Saturday, June 13, 2026
முகப்பு பதிவு பக்கம் 652

வைகுண்டராஜனை கைது செய் ! சொத்துக்களை பறிமுதல் செய் !

3
தாது மணல் கொள்ளை
தாது மணல் கொள்ளை

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகக் கழகத் தலைவராக இருந்த சுப்பையா ஐ.ஏ.எஸ்க்கு வைகுண்டராஜன் ரூ ஏழரை கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் வைகுண்டராஜனுக்கு மதுரை உயர்நீதி மன்றம் ஜாமீன் மறுத்துள்ளது. கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிப்பதற்காக அவர் தலைமறைவாகி விட்டதாக செய்திகள் சொல்லுகின்றன. மிகப்பெரிய தொழிலதிபர், ஜெயா டிவியின் பங்குதாரர், சேனல் நியூஸ் 7 டிவியின் உரிமையாளர், செல்வாக்கு மிக்க பெரும்புள்ளி தலைமறைவாகி விட்டார் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. தென் மாவட்டங்களின் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், கிரிமினல் கும்பல்களும் வைகுண்டராஜனின் அடியாட்களாக செயல்பட்டு வருவது நாடறிந்த உண்மை. அப்படிப்பட்டவர் இவர்களுக்கெல்லாம் தெரியாமல் தலைமறைவாகி விட்டார் என்று சொல்வது நாடகம் தவிர வேறு என்ன?

வைகுண்டராஜன்
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்கரையையே கரைத்து, விலையுயர்ந்த, அபூர்வமான தாதுமணலைக் கொள்ளையடித்தவர் வைகுண்டராஜன்

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்கரையையே கரைத்து, விலையுயர்ந்த, அபூர்வமான தாதுமணலைக் கொள்ளையடித்தவர் வைகுண்டராஜன். சட்டவிரோதமாகத் தோரியம் உள்ளடங்கிய மோனோசைட் தாதுவை தூத்துக்குடி துறைமுகம வழியாக வெளிநாடுகளுக்குக் கடத்துவதற்கு உறுதுணையாக இருந்தததற்காகத்தான் சுப்பையா ஐ.ஏ.எஸ்க்கு ஏழரை கோடி லஞ்சம் கொடுத்துள்ளார் வைகுண்டராஜன். இதை ஆதாரபூரவமாக கண்டுபிடித்து 2012-ம் ஆண்டு வழக்கு தொடுத்த சி.பி.ஐ இதுவரை அவரைக் கைது செய்யவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வைகுண்டராஜன் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தபோதுதான் இந்த விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் இப்போது சி.பி.ஐ சொல்கிறது. “வைகுண்டராஜன் தலைமறைவாகி விட்டார். தனிப்படை அமைத்து தேடுகிறோம்” என்று. இது கண்துடைப்பு நாடகம். சி.பி.ஐயும், தமிழக அரசும் சேர்ந்து வைகுண்டராஜனை தெரிந்தே பாதுகாக்கின்றன.

வைகுண்டராஜன் தலைமறைவாகி விட்டார் என்றால் சி.பி.ஐ அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரது சொத்துக்களை முடக்க வேண்டியதுதானே! அதை ஏன் செய்யவில்லை? எனவே, “வைகுண்டராஜனை உடனே கைது செய்! அவர் கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்!” எனக் கோருகிறோம். வாழ்வாதாரத்திற்காக கூடங்குளத்தில் போராடும் மக்களையும், பிழைப்பிற்காக தாமிரபரணி, வைப்பாறு உட்பட தமிழக ஆறுகளில் மாட்டு வண்டியில் மணல் அள்ளும் ஏழை விவசாயிகளையும் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், குண்டர் சட்டத்திலும் கைது செய்வதோடு, இரவு 11 மணிக்கு மேல் வியாபாரம் செய்யும் சிறு ஹோட்டல்கள், டீக்கடைகள் மற்றும் நடைபாதைக் கடைகளை அடித்து நொறுக்கியும், மேற்படி கடைகளில் உள்ள போண்டா, வடைகளை பிறந்து பார்த்து, கெட்டுப் போனதாகக் கூறி கடை உரிமத்தையே ரத்து செய்யும் மத்திய, மாநில அரசுகளுக்கு மனித குலத்திற்கும் இயற்கை வளத்திற்கும் சவால் விடும் வைகுண்டராஜனை கைது செய்வது இயலாத காரியம்தானோ?

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் இயற்கை வளக் கொள்ளைகளை விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அரசு அதற்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டது. ஆனால், அரசு அதற்கு எந்த ஒத்துழைப்பும் அளிக்காத நிலையில் நீதிமன்றம் அரசுக்கு ரூ 10,000 தண்டம் விதித்து மீண்டும் உத்தரவிட்டது. ஆனால், அரசு நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் ஊழலை மட்டும் விசாரிக்க உத்தரவிட்டது. கிரானைட் ஊழலை முதலில் அம்பலப்படுத்தியது சகாயம் ஐ.ஏ.எஸ்தான். பி.ஆர்.பி மீது பல வழக்குகளைத் தொடுத்து, தொழிலை முடக்கி, அவரைப் பல மாதங்கள் சிறையிலும் வைத்தது தமிழக அரசு. இதுவரை கிரானைத் தொழில் முடங்கியுள்ளது.

ஆஷிஷ்குமார்
மணல் கொள்ளையை ஆய்வு செய்து அரசுக்கு புகார் அனுப்பிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் மறுநாளே பந்தாடப்பட்டார்.

ஆனால், தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளையை விடப் பெரியது. 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. சுற்றுச் சூழல் மாசு, புற்றுநோய், மீன்பிடி தொழில் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளோடு, பல இலட்சம் கோடி மதிப்புள்ள மோனசைட் எனப்படும் தடை செய்யப்பட்ட கனிமம் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு எதிராகப் போராடிய மக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். அவர்களுடைய முறையீடுகள் அனைத்தும் குப்பைக் கூடைகளுக்குப் போயின. மக்கள் தொடர்ந்து நேரடியாக பலமுறை முறையிட்டதால் மணல் கொள்ளையை ஆய்வு செய்து அரசுக்கு புகார் அனுப்பிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் மறுநாளே பந்தாடப்பட்டார்.

வருவாய்த்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் தமிழக அரசு குழு அமைத்து விசாரணை நடத்தியது. ஆனால், அந்த விசாரணை அறிக்கையைக் கூட வெளியிடவில்லை. நீதிமன்றம் கேட்டும் அறிக்கையை தர அரசு மறுத்து விட்டது. வைகுண்டராஜன் கொள்ளை கடற்கரையோடு நின்று விடவில்லை. உள்நாட்டு மக்களையும் பாதிக்கும் வகையில் செம்மண்ணான தேரிமண்ணையும், பல ஆண்டுகளாக சூறையாடி வருகிறார். இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவது நாடார் சமூக மக்களும்தான். இவ்வாறு அனைத்து சமூக மக்களையும், அடுத்த தலைமுறையையும் பாதிக்கும் வகையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனது ராஜாங்கத்தை நடத்தி வரும் வைகுண்டராஜன் மீது இதுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.

சகாயம் ஐ.ஏ.எஸ்
சகாயம் ஐ.ஏ.எஸ் விசாரித்தால் உண்மைகள் அம்பலத்துக்கு வந்துவிடும் என்பதால் தமிழக அரசு சகாயம் குழுவை முடக்க முயற்சி செய்கிறது

இந்தச் சூழலில்தான் டிராபிக் ராமசாமி என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் சகாயம் குழு விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சகாயம் ஐ.ஏ.எஸ் விசாரித்தால் உண்மைகள் அம்பலத்துக்கு வந்துவிடும் என்பதால் தமிழக அரசு சகாயம் குழுவை முடக்க முயற்சி செய்கிறது. மக்களிடம் ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த ஜெயா அரசு, ஓட்டுப் போட்ட உழைக்கும் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் இது. தாதுமணல், கிரானைட் போலவே ஆற்றுமணல் கொள்ளையும் தமிழகத்தில் தாமிரபரணி, வைப்பாறு, தொடங்கி பாலாறு, காவேரி வரை மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாக நடைபெறும் இந்தக் கொள்ளைகளை எதிர்த்த பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அரசு அளித்துள்ள உரிமத்தைப் பெயரளவுக்கு வைத்துக் கொண்டு பல்லாயிரம் மடங்கு அதிகமாக மாபெரும் கொள்ளையாக இது நடைபெற்று வருகிறது. இவற்றைத் தடுத்து நிறுத்த சகாயம் குழு விசாரணை வரம்பை தாதுமணல் – கிரானைட் – ஆற்று மணல் ஆகிய மூன்றுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

சகாயம் குழு விசாரணைக்கு அரசு உத்தரவிட்டால் கூட மக்ககள் போராட்டமின்றி அவ்விசாரணை முழுமையாக நடைபெறாது. அரசும், அதிகாரிகளும் அதை முடக்குவதற்கு முயற்சிப்பார்கள். ஆகவே, கடற்கரை மக்களின் பல்லாண்டு காலப் போராட்டம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மீண்டும் தீவிரமாக போராடினால், தாதுமணல் நிறுவனங்களை மூடி மக்களின் வாழ்வாதார நிலையை பாதுகாக்கலாம். படுவேகமாக ந டைபெறும் அனைத்து இயற்கை வளக் கொள்ளைகளையும் தடுத்து நிறுத்தலாம். இதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமின்றி அனைத்துப் பிரிவு மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். வெறும் பார்வையாளர் என்ற நிலையில் இல்லாமல் பங்கேற்பாளராக எங்களோடு இணையுங்கள். நம் தாய் மண்ணை கனிம கொள்ளையர்களின் பிடியில் இருந்து மீட்டெடுக்க உங்களை அழைக்கிறது மனித உரிமை பாதுகாப்பு மையம்.

தூத்துக்குடி துறைமுகக் கழகத் தலைவருக்கு ஏழரை கோடி லஞ்சம்
தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜன் தலைமறைவு!
சி.பி.ஐ.-யே உடனே கைது செய்! சொத்துக்களை முடக்கு!

தமிழக அரசே
கனிமவளக் கொள்ளையை விசாரிக்க நியமிக்கப்பட்ட சகாயம் குழுவை முடக்காதே!
தாதுமணல்-ஆற்றுமணல் கொள்ளைகளையும் விசாரிக்க உத்தரவிடு!
தமிழ்நாட்டை சூறையாடும் அனைத்து கனிமவளக் கொள்ளைகளையும் தடுத்து நிறுத்த போராடுவோம்!
இயற்கை,சுற்றுச்சூழல், தலைமுறைகளைக் காப்பாற்ற களத்தில் இறங்குவோம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள் : 29.11.2014, சனிக்கிழமை காலை 10.00 மணி
இடம் : பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு, தூத்துக்குடி

மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
தூத்துக்குடி –  நெல்லை – குமரி மாவட்டங்கள்
9443527613, 9442339260, 9486643116

ஊழல் எதிர்ப்பு அணி – ஜூவியின் புதுப்பட ரிலீஸ் !

4
மும்மூர்த்திகளுக்குஆதரவா, கேலியா, இல்லை விகடனின் வர்த்தகமா?
மும்மூர்த்திகளுக்குஆதரவா, கேலியா, இல்லை விகடனின் வர்த்தகமா?

விலை பன்னிரெண்டு ரூபாய். இதழ் வாரம் இருமுறை. மாதம் எட்டு. இதழ் ஒன்றின் விநியோகம் 2 லட்சம் வரை இருக்கலாம். ஒரு இதழுக்கு மொத்த வரவு (செலவு, கழிவையும் உள்ளடக்கி – விளம்பர வரவை தவிர்த்து ) 24 லட்ச ரூபாய். இதை சாதிப்பதற்கு என்ன வேண்டும்?

அட்டைப்படக் கட்டுரை.

வாசகர்கள் ஜூனியர் விகடன் பெயருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட கவர் ஸ்டோரி என்ன என்றே பார்க்கிறார்கள். சரக்கு விலைபோவது விகடன் குழும பிராண்டில் அல்ல. மல்டி கலர் வம்பு தும்பு, கிசுகிசு, அரட்டை அக்கப்போர் இன்னபிற மசாலாக்களை கொண்டிருக்கும் அட்டைகளே சரணம். சரி அதனால் என்ன? பெட்டிக்கடையில் வாங்குபவன் வாசகரா, இளித்தவாயனா? அவர்கள் பகிரங்கமாகவே வா இல்லை இ என்றே தெரிவிக்கிறார்கள்.

இனி கதையின் காரணம். 30.11.2014 தேதியிட்ட ஜூவியின் அட்டைப்படம்: முறையே வாசன், விஜயகாந்த், வைகோ சிரித்தவாறு காட்சி. “உருவாகிறது ‘ஊழல் எதிர்ப்பு அணி’!” – இது கவர் ஸ்டோரியின் தலைப்பு!

நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடி – பாஜகவிற்கு மிருதங்கம் அடித்தார்கள். தேர்தலுக்கு பிறகு திமுகவில் அப்படி, இப்படி என ட்ரம்ஸ் தட்டினார்கள். எத்தனை காலத்திற்கு என்று சலிப்பு வந்த உடன், வாசன் வந்தருளினார். பிறகு தமிழ்நாட்டின் விமோசனத்திற்காக ஜூவி அடுத்த கூட்டணி தயாரிப்பிற்கு தயார். இந்த சமையல் குறிப்பிற்கு அவர்கள் கடுகளவும் மெனக்கெடவே இல்லை.

உருவாகிறது ஊழல் அணிக்கு ஜூவி எழுதிய மொத்த வார்த்தைகளும் எவ்வித சுருக்கமும் இன்றி கீழே தரப்பட்டுள்ளது:

”அரசியல் வட்டாரத்தில் கமுக்கமாக நடக்கத் தொடங்கி இருக்கும் ஒரு பேச்சுவார்த்தை பற்றிய முன்னோட்டங்களை இப்போதே சொல்லிவிடுகிறேன். இது ஆரம்பக்கட்டம்தான்! தி.மு.க, அ.தி.மு.க இல்லாத அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் சிலர் இறங்கி இருக்கிறார்கள். விஜயகாந்த், வைகோ, ஜி.கே.வாசன் ஆகிய மூவரையும் அதில் இணைக்கும் திட்டம் இருக்கிறதாம். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய நான்கையும் இதனுடன் இணைக்கலாம் என்ற திட்டமும் இருக்கிறதாம். ‘ஊழல் எதிர்ப்பு அணி’ என்று இதற்கு முத்திரையும் வைக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள். ஜி.கே.வாசனும் விஜயகாந்தும் எப்போதும் நண்பர்கள். விஜயகாந்தும் வைகோவும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமாக பின்னிப் பிணைந்து இருந்தார்கள். இப்படி ஓர் அணி அமையும்போது புதிய கட்சிகளும் தயங்காமல் ஒன்று சேரும் என்கிறார்கள். இது தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத மட்டுமல்ல, பி.ஜே.பி, காங்கிரஸ் அல்லாத அணியாகவும் அமையுமாம்!” என்ற கழுகார், ”ஒரு சீக்ரெட் சொல்கிறேன்! அது விரைவில் வெடிக்கும்!” என்று பீடிகையுடன் அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.”

மொத்தம் 107 வார்த்தைகள். ஏழு வாக்கியங்கள். அதிலும் கடைசி வாக்கியத்தில் அடுத்த பரபரப்பிற்கான பீடிகை. இதிலிருந்தே தெரிகிறது, இந்த இத்துப் போன செய்திகளை அவர்களே ரசிக்கவில்லை. இட்டுக் கட்டல்தான் என்றாலும் அதிலும் கூட அளவிலோ, திருப்பங்களிலோ, டிவிஸ்டுகளிலோ, முடிச்சுக்களிலோ கடுகளவு கூட படைப்புத் திறன் இல்லை!

என்ன ஆச்சு ஜூவிக்கு?

பிரியாணி வார்த்தையைக் காட்டினாலே தமிழன் எச்சிலூறும் நாக்குடன் வருவான் என்று எவ்வளவு தன்னம்பிக்கையா? பிரியாணி இல்லை, பிய்ஞ்சு போன செருப்புதான் என்றாலும் ஆம்பூர் வாசனையை தேடுவான் என்று எப்படி ஒரு கணிப்பு? விகடன் குழும மார்க்கெட்டிங் உத்தி அபாரம்!

இல்லை மோடி, பாஜக எபிசோடு போல ஏதும் அசைண்மெண்டா? இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஊழல் எதிர்ப்பு கூட்டணிக்கு கழுகு எனும் கிசுகிசு பக்கத்தில் ஒதுக்க வேண்டிய காரணம்?

ஜூவியில் காரணமே இல்லாமல் வைகோ எனும் பியூஸ் போன பல்பர் ஏதோ ஒரு நியூசில் இடம்பெறுவார். அதற்காகவா இந்த கவரேஜ் (உண்மையில் கடுகரேஜ்)? சார்க் மாநாட்டில் ராஜபக்சேவுக்கு வாழ்த்து சொன்ன மோடிக்கு, இடியே கலங்கி போகும் வண்ணம் கண்டித்தாரே வைகோ, அதன் பொருட்டா? வைகோவை நாங்கள் பொருட்படுத்தவே இல்லை என்று பாலிமர் சேனலே பொருட்படுத்தாத பாஜக தலைகள் ஒதுக்கியதே அவர்களை எச்சரிக்கும் பொருட்டா?

இல்லை பிரச்சாரத்துக்கு வைகோ, பிரபலத்துக்கு கேப்டன் என்று கமலாலயம் ஆனந்தத்தில் திளைத்ததே, அதை நினைவுபடுத்தி தாமரைக்கு விடுவிக்கும் எச்சரிக்கையா?

இல்லை வாசன் கம்பெனியை யாராவது கருணை காட்டி கூட்டணியில் தூக்கி போட்டாலும் 5 சீட்டுகள் கிடைத்தாலே அதுதான் எட்டாவது உலக அதிசயம். தஞ்சை பண்ணையாரின் வாரிசுக்கு கூட ரெண்டு மூன்று சேர்த்து கேட்கத்தான் இந்த ஏழு வாக்கியங்களா?

இல்லை விகடன் கனவு கண்ட அந்த பொற்கால பாஜக கூட்டணியின் துர்பாக்கிய தடையாக இருந்த கேப்டன் கட்சியை பழிவாங்கவா? கேப்டன் வருவார், மாட்டார் என்று பொன்னார் அறையில் முறுக்கு பாக்கெட்டுகள் தீர்ந்த நேரத்தில் நகங்களை கடித்து அவதிப்பட்டதாக ஆ.விகடனில் வானதி சீனிவாசன் குமுறுகிறார். கடிபட்ட, அரைபட்ட முறுக்குகளுக்கான நன்றிக் கடனா?

இல்லை திமுக, அதிமுகவிற்கு மாற்றாக பாஜகவை ஆளாக்க சில்லறையாட்களை ஓரம் கட்டுகிறார்களா? எனில் வைகோவின் இடம் சில்லறையில் என்ன? சில்லறை சிறுத்த பிறகு பேரிசையுடன் வேறு ஏதும் முழங்குவாரா? தமிழிசைக்கு தெரியுமா?

இல்லை ரஜினியை இழுத்துபோட அமித்ஷா போடும் திரில்லர் ரூட்டுக்கு இது ஒரு கிளைக்கதையா?

இல்லை, கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி, என்று நல்லகண்ணு அறம் காட்டி முற்போக்கு காட்டும் தந்திரமா? நேற்று காவியுடன் காபி, இன்று சிவப்புடன் மோர், நாளை கதருடன் லாலி பாப்பா? அடேயப்பா!

இல்லை இப்படி ஒரு ஊழல் எதிர்ப்பு கூட்டணி வந்தால் ஆம் ஆத்மியிலிருந்து விலகிய ஞானாத்மாக்களும், உதயாத்மாக்களும் வந்து சேருமா? இதனால் ஃபேஸ்புக்கில் ரெண்டு மாதம் அனல் பறக்குமே? அந்த அனலை செய்தியாக்கும் திட்டமா?

இல்லை இந்த வார இதழை விறுவிறுப்புடன் தள்ள வேறு எந்த வரலாற்று சாதனைகளும் நடக்காததன் விளைவா? சொல்லுங்கள் அய்யா, சொல்லுங்கள்!

ஊழல் எதிர்ப்பு அணி என்று பந்தாவுடன் தலைப்பு போட்டு உள்ளே போய் பார்த்தால் பந்தலும் இல்லை பந்தியும் இல்லையே?

ஒரு நாட்டின் அரசியல் தரம் எப்படி இருக்கிறது, அறிய வேண்டுமா? அங்கு வரும் அரசியல் பத்திரிகைகளை பாருங்கள்!

ஓபி எஸ்ஸையும், அம்மா அடிமைகளையும் கிண்டல் செய்து தமிழகத்தை பார்த்து சிரிப்பவர்கள், தமிழக ஊடகங்களை பார்த்து சிரிக்க வேண்டாம், அழவாவது செய்யலாமே?

கிருஷ்ணனின் அருகதை என்ன ? – டாக்டர் அம்பேத்கர்

4

இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – டாக்டர் அம்பேத்கர் – 4

இப்போது கிருஷ்ணனைப் பற்றிப் பார்ப்போமாக

மகாபாரதத்தின் கதாநாயகன் கிருஷ்ணன். சரியாக சொல்ல வேண்டுமானால் கௌரவர்கள் – பாண்டவர்கள் சம்பந்தப்பட்டதே மகாபாரதக் கதையாகும். தம் மூதாதையரின் அரசாட்சி உரிமைக்காக இவ்விரு அணியினர் மேற்கொண்ட யுத்த-கதையே மகாபாரதக் கதையாகும். அவர்கள் தான் இக்கதையில் பிரதான பங்கினராய் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படித் தெரியவில்லை. கிருஷ்ணன்தான் இக்கதையின் கதாநாயகன். இது விநோதமாய் உள்ளது. மேலும் இந்தக் கிருஷ்ணன் கௌரவர்கள்-பாண்டவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருந்த ஆளாகவும் தெரியவில்லை. கிருஷ்ணன் நாடாண்ட பாண்டவர்களின் நண்பனாய் இருந்திருக்கிறான். வேறொரு நாட்டின் அரசனான கம்சனுக்கு கிருஷ்ணன் எதிரி. அருகருகே ஒரே இடத்தில், ஒரே காலத்தில் இரு அரசாட்சிகள் இருந்திருக்க கூடுமா? மேலும் இவ்விரு அரசர்களுக்கிடையே உறவு இருந்த்தாய்க் காட்டிட மகாபாரதத்தில் ஏதும் ஆதாரமில்லை. எனவே, கிருஷ்ணன் மற்றும் பாண்டவர் பற்றிய இரு தனித்தனி கதைகள் கலந்து ஜோடிக்கப்பட்டு இடைச்செருகலாகப் பிற்காலத்தில் மகாபாரதத்தில் நுழைக்கப்பட்டிருக்க வேண்டும். கிருஷ்ணனின் கதாபாத்திரத்தை மேலும் சற்று விரிவாக்கும் நோக்கத்துடனேயே இந்த இடைச்செருகல் இடம்பெற்றிருக்க வேண்டும்.

கிருஷ்ணன் அனைத்திற்கும் மேம்பட்டவன், பெருமைக்குரியவன் எனச் சித்தரித்துக் காட்டிட வியாசன் மேற்கொண்ட துணிகரத் திட்டத்தின் விளைவே இவ்விரு கதைகளின் கலப்புத் தொகுப்பாகும்.

வியாசனின் கூற்றுப்படி கிருஷ்ணன் மனிதர்களுள் தெய்வம். அவ்வளவுதான் ! அதனாலேயே கிருஷ்ணன் மகாபாரதக் கதையில் கதாநாயகன் ஆக்கப்பட்டிருக்கின்றான். உண்மையில் கிருஷ்ணன் மனிதர்களுள் தெய்வம் எனும் அளவுக்கு அருகதையுடையவனா? ஒருவேளை அவனுடைய வாழ்க்கைச் சுருக்கம் அவ்வித கேள்விக்குச் சரியான விடை அளிக்கலாம்: சற்று பார்ப்போம்.

கம்சன்
தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தை கம்சனைக் கொன்றுவிடும் என்று வானத்திலிருந்து அசரீரி சொன்னதாய் நாரதன் அல்லது தெய்வானை மூலம் கேள்விப்பட்ட கம்சன்

பத்ரா மாதம் எட்டாம் நாள் நள்ளிரவில் மதுராபுரி நகரில் கிருஷ்ணன் பிறந்தான். அவனுடைய தந்தை யாதவ இனத்தைச் சேர்ந்த வாசுதேவன். மதுராபுரியை ஆண்ட அரசன் உக்கிர சேனனுடைய சகோதரன் தேவகனுடைய மகள் தேவகி அவனுடைய தாய். சௌபாவின் தானவ மன்னன் துருமிளாவுடன் உக்கிரசேனனுடைய மனைவி கள்ளத் தொடர்பு கொண்டிருந்தாள். இத்தகாத தொடர்பினால் பிறந்தவன் கம்சன். ஒரு வழியில் பார்த்தால் தேவகிக்கு கம்சன் ஒன்றுவிட்ட சகோதரன்.

உக்கிரசேனனை சிறைப்படுத்தி மதுராபுரியின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினான் கம்சன். தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தை கம்சனைக் கொன்றுவிடும் என்று வானத்திலிருந்து அசரீரி சொன்னதாய் நாரதன் அல்லது தெய்வானை மூலம் கேள்விப்பட்ட கம்சன் தேவகியையும் அவள் கணவனையும் சிறைப்படுத்தி ஒன்றன் பின் ஒன்றாய் பிறந்த அவர்களுடைய ஆறு குழந்தைகளையும் கொன்று விடுகிறான். ஏழாவது குழந்தையாகிய பலராமன் தேவகியின் வயிற்றில் கருவாய் இருக்கும்போதே, வாசுதேவனின் வேறொரு மனைவியான ரோகிணியின் வயிற்றுக்கு அதிசயமான முறையில் மாற்றப்படுகிறான். எட்டாவது குழந்தையாய் கிருஷ்ணன் பிறக்கிறான்.

விராஜ நாட்டவர்களான நந்தனும் யசோதையும் அப்போது யமுனை நதியின் மறுகரையில் வாழ்கிறார்கள். இரகசியமாக கிருஷ்ணனின் தந்தை, கிருஷ்ணன் பிறந்தவுடன் அவர்களிடம் சேர்த்து விடுகிறான். பெருக்கெடுத்து ஓடும் யமுனை நின்று இந்த தெய்வ குழந்தை ஆற்றைக் கடக்க வழிவிட்டதாம். நாகங்களின் தலைவனான அனந்தா (பாம்பு) படம் எடுத்து குழந்தைக்கு முக்காடிட்டு கொட்டும் அடைமழை குழந்தை மேல் விழாமல் பாதுகாத்து யமுனையின் அக்கரையிற் சேர்த்ததாம்; அவர்களுக்கு அடைக்கலம் கிடைத்ததாம். ஏற்கெனவே செய்து கொண்ட முன்னேற்பாட்டின்படி வாசுதேவன் தன் மகனை நந்தனுக்கு கொடுத்தான்.

நந்தன் தாம் பெற்ற மகள் யோகிந்தா அல்லது மகமாயா எனும் குழந்தையை வாசுதேவனுக்கு கொடுத்தான். இதுதான் தாம் பெற்ற எட்டாவது குழந்தையென்று வாசுதேவன் அப்பெண் குழந்தையைக் கம்சனிடம் கொடுத்தான். நந்தனும் யசோதையும் வளர்த்துவரும் குழந்தையே கம்சனைக் கொன்றுவிடும் என்று கூறிவிட்டு அப்பெண் குழந்தை எங்கோ ஓடி மறைந்தது.

யமுனையை தாண்டும் வசுதேவர்
அனந்தா (பாம்பு) படம் எடுத்து குழந்தைக்கு முக்காடிட்டு கொட்டும் அடைமழை குழந்தை மேல் விழாமல் பாதுகாத்து யமுனையின் அக்கரையிற் சேர்த்ததாம்

எட்டாவது குழந்தையான கிருஷ்ணனை கொன்றிட கம்சன் பல வழிகளில் முயன்றும் முடியாமற் போகிறது. எப்படியாவது கிருஷ்ணனைக் கொன்று விட வேண்டும் எனும் நோக்கத்தில் பல ரூபங்களில் பல அசுரர்களைக் கம்சன் விராஜ நாட்டிற்கு அனுப்பினான். குழந்தைப் பருவத்திலேயே கிருஷ்ணன் பல அசுரர்களைக் கொன்றதாயும், அரிய பல சாகசங்களை நிகழ்த்தியதாயும் புராணத்தில் காணும் நிகழ்ச்சிகளுக்கொப்ப கிருஷ்ணனின் செயல்கள் வேறெந்த சாதாரணக் குழந்தையாலும் செய்ய முடியாத செயல்களாய் தெரிகின்றன. இப்படி சில நிகழ்ச்சிகளை மகாபாரதத்திலும் காணலாம். இவ்வெண்ணத்திற்கு இசைவாக இவ்வுண்மை நிகழ்ச்சிகளைப் பற்றிப் பொறுப்புள்ள சில பெரியவர்களும் கூட பெரும்பாலும் வித்தியாசமான கருத்தையே கொண்டுள்ளனர். பிற்காலத்திய சில ஆதாரங்களினடிப்படையில் சில உண்மைகளை மட்டும் நான் குறிப்பிடுகிறேன். முதலாவதாக, ஓர் நிகழ்ச்சியைப் பார்ப்போம்.

முதலாவதான நிகழ்ச்சி பூதனை என்ற பெண் கிருஷ்ணனால் கொல்லப்பட்ட நிகழ்ச்சி. பூதனை கம்சனின் தாதியாய்ப் பணியாற்றியவள். கிருஷ்ணனைக் கொல்ல ஒரு பெண் இராஜாளிக் கழுகு ரூபத்தில் பூதனையை அனுப்பினான் கம்சன் என்கிறது ஹரிவம்ச புராணம். பாகவத புராணத்தின்படி ஓர் அழகிய பெண் ரூபத்தில் பூதனாவைக் கம்சன் அனுப்பினான் எனத் தெரிகிறது. அழகிய பெண் ரூபத்திலிருந்த பூதனா குழந்தை கிருஷ்ணனுக்கு பாலூட்டுவது போல பாவனை செய்தாளாம். விஷம் தடவிய தன் மார்பகத்தைக் கிருஷ்ணனின் வாயில் வைத்தாளாம். கிருஷ்ணனோ வெகு பலமாக உறிஞ்சினானாம். அவள் உடம்பிலுள்ள இரத்தமெல்லாம் வறண்டு போய் கடுங் கூச்சலுடன் அவள் கீழே விழுந்து மாண்டு போனாளாம். இது ஒரு நிகழ்ச்சி.

கிருஷ்ணன் மூன்று மாதக் குழந்தையாய் இருந்தபோது வேறொரு சாகசத்தைச் செய்தான். இது சகடை என்னும் வண்டியை உடைத்த கதை. இவ்வண்டி உணவுப் பண்டங்களை வைக்க உபயோகிக்கப்பட்டது. அதில் விலையுயர்ந்த ஜாடிகள், சட்டி, பானை, பாத்திரங்கள், பால், தயிர் போன்றவைகளெல்லாம் சீராய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஹரிவம்ச புராணத்தின்படி கம்சன் கிருஷ்ணனைக் கொன்றிடும் நோக்கத்துடன் ஒரு அசுரனை அந்த வண்டி ரூபத்தில் அனுப்பியதாயத் தெரிகிறது. இருந்தபோதிலும் யசோதா குழந்தையான கிருஷ்ணனை அவ்வண்டிக்கு கீழே கிடத்தி விட்டுக் குளிப்பதற்காக யமுனைக்குப் போனாளாம். அவள் திரும்பி வந்த வேளையில் வண்டியின் கீழ் படுத்துக் கொண்டிருந்த குழந்தை கிருஷ்ணன் அவ்வண்டியை உதைத்ததால் அதன் மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பொருட்களும் உடைந்து சிதறி சின்னாபின்னமாய்ப் போனதாய்க் கேள்விப்படுகிறாள். இந்நிகழ்ச்சி யசோதைக்கே அதிர்ச்சியாயும், ஆச்சரியமாயும் உள்ளது. அதன் மூலம் கெடுதல் நேரிடாமல் தடுத்திட அவள் பல பூஜைகள் செய்தாளாம். இது வேறொரு நிகழ்ச்சி.

கிருஷ்ணனைக் கொல்ல சகடை, பூதனா ஆகியோரின் முயற்சிகள் தோற்ற பின் அதே காரியத்தைச் செய்ய கம்சன் மீண்டும் திரினவர்த்தன் எனும் வேறொரு அசுரனை அனுப்பினானாம். இந்த அசுரன் பறவை ரூபத்தில் வந்து தெய்வ வரம் பெற்ற அக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு பறந்தானாம். அப்போது கிருஷ்ணனுக்கு ஒரு வயதுதானாம். வானத்தில் பறந்து கொண்டிருந்த அசுரன் விரைவில் கீழே விழுந்து செத்தானாம். அப்போது குழந்தை (கிருஷ்ணன்) பத்திரமாய் இருந்ததோடு, அந்த அசுரனின் குரல்வளையைக் கெட்டியாய் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்ததாம். இது மற்றோர் நிகழ்ச்சி.

கிருஷ்ணன் - கோபியர்
காளியனை அடக்கியதாய்ச் சொல்லப்படும் அருஞ்செயலைத் தொடர்ந்து கிருஷ்ணன் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் ஆடைகளைத் திருடிய நிகழ்ச்சி வருகிறது.

கிருஷ்ணனின் அடுத்த சாகசச் செயல் என்னவெனில் அடுத்தடுத்து வளர்ந்திருந்த இரண்டு அர்ஜூனா மரங்களை உடைத்தெறிந்ததாகும்.

ஏதோ சாபத்தால் இரு யக்ஷர்கள் மரமாய்ப் போனார்கள் எனச் சொல்லப்படுகிறது. கிருஷ்ணன் அம்மரங்களை வீழ்த்திச் சாய்த்த சாகசத்தால் அவர்கள் இருவரும் மீண்டும் பழைய வடிவம் பெற்று விடுவிக்கப்பட்டார்களாம்.

கிருஷ்ணன் தவழத் தொடங்கிய காலத்தில் அவன் செய்யும் குறும்புகளிலிருந்து தடுத்திட மர உரலில் கயிறு போட்டுக் கிருஷ்ணனைக் கட்டிவிட்டு யசோதை வீட்டு வேலைகளைக் கவனிக்கப் போனாளாம். யசோதை மறைந்தவுடன் கிருஷ்ணன் அந்த மர உரலோடு இழுத்துக் கொண்டு போய் மரங்களை வேரோடு சாய்த்தானாம். அடி மரமே வேரறுந்து விழுந்தபோது பெரும் ஓசை எழுந்ததாம். ஆனால், கிருஷ்ணனுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையாம்.

இவ்வித நிகழ்ச்சிகளெல்லாம் நந்தனின் மனத்தில் பெரும் பயத்தை உண்டாக்கியது. விராஜ நாட்டிலிருந்து வெளியேறி வேறொரு பகுதிக்கு குடிபெயர்ந்திட அவன் தீவிரமாய் யோசித்தான். அவன் இப்படி யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அப்பிரதேசத்தில் ஓநாய்கள் மலிந்து கால்நடைகளுக்கு பேராபத்தை உண்டுபண்ணியதால் அவ்விடமே பாதுகாப்பற்ற இடமாய்த் தெரிந்தது. எனவே, நாடோடிகளாய் இருந்த கிருஷ்ணனின் கூட்டத்தார் தங்களுடைய பொருள்-உடைமைகளுடன் பிருந்தாவனம் எனும் இரம்மியமான பிரதேசத்தை நோக்கிப் புறப்பட்டனர். அப்போது கிருஷ்ணனுக்கு வயது ஏழுதான்.

புதிதாக இவ்விடத்திற்கு வந்து சேர்ந்தபின் கிருஷ்ணன் பல அசுரர்களைக் கொன்றான். அவர்களுள் அரிஸ்தா என்பவன் காளை மாட்டு ரூபத்தில் வந்தான். கேசின் என்பவன் குதிரை ரூபத்தில் வந்தான். மற்றும் விரத்ராசூரன், பக்காசூரன், அகாசூரன், போமாசூரன், மற்றும் ஷங்காசூரன் ஆகிய யக்ஷன் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர்.

இவையனைத்தையும் விட யமுனைப் பெருநீர்ச் சுழியில் வாழ்ந்து கொண்டிருந்த யமுனை நதி நீரில் விஷம் கலந்திட்ட காளியன் என்ற நாகங்களின் தலைவனைக் கிருஷ்ணன் கொன்றது மிகப் பெருஞ்செயலாம்.

ஒருநாள் படமெடுத்து ஆடிக் கொண்டிருந்த காளியனின் தலை மீது குதித்து கிருஷ்ணன் நடனம் ஆடினான். பொறுக்க முடியாமல் இந்நாகம் இரத்த வாந்தி எடுத்தது. கிருஷ்ணன் அந்த நாகத்தை கொன்று விட்டிருக்கலாம். ஆனால் அந்த நாகத்தின் குடும்பத்தினருக்காக இரங்கிப் பிழைத்துப் போகட்டும் என்று வேறெங்காவது போய்ச் சேர அனுமதித்தான்.

காளியனை அடக்கியதாய்ச் சொல்லப்படும் அருஞ்செயலைத் தொடர்ந்து கிருஷ்ணன் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் ஆடைகளைத் திருடிய நிகழ்ச்சி வருகிறது. புராணத்தில் வரும் கிருஷ்ணனைத் தெய்வமாய்த் தொழும் பக்தர்கள் இந்நிகழ்ச்சியை ஜீரணிப்பது பெரும் சங்கடத்திற்குரியது. இந்நிகழ்ச்சியை முற்றிலும் விரிவாக குறிப்பிட்டால் மிக்க அருவெறுக்கத்தக்க நிகழ்ச்சியாய்த் தோன்றும்; சுருக்கமாய்ச் சொன்னாலும் கூட அசிங்கமாய்த் தெரியும்; அவமரியாதையாய் தோன்றும். ஆயினும் இயன்றவரை மிக நாகரிகத்துடனேயே கிருஷ்ணனின் இந்த நடவடிக்கையை நான் சுருக்கமாய் குறிப்பிடுகிறேன்.

கோபிகள் ஒரு நாள் யமுனையில் நீந்திக் குளிக்கப் போனார்கள். நதியில் இறங்கும் முன் தம் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்தார்கள். நிர்வாணமாய்க் குளிக்கும் பழக்கம் நாட்டில் சில பகுதிகளில் இன்னும் நிலவிடுவதாய் சொல்லப்படுகிறது. நதிக்கரையில் கோபியர்கள் அவிழ்த்து வைத்த ஆடைகளைக் கிருஷ்ணன் எடுத்துக் கொண்டு ஓடிப் போய் நதியோரத்தில் இருந்த ஒரு மரத்தின் மீது ஏறிக் கொண்டான். ஆடைகளைத் திருப்பித் தா என்று அப்பெண்கள் கேட்டபோது, ஒவ்வொருத்தியும் அம்மரத்தருகே வந்து தனக்கு ஆடை வேண்டுமென்று ‘கையேந்தி’க் கேட்டாலொழிய அத்துணிகளைக் கொடுக்க முடியாதென்று கிருஷ்ணன் சொன்னானாம். இது நடக்க வேண்டுமானால் குளித்துக் கொண்டிருந்த அப்பெண்கள் நிர்வாணமாக வெளியேறி மரத்தடிக்கு வந்து கிருஷ்ணன் முன் நிர்வாணமாய் நின்று கையேந்த வேண்டும். அப்பெண்கள் அப்படிச் செய்த பின்னர்தான் கிருஷ்ணன் ‘மனமிரங்கி’ அப்பெண்களுக்கு அவரவர் துணிகளைக் கொடுத்தானாம். இக்கதை பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

(தொடரும்)

(டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 8 – பின்னிணைப்பு 1 – இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – பகுதி 4)

முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீவிரமாக செயல்படுகிறார்

2

ops 1செயல்படும் அரசும் செயல்படாத எதிர்க்கட்சிகளும்

“தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 27 அன்று மாலை 5 மணிக்கு, பெங்களூரு பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது; ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு தமிழக அரசே செயலிழந்து போய்விட்டது” இப்படி எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓயாது ஒப்பாரி வைக்கின்றன.

editorial-1இது உண்மையா! இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட அன்றும் மறுநாளும் அவரும் பிற அமைச்சர்களும் பெங்களூரு போய்விட்டதால் அவர்களின் கீழ் இருந்த அந்தந்த துறைசார்ந்த அதிகாரிகளும் ஊழியர்களும் தீர்ப்பின் பரபரப்பில் வேலை செய்யவில்லை. வெறுமனே அலுவலகத்துக்கு வந்தவர்களும் தமக்குரிய வழமையான பணிகளைக்கூடச் செய்யாது போய்விட்டார்கள்.

ஜெயலலிதாவைத் தண்டித்த தீர்ப்பு வந்த மறுநிமிடம் முதல் அவர் காலாலிட்ட உத்திரவைத் தலையால் ஏற்று அம்மா தி.மு.க.வின் அடிமைகளும் கைக்கூலிகளும் தமிழக அரசும் அவர் பிணையை விலைக்கு வாங்கிக் கொண்டு போயசுத் தோட்டம் மாளிகைக்குள் நுழையும் வரை செயல்பட்டனர். அதாவது, அம்மாவுக்காக அழுது புரண்டார்கள், ஒப்பாரி வைத்தார்கள், மொட்டை போட்டார்கள், பால்குடம் எடுத்தார்கள், உண்ணாவிரதம் இருந்தார்கள், பொங்கல் வைத்தார்கள், அபிசேகங்கள், யாகங்கள், வேண்டுதல்கள், பரிகாரங்கள் செய்தார்கள்; கடைகளை மூடச்சொல்லி அடித்து நொறுக்கினார்கள்; அரசு மற்றும் தனியார் வாகனங்களை எரித்தார்கள் – அதில் முன்பு நடந்ததைப்போல நரபலி நிகழாமல்போனது குறித்து தண்டிக்கப்பட்ட தெய்வத்துக்கு வருத்தம் இருக்கலாம். மற்றபடி அம்மா தி.மு.க.வின் அடிமைகளோடும் கைக்கூலிகளோடும் கைகோர்த்துக்கொண்டு தமிழக அரசு அதன் வழமையான செயல்பாடுகளோடு, மக்கள் பொதுச்சொத்தைக் கொள்ளையடித்த ஜெயலலிதா கிரிமினல் குற்றவாளி என்ற களங்கத்துக்கு, கறைக்கு வெள்ளையடிக்கும் ஆளுங்கட்சியின் அடாவடி, அராஜகச் செயல்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டுதான் இருந்தது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவைக் குற்றவாளியென அறிவித்துத் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து ஆளுங்கட்சியினர் கட்டவிழ்த்து விட்ட அடாவடி, அராஜகச் செயல்களையும் ஆளுங்கட்சி நடத்திய போராட்டங்களையும் அதிகாரிகளும் போலீசும் தடுத்து நிறுத்தவில்லை; பாதிக்கப்பட்ட மக்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் அவர்கள் பாதுகாப்பு வழங்கவில்லை. இவற்றை வைத்துத்தான் ‘தமிழக அரசே செயலிழந்து போய்விட்டது’ என்று எதிர்க்கட்சிகள் குறைபட்டுக் கொள்கிறார்கள். ஆனால், அவ்வாறு சொல்வதற்கு எந்த எதிர்க்கட்சிக்கும் அருகதை கிடையாது, ஏனெனில், செயல்படாமல் இருந்தவை எதிர்க்கட்சிகள்தாம்! ஜெயலலிதா சிறையிலடைக்கப்பட்ட பிறகும் பன்னீர்செல்வம் முதலமைச்சரான பிறகும் தமிழக அரசும் அதிகாரிகளும் போலீசும் வழக்கம்போல செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள் என்பதுதான் உண்மை.

2014, ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலை நினைவுபடுத்திப் பார்த்தாலே இந்த உண்மை புரியும். அத்தேர்தலின்போது ஆளுங்கட்சியினர் நடத்திய தேர்தல் தில்லுமுல்லுகள், அடாவடி, அராஜகச் செயல்களை அதிகாரிகளும் போலீசும் தடுக்கவோ, நிறுத்தவோ முயன்றார்களா? குற்றமிழைத்த ஆளுங்கட்சியினர் மீது கைதோ வழக்கோ போட்டார்களா? அவற்றை எதிர்த்து அம்பலப்படுத்திய எதிர்க்கட்சியினர் மீது தானே நடவடிக்கை எடுத்தார்கள். போலீசு வேன்களில்தானே பணம் கடத்தப்பட்டது; அதை வாக்காளர்களுக்கு விநியோகித்தவர்களுக்குத்தானே பாதுகாப்புக் கொடுத்தார்கள். 144 தடைவிதித்து ஆளுங்கட்சிக்கு வசதிசெய்து கொடுத்த தேர்தல் ஆணையமே ஆளும்கட்சியின் பணப் பட்டுவாடாவைத் தடுக்க முடியாமல் போய்விட்டது என்று ஒப்புக்கொண்டது. தேர்தல் ஆணையத்தின் ஊழியர்களாகச் செயல்பட்ட அதிகாரிகளும் போலீசும் உடந்தையாக இல்லையென்றால், அத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றிருக்க முடியுமா?

அவ்வளவு ஏன், அதிகாரிகளும் போலீசும் உடந்தையாக இல்லாமலா இப்போது தண்டிக்கப்படுவதற்குக் காரணமான சொத்துகளை எல்லாம் ஜெயா-சசி கும்பல் குவித்தது? அந்தச் சொத்துகள் எல்லாம் இலஞ்ச-ஊழல் மூலம் மட்டும் குவிக்கப்பட்டவை அல்ல. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் முதல் கோடநாடு பண்ணை, கங்கை அமரனின் பையனூர் பங்களா வரை பல அசையா சொத்துக்கள் எல்லாம் மிரட்டி வாங்கப்பட்டவைதாமே. அப்போதும் அதற்கெல்லாம் பாதுகாப்பாகத்தானே அதிகாரிகளும் போலீசும் நின்றார்கள். போயசு மாளிகைக்கே போய் சொத்துக்களைப் பதிவுசெய்து கொடுத்தவர்கள்தானே!

உயர் அதிகாரிகளும் போலீசும் மட்டுமல்ல; கிராம அதிகாரி முதல் தலைமைச் செயலாளர் வரை, சாலையில் நிற்கும் போக்குவரத்துப் போலீசுக்காரன் முதல் மாநிலத் தலைமைப் போலீசு இயக்குநர் வரை, கீழ்நிலை முன்சீப் கோர்ட் முதல் உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி வரை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் முதல் நாட்டின் முதல் குடிமகனான அரசுத் தலைவர், பிரதமர் வரை – இவர்கள் எல்லாம் எதற்காகச் செயல்படுகிறார்கள்? நாட்டு நலனுக்காகவா? மக்கள் நலனுக்காகவா? இல்லையே. இலஞ்ச-ஊழலிலும், அதிகார முறைகேடுகளிலும் ஊறித்திளைக்கும் அவர்கள் ஜெயலலிதாவைப் போன்ற ஊழல் பெருச்சாளிகளுக்குத் துணை நிற்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல.

ஜெயலலிதா மட்டும் நேரில் போயிருந்தால், உச்சநீதி மன்றம் தாமே தண்டனிட்டு, அவர் காலில் விழுந்து கும்பிட்டு, ஜாமீன் உத்திரவைக் கையளித்திருப்பார்கள். அதையும் விஞ்சும் அளவுக்குக் கடுமை காட்டுவதைப் போல நடித்துவிட்டு, ஜெயலலிதாவே எதிர்பாராத தீர்ப்பை வழங்கியது அந்நீதி மன்றம். சொத்துக் குவிப்பு வழக்கை 18 ஆண்டுகள் இழுத்தடித்ததைப்போல மேல்முறையீட்டு வழக்கைத் தாமதிக்காது, 2 மாதங்களில் தாக்கல் செய்து, 3 மாதங்களில் தீர்ப்பு வாங்கவேண்டுமாம்! ஒருநாள் தவறினாலும் கடும் நடவடிக்கை மேற்கொள்வார்களாம்! இதைத்தான் கடும் நிபந்தனை ஜாமீன் என்று கருணாநிதி நம்பச் சொல்லுகிறார். தண்டனை வருமுன் வழக்கை இழுத்தடிப்பதும், தண்டிக்கப்பட்ட பிறகு மேல்முறையீட்டை விரைந்து முடித்து விடுதலை பெறுவதும்தானே கடைந்தெடுத்த குற்றவாளியும் நாலாந்தர வக்கீலும் கையாளும் தந்திரம். அவ்வாறாக விதிக்கப்பட்டது கறாரான, கடுமையான, நிபந்தனையுடன்கூடிய ஜாமீனா, குற்றவாளியுடன் கூட்டுக் களவாணித்தனமா? களவாணித்தனம் செய்து கையும் களவுமாகச் சிக்கிக் கொண்டீர்களா, சரி! போ! இனி இப்படிச் செய்யாதீர்கள்” என்பதுதான் டான்சி நில அபகரிப்பு வழக்கு முதல் ஜெயலலிதாவின் எல்லா விவகாரங்களிலும் நீதியரசர்களின் வழுவாநீதி!

editorial-protest-against-electricity-rate-hike‘தமிழக அரசே செயலிழந்து போய்விட்டது, அதிகாரிகள் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக செயல்படுகின்றனர், காவல்துறை ஆளுங்கட்சியின் ஏவல்துறையாகிவிட்டது, மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கத் தவறி விட்டது’ என்றெல்லாம் இப்போது கூச்சல்போடும் எதிர்க்கட்சிகளுக்கும் இது நன்றாகவே தெரியும், அது இராஜாஜியோ, காமராஜரோ, பக்தவச்சலமோ, அண்ணாதுரையோ, கருணாநிதியோ, எம்.ஜி.ஆரோ., ஜெயலலிதாவோ யார் ஆண்டாலும் அரசும் ஆட்சியாளர்களும் எப்போதும் இப்படித்தான் செயல்பட்டிருக்கிறார்கள்; இனியும் இப்படித்தான் செயல்படுவார்கள்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற வக்கிரமான, பொறுக்கி அரசியல், பாசிசக் கோமாளிகள் எதற்கும் தமது செல்லப் பிள்ளைகளான அரசு அதிகாரிகளையும் போலீசுக்காரன்களையும் கூலி எழுத்தாளர்களையும் நம்பி ஆட்சி நடத்தினார்கள்; தடையற்ற அதிகாரமுறைகேடுகளுக்கு அனுமதிக்கப்பட்ட இவர்கள் கூடுதலான விசுவாசத்தைக் காட்டுவதில் வியப்பொன்றுமில்லை. ஆகவே, எப்போதும் போல அரசும் ஆட்சியாளர்களும் செயல்பட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். இந்த உண்மையை அறிந்திருந்தும் எதிர்க்கட்சிகள்தாம் வேடிக்கை பார்க்கிறார்கள், அறிக்கை விடுகிறார்கள்; தமக்கும், தாம் முடிந்த அளவு குவித்து வைத்திருக்கும் சொத்துக்களுக்கும் பாதிப்பு வராதவாறு அடையாளப் போராட்டங்கள் நடத்துகிறார்கள். மற்றபடி செயல்படாமலிருப்பவை எதிர்க்கட்சிகள்தாம்!

துணுக்குகள்: அம்மா சேவை தவிர, சகாயம் கமிசனை செயல்படாமல் நிறுத்தி வைப்பது, பால் விலை, மின்கட்டணம் உயர்வு, ஆம்னிப் பேருந்துக் கட்டணத்தை விண்ணுயர ஏற்றிக்கொள்ள அனுமதி, கேரளாவில் மதுவிலக்கு என்றால் எல்லையோரக் கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் திறந்து வசூல்வேட்டை – இவற்றுக்காக அதிகாரிகள் செயல்படவில்லையா! அம்மா சேவை தவிர, டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லிப் போராடினால் தடியடி-கைது-சிறை, லாக்அப் சித்திரவதை-கொலை-பாலியல் வன்முறை என்று போலீசுக்காரன்கள் செயல்படவில்லையா!
________________________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2014 (தலையங்கம்)
________________________________________________

மீனவ நண்பன் மோடி – கேலிச்சித்திரம்

1

meenavar

படம் : ஓவியர் முகிலன்

ஒரு வருடம் உள்ளே தள்ள ஒரு வழக்கு போதும்

0

குண்டர் சட்டத்திருத்தத்தை ரத்து செய்! – பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம்

ன்பார்ந்த வழக்குரைஞர்களே! பொதுமக்களே!

சுதந்திர போராட்ட காலத்தில் காலனிய ஆதிக்க பிரித்தானிய அரசு தனது மூலதனத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் பாதுகாக்கும் விதத்தில் தடுப்பு காவல் சட்டங்களை இயற்றி, போராட்டக்காரர்களை கடுமையாக ஒடுக்கியது. 1947-க்கு பின்பும், ‘சுதந்திர’ இந்தியாவின் புதிய ஆட்சியாளர்கள் பாகிஸ்தான் பிரிவினையின் சூழலைக் காரணம் காட்டி, அதே ஒடுக்குமுறை ஆயுதத்தை தன் உறைக்குள் பத்திரப்படுத்திக்கொண்டார்கள். இந்திராகாந்தி எதிர்க்கட்சிகளையும், ஜனநாயக, புரட்சிகர சக்திகளையும் கடுமையாக ஒடுக்க ‘மிசா’ என்னும் த.கா.சட்டத்தினைத் தான் பயன்படுத்தினார். அதற்கு பிறகு, தடா, பொடா, தேசிய பாதுகாப்பு சட்டம் என தடுப்பு காவல் சட்டங்களை அடுத்தடுத்து கொண்டுவந்து புரட்சிகர, ஜனநாயக சக்திகளையும், எதிர்கட்சிகளையும் எப்படி ஒடுக்கினார்கள் என்பது கடந்த கால வரலாறு!

இப்பொழுது நடைமுறையில் இருக்கும் குண்டர் தடுப்பு சட்டம் 1982-ல் அரசு கொண்டு வந்தது. தொழில்முறை திருடர்கள், ரவுடிகள், போதைப்பொருள் கடத்துபவர்கள் என சில பிரிவுகளில் துவங்கி, கடந்த 32 ஆண்டுகளில் நில அபகரிப்பு, மணல் கொள்ளை, திருட்டி விசிடி தயாரிப்பவர்கள் என பல பிரிவுகளையும் சேர்த்து பெரியதாய் ஊதிப்பெருக்கியுள்ளனர். வெளியில் இருந்தால், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவார்கள், அதனால் குற்றமிழைப்பதிலிருந்து தடுத்து வைப்பது என கூறிக்கொண்டு தான் பிணை ஏதுமின்றி ஓராண்டு தடுப்பு காவலில் வைப்பது என்பதை கொண்டுவந்தார்கள்.

சமீபத்தில் தமிழக அரசு குண்டர் சட்டத்தில் முதல்முறை குற்றம் செய்தவர்கள் மீதும் பயன்படுத்தலாம், இணையம் மற்றும் பாலியல் குற்றங்கள் செய்பவர்களும் கைது செய்யப்படலாம் என திருத்தியிருக்கிறது. இந்த சட்டத்தில் இதுவரை கைது செய்திருப்பது தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனையோ, கிரானைட் திருடன் பி.ஆர்.பியையோ கிடையாது. எதிர்கட்சிகாரர்களையும், புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் மீது தான் பொய்வழக்குகள் போட்டு கு.சட்டத்தில் அடைத்திருக்கிறார்கள்.

உதாரணமாய், சென்னை மதுரவாயலில் காவல்துறையின் அராஜகங்களை தொடர்ச்சியாய் அம்பலப்படுத்தி, உழைக்கும் மக்களை திரட்டி போராடியதால் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் இரண்டு முன்னணி தோழர்களை குண்டர் சட்டத்தில் அடைத்தார்கள்.

சென்னை சந்தோஷ் நகர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சார்ந்த அசோக் என்பவரை குண்டர் சட்டத்தில் அடைக்க முயன்றார்கள். மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நீதிமன்றங்களில் போராடி காவல்துறையின் முயற்சியை முறியடித்தது. மக்களுக்காக போராடும் புரட்சிகர அமைப்பில் செயல்படும் தோழர்களை இழிவுப்படுத்தும்விதமாக கத்தியைக் காட்டி வழிப்பறித்தார்கள், பொதுமக்களை மிரட்டினார்கள் என பொய் வழக்கு போடுகிறார்கள்.

சமீபத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் தொழிற்சங்க நிர்வாகியான தோழர் சிவாவை தொழிலாளர் நலத்துறை ஆணைய அதிகாரியை மிரட்டியதாய் பொய் வழக்கு ஒன்றை தொடுத்தார்கள். குண்டர் சட்டத்தில் போடக்கூடாது என சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை வாங்கியதை கூட மதிக்காமல், கு.சட்டத்தில் அடைத்தார்கள். மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தொடர்ச்சியாக நீதிமன்றங்களில் போராடி, இப்பொழுது தமிழக அரசின் உள்துறை செயலாளர் தோழர் சிவாவின் மீதான குண்டர் சட்டத்தை திரும்ப பெற்றிருக்கிறார். இது தமிழக குண்டர் சட்ட வரலாற்றில் முதன்முறையாக இப்படி நிறைவேற்றியிருக்கிறோம். 58 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு, தோழர் சிவா இப்பொழுது வெளியே வந்திருக்கிறார்.

இப்படி, காவல்துறை நினைத்தால் இனி யார் மீது வேண்டுமென்றாலும், பொய்வழக்கு ஒன்றைப் போட்டு, குண்டர் சட்டத்தில் தடுப்பு காவலில் அடைக்கலாம் என்ற பாசிச நிலை தான் நிலவுகிறது. இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 95%த்தினர் நீதிமன்றத்தினால் பொருத்தமில்லாத வழக்கு என விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒருவருடத்திற்கு மேலாகவும் சிறையில் அவதிப்பட்டிருக்கிறார்கள். அதற்காக இதுவரை எந்த ஒரு அதிகாரியும் தண்டிக்கப்பட்டதில்லை.

மனித உரிமைப் பாதுகாப்புமையம் குண்டர் சட்டத்தில் தமிழக அரசு கொண்டு வந்த திருத்தத்தை ரத்து செய்ய பொதுநலவழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்டோபர் மாதம் தாக்கல் செய்திருக்கிறது. அரசு பதிலளிக்க நான்கு வார அவகாசம் கேட்டது. 24/11/2014 அன்று வழக்கு விசாரணை வந்த பொழுது, அரசு மீண்டும் இரண்டு வார கால அவகாசம் கேட்டுள்ளது!

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் அடக்குமுறை சட்டங்களை எதிர்க்காவிட்டால், தனியார்மய, தாராளமய, உலகமய -மறுகாலனியாதிக்க கொள்கைகளின் விளைவாக பாதிப்பினால், போராடும் உழைக்கும் ஏழை மக்களும், மக்களின் உரிமைகளுக்காக போராடக்கூடிய புரட்சிகர, ஜனநாயக சக்திகள் தான் என்பதை புரிந்துகொண்டு, இந்த சட்டத்தை முறியடிக்க நாம் போராடவேண்டும் என்றும், குண்டர் சட்டத்தில் முதலில் அடைக்கப்பட வேண்டியவர் பொதுச்சொத்துக்களை திருடிய ஜெயலலிதாதான் என மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது. கடந்த வாரத்தில் குண்ட சட்டத்திருத்தத்தின் அபாயத்தை விளக்கி, பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தியது

வழக்குரைஞர்கள் மத்தியில் தொடர்ந்து கையெழுத்து இயக்கமும் நடத்தி வருகிறது. நேற்று 25/11/2014 அன்று “குண்டர் சட்ட திருத்தத்தை திரும்ப பெறவேண்டும்” என தமிழக அரசை வலியுறுத்தி 25/11/2014 அன்று பகல் 1.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாக ஆவின் கேட் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது!
hrpc-gundas-demo-photo
சென்னை கிளை செயலர் வழக்குரைஞர் மில்ட்டன் தலைமை தாங்கினார். வழக்குரைஞர் பொற்கொடி சிறப்புரை ஆற்றினார். நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் நின்று உரையையும், முழக்கங்களையும் கவனித்தனர். விளக்க பிரசுரங்கங்களை கேட்டு வாங்கிப் படித்தனர்.

ஆர்ப்பாட்ட முழக்கங்கள் நீதிமன்றத்தில் எதிரொலித்தன!

போராடுவோம்! போராடுவொம்!
ஆள்தூக்கி கருப்புச் சட்டம்
குண்டர் தடுப்பு சட்ட திருத்தத்தை
திரும்பப் பெறும்வரை போராடுவோம்!

ஒரு கிரிமினல் வழக்கு போதும்
ஒரு வருடம் உளளே தள்ள!
புரிந்து கொள்வோம்! புரிந்து கொள்வோம்!
உரிமைக்காக போராடுகின்ற
ஜனநாயக, புரட்சிகர
சக்திகளை ஒடுக்கவே
சட்ட திருத்தம் என்பதை
புரிந்து கொள்வோம்! புரிந்து கொள்வோம்!

நீக்கியாச்சு! நீக்கியாச்சு!
தொழில்முறை குற்றவாளியைத்தான்
குண்டர் தடுப்பு சட்டத்தில்
கைது செய்ய வேண்டும் என்பதை
நீக்கியாச்சு நீக்கியாச்சு.

சைபர் கிரைம் குற்றத்திற்கும்
பாலியல் வன்முறை குற்றத்திற்கும்
இருக்கின்ற சட்டங்கள் போதாதா?
சட்டத்திருத்தத்தில் சேர்க்கனுமா?
உணர்ந்து கொள்வோம் உணர்ந்து கொள்வோம்
கருத்து உரிமையை மறுத்து
போராடுபவர்களை அச்சுறுத்தவே
சட்டத்திருத்தம் என்பதை
உணர்ந்து கொள்வோம்! உணர்ந்து கொள்வோம்!

கருத்து உரிமையை மறுத்து
போராடுபவர்களை அச்சுறுத்தவே
சட்டத்திருத்தம் என்பதை
உணர்ந்து கொள்வோம், உணர்ந்து கொள்வோம்.

பாயவில்லை! பாயவில்லை!
மக்கள் சொத்தை கொள்ளையடித்த
ஜெயா, சசி கும்பல் மீது
இயற்கை வளத்தை சூறையாடிய
வைகுண்டராஜன், பி.ஆர்.பி மீதும்
குண்டர் சட்டம் பாயவில்லை.

ஏவுகிறது! ஏவுகிறது!
காக்கிச்சட்டை வெறிநாய்கள்
தொழிற்சங்க தலைவர்கள் மீதும்
குண்டர் தடுப்பு சட்டத்தை
ஏவுகிறது ஏவுகிறது.

தவறே செய்யாத அப்பாவியை
குண்டாஸ் வழக்கில் கைது செய்தால்
குறைந்த பட்சம் 9 மாதம்
தெரிந்தே பொய்வழக்கு போடுகின்ற
போலீசுக்கு என்ன தண்டனை
நீதிமன்றமே பதில் சொல்!

கல்வி, வேலை, மருத்துவம்,
தண்ணீர், இருப்பிட உரிமைகளெல்லாம்
உழைத்து வாழும் மக்களுக்கு
கானல் நீராகி போகுது.

உரிமைக்காக போராடாமல்
அடிமைகளாய் வாழவே
போராடும் மக்களை ஒடுக்குவதற்கே
சட்ட திருத்தம், சட்ட திருத்தம்.

போராடுவோம்! போராடுவோம்!
ஆள்தூக்கி கருப்புச் சட்டம்
குண்டர் தடுப்பு சட்டத்தை
தூக்கியெறியப் போராடுவோம்!

தடுப்பு காவல் சட்டமே
தவறாக இருக்கும்போது
திருத்தம் எதற்கு வெங்காயம்.

தமிழக அரசே! தமிழக அரசே!
ரத்து செய்! ரத்து செய்!
உடனடியாக ரத்து செய்!
குண்டர் தடுப்பு சட்ட திருத்தத்தை
உடனடியாக ரத்து செய்!

hrpc-gundas-demo-poster

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

வன்கொடுமைகள் : ஒய்யாரக் கொண்டையில் ஈறும் பேனும்

4

தீவிரமடையும் வன்கொடுமைகள்: ஒய்யாரக் கொண்டையின் உள்ளே ஈறும் பேனும்

சிலம்பட்டி தொடங்கி பெங்களூரு, அகமதாபாத், மஹாராஷ்டிரா என்று நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக கடந்த மூன்று மாதங்களுக்குள் அடுத்தடுத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கெதிராக ஆதிக்க சாதியினர் நிகழ்த்தியிருக்கும் வன்கொடுமைகளும் – கொலைகளும் வக்கிரம் நிறைந்தவை!

எரித்துக் கொல்லப்பட்ட விமலாதேவி.
கள்ளர் சாதிவெறி பிடித்த பெற்றோர்களால் எரித்துக் கொல்லப்பட்ட விமலாதேவி.

உசிலம்பட்டி – போலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கள்ளர் சாதியைச் சேர்ந்த விமலாதேவி, தமது தந்தையிடம் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்த பள்ளர் சாதியைச் சேர்ந்த திலீப்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டு கேரளாவில் வாழ்ந்து வந்தார். வயதுக்கு வந்த இருவர் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்துவந்த நிலையில், அவர்களை போலீசின் துணையோடு சட்டவிரோதமாகப் பிரித்தனர், கள்ளர் சாதிவெறியர்கள்.  உசிலம்பட்டி துணைக் கண்காணிப்பாளர் சரவணக்குமார் முன்னிலையில்தான் இந்த சாதிப் பஞ்சாயத்தே நடைபெற்றிருக்கிறது. அங்கே, பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி; உசிலை சட்டமன்ற உறுப்பினரும் பார்வர்டு பிளாக் தலைவருமான கதிரவன்; மார்க்சிஸ்டு கட்சியின் செல்லக்கண்ணு மற்றும் கள்ளர் சாதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் தாலியைக் கழட்டி எறியுமாறு விமலாதேவியை மிரட்டியும் அந்தப் பெண் பணியவில்லை. நீதிமன்றத்தில் விமலாதேவி ஆஜர் படுத்தபட்டபோதும், “என்னை யாரும் கடத்தவில்லை. நான் விரும்பித்தான் திலீப்குமாருடன் சென்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தேன்” என்று உறுதியாக அறிவித்தார். இருப்பினும் அவரைச் சட்டவிரோதமாக சாதிவெறிபிடித்த பெற்றோர்களிடமே ஒப்படைத்தது நீதிமன்றம்.

உடனே, விமலாதேவிக்கு கள்ளர் சாதியைச் சேர்ந்த சதிஷ்குமார் என்பவரோடுகட்டாயத் திருமணம் செய்துவைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர், அவரது பெற்றோர். அதனை உறுதியாக எதிர்த்து நின்ற விமலாதேவி, அக்-1 அன்று இரவு கள்ளர் சாதி சுடுகாட்டில் எரிந்து சாம்பலாகிக் கிடந்தார். விமலாதேவி தற்கொலை செய்துகொண்டதாகவும், பிணத்தை எரித்துவிட்டதாகவும் திமிராக அறிவித்தனர் கள்ளர் சாதிவெறியர்கள்.

“என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் கேசு போட்டுக்கோங்க. ஆனால், என் மகளைக் கொன்னதாகத்தான் கேசு இருக்கனும். அவன் (திலீப்குமார்) பொண்டாட்டினு இருக்கக்கூடாது” என்று கூறியிருக்கிறார், விமலாதேவியின் தந்தை. இக்கூற்று ஒன்றே போதும், சாதிவெறியர்களின் திமிரை நிரூபிப்பதற்கு!

ரமேஷ்
கைக்கடிகாரம் கட்டி வந்ததற்காக ஆதிக்க சாதிவெறி பிடித்த சக மாணவர்களால் மணிக்கட்டுச் சிதைக்கப்பட்ட பி. ரமேஷ்.

மகாராஷ்டிரா மாநிலம் அஹமத்நகர் மாவட்டத்திலுள்ள காசர்வாடி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த சஞ்சய் ஜாதவ், அவரது மனைவி ஜெயசிறீ மற்றும் அவர்களது மகன் சுனில் ஆகியோர் ஆதிக்க சாதி வெறியர்களால் அக்-21 அன்று நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார்கள். கண்டதுண்டமாக வெட்டப்பட்டு நாலாபுறமும் வீசியெறியப்பட்ட அவர்களது சிதைந்த உடல் பாகங்கள் விவசாயக் கிணற்றிலும், விவசாய நிலத்திலும் அழுகிய நிலையில் இரண்டு நாட்களுக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்டது.

கொல்லப்பட்ட சஞ்சய் ஜாதவிற்கு மேல்சாதியை சேர்ந்த திருமணமான பெண்ணொருவருடன் கள்ள உறவு இருந்ததாக குற்றம் சாட்டி இப்படுகொலையை நிகழ்த்தியிருக்கிறார்கள் ஆதிக்க சாதிவெறியர்கள். இந்த மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நிகழ்ந்துள்ள மூன்றாவது தாழ்த்தப்பட்டோர் படுகொலை இது.

பஞ்சாபின் லூதியானா மாவட்டம் ஜமால்பூர் கிராமம். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர்களான ஹரிந்தர் சிங்கும் ஜதிந்தர் சிங்கும் தங்களுக்குச் சொந்தமான விளைநிலத்தை ஆக்கிரமித்து அனுபவித்து வரும் உள்ளூர் நிலப்பிரபுவுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்தனர். நிலப்பிரபுவின் ஆக்கிரமிப்பை மீறி துணிவுடன் தங்களது நிலத்தில் இறங்கி விவசாயம் செய்ய முற்பட்டதற்காக அச்சகோதரர்கள் இருவரும் செப்.27 அன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். தங்களுடனான மோதலில் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவித்தது போலீசு. ஆனால் அந்த நிலப்பிரபு, தனது கைக்கூலியான அகாலி தளக் கட்சியின் பிரமுகரை வைத்து இந்தக் கொலையைச் செய்திருப்பதும், கொலைகாரர்களைக் காப்பாற்றும் பொருட்டு இதனை மோதல் கொலை என்று போலீசு சித்தரித்திருப்பதும் இப்போது அம்பலமாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவன் பி.ரமேஷ். சற்றே விலை கூடிய கைக்கடிகாரத்தை அவர் அணிந்திருந்ததை ஆதிக்க சாதியைச் சேர்ந்த சக மாணவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவரிடமிருந்து அதனைப் பிடுங்கி எறிய முயன்றுள்ளனர். ரமேஷ் அதனை எதிர்த்திருக்கிறார். கடந்த அக்-3 அன்று திருத்தங்கல் இரயில் நிலையம் அருகே ரமேஷை வழிமறித்த அந்த சாதிவெறி பிடித்த மாணவர்கள் கடிகாரம் கட்டிய மணிக்கட்டை வெட்டிச் சிதைத்தனர்.

சிறுவன் சந்தோஷ்
பெங்களூரு ருத்ரேஸ்வரர் கோயில் பார்ப்பனர்களால் தாக்கப்பட்ட சிறுவன் சந்தோஷ்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகில் உள்ள கிராமம் செவ்வூர். இக்கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் சிங்கப்பூர் சென்று வேலை செய்வதால், எல்லோரிடமும் நிலம் இருக்கிறது. குடியிருப்புகளும் பெரும்பாலும் கான்கிரீட் வீடுகளாகியிருக்கின்றன. கல்வியிலும் பொருளாதாரத்திலும் ஓரளவு முன்னேறியிருக்கின்ற காரணத்தால், தப்படிப்பது, சாவுச்சேதி சொல்வது உள்ளிட்ட சாதி அடிப்படையிலான அடிமைத்தொழில்ளைச் செய்யமாட்டோம் என மறுத்திருக்கின்றனர். இதன் காரணமாக கடந்த மே மாதம் முதல் தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் அனைத்தையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து சமூகப்புறக்கணிப்பை அறிவித்திருக்கிறார்கள் ஆதிக்க சாதிவெறியர்கள்.

குஜராத்தின் அகமதாபாத் மாவட்டம், பாய்லா கிராமத்தைச் சேர்ந்த மெகுல் காபிரா, வால்மீகி என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர். தன்னைப் போலவே தனது பிள்ளையும் துப்புரவுப் பணியாளராக அடிமைத் தொழில் செய்யக்கூடாது என்றெண்ணிய அவரது தந்தை, கடன்பட்டு மகனுக்கு ஆட்டோ ஒன்றை வாங்கித் தருகிறார். “குப்பை அள்ளும் சாதிக்காரன், ஆட்டோ ஓட்டுவதா?” என்று கருவிக் கொண்டிருந்த ஆதிக்க சாதிக் கும்பல் ஒன்று அவரது ஆட்டோவை அடித்து நொறுக்கியதோடு, அவரையும் கண்மூடித்தனமாகத் தாக்கியது. கடந்த 2012-ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்திற்காக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதிலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

பெங்களூரை அடுத்த நெலமங்களாவில் உள்ள ஜெயநகரை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியான ராஜ்குமாரின் எட்டு வயது மகன் சந்தோஷ், கடந்த அக்-19 அன்று தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு, அருகிலுள்ள ருத்ரேஸ்வரா கோயிலுக்குள் தண்ணீர்க் குடிப்பதற்காகச் சென்றிருக்கிறான். அப்போது கோயிலில் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்த கோயில் பூசாரி விஜயகுமாரிடம் தங்களுக்கும் பிரசாதம் வழங்குமாறு அச்சிறுவர்கள் கேட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிறுவர்கள் கோயிலுக்குள் நுழைந்துவிட்டதைக் கண்டு ஆத்திரமுற்ற பூசாரி விஜயகுமார், சிறுவர்கள் சந்தோஷ் மற்றும் அவனது நண்பர்களான சேத்தன், கௌதம் ஆகியோரை தடியால் தாக்கியிருக்கிறான். நண்பர்கள் ஓடிவிட, சந்தோஷை மட்டும் பிடித்துக்கொண்ட பூசாரி விஜயகுமார், அவனை வெயிலில் முட்டி போடவைத்து சித்திரவதை செய்திருப்பதோடு, அச்சிறுவனது மண்டை உடைந்து இரத்தம் கொட்டுமளவிற்கு தாக்கியிருக்கிறான்.

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சாமானியனுக்கு மட்டுமல்ல; மாநில முதல்வர் என்ற அந்தஸ்தில் இருந்தாலும் கூட, ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைகளிலிருந்து தப்பித்து விடமுடியாது என்பதற்கு பொருத்தமான உதாரணம், பீகார் முதல்வர் ஜிதன் ராம் மஞ்ஜிக்கு நேர்ந்த அவலம்.

சஞ்சய் ஜாதவ் குடும்பத்தினர்
ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்டு கண்டந்துண்டமாக வெட்டி வீசியெறியப்பட்ட சஞ்சய் ஜாதவ் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் உடல் பாகங்கள்.

பீகார் முன்னாள் முதல்வரான தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த போலோ பஸ்வான் சாஸ்திரி நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஜிதன் ராம் மஞ்ஜி, “கடந்த ஆக-15-ம் தேதியன்று அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கினங்க மதுபானி மாவட்டத்திலுள்ள பகவதி பரமேசுவரி கோயிலுக்குச் சென்றிருந்தேன். நான் அக்கோயிலுக்கு சென்று திரும்பிய பிறகு, தீட்டுக்கழிப்பு சடங்குகள் நடத்தி, கோயில் கழுவப்பட்டிருக்கிறது” என தனக்கு நேர்ந்த வன்கொடுமையைச் சுட்டிக்காட்டி, சாதிவெறியர்களின் வக்கிரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

கடந்த ஓரிரு மாதங்களில் மட்டும் நாளேடுகளில் வெளிவந்துள்ள வன்கொடுமை பற்றிய செய்திகள் இவை. உசிலம்பட்டி சாதிவெறிக் கொலையாகட்டும், லூதியானாவில் நடத்தப்பட்டிருக்கும் கொலையாகட்டும் இரண்டிலுமே சாதிவெறியர்களும் போலீசும் ஓட்டுக் கட்சிகளும் கூட்டணியாகச் செயல்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். உசிலைக் கொலையில் நீதிமன்றமும் ஆதிக்க சாதிவெறிக்குத் துணை நின்றிருக்கிறது.

விருதுநகர் சம்பவம், மாணவர்கள் மத்தியில் வளர்ந்துவரும் சாதிவெறிக்கு அச்சுறுத்தும் சான்றாக இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தைக் காட்டிலும் சமூகத்தின் பண்பாடு பின்னோக்கிச் செல்வதையும், தாழ்த்தப்பட்ட மக்கள் தம் வாழ்க்கையில் எட்டிப் பிடிக்கின்ற எளிய முன்னேற்றத்தைக்கூட சகித்துக் கொள்ள இயலாத அளவிற்கு ஆதிக்க சாதியினர் மத்தியில் சாதிவெறி கொழுந்து விட்டு எரிகிறது என்பதற்கு சிவகங்கை, அகமதாபாத் சம்பங்கள்  எடுத்துக்காட்டாக இருக்கின்றன.

பெங்களூருவிலும் மகாராஷ்டிராவிலும் பீகாரிலும் நடைபெற்றுள்ள சம்பவங்கள் பிற்போக்கான காட்டுமிராண்டி நிலையிலேயே இந்தியச் சமூகத்தின் பல பகுதிகள் நீடிப்பதைக் காட்டுகின்றன. குறிப்பாக, தனக்கு நேர்ந்த தீண்டாமைக் கொடுமை பற்றி ஒரு மாநில முதலமைச்சரே வெளிப்படையாகத் தன் குமுறலை வெளியிட்ட பின்னரும், ஓட்டுக்கட்சிகளோ, ஊடகங்களோ அது பற்றிக் கண்டு கொள்ளவில்லை. அந்தக் குறிப்பிட்ட தொகுதியின் எம்.எல்.ஏ. வெளியிட்ட மறுப்புச் செய்தியோடு அப்பிரச்சினை அமுக்கப்பட்டுவிட்டது.

தருமபுரி இளவரசன் கொலைக்குப் பிறகு, தருமபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும் ஒரு சேரி உருவாக்கப்பட்டிருக்கிறது. வெறி பிடித்த வன்மத்தோடு தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக ரீதியாகப் பின்னோக்கித் தள்ளப்படுகின்றனர். நெல்லை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக வெளிப்படும் வன்முறை, இது ஒரு பொதுப்போக்காக வளர்ந்து வருவதைக் காட்டுகிறது.

நாடெங்கும் புதுப்புது வடிவத்திலான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதற்கும், கண்ணகி-முருகேசன் கொலை உள்ளிட்ட கொடிய வன்கொடுமைக் குற்றங்களில் கூட யாரும் தண்டிக்கப்படாத நிலையிலும், அச்சட்டதையே நீக்க வேண்டும் என்று  ஆதிக்க சாதிவெறியர்கள் கூச்சலிடுவதற்கான அடிப்படை என்ன?

அதிகரித்து வரும் நகரமயமாக்கம், தவிர்க்கவியலாமல் காதல் திருமணங்களுக்கும் சாதிரீதியான ஒன்றுகலத்தலுக்கும் வழிவகுக்கிறது. தருமபுரி முதல் உசிலை வரையிலான பல நிகழ்வுகள் அதற்குச் சான்றாக உள்ளன.  இந்த மாற்றத்தை கிராமப்புறத்தில் சாதியக் கலாச்சாரத்தில் ஊறியிருக்கும் பழமைவாதப் பெற்றோர்களால் ஒப்புக் கொள்ள முடிவதில்லை என்ற போதிலும், இந்த முரண்பாடு ஒரு கலவரமாக வெடிப்பதற்கு அப்பெற்றோர்கள் காரணமாக இருப்பதில்லை.
எல்லா சாதிகளிலும் தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின் விளைவாக உருவாகியிருக்கும் புதிய வகை தரகு வர்க்கங்களும், அரசியல் பிழைப்புவாதிகளும்தான் இந்த முரண்பாட்டைத் தீவிரப்படுத்துகிறார்கள். அது மட்டுமல்ல, சொல்லிக்கொள்ளப்படும் இந்த வளர்ச்சியாக இருக்கட்டும், கைபேசி முதல் இணையம் வரையிலான முன்னேற்றங்களாக இருக்கட்டும், இவை எதுவும் சமூகத்தில் ஒரு ஜனநாயகப் பண்பாட்டை உருவாக்கவில்லை; மாறாக, சீரழித்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைப் போலவே, பெண்களுக்கும், சிறுமியர்க்கும் எதிரான பாலியல் குற்றங்களின் அதிகரிப்பும், திருட்டு, ஆதாயத்துக்கான கொலைகள், மோசடிகள், முதியோர் கொலைகள் உள்ளிட்ட குற்றங்களின் அதிகரிப்பும் இந்த வளர்ச்சிப்பாதை தோற்றுவித்துள்ள கொடிய விளைவுகள் என்பதைக் கணக்கில் கொண்டு, இவற்றுக்கெதிரான போராட்டத்தை நடத்தவேண்டியிருக்கிறது.

– இளங்கதிர்
_______________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2014
_______________________________

துடைப்பத்தோடு போபாலுக்குப் போங்களேன் மோடி !

0

தூய்மை இந்தியா: துடைப்பத்தோடு போபாலுக்குப் போங்களேன் மோடி!

தர பிரதமர்களைவிடத் தன்னை வித்தியாசமானவராகக் காட்டிக் கொள்ளும் கோமாளித்தனத்தோடு “தூய்மை இந்தியா” எனும் விளம்பர வித்தையை ஆரவாரத்துடன் நடத்துகிறார் மோடி. அழுக்கும் அசுத்தமும் தாழ்த்தப்பட்டோரின் சேரிப் பகுதியில்தான் இருக்கிறது என்று வக்கிரமாகக் காட்டும் வகையில், காந்தி பிறந்தநாளன்று டெல்லியிலுள்ள தாழ்த்தப்பட்ட வால்மீகி சாதியினர் நிறைந்துள்ள சேரிப்பகுதிக்கு வந்து தெருக்கூட்டுவதைப் போல புகைப்படம் எடுத்துக் கொண்டு, பாரத் சுவட்ச் அபியான் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தைத் தொடங்கிவைத்த அவர், இதனை 2019-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்கிறார். இதற்காக சச்சின் டெண்டுல்கர், அம்பானி, சல்மான்கான், கமல்ஹாசன் மற்றும் நடிகைகள், பிரமுகர்கள் என ஒன்பது பேரைத் தெரிவு செய்து தூய்மை இந்தியாவை உருவாக்கும் பணியில் இணைய அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மோடி தூய்மை இந்தியா
ஒரு நாடகம் நடக்குது நாட்டிலே…

மல்டி லெவல் மார்க்கெட்டிங் போல இவர்கள் மேலும் 9 பேருக்கு அழைப்பு விடுக்க, அப்படியே அது பல மடங்காகப் பெருகி நாடெங்கும் விரிவடையுமாம். இத்திட்டம் அறிவிக்கப்பட்டதும், திடீரென அரசு அலுவலக வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, ஊடகங்களின் ஒளிவட்டத்தில் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, காங்கிரசின் சசிதரூர், பா.ஜ.க. அமைச்சர்கள் மற்றும் ஆம் ஆத்மி பிரமுகர்கள் – என எல்லோரும் கையிலே துடப்பத்தை ஏந்திக் கொண்டு தெருக்கூட்டும் விளம்பர நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

சாமானிய மக்கள் தெருக்களில் கொட்டும் குப்பைகளைவிட, நாட்டின் தூய்மையையும் சுற்றுச்சூழலையும் நாசமாக்கிவருவது உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்  நிறுவனங்கள்தான். மறுசுழற்சி செய்ய இந்தியாவில் செலவு குறைவு என்பதால், ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து குப்பைகளும் நச்சுக் கழிவுகளும் பெருமளவில் இங்கே கொட்டப்பட்டு வருகின்றன. டெல்லியில் மட்டும் ஏறத்தாழ 30,000 டன் அளவுக்கும், நாடு முழுவதும் 13 லட்சம் டன் அளவுக்கும்  உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களால் உருவான மின்னணுக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.

காடுகளையும் ஆறுகளையும் மலைகளையும் அழித்தும், ஆற்றுநீரையும் நிலத்தடி நீரையும் வரைமுறையின்றி உறிஞ்சியும், நச்சுக் கழிவுகளைக் கொட்டி சுற்றுச்சூழலை நாசமாக்கியும் வரும் கார்ப்பரேட் நிறுவனங்களால் இந்தியாவின் 13 நகரங்கள் மிக மோசமாக மாசடைந்துள்ளன. 150 ஆறுகளில் 76 ஆறுகள் கழிவுநீர் கால்வாய்களாக மாறிவிட்டன. விஷவாயுக் கொலைகார யூனியன் கார்பைடு நிறுவனத்தின் கழிவுகளால் போபால் நகரமே வாழத் தகுதியற்றதாகி விட்டது. தொழிற்சாலைக் கழிவுகளால் நாசமாக்கப்பட்டுள்ள குஜராத்தின் வாபி நகரம் மட்டுமின்றி, கப்பல் உடைக்கும் தொழில் நடக்கும் குஜராத்தின் அலாங் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான டன்கள் அளவுக்கு நச்சுக் கழிவுகள் குவிந்து ஆண்டுக்குச் சராசரியாக 60 பேர் கொல்லப்பட்டு வருகின்றனர். அங்கெல்லாம் தூய்மைப்படுத்த முன்வராத கார்ப்பரேட் அடியாளான மோடி, தெருக் குப்பைகளை அகற்றுவதையே தூய்மை என்று பித்தலாட்டம் செய்கிறார்.

இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருப்பது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விதிகள்தான் என்று சாடிவரும் மோடி, கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டங்களுக்குப் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே காடுகளை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களை மாற்றியமைக்கவும், காடுகளைத் தமது வாழ்வாதரமாகக் கொண்டுள்ள பழங்குடி மக்களது கிராமச் சபைகளின் கருத்து கேட்டு ஆலைகள் தொடங்கப்பட வேண்டுமென்ற விதியை ரத்து செய்யவும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை முடமாக்கியும் பெயரளவில் நீடித்துவரும் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு சட்டங்களின் முதுகெலும்பை முறிக்கக் கிளம்பியிருக்கிறார். இந்த அயோக்கியத்தனங்களை மூடிமறைக்கவே தூய்மை இந்தியா போன்ற அற்பத்தனமான கூத்துக்கள் அரங்கேற்றப்படுகின்றன.

– பாலன்
_______________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2014
_______________________________

உங்க பத்திரிகை மேல கேசு போடுவேன் !

6

‘ஊத்திக் கொடுப்பதும் சீரழிப்பதுமா… அரசின் வேலை’ என்ற முழக்கத்தை முன்வைத்து பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் சென்னை அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த 16.11.14 அன்று பிரச்சாரம் செய்த போது அனுபவங்கள்.

சுமார் 2000 பேர் வசிக்கும்  இந்த பகுதியில் வசிக்கும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பெரும்பாலும் அன்றாடம் கூலி வேலைகளுக்கு செல்லுபவர்கள். ஆண்கள் அத்தனை பேரும் வேலைகளை காரணம் காட்டி குடிப்பவர்கள்தான். இதில் இளைஞர்களும் அடங்குவார்கள்.

tasmac-pevimu-campaign-12

பிரச்சாரத்தின் போது 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி “ஏம்மா இந்த சாராயக் கடைய அம்மா இல்ல, அப்பா – விஜயகாந்து – மோடி யாரு வந்தாலும் தடுக்க முடியாது, இது அம்மா கட்சிகாரங்க அதிகமா இருக்கிற ஏரியா, நீங்க எல்லாம் பொம்பளங்களா இருக்கிறீங்க… சீக்கிரம் கௌம்புங்க” என்று நம்மீது அக்கறையுள்ளதை போல் பேசினார்.

தோழர்கள் அவரிடம் “ஏம்மா நாங்களும் எல்லா கட்சிகாரவுங்களையும் பார்த்துட்டுதான் வந்திருக்கிறோம்” என்று கூறியவுடன்

“ஏம்மா நானும் அம்மா கட்சிதான். என்கிட்டேயே நீங்க அம்மாவை மோசமா படம் போட்ட பேப்பரை குடுங்கிறீங்க” என்று கோபப்பட்டார்.

தோழர்களும் தொடர்ந்து “அம்மா நீங்க கிராமத்திலிருந்து வந்தவங்க மாதிரி தெரியுது. உங்க வயசுக்கு உங்க தாத்தா, அப்பா எல்லாம் எப்படி பயந்து பயந்து குடிச்சாங்க. ஆனா இப்போ சாராயக்கடையை அரசாங்கமே நடத்துற தைரியத்துல உங்கமகன் எப்படி குடிக்கிறாரு, இத இப்படியே விட்டுட்டா உங்க பேரப்புள்ளைங்க குடிச்சிட்டு ரோட்டுல விழுந்து கிடக்கிறத உங்களால பார்க்க முடியுமா?

அதுமட்டுமில்லாம குடிவெறியோட கூடவே செக்ஸ்பட வீடியோவை பார்த்துட்டுவர பயலுங்க அக்கா, தங்கச்சி, குழந்தைன்னு பார்க்காம பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துறத நீங்க பார்த்துகிட்டுசந்தோசபடுவீங்களா? தடுக்கத்தானே பார்ப்பீங்க, ஆனா தமிழகத்திற்கே ‘அம்மா’வாக இருக்கும் அவங்க ஏன் நம்முடைய பிள்ளை அழிவதைப்பத்தி கவலைப்படாமல் குடிகாரனாகவும்-காமுகனாகவும் மாறுவதை தடுக்க முடிந்தாலும் முதலாளிகளின் லாபத்திற்காக நம்வீட்டு பிள்ளைகளை பலி கொடுக்கிறார்கள்?”என்று கேட்டவுடன்

“அதெல்லாம் சரிதாம்மா ஆனாலும்….” என்று பதில் கூற முடியாமல் தடுமாறியவரிடம் பிரசுரத்தை கொடுத்து, “இதில் இப்போது உள்ள நிலைமைக்கு மாறாக ஏதும் எழுதி இருந்தால் உங்களை மறுபடியும் சந்திக்க வரும்போது கூறுங்கள்” என்று என்றவுடன் பிரசுரத்தை வாங்கி கொண்டு சிரித்த முகத்துடன் விடை கொடுத்தார்.

அதன்பிறகு பிரச்சாரத்தை தொடர்ந்த சிறிது நேரத்தில் அதிமுக கட்சி வேட்டி கட்டிய ஒருவர் நம்மை நோக்கி வந்து “ஏம்மா நான் ஒன்னு கேட்ட கோவிச்சுக்காம பதில் சொல்வீங்களா?” என்ற பீடிகையோடு பேச தொடங்கினார்.

“ஏம்மா என் வீட்டுல நீங்க கொடுத்த ஒரு பத்திரிக்கையிலே ‘பாப்பாத்தி ஜெயா’ என்று போட்டு இருக்கிறீங்க. இது நீங்க போட்ட பத்திரிக்கைதானே, எப்படி நீங்க சாதி பெயரை போடலாம்” என்று கோபமாக பேசத் தொடங்கினார்.

“ஐயா பாப்பாத்தி என்று நாங்களா போடவில்லை அவங்க சட்டசபையிலே சொன்னதைதான் நாங்க பத்திரிக்கையிலே போட்டோம்” என்று கூறினோம்.

அதை காதில் வாங்கிக் கொள்ளாமலேயே “உங்க வீட்டுல எல்லாம் குடிக்க மாட்டாங்களா, பெரிசா பிரச்சாரம் செய்ய வந்துட்டீங்க. முதல்ல உங்க புருசன்கள, புள்ளைகள பாருங்க அப்புறமா இங்க வாங்க” என்று அடுத்த கேள்விக்கு தாவினார்.

தோழர்களும் “நாங்க மட்டும் இல்ல.எங்கபுருசங்க, புள்ளைக எல்லாம் இந்த குடிகெடுக்கிற அரசுக்கு எதிரா சென்னையில பல பகுதியில் பிரச்சாரத்தில இருக்காங்க, அவங்க யாரும் குடிக்க மாட்டாங்க” என்ற பதிலுக்கு பேச முடியாமல்

“எங்க அம்மாவை பாப்பாத்தின்னு போட்ட உங்க பத்திரிகை மேல கேசு போடப் போறேன்” என்று சாராய வாடை முகத்தில் தெறிக்க பெரும் கூச்சலிட்டவாறு சென்று விட்டார்.

பகுதி மக்கள் பிரச்சாரத்தின் போது நம்மிடையே அவர்களுடைய குடும்பத்தில் குடியால் ஏற்படும் பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டார்கள்.

பொதுவாக மாமியார் மருமகள் என்றால் பிரச்சனைதான் என்று கருத்து இருக்கும் நிலைமையில், தன்னுடைய பிள்ளை தினமும் வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்காக வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தையும் விற்றுவிட்டான் என்பதையும் காலையில் தண்ணீர் பிடித்து வைத்திருந்த பிளாஸ்டிக் குடங்களை உடைத்து கடையில் விற்றுவிட்டு குடிக்க சென்றுவிட்டான். மருமகளும் இரண்டு மாத கைக்குழந்தையும் பசியும் பட்டினியுமாக இருப்பதை பார்க்க முடியாமல் தன்னுடைய தள்ளாத வயதிலும் வேலைக்கு செல்வதையும், அதில் வரும் வருமானத்தையும் பிடுங்கிக் கொள்வதும் குழந்தை பாலுக்காக ஏங்கி அழுவதையும் சகித்துக் கொள்ள முடியாததையும் கூறி, “நீங்க இந்த சாராய கடையை ஒழிக்க எடுக்கும் போராட்டத்திற்கு எங்கு கூப்பிட்டாலும் வருவேன்” என்று கூறியது குடிகெடுக்கும் குடியை ஒழிக்க பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களுக்கு இன்னும் முனைப்போடு செயல்பட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியது.

அன்றாடம் குடியினால் ஏற்படும் பிரச்சினைகள்

  • குடித்துவிட்டு சின்ன வயதிலேயே இறந்து போகும் கணவன்கள், அனாதைகளாக கைவிடப்படும் மனைவிகள் – குழந்தைகளின் அவலம்
  • அரசு திட்டமிட்டே பரப்பும் சீரழிவு கலாச்சாரம், அரசு என்பது முதலாளிகளுக்கானது, மக்களுக்கானது அல்ல, அரசு ஒரு போதும் உழைக்கும் மக்களை பற்றி சிந்திக்காது என்பதை காட்டுகிறது.
  • சிந்திக்காத அரசை அடித்து நொறுக்க மக்களாகிய நாம்தான் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

ஆகியவற்றை பல்வேறு சம்பவங்களை எடுத்துக்காட்டி தோழர்கள் விளக்கி பேசியது பகுதி பெண்களின் மத்தியில் ஆதரவையும் வரவேற்பையும் பெற்றது. அமைப்பாக சேருவதற்கு பலர் ஆர்வம் காட்டினார்கள்.

நமது பிரசுரத்தில் உள்ள ஓவியத்தை வீடு வீடாக ஸ்டிக்கர் போட்டு ஒட்டி, “ஓட்டுக் கட்சிகள் ஓட்டு கேட்டு வரும்போது அதை காண்பித்து பேச வேண்டும்” என்றார்கள்.

போராட்டம் தொடரும்…

தகவல்
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை கிளை

தமிழினத்தின் புதிய விடிவெள்ளி சல்மான் கான்

13

ஹாய் வினவு,

முதல்லயே சொல்லிடறேன். உங்க மேல நான் செம்ம கடுப்புல இருக்கேன். எதனாலேன்னு அப்பால சொல்றேன்.

நான் வாசு. வாசுதேவன் மாரிமுத்து. திருவண்ணாமலை சொந்த ஊரு. அருணாச்சலேஸ்வரர் கோயில், ரமணாஸ்ரமம் எல்லாம் உங்களுக்கு தெரியும்ல? புண்ணிய பூமி சார்…நான் BE (E&C) முடிச்சிட்டு இப்ப அக்சென்சர்ல வொர்க் பன்றேன். கொஞ்ச நாள் முன்னே ஆபீஸ்ல ஒரு கொலீக் சொல்லித் தான் உங்க வெப்சைட் பத்தி தெரியும்.

arpita-salman
சென்ற வாரம் ஹைதராபாதில் நடந்த அர்பிதா கான் திருமணம்.

எனக்கு சல்மான் கான் பிடிக்கும்; தமிழ்லேன்னா எனக்கு எல்லாமே நம்ப தல தான். டபாங் பார்த்தீங்களா? செம்ம மாஸ்ல? உங்க ரசனைக்கு நீங்க எங்கே பார்த்திருக்கப் போறீங்க. என்னோட பிரச்சினை அதில்லே. நீங்க அடிக்கடி தேவையில்லாம சல்லு பாய் பத்தியும் தல பத்தியும் கலாய்ச்சி எழுதினு இருக்கீங்க. எங்காளோட பெருமையை நீங்க இன்னும் சரியா புரிஞ்சிக்கலை. இப்ப புரிஞ்சிப்பீங்க.

23ம் தேதி இங்கிலிஷ் ஹிந்து பத்திரிகைல ஐந்து மீனவர் விடுதலை பத்தி நம்ம சல்லு பாய் சர்கிள்ள ரொம்ப பேமஸ்! மேட்டர் இதான், சல்மான் கானும் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவும் நண்பர்கள். 22-ம் தேதி சல்லு பாயோட சிஸ்டர் அர்பிதாவுக்கு கல்யாணம். இந்தக் கல்யாணத்துக்கு அவரோட ஃபிரண்ட் நமல் ராஜபக்சேவுக்கும் அவோரோட அப்பா மகிந்த ராஜபக்சேவுக்கும் பத்திரிகை வச்சாரு சல்லு பாய்.

சல்லு பாய் இப்ப ரொம்ப பிசியா இருந்ததாலே கல்யாணப் பத்திரிகையை மீடியா ஃபிரண்ட் ரஜத் சர்மா கிட்டே கொடுத்து விட்டார். மகிந்த ராஜபக்சேவை சந்திச்ச ரஜத் சர்மா, சல்லுபாய் கேட்டுகிட்டதால தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்கள் விடுதலை பற்றி கேட்டிருக்கார். மகனோட பிரெண்டே ஆசைப் பட்டு கேட்டதும் மகிந்தா மீனவர்களை விடுதலை செய்ய ஒரு காரணமா இருக்கலாம்னு சொல்லாம சொல்லுது ஹிந்து பத்திரிகைல வந்த செய்தி.

மீனவர்கள் விடுதலைக்காக இந்திய அரசு எல்லா சாத்தியமான வழிமுறைகளையும் முயற்சி செய்து பார்த்தாங்களாம். அதில் சல்மானுக்கும் நமலுக்கும் இருந்த நட்பை பயன்படுத்தியதும் ஒன்னுண்ணு ஹிந்துகாரனே சொல்லிட்டான்.

மீனவர்களை விடுவித்த சல்மான் கானின் நமல் ராஜபக்சேவுடனான நட்பு
மீனவர்களை விடுவித்த சல்மான் கானின் நமல் ராஜபக்சேவுடனான நட்பு

தமிழ்நாட்டுல தமிழர்களுக்கு தமிழின தலைவர் கருணாநிதிலேர்ந்து ரகவாரியா போராளிகள் இருக்காங்க. இங்க இருக்கிற எல்லா குட்டிச் சுவர்லேயும் மீசை முறுக்கிட்டு திரியற திருமாவளவன் இருக்காரு; விரைவீக்க டாக்டரே பொறாமை படும் அளவுக்கு எல்லா இருட்டுச் சந்து போஸ்டர்லயும் பல்லைக் காட்டுற மருத்துவர் மற்றும் சின்ன மருத்துவர் இருக்காரு; இது தவிற 16” பைசெப்ட் பாய் சீமான், பழ நெடுமாறன், வைகோ, டிராபிக் ராமசாமி, பி.குமார் (அகில இந்திய காதலர் கட்சி), அர்ஜுன் சம்பத், ஜி.கே வாசன் (லேட்டரல் எண்ட்ரி) இப்படி பலர் இருக்காங்க. இவங்க எல்லாருக்கும் மேல அகிலம் போற்றும் மக்கள் முதல்வர் அம்மா இருக்காங்க.

ஆனா இத்தனை பேரும் என்ன செய்யறாங்க?

தாத்தா சி.எம்மா இருந்தப்ப டெல்லிக்கு லெட்டர் எழுதினாரு.. தாத்தா ரெஸ்ட்டுக்கு போயி மம்மி வந்த பின்னும் தாத்தா காட்டிய அதே லட்சிய வழியில் அதே லெட்டரு தான். இப்ப மம்மிய பெங்களூர் கோர்ட்டு மக்கள் முதல்வர் ஆக்கினப்புறம் ஒருத்தர் சி.எம்மா வந்திருக்காரு. பாஷா படத்துல ஆட்டோ மாணிக்கத்த ஆனந்தராஜ் உருட்டு கட்டைல போட்டு சாத்து சாத்துன்னு சாத்தும் போது ரஜினி லூசு மாதிரி சிரிப்பார்ல, அந்த ரியாக்சனயும் குணா கமல் ரியாக்சனையும் மிக்ஸ் பண்ணா மாதிரி இருக்கிற குங்குமப் பொட்டு மிச்சர் மாமா ஓ.பி.எஸ் கூட கலைஞர் காட்டிய அதே கொள்கையின் படி டெல்லிக்கு லெட்டர் தான் போடறாரு.

இவங்க எழுதற லெட்டரை சென்னை செக்கரட்ரியேட் போஸ்ட் பாக்ஸ்லேர்ந்து எடுக்கற கேப்ல பத்து மீனவர்களையும், சென்னைலேர்ந்து டெல்லிக்கு அந்த லெட்டர் போற கேப்ல பதினைஞ்சி மீன்வர்களையும், மோடி அந்த லெட்டர்ல பஜ்ஜிய அழுத்தி எண்ணைய வடிச்சிட்டு கசக்கி குப்பைத் தொட்டிக்குள்ளே வீசற கேப்ல மேலும் இருபது மீனவர்களையும் கைது செய்யறான் ராஜபக்சே.

இந்தியா தான் இந்த உலகத்திலேயே நாலாவது பலமான நாடுன்னு சொல்றானுக.. ஆனா, சுள்ளான் சிலோன்காரன் போட்டு கொமட்டுலயே குத்தறான். ஏண்டா போலீசு மிலிட்டரின்னு ஒவ்வொத்தனையும் கறி சோறு போட்டு செனப் பன்னி மாதிரி வளத்து வச்சிருக்கீங்களேடா, இதெல்லாம் அடி வாங்கற பாடியாடான்னு கேட்கலாம்னு தான் பார்த்தேன். BUT, அதெல்லாம் பாலிடிக்ஸ் பாஸ். நமக்கு பாலிடிக்ஸ்னாலே அவ்வளவா ஆகாது.

ரஜத் சர்மா
ரஜத் சர்மா

ஆனா இன்னைக்கு என் தலைவன் சல்மான் கானுக்காக நான் பேசியே ஆகனும் பாஸ். நீங்க பாருங்க இந்தியாவோட ஆர்மி, நேவி, விமானப்படை, உளவுப் படை, போலீஸ் படை அப்புறம் அவன் வச்சிருக்கிற தொந்திப் படைன்னு எவன்னாலயும் சிலோன்காரனை இத்தனை வருசமா டச் பண்ண முடியலை. மோடி இன்னாமோ பெரிய WWF Undertaker மாதிரி வஸ்தாதுன்னு சொன்னானுங்க.. அவரு வந்த பின்னேயும் மீனவர்கள் நிலைமை மாறவே இல்லை.

ஆனா இந்த அஞ்சி பேர் விசயத்துல பாருங்க இவரு போன் போட்ட உடனே அவரு வீட்டுக்கு அனுப்பி வச்சாராம். தமிழ்நாட்டுல பி.ஜே.பிக்கு பூத் கமிட்டி ஏஜெண்ட் போடக் கூட ஆளில்லாம காத்தாடிட்டு இருக்கு. இந்த மாதிரி எதுனா சீன் போட்டா தானே அடுத்த எலக்சென்ல வார்டு கவுன்சிலராவது ஜெயிக்க முடியும். ஏன்னா உத்திரபிரதேச இடைத்தேர்தலுக்காக ஊரையே கொளுத்தி விட்டவனுங்க தானே.

அதுக்கு தகுந்தா மாதிரி பி.ஜே.பியோட தமிழ்நாட்டு தலைவி தூள் சொர்ணாக்கா வேற எல்லா டி.விலயும் போயி “மீனவர்கள் விடுதலையை தயவு செய்து யாரும் அரசியல் ஆக்க வேணாம்.. ஆனா விடுதலைக்கு நாங்க தான் காரணம்”னு பீத்திகிட்டே இருக்காங்க. சரிங்கக்கா ரெண்டு நாள் முன்னாடி மோடியை பார்த்து பயந்து தூக்குலேர்ந்து அஞ்சி மீனவர்களை விடுவித்த ராஜபக்சே நேத்து பதினாலு மீனவர்களை கைது பண்ணிருக்காப்லயே? உங்காளுக்கு நெஜமாலுமே நெஞ்சில மஞ்சா சோறு இருந்தா “இனிமே தமிழ்நாட்டு மீனவர்கள் ஒருத்தரைக் கூட நாங்க கைது செய்ய மாட்டோம்னு” ராஜபக்சேவை சொல்ல வைங்க பார்க்கலாம்.

வினவு சார்.. பி.ஜே.பி பயங்கரமா காமெடி பன்றாங்கன்னா நம்ம அ.தி.மு.க காமெடியா பயங்கரமா நடந்துக்கறாங்க. பி.ஜே.பி காரன் என்னடான்னா சிலோன்ல இருந்து ரிலீஸ் ஆன மீனவர்களை வீட்டுக்கு அனுப்பாம, அவங்க வீட்டுக்காரங்க கிட்ட கூட சொல்லாம, அவங்கெல்லாம் திருச்சி விமான நிலையத்துல எப்படா பார்ப்போம்னு தவிச்சிகிட்டு இருந்த நேரத்துல டெல்லிக்கு கூப்டு மோடியோட நிப்பாட்டி போட்டோ சூட் வைக்கிறான்.

டெல்லிலேர்ந்து நேரா வீட்டுக்கு அனுப்பிடுவாங்கன்னு பாத்தா கூடவே செக்கூரிட்டியா ஒரு ஆபீசரையும் அனுப்பி வைக்கிறான். ஏன்னா, தமிழ்நாட்டுக்கு வரும் மீனவர்கள் அம்மாவோட நின்னு ஒரு போட்டோ எடுத்து அதை மோடி போட்டோ வர்றதுக்கு முன்னே ரிலீஸ் பண்ணிடப் போறாங்களோன்னு ஒரு முன்னெச்சரிக்கை. ம்ம்ம்ம் பாம்பின் கால் பாம்பறியும்; ஒரு விளம்பரப்பிரியனுக்குத் தானே இன்னொரு விளம்பரப்பிரியையின் மனம் புரியும்.

தமிழினத்தின் விடிவெள்ளி சல்மான் கான்
தமிழினத்தின் விடிவெள்ளி சல்மான் கான்

இந்த நிலைமைல நம்ம தினத்தந்தி ரங்கராஜ் பாண்டேவோட நிலைமைய யோசிச்சா தான் மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு பாஸ். அவரோட ரெண்டு கண்ணும் ஒன்னை ஒன்னு எதிர்க்கும் தர்மசங்கடமான நிலைமை. மோடியை ஆழ்மனசிலேர்ந்து திருப்தியா ஆதரிச்சு பேசலாம்னு பாத்தா மக்கள் முதல்வர் காண்டாகி பெரிய அண்ணாச்சி மேல கஞ்சா கேசு விழுந்தாலும் விழும் – தொழில் நடக்கனுமா இல்லையா. வழக்கம் போல வாலைச் சுருட்டிகிட்டு மக்கள் முதல்வரை வெளிப்படையா ஆதரிக்கலாம்னாலும் பிரச்சினை.

இப்படி இவங்க எல்லாரும் மீனவர்களை மறந்துட்டு விளம்பரத்துக்காக அடிச்சிட்டு சாவும் போது எல்லாத்தையும் சுபமா நடத்தி வைச்சிட்டு எங்க சல்லு பாய் ஜென் துறவி மாதிரி சைலண்டா இருக்காரு.

ஈழப் போர் நடந்தப்ப சீமானும் வைகோவும் (பாஸ் விரல் வலிக்குது, இந்த லிஸ்ட்ல ஏற்கனவே நான் சொன்ன உதிரிப் போராளிகளையும் சேர்த்து புரிஞ்சிக்கங்க) அம்மா கால்லே விழுந்தாங்க, பி.ஜே.பி கால்லயும் விழுந்தாங்க. அட அவ்வளவு ஏங்க பாரபட்சம் பார்க்காம ஒபாமா கால்லயும் ஹிலாரி கால்லயும் கூட விழுந்தாங்க. ங்கொய்யால யாரு கிட்டே…..? ராஜராஜ சோழன் பரம்பரை பாஸ்; கால்ல விழுறதுன்னு முடிவு பண்ணிட்டா எவன் கால்னு பார்க்க மாட்டாய்ங்கே. மீசைய முறுக்கி விட்டுகினு குப்புன்னு விழுந்துடுவாய்ங்கே. வீரம் முக்கியமில்லையா பாஸ்.

அந்த தமிழ் வீரத்தை சல்லு பாய் கிட்டே காட்டி அவர் கால்ல விழுந்திருக்கலாம். ஈசியா மேட்டரை முடிச்சிக் குடுத்திருப்பார். சோட்டா பீம் மோடியாலயே முடியாததை அசால்டா முடிக்கிறவர் தான் சல்லு பாய். அவரு தமிழர் இல்லைன்னு இவங்க யாரும் யோசிக்கத் தேவையில்லை. தமிழ் போராளிகளின் ஒரே பிரச்சினை வடுக வந்தேறிகள் தானே? வேணும்னா இவங்க வழக்கமா வடுக வந்தேறிகளைக் கண்டு பிடிப்பதற்காக செய்யும் யூரின் டெஸ்ட் செய்து பார்க்கட்டுமே. அவர் வடுக வந்தேறி இல்லைன்னு டீடெய்லா ரிசல்ட் வரும். அதுக்கு நான் கேரண்டி.

தமிழ் போராளிகள் மேல கூட எனக்கு கோபம் இல்லை பாஸ் – நாளைக்கே சல்லு பாய் சீமானுக்கு கால்ஷீட் கொடுத்தா ”அந்த ராஜராஜ சோழனோட மறுஜென்மமே சல்மான் கான்” தான் அப்படின்னு நேக்கா பேலன்ஸ் பண்ணிடுவார். சீமான் இந்த மாதிரி எழுதற திருக்குறளுக்கெல்லாம் உரை எழுதறக்காகவே நிறைய அப்ரசண்டி பாய்ஸ் இருக்காங்க. சோ நோ பிராப்ளம்.

எனக்கு உங்க மேல தான் பயங்கர காண்டா இருக்கு. தமிழர்களுக்கு இருக்கும் ஒரே எதிர்கால நம்பிக்கை சல்லு பாயை நீங்க எத்தனை கேவலமா எழுதியிருக்கீங்க? சுவச் பாரத் பதிவுல கூட ’பொறுக்கி சல்மான் கான்’ அப்படின்னு எழுதியிருக்கீங்க. சல்லு பாய் லைட்டா மப்புல வண்டி ஓட்டும் போது குறுக்கே வந்து விழுந்து செத்தவங்களுக்காக எங்க தலைவனை எத்தனை கேவலமா திட்டிப் பேசினீங்க. போதைல இருக்கிறவன் குழந்தை மாதிரி பாஸ்.

அன்னைக்கெல்லாம் மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருந்துச்சி பாஸ். நீங்க செய்த தவறுக்கு பரிகாரமா இந்த பதிவை வெளியிடனும். செய்வீங்களா பாஸ்?

இப்படிக்கு,

வாசு

குறிப்பு : ஒருவேளை என்னோட லெட்டரை வெளியிட்டா தயவு செஞ்சு “தமிழினத்தின் புதிய விடிவெள்ளி சல்மான் கான்” அப்படின்னு பேர் வைங்க தலைவா.

  • தமிழரசன்

பில்கேட்ஸ் பவுண்டேஷன் : அதிர்ச்சியூட்டும் உண்மைகள் !

3

கேட்ஸ் பவுண்டேஷன்: மனிதநேய வடிவில் வரும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு!

(சென்ற இதழின் தொடர்ச்சி)

ழை நாட்டு மக்களைச் சோதனைச்சாலை எலிகளாகப் பயன்படுத்திப் புதிய மருந்துகளை அவர்கள் மீது சோதிப்பதையும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தடைசெயப்பட்ட மருந்துகளை, மந்திர சக்திகள் கொண்ட அருமருந்தாகக் காட்டி அவற்றை ஏழை நாடுகளின் தலையில் கட்டுவதையும் நோக்கமாகக் கொண்ட பில் கேட்ஸ் அறக்கட்டளை, இந்தியாவில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. இந்தியாவில் தமது அறக்கட்டளையின் செயல்பாடுகளைப் பற்றிக் கூறும் போது, “தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு இந்தியாவைப் போன்று சிறந்த இடம் வேறில்லை” எனக் குறிப்பிடுகிறார், பில் கேட்ஸ். இதன் பொருள், பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் புதிய தயாரிப்புகளை எவ்விதமான மருத்துவ அறம் மற்றும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படாமலும் மிகவும் மலிவான செலவிலும் மக்கள் மீது சோதித்துப் பார்ப்பதற்கு எளிமையானதொரு சோதனைக்கூடமாக இந்தியா விளங்குகிறது என்பதுதான்.

போலியோ ஒழிப்புத் திட்டம்
இந்திய அரசால் மிகப்பெரும் அளவில் செயல்படுத்தப்படும் போலியோ ஒழிப்புத் திட்டத்திற்கு கேட்ஸ் பவுண்டேஷனும் ரோட்டரி இண்டர்நேஷனலும்தான் “ஸ்பான்சர்கள்”

இந்தியாவில் பில் கேட்ஸ் அறக்கட்டளையின் செயல்பாடு எய்ட்ஸ் நோய் தடுப்பு, தொற்று நோய்களுக்கான தடுப்பூசிகள், தாய்-சேய் நலத் திட்டங்கள், குடும்பக் கட்டுப்பாடு, புதிய தடுப்பூசிகளுக்கான ஆராய்ச்சிகள் – எனப் பல தளங்களில் விரிந்து செல்கிறது. உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஏறத்தாழ அம்மாநில அரசுகளின் அனைத்து சுகாதாரத் திட்டங்களிலும் பில் கேட்ஸ் அறக்கட்டளை மூக்கை நுழைத்துச் செயல்பட்டு வருகிறது.

அருணாச்சலப்பிரதேசம், ஜார்கண்ட், இராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் கேட்ஸ் அறக்கட்டளை முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும் போலியோ, காசநோய், காலரா, ரொட்டாவைரஸ், நிமோனியா ஆகிய நோய்களுக்கான தடுப்பூசித் திட்டங்களை இந்திய அரசு கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்துதான் நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது.

ரொட்டாவைரஸ் தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான சோதனைக் கூடத்தை வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (சி.எம்.சி) ஏற்படுத்தியுள்ள கேட்ஸ் அறக்கட்டளை, ரொட்டாவைரஸ் தடுப்பூசி தொடர்பான மருந்துகளை மேலும் வளர்த்தெடுக்கவும், அம்மருந்துகளை 10,000 பச்சிளங் குழந்தைகளுக்குக் கொடுத்து பரிசோதிக்கும் மூன்றாம் கட்ட சோதனைகளை நடத்தவும் பாரத் பயோடெக் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறது. பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் தடுப்பூசிகளை இந்திய அரசின் குழந்தைகள் நலத்திட்டத்துடன் இணைப்பதன் மூலம் அம்மருந்துகளுக்கான சந்தையை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது, கேட்ஸ் அறக்கட்டளை.

இப்படிப்பட்ட வணிக நோக்கங்களைத் தாண்டி கேட்ஸ் அறக்கட்டளைக்கு வேறெந்த ‘நல்ல’ நோக்கமும் கிடையாது என்பதற்கு இன்னொரு உதாரணமாக உத்திரப் பிரதேச மாநிலத்தில் அதனின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் தாய்-சேய் நலத் திட்டத்தைக் குறிப்பிடலாம். கேட்ஸ் அறக்கட்டளை இந்தத் திட்டத்திற்கு 7.5 கோடி அமெரிக்க டாலர்களை நிதியாக அளித்து, “கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஏழைத் தாய்மார்களுக்கும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இத்திட்டத்தின் நோக்கம்” எனக் கூறியது.  ஆனால், நடந்ததோ வேறு. சுகாதார விழிப்புணர்வு என்ற பெயரில் கிராமப்புற ஏழைகளை மருத்துவ காப்பீடு சந்தாதாரர்களாக மாற்றும் வேலைதான் தீவிரப்படுத்தப்பட்டது.

கடந்த 2010-11-ம் ஆண்டில் மட்டும் மருத்துவ மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்கு இந்திய அரசு ஒதுக்கிய நிதி 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம். இந்த நிதியோடு ஒப்பிட்டால் பில் கேட்ஸ் அறக்கட்டளை கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் சுகாதராத் திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியின் அளவு – 6,000 கோடி ரூபாய் என்ற சுண்டைக்காய்தான். ஆனாலும், கேட்ஸ் அறக்கட்டளை இந்திய அரசின் சுகாதாரத் திட்டங்களை, அவை செயல்படுத்தப்படும் விதத்தைத் தீர்மானிக்கும் செல்வாக்கைப் பெற்றிருக்கிறது. அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட்டு அவற்றை தங்களது நலனுக்கு ஏற்றாற்போல மாற்றுவது என்ற தனது ஆதிக்க நோக்கத்தை இந்தியாவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.

பீகார் மஹிலா ஸமக்யா
பீகார் மாநில அரசின் பீகார் மஹிலா ஸமக்யா என்ற அமைப்பின் கீழ் செயல்படும் பல்வேறு மகளிர் அமைப்புகள் இணைந்து பீகாரின் முசாஃபர்புர் மாவட்டத்தில் பெண்கள் சமத்துவம் குறித்து நடத்திய மாநாடு. “பெண்கள் சமத்துவம்” என்ற இந்திய அரசின் திட்டத்திற்கு யு.எஸ்.எய்ட்-ம் கேட்ஸ் அறக்கட்டளையும் புரவலர்களாக உள்ளன. (கோப்புப் படம்)

உமி கொண்டுவந்தவன் அவல் தின்பது எப்படி சாத்தியமானதென்றால், இது கேட்ஸ் அறக்கட்டளை இந்தியாவிற்கு எவ்வளவு நிதி தருகிறது என்பதோடு சம்பந்தப்பட்டதாக இல்லை.  மாறாக, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, அரசின் மருத்துவ-சுகாதாரத் திட்டங்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்திற்கு ஏற்ப நைச்சியமான முறைகளில் மாற்றியமைக்க வேண்டும்.  அத்திட்டங்களை உருவாக்குவதையும், செயல்படுத்துவதையும் மட்டுமல்ல, அதற்கான நிதியைச் செலவழிக்கும் உரிமையையும் கேட்ஸ் அறக்கட்டளை போன்ற கார்ப்பரேட் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்ற ஏகாதிபத்திய ஆதிக்கம்தான் இதன் பின்னுள்ள காரணம்.  அதனைச் செயல்படுத்தும் கைக்கூலிகளாக இந்திய ஆளும் வர்க்கமும் ஆட்சியாளர்களும் இருந்து வருகின்றனர்.  அரசு நிறுவனங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் கேட்ஸ் அறக்கட்டளையின் வேலைக்காரனாக மாற்றும் வேலையைச் செய்து வருகின்றனர்.

புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்காக பி.டி.பி. என்றழைக்கப்படும் “பொதுத் துறை-தனியார் கூட்டு” திட்டத்தை கேட்ஸ் அறக்கட்டளை முன்னிறுத்துகிறது. இதன் மூலம் ஏழை நாடுகளின் அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மாணவர்களைப் பன்னாட்டு ஏகபோக மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைத்து புதிய மருந்துகள், தடுப்பூசிகள், பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தயாரிக்கும் தமது நோக்கத்தை மிகவும் மலிவான செலவில் நிறைவேற்றி வருகிறது.

இந்த பி.டி.பி. திட்டத்தின்படி புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதுடன் கேட்ஸ் அறக்கட்டளை நின்றுவிடுவதில்லை, அவற்றை மக்கள் மீது சோதனை செய்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் வாங்குவதுடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மருந்துகளுக்கான சந்தையை உருவாக்கிக் கொடுக்கும் தரகனாகவும் கேட்ஸ் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.

gates-1இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை மற்றும் அதன் கீழ் இயங்கும் உயிரி தொழில்நுட்பத் தொழிற்துறை ஆராய்ச்சி மற்றும் உதவி மையம் ஆகியவற்றுடன் இணைந்து பில் கேட்ஸ் அறக்கட்டளை உருவாக்கியுள்ள ‘கிராண்ட் சேலஞ்சஸ் இந்தியா‘ என்கிற அமைப்பு பி.டி.பி. திட்டத்திற்கு எடுப்பான உதாரணம். 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம், பில் கேட்ஸ் அறக்கட்டளையும், மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறையும், தலா 150 கோடி முதலீடு செய்து தொற்றுநோய்களுக்கான புதிய தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பதுடன் பழையவற்றை மேம்படுத்தும் பணியிலும் ஈடுபடும் நிறுவனம் ஒன்றை உருவாக்கவிருப்பதாக அறிவிக்கிறது.

இவை போன்ற திட்டங்களுக்காக  கேட்ஸ் அறக்கட்டளையுடன் இந்திய அரசு கைகோர்த்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.  ஆனாலும், நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஏகாதிபத்திய ஆதிக்கம் காரணமாகவே இந்தக் கூட்டுறவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிராண்ட் சேலஞ்சஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் பில் கேட்ஸ் அறக்கட்டளையைச் சேர்த்துக் கொண்டதன் மூலம், இனிவரும் காலங்களில் எந்தெந்த தடுப்பூசி மருந்துகள் தொடர்பாக ஆராய்சசி செய்ய வேண்டும், உற்பத்தி செய்ய வேண்டும், மக்களிடம் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கும் உரிமையும் அதனிடம் தாரைவார்க்கப்பட்டிருக்கிறது.

இதேபோன்று பில் கேட்ஸ் அறக்கட்டளையும், இந்திய அரசும் இணைந்து உருவாக்கியுள்ள “இந்திய பொது சுகாதார அறக்கட்டளை”, பொது சுகாதாரம் குறித்து ஆய்வு செய்வதற்கான கல்வி நிறுவனங்களை நாடு முழுவதும் தொடங்கவிருக்கிறது. இந்த அறக்கட்டளைக்கு 90 கோடி ரூபாய் நிதியளித்துவிட்டு இந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் அனைத்தையும் தனது நோக்கத்திற்குப் பயன்படுத்தும் வாய்ப்பை இதன் மூலம் பில் கேட்ஸ் அறக்கட்டளை பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புக்களை சந்தித்தப் பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் தடுப்பூசிகளை வேறு பெயர்களில் இந்தியா போன்ற ஏழை நாடுகளின் தலையில் கட்டும் கேட்ஸ் அறக்கட்டளையின் சதிச்செயல் ஏற்கெனவே அம்பலமான பிறகும் கூட இந்திய அரசு அதனுடனான தொடர்பைப் பேணுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு கேட்ஸ் அறக்கட்டளையும், “பாத்” என்ற அரசுசாரா நிறுவனமும் இணைந்து, குஜராத்திலும், ஆந்திராவிலும் நடத்திய தடுப்பூசி முகாம்களில், ஹெச்.பி.வீ. என்ற  கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசியை 23,000 பழங்குடியினச் சிறுமிகளுக்குச் செலுத்தின. இந்த தடுப்பூசி நோயைத் தடுப்பதற்குப் பதிலாக பாரதூரமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியது. அத்தடுப்பூசியின் காரணமாக ஏழு பழங்குடியினச் சிறுமிகள் அநியாயமாக உயிரிழந்ததோடு, 1,200-க்கும் அதிகமான சிறுமிகள் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டனர். அமெரிக்க மக்களால் புறக்கணிக்கப்பட்ட கர்டாசில் என்ற மருந்தைத்தான், அதில் சில மாற்றங்களைச் செய்து, புதுப் பெயரையும் சூட்டி இந்தியச் சிறுமிகளுக்குச் செலுத்திய அயோக்கியத்தனம் பின்னர் விசாரணையில் அம்பலமானது.

தடுப்பு மருந்து அறிமுகம் - பாரத் பயோடெக்
கேட்ஸ் அறக்கட்டளையைத் தனது கூட்டாளியாகக் கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு நோய்க்கான புதிய, மலிவான தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி (கோப்புப் படம்)

இம்மரணங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கேட்ஸ் அறக்கட்டளையின் தொங்குதசையான பாத் நிறுவனம், பழங்குடியினச் சிறுமிகளை வலுக்கட்டாயமாக இம்முகாம்களுக்கு இழுத்து வந்ததும், இம்மருந்தின் விளைவுகள் குறித்துப் பல பொய்களைப் பிரச்சாரம் செய்ததும் மட்டுமின்றி, தடுப்பூசி போட்டுக் கொண்ட பல சிறுமிகளின் பெற்றோர்களின் கையெழுத்தை பாத் நிறுவன அதிகாரிகளே மோசடியாக போட்டிருப்பதும் நிரூபணமானது.

இம்மரணங்கள் குறித்து விசாரித்த நாடாளுமன்ற  நிலைக்குழு, தனது அறிக்கையில், “மருத்துவ முகாம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இவை, அங்கீகாரமற்ற தடுப்பூசிகளை மனிதர்கள் மேல் சோதித்துப் பார்ப்பதற்காக நடத்தப்பட்ட மருந்துப் பரிசோதனை நடவடிக்கைகளாகும்” என்பதை உறுதி செய்து, “இது சட்டவிரோதமான முறையில் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறலாகும்” எனச் சுட்டிக் காட்டியது. “ஒருவேளை இந்த அறக்கட்டளையின் பரிந்துரையின் பேரில் இந்திய அரசின் தடுப்பூசித் திட்டத்தில் கர்டாசில் தடுப்பூசியைச் சேர்த்திருந்தால், அது அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனத்திற்கு மிகப் பெரும் இலாபத்தை, ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே செல்லும் அதிரடி இலாபத்தை, அள்ளித் தந்திருக்கும்” என்பதை அம்பலப்படுத்திய நாடாளுமன்ற நிலைக்குழு, “பொதுச் சேவை என்கிற பெயரில் தனியார் நிறுவனங்களின் வணிக நோக்கங்களுக்குச் சாதகமாக இயங்கிவரும் இந்த அறக்கட்டளை மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் பரிந்துரைத்தது.

ஆனால், இதுவரை கேட்ஸ் அறக்கட்டளை மீதோ, பாத் நிறுவனம் மீதோ எந்த கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கேட்ஸ் அறக்கட்டளையும் புதிய மருந்துகளைப் பரிசோதிக்கும் தனது கிரிமினல் நடவடிக்கைகளைக் கைவிட்டுவிடவில்லை. கேட்ஸ் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் இயங்கும் “குடும்ப சுகாதார அகிலம்” என்ற நிறுவனம், 2011-13-ம் ஆண்டுகளில் இந்தியாவில் 12,818 மருந்துப் பரிசோதனைகளைப் பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் சார்பாக நடத்தியிருக்கிறது. இது  போல கேட்ஸ் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் இயங்கும் ஏர்ராஸ் என்ற நிறுவனம் 2011-ம் ஆண்டில் பெங்களூரு நகரில் காச நோய்த் தடுப்பூசிக்கான மருந்துப் பரிசோதனைகளை நடத்தியது.

சமூகம் சார்ந்த ஆரம்ப சுகாதாரத் திட்டங்கள் மட்டுமே ஏழை நாட்டு மக்களுக்கு பலன் தரும் என்று 1978-ல் நடைபெற்ற ஆரம்ப சுகாதாரத்துக்கான அல்மா அட்டா மாநாட்டுத் தீர்மானம் கூறுகிறது. “தங்களது உடல் நலத்திற்கான சுகாதாரத் திட்டங்களை வகுக்கவும், அவற்றை நடைமுறைப்படுத்தவும், மக்கள் அனைவருக்கும் உரிமையும், கடமையும் உண்டு” என்ற கொள்கையின் அடிப்படையில் மாவோவின் மக்கள் சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘வெறுங்கால் மருத்துவர்கள்’ (Barefoot Doctors) என்ற திட்டம், பொது சுகாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை நாடுகள் அதிலிருந்து விடுபட மேற்குலக ஏகாதிபத்தியத்தின் தயவை நம்பியிருக்க வேண்டியதில்லை என்பதைத் தெளிவாகக் காட்டியது. அல்மா அட்டா மாநாடு சீன அனுபவத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து ஏழை நாடுகளும் சமூகம் சார்ந்த சுகாதார நலத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் எனக் கோரியது.

கேட்ஸ் அறக்கட்டளையோ அல்மா அட்டா தீர்மானத்திற்கு நேர்எதிராக, புதிய புதிய தடுப்பூசிகளை உருவாக்கி, அவற்றைச் சந்தையில் கொட்டுவதன் மூலம் மட்டுமே நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என வாதிடுவதோடு, அதனை முனைப்பாகச் செயல்படுத்தியும் வருகிறது. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், எபோலா – என உலகமயம் உருவாக்கித் தள்ளும் ஒவ்வொரு புதுப்புது தொற்று நோய்களையும் தனது திட்டங்களைச் செயல்படுத்துவதற்குக் கிடைத்த நல்வாயப்பாகவே ஏகாதிபத்தியங்கள் கருதுகின்றன. மேற்குலகின் அமைதியைச் சீர்குலைப்பதில் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு அடுத்தபடியாக இத்தொற்று நோய்கள் இருப்பதாக நியாயம் கற்பித்து, அதனை ஒழிப்பது என்ற பெயரில் ஏழை நாடுகள் மீது தமது ஆதிக்கத்தை மேலும்மேலும் தீவிரப்படுத்த முனைகின்றன. இந்த ஆதிக்கத்தைத் தொடுக்கும் கருவிகளாக கேட்ஸ் அறக்கட்டளை போன்ற தர்மகர்த்தாக்களும் அரசுசாரா நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

gates-maramma
கேட்ஸ் அறக்கட்டளை நடத்திய கருப்பை புற்றுநோய் தடுப்பு முகாமில் ஊசி போட்டுக் கொண்ட ஏழாவது வாரத்திலேயே இறந்து போன சாயம்மாவின் புகைப்படத்தோடு, அவரது தாயார் மாரம்மா. (கோப்புப் படம்)

உலகிலேயே பொது மருத்துவமும், ஆரம்ப சுகாதாரமும் மிகத் தீவிரமாக தனியார்மயப்படுத்தப்பட்டுள்ள நாடு அமெரிக்காதான். அந்நாட்டில் ஆயிரம் டாலர் இல்லாமல் ஒரு பல்லைக்கூடப் பிடுங்கிவிட முடியாது. அந்தளவிற்கு அந்நாட்டில் மருத்துவச் செலவு உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அமெரிக்காவில் மருத்துவக் காப்பீடு இல்லாதவர்கள் சிகிச்சை பெறுவது குதிரைக் கொம்புக்கு ஒப்பானது. செப்டம்பர் 2001-ல் நடந்த இரட்டை கோபுரத் தாக்குதலையடுத்து, அந்த இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொற்று நோய்க்கு ஆளாக நேர்ந்தது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அமெரிக்க அரசு மறுத்துவிட்ட நிலையில், 9/11 என்ற ஆவணப்படத்தை இயக்கிய மைக்கெல் மூர் என்ற இயக்குநர், அத்தொழிலாளர்களை கியூபாவிற்கு அழைத்துச் சென்று சிகிச்சைப் பெற வைத்தார். காத்ரினா புயல் தாக்கி தெருவிற்கு வந்த அமெரிக்காவைச் சேர்ந்த கருப்பின ஏழை மக்களுக்கு கியூபாவிலிருந்து சென்ற மருத்துவர் குழுக்கள்தான் முதலுதவி உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்தன.

இப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட நாட்டைச் சேர்ந்த பில் கேட்ஸ் கணினித் துறையைச் சேர்ந்த ஏகபோக முதலாளி மட்டுமல்ல; பிக் பார்மா என்று அழைக்கப்படும் ஏகபோக மருந்து கம்பெனிகளிலும் பங்குதாரராக இருந்து வருகிறார். அவரது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அமெரிக்க உளவுத் துறைக்காகச் செயல்பட்டு வருவதும் அம்பலமான உண்மை. தனியார்மயத்தை ஆராதிக்கும் நாட்டைச் சேர்ந்த ஏகபோக முதலாளி, அமெரிக்க அரசின் உளவாளி ஏழை நாட்டு மக்களுக்கு உதவ வந்திருக்கும் தர்மகர்த்தாவாக முன்னிறுத்தப்படுவது அயோக்கியத்தனமானது. ஒவ்வொரு வார்த்தையின் பின்னும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்திருக்கிறது எனும்பொழுது, ஒரு தேசங்கடந்த தொழிற்கழகத்தின் முதலாளி நடத்தும் கேட்ஸ் அறக்கட்டளையின் செயல்பாடுகளின் பின்னே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனும் ஆதிக்கமும் மறைந்திருக்காதா?

(முற்றும்)
– கதிர்
இக்கட்டுரை, மும்பையிலிருந்து வெளிவரும் “இந்தியப் பொருளாதாரத்தின் கூறுகள்” என்ற ஆங்கில காலாண்டு இதழில் (எண்.57) வெளியான “கேட்ஸ் அறக்கட்டளையின் உண்மை நிகழ்ச்சி நிரல்” மற்றும் “இந்தியாவில் கேட்ஸ் அறக்கட்டளை: அரிச்சுவடி” என்ற இரு கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
_______________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2014
_______________________________

மரத்தில் மறைந்தது மா மத யானை

1

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா? பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள் – 4

மரத்தில் மறைந்தது மா மத யானை

அம்பேத்கர் மதத்தைப் பற்றி
அம்பேத்கர், “சாராம்சத்தில் மதத்தன்மை மட்டும் கொண்ட சில சடங்குகள்… ஆகியவற்றுடன் மதம் குறித்த நமது வரையறுப்பை நாம் நிறுத்திக் கொள்ள முயல வேண்டும்” என்று கூறினார்.

மதச்சார்பின்மை வரையறுக்கப்படாதது இருக்கட்டும். மதம் என்றால் என்னவென்று வரையறுப்பது மத உரிமையைத் தீர்மானிப்பதற்கு அவசியமாக இருந்தது. ஏனென்றால் ஆணாதிக்கத்திலிருந்து தொடங்கி சாதி ஆதிக்கம், நிலவுடைமை ஆதிக்கம் வரையிலான அனைத்து வகை ஆதிக்கங்களுமே மத ஒழுக்கமாகவும் மத சம்பிரதாயமாகவும் மதச்சட்டமாவும் பின்னர் அதுவே அரசின் சட்டமாகவும் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளன. இந்த ஆதிக்க உணர்வுகளையும் மத உணர்வுகள் என்று தான் மதவாதிகள் கூறி வருகின்றனர். இதனடிப்படையில்தான் மதத் தனிநபர் சட்டங்களையும் நியாயப்படுத்தி வருகின்றனர்.

நவீன “இந்தியக் குடியரசு” அமையும் சந்தர்ப்பத்தில் இதற்கு முடிவு கட்ட விரும்பிய அம்பேத்கர், “சாராம்சத்தில் மதத்தன்மை மட்டும் கொண்ட சில சடங்குகள்… ஆகியவற்றுடன் மதம் குறித்த நமது வரையறுப்பை நாம் நிறுத்திக் கொள்ள முயல வேண்டும்” என்று கூறினார்.

“மதத்தின் சாரம் (தீன்) என்பதைப் பொறுத்தவரை வழிபாடு மற்றும் நம்பிக்கை தொடர்பான சடங்குகள்தான் (இபாதத், இதிகுவாதத்) மாற்றக் கூடாதவை; மற்றவை (அதாவது ஷரியத் சட்டம் போன்றவை) மாறலாம்” என்ற நிலையை மவுலானா அபுல் கலாம் ஆசாத் மேற்கொண்டார்.

இந்து என்பது வெறும் மதமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை (சநாதன தருமம்) என்று கூறும் பார்ப்பன மதவாதிகளும், இசுலாம் என்பது மதமல்ல அது ஒரு மார்க்கம் (வாழ்க்கை நெறி) என்று கூறும் இசுலாமியப் பழமைவாதிகளும் இணைந்து நின்று அம்பேத்கரின் கருத்தை எதிர்த்தனர்.

பெரியாரைப் போன்று அம்பேத்கர் நாத்திகர் அல்ல. மனிதனின் ஆனமீகத் தேவையை நிறைவு செய்ய மதம் அவசியம் என்ற கருத்து கொண்டவர் என்பதையும் இங்கே நினைவிற்கொள்ள வேண்டும். ஆன்மீக உரிமையைக் காட்டிலும் ஆதிக்க உரிமையில் அதிக நாட்டம் கொண்ட மதவாதிகள்தான் இறுதியில் வெற்றி பெற்றனர். மதம் மற்றும் மத உரிமையை இன்னதென்று வரையறுக்காமல் அந்தப் பொறுப்பை பாராளுமன்றம் மற்றும் நீதித்துறையின் தோள்களுக்குத் தள்ளிவிட்டது அரசியல் நிர்ணய சபை.

அன்று தொடங்கி இன்று வரை பாராளுமன்றம் அந்தப் பணியை மேற்கொள்ளவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக எது மத உரிமை, எது மத நம்பிக்கை என்பதை ஆய்ந்து தீர்ப்பு சொல்லும் வேலையை உச்சநீதி மன்றம்தான் செய்து வருகிறது.

சுதந்திரமா, சமத்துவமா?

அரசியல் சட்டத்தின் 25 மற்றும் 26- வது பிரிவுகள் வழங்குகின்ற மதச் சுதந்திரத்தின் அடிப்படையில் தான் அனைத்து மதங்களின் தனிநபர் சட்டங்களுமே அதிகாரம் பெறுகின்றன. அதாவது குறிப்பிட்ட மதத்தில் ஒரு இந்தியக் குடிமகன் பிறந்தான் என்ற காரணத்தைக் கொண்டு, பிறப்பு முதல் இறப்பு வரையிலான அவனது சிவில் வாழ்க்கையில் தலையிட்டு அதிகாரம் செய்யும் உரிமையை இந்தச் சட்டப் பிரிவுகள்தான் மதத்திற்கு அளிக்கின்றன.

இந்திய உச்சநீதி மன்றம்
நீதிமன்றமே புரோகிதனாக

அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவு சட்டத்தின் முன் அனைத்து குடிமக்களும் சமம் என்று கூறுகிறது; 15-வது பிரிவோ மதம், இனம், பால் வேறுபாடுகளுக்காக குடிமக்கள் யாரிடமும் அரசு வேற்றுமை பாராட்டக்கூடாது என்று கூறுகிறது.

குடிமகன் என்ற முறையில் ஒரு தனிநபரின் சமத்துவ உரிமையும், அந்தத் தனிநபரின் மேல் ஆதிக்கம் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு உள்ள சுதந்திரமும் மோதிக் கொள்ளும் போது – அதாவது ஷாபானுவின் மீது ஷரியத் ஆதிக்கம் செய்யும் போது, இந்துப் பெண்ணுக்குச் சொத்துரிமை மறுக்கப்படும் போது, சட்டப்பிரிவு 24-ற்கும் 14-ற்கும் இடையில் முரண்பாடு ஏற்படும் போது, அதாவது சுதந்திரமும், சமத்துவமும் மோதிக்கொள்ளும் போது நீதிமன்றம் என்ன செய்யும்?

நீதிமன்றமே புரோகிதனாக

இந்த இடத்தில்தான் ‘ மதம் ‘ என்பதற்கு உச்சநீதி மன்றம் அளித்துள்ள விளக்கங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

“மதத்தை கடைப்பிடிக்கவும், பிரச்சாரம் செய்யவும் சுதந்திரம்” அளிக்கும் சட்டப்பிரிவு 25- ல் கண்டுள்ள மதம் என்ற சொல்லின் பொருளை விளக்கிய உச்சநீதி மன்றம், “வெறும் நம்பிக்கை மட்டும்தான் மதம் என்று கூறிவிட முடியாதெ”ன்றும் ஒரு மதத்தின் உயிராதாரமான விசயம் எது என்பதை “அந்தக் குறிப்பிட்ட மதத்தின் கோட்பாடுகளைக் கொண்டுதான் தீர்மானிக்க முடியும்” என்றும் கூறியது.

“எந்த ஒரு பிரிவினரும் தங்களது மதம் சம்பந்தப்பட்ட விவகாரங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் உரிமையை” வழங்குகின்ற சட்டப்பிரிவு 26(பி) –ல் கண்டுள்ள “மதம் சம்பந்தப்பட்ட விவகாரம்” என்ற சொற்கோர்வையை உச்சநீதி மன்றம் கீழ்க்கண்டவாறு வியாக்கியானம் செய்தது.

“அதேபோல கோயிலில் யார் யார் நுழைந்து வழிபாடு நடத்தலாம், அவர்கள் எந்த இடத்தில் நிற்க வேண்டும் என்பதும் மத சம்பந்தப்பட்ட விவகாரம் தான்.”

அனைத்து அதிகாரமும் மத குருமாருக்கே

குறிப்பிட்ட மதத்தில் நம்பிக்கையுள்ள ஒரு இந்தியக் குடிமகன், மேற்படி விதிமுறைகளைக் கடைப்பிடிக்க மறுத்தால் அவனை ” மதத்தின் அடிப்படையில் சமூகப் புறக்கணிப்பு செய்யும் உரிமையும் மதகுருமார்களுக்கு உண்டெ”ன்றும் அது ‘தனது சிவில் உரிமையைப் பாதிப்பதாக‘ ஒரு குடிமகன் முறையிட முடியாதென்றும் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவ்வாறாக, மதம் என்பதற்கு உச்சநீதி மன்றம் கூறியுள்ள விளக்கங்கள் அனைத்துமே ஒரு குடிமகனின் சமூக வாழ்க்கை மீது மதம் செலுத்தும் அதிகாரத்திற்கு சட்ட அங்கீகாரம் தருபவை; மதத்தைத் தனிநபரின் நம்பிக்கை என வரையறுக்கும் மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்கு எதிரானவை. எனவே குடிமகனின் சமத்துவ உரிமைக்கும் மதத்தின் சுதந்திரத்திற்குமான மோதலில் உச்சநீதி மன்றம் மதத்தைத்தான் ஆதரித்து வருகிறது.

மதத்தின் ஒழுக்கமும் அரசின் ஒழுக்கமும்

சங்கராச்சாரி, சத்யமூர்த்தி
தேவதாசி முறை, உடன்கட்டையேறுதல் (சதி), பலதார மணம் ஆகிய கொள்கைகளனைத்தும் இந்து மதத்தின் பிரிக்கவொண்ணாத கோட்பாடுகளாக இருந்தவைதான். என்பதை சங்கராச்சாரி முதல் சத்தியமூர்த்தி வரை பலரும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இருப்பினும், பொது ஒழுங்கு, நலவாழ்வு மற்றும் ஒழுக்க நெறி ஆகியவற்றின் அடிப்படையில் மதச் சுதந்திரத்தை முறைப்படுத்தும் உரிமை அரசுக்கு இருப்பதாக சட்டப்பிரிவு -25(1) கூறுகிறது.

நல்லொழுக்கத்தின் மொத்தக் குத்தகைதாரரான மதத்திடமிருந்து ஒழுக்கத்தை நிலைநாட்டும் உரிமையை அரசு கைப்பற்றிக் கொள்ளும் இந்தச் சட்டப்பிரிவு மேற்கத்திய ஜனநாயக, மற்றும் மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் ஒரு முக்கியமான அம்சமாகும்.

இந்துக் கோயில்களின் கருவறையில் பார்ப்பனரல்லாதார் நுழைவதற்கு நிலவும் தடை, கிறித்தவப் பெண்கள் மண விலக்குப் பெறுவதில் உள்ள ஆகப் பிற்போக்கான தடைகள், இசுலாமிய ஆண்களின் நான்கு தார மண உரிமை போன்ற ஒழுக்ககேடான மத சம்பிரதாயங்களை, அரசு தன்னுடைய கையில் வைத்திருக்கும் ஒழுக்க நெறியை நிலைநாட்டுவதற்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒழித்திருக்கலாமே! ஏன் செய்யவில்லை? ஏனென்றால், ‘சர்வ தர்ம சம பாவ‘ என்ற மண்ணுக்கேற்ற மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் ஒளியில்தான் ஒழுக்க நெறி குறித்த தனது வரையறைகளை அரசு ஏற்படுத்திக் கொள்கிறது. அதாவது மதத்தின் ஒழுக்க நெறியே அரசின் ஒழுக்க நெறி!

இமாலயப் பொய்

தேவதாசி முறை, உடன்கட்டையேறுதல் (சதி), பலதார மணம் ஆகிய கொள்கைகளனைத்தும் இந்து மதத்தின் பிரிக்கவொண்ணாத கோட்பாடுகளாக இருந்தவைதான். இதை சங்கராச்சாரி முதல் சத்தியமூர்த்தி வரை பலரும் தெளிவுபடுத்தியுள்ளனர். எனினும், மேற்கூறிய மதச் சம்பிரதாயங்களைத் தடை செய்ய வேண்டிய சமூக நிர்ப்பந்தம் ஏற்பட்ட போது ஒழுக்கத்தை நிலைநாட்டுவதற்காகவே சட்டப்பிரிவு 25(1) தனக்களித்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்து மதத்தின் ‘தீய ஒழுக்கங்களை’ அரசு ஒழிக்கவில்லை. மாறாக ” இந்தப் பழக்கங்கள் இந்து மதத்தின் சாராம்சமான கோட்பாடுகள் அல்ல” என்று ஒரு இமாலயப் பொய்யைச் சொல்லி அதனடிப்படையில் தடை செய்தது.

இவ்வாறு புளுகியதன் நோக்கம் இந்து மதத்தின் கவுரவத்திற்குக் களங்கம் வந்துவிடக்கூடாதே என்ற அச்சம் மட்டுமல்ல; மதத்திற்கு ஒழுக்க நெறியைக் கற்பிக்கும் பணியைச் செய்வதன் மூலம், மதச் சுதந்திரத்தில் தலையிடும் ஒரு ‘தவறான’ முன் மாதிரியை உருவாக்கி இந்திய மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் அடிப்படையைத் தகர்க்க அரசு (அதாவது நீதிமன்றம் உள்ளிட்ட அரசு ) விரும்பவில்லை என்பதுதான்.

பார்ப்பனச் சூது!

பாஜக
மதவிவகாரங்களில் அரசுத் தலையீட்டை எதிர்க்கும் பாரதீய ஜனதா கும்பல், அரசின் இந்த அதிகாரத்தையும் பறிக்க வேண்டுமென ஏன் கோரவில்லை என்ற கேள்வி இந்த இடத்தில் எழுகிறது.

வேறொரு கோணத்திலிருந்து இதைப் பரிசீலிப்போம். இந்துக் கோயில்களின் உள்ளே நுழைந்து வழிபாடு நடத்த தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி இல்லை என்ற விதியும், பார்ப்பனரல்லாதார் கருவறைக்குள் நுழைய முடியாது என்ற விதியும் ஆகமவிதிகளில் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.

சமூக நிர்ப்பந்தங்கள் காரணமாகவும், அரசியல் நோக்கத்திற்காகவும் தாழ்த்தப்பட்டோர் ஆலய நுழைவை ஏற்க நினைத்த சனாதனிகள் (அரசு) முதலில் சங்கராச்சாரி உள்ளிட்ட பார்ப்பனக் குருமார்களிடம் இதற்கு ஒப்புதல் பெற்றுக் கொண்டனர். இது மதவாதிகளுடனான சமூக ரீதியான சமரசம்.

அடுத்து, சட்டரீதியாக இதை அமல்படுத்தும் போது தேவதாசி ஒழிப்புக்குக் கூறியதைப் போல “ஆகம விதிகள் என்பவை இந்து மதத்தின் சாராம்சமான கோட்பாடுகள் அல்ல” என்று வியாக்கியானம் செய்து நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யப் போனால் கோயில்களின் மீதான அதிகாரத்தையே பார்ப்பனர்கள் இழக்க நேரும்.

எனவேதான் மதச் சுதந்திரத்தை வழங்கும் சட்டப்பிரிவு 25- இல் உட்பிரிவு (2) சேர்க்கப்பட்டது. ” தாழ்த்தப்பட்டோரைக் கோயிலுக்குள் அனுமதிப்பது மதச்சுதந்திரத்தைப் பாதிப்பதாகாது” என உட்பிரிவு கூறுகிறது. மேல் பார்வைக்குத் தாழ்த்தப் பட்டோரின் உரிமையைப் பாதுகாப்பதற்கான சரத்து போலத்தோற்றமளிக்கும் இந்த உட்பிரிவின் உண்மையான நோக்கம் ஆகம விதிகளைப் பாதுகாப்பதுதான்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக 1970 இல் தி.மு.க அரசு இயற்றிய சட்டம், மதச் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்றும், “ஆகம விதிகளின்படி தீண்டாமை என்பது ஒரு மத உரிமை” என்றும் உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறிய போது தான் இந்தச் சூட்சுமம் அம்பலத்திற்கு வந்தது.

இந்து மதச் சம்பிரதாயங்களில் அரசு  தலையீடு செய்து பல விசயங்களைத் திருத்தியமைத்துள்ளதென்றும், பிறர் (முசுலீம்கள்) தான் இதை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்றும் பாரதீய ஜனதா முதல் நீதிபதி குல்தீப் சிங் வரை பலரும் பிரச்சாரம் செய்கின்றனரே, அந்த ‘அரசுத் தலையீட்டின்‘ சட்ட ரீதியான லட்சணம் இதுதான்.

மதம் மற்றும் மத உரிமை குறித்து இதுவரை உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்புகளின் சாரம் வருமாறு.

“மதம் மற்றும் மத உரிமை பற்றி எல்லா மதங்களுக்கும் பொதுவான எந்த ஒரு வரையறையும் அரசு ஏற்படுத்தவே முடியாது. எனவே எல்லா மதத்தினரின் உரிமைகளும் சம்மானதோ,ஒரு சீரானதோ அல்ல. (அதாவது கத்தி வைத்துக் கொள்ளும் சீக்கியனின் மத உரிமை தனக்கும் வேண்டுமென ஒரு முசுலீம் கோர முடியாது )”

“ஒரு குடிமகனின் மதச்சார்பற்ற உரிமையைக் காட்டிலும் மதத்தின் உரிமையே மேலானது.”

பாரதீய ஜனதாவின் பொருள் பொதிந்த மவுனம்

ஆயினும், “பொது ஒழுங்கு, நல வாழ்வு, ஒழுக்கநெறி” ஆகியவற்றின பெயரால் மதச் சுதந்திரத்தில் தலையிட்டுக் கட்டுப் படுத்துவதற்கு அரசிற்கும் நீதிமன்றத்திற்கும் சட்டப்பிரிவு 25,26 –ல் உரிமை இருக்கத்தான் செய்கிறது.

மதவிவகாரங்களில் அரசுத் தலையீட்டை எதிர்க்கும் பாரதீய ஜனதா கும்பல், அரசின் இந்த அதிகாரத்தையும் பறிக்க வேண்டுமென ஏன் கோரவில்லை என்ற கேள்வி இந்த இடத்தில் எழுகிறது.

இவ்வாறு செய்வது இசுலாமிய, கிறித்தவ மதங்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கான வாய்ப்பை அரசிடமிருந்து பறித்து விடும் என்பது ஒரு காரணம். மேலும்,அரசின் செல்வாக்கிலிருந்து மதத்தை விடுவிப்பதல்ல அக்கட்சியின் நோக்கம்; மதத்தின் சித்தாந்தச் செல்வாக்கின் கீழ் அரசைக் கொண்டு வர முயலும் ஒரு பாசிசக் கட்சியே அது. எனவே அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இந்தச் சட்டப்பிரிவுகள் தனக்குத் தடையாக இல்லாத வரையில் இவற்றை எதிர்க்க வேண்டிய அவசியம் பாரதீய ஜனதாவிற்கு இல்லை.

செங்கல் ஊர்வலம் நடத்துவதற்கும், ரதயாத்திரை நடத்துவதற்கும், கடப்பாறையுடன் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் கலவரம் நடத்துவதற்கும், மகாஆரத்தி என்ற பெயரில் வழிபாட்டுக் கூட்டம் நடத்தி வன்முறையைத் தூண்டுவதற்கும், பாரதீய ஜனதா இந்து முன்னணிக் கும்பலுக்கு மதச்சுதந்திரத்தை அளிப்பவை சட்டப்பிரிவு 25-ம், 26-ம் தான்.

‘பொது ஒழுங்கு, ஒழுக்க நெறி, நலவாழ்வு’ ஆகிய காரணங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகளை அரசோ, நீதி மன்றமோ தடுத்ததில்லை எனும்போது அரசின் இந்த ‘காகித அதிகாரம்’ குறித்த பாரதீய ஜனதா கவலை கொள்ள அவசியமில்லை.

அரசு அவ்வாறு தலையிட முயன்ற சந்தர்ப்பங்களில், எடுத்துக் காட்டாக, ‘பாபர் மசூதியா – இராம ஜன்ம பூமியா’ என்ற கேள்வியை உச்சநீதி மன்றத்தின் முடிவுக்கு ராவ் அரசு அனுப்பிய போது “மத நம்பிக்கை குறித்த விசயங்களில் எந்த நீதிமன்றமும் தீர்ப்பு வழங்க இயலாது” என்று அறிவித்ததன் மூலம் சட்டப்பிரிவு 25,26 –இன்படி உச்சநீதி மன்றத்திற்குரிய அதிகார வரம்பை பாரதீய ஜனதா நினைவுபடுத்தியது.

இறுதியாக கடந்த ஜுலை மாதம் வெளியான உச்சநீதி மன்றத் தீர்ப்பொன்றை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

நீதிமன்றத்தின் ஒப்புதல் வாக்குமூலம்

“முசுலீம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க எனக்கு வாக்களியுங்கள்” என்ற சுவரொட்டி வெளியிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றதால், “தாஸ் ராவ் தேஷ்முக் என்ற சிவசேனா எம்.எல்.ஏ தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது” என்ற பம்பாய் உயர்நீதி மன்றம் தீர்ப்புக் கூறியிருந்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்துக்கு மேல் முறையீடு செய்தார் தேஷ்முக். மதத்தின் பேரால் ஓட்டுக் கேட்டதற்காக அல்ல, முசுலீம் எதிர்ப்பைத் தூண்டியதற்காக தேஷ்முக்கின் தேர்தல் செல்லாது என உச்சநீதி மன்றமும் உறுதி செய்தது. நீதிபதிகள் ஜி.என்.ரே, பைசானுதீன் ஆகியோர் கீழ்க்கண்ட கருத்துக்களையும் தமது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

“இத்தகைய கட்சிகள் தேர்தலிலும், பாராளுமன்றத்திலும் பங்கேற்பதை சட்டம் அங்கீகரிக்கின்ற வரையில் இந்தச் சூழ்நிலையை (அதாவது மதத்துவேசம் தூண்டப்படுவதை) தவிர்க்க இயலாது.”

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து பாரதீய ஜனதாவின் மாநில அரசுகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டதை உறுதி செய்தத் தீர்ப்பை வழங்கிய உச்சநீதி மன்ற பெஞ்சின் பெரும்பான்மை நீதிபதிகள் நமது அரசியல் சட்டத்தின்படி, ” மதமும் அரசியலும் கலக்கக் கூடாது” என்று குறிப்பிட்டனர்.

தற்போதைய தீர்ப்போ, அரசியல் நோக்கத்திற்கு மதத்தைப் பயன்படுத்துவதை நிலவுகின்ற அரசியல் சட்டம் அங்கீகரிக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

மதத்தை அரசியல் நடவடிக்கையாகவும், அரசியலை மதச் சடங்காகவும் ஒரே நேரத்தில் நடத்திவதற்கு வாய்ப்பளிக்கும் இந்த ‘மதச்சார்பற்ற’ அரசியல் சட்டத்தை பாரதீய ஜனதா ஏன் எதிர்க்கப்போகிறது?

அனைத்து மதங்களுக்கும் சம உரிமை தருவதாக ஏட்டளவில் கூறுகின்ற இம்மதச்சார்பின்மை, பார்ப்பன –இந்து ஆதிக்கத்தைத்தான் தனது நடைமுறையாகவும் கொண்டுள்ளது. இந்தப் போலி மதச்சார்பின்மையின் கீழ், சிவில் சட்டத்தை மட்டும் உண்மையிலேயே மதச்சார்பற்ற சட்டமாக மாற்ற வேண்டும் என்கிறது பாரதீய ஜனதா.

ஆனால் நிலவுகின்ற மதச்சார்பின்மை சட்டரீதியிலேயே போலியானது என்று எந்தக் கட்சி கூறுகிறது? காங்கிரசு, வலது-இடது கம்யூனிஸ்டு கட்சிகள், திராவிட இயக்கங்கள் மற்றும் முசுலீம் லீக் வரை அனைத்துக் கட்சிகளுமே இந்த மதச்சார்பின்மையைப் போற்றிக் கொண்டாடுகின்றன.

இந்த மதச்சார்பின்மையை ஏற்றுக் கொள்ளும் கட்சிகள் ‘மதச்சார்பற்ற சிவில் சட்டம்’ வேண்டுமென்று பாரதீய ஜனதா கோருவதை மட்டும் எப்படி எதிர்க்க முடியும்? அல்லது தங்களது எதிர்ப்பை அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் அவர்கள் எங்ஙனம் நியாயப்படுத்த இயலும்?

அதனால்தான் தடுமாறுகிறார்கள். மழுப்புகிறார்கள். ‘அஞ்சாதீர்கள்’ என்று முசுலீம் பழமைவாதிகளுக்கு ஆறுதல் கூறுகிறார்கள். மொத்ததில் தங்களது நடவடிக்கைகள் மூலம் ‘இந்த நாட்டில் முழு நிறைவான மதச்சார்பின்மையை அமல்படுத்தத் தடையாயிருப்பவர்கள் முசுலீம்கள்தான்’ என்ற தவறான கருத்தை மறைமுகமாகத் தோற்றுவித்து வருகிறார்கள். இத்தகைய கருத்து பெரும்பான்மையின் மத்தியில் உருவாக்கப்படுவதைத்தான் இந்து மதவெறியர்களும் விரும்புகிறார்கள்.

பாரதீய ஜனதாவின் அதே தந்திரம்! எதிர்க்கட்சிகளின் அதே தடுமாற்றம்!

போலி மதச்சார்பின்மை கட்சிகள்
காங்கிரசு, வலது-இடது கம்யூனிஸ்டு கட்சிகள், திராவிட இயக்கங்கள் மற்றும் முசுலீம் லீக் வரை அனைத்துக் கட்சிகளுமே இந்த மதச்சார்பின்மையைப் போற்றிக் கொண்டாடுகின்றன.

இதற்கிடையில் தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் பொதுசிவில் சட்டத்தை அறிமுகப்படுத்தப் போவதாக பாரதீய ஜனதா அறிவித்துள்ளது. ” ஒரு சீரான உரிமையியல் சட்டத்தைக் கொண்டுவர அரசு முயல வேண்டும் ” என்ற “அரசியல் சட்டத்தின் 44-வது பிரிவின் வாசகத்தில் உள்ள அரசு என்ற சொல்லுக்கு ‘மாநில அரசு’ என்ற பொருள் கூறுவதன் மூலம் இதைச் செய்ய முடியும்” என்று கூறுகிறார் சட்டவல்லுனர் ராஜீவ் தவான்.

அதற்குப்பின் கவர்னர் அதில் கையெழுத்திட மறுக்கலாம். ஜனாதிபதி ஒப்புதல் தராமல் நிறுத்தலாம் அல்லது உச்சநீதி மன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கலாம். ஆனால் எதைச் செய்தாலும் அது இடைக்கால ஏற்பாடாக மட்டுமே இருக்கும்.

அரசியல் சட்டம் தனக்களித்த உரிமையைப் பயன்படுத்தித்தான் இந்து மதவெறியர்கள் பாபர் மசூதியை இடித்தனர். பாபர் மசூதி தரைமட்டமாக்கப்படும் வரை ‘அது மசூதிதான் – கோயிலல்ல’ என்று பேசிவந்த எதிர்க்கட்சிகள் இப்போது மசூதியா –கோயிலா? என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு சொல்வதற்காகக் காத்திருக்கிறார்கள். கரசேவைக்கெதிரான மக்கள் திரள் நடவடிக்கையில் ஈடுபட எந்தக் கட்சிக்கும் துணிவு இல்லை. பாபர் மசூதி விவகாரத்தில் எப்படிக் காய்களை நகர்த்தியதோ அதே முறையைத்தான் இந்த விசயத்திலும் பாரதீய ஜனதா பின்பற்றுகிறது.

பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பயன்படுத்தித்தான் அதற்குக் குழி தோண்டினான் இட்லர். இந்த ‘ஜனநாயகத்தையும்’ ‘மதச்சார்பின்மையையும்’ பயன்படுத்தித்தான் இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கு பாரதீய ஜனதாவும் முயற்சிக்கிறது . ஒரே சட்டத்தின் மூலம் ஒரே நாட்டையும் மக்களையும் செதுக்கி உருவாக்க நினைக்கிறது.

இந்தப் போலி ஜனநாயகம் பாசிசமாக உருமாறுவதும், போலி மதச்சார்பின்மை இந்து ராஷ்டிரத்தை நோக்கி நகர்வதும் ஒன்றும் அதிசயமல்ல; போலி மதச்சார்பின்மைக்குப் பல் முளைத்திருக்கிறது – அதுதான் இந்து ராஷ்டிரம். அதன் குழந்தைப் பருவத்தை எண்ணி ஏங்குவது கையறுநிலை; அதை மீண்டும் கொண்டு வரமுடியுமென நம்பிக்கை வைப்பது முட்டாள்தனம்.

அரசியல், கல்வி மற்றும் சமூக வாழ்வின் பல்வேறு துறைகளில் மனிதனின் மீது ஆதிக்கம் செய்வதற்கு மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான அதிகாரத்தையும் உரிமையையும் ரத்து செய்ய வேண்டும். தனிநபரின் நம்பிக்கை என்ற அளவில் மட்டுமே மதச் சுதந்திரம் அங்கீகரிக்கப்படவேண்டும். இத்தகைய உண்மையான மதச்சார்பின்மைக் கொள்கையை நிலைநாட்டவும், அதன் பிரிக்கவொண்ணாத அங்கமான ‘மதச்சார்பற்ற உரிமையியல் சட்டத்தை’ நிறைவேற்றச் செய்யவும் வேண்டும். புரட்சியாளர்களும், ஜனநாயகவாதிகளும், முற்போக்காளர்களும் முன்வைத்துப் போராட வேண்டிய கோரிக்கை இதுதான்.

ஆனால் முசுலீம் பழமைவாதிகள், சீர்திருத்தவாதிகள், திராவிட இயக்கங்கள், புதிய இடது சாரி ‘அறிஞர்கள்’ போன்ற பலரும் இதை ஏற்பதில்லை.

(தொடரும்)
முந்தைய பகுதிகள்

  1. பொது சிவில் சட்டம் – மாயையும் உண்மையும்
  2. பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது
  3. ‘ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி’ – இந்திய அரசின் மதச்சார்பின்மை

வேதாரண்யம் – வி.வி.மு போராட்டம் – அதிமுக ரவுடிகள் தாக்குதல்

0

நாகை மாவட்டம் – வேதாரண்யம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆளும் கட்சிக்கு எதிராகவோ தன்னை எதிர்த்தோ யாரும் எதையும் செய்யக்கூடாது என்று அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் வேதாரண்யம் அதிமுக எம்.எல்.ஏ என்.வி. காமராஜ். ஆளும் கட்சியும் போலீசும் கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டு இவ்வாறு செய்வது தமிழகம் முழுவதற்குமே பொருந்தும் என்பது வேறு விசயம்.

கடந்த சில வாரங்களாக, “காவிரியின் குறுக்கே அணைக்கட்ட கூடாது”, “தமிழக மீனவர்கள் 5 பேர் தூக்கை ரத்து செய்வது”, “பால்விலை – மின்கட்டண உயர்வை ரத்து செய்வது” ஆகிய கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு, ஏட்டு முதல் எஸ்.பி வரை செருப்பு தேய நாம் நடந்தாலும் ஒவ்வொரு மனுவையும் அனுமதி மறுத்து திருப்பி அனுப்பி வந்தது வேதை நகர போலீசு.

காரணம் கேட்டால், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வந்து விடுமாம்.

  • காவிரியின் குறுக்கே அணை கட்ட கூடாதென்றால் கர்நாடக அரசு வந்து கலகம் செய்து விடுமா?
  • தமிழக மீனவர்கள் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய போராடினால், ராஜபக்சே வந்து சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து விடுவாரா?

இல்லை. பிறகு என்ன பிரச்சனை?

“பால்விலை-மின்கட்டண உயர்வு பற்றி பேசினால் மக்கள் முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களை பற்றி ‘அவதூறாக’ பேசி விடும் வாய்ப்பு இருப்பதாலும், இதனால் உணர்ச்சி வசப்படும் எம்.எல்.ஏ வின் தொ(கு)ண்டர்கள் தகராறு செய்தால் கலவரம் ஏற்பட்டு விடும்” என்று நீட்டி முழக்கினார் டி.எஸ்.பி சார்லஸ்.

ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து தரப்பட்ட கடிதமோ 30(2) காவல்சட்டம் அமலில் இருப்பதாக கூறி பல்லிளித்தது.

இனி மனு கொடுத்தும் பலனில்லை என்பதால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்து விவசாயிகள் விடுதலை முன்னணி – புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக சுவரொட்டி- துண்டு பிரசுரம் மூலம் பிரச்சாரம் செய்து, “நவம்பர் 17 அன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்து”வதாக பகிரங்கமாக அறிவித்து விட்டோம்.

‘சட்டத்தை நாமே கையில் எடுத்துக் கொண்டதாக ‘ பதறிய போலீஸ் எஸ்.ஐ 17-ம் தேதி காலையிலேயே போன் செய்து சமரசம் பேசினார். இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று அறிவித்து சுமார் 150 தோழர்கள் வேதாரண்யத்தில் ஒன்று திரண்டனர்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் பேசிய எஸ்.ஐ, “மேல் இடத்திலேயே கூறி விட்டார்கள், உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது. வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வந்து நடத்திக் கொள்ளுங்கள்” என்றார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

வேதாரண்யம்-மேலவீதி பெரியார் சிலையில் இருந்து செங்கொடிகளுடன் முழக்கமிட்டு கொண்டே சென்ற பேரணி வட்டாட்சியர் அலுவலகத்தை வந்து அடைந்தவுடன் ஆர்ப்பாட்டமாக மாறியது. வேதாரண்யம் வட்டார வி.வி.மு ஒருங்கிணைப்பாளர் தோழர் தனியரசு தலைமை தாங்க, தோழர் கிருஷ்ணமூர்த்தி, பட்டுக்கோட்டை வி.வி.மு வட்டார செயலர் தோழர் மாரிமுத்து, பு.மா.இ.மு திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் ஆசாத் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்ட தலைவர் காவிரிநாடன் பேசுகையில், “விலைவாசி உயர்வால் சாமான்ய மக்கள் படும் அவஸ்தையையும், தங்களின் நியாயமான உரிமைகளுக்காக கூட போராட முடியாதபடி மக்கள் எப்படி அடக்கி  ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் எனக்கு முன்னால் பேசியவர்கள் பேசி சென்றிருக்கிறார்கள். மக்களின் கோரிக்கைகளுக்காக போராடும் வி.வி.மு வை செயல்பட விடாமல் முடக்குவதன் மூலம் மக்கள் போராட்டங்களை அடக்கிவிடலாம் என கருதி எம்.எல்.ஏ வின் ஆட்கள் செய்து வரும் அராஜகங்களை தோலுரிக்க வேண்டும். மக்கள் பிரச்சனைக்காக போராடியதற்காக வி.வி.மு தோழர் தனியரசுவின் கடையை அடித்து நொறுக்கியும், பொருட்களை சூறையாடியும், அடுத்தடுத்து அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தும் வி.வி.மு வின் அரசியல் செயல்பாடுகளை முடக்க எம்.எல்.ஏ கண்ட கனவு பொய் ஆகி போனது. இதோ மீண்டும் மக்கள் பிரச்சனைக்காக களத்திலே நாங்கள் வந்திருக்கிறோம். தாதுமணல் வைகுண்டராஜனை அவனது கோட்டைக்குள்ளேயே சென்று அவன் சிண்டைப் பிடித்து உலுக்கியவர்கள் நாங்கள், பேச்சில் அல்ல களத்திலே நிற்கும் வீரர்கள்” என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

மக்கள் கலை இலக்கியக் கழக மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் பேசுகையில், சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என ஜெயாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்ட போது, ‘காவிரிய வச்சுக்கோ… அம்மாவை குடு..’ என போஸ்டர் அடித்து ஒட்டிய அதிமுக வினரை விமர்சித்து பேசினார். “ஒரு கொள்ளைக் கூட்டத் தலைவிக்காக தமிழகத்தின் உரிமையை அடகு வைக்கத் துணியும் இந்த அடிமைகளை எம்.எல்.ஏ-எம்.பி க்களாக தேர்ந்தெடுத்து இருக்கும் மக்களே, அடுத்தடுத்து அறிவிக்கப்படும் விலைவாசி-மின்கட்டண உயர்வு அறிவிப்புகள் உங்களுக்கு வழங்கப்படும் பரிசுகள்” என்று மக்களையும் விமர்சித்து பேசினார்.

“யாரையும் தாக்கி பேச வேண்டாம், மனம் புண்படும் படி பேச வேண்டாம்” என அறிவுரை வழங்கிய போலீசின் யோக்கியதையையும் கண்டித்து பேசினார்.

vedaranyam-demo-1“ஆவின் பாலை திருடி, பாதிக்குபாதி தண்ணீரை கலந்து விற்ற அதிமுக வைத்தியை தாக்கிப்பேசாமல் வேறு எப்படி பேசுவது? விலை உயர்வுக்கு காரணத்தை வேறு எப்படி விளக்குவது?”

“அதிமுக எம்.எல்.ஏ க்கள் என்ன உழைப்பால் உயர்ந்த உத்தமர்களா? என்.வி காமராஜ் சில ஆண்டுகளுக்கு முன்னால் சாதாரண உப்பளத் தொழிலாளி. இன்று கோடிகளுக்கு அதிபதி. மூட்டை தூக்கி சம்பாதித்த சொத்தா இவ்வளவு? பல்லாயிரம் பேருக்கு, ஆடம்பரமான முறையில் சமையல் செய்து தன் வீட்டு திருமண நிகழ்ச்சியை நடத்த எங்கிருந்து வந்தது பணம்?” என்று அடுத்தடுத்து கேள்விகளால் துளைத்தெடுத்தார்….

“அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி நீங்கள் பேசிக் கொண்டிருப்பதால் உடனடியாக முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்திய ஜனநாயகமே இடிந்து விடும்” என்று காவல்துறையினர் பதறி ஆர்ப்பாட்ட மைக்கை அடாவடியாக ஆப் செய்ய… தோழர்கள் பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட தள்ளுமுள்ளு ஆனது.

இவ்வாறு கருத்துரிமையின் லட்சணத்தை அம்பலப்படுத்திய தோழரின் பேச்சு முடிய, தோழர் வெங்கடேசன் நன்றியுரை கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

vedaranyam-demo-3‘அம்மா’ வைப் பேசியதை விட தங்களின் அண்ணன் காமராஜைப் பற்றி பேசி விட்டதால் இனி ஊருக்குள் தங்களை எவன் மதிப்பான்? என்று ஆத்திரத்தில் குதித்தனர் எம்.எல்.ஏ வின் கைக்கூலிகள். ஆர்ப்பாட்டம் முடிந்து வேனில் திரும்பிச்சென்ற தோழர்கள் மீது மருதூர் இரட்டைக்கடைவீதியருகே காமராஜன் அண்ணன் மகன் அசோக், பாபு மற்றும் சில காலிகள் குவாட்டர் பாட்டில்களை வீசியும், கல்லெறிந்தும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

தோழர்கள் திரும்பிச் சென்ற வேனை அதிமுக காலிகள் பின் தொடர்ந்து வருவது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தும் கூட அவர்கள் பாதுகாப்பு தரவில்லை. பாட்டில் வீச்சில் வேனில் ஜன்னல் அருகே அமர்ந்திருந்த தோழர் காந்தி காயமடைய, இன்னொருவரின் கையில் கல் பட்டு தெறித்து காயமானது. உடனே அருகில் இருந்த வாய்மேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கக்கோரி தோழர்களும், வழக்கறிஞர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போதைக்கு நிலைமையை சமாளிப்பதற்காக மனு ரசீது மட்டும் வழங்கி தோழர்களை அனுப்பி விட்டு, ஆர்ப்பாட்டத்தில் அவதூறாக பேசியதாக 8 தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது போலீசு.

இந்த ஆர்ப்பாட்டத்திலேயே கலந்து கொள்ளாத மதுரை மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தளவுக்கு அம்மா போலீசு அதிமுக காலிகளுக்கு அரணாக நிற்கிறது.

மீண்டுமொரு பெரிய தாக்குதலுக்கு எம்.எல்.ஏ வின் ஆட்கள் தயாராகி வருவதாக தகவல்கள் வந்துள்ளன. பேச்சுரிமை, கருத்துரிமை, சட்டத்தின் ஆட்சி என்று இதற்கு மேலும் யாரேனும் நம்பிக்கை வைத்திருந்தால் அவர்கள் கூறட்டும் இனி இந்த சட்ட வரம்புகளுக்குள் நின்று போராட முடியுமா? அல்லது மக்களே அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டுமா என்று……..

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி
வேதாரண்யம்.

மேக் இன் இந்தியா : புதிய மொந்தை பழைய கள்ளு!

2

பாசிஸ்டுகள் அடிமுட்டாள்களாகவும், அண்டப்புளுகர்களாகவும் கோமாளிகளாகவும்தான் இருப்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துக்காட்டி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அந்நிய முதலீடுகள் பெருகினால், நாட்டில் தொழில் வளர்ச்சியும் வேலைவாப்பும் பெருகி இந்தியா வல்லரசாகிவிடும் என்ற அண்டப்புளுகையே, மீண்டும் “மேக் இன் இந்தியா” என்ற பெயரில் பாலிஷ் போட்டு அவர் கடைவிரிக்கிறார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தனியார்மய – உலகமயக் கொள்கையை காங்கிரசு கூட்டணியும் பா.ஜ.க. கூட்டணியும் தீவிரமாகச் செயல்படுத்தி தோல்வியடைந்துள்ள நிலையில், அடிமுட்டாள்தனமாக மீண்டும் அதே பாதையை மூர்க்கமாகச் செயல்படுத்த கிளம்பிவிட்டார் மோடி.

மேக் இன் இந்தியா
தோற்றுப்போன திட்டத்தையே மேக்இன் இந்தியாவாக பெயர் மாற்றம் செய்து செப்டம்பர் 25 அன்று ஆரவாரமாக அறிமுகப்படுத்தும் மோடி.

கடந்த ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி, “மேக் இன் இந்தியா” என்ற முழக்கத்துடன் “உலகின் பொருள் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதே எங்கள் இலக்கு. இந்தியாவில் முதலீடு செய்யப்படும் மூலதனங்களுக்கு எந்தப் பாதகமும் வராது. எனவே, இந்தியாவில் முதலீடு செயுங்கள்” என்று போணியாகாத சரக்கை மலிவு விலைக்குத் தருவதாகக் கூவிக்கூவி விற்கும் வியாபாரியைப் போல பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களை வலிந்து அழைக்கிறார். உலகச் சந்தைக்காக அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கி, உற்பத்தியாகும் பொருட்களை உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுதான் மோடி முன்வைக்கும் மேக் இன் இந்தியா திட்டம். இதற்காக சுங்க வரி, கலால் வரி, ஏற்றுமதி வரிகள் அந்நிய முதலீட்டாளர்களின் நலன்களுக்கேற்ப மாற்றியமைக்கப்படும் என்று இதனை விளக்கும் வகையில் தனியொரு இணைய தளத்தையே மோடி அரசு தொடங்கியுள்ளதோடு, சர்வதேச முதலீட்டாளர்களின் உச்சி மாநாட்டையும் நடத்தியுள்ளது.

அந்நிய நேரடி முதலீடு (FDI – ஃபாரின் டைரக்ட் இன்வெஸ்ட்மெண்ட்) என்பதற்கு “முதலில் இந்தியாவை வளர்ப்போம்” (ஃபர்ஸ்ட் டெவலப் இந்தியா) என்று விளக்கமளிக்கிறார் மோடி. “மேக் இன் இந்தியா திட்டத்தால் பொருள் உற்பத்தித் துறை வளர்ந்து பல இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும், தொழில்நுட்ப ரீதியாக இந்தியா வளர்ச்சியடையும்” என்று ஆரூடம் கூறுகிறார். 2022-ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீத பங்களிப்பை பொருள் உற்பத்தித்துறை அளிக்க வேண்டும் என்ற இலக்கையும் அவர் தீர்மானித்துள்ளார். தவிடு தின்னும் ராஜாவுக்கு முறம் பிடித்த கதையாக, இந்தக் கோமாளித்தனத்தையே ஏதோ மோடி கையில் மந்திரக்கோல் உள்ளதைப் போலவும், அந்நிய முதலீடுகள் பெருகுவதற்கான சூழல் கனிந்து விட்டதாகவும் முதலாளித்துவ ஊடகங்கள் விளம்பரப்படுத்தி பிரமிப்பூட்டுகின்றன.

make-in-india-1பொருளுற்பத்தித் துறையும் கார்ப்பரேட் நிறுவனங்களும் வளர்ந்தால், நாட்டில் வேலைவாய்ப்பு பெருகி இந்தியப் பொருளாதாரமும் வளர்ச்சியைச் சாதிக்கும் என்று கதையளக்கும் மோடியின் இந்தக் கவர்ச்சித் திட்டம், காங்கிரசு அரசின் கொள்கைதானே தவிர, இதில் புதுமையோ, மோடியின் தனித்திறமையோ எதுவும் கிடையாது. ஏற்கெனவே 2004-ல் காங்கிரசு தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தபோதே, பொருள் உற்பத்தித்துறைக்கான தேசிய திட்டம் வகுக்கப்பட்டு, “திறன் மேம்பாட்டு ஆணையம்” அமைக்கப்பட்டது. ஆனாலும் எதிர்பார்த்த விளைவை அதன் மூலம் சாதிக்க முடியவில்லை. இருப்பினும், தோற்றுப்போன அத்திட்டத்தையே மேக் இன் இந்தியாவாக பெயர் மாற்றம் செய்து கவர்ச்சிகரமான புதுமைத் திட்டமாக மாய்மாலம் செய்யும் மோடி கும்பல், ஏதோ காங்கிரசு அரசு செய்யத் தவறி விட்டதைப் போலவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தததும் அதனைச் செயல்படுத்துவதைப் போலவும் சவடால் அடிக்கிறது.

அந்நிய முதலீடுகள் இந்தியாவில் பெருகினால் நாடு முன்னேறி வல்லரசாகிவிடும் என்று கூறி தனியார்மய – தாராளமயக் கொள்கைள் புகுத்தப்பட்ட கடந்த 25 ஆண்டுகளில் நடந்ததென்ன? 1990-களில் புதிய தாராளவாதக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், அந்நிய முதலாளிகளும் இந்தியத் தரகுப் பெருமுதலாளிகளும் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காகவே அரசுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டே முடக்கப்பட்டன. பி.எஸ்.என்.எல். நட்டத்தில் தள்ளப்பட்டதை இந்நடவடிக்கைகள் நிரூபித்துக் காட்டின. தனியார்மயத்தின் இரண்டாவது கட்டத்தில் பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களையும் லாபத்தையும் கொண்டிருந்த அரசுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்கும் படலம் தொடங்கியது. 2100 கோடி ரூபாய் மதிப்புடைய அரசுத்துறை நிறுவனமான மாடர்ன் புட்ஸ், வெறும் 104 கோடிக்கு யுனிலீவர் நிறுவனத்துக்குத் தாரைவார்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆற்றுநீர், இரும்பு, நிலக்கரி, எரிவாயு உள்ளிட்டு இயற்கை மூலவளங்களைச் சூறையாடுவதற்காக அந்நிய முதலீட்டாளர்களுக்குக் கதவுகள் அகலத் திறந்து விடப்பட்டன. 2000-வது ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் அந்நிய முதலீட்டைக் காட்டி ஆகா, வளர்ச்சி என்றனர். பின்னர் அதுவும் சரிந்து விழுந்ததோடு, அவுட் சோர்சிங் பெருகும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனது.

தனியார்மய  – தாராளமயத்தின் தொடக்கத்தில் அந்நிய முதலாளிகள் தாமே நேரடியாகத் தொழில் தொடங்குவதற்கும் மேலை நாடுகளிலிருந்து நுகர்பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட போதிலும் 1990-களின் இறுதியில் இந்த வளர்ச்சி நீர்க்குமிழி போல உடைந்தது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டது. பிறகு இந்த மந்த நிலையைக் காட்டி நிதித்துறையில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினால்தான் நாடு முன்னேறும் என்று கூப்பாடு போட்டு, கடன் சந்தை, வங்கிகள், பங்குச் சந்தை முதலானவற்றில் அந்நிய முதலீட்டுக்குத் தாராள அனுமதியளிக்கப்பட்டது. இதனால் அந்நியக் கடன் மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை வீங்கியது. அந்நிய நிறுவனங்கள் பங்குச் சந்தையிலும் கடன் சந்தையிலும் போட்டிருந்த தமது மூலதனத்தை சுருட்டுக் கொண்டு ஓடியதும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து விழுந்தது.

டோங்கிரியா கோண்டு பழங்குடியினர்
பாக்சைட் சுரங்கத் திட்டத்திற்காக ஒரிசாவின் நியாம்கிரி மலையை ஆக்கிரமிக்க முயன்ற வேதாந்தா நிறுவனத்தையும் அதற்குத் துணை நிற்கும இந்திய ஆட்சியாளர்களையும் எதிர்த்துப் போராடும் டோங்கிரியா கோண்ட் பழங்குடியினர் (கோப்புப் படம்)

அந்நிய முதலீடுகளால் பங்குச் சந்தையில் விலைக்குறியீட்டு எண் ஏறி இறங்குவதைக் காட்டி ‘வளர்ச்சி’, ‘முன்னேற்றம்’ என்று ஆரவாரம் செயய்ப்பட்டதேயன்றி, நாட்டின் தொழிலும் விவசாயமும் வேலைவாய்ப்பும் குறிப்பிடும்படியான எந்த வளர்ச்சியையும் சாதிக்கவில்லை.  அடிக்கட்டுமான வளர்ச்சி என்ற பெயரில் நகர்ப்புறங்களில் உருவாக்கப்பட்டுள்ள மேம்பாலங்களும், அதிவிரைவுச் சாலைகளும், அதிநவீன விமான நிலையங்களும் கிராமப்புற விவசாயிகளின் குடிசைகளையும் அவர்களின் வாழ்வாதாரங்களையும் பறித்துள்ளதேயன்றி, அவர்களது வறுமையை விரட்டியடிக்கவில்லை. ஊழலுக்கும் பகற்கொள்ளைக்கும், சுற்றுச்சூழல் நாசமாக்கப்பட்டதற்கும் சான்றாக நிற்கும் இந்த ‘வளர்ச்சி’ வேலைவாயப்புகளை நிரந்தரமாக்கவில்லை. பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டு,  இலட்சக்கணக்கான விவசாயிகள் நாடோடிகளாக நகர்ப்புறங்களுக்கு விசிறியடிக்கப்பட்டனர். உத்திரவாதமற்ற வேலையும், அற்பக் கூலியும், விலைவாசி உயர்வும் சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாகின.

கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து மந்தத்திலும் நெருக்கடியிலும் அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரங்கள் சிக்கிக் கொண்டிருப்பதால் ஏகாதிபத்திய நாடுகள் இந்தியாவில் வந்து முதலீடு செய்வதற்கான அடிப்படையும் மிகக் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமானால், அந்நிய நிறுவனங்கள் பொருள் உற்பத்தித் துறையில் முதலீடுசெய்ய வேண்டுமானால், தடையில்லாத மின்சாரம் வேண்டும். ஆனால், மின்தட்டுப்பாடு நாட்டின் தீராத பிரச்சினையாக உள்ளது. மின்சாரம் மட்டுமின்றி, சாலைகள், துறைமுகங்கள் முதலான போக்குவரத்து வசதிகள், தொலைத் தொடர்பு முதலான அடிக்கட்டுமானத் துறையில் இந்தியா இன்னமும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது.

மேக் இன் இந்தியா
அந்நிய முதலீட்டின் மகிமை : நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதை எதிர்த்து வேலை இழந்த அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

கடந்த 2013-ம் ஆண்டில் இந்தியாவின் பொருள் உற்பத்தித்துறையானது மொத்தப் பொருளாதாரத்தில் வெறும் 13 சதவீத அளவுக்கே பங்களித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் மிக மோசமான நிலைமை என்று உலக வங்கியே மதிப்பிட்டுள்ளது. ஆனால், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொருள் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 34 சதவீதமாக உள்ளது. மேலும், பொருள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் 189 நாடுகளில் 134-வது இடத்தில்தான் இந்தியா உள்ளது என்கிறது உலகவங்கி. இருப்பினும், இந்தியாவை 50-வது இடத்துக்கு உயர்த்தி சீனாவை முந்தப் போவதாக சவடால் அடிக்கிறார் மோடி. இதற்காக, இதர ஏழை நாடுகளைவிட மலிவான கூலியில் உற்பத்தி செய்து தருவதற்கான உத்திரவாதம் அளிப்பதன் மூலம் அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்க முயற்சிக்கிறார். இந்த நோக்கத்தோடு தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.) முடித்தவர்களைக் கவரும் வகையில், பாரதீய ஜனதா கட்சியின் தாய்க்கட்சியான ஜனசங்கத்தின் அமைப்பாளரான தீனதயாள் உபாத்தியாயா என்பவரது பெயரில், “ஷிரமேவ ஜெயதே கார்யக்ரம்”(உழைப்பே வெல்லும்) எனும் திட்டத்தை அண்மையில் மோடி தொடங்கியுள்ளார்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்கும் மூலதன அழுத்தம் கொண்ட பெருந்தொழில் நிறுவனங்களில் தானியங்கி எந்திரங்களே பெரும்பாலான வேலைகளை நேர்த்தியாகவும் விரைவாகவும் செய்து விடுவதால், அங்கு தேர்ச்சிபெற்ற தொழிலாளர்களுக்கு வேலை வாப்பு  அருகிவிட்டது. தானியங்கி எந்திரங்களின் வேகத்துக்கு ஏற்ப வேலை செய்யும் வகையிலான தொழில் தேர்ச்சி பெறாத அல்லது தொழில் பழகுநர்களாக உள்ள தொழிலாளர்கள்தான் இத்தகைய நிறுவனங்களுக்குத் தேவைப்படுகின்றனர். எனவேதான், இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய மோடி, “தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.) முடித்தவர்களை நாம் மதிப்பதில்லை. அவர்களது மரியாதையும் கண்ணியமும் காக்கப்பட்டால்தான் சமுதாயம் முன்னேற்றமடையும்; தொழிலாளர்கள் கடின உழைப்பைக் கொண்ட தேசத்தைக் கட்டியமைக்கும் யோகிகள்” என ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக, நிரந்தரத் தொழிலாளர்கள் செயய வேண்டிய வேலைகளைத் தொழில் பழகுநர்களை வைத்து வேலைவாங்குவதையே கவர்ச்சிகரமான திட்டமாக முன்வைத்துள்ளார். இத்தகைய தொழில் பழகுநர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூடத் தராமல், பராமரிப்பு நிதி (ஸ்டைபண்ட்) மட்டும் கொடுத்து, இளம் தொழிலாளர்களை எவ்வித உரிமையுமின்றி ஒட்டச் சுரண்டுவதற்கான ஏற்பாட்டைத்தான் மோடி செய்துள்ளார்.

ஏற்கெனவே தொழில்பழகுநர்களாக ஒரு முதலாளித்துவ நிறுவனத்தில் சேர்பவர்கள், பயிற்சிக் காலம் முடிந்த பின்னரும் முறையான நிரந்தரத் தொழிலாளர்களாக மாற்றப்படுவதில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும், கேசுவல் தொழிலாளர்களாகவும்  மணிக்கூலி, தினக்கூலி, பீஸ்ரேட் தொழிலாளர்களாகவும் உழலும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையை நிரந்தரமாக்கி, குறைந்த கூலிக்கு வேலை செய்யும் கொத்தடிமைகளாகத் தொழிலாளர்களை மாற்றுவதே மோடியின் நோக்கமாக உள்ளது. மோடி அரசால் தற்போது முன்மொழியப்பட்டுள்ள மசோதாவானது, தொழில் தகராறு சட்டம், குறைந்தபட்ச ஊதியச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம், தொழிலாளர் காப்பீடு சட்டம் உள்ளிட்ட முக்கியமான 14 தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து முழுமையான விலக்கு அளிக்கப்பட வேண்டுமெனக் கூறுகிறது.

make-in-india-2ஏற்கெனவே தொழிலாளர் சட்டங்களை மதிக்காத முதலாளிகள், இனி எவ்விதத் தயக்கமும் இன்றி தொழிலாளர்கள் மீது சுரண்டலையும் அடக்குமுறையையும் தீவிரப்படுத்துவார்கள் என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது. மேலும், தொழில் நிறுவனங்களில் ஆய்வு என்ற பெயரில் இன்ஸ்பெக்டர்கள் தொந்திரவு கொடுப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வெளிப்படையான ஆயவு மேற்கொள்ளும் திட்டம் கொண்டுவரப்பட்டு, இதற்காக  “ஸ்ரம் சுவிதா” என்ற இணையத்தளம் உருவாக்கப்படுமாம். இன்ஸ்பெக்டர்கள் 72 மணி நேரத்துக்குள் தங்கள் அறிக்கையை அதில் தாக்கல் செய வேண்டுமாம். அப்படி அவர்கள் ஆவு செய்து அளிக்கும் அறிக்கையின்படி முதலாளிகள் தங்கள் நிறுவனங்களிலுள்ள குறைகளைத் தாங்களே சரிசெய்து கொள்ள வேண்டுமாம். முதலாளிகளின் வரைமுறையற்ற கொள்ளைக்கு வழிசெய்து கொடுப்பதுதான் மோடியின் இந்த ஒற்றைச் சாளர நிர்வாகமுறை. குறைவான அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்ற மோடியின் முழக்கத்தின் பொருள், முதலாளிகளை மேற்பார்வையிடுவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் அரசு கொண்டிருக்கும் அதிகாரங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டுவதுதான்.

மொத்தத்தில், தொழிலாளர் உரிமைகளைப் பறித்து, வளர்ச்சி என்ற பெயரில் உழைக்கும் மக்களை அவர்களது வாழ்வாதாரத்துக்கான நிலத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றி, சுற்றுச்சூழலை நாசமாக்குவதற்கு தாராள அனுமதியளித்து அந்நிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதுதான் மோடியின் நயவஞ்சகத் திட்டம். தரகுப் பெரு முதலாளிகளும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் தடையின்றிக் கொள்ளையடிக்க வாய்ப்புகளை பட்ஜெட்டின் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ள மோடி அரசு, அதுவும் போதாதென்று தொலைத்தொடர்பு, ரயில்வே துறையின் உள்கட்டமைப்பு,  இராணுவத் துறை மற்றும் காப்பீடு துறைகளில் அந்நிய முதலீட்டுக்கு தாராள அனுமதி, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை என்று மூர்க்கத்தனத்துடன் நாட்டை விற்கக் கிளம்பிவிட்டது. இவற்றின் மூலம் அந்நிய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தலாமேயன்றி, அந்நிய முதலீடு பெருகும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியில் ஏறத்தாழ 45 சதவீதத்தை சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள்தான் நிறைவு செகின்றன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் ஏறத்தாழ 40 சதவீத அளவுக்குப் பங்களிப்பதும், ஏறத்தாழ 10 கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பளிப்பதும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள்தாம். இச்சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டுமென்ற விதியை ஒழித்துக்கட்டி, இத்தகைய நிறுவனங்களுக்கு எவ்வித சலுகையுமின்றி நசிவடையச்செய்துவிட்டு, மேக் இன் இந்தியா என்று முழங்குகிறார் மோடி. மேக் இன் இந்தியா பற்றி அவர் ஆரவாரம் செய்து கொண்டிருக்கும்போதே, சென்னை-சிறீபெரும்புதூர் சிறப்புப்பொருளாதார மண்டலத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நோக்கியா நிறுவனம் மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக உலகின் பல ஏழை நாடுகளும், குறிப்பாக ஆசியப் புலிகள் என்று சித்தரிக்கப்பட்ட மலேசியா, தைவான் போன்ற நாடுகளும் இத்தகைய ஏற்றுமதி அடிப்படையிலான உற்பத்தியில் ஈடுபட்ட போதிலும், அந்நாடுகளால் எந்த முன்னேற்றத்தையும் சாதிக்க முடியவில்லை.

இந்தியாவில் ராஜீவ் ஆட்சிக் காலத்தில் இத்தகைய பொருளாதாரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அவரது ஆட்சியிலும், அதற்குப் பின்னர் வந்த ஆட்சிகளிலும் தொடர்ந்து பின்பற்றப்பட்டுள்ள போதிலும் பெருந்தோல்வியிலும் பேரழிவிலும்தான் முடிந்துள்ளது. மேலும், அந்நிய முதலீடுகளும் ஏகாதிபத்திய உலகமயமாக்கமும் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியைத்தான் சாதித்துள்ளன என்பதை முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளே ஒப்புக் கொள்கின்றனர். உலகமயமாக்கத்தின் கீழ் வேலைவாய்ப்புகளின் வளர்ச்சி குறைந்துள்ளதை சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு(ஐ.எல்.ஓ.)வெளியிட்டுள்ள புள்ளிவிவரமே உறுதிப்படுத்துகிறது.

ஆனால் அடிமுட்டாள் மோடியோ, இப்பேரழிவுப் பாதையைத்தான் வளர்ச்சிக்கான, நாட்டின் முன்னேற்றத்துக்கான பாதை என்கிறார். முதலில் நாட்டின் வளர்ச்சி, அப்புறம் தொழிலாளர் நலனைப் பார்ப்போம் என்கிறார். இங்கே நாடு என்றால் அவரது அகராதியில் கார்ப்பரேட் முதலாளிகள். எது நாடு, இது யாருக்கான வளர்ச்சி என்ற கேள்வி எழுப்பி,வர்க்க உணர்வுள்ள தொழிலாளி வர்க்கம் மோடி கும்பலின் சதிகளை அம்பலப்படுத்தி போராட்டங்களை நடத்துவதன் மூலமே இப்பேரழிவையும் தாக்குதலையும் தடுத்து நிறுத்த முடியும்.

– மனோகரன்
_______________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2014
_______________________________

மேக்கேதாட்டு அணை குடிநீருக்கா, முதலாளிகளுக்கா ?

1

வம்பர் 11-ம் தேதியன்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் (M.B.Patil) கரும்பு விவசாயத்தை விரிவுபடுத்துவதற்காகவும், பெங்களூரு மக்களின் குடிநீர் மற்றும் மின்சாரத் தேவைக்காகவும் மேக்கேதாட்டு (ஆடு தாண்டும் காவேரி) என்ற இடத்திலும், மைசூரின் சுற்றுவட்டாரப் பகுதியிலும் அணைகள் கட்ட இருப்பதாக அறிவித்தார். கர்நாடக வனப்பகுதியில் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் மேக்கேதாட்டு என்ற பகுதியில் 48 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட சமநிலை நீர்த்தேக்கமாகவும், இது கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு சமமான பெரிய அணையாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கினை தர மறுத்து வருகின்ற கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு, தஞ்சை டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் சதித்திட்டம்!

கர்நாடக அரசு இது போன்று மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டப்போவதாக அறிவிப்பது முதல் முறை அல்ல. 1967ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அவ்வப்போது அணை கட்டப்போவதாக அறிவித்து வந்துள்ளது. முக்கியமாக, 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கேட்டு கர்நாடக அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து மனு செய்து வந்துள்ளது. இந்தத் திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், இத்திட்டத்திற்கு காவிரி தீர்ப்பாயம் அனுமதியளிக்கவில்லை என்பது உண்மையின் ஒரு பகுதிதான். அடர்ந்த காட்டில் 2500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பை இந்த திட்டம் மூழ்கடிக்கும், வனவிலங்குகளை பாதிக்கும் போன்ற பல காரணங்களால் வனத்துறையும் சுற்றுச்சூழல் துறையும் அனுமதியளிக்கவில்லை. இது ஒட்டுமொத்த கர்நாடக மக்களுக்கும் எதிரான திட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உண்மையை மறைத்துவிட்டு, தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பதால்தான் அணை கட்டமுடியவில்லை என்று கன்னட மக்களிடம் பிரச்சாரம் செய்து கன்னட இனவெறியைத் தூண்டிவிடுகிறது, கர்நாடக அரசு.

பெங்களூரு நகரத்தின் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் என்ன?

  • பெங்களூருக்கு நாள்தோறும் காவிரியில் இருந்து எடுத்து வினியோகம் செய்யப்பட்டு வரும் 140 கோடி லிட்டர் நீரில் 52 சதவீதம் நீரை வீணடிப்பதாக இந்திய அரசும் மத்திய குடிநீர் கமிசனும் தொடர்ந்து கர்நாட அரசை எச்சரித்து வருகின்றன. இதற்கு காரணம் குடிநீர் வினியோகம் பன்னாட்டுக் கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான்.
  • குடிநீர் தட்டுப்பாடு யாருக்கு? கூலி ஏழைத் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், வியாபாரிகள், ஆசிரியர்கள் போன்ற கீழ்த்தட்டு மக்களுக்குத்தான் குடிநீர் தட்டுப்பாடு. மால்கள், ஸ்டார் ஓட்டல்கள், பன்னாட்டுக் கம்பெனிகள், உல்லாச சுற்றுலா விடுதிகள், ஐ.டி. கம்பெனிகளுக்குத் தான் முன்னுரிமை கொடுத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சமச்சீர் குடிநீர் வினியோகம் செய்தாலே பெங்களூரு மக்களுக்கு முழுமையான குடிநீர் வழங்க முடியும்.
  • பெங்களூரு மாநகர எல்லைக்குள் சிறிதும் பெரிதுமாக 2789 ஏரிகள் உள்ளன. இவற்றிற்கு நீர்வரும் வழிகள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 99% ஏரிகள் சாக்கடைகளாகவும் கார்ப்பரேட் கம்பெனிகளின் கழிவுகள் கொட்டும் இடங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. பல நூற்றுக்கணக்கான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
  • கர்நாடகாவின் தேம்ஸ் நதி என்றழைக்கப்படும் ஆர்க்காவதி ஆறும் பெங்களூரு நகர ஏரிகளின் நீரையும் சுத்திகரித்து வினியோகிக்கும் திட்டத்தை சீரியமுறையில் செயல்படுத்தவில்லை. இதற்கான நிதி ஒதுக்கீடும் மிகக் குறைவு.
  • கேளிக்கைப் பூங்காக்கள், செயற்கை கடல், கோல்ப் மைதானங்கள், இரவு நேர கிளப்புகள், நட்சத்திர விடுதிகள், குதிரைப் பந்தய மைதானங்களுக்கு பல லட்சம் லிட்டர் நீர் தினந்தோறும் வாரி இறைக்கப்படுகிறது.

மொத்தத்தில், கார்ப்பரேட் முதலாளிகள், மேட்டுக்குடி மக்களுக்கான மேற்கண்ட நடவடிக்கைகளை அரசு நிறுத்தாமல், காவிரியில் இருந்து நீரைக் கொண்டுவருவதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை என்று கர்நாடகத்தில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முக்கியமாக, குடிநீரை அதிக அளவில் கொண்டுவருவதால், அதே அளவுக்கு கழிவு நீரும் வெளியேறும். இதனை மேலாண்மை செய்வது மேலும் சிரமமான விசயமாக இருக்கும் என்று பலர் தெரிவிக்கின்றனர். இத்தனையையும் மீறிதான் பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக காவிரி நீரைக் கொண்டுவர இருப்பதாக கர்நாடக அரசு பொய் பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து வருகிறது.

[நோட்டிசை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்]

மின்தடை உழைக்கும் மக்களுக்கு! உல்லாச வாழ்க்கை மேட்டுக்குடி மக்களுக்கு!

மேலும், பெங்களூரு நகரத்தின் மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கர்நாடக அரசு கூறுகிறது. மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துவது யார்?

  • கார்ப்பரேட் கம்பெனிகள், உல்லாச விடுதிகள், மால்கள், ஸ்டார் ஓட்டல்கள் இவை ஒருநாளுக்குப் பயன்படுத்தும் மின்சாரத்தை கொண்டு ஒட்டுமொத்த கர்நாடக மக்களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்க முடியும். ஆகையால், மின்பற்றாக்குறை என்பது ஒரு மோசடி பிரச்சாரம்.
  • தற்போது கர்நாடக அரசு அமைக்க இருக்கும் மின்நிலையங்கள் கூட கார்ப்பரேட் ஆலைகள்தான் செய்ய இருக்கின்றன. மின்சாரத்தை முழுமையாக தனியார்மயமாக்குவதே கர்நாடக அரசின் குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.

கரும்பு விவசாயத்தை விரிவுபடுத்துவது யாருக்காக?

எம்.பி.பாட்டீல் கரும்பு விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் உதவும் என்று கூறியுள்ளார். சுமார் 4.5 லட்சம் ஹெக்டேர் கரும்பு விவசாயம் விரிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். இத்திட்டத்தினால் கரும்பு விவசாயிகள் நன்மை பெறப்போவதில்லை. ஏற்கனவே, கரும்பு விவசாயிகள் தற்கொலையில் கர்நாடக மாநிலம் முதலிடம் வகிக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், கரும்பு விவசாயத்திற்கு போதுமான நீர் இல்லை என்பதல்ல. மாறாக, கரும்புக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பதே முக்கியமான காரணம்.

அடுத்து, கரும்பு விவசாயிகளுக்கு உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் உரிய வகையில் வழங்கப்படவில்லை. சர்க்கரை ஆலை முதலாளிகள் கர்நாடக விவசாயிகளை கசக்கிப் பிழிவதும், அதற்கு எதிராக விவசாயிகள் நடத்தியப் போராட்டங்களும் நாடறியும். மேலும், கரும்பு விவசாயத்தில் மூலம் சர்க்கரை ஆலை முதலாளிகள் மட்டுமல்ல, கரும்பிலிருந்து மின்சாரம், எரிசாராயம் தயாரிக்க இருப்பதாகவும் கர்நாடக அரசு கூறியுள்ளது. இதன் மூலம், பல ஆயிரம் கோடி ரூபாய் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க வழிவகை செய்து வருகிறது.

பெங்களூரு மாஸ்டர் பிளான் 2031

பெங்களூரு மாஸ்டர் பிளான் 2031 என்ற பெயரில் நெதர்லாந்து கம்பெனி மூலம் பெங்களூரு நகர விரிவாக்கத் திட்டத்தை கர்நாடக அரசு போட்டு வருகிறது. இத்திட்டம் முழுவதும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனிலிருந்து போடப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆர்க்காவதி நதி முதல் மேக்கேதாட்டு வரை சுற்றுலா தளங்களையும் கேளிக்கை விடுதிகளை அமைப்பது, பெங்களூரு நகரத்தில் உள்ள உழைக்கும் மக்களையும் நடுத்தர மக்களையும் நகரத்தை விட்டு வெளியேற்றுவது என்பதைத்தான் திட்டமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த பெங்களூரு மாஸ்டர் பிளான் திட்டத்திற்கு கன்னட மக்கள் மத்தியிலேயே எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. இந்த வளர்ச்சிக்குத்தான் காவிரி நீரைக் கொண்டுவர கர்நாடக அரசு துடிக்கிறதே ஒழிய, உழைக்கும் ஏழை மக்களுக்கு நீரைக் கொண்டுவருவதற்காக அல்ல!

தொடரும் கர்நாடக அரசின் சதித்திட்டம்:

இவையெல்லாம் ஒரு புறமிருக்க, தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை உரிய வகையில் வழங்க கர்நாடக அரசு  ஒவ்வொரு ஆண்டும் மறுத்து வருகிறது. இந்நிலையில், உபரிநீரைத்தான் தேக்கி பெங்களூருவுக்கு கொடுக்க இருக்கிறோம் என்பதும் சுத்தப் பொய்! ஏற்கனவே, தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்கும் நீர் என்பது, மழைக்காலங்களில் அணைகள் நிரம்பி வழிந்தோடும் நீரைத்தான். இந்த நீரையும் நிரந்தரமாக தடுப்பதற்காகத்தான் தற்போது, மேக்கேதாட்டுப் பகுதியில் அணை கட்டும் பணியை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது.

தமிழகத்திற்கு தண்ணீரை தரக்கூடாது என்பதில் கர்நாடகா ஏன் இவ்வளவு உறுதியாக உள்ளது? தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுப்புத் திட்டத்தை அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது, கிரேட் ஈஸ்டர்ன் என்ற பன்னாட்டுக் கம்பெனி. இதற்கு மத்திய, மாநில அரசுகள் பக்கத் துணையாக இருந்து வருகின்றன. இந்த கிரேட் ஈஸ்டர்ன் கம்பெனிக்கு எதிராக காவிரி டெல்டா விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்கள் போராடுவதற்கு காரணமாக இருக்கும் கொஞ்ச நஞ்ச விவசாயத்தையும் ஒழித்தால்தான் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தங்குதடையின்றி அமுல்படுத்த முடியும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் இந்த கார்ப்பரேட் முதலாளிகளின் திட்டத்தின் ஒரு பகுதிதான் கர்நாடக வனப்பகுதியில் காவிரியின் குறுக்கே அணைகட்டும் திட்டமும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இந்த திட்டத்தை மறைக்கும் வகையில், குடிநீர் தட்டுப்பாடுதான் பிரச்சனை என்று பெங்களூரு மக்களிடம் கூறி, குடிநீர் கட்டணத்தை உயர்த்தியுள்ளது கர்நாடக அரசு. இதன் மூலம் காவிரியில் புதிதாக அணை கட்டி நீரை எடுப்பதுதான் தீர்வு என்ற ஒரு கருத்தை சதித்தனமாக திணித்து வருகிறது. கர்நாடக அரசின் இந்த சதித்திட்டத்தை பெங்களூரு மக்கள் புரிந்து கொண்டு, சமச்சீர் குடிநீர் வினியோகத்திற்காகப் போராட வேண்டும்.

உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார மன்றங்களைக் கட்டி எழுப்புவோம்!

மேலும், கார்ப்பரேட் முதலாளிகளின் மீத்தேன் எடுக்கும் திட்டம், அணை கட்டும் திட்டம் எல்லாம் கிராமப்புற விவசாயிகளை கூலி அடிமைகளாக பெங்களூர், சென்னை, ஒசூர் போன்ற நகரங்களை நோக்கி வீசியெறிவதாக உள்ளன. நகரத்தில் அவர்கள் அமைக்கும் நவீன தொழிற்சாலைகளுக்கு கொத்தடிமைகளாக குறைந்த கூலிக்கு இவர்களை சுரண்டுவதற்கான திட்டமாக உள்ளன. இதற்கேற்ப தொழிலாளர் சட்டங்களையும் ஒழித்துக்கட்டி மொத்த மக்களையும் நவீன கொத்தடிமைகளாக்குகின்றனர்.

மொத்தத்தில், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவது என்பது கார்ப்பரேட் முதலாளிகளின் பல்நோக்குத் திட்டமாக உள்ளது. இது கர்நாடக மற்றும் தமிழக மக்களின் வாழ்வை சூறையாடுவதாக உள்ளது என்பதை நாம் உணரவேண்டும். தற்போது ஆட்சிக்கு வந்துள்ள மோடி அரசு இதுபோன்ற மக்கள் விரோத, சுற்றுச்சூழல் விரோத திட்டங்களைத்தான் வளர்ச்சித் திட்டங்கள் என்று கூறிவருகிறார். இதற்காக சட்டரீதியாக உள்ள தடைகளை எல்லாம் நீக்கி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்கிறார். இத்திட்டங்களை எதிர்ப்பவர்களை கடுமையாக ஒடுக்கி வருகிறார். நீதிமன்றங்களும் இதுபோன்ற திட்டங்களுக்கு எவ்விதத் தடையும் விதிப்பதில்லை.

ஆக, இந்த அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் அடியாளாக மாறி பகிரங்கமாக நம்மை ஒடுக்க வருகிறது. இந்த சட்டமும் நீதியும் இனியும் மக்களைக் காக்கும் என நினைப்பது முட்டாள்தனம். இதற்கு ஒரிசாவின் போஸ்கோ, தமிழகத்தில் கூடங்குளம் என பல உதாரணங்கள் நம் கண் முன்னே உள்ளன. இந்தத் திட்டங்களை தடுப்பதற்கு ஒரு வழிதான் உள்ளது. இந்த அரசின் திட்டங்களுக்கு எதிராக போராடுவது ஒன்றே வழி.

  • கார்ப்பரேட் கம்பெனிகளை நமது மண்ணைவிட்டு விரட்டியடிக்கும் வகையில் வீறுகொண்டு போராட வேண்டும்.
  • ஒவ்வொரு ஊரிலும் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தை தூக்கியெறிய வேண்டும்.
  • அவர்களது கைக்கூலிகளான ரியல் எஸ்டேட் முதலாளிகள், புரோக்கர்கள், அரசு அதிகாரிகளை விரட்டியடிக்க வேண்டும்.
  • உள்ளூர் மக்கள் அதிகாரம் செலுத்தும் வகையில் உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார மன்றங்களைக் கட்டியமைக்க உழைக்கும் வர்க்கங்கள், மக்கள் ஓரணியில் திரண்டு போராடுவோம்!
  • மக்கள் எழுச்சியின் மூலம் இதனை சாதிப்போம்!

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசின் அணைகட்டும் திட்டம்:
தஞ்சை டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும்
கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கான சதித்திட்டம்
!

  • கர்நாடக வனப்பகுதியில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசின் அணை கட்டும் திட்டமும் தஞ்சை டெல்டாவை பாலைவனமாக்கும் மீத்தேன் எடுக்கும் திட்டமும் கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்காவே!
  • காவிரியின் குறுக்கே கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியை முறியடிப்போம்! தஞ்சை டெல்டாவில் மீத்தேன் எடுப்புத் திட்ட்த்தை தடுத்து நிறுத்துவோம்!
  • உண்மையான ஜனநாயத்திற்கான மாற்று அதிகார மன்றங்களைக் கட்டி எழுப்புவோம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 25-11-2014 மாலை 5 மணி
நகராட்சி அலுவலகம் முன்பு
, ஒசூர்.

ஒசூர் ஆர்ப்பாட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தருமபுரி-கிருஷ்ணகிரி-சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு: 97880 11784 – 97513 78495 – 99433 12467