Sunday, June 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 621

அரசையும் அமைச்சரையும் பணிய வைத்த புமாஇமு போராட்டம்

0

சென்னை இராயபுரம் விடுதி மாணவிகளுக்கு நியாயம் கேட்டு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் நடந்த மாணவர் போராட்டத்திற்கு வெற்றி!

  • இராயபுரம் அரசு ஆதிதிராவிட மாணவியர் விடுதியில் மேற்கூரை இடிந்து  விழுந்து இரண்டு மாணவிகள் படுகாயம்!
  • புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி போராட்டத்தால் பணிந்தது ஆதி-திராவிட நலத்துறை

புமாஇமு ஆர்ப்பாட்டம்

சேரிகளாக புறக்கணிக்கப்படும் அரசு ஆதிதிராவிடர் விடுதிகள்

பெரும்பான்மை உழைக்கும் மக்களை சூத்திரர்  என்றும் பஞ்சமர், சண்டாளர்  என்றும் இழித்துரைத்து அவர்களை கல்வி கற்கவிடாமல், கல்வியின் நறுமணத்தைக் கூட நுகரவிடாமல் தடுத்து ஊருக்கு வெளியே குடிக்க தண்ணீர் இல்லாமல், பிழைக்க நிலம் இல்லாமல், ஏன்? செத்தால் புதைக்க சுடுகாடு கூட இல்லாமல் ஒதுக்கி வைத்து அவர்களை அடக்கி ஒடுக்கியது பார்ப்பனீயம். இன்று நான் ஒரு பாப்பாத்தி என்று சட்டமன்றத்திலேயே அறிவித்துக்கொண்ட ஜெயா தலைமையிலான அதிமுக அரசு தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதிகளை புறக்கணிக்கப்பட்ட சேரிகளாகவே நடத்துகிறது. “எங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை” என்று முறையிடும் மாணவர்களிடம்  “கவர்மெண்டு ஆஸ்டல்னா அப்படித்தான் இருக்கும், ரொம்ப துள்ளாதீங்க….. அப்பறம் படிப்பும் போயிடும்” என்று சாதி ஆதிக்க மனோபாவத்துடன் கலெக்டர் அலுவலக உயர் அதிகாரிகள் மிரட்டுகிறார்கள் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மாணவிகள்.

royapuram-girls-hostel-rsyf-05

‘சூத்திரனுக்கு எதுக்கடா கல்வி’ என்று இரண்டாயிரம் ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை மறுத்து வந்த பார்ப்பனீய மனுநீதியின் தொடர்ச்சியாக இன்றும் கூட உழைக்கும் மக்களின் பிள்ளைகள் படிக்கின்ற அரசுக் கல்லூரிகளும், அவர்களுக்கான விடுதிகளும் இந்த அரசால்  சேரிகளைப் போன்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

மாணவிகளின் உயிரை பறிக்கத் துடிக்கும் அரசின் அலட்சியம்

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு என்று சென்னையில் உள்ள 6 விடுதிகளில் ஒன்று, ராயபுரம் மாணவிகள் விடுதி. சென்னையில் உள்ள 10-க்கும்மேற்பட்ட அரசுக்கல்லூரிகளில் பயிலும் தலித் மாணவிகளின் ஒரே புகலிடம் இந்த விடுதிதான். சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ள இவ்விடுதி பார்ப்பதற்கு அகதிகள் முகாம் போன்றே உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித பராமரிப்பும் இன்றி பாழடைந்த கட்டிடங்கள் மட்டுமே விடுதியாக இயங்குகிறது.

வயது வந்த மாணவிகளுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளை இவர்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. கல்லூரிக்கு செல்லும் போது வீடுகளில் இருந்து வரும் சக நண்பர்களான மாணவிகளை பார்த்து அவர்களைப் போல் நாம் இருக்க முடியவில்லையே என்ற இந்த ஏக்கத்தை எருமை மாட்டுத்தோல்களைக் கொண்ட அதிகாரிகளால் உணர முடியாது. திடகாத்திரமான உடல் அமைப்புடன் இந்த விடுதிக்கு வந்த கிராமத்து ஏழை மாணவிகளின் ஆரோக்கியத்தை விடுதி உணவும், சூழலும் பறித்துக்கொண்டது என்றால், மிச்சம் இருக்கும் உயிரையும் பறிக்கப் பார்க்கிறது அரசின் அலட்சியம்.

royapuram-girls-hostel-rsyf-10

மூன்று நாட்களுக்கு முன்பு ராயபுரத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மாணவிகள் தங்கியுள்ள விடுதியில் அறையில் மேற்கூரை இடிந்து விழுந்து கலைவாணி, விநாயகசெல்வி எனும் இரண்டு மாணவிகள் படுகாயமடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு அறைக்கு ஒட்டுப்போடும் நாடகத்தை அரங்கேற்றியது அரசு.

ஆனால், மாணவிகளின் கோரிக்கை உயிருக்கு உத்தரவாதம் வேண்டும் என்பது. “ஏற்கனவே வேப்பேரியில் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள விடுதிக்கு மாற்ற வேண்டும்” என்கிறார்கள் மாணவிகள். அந்த விடுதியை திறக்க மறுக்கிறது அரசு. காரணம் ’அம்மா’ முதல்வராக இருந்தபோது கட்டிய அந்த விடுதியை அவர் கையால் திறக்க திட்டமிடப்பட்டதாம். தற்போது பதவி இழந்ததால் திறக்கும் திட்டமில்லையாம். மீண்டும் ’அம்மா’ பதவிக்கு வந்தால்தான் இந்த மாணவிகளுக்கு விடிவுகாலம் பிறக்குமாம். எவ்வளவு வக்கிரம் இது. இந்த வக்கிரத்திற்கு கொடுக்கப்பட்ட பலிதான் இரண்டு மாணவிகள் படுகாயம்.

தமிழகத்தின் பல்வேறு மூலைகளில் இருந்து வருகின்ற பல ஆயிரம் உழைக்கும் மக்கள் வீட்டு மாணவர்களின் புகலிடம் அரசுக் கல்லூரிகளும், அரசு விடுதிகளும்தான். ஆனால் அவை அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்படாமல், கழிவறை இல்லாமல், குளியல் அறை இல்லாமல், சரியான உணவு இல்லாமல், மோசமான முறையில் தான் உள்ளன. அரசுக்கு இதெல்லாம் தெரியும்.

ஆனால், “இவனுக்கெல்லாம் படிப்பா ?” என்று ஒரு தாழ்த்தப்பட்ட மாணவன் படிப்பதைப் பார்த்து சாதி வெறியன் கொக்கரிப்பது போலவே நம்மைப் போன்ற உழைக்கும் மக்களின் பிள்ளைகள் படிக்கும் கல்லூரிகளையும், அவர்களுக்கான விடுதிகளையும் இந்த அரசு பார்க்கிறது. அதனால் தான் போதிய நிதி ஒதுக்குவதில்லை. அது மட்டுமல்ல, மாணவர்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகையையும் தராமல் இழுத்தடிக்கிறது.

royapuram-girls-hostel-rsyf-08

‘பஞ்சப்பராரிகளுக்கு,  எதற்கு கக்கூசு’  என்று தான் நம்மை ஒதுக்குகிறது அரசு. ஐ.ஐ.டி விடுதிகளையும் மத்திய பல்கலைக் கழக விடுதிகளையும், நன்றாகப் பராமரிக்கும் அரசு உழைக்கும் மக்கள் வீட்டுப் பிள்ளைகள் தங்கி படிக்கும் விடுதிகளை கண்டுகொள்வதில்லை.

நரகமயமான விடுதி வாழ்க்கை

இப்படி எந்த அடிப்படை வசதியும் இல்லை  என்றாலும் எப்படியாவது படித்து உழைத்து முன்னேறி விடலாம் என்ற லட்சியத்துடன் தான் பல்லாயிரம் மாணவர்கள் இந்த விடுதிகளை நோக்கி வருகின்றனர். கழிப்பறை இல்லை, குடிநீர் இல்லை, குளிக்க அறை இல்லை, படுக்கும் அறையில் இடமில்லை என எப்பேர்பட்ட இடர்பாடு வந்தாலும் இந்த நெருப்புக் கடலில் நீந்தி, அதிலேயே வாழ்ந்து எப்படியும், மூன்றாண்டு, அல்லது இரண்டாண்டு படிப்பை முடித்துவிடலாம் என்று மாணவர்கள் போராடுகின்றனர். அதனால், இவற்றை சகித்துக் கொள்கின்றனர்.

பல விடுதி மாணவர்கள் ஒருவேளை நல்ல சாப்பாடு கிடைக்கும் என்பதற்காக பல கனவான்களின் திருமணங்களிலும், விசேசங்களிலும் சமையல் மற்றும் பந்தி பரிமாறல், பாத்திரம் கழுவும் வேலைக்கு போகிறார்கள். தங்களைப் பராமரித்துக் கொள்ள ஊரில் இருந்து பணம் எதிர்பார்த்து பெற்றோருக்குப் பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக மாணவர்கள் பகுதி நேர வேலைக்குச் செல்கிறார்கள். இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் விடுதி மாணவர்களை காவல் தடிகள் குற்றவாளிகளாகவும், பொறுக்கிகளாகவும் சித்தரித்து அவர்களை சந்தேகக் கேசு போட்டு துன்புறுத்துகிறார்கள். கல்லூரியில் மாணவர்கள் பகுதிநேர வேலைக்கும் போகக் கூடாது என்று சொல்கிறார்கள். இப்படி பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் விடுதி மாணவர்கள் வாழ்கிறார்கள். மாணவர்களுக்கு இந்த நிலை என்றால் மாணவிகளின் நிலை சொல்லி மாளாது.

royapuram-poster

மாணவர்கள் தங்கள் பராமரிப்பிற்காக பகுதி நேர வேலைக்கு செல்ல முடியும். கேட்டரிங் வேலை செய்து ஒரு வேளை நல்ல சோறு சாப்பிட முடியும். ஆனால் மாணவிகளுக்கு இந்த வாய்ப்புகள் கூட குறைவு. அதையும் தாண்டி வேறு வழியே இல்லை எனும் போது, சூப்பர்மார்க்கெடுகளிலும், பேன்சிஸ்டோர்களிலும் அற்பக் கூலிக்கு வேலைக்குச் செல்வது என்று உள்ளது. அங்கும் கூட பாதுகாப்பான சூழல் இல்லை. வேலியில்லா பயிராகவே இவர்களைப் பார்க்கிறது சமூகம். அப்படி வேலைக்குச் சென்றாலும், அதனை வீட்டிற்கு தெரிவிப்பது கிடையாது. ஊருக்குப் போய் வரும் போது பிள்ளைகளுக்கு வழிச்செலவுக்கு 200 ரூபாய் கூட கொடுத்தனுப்ப முடியாத  ஏழைப் பெற்றோர்கள் எப்படி இவர்களுக்கு மாதாமாதம் பணம் அனுப்ப  முடியும்? இப்படி துன்பகரமான சூழலில் தான் பல ஆயிரம் முதல் தலைமுறை மாணவ மாணவியர்கள் விடுதிகளில் தங்கிப் படிக்கிறார்கள். இப்படி இவர்களின் பிறவிப் பெருங்கடல் நெருப்பால் ஆனதாகத் தான் உள்ளது.

ஆனால் அவர்கள் நரக வாழ்க்கை வாழும் இதே நகரங்களில் தான் எந்த நேரமும் கேட்டதெல்லாம் கிடைக்கும் வசதியுடன் தனியார் விடுதிகளைப் பார்க்க முடிகிறது. பல ஆயிரம் ரூபாய் வாடகையாகத் தந்து அப்பார்ட்மெண்ட்களில் தங்கி மாதச் செலவுகளுக்கு வீடுகளில் பணம் வாங்கும் மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் செலவுக்கு வழங்கும் பெற்றோரும் படிக்கிற பிள்ளைகளுக்கு  எதற்கு கஷ்டம் என்று காரணம் சொல்லுகின்றனர். பள்ளியில் படிக்கும் போதே பிள்ளைகளை மதிப்பெண் எடுக்கும் எந்திரமாக மாற்றி எப்படியாவது அரசு ஐ.ஐ.டியிலும், மத்தியப் பல்கலைக் கழகங்களிலும், மருத்துவப் படிப்பிலும் சீட்டு வாங்கிவிடவேண்டும் என்று போராடுகின்றனர். இடஒதுக்கீடு திறமை இல்லாதவர்கள் எல்லாம் கொண்டு வருகிறது என அங்கலாய்க்கின்றனர்.

ஆதிக்க சாதிக் காரன் குடிநீர் கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாது  என்றும் சொல்லிவிட்டு தாழ்த்தப்பட்டவர்கள் அழுக்கானவர்கள் குளிக்கமாட்டார்கள் என்று கூறுவது போல அரசுக் கல்லூரியின் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களை இவர்கள் பார்க்கிறார்கள். பட்டப்படிப்பு முடிந்தாலும் தன்வீட்டுப் பெண்களை வேலைக்கு அனுப்பக்கூடாது என நினைக்கும் இவர்கள் எப்படி இந்த விடுதி மாணவிகளின் வாழ்நிலையை உணர்வார்கள்.

மனுகொடுத்து மன்றாடிய விடுதி மாணவர்கள் – எட்டிக்கூட பார்க்காத அதிகாரிகளின் அலட்சியம்

இப்படி இந்த மாணவர்கள் படுகின்ற துன்பங்கள் இந்த அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இல்லை.

அதிகாரிகளுக்கு அனைத்துப் பிரச்சனைகளும் தெரிந்து தான் இருக்கிறது. ஆனாலும் இவர்களின் எருமைத் தோலுக்கு எதுவும் உறைப்பதில்லை. மாணவர்கள் மனு கொடுத்தால் சரிசரி என்று தட்டிவிட்டுச் செல்லுகின்றனர். படுக்கை அறை முதல் கக்கூசு வரை ஏ.சி. போட்டு குளுகுளு என்று இருப்பவர்களுக்கு எப்படி மாணவர்களின் துன்பம் உறைக்கும்? உறைக்காது. மாணவர்களைப் போன்று அவர்கள் பலர் பார்க்கும் வகையில் குளித்தால்  தெரியும் இந்த அவமானம். குளுகுளு அறையில் நீர்த்தொட்டியில் குளிப்பவர்களுக்கு இது அலட்சியமாகத் தான் தெரியும்.

அதிகாரிகளைக் கண்காணிக்கும்  இந்த அரசுக்குத் தெரியாதா? அனைத்தும் தெரியும். ஆனால் இந்த அரசிற்கு பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்குத் தரவும், கல்வி நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்குமே நேரம் சரியாக இருக்கிறது. அதையும் தாண்டி சிந்தித்தால் ஜெயி(ல்)லலிதா வின் விடுதலை பற்றியோ தான் யோசிக்க முடிகிறது. இது போன்ற வேலைகளில் இவர்கள் அரசு விடுதி மாணவர்களைப் பற்றி சிந்திக்க ஏது நேரம்?

போராட்டம் ஒன்றே விடிவெள்ளி

ஆம்! மாணவர்களின் போராட்டங்கள் ஒன்றே தீர்வு, அதுவும் அதிகாரிகளுக்கு உறைக்கும் வகையிலான போராட்டம் மட்டுமே தீர்வு. அது போன்ற போராட்டங்களை எந்த ஓட்டுக் கட்சியும் நடத்தமுடியாது. அவர்களுக்கு அந்த தகுதியும், யோக்கியதையும் இல்லை. எங்களைப் போன்ற புரட்சிகர அமைப்புகள் தான் செய்ய முடியும். ஆம் அந்த விதத்தில் தான் எங்களுடைய அமைப்பின் சார்பாக மாணவர்களை அணிதிரட்டி சென்னை கடற்கரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து முழக்கமிட்ட படியே சென்று கலெக்டர் அலுவலகத்தின் முன்பு திடீர் என ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

royapuram-girls-hostel-rsyf-07

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, பாழாய்போன தேர்வின் காரணமாக பல நூறு மாணவர்களை அணிதிரட்ட முடியாமல் போகக் கூடிய துரதிஷ்டமான நிலை இருந்த போதிலும் நூறு மாணவர்களை வைத்து எமது அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டமும் அதில் போடப்பட்ட முழக்கங்களும் எருமைத் தோல் படைத்த அதிகாரிகளுக்கு உறைக்கும் வகையில் இருந்தது.

எமது அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் கண்டன உரையாற்றினார். அதன்பின்னர் அந்த மேன்மக்கள் உழைக்கும் மக்களின் பிரதிநிதிகளான எங்களை சந்திக்க ஒத்துக் கொண்டனர். பல அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் இருந்த இடத்தில் எமது தோழர்கள், “ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து விடுதிகளையும் சீரமைத்துக் கொடுக்க வேண்டும். உடனடியாக இராயபுரம் விடுதியை சீரமைக்க வேண்டும்” என்றதும் சொன்னதற்கு சரி என்று சொன்னார்.

chennai-collectorஆனால், “இதுபோன்ற பதில்களை பலமுறை நாங்கள் கேட்டு விட்டோம்”, என இராயபுரம் ஆண்கள் விடுதியின் பிரதிநிதி சொன்னதும் பு.மா.இ.மு தோழர்கள் “இந்த இடத்திலேயே நாள் உட்பட்டு தெளிவான பதிலை சொல்லுங்கள்” என்று நெருக்குதல் தந்த பிறகு இன்னும் 15 நாட்களுக்குள் செய்து விடுவதாக உறுதி அளித்தனர். அந்த அடிப்படையில் வெளியில் வந்து ஆர்ப்பாட்டத்தில் காத்திருந்த மாணவர்களிடம் தகவல் சொல்லப்பட்டது. விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

அதன் பின்னர் காயமடைந்த மாணவர்களுக்கு ஆர்ப்பாட்டத்தகவலை சொல்லச் சென்றோம். விடுதியில் உணவு இடைவேளை என்பதால் மாணவிகள் அனைவரும் அவரவர் அறைகளில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அந்த விடுதியின் காப்பாளர் நம்மை பார்த்து பயமடைந்தார்; பேசுவதற்குத் தயங்கினார்.

அவரிடம் நாம் நடத்திய ஆர்ப்பாட்டத்தைப் பற்றியும், ஆட்சியரை சந்தித்தது பற்றியும் விளக்கினோம். “காப்பாளர் என்ற முறையில் நீங்கள் மாணவிகளுக்குத் தான் பொறுப்பு, ஆனால் கட்டிடத்தை பராமரிக்காததற்கு காரணம் இந்த அரசு தான். எனவே எங்களுக்கு நீங்கள் தனிப்பட்ட எதிரி இல்லை. ஆனால், நம் அனைவருக்குமே இந்த அரசும் அது அமுல் படுத்திவரும் தனியார்மய, தாராளமயக் கொள்கைதான் எதிரி” என்றதும்,

அவராகவே “ஆமாம், விடுதியில் சுத்தம் செய்யும் வேலைக்குக் கூட நிரந்தர ஆட்கள் இல்லை. அதற்குக் கூட தனியார் நிறுவனம் தான் காண்ட்ராக்ட் விடுகிறது. இதனையாரும் பேசுவதில்லை” என்று அவரது ஆதங்கத்தைக் கொட்டினார். “இதுபோன்ற விபத்து ஏற்படும் என்பதால் உடனே இவற்றை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என பலமுறை சொல்லியுள்ளேன். ஆனால் அப்போதெல்லாம் யாரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்று நீங்கள் போராட்டம் நடத்தியுள்ளீர்கள்  என்பதற்கு நன்றி” என்று கூறினார்.

பின்னர் போராட்டத்திற்கு ஆதரவளித்து வந்த ஆண்கள் விடுதி மாணவர்களிடம் இந்தப் போராட்டத்தை தொடர வேண்டியதன் அவசியத்தைப் பற்றி விளக்கிவிட்டு காயமடைந்த மாணவிகளைச் சந்திக்க மாணவியர் விடுதிவழியாகச் சென்றோம். விடுதியினை ஆதிதிராவிட நலத் துறை அமைச்சர் பார்வையிட்டு சென்றார் என்று தகவல் கிடைத்தது.

மருத்துவமனையிலும் எமது பெண் தோழர்கள் இரண்டு நாட்களாக காயமடைந்த மாணவிகளுடன் துணையாக இருந்து வருகின்றனர். மருத்துவமனைவளாகத்தில் இவர்களைப் பார்ப்பதற்காக 25-க்கும் மேற்பட்ட தோழர்கள் காத்துக் கொண்டு இருந்தனர். அப்போது மாணவிகள் காயமடைந்து இரண்டு நாட்கள் ஆன பிறகு அமைச்சர் பார்வையிட வந்தார். உடன் அவருடைய அல்லக்கைகளும், காவல் துறையும், மின் தூக்கியில் சென்று மாணவிகளைப் பார்த்தனர். அதுவரை எமது தோழர்களை காத்திருக்கச் செய்தனர். ஆனாலும் “அவரை நம்பி ஓட்டுப் போட்ட மக்களை அவர் மதிக்காமல் இருக்கலாம். ஆனால் அந்த மக்களை மதிக்க வேண்டும்” என்று எமது தோழர்களும் மாணவர்களும் அமைதியாக, பொறுமையாக இருந்தனர்.

minister-subramanianஅதன் பிறகு வந்த அமைச்சர், ஜெயாவின் தரிசனத்துக்காக பெங்களூரு நீதிமன்றத்தின் வாசலில், கை கட்டி மெய்மறந்து காத்திருந்த அமைச்சர் அங்கு நின்றிருந்த எமது தோழர்களை கண்டு கொள்ளாமல் செல்ல முயன்றார்.  “நாங்கள் தான் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியிணர். இவர்தான் எங்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்” என்று கூறியதும் சரிப்பா என்று ஓட்டம் பிடிக்கப் பார்த்தார்.

“எங்களை பார்த்து ஏன் பதில் பேசாமல் இப்படி செல்கிறீர்கள்” என்றதும், போலீசு, “அமைச்சரை நீங்கள் ஏதாவது செய்துவிடுவீர்கள் என்று தான் பேசாமல் செல்கிறோம்” என்றார். அப்போது தான் இவர்கள் தங்கள் நிழலைக் கூட பார்த்து பயப்படும் அளவிற்கு வீரமானவர்கள், எப்படி நம்மைப் போன்ற புரட்சிகர அமைப்பினைச் சந்தித்தால், நிற்பார்கள் என்பது நினைவுக்கு வந்தது.

அதன் பின்னர் காயமடைந்த மாணவிகளைச் சந்தித்து நமது ஆர்ப்பாட்டச் செய்திகளைத் தெரிவித்தோம். அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் கிடைக்கவும், போராடியுள்ளோம் என்று சொன்னதும், அந்த மாணவியின் தாய் “இந்த ஊரில் எங்களுக்காக நீங்கள் வந்துள்ளீர்கள், மிக்க நன்றி” எனக் கூறினார்.

“இது எங்களுடையகடமை மாணவர் உரிமை எங்கு பாதித்தாலும் எமது பு.மா.இ.மு – அங்கு அவர்களுக்காக நிற்கும்” என்று கூறினோம்.

rsyf-hospital-visit-5

“நீங்கள் எல்லாம் போராடியதன் விளைவுதான் இன்று அமைச்சரே நேரில் வந்து எங்கள் பிள்ளைகளைப் பார்த்தது மட்டுமில்லாமல் தரமான மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்று உறுதிஅளித்துவிட்டு சென்றுள்ளார்” என்று அவர் கூறினார்.

ஒரு மாணவி தனக்கு அடிபட்டதை அவரது பெற்றோரிடம் கூட சொல்லவில்லை. அவரது அம்மாவிற்கு வலிப்பு நோய் இருப்பதால், அதிர்ச்சியான வற்றை சொல்லக்கூடாது.  எனவே, அவரது சக தோழியும், தோழர்களும் தான் இவருக்கு துணையாக இருந்துள்ளனர்.

மற்றொரு மாணவியின் பெற்றோர், “இது போன்று தான் எங்களிடம் இவர்கள் படும் கஷ்டங்களை பற்றி சொல்வதே இல்லை.  சொன்னால் கல்லூரிக்கு அனுப்பாமல் இருந்து விடுவோமோ என்று பயப்படுகின்றனர், வேறு இடத்தில் தங்க வைக்க சென்னையில் சொந்தக்காரர்கள் யாரும் இல்லை. வெளியில் தங்க வைக்கும் அளவுக்கும் எங்களுக்கு வசதியில்லை. ஊருக்கு வந்து போகக் கூட 100 அல்லது 200 ரூபாய் தான் கொடுக்க முடிகிறது, ஒரு நல்லது கெட்டது  என்றால் கூட நல்ல சாப்பாடு போட முடிவதில்லை. இது தான் எங்கள் நிலை” என்று அந்தத் தாய் உடைந்து பேசினார். “கை, காலில் அடிபட்டிருந்தால் கூட சரியாகிவிடும் என்று விட்டுவிடலாம், கழுத்திலே பலமான அடி என்று சொல்கிறார்கள் அது தான் எங்களுக்கு பயமாக உள்ளது” என்று கண்ணீர் சிந்தினார்.

“தரமான மருத்துவ வசதி அளிப்பதாக அவர்கள் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றும் வரை  உங்களுக்குத் துணையாக இருப்போம்” என்றோம். “இந்தப் போராட்டம் மட்டும் இல்லையென்றால், இந்த அளவிற்குக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்” என்றார் அந்தத் தாய்.

rsyf-hospital-visit-2நாங்கள் வரும்வரை காத்திருந்த விடுதிக் காப்பாளர், எமது தோழர்களைச் சந்தித்து “நீங்கள் என்னைச் சந்தித்துச் சென்ற 10 வது நிமிடம் அமைச்சரும் அதிகாரிகளும் வந்தார்கள். எப்போது பார்வையிடுவது என்றாலும் 5 – 10 நிமிடம் தான் நடக்கும், ஆனால் இன்று ½ மணி நேரம் அமைச்சரும், அதிகாரிகளும் பார்வையிட்டனர். கட்டிடம் மேற்கூரை இடிந்த இடத்தில் பூச்சுவேலைகளைப் பார்வையிட்டவர்கள் கொடியில் ஏன் துணிகள் காய்கின்றன. என்ன  இது எனச் சத்தம் போடுகின்றனர். குப்பைத் தொட்டியே தராத இவர்கள் குப்பையாக இருக்கிறது என்று குறை சொல்லுகிறார்கள். மாணவர்களைப் பராமரிக்க போதிய காப்பாளர்களை அரசு நியமிப்பதில்லை. இப்போது கூட பார்வையிடச் சென்ற அமைச்சர், படுத்திருந்த மாணவியிடம் என்ன ஆச்சு என்றதற்கு , சளி பிடித்துள்ளது என்று அந்த மாணவி பதில் அளித்ததும், என்ன கவனிக்கிறீர்கள் என்று சத்தம் போட்டுவிட்டுச் சென்றார்.  ஆனால் நான் இரண்டு நாட்களாக இந்த மாணவிகளுடனேயே தான் இருந்து வருகிறேன். இதையெல்லாம் இந்த அமைச்சரும், அதிகாரிகளும் கண் திறந்து பார்ப்பதில்லை” என்று அவரது ஆதங்கத்தைக் கொட்டினார்.

“இறுதியாக இந்த விடுதி வேப்பேரியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள விடுதிக்கு இடமாற்றம் இன்னும் 2, 3 நாட்களில் செய்யப்படும் என்று உறுதி அளித்துவிட்டுச் சென்றார்”  எனக் கூறினார்.

rsyf-hospital-visit-4

இந்த அரசே இப்படித்தான் செயல்படுகிறது, பிரச்சனை என்று வராதவரை அதைப்பற்றி ஒன்றும் கண்டு கொள்வது கிடையாது. பிரச்சனை ஏற்பட்டால் உடனே கீழ்நிலை அதிகாரிகளைத் தண்டிப்பது என்று செய்து தற்காலிக கண் துடைப்பு நாடகங்களை நடத்துகிறது. இராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், “நான் தினமும் இந்த வழியாகத் தான் போகிறேன் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே” என்று நைச்சியமாக பேசுகிறார். ஏன் இவர் தினமும் வீட்டுக்கு போகும் வழிதானே, இவரது தொகுதிக்குட்பட்ட விடுதிதானே, ஒரு நாள் இவர் எட்டிப் பார்த்து இருக்கலாமே!

நமது போராட்டங்கள் தான் போயஸ் தோட்டத்து காவலர்களையும் எருமைத் தோல் அதிகாரிகளையும் மக்களைச் சந்திக்க அழைத்து வந்திருக்கிறது. ஆம் எண்ணிக்கை என்பதை விடவும் போராட்டத்தின் தலைமை யாரிடம் இருக்கிறது, புரட்சிகர அமைப்புகளிடமா? அல்லது ஓட்டுப் பொறுக்கி அமைப்புகளிடமா? என்பது தான் கேள்வி. மருத்துவமனையில் அமைச்சர் பயந்து போகக்காரணம் எண்ணிக்கை இல்லை. நமது அரசியல் பின்புலமே வலிமை.

இதை ஒரு தற்காலிக வெற்றியாகத் தான் பார்க்கிறோம். அனைத்து அரசுவிடுதிகளையும் சீரமைக்கும் வரையிலும் அனைவருக்கும் இலவசக் கல்வி கிடைக்கும் வரையில் எமது போராட்டங்கள் தொடரும்.

மாணவர்களே! இளைஞர்களே! உழைக்கும் மக்களே! புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள்வீர்!

தாழ்த்தப்பட்ட விடுதி மாணவர்களே!

  • பாழடைந்துள்ள தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதிகளை உடனடியாக சீரமைப்பு செய்ய மாணவர் கமிட்டிகளை கட்டியமைப்போம்!
  • வீதியில் இறங்கி போராடுவோம்!

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்தி பேரணி, ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை
9445112675

அரவிந்தன் நீலகண்டன் : ஹிட்லர் காதலை போற்றலாமா ?

36

a n cover சென்ற வார தினகரன் நாளிதழின் இலவச இணைப்பான வசந்தத்தில் தமிழக ஆர்.எஸ்.எஸ்சின் ஒரே ”அறிவுஜீவி”யான அரவிந்தன் நீலகண்டனைப் பற்றிய கட்டுரை வந்திருக்கிறது (காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல). அக்கட்டுரையின் குரல் என்னவோ அவரது மனைவி ஃபன்ஷியா தானியலுடையதுதான் என்றாலும் அது அரவிந்தின் பெருமையையே பேசுவதால் அதனை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.

ஒரு தீவிர இந்துத்துவவாதி, 14 வயதில் ஷாகா பயிற்சிக்குப் போனவரான அரவிந்தன் தனது ப்ரொட்டஸ்டண்ட் கிருஸ்தவ மனைவிக்கு முழுமையான மத சுதந்திரம் வழங்கியிருப்பதாக சொல்லி இதுதான் உண்மையான மதநல்லிணக்க வாழ்க்கைக்கு இலக்கணம் என்று அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள்.

சங்கப்பரிவாரத்தைப் பற்றிய எந்த அறிவுமில்லாத ஒருவன் இக்கட்டுரையின் மூலம் அரவிந்தன் நீலகண்டனைப் பற்றி புரிந்துகொள்ளப் போவதில்லை, அது அவனுக்கு அனாவசியம். ஆனால் அவர் வழியே ஆர்.எஸ்.எஸ்சை புரிந்துகொள்வான் என்பதுதான் மிகவும் அபாயகரமானது. மேலோட்டமான பார்வையில் தினத்தந்தி குடும்பமலர் பாணியிலான அந்த கட்டுரையில் என்ன பிரச்சினை என்று சிலருக்குத் தோன்றலாம். ஆயினும் அதில் செருகப்பட்டிருக்கும் ஒரு பத்திதான் நமக்கு எச்சரிக்கை சமிஞ்சையை கொடுக்கிறது.

அரவிந்தனின் மத நம்பிக்கைகையை ஃபன்ஷியா மதிக்கிறார், பன்ஷியாவின் மத நம்பிக்கையை அரவிந்தன் மதிக்கிறார் என விளக்கும் அக்கட்டுரை அதன் பிறகு கீழ்கண்டவாறு நீள்கிறது.

இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றாலே மதவெறியர்கள்… பிற மதத்தை இழிவுபடுத்துபவர்கள் என்ற கருத்து பொதுத்தளத்தில் உருவாகியிருக்கும் சூழலில். மதவெறியர்கள் வேறு,… அவர்கள் எல்லா மத்த்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் விஷக்கிருமிகள். காதலை எதிர்ப்பதும் இவர்கள்தான். சமூகத்தை சீரழிப்பதும் இவர்களேதான். இவர்களுக்கும் உண்மையாகவே தங்கள் மதத்தை நேசிப்பவர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என தங்கள் வாழ்க்கை மூலம் நிரூபித்து வருகிறார்கள்.

இங்குதான் இக்கட்டுரையின் முக்கியமான பிரச்சாரம் இருக்கிறது. இந்துத்துவாவாதிகள் மதவெறியர்கள் இல்லையா? பிறமதத்தை இழிவுபடுத்துவதுதானே இவர்களது தலையாய பணி? சொல்லப்போனால் அந்த இழிவு படுத்தல் பல நூறு சிறுபான்மை மக்களை கொல்லும் ஒரு வரலாற்று நடைமுறை. ஆனால் தவறுதலாக பொதுத்தளத்தில் இப்படியான கருத்துகள் உருவாகிவிட்டதாக எழுதுவதன் உள்நோக்கம் என்ன?

இந்து மதத்தில் வேண்டுமானால் மதவெறியர்கள், மதநல்லிணக்க வாதிகள் இருப்பதாக சொல்லிக் கொள்ளலாம். (அதுவே உண்மையில் பிரச்சினைதான். ஏனெனில் இந்துமத்தின் ஆன்மாவே சாதி என்பதால் அங்கே சமத்துவத்தின் வாசனைக்கு கூட வழியில்லை.) ஆனால் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் ஒருவர் நல்லவர் என்றால் எவ்வளவு அயோக்கியத்தனம். ஆக சங்கபரிவாரம் எனும் பயங்கரவாதிகளை அரவிந்தன் நீலகண்டனது காதல் மனைவியின் முகத்தை வைத்து நல்லவர்கள் என்று காட்டுகிறார்கள் தினகரனது இலவச இதழ் தயாரிப்பாளர்கள்.

இக்கட்டுரை மூன்று கோணங்களில் புரிந்துகொள்ளப்படுவதற்கான வாய்ப்பை வாசகர்களுக்கு வழங்குகிறது. அரவிந்தன் நீலகண்டன் ஒரு மதநல்லிணக்கவாதி, அவரது மனைவி ஃபன்ஷியா ஒரு மதநல்லிணக்கவாதி மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஒரு மதசகிப்புத்தன்மையுள்ள இயக்கம். காவி பயங்கரவாதிகள் இதனை ஒரு ஆதாரமாக பொதுவெளியில் வைக்கும் வாய்ப்பு 100 சதவிகிதம் உண்டு. ஆகவே அரவிந்தினனின் காதல் வாழ்வை நாம் விவாதத்துக்கு உட்படுத்தவேண்டிய தேவை தவிர்க்க இயலாததாகிறது.

ஆர்.எஸ்.எஸ் பார்வையில் இந்தக் காதல் அவர்களது மதவெறி கொள்கைக்கு முரணானது அல்ல. காரணம் குஜராத் கலவரத்தை கண்டிக்காத ஒரு கிருஸ்தவ இந்தியனும், பாபர் மசூதி இடிப்பை கண்டுகொள்ளாத ஒரு இசுலாமிய இந்தியனும் அவர்களுக்கு ஏற்புடையவர்களே. கோல்வால்கரது விதிகளின்படி இவர்களை இந்துக்களாகவே கூட ஏற்றுக்கொள்ள முடியும். அதாவது அல்லாவையோ, ஏசுவையோ தொழுவது பிரச்சினையில்லை. ஆனால் அந்த தொழுகைக்காரர்கள் இந்த நாட்டின் பண்பாட்டை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். சரி, அந்த பண்பாடுதான் என்ன?

ராமன் இந்த நாட்டின் தேசிய புருஷன், சதி மாதாவை போற்றுதல், பசுவை வெட்டி உண்ணாமல் தொட்டு வணங்குதல், ஜகத்குருவை அங்கீகரித்தல், என்று இந்த பண்பாடு ஆரம்பித்து காத தூரம் பல நூறு விதிமுறைகளோடு விரிந்து கிடக்கிறது. இதன்படி காளி, துர்கை என்று வரும் வந்தே மாதரத்தை கூட ஒரு முசுலீம் பாடித்தான் ஆக வேண்டும்.

ஒருவேளை அரவிந்தன் வீட்டுப்பெண் ஒருவர் இந்த இந்து ராஷ்ட்டிர காவாலித்தன்ங்களை எதிர்த்தால் அவர்தான் ஆர்.எஸ்.எஸ்சின் எதிரியாவாரே தவிர ஆர்.எஸ்.எஸ்காரரை ஏற்றுக்கொள்ளும் ஃபன்ஷியா அவர்களுக்கு எதிரியல்ல. இந்த அடிப்படையில்தான் முக்தர் அப்பாஸ் நக்வி பாஜகவில் பொறுப்பில் இருக்கிறார். கீதையை ஆராதித்து காவி தீவிரவாதத்தை கண்டுகொள்ளாத அப்துல் கலாமை இவர்கள் கொண்டாடுகிறார்கள். ஆகவே அரவிந்தனின் கல்யாணத்தில் ஆர்.எஸ்.எஸ் முரண்பட அவசியமேயில்லை.

இணையத்தை பாவிப்பவர்களால் அரவிந்தனையும் ஆர்.எஸ்.எஸ்சையும் தனித்தனியே பார்க்க முடியாது என்பதால் மேற்சொன்னவை அவருக்கும் பொருந்தும். இருப்பினும் வேறு சில அம்சங்களும் நம் பரிசீலனைக்கு உகந்தவையே. உயர் மத்தியதர வகுப்பினரின் பார்வையில் வர்க்கமும் சாதியும்தான் முதலில் வரும். அனேகமாக எல்லா மதங்களிலும் பெண் இரண்டாம்பட்சமே, அவர்கள் தங்கள் சாதி பட்டப்பெயரைகூட திருமணத்துக்குப் பிறகு சுமக்கமுடியாது.

ஆணின் சாதியே அடுத்த தலைமுறைக்கு அடையாளமாகும் என்பதால் தனக்கு நிகரான சாதி மற்றும் வர்கப் பின்னணியுள்ள ஒரு வேற்றுமதப் பெண்ணை ஆண் மணப்பதற்கு உரிய ‘நெகிழ்வு’த்தன்மையை இந்து மதம் கொண்டிருக்கிறது. ஐயர், ஐயங்காரையோ, ரெட்டி நாயுடுவையோ, முதலியார் கொங்கு கவுண்டரையோ, குமரி மாவட்ட வேளாளர் குமரி மாவட்ட பணக்கார நாடாரையோ மணந்து கொள்வதில் பார்ப்பனியத்திற்கு பிரச்சினையே இல்லை.

குமரி மாவட்டத்தில் நாடார் சாதி மக்கள் இந்து, கிறிஸ்தவ மதங்களில் இருந்தாலும் திருமண சம்மந்தம் சர்வ சகஜம். இருப்பினும் மண்டைக்காடு கலவரத்திற்கு பிறகு இதையே பிரச்சினைக்குரிய ஒன்றாக மாற்றிவிட்டார்கள் சங்கபரிவார இயக்கத்தினர். எனினும நாடார் தலித் திருமணமோ, மீனவர் நாடார் திருமணமோ, நாஞ்சில் நாட்டு வேளாளர், ஆசாரி திருமணோ இங்கு எப்போதுமே சாத்தியமில்லை.

இந்த பின்னணியில் பார்க்கையில் அரவிந்தனின் திருமணம் இரண்டு பேராசிரியர் குடும்பங்களுக்கிடையேயான இரு கம்ப்யூட்டர் பட்டதாரிகளின் திருமணம் அவ்வளவே. அரவிந்தனின் மனைவியின் செயல்பாட்டிலும் முற்போக்கு அம்சமென்று ஏதுமில்லை. அவரது கணவரின் மதவெறிப் படைப்புக்கள் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் அவர் கொடுத்த பைபிள் படிப்பு சுதந்திரத்தை கிடைத்தற்கரிய பேறாக கொண்டாடும் டிபிகல் இந்து கலாச்சாரப் பெண்ணாகவே அவர் காட்சியளிக்கிறார். மேலதிகமாக இந்தியாவில் சிறுபான்மை மக்களை வேட்டையாடும் ஒரு கூட்டத்தின் உறுப்பினரை மானே தேனே என்று வியந்து போற்றுமளவுதான் அவரது சமூக உணர்வு தரந்தாழ்ந்து இருக்கிறது.

ஆகவே இத்தம்பதிகள் உதாரண மனிதர்களாவது அவர்களது சமூகப் பாத்திரத்தின் மூலம்தான் சாத்தியம். வீட்டுக்குள் அனுசரித்துப்போகும் இயல்பில் மெச்சிக்கொள்ள ஏதுமில்லை. கோயிலில் ஆடு கோழி வெட்டக்கூடாது என சட்டமியற்றிய ஜெயலலிதா தன் வீட்டு நாய்களுக்கு தினசரி எட்டுகிலோ ஆட்டுக்கறி வாங்கியதாக குன்ஹாவின் தீர்ப்பு சொல்கிறது. நாய்க்கு கறி போட்டதை வைத்து ஜெயாவை மதிப்பிடுவது சரியாக இருக்குமா?

அரைகோடி யூதர்களை கொன்றொழித்த ஹிட்லர் தனது காதலியை மதிக்கும் விசயத்தில் ஒரு குறையும் வைத்தவரல்ல. ஈவாவின் பார்வையில் ஹிட்லர் மகத்தான மனிதராகவே இருப்பார். அதைவைத்து மட்டும் அவரை உதாரண மனிதராக காட்ட முடியுமா? இல்லை மஹிந்த ராஜபக்சே கூட தனது மனைவியை ஒய்யாரமாக நடத்துகிறார், கருணைக் கடலே என ஆராதிக்கத்தான் முடியுமா?

அப்பாவிகளை சுட்டுத்தள்ளும் ராணுவத்தினர் முதல் அடித்துக்கொல்லும் போலீஸ்காரர்கள் வரை எல்லா குற்றவாளிகளும் தமது குடும்பத்தினர் பால் அன்பு கொண்டேராகவே இருக்கிறார்கள். இது குறித்து ஹாலிவுட் படமான பாடி ஆஃப் லைஸ்-ல் வரும் சிஐஏ அதிகாரியின் வாழ்க்கையை சொல்லலாம். வினவில் வெளிவந்த இந்த பட விமரிசனத்தை வாசகர்கள் படித்து அறியலாம். இந்த கோணத்தில் பார்த்தால் உலகின் ஆகப்பெரிய கிரிமினல் கூட உதாரண மனிதனாகிவிடக் கூடும்.

ஆர்.எஸ்.எஸ்சின் செயல்பாடுகள்தான் நாடெங்கும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று லட்சக்கணக்கிலான மக்களை அகதிகளாக்கியது, இன்றுவரை அது தொடர்கிறது. இந்த இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளர் மனைவி பைபிள் படிக்க அனுமதிக்கிறார் என்பதை பரிகாரமாக கருதுவதே அநீதி. இதனை எப்படி உதாரண வாழ்வாக கருதுவது? வேசிக்கும் விலைமகளுக்கும் வித்தியாசம் தேட இயலுமாயின் இந்துத்துவவாதிக்கும் மதவெறியனுக்குமான வித்தியாசத்தை நாம் தேட முடியும்.

ஆனால் இரண்டும் வேறு வேறுதான் என சத்தியம் செய்கிறது தினகரன். அதற்கான உதாரணமாக அரவிந்தன் நீலகண்டன் காட்டப்படுகிறார். அந்த தம்பதிகள் வாழ்க்கை இந்தியர்கள் அனைவருக்குமான பாடம் என்கிறது தினகரன் ஞாயிறு இணைப்பின் (9/11/2014) அட்டைப்பட வாக்கியம். இந்த உதாரண புருஷரின் மத நல்லிணக்கத்தை தெரிந்துகொள்ளலாமென ஆர்.எஸ்.எஸ் அபிமானிகள் நடத்தும் தமிழ்ஹிந்து இணையதளத்தை பார்த்தால் மாற்று மதத்தவர் மீதான அரவிந்தரின் அன்பு கரைபுரண்டோடுகிறது. அதில் அரை ஸ்பூன் மட்டும் கீழே…

இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து பிரிட்டிஷாரை எதிர்த்தனர். இந்துக்கள் இந்தியாவின் விடுதலைக்காக எதிர்த்தார்கள். இஸ்லாமியர்கள் துருக்கியில் கிலாபத்தை மீண்டும் நிறுவுவதற்காக எதிர்த்தார்கள்.
அன்புள்ள மதச்சிறுபான்மை சோதரரே நீங்கள் பத்திரமாக கிளைகளில் அமர்ந்திருக்கும் இப்பெருமரத்தின் வேர்களை அந்நிய பண உதவியுடனான மதமாற்றம் எனும் கோடாலியால் வெட்டாமல் இருங்கள்… உங்கள் வருங்கால சந்ததிகளுக்காகவேனும்….
இந்த வக்கிர மனநிலை ஓர் இறையியலாகவே ஆபிரகாமிய மதங்களின் மூலம் அந்த மத மக்கள் மனதில் வேரூன்றி இருக்கிறது. (அரவிந்தனின் கட்டுரைகளில் இருந்த மிகச்சில உதாரணங்கள்)

இருந்தாலும் ஒரு இந்துத்துவவாதி தனது மனைவிக்கு இத்தகைய மத சுதந்திரத்தை வழங்கியிருப்பது பாராட்டத்தக்க அம்சம்தானே எனும் கேள்வி எழக்கூடும். ஆனால் இது பாராட்டுக்குரிய அம்சமல்ல. அரவிந்தன் வீட்டில் மனைவியின் மத உரிமையை மதிக்கிறார், அவருக்கு அசைவ உணவு வாங்கித் தருகிறார், அவர் பைபிள் படிப்பதை அனுமதிக்கிறார் என மேலோட்டமாக படிக்காமல் சற்று நின்று நிதானித்து பாருங்கள்.

அரவிந்தன் நீலகண்டனது சாதி என்ன, நமக்குத் தெரியவில்லை. அவரது குடும்பம் ஆச்சரமான சைவ உணவு தீவிரவாதிகள் என்பதால் நிச்சயம் சைவ உணவை புண்ணியமாகக் கொண்ட ஏதோ ஒரு “உயர்” சாதி என்று தெரிகிறது. இத்தகைய சாதிக்காரர்கள் அசைவ உணவு சாப்பிடும் மருமகளை எப்படி நடத்துவார்கள் என்பதை நாவலாக எழுதுமளவு எழுத்தாளர் நாஞ்சின் நாடனால் சொல்ல முடியும். நாஞ்சில் நாட்டு வேளாளர்கள் எனும் ஆதிக்க சாதியினர் அங்கே எப்படி தலித்துக்களை நடத்துவார்கள், தமது சாதிப்பெருமையை எப்படி கடைபிடிக்கிறார்கள் என்பதெல்லாம் ஊரறிந்த உண்மை.

இந்த பின்னணியில் சைவ உணவு சாதிக்கரரான அரவிந்தன் நீலகண்டன் தனது காதல் மனைவிக்கு அசைவ உணவு வேண்டுமென்றால் வெளியே ஓட்டல்களில் வாங்கித் தருவாராம். ஒரு உண்மையான ஜனநாயகவாதி என்றால் தனது மனைவியின் உணவுப் பழக்கத்தை மதித்து வீட்டிலேயே சமைப்பதை வலியுறுத்த வேண்டும். இதில் அனுமதி என்று வந்தாலே அது ஆணாதிக்கப் பிச்சை என்பது வேறு விசயம். ஆனால் இங்கே அது கூட இல்லை.

ஒரு வேளை நீலகண்டனது பெற்றோர் அதை விரும்பாவிட்டால் அவர்களுக்கு ஜனநாயகம் குறித்து வகுப்பு எடுத்து வலியுறுத்த வேண்டும். மறுத்தால் அவர்களையோ இல்லை தானோ வீட்டை விட்டு வெளியற்றவோ, வெளியோரவோ செய்ய வேண்டும். இதெல்லாம் செய்யாமல் நீலகண்டன் அவர்கள் வீட்டில் தனக்கு பிடித்த தயிர் சாதத்தை நக்குவாராம். காதல் மனைவிக்கு மட்டும் ஓட்டலுக்கு சென்று எலும்பு கடிக்க ஏற்பாடு செய்வாராம்.

இவ்வளவிற்கும் அவரது மனைவி வீட்டில் இவருக்கென்று சைவ உணவு சமைத்து கொடுப்பார்களாம். ஆக அங்கேயும் இவர் சமத்துவமாக நடந்து கொள்ளவில்லை. இருந்திருந்தால் பீஃப் பிரியாணியில் பீசை வைத்து விட்டு சோற்றையாவது உண்டிருக்க வேண்டும், குறைந்த பட்சம். மாறாக நீலகண்டனது மாமியார் இவருக்கென்றே வெஜிடெபிள் பிரியாணி சமைத்துக் கொடுப்பாராம்.
ஒரு வேளை இந்த ஓட்டல் சமத்துவமே போதுமென்று புல்லரிப்பவர்கள் சற்று யோசித்து பாருங்கள்.

அவர் உயிரைகொடுத்து ஆதரிக்கும் இயக்கம் இசுலாமியர்களை கொன்று குவிக்கிறது, பாதிரியாரை குழந்தைகளோடு எரிக்கிறது, கன்னியாஸ்திரிகளை வன்புணர்ச்சி செய்கிறது, பிள்ளையார் ஊர்வலத்தில் குடிகாரர்களை வைத்து மசூதிகளுக்கருகே ரவுடித்தனம் செய்கிறது. வீட்டு காம்பவுண்டுக்குள் மத நல்லிணக்க முகமும்(அதுவும் ஓட்டல் நல்லிணக்கம்) வெளியே வந்தால் நல்லிணக்கம் எனும் கருத்தின் மீதே வெறுப்பு கொள்ளும் முகமும் ஒருவருக்கு இருக்குமாயின்… அவரது நிஜமான முகம் எது? ஒன்று நிஜமெனின் இன்னொன்று நடிப்பென்றாகிறது. கணவர் பாத்திரம் பொய்யானதா அல்லது காக்கி டவுசர் பொய்யா?

இதை இருதுருவ மனநிலை பிறழ்வு என சொல்லி கரிசனம் காட்டவும் முடியாது. பைபோலார் வந்தவர்கள் சிலகாலம் ஒருவிதமாகவும் அடுத்த சில நாட்கள் அதற்கு நேரெதிரான இயல்புடனும் இருப்பார்கள். அங்கே காலம்தான் மனநிலையை மாற்றுமேயன்றி காம்பவுண்ட் சுவரல்ல. அவர் புரிதலின்றி வானரப்படையில் இருக்கிறார் என்றும் சொல்ல முடியாது. அவர் எழுதிய கட்டுரைகளில் இருக்கும் வன்மத்தை விடுங்கள்… வினவில் மனோஜ் குமார் எனும் தலித் இளைஞரிடம் பிடிபட்டார் அல்லவா, அப்போது தனது பார்ப்பன ஜிக்களை விட்டுக் கொடுக்காமல் எப்படியெல்லாம் பேசியிருக்கிறார் என்று பாருங்கள்.

an
காதலில் மட்டுமல்ல கொள்கையிலும் ஹிட்லரின் சீடர் அரவிந்தன் நீலகண்டன்.

மனைவிக்கு ஓட்டல் கறி சாப்பிடும் உரிமை கொடுக்கும் நபர் மாட்டுக்கறி சாப்பிடும் மக்களின் உரிமை மீது வன்மத்தை கக்கும் இயக்கத்தில் மனதாரா இயங்குவது உண்மைதானே? இன்னொரு மதத்துப் பெண்ணை காதலித்து வீட்டை எதிர்த்து கைப்பிடிக்கும் உரிமையை பயன்படுத்திய நபர், முஸ்லீம்கள் இந்துப் பெண்களை காதலித்தால் லவ் ஜிகாத் என கொச்சைப்படுத்தி அதனை தீவிரவாதமாக சித்தரிக்கும் அசிங்கத்தை எப்படி செய்கிறார்? மனைவியோடு கிருஸ்துமஸ் கொண்டாடும் மனிதர் எப்படி கிருஸ்துவர்கள் எல்லோரும் வக்கிரம் பிடித்தவர்கள் என எழுதுகிறார்?

இதற்கான பதில் இந்துத்துவாவின் வரலாற்றிலேயே இருக்கிறது. தங்கள் மேலாதிக்கத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் மராட்டிய சித்பவன பார்ப்பனர்களுக்கு இருந்தது. இந்திய மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி வைக்க வேண்டிய தேவை ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. இந்த இரண்டு தேவைகளுக்குமான கள்ள உறவிற்கு பிறந்த குழந்தைதான் ஆர்.எஸ்.எஸ். அந்தமான் சிறையில் இருந்து தன்னை விடுவிக்கச் சொல்லி வெள்ளையனின் காலில் விழுந்தவர் சாவர்க்கர். அவர் பிரிட்டிஷ் ராணுவத்தில் இந்திய இளைஞர்களை சேரும்படி வலியுறுத்தியவர்.

ஆனால் இதே சாவர்க்கர் ஒருகாலத்தில் மொகலாய அரசின் பிறைக்கொடியை தேசியக்கொடி (எரிமலை எனும் அவர் எழுதிய நூல்) என்று சொன்ன வரலாறும் இருக்கிறது. தனக்கு ஆதாயம் கிடைக்குமாயின் கழுதையைக் கூட அப்பா என்றைழைக்கும் இக்கும்பல் ஆதாயமில்லாவிட்டால் அப்பாவைக்கூட கழுதை என்று சொல்லும். எனினும் இந்த முரண்பாடுகள் பார்ப்பனியத்தின் நலனுக்காக செய்யப்படும் சாமர்த்தியமே அன்றி ஒரு போதும் கொள்கை சமரசம் என்று பார்க்க கூடாது. அல்லது காலந்தோறும் பார்ப்பனியம்.

பெண்களை தெய்வமாக வணங்குவதாக சொல்லிக்கொள்ளும் இந்த கலாச்சாரக் காவலர்கள்தான் ஒருகாலத்தில் தம் சொந்த சாதி கைம்பெண்களை மொட்டையடித்து மூளியாக்கி அழகுபார்த்தவர்கள் (மொட்டையடித்தால் அழகு போய்விடும், பிறகு எப்படி இன்னொரு துணையை தேடுவாள் எனும் அறிவார்ந்த இந்து ஞானத்தின் கண்டுபிடிப்பு). இவர்கள் முஸ்லீம்களை இந்துக்களின் எதிரிகள் என வெறித்தனமான பிரச்சாரத்தில் ஈடுபட்ட காலகட்டத்தில் காசியில் மட்டும் சுமார் 5 லட்சம் இந்து விதவைகள் அநாதைகளாக விடப்பட்டிருந்தார்கள். சாப்பாட்டுக்கு வழியின்றி அதில் பலர் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள். இன்றைக்கும் உ.பி பிருந்தாவன் நகரில் கைவிடப்பட்டு அநாதையாக திரியும் இந்து விதவைகள் எண்ணிக்கை நாற்பதாயிரம்.

இத்தகைய இயக்கத்தின் பிரதான் பண்டிட் ஒருவர் இரட்டைவேடம் பூணுவதில் வியப்படைய எதுமில்லை. ஆர்.எஸ்.எஸ் சின் ரத்த வேட்கைக்கும் அரவிந்தனின் அடிப்படைவாதத்துக்கோ அவரது வீட்டுக்குள் இருப்பதாக??? சொல்லப்படும் மத நல்லிணக்கம் பரிகாரமாகிவிடாது.

நாடறிந்த இந்து வெறியனான சுப்ரமணியசாமியின் மகள் சுகாசினி ஹெய்தர் மணந்திருப்பது ஒரு மேட்டுக்குடி முசுலீமைத்தான். இந்த சம்மந்தம் சு சாமியின் மதவெறியை கொஞ்சம்கூட மாற்றிவிடவில்லை. அனேகமாக தினகரனின் அடுத்த உதாரண புருஷர் சூச்சூஸ்வாமியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

குஜராத் கலவரத்தின்போது கலப்பு மணம் செய்துகொண்ட தம்பதிகளின் விவரங்களை கையில் வைத்துக்கொண்டு அதில் கவனமாக இந்து அல்லாதவர்களை மட்டும் தனியே கொலை செய்த இந்துத்துவ வெறியர்களின் செயலை நாமும் மறந்துவிட முடியாது. அரவிந்தின் நலன்விரும்பிகளும் மறந்துவிடக்கூடாது.

உண்மையான மதநல்லிணக்கவாதிகள் நம் அருகே ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். பள்ளி காலத்தில் ஒரு பிராமண நண்பன் வீட்டுக்கு சென்றபோது தரப்பட்ட காபியை அன்னாத்தி குடிக்கச்சொன்னார் நண்பனது அப்பா. அப்போது அவனது அம்மா இடைமறித்து நீ வாய் வச்சே குடிடா என்று சொல்லிவிட்டு குடித்து முடிக்கும் வரை அருகில் நின்றார். அவருக்கு மத நல்லிணக்கம் எனும் வார்த்தைகூட அப்போது தெரிந்திருக்காது. ஆனாலும் தன் வீட்டில் தனது ஆச்சாரத்தைக் காட்டிலும் விருந்தாளியின் சுயமரியாதை முக்கியம் என கருதிய அவரது இயல்பில் இருக்கிறது மத நல்லிணக்கம்.

கோவையில் நடந்த கலவரத்தின்போது முஸ்லீம்களின் கடைகள் சூறையாடப்பட்டன. அப்போது உச்சகட்ட இசுலாமிய வெறுப்பு பிரச்சாரம் கோவையெங்கும் செய்யப்பட்டிருந்தது. கோட்டைமேட்டில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்படுவதாகக்கூட வதந்திகள் பரப்பப்பட்டன. ஆகவே அந்த சூறையாடலில் சாதாரண மக்களும் தயக்கமின்றி பங்கேற்றார்கள். அப்போதும் அதில் பங்கேற்காத, பங்கேற்கச்சென்ற அண்டைவீட்டு நபர்களை தடுத்த இந்து ஒருவரை நான் கோவையில் சந்தித்திருக்கிறேன். பொழப்பு கொடுத்த ஊர்ல எப்படிங்க திருட முடியும் எனும் ஒற்றைக் கேள்வியை அதற்கான காரணமாக முன்வைத்தார் அவர். அந்த எளிய மனிதனின் அற உணர்வை மத உணர்வால் வெல்ல முடியவில்லை.

இப்படியான எளிய மனிதர்களிடத்திலும் மிக அரிதாக ஹேமந்த் கர்கரே போன்ற அதிகாரிகளிடத்திலும் மத நல்லிணக்கம் இருக்கிறது. ஆனால் அவற்றை தெரிந்துகொள்ள நாம் எது மதவாதம் என்பதையும் யாரெல்லாம் மதத்தீவிரவாதி என்பதையும் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். வெறுமனே தினகரனை படித்தால், அல்லது தினகரனது இலவச இதழ் தயாரிப்பாளர்கள் சொல்வது போல படித்தால் அரவிந்தன் நீலகண்டன் மட்டுமல்ல அவரது ஆசானான ஹிட்லர் கூட நமக்கு காந்தியாகத்தான் தெரிவார்.

கண்ணிருப்பவர்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். கோபம் கொள்ளுங்கள்!

– இசையவன்.

மக்கள் தொகையை குறைக்க பெண்களைக் கொல் !

2

த்தீஸ்கர் மாநிலத்தில் அரசு சுகாதார நலத்துறை சார்பாக பிலாஸ்பூர் மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதி நடத்தப்பட்ட கருத்தடை முகாமில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 83 பெண்களில் 13 பேர் மரணமடைந்துள்ளனர்; சுமார் 50 பேர் கவலைக்கிடமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆர்.கே குப்தா என்ற அரசு மருத்துவரின் தலைமையில் நடந்த இந்த கருத்தடை முகாமில், ஐந்து மணி நேரத்திற்குள் 83 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரித்து வரும் போலீசார், தமது முதல் கட்ட விசாரணையில் அறுவை சிகிச்சைகள் நடந்த கட்டிடம் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்ததையும் குறைந்தபட்ச சுகாதார வசதிகள் கூட இல்லாமல் இருந்ததையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள்
அடிப்படை வசதிகள் அற்ற அரசு மருத்துவமனை

மேலும், உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள, “ஒரு மருத்துவர் ஒரு நாளில் முப்பது கருத்தடை அறுவை சிகிச்சைகள் வரை செய்யலாம்” என்ற அளவைத் தாண்டி அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருப்பதும் மரணங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தமது முதல்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் முடிவு செய்துள்ளனர். மேல் கட்ட விசாரணைகளைத் துவங்கியுள்ள காவல் துறை, தனது ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் மருத்துவர் குப்தாவை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட மருத்துவர் தனது பணிக்காலத்தில் சுமார் ஐம்பதாயிரம் பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்தவர் என்பதும், அவரது இந்த ‘சாதனைக்காக’ கடந்த குடியரசு தினத்தன்று மாநில பாரதிய ஜனதா அரசால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட குப்தா தனது தரப்பாக, தான் மேற்கொண்ட அறுவை சிகிச்சை முறையில் தவறுகள் ஏதும் இல்லையென்றும் அறுவை சிகிச்சைக்குப் பின் வழங்கப்பட்ட மருந்துகள் தரமற்றவை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமும், அரசு சுகாதாரப் பணியாளர்கள் மூலமும் அறுவை சிகிச்சை முகாமுக்காக பெண்கள் திரட்டப்பட்டு அழைத்து வரப்பட்ட நிலையில் ஒரு மருத்துவர் என்ற முறையில் தான் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதே முறையென்றும், அதிக எண்ணிக்கையில் நடந்த அறுவை சிகிச்சைகளினாலோ தரமற்ற மருந்துகளினாலோ மரணங்கள் நிகழ்ந்திருந்தால் அதற்குத் தான் மட்டும் பொறுப்பல்ல என்றும் மாவட்ட நிர்வாகமும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்படும் பெண்
வட இந்திய ஆங்கில ஊடகங்கள் இந்த முறை வேறு டி.ஆர்.பி வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் நான்கைந்து நாட்கள் சாமியாடி விட்டு ஓய்ந்தன.

விநாயகனுக்கே ’பிளாஸ்டிக் சர்ஜரி’(!?) மூலம் முகமாற்று அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு நவீன விஞ்ஞானத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முன்னேறி விட்ட ’இந்துத்துவ’ இந்தியாவில் கருத்தடை அறுவை சிகிச்சைகளில் நடந்த தோல்வி சங்கபரிவாரத்தின் முகத்தில் சாணியைக் கரைத்து ஊற்றியுள்ளது. அதிலும் 2003 – 2012 காலகட்டத்தில் மட்டும் கருத்தடை அறுவை சிகிச்சையின் விளைவாக சுமார் 1500 பெண்கள் மரணித்துள்ளனர் என்கிறது அரசு கணக்கெடுப்பு ஒன்று.

2010-11ல் இருந்து 2013-14 காலட்டம் வரை மட்டும் 14,901 கருத்தடை அறுவை சிகிச்சைகள் தோல்வியுற்று அதில் 363 பெண்கள் இறந்துள்ளனர். வழக்கமாக இந்தச் சாவுகளை கண்டும் காணாமலும் கடந்து செல்லும் வட இந்திய ஆங்கில ஊடகங்கள் இந்த முறை வேறு டி.ஆர்.பி வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் கையிலெடுத்து நான்கைந்து நாட்கள் சாமியாடி விட்டு ஓய்ந்தன.

அடிப்படை மருத்துவ மற்றும் சுகாதார வசதிகளைக் கூட நிறைவேற்ற வக்கற்று பெண்களை மரணத்தில் தள்ளும் ஒரு நாட்டிற்கு செவ்வாய் கிரக சுற்றுலா ஒரு கேடா என்று நாம் கேட்டால், ”ஒரே கிளிஷேவா பேசாதீங்க பாஸ்” என்று அதியமான், பத்ரி வகையறாக்கள் உள்ளிட்ட முதலாளித்துவ சொம்பு தூக்கிகள் ’ஜகா’ வாங்கக் கூடும். என்றாலும் “எல்லோருக்கும் ரொட்டி கிடைக்கும் வரை யாருக்கும் கேக் கிடையாது” என்று ஆசான் லெனின் சொன்னதன் பொருளை நாங்கள் மட்டுமல்ல அரசின் புறக்கணிப்பால் சாவுக்கு வாக்கப்பட்ட சாதாரண மக்களும் கூட இந்த தருணத்தில் சரியாகவே புரிந்து கொள்வர்.

ஆர்ப்பாட்டம்
இத்தனை மரணங்கள் விளைந்த பின்னும் மத்திய அரசு தனது கருத்தடை திட்டங்களில் பிடிவாதமாக ஊன்றி நிற்கிறது

இது ஒரு புறமிருக்க, இத்தனை மரணங்கள் விளைந்த பின்னும் மத்திய அரசு தனது கருத்தடை திட்டங்களில் பிடிவாதமாக ஊன்றி நிற்கிறது. மக்கள் தொகையைக் கட்டுக்குள் கொண்டு வர பெண்களின் உயிரைக் காவு வாங்கும் நடைமுறையைத் தவிர்த்து வேறு மாற்றுத் திட்டங்கள் குறித்து சிந்திக்கவில்லை. நாடெங்கும் அதிகாரப்பூர்வ சமூக நலப் பணியாளர்களை ( Accredited Social Health Activists – ASHA) நியமித்து பெண்களுக்கான கருத்தடை திட்டங்களை வெறி கொண்ட வேகத்தில் முன்னெடுத்து வருகிறது.

ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தவிர இதற்கென்றே இயங்கும் என்.ஜி.ஓ குழுக்களிடமும் கருத்தடை பிரச்சாரத்தையும், கருத்தடை முகாம்களுக்குப் பெண்களை இழுத்து வரும் பணியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கருத்தடை அறுவை சிகிச்சைக்கும் 1,500 ரூபாய் மருத்துவமனைக்கு வழங்கும் அரசு 30 கருத்தடை அறுவை சிகிச்சைகளுக்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் கூடுதல் போனசாக 500 ரூபாய் அறிவித்துள்ளது. தவிர பெண்களை அழைத்து வரும் என்.ஜி.ஓ பணியாளருக்கு ஒரு ‘உருப்படிக்கு’ 150 ரூபாயும் மருத்துவருக்கு 75 ரூபாயும் சன்மானமாக நிர்ணயித்துள்ளது. அறுவை மேற்கொள்ளும் பெண்களுக்கு 600 ரூபாய் ஊக்கத்தொகையும் அறிவித்துள்ளது.

இது தவிர அரசு மருத்துவமனைகளுக்கும் ஆஷா பணியாளர்களுக்கும் தனித்தனியே இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலக்கை அடைய முடியாத ஆஷா பணியாளர்களின் சம்பளத்தைப் பிடித்தம் செய்வது, சம்பளத்தை வெட்டுவது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது அரசு. இவ்வாறு தனது கீழ்மட்ட உறுப்புகளை கசக்கிப் பிழிந்து நிறைவேற்றப்படும் ’இலக்குகள்’ எதார்த்தத்தில் அப்பாவிப் பெண்களின் மரணத்தில் முடிகிறது.

பில் கேட்ஸ்
மெலிந்தா, பில் கேட்ஸ் அறக்கட்டளை, பிரிட்டிஷ் எய்டு போன்ற ஏகாதிபத்திய அறக்கட்டளைகள் நேரடியாக களமிறங்கியுள்ளன

என்றாலும் இந்திய அரசு தனது மக்களின் கருவறுப்பதில் போதிய வேகத்தைக் காட்டவில்லை என்பதே ஏகாதிபத்திய நாடுகளின் மனக்குறை. இதற்காகவே மெலிந்தா பில் கேட்ஸ் அறக்கட்டளை, பிரிட்டிஷ் எய்டு போன்ற ஏகாதிபத்திய அறக்கட்டளைகள் நேரடியாக களமிறங்கியுள்ளன. மகளிர் சுய உதவிக் குழுக்கள், என்.ஜி.ஓ வலைப் பின்னல்கள் மற்றும் கீழ்மட்ட அரசு நிர்வாக அலகுகள் வரை ஊடுருவியுள்ள இந்த அறக்கட்டளைகள், கருத்தடை செய்வது குறித்தும் அதில் இலக்கை எட்டுவது குறித்தும் இந்தியாவுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் நடக்கும் பல்வேறு என்.ஜி.ஓ பணிகளுக்கு சுமார் 100 கோடி டாலர் (சுமார் ரூ 6,000 கோடி) நிதியை இறக்கியுள்ள மெலிந்தா கேட்ஸ்  அறக்கட்டளை அதில் கணிசமான தொகையை கருத்தடை திட்டங்களுக்கென்று ஒதுக்கியுள்ளது. பிரிட்டிஷ் எய்டு தனது பங்காக சுமார் 16.6 கோடி யூரோ (சுமார் ரூ 1,250 கோடி) நிதியை கருத்தடைத் திட்டங்களுக்காகவே ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவில் கருத்தடை அறுவை சிகிச்சைகளால் நிகழும் மரணங்கள் சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் ஒரு பெரும் சூறாவளியைக் கிளப்பியது.

ஆங்கிலேயர்களின் வரிப்பணம் இந்திய அரசால் கட்டாய கருத்தடை செய்ய பயன்படுத்தப்படுவதாக இங்கிலாந்தில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இந்தாண்டின் துவக்கத்தில் குற்றம் சுமத்தி விவகாரத்தை அந்நாட்டு அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றன. தாம் கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சைகளையோ கருத்தடை முகாம்களையோ ஆதரிக்கவில்லை என்றும், இதற்காக இங்கிலாந்தின் வரிப்பணம் செலவிடப்படுவதை தாம் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அரசுத் தரப்பில் விளக்கங்களாக முன்வைக்கப்பட்டது.

மருத்துவமனையில் உணவுக்கு வரிசையில் நிற்கும் பாதிக்கப்பட்ட பெண்கள்
ஆஷா பணியாளர்களும், என்.ஜி.ஓக்களும் படிப்பறிவற்ற ஏழைப் பெண்களைக் கருத்தடை முகாம்கள் என்று அழைக்கப்படும் மரண முகாம்களில் தள்ளி விடுகின்றனர்

என்றாலும், கருத்தடை திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து வரும் மாநிலங்களான மத்திய பிரதேசம், ஒரிசா, சத்தீர்கர், பீகார், உ.பி, குஜராத், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இத்திட்டத்தின் நடைமுறை செயல்பாடு வேறுவிதமாகவே உள்ளது. 600 ரூபாய் ஊக்கத்தொகை கிடைக்கும் என்று ஆசை காட்டியும், கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது என்பதை மறைத்தும், பொதுவான மருத்துவ பரிசோதனைதான் என்று ஏமாற்றியும் பெண்களை அழைத்து வரும் ஆஷா பணியாளர்களும், என்.ஜி.ஓக்களும் படிப்பறிவற்ற ஏழைப் பெண்களைக் கருத்தடை முகாம்கள் என்று அழைக்கப்படும் மரண முகாம்களில் தள்ளி விடுகின்றனர்.

ஏன் இந்த வெறித்தனமான வேகம்?

நாடு எதிர்கொள்ளும் மொத்த பிரச்சினைக்கும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது தான் காரணம் என்கிற முதலாளித்துவ கண்ணோட்டமே முதலில் தவறு. நாட்டின் வளங்களை மக்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதற்கு அதிக மக்கள் தொகை ஒரு காரணமன்று – மாறாக, வளங்களின் வினியோகம் சமூகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தனிநபர்களான முதலாளிகளின் கட்டுபாட்டில் இருப்பதும் அவர்களி லாப வெறியுமே மாபெரும் தடையாக நிற்கிறது.

மக்கள் தொகை அதிகரிப்பு என்பது சாதாரண மக்களைப் பொருத்தளவில் அவர்கள் சந்திக்கும் அன்றாட வாழ்க்கைப் பிரச்சிகளின் பட்டியலில் இல்லை. ஆனால், முதலாளித்துவ சமூகத்திற்கும் அதன் கட்டுமானத்தைக் காத்து முதலாளிகளின் நலன்களை உத்திரவாதப்படும் ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் இந்தியா போன்ற அல்லக்கை நாடுகளின் பிரதான கவலையாக மக்கள் தொகை அதிகரிப்பு இருக்கிறது. எனவேதான் வறுமை ஒழிப்பு, கல்விக்கான உத்திரவாதம், வேலைக்கான உத்திரவாதம், விலைவாசி உயர்வு, அடிப்படை சுகாதாரப் பிரச்சினைகள் போன்ற அத்தியாவசியமான தேவைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விட மக்கள் தொகையைக் குறைப்பதற்கான முக்கியத்துவத்தை பிரதானப்படுத்துகிறார்கள்.

ஏன் அவர்கள் மக்கள் தொகை அதிகரிப்பதைப் பற்றிக் கவலை கொள்கிறார்கள்?

உயிர் பிழைத்த பெண் மருத்துவமனையில்
இந்நாடுகளின் மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைத்திருப்பது அமெரிக்காவின் நலன்களுக்கு முக்கியமானது

இந்தக் கேள்விக்கான பதிலை நாம் புரிந்து கொள்ள அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கவுன்சிலில் ஹென்றி கிஸ்ஸிங்கரால் 1974-ம் ஆண்டு முன்மொழியப்பட்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜெரால்டு ஃபோர்டால் 1975-ம் ஆண்டு அரசின் கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட NSSM 200 என்ற ஆய்வறிக்கையையும், அதன் பரிந்துரைகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.

”தேசிய பாதுகாப்பு ஆய்வறிக்கை 200: உலகளாவிய மக்கள் தொகை வளர்ச்சியால் அமெரிக்க பாதுகாப்புக்கும் எல்லை தாண்டிய நலன்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் (NSSM200)” என்ற பெயரில் இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
மேற்படி அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கியமான பகுதிகளின் சாராம்சத்தை கீழே பார்க்கலாம் –
”அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு வளர்ச்சியடையாத நாடுகளில் இருந்து அதிகளவில் தாதுப் பொருட்கள் தேவைப்படும். எனவே இந்நாடுகளின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளின் ஸ்திரத்தன்மை முக்கியமானதாகும்.

இந்நாடுகளின் அரசாங்கங்களின் நடவடிக்கைகளின் காரணமாகவோ, வன்முறை மற்றும் குடிமைச்சமூக போராட்டங்களின் காரணமாகவோ மூலப் பொருட்களின் விநியோகம் தடைபடலாம். மக்கள் தொகை அதிகரிப்பு பிரச்சினை மட்டுமே இதற்குக் காரணம் இல்லையென்றாலும் பிரதான முக்கியத்துவம் வாய்ந்தது.

வளர்ச்சியடையாத நாடுகளில் உள்ள இளைஞர்கள் நிலையற்றவர்களாகவும், தீவிரத்தன்மை கொண்டவர்களாகவும் தனிமைப்பட்டவர்களாகவும் வன்முறையாளர்களாகவும் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். இந்த இளைஞர்களை ‘நிறுவனங்களுக்கு’ எதிராகவோ ‘ஏகாதிபத்தியங்களுக்கு’ எதிராகவோ அல்லது பிற ‘அந்நிய தலையீடுகளுக்கு’ எதிராகவோ திசைதிருப்புவது எளிது. இதன் காரணமாக இந்நாடுகளில் இருந்து வளங்களையும் மூலாதாரங்களை அமெரிக்க பொருளாதார நலன்களுக்காக பெறுவது தடைபடக் கூடும்.

கொலைகார மருந்துகள்
கொலைகார மருந்துகள்

எனவே இந்நாடுகளின் மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைத்திருப்பது அமெரிக்காவின் நலன்களுக்கு முக்கியமானது. இதில் முக்கியமானது என்னவென்றால், அந்நாடுகளின் மக்கள் தொகையைக் குறைக்க வேண்டும் என்பதற்கான நமது நடவடிக்கைகள் அவர்களது கவனத்தை ஈர்த்து நமது நோக்கங்களை அறிவிக்கும் விதமாக இருக்கக் கூடாது.”
இக்கட்டுரையின் இணைப்பில் உள்ள சுட்டியின் மூலம் அமெரிக்காவின் திட்ட அறிக்கையை முழுவதுமாக தரவிறக்கம் செய்து வாசிக்குமாறு வாசகர்களுக்குப் பரிந்துரைக்கிறோம்.

இந்தியாவில் கருத்தடை திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து வரும் மாநிலங்களில் வடகிழக்கு மாநிலங்களும் மத்திய இந்தியாவின் மாநிலங்களும் குஜராத்தின் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுமே முன்னணியில் நிற்கின்றன. கருத்தடை அறுவை சிகிச்சைகளின் மூலம் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையிலும் இந்தப் பகுதிகளே முன்னணி வகிக்கின்றன.

ஆக, நடந்து கொண்டிருப்பது ஒரு இனப்படுகொலை. காங்கிரசு ஆட்சியின் போது பன்னாட்டுக் கம்பெனிகள் மத்திய இந்தியாவின் வளங்களை சூறையாடிச் செல்ல தடையாக இருந்த பழங்குடி மக்களின் மேலும் மாவோயிஸ்டு புரட்சியாளர்களின் மீதும் பச்சை வேட்டைப் படுகொலைகள் என்ற உள்நாட்டு போரைத் தொடுத்திருந்த அதே வேளையில் பன்னாட்டு அறக்கட்டளைகளும் என்.ஜி.ஓ கைக்கூலிகளும் அதற்கு இணையாக சத்தமின்றி ஒரு இனப்படுகொலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் முன்னணியில் நின்றது பாரதிய ஜனதா ஆட்சி புரிந்த சத்தீஸ்கரும் குஜராத்தும் தான்.

முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகள் தமது பொருளாதார நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பெண்களின் கருப்பை வரையிலும் தமது விஷக் கரங்களை நீட்டத் தயங்காதவர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளனர்.

எலி விஷம் கலந்த மருந்தை விற்ற ரமேஷ் மஹாவர்
எலி விஷம் கலந்த மருந்தை விற்ற ரமேஷ் மஹாவர்

ஏகாதிபத்தியங்கள் தமது நேரடி நலன்களுக்காக இனக்கொலையில் இறங்கி நிற்கும் அதே நேரம், அதற்கான மருந்துகளில் கூட ஊழல் புரிந்து ஏகாதிபத்தியங்களின் நோக்கத்தை சுலபமாக்குகிறது இந்திய ஆளும் வர்க்கம். சத்தீஸ்கரில் கருத்தடை முகாமில் பயன்படுத்தப்பட்ட மருந்துகளில் எலி விஷம் கலந்துள்ளதை போலீசு விசாரணை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மருந்துகள் உள்ளூர் பாரதிய ஜனதா பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான உப்புமா கம்பெனி ஒன்றிலிருந்து தயாரிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகத்தால் கொள்முதல் செய்யப்பட்டதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.

கேட்கவே நெஞ்சம் பதறும் இந்தச் சம்பவங்களை இந்திய ஆங்கில ஊடகங்கள் தமது டி.ஆர்.பியை உயர்த்திக் கொள்ளும் வகையில் பின்னணி இசைக் கோர்வையுடன் மலினமான திரில்லர் கதை போல் விவரித்துச் செல்கின்றன. டைம்ஸ் நௌ தொலைக்காட்சி மருத்துவர் குப்தாவுக்கு “மரண மருத்துவர்” (Dr. Death) என்ற பட்டப் பெயர் அளித்துள்ளது. மற்றொரு வட இந்திய ஆங்கில ஊடகம் “பிலாஸ்பூரின் கசாப்புக்காரர்” (Butcher or Bilaspur) என்ற பட்டப் பெயரை அளித்துள்ளது.

மொத்த விவகாரத்தையும் மருத்துவர் குப்தாவின் தலையில் கட்டி ஒருசில நாட்கள் டி.ஆர்.பியை தேற்றிக் கொண்டபின் ஒட்டுமொத்தமாக ஊற்றி மூடிவிடும் திசையில் காய் நகர்த்துகின்றன ஜனநாயகத்தின் நான்காவது கழிப்பறையான முதலாளித்துவ ஊடகங்கள்.

”முதலாளித்துவம் கொல்லும்; கம்யூனிசமே வெல்லும்” என்கிற முழக்கத்தை எமது அமைப்புகளின் போஸ்டர்களில் நீங்கள் படித்திருக்கக்கூடும். அந்த முழக்கத்தின் முதல் பகுதியை அவர்கள் நாளும் நாளும் நிரூபித்து வருகிறார்கள். முதலாளித்துவத்தின் வெற்றிச் சரித்திரத்தில் சத்தீஸ்கரில் மரணித்துப் போன 13 பெண்களின் பெயர்களும் இடம் பெற்று விட்டது. முதலாளித்துவ நிதிமூலதனக் கொடுங்கோன்மையை வீழ்த்தி எமது முழக்கத்தின் பிந்தைய பகுதியை நிகழ்த்திக் காட்டுவது மட்டுமே பரந்துபட்ட மக்களின் வாழ்க்கையை உத்திரவாதப்படுத்தும்.

– தமிழரசன்.

மேலும் படிக்க

திருச்சியில் மோடியின் ‘தூய்மை’ இந்தியா திட்டம்

1

திருச்சியில் நரேந்திர மோடியின் ‘ தூய்மை ‘ இந்தியா திட்டத்திற்க்காக BJP கட்சியின் தொண்டர்கள் நகர் சுத்தி தொழிலாளர்களின் விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமையை (02.11.14) கணக்கிட்டு ‘சுத்தம் செய்ய’ உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் தெருவிற்கு வந்தனர். வந்த 25 பேரில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் மினிஸ்டர் சட்டையும் பார்த்த சாரதி வேட்டியும் உடுத்தியிருந்தனர். மற்றவர்கள் பேண்ட் சட்டையுடனும் தெருவிற்குள் நுழைந்தனர். அவர்கள் தெருவிற்குள் நுழைவதற்கு முன்பே அவர்கள் மேல் அடித்திருந்த “சென்ட்” தெருவிற்குள் நுழைந்தது.

தூய்மை இந்தியா
கார்ட்டூன் – நன்றி http://ajanrnair.blogspot.in/

புத்தம் புதிய விளக்குமாறு குச்சி (கை வலிக்காமல் இருக்க விளக்குமாறு குச்சியிலும் துணி சுற்றப்பட்டிருந்தது ) சட்டி, பையுடன் நவீன கேமிரா என ஆயுதங்களுடனும், நெற்றியில் செந்தூரமும், சந்தனமும் மணமணக்க தெருவைக் கூட்ட தயாரானார்கள். இவர்களைப் மக்கள் ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தனர்.

சற்றும் எதிர்பாராத பாஜக காரர்களை பார்த்து மக்கள் கலை இலக்கியக் கழக தோழர். சீனிவாசன், “தெருவைக் கூட்ட தினமும் வருவீர்களா” என்று கேட்டதுமே உளற ஆரம்பித்தனர்.

தூய்மை இந்தியா
தூய்மை இந்தியா, பணம் பண்ணும் இந்தியா – கார்ட்டூன் : நன்றி http://www.downtoearth.org.in/content/swachh-bharat-abhiyaan

 

“ம்… வருகிறோம்” என்றனர்.

“நாட்டை குப்பையாக்குவது யார் தெரியுமா?” என்று கேட்டதற்கு

“நாம்தான்” என்றனர்.

நமது தோழர், “நாம் என்று சொல்லாதீர்கள்; மோடி என்று சொல்லுங்கள், இல்லை என்றால் மோடியைப் பார்த்தே கேளுங்கள்” என்றார்.

உடனே அவர்கள் அனைவரும் கோரசாக பேச ஆரம்பித்து விட்டனர். சிலபேர் “ஏய், அவர் ம.க.இ.க காரர்” என்றதும் சற்று சுதாரித்துக் கொண்டனர்.

என்றாலும் நமது தோழர் அவர்களை விடுவதாக இல்லை.

“குஜராத்தில் பழைய குப்பையை உடைத்து அந்த துறைமுகத்தையே அசுத்தம் செய்ய வைத்தது யார்? தூய்மை இந்தியா பேசும் உங்க மோடி., போபாலில் விஷ வாயுவால் 23 ஆயிரம் பேர் இறந்து போனார்கள். 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பிறக்கும் குழந்தைகள் ஊனமாகத்தான் பிறக்கிறது. காரணம் இன்னும் அந்த ரசாயனக் கழிவுகள் அகற்றப்படவில்லை. அங்கு போங்க – துடப்பக்கட்டையோடு” என்றார்.

இத்தகைய எதிர்ப்பை எதிர்பார்க்காத பாஜக காரங்க, “இது தனி மனித ஒழுக்கம் பற்றிய பிரச்சினை. ஒவ்வொரும் மாறவேண்டும் என்று நாங்க சொல்லுகிறோம்” என்றனர்.

“தனிமனித ஒழுக்கம் என்று மக்கள் மீது பழி போடாதீங்க; காத்தையும், மண்ணையும் கெடுத்தது நீங்கள்தானே” என்று சத்தமாக பேசியதும் அக்கம் பக்கம் இருந்த மக்கள் அருகில் வந்து கூட ஆரம்பித்து விட்டனர். சரி வேறு இடத்திற்கு போகலாம் வாருங்கள் என்று கூட்டமாக கிளம்பிவிட்டார்கள் அடுத்த சூட்டிங்கிற்கு.

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி கிளை.

தருமபுரி குழந்தைகள் மரித்தது எப்படி ?

6

newbornதிருக்கும் ஆக்சிஜன் இல்லை
எங்கள்
கருவுக்கும் ஆக்சிஜன் இல்லை
ஏழைகள் என்றால்
எதுவுமே இல்லையோ!

அந்தப் பொம்மையைக்
கட்டிப்பிடித்துதான்
எங்கள் பிள்ளைகள் தூங்கும்
என்று பெருமை பேசும்
தாய்மைகள் நிரம்பிய உலகில்தான்,

தாயின்
பால்மண அணைப்பைப் பார்க்காமலே
பொம்மைகளாய் விறைத்துப் போயின
தருமபுரி குழந்தைகள்!

புடைக்கத் தின்ன வழியின்றி
சிசுவால் மட்டுமே
நிரம்பிய வயிறு
இழப்பின் வலியை
எப்படித் தாங்கும்?

கிருமித் தொற்றாம்…
மஞ்சள் காமாலையாம்…
கொடுத்து வைத்தது அவ்வளவுதான்
என்ன சொல்ல்வது விதி! – என
முடித்து வைக்கப் பார்க்கிறார்கள்
எஞ்சியிருக்கும் கேள்விகளை.
அரசைவிட
ஒரு ஆபத்தான கிருமி உண்டா?

குற்றத்தின் தசைப்பிண்டங்களை
கூட்டிக் கொண்டு அலைய
முன்னெச்செரிக்கை மருந்துகள்…
முதல்தர பிராணவாயு உருளைகள்…
உடனடி உபகரணங்கள், வாகனங்கள்
அடுத்த குற்றப்பிழைப்பிற்கு
ஒரு நொடி கூட தாமதிக்காமல் புறப்பட
உயர்தர ஹெலிகாப்டர்கள்…
ஓராயிரம் காவலர்கள்…
என மயிர்கூச்செரியும் நிர்வாகம்.

babiesவிவசாயி, தொழிலாளர்கள்
உயிர்காப்புக்கு
பேருக்கு இன்க்குபேட்டர்கள்,
குழந்தைகள் நூறுக்கு
இரண்டே செவிலியர்கள்,
பிராணவாயு உருளை மாற்ற
பெற்றோர்களே ஊழியர்கள்,
யாருக்கு அரசு?
இது விதியா? ஆளும்வர்க்க சதியா?

பத்துமாத சிறை உதைத்து
ரத்தவலை தானறுத்து
மொத்தவலி தானுடைத்து
உள்ளே இருந்த குழந்தை
போராடியதால்
உயிரோடு வெளியே வந்தது!

வெளியேஇருப்பவர்களின்
போராட்டமின்மையால்
குழந்தைகள் பிணமானது.
போராட்டமில்லாத இடத்தில்தான்
சோகம் பிறக்கிறது!

போராட வேண்டிய இடத்தில்
போராட வேண்டிய நேரத்தில்
போராடாததால் இந்தச் சாவு.
பிறக்காமலே கொல்ல
குடும்பக் கட்டுப்பாடு!
பிறந்தால் கொல்ல
சத்துணவு தட்டுப்பாடு!

போதிய உபகரணங்கள் இல்லை,
போதிய மருந்துகள் இல்லை,
எல்லாவற்றிற்கும் மேல்
போதிய ஊழியர்களே இல்லை.

மக்கள்தான் போராட வேண்டுமா?
மருத்துவர்கள் போராட மாட்டார்களா?

விவசாயிகளின் சமூக அறிவும்
கருக்கரிவாளும்
சமூகத்திற்கே
போராடுகையில்
மருத்துவர்களின் அறிவும்
அறுவை சிகிச்சை கத்தியும்
தன் சம்பளத்தை மட்டும்
அறுத்து எடுப்பது
அருவருப்பாய் இல்லையா?

கொத்தாய் குழந்தைகள்
செத்தது எப்படி?
– எடை குறைபாடு
ஏன் குறைபாடு?
– தாய்க்கு சத்தில்லை
ஏன் இல்லை?

கருத்தரிக்க முடியாதபடி
உருத்தெரிக்க
மிகைக் கொழுப்பு
மிகுந்திருக்கும் நாட்டில்,
உழைப்பவருக்கு
உயிர் அணு காக்கவும்
சத்தில்லாத வாழ்க்கைத் தரம்
யாரால்?

babies 2கிருமி தொற்று ஏன்?
சுகாதரமில்லை
தண்ணீருக்கே வைத்தியம் பார்த்து
தனிப் பராமரிப்புடன்
நாய்களை குளிப்பாட்டும் நாட்டில்,
பொதுக்குழாயில்
சாக்கடையை கலந்தது யார் குற்றம்?

பிணத்தை அறுத்தால்
உண்மை வெளியே வராது
அரசை அறுத்துப் பார்த்தால்
அனைத்துக் குற்றத்திற்குமான
கிருமி தெரியவரும்!

இனி காசிருப்பவனுக்கே
கருவறை!
காசில்லாதவனுக்கு
கருவறையே கல்லறை!
தனியார்மயத் தொற்றே
அரசின் நடைமுறை!

எல்லாப் பக்கங்களிலிருந்தும்
முதலாளித்துவத்திற்கு மூச்சுக் கொடுக்கும்
அரசியல் ‘ஆக்சிஜனை’
பிடுங்கி எறியாமல்
இனி உழைப்பவர்கள்
சுவாசிக்கவும் முடியாது!

• துரை.சண்முகம்

சாகித்ய அகாடமி புகழ் ஆயிஷா நடராஜனின் உண்மை முகம்

6

யிஷா எனும் கதை, பள்ளி ஆசிரியருக்கும் மாணவருக்கும் நடந்தேறும் உளவியலை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுவர் இலக்கியம். இந்த கதை எழுதிய இரா நடராஜனுக்கு 14.11.2014 அன்று பால சாகித்ய அகாடமி பரிசு (சிறுவர் இலக்கிய பரிசு) பெங்களூருவில் வழங்கப்பட்டிருக்கிறது.

கடலூரில் ஆயிஷா இரா.நடராஜன் எழுதிய “டார்வின் ஸ்கூல”; மற்றும் “இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்” ஆகிய நூல்களின் வெளியிட்டு விழா பாரதி புத்தகாலயத்தின் சார்பில் கடலூர் டவுன் ஹாலில் கடந்த நவம்பர் 7-ம் தேதியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பால்கி ஒருங்கிணைப்பு செய்தார்.

ayeesha-natarajanஇந்நிகழ்ச்சியைப் பற்றி விவரிப்பதற்கு முன்பாக பெற்றோர்களின் இரத்தத்தை உறிஞ்சும் கிருஷ்ணசாமி பள்ளி நிர்வாகத்தின் முதல்வராக வீற்றிருக்கும்  (பள்ளி முதலாளியின் கல்லா நிரப்ப அரும்பாடுபடும்)  திருவாளர் ஆயிஷா இரா. நடராஜன் எனும் சிந்தனையாளரின் படைப்புகளையும், அவரது நடைமுறைகளைப் பற்றியும் பேச வேண்டும்.

அறிவியல் மேதமையும், உளவியல் ஆளுமையும், தற்புகழ்ச்சி போதையும், மாணவர், ஆசிரியர் மீது அதிகார அடக்குமுறையும்  ஏவும் உளவியல் அறிஞர் இரா.நடராஜன்  எனும் சிந்தனையாளரின் படைப்புகளையும், அவரின் நடைமுறைகளைப் பற்றியும் விவாதிப்பதற்கு முன்பாக அவர் முதல்வராக இருக்கும் பள்ளியைப் பற்றி சுருக்கமாக இங்கே சொல்ல வேண்டியுள்ளது.

கடலூரில் ஒருகாலத்தில் சிறுநீரகத் திருட்டில் புகழ்பெற்ற டாக்டர். ராஜேந்திரன் என்பவர் கடந்த 1990-ல் ஒருசாதாரண கட்டிடத்தில் மெட்ரிக்குலேசன் பள்ளியைத் துவங்கினார். பின் மெல்ல மெல்ல நாளொரு மேனியும, பொழுதொரு வண்ணமாக பெற்றோர்களின் தாலியறுத்து 1997-ல் பாலிடெக்னிக் கல்லூரி, 2001-ல் பொறியியல் கல்லூரி, 2007-ம் ஆண்டு அறிவியல் கலைக்கல்லூரி என மிகப்பெரிய அளவில் கால்பரப்பி விரிந்துள்ளது கிருஷ்ணசாமி நினைவு கல்வி நிறுவனங்கள். கடலூரில் உள்ள தனியார் பள்ளிகளில் பள்ளி ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் கொடூரமான முறையில் கொள்ளை அடிப்பது, கிருஷ்ணசாமி பள்ளிதான் என்பதை கடலூர் மக்கள் நன்கு அறிவார்கள். நீதிபதி சிங்காரவேலர் குறிப்பிட்டுள்ள கட்டண விதிமுறைக்கெல்லாம் சவால் விடும் அளவிற்கு கொள்ளை அடித்து வருகின்றனர் இந்த கயவர்கள்.

மேலும் இங்கு வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு 15,000 ரூபாய் சம்பளம் என்றால் 8,000 அல்லது 7,000 மட்டுமே கையில் கொடுப்பார்கள். பள்ளிக் கட்டணம் என்ற பெயரில் 12,000 ரூபாய் வாங்கி கொண்டு ரூ 4000, ரூ 6000 என ஒரு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுப்பார்கள். அதற்கு முறையான ரசீது ஏதும் கிடையாது. இவை அனைத்தும் திருவாளர் நடராசன் அவர்களுக்கு தெரிந்தே நடப்பது தான. இவர்களின் தவறை யாரும் கேட்க முடியாது. அப்படி கேட்கும் பெற்றோர்கள் அவமானப்படுத்தப்படுவார்கள். இப்பள்ளியின் மாணவர்களில் பணம் கட்டியவர்கள், கட்டாதவர்கள் என இருவகையில் தரம் பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள்.

இப்படிப்பட்ட புகழுக்கெல்லாம் காரணமான இப்பள்ளியின் முறையாக அடிக்கட்டுமான வசதியின்மைக் காரணம் கடந்த 2011 முதல் பதிவு செய்யப்படாத பள்ளிகளின் பட்டியலில் வந்துவிட்டது. கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சுமார் 122 தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 22 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டது ரகசியமாக வைக்கப்பட்டு இருந்த நிலையில் பள்ளியின் பொன்விழாவிற்கு கடந்த வாரம் 01.11.14 அன்று தமிழக ஆளுநர் ரோசையாவை சிறப்பு அழைப்பாளராக அழைத்தனர். இதற்காக கடலூர் நகரம் முழுவதும் பெரிய அளவில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் என மாவட்ட நிர்வாகத்தையே தனது பள்ளிக்கான வேலைகளில் ஈடுபடுத்தி வந்த நிலையில், சமூக ஆர்வலர் ராஜ்மோகன் என்பவர் “அங்கீகாரம் இல்லாத பள்ளிக்கு ஆளுநர் வரலாமா?” என கேள்வி எழுப்பி மனு ஒன்றை ஆட்சியரிடம் கொடுத்தார்.

இதுவே தி இந்து நாளிதழிலும் செய்தியாக வெளிவரவே அதிர்ச்சி அடைந்த மாவட்ட நிர்வாகம் உளவுத்துறை மூலம் செய்தி சேகரித்து உள்துறை செயலாளருக்கு அனுப்பியதின் விளைவாக ஆளுநர் வருகை ரத்து செய்யப்பட்டது. மாவட்ட கல்வி அதிகாரிகளை அழைத்து கடுமையாக கண்டித்தார் கலெக்டர். ஆளுநர் வருகை ரத்து செய்யப்படவே புராணப் புரட்டு புகழ் ஆன்மீக முரசு திருமிகு சுகிசிவம் வரவைக்கப்பட்டார். ஊடகங்களிலும், மேடைகளிலும் நேரம், காலம், உள்ளிட்டு, சதாசர்வகாலமும் இராமாயணம், மகாபாரதம், கிருஷ்ண உபதேசம் போன்றவற்றையே பாரத மக்களுக்கு அருள்பாலிக்கும் இந்த சுகிசிவம், கரன்சி சிவமான கிட்டினி திருடனிடம் பஞ்சம் பிழைப்பது ஏன் என்பது கரன்சி கடவுளான லட்சுமிக்கே வெளிச்சம் என்பது தனிக்கதை, நாம் மீண்டும் மேட்டருக்கு வருவோம்.

கடலூரின் பள்ளிகளிலும் 3 மாதத்திற்கு ஒருமுறை தான் டேம் பீஸ் வாங்குவார்கள். ஆனால் இங்கோ எப்போது சொல்வார்கள் என்றே தெரியாது. திடீர் திடீர் என்று பணம் கேட்டு மிரட்டுவார்கள். கட்டியே தீரவேண்டும் இல்லையேல் தேர்வு எழுத விடமாட்டார்கள். அதுமட்டுமல்ல “படிக்க பணம் கட்ட முடியலன்னா ஏன்யா வரிங்க” என்று அருவருப்புடன் பேசுவார்கள்.

மேற்கண்ட பிரச்சனைகள் அனைத்தும் முதல்வர் பதவியில் அதிகாரம் செலுத்தும் நம்ம கல்வி உரிமைப்போராளி, குழந்தைகள் உரிமைப்போராளி, உளவியல் வேந்தன், அறிவியல் ஆசான் தற்புகழ்ச்சி பேரொளி ‘ஆயிஷா’ நடராசனுக்கு தெரியாதது அல்ல, எல்லாம் தெரியும், தெரிந்தேதான் செய்கிறார்.

  • கல்வித்துறையின் எந்த விதிமுறைகளையும் மதிக்காமல் எல்லாவற்றையும் கரன்சி துறை கட்டுப்படுத்தி மாணவர்களின் ஒழுக்கம், கல்வி, ஆளுமை, விளையாட்டுத் திடல் என்று எதையும் கவனிக்காமல் பில்டப் காட்டி பணம் பறிக்கும் பகல் கொள்ளையாளிகளுக்கு தூணாய் துணைநின்று துரும்பாய் உழைத்து வழிநடத்துபவர் தான் இந்த ‘ஆயிஷா’ நடராசன்.
  • கல்விக் கட்டண உயர்வை பெற்றோர்கள் யாராவது தட்டிக் கேட்டால் பிள்ளைகளை வெளியில் நிற்க விடுவார், இந்த மாணவப் போராளி முதல்வர்.
  • பார்க் இல்லை என்று அதிகாரி கேட்க அடுத்தவன் இடத்தை ஆக்கிரமித்து பார்க் கட்டி,  ராதிகாவை வரவழைத்து திறக்க ரூட் போட்டு கொடுத்ததே இந்த நடராசன் தான.
  • பொதுப் போக்குவரத்துக்கான ரோட்டை தனது பள்ளிக்காக ஆக்கிரமிக்க ஆலோசனை சொன்னதும் இந்த நடராசன்தான்.
  • சமீபத்தில் ஆளுநர் வருகைக்காக பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் ரூ.100, கல்லூரி மாணவர்கள் அதற்கு மேலும் தனியாக பணம் கட்ட வேண்டும் என ஆலோசனை தந்து சில லட்சம் செலவு செய்து பல லட்சம் மக்கள் பணத்தை ஆட்டையை போட ஐடியா தந்ததும் இந்த நடராசன் தான்.
  • “என்ன சார் முற்போக்கா பல புத்தகம் எழுதி இருக்கீங்க. ஆயிஷா புத்தகமும், ஆவணப்படமும் இன்னமும் உங்களப்பத்தி நல்லவிதமா பேசுது, உங்கள ஸ்கூல்ல பாத்தா இப்படி இருக்கீங்களே” என்று கேட்டால், “அதுவேற, இதுவேற. அங்க நான் அப்படித்தான், இங்கு நான் இப்படிதான் செய்வேன; ரூல்ஸ்படிதான் கேட்கணும்” என்று பேசகிறார் இந்த கல்வி உளவியலாளர்.

பெரும்பாலும் இவரின் போலி முகத்தை நம்பி, பின்னர் உண்மை முகத்தை காணும் பல பெற்றோரும், ஆசிரியர்களும் “உண்மையில் இவர் ஒரு பசுந்தோல் போர்த்திய புலி சார்” என்றே சொல்கின்றனர். “கத்தியில்லாம, தடி, பிளேடு என ஆயுதம் இல்லாமல் டை கட்டிகிட்டு எப்படி வழிபறி பண்ணணும்ங்கிற கலையை இவங்க ஒரு பல்கலைக்கழகமே நடத்தலாம் சார்” என்றும் போட்டு உடைக்கிறார்கள்.

முற்போக்கு, பிற்போக்கு வைத்து முதல்வர் வேலை பார்க்கும் இந்த மேதமைமிக்க நடராசனின் நூல் வெளியீட்டு விழாவுக்கு கடலூர் கவிஞர் பால்கி தலைமை தாங்கி, “நடராசன் எழுத்துலகின் புது அவதாரம், படைப்புகளின் பன்முகத் தன்மையை ஒருங்கே பெற்றவரை வளர்த்தெடுக்கவே இந்நிகழ்ச்சி” என்று சொறிந்தார். சொறிந்த சொறியில் நடராசன் மிதக்கும்போது அடுத்து வந்த கடலூர் குடியிருப்போர் சங்கத்தலைவரும், சிபிஎம் கட்சியின் மா.வ.க. உறுப்பினருமான மருது, “இரா.நடராசன் ஒரு கல்வித்துறை அறிவாளி, கடலூரின் சொத்து இவரை நாம் அடையாளப்படுத்தியே தீரவேண்டும்” என்றார்.

இதன் பிறகு நடராசனின் நண்பரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவருமான பேரா.மணி பேசும்போது, “எங்கள் சிந்தனை, சொல் என அனைத்தையும் தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல உதவியது சி.பி.எம் கட்சி. இது உழைக்கும் மக்களின் கட்சி இவர்கள் நடத்தும் பாரதி புத்தகாலயத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ள ‘ஆயிஷா நடராசனின்’ படைப்புகள் உண்மையில் சமூகத்திற்கு தேவையான விஷயத்தை சொல்கின்றன. என்னைப் பொறுத்தவரை இவர் சமூகத்தைப் பற்றி சிந்திக்கும் போது, நாம் இவரைப் பற்றியும் இவரின் படைப்புகளைப் பற்றியும், இவரின் நவீன சிந்தனையைப் பற்றியும் ஆராய்ச்சி செய்யலாம்னு ஆசை” என ஏற்கனவே சொறிந்த அறிப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒருமுறை இவரும் சொறிந்தார்.

அடுத்துபேசிய சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், “ஆயிஷா நடராசனைப் பொறுத்தவரை அவரை எனக்கு 2000-ம் ஆண்டு முதல் நல்ல அறிமுகம். அவர் புத்தகத்தைப் படித்துவிட்டு பலமுறை அவரை கைபேசியில் பாராட்டியுள்ளேன். இப்போது நேரில் பாராட்டும் வாய்ப்பு கிட்டியுள்ளது” என்று துவங்கி “நடராசனின் சிறப்பு என்னவென்றால் தமிழில் இதுவரை தேடித்தேடி கிடைக்காத பல அறிவியல் விஷயங்களை நமக்கு கண்டுபிடித்து தந்துள்ளார்.” என்று புகழ் மாலை சூட்டினார்.

“2012-ல் பத்தோடு பதினொன்றாக இருந்த ஆயிஷா நடராசனின் நூல்கள் இன்று முன்னணியில் உள்ளது. 2005-ல் பாரதி புத்தகாலயத்தில் உறுப்பினராக இருந்தவர் என்று புத்தகம் பேசுது நூலின் முதன்மை ஆசிரியராக உள்ளார்” என்று பேசினார். இப்படி சிலாகித்து உச்சத்தில் பேசும்போது, சாய்ந்து உட்கார்ந்து இருந்த நடராசன் புகழ்ச்சி தாங்காமல் நாற்காலியின் உச்சத்திற்கு வந்து விட்டார் ஒரு கட்டத்தில் புகழின் அரிப்பு தாங்காமல் எழுந்து நின்றே விட்டார்.

இதோடு நின்று விடவில்லை ஜி.ஆர். கொஞ்சம் சமூகப்பிரச்சனைப் பற்றி பேசணுமில்லையா அதனால் அரசுப்பள்ளியின் பக்கம் தனது பேச்சை திருப்பினார். “கோவை காரமடை ஒன்றியப் பள்ளி 1930-ல் துவங்கப்பட்டது. 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்த பள்ளியில் இப்போ 67 பேர்தான் உள்ளனர். பள்ளியின் அடிப்படை வசதிக்காக அரசு நிதி ஒதுக்கவில்லை, பின் ஆசிரியர்கள் ரூ 50,000 சொந்த பணத்தில் செலவு செய்தபோது ஊர்மக்கள் 3 லட்சம் வசூலித்து தந்தார்கள், இதைக்கேள்விப்பட்ட ஆட்சியர் 3 லட்சம் தந்தார்.

மேலும் நெடுவயல் எனும் கிராமத்தில் பள்ளியை சீரமைக்க கருப்பையா அண்ணன் ஆண்டுதோறும் வசூல்செய்து சீர்படுத்தினார். இப்படி நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி கற்று கொடுப்பதற்கு நடராசனிடம் நிறையவே உள்ளது” என்று முடித்தார்.

“ஆயிஷா வந்த காலத்தில் அதை வாங்க யாரும் இல்ல, இப்ப பாரதி புத்தகாலயம் மூலமாவும் நான் அடையாளம் கண்டுபிடிப்பதற்கு என்னை பலரும் நாடி வருகிறார்கள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார் நடராஜன்.

இப்படி நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை தொகுப்பாக பார்க்கும்போது அரசுப்பள்ளியின் அவலம் குறித்து மேடையில் பேசிய யாரும் அவர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கவில்லை. மாணவர்களின் படிப்பறிவை பற்றி பேசியவர்கள் யாரும் மாணவர்களைப் பணயமாக்கி கொள்ளையடிக்கும், உழைக்கும் மக்களின் இரத்தம் குடிக்கும் தனியார்மயத்தால் உருவாக்கப்பட்ட தனியார் பள்ளி, கல்லூரிகளின் அராஜகத்தைப் பற்றியோ, ரவுடித் தனத்தைப் பற்றியோ துளியளவும் விமர்சிக்கவில்லை.

நாடு முழுவதும் அரங்கேறிவரும் தனியார்மய, தாராளமய, உலகமய கொள்ளையால் மனிதகுலம் இதுவரையில் அனுபவித்த கல்வி, மருத்துவம், தண்ணீர், மின்சாரம், சுகாதாரம் அனைத்தையும் ஏப்பம்விட்டு, காடுகள், மணல்கள், கடல், மலைகள், கனிம வளங்களையும் ஏப்பம் விட்டு மனிதகுலத்திற்கே அழிவை ஏற்படுத்தும் எதிரியை அடையாளம் காட்டாமல் மிக எச்சரிக்கையுடன் வாசகர்களையும், பார்வையாளர்களையும் மடைமாற்றம் செய்யும் வேலைதான் நடராசனின் படைப்புகள், அறிவு உள்ளிட்ட மனிதகுல வளம் அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விருந்தாக்கும் வேலையைதான் இதுபோன்ற அறிவியல் எழுத்தாளர்களின் படைப்பு உள்ளது. எதிரியை அடையாளம் காட்டாத இவர்களின் அறிவியல் நிச்சயம் முதலாளிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும்.

ஜி.ராமகிருஷ்ணன் தனது பேச்சில் எந்த இடத்திலும் தரங்கெட்டு வரும் அரசுப்பள்ளிகளின் வீழ்ச்சிக்கு காரணம் தனியார்மயம் தான், தனியார் பள்ளிகளின் கொள்ளை லாபவெறிதான் என்று ஒரு இடத்தில் கூட பேசவில்லை. அரசு மக்கள் நலத்திட்டத்தில் வேலைகளில் இருந்து விலகி முதலாளிகளின் சேவகர்களாக மாறி ஒருமக்கள் விரோத நிறுவனமாக செயல்படுவதையோ அல்லது கார்ப்பரேட் முதலாளியாக நாட்டை சூறையாடுவதையோ யார்? என அடையாளம் காட்டாமல் குள்ள நரித்தனமாக பதுங்கும் இவர்கள் தான் மக்களை விழிப்படையச் செய்யபோகிறார்களாம். நல்ல வேடிக்கை, இந்த நேரத்தில் ஒரு பட்டுக்கோட்டை பாடல் நினைவுக்கு வருகிறது.

“‘மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்?”

“நாம் சேர்கின்ற செல்வங்கள் பண்ணையாரிடம் போய் சேர்வதனால் வந்த தொல்லையடி…….”

என்ற வரியை வேறு இடத்தில் போய் சேர்வதனால் வந்த தொல்லையடி என்று மாற்றினார்கள் சினிமாக்காரர்கள்.

“நாயும் வயிற்றை வளர்க்கும், வயிற்றுச்சோற்றை பெரிதென்று சொல்வீரோ”

என்றார் பாரதிதாசன்

இந்த வரிகளில் இருந்து சொந்த வாழ்க்கை வேறு, பொது வாழ்க்கை வேறு என்று பேசும் நடராசன் போன்றவர்களின் நோக்கத்தையும், புரிந்துகொண்டு உண்மையில் இப்படி பணத்துக்காகவும், பெயர், புகழுக்காகவும, பேனா பிடிக்கும் ‘நான் அவன் இல்லை. அவன் நான் இல்லை’ என்று இரட்டை வேடம் போடும் இவர்களை மக்களிடம் அடையாளம் காட்ட வேண்டும. இவர்கள் உண்மையில் மக்களின் எதிரிகள் என்கிறார் பாரதிதாசன்.

பின்குறிப்பு

இந்நிகழ்ச்சி நடத்த அன்று நவ 7 ரசியப் புரட்சி நாள். ஏதுமற்ற ஏழைப் பாட்டாளி வர்க்கம். கொடுங்கோல் ஜார் அரசனையும் முதலாளித்துவ அடிவருடி அரசையும் தூக்கியெறிந்து உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய இத் திருவிழாவை பற்றி இந்த சிபிஎம் ‘போராளிகள்’ ஒருவரி கூடபேசவில்லை. சரிதானே! தனியார் பள்ளி கொள்ளையர்களை காப்பாற்றுவதை பகிரங்கமாக செய்யும் ஆயிஷா நடராஜன் போன்றோரை தூக்கி சுமக்கும் போலிக் கம்யூனிஸ்டுகள் ரசிய புரட்சி பற்றி பேசினால்தானே பிரச்சினை!

– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கடலூர்.

மோடி அலை என்ற வெங்காயம் !

4

அரியானா, மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள்:மோடி அலை என்ற வெங்காயம்!

காராஷ்டிராவில் கடந்த 15 ஆண்டுகளாக நீடித்தவந்த காங்கிரசு மற்றும் தேசியவாத காங்கிரசு கூட்டணி ஆட்சியும், அரியானாவில் கடந்த பத்தாண்டுகளாக நீடித்துவந்த காங்கிரசு ஆட்சியும் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தப்பட்டுள்ளதைக் காட்டி மீண்டும் மோடி அலை சுழன்றடிப்பதாகப் பார்ப்பன ஊடகங்கள் குதூகலிக்கின்றன. அரியானாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள அதேசமயம், மகாராஷ்டிராவில் அதிக இடங்களைக் கைப்பற்றி தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி ஆட்சியை பா.ஜ.க. அமைத்துள்ளது. இதைக் காட்டி நாடாளுமன்றத் தேர்தலின் போது வீசிய மோடி அலையானது இப்போது சுனாமியாகச் சுழன்றடித்துள்ளது என்றும், அமித் ஷாவை பா.ஜ.க. தலைவராக்கியதன் மூலம் தான் நினைத்ததை மோடி சாதித்துவருகிறார் என்றும், அமித்ஷாவின் சாணக்கியத்தனத்தை இச்சட்டமன்றத் தேர்தல்கள் நிரூபித்துக் காட்டிவிட்டன என்றும் ஆளும் வர்க்க ஊடகங்கள் துதிபாடுகின்றன.

மனோகர்லால் கட்டார்
அரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார்

மகாராஷ்டிராவில் கடந்த 2009-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசும் தேசியவாத காங்கிரசுக் கட்சியும் கூட்டணி சேர்ந்து 37 சதவீத வாக்குகளைப் பெற்றன. இம்முறை இவ்விரு கட்சிகளும் கூட்டணி சேராமல் தனித்துப் போட்டியிட்டதால் கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட இவ்விரு கட்சிகள் பெற்ற வாக்குகள் ஏறத்தாழ 3 சதவீதம் குறைந்துள்ளது. இந்த 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூடுதலான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்த 3 சதவீத வாக்கு வித்தியாசமும்கூட, அதிகாரத்திலிருந்த காங்கிரசு மற்றும் தேசியவாத காங்கிரசின் கூட்டணி ஆட்சியில் நடந்த லவாசா மற்றும் ஆதர்ஷ் ஊழல் கொள்ளைகள் அம்பலப்பட்டு நாறியதாலும், தொடர்ந்து 15 ஆண்டுகளாக நீடித்த இக்கூட்டணி ஆட்சி மீதான மக்களின் அதிருப்தியாலும் பா.ஜ.க.வுக்கு எதிர்மறையில் கிடைத்த வாக்குகளேயன்றி, மோடி முன்வைக்கும் வளர்ச்சிப் பாதையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து அளித்த வாக்குகள் அல்ல. மோடி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் முதலான முக்கிய தலைவர்கள் மூன்று மாதங்களாக முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு பிரம்மாண்ட பேரணிகளை நடத்தியபோதிலும், வெறும் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தைத் தான் ஏற்படுத்த முடிந்துள்ளதேயன்றி, மற்றபடி மோடி அலையுமில்லை, சுனாமியுமில்லை.

அரியானாவின் 90 தொகுதிகளில், 47 எம்.எல்.ஏ.க்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் அம்மாநிலத்தில் முதன் முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. இருப்பினும், அரியானாவில் கடந்த மே மாதத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது 34.7 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த பா.ஜ.க, இப்போது அம்மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் 33.2 சதவீதம்தான் பெற்றுள்ளது. மோடியின் வளர்ச்சிப்பாதை என்று ஊதிப் பெருக்கப்பட்ட பலூன் காற்றுப் போன நிலையிலும் அரியானாவில் இந்த வெற்றியை பா.ஜ.க.வால் எப்படி சாதிக்க முடிந்தது?

விதர்பா விவசாயி தற்கொலை
மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்தின் தீராத அவலம் : கடன் சுமை தாளாமல் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட விவசாயி (கோப்புப் படம்)

அரியானாவில் ஜாட் சாதியத் தலைவரும் லோக்தளக் கட்சியின் தலைவருமான சவுதாலா, ஆசிரியர் நியமன ஊழலில் சிக்கி அம்பலப்பட்டதாலும், காங்கிரசு தலைவியான சோனியாவின் மருமகன் ராபர்ட் வதோராவுக்கு ஆதரவாக டி.எல்.எஃப்.  என்ற கட்டுமான நிறுவனத்துக்கு நிலம் கையளித்ததில் நடந்த ஊழல் முறைகேடுகள் அம்பலப்பட்டுள்ளதாலும், இவ்விரு கட்சிகளுக்கு எதிரான மக்களின் அதிருப்தியை பா.ஜ.க. அறுவடை செய்து கொண்டது. மறுபுறம், ஏறத்தாழ 27 சதவீதமாக உள்ள ஜாட் சாதியினர் தொடர்ந்து அரியானா அரசியலில் செல்வாக்கு செலுத்தி வந்த நிலையில், பிராமணர்கள், குஜ்ஜார், காம்போஜ், சீக்கியர், ஜாட், பனியா, யாதவா, ராஜபுத்திரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் முதலான சாதிகளை ஈர்த்து, அந்தந்த வட்டாரத்துக்கேற்ப மெகா சாதிக் கூட்டணி கட்டிக்கொண்டு மேற்படி சாதிகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு விலைபேசியும் பதவி வாக்குறுதிகள் கொடுத்தும் ஓட்டுப் பொறுக்கியது.

காங்கிரசுக்கு ஆதரவாக இருந்துவந்த தாழ்த்தப்பட்ட வால்மீகி சாதியினரின் வாக்குகளை ஈர்க்க, டெல்லியில் வால்மீகி சாதியினர் நிறைந்துள்ள பகுதியில், கையில் துடப்பத்தை ஏந்தி தெருவைக் கூட்டுவதாக நிழற்படத்துக்குக் காட்சியளிக்கும் நாடகத்தை தூய்மை இந்தியா திட்டத்தின் பெயரால் மோடி நடத்தினார். குறிப்பாக கன்ஷிராமால் தொடங்கப்பட்ட பிற்பட்ட- சிறுபான்மையின அரசு ஊழியர் சங்கத்தை உடைத்து, அதன் முக்கிய தலைவர்களை பா.ஜ.க.வுக்கு இழுத்துக் கொண்டும், சீக்கியர்களில் ஒரு பிரிவினரைத் தன்பக்கம் வளைத்துப் போட்டுக் கொண்டும் தனக்குச் சாதகமான சாதிய முனைவாக்கத்தைக் கட்டிக் கொண்டு, மோடி-அமித் ஷா கும்பல் இந்த வெற்றியைச் சாதித்துள்ளது. படுகேவலமான இச்சாதிய முனைவாக்கத்தைத்தான் அமித் ஷாவின் சாணக்கியத்தனம் என்றும் மோடி அலை என்றும் பார்ப்பன ஊடகங்கள் ஊதிப் பெருக்குகின்றன.

அரியானாவில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்ததும் மோடி, சுஷ்மா கோஷ்டிகளுக்கிடையே முதல்வர் பதவிக்கும் அமைச்சர்கள் பதவிக்குமான நாய்சண்டை முற்றி சந்தி சிரித்தது. பேரங்கள் – சமரசங்களுக்குப் பிறகு, “பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கு பெண்கள்தான் காரணம், இந்தியாவின் பாரம்பரியமிக்க ‘காப்’ பஞ்சாயத்துகளின் தீர்ப்புகள் நியாயமானவை” என்றெல்லாம் பேசிவரும் அப்பட்டமான இந்துத்துவ வெறிபிடித்த பிற்போக்குத் தலைவரும் மோடியின் விசுவாசியுமான மனோகர்லால் கட்டார் இப்போது முதல்வராக்கப்பட்டுள்ளார்.

தேவேந்திர ஃபட்னாவிஸ்
மகாராஷ்டிராவின் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ள பா.ஜ.க., தேர்தலுக்குப்பின் சிவசேனாவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கத் தீர்மானித்துள்ளது. பேரங்கள் படியாமல் முறுக்கிக் கொண்டிருந்த சிவசேனாவுக்கு அமைச்சரவையில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு அமைச்சர் பதவி வழங்கவும், துணை முதல்வர் பதவி வழங்கவும் பா.ஜ.க. ஒப்புக் கொண்டுள்ளதையடுத்து இக்கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளன. இங்கேயும் மோடி, நிதின் கட்காரி கோஷ்டிகளுக்கிடையே முதல்வர் பதவிக்கும் அமைச்சர்கள் பதவிக்குமான நாய்ச்சண்டை தொடர்ந்ததால், யார் முதல்வர் என்று தீர்மானிக்க முடியாமல் இழுபறி நீடித்து, தற்போது மோடியின் விசுவாசியும், ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரைச் சேர்ந்த சித்பவன பார்ப்பனருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக்கப்பட்டுள்ளார். மொத்தத்தில் இவ்விரு மாநிலங்களிலும் இதர கோஷ்டிகள் ஓரங்கட்டப்பட்டு, மோடி-அமித்ஷா கும்பலின் விசுவாசிகளே முதல்வர்களாகவும் முக்கிய அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மறுகாலனியாக்கத்தின் கீழ் விவசாயமும் விவசாயிகளும் நாசமாக்கப்பட்டுள்ளதற்கும், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அடக்குமுறைகள் தொடர்வதற்குமான அடையாளக் குறியீடாக உள்ள மாநிலங்கள்தான் மகாராஷ்டிராவும், அரியானாவும். பா.ஜ.க. – சிவசேனா கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ள மகாராஷ்டிராவின் தீராத அவலமாக விவசாயிகள் தற்கொலைச் சாவுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 2001 முதல் இதுவரை 11,029 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த தீபாவளியன்று கடன் சுமை தாளாமல் 6 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளதையும் சேர்த்து நடப்பு 2014-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 906 பேர் மாண்டு போயுள்ளனர்.

பன்னாட்டு நிறுவனங்களின் மனங்கவர்ந்த மாநிலமான அரியானாவில் அமைந்துள்ள குர்கான் தொழிற்பேட்டையானது, முதலாளித்துவப் பயங்கரவாதத்தின் தலைமையகமாகத் திகழ்கிறது. மறுகாலனியாக்கத்தின் கீழ் தொழிலாளர்களின் உரிமை பறிப்பும், கொடூரமான சுரண்டலும் முதலாளித்துவ பயங்கரவாதமும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள முதன்மை மாநிலம்தான் அரியானா என்பதை மாருதி மற்றும் ஹோண்டா தொழிலாளர்களின் மீதான அடக்குமுறையும், அதற்கெதிரான தொழிலாளர்களின் போராட்டமும் நிரூபித்துக் காட்டியது. ஆனாலும் மறுகாலனியாக்கத்தின் குறியீடாக உள்ள இவ்விரு மாநிலங்களில் அவலத்திலும் அடக்குமுறையிலும் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க எந்த ஓட்டுக் கட்சியும் எந்தத் திட்டத்தையும் இத்தேர்தலில் முன்வைக்கவில்லை.

மாருதி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
மாருதி நிறுவனத்தின் அடக்குமுறைக்கு எதிராகப் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இணைந்து குர்கானில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

இவ்விரு மாநிலங்களிலும் மறுகாலனியச் சூறையாடலையும் இந்துவெறி பாசிசத் தாக்குதலையும் மேலும் தீவிரப்படுத்தும் வகையில் இந்துவெறி பாசிச கும்பல் அதிகாரத்துக்கு வந்திருப்பதும், மோடியின் விசுவாச பார்ப்பன பாசிசத் தளபதிகளாக உள்ள கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகளே முதல்வராக்கப்பட்டிருப்பதும் பேரபாயமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஓட்டுக்கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதாச்சார அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்களின் விகிதாச்சாரமும் அமைய வேண்டுமென்றும், இதற்கேற்ப தேர்தல் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டுமென்றும் சுடுகாட்டில் உட்கார்ந்து கொண்டு சாம்பிராணி புகையை எழுப்பிக் கொண்டிருக்கிறது, மார்க்சிஸ்ட் கட்சி.

– குமார்
_______________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2014
_______________________________

ஆஸ்திரேலியாவில் மோடியை எதிர்த்து போராட்டம்

6
இந்திய பூர்வகுடிகளின் எதிரியான பார்ப்பனியத்தின் தளபதி மோடிக்கு ஆஸ்திரேலிய பூர்வகுடி நடன வரவேற்பு!
இந்திய பூர்வகுடிகளின் எதிரியான பார்ப்பனியத்தின் தளபதி மோடிக்கு ஆஸ்திரேலிய பூர்வகுடி நடன வரவேற்பு! படம்  நன்றி – The Hinduஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக மோடி ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார். ஏற்கனவே அமெரிக்காவில் அவர் செய்த மாபெரும் ‘சாதனை’கள் குறித்து இன்றும் ஊடகங்கள் புளகாங்கிதம் அடைந்து வருகின்றன. இந்த ஃபுல்காங்கிதம் தற்போது கங்காரு தேசத்திலும் நடக்கிறது.

சிட்னியில் புலம்பெயர் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு கூட்டத்துக்கு நேற்று (17/11/2014) மோடி சென்றார். இந்தியர்கள் 16,000 பேர் மோடியை வரவேற்க அலைகடலென திரண்டிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. கூட்டத்தின் பிரம்மாண்டத்தை சித்தரிக்கும் ஊடகங்கள், மோடி செல்லுமிடமெல்லாம் அவரை விடாமல் துரத்தும் 2002-ம் வருட குஜராத் முஸ்லிம் மக்கள் படுகொலைகளின் நீதிக்கான வேட்கையை மூடி மறைக்கின்றன. கவித்துவ நீதியின் மீது நாட்டம் கொண்ட அறவுணர்வு குன்றாத இந்தியர்கள் ஆஸ்திரேலியாவிலும் இருக்கிறார்கள் என்பதற்கு சான்று பகர்கிறது இந்த செய்தி.

நூற்றுக்கணக்கான மக்கள் — பெரும்பாலும் சீக்கியர்கள் திரண்டு மோடிக்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளில், ‘மோடி உங்கள் கரங்களில் ரத்தம் தோய்ந்திருக்கிறது’, ‘பொய் ஒருபோதும் உண்மையாகாது’, ‘தவறு எப்போதும் சரியாகாது’, ‘தீமை நல்லதாக மாறாது’ என்று எழுதப்பட்டிருந்தன. சிட்னியில் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவின் பிரதமர் டோனி அபட் மெல்போர்னில் ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சிக்கும் சென்று தமது எதிர்ப்பை தெரிவித்தனர், போராட்டக்காரர்கள்.
இந்த எதிர்ப்பு குறிப்பாக 2002-குஜராத் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலைக்காக என்பது குறிப்பிடத்தக்கது. சிட்னியில் என்ன நடக்கிறது என்று கார்ப்பரேட் ஊடகங்களின் மூலம் மோடி மகிமை அள்ளித் தெளிக்கப்படும் போது ஆஸ்திரேலிய வாழ் சீக்கிய மக்களின் எதிர்ப்பெல்லாம் எங்கேயும் வராது.

"மோடி உங்கள் கையில் இரத்தக் கறை" ஆஸ்திரேலிய சீக்கிய மக்கள் எதிர்ப்பு!
“மோடி உங்கள் கையில் இரத்தக் கறை” ஆஸ்திரேலிய சீக்கிய மக்கள் எதிர்ப்பு!

இதோடு கூடவே “காஷ்மீர் கவுன்சில் ஆஃப் ஆஸ்திரேலியா” எனும் குழுவினரும் மோடியை எதிர்த்து போராட்டத்தை பதிவு செய்திருக்கின்றனர். இந்த போராட்டம் நியூ சவுத் பாராளுமன்றத்திற்கு வெளியே நடைபெற்றது. காஷ்மீருக்கு அமைதியான தீர்வு ஏற்பட்டால்தான் இந்தியா, பாக் இருநாடுகளும் முன்னேற்றத்தை அடையுமென கவுன்சிலின் நிறுவனர் மும்தாஸ் மியன் ஊடகங்களிடம் கூறினார்.

modi-sydney-2மோடி எனும் பாசிஸ்டை எவ்வளவுதான் மூடி மறைத்து மேக்கப் போட்டு மினுக்க வைத்தாலும் உண்மை மறைந்து விடாது. மோடி எங்கு சென்றாலும் அங்கே எதிர்ப்பதற்கு நம் மக்கள் இருக்கிறார்கள். காட்டுவதற்குத்தான் ஊடகங்கள் இல்லை.

modi-sydney-1

மேலும் படிக்க:

கும்மிடிப்பூண்டி, கடலூரில் நவம்பர் தின விழா !

0

நவம்பர் புரட்சி தின கொண்டாட்டங்கள் – 5

17. திருவள்ளூர் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக 97-வது நவம்பர் புரட்சி தின விழா கும்மிடிப்பூண்டி பகுதியில் SMV மஹாலில் நடத்தப்பட்டது.

nov7-thiruvallur-poster

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின், திருவள்ளூர் மாவட்ட தலைவர் தோழர். விகந்தர் தலைமை உரையாற்றினார்.

தனது தலைமை உரையில், ரஷ்ய புரட்சி நாளை நாம் உயர்த்தி பிடிக்க வேண்டிய அவசியமென்ன என்று தொடங்கி, இது தொழிலாளி வர்க்கம் அரசாள வந்த நாள், முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டிய நாள் என்றும் அத்தகைய பயங்கரவாதத்தை நாமும் நாள்தோறும் சந்தித்து வருகிறோம் அதை முறியடிக்க வேண்டியுள்ளது என்று தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

சிறுவர்களுக்கான நிகழ்ச்சியில், புரட்சிகர பாடல்களும் கல்வி தனியார்மயம் குறித்த நாடகமும் நடத்தப்பட்டது. கல்விக் கொள்ளையர்களின் லாப வெறிக்கு இளந்தளிர்கள் ‘நரபலி’ தரப்படும் அவலத்தை சித்தரிக்கும் வகையில் அமைந்த நாடகம் பார்வையாளர்களை உறைய வைத்தது. பகத்சிங் வேடமணிந்த மூன்று இளம் சிறுவர்கள் “லால் சலாம், இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டது “அந்த வீரன் இன்னும் சாகவில்லை” என்ற பாடலை நினைவூட்டுவதாக அமைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் SRF மணலி கிளையை சேர்ந்த தோழர். ராஜா முற்போக்கு கவிதைகள் வாசித்தார். இக்கவிதை அனைவரையும் ஈர்த்தது.

நவம்பர் புரட்சி தினத்துக்காக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர் துரை.சண்முகம் எழுதிய கவிதையை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர். சுப.தங்கராசு வாசித்தார்.

பகத்சிங் குறித்து கிளைச் சங்க தோழரின் மகள் 10 நிமிடம் உரையாற்றினார். சிறுவர்கள் முதல் முறையாக மேடையில்  பங்கேற்றது மற்ற பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் உற்சாகமூட்டுவதாக இருந்தது.

பிரச்சாரக்குழுவின் “குப்பை உணவு”, “நவம்பர் புரட்சி” ஆகிய பாடல்கள் பார்வையாளர்களை பலத்த கரகோஷத்தோடு வரவேற்கச் செய்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அடுத்ததாக எழுச்சியுரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச்செயலாளர் தோழர் சுதேஷ்குமார், நிலவுகின்ற சமூக அமைப்பில் உள்ள பண்பாட்டுச் சீரழிவுகளையும், இந்த சீரழிவுகளின் விளைவாக உழைக்கும் மக்களின் எழுச்சி தள்ளிப் போவதையும் விளக்கினார். ஸ்மார்ட் போன் கலாச்சாரத்தின் காரணமாக சிறுவர்கள் முதற்கொண்டு சீரழிவதையும், “ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் தாம் அவர் அப்பா இல்லன்னா வெறும் டப்பா” எனுமளவுக்கு செல்போன் மீதான் மோகம் திணிக்கப்பட்டுள்ளதை சாடிய தோழர், ஆபாச சீரழிவு கலாச்சாரம் குடும்ப உறவுகளையும் விட்டுவைக்கவில்லை என்பதை தோலுரித்துக்காட்ட மறக்கவில்லை. குடும்பம் ஒரு கோவில், அன்னை அதில் தெய்வம் என்பதெல்லாம் காலாவதியாகி, நுகர்வே சகலமும் என்ற ஒரு நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ள அவலத்தை எடுத்துரைத்தார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட பிரச்சாரக் குழு இந்து மதவெறி பயங்கரவாதத்தை திரைகிழித்தும், ரஷ்ய புரட்சி நாளை உயர்த்திப் பிடித்தும் பாடல்களை பாடினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர். சுப.தங்கராசு இருவரும் நினைவுப் பொருட்களை வழங்கி உற்சாகப்படுத்தினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக, சங்கத்தின் செயலாளர் தோழர் ரமேஷ் நன்கொடையாக புது ஆடை வழங்கியதை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர். சுப.தங்கராசு பெற்றுக்கொண்டார்.

320-க்கும் மேற்ப்பட்ட தொழிலாளிகள் தம் குடும்பத்துடன் கலந்து கொண்ட இந்த விழா, தொழிலாளிகளிடமும், அவர்தம் குடும்பத்தினரிடமும் உற்சாகத்தை தந்துள்ளது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கும்மிடிப்பூண்டி பகுதி தலைவர், தோழர். கோபாலகிருஷ்ணன் நன்றியுரைக்கு பின் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் மாவட்டம்.- 9444213318

18. கடலூர் அண்ணாகிராமம்

உழைக்கும் மக்கள் அலையென எழுந்து அதிகாரத்துக்கு வந்த நாள்
உழைக்கும் மக்களின் உன்னதமான விழா.

நவம்பர் 7 ரசிய புரட்சி நாள் நீடூழி வாழ்க!

வம்பர் 7 ரசிய புரட்சி நாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக அண்ணாகிராமம் பகுதியில் கொண்டாடபட்டது. தோழர்கள்,ஆதரவாளர்கள் மற்றும் அந்த ஊர் பொதுமக்கள் என்று அனைவரும் கலந்து கொண்டார்கள்.அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டு இருந்தது. பெருந்திரளான மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.

முதல் நிகழ்ச்சியாக நவம்பர் புரட்சியை விளக்கும் விதமாக “ஸ்டலின் சகாப்தம்” படத்தை பெரிய திரையில் போட்டு காட்டப்பட்டது. பின்னர் தலைமை உரையாக தோழர் கருணாமூர்த்தி நவம்பர் 7-ன் முக்கியத்துவத்தையும் பற்றியும், இந்த நாளில் உழைக்கும் மக்கள் ரசிய நாட்டில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததையும், உலக பாட்டாளிகளுக்கு வழி காட்டியதையும் விளக்கி கூறினார்.

இந்நாளை ஒவ்வொரு உழைக்கும் மக்களும் தங்களுடைய பண்டிகை போல கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், இன்று நம் நாட்டில் மறுகாலனியாக்கத்தாலும், பார்ப்பன பாசிசத்தாலும், உழைக்கும் மக்களுக்கு ஏற்படும். பாதிப்புகளை விளக்கி பேசினார். உழைக்கும் மக்கள் இன்று நாள்தோறும் விலைவாசி உயர்வு, மானியவெட்டு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள், ஆனால் இன்று பெரும் முதலாளிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து மக்களைச் சுரண்டி வாழ்கிறார்கள்.

ஆகையால், உழைக்கும் மக்களாகிய நாம் ஒன்று சேர்ந்து மக்கள் கமிட்டிகளை கட்டவேண்டும். அதன் ஊடாக ஒரு புதிய ஜனநாயகக் குடியரசை ஏற்படுத்த வேண்டும் என்று விளக்கி பேசினார்.

பின்னர் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பின்பு அனைத்து மக்களுக்கும் உணவளிக்கப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இவண்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

கடலூர் மாவட்டம்

ஐடி பிரமிடில் பாலாஜி அண்ணாவுக்கு இடமில்லை

22

it 2பாலாஜி அண்ணா தளர்ந்து போயிருந்தார். நாற்பத்தி ஏழு வயதுக்கு அவர் கண்களின் கீழே வளையமிட்டிருந்த கருமையும், முகமெங்கும் இருந்த சுருக்கங்களும் பார்க்க என்னவோ போல் இருந்தது. முன்னைப் போல் துறுதுறுவென்று அலைபாயும் கண்கள் இல்லை. பத்துப் பண்ணிரண்டு வருடங்களுக்கு முன் எந்த நேரமும் நெருக்கிய புருவங்களோடு நம் கண்களை அவர் ஊடுருவிப் பார்த்தால் பசித்த புலியை நேரிட்டுச் சந்தித்தது போல் இருக்கும்.

“ஏய்… சரியாச் சொல்லு. பொய் சொல்லக் கூடாது. நீ கோஸ்ட் அடிக்கும் போது ப்ரைமரி ஹார்ட் டிஸ்கையும் செகண்டரி ஹார்ட் டிஸ்கையும் சரியாத் தானே செலக்ட் பண்ணினே? அப்புறம் எப்படிடா டேட்டா லாஸ் ஆச்சி. உண்மைய ஒத்துகிட்டா என்னால காப்பாத்த முடியும்… இல்லாட்டா வேலை போயிடும் பரவாயில்லையா?” உணர்ச்சிகளற்ற அவரது இன்றைய முகம் முன்பு ஒரு காலத்தில் நான் செய்த தவறை மறைக்க முயற்சித்த போது அனல் கக்கியது நினைவுக்கு வந்தது.

பாலாஜி சார் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட பாலாஜி அண்ணா நான் பொறியியல் படித்து கணினி பழுது பார்க்கும் நிறுவனம் ஒன்றில் முதன்முதலாக வேலைக்குச் சேர்ந்த போது எனது தொழில்நுட்ப பயிற்சியாளராக இருந்தார். கணினித் தொழில்நுட்பத்தில் ஆனா ஆவன்னா சொல்லிக் கொடுத்த ஆசான்.

நாவல் நெட்வேர் என்கிற கணினி இயங்குதளத்தை(Operating system) இன்றைய ஐ.டி தலைமுறையினர் அனேகமாக மறந்திருப்பார்கள். அந்த இயங்குதளத்தில் புழக்கத்தில் இருந்த நாவல் டைரக்டரி சர்வீஸ் (NDS) என்ற நுட்பத்தில் பாலாஜி நிபுணர். பின்னர் அதே தொழில்நுட்பத்தை நாவல் நிறுவனத்திடமிருந்து விலைக்கு வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 2000 இயங்குதளத்திலிருந்து ஆக்டிவ் டைரக்டரி சர்வீஸ் (ADS) என்ற பெயரில் சந்தைப்படுத்தி நாவலை ஒழித்ததோடு சர்வர் மார்க்கெட் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டது.

இந்தப் போக்கு துவங்கிய இரண்டாயிரமாவது ஆண்டுகளின் துவக்க காலத்தில் பாலாஜி எங்கள் கண்களுக்கு அசகாய சூரராக தெரிந்தார். அப்போது தான் பல வங்கிகள் தமது சேவையை கோர் பாங்கிங் (Core Banking) என்று சொல்லப்படும் மையப்படுத்தப்பட்ட கணினி வலைப் பின்னலுக்குள் கொண்டு வரத் துவங்கியிருந்தன. அந்த பிராஜக்டுக்காக விண்டோஸ் இயங்குதளத்திலும் ஆக்டிவ் டைரக்டரியிலும் எங்களுக்கு பயிற்சி அளித்தார் பாலாஜி.

it 3ஓரிரு ஆண்டுகளில் (2004 ஜனவரி என்பதாக நினைவு) ஐ.பி.எம் நிறுவனத்திடமிருந்து பாலாஜிக்கு கூடுதல் சம்பளத்துடன் வேலைக்கான அழைப்பு வந்தது. ஐ.பி.எம் வேலையை ஏற்று பெங்களூர் சென்றவரிடம் இருந்து அதன் பின்னர் பெரிய அளவில் தகவல்கள் ஏதும் வரவில்லை. அவ்வப் போது பொதுவான நண்பர்களிடமிருந்து சில தகவல்களைக் கேள்விப் பட்டு வந்தேன். ஒவ்வொரு முறை அவரைக் குறித்துக் கேள்விப் படும் போதும் அவர் வெவ்வேறு நிறுவனங்களில் வேலை செய்வதாக அறிந்து கொள்ள முடிந்தது. சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் சென்ற வாரம் எதேச்சையாக தேனீர் கடை ஒன்றில் வைத்து தான் அவரை நேரில் பார்த்தேன்.

”இப்போதைக்கு வேலை எதுவும் இல்லைடா.. ஆறு மாசமாச்சி. தேடிகிட்டு இருக்கேன், பார்க்கலாம். உனக்கு ஏதாவது லீட் தெரிஞ்சா சொல்லேன்”

ஆச்சர்யமாக இருந்தது.

“அட… உங்களுக்கேவா வேலை இல்லை? சும்மா தமாஸ் பண்ணாதீங்க பாஸ்.”

”உனக்கு கேட்க தமாசா இருந்தாலும் அது தான்பா உண்மை.”

”இல்லையே, நான் அப்பப்ப கேள்விப்பட்ட வரைக்கும் நீங்க அடிக்கடி கம்பெனி மாறிகிட்டே இருந்தீங்க… ஒவ்வொரு தடவை கம்பெனி மாறும் போதும் நல்ல சம்பளத்துக்கு மாறியிருக்கீங்க… அப்புறம் எப்படி வேலை போகிற நிலைமைக்கு வந்தீங்க?”

”உண்மைய சொல்லப் போனா… நான் ஒரு பிரமிட் மேல ஏறிகிட்டு இருந்தேன்.. நீ பிரமிட் பார்த்திக்கே இல்ல? அதுக்கு மேலே போகப் போக உயரம் அதிகமாகிட்டே இருக்கும்.. அதே நேரம் இடம் குறைஞ்சிகிட்டே இருக்கும்.. புரியுதா?”

“புரியலையே பாஸ்”

it 1”இப்ப டி.சி.எஸ்ஸோ காக்னிசண்டோ இல்ல இது மாதிரி எந்த கம்பெனியா இருந்தாலும் எடுத்துக்க. அவனுக்கு கீழ் மட்டத்துல ஒரு ஆயிரம் எல்-1 ரிசோர்ஸ் (L1 – resource – முதல் கட்ட தொழில்நுட்ப அறிவுள்ள ஆற்றல்கள் அல்லது மனித வளங்கள்) தேவைப்பட்டால் அதில் 40 சதவீதம் தான் எல்-2 ரிசோர்ஸ் தேவை. அதாவது 400 பேர். அதுக்கு மேல எல் – 3 ரிசோர்ஸ் ஒரு 40 பேர் தேவை. அதுக்கும் மேல எஸ்.எம்.இ (SME – Subject Matter Experts / துறை சார் வல்லுனர்) ஒன்னோ ரெண்டோ பேர் தான் தேவை. ஒரு இன்ஜினியர் குறிப்பிட்ட ஒரு ஸ்கில் செட்ல (Skill set) எல்-1ல துவங்கி எஸ்.எம்.இயா முடிய சுமாரா எட்டுலேர்ந்து பத்து வருசம் ஆகும்… அது தான் அவனோட கேரியர் கிராஃப். அதுக்குப் பின்னே மேனேஜ்மெண்டுக்கு போகலாம்.. இல்லேன்னா ப்ரீசேல்ஸா (pre-sales – விற்பனைக்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குபவர்) போகலாம்.. முடியலைன்னா பிரமிடோட உச்சிலேர்ந்து கீழ விழுந்து தான் ஆகனும், என்னை மாதிரி”

”சரி பாஸ் நீங்க எல் – 2லயோ எல்- 3லயோ கொஞ்சம் வருசத்தை இழுத்து அடிச்சிருக்கலாமே…?”

“செய்திருக்கலாம்.. ஆனா அப்ரெய்சல் அவ்வளவா எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு வருசமும் ஒரு குரோத் காட்டியாகனும் இல்ல? நான் நம்ம கம்பெனியில இருந்து போன கொஞ்ச நாள்ல கல்யாணம் ஆச்சி.. ரெண்டு பசங்க. அவங்க படிப்பு… பொண்டாட்டியோட செலவு.. வீடு வாங்கினது.. கார் வாங்கினது.. இப்படி கமிட்மெண்டுக்கு மேல கமிட்மெண்டா சேர்ந்து கிட்டே போகுதில்லே? அதை ஈடுகட்டனும்னா நான் அடுத்த கட்டத்துக்கும் அடுத்த கம்பெனிக்கும் மாறித்தானே ஆகனும்?”

”அதான் நிறைய கம்பெனிகள் இருக்கே? ஒவ்வொரு லெவலுக்கும் நாலஞ்சி கம்பெனி மாறினாலே வருசத்த ஓட்டிடலாமே?”

“இல்லடா.. ஒரே லெவல்லே இருந்து இன்னொரு கம்பெனிக்கு ஜம்ப் ஆனா சம்பளத்துல அந்தளவுக்கு ஹைக்(Hike – உயர்வு) இருக்காது. ஒரு குறிப்பிட்ட ஸ்கில் செட் உள்ள ஒரு ரிசோர்சுக்கு இவ்வளவு தான் சம்பளம்னு ஒரு ஸ்டேண்டர்ட் இருக்கில்லே… அது எல்லா கம்பெனி ஹெச்.ஆருக்கும் (HR – Human resources / நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆள் எடுக்கும், சம்பளம் நிர்ணயம் செய்யும் வேலையைச் செய்யும் மனித வளத் துறை) இந்த ஸ்டேண்டர்ட் என்னான்னு தெரியும் இல்ல?”

”சரி, நீங்க மேனேஜ்மெண்ட் லைன்ல போக முயற்சி செய்யலையா?”

it 5“அதுக்கு தனியா ஐ.டி.ஐ.எல், பி.எம்.பி, சிக்ஸிக்மான்னு தனியா படிக்கனும். டெக்னிக்கலா படிக்கறது வேற இது வேற.. எனக்கு செட் ஆகலை. அதுவுமில்லாம மேனேஜ்மெண்ட் சைட்ல போக என்னோட சுபாவமும் ஒத்துக்காது. அப்படியும் வேற வழியில்லாம பிராஜக்ட் மேனேஜர் வேலைக்கு நாலஞ்சி இண்டர்வ்யூ போய் பார்த்தேன்… தேர்வாகலை.”

”ஆன் சைட் போக ஏதும் முயற்சி செய்யலையா?”

”உனக்கே தெரியுமே… இங்க அப்பாவுக்கு வயசாயிடிச்சி. நான் மட்டும் தான் ஒரே பிள்ளை. இந்த நிலைமைல அவரை அங்கே கூட்டிப் போகவும் முடியாது விட்டுட்டு போகவும் முடியாது..”

”சரி என்ன செய்யலாம்னு இருக்கீங்க?”

”இன்னும் முடிவு செய்யலை. வீட்டு லோனுக்கு தவணை கட்டி நாலு மாசமாச்சி. காரை விக்க முடிவு பண்ணிட்டேன். அந்தக் காசை வச்சி கொஞ்ச நாள் ஓட்டலாம். வீட்டை என்ன செய்யறதுன்னு தெரியலை. பசங்க ரெண்டு பேரும் படிக்கிறாங்க. இந்த வருசம் முடிய இன்னும் அஞ்சாறு மாசம் இருக்கு. அது வரைக்கு முயற்சி செய்து பார்த்துட்டு வீட்டையும் வித்துட்டு ஊருக்கே போகலாமான்னு ஒரு யோசனை இருக்கு. பாக்கி இருக்கிற லோன் போக ஏழெட்டு லட்சம் கிடைக்கலாம். வர்ற காசுல ஊர்ல போயி ஏதாவது சின்னதா பிசினஸ் செய்யலாம்னு நினைக்கிறேன்…”

”அவ்வளவு தானா?”

”……..” நீண்ட மௌனம் ஒன்றே பதிலாக வந்தது.

“ம்?” உறைந்து போயிருந்தவரை லேசாக உசுப்பினேன்.

“ஆங், அவ்வளவு தாண்டா. திரும்பி நின்னு யோசிச்சிப் பாத்தா ஈரோட்லேர்ந்து இருபத்தி மூணு வயசுல எப்படி கிளம்பினேனோ அப்படியே திரும்பிப் போறேன். என்ன சாதிச்சோம்னு நெனைச்சி நெனைச்சி பார்த்தாலும் ஒன்னும் தோன மாட்டேங்குது. ரொம்ப யோசிச்சா டிப்ரஷன்ல விழுந்திடுவேனோன்னு பயமா இருக்கு… சரி, உன் நெம்பர் குடு… பின்னாடி பார்க்கலாம்”

பாலாஜி அண்ணா சென்று விட்டார். ஐ.டி வாழ்க்கையின் நிலையாமை பணிப் பாதுகாப்பின்மை குறித்தெல்லாம் முன்பே தெரிந்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை செவுளில் அறைந்து உணர்த்திச் சென்றார் பாலாஜி. காலையில் துவங்கி மாலையில் முடிவுரும் பட்டாம்பூச்சின் வாழ்க்கை போல் ஐ.டி துறையின் வாழ்க்கை ஓரிரு பத்தாண்டுகளிலேயே முடிவுக்கு வருவதை அங்கும் இங்கும் கேள்விப்பட்டிருந்தாலும் அணுக்கமான ஒருவரின் முடிவை முதன் முறையாக நேரில் காண்கிறேன்.

சரியாக அந்த சந்தர்பத்தில் கழிவறையில் பயன்படுத்திய பின் தூக்கியெறியப்படும் மலம் துடைக்கும் காகிதம் போல் அருவறுப்பாக உணர்ந்தேன். சொந்த வாழ்க்கையை மறந்து பிறந்து வளர்ந்த சமூகத்தை மறந்து சமூக கடமைகளை மறந்து எவனோ ஒரு அமெரிக்கனுக்கு உழைத்துத் தேய்ந்து இளமையைத் தொலைத்த பின் தூக்கியெறியப்படும் அவலம் எனக்குத் தொழில் சொல்லிக் கொடுத்த ஆசானுக்கு மட்டுமே விதிக்கப்பட்டதா என்ன? – யோசிக்கிறேன். நீங்களும் யோசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

– சுகுமாரன்.

ஜெயா நிரபராதி : ஊடகங்கள் எழுதிய விநோத தீர்ப்பு !

5

ஜெயா – சசி கும்பல் மீதான சொத்துக்குவிப்பு வழக்கும், அவ்வழக்கில் பெங்களூரூ சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பும் இந்தியச் சமுதாயத்தின் தலைமை சக்தியாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுள்ள பார்ப்பனக் கும்பலின் கிரிமினல் புத்தியை, பித்தலாட்டத்தனத்தைப் புரிந்துகொள்ளும் வாப்பைத் தமிழக மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இப்பார்ப்பனக் கும்பல் ஊடகங்களில் தமக்குள்ள ஆதிக்கம், செல்வாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு, இச்சொத்துக் குவிப்பு வழக்கே மோசடியானது போலவும், தேர்தல்கள் மூலம் ஜெயாவை வீழ்த்த முடியாத தி.மு.க., அவரைப் பழிதீர்த்துக் கொள்ள பின்னிய சதிவலை போலவும், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கில் வழங்கியிருக்கும் தீர்ப்பு அநியாயமானதென்றும் ஒரு அயோக்கியத்தனமான கருத்தைத் தமிழக மக்களின் பொதுப்புத்தியில் விதைத்துவிட முயலுகின்றன. இந்த வகையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த அம்மாவின் அடிமைகளைவிட, தினமணி, இந்து, துக்ளக், கல்கி, விகடன் குழும இதழ்கள் உள்ளிட்ட பார்ப்பன ஊடகங்களும்; தந்தி, புதிய தலைமுறை உள்ளிட்ட சூத்திர ஊடகங்களும் தம்மை அபாயகரமானவையாகத் தோலுரித்துக் காட்டிக் கொண்டுள்ளன.

சோ ராமஸ்வாமி அய்யர்
குற்றவாளி ஜெயாவைத் தியாகி போலக் காட்டுவதற்காக தீர்ப்பு குறித்து துணிந்து பொய்களையும், அவதூறுகளையும் அள்ளிவிட்டு வரும் துக்ளக் சோ ராமஸ்வாமி அய்யர்.

2ஜி வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள ஆ.ராசாவை உலக மகா வழிப்பறிக் கொள்ளையன் போலச் சித்தரித்து செய்திகளையும், கருத்துப் படங்களையும் வெளியிட்டு வரும் இந்த ஊடகங்கள், சொத்துக் குவிப்பு வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப் பெற்ற ஜெயாவை மறந்தும்கூட குற்றவாளி என்று குறிப்பிட்டு எழுதுவதில்லை.

“குடும்பச் சூழ்நிலை காரணமாக நடிக்க வந்து, தாய் சந்தியாவின் மரணத்துக்குப் பின்னால் அரசியலுக்கு வந்து கூடா நட்பு கேடா முடியும் என்ற பழமொழிக்கு உதாரணமாக பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சென்றுவிட்டார், ஜெயலலிதா” என ஜெயாவை ஏதுமறியா அப்பாவியாக, நம்பி ஏமாந்து போன வெகுளிப் பெண்ணாக முன்னிறுத்துகிறது, ஆனந்த விகடன் (08.10.2014). அ.தி.மு.க. அடிமைகள் ஜெயாவின் மீதான தமது விசுவாசத்தை, பக்தியைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகின்றனர் என்றால், பார்ப்பன ஊடகங்களும் அவர்களுக்குச் சளைத்ததாகத் தெரியவில்லை. விகடன் குழுமம் ஜெயாவிற்காக உப்புக் கண்ணீரை உகுக்கிறது என்றால், கல்கி இதழோ இரத்தக் கண்ணீரே வடிக்கிறது.

“நல்ல கல்வியறிவு, விசயஞானம் உள்ளவர், ஏராளமான புத்தகங்களை வாசிக்கும் பழக்கமுள்ள அறிவாளி, சாமானிய மக்களிடம் பரிவு காட்டியவர்,  மக்களிடம் மிகுந்த செல்வாக்கு உடையவர் என்றெல்லாம் பெயர் பெற்றுள்ள ஜெயலலிதா இத்தகைய தண்டனையை அடைந்தது அனைவர் மனத்திலும் ஈரத்தை ஏற்படுத்தியுள்ளது” எனப் படிக்கும் வாசகனே நெளியும் அளவிற்கு ஒரு குற்றவாளியை அனுதாபம் கொள்ளத்தக்க தியாகியைப் போலக் காட்டுகிறது, கல்கி (12.10.2014).

2ஜி, ஆதர்ஷ், நிலக்கரிச் சுரங்க ஊழல்களைப் பற்றி எழுதும்போதெல்லாம் ஊழலை இனியும் சகித்துக் கொள்ளக் கூடாது என அறம் பேசிய இப்பார்ப்பன ஊடகங்கள், ஜெயாவின் சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டுகின்றன. “2ஜி முறைகேடு, நிலக்கரிச் சுரங்க ஊழல் போன்ற பல இலட்சம் கோடி ஊழல்களுக்கு முன்னால், 66 கோடி ரூபாய் சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு பொருட்டாகவே பொதுமக்கள் பார்வையில் படாதது ஜெயாவின் அனுதாபத்திற்கான காரணமாக இருக்கலாம்” என எழுதியும், (29.9.2014), “65 கோடி ரூபாவுக்கு 4 வருஷம் தண்டனைன்னா, 1,76,000 கோடி ரூபாவுக்கு 10,828 வருஷம் தண்டனை வருது” (28.9.2014) எனக் கணக்குப் போட்டுக் காண்பித்தும் ஜெயாவின் ஊழலை சப்பை மேட்டராகக் காட்ட முயலுகிறது, தினமணி.

தினமணி ஆசிரியர் வைத்தியநாத அய்யர்
தினமணி ஆசிரியர் வைத்தியநாத அய்யர்

போலீசு போடும் பொய் வழக்குகளைக்கூட நியாயப்படுத்தி எழுதும் குரூரப் புத்தி கொண்ட துக்ளக் சோ, சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு குறித்து எந்தவொரு எதிர்வாதத்தையும் முன்வைக்காமல், குப்பையைப் போல அலட்சியப்படுத்தி ஒதுக்கித் தள்ளுகிறார். “ஜெயலலிதா குற்றவாளி என்று கூறி, அவருக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தின் நேர்மையே சந்தேகத்துக்குரியதாகிவிடும் என்ற அளவுக்கு வெளியே பிரச்சாரம் நடந்தது” எனக் குறிப்பிட்டு, குன்ஹாவின் தீர்ப்பை அரசியல் நிர்பந்தம் காரணமாக அளிக்கப்பட்ட தீர்ப்பாகக் கொச்சைப்படுத்தியிருப்பதோடு, “அதே ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில், எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் தீர்ப்பு வந்திருக்க முடியும்.  அதற்குத் தேவையான ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்” எனக் கிசுகிசு பாணியில் தலையங்கமே தீட்டி, பழிவாங்கும் நோக்கில் ஜெயாவிற்குத் தண்டனை அளிக்கப்பட்டிருப்பதாகக் காட்ட முயலுகிறார், அவர்.  மேலும், இந்தத் தீர்ப்பு ஜெயலலிதாவுக்குப் பின்னடைவோ, இல்லையோ, தமிழக அரசியல் எதிர்காலத்துக்கு ஒரு சோதனைக் காலமாகிவிடும்” எனக் குறிப்பிடும் துக்ளக் சோ, இதன் மூலம் ஜெயாவிற்கு விதிக்கப்பட்ட தண்டனையைத் தமிழகத்தின் மீது விதிக்கப்பட்ட தண்டனையாகக் காட்டி ஜெயாவைக் குற்றத்திலிருந்தும், தண்டனையிலிருந்து விடுவித்துவிடுகிறார்.

“உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் மேல்முறையீடுகளுக்குப் பிறகுதான், இந்தப் பிரச்சினை பற்றி முடிவான கருத்தைத் தெரிவிக்க முடியும். குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டு, சாட்சியங்கள் ஜோடிக்கப்பட்டு, ஜெயலலிதா அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் இந்தச் சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்கிற ஜெயலலிதா தரப்பு வழக்குரைஞர்களின் வாதம் பொய்யானது என்று தள்ளிவிட முடியாது” என எழுதி குன்ஹாவின் தீர்ப்பை ஒதுக்கித் தள்ளுகிறது, தினமணி (29.9.2014).

தினமணி கருத்துப்படம்
சொத்துக் குவிப்புக் குற்றத்தைச் சப்பையாகக் காட்டும் நோக்கில் தினமணி நாளிதழ் வெளியிட்ட கருத்துப்படம்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை இப்படி ஒதுக்கித் தள்ளும் தினமணி வைத்தியநாத அயரும், துக்ளக் சோ இராமஸ்வாமி அயரும் 2ஜி வழக்கை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி விசாரிப்பதையே இறுதியான தீர்ப்பு போலக் காட்டி தி.மு.க.வின் வாயை அடைத்து வருகிறார்கள். ஒரு கீழமை நீதிமன்றம் ஜெயாவிற்கு அளித்த தண்டனையைத் தகுதியற்றதாகப் பார்க்கும் இக்கும்பல், 2ஜி வழக்கிலோ வேறோரு அளவுகோலைப் பிரயோகிக்கிறது. “ஜெயாவிற்கு எதிரான தீர்ப்பு அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவை ஏற்படுத்தும். ஆனால், தி.மு.க.வின் 2ஜி ஊழல் கறை மற்றும் குடும்ப அரசியலை மக்கள் மறக்கவில்லை” எனக் கொஞ்சம்கூடக் கூச்சநாச்சமின்றி ஒருதலைப்பட்சமாக எழுதுகிறார், துக்ளக் சோ (08.10.2014). பார்ப்பானுக்கும் சூத்திரனுக்கும் ஒரேவிதமான நீதி இருக்கக்கூடாது, இருக்க முடியாது என்பதுதான் இதன் மூலம் இக்கும்பல் சொல்லவரும் செய்தி.

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்காக தமிழகத்தையே நிலைகுலையச் செய்தனர் அ.தி.மு.க. காலிகள்.  தமிழக அமைச்சரவையே பரப்பன அக்ரஹாரா சிறையின் முன் தவம் கிடந்தது. தனது விசுவாச அடிமையைத் தமிழக முதல்வராக்கி, அதன் மூலம் மிகவும் வெளிப்படையாகவே அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டிருக்கிறார், ஊழல் குற்றவாளி ஜெயா. தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த இழிநிலை குறித்து ஒரு வார்த்தைக்கூடக் கண்டித்துப் பேசாத பார்ப்பன ஊடகங்கள், ஜெயாவின், அ.தி.மு.க.வின் எதிர்காலம் குறித்துதான் அதிகம் கவலை கொள்கின்றன.
அ.தி.மு.க. கும்பல் பொதுச் சொத்துக்களைச் சூறையாடிய வெறியாட்டங்களை ஊடகங்கள் வன்முறையாகச் சித்தரிக்கவில்லை.  “போராட்டம்” என்று திரித்து எழுதின. இது குறித்து துக்ளக் சோவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, “ஒருநாள் கடையடைப்பு, பொதுச் சொத்து சேதம், தெருவில் ரகளை போன்றவை நடந்திருக்கின்றன. அடுத்தநாள் இவை போன்று கண்டிக்கத்தக்க சம்பவங்கள் நடைபெறவில்லை. இதை வைத்துக்கொண்டு சட்டம்-ஒழுங்கே சீர்குலைந்துவிட்டதாகச் சொல்ல முடியாது” எனக் கேவலமான முறையில் நியாயப்படுத்தி பதில் அளித்தார், அவர். (துக்ளக், 15.10.2014)

“உங்க வீட்ல ஒருவன் ஜெயிலுக்குப் போனால் அழமாட்டீர்களா? தனி நபருக்குக் குடும்ப அளவில் என்றால், ஒரு தலைவிக்கு மாநில அளவில் நடக்கிறது” என்று இந்தக் கேவலத்திற்கு வியாக்கியானம் அளித்தது, தினமணி (02.10.2014).

ஜெயாவின் அரசியல் வாழ்வே இப்படிபட்ட வன்முறைகளும் ஆபாசக் கூத்துக்களும் நிறைந்ததுதான் என்பதற்கு மகளிரணி நடத்திய ஆபாச நடனம் தொடங்கி, மூன்று மாணவிகளை எரித்துக் கொன்றது வரையில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், இந்து நாளேடோ, “தீர்ப்பு வெளியான நிமிடம் தொடங்கி, அதை அ.தி.மு.க.வினர்எதிர்கொண்டவிதமும் அவர்கள் ஆற்றிய எதிர்வினைகளும் அவர்களின் தலைவிக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.  கடையடைப்பு, வாகனங்கள் எரிப்பு, வன்முறைகள் இது போன்ற எதிர்வினைகள், ஜெயலலிதாவின் துணிவான, உறுதியான அணுகுமுறை மீது மதிப்பு கொண்டவர்களுக்கும்கூட அதிருப்தியையே உருவாக்கியுள்ளது. அடுத்து, கர்நாடக உயர்நீதி மன்றத்தில் ஜெயலலிதாவைப் பிணையில் வெளியே எடுப்பதற்கான நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கும்போதே, இங்கு அ.தி.மு.க.வினர் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் அவர்களின் தலைவிக்கு மேலும் இடைஞ்சல்களை ஏற்படுத்துமே தவிர, எந்தவகையிலும் உதவாது என்பது சட்டத்தின் போக்கை அறிந்தவர்களுக்கு நன்கு புரியும்” எனப் பதைபதைத்து தலையங்கம் (அக்.4) தீட்டியது.

மூத்த பத்திரிகையாளர் ஞாநி
“ஜெயா தன்னை சுயபரிசீலனை செய்து கொள்ள வேண்டும்” என இந்தியா டுடே இதழ் வழியாக வேண்டுகோள் விடுத்த மூத்த பத்திரிகையாளர் ஞாநி.

ஜெயாவின் தலையாட்டி பொம்மை என்பதைத் தவிர ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக உட்கார வைக்கப்பட்டிருப்பதற்கு வேறு காரணம் எதுவும் கிடையாது. ஓ.பி. முதல்வராகியிருப்பதும், அவரைப் பின்னிருந்து ஜெயா இயக்குவதும் தமிழகத்திற்கு நேர்ந்துள்ள அவமானம். ஆனால், இந்து நாளேடோ, “முதல்வர் பதவியில் தனக்குப் பதிலாக இன்னொருவரை அமர்த்திய விதம் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறனுக்கு ஒரு சான்று” என விசிலடித்து வரவேற்கிறது. மேலும், “ஜெயா தன்னைக் குற்றமற்றவர் என நிரூபித்து, அதன்பின் முதல்வர் நாற்காலியில் உட்கார வேண்டும்” எனத் தனது ஆலோசனையைப் பணிவோடு முன்வைக்கிறது. (அக்.18)

உச்சநீதி மன்றம் ஜெயாவிற்காக சட்டத்தையே வளைத்து அளித்திருக்கும் பிணையை அ.தி.மு.க. அடிமைகள் மட்டுமா கொண்டாடினார்கள்?  புதிய தலைமுறை, தினத்தந்தி, பாலிமர் ஆகிய தொலைக்காட்சிகள் உற்சவ மூர்த்தி போல ஜெயா பெங்களூரிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டதைக் கொண்டாட்டமாக ஒளிபரப்பின. இதைக் கண்டு ஜெயா டி.வி.கூட கூச்சத்தில் நெளிந்திருக்கக் கூடும். ஊடகங்களில் ஜெயா டி.வி.க்கு இணையான ஊதுகுழலைக் குறிப்பிட வேண்டும் என்றால், அது தந்தி டி.வி.யாகத்தான் இருக்க முடியும். ஜெயாவிற்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டதைக்கூட மூடிமறைத்து, மழுப்பலாகக் கூறும் அளவிற்கு அதனின் ஜெயா விசுவாசம் கொடிகட்டிப் பறந்தது.

ஜெயாவிடம் விசுவாசமாக நடந்து கொள்வதில் தினத்தந்தியின் ரெங்கராஜ் பாண்டே, ஹரிஹரன் போன்றவர்கள் ஒரு ரகம் என்றால், தமிழக அறிவுஜீவி வர்க்கம் இன்னொரு ரகம். தீர்ப்பு குறித்து கருத்துக் கூறாமல் தமது விசுவாசத்தைப் பறைசாற்றிக் கொண்டவர்கள் மத்தியில், வாயைத் திறந்த ஒரு சிலரோ ஜெயாவிற்கு அனுதாபம் ஏற்படுத்தும் வகையிலேயே கருத்துக்களைப் பதிவு செய்தனர்.  குறிப்பாக, தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளரான ஞாநி, “தன் கடந்த 23 வருட அதிகாரப் பயணத்தில் தன் தவறுகள் என்னென்ன, நண்பர்கள் முதல் கொள்கைகள் வரை தன் தேர்வுகளில் நடந்த பிழைகள் என்னென்ன? என்றெல்லாம் தனியே, தன்னந்தனியே அமர்ந்து ஜெயலலிதா யோசிப்பாரானால், இந்த 30 வருட அரசியலையும்கூடத் தூக்கி எறிந்துவிட்டு வேறொருவராகத் தன்னை வடிவமைத்துக் கொண்டுவிடலாம். அதற்கான திறனும் சாத்தியமும் உடையவர்தான் ஜெயா” என வேண்டுகோள் விடுத்திருக்கிறார் (இந்தியா டுடே, அக்.29). ஜெயா, பார்ப்பன பாசிசத் திமிரும் அகங்காரமும் நிறைந்த தனது நடவடிக்கைகளின் மூலம் எத்தனை தடவை இந்த அறிவுஜீவிகளின் முகத்தில் காரி உமிழ்ந்தாலும், அவர்களோ அதையெல்லாம் துடைத்துப் போட்டுவிட்டு, சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல, ஜெயாவைத் திருத்தியே தீருவது என்ற கனவோடு எழுதியும் பேசியும் வருகிறார்கள். ஜெயாவை அம்மா என அழைக்கும் அ.தி.மு.க. தொண்டனின் பிழைப்புவாதத்தைவிட, ஜெயாவை அறிவும் திறமையும் கொண்டவராகக் காட்டும் அறிவுஜீவிகளின் காரியவாதக் கற்பிதம்தான் சகிக்கவே முடியாத அசிங்கமாகத் தெரிகிறது.

ரெங்கராஜ் பாண்டே
தந்தி டி.வி.யின் தொகுப்பாளர் ரங்கராஜ் பாண்டே – ஊடகத்துறையில் உள்ள ஜெயா விசுவாசிகளுக்கு ஒரு வகை மாதிரி.

2ஜி, நிலக்கரி ஊழல் ஆகியவற்றைக் காட்டி ஜெயாவை நிரபராதியாகக் காட்டும் மோசடித்தனத்தில் மட்டும் ஊடகங்கள் ஈடுபடவில்லை. “பொதுமக்கள் மட்டும் யோக்கியமா? அவர்களும்கூடத்தான் சமயம் வாய்த்தால் ஊழலில் ஈடுபடுகிறார்கள். நீதிபதி குன்ஹா தீர்ப்பு வந்த நாளின் கலவரச் சூழலில், ரூ.14-க்கு விற்க வேண்டிய பால் பாக்கெட்டை ஒரு கடைக்காரர் ரூ.20-க்கு விற்கிறார். ரூ.30-க்குச் செல்ல வேண்டிய சவாரிக்கு ரூ.100 கேட்கிறார் ஆட்டோக்காரர்” என உதாரணங்களைக் குறிப்பிட்டு, மக்களைக் குற்றவாளிகளாக்கி, ஜெயாவை விடுவித்துவிட்டது, இந்து நாளேடு. (எங்களுக்கு என்ன தண்டனை குன்ஹா?, இந்து, செப்.30).  1,76,000 கோடி ரூபாய்க்கு 66 கோடி ரூபாய் ஈடாகாது என வாதாட வந்த ஊடகங்கள், 66 கோடி ரூபாய் ஊழலை 20 ரூபாய்க்கு ஈடாக்கிவிட்டன.

நடுநிலை எனக் கூறிக்கொள்ளும் ஊடகங்களின் குதர்க்கமும் வக்கிரமும் நிறைந்த இந்த ஆவுகளை ஒப்பிடும்பொழுது, “அ.தி.மு.க. வைச் சேர்ந்த அமைச்சர்களிடமே 500 கோடி ரூபாய் சொத்து இருக்கும்பொழுது, அம்மாவிடம் 66 கோடி ரூபாய் சொத்து இருக்க முடியாதா?” என ஜெயாவின் குற்றத்தை நியாயப்படுத்திப் பேசும் அ.தி.மு.க. தொண்டன் யோக்கியவானாகத் தெரிகிறான்.
– குப்பன்
_______________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2014
_______________________________

உசிலை போலீசு உதவியுடன் சாதிவெறியர் அராஜகம்

2

மீபத்தில் விவிமு, மனித உரிமை பாதுகாப்பு மையம் போன்ற அமைப்புகள் உசிலை வட்டாரத்தில் ஒட்டிய ஜெயா கைது, விமலாதேவி கௌரவக்கொலை சம்பந்தமான போஸ்டர்களை பழனி என்ற பழனியப்பன் எனும் சிறப்பு சார்பு ஆய்வாளர் தலைமையில் ஒரு குழு சேர்ந்து தொடர்ந்து கிழித்தெறிந்து அம்மா மற்றும் ஆதிக்க சாதி விசுவாசத்தைக் காட்டினார்கள்.

உசிலை சட்டமன்ற உறுப்பினர் பார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்த கதிரவன் தலைமையில் 4.11.2014 அன்று மீனவர்களுக்கு தூக்கு, பால்விலை உயர்வு, விமலாதேவி கொலை சம்பந்தமாக கம்யூனிஸ்டுகளை இழிவுபடுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மீனவர் தூக்கை கண்டித்து நெஞ்சை உயர்த்தியும், பால்விலை உயர்வுக்கு கொஞ்சம் பம்மியும், விமலாதேவி கொலைக்கு சாதிவெறி விசத்தைக் கக்கியும் ரெட்காசி மற்றும் கதிரவன் ஆகியோர் பேசினர்.

“விமலாதேவி கொலை சம்பந்தமாக அந்தப் பகுதியில்ஆ ர்ப்பாட்டம் நடத்த யாருக்கும் அனுமதி மறுத்தபோது இவர்கள் எப்படி போஸ்டர் அடித்து பேசுகிறார்கள்” என ஒருவர் உளவுத் துறையை தொடர்பு கொண்டு கேட்ட போது, ‘பா.பி கட்சியினரிடம் இது பற்றி பேசமாட்டோம் என்று எழுதி வாங்கிக் கொண்ட’தாகக் கூறினார். “ஏன் தடுக்கவில்லை” எனக் கேட்டதற்கு, “தடுக்க எல்லாம் முடியாது, கேஸ்தான் போட முடியும். இந்தக் கூட்டத்துக்கு டி.எஸ்.பிதான் அனுமதி கொடுத்தார்.அவரைப் போய் கேளுங்க” எனத் திமிராக பதில் சொன்னார்.

அவர்கள் ஆர்ப்பாட்டம் நடந்த பொழுது அருகில் உள்ள நாடார் வணிகவளாக மாடியில் விவிமு தோழர் குருசாமி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்னரசு ஆகியோர் நின்று கூட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த ரெட்காசி ஆபாச வார்த்தைகளால் திட்டி ஆட்களை அனுப்பி அவர்களை அடித்து விரட்ட கட்டளையிட்டான். காவல்துறை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது. குரைக்கிற நாயைப் போல் அருகே வரை வந்து விட்டு தோழர்கள் அஞ்சாமல் எதிர்கொள்ள தயாராய் இருந்ததைப் பார்த்து விட்டு பேசாமல் திரும்பிப் போனார்கள்.

அதன்பின் அங்குவந்த ஆய்வாளர் தென்னரசை நோக்கி, “இங்க என்னய்யா பண்ற வெண்ண” (காவல் துறை உங்கள் நண்பன்) என்றார். அதற்கு தென்னரசு, “மரியாதையாக பேசுங்க” என்றதும் சுருதி குறைந்தது. “பிரச்சனை வந்துவிடும், தயவுசெய்து வாருங்கள் தோழர்” எனக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டு இருவரையும் அவ்விடத்தை விட்டு 10 காவல்துறையினரின் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றது போலீசு. குருசாமியை அருகில் உள்ள தெருவிலும், தென்னரசு அவர்களை மதுரை ரோட்டில் கொங்கபட்டி அருகிலும் இறக்கிவிட்டு அவர் ஆட்டோ பிடித்து வீடு செல்லும் வரை காத்திருந்து அனுப்பி வைத்தது காவல்துறை. மேற்கண்ட அமளியில் சில காவல்துறையினர் மட்டும் பா.பி கட்சியினரை தடுக்க ஓடி வந்தனர். ஆனால், அவர்கள் அராஜகத்தை சட்டரீதியாக தட்டிக் கேட்கவில்லை.

பார்வர்ட் பிளாக் கூட்டத்தில் அவர்கள் பேசியதன் சாராம்சம்,

இந்த உசிலை பகுதியில் உள்ள நாடார், செட்டியார், ஆசாரி, வெள்ளாளர் போன்ற அனைத்து சாதியினரையும் காப்பவர்கள் நாங்கள். நாடார்கள் வணிகம் செய்து சம்பாதித்து எங்கள் சாதியினரின் உழைப்பில்தான் உயர்ந்தவர்கள். எங்களுடைய காடுகளில் வேலை செய்வதற்கு பறையர், பள்ளர், சக்கிலியர்கள் உதவி புரிந்தார்கள் என்ற பரப்புரையோடு ஆதிக்கசாதிக்கு துணை போகாத காரணத்தால் சி.பி.எம் தோழர் செல்லக்கண்ணுவை “நாயே, பேயே” என்ற பலவாறும் பழித்தனர். நாங்கள்தான் உண்மையான இடதுசாரி அமைப்பு, எங்களிடம் சாதிபிரிவினை கிடையாது என்று கூறினார்கள்.

ஆனால், மதியம் 3 மணியளவில் வணிக வளாகத்தில் இருந்த டீக்கடையின் பாத்திரங்களை உடைத்து நொறுக்கி எறிந்து நாடார் சாதி என்ற சொல்லவியலாத வார்த்தைகளால் திட்டி எங்களுக்கு எதிராக மாடியில் போட்டோ எடுக்க உதவி செய்கிறீர்களா என சண்டை போட்டு கடை அடைக்கச் சொல்லி மிரட்டினர். காவல்துறை அவர்களது ரவுடியிச அரசியலுக்கு எந்தவித சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உசிலை காவல்துறை பெரும்பான்மையாக ஆதிக்கசாதியினருக்கு துணையாகவே உள்ளனர்.

_____________________

சிலம்பட்டியில் 06.11.2014 அன்று மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை ஆர்.டி.ஓ அலுவலகம், பஸ் நிலையம் அருகில் தேனிரோடு, தாலுகா அலுவலகம் அருகில் என மூன்று இடங்களில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக பிரச்சாரம் நடத்தப்பட்டது.

தோழர் குருசாமி தனது உரையில் மேற்கண்ட விஷயங்களுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக  தலைப்பில் உள்ள மூன்று விஷயங்களின் அபாயத்தை பற்றியும் விளக்கிப் பேசினார்.  இறுதியாக “காவல்துறை, ஊடகங்கள், பார்வர்ட் பிளாக் கட்சியினர் எல்லாம் நக்சல்பாரிகள் ஊடுருவல் என்கிறார்களே, நக்சல்பாரிகள் எங்கேயும் ஊடுருவவில்லை. நாங்கள் பாகிஸ்தானில் இருந்தோ, ஆப்கானிஸ்தானில் இருந்தோ வரவில்லை. நக்சல்பாரி என்பதன் அர்த்தம் நாட்டுப்பற்றுள்ளவன், சாமானியனுக்கு அதிகாரம் கிடைக்கப் பாடுபடுபவன்” எனறு கூறி நக்சல்பாரி தோற்றத்தை விளக்கினார்.  கதிரவன் கூட்டத்தில் ஏற்படுத்திய அமளியின்போது கண்டுகொள்ளாத காவல்துறையையும் கடைகளை சேதப்படுத்திய ரெட்காசியையும் எச்சரிக்கை செய்து, “நக்சல்பாரி அரசியல் கொண்ட நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம், எல்லாவற்றிற்கும் தயார்” எனக்கூறி முடித்தார்.

மூன்று இடங்களிலும் வழக்கத்திற்கு மாறாக என்னவெல்லாம் பேசுவோம், ஏதும் பிரச்சனை நடக்குமோ என எதிர்பார்ப்புகளோடு மக்கள் கவனித்தனர். பிரச்சார இயக்கத்தில் வி.விமு தோழர்களுக்கு 70-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நான்கைந்து வாகனங்களோடு காவல் நின்றனர்.

தோழர் அ. சந்திரபோஸ் தலைமையில் நடந்த இந்தப் பிரச்சார இயக்கத்தில் உசிலை வட்டார வி.வி.மு செயலாளர் தோழர் குருசாமி, தோழர் ஆசை உரையாற்றினார்கள். தனியார்மய, தாராளமயத்தை எதிர்த்து தோழர்களால் முழக்கம் எழுப்பப்பட்டது.

usilai-milk-price-eb-demo-3

இந்தியாவில் தனியார்மயக் கொள்ளைக்குப் பின் கார்ப்பரேட், தரகு முதலாளிகளால் எப்படி சுரண்டப்படுகிறது. உழைக்கும் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தோழர் சந்திரபோஸ் தனது தலைமை உரையில் தொகுப்பாக எடுத்துரைத்தார்.

usilai-milk-price-eb-demo-1

தோழர் ஆசை உழைக்கும் மக்கள் மொழி நடையில் ஆவின் நஷ்டத்திற்கு காரணமாய் மக்கள் பணத்தை சுருட்டிய அதிமுக கொள்ளையர்கள் மாதவரம் மூர்த்தி, வைத்தியநாதன் சொத்தை பறிமுதல் செய்யாமல் பால்விலை ஏற்றம் மூலம் மக்கள் பணத்தை பறிக்கும் செயலைக கண்டித்து பேசினார்.

usilai-milk-price-eb-demo-2

உசிலை பகுதியில் சமீபகாலமாக உசிலையில் தேனிரோட்டில் முருகன் கோவில்வரை, வத்தலக் குண்டு ரோட்டில் டவுன் போலீஸ் ஸ்டேசன் வரை, மதுரை ரோட்டில் கண்ணன் தியேட்டர் வரை, பேரையூர் ரோட்டில் ஆர்.டி.ஓ அலுவலகம் வரை வாய்மொழி உத்தரவாக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாக கூறி, காவல்துறை நமது அரசியல் ரீதியான போஸ்டர்கள் ஒட்ட விடாமல் கிழிப்பது, வழக்கு போடுவது, மேலும் இந்த இடங்களுக்குள் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுப்பது என்று ஜனநாயகத்தைக் காத்து வந்தது.

ஆனால், சமீபத்தில் அம்மாவுக்கு தண்டனை வழங்கி சிறையில் அடைத்தவுடன் அதிமுக காலிகளுக்கு பேருந்து நிலையம் அருகில் ஏற்கனவே சொன்ன 144 தடை உத்தரவு உள்ள இடத்தில் உண்ணாவிரத மேடை அமைக்க அனுமதி கொடுத்தது. அடுத்து தேவர் ஜெயந்தியை ஒட்டி அவர்கள் சொன்ன 144 மைய இடமான தேவர் சிலையைச் சுற்றி போஸ்டர், பிளக்ஸ் மற்றும் முருகன்ஜீ மேடை அமைத்து பேச அனுமதி அளித்து மேலும் தனது ஆதிக்கசாதி ஜனநாயகத்தைக் காட்டியது.

usilai-milk-price-eb-demo-4

செய்தி
புஜ செய்தியாளர்

உசிலம்பட்டி.

வேலிக் கருவையில் அரசுப் பள்ளி – அரியலூர் போராட்டம்

2

தனியார் கல்விக்கொள்ளையில் அரசுப் பள்ளியின் அவலம்

ளர்ச்சி என்ற போதையை நாடு முழுக்க பரவ விட்ட பாஜக-வின் முகம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. இந்த வேளையில், தன்னுடைய கருணை பார்வையால் மட்டுமே நாட்டின் பிரச்சினைகளை தீர்த்துவிட முடியும், அது அதிகார வர்க்கத்தின் துணையுடன் மட்டுமே நடக்கும் என மோடியும்-லேடியும் நம்பும் ‘அதிகார வர்க்கம்’ ஒரு கொழுத்த எருமை என்பதை நீங்கள் படிக்கப் போகும் செய்தி உணர்த்தும்.

சன்னாசிநல்லூர் பள்ளி

அரியலூர் மாவட்டம் , செந்துறை ஒன்றியத்தில் வெள்ளாற்றங்கரையில் உள்ளது சன்னாசிநல்லூர் என்ற கிராமம் (தொல்.திருமாவளவனது சொந்த கிராமமான அங்கனூரிலிருந்து 4 கி.மி தொலைவில் உள்ளது). இங்கு செயல்பட்டுவந்த அரசு தொடக்கப் பள்ளி கடந்த 2009-2010 கல்வியாண்டில் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

6-ம் வகுப்பிலிருந்து 10-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளி செயல்பட்ட இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டது. புதிய கட்டிடத்தில் ஒரு வகுப்பறை மட்டுமே உள்ள நிலையில் மீதி நான்கு வகுப்புகளும் பள்ளிக்கு அருகில் உள்ள வேலிக்கருவைக் காட்டில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

சன்னாசிநல்லூர் பள்ளி

தூறல் வந்தாலும் வெயில் அதிகமாக இருந்தாலும் கூட பள்ளிக்கு விடுமுறை என்ற முறையில் பள்ளி கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வந்திருக்கிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும், எந்த பயனும் இல்லை. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அங்கு படித்துவரும் மாணவர்களுக்கு பாம்புகள் மற்றும் பூச்சிகளின் ‘வேலிக்கருவை வகுப்பறைக்குள்’ வந்துவிடுவதால் மாணவர்கள் உயிருக்கு ஆபத்து என புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து புகார் அளித்தும் அதிக்காரிகள் ‘ இதோ பணம் ஒதுக்கி விட்டோம், கூடிய சீக்கிரம் கட்டிடம் கட்டிவிடுவோம் ’ என்று சளைக்காமல் பதில் சொல்லி மக்களை விரக்தியின் அவநம்பிக்கையின் விளிம்புக்கு தள்ளி உள்ளனர்.

சன்னாசிநல்லூர் பள்ளி

இவர்களிடம் எதையும் பெற முடியாது எல்லாம் எங்கள் தலைவிதி என்று மக்கள் இருந்து வந்த நிலையை கிராம இளைஞர்கள் மூலமாக அறிந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் உடனடியாக பள்ளிக்கு சென்று பார்த்து உண்மையை அறிந்துகொண்டு, அன்று இரவே கிராம பொதுமக்களை சந்தித்து நம்பிக்கையூட்டி போராட்டம் ஒன்றே தீர்வு என்பதையும் மனு கொடுப்பதால் தீர்வு இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினர். மறுநாள் கிராம பொதுமக்களின் சார்பாக ஊர்கூட்டம் கூட்டப்பட்டது. கிராமத்தின் அனைத்து பிரிவினரும் கலந்துகொண்டனர். மறுநாள் பள்ளியில் பெற்றோர் சங்கத்தை கூட்டி என்ன செய்யலாம் என முடிவு செய்வது என தீர்மானித்து கலைந்தனர்.

சன்னாசிநல்லூர் பள்ளி

கடந்த 12.11.2014-ம் தேதி காலை பெற்றோர் கூட்டம் நடைபெற்றது. பலமுறை மனு கொடுக்கப்பட்டதை பற்றியும் அதனால் எந்த பயனும் இல்லை என்பதை பற்றியும் மக்கள் விரக்தியுடன் பேசினர். பள்ளிக்கூடம் இப்படியே நடந்தால் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்ப்பதை தவிர வேறு வழியில்லை என சூழ்நிலையின் தாக்கத்தில் பேசினர்.

சன்னாசிநல்லூர் பள்ளி

தோழர்கள் மீண்டும் அந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டி கல்வி தனியார்மயம் என்பது எவ்வளவு மோசமானது என்பதையும் அரசுப் பள்ளிகளின் மீதான நமது கவனமின்மையால் நமது எதிர்கால தலைமுறையே கல்வி வியாபாரத்தால் பாதிக்கப்படும் என்பதையும் பேசி புரிய வைத்தனர். நமது குழந்தைகளின் கல்வி உரிமைக்கு நாம் போராடாமல் வேறு யார் போராடுவது? என்ற கேள்வியை முன்வைத்தனர்.

ariyalur-school-12

ariyalur-school-10

பிறகு பொதுமக்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டமே தீர்வு என முடிவு செய்தனர். அதன்படி 14.11.2014 ம் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்து போராடுவது என முடிவு செய்யப்பட்டது.

போராட்ட புகைப்படங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்:
புதிய ஜனநாயகம் செய்தியாளர்,
ஜெயங்கொண்டம்.