Monday, June 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 613

புதிய திசைகள் திறக்கின்றது !

3

நிமிர்ந்து நில்!
துணிந்து செல்!

ஐ.டி ஊழியர்கள்
படம் : நன்றி http://www.thehindubusinessline.com

கார்ப்பரேட் மூலதனத்துக்காக
எதை எதையோ கற்றோம்

வாழ்வதற்காக
போராடக் கற்போம்!

ஏ.சி. கியூபிக்கிளில்
அச்சத்தில் உறையவைக்கப்பட்ட
பனிக்கட்டிகளாய்
ஏன் இந்த அவலம்,

பக்கத்து மனிதர்களின்
மனக் கொதிப்பை
பகிர்ந்து கொள்ள மறுத்ததால்
வந்த துயரம்.

என்ன தவறு செய்தோம்?
என்ன சொன்னாலும் கேட்டோம்!
அதுதான் தவறு.
நாமும் ஒரு தொழிலாளிதான்
என்பதை
மறந்து போன துயரத்தால்
விளைந்த சோகம் இது!

இரவு, பகல் எந்த ஷிப்ட்டிலும்
இளரத்தம் சுண்டக் காய்ச்சினோம்,
இமைத் துடிப்பைத் தொலைத்து
கணினி இலக்கில்
கருவிழி பாய்ச்சினோம்.

எங்கோ இருக்கிற
அமெரிக்க ‘டீலை’
‘டேலி’ செய்தோம்,
சொந்த உடம்பில்
வைட்டமின் ‘டி’ ஐ
காலி செய்தோம்.

நிர்வாகத்தின்
டார்கெட் அழுத்தத்தில்
மவுஸ் துடித்ததை விட
நம் இதயம் துடித்தது அதிகம்!

மூலதனத்துக்கு தேவை
இதயம் அல்ல லாபம்.
நமக்குத் தேவை
தயக்கம் அல்ல இயக்கம்.

எது
கொத்து கொத்தாக விவசாயிகளை
விளை நிலத்தை விட்டு
பிடுங்கி எறிந்ததோ,

எது
லட்சக்கணக்கான தொழிலாளர்களை
திடீரென
தொழில்களை விட்டு விரட்டியதோ,

எது
மீனவரை
ஆழ்கடல் துரத்தி
அலைக்கழித்து விரட்டுகிறதோ

அதுதான்
நம்மையும்
ஒரு நொடியில்
வீதிக்கு விரட்டுகிறது!

நோக்கியாவின் கதவுகள்
சாத்தப்படுவதும்,
டி.சி.எஸ்.சின் கணினிகள்
சாத்தப்படுவதும்
வேறு வேறு அல்ல.

மொத்த தொழிலாளிகளின்
ஒரு பகுதி என
நம்மை உணர்ந்தால்
சித்தம் கலங்காது
ரத்தம் கொதிக்கும்!

லாபத்துக்கு தேவையற்றவர்களை
‘திறமையற்றவர்களாய்’ இழிவுபடுத்தும்
கார்ப்பரேட்டுகளுக்கு,
நமது திறமையை
நாம் தனி அல்ல
உழைப்பாளர் அணி என
ஓங்கி அறைந்திடுவோம் முகத்தில்!

உரிமைகளுக்கு
ஃப்ரெஷரானால்
நமக்கான வேலை
நிறைய இருக்கிறது

போராட்டம் இல்லாத இடத்தில்தான்
சோகம் பிறக்கிறது
போராடும்
ஒவ்வொரு நிமிடமும்

புதிய திசைகள் திறக்கின்றது.
அச்சம் தவிர் நண்பா!
சங்கமாய் சேர்ந்து அடி!
சாதிக்க முடியாதது அல்ல ஐ.டி!

– துரை.சண்முகம்

நூல் அறிமுகம் : ஆம் ஆத்மி கட்சி பிறப்பும் வளர்ப்பும்

1

நாம் யாரால் ஆளப்படுகிறோம்? மிக எளிமையான இந்தக் கேள்விக்கான பதில் அத்தனை எளிமையானதல்ல. ‘மோடி தான் பிரதமர், அம்மா தான் மக்கள் முதல்வர். இவர்களைத் தான் மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்தார்கள். இவர்கள் தான் நம்மை ஆள்கிறார்கள்’ என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், “அவர்கள் போட்டுக் கொண்டிருக்கும் சட்டை அவர்களுடையதில்லை” என்கிறது கீழைக்காற்று பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ள “ஆம் ஆத்மி: பிறப்பும் வளர்ப்பும்” என்கிற சிறு வெளியீடு.

புதிய ஜனநாயகம் பத்திரிகையில் “ஆம் ஆத்மி கட்சியின் பிறப்பு இரகசியம்” என்ற தலைப்பில் நான்கு மாதத் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்தச் சிறு வெளியீடு.

aam-aadhmi-party

தொண்ணூறுகள் தொடங்கி கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக மாவட்ட, வட்ட ஆட்சியர் அலுவலகங்கள் தொடங்கி மத்திய அமைச்சகங்கள் மற்றும் பிரதமர் வரைக்கும் எந்த திட்டங்களை எப்படிச் செயல்படுத்த வேண்டும், எந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று சகல துறைகளிலும் ஆலோசனை வழங்குவது மக்களால் தேர்ந்தெடுத்து எம்.எல்.ஏக்களாகவும், எம்.பிக்களாகவும் உள்ள ‘மக்கள் பிரதிநிதிகள்’ அல்ல – அவை என்.ஜி.ஓக்கள் என்று அழைக்கப்படும் அரசு சாராத் தொண்டு நிறுவனங்கள் தாம்.

கடந்த சில பத்தாண்டுகளாக பல்லாயிரக்கணக்கான அரசு சாராத் தொண்டு நிறுவனங்கள் கார்ப்பரேட் நலன்களை சாதித்துக் கொடுப்பதற்காக உண்டாக்கப்பட்ட சிந்தனைக் குழாம்களுக்கு கள ஆய்வுகளைச் செய்து கொடுப்பதையும், இவர்கள் ஏகாதிபத்திய நலன்களை நிறைவேற்ற எப்படித் தோள் சேர்கிறார்கள் என்பதை விளக்குகிறது இச்சிறு வெளியீடு. போர்டு, ராக்ஃபெல்லர், மிலிண்டா கேட்ஸ் போன்ற பல்வேறு ஏகாதிபத்திய கார்ப்பரேட் அறக்கட்டளைகளிடம் எலும்புத் துண்டுகளைப் பொறுக்கித் தின்னும் அரசு சாராத் தொண்டு நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்டதே ஆம் ஆத்மி கட்சி என்பதை நிறுவுகிறது இவ்வெளியீடு.

ஆம் ஆத்மி கட்சி என்பது அரசு சாராத் தொண்டு நிறுவனங்களின் எந்திரகதியிலான கூட்டுத் தொகை மட்டும் தானா? அதற்கும் மேல், ஆம் ஆத்மி கட்சியின் அவதாரம் நிகழ்ந்த காலகட்டத்தின் உலகப் பொருளாதார கட்டமைப்பு நெருக்கடி, அது உலகளாவிய அளவில் மக்களிடையே ஏற்படுத்திய அதிருப்தி, அதிகரித்து வரும் ஊழல் முறைகேடு புகார்கள், செல்வாக்கிழந்த ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் என்ற பின்புலத்தில் நடந்த வண்ணப் புரட்சிகள், ஆட்சிக் கவிழ்ப்பு – அதிகார மாற்றங்கள், அதில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பங்கு, அந்நடவடிக்கைகளில் உள்ள ஏகாதிபத்திய நலன் என இந்தச் சிறிய வெளியீடு நம்மை பரந்துபட்ட ஒரு தளத்திற்கு அழைத்துச் செல்கிறது.

இந்நூல் ஆம் ஆத்மி கட்சியின் பிறப்பு இரகசியத்தை மையமாக கொண்டு நிகழ்கால அரசியலின் பல துண்டு துக்கடாவான சம்பவங்களை இணைக்கும் அடிநீரோட்டத்தை வாசகருக்கு அறிமுகம் செய்து வைக்கிறது.

அவசியம் வாங்கிப் படிப்பதோடு நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டிய நூல்.

ஆம் ஆத்மி ஆத்மி கட்சி – பிறப்பும் வளர்ப்பும்

வெளியீடு : கீழைக்காற்று
விலை : ரூ 25

புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367

TCS Layoff – களமிறங்கிய தொழிலாளர் படை – ஆதரியுங்கள் !

16
ஐ.டி காரிடார் சாலையில் தொழிலாளர் படை அணிவகுப்பு
ஐ.டி காரிடார் சாலையில் தொழிலாளர் படை அணிவகுப்பு

டி.சி.எஸ் நிறுவனம் 25,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்வது குறித்து வினவில் தொடர்ச்சியாக எழுதி வருகிறோம். இது தொடர்பாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும், வினவு தளமும் இணைந்து ஐ.டி ஊழியர்கள் மத்தியில் வீச்சாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இணையத்தில் தொடங்கிய பிரச்சாரம் களத்திலும் தொடர்கிறது.

வேலைநீக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ஐ.டி துறை ஊழியர்கள் அனைவரும் சங்கமாக திரண்டு தமது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறைகூவியும் இன்று (07.01.2015) காலை 8 மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சோழிங்கநல்லூர் சிக்னலில் திரண்டனர். ஐ.டி ஊழியர்களைக் காப்பாற்ற ஆலைத் தொழிலாளர்கள் அணி திரண்டு வந்தது தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி பாத்திரத்தையும், போராட்ட குணத்தையும் பறை சாற்றுவதாக இருந்தது.

வந்திறங்கும் தொழிலாளர் படை
வந்திறங்கும் தொழிலாளர் படை
பிரச்சாரப் பணிகளுக்கு தயாராகும் தொழிலாளிகள்
பிரச்சாரப் பணிகளுக்கு தயாராகும் தொழிலாளிகள்

tcs-layoff-ndlf-campaign-09பணிக்கு சென்று கொண்டிருக்கும் ஐ.டி ஊழியர்களை தொழிற்சங்கமாக ஒன்றிணையுமாறு அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். ஐ.டி காரிடாரில் உள்ள டி.சி.எஸ் மற்றும் மற்ற ஐ.டி நிறுவன அலுவலகங்கள் முன்பும் சாலை சந்திப்புகளிலும் ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்களை வினியோகிக்கின்றனர்.

அதிகாலையில் கார்ப்பரேட் நிர்வாகத்தின் லே ஆஃப் கொடுங்கனவோடு பேருந்துகளில் பயணிக்கும் ஐ.டி மற்றும் டி.சி.எஸ் ஊழியர்களை நம்பிக்கை ஊட்டும் விதமாக தொழிலாளர்களாக இருக்கும் தோழர்கள் பேசி வருகின்றனர். இது தொடர்பான ஆங்கிலம் மற்றும் தமிழ் துண்டறிக்கைகளை விநியோகித்து உரையாடுகின்றனர்.

காலையிலேயே வந்திறங்கி, பிரசுரங்களை பிரித்து மடித்து, கொடிகள், பேனர்களை உயர்த்திப்பிடித்து ஐ.டி வளாக நெடுஞ்சாலையில் நம்பிக்கையூட்டும் விதமாக அவர்கள் பிரச்சாரம் செய்வது கார்ப்பரேட் முதலாளிகளின் கண்ணை உறுத்தத்தானே செய்யும்?

உடனே அவர்கள் உத்தரவுப்படி போலீசு பெரும்படையுடன் களமிறங்கியது. தோழர்களிடம் நைசாக பேசி கலைந்து போகுமாறு கூறியது. தொழிலாளிகளோ, “துண்டறிக்கை விநியோகிப்பது அடிப்படை ஜனநாயக உரிமை, இதை நிறுத்த முடியாது” என்று பேசி தமது தலைவர்களிடம் அனுப்பினர்.

தலைவர்களை தேடி அலைந்த போலீசு இறுதியில் பு.ஜ.தொ.மு மாநிலத் தலைவர் முகுந்தன், மாநிலப் பொதுச்செயலாளர் சுப.தங்கராசு, மாநிலப் பொருளார் விஜயகுமார் ஆகியோரை சந்தித்து பேசியது. தோழர்களும் தொழிலாளிகள் சொன்ன அதே ஜனநாயக விளக்கத்தை எடுத்தியம்பினர்.

“குறைந்த பட்சம் பேனர்கள், கொடிகளையாவது அப்புறப்படுத்துங்கள்” என்று ஆரம்பித்து “பிரசுரம் கொடுக்காதீர்கள்” என்று மிரட்டி வருகிறது போலீசு. இதற்கு அஞ்சாத தொழிலாளர் படை தனது பிரச்சாரத்தை நிறுத்தாமல் செய்து வருகின்றது. ஐ.டி ஊழியர்களை தூக்கி எறியும் டாடாவை எதிர்த்து பேசக்கூடாது என்பதே இங்குள்ள ஜனநாயகத்தின் இலட்சணம்.

 

TCS-Prasuram-tamil-1 TCS-Prasuram-tamil-2

சாலையில் தொடங்கிய இந்த பிரச்சாரம் அவர்களை தொழிற்சங்கமாக திரட்டும் வண்ணம் தொடர்கிறது.

tcs-layoff-ndlf-campaign-04இன்றைய நிகழ்வைத் தொடர்ந்து ஐ.டி ஊழியர்கள், தொழிற்சங்க முன்னணியாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டு நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் வரும் சனிக்கிழமை ஜனவரி 10, 2015 அன்று மாலை 6 மணிக்கு சிறுசேரிக்கு அருகில் உள்ள படூரில் நடைபெறவுள்ளது. இதற்கு அனைவரும் வாருங்கள்!

tcs-layoff-ndlf-campaign-05

இது தொடர்பாக மேலும் விபரங்களைப் பெற 9003198576 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். அல்லது combatlayoff@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பேஸ்புக் பக்கம் fb://VinavuCombatsLayoff

இந்திய ஐ.டி துறை வரலாற்றில் முதல்முறையாக ஊழியர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான இந்த முயற்சியில் இணைய பிரச்சாரம் தொடர்பான பணிகளை வினவு தளமும், பு.ஜ.தொ.முவும் முன்னெடுத்து வருகிறது. இதற்கு வினவு வாசகர்களின் ஆதரவையும், உதவியையும் கோருகிறோம். இந்தச் செய்தியை இணையத்திலும், உங்கள் உறவினர்கள், நண்பர்கள் மத்தியிலும் பரவலாக கொண்டு செல்லும்படி கேட்டுக் கொள்கிறோம்.

tcs-layoff-ndlf-campaign-10

TCS Layoff - NDLF (2)

TCS-Prasuram-english-1 TCS-Prasuram-english-2

ஃபாக்ஸ்கான் பயங்கரவாதம் – நேரடி ரிப்போர்ட்

0

சென்னை- ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் பாக்ஸ்கான் என்ற பன்னாட்டு நிறுவனம், சட்டவிரோதமாக தனது உற்பத்தியை நிறுத்தி ஆலையை மூடிவிட்டது. 8 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பணிபுரிந்த 1,700 நிரந்தர ஊழியர்கள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வெளியேற்றப்பட்டனர். திடீர் ஆலை மூடலை எதிர்த்துப் போராடிய தொழிலாளர்கள், சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். சட்ட விரோத ஆலை மூடலுக்கு எதிராக, அரசின் தொழிலாளர் உதவி ஆணையர் பேச்சு வார்த்தைக்கு பலமுறை அழைத்தும் வராமல், தனக்கு வேலை செய்த தொழிலாளர்களை குப்பைக் காகிதங்களாக தூக்கி எறிந்தது போலவே, இந்திய தொழிலாளர் சட்டங்களையும் கழித்து வீசியிருக்கிறது ஃபாக்ஸ்கான்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் தயாரிப்பில் மிகப்பெரும் பங்கு வகிக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் சோனி, மோட்டரோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பொருட்களை தயாரிக்கும், உலகின் மிகப்பெரும் மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது. சீனாவில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலைகளில் தொழிலாளர்களின் உழைப்பை பிழிந்து ஆலைகளில் வைத்தே அவர்களை பிணமாக்கியது பற்றிய செய்திகள் வினவில் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன. பாக்ஸ்கான் ஆலைகளில் தொழிலாளர்கள் ‘தற்கொலை’ செய்துகொண்ட செய்திகள், உலகத் தொழிலாளர்களை உலுக்கியது.

இப்போழுது, இந்தியாவில் அதன் கொடுங்கரத்தின் வெறிச் செயல்கள் வெளிப்படுகின்றன. இந்திய தொழிலாளர் சட்டங்களும் அதிகாரவர்க்கமும் ஓட்டுச்சீட்டு அரசியல் தொழிற்சங்கங்களும் அவற்றை முறியடிக்க வக்கற்று, சமரசம், பேச்சுவார்த்தை என்ற பெயரில் தொழிலாளர்களை காவு கேட்கும் அதன் ரத்தப்பசிக்கு தீனிபோடுகிறார்கள்.

இதோ அந்த ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்ட தொழிலாளர்களின் குரல்களை கேளுங்கள்…

ரஜினி, பாக்ஸ்கான், சிஐடியு தொழிற்சங்க தலைவர்

நோக்கியா கம்பெனிக்கு சப்ளையர் இந்த கம்பெனி. ஆனாலும் அதைவிட பெரிய கம்பெனி. நோக்கியா மூடியபிறகும் எந்த பாதிப்பும் இல்லாமல் உற்பத்தி நடந்தது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி தொடர்ந்தது. இந்த கம்பெனி நோக்கியாவுக்கு மட்டுமல்ல, சோனி, மோட்டரோலா கம்பெனிகளுக்கும் பாகங்களை எக்ஸ்போர்ட் பண்ணிட்டிருந்தாங்க. நோக்கியாவோட தொழிற்சாலை தமிழ்நாட்டுலயே இருந்ததாலே அதுக்கு முன்னுரிமையா செய்து கொடுத்திட்டிருந்தோம். ஒரு கட்டத்துல, இந்த கம்பெனியில, 19,000 பேர் வேலை பார்த்தாங்க.

ரஜினி
ரஜினி, பாக்ஸ்கான் சி.ஐ.டி.யு தலைவர்

தற்போது இருப்பது நிரந்தர ஊழியர்கள் 1,700 பேர் மட்டும்தான்.

9,000 பேர் டெம்பரவரியா வேலை செய்தாங்க, தங்கள் வயித்துப் பொழப்புக்காக வேற வழியில்லாமல் 5 வருடங்களுக்கு மேலாக, 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான சம்பளத்துக்கு எந்த வித உரிமையும் இல்லாம வாழ்க்கைய ஓட்டிக்கிட்டிருந்தாங்க. ஊழியர்கள், 280 நாட்கள் தொடர்ந்து வேலை செய்த பிறகு 2 நாட்கள் விடுமுறை கொடுத்துட்டு, மறுபடியும் வேலையிலே ரி-என்டிரி கொடுத்து, மீண்ட்டும் டெம்பரவரியாக சேர்த்துக் கொள்வார்கள்.

கம்பெனிக்காரனுங்க பயங்கரமா தந்திரம் தெரிஞ்சவனுங்க. அதுமட்டுமில்லாம, அவனுங்க பின்னாடி ஒருகூட்டம் லீகல் அட்வைசர்னு அலையுது. பெர்மனன்ட் ஐடியான எனக்கு ஆரம்ப சம்பளமாக ரூ 2,900 இருந்தது. 8வருடங்கள் கழித்து இப்பத்தான் சம்பளம் 15ஆயிரம்.

4 மாதங்களுக்கு முன்பு 400 பெண் ஊழியர்களுக்கு வி.ஆர்எஸ் கொடுத்து அனுப்பினாங்க.

இதுவரைக்கும் நேரடியாக மேனேஜ்மென்ட் தொழிலாளர்களிடம் ஆலையை மூடப்போவதாக எந்த முன் அறிவிப்பும் கொடுக்கல. டிவியும், பத்திரிகைகளும்தான் ஆலையை மூடப்போவதாக சொல்கிறார்கள். கவர்மென்ட் ஆபிசர்களும், கஷ்டப்படற தொழிலாளர்களிடம் எதுவும் கேட்காமல், “நீங்க என்ன நினைக்கிறீங்க?” ன்னு நிறுவனத்திடம், கேட்கிறாங்களே ஒழிய அவங்கள தண்டிக்க ஏதுவும் செய்யல.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலை நடுத்தெருவுக்கு வந்துவிடுமே என்ற எண்ணம் எவனுக்கும் இல்லை. அதைவிட்டு, எரிறதுல எண்ணெய் ஊத்தி லாபம் பார்க்கிறானுங்க பத்திரிக்காரனுங்க. எத, எதல லாபம் பாக்கிறதுனு விவஸ்தல இல்லையா. செய்திகளையும் அப்படித்தான் போடுறானுங்க. 1000 பேர் போராட்டம் செய்து அரெஸ்ட் ஆனா, 512 னு போடுறானுங்க.

கவர்மெண்ட் எதுக்கு இருக்கு, மக்களுக்கு சேவை செய்ய. ஆனா, அவன் கம்பெனிக்காரனுக்குத்தான் கவலைப்படறான். நிலைமை இப்படித்தான் இருக்கு. தானாகவே ஒரு ரூமரைக் கிளப்பிவிட்டுட்டு, அதை உண்மையாக்கும் நடவடிக்கைக்கு அரசாங்கம் துணை நிக்குது. ஜனநாயக நாடுன்னு சொல்லிட்டு எந்த அதிகாரி ஜனநாயகத்தை மதிக்கிறான், எந்த பத்திரிகைக்காரன் உண்மைநிலையை சொல்றான்.

ஏசி (போலீசு)லயிருந்து கலெக்டரு, பத்திரிக்கைனு எவனும் ஜனங்க பிரச்சினைய பாக்குறதில்ல.

இப்படியே, நியாயமில்லாம, வேலையைவிட்டு தூக்குவது தொடர்ந்தால் ஆலையின் முன், குடும்பத்துடன் போராட வேண்டிய நிலைமைதான்வரும். அப்பறம் குடும்பத்துக்கு கம்பெனிக்காரன் சோறுப் போடுவானோ? இல்லை, போலீசுக்காரனுங்க சோறு போடுவானுங்களோ தெரியாது.

சக்திவேல், திருவொற்றியூர், 8வருடங்களாக வேலை செய்பவர்.

சக்திவேல்
சக்திவேல்

என்னுடைய வேலைய நம்பித்தான் என் குடும்பமே இருக்கு. இதைத் தவிர வேற எந்த வேலையும் எனக்கு தெரியாது. பன்னிரெண்டாவது முடிச்சிட்டு உடனே வேலைக்கு வந்துட்டேன். அப்பா கூலித்தொழிலாளி. இவ்ளோ நாளும் என்னை நம்பி குடும்பமே போய்ட்டு இருக்கு. இருக்க வீடுகூட கிடையாது.

கம்பெனி மூடுறாங்கனு கேள்விப்பட்டதும், என்ன செய்யறதுன்னே தெரியல. 8 வருஷமாக இங்கேயே ஓட்டிட்டேன். இந்த வேலைகள்தான் எனக்கு அத்துபடி. இனிமேல் நான் வேறு வேலையும் கத்துக்கமுடியாது. வேற கம்பெனிக்குக்கு போகலாமுனுப்பார்த்தா, வயசு பார் ஆயிடுச்சினுவாங்க. என் கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்திருங்காங்க, இதனால கல்யாணமும் தடைபடுது. வாழ்க்கையே கேள்விக்குறியா இருக்கு, என்ன செய்யறனுன்னே தெரியல.

எட்டு வருடங்கள் கழித்து இப்பதான், சம்பளம் 2000-லிருந்து 15,000-த்துக்கு அதிகரிச்சி கொஞ்சம் நிம்மதியா இருக்காலாமுனு பார்த்தா இப்படியொரு நிலை ஆயிடுச்சி. ஒரே மனஉளைச்சலா இருக்கு. சாதாரண போராட்டம்னு ஆலைக்கு முன்னே வந்தாலே, போலீசு அரஸ்ட் பண்ண வந்திடுறாங்க. வேலையே போகப்போகுது, இப்ப போலீசு என்ன பண்ணுவானுங்கனே தெரியல. எல்லாம், கம்பெனிக்காரனுக்கு ஆதரவாதான் இருக்கானுங்க.

கம்பெனியில 200-க்கும் அதிகமான கேமராக்கள் இருக்குது. பாத்ரூம் போனாக்கூட எல்லாருக்கும் தெரியும். பெல்லு அடிக்கிறதுக்கு முன்னே வந்துடணும். டாய்லெட்டுக்கு போறதுக்கும் கணக்கு உண்டு. டூட்டியில, நாலுவாட்டி பாத்ரூம் போனா வார்னிங் எல்லார் முன்னாலயும் நடக்கும்.

ஊதிய உயர்வுக்காக போராட்டம் பண்ணப்போ வேலூர் ஜெயில 5 நாட்கள் தூக்கிப் போட்டுட்டானுங்க. 219 பேர் ஜெயிலுக்குப்போனோம். குற்றம் செய்றவனுக்குத்தான் ஜெயிலுனு நினைச்சிருந்தேன். ஆனா, தொழிலாளி உரிமைக்கேட்டு போராடுனாலும் ஜெயிலுத்தானு அப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டேன். அதோடு மட்டுமில்லாமல், வார்னிங் லெட்டர் வேற அனுப்பிட்டாங்க. இப்படியே என் வாழ்க்கை கழிச்சிப்போச்சி. அதுக்கப்புறம், எதைக்கேட்டாலும் சஸ்பென்ட்தான்.

சாப்பாடு பத்தாம கேட்டாலும் கேவலப்படுத்துவாங்க. தரம் இல்லாத சாப்பாடுதான்.

இப்ப வேலையில்லாதது என் வாழ்க்கையையே இருட்டில் தள்ளிடிச்சு. இந்த கம்பெனியில வேலைப்பார்த்த அனுபவத்தை சொல்லி, எந்த கம்பெனிக்கு போய் நின்னாலும் வேலை கொடுக்கமாட்டேன்றாங்க. என்ன விஷயமென்றே புரியல.

கம்பெனி கட்டாய விஆர்எஸ் கொடுத்துட்டு, எக்ஸ்பீரியன்ஸ் சர்பிகேட் தரனுன்னு சொல்றாங்க. இந்த கம்பெனியில நான் கம்மி சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்ததுக்குக் காரணம், 58 வயசு வரைக்கும் வேலை உத்திரவாதம்னு நினைச்சுதான். என்னுடைய ஜாயினிங் ஆர்டருல இருக்கு. எனக்கு வேலைதான் வேணும். இழப்பீடு தேவையில்லை.

அரசு எங்களுக்கு பதில் சொல்லியாகணும். அவங்க சொல்ற பதிலில்தான் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை அடங்கி இருக்கு. இதுக்கு சரியான வழிகாட்டலனா அரசாங்கத்த எதிர்த்து போராட்டம் பண்ணுவோம்.

வெளிநாட்டுலருந்து வந்து இங்க ஆதிக்கம் செலுத்த கம்பெனிகாரனுக்கு உரிமை இருக்கு. இந்தியாவுலய பொறந்த எங்களுக்கு வேலூர் ஜெயிலா? விடமாட்டோம்! எதிர்த்து போராடுவோம்!

சரவணன், அண்ணா தொழிலாளர் சங்க செயலாளர்

சரவணன்
சரவணன்

அக்கா, தங்கை, அப்பா, அம்மா என்று அனைவரும் இந்த வேலைய நம்பித்தான் இருக்கோம். வாடகை வீடுதான். கடந்த 3 மாதங்களாக உற்பத்தி குறைவுனு காரணம் காட்டி தொழிற்சாலைய மூடப்பாக்குறாங்க. நோக்கியாவை நம்பித்தான் நாங்க வந்தோமுனு கம்பெனி சொல்றத ஏத்துக்கவே முடியாது. ஏன்னா, இங்க செல்போன் பாகங்கள் மட்டும் உற்பத்தி நடக்கல. லேப்டாப், எல்இடி டிவிக்கள் பாகங்களும் உற்பத்தி நடக்குது; ஏற்றுமதி ஆகுது.

இந்த கம்பெனியில வேலை பார்த்தவங்க வெளியப் போய் வேலைச் செய்ய முடியாது. டெம்பரவரி தொழிலாளர்களாக வெளியேற்றப்பட்டவர்கள் எல்லாம் ஏற்கனவே, வெளியில் வேலையில்லாமல், இருக்காங்க. ஆலையை மூடக்காரணம், முழுசா எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிட்டு, டெம்பரவரி ஆளுங்களை வைச்சி கம்மியான சம்பளம் கொடுத்துட்டு வேலை வாங்கிக்கலாம்னு நினைக்கிறாங்க. இங்க, இருக்கற மெஷின்களை வெளியிடத்துக்கு எடுத்துச் செல்ல, இப்ப லீவுனு சொல்றானுங்க.

சீனிவாசன்

என்னை டெக்னிஷியன் கேட்டகிரியில் எடுத்தார்கள். நாங்க யூனியனிலும் சேரக்கூடாது. சம்பள உயர்வு போன்ற போராட்டங்களில் கலந்துக் கொள்ளக்கூடாது என்று முதலிலேயே சொல்லிட்டாங்க. இங்கு மோல்டிங் டீம், அசெம்பிளி டீம் என்று, 6 விதமான டிபார்ட்மெண்ட்டுகள் இருக்குது, இவை எல்லாவற்றிலும் மேனேஜர், சூப்ரவைசர்கள், டெக்னிசியன்கள் என்று தரவாரியாக பிரித்துள்ளார்கள்.

கடந்த இரண்டு வருடமாகத் தொடர்ந்து, காலையில் எச் ஆர் வருவாரு. ஒவ்வொரு யூனிட்டுல இருந்து நாலு பேரைக் கூப்பிடுவாரு. இரண்டு நிமிஷம் கண்ணீர்விட்டு ,

‘கம்பெனி புரடக்ஷன் குறைஞ்சிடுச்சி, கம்பெனி மூடுற நிலைமைக்கு வந்துடுச்சி, உங்கள மட்டும் நான் காப்பாத்திறேன். மூணு மாச சம்பளம் தர்றோம், நீங்களே வாலண்டிரா விஆர்எஸ் கொடுத்துட்டு செட்டில்மெண்ட வாங்கிக்கினு போயிடுங்க’

னு சொல்லுவாரு. உடனே,

‘எங்களுக்கு வேற வேலை கிடைச்சிட்டதால நாங்க இங்க வேலையை விட்டு விடுகிறோம’

என்று எழுதிக் கையெழுத்து வாங்கிடுவாங்க. ஐடிகார்டு, ஷூ, யூனிபார்ம் எல்லாத்தையும் வாங்கிட்டு வெளியே அனுப்பிடுவாங்க. தினமும், கூட்டமாக ஆடுகள் நிற்கும் எந்த ஆடு இன்னிக்கி வெட்டுவாங்கனு தெரியாது. 2009-ல் இருந்தே இப்படி தினமும் நடக்குது.

எனக்கும் அந்த முறை வந்தது. நான், என் குடும்ப நிலைமையைப்பற்றி சொன்னேன். உடனே,

‘நாளைக்கு நீ வேளைக்கு வரமுடியாது. வெளியத்தான் நிக்கணும்’

என்றார்கள். மறுநாள் வந்தேன். சூப்ரவைசர் உள்ள அனுமதிக்கல. நான் வெளியேற்றப்பட்டேன். மற்ற தொழிலாளர்கள், தொழிலாளர் சங்கத்தை அணுகுவது நல்லது என்றார்கள். நான் புஜதொமு தொழிற்சங்கத்தை அணுகினேன்.

“திடீரென்று வீட்டுக்கு அனுப்பினால், என் குடும்பம் என்னாகுறது. அதனால, நான் வேலையை விடமாட்டேன்”

என்று கம்பெனிக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். கம்பெனியிலிருந்து அதற்கு, ஒருமாதம் கழித்து லெட்டர் வருது.

‘தொடர்ந்து வேலைக்கு வராதக் காரணத்தினால் உங்களை வேலையிலருந்து ஏன் தூக்கக்கூடாது’

னு. அந்த லெட்டர எடுத்துகுனு நான் மறுநாள், கம்பெனிக்கு போனேன். என்னை, ஐஆர் (இன்ட்ரசியல் ரிலேஷன்ஷிப்) தொழிற்சாலையிலுள்ள ‘வக்கீல்’ கிட்ட அனுப்பினாங்க, அங்கு அவர்கள்,

‘கம்பெனி மூடப்போறோம். அதனால, நீ விஆர் கொடுத்துடு’

என்று மிரட்டினார்கள். உடனே, நான் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் இருக்கும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்துக்கு போனேன். அங்கு, நிர்வாகம்

‘நாங்க இவரை வேலைவிட்டு எடுக்கவும்இல்ல, சஸ்பென்டும் செய்யல’

என்று அசராமல் பொய் சொல்லியது.

உதவி ஆணையர் அலுவலகத்தின் அதிகாரி தர்மசீலன், கம்பெனிக்கு உடந்தையா இருந்தாரு. திரும்பவும் என்னை என்கொயரிக்கு கம்பெனிக்கு கூப்பிடறேனு சொன்னவங்க. பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கல, கூப்பிடவும் இல்ல. இதெல்லாம் சுமார் ஒரு வருடகாலம் நடந்தது.

அதன்பிறகு,

“நான் வேலையில்லாம இருப்பதால பிழைப்பு ஊதியம் தரணும்”

னு கேட்டேன்.

‘நீ வேலைவிட்டு நின்னுட்டே, அதனால பிழைப்பு ஊதியம்தர முடியாது’

ன்னுட்டாங்க. தொடர்ந்து இம்மாதிரி பச்சைப்பொய்ய அரசு அதிகாரிங்க துணையோட நிர்வாகத்துகாரங்க தைரியமாக சொல்றாங்க. இங்க என்ன மாதிரி பர்மனெண்ட் எம்பிளாயிக்கே இந்த நிலைமைதான். பிறகு, காண்டிராக்ட், டெம்பரவரி தொழிலாளிகள் எப்படி உரிமையைப்பத்தி பேசமுடியும்.

தொழிலாளி வேலைக்கு மட்டுமில்ல உயிருக்கும் இங்க உத்திரவாதம் இல்ல. 2010-ல் கம்பெனியின் ஏசி மெஷினைகளை நீண்ட நாள் சுத்தம் பண்ணாம இருந்ததாலே, ஊழியர்கள், விஷவாயு தாக்கி 150-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். அதற்கு எதிராக பணிபாதுகாப்புக்கோரி, 60 நாட்கள் போராட்டம்,இரயில் மறியல்,செய்ததற்கு போலீசு, வேலூர் ஜெயில்ல அடைச்சாங்க. பல போராட்டம் செய்தப் பிறகுத்தான் சம்பளமும் உயர்த்தினாங்க.

இப்ப வேலையே இல்லனு தைரியமா சொல்றானுங்க. அவனுக்கு இந்த அரசாங்கமும் அதிகாரிகளும் இருக்கும் தைரியத்தில்தான் எல்லாம் செய்யிறான்.

பாக்ஸ்கான் போராட்டடத்தில் சி.ஐ டி யு தொழிற்சங்கம் சார்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எம்.எல்.ஏ., சட்டமன்றக் குழுத் தலைவர் திரு சௌந்தர்ராஜன் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் இருக்கும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்துக்கு வந்தபோது, வினவு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்,

வினவு : “நோக்கியா…வழியில் பாக்ஸ்கான் செல்கிறதா?”

திரு.செளந்தர்ராஜன்

திரு சௌந்தர்ராஜன்
திரு சௌந்தர்ராஜன்

“பாக்ஸ்கான் போராட்டத்தின் அடுத்தக் கட்டத்தை முன் கூட்டியே சொல்ல முடியாது. கம்பெனி மூடுவதைத் தடுப்போம். கம்பெனிக்காரனின் நடவடிக்கையேப் பொறுத்தே எங்கள் நடவடிக்கை இருக்கும்.

ஏகாதிபத்தியத்தின் கை ஓங்கி இருப்பதற்கு, மோடி அரசுதான் காரணம். தொழிலாளர்களுக்கு அரசியல் அறிவு குறைவாக உள்ளது. தொழிலாளர்களே காரியவாதமாக செயல்படுகிறார்கள். ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் ஆனால் 20 ஆயிரம் பேர் கூட சங்கம்மாக்கப்படவில்லை.

இங்க, மட்டுமல்ல, படித்தவர்கள் மத்தியிலும் டிசிஎஸ் போன்ற நிறுவனங்களிலும் இதுதான் நிலைமை. முப்பத்தைந்து வயதுக்கு மேல வேலையை விட்டு தூக்குவது வாடிக்கையா இருக்கு.

வினவு : “40ஆண்டுகளுக்கு முன்பே, ஆலை நிர்வாகத்திற்கு எதிரா,திடீர் முற்றுகை, ஆர்ப்பாட்டம் போராட்ட வடிமாக இருந்தது. இப்போது அவை கற்பனையில்தான் உள்ளது, ஏன் இந்த நிலை?”

திரு.செளந்தர்ராஜன்

“அம்மாதிரி போராட்டங்களுக்கு திரும்பணும்னா, வலுவும் பலமும் இருக்கணும், அப்படியில்லாமல் நிர்வாகத்தோட மூக்கை சொறிஞ்சிட்டு, உதை வாங்கிட்டு வரக்கூடாது.”

பாக்ஸ்கான் தொழிலாளர்களில் சிலர்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

வினவு : “நிர்வாகம்,தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க மறுப்பது சட்டவிரோதமாக்கப்படவில்லை. பிறகு, எப்படி தொழிலாளி அச்சமின்றி சங்கமாக திரள்வார்கள் என்று எதிர்பார்க்கமுடியும்.”

திரு செளந்தர்ராஜன்

“முதலாளிகள் இச்சட்டத்தை இயற்றக்கூடாது என்றும் இடது சாரிகள் உள்ளே புகுந்து ஆலையைக் கொடுத்து விடுவார்கள் என்று அரசை மிரட்டுகிறார்கள்.”

வினவு : “‘சுதந்திரம்’ கிடைத்து 50 ஆண்டுகளுக்கு பிறகுமா இந்த நிலைமை ?”

திரு.செளந்தர்ராஜன்

“ஒட்டு மொத்த சமூக நிலைமைதான் இதற்கு காரணம்… இதைப்பற்றி பேசும் நேரம் அல்ல இது.”

என்று முடித்துக் கொண்டார்.

அவருடன் வந்த சி.ஐ.டி.யு சங்கத்தினர், பாக்ஸ்கான் ஆலை மூடலுக்கு எதிராக தமிழக முதலமைச்சரின் தலையீட்டை கோரும் மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் திரு. சௌந்தர்ராஜனின் கோரிக்கை மனுக்களை பிரதிகள் எடுத்து தொழிலாளர்களிடம் விநியோகித்து ஆலைமூடலுக்கு எதிரான போரட்டம் ‘உயர்ந்த’ மட்டத்தில் நடப்பது போல பிரச்சாரம் செய்தனர்.

workers-reading-petitionதெருவில் வீசியெறியப்பட்ட ஸ்ரீபெருமந்தூர் பாஸ்கான் தொழிலாளர்களுக்கு இப்போரட்டக்களம் புதிதல்ல! கடந்த 2010-ம் ஆண்டுகளிலேயே பிணந்தின்னும் பன்னாட்டு பாக்ஸ்கான் நிறுவனத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம், சாலை, ரயில் மறியல், ஆலை முற்றுகை, கைது, சிறை என்று அனைத்தையும் பார்த்தவர்கள். அதிகாரவர்க்கம், போலீசு, அச்சுறுத்தலுக்கும் அடக்குமுறைக்கும் அஞ்சாதவர்கள்.

workers

நிர்வாகத்தின் தொடர் தாக்குதலுக்கு எதிராக இவர்கள், அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயாராவது திண்ணம். அதே நேரம் வழமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் மட்டும் இதை சாதித்துவிட முடியாது. ஏனெனில் தொழிலாளர் உரிமைகளுக்கு எதிராக பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, அரசு, அதிகார வர்க்கம், போலீசு, நீதிமன்றம், ஊடகங்கள், ஓட்டுக் கட்சி தொழிற்சங்கங்கள் அனைத்தும் அணிவகுத்து நிற்கின்றன.

தமது வேலை இழப்புக்கு அடிப்படை காரணம் என்ன என்பதை புரிந்து கொண்டால்தான் முதலமைச்சருக்கு மனு போன்ற அசட்டுத்தனமாக காரியங்களில் தொழிலாளிகள் ஈடுபட மாட்டார்கள். தொழிலாளிகளின் உரிமையை தீர்மானிப்பது தொழிலாளிகளின் ஒன்றுபட்ட சக்திதான். அதுவும் ஒரு துறையில்லாமல் அனைத்து துறைகளிலும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அந்த வலிமையின் மூலமே தங்களது உரிமைகளை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் நிலையினை தொழிலாளிகள் அடைவார்கள். அது இறுதியில் இந்தியாவை இந்திய மக்கள் பாதுகாக்கும் வழியையும் கண்டறியும்.

ஃபாக்ஸ்கான் தொழிலாளிகளின் வேலை இழப்பின் பின் உள்ள கதைகளும் வலிகளும் நீங்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அதனால் உருவாகும் சமூக குலைவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதே. எனவே இந்த போராட்டத்தை ஆதரிக்க வேண்டியது நமது அனைவரின் கடமை.

ஃபாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்!

– வினவு செய்தியாளர்கள்

TCS டி.சி.எஸ் ஆட்குறைப்பு – அழக்கூட முடியவில்லை

4

டி.சி.எஸ் நிறுவனம் 25,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்துவருவதை ஒரு செய்தியாக என்னால் கடந்து செல்ல முடியவில்லை. 25,000 என்பது வெறும் நம்பர் அல்லவே. அவர்கள் கை, கால், ரத்தம், சதை, உணர்ச்சி கொண்ட மனிதர்கள். நான் அவர்களில் சிலரை தினமும் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறேன், அவர்கள் என் டீம் லீடர்கள் ;  சிரிப்பார்கள், கோபப்படுவார்கள், திட்டுவார்கள். ஏனோ இப்பொழுது மட்டும் உணர்ச்சியற்று நிற்கிறார்கள். ஏன்? தெரியவில்லை.

டி.சி.எஸ் அலுவலகம்எச்.ஆர் அறையிலிருந்து வெளிவரும் அவர்களை நான் எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. எச்.ஆரைப் போல நானும் உணர்ச்சியில்லாமல், அடுத்த வேலை கிடைக்க “ஆல் த பெஸ்ட்” சொல்ல வேண்டுமா? இல்லை, சோகமாக சிரிக்க வேண்டுமா? மௌனமாக கடந்துவிட வேண்டுமா? அடுத்த சில வருடங்களில் நானும் எச்.ஆர் அறைக்கு அழைக்கப்படுவேன் என்பதால் இப்போதே நடைமுறைகளை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டுமா? என்ன செய்வது?

என்ன செய்தாலும் இந்த ஆட்குறைப்பும், வேலை நீக்கமும் இந்த ஒரு முறையோடோ, இல்லை டிசிஎஸ் நிறுவனத்தோடு மட்டுமோ முடியப்போவதில்லை. கணினியின் கோப்புகளை “கிளீன் அப்” செய்வது போல நிர்வாகம் தனது இலாபத்துக்கு இடைஞ்சலாக உணரும் போதெல்லாம் எங்களை நீக்குவார்கள். நாங்கள் ரீசைக்கிள் (Recycle) செய்ய முடியாதவர்கள் என்பதால் அதற்கான குப்பைத்தொட்டியில் விசிறியடிக்கப்படுவோம்.

இன்று ஆலோசகர் (consultant – கன்சல்டன்ட்), இணை ஆலோசகர் (Associate Consultant) என்றால் நாளை IT Analyst, Systems Engineer.. என நாங்கள் எல்லோருமே பாதிக்கப்படுவோம். தற்போதைக்கு நமக்கு பிரச்சனையில்லை என்று நிம்மதியாக கடந்து செல்ல முடியாது.

கல்லூரி மாணவராக 21 வயதில் காம்பஸ் இன்டர்வியூவில் (வளாக நேர்முகம்) தெரிவு செய்யப்பட்டு இன்டஸ்டிரியில் நுழைந்தேன். என்னைப்போலத்தான் இப்பொழுது வேலை நீக்கப்பட்டவர்களும் நுழைந்தார்கள்.

பிள்ளைக்கறி உண்பதுபோல அவர்களின் இளம்வயதில் வேலையை உறிஞ்சிவிட்டு இப்பொழுது 30-களில் வேலையைவிட்டு துரத்தப்படுகிறார்கள். இனி அவர்கள் எங்கு செல்வார்கள். நான் எனது 30-களில் இங்கே இருப்பேனா இல்லை துரத்தப்பட்டு விடுவேனா? அப்படி துரத்தப்பட்டால் என்ன ஆவேன்? அப்பொழுது இவர்களைப்போல எனக்கும் திருமணமாகி குழந்தைகள் இருப்பார்கள். வயதான நோய்வாய்ப்பட்ட பெற்றோர்கள் இருப்பார்கள். அவர்களை எப்படி பாதுகாப்பேன்? என்று பயமாக இருக்கிறது. துரத்தப்படாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்? என் திறமைகளை அதிகரித்துக்கொள்ள வேண்டுமா? ஆர்க்கிடெக்ட் ரமேஷைவிட திறமையானவர் இருக்கமுடியுமா? அவரையே துரத்திவிட்டார்களே.

ரமேஷை எனக்கு தனிப்பட்ட முறையிலே தெரியும். நன்றாக பழகுவார். அவரைத்தான் நாங்கள் டீமின் பில்லர் (தூண்) என்று வேடிக்கையாக அழைப்போம். மிகவும் திறமையானவர். பல தொழில்நுட்பங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். நாங்கள் பல மணிநேரம் போராடி வழிதெரியாமல் இருக்கும் தொழில்நுட்ப பிரச்சனைகளுக்கு சில விநாடிகளில் தீர்வு கண்டுபிடித்துவிடுவார். கடுமையாக உழைப்பவர். நான் அலுவலகத்திலிருந்து கிளம்பும் போதும் அவர் அலுவலக கியூபிக்களில் தான் இருப்பார், காலை அலுவலகம் செல்லும்போதும் அங்குதான் இருப்பார். மனுஷன் வீட்டிற்கு போவாரா என்று சந்தேகமாக இருக்கும். ஆனால் சட்டை மட்டும் மாறியிருக்கும். சரி வீட்டிற்கு சென்றுவிட்டுதான் வந்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அவரும் கூட வேலைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ‘ஜாவா’வை கரைத்து குடித்திருப்பது நம் வேலையை காப்பாற்ற உதவாது என்பது மட்டும் தெரிகிறது.

டி.சி.எஸ் லாபமும், ஊதியமும்
டி.சி.எஸ் லாபமும், ஊதியமும்

இரவுபகலாக வேலை செய்தால் அப்ரைசலில் நல்ல பேண்ட் கிடைக்கும் என்ற எண்ணம் சிறிது காலத்திற்கு முன்னர் தான் தகர்ந்தது. “C” தான் போட்டார்கள். எனது ரேட்டிங்கை ஏற்கவில்லை என்பதற்கான பட்டனை அழுத்தினேன். மானேஜர், சூப்பர்வைசர்கள் அழைத்து பேசினார்கள். அடுத்த முறை நல்ல ரேட்டிங் தருவதாகவும், ஆன்சைட்டிற்கு என் பெயரை பரிசீலித்து வருவதாகவும் கூறினார்கள். அவ்வளவுதான் அந்த பிராசஸ் முடிந்துவிட்டது. நமக்கு ஆத்ம திருப்தி ஏற்படவேண்டும் என்பதற்காக அந்த பட்டனைவைத்திருக்கிறார்கள். வேறு பயன் எதுவுமில்லை.

இப்பொழுது “D” பேண்ட் போட்டுவிடக்கூடாதே என்பதற்காக தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்து கொண்டிருக்கிறேன். நாங்கள் அமெரிக்கனுக்கு 24×7 சப்போர்ட் கொடுக்கவேண்டும். அது தீபாவளியோ, பொங்கலோ, கல்யாணம், காதுகுத்தோ எதுவுவாக இருந்தாலும் சரி அது நமக்குதானே. அவனுக்கில்லையே. அந்த நாட்களில் எல்லாம் அலுவலகத்திற்கு செல்ல பழகியிருக்கிறேன். ஆரம்பத்தில் மானேஜரிடம் நல்ல பெயர் வாங்க நானாக போட்டுக்கொண்ட மண் இது. இப்போது அதுவே வாடிக்கையாகிவிட்டது. என்னை கேட்காமலேயே இது போன்ற நாட்களில் என் பெயரை தான் அறிவிக்கிறார்கள். அமெரிக்க விசா நடைமுறைகளாலும், டீம் பாலிட்டிக்ஸ்னாலும் ஆன்சைட் கூட கிடைக்காது என்றே நினைக்கிறேன்.

இதுநாள் வரை அப்ரைசல், ஆன்சைட் கேரட்டுகளைத் தொங்கவிட்டு நயமாக பேசி வேலை வாங்கினார்கள். இனி பிங்சிலிப்பை காட்டி மிரட்டுவார்கள் என்பது மட்டும் தான் என் கண்முன்னால் தெரிகிறது. அவர்கள் மிரட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நானே மிரண்டுபோய் தான் இருக்கிறேன். அப்ரைசரின் “D” பேண்ட் என்னை வேலையைவிட்டு நீக்கும் வல்லமை வாய்ந்தது என்றால் அவர் என்னை எப்படி நடத்துவார்.

ஏற்கனவே என் சுயமரியாதையை பல சந்தர்ப்பங்களில் சீண்டி பார்த்திருக்கிறார்கள். இனி அப்படி நடந்தால் குறைந்தபட்ச எதிர்ப்பை தெரிவிக்ககூட முடியாதோ? நான் எதை செய்வதாக இருந்தாலும் “D” பேண்டும் வேலை நீக்கமும் என கண்முன்னால் வந்து மறையுமே. அனிச்சை செயலாக எதிர்த்துபேசிவிட்டால்? அதையும் கூட கட்டுப்படுத்திதான் ஆகவேண்டுமா? சுயமரியாதையை காப்பாற்றிக்கொள்வது கூட இனி குற்றமாகிவிடுமே, என்ன செய்வது?

கிளையண்ட் சாட்டிஸ்பேக்சன், டெலிவரி, டிப்ளாய்மண்ட் என்று பல பெயர்களை கூறி இன்னும் இன்னும் வேகமாக ஓட வைப்பார்கள். இறுதியில் எப்படியும் தோற்கடிக்கப்படவிருக்கிறோம் என்பதை தெரிந்துகொண்டே வேகமாக ஓடும் என் நிலையை கண்டு எனக்கே பரிதாபமாக இருக்கிறது. இப்போதைக்கு தப்பிக்க வேகமாக ஓட வேண்டுமா?. அதனால் என்ன பயன்?

டி.சி.எஸ் அலுவலகம்
டி.சி.எஸ் அலுவலகம்

அமெரிக்க வாடிக்கையாளரின் தகவல் பாதுகாப்புக்கும் (Information security), நெட்ஒர்க் பாதுகாப்புக்கும் (Network security) இரவு பகலாக வேலை பார்க்கிறேன். அதை தெரிந்துகொள்ள தடித்தடியான புத்தகங்களும் இருக்கின்றன. எனது சொந்த பணிபாதுகாப்புக்கு ( Job security) என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு இதுநாள் வரை தெரிந்திருக்கவில்லை. எந்த புத்தகத்தில் அதை படிப்பது?

அனைத்தும் தெரிந்தவனாக நினைத்துக்கொண்டு ஐ.டி கண்ணாடி கிணற்றின் தவளையாகவே இருந்திருக்கிறேனோ என்று எண்ணத் தோன்றுகிறது. நிறுவனத்தை எவ்வளவு நம்பினேன். இத்தனை பேரின் வாழ்க்கையை அழித்து அன்பிட் (Unfit) ஆக்கிவிட்டு “Fit For Life” என்று அலுவலகத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள். ஜாப் செக்யூரிட்டி இல்லாமல் இருக்கும் எங்களிடம் “Safety first” என்று இன்றும் விளம்பரம் செய்கிறார்கள். இதை என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

இதை எதிர்த்து எங்களால் ஒன்று செய்ய முடியவில்லை என்பதை நினைக்கும் போது தான் கஷ்டமாக இருக்கிறது. பஸ் ஸ்டிரைக் என்று சொன்னார்கள். ஏதோ எம்பிளாயீஸ் பிராப்ளமாம். குறைந்தபட்சம் அவர்கள் பிரச்சனையை வெளியில் சொல்லமுடிகிறது அவர்களால். எங்களால் அது கூட முடியவில்லையே. கூடி அழமுடியாத நிலையில் தான் இருக்கிறோம்.

யார் யாருக்கு வேலை பறிக்கப்பட்டுள்ளது என்பது கூட எங்களுக்குத் தெரியாது. அந்த நபர்களைத்தாண்டி, அந்த டீமை தாண்டி யாருக்கும் தெரியாதே. ஒன்று கூடி போராட தேவையில்லை; ஒன்றுகூடி அழக்கூட எங்களால் முடியவில்லையே. வேலை போனவருக்கு ஆறுதல் சொல்லக் கூட முடியவில்லையே. ஏன் இப்படி தனித்தனி தீவுகளாக இருக்கிறோம்? என்று நினைத்தால் வெறுப்பாக இருக்கிறது. ஆனால் டீம் ஒர்க் என்பதை பற்றி நாள் கணக்கில் வாய் கிழிய பேசுகிறார்கள். டீம் பில்டிங், டீம் ஸ்பிரிட், மயிறு மட்டை என்று ஃபிரெஷ்ஷர்கள் பலருக்கு நானே வகுப்பெடுக்கிறேன்.

காய்கறி விற்பவரில் ஆரம்பித்து, மூட்டை தூக்குபவர் வரை தங்கள் பிரச்சனைக்காக ஒன்று கூடி ஏதோ செய்கிறாகள். போராடுகிறார்களோ இல்லை மனு கொடுக்கிறார்களோ ஏதோ ஒன்று செய்கிறார்கள். ஏன் நாங்கள் மட்டும் எதையும் செய்ய முடியாமல் இருக்கிறோம்.

எங்களைப்போல மெத்த படிக்காத, சாதாரண மூட்டைதூக்கும் தொழிலாளியால் முடிவது ஏன் எங்களால் முடியவில்லை?

நீங்கள் சொல்வது போல சங்கம் வைப்பதால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடுமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அது இல்லாமல் எங்கள் குரல் கூட வெளியில் கேட்காது என்பது தான் உண்மை. அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டிருக்கும்போது இது மட்டும் தான் ஒரே வழியாக தெரிகிறது.

(ஐ.டி துறை நண்பர்களின் உண்மைக்கதைகள் இங்கே இடம்பெறுகின்றன, பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.)

– ரவி

(படங்களை இணையத்தில் எடுக்கப்பட்டவை)

தொழிற்சங்கமாய் திரள்வோம்!
லே ஆஃப் எனும் கார்ப்பரேட் ஒடுக்குமுறையை முறியடிப்போம்!

பேஸ்புக் : https://www.facebook.com/VinavuCombatsLayoff
தொலைபேசி : 9003198576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com

– வினவு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சென்னை

சோவியத் ரஷ்யாவில் முஸ்லீம்கள் – நூல் அறிமுகம்

8

‘கம்யூனிஸ்ட்கள் நாத்திகர்கள்; ஆகவே மதநம்பிக்கையாளர்களான பெரும்பான்மை மக்களின் உணர்வுக்கு எதிரானவர்கள்’ என்ற கருத்தை மதவாதிகள் தொடர்ந்து மக்களிடையே பரப்பி வருகிறார்கள். இந்த பிரச்சாரம் மதவாதிகள் எதிர்பார்த்த அளவுக்கு பலனை அளிக்கவில்லை என்றாலும் மதத்தின் பெயரால் நடத்தும் மாபாதக செயல்களை நியாயப்படுத்த இதனை பயன்படுத்தி வருகிறார்கள். மக்களை பாதிக்கும் பிரச்சினைகளில் உண்மையோடும், உறுதியோடும் போராடும் கம்யூனிஸ்ட்கள் மீதான நம்பிக்கையையும், மதிப்பையும் மக்கள் எக்காலத்திலும் இழக்கவில்லை. எனினும் மதம் தொடர்பாக கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு என்ன ? புரட்சி நடைபெற்ற சோவியத் ரஷ்யாவில் மத விவகாரங்கள் எப்படி கையாளப்பட்டன? மத உணர்வாளர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் ? என்பதை மக்கள் முழுமையாக புரிந்து வைத்துள்ளார்கள் என்று சொல்ல முடியாது.

muslims-in-soviet-russiaஇந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக ‘சோவியத் ரஷ்யாவில் முஸ்லிம்கள்’ என்ற பெயரில் ஒரு சிறுநூலை ‘நீந்தும் மீன்கள்’ வெளியீட்டகம் கொண்டு வந்துள்ளது. சோவியத் ரஷ்யாவுடன் இணைந்திருந்த மத்திய ஆசிய நாடுகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் பெற்றிருந்த மத உரிமைகளை விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்த கட்டுரைகளை எழுதியவர்கள் கம்யூனிஸ்ட்களோ, மதச்சார்பற்ற கருத்தியலாளர்களோ அல்லர்; இஸ்லாமிய மதத்தலைவர்கள் என்பது கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. கசகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான்ஆகிய மத்திய ஆசியா நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய மதத்தலைவர்களும், அறிஞர்களும் இந்த கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

இஸ்லாம் 8-ம் நூற்றாண்டின் போது மத்திய ஆசியாவில் அறிமுகமானது. கடுமையான இன்னல்களை அப்போது சந்தித்தது. பிற்பாடு மத்திய ஆசியாவில் இஸ்லாம் முழுமையாக பரவிய போதும் மக்கள் நிம்மதியை பெற்று விடவில்லை.  கான்கள் மற்றும் நிலப்பிரபுக்களால் முஸ்லிம்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். பிறகு 19-ம் நூற்றாண்டில் மத்திய ஆசியப் பகுதிகள் ஜார் மன்னனால் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டன. அப்போது முஸ்லிம்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்பட்டார்கள். அவர்கள் மத உரிமைகள் கடுமையாக ஒடுக்கப்பட்டிருந்தன. ரஷ்யப் புரட்சி நடந்த 1917-க்கு பிறகு தான் மக்கள் சமூக விடுதலையையும், மத உரிமையையும் முழுக்கப் பெற்றார்கள்.

இந்த நூலின் கட்டுரைகள் சோவியத் ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்ட பிறகு மக்களுக்கு கிடைத்த சமூக உரிமையையும், மத உரிமையையும் அறிவிக்க எழுதப்பட்டவை அல்ல. பொதுவான வாழ்க்கைப் பதிவு மற்றும் புனித பயணங்கள் பற்றிய நினைவுகள் வழியாக சோவியத் ரஷ்யா பற்றிய தமது எண்ண ஓட்டங்களை பகிர்ந்துள்ளார்கள், கட்டுரையாளர்கள்.  உதாரணமாக, ‘புனித பயணங்களின் நீங்கா நினைவுகள்’ முழுக்க ஒரு பயணக்கட்டுரை. தகெஸ்தானில் வாழ்ந்த அசில்தார் ஹாஜியின் பயண அனுபவங்களின் பதிவு. சிறு வயதில் புனிதப் பயணத்தை மேற்கொள்ள விழைந்த ஆசையை குறிப்பிடுகிறார் அசில்தார். தனது தந்தை மெக்கா, மதினா சென்று திரும்பிய போது ஒரு மாவீரனை போல கிராம மக்களால் கொண்டாடப்பட்டதை நினைவு கூர்கிறார். பிறகு தனது காத்திருப்பையும், இறுதியில் தனது பயண அனுபவத்தையும் அறியத் தருகிறார்.

தனது பயணத்தின் போது மதினாவில் புலம் பெயர்ந்த தகெஸ்தானியர் ஒருவருடனான சந்திப்பை விளக்குகிறார். சவூதி அரேபியாவில் வாழும் அவர் கண்களில் நீர் ததும்ப அசில்தாரை கட்டி அணைக்கிறார். புரட்சி மக்களின் தேவைகளை நிறைவு செய்திருப்பதை அறிந்து உவகை கொள்கிறார். புரட்சியின் பலன்களை அனுபவிக்க அவர் அங்கு இல்லை என்பதை நினைத்து கண்ணீர் உகுக்கிறார். புதிய வாழ்க்கைக்கான காலம் புலரும் என்பதை முன்னரே அறிந்திருந்தால் தான் நாட்டை விட்டு வெளியேறி இருக்க மாட்டேன் என்று நொந்து கொள்கிறார்.

தாஜிகிஸ்தானை சேர்ந்த அப்துல்லாஜன் இபுனு அல்பேனியா நாட்டுக்கு சென்று வந்ததை ‘நண்பர்களுடன் சந்திப்பு’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அல்பேனியாவின் வளர்ச்சியை பதிவு செய்திருக்கும் அவர் பின்பு சிரியா செல்கிறார். சிரியாவின் தலைமை முப்தி யாசெர் அபெத்துடனான தனது சந்திப்பை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறார். சோவியத் நாட்டில் இஸ்லாமிய மக்கள் சிறப்பாக பேணப்படுவதை தான் முன்பு மேற்கொண்ட பயணத்தில் கண்டுணர்ந்ததை அப்துல்லாஜனுடன் பகிர்கிறார் யாசர் அபெத்.

மதரசாக்களில் முஸ்லிம்கள் பெருமளவுக்கு சென்று பயின்று வந்ததையும், விண்ணப்பிப்போரை சேர்த்துக் கொள்வதற்கு அங்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டதையும் மதரஸா ஆசிரியர் ஒருவரின் பதிவில் அறிய முடிகிறது. இஸ்லாமிய வாரியம் முதன்முறையாக அமைக்கப்பட்டு மக்களின் குறைகள் களையப்பட்டன. இஸ்லாமிய மதச்சங்கங்கள் அமைத்துக் கொள்ளப்பட்டன. அங்கு இஸ்லாம் பற்றிய அறிவு மிகுந்தவர்கள் குறுக்கீடின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். முஸ்லிம் மக்கள் கொண்டாடும் ரம்ஸான், மொகரம் ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. ஹஜ் புனிதப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. திருக்குரான் பதிப்பித்தல், சமயக் குருமார் பேராயம் என்று அனைத்து மத நடவடிக்கைளுக்கும் அனுமதி இருந்தது.

‘மதம் தனிநபர் உரிமை’ என்ற ஜனநாயக கருத்தாக்கத்தில் ஊன்றி நின்று இந்த மத உரிமைகள் சோவியத் ரஷ்யாவில் அனுமதிக்கப்பட்டன. மக்களிடையே அமைதிக்கும், நட்புணர்வுக்கும் முதலிடம் தரப்பட்டன. அதனால் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். மோடியின் ஆட்சியில் கிறிஸ்துமஸ் கொண்டாட ஏற்படுத்தப்பட்ட சிக்கல்களை கண்ணுற்றோம். மொகரம் ஊர்வலத்துக்கு எதிராக டில்லியின் பாவனா பகுதியில் போலீசும், இந்து மதவெறியர்களும் ஏற்படுத்திய தடைகளை கண்டோம். விநாயகர் ஊர்வலத்தின் போது மசூதிகள் தாக்கப்படுவதையும் காண்கிறோம். மதவாதிகளால் சமூக நல்லிணக்கத்தை ஒருபோதும் பேண முடியாது என்பதற்கு இவை உதாரணங்கள்.

சோசலிச ஆட்சியில் மதங்கள் அரசிலிருந்தும், ஆட்சி முறையிலிருந்தும் விடுவிக்கப்பட்டு தனிநபர் உரிமையாக பற்றிக் கொள்ள அனுமதிக்கப்படும். அது ஒன்றே இந்துத்துவம், தலிபானியம் போன்ற ஆபத்துகளிலிருந்து மக்களை பாதுகாக்கும். இந்த நூல் முஸ்லிம்கள் மட்டுமல்ல மதங்களை பின்பற்றுபவர்கள் அனைவரும் படித்து தெளிவுபெற வேண்டிய ஒரு கையேடு என்பதை மறுக்கலாகாது.

– சம்புகன்

சோவியத் ரசியாவில் முஸ்லீம்கள்

மொழிபெயர்த்தவர் : சின்னத்தம்பி முருகேசன்
வெளியீடு : நீந்தும் மீன்கள் வெளியீட்டகம்
விலை : ரூ 90
பக்கங்கள் : 116

புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367

TCS : We can Combat layoff!

9

Friends,

layoff-management-3TCS is in the process of laying off 25,000 employees. All those guillotined are our colleagues. The CEOs call it jobs chopping. You might have escaped the blood bath now. Who next and when? The threat is hanging over all of us

They lift us straight from campus, and by the time we reach mid thirties we are sucked dry and are ready to be thrown out. For them this is corporate Dharma. At a time, when we look forward to a fruitful career and peaceful family life, we are forced to make a fresh start in the job market competing with kids just out of college.

Our corporate leaders know what this entails! Depressions, broken homes and suicides. Still they will ram through this round of layoff and a succession of further layoffs. They are concerned only about their quarterly profit margins.

layoff-survivorWhat is worse, we look at this corporate injustice as some sort of natural calamity, against which one can do nothing. Thousands of people leave in tears. In IBM employees are humiliated, asked to leave on the spot, their laptops confiscated by the guards. Even a meek illiterate woman would resist rape. But we don’t raise a finger in protest, when a friend’s job is chopped off in our next cubicle. This calamity unfolds in front your own eyes, yet you choose to remain silent – to save your job.

Can you? It is only a matter of time before every IT employee in his thirties is to face this situation. The only way to smash this job cutting machine is to Unionize! The Corporates unionise themselves as NASCOM and blacklist the ones who dare to speak against them. But some of us think that union is a business of workers. What is the difference between an axed TCSer and an axed FOXCONNer? The pay cheque?

As the vanguard of 21st century hi tech universe, we network in the virtual world and ensure security for systems we design, implement and maintain. It’s time we network ourselves as a union and ensure security and honour for our own lives. After years of toil, we can’t be thrown out as dirty rags.

lay-off-survivorsA collective action of workers in an industry like Hyundai would affect industrial production in a unit, and some of its ancilliaries. But a threat of collective action by IT workers, would send shivers down the spine of NASSCOM, and Europe and US would feel the tremors of our action.

But fear is the key corporates hold. The fear that one loses his job on forming an union, is not unique to IT employees. Workers who try to organize are threatened with dismissal in every industry. Only those who defy such threat, save their jobs and save their honour. If they cut your job to increase their profit, threaten them with loss. Their fear of loss could earn you your job.

25K+ TCSers in Chennai and 3 lakh+ overall. This is your collective might. You have to unionize. We understand your anxieties and hesitations. As we have successfully organized unions in various industries, we believe we could together fight this layoff.

We, NDLF together with vinavu.com have organized a meeting of trade union leaders, legal experts and IT industry people. We invite you to the meeting to get answers to your queries and share your ideas.

By
New Democratic Labour Front, Tamil Nadu.
Contact:
https://www.facebook.com/VinavuCombatsLayoff
Phone : 90031 98576
Mail: combatlayoff@gmail.com

திருச்சி கலெக்டருக்கு வகுப்பு எடுத்த ஆட்டோ தோழர்கள்

4

அடாவடித்தனத்துடனும், அராஜகவாதிகளாவும் செயல்படும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள்!

எதிர்கொண்டு போராடும் திருச்சி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்!

டந்த 5.12.14 முதல் எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து, ‘உடனடியாக மீட்டர் போட்டு ஆட்டோவை இயக்க வேண்டும்’ என தடாலடியாக அறிவிப்பு வெளியிட்டு அமுல்படுத்துமாறு நிர்பந்தித்தனர், அதிகாரிகள்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்இத்தகைய அவசரகதியிலான முடிவுகளுக்கெதிராக திருச்சி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் (புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைப்பு சங்கம் ) சார்பாக பிரச்சார இயக்கம் முன்னெடுத்தோம். மக்களிடம் உண்மை நிலையை விளக்குவது, அனைத்து ஓட்டுனர்களை ஒருங்கிணைப்பது பிற சங்கங்களை ஒருங்கிணைக்க முயற்சி எடுப்பது என முடிவு செய்து வேலை நிறுத்தம், RTO அலுவலக முற்றுகை என நடத்தினோம். இதனைத் தொடர்ந்து 15 நாட்களாக அதிகாரிகள் தமது நடவடிக்கையை நிறுத்தி வைத்தனர்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்ஆனால் முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமல் கோரிக்கைகள் பற்றி பரிசீலிக்காமலும், சங்கங்களை அழைத்து பேசாமலும் 15 நாட்கள் வன வாசத்திற்க்கு பின் திடீரென தினசரிகளில் 48 மணி நேரம் கெடுவிதித்து அறிக்கை வெளியிடுகிறார், போலீஸ் கமிஷ்னர். ‘மீண்டும் பழைய உத்தரவின் படி மீட்டர் போட்டு வண்டி ஒட்ட வேண்டும். இல்லாவிட்டால் முதல் நாள் அபராதம் ரூ 100 , இரண்டாவது நாள் ரூ 500, மூன்றாம் நாள் ஆட்டோக்கள் பறிமுதல், பர்மீட் ரத்து செய்யப்படும்’ என அறிவித்து நடவடிக்கையில் இறங்கினர். (நல்ல வேளை நான்காவது நாள் ஆட்டோ டிரைவருக்கு தூக்குத் தண்டனை தரப்படும் என அறிவிக்கவில்லை)

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்சும்மா இருக்கையிலேயே நம்ம ஊர் போலீசுகாரர்களுக்கு கை அறிப்பெடுக்கும். இப்படி ஒரு அறிவிப்பு வந்ததும் தெருவுக்குத் தெரு வண்டியை மடக்கி மாமூல் வேட்டையில் இறங்கினர்.

இந்த சூழலில் சங்கங்கள் எல்லாம் வாயை மூடி மௌனம் காத்துக் கிடந்தனர். சி.ஐ.டி.யு.வினர், ‘இனியும் அதிகாரிகளை எதிர்க்கொள்ள முடியாது’ எனக் கருதி தமது கிளையில் மீட்டர் போட்டு ஒட்ட வேண்டும் என அறிவிப்பு செய்தனர்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்ஆனால் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கமோ இதனை எதிர் கொண்டு அடுத்த சுற்று போராட்டத்திற்கு ஆயுத்தம் ஆனது. திருச்சி முழுவதும் உள்ள அனைத்து ஸ்டாண்டுகள், சங்கங்கள் உள்பட அனைவருக்கும் அறிவிப்பு கொடுதது ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம். ஏ.ஐ.டி.யு.சி, விடுதலை சிறுத்தைகள், திமுக, அதிமுக , சி.ஐ.டி.யு வினர் சங்கத்தை சேர்ந்த கிளைகளில் உள்ளோர் உள்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமது குமுறலையும், ஆலோசனைகளையும் வழங்கினர். அதனைத் தொடர்ந்து 22.12.2014 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டது.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்நாம் அணி திரட்ட திட்டமிட்ட நாளில் மாவட் ஆட்சியர் அணியினரும் தமது பங்குக்கு அணிதிரட்டினார். ஸ்டாண்டு இல்லாத, உதிரியாக ஓட்டும் டிரைவர்களை அழைத்து பேசி கலெக்டர் கொடியசைத்து மீட்டர் ஆட்டோவை துவக்கி வைப்பது போல ஒரு காட்சியை ஏற்படுத்த அதே நாளில் முடிவு செய்திருந்தனர். அவர்கள் அணியைச் சேர்ந்த 25 நபர்கள் ஒருபுறம் நின்றனர்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்நமது தலைமையிலான அணிகள் 100-க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்று ஆட்சியர் அலுவலகம் உள்ளே வரை சென்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்கொடியசைத்து அவர்கள் ஆட்டோக்களை அவசரமாக அனுப்பிய ஆட்சியர் நமது தரப்பினை அழைத்து பேச முடிவு செய்து கூப்பிட்டனர். பிற சங்க பிரதிநிதிகள் உள்பட 10 நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்

நாட்டு நடப்புகள் அனைத்தும் தெரிந்தவர் என ஆட்சியர் பற்றி கருதியிருந்தோம். ஆனால் அடிப்படையான விசயங்கள் கூட தெரியவில்லை என்பதை அவர் பேச்சில் உணர முடிந்தது.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்

“7000 ஆட்டோ டிரைவர் குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இதனை அனைத்து சங்க பிரநிதிகள், அதிகாரிகள் கொண்ட கமிட்டி அமைத்து பேசாமல் தன்னிச்சையாக முடிவெடுப்பது என்ன நியாயம்” என்ற நமது கேள்விக்கு?

“இது பற்றி எனது காதுக்கு செய்தி வரவில்லை” என்கிறார்!

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்“அங்கீகாரம் இல்லாமல் நூற்றுக்கணக்கான கால்டாக்ஸிகள் இயங்குகின்றன. இவற்றால் ஆட்டோக்களும் பாதிக்கப்படுகின்றன. ஏன் அவர்களை ஒழுங்குபடுத்தவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை” எனக் கேட்டதற்கு

“என்ன ? கால்டாக்ஸிக்கு அங்கீகாரம் இல்லையா?” என கீழ் நிலை அதிகாரியை பார்த்து கேட்கிறார்!

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்

“ஆமாம் மேடம்” என அவர் அடக்கமாக உண்மையை உளறியதும், “சரி நடவடிக்கை எடுக்கிறேன்” என்கிறார்!

“தனியார் கம்பெனிகள் கொழுத்த லாபத்தில் தரமில்லாத மீட்டரை விற்கின்றனர். அதற்கு பதிலாக அரசே G.S.M மீட்டர் தரவேண்டும்” என்ற கோரிக்கைபற்றி பேசிய போது!

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்

“அது என்ன G.S.M மீட்டர். அப்படி ஏதும் இல்லையே” என கீழ் அதிகாரியை பார்த்து பேச,

“இல்லம்மா இருக்கு ஆனா அது சென்னைக்கு மட்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என சமாளித்தார் ஆட்சியரின் கீழ் நிலை அதிகாரி.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்

“போலீஸார் அபராதம் என்ற பெயரில் வளைத்து வளைத்து படிக்கின்றனர். இது முறையல்ல” என்றதும் உடனே போலீஸ் கமிஷனருக்கு போன் போட்டார். ஆனால், ‘அவர் திருப்பதி ஏழுமலையான் சன்னதியில் உள்ளதால் டவர் கிடைக்கவில்லை வந்ததும் பேசுகிறேன்’ என்றார் ( அண்ணல் மலையை விட்டு இறஙகிவரும் வரை 7,000 ஆட்டோக்கள் மாமுல் கட்டியே ஆக வேண்டும் மறைமுகமாக அறிவித்தார்).

“இலவச மீட்டர் எங்கேயும் வழங்கவில்லை” என அறிவித்தவர் (அம்மா 110 விதி அறிவிப்பை தடாலடியாக மறந்துவிட்டாரா, அல்லது அம்மா பேச்சு வெறும் சும்மா வெத்துவேட்டு என கருதினாரோ என தெரியவில்லை) “வங்கிகளில் கடன் ஏற்பாடு செய்கிறேன் வாங்கிக்கொள்ளுங்கள்” என்றார்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்

“எந்த வங்கியும் கடன் தருவதில்லை. உங்கள் உத்தரவை யாரும் பின்பற்றி நடைமுறை படுத்தவில்லை” என்றதும் உடனே IOB வங்கி மாவட்ட அதிகாரிக்கு போன் செய்து, “உடனே நிபந்தனை இல்லாமல் கடன் கொடுங்க. இல்லாவிட்டால் போஸ்டர் அடிச்சு ஒட்டுவாங்க” என கூறி அவரை சம்மதிக்க வைத்தார்.

“உங்க மற்ற கோரிக்கைகளை அரசிடம் பேசுகிறேன். அனைத்து சங்கங்களையும் கூப்பிட்டு பேசி இறுதி முடிவு எடுக்கிறோம்” என்ற வாக்குறுதியின் பெயரில் முற்றுகை விலக்கி கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை சுவரொட்டியாக தயாரித்து அனைத்து ஆட்டோக்களிலும் ஒட்டபட்டுள்ளது. மீண்டும் அமைதியாக நாட்கள் நகர்கின்றன!

இந்த கலவரங்களுக்கு மத்தியில் சி.ஐ.டி.யு வினர் சங்கங்கள் சேர்ந்து நிர்வாகிகள் 4 நபர்கள் வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்து அன்றைய செய்திகளில் அவர்களும் இடம் பிடித்தனர்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்

மீட்டர் ஆட்டோ இயங்க தடையாக உள்ள பிரச்சினைகள்

  1. 25 ஆண்டுகாலமாக மீட்டர் போடும முறை நடை முறையில் இல்லை
  2. பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிகாரிகள் அறிவிப்பாக வெளியிடுவதும். அதன் பின் உள்ள பிரச்சினைகளை சரி செய்யாமல் கிடப்பில் போடுவதுமாக இருந்துள்ளனர்.
  3. இதனால் ஆட்டோ தொழிலை பல்வேறு பிரச்சினைகளும், சிரமங்களும் சூழ்ந்துள்ளன.
  4. ஆண்டுக்கு ஒரு முறை F.C எடுக்கும் முறை அமுலில் உள்ளது இதற்கு செலவு குறைந்தது ரூ 5000 ஆகும்.
  5. இன்சூரன்ஸ் ரூ 800 ஆக இருந்தது இன்று ஆண்டுக்கு ரூ 4,000 ஆக உயர்ந்துள்ளது.(பல லட்சம் கோடி இன்சூரன்ஸ் தொகை கேள்வி கேட்பாரின்றி உள்ளது. இதில் பல பன்னாட்டு நிறுவனங்கள் புகுந்து சுருட்ட துவங்கி விட்டனர்.) இந்தத் தொகையை கட்டமுடியாமல் ஆட்டோ ஓட்டுனர்கள் தவித்து வருகின்றனர்.
  6. படிப்பறிவு இல்லாதவர்கள் தான் ஆட்டோ தொழில்களில் வந்து சேர்கின்றனர். தமது அனுபவம் மூலம் கற்று தேர்கின்றனர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தொழிலில் உள்ளவர்களை திடீர் என மத்திய அரசு 8-ம் வகுப்பு படித்தால் தான் பேட்ஜ் வாங்க முடியும் என சட்டம் இயற்றி பிழைப்பை கெடுத்து உள்ளது. இனிமேல் எப்படி இவர்கள் படித்து சான்றிதழ் பெற முடியும்.
  7. நமது ஆட்டோ சம்மந்தமான ஆவணங்களை வங்கி, மற்றும் பைனாஸ்சியரிடம் அடமானம் வைக்கப்பட்டு தான் கடன் பெற முடிகிறது. இவை முடியும் வரை ஆவணம் பெற முடியாது. இது போன்ற சூழலில் முறையாக ஆவணங்களோடு ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் இயங்குவதில்லை.
  8. மக்கள் அன்றாட தேவைகளுக்கே படாதபாடு படும் சுழலில் ஆட்டோவில் பயணம் செய்வது அரிதாக உள்ளது.
  9. நாள் ஒன்றுக்கு 5,6 சவாரி கிடைத்தால் அது பெரிய விசயமாகும். இது போன்ற சூழலில் மீட்டர் போட்டு அரசே கட்டணத்தை நிர்ணயத்து இயக்கக் கோரும் போது இப்போது உள்ள வருமானத்தில் பாதி தான் ஈட்ட முடியும். அதுவும் சின்ன சிறிய நகரங்களுக்கு இந்த மீட்டர் கட்டணத்தை பொருத்தினால் மேலும் அதிக பாதிப்பு ஏற்படும்.

trichy-auto-drivers-protest-15

இவை எதைப் பற்றியும் நம்ம ஊர் அதிகாரிகள் கவலைப்படவில்லை. தனது மேலதிகாரிகள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே அமுல்படுத்த வேண்டும் என்ற சிகப்பு நாடா முறையையே பின்பற்றுகின்றனர். ஜனநாயக பூர்வமாக விவாதித்து, நல்லது, கெட்டதை பேசி தீர்த்து முழுமையாக அமுல்படுத்துவது என்பது இவர்கள் அகராதியில் கிடையாது. எனவே புரட்சிகர அமைப்புகளுடன் இணைந்து ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராடுவதை தவிர வேறு வழியில்லை என்ற நோக்கத்தில் அடுத்தகட்ட போராட்டத்திற்க்கு ஆ.ஓ.பா.ச தயாராகி வருகிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

செய்தி:
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்,
(இணைப்பு) – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி)
திருச்சி.

பேச: 9791692512.

தண்ணீர் தாகத்திற்கா… லாபத்திற்கா…?

6

ண்ணீர் இயற்கையின் சொத்து. அதனை யாரும் உருவாக்க முடியாது. ஆனால் நீரை விற்பனைப் பண்டமாக மாற்ற வேண்டும் என்று சொல்கிறது காட்ஸ் (GATS) ஒப்பந்தம். இதில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய நீர்க் கொள்கையின்படி நிலம் உங்களுக்கு சொந்தமாக இருப்பினும் அதற்கு கீழே இருக்கும் நீர் அரசுக்குத்தான் சொந்தம். இதுவரை ஆற்று நீரை மட்டுமே முதலாளிககுக்கு தாரை வார்த்த அரசு இப்போது நிலத்தடி நீரையும் தாரை வார்க்க உள்ளது.

thanneer-front thanneer-back

இந்நிலையில் 2005-ம் ஆண்டு வெளியிடப்பட்ட “தண்ணீர் தாகத்திற்கா அல்லது இலாபத்திற்கா” என்ற மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் வெளியீட்டை கீழைக்காற்று வெளியீட்டகம் 2-ம் பதிப்பாக கொண்டு வந்துள்ளது.

பெக்டெல், சூயஸ் போன்ற நிறுவனங்களின் உலகளாவிய ஆதிக்கம், மறுபுறம் அரசுத் துறைகளை வேண்டுமென்றே நட்டத்தில் ஓட வைத்து தனியாருக்கு மாற வைப்பது போன்றவற்றை  அம்மா குடிநீருக்கு பழகும் எவரும்  புரிந்து கொள்வது எளிதாக இருக்கும். காசு இருந்தால் மருத்துவம், தண்ணீர் என எல்லா சேவைகளும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை விரிவாக விளக்குகிறது இந்நூல்.

இந்தப் புத்தகம் மணற்கொள்ளை எப்படி ஆற்றின் போக்கை பாதிக்கிறது, நீரை உறிஞ்சி வைக்கும் பாக்டீரியாக்கள் எப்படி காணாமல் போகிறது போன்றவற்றையும் விளக்குகிறது.  நிலத்தடி நீர்மட்டம் குறைவது, ரியல் எஸ்டேட் கொழுப்பது போனவற்றையும் புரிந்து கொள்ள  முடிகிறது.

தண்ணீர் தனியார்மயத்துக்கெதிராக உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களில், பொலிவியாவின் கொச்சபம்பாவும், தென்னாப்பிரிக்க மக்களி “ப்ரீ பெய்டு” முறைக்கு எதிராக நடத்திய போராட்டம்,  பிலிப்பைன்சின் போராட்டங்களையும் விவரிக்கிறது இந்நூல். நீரை உறிஞ்சி லாபம் சம்பாதிக்க முடியாவிட்டாலும் முதலாளிகள் எப்படி நட்ட ஈடு என்ற பெயரில் அநியாயமாக மக்களின் வரிப்பணத்தில் இருந்து காசு வாங்கிக் கொண்டு சென்றார்கள் என்பதை புத்தகம் அம்பலப்படுத்துகிறது.

இந்திய அளவில் கோக்கிற்கும், பெப்சிக்கும் தண்ணீர் எப்படி தாரை வார்க்கப்பட்டுள்ளது , குறிப்பாக தமிழகத்தில் காணாமல் போன ஆறுகள் பற்றியும் சென்னையில் மறைந்து போன 48 ஏரிகளைப் பற்றியும் விளக்குகிறார்கள். தில்லி, திருப்பூர், சென்னை என்ற நகர உதாரணங்களும், தாமிரபரணி கோக்கிற்கு தாரை வார்க்கப்பட்டதையும், பெப்சிக்கு பாலாறு தாரை வார்க்கப்பட்டதையும் பற்றி சொல்கிறார்கள்.

தண்ணீர் இனிமேல் விற்பனைப் பண்டம் தான் என்பதை இன்று எல்லோரும் ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டிருக்கிறோம். அதுதான் இந்த பத்தாண்டில் நடந்துள்ள மாற்றம். ஆனால் எல்லா தண்ணீரும் விற்பனைக்குத்தான் என்ற நிலை வந்தால் எப்படி சமாளிக்க முடியும்.

இருக்கும் விலைவாசியில் சாப்பாட்டுக்கு வழியில்லாத ஏழைகள், தண்ணீரை குடித்து பசியாற்றுவது கூட இனி சாத்தியமற்ற நிலை என்ற சூழலில் இப்புத்தகம் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. தனியார்மய காலத்தில் ஓட்டுச்சீட்டு அரசியலால் இதற்கு தீர்வு கிடையாது என்பதையும், ஒப்பந்தங்கள் எல்லாமுமே அதிகாரிகளால் மட்டுமே கையெழுத்திடப்படுகிறது, அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கிறது என்பதை காட் ஒப்பந்தம் மூலமாக நிரூபித்திருக்கிறது புத்தகம்.

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்க கூடாது என்ற நமது மரபும், தண்ணீர் கேட்டவனுக்கு மோரே கலக்கிக் கொடுத்த பழைய மரபும் அழிந்து, ‘தண்ணீர் இல்லை’ என தேநீர்க் கடைகளும் கைவிரிக்கும்படி மாறி வரும் சூழல், நமது தண்ணீர் உரிமையை பாதுகாக்க நம்மை அழைக்கின்றன.

தண்ணீர் தாகத்திற்கா இலாபத்திற்கா?

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367

விலை : ரூ 30/-
பக்கங்கள் : 72

விடியும் வரை கொண்டாட்டம் ! விடிந்த பிறகு சொர்க்கம் !

14

வ்வொரு பதினாறு வருடமும் ஹேப்பி நியுஇயரும் வைகுண்ட ஏகாதேசியும் ஒன்றாக வருகின்றன! இந்தவகையில் 2015, விடிய விடியக் கொண்டாட்டம்! விடிஞ்ச பிறகு சொர்க்கவாசல்! என்று டபுள் டமாக்காவாக இருந்தது.

கர்நாடக சங்கீதம்
நாரத கான சபாவில் இருந்து மியுசிக் அகடமி வரைக்கும் ஒரே கூட்டம்!

வைகுண்ட பெருமாளின் சொர்க்க வாசலும் ஈசிஆர் பாற்கடலும் பக்த கோடிகளுக்கும் பல்வேறு ரிசார்ட்டுகளுக்கும் ஒரு சேர அருள் பாலித்தன. இதில் உள்ள சிறப்பு அம்சங்களை அனுபவிக்கிற பல்வேறு சமூகக் கூட்டங்களின் உற்சாகத்தைப் பரிசீலிப்பது அவசியமானதாகும்.

பொதுவாக மார்கழி என்றாலே மகா உற்சவமாக இருக்கும்! போன வாரம் கூட பாம்பே ஜெயஸ்ரீ ராகமாலிகாவில் பிருகாக்களையும் சங்கதிகளையும் அள்ளி வீசினார். நாரத கான சபாவில் இருந்து மியுசிக் அகடமி வரைக்கும் ஒரே கூட்டம்! மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு ‘மார்கழி’ என்று காலம் போட்டு காலம் காலமா எழுதிட்டு வர்றா!

ஒவ்வொரு வருடமும் இஷை தாகத்தை புதுமையான முறையில் வழங்கி வரும் சபாக்கள் இந்த முறை கேண்டின் பலகாரங்களிலும் பல புதுமைகளைப் புகுத்தியுள்ள அரிய தகவலை மவுண்ட் ரோடு ஒரு பக்கத்துக்கு எழுதியிருந்தது. இந்த முறை ராகி தோசையும் கோதுமை இடியாப்பமும் உலர் பழங்களில் (கிஸ்மிஸ் என்று கெஸ்) செய்யப்பட்ட போளியும், மியுசிக் அகடமி கேண்டினில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்களாம். புதினா இடியாப்பம், ஆப்பிள்-ஆனியன் சேவையும் ரசிக சிகாமணிகளுக்காக கொண்டு வந்திருக்கிறார்களாம்.

இப்படிப்பட்ட இந்த சங்கீதக் கூட்டம் ஹேப்பி நியுஇயரை இரவு 10 மணி ஸ்பெசல் கச்சேரியுடன் கொண்டாடியிருக்கிறார்கள்! இந்த முறை கச்சேரியின் தீம், பன்னிரெண்டு ராசிகளை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு ராகங்களை, ஆலாபனம் செய்வதாகும்.

புத்தாண்டு கச்சேரியில் பாரம்பரிய (!!) சிற்றுண்டிகளும் மசாலா டீயும் பானகமும் வழங்கப்பட்டிருக்கின்றன. சமூகத்தின் 3% உயர்ந்த அடுக்கான இவர்களின் புதுவருடக் கொண்டாட்டம் இவ்விதம் இருக்கிறது.

இவ்விடத்தில் ஒரு சம்பவத்தை நினைவு கூர்வது அவசியமாகும். ‘தானே’ புயல் கடலூர் மாவட்டங்கள் முழுவதையும் முற்றிலும் உருக்குலைந்த சமயம் ஒரு மார்கழி மாதம் தான் என்று நினைக்கிறேன். அன்று விழுந்த முந்திரி விவசாயம் இன்றளவும் எந்திரிக்கவில்லை. காற்றாலும் மழையாலும் வேரோடு பிடுங்கெறியப்பட்ட அக்காலத்தில் நடுத்தரவர்க்கமாக இருந்த பல விவசாயக் குடும்பங்கள் கடனாளியாக உரிய நிவாரணமின்றி இன்றளவும் சின்னபின்னமாகி சிதறிப் போயிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையிலும் கூட ஹம்சர்வர்தினி ராகம் பாடியதால் தான் ‘தானே’ புயல்-மழை வந்திருக்கிறது என்று அன்றைய காலகட்டத்தில் உச்சி முகர்ந்து உவமை பாடிய இசைக்கூட்டத்திற்கு புயல் மழையே ராக தாள விளைவாக இருக்கிறதென்றால் ஹேப்பி நியுஇயரை சும்மா விட்டுவிடுவார்களா? நிற்க.

புத்தாண்டு உணவு
ஒரு வேளை மழை வரவில்லையென்றால்உங்கள் இரவு உணவை , மாடியில் சில அலங்கரிக்கப்பட்ட விளக்குகளோடு நட்சத்திரங்களுக்கு கீழே உண்ணலாம்

இவ்விதம் இசை ஞானம் உள்ளவர்களுக்கு புதுவருடம் பத்து மணி கச்சேரியோடு ஆரம்பிக்கிறது என்றால் அது இல்லாதவர்கள் என்ன செய்ய? அதற்கும் 15 வழிகளில் வழக்கத்திற்கு மாறான முறையில் புத்தாண்டைக் கொண்டாட மவுண்ட் ரோடு கீழ்க்கண்ட விதம் அறிவுறுத்தியிருக்கிறது. முதலில் அங்கே சொடுக்கி படித்துவிட்டு இங்கு வந்து படிக்கவும்.

  1. ஒரு வேளை மழை வரவில்லையென்றால்உங்கள் இரவு உணவை , மாடியில் சில அலங்கரிக்கப்பட்ட விளக்குகளோடு நட்சத்திரங்களுக்கு கீழே உண்ணலாம். (மாடியே இல்லாதவர்கள் என்ன செய்யலாம்? சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் இவ்விதம் ஆணவத்தோடு ச்சீ ஆவணத்தோடு பாடியிருக்கிறார் “கிராமத்து குடிசையிலே கொஞ்சம் காலம் தங்கிப் பாருலே! கூரையின் ஓட்டை விரிசல் வழி நட்சத்திரம் எண்ணிப் பாருலே!”)
  2. 2015-ல் சாதிக்க வேண்டியதை பேப்பர் லாந்தரில் எழுதி, நட்ட நடுராத்திரியில் பறக்கவிடலாம்.
  3. பாத் டப்பில் அதிக நுரையுடன் வாசனைத் திரவியங்கள் ஒரு பக்கம்! வைன் ஒரு பக்கம்! படிக்க புத்தகம் ஒரு பக்கம்! என்று புத்தாண்டைக் கொண்டாடலாம். (ஏற்கனவே ஜெயமோகன் சுந்தர ராமசாமிக்கு பாத் டப்பில் குளிப்பது மிகவும் பிடிக்கும் என்று இரங்கல் உரையில் எழுதியதாக ஞாபகம்!)
  4. நடுநிசியில் டிவிடி பிளேயரில் சினிமா போட்டு பார்க்கலாம். கிராவிட்டி, பெர்சி ஜாக்சன், சீ ஆப் மான்ஸ்டர்ஸ் மற்றும் ராசி போன்ற படங்கள்.
  5. மாலை நேரத்தை குடும்பத்துடன் பெற்றொர்கள், தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்களுடன் செலவிடலாம். முதலாளித்துவம் கூட்டுக்குடும்பத்திற்கு வேட்டுவைத்து அழித்தது கூட தெரியாமல் இப்படியொரு அட்வைசு. ஐந்து இலக்க சம்பளம் வாங்கும் மென்பொருள் வேலை பார்ப்பவர்களே குழந்தைகளை விட்டு விட்டே வேலை பார்க்கிற பொழுது தாத்தா பாட்டிக்கு எங்க போக?
  6. ஒரு கேக்கை வாங்கிக்கொண்டு தெருவில் ஸ்ட்ரேஞ்சர்ஸுடன் (அதாவது முன்பின் தெரியாதவருடன்) கொண்டலாம். உங்களுக்கு நாய், நரி பிடிக்கும் என்றால் அவைகளுக்கு உணவளித்து கொண்டாடலாம். திரிஷாவெல்லாம் இப்படித்தான்!
  7. புத்தாண்டு உணவு
    ஒரு பீசா ஆர்டர் செய்தோ அல்லது நூடுல்ஸ் சமைத்தோ கொண்டாடிவிட்டு தூங்கச் செல்லலாம்

    குடிப்பதாக இருந்தால் உங்களுக்கு தெரியாதவர்களுடன் சேர்ந்து குடிக்கலாம். அதாவது உங்களின் நண்பர்களின் நண்பர்களுடன்.

  8. நீங்கள் வேலையில் இருந்தால் நைட் வீட்டிற்கு திரும்பும் பொழுது உங்களது வாட்ச் மேனுக்கு வாழ்த்து சொல்லி கிப்ட் கொடுங்கள். இதனால் அவர் திருப்தியாக உணர்வதோடு உங்களையும் எளிதில் விட்டுவிடுவார்.
  9. பன்னிரெண்டு பேப்பர்களை எடுத்து வைத்துக்கொண்டு 2014-ல் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு நேர்ந்த மோசமான விசயங்களை எழுதி வீட்டிற்குள்ளேயோ அல்லது பால்கனியிலேயோ ஒவ்வொரு மாதத் தாளையும் ஒவ்வொன்றாக எரியுங்கள்! இது சிம்பாலிக்காக உங்களது மோசமானவைகளை அழித்து புது வாழ்வு தொடங்குவதை குறிக்கும்!
  10. ஒரு வேளை துரதிர்ஷ்டவசமாக இரவு வேலை பார்க்க நேர்ந்தால் உங்களை வெளிப்படுத்தும் விதத்தில் தீமாக உடையணிந்து கொள்ளலாம்!
  11. பார்டிக்கு செல்வதாக இருந்தால் காக்ரா, லெஹேனா மற்றும் ஒன்பது முழ சேலையை அணிந்து செல்லலாம். இதனால் அனைவரின் கவனமும் உங்கள் மீது திரும்பும்!
  12. தனிமையில் புத்தாண்டைக் கொண்டாடுங்கள். ஒரு பீசா ஆர்டர் செய்தோ அல்லது நூடுல்ஸ் சமைத்தோ கொண்டாடிவிட்டு தூங்கச் செல்லலாம். அந்த இரவு உங்களுடையது!
  13. உங்களுக்கு நீங்களே கடிதம் எழுதிக்கொள்ளலாம். இந்த வருடம் என்ன நடந்தது? அடுத்த வருடம் என்ன நடக்க வேண்டும் என பல இத்யாதிகள். ஒரு வேளை யாரேனும் படித்துவிடுவார்கள் என்று பயந்தால் futureme.org என்ற தளத்திற்கு சென்று நீங்களே எழுதி உங்களது மெயிலுக்கு அனுப்பிக்கொள்ளலாம். முடிந்தால் கவிதை எழுதுங்கள்!
  14. டெக்னாலஜிக்கு நோ சொல்லுங்கள். இன்று செல்போன், லேப்டாப், டெஸ்க்டாப், டேப்ளாய்டு, பேப்ளாய்டு (என்னென்னு தெரியலையே!) போன்றவைகளை அணைத்து வைத்துவிட்டு காலையில் வாழ்த்து சொல்லலாம்.
  15. யாருக்காவது கால் செய்து பேசலாம்! இந்த வருடத்தில் உங்களது நண்பர்களுடன் தொடர்பு அறுந்து போயிருந்தால் பலப்படுத்தலாம்!

மேலே உள்ள பதினைந்து அம்சக் கோட்பாடுகள் சொல்கிற செய்தி என்ன? எவ்வளவு நுகர முடியுமோ அவ்வளவு நுகருங்கள் என்பதே! அது மொட்டை மாடியிலே சாப்பிடு, பீசா ஆர்டர் பண்ணு! பாத் டப்பில் வைனோட குளி, வித்யாசமா குடி! டிரஸ் வாங்கு, பார்டிக்கு போ, டிவிடியில் படம் பாரு! அதுதவிர தனிநபராக மனிதர்கள் தங்களை அன்னியப்படுத்திக் கொள்ள கடிதம் எழுதி எரிக்கச் சொல்லிவிட்டு குடும்பத்தோடு பேசி மகிழ் என்று முரண்பட்டு நிற்கிறது. சமூகத்தின் லும்பன் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு மேட்டுக்குடி உதிரி வர்க்கங்களின் புதுவருடம் இப்படித்தான் இருக்கப்போகிறது. இது இரண்டாவது வகை.

இதில் மூன்றாம் தரப்பாக சமூகத்தின் அடித்தட்டைச் சேர்ந்த இளைஞர் பிரிவு புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் கணிசமான அளவு மதுவிற்கு பலியாகியிருக்கிறது. இவர்கள் யாரும் மேலே சொன்ன விதத்தில் புத்தாண்டை அறிந்தவர்கள் கிடையாது. கடின உடல் உழைப்பில் ஈடுபடுகிற இளைஞர்கள், மாணவர்கள் உள்பட ஒவ்வொரு புத்தாண்டிற்கும் மதுவிற்கு அறிமுகப்படுத்தப்படுகிற கலாச்சாரம் பெருகி வந்திருக்கிறது.

திரைப்படங்களும், சின்னத்திரையும், பத்திரிக்கைகளும், இதை ஒரு கலச்சாரமாகவே நிறுவியிருக்கின்றன. ஆளும் வர்க்கம் புத்தாண்டு மது விற்பனையை டார்கெட் போட்டு விற்கின்றது!

இனி சமூகத்தின் மறுபக்கத்தைப் பார்ப்போம். மெரினா கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலை, அண்ணா சாலை, பூந்த மல்லி நெடுஞ்சாலையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மதுவோடு ஆரம்பித்து 12 மணிக்கு உச்சநிலை அடைந்து சரியாக இரவு ஒருமணிக்கு நட்சத்திர விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகளின் சுருதி குறைகிற அதே இரவு ஒரு மணிக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் சொர்க்கவாசல் நடை திறக்கப்பட இருக்கிறது!

இந்த ஆண்டு பல இலட்சணக்கான பக்தர்கள் சொர்க்கம் போகும் பொருட்டு சொர்க்கவாசல் திறப்பிற்காக கிலோ மீட்டர் வரிசையில் காத்திருக்கின்றனராம். இப்படி இருந்தாலும் இரவு ஒரு மணியிலிருந்து காலை ஐந்து மணி வரை விஐபி தரிசனம் மட்டும் தான் திருப்பதியில் அனுமதிக்கப்படுமாம்.

ஐந்து மணிக்கு பிற்பாடுதான் ஏழை பக்தர்களால் மோட்சம் செல்ல முடியும்! இந்த நான்கு மணி நேரத்தில் இந்துப் பார்ப்பனியம் பணம் படைத்த வர்க்கங்களைத்தான் முதலில் மோட்சம் செல்ல அனுமதிக்கிறது. இதற்கும் ஆன்லைனில் டிக்கட் வாங்குவது முன் நிபந்தனையாகும்.

ஆளும் வர்க்கம் எப்படி ஏழைகளைச் சுரண்டி நிவாரணம் என்ற பெயரில் ரொட்டித்துண்டை வீசியெறிந்துவிட்டு தரகுமுதலாளிகளுக்கு பாய் விரிக்கிறதோ அதே போல வரிசையில் காத்திருக்கிற ஏழை பக்தர்களுக்கு காபி, டீ, பால் கொடுத்துவிட்டு பணம் படைத்தவர்களை முதலில் மோட்சம் செல்ல அனுமதிக்கிறது திருப்பதியின் வைகுண்ட ஏகாதேசி!

கோயிலும் கோலமும்
மக்கள் கோவிலுக்கும் போகிறார்கள், கோலமும் போடுகிறார்கள். இதில் மதம் எது, மார்கெட் எது என்று பிரித்து பார்ப்பது கடோபநிதத்தை புரிந்து கொள்வதை விட கஷ்டம்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே பார்த்த சாரதி கோயிலில் பக்தர்கள் மோட்சம் அடைந்த சம்பவமும் நடந்தேறியிருக்கிறது. கூட்ட நெரிசலில் பக்தர்கள் மிதிபட்டு இறந்திருக்கிறார்கள். இங்கு தான் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ கும்பல் ஒரு தத்துவார்த்த கேள்வியை எழுப்புகிறது. தமிழ்நாட்டில் பெரியாரின் நாத்திக மரபு இருப்பது உண்மையென்றால் கோயிலில் ஏன் இத்தனைக் கூட்டம்?

இது போக புத்தாண்டு கிறித்தவ கொண்டாட்டம், அதை இந்துக்கள் கொண்டாட கூடாது, கோவில்களை நள்ளிரவில் திறக்க கூடாது என்று வருடா வருடம் இந்துமுன்னணியும், இத்துப் போன இராம கோபாலானும் அலறுகிறார்கள், அறிக்கை விடுகிறார்கள். என்ன பயன்?

மக்கள் கோவிலுக்கும் போகிறார்கள், கோலமும் போடுகிறார்கள். இதில் மதம் எது, மார்கெட் எது என்று பிரித்து பார்ப்பது கடோபநிதத்தை புரிந்து கொள்வதை விட கஷ்டம்.

இக்கும்பலின் பித்தலாட்டத்தை இனங்காணுவது எப்படி? இதற்குத்தான் இன்றைய முதலாளித்துவம் முன்னணியில் வைத்திருக்கிற புத்தாண்டு கொண்டாட்டங்களை முதலில் பரிசீலனை செய்தோம்.

கோயிலில் மட்டுமா கூட்டம்? ஈசிஆர் பீச்சில் ரிசார்ட்டுகளில் பப்புகளிலும் தான் ஒரே கூட்டம்! டாஸ்மாக்கில் எதைவிடவும் கூட்டம்! மறுகாலனியாதிக்கம் தனியார்மயம் தாராளமயம் வழங்கியிருக்கிற அதி உன்னத தரிசனங்களின் விளைவுகள் இவை!

கடவுளை நம்புவன் முட்டாள் என்றால் கடவுளை உருவாக்கியவன் அயோக்கியன் என்றார் பெரியார். அப்படி கடவுளை உருவாக்கி பார்ப்பனியத்திற்கு தலைமையேற்கிற 3% கூட்டம் கச்சேரி என்றும் பதினைந்து வழிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் என்றும் வணிக உத்தியில் முதலாளித்துவத்தோடு இலட்சமண ரேகையாக நிற்கின்றன!

எஞ்சியிருக்கிற இடைநிலைச் சாதிகளும் தலித்துகளும் கூடையில் இட்ட நண்டுகளாக ஒருவரையொருவர் மேல் எழும்பா வண்ணம் பார்ப்பனியத்தின் படிநிலை அடுக்கில் சிக்குண்டு கிடக்கிறார்கள்!

இவ்விதம் ஆளும் வர்க்கம், மக்களை ‘ஜனநாயகம் குறித்துத் தொல்லைப்பட முடியாதபடி’, ‘அரசியல் குறித்துத் தொல்லைப்பட முடியாதபடி’ வைத்திருப்பதன் அவசியம் தான் புத்தாண்டும் ஏகாதேசியும்.

நுகர்வுக் காலாச்சாரமும் ‘நூல்’ கலாச்சாரமும் பின்னிப் பிணைத்திருப்பதை பார்ப்பனிய எதிர்ப்பு, முதலாளித்துவ மறுப்பு கட்டியெழுப்புவதன் மூலமே முறியடிக்க இயலும்.

அதற்கு ரங்கநாதனையும் ரத்தன் டாடாவையும் கேள்வி கேட்கும் உரிமையை மக்களுக்கு கற்றுத் தருவது வேண்டும்.

– இளங்கோ.

செய்தி ஆதாரங்கள்

  1. காஞ்சிபுரம் வைகுண்டபெருமாள் கோயில்: பரமபத வாசல் நாளை அதிகாலை 5 மணிக்கு திறப்பு
  2. Chennai Margazhi season
  3. A change of tune with healthy bites
  4. 15 unusual ways into 2015
  5. புத்தாண்டு வைகுண்ட ஏகாதசியை கொண்டாட திருமலை தயாராகிறது!
  6. Usher in the New Year, Carnatic style

டி.சி.எஸ் ஆட்குறைப்பு – ஜெர்மனியிலிருந்து ஒரு கடிதம்

3

ஐ.டி துறையில் பணி புரியும் இந்திரன் என்ற இந்த நண்பர்  டி.சி.எஸ் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிரான வினவு, பு.ஜ.தொ.மு பிரச்சாரக் கட்டுரைகளை படித்து விட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.  டி.சி.எஸ்சில் வேலை செய்யும் அவரது நண்பர் தனக்கு 32 வயது ஆகி விட்டதால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தன்னையும் வேலையை விட்டு தூக்கி விடுவார்கள் என்று பயப்படுவதாகவும், அதை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று கேட்பதாகவும் கூறினார். 

இந்தியாவில், டி.சி.எஸ்சிலும், பிற ஐ.டி நிறுவனங்களிலும் யூனியன் (தொழிற்சங்கம்) அமைப்பதற்கான நடைமுறைகளை தெரிந்து கொள்ள அவரது நண்பர் ஆவலாக இருப்பதாக கூறினார்.

இந்திரன் ஐரோப்பிய நாடு ஒன்றில் வேலை செய்வதாகவும், அங்கு தொழிற்சங்கங்கள் மூலம் ஊழியர்கள் பெற்றிருக்கும் உரிமைகள் பற்றியும் விளக்கினார்.

அவற்றை தொகுத்து மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறார்.

not-cricket

TCS வேலை பறிப்பு

பீகாரை சேர்ந்த என் பள்ளி பருவ நண்பன் ஒருவன், எங்கள் பள்ளி சார்ந்த watsapp குரூப்பில் திடீரென்று 26,000 பேர் டி.இ.எஸ்-ல் இருந்து விரட்டப்பட இருக்கிறார்கள் என்று பகிர்ந்தான். என் பள்ளிக்கூட நண்பர்கள் அனைவருமே ஐ.டி சார்ந்த தொழில் புரிகிறோம்.அவனிடம் வேலை பாதுகாப்பு பற்றி கேட்டதற்கு அதுபற்றி சரிவர தெரியவில்லை, நிறுவனத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி  பேசிக் கொள்கிறார்களாம்.

அவற்றை கீழே தொகுக்கிறேன்,

  1. 26,000 பேரை நீக்குகிறார்கள்.
  2. முதலீட்டாளர்களிடம் லாபக் கணக்கை காண்பிக்க, ஆட்குறைப்பு செய்து, பிறகு குறைந்த சம்பளத்தில் புதியவர்களை இணைப்பது.
  3. ஆறு முதல் எட்டு வருடம் வரை அனுபவம் உள்ளவர்களை மட்டும் நீக்குகிறார்கள்.
  4. இரண்டு மாத சம்பளம் மட்டும் தரப்படும்.
  5. union (தொழிற்சங்கம்) ஆரம்பித்தால், Nasscom blacklist (நாஸ்காம் கருப்புப் பட்டியல்) செய்து விடுவார்கள் மற்றும் அனுபவ சான்றிதழ் தரமாட்டார்கள் அல்லது தவறாக சித்தரிக்கப்படும்.
  6. 54,000 புதிய பி.ஈ. மாணவர்களை வேலைக்கு சேர்க்க போகிறார்கள்.

hall-meetingஅனைவருக்கும் இதை கேட்கும்போதே அதிர்ச்சி. வேலை பாதுகாப்பு மற்றும் வேலை இழப்பு பற்றி பள்ளி படிப்பிலோ அல்ல நான்கு வருட பி.ஈ. படிப்பிலோ சொல்லி தரவில்லை, தினமும் படிக்கிற செய்திகளிலும் இதைப் பற்றி பேசவில்லை. வேலை பாதுகாப்பு பற்றி அடிப்படைக் கல்வி கொஞ்சமும் இன்றி அறிவு அற்றவர்களாக இருக்கிறோம் என்று உணர்வதற்கே இவ்வளவு காலம் ஆகிவிட்டது.

என்ன பிரச்சனை?

நமது ஐ.டி ஊழியர்களுக்கு திறமையின்மை, புது தொழில் நுட்பம் சார்ந்த அறிவு இல்லாதது, புது யுத்திகள் உருவாக்க தெரியாதது, நிறுவன மேலாண்மை இல்லாதது, புதிய productகள் உருவாக்க தெரியாதது, போன்றவற்றை தள்ளி வைத்துவிடுவோம்.

கடந்த 20 வருடங்களாக நமது நாட்டு ஐ.டி நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அவர்கள் சொல்லும் வேலையை, அவர்கள் தேவைக்கு ஏற்றாற்போல் build (கட்டியமைத்து) செய்துவந்தனர். ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக தங்கள் தேவைகளை ஒரு system (அமைப்பாக) ஆக அல்லது process (செயல்முறை) ஆக standardisation (தகுதரம்) செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே, வேலை செய்வதற்கு திறமையான ஊழியர்கள் தேவையின்றி போகிறார்கள்.

மேலும், தற்பொழுது இந்திய நிறுவனங்களுக்கு அவ்வளவாக மிக பெரிய project-கள் (பத்து வருட அல்ல பதினைந்து வருட) வரத்து குறைந்துவிட்டது .

இந்த பிரச்சனையால் இன்னும் சில வருடங்களில் கம்பெனி restructure (மறுசீரமைப்பு) என்ற பெயரில் மேலும் பல்லாயிரம் வேலை இழப்புகள் இந்தியா முழவதும் பல பெரிய நிறுவனங்களில் நிகழலாம்.

ஜெர்மன் வேலை பாதுகாப்பு முறை!

why-unionஇதே சூழ்நிலையை சென்ற வருடம் ஜெர்மனியில் நான் சந்தித்தபோது. வேலை பாதுகாப்புப் பற்றிய அறிவு இல்லாத ஒரு சூனியமாக தான் இருந்தேன். என் கம்பெனி சி.ஈ.ஓ company restructre (நிறுவன மறுசீரமைப்பு) பற்றி பேசும்போது, ” இன்னும் ஆறு முதல் எட்டு மாதங்களில் உங்களில் சிலர் வேலை இழக்கலாம்” என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார் . எங்களிடம் சொல்லும்போது முன்பே union (தொழிற்சங்கம்) இல் கூறிவிட்டுத்தான் எங்களிடம் தகவலை தெரிவித்து இருக்கிறார் .

ஜெர்மனியில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போதே நீங்கள் அந்த கம்பெனியின் தொழிற்சங்கத்தில் தன்னாலயே இணைந்து விடுவீர்கள் மற்றும் உங்களுக்கு ஓட்டு உரிமையும் உண்டு.

ஜெர்மன் இழப்பு தொகை?

உங்களுடைய தற்போதைய மாத சம்பளம் * ௦.5 (குறைந்த பட்சம்) * உங்கள் அனுபவ வருடங்கள் + Negotiation (பேச்சு வார்த்தை)

உதாரணமாக , உங்களுக்கு மாத சம்பளம் 2000 euro மற்றும் நான்கு வருட அனுபவம் இருந்தால் – ( 2000 * 0.5 * 4 = 4000 euro )

Negotiation (பேச்சுவார்த்தை) – குழந்தைகளின் படிப்புக்கான பணம், உங்களின் எதிர்கால வேலைக்கான தகுதியை வளர்த்துகொள்ள பணம், அரசாங்கத்துக்கு கடிதம் (மூன்று மாதம் கழித்து 60% சம்பளத்தை அரசாங்கம் மாதம் மாதம் தங்களுக்கு புது வேலை வரும் வரை தரும்)

எங்களுக்கு “௦.5” (குறைந்த பட்சம்)-ஐ உயர்த்தி “1” தந்தார்கள் . குழந்தைகள் இருந்தால் கூடுதலாக 2000  யூரோ தந்தார்கள். இந்தியாவில் உள்ள என் நண்பர்கள் இதை லாட்டரி என்றே வர்ணித்தார்கள்.

recession (பொருளாதார சுணக்கம்) வந்தால் ?

log-off-your-silenceஇந்த அடிப்படையில்தான் வாரன் பஃபெட் சென்ற முறை recession வந்தபோது ஒரு கருத்தை வெளியிட்டார் , “ஒருவன் தன் சம்பளத்தின் ஒரு பகுதியை எப்போதும் சேமிக்க வேண்டும். recession அல்லது வேறு காரணத்தினால் வேலை இழப்பு ஏற்பட்டால், எட்டு மாதம் முதல் பதினாறு மாதம் வரை அந்த சேமிப்பு பணம் உதவும்” என்று கூறினார்.

தற்போது டி.சி.எஸ்-இல் நிலவும் இரண்டு மாத சம்பளம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவது உண்மையானால் இவர்கள் எப்படி சமாளிப்பார்கள் என்று தோன்றுகிறது.

இந்த நீண்ட கடிதத்தின் இலக்கு டி.சி.எஸ்-ல் பணிபுரியும் நண்பர்களுக்கு union (தொழிற்சங்கம்) எப்படி ஆரம்பிப்பது? எப்படி செயல்படுவது? Nasscom blackmark (நாஸ்காம் கருப்புப் பட்டியல்)-ஐ எப்படி சமாளிப்பது? நிறுவனத்தில் இருந்து எப்படி தங்கள் settlement பணத்தை வாங்குவது? போன்றவற்றை Facebook மற்றும் தங்கள் வலைதளத்தில் சாமானியர்களுக்கு புரியும்படியாக தெரிவிக்க வேண்டுகிறோம்.

இப்படிக்கு,

இந்திரன்

____________________________

இந்திரன் மற்றும் இலட்சக்கணக்கான இந்திய ஐ.டி துறை ஊழியர்களின் பிரச்சனைக்கு தீர்வாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் வினவு தோழர்கள், ஐ.டி ஊழியர்கள் மத்தியில் பிரச்சார இயக்கம் நடத்தி வருகிறோம். தொழிற்சங்கம் அமைத்து செயல்படுவது, நாஸ்காம் மிரட்டலை எதிர்கொள்வது, நிறுவனத்தின் ஊழியர் சுரண்டலை முறியடிப்பது இவற்றை விளக்கும் அரங்கக் கூட்டம் ஒன்றை பு.ஜ.தொ.மு ஏற்பாடு செய்து வருகிறது. கூட்டம் நடைபெறும் தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும்.

இந்திரன் விவரிக்கும் ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்களுக்கு உள்ள உரிமைகள், 19-ம் நூற்றாண்டு முதல் நீண்ட போராட்டங்களின் மூலம் வென்றெடுக்கப்பட்டவை. 1789 ஃபிரெஞ்சு புரட்சி, 1871 பாரிஸ் கம்யூன், 1917 ரசிய புரட்சி ஆகியவை இந்தப் போராட்ட பாரம்பரியத்தின் உந்து சக்திகள்.

ஐரோப்பிய நாடுகளில் வேறு வழியில்லாமல் தொழிலாளர் உரிமைகளை அங்கீகரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் டாடா, இன்ஃபோசிஸ் போன்ற முதலாளிகளை தமது தரகர்களாக வைத்துக் கொண்டு, இந்திய அரசை தமக்கு சாதகமாக செயல்படும்படி வளைத்து இந்திய மக்களை சுரண்டி வருகின்றனர்.

இதை மாற்றுவது ஐ.டி துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்கள் அமைப்பாக அணி திரள்வதன் மூலம் சாத்தியமாகும்.

தொழிற்சங்கமாய் திரள்வோம்!
லே ஆஃப் எனும் கார்ப்பரேட் ஒடுக்குமுறையை முறியடிப்போம்!

தொடர்பு  கொள்ளுங்கள்:

பேஸ்புக் : https://www.facebook.com/VinavuCombatsLayoff
தொலைபேசி : 90031 98576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com

– வினவு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சென்னை

மதச்சார்பற்ற அறிஞர்களின் நரியை பரியாக்கும் முயற்சி

3

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா? பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள் – 5

“ஒரு நாடு, ஒரு மக்கள் ,ஒரு சட்டம்” என்ற முழக்கத்தின் கீழ் இந்துச் சட்டத்தையே அனைவருக்குமான சிவில் சட்டமாகத் திணிக்க பாரதீய ஜனதா முயற்சிக்கின்றது. காங்கிரசு மற்றும் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த கட்சிகள் அனைத்தும் இந்திய மதச் சார்பின்மையின் பெயரால் பொதுசிவில் சட்டத்தை எதிர்க்கின்றன.

இவர்கள் ஒருபுறம் இருக்க, வலது இடது போலி கம்யூனிஸ்டுகள், இசுலாமியப் பழமைவாதத்தை எதிர்க்கும் சீர்திருத்தவாதிகள், பெண்ணுரிமை இயக்கங்கள், சில புரட்சிகர இயக்கங்கள் மற்றும் பல அறிவு ஜீவி்கள் போன்றோர், பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தில் தெரிவிக்கும் கருத்துகள் நமது பரிசீலனைக்கு உரியவை.

  • சென்ற டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (மார்க்சிஸ்டு கட்சியுடன் இணைந்தது ) மாநாடு, பொது சிவில் சட்டம் குறித்த தனது கருத்தைத் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. அதற்கு நம்பூதிரிபாடு ஒரு பொழிப்புரை எழுதியுள்ளார்.
    “ஒரு பொது சிவில் சட்டத்தை உடனே நிறைவேற்றுவதோ அல்லது ஷரியத் சட்டத்தை அப்படியே பாதுகாப்பதோ இரண்டுமே இந்தியப் பெண்களின் உடனடித் தேவை அல்ல; மாறாக, ஒவ்வொரு மதத்தின் தனிநபர் சட்டமும், ‘ஜனநாயகம், சமூக நீதி, ஆண்- பெண் சமத்துவம்’ போன்ற நவீனக் கொள்கைகளுக்கு எதிராகப் பெண்களின் உரிமையில் எந்த அளவுக்குக் குறிக்கிடுகின்றன என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும். ஏதேனும் ஒரு மதத்தின் தனிநபர் சட்டம் அவ்வாறு இந்தியப் பெண்ணின் உரிமையில் குறுக்கிட்டால் அது பொருத்தமான வகையில் திருத்தப்படவேண்டும்.”
    அதாவது மதச்சார்பற்ற உரிமையியல் சட்டம் இப்போது தேவையில்லை. மதச்சட்டங்களையே சீர்திருத்தி ஜனநாயகத்தன்மை கொண்டவையாக மாற்றினால் போதும் என்கிறார் நம்பூதிரிபாடு.
  • மா.லெ (செங்கொடி) குழுவின் பத்திரிகையான ‘ரெட் ஸ்டார்’ நம்பூதிரியின் நிலைப்பாட்டை வேறு வார்த்தைகளில் கூறுகிறது.
    “ஒருபடித்தான உரிமையியல் சட்டம் மொத்த சமூக மாற்ற நிகழ்வுப் போக்குடன் உருவாக்கப்பட வேண்டிய ஒன்று. அதை மட்டும் தனியாக உருவாக்குவதோ மேலிருந்து திணிப்பதோ முடியாது. ஒவ்வொரு மதத்தின் தனிநபர் சட்டங்களுக்குள்ளும் ஏற்படுகின்ற மாற்றத்தினூடாகவும், சமூகத்தில் நடைபெறும் முற்போக்கான போராட்டங்களின் விளைவாகத் தோன்றும் அந்தந்த மதத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் போராட்டங்களினூடாகவும் அது உருவாகி நடை முறைக்கு வருகிறது.”
  • இசுலாமியப் பழமைவாதிகளுக்கெதிராகப் போராடி வரும் அஸ்கார் அலி எஞ்சினியர் என்ற அறிஞரும் எந்தவொரு சிவில் சட்டமும் மேலிருந்து திணிக்கப்படுவதை எதிர்க்கிறார். ஒவ்வொரு மதத்தின் தனிநபர் சட்டமும் அம்மதத்தைச் சேர்ந்தவர்களது போராட்டத்தால் ஜனநாயகப் படுத்தப்படவேண்டும் என்ற கருத்தையே முன் வைக்கிறார். சிவில் வாழ்க்கையின் மீது மதம் செலுத்தும் அதிகாரத்தை மறுக்காமல் மதக் கோட்பாடுகளின் துணைகொண்டே அவற்றை ஜனநாயகப்படுத்த இயலும் என்று கருதுகிறார்.
    மேற்குலகின் கோட்பாடான மதச்சார்பின்மையை நமது நாட்டுக்கு அப்படியே பொருத்தவியலாது என்றும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நமது மதச் சார்பின்மையின் ரகசியம் என்றும் “பின் – நவீனத்துவ காலத்தில், இன்று மேற்குலகம் புரிந்து கொண்டுள்ள உண்மையை இந்தியர்களாகிய நாம் பல நூற்றாண்டுகளாகவே அறிந்திருக்கிறோம்” என்றும் கூறுகிறார். (இந்து 11.6.96)
  • மது கிஷ்வர்
    பெண்ணியவாதி மது கிஷ்வர்

    எந்தவொரு சமூகமும் கட்டாயத்தின் கீழ் தங்கள் மரபுகளைச் சீர்திருத்துமாறு செய்யக் கூடாது; மதத் தனிநபர் சட்டமும் இருக்கட்டும், மதச்சார்பற்ற சிவில் சட்டமும் இருக்கட்டும்- தனக்கு எது தேவை என்பதைப் பெண் தீர்மானிக்கட்டும் என்கிறார் பெண்ணியவாதி மதுகீஷ்வர்.

  • தமது மரபுகளை உயர்த்திப் பிடிக்கும் உரிமை ஒவ்வொரு சமூகத்திற்கும் உண்டு என்றும், எந்தவொரு அரசு உருவாக்குகின்ற சட்டத் தொகுப்பும் அதிகாரமயமாக்கலும் மட்டுமே பயன்படும் என்றும், அது பன்முகத்தன்மைக்கு எதிரானது என்றும் வாதிடுகிறார்கள் பின் நவீனத்துவ அறிஞர்கள்.
  • சிவில் சட்டம் குறித்த விவாதமெல்லாம் வெட்டிப் பேச்சு என்றும், இந்தச் சட்டங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கிராமப் பஞ்சாயத்துகள் பல பிரச்சினைகளில் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றன என்றும் சிலர் கூறுகின்றனர்.
  • மதச்சார்பற்ற, ஜனநாயகரீதியிலான சிவில் சட்டமொன்று தேவை என்று கருத்தளவில் ஏற்றுக் கொள்பவர்கள் பலரும், இந்து மதவெறிச் சக்திகள் மேலோங்கியிருக்கும் இன்றைய தருணத்தில் அதை நடைமுறைப்படுத்தவியலாது என்றும், காலம் கனியும் வரை காத்திருக்க வேண்டுமென்றும் கூறுகின்றனர்.
  • “மதச்சார்பற்ற சிவில் சட்டத்திற்காகப் போராடுவதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் இசுலாமியப் பெண்கள் உள்ளிட்ட யாருமே இன்று அந்தக் கோரிக்கையை ஆதரிக்க மாட்டார்கள் என்பதுதான்” – இது மார்க்சிஸ்டு கட்சி சார்ந்த அறிவு ஜீவிகள் சிலரின் வாதம்.
  • “சாதி ஒழிப்பு, மதச்சார்பின்மை ஆகய எதையும் தனியே உருவாக்க முடியாது. அவை ஒட்டு மொத்தச் சமூக மாற்றத்தின் அங்கமாகும். எனவே இன்றைய சமூக எதார்த்தங்களிலிருந்து துண்டிக்கப்பட்ட முறையிலான எந்தவொரு விவாதத்தையும் நாம் எதிர்க்க வேண்டும்” எனகிறது ‘ரெட் ஸ்டார்’ பத்திரிக்கை.
  • ஒரு சீரான சிவில் சட்டம் என்ற பெயரில் சிறுபான்மை மக்கள் மீது இந்துச் சட்டத்தைத் திணிக்கும் முயற்சியைக் கண்டிப்பதாகக் கூறுவதுடன் தமது பணி முடிந்தது என்று சிலர் பொருள் செறிந்த முறையில் மவுனம் சாதிக்கின்றனர்.

மேற்கூறிய நிலைப்பாடுகள் மற்றும் நிலைப்பாடற்ற குழப்பங்கள் பற்றிப் பரிசீலிப்போம்.

மதத்தை ஜனநாயகப்படுத்தும் முயற்சி

மனிதனின் சிவில் வாழ்க்கையின் மீது மதம் செலுத்துகின்ற அதிகாரத்தைப் பறித்து விஞ்ஞானபூர்வமான, ஜனநாயக பூர்வமான முறையில் சமூகத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் மதச்சார்பின்மையின் சாரம்.

அஸ்கர் அலி எஞ்சினியர்
மதச்சார்பற்ற இஸ்லாமிய அறிஞர் அஸ்கர் அலி எஞ்சினியர்

சிவில் வாழ்க்கையின் மீது மதம் செலுத்தும் அதிகாரத்தை எற்றுக் கொண்டு, அந்தந்த மதக்கோட்பாடுகளில் உள்ள ஒரளவு முற்போக்கான அம்சங்களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றின் துணைகொண்டு மதச்சட்டத்தை ஜனநாயகப்படுத்தலாம் என்பது அஸ்கர் அலி எஞ்சினியர் நிலைப்பாடு.

இந்த வழிமுறையைப் பின்பற்றி ஒருதார மணமுறைக்கு ஆதரவாகவும், முத்தலாக்கிற்கு எதிராகவும் பல ஆதாரங்களை குர்ஆன் மற்றும் நபிகள் வழங்கிய தீர்ப்புகளிலிருந்து எடுத்து எழுதுகிறார் எஞ்சினியர். வேறு பல இசுலாமியச் சீர்திருத்தவாதிகளும் இவ்வாறே செய்கிறார்கள்.

அதே நூல்களிலிருந்து வேறு சில ஆதாரங்களைக் காட்டியோ, அல்லது ஒரு சொல்லுக்கு வேறு விதமாகப் பொருள் கூறியோ இவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள் இசுலாமியப் பழமைவாதிகள். தொடர்ந்து இவர்களுக்கிடையே நடக்கின்ற அடுத்தடுத்த சுற்று விவாதங்கள் மதநூல்களின் பொருள் விளக்க ஆய்வாக வீழ்ச்சி அடைகின்றனவேயன்றி, சமூகத்தின் தேவை குறித்த அல்லது பிரச்சினை குறித்த அறிவுபூர்வமான விவாதமாக வளர்ச்சி அடைவதில்லை.

எனவே, நவீன யுகத்தின் தேவைகளுக்கு 1000, 2000ஆண்டுகளுக்கு முற்பட்ட குர்ஆனிலோ, பைபிளிலோ, ஸ்மிருதிகளிலோ விடை இருக்கிறதா என்று தேடுவதும், அவ்வாறு இருப்பதாகக் கூறுவதும் மதத்திற்கு முற்போக்கு முலாம் பூசுவதற்கு மட்டுமே பயன்படுகிறது. இந்த முயற்சி, வரலாற்று ரீதியில் மோசடியாகவும், நடைமுறையில் கோமாளித்தனமாகவும் முடிகிறது.

இந்து மதத்தின் ‘நல்ல’ கோட்பாடுகளின் துணைகொண்டே அதனைச் சீர்திருத்திவிட முடியும் என்று வாதிட்ட காந்திக்கு பெரியார் அளித்த மறுப்புரை இங்கே நினைவு கூறத்தக்கது.

மார்க்சிஸ்டுகளின் மோசடி!

அடுத்து நம்பூதிரிபாடு முன்வைக்கும் தீர்வுக்கு வருவோம். “ஜனநாயகம், சமூக நீதீ, -ஆண் –பெண் சமத்துவம் போன்ற நவீனக் கொள்கைகளுக்கு எதிராக ஒவ்வொரு மதமும் எந்த அளவு குறுக்கிடுகிறதோ அந்த அளவுக்கு அந்தந்த மதத்தனிநபர் சட்டங்கள் திருத்தப்படவேண்டும்” என்கிறார் நம்பூதிரிபாடு.

ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாடு
ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாடுவின் ஆலோசனை தெரிந்தே செய்யப்படும் மோசடி

அதாவது சிவில் வாழ்க்கை மீது மதம் செலுத்தும் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்காமலேயே, தனிநபர் சட்டம் என்ற பெயரில் இந்தியக் குடிமக்களின், குறிப்பாகப் பெண்களின் முதுகில் சவாரி செய்ய இந்திய அரசியல் சட்டம் மதங்களுக்கு அளித்துள்ள உரிமையைக் கேள்விக்குள்ளாக்காமலேயே, ‘சர்வதர்ம சம்பாவ’ என்ற இந்திய மதச்சார்த்தபின்மைக் கோட்பாட்டின் எல்லைக்குள் நின்றபடியே மதச்சட்டங்கள் ஜனநாயகப்படுத்த வழி சொல்கிறார் ஈ.எம்.எஸ்.

ஆனால் மதக்கோட்பாடுகளை அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்த எந்த மதவாதி ஒப்புக் கொள்வான்? மதவாதி ஒப்புக் கொள்வது இருக்கட்டும். நமது அரசியல் சட்டமே அதை ஒப்புக் கொள்ளவில்லையே. அவ்வாறு ஒப்புக் கொள்வதாக இருந்தால், “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்று கூறும் 14-வது பிரிவையும், பால் வேறுபாடுகளுக்காக யாரிடமும் அரசு வேற்றுமை பாராட்டக்கூடாது” என்று கூறும் 15- வது பிரிவையும் பயன்படுத்தி மதத் தனிநபர் சட்டங்கள் அனைத்தையும் ஒழித்திருக்க முடியும்; அல்லது திருத்தியிருக்க முடியும்.

பொது ஒழுங்கு, நலவாழ்வு மற்றும் ஒழுக்க நெறி ஆகியவற்றின் அடிப்படையில் மதச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் உரிமையை சட்டப்பிரிவு 25(1) அரசுக்கு அளிக்கிறது. இருந்தபோதிலும் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி மதங்களின் தீயொழுக்கங்களை ஒழிப்பதற்கு அரசு முயலவில்லை.

இந்து தனிநபர் சட்டத்தில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள தேவதாசி ஒழிப்பு போன்ற சீர்திருத்தங்களும் கூட எப்படிச் செய்யப்பட்டன? இந்து மதத்தில் நிலவும் தேவதாசி முறை என்ற ஒழுக்கக் கேட்டை சட்டப்பிரிவு 25(1) அளிக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு ஒழிக்கவில்லை. மாறாக “தேவதாசி முறை இந்துமதத்தின் அத்தியாவசியமான நம்பிக்கை அல்ல” என்ற மதவாதிகளின் கூற்றின் அடிப்படையில்தான் திருத்தப்பட்டது.

ஜனநாயகம், சமூகநீதி, பெண்ணுரிமை ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் மதச்சட்டங்களைத் திருத்தியமைக்கலாம் என்று நம்பூதிரிபாடு முன்வைக்கும் ஆலோசனை தெரிந்தே செய்யப்படும் மோசடியாகும். இத்தகைய சட்டத்திருத்தம் எதையும் மார்க்சிஸ்டு கட்சி எம்.பி.க்கள் யாரும் இன்றுவரை பாராளுமன்றத்தில் முன்மொழிந்ததில்லை என்ற உண்மை இந்தப் பித்தலாட்டத்தை மேலும் அம்பலப்படுத்துகிறது.

இது ஒருபுறமிருக்க, சிவில் வாழ்க்கை மீது மதம் செலுத்தும் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு, அதில் சீர்திருத்தங்கள் கோருவதன் வாயிலாக மதச் சீர்திருத்தவாதியாக அவதாரம் எடுக்கிறாரல் நம்பூதிரிபாடு.

மதத்திற்குள்ளிருந்தே அதை ஜனநாயகப்படுத்த முடியுமா?

அம்பேத்கர்
இந்து சட்டத்தை சீர்திருத்த முயன்று தோற்கடிக்கப்பட்டார் அம்பேத்கர்

மதச்சார்பற்ற மதிப்பீடுகளை அளவுகோலாகக் கொண்டு மதக் கோட்பாடுகளை ஆய்வு செய்யக்கூடாது என்பதுதான் மதவாதிகளின் நிலைப்பாடு. இதன்படி ஷரியத்தின் ஆணாதிக்கம் பற்றி ஒரு நாத்திகனோ, அல்லது பிற மதத்தவனோ பேசக்கூடாது.

“கருவறைக்குள் யாரை விடலாம், யாரை விடக்கூடாது என்பதை இந்துக்களாகிய நாங்கள் எங்கள் மதத்திற்குள் பேசிக் கொள்கிறோம். நாத்திகர்களான நக்சலைட்டுகளுக்கு இதில் தலையிடுவதற்கு உரிமை கிடையாது” என்பது கருவறை நுழைவுப் போராட்டத்திற்கெதிராக இந்து முன்னணி முன்வைத்த வாதங்களில் மிக முக்கியமானதொன்று ஆகும்.

இனம், பால், வர்க்கம் என்ற முறையில் எந்த மதத்தைதச் சேர்ந்த மக்களையும் அணுகவும், மதத்தின் பெயரால் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நுகத்தடிகளை அகற்றவும் மதச்சார்பற்றவர்களுக்கும் ஜனநாயகவாதிகளுக்கும் உரிமை உண்டு. இத்தகைய போராட்டத்தின் மூலம்தான் மதச்சார்பின்மை நிலைநாட்டப்படுகிறது.

மாறாக, மதச்சார்பான முறைகள் மூலம் மதச்சார்பற்ற சட்டத்தை உருவாக்க முயலும் அணுகுமுறை, இலக்கிற்கும் அதை அடைவதற்கான வழிமுறைக்கும் இடையில் உள்ள இயங்கியல் உறவை மறுதலிக்கிறது.

ரெட் ஸ்டாரின்’ அணுகுமுறையில் இது பிரதிபலிப்பதைக் காணலாம். “ஒவ்வொரு மதத்தின் தனிநபர் சட்டங்களுக்குள்ளும் ஏற்படும் மாற்றம்” என்பதை மதச்சார்பின்மையை நோக்கிய முன்னேற்றமாகச் சித்தரிக்கிறது ‘ரெட்ஸ்டார்’.

உண்மை அதுவல்ல; உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, நாகரிகத்தின் வளர்ச்சி, முற்போக்கான சக்திகளின் போராட்டங்கள் ஆகியவற்றின் தாக்குதலால் நிலைகுலைந்து வரும் மதம், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கடைப்பிடிக்கும் தந்திரம்தான் சீர்திருத்தம்.

எல்லா சீர்திருத்தங்களையும் போலவே இவையும் அந்தந்த மதத்தைச் சார்ந்த மக்களுக்குச் சில புதிய நிவாரணங்களை வழங்கத்தான் செய்யும். இது சீர்திருத்ததின் விளைவு, நோக்கம் என்ன என்பதுதான் பிரச்சினை.

பலதார மணம், தேவதாசி முறை, கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைவதற்கான தடை போன்றவற்றை இந்து சனாதனிகள் மனமுவந்து விலக்கிக் கொள்ளவில்லை; ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு இவை எதிராக இருக்கின்றன என்ற காரணத்தால் சட்டத்திருத்தம் செய்யவுமில்லை.

அம்பேத்கருக்கு எதிராக இந்து – முசுலீம் கூட்டணி!

மாறாக, சிவில் வாழ்க்கை மீது மதம் செலுத்தும் அதிகாரத்தை முற்றிலுமாகப் பிடுங்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறியபோது மதப் பகைமைகளை மறந்து இந்து சனாதனிகளும், இசுலாமியப் பழமைவாதிகளும் அம்பேத்கருக்கு எதிராக ஓரணியில் திரண்டார்கள்.

பாகிஸ்தான் மதவாதம்
அம்பேத்கர், பெரியார், ஜின்னா (1940-ல்) – பாகிஸ்தானில் முத்தலாக் மணவிலக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

கடவுளர்கள், வழிபாட்டு முறைகள், பண்பாடுகள் ஆகியவற்றால் ஒன்றுக்கெதிராக நின்று கொண்டிருந்த கூட்டத்தை ‘இந்துச் சட்டம்’ என்ற பட்டியில் அடைப்பதன் வாயிலாகத்தான் சனாதன தருமத்தைக் காப்பாற்றவியலும் என்ற நிலைமை இருந்ததால் அந்த லட்சியத்தை அடைவதற்காகச் சில சில்லறைச் சீர்திருத்தங்களுக்கு உடன்பட்டார்கள்.

இதன் துணை விளைவாக ‘முசுலீம் தனிநபர் சட்டம்’ என்பதையும் ஏற்க வேண்டியிருக்கும் என்று தெரிந்தும் கூட, மேற்படி சீர்திருத்தங்களுக்கு இந்து சனாதனிகள் உடன்படக் காரணம் ஒன்றுதான். மதச்சார்பற்ற சிவில் சட்டம் என்ற பேயிடமிருந்து இந்து மதத்தைக் காப்பாற்றுவது தான் அது.

இனி பாகிஸ்தானின் உதாரணத்தைக் காண்போம். ‘மதச்சார்பற்ற’ இந்தியாவின் முசுலீம் தனிநபர் சட்டம் ‘முத்தலாக்’ முறையிலான மணவிலக்கை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் இசுலாமியக் குடியரசான பாகிஸ்தானிலோ முத்தலாக் மணவிலக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இசுலாமியப் பெண்களுக்கு ஆதரவான இந்த நிலை மதச்சார்பற்ற ஜனநாயக மதிப்பீடுகளின் பால் பாகிஸ்தான் அரசுக்கும் மதவாதிகளுக்கும் உள்ள காதலைக் காட்டுகிறதா, அல்லது மதச்சார்பற்ற அரசாக மாறிவிடாமல் தடுப்பதற்கு அவர்கள் கொண்டிருக்கும் எச்சரிக்கையுணர்வைக் காட்டுகிறதா?

ஆளும் வர்க்கங்கள் மற்றும் பிற்போக்கு மதவாத சக்திகளின் இத்தகைய சூழ்ச்சிகளைக் கண்டு புரட்சியாளர்களுக்குரிய எச்சரிக்கையுணர்வைப் பெறுவதற்குப் பதிலாக சீர்திருத்தவாதிகளைப் போல மகிழ்ச்சி அடைகிறது, ‘ரெட் ஸ்டார்’.

மதச் சட்டங்களைச் சீர்திருத்தி ஜனநாயகப்படுத்தும் வித்தையும், நரியைப் பரியாக்கும் வித்தையும் ஒன்றே. நரியைப் பரியாக்குவதாக நம்பூதிரி கூறுவதில் வியப்பில்லை; நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலரும் அதே நம்பிக்கையைக் கொண்டிருப்பதுதான் வேடிக்கை!

(தொடரும்…)

  1. பொது சிவில் சட்டம் – மாயையும் உண்மையும்
  2. பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது
  3. ‘ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி’ – இந்திய அரசின் மதச்சார்பின்மை
  4. மரத்தில் மறைந்தது மா மத யானை

சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தக் கட்டுரை இடம் பெற்றுள்ள நூல் கிடைக்கும்

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா?

பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள்

வெளியீடு :
கீழைக்காற்று
சென்னை – 600 002
044-28412367

விலை : ரூ 40
பக்கங்கள் : 64

ஏசு நாதர் போராட மாட்டாரா ?

267

லகமே ஓய்வெடுக்கும் நள்ளிரவு முழுக்க ஓய்வில்லாமல் எனது ஆலை இயந்திரத்தை இயக்கிவிட்டு, வெளி உலகம் எந்திரமாய் இயங்கிக்கொண்டிருக்கும் காலைப் பொழுதில் நானோ தூங்கி கொண்டிருந்தேன்.

ஏசு கிறிஸ்து
“உங்களின் சகல துன்பங்களையும் கர்த்தராகிய யேசு போக்குவார்”

ஆமென்… உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பாராக. உங்களின் சகல துன்பங்களையும் கர்த்தராகிய யேசு போக்குவார். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். கர்த்தரை நேசியுங்கள். உங்கள் பாவங்களை உடனடியாக மன்னிப்பார். இறுதியாக உங்களுக்கு ஏதேனும் கடன் தொல்லை, குடும்ப பிரச்சனை, நிம்மதியின்மை, எதுவாக இருந்தாலும் எங்களிடம் வந்து சொல்லுங்கள். உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். உங்கள் வாழ்வில் கஷ்டம் நீங்கி ஒளி பிறக்கும்” என

பிரசங்கம் செய்து கொண்டிருந்த சத்தம் கேட்டு, எழுந்து வெளியே சென்று பார்த்த போது எனது வீட்டின் முன் பெரிய வண்டி நின்று கொண்டிருந்தது. அதில் மைக் செட் கட்டப்பட்டிருந்தது. சுமார் 10 பேர் கையில் பிரசுரம், புத்தகம், சாக்லேட், என அனைவருக்கும் வீடு வீடாக சென்று கொடுத்துக் கொண்டிருந்தனர்.

நானும் அவர்கள் அருகில் சென்றேன். எனக்கும் ஒரு புத்தகம், சாக்லேட் கொடுத்தார்கள். அங்கே மைக்கை பிடித்து பேசிக்கொண்டிருந்தவரிடம் சென்று,

“ஐயா ஒரு நிமிடம்” என்றேன்.

“ம்….. சொல்லுங்கள்” என்றார்.

“பிரச்சனை இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள் என்று கூறினீர்கள், அதான் வந்தேன்” என்றேன்.

அவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு,

“ம்…! வாங்க! வாங்க! என்ன பிரச்சனை” என்று ஆவலாக கேட்டார்.

“ஐயா போன வாரம் கரண்டு பில் விலைய ஏத்திட்டாங்க. அத கொஞ்சம் குறைக்க முடியுமா” என்றேன்.

அவருடைய மகிழ்ச்சியான முகம் சற்று சுருங்கியது. சிறிது நேரம் யோசித்து விட்டு,

“ம்…! கண்டிப்பாக, ஆண்டவராகிய யேசு கிறிஸ்து தங்களின் ஜபத்தால் மனமுருகி அந்த அதிகாரத்தை கொண்ட மனிதரிடம் நெருங்கி தங்களின் கஷ்டத்தை வெளிப்படுத்தி….”

இடையே நான் குறுக்கிட்டு, தன்மையாக “ஐயா கொஞ்சம் நில்லுங்க. கரண்ட் பில்ல குறைக்க முடியுமா? முடியாதா?” எனக் கேட்டேன்.

அதற்கு அவர் “கண்டிப்பா முடியும்பா, அதுக்கு நீங்கள் ஆண்டவரிடம் ஜெபித்தால் விலை குறையும்” என்றார்.

“நான் இங்கே ஜெபித்தால் தமிழக அரசு எப்படி விலைய குறைக்கும்?”

“நீங்கள் ஜெபிக்கும் போது அந்த அதிகாரம் கொண்ட நபரிடம் யேசு சென்று உங்கள் கஷ்டங்களை எடுத்து கூறுவார். உடனே அவரும் மனமிறங்கி விலையை குறைத்து விடுவார்.”

“நீங்க சொல்றபடி, ஒ.பன்னீர்செல்வத்திட்ட இயேசு சொல்லி, அவரு விலைய குறைச்சுருவாரா?”

(பதில் கூறாமல் சிரித்து மழுப்புகிறார்).

“ஐயா, கூடங்குளம் மக்கள் இன்னைக்கில்ல, 3 வருஷமா ஆண்டவரை ஜெபித்துக்கொண்டுதான் இருக்காங்க. ஆனாலும் அந்த அணுவுலைய மூட முடியலையே. இப்ப மேலும் ரெண்டு அணு உலைய வேற புதுசா வைக்க போராங்காளாமே!”

அவரால் எந்த பதிலும் சொல்ல முடியாமல் திணறிய போது, அவருடன் வந்திருந்த இன்னொருவர் எனது கையை இருக பிடித்து,“ஐயா எனக்கு மூனு பிள்ளைங்க. நான் எந்த வேலைக்கும் போகல. இருந்தாலும் எனக்கு எந்த கஷ்டமும் இல்ல. நான் நல்லா இருக்கிறேன்” என்றார்.

“ஐயா நீங்க நல்லா இருக்கிங்க. ஆனா என் பிரச்சன இன்னும் தீரலையே. இந்த தெருவுக்கு நான் குடி வந்து 6 வருசத்துக்கு மேல ஆகுது. இந்த ரோடு மழ பெஞ்சா தண்ணியும், சேறுமா வந்து நிக்குது. வீட்டுக்குள்ள வரைக்கும் சாக்கடை கலந்த மழை தண்ணி வருது! நாங்க குடிக்கிற தண்ணி தினந்தோறும் வருவதில்ல! இருக்கிற பிரச்சனைல, இப்ப வேற கேஸ் வாங்கனும்னா, அக்கோண்ட் வேணுமாம்! எதோ பாம் எழுதி தரணுமா… இதெல்லாத்துக்கும் மேல விலவாசி ஏறிக்கிட்டே போகுது. ஆனா கம்பெனில, எங்க சம்பளத்த மட்டும் யேத்த மாட்டேங்குறாங்க. இத எங்க போய் சொல்றது?”

(என்னுடைய பதிலை கேட்டவுடன் அவரை பின்தள்ளிவிட்டு மீண்டும் பழைய நபரே பதிலை கூற ஆரம்பித்தார்.)

“ரோடு சரியில்ல, தண்ணி வரல, கரண்டு பில் யேறி போச்சுனா! இதுக்கெல்லாம் சம்பந்தப்பட்ட தலைவருங்க இருப்பாங்க. அவங்க கிட்ட போய் மனு கொடுங்க!”

“அதெல்லாம், பல தடவ கொடுத்துப் பாத்தாச்சு. ஒன்னும் நடக்கலீங்க!”

“ஒன்னும் நடக்கலன்னா, அதுக்கு மேல நீங்க போராடித்தான் ஆகனும்! எங்களால ஒன்னும் செய்ய முடியாது. நாங்க ஜெபிப்போம். அவ்வளவுதான் எங்க வேல பா!”

(இப்படி நானும் அவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே அவருடன் வந்திருந்த மற்றவர்கள் ஒருவர்பின் ஒருவராக வண்டியில் ஏறிக்கொண்டு, ஐயா, வாங்க! வாங்க! என்று அழைத்தனர். அவரும் கிளம்ப தயாரானார்.)

“நீங்க எல்லாரும் மக்கள் நல்லா இருக்கனும்னு தானே ஜெபிக்கிறீங்க! அப்போ வாங்க போராடலாம்” என்றதும்,

“நீங்க பெரிய ஆளய்யா! எங்கள ஆள வுடுங்க. எங்களுக்கு வேற வேலை இருக்குது!” எனக் கூறி வேனில் ஏறி சிட்டாக பறந்து விட்டனர்.
—————————————————————————————

யேசு நாதரே போராடாமல் எதுவும் கிடைக்காது என்று சொல்லிவிட்டார் என நினைத்துக்கொண்டு, மீண்டும் தூங்க ஆரம்பித்தேன். அரைமணி நேரத்தில் மீண்டும் ஒரு குரல், எனது செவியை கிழித்தது.

“சார்…. சார்….!”

தன்னார்வ அரசியல்
“2015-க்குள் பட்டினியை குறைக்க வேண்டும் – ஆயிரத்தாண்டு வளர்ச்சி இலக்கு” “எனக்கும் அதே நோக்கம்தான்”

யார் என்று எழுந்து பார்த்தால் சுமார் 15 பேர் இருப்பார்கள். வெள்ளை நிற தொப்பியுடன் கலக்கலான சட்டை பேண்டுடன் காலில் ஷூ (shoe)வுடன் நின்று கொண்டிருந்தனர். எனது, ஹவுஸ் ஓனர் எச்.டி.எஸ்.சி பேங்கில் இந்த வீட்டை அடமானம் வைத்து லோன் வாங்கியிருந்தார். திருப்பி கட்டாததால், ஜப்தி செய்ய வந்திருக்கிறார்களோ என திகைத்து போனேன்.

“என்ன வேணும் சார்?”

“உங்க வீட்டில் பாத்ரூம் இருக்குதா?”

“ங்….இருக்குதே”

“உங்களுக்கு ரோடு வசதி தண்ணி ஒழுங்கா வருதா?”

“ரோடு சரியில்ல. மழை பேஞ்சா சேறும் சகதியும்தான் மிஞ்சும். தண்ணி எடுக்க தினந்தோறும் சண்டதான் வரும்.”

“இல்ல சார். நாங்க உங்களுக்கு ஒரு இலவசமான பயிற்சி தந்து வேலையும் தருகிறோம். அதுக்கு 8-வது படித்திருந்தால் மட்டும் போதும். நீங்க, உங்க தம்பி தங்கச்சி யாரா இருந்தாலும் பரவாயில்ல.”

“நீங்க யாருங்க?”

“நாங்க வேல வாங்கி கொடுக்கிற ஒரு இன்ஸ்டியூட் வச்சிருக்கோம்.”

“அது கவர்மெண்டா? தனியாரா?”

“இது தனியார்தான். ஆனா கவர்மெண்டுக்கு ரிப்போர்ட் அனுப்புவோம்.  நீங்க ஏன் இந்த வேலைய செய்றீங்க. இதனால உங்களுக்கு என்ன இலாபம்?”

“இது ஒரு சேவை சார். வேலை இல்லாதவங்களுக்கு வேல கொடுக்கிறோம்ல”

“இதெல்லாம் கவர்மெண்ட் தானே செய்யனும். எல்லாதுக்கும் வேல கொடுக்கறது கவர்மெண்ட் வேல தான. அதுக்குதானே நாம ஓட்டுப்போட்டு எம்.பி, எம்.எல்.ஏ-ன்னு தேர்ந்தெடுத்து வச்சிருக்கோம்.”

“சார் அரசியல் எல்லாம் பேசாதீங்க? நோ பாலிடிக்ஸ், பிளீஸ். ஏதோ எங்களால முடிஞ்சத செய்றோம்.”

“சரிங்க சார். நீங்க வேலை இல்லாதவங்களுக்கு வேல கொடுக்கறதா சொல்றீங்க. அதுக்கு ஏன் இப்படி தெருத்தெருவா சுத்தறீங்க. இப்பதான் நோக்கியாவிலும், பாக்ஸ்கானிலும் 15,000 பேருக்கு மேல வேல இல்லாம போச்சு. அவங்களுக்கு கொடுக்க வேண்டியதுதானே.”

“இல்ல சார். அவங்கெல்லாம் ஐ.டி. பீல்ட சேந்தவங்க. நாங்க வந்து பிட்டரு, டர்னரு, வெல்டரு ட்ரெயின்ங் மட்டும்தான் கொடுக்கிறோம்.”

“பரவால்ல சார். நீங்க தான் ட்ரெயினிங் கொடுக்கிறீங்கல்ல. அவங்களும் கத்துப்பாங்க.”

“இல்ல சார். அவங்க காண்டக்ட் நம்பர் எங்கிட்ட இல்ல.”

“நான் வாங்கித்தரவா?”

“அவர். இல்ல சார். அவங்க வேற ஊரு. நாங்க இந்த ஊர்ல இருக்கறவங்களுக்கு மட்டும்தான் சொல்லித்தறோம். ஏன்னா எங்க இன்ஸ்டியுட் இங்க தான் இருக்குது. நாங்க தேட்ற ஆளுங்களுக்கு வயசு 30க்குள்ள இருக்கனும் சார். அவங்களுக்கு எல்லாம் வயசு அதிகமா இருக்கும்.”

“வேல எப்படி சார். ஈ.எஸ்.ஐ, பி.எஃப், சம்பளம், நிரந்தரம் (PERMANENT) என எல்லா இருக்கும்தானே?”

“அதெல்லாம் அவங்க கம்பெனி ரூல். அதுல நாங்க தலையிட மாட்டோம். எங்க வேலயே உங்களுக்கு வேல வாங்கி தர்றதோட முடிஞ்சிடும் சார்.”

“அப்ப நீங்க ஆள மட்டும் கொண்டு போய் தள்ளிடுவீங்க. அதன்பிறகு என்ன ஆனாலும் நீங்க கண்டுக்க மாட்டிங்கதானே. கொறஞ்சது ஒருத்தருக்காவது, நிரந்தர வேலை உங்களால் வாங்கித்தர முடியுமா?”

“இல்ல சார். அங்க அவங்களோட பெர்பாமன்ஸ் படி நிரந்தரம் பண்ணுவாங்க.”

“அப்படின்னா நீங்க ட்ரெயினிங் கொடுக்கிறேன்னு சொல்ற பிர்லா கம்பெனியிலேயே 20 வருசமா கான்ட்ராக்டிலதானே வேல செய்றாங்க.”

“இப்பல்லாம் வேல கிடைக்கறதே பெரிய விசயம். இதுல நீங்க பர்மெனட்ன்னு பேசுறீங்களே சார். எதோ எங்களால் முடிஞ்சது வேல வாங்கித்தறோம். அதுவே பெரிய விசயம்.”

“பர்மெனன்ட் இல்லனா கூட பரவால்ல சார். தொடர்ச்சியா அங்கயே வேல கொடுப்பாங்கல்ல.”

“அதுக்கு நான் உத்தரவாதம் கொடுக்க முடியாது சார். அப்படியே உங்கள வேலைய விட்டு தூக்கிட்டா எங்க கிட்ட வாங்க. உங்களுக்கு வேற வேல வாங்கித்தாறோம்.”

“அப்ப இப்படியே ஒவ்வொரு கம்பெனியா சுத்திக்கிட்டே இருந்தா எப்பதான் சார் நாங்க செட்டில் ஆகுரது” என்று கேட்டவுடன், பதில் சொல்ல முடியாமல் ரொம்ப நேரம் யோசித்து விட்டு

“ஓகே சார் உங்களுக்கு வாய்ப்பிருந்தா யாரையாவது அனுப்புங்க” என கூறிவிட்டு ( இந்த விவாதம் சென்று கொண்டிருந்த போதே கூட வந்த அனைவரும் ஒவ்வொருத்தராக சென்றுவிட்டனர் ) வந்த வழியே அவர்கள் சென்று விட்டனர்.

சமீபத்தில், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணத்தை உயர்த்துவது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்தியதையும், மின்சாரத்துறை நட்டத்திற்கு காரணம் அரசு தனியாரிடம் மின்கொள்முதல் செய்வது தான் என்பதை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை ஒத்துக்கொள்ள வைத்ததையும் மனித உரிமை பாதுகாப்பு மையம், புரட்சிகர அமைப்புகளான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் போராட்டம் தான் மக்களிடம் அம்பலப்படுத்தியது.

மின்கட்டண உயர்வு மட்டுமல்ல மற்ற எல்லா பொருள்களின் விலைவாசி உயர்வு, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் தற்கொலை என மக்களின் கழுத்தை நெறிக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் அரசின் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் தான்.

மக்களின் பிரச்சனைகளுக்கு காரணம் யார்? அதற்கு தீர்வு என்ன? இந்த அரசு யாருக்கானது? என்பதை மக்களுக்கு புரிய வைத்து, மக்களை அரசியல்படுத்தி அரசுக்கு எதிராக மக்களை கேள்வி கேட்க வைத்து போராட வைப்பதே இன்றைய தேவையாக உள்ளது. அதை விடுத்து, பிரச்சனைக்கான காரணத்தை உணராத வகையில் திசை திருப்பி எதிர்த்து கேள்வி கேட்காத வண்ணம் மக்களின் போர்க்குணத்தை மழுங்கடித்து அடிமைகளாக்கும் வேலையை இது போன்ற பல்வேறு மத நிறுவனங்களும், என்.ஜி.ஓ.க்களும் செய்து வருகின்றன.

– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கும்மிடிப் பூண்டி.

வேடிக்கை பார்த்தால் வெள்ளாறு செத்துவிடும் !

0

vellaru-devankudi-notice

டலூர மாவட்டம், விருத்தாசலம் அருகிலுள்ள வெள்ளாற்றுப் பகுதியில் மணல்கொள்ளையால் பாதிக்கப்பட்டு குண்டும் குழியுமாக மாறிய தேவங்குடி, பவழங்குடிக்கு செல்லும் சாலையைப் பராமரிக்காத, புதிதாக சாலை போடாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்,

  • வெள்ளாற்று மணல் கொள்ளையில் ரூ 150 கோடி மோசடிக்கு உடந்தையான அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது கிரிமினல் வழக்குப் போடு-சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடு

என்பதை வலியுறுத்தியும் கடந்த 26-12-2014 வெள்ளியன்று காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை கருவேப்பிலங்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

vellaru-demo-1வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கமும், மனித உரிமை பாதுகாப்பு மையமும் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாதிக்கப்பட்ட கிராமங்களிலிருந்து டிராக்டர்களில் திரண்டு வந்த பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். இவை தவிர அங்கு கூடிய பிற பகுதி மக்களும் ஆர்வமாக ஆர்ப்பாட்ட உரைகளையும் முழக்கங்களையும் கேட்டனர்.

vellaru-demo-3

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ம.உ.பா.மைய மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் புஷ்பதேவன் தலைமை ஏற்றார். வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மருங்கூர் பஞ்சமூர்த்தி மற்றும் கருவேப்பிலங்குறிச்சி ஓய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோவன், நேமம் சுப்பிரமணி, கார்மாங்குடி அறிவரசன், கோபாலகிருஷ்ணன், சிவபிரகாஷ், மேலப்பாலையுர் சசிகுமார், கீரனூர் ராஜவன்னியன், மருங்கூர் பாலமுருகன் ஓய்வுபெற்ற ஆசிரியர் இராஜகோபால், மதகளிர்மாணிக்கம் தமிழரசன், விருத்தாசலம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பாளர் தோழர் முருகானந்தம், பவழங்குடி ஓய்வுபெற்ற ஆசிரியர் சிறுத்தொண்ட நாயனார், உழவர் மன்றத்தைச் சேர்ந்த தெய்வக்கண்ணு  ஆகியோர் பேசினர்.

வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 11 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை மக்கள் கூடி நின்று கலையாமல் உரைகளைக் கேட்டனர்.

vellaru-demo-4இறுதியாக ம.உ.பா.மைய மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ உரையாற்றினார்.

மணல்கொள்ளையர்களுக்கு அதிகார வர்க்கம் எப்படி துணைபோகிறது, கொள்ளையைத் தடுக்க வேண்டிய கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளே எப்படி உடந்தையாகச் செயல்படுகிறார்கள் என்பதையும், இவர்கள் மீது வழக்கு தொடுத்து தண்டிப்பதற்கு இவர்களிடமே மனு கொடுத்து நாம் போராட வேண்டியிருக்கிறது என்பதையும் விளக்கியதுடன் அதிகார வர்க்க்மும் அரசியல்வாதிகளும் மக்களுக்கு தேவையற்ற சதைப்பிண்டங்களாக இருப்பதோடு, நமக்கு எதிராகவும் செயல்படுகின்றனர் என்பதை எளிமையாக விளக்கிப் புரிய வைத்தார்.

“இவர்கள நம்பிப் பயனில்லை. மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை எஸ்.பி. வனத்துறை, கனிம வளத்துறை, வருவாய்த்துறை என மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய இந்த அதிகார வர்க்கமோ மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்றனர்” என்பதை விளக்கிப் பேசியபோது மக்கள் கைதட்டி ஆரவாரித்து ஆதரவளித்தனர்.

“மந்திரி வருகிறார் என்றால் சாலைகளைச் சரிசெய்யும் அதிகாரிகள் லட்சக்கணக்கான மக்கள் போகும் சாலைகளைச் சரிசெய்யாத்து ஏன்? மந்திரிகளால் மக்களுக்கு ஏதாவது பலனுண்டா? எம்.எல்.ஏ., எம்.பிக்களால் மக்களுக்கு ஏதாவது நல்லது நடந்த்துண்டா? மக்களின் பிரச்சினைகளைக் காது கொடுத்துக் கேட்கவாவது செய்கின்றார்களா?” எனக் கேள்வி எழுப்பி, இந்த மக்கள் விரோத அரசமைப்பை அம்பலப்படுத்தினார்.

“ரோடு போடவில்லை எனில் அடுத்த கட்டமாக நெடுஞ்சாலைத்துறையை முற்றுகையிடுவோம்” என்று விளக்கிப்பேசினார்.

மணல் அள்ளுவதில் நடக்கும் சட்டவிரோதச் செயல்களையும் இதற்குத்துணைபோகும் அதிகாரிகளின் தேசத்துரோகத்தையும் தோலுரித்து, உடனடியாக வழக்குப் பதியவும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவும் வேண்டியதை விளக்கிப் புரிய வைத்தார்.

vellaru-demo-2ஆர்ப்பாட்டத்தில் பேசிய விவசாயிகள் “வெள்ளாறு எங்கள் ஆறு என்பதை அடிக்கடி சொல்லிப்பாரு. இது நமது பகுதியில் ஓடுகிறது. இதற்கு நாம்தான் உரிமையாளர்கள். நாம்தான் பயனடைகிறோம். ஆற்று மணல்கொள்ளையால் ஆற்றுநீர் பாதிப்படைகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. இதன் காரணமாக கடல்நீர் உள்ளே வரும். விவசாயம் பாதிக்கப்படும். குடிநீர் கிடைக்காது. எனவே நாம் எச்சரிக்கையடைந்து மணல்குவாரியை மூடியே ஆக வேண்டும். மணல்குவாரியை நிரந்தரமாக மூடும்வரை நாம் போராடியே தீரவேண்டும்” என ஆதங்கத்துடன் பேசினர்.

ஆறு சாகிறதே என விவசாயிகளின் தனது வேதனைகளை அங்கே வார்த்தைகளில் வடித்தனர். இது, தொடர்ச்சியான மக்களது போராட்டத்தின் வீச்சு.

ஆர்ப்பாட்டத்திற்கு நிதி கொடுங்கள் என்று அறிவித்தவுடனே பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்களும் தங்களது பெயரையும் ஊரையும் சொல்லி 50, 100 என கையில் உள்ளதை அள்ளித்தந்தனர்.

வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கமும் மனித உரிமைப் பாதுகாப்பு இயக்கமும் மனித உரிமை பாதுகாப்பு மையமும் ஒவ்வொரு கிராமத்திலும் பிரச்சாரம் செய்ததை ஒட்டி கிராம மக்களும், பெருமளவில் பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

vellaru-devankudi-banner

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாச்சலம்

முந்தைய பதிவுகள்