரி
வியாக்கியானம் செய்யலாம்.

குன்கா ராமாயணத்தில்
அவர் மட்டுந்தான்
நோக்கினார்,
குமாரசாமி ராமாயணத்தில்
“அண்ணலும் நோக்கினார்
அவளும் நோக்கினாள்”

நீதி... நேர்மை .. வெட்கம்.. மானம் அனைத்துக்குமே விடுதலை!
நீதி… நேர்மை .. வெட்கம்.. மானம் அனைத்துக்குமே விடுதலை!

அரசியல் சட்ட அதிகாரத்தில்
ஜெயா- சசி
காற்சிலம்பு தெறித்த
கடைசிக் காட்சியில்
நல்லவேளை
“யானோ அரசன்
யானே கள்வன்-” என்று
குமாரசாமி
குப்புற விழுந்து
உயிரை விடாமல்
“யானே அள்ளுவேன்”
என,
நீதியை அள்ளும் காட்சியில்
சுப்பிரமணிய சாமிக்கே
சுரணை வந்தது.

இத்தனை சதவீதம்
சொத்துக் குவிக்கலாம்
என ஒத்துக்கொண்ட பிறகு
எதற்கு நீதி மன்றங்கள்?
கட்டிடங்களை எல்லாம்
கமிஷன் மண்டியாக
மாற்றிவிடலாம்.

சாலையோர மக்களை
காரை ஓட்டிக் கொன்ற
சல்மான் கானுக்கு
உடனே ஜாமீன்.

வேலை தேடி
வெளி மாநிலம் போகும்
அப்பாவி தொழிலாளிகளுக்கு
துப்பாக்கிச் சூடு!

கட்டைகளை கடத்தியதாக பழி
சட்டத்தையே கடத்திய
ஜெயா- சசி கும்பலுக்கு
நீதிமன்றமே வழி!

நீதிமன்ற அருகதை
அம்மாவின் வருகைக்காகவே காத்திருந்தது போல், நீதிமன்றத்தின் அலங்காரத் திரை அவிழ்ந்தது

ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்,
நீதிமன்றங்களி்ன் தரத்தை
ஜெயலலிதாவை விட
யாரால் சிறப்பாக விளக்கமுடியும்?

அம்மாவின்
வருகைக்காகவே
காத்திருந்தது போல்,
நீதிமன்றத்தின்
அலங்காரத் திரை அவிழ்ந்தது
ஏதோ
அங்க ஒண்ணு இருக்கு
என்று
நீதி மன்றத்தை உற்றுப்பாத்தவர்களின்
கண்களையே நோண்டிவிட்டது
காவல் தெய்வம்!

பாருங்கள்!
பரம்பொருளின் அருள்வாக்கு,
“இனி ஊழலை ஒழிக்க முடியாது
நீதியை ஒழித்துவிடு!”

அம்மா குடிநீர்,
அம்மா உணவகம் மாதிரி
இது அம்மா தீர்ப்பு!

சந்தேகமேயில்லை,
அம்மாவுக்கு மட்டுமா? விடுதலை?
நீதி… நேர்மை .. வெட்கம்.. மானம்
அனைத்துக்குமே விடுதலை!

– துரை. சண்முகம்