Sunday, July 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 686

நூல் அறிமுகம் : தென்னிந்தியாவைக் கண்டேன்

1

னது சொந்த வாழ்க்கையின் சொகுசுகளை ஒரு துளிகூட காய்ந்துவிடாமல் ருசிப்பவர்களும், தனது எதிர் காலத்திற்கும் தனது பெண்டு பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் கான்கிரீட் அடித்தளம் அமைத்து உறுதி செய்து கொண்டவர்களும் “என்ன செய்தார்கள் இந்த கம்யூனிஸ்டுகள்?” என்ற கேள்வியை ரொம்பவும் ஆக்ரோசமாகக் கேட்கிறார்கள்.

தாதா அமீர் ஐதர் கான்
தாதா அமீர் ஐதர் கான்

ஆனால் தாங்கள் கொண்டிருந்த லட்சியத்திற்காக, மக்கள் விடுதலைக்காகத் தனது சொந்த வாழ்வையும், உயிரையும் இழக்கத் தயாராகவிருந்த தொண்டர்கள் எந்த இயக்கத்தில் நிறைந்திருந்தார்கள் என்ற கேள்வியுடன் நவீன கால வரலாற்றைப் புரட்டினால், உலகெங்கும் அது கம்யூனிஸ்டுகளின் தியாக வரலாறாக, போராட்ட வரலாறாகவே இருக்கக் காணலாம். இந்தியாவிலும் இது அப்படித்தான்.

ஆரம்பகால இந்தியப் பொதுவுடைமை இயக்கம் பின்னாளில் நாடாளுமன்ற இயக்கமாகச் சீரழிந்து விட்டாலும், துவக்க காலப் பொதுவுடைமை இயக்கப் போராளிகளின் வரலாறு, தியாகத்திற்கும் போர்க்குணத்திற்கும் சான்று பகர்கிறது.

தோழர் அமீர் ஐதர் கானின் ‘’தென்னிந்தியாவைக் கண்டேன்’’ எனும் தன் வரலாற்று நூல் அத்தகையதோர் வரலாற்றுச் சான்று.

தாதா அமீர் ஐதர் கான்
பஞ்சாபில் முஸ்லீம் மதக் குடும்பத்தில் பிறந்து, தென்னிந்தியாவுக்கு வந்து கம்யூனிஸ்ட் கட்சி கட்டிய தாதா அமீர் ஐதர் கான்.

எளிய பஞ்சாபி முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவரான கான், சர்வதேச கம்யூனிஸ்டு அகிலத்தின் பிரதிநிதியாக ரசியாவில் சில காலம் செயல்பட்ட பின் இந்தியா திரும்பினார். தென்னிந்தியாவில் கட்சியை உருவாக்கும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னைக்குக் கிளம்பினார் கான்.

மீரட் சதி வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்ததால் தமிழகத்திலும் தலைமறைவாகத்தான் இவர் வாழ வேண்டியிருந்தது. புனை பெயரோ சங்கர். தமிழோ அறவே தெரியாது.

பஞ்சாபி முஸ்லீமாகப் பிறந்து புனைபெயரை இந்துப் பெயராக வைத்துக் கொண்டு, தமிழகத்தில் இந்து சாதிய சம்பிராதயங்களைப் பற்றி ஏதும் தெரியாமல் மொழியும் தெரியாமல் சென்னையில் வந்து இறங்கினார். அறிமுகத்திற்காக சொல்லப்பட்ட ஒரேயொரு நபரும் எதுவும் செய்ய இயலாதெனக் கைவிரித்து விட்டார். சென்னை இப்படித்தான் அவரை வரவேற்றது.

அறிமுகத்துக்கு நண்பர்கள், கைச்செலவுக்கு போதிய பணம், அவசரத் தொடர்புக்குத் தொலைபேசி வசதி, இன்னும் பல முன்னேற்பாடுகளுடன் வெளியூர்ப் பயணம் மேற்கொள்பவர்களின் கணக்கின்படி அடுத்த நாளே கான் பஞ்சாபிற்கு மீண்டும் ரயிலேறியிருக்க வேண்டும்.

ஆனால் தன்னந் தனியானாய் விடப்பட்ட போதும், இந்த முகம் தெரியாத ஊரில், மாத்யூஸ் என்ற ரயில்வேத் தொழிலாளியிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டு தனது பணியைத் தொடங்குகிறார் கான்.

இத்தகையதோர் நிலைமையில், தான் பட்ட துன்பங்கள் சந்தித்த இடர்ப்பாடுகள் ஆகியவை குறித்தும், தான் வாழ நேர்ந்த சூழல் குறித்தும் விலாவாரியாக சுவைபட எழுதுவார் என்று நாம் எதிர்பார்த்தால் ஏமாறத்தான் செய்வோம். வாழ்ந்த போது மட்டுமல்ல, பின்னாளில் வரலாறு எழுதும்போதும் தனது சொந்த சூழ்நிலைகளைக் காட்டிலும், அன்று நிலவிய அரசியல் சூழ்நிலைகளே அவருக்கு முக்கியத்துவம் நிறைந்ததாகத் தோன்றுகின்றது. எனவே அதை விவரிக்கிறார்.

‘’காந்தி – இர்வின் ஒப்பந்த காலம் அது. ஒப்பந்தம் என்னுள்ளத்தில் கசப்புணர்ச்சியை ஏற்படுத்திற்று. காந்திஜியை விமரிசிப்பதில் நான் தயவு தாட்சண்யம் காட்டவில்லை. காந்திஜி உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். கடல் நீரைக் காய்ச்சிய மக்கள் நாளடைவில் சலிப்படைந்தார்கள். சிலர் கள் இறக்கும் பனை, தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்கள். சிலர் சட்டத்தை மீறி நடக்கலானார்கள். பல இடங்களில் வன்முறை நிகழ்ந்தது. ஷோலாப்பூரில் மக்கள் நகரை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். காந்தி – இர்வின் ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை மக்கள் இயக்கம் ஏற்படுத்தியது.’’

‘’கல்லூரிகளையும், பள்ளிகளையும் விட்டு வெளியேறிய மாணவ – மாணவியரும் போராட்டக் காலத்தில் கைது செய்யப்பட்டு ஒப்பந்தத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் சிலருக்கு இனி என்ன செய்ய வேண்டும் என்று தெரிய வில்லை. இந்த ஒப்பந்தம் தேசீய விடுதலைப் போராட்டத்துக்குத் துரோகம் செய்வதாகும் என்று பேசியவர், எழுதியவர் சிலரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார்கள் நம் தோழர்கள்…

ஒப்பந்தத்தின் சாரத்துக்கு நான் தந்த விளக்கமும், விளக்க முறையும் அரசியல் அறிந்த தென்னிந்தியர் பலருக்குப் புதியவையாகத் தோன்றின. நம் இளம் தோழர்களை ஊக்குவித்தன.

ஆங்கில சுயசரிதை
அமீர் ஐதர் கானின் ஆங்கில சுயசரிதை (செயின்ஸ் டு லூஸ்).

1930-32 மாணவர்களிடம் கம்யூனிச அரசியல் தீப்போல பற்றிக் கொண்டகாலம். கான் இதற்கு முக்கியக் காரணகர்த்தா. அவர்களை நகருக்கு வெளியே இருந்த பி அண்டு சி பஞ்சாலைக்கு அழைத்துப் போனார் கான். தொழிலாளர்களுடன் அவர்கள் மொழியில் அவர்கள் பிரச்சனைகளைப் பற்றி உரையாடுவது எவ்வாறு என்று சொல்லிக் கொடுத்தேன். இத்தகைய செயல்முறைப் பயிற்சியால் அவர்கள் மார்க்சியக் கொள்கையை அறியலானார்கள்.

மத்திய தர வர்க்கத்துக்குள் கீழ்த்தட்டைச் சார்ந்த மாணவர்களுக்கு அந்த நாள்களில் நாள்தோறும் சிற்றுண்டிக்காக ஆறணா தரப்படுவது வழக்கம். இளம் தோழிலாளர் சங்கத்துக்கு அந்தத் தொகையை வழங்கி விடுவார்கள். இந்த உதவியினால் சிறு வெளியீடுகளையும் பத்திரிக்கையும் கொண்டு வர முடிந்தது…’’

சென்னை தீவுத்திடல் மைதானத்தில் தற்செயலாக ராஜவடிவேலு(முதலியார்)வைச் சந்தித்தார் கான். ‘’அவர் நீதிக்கட்சியின் பத்திரிக்கை ஆசிரியராக இருந்தவர். நீதிக் கட்சி சென்னை மாகாண அமைச்சரவை அமைந்த பிறகு அவர் எதிர் பார்த்தது போல் சாதி அமைப்பு, ஏற்றத் தாழ்வுகள், சமூகத்திமை இழிவுகள் அறவே ஒழிய வில்லை; மாறாக, பிரிட்டிஷாரோடு செர்ந்து கொண்டு அவர்கள் சுரண்டல் வர்க்க நலன்களுக்கு ஆதரவாக மாறி விட்டார்கள்.

இதனால் அவர் நீதிக் கட்சி நபர்களுக்கு எதிராக எழுதத் துவங்கினார்; நீதிக்கட்சி ஆசிரியர் பதவியிலிருந்து அவரை விலக்கியது. அவரும் ‘ஜனமித்திரன்’ என்றொரு ஏடு தொடங்கி தானே அச்சிட்டு பறையர், துப்புரவு செய்வோர் சேரிக்கு எடுத்துச் சென்று விற்றார்.’’

“ராஜ வடிவேலுவை மூன்று நாட்களாகப் பல மணி நேரம் வாழ்க்கை, நாட்டு அரசியல் நிலைமை ஆகியவை பற்றிக் கேள்விகள் கேட்டுக் குடைந்தெடுத்தேன். தென்னிந்தியச் சாதி அமைப்பு, குறிப்பாகப் பார்ப்பன ஆதிக்கம் உள்ளிட்ட எல்லா அநீதிகளையும் எதிர்த்து எழும் அஞ்சாநெஞ்சம் படைத்த போராளி – ஆனால் ஒரு பிரச்சனையைப் பற்றியோ, அல்லது அநீதி என்று அவருக்குத் தோன்றியதை எதிர்த்துப் போராடும் வழிமுறை பற்றியோ காரண காரணிகளைக் கண்டறிந்து செயல்படுவது என்பது அவருடைய இயல்பில்லை என்பதைக் கண்டேன்.

தம் திறமையை பற்றி உணர்வு இல்லாது அமைப்பில் திரளாமல் இருக்கும் சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டு வாடும் மக்களை அமைப்பு முறையில் திரட்டுவது வர்க்க உணர்வு பெற்றோர் அனைவரது கடமை…’’

ராஜவடிவேலு கானின் தர்க்கத்தை ஒப்புக் கொண்ட கணத்திலேயே ‘ஜனமித்திரன்’ ‘முன்னேற்றம்’ என்ற பெயரோடு இரு வார ஏடாகப் புதிய வடிவெடுத்தது. அவரே ஆசிரியர், அச்சிடுபவர், வெளியீட்டாளர் எல்லாம். கானோடு ராஜவடிவேலு, கம்மம்பாடி சத்திய நாராயணா இருவர் முழுநேர ஊழியர்களாக இருந்து 30 பேர் கொண்ட ‘இளைய தொழிலாளர் சங்கம்’ அமைத்தார்கள். இது கம்யூனிஸ்ட் கட்சி சட்ட விரோதமாக்கப்பட்டதால் செய்து கொள்ளப்பட்ட புது ஏற்பாடு. ‘முன்னேற்றம்’ பத்திரிக்கை கைகளால் 500 படிகள் அச்சிடப்பட்டது. பணவசதி இல்லை; அனைத்துமே தொழிலாளர் – மாணவர் உழைப்பில் தான் நிறைவேறியது.

‘’நரம்புகளைக் கொடுமையான சோதனைக்குள்ளாக்கும் இக்கடும் பணியில் எப்பொழுதாவது நான் தோழர் இராஜவடிவேலுக்கு உதவி செய்வேன்! வேலை முடிந்து இருவரும் சேர்ந்து சாப்பிடுவோம். இன்முகத்துடன் அவர் மனைவி உணவு பிரமாறுவார்.

இவ்வாறு கடும் உழைப்பின் பின் வெளிவரும் இதழ்களை விநியோகிக்க ‘இளைய தொழிலாளர் சங்க’ உறுப்பினர் ஒவ்வருவரும் முயன்று உழைக்க வேண்டி இருந்தது. ஒவ்வொருவரும் விற்பனைக்காகப் பங்கு பிரித்துக் கொள்வோம். தொழிலாளர்களை அவரவர் இல்லங்களில் சந்திப்போம்; ஒவ்வொரு கட்டுரையும் சொல்வதென்ன, கொண்ட கருத்தென்ன என்பது பற்றித் தெளிவாக விளக்குவோம். விவாதிப்போம். சுருக்கமாக ’31-32 ஆம் ஆண்டுகளில் போர்க்குணம் மிக்க தொழிலாளி வர்க்கத்துக்குள் பிரச்சார ஏடாக ‘முன்னேற்றம்’ செயல்பட்டது’’என்று கம்மம்பாடி சத்தியநாராயணா கூறும் குறிப்பு அவர்களது கடுமையான உழைப்பை விளக்குகிறது.

அமீர்கான் சென்னை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட சம்பவம் அவரது அளவற்ற துணிச்சலைக் காட்டுகிறது. ‘’சென்னை மாகாண மேஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்டிரேட்டுக்கு மட்டும் இருபுறமும் மின்விசிறிகள்.. அது கோடை. உள்ளே புழுங்கிற்று. நாங்கள் இருந்த பக்கம் விசிறிகள் ஓடவில்லை. ‘எங்களைத் துன்புறுத்திப் பொருளாதாரச் சிக்கனம் செய்வது தவறு, விசிறி வேண்டும்’ என்று உரக்கக் கத்தினேன்.

அச்சமயத்தில் அரசு தரப்பில் எவரோ ஒருவர் ‘உமது வழக்குரைஞர்தான் உமக்கு விசிறி வைக்க வேண்டும்’ என்றார். உடனே கோபாவேசத்தில் அவர்கள் மேல் எறிய நாற்காலியைத் தூக்கினேன்… அரசுக் குற்றச் சாட்டைக் கண்டு நான் அஞ்சவும் இல்லை, நீதி மன்றத்தின் கண்ணியம் பற்றிக் கவலைப்படவுமில்லை என்று காட்டவே இவ்வாறு செய்தேன்…’’

சிறைவாசம் 2 ஆண்டுகள். சென்னை, சேலம், கோவை, ராஜமகேந்திரபுரம் என்று 4 இடங்களில் மாற்றி மாற்றி அடைக்கப்பட்டார் கான். சிறையிலும் அவரது போராட்டம் நிற்கவில்லை.

இராஜமகேந்திரபுரம் சிறை மேலாளர் இச்சென்(HICHEN)கானைப் பணியவைக்க தந்திரம் ஒன்று தீட்டினார். இயக்கத்துக்குத் தலைமுழுகி விட்டுச் சென்னை மாகாணத்தை விட்டு வெளியேறி விடுவதாக உறுதிமொழி அளித்தால் விடுதலை செய்து விடுவதாக ஆசை காட்டினார்.

‘’வாழ்க்கை வெளியில் வாழ்வதற்காகவே. சிறையிலன்று. சிறைவாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?’’ என்றார். நான் அவரை வெளியே போய்விடச் சொன்னேன். ஒரு நாளில் இவ்வாறு எழுதினேன்: ‘’பல்லாயிரம் மைல்கள் கடந்து இங்கு வந்து ஆளுவதற்குப் பிரிட்டிஷ்காரர்களுக்கு உரிமை உள்ளதென்றால் எனக்கு இந்த நாட்டில் வாழ்வதற்காகவாவது உரிமை உண்டு… ஆகவே, என் உயிருள்ள வரை சிறையில் வைத்திருக்கலாம். எந்த நிபந்தனையையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்…’’

47-க்குப்பின் அவரது சொந்த ஊரான ராவல்பிண்டி (பாகிஸ்தான்) சென்றார் கான்; தொழிற்சங்க வேலைகளில் ஈடுபட்ட கானுக்கு ‘சுதந்திர’ பாகிஸ்தான் கொடுத்த பரிசு 14 ஆண்டு சிறைவாசம்.

கட்சி கட்டுவதைப் பற்றி கான் சொன்ன வார்த்தைகள். ஆழமான பொருள் உள்ளவை:

‘’இதயங்களைக் கனிவித்தலும் கனிவித்த இதயங்களைக் காத்தலும் மனிதத் திறமையில் பயன் மிகுந்தவை’’.

– புதூர். இராசவேல்
_______________________________________
புதிய கலாச்சாரம் நவம்பர் 1997
_______________________________________

‘தென்னிந்தியாவைக் கண்டேன்’ – அமீர் ஹைதர் கான் (விலை ரூ. 160)

நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044-2841 2367

புதிய கார்ப்பரேட் வங்கிகள் : திருடன் கையில் பெட்டிச்சாவி !

11

ந்து மதப் புராணக் கதையான மஹாபலி சக்கரவர்த்தி வதத்தில் வாமன அவதாரத்தில் வந்த பெருமாள் எடுத்து வைத்த மூன்றாவது அடி முக்கியமானது.  அந்த மூன்றாவது அடிதான் மஹாபலியின் தலையில் இறங்கியது. வங்கித் துறையைத் தனியார்மயமாக்குவதிலும் அப்படிபட்டதொரு மூன்றாவது அடியை எடுத்து வைத்திருக்கிறது, மன்மோகன் அரசு. முதல் அடியில், வங்கித் துறையில் தனியார் நுழைய அனுமதிக்கப்பட்டனர்; இரண்டாவது அடியில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பங்குகள் தனியாருக்கு விற்க அனுமதி அளிக்கப்பட்டது. மூன்றாவது அடியில், கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாகவே வங்கிகளைத் திறந்து கொள்ள அனுமதி அளித்து, இதன் மூலம் வங்கிகள் தேசியமயமாக்குவதற்கு முன்பிருந்த நிலையை – வங்கித் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கோலோச்சும் நிலையை மீண்டும் உருவாக்க முனைந்திருக்கிறது, காங்கிரசு அரசு.

மங்களூர் வங்கி ஊழியர் போராட்டம்
வங்கி ஒழுங்காற்றுச் சட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக செய்யப்பட்ட திருத்தங்களை கண்டித்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் மங்களூர் நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

26 இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் அனுமதி வேண்டி விண்ணப்பித்திருப்பதாகவும், தகுதி வாய்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கிகளைத் திறந்துகொள்ள உரிமம் வழங்கும் உற்சவம் ஜனவரி 1, 2014 முதல் தொடங்கி விடுமென்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த 26 நிறுவனங்களுள் டாடா, பிர்லா, எல் அண்ட் டி, ரிலையன்ஸ், டி.வி.எஸ். ஆகிய தொழில் குடும்பங்கள் மட்டுமின்றி, நவீனமான முறையில் கந்துவட்டித் தொழிலை நடத்தி வரும் முத்தூட் பைனான்ஸ் உள்ளிட்டுப் பல்வேறு ”பிளேடு” கம்பெனிகளும் அடங்கியுள்ளன.

நிதித்துறையில் அரசின் கட்டுப்பாட்டை முற்றிலுமாக ஒழித்துக்கட்டி விட்டு, அதனை முழுமையாகத் தனியார்மயமாக்க வேண்டும் என்று சர்வதேச நிதி நிறுவனங்களும், தர மதிப்பீட்டு நிறுவனங்களும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. அவர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தோடுதான் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி வங்கித் துறையில் மூன்றாம் கட்ட தாராளமயத்தை அமலாக்க முயலுகிறது, காங்கிரசு கும்பல். இந்த உண்மையை மறைத்து விட்டு, ”வங்கிச் சேவை இன்னும் இந்திய கிராமங்களை முழுமையாகச் சென்றடையவில்லை. அதனை நிறைவு செய்யும் நோக்கத்தில்தான் வங்கித் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைவதற்கு அனுமதி அளித்திருப்பதாக” நாடகமாடுகிறது, மைய அரசு. வங்கித் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிப்பதால் வாடிக்கையாளர்களுக்குத் தரமான சேவை கிடைக்கும்; அத்துறையில் நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்படும் எனப் பின்பாட்டு பாடுகிறார்கள், தனியார்மயத்தின் ஆதரவாளர்கள்.

இதே வாதத்தை முன்வைத்துதான் தனியார் வங்கிகளுக்கு அரசு அனுமதி அளித்தது. அவ்வங்கிகள் கடனை வசூலிக்க குண்டர் படையை அறிமுகம் செய்து வைத்து, தமது ‘சேவை’யை மேம்படுத்தின. ”இந்தியாவில் செயல்பட்டு வரும் 12 தனியார் வங்கிகளுக்கு நாடெங்கிலும் 15,630 கிளைகள் இருந்தாலும், இதில் 2,699 கிளைகள்தான் கிராமப்புறங்களையொட்டி அமைக்கப்பட்டிருக்கிறது” என நிதி அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சுட்டிக் காட்டியிருக்கிறது. ”50 சதவீதத்திற்கும் மேலான தனியார் வங்கிகள் 2010-11ஆம் ஆண்டில் விவசாயத்திற்கு ஒரு பைசா கூடக் கடனாக வழங்கவில்லை; பொதுத்துறை வங்கிகள் வழங்கியிருக்கும் மொத்தக் கடனில் 30 சதவீதம் மட்டுமே விவசாயத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது” என இந்திய ரிசர்வ் வங்கி பிலாக்கணம் பாடியிருக்கிறது.

கிராமப்புற சிறு விவசாயிகளுக்கும் சிறுதொழில்களுக்கும் கடன் வழங்குவதை விட, ஆடம்பர நுகர்பொருட்களுக்கும், வீடு வாங்குவதற்கும் கடன்கள் கொடுப்பதற்குத்தான் வங்கிகள் முன்னுரிமை தருகின்றன என்பது வெளிப்படையாகத் தெரியும் நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் கிராமப்பற மக்களின் நிதித் தேவையை ஈடு செய்யும் விதத்தில் தமது வங்கிகளை நடத்துவார்கள் என மைய அரசு கூறுவதை அப்பாவிகள் கூட நம்ப மாட்டார்கள்.

வங்கிகளைத் திறக்கவுள்ள கார்ப்பரேட் கும்பல் விவசாயத்திற்குக் கடன் வழங்குவதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இவ்வங்கிகளில் போடப்படும் பணம் பாதுகாப்பாக இருக்குமா என்பதுதான் முக்கியமான கேள்வி. இந்திய நடுத்தர வர்க்கப் பிரிவு, தமது பணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளிலோ அல்லது அக்கம்பெனிகள் வெளியிடும் கடன் பத்திரங்களிலோ முதலீடு செய்வதை விட, வங்கிகளில் சேமிப்பதைத்தான் நம்பகமானதாகக் கருதுகிறது.  இப்பிரிவின் இந்த மனநிலையைத் தனியார்மயத்தால் கூட மாற்ற முடியவில்லை. இந்நிலையில் அவர்களின் பணத்தைச் சேமிப்பாகப் பெற்று, அதனைப் பங்குச் சந்தைக்கு மடைமாற்றி விட கார்ப்பரேட் கும்பலுக்கு வங்கி என்ற குறுக்கு வழி திறந்து விடப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் கடனை வாங்கிவிட்டு ஏப்பம் விட்டதில் முன்னணியிலிருப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் என்பது அம்பலமாகி, அம்மோசடிகள் குறித்து இப்பொழுது சி.பி.ஐ. விசாரணை நடந்துவரும் வேளையில் வங்கிகளைத் திறந்துகொள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது திருடன் கையிலே பெட்டிச் சாவியைக் கொடுப்பதற்கு ஒப்பானது.

அப்படிப்பட்ட மோசடிகள் நடைபெறாத வண்ணம் தடுக்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டிருப்பதாகச் சமாதானம் சொல்கிறது, மைய அரசு.  இதைக் கேட்கும்பொழுது கள்ளன் பெருசா, இல்லை காப்பான் பெருசா என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்டுப் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் 7,500 கோடி ரூபாயைக் கடனாக வாங்கி, அதனைக் கட்டாமல் ஏமாற்றி வரும் விஜய் மல்லையாவைச் சட்டம் என்ன செய்து விட்டது? அதிக வட்டி தருவதாக ஆசை காட்டிப் பொதுமக்களிடமிருந்து பெற்ற சேமிப்புகளை ஏப்பம் விட்ட, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு நிதி நிறுவன அதிபர்கள் ஆயுள் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டிருக்கிறார்களா? அல்லது, ஏமாந்தவர்களுக்கு அவர்களின் பணம்தான் முழுமையாகக் கிடைத்து விட்டதா?

பங்குச் சந்தை ஊழல், 2ஜி ஊழல், நிலக்கிரி ஊழல் எனப் பல்வேறு ஊழல்களின் ஊற்றுக்கண்ணாக இருந்துவரும் கார்ப்பரேட் கும்பல், ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி ரூபா பெறுமான வரி மோசடிகளில் ஈடுபட்டு வரும் கார்ப்பரேட் கும்பல், வங்கிகளை நாணயமாக நடத்தும் என்பதற்கு ஏதேனும் உத்தரவாதமுண்டா? வங்கிகள் அரசுடமை ஆக்கப்படுவதற்கு முன்பாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தி வந்த வங்கிகளில் நடந்த மோசடிகளைக் கணக்கில் கொண்டால், எப்பேர்பட்ட அபாயத்தை மீண்டும் இந்திய மக்களின் தலையில் சுமத்த காங்கிரசு கும்பல் தயாராகி வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

-குப்பன்
_____________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2013

_____________________________

பவா செல்லத்துரை: திருவண்ணாமலையில் ஒரு பவர் ஸ்டார் !

48

திருவண்ணாமலை ஊர் பெயரைக் கேட்டாலே ஒரு எரிச்சல் வரும். கிரிவலம், விசிறி சாமியார், ரமண ஆசிரமம், மகா தீபம் போன்ற ஆன்மீக சுற்றுலாக்களில் உருண்டு புரளும் அந்த ஷேத்தரம் உண்மையில் ஒரு சபிக்கப்பட்ட ஊர் போலும். அழகான மலைகளும், சுறுசுறுப்பான உழைக்கும் மக்களும் கொண்ட அந்த ஊர் இத்தகைய பக்தி வணிகத்தால் மறைக்கப்படுகிறது. தன்னை பறிகொடுத்தும் வருகிறது.

இந்த எதிர்மறை பட்டியலில் இன்னுமொரு குறிப்பு சேர்ந்திருப்பது நானே விரும்பி செய்த ஒன்று அல்ல.

_____

பவா செல்லதுரை
“ஆவணப் படத்தின் தலைப்பே ‘பவா என்றொரு கதைசொல்லி‘ என்பதுதான்”

‘‘வா செல்லதுரையைப் பற்றி ஆவணப்படம் எடுத்திருக்காங்களாம். விழாவுக்கு வர்றீங்களா?‘‘ நண்பர் ஒருவர் கேட்டார்.

எனக்கு ஒரு கணம் குழப்பம். ஆவணப்படம் அவர் எடுத்ததா? அவரைப் பற்றியதா? ‘‘அவரைப் பத்தினதுதான்‘‘ என்று அழைப்பிதழைக் காட்டினார்.

தமிழச்சி தங்கபாண்டியன், ஜெயமோகன், பாலு மகேந்திரா, இயக்குநர் சேரன், செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள் என பெருந்தலைகளின் பெயர்கள் கண்ணில் பட்டன. வலைப்பதிவரான செந்தழல் ரவிதான் ஆவணப் படத்தின் தயாரிப்பாளர். இயக்கம், (காஞ்சனை)ஆர்.ஆர்.சீனிவாசன்.

தமிழ்த் தேசியம், காவி தேசியம், போலி கம்யூனிஸ்டுகள், கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள், என்.ஜி.ஓ. காரர்கள், பத்திரிகையாளர்கள், சிறுபத்திரிகை இலக்கியவாதிகள், சினிமா படைப்பாளிகள் என பன்முகங்கள் சங்கமிக்கும் அந்த விழா சுவாரஸ்யமானதாக இருக்கும் என்று தோன்றியது. ஒரு ஞாயிறு நேரத்து மாலையை இலக்கிய வம்புகளால் இட்டு நிரப்பலாம் என்று கிளம்பினேன். பிரசாத் லேப் அரங்கில் நிகழ்ச்சி. செல்லும் வழியில் முகநூலைத் தோண்டிய போது பவா செல்லதுரை எழுதியிருந்த குறிப்பொன்றை படிக்க நேர்ந்தது.

அவருக்கு நடிகர் மம்முட்டி போன் செய்தாராம். ‘‘உங்களைப் பத்தி ஆவணப் படம் எடுத்திருக்காங்களாமே..’’ என்று அவர் கேட்க, ‘‘அதை ஆவணப்படம் என்று முழுமையாக சொல்ல முடியாது. நான் சில கதைகள் சொல்கிறேன். அதை படமாக்கியுள்ளனர். ஆவணப் படத்தின் தலைப்பே ‘பவா என்றொரு கதைசொல்லி‘ என்பதுதான்’’ என்று இவர் சொல்லியிருக்கிறார். ‘‘திரையில் உங்க முகம் மட்டுமே வந்தா நல்லாவா இருக்கும்’’ என்று மம்முட்டி அக்கறையுடன் கேட்க, ‘‘இல்லே… பி.சி.ஸ்ரீராம், மிஸ்கின் போன்றவர்கள் இடையிடையே என்னைப் பத்தி பேசியிருக்காங்க’’ என்று பவா பதில் சொல்லியிருக்கிறார். ‘‘அப்படின்னா என்கிட்ட ஏன் கேட்கலை’’ என்று மம்முட்டி உரிமையுடன் கேட்டிருக்கிறார். கொல்கத்தாவில் இருந்ததால் விழாவில் கலந்து கொள்ளா இயலாமை குறித்தும் வருத்தப் பட்டிருக்கிறார் மம்முட்டி.

‘‘அவர் எவ்வளவு பெரிய நடிகர்? அவர் தன்னை நினைவில் வைத்துக்கொண்டு போன் செய்து இத்தனை தூரம் அக்கறையாக விசாரிக்கிறாரே..’’ என்று வியந்து, விதந்து பவா செல்லத்துரை இதை எழுதியிருப்பதுதான் முக்கியமானது. சரியாகச் சொன்னால் இது ஒரு இலக்கிய மார்க்கெட்டிங் திருப்பணி.

இதுதான் பவா. எல்லோரையும் எப்போதும் பாராட்டிக் கொண்டே இருப்பார். விழாவுக்கோ வீட்டுக்கோ வந்தவர்களையும் பாராட்டுவார். வராதவர்களையும் பாராட்டுவார். தன்னைப் புகழ்பவர்களையும் பாராட்டுவார். உள்ளுக்குள்ளே பழிப்பவர்களையும் பாராட்டுவார். புகழ வாய்ப்பு கிடைக்காதவர்களையும், முன்வராதவர்களையும் கூட பாராட்டுவார். மேற்கண்ட பிரபலங்களும் இத்தகைய இலக்கிய வழிப்பட்ட விளம்பரங்களை பதிலுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

காரணம் பவா செல்லத்துரை ஒரு தனிநபரல்ல. தமுஎகசவில் ஒரு முக்கிய தூணாக பங்காற்றியுள்ளார். வம்சி பதிப்பகம் மூலம் சில பல புத்தகங்களை வெளியிடுகிறார். இடதில் இருந்தாலும் கடைக்கோடி வலதுகள் வரை நெருங்கிய நட்பு வைத்திருப்பவர். கலை இரவு எனும் போலிக் கம்யூனிஸ்டுகளின் மொக்கை நிகழ்ச்சியை கண்டு பிடித்த அறிவாளிகளில் ஒருவர். இது போக திருவண்ணாமலையின் கோவில் ஜயர், ஆசிரமத்து நிர்வாகி முதல் பொறியியல் கல்லூரி முதலாளி வரை சகலரோடும் தொடர்பையும், நட்பையும் பேணுபவர். மாதம் ஒன்றோ மூன்றோ இலக்கிய நிகழ்ச்சிகளை உடும்பு வறுவல், காட்டுக்கோழி பிரியாணி சகிதம் நடத்துபவர்.

எனவே இப்பேற்பட்டவருடன் நட்பு பாராட்டுவது இலக்கிய, சினிமா பிரபலங்களுக்கு ஒரு மார்க்கெட்டிங் உத்தியாக தேவைப்படுகிறது. இவருக்கும் தன்னைப் போன்ற ‘சாதாரணமானவனை’ பெரும் பிரபலங்கள் கொண்டாடுவதை பிறருக்கு தெரிவித்து தான் சாதாரணமானவன் இல்லை என்று காட்ட வேண்டியிருக்கிறது.

இத்தகைய பரஸ்பரம் பறிமாறப்படும் ஒரு புகழ்ச்சி நிகழ்ச்சி, சினிமா புகழ்ச்சி மேடைகளுக்கு புகழ்பெற்ற பிரசாத் லேப் அரங்கில் நடந்தது பொருத்தமானதுதான். இனி, ஓவர் டூ பிரசாத் லேப்.

பாலு மகேந்திரா
‘‘பவா எழுதிய கதைகளை விட, சொல்லும் கதைகள்தான் மிகச் சிறப்பாக உள்ளன’’

‘பவா என்றொரு கதை சொல்லி‘ ஆவணப் படத்தின் உள்ளடக்கம் குறித்து பெரிதாக சொல்வதற்கு எதுவுமில்லை. அரங்கத்தில் அவரை புகழ்ந்து பலர் பேசியதைப் போல, கேமராவிற்கு முன்பாகவும் புகழ்ந்து பேசியுள்ளனர். அப்படி ஆவணப்படத்திலும், வெளியீட்டு அரங்கத்திலும் பேசிய அத்தனை பேருமே… பவாவின் கதை சொல்லும் திறன் குறித்துதான் எக்கச்சக்கமாக புகழ்மாரி பொழிந்தார்கள். ‘‘பவா எழுதிய கதைகளை விட, சொல்லும் கதைகள்தான் மிகச் சிறப்பாக உள்ளன’’ என்று பாலு மகேந்திரா குறிப்பிட்டார். பொதுவில் எழுதும் போது ஒரு செயற்கைத்தன்மையும் திட்டமிட்ட அறிவாளித்தனமும் வந்து விடுவதாக குறிப்பிட்ட பாலுமகேந்திராவை உள்ளுக்குள் கொலைவெறியோடு ஜெயமோகன் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆவணப்படத்தில் செந்தழல் ரவியும் இதர இலக்கியவாதிகளும் “ம்” கொட்டிக் கொண்டிருக்கும் போது பவா பேசுகிறார், கதை சொல்லுகிறார், ஊர் சுற்றிக் காட்டுகிறார், படம் காட்டி அருஞ்சொற்பொருள் விளக்குகிறார். அத்தனையிலும் அவர் பேசுவதைக் கேட்பதில் நமக்கு எந்த சுவாரசியமும் தட்டுப்படவில்லை. இந்தப் பேச்சுக்குத்தானா இத்தனை பாராட்டு பாலகுமாரா?

முதலில் சென்னைத் தமிழ் என்று துவ‌ங்கினாலும் வட தமிழகத்தில் செல்வாக்கோடு இருக்கும் அந்த தமிழ் பேசப்படும் பகுதியைச் சேர்ந்தவர் அந்த தமிழை பேசவில்லை. பேசவில்லை என்பதோடு வலிந்து பாதிக்கு பாதி ஆங்கிலச் சொற்கள் கலந்து பேசுகிறார். மிகவும் செயற்கையான பேச்சு அது. பாசாங்குத்தனமான அறிவாளித்தனம், தனது இயலாமையை வெளிப்படையாக காட்டிக் கொள்ளும் பாணி பேச்சு. வடிவமே இத்தனை பிரச்சினைகளோடு என்றால் உள்ளடக்கம் இன்னமும் மோசம். அவர் கூற வரும் செய்திகளின் ஆன்மாவை அவர் தரிசித்ததாகவோ இல்லை கண்டு கொண்டு பேசியதாகவோ எதுவும் தென்படவில்லை. களக்காடு அக்ரஹாரம் பகுதியில் உள்ள பெரிய தெருவின் திண்ணைகளில் பேசும் தொந்தி புரளும் பார்ப்பனர்களின் வெட்டி அரட்டை சுவாரசியம் கூட அதில் இல்லை.

ஆவணப்படத்தின் காட்சி ஒன்றில் பள்ளி மாணவர்கள் அமர்ந்திருக்க அவர்களோடு செந்தழல் ரவியும் உட்கார்ந்து கேட்க, ஜெயந்தி என்றொரு பெண்ணின் கதையை பவா சொன்னார். முதல் வகுப்பில் இருந்து கல்லூரி வரையிலும் தன்னுடன் படித்த ஜெயந்தி என்ற பெண் எப்போதும் முதல் ரேங்க் வாங்குகிறார். ரேங்க் எடுப்பதில் ஜெயந்தியை முந்த வேண்டும் என்று போட்டியிட்டு கடைசி வரையிலும் தோற்றுக் கொண்டே இருக்கிறார் பவா. இந்தக் கதையை நகைச்சுவையாக சந்தானம் பாணியில் சொல்லிக் கொண்டு வந்தார். இதற்கெல்லாம் மாணவர்களும், ரவியும் சிரிக்கிறார்கள்.

கடைசியில், ஜெயந்தியை, 48 வயதான அவரது அக்காள் கணவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொடுக்கப் போகும் சோகத்துடன் கதையை முடிக்கிறார். வகுப்பில் முதல் ரேங்க் வாங்கிய ஜெயந்தி வாழ்க்கையில் தோற்றுப் போகிறார் என்று, வெற்றி – தோல்வி என இருமை எதிர்வுகளை ஒரு சாதாரண பரபரப்பாக்கி முடிக்கிறார். சிரித்த மாணவர்கள் சிந்தனை ஏதுமின்றி கொஞ்சம் அனுதாபத்துடன் கலைந்திருக்க கூடும்.

பவா செல்லதுரை
வெறுமனே உயிரற்ற சுவாரசியங்கள் கொண்ட, தெரிந்தே துண்டித்துக் கொண்ட பழமையின் மங்கிய வாசம் மட்டுமே ஈர்க்கின்றன.

உண்மையில் கதை அங்கிருந்துதான் தொடங்குகிறது. மேலும் ஜெயந்தி வாழ்க்கையில் அவளாகவே தோற்கவில்லை. இந்த பார்ப்பனிய ஆணாதிக்க சமூகம்தான் அவளை தண்டித்திருக்கிறது. குற்றமிழைக்காத அவள் ஏன் தண்டிக்கப்பட்டாள் என்பதை விவரிப்பதில்தான் கதையின் ஆன்மா ஒளிந்திருக்கிறது. அதை வெற்றி தோல்வி என்று எதுகை மோனை எஃபக்டில் சொல்வதால் மாணவர்கள் பெறுவது ஏதுமில்லை. இதிலிருந்து தெரிவது என்னவெனில் பவாவைச் சுற்றியுள்ள மனிதர்களின் கதைகளில் எவை எந்தக் காட்சிகள் அவரை ஈர்க்கின்றன என்பதுதான். அந்த என்பது என்பது வெறுமனே உயிரற்ற சுவாரசியங்கள் கொண்ட, தெரிந்தே துண்டித்துக் கொண்ட பழமையின் மங்கிய வாசம் மட்டுமே. பர்மா பஜார் செண்டில் அலுப்புற்றவர்களை அந்த பழங்கஞ்சியின் வாசம் சில கணங்கள் வேண்டுமானால் ஆக்கிரமிக்கலாம். ஆறு நாள் பீசா, பர்கர், ஒரு நாள் பழங்கஞ்சி என்பதைத் தாண்டி அதற்கு மரியாதை ஏதுமில்லை.

‘வேட்டை‘ என்றொரு கதை. ஜப்பான் கிழவன் என்ற நரிக்குறவர் வேட்டைக்காரனைப் பற்றிய கதை அது. அவர் வைத்த கண்ணியில் விலங்குகளும், பறவைகளும் சிக்காமல் போனதையும், வேதகாரர்களின் ‘கண்ணி‘யில் ஜப்பான் கிழவன் வீழ்ந்து போனதையும் இணைத்து… கதையில் சொல்ல வருவது என்ன? ‘அவன் பையில் கண்ணிகள் பத்திரமாக இருந்தன‘ என்று ‘வேட்டை‘ கதை முடிகிறதாம். முடியட்டும். கதை வாசிப்பின் மிச்சம் என்ன? ‘நரிக்குறவர்களை அவர்களின் பாரம்பரியத்தில் இருந்து வீழ்த்தி மதமாற்றம் செய்து ‘வேட்டை‘யாடிவிட்டார்கள்‘‘ என்பதா? எனில், இக்கதையின் இந்துத்துவ சார்பு குறித்து நாம் தனியே விவாதிக்க வேண்டும்.

ஊசி பாசி, காரை, புறா விற்கும் குறவர் இன மக்களை இந்த சமூகம் எப்படி நடத்துகிறது என்பதை விட அவர்கள் எப்படி சுவாரசியமாக வாழ்கிறார்கள் என்பதே பவாவின் கலாபூர்வ கண்டுபிடிப்பு. பழங்குடிகளை நாகரீக சமூகம் அழிக்கிறது என்ற பின்நவீனத்துவ சொல்லாடல் முழு உண்மையை மறைக்கும் பாதிப் பொய். எல்லா குடி மக்களையும் வறுமை என்ற ஒன்று வாய்ப்பு, வசதிகள், அறிவு சரியாகச் சொன்னால் வர்க்கம் காரணமாக விடாமல் ஒட்டிக் கொண்டிருக்கிறது. பழங்குடி மக்களிடம் எளிய வாழ்க்கை பண்பு இருப்பதாலேயே, திறமையாக பிரசவம் பார்க்கிறார்கள், அவர்களுக்கு நவீன மருத்துவ வசதிகள் தேவையில்லை என்று சுவாரசியமாக கதை சொல்வது நேயமற்றது.

பிறகு ஆவணப்படத்தில் பவா செல்லதுரை சொன்ன கதைகளை கேட்டு முடித்தபோது ஓர் அமானுஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்தது போலிருந்தது. காடு, வேட்டை, குறி சொல்பவர்கள், ஆவிகள், இருண்மை மனம், இறுகிப் போன நம்பிக்கைகள்… என அவர் விவரித்தக் கதைகளின் மையச் சரடாக மர்மத் தன்மையே நிரம்பியிருந்தது. அந்த மர்மத்தை விலக்கி உண்மையின் ஒளியை காட்டுவதற்குப் பதிலாக… அவர் மர்மத்தை ரசிக்கிறார்; ரசிக்கக் கற்றுத் தருகிறார்.

கர்ப்பவதியான பெண் ஒருத்தி தனது பிள்ளை இறந்து பிறக்கும் என்று கற்பித்துக் கொண்டு கொடுங்கனவுகளோடு வாழ்கிறார். அதை வாய் பேச இயலாத ஒரு குறி சொல்பவன் அதிகப்படுத்துகிறான். இதை மலிவான ஒரு மர்மப் பட உத்தியோடு அடித்து விடுகிறார் பவா. பின்னர் கிறிஸ்மஸ் நாட்களில் வரும் தேவாலயக்குழு, ஏசுநாதர் பிறந்த கதையை சொல்லி, அந்த பெண்ணின் கொடுங்கனவு மறைவதை காப்பிய சுவையோடு சொல்கிறார் பவா. ஓர் உளவியல் மருத்துவரிடம் சென்று 200 ரூபாயில் முடிய வேண்டிய பிரச்சினையை மர்மம், ஊமையன், குறி, தொன்மம் என்று கொல்வதை நம்மால் ரசிக்க முடியவில்லை. மூடநம்பிக்கைகளை விஞ்ஞானம் வென்று விட்டாலும், இவரைப் போன்ற இலக்கியவாதிகள் தமது திறனால் கதைகளாக வாழ வைக்க விரும்புகிறார்கள். நம்மைப் பொறுத்த வரை இது ஒரு கொலை நடவடிக்கை என்கிறோம்.

பழங்கால மர்ம சடங்குகளை, மூட நம்பிக்கைகளை விமர்சனமின்றி வழி மொழியும் இவரது கதைகளை, செந்தழல் ரவி, ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனாக கொண்டு வரப் போகிறாராம்.. சபாஷ் ரவி. ஏற்கெனவே கம்ப்யூட்டர் ஜோசியம் எல்லாம் இங்கே வந்து விட்டது. பிறகென்ன இனி பவா செல்லத்துரை சொல்லும் ஜமீன் குளமும், அதில் சுற்றும் ஆவியும் சாகா வரம் பெற்று இணைய வெளியில் கால் பதிக்கட்டும்.

ஜெயமோகன்
“தண்டி தண்டியாக புத்தகங்கள் எழுதியும் நமக்கு ஒரு ஆவணப்படம் இல்லையா”

வணப் படத்தில் ஒவ்வொருவரும் பேசுவதற்கு முன்பு ‘மானிட்டர்‘ பார்ப்பதையும், தயார் ஆவதையும் படம் பிடித்து அதையும் சேர்த்துள்ளனர். இந்த ஒழுங்கற்றத் தன்மை குறித்து பேசிய அனைவருமே சிலாகித்தனர். இது ரொம்பவும் இயல்பாக இருக்கிறதாம். ஜாக்கிஜான் படங்களில், படம் முடிந்ததும் ‘மேக்கிங் ஆஃப் தி ஃப்லிம்‘ என்று போடுவார்கள். நடிக்கும்போது ஏற்படும் தவறுகள் தொகுக்கப்பட்டிருக்கும். அதையே இங்கும் எடுத்து ஒவ்வொருவர் பேசுவதற்கும் முன்பு இணைத்து விட்டால் அது புதுமையாம்… ஒழுங்கிற்கு எதிரான கட்டவிழ்ப்பாம். அப்படின்னா முதலில் அந்த கட்டை உலக அளவில் அவிழ்த்தவர் ஜாக்கிஜான்தான், ஆர்.ஆர்.சீனிவாசன் அல்ல. மேலும் இந்த உத்தி முதல் காட்சிகளிலேயே வரும் போது இது ஒரு செயற்கையான அணுகுமுறை என்று நமக்கு உடனேயே தோன்றுகிறது. இயல்பை இயல்பாக காட்டாமல் இத்தகைய உத்திகளால் செயற்கையாக உருவாக்கும் போது அது இருக்கும் கொஞ்ச நஞ்ச இயல்பையும் கொன்று விடுகிறது.

பொதுவில் கேமரா, பத்திரிகை, ஆவணப்படம் என்று வரும்போது அறிஞர்கள் முதல் மக்கள் வரை ஒருவித செயற்கைத் தன்மையோடு வடிவம், உள்ளடக்கம் இரண்டிலும் பேசுகிறார்கள். அவர்களை பேசவிட்டு, வாதிட்டு, கோபப்படுத்தி உண்மைக் கருத்துக்களை வெளியே கொண்டு வரும் ஆற்றல் இயக்குநருக்கு இருக்க வேண்டும். இங்கே அது இல்லை. அதனால் பவா செல்லத்துரை எனும் அரட்டை மனிதர் குறித்து அறிஞர் பெருமக்கள் செப்பியிருக்கும் கருத்துக்களில் சரக்கோ, முறுக்கோ எதுவுமில்லை.

நிகழ்ச்சியில் பேசிய ஜெயமோகனே இதற்கு சாட்சி. ரெண்டு சிறுகதை தொகுப்பு எழுதிய பவா செல்லத்துரைக்கே இத்தனை பிரபலங்களின் துணுக்குகளோடு ஆவணப்படமா என்று அவர் உள்ளுக்குள் குமைந்திருக்க வேண்டும். தண்டி தண்டியாக புத்தகங்கள் எழுதியும் நமக்கு ஒரு ஆவணப்படம் இல்லையா என்று அவர் கேட்டால் அது நியாயமான கேள்விதான். ஆனாலும் அவரது மனக்குளத்தில் உள்ள அவரது ஆவணப்படத்தை கமலோ, மணிரத்தினமோ எடுத்தால்தான் அவர் ஆழ்மனம் சாந்தியடையும்.

“பவா செல்லத்துரை வாழ்க்கையில் பெரிய சோகங்களை கண்டவரில்லை, அதனால்தான் அவர் வாழ்வை மகிழ்வாக எதிர் கொள்கிறார், பேசுகிறார், விருந்து வைக்கிறார்” என்று ஒரு மாதிரி வஞ்சகப் புகழ்ச்சியில் பேசினார் ஜெயமோகன். அவர் உன்னத இலக்கியங்களை படைப்பதற்கு வாழ்வில் அவர் கண்ட பெருஞ்சோகங்களே காரணம் என்பதை இங்கே சொல்லாமல் சொல்கிறார். இந்த உள்குத்தை யாரும் கண்டுபிடித்த மாதிரி தெரியவில்லை.

மேலும் அவரது மகனான அஜிதன்தான் தனது முதல் மாணவன் என்பதையும் மேடையில் பகிரங்கமாக அறிவித்தார். விஷ்ணுபுரத்திற்கு என்னதான் வாக்கப்பட்டாலும் அரங்கசாமி போன்ற பக்த கோடிகளுக்கு கூட அந்த முதல் மாணவன் தகுதியில்லை என்பதிலிருந்து இலக்கியம் கூட ஆதீன பட்டத்திளவரசு மூலம்தான் கைமாறும் என்று தெரிகிறது. சரி, குடும்ப வாரிசு இல்லாத இடம் எது என்று நீங்கள் எரிச்சலடைவது தெரிகிறது. இதனால்தான் பவா குறித்த ஆவணப்படத்தில் அவரது அன்பான குடும்பம் ஆவணப்படுத்தப்படவில்லை என்று வருத்தப்படுகிறார் ஜெயமோகன். எனவே ஜெமோ குறித்து ஆவணப்படம் எடுக்கும் போது இந்தக்குறை தீர்க்கப்படும் என்று தெரிகிறது.

நிகழ்ச்சியில் பேசிய பலர் பவா செல்லதுரையே கூச்சப்படும் அளவுக்கு புகழ்ந்து தள்ளினார்கள். பெரும்பாலானோர், ‘எப்போ போனாலும் பவா வீட்டில் பிரியாணி சாப்பிடலாம்‘ என்று சாப்பாட்டு ராமன்களைப் போல அடுக்கியதைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருந்தது. எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் இப்படி எந்நேரமும் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு சாப்பாடு போடும் இல்லம் என்றால் அது சிவாஜி கணேசனின் ‘அன்னை இல்லம்‘ வீடுதான். அதன்பிறகு இப்போது பவா செல்லதுரையின் வீடு. ‘பவா வீட்டுக்கு எந்த நேரத்துக்குப் போனாலும் பிரியாணி கிடைக்கும்‘ என்று லெக் பீஸ் தின்ற எச்சிலின் ஈரத்துடன் பேசுபவர்கள், இப்படி கொத்து, கொத்தாக வரும் நபர்களுக்கு எல்லாம் சமைத்துப் போட எவ்வளவு பணம் வேண்டும் என்பதையோ, இது மற்றவர்களால் முடியாதது ஏன் என்பதையோ கொஞ்சம் கருணை கூர்ந்து பரிசீலிக்க கூடாதா?

பவா செல்லதுரை
இலக்கியவாதிகள் அத்தனை பேரும் வாழ விரும்பும் வாழ்க்கையை, பவா செல்லதுரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஏனெனில் இந்த இலக்கியவாதிகள் அத்தனை பேரும் வாழ விரும்பும் வாழ்க்கையை, பவா செல்லதுரை வாழ்ந்து கொண்டிருக்கிறார். சினிமா செட் போல ஒரு வீடு, அதற்கு எந்நேரமும் வருகை தந்து கொண்டிருக்கும் சினிமா; இலக்கிய வி.ஐ.பி.கள், அவர்களுடன் அசைவ விருந்து, மா மரத்தடியில் இலக்கியம், மலையோரத்தில் வாக்கிங்… இந்தக் ‘கொடுப்பினை‘ எத்தனை பேருக்கும் கிடைக்கும்? எனில், இந்த இன்பமயமான வாழ்வைப் பார்த்து ரசித்து பங்கு பெறுவது மட்டும்தான் பவா அண்ட் கோவை இணைக்கும் இழையா என்றால், நிச்சயம் இல்லை.

பவாவிற்கு கருணா என்றொரு நண்பர் இருக்கிறார். முழுப்பெயர் கருணாநிதி. எஸ்.கே.பி.கருணா என்று சொல்வார்கள். தி.மு.க. முன்னால் அமைச்சர் கு.பிச்சாண்டியின் தம்பி. திருவண்ணாமலையில் உள்ள எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் முதலாளி. இப்படி கல்லூரி உரிமையாளராக மட்டும் இருந்திருந்தால் அவர் பத்தோடு பதினொன்று. மாறாக, கருணாவுக்குள் ஓர் இலக்கியவாதி உறங்கிக் கொண்டிருந்தார். அதைக் கண்டுபிடித்து எழுப்பிவிட்டவர் பவா செல்லதுரை. ஓர் ஊழல் அரசியல் பணக்கார வாரிசின் இலக்கியத் தாகத்தை இனம் கண்டு கொண்ட பவா, திருவண்ணாமலைக்கு எந்த இலக்கியவாதி வந்தாலும் கருணாவுக்கு அறிமுகப்படுத்துவார்.

அரசியல் குடும்பத்தில் பிறந்து இலக்கிய நட்பு வட்டம் இல்லாமல் காய்ந்து கிடந்த கருணாவுக்கு அதைவிட மகிழ்ச்சி என்ன இருக்க முடியும்? ஒரு பணக்கார இலக்கிய கோயிந்து பலியாடாக கிடைத்திருக்கிறது என்றால், எழுத்தாளர்களுக்கு அதை விட மகிழ்ச்சி என்ன இருக்க முடியும்? ஆகவே இந்த நட்பு செழித்து வளர்ந்தது. ‘‘பவா செல்லதுரை ஒவ்வொரு வாரமும், அந்த வாரத்தின் மிகச் சிறந்த பிரியாணியை சாப்பிடுகிறார்‘‘ –  என்று ஆவணப்படத்தில் எஸ்.கே.பி.கருணா சொல்லும் போது பின்னணிக் காட்சியில் ஏராளம் பேர் சிக்கன் பிரியாணி சாப்பிடுகிறார்கள். ஜெயமோகனுக்கு அருகில் சாப்பிடும் பவா ‘வெளியே சிலர் வந்திருக்கிறார்கள், அவர்களுக்கும் பிரியாணி போடுங்கள்’ என்று கூறுகிறார்.

ஆவணப்படத்தின் காட்சி ஒன்றிற்காகவே ஒரு பிரியாணி விருந்தென்றால் மற்றதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நாகர்கோவிலில் மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் சுந்தர விலாஸ் இல்லமும் கூட இத்தகைய விருந்து உபசரணைகளுக்கு பெயர் போனதுதான். ஒரே ஒருவித்தியாசம், அங்கே சைவம், இங்கே அசைவம். இது போதாதா இலக்கியவாதிகளுக்கு?

இயக்குநர் சேரன்
‘‘பவாகிட்ட ‘முடியாது’ங்குற வார்த்தையே வராது”

கருணாவின் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு எழுத்தாளர்களையும், சினிமாக்காரர்களையும் வரவழைக்க வேண்டுமா? பவா நிறைவேற்றிக் கொடுப்பார். தெரிந்தவர்கள் யாருக்கேனும் பொறியியல் சீட் வாங்க வேண்டுமா? பவாவுக்கு போன் செய்தால் போதும். இயக்குநர் சேரன் இதை நிகழ்ச்சியில் வெளிப்படையாகவே சொன்னார்,

‘‘பவாகிட்ட ‘முடியாது’ங்குற வார்த்தையே வராது. ‘என் மனைவி திருவண்ணாமலை கோயிலுக்கு வரணும்னு சொல்றாங்க’ன்னு சொன்னாப் போதும், ‘அனுப்புங்க… நம்ம ஸ்ரீதர் அய்யர் இருக்கார்’னு சொல்லுவார். ரெண்டு பேருக்கு எஞ்ஜினீயரிங் சீட் வேணும்னு சொன்னா, ‘கருணாகிட்டப் பேசிடலாம்’பார். ஷூட்டிங் நடக்கும்போது திடீர்னு பணப் பற்றாக்குறை. பவாவுக்கு போன் போட்டு ‘ஒரு 25 லட்சம் உடனே வேணும்’னு கேட்டா, அதுக்கும் முடியாதுன்னு சொல்ல மாட்டார். ‘கருணா ஆஸ்திரேலியாவுல இருக்கார். பேசிட்டு சொல்றேன்’னு சொல்லுவார். இவரைப் போல ஒரு மனுஷனை நீங்க பார்க்கவே முடியாது” என்று பேசினார் சேரன்.

வாங்கிக் கொடுக்கும் எஞ்ஜினியரிங் சீட்டுக்கு கமிஷன் உண்டா, கல்லூரிக்கு அழைத்து வரும் வி.ஐ.பி.களுக்கு கட்டிங் உண்டா என்பது எல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கல்லூரியை முதலாளி கருணா எப்படி ‘உழைத்து’ கட்டினார், மாணவர்கள் எவ்வளவு ‘பீஸ்’ கட்டுகிறார்கள் என்பதை பவா எனும் கதை சொல்லி கதையாக சொல்வாரென்றால் அவர் ஒரு கதை சொல்லி என ஏற்கலாம். கதைகளை மறைத்தால் அதற்கு என்ன பெயர்?

சேரன் பேச்சில் இருந்து தெரிவது என்னவெனில், வி.ஐ.பி.களின் வீட்டம்மாவுக்கு விபூதி வாங்கித் தருவது, ரமணாஸ்ரமத்தை சுற்றிக் காட்டுவது, கிரிவலத்துக்கு அழைத்துச் செல்வது போன்ற டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதில் பவா செல்லதுரை கை தேர்ந்தவராக இருக்கிறார். (பாலகுமாரனுக்கு விசிறி சாமியாரை அறிமுகப்படுத்தியது பவா செல்லதுரைதானாம். இதையும் விழாவிலேயே சொன்னார்கள்). இதுதான் வி.ஐ.பி.களை கவிழ்க்கும் கலை.

சொகுசான வாழ்க்கை, எந்நேரமும் நல்ல தீனி, யாரைப் பிடித்தால் காரியம் நடக்குமோ அவர்களுக்கு கூச்சமே இல்லாமல் சோப்புப் போடுவது, தரகு வேலை பார்ப்பது… இதையே 24 மணி நேரமும் செய்து கொண்டிருக்கும் இந்த நபர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஏதோ பொறுப்பில் இருக்கிறாராம். இவரது நட்பு வட்டம், செயல்பாடு, எழுத்து, பேச்சு… போன்றவைக்கும், கம்யூனிஸத்துக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? ஆனால், பவா செல்லதுரையின் வீட்டில் தினம் பத்து பேர் பிரியாணி சாப்பிடுவதை ‘கம்யூன் வாழ்க்கை’ என்கிறார் செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள். கறிச்சோறு சாப்பிட்டா கம்யூன் வாழ்க்கையா? என்னா ஒரு பொருள்முதல்வாத புரிதல்..?!

இவர்கள் எல்லோரும் எதன் அடிப்படையில் ஒருங்கிணைகின்றனர்? இவர்களை இணைக்கும் கண்ணி எது? ‘இலக்கியம்’ என்று யாராவது சொன்னால், அது பொய் என்பதை இந்த ஆவணப் பட நிகழ்ச்சியே நிறுவிவிடுகிறது. இவர்களை இணைப்பது பச்சையான காரியவாதம். பவா செல்லதுரையின் செல்வாக்கான சினிமா, அரசியல் தொடர்புகள் மற்றவர்களை கவர்ந்து இழுக்கின்றன. அதனால்தான், ‘ஐயாமாரே… உங்கூட்டு உடும்பு கறி சூப்பர்’ என்று கூவுகின்றனர். இந்த அசிங்கமான சொறிந்து விடும் பண்பை இலக்கியம் என்ற பெயரில் அடுத்தத் தலைமுறைக்கும் கடத்துவதுதான் இதில் உள்ள மெய்யான அபாயம். எழுத்தாளன் என்பவன் சுய மரியாதை மிக்கவனாக, மற்ற பிரிவினரைக் காட்டிலும் சமூகப் பொறுப்புணர்வு மிக்கவனாக இருந்த காலம் ஒன்று உண்டு. அந்த குறைந்தபட்ச நேர்மையோ, தன்மானமோ இவர்களிடம் இல்லை.

இவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களுடன் ஒட்டி உறவாடி, அவர்களைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்று வரும் பாணபத்திர ஓணாண்டிகள்!

–   வளவன்

வால்மார்ட் மேட் இன் பங்களாதேஷ் – ஆவணப்படம்

1

ந்த நாட்டின் அடுக்கு மாடி கட்டிடங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இன்னொரு கட்டிடம் இடிந்து விழுந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு காரணம் வெளிநாடுகளிலிருந்து செயல்படும் அன்னிய சக்திகள்தான் என்று தெரிய வந்தது. இடிபாடுகளிலும், எரிந்து கருகிய மிச்சங்களிலும் கிடைத்த தடயங்கள் இந்த கோர விபத்துக்களுக்கு காரணமானவர்களை அடையாளம் காட்டின.

ஆனால், ‘அந்த பயங்கரவாதிகளை பிடித்துத் தண்டிப்போம், அவர்களை ஒப்படைக்க மறுக்கும் நாடுகள் மீது போர் தொடுப்போம்’ என்று யாரும் அறை கூவவில்லை. இதை சாக்காக வைத்து உலகெங்கும் போர் நடத்துவோம் என்று கொக்கரிக்கவில்லை. ஏனென்றால் கொல்லப்பட்டது ஏழை மக்கள், இந்தப் பேரழிவுகள் நடந்தது வங்க தேசத்தில்.

வால்மார்ட்
வால்மார்ட் – வரலாறு காணாத விற்பனை

வங்க தேச தொழிலாளர்கள் யாரால் எந்த நிறுவனங்களால் கொல்லப்பட்டார்களோ, அந்த நிறுவனங்களில் மிகப் பெரியதான வால்மார்ட் 2012-ம் ஆண்டு வரலாறு காணாத வருமானத்தை ஈட்டியது. குறைந்த செலவில் பொருட்களை செய்து வாங்கி, குறைந்த விலைக்கு விற்கும் அதன் வணிக உத்திக்கு பலியானவர்கள் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் எந்த நியாயமும் கிடைக்காமல், எந்த பொருளாதார நிவாரணமும் அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை பலி கொண்ட அமெரிக்கர்களின் நுகர்வு வெறிக்கு இரை போடும் உற்பத்தி முறை தங்கு தடையின்றி தொடர்கிறது.

பல அடுக்கு வாங்கும் நடைமுறை மூலம் மனிதத் தன்மையற்ற, கொடூரமான சுரண்டலை தொழிலாளர்கள் மீது வால்மார்ட் எப்படி நடத்துகிறது என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த அல்-ஜசீரா ஆவணப்படம்.

2012-ம் ஆண்டு வங்கதேசத்தில் தீக்கிரையான தஸ்-ரீன் ஆயத்த ஆடை தொழிற்சாலையின் கருகிய மிச்சங்களில் வால்மார்ட்டின் முத்திரையான ஃபேடட் குளோரி (faded glory) பொருத்தப்பட்ட அரை கால்சட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், தான் அந்த நிறுவனத்துக்கு ஆர்டர் கொடுக்கவே இல்லை என்று சாதித்தது வால்மார்ட்.

ஒவ்வொரு பருவத்திலும், முந்தைய பருவத்தை விட குறைந்த கூலியில் செய்து வாங்க வேண்டும், அதற்காக சப்ளையர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவலை இல்லை. அதற்கு கடைப்பிடிக்கப்படும் உற்பத்தி குறுக்கு வழிகளின் காரணமாக, விபத்துக்கள், உயிரிழப்புகள் நிகழ்ந்தால், குழந்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவது தெரிய வந்தால், தமது பொறுப்பை தட்டிக் கழித்துக் கொள்ள விலாவாரியான திட்டமிடலை செய்கிறது வால்மார்ட்.

வங்கதேச தொழிலாளர்கள்
தொழிற்சாலைக்குள் செல்லும் வங்கதேச தொழிலாளர்கள்.

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். வால்மார்ட் தனது ஆடைகளுக்கான ஆர்டரை சக்சஸ் அப்பேரல் என்ற நியூயார்க் வர்த்தக நிறுவனத்துக்கு அளிக்கிறது. சக்சஸ் அப்பேரலின் தாக்கா அலுவலகம், அந்த ஆர்டரை ட்ரூ கலர் என்ற உள்நாட்டு முகவரின் உதவியுடன் சிம்கோ என்ற வங்க தேச நிறுவனத்துக்கு அனுப்புகிறது. அந்த நிறுவனம் மாதத்துக்கு 3 லட்சம் ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் கொள்ளளவு உடையது.

வால்மார்ட் போன்ற கார்ப்பரேட்டுகள் பீற்றிக் கொள்ளும் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளின் கீழ் அதன் பொருட்களை உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஆலைகளும் மூன்றாம் தரப்பு ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகின்றன. அந்த நிறுவனங்களின் உற்பத்தி அளவு, தொழிலாளர் பாதுகாப்பு நடவடிக்கைகள், குழந்தைத் தொழிலாளர் பயன்படுத்தாமல் இருப்பது போன்ற விபரங்கள் அறிக்கையில் இடம் பெறுகின்றன.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிம்கோவிடம் சக்சஸ் அப்பேரல் மூலம் 3.3 லட்சம் ஆடைகளுக்கான ஆர்டர் வந்திருக்கிறது. ரம்ஜான் விடுமுறையில் பல தொழிலாளர்கள் ஊருக்குப் போய் விட உற்பத்தியை வால்மார்ட் கோரிய நேரத்தில் முடிக்க முடியாத நெருக்கடி. சக்சஸ் அப்பேரல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியிடம் காலக் கெடு கேட்டால், “ஒரு நாள் கூட தாமதப்படுத்த முடியாது, எப்படியாவது செய்து முடித்து விடுங்கள்” என்கிறார். அதாவது வெளியில் கொடுத்து செய்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று பொருள்.

தீப்பிடித்த தஸ்-ரீன் கட்டிடம்.
தீப்பிடித்த தஸ்-ரீன் கட்டிடம்.

அந்த நேரத்தில் இன்னொரு வால்மார்ட் சப்ளையர் மூலம் கூடுதலாக 3 லட்சம் ஆடைகளுக்கான ஆர்டர் சிம்கோவிற்கு வருகிறது. இதன் மூலம் சிம்கோ மீது அதன் உற்பத்தி திறனை விட இரண்டு மடங்கு அளவிலான ஆர்டர்கள் சுமத்தப்பட்டிருக்கிறது. வால்மார்ட் போன்ற பெரிய வாடிக்கையாளரின் ஆர்டரை மறுப்பது நடைமுறையில் சாத்தியமற்றது.

உற்பத்தி நெருக்கடியை தீர்த்துக் கொள்ள சிம்கோ, டூபா என்ற நிறுவனத்துக்கு ஆர்டரின் ஒரு பகுதியை கொடுக்கிறது. டூபாவின் தஸ்-ரீன் தொழிற்சாலை தீ விபத்து நடந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது. இது வால்மார்ட்டுக்கு தெரிந்தே நடக்கிறது. அதன் ரிடெயில் லிங்க் என்ற தரவுத் தளம் ஆடைகள் உற்பத்தி ஆகும் அனைத்து இடங்களையும் பதிவு செய்கிறது.

அந்தக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் பிடித்த தீ, வேகமாக பரவியது. மூன்றாவது, நான்காவது மாடிகளில் இருந்த உற்பத்திக் கூடங்களின் கதவுகள் வெளியிலிருந்து பூட்டப்பட்டிருந்ததால், உள்ளே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள், பெரும்பாலும் இளம் பெண்கள் தப்பிக்க முடியவில்லை. தொழிலாளர்கள் எழுந்து ஓடுவதை பார்த்த மேலாளர், கண்காணிப்பாளரை பார்த்து “வேலையை முடிக்கணும்னு சொல்லியிருக்கேனே, தே…. மகனே. இதுங்க எங்க எந்திரிச்சு சுத்துதுங்க. போய் உட்கார்ந்து வேலையை பார்க்கச் சொல்லு, நாளைக்கு ஷிப்மென்ட் அனுப்பணும்” என்று திட்டியிருக்கிறார்.

தஸ்-ரீன் கட்டிடம்
தஸ்-ரீன் கட்டிடம்

ஜன்னல்களையும், கதவுகளையும் உடைத்து, மூன்றாவது, நான்காவது மாடிகளிலிருந்து குதித்து தப்ப முயன்றிருக்கின்றனர் தொழிலாளர்கள். 317 பேர் கொடூரமாக கருகி உயிரிழந்தனர். இந்தப் பிரச்சனையில் அதன் பங்கு குறித்த ஆதாரங்கள் வெளியானதும், வால்மார்ட் சிம்கோவுக்கு கொடுத்திருந்த ஆர்டரை ரத்து செய்து, ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த ஆடைகளை வாங்க மறுத்து விட்டது; சக்சஸ் அப்பேரல் நிறுவனத்தை தனது சப்ளையர் பட்டியலில் இருந்து நீக்கி விட்டது. அதற்கு பதிலாக சக்சஸ் அப்பேரல் நிறுவனத்தின் மேலாளர் ஆரம்பித்த புதிய நிறுவனம் பட்டியலில் சேர்ந்து விட்டது.

வால்மார்ட்டின் பொறுப்பு வங்கதேச தரகர் சிக்மோவின் மீது சுமத்தப்பட்டு தட்டிக் கழிக்கப்பட்டது. இந்தத் தொழிலாளர்களின் உயிரையும், இரத்தத்தையும் உறிஞ்சி தயாரிக்கப்பட்ட ஆடைகள் உலகெங்கும் வால்மார்ட் வாடிக்கையாளர்களின் உடலை அலங்கரிக்க, 2012-ம் ஆண்டுக்கான வால்மார்ட்டின் விற்பனை புதிய உயரங்களை தொட்டது.

குழந்தை தொழிலாளி
குழந்தை தொழிலாளி – மாதம் 2,000 ரூபாய் சம்பளம்.

2013 ஏப்ரல் மாதம் ராணா பிளாசா கட்டிடத்தில் மீண்டும் இதே கதை. அந்த 8 மாடி கட்டிடம் இடிந்து விழப் போகும் நிலையில் இருப்பதால், அதை பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்தது நகர நிர்வாகம். ஆனால், மேற்கத்திய நிறுவனங்களின் ஆயத்த ஆடை தேவையை நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற வெறியில் வங்க தேச தரகர்கள், தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வேலைக்கு வரச் செய்தனர். கட்டிடம் இடிந்து விழுந்ததில் 1,217 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி கொல்லப்பட்டனர். அவர்களைக் கொன்றவர்கள் மேற்கத்திய ஆடை நிறுவனங்களும், அந்த ஆடைகளை வாங்கி போட்டுக் கொள்ளும் நுகர்வோரும்தான்.

பல் அடுக்கு வாங்கும் முறையின் மூலமாக, வால்மார்ட், கேப் போன்ற மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களுக்கான ஆடைகள் நூற்றுக் கணக்கான சிறு உற்பத்திக் கூடங்களில் தயாரிக்கப்படுகின்றன. பளபளக்கும் பிளாஸ்டிக் உறைகளில், விறைப்பான மடிப்புகளுடன் போடப்படும் அந்த ஆடைகள் 12 வயது சிறுமிகளின் உழைப்பில், மாட்டுக் கொட்டகை போன்ற கூடங்களில் ஆடைகள் தயாராகின்றன. இன்னும் பால் மணம் மாறாத முகம் கொண்ட சிறுமி ‘சார் சொல்லியிருக்காரு, இதை எல்லாம் இன்னைக்குள்ள முடிச்சிடணும்னு. ஒரு நாளைக்கு 500 பட்டன்கள் பொருத்துவேன்’ என்கிறாள். அவளுக்கு சம்பளம் ஒரு மாதத்துக்கு 2,500 டாக்கா (இந்திய ரூபாய் சுமார் 2,000).

இதுதான் அமெரிக்கா உலகுக்கே காட்டும் பொருளாதார முன்மாதிரியின் யோக்கியதை.

பாறைகளுக்கு கீழே உறைந்திருக்கும் ஷேல் கேஸ் எரிவாயுவை உயர் அழுத்தத்தில் தண்ணீர் செலுத்தி வெளியில் எடுப்பது போன்ற புதுப் புது தொழில் நுட்பங்களை கண்டு பிடிப்பதுதான் அமெரிக்க தேசத்தை முன்னேற்றப் பாதையில் நடைபோட வைக்கிறது என்று போற்றுகிறார் பத்ரி.

ஆனால், அமெரிக்க மக்களுக்குத் தேவையான ஆடைகளை குறைந்த விலையில் தயாரிக்கும் தொழில் நுட்பமும், எந்திரமும் கூட உருவாக்க வக்கில்லாமல் ஏழை நாடுகளை சுரண்டுகிறது அந்நாடு. தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டல் மட்டும்தான் அமெரிக்காவின் முன்னேற்றத்துக்கான அடிப்படை காரணம் என்பதுதான் நிதர்சனம்.

காமன்வெல்த் மாநாடா கொலைகாரர் மாநாடா – கார்ட்டூன்கள்

2
அதிகார பூர்வ போட்டோ
இலங்கையில் நடைபெற்ற காமன்வெலத் நாட்டு தலைவர்கள் மாநாட்டின் அதிகாரபூர்வ புகைப்படம்.
நடனம்
காமன்வெல்த் தலைவர்களின் நடனம்.
போர்க் குற்றவாளிகள்
போர்க் குற்றவாளிகளின் மாநாடு.
காமன்வெல்த் போர்க்குற்றவாளிகள்
காமன்வெல்த் போர்க்குற்றவாளிகள்
இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட்
இங்கிலாந்து – இலங்கை கிரிக்கெட்
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா
காமன்வெல்த் உச்சி மாநாடு
இலங்கையின் காமன்வெல்த் உச்சி மாநாடு 2013
அரச குடும்பம்
இலங்கையின் போர்க்குற்றவாளியை வரவேற்கும் அரச குடும்பம்.
காமன்வெல்த் பேரணி
காமன்வெல்த் பேரணி- 2013, இலங்கை.

நன்றி : ஷான் சுந்தரம்

ஆயிரம் தொழிலாளிகள் டிஸ்மிஸ் ! நோக்கியாவின் பயங்கரவாதம் !

15

ஆயிரம் தொழிலாளர்களின் வேலை பறிப்பு ! நோக்கியாவின் முதலாளித்துவப் பயங்கரவாதம் !

பு.ஜ.தொ.மு. கண்டன ஆர்ப்பாட்டம்.

சிறீபெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டல வளாகத்தில் அமைந்துள்ள நோக்கியா கைபேசி நிறுவனம், தமது நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி வேலை நீக்கம் செய்திருக்கிறது.

“ஆயிரம் தொழிலாளர்களின் வேலை பறிப்பு! நோக்கியாவின் முதலாளித்துவப் பயங்கரவாதம்!” என்று இவ் வேலை பறிப்புக்கெதிராக, தொழிலாளர்கள் மத்தியில் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு, கடந்த நவம்பர் 20 அன்று திருப்பெரும்புதூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

கடந்த நவம்பர் 7-ம் தேதி அன்று ஒப்பந்தத் தொழிலாளர்கள் 200 பேரை அழைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கி, “கம்பெனியின் வளர்ச்சிக்கு நன்றாக உழைத்தீர்கள்; வேறு இடத்தில் நல்ல வேலை கிடைத்து முன்னேற வாழ்த்துக்கள்!” என்று வக்கிரமாகக் கூறி வெளியேற்றியிருக்கிறது, நோக்கியா நிர்வாகம். ஒரே நேரத்தில் கணவன், மனைவி இருவரின் வேலையும் பறிக்கப்பட்டதையடுத்து, “தம்மில் யாரேனும் ஒருவருக்காகவாவது வேலையைத் தொடர அனுமதிக்க வேண்டும்” என்று அத்தம்பதிகள் கெஞ்சிய போதும் மனமிரங்க மறுத்து விட்டது, நோக்கியா நிர்வாகம். நரிக்குறவர் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி ஒருவர், 12-ம் வகுப்பு வரை படித்து விட்டு நோக்கியாவில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். “தனது வருமானத்தை மட்டும நம்பி தமது குடும்பம் இருக்கிறது; வேலை பறிக்கப்பட்டால் தனது குடும்பமும் சேர்ந்து பாதிக்கப்படும்” என்ற இவரது நியாயமான கோரிக்கையும் ஏற்கப்படவில்லை

தொழிலாளர்களின் கோரிக்கைகளை விசாரித்து மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல; இதனினும் கொடுமை, ஒவ்வொரு நாளும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் தங்களின் மின்னணு அடையாள அட்டையை, நோக்கியா கம்பெனியின் மின்னணு வருகைப் பதிவேட்டு இயந்திரம் ஏற்க மறுத்து வெளியே தள்ளி விட்டதென்றால், அத்தொழிலாளியின் வேலை பறிக்கப்பட்டுவிட்டது என்று அவராகவே புரிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக, மனிதவள மேம்பாட்டு அதிகாரியையோ, நிர்வாகிகளையோ சந்தித்து முறையிட கூட அவர்களுக்கு அனுமதியில்லை.

ஒரு நிறுவனம் தன்னிடம் பணியாற்றும் தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்கிறது என்றால், என்ன காரணத்திற்காக ஆட்குறைப்பு செய்கிறது என்பதையும் இது தொடர்பாக முறையான முன்னறிவிப்பையும் தொழிலாளர்களுக்கு அறிவிக்க வேண்டும்; அதற்கு முன்னர், இந்த ஆட்குறைப்பிற்கான சட்டபூர்வமான காரணங்களை முன் வைத்து, தொழிலாளர் நல ஆணையரிடம் முன் அனுமதியையும் பெற்றிருக்க வேண்டும்; அவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையையும் வழங்க வேண்டும்; ஆனால், இவை எவற்றையும் பின்பற்றவில்லை என்பது மட்டுமல்ல; தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைத்த தொழிலாளர்களை மயிருக்குக்கூட சமமாக மதிக்காமலும், வக்கிரமான முறையிலும் கிள்ளுக்கீரைகளைப் போல கடாசி எறிந்திருக்கிறது நோக்கியா நிறுவனம்.

ஆறாண்டுகளுக்கும் மேலாக, ஓடாக உழைத்த தொழிலாளர்களுக்கு நோக்கியா நிறுவனம் வழங்கியிருக்கும் “வெகுமதி’ இதுதான். தன்னுடன் பணியாற்றிய சக தொழிலாளிகளுள் யார் யாருடைய வேலை பறிக்கப்பட்டிருக்கிறது என்பது சக தொழிலாளிகளுக்குக் கூடத் தெரிய வாய்ப்பில்லை என்பது இதன் உச்சக்கட்ட அவலம்.

“நோக்கியா கைபேசிக்கான மார்க்கெட் சரிந்துவிட்டது; உற்பத்தி இல்லை; எனவ, வேலைநீக்கம் செய்கிறாம்.” என்கிறது அந்நிறுவனம். நோக்கியா தயாரிப்பு மொபைல்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டிருப்பதும், பங்கு சந்தையில் அதன் மதிப்பு குறைந்துள்ளது என்பதும் உண்மைதான் என்ற போதிலும், இதனால் தொழில் நொடித்துப் போக, போட்ட காசு எடுக்க முடியாமல் பின்லாந்து முதலாளி ஒன்றும் பிசசையெடுத்துத் திரியவில்லை.

ஒப்பந்தத் தொழிலாளர்களையும், பயிற்சியாளர்களையும பிரதானமாகக் கொண்டு சட்டத்திற்குப் புறம்பான வழியில் அவர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தி, அவர்களின் உழைப்பைச் சுரண்டி ஆறு ஆண்டுகளில் ஏறத்தாழ 25,000 கோடி ரூபாய்களை இலாபமாக மட்டும் ஈட்டியிருக்கிறது, இந்நிறுவனம். அரசின் பல்வேறு சலுகைகளையும், பல்லாயிரம் கோடி ரூபாய்களை வரிவிலக்காகவும் பெற்றுள்ளதோடு, 1800 கோடி ரூபாய் வரி ஏய்ப்பிலும் ஈடுபட்ட கேடி நிறுவனம்தான் நோக்கியா. இவற்றுக்கும் மேலாக, சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் நிறுவனத்திற்கு நல்ல இலாபத்திற்குத்தான் விற்றிருக்கிறது.

“நிலைமை இவ்வாறிருக்க, தமது பொருளுக்கு சந்தையில்லை என்பதையும் மைக்ராசாஃப்ட் நிறுவனத்திற்கு கைமாற்றி விட்டதையும சாக்காகக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையானது சட்ட விரோதமானது! ஆயிரக் கணக்கான தொழிலாளர்களையும் அவர்களைச் சார்ந்துள்ள குடும்பங்களையும் தற்கொலைக்குத் தள்ளும் நடவடிக்கை இது. தொழிலாளர்களின் குருதியைக் குடித்து கோடிகளாய் குவித்து, கரும்புச் சக்கைகளாய் தொழிலாளர்களை தூக்கி கடாசும் நோக்கியாவின் பயங்கரவாதம்; முதலாளித்துவப் பயங்கரவாதம் இது!” என்கிறார், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் காஞ்சிபுர மாவட்ட செயலர் தோழர் ஆ.கா.சிவா.

மேலும், இப்பிரச்சினையை தொழிலாளர்கள் மத்தியில் விரிவான பிரச்சார இயக்கமாக கொண்டு செல்வதாக தெரிவித்த அவர், “இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஹூன்டாய்; ஹ்வாசின்; எஸ்.ஜி.எச். உள்ளிட்ட தொழிற்சாலைகளில் தொழிலாளர்களிடம் பிரசுரங்களை விநியோகித்து, ஆலை வாயில் கூட்டங்களை நடத்தியுள்ளோம். ஹூண்டாய் ஆலைவாயில் கூட்டத்தின் பொழுது, தமது ஆலைவாயிலின் முன்பாக கூட்டம் போடக்கூடாது என மிரட்டினார், ஹூண்டாயின் பாதுகாப்பு அதிகாரி. ‘இது எமது தொழிற்சங்க உரிமை; தொழிலாளர்கள் கூடியிருக்கும் இடங்களில்தான் கூட்டம் நடத்துவோம். உனது வேலையைப் பார்த்துக்கொண்டு போ! உன்னால் ஆனதைப் பார்’ என்று சவால் விட்டு தமது பிரச்சாரத்தைத் தொடர்ந்தனர், எமது தோழர்கள்.” என்றார்.

இதனைத் தொடர்ந்து, 20.11.2013 அன்று மாலை திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பு.ஜ.தொ.மு.வின் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் தோழர் ஆ.கா.சிவா தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், பு.ஜ.தொ.மு.வின் மாநில அமைப்புச் செயலர் தோழர் சி.வெற்றிவேல் செழியன்; நோக்கியா நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றும் தோழர் திலகா ஆகியோர் கண்டன உரையாற்றினர். பு.ஜ.தொ.மு.வின் இணைப்புச் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பெருந் திரளாக கலந்து கொண்டனர். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் நிறுவனப் பேருந்துகளில் சென்ற தொழிலாளர்களின் கவனத்தை இவ்வார்ப்பாட்டம் ஈர்த்தது.

“ஆயிரம் பேரின் வேலை பறிப்புக்கு எதிரான எமது பிரச்சாரங்களின் பொழுது, நாங்கள் சந்தித்த பல தொழிலாளர்கள் வர்க்க உணர்வற்று, யாருக்கோ பாதிப்பு, நமக்கென்ன வந்தது” என்ற கண்ணோட்டத்தில் இருப்பதை உணர முடிந்தது.  ‘வேலைக்கு எடுக்கும் பொழுது, ஒப்பந்த அடிப்படையில்தான் எடுத்தனர். அவர்கள் ஒன்றும் நிரந்தரம் இல்லையே? அவர்கள் வேலையில்லை போ என்றால் போய்தானே ஆக வேண்டும்?’, ‘அவனால் சம்பளம் கொடுக்க முடியல… நட்டம்னு சொல்றான்.. வேறென்ன சார் பண்ண முடியும்?’, ‘நோக்கியா கம்பெனியை மைக்ராசாப்ட் நிறுவனம் வாங்கிடுச்சு’,  ‘நோக்கியா கம்பெனி 8-வது படிச்சவன கூட வேலைக்கு வச்சிகிட்டான். மைக்ராசாப்ட், சாப்ட்வேர் கம்பெனி, அவங்களுக்கு, தகுதியில்லாதவங்க தேவையில்லை; அதனால, அவங்கள மட்டும் வெளியேற்றியிருக்காங்க…’ என்று ஏறத்தாழ நோக்கியா கம்பெனிக்கு வக்காலத்து வாங்குவதைப் போலத்தான் தொழிலாளர்களுள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

நிரந்தரத் தொழிலாளி, யாருக்கோ பிரச்சினை என ஒதுங்கிச் செல்வதும்; ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் தன்னையும் வெகு விரைவில் வெளியேற்றி விடுவான் என்ற அச்சம் இருந்த போதிலும், தம் கண்ணெதிரே வேலை பறிக்கப்பட்டு தெருவில் வீசியெறியப்பட்ட சக தொழிலாளியின் உரிமைக்காகப் போராட முன்வரத் தயாராக இல்லை. அது போலத்தான், நோக்கியா தவிர்த்த பிற பன்னாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்களும் இதை நோக்கியாவின் பிரச்சினையாக சுருக்கிப் பார்க்கின்றனர். நிரந்தரத் தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி, பயிற்சியாளர் எனத் தொழிலாளர்கள் பிரிந்து கிடப்பதும், பல்வேறு நிறுவனங்களில் நடைபெறும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தனித்தனிப் பிரச்சினைகளாகப் பிரித்துப் பார்ப்பதும்தான் தொழிலாளர்களைப் பீடித்துள்ள நோயாக உள்ளது.

இது, ஒப்பந்தத் தொழிலாளியின் பிரச்சினை மட்டுமல்ல; தொழிலாளர்கள் அனைவரின் பிரச்சினை. அந்நிய மூலதனத்தை வரவேற்பது; வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது என்கிற பெயரில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி, அற்பக் கூலிக்கு தொழிலாளர்களை பணிக்கமர்த்திக் கொள்ளும் வாய்ப்பையும் வழங்கி, மலிவான விலையில் தொழிலாளர்களின் மனித வளத்தைப் பயன்படுத்திக் கொண்டும், இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தும் நாட்டையே சூறையாடும் அரசின் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைதான் இவற்றுக்கு அடிப்படை.

நிரந்தரத் தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி, பயிற்சியாளர் என அனைவரின் தலைக்கு மேலும் தொங்கும் கத்தியைப் போல, எந்நேரமும் நம்மை காவு வாங்க காத்திருக்கிறது முதலாளித்துவப் பயங்கரவாதம். நம்மிடைய உள்ள பிரிவினைகளை உடைத்தெறிந்து நாமெல்லாம் தொழிலாளி வர்க்கம் என்ற அடிப்படையில் வர்க்கமாக அணி திரண்டு போராடாமல், நம்மை நடுத்தெருவுக்குத் தள்ளும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தையும் நாட்டையேச் சூறையாடும் மறுகாலனியாக்கக் கொள்கையையும் எதிர்த்து வீழ்த்தவியலாது!” என்று அறைகூவல் விடுத்து கண்டன உரையாற்றினார், தோழர் சி. வெற்றிவேல் செழியன்.

சி.ஐ.டி.யு.வின் அ.சவுந்திரராஜனை சிறப்புத் தலைவராகக் கொண்ட, நோக்கியா நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் மத்தியில் இயங்கும் சங்கமான “நோக்கியா (இந்தியா) தொழிலாளர் சங்கம்” ஒப்பந்தத் தொழிலாளர்களின் இப்பிரச்சினை குறித்து இதுவரை வாய்திறக்காத நிலையில், பன்னாட்டு நிறுவனங்களின் நேரடி மிரட்டல் மற்றும் போலீசின் பீதியூட்டல்களை எதிர்கொண்டு, இருங்காட்டுக்காட்டை சிப்காட் உள்ளிட்ட சிறப்புப் பொருளாதார மண்டல வளாகங்களில் முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு எதிராக வர்க்க ஒற்றுமையுடன் தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைய வேண்டுமென்ற அறைகூவலோடு தொழிலாளர்களை அணி திரட்டி வருகிறது, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

திருப்பெரும்புதூர் ஆர்ப்பாட்டம்

சிறப்புப் பொருளாதார மண்டல தொழிற்சாலைகள் முன்பு பிரச்சாரம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

– இளங்கதிர்.

இலஞ்சம் … தேசிய ஒருமைப்பாட்டைக் காக்கும் கவசம் !

2

வீ.கே.சிங் என்ற விஜயகுமார் சிங் இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்தபொழுது (2010-2012) உருவாக்கப்பட்டு, அவரது கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருந்த தொழில்நுட்ப ஆதரவு பிரிவு என்ற உளவு அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்திய இந்திய இராணுவத் தலைமை,  ”அந்த அமைப்பு ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை ஆண்டு வரும் ஒமர் அப்துல்லா அரசைக் கவிழ்க்கும் நோக்கத்தோடு, அவரது கூட்டணி அரசில் விவசாயத்துறை அமைச்சராக இருந்து வரும் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த குலாம் ஹசன் மிர்ருக்கு 1.19 கோடி ரூபாயை வழங்கியிருக்கிறது; இராணுவ அமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டிருக்கிறது” என்பன உள்ளிட்டுப் பல முக்கியமான கிரிமினல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருக்கிறது. மைய அரசிடம் கடந்த மார்ச் மாதத்தில் அளிக்கப்பட்ட இவ்விசாரணை அறிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அதிலுள்ள முக்கிய விடயங்களை கடந்த செப். மாத இறுதியில் பரபரப்புச் செய்தியாகக் கசிய விட்டது.

வீ.கே. சிங்
முன்னாள் ராணுவ தளபதி வீ.கே. சிங்.

கடந்த ஆறேழு மாதங்களுக்கு மேலாக மைய அரசின் குப்பைகளுள் ஒன்றாகக் கிடந்த இந்த அறிக்கை, வீ.கே.சிங், பா.ஜ.க.வின் பிரதம மந்திரி வேட்பாளர் நரேந்திர மோடியுடன் கை கோர்த்துக் கொண்டவுடனேயே கசிந்து வெளிவந்திருப்பதைத் தற்செயலானதாகவோ, மைய அரசிற்குத் தெரியாமல் நடந்து விட்டதாகவோ கருத முடியாது. அதே சமயம், இந்தக் கசிவு கேள்விக்கிடமற்ற புனிதப் பசுவாகச் சித்தரிக்கப்படும் இந்திய இராணுவத்துக்குள் புரையோடிப் போயிருக்கும் கோஷ்டிப் பூசல்கள், அதிகாரப் போட்டிகள், குழிபறிப்புகள், ஊழல்கள் ஆகியவற்றோடு, தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் இந்திய இராணுவம் காஷ்மீரில் நடத்தி வரும் சதிகள், தகிடுதத்தங்கள் ஆகிய அனைத்தையும் கீறிக் காட்டுவதாக அமைந்து விட்டது.

‘‘இராணுவ அமைச்சகம் அளித்துள்ள அறிவுரைகளின் படிதான் தொழில்நுட்ப ஆதரவுப் பிரிவை அமைத்ததாக” வீ.கே.சிங் தன்னிலை விளக்கம் அளித்திருந்தாலும், அவர் தனது சுயநல நோக்கங்களுக்காகவும் அவ்வமைப்பைப் பயன்படுத்தி வந்திருப்பதும் விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது. வீ.கே. சிங் இராணுவத் தளபதியாக மே 2010-இல் பதவியேற்றவுடனேயே, தொழில்நுட்பப் பிரிவு என்ற பெயரில் இந்த உளவு அமைப்பை அமைத்து, அதனைத் தனது விசுவாச அதிகாரிகளைக் கொண்டு நிரப்பியிருக்கிறார்; தன்னைத் தவிர வேறு யாருக்கும் கட்டுப்படவோ பதில் சொல்லவோ தேவையில்லை என்ற விதத்தில் இந்த அமைப்பைச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகார அமைப்பாக வளர்த்து விட்டதோடு, தனது எதிர் கோஷ்டிகளை உளவு பார்க்கும் அமைப்பாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார். இராணுவத்தின் மற்ற உளவுப் பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, முறைகேடாகத் தனது விசுவாச உளவு அமைப்பிற்குத் திருப்பி விட்டிருக்கிறார். அவரது ஓய்வு பெறும் வயதை நிர்ணயிக்கும் பிரச்சினையில் காங்கிரசு அரசிற்கும் அவருக்கும் பிணக்கு ஏற்பட்ட பிறகு, இந்த அமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு இராணுவ அமைச்சகத்தின் தொலைபேசி பேச்சுக்களை ஒட்டுக்கேட்கும் சட்டவிரோத நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார். இந்த ஒட்டுக் கேட்கும் கருவிகளை வாங்கியதில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழலும் முறைகேடுகளும் நடந்திருப்பதும் விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது.

வீ.கே. சிங்கிற்குப் பிறகு விக்ரம் சிங்கை இராணுவத் தளபதியாக நியமிக்கும் முடிவை மைய அரசு எடுத்த சமயத்தில், ”விக்ரம் சிங் காஷ்மீரில் போலிமோதல் படுகொலைகளை நடத்தியவர்; எனவே, அவரைத் தலைமைத் தளபதியாக நியமிக்கக் கூடாது” எனக் கோரி, ”எஸ் காஷ்மீர்” என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு பொதுநல வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதென்றாலும், இதற்குப் பின்னால் இருந்தவர் வீ.கே.சிங்தான் என்பதும் விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது.  இந்த எஸ் காஷ்மீர் அமைப்புடன் தொடர்புடைய ஜம்மு-காஷ்மீர் மனித சேவை அமைப்பு என்றொரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு வீ.கே.சிங் தலைமைத் தளபதியாக இருந்த சமயத்தில் 2.38 கோடி ரூபாயை நிதியாக அளித்திருக்கிறார்.  அந்த வழக்கையும் இந்த நிதியையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், வீ.கே.சிங், விக்ரம் சிங்கின் பதவி உயர்வுக்கு எதிராகத் திரைமறைவில் காய் நகர்த்தியதைப் புரிந்துகொள்ள முடியும்.

குலாம் ஹசன் மிர்
ஒமர் அப்துல்லா அரசைக் கவிழ்ப்பதற்காக இராணுவத்திடமிருந்து 1.19 கோடி ரூபாய் இலஞ்சமாகப் பெற்றதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள காஷ்மீர் மாநில அமைச்சர் குலாம் ஹசன் மிர்.

ஒமர் அப்துல்லாவின் அரசைக் கவிழ்க்கப் பணம் கொடுத்தார், இராணுவத்தின் அதிகார ஒழுங்கைச் சீர்குலைக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டுகளை விட, இக்குற்றச்சாட்டுகளுக்கு வீ.கே. சிங் அளித்த பதில்தான் அவரது ஆதரவாளர்களைக் கூட விக்கித்துப் போக வைத்து விட்டது. ”ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதத்தை அடக்கி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில்தான் இந்த நடவடிக்கைகளை தான் எடுத்ததாகவும், பணப் பட்டுவாடா நடந்ததை இலஞ்சமாகக் கருதக் கூடாது; அதனை நல்லெண்ண நடவடிக்கையாகக் கருத வேண்டும்” என அவர் விளக்கமளித்ததோடு, ”ஜம்மு-காஷ்மீர் அரசியல்வாதிகளுக்குப் பணம் கொடுப்பதை நான் புதிதாகத் தொடங்கவில்லை; அது 1947 தொடங்கியே நடந்து வருகிறது” என ஒரே போடாகப் போட்டார். தான் மட்டும் நீரில் மூழ்காமல், தனது எதிராளியையும் இழுத்துக் கொண்டு மூழ்கும் தந்திரம் நிறைந்தது அவரது பதில்.

2010-ஆம் ஆண்டில் காஷ்மீரின் தாங்க்மார்க் பகுதியில் நடந்த இளைஞர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததிலும், 2011-ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல்களை நடத்தி முடித்ததிலும் தொழில்நுட்ப ஆதரவுப் பிரிவு பெரும்பங்கு ஆற்றியதாகக் குறிப்பிட்டு, தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தியிருக்கிறார், வீ.கே. சிங்.  ஜம்மு-காஷ்மீரில் நடக்கும் தேர்தல்களைத் தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாக, அங்கு நடைபெறும் போராட்டங்களை இந்திய இராணுவம் தனது உயிரைக் கொடுத்து அடக்கி வருவதாக ஆட்சியாளர்களும் தேசியக் கட்சிகளும் காட்டும்பொழுது, வீ.கே.சிங் அளித்திருக்கும் அறிக்கையோ, அவையெல்லாம் கையூட்டுக்கும் இலஞ்சத்திற்கும் கிடைத்த வெற்றியாகக் கூறுகிறது.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசுக்கு எதிராகத் தன்னெழுச்சியான மிகப்பெரும் மக்கள்திரள் போராட்டம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெடித்தபொழுது, போராட்டக்காரர்கள் லஷ்கர்-இ-தொபாவிடம் காசு வாங்கிக் கொண்டு போராடுவதாகக் கூறி, காஷ்மீர் மக்களை அவமானப்படுத்தியது, இந்திய இராணுவம். இராணுவத்தின் அக்குற்றச்சாட்டு இதுவரை நிரூபிக்கப்படவில்லை.  ஆனால், காசு கொடுத்து துரோகிகளையும் பிழைப்புவாதிகளையும் உருவாக்குவதன் மூலம்தான் காஷ்மீரில் தேசிய ஒருமைப்பாட்டின் கொஞ்சநஞ்ச மான, மரியாதையையும் காப்பாற்ற முடிகிறது என்பதை இந்திய இராணுவத்தின் தளபதியாக இருந்தவரே ஒப்புக்கொண்ட பிறகும் இது குறித்து விசாரிப்பதற்கு மட்டுமல்ல, இது குறித்துப் பேசுவதற்கே அச்சப்படுகிறார்கள் காங்கிரசு, பா.ஜ.க. பிராண்டு தேசியவாதிகள்.

காங்கிரசு தோண்டிய கிணற்றிலிருந்து வெளிவந்த பூதம் காஷ்மீரைச் சேர்ந்த பிழைப்புவாத ஓட்டுக்கட்சித் தலைவர்களை மட்டுமல்ல, இந்த ‘தேசிய’க் கட்சிகளையும் ஒருசேர அம்பலப்படுத்தி விட்டது. அதனால்தான், ”இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இன்னும் விரிவாக விசாரணை நடத்த வேண்டும்” என இழுக்கிறது, மைய அரசு. வீ.கே. சிங்கின் ஆதரவாளரான பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி, ”இத்தகைய இரகசியங்கள் வெளியே வந்திருக்கக் கூடாது; இஷ்ரத் ஜஹான் வழக்கிலும் இப்படிதான் காங்கிரசு இரகசியங்களை வெளியே கசியவிட்டு விட்டது” எனக் கண்டித்திருக்கிறார். ”இராணுவ இரகசிய நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை வெளிப்படையாக ஆராய்வதும் பேசுவதும் ஆபத்தானது; உளவு அறியவும் எதிரியைத் திசை திருப்பவும் இராணுவம் எதையெல்லாமோ செய்யும். அதையெல்லாம் அம்பலப்படுத்திக் கொண்டிருப்பது ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு நல்லதல்ல” என எச்சரிக்கிறது, தினமணி (29.09.2013).

2011 பஞ்சாயத்து தேர்தல்
காஷ்மீர் பள்ளத்தாக்கில் 2011-ஆம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் ஓட்டுப்போடக் காத்திருக்கும் மக்கள் (கோப்பு படம்)

இப்படிப்பட்ட கேள்விக்கிடமற்ற ஆதரவு மட்டுமல்ல, சட்டபூர்வ பாதுகாப்பும் இந்திய இராணுவத்துக்கு வழங்கப்படுவதால்தான், அக்கும்பல் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமின்றி நிதி முறைகேடுகள், ஊழல்கள் மட்டுமல்ல, காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் போலி மோதல் கொலைகளை அடுக்கடுக்காக நடத்தி வருகிறது. அதிலும் கூட, ‘மோதல்’ கொலை நடந்ததாகப் பொய்க்கணக்கு எழுதி, அரசாங்கம் அறிவித்துள்ள பரிசுப் பணம், பதவி உயர்வுகளை மோசடியான முறைகளில் சுருட்டிக் கொள்கிறது.  போராளி அமைப்புகளிலிருந்து விலகி சரணடைவோரை மிரட்டிப் பணம் பறிக்கும் மாஃபியா வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. தனது சதித் திட்டங்களை நிறைவேற்றும் பலிகிடாக்களாகச் சரணடைந்த போராளிகளைப் பயன்படுத்திக் கொண்டு, பிறகு அவர்களைத் தூக்கு மேடைக்கும் அனுப்புகிறது.  தூக்கிலிடப்பட்ட அஃப்சல் குரு இப்படிபட்ட பலிகிடாக்களில் ஒருவர்தானே!  இந்தச் சதிகளை விசாரிப்பது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தென்றால், அயோக்கியத்தனத்தின் மறுபெயர்தான் தேசப் பாதுகாப்பு, தேச பக்தி என அடித்துச் சொல்லலாம்.

-ஆர்.ஆர்.
________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2013
________________________________

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் – நீங்களும் எழுதலாம்

20

ணரூழ்த்து நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.

–    குறள் 650

ஆசிரியர்இந்தக் குறளுக்கு மு.வ உரையின் படி,

தாம் கற்ற நூற் பொருளைப் பிறர் உணருமாறு விரித்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

– என்பது பொருளாகும்.

பல வண்ணங்களில் தோட்டம் தோட்டமாக மலர்ந்திருந்தாலும் இன்றைய ஆசிரியர்களிடம் இத்தகைய மணம் கமழும் இயல்பு வெகு அரிது. தூரத்தே கண்ணைக் கவரும் வண்ணம் இருந்தாலும் அருகாமையில் கூட மணம் பரப்பாத இந்தப் பூக்களால் என்ன பயன்?

கல்வி என்பது வேலை வாய்ப்பாகவும், வாழ்க்கையின் பொருளாதார ஓட்டத்திற்கு தேவைப்படும் பந்தயக் குதிரை தயாரிப்பாகவும் அருகி விட்ட சூழ்நிலையில் அறிவு மட்டுமல்ல, அறிவை செதுக்கும் ஆசிரியக் கலை அறிந்த ஆசிரியர்களும் வெறுமனே ரிங் மாஸ்டர்களாக மட்டும் மிரட்டுகிறார்கள்.

அறிவுப் பெருவெளியில் தட்டுத் தடுமாறி, தவழ்ந்து, எழுந்து, அன்னமாகவும், சிறுத்தையாகவும் ஓட வேண்டிய நாம் கூண்டில் அடைபட்ட விலங்குககளாய் சலிப்பூட்டும் விதத்தில் ஆடுகிறோம்.

ஆசிரியர்

இயற்கை, மனித சமூகம், சிந்தனை மூன்றின் இயக்கத்தையும், வரலாற்றையும், போராட்டத்தையும் உள்வாங்கி அந்தப் பாதையில் பயின்று பங்களிக்கும் போது மட்டுமே அறிவும், நடைமுறையும், வரலாறும் ஒன்றுக்கொன்று தோழனாய் பிரபஞ்சப் பெருவெளியில் வெற்றிகரமாய் பயணத்தை தொடரும்.

ஆனால்?

மறுகாலனியாக்க சூழலில் கல்வியை தனியார்மயம் கவ்வியிருக்கும் நிலையில் அறிவும் ஆசிரியர்களும் சந்தையின் விதிகளைக் கற்றுத்தரும் தனிநபர்வாதத்தை மட்டும் கற்றுத் தருகின்றனர்.

சந்தையின் புதிய காரை தொலைவிலேயே அடையாளம் காணும் சிறுவனுக்கு தாமிரபரணி ஆறு தெரியாது. ராக்கியையும், அண்டர்டேக்கரையும் விடாது துரத்தும் மாணவர்களுக்கு வெள்ளையனை துரத்த முயன்ற திப்புசுல்தானின் வீரமரணம் தெரியாது. ராகு கேது கதைகளோடு விரதமிருக்கும் பெண்களுக்கு கிரகணம் குறித்த அறிவியல் உண்மை போய்ச் சேருவதில்லை. லாஸ் வேகாசின் தெருக்களை வீடியோ கேமினால் அறியும் இளைஞனுக்கு மாஞ்சோலையின் அமைவிடம் தெரியாது. அழகு நிலையங்களிலும், நிலைக்கண்ணாடியிலும் அழகைத் தேடும் மாணவிகளுக்கு சமூகக் களத்தில் உருவாகும் பேரழகு குறித்து கிஞ்சித்தும் தெரியாது.

பேராசிரியர்

ஜன்மாஷ்டமியில் உண்ணியப்பத்தை ருசிக்கும் பக்தர்களுக்கு வருணாசிரமத்தை போதித்த கீதைக்கும் முந்தைய குறளின் “பிறப்பொக்க எல்லா உயிர்க்கும்” வரிகளின் வரலாறு தெரியாது. பங்குச் சந்தையின் சூதாட்டத்தை பயலும் வணிகவியல் மாணவர்களுக்கு பல பத்தாண்டுகளில் விலைவாசி உயராத சோவியத் சமூகத்தின் வரலாறு தெரியாது.

இவையெல்லாம் கற்றுத்தருகின்ற கல்விக்கூடமும், ஆசிரியர்களும் எங்கே இருக்கின்றார்கள் என்றால் அதற்கு சோவியத் யூனியனையும், பொதுவுடமையை சீனாவையும் கூறலாம். இரண்டும் தற்போது இல்லை. ஒருவேளை இத்தகைய சமூக அமைப்பு இல்லையென்றாலும் கல்வி கற்க வரும் மாணவர்களிடம் ஏதோ ஒரு துறை சார்ந்த ஆர்வத்தையும், பரவசத்தையும் தமது தனிப்பட்ட ஆர்வத்தினால் கற்றுத்தந்த ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

இவர்கள் தமது பணியை விரும்பி ஏற்றதோடு அதை ஒரு தொண்டாகவே செய்து வந்தார்கள், வருகிறார்கள். கல்வியை விருப்பமான அறிவாக, கலையாக மாணவர்களிடம் கற்பிக்க முனையும் இத்தகைய ஆசிரியர்களைப் பெற்ற மாணவர்கள் நிச்சயமாக அதிர்ஷடசாலிகள்தான். இதில் நாம் அறிவியலை விடுத்து அதிர்ஷ்டத்தை மட்டும் சார்ந்து நிற்பது ஒருவகையில் துரதிர்ஷடவசமானதுதான். ஆயினும் என்ன செய்வது?

ஆசிரியர்ஆரம்ப பாடசாலை முதல் உயர்மட்ட கல்வி வரை இவர்கள், உயிரெழுத்தையும், கணித வாய்ப்பாட்டையும், குவாண்டம் இயற்பியலையும், உழைக்கும் மக்களின் கதைகளையும், வரலாற்றின் வழியையும் சலிப்பில்லாமல் கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.

வினவில் வந்த கவரப்பட்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் போல, தங்க மீன்களின் எவிட்டா மிஸ் போல ஊருக்கொன்றாய், காலத்திற்கொன்றாய் இவர்கள் இருக்கலாம். அவர்களைப்பற்றி நாம் நினைவு கூர்வதும், அந்த நினைவின் வழி நல்ல ஆசிரியர்களை உலகறியச் செய்வதும், அறிந்த உலகம் இனிவரும் ஆசிரியர்களை அப்படி ஒரு சிலரையாவது உருவாக்குவதற்கும்தான் இந்த முயற்சி.

ஆம். உங்கள் மாணவப் பருவத்தில் அத்தகைய ஆசிரியர்கள் இருந்திருப்பார்கள். அவர்களைப் பற்றிய உங்கள் நினைவுகளை எழுதி அனுப்புங்கள். அந்ந ஆசிரியர்கள் அரசு ஆசிரியர்களாக மட்டும் இருக்க வேண்டியதில்லை, தனியார் பள்ளி ஆசிரியர்களாகவும், ஏன் வெளிநாட்டு முனைவர் பட்டத்தை வழிநடத்தும் ஆசிரியர்களாக கூட இருக்கலாம்.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஹைபிரிட் குதிரைகளை வளர்க்கும் சுமையிலும், அரசு பள்ளி ஆசிரியர்கள் பெருத்த சம்பளங்களை வாங்கிக் கொண்டு வட்டிக்கு விடும் தொழிலதிபர்களாகவும் இருக்கும் காலத்தில் நல்ல ஆசிரியர்களை நினைவு கூர்வோம்.

வாசகர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், தோழர்கள் அனைவரும் இதில் பங்கேற்குமாறு அழைக்கிறோம். உங்களைப் பற்றிய விவரங்களுடன் ஆசிரியர் நினைவுகளை எழுதி அனுப்புங்கள். தட்டச்சு தெரியாத நண்பர்கள் கூட கையெழுத்தில் எழுதி ஸ்கேன் செய்து அனுப்பலாம். வரும் நாட்களில் இந்த பதிவுகள் தொடராக வெளிவரும். இந்த தொடருக்கு என்ன தலைப்பு வைக்கலாம்? என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள், வெளிச்சத்திற்கு வராத வேர்கள் போல இதைவிடச் சிறப்பான தலைப்புகளை நீங்களும் தெரிவிக்கலாம்.

– வினவு

ஜெயா என்றால் சீமான், நெடுமாறனுக்கு பயம் பயம் !

15

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவரை இடித்துத் தள்ளி, அடுத்தது முற்றத்தையும் இடிக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் புரட்சித் தலைவி. கொளத்தூர் மணி கைது, நெடுமாறன் கைது என்று கைதுகளுக்கும் குறைவில்லை.  சர்வாதிகார ஆட்சியின் காட்டுத் தர்பாரை எதிர்க்கத் துணிவற்ற தமிழ்த் தேசியவாதிகளோ… ‘இது மத்திய உளவுத் துறையின் சதி‘ என்கிறார்கள். அதாவது ஜெயலலிதாவுக்கும் இதற்கும் தொடர்பு இல்லையாம்.

நெடுமாறன்
‘‘முற்றத்தை யாராவது அழிக்க நினைத்தால் அவர்களை, இறந்து போன தமிழர்களின் ஆன்மா மன்னிக்காது’’

கைதுக்கு முந்தைய நெடுமாறனின் பேட்டியைக் கவனியுங்கள்…

‘‘மத்திய புலனாய்வுத் துறை மூலமாக இதை இடிக்கவும் விழாவை தடுக்கவும் முயற்சி நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசும் ஏன் எதிராக செயல்படுகிறது என்றே தெரியவில்லை” என்று புலம்பினார். “ஏன்” என்ற கேள்விக்கு நெடுமாறனுக்கு பதில் தெரியவில்லையென்றால் நடராஜனிடம் கேட்டால் சொல்லக் கூடும். முள்ளிவாய்க்கால் முற்றம் நிகழ்ச்சிக்கு இடையூறு செய்தது முதல் சுற்றுச் சுவரை இடித்தது வரை சகலமும் ஜெயலலிதாவின் வேலைதான் என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். நெடுமாறனுக்கு மட்டும் தெரியவில்லையாம்.

அடுத்த பாராவில், ‘‘முற்றத்தை யாராவது அழிக்க நினைத்தால் அவர்களை, இறந்து போன தமிழர்களின் ஆன்மா மன்னிக்காது’’ என்று எச்சரிக்கிறார். மூன்றாவது பாராவில், ‘‘இதை அழிக்க நினைப்பவர்கள் தமிழ் இனத்தின் துரோகி” என்று சாபம் விடுகிறார். கடைசி வரையில் பெயரை மட்டும் அவர் சொல்லவே இல்லை.

மேற்கண்ட பேட்டி, நெருக்கடி முற்றிய நிலையில், குறிக்கப்பட்ட தேதிக்கு முன்னரே முற்றத்தை திறந்து வைத்து நெடுமாறன் பேசியது. ஒருவேளை சுற்றுச் சுவர் இடிக்கப்பட்ட பின்னர் ஜெயலலிதாவைக் கண்டித்து ஏதேனும் பேசியிருப்பாரோ என்று தேடிப் பார்த்தோம். அப்போதும் இதேமாதிரி, ‘தமிழர்கள் ஆவி மன்னிக்காது’ என்றுதான் பேசிக்கொண்டிருக்கிறார். கடைசி வரையில் இடித்தது யார் என்பதை அவர் சொல்லவே இல்லை.

“அதை மட்டும் சொல்லிராதீங்க… அடிச்சுக் கூட கேப்பாங்க, அப்பவும் சொல்லிராதீங்க” என்ற வடிவேல் காமெடியைப் போல… நெடுமாறன் கடைசி வரையிலும் ‘அதை’ மட்டும் சொல்லவே இல்லை. நெடுமாறன் மட்டுமா? இந்தப் பட்டியலில் பலர் உண்டு.

சீமான்
‘சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா, இப்படி இடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று அதிர்ச்சி அடைகிறார்.

முற்றம் இடிப்பைக் கண்டித்துப் பேசிய சீமான், ‘இது மத்திய உளவுத்துறையின் சதி’ என்றதோடு நிற்கவில்லை. அதை நிரூபிக்க ஆதாரங்களை எடுத்து விட்டார். ஆக்கிரமிக்கப்பட்டதாக சொல்லப்படும் நெடுஞ்சாலை மத்திய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமென்றும், அதனால் ரா அமைப்பின் தூண்டுதலின் பேரில்தான் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டிருப்பதாகவும் ஈழ இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். நெடுஞ்சாலைகளெல்லாமே மத்திய அரசுக்கு சொந்தமானவையல்ல என்பதை அண்ணனுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது. இந்த இடத்தை மாநில அரசிடமிருந்து குத்தகைக்கு எடுத்துள்ளதாகவும், குத்தகையை மாநில அரசு புதுப்பிக்கவில்லையென்றும் நெடுமாறன் கூறியிருக்கிறார். அண்ணன் அதையும் கவனிக்கவில்லை போலும். ஜெ அரசு சம்பந்தப்பட்டதாக இருந்தால், எப்படியோ அது அண்ணன் கண்ணில் படாமலேயே போய் விடுகிறது.

அதுமட்டுமல்ல, ‘காமன்வெல்த் மாநாட்டுக்குத் தமிழ்நாட்டில் எழுந்திருக்கும் எதிர்ப்புகளை திசை திருப்பவே, முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்டுள்ளது’ என்ற யாரும் எதிர்பார்க்காத கோணம் ஒன்றையும் எடுத்து விட்டார். இப்படி சொல்லி முடிப்பதற்குள் அவருக்கு ஜெயலலிதாவின் காமன்வெல்த் தீர்மானம் நினைவுக்கு வந்து விட்டது. ‘சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா, இப்படி இடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று அதிர்ச்சி அடைகிறார். அப்ப தீர்மானமெல்லாம் நாடகமா என்று சந்தேகமாக கேட்கிறார்.

என்ன பேசினாலும் ‘ஜெயலலிதா’ என்ற பெயரை மட்டும் அவர் சொல்லவில்லை. பெருமகனார் என்பதைப் போல பெருமகளார் என்று மரியாதையாகவாவது சொல்லலாம். ஆனால் எச்சரிக்கையாக ‘தமிழக அரசு’ என்கிறார். தமிழக அரசின் செயல் அவருக்கு அதிர்ச்சி அளிக்கிறதாம்.

வைகோ
வைகோவை பொருத்த வரை அம்மாவுடன் கூட்டணி கிடையாது.

அம்மாவுக்கு அப்பாற்பட்டு ஒரு அரசா? கழிவறை முதல் கல்லறை வரை எது திறக்கப் பட்டாலும், “நான் உத்தரவிட்டுள்ளேன், என்னுடைய அரசு நிறைவேற்றியிருக்கிறது” என்று அடக்கத்தோடு பொறுப்பேற்றுக் கொள்ளும் அம்மையார், இந்த புல்டோசர் வேலைக்கு மட்டும் பொறுப்பேற்றுக் கொள்ள மாட்டாரா என்ன?

அம்மாவுக்கு அப்பாற்பட்டு ‘தமிழக அரசு’ என தனியே ஒன்று செயல்படுவதாக சீமான் பேசி வருவது அம்மாவுக்கு தெரிந்தால், அண்ணன் மீது அவதூறு வழக்கு பாயத் தொடங்கி விடுமே! சீமான் இந்தக் கோணத்தில் யோசித்தாரா தெரியவில்லை.

ஸ்ஸ்.. யப்பா… முடியலை.

ஜெயலலிதா எவ்வளவு அடித்தாலும் வலிக்காதது மாதிரியே நடிக்கும் இவர்கள், இப்போதும் வலியை பொறுத்துக் கொண்டு, உள்குத்துக்கு ஆயின்மென்ட் தடவிக் கொண்டிருக்கிறார்கள்.

வைகோவை பொருத்த வரை அம்மாவுடன் கூட்டணி கிடையாது. அவர் தலைவிதி முடிவாகி விட்டது. “அங்க அவன் இடிக்கிறான், இங்க இவள் இடிக்கிறாளா, அங்கே ராஜபக்சே இடிக்கிறான், இங்கே ஜெயலலிதா இடிக்கிறாளா?” என்று வைகோ உணர்ச்சி வசப்பட்டு வார்த்தையை விட்டதை காப்டன் டிவிக்காரன் கவ்வி விட்டான். அதையே திரும்பத் திரும்ப போட்டுத் தாக்குகிறான்.

இதையெல்லாம் கண்டு நெடுமாறன் அண்ட் கோவுக்கு சித்தம் கலங்குகிறது. ‘நாம வெயிட்டாவும், வீக்காவும் பேசி சமாளிச்சுக்கிட்டிருக்கோம். இந்தாளு நடுவுல புகுந்து குட்டையைப் குழப்புறாரே’ என்று அவர்கள் உள்ளுக்குள் குமைகிறார்கள்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதா குடைச்சல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். நினைவு ஜோதி கொண்டு வந்தவர்களை கைது செய்தார். நிகழ்ச்சியையே தடை செய்ய முயன்றார். அதனால்தான் திட்டமிட்டதில் இருந்து இரண்டு நாட்கள் முன்பாகவே நெடுமாறன், முற்றத்தை திறந்து வைக்க வேண்டியிருந்தது. அதன் பிறகும் காவல் துறையின் நெருக்கடிகள் நிற்கவில்லை. பிரபாகரன் படம் பதித்த ப்ளெக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று அவற்றை அகற்றினார்கள்.

அந்த சமயத்தில் ‘இந்து’ பத்திரிகையில் ஒரு செய்தி வெளியானது. ‘முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் உட்பகுதியில், ஈழப் போராட்டத்தில் உயிர் நீத்த பல தலைவர்களின் படங்கள் ஓவியங்களாக வைக்கப்பட்டுள்ளன. அதில் பிரபாகரனின் ஓவியமும் உள்ளது. அந்த ஓவியம் மட்டும் ஒரு துணியால் மூடி வைக்கப்பட்டுள்ளது’ என்ற அந்த செய்தியைக் கண்டு பதறிப்போன நெடுமாறன் உடனடியாக மறுப்பு ஒன்றை வெளியிட்டார். , ‘ஈழப் போராட்டத்தில் இறந்து போனவர்களின் ஓவியங்களை மட்டுமே முற்றத்தில் வைத்துள்ளோம். பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கிறார். அதனால் அவர் படத்தை வைத்திருக்கிறோம் என்ற செய்தியே தவறானது’ என்று அறிக்கை வெளியிட்டார்.

எவ்வளவு அயோக்கியத்தனம் இது? காலம் எல்லாம் எந்தப் பெயரை வைத்து அரசியல் செய்தார்களோ… அந்தப் பெயரை சத்தமே இல்லாமல் கை கழுவி விட்டார்கள். முப்பதாண்டு காலமாக தங்களின் சுயநல அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்ட பிரபாகரன் என்ற பெயரை, அவரது மரணத்திற்குப் பிறகு தீண்டத் தகாததாக மாற்றி விட்டனர் தமிழ்த் தேசியவாதிகள். அதனால்தான் ‘பிரபாகரனின் ஓவியம் இருக்கிறது’ என்ற செய்திக்கு அஞ்சிப் பதறுகிறார் நெடுமாறன்.

ஓவியம் இருக்கிறது என்ற செய்தி அம்மாவின் கண்ணில் பட்டு விட்டால் என்ன செய்வது என்பது தான் அவருடைய பிரச்சினை. அதனால்தான், எப்டியெல்லாமோ பேசி சமாளிக்கிறார். பிரபாகரன் உயிரோடு இருப்பதாக இப்போது எவரும் பேச மறுக்கும் நிலையில் அதை ஒரு லா பாயிண்டாக வைத்து இந்து செய்தியை மறுக்கிறார் நெடுமாறன். இதில் பிரபாகரன் புகழை விட ஜெயா மீதான அச்சமே மேலோங்கி இருக்கிறது.

பிரபாகரன் பெயரைச் சொல்ல பயம், ஜெயலலிதா பெயரைச் சொல்ல பயம்… இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் ஈழம் வாங்கித் தரப் போகிறார்களாம்!

இதில் உச்சகட்ட காமெடி ஒன்றும் இருக்கிறது. இரவு 10 மணிக்குப் பிறகு ஒலிபெருக்கி பயன்படுத்திய வழக்கில் (சசிகலா) நடராஜன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு நடராஜன், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘நவம்பர் 8 -ம் தேதி நடைபெற்ற திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன். விழாவை ஏற்பாடு செய்திருந்த உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளைக்கும், விழா ஏற்பாட்டாளர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள், கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர். திறப்பு விழா மற்றும் கருத்தரங்கம் எந்தவொரு தனிப்பட்ட நபருக்கோ, அரசுக்கோ அல்லது நாட்டுக்கோ எதிராக ஏற்பாடு செய்யப்படவில்லை.” என்கிறார் நடராஜன்.

சசிகலா நடராசன்
‘எனக்கும் இந்த முற்றத்துக்கும் அதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’

//விழாவை ஏற்பாடு செய்திருந்த உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளைக்கும், விழா ஏற்பாட்டாளர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை// என்ற வாக்கியத்தின் பொருள் உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை என்பது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்படுவதற்காக உருவாக்கப்பட்டது. இதற்கு நெடுமாறன்தான் தலைவர். ‘விழா ஏற்பாட்டாளர்கள்’ என்றால் யார்? நடைமுறையில் இது நடராஜனைதான் குறிக்கும். தனக்கும் நெடுமாறனுக்கும் தொடர்பில்லை என்கிறார்.

அப்புறம்,  ‘இது தனியொரு நாட்டுக்கோ தனியொரு நபருக்கோ எதிரானது இல்லை’ என்கிறார். ‘யாருக்கும் எதிரானது இல்லை’ என்றால் ராஜபக்சேவுக்கும் எதிரானது இல்லை போலும். மொத்தத்தில் ‘எனக்கும் இந்த முற்றத்துக்கும் அதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்பதுதான் அவர் தனது ஜாமீன் மனுவில் கூறவரும் விசயம்.

ஒரு வருடத்துக்கு முன்பு தஞ்சாவூரில் நடந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில், நடராஜனுக்கு சொந்தமான ரோலக்ஸ் வாட்ச், நிசான் கார், என்டோவர் கார், சொனாட்டா கார் ஆகியவை விழா மேடையில் வைத்து விற்பனை செய்து, அதில் கிடைத்த 45 லட்ச ரூபாய் பணத்தை முள்ளிவாய்க்கால் முற்றத்திற்காக நெடுமாறனிடம் கொடுத்தார் நடராஜன். இது அவர்களே வெளியிட்ட பத்திரிகை செய்திதான். அந்த 45 லட்சம் பணம் போக, விளார் கிராமத்தில் உள்ள தனது நிலம் 2 ஏக்கரையும் முற்றத்திற்காகக் கொடுத்தார். பிறகு நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தார். முற்றத்தை நெடுமாறன் திறந்து வைக்கும் போதும் அதன் பிறகும் நடராஜனும், அவரது சகோதரர் சுவாமிநாதனும் எப்போதும் உடன் இருந்தார்கள். இப்படியிருக்க… ‘எனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை’ என்று அடித்து விடுகிறார் நடராஜன்.

நேற்று நெடுமாறன் உள்ளிட்ட 81 பேருக்கு ஜாமீனும், நடராஜனுக்கு முன்ஜாமீனும் வழங்கியிருக்கிறது உயர்நீதிமன்றம். ‘10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி போட்டது’ என்பதெல்லாம் ஒரு போண்டா செக்சன். இதற்கு முன் ஜாமீன் வாங்கி வரலாறு படைத்திருப்பவர் அநேகமாக ‘மொழிப்போர்‘ மறவர் நடராசன் ஒருவராகத்தான் இருக்க முடியும். அதேபோல, இந்த போண்டா கேசுக்கு முன்ஜாமீன் வாங்குவதற்கே உயர் நீதிமன்றம் வரை விரட்டிய அரசும் புரட்சித் தலைவியின் அரசாகத்தான் இருக்கமுடியும்.

தொடர்ந்து பல்லைக் கடித்துக் கொண்டு வலியைப் பொறுத்துக்கொள்வதே அடுத்தடுத்து அடி வாங்குவதற்கான அடிப்படையாகவும் அமையக் கூடும்.  “நாம இவ்வளவு தூரம் கை வலிக்க அடிக்கிறோம். நம்மளை ஒரு வில்லனாவே ஒத்துக்க மாட்டேங்குறாங்களே” என்று அம்மா ஆத்திரமடைவதற்கான வாய்ப்பும் உண்டு.

புற முதுகு காட்டாத தமிழின வீரம் என்பது சங்க இலக்கியத்திற்கு மட்டுமே சொந்தம், முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அல்ல போலும்.

– வழுதி

வளம் கொழிக்கும் இணைய உளவுத் தொழில்

2

மூன்றாம் உலக நாடுகளுக்கு உளவுக் கருவிகளை விற்பது இப்போழுது தனியார் நிறுவனங்களுக்கு நல்ல லாபம் தரும் தொழில். தேர்ந்த தொழில் நுட்பத்துடன் மக்களை உளவு பார்க்கும் கருவிகள் மற்றும் மென் பொருட்களை சந்தைப்படுத்தி பெரும் லாபம் ஈட்டிக் கொண்டிருகின்றன பல தனியார் நிறுவனங்கள்.

“எங்கள் உளவுக் கருவிகளை பயன்படுத்தினால் நீங்கள் ஒரே நேரத்தில் பல லட்சம் மின்னஞ்சல்களை உளவு பார்க்கலாம்” என்கிறது ஒரு தனியார் நிறுவனத்தின் கவர்சசிகரமான விளம்பரம்.

இங்கிலாந்தை சேர்ந்த பிரைவசி இன்டர்நேஷனல் எனும் தனிநபர் உரிமைகளை கண்காணிக்கும் நிறுவனம் வெளியிட்டுள்ள  ஆய்வறிக்கையில், மூன்றாம் உலக நாடுகளுக்கு உளவுக் கருவிகள் விற்கும் தனியார் நிறுவனங்களின் லாபம் கொழிக்கும் வணிகம் பற்றியும் அவர்களின் ரகசிய சந்தைப்படுத்தும் ஆவணங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.

ஒளி இழைக் கம்பிகள்
ஆமெஸ் நிறுவனம் வழங்கும் செரிப்ரோ கருவியை ஒளி இழைக் கம்பி வலையமைப்பில் பொருத்துவதன் மூலம் இணைய பரிமாற்றங்களை ஒட்டுக் கேட்கலாம்.

பிரைவசி இன்டர்நேஷனல் கடந்த நான்கு ஆண்டு காலம் நடத்திய ஆய்வுகள் மற்றும் ஆவண சேகரிப்பின் மூலம், தனியார் உளவு கருவிகள் விற்கும் நிறுவனங்கள் நடத்திய ரகசிய விற்பனை கண்காட்சிகள், அதில் சந்தைப்படுத்த உபயோகித்த 1200-க்கும் அதிகமான ஆவணங்கள், இதர ரகசிய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கைப்படி இங்கிலாந்து, ஜெர்மெனி, பிரான்சு, அமெரிக்காவைச் சேர்ந்த 300-க்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள், ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகளுக்கு மக்களை உளவு பார்க்கும் கருவிகள், மற்றும் மென் பொருட்களை விற்பனை செய்துள்ளது தெரிய வந்தது. இந்த விற்பனைக்காக அரசு பிரதிநிதிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டும் பங்கெடுத்த பல ரகசிய கண்காட்சிகளும் நடத்தப்பட்டுள்ளன. துபாய், பராகுவே, பிரேசில், வாஷிங்டன், கோலாலம்பூர், லண்டன் போன்ற நகரங்களில் இந்த ரகசிய கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

பல்வேறு கவர்ச்சிகரமான தொழில் நுட்பங்களை காட்டி தங்கள் கருவிகள் மற்றும் மென்பொருட்களின் சிறப்பை அவர்கள் விளக்கியுள்ளனர். அவர்களின் உளவுக் கருவிகள் பல லட்சம் மின்னஞ்சல்கள், குறுங்செய்திகள், தொலைபேசி அழைப்புகளை ஒரே நேரத்தில் கண்காணிக்கும் என்று மார் தட்டியுள்ளனர்.

இந்த மாதிரியான உளவுக் கருவிகளை விற்பனை செய்வது குறித்து எந்த நாட்டிலும் தனிச் சட்டங்கள் இல்லை. இவர்களின் வணிகம் கண்காணிப்படுவதும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் இவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ‘இந்த மாதிரி கருவிகளை விற்பது சட்டப்படி குற்றமாகாது. இன்று பெருகி வரும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த இந்த உளவுக் கருவிகள் பெரிதும் உதவும்’ என்பது அவர்களின் வாதம்.

ஆனால், “தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என வாங்கப்படும் பல உளவு கருவிகள் அந்நாடுகளில் உள்ள மனித உரிமை பாதுகாவலர்கள், களப்பணியாளர்கள், தகவல் உரிமை ஆர்வலர்கள் இதர சமுக ஆர்வலர்களை கண்காணிக்க பெரிதும் பயன்படுத்தப்படுகிறது” என கவலை தெரிவிக்கிறது பிரைவசி இனடர்நேஷனல். “எங்களின் இந்த முயற்சியின் மூலம் இந்த வணிகம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும், கட்டுப்படுத்தப்பட வேண்டும். இது தான் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டதன் முக்கிய நோக்கம்” என்கிறது பிரைவசி இன்டர்நேஷனல்.

அமெரிக்காவின் பிரிஸம், இங்கிலாந்தின் ஜிசிஎச்க்யு அரசு நிறுவனங்களை  போன்று  மக்களை உளவு  பார்க்கும் பெரிய பூதத்தின் குட்டிச் சாத்தான்கள் தான் இந்த மூன்றாம் உலக நாடுகளின் கண்காணிப்புகள். வரும் காலத்தில் இவை அனைத்தும் ஒன்றாக ஒரே வலைப் பின்னலுக்குள் இணைக்கவும் படலாம்.

இங்கிலாந்தின் அரசுத் துறைகள் இந்நிறுவனங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றன. இந்த கருவிகளை உண்மையான தீவிரவாதிகள் வாங்கி அரசையும் கண்காணிக்கலாம் என்ற பயமாக இருக்கலாம். ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் வருவது போல் சட்டை பட்டன் கேமிரா, கோக் டின்னில் காமிரா, ரகசிய ஆயுதங்கள் என இந்த உளவுக் கருவிகள் பல வண்ண தொழில் நுட்பங்களை கொண்டவை. ஆனால் இங்கிலாந்தின் அரசுத் துறைகள் எந்த லட்சணத்தில் இயங்கும் என்பதும், குறிப்பாக வெளிநாடுகளில் வணிகம் என்றால் எப்படி இயங்கும் என்பதும் குளோபல் டெக்னிகல் நிறுவனத்தின் போலி வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவி விற்பனையிலேயே பார்த்தது தான்.

இந்த நிறுவனங்கள் அமெரிக்காவின் என்எஸ்ஏ, இங்கிலாந்தின் ஜிசிஎச்க்யு ஆகியவற்றுக்கு நிகரான கருவிகள் இருப்பதாக பயம் காட்டுகின்றன. பிரைவசி இனடர்நேஷனல் அம்பலப்படுத்தியுள்ள ஆவணத்தில் உள்ள மத்திய கிழக்கை சேர்ந்த துபாயை தலைமை இடமாக கொண்ட தனியார் நிறுவனம் அமெஸ், செரிப்ரோ எனும் கருவியை விற்பனை செய்கிறது. செரிப்ரோ கிட்டத்தட்ட இங்கிலாந்தின் உளவு நிறுவனமான ஜிசிஎச்க்யு நிறுவனத்தின் டெம்போரா எனும் கருவிக்கு நிகரானது. இந்த கருவி வன்பொருள் மற்றும் மென்பொருள் இணைந்து செயல்படும் ஒரு அமைப்பு.

செரிபெரா கருவியை நாட்டின் மைய ஒளி இழையில் (Optocal Fibre Cable) பொருத்துவதன் மூலம், ஒரே நேரத்தில் பல லட்சம் இணைய பரிமாற்றங்களை, குறுஞ்செய்திகள், செல்பேசி அழைப்புகள், பில்லிங் தகவல்கள், மின்னஞ்சல்கள், சமூக வலைத் தளங்களில் நடக்கும் விவாதங்கள், தனி நபர் சாட் வரை அனைத்தையும்  கண்காணிக்கலாம். இதில் சிறப்பு என்னவென்றால், இதற்கு எந்த சேவையாளரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

செரிப்ரோவின் இன்னொரு சிறப்பு, அது பில்லியன் கணக்கான தகவல்களை சேமிக்க வல்லது. ஒரு நபரை நேரடியாக அதாவது லைவாக கண்காணிக்க முடியும் என்பது இதன் மற்றுமொரு சிறப்பம்சம்.

சேர்மன் மாவோ
மாவோ அணுகுண்டை “காகிதப் புலி“ என்றார்.

இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் யாரும் பத்திரிக்கை கேள்விகளுக்கு பதில் அளிக்க விருமபவில்லை. “நாங்கள் அரசுக்கு உதவியாகத்தான் இருக்கிறோம், தீவிரவாதத்தை ஒழிக்க உதவுகிறோம் என்று மட்டும் விளக்கம் அளிக்கின்றன.

ஆனால் இந்த கருவிகள் தீவிரவாதிகள் மீது மட்டும்தான் கண்காணிப்பை நிகழ்த்துகின்றன என்பதற்கு  என்ன உத்திரவாதம்? யார் பொறுப்பேற்பார்கள்.?

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லாரசு நாடுகள் மட்டுமில்லாமல், மூன்றாம் உலக நாடுகள் கூட மக்களை உளவு பார்க்க காரணம் என்ன?

அரசின் ஊழல், வேகமாகி வரும் தனியார் மயம் இவற்றின் மூலம் நாட்டின் வளங்கள் கார்ப்பரேட்டுகளின் லாப வெறிக்கு அள்ளிக் கொடுக்கப்படுகிறது, சாதாரண மக்களின் வாழ்க்கை அதிகரித்து வரும் வரிகளின் சுமையுடனும், விலைவாசி உயர்வுடனும் நெருக்கடிக்கு உள்ளாகிறது. கார்ப்பரேட்டுகளின் லாப வெறிக்கு எதிராக மக்கள் எழுச்சிகள் வெடிக்காமல் அவர்கள் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது அவசர தேவையாகியிருக்கிறது. அமெரிக்கா பூச்சாண்டி காட்டிய தீவிரவாதத்தை விட உண்மையாக மக்களின் எழுச்சியைத் தான் அவர்கள் தீவிரவாதம் என பார்க்கிறார்கள்.

அறுபதுகளின் இறுதியில் பல நாடுகள் அணுகுண்டை வைத்து அலும்பு செய்துக் கொண்டிருந்த போது, மாவோ அணுகுண்டை “காகிதப் புலி“ என்றார். யோசித்துப் பார்த்தால், உண்மையான மக்கள் எழுச்சியின் முன்பு இந்த உளவு தொழில் நுட்பங்கள் வெறும் காகிதப் புலிகள் என்று தெரிய வரும்.

மேலும் படிக்க

ஐ.என்.எஸ் விக்கிரமாதித்யா – அறுக்கமாட்டாதவன் கையில் ஆயிரம் கருக்கறுவாள்

53

ந்திய கடற்படையில் விக்கிரமாதித்யா என்ற விமானம் தாங்கி போர்க் கப்பல் கடந்த 16-ம் தேதி முறைப்படி இணைக்கப்பட்டது. பழைய ரஷ்ய போர்க் கப்பலான இது சுமார் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு (Remodel) வாங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே இருக்க்கும் ஐ.என்.எஸ் விராட் என்ற விமானம் தாங்கி கப்பலுடன் இதுவும் இணைந்து இந்தியப் பெருங்கடலில் இரண்டு விமானம் தாங்கி கப்பல்களை கொண்ட ஒரே நாடாக இந்தியா இருக்கும்.

ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா
ரூ 15,000 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா

1987 டிசம்பரில் இயங்கத் துவங்கிய ‘கீவ்’ வகையை சேர்ந்த இந்த கப்பல் ஆரம்பத்தில் பக்கு என்ற பெயரில் இயங்கியது.  பின்னர் 1991-ல் பனிப்போர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அட்மிரல் செர்ஜேய் கோர்ஷ்கோவ் பெயர் சூட்டப்பட்டது. சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்த கப்பலை இயக்குவதற்கு கட்டுப்படியாகவில்லை என்று ராணுவத்திலிருந்து திரும்பப் பெறப்பட்டது. ரஷ்யாவால் தீனி போட்டு மாளாது என்று திரும்பப் பெறப்பட்ட இந்த கப்பலை வாங்குவது என்று இந்தியா முடிவு செய்தது. இதற்கான பேச்சுவார்த்தை 1998-ல் ஆரம்பபிக்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. 2004 ஜனவரியில் $947 மில்லியன் டாலர் செலவில், ஒரு ஆண்டிற்குள் புதுப்பித்து தருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் 2009-ல் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு கட்டணம் $2.3 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டது. விலை உயர்த்தப்பட்டது மற்றும் கால தாமதத்திற்கு முக்கிய காரணம் கேபிள் வேலைகள் அதிகமானதுதான் என்று கூறப்பட்டது.

மூன்று கால்பந்து மைதானம் அளவிற்கு பரந்து விரிந்ததாகவும், 44,400 டன் எடை, 284 மீட்டர் நீளம் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போர்க் கப்பல் இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய போர்க் கப்பலாகும். 56 கிமீ வேகத்தில் பயணம் செய்யக் கூடிய இதில் 8 கொதிகலன்களும், 4 விசைமுடுக்கிகளும் உள்ளன. இதில் 34 விமானங்களை நிறுத்தலாம். 24 மிக்-29 ரக விமானங்களையும், 10 கமோவ்-31, கமோவ்-28 ஹெலிகாப்டர்களையும் தாங்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய தயாரிப்பாக ஐ.என்.எஸ் விக்ராந்த் என்ற விமானம் தாங்கி கப்பல்,  கொச்சியில் கட்டப்பட்டு வருகிறது. 500 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு என்று  திட்டமிட்டு, தற்போது ஆயுதங்களும், விமானங்களும் இல்லாமலே 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ 13,000 கோடி) செலவு ஆகும், அவை இணைக்கப்பட்டால் 5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ 31,000 கோடி) வரை ஆகலாம் என செலவு உயர்ந்திருக்கிறது.

இந்திய பாதுகாப்பு ஒதுக்கீடு
பழைய பண்ணையார் இங்கிலாந்தை விஞ்சவிருக்கிறது இந்திய பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு.

2013-ல் 44 பில்லியன் அமெரிக்க டாலராக (ரூ 2.7 லட்சம் கோடி) இருக்கும் இந்திய பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு 2020-ல் 66.3 பில்லியன் டாலராக (ரூ 4.1 லட்சம் கோடி) உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முன்னாள் உலக மேலாதிக்க வல்லரசான இங்கிலாந்தின் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை விட அதிகமாகும். இங்கிலாந்தின் பட்ஜெட் 2020-ல் 59.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் சகாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் அதிக குழந்தைகள் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலகவங்கி அறிக்கை தெரிவிக்கிறது. உலக பட்டினி குறியீட்டில் இந்தியா 15-வது இடத்தில் உள்ளது, குறியீட்டு எண் 22.9-ல் இருந்து 23.7 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் வணிக நலன்கள் கடலைச் சார்ந்து இருப்பதாகவும், இந்தியாவின் கடல்சார் நலன்களை பாதுகாப்பது தேசிய பாதுகாப்புக் கொள்கையின் மையமான கூறு என்று இந்த கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து பேசிய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அந்தோணி தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பாதுகாப்பது, தேசபக்தி, சீன அபாயம் என்ற பல பெயர்களில் செய்யப்படும் இந்த ஆயுதக் குவிப்புகள் இந்திய ஆளும் வர்க்கத்தின் வல்லரசு கனவுக்காகத்தானே தவிர இந்திய மக்களின் பாதுகாப்புக்காக அல்ல என்பதற்கு தினம் தினம் தமிழக மீனவர்கள் மீது சிங்கள் இராணுவம் தொடுக்கும் தாக்குதலும், அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் இந்திய கடற்படையும் தான் சான்று.

ஐ.என்.எஸ். விக்ராந்த்
பல பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் கொச்சியில் கட்டப்பட்டு வரும் ஐ.என்.எஸ். விக்ராந்த்

மக்கள் மீதான் தாக்குதலை தடுக்கத் தவறும் இந்திய இராணுவம், இந்திய ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்க நலன்களுக்காக,  மறுகட்டுமானப் பணிகள் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானிலும், கடற்கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் சோமாலியாவிலும், அமைதிப்படை என்ற பெயரில் பல ஆப்பிரிக்க நாடுகளிலும் அமெரிக்காவுக்கு விசுவாச சேவை செய்துவருகிறது.

இது மட்டுமல்லாமல் இந்த இராணுவ தளவாடங்கள், போராடும் மக்கள் மீதும் உபயோகப்படுத்தப்படும் என்பதற்கும் சான்று உள்ளது. கூடங்குளம் போராட்டத்திற்கு கடல் வழியாக மக்கள் திரண்ட போது அவர்களை மிரட்டுவதற்கு இந்திய கடற்படை கடல் வழியாக முற்றுகை இட்டதும், விமானப் படையினர் மிகத் தாழ்வாக பறந்து சகாயம் என்ற மீனவரை கொன்றொழித்ததும் இதற்கு  தக்க உதாரணங்களாகும்.

அமெரிக்கா தன்னுடைய கவனத்தை ஆசியா மற்றும் தெற்காசிய பகுதியில் திருப்பி சீனாவை சுற்றி வளைக்கும் தன்னுடைய திட்டத்தின் அடியாளாக இந்தியாவை பயன்படுத்த திட்டமிட்டிருப்பது குறித்தும், அமெரிக்காவின் பதிலியாக இந்தியாவை சீனாவுடன் மோத வைக்கும் திட்டம் குறித்தும், அது இந்தியாவுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து ஏற்கனவே வினவில் செய்தி வெளியாயிருந்தது.  அதனுடன் இதை பொருத்தி பார்ப்பது அவசியம்.

மேலும் இந்த விமானந்தாங்கி கப்பல்கள் இராணுவ தளம் இல்லாத பகுதிகளில் தாக்குவதற்கென்றே அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. அதுவும் இன்று அமெரிக்கா ஒற்றைத் துருவ வல்லரசாக மாறிய பிறகு அதற்கென்றே உலகின் எல்லா பகுதிகளிலும் இராணுவ தளங்கள் இருப்பதால் அதன் பயன் பெரிய அளவில் இல்லை. மேலும் முதலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்டநேரம் பறக்கும் விமானங்கள் இல்லாத போது இத்தகைய விமானந் தாங்கிக் கப்பல்களுக்கு ஒரு தேவை இருந்தது. தற்போது அமெரிக்காவின் பி.52 விமானங்கள் ஒரு முறை போட்ட எரிபொருளோடு பல்லாயிரம் கிலோமீட்டர் நிற்காமல் பறக்கக் கூடியது.

எது எப்படியோ இந்தியா போன்ற நாட்டிற்கு அப்படி ஒரு கப்பல் வைத்துக் கொள்வதற்கு எந்த அவசியமும் இல்லை. இத்தகைய கப்பல் இல்லாமலே கூட பாகிஸ்தான் இந்தியா முழுவதையும் தாக்கும் வல்லமை கொண்டிருக்கிறது. மேலும் வல்லரசு நாடுகளில் இருக்கும் விமானந் தாங்கிக் கப்பல்களின் எடையும், போர்த்திறனும், வேகமும் நமது கப்பல்களை விட சில மடங்கு அதிகம். காயலான் கடைக்கு போக வேண்டிய திறமை படைத்த இத்தகைய விமானந் தாங்கிக் கப்பல்களால் இந்தியா ஒரு வல்லரசு நாடு என்று வெட்டி பந்தாவாக பேசிக் கொள்ளலாம். ஆனாலும் அதற்கென்றே சில பல ஆயிரம் கோடிகளை செலவிடுகிறார்கள்.

அறுக்கமாட்டாதவன் கையில் ஆயிரம் கருக்கறுவாள் என்று ஒரு சொலவடை உண்டு.  ஆளும் வர்க்கத்தின் கையில் இருக்கும் இந்த ஆயுதங்கள் மக்களுக்காக அறுக்காது, மக்களைத் தான் அறுக்கும்.

மேலும் படிக்க

சச்சினின் ‘சீக்ரெட் ஆஃப் எனர்ஜி’ !

20

ச்சின்
உங்கள் சாதனையைக் கண்டு
நாங்களும் வியக்கிறோம்.

டெண்டுல்கர் தேசபக்தி

இருபத்திநான்கு ஆண்டுகள்
எந்தச் சூழலிலும்,
சாதாரண இந்தியனின்
எந்தப் பாதிப்பிலும்
கவனம் திரும்பாமல்,
தனது ஆட்டத்திலேயே
குறியாயிருந்து
முன்னேறிய
தங்கள் ‘திறமை’
எங்களை திகைக்க வைக்கிறது!

தாயுடனான, மனைவியுடனான,
குழந்தைகளுடனான… பொழுதுகளை
நிறைய இழந்ததாய்
நிறைவுப்போட்டியின் இறுதியில்
நீங்கள் சொன்னபோது வருந்தினோம்,
குடும்பத்தை இழந்து ஷார்ஜாவிலும்
குவலயத்தின் ஏதாவதொரு தெருக்கோடியிலும்
தேசத்தையே இழந்து நாங்கள்
உங்கள் பின்னால் திரண்டபோதும்,
தன்னையே இழந்த
எங்களது இழப்பில்
நீங்கள் தடுமாறாமல்
ஆடிய அழகில் வியந்தோம்!

சிவசேனையால் கொல்லப்பட்ட
இசுலாமிய மக்களின் இல்லங்களில்
அழுகுரல் ஓயாத நிலையிலும்
உங்கள் திருமணத்திற்கு
வந்த சிலரில்
பால்தாக்கரேவும் உண்டு.
இறுதி ஓய்விற்காக
நீங்கள் அளித்த விருந்தில்
ராஜ் தாக்கரேவும் உண்டு.
கொலைகாரனையும்
உபசரிக்கும்
உங்கள் விருந்தோம்பல் சாதனையில்
நாங்கள் கிளீன் போல்டு!

தங்கள் சொந்த மாநிலமான
மகாராஷ்ட்ராவின்,
விதர்பா விவசாயிகள் தற்கொலை,
குரூரமாக கொளுத்தப்பட்ட
கயர்லாஞ்சியின் தலித்துக்கள்,
குஜராத்தில்
ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட
இசுலாமியர்கள்,
எந்த விசயத்தையும்
கண்டு கொள்ளாமல்
எச்சரிக்கையாய்,
எதைப் பற்றியும் வாய் நழுவாமல்
குவிக்கப்படும்
சொந்த ரன்களின் நலன்களிலேயே…
இப்படி ஒரு மனிதன்
இருக்க முடியுமா? என
வாழ்வை அர்ப்பணித்த
உங்கள் கிரிக்கெட் ‘வெறியில்’
நாங்களும் உறைந்தோம்!

பெப்சி சச்சின்
பெப்சியில் “சீக்ரெட் ஆஃப் எனர்ஜி”

விளையாட்டைத் தவிர
வேறெதிலும் செலவிடமுடியாத
தங்களது லட்சியத்தின் துடிப்பு,
பெப்சி, எம்.ஆர்.எஃப்,
பூஸ்ட்… போன்றவற்றில்
”சீக்ரெட் ஆஃப் எனர்ஜியாக”
செயல்பட்டதைப் பார்த்து சிலிர்த்தோம்!

பாரத ரத்னா பற்றி
வேறு ஏதோ நினைத்திருந்தோம்,
உங்களுக்கு
வழங்கப்பட்ட பிறகுதான் புரிந்தது,
அது,
தன்னலம் தவிர
உலகம் மரத்துப்போன
மனிதர்களுக்கான குரூரம் என்று.
களத்துக்கு வெளியே
நீங்கள் கவனமாக ஆடிய
கார்ப்பொரேட் உணர்ச்சிகளுக்கான
நுட்பத்தை
உங்களைத் தவிர
உள்ளுக்குள் யார் ஆட முடியும்?

உலகமயம் சூடுபிடித்த
ஆடுகளத்தில்
ஒட்டு இடமுமின்றி
உடலெங்கும் பன்னாட்டுக் கம்பெனிகள்
விளம்பரம் தரித்து,
தேசபக்தியோடு நீங்கள் அடித்த
சிக்சரிலும், ஃபோரிலும்
இந்தியாவின் ஸ்கோர் மட்டுமா
எகிறியது?
அன்னிய மூலதனத்தின் அளவையும்
எகிறவைக்க ஆடிய நாயகன் நீங்கள்!

எவன் செத்தாலும்
யார் என்ன சொன்னாலும்!
சுற்றிலும் அழுத்தும்
மனித உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல்
தனது இலக்கில் மட்டுமே
வாயை மூடிக்கொண்டு
குறியாய் இருக்கும்
மன்மோகன்சிங் கிரிக்கெட் ஆடினால்
நிச்சயம் அவர்பெயர் டெண்டுல்கர்தான்!

– துரை.சண்முகம்

சிவகங்கை சாராய ஆலையை எதிர்த்து பு.ஜ.தொ.மு போராட்டம்

0

மண்ணைக் கெடுத்து, மக்களை நோயாளியாக்கும் ஈ.ஐ.டி பாரி –யை இழுத்து மூடு!

சிவகங்கை சாராய ஆலையை எதிர்த்து பு.ஜ. தொ.மு போராட்டம்.

1780-ம் ஆண்டு சென்னைக்கு வந்த வேல்ஸ் நாட்டின் சாதாரண வியாபாரிகளில் ஒருவன் தாமஸ் பாரி. 1788-ம் ஆண்டு ஜூலை 17 -ம் தேதி அவன் வங்கித் தொழில் செய்யவும், பொருள்களை வாங்கி விற்கவும் தனது கடையைத் தொடங்கினான். 1819–ல் ஜான் வில்லியம் டேர் என்பவனோடு இணைந்து பாரி அண்டு டேர் எனும் கம்பெனியைத் தொடங்கினான். 1908-ல் அது ஈ.ஐ.டி பாரியாக மாற்றமடைந்தது. சென்னையில் வளர்ந்து வந்த இந்த நிறுவனம் பின்னாளில், தான் கம்பெனி நடத்திய தெருவிற்கே பாரீஸ் கார்னர் எனும் பெயர் வைக்கும் அளவிற்கு வளர்ந்தது.

1981-ல் முருகப்பா குழுமம் எனும் தமிழகத் தரகு முதலாளிகளின் கும்பல் இதோடு இணைந்தது. இந்தியாவில் ஏழு பெரிய சர்க்கரை ஆலைகள், உள்ளிட்ட பல துணைத் தொழில்களை நடத்துகிறது. உரத் தயாரிப்பு, குளியலறைச் சாதனங்கள், சர்க்கரைத் தொழில், காப்பீடு, கல்வி, மின்சாரம், மின்னணுவியல் மற்றும் வங்கி, உள்ளிட்ட துறைகளில் மக்களிடம் சுரண்டிச் சேர்த்ததையே முதலீடு செய்து இன்று பல நூறு கோடிகளை லாபமாகச் சம்பாதித்திருக்கும் ஈ.ஐ.டி பாரி இன்று ஒரு பன்னாட்டு நிறுவனம். உலகெங்கும் இதற்குத் தொழில்களும் சொத்துக்களும் உள்ளன.

1990-களிலிருந்து இதுபோன்ற பன்னாட்டுக் கம்பெனிகளுக்குப் பலகோடி ரூபாய்களுக்கான இடம், வரிச் சலுகைகள், வசதிகள், வங்கிக் கடன்கள் வழங்கி ஊக்கப்படுத்துவதை இந்திய அரசு தனது கொள்கையாகக் கொண்டதால், பல பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு வகைகளில் இந்திய வளங்களைச் சூறையாடத் தொடங்கின. நாசப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதனால் இந்திய மக்களின் தொழிலும் வாழ்வும் அழிந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட நாசகரமான வேலையைச் செய்கின்ற பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றுதான் ஈ.ஐ.டி பாரி.

சிவகங்கை மாவட்டம் உடைகுளம் ஆலையில், தனது மற்ற சர்க்கரை ஆலைகளில் தயாரிக்கப்படும் கரும்புச் சாற்றின் அழுக்குக் குவாலையைக் கொண்டு வந்து, அதிலிருந்து தூய சாராயத்தைத் (ஆல்கஹால்) தயாரிக்கிறது. (இந்த அழுக்கிலிருந்துதான் காஃபிபைட், கேரமில்க், எக்லர்ஸ், லேக்டோகிங் போன்ற சாக்லேட்டுகளைத் தயாரித்து விற்பனை செய்து கொள்ளை லாபம் அடிக்கிறது.) சிவகங்கையின் மிக மேடான பகுதியாகிய உடைகுளம் கண்மாய்க்கரைப்பகுதில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த சாராய ஆலை இன்று இப்பகுதியில் மிகப்பெரும் அழிவினைச் செய்து வருகிறது.

உடகுளம், செங்குளம் மற்றும் அதைச்சுற்றியுள்ள சுமார் 30 கிராம மக்களுக்கும் சாராயஆலை உண்டாக்கியுள்ள ஆபத்துக்கள் மிகவும் பயங்கரமானவை. துவங்கிய பத்தாண்டுகளிலேயே அதன் ஒன்பது (9) ராட்சத ஆழ்குழாய்க் கிணறுகள் மூலமாக நிலத்தடி நீரை அதல பாதாளத்திற்கு அனுப்பி விட்டன. இதனால் சுமார் 200 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளன, விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் விளை நிலங்கள் அனைத்தும் தரிசாகவதைத் தவிர வேறு வழியில்லை. இப்போதே இதை எதிர்பார்த்து ரியல் எஸ்டேட் புரோக்கர்கள், பிளாட் போட்டு விற்பனை செய்வதற்காக பிசாசுகளைப் போல இப்பகுதியில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆலையின் ரசாயனக் கழிவுநீர் கண்மாயில் கலந்து தேங்கி நிற்கிறது. ஆலையின் உள்ளே கழிவு நீரைத் தேக்கி வைத்து, மழைக் காலங்களில் அதைக் கண்மாயில் திறந்து விடுகிறார்கள். அதைக் குடிக்கும் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சில இறந்தும் போயுள்ளன. நிலத்தடி நீரும் ரசாயனத் தன்மையானதாகி விட்டது. உள்ளூர்க் கிணறுகளில் தண்ணீர் அடியாழத்திற்குப் போய்விட்டது. செங்குளத்திலுள்ள வற்றாத ஊரணி இப்போது வற்றிப் போயிருக்கிறது.

நள்ளிரவில் ஆலை வெளியிடும் ரசாயன விஷப்புகையைச் சுவாசிக்கும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். கர்ப்பிணிப் பெண்களின் கருவிலுள்ள சிசுவும் குழந்தைகளும் இளமையிலிருந்தே இதைச் சுவாசிப்பதால் இன்னும் சில ஆண்டுகளில் இப்பகுதி மக்கள் அனைவருமே நிரந்தர நோயாளிகளாக இருப்பார்கள். தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்று அரசும் ஓட்டுக்கட்சிகளும் புளுகினாலும், அழிவும் நோயும்தான் இந்த சாராயத் தொழிற்சாலையால் இப்பகுதி மக்களுக்குக் கிடைத்த பலன். ஆலையில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்? அதில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைமை என்ன என்பது ப.சிதம்பர ரகசியமாக உள்ளது.

ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்வேறு ஓட்டுக்கட்சிகளிலும் உள்ள இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். அதற்காக அவ்வப்போது அரசு அதிகாரிகள் வந்து விசாரிப்பது போல் “சீன்” போடுகிறார்கள், நிர்வாகத்தையும் கிராமத்தையும் வைத்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். நிர்வாகமோ, கிராமங்களிலுள்ள சிலருக்கும், ஓட்டுக்கட்சிப் பிரமுகர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் அவ்வப்போது எலும்புத் துண்டை வீசுகிறது. அவர்களும் வாலை ஆட்டிக்கொண்டே அதைக் கவ்வுகிறார்கள். இதன் மூலம் மக்களின் போராட்டத்தை முடக்க நினைக்கிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இது குறித்த சிறு சுவரொட்டியை பு.ஜ.தொ.மு. வெளியிட்டது. கிராம மக்களைச் சந்தித்துப் பேசியது. ஆனாலும் ஆலை நிர்வாகத்தின் எலும்புத் துண்டை எதிர்பார்த்திருந்த சிலரால் அது தடுக்கப்பட்டது. இப்போது செங்குளம் பகுதி மக்கள் நேரடியாக அதன் பாதிப்பை உணர்ந்துள்ளனர். அவர்கள் இப்போது ஆட்சியர் அலுவலகத்தையும் வீட்டையும் முற்றுகையிடுகின்றனர்.

இந்த ஆலையை நாம் இனியும் அனுமதிக்க முடியாது. ஆகவே, போராடியாக வேண்டும். இந்த சாராய ஆலைக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும். இதை மூடுவதால், ஈ.ஐ.டி பாரியோ, முருகப்பா குழும முதலாளிகளோ ஒரு மயிரையும் இழக்கப் போவதில்லை. ஆனால், தொழிலையும் வாழ்க்கையையும் இழக்கப் போவதென்னவோ நாம்தான்.

எனவே, “ஈ.ஐ.டி பாரியை இழுத்து மூடு!” என்கிற போராட்ட முழக்கத்தோடு பு.ஜ.தொ.மு களம் இறங்கியுள்ளது. மக்களிடம் ஆதரவு கோரி வருகிறது. இணையத்தில் உலவும் சிவகங்கைப் பகுதி மக்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும்.

மக்கள் அணி திரண்டு போராடத் துவங்கிவிட்டால் அனைத்தையும் சாதிக்கமுடியும். போராடுவோம்! வெற்றிபெறுவோம்! இதைத் தவிர வேறு குறுக்குவழி ஏதும் இல்லை! எனும் அறிவிப்போடு மக்களைச் சந்தித்து வருகிறது, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – தமிழ்நாடு
சிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டங்கள். – நவம்பர் 2013
தொடர்புக்கு: 9443175256 – 9487407648 – 9488154962
ndlfsivaram@gmail.com

வீடியோ : போதையின் பிடியில் ரியோ டி ஜெனிரோ – ஆவணப்படம்

1

லகில் எங்கெல்லாம் போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன? ஈராக்கில், ஆப்கானிஸ்தானில், சிரியாவில் நடக்கும் போர்கள் ஊடகங்களின் பன்னாட்டு தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்கின்றன. இவற்றுடன் காஷ்மீரிலும், தண்டகாரண்யாவிலும், ஈழத்திலும் தம் நாட்டு மக்களுக்கு எதிராக அரசுகள் நடத்தும் ஆயுதம் தாங்கிய போர்களைப் பற்றியும் செய்திகள் வெளியாகின்றன.

ரியோ-டி-ஜெனிரோ
அழகு கொஞ்சும் ரியோ-டி-ஜெனிரோ

இவற்றைத் தவிர உழைக்கும் மக்கள் மீதான பொருளாதாரச் சுரண்டல், அவற்றுக்கு எதிராக போராடும் மக்களை வன்முறையால் நசுக்குவது என்ற அரசுகளின் போர்கள் உலகெங்கும் நடந்து வருகின்றன. இத்தகைய போர்களில் ஒருவகை பெருநகரங்களில் நடந்து கொண்டிருப்பவை; பல கோடி ரூபாய் விலை கொடுத்து வீடு வாங்கக் கூடிய சில நூறு மேட்டுக் குடியினரின் நலன்களுக்கும், லட்சக் கணக்கான மக்களின் உரிமைகளுக்கும் இடையேயானவை. சென்னை போன்ற மாநகரங்களில் குடிசைகளுக்கு தீ வைத்து கொளுத்தி விட்டு, மக்களை புறநகர்களைத் தாண்டி பொட்டல் காடுகளுக்கு துரத்தி விடுகிறது, அரசு. அந்த இடங்களில் பணக்காரர்களுக்கு சேவை செய்ய 7 நட்சத்திர விடுதிகளும், 7 நட்சத்திர குடியிருப்புகளும் புதிது புதிதாக முளைக்கின்றன.

மும்பையின் தாராவி போன்ற பகுதிகளில் அரசு எந்திரத்துக்கு அப்பாற்பட்ட சுயேச்சையான சுரண்டும் நிர்வாக அமைப்புகள் உள்ளுக்குள்ளேயே நிலவுகின்றன. போதை மருந்து விற்பனை, சூதாட்டம், பாலியல் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் நடத்துதல், நேரடியாக மிரட்டி பாதுகாப்பு பணம் வசூல் என்று தாதாக்கள் மக்களை சுரண்டுகிறார்கள். உள்ளூர் போலீஸ்காரர்களும், அதிகாரிகளும் தங்களுக்கு வர வேண்டியதை பெற்றுக் கொண்டு இத்தகைய நகரங்கள் இயங்க அனுமதிக்கிறார்கள்.

செல்வமும் வறுமையும் - அக்கம் பக்கத்தில்
செல்வமும் வறுமையும் – அக்கம் பக்கத்தில்

இந்த மாதிரியின் மிகப்பெரும் உதாரணம் பிரேசில் நாட்டின் ரியோ-டி-ஜெனிரோ மாநகரம். ஃபவேலாக்கள் என்று அழைக்கப்படும் ரியோவின் பிரம்மாண்டமான சேரிகளைப் பற்றிய ஆவணப் படம் : “கடவுளரின், துப்பாக்கிகளின், தாதாக்களின் நகரம் (City of Gods, Guns and Gangs)”.

வெண்மணல் கடற்கரைகளும், பசுமை போர்த்த மலைகளும் சூழ்ந்த ரியோ-டி-ஜெனிரோவின் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் விண்ணை முட்டும் பல்லடுக்கு, ஆடம்பர சொகுசு குடியிருப்புகள் பளபளக்கின்றன. பல பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த மேட்டுக்குடி குடியிருப்புகளிலிருந்து ஓரிரு கிலோமீட்டர் தொலைவில் ஃபவேலா என்று அழைக்கப்படும் சேரிகள் விரிந்திருக்கின்றன. மலைச்சரிவுகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் தீப்பட்டிகள் போல அடுக்கப்பட்டிருக்கின்றன.

ரியோ-டி-ஜெனிரோவில் 600 சேரிகள் உள்ளன. நகர மக்கள் தொகையில் 5-ல் ஒரு பகுதியினர் ஃபவேலாக்களில் வசிக்கின்றனர். சேட்டிலைட் டிஷ் ஆன்டெனாக்கள், நவீன மோஸ்தர் டி-சட்டைகள், அரைக்கால் சட்டைகள் என்று 21-ம் நூற்றாண்டின் வளர்ச்சிகளை உள்வாங்கிக் கொண்ட இந்த ஃபவேலாக்களில் சில ஏக்கர் நிலத்துக்குள் இலட்சக்கணக்கான மக்கள் வசிக்கிறார்கள். ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் குழந்தைகள் படிக்கிறார்கள். மருத்துவ சேவையும், சுகாதார சேவைகளும் கண்ணுக்குத் தெரிவதில்லை.

குழந்தைகளும் ஆயுதம் ஏந்திய காவலரும்
குழந்தைகளும் ஆயுதம் ஏந்திய போலீசும்

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 47.7% வெள்ளை இனத்தவரும், 43.1% கலப்பு இனத்தவரும் இருக்க 7.6% மட்டுமே உள்ள கறுப்பின மக்கள் இந்த ஃபவேலாக்களின் மக்கள் தொகையில் 70 சதவீதம் இடம் பிடிக்கின்றனர். ஃபவேலாக்களில் வசிக்கும் அனைத்து இன மக்களும் ஒன்றாக கலந்து சுக துக்கங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். குழந்தைகள் சேர்ந்து விளையாடுகிறார்கள்.

போதை மருந்து விற்பனை, சூதாட்ட விடுதிகள், இவற்றை பாதுகாக்க ஆயுதம் ஏந்திய படைகள் என்று ஒவ்வொரு ஃபவேலாவிலும் ஒரு நிழல் அதிகார அமைப்பு செயல்படுகிறது. இளைஞர்கள் போதை மருந்து பழக்கத்தில் சிக்கி வாழ்க்கையை இழக்கிறார்கள். குழந்தைகள் துப்பாக்கிச் சண்டைகளின் நடுவில் உயிரை விடுகிறார்கள். சிறுவர்கள் போதை மருந்து கும்பல்களுக்குள் இழுக்கப்படுகிறார்கள். முகத்தைத் துணியால் மூடிக் கொண்டு, கையில் இயந்திர துப்பாக்கியுடன் போதை மருந்து கும்பல் தலைவர் தெருமுனையில் உட்கார்ந்திருக்க ஒரு பாட்டியும், பேரனும் அவரைக் கடந்து இயல்பாக நடந்து போகிறார்கள். வீடுகளின் சுவர்களில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த துளைகள் நிரம்பியிருக்கின்றன.

அரசு அவ்வப்போது போலீஸ் படைகளை அனுப்பி, துப்பாக்கிச் சண்டை நடத்தி போதை மருந்து வியாபாரிகளை பிடிக்க முயற்சிக்கிறது. கீழ்மட்ட விற்பனையாளர்கள் கைது, ஒரு சிலர் சுட்டுக் கொலை என்று புள்ளிவிபரங்களாக அது முடிகிறது. படையினரை எதிர்கொள்ளும் இளைஞர்கள், தமது சட்டை, பனியனை மேலே உயர்த்தி கைகளை தூக்கி விட வேண்டும், ஆயுதங்கள் எதுவும் இல்லை என்று நிரூபிப்பதற்கு. இல்லை என்றால் அவர் யாராயிருந்தாலும் கொல்லப்பட்ட போதை மருந்து கும்பலின் புள்ளிவிபரத்தில சேர்க்கப்பட்டு விடுவார்.

கால்பந்து உலகக் கோப்பை
கால்பந்து உலகக் கோப்பைக்கான தயாரிப்பு

அமெரிக்காவில் போலீசாரால் 37,000 பேர் கைது செய்யப்பட்டால் 1 நபர்  கொல்லப்படுகிறார். ரியோவில் 23 பேர் கைது செய்யப்பட்டால் ஒருவர் போலீசாரால் கொல்லப்படுகிறார். ஒவ்வொரு நாளும் 3 பேர் போலீசால் கொல்லப்படுகின்றனர். சில சமயங்களில் சிறு குழந்தைகளும் கொல்லப்படுகின்றனர். பிரேசில் உலகத்திலேயே கொலை வீதம் அதிகமான நாடு, போலீசால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

இப்படி, சீவி சிங்காரித்த முகமும், அழுகி நாறும் அடிவயிறும் கொண்ட ரியோவில் 2014-உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளும், 2016-ல் ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெறவுள்ளன. அதற்காக பல பத்தாயிரம் கோடி செலவில் புதிய விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படுகின்றன. சாலைகள் போடப்படுகின்றன.

வெளிநாட்டு சீமான்கள் வரும் போது, ஃபவேலாக்களை என்ன செய்வது? பளபளக்கும் நட்சத்திர விடுதிகள், கேளிக்கை அரங்குகள், உயர்குடி வீடுகள் இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு சேரிகளில் வசிக்கும் 20 லட்சம் மக்களை கண்ணுக்குத் தெரியாமல் அகற்றி விட முடியாத நிலையில், அவற்றை ‘அமைதி’ப்படுத்தும் போலீஸ் படை ஒன்றை உருவாக்கியிருக்கிறது பிரேசில் அரசு. ஃபவேலாக்களின் போதை மருந்து வளையங்களை உடைப்பது இவற்றின் நோக்கம். 2014-ம் ஆண்டுக்குள் 40 ஃபவேலாக்களை அமைதிப்படுத்த திட்டமிட்டிருக்கிறது அரசு. ஃபவேலாக்களில் வாழும் மக்களுக்கு கௌரவமான வேலை வாய்ப்புகள், முறையான வாழ்விடம், குழந்தைகள் படிக்க பள்ளிகள், மருத்துவமனைகள் ஏற்படுத்துவதற்கு காசில்லாத அரசு, உலகக் கோப்பை, ஒலிம்பிக் போட்டி மைதானங்களையும் சிறப்பு ஆயுதப் படைகளையும் உருவாக்க செலவிடுகிறது.

அதிரடி ஆயுதப் படை
அதிரடி ஆயுதப் படை

BOPE – பாப்பி என்ற நகர்ப்புற போர்ப் படை உருவாக்கப்பட்டிருக்கிறது. கத்தியால் துளைக்கப்பட்ட மண்டை ஓடும், துப்பாக்கிகளும் கொண்ட சின்னம் பொறித்த தொப்பியுடன் துப்பாக்கிகளையும், கொலை வெறி ஆயுதங்களையும் சுமந்து கொண்டு ஃபவேலாக்களுக்குள் குதிக்கின்றனர் இவர்கள். ஈராக்கில் அமெரிக்கப் படை குவிப்பைப் போல பெருமளவிலான ஆயுதப் படையினர் ஃபவேலாக்களை ஆக்கிரமிக்கின்றனர். ஆடிப் பாடிக் கொண்டு போகும் குழந்தைகளையும், பேத்தியுடன் உட்கார்ந்திருக்கும் பாட்டியையும் தாண்டிச் சென்று,  அவர்களுக்கு நடுவே போதை மருந்து கும்பல்களை வேட்டையாடுகின்றனர். இதன் மூலம் ஃபவேலாக்களை போதை மருந்து கும்பல்களிடமிருந்து மீட்டு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது அரசு.

வேட்டையாடப்படும் போதை மருந்து கும்பல்களில் யார் உள்ளனர்? துப்பாக்கி ஏந்திய, அரைக் கால்சட்டை போட்ட, சட்டை போடாத மார்பில் துப்பாக்கியை கட்டிக் கொண்டிருக்கும் இளைஞர்கள். அவர்கள் கையிலிருக்கும் துப்பாக்கிகள் எங்கிருந்து வருகின்றன? “மேட் இன் அமெரிக்கா” முத்திரையை காட்டுகின்றனர். எப்படி வருகின்றன? கடத்தல் மற்றும் நகர போலீஸ் மூலம். போதை மருந்துகள் எங்கிருந்து வருகின்றன என்று கேட்கக் கூடாது.

போதைப் பொருள் கும்பல்
போதைப் பொருள் கும்பல்

அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு ஜிகாதி பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து, பின்னர் உலகெங்கிலும் ஜிகாதி பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் ஆயுதங்களையும், போர்த் தொழிலையும் ஏற்றுமதி செய்வது போல, இன்றைய முதலாளித்துவ உலகம் தென் அமெரிக்க நாடுகளுக்கு போதை மருந்து ஏற்றுமதியையும், ஆயுத ஏற்றுமதியையும் ஒருங்கே செய்கிறது.

ஃபவேலாக்களின் வீதிகளில் போதை மருந்துகள் வாழைப்பழம் போல விற்பனையாகின்றன. அவற்றை வாங்கி புகைத்து தெருமுனையிலோ, கேளிக்கை அறைகளிலோ மயங்கிக் கிடக்கின்றனர் இளைஞர்களும் இளம்பெண்களும். ஆண்டுக்கு 40 கோடி டாலர் (சுமார் ரூ 2,400 கோடி) மதிப்பிலான போதை மருந்துகள் ரியோவின் ஃபவேலாக்களில் விற்பனையாகின்றன என்று மதிப்பிடப்படுகிறது.

போதை மருந்து விற்பவர்களை மட்டும் பிடித்து விட்டால் போதுமா? வறுமையையும், புறக்கணிப்பையும், சுரண்டலையும் மறக்க போதை மருந்து இல்லா விட்டால், வேறு என்ன கொடுக்க முடியும்? ஆம், மத குருக்களும் களத்தில் இறக்கி விடப்பட்டிருக்கின்றனர். போதை மருந்து உட்கொண்டு மயக்கத்தில் ஆடிக் கொண்டிருப்பவர்களுக்கு பேய் விரட்டும் முழக்கங்கள் எழுப்பி விடுவிக்க முயற்சிக்கின்றனர். போதை மருந்துக்கு அடுத்தபடியாக, செழிக்கும் நடவடிக்கை மத குருக்களின் பேய் விரட்டும் தொழில்தான்.

பராக் ஒபாமா
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா

ஆவணப் படத்தின் இறுதியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பிரேசில் வருகை காட்டப்படுகிறது. ‘பிரேசில் உலகின் முக்கியமான நாடாக வளர்ந்து வருகிறது, பயம்  பீடித்த பகுதிகளில் நம்பிக்கை திரும்புகிறது. ஒவ்வொரு நாளும் பிரேசிலில் மேலும் மேலும் தீர்வுகள் உருவாகின்றன’ என எழுதிக் கொடுக்கப்பட்ட உரையை தனக்கே உரிய மோசடி குரலில் பேசுகிறார் ஒபாமா.

2014-ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கும், 2016-ல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடக்கும். ஃபவேலாக்களில் வாழும் 20 லட்சம் மக்களின் வாழ்க்கை அப்படியே தொடரும், இன்னும் மோசமாகும், இன்னும் அதிகமான மக்கள் அவர்களது அணியில் தள்ளப்படுவார்கள்.

பிரேசிலில் நடக்கும் போர் நம் மத்தியிலும் நடந்து கொண்டிருக்கிறது. சுரண்டப்படுபவர்களின் தரப்பு பலவீனமாக இருப்பதால் அதை பளீரென்று நாம் உணர்வதில்லை. ஆனால், முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியின் தவிர்க்க முடியாத விளைவுகளாக சுரண்டல்கள் தீவிரமடைந்து, சுரண்டப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

சென்னையின் மெட்ரோ ரயில் பெட்டிகள் பிரேசிலில் இருந்துதான் தயாரிக்கப்பட்டு வருகின்றன. உலகின் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் முக்கியமான நாடாக கருதப்படும் பிரேசிலில் ஏழைகளின் வாழ்க்கை என்பது இப்படித்தான் இருக்கின்றது. இங்கே மக்கள் தமது வருமானத்தை டாஸ்மாக்கில் தொலைப்பது போல அங்கே போதை பொருளில் தொலைக்கிறார்கள். கூடவே ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் குணத்தையும் !

Part 1

Part 2

தாது மணல் குவாரிகளை மூடு! – தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் !

5

தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜன்
துணைபோகும் அதிகாரிகள், அரசியல்வாதிகளை
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்!
தாது மணல் குவாரிகளை நிரந்தரமாக மூடு!

பொதுக்கூட்டம்
கலை நிகழ்ச்சி

இடம்
தூத்துக்குடி
அண்ணாநகர் மெயின் ரோடு

நாள்
23-11-2013
சனி மாலை 5 மணி

தலைமை
வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன், உயர்நீதிமன்றம், மதுரை
மாவட்ட துணைச்செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்

கருத்துரை

திரு எஸ். சேவியர் வாஸ்
தலைவர், தூத்துக்குடி மாவட்ட மீனவர் கூட்டமைப்பு

திரு. எஸ்.வி.அந்தோணி
உவரி மு. ஊராட்சி மன்றத் தலைவர்

திரு எஸ்.ஏ.ஜோசப்
தலைவர், திருநெல்வேலி மாவட்ட மீனவர் கூட்டமைப்பு

திரு கான்சீயூஸ்
ஊர் கமிட்டி தலைவர், பெரியதாழை.

திரு. ராஜன் வாய்ஸ்
ஊர் கமிட்டி தலைவர், பெரிய தாழை

திரு. லிபோன்ஸ்
ஊர் கமிட்டி தலைவர், பெரியதாழை

திரு சார்லஸ் பட்சேக்
கீழ வைப்பாறு

திரு எல்.எஸ். ஜானி பூபால ராயர்
லயன்ஸ் டவுன், தூத்துக்குடி

வழக்கறிஞர் சுப. இராமச்சந்திரன்
மா. செயலாளர், ம.உ.பா மையம், தூத்துக்குடி.

வழக்கறிஞர் கொ. அரிராகவன்
மாவட்ட தலைவர், ம.உ.பா.மையம், தூத்துக்குடி

வழக்கறிஞர் செ. தங்க பாண்டியன்
மா. அமைப்பாளர், ம.உ.பா மையம், திருநெல்வேலி

வழக்கறிஞர் க. சிவராச பூபதி
மா.அமைப்பாளர், ம.உ.பா.மையம், நாகர்கோவில்

சிறப்புரை

வழக்கறிஞர் சி. ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு

தோழர் மருதையன்,
பொதுச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

நன்றியுரை
திரு ஜோவர்
, மாவட்ட பொருளாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், தூத்துக்குடி

புரட்சிகர கலை நிகழ்ச்சி
மக்கள் கலை இலக்கியக் கழக மைய கலைக்குழுவினர்

தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் –  தமிழ்நாடு

தூத்துக்குடி – திருநெல்வேலி – கன்னியாகுமரி
944352761, 9442339260, 9486643116
சென்னை கிளை தொடர்புக்கு வழக்குரைஞர் மில்டன் 98428 12062

 

தூத்துக்குடி நோட்டிஸ் - முன்புறம்

தூத்துக்குடி நோட்டிஸ் - பின்புறம்

[நோட்டிசை பெரிதாகப் பார்க்க  படத்தின் மீது கிளிக் செய்யவும்]

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடந்து வரும் தாது மணல் கொள்ளை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறித்து சட்டப் பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ககன்தீப்சிங் பேடி குழு அறிக்கையின் அடிப்படையில் பெருங்கனிம குவாரிகள் பற்றி கொள்கை முடிவு எடுக்கப்படும்” என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனை வைத்து வைகுண்டராஜன் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள். தாது மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தப் போகிறது. மக்கள் கோரிக்கை நிறைவேறப் போகிறது என்னும் பொய்ப் பிரச்சாரம் திட்டமிட்டு மக்களிடம் பரப்பப்படுகிறது.

ஜெயா அரசு வைகுண்டராஜன் மீது நடவடிக்கை எடுக்குமா?

ஜெயா - வைகுண்டராஜன்
ஜெயலலிதா – வைகுண்டராஜன்

தமிழக சட்டப் பேரவையில் நீண்ட உரையாற்றிய தமிழக முதல்வர் ஜெயலலிதா கடலோர மாவட்டங்களில் கடந்த 25 ஆண்டுகளாக வரைமுறையற்று நடந்து வரும் தாது மணல் கொள்ளை குறித்தோ, மூன்று மாவட்டக் கடற்கரையைச் சிதைத்து பல லட்சம் கோடி கொள்ளையடித்த வைகுண்டராஜன் மீதான நடவடிக்கை குறித்தோ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு நடத்தி பேடி குழு சமர்ப்பித்த அறிக்கையின் விவரங்களையும் தெரிவிக்கவில்லை. தி.மு.க ஆட்சியில் வைகுண்டராஜன் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்பட்ட போது அதனை எதிர்த்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் 19.04.2007-ல் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். ஜெயலலிதாவோ வைகுண்டராஜன் மீதான நடவடிக்கை ஜெயா டிவியை முடக்கும் சதி எனப் பேட்டியளித்தார்.

தாது மணலையொத்த மதுரையின் கிரானைட் ஊழலில் கிரானைட் முதலாளிகள் கைது செய்யப்பட்ட பின்பே விரிவான ஆய்வு நடந்தது. கிரிமினல் வழக்குகள்,  கைதுகள் ஒருபுறம் – ஆய்வு மறுபுலம் என இரண்டும் சேர்ந்தே நடந்தது. ஆனால், தாது மணல் கொள்ளையில் தடயங்களை அழித்து, கடலோரங்களில் கலவரத்தைத் தூண்டி பொது அமைதியை சீர்குலைத்து வரும் வைகுண்டராஜனின் நிழலைக் கூட தமிழக அரசின் காவல்துறை தீண்டவில்லை. குளத்தூர் வி.ஏ.ஓ. கொடுத்த புகார் மீது கூட வழக்கு பதியப்படவில்லை. தமிழக முதல்வரிர் சட்டசபை அறிக்கை வைகுண்டராஜனை காப்பாற்றும் நோக்கத்தோடு, வரும் பாராளுமன்றத் தேர்தலில் மீனவ சமூக மக்களின் ஓட்டுக்களை குறி வைத்துப் பேசப்பட்டதே.

மணல் குவாரிகளை அரசு ஏற்றால் மக்கள்  பிரச்சினை தீருமா?

தாது மணல் குவாரிகளை அரசு ஏற்று நடத்தினால், வி.வி மினரல்ஸ் வைகுண்டராஜனின் அடியாட்கள் தொல்லை ஒழியும், கடலோர கிராமங்களில் அமைதி திரும்பும் எனச் சிலர் கருதுகின்றனர். மணல் குவாரிகளை யார் நடத்தினாலும் கதிர்வீச்சு, மீன்வளம் அழிப்பு, கடலரிப்பு, கடற்கரை மேடாவது, புற்றுநோய், கல்லடைப்பு போன்ற மக்கள் மீதான பாதிப்புகள் தொடரவே செய்யும். கடற்கரையில் மக்கள் சுதந்திரம் பறிபோன நிலையில் எவ்வித மாற்றமும் வராது. அரசுதான் அணு உலையை நடத்துகிறது என்பதற்காக அதை நாம் அனுமதிக்க முடியுமா? அரசு நடத்தினாலும் – தனியார் நடத்தினாலும் கதிர்வீச்சு விபத்தால் சாகப் போவது மக்கள்தான்.

உண்மையில் தாது மணல் சுரங்கங்களை இயக்கப் போதிய உட்கட்டமைப்பு வசதி அரசிடம் இல்லை. மணல் பிரிப்பு இயந்திரங்கள், தொழில்நுட்பம், வேலை ஆட்கள், தாது நிலங்கள், வாகனங்கள், எல்லாம் வி.வி.யின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசின் பலநூறு ஏக்கர் நிலங்கள் வி.வி.க்கு 20,30 ஆண்டுகால குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. ஒரு வேளை அரசாங்கம் தாது மணல் குவாரிகளை எடுத்தால் அதை நீதிமன்றம் சென்று தடுக்கும் வாய்ப்பு உள்ளது. மாறா, ஜெயாவும் வி.வி.யும் இரகசியக் கூட்டு வைத்துக் கொண்டு, தற்போது ஆற்று மணல் குவாரிகளை அரசின் பெயரால் தனியார்கள் நடத்துவது போல், தாது மணல் குவாரிகளையும் நடத்தலாம். ஆற்று மணல் குவாரிகளை சில இடங்களில் போராடித் தடுத்த மக்கள், அரசு ஏற்று நடத்தும் போது போராடவே விடாமல் ஒடுக்கப்பட்டனர். தாது மணல் குவாரிகளை அரசு எடுத்தாலும், கடற்கரையிலும் இதே நிலைமைதான் வரும். அரசு எடுப்பதென்பது வைகுண்டராஜனை பாதுகாப்பதே தவிர மக்களுக்கு ஆதரவானதல்ல. வழக்கம் போல் வைகுண்டராஜனின் சாம்ராஜ்யம் தொடரத்தான் செய்யும்.

ககன்தீப்சிங் பேடி குழு விசாரணை – அரச நாடகத்தின் ஓர் அங்கம்!

தாது மணல் கொள்ளை மக்கள்  போராட்டமாக உருவெடுத்த சூழலில் ககன்தீப்சிங் பேடி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு நடத்தப்பட்டு ஆய்வறிக்கை வெளியிடாமல் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நடந்த இரண்டாம் கட்ட ஆய்வு மக்களுக்கு தெரிவிக்காமல் ரகசியமாக நடத்தப்பட்டுள்ளது. அதிகமாக மணல் கொள்ளையடிக்கப்பட்ட இடங்களை காட்டச் சென்ற மக்களை காவல்துறை தடுத்து உள்ளது. ஆனால், மணல் கம்பெனி ஆட்கள் ஆய்வுக் குழுவோடு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பஞ்சல் கிராமத்திற்கு ஆய்வுக் குழு வந்த போது, வி.வி. மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனங்களில்தான் ஆ்யவுக் குழு உபகரணங்கள் எடுத்து வரப்பட்டுள்ளன. பேடியுடன் வரும் பெரும்பாலான அதிகாரிகள் வைகுண்டராஜனின் கொள்ளையில் இன்றுவரை கூட்டாளிகள்தான். பாதிக்கப்பட்ட இடங்களைக் காண பேடியை மக்கள் அழைத்த போது, எல்லா இடங்களையும் என்னால் பார்க்க முடியாது; இரண்டு நாட்களில் நாங்கள் டார்கெட் முடிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார் பேடி. இதுதான் பேடி குழு ஆய்வின் லட்சணம். இதன்பின் குமரி மாவட்டத்திலும் மிகவும் விரைவாக ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ விசாரணை, நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு என தாது மணல் கொள்ளை வழக்கு தமிழக அரசின் கையை விட்டு போய் விடக் கூடாது என்ற அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

ஒழிக்கப்பட வேண்டிய வைகுண்டராஜனின் ஊழல் சாம்ராஜ்யம்!

வைகுண்டராஜனிடம் மாதம் ரூ 5,000 முதல் ரூ 10,000 வரை பெற்றுக் கொண்டு கம்பெனிக்கு அடியாள் வேலை, தரகு வேலை மட்டும் பார்ப்பவர்கள் தவிர வருவாய், பொதுப்பணி, காவல், அணுசக்தி உள்ளிட்ட மத்திய-மாநில அரசின் அனைத்துத் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், என்ற அடித்தளத்தில்தான் வைகுண்டராஜனின் ஊழல் சாம்ராஜ்யம் கட்டமைக்கப்பட்டுள்ளது. நீதித்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. 15 ஆண்டுகளால வைகுண்டராஜன் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளிலும் நடவடிக்கை எடுக்காததுடன், கடந்த தி.மு.க ஆட்சியில் பெயரளவுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையில், வைகுண்டராஜனுக்கு மணல் கொள்ளை தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பிய அறிவிக்கைப் கூட ரத்து  செய்தது நீதிமன்றம். தூத்துக்குடி பத்திரிகையாளர்களில் பெரும்பாலானோர் வைகுண்டராஜனிடம் விலை போனதுடன் கொடைக்கானலுக்கு உல்லாசப் பயணம் சென்று வந்துள்ளனர்.

தாது மணல் கொள்ளை – கடலோர மக்களின் தனித்த பிரச்சினையல்ல!

தமிழகத்தில் கிரானைட், ஆற்று மணல், தாது மணல் என சூறையாடல் நடத்தப்படுவதைப் போல ,நாடு முழுவதும் இயற்கை வளங்கள் வரைமுறையின்றி கொள்ளையிடப்படுகிறது. இக்கொள்ளைக்கு சட்டபூர்வ அனுமதி அளிக்கும் கொள்கைதான் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மத்திய, மாநில அரசுகளின் பொருளாதாரக் கொள்கை. இம்மக்கள் விரோதக் கொள்கைதான் விவசாயிகளை நிலத்தை விட்டு, தொழிலாளர்களை வேலையை விட்டு, பழங்குடியினரை காட்டை விட்டு, மீனவர்களை கடலை விட்டு, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டால் சிறு வியாபாரிகள் தொழிலை விட்டு, பணக்காரர்கள் கல்வியை விட்டு விரட்டுகிறது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களும் போலீசு, பொய் வழக்கு, கைது, சிறை என எதற்கும் அஞ்சாமல் நாட்டுப் பற்றுடன் அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடி வருகின்றனர்.

தாது மணல் கொள்ளை, அணு உலைப் பிரச்சினையில் கடலோர மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டாலும், உண்மையில் இவை ஒட்டுமொத்த நாட்டு மக்கள் பிரச்சினை. அனைத்து மக்களுக்கும் சொந்தமான இயற்கை வளங்கள் கொள்ளை போவது, இயற்கைச் சமநிலை சீர்குலைக்கப்படுவது, சமூக அமைதி கெடுவது, எதிர்காலத் தலைமுறைகள் பாதிக்கப்படுவது என அனைத்தும் மக்கள் சார்ந்ததாக உள்ளன. மாபெரும் சக்கரவர்த்திகள், உலகை அச்சுறுத்திய சர்வாதிகாரிகள் எல்லாம் மக்கள்  போராட்டத்தின் முன் மண்டியிட்டதே வரலாறு.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அமெரிக்கா, ரசியா, இந்தியா வல்லரசுகளின் கொள்கையையே எதிர்த்து அர்ப்பணிப்போது ஒற்றுமையாக போராடி வரும் கடலோர மக்கள், வைகுண்டராஜன் போன்ற கிரிமினல்களை வீழ்த்த முடியும். தாது மணல் கொள்ளைக்கு எதிரான மக்களின் போராட்டம் வெற்றியடைந்தால், அது கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை உற்சாகத்துடன் முன்னெடுத்துச் செல்லும். மேலும் கூடங்குளம் அணு உலையை மூடுவதும், மேலும் நான்கு அணு உலைகளுக்கு ஒப்பந்தம் போட முயலும் மத்திய அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தும்.

தாது மணல் குவாரிகளை நிரந்தரமாக மூட நமது போராட்ட உணர்வை, அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ள வழக்கறிஞர்கள் முன்முயற்சியில் நடத்தப்படும் பொதுக்கூட்டத்திற்கு திரளாக அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்! உங்கள் பங்களிப்பாக போராட்ட நிதியும் தாருங்கள்!

வைகுண்டராஜனின் கொள்ளை மீண்டும் தொடரவே,
தாது மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்து என்ற கோரிக்கை!

வி.வி.யைப் பாதுகாக்கவே மக்கள் பங்கேற்பில்லாத பேடி குழு விசாரணை!

வி.வி உள்ளிட்ட தாது மணல் மாபியாக்கள், துணை போன அதிகாரிகள், அரசியல்வாதிகளை தேசிப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்!
அவர்களது ஊழல் சொத்துக்களைப் பறிமுதல் செய்!

தாது மணல் கொள்ளை பற்றி சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்து!

தொழில் இழந்த மீனவர்கள், புற்றுநோய், கல்லடைப்பு, கருப்பை
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை, இழப்பீடு வழங்கு!

சொந்த நாட்டு மக்களின் வாழ்வைச் சூறையாடும்
தனியார்மயக் கொள்கையை ரத்து செய்!

தகவல் :

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.