Sunday, July 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 688

பாவ் நகர் – மிதி விர்தி : குஜராத்தின் கூடங்குளம் ?

0

குஜராத் மாநிலம் பாவ் நகர் மாவட்டத்திலுள்ள மிதி விர்தி கிராமத்தில் ”வெஸ்டிங் ஹவுஸ் கார்ப்பரேசன்” என்ற அமெரிக்க நிறுவனம், 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 6600 மெகா வாட் மின்னுற்பத்தித் திறனுள்ள அணு உலைகளைக் கட்டவிருக்கிறது. இப்பேரழிவுத் திட்டத்தை எதிர்த்து  அப்பகுதியிலுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அணுஉலைக்கெதிரான பாவ்நகர் மக்கள் போராட்டம்
குஜராத்தில் நிறுவப்படவுள்ள அணு உலைத் திட்டத்துக்கு எதிராக கிராம மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்.

அணு உலையில் விபத்து ஏற்பட்டால், அணு உலையைக் கட்டியமைத்த நிறுவனம் மிகமிகக் குறைவான தொகையை நட்டஈடாகக் கொடுத்தால் போதும் என்றவாறு அணுசக்தி கடப்பாடு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அற்பமான நட்ட ஈடு கொடுக்கும் விதியும் கூட  இருக்கக் கூடாதென்று வெஸ்டிங் ஹவுஸ் கார்ப்பரேசன் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் நிர்ப்பந்திக்கின்றன. கடந்த செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்காவிற்குச் சென்ற மன்மோகன் சிங், இந்நிறுவனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துவிட்டு வந்துள்ளார். மன்மோகனின் இச்செயலைக் கண்டித்தும், மிதி விர்தி அணு உலைத் திட்டத்தைக் கைவிடக் கோரியும், கடந்த செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதியன்று ஆயிரக்கணக்கான கிராம மக்கள் ஊர்வலமாகத் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

ஆனால் காங்கிரசுக் கூட்டணியின் மைய அரசும், குஜராத்தை ஆளும் பா.ஜ.க.வும் விவசாயிகளின் போராட்டத்தை அலட்சியப்படுத்தி விட்டு, அணு உலைகளைக் கட்டியமைப்பதில் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அணுசக்தி கடப்பாடு மசோதாவை நிறைவேற்றுவதில் காங்கிரசு கூட்டணி அரசுக்குப் பக்கபலமாக இருந்து உதவிய பா.ஜ.க., இப்போது தங்களது ஆட்சியிலுள்ள குஜராத்தில் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அணு உலையைக் கட்டும் அமெரிக்க நிறுவனத்திற்கு விசுவாசமாக நின்று, தங்களுக்கும் காங்கிரசுக்கும் எந்த வேறுபாடுமில்லை என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது.

____________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2013

____________________________________

லஷ்மண்பூர் – பதே படுகொலைத் தீர்ப்பு : நீதிமன்றத்தின் வன்கொடுமை !

3

பீகாரிலுள்ள லஷ்மண்பூர்-பதே கிராமத்தில் 16 ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்டோர் 58 பேரை ரன்வீர் சேனா என்ற ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களின் குண்டர் படையினர் படுகொலை செய்த வழக்கில், அமர்வு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 26 ஆதிக்க சாதிவெறி பயங்கரவாதிகளை பாட்னா உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் உற்றார் – உறவினர்களது சாட்சியங்கள் நம்பகத்தன்மையுடன் இல்லை என்று கூறி கடந்த அக்டோபர் 9-ஆம் நாளன்று மனுநீதியையே இந்நீதிமன்றம் தனது தீர்ப்பாக நிலைநாட்டியுள்ளது.

லஷ்மண்பூர் பதே கொலைவெறியாட்டம்
லஷ்மண்பூர் – பதே கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் 58 பேரை படுகொலை செய்து ரன்வீர் சேனா நடத்திய பயங்கர வெறியாட்டம் (கோப்பு படம்).

பீகாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து ஏறத்தாழ 100 கி.மீ. தொலைவில், ஜெகனாபாத் மாவட்டத்தின் சோனே ஆற்றின் கரையிலுள்ள கிராமம்தான் லஷ்மண்பூர்-பதே. ராஜபுத்திரர்கள், பூமிகார் ஆகிய ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களையும், மல்லா, பஸ்வான் முதலான தாழ்த்தப்பட்ட சாதியினரான  கூலி விவசாயிகளையும் கொண்ட கிராமம் இது. வழக்கமாகத் தமக்கு வழங்கப்படும் கூலியான ஒன்றரை கிலோ உணவு தானியத்தை அறுவடைக் காலத்தில் 3 கிலோவாக உயர்த்தித் தருமாறு கோரி, வேலைக்கு வராமல் இக்கிராமத்தின் தாழ்த்தப்பட்ட மக்கள் இ.பொ.க. (மா-லெ) லிபரேஷன் கட்சியின் தலைமையில் திரண்டு போராடினர். நக்சல்பாரிகள் இயக்கம் இப்பகுதியில் செல்வாக்குப் பெறுவதைத் தடுக்கவும், தம்மை எதிர்க்கத் துணிந்து விட்ட  தாழ்த்தப்பட்டோரை அச்சுறுத்திப் பணிய வைக்கவும் 1997 டிசம்பர் முதல் நாளன்று நள்ளிரவில் இக்கிராமத்தின் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பைச் சுற்றிவளைத்து பூமிகார் நிலப்பிரபுக்களின் ஆதிக்க சாதிவெறி குண்டர் படையான ரன்வீர் சேனா கொலைவெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டது.

போஜ்பூரிலிருந்து சோனே ஆற்றைக் கடந்து ஆயுதங்களுடன் படகில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட ரன்வீர் சேனா குண்டர்கள், உள்ளூர் பூமிகார் நிலப்பிரபுக்கள் வழிகாட்ட, தாழ்த்தப்பட்டோரை வீடுகளிலிருந்து வெளியே இழுத்துப்போட்டு சுற்றிவளைத்துக் கொண்டு தாக்கிக் கொன்றனர். தப்பியோடியவர்களை டார்ச் லைட் மூலம் வீடுவீடாகத் தேடி விரட்டிக் கொன்றனர். இக்கொலைவெறியாட்டத்தில் 27 பெண்கள், 16 குழந்தைகள் உள்ளிட்டு 58 தாழ்த்தப்பட்டோர் கோரமாகக் கொல்லப்பட்டனர். நொறுங்கிக் கிடந்த தாழ்த்தப்பட்டோரது வீடுகளின் சுவர்களிலும் தரையிலும் மட்டுமின்றி, சோனே ஆற்றங்கரைலும், கரையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகிலும் கூட  இரத்தம் தெறித்திருந்தது. கொல்லப்பட்ட 27 பெண்களில் 8 பேர் கர்ப்பிணிகள். இக்கொலைவெறியாட்டம் நடந்த போது தானிய மூட்டைகளுக்குப் பின்னே பதுங்கிக் கொண்டு உயிர் பிழைத்தார் கர்ப்பிணியான ராஷ்மி தேவி. இக்கோரத்தைக் கண்ணெதிரே பார்த்த பீதியில் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. ”நாங்கள் தாழ்த்தப்பட்டோரின் குழந்தைகளைக் கொல்வதற்குக் காரணம், அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகு நக்சல்பாரிகளாகி விடுவார்கள் என்பதால்தான். நாங்கள் பெண்களைக் கொல்வதற்குக் காரணம், அவர்கள் நக்சல்பாரிகளைப் பெற்றெடுத்து விடுவார்கள் என்பதால்தான்” என்று ரன்வீர் சேனா பகிரங்கமாகவே கொக்கரித்தது.

நம்பிக்கையிழந்த தாழ்த்தப்பட்ட மூதாட்டி
”தீர்ப்புக்குப் பின்னர் சாதிவெறியர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எங்களைப் பிடித்தாட்டுகிறது. நாங்கள் எல்லா நம்பிக்கைகளையும் இழந்து நிற்கிறோம்” என்று கூறும் தாழ்த்தப்பட்ட மூதாட்டி.

தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டு, அனைத்து பிரிவு உழைக்கும் மக்களையும் அணிதிரட்டி ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களுக்கு எதிரான போராட்டங்களால் நக்சல்பாரி இயக்கம் பீகாரில் பற்றிப் பரவத் தொடங்கியதும், ஒவ்வொரு ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களும் தனிவகை குண்டர் படைகளைக் கட்டியமைத்துக் கொண்டு உழைக்கும் மக்கள் மீது தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டனர். குர்மிகளின் பூமி சேனா, யாதவர்களின் லோரிக் சேனா, பூமிகார்களின் ரன்வீர் சேனா, ராஜபுத்திரர்களின் சன்லைட் சேனா முதலான குண்டர் படைகள் மட்டுமின்றி, பிரம்ம ரிஷி சேனா, குயேர் சேனா, கங்கா சேனா முதலான வட்டார அளவிலான குண்டர் படைகளும் உருவாக்கப்பட்டன. இவற்றில், 1994-இல் கட்டியமைக்கப்பட்ட பூமிகார்களின் ரன்வீர் சேனாதான் வலுவானதும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதுமாகும். அதன் தலைவன்தான் பிரம்மேஷ்வர் சிங். அவன் முன்னின்று வழிநடத்தியதுதான் லஷ்மண்பூர்-பதே கொலை வெறியாட்டம்.

தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களால் நடத்தப்பட்ட இப்படுகொலை பற்றிய வழக்கில் 11 ஆண்டுகளான பின்னரும் நீதிமன்ற விசாரணை தொடங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு, மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரே 2008-இல்தான் விசாரணையே தொடங்கியது. படுகொலை நடந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு, பாட்னா அமர்வு நீதிமன்ற நீதிபதியான விஜய் பிரகாஷ் மிஸ்ரா, குற்றம் சாட்டப்பட்ட சாதிவெறியர்களில் 16 பேருக்கு மரண தண்டனையும் 10 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி, எஞ்சிய 9 பேரை விடுதலை செய்து 7.10.2010 அன்று தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து சாதிவெறியர்கள் பாட்னா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செதனர். மூன்றாண்டுகளுக்குப் பிறகு கொலைகார சாதிவெறியர்களை உயர் நீதிமன்றம் இப்போது விடுதலை செய்துள்ளது. ”பீதி நிறைந்த அந்தச் சூழலில் ஒவ்வொருவரும் உயிர் பிழைக்கத் தப்பியோடியிருப்பார்களே அன்றி, படுகொலை நடந்த இடத்தில் இருந்திருக்க மாட்டார்கள்; குற்றவாளிகளை இருட்டில் அடையாளம் கண்டிருப்பார்கள் என்பது நம்பும்படியாக இல்லை” என்று தீர்ப்பளித்திருக்கிறது உயர் நீதிமன்றம். இந்தப் படுகொலைக்கான காரணம் மட்டுமல்ல, குற்றவாளிகளை விடுவிப்பதற்கு நீதிமன்றம் கூறியிருக்கும் காரணமும் அப்படியே கீழ் வெண்மணியை ஒத்திருக்கிறது.

ஆனால் முகத்தை மறைத்துக் கொண்டு வந்த அவர்களின் தோற்றத்தை வைத்தும், அவர்களின் குரலை வைத்தும் அவர்கள் யார் என்பதைத் தாழ்த்தப்பட்ட மக்கள் அடையாளம் காட்டி சாட்சியமளித்த போதிலும், அதை நீதிமன்றம் ஏற்க மறுத்திருக்கிறது. தீர்ப்பளித்த நீதிபதிகள் கொலைகாரர்களை விடுவிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு, அதற்கேற்ப கிரிமினல்களைப் போலச் சிந்தித்துத் தீர்ப்பெழுதியிருக்கின்றனர். மேல் முறையீட்டில் சாதிவெறியர்கள் விடுதலையாகும் விதத்திலும், உயர்நீதி மன்றம் சட்டப்படி குற்றவாளிகளை விடுவிப்பதற்கு ஏதுவாகவும், போதுமான ஓட்டைகளுடன் குற்றப்பத்திரிகையை போலீசு தயாரித்திருக்கும்.

”இத்தீர்ப்பையடுத்து ஆதிக்க சாதிவெறியர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து ஆனந்தக் கூத்தாடுகின்றனர். ‘உங்கள் வீட்டைக் கொளுத்தினாலும், உங்களைக் கொன்றாலும் எங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது பார்த்தீர்களா’ என்று எங்களிடம் எகத்தாளம் செய்கின்றனர். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் அவர்கள் எங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எங்களைப் பிடித்தாட்டுகிறது. நாங்கள் எல்லா நம்பிக்கைகளையும் இழந்து நிற்கிறோம்” என்கிறார் லஷ்மண்பூர்-பதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு தாழ்த்தப்பட்ட மூதாட்டி.

ரண்வீர் சேனா
பூமிகார் நிலபிரபுக்களின் ஆதிக்கசாதி கொலைகார குண்டர் படையான ரண்வீர் சேனா.

”இவ்வளவு கொடிய சாதிவெறிப் படுகொலையில் குற்றவாளிகள் தப்பிக்கிறார்களே, அது எப்படி சாத்தியம்? ஏனெனில், நீதிமன்றங்கள் அவர்களுக்கானது; அரசாங்கம் அவர்களுக்கானது; போலீசு அதிகாரம் அவர்களுடையது. ஏழைகளுக்கு எதுவுமில்லை. இதுதான் இன்றைய நீதி!” என்று தனது சொந்த அனுபவத்திலிருந்து கூறுகிறார், தனது குடும்பத்தில் ஏழு பேரை இப்படுகொலையில் பறிகொடுத்த லஷ்மண்பூர்-பதே கிராமத்தைச் சேர்ந்த பவுத் பஸ்வான் என்ற தாழ்த்தப்பட்ட கூலி விவசாயி.

பீகாரில் சாதிவெறி பயங்கரவாதிகள் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுவது இப்போது முதன்முறையாக நடப்பதல்ல. ஏற்கெனவே பதானிதோலாவில் தாழ்த்தப்பட்டோரைக் கொன்ற குற்றவாளிகள் 2012 ஜூலையில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் நக்ரி பஜார் பகுதியில் சாதிவெறியர்களால் நடத்தப்பட்ட படுகொலையின் குற்றவாளிகள் 2013 மார்ச்சில் விடுவிக்கப்பட்டனர். இவை தவிர மியான்பூர், நாராயண்பூர், காக்தி பிகா முதலான இடங்களில் தாழ்த்தப்பட்டோர் கொல்லப்பட்ட வழக்குகளில் அமர்வு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட  சாதிவெறியர்கள் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

லஷ்மண்பூர்-பதே படுகொலையை அன்றைய அரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணன், தேசிய அவமானம் என்று சாடி கண்டனம் தெரிவித்த பின்னரே, லல்லு பிரசாத் யாதவின் மனைவியான ராப்ரி தேவியின் ராஷ்ட்ரிய ஜனதா தள அரசாங்கம் ரன்வீர் சேனாவுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான தொடர்பு பற்றி விசாரணை நடத்த நீதிபதி ஆமிர்தாஸ் தலைமையிலான ஒரு ஆணையத்தை நியமித்தது. அந்த ஆணையம் அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு முன்னரே ராப்ரி தேவி அரசாங்கம் கவிழ்ந்தது. பின்னர் 2006-இல் ஆட்சிக்கு வந்த நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள – பா.ஜ.க. கூட்டணி அரசாங்கம் அந்த ஆணையத்தைக்  கலைத்து, அதன் விசாரணை அறிக்கையை முடக்கி வைத்தது. இருப்பினும், சில சமூக ஆர்வலர்களின் முயற்சியால் இந்த அறிக்கை அம்பலமானது. காங்கிரசு, பா.ஜ.க., சமதா முதலான ஆளும் வர்க்கக் கட்சிகள் மட்டுமின்றி, ‘சமூக நீதி’ பேசும் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் முதலான ஓட்டுக் கட்சிகளின் உள்ளூர் தலைவர்களும் பிரமுகர்களும் ரன்வீர் சேனாவின் கூட்டாளிகளாகவும் புரவலர்களாகவும் இருந்துள்ள விவகாரம் இந்த அறிக்கையின் மூலம் வெளிவந்தது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியே பூமிகார் சாதிவெறி நிலப்பிரபுக்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக இருப்பதால், கொலைகாரன் பிரம்மேஷ்வர் சிங்கின் பெயர் ரன்வீர் சேனா நடத்திய படுகொலைகள் தொடர்பான எந்த முதல் தகவல் அறிக்கையிலும் சேர்க்கப்படவில்லை. அவன் பிணையில் வெளிவர மனுச் செய்த போது, அதை நிதிஷ் அரசாங்கம் எதிர்க்கவுமில்லை. பின்னர், குற்றங்கள் நிரூபணமாகவில்லை என்று 2011-இல் அவன் விடுதலை செய்யப்பட்டான். அதன் பிறகு அவன் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதும், இச்சாதிவெறி பயங்கரவாதிக்கு பா.ஜ.க.வும் ஐக்கிய ஜனதா தளமும்  கண்ணீர் அஞ்சலி செலுத்தின.

பிரம்மேஷ்வர் சிங்
லஷ்மண் பூர் – பதே கொலைவெறியாட்டத்தை வழிநடத்திய ரண்வீர் சேனா குண்டர் படையின் தலைவன் பிரம்மேஷ்வர் சிங் (கோப்பு படம்).

இவையனைத்தும், இன்றைய அரசியலமைப்பு முறையே தாழ்த்தப்பட்டோருக்கும் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களுக்கும் எதிரானதாக இருப்பதையும், பெயரளவிலான ஜனநாயகத்தையும் சட்டப்படியான மனித உரிமைகளையும் கூட செயல்படுத்த வக்கற்று தோல்வியடைந்து கிடப்பதையும் மெய்ப்பித்துக் காட்டுகின்றன. ஏற்கெனவே சமூக ரீதியில் ஒரு ஆதிக்க சாதி என்ற முறையில் பெற்றிருக்கும் அதிகாரத்துடன், அரசியல் கட்சி, அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறை போன்றவற்றிலும் இந்த இடைநிலைச் சாதிகளின் மேட்டுக்குடி வர்க்கங்கள் அதிகாரத்தைப் பெற்றுள்ளன. மேலும், தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்துக்குப் பின்னர், இத்தகைய இடைநிலைச் சாதிகளில் தோன்றியிருக்கும் புதியவகை தரகு வர்க்கங்கள் இன்று சாதிக் கட்சிகளின் புரவலராக இருந்து, சாதிய பிழைப்புவாத வாக்கு வங்கி அரசியலுக்கு வழியமைத்துக் கொடுப்பதோடு, தீண்டாமையைத் தங்களது பிறப்புரிமையாக அறிவிக்கும் அளவுக்குக் கொட்டமடிக்கின்றன. தமிழகத்தில் ராமதாசு உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதிகளின் கூட்டணி இத்தகையது தான்.

சாதி-தீண்டாமையை ஒழிப்பதற்கு முன்வைக்கப்படும் சீர்திருத்தவாதத் தீர்வுகளும் நாடாளுமன்ற அரசியல் வழிமுறைகளும் தோல்வியைத் தழுவி விட்டன என்பது மட்டுமல்ல, அவை சாதியை மேலிருந்து உறுதிப்படுத்துவதற்கும், தீண்டாமைக் கொடுமைகளை தீவிரப்படுத்துவதற்குமே பயன்படுகின்றன. சாதி அரசியலுக்கும், சாதியைப் புனிதப்படுத்தும் பார்ப்பனியத்துக்கும், பிழைப்புவாத நாடாளுமன்ற அரசியலுக்கும் எதிராக ஒரு ஜனநாயகப் புரட்சிக்கு மக்களை அணிதிரட்டுவதுதான் அவசரக் கடமையாக இருக்கிறது.

-குமார்
_____________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2013
_____________________________________

தமிழகமெங்கும் நவ 7 புரட்சி தின கொண்டாட்டங்கள் !

3

96-வது ரஷ்யப் புரட்சி நாள் விழா நவம்பர் 7 அன்று புரட்சிகர அமைப்புகளால் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

1. ஆவடி – அம்பத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்

நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம் ! புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம் !

-என்கிற முழக்கத்தின் அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஆவடி – அம்பத்தூர் பகுதிக் குழுவும், காஞ்சிபுரம் மாவட்டக் குழுவும் இணைந்து நவம்பர் புரட்சி நாள் விழாவை சென்னையின் புறநகர்ப் பகுதியான பட்டாபிராம் பகுதியில் நடத்தினர்.

7.11.2013 அன்று மாலை 5.45 மணிக்குத் துவங்கிய இக்கூட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தோழர் ஆ.கா.சிவா தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் சுமார் 380 தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு, தங்களது குடும்ப விழாவாக மாற்றினர். விழாவுக்காக அறிவிக்கப்பட்டிருந்த மாறுவேடப் போட்டி, பாட்டுப்போட்டி, ஒவியப் போட்டிகளில் தொழிலாளர்களது பிள்ளைகள் 15 பேர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். பாட்டுப் போட்டியின் போது சிறுவர்கள் பாடுவதை பார்த்த 6 வயது சிறுவன் ஒருவன், நானும் ஒரு பாடலைப் பாட வேண்டும் என்று கோரிக்கை வைத்து , கலைநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருடம் அனுமதி பெற்று, பாடலை பாடினான். சிறுவர்களின் பாட்டுப் போட்டி சமூக அவலங்களையும் , அடிமைத் தனத்தையும் அம்பலப்படுத்தியது. இது வந்திருந்தவர்களுக்கு உணர்வூட்டியது.

மாறுவேடப் போட்டியில் வீரபாண்டிய கட்ட பொம்மன், வீரமங்கை வேலு நாச்சியார் வேடமிட்டு வந்த சிறுவர்கள், மறுகாலனியாக்கத்திற்கு எதிராக போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையில் , மழலை மொழியில் பேசியது பார்வையாளர்களை ஈர்க்கும்படி இருந்தது.

சிறுவர்கள் வரைந்த ஓவியங்கள் அரங்கத்தின் முகப்பில் வைக்கப்பட்டன. இந்த ஒவியங்கள் மறுகாலனியாக்கத் தாக்குதலையும் , இந்து மதவெறிப் பாசிசத்தையும் அம்பலப்படுத்துவதாக இருந்தது. நாடு மீண்டும் இதற்கெதிரான போராட்ட வேண்டியதன் உணர்வை தூண்டியது.

கவிதைப் போட்டியில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் தாங்கள் தொழில்முறை கவிஞர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்தனர். முதலாளித்துவம் தொடுத்த அடக்கு முறைகள் அவர்களை புரட்சிகர கலைஞர்களாகவும் மாற்றியது. தொழிலாளி வர்க்கத்தின் மீதான முதலாளித்துவ ஒடுக்குமுறையும், உரிமை பறிப்புகளையும் அம்பலப்படுத்தி வர்க்கமாக இணைந்து போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையில் அவர்களது கவிதை இருந்தது.

இதையடுத்து நடந்த புரட்சிகர கலைநிகழ்ச்சியானது, முதலாளித்துவ பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியும் , நம் நாடு பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டைக் காடாக மாற்றப்பட்டு இருக்கும் மறுகாலனியாக்க சூழலில் நக்சல்பாரிகள் தலைமையில் அணிதிரளவேண்டிய அவசியத்தை உணர்த்தியும் முத்திரை பதித்தது.

அதை தொடர்ந்து, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் நவம்பர் புரட்சி தின சிறப்புரையாற்றினார்.. சிறப்புரையின் உள்ளடக்கம் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

”ரசியத் தொழிலாளி வர்க்கம், தான் அனுபவித்து வந்த முதலாளித்துவ கொடுங்கோன்மைக்கும், அனைத்து விதமான உரிமை பறிப்புகளுக்கும், வறுமை – சுரண்டலுக்கும் நவம்பர் புரட்சியில் முடிவு கட்டியது. பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் தலைமையில் போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சி, முதல் சோசலிச அரசை நிறுவி, மனித குலம் இதுகாறும் காணாத வகையில் அந்நாட்டின் தொழிலாளர்களுக்கும், ஏனைய உழைக்கும் மக்களுக்கும் மகிழ்ச்சியான வாழ்வை ஏற்படுத்தி கொடுத்தது.

மனிதன் மனிதனை சுரண்டும் இழிநிலையிருநது ரசிய பாட்டாளி வர்க்கம் தன்னை விடுவித்துக் கொண்டது. தொழிலாளிகளால் உலகை ஆள முடியும் என்பதை உலகிற்கு பறைசாற்றிய நாள் நவம்பர் 7. உலகின் ஏனைய ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும் ரசியப் புரட்சி விடிவெள்ளியாக வழிகாட்டியது..முதலாளிகளே திறமையாளர்கள் என்று அறிவாளிகள் பீற்றிக் கொள்வது ஒரு பித்தலாட்டம். சமூகத்தைச் சுரண்டியும், அழித்தும் தான் முதலாளிகள் உல்லாச வாழ்க்கையை நடத்துகின்றனர். முதலாளித்துவம் உலகெங்கும் உழைக்கும் மக்களை வேலையின்மையிலும் வறுமையிலும தள்ளி உள்ளது .

இந்தியாவில் திணிக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற மறுகாலனியாக்கக் கொள்கையானது , வேலைபறிப்பு – தற்கொலைகள் – ஆலைச்சாவுகளைத் தீவிரமாகியுள்ளது. ரசியத் தொழிலாளர்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியதன் மூலம் தங்களது துயரங்களுக்கு முடிவு கட்டினர். இந்திய பாட்டாளி வர்க்கமும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினால் மட்டுமே, தங்களது துயரங்களுக்கு முடிவு கட்ட முடியும். இதனை ஓட்டுச் சீட்டு அரசியல் மூலமோ, சாதி – மத- இனவாத அமைப்புகள் மூலமோ முன்னெடுக்க முடியாது. புரட்சிகர அமைப்புகளால் மட்டுமே அதனை சாதிக்க முடியும். நக்சல்பாரி பாதையில் தொழிலாளி வர்க்கம் உள்ளிட்ட , அனைத்து ஒடுக்கபட்ட வர்க்கங்களும் ஒன்றிணைந்து புதிய ஜனநாயக புரட்சியை நடத்தி முடிப்போம், வாரீர்” என்று அறைக்கூவல் விடுத்தார்.

சிறப்புரையில் முதலாளித்துவ அடக்குமுறையை பற்றி பேசிய போது தொழிலாளர்கள் காட்டிய அதே ஆர்வத்தை மறுகாலனியாக்க அரசியலை அம்பலப்படுத்தி பேசிய போதும் வெளிப்படுத்தினர் .தொழிலாளர்களை நமது அரசியலை பற்றிக் கொண்டு வருவதை இது உணர்த்தியது.

மேலும், ரஷ்ய புரட்சிக்கு முன் ஜாரிச மன்னனால் உழைக்கும் மக்கள் பாதிக்கபட்டதையும் , இதற்கெதிராக ரஷ்ய மக்கள் போராட்டத்தை நடத்தி புரட்சியை சாதித்ததையும் , உலகம் முழுவதும் நடந்து வரும் முதலாளித்துவ சுரண்டல் முறையை அம்பலப்படுத்தியும் , அதற்கெதிராக மக்கள் போராட்டத்தை பற்றியும் பிளாக்ஸ் பேனர்கள் மண்டபத்தின் முகப்பில் வைத்தது பார்வையாளர்களை ஈர்த்தது. HR அதிகாரிகளை அம்பலபடுத்தி வைத்த போட்டோக்கள் தொழிலாளர்களை கவர்ந்தது.

பாட்டுப்போட்டி, மாறுவேடப்போட்டி, ஒவியப்போட்டி ஆகியவற்றில் பங்கேற்ற சிறுவர்களுக்கும், கவிதை வாசித்த தோழர்களுக்கும் மற்றும் பறை இசைத்த சிறுவனுக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தின் கடைசி நிகழ்ச்சியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் தோழர் ஜெயராமன் நன்றியுரையாற்றினார்.

இப்பகுதியில் முதல் முதலாக நடைபெற்ற இவ்விழா, தொழிலாளர்களுக்கு நம்பிக்கையை ஊட்டி உள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் ஆவடி, அம்பத்தூர் பகுதி
8807532859, 9445368009

2. ஒசூர்

வம்பர் 7 ரசியப் புரட்சி நாள் விழாவை ஒட்டி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக கமாஸ் வெக்ட்ரா ஆலை வாயிலில் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கமாஸ் வெக்ட்ரா துணைத் தலைவர் தோழர்.ஆனந்த் தலைமை தாங்கினார்.

பு.ஜ.தொ.மு. மாவட்டத் தலைவர் தோழர்.பரசுராமன் கொடியேற்றி, சிறப்புரையாற்றினார். இன்று தொழிலாளர்களுக்கான சட்டபூர்வ உரிமைகள் பறிக்கப்படுவதை அம்பலப்படுத்தி பேசினார். ஒசூரில் பல தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கான சட்டபூர்வ உரிமைகள் மறுக்கப்படுவதை சுட்டிக் காட்டினார். குறிப்பாக, முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தினார். முதலாளிகளுக்கு கோடி கோடியாய் இந்த அரசு வரிச் சலுகை வழங்குவதையும் முதலாளிகளுக்கு பக்க பலமாக இருப்பதையும் அம்பலப்படுத்தி இந்த அரசு முதலாளிகளுக்கான அரசு என்பதை உணர்த்திப் பேசினார்.

முன்னதாக தோழர். வேல்முருகன் தொழிலாளர்களின் போராட்டம் ஒரு ஆலைக்குள் நடத்தப்படுவதன் வரம்பு என்பது முடிவடைந்து விட்டது. இனி தொழிற்பேட்டை முழுவதற்குமான போராட்டங்களாக வளர்த்தெடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அந்த வகையில் தொழிலாளர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். நவம்பர் 7 ரசியப் புரட்சிநாள் என்பதன் மூலம் இதனை நாம் உணர வேண்டிய அவசியம் உள்ளதை சுட்டிக்காட்டினார்.

இறுதியாக பொதுமக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஓசூரில் ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ. போன்ற பிழைப்புவாத போலி கம்யூனிஸ்ட் சங்கங்கள் தொழிலாளர்களுக்கு நவம்பர் 7-ன் முக்கியத்துவத்தை உணர்த்தாமல் தவிர்த்து வருவதையும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

பொதுவாக, சட்டத்தை மீறினால், தொழிலாளர்களையும் உழைக்கும் மக்களையும் கிரிமினல்களைப் போல தண்டிக்கின்றது அதிகார வர்க்கம். கரண்ட் பில் கட்டவில்லை என்றால், பீஸ் புடுங்குகின்றனர் அதிகாரிகள். வண்டியை (டூவிலர்) லோனுக்கு வாங்கி தவணையைக் கட்டவில்லை என்றால், ரவுடிகளை வைத்து வண்டியை தூக்கிச் செல்கின்றனர். ஆனால், முதலாளிகள் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு உரிய சட்டவிதிகளைக் கடைப்பிடிப்பதில்லை. தொழிலாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி கொல்கின்றனர். ஆலையில் உள்ள எந்திரங்களின் தன்மையை மாற்றி அதிக உழைப்பை உறிஞ்சுகின்றனர். பயிற்சி தொழிலாளர்களை உற்பத்தியில் ஈடுபடுத்தி கசக்கி பிழிகின்றனர். அரசிடன் லோன் வாங்கி கட்டுவதே இல்லை. இவர்களை இந்த அரசு பாதுகாக்கிறது. ஆனால், இந்தப் போக்கை மாற்றி அமைக்க வேண்டுமென்றால் தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல்படுத்தாத முதலாளிகளுக்கு கிரிமினல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வேண்டும். அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும். இது சாத்தியமல்லாத விசயமல்ல. ஒசூரில் குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர்கள் ஒற்றுமையாகப் போராடியதால் அந்த ஆலையில் எச்.ஆர். அதிகாரிகள் உள்ளிட்ட 4பேர் கிரிமினல் குற்றங்களின் கீழ் கைது செய்யபட்டடுள்ளனர். ஆகையால், இந்த கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் நவம்பர் புரட்சி விழா கொண்டாடப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
பு.ஜ.தொ.மு. – ஒசூர்
97880 11784

3. சிவகங்கை

மக்கும் வேண்டும் நவம்பர் 7 – என்ற தலைப்பில் 96-வது ரசிய சோசலிசப் புரட்சி நாள் கொண்டாட்ட விழா சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்றது. மூத்த தோழர் வேலு அவர்கள் செங்கொடியை ஏற்றினார். அதன் பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டன. தோழர் கணேசன் தலைமை வகிக்க, தியாகிகளுக்கு வீர வணக்கம் பாடப்பட்டது. அதன்பின்னர் இந்தியாவிலும் நவம்பர் 7-ஐக் கொண்டு வருவோம் என்றும் போலிக் கம்யூனிஸ்ட்டுக் கடைகளை அம்பலப்படுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அதன்பின்னர், “நமக்கும் வேண்டும் நவம்பர் 7” என்கிற தலைப்பில் தோழர் ஆனந்த் பேசியபோது, புரட்சிக்கு முந்தைய ரசிய நிலையையும் இன்றைய இந்திய நிலையையும் ஒப்பிட்டுப்பேசி, நவம்பர் 7 –ன் தேவையை வலியுறுத்தினார்.

அதன்பிறகு, “முப்பெரும் தமிழகக் கொள்ளயர்களும், முப்பெரும் இந்தியக் கூட்டாளிகளும்” என்கிற தலைப்பில் சிவகங்கை, இராமநாதபுரம் பு.ஜ.தொ.மு மாவட்டஅமைப்பாளர் தோழர் நாகராசன் பேசிய போது, கிரானைட் கொள்ளயன் பி.ஆர்.பழனிச்சாமி, ஆற்று மணல் கொள்ளையன் ஆறுமுகச்சாமி, தாது மணல் கொள்ளையன் வைகுந்தராஜன் ஆகிய மூன்று தமிழகக் கொள்ளையர்களையும், அவர்களின் முப்பெரும் இந்தியக் கூட்டாளிகளான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஃப்.எஸ் அதிகார வர்க்கத்தினரையும் தோலுரித்துக் காட்டினார்.

அடுத்ததாகப் பேசிய தோழர் மணிமேகலை, ரசியாவில் புரட்சிக்கு முந்தைய பெண்கள் நிலையையும், புரட்சியில் அவர்களின் பங்களிப்பையும், புரட்சிக்குப் பின்பு நிர்வாகத் துறையில் அவர்கள் ஆற்றிய மகத்தான பங்களிப்பையும் சுட்டிக் காட்டி, புரட்சிகர அமைப்புகளில் பெண்கள் சேர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

“மோடியா? மோசடியா?” என்கிற தலைப்பில் அடுத்தாகப் பேசிய தோழர் குருசாமி மயில்வாகனன், இந்திய நீதிமன்றங்கள் சரியாக இயங்குமேயானால் மோடிக்குக் கிடைக்கக் கூடிய தண்டனை தூக்குதான், அதிலிருந்து மோடி தப்பிக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி ஆர்.எஸ்.எஸ் கும்பலின் முன்னோடிகளில் ஒருவனான ஹிட்லரைப் போன்று தற்கொலை செய்து கொள்வதுதான். ஆனால் நாம் அதற்கு அனுமதிக்கக் கூடாது, அவர்களின் இன்னொரு முன்னோடியான முசோலினிக்கு இத்தாலி மக்கள் கொடுத்த தண்டனையான தெருவிலே அடித்து இழுத்து வந்து முச்சந்தியிலே தூக்கிலிட்டது போல இந்திய மக்களும் தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

அடுத்ததாக, “முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்” எனும் தலைப்பில் பேசிய பு.ஜ.தொ.மு வின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன், மூலதனமானது தனக்குள் போட்டியிட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வது முதலாளித்துவத்தின் இயல்பு. ஆனாலும் அந்த அழிவினால், முதலாளிகள் அழிவதில்லை. மீண்டும் வருவார்கள். ஆனால், தொழிலாளி வர்க்கமோ அந்த அழிவினால் பாதிக்கப்படுகிறது. லாபம் கிடைத்தாலும், நட்டம் கிடைத்தாலும் பாதிப்பு தொழிலாளிக்குத்தான் என்பதை விளக்கி முதலாளித்துவத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்தினார்.

தோழர் மாணிக்கம் நன்றியுரையாற்றினார். இறுதியாக பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்தோடு விழா நிறைவுற்றது.

சிவகங்கையின் எம்.எல்.ஏவாக தொடர்ந்து இரண்டு முறையிருப்பது இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி எனும் கடை. நகராட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது இருந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக் கட்சி எனும் கடை. அவர் ஊழல் குற்றச்சாட்டால் கடையிலிருந்து விரட்டப்பட்டு தற்போது ஆர்.பி.எம் எனும் கடையைத் தொடங்கியுள்ளார்.

இருப்பினும் நவம்பர் புரட்சி நாளை இவர்கள் எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டதில்லை. மாறாக நவம்பரில் தீபாவளி வரும் காரணத்தால் வளர்ச்சி நிதி மட்டும் ஆண்டு தோறும் வசூலிக்கத் தவறுவதில்லை. இந்த ஆண்டு பு.ஜ.தொமுவின் சுவரொட்டிகளும், பிரசுரங்களும், நிகழ்ச்சியும் போலிக் கம்யூனிஸ்ட்டுக் கடைகளிலுள்ள நல்லவர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டதாக சில நல்லவர்கள் கூறியிருக்கிறார்கள். தலைகுனிவு மட்டுமல்ல தலைகுப்புற வீழ்த்தாமல் விட மாட்டோம் என்பதுதான் புரட்சிகர அமைப்பின் வேலை என்பதை அந்த நல்லவர்களும் விரைவில் புரிந்து கொள்வார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சிவகங்கை

4. திருச்சி

96 வது நவம்பர் 7 ரசிய சோசலிசப் புரட்சி நாள் வாழ்க!

ரசியாவில் 1917 ஆம் ஆண்டு உழைக்கும் மக்கள் தங்களை அழுத்தி சிதைத்துக் கொண்டிருந்த ஜார் ஆட்சியை மாமேதை தோழர்.லெனின் தலைமையில் தூக்கியெறிந்த நாள், “அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே” என்று முழங்கி பாட்டாளிகளின் சர்வாதிகாரம் நிறுவிய நாள்.

இந்த எழுச்சிகரமான நாளை, திருச்சியில் விழாவாக கொண்டாடியது, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி போன்ற புரட்சிகர அமைப்புகள். காலை 8.30 மணிக்கு BHEL ஆலையில் பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பாக டிரைனிங் சென்டரில் கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதே நேரத்தில் தில்லைநகர் காந்திபுரம் பகுதியில் ம.க.இ.க.தோழர்கள் கொடியேற்றி மக்களிடையே நவம்பர் 7 புரட்சியினை விளக்கி நாமும் அம்மக்களை போல் போராட முன் வரவேண்டும் என றை கூவல் விடுத்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி இந்நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்தினார்.

புத்தூர் சண்முகா திருமண மண்டபத்தில் மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை நவம்பர் புரட்சிதின விழா சிறப்பாக நடைபெற்றது.

தலைமையேற்ற பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் தோழர் சுந்தர்ராஜ், “தொழிலாளி வர்க்கத்துக்கு உரிமையை வழங்கிய புரட்சிதினம், மிதிபட்டு, நசிபட்டு கிடந்த உழைப்பாளி வர்க்கத்தை தலை நிமிர வைத்த நாள், உழைப்பாளியின் வியர்வையே தேசத்தின் முகவரி என முதலாளி வர்க்கத்தின் செவிப்பறையில் அறைந்து கூறிய நாள், ஆனால் இன்று முதலாளித்துவ கொடூர சுரண்டல் என்றுமில்லா வண்ணம் ஒவ்வொரு துறையிலும் தன் ராட்சத கரங்களை அகல விரித்து தொழிலாளியின் கழுத்தை லாப வெறி கொண்டு இறுக்குகிறது, தொழிலாளர்கள் விடுதலையை நோக்கி தமது கரங்களை இணைக்கும் சுழல் தோன்றியுள்ளது. புரட்சியின் தேவையை முன்மொழிகிறது. இதற்கான வேலைத்திட்டம் நமது கரங்களில் உள்ளது, நடைமுறையில் இறங்குவோம், புரட்சியை நடத்துவோம்” என்றார்.

“நிலப்பிரபுத்துவ பிற்போக்கு பண்பாட்டுக்கெதிராக பாட்டாளி வர்க்க பண்பாட்டின் தேவை” எனும் தலைப்பில் பெண்கள் விடுதலை முன்னணி தோழர். பவானி பேசினார், “இன்று உழைக்கும் மக்களின் வாழ்க்கையை ஆக்ரமித்துள்ள பிற்போக்கு திருவிழாக்கள், பண்டிகைகள் கணப்பொழுது சந்தோசத்தை கொடுக்கிறது, ஆனால் அதன் பின்னே படும் வேதனை சொல்லி மாளாது, நரகாசுரனை கொன்று மக்களை பட்டாசு வெடித்து கொண்டாட சொல்லும் பார்ப்பனியத்தின் மோசடியை உணராமல் அசுரர்கள் நாம் இதில் மூழ்கி உள்ளோம்.

ஒவ்வொரு பண்டிகைகளும் மக்களின் பாக்கெட்டை காலிசெய்யும் படிதான் வருகிறது, முதலாளிகளின் கொழுத்த லாபத்துக்காக உழைக்கும் மக்கள் பலியாகிறோம், டாஸ்மாக் மூலம் லாப இலக்கை உயர்த்துகிறது ஜெயா அரசு, உண்மையில் தாலியறுக்கும் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது என்பதுதான் கொடுமை, ஆனால் ரசிய சோசலிச புரட்சி உழைக்கும் மக்களின் நிறைவான வாழ்க்கையை மட்டும் கணக்கில் எடுத்து, பெண்களை சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களாக உயர்த்துவதற்கு ஏற்க அனைத்து அடிமைத் தனத்திலுருந்தும் விடுவித்தது. அது போன்ற நாள் இங்கு வர நாம் அமைப்புகளில் இணைந்து போராட வேண்டும்” என்றார்.

“ஏகாதிபத்திய சீரழிவு பண்பாட்டிற் கெதிராக பாட்டாளி வர்க்க பண்பாடு” என்கிற தலைப்பில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர். ஓவியா பேசினார், “புரட்சி நாள் நம்மை ஏங்க வைக்கிறது அப்படி ஒரு நிறைவான நாள் இங்கும் தேவை என்பதை உணர்த்துகிறது.

இன்றைய இளைய சமுதாயம் எதை நோக்கிப் போகிறது? நாட்டுப்பற்றோ மக்கள் மீதான அக்கறையோ இன்றி வெறும் என்ஜாய் பண்ணும் விட்டேத்தி தனத்தில் மூழ்கி உள்ளது.

செல்போன், இன்டர்நெட், வீடியோ கேம், பேஸ்புக், இதில் நுழைந்து ஆதியில் இருந்து அந்தம் வரை பூந்து விளையாடுகின்றனர், தமது பிள்ளைகள் நன்றாக வளர்கிறார்கள் என பெற்றோர்கள் கனவில் மூழ்கி உள்ளனர். ஆனால் எந்த விசயத்தில் வளர்ச்சி என பார்க்கும் போது அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது, நடுத்தர வர்க்கம் பிள்ளைகளை தனி ரூம் ஒதுக்கி அவன் நடத்தையை கவனிக்காமல் கம்ப்யூட்டரில் மூழ்கியிருக்கிறான் என கற்பனையில் இருப்பது அவனின் சீரழிவு கலாச்சாரத்துக்கு பச்சைக் கொடி காட்டுவதே,

பெண்கள் மீதான பாலியல் வன்முறை, அதிகரித்து ஒட்டுமொத்த பெண்னினமும் பாதுகாப்பற்று நிற்கும் நிலையை இந்த ஏகாத்திபத்திய சீரழிவு உருவாக்கியுள்ளது. இதை வெட்டியெறிந்து இங்கும் ஒரு புரட்சியை சாதிக்காமல், சீரழிந்து நிற்கும் இளைய சமூதாயத்தை மீட்டெடுக்க முடியாது, அந்தக் கடமை நமது தோளில் சுமத்தப்பட்டுள்ளது, வாருங்கள்” என அறை கூவினார்.

இடையில் கலாச்சார போட்டி என புதிய இளந் தோழர்களின் பறை முழக்கங்கள், புரட்சிகர பாடல்கள், கவிதைகள் அரங்கேறின. வருங்கால புரட்சியின் கொழுந்துகளான சிறு குழந்தைகள் பகத்சிங், விவசாயி, பறை இசைப்பவர், நாடோடிகள் போன்ற மாறுவேடமிட்டு பார்வையாளர்களை ஈர்த்தனர். புரட்சிகர உற்சாகத்தை பார்வையாளர்களுக்கு ஊட்டினர். பங்கேற்ற அனைவருக்கும் பரிசு வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டது. பெவிமு தோழர். சுமதியின் சிலம்பாட்டம் பார்வையாளர்களின் உணர்ச்சியை தட்டி எழுப்பியது.

இறுதியில் மைய கலைக்குழுவினர் பாடிய புரட்சிகரபாடல்கள் அனைவருக்கும் புரட்சிகர உணர்வை மேலும் அதிகப்படுத்தியது. ம.க.இ.க தோழர். சரவணனின் நன்றியுரையுடன்… சர்வதேசிய கீதம் பாடப்பட்டு நிகழ்ச்சி நிறைவுற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் : –
ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு., திருச்சி.

ரேஷ்மா : பாலைவனத்தின் கம்பீரக் குயில் !

13

ரேஷ்மாபாகிஸ்தானை சேர்ந்த பிரபல நாட்டுப்புற இசைப்பாடகி ரேஷ்மா (வயது 66) கடந்த நவம்பர் 3-ம் தேதி காலமானார். லாகூர் மருத்துவமனை ஒன்றில் ஏப்ரல் 6 முதல் தொண்டை புற்றுநோய்க்கான சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த அவரது உயிர் கோமா நிலையிலேயே பிரிந்தது. எண்பதுகளில் இந்திய மற்றும் பாகிஸ்தான் மக்களிடையே குறிப்பாக இந்தி சினிமா பாடல்களில் ரேஷ்மாவின் உணர்ச்சி ததும்பும் சூஃபி மரபு நாட்டுப்புறப் பாடல்கள் மிகவும் பிரசித்தமானது.

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பீகானீர் என்ற ஊரில் 1947-ல் பிறந்த ரேஷ்மா பிரிவினைக்கு பின் பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார். பாகிஸ்தான் வானொலியில் தனது பன்னிரெண்டாவது வயதில் அவர் ‘லால் மேரி பத் ரக்கியோ பல்லா’ என்ற புகழ் பெற்ற பாடலை பாடியதன் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். முறையாக சங்கீதம் எல்லாம் கற்றிராத ரேஷ்மா, பஞ்சாரா என்ற நாடோடி சமூகத்தில் பிறந்தவர். அச்சமூகத்தின் மதம், இசை போன்றவற்றில் இசுலாமிய சூஃபி மரபு இரண்டற கலந்தது. ரேஷ்மாவின் தந்தை ராஜஸ்தானில் ஒட்டகத்தை விலைக்கு வாங்கி, அதனை பாகிஸ்தானிலுள்ள கராச்சிக்கு சென்று அங்கு விற்று, அங்கிருந்து வாங்கி வரும் குதிரையை பின்னர் ராஜஸ்தானில் விற்கும் வணிகராக இருந்து வந்தார். ரேஷ்மாவின் குடும்பத்தினர் முதலில் அவரது பாடும் திறனைப் பற்றி அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை.

கராச்சி நகரில் நடந்த சூஃபி அறிஞர் லால் சபாஸ் கலந்தர் நினைவு நாளில் கலந்து கொண்ட ரேஷ்மா, 13-ம் நூற்றாண்டினைச் சேர்ந்த முன்னோடி சூஃபி மரபின் பல்துறை வித்தகர் அமீர் குஸ்ரு இயற்றி, இசையமைத்து பின் இன்னொரு சூஃபி ஞானி புல்லஷா மெட்டை சிறிது மாற்றியமைத்த பாடலான ‘லால் மேரி’ பாடலை பாடத் துவங்கினார். இறைவனோடு இரண்டற கலக்கும் காதலியாக உருவகப்படுத்தப்பட்டிருக்கும் பாடல் அது.

பெர்சிய மற்றும் இந்திய கூட்டிணைவில் உருவாகி வளர்ந்த கவ்வாலி இசை மரபில் வந்த அந்த சூஃபி பாடலானது அங்கு வந்திருந்த திரைப்பட இசையமைப்பாளர் ஒருவரை பெரிதும் கவரவே ரேஷ்மா நாடறிந்த பாடகியாக மாறினார். பின்னர் திரைப்படங்களில் பாடிய ரேஷ்மாவுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்த பாடல் 1983-ல் வெளியான ஹீரோ படத்தில் வரும் ‘லம்பி ஜூதாயி சார் தினோன்’ என்ற பாடல்தான். இது காதலியின் பிரிவுத் துயரை வெளிப்படுத்தும் பாடலும் கூட.

அந்தப் பாடலின் வரிகள் எளிமையான படிமங்களோடு இருப்பது மட்டுமின்றி, காதலனை பிரிந்த துயரத்தினை பேசுகின்ற மொழியில் கம்பீரமாக இசைக்கப்பட்டதுமாகும். சூஃபி மரபின் செவ்வியல் தாளக் கணக்கை காதலுடைய சோகத்தின் உச்சத்திற்கும் தந்து செல்லும் வகையில் இப்பாடலின் இசை அமைக்கப்பட்டிருக்கும். பாடகரின் மூச்சை எப்படி பிரயோகிப்பது என்பது குறித்தும் சில கணக்குகள் இம்மரபில் இருக்கின்றன.

ரேஷ்மாசூஃபி மரபில் இலக்கண சுத்தமாக எதுவும் கிடையாது என்ற போதிலும் இறைவனுக்கு மட்டும் கொஞ்சம் தாளக்கட்டில், மூச்சு பிரயோகத்தில் இலக்கணம் பார்க்கப்படும். இத்தாளக் கட்டை சமரா என்றும் அழைப்பார்கள். இந்த வகை ஓரளவு கஜல் வகையான சூஃபி இசை மரபில் வருவதாகும்.

ஒன்பதாம் நூற்றாண்டில் இசுலாமிய மதபீடங்கள் நுண்கலைகளுக்கு எதிராக நின்ற தருணத்தில் அவர்களிடமிருந்து ‘தொழுகை தேவையில்லை, இசையின் மூலமே இறைவனை அடையலாம்’ என்று கிளம்பிய சூஃபி ஞானிகள் அன்றிருந்த அடிமை மக்களோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள். சுல்தான்களின் ஆடம்பரங்களுக்கு எதிராக இறைவனை மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என்று கிளம்பிய இசுலாத்தின் புதிய பிரிவினர் இவர்கள். துயரம், ஆத்திரம், மகிழ்ச்சி என எல்லா உணர்ச்சிகளையும் பேசத் தலைப்பட்டு அதன் பின் அதனை இசையின் ஊடாகவே சமூகத்தின் உணர்வாக மாற்றீடு செய்து பாடும் சூஃபி ஞானிகள் பெரும்பாலும் ஒன்றிரண்டு பக்க வாத்தியங்களுக்கு மேல் வைத்துக் கொள்வதில்லை. ஸ்வரம், ராக அமைப்புகளை முறையாக பின்பற்றிடாத போதும் சூஃபி இசையின் இனிமை காரணமாக இந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீதம் அதனிடமிருந்து பெற்றுக் கொண்டது ஏராளம்.

பார்ப்பனிய மதம் தென்னிந்தியாவில் வீழ்ச்சியடைந்து பின் மீண்டெழும் காலத்தில் சைவக் குரவர் நால்வரும், ஆண்டாளும், ஆதி சங்கரனும் பாடிய பாடல்கள் இறைவனை நண்பனாக, காதலனாக, தாயாக உருவகித்து பாடியதை அனைவரும் அறிந்ததே. மாறாக இறைவனை காதலியாக உருவகிக்கும் பாடல்கள் சூஃபி மரபில் அதற்கு முன்னரே வெளி வந்தன. அதே நேரத்தில் அடிமைகளின் விடுதலைப் பாடலைப் போல சூஃபி இசை அரேபியாவில், பெர்சியாவில் நிலை கொண்டிருந்தது. வணிகர்களின் வழிநடைப் பாடல்களாகவும் பின்னர் அவை பிரசித்தி பெற்றன. சென்ற இடத்திலெல்லாம் சூஃபி ஞானிகள் அங்குள்ள மக்களின் பண்பாடு, கலாச்சாரம், மொழி என எல்லாவற்றுக்கும் தக்கபடி தங்களை, தங்களது இசையை தகவமைத்துக் கொண்டனர். அனைத்தையும் கற்றுக்கொள்ளவும் செய்தனர்.

ரேஷ்மாஎளிய மக்களின் இசைக் கருவிகளான தோலினால் செய்யப்பட்ட வாத்தியங்களையும், ஊது குழல்களையும் முதலில் அவர்கள் பயன்படுத்தினர். தபேலா, ஹார்மோனியம், டோலக், தாயிரா போன்றவை சூஃபி இசையில் முக்கியமான இசைக் கருவிகளாகும். அந்தக் காலத்தில் தமிழகம் வரை வந்த இவர்கள் ஒரு டோலக்கு ஒன்றைக் கையில் வைத்து தட்டியபடி ஊர் ஊராக சென்று மக்கள் மத்தியில் பாடி வந்தனர். பக்கீர்கள் என்ற பெயரில் வந்த இவர்கள் பின்னாட்களில் திப்புவின் மகன்கள்  நடத்திய வேலூர் புரட்சிக்கு தங்களது இத்தகைய பாடல்கள் மூலம் தென்னிந்தியா முழுக்க படைவீரர்களை அணிதிரட்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உணவிற்காகவும், பிற வாழ்வியல் தேவைக்காகவும் நாடு முழுக்க சுற்றித் திரியும் பஞ்சாராக்களுக்கு துயரம் அன்றாட வாழ்க்கையின் எதார்த்தம். அவர்கள் இழந்து போனதாக நம்பப்படும் எரிந்து போன காட்டின் துயர் அது. தான் செல்லும் இடங்களில் உள்ள மக்களின் மொழி, கலை வடிவம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு அதற்கு தனது உள்ளடக்கத்தை வழங்கியவை சூஃபி இசைப் பாடல்கள். ஆன்மாவினை ஒழுங்கற்ற உடலோடு இணைக்க ஒரு தாளக்கட்டை பயன்படுத்த வேண்டும் என்று கருதிய இவர்கள் ஏற்றுக் கொண்ட முறைதான் சூஃபி இசை மரபு. ஓரிடத்தில் தங்காத ஓட்டமே அவர்களை இசையின் பல்பரிமாணங்களை கற்றுக்கொள்ளவும், பல்வேறு இசைக் கலவைகளையும் செய்ய உதவியது.

ரேஷ்மாஇசுலாமிய பிரிவுகளில் சூஃபி மரபை முக்கிய பிரிவுகளான ஷியா, சுன்னி போன்றவை ஏற்றுக்கொள்வதில்லை. அதிலும் இசை, நடனம் போன்றன அவர்களைப் பொறுத்த வரை ஹர்ரம் (பாவம்). இத்துடன் இறந்த ஞானிகளின் கல்லறைகளான தர்காக்களை வணங்குவோர் சூஃபி இசுலாமியர்கள். இப்படி செய்பவர்கள் மைய இசுலாமை பொறுத்தவரை பாவிகள்தான். எனவேதான் இசுலாமிய நாடுகள் பலவும் சூஃபி வழிபாட்டை தடை செய்துள்ளன. அவர்கள் இசையுடன் கூடிய நடனமான சாம ஆடுவதன் மூலம் இறைவனை அடையலாம் எனச் சொல்வது மையவாத இசுலாமியர்களுக்கு அவ்வளவாக உவப்பில்லை.

இந்தியாவில் பத்தாம் நூற்றாண்டின் அடிமைகள் அரசோடு உள் நுழைந்த சூஃபி மரபை இந்தியாவில் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத சாதியினர் ஏற்றுக் கொண்டது தற்செயலானதல்ல. நாடோடிகளாக அறியப்பட்ட பஞ்சாரா சாதியினரும் இம்மரபு மூலம் இறைவனை துதிக்கலாம் என்பதால் இதன்பால் ஈர்க்கப்பட்டனர். முரண்நகை என்னவென்றால் இதே பஞ்சாராக்கள் தான் முகமது கோரியை எதிர்த்த பிரிதிவிராஜனின் படைவீரர்களாம்.

ரேஷ்மாரேஷ்மாவின் குரலில் நளினம் இல்லை. ஆனால் உயிர் இருக்கிறது. பாலைவனத்தின் கம்பீரம் இருக்கிறது. மீண்டு சுழன்று வரும் ரேஷ்மாவின் குரலில் பாலைவனத்தில் நடந்து போகும் யாத்திரிகனின் கால்நடைப் பயணத்தின் சூறைக் காற்று இருக்கிறது. நமது பாலைத் திணையின் பிரிவுத் துயரும் அதில் இருக்கிறது. தனிமையின் துயரத்திலிருந்து எழும் சூஃபி குரல் பொதுவான துயரமாக இதன் உச்சத்தில் சென்று ஒருவித பரவச நிலையை கேட்பவரிடம் ஏற்படுத்துவதை நுஸ்ரத் பதே அலி கானிடம் காண்பதை போலவே ரேஷ்மாவின் குரலிலும் காண முடியும். இதன் வடிவங்களை இளையராஜாவிலும், ஏ.ஆர் ரஹ்மானின் சில மெலடிகளிலும் திரிந்த வடிவில் காண முடிகிறது. பம்பாய் படத்தில் வரும் கண்ணாளனே பாடலும், குரு படத்தில் வரும் மன்னிப்பாயா பாடலும் இதற்கு சில உதாரணங்கள்.

ரேஷ்மாவின் குரலில் தனிமையின் துயரம் இருக்கிறது. ஆனால் அந்த தனிமை மீராவின் தனிமை தோற்றுவிக்கும் தனிநபரின் பக்தி பரவச மனநிலை அல்ல. ஒரு சமூகத்தின் தனிமையின் துயரம் அது. புறக்கணிக்கப்பட்ட மக்கள் பெரும்பான்மை சமூகத்தினை எதிர்த்து இறைவனை இசையின் மூலம் அடையும் முயற்சியில் ஏற்படும் அயற்சி ஆங்காங்கு அவரது பாடல் ஓட்டத்தில் தென்படுகிறது. அந்த மன நிலையில் உலகெங்கிலும் இருக்கும் மக்களை சகோதரனாக, காதலனாக, காதலியாக, குடும்ப உறுப்பினராக கருதும் பொதுமன நிலை இருக்கிறது. தனது மறுநாள் வாழ்க்கை குறித்த கவலைகள் ஏதுமில்லாத போதும், இப்படி வாழ சபிக்கப்பட்ட இனத்தின் மெல்லிய குமுறல் இடையிடையே ஒலிக்கிறது. பாடகரின் மகிழ்ச்சியும் மொத்தமாக வெளிப்படுகிறது. தாளக்கட்டை தளர்த்தி கீழே இறங்குகையில் பக்க வாத்தியம் ஒலிக்கத் துவங்குகிறது. ரேஷ்மாவின் மூச்சுப் பிரயோகம் இனி அமைதியுறும் என அது சொல்லாமல் செல்கிறது. பக்தி விடை பெறும் இந்த தளத்தில் ரேஷ்மாவின் கவாலி இசை மடை திறந்து ஓடும் காதலின் மெல்லிசையாக ஓடத் துவங்குகிறது.

reshma-7பாகிஸ்தான் மீதும், மொகலாயர்கள் மூலம் இந்தியாவில் கலந்த இசுலாமியப் பண்பாடு குறித்தும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இதர வானரங்கள் என்னதான் வெறுப்பைக் கட்டியமைத்தாலும் அவை மக்களிடம் எடுபடவில்லை என்பதற்கு ரேஷ்மாவின் வெற்றியே ஒரு சான்றாகும். கடவுள் மற்றும் சாதியை வரித்துக் கொண்ட பார்ப்பனியப் பண்பாட்டின் பாசுரங்களை விட வாழ்வியலையும், மனிதர்களின் அன்பையும் இழையாகக் கொண்ட சூஃபி மரபு உள்ளிட்ட மொகலாயர் பண்பாடு நிச்சயமாக மேம்பட்டதுதான். அதனால்தான் சூஃபி மரபை இசுலாமிய மதவாதிகளும் ஏற்றுக் கொள்வதில்லை.

மதங்களிடமிருந்து மனித சமூகத்தை விடுவிக்க எண்ணும் சூஃபி மரபு நமது சித்தர் மரபுக்கு ஒப்பானது. ரேஷ்மா எனும் அந்த பாலைவனத்து துயரை கம்பீரமாக ஒலிக்கும் குரல் இனி இசைக்கப் போவதில்லை. அவருக்கு நமது அஞ்சலிகள்!

– வசந்தன்

பிலால், பக்ருதின், பன்னா கைது: தீவிரவாத ஒழிப்பா – முசுலீம் வேட்டையா ?

26

போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய மூவரும் அடுத்தடுத்துக் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக போலீசின் துணிச்சலுக்கும் திறமைக்கும் கிடைத்த வெற்றியாகத் தமிழக அரசு கூத்தாடிக் கொண்டாடி வருகிறது.  எனினும், ஜெயா அரசின் இந்த ஆரவாரத்தையெல்லாம் மீறித் தமிழக போலீசின் சொல்லிக் கொள்ளப்படும் இந்த சாகச நடவடிக்கை குறித்தும், அதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திவரும் விசாரணைகள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

போலீசால் கைது செய்யப்பட்டுள்ள இசுலாமியர்கள்
தமிழக போலீசால் கைது செய்யப்பட்டுள்ள (இடமிருந்து) பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன்

போலீஸ் பக்ருதீன் சென்னைக்கு வந்திருப்பதைத் துப்பறிந்து, அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து, அவரைத் தொடர்ந்து சென்று, எதிர்பாராத சமயத்தில் அவர் மீது பாய்ந்து, அவரோடு கட்டிப்புரண்டு சண்டை போட்டு, பெரும் போராட்டத்துக்குப் பிறகுதான் பக்ருதீன் கைது செய்யப்பட்டதாகத் தமிழக போலீசு கூறிவரும் அதேசமயம், இதனை மறுக்கும் தகவல்கள் பல்வேறு தரப்பிலிருந்து வெளிவந்துள்ளன.

‘‘சில முசுலீம் அமைப்புகளின் வற்புறுத்தலால் பக்ருதீன் சரணடைய ஒப்புக் கொண்டதாகவும், இதனையடுத்து அந்த முசுலீம் அமைப்புகள் போலீசோடு நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில், ஒரு பொதுவான இடத்தில் பக்ருதீனை போலீசிடம் சரணடைய வைப்பது” என முடிவாகியதாக ஜூனியர் விகடன் (13.10.13, பக்.45) கிசுகிசு பாணியில் எழுதியிருக்கிறது.

பக்ருதீனுக்காக சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செதுள்ள இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம், ”பக்ருதீனை சென்னை பெரியமேட்டில் உள்ள விடுதி ஒன்றில் வைத்துதான் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்” எனக் கூறியிருக்கிறார். (குமுதம் ரிப்போர்ட்டர், 13.10.2013, பக்.8)

‘‘போலீஸ் பக்ருதீன் சாகுல் ஹமீது என்பவர் மூலம் தமிழகம் மற்றும் ஆந்திர போலீசாரைத் தொடர்பு கொண்டு, தான் சரணடைய விருப்பம் தெரிவித்ததாகவும், அதன் அடிப்படையில்தான் போலீசார் அவரை பெரியமேட்டுக்கு வரச் சொல்லிக் கைது செய்ததாக ஒரு செய்தி வந்திருப்பதாக’’க் குறிப்பிட்டுள்ள தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, ”போலீஸ் பக்ருதீன் தானாகச் சரணடைந்தாரா? அல்லது போலீசார் சண்டை போட்டுப் பிடித்தார்களா? எது உண்மை?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தீவிரவாதிகளைக் கண்காணிப்பதற்கு எஸ்.ஐ.டி., எஸ்.ஐ.யூ., எஸ்.ஐ.சி., என ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகள் தமிழக போலீசில் இருந்து வந்தாலும், அவைகளில் ஒன்று கூட பக்ருதீன் கூட்டாளிகள் புத்தூரில் தங்கியிருப்பதைத் துப்பறிந்து கண்டுபிடிக்கவில்லை. சரணடைந்த பக்ருதீனிடமிருந்து தான் போலீசார் அந்தத் தகவலைப் பெற்றுள்ளனர்.  இம்மூவரையும் கைது செய்த பிறகோ, சமீபத்தில் நடந்த இந்து முன்னணி தலைவர்கள் கொலை வழக்குகள் அனைத்தையும் இந்த மூவரின் தலையில் கட்டிவிட்டது, தமிழக போலீசு.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய அப்பாவிகள்
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மோசடியாக சிக்கவைக்கப்பட்டு ஐந்தாண்டு சிறைவாசம் அனுபவித்த அப்பாவி முசுலீம்கள்.

இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டிருப்பது தொடர்பாக தமிழக டி.ஜி.பி. 27.7.2013 அன்று வெளியிட்டிருந்த அறிக்கையில், ”பா.ஜ.க. மாநில மருத்துவ அணிச் செயலர் அரவிந்த் ரெட்டி கொலை, பணப்பரிமாற்றம் விவகாரம் தொடர்பாக நடந்தது.  இவ்வழக்கில் வேலூரைச் சேர்ந்த வசூர் ராஜா உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டு, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செயப்பட்டுள்ளது.  பரமக்குடி நகர பா.ஜ.க. கவுன்சிலர் முருகன், சொத்து விற்பனை தொடர்பாக நடந்த தகராறில் கொல்லப்பட்டார்.  இவ்வழக்கில் நான்கு பேர் கைது செயப்பட்டுள்ளனர்” என விளக்கியிருந்தார். ஆனால், இதற்கு மாறாகத் தற்பொழுது அரவிந்த் ரெட்டி, முருகன் கொலைகளுக்கும் பக்ருதீனும் அவரது கூட்டாளிகளும்தான் காரணம் என போலீசு கூறுகிறது.  இதில் எது உண்மை? எது பித்தலாட்டம்?

மேலும், இம்மூவரும் இந்து முன்னணியின் ராம.கோபாலன், தினமலர் அதிபர் கோபால்ஜி ஆகியோரைப் படுகொலை செய்யத் திட்டம் தீட்டியதாகவும்; சென்னையில் நடந்த திருப்பதி குடை ஊர்வலத்தைச் சீர்குலைக்கச் சதி செய்ததாகவும்; மோடியைக் கொல்ல நோட்டம் விட்டதாகவும் பீதி கிளப்பியிருக்கிறது, தமிழக போலீசு.  இதன் மூலம் தானே முன்வந்து போலீசிடம் சரணடைந்ததாகக் கூறப்படும் பக்ருதீனையும், கத்தியைத் தவிர வேறு ஆயுதங்கள் இல்லாத நிலையில் கைது செயப்பட்ட பிலால் மாலிக், பன்னா இஸ்மாயிலையும் மிகப்பெரிய தீவிரவாதக் கும்பலாகச் சித்திரிக்க முனைந்து வருகிறது.

‘‘பக்ருதீனைப் பற்றி போலீசு கூறுவதில் கொஞ்சம் உண்மையும் நிறைய பொய்யும் இருக்கிறது” எனக் கூறுகிறார், அவரது சகோதரர் தர்வேஸ் மைதீன்.  ”1995-ஆம் ஆண்டில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் குண்டுவெடிப்பு வழக்கில் முதன்முதலாக பக்ருதீனைக் கைது செய்தார்கள். இதில் உண்மைக் குற்றவாளி வெங்கடேசன் என்ற முஸ்தபா என்பது தெரிய வந்தது. ஆனாலும், அன்று முதல் பக்ருதீனைத் தீவிரவாதி என முத்திரை குத்திவிட்டது போலீசு” என்கிறார் அவர்.

பக்ருதீனின் சகோதரர் என்ற ஒரே காரணத்திற்காகவே தர்வேஸ் மைதீனும் அத்வானியைக் கொல்ல பாலத்திற்கு அடியில் குண்டு வைத்த வழக்கில் கைது செயப்பட்டு, பிணையில் வெளியே வந்திருக்கிறார். பக்ருதீனைக் காரணம் காட்டியே, அக்குடும்பத்தைத் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்திருக்கிறது, போலீசு.  பக்ருதீன் மனைவிக்கு நிர்பந்தம் கொடுத்து, அவரை மணவிலக்குப் பெற வைத்திருக்கிறது.

‘‘ஒரு கொலைவழக்கில் கைதாகி விடுதலை ஆன பிறகு, எந்தப் பிரச்சினை என்றாலும் அவர் மீதும் சேர்ந்து வழக்குப் போடுவது போலீசுக்கு வாடிக்கையாகி விட்டது.  போலீஸ் டார்ச்சரால் எங்க குடும்பமே சீரழிஞ்சு போச்சு” எனக் கூறுகிறார், பன்னா இஸ்மாயிலின் மனைவி ஷமீம் பானு.

போலீசின் இந்தச் சித்திரவதைகளும் அச்சுறுத்தல்களும் ”அவர்கள் தவறு செய்திருந்தால் தூக்கில் கூட போடுங்கள்; எங்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்” எனக் கூறும் நிலைக்குத் அக்குடும்பங்களைத் தள்ளிவிட்டிருக்கிறது.  பக்ருதீன், பன்னா இஸ்மாயிலின் குடும்பங்கள் மட்டுமல்ல, ஏறத்தாழ முசுலீம் சமூகத்தின் நிலைமையே இதுதான்.  தம் மீது குத்தப்பட்டுள்ள தீவிரவாத முத்திரையைக் களைந்து கொள்வதற்கு அச்சமூகமே தீயில் இறங்கித் தம்மைப் புனிதனாகக் காட்டிகொள்ளும் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

சிறு சிறு திருட்டுகள், அடிதடி வழக்குகளில் கைது செய்யப்படும் இளைஞர்களின் பெயர்களை ரௌடிகள் லிஸ்டில் வைத்து வதைக்கும் போலீசின் கிரிமினல் புத்தியும், அத்துறையில் ஊறியிருக்கும் இந்து மதவெறியும் ஒருசேரக் கலந்து பக்ருதீன் விவகாரத்தில் வெளிப்பட்டுள்ளது.  இது மட்டுமின்றி, பிடிபட்ட பக்ருதீன் உள்ளிட்ட மூவர் மீது அரவிந்த் ரெட்டி, முருகன், ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்குகளைச் சகட்டுமேனிக்குப் பாய்ச்சியிருப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அரசியல் நோக்கங்களுக்கு ஒத்தூதும் வேலையையும் தமிழக போலீசு கனகச்சிதமாகச் செய்து முடித்திருக்கிறது.  தமிழகத்தில் மட்டுமல்ல, நாடெங்கும் நடந்துள்ள பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் போலீசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளைக் கீறிப் பார்த்தாலே, அதனின் புத்தியில் முசுலீம் வெறுப்பும் இந்து மதவெறிச் சார்பும் உறைந்து போயிருப்பதையும்; அறிவிக்கப்படாத ஆர்.எஸ்.எஸ். இன் அடியாளாக அத்துறை செயல்பட்டுவருவதையும் புரிந்துகொள்ளலாம்.

அசீமானந்தா
”மாலேகான் குண்டுவெடிப்பை நாங்கள்தான் செய்தோம்” என ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த அசீமானந்தா.

• மகாராஷ்டிராவிலுள்ள மாலேகான் நகரிலும், ம.பி.யிலுள்ள அஜ்மீர் தர்காவிலும், சம்ஜௌதா விரைவு ரயிலிலும் நடந்த குண்டுவெடிப்புகளை ஆர்.எஸ்.எஸ். கும்பல்தான் நடத்தியது என்பது தற்பொழுது உறுதியாகி விட்டது.  அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் கைது செயப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த அசீமானந்தா இதனை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.  ஆனால், அக்குண்டுவெடிப்புகள் நடந்தவுடனேயே அதற்கான பழி கயமைத்தனமான முறையில் முசுலீம்கள் மீது சுமத்தப்பட்டு அப்பாவிகள் கைது செய்யப்பட்டனர்.

குறிப்பாக, மாலேகான் குண்டுவெடிப்பில் அப்ரார் அகமது என்ற போலீசு ஆட்காட்டி அளித்த சாட்சியத்தை ஆதாரமாகக் காட்டி, 9 முசுலீம்களைக் கைது செய்தது, அம்மாநில தீவிரவாதத் தடுப்பு போலீசு. வழக்கு விசாரணையின் போக்கில் அப்ரார் அகமதுவும் இவ்வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட விசித்திரமும் நடந்தது.  அதன்பின் அப்ரார் அகமது அந்த 9 முசுலீம்களுக்கும் எதிராக, தான் அளித்த சாட்சியத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டான்.  ஆனாலும், தீவிரவாதத் தடுப்பு போலீசு அப்ரார் அகமது அளித்த பொய் சாட்சியத்தின் அடிப்படையிலேயே வழக்கை நடத்தி வந்தது.  இவ்வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட பிறகும், வழக்கின் போக்கில் எந்த மாற்றமும் நடக்கவில்லை.  மாலேகான் குண்டு வெடிப்பை இந்து மதவெறியர்கள்தான் நடத்தினார்கள் என்பது அம்பலமான பிறகுதான், அந்த 9 முசுலீம்களும், செய்யாத குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசத்தை அனுபவித்த பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டனர். எனினும், அந்த அப்பாவிகள் இன்னும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை.

• மும்பை புறநகர் பகுதி மின்சார ரயில்களில் ஜூலை 11, 2006 அன்று நடந்த ஏழு குண்டு வெடிப்புகளில் 187 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து விசாரணை நடத்திவரும் மகாராஷ்டிரா தீவிரவாதத் தடுப்பு போலீசு பிரிவு, இந்திய மாணவர் இசுலாமிய இயக்கம்தான் (சிமி) இக்குண்டுவெடிப்புகளை நடத்தியதாகக் கூறியதோடு, அவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் குற்றஞ்சுமத்தி 13 முசுலீம்களைக் கைது செய்து சிறையிலடைத்தது.  கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்து வரும் இவ்வழக்கு விசாரணையில், இந்த 13 பேருக்கு எதிராக ஒரு உருப்படியான ஆதாரத்தைக் கூட தீவிரவாதத் தடுப்பு போலீசார் முன்வைக்கவில்லை; குற்றஞ்சாட்டப்பட்டவர்களுள் ஒருவரான இஹ்தேஷம் சித்திக்கிற்கு எதிராகச் சாட்சியம் அளித்துள்ள விஷால் பர்மர் போலீசாரால் தயார்படுத்தப்பட்ட பொய் சாட்சியம் என்பதும் அம்பலமாகியிருக்கிறது.

இதுவொருபுறமிருக்க, மும்பை குற்றப்பிரிவு போலீசு, கடந்த 2008-ஆம் ஆண்டு சாதிக் சித்திக் என்பவர் உள்ளிட்ட ஐந்து பேரைக் கைது செய்தது.  ”இவர்கள் ஐந்து பேரும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள்; இந்த ஐந்து பேர்தான் மும்பை புறநகர் மின்சார ரயில்களில் நடந்த குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்கள்; சாதிக் சித்திக் இதனை ஒப்புக்கொண்டு தங்களிடம் வாக்குமூலம் அளித்திருப்பதாக”க் கூறி வருகிறது, மும்பை குற்றப்பிரிவு போலீசு. ஆனாலும் தீவிரவாதத் தடுப்பு போலீசு பிரிவு, தான் பிடித்த முயலுக்கு மூணுகால் எனப் பிடிவாதமாக 13 பேருக்கும் எதிராக வழக்கை நடத்தி வருகிறது. ஒரே வழக்கில் இரண்டு விதமான விசாரணை முடிவுகள், குற்றவாளிகள் – என்ற இந்தக் கூத்தை விசாரணை நீதிமன்றமும் கேள்விக்குள்ளாக்கவில்லை. இந்நிலையில் பத்திரிகையாளர் ஆஷிஷ் கேதான் (குஜராத் முசுலீம் படுகொலைகளில் இந்து மதவெறிக் கும்பலுக்கு உள்ள பங்கை இரகசிய வாக்குமூலமாக சேகரித்து அம்பலப்படுத்தியவர்) இக்குண்டு வெடிப்பு வழக்கில் போலீசு நடத்தியிருக்கும் விசாரணை பொய் மூட்டையாக இருப்பதால், சுதந்திரமான கமிசனை அமைத்து இவ்வழக்கு குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருக்கிறார்.

முகம்மது ஆமிர் கான்
டெல்லி போலீசால் 20 பயங்கரவாத வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு, 14 ஆண்டு கால சிறைவாசத்திற்கு பிறகு, ”குற்றமற்றவர்; வழக்குகள் மோசடியானவை” எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள முகம்மது ஆமிர் கான்.

Ž • 2010-ஆம் ஆண்டு நடந்த புனே ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கில் ஹிமாயத் பேக் என்ற முசுலீம் இளைஞருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக சாட்சியம் அளித்த அத்துனை பேரையும் இரகசியமாக பேட்டி எடுத்த ஆஷிஷ் கேதான், இச்சாட்சியங்கள் அனைவரும் பேக்கிற்கு எதிராகச் சாட்சியம் அளிப்பதற்கு ஏற்றவாறு (மகாராஷ்டிராவின்) தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டு தயார்படுத்தப்பட்டதை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

இதுவொருபுறமிருக்க, இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் யாசின் பக்தல் கடந்த ஆகஸ்டு மாதம் கைது செய்யப்பட்டார். ”ஜெர்மன் பேக்கரி வழக்கிற்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேக்கிற்கும் சம்பந்தமில்லை; அக்குண்டுவெடிப்பைத் தானும் காதில் சித்திக் என்பவரும்தான் சேர்ந்து நடத்தியதாக” வாக்குமூலம் அளித்திருக்கிறார். ஆனாலும், இவ்வழக்கை நடத்திவரும் தீவிரவாதத் தடுப்பு போலீசு பேக்கிற்கு எதிராகத் தன்னிடம் வலுவான சாட்சியங்கள் இருப்பதாக இன்னமும் கூறி வருகிறது.

குண்டுவெடிப்பு வழக்குகளில் பொய் சாட்சிகளைத் தயாரித்து மோசடியாக வழக்குகளை நடத்தி வருவதற்கு, அப்பாவி முசுலீம்கள் சிக்க வைக்கப்பட்டிருப்பதற்கு, ஆர்.எஸ்.எஸ். கும்பல் நடத்திய குண்டுவெடிப்புகளுக்குக் கூட முசுலீம்கள் மீது பழி போட்ட கயமைத்தனத்திற்கு இன்னும் பல வழக்குகளை எடுத்துக் காட்டலாம். இந்த அத்துமீறல்கள் குறித்த விவாதம் கடந்த இருபது ஆண்டுகளாக இந்திய அரசியல் வெளியில் நடந்து வருகிறது.  இத்துனை ஆண்டுகளாக இது பற்றி வாயே திறக்காத காங்கிரசு கும்பல், இப்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், ”தீவிரவாத வழக்குகளில் அப்பாவி முசுலீம்கள் கைது செய்யப்படுவதை மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்; தவறு செய்யும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு, உப்புப் பெறாத கடிதமொன்றை மாநில அரசுகளுக்குத் தட்டிவிட்டிருக்கிறது. அதேசமயம், இப்படியொரு சடங்குத்தனமாகக் கடிதத்தை அனுப்புவதைக்கூட இந்து மதவெறிக் கும்பல் விரும்பவில்லை. ”இவை முசுலீம்களை தாஜா செய்யும் நடவடிக்கை” என பா.ஜ.க. குதிக்கத் தொடங்கி விட்டது. இந்து மதவெறிக்கும் அரசு பயங்கரவாதத்துக்கும் இடையே மாட்டிக்கொண்டுள்ள முசுலீம் சமூகமோ அச்சத்துக்கிடையே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறது.

-செல்வம்
__________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2013
__________________________________

நடராஜ சோழன் அருளிய முள்ளிவாய்க்கால் முற்றம் !

33

ங்களுக்கு தஞ்சாவூர் என்றால் பெரிய கோயில் நினைவுக்கு வருவதைப் போல, தஞ்சை மக்களுக்கு விளார் என்றால் நினைவுக்கு வருவது நடராஜன்தான். அவரது சொந்த ஊர் என்பதைத் தவிர விளாருக்கு வேறு வரலாறும் கிடையாது. அந்த விளார் சாலைக்கு ஒரு அடையாளம் தரவும் நடராஜனுக்கு ஒரு நிரந்தர பட்டத்துக்கு ஏற்பாட்டை செய்யவும் நடந்த ஏற்பாட்டுக்கான ஒரு விழா நேற்று 8.11.2013 அன்று நடந்திருக்கிறது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாஒருவேளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ராஜராஜன் என்றொருவன் பிறக்காதிருந்தால் இன்றைக்கு தஞ்சையின் அடையாளமாக சசிகலாவும் நடராஜனும்தான் இருந்திருப்பார்கள். ராஜராஜன் கொஞ்சம் முந்திக்கொண்டு பிறந்து ஒரு பெரிய கோயிலையும் கட்டித் தொலைத்ததால் தமிழ்தேசிய புரவலர் நடராஜனுக்கு ஒரு கட்டிடம் கட்டி தன் பெயரை நிலை நாட்டியாக வேண்டிய அவசியம் உருவாகிறது. மற்றபடி அவர் தஞ்சைக்கு செய்ய வேண்டிய பணிகளை செவ்வனே ஆற்றிக்கொண்டுதான் இருக்கிறார். தஞ்சையின் ரியல் எஸ்டேட் விலையை சகட்டு மேனிக்கு ஏற்றியது முதல் மார்க்கெட் போன நடிகைகளை தஞ்சாவூருக்கு பொங்கல் சமயத்தில் அழைத்து வருவது வரை நடராஜன் செய்த பணிகளை ராஜராஜனே வந்தாலும் செய்ய முடியாது.

தமிழ்தேசிய புரவலர் நடராசன்
தமிழ்தேசிய புரவலர் நடராசன்

அந்த நடராஜன் நடத்தும் விழாவை ஒரு தஞ்சாவூர்காரனான நான் புறந்தள்ளுவது பெரும் வரலாற்றுப் பிழையாகி விடுமாகையால் எப்பாடுபட்டாவது சென்று விடுவது என தீர்மானித்தேன். மேலும் விழாவுக்கு அழைக்கப்படாதவர்கள் துரோகிகள் மட்டுமே என ஆனந்த விகடனில் பழ நெடுமாறன் சொல்லியிருக்கிறார் (ஆனால் கூட்டத்தில் அதை மறுத்தார்). அழைக்கப்படாதவன் துரோகியென்றால் வராதவனும் துரோகியாகி விடுவானே எனும் அச்சமும் சேர்ந்து கொள்ள, செல்ல வேண்டுமெனும் தீர்மானம் வலுப் பெற்றது. இந்த முடிவுக்கு வந்த வேளையிலேயே முற்றத்துக்கு முடிவு கட்ட மம்மி முடிவெடுத்த செய்திகள் வர ஆரம்பித்தபடியால், ஜெயாவுக்கு எதிராக நெடுமாறன் சீற்றம் காட்டும் ஒரு அரிய காட்சியைக் காணும் வாய்ப்பு கிட்டலாம் எனும் சாத்தியங்கள் என மனதில் தோன்றின. வாழ் நாளுக்குள் அப்படியான ஒரு காட்சியை காணும் ஆவலும் இணைந்து கொள்ள, தஞ்சைக்கு போவது ஒரு தற்காலிக லட்சியமாகவே மாறிவிட்டது.

விளார் சாலை தஞ்சையின் மறுகோடியில் இருப்பதால் நகரத்து வீதிகளில் முற்றத்து விளம்பரங்களை பார்த்தபடியே செல்லும் வாய்ப்பு கிடைத்தது. என்ன ஆச்சர்யம், எந்த போஸ்டரிலும் பிரபாகரனைக் காணவில்லை. அனேக சுவரொட்டிகளில் நெடுமாறனும் நடராஜனும் மட்டுமே காட்சி தந்தார்கள். மணியரசன் மட்டும் பாலச்சந்திரன் படத்துடன் பேனர் வைத்திருந்தார். அண்ணனுக்கு விமரிசையாக கல்யாணம் செய்து வைத்த களைப்பில் இருப்பதால் நாம் தமிழர் தம்பிகளின் விளம்பரங்கள் பெரிய அளவில் தட்டுப்படவில்லை. இதையெல்லாம் கவனித்தபடியே சென்றதில் முற்றம் வந்து விட்டது.

போஸ்டர்கள்
தஞ்சை நகரை அலங்கரித்த போஸ்டர்கள்

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் தோற்றம் பற்றிய பதிவை இரண்டொரு நாளில் எழுதுகிறேன். இன்று திறப்புவிழா என்பதால் இப்போது விழா அரங்க நிகழ்வுகளை மட்டும் பார்க்கலாம். முதலில் தேனிசை செல்லப்பாவின் பாடல் நிகழ்ச்சி, அதில் அவர் மூன்று முறை உலகை சுற்றி வந்த செய்தியை மூன்று முறையும், தன்னை சிறப்பாக வரவேற்ற மலேசிய மற்றும் கனடா நாட்டு தமிழர்கள் பெயரை நான்கு முறையும், தலைவர் நெடுமாறன் எனும் வார்த்தையை குறிப்பெடுக்க இயலாத அளவுக்கு பல முறையும் குறிப்பிட்டார். அதன் பிறகு அவர் சொன்ன விடயம்தான் செல்லப்பாவைப் பற்றி இங்கே பேச வைக்கிறது. அதாவது நெடுமாறன் இன்னமும் பிரபாகரனுடன் பேசி வருவதாகவும் விரைவில் அவர் வெளியே வருவார் எனவும் உணர்ச்சிப் பெருக்கோடு குறிப்பிட்டார். இந்த இரகசியத்தை தேனிசை செல்லப்பாவுக்கு சொன்ன நெடுமாறன், மற்ற யாருக்கும் சொல்லவேயில்லை. என்ன செய்ய, எல்லா தமிழர்களுக்குமான தலைவனின் நம்பிக்கையைப் பெற்ற ஒரே தமிழனாக தேனிசை செல்லப்பா மட்டும்தான் இருக்கிறார் போல. மற்றவர்களுக்கு அந்த பாக்கியம் இல்லை.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாகிட்டத்தட்ட ஏழு மணிநேரம் நடந்த இந்த நிகழ்வின் சாரத்தை மூன்று வரிகளில் அடக்கிவிடலாம், (சில விதிவிலக்குகள் உண்டு)

  • வள்ளல் நடராஜன் வாழ்க.
  • அய்யகோ இந்த அரசு எங்களை இப்படி துன்புறுத்துகிறதே.
  • ராஜபக்சேவுக்கு துணைபோன காங்கிரசை தண்டிப்போம்.

அதேபோல வழக்கமான தமிழ்தேசிய கூட்டங்களில் காணப்படும் மூன்று சங்கதிகள் இங்கே அத்தனை அதிகமாக இங்கே இல்லை,

  • துரோகி கருணாநிதி எனும் வசைபாடல் கணிசமாக குறைந்திருக்கிறது.
  • பிரபாகரன் மீண்டும் வருவார் எனும் வாக்குறுதி எந்த பேச்சாளரிடம் இருந்தும் வரவில்லை.
  • இந்தியாவே எங்கள் மீது கருணை காட்டும் எனும் மன்றாடல் காசி ஆனந்தனிடம் இருந்து மட்டும்தான் வந்தது. மற்ற பலரும் மகிந்தாவுக்கு இணையான குற்றவாளி இந்தியா என குறிப்பிட்டார்கள்.

ஆகவே தமிழ்தேசிய பாகவதர்கள் தங்கள் பாடல்கள் சலிப்பூட்டாமல் இருக்க சில மாறுதல்களை செய்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

இடம் கொடுத்த மகராசன்,
எங்கள் ம.நடராசன்.
அவன் எல்லாம் வல்ல இளவரசன் – செல்லப்பாவின் பாடல்.

கருத்து முதல் வாதமாக இருந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தை பொருள் முதல் வாதமாக மாற்றியவர் எங்கள் நடராசன் –மருத்துவர் தாயப்பன்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாமேலேயுள்ளவை சில மாதிரிகள். அனேகமாக எல்லா பேச்சாளர்களும் நடராசனை தாஜா செய்தே பேச்சை ஆரம்பித்தார்கள். இந்த முற்றத்தின் தொண்ணுறு விழுக்காடு செலவை நடராசனே ஏற்றார் என்றார் காசி ஆனந்தன். நாங்கள் இந்தியாவை நேற்றும் நம்பினோம், இன்றும் நம்புகிறோம் நாளையும் நம்புவோம் மற்றும் ஈழம் இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எப்போதுமே இருக்கும் எனும் செய்தியை 8436-வது முறையாக சொன்னார் காசி.

அடுத்ததாக வந்தார் முனைவர் ம.நடராசன். சூத்திரதாரியாகப்பட்டவர் சிறந்த சொற்பொழிவாளராக இருக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா? ஆதலால் அவரது பேச்சு அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. சிலரது நிர்ப்பந்தத்தால் இரண்டு நாட்கள் முன்னதாகவே இந்த முற்றம் திறக்கப்பட்டதாக தெரிவித்தார் நடராசன்.

“என்னை இனி தூக்கில் போட்டாலும் கவலையில்லை” என்ற அளவுக்கு வீராவேசமாகப் பேசிய நடராசன், மேற்படி நிர்ப்பந்தம் யாரால் தரப்பட்டது, என்ன வகையான நிர்ப்பந்தம் என்பதை மட்டும் சொல்ல மறுத்து விட்டார்.

அவரை தொடர்ந்து பேசிய நெடுமாறனது பேச்சு வழக்கத்தை விட கொஞ்சம் கடுமையானதாக இருந்தது. அவரது வழக்கமான வாசகங்களான “புலிகள் இந்தியாவின் எதிரியில்லை. நாம் புலிகளை ஒடுக்கியதால் தமிழக கடல் பரப்புக்கு சீனாவின் அச்சுறுத்தல் வரும்” ஆகியவை இப்போது இல்லை. இரண்டு பேரும் தாங்கள் நான்கு நாளாக பெரும் துயரப்பட்டதாகவும், அப்படி நாங்கள் செய்த பாவம்தான் என்ன எனும் புலம்பல்தான் வந்ததே தவிர யார் அப்படி செய்தது எனும் பேச்சு கடைசி வரை இருவரிடமிருந்தும் வரவேயில்லை. ஜெயலலிதா எவ்வளவுதான் ஊமைக்குத்தாக குத்தினாலும் அதனை நேரடியாக சுட்டிக் காட்டாமல் இருக்கும் பெருந்தன்மைதான் இருவரையும் இந்த உயரத்தில் வைத்திருக்கிறது. அந்தச் சூழலிலும் ஜெயாவின் மனம் காயப்படக் கூடாதென்று மத்திய அரசின் உளவுத் துறை கொடுத்த தவறான தகவலுக்கு தமிழ்நாடு அரசு தேவையற்ற முக்கியத்துவம் கொடுப்பதாக மட்டும் சொன்னார் ம.நடராசன்.

மணியரசன்
மணியரசன்

பிற்பாடு வந்த மணியரசனுக்கு, அவர் மார்க்சையும் பெரியாரையும் கசடறக் கற்று தனக்கேயுரித்தான ஒரு தனி பாதையில் போகும் தலைவர் என அறிமுகம் தரப்பட்டது. அவர்தான் விழாவின் திருப்பு முனையான “இந்தியா எங்கள் பேச்சை மதிக்கா விட்டால் தமிழகம் தனியாகப் போக நேரும்” எனும் எச்சரிக்கை வாக்கியத்தை உதிர்த்தார். அவருக்குப் பிறகு வந்த தஞ்சை.இராமமூர்த்தி, வெள்ளையன் மற்றும் மகேந்திரன் ஆகியோரது உரைகளில் குறிப்பிடும்படி ஏதுமில்லை என்பதால், விரைவில் ஈழம் பெற்றுத் தரவிருக்கும் பாஜகவின் பொன்னார் அவர்களுடைய பேச்சுக்கு வரலாம்.

மொத்த நிகழ்விலும் ஒரு ஆராய்ச்சியாளனுக்கு உரிய நேர்த்தியுடன் பேசியது பொன்.ராதா மட்டுமே. மணியரசனின் பேச்சைப் பற்றி குறிப்பிட்ட அவர் “காங்கிரசின் தவறுக்கு இந்தியாவில் இருந்து பிரிவோம் என சொல்வதா? தமிழ்நாடு இந்தியாவின் நெடிய கலாச்சாரத்தின் ஒரு அங்கம்’’ என்று உணர்ச்சி பொங்க சொல்லி விட்டு கூட்டத்தைப் பார்த்தார் பொன்னார், மொத்த கும்பலிலும் இரண்டு பேர் மட்டும் கைதட்டல் மட்டும் கேட்டது. அது அனேகமாக அவரது ஓட்டுனராகவும் தனி உதவியாளராகவும் இருக்கக் கூடும்.

இந்தியா சார்பாக ஒரு பியூன்கூட இலங்கைக்கு செல்லக்கூடாது என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு என்றார் பொன்.ராதா. ஆனால் அது தமிழக பாஜக தலைவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடு என தெரிவித்து விட்டது பாஜக மேலிடம். அனேகமாக பாஜக ஆட்சிக்கு வரும் வரை அல்லது மகிந்தவிடம் போய் ஒரு மைனர் செயின் வாங்கி வரும்வரை பொன்னார் இந்த நிலைப்பாட்டில் இருப்பார் என நம்பலாம் (நெக்லசெல்லாம் அகில இந்திய தலைவருக்கு மட்டுமே).

பொன். இராதாகிருஷ்ணன்
பொன். இராதாகிருஷ்ணன்

இலங்கை வாழ் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு சம்மான உரிமைகள் கிடைக்க இந்தியா பாடுபட வேண்டும். அதற்குப் பிறகும் அவர்களுக்கு கொடுமைகள் நடந்தால் வங்காள தேசத்தை இந்தியா உருவாக்கியது போல ஈழத்தை பிரிக்க வேண்டுமென்று குரலை உயர்த்தி உறுமினார். ம்ஹூம். இதற்கும் கூட்டத்தில் எந்த சலசலப்பும் இல்லை.

கடைசியாக, “நான் அரசியல் பேச விரும்பவில்லை” என்று சொல்லிக் கொண்டே, “ஒரு வலுவான பிரதமர் இல்லாத்துதான் ஈழத் தமிழர் பிரச்சனைக்குக் காரணம்” என்று மறைமுகமாக மோடிக்கு மார்க்கெட்டிங் செய்து, அந்த குறையும் விரைவில் தீரும் என அருள்வாக்கு சொல்லி விட்டு விடைபெற்றார் பொன்னார்.

நட்சத்திரப் பேச்சாளர் வைகோ பேச ஆரம்பிக்கையில் மணி பதினொன்று. அந்த அர்த்த ராத்திரியிலும் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா வழியாக உலகம் சுற்ற அவர் தயங்கவில்லை. அதுகூட பரவாயில்லை, ஜெயா எக்ஸ்பிரஸ்சில் இனி ஆர்.ஏ.சி கூட கிடைக்காது என்பது தெரிந்து போனதால் அவர் அதிகம் விமர்சனம் செய்தது ஜெயலலிதாவைத்தான். கிட்டத்தட்ட ஜெயாவை ராஜபக்சேவுடன் ஒப்பிட்டு நடராஜன் கண்களுக்கு மரண பயத்தைக் காட்டினார் வைகோ. அந்த ஒளி வெள்ளத்திலும் நடராசனின் முகம் இருண்டு கிடந்தது.

வைகோ
வைகோ

முன்னதாக வைகோவை பிறவிப் போராளி என வர்ணித்திருந்தார் பொன்னார். வாஜ்பாய் அரசுக்கு வைகோ நற்சான்றிதழ் கொடுத்ததற்கான நன்றிக் கடன் அது. பதிலுக்கு வைகோ தனக்கு ஏதாவது மொய் செய்வார் என்று எதிர்பார்த்து வைகோவின் வாயைப் பார்த்துக்கொண்டிருந்த பொன்.ராதாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழர்களை மதிக்காமல் இனி எந்த ஆளும்கட்சி செயல்பட்டாலும் அதனால் இந்தியாவின் ஒருமைப்பாடு பாதிக்கப்படும் என சொல்லி வைகோ உரையை முடித்தார். சமீபகாலமாக அவர் இணையத்தை அதிகம் பாவித்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பது அவரது உரையின் வாயிலாக தெரிந்தது.

விழாவின் பிரதான நோக்கமான நடராஜனை வாழ்த்திப் பாடுவது என்பது ஓரளவு நிறைவேறியிருக்கிறது என்றாலும் அதனை மதுரை ஆதீனம் அளவுக்கான நேர்த்தியுடன் யாரும் செய்யவில்லை. இன்னுமொரு பிரதான நோக்கமான தமிழ் தேசிய வாக்கு வங்கியை பாஜக பக்கம் கொண்டுசெல்வது என்பது பரிதாபமான தோல்வியை சந்தித்திருக்கிறது என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. நெடுமாறன் தனது இந்துத்துவ பாசத்தை வெளிப்படையாக 6-ம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பில் காட்டினார். (பாஜகவை அழைத்தது பற்றிய கேள்வியை கோபமாக தவிர்த்தார்). ஆனால் அதற்கான ஆதரவு அவருக்கு மற்றவர்களிடமிருந்து கிடைத்த மாதிரி தெரியவில்லை.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா

ஈழப்பிரச்சினையில் இதுவரை வெளிப்படையாக வாஜ்பாயை பாராட்டி வந்த வைகோ, அந்தக் கதையை இங்கே கடை விரிக்கவில்லை. இந்த அரங்கில் பாஜகவையும் சேர்த்து எச்சரிக்கும் நிலையைத்தான் அவர் எடுக்க வேண்டியிருந்தது.

சில செய்தித்துளிகள் :

  • ஒரு குழந்தையைப் பெற்ற தாயைப்போன்ற பரவசத்தில் இருக்கிறோம் என்றார் நடராஜன்.
  • போரின் கடைசி இரண்டு நாட்களில் மட்டும் ஒன்னரை லட்சம்பேர் கொல்லப்பட்டதாகக் கூறிய நெடுமாறன், இது ஒரு விழா அல்ல, துயரத்தை காட்டும் நிகழ்வு என்றார். ஆனால் பந்தலின் பகட்டு அப்படி எந்த துயரத்தையும் காட்டவில்லை. அரங்க ஏற்பாட்டை கவனிக்கையில் விழாவுக்கான செலவு மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு குறையாமல் இருக்கும் என தெரிந்தது.
  • முற்றம் அமைப்பதற்கான செலவில் 90 சதவிகித பணத்தை நடராசன் கொடுத்ததாகச் சொன்னால் காசி ஆனந்தன். உலகில் உள்ள எல்லா தமிழர்களிடமும் நிதி பெற்று இந்த முற்றம் கட்டப்படுவதாக சொன்னார் மணியரசன். “அம்மையப்பன்தான் உலகம்” என்ற பொருளில் உலகம் என்ற சொல்லை அவர் பயன்படுத்தியிருக்கக் கூடும்.
  • ஒரு முதியவருக்கு இப்படி நாலு நாளாக மன உளைச்சல் தருகிறீர்களே என புலம்பினார் பெ.மணியரசன். மண்ணை வாரி தூற்றாத்துதான் பாக்கி.
  • நெடுமாறனின் தந்தையார் இதே சூரசம்ஹாரத்தன்று பழமுதிர்சோலை முருகன் கோயிலை திறந்ததாகவும் இப்போது நெடுமாறன் முள்ளிவாய்க்கால் முற்றம் திறந்திருப்பதாகவும் வைகோ குறிப்பிட்டார்.
  • நடராஜன் எதிர்பார்த்த இரண்டாம் ராஜராஜன் எனும் பட்டத்தை தஞ்சை ராமமூர்த்தி அவருக்கு வழங்கினார், ஆனால் இறுதி நேர திருப்பமாக அப்பட்டம் நெடுமாறனுக்கும் தரப்பட்டு விட்டது.
  • திடலுக்கு வெளியே வைக்கப்பட்ட பெரும்பாலான பேனர்கள் நடராசனை வாழ்த்தி மட்டுமே வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்று கள்ளர் குல முன்னேற்றக் கழகத்தால் வைக்கப்பட்டிருந்தது. புதிய பார்வை வாசகர் வட்டம் எனும் அடையாளத்தோடு ஒரு வேன் அங்கே சுற்றிக் கொண்டிருந்தது

“யாயும் யாயும் யாராகியரோ” எனும் குறுந்தொகைப் பாடலைக் குறிப்பிட்டு அதற்கான ஒரு புது விளக்கத்தோடு பொன்.ராதாகிருஷ்ணனை வரவேற்றார் தாயப்பன். அந்த வரிகள் கீழே,

“நீங்கள் காவி, நாங்கள் கருப்பு..
உங்களுக்கு அயோத்தி, எங்களுக்கு ஈரோடு,
உங்களுக்கு ராமன், எங்களுக்கு ராமசாமி
இருந்தாலும் நாம் இருவரும் தமிழன் எனும் வகையில் ஒன்று கலந்தோமே”.

ஒரே நேரத்தில் தமிழையும் பெரியாரையும் கொச்சைப்படுத்த தாயப்பன் பயன்படுத்திய அந்தப் பாடலின் பொருளை தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ளுதல் நல்லது.

உன் தாய் யாரோ என் தாய் யாரோ, உன் தந்தைக்கும் என் தந்தைக்கும் எந்த வகையிலும் உறவில்லை, நீ வந்த வழியும் நான் வந்த வழியும் நமக்கு தெரியாது (வழி –குலம்). ஆயினும் செம்புலப்பெயநீர் போல நம் இரு அன்புடைய நெஞ்சங்களும் கலந்தனவே.

இரண்டும் கலந்தால் பிறப்பது என்ன? அதைத்தான் தமிழ் ஆர்.எஸ்.எஸ் என்று ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம்.

– வில்லவன்

தருமபுரி தலித் கிராமங்கள் எரிப்பு : முதலாம் ஆண்டு நினைவு

0

நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டி ஆகிய மூன்று கிராமங்கள் எரிப்பு, சூறையாடல் : முதலாம் ஆண்டு நினைவு நாள் !

ருமபுரி அருகே உள்ள நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டி ஆகிய 3 தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் கிராமங்கள் நவம்பர் 7, 2012 அன்று வன்னிய சாதிவெறியர்களால் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த நாளை நினைவு கூறும் வகையில் ஊரைக் கூட்டிப் பேசி மக்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தனர். இதற்காக பிரசுரம் பேனர் தயாரித்து தயார் நிலையில் இருந்தனர்.

இந்நிலையில் ஊர் முக்கியஸ்தர்களை வரவழைத்து மாவட்ட ஆட்சியர் ‘‘உண்ணாவிரதம் இருக்கக் கூடாது’’ என்று பேசினார். மேலும் பல சலுகைகளை செய்து தருவதாகவும், நடந்து கொண்டிருக்கும் மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் நைச்சியமாக அவர்களிடம் பேசியுள்ளார். பின்னர் ஊர் மக்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரும் மனு ஒன்று அவரிடம் கொடுக்கப்பட்டது. ‘‘144 தடை உத்திரவு உள்ளது. இதனை ஏற்க முடியாது’’ என்று மாவட்ட ஆட்சியர் கூறினார். ஆனால் ஊர் முக்கியஸ்தர்கள் ஆட்சியர் கூறியதை ஏற்காமல் ஊருக்குத் திரும்பினர்.

நவம்பர் 5-ம் தேதியே CPI(M) கட்சியினர் 144 தடை உத்திரவைக் கூறி உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என்று முடிவு செய்ததால் நத்தத்தில் உள்ள CPI(M) கிளை உறுப்பினர்கள் ‘’நாங்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்க முடியாது’’ என ஊரில் அறிவித்து விட்டனர். நாடாளுமன்றத் தேர்தலில் வன்னியர்களின் ஓட்டுக்களைப் பெற முடியாமல் போய்விடும் என்று அவர்கள் ஓட்டுக் கணக்கு போட்டதை நத்தம் அண்ணா நகர் மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டனர். அண்ணா நகரில் பொறுப்பாளர் ஆனந்தன் “144 தடையுத்திரவு உள்ளது. நக்சல்பாரிகள் உங்களை சிக்கலில் இழுத்து விட்டு விடுவார்கள். பிறகு அனுபவிப்பது நீங்கள்தான். கைதானால் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்” என்று மிரட்டும் தொனியில் பேசினார். ஆனால் அவர்கள் அவரை எதிர்த்து “நாங்கள் கைதானால் நக்சல்பாரித் தோழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்று பேசி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர்.

முதல் நாள் இரவே தாசில்தார் போலீசுடன் நத்தத்திற்கு வந்து, உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி அந்த நாளை நினைவுபடுத்தினால் மீண்டும் சாதிப்பூசல் வரும். எனவே போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். தோழர்கள் வந்திருக்கிறார்களா என்று விசாரித்தார். அவரிடம் கோபப்படாமல் தகுந்த பதில் அளித்து மக்கள் அனுப்பி வைத்தனர். அதன்பிறகு சுமார் 9 மணிக்கு RDO பத்து போலீசுடன் ஊருக்கு வந்து மிரட்டும் தொனியில் பேசினார். “நாங்கள் ஓராண்டு நினைவு என்ற வகையில்தான் செய்கின்றோம்” என்று ஊர் முக்கியஸ்தர்கள் கூறியதால் அவர்கள் சென்று விட்டனர்.

பதினைந்து நாட்களுக்கு முன்பிருந்தே இப்போராட்டம் குறித்து வி.வி.மு தோழர்கள் ஊர் முக்கியஸ்தர்களுக்கும், சில அரசியல் சக்திகளுக்கும் இப்போராட்டத்தை சிறப்பாக நடத்துவதற்காக ஆலோசனைகளை வழங்கியிருந்தனர். இதனை பயன்படுத்தி உழைக்கும் மக்களை விடுதலை செய்யும் வர்க்க அரசியலை இம்மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று வி.வி.மு தோழர்கள் திட்டமிட்டு செயல்பட்டனர்.

அதன்படி விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய இரண்டு அமைப்புகளின் பெயரில் 400 சுவரொட்டிகளை அச்சிட்டு அதனை ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, பெண்ணாகரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பரவலாக ஒட்டினர். தருமபுரி நகரத்தில் சுவரொட்டி ஒட்டி முடிக்கும் தருவாயில் உளவுப்பிரிவினர் தோழர்கள் சரவணன், முனியப்பன் ஆகிய இரு வி.வி.மு தோழர்கள் மீது 5 பிரிவுகளில் பொய்வழக்கு போட்டுள்ளனர். போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபடாமல் இருந்த தோழர் கோபிநாத் (வி.வி.மு) மீது அதே பிரிவுகளில் வழக்கு போட்டுள்ளனர்.

இன்னொருபுறம் உண்ணாவிரதப் போராட்டத்தை சிறப்பாக நடத்த தங்களது பங்களிப்பை செய்வது என்ற முறையில் தோழர்கள் செயல்பட்டனர். செஞ்சட்டை அணிந்து கொண்டு சுமார் 50 தோழர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரதம் நவம்பர் 7 அன்று காலை எட்டு மணிக்கு துவங்கியது. அப்பகுதியில் போஸ்டர்களை ஒட்டி விட்டு, வி.வி.மு-வின்  துண்டு பிரசுரங்களை நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணா நகர் ஆகிய மூன்று கிராமங்களுக்கும் சென்று விநியோகித்தனர். வி.வி.மு பிரசுரம் சிறப்பாக உள்ளது என்று அப்பகுதி இளைஞர்கள் கருத்து தெரிவித்தனர்.

நத்தத்தில் நடந்த உண்ணாவிரதத்தில் வி.வி.மு, பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 6 பேர் உரையாற்றினர். இதில் வி.வி.மு தோழர் ஆம்பள்ளி முனிராஜ் பேசுகையில், “சாதிவெறித் தாக்குதலில் முக்கிய பங்காற்றிய கன்பார்ட்டி முருகன், புரட்சிகர இயக்கத்தில் இருந்தபோது தலித் பகுதிகளில் மாட்டுக்கறி சாப்பிட்டு வளர்ந்தவன். அவன் உடம்பில் ஓடும் இரத்தம் முழுக்க மாட்டுக்கறி ரத்தம்தான் அதிகம் இருக்கும். மாட்டுக்கறி குழம்பு எடுத்துக் கொண்டு வரும்போதே கறி அனைத்தையும் எடுத்து சாப்பிட்டு விடுவான். அப்படிப்பட்டவன் இன்று சாதி வெறியனாக மாற்றப்பட்டுள்ளான்” என்பதை விளக்கிப் பேசியது மக்களை சிந்திக்கத் தூண்டுவதாகவும், அவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுத் தந்தது.

தோழர் பரசுராமன் (பு.ஜ.தொ.மு – ஓசூர்) பேசும்போது, “ஓசூர் தொழிற்சாலைகளில் பிறப்பால் வன்னிய தொழிலாளிகள் பாதிக்கப்பட்ட போது நக்சல்பாரி தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு தான் முதல் குரல் கொடுத்து நீதி பெற்றுக் கொடுத்தது. அப்பகுதியில் இருந்த பா.ம.க.வினர் சம்பவ இடத்திற்கு வந்தும் கையாலாகாமல் விட்டுச் சென்று விட்டனர். அதே போல தமிழகத்தில் பெரிய அளவில் தலித் மக்களைத் திரட்டி வைத்திருப்பதாகக் கூறிக்கொள்ளும் சில தலித் அமைப்புகளால் இளவரசன் – திவ்யா தம்பதியினரைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் சாதிமறுப்பு திருமணம் செய்து வைத்தற்காக என்னை ஒரு நாள் முழுவதும் காவலில் வைத்தது சேலம் போலீசு. அத்துடன் இரவு பகலாக அடித்தனர்” என்றும் குறிப்பிட்டார். இது போன்று பல சாதிமறுப்பு திருமணங்களை புஜதொமு, விவிமு நடத்தி வைத்துள்ளதையும், அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வருவதையும் நினைவு கூர்ந்து பேசினார். வர்க்க உணர்வூட்டும் வகையிலும், சாதிவெறியர்களின் நோக்கத்தை அம்பலப்படுத்தும் விதமாகவும் அவரது பேச்சு இருந்தது.

மேலும், தலித் மக்களுக்கு குரல் கொடுப்பதாக பேசி வரும் சில கட்சிகள், குழுக்கள் தங்களை இந்த நிகழ்வில் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொண்டதும் நிகழ்ந்தது. குறிப்பாக இளவரசன் மரணமடைந்த போது அது தற்கொலை என்று பேசிய வி.சி.க பொதுச்செயலர் சிந்தனைச்செல்வன் இந்த நினைவுக் கூட்டத்தில் அதனை திட்டமிட்ட படுகொலை என்று சந்தர்ப்பவாதமாக பேசினார். அப்போது அவருக்கு எதிரான சலசலப்பு மக்களிடையே ஏற்பட்டது. மக்கள் ஜனநாகய இளைஞர் கழகம் (ம.ஜ.இ.க) அமைப்பு தனது போஸ்டரில் நவம்பர் 7 தருமபுரி சாதிக் கலவர நாள் என்று அச்சிட்டு இருந்ததைக் கண்டு மக்கள் ஆத்திரமடைந்தனர். சாதிவெறித் தாக்குதலை மாற்றி இரண்டு தரப்பும் கலவரம் செய்ததாக காட்டும் வகையில் அச்சிட்டு ஒட்டியிருந்ததால் நத்தம் கிராமத்தில் சுவரொட்டிகளை இளைஞர்களே கிழித்து விட்டனர்.

ம.க.இ.க-வின் மைய கலைக்குழுத் தோழர்களுடன் வி.வி.மு தோழர்கள் இணைந்து நடத்திய கலை நிகழ்ச்சி இவற்றை சிறப்பிக்கும் வகையில் இருந்தது. புரட்சிகர இயக்கம் மீண்டும் இப்பகுதியில் வளர வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் நிகழ்ச்சி அமைந்திருந்தது.

அண்ணா நகரில் நடந்த உண்ணாவிரதத்திலும் கலந்து கொண்டு தோழர்கள் பேசினார்கள். கொண்டாம்பட்டியில் தோழர் ஆம்பள்ளி முனிராஜ் சென்று உரை நிகழ்த்தினார். மூன்று ஊர்களிலும் வி.வி.மு தோழர்களின் பங்களிப்பு இருந்ததால்தான் நிகழ்ச்சியை நடத்த முடிந்த்தாக ஊர் மக்கள் தெரிவித்தனர். வர்க்கப் போராட்டமே தீர்வு என்பதை உணர்த்தும் வகையில் தோழர்களின் உரைகள் இருந்தன.

தாசில்தார், காவல்துறை ஆய்வாளர், கூடுதல் கண்காணிப்பாளர் கல்யாண் ஆகியோர் வந்து நிகழ்ச்சிக்கு பல நிபந்தனைகளை விதித்தனர். மைக் வைத்து பேசக் கூடாது என்றனர். ஆம்பள்ளி முனிராஜ் சாதிவெறியர்களை அம்பலப்படுத்தி பேசிய போது, கிராமம் எரிக்கப்பட்டதை மட்டுமே பேச வேண்டும் என்றனர். நாங்கள் ஊமையாக இருக்க முடியாது என பெண்கள் பதிலுக்கு கூறினர். இப்படி பல தடைகளைத் தாண்டிதான் உண்ணாவிரதம் மூன்று கிராமங்களிலும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி நக்சல்பாரி இயக்கத்தின் மீது அப்பகுதி மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அமைப்பின் செல்வாக்கை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தியுள்ளது. அப்பு, பாலன் காலத்தில் இருந்த வர்க்க ஒற்றுமையை கட்டியமைக்கும் முயற்சியில் வி.வி.மு தோழர்களின் பணி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

144 தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மீது தருமபுரி காவல்துறை வழக்கு தொடுத்திருக்கிறது.

தகவல் :

செய்தியாளர், புதிய ஜனநாயகம், தருமபுரி.

வைகோ வழங்கும் கபடநாடகம் பார்ட் 2

13

மொழிப்போர் மறவர் ம.நடராசன் தலைமையில் மாவீரன் பழ.நெடுமாறன் அவர்களால் 6.11.2013 அன்று  காலை 11 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திடீரென்று திறந்து வைக்கப்பட்டு விட்டது.

அம்மாவை வைத்து திறப்பு விழா நடத்த முயற்சி நடப்பதாக ஏற்கெனவே செய்திகள் வந்தன. இப்போது மூடுவிழா நடத்த அம்மா முயற்சிப்பதால் உடனே திறப்பு விழா நடத்தி விட்டதாக கூறுகிறார்கள். எப்படியோ ஈழத் தாயிடமிருந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் காப்பாற்றப்பட்டு விட்டது.

முள்ளிவாய்க்கால் முற்றம்
மொழிப்போர் ‘மறவர்’ ம.நடராசன் தலைமையில் ‘மாவீரன்’ பழ.நெடுமாறன் அவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறந்து வைக்கப்பட்டு விட்டது.

திமுக-அதிமுக வுக்கு இடையே ஈழம் சிக்கித் தவித்ததைப் போல இப்போது முற்றமும் நடராசன் – ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கிறது. அம்மையார் களத்தில் இறங்கி விட்டால் யுத்த தருமங்களையெல்லாம் பார்க்கமாட்டார் என்பது நடராசனுக்குத் தெரியும். அங்கு வருகை புரியும் சான்றோர் பெருமக்களும் தெரிந்து கொள்வது நல்லது.

“ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டிருப்பதால் நினைவு முற்றத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று “யாரோ” மனுச் செய்தார்களாம். அடுத்த படியாக “அனுமதி கிடையாது” என்று போலீசு மறுத்தது. வழக்கம் போல சரியான காரணம் சொல்ல முடியாமல் நீதிமன்றத்தில் அரசு தரப்பு சொதப்பி விட்டதால், உயர்நீதி மன்றம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

இந்த தோல்விச் செய்தியை அம்மாவுக்கு யார் சொல்வது? “பேட் நியூஸ்” என்று பாட்ஷா ரகுவரனைப் போல அம்மா சேதி சொன்னவனையே போட்டுத் தள்ளி விட்டால்?

உடனே மேல் முறையீடு செய்திருக்கிறார்கள். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், அட்வகேட் ஜெனரலே வந்து ஆஜராகியிருக்கிறார். ஏதோ ஒரு பயங்கரமான லா பாயின்ட்டை பேசவிருக்கிறார் என்று எண்ணிக் கொண்டிருந்த போது, அவர் ஒரு பொட்டலத்தை நீதிபதி கையில் கொடுத்திருக்கிறார். நீதிபதிகளும் தைரியமாக அதை கையில் வாங்கினர்.

நடராசன் சம்மந்தப்பட்ட வழக்கில் இப்படி ஒரு பொட்டலத்தை கொடுத்ததால் நமக்குத்தான் முதுகுத் தண்டு சில்லிட்டு விட்டது. “நீதிபதிக்கே பொட்டலமா” என்று நாம் எண்ணி முடிப்பதற்குள் பொட்டலத்தில் என்ன இருக்கிறது என்பதை அட்வகேட் ஜெனரல் திறந்து கூறிவிட்டார்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு “விழாவுக்கு வருகிறவர்களின் உயிருக்கு ஆபத்து” இருப்பதாக உளவுத்துறை செய்தி வந்திருப்பதாகவும், அதனால்தான் அனுமதி மறுப்பதாகவும் சொன்னார். ஆபத்து பற்றிய விவரங்களை வெளிப்படையாக நீதிமன்றத்தில் கூற முடியாதல்லவா? அதனால், மூடி முத்திரையிட்ட உறையில் கொடுத்திருக்கிறார்கள். “போதிய போலீசு பாதுகாப்பு கொடுங்கள்” என்று கூறி பொட்டலத்தை போலீசு கையிலேயே திருப்பித் தந்து விட்டார் நீதிபதி.

வைகோ
முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு என்று ஒரு கபட நாடகத்தை நடத்தினார்” என்று வைகோ பொளந்து கட்டியிருக்கிறார்.

உளவுத்துறையின் ஒரு எச்சரிக்கை இப்படி ஊரறிய உதாசீனப்படுத்தப் படும் போது, தங்களுடைய எச்சரிக்கை உண்மையானதுதான் என்று லைட்டாகவேனும் நிரூபித்துக் காட்டுகின்ற “தார்மிகப் பொறுப்பு” உளவுத்துறைக்கு வந்து விடுகிறது. பொட்டலம் வரவழைப்பது, குண்டு வரவழைப்பது போன்ற அற்புதங்களை நிகழ்த்திக் காட்டும் வல்லமை கொண்டவர்கள் அல்லவா உளவுத் துறையினர்!

அதேபோல, நீதிமன்றம் “போதிய போலீசு பாதுகாப்பு” கொடுக்கச் சொல்லியிருப்பதால், “போ…….திய” அளவுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படக் கூடிய ஆபத்தும் உண்டு. முன்னர் ஒருமுறை கோவை முஸ்லிம் தீவிரவாதம் பற்றி பாஜகவினர் ரொம்ப அலப்பறை கொடுத்தனர். அப்போது அத்வானி கோவைக்கு வந்தார். அவர் பங்கேற்ற பொதுக்கூட்டத்துக்கு அன்றைய கமிசனர் ராதாகிருஷ்ணன் வெயிட்டாக பாதுகாப்பு கொடுத்து விட்டார் – கூட்டத்துக்கள் முஸ்லிம் தீவிரவாதி மட்டுமல்ல, ஒரு பாரதிய ஜனதாக்காரன் கூட நுழைய முடியவில்லை. பாதுகாப்பென்றால் அப்படி ஒரு பாதுகாப்பு!

மேற்கூறிய எச்சரிக்கைகளை அய்யா பழ.நெடுமாறன் கணக்கில் கொள்வது நல்லது.

கடந்த இரு நாட்களாக வரும் செய்திகளைப் பார்க்கும்போதுதான், தஞ்சை நிகழ்ச்சி, தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனை நிகழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளதற்கான காரணம் புரிந்தது. பாஜக, தேமுதிக, மதிமுக அடங்கிய தமிழருவி கூட்டணி அம்மாவுக்கு பிடிக்கவில்லையென்றும், அதனால்தான் கெடுபிடிகள் அதிகரிக்கப் படுவதாகவும் கூறுகின்றன செய்திகள்.

“அ.தி.மு.க. அரசின் பாசிச முகத்திரை கிழிந்தது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக, குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடந்த காலத்தில் சர்வாதிகார பொடா அடக்குமுறையை ஏவிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு என்று ஒரு கபட நாடகத்தை நடத்தினார்” என்று வைகோ பொளந்து கட்டியிருக்கிறார்.

அம்மா ஒவ்வொரு முறை கபட நாடகம் போடும்போதும் அவருக்கு மேக் அப் அணிவித்து, கதை வசனம் எழுதிக் கொடுத்து, பிற நடிகர்களை ஏற்பாடு செய்து, வசனம் மறக்கும் போது சைடில் நின்று பிராம்ப்டர் வேலை பார்த்தவர்கள் என்பதால், வைகோ, நெடுமாறன், சீமான் போன்றவர்கள், ஜெ நடத்தியது கபட நாடகம்தான் என்று கூறும்போது அதை நாம் நம்பாமல் இருக்க முடியவில்லை.

தமிழ்நாடு பாஜக
தமிழக பாஜக சார்பில் பொன் இராதா கிருஷ்ணனும், இல. கணேசனும் டில்லி சென்றிருக்கிறார்கள். கபட நாடகம்-2 இன் கதையை விளக்கி கூறி டில்லி பாஜக தலைவர்களின் கால்ஷீட் வாங்குவதற்கு!

அடுத்த கபட நாடகத்துக்கு கதாநாயகன், ஸ்கிரிப்ட் மற்றும் நடிகர்களை ஏற்பாடு செய்ய தீயாய் வேலை செய்யத் தொடங்கி விட்டார்கள் நெடுமாறன் குழுவினர். நேற்று தமிழக பாஜக சார்பில் பொன் இராதா கிருஷ்ணனும், இல. கணேசனும் டில்லி சென்றிருக்கிறார்கள். கபட நாடகம்-2 இன் கதையை விளக்கி கூறி டில்லி பாஜக தலைவர்களின் கால்ஷீட் வாங்குவதற்கு!

டில்லி பாஜக தலைவர்களிடம்  வசனங்களை ஒப்படைப்பதற்கு முன்னால், பத்திரிகையாளர்களிடம் ஒரு பஞ்ச் டயலாக்கை எடுத்து விட்டிருக்கிறார் இல.கணேசன்.

“இலங்கைக்கு நிதி மட்டுமல்ல: போர்ப் பயிற்சியும் மத்திய அரசு தந்தது. தார்மிக ஆதரவும் தந்தது. இவ்வளவும் செய்து விட்டு ராஜபக்சேவை கண்டிக்க காங்கிரசுக்கு தகுதி இல்லை” என்று பேசியிருக்கிறார் இல.கணேசன்.

இந்த பஞ்ச் டயலாக்கை ஏற்கெனவே எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை? 2009 இல் ஈழத்தாய்க்கு எழுதிக் கொடுக்கப்பட்டு அவர் பேசிய அதே வசனம்தான். அது கபட நாடகம் – பார்ட் 1.

தற்போது கபட நாடகம் பார்ட்-2 தொடங்கி விட்டது. அதன் முதல் காட்சி இன்று தஞ்சையில் அரங்கேறுகிறது. “மோடி பிரதமரானால், ஈழம் அல்லது சம உரிமை அல்லது அல்வா கொடுப்பார்” என்று பொன்.இராதாகிருஷ்ணன் இன்று மாலை பிகடனம் செய்யக்கூடும்.

இந்தக் கபடநாடகம்-2 வெற்றி பெறும் பட்சத்தில், 2019 இல் கபடநாடகம் பார்ட்-3 தொடங்கும். அதன் முதல் காட்சியில் மோடியின் பாசிச முகத்திரையை வைகோ கிழிப்பார்.

000

மணல் அரசியல் vs மக்கள் – விகடன் கட்டுரை

12

தென் மாவட்டங்களில் நடக்கும் தாது மணல்கொள்ளை குறித்து ஆனந்த விகடன் 13-11-2013 தேதியிட்ட இதழில் வெளியான மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்  வாஞ்சிநாதனின் பேட்டி :

தாது மணல் கொள்ளைதாது மணல் கொள்ளைக்கு எதிராக மக்களின் போராட்டங்களும் எதிர்ப்புக் குரல்களும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தென் தமிழகக் கடலோரத்தில் கேட்கின்றன. தாது மணல் நிறுவனங்களைப் பற்றி பேசினால் உயிர் இருக்காது என்ற அச்சத்தில் உறைந்திருந்த மக்கள், வாய் திறந்து பேசத் தொடங்கியுள்ளனர். ககன்தீப் சிங் பேடி தலைமையிலான ஆய்வுக் குழுவினரை தங்கள் ஊருக்கும் ஆய்வுக்கு வரச்சொல்லி மக்கள் மனு கொடுத்த காட்சி, புத்தம் புதியது.

“ஆனால், ககன்தீப் சிங் பேடியின் ஆய்வே, வெறும் கண்துடைப்பு. மக்களை நம்ப வைத்துக் கணக்குக் காட்ட நடத்தப்படும் நாடகம். உண்மை யான பாதிப்பு மிகப் பிரமாண்டமானது. பல்லாயிரம் கோடி மதிப்புள்ள தாது வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. ஆபத்தான கதிரியக்கம்கொண்ட தனிமங்கள் அனுமதியின்றி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் வன்முறையாகச் சிதைக்கப்பட்டுள்ளது. இயற்கை சீரழிக்கப்பட்டுள்ளது. பலர் உயிர் இழந்துள்ளனர். இவை அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும். மொத்த தாது மணல் நிறுவனங்களும் இழுத்து மூடப்பட்டு அவர்களின் அனைத்துச் சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும். அந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், இந்தக் கொள்ளைக்குத் துணைபோன அனைத்துத் துறை அரசு அதிகாரிகளும் கைதுசெய்யப்பட வேண்டும்!” என்கிறார் வாஞ்சிநாதன்.

தாது மணல் கொள்ளைதாது மணல் அள்ளப்படும் பகுதிகளில் நடத்தப்பட்ட உண்மை அறியும் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் இவர். ‘மனித உரிமை பாதுகாப்பு மையம்’ என்ற அமைப்பில் இருந்து சென்ற ஆய்வுக் குழுவினர், வி.வி. மினரல்ஸின் தாது மணல் ஆலைகளுக்குள் நுழைந்து அங்கு நடக்கும் முறைகேடுகளை புகைப்பட ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி உள்ளனர். ஒரு தாது மணல் ஆலையின் உட்பு றங்களும் செயல்பாடுகளும் பதிவாகியிருப்பது இதுவே முதல்முறை. வாஞ்சிநாதனிடம் பேசிய போது…

“இந்த கார்னெட் மணல் தொழிலில், ஆரம்பத்தில் அரசு நிறுவனம் மட்டும்தான் ஈடுபட்டது. 1970-களுக்குப் பிறகுதான் இதில் தனியார் அனுமதிக்கப்பட்டனர். வைகுண்டராஜன் இந்தத் தொழிலுக்குள் நுழைந்ததும் இதன் பிறகுதான். கடலோரக் கிராமங்களில் ஊர் கமிட்டி முறை உள்ளது. இவர்கள்தான் பெரும்பாலான விஷயங்களைத் தீர்மானிப்பார்கள். வைகுண்டராஜன், ஊர் கமிட்டிகளில் உள்ளவர்களை பல்வேறு வழிகளில் வளைத்துப்போட்டு தன் ஆதரவாளர்களாக மாற்றுகிறார். இவருக்கு ஆதரவாக கடலோரத்தில் ஒரு குழு உருவாகிறது.

தாது மணல் கொள்ளைஒவ்வொரு கிராமத்திலும் அவர்கள் இருப்பார்கள். அடியாள் போல என்று வைத்துக்கொள்ளலாம். வேறு வேலை எதுவும் அவர்களுக்குக் கிடையாது. மாதச் சம்பளம் மட்டும் வந்து விடும். இதற்கு உள்ளூர் அரசியல்வாதிகள், காவல் துறை அனைவரும் ஆதரவு. இந்தத் தொழிலுடன் சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவுத் துறை, பொதுப்பணித் துறை, கனிமவளத் துறை, சுங்கத் துறை என அனைத்துத் துறைகளையும் தன் செல்வாக்கு எல்லைக்குள் கொண்டு வருகிறார். அவரைக் கேட்காமல் ஓர் அணுவும் அசையாது. இதுதான் வி.வி. என்ற பிரமாண்ட சாம்ராஜ்யம் கட்டி எழுப்பப்பட்டிருப்பதன் பின்னணி.

இன்னொரு முக்கியமான விஷயம், அரசின் கொள்கை மாற்றம். 1990-களுக்கு முன்பு, இந்தத் தொழிலை செய்வதற்கு நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. இயற்கை வளங்களை சீரழிக்கும் தொழிலைச் செய்ய வேண்டுமானால், பல இடங்களில் அனுமதி வாங்க வேண்டும், பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

தாது மணல் கொள்ளை1991-ல் மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த புதிய தாராளமயக் கொள்கை, இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. சட்டத்துக்குப் புறம்பானவையாக இருந்த அனைத்தும் சட்டபூர்வமானவையாக மாற்றப்பட்டன. சத்தீஸ்கரின் கனிம நிறுவனங்கள், கர்நாடகாவின் ரெட்டி சகோதரர்கள், தமிழ்நாட்டில் வி.வி.மினரல்ஸ் என நாடு தழுவிய அளவில் கனிம வளம் பெரும் அளவில் சுரண்டப்பட, அரசின் இந்தக் கொள்கை மாற்றம்தான் காரணம். ஆனால், பெரும் லாப ருசி பார்த்துவிட்ட நிறுவனங்கள், கொள்கை, சட்ட விதிகளுக்கு எல்லாம் உட்பட்டு இயங்குவது இல்லை. உதாரணம், கூடங்குளம் அணு உலையின் சுற்றுச்சுவரை ஒட்டி ‘பஞ்சல்’ என்ற கிராமம் இருக்கிறது. அணு உலையையும் இந்தக் கிராமத்தையும் ஒரு சுற்றுச் சுவர்தான் பிரிக்கிறது. அந்தச் சுவர் வரைக்கும் தாது மணலைத் தோண்டி எடுத்திருக்கிறது வி.வி. மினரல்ஸ். பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. இத்தனைக்கும் அது பாதுகாக்கப்பட்ட பகுதி. அங்கு 300 ஏக்கர், வி.வி-யின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

தாது மணல் கொள்ளைஎல்லா அரசியல் கட்சிகளும் வி.வி-க்கு ஆதரவாக இருக்கின்றன. கடந்த தி.மு.க. ஆட்சியில் வைகுண்டராஜன் மீது பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடனே அதை எதிர்த்து, 19.04.2007 அன்று, அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். எதற்கும் அசைந்து கொடுக்காத ஜெயலலிதா, ‘வைகுண்டராஜன் மீதான நடவடிக்கை, ஜெயா டி.வி-யை முடக்கும் சதி’ என்று ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். இது, எல்லா ஊடகங்களிலும் அப்போது வெளி வந்துள்ளது. அத்தகைய ஜெயலலிதா அரசு எடுக்கும் நடவடிக்கை நியாயமானதாக இருக்கும் என்று நம்புவதற்கு இல்லை. மக்களுக்கு இது மிக நன்றாகத் தெரிந்திருக்கிறது. பல ஊர்களில், ‘அரசு மட்டும் வி.வி. பக்கம் இல்லை என்றால், பத்தே நாட்களில் அனைத்து மணல் கம்பெனிகளையும் மூடிவிடுவோம்’ என்று மக்கள் சொல்கிறார்கள். அவர்களின் அச்சம் அரசை நினைத்துதான். ஏனென்றால், கடந்த காலங்களில் மணல் நிறுவனங்களுக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு மோசமாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். அந்தக் காயத்தின் வடு இன்னும் அவர்களிடம் ஆற வில்லை.

தாது மணல் கொள்ளைஇப்படி சொல்வதால், ‘அ.தி.மு.க- தான் வி.வி-க்கு ஆதரவாக இருக்கிறது, மற்றவர்கள் எல்லாம் இதை எதிர்க்கிறார்கள்’ என்று புரிந்துகொள்ளத் தேவை இல்லை. தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள், இந்தப் பிரச்னை எங்கேயோ எத்தியோப்பியா பக்கம் நடப்பதைப் போல மௌனம் காக்கின்றன. இந்து முன்னணியும் தென்னிந்திய திருச்சபையும் ஓரணியில் இணைந்து வைகுண்டராஜனை ஆதரித்து மனு கொடுக்கிறார்கள். சீமான், வைகுண்டராஜன் வீட்டுத் திருமணத்துக்குச் சென்று கலந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாக இருக்கிறார். ஆக, அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் இந்தச் சுரண்டலுக்கு ஆதரவாகவே இருக்கின்றனர்” என்ற வாஞ்சிநாதன், ஆய்வில் தாங்கள் கண்ட பல அதிர்ச்சித் தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.

தாது மணல் கொள்ளை“தாது மணல் ஆலைகள் ஒவ்வொன்றும் பெரிய இரும்புக் கோட்டையைப் போல இருக்கின்றன. சுற்றிலும் பெரிய மதில் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்குக் கூட உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அதன் அருகே ஐந்து நிமிடங்கள் நின்றாலே, விசாரிக்க ஆள் வந்து விடுகிறார்கள். பெரியதாழை என்ற ஊரில் தாது மணல் சுரண்டப்பட்டதால், மொத்தக் கடற்கரையும் சிதைக்கப்பட்டுள்ளது. பல ஏக்கர் பரப்பளவுள்ள அந்த இடத்தில் கழிவு மணலைக் கொட்டி நிரப்பி எதுவுமே நடக்காதது போல மாற்றியுள்ளனர். உவரி கடற்கரையிலும் இதே போல நடந்துள்ளது. பாம்பன் தீவு முதல் தூத்துக்குடி வரையிலான கடற்பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இவை அனைத்தும் பாதுகாக்கப்பட்ட கடற்பகுதி. பல அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழும் இந்தப் பகுதியை ‘மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பகம்’ என்று அழைக்கின்றனர். மீனவர்கள், இந்தப் பகுதியில் பெரிய வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தாலே கடும் தண்டனை உண்டு. ஆனால், இங்கு மோசமான விதிமீறல்களை நிகழ்த்தி தாது மணல் கழிவைத் திறந்து விடுகின்றனர்.

வாஞ்சிநாதன்
படம் : நன்றி ஆனந்த விகடன்

கடல் நீர் சிவப்பு நிறத்தில் மாறிக் கிடக்கிறது. ‘சிங்க இறால்’ என்ற நல்ல விலை போகக் கூடிய மீன் வகைகள் இந்தப் பகுதியில் நிறைய கிடைத்து வந்தன. இப்போது அவை கிட்டத்தட்ட அழிந்து விட்டன. ஆறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பெரியதாழைத் தூண்டில் வளைவு, தாது மணல் நிறுவனக் கழிவினால் மூடப்பட்டுவிட்டது. இதனால் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டு பலருக்கு தலை, கால், தண்டுவடம் அடிபட்டு முடமாகியுள்ளனர்.

மணல் கழிவுகள் கடற்கரையில் மலைபோல் குவிவதால் மீனவர்களின் படகுகளைக் கரையேற்ற முடியவில்லை. சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய்… என விதவிதமான நோய்கள் மீனவர்களைத் தாக்குகின்றன.

இப்படி மொத்தக் கடலோரமும் சொல்ல முடியாத அளவுக்கு சிதைக்கப்பட்டுள்ளது. மதுரையில் பி.ஆர்.பழனிச்சாமி கிரானைட் வளத்தைக் கொள்ளை அடித்ததற்காகக் கைதுசெய்யப்பட்டார். அதைவிட இங்கு 100 மடங்கு கொள்ளை நடந்துள்ளது. ஏன் இதுவரை வைகுண்டராஜனைக் கைது செய்யவில்லை? இப்போது மக்களிடையே சாதி, மதப் பிரச்னைகளைத் தூண்டிவிட்டு மோதல்களை உருவாக்கும் வேலை நடந்து வருகிறது. இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். தென் தமிழக மக்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்தும் கூட, இயற்கை வளங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற உத்வேகத்துடன் போராடி வருகின்றனர். அவர்களுக்கு, அனைவரும் துணை நிற்க வேண்டும்!” என்கிறார் வாஞ்சிநாதன்!

– பாரதி தம்பி

நன்றி : ஆனந்த விகடன்

ராம்கோ குரூப்பின் முதலாளித்துவ பயங்கரவாதம்

9

ராஜபாளையம் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. குறிப்பாக ராம்கோ குரூப். பி.ஏ.சி. ராமசாமி ராஜா என்பவரால் தொடங்கப்பட்டு சிமிண்ட், நூற்பாலை, மருத்துவ துணிகள் ஆலை, கூரைத் தகடுகள் என பலதுறைகளில் கால்பரப்பி இந்திய அளவில் ராஜஸ்தான் வரையிலும், பன்னாட்டு அளவில் இலங்கை, பாகிஸ்தான் வரையிலும் விரிந்து வரும் நிறுவனம் தான் ராம்கோ குரூப்.

ராஜபாளையம் மில்ஸ்
ராஜபாளையம் மில்ஸ் – ராம்கோ குழும நிறுவன முதலாளி ராமசாமி ராஜா

இந்த ராம்கோ குரூப்பின் கட்டுப்பாட்டில் தான் ராஜபாளையம் பகுதி இருக்கிறது. அவர்கள்வைத்தது தான் இங்கு சட்டம். அவர்கள் விரும்பாத எதையும் இங்கு நடக்க விடமாட்டார்கள்.

மின் வெட்டுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தை காவல்துறை தலையிட்டு இடைநிறுத்தியது குறித்து ஏற்கனவே வினவு வாசகர்களுக்கு தெரியும். இப்படி ஊருக்குள் நடக்கும் பொது நிகழ்ச்சிகளையே தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக நடத்தக் கூடாது என நினைக்கும் இவர்கள் தங்கள் தொழிலாளர்களை எப்படி நடத்துவார்கள்?

எல்லா தொழிற்சாலைகளையும் போலவே இங்கும் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகள், உரிமை மறுப்பு, அடிப்படை வசதிகளின்மை, அடாவடித்தனம், கருங்காலித்தனம் என அத்தனையும் உண்டு. தொழிற்சாலைக்குள் மட்டுமல்ல குடும்பத்தினரிடம் கூட ஆலை நிர்வாகத்தைப் பற்றி விமர்சனமாக எதுவும் பேசிவிடக் கூடாது என நினைக்குமளவுக்கு தொழிலாளர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். இப்படியான சூழலில் தான் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

டந்த 01/11/2013 வெள்ளியன்று மதியம் 3 மணிக்கு மேல், ராம்கோ குரூப்பின் ஒரு பிரிவான ராஜபாளையம் மில்ஸ் எனும் நூற்பாலையில் நடக்கும் அத்து மீறல்களையும், தொழிலாளர்கள் நிலையினையும், அவர்கள் புரட்சிகர சங்கங்களில் திரண்டு போராட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி ஆலையின் வாயில் பகுதிக்கு முன்பு சாலையில் தொழிலாளர்களிடம் பிரசுரம் வினியோகித்துக் கொண்டிருந்தார்கள் இரண்டு தோழர்கள்.

திடீரென ஆலைக்குள்ளிருந்து பாய்ந்து வந்த ஏழெட்டு பேர், “எங்கள் ஆலைக்கு முன்னால் வந்து எங்களை எதிர்த்து நோட்டீஸ் கொடுக்கிறீர்களா?” என்று தோழர்களை குண்டுக் கட்டாக தூக்கிக் கொண்டு ஆலைக்குள் சென்றார்கள்.

தோழர்கள் கையிலிருந்த பிரசுரத்தை பறித்து படித்துப் பார்த்த அதிகாரிகள், “உள்ளே இருக்கும் தொழிலாளர்களின் உதவியில்லாமல் இப்படி நோட்டீஸ் தொகுக்க முடியாது. உங்களுக்கு உதவிய தொழிலாளர்கள் யார் எனக் கூறுங்கள் உங்களை விட்டு விடுகிறோம்” என்று கூறியிருக்கிறார்கள்.

அதற்கு தோழர்கள் “சாலையில் நின்று பிரசுரம் வினியோகிக்கிறோம். இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? எங்களை இப்படி நீங்கள் தூக்கி வந்ததே தவறானது. எங்களை போக விடுங்கள். நாங்கள் அமைதியாக பிரசுரம் வினியோகித்து விட்டு சென்று விடுவோம்.இதை தடுப்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை” என்று எதிர்த்து பேசியிருக்கிறார்கள்.

இதன் பிறகு அங்கிருந்த அதிகாரிகள், கருங்காலிகள், குண்டர்கள் என 15 பேர் தோழரை தாக்குகிறார்கள். ஆண் தோழருக்கு அடி, உதை, கீழே தள்ளி மிதிக்க பெண் தோழரை நாக்கூசும் நாராச வார்த்தைகளால் அர்ச்சித்திருக்கிறார்கள். இதில் ஆண் தோழர் மயங்கி விழுந்து விட தண்ணீர் தெளித்து மயக்கத்திலிருந்து விடுவித்து பின்னர் அடி உதை, விசாரணைகள் தொடர்ந்திருக்கின்றன.

இதற்குள் வெளியில் நின்றிருந்த தோழர்கள் இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் மில் முதலாளி மீதும், ஹெச். ஆர் மேனேஜர் மீதும் தோழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதாக புகார் அளித்துள்ளனர். ஆலைக்குள் சென்ற காவல் துறை துணை கண்காணிப்பாளரும் நிர்வாகத்தினரோடு சேர்ந்து கொண்டு தோழர்களிடம் எப்.ஐ.ஆர் போட்டு உள்ளே தள்ளி விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.

அதையும் தோழர்கள் துணிவுடன் எதிர்கொள்ளவே நிலைமை விபரீதமாக போவதைத் தெரிந்து கொண்டு தோழர்களின் குடும்பத்தினரையும், ஆலைக்குள் வேலை பார்க்கும் தோழர்களின் பகுதியைச் சேர்ந்தவர்களையும் அழைத்து வந்து நைச்சியமாக “உள்ளே இருக்கும் தொழிலாளர்கள் யார் என்பதை மட்டும் காட்டிக் கொடுத்து விடுங்கள். உங்களை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் விட்டு விடுகிறோம். உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்கிறோம்” என்று ஒரு பக்கம் பேசிக் கொண்டே மறு பக்கம் தோழரின் செல்பேசியை பறித்து அதிலிருக்கும் நம்பர்களை அழைத்து ஆபாசமாக திட்டிக் கொண்டும் இருந்திருக்கிறார்கள்.

என்ன ஆனாலும் உயிரே போனாலும் தொழிலாளர்களை காட்டிக் கொடுக்க மாட்டோம் என்பதில் தோழர்கள் உறுதியாக இருந்தார்கள்.

இதன் பின்னர் வேறு பகுதி தோழர்கள் மூலமாக டி.எஸ்.பி க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாலை ஏழு மணிக்கு தோழர்களை விட்டு விடுவதற்கு முன் வந்தார்கள். ஆலையிலிருந்து அப்படியே வெளியில் அனுப்பக் கூடாது அவர்களை போலீஸ் ஸ்டேசன் அழைத்து வர வேண்டும். புகார் மனுவை பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து தோழர்கள் ஸ்டேசனில் முழக்கம் எழுப்ப, “தீபாவளி நேரமாக இருப்பதால் பிரச்சனை வேண்டாம் இப்போது அழைத்துச் செல்லுங்கள் தீபாவளி கழித்து புகாரை பதிவு செய்து விசாரிக்கிறோம்” என்று போலீஸ் சமாதானம் செய்ததின் பேரில் தோழர்கள் திரும்பியிருக்கிறார்கள்.

பொது இடத்தில் பிரசுரம் வினியோகிப்பது தவறா? ஜனநாயகம், சுதந்திரம் என்பதெல்லாம் பல்லிளிக்கும் இடம்  இதுதான். இது சுதந்திர நாடு என்றால், இங்கு ஜனநாயகம் இருக்கிறது என்றால் தோழர்கள் பிரசுரம் வினியோகித்தது எப்படி தவறாகும்? அப்படியே தவறு என்றாலும் ஆலை நிர்வாகத்தினர் தோழர்களைத் தாக்குவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? இந்தக் கேள்விக்கான விடையை நம்மால் குற்ற நடவடிக்கைகளில் தேட முடியாது. அரசியல் நடவடிக்கைகள் மூலமே தேட வேண்டும். ஏனென்றால் தோழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அரசியல் நடவடிக்கை தானேயன்றி குற்ற நடவடிக்கை அல்ல.

தொழிலாளர்களையும் நாட்டின் வளங்களையும் தாராளமாக சுரண்டிக் கொள்ளலாம் என்பது முதலாளிக்கு உள்ள சுதந்திரம், இந்த சுதந்திரத்திற்கு தடையாக உள்ள எதையும் சட்டம், மக்கள் உரிமை என்று எந்தக் கவலையும் இன்றி அடக்கி ஒடுக்குவதற்கும் தேவைப்பட்டால் கொலை செய்வதற்கும் கூட முதலாளிகளுக்கு உரிமை உண்டு. தேசிய முதலாளியா, தரகு முதலாளியா, பன்னாட்டு முதலாளியா என்பதைப் பொறுத்து அளவுகள் மாறலாம். ஆனால், இது தான் யதார்த்தம்.

இதற்கு மாறாக உழைக்கும் மக்களுக்கோ டாஸ்மாக சரக்கடித்து வீதியில் விழுந்து கிடப்பதற்கு உரிமையுண்டு. ஆபாச வக்கிரங்களை கலை என்ற பெயரில் திரைப்படங்களிலும் இணையத்திலும் கண்டு களித்து வீணாவதற்கு சுதந்திரம் உண்டு. சாதிச் சங்கங்கள் என்ற பெயரில் நித்தம் ஒரு சுவரொட்டி ஒட்டி அடாவடி செய்வதற்கு ஜனநாயகம் துணைக்கு வரும். ஆனால் ஒரு முதலாளியை எதிர்த்து இழந்து கொண்டிருக்கும் உரிமைகளைக் கேட்டால் உரிமையோ, சுதந்திரமோ, ஜனநாயகமோ எதுவும் இருக்காது. முதலாளியின் தாக்குதல் உட்பட காவல் துறையினரின் அத்துமீறல்கள் வரை அத்தனையும் எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். இதுவும் யதார்த்தம். இந்த உரிமைகளிலிருந்து தான் முதலாளி தொழிலாளர்களை தாக்குகிறான், உரிமைகளைப் பறிக்கிறான் , சுரண்டிக் கொழுக்கிறான்.

யதார்த்தம் இப்படி இருக்க, இந்த ரவுடித்தனத்தை சுதந்திரம், ஜனநாயகம் என்று உழைக்கும் மக்களும் நம்புகிறார்களே அதனால் தான் இது போன்ற கொடுமைகள் இவ்வளவு காலமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ராஜபாளையம் மில்ஸ்
ராஜபாளையம் மில்ஸ்

இது நமக்கான சுதந்திரம் இல்லை என்பதை ராஜபாளையம் மில்ஸ் தொழிலாளர்கள் உணர்ந்திருந்தால் அந்த 15 ரவுடிகள் தோழரைத் தாக்கியிருக்க முடியுமா? அச்சேற்ற முடியாத வக்கிர வார்த்தைகளை உதிர்த்திருக்க முடியுமா? ஆனாலும் தொழிலாளர்கள் உணர்ந்து வருகிறார்கள். “நோட்டிஸ் கொடுத்தது தப்பா? ஏன் அடிக்க வேண்டும்? நமக்காக எங்கிருந்தோ வந்து அடிவாங்கியிருக்கிறார்களே, எவ்வளவு அடித்துக் கேட்டும் தோழர்கள் உள்ளிருக்கும் தொழிலாளர்களை காட்டிக் கொடுக்க வில்லையே” எனும் உணர்ச்சிகள் தான் தொழிற்சாலை முழுவதும் பேச்சாக இருக்கிறது. இது அவர்களுக்கு புரிதலைக் கொடுக்கும். அதற்கான வேலைகளில் தோழர்களும், ஆதரவுத் தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். மரம் ஓய்வை நாடினாலும் காற்று சும்மா இருப்பதில்லையே.

சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து வேலைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று திங்கள் கிழமை அதிகாலை 4 மணிக்கு ராஜபாளையம் மில்ஸின் ரவுடித்தனத்தை கண்டித்து தோழர்கள் சுவரொட்டிகள் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த போலீசார் ஒட்டிய சுவரொட்டிகளையும், தோழர்களை வைத்திருந்த சுவரொட்டிகளையும் கிழித்துப் போட்டு, பசையை கீழே கொட்டி இரண்டு தோழர்களை தெற்கு போலிஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு துணை கண்காணிப்பாளர் முகவரி, தொலைபேசி எண்களை வாங்கி வைத்துக் கொண்டு அழைத்த போதெல்லாம் விசாரணைக்கு வர வேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் இது போன்ற இயக்கங்களில் சேர்ந்து உங்கள் வாழ்க்கையை வீணக்கிக் கொள்ளாதீர்கள் என்று இலவச அறிவுரைகளை வழங்கி, எந்தப்பிரச்சனை என்றாலும் நாங்கள் நிர்வாகத்திற்குத்தான் ஆதரவாக இருப்போமேயன்றி உங்களுக்கு ஆதரவாக இருக்க முடியாது என்று மிரட்டி விடியும் வரை வைத்திருந்து விட்டு அனுபியுள்ளார்கள்.

இப்படி அப்பட்டமாக சட்டத்தை மதிக்காமல் உரிமைகளை மீறும் ஆலை நிர்வாகத்தையும் காவல் துறையையும் சும்மா விட்டு விட முடியுமா? தோழர்கள் தொடர் நடவடிக்கைகளை ஆலோசித்து வருகிறார்கள். புஜதொமு சங்கம் கட்டாமல் விடப் போவதில்லை. ராம்கோ குரூப்ஸின் கொட்டத்தை அடக்காமல் ஓயப் போவதில்லை.

வினியோகிப்பட்ட பிரசுரம்

அன்பார்ந்த ராம்கோ குரூப் நூற்பாலை தொழிலாளர்களே,

பலகாலமாக தொழிற்சாலைகளில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும் இயல்பாக இருக்க வேண்டிய மகிழ்வோடு நீங்கள் இருக்கிறீர்களா? எப்போது வேலை போகுமோ எனும் அச்சம், எப்போது நிரந்தரம் செய்யப்படுவோமா எனும் கவலை, விற்கும் விலைவாசியில் போதாத சம்பளம் ஏற்படுத்தும் பற்றாக்குறையை எப்படி சரிக்கட்டுவது எனும் சிந்தனை, எப்போதும் கண்காணிக்கப்படுவது போன்ற உணர்வால் நிம்மதியற்ற நிலை போன்றவற்றால் ஒரு இயந்திரம் போல் மாறிக் கொண்டிக்கிறீர்கள் என்றால் அது மிகையல்ல. இதுதான் அனைத்து தொழிற்சாலைகளிலும் உள்ள தொழிலாளர்களின் நிலையாக இருக்கிறது. இப்படித்தான் தொடர்ந்து இருக்கப் போகிறீர்களா?

நிரந்தரத் தொழிலாளர்கள்

ராம்கோ குரூப் நூற்பாலைகளிலும் கூட அதே நிலை தான். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் இந்த ஆலையில் பணி நிரந்தரம் செய்யப்பட்டிருப்பவர்கள் நானூறு பேர் கூட இல்லை. ஏழு, எட்டு ஆண்டுகள் பணி செய்தும் கூட நிரந்தரமாக்கப்படாத தொழிலாளர்கள் இங்கு இருக்கிறார்கள். ஆனால் அரசின் சட்டமோ 480 நாட்கள் வேலை செய்து விட்டாலே, நிர்வாகம் அறிவிக்கா விட்டாலும் கூட அந்த தொழிலாளி அடுத்த நாள் முதல் நிரந்தரத் தொழிலாளியாக ஆகிவிடுகிறார் என்கிறது.

ஊதிய உயர்வு

தொழிலாளர்களுக்கு போதிய ஊதியம் தரப்படுவதில்லை. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இதற்கென நியமிக்கப்படும் கமிட்டி நிர்வாகத்திற்கு சாதகமாக நடந்து கொண்டு விலைவாசி உயர்வு உள்ளிட்ட எதையும் கணக்கிலெடுக்காமல் ஒப்புக்கு ஊதிய உயர்வை அறிவித்து ஏற்றுக் கொள்கிறது. அடிப்படை அலகாக 50 பைசாவுக்கு மேல் உயர்த்த மறுக்கிறது நிர்வாகம். ஆனால் உங்களுடைய உழைப்பின் பலனாக கடந்த ஆண்டு ராம்கோ குரூப் ஆலைகள் நிகர லாபம் மட்டும் 695 கோடி ஈட்டியுள்ளன.

போனஸ்

ராம்கோ குரூப் நிறுவனத் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ஒரு நாளில் செலவழிக்கப்பட்ட தொகை கோடிகளை எட்டியிருக்கிறது. அதிலும் உங்கள் ஊதியத்திலிருந்து ஒரு தொகை பிடித்தம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டுக்கான போனஸ் தொகையாக மொத்த தொழிலாளிகளுக்கும் சேர்த்து 10 கோடி என்று நிர்வாகம் ஒதுக்க அதை ஏற்றுக் கொண்டு நன்றி தெரிவித்துவிட்டு வந்திருகின்றன ஏ.ஐ.டி.யு.சி; ஐ.என்.டி.யு.சி; ஹெச்.எம்.எஸ். போன்ற சங்கங்கள்.

எந்திர வேகம் அதிகரிப்பு

ஒவ்வொரு ஆண்டும் எந்திரங்களின் உற்பத்தி வேகத்தை தொடர்ந்து கூட்டிக் கொண்டே போகிறது நிர்வாகம். இதனால் நான்கு எந்திரங்களுக்கு கூட சைடு பார்க்க முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள் தொழிலாளர்கள். இதைப் பயன்படுத்தி துணைக்கு ஒரு ஆளை விட்டு விட்டு சைடு சம்பளத்தை மொத்தமாக விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது நிர்வாகம்.

பாதுகாப்பு

ஒவ்வொரு வாரமும் உறுதிமொழி எடுப்பது என்ற பெயரில் விபத்து நேர்ந்தால் அதற்கு தானே காரணம் என தொழிலாளியை நம்ப வைக்கிறது நிர்வாகம். விபத்துகளுக்கு காரணம் உண்டு, பாதுகாப்பற்ற பழக்கங்களும், பாதுகாப்பற்ற சூழ்நிலையும் தான் காரணம் எனும் உறுதி மொழியை வாரந்தோறும் சொல்ல வைத்து அதே நேரம் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் தொழிலாளர்களுக்கு கொடுக்காமல் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

நிர்வாகத்தின் சதித்தனம்

குறைந்த சம்பளத்துக்கு வட மாநிலங்களிலிருந்து ஆட்களை கொண்டு வந்து இறக்கியிருப்பதோடு மட்டுமல்லாமல், புதிய ஆட்களை நேரடியாக எந்திரங்களில் வேலை கொடுத்து விட்டு நிரந்தரத் தொழிலாளர்களை, பழைய தொழிலாளர்களை துணை வேலைகளை செய்யச் சொல்வதன் மூலம் அவர்களை மன உழைச்சலுக்கு ஆளாக்கி அவர்களாகவே வேலையை விட்டுப் போகும்படி சதித்தனமான வேலைகளில் இறங்கியிருக்கிறது நிர்வாகம்.

பழிவாங்கும் நிர்வாகம்

சிறுநீர் கழிக்கக் கூட நேரமில்லாத அளவுக்கு இயந்திரங்களின் வேகம் அதிகரிக்கப்பட்டிருக்க கழிப்பறை, தண்ணீர் உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல், இருந்தாலும் முறையாக பராமரிக்காமல் தொடர்ந்து அலட்சியம் செய்து வருகிறது நிர்வாகம்.

விஜயதசமி போன்ற பண்டிகை நாட்களில் விடுமுறை எடுக்க வேண்டும் என்றால் முன்னதாகவே அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்கி கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது நிர்வாகம். ஆலோசனை எழுதிக் கொடுத்தால் பரிசு என்ற பெயரில் தொழிலாளர்களுக்குள் கருங்காலிகளை உருவாக்கி தொழிலாளர்களை ஒருவித அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வைத்திருக்கிறது நிர்வாகம்.

இக்கொடுமைகளை எதிர்த்துக் கேட்டாலோ, தொழிலாளர்களுடன் பேசினாலோ, முணுமுணுத்தாலோ கூட பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி தொழிலாளர்களை பழிவாங்குகிறது நிர்வாகம். இவைகளை கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய அரசோ கண்டு கொள்வதில்லை. அதிகாரிகளோ நிர்வாகத்துக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்கள்.

தொழிலாளர்கள் தங்களின் கடினமான வாழ்க்கைச் சூழலினால் இவற்றை சகித்துக் கொண்டு போகிறார்கள். இருக்கும் தொழிற்சங்கங்களோ நிர்வாகத்திற்கு வால் பிடித்துச் சென்று தொழிலாளர்களுக்கு துரோகம் செய்கின்றன. ஆனால் நிலமை இப்படியே இருந்துவிடுமா? இறுகிக் கொண்டிருக்கும் சூழ்நிலைகள் மேலும் மேலும் தொழிலாளர்களை வாழ முடியாது எனும் நிலைக்குள் தள்ளுகின்றன.

தொழிற்சாலைகளின் நிலை

நாடு முழுவதும் தொழிற்சாலைகள் இப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர்களை மனிதப் பிறவியாக கருதாமல் ஒரு இயந்திரமாகவே கருதுகின்றன. எல்லாவித அடக்குமுறைகளையும் கையாண்டு தொழிலாளர்களை கசக்கிப் பிழிகின்றன. எதிர்த்துக் கேட்டால் வெளியில் இருக்கும் வேலையில்லாப் பட்டாளத்தைக் காட்டி சம்பளத்தைக் குறைத்து விருப்பமிருந்தால் வேலை செய் என்று மிரட்டுகிறது. எந்த உரிமைகளையும் கொடுப்பதில்லை. சட்டப்படியாக அரசு வழங்கியிருக்கும் எந்தச் சலுகைகளையும் வழங்குவதில்லை. தொழிலாளர்களை முறைப்படி நிரந்தரம் செய்வதில்லை.  முதலாளிகள் தங்களின் கொள்ளை லாபத்திற்காக எந்தவித இழிசெயலையும் செய்யத் தயங்குவதில்லை. அவர்களுக்கு இந்தத் துணிவைக் கொடுத்தது யார்?

யார்? எது காரணம்?

அரசின் தனியார்மய தாராளமய உலகமய கொள்கைதான் நாட்டின் இயற்கை வளங்களை சூறையாடவும், தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து சுரண்டவும் முதலாளிகளுக்கு சட்டபூர்வமாகவே வழி செய்து கொடுக்கிறது. இந்தக் கொள்கையின் அங்கமாக இருந்துதான் முதலாளி தொழிலாளியைச் சுரண்டுகிறான். முதலாளியின் நலனுக்காகவே இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை தனியொரு தொழிலாளியால் எதிர்த்துப் போராட முடியுமா? இப்படி எண்ணித்தான் தொழிலாளர்கள் முடங்கிப் போய் கிடக்கிறார்கள். ஆனால் இழந்து கொண்டிருப்பது நம் வாழ்க்கை. நம் வாழ்க்கையை பாதுகாக்க நாம் ஒன்றிணைவதைத் தவிர வேறு வழியில்லை. நம்மைப் பிரிக்கும் அத்தனை பேதங்களையும் கடந்து தொழிலாளர்களாய் ஒன்றிணைந்து சங்கமாகி போராடினால் தான் நாம் சுரண்டப்படுவதை தடுக்க முடியும். நம்முடைய உரிமைகளையும் மீட்டெடுக்க முடியும்

வாருங்கள் தொழிலாளர்களே! புரட்சிகர சங்கத்தின் கீழ் அணி திரள்வோம்! நமக்கான உரிமைகளை வென்றெடுப்போம்.

ஒட்டப்பட்ட சுவரொட்டி

ராம்கோ குரூப் – ராஜபாளையம் மில்ஸின் ரவுடித்தனம்

மில்முன்பு தொழிலாளர்களிடம் பிரச்சாரம் செய்த பு.ஜ.தொ.மு தோழர்கள் மீது
காட்டுமிராண்டித் தாக்குதல்

தொழிலாளர்களே! உழைக்கும் மக்களே!

தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளை எதிர்த்து முறியடிப்போம்!
உரிமைகளை வென்றெடுப்போம்!

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

முள்ளிவாய்க்கால் முற்றம் : உருவாகிறது தமிழ் ஆர்.எஸ்.எஸ்

20

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் அளித்த  நேர்காணலின் கட்டுரை வடிவம்

கேள்வி

2009 முள்ளி வாய்க்கால் இனப்படுகொலை முடிந்து 4 ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போது தஞ்சை விளாரில், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் தலைமையில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தின் திறப்பு விழா வரும் நவம்பர் 8, 9, 10 ஆகிய நாட்களில் நடக்க இருக்கின்றது. இது தமிழர் வரலாற்றில் திருப்புமுனை நிகழ்ச்சி என்று அறிவித்திருக்கிறார்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்

தஞ்சை ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்

முள்ளி வாய்க்கால் இனப்படுகொலைக்கு, அதை நினைவு கூரும் விதத்தில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. குறிப்பாக, இலங்கையில் அத்தகைய சின்னங்களெல்லாம், நினைவிடங்களெல்லாம் அழிக்கப்படுகின்ற சூழலில், சிங்கள குடியேற்றங்களும், இராணுவத் திணிப்புக்களும் நடைபெறுகின்ற சூழலில், ஈழ விடுதலைக்கு முக்கியப் பின்தளமாகிய தமிழகத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்படுவது நியாயமான ஒன்று தான்;

ஆனால் அப்படி ஒரு நினைவு முற்றம் அமைக்கும் போது, அதை யாருடைய துணை கொண்டு அமைக்கிறோம், யாரை அதன் திறப்பு விழாவிற்கு அழைக்கிறோம் என்பதெல்லாம் பரிசீலனைக்கு உரிய விடயங்களாகும். பழ.நெடுமாறன் இணையத்தில் இந்த விழாவிற்கு விடுத்திருக்கும் அழைப்பில் “தஞ்சை பெரிய கோவில் என்பது தமிழனுடைய வெற்றியின் ஒரு சின்னம், அது கலைக் கோவில்; இந்த முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னம் தமிழினத்தினுடைய அவலத்தின் சின்னமாக இருக்கிறது. உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இங்கே வர வேண்டும்; இதை வந்து காண்பதன் மூலம் இப்படி ஒரு அவலம், தமிழ் மக்களுடைய வாழ்வில் இனியும் ஒரு முறை நேரக்கூடாது என்பதற்கான படிப்பினையை நாம் பெற வேண்டும்” என்று சொல்கிறார்.

அதில் நான் உடன்படுகிறேன், இதை பார்ப்பதன் மூலம் எதிர் காலத்தில் இப்படி ஒரு அவலம் தமிழ் மக்களுக்கு நேரக் கூடாது என்ற படிப்பினையை நாம் பெறவேண்டும் என்பதில் உடன்படுகிறேன். அந்த படிப்பினையை சிற்பங்களைப் பார்ப்பதன் மூலம் மட்டும் ஒருவர் பெற்று விட முடியாது. இந்த சிற்பங்களுக்காக பல ஓவியர்கள், சிற்பிகள் உழைத்திருக்கிறார்கள்; அதை அங்கீகரிக்கிறோம் என்றாலும், இந்த நினைவு முற்றத்தை உருவாக்குவதற்கு யார் பின்புலமாக இருந்தார்கள், யார் இதில் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது முக்கியமான கேள்வி.

ஆனந்த விகடன் பேட்டியில் நெடுமாறன் “துரோகிகளை நாங்கள் அழைக்கவில்லை” என்று சொல்லியிருக்கிறார். அதாவது தி.மு.க-வினர், இன்ன பிறரை அழைக்கவில்லை என்று சொல்கிறார். அதிலே ஒன்றும் கேள்வியில்லை.

Page-01ஆனால் அழைக்கப்பட்டிருப்பவர்கள் யார்? அவர்கள் எல்லாம் ஈழ விடுதலைப் போராட்டத்தினுடைய நண்பர்களா, ஆதரவாளர்களா, உந்து சக்திகளா என்று பார்த்தால், அப்படித் தெரியவில்லை. அவர்கள் சொல்வது போல இது தமிழர்கள் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இருக்குமா, இருக்காதா என்பதை நாம் எதை வைத்து முடிவு செய்ய முடியும்? நடந்தவற்றை எல்லாம் திரும்பப் பரிசீலனை செய்தால் இது திருப்பு முனையா, இல்லையா என்று புரிந்து கொள்ளலாம்.

கேள்வி

முள்ளிவாய்க்கால் என்பது ஒரு மிகப் பெரிய அவலம், அதை நினைவு கூர்வதற்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதிலும் விமர்சனம், பரிசீலனை, எதிர்ப்பு என்றெல்லாம் பார்க்க வேண்டுமா?

பதில்

எதை விமர்சிக்கலாம் என்று நாம் தேடி அலையவில்லை. முள்ளிவாய்க்கால் ஒரு மிகப் பெரிய துயரம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை; ஆனால் “அது அரசியலுக்கு அப்பாற்பட்டது, அதில் அரசியல் இல்லை” என்று சொல்வது முற்றிலும் தவறு; அதை ஏற்க முடியாது.

“மாவீரர் கல்லறைகளை அங்கே தகர்க்கிறார்கள், நினைவுச் சின்னங்களை தகர்க்கிறார்கள், அதனால் தான் தமிழகத்தில் இந்த சின்னத்தை எழுப்புகிறோம்” என்று நெடுமாறன் சொல்கிறார். அதை தகர்ப்பதில் சிங்கள இனவெறி அரசியல் இருக்கிறது. அது போல சின்னம் எழுப்புவதிலும் ஒரு அரசியல் இருக்கிறது, எனவே நினைவுச் சின்னம் எழுப்பும் போது, யாரைக் கொண்டு அதைச் செய்விக்கலாம் என்பதில் ஒரு வரையறை வேண்டும்.

உதாரணமாக ஈராக்கில் அமெரிக்கா படுகொலை நடத்துகிறது, அதற்குப் பல வளைகுடா நாடுகள் துணை நிற்கின்றன. துணை நின்ற வளைகுடா நாடுகளிடமே நன்கொடை வாங்கி அங்கே ஒரு நினைவுச்சின்னம் எழுப்பினால் அது கேலிக் கூத்தாக இருக்காதா?

“துரோகிகளை அழைப்பதில்லை” என்று நெடுமாறனே சொல்கிறார். அழைக்கப்பட்டிருப்பவர்களில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? அதில் ஏன் விளார் நடராசன் இருக்கிறார். அவர் யார்? அவருக்கும் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பக்கூடாதா? இது “அரசியலா”?

பாரதிய ஜனதா கட்சிக்காரர்களை அழைத்திருக்கிறீர்களே, அவர்கள் யார்? அவர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தின் நண்பர்களா? எதிரியா? எப்படி அழைத்திருக்கிறீர்கள் என்று கேட்கக் கூடாதா? இது “அரசியலா”?

இது எப்படி இருக்கிறது என்றால், கல்யாண வீட்டிலும், எழவு வீட்டிலும் “அரசியல் பேசாதீங்க” என்பார்களே, அந்த மாதிரி இருக்கிறது. இது தனிப்பட்ட துக்கம் அல்ல, தனிப்பட்ட எழவு வீடல்ல. நடந்திருப்பது ஒரு இனப்படுகொலை; இனப்படுகொலை என்பது ஒரு அரசியல் படுகொலை, அரசியல் காரணத்திற்காக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்குப் பின்னால் அரசியல் சக்திகள் இருந்திருக்கின்றன, அதனால் அரசியல் பேசித்தான் ஆக வேண்டும்.

Page-02கேள்வி

நடராசனைப் பற்றி சொன்னீர்கள், தமிழ் நாட்டில் ஈழ விடுதலையை ஆதரிக்கக் கூடியவங்க எல்லாக் கட்சிகளிலும் இருக்காங்க, கட்சித் தலைமையே ஈழ விடுதலையை எதிர்த்தாலும், தனி நபர்களாக ஒவ்வொருத்தரும் ஆதரிக்கிறாங்க, நன்கொடை குடுக்குறாங்க. சசிகலா நடராசனும் அது மாதிரி ஒரு ஆள், அப்படி எடுத்துட்டு போகலாம் இல்லையா, இதுல என்ன பிரச்சினை உங்களுக்கு?

பதில்

“கட்சி நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு ஈழ ஆதரவாளர், தமிழ் உணர்வாளர் நடராசன்” என்று கூறுவது, நடராஜனுக்கே கூட ஒரு புது செய்தியாகத்தான் இருக்கும்! நடராசன் என்பவர் தமிழ் நாட்டு அரசியலுக்கு எப்படி வந்தார் என்பதைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

1991-ம் ஆண்டில் தமிழ் நாட்டில் ஜெயலலிதா ஆட்சி வந்தது. ஜெயலலிதா எப்படி ஆட்சிக்கு வந்தார்? ஜெயலலிதா பெரும்பான்மை பெற்று தமிழ் நாட்டில் ஆட்சியைப் பிடிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது ராஜீவ் கொலை. ராஜீவ் கொலையில் சிதறிய அவரின் உடலின் புகைப்படத்தை சுவரொட்டிகளாக அடித்து, தமிழகம் முழுவதும் ஒட்டி, இந்தக் கொலைக்குக் காரணம் தி.மு.க-வினர் தான் என்று பிரச்சாரம் செய்து, காங்கிரசாரும், அண்ணா தி.மு.க-வினரும் தி.மு.க-வினருக்கெதிரான ஒரு வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள். தமிழகம் முழுவதும் திமுகவினரின் இரண்டு லட்சம் வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டன. பல பேர் மீது வழக்குகள் போடப்பட்டன. ஜெயலலிதா அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்று என்ன செய்தார்? வெற்றி பெற்ற கணம் முதல், புலிகளைத் தமிழ் மண்ணிலிருந்து துடைத்தெறிவது, ஈழ அகதிகளை இங்கிருந்து வெளியேற்றுவது என்பதற்கான வெளிப்படையான நடவடிக்கைகளில் இறங்கினார். ஈழ ஆதரவு, அகதிகளுக்கு ஆதரவு என்று பேசியவர்களெல்லாம், தடா முதல், NSA முதல், ராஜதுரோகக் குற்றச்சாட்டு முதல், பல குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்கள்.

ஆக, இந்தக் காலகட்டம் முழுவதும், ஈழ எதிர்ப்பு, புலி எதிர்ப்பு காலகட்டமாக இருந்தது. அன்றைக்கு தினமலரும், வாழப்பாடி ராமமூர்த்தியும், சோ-வும் தான் இந்த அரசாங்கத்தை வழி நடத்தினார்கள். இப்படிப்பட்ட அரசியல் அதிகாரத்தின் பின்புலத்தில்தான், அதாவது ஈழ எதிர்ப்பு அரசியலின் பின்புலத்தில் தான் நடராசன் என்ற “ஈழ ஆதரவாளர்” உருவாகின்றார். இந்தப் பின்புலத்தில் அவர் சசிகலாவின் கணவர்; உடன்பிறவா சகோதரியின் கணவர் என்ற முறையில் கட்சிக்குள் செல்வாக்கு பெறுகிறார்.

உடன்பிறவா சகோதரி, அன்பு சகோதரிக்கு எப்படி அறிமுகமானார் என்பது ஒரு தனிக்கதை. ஒரு வீடியோ கடை மூலம் அறிமுகமாகிறார். அன்றைய கால கட்டத்தில் எதற்கும் உருப்படாதவர்களுடைய தொழில் ஒரு வீடியோ கடை திறப்பது என்று இருந்தது. அது அழகிரி குடும்பமாக இருக்கட்டும், அல்லது இன்றைய சன் டீவி-யினுடைய கலா நிதி மாறன் குடும்பமாக இருக்கட்டும், எல்லாருமே வீடியோ கடையிலிருந்து தொடங்கியவர்கள் தான். அப்படி ஜெயலலிதாவுக்கு வீடியோ கேசட் கொடுத்து சசிகலாவுக்கு ஏற்பட்ட பழக்கம், போயஸ் தோட்டம் வரை சென்றது. சசிகலாவின் கணவன் என்ற முறையில், இவர் அண்ணா தி.மு.க-வில் ஒரு அதிகார மையமாக மாறினார். இந்த வகையில் நடராசன் தமிழகத்தின் ‘வரலாற்று’ மனிதர் ஆனார்!.

முற்றம் திறப்பு
முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழா – நடராசன் தலைமையில் நெடுமாறன் திறந்து வைப்பு.

பிரபல மார்க்சிய அறிஞர் பிளக்கனோவ், வரலாற்றில் தனி நபர்களின் பாத்திரம் என்ன என்று சொல்லும் போது ”ஒரு மன்னன் பெண் பித்தனாக இருக்கலாம். மன்னனுடைய குதிரை லாயக்காரனும் பெண் பித்தனாக இருக்கலாம். குதிரை லாயக்காரன் பெண் பித்தனாக இருந்தால் அதில் அரசியல் விளைவு ஒன்றும் கிடையாது; ஆனால் மன்னன் பெண் பித்தனாக இருந்தால் அதற்கு அரசியல் விளைவு உண்டு” என்பார். அதுபோல, ஜெயலலிதாவின் அன்புச் சகோதரி சசிகலாவின் கணவர் என்ற முறையில் நடராசன் அந்த இடத்தில் உட்கார்ந்து விட்டார். ஆகையினால் அதற்கு ஒரு மிகப் பெரிய அரசியல் விளைவு இருந்தது.

அந்த “அரசியல் விளைவு” மன்னார்குடி மாஃபியா என்ற கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கியது; அந்தக் குடும்பம் முழுவதும் தமிழ் நாட்டைச் சூறையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அப்படி ஒரு சூறையாடலைத் திட்டமிட்டுத் தலைமை தாங்கி நடத்தியவர் நடராசன். இந்த கொள்ளையைப் பற்றி நான் மேலும் விவரிக்க வேண்டிய தேவையில்லை. தமிழகம் அறிந்த உண்மை இது.

இப்படி ஒரு கொள்ளையை நடத்தியது மட்டுமல்ல, சாதி ரீதியாக முக்குலத்தோரை ஒரு சக்தியாக உருவாக்கி தமிழக அரசியலில் நிறுத்தியது நடராசன் என்ற நபருடைய தமிழ் இன விரோத, சாதி வெறி நடவடிக்கை.

கேள்வி

இன உணர்வு இருப்பவர்களுக்கு சாதி உணர்வு இருக்க கூடாது என்கிறீர்களா? இது இரண்டையும் எப்படி பிரித்து பார்க்க முடியும்?

பதில்

நடராசனுடைய தனிப்பட்ட சாதி உணர்வை பற்றி பேசவில்லை. அவர் ஏன் சொந்த ஜாதியில் திருமணம் செய்தார், பெண் எடுத்தார் என்பதையா பேசுகிறோம்?, நாம் பேசுவது குதிரைலாயக்காரனின் பெண் பித்தை பற்றி அல்ல, மன்னனின் பெண் பித்தை பற்றிப் பேசுகிறோம்.

அவர் சாதிக்காரர்களை அரசியல் ரிதீயாக ஒன்று திரட்டினார். தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையார் என்று இருந்தவர்களை முக்குலத்தோர் என்று ஒன்று திரட்டி அதை ஒரு அரசியல் சக்தியாக்கி அண்ணா தி.மு.க வின் ஒரு படை போன்று அதை மாற்றியதில் நடராஜனுடைய பங்கு முதன்மையானது. காலனியாதிக்க எதிர்ப்பு போராட்ட வீரன் பூலித்தேவனை, தேவர் சாதிக்காரனாக சித்தரித்து, அதற்கு ஒரு விழா எடுத்து இன்றைக்கும் அதை செய்வது நடராசன்தான்.

இன்றைக்கு தேவர் குருபூசை விழா அமர்களமாக நடக்கிறது, சாதிக் கலவரம் ஆண்டு தோறும் நடக்கிறது. இதற்கெல்லாம் மூல காரணம், இதை இப்படி ஒரு நிறுவனமாக ஒழுங்கமைத்து எல்லாக் கட்சியினரும் போய் அங்கு வழிபாடு செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்கி, அதை ஒரு அச்சுறுத்தும் சாதி வெறி கும்பலாக ஆக்கி வைத்தது நடராசன். அதிமுக அட்சியில் காவல் துறையில் எல்லா எஸ்.ஐ போஸ்டிங்கிலும் ஒரே சாதிக்காரர்கள் என்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் அந்த காலகட்டத்தில் வந்தன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒரு சாதி வெறிக் கும்பலை அரசியல் அதிகாரத்துக்கு கொண்டு வந்து நிறுத்தி, அதை வைத்துக் கொண்டு மிரட்டுவது என்பதை உருவாக்கியது நடராசன்.

தஞ்சை ஆர்ப்பாட்டம்
நெடுமாறனை எதிர்த்து தஞ்சையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்

இதை சாதி உணர்வு என்று எப்படி பார்க்க முடியும், சொல்லப் போனால தமிழன், தமிழ் இன உணர்வு கொள்வதற்கு எதிராக அவனை சாதி வெறியனாக சாதிக்கு உள்ளே தள்ளியது நடராசன். தமிழின உணர்வுக்கு எதிரான வேலையை செய்தவர் நடராசன். அது ஒரு பிரச்சனையாகவே இவர்களுக்குப் படவில்லை என்று தெரிகிறது.

பரமக்குடி துப்பாக்கி சூடு பற்றி சம்பத் கமிசன் அறிக்கை வந்திருக்கிறது. முற்றிலும் தற்காப்பிற்காக நடத்தப்பட துப்பாக்கிச்சூடு என்று அந்த அறிக்கை கூறுகிறது. அந்த அறிக்கை, சரியாக தேவர் ஜெயந்தி நடக்கும் அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. இதற்கு ஒரு நோக்கம் இருக்கிறதா இல்லையா? இதை உருவாக்கியது, இதற்கு அடித்தளமாக இருந்தது நடராசன். நடராசன் இப்படி ஒன்றை உருவாக்கியதன் தொடர்ச்சியாகத்தான் தென் மாவட்டங்களில் 95,96-ல் நடைபெற்ற சாதிக் கலவரங்கள், அதாவது தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள் நடந்தன.

இந்த தமிழ் இன உணர்வாளர், முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு கார் கொடுத்தேன் என்பவர், பணம் கொடுத்தேன் நிலம் கொடுத்தேன் என்பவர், நத்தம் காலனிக்கு போனாரா? அங்கே தாக்கப்பட்டவர்கள் தமிழர்கள் இல்லையா?. அதுபோல தமிழ்நாட்டின் எத்தனை பகுதிகளில் ஆதிக்க சாதி வெறியர்களால் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுகிறார்கள், அதற்கெல்லாம் இவர் போகிறாரா, பார்க்கிறாரா? அதைப் பற்றி எல்லாம் இந்த “இன உணர்வாளர்கள்” என்ன கருதுகிறார்கள்?

இது நடராஜனுடைய பிரச்சனை மட்டுமல்ல. “இவ்வாறு செய்வது தவறு இல்லை. இப்படியெல்லாம் செய்து கொண்டே ஒருவன் தமிழ் உணர்வாளனாகவும் இருக்க முடியும்” என்று கருதுகிறார்களே அது தான் பிரச்சனை.

நடராசன் சோ வுக்கு எதிராக பேட்டி கொடுத்திருக்கிறார். சோ வுக்கும் இவருக்கும் உள்ள தொடர்பு என்ன? அண்ணா திமுக என்ற கட்சியில் அதனுடைய பார்ப்பன பாசிச அரசியல் நடவடிக்கைளை மேலிருந்து வழி நடத்தியவர் சோ ராமசாமி. இன்னொரு பக்கம் அதிமுக கட்சியின் அணிகளை கீழிருந்து சாதி ரீதியாக திரட்டுவதும், ஊழல் செய்வதும், கொள்ளை அடிப்பதும், அதிலே பங்கு வசூலிப்பதுமான வேலைகளை ஒழுங்கமைத்துக் கொடுத்து, மன்னார்குடி மாஃபியாவாக இயங்கியது நடராஜனுடைய வேலை. இப்படி ஒரு வேலைப் பிரிவினையில்தான் அந்தக் கட்சி இயங்கியிருக்கிறது. இதன் மூலம் நடராஜனுக்கு அனைத்திந்திய அளவில் தொடர்பு, கன்சிராமோடு தொடர்பு, இவருக்கு உத்தர பிரதேசத்தில் பினாமி சொத்துக்கள் அவர்களுக்கு இங்கே தமிழகத்தில் பினாமி சொத்துக்கள், என தேசிய அளவில் நடராசன் அரசியல் பிரமுகர் ஆனார்.

சென்ற ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற் பொங்கல் விழாவில் பிராணாப் முகர்ஜியின் உறவினரை அறிமுகப்படுத்தினார் என்று பத்திரிகையில் செய்தி வந்திருந்தது. பிரணாப் முகர்ஜி யார்? தமிழ் உணர்வாளர்களை கேளுங்கள் யார் என்று கூறுவார்கள். ஈழ விடுதலையின் எதிரி. அந்த எதிரியின் நெருங்கிய உறவினர் இவருக்கு தெரிந்தவராம், இவர் கையில் இருக்கிறாராம். “இன்னும் பல பேரை கொண்டு வருவேன்” என்று பெருமையாகப் பேசுகிறார் இந்த அரசியல் தரகர்.

(சசிகலா) நடராசனை சிறப்பிக்கும் அழைப்பிதழ்
(சசிகலா) நடராசனை சிறப்பிக்கும் அழைப்பிதழ்

இவர் ஒரு அரசியல் தரகர் என்று அருவருப்பாக பார்க்கின்ற ஒரு மனோபாவம் கூட இந்த தமிழ் உணர்வாளர்களிடம் இல்லை. இப்படி முறைகேடாக சொத்து சேர்த்தவர்கள், நிழலான தொழில் செய்த நிழல் மனிதர்கள் பல பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஜேப்பியார் சாராயம் விற்றவர், நிறைய ரவுடித்தனங்கள் செய்தவர், பின் வயதாகி ஒரு கட்டம் வந்த பிறகு அவர் வள்ளலாக அவதரிக்கிறார், அதுபோல ராமசாமி உடையார் சாராயம் விற்று பின் மெடிக்கல் காலேஜ் கட்டி வள்ளலாகி விட்டார்.

நடராஜனுக்கு மட்டும் அவர்களைப் போல கடைசி காலம் வரை காத்திருக்க பொறுமை இல்லை. ஆரம்பத்திலேய அப்படி ஒரு பிரமுகராக வேண்டும் என்று ஆசை. ஆரம்பத்திலேயே “புதிய பார்வை” என்று ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கிறார். நவீன அச்சு இயந்திரங்களை கொண்டு வந்து இறக்கி தன்னை பத்திரிகை ஆசிரியாராக, அறிவு துறையாளர் போல அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இதை இவர்களெல்லாம் அங்கீகரிக்கிறார்கள் என்பது தான் கேவலம்!

1991-96 க்கு இடைப்பட்ட காலத்தில் கடுமையான அடக்குமுறை ஈழத்தமிழர்கள் மீதும் புலிகள் மீதும் நிலவிய அந்த காலத்தில், 1995-ம் ஆண்டில் தமிழகமே காறி உமிழ்ந்த வளர்ப்பு மகன் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்திற்கு சென்று வாழ்த்தி, விருந்துண்டு, சிறப்பித்து விட்டு வந்தவர் பழ.நெடுமாறன். இன்றைக்கு “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம்” என்று உலகத் தமிழினத்தையே வரவழைத்து நடராசன் வீட்டு விருந்துக்கு அழைத்து செல்கிறார். இதை நான் கேவலப்படுத்துவதற்காக சொல்லவில்லை.

“முற்றத்துக்கு நடராசன் நிதி கொடுத்தார்” என்று அவர்கள் இவர்கள் சொல்லுகிறார்கள் ஜூனியர் விகடனில் ஒரு விளம்பரம் வருகிறது. “முற்றம் தந்த முதல்வனே” என்று வாசகம். நடுவில் பிரபாகரன் படம், இந்த பக்கம் முத்துராமலிங்க தேவர், அந்த பக்க பூலித்தேவன் படம்! முள்ளி வாய்க்கால நினைவு முற்றம் என்பது முக்குலத்தோர் தமிழினத்திற்கு தந்த பரிசா? இப்படி விளம்பரம் கொடுக்கலாமா? இதை நெடுமாறனும் மற்றவர்களும் அங்கீகரிக்கிறார்களா? இது ஒரு ஆண்டை வீட்டு விழா போல நடக்கிறது. இநத மூன்று நாள் நிகழ்ச்சியில் இரண்டு நாள் நிகழ்ச்சிகள் நடராஜனுடைய தமிழரசி திருமண மண்டபத்தில்தான் நடக்கவிருக்கின்றன.

அங்கு நடராசன் ஆண்டு தோறும் பொங்கல் விழா நடத்துவது வழக்கம். சினிமா துணை நடிகர்களை அழைத்து வந்து ஆட வைப்பது வழக்கம். இப்போது அதற்கு பதிலாக இந்த விழாவை அவர்கள் நடத்துகிறார்க்ள். இதற்கு மேல் நடராஜனுடைய வரலாறை நான் சொல்லத் தேவையில்லை. வரலாற்றில் ஆர்வம் உள்ள மாணவர்கள் (90-களின்) ஜீனியர் விகடன், நக்கீரன் போன்ற பத்திரிகைகளை புரட்டிப் பார்த்தால் கஞ்சா செரினா வழக்கு முதல் நடராஜனுடைய வரலாறு முழுவதையும் அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

சென்ற ஆண்டு இதே தமிழரசி கல்யாண மண்டபத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்காக தன் இரண்டு கார், கையிலிருந்த பிரேஸ்லெட் நகைகளை எல்லாம் நன்கொடையாக கொடுத்து. “நான் இந்த உலகத்தில் இரண்டு பேருக்கும் மட்டும் தான் கட்டுப்படுவேன். ஒன்று சசிகலா இன்னொன்று நெடுமாறன்” என்று அந்த மேடையில் பேசினார் நடராசன். நாம் சசிகலாவை கேட்க முடியாது, அதனால், நெடுமாறன்தான் நடராஜனுடைய இந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டும்.

கேள்வி

இதே விழாவில் பி.ஜேபி பங்கேற்கிறது. பி.ஜே.பி பங்கேற்பதை கண்டித்து இணையத்தில் பலர் விமர்சனமாக எழுதி இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஈழப் போராட்டத்திற்கு பா.ஜ.க உதவியதாக வை.கோ பேசிக்கொண்டிருக்கிறார். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்

இந்த நிகழ்ச்சிக்கு பொன்.ராதாகிருஷ்ணன், அர்ஜூன் சம்பத் ஆகியோரை அழைத்திருக்கிறார்கள், சுப்பிரமணிய சாமியை ஏன் அழைக்கவில்லை என்று தெரியவில்லை. “ஈழ விடுதலைக்கு ஆதரவளித்த” பா.ஜ கட்சியில் தான் அவரும் சேர்ந்து இருக்கிறார். ஏன் அழைக்கவிலை என்று தெரியவில்லை.

தஞ்சை ஆர்ப்பாட்டம்
தஞ்சை ஆர்ப்பாட்டம்

“காங்கிரஸ் அளவுக்கு பி.ஜே.பி எதிரி அல்ல” என்பது இவர்கள் உருவாக்குகின்ற சித்திரம். ஆனால் உண்மை அதுவல்ல. “நடுக்கடலில் புலிகளின் ஆயுதக் கப்பலை இந்தியக் கடற்படை தடுத்து நிறுத்திய போது, இந்தியக் கடற்படையின் பிடியில் இருந்து கப்பலை விடுவித்து ஆயுதங்களை புலிகளுக்கு சேர்ப்பதற்கு உதவியவர் வாஜ்பாய்” என்று வை.கோ மேடைகளில் அடிக்கடி சொல்வது வழக்கம். கடைசியாக விருதுநகர் மாநாட்டில் கூட, 2004 வரை எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த்தாகவும், 2004 க்கு பிறகு தான் சிங்கள அரசுக்கு இந்திய அரசு, காங்கிரஸ் அரசு உதவி செய்ய ஆரம்பித்ததாகவும் பேசி இருக்கிறார்.

இது எல்லாமே வடிகட்டிய பொய். ஆயுதக் கப்பலை காப்பாற்றுவதற்கு வாஜ்பாய் உதவி செய்தாராம். 2000-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த புகழ் பெற்ற ஆனையிரவு முற்றுகை பற்றி உணர்ச்சி பொங்கப் பேசும் வைகோ, அதற்கப்புறமுள்ள கதையை ஏன் பேசுவதில்லை? ஏறத்தாழ நாற்பதாயிரம் சிங்கள சிப்பாய்களை சுற்றி வளைத்து, அவர்கள் சரணடைந்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில், மேல் கையில் புலிகள் இருந்த போது, புலிகளுடைய காலைப் பிடித்து இழுத்தது யார்?

2000 ஏப்ரலில் நடந்து கொண்டிருந்த தேசிய ஜனநாயக முன்னணியின் ஆட்சியில் ம.தி.மு.க, பா.ம.க, தி.மு.க மூன்று கட்சிகளை சேர்ந்தவர்கள் வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருக்கிறார்கள். இந்த சுற்றி வளைப்பில் சிங்கள ராணுவம் சிக்கிய உடன் இலங்கை அரசு அபயக் குரல் எழுப்புகிறது. உடனே வாஜ்பாய், புலிகள் “இந்த முற்றுகையை விலக்கிக் கொள்ள வேண்டும், அவர்களை விடுவிக்க வேண்டும், இல்லையென்றால் இங்கிருந்து இந்திய படைகள் அனுப்பப்படும்” என்று எச்சரிக்கிறார்.

இவர்கள் வாஜ்பாய் அரசின் சார்பாக புலிகளிடம் தரகு வேலை செய்கிறார்கள். வாஜ்பாய் சொன்னதை புலிகள் கேட்கவில்லையென்றால் என்ன நடந்திருக்கும்? வாஜ்பாய் சொன்னது போல படையை அனுப்ப வேண்டியிருந்திருக்கும். படையை அனுப்பியிருப்பார்களா? ஒரு முறை ஐ.பி.கே.எப்-1 சென்று செருப்படி பட்டு திரும்பி வந்திருக்கிறது. இரண்டாவது ஐ.பி.கே.எப்-ஐ அனுப்பியிருக்க முடியுமா? அன்றைக்கு முடியாது என்ற தடுமாற்றத்தில் இந்திய அரசு இருந்தது. வாஜ்பாய் அரசுக்கு அப்படி ஒரு சங்கடம் நேராமல், கத்தியில்லாமல் ரத்தமில்லாமல், எந்த சேதமுமில்லாமல், புலிகளை வாபஸ் வாங்க வைத்து, சிங்கள ராணுவத்தை காப்பாற்றிவிட்ட கைக்கூலிகள் இவர்கள்.

2009-ல் போர் நிறுத்தத்திற்கு கருணாநிதி ஏற்பாடு செய்யவில்லை. காங்கிரஸ் அரசில் பதவிக்காக அவர் அதை செய்தார் என குற்றம் சாட்டுகிறார்கள். உண்மைதான். ஆனால் 2000-ல் நீங்கள் செய்தது என்ன? “ஈழம் அடைந்துவிடலாம், புலிக்கொடி ஏறப் போகிறது” என்று பேசிக் கொண்டிருந்த நிலையில் புலிகளின் காலைப் பிடித்து இழுத்தீர்கள். இதனை எப்படிச் சொல்வது? வாஜ்பாய் அரசுக்கு சுமுகமாக வேலையை முடித்துக் கொடுத்தீர்கள் என்று சொல்வதா? அல்லது சிங்கள அரசுக்கு சுமுகமாக வேலையை முடித்துக் கொடுத்தீர்கள் என்று சொல்வதா?

இப்படி தங்களுடைய துரோகமும் சேர்ந்திருப்பதினால் இவர்கள் பாரதிய ஜனதாவைப் பற்றி பேசுவதில்லை. பாரதிய ஜனதா இப்படி செய்தது என்று குற்றம் சாட்டினால், இவர்கள் தங்களுடைய பாத்திரத்தை பேச வேண்டியிருக்கும். அதனால் தான் அதை கவனமாக இருட்டடிப்பு செய்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் முற்றம்பிரபாகரனுடைய வாழ்க்கை வரலாறைப்பற்றி நெடுமாறன் ஒரு பெரிய நூல் (பிரபாகரன்: தமிழர் எழுச்சியின் வடிவம்) எழுதியிருக்கிறார், அண்டன் பாலசிங்கத்தின் ”போரும் சமாதானமும்” என்ற நூல் இருக்கிறது. இரண்டு நூல்களிலும் இந்த முற்றுகை எப்படி விலக்கி கொள்ளப்பட்டது. வாஜ்பாய் அரசு அன்றைக்கு என்ன செய்தது? இவர்கள் பாத்திரம் என்ன – என்பது பற்றி எதுவும் கிடையாது. அந்த இடம் இருட்டாக இருக்கிறது. அப்படி ஒரு இருட்டடிப்பை, மோசடியை இவர்கள் செய்யக் காரணம் இவர்களுடைய பாத்திரம் அப்படிப்பட்டது.

வாஜ்பாய் அரசு அதோடு நிறுத்தவில்லை. தமிழீழத்தை அடைய விடாமல் பிரபாகரனையும், புலிகளையும் தடுத்தது மட்டுமல்ல. அந்த நாட்களில் ராமதாசு, வை.கோபால்சாமி எல்லாம் இங்கு தமிழீழம் தமிழீழம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது டெல்லியிலிருந்து தாக்கீது வருகிறது – சுப்பிரமணிய சாமி, சோ போன்றவர்கள், “என்ன, இவர்கள் எல்லாம் தமிழீழம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள், பேசக் கூடாது” என்கிறார்கள். உடனே ராமதாசு, வைகோ போன்றோர் சொல்கிறார்கள் “தமிழீழம் என்பது எங்கள் கொள்கை. நாங்கள் எங்களுக்குள் பேசிக் கொள்கிறோம். அதை ஆதரிக்கச் சொல்லி உங்களை கேட்கவில்லையே” என்ற ரீதியில் பதிலளிக்கிறார்கள். இப்படிப்பட்ட நகைச்சுவை நாடகங்கள் எல்லாம் இங்கே அரங்கேறியிருக்கின்றன.

அதற்கு பின்னர் அத்வானி பிரபாகரனை இலங்கையிலிருந்து வெளியேற்ற வேண்டும் (extradition) என்று கோருகிறார். அப்படி கோருவதற்கு துணை நின்று குரல் கொடுத்தது யார் என்றால், வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் இந்திரஜித் குப்தா. தா.பாண்டியன், நல்லகண்ணு ஆகியோரின் வலது கம்யூ கட்சிதான். அதற்குப் பிறகு “2002-ல் சமாதான பேச்சு வார்த்தை நார்வே அரசின் மூலமாக தொடங்கிய பிறகு “அந்த நபரை இந்தியாவிடம் ஒப்படைப்பது என்ற கேவலமான காரியத்தை நாங்கள் செய்ய மாட்டோம்” என்று இலங்கை தூதரக அதிகாரி ஒருவர் பதிலளித்தார். ஆனால் அந்த கேவலமான காரியத்தை செய்தது பாரதிய ஜனதா கட்சி. இதற்கெல்லாம் ஆதாரங்கள் இருக்கின்றன.

இத்தனை ஆதாரங்களையும் மறைத்து விட்டு பாரதிய ஜனதா கட்சி ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்ததைப் போல ஒரு சித்திரத்தை உருவாக்குகிறார்கள். இன்னும் விவரங்களை நீளமாக சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கு பின்னால் இறுதிப்போர் கால கட்டத்தில் (2008-09) இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பித்தார்கள். அதில் பாரதிய ஜனதாவும் உறுப்பினராக இருக்கிறது. பாரதிய ஜனதாவையும் சேர்த்து வைத்துக் கொண்டு, அவர்கள் இனப் படுகொலையை தடுக்க துணை நிற்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். அதாவது நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாரதிய ஜனதாவும், மாநிலத்தில் ஜெயலலிதாவும் வெற்றி பெறும் பட்சத்தில் ஈழத்தில் போர் நிறுத்தம் வந்து விடும் என்று ஒரு தோற்றத்தை மக்களுக்கு ஏற்படுத்த இவர்கள் வேலை செய்தார்கள். இனப்படுகொலை நடந்து முடிந்தது. அதற்குப் பின்னால் நாடாளுமன்றத்தில் விவாதம் வரும்போது “இனப்படுகொலை” என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று பேசியவர் சுஷ்மா சுவராஜ்.

அதற்குப் பிறகு சுஷ்மா சுவராஜ், ராஜபக்சேவை போய் பார்க்கிறார், நெக்லெஸ் வாங்கிக் கொண்டு வருகிறார், பாரதிய ஜனதா கட்சியின் குழு போகிறது, இந்திய முதலாளிகளோடு பாஜக எம்பிக்கள் இலங்கை போகிறார்கள். இப்போது கடைசியாக ஆர்.எஸ்.எஸ் ஒரு குழுவை அனுப்பி வைத்திருக்கிறது. இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் விழாவிலே பொன்.ராதாகிருஷ்ணனோடு அதே அரங்கத்தில் பங்கேற்கவிருக்கின்ற தமிழ்தேசிய பொதுவுடைமை கட்சியினுடைய மணியரசன் தன்னுடைய பத்திரிக்கையில் இதைப் பற்றியெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார். காங்கிரசைப் போலத் தான் பாரதிய ஜனதாவும், ஈழ விடுதலைக்கு அது எதிரிதான் என்று விரிவாக எழுதியிருக்கிறார். எழுதி விட்டு அவர்களுடன் சேர்ந்து விழாவில் பங்கேற்கவும் செய்கிறார்.

பி.ஜே.பி என்பது ஈழ விடுதலைக்கு ஆதரவாக எதுவும் செய்ததில்லை என்பது மட்டுமல்ல, திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் “மொழிவாரி மாநிலங்களைப் பிரித்ததே தவறு” என்று பேசியவர் மோடி. அதுதான் அவர்களுடைய கொள்கை. தமிழ் தேசிய இனம், கன்னட தேசிய இனம் என்று இனத்தையே அங்கீகரிக்க மறுப்பவர்கள் அவர்கள். அவர்கள் இன விடுதலையை பெற்றுத் தருவார்கள் என்றும், ஈழத்தமிழர்களுக்கு தன்னுரிமையை பெற்றுத் தருவார்கள் என்றும் கூறுவது மிகப்பெரிய மோசடி.

பாஜக வினரே அப்படியெல்லாம் சொல்லிக் கொள்ளவில்லை. “ராஜாதி ராஜ, ராஜ கம்பீர” என்று அவர்களுக்கு இல்லாத பண்புகளை எல்லாம் பாரதிய ஜனதாவின் மீது ஏற்றி நெடுமாறனும், வைகோவும், இன்ன பிறரும்தான் அவர்களை இப்படி சித்தரித்து காட்டுகிறார்கள். இது அப்பட்டமான பொய் என்பது மட்டும் தான் உண்மை.

கேள்வி

புலிகள் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்துக்கு ஆதரவாக ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அந்த நிகழ்ச்சியில் தேசியக் கட்சியான பாரதிய ஜனதா “துணிச்சலுடன்” கலந்து கொண்டு பேசுகிறது. இதை ஏன் இந்தக் கோணத்தில் பார்க்கக்கூடாது?

பதில்

பார்க்கலாம். புலிகள் இயக்கத்தை தடை செய்த ஒரு கட்சி; காங்கிரஸ் ஆட்சி புலிகள் இயக்கத்தை தடை செய்யும் போதெல்லாம், அதற்கு முழு மனதாக ஆதரவு கொடுத்த ஒரு கட்சி; நாள் தோறும் புலி எதிர்ப்பு அறிக்கை விடுவதையே தன்னுடைய பணியாக கொண்டிருக்கின்ற சுப்பிரமணிய சாமி என்ற பிறவியை தன்னுடைய கட்சியிலே சேர்த்து வைத்திருக்கின்ற ஒரு கட்சி – யாரோ ஒரு நபரை அனுப்பி வைத்து ஈழத் தமிழினத்திற்கு ஆதரவாக பேசுவது போல ஒரு நாடகத்தை நடத்திக் காட்டுகிறது. அதையும் நம்புவதற்கான மூடர்கள் தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறார்கள் என்பதால் இந்தக் கோணத்திலும் பார்க்கலாம்.

நெடுமாறன் தாக்கரேயின் வீட்டுக்கு போனாராம். தாக்கரே வீட்டில் பிரபாகரனுடைய படம் மாட்டி வைத்திருக்கிறாராம். அதை பார்த்து இவர் நெகிழ்ந்து போய் விட்டதாக எழுதுகிறார். பால் தாக்கரே என்பவன் யார்? ஒரு காலத்தில் தமிழர்களை மும்பையிலிருந்து விரட்டியடித்த ஒரு பாசிஸ்ட், இன வெறியன். 1992-ல் முஸ்லீம்களுக்கு எதிரான மிகப் பெரிய படுகொலையை கட்டவிழ்த்து விட்டவன். அதற்குப் பின்னால் பீகாரையும், உ.பியையும் சேர்ந்த ஏழைத் தொழிலாளர்களை அடித்து விரட்டியவன். அப்படி ஒரு பாசிஸ்டால் பாராட்டப்படுவதை, ஒரு பெரிய அங்கீகாரமாக கருதுபவர் நெடுமாறன் என்பதால், பாரதிய ஜனதா ஈழ விடுதலை போராட்டத்தை அங்கீகரிப்பது குறித்து அவர் பெருமை கொள்ளலாம்.

ஆனால், பாரதிய ஜனதாவைப் பொறுத்த வரைக்கும் ஈழப் போராட்டத்தை எப்படிப் பார்க்கிறது? தமிழ் நாட்டுக்கு வரும் போது இது தமிழர்களுடைய போராட்டமல்ல, இந்துக்களின் போராட்டம் என்று சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். வட இந்தியாவுக்கு போகும் போது இலங்கை என்பது அகண்ட பாரதத்தின் ஒரு அங்கம், பௌத்தர்கள், தமிழர்கள் உட்பட எல்லோரும் நம்மைச் சேர்ந்தவர்கள் தான், சிங்களவர்கள் ஆரிய இனத்தின் தொடர்ச்சி என்று அங்கே பேசுகிறார்கள்.

தமிழினம் என்கிற வரையறையை அவர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்த வரையில் தமிழுணர்வு என்பதை இந்து உணர்வாக மாற்றுவது எப்படி என்பது தான் அவர்களுடைய கவலை. இவர்கள் இங்கே பொன்.ராதாகிருஷ்ணனை மேடையேற்றட்டும். அங்கே வேறொரு காரியம் நடக்கிறது.

என்ன காரியம்? இலங்கையில் அசோக வனம் உருவாக்கப்படுகிறது. அது பாரதிய ஜனதா கட்சியின் ஒத்துழைப்போடு, ஆதரவோடு நடக்கிறது. அதை இவர்கள் இங்கிருந்து போய் பாராட்டுகிறார்கள். ராஜபக்சே அங்கிருந்து சாஞ்சிக்கு வருகிறான். அதற்கு அவர்களால் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அதை எதிர்த்து வைகோ ஒரு போராட்டமும் நடத்திக் கொள்கிறார்கிறார். அதற்குப் பிறகு இவர்கள் ஈழத்தமிழருக்கு பாஜக ஆதரவென்று பேசிக்கொள்கிறார்கள்.

ஆக, பாரதிய ஜனதாவின் தமிழின ஆதரவு என்பதெல்லாம் தமிழ் நாட்டில் இருக்கக் கூடிய தமிழ் உணர்வை இந்து உணர்வாக மாற்றுவதற்கு பாரதிய ஜனதாவும், சங்க பரிவாரமும் செய்கின்ற ஒரு சதி என்று தான் சொல்ல முடியும்.

கேள்வி

இந்தச்சதி, தமிழ் தேசிய வாதிகளுக்கு தெரியாதா? இது கூட தெரியாமல்தான் அவர்கள் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்கிறிர்களா?

பதில்

ஆம் அவர்களுக்குத் தெரியும். தமிழகத்தில் இருந்து பெரியாரின் அரசியல் செல்வாக்கை ஒழிப்பது என்பது பார்ப்பனக் கும்பலின் நீண்ட நாள் கனவு. இங்கே பார்ப்பன பாசிசம் தலையெடுப்பது என்பது ஒரே வழியில் நடக்கவில்லை. பல வழிகளில் நடக்கிறது.

அதில் ஒன்று அரசியல் சந்தர்ப்ப வாதிகள், பிழைப்பு வாதிகளை வைத்துக் கொண்டு காலூன்ற முயற்சிப்பது. கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக தமிழகத்தில் நாம் பார்த்து வருவது அதுதான். பா.ம.க., ம.தி.மு.க., தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசில் கூட்டணி – பதவி என்ற ஆதாயங்களுக்காக தமிழ் நாட்டின் கதவுகளை ஆர்.எஸ்.எஸ்-க்கு திறந்துவிட்டார்கள். இது பார்ப்பன பாசிசம், இவர்களின் அரசியல் பிழைப்பு வாதத்தைப் பயன்படுத்திக் கொண்டு நுழையும் வழி.

இரண்டாவதாக, கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாக தலையெடுத்து வளர்ந்து வருகின்ற சாதி சங்கங்கள் ராமதாஸ் தலைமையில் இப்போது தீவிரம் அடைந்திருக்கின்றன. சாதி சங்கம் என்றால் என்ன? சாதி சங்கம் என்பது ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கின்ற சாதி மறுப்பு, சுயமரியாதை மரபை வேரறுப்பதற்கானது. ஆர்.எஸ்.எஸ். வேண்டுவது அதைத்தான். வட நாட்டில் “லவ் ஜிகாத்” என்று சொல்லி, முஸ்லீம்களுக்கு எதிராக ஜாட் சாதியினரைத் தாக்குதல் தொடுக்க வைக்கிறார்கள். ஜாட் என்பது ஒரே நேரத்தில் சாதியாகவும், இந்துவாவும் இருக்கிறது. வன்னியர் சங்கம், உடையார் சங்கம், முக்குலத்தோர் சங்கம், என்று சங்கங்களை இவர்களால் ஒன்றிணைக்க முடியுமென்றால், அவர்களை மிகவும் இயல்பாக இந்து மதவெறிக்கு கொண்டு வந்து விட முடியும். ஆகவே இதனை பாஜக வினர் மிக்க மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள்.

மூன்றாவதாக பயன்படும் வழிக்கு ஒரு வரலாறு இருக்கிறது. தமிழகத்தை பொறுத்த வரையில், குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஆர்.எஸ்.எஸ். நேரடியாக கால் பதித்த காலம் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்ற பிறகுதான். எம்.ஜி.ஆர் ஆர்.எஸ்.எஸ்ஸை அனுமதித்த பிறகுதான் மண்டைக்காடு கலவரம் வந்தது. பிறகு வந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்பினர் பல்வேறு அதிகார நிறுவனங்களிலே பங்கு பெறும் சூழ்நிலை வருகிறது. விநாயகர் ஊர்வலம் என்பதெல்லாம் ஏறத்தாழ நிறுவன மயமாக்கப்படுகிறது.

மோடியின் திருச்சி கூட்டத்தில் ஒரு பேச்சாளர், “அன்னைக்கு ஒரு பிள்ளையாரை பெரியார் உடைத்தார். இன்று தமிழ்நாடு எங்கும் பல்லாயிரம் பிள்ளையார்கள்! உங்களால் என்ன செய்ய முடியும்” என்று சவால் விட்டு பேசினார். அப்படி ஆர்.எஸ்.எஸ். இங்கே காலூன்றி இருக்கிறது. இருப்பினும், இத்தனைக்குப் பிறகும் தமிழகம் தங்கள் கைக்கு வந்துவிட்டதாக அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. பாரதிய ஜனதாவினருக்குக் கிடைத்திருக்கிற ஒரு அரிய வாய்ப்பு -இந்த தமிழ் தேசிய அமைப்புகள்.

“தமிழ் இனம்” என்பது வழியாக இந்துத்துவம் உள்ளே நுழைந்து விட முடியும் என்பதை அவர்கள் கண்டு கொண்டார்கள். இது ரொம்ப முக்கியமான விசயம். தமிழ் நாட்டை பொறுத்த வரைக்கும் “யார் தமிழன்” என்ற கேள்வி ரொம்ப நாளாக இருக்கிறது. என்னென்ன சாதிகளெல்லாம் தமிழ்ச் சாதிகள். இன்ன சாதிகளெல்லாம் தமிழ் சாதிகள் கிடையாது. பார்ப்பனர்கள் தமிழர்கள் – பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை என்று பல வரையறைகள் இருக்கின்றன.

பெரியாரைப் பொறுத்த வரையில், திராவிடன் என்று சொல்லுவதாக இருக்கட்டும், தமிழன் என்று சொல்வதாக இருக்கட்டும், அவர் “பார்ப்பனியம், மனுதர்மம், சாதியாதிக்கம், சமஸ்கிருதம்” இவற்றுக்கு எதிராக “சுயமரியாதை, நாத்திகம், சமத்துவம்” என்ற உன்னதமான, சமத்துவ விழுமியங்களை முன்வைத்து அதிலிருந்து தமிழன் என்பதை பெரியார் முன்நிறுத்தினார். அதை அப்படி உருவாக்க முடியும் என்று கருதினார். அப்படி உருவாக்க முடிந்திருக்குமா முடிந்திருக்காதா என்பது வேறு. ஆனால் கருத்தியல் ரீதியில் அது முற்போக்கானது. அப்படி ஒரு விழுமியத்தை பெரியார் உருவாக்கினார்.

ஆனால் அதற்கு மாற்றாக இப்போது உருவாகி வளர்ந்து வருகின்ற தமிழ் தேசியம் என்பது கன்னட எதிர்ப்பு, தெலுங்கன் எதிர்ப்பு, மலையாளி எதிர்ப்பு என்று அண்டை மாநில மக்களை தமிழனுக்கு எதிராக நிறுத்துவதன் மூலம் உருவாக்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு பிரச்சினையிலோ, காவிரி பிரச்சினையிலோ, பாலாறு பிரச்சினையிலோ, வேறு ஒரு பிரச்சினையிலோ அண்டை மாநிலத்தவரை எதிரியாக காண்பதன் மூலம் தமிழன் தன்னை வரையறுத்துக் கொள்வது – என்ற முறையில் பார்க்கப்படுகிறது.

அல்லது பிறப்பின் அடிப்படியில் இன்னின்ன சாதிகள் தமிழ்ச் சாதி, மற்ற சாதிகள் வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள், கன்னடம் பேசுபவர்கள் அவர்களையெல்லாம் தமிழ் இனத்தில் சேர்க்க முடியாது – என்று பல வரையறைகள் நிலவுகின்றன. இவையெல்லாம் பெரியார் கொடுத்த வரையறையுடன் ஒப்பிடும் போது பிற்போக்கானவை. இதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். அதனால்தான் பெரியாரை ஒரு வேற்று மொழிக்காரன் என்ற அடிப்படையில், அவர் தமிழனுக்கு எதிரான சதிகாரன், சூழ்ச்சிக் காரன் என்கிறார்கள்.

பெரியாரை மட்டுமல்ல, அது யாராக இருந்தாலும் “வடுகன், சதிகாரன், சூழ்ச்சிக்காரன் என்று பிறப்பு அடிப்படையில், சாதிய கண்ணோட்டத்தில் எப்படி பார்ப்பார்களோ அப்படி “இந்த மொழி பேசுபவன் என்பதனால் இவன் நம்ப முடியாதவன்” என்று சித்தரிப்பது இந்த புதிய தமிழ் தேசியத்தினுடைய முக்கியமான குணாதிசயம். இது ஒரு பிற்போக்கு தமிழ் தேசியம்.

ஆனால் தமிழ் நாட்டில் பெரியார் முன் வைத்த தமிழ் எனும் அடையாளம், பிற்போக்கானது போலவும், ஈழத்தில் உருவாகி வளர்ந்து வந்த தேசியம் முற்போக்கு தேசியம் போலவும் இவர்கள் காட்டுகிறார்கள் அது உண்மை அல்ல.

சொல்லப் போனால் திராவிட இயக்கத்துக்கு ஒப்பான ஒரு சீர்திருத்த இயக்கம் ஈழத்தில் கிடையாது. ஈழத்தில் இருந்த தமிழ் தேசியம் எந்த ஒரு முற்போக்கு அம்சமும் இல்லாத ஒரு தேசியம். சைவம், பார்ப்பனியம், சாதிய உணர்வு இதன் அடிப்படையில கட்டமைக்கப் பட்ட தேசியம் தான் அது. 70-களில் கூட அங்கே தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கம் ஆலய நுழைவு போராட்டங்களை நடத்தும்போது, இவர்கள் விதந்து போற்றுகின்ற தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் பல இடங்களில் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள்ளே அனுமதிக்கக் கூடாது என்று எதிர்த்து நின்றார்கள். சிங்களப் பேரின வாதத்தின் தாக்குதல் நடைபெறுகின்ற சூழலில் கூட கூட தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் படிக்க கூடாது என்று பாடப் புத்தகத்தைப் பிடுங்கிக் கொளுத்துகிறார்கள். அப்போதுதான், எழுத்தாளர் தோழர் டானியல் “யாழ் நூலகத்தை கொளுத்தியது சரி” என்று ஒரு அறிக்கை விடுகிறார்.

அப்படிப்பட்ட சாதி வெறியோடு இணைந்த தேசீயம்தான் அங்கே இருக்குற மரபு. ஆனால் அதை முற்போக்கு போல காட்டுகிறார்கள். இதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்-க்கு, இந்துத்துவ சக்திகளுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது. இந்தத் தமிழ் தேசியவாதிகளை பிடித்தால் பெரியாரை, அவர் தோற்றுவித்து வளர்த்த முற்போக்கு விழுமியங்களை இந்த தமிழ் மண்ணிலிருந்து துடைத்தெறிந்து விடலாம் என்பது அவர்கள் கணக்கு.

தமிழ் நாட்னி மக்கள் அரசியல் ரீதியாக பின்தங்கி இருக்கலாம். ஆனால் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய மரபு பெரியாருடைய மரபு. அதன் காரணமாகத்தான் பாபர் மசூதி இடிப்பை ஒட்டி இந்த நாடே பற்றி எரிந்த போது இங்கு மதக் கலவரம் என்று ஒன்று நடக்கவில்லை. அதன் காரணமாகத்தான் இந்தியாவிலேயே சாதிப் பெயரை சேர்த்து போட்டுக் கொள்வது இழிவு என்று பண்பாட்டு ரீதியாகவே அதனை வெறுத்து ஒதுக்குகின்ற ஒரு மனோபாவம், உயர் சாதி என்று சொல்லப்படுவோர் உள்ளிட்டு எல்லார் மத்தியிலும் பொதுக் கலாச்சாரத்திலேயே அது வந்திருக்கிறது.

இப்படிப்பட்ட முற்போக்கான அம்சங்களை ஒழித்துக் கட்டி, பழையபடி தன்னுடைய விழுமியங்களை நிலை நாட்டுவதற்கு இந்த தமிழ்த் தேசியவாதிகள் உதவுவார்கள் என்று இந்துத்துவா சக்திகள் கருதுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பத்திரிகை ஆர்கனைசர். அதன் முன்னாள் ஆசிரியர் தருண் விஜய், (எம்.பி) என்பவர் சமீபத்தில் தமிழின் மேன்மைகள் பற்றிப் பேசுகிறார். ‘இந்தியாவில் வட பகுதியில் இருக்கின்ற நாம் இத்தனை காலம் தமிழின் பெருமைகளை பற்றி அறியாமல் இருந்து விட்டோம். தமிழை இண்டாவது ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும்’ என்று திடீரென்று என்று தமிழ் மேல் காதல் வந்து புகழ் பாடுகிறார். மோடி இங்கே வந்து “சங்க இலக்கியம்” என்கிறார். பழந்தமிழ் இலக்கியம், மரபு உள்ள தமிழ் என்று அவர் பேசுகிறார்.

செத்துப் போன மொழியான சமஸ்கிருதத்தை முதல் செவ்வியல் மொழியாக அறிவித்தது யார்? பாரதிய ஜனதா. தமிழ் மேல் இவர்களுக்கு வெறுப்பும் துவேசமும்தான் இருக்கிறது. இன்று வரையில் வரையில் தமிழ் வழிபாட்டை எதிர்ப்பவர்கள் இவர்கள். இதே பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இப்பொழுது சேர்ந்திருக்கிற சுப்ரமணியசாமி தில்லையில் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடுவதற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார்.

இதே தில்லையில் அர்ஜூன் சம்பத் தமிழில் பாடுவதற்கு எதிராக தீட்சிதர்களை திரட்டிக் கொண்டு வந்து கலகம் செய்தவர். ஆனால், இவர்களை எல்லாம் தமிழினத்தின் நேச சக்திகளாக நெடுமாறன் கருதுகிறார். மொழி வாரி மாநிலமே தப்பு என்று மோடி பேசுகிறார். நெடுமாறனோ பொன் இராதாகிருஷ்ணனை ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆதரவாளர் என்று அழைத்துக் கொண்டு வருகிறார். அர்ஜூன் சம்பத்தை உள்நாடு மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் மேடை ஏற்றி அவரை கௌரவப்படுத்துகிறார்.

அர்ஜூன் சம்பத்துக்கும் நெடுமாறன் போன்றோருக்கும் தினமணி தொடர்ச்சியாக மேடை அமைத்துக் கொடுக்கிறதே, என்ன அடிப்படையில்? தினமணிக்கு ஈழ விடுதலைப் போராட்டத்தின் மீது அவ்வளவு காதலா? அவ்வளவு அக்கறையா? ஆர்.எஸ்.எஸ் சார்பு கருத்துக்களை யார் முன் வைக்கிறார்களோ அவர்களை முன்னுக்குத் தள்ளுவது, பழைய பாணியில் சோ, ராமகோபாலன் வழியாக இந்துத்துவத்தைக் கொண்டு வருவது இங்கு சாத்தியப்படவில்லை. அதற்காக அவர்களுக்கு இப்படிப்பட்ட தமிழர்கள் – தமிழ் ஆழ்வார்கள் தேவைப்படுகிறார்கள். இவர்கள் வழியாக தமிழ் ஆர்.எஸ்.எஸ்-ஐ புகுத்துவது என்பது திட்டமிட்டு நடக்கிறது.

2009-ல் பாரதிய ஜனதா கட்சி இனப்படுகொலைக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. இங்கே இருந்து வைகோ டெல்லிக்கு சில நூறு பேரை அழைத்துக் கொண்டு போய் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார். அந்த ஆர்ப்பாட்ட்டத்திற்கு அத்வானியை அழைத்து வந்து மைக்கை கொடுத்து பேச வைக்கிறார். சங்கராச்சாரியை கொலை வழக்கில் கைது செய்த போது துடித்துப்போய், மனித சங்கிலி, சாலை மறியல், பொதுக் கூட்டமெல்லாம் நடத்திய அத்வானி, இலங்கையில் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த போது சொந்த முறையில் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லையே! டெல்லிக்குப் போய் அத்வானிக்கு ஒரு தமிழ் ஆதரவு முகமூடியை உருவாக்கித் தர வேண்டிய அவசியம் வைகோ-வுக்கு என்ன என்ற கேள்வி வருகிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது என்பது ஒரு பிரச்சனை. கருணாநிதி ஆட்சி காலத்தில் ஒரு அரசாணை போடப்பட்டது, சட்டம் இயற்றப்பட்டது. அன்றைக்கு பார்ப்பன அர்ச்சகர்கள் அதற்கு எதிராக உச்சநீதி மன்றத்துக்குப் போனார்கள். இன்று வரையில் அந்த வழக்கு விசாரணைக்கு வராமல் ஜெயலலிதா அரசு வாய்தா வாங்குகிறது. ஆகம விதிப்படி அமைந்த கோயில்களில் பார்ப்பனர் அல்லாதவர்களை அர்ச்சகராக நியமிக்காமல் எப்படி தவிர்க்கலாம். அவர்களை எப்படி மாரியாத்தா, காளியாத்தா கோயிலுக்குத் தள்ளலாம் என்று சதித் திட்டம் தீட்டுகிறது. அதைப் பற்றி இந்த “தமிழ் உணர்வாளர்கள்” யாரும் பேசுவதில்லை. இப்படி ஒரு பட்டியல் இருக்கிறது. இதெல்லாம் ஏன் இவர்களுக்கு தமிழர்களின் பிரச்சினையாக தெரிய மாட்டேன் என்கிறது?

நெடுமாறன் பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு “உலகப் பெருந்தமிழர்” என்று விருது கொடுக்கிறார். அதைக் கேள்விக்குள்ளாக்கிய நீலவேந்தன் (ஆதித் தமிழர் பேரவை) புறக்கணிக்கப்படுகிறார். இது என்ன வகைத் தமிழ் உணர்வு? இந்தத் “தமிழ் உணர்வு”தான் இந்துத்துவத்துக்கு பிடித்திருக்கிறது.

இந்த தமிழ் தேசியர்கள் ஏமாளிகளாக, அரசியல் தெரியாமல் இந்துத்துவத்திடம் ஏமாந்து விட்டார்கள் என்று கருத முடியவில்லை. தமிழருவி மணியன் மோடியை ஆதரிக்கிறார். பல பேர் “தமிழருவி மணியனா இப்படி. அவரா மோடியை ஆதரிப்பது?” என்று எழுதுகிறார்கள். அவர் ஏதோ பயங்கரமான புரட்சிக்காரர் போலவும், கொள்கை ரீதியாக மலையிலிருந்து பாதாளத்தில் விழுந்து விட்டது போலவும் எழுதுகிறார்கள்.

ஆனால், தமிழருவி மணியன் என்ன சொல்கிறார்? அவர் மோடியை ஆதரிப்பது ஒரு புறம் இருக்கட்டும். அவர் மதச் சார்பின்மைக்குத் தரும் விளக்கத்தைப் பாருங்கள். பெரும்பான்மை சிறுபான்மையை ஒடுக்கக் கூடாதாம். சிறுபான்மையும் பெரும்பான்மையை ஒடுக்கக் கூடாதாம். இதற்கு என்ன பொருள்? அதாவது, சிறுபான்மையினர்க்கு வழங்கப்படும் “சலுகைகள், பாதுகாப்பு” என்பதை அவர்களுக்கு வழங்கப்படும் சிறப்புச் சலுகைகள் என்றும், தாஜா செய்வது என்றும் வாக்கு வங்கி அரசியல் என்றும் அதை கொச்சைப்படுத்தி, எல்லோரையும் சமத்துவமாக நடத்துவது என்ற போர்வையில் பெரும்பான்மையின் அதிகாரத்தை சிறுபான்மையின் மீது நிலை நாட்டுவது – இதைத்தான் மோடி பேசுகிறார். அதையேதான் தமிழருவி மணியன் பேசுகிறார்.

தன்னுடைய அரசியலை நியாயப்படுத்துவதற்கு, “ஜெயபிரகாஷ் நாராயணனை விட பெரிய மதச்சார்பற்ற தலைவரை நீங்க பார்த்திருக்க முடியுமா? அவரே ஆர்.எஸ்.எஸ்-சோடு கூட்டு சேர்ந்தார். கடவுளே கூட குரங்கோடு கூட்டு வைத்திருக்கிறார். அப்படி இருக்கும் போது நான் பாரதிய ஜனதாவோடு கூட்டு வைக்கலாம் என்று சொல்வதில் என்ன தப்பு?” என்கிறார். ராமன் அனுமாரோடு கூட்டணி வைத்தான் என்று சொன்னால், ராமனுக்கு அனுமார் அடிமை. ராமனுக்கு வேண்டிய வேலையை செய்து கொடுத்தது குரங்கு. நீங்கள் பஜ்ரங் தளத்தோடு கூட்டு வைத்தால், குரங்குக்கு நீங்கள் அடிமை, குரங்கை உங்களுடைய முதுகில் நீங்கள் சுமக்கப் போகிறீர்கள். இரண்டும் எப்படி ஒன்றாகும்?

பால் தாக்கரே வீட்டில் பிரபாகரன் படம் தொங்குகிறது என்று சொன்னால், தாக்கரே யார் என்று நெடுமாறனுக்குத் தெரியாதா? தமிழர்களை விரட்டி அடித்தவர், கொடூரமான ஒரு இனக்கொலையாளி என்பது தெரியாதா? அது தெரியும் அவருக்கு, அதற்குப் பிறகும் அவரை ஒரு பெரிய மனிதனாகவும், அவருடைய வீட்டில் பிரபாகரன் படம் தொங்குவது ஒரு கௌரவமாகவும் அவருக்குத் தோன்றுகிறது என்றால், தாக்கரேவை அவரால் அங்கீகரிக்க முடிகிறது என்று சொன்னால், நெடுமாறனை ஏமாளி என்றா நாம் சொல்ல முடியும். அப்படி சொல்ல முடியாது என்று நான் நினைக்கிறேன்.

அதே போலத்தான் வைகோவும். மோடியின் பீகார் கூட்டத்தில் குண்டு வெடித்தது. மோடி அது பற்றி கூட்டத்தில் பேசவில்லையாம். அதனால், மோடியின் பெருந்தன்மையை, பொறுப்புணர்ச்சியை வைகோ மெச்சுகிறார். யாருடைய பெருந்தன்மையை? 2000 முஸ்லீம்களை கொலை செய்து விட்டு, அதற்கு “வினை, எதிர்வினை” என்று விளக்கம் கொடுத்த வக்கிரமான ஒரு பாசிஸ்டின் பெருந்தன்மையை அவர் மெச்சுகிறார். வைகோவால் மெச்சப்பட்ட அந்த பாசிஸ்ட் மோடி அடுத்து என்ன செய்கிறார்? குண்டு வெடிப்பில் செத்துப் போனவர்களுக்கு ஆறுதல் சொல்கிறேன் என்று அவர்களுடைய அஸ்தி கலசத்தை வைத்து ஊர்வலம் விடுகிறார். கோத்ராவுக்குப் பின்னால், குஜராத்தில் என்ன நடந்ததோ அதேபோல செய்கிறார். இப்படிப்பட்ட ஒரு பாசிஸ்ட்டின் பெருந்தன்மையை பாராட்டக்கூடிய மனம் வைகோவிற்கு எப்படி வருகிறது. இது ஏமாளித்தனமா? அப்படி என்னால் கருத முடியவில்லை.

கருணாநிதியை இவர்கள் ஈழம் தொடர்பான விஷயத்தில் கறாராக விமர்சிக்கிறார்கள், வசை பாடுறார்கள், அம்பலப்படுத்துகிறார்கள், கருணாநிதியைப் பொறுத்த வரைக்கும் எல்லாம் நடக்கிறது. ஆனால், ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக, புலிகளுக்கு எதிராக ஜெயலலிதா இழைக்காத கொடுமை, அடக்குமுறை எதுவும் இல்லை. பேச்சு மாற்றிப் பேசுவது, மிகவும் அலட்சியமாக நேற்று சொன்னதை இன்று மறுப்பது இதெல்லாம் ஜெயலலிதாவுடைய அரசியல் வரலாற்றில் தொடர்ந்து நடந்திருக்கிறது. “தனி ஈழம் வாங்கிக் கொடுப்பேன்” என்றார், சட்டசபையில் தீர்மானம் போட்டார். இப்போது “தமிழர்களுக்கு சிங்களரோடு சம உரிமை கிடைக்கும் பட்சத்தில் காமன்வெல்த் மாநாட்டுக்குப் போகலாம்” என்று தீர்மானம் போட்டார். ஒரு மென்மையான குரலில் வைகோ ஆட்சேபம் தெரிவிக்கிறார். நெடுமாறனோ மற்றவர்களோ பேச மறுக்கிறார்கள். ஏன் மறுக்கிறார்கள்? பேசினால் ஜெயலலிதா கைது செய்து விடுவார் என்று அச்சமா?

நெடுமாறனோ, வை கோபால்சாமியோ, சீமானோ மற்றவர்களோ சிறைச்சாலைக்கு அஞ்சுபவர்கள் என்று நான் நினைக்கவில்லை. “மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை, என்னை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை” என்று கூறும் மிகவும் உறுதியான வீரர்கள் அவர்கள். ஜெயலலிதாவை எதிர்க்க அவர்களுக்கு மனது வர மாட்டேன் என்கிறது. அதுதான் விசயம். கருணாநிதியை பேசுவது போல அவர்களால் ஜெயலலிதாவை எதிர்த்து பேச முடியவில்லை. இயல்பாகவே அவர்களுக்கு நாக்கு எழும்பவில்லை. இவர்களுடைய இந்த “இயல்பு” இந்துத்துவத்துக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

இதற்கு முன்னால் நான் பட்டியலிட்ட அனைத்தும் ஒரு ஐயத்தை ஏற்படுத்துகிறது. இவர்கள் ஏமாளிகள் அல்லர். இவர்கள் வெறும் அரசியல் சந்தர்ப்ப வாதிகளும் அல்லர். இவர்களில் எத்தனை பேர் தமிழ்வேடம் தரித்த இந்துத்துவவாதிகள் என்ற ஐயம் எழுகிறது. அதனால்தான் இவர்கள் இந்த நிலையை எடுக்கிறார்கள். அதனால்தான் இவர்கள் பேசுகின்ற தமிழ்த் தேசியம் என்பது இந்துத்துவ பாசிசத்துடன் மிக நெருக்கமாக இருக்கக் கூடிய ஒரு வெறி பிடித்த, பாசிசத் தன்மை வாய்ந்த, பிற்போக்குத் தனமான தேசியமாக இருக்கிறது.

இதை தயவு தாட்சணியமே இல்லாமல் நாம் எதிர்க்க வேண்டியிருக்கிறது, இதை முறியடிக்க வேண்டியிருக்கிறது.

கேள்வி

நீங்க அளிக்கிற விளக்கங்கள் எல்லாம், தி.மு.க.வுக்கான மறைமுகமான ஆதரவு என்று சிலர் சொல்லக் கூடும் இல்லையா?

பதில்

நாங்கள் இந்த தி.மு.க – அண்ணா தி.மு.க, காங்கிரஸ் – பாரதிய ஜனதா ஏன்ற தேர்தல் அரசியலுக்கு வெளியில் இருக்கிறோம். திமுக, அண்ணா திமுகவையோ, காங்கிரஸ், பாஜகவையோ பயன்படுத்தி எந்த வகையிலும் ஈழப் போராட்டம் முன்னேற முடியாது என்பதை 30 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். இல்லை, இவர்களை பயன்படுத்திதான் ஈழ விடுதலையை சாதிக்க முடியும் என்பது நெடுமாறன், வைகோ உள்ளிட்ட அனைவரது கொள்கை. அந்த அடிப்படையில்தான் அவர்கள் காங்கிரஸ், பாரதிய ஜனதா, திமுக, அதிமுகவை மாற்றி மாற்றி ஆதரித்து, அவர்கள் ஆதரவைப் பெற்று ஈழத்துக்கு ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள்.

நாங்களோ இந்த தேர்தல் அரசியலுக்கு வெளியில் இருக்கிறோம். இந்தியாவின் இந்த தேர்தல் அரசியல் அமைப்பு என்பதே ஈழ விடுதலைக்கு உதவி செய்யக் கூடியது அல்ல என்பது எங்கள் கருத்து. நாங்கள் சொல்கின்ற இந்த விமர்சனங்களை திமுக-வுக்கு பயன்படும் என்று வியாக்கியானப்படுத்துவது ஒரு முழு அவதூறு, தெரிந்தே செய்யப்படும் ஒரு அவதூறு. அதற்கு எப்படி விளக்கம் அளிக்க முடியும்?

சில நாட்களுக்கு முன்னால் “முள்ளிவாய்க்கால் முற்றம்” உள்ளே சென்று வந்த தோழர்கள் சொன்னார்கள். “தமிழ் வளர்த்த சான்றோர்கள் என்ற பெயரில் அங்கே எம்.ஜி.ஆர் படம் இருக்கிறது, ராஜாஜி படம் கூட இருக்கிறது, ஆனால் பெரியார் படம் இல்லை” என்று வருத்தத்தோடு ஒரு தோழர் சொன்னார். பெரியார் படம் வைக்கவில்லை என்றால் மகிழ்ச்சி! தயவு செய்து அங்கே அதை வைத்து விடாதீர்கள். இதை பெரியாருக்கு நீங்கள் செய்யும் மரியாதையாகவே நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.

கேள்வி

சரி தோழர், 30 ஆண்டுகளாக ஈழப் போராட்டத்தில் வைகோ நெடுமாறன் போன்றவர்களுடைய பங்கை நீங்க நிராகரிக்கிறீர்களா?

பதில்

அது எப்படி நிராகரிக்க முடியும்? எத்தனை முறை இரண்டு பேரும் சிறை சென்றிருக்கிறார்கள், எத்தனை முறை ஈழம் சென்று வந்திருக்கிறார்கள். எத்தனை காலம் புலிகள் இயக்கத்தின் தலைமையோடு அவர்கள் நெருக்கமான உறவில் இருந்திருக்கிறார்கள். அதைப் பற்றி எல்லாம் அவர்களுடைய நூல்களில் – அவர்களுடைய உரைகளில் பதிவு செய்திருக்கிறார்கள்! அதனால் அவர்களுடைய பாத்திரத்தை நிராகரிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. அவர்கள் பாத்திரம் தோற்றுவித்த விளைவு என்ன என்பதுதான் இப்போது கேள்வி.

இப்பவும் நெடுமாறனை கேளுங்கள், இந்திரா இருந்திருந்தால் ஈழம் கிடைத்திருக்கும், எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் ஈழம் கிடைத்திருக்கும் என்கிறார். எப்படிப் பார்த்தாலும் இந்தியாவின் தயவில் ஈழம் என்பதுதான் கடந்த 30 ஆண்டுகளாக இவர்கள் பேசி வரும் கொள்கை. புலிகளுக்கும் அப்படி ஒரு பிரமை இருந்தது உண்மை. புலிகளுக்கு அப்படி ஒரு பிரமை இருந்தாலும் இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். இவர்கள் பாத்திரம் என்ன?

அப்படி ஒரு பிரமையை அகற்றி, “இந்தியாவை நம்பி ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்தாதே” என்ற தெளிவை இவர்கள் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட விமர்சனம் வைத்தவர்களை எல்லாம் நிராகரித்தார்கள். எத்தனை முறை இந்தியாவிடம் அடிபட்ட பிறகும், மீண்டும் மீண்டும், “இந்தியாவின் தயவில்லாமல் நாம் விடுதலை பெற முடியாது” என்ற கருத்தைத்தான் அங்கே உருவாக்கினார்கள். இந்திய அமைதிப்படைத் தாக்குதல்களுக்கு பிறகும் கூட இக்கருத்தைத்தான் உருவாக்கினார்கள். இந்தியாவின் நலனுக்காக, வெற்றி பெற்ற புலிகளைப் பின்வாங்கச் செய்தார்கள். இவர்கள் அனைவரும்தான் இப்படிப்பட்ட ஆலோசனைகளை வழங்கியவர்கள். இந்த அரசியலின் முடிவுதான் – முள்ளிவாய்க்கால்!

புலிகள் கொல்லப்பட்டு விட்டார்கள். ஆனால், இந்தியாவின் மீது நம்பிக்கை வைக்குமாறு புலிகளுக்கு ஆலோசனை கூறிய இவர்கள் இதற்கு என்ன விளக்கம் சொல்லுகிறார்கள்? கிளிநொச்சி வீழ்ச்சிக்குப் பிறகே தோல்வி நிச்சயமாகி விட்ட நிலையில், இந்தியாவின் மீதும் தேர்தல் அரசியல் கட்சிகளின் மீதும் நம்பிக்கை வைக்கச் சொல்லி, போர் நிறுத்தம் வாங்கித் தந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை புலிகளுக்கு ஊட்டிக்கொண்டிருந்த இவர்கள், தங்களது செயலுக்கு எந்த வகையில் பொறுப்பேற்று விளக்கம் அளிக்கிறார்கள்?

தோல்விக்கு இவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லுகின்ற ஒரே ஒரு விளக்கம். “20-30 நாடுகள் சேர்ந்து இலங்கைக்கு உதவி செய்து ராணுவ ரீதியாக புலிகளை ஒடுக்கி விட்டார்கள்” என்பதுதான். அது ராணுவ ரீதியான தோல்விக்கான விளக்கம்! அரசியல் ரீதியாக இந்திய அரசின் மீது நம்பிக்கை வைக்கச் சொன்னீர்களே, அதற்கு நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்ட புலி ஆதரவாளர்களின் விளக்கம் என்ன? உங்களுடைய வழிகாட்டுதலால் ஏற்பட்ட விளைவு என்ன?

காங்கிரசை நம்பக்கூடாது, தி.மு.க.வை நம்பக் கூடாது என்று எந்தத் தேதியிலிருந்து உங்களுக்குப் புரிந்தது? 2008 அக்டோபர் மாதத்துக்குப் பிறகா? அது வரைக்கும் சோனியா காந்தியின் தாய் உள்ளத்துக்கு வேண்டுகோள் விடுத்தீர்கள். கருணாநிதி தலைமையில் மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்தினீர்கள். அதற்குப் பிறகு உங்கள் நம்பிக்கையை ஜெயலலிதாவுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் மாற்றிக் கொண்டீர்கள். அதற்காவது ஏதாவது அடிப்படை இருக்கிறதா?

ஒரு அடிப்படையும் இல்லை. இந்த மடம் இல்லையென்றால் அந்த மடம் என்ற கதைதான்! பாரதிய ஜனதாவும் ஜெயலலிதாவும் ஈழ விடுதலைக்கு ஆதரவாக இருப்பார்கள், போர் நிறுத்தம் கொண்டு வருவார்கள் என்று ஒரு பிரமையை புலிகளுக்கு உருவாக்கினீர்கள். உங்களுடைய வாக்குறுதியைக் கேட்டு அவர்கள் அந்த பேரழிவுப் பாதையில் தொடர்ந்து பயணம் செய்தார்கள்.

இறுதியாக, நந்திக் கடலோரம் 1.5 சதுர கிலோமீட்டர் பரப்பில் 1.5 லட்சம் மக்களைக் கொண்டு குவித்து, ஒரு இனப் படுகொலையை நடத்துவதற்கு வாய்ப்பான சூழ்நிலையை எதிரிக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் வரை இங்கே நீங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தீர்கள். அதன் பிறகு தேர்தல் முடிவு வருகிறது, நான்கு நாட்கள் பொறுத்திருங்கள் என்று காத்திருக்கச் சொன்னீர்கள். அந்த நாட்களில் மட்டும் 20,000 பேர் கொல்லப்பட்டார்கள். தேர்தல் முடிவோ வேறு விதமாக திரும்பி விட்டது.

ஆனால் நடந்திருக்கும் எதற்கும் நீங்கள் பொறுப்பு ஏற்பதில்லை. எதற்கும் நீங்கள் பதில் சொல்வதில்லை, ஒரு தலைமை என்பது, அல்லது தலைமையுடன் நெருக்கமாக இருந்து வழிகாட்டுபவர்கள் என்பவர்கள் நேர்ந்து விட்ட தவறுகளுக்கு பொறுப்பேற்று விளக்கம் சொல்ல வேண்டும். சீனத்தில், ரஷ்யாவில் சோசலிசம் தோற்று விட்டது என்றால் அது ஏன் என்ற விளக்கத்தைச் சொல்வது ஒவ்வொரு நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் கடமை.

நீங்கள் முப்பது ஆண்டு காலமாக, “நாங்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தோடு நகமும் சதையுமாக இருந்தோம், ரத்தமும் சதையுமாக இருந்தோம்” என்று சொல்லிக் கொள்பவர்கள், அந்தப் போராட்டத்தின் தோல்வி குறித்து விளக்கம் அளிக்காமல் ஏன் ஓடி ஒளிகிறீர்கள்?

முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்த அந்தக் கடைசி நான்கு நாட்களில் புலிகளும் அந்த மக்களும் பரிதவித்து யார் யாரை எல்லாமோ தொடர்பு கொண்டார்கள், உங்களைத் தொடர்பு கொள்ளாமல் இருந்திருப்பார்களா? அந்த நான்கு நாட்களில் வைகோ, நெடுமா, சீமான் உள்ளிட்ட முன்னணியாளர்கள் எங்கு இருந்தீர்கள். நீங்கள் எல்லாம் அவர்களுக்கு என்ன பதில் சொன்னீர்கள்? என்ன செய்யலாம் என்று வழி காட்டினீர்கள்? அது எல்லாமே மர்மமாக இருக்கிறது. அவர்கள் ப.சிதம்பரத்தை தொடர்பு கொண்டார்களா? கஸ்பாரை தொடர்பு கொண்டார்களா? உங்களைத் தொடர்புகொண்டார்களா, யார் என்ன சொன்னீர்கள்? இது எல்லாமே ஒரு மர்மக் குகையாக இருக்கிறது. பரிதாபத்துக்குரிய முறையில் அவர்கள் கொல்லப்பட்டார்கள். நீங்களோ கள்ள மௌனம் சாதிக்கிறீர்கள்.

எல்லாம் முடிந்து விட்டது, இப்போது வைகோ சொல்லுகிறார். இந்தியாதான் இந்தப் படுகொலையின் கூட்டாளி என்று! சீமான் வழிமொழிந்து குற்றம் சாட்டுகிறார். இதெல்லாம் செய்து விட்டு, சட்டமன்றத்தில் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினால், “நாங்கள் தீர்மானத்தை ஆதரிக்கிறோம் -வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம்” என்று கூத்தாடுகிறார்கள். ஜெயலலிதா என்ன தீர்மானம் நிறைவேற்றினார்? இந்தியா இனப்படுகொலையின் கூட்டாளி என்று தீர்மானம் நிறைவேற்றினாரா? திரும்ப மத்திய அரசுக்கு – இனப்படுகொலையின் கூட்டாளியான இந்திய அரசுக்கு – வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றினால் அதைப் பாராட்டுகிறீர்கள். என்ன கேலிக் கூத்து இது?

இந்தியாதான் குற்றவாளி என்றால், இந்தியாவைக் குற்றம் சாட்டுவதுதான் உங்கள் நோக்கம் என்றால், அதை நோக்கி உங்கள் நடவடிக்கை இருக்க வேண்டும். ஒரு பக்கம் வாய்ச்சவடால் பேசிக் கொண்டே எந்த இந்திய அரசைக் குற்றவாளி என்று சொல்லுகிறீர்களோ, அந்த இந்திய அரசின் கீழ் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் யாரோடு கூட்டணி சேர்வது, மோடியோடு சேரலாமா என்று வைகோ யோசித்துக் கொண்டிருக்கிறார். அதற்குத் தமிழருவி மணியன் தரகு வேலை பார்க்கிறார்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கவில்லை என்றால் இந்தியா தனிமைப்பட்டு விடும் என்று கரியவாசம் சொன்னாராம். அதனால், “இலங்கை என்ற எலி இந்தியா என்ற யானையை மிரட்டுகிறது” என்று நான்கு நாட்களுக்கு முன்னாலே தினமணியில் நடுப்பக்க கட்டுரை எழுதுகிறார் நெடுமாறன். எலி யானையை மிரட்டலாமா? “இந்த தெற்காசியப் பகுதியில் இந்தியா ஒரு யானை; பாகிஸ்தான் ஒரு பூனை; இலங்கை ஒரு எலி. யானை இந்தப்பகுதியை ஆள வேண்டும்” என்பதுதான் நெடுமாறனுடைய கனவு.

இதே கனவைத்தான் திருச்சியில் மோடி வெளியிட்டார். “இந்தியா இந்தப் பகுதியில் யானையாக இருக்க வேண்டும். மன்மோகன் சிங் அப்படிப்பட்ட ஆட்சியைத் தரவில்லை. நான் வந்தால் அப்படிக் கொடுப்பேன். இலங்கையையும், பாகிஸ்தானையும் அடக்கி வைப்பேன்” என்ற ஒரு நம்பிக்கையை அந்த மேடையில் ஊட்டினார். ‘தெற்காசிய பிராந்திய வல்லரசாக இந்தியாவைக் காண வேண்டும், வலிமை மிக்க இந்த பிராந்திய வல்லரசால் தூக்கி எறியப்படும் எலும்புத் துண்டாக ஈழ விடுதலை இருக்க வேண்டும்” என்பதுதான் நெடுமாறனின் கருத்து.

ராஜபக்சே என்ன சொல்கிறார்? ‘நான் பெரும்பான்மை, என்னுடைய தயவில் தமிழர்கள் வாழ வேண்டும். தமிழர்கள் எலி’ என்று சொல்லுகிறார். மோடி என்ன சொல்கிறாரோ அதை ராஜபக்சேயும் சொல்லுகிறார். மோடி என்ன சொல்லுகிறாரோ அதைத்தான் நெடுமாறனும் சொல்லுகிறார்.

ஈழ விடுதலை என்பதை ஒரு தேசிய இனம் பெறுகின்ற சம உரிமையாக, ஜனநாயக ரீதியான உரிமையாக இருப்பதை, வல்லரசு, ஒடுக்கப்பட்ட அரசு என்று இல்லாமல் சமமான உரிமை பெற்ற அரசுகளாக இருப்பதை நெடுமாறன் கூறவில்லை. மாறாக, யானை தின்ற கவளத்தில் எலி தின்னக் கிடைக்கின்ற ஒரு சோற்றுப் பருக்கையாகத்தான் ஈழ விடுதலையைக் கூறுகிறார். யானையின் தயவில் எலிகளாம். நான் சொல்லவில்லை புலிகளை எலிகள் என்கிறார் நெடுமாறன்.

கேள்வி

நீங்க சொல்ற விமர்சனங்கள் சரியாக்கூட இருக்கலாம். ஆனா, இப்ப இசைப்பிரியா படுகொலை குறித்த வீடியோ வெளியாகியிருக்கிறது. இன்னொரு பக்கம் காமன்வெல்த் மாநாடு பற்றிய சர்ச்சைகள் நடந்துக்கிட்டிருக்கின்றன. இப்ப நீங்க விமர்சிக்கிறீங்க. இது சரியான தருணமா?

பதில்

காமன்வெல்த் என்பது பிரிட்டன் உருவாக்கிய ஒரு அடிமை நிறுவனம். அதிலிருந்து இலங்கையை நீக்குவது, இந்தியா அந்த மாநாட்டை புறக்கணிப்பது என்பதெல்லாம், இனப்படுகொலை செய்த இலங்கையை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்துவது, ஒரு சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்குவது போன்ற ஒரு நடவடிக்கை. அதுதான் அந்த கோரிக்கையினுடைய வரம்பு.

இசைப்பிரியாவின் கொலைக்கு ராஜபக்சேதான் பொறுப்பு, ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், ஈழ விடுதலைப் போராட்டத்தின் அழிவுக்கு யார் பதில் சொல்வது? இந்தக் கேள்வியை வேறு எந்தத் தருணத்தில் எழுப்புவது? இசைப் பிரியாவின் இறுதிக்காட்சிகளை, இறுதிக் கணங்களை வீடியோவில் பாருங்கள். குஜராத்தில் இஷ்ரத் ஜகானின் உயிரற்ற உடல் கிடத்தப்பட்டிருக்கும் காட்சியையும் பாருங்கள். சிங்களப் பாசிசத்திற்கும், இந்துப் பாசிசத்திற்கும் என்ன வேறுபாட்டை உங்களால் காண முடிகிறது? இசைப் பிரியாவுக்கும் இஷ்ரத் ஜகானுக்கும் என்ன வேறுபாட்டை காண முடிகிறது.

இசைப்பிரியாக்களுக்கு அஞ்சலி செலுத்த இந்திய ராஜபக்சேக்கள் வருகிறார்கள் – முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு.

நீங்களும் போகிறீர்களா?

000

சப்பாயேவ் – சோவியத் திரைப்படம்

2

வீடியோவை நேரடியாக தளத்தில் பார்க்க முடியவில்லை என்றால், இந்த சுட்டியை கிளிக் செய்து யூடியூபில் பார்க்கவும்

மிடுக்கான ராணுவச் சீருடைகள், நவீன ஆயுதங்கள், வசதியான தங்குமிடங்கள் இவற்றுடன் முறையாக போரிடுகிறது ஒரு படை. படைத் தலைவர் ஓய்வு நேரத்தில் பியானோ வாசிக்கிறார். எதிரிப் படைகளை முறியடித்து பழைய உலகை பாதுகாக்கும் நோக்கத்தோடு போரிடுகிறார்கள்.

இன்னொரு பக்கம், தொள தொளப்பான, கந்தலாடை உடுத்த, துருப்பிடித்த துப்பாக்கிகளுடன், கிராமத்து வீடுகளில் இருந்து செயல்படும் படை. படைத் தலைவர் சப்பாயேவ் உருளைக் கிழங்குகளை மேசையில் நகர்த்துவதன் மூலம் போர் உத்திகளை விளக்குகிறார். தங்களை பசியும், பட்டினியும் ஆக சுரண்டும் உலகை தகர்த்து புதிய உலகை படைப்பதற்காக போராடுகின்றனர் இந்தப் படையினர்.

விவசாயியான சப்பாயேவின் தலைமையிலான செம்படையணியின் வீரர்களும், எளிய விவசாயிகள். அவருடைய படைகள் படித்த, அனுபவம் வாய்ந்த தளபதிகளின் வெண் படைகளிடம் ஒருமுறை கூட தோற்றதில்லை. விவசாயிகள் படை வெற்றிகளை குவித்தாலும், கட்டுக் கோப்பு, ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள் பல இருக்கின்றன.

கட்சியிலிருந்து அனுப்பப்பட்டு வந்து சேரும் தன்னை விட இளையவரான கமிஸார் பர்மனோவை சந்தேகமாக பார்க்கிறார் சப்பாயேவ். விவசாயிகளின் வர்க்க ரீதியான புரட்சிகர உணர்வுக்கும், புரட்சிகர திட்டத்துடன் செயல்படும் கட்சியின் ஒழுங்குக்கும் இடையேயான மோதலாக இது விரிகிறது.

சப்பாயேவ் திரைப்படம்கிராம மக்களை கொள்ளையடிக்கும் செம்படை வீரர்களை கைது செய்து அடைக்கும் கமிசாரிடம், தனது படையணி வீரர்களை தண்டிக்கும் அதிகாரம் தனக்குத்தான் உண்டு என்று கலகம் செய்யும் சப்பாயேவ், கிராம மக்கள் திரண்டு வந்து நன்றி சொன்னதும் இளம் கமிசாரின் அரசியல் வழிகாட்டலை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறார்.

இயல்பிலேயே போர்த்திறமும், தலைமைப் பண்பும் கொண்ட சப்பாயேவ், செம்படைத் தளபதி ஆன பிறகு எழுதப் படிக்கக் கற்றுக் கொள்கிறார். கமிஸார் பர்மனோவ் அவருக்கு உலக வரலாற்றையும், அரசியல் கண்ணோட்டத்தையும் கற்றுக் கொடுக்கிறார். ஒரு படைத் தலைவருக்கான ஒழுங்கை ஏற்படுத்திக் கொள்ள உதவுகிறார். படிக்காத விவசாயி, மக்களுக்காக போராடும் போராளி என்ற நிலையிலிருந்து ஒரு வரலாற்றுப் பார்வை கொண்ட தலைவராக பரிணமிக்கிறார், சப்பாயேவ்.

ஒரு காட்சியில் “நீ கம்யூனிஸ்டா, போல்ஷ்விக்கா” என்று கேட்கும் ஒரு விவசாயியிடம் சப்பாயேவ், தான் ஒரு இண்டர்நேஷனலிஸ்ட் (சர்வதேசியவாதி) என்று பதில் சொல்கிறார். பர்மனோவ், “எந்த சர்வதேசியம், இரண்டாவது அகிலமா, மூன்றாவது அகிலமா” என்று கேட்க, மிடுக்கு சற்றும் குறையாமல், “லெனின் எந்த அகிலத்தில் இருக்கிறாரோ அந்த அகிலம்” என்கிறார் சப்பாயேவ்.

சப்பாயேவின் உதவியாளர் பெத்கா, தனது காதலி அன்னாவிற்கு இயந்திரத் துப்பாக்கி சுட கற்றுத் தருகிறார். இறுதிக் காட்சியில் துப்பாக்கியின் பொறுப்பில் இருந்த முதியவர் கொல்லப்பட்ட நிலையில் அன்னா துப்பாக்கியை இயக்கி வெண்படைகளின் தாக்குதலை முறியடிக்க உதவுகிறார்.

கட்சி பர்மனோவை திரும்ப அழைத்துக் கொண்டு அவ்விடத்தில் வேறொரு கமிசாரை நியமிக்கும் போது சப்பாயேவும், மக்களும் உருக்கமாக விடை கொடுக்கின்றனர்.

நவீன தொழில்நுட்பங்கள் இல்லாமல் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தப் படம், எதிர்கால குறிக்கோள்களின் உயரத்தில் இருந்து கடந்த காலத்தை ஆய்வு செய்வது என்ற சமூக யதார்த்த அடிப்படையிலானது. இந்த திரைப்படம் இன்றைக்கும், புத்துணர்ச்சி ஊட்டும் புரட்சிகர அனுபவத்தைத் தருகிறது. கலை மக்களுக்கானதாக படைக்கப்படும் போது , லட்சக் கணக்கான மக்களின் புரட்சிகர நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் போது அது சாகாவரம் பெறுகிறது.

வசிலி சப்பாயேவ் ரஷ்யாவில் புதய்கா என்ற கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர். முதல் உலகப் போரில் போரிட்டு புனித ஜார்ஜ் பட்டயத்தை மூன்று முறை பெற்றார். செப்டம்பர் 1917-ல், போல்ஷ்விக் கட்சியிலும் செம்படையிலும் சேர்ந்து புரட்சிகர அணியில் போரிட்டார். 1917 டிசம்பர் மாதம் செம்படையின் 138-வது காலாட்படைப் பிரிவின் வீரர்கள் அவரை தங்களது தளபதியாக தேர்ந்தெடுத்தனர். பின்னர் 2 வது நிக்கலேவ் பிரிவு மற்றும் 25-வது துப்பாக்கி படைப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். சப்பாயேவின் தலைமையில் 25வது படைப்பிரிவு தோல்வியையே சந்தித்ததில்லை.

செப்டம்பர் 5, 1919-ல், செம்படையின் வட்டார தலைமையகத்தை வெண் படைகள் தாக்கியபோது, தீரத்துடன் போரிட்டு காயமடைந்த சப்பாயேவ் உரால் ஆற்றின் குறுக்கே நீந்தி தப்பிக்க முயன்றார். அதன் பின் அவர் உயிரோடு வரவில்லை, அவரது உடலும் மீட்கப்படவில்லை.

வசிலி சப்பாயேவ்
வசிலி சப்பாயேவ்

சிலி சப்பாயேவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சப்பாயேவுடன் கமிஸாராக பணியாற்றிய டிமித்ரி பர்மனோவ் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட உண்மைக் கதையே வசிலியேவ் சகோதர்களால் இயக்கப்பட்டு 1934-ம் ஆண்டு வெளி வந்த சப்பாயேவ் திரைப்படம்.

தோழர் சப்பாயேவின் வாழ்க்கையும், இந்த திரைப்படமும், தன்னிச்சையான புரட்சிகர உணர்வுக்கும், பாட்டாளிவர்க்க தலைமையில் அமைப்பாக்கப்பட்ட கட்சியின் புரட்சிகர உணர்வுக்கும் இடையிலான போராட்டத்தையும், வர்க்க அடிப்படையில் உணர்வு பெற்றிருக்கும் மக்களை கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு கற்றுக் கொடுக்கிறது.

பர்மனோவிற்கும் சப்பாயேவிற்குமிடையிலான உறவு, மக்களுக்கு கற்றுக் கொடுத்தல், மக்களிடமிருந்து கற்று கொள்ளல் என்பதை ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி கையாண்ட முறையை சித்தரிக்கிறது.

ரசியப் புரட்சி – வேண்டும் தொடர்ச்சி !

5

வாசகர்கள், பதிவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்!

ரஷ்யப் புரட்சி

வால்கா
புதிய மனித சமுதாயத்தின் முகத்தில்
தன்னை கழுவிக் கொண்டது.

பூமிப்பந்து முதன் முதலாய்
மனிதப் பண்பின் உச்சத்தில்
தன்னை தழுவிக் கொண்டது.

அன்றலர்ந்த மலர்களுக்கு
தன்னிலும் மென்மையான
இதயங்களைப் பார்க்கும்
வாய்ப்பு கிடைத்தது.

பரந்து விரிந்த வானம்
சோசலிசத்தின் உள்ளடக்கத்தில்
தன்னை உணர்ந்து கொண்டது.

அலைஓயா கடல்கள்
கம்யூனிச பொதுஉழைப்பின்
மனதாழம் பார்த்து வியந்தது!

சுரண்டலின் நகங்களால்
அவமானக் கீறலோடு
அலைந்த காற்றுக்கு
வரலாற்றில் முதலாய்
மனித சுவாசத்தின் மதிப்பு கிடைத்தது!

இயற்கையின் மகிழ்ச்சியாய்
விளைந்தது நவம்பர் புரட்சி!
எல்லோர்க்கும் தேவையாய்
எழுந்தது ரசியப்புரட்சி!

ரசியப்புரட்சி அறிந்தால்,
கம்யூனிசம் புரிந்தால்,
முதலில் இன்னொரு உலகம்
கண்ணுக்குத் தெரியும்,
நாம் இருக்கும் உலகத்தின்
இறுக்கம் புரியும்!

”எல்லோருக்குமான இயற்கை
எல்லோருக்குமான உலகம்
எல்லோருக்குமான இனிமை
எல்லோருக்குமான உரிமை” என
புரட்சியின் தொடர்ச்சிகள்
புது அழகாய் விரியும்.

”கம்யூனிசம் அபாயம்”…
”கம்யூனிசம் ஒத்துவராது”…
”கம்யூனிசம் பிடிக்காது”…
பலவாறாக பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு
தலைநிமிர்ந்து சமூகத்தை பொதுவாக்கிய
உழைக்கும் வர்க்கத்தின் பதில்தான் ரசியப்புரட்சி!

முதலாளித்துவம்
எவ்வளவு மோசமானது என்பதற்கு,
முன்னேறிய கம்யூனிசத்தை
நாமறியாமலே மறுக்கும்
முட்டாள்தனமே சாட்சி!

ஒண்ணுக்கு போவதிலும்
உன்னிடம் காசு பிடுங்கும்
முதலாளித்துவச் சுரண்டலின் மேல்
அப்படியென்ன கவர்ச்சி!

”கடவுளால் முடியாததை
கம்யூனிஸ்ட் செய்தான்,
பிச்சைக்காரனே இல்லாத நாடு
சோவியத் ரசியா”
பெருமை பொங்கினார் பெரியார்.

”திருட்டுத் தேவையே இல்லை
பூட்டுத் தயாரிக்காத நாடு ரசியா
இரும்புத்திரை இல்லை
இரும்புத் தொழிற்சாலையைத்தான்
நிறையப் பார்த்தேன்” – என
பூரித்துப் போனார் கலைவாணர்

வல்லரசாகப் போவதாய்
வக்கணை பேசும் முதலாளித்துவத்தில்
செருப்பை நிம்மதியாய்
வெளியில் விட யோக்கியதை உண்டா?

முதலாளித்துவம்
பலவும் கண்டுபிடித்த பெருமை இருக்கட்டும்
முதலில் நாம் மனிதன் என்பதை கண்டுபிடிக்க
சமூகம் உள்ளதா அதனிடம்!

இளரத்தம்
சுண்டக் காய்ச்சும் வேலை!
எந்தப் பணி பாதுகாப்புமின்றி
பணி நிரந்தரமில்லையென பயமுறுத்தியே
எந்திரத்தை உயிரூட்ட
இளம் தொழிலாளர் கொலை,

விழிப்பசை தீர களைத்து
குடல்பசை தடவி
குறுகலான தகரக் கொட்டகையில்
பாதி தகனம்!
மிச்சம் உயிர் மறு ஷிப்ட்டில்!

மடி வலிக்க கறந்தால்
மாடும் உதைக்கும்,
மடிக்கணிணியில் கறந்தால்
‘மைக்ரோசாப்ட்’ பெருமையா?
பார்க்கும் எருமைகள் பதைக்கும்!

தெருவோடு போகும் பெண்
கருவோடு திரும்புகிறாள்,
முனகவும் சக்தியில்லாத
மூதாட்டியின் மேல் பாலியல் வக்கிரம்,
வீட்டிலிருக்கும் பெண்ணுக்கோ
வீட்டிலுள்ளவர்களாலேயே விபரீதம்
முதலாளித்துவ நுகர்வு முற்றி
ரத்தமாய் வடிகிறது கள்ள உறவில்!

மனிதனை நுகரும்
மறுகாலனிய கொடூரம்
முதலாளித்துவம் இருக்கும் வரை
புழுவாய் நெளியும்.
ரசியப் புரட்சியின் சவுக்கை எடுத்தால்தான்
முதலாளித்துவக் கழிவுகள் ஒழியும்!

ரத்த ஞாயிறு முடிந்திடவில்லை…
ஈழத்தில்… காஷ்மீரில்… சத்திஸ்கரில்… வெவ்வேறு விதமாய்…
ஜாரின் நடுக்கம் ‘மாருதி’ வரைக்கும்
மேலாதிக்கவெறியோடு மோடியின் நாஜிப்படை…
நத்தம் காலனி விளைச்சலின் மீது
நவீன ‘குலாக்குகளின்’ தீ வெறி!
நவம்பர் புரட்சியும் முடிந்திடவில்லை…
தொடர்ச்சி கொடுங்கள் உழைக்கும் மக்களே
தருணம் நழுவாமல்
இயங்குவதற்குப் பெயர்தான் புரட்சி!

புரட்சி வேண்டுமா?
பொருந்துக அமைப்பில்!

– துரை.சண்முகம்

சுப. உதயகுமாருக்கு மகஇக-வின் பதில்

40

நேற்று (5.11.2013) இரவு தனது முகநூல் பக்கத்தில் ம.க.இ.க. தோழர்களுக்கு “திறந்த கடிதம்” ஒன்றை கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு.சுப.உதயகுமார் வெளியிட்டிருக்கிறார்.

2011 முதல் இன்றுவரை நிகழ்ந்தவை என்று பல சம்பவங்களைக் குறிப்பிட்டு, அவை குறித்த அவரது விமரிசனங்களையும் அதில் எழுதியிருக்கிறார். இத்தனை நாட்களுக்குப் பின்னர், இப்படியொரு கடிதத்தை அவர் இப்போது எழுதுவதற்கு என்ன காரணம்? அதையும் அக்கடிதத்திலேயே அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

“கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினை, தாதுமணற் கொள்ளை பிரச்சினை பற்றியெல்லாம் நன்கு அறிந்து வைத்திருக்கும் கடலோர மக்கள் மத்தியிலேயே நீங்கள் தொடர்ந்து பரப்புரை செய்வது ஏன்? இந்தப் பிரச்சினைகள் பற்றி போதிய விழிப்புணர்வில்லாத உட்பகுதி மக்களை சந்தித்து அவர்களிடம் பரப்புரை செய்யலாமே? கடலோர ஊர்களிலுள்ள இளைஞர்களைப் பிடித்து, என்னைப்பற்றி, எங்கள் இயக்கத்தைப் பற்றி அவர்களிடம் தவறாகப் பேசி, மூளைச்சலவை செய்வது உண்மையிலேயே தேவைதானா? இக்கேள்விகளைக் கேட்பதற்காகத்தான் இக்கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன்.”

என்று குறிப்பிட்டுள்ளார்.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்

கடந்த அக்டோபர் 9 ஆம் தேதியன்று தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் உதயகுமாரை இடிந்தகரையில் நேரில் சந்தித்திருக்கின்றனர். அக்டோபர் 12 ஆம் தேதி தூத்துக்குடியில் நடத்தவிருந்த பேரணி, பொதுக்கூட்டம் குறித்த துண்டறிக்கைகளைக் கொடுத்து, தாதுமணல் கொள்ளைக்கு எதிராக நாங்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தைப் பற்றியும் விளக்கியிருக்கின்றனர். இச்சந்திப்பு பற்றி உதயகுமாரும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அன்று தாது மணல் கொள்ளை எதிர்ப்பியக்கத்தை வரவேற்று வழக்குரைஞர்களிடம் உதயகுமார் பேசியிருக்கிறார். ஆனால், தற்போது கடிதத்தில் வேறு குரலில் பேசுகிறார். சென்ற மாதம் வரை அவரை பல சந்தர்ப்பங்களில் நேரில் சந்தித்த தோழர்களிடம் பேசாத பல “பிரச்சினைகளை” இப்போது அவர் பட்டியலிட்டு அடுக்குகிறார்.

தாது மணல் கொள்ளை என்ற பிரச்சினை பற்றி அவரது நிலை என்ன? இதனை 16, அக், 2013 ஆனந்த விகடன் பேட்டியில் அவர் தெளிவாக கூறியிருக்கிறார்.

“தாதுமணல் கொள்ளையர்களின் அனுதாபிகள் எங்கள் ஊர்களில் இருக்கிறார்கள். அதைப் பேசினால், ஊர் மக்களிடையே பிளவு வரும்; சமுதாயப் பிரச்னைகள் எழும்… நாங்கள் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் மட்டும்தான். அனைத்து தீய சக்திகளுக்கும் எதிரான மக்கள் இயக்கமல்ல ..”

என்று கூறி தாது மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டங்களை தங்களால் எடுக்க இயலாத காரணத்தை விளக்கியிருக்கிறார்.

அவரால் எடுக்க இயலாத தாது மணல் பிரச்சினையை ம.க.இ.க வும் அதன்  தோழமை அமைப்புகளும் எடுப்பது குறித்து நியாயமாக அவர் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். அவ்வாறின்றி, “கடலோர கிராமங்களில் வேலை செய்யாதீர்கள்” என்று ம.க.இ.க வுக்கு ஏன் அறிவுருத்துகிறார் என்று புரியவில்லை. தாது மணல் கொள்ளையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கடலோர மக்கள். போராட விரும்புகிறவர்களும் அவர்கள்தான்.

நாங்கள் கடலோர கிராமங்களிலிருந்து வெளியேற வேண்டுமென்று விரும்புகிறவர்கள் கனிம மணல் கொள்ளையர்கள் மட்டுமே என்று இதுகாறும் நாங்கள் எண்ணியிருந்தோம். உதயகுமாரின் கடிதத்தில் காணப்படும் ம.க.இ.க வுக்கு எதிரான அவதூறுகளும், கடலோர இளைஞர்களை “மூளைச்சலவை” செய்வதாக அவர் கூறும் குற்றச்சாட்டும், “வைகுண்டராசன் வலைப்பின்னல்” பற்றிய புதிய புரிதலை எங்களுக்குத் தருகின்றன.

அவரது கடிதத்தில் கூறியுள்ளவை அனைத்துக்கும் உடனே பதில் அளிக்கத் தேவையில்லை என்று கருதுகிறோம் – நிதி தொடர்பான அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டைத் தவிர. தனது கடிதத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் மீது உதயகுமார் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை தோழர் ராஜுவுக்குத் தெரிவித்தோம்.

அவர் இடிந்தகரை ஊர்க்கமிட்டிக்கும், இதில் தொடர்புள்ள மற்றவர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதன் நகலை இத்துடன் இணைத்திருக்கிறோம்.

இவண்,

காளியப்பன்,
மாநில இணைச்செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.

________________________

அனுப்புநர்:

ராஜு, வழக்குரைஞர்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
கை பேசி: 94432 60164

 பெறுநர்

ஊர் நலக்கமிட்டி, இடிந்தகரை
பங்குத்தந்தை, இடிந்தகரை
பங்குத்தந்தை சுசீலன்,  கூட்டப்புளி
சுந்தரலிங்கம், கூடங்குளம்
திரு.சுப.உதயகுமார்,ஒருங்கிணைப்பாளர், அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம், இடிந்தகரை.

ஐயா,

வணக்கம்.

நேற்று (5.11.2013) திரு சுப.உதயகுமார், இணையத்தில் தனது முகநூல் பக்கத்தில் எங்களது வழக்குரைஞர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில், பல தவறான தகவல்களை எழுதியிருக்கிறார். அதன் நகலை உங்களுக்கு இணைத்திருக்கிறேன். அதில் கண்டுள்ள எல்லா விசயங்களையும் உங்களிடம் எழுப்புவது என் நோக்கமல்ல. வழக்குகளுக்காக நாங்கள் பெற்ற தொகை பற்றி அவர் குறிப்பிட்டுள்ளவை உண்மைக்கு மாறானவை என்பதால், அவை குறித்து உங்கள் அனைவரின் கவனத்துக்கு கொண்டு வருவது அவசியம் என்று கருதுகிறேன்.

சங்கரன் கோயில் இடைத்தேர்தல்முடிந்த பின்னர், மார்ச் 19, 2012 அன்று ஜெயலலிதா அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. கூடங்குளத்தில் போராட்டக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உட்பட 11 பேர் முதலில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் வைக்கப்பட்டனர். இந்தக் கைதைக் கண்டித்து சாலை மறியல் செய்த பங்குத்தந்தை சுசீலன் உட்பட்ட கூட்டப்புளி மக்கள் 178 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் வைக்கப்பட்டனர்.

இதனை ஒட்டி வள்ளியூர் நீதிமன்றம், நெல்லை நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றம் ஆகிய இடங்களில் சிறையில் இருப்பவர்களைப் பிணையில் எடுப்பது தொடர்பான பணிகளை நாங்கள் செய்தோம். 12 வெளியூர் வழக்குரைஞர்கள் சுமார் 15 நாட்கள் இந்த வேலைகளைச் செய்ய வேண்டியிருந்த காரணத்தினால், போக்குவரத்து, தங்குமிடம் உள்ளிட்ட நடைமுறைச் செலவுகள் குறிப்பிடத்தக்க அளவு ஆயின. இவையன்றி நீதிமன்றச் செலவுகள். குறிப்பாக மக்கள் மீது தேசத்துரோக குற்றத்தின் கீழ் வழக்கு போடப்பட்டிருந்ததாலும், அதனை அங்கீகரிக்கும் விதத்தில் நீதிமன்றம் நடந்து கொண்டதாலும்,  மூத்த வழக்குரைஞர் ஒருவரை அமர்த்த வேண்டியதாயிற்று. அவரை வெளியூரிலிருந்து அழைத்து வர வேண்டியிருந்த்தால் அதற்கு  குறிப்பிட்ட அளவு செலவிட வேண்டியதாயிற்று. அந்தச் செலவுகள் குறித்த உள்விவரங்கள் அனைத்தும் நாங்கள் உங்களிடம் கொடுத்துள்ள கணக்கில் உள்ளன.

இச்செலவுகளுக்காக கூட்டப்புளி பங்குத்தந்தை ராபின்சன் மற்றும் முக்கியஸ்தர்கள் வழியாக பல தவணைகளில் மொத்தம் ரூ. 65,000, மற்றும் கூடங்குளத்தில் கைதானோருக்காக அந்த ஊர் முன்னணியாளரிடமிருந்து ரூ.5000 ஆக மொத்தம் ரூ.70,000 பெற்றிருந்தோம். அதற்கான செலவு கணக்கை, உதயகுமாரிடமும், கூட்டப்புளி பங்குத்தந்தையிடமும், கூடங்குளம் சுந்தரலிங்கத்திடமும் ஆளுக்கொரு நகல் கொடுத்து விட்டோம்.

இதன் பின்னர் கூடங்குளம் மக்கள் மீது போடப்பட்ட ராஜத்துரோக வழக்குகளுக்கு எதிராக நாங்கள் நெல்லையில் நடத்திய கருத்தரங்கினை ஒட்டி ஏப்ரல், 21, 2012 அன்று இடிந்தகரை சென்றிருந்தபோது எமது வழக்குரைஞர்கள் சுமார் 50 பேரை மேடையில் அமரச் செய்து, “நமக்காக ஒருகாசு கூட கட்டணம் வாங்காமல் பணியாற்றிய வழக்குரைஞர்களுக்கு நன்றி கூறுவதாக” உதயகுமாரும் புஷ்பராயனும் மக்கள் மத்தியில் அறிவித்தனர்.

பின்னர் செப்டம்பர், 2012 இல் நடைபெற்ற கடலோர முற்றுகை, போலீசு தாக்குதல், கடலில் மனிதச் சங்கிலி, சகாயம் மரணம் ஆகியவை தொடர்பான பணிகளில் நாங்கள் உங்களோடு இணைந்து ஈடுபட்டோம். இவற்றைத் தொடர்ந்து இடிந்தகரை, கூடங்குளம் மக்கள் பலர் கைது செய்யப்பட்டனர். குண்டர் சட்டம் உள்ளிட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவ்வழக்குகள் எதையும் போராட்டக்குழு எங்களிடம் ஒப்படைக்கவில்லை.

“பிணையெடுப்பதில் காலதாமதமாகிறது” என்று கருதிய மக்கள் சிலர், “நீங்கள் வழக்கை நடத்துங்கள்” என்று எங்களைத் தொடர்பு கொண்டு தொலைபேசியில் கேட்டனர். “உதயகுமார் யாரிடம் வழக்கை ஒப்படைத்திருக்கிறாரோ அவர்கள்தான் செய்ய முடியும். எங்களிடம் வழக்கு தரப்படவில்லை” என்று அவ்வாறு கேட்டவர்களிடம் தெளிவுபடுத்திவிட்டோம். வழக்குகளை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்குரைஞர்களிடமும் வேறு சிலரிடமும் உதயகுமார் ஒப்படைத்திருப்பதாக பின்னர் கேள்விப்பட்டோம்.

இதற்குப் பின்னர் திடீரென்று ஒரு புது வதந்தி பரப்பப் பட்டது.  “உங்களுக்கு இரண்டு இலட்சத்துக்கு மேல் போராட்டக் கமிட்டி பணம் கொடுத்திருக்கிறதாமே” என்று வள்ளியூர், நெல்லை, நாகர்கோயில் நீதிமன்றங்களில் சில வழக்குரைஞர்கள் எங்கள் வழக்குரைஞர்களிடம் போகிற போக்கில் குறிப்பிட்டனர். யார் சொன்னார்கள், எப்போது சொன்னார்கள் என்ற ஆதாரம் இல்லாமல், ஒரு கிசு கிசு செய்தி போல இது பரப்பப் பட்டது.  எனவே இதனை மறுத்து, “நாங்கள் கட்டணம் வாங்காமல்தான் பணியாற்றினோம்” என்பதைக் கூறவேண்டியது அவசியமாயிற்று.

இப்படி ஒரு பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுவதாக கூட்டப்புளி, இடிந்தகரை ஊர்க்கமிட்டியைச் சேர்ந்தவர்களிடமும் கூடங்குளம் முன்னணியாளர்களிடமும் நாங்கள் அப்போதே சொல்லியிருக்கிறோம். “இப்படி கிளப்பி விடுவது யார்” என்று தாங்கள் உதயகுமாரிடமே கேட்டதாகவும், தான் அவ்வாறு கூறவில்லை என்று உதயகுமார் மறுத்ததாகவும் அவர்கள் எங்களுக்கு தெளிவு படுத்தினர். இந்த பொய்ப்பிரச்சாரம் பற்றி நாங்கள் முறையிட்டது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும்.

இப்பிரச்சினையை அரைகுறையாக விடக்கூடாது என்பதால், மே, 9 2013  அன்று இடிந்தகரையில் நேரடியாக உதயகுமாரிடமே நாங்கள் இது பற்றி கேட்டடோம். நாங்கள் வாங்கிய பணம், அதற்கான கணக்கு ஆகியவற்றின் நகலை மீண்டும் ஒருமுறை அவர் கையில் கொடுத்தோம். “இரண்டு இலட்சம் வாங்கியதாகவெல்லாம் யாரிடமும் நான் சொல்லவில்லை. அப்படி யாராவது சொன்னால், என்னிடம் அனுப்புங்கள். நான் விளக்குகிறேன்” என்று அவர் எங்களுக்குப் பதிலளித்தார்.

இப்போது தனது கடிதத்தில்,  மொத்தம் ரூ.1,95,000 கொடுத்தது போலவும் அதில் 1.25 லட்சம் ரூபாய் இடிந்தகரை மக்கள் எங்களுக்கு கொடுத்ததாகவும் உதயகுமார் எழுதியிருக்கிறார். மார்ச் 2012 நடைபெற்ற கைது தொடர்பான வழக்குகளைத்தான் நாங்கள் கையாண்டோம். அவை கூட்டப்புளி, கூடங்குளம் மக்கள் மீதான வழக்குகள். அதற்கான பணத்தைக் கொடுத்த அவர்களிடம் கணக்கும் கொடுத்துவிட்டோம்.

இடிந்தகரை மக்கள் மீதான வழக்குகள்- கைது என்பது கடலோர அணுஉலை முற்றுகைப் போராட்டத்துக்குப் பின்னர்தான். இந்த வழக்குகள் எதுவும் எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பதை ஏற்கெனவே தெளிவு படுத்திவிட்டோம். இடிந்தகரை மக்களிடமிருந்து 1.25 இலட்சம் நாங்கள் வாங்கியதாக உதயகுமார் கூறுகிறார். ஒருபைசா கூட நாங்கள் வாங்கவில்லை என்பதே உண்மை.

இடிந்தகரை, கூடங்குளம், கூட்டப்புளி மக்கள் அனைவரும் இந்தக் கணம் வரை எங்களுடன் நேசமாகத்தான் பழகுகிறார்கள். யாரும் இப்படி ஒரு கேள்வியை எங்களிடம் கேட்டதில்லை. அவ்வாறு இருக்கும்போது எங்களுக்கு எதிராக இப்படி ஒரு பொய்ப்பிரச்சாரம் செய்வதற்கு வேறு ஏதாவது ஒரு நோக்கம் இருக்கவேண்டும். அல்லது எங்கள் பெயரைச் சொல்லி 1.25 இலட்சம் ரூபாயை யாரோ கையாடல் செய்திருக்க வேண்டும்.

இவற்றில் எது உண்மையாக இருந்தாலும் அது மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.

எங்கள் மீது அடுக்கடுக்காகப் பொய்வழக்குகளைப் போடும் மிக மோசமான போலீசு அதிகாரிகளுக்குக் கூட, இப்படி ஒரு பொய்க்குற்றச்சாட்டை எங்கள் மீது சுமத்த மனம் வந்ததில்லை. வெளிநாட்டுப் பணம் வருவதாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டபோது, கண் கலங்கி குமுறியவர் உதயகுமார். அந்த வலி மற்றவர்களுக்கும் இருக்கும் என்பதை அவர் அறியாமலிருக்க வாய்ப்பில்லை.

எந்த இடிந்தகரை மக்களிடமிருந்து எங்களுக்கு 1.25 இலட்சம் பணம் கொடுக்கப்பட்டதாக உதயகுமார் கூறுகிறாரோ, அந்த இடிந்தகரை ஊர்க்கமிட்டிக்கும், கூட்டப்புளி பங்குத்தந்தை மற்றும் ஊர்க்கமிட்டியினருக்கும், கூடங்குளம் முன்னணியாளர்களுக்கும் என்னுடைய இந்தக் கடிதத்தை அனுப்புகிறேன்.

இடிந்தகரை மக்கள் முன்னால் உதயகுமார் கூறியிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு பகிரங்க விசாரணை நடத்தப்படவேண்டும். அதில் கூட்டப்புளி, கூடங்குளம் முன்னணியாளர்களும், போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க வேண்டும். இந்த வழக்குகளைக் கையாண்ட எமது வழக்குரைஞர்கள் அனைவரும் இடிந்தகரைக்கு வருவதற்குத் தயாராக இருக்கிறோம்.

தேதியை இடிந்தகரை ஊர்க்கமிட்டி தெரிவிக்கட்டும்.

நன்றி.

______________________

 

 

இசைப்பிரியாக்களுக்கு என்ன பதில் ?

19

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பிரிவில் பணியாற்றியவரும், செய்தி வாசிப்பாளருமான இசைப்பிரியா சிங்கள் இராணுவத்தினரால் இழுத்து செல்லப்படும் வீடியோ ஆதாரத்தை சானல் 4 வெளியிட்டுள்ளது. நான்கு நிமிடம் ஓடும் இந்த புதிய வீடியோ ஆதாரத்தின் மூலம் இசைப்பிரியா போரில் கொல்லப்பட்டார் என்ற இலங்கை அரசின் கூற்று பொய் என்பது அம்பலமாகியுள்ளது. இசைப்பிரியாவின் முகத்தில் உள்ள ஆழமான காயங்கள் அவர் சிங்கள இராணுவத்தால் பாலியல வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்டதை உறுதி செய்வதாக உள்ளது.

இசைப்பிரியா
இசைப்பிரியா

நான்கு நிமிடங்கள் ஓடும் இந்த காணொளியில் இசைப்பிரியா அரை நிர்வாணமாக  சகதியில் கிடக்கிறார். சிங்களப் படையினர் இவரை பிரபாகரனின் மகள் என்று  கூறி இழுத்துச் செல்கின்றனர். அதை இசைப்பிரியா மறுக்கிறார். முகத்தில் பலமான காயங்களுடன் கைகள் கட்டப்பட்டு பாலியல் வன் கொடுமைக்கான அறிகுறிகளுடன் இசைப்பிரியா இறந்து கிடக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.

கடந்த ஜூன் 2011-ல் வெளியான “இலங்கையின் கொலைக்களங்கள்” என்ற ஆவணப்படத்தில் இசைப்பிரியா அரை நிர்வாணமாக, கடுமையான காயங்களுடன் இறந்து கிடக்கும் காட்சி வெளியானது. பாலியல் வன் கொடுமைக்கான ஆதாரங்கள் இதில் இருப்பதாக வைக்கப்பட்ட குற்றச் சாட்டை நிராகரித்த இலங்கை அரசு “சிங்களப் படையின் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே தலைமையிலான 53-வது டிவிசனுடன் நடந்த சண்டையில், மே 18 2009-ல் இசைப்பிரியா கொல்லப்பட்டார்” என அறிவித்தது. தற்போது  கிடைத்திருக்கும் ஆதாரத்தின் மூலம் இசைப்பிரியா போரில் கொல்லப்படவில்லை, சிங்கள இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட இசைப்பிரியாவின் உடல்
சிங்கள படையினரால் கொல்லப்பட்ட இசைப்பிரியாவின் உடல்

சானல் 4 இதுவரை மூன்று ஆவணப் படங்களை வெளிக் கொண்டு வந்துள்ளது. இவை இலங்கை அரசு இழைத்த போர்க் குற்றங்கள் சிலவற்றை வெளிச்சமிட்டு காட்டின. புலிகளுக்கு எதிரான போர் என்று அழைத்துக் கொண்டு இலங்கை அரசு செய்த இனப்படுகொலை என்ற பனிப்பாறையின் நுனிதான் இவை எல்லாம். மாவிலாறில் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற இந்த இன அழிப்புப் போரில் ஈழ மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு பயங்கரமானது. பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தி அங்கு மக்களை வரவழைத்து, பின் அங்கு குண்டு வீசியது, மருத்துவமனைகள் மீது தாக்குதல் தொடுத்து காயமடைந்த மக்களை கொன்றது, கடைசி நாட்களில் கொத்து கொத்தாக பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே அடியாக கொல்லப்பட்ட்து, சரணடைந்த புலித் தலைவர்களை கொன்றது என்ற அநீதியான போரின் சில நிகழ்வுகள் மட்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

லசந்தா விக்கிரமசிங்கே
மர்மமான முறையில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் லசந்தா விக்கிரமசிங்கே.

இலங்கை அரசின், சிங்கள இராணுவத்தின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் லசந்தா விக்கிரமசிங்கே போன்ற பத்திரிகையாளர்கள் மர்மமான  முறையில் கொல்லப்பட்டார்கள். இலங்கையில் சுதந்திரமான பத்திரிகைகள் தாக்கப்பட்டன. கடந்த ஐந்து  ஆண்டுகளில் 23 பத்திரிகையாளர்கள் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். 9 பத்திரிகையாளர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிங்கள பத்திரிகையாளர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இந்த இன அழிப்புப் போரின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து, வழிகாட்டி வேண்டிய உதவிகளை செய்த  இந்திய அரசு தற்போது  இந்த ஆவணப் பட இயக்குநர் கல்லம் மேக்ரேவுக்கு இந்தியா வர விசா மறுத்துள்ளது.

இஷ்ரத் ஜகான்
குஜராத் போலீசால் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜகான்.

இந்தக் காணொளி நமக்கு வாச்சாத்தியையும்,குஜராத்தையும், காஷ்மீரையும், மணிப்பூரையும் நினைவுபடுத்துகிறது. நம்மைச் சுற்றி இசைப்பிரியாக்கள் நிறைந்திருக்கிறார்கள். ஈழத்து இசைப்பிரியாவுக்காகவும், குஜராத்தின் இசைப்பிரியாகளுக்காகவும் நீதி பெற நாம் போராட வேண்டியுள்ளது.

கொன்ற இராஜபக்சேக்கள் (ஈழம், இந்தியா இரண்டிலும்) தங்களை புனிதப்படுத்தி கொள்ள வளர்ச்சி என்ற முகமூடியுடன் பாசிசத்தை ஆயுதமாக தரித்து வருகிறார்கள். இராஜபக்சேக்களுக்கு ஆதரவாக டக்ளஸ்களும், கருணாக்களும், தமிழருவி மணியன்களும், நெடுமாறன்களும் களம் இறங்கியிருக்கிறார்கள்.

இசைப்பிரியாகளின் அழுகுரல் உங்களுக்கு கேட்கிறதா? இந்த இராஜபக்சேக்களை என்ன செய்யப் போகிறீர்கள்?

ஆவணப் படம்