Monday, June 15, 2026
முகப்பு பதிவு பக்கம் 687

தனியார் பள்ளிகள்: A – FOR – அயோக்கியர்கள் !

4

க்கள் போராடும் பல சந்தர்ப்பங்களில், “சட்டத்தை யாரும் கையிலெடுக்க அனுமதிக்க மாட்டோம்” என்று ஆளும் வர்க்கம் எச்சரிப்பதுண்டு. ஆனால் “உங்கள் சட்டம் எங்கள் கால் செருப்புக்கு சமம்” என தனியார் பள்ளி முதலாளிகள் அரசின் “கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்  – 25 சதவீதம் நலிந்த, ஏழை பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை” காலில் போட்டு மிதித்து திமிரை காண்பித்து விட்டனர்.

கல்வி உரிமை போராட்டம்
கல்வி உரிமைக்காக போராடும் மாணவர்கள்

அரசாங்கம் கூறியவாறு, கடந்த இரண்டு கல்வியாண்டுகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான கட்டணத்தை தராததால், இந்த 2014 – 2015 கல்வியாண்டில் 25 சதவித ஒதுக்கீட்டை ஏற்க முடியாது, அனுமதிக்க முடியாது என அரசுக்கு சவால் விட்டனர் கல்வி முதலாளிகள். அரசு கடன் பாக்கிக்காக பால் உற்பத்தியாளரோ, கரும்பு விவசாயிகளோ போராடினால் போலீசை விட்டு அடிப்பது இதே அரசுதான்.

அதே போல தனக்கு எதிராக போக்குவரத்து தொழிலாளிகளோ, விமான நிலைய ஊழியர்களோ வேலை நிறுத்தம் செய்தால் வேலையை விட்டு தூக்கி விடுவோம் என மிரட்டும் இந்த அரசு, கல்வி வியாபாரிகளின் கண் சிவந்தவுடன் ஓடோடி வந்து பழைய பாக்கியை தந்து விடுகிறோம், வந்து கடையைப் போடுங்கள் என பேரம் பேசி உடனே அவர்களின் உண்டியலுக்கு உத்திரவாதம் தந்துள்ளது.

எந்த அளவுக்கு கல்விக் கடையில் தள்ளுமுள்ளு நடக்கிறதோ அந்த அளவு தனியார்மயத்தின் தில்லுமுல்லுகளை அரங்கேற்றும் இந்த பிள்ளைக்கறி பேய்கள், பேச்சுவார்த்தைக்கு வந்த இடத்தில், நர்சரி, பிரைமரி பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் 5 பிரிவுகளுக்கு மேல் தொடங்கக் கூடாது, மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தக் கூடாது எனும் அரசு விதிகளை விலக்க வேண்டும், பள்ளி வாகனங்களுக்கான கட்டுப்பாடு, பர்மிட் விதிகளை தளர்த்த வேண்டும், தனியார் பள்ளிகளுக்கான சலுகைகளை வழங்கவேண்டும், என எரிகிற வீட்டில் புடுங்குகிறவரை ஆதாயம் பார்த்திருக்கிறது.

ஆட்டோ தொழிலாளர்கள் மீட்டர் கட்டணத்தை முறைப்படுத்தக் கோரி முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு போனபோது, மிரட்டி உட்கார வைத்து, சாலையில் திருடர்களைப் போல துரத்தி, துரத்தி வேட்டையாடிய இந்த அதிகார வர்க்கம்தான், சமுதாயத்தின் அடிப்படை உரிமையான கல்வி விசயத்தில் தனியார் பள்ளி முதலாளிகளின் திமிரடிக்கு, காலைக் கழுவி குடிக்கிறது.

கல்வி உரிமை சட்டம்
இந்தக் கல்விக் கடைகளை கட்டாயம் 25 சதவீதம் பேருக்காவது கல்வி உரிமை வழங்க வேண்டும் என்று சட்டத்திற்கு கட்டுப்படுத்துவதற்குப் பதில், மீண்டும் மக்களது வரிப்பணத்திலிருந்தே உனக்கு காசு தருகிறேன் என்கிறது.

கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் என்று பெயர் வைத்துக் கொண்டு, எல்.கே.ஜி. முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு அரசே தனியாருக்கு காசு கொடுப்பதே அயோக்கியத்தனம். நகராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் ஒரு சாதாரண தொழிலாளிகள் பழக்கடையோ, ஐஸ் வண்டியோ போட்டால் கூட சுங்கம் வசூலிக்கும் அதிகார வர்க்கம், இந்தக் கல்விக் கடைகளை கட்டாயம் 25 சதவீதம் பேருக்காவது கல்வி உரிமை வழங்க வேண்டும் என்று சட்டத்திற்கு கட்டுபடுத்துவதற்குப் பதில், மீண்டும் மக்களது வரிப்பணத்திலிருந்தே உனக்கு காசு தருகிறேன் என்பதிலிருந்து இது முழுக்க முழுக்க தனியார்மயத்திற்கான, முதலாளிகளுக்கான ஏவல் அரசு என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.

இந்த 25 சதவீத ஒதுக்கீட்டால், இந்த கல்வி வள்ளல்கள் இழந்தது தான் என்ன? தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய ஈரோடு பகுதியைச் சேர்ந்த தனியார்பள்ளி முதலாளி விஜயலெட்சுமி என்பவர் தன் பேச்சிலேயே “பள்ளியில் சேர்க்கும் பிள்ளைகளுக்கான கல்விக் கட்டணத்தை மட்டும்தான் நாங்கள் வாங்க மாட்டோம், மற்றபடி, யூனிபார்ம், டை, ஷூ, லஞ்ச், புத்தகங்கள், ட்ரான்ஸ்போர்ட், எல்லாம் அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும், ஸ்கூல் பீசை கூட கட்ட முடியாதவர்கள் பெற்றோர்களா?” என சாபமும் விடுகிறார்.

ஒரு பிள்ளை, கல்வி பயில்வதற்கான அடிப்படை சாதனங்கள் எதையும் உரிமையாக வழங்காத இந்த பகல் கொள்ளைக்காரர்கள், வெறும் உட்கார இடம் கொடுப்பதையே, ( அந்த இடத்துல இன்னொரு பீசை பார்த்துருப்பேன்… எனும் வெறியோடு… ) பெரும் இழப்பாக சித்தரிக்கிறது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனிய கொள்கையால் விளைநிலங்களை அழித்து, விவசாயிகளை போண்டியாக்கி அவர்களிடமிருந்து பிடுங்கிய இடத்தில் கல்லாவைத் திறந்து உட்கார்ந்திருக்கும் இந்த கொள்ளைக் கும்பல் ஏதோ மக்களுக்கு பிச்சை போடுவது போல பேசுவதும், பீசை வைத்து குழந்தைகளை கொல்லும் இந்த பயங்கரவாதிகளுக்கு அரசு பணிந்து போவதும் ஏதோ கொடுக்கல் வாங்கல் உறவினால் மட்டும் அல்ல.

கல்வி உரிமை
தனியார்மய, தாராளமயத்தை எதிர்ப்பது, ஒழிப்பது அனைத்து தனியார்பள்ளிகளையும் அரசுடமை ஆக்குவது என்ற போராட்டத்தின் தீவிரத்தில்தான் இந்த பள்ளிக் கொள்ளையர்களின் திமிர்தனத்திற்கு முடிவுகட்ட முடியும்.

உலகவர்த்தக கழகத்தின் ஆணைப்படி, கல்வி மட்டும் அல்ல, தண்ணீர், மருத்துவம், போக்குவரவு எந்த சேவையையும் இனி மக்களுக்கு காசுக்கு மட்டுந்தான் வழங்கவேண்டும், அரசு மானியம், இலவசம் என்பதையெல்லாம் ஒழித்துக்கட்ட வேண்டும். தனியார், வெளியார் முதலாளிக்கு தங்கு தடையின்றி அனைத்து சேவை, தொழில்களை திறந்துவிடவேண்டும் என்ற அரசு கொள்கையின் அடிப்படையில்தான் இத்தனை பயங்கரங்களும் அரங்கேறி வருகின்றன. தனியார்மய, தாராளமயத்தை எதிர்ப்பது, ஒழிப்பது அனைத்து தனியார்பள்ளிகளையும் அரசுடமை ஆக்குவது என்ற போராட்டத்தின் தீவிரத்தில்தான் இந்த பள்ளிக் கொள்ளையர்களின் திமிர்தனத்திற்கு முடிவுகட்ட முடியும்.

தொலைக்காட்சி விவாதத்தில் (சன் நியூஸ்) வெங்கடாஜலம் என்ற கல்வி முதலாளி மக்களுக்கு கல்வி இலவசம் என்ற விவாதமே கூடாது. பேச்சுக்கே இடமில்லை, போய் அரசு பள்ளியைத் திற, ஏன் எங்ககிட்ட வார என்று பகிரங்கமாகவே தனது வர்க்கத் திமிரை காட்டுகிறார். நாங்களும் அதைத்தான் கேட்கிறோம்! “இவ்வளவு சிரமப்பட்டுட்டு, நஷ்டப்பட்டுட்டு உன்னை எவன் பள்ளிக்கூடம் நடத்த சொன்னான்? போய் பேசாமல் மசாஜ் சென்டர் வச்சி மகராஜனா பெரிய இடத்து கால் கைய புடிச்சு பொழச்சுக்க! எல்லா பள்ளிக் கூடத்தையும் அரசே ஏற்று நடத்தட்டும்” என்கிறோம். இன்னொரு வெள்ளுடை கொள்ளையன் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன். அங்குதான் ஆபாச படம் ஓட்டுகிறார் என்றால், இந்த விசயத்திலும் ஆபாச பாடம் நடத்துகிறார். பெத்த பிள்ளைக்கு, படிக்க செலவு பண்ண முடியாதுங்குறான், போய் சாராயக் கடைல குடிக்கிறான், என மக்களை மிகவும் இழிவுபடுத்தி தங்கள் கொள்ளைக்கு நியாயம் பேசுகிறார்.

குவார்ட்டர், ஆஃப், ஃபுல், லுன்னு அது அதற்கு ஒரு ரேட் வச்சி ஓட்டுற மாதிரி எல்.கே.ஜி, யூ.கே.ஜி, ஃபஸ்ட்டு, என்று வகுப்புக்கு ஏற்ற ரேட்டு வச்சி கல்வியை சரக்காய் ஓட்டும் இந்த கும்பல் மக்களுக்கு புத்தி சொல்ல கிளம்பிவிட்டது. நீ சட்டப்படி ஸ்டெடியா நில்லுடான்னா, அவன குடிக்கிறத நிறுத்தச் சொல் என்பது என்ன யோக்கியதை? உண்மையில் டாஸ்மாக் போதையை விட ஆபத்தானது, இந்த தனியார்பள்ளி போதைதான், தண்ணியடிப்பவனுக்கு விடிந்த பிறகாவது தெளிந்து விடுகிறது, தனியார்பள்ளியில் விழுந்தவனுக்கு கடைசி வரை தெளிவதில்லை, காசை கடைசி வரை இழந்து கறிக்கோழி ஆவதுதான் மிச்சம், அரசு பள்ளி சரி இல்லை என்றால், அதை சரியாக்க போராட வேண்டுமே ஒழிய, தரமாக இருப்பது போன்று ஃபிலிம் காட்டும் எதிர்த்த வீட்டுக்காரனை அப்பா என்று அழைக்க முடியுமா?

தனியார் மோகம்
தனியார் மோகம் உண்மையில் கல்வித்தரத்தை சார்ந்து உருவாவதல்ல, வர்க்கத்தரத்தை சார்ந்து உருவாகும் கண்ணோட்டம்தான்.

தனியார் மோகம் உண்மையில் கல்வித்தரத்தை சார்ந்து உருவாவதல்ல, வர்க்கத்தரத்தை சார்ந்து உருவாகும் கண்ணோட்டம்தான். சென்ற ஆண்டு நெல்லையில் ஒரு அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவி, மாநிலத்திலேயே முதலாவதாக வந்தார். அவரது அப்பா ஒரு பாய் வியாபாரி, தினமும் அவர் படிக்கும் பள்ளியைச் சுற்றி தன் தந்தை பாய், பாய் என கூவி விற்கும் குரல், என் குடும்பத்தின் நிலையை மாற்ற எனக்குள் வைராக்கியமாய் வளர்ந்து, எனது சோர்வை, பசியை மறந்து இந்த அளவுக்கு படித்து தேர்ச்சியாகி முதலாவதாக வர வைத்தது என்று சொன்னார். இங்கும் கூட வர்க்க உணர்வுதான் கல்வி உணர்வை விழிப்படைய வைத்திருக்கிறது.

இந்த உழைக்கும் வர்க்க உணர்விலிருந்து கல்வி அனைவருக்கும் பொது உரிமை என போராடினால் நம்மாலும் சாதிக்க முடியும். இரண்டு ஆண்டு குறிப்பிட்ட சதவித லாபத்தை இழப்பதற்கே முதலாளிகளுக்கு இவ்வளவு வெறி வருகிறதென்றால், சாகும் வரை தனியார் முதலாளிகளுக்கு சகல வளங்களையும், உரிமைகளையும் இழக்கும் நமக்கு எவ்வளவு கோபம் வர வேண்டும்?

அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தேவையான பள்ளிகளை அரசே ஏற்று நடத்தவும், பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கவும் போராட்டத்தை துவக்க வேண்டும். கல்விக்கு எதுக்குடா காசு? குடிக்க கடை திறக்கும் அரசே படிக்க பள்ளியை திற என வீதியில் இறங்கவேண்டும். எதுக்கு 25 சதவீத பிச்சை, பித்தலாட்டம்! 100 சதவீதம் உயர்கல்வி வரை இந்த நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் முழு உரிமையாக இருக்க வேண்டும், சமுதாயத்தின் சகல சொத்துக்கள், வளங்களை தனியாரும், பன்னாட்டு மூலதனம் கைப்பற்றும் போது, மக்களுக்கு கல்வி உட்பட அனைத்து சேவைகளையும் முழு உரிமையாக்க மக்களுக்கான அதிகார அமைப்புகளை உருவாக்கினால்தான் இனி எஃபார் ஆப்பிள் என ஏங்குவதற்கு பதில் அ ஃபார் அனைத்தும் மக்களுக்கே என்று இந்த அரசுக்கும் சேர்த்து பாடம் கற்பிக்க முடியும்.

எல்.கே.ஜி.க்கு ஒரு லட்சமா? என பீதியில் உறைவதை விட, எல்லா பள்ளிகளையும் அரசுடைமையாக்கு என வீதியில் இறங்கினால்தான்… பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வழியை காட்ட முடியும்! கொள்ளையடிப்பவனுக்கு டொனேசன் கொடுக்க கியூவில் நிற்பதை விட, உரிமைக்காக போராட ரோட்டில் நிற்பது ஒன்றும் கேவலமானதல்ல!

–  துரை.சண்முகம்

நியூட்ரினோ ஆய்வு மையத்தை தடை செய்!

1

தேவாரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் மக்களின் கடுமையான எதிர்ப்பையும் கண்டு கொள்ளாமல் கடந்த 2009-ம் ஆண்டிற்குப் பிறகு துவங்கப்பட்டது.

இது ஒரு ஆராய்ச்சி படிப்புதான். இந்த நியூட்ரினோ கதிர்களால் எந்தப் பாதிப்பும் இல்லை என்ற கருத்து அறிவியல் அறிஞர்களாலும் , அதிமேதாவிகளாலும் திணிக்கப்பட்டது. அதனை மீறி எதிர்ப்பு தெரிவித்தவர்களை காவல் துறை வழக்குப் போடுவதாக மிரட்டி அடக்கியது.

ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்படுள்ள இந்த திட்டம் எப்படி செயல்படவிருக்கிறது என்று யாருக்குமே தெரியாத புதிராகவே இருக்கிறது. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த இதுவரை இந்த அரசு எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை.

ஆனால் அண்மையில் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் அவர்கள் அணு உலைக் கழிவுகளை கொண்டுவந்து நிரப்புவதற்குத்தான் இந்த சுரங்கத்தை பயன்படுத்தி வருகிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார் . அவருடைய கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் தான் ஆராய்ச்சி மற்றும் அணுக்கழிவுகள் கொட்டுவது என்ற பேரில் இது சார்ந்த துறையினர் உரிமம் கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளனர் என்ற உண்மை நம் உதிரத்தை உறைய வைக்கிறது.

இன்று இந்த பகுதியில் விவசாய நிலங்கள் எல்லாம் முகம் தெரியாத நபர்களால் இரகசியமாக வாங்கி குவிக்கப்படுகிறது. அண்மையில் இந்த பகுதியில் பணியாற்றி வரும் மத்திய அரசு வங்கி ஊழியர்களுக்கு நியூட்ரினோ அலவன்ஸ் என்ற சிறப்பு சலுகை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, மக்கள் எந்த ஆதரவோ, ஆலோசனையோ, ஆறுதலோ கூட சொல்ல ஆளின்றி அனாதைகளாக்கப்பட்டு கிடக்கிறார்கள்.

சாக்குளத்து மெட்டு, இராமக்கல் மெட்டுச் சாலை போன்றவை இந்த பகுதியின் முன்னேற்றத்திற்கு வகை செய்பவை. குறைந்த அளவு பணம் செலவிட்டாலே போதுமானது , ஆனால் மலை வளம் கெட்டுவிடும் , மிருகங்களுக்கு பாதுகாப்பு போய்விடும் என்று கதைகள் பல சொன்ன அரசாங்கம்தான் பல மைல்கள் மலையை குடைகிறது. மக்கள் நலனில் அக்கறையற்றவர்கள் என்ற உண்மையை நிருபிக்கிறது.

எல்லாவற்றிக்கும் மேலாக இந்த திட்டத்தில் இந்திய அணுசக்தி கழகம் அங்கம் வகிக்கிறது . அரை குறை விவசாயத்தையும் அழித்து இந்த பகுதியிலிருந்து யாரோ சில முதலாளிகளுக்கு மட்டும் பயன் தரக்கூடிய நியூட்ரினோ திட்டத்தின் உண்மை நிலவரத்தை அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கு பயனளிக்காத திட்டம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், விவசாயிகளையும் , விவசாயத்தையும் காக்கும் படியான ஆக்கப்பூர்வமான அறிவியல் ஆராய்ச்சி மையத்தை உருவாக்க வேண்டும்.

இதற்காக உழைப்பாளிகளின் உரிமைக்காக இரத்தம் சிந்தி போராடி வெற்றி பெற்ற, சரித்திரப்புகழ் பெற்ற தொழிலாளர் தினமான மே 1ஆம் நாளில் சபதமேற்போம் என்று அறைகூவல் விடப்பட்டது.

வாகனப்பேரணி

மே நாள் காலை 10.30 மணிக்கு மே நாள் வாகனப் பேரணி தேனிமாவட்டம் ராசிங்காபுரம் கிராமத்தில் இருந்து தொடங்கியது. பேரணியில் தேனி , மதுரை மாவட்டத்தை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டார்கள். இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அணிவகுக்க பேரணியை தேவாரம் பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணி செயற்குழு உறுப்பினர் தோழர் கே. பழனிச்சாமி அவர்கள் தொடங்கி வைத்தார். பேரணி திம்மி நாயக்கன் பட்டி, பொட்டிப்புரம், ராமகிருஷ்ணாபுரம் , புதூர் , டி. புதுப்பட்டி, தம்மிநாயக்கன் பட்டி, மரவபட்டி, எரணம் பட்டி, லட்சுமிநாயக்கன்பட்டி, கிருஷ்ணம் பட்டி, ரோட்டுப்பட்டி, வழியாக தேவாரம் வந்தடைந்த்து. பேரணி சென்ற இடங்களில் மக்கள் மத்தியில் நியூட்ரினோ திட்டம் பற்றி மக்கள் ம்த்தியில் தோழர்கள் விளக்கஉரையாற்றினார்கள். கடுமையான வெயிலிலும் தோழர்கள் உற்சாகமாக பயணமானார்கள். மக்கள் மத்தியில் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டது.

மாலை தேவாரம் நகரத்தின் பல்வேறு வீதிகள் வழியாக பேரணி நடத்தப்பட்டது . தேவாரம் பேருந்து நிலையத்தில் உசிலை வட்டார விவிமு செயலாளர் தோழர் குருசாமி அவர்கள் செங்கொடியை ஏற்றி வைத்தார். அதன் பிறகு பேரணி ஆர்பாட்டத் திடலை வந்தடைந்த்து.

ஆர்ப்பாட்டம்

மாலை 5,30 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்டது, ஆர்ப்பாட்டத்திற்கு தேவாரம் பகுதி விவிமு செயற்குழு உறுப்பினர் தோழர் கே. முருகன் தலைமை தாங்கினார். தேவாரம் ஏரியாச் செயலாளர் தோழர் பாக்கியராஜ், உசிலைவட்டாரச் செயலாளர் தோழர். குருசாமி, தேனி மாவட்டச் செயலாளர் தோழர் . பா.மோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். நிறைவாக மதுரை மாவட்ட மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் மாவட்டச் செயலாளர் தோழர்.லயோனல் அந்தோணிராஜ்  கண்டனஉரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் குறித்த நாடகம் நடத்தப்பட்டது.

நான்கு ஆண்டுகளாக எந்த சலனமும் இல்லாமல் மக்களின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து நடந்துவரும் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு தொடக்கமாக ஆர்ப்பாட்டம் இருந்த்து. தோழர்கள் பிரச்சாரம் செய்த கிராமங்களில் உள்ள மக்கள் தோழர்களின் கருத்துக்களுக்கு வரவேற்பு கொடுத்தார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
தேனி – மதுரை மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி

கொத்தடிமைத்தனம், விபச்சாரம்: தனியார்மயத்தின் பேரபாயங்கள் !

3

திகாலையில் பரபரப்பாக இயங்கும் தமிழகத்தின் பேருந்து, ரயில் நிலையங்களில் சரிவரத் தூங்காத சிவந்த கண்களோடு அவசரஅவசரமாகத் தாங்கள் வேலை செயுமிடத்திற்குப் பயணிக்கும் அவர்களின் முகங்கள் நம் அனைவருக்கும் பரிச்சயமானவைதான். கிழக்கு, வடகிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று தமிழகம் முழுவதும் உள்ள பெரிய, சிறிய நகரங்களில் சாலைகள், பாதாளச் சாக்கடைகள், வானுயர் கட்டிடங்கள், ஐந்து நட்சத்திர விடுதிகள், பிரம்மாண்ட மெட்ரோ ரயில், விமான நிலையம் போன்ற கட்டுமானப் பணிகளில் அற்பக்கூலிக்குப் பணியாற்றி வருவதும், இந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் எந்தவிதமான தொழிற்சங்க உரிமையும் இன்றி மிகக் கொடூரமான முறையில் சுரண்டப்பட்டு வருவதும் பார்த்துபார்த்துப் பழகிப் போவிட்ட விசயமாகிவிட்டது. இந்நிலையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் புலம்பெயர்ந்த ஆண் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகவும், பெண்கள் அதையும் தாண்டி விபச்சாரத்தில் தள்ளப்படும் கொடுமையும் நடந்திருப்பது அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெம்ஸ் அக்ரோ கொத்தடிமைகள்
நாமக்கல் – மணிக்கட்டுப்புதூரிலுள்ள ஜெம்ஸ் அக்ரோ நிறுவனத்தில் கொத்தடிமைகளாக தள்ளப்பட்டு, பின் மீட்கப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், சத்தீஸ்கரைச் சேர்ந்த இடைத்தரகன் டிஜுராம் கொர்ரம், அம்மாநிலத்தைச் சேர்ந்த பன்னிரெண்டு பழங்குடிப் பெண்களை ரயில் மூலம் திருப்பதிக்குச் செல்லலாம் என ஆசை காட்டி நாமக்கல்லிற்குக் கடத்தி வந்து, மணிக்கட்டிப்புதூரிலுள்ள ஜெம்ஸ் அக்ரோ என்கிற காய்கறிகளைப் பதனிட்டு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் கொத்தடிமையாக விற்றுச் சென்றுவிட்டான்.

ராஜேஸ்வரி சலம்
ஜெம்ஸ் அக்ரோ ஆலையில் கொத்தடிமைகளாக சுரண்டப்பட்டு வந்த பழங்குடியினப் பெண்களை சத்தீஸ்கர் மாநில அரசு உதவியோடு மீட்ட ராஜேஸ்வரி சலம்.

இவர்களைப் போன்றே பல சத்தீஸ்கர் பழங்குடிப் பெண்கள் அந்நிறுவனத்தில் கொத்தடிமைகளாக இருந்துள்ளனர். இப்பெண்கள் காய்கறிகளைப் பதனிட அசிடிக் அமிலம் அடங்கிய வினிகரில் கைகளை நனைத்தபடி ஒருநாளுக்கு 18 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அரிப்பு, ஒவ்வாமை போன்ற கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். ஒரு நாளைக்கு இரண்டு வேளை சோறு, தேங்காய் எண்ணெய், குளியல் சோப்பு மற்றும் மாதச்சம்பளமாக 100 ரூபாய் கொடுத்து, இப்பழங்குடியினப் பெண்களின் உழைப்பை ஒட்டச் சுரண்டியிருக்கிறது, ஜெம்ஸ் அக்ரோ. அவர்கள் பல நாட்களில் நள்ளிரவில் எழுப்பப்பட்டு வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து நின்றால் தனியறைகளில் அடைத்து வைக்கப்பட்டு, முதலாளிகளாலும் அவர்களின் கங்காணிகளாலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். தாங்கள் ஏமாற்றப்பட்டு கொத்தடிமைகளாய் வதைக்கப்படுவதை உணர்ந்தாலும், வெளியே தப்பிக்க முடியாதபடி, ஒற்றைக் கழிப்பறை கொண்ட அறைகளில் அவர்களனைவரும் அடைக்கப்பட்டிருந்தனர்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தனக்குக் கிடைத்த சிறிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தன்னையும் மற்றவர்களையும் காப்பாற்றியிருக்கிறார் அந்த பன்னிரெண்டு பெண்களில் ஒருவரான ராஜேஷ்வரி சலம். அக்கொத்தடிமைத் தொழிற்சாலையில் இருந்து தப்பி தன் சொந்த மாநிலமான சத்தீஸ்கரை அடைந்த சலம், அம்மாநிலத்தின் நாராயண்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்து, தன்னுடன் வேலை செய்த 60 பழங்குடிப் பெண்களையும் அக்கொத்தடிமை முகாமிலிருந்து காப்பாற்றியிருக்கிறார்.

கடந்த ஆண்டு நவம்பரில் இச்சம்பவம் வெளியே வந்த சமயத்தில், ஈரோட்டிலுள்ள ஒரு தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக வேலை செய்துவந்த 24 சத்தீஸ்கர் பழங்குடிப் பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும், கடந்த பிப்ரவரியில் சத்தீஸ்கரைச் சேர்ந்த 117 பழங்குடியினர் ஜம்முவில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 48 குழந்தைகள் உட்பட 23 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் கடத்தல்காரர்களால், பனிரெண்டு லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளனர். குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபாய் முன்பணமாகக் கொடுக்கப்பட்டு இவர்கள் ஜம்முவிலுள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக விற்கப்பட்டனர். காலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரை 3000-க்கும் அதிகமான செங்கற்களை அறுக்கும் இவர்களுக்கு, வாரச்சம்பளமாக குடும்பத்திற்கு 500 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் இயற்கை உபாதைக்குச் செல்லும்பொழுது கூட அங்குள்ளவர்களால் கண்காணிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலுற்ற குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்குக்கூட இவர்களை அனுமதிக்காமல், சிறைக் கைதிகளைவிடக் கேவலமாக நடத்தியிருக்கின்றனர் செங்கல் சூளை முதலாளிகள். கடைசியில் அவர்களுடன் இருந்த 31 வயது மதிக்கத்தக்க ஓம் பிரகாஷ், அங்கிருந்து தப்பித்து தன்னார்வ நிறுவனங்களுக்குத் தகவல் தந்த பிறகே அம்மக்கள் மீட்கப்பட்டனர்.

11-c-1

கொத்தடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக மாவட்ட ஆட்சியர், போலீசு கண்காணிப்பாளர், வட்டாட்சியர், தொழிலாளர் நல ஆணையர் – என ஒரு பெரும் அதிகார வர்க்கமே இருந்தபோதும், அவர்களின் கண்களுக்குக் கீழ்தான் இந்தக் கொடூரம் நடந்திருக்கிறது. இக்கும்பல் தங்களின் அதிகாரத்தை முதலாளிகளிடமிருந்து இலஞ்சம் வாங்குவதற்குப் பயன்படுத்துகிறதேயொழிய, கொத்தடிமைகளாகச் சுரண்டப்படும் தொழிலாளர்களைக் காப்பாற்றுவதற்கு ஒருக்காலும் பயன்படுத்துவதில்லை என்பதை இச்சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

வெளியே தெரிந்த செய்திகளுக்கு அப்பால், சத்தீஸ்கரின் பழங்குடியினப் பெண்கள் மும்பை, டெல்லி, பஞ்சாப் மற்றும் இந்தியாவின் தென்பகுதிகளில் உள்ள பெருநகரங்களுக்குக் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்படுவதும் நடந்து வருகிறது. திரையில் தொடர்ச்சியாக மாறிக் கொண்டேயிருக்கும் பிம்பங்கள் போல, இம்மக்களது வேலை மற்றும் வாழ்நிலையில் வலுக்கட்டாயமாக பல மாற்றங்கள் அடுத்தடுத்து திணிக்கப்பட்டதுதான் அவர்களின் அவல நிலை அனைத்திற்கும் காரணமாகும். கார்ப்பரேட் பகற்கொள்ளையும் அரசு பயங்கரவாதமும் தலைவிரித்தாடும் சத்தீஸ்கரில், ‘நாட்டின் வளர்ச்சி’ என்கிற பெயரில் பல கொடூரங்கள் இம்மக்கள் மீது ஏவிவிடப்படுகின்றன. இவர்களின் பூர்வீக வாழ்விடமான மலைகளில் உள்ள அரிய கனிம வளங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தூக்கிக் கொடுப்பதற்கு வசதியாக, இம்மக்கள் வலுக்கட்டாயமாகத் தமது சொந்த பூமியிலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். இந்த கார்ப்பரேட் கொள்ளையை எதிர்ப்பவர்கள் மீது ‘மாவோயிஸ்டு பயங்கரவாதிகள்’ என்ற முத்திரை குத்தப்பட்டு, அவர்கள் மீது “காட்டுவேட்டை” என்ற பெயரில் அரசு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. இதன் காரணமாக, வாழ்வாதாரங்களை இழந்து அகதி நிலைக்குத் தள்ளப்படும் பழங்குடியின மக்களை ஆசை காட்டிக் கடத்திச் சென்று கொத்தடிமைகளாக விற்பது ஒரு தொழிலாகவே அம்மாநிலத்தில் நடந்து வருகிறது.

11-c-2

சத்தீஸ்கரில் மட்டும் இதுவரை 9,000 பெண்கள் காணாமல் போயுள்ளதாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், உண்மையில் இந்த எண்ணிக்கை 90,000- யும் தாண்டும் என அங்குள்ள சமூகநல அமைப்புகள் கூறுகின்றன. குறிப்பாக பிலாஸ்பூர், துர்க், ராய்ப்பூர், ராய்காட், பலாவ்டா பஜார், ஜன்ஞ்கீர் சம்பா, ஜக்தல்பூர் போன்ற இடங்களில் ஆள்கடத்தல் கோலோச்சுவதாக அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன. கடந்த நான்காண்டுகளில் நாராயண்பூர் மற்றும் கன்கெர் மாவட்டங்களில் மட்டும் 10,000-க்கும் அதிகமான பெண்கள் காணாமல் போயுள்ளனர். ரூபாய் 5,000-லிருந்து 50,000 வரை விற்கப்படும் இப்பெண்கள் பெருநகரங்களில் உள்ள புதுப் பணக்காரர்களின் வீடுகளில் வேலையாட்களாகவும், தொழிற்சாலைகளில் குறைந்த கூலிக்கு கொத்தடிமைகளாகவும், பல சமயங்களில் விபச்சாரத்திலும் பலவந்தமாகத் தள்ளப்படுகிறார்கள்.

தமிழகம் உள்ளிட்டு பல்வேறு மாநிலங்களில் வேலை தேடி புலம் பெயரும் இத்தொழிலாளர்கள் இத்தகயை கொடிய அவலநிலையில் இருத்தி வைக்கப்பட்டிருக்கும் பொழுது, அத்தகைய அவல நிலையை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக, தமிழர்களின் தாயகமாக தமிழ்நாடு நீடிக்க அதிக எண்ணிக்கையில் வெளிமாநிலத்தவர் குடியேறுவதை தடுக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்றவை வழங்கக் கூடாது என்றும் இனவெறியைத் தூண்டிவிடும் போராட்டங்களை நடத்துகின்றன, த.தே.பொ.க., நாம் தமிழர் போன்ற தமிழினவாத அமைப்புகள். மகாராஷ்டிராவில் நவநிர்மாண் சேனா குண்டர்கள் மராட்டியம் மராட்டியர்களுக்கே சொந்தம் எனக்கூறி, இம்மக்களை விரட்டக் கோருகின்றனர். தங்கள் வாழ்விடங்களிலிருந்து கடத்தப்பட்டு, கொத்தடிமைகளாக விற்கப்பட்டு அவல வாழ்வில் வதைபடும் இம்மக்களை எதிரிகளாகச் சித்தரிப்பது வக்கிரத்தின் உச்சமாகும்.

11-c-3

அமெரிக்காவிற்கு அடிமைகளாகக் கடத்தி வரப்பட்ட ஆப்பிரிக்க கருப்பின மக்கள் நவீன அமெரிக்காவை உருவாக்கியதைப் போல, இன்று இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அடிக்கட்டுமான வசதிகளை உருவாக்குபவர்கள் ஒரிசா, பீகார், சத்தீஸ்கர் போன்ற ‘வளர்ச்சி’யற்ற மாநிலங்களிலிருந்து வெளியேறிவரும் தொழிலாளர்கள்தான். இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் தனியார்மயம் – தாராளமயம் நாடெங்கும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியைத்தான் உருவாக்கியிருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வான வளர்ச்சிதான் தொழிலாளர்களை அகதிகளாகச் சிதறடிக்கிறது. முதலாளித்துவத்தின் கொடிய சுரண்டலுக்கு இந்த ஏற்றத்தாழ்வான வளர்ச்சி அவசியமான ஒன்றாகும். எனவே, சத்தீஸ்கரைச் சேர்ந்த பழங்குடியினர் கொத்தடிமைகளாக விற்கப்படுவதையும், விபச்சாரத்தில் தள்ளப்படுவதையும் கிரிமினல் ஆள்கடத்தல் கும்பலின் நடவடிக்கையாகப் பிரித்துப் பார்க்க முடியாது. வேலைவாய்ப்பு, முன்னேற்றம், வளர்ச்சி – என ஆளுங்கும்பலும் ஓட்டுக்கட்சிகளும் வாப்பந்தல் போடுகிறார்களே, அந்த மோசடியின் விளைவுகள்தான் இவை.

– அன்பு
________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2014
________________________________________

வெனிசுலா: அமெரிக்காவின் அடுத்த ஆக்கிரமிப்புப் போர் !

1

மெரிக்க மேலாதிக்க எதிர்ப்புப் போராளியும், வெனிசுலாவின் முன்னாள் அதிபருமான ஹியுகோ சாவேஸ் மறைந்து ஓராண்டாகிவிட்ட சூழலில் இன்று வெனிசுலா அமெரிக்காவின் சதிகளால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மாணவர் போராட்டம் என்ற பெயரில் பயிற்றுவிக்கப்பட்ட ஆயுதக் குழுக்களைக் கொண்டு மிகப்பெரிய கலவரத்தை அமெரிக்கா அங்கே கட்டவிழ்த்துள்ளது. தலைநகரான காரகாஸும், மெரிடா, டத்சிரா உள்ளிட்ட எல்லைப்புற நகரங்களும் கலவரக்காரர்களின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.

எதிர்ப்புரட்சி கலகக் கும்பல்
அமெரிக்கா பின்னிருந்து இயக்கும் வெனிசுலாவின் மேட்டுக்குடி மாணவர்களைக் கொண்ட எதிர்ப்புரட்சி கலகக் கும்பலின் தாக்குதல்.

வெனிசுலாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்ப்பதற்கு அமெரிக்க அரசு சதி செய்வது இது முதல் முறையல்ல. சாவேஸ் உயிருடன் இருந்தபோது அவரது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும், அவரைக் கொலை செய்வதற்கும் அமெரிக்கா பலமுறை முயன்றுள்ளது. 2002-ம் ஆண்டில் சாவேஸுக்கெதிராக ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தி அவரைக் கைது செய்யும் அளவிற்குச் சென்றது. ஆனால், சாவேஸுக்கு ஆதரவாக இலட்சக் கணக்கான மக்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுப் போராடியதன் விளைவாக இரண்டு நாட்களுக்குள் இராணுவம் சாவேஸை விடுவித்துப் பின்வாங்கியது. அதனைத் தொடர்ந்து, 2005-ம் ஆண்டிலும் 2007-ம் ஆண்டிலும் மாணவர் போராட்டங்கள் என்ற பெயரில் சாவேஸுக்கெதிரான சதிகளை அமெரிக்கா அரங்கேற்றியது. ஒவ்வொரு முறையும் அமெரிக்காவின் சதிகளை, மக்களின் ஆதரவுடன் சாவேஸ் முறியடித்தார்.

தற்போது சாவேஸ் இல்லாத வெனிசுலாவில் அமெரிக்காவின் சதிகள் புத்துயிர் பெற்றுள்ளன. வெனிசுலா மீது அமெரிக்கா இந்த அளவிற்குத் தீராப்பகை கொள்ளக் காரணங்கள் பல உள்ளன. எக்ஸான் மொபில் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலிருந்த எண்ணெ வயல்களை வெனிசுலா நாட்டுடைமையாக்கியுள்ளது; பொதுத்துறை நிறுவனங்கள் முதற்கொண்டு இயற்கை வளங்கள் வரை அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்குத் திறந்துவிடக் கோரும் உலகவங்கி மற்றும் ஐ.எம்.எப். போன்ற ஏகாதிபத்திய நிதிநிறுவனங்களிலிருந்து வெனிசுலா விலகிக் கொண்டதுடன், மின்சாரம், தொலைதொடர்பு மற்றும் சிமெண்ட் உற்பத்தியை அரசுடைமையாக்கியுள்ளது; அமெரிக்காவின் வர்த்தக வலையத்தில் சிக்கித் தவித்த தென் அமெரிக்க நாடுகளுக்கென்று தனியான வர்த்தக வலையத்தையும் வெனிசுலா உருவாக்கியுள்ளது; அமெரிக்காவின் தடைகளை மீறி ஈரானுடன் இணைந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் புதிய கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க மேலாதிக்கத்துக்குச் சவால் விடும் இந்த நடவடிக்கைகள்தான், வெனிசுலாவில் எப்படியேனும் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை அரங்கேற்றுவதற்கு அமெரிக்கா வெறிபிடித்து அலைவதற்குக் காரணம்.

நோக்கோலஸ் மாதுரோமேற்கூறிய மாற்றங்கள் அனைத்தும் சாவேஸ் தலைமையில் சாதிக்கப்பட்டவை. சாவேஸின் மரணத்துக்குப் பின் அதிபர் பதவியேற்றிருக்கும் நிக்கோலஸ் மாதுரோ, சாவேஸின் வழியில் அமெரிக்க எதிர்ப்பில் உறுதியாக நிற்பதால், இவரது ஆட்சியையும் கவிழ்க்கும் நடவடிக்கைகளையும் அமெரிக்கா தீவிரமாக்கியிருக்கிறது. 2002-ம் ஆண்டில் சாவேஸுக்கெதிராக இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டுத் தோற்கடிக்கப்பட்ட, சி.ஐ.ஏ. கைக்கூலி லோபஸ் மென்டோசாவைத்தான் அமெரிக்கா மீண்டும் களத்தில் இறக்கியிருக்கிறது. சி.ஐ.ஏ. வினால் இயக்கப்படும் ஜனநாயகத்துக்கான தேசிய அறக்கட்டளை (National Endowment for Democracy ) என்ற அமைப்பும், யு.எஸ்.எய்டு என்ற அமைப்பும்தான் தற்போதைய எதிர்ப்புரட்சிக் கலகங்களை நடத்துவதற்கு நிதியளிக்கின்றன. 2002-ம் ஆண்டு முதல் சாவேஸின் ஆட்சிக்காலம் முழுவதும், வெனிசுலாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மூலம் கள்ளத்தனமாக விநியோகிக்கப்பட்ட அமெரிக்க டாலரைத் தின்று வளர்ந்த இந்த குடிமைச் சமூக அமைப்புகள் (Civil Society Organizations) சமூகத்தில் குறிப்பிட்ட அளவு ஊடுருவியுள்ளன. சாவேஸ் அதிபரான பிறகு நடந்த 19 தேர்தல்களில் 18-ல் படுதோல்வியடைந்த போதிலும், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தோற்ற போதிலும் என்.ஜி.ஓ. க்கள் என்ற இந்த நச்சுக்கிருமிகள் அமெரிக்காவின் தயவில் உயிர் பிழைத்திருந்தன. மக்கள் செல்வாக்குப் பெற்ற சாவேஸ் என்ற தலைவர் மறைந்தவுடன், இந்த வலைப்பின்னல் மென்டோசாவின் தலைமையில் கலவரத்தைத் தொடங்கியிருக்கின்றது.

மேட்டுக்குடி இளைஞர்களைக் கொண்ட இந்தக் கலவரக் கும்பல், விலைவாசி உயர்வு, பெருகிவரும் குற்றச் செயல்கள், அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவற்றிற்கு எதிராகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு, அதற்குத் தீர்வாக தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தக் கோருகிறது. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும், மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களும்தான் வெனிசுலாவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று பிரச்சாரம் செய்கிறது.

லோபஸ் மென்டோசா
வெனிசுலாவின் எதிர்த்தரப்பு தலைவரும் சி.ஐ.ஏ. கைக்கூலியுமான லோபஸ் மென்டோசா.

போராட்டக்காரர்கள் அமைதிவழியில் போராடுவதாக அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் சித்தரிக்கின்றன. ஆனால் இந்தக் கும்பல், அரசின் அடக்குமுறையை வரவழைப்பதற்காகவே வன்முறைச் செயல்களில் ஈடுபடுகின்றது. குறிப்பாக சமூக நல மருத்துவமனைகள், மானிய விலையில் உணவு வழங்கும் நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொதுப் போக்குவரத்து சாதனங்கள் எனத் தொழிலாளர்களுக்கு அரசு செய்து தந்துள்ள வசதிகளைத் தாக்கி, தீயிட்டுக் கொளுத்துகிறது. மின் இணைப்புகளைத் துண்டித்து, மின்உற்பத்தி நிலையங்களைத் தாக்குகிறது.

தெருவில் தடையரண்களை அமைத்துக் கொண்டு பொதுமக்களையும், அரசு ஆதரவாளர்களையும் தாக்குகின்றது. அரசு அலுவலர்களைத் துப்பாக்கியால் சுடுகிறது. ‘ஸ்நைபர்’ எனப்படும் தொலைதூரத்திலிருந்து மறைந்திருந்து சுடும் துப்பாக்கியுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சக போராட்டக்காரர்களையே தாக்கி அவர்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டதாக பொப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர். ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதற்குத் தேவையான ஆயுதங்களையும் இவர்கள் ஏராளமாக வாங்கிக் குவித்துள்ளனர். வெனிசுலாவின் முக்கியமான இரு பல்கலைக் கழகங்கள் துணை இராணுவப் படைகளைப் பயிற்றுவிக்கும் கூடாரமாகவும், ஆயுதக் கிடங்குகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

இது ஒரு பாசிசக் கும்பல் என்றும் இதனை நசுக்க வேண்டும் என்றும் வெளிப்படையாகப் பேசிவந்த வெனிசுலாவின் தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கேப்டன் ஜோஸ் கில்லன் ஆர்க்யூ, இந்த கலகக் கும்பல் அமர்த்திய கூலிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலைகள் மற்றும் நாசவேலைகளை நிறைவேற்றுவதில் தேர்ச்சி பெற்ற கொலம்பிய போதை மருந்து மாஃபியாக்கள் இதற்காகவே வெனிசுலாவுக்குள் இறக்கப்பட்டிருக்கின்றனர். கலவரத்தைத் தூண்டுவது, ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைத் தூக்கியெறிந்துவிட்டு அமெரிக்க ஆதரவு பொம்மை அரசை நிறுவுவதுதான் இவர்கள் நோக்கம் என்பதால், பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசு விடும் அழைப்புக்களை இந்தக் கலவரக் கும்பல் தொடர்ந்து மறுத்து வருகின்றது.

இந்தச் சிறு கும்பல் நடத்தும் போராட்டங்களை, மிகப் பெரிய மக்கள் எழுச்சி போல அமெரிக்க ஆதரவு சர்வதேச ஊடகங்கள் சித்தரிக்கின்றன. அமைதியான மக்கள் போராட்டத்தை வெனிசுலா அரசு கடுமையாக ஒடுக்குவதாகவும், மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாகவும் பரப்புவதன் மூலம் அமெரிக்கத் தலையீட்டை நியாயப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.

அமெரிக்கா திரைமறைவில் நின்றுகொண்டு நடத்திவரும் இத்தகைய ஆட்சிக்கவிழ்ப்பு வேலைகளை வெனிசுலா அம்பலப்படுத்தியுள்ளது. அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் போராட்டக்காரர்களுக்குப் பண உதவியும், ஆயுத உதவிகளும் செய்வதாகக் கூறி பல அதிகாரிகளை வெனிசுலா வெளியேற்றியுள்ளது. குறிப்பாக, கெல்லி கெடர்லிங் என்ற தூதரக அதிகாரி சி.ஐ.ஏ.வின் உளவாளி என்பதும், வெனிசுலாவில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதற்காகவென்றே அவரை சி.ஐ.ஏ. நியமித்துள்ளதாகவும் அம்பலமாகியுள்ளது. கெல்லி கெடர்லிங்கினால் நேரடியாகப் பயிற்றுவிக்கப்பட்டவர்களுள் ஒருவரான கியூபாவைச் சேர்ந்த முன்னாள் சி.ஐ.ஏ. உளவாளி ராவுல் கபோடி இதனை அம்பலப்படுத்தியுள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் அமெரிக்கா தனது உளவாளிகளை எப்படி உருவாக்குகிறது என்பதையும் விளக்கியுள்ளார்.

ஜென் ஷார்ப்
2002-ம் ஆண்டு வெனிசுலாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் இயங்கிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கழக நிறுவனரும், அமைதிவழி ஆட்சிக்கவிழ்ப்பு சித்தாந்த வழிகாட்டியுமான ஜென் ஷார்ப்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டின் நிறுவனம், ஜனநாயகத்துக்கான தேசிய அறக்கட்டளை, அகிம்சை வழிப் போராட்டங்களுக்கான சர்வதேச மையம் போன்ற பல நிறுவனங்கள் வெனிசுலாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பட்ட மேற்படிப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது, பேராசிரியர்களுக்கு சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்களை உருவாக்கித் தருவது எனப் பல வழிகளில் மாணவர்களையும் பேராசிரியர்களையும் தங்களது வலையில் விழவைக்கின்றனர்.

வெனிசுலாவில் தற்போதும், இதற்கு முன்னரும் பல்வேறு மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் மாணவ தலைவர்கள் இத்தகைய நிறுவனங்களிடம் உதவி பெற்றுப் படித்தவர்களே. அமைதிவழி ஆட்சிக்கவிழ்ப்பு என்ற கோட்பாட்டை முன்வைத்து, பனிப்போர் காலத்துக்குப் பின் சி.ஐ.ஏ நடத்திய ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைகளுக்கெல்லாம் சித்தாந்த வழிகாட்டியாக இருந்த ஜென் ஷார்ப் என்பவரின் (சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு என்ற நூலின் ஆசிரியர்) ஆல்பர்ட் ஐன்ஸ்டின் நிறுவனம்தான் 2002-ம் ஆண்டு வெனிசுலாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் செயல்பட்டது.

தன்னார்வக் குழுக்கள், பல்கலைக்கழக வளாகங்கள் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அடிவருடிகளின் கையில் இருக்கும் ஆயுதம், வெனிசுலாவின் ஊடகங்கள். ஊடகத்துறையின் சுமார் 70 விழுக்காடு முதலாளிகளிடமும், 20 விழுக்காடு மக்கள் கூட்டுறவிடமும், 5 விழுக்காடு அரசிடமும் உள்ளன. பொய்களையும் வதந்திகளையும் பரப்புவதிலும், தனியார்மய ஆதரவு பொதுக்கருத்தை தந்திரமாக உருவாக்குவதிலும் தனியார் ஊடகங்கள் முக்கியப் பாத்திரமாற்றுகின்றன. அன்னா ஹசாரே போராட்டத்தை இங்கே கார்ப்பரேட் தொலைக்காட்சிகள் ஊதிப் பெருக்கியதைப் போலவே, வெனிசுலாவின் எதிர்ப்புரட்சி கலகக் கும்பலின் நடவடிக்கைகளை அந்நாட்டின் தனியார் ஊடகங்கள் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி போல சித்தரிக்கின்றன.

வெனிசுலாவில் அரங்கேறிவரும் சதிச்செயல்களை பின்னிருந்து இயக்குவது அமெரிக்காதான் என்பது உலகத்துக்கே தெரிந்திருந்தாலும், வழக்கம்போல அமெரிக்கா அதனை மறுக்கிறது. மறுபுறம் வெனிசுலாவில் நேரடியாகத் தலையிடுவதற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் அமெரிக்கா பகிரங்கமாகவே செய்து வருகிறது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, ‘வெனிசுலா அரசு தனது மக்களுக்கெதிராக நடத்திவரும் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என எச்சரிக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையை உடனடியாக இதில் தலையிட வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், ‘வெனிசுலாவில் நடைபெறும் சம்பவங்கள் கவலையளிப்பதாகவும், அதிபர் மாதுரோ உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும்‘ எனவும் எச்சரிக்கிறார். வெனிசுலா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பையும், ஐ.நா.வையும் அமெரிக்கா தொடர்ந்து நிர்பந்திக்கிறது.

வெனிசுலா சுவர் சித்திரம்
அமெரிகாவின் சதிகளுக்கு எதிராக வெனிசுலாவின் உழைக்கும் மக்கள் குடியிருப்புப் பகுதியில் வரையப்பட்டுள்ள சித்திரம்.

அமெரிக்காவின் இதுபோன்ற சதிகளைத் தங்களது சோந்த அனுபவத்தினூடாக வெனிசுலாவின் மக்கள் உணர்ந்திருப்பதால், இதனை அவர்கள் முறியடிப்பார்கள் என்பது திண்ணம். ஆனால், அமெரிக்காவால் அடுத்தடுத்து இதுபோன்ற கலவரங்களையும், மாணவர் போராட்டங்களையும் வெனிசுலாவில் நடத்த முடிவதற்கு வேறொரு அடிப்படையும் இருக்கிறது. 21-ம் நூற்றாண்டின் சோசலிசம் என்ற பெயரில் தரகு முதலாளிகள் உள்ளிட்ட அனைத்து வர்க்கங்களையும் உள்ளடக்கிய பல கட்சி ஜனநாயக அரசுதான் வெனிசுலாவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, அமெரிக்க ஆதரவு தரகு முதலாளி வர்க்கம் பொருளாதாரத்திலும் சமூகத்திலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு செல்வாக்கு செலுத்துகிறது. இவற்றையெல்லாம் மீறி, மக்களிடம் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்து, அந்த அதிகாரத்தின் மூலம்தான் பல சீர்திருத்தங்களை அமலுக்குக் கொண்டுவந்திருக்கிறார் சாவேஸ். ஆகவே, கீழிருந்து மக்களைத் திரட்டி நடத்தப்பட்ட புரட்சி, அதிலிருந்து உருவாக்கப்பட்ட தொழிலாளர் – விவசாயிகள் கமிட்டிகளின் அரசியல் அதிகாரம் என்ற நிலை அங்கு இல்லை.

10-6அமெரிக்க எதிர்ப்பு, தனியார்மய எதிர்ப்பு, மக்கள்நல நடவடிக்கைகள் பலவற்றை சாவேஸ் எடுத்திருந்த போதிலும், அவை ஏற்கெனவே இருந்த முதலாளித்துவ அதிகார வர்க்க அரசமைப்பின் மூலம்தான் நிறைவேற்றப்படுகின்றன. இந்த முதலாளித்துவ அதிகார வர்க்கமும் சாவேஸின் கட்சியைச் சேர்ந்த முதலாளித்துவப் பேர்வழிகளும்தான் பதுக்கல் முதல் ஊழல் வரையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். நாம் போலி கம்யூனிஸ்டு என்று இங்கே கூறுவதைப் போல, அங்கே பொலி பூர்சுவா (பொலிவாரியன் பூர்சுவா) என்று ஏளனமாக இவர்களை அழைக்கிறார்கள் வெனிசுலா மக்கள். கட்டுச் சோற்றுக்குள்ளிருக்கும் பெருச்சாளி போல வெனிசுலா அரசை உள்ளிருந்து அழிக்கும் வேலையை இவர்கள்தான் செய்து வருகின்றனர். அமெரிக்க ஆதரவு எதிர்ப்புரட்சி சதிக் கும்பல் செல்வாக்கு பெறும் வாய்ப்பை இவர்கள்தான் ஏற்படுத்தித் தருகின்றனர்.

வெனிசுலாவில் அமெரிக்கா தற்போது அரங்கேற்றி வரும் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை, இராக், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்புகள், தலையீடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பிய வண்ணப்புரட்சிகள் ஆகியவற்றுடன் ஒப்பிடத்தக்கது என்கிற அதே நேரத்தில், இதற்கொரு கூடுதல் முக்கியத்துவமும் இருக்கிறது. கம்யூனிசம் தோற்றுவிட்டது, முதலாளித்துவமும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கமும் நிலைநாட்டப்பட்டு விட்டன என்று ஏகாதிபத்தியவாதிகள் கொக்கரித்து வந்த காலத்தில், பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்படும் நாடுகளின் மீது மறுகாலனியாக்க தாக்குதல் கட்டவிழ்த்து விடப்படும் இந்தக் காலத்தில், அலையை எதிர்த்து நீந்த முடியும் என்ற நம்பிக்கையின் சின்னமாக வெனிசுலா ஒளிர்கிறது. கல்வி, மருத்துவம், பொதுச்சேவைகள் ஆகிய அனைத்தையும் தனியார்மயமாக்கும் போக்கு உலகெங்கும் நிகழ்ந்துவரும் நிலையில், இவற்றையெல்லாம் மக்களின் அடிப்படை உரிமையாக்கியிருப்பதுடன், மிகக் குறுகிய காலத்தில் மக்கள் அனைவருக்கும் இச்சேவைகளை வழங்கியுமிருக்கிறது சாவேஸின் அரசு. அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய அரசுகளின் அச்சத்திற்கும் ஆத்திரத்துக்கும் அதுதான் காரணம். உலகெங்கிலும் உள்ள உழைக்கும் வர்க்கம் வெனிசுலாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியதற்கான காரணமும் இதுதான்.

வெனிசுலாவில் தற்போது நடைபெற்றுவரும் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கோட்பாட்டின் சரியான தன்மையை மீண்டும் நிரூபித்திருக்கிறது. ஏகாதிபத்திய கைக்கூலிகள் மற்றும் தரகு முதலாளிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்யாமல், ஆலைகள், தொழில்கள் முதல் ஊடகங்கள் வரையிலானவற்றை அவர்கள் கட்டுப்பாட்டிலேயே விட்டுவைத்து, நாடாளுமன்ற அதிகாரத்தை மட்டும் கையில் வைத்துக்கொண்டு அரசு அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பதற்கு வெனிசுலாவின் நிகழ்வுகள் சான்று பகர்கின்றன.

-கதிர்
________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2014
________________________________________

அந்தக் கைகள் ….

8

துரை பெரியார் பேருந்து நிலையம், புறப்படத் தயாராய் நகரப் பேருந்தின் இஞ்சின் இரைகிறது. எத்தனை முறை துடைத்தாலும் ஓட்டுநரின் நெற்றியில் வியர்வை கண் திறக்கிறது. பயணத்தின் நெசவு போல உள்ளே குறுக்கும், நெடுக்குமாய் நடத்துனரின் உழைப்பு! அதைவிட சீட்டை கிழித்துக் கொண்டே ஊரின் மணம் அறிந்தவர் போல், “பழங்காநத்தம் இறங்கு” என்று அனிச்சை செயலாய் புறமறியும் அவர் திறன் வியக்க வைக்கிறது.

வெங்காயம்
படம் : இணையத்திலிருந்து

அந்த நிறுத்தத்தில், ஏறிய வேகத்தில் என்னைத் தாண்டி முன் உள்ள இருக்கையின் கைப்பிடியை இறுகப் பற்றுகிறது ஒரு கை. விரல் கணுக்கள் இறுகி கருப்பு மேடாய் தடித்திருக்கின்றன. கைப்பிடியை பிடிக்காத இன்னொரு கையும் கூட உள்ளங்கை செதில்கள் போல இறுகி ரத்தம் கட்டியது போலத்தான் இருந்தன.

அறுபது வயதை நெருங்கும் அந்த பெரியம்மாவிடம் ” என்னம்மா கையெல்லாம் இப்புடியிருக்கு,?” என்று மெல்ல பேச்சு கொடுத்தேன்.

”குந்த வச்சி சோறு போட ஆளுமல்ல, பந்தி வச்சி பரிமாற சனமுமில்ல, உழைச்சாதாம்பா சோறு அதான் இப்புடியிருக்கு” என்றார் சாதாரணமாக.

“என்ன வேல பாக்குறீங்க?”

“ஓட்டல்ல வெங்காயம், காய்கறி நறுக்குற வேல!”

“அதாலயா இப்புடி இருக்கு?”

“என்னய்யா இப்புடி கேக்குற? அடுப்புல வச்ச கொள்ளி எரிஞ்சுதான தீரனும்? சும்மாவா, தினம் ஒரு மூட்டை வெங்காயம் உரிக்கணும், நறுக்கணும், கேட்ட காய்கறிய கேட்ட நேரத்துல அரியணும், சாகப் போற நேரத்துலதான் ஈசலுக்கு இறகு முளைக்கும்ங்குற மாதிரி, இந்த வயசுல எனக்கு இந்த கதி!”

என்னால் நம்பவே முடியவில்லை, ஆச்சரியமாய் திகைத்துப் போய் அந்த பெரியம்மாவைப் பார்த்தபடி, “இவ்வளவு கஷ்டப்பட்டு அப்படி என்ன வருமானம்?” என்றேன்

“அத ஏன் கேக்குற? சோத்துக்கு இளச்சாலும் சொல்லுக்கு இளைக்கக் கூடாதுன்னுதான் இம்புட்டு பாடு! மாசம் ஆயிரத்து ஐநூறு, ரெண்டு வேள சாப்பாடு, ரெண்டு காபி இல்ல டீ. இதுல இந்த பஸ்காரன்தான் பாதி திங்குறான், பஸ்சுக்கு காசு கேட்டா முதலாளி முடிஞ்சா வாங்குறான்! நான் பாலைப் பாக்குறதா? பானையப் பாக்குறதா?”

“வேல நேரம்?”

“தெனம் ராத்திரி போய் ஓட்டல்ல படுத்திருவேன், எம் மாறி ரெண் டாளு வருது! காலைல நாலுமணிக்கு எந்திரிச்சு வெங்காயம் உரிக்கணும், இடைல காய்கறி, பன்னெண்டு மணிக்கெல்லாம் வேலய முடிச்சிட்டு வூட்டுக்கு போயிட்டு திரும்பவும் ராவுக்கு வருவேன்! வூடுன்னு ஒண்ணு இருக்குதே, போய் நல்லது கெட்டது பாக்கணும்! வூட்டுல ஒரு நாலு வெங்காயம் உரிச்சாலே கண்ணு கலங்குதுங்குதுங்க, தோ பாருப்பா ஒரு மூடை வெங்காயம் உரிச்ச கண்ணு இது, பாரு ரத்தம் போயி வெளுத்து கெடக்கு! வெங்காயம் உரிச்சு உரிச்சு கையே செதில் செதிலா போயிடுச்சி போ! அதுனாலென்னா, இருக்குற வரைக்கும் உழைப்போம்” பேச்சில் தன்னிரக்கத்துக்கு பதில் தன்னம்பிக்கை வெளிப்பட்டது.

“கையே போயிடும் போல, வேற வேல பாருங்கம்மா?”

“யார் பெத்த புள்ளயோ நீ பாவம் பாக்குற! விதி! சோத்துப்பான ஒடைஞ்சா, மாத்துப்பான இல்லப்பா! வெவசாயம் இருந்தா நான் ஏன் நாதியத்து அலையுறேன், எல்லாம் போச்சு தம்பி! குதிரு இல்லாத வீட எலி கூட மதிக்காதுன்னு, என் பொழப்பு இப்படியாச்சு, உங்க உறவுல வேகுறதுக்கு, ஒரு கட்டு விறகுல வேகலாம்னு, இதுக்கு வந்துட்டேன்!”

விரக்தியும், மெல்லிய சிரிப்புமாய் அந்த பெரியம்மா நிறுத்தம் வந்தவுடன் இறங்கினார். அந்த கைகளின் பிடி இப்போது என் இதயத்தில் இறங்கியது!

…………………………………………………………

சென்னை அயானாவரம். கோடை உரித்த தோலுக்கு, நிழல் பூசி இதமளிக்கிறது மரம் ஒன்று. அங்கே ஒரு இளநீர் கடை. ஒவ்வொரு காய்களையும் உள்ளங்கையில் சுற்றவிட்டு தலையை சீவி எறிகிறது பெண்ணின் கைகள். சீவிய காயின் வாய் வழி நீர் வராததால், வாங்கியவர் சரி செய்து தர நீட்டினார். அந்தப் பெண்ணோ, அரிவாளை நாடாமல், வலது கை பெருவிரலால் ஒரு அமுக்கு அமுக்க, குடிப்பவரின் இயலாமையை கேலி செய்வது போல் பீறிடுகிறது இளநீர்.

வீட்டில் அவசரத்துக்கு ஒரு தேங்காயை உரிப்பதற்கே, சிலருக்கு மூச்சு முட்டுகிறது. நடுத்தர வயதுள்ள அந்தப் பெண்ணோ அலட்சியமாக பத்து நிமிடத்தில் ஒரு ஏழெட்டு இளநீரை சீவித் தள்ளினார். குடித்த இளநீரை ரெண்டாய் போட்டு நிமிடத்தில் உள்ளிருக்கும் வழுக்கையை வழித்து தரும்போது, அதை வாங்கும் சக்தி கூட இல்லாதது போல் ஒரு ஆண்மகன் தடுமாற, “இன்னா சார்! இஞ்சினியருங்கிற இளநிய புடிக்கத் தெம்பில்ல” என்று பழகிய உரிமையுடன் கேலி செய்ய, “இதெல்லாம் படிச்சிட்டா வந்தோம்!” என்று மேலும் வழுக்கையானது அவர் பதில்.

இளநீர்க் கடை
படம் : இணையத்திலிருந்து

மீதம் காசு தருகையில் கையைப் பார்த்தேன். அதுவும் ஒரு சிவப்பு இளநீராய் மேடுகட்டி இருந்தது. விசாரிக்க,

“இன்னா சார் கையப் பாக்குற, எத்தன இளநி விழுவுற கையி இது! செவந்துதான் போவும்! சீசன்னா நூறு இளநி பொளக்குறேன்! அரிவாள்ல என்னத்த இருக்கு! கை போடுற வேகத்துலதான் வேலயே இருக்கு! வீட்ல காலைல வந்து வண்டில காயோட புள்ளையும், என்னையும் இறக்கி விட்டுட்டு போவும், அது கோயம்பேடாண்டா வேல பாக்குது! சாங்காலம் ஆறாகும்! போய் சோத்துல கைய வச்சேன்னு வச்சுக்கோ, தீ பட்ட மாறி எரியும்! போவப் போவ பழவிடும், வூட்ல உட்காந்து டி.வி. பாத்துக்குனு இருந்தா எப்புடி குடும்பம் பண்றது? தோ, பச்ச புள்ளயோட ரோட்லதான் பகல் முழுக்க!” பேச்சுக்கிடையில் அடுத்த இளநீர் சீவினார்.

அப்பொழுதுதான் பார்த்தேன் கடைக்கு பக்கத்திலேயே மரத்தில் ஏனை கட்டி பிள்ளை தூங்கியது. காலை உதைத்துக் கொண்டு பிள்ளை நெளிய ஆரம்பித்தது. அடுத்து ஏனையை உதைத்தபடி அழ ஆரம்பித்தது. அந்த நேரம் பார்த்து பக்கத்தில் கட்டிட வேலைக்கார சித்தாள் பெண் வர,

“தே செத்த புள்ளய தூக்கு இந்த கை சூட்டோடு தூக்குனா இன்னும் கத்துவான், தூக்கு கை கழுவிட்டு வாரேன்!” என உரிமையோடு பேச,

“தே! என் கையே கலவை போட்டு கரடு தட்டி கெடக்கு அது இன்னும் கத்தவா, சரி என்று! வெறுங்கையால் தூக்கினால் உறுத்தும்” என்று சும்மாடு துண்டை உதறி அதில் லாவகமாய் பிடித்து அந்த குழந்நையை தூக்கி எடுத்தாள், அதன் பளிங்கு விழிகளின் இளநீர் தாயின் கை தேடி வழிந்தது!

உழைப்பின் கைகளில் துயரம் தாண்டி அன்பும், வர்க்க உணர்ச்சியின் பற்றுக்கோடாய் அந்த கைகளின் பரஸ்பர இணைப்பையும் பார்த்து, இப்போது இளநீர் உணர்ச்சியில் உரைத்தது!

– துரை.சண்முகம்

இதுதாண்டா தொழிலாளி வர்க்கம் – மே நாளில் சிவந்த ஓசூர்

1

மே தினம் என்பது உலகத் தொழிலாளர்கள் அனைவரும் தமது உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுக்கும் தினம். சூரியன் உதித்து அந்திசாயும் வரையிலும் ஓய்வின்றி உழைத்த கரங்கள் 1886 மே-1 ல் அமெரிக்காவின் சிகாகோ நகர ஹேமார்ட் சதுக்கத்தில் ஒன்று கூடி தங்களுக்கு 8 மணிநேர வேலை நேரத்தைப் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உரிமை குரலெழுப்பி விண்ணதிர முழங்கினார்கள்.

தொழிலாளர்களின் ஒற்றுமையைக் கண்டு அரண்டுப்போன முதலாளிகள் தமது ஏவல் நாய்களான போலீசை வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டிலே சுருண்டு விழுந்த எண்ணற்ற தொழிலாளர்களின் இரத்தத்தால் அந்த ஹேமார்ட் சதுக்கமே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்தது. அன்றைய நாளில் உயிர் இழந்த தொழிலாளர்களை நினைவுகூறவே அவர்களது கோரிக்கைகளை பரிசீலிக்கவே, தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலையை சாதிக்கவே நாம் செல்ல வேண்டிய பாதையைப்பற்றி நினைவுகூர்ந்து அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுச் செல்ல உறுதி பூணுவதே மேதினத்தின் சிறப்பு.

உலகமே உழைக்கும் தொழிலாளர்களால்தான் இயங்குகிறது. ஆனால் அந்த உழைப்பாளர்களுக்காக ஒரே ஒரு நாள்மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும்கூட முதலாளித்துவ ஓநாய்கள் மனமிறங்கி கொடுத்த சலுகையல்ல. தொழிலாளர்கள் தாங்களே போராடி தம் கரத்தாலே பறித்துப் பெற்றுக் கொண்ட நாள் இது. அந்த வர்க்க பெருமிதத்தோடு முன்பெல்லாம் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், வீதிநாடகங்கள், ஆர்ப்பாட்டங்கள் என போர்க்குணமான நிகழ்வுகள் தங்களது வர்க்கத்துக்காக, உரிமைக்காக நடந்தவண்ணம் இருந்தன. ஆனால் இப்போது, குறிப்பாக தமிழகத்தில் எடுத்துக்கொண்டால் .. புரட்சிகர இயக்கங்களைத் தவிர பிற எவையுமே இந்த பாரம்பரியத்தை எடுத்து வரித்துக்கொண்டு அடுத்தக்கட்டத்திற்கு வளர்த்துச் செல்லும் கண்ணோட்டம் கொண்டதாக அறவே இல்லை.

எல்லாருமே தங்களின் ஓட்டுப் பொறுக்கி அரசியல் நலனை முன்னுறுத்தியோ அல்லது முதலாளிகளின் நலனை பேணும் பொருட்டோ அல்லது பேரம்பேசி ஆதாயம் பெறும் பொருட்டோ அல்லது தங்களின் கட்சிகளை அதன் தலைமையின் போலிக் கௌவரத்தை வெளிப்படுத்திக் கொள்ளவோதான் ஒரு அடையாளமாக நடத்துகின்றன. இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இதனை பட்டியலிட வேண்டிய அவசியமில்லை. கூர்ந்து அவதானிப்போர் உணரமுடியும்.

இங்கே, ஓசூரிலே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய இவ்விரு புரட்சிகர அமைப்புகள் சார்பாக மேதினத்தை தொழிலாளர்களுக்கான உண்மையான பொருளில் அதன் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்து உயர்த்திப் பிடிக்கின்ற வகையிலே மேதினத்தன்று நான்கு தலைப்புகளில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்த திட்டமிட்டுக் கொண்டன. அதன்படி திட்டமிட்டவகையில் எடுத்துச்செல்லும்போது ஏற்படுத்தப்பட்ட தடைகளை எதிர்கொண்டு முறியடித்து போர்க்குணத்தோடு எழுச்சிகரமாக நடத்திமுடித்தன. திரளான மக்கள் இறுதிவரை கலந்துக்கொண்டு ஆதரித்தும் வாழ்த்துத் தெரிவித்து சென்றதும் போலிகம்யூனிஸ்டுகளின் கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு தோழர் இதில் இறுதிவரை கலந்துக்கொண்டு நெகிழ்வோடு தனது ஆதரவைத் தெரிவித்துச் சென்றதுமே இதற்கு கட்டியம் கூறுவதாக இருந்தது.

1) காலை 7.30 மணிமுதல் 10.30 வரை பு.ஜ.தொ.மு-ன் கிளைச் சங்கங்களில் கொடியேற்றி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி, தொழிலாளர்கள் எடுத்துக்கொள்ளவேண்டிய உறுதிமொழிகள் பற்றிய விளக்க உரைகள்.

2) இருசக்கர வாகனங்களில் கொடிகள் மற்றும் பதாகைகளுடன் ஊர்வலமாக துண்டறிக்கைகளை கொடுத்து வழிநெடுக பிரச்சாரம் செய்தல்

3) கார்போரண்டம் யுனிவர்சல் ஆலையில் காலை 11.00 மணியளவில் அவ்வாலைத் தொழிலாளர்கள் சங்கம் பு.ஜ.தொ.மு வுடன் இணைக்கப்படும் விழாவில் கலந்துக்கொண்டு அவர்களை வாழ்த்தி எழுச்சியுரையாற்றுதல்

4) மாலை 5 மணியளவில் பன்னாட்டுக் கம்பெனிகள்- பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம்! உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டியெழுப்புவோம்! என்கின்ற அரசியல் முழக்கத்தின்கீழ் மேநாளில் சூளுரைத்து ஓசூர் நகராட்சி அலுவலகத்தின் முன்பே திரளான மக்கள் பங்கேற்போடு எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடத்துதல்

மேற்கண்ட திட்டங்கள் அனைத்தையும் மேதின ஒரே நாளில் கம்பெனி முதலாளிகள் அவர்களின் ஏவலாளிகளின் தடைகளை எதிர்கொண்டு நடத்தியது என்பது ஒசூர் தொழிலாளர்களுக்கு புது ரத்தம் பாய்ச்சியதாக இருந்தது.

காலை 8.00 மணியளவில் சிப்காட்-1ல் உள்ள கமாஸ் வெக்ட்ரா ஆலைவாயில் முன்பு அவ்வாலை தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு வின் கிளைச்சங்கத் தலைவர் கொடியேற்றி தலைமைத்தாங்கினார். பு.ஜ.தொ.மு வின் மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் சிறப்புரையாற்றினார். இறுதியாக கிளைச் சங்க பொருளாளர் தோழர் முரளி நன்றியுரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

பிறகு அங்கிருந்து கொடி, பதாகைகளுடன் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று சிப்காட்-2 ல் உள்ள வெக் இந்தியா ஆலைவாயில் முன்பாக அவ்வாலையில் இயங்கும் பு.ஜ.தொ.மு வின் கிளைச்சங்கத்தின் பொருளாளர் தோழர் ஜெயப்பிரகாஷ் கொடியேற்றி தலைமை தாங்கினார். இதில் அவ்வாலை கிளைச்சங்கத்தின் செயலாளர் தோழர் வேல்முருகன் மற்றும் மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். குறிப்பாக ஆலையில் நடைமுறையில் உள்ளதாக சொல்லப்படும் நிலையாணை என்பது என்ன என்றே பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு தெரியாது. பு.ஜ.தொ.முவில் இணைந்தபிறகுதான் இதுபற்றியும் இது ஆலை முதலாளியின் நலனுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பதை தெளிவாக புரிந்துக்கொள்ளமுடிந்தது. இருப்பினும் இதன்படிகூட முதலாளி நடந்துக்கொள்ள மறுக்கிறான் என்பதை பார்க்கும்போது நாமும் முதலாளியைப்போலவே நமக்கான அதிகார அமைப்புகளை கட்டப்போராடவேண்டும் என்பதை உணரவேண்டும் என்றவகையில் தொழிலாளர்களுக்கு புரியும்படியாக எளிமையாக உரையாற்றினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

பிறகு ஊர்வலமாக இருசக்கரவாகனங்களில் கொடி, பதாகையோடு துண்டறிக்கைகளைக் கொண்டு பிரச்சாரம் செய்துக்கொண்டே காலை 11 மணியளவில் மீண்டும் சிப்காட்-1 ற்கு வந்து கார்போரண்டம் ஆலையில் பு.ஜ.தொ.மு ல் அவ்வாலைத் தொழிலாளர்கள் இணைப்புவிழாவில் கலந்துக்கொண்டனர்.

கார்போரண்டம் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் பு.ஜ.தொ.மு ல் இணைப்பு விழா :

காலை 11 மணியளவில் நடத்தப்படுவதற்காக தோழர்கள் முன்கூட்டியே வந்து கொடிநட்டு, தகவல்பலகை பொறுத்தப்படும் வகையில் முயற்சி செய்தனர். இதனை தடுக்கும் பொருட்டு நிர்வாகம் போலீசை அழைத்தவுடன் உடனே ஓடோடி வந்தார்கள் போலீசுப்பட்டாளம். ஆலை நிர்வாகம் இஞ்சக்சன் ஆர்டர் வாங்கிவைத்துள்ளது. 200 மீட்டர் தூரத்துக்கு அப்பால்தான் எதுவுமே நீங்கள் செய்துக்கொள்ளவேண்டும் என சட்டவாதம் பேசி தடுக்க முயற்சித்தது போலீசு. கலெக்டரிடம் பேசுங்கள் என்று அறிவுறுத்தி காலம் தாழ்த்தியது. இதனைப்பொருட்படுத்தாமல் உலகம் முழுவதும் இந்த நாளில் கம்பெனி வாயில்முன்பாக தொழிலாளர்கள் கூடி தங்களின் தலைவிதியைப்பற்றியும் தங்களின் மூதாதையர்களைப்பற்றியும் நினைவுகூர்ந்து உறுதிமொழியேற்பது என்பது சாதாரண நடைமுறைதான். இது எல்லோருக்கும் பொருந்துவதைப்போலவே எங்களுக்கும் பொருந்தும் என்று சொல்லிக்கொண்டே தங்களின் வேலையை கவனித்தனர். பிறகு போலீசு ஒதுங்கிக்கொண்டது.

பிறகு மிரட்டும் தொனியில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பதிவு செய்யத்தொடங்கியது. நன்றாகவே பதிவுசெய்துக்கொள்ளுங்கள் எங்களின் நடவடிக்கை என்பது வெளிப்படையானது என்று கூறிவிட்டு வேலையை தொடர்ந்தனர் தோழர்கள்.

முதல் நிகழ்ச்சியாக தோழர் பரசுராமன் தலைமையில் கொடியேற்றி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பிறகு ஆலைமுன்பு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் இணைப்புவிழா சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்விற்கு கார்போரண்டம் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் துணைத்தலைவர் தோழர் அந்தோனி தலைமையேற்றார். மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் சிறப்புரையாற்றினார். தோழர் சங்கர் மாவட்ட செயலாளர், தோழர் செந்தில்குமார் கமாஸ்வெக்ட்ரா கிளைச்சங்க செயலாளர், தோழர் வேல்முருகன் வெக் இந்தியா கிளைச்சங்க செயலாளர், தோழர் வெங்கடேசன் அசோக்லேலாண்டு தொழிலாளி, தோழர் சிவலிங்கம் கார்போரண்டம் ஐ.சி எம்ளாயிஸ் யூனியன் இணைச்செயலாளர் , தோழர் கோபால் ஹரிதா ரப்பர் நிறுவன தொழிலாளி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக தோழர் சுந்தரேசன் கா.யு.தொ.தொழிற்சங்க இணைச்செயலாளர் நன்றியுரையாற்றினார்.

அமைதியாக நடந்தேறவேண்டிய இவ்விணைப்பு விழாவை பரப்பரப்பூட்டி போலீசு பட்டாளம், பத்திரிக்கையாளர்கள், அதிகார வர்க்கங்கள் புடைசூழ வெற்றிகரமாக எழுச்சியாக நடந்தது. முருகப்பா குழுமநிறுவனமான இந்த ஆலை நிர்வாகம் இந்த தொழிற்சங்கத்தை அங்கீகரித்து பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமூகமாக பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முன்வரவேண்டும். இல்லையேல் ஒசூர் தொழிலாளர்கள், பொதுமக்கள், வியாபாரிகளின் ஆதரவைத் திரட்டி சட்டப்படியும் சட்டத்திற்கு வெளியே தெருப்போராட்டங்களை நடத்தி பணியவைப்போம் என்று எச்சரிக்கும் வகையில் இவ்விழா நடந்தேறியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

நகராட்சி அலுவலகம் முன்பாக நடத்தப்பட்ட எழுச்சிமிகு அரசியல் ஆர்ப்பாட்டம்:

சார் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு நகராட்சி அலுவலகம் வந்தடையும் வண்ணம் போலீசு அனுமதி கோரப்பட்டிருந்தது.

“அவ்வாறு அனுமதிதரமுடியாது. நாங்கள் சொல்கின்ற ரூட்டில் வேண்டுமானால் பேரணி வைத்துக்கொள்ளுங்கள்” என்றனர்.

“இது தொழிலாளர் தினம், இது எங்களுடைய தினம் நாங்கள் விரும்பும் வழியை எங்களுக்கு ஒதுக்கித்தர உங்களுக்கென்ன பிரச்சினை” என்றால் அதற்கு எவ்வித பதிலும் இல்லை.

மாறாக, “நாங்கள் சொல்கிறபடி பேரணி நடத்துங்கள் இல்லையேல் உங்கள் பேரணிக்கு அனுமதியில்லை” என்றனர்.

ஆதலால் ஆர்ப்பாட்டம் மட்டுமே நடத்தமுடிவு செய்து அதன்படி நடத்தப்பட்டது. மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ள அனுமதியளித்திருந்தனர். அதே இடத்தில் வலது-இடது போலிக்கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யூ மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி யினர் குவிந்து முழக்கமிட முயன்றனர்.

அவர்களை கேட்டால் “எங்களுக்கும் இங்கதான் அனுமதியளித்துள்ளனர்” என்றனர். பிறகு போலீசிடம் கேட்டால்..”அவர்கள் அங்க நடத்திக்கொள்ளட்டும், நீங்கள் இங்க நடத்திக்கொள்ளுங்கள். நாங்க என்ன செய்யமுடியும் ? எங்கள் மேல்அதிகாரிகள் இப்படி கொடுத்திருப்பது குறித்து எங்களுக்கே தெரியாது” என கைவிரித்தனர்.

பிறகு நமது தோழமை அமைப்பான ம.க.இ.க பாடல் ஒலிப்பேழையில் வருகின்ற போலீக்கம்யூனிஸ்டுகளை அம்பலப்படுத்தும் பாடலை ஒலிப்பெருக்கியில் போட்டவுடன் அவர்கள் துண்டக்காணோம் துணியக்காணோம் என கிளம்பிவிட்டனர். இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகுதான் சாதாரணமாக நடந்தேறவேண்டிய ஆர்ப்பாட்டம் பரபரப்பாகவும், திரளான மக்களின் பங்கேற்போடும்,விவாதங்களோடும் போர்க்குணத்தோடு எழுச்சிகரமாக நடந்தேறியது.

சரியாக 5.00 மணிக்கு பறையோசை அதிர தொடங்கிய இவ்வார்ப்பாட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செந்தில்குமார் முன்மொழிதலுடன், மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் தலைமையேற்று நடத்தினார். பாகலூர் பகுதி பு.ஜ.தொ.மு வின் பொறுப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தெலுங்கில் கண்டன உரையாற்றினார். மாவட்ட தலைவர் தோழர் பரசுராமன் சிறப்புரையாற்றினார். இறுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணியின் அஞ்செட்டி ஒன்றிய தோழர் முனியப்பன் நன்றியுரையாற்றினார்.

தோழர் சங்கர் தனது தலைமையுரையில் இரண்டாண்டிற்கு முன்பு இதே நாளில் மேதினத்தில் பேருந்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே கால்தவறி விழுந்து இறந்த தியாகத் தோழர் முன்னால் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செல்வராசை நினைவுகூர்ந்து உரையாற்றினார். அவரது தியாகத்தை நாம் நெஞ்சிலேந்திப் போராட அழைத்துப்பேசியது உருக்கமாக இருந்தது.

தோழர் ரவிச்சந்திரன் தனது கண்டன உரையில் இங்கே பாகலூர் பகுதியில் ஓடிக்கொண்டிருக்கும் தென்பெண்ணையாறாகட்டும், நமது தமிழகத்தின் நெற்களஞ்சமாம் தஞ்சையை வளமான பூமியாக்கிய காவிரியாகட்டும் இவைகள் எல்லாமே கார்பரேட் முதலாளிகளின் நலன்பொருட்டே பொட்டல் காடாக்கப்படுகிறது. தவித்த வாய்க்கு தண்ணீர்கூட இனி கிடைக்காது என்ற நிலைக்கு அழைத்துச் செல்லும் இந்த முதலாளித்துவப் பயங்கரவாதத்தை வேரோடு வெட்டி சாய்த்திட புரட்சிகர இயக்கங்களில் அணிதிரண்டுப்போராட வேண்டிய அவசியத்தை வலியிறுத்திப்பேசினார். அவர் பேசும்போது இந்த தண்ணி எந்த முதலாளித்துவ கொமபனும் கண்டுப்பிடித்ததல்ல. இயற்கையாகவே இந்த பூமியில் உள்ளது. இதைகூட விட்டுவைப்பதில்லை என்றால் நாம் சும்மா வேடிக்கைப் பார்க்கமுடியாது என்று கூறியது நல்ல வரவேற்பை பெற்றது.

தோழர் பரசுராமன் தனது சிறப்புரையில் இந்த நாட்டின் சட்டமன்றம், பாராளுமன்றம் , நீதிமன்றம், போலீசு, இராணுவம், பத்திரிக்கைகள் எல்லாமே முதலாளி வர்க்கத்துக்கான நிலையாணைகள். இவை எதுவுமே இந்நாட்டின் கோடான கோடி மக்களுக்கு பயன்தருவதில்லை. மாறாக கார்பரேட் முதலாளிகள், பன்னாட்டு கம்பெனிகளின் நலனுக்கானவை. ஓட்டுக்கட்சிகள் எல்லாமே இதற்கு துணைநிற்பவை. இதனைப்புரிந்துக்கொண்டு நாம் நமக்கான உண்மையான மாற்று அதிகார அமைப்புகளை கட்டியெழுப்ப முன்வரவேண்டும் என்று அறைகூவி அழைக்கும் வகையில் எழுச்சிகரமாக உரையாற்றியது வியாபாரிகள், தொழிலாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

மேநாள் ஆர்ப்பாட்ட முழக்கங்கள்:

வாழ்க, வாழ்க, வாழ்கவே!
விவசாயிகள் விடுதலை முன்னணி
வாழ்க, வாழ்க, வாழ்கவே!

வாழ்க, வாழ்க, வாழ்கவே!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வாழ்க, வாழ்க, வாழ்கவே!

ஓங்குக, ஓங்குக!
புதிய ஜனநாயகப் புரட்சி
ஓங்குக, ஓங்குக!

வாழ்க வாழ்க வாழ்கவே!
மே நாள் வாழ்கவே!

***

வெட்டி வீழ்த்துவோம்! வெட்டி வீழ்த்துவோம்!
பன்னாட்டுக் கம்பெனிகளின்
பார்ப்பன சர்வாதிகாரத்தை
வெட்டி வீழ்த்துவோம்! வெட்டி வீழ்த்துவோம்!

கட்டி எழுப்புவோம்! கட்டி எழுப்புவோம்!
உண்மையான ஜனநாயகத்திற்கான
மாற்று அதிகார அமைப்புகளைக்
கட்டி எழுப்புவோம்! கட்டி எழுப்புவோம்!

***

பகற்கொள்ளை, பகற்கொள்ளை
தனியார் பள்ளிகள் பகற்கொள்ளை
கட்டணக் கொள்ளையைத் தாங்காமல்
பெற்றோர்களோ தற்கொலை!
மாறிவிடுமா? மாறிவிடுமா?
மோடி ஆட்சி வந்தாலும்
லேடி ஆட்சி வந்தாலும்
மாறிவிடுமா? மாறிவிடுமா?

ஜூன் மாதம் பள்ளி திறக்குது
பெற்றோர்களுக்கோ பீதி பரவுது
கல்விக் கட்டணத்தை நினைத்தாலே
வாழ்க்கையே நொந்து போகுது!
மாறிவிடுமா? மாறிவிடுமா?
மோடி ஆட்சி வந்தாலும்
லேடி ஆட்சி வந்தாலும்
மாறிவிடுமா? மாறிவிடுமா?
யார் ஆட்சி வந்தாலும்
ஒழியாது, ஒழியாது!
கல்வித் தனியார்மயம் ஒழியாது!

அம்மை நோய் பரவுது
வைரஸ் நோய் பரவுது
டாக்டரிடம் காரணம் கேட்டா
குடிநீரில் கோளாறு என்கிறாரு
அம்மா தண்ணீரு பத்துரூபா
அக்வா தண்ணீரு இருபதுரூபா
ஜோரா நடக்குது, ஜோரா நடக்குது!
தண்ணீர் வியாபாரம் ஜோரா நடக்குது!
தண்ணியை விக்கிற அம்மாதான்
தனியார்மயத்தின் காவலாளி!

இஞ்ஜினியரிங் காலேஜெல்லாம்
காத்து வாங்குது, காத்துவாங்குது!
பி.இ. படிச்சவன் பட்டமெல்லாம்
காத்துல பறக்குது, காத்துல பறக்குது!
வேலையின்மையை உருவாக்கிய
தனியார்மயத்தின் தாசர்களான
ஓட்டுக் கட்சிகளின் ஆட்சி மாற்றம்
வேலையில்லாத் திண்டாட்டத்தை
ஒழிக்காது, ஒழிக்காது!

வாஜ்பாயி தொடங்கி வைத்து
மன்மோகன் அழைத்து வந்த
வால்மார்ட்டும், ரிலையன்சும்
சில்லரை வணிகத்தை
நசுக்க வருது! நசுக்க வருது!
நாலு கோடி வியாபாரிகளை
ஒழிக்க வருது! ஒழிக்க வருது!
புதிய ஆட்சி என்பதெல்லாம்
போராடும் வணிகர்களை
-ஒடுக்க வருது! ஒடுக்க வருது!

பால் குடிக்கும் குழந்தையைக் கூட
பாலியல் வன்முறை விட்டுவைக்கல
பள்ளிக் கூட மாணவர்களை
செக்ஸ் வெறி விட்டுவைக்கல
காரணம் என்ன, காரணம் என்ன?
தனியார்மயத்தின் முன்னேற்றமெனும்
செல்ஃபோனும் இன்டர்நெட்டும்

இன்டர்நெட்டில் பிரச்சாரம் செய்து
ஆட்சிபுடிக்கும் ஓட்டுக்கட்சிகள்
பாலியல் வன்முறை ஒழிக்காது!

விவசாயிகளுக்கு சோறுபோட்டது
விவசாயம் என்பதெல்லாம்
அந்தக்காலம்! அந்தக்காலம்!
விவசாயத்தைக் காப்பாற்ற
பெங்களூருக்கும் திருப்பூருக்கும்
ஓடியது கடந்தகாலம்!
விளைநிலத்தை விற்றுவிட்டு
ஊரைவிட்டே ஓடுவது
இந்தக்காலம்! இந்தக்காலம்!
விவசாயம் ஒழிந்ததற்கு
காரணம் யார்? காரணம் யார்?
மூன்று இலட்சம் விவசாயிகள்
தற்கொலைக்குக் காரணம் யார்?
டாடா, பிர்லா, அம்பானிக்காக
விவசாயத்தை ஒழித்துக் கட்டிய
தனியார்மயத்தின் தாசர்களே!
தனியார் முதலாளிகளுக்கு
விளைநிலங்களை தாரைவார்த்த
குஜராத்தின் முதலமைச்சர்
விவசாயிகளின் எதிரியே!

எட்டு மணிநேர வேலையில்லை
பணிப்பாதுகாப்பு ஏதுமில்லை
நிரந்தமான வேலையில்லை
மருத்துவ வசதி ஏதுமில்லை
உரிமைகள் ஏதுமில்லாமல்
உழன்று சாகிறான் தொழிலாளி!
தனியார்மயத்தின் பரிசு இது!
தொழிலாளர்கள் கொத்தடிமைகள்
உரிமைகள் குறித்துப் பேசுவதற்கு
சங்கம் வைக்கும் உரிமையில்லை!
ஏட்டளவில் இருக்கின்ற
தொழிலாளர் உரிமைகளை
இல்லாமல் ஒழிப்பதற்கு
கார்ப்பரேட் கம்பெனிகள்
ஓநாய்களாக திரிகின்றன.

கான்ட்ராக்ட் தொழிலாளி என்பதெல்லாம்
கன்ஃபார்ம் தொழிலாளி என்பதெல்லாம்
தொழிலாளர்களை பிரித்துவைத்து
ஒடுக்குவதற்கே ஒடுக்குவதற்கே
புரிந்து கொள் புரிந்து கொள்!

பயிற்சி மாணவர் என்ற பெயரில்
வேலை செய்பவரும் தொழிலாளியே
பயிற்சி என்ற பெயரிலே
நமது உழைப்பை சுரண்டுகிறான்!
தீவிரமடையும் தீவிரமடையும்
புதிய ஆட்சி அமைந்தபின்னர்
தொழிலாளர் மீதான
அடக்குமுறைகள் தீவிரமடையும்!

ஜனநாயக ஆட்சி என்ற பெயரில்
இயற்கை வளங்களை சூறையாடுறான்!
இரும்புத்தாதை கொள்ளையடிக்க
சட்டீஸ்கர் மாநிலத்தில்
பழங்குடி மக்களை விரட்டியடிக்கிறான்!
திரு வண்ணாமலை மாவட்டத்திலேயே
கவுத்தி வேடியப்பன் மலைகளை
ஜிண்டாலுக்கு தாரை வார்க்க
விவசாயிகளை விரட்டியடிக்கிறான்!
தஞ்சை, திருவாரூர் மாவட்ட
விவசாயிகளை விரட்டியடிக்க
மீத்தேன் நிலக்கரி எடுப்புத் திட்டமாம்
தீவிரமடையும் தீவிரமடையும்!
மோடி ஆட்சி என்றாலும்
கேடி ஆட்சி என்றாலும்
இயற்கை வளத்தை சூறையாடும்
தனியார்மயத்தின் கொடுமைகள்
தீவிரமடையும் தீவிரமடையும்!

பொதுசிவில் சட்டமென்றும்
முசுலீமகள் எதிரியென்றும்
ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. பேசுவது
கார்ப்பரேட் கொள்ளையை மறைப்பதற்கே!
உழைக்கும் மக்களை கூறுபோடவே!
புரிந்து கொள்வோம்! புரிந்து கொள்வோம்!
உழைக்கும் வர்க்கம் என்ற பெயரில்
ஓரணியாய் அணிதிரள்வோம்!

***

ஓட்டுக் கட்சிகள் அத்தனையும்
தனியார்மயத்தின் தாசர்களே!
மாறிவிடாது, மாறிவிடாது!
புதிய ஆட்சி வந்துவிட்டாலே
நமது அவலங்கள் மாறிவிடாது!
தீவிரமடையும், தீவிரமடையும்
விலைவாசி உயர்வும் நெருக்கடிகளும்
தீவிரமடையும், தீவிரமடையும்!

சலுகைகளும் மானியங்களும்
பன்னாட்டு முதலாளிக்கு
வறுமையும் தற்கொலையும்
நம்நாட்டு மக்களுக்கு
இதுதான் போலி ஜனநாயகம்!

ஓட்டுக் கட்சிகள் அத்தனையும்
தனியார்மயத்தின் அடிமைகளே
ஓட்டுக் கட்சிகள் அத்தனையும்
கார்ப்பரேட் கம்பெனிகளே

***

நாட்டை கூட்டிக் கொடுக்கும் மன்றம்
சட்டமன்றம், பாராளுமன்றம்!
காசுக்கு நீதியை விற்கும் மன்றம்
நீதிமன்றம் நீதிமன்றம்!
கார்ப்பரேட்டுகளின் அடியாள் படை
தாசில்தாரும் கலெக்டரும்!
உழைக்கும் மக்களை ஒடுக்கும் படை
போலீசும் இராணுவமும்!
பத்திரிகை டீவி என்பதெல்லாம்
கார்ப்பரேட்டுகளின் பாக்கெட்டிலே
பத்திரிகை சுதந்திரம் என்பதெல்லாம்
ஆபாச சீரழிவு பிரச்சாரம்தான்!
புரிந்து கொள்வோம்! அடையாளம் காண்போம்!
உழைக்கும் மக்கள் எதிரிகளைப்
புரிந்து கொள்வோம்! அடையாளம் காண்போம்!

ஆணையங்கள் என்ற பெயரில்
கார்ப்பரேட்டுகளின் ஆட்சி நடக்குது!
சட்டமியற்றும் அதிகாரம் கூட
நாடாளுமன்றத்திற்கு இனிமேல் இல்லை
அரசியலமைப்புச் சட்டம் என்பதே
கார்ப்பரேட் கம்பனிகளின் நிலையாணை தான்

கொள்ளையடிப்பதே கொள்கையானபின்
சட்டம் – நீதி தேவையில்லை
என்பதுதான் மோடி மந்திரம்!
பாசிசத்தின் மூடு மந்திரம்!

***
அதிகாரத்தைக் கையிலெடுப்போம்!
அநீதிகளுக்கு முடிவு கட்டுவோம்!

நிலம், நீர், காற்று எல்லாம்
கல்வி, மருத்துவம், சாலை எல்லாம்
உழைக்கும் மக்களின் உரிமையாக்குவோம்!
பொது உடைமை யாக்குவோம்!
போக்குவரத்து, மின்சாரம்
தொலைபேசி எல்லாமே
உழைக்கும் மக்களின் உரிமையாக்குவோம்!
பொது உடைமை யாக்குவோம்!
தனியார் உடைமையை ஒழித்துக் கட்டுவோம்!
பொது உடைமை யாக்குவோம்!

நில முதலைகள், கல்வி வியாபாரிகளின்
மருத்துவம், தண்ணிர் வியாபாரிகளின்
சொத்துரிமையைப் பறித்தெடுப்போம்!
வாக்குரிமையைப் பறித்தெடுப்போம்!

பன்னாட்டுக் கம்பெனிகள்
டாடா – பிர்லா – அம்பானிகளின்
சொத்துக்களை பறிமுதல் செய்வோம்!
உரிமைகளை பறித்தெடுப்போம்!

இலஞ்ச ஊழலில் கொள்ளையடித்த
அதிகாரிகள், அரசியல்வாதிகளின்
சொத்துக்களைப் பறித்தெடுப்போம்!
வாக்குரிமையைப் பறித்தெடுப்போம்!

ஆலைகள் தோறும் கமிட்டிகள் அமைப்போம்!
ஆலை நிர்வாகத்தைக் கையிலெடுப்போம்!
நகரங்கள் தோறும் கமிட்டிகள் அமைப்போம்!
நகரத்தை நிர்வாகம் செய்வோம்!
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளை
நாடு முழுவதற்குக் கட்டியமைப்போம்!
விளை பொருளுக்கு விலை நிர்ணயம்
சாலை அடிப்படை வசதிகள் வரை
அனைத்து பிரச்சனைகளையும்
மக்கள் கமிட்டிகள் மூலமே
தீர்வு காண்போம்! தீர்வு காண்போம்!

போலீசு, இராணுவம், நீதிமன்றங்களின்
அதிகாரங்களைப் பறித்தெடுப்போம்!
தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டிகளின்
அதிகாரத்தின் கீழ் கட்டுப்படுத்துவோம்!

இரட்டையாட்சியை ஒழித்துக் கட்டுவோம்!
சட்டமியற்றவும் அமுல்படுத்தவும்
அதிகாரம் கொண்ட அமைப்பாக்குவோம்!
மக்கள் பிரதிநிதி தவறிழைத்தால்
திருப்பியழைக்கவும் தண்டிக்கவும்
அதிகாரம் மக்களுக்கே!

போராட்டங்களைக் கட்டியமைப்போம்!
எழுச்சிகளை வளர்த்தெடுப்போம்!
உண்மையான ஜனநாயகத்தை
மாற்று அதிகார அமைப்புகளை
வளர்த்தெடுப்போம்! வளர்த்தெடுப்போம்!

அதிகாரத்தைக் கையிலெடுப்போம்!
அநீதிகளுக்கு முடிவு கட்டுவோம்!
போலி ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டுவோம்!
புதிய ஜனநாயகத்தை கட்டியமைப்போம்!

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி- விவசாயகள் விடுதலை முன்னணி
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள். தொடர்புக்கு:செல்-9788011784

ஒளிரும் குஜராத்: இராம ஜென்மபூமி பாகம் 2

3

ன்றைய “இராம ஜென்மபூமி”யும் இன்றைய “ஒளிரும் குஜராத்”தும் வேறு வேறானவையா? இல்லை. இரண்டும் புனைவுகள்தான். முன்னது ஆர்.எஸ்.எஸ்-ன் சொந்த சரக்கு; பின்னது இந்தியத் தரகு முதலாளி வர்க்கம் தந்த சரக்கு என்பதுதான் வேறுபாடு. இராமாயணம் என்ற புனைகதையை, ஒரு நம்பிக்கையாக மக்கள் மனதில் நிலைநாட்ட பார்ப்பனர்களுக்கு சில நூறு ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால், ஒளிரும் குஜராத் என்ற புனைசுருட்டை, மிகக் குறுகிய காலத்தில் ஒரு ‘தேசிய’ மூடநம்பிக்கையாக நிலைநிறுத்தி விட்டது, இந்தியத் தரகு முதலாளி வர்க்கம்.

“ஒளிரும் குஜராத்” என்பது ஒரு குறியீடு. மறுகாலனியாக்கத்தின் மூலம் முன்னேற்றம், வளர்ச்சி, சொர்க்கம் என்று ஆளும் வர்க்கம் உருவாக்கும் கருத்தாக்கம்தான் அதன் உள்ளடக்கம். தீவிரமான வர்க்கச் சுரண்டலையும் ஏற்றத் தாழ்வையும் நியாயப்படுத்தும் இந்தக் கருத்தாக்கத்தின் இதயமாக இந்துத்துவம் மறைந்திருக்கிறது.

“நாளைய பிரதமர் மோடி” என்ற முழக்கம், இந்தியத் தரகு முதலாளி வர்க்கம் தீர்மானித்த நிகழ்ச்சி நிரல்தான் என்பது இன்று முற்றுமுழுதாக அம்பலமாகிவிட்டது. இந்த முடிவுக்கு இந்திய கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் வந்ததைப் பற்றித் தனது கட்டுரையொன்றில் விளக்குகிறார் சித்தார்த் வரதராஜன் (தி இந்து நாளேட்டின் முன்னாள் ஆசிரியர்).

மன்மோகன் அரசு 2009-ல், இரண்டாம் முறையாகப் பதவி ஏற்றிருந்த அந்த ஆண்டிலேயே, கார்ப்பரேட் வர்க்கத்தின் இந்தக் கனவு துவங்கி விட்டது. “மோடியின் தலைமையில் குஜராத் எல்லா துறைகளிலும் முன்னேற்றம் கண்டிருக்கிறது; இந்த தேசத்துக்கு தலைமையேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தால், எப்படி இருக்கும்; எண்ணிப் பாருங்கள்” என அன்றே “வைப்ரன்ட் குஜராத்” நிகழ்ச்சியில் பேசினார் அனில் அம்பானி. உடனே மிட்டல் உள்ளிட்டோர் அதனை வழிமொழிந்தனர். 2010-ல் மேற்கு வங்கத்திலிருந்து விரட்டப்பட்ட டாடாவுக்கு குஜராத்தில் சர்வமானியம் அளித்து மோடி குடியேற்றியவுடன், “வீடற்றவர்களாக நடுத்தெருவில் நின்ற எங்களுக்குத் தஞ்சமளித்தவர் மோடி” என்று நெகிழ்ந்தார் டாடா மோட்டார்ஸின் எம்.டி. ரவி காந்த். “மற்ற மாநிலங்களில் தொழில் தொடங்க உரிமம் பெறுவதற்கு 6 மாதங்கள் ஆகும்; குஜராத்தில் இரண்டே நாட்கள்தான்” என்று மோடியின் ஒற்றைச் சாளர நிர்வாகத்தைப் புகழ்ந்தார் டாடா.

ஒளிரும் குஜராத்: இராம ஜென்மபூமி பாகம் 2

“குஜராத் மாநிலமே ஒரு தங்கக் குத்துவிளக்காக மின்னுவதாகவும், அதன் பெருமை அனைத்தும் மோடியையே சேரும்” என்றும் 2011-ல் புகழ்ந்து, பிரதமர் பதவிக்கு சிபாரிசு செய்தார் முகேஷ் அம்பானி. “இன்று சீனாவைப் போன்ற வளர்ச்சி என்று எல்லோரும் பேசுகிறார்கள். விரைவில் குஜராத்தைப் போல வளரவேண்டும் என்று சீனாவில் பேசப்போகிறார்கள். அந்த நாள் தொலைவில் இல்லை” என்று 2013-ம் ஆண்டு “வைப்ரன்ட் குஜராத்” நிகழ்ச்சியில் பேசினார் ஆனந்த் மகிந்திரா. இவையெல்லாம் சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. மோடியின் பத்தாண்டு ஆட்சியில் தனது சொத்தைப் பத்து மடங்கு பெருக்கிக் கொண்ட அதானியைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. அவர்தான் மோடியின் அதிகாரபூர்வ ஸ்பான்சர்; “சர்வதேச அரங்கில் குஜராத்தின் கவுரவம் குலைக்கப்படுவதை எதிர்த்து” (இனப்படுகொலைக்காக) 2002-லேயே குரல் கொடுத்தவர்.

ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியை இந்தியத் தரகு முதலாளி வர்க்கம் இப்படியெல்லாம் துதிபாடிப் பதவியில் அமர்த்த துடித்தது இந்திய அரசியலில் இதுவரை நடந்ததில்லை. அதுவும் முதலாளிகளுக்குச் சலுகை வழங்குவதில் “நீ, நான்” என்று மாநில முதல்வர்கள் போட்டி போடும் இந்தக் காலத்தில், இனப்படுகொலை குற்றவாளி என்று அம்பலப்பட்டுப்போன ஒரு நபரை, முதலாளி வர்க்கம் இந்த அளவுக்குத் தலையில் வைத்துக் கொண்டாடுவதிலிருந்தே மோடியின் தனிச்சிறப்பை யாரும் ஊகிக்க முடியும்.

மோடி, குஜராத்தின் கடற்கரையையும், விளைநிலங்களையும் அதானி, டாடா, அம்பானி சகோதரர்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரையிலான அனைவருக்கும் வாரிக்கொடுத்ததும், வரிச்சலுகைகள் – மானியங்கள் அளித்ததும் ஏற்கனவே அம்பலமாகியிருக்கின்றன. கேட்பதற்கு முன் வாரிவழங்கும் மோடியின் பரந்த உள்ளத்தைக் காட்டிலும் முதலாளிகளுக்குப் பிடித்திருப்பது மோடியின் வேகம். சட்டம்-நெறிமுறை எதையும் பொருட்படுத்தாத வேகம்! 8 அமைச்சரவைகளைக் கையில் வைத்துக் கொண்டு மோடி என்ற ஒற்றைச் சாளரத்திலேயே முதலாளிகளுக்கு எல்லாவற்றையும் முடித்துத் தரும் நிர்வாகத் திறன் அல்லது சர்வாதிகாரம்! மக்களின் எதிர்ப்பு இயக்கங்களை இல்லாதொழிக்கும் சாமர்த்தியம் அல்லது துணிச்சல்!

2009 முதல் 2012 வரையிலான இந்தக் காலத்தில்தான் கலிங்காநகர், போஸ்கோ, நியம்கிரி முதலான போராட்டங்கள் நடந்தன. ராடியா டேப்புகள் வெளியாகின. தங்களது அந்தப்புர இரகசியங்களைக் காப்பாற்றுவதற்குக்கூட முடியாத அளவு இந்திய ஜனநாயகம் பலவீனமடைந்திருப்பதை எண்ணிக் குமுறினார் டாடா. முகேஷ் அம்பானி, டாடா உள்ளிட்ட தரகு முதலாளிகள் தொழில் செய்வதற்குரிய சூழல் இந்தியாவில் இல்லையென்றும், வெளிநாட்டில் முதலீடு செய்வதாகவும் பகிரங்கமாக அரசை மிரட்டினர்.

இதனைத் தொடர்ந்து முதலாளிகளைத் தாஜா செய்வதற்கான நடவடிக்கைகளில் மன்மோகன் அரசு ஈடுபட்டது. என்றபோதிலும், சிங்குர், மாருதி உள்ளிட்ட பிரச்சினைகளில் துணிச்சலாக முதலாளி வர்க்கத்துக்கு அடியாள் வேலை பார்த்த மோடியைத்தான் ஆளும் வர்க்கம் விரும்பியது. இந்தப் பின்புலத்திலும் சில்லறை வணிகம், ஓய்வூதிய நிதி உள்ளிட்டவற்றைத் திறந்து விடுவதில் மன்மோகன் அரசு காட்டிய தாமதம் போன்ற பல காரணங்களினாலும்தான், மோடியைப் புகழ்ந்து எழுதிய அமெரிக்க டைம்ஸ் வார ஏடு, மனமோகனை “அண்டர் அச்சீவர்” என்று விமரிசித்தது.

தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் மோடியைக் கொண்டு வருவதற்கு இன்று காட்டிவரும் வெறி, பாபர் மசூதியை இடிப்பதற்கு அன்று அத்வானி காட்டிய வெறியைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமானது. இது முதலாளிகளிடம் வெளிப்படும் வழக்கமான இலாப வெறி அல்ல; கடற் கொள்ளையர்களிடம் மட்டுமே காணத்தக்க வெறி! இதற்கும் ஒரு பின்புலமிருக்கிறது.

ஒளிரும் குஜராத்: இராம ஜென்மபூமி பாகம் 2

நிலக்கரி, இரும்பு, பாக்சைட் உள்ளிட்ட கனிம வளங்கள், நீர்வளம், நிலவளம், கடல்வளம், எண்ணெய், எரிவாயு, காடுகள், மலைகள் முதல் அலைக்கற்றை வரையிலான எல்லா பொதுச்சொத்துக்களையும் இலவசமாகவோ, அடிமாட்டு விலைக்கோ கைப்பற்றிக் கொள்வதற்கான போட்டி இன்று உலகெங்கும் தீவிரமடைந்திருக்கிறது. 2008-க்குப் பிந்தைய பொருளாதார மந்தத்திலிருந்து மீள வழி தெரியாமல், உலக முதலாளித்துவம் திணறுகிறது. சந்தைகளின் தேக்கம், மிகை உற்பத்தி ஆகியவற்றின் காரணமாக தொழில் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. மூலதனத்தின் ரத்தப்பசியைத் தீர்ப்பதற்கு, பொதுச்சொத்துக்களைக் கொள்ளையடிப்பதும் நிதி மூலதனச் சூதாட்டமுமே முதலாளி வர்க்கம் தெரிவு செய்யத்தக்க தொழில்களாக இன்று எஞ்சியிருக்கின்றன. சூதாட்டத்தைக் காட்டிலும் உத்திரவாதமானது கொள்ளை என்ற உண்மையை விளக்கத் தேவையில்லை. இந்தக் கொள்ளைதான் இந்தியத் தரகு முதலாளிகளின் இலாப விகிதத்தை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து, அவர்களில் பலரை உலக கோடீசுவரர்களாகவும் ஆக்கியிருக்கிறது.

மக்கள் போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள், மாவோயிஸ்டு பிரச்சினை, சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் தொந்திரவுகள் போன்றவற்றால் இந்தக் கொள்ளையைத் தாங்கள் விரும்பிய வேகத்தில் நடத்த முடியவில்லை என்பதுதான் காங்கிரசு அரசின் மீது தரகு முதலாளிகள் கோபம் கொள்ளக் காரணம். மாறாக, சுற்றுச்சூழல் தடையகற்றுதல் (environmental clearance) குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்துத் தரப்படும் என்று கூறும் மோடியின் தேர்தல் அறிக்கை அவர்களின் மனதைக் கவர்ந்திருக்கிறது.

“சுற்றுச்சூழலைப் பேணுதல், பழங்குடி மக்களின் உரிமை, விவசாயிகளின் உரிமை” என்பன போன்ற பசப்பு வார்த்தைகள் ஏதுமின்றி, மரங்கள், மலைகள் முதல் பழங்குடிகள், மீனவர்கள் வரையிலான அனைத்தையும், நாட்டின் ‘வளர்ச்சி’க்காக அகற்றப்படவேண்டிய தடைகளாக மோடி கருதுகிறார் என்பது மட்டுமின்றி, இந்து ராஷ்டிரத்துக்கான தடையகற்றும் நடவடிக்கைகளை அவர் ஏற்கனவே குஜராத்தில் வெற்றிகரமாக செய்தும் காட்டியிருக்கிறார் என்பதால், மோடியை இயல்பாகவே அவர்கள் ஆதரிக்கிறார்கள். பிரதமர் பதவியின் மீது மோடி என்ற பாசிஸ்டு கொண்டிருக்கும் மோகத்தைக் காட்டிலும், பிரதமர் நாற்காலியில் மோடியை அமர்த்துவதற்கு கார்ப்பரேட் முதலாளிகள் காட்டும் வேகம் சற்று அதிகமாகவே இருக்கிறது.

ஒளிரும் குஜராத்: இராம ஜென்மபூமி பாகம் 2

80-களில் ராம ஜென்மபூமி என்ற கட்டுக்கதையையும் இந்துத்துவ அரசியலையும் எதிர்த்து எழுதுவதற்கு, பல்வேறு சிந்தனைப் போக்குகளைச் சார்ந்த அறிவுத்துறையினரும் இருந்தனர். வெளியிடுவதற்கும் ஊடகங்களில் ஓரளவு இடமிருந்தது. இன்றோ தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், இணையம் என எல்லா ஊடகங்களும் மோடிக்காக குரைக்கின்றன. முன்னர் பார்ப்பன மதத்தை எதிர்த்தவர்கள் வேட்டையாடிக் கொன்றொழிக்கப் பட்டதைப் போலவே, இன்று மோடியை விமரிசிக்கும் ஊடகவியலாளர்கள் பணியிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்; தாக்கப்படுகிறார்கள்.

ஒளிரும் குஜராத் என்பது முதலாளி வர்க்கத்தால் படைக்கப்பட்ட கடவுள். மோடி அதன் தலைமைப் பூசாரி. தனது கடவுளோ, பூசாரியோ கேள்விக்குள்ளாக்கப்படுவதைத் தரகு முதலாளி வர்க்கம் விரும்பவில்லை என்பதையே இவை காட்டுகின்றன.

ஒளிரும் குஜராத் என்ற புனைவைத் தகர்க்கும் புள்ளி விவரங்கள் அன்றாடம் வந்த வண்ணம்தான் இருக்கின்றன. கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு 11 ரூபாய்க்கு குறைவாக ஈட்டுவோரே வறியவர்கள் என்ற குஜராத் அரசின் வரையறை, 4.5 இலட்சம் மாநில அரசு ஊழியர்கள் ஒப்பந்தக் கூலிகளாக அமர்த்தப்பட்டிருப்பது, நகர்ப்புற சேரிகளில் 75% வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமலிருப்பது, இந்தியாவிலேயே அதிக கடன்பட்ட மாநிலங்களில் குஜராத் மூன்றாம் இடத்தில் இருப்பது, கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவுக்குள் வந்த மொத்த அந்நிய முதலீடு 7000 கோடி டாலர்கள்தான் என்று ரிசர்வ் வங்கி கூற, பத்தாண்டு மோடி ஆட்சியில் 8 இலட்சம் கோடி டாலர் அந்நிய முதலீடு குஜராத்திற்கு வந்திருப்பதாக வைப்ரன்ட் குஜராத் இணைய தளம் புளுகுவது… என அடுக்கடுக்காக உண்மைகள் வருகின்றன.

மோடியின் குற்றங்கள், குஜராத் அரசின் ஊழல்கள் பற்றிய சி.ஏ.ஜி.- யின் அறிக்கை, நிலப்பறிப்புக்கும் அணு உலைக்கும் எதிரான மக்கள் போராட்டங்கள் என அடுத்தடுத்து செய்திகள் வருகின்றன. ஆனால், அனைத்தும் மோடி ஆதரவு பிரச்சாரம் எனும் அடைமழையில் மூழ்கடிக்கப்படுகின்றன.

இந்துக்களின் வெகுளித்தனமான மத நம்பிக்கையை, தனது இராம ஜென்மபூமி என்ற சதித் திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொண்டதைப் போலவே, இன்று தனியார்மயத் தாக்குதல்கள், ஊழல், விலை உயர்வு போன்ற பல காரணங்களால் காங்கிரசு அரசின் மீது அதிருப்தியுற்று, ஏதேனும் ஒரு மாற்றத்துக்காக ஏங்குகின்ற, ஆனால் என்ன மாற்றம் வேண்டும் என்று அறிந்திராத மக்களிடம், ஒளிரும் குஜராத்தைப் புதிய கடவுளாகவும், மோடியை மீட்பனாகவும் சந்தைப்படுத்துகிறது பா.ஜ.கட்சி.

ஒளிரும் குஜராத்: இராம ஜென்மபூமி பாகம் 2

ஒரு வகையில், ஒளிரும் குஜராத் என்பதே புதிய மொந்தையில் பழைய கள்ளுதான். 2004 பொதுத்தேர்தல் பிரச்சாரத்தில், ஆடு மேய்ப்பவர்களும் செல்போன் வைத்திருப்பதைக் காட்டி, “இந்தியா ஒளிர்கிறது” என்று பிரச்சாரம் செய்தது பாரதிய ஜனதா. இந்தியா ஒளிரவில்லை என்பதைத் தம் சொந்த அனுபவத்தில் உணர்ந்திருந்த மக்கள் பாரதிய ஜனதாவைத் தோற்கடித்தார்கள். அதனால்தான் மக்கள் தமது சொந்த அனுபவத்தில் கண்டுபிடிக்க முடியாததும், சிங்கப்பூர், துபாயைப் போல எங்கோ இருப்பதும், யாரும் காணாததுமான குஜராத்தின் படத்தைக் காட்டி ஒளிர்கிறது, ஒளிர்கிறது என்று கூவுகிறது.

இராம ஜென்மபூமி என்ற புனைகதையை வரலாற்றாசிரியர்களும், தொல்லியல் ஆய்வாளர்களும் ஆதாரங்களுடன் கேள்விக்குள்ளாக்கிய போது, அவர்களை இந்து விரோதிகள் என்று பார்ப்பன பாசிஸ்டுகள் சாடியதைப் போலவே, இன்று குஜராத்தின் வளர்ச்சியைக் கேள்விக்குள்ளாக்கியவுடனே கேஜ்ரிவாலையும் பாகிஸ்தான் கைக்கூலி என்று முத்திரை குத்துகிறார் மோடி. ஒரு சிறிய விமரிசனமே மோடியின் கனவான் மேக்கப்பைக் கலைத்து அவரது உண்மைச் சொரூபத்தை வெளிக் கொணர்ந்து விடுகிறது.

“மோடியைத் தீமையின் உருவமாக சித்தரிப்பதன் மூலம் அவரை வீழ்த்திவிட முடியாது. ஏனென்றால், இளைய தலைமுறைக்குத் தீமைதான் கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது; ‘நான், எனது’ என்று மோடி, தன்னை மட்டுமே முன்நிறுத்திப் பேசுவதும்கூட சுய முன்னேற்றத்தை விரும்பும் இன்றைய தலைமுறைக்குப் பிடிக்கத்தான் செய்யும். நெறிகளைப் பேசிப் பயனில்லை, வெற்றி பெறுவது எதுவோ அதுவே சிறந்த நெறி” என்று அம்பானிக்குச் சொந்தமான ஃபர்ஸ்ட் போஸ்ட் என்ற இணைய இதழில் அதன் ஆசிரியர் கட்டுரை எழுதுகிறார்.

இது மோடிக்கு ஆதரவான வெறிபிடித்த எழுத்து என்றபோதிலும், மோடியை ஆதரிக்கும் புதிய நடுத்தர வர்க்கத்தினரின் உளவியலை இது சரியாகத்தான் சொல்கிறது. 2002 இனப்படுகொலை என்பது இந்தப் பிரிவினருக்கெல்லாம் தெரியாத உண்மையல்ல; ஆனால் மோடிக்கு எதிராக நீங்கள் எத்தனை ஆதாரங்களைக் கொடுத்தாலும், “நிரூபிக்க முடியுமா?” என்று மடக்குவார்கள். அதேபோலத்தான், குஜராத்தின் பொய்மைகளை அம்பலப்படுத்துவோரையும் அவர்கள் மடக்குகிறார்கள். மோடி இந்துத்துவ அரசியலைப் பேசாமல் தவிர்ப்பதையும், ராஜ்நாத் சிங் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்பதையும், அதே நேரத்தில் அமித் ஷா பழிவாங்கச் சொல்வதையும் முரண்பாடுகளாகவோ சந்தர்ப்பவாதமாகவோ இவர்கள் கருதுவதில்லை. மாறாக, இதனைச் சாமர்த்தியம் என்று மெச்சுகிறார்கள்.

ஒளிரும் குஜராத்: இராம ஜென்மபூமி பாகம் 2

மோடியின் காலாட்படைகள் அனைவரும் முன்னாள் கரசேவகர்களாகேவா, இந்து வெறியர்களாகவோ இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. இந்து மத நம்பிக்கை கொண்டவர்களை மட்டும்தான் ராமபிரானால் அன்று திரட்ட முடிந்தது. ஒளிரும் குஜராத் என்ற இந்தப் புதுக்கடவுளோ, ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர்ஜி போன்ற கார்ப்பேரட் சாமியார்களை ஒத்தது. இது, இந்து மத நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒருவகை கார்ப்பரேட் மத நம்பிக்கை. வாழும் கலையால் வனைந்து உருவாக்கப்பட்ட புதிய பார்ப்பன மதம். இந்த நம்பிக்கையின் மத உள்ளடக்கம், ஏறத்தாழ மோடி அணிந்துவரும் டிசைனர் குர்த்தாவின் காவி நிறத்துக்கு ஒப்பானது.

மறுகாலனியாக்கம் தோற்றுவித்துள்ள ஏற்றத்தாழ்வை “வளர்ச்சி” என்று கொண்டாட முடிகின்ற மனோபாவத்துக்கும், பார்ப்பனியத்துக்குமான இடைவெளி கூப்பிடு தூரம்தான். 2002 படுகொலைக்கு நீதி கேட்கும் முஸ்லிம் மக்களுக்கு “வளர்ச்சியை” வழங்குவதாக வாக்களிக்கிறார் மோடி. அது சிறுபான்மையினர்க்கு வழங்கப்படும் சலுகை அல்ல, அனைவருக்குமான வளர்ச்சி என்றும் வலியுறுத்துகிறார்.

நீதி என்ற சொல்லைப் பார்ப்பனியம் மட்டுமின்றி முதலாளித்துவமும் விரும்புவதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு என்ற ‘ஓர வஞ்சனையை’ எதிர்ப்பதற்கு, தகுதி-திறமை என்ற ‘நடுநிலையான’ மாற்றை பார்ப்பனியம் முன்நிறுத்தியதைப் போலவே, ‘நீதி’க்கு எதிரான நடுநிலையான மாற்று, ‘வளர்ச்சி’ என்று முன் நிறுத்துகிறார் மோடி.

சல்வா ஜுடும் கூலிப்படையால் தாய் மண்ணிலிருந்து அகதி முகாம்களுக்கு விரட்டப்பட்ட பழங்குடி மக்கள், 2002 இனப்படுகொலையின் போது வீடும், தொழிலும், உடைமைகளும் பறிக்கப்பட்டு அகதி முகாம்களுக்குத் துரத்தப்பட்ட முஸ்லிம்கள், முசாபர் நகரின் முஸ்லிம் அகதிகள், விவசாய அழிப்பு என்ற அறிவிக்கப்படாத வளர்ச்சித் திட்டத்தின் விளைவாக மாநிலம் விட்டு மாநிலம் நாடோடிகளாக ஓடும் விவசாயிகள் – இவர்கள் வேண்டி நிற்பது வளர்ச்சியா, நீதியா? சட்டீஸ்கரின் அகதி முகாம்களுக்கும், அகமதாபாத்தின் அகதி முகாம்களுக்கும் என்ன வேறுபாடு?

“வலியது வெல்லும்” என்ற தத்துவத்தைப் பார்ப்பனியப் பின்வாயால் கூறி வந்த மோடி, இனி அதனை முதலாளித்துவ முன்வாயால் முழங்குவார் என்பதைத் தவிர பார்ப்பன பாசிசத் தாக்குதலுக்கும், மறுகாலனியாக்கத் தாக்குதலுக்கும் வேறு என்ன வேறுபாடு? மனித முகம் கொண்ட “வளர்ச்சி”யும் இல்லை, மனித முகம் கொண்ட ராமராச்சியமும் இல்லை. எனவே, மோடியின் மனித முகம் என்பது ஒரு முகமூடி.

“நல்ல இந்து மதம், மத நல்லிணக்கம்” போன்ற வாதங்களின் மூலமன்றி, பார்ப்பன இந்து மதத்தைக் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம்தான் பார்ப்பன பாசிசத்தை வீழ்த்த முடியும். அதேபோல, “எந்த வர்க்கத்துக்கான வளர்ச்சி” என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம்தான், மறுகாலனியாக்க கொள்ளையையும், முதலாளித்துவக் கொள்ளையர்களின் சொர்க்கபுரியான குஜராத்தின் உண்மை முகத்தையும் மக்களுக்குக் காட்ட முடியும். இல்லையேல், “நல்ல முதலாளித்துவம், மனித முகம் கொண்ட வளர்ச்சி” என்பன போன்ற பித்தலாட்டங்களுக்கு நாம் பலியாக வேண்டியிருக்கும்.

குஜராத் – இந்துத்துவத்தின் சோதனைச்சாலை என்பதை வர்க்கக் கண்ணோட்டத்தில் விளங்கிக் கொள்ளுங்கள்” என்று தங்களது நடவடிக்கைகள் மூலம், டாடா, அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகள் மீண்டும் மீண்டும் நமக்கு வலியுறுத்திச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைத்தான் ஒருமுறை கேட்டுப் பாருங்களேன்.
*

மோடியை விஞ்சுகிறார் லேடி :

மோடியை விஞ்சுகிறார் லேடி

ஒளிரும் குஜராத், விஷன் தமிழ்நாடு போன்ற எல்லாமே மெக்கின்சி போன்ற பன்னாட்டு கன்சல்டன்சி நிறுவனங்களும், ஃபிக்கி, சி.ஐ.ஐ. போன்ற இந்தியத் தரகு முதலாளித்துவ சங்கங்களும் தத்தம் எதிர்கால தொழில் வளர்ச்சியை மனதிற்கொண்டு வழுவழு தாளில் அடித்துக் கொடுக்கும் விளம்பரக் காகிதங்கள் என்பதே உண்மை. அவற்றைத் தமது சொந்தக் கண்டுபிடிப்புகள் போல மோடியும் ஜெயாவும் சந்தைப்படுத்திக் கொள்கிறார்கள்.

தமிழகத்தில் 12 மணி நேர மின்வெட்டு, பத்து இலட்சம் விசைத்தறி முதலாளிகள் – தொழிலாளர்களின் போராட்டம், குடிக்கத் தண்ணீரில்லாமல் எங்கு நோக்கினும் பெண்களின் சாலை மறியல் போராட்டம் என இத்தனையும் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில்தான், இவை எதையும் பற்றிக் கவலைப் படாமல், தமிழகம் முதன்மை மாநிலம் என்று பொளந்து கட்டிக் கொண்டிருந்தார் புரட்சித் தலைவி. எங்கோ இருக்கும் குஜராத்தைக் காட்டி ஏமாற்றுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

– சூரியன்
________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2014
________________________________________

ராம்கோவை முறியடித்த ராஜபாளையம் மே நாள் மற்றும் சென்னை ஆர்ப்பாட்டம்

3

1. சென்னை

மே நாள்… உழைக்கும் மக்களின் போராட்ட உணர்வுக்கு உரமூட்டும் நாள்.

128-வது மே நாளில், இந்தப் போராட்ட வரலாற்றின் தொடர்ச்சியாக, 01.05.2014- வியாழக்கிழமையன்று, சென்னைக்கு அருகே, திருப்பெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்திலுள்ள பன்னாட்டுக் கம்பெனிகளில் அதிகளவில் பணிபுரியும் தொழிலாளர்கள் வசிக்கின்ற நகரமான பூவிருந்தவல்லியில் சென்னை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில்

  • பன்னாட்டுக்கம்பெனிகள்-பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம்!
  • உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டியெழுப்புவோம்!

என்ற தலைப்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சுமார் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய தோழமை அமைப்புகளின் தோழர்களும் குடும்பத்துடன் கலந்துகொண்ட இந்தப் பேரணியை பு.ஜ.தொ.மு.-வின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் சிவா தொடங்கி வைத்தார்.

பூவிருந்தவல்லி கல்லறைத்தோட்டம் அருகிலிருந்து தொடங்கி தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் வசிக்கின்ற தெருக்களின் வழியாகச் சென்ற இப்பேரணியில், “தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டி, உதிரம் குடித்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, கொழுத்துத் திரிவதுடன், நம் நாட்டின் இயற்கை வளங்களையும், நமது வாழ்வாதாரத்தையும் சூறையாடிவரும் பன்னாட்டுக் கம்பெனிகளை நாட்டைவிட்டே துரத்தியடிக்கவேண்டும்; நடந்து முடிந்துள்ள போலி ஜனநாயகத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வருவது எந்தக் கட்சியாக இருந்தாலும் நமது பிரச்சினைகள் தீரப்போவதில்லை; ஏனென்றால் லேடி, மோடி, டாடி என எல்லோருமே பன்னாட்டுக் கம்பெனிகளின் கூஜாக்களே… எனவே, இந்த தரகு, அதிகாரவர்க்க முதலாளிகளின் சர்வாதிகாரத்தைத் தூக்கியெறிந்துவிட்டு உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டியெழுப்புவோம்!” என்பனவற்றை உள்ளடக்கி தோழர்கள் எழுப்பிய முழக்கங்களை பகுதிவாழ் மக்கள் ஆர்வத்துடன் கவனித்தனர்.

பேரணியின் முடிவில் பூவிருந்தவல்லி பேருந்துநிலையத்தின் அருகிலுள்ள அம்பேத்கர் சிலையருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமையுரையாற்றிய தோழர் சிவா, “8 மணிநேர உழைப்பு, 8 மணிநேர ஓய்வு, 8 மணிநேர பொழுதுபோக்கு ஆகிய கோரிக்கைகளுக்காகப் போராடிய நமது முன்னோடிகள், தமது இன்னுயிர் ஈந்து அந்த உரிமைகளை நமக்குப் பெற்றுத் தந்தார்கள். ஆனால் இன்றைய மறுகாலனியாக்கச் சூழலில் இந்த உரிமைகளனைத்தும் பறிக்கப்பட்டு விட்டன. தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தும் கழிப்பறைக் காகிதங்களாகி விட்டன. தொழிற்சங்க உரிமைக்காகப் போராடிய மாருதி கார் தொழிற்சாலையின் தொழிலாளர்களைக் கைது செய்த, முதலாளிகளின் ஏவல்நாயான இந்திய அரசு அவர்களுக்குப் பிணை வழங்கக்கூட மறுத்து சிறையிலடைத்து வதைக்கிறது. திருப்பெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பன்னாட்டுக் கம்பெனிகளில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகளாக்கப்பட்டுச் சுரண்டப்படுகின்றனர். இக்கொடுமைகளை ஒழித்துக்கட்டி, நமது உரிமைகளை மீட்டெடுக்க தொழிலாளர்கள் ஒரே வர்க்கமாக அணிதிரண்டு புரட்சிகரத் தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு.-வில் இணைந்து போராட முன்வரவேண்டும்” எனத் தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

தொடர்ந்து சிறப்புரையாற்றிய பு.ஜ.தொ.மு.-வின் மாநில இணைச்செயலாளர் தோழர் சுதேஷ்குமார், உலக இயக்கத்தின் அச்சாணியாகத் திகழும் தொழிலாளர்களின் வாழ்க்கை இன்று அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதைச் சுட்டிக்காட்டி, இதற்குக் காரணமாகவுள்ள தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்கிற இந்த மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிக்கவேண்டியதன் அவசியத்தை விளக்கிப் பேசினார். “இன்றைய சூழலில், உயிர் வாழ்வதற்காக ஏதாவதொரு வேலையில் சேர்ந்தே தீரவேண்டுமென்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ள தொழிலாளர்கள் தமது உரிமைகள், தொழிற்சங்க சட்டங்கள் குறித்து போதிய விழிப்புணர்வற்று உள்ளனர். அத்தகைய புரிதல் ஏதும் வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் ஆபாசச் சீரழிவுகள், மது, போதைப்பழக்கம் உள்ளிட்ட ஏகாதிபத்திய நச்சுக் கலாச்சாரத்தைத் திட்டமிட்டே திணிக்கிறது ஆளும் வர்க்கம். இதனுடைய உச்சக்கட்டமாக தொழிலாளர்களின் போராட்ட தினமான மேதினத்தில் தொழிலாளர்களுக்குக் கட்டாய மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர் சில நயவஞ்சக முதலாளிகள். உரிமை, போராட்டம் எனும் உணர்வு சிறிதளவுகூட ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர். ஆகவே, தொழிலாளி வர்க்கம் முன்னெப்போதையும்விட கூடுதலான விழிப்புணர்வுடன் தமது போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. தொழிலாளர்கள் தமது வரலாற்றுக்கடமையை உணர்ந்து, சரியான அரசியல் புரிதலுடன் வர்க்கமாக அணிதிரண்டு, புரட்சிகரப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இப்படிப்பட்ட போராட்டங்களின் வாயிலாகத்தான் நமது உரிமைகளை மீட்டெடுக்க முடியும்.

உதாரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள GSH எனும் ஆலையின் முதலாளி, தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி, மாமல்லபுரம் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஏற்பாடு செய்திருந்த கட்டாய மதுவிருந்தை பு.ஜ.தொ.மு. தோழர்கள் தடுத்து முறியடித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள CRP ஆலையில் மே நாளில் பு.ஜ.தொ.மு.-வின் செங்கொடியை ஏற்ற விடாமல் தடுத்து ஆளுங்கட்சியின் ஆசிபெற்ற பிழைப்புவாதத் தொழிற்சங்கம் ரவுடிகளை ஏவிவிட்டு மிரட்டிய காலித்தனத்தை முறியடித்து பெரும்பான்மையான தொழிலாளர்களுடைய ஆதரவோடு கொடியேற்றியுள்ளனர் பு.ஜ.தொ.மு. தோழர்கள்.

இப்படிப்பட்ட வர்க்க உணர்வுடன் கூடிய போராட்டங்களே இன்றைய அவசர, அவசியத் தேவைகளாகவுள்ளன. போராடாமல் வாழ்க்கையில்லை. எனவே, தொழிலாளிவர்க்கம் இழந்துவிட்ட தனது உரிமைகளை மீட்டெடுக்க, வாழ்க்கையின் அவலத்தைப் போக்க, புதியதொரு சமுதாயத்தைப் படைத்திட முன்வரவேண்டும். நிலவுகின்ற இந்தப் போலி ஜனநாயகத் (முதலாளித்துவ சர்வாதிகாரத்)தைத் தூக்கியெறிந்துவிட்டு, உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டியமைக்க வேண்டும். இந்த மேநாளில் அதற்கான உறுதிமொழியை நாமனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். புரட்சிகரத் தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு.-வில் இணைந்து போராட முன்வரவேண்டும்” என்று மே தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உரையாற்றினார்.

தமது இன்னுயிர் ஈந்து மே தினம் உருவாகக் காரணமாகவிருந்த தொழிலாளத் தோழர்களுக்கும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி உயிர்நீத்த தோழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தியதுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சென்னை.

2. ராஜபாளையம்

“பன்னாட்டுக்கம்பெனிகள் – பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம்! உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!” எனும் மே நாள் சூளுரை முழக்கத்தின் கீழ் தமிழகத்தின் தென் மாவட்டப் பகுதிகளில் இயங்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மற்றும் பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக மே நாளன்று இராஜபாளையத்தில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தினை நடத்துவது என முடிவு செய்து அதற்கான துண்டறிக்கை மற்றும் சுவரொட்டிகளில் ஒட்டி பிரச்சாரம் செய்து வந்தன.

ஏற்கனவே அப்பகுதியில் தொழிலாளர் வர்க்கத்தை நசுக்கிப் பிழிந்து, தொழிலாளர் நலச் சட்டங்களை மயிரளவிற்கும் மதிக்காமல், ஆண்டாண்டு காலமாக தனது சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் ராம்கோ குரூப்பின் அக்கிரமங்களை எதிர்த்து அப்பகுதி வரலாற்றிலேயே முதன்முறையாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் பிரச்சாரத்தால் பீதியடைந்து போயிருந்த ராம்கோ கும்பல் மேநாள் பேரணியினை நடத்த விடாமல் தடுக்க தனது வளர்ப்புப் பிராணிகளான போலீசை ஏவிவிட்டது. போலீசும் திங்கிற சோத்துக்கு விசுவாசத்தோடு வாலை ஆட்டியது. என்றைக்கோ பிறந்த ராம்கோ குரூப்பின் முதலாளி ராமசாமி ராஜாவின் பிறந்த நாளை மே 1-ம் தேதி கொண்டாடப் போவதாக அறிவித்து அன்று பார்ப்பன அரை லூசான எஸ்.வி. சேகரின் அல்வா நாடகம் நடத்தப்போவதாக நகரமெங்கும் விளம்பரம் செய்திருந்தது.

இராசபாளையம் நகரில் மே நாள் அன்று பேரணி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்ட உடன், ஏப்ரல் 24 அன்றே போலீசிடம் அனுமதி கேட்கப்பட்டது.

முதலில் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிகழ்ச்சி இருப்பதால் அனுமதி கிடையாது என்று மறுத்தது போலீசு. இந்த பதிலைக் கூறவே போலீசுக்கு இரண்டு நாள் ஆனது.  பின் வேறு பாதையில் அனுமதி கேட்டோம். அதற்கு பதிலளிக்காமல், அனுமதி கேட்கச் சென்ற தோழர்களை கூட்டம் நடத்த மாட்டோம் என எழுதித் தரவேண்டும் என்றும் அப்போதுதான் ஸ்டேசனில் இருந்து வெளியில் விடுவோம் என்றும் கூறியது. இது சட்டவிரோதமானது என போராடிய தோ0ழரை ஒரு போலீசு அடித்துள்ளான்.

இது பற்றி தகவல் அறிந்தவுடன் , போலீசின் இந்த சட்ட விரோத நடவடிக்கை பற்றி மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர். வாஞ்சிநாதன் எஸ்.பி, டி.எஸ்.பி ஆகியோருக்கு புகார் செய்த பிறகு தோழர்களையும் விடுவித்தது.

பின்னரும், ஆளே இல்லாத  சாலையில் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்றது போலீசு.

இதை ஏற்க முடியாது, என்று “ஓரளவாவது மக்கள் கூட்ட இடத்தில் கூடும் , ஆர்ப்பாட்டம் மட்டுக்குமாவது அனுமதி பெறுவதற்கு தோழர்களும் ம.உ.பா.மை. தோழர் நடராசனும் போராடினார்கள்.

இறுதி வரை போலீசு அனுமதி வழங்கவில்லை.காரணம்,  ராம்கோ முதலாளியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மே நாள் அன்று நடை பெற இருப்பதால் புரட்சிகர அமைப்புகள் மே நாளை கடைபிடிக்க கூடாது என்பது தான்.  இதை வெளிப்படையாகவே போலீசு கூறியது. மேலும், மே நாளை தவிர வேறு நாளில் நாம் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளலாம் என்றும், அல்லது சிவகாசி, விருதுநகர் ஆகிய இடங்களில் அனுமதி தருவதாகவும் கூறியது போலீசு .

அப்பட்டமாக தான் ராம்கோ முதலாளியின் கைக்கூலி என தன்னை காட்டிக் கொண்டது போலீசு. டவுன் ஸ்டேசன், டி.எஸ்.பி, எஸ்.பி இன்ஸ்பெக்டர், எஸ்.பி, என தோழர்களை அலைக்கழித்தது போலீசு. மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களின் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகும் இந்தியாவிலுள்ள சட்டங்களும் மனித உரிமைகளும் ராம்கோ வீட்டுக் கக்கூசிற்குள் கிடப்பதை விட உயர்வானதல்ல என எண்ணுகிற ராஜபாளையம் போலீசு இறுதியில் அனுமதியினை மறுத்தது.

ஆனால், அனுமதி கொடுத்து நிகழ்ச்சியினை நடத்தியிருப்பதைக் காட்டிலும் கூடுதலான போராட்ட உணர்வினைத் தோழர்களுக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கேயுரிய போர்க்குணமிக்க ஒரு போரட்டத்தினைக் காணுகிற வாய்ப்பினை ராஜபாளையம் மக்களுக்கும் 2014 மேநாள் வழங்கியது.

பரபரப்பும் நெருக்கடியுமான நான்கு சாலைகள் கூடும் காந்திசிலை சிக்னலின் அருகே சரியாக காலை 10 மணிக்கு நான்கு சாலைகளின் வழியாக செஞ்சட்டையும் கொடியும் ஏந்திய தோழர்கள் முழக்கங்களை எழுப்பியவாறு ஒன்று சேர்ந்தனர். மே நாள் மைய முழக்கங்களோடு ராம்கோ குரூப்பையும் அதன் ஏவல் நாய்களாக விளங்கும் போலீசையும் கண்டித்து முழக்கங்கள் விண்ணதிரும் வகையில் எழுப்பப்பட்டன. ஏற்கனவே அப்பகுதியில் பாதுகாப்பு எனும் பெயரில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சில போலீசார்கள் நின்ற இடத்திலேயே பதட்டமடைந்ததோடு மேல்போலீசுக்குத் தகவல் அனுப்பினர்.

ரொட்டித் துண்டைக் கவ்வத் தாவுவதைப் போலவே பாய்ந்து வந்த போலீசு முதலில் சட்டம் பேசிப் பார்த்தது. பின்னர் மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களோடு வாக்குவாதம் செய்து பார்த்தது. எதுவும் தோழர்களின் முழக்கத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே பேசாமல் நின்றுகொண்டு, மேநாள் மைய முழக்கங்கள், ஆசான்கள் கார்ல் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ், மாமேதை லெனின், பாட்டாளி வர்க்கத் தளபதி ஸ்டாலின், சிவப்புச் சூரியன் மாசேதுங், புரட்சியாளன் பகத்சிங் ஆகியாரின் பிரம்மாண்டமான உருவப்பட பேனர்களையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

அதன்பிறகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களின் அமைப்பாளர் தோழர் நாகராசன் தலைமை உரையாற்றினார். மேநாள் ஒரு போராட்ட நாள் என்பதை விளக்கிய அவர் ராம்கோ குரூப்பின் சட்டவிரோதமான செயல்களையும் அதற்கு வாலாட்டும் போலீசுத்துறையையும் கண்டித்துப் பேசியதும் ஆர்ப்பாட்ட்த்தை முடித்துக்கொள்ளக் கோரிய போலீசு அனைவரையும் கைது செய்து வாகனங்களில் ஏற்றி ஒரு மண்டபத்தில் கொண்டுபோய் இறக்கியது.

மண்டபத்திலும் கூட்டம் தொடர்ந்தது, தலைமையேற்றுப் பேசிய தோழர் மருது, நடந்த நிகழ்ச்சிகளையும் அதற்கான காரணங்களையும் விளக்கினார். அதன்பிறகு மீண்டும் தோழர் நாகராசன், தொழிலாளி வர்க்கம் இன்று எவ்வாறெல்லாம் நசுக்கப்படுகிறது என்பதை விரிவாகப்பேசினார். அதன்பின்னர், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் மேநாள் எவ்வாறு தொழிலாளர் தினமாக உருவெடுத்தது என்பதையும், பாட்டாளி வர்க்கத் தலைவர்களாகிய லெனின், ஸ்டாலின் , மாவோ ஆகியோர் மேநாளுக்குக் கொடுத்துவந்த முக்கியத்துவம் பற்றியும் பேசினார்.

அதன்பிறகு மதுரை உயர் நீதிமன்ற வழக்குரைஞரும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட துணைச் செயலாளருமான தோழர் வாஞ்சிநாதன், அனுமதி பெறுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளையும் அவற்றைப் போலீசு அனுமதி மறுத்ததையும் விளைக்கியதோடு, மேநாளை இப்படி ஒரு போராட்ட நாளாக நடத்த புரட்சிகர அமைப்புகளால் மட்டுமே முடியும் என்பதை விளக்கி பகுதியின் தோழர் அய்யனார் துணிச்செயலான செயல்பாடுகளுக்காக நன்றி தெரிவித்துக்கொண்டதோடு தோழர்கள் அனைவரும் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இறுதியாக நன்றி தெரிவித்துப் பேசிய தோழர் அய்யனார், ஒரு பெரிய பொதுக்கூட்டத்தை ராஜபாளையத்தில் நடத்த வேண்டும் எனும் தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.

ஓட்டுக்கட்சிகளும் போலிக்கம்யூனிஸ்டுகளும் மேநாளை ஒரு கேலிக்கூத்தான நாளாக ஆக்கிவைத்திருக்கும் சூழ்நிலையில் புரட்சிகர அமைப்புகள் மேநாளை ஒரு போராட்ட நாளாக மாற்றியதால் ஏற்படும் வர்க்க உணர்வோடு தோழர்கள் விடைபெற்றனர்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ராஜபாளையம்

ஜிண்டாலை அடித்து விரட்டுவோம் – மே நாள் போராட்டச் செய்தி

3

திருவண்ணாமலையிலிருந்து 7 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது கவுத்தி-வேடியப்பன் மலைகள். இம்மலைகளில் இரும்பு கனிமம் இருப்பதையறிந்து அதை வெட்டியெடுக்க தமிழ் நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO-Tamilnadu Industrial Development Corporation) ஏலமுறையில் தேர்வு செய்த ஜிண்டால் விஜய நகர் ஸ்டீல் லிமிடெட் (JVS Limited) என்ற பன்னாட்டு நிறுவனத்துடன் 30 ஆண்டுகளுக்கான கூட்டு முதலீடு ஒப்பந்தம் ஒன்றை டிம்கோ (TIMCO-Tamilnadu Iron Ore Minarals Corporation) என்ற பெயரில் 29.03.2005 அன்று செய்து கொண்டது.

அரசு அதிகாரிகள், ஓட்டுச்சீட்டு பொறுக்கி அரசியல்வாதிகளின் ஏல முறைகள் மூலம் மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடிக்க பலவழிகளை கையாண்டு வந்தார்கள். தெரிந்தவர்களுக்கு கான்ட்ராக்ட் கொடுப்பது, பினாமி முறையில் கான்ட்ராக்ட் எடுப்பது ஆகியவை மக்களின் விழிப்புணர்வில் மாறுதல் அடைந்து டெண்டர் முறை வந்து அதிலும் ஊழல் நாறிய பின் முன்னேற்றம் ஏற்பட்டதா என்றால் மாறாக ஓட்டப் பந்தயத்தில் முதலில் வருபவருக்கு பரிசு என்பது போல் அலைக்கற்றை ஊழல் நடந்து நாறியதை அறிவோம்.

ஆனால் தற்போது ஜிண்டாலுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் எல்லாவற்றையும் விஞ்சக்கூடியது. ஜிண்டால் ரூ 135 கோடி முதலீடு செய்வாராம், தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சிக்கழகம் 1%  (1.35 கோடி) முதலீடு செய்யுமாம். இரும்புத்தாது விற்பனை மூலம் 1,000 கோடி ரூபாய் லாபம் வரும் என்றால் ஜின்டாலுக்கு பங்கு 999 கோடி ரூபாய், அரசுக்கு லாபத்தில் பங்கு 1 கோடி ரூபாய் என்பது இதன் அர்த்தம்.

ஒப்பந்தத்தை பார்த்தாலேயே அதிகாரிகளூம், அரசியல் வாதிகளும் கூட்டுக்கொள்ளை அடித்துள்ளனர் என்று தெரிந்து விடும். ஜிண்டால் சுரங்கம் வெட்ட கேட்ட நிலப்பரப்பு 325 ஹெக்டேர் (சுமார் 800 ஏக்கருக்கு மேல்). இதில் உள்ள கனிமத்தை எடுத்து பதிலுக்கு ஜிண்டால் கொடுப்பது ஒரு பேரழிவை.

ஜிண்டால் அமைக்கும் திறந்தவெளி சுரங்கம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளதால் , கழிவுகள் தேக்கி வைக்கும் குட்டைகள், இரும்புத் தாது தொடர்வண்டி நிலயத்தில் சேர்க்க டம்பர்கள் மூலம் எடுத்துச்செல்ல வேண்டும். அதற்கு தடையாக உள்ள 2,22,00 மரங்களை வெட்ட வேண்டும். மரங்களை வளர்க்க வக்கற்ற இந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஒரு முதலாளி தரும்  பிச்சை காசுக்காக பல லட்சம் மரங்களை வெட்டுவதை ஏற்கமுடியுமா?

ஒவ்வொரு நாட்டிலும் மழை ஆதாரத்திற்காக நிலப்பரப்பில் 33% காடுகள் இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் தற்போது உள்ள காடுகள் 25%-க்கும் குறைவாகவே உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பல லட்சம் மரங்களை வெட்டி ஒரு தனிநபருக்கு தாரை வார்க்கும் கயவர்களை நாம் அனுமதிக்க முடியுமா?

சுரங்கம் அமைக்க வெட்டப்படும் காடுகளில் 20 வகை மூலிகைகளும் அழியும். மேலும் பாதுகாக்கப்பட்ட இந்த வனப்பகுதியில் மயில்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான அழகிய பறவைகள் அழியும், மான்கள், குரங்குகள் போன்ற ஆயிரக்கணக்கான விலங்குகள் கொல்லப்படும்.

கிராமத்து மக்களின் வேடியப்பன் சாமி தூக்கியெறியப்படுவார். வெடியினால், பாறைகள் வெட்டுவதால், இரும்புத்தாது எடுத்துவரும் டம்பர்களால் ஏற்படும் தூசிகள் திருவண்ணாமலை முழுமைக்கும் பதிப்பை ஏற்படுத்தும்.

பெண்கள் குடிநீர் கேட்டு போராடினால் போலீசு குண்டாந்தடி சுழற்றி அடித்து விரட்டுகிறது. ஆனால் ஜிண்டால் நிறுவனம் சுரங்கம் தோண்ட நாள் ஒன்றிற்கு சாத்தனூர் அணையிலிருந்து 560 கன மீட்டர் அதாவது 5,60,000 லிட்டர் ( அம்மா இதை 10/-ரூ வீதம் விற்றால் நாள் ஒன்றுக்கு 56 லட்சம் ரூபாய் கிடைக்கும் ) தண்ணீர் வழங்க ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மலைகளை சுற்றியுள்ள 51 கிராமங்களில் உள்ள 2 லட்சம் மக்கள் 20,000 க்கு மேற்பட்ட விவசாயிகள், அவர்கள் பயிரிடும் 18,000 ஏக்கர் விவசாய நிலங்கள் எல்லாவற்றையும் அழிக்கும் இந்த திட்டம் மனிதகுலத்திற்கு உடனுக்குடன் பேரழிவை தரும் வல்லமை உள்ளது.

தங்களின் வாழ்வாதாரத்தை அடியோடு நாசமாக்கும் இந்த கொடிய ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் கவுத்தி-வேடியப்பன் மலை பாதுகாப்பு இயக்கம் என்ற ஒரு சங்கத்தை கட்டி சாதி, கட்சி வேறுபாடில்லாமல் அனைத்து ஓட்டுக்கட்சிகளின் ஆதரவை கேட்டனர்.

இவர்களுக்காக எந்த ஓட்டு பொறுக்கி கட்சியும் நேரில் வந்து ஆதரவு அளிக்கவில்லை. பகுதிமக்களே பலவகை போராட்டங்களை முன்னெடுத்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் கருத்து கேட்பு கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களின் ஆவேசத்தை வெளிப்படுத்தினர். மக்களின் ஆவேசம் கலவரமாக மாறும் வாய்ப்புள்ளதை உணர்ந்து மக்களுக்கு சாதகமாக பரிந்துரை செய்வதாக வாக்களித்தார்.

அதேசமயம் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதை வனத்துறை ஆட்சேபித்ததால் ஜிண்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் அதை ஏற்று பாதிக்கப்படும் பகுதியை ஆராய்ந்துவர பி.வி.ஜெயகிருஷ்ணா என்பவர் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தது. அந்த குழு 2.20 லட்சம் மரங்கள் வெட்டப்படும் நிலை உள்ளது என அறிக்கை கொடுத்தது. அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது.

சுரங்கம் வெட்டப்படுவது நிறுத்தப்பட்டது, என பகுதி மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். ஆனால் உச்ச நீதிமன்றம் வெட்டப்படும் மரங்களை பார்த்ததேயொழிய பாதிக்கப்படும் மனிதர்கள், குடியிருப்புகள், விவசாய நிலங்கள், சுற்றுச்சூழல், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

அதனால்தான் ஜிண்டால் நரித்தனமாக முன்பு ஒதுக்கப்பட்ட 325 ஹெக்டேருக்கு பதில் வெறும் 32.5 ஹெக்டேர் நிலத்தில் சுரங்கம் வெட்ட அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளான். இடத்தை பிடித்து மடத்தை வளைக்கும் பாமர மக்களுக்கும் தெரிந்த இந்த நயவஞ்சக திட்டம் உச்ச நீதிபதிகளுக்கு தெரியாததல்ல. ஜிண்டாலுக்கு கவுத்தி-வேடியப்பன் மலைகளையும் அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்க ஒப்புதல் கொடுக்க தயாராகி விட்டனர் என்பதுதான் அர்த்தம். அதனால்தான் ஜிண்டாலின் மனுவை ஏற்று 32.5 ஹெக்டேரில் சுரங்கம் வெட்டுவதால் பாதிப்பு வருமா என ஆராய்ந்துவர மீண்டும் ஜெயகிருஷ்ணா தலைமையில் கமிட்டி அமைத்துள்ளது.

நிச்சயம் ஜிண்டால் வரப்போவது உறுதியாகி விட்டது.ஒரு பேரழிவை எதிர்கொள்ள அப்பகுதி மக்கள் தயாராக வேண்டும். எப்போதும் போல ஓட்டுப்பொறுக்கி கட்சிகள், வாக்குறுதிகளை அள்ளி வீசும், ஏகாதிபத்தியங்களிடம் பணத்தை பெற்று மக்களின் போராட்டங்களை மழுங்கடிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மக்களிடம் ஊடுருவும், சாதிக் கலவரங்களை எழுப்பி மக்களை பிளவுபடுத்த முயற்சிப்பார்கள், திட்டத்தை நடைமுறைபடுத்தும் மாவட்ட ஆட்சியரிடமே நீதி கேட்டு மனு கொடுக்கச் சொல்லுவார்கள்.

ஜிண்டால் என்ற தனி நபருக்காக மூன்று மாவட்டங்களை அழிக்கும் இந்த திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என மனித உரிமை பாதுகாப்பு மையம், விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி, விழுப்புரம்-கடலூர் மாவட்ட புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர்கள், “இந்த திட்டத்திற்கு ஆதரவாக மத்திய வனத்துறை, சுற்றுசூழல் துறை, மாவட்ட ஆட்சியர், உச்ச நீதிமன்றம், அனைத்து ஓட்டுப்பொறுக்கி கட்சிகளும் செயல்படுகின்றனர்” என்பதை விளக்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

உலக பாட்டாளி வர்க்க நாளான மே-1 அன்று இந்த திட்டத்திற்கு ஆதரவாக செயல்படும் வனத்துறை அலுவலத்தை முற்றுகையிட வேண்டும் என்று “உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!” “கவுத்தி-வேடியப்பன் மலைகளை சூறையாடவரும் ஜிண்டாலை அடித்து விரட்டுவோம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து புரட்சிகர அமைப்புகள் மூன்று மாவட்டங்களிலும், கவுத்தி வேடியப்பன் மலைகளை சுற்றியுள்ள கிராமங்களிலும் பிரச்சாரம் செய்தனர்.

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்புகளை சார்ந்த இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் கிராமங்களில் உள்ள மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தனர். மக்களிடமே தங்கி, அவர்களிடம் உணவு பெற்று வீடுகள், வயல்களில் வேலை செய்யும் இடங்கள், 100 நாள் திட்டத்தில் வேலை செய்யும் இடங்கள், ஊர் பிரமுகர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கட்சிக்கார்ர்கள் என ஒருவர்கூட விடாமல் பிரச்சாரம் செய்யப்பட்டது. “சுட்டெரிக்கும் வெய்யிலில் எங்களுக்காக பிரச்சாரம் செய்கிறீகள், மே 1 கூட்டத்தில் உங்களோடு இணைந்து வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட வருகிறோம்” என பலர் கூறினார்கள்.

கவுத்தி-வேடியப்பன் மலை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர், பாலியப்பட்டு கிராம மக்களை திரட்டி நம்மை விளக்கி பேச அழைத்தார்.

நகர பகுதி மக்களிடம் பிரச்சாரம் செய்தபோது “ஜிண்டால் சுரங்கம் வெட்டுவதால் பாதிப்பு கிராம மக்களுக்கு மட்டும்தான் ஏற்படும் என்று நினைத்தோம், நீங்கள் விளக்கியபிறகுதான் எங்களுடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்போகிறதுஎன்பதை புரிந்து கொள்ள முடிகிறது” என்றனர்.

பேருந்து பிரச்சாரத்தின்போது பாதிப்பிற்குள்ளாகும் கிராமத்தை சேர்ந்த பயணிகள் நம்மிட்டம் “நாங்களும் இரண்டு மாதமாக பார்க்கிறோம், எங்கிருந்தோ வந்து எங்களுக்காக பிரச்சாரம் செய்து வருகிறீகள், உங்கள் மாதிரி நாங்கள் கஷடப்படவில்லையே என்று உங்களை பார்க்கும்போது எங்களுக்கு குற்ற உணர்வு ஏற்படுகிறது. நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம் “ என்று கூறினர்.

மே-1 அன்று விழுப்புரம், கடலூர் மாவட்டம் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி, மனித உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள், நகர இளைஞர்கள், பாதிக்கப்படும் கிராமங்களான பாலியப்பட்டு, சின்னபாலியப்பட்டு, இனாம் காரியாந்தல், சின்ன புனல்காடு, வடமாத்தூர், ஆடையூர் பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், கலந்துகொண்டனர்.

ஊர்வலத்திற்கு வி.வி.மு.தோழர். ஏழுமலை தலைமை தாங்கினார். மனித உரிமை பாதுகாப்பு மையம், மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். ராஜு, வி.வி.மு.மாவட்ட அமைப்பாளர் தோழர். அம்பேத்கார், பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பாளர் தோழர்.செல்வகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றியபின் தோழர்களின் விண்ணதிரும் முழக்கங்களோடு ஊர்வலம் நகரின் மையபகுதி வழியாக வனத்துறை அலுவலகத்தை அடைந்தது.

ஓட்டுக்கட்சிகள், அதிகாரவர்க்கம் ஆகியோர் மக்களுக்கு எதிராக செயல்படுவது, இரும்புத்தாது எடுப்பதால் ஏற்படும் பாதிப்பை விளக்கி எழுப்பிய கோஷங்களை செல்லும் வழியில் உள்ள மக்கள் அனைவரும் நின்று கவனித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும்போது போலிசு  தடுத்து நிறுத்தி கைது செய்தது. அப்போது தோழர்கள் ராஜு, அம்பேத்கார், செல்வகுமார் ஆகியோர் எழுச்சியுரை ஆற்றினர்.

பின்னர் போலிசு அனைத்து தோழர்களையும் ஒரு கல்யாண மண்டபத்தில் அடைத்தனர். மண்டபத்தில் தோழர்களின் கலைக்குழு பாடல்கள், பேச்சுக்கள் புதிதாக வந்த மக்கள் ஆச்சரியத்துடன் ரசித்தனர். கவுத்தி-வேடியப்பன் மலை பாதுகாப்பு இயக்க தலைவர் திரு. பாலகிருஷ்ணன் பேசும்போது, “வனத்துறை, வருவாய்த்துறை ஜிண்டாலுக்கு ஆதரவாக இருக்கிறது, காட்டில் ஒரு மான் அடிபட்டால் அப்பாவிகளிடம் வனத்துறையினர் ரூ.1000/- லஞ்சம் வாங்குகின்றனர்.ஜிண்டாலுக்காக 10,000-க்கும் மேற்பட்ட விலங்குகளை கொள்ளப்போகிறார்கள், இது எந்த சட்டத்தில் உள்ளது” என கேள்வி எழுப்பினார்.

பாலியப்பட்டை சேர்ந்த பச்சையப்பன் பேசும்போது “50 கிராமம் பாதிக்கும் என்பது பொய் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இரும்பு எடுக்கும்போது வரும் கழிவு கெட்ட நீரால் துர் நாற்றம் வீசும், இந்த மலை பாட்டன், பாட்டி சம்பாதித்த சொத்து, உயிரை விட்டாலும் விடலாமே தவிர மலையை விட தயாராக இல்லை” என்றார்.

அப்பகுதியில் செயல்படும் திரு அண்ணாமலை பேசும்போது பகுதியில் இருந்து பெரும்பான்மை மக்களை திரட்டி வராததற்கு வருத்தம் தெரிவித்தார். கழிவுகளால் துரிஞ்சல் ஆறு பாதிக்கப்படுவதை விளக்கி பேசினார்.

புனல்காடு பகுதியை சேர்ந்த திரு முத்துகிரிட்டிணன் பேசும் போது “ இரண்டு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறோம். நீங்க வந்திருக்கீங்க சந்தோசம், நாங்க 100 போராட்டம் நடத்தியிருப்போம் யாரும் இந்த மாதிரி நடத்தவில்லை. சந்தோசமாக இருக்கிறது” என்றார்.

அம்சா என்ற பெண்மணி பேசும்போது “ எங்க வேடியப்பன் சாமி, மலையை பாதுகாக்க நீங்க வந்திருக்கீங்க, இனி நாங்க உங்களுக்காக வருவோம்” என்று கூறினார்.

திருவண்ணாமலை மனித உரிமை பதுகாப்பு மையத்தை சேர்ந்த தோழர் கண்ணன் பேசும் போது “ 1998-ல் பகுதியில் பிரச்சனை ஏற்பட்டபோது பிரச்சாரம், கணடன ஆர்ப்பாட்டம் செய்தோம். தற்போது புரட்சிகர அமைப்புகள் முதன் முறையாக திருவண்ணாமலையில் குவிந்திருக்கிறார்கள். அவர்களுக்கு திருவண்ணாமலை சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தோழர்கள் அம்பேத்கார் மற்றும் சில தோழர்கள் பேசும் போது பிரச்சாரத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை விளக்கியும் பகுதியில் அதிகாரவர்க்கம் மக்களை சாதிரீதியாக பிரிக்க முயற்சி செய்கிறான். மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போராட்டங்களை மட்டுப்படுத்த உள்ளே நுழைந்திருப்பதன் அபாயத்தை எச்சரித்து பேசினார்கள்.

இறுதியில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு பேசும்போது “அதிகார வர்க்கங்கள் எதிர்காலத்தில் எப்படி செயல்படும்” என்றும், தொண்டு நிறுவனங்களால் திசைமாறிய போராட்டங்களை உதாரணங்களோடு எடுத்துக்காட்டி பேசினார்.

தற்போது கிராமப்பகுதியில் போராடும் இயக்கங்கள் எப்படி தங்களை மேம்படுதிக்கொள்ள வேண்டும் என்றும், தற்போது அதிகாரவர்க்கம் கூறும் ஜனநாயகத்தில் மக்களுக்கு எப்படிப்பட்ட உரிமை இருக்கிறது என்பதை உணர்வுபூர்வமாகவும், நையாண்டியாகவும் விளக்கி பேசியதை கூர்ந்து கவனித்தனர். மாலையில் தோழர்களை போலிசு விடுவித்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இந்த மே-1 பிரச்சாரத்தின் மூலம் பேருந்துகளில் கடந்த இரண்டுமாதங்களாக சுமார் 1,00,000-க்கும் மேற்பட்ட மக்களிடமும், திருவண்ணாமலை நகர மக்கள் சுமார் 10,000-க்கு மேற்பட்டவர்களிடமும், பாதிக்கப்படும் கிராம மக்களிடமும், விழுப்புரம், கடலூர், பண்ருட்டி, திருக்கோயிலூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் ஆகிய நகரங்கள், கிராமங்கள் என பிரச்சாரம் செய்து ஊர்வலத்திலும், கைதிலும் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டதை அறிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட தோழர்கள் மகிழ்ச்சியுடனும், உத்வேகத்துடனும் விடைபெற்றனர்.

பகுதி மக்கள் நம்மிடம் காட்டிய ஆதரவு ஜிண்டால் மட்டுமல்ல, எந்த கொம்பனும் நெருங்க முடியாது என்பதை உணர்த்தியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

விவசாயிகள் விடுதலை முன்னணி,
திருவண்ணாமலை

பில்கேட்சின் கருணைக்கு இந்திய பெண்கள் பலி !

2

ன்னாட்டு மருந்து கம்பெனிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நடத்தும் நெறிமுறைகளும், இரக்கமும் அற்ற மருத்துவ சோதனைகளால் ஏழை எளிய மக்கள் கொல்லப்படுவது இன்றும் நிற்கவில்லை.

கருப்பை வாய் புற்றுநோய்
ஆண்டுக்கு 5 லட்சம் பெண்களை பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோய்

கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் சோதனை தொடர்பாக அமெரிக்க நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் கடந்த 15 ஆண்டுகளில் 254 இந்திய பெண்கள் உயிரிழந்திருக்கும் தகவல் சமீபத்தில் அம்பலமாகியுள்ளது.

உலக அளவில் ஆண்டுக்கு 2 இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் அதில் 85% பேர் மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்தவர்களென்றும் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 இலட்சம் பெண்கள் புதிதாக இந்நோய் தாக்குதலுக்குள்ளாவதாகவும் அப்புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கருப்பை வாய் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய பல்வேறு மருத்துவ ஆய்வு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதிக செலவாகும் பழைய முறைகளுக்கு மாற்றாக குறைவான செலவிலான சோதனை முறை உருவாக்கினால் இதன் சந்தை அதிகரிக்கும் என பல்வேறு மருத்துவ கம்பெனிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மூன்றாம் உலக ஏழை நாடுகளின் மக்கள் மீது பல சோதனைகளை நடத்தி வருகின்றன.

இந்தியாவிலும் கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் முறையை அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் கழகமும், உலகப்புகழ் மென்பொருள் நிறுவன மைக்ரோ சாஃப்டின் பில் கேட்சும் அவரது மனைவியும் மூன்றாம் “உலக மக்களின் மீது கருணை கொண்டு அவர்களுக்கு சேவை செய்வதற்காகவே” நடத்தி வரும் மெலிண்டா – பில் கேட்ஸ் அறக்கட்டளையும் இணைந்து தமிழகத்தின் திண்டுக்கல், மகாராஷ்டிரத்தின் மும்பை குடிசைப் பகுதிகள், உஸ்மானாபாத் ஆகிய இடங்களில் ஏழை பெண்களிடம் கடந்த 15 ஆண்டுகளாக சோதித்து வருகின்றன.

இத்தகைய சோதனைகள் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் நடத்தப்படுவதன் நோக்கம் நோயினால் பாதிப்படையும் பெண்கள் மீதான அக்கறையோ அல்லது சேவை மனப்பான்மையோ, உண்மையான மருத்துவ நோக்கமோ இல்லை.

மேற்கத்திய நாடுகளில் ஒரு நோய்க்கான புதிய மருந்தோ, மருத்துவ முறையோ அல்லது புதிய சோதனை முறையோ சந்தைப்படுத்தும் முன் அவை நோயாளிகள் மீதான சோதனை உட்பட அனைத்து சோதனைகளும் செய்து பார்க்கப்பட்டு முறையான அங்கீகாரம் பெற்றப்பட்டிருக்க வேண்டும்.

மருந்துகள் மனிதர்களின் மீது சோதனை செய்யப்படுவதற்கு முன் ஆய்வகங்களில் விலங்கு, மனித செல்களில் பரிசோதிக்கப் பட்ட பிறகு எலிகள், குரங்குகள் போன்ற விலங்குகளின் மீது சோதித்தறியப்படுகின்றன.

பின்னர் மூன்று கட்டமாக அவை மனிதர்களின் மீது பரிசோதிக்கப் படுகின்றன. முதல் கட்டத்தில் 8 முதல் 10 ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு கொடுத்தும், இரண்டாவது கட்டத்தில் சுமார் 20 முதல் 100 நோயாளிகளுக்கு மட்டும் கொடுத்தும் பரிசோதித்து பார்க்கப்படுகின்றன. மூன்றாவது கட்டமாக பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு பரவலாக கொடுத்து பரிசோதிக்கப்படுகின்றன. பின்னர், மருந்து சந்தையில் விற்பனைக்கு வந்த பிறகு நோயாளிகளை கண்காணிப்பதன் மூலம் பாதுகாப்பு மற்றும் பக்க விளைவுகளுக்கான நான்காவது கட்ட பரிசோதனைகளும் சில சமயங்களில் நடத்தப்படுகின்றன.

மேற்கத்திய நாடுகளில் மருந்துச் சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும் தன்னார்வலர்களுக்கு ஆய்வு நிறுவனங்கள் பெரும் தொகையை தரவேண்டியுள்ளது. மட்டுமின்றி அந்நாடுகளில் நோயாளிகளுக்கு தெரியப்படுத்தாமல் அவர்கள் மீது மருத்துவ சோதனைகளை நடத்த முடியாது. மேலும், அம்மருந்துகள் பாதகமான பக்க விளைவுகளை ஏற்படுத்தினால், அங்கே பல இலட்சம் டாலர் இழப்பீடு தரவேண்டியிருக்கும்.

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளிலோ ஏழைகள், நடைபாதைவாசிகள், குடிசை வாழ் மக்கள், பழங்குடி மக்கள் ஆகியோரிடம், “ரத்த மாதிரி எடுக்கிறோம், நோய் இருக்கிறதா என்று சோதனை செய்கிறோம், இலவச மருத்துவ சிகிச்சை கொடுக்கிறோம்” என பொய்களை கூறி மக்களை ஏமாற்றி என்ன மருந்து, என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதையும் அவர்களுக்கு தெரியப்படுத்தாமல் அவர்கள் மீது மருத்துவ பரிசோதனைகளை நடத்திக்கொள்ள முடிகிறது. இங்கு இழப்பீடு பிரச்சினையும் இல்லை.

மூன்றாம் உலக நாடுகளில் ஒப்பீட்டளவில் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமென்பதால் இந்நாடுகளில் அவர்களுடைய சோதனைக்கான மாதிரிகள் (Samples) எளிதாக கிடைப்பர். அதனால் தான் மருந்து கம்பெனிகள் இந்நாடுகளின் ஏழை பெண்களின் மீது இச்சோதனைகளை நடத்துகின்றன.

மருந்தக சோதனைகளின் களம்
பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் சோதனை எலிகளாக இந்திய மக்கள்.

இலவச மருத்துவ சோதனை, சிகிச்சை என்று மக்களை ஏமாற்றி வஞ்சிக்க பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உலகம் முழுவதும் களமிறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாத் (PATH) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏழை மக்களை வஞ்சித்து மருத்துவ சோதனையை செய்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் 2005-ம் ஆண்டு பன்னாட்டு கம்பெனிகளின் லாப வெறிக்காக உலக வர்த்தக கழகத்தின் நிர்பந்தத்தினால், மருந்து சோதனைகளை நடத்துவதற்கு ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு விட்டதால் ஏழை அடித்தட்டு மக்களை பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் சோதனை எலிகளாக்கும் ஒப்பந்த ஆய்வு அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் காளான்கள் போலப் பெருகியிருக்கின்றன.

இவற்றுக்கு போர்டு பவுண்டேசன், கேட்ஸ் பவுண்டேசன் போன்ற அமெரிக்க கார்ப்பரேட் அறக்கட்டளைகள் நிதியளிக்கின்றன.

மென்பொருள் துறையில் ஏகபோகத்தை பயன்படுத்தி பல பில்லியன்கள் சம்பாதித்த மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் கம்பெனி முதலாளி பில் கேட்ஸ் 2006-ம் ஆண்டு பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை அமைத்து முழுநேர “தர்மகர்த்தாவாக” மாறினார். பங்குச் சந்தை, பிற ஊக வணிக சந்தைகளில் சூதாட்டங்களின் மூலம் பல பில்லியன் டாலர் சொத்து சேர்த்திருக்கும் வாரன் பஃப்பெட் தனது சொத்தில் கணிசமான தொகையை கேட்ஸ் அறக்கட்டளைக்கு கொடையளித்திருக்கிறார்.

உலக அளவில் விவசாயம், மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் $33.5 பில்லியன் (சுமார் ரூ 1.66 லட்சம் கோடி) மதிப்பிலான தரும காரியங்களை நடத்தி வரும் கேட்ஸ் அறக்கட்டளை விவசாயம் தொடர்பான கொடைக்கு மான்சான்டோ, தடுப்பூசிகள் கொடைக்கு கிளாக்சோ ஸ்மித்கிளைன், கல்வி கொடைக்கு பியர்சன் எஜூகேஷன் என்று ஒவ்வொரு துறையிலும் பொருத்தமான கார்ப்பரேட் கூட்டாளியை சேர்த்துக் கொண்டு செயல்படுகிறது.

இத்தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போதுமான நிதியின்றி இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்குச் சில வசதிகளைச் செய்து தந்து, தங்கள் சோதனைக்கு மருத்துவமனை நிர்வாகத்தை இணங்கச் செய்வதன் மூலமும் மருத்துவம் பார்க்க வசதியின்றி அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை மக்களை சுலபமாக சோதனைக்குட்படுத்துகின்றன.

தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்துக் கொள்ளும் மக்களும் கூட இத்தகைய மருந்துச் சோதனைகளிலிருந்து தப்புவதில்லை. மருந்து நிறுவனங்கள் பணமும், புகழும் தருவதாகச் சொல்லி மருத்துவர்களை சோதனையின் வலைப்பின்னலில் இழுத்துப் போடுகின்றன. மருத்துவர்கள் ஒரு புதிய மருந்து வந்திருப்பதாகவும், அதைப் பயன்படுத்தினால் நோய் குணமாக வாய்ப்பிருக்கிறது என்றும் கூறி நோயாளிகளை இணங்கச் செய்கின்றனர் அல்லது நோயாளிகளுக்கு தெரியாமலேயே அவர்களை சோதனைக்குட்படுத்துகின்றனர்.

clinical-trialsஇப்பின்னணியில் நமது நாடு பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் ஆய்வுக் கூடமாக்கப்பட்டு நம் மக்கள் சோதனைச்சாலை எலிகளாக்கப் பட்டுள்ளனர். இத்தகைய ஆய்வுகள் மூலம் உருவாக்கப்படும் மருந்துகளும், மருத்துவ முறைகளும் பல லட்சம் ரூபாய் விலை வைக்கப்பட்டு மேற்கத்திய நாடுகளில் சந்தைப்படுத்தப்படுகின்றன. அவற்றின் பலன்கள் இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு மறுக்கப்படுகின்றன.

உதாரணமாக மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்  அபாயங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் மரபணு சோதனை முறைக்கு மைரியட் ஜெனிடிக்ஸ் நிறுவனம் வடிவுரிமை வாங்கி வைத்துள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி அந்த மருத்துவப் பரிசோதனையை செய்து கொண்டதில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கு சாத்தியக்கூறுகள் 87 சதவிகிதம் இருப்பதாகத் தெரிய வந்ததையடுத்து, உடனடியாக மார்பகங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் முடிவுக்கு வந்தார்.

ஆனால் ஏஞ்சலினாவுக்கு கிடைத்த வாய்ப்பு அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் கிடைக்கப் போவதில்லை. மைரியட் ஜெனிடிக்ஸ் நிறுவனம் மரபணு சோதனையை செய்து கொள்ள அந்நிறுவனம் ஒருவருக்கு 3,500 டாலர் (சுமார் ரூ. 2 லட்சம்) கட்டணமும் அச்சோதனையில் இருந்த சில குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதை பிற்சேர்க்கை சோதனையாக்கி அதற்கு தனியாக 700 டாலர் (ரூ. 42 ஆயிரம்) கட்டணமும் வசூலிக்கிறது.

இந்த இரண்டாம் கட்ட சோதனை கட்டணத்தை உள்ளடக்கியிராத மருத்துவக் காப்பீட்டை வைத்திருந்த பெண்களுக்கு இச்சோதனைகளை செய்து கொள்ளும் வாய்ப்பை மறுத்துள்ளது மைரியட் ஜெனிடிக்ஸ் நிறுவனம். அமெரிக்காவிலேயே ஏழைகளுக்கு அச்சோதனை வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

“பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் கடும் உழைப்பால் புதிய புதிய மருந்துகளை கண்டுபிடித்து சந்தைக்கு கொண்டு வருகின்றன. அதற்கு அறிவு, திறமை இவற்றோடு பெரும் தொகையையும் செலவழிக்கின்றன. அப்படியிருக்கையில் அவர்களுடைய உழைப்பை குறைந்த விலைக்கு கொடு என்று எப்படி கேட்பீர்கள்?” என்று முதலாளித்துவ ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.

அவர்களுடைய கடும் உழைப்பின் இலட்சணம் என்ன? மருத்துவம் பார்க்க இயலாத வாழ்நிலையிலுள்ள மக்களின் மீது சோதனை நடத்தி அவர்களை பலியிடுவதன் மூலம் தான் தமது மருந்துகளை சந்தைப்படுத்தும் அங்கீகாரத்தை மருந்து நிறுவனங்கள் பெறுகின்றன. அவற்றை முதலில் மேற்கத்திய நாடுகளில் பணக்காரர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. ஏழைகளுக்கோ சோதனையில் தம்மை ஈடுபடுத்தி கொள்ளும் கடமையை தவிர பலனை பெறும் உரிமை இல்லை.

clinical-trials-3மருத்துவ சோதனைகளால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவது, உயிரிழப்பது குறித்த அறம், நெறிமுறைகள் சார்ந்த கேள்வி எழுப்பப்படும் போது அம்மக்களின் மருத்துவம் பார்க்க இயலாத வாழ்நிலையை காட்டி நியாயப்படுத்தவும் நிறுவனங்கள் தயங்குவதில்லை. சிலஇடங்களில் சிலருக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் இலவச மருந்துகளை கொடுத்து தமது கைகளிலிருக்கும் ரத்தக்கறையை கழுவிக்கொண்டு பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் தரவேண்டிய பொறுப்பிலிருந்தும் வஞ்சகமாக தப்பித்துக் கொள்கின்றன.

இந்த பாசிச முறையைத் தான் சுதந்திர சந்தைப் பொருளாதாரம் சாதித்திருக்கிறது. இதற்கு சேவை செய்வதற்காக தான் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளனவே அன்றி மக்கள் சேவைக்காக அல்ல.

கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் புதிய முறையை சோதிப்பதற்காக மொத்தம் 2.24 லட்சம் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் 1.38 லட்சம் பெண்களுக்கு எவ்வித நோய் சோதனையும் நடத்தாமல் வெறுமனே கண்காணித்து வைத்திருந்ததால், நோய் கண்டறியப்படாமல் முற்றி 254 பெண்கள் கருப்பை வாய் புற்றுநோய்க்கு பலியாகி உள்ளனர். அதாவது முன்கூட்டியே நோயைக் கண்டறியாமல் விட்டு வைப்பதால் ஏற்படும் உயிரிழப்பு விகிதத்தை கணக்கிடுவதற்காக 254 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கத்திய நாடுகளில் கருப்பை வாய் புற்றுநோயை கண்டறிவதற்கு பயன்படுத்தப்படும், அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட எளிய சோதனைகளை செய்யாமல் வைத்திருந்து 1.38 லட்சம் பெண்களில் எத்தனை பேர் சாகிறார்கள் என்று பார்த்திருக்கின்றனர். இந்தியாவில் இத்தகைய சோதனைகள் பரவலாக நடைமுறையில் இல்லை எனினும், தெரிந்தே லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களின் இறப்பை கண்காணித்து வந்த இந்த நிறுவனங்கள் மற்றும் ஆய்வாளர்களின் வக்கிரத்துக்கு அவர்களது லாப வெறியைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

இச்சோதனையை மேற்கத்திய நாடுகளில் நடத்தியிருந்தால் இதில் பங்குபெறுபவர்களுக்கு தலா 100 டாலர் வீதம் கொடுப்பதாக இருந்தாலும் ரூ 144 கோடி கட்டணமாக செலுத்த வேண்டியிருந்திருக்கும். அது மட்டுமின்றி உயிரிழப்பவர்களுக்கு குறைந்த பட்சம் 1 இலட்சம் டாலர்கள் இழப்பீடு தருவதாக கொண்டாலும், 254 பேர் உயிரிழந்ததற்கு ரூ 152 கோடிக்கும் மேல் இழப்பீடு செலுத்த வேண்டியிருந்திருக்கும். ஆக இச்சோதனையை இந்தியாவில் நடத்தியதின் மூலம் சுமார் ரூ 296 கோடிக்கும் மேல் மிச்சம் பிடித்திருக்கிறது அமெரிக்க புற்றுநோய்க் கழகம்.

பன்னாட்டு கம்பெனிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஏழை மக்களின் உயிரை கிள்ளுக்கீரையாக நினைத்து பலி கொடுப்பது இதுவே முதல் முறை அல்ல.

2009-ம் ஆண்டு கேட்ஸ் அறக்கட்டளையின் 3.6 மில்லியன் டாலர் நிதியுதவியுடன் பாத் (PATH) தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆந்திர பிரதேசம் மற்றும் குஜராத்தில் கார்டாசில் என்ற கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை சோதிக்கும் திட்டத்தை ஆரம்பித்தது.

24,777 சிறுமிகளிடம் அவர்களுடைய பெற்றோர்களுடைய முறையான அனுமதியைப் பெறாமல், சோதனை என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிவிக்காமல் ஏமாற்றி நடத்தப்பட்ட சோதனையில் 7 சிறுமிகள் கொல்லப்பட்டனர். இதில் ஆந்திராவின் கம்மம் மாவட்டத்தின் பழங்குடி மாணவிகளுக்கான உறைவிடப் பள்ளியில் மட்டும் மூன்று சிறுமிகள் உயிரிழந்தனர்.

பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களின் நலன்களை உறுதி செய்ய கொஞ்சம் பணத்தை வீசி எறிந்து உயிரையே உறிஞ்சுவது தான் கேட்ஸ் அறக்கட்டளையின் பின்னே உள்ள அறம்.

டெல்லி எய்ம்ஸ் (AIMS) மருத்துவமனையில் 4,142 குழந்தைகளிடம்  ரத்த அழுத்த நோய் மருந்து உள்ளிட்ட 42 வகை மருந்துகளை செலுத்தி சோதனைளை நடத்தியதில் 49 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

2005 முதல் 2012 வரை மருத்துவ சோதனைகளால் 3,458 பேர் கொல்லப்பட்டு 14,320 க்கும் மேற்பட்டோர் கடுமையான பாதிப்படைந்துள்ளனர்.

அதை அடுத்து மருத்துவ சோதனைகள் தொடர்பாக ஸ்வாஸ்த்ய அதிகார் மன்ச் என்ற தன்னார்வ அமைப்பு 2012-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் அக்டோபர் 2013-ல் மருத்துவ ஆராய்ச்சி விதிமுறைகளையும் ஹெல்சின்கி வழிமுறைகளையும் பின்பற்றாத 160-க்கும் மேற்பட்ட மருத்துவ சோதனைகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும் மருத்துவ சோதனைகளில் உயிரிழந்தோருக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் இழப்பீடு வழங்காத பிரச்சனையில், ஆனந்த் ராய் என்பவர் தொடுத்த பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகளுக்குப் பதிலளிக்குமாறு நோட்டீசு அனுப்பியது. அவை வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டிருக்கின்றன.

புதிய மருந்து ஆலோசனை குழுக்கள் (NDAC), தொழில்நுட்ப குழுக்கள், மற்றும் மேல் கமிட்டிகள் அதற்கும் மேல் உச்ச நீதிமன்றம் என இத்தனை கண்காணிப்புகள் இருந்தும் நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்ட மருத்துவ சோதனைகள் சட்ட விரோதமாக தொடர்ந்து கொண்டிருக்க, படுகொலைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதில் குற்றவாளிகள் யாரென்பது அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கும் நன்றாகவே தெரிந்திருந்தும் அவற்றை தொடரும் நிறுவனங்களின் மேல் எந்த பெயரளவிலான விசாரணை கூட மேற்கொள்ளப் படவில்லை.

பில்கேட்சின் கருணை இப்படித்தான் இந்தியாவின் ஏழை பெண்களை பலிவாங்குகிறது. இருப்பினும் இவருக்கும், இவரது நிறுவனத்திற்கும் இந்தியாவில் படித்த ரசிகர்கள் பலர் உண்டு என்பதால் கேட்ஸ் பவுண்டேசன் தனது படுகொலையை தொடர்ந்து செய்து வரும். எப்போது நிறுத்தப் போகிறோம்?

– மார்ட்டின்

மேலும் படிக்க

புதிய ஜனநாயகம் – மே 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

0

puthiya-jananayagam-may-2014

புதிய ஜனநாயகம் மே 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. புரட்சிக அமைப்புகளின் தேர்தல் புறக்கணிப்பு அரசியல் பிரச்சார இயக்கம்.

2. தேவை : மாற்று அதிகாரத்துக்கான மக்கள் எழுச்சி !

3. நீதிமன்றம், தேர்தல் ஆணையம் : ஜெயாவின் குற்றக் கூட்டாளிகள்!

4. ஒளிரும் குஜராத் : இராம ஜென்மபூமி பாகம் 2

5. புதுவை பல்கலைக்கழகம் : பார்ப்பனக் கொட்டத்தை அடக்கிய மாணவர் போராட்டம்!

6. உண்மை சுடுகிறது! பா.ஜ.க அலறுகிறது!!

7. “தேர்தல் அரசியல் அணு உலையை மூடாது! மக்கள் போராட்டமே தீர்வு !! – கூடங்குளத்தில் நடத்தப்பட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கருத்தரங்கம்

8. ஆம் ஆத்மி : சிறப்பு இரகசியம்!

9. இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் : இந்தியா மீது பூட்டப்பட்ட பொன்விலங்கு!

10. வெனிசுலா : அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடுத்த ஆக்கிரமிப்புப் போர் !

11. கொத்தடிமைத்தனம், விபச்சாரம் : தனியார்மயம் தீவிரப்படுத்தும் பேரபாயங்கள்!

12. ‘வளர்ச்சி’ : கொழுத்தது யார்? தெருவில் நிற்பது யார்?

புதிய ஜனநாயகம் மே 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு சுமார் 5 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

எல்லா கேஸையும் ஊத்தி மூடணும், செய்வீர்களா – கார்ட்டூன்கள்

2

jj-cartoon-1

jj-cartoon-2

[புதிய ஜனநாயகம் மே 2014 இதழின் அட்டைப் படம்]

படங்கள் : ஓவியர் முகிலன்

கோவை, பென்னாகரத்தில் மே தின ஆர்ப்பாட்டம்

0

1. கோவையில் மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம்

  • உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!
  • விசைத்தறி , கைத்தறி உட்பட சிறுதொழில், சிறு வணிகர்களை விழுங்கவரும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தை விரட்டியடிப்போம்!

என்கிற அடிப்படையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் 2 மாதங்களுக்கு மேலாக கூலிக்கு நெசவு செய்யும் உரிமையாளர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்தது.

விசைத்தறி உரிமையாளர்கள் 1993-லிருந்தே தங்களது நிலையை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் வந்தபிறகு விசைத்தறி பிரச்சனை தீவிரமடைந்து வந்திருக்கின்றது.

தற்சமயம் விசைத்தறி உரிமையாளர்களாக உள்ளவர்களெல்லாம் யார்? இவர்களெல்லாம் முன்னாள் விவசாயிகள். விவசாயம் செய்து வாழ்க்கையை ஓட்டமுடியாது என்ற காரணத்தினாலேயே தங்களிடமிருந்த விவசாய நிலங்களையும் நகைகளையும் விற்றும் மற்றும் கந்து வட்டிக்கு கடன் வாங்கியுமே இந்த தறியை அமைத்தவர்கள். எப்படியாவது அரசு பார்த்து 5% , 10% கூலி உயர்வுக்கு வழிசெய்து கொடுத்து தங்களை கரையேற்றும் என நம்புகிறார்கள். ஆனால் இந்த அரசுதான் நம்மை அப்போது விவசாயத்திடமிருந்தும் தற்போது விசைத்தறியிடமிருந்தும் ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

நமது நாட்டில் விளையும் தரமான பஞ்சை அடிமாட்டு விலைக்கு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து பற்றாக்குறையை உருவாக்குகிறது மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு. தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையை ஒன்றும் இல்லாததாக்கி விட்டது . கோவையில் இருக்கக்கூடிய 5 தேசிய பஞ்சாலைகளையும் சில வருடங்களுக்குள் மூடி விட வேண்டும் என கங்கணம் கட்டி கொண்டிருகிறது. இதற்காகவா நாம் இவர்களையெல்லாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தோம்?

பட்டு வேட்டி பற்றிய கனவில் இருந்த போது கட்டியிருந்த கோவணம் பறிபோன கதையாக நாம் கூலி உயர்வு பற்றி பேசிகொண்டிருக்கும் போதே விசைத்தறி அழிக்கப்படும் அபாயம் நெருங்கி வருகிறது. அதிக வேகத்துடன் நெய்யக்ககூடிய பவர்லூம் , சுல்ஜர் தறி, ஜெட் தறி என அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி முதலாளிகள் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதே இதற்கு சான்று.

தற்சமயம் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வந்த பிறகு ஆறு மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் உயர்ந்து வருகின்றது. 2014-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 110% மின் கட்டணம் உயர்ந்துள்ளது என்கின்றனர். ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியும் உயர்த்தி தராத பட்சத்தில் அரசாங்கத்தின் மின்கட்டண உயர்வு என்பது எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது தானே?

கடந்த மார்ச் மாதத்தில் விசைத்தறி பிரச்சனை தொடர்பாக கோவை மாவட்ட தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் 12 (3) ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி சோமனூர் பகுதிகளுக்கு 30% கூலி உயர்வும், பல்லடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நெய்யப்படும் ரகங்களுக்கு 27% கூலிஉயர்வும் கொடுக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த முடிவை ஜவுளி உற்பத்தியாளர் சங்கம் அங்கீகரிக்கவில்லை. விசைத்தறி உரிமையாளர்கள் தங்களது சங்கங்களை கலைத்தனர். ஜவுளித்துறையினர் இந்த ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது என அடாவடித்தனம் செய்து வந்தனர். விளைவு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தறிகள் ஓடவில்லை. பதினைந்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வாழவழியின்றி நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். கஞ்சித் தொட்டி திறந்துள்ளனர்.

விலைவாசி உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு , மின்வெட்டு , மின்கட்டணம் உயர்வு , உதிரிபாகங்கள் விலையேற்றம், தங்களிடம் வேலைசெயும் தொழிலாளர்களுக்கு கூலிஉயர்த்தி கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் காரணமாகவே விசைத்தறி உற்பத்தியாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட துன்பதுயரங்களை சிறிதேனும் போக்க ஜவுளி உற்பதியாளர்களிடம் கூலிஉயர்வு கேட்டனர். கூலிஉயர்வில் உடன்பாடு ஏற்படாததின் காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். தற்சமயம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத் தறிகள் ஓடவில்லை. பதினைந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வாழ வழியில்லை. ஓட்டு பொறுக்கிகள் போட்ட தேர்தல் கூச்சலில் பல்லடம் விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் நம் யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை.

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வானத்தையே வில்லாக வளைப்போம்’ என சவடால் அடித்து தேர்தல் வாக்குறுதிகளையும் பணத்தையும் அள்ளி வீசிய எந்த கட்சியும் விசைத்தறி உரிமையாளர்களின் பிரச்சனையை கண்டு கொள்ளவே இல்லை தேர்தல் புறக்கணிப்பு, கஞ்சித்தொட்டி திறப்பு என பாதிக்கப்பட்டோர் எவ்வளவு தீவிரமான நிலை எடுத்த போதிலும் அரசும் மசிந்து கொடுக்கவில்லை . மாறாக தேர்தலில் ஓட்டு போடவில்லை என்றால் எந்த சலுகையும் கிடையாது என மிரட்டவே செய்தது.

“விரும்பிய கட்சிக்கு ஓட்டு போட்டு விட்டோம். புதிய ஆட்சி வரப்போகிறது கண்டிப்பாக நல்லது நடக்கும்” என நீங்கள் நம்பிகொண்டிருக்கலாம் . ஆனால் மோடியோ-லேடியோ அல்லது வேறு எந்த கேடியோ யாருடைய ஆட்சி அமைந்தாலும் நமது பிரச்சனைகள் தீர போவதில்லை. தீவிரமடையத்தான் போகின்றன என்பதைதான் தற்போதைய நிலைமைகள் உணர்த்துகின்றன.

நம் கண் எதிரிலேயே விவசாயம் ,கைத்தறி , விசைத்தறி, சிறு குறு தொழில்கள், மீனவர்கள் மற்றும் சிறுவணிகர்களின் வாழ்வாதார உடமைகள் பறிக்கப்படுகின்றன. உழைப்பாளர்களிடமிருந்து உற்பத்தி கருவிகளை பிடுங்கிக் கொண்டு அவர்களை உடைமை ஏதுமற்றவர்களாக , வாழவழியற்றவர்களாக நகரங்களில் விசிறியடித்து வருகிறது முதலாளித்துவம். அனைத்து தரப்பு உழைக்கும் மக்களின் வாழ்க்கை மிகுந்த நெருக்கடிக்குள்ளாகி வருகிறது.

பெருநகரங்களில் உழைக்கும் மக்கள் குவிவது அதிகமாகி வருகிறது. நகரங்களில் கூலி வேலை செய்பவரை விசாரித்து பாருங்கள். அவர் முன்னாள் விவசாயியாக , ஒரு சிறு தொழில் முனைவராக இருப்பார்கள், இப்படி நமது தொழில்களை அழித்த இந்த முதலாளிக்குதான் அரசு வரிச்சலுகைகள், மானியங்கள், வட்டியிலா கடன்கள், இலவச மின்சாரம் குறைந்த விலையில் நிலம், தண்ணீர் போன்ற பொருளாதார உதவிகளோடு அடியாளாக போலீசையும் அனுப்பி வைக்கிறது. நாம் நமது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள போராடினால் தடியடி, சிறை, சித்ரவதை, கொட்டடி கொலை என வெறியாட்டம் போடுகிறது.

ஆகவே ஆட்சியாளர்களை நம்பி பயனில்லை, அரசை நம்பி பயனில்லை. ஏனெனில், இது கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசு. விசைத்தறி உள்ளிட்ட சிறு தொழில்களை அழிப்பதையே நோக்கமாக கொண்டது இந்த அரசு. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவையே , அதாவது சிறு தொழில்களை அழித்து கார்ப்பரேட் கம்பெனிகளை அமைப்பதையே நடைமுறைப்படுத்துவார்கள்.

இந்த புரிதலுடன் விசைத்தறி உரிமையாளர்கள் புதிய பொருளாதார கொள்கையை எதிர்த்துபோரட முன்வர வேண்டும். இல்லையெனில் நாம் பெறுவது எல்லாம் தற்காலிக வெற்றிதான். அடுத்து வரும் மாதங்களில் இந்த வெற்றியெல்லாம் தட்டிப் பறிக்கப்படும். எனவே, விசைத்தறி உரிமையாளர்கள் விசைத்தறி அழிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடது. கிராமந்தோறும் ஊர் கமிட்டிகளை அமைத்து கோரிக்கைகள் நிறைவேறும்வரை உறுதியாக விடப்பிடியாகப் போராட முன்வரவேண்டும்.

சாதி , மத பேதங்களை கடந்து உழைக்கும் வர்க்கமாய் ஒன்று சேரவேண்டும் என இந்த மே நாளில் உறுதி எடுத்துகொள்ளவேண்டும்.

விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் பிற உழைக்கும் மக்களின் விடுதலைக்காக நக்சல்பாரி அமைப்பு களத்தில் நிற்கிறது . உழைக்கும் வர்க்கத்தின் உரிமையை வென்றெடுக்க மே நாள் பேரணியில் திரளாக கலந்து கொண்டு வர்க்க உணர்வுபெற, உரிமைகளை வென்றெடுக்க உங்களை அறைகூவி அழைக்கின்றோம்.

தமிழக அரசே!

  • கூலிக்கு நெசவு செயும் விசைத்தறி உரிமையாளர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்று!
  • விசைத்தறிக்கு தடையில்லா மின்சாரம் வழங்கு !
  • விசைத்தறி உள்ளிட்ட சிறு தொழில்களை அழித்து வரும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தை அனுமதிக்காதே!

என்கிற முழக்கங்களோடு பல்லடம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மே தினத்தில் பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என்று ம.க.இ.க – பு.மா.இ.மு-பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகள் கோவை-திருப்பூர்-ஈரோடு- கரூர்-நாமக்கல் மாவட்டங்களுடன் இணைந்து திட்டமிட்டன.

மே தினத்துக்கு முன்னால் 5 நாட்களாக பல்லடம் பகுதியில் உள்ள கிராமங்களில் பிரச்சரம் மேற்கொள்ளப்பட்டது. இதனை அறிந்த காவல்துறை, “நக்சல் பரி அமைப்புகள் விசைத்தறி பிரச்சனை கையில் எடுத்துவிட்டார்கள். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்” என்று பதறியது.

“தேர்தல் முடிவு வெளியாகும்  மே 16-ம் தேதிக்கு மேல் கூலி உயர்வு குறித்து பேசலாம்” என்றும் சொல்லியிருந்தனர் திருப்பூர், கோவை மாவட்ட ஆட்சியர்கள். ஆனால்,  மே -1 தினத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் 28.04.2014 தேதியன்று இருதரப்பினரையும் அழைத்து பேசி சில குறிப்பிட்ட ரகங்களுக்கு 27% கூலி உயர்வு பேசி முடித்து உள்ளார்கள்.

பேரணி – ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று போலீஸ் கூறி விட்டது. “தடையை மீறி செய்வோம்” என்று கூறிய பிறகு ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கினர்.

பல்லடம் , கோவை , ஈரோடு , காங்கயம் , கரூர், நாமக்கல் போன்ற பகுதிகளில் வீச்சான பிரச்சாரம் செய்யப்பட்டது. மக்கள் பெருத்த ஆதரவும் , நிதியுதவும் வழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி பெற காவல் நிலையத்தில் கேட்டகப்பட்டது. நீண்ட இழுத்தடிப்புக்கு பிறகு பேரணி கூடாது, ஒலிப்பெருக்கி கூடாது, புண்படுத்தக் கூடாது. இப்படி பல கூடாதுக்கு பிறகு பல்லடம் காவல் துறை அனுமதி வழங்கியது. இதை மீறி ஒலிபெருக்கி வைத்து கைதாவது என முடிவு செய்து ஆர்ப்பாட்டம் துவங்கப்பட்டது.

தோழர் புஸ்பராஜ் சிவகிரி

ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் தேர்தலின் போது அனல் பறக்கும் பிரச்சாரம் என்று வாய்ச்சவடால் அடித்தனர். இன்று தேர்தல் முடிந்த பின்பு அம்மா கொடநாட்டிலும் , விஜயகாந்த் டாஸ்மாக்கிலும் என ஆளுக்கொரு மூலை பறந்து விட்டனர் . மக்கள் அனாதையாய் விடப்பட்டனர் என ஓட்டு கட்சிகளை அம்பலப்படுத்தினார். மேலும் ஈரோடு பகுதிகளில் நாலணா கூலிக்காக எத்தனை போராட்டம் நடத்த வேண்டி இருந்தது என்பதை சுட்டி காட்டினார்.

விளவை ராமசாமி

புரட்சிகர அமைப்புகள் பல்லடத்தில் கால் வைத்து விடுவோம் என்று போலீசுக்கும் , முதலாளிகளுக்கும் பெரும் அச்சம் எனவே காவல் துறையினர் அனுமதி தருவதற்கு இழுத்தடித்தனர். அதுமட்டுமில்லாமல் தேர்தல் முடிவுக்கு பிறகுதான்  நடத்துவதாக இழுத்தடித்து வந்த கூலி உயர்வு பேச்சுவார்த்தையை புரட்சிகர அமைப்புகள் களமிறங்கியதும் அவசர அவரசமாக விசைத்தறியாளர்களையும், ஜவுளி உற்பத்தியாளர்களையும் ஆட்சியர் அலுவலகத்தில் அழைத்து, “இது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாறிவிட்டது. எனவே இதை சமரசமாக முடித்துக் கொள்ளுங்கள்” என அவசரகதியில் கூலி கொடுக்கப்பட்டதை விளக்கி பேசினார்.

இந்த கூலி உயர்வு தற்காலிகமானது என்பதையும் , விசைத்தறி முழுவதையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் விழுங்க காத்திருப்பதையும் அம்பலப்படுத்தி பேசினார். அனைத்து தேசிய தொழில்களையும் இயற்கை வளங்களையும் இந்த முதலாளித்துவ பயங்கரவாதத்திலிருந்து இந்த மனிதகுலம் முழுவதையும் காக்கும் பொறுப்பு கம்யுனிஸ்டுகளின் தோள் மீது விழுந்திருக்கிறது என்பதை விளக்கி பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி :
கோவை பகுதி பு.ஜ.தொ.மு.

2. தருமபுரி பென்னாகரம்

ருமபுரி, பென்னாகரம் வட்டம் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக மேதின பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மே-தின பேரணிக்கு அனுமதி மறுத்து ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கியது காவல்துறை. பலமுறை முயற்சித்தும் பேரணிக்கு தடை விதித்தது.

இதனை பொருட்படுத்தாமல் மக்களை திரட்டும் வேலையில் பரவலாக ஈடுபட்டு பென்னாகரம் பி.டி.ஓ அலுவலகம் அருகில் 500-க்கும் மேற்பட்ட மக்கள், தோழர்கள் திரளாக கூடினார்கள். உடனே தடையை மீறி அமைதி பேரணியாக மாலை 4.30 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு பென்னாகரம் பேருந்து நிலையத்தில் நிறைவுற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கூட்டம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி தொடங்கியது. மக்கள் கூட்டத்தை சற்றும் எதிர்பார்க்காத போலீசு செய்வதறியாமல் திகைத்து நின்றது. காவல்துறை கேமிராவை கொண்டு வந்து படம் பிடித்தது.

மே தினத்தை விழாவாக அனைத்து கட்சிகளும் கடைப் பிடிக்கும் பொழுது நாம் போராட்டமாக செய்தது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சி.பி.ஐ, சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த 4-5 பேர் கடமைக்காக கொடியேற்றியிருந்தனர். நமது கூட்டத்தை பார்த்து முகத்தில் களை இழந்து கூட்டத்தை கவனித்தனர்.

  • உண்மையான ஜனநாயகத்தின் மாற்று அதிகார அமைப்புகளை கட்டியெழுப்புவோம்,
  • விவசாயிகளை விவசாயத்தை விட்டே விரட்டி அடிக்கும் மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்

என்ற கோரிக்கைகளை விளக்கி பேசப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பு.மா.இ.முவைச் சேர்ந்த தோழர் அன்பு உரையாற்றினார். தோழர் கோபிநாத், வட்டார செயலாளர் தோழர் முத்துகுமார் உள்ளிட்ட தோழர்கள் சிறப்புரை ஆற்றினர், தோழர் குபேந்திரன் நன்றியுரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தருமபுரி

மார்க்ஸ், ஏங்கெல்சின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

1

‘’தனிச் சொத்தை நாங்கள் ஒழித்துக் கட்ட விரும்புகிறோம் என்று நீங்கள் கிலி கொண்டு பதறுகிறீர்கள். ஆனால் தற்போதுள்ள உங்களுடைய சமுதாயத்தில் பத்தில் ஒன்பது பங்கு மக்களுக்கு தனிச் சொத்து ஒழிக்கப்பட்டு விட்டது; ஒரு சிலரிடத்தே தனிச் சொத்து இருப்பதற்கே காரணம், இந்தப் பத்தில் ஒன்பது பங்கு மக்களிடத்தே அது இல்லாது ஒழிந்ததுதான். ஆக சமுதாயத்தின் மிகப் பெரும் பகுதியோரிடம் எந்தச் சொத்தும் இல்லாதொழிவதையே தனக்குரிய அவசிய நிபந்தனையாய்க் கொண்ட ஒரு சொத்து வடிவத்தை ஒழிக்க விரும்புகிறோம் என்று எங்களை ஏசுகிறீர்கள்… ஆம், உண்மையில் அதுவேதான் நாங்கள் செய்ய விரும்பும் காரியம். ‘’

– கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் பிரபலமான மேற்கோள் ஒன்று.

‘’ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம் – கம்யூனிசம் எனும் பூதம். போப்பாண்டவரும், ஜார் ஆரசனும்… ஜெர்மன் உளவாளிகளும், பழைய ஐரோப்பாவின் சக்திகள் அனைத்தும் இந்தப் பூதத்தை ஓட்டுவதற்காகப் புனிதக் கூட்டு சேர்ந்திருக்கின்றன.’’

கம்யூனிஸ்ட் அறிக்கை – என்று துவங்குகிறது கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை. 1848 பிப்ரவரியில் லண்டனில் உள்ள ஒரு சிறிய அச்சகத்திலிருந்து வெளியிடப்பட்ட இந்தச் சிறிய வெளியீடு, ஐரோப்பாவை மட்டுமல்ல, உலகத்தையே பிடித்து ஆட்டத் தொடங்கியது.

அறிக்கை வெளிவந்து இன்று 150 (தற்போது 166) ஆண்டுகள் நிறைவடைந்த பின்னும் உலகைப் பிடித்து ஆட்டிக் கொண்டுதானிருக்கிறது.

இத்தகையதோர் வரலாற்று ஆவணம் உருவான 19-ம் நூற்றாண்டு ஒரு கொந்தளிப்பான காலம். 1831 நவம்பரில் பிரான்சின் நெசவாளர்கள் ஆயுதமேந்திப் போராடத் தொடங்கினர். அவர்கள் இராணுவத்தால் நசுக்கப்பட்டனர். எனினும் பாட்டாளிகளுக்கும் முதலாளிகளுக்குமிடையிலான இந்த மோதல் ஐரோப்பா முழுவதிலுமிருந்த மன்னர்களையும் முதலாளிகளையும் நடுங்கச் செய்தது.

நெசவாளர்களின் ஆயுத எழுச்சியை நேரில் கண்ட ஒரு ஆளும் வர்க்க சித்தாந்தவாதி கீழ்க்கண்டவாறு அபாயச்சங்கு ஊதினார்:

‘’செல்வந்தர்களின் ஆதாயத்திற்காக மட்டுமே நீங்கள் வியர்வை சிந்துகிறீர்கள். ஆலை முதலாளிகள்தான் உங்கள் இயற்கையான எதிரிகள்.. ஆனால் நீங்கள்தான் எண்ணிக்கையில் மிகவும் பெரியவர்கள்; மிக வலிமையானவர்கள். ஒன்று சேருங்கள்! என்று தொழிலாளர்களை நோக்கிச் சொல்பவர்கள் தோன்றுவார்கள்.’’

ஆம்! ஆனால் அவர்கள் ஏற்கெனவே தோன்றியிருந்தார்கள். அவர்கள் தேவ தூதர்கள் அல்ல; வரலாறு ஈன்றெடுத்த பிள்ளைகள். அவர்கள் தங்கள் வசனத்துக்கு மரியாதை சேர்க்க எந்தத் தேவனையும் துணைக்கு அழைக்கவில்லை.

‘’முந்தைய உலகக் கண்ணோட்டம் மற்றும் முந்தைய வரலாற்றின் தர்க்க ரீதியான, வரலாற்று ரீதியான, அவசியமான தொடர்ச்சி என்ற வகையில் நமது கோட்பாடுகளை வளர்த்து ஒரு சில படைப்புகளில் வடிக்காத வரை உண்மையான தெளிவு மக்களுக்கு இருக்காது. பெரும்பான்மையினர் இருளில் குழம்பித் திரிவார்கள்’’ – என்று 1844 அக்டோபரில் எங்கெல்சிற்குக் கடிதம் எழுதினார் மார்க்ஸ்.

ஆம்! பலர் குழம்பித்தான் திரிந்தார்கள். டஜன் கணக்கிலான சோசலிசக் கோட்பாடுகள் தோன்றின. ‘’எல்லோரையும் பேரரசர்களாகவும் போப்பாண்டவர்களாகவும் மாற்ற விழையும்’’ இந்தப் போக்குகளை ஏளனம் செய்து சாடினர் மார்க்சும் எங்கெல்சும்.

காரல் மார்க்ஸ்
காரல் மார்க்ஸ்

மன்னர்களையும், முதலாளிகளையும் அவர்களுடைய கொள்ளையையும் இரட்டை வேடத்தையும் தனது குத்தீட்டி போன்ற சொற்களால் மார்க்ஸ் கிழித்துக் காட்டியவுடன் ‘’உன்னுடைய தொழிலாளி வர்க்கம் மட்டுமென்ன, கலப்பற்ற சொக்கத் தங்கமோ?’’ என்ற கேள்வியை எழுப்பினார்கள் முதலாளித்துவ அறிஞர்கள். ‘’சாதி, மதம், சுயநலம், குடி, சூது, ஆடம்பர மோகம் – என்று இவை அனைத்திலும் ஊறிக்கிடக்கும் உன்னுடைய தொழிலாளிகளா புரட்சி செய்யப் போகிறார்கள்?’’ என்பதுதானே புரட்சியாளர்களை நோக்கி மார்க்சிய எதிர்ப்பாளர்கள் அனைவரும் எழுப்பும் கேள்வி.

‘’தூக்கியெறியும் (பாட்டாளி) வர்க்கத்தால் புரட்சியின் போது மட்டுமே தன்னிடமிருந்து பழைய ஆபாசம் முழுவதையும் விட்டொழித்து சமுதாயத்தின் புதிய அடிப்படையை தோற்றுவிக்க வல்லதாக மாற முடியும்’’…

‘’உழைக்கும் வர்க்கங்கள் இயற்கையை வென்று விட்டன. இனி அவர்கள் மனிதர்களை வெல்ல வேண்டும். இந்த முயற்சியில் வெற்றி காண அவர்களுக்கு வலிமை தேவையில்லை. ஆனால் அவர்களது பொதுவான வலிமையை ஸ்தாபனப்படுத்துவதுதான் தேவைப்படுகிறது’’ என விடையளித்தார் மார்க்ஸ்.

பிரெடரிக் எங்கெல்ஸ்
பிரெடரிக் ஏங்கெல்ஸ்

தொழிலாளி வர்க்கத்தை அமைப்பாக்கும் வேலையை மார்க்சும், எங்கெல்சும் முன் நின்று செய்தார்கள். அனைத்துலகக் கம்யூனிஸ்டு கழகத்தை ஏற்படுத்தினார்கள். பல்வேறு விதமான கற்பனைச் சோசலிசப் போக்குகளுக்கு எதிராகத் தங்களது விஞ்ஞான சோசலிசக் கோட்பாடுகளை முன் வைத்து அக்கழகத்தின் இரண்டாவது காங்கிரசில் வாதாடினார்கள். அறிக்கை எழுதும் பொறுப்பை கழகம் அவர்களிடம் ஒப்படைத்தது. பிறகு அறிக்கை அக்கழகத்தால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

“இந்தச் சிறு பிரசுரம் மிகப் பெரிய நூல் தொகுதிகளுக்குச் சமமானது’’ என்று பின்னாளில் குறிப்பிட்டார் லெனின். மார்க்சியத்தின் அரசியல் பொருளாதார, தத்துவ ஆயுதமாக விளங்கிய கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை வெளி வந்தவுடனே விற்றுத் தீர்ந்து விடவும் இல்லை. உலகைக் கவர்ந்து விடவும் இல்லை. ஐரோப்பாவில் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின் வெற்றியையும் பின்னடைவையும் ஒட்டி அறிக்கை மீதான ஆர்வம் கூடிக் கொண்டும் குறைந்து கொண்டும் இருந்தது.

அறிக்கை வெளியிடப்பட்டு சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின் 1887-இல் எங்கெல்ஸ் இவ்வாறு எழுதினார்:

‘’ஒரு உலகப் போரைத் தவிர, அதுவும் இதுவரை கனவு கண்டிராத விரிவும் வன்முறையும் கொண்ட ஒரு உலகப் போரைத் தவிர வேறெந்தப் போரும் முடிவில் ஜெர்மனிக்குச் சாத்தியமில்லை… இளவரசர்களே, ராஜதந்திரிகளே உங்களுடைய ஞானத்தால் இன்று நீங்கள் ஐரோப்பாவை இங்குதான் கொண்டு வந்துள்ளீர்கள்… போர் தற்போதைக்கு எங்களைப் பின்னணிக்குத் தள்ளலாம். நாங்கள் ஏற்கனவே பெற்றுள்ள சில சாதகங்களை அது எங்களிடமிருந்து பறித்துக் கொள்ளலாம். ஆனால் உங்களால் மீண்டும் என்றுமே கட்டுப்படுத்த முடியாத சக்திகளை நீங்கள் கட்டவிழ்த்து விடும்போது, நிகழ்ச்சிகள் அவற்றின் போக்கிலேயே நடைபெறட்டும். இந்த யுத்தத்தின் முடிவில் நீங்கள் நாசமாக்கப்படுவீர்கள். பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி அடையப்படிருக்கும் அல்லது தவிர்க்க முடியாததாகியிருக்கும்.’’

மார்க்ஸ் - ஏங்கெல்ஸ்
காரல் மார்க்ஸ் – பிரெடரிக் எங்கெல்ஸ்

உண்மைதான்! பாட்டளி வர்க்கத்தின் வெற்றி அடையப்பட்டு விட்டது ரசியாவில். முதல் உலகப் போரின் முடிவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தோற்றுவிக்கப்பட்டது. மார்க்சியமும், கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையும் எட்டுத் திக்கும் பரவத் தொடங்கின.

சமூக உறவுகளின் இயக்கத்தைப் பற்றியும் அதன் உள் உறவுகளைப் பற்றியும் துல்லியமாகப் புரிந்து கொண்டு விட்டால் நிலவுகின்ற சமூக அமைப்புதான் நீடித்திருக்க முடியும் என்ற மாயை அகன்று விடும் என்றார் மார்க்ஸ். அத்தகைய புரிதல் இருந்தால் இயற்கை விஞ்ஞானத்தையொத்த துல்லியத்தை சமூக விஞ்ஞானமும் பெற முடியும் என்றார் எங்கெல்ஸ்.

தொழிலாளி வர்க்கம் அவ்வாறு புரிந்து கொள்வதன் அபாயத்தை பாரிஸ் கம்யூனிலும், ரசியப் புரட்சியிலும் முதலாளி வர்க்கம் பட்டுத் தெரிந்து கொண்டது. தத்துவத் துறையில் விஞ்ஞானத்தைத் திட்டமிட்டே புறக்கணிக்கத் தொடங்கியது. அறியொணாவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது; ‘’வல்லாண்மைக்கான விருப்புறுதி’’ எனக் கூறி காலனியாதிக்கத்தை நியாயப்படுத்தியது.

கீனிசியப் பொருளாதாரமும் போலி சோசலிசமும் வீழ்ச்சியடைந்ததை கம்யூனிசத்தின் வீழ்ச்சியாகச் சித்தரித்தது. தான் உருவாக்கிய, தனது சொந்த மதிப்பீடுகளைத் தானே நொறுக்க நேர்ந்த போது, தன்னுடைய முடிவு நெருங்கும் போது, ஏகாதிபத்தியம் இன்று அதை ‘சித்தாந்தத்தின் முடிவு’ என்று பிரகடனம் செய்கிறது.

லட்சிய வீடு, லட்சியக் கார், லட்சிய வேலை, லட்சியத் தொலைக்காட்சி… எல்லாவற்றையும் அடைய முடியும். லட்சிய சமூகம் ஒன்றை மட்டும் அடைய முடியாது என்கிறார்கள் ஏகாதிபத்தியத்தின் தத்துவ ஞானிகள். ‘’கம்யூனிசம் பற்றிக் கனவு காண்பவர்கள் இன்றைய சமூக சூழ்நிலையை உணராதவர்கள்’’ என்று அனுதாபம் தெரிவிக்கிறார்கள் சில ஆய்வறிஞர்கள்.

‘’நாம் உயிர்வாழும் வாயு மண்டலம் நம் ஒவ்வொருவர் மீதும் 20,000 பவுண்டு சக்தியுடன் அழுத்திய போதிலும் நீங்கள் அதை உணர்கிறீர்களா என்ன? அது போலவே ஐரோப்பிய சமூகம் தன்னைச் சூழ்ந்து எல்லாப் பக்கங்களிலும் அழுத்திக் கொண்டிருந்த புரட்சிகர வாயு மண்டலத்தை 1848-க்கு முன் உணரவில்லை’’ என்று கூறினார் மார்க்ஸ்.

1998-லும் (தற்போது 2014-லிலும்) அப்படித்தான். தனது நலனுக்காக உலகப் பொருளாதாரத்தை ஒன்று சேர்க்கும் வல்லரசுகள், உலகத் தொழிலாளி வர்க்கம் மட்டும் ஒன்று சேரக் கூடாது என விரும்புகின்றன. ஆனால் விருப்பங்கள் மட்டும் வரலாற்றை இயக்கிச் செல்வதில்லை.

கம்யூனிசம் எனும் பூதம் மீண்டும் உலகை ஆட்டத் தொடங்கும். தனது உதடுகள் உச்சரித்த ‘’உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’’ என்ற முழக்கம் செயல் வடிவம் பெற்றதைக் காண அந்த ஆசான்கள் இல்லையே எனத் தொழிலாளி வர்க்கம் கண் கலங்கும்.

– சூரியன்
______________________________________
புதிய கலாச்சாரம், மார்ச் 1998
______________________________________