வாழ்வையே விற்பதாகவும் வாங்குவதாகவும் பார்க்கச் சொல்கிற அத்து மீறல்; உழைப்புச் சுரண்டல்; முதலாளித்துவத்தின் கொடூரம்; இவைகள் தான் சன்னல்களுக்கு அப்பால் பிதுங்கித் தள்ளும் அடிவேர்கள்!
விண்டோசின் முடிவு
மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ்-xp இயங்குதளத்தின் சேவையை அடியோடு நிறுத்தி செவ்வாயோடு செவ்வாயாக ஒரு வாரம் ஆகியிருக்கிறது. மைக்ரோசாப்ட் இயக்குநர் டிம் ரெய்ன்ஸ் ஏப்ரல் 8-ம் தேதி விண்டோஸ்-xp இயங்குதள சேவையை நிறுத்துவதாக அறிவிப்பதற்கு முன்னரே பிரிட்டனின் மிகப்பெரும் ஐந்து வங்கிகள் 100 மில்லியன் டாலர்களை (தோராயமாக ரூ 620 கோடிகள்) மென்பொருள் புதுப்பித்தலுக்காக செலவிட்டிருக்கின்றன.
ஆருத்ரா தரிசனத்திற்கு ஆன்லைன் டிக்கட் வாங்கும் இந்தியாவில் இதன் நெருக்கடி மிகவும் பலமாக இருக்கிறது. இந்தியப் பொதுத்துறை வங்கிகளின் 34,000-க்கும் மேற்பட்ட கிளைகள் இதனால் பாதிப்படையலாம் என்கிறது இந்திய வங்கியாளர்களின் கூட்டமைப்பு. ஒரு நாளில் தோரயமாக 1,100 கோடி ரூபாய்க்கான வணிக வாய்ப்புகள் பாதிக்கும் என்றும் மூன்று நாளில் ஏற்படும் இழப்பு ஏறக்குறைய 3,300 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்கிறது இவ்வமைப்பு.
2001-ல் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ்- XP இயங்குதளம் 13 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென்று நிறுத்தும் அளவிற்கு என்ன பிரச்சனை ஏற்பட்டது? ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லையென்பதுதான் பிரச்சனையே! அசென்ஷியஸ் கன்சல்டிங்கின் தரவுகளின்படி இந்தியாவில் 40 சதவீதத்திலிருந்து 70 சதவீதம் வரையிலான கணிணிகள் விண்டோஸ்- xp இயங்குதளத்தில்தான் இயங்குகின்றன.
இடையில் கொண்டுவரப்பட்ட விண்டோஸ் விஸ்டா படுத்துவிட்டது. அதன்பிறகு கொண்டு வரப்பட்ட விண்டோஸ்-7, இதுவரை வந்த தொகுப்புகளின் பிரதிபலிப்பாகவும் பளபளப்பாக தோன்றும் திரையைத்தவிர (புலிகேசியின் பாணியில் ஆட்டு மூத்திரத்தை விளம்பரப்படுத்தினாலே வாங்கி குடிக்கும் நுகர்வு கலாச்சாரத்தை மைக்ரோசாப்ட் கையாண்டது) அச்சு மாறாமல் அப்படியே வந்தது.
இங்கு இருந்துதான் பில்கேட்ஸ்க்கு எரிச்சல் ஆரம்பித்திருக்க வேண்டும். அதாவது விண்டோஸ்-7ன் விற்பனையை உயர்த்துவதற்காக 2010-லேயே விண்டோஸ்- xpயின் விற்பனை நிறுத்தப்பட்டது. xpக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு தொடர்பான மென்பொருள் புதுப்பித்தல்கள் மட்டும் தொடர்ந்த நிலையில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்ளாய்ட் கணினிகளின் சந்தையை பிடிக்கும் பொருட்டு சொட்டு மருந்தாக 2012 அக்டோபரில் விண்டோஸ்-8 சந்தையைத் தொட்டது. (நீங்கள் கணினியை பயன்படுத்துவது குறித்த தகவல்களை உளவு பார்ப்பதில், விண்டோஸ் 8 பல மடங்கு முன்னேறிய ஒன்று என்பது தனிக்கதை.)
2001-ல் விண்டோஸ் XP யை அறிமுகப்படுத்தும் பில் கேட்ஸ்.
இப்பொழுதும் வாடிக்கையாளர்கள் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. எச்சரிக்கை மேல் எச்சரிக்கையாக விடுத்தது மைக்ரோசாப்ட் நிறுவனம். போர்ப்ஸ் இதழ் மைக்ரோசாப்டிற்கு தன் கரிசனத்தை இப்படியாக வெளியிட்டது; மூன்றில் ஒரு பங்கு மைக்ரோசாப்ட் வாடிக்கையாளர்கள் விண்டோஸ்- xp இயங்குதளத்தைப் பயன்படுத்துவதாகவும் 36 சதவீதம் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கைக்குப் பின்னரும் தொடர்ந்து xp இயங்குதளத்தையே பயன்படுத்துவதாகவும் தெரிவித்ததோடு நில்லாமல் இதிலிருந்து தப்புவது எப்படி என்று 10 விதமான ஆலோசனைகளை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறது.
நம்மவர்கள்தான் ஆகச் சிறந்த அடிமைகள் ஆயிற்றே! ரிசர்வ் வங்கி கடந்த மாதம் முதலே வங்கிகளுக்கு மென்பொருள் புதுப்பித்தல் தொடர்பாக நினைவூட்டலை ஊட்டியது. இந்தியாவில் 16 சதவீதம் அளவிலான ஏடிஎம்கள் இதனால் பாதிக்கப்படலாம் என்கின்றனர். பணம் எடுப்பதற்கும் வங்கி கணக்குகளை சரிபார்ப்பதற்கும் மிகவும் எளிய விண்டோஸ்- xp இயங்குதளமே போதுமானது எனும் பொழுது தவிடு தின்னும் அரசனுக்கு அமைச்சர் முறம் பிடித்த கதையாக வலுக்கட்டாயமாக இயங்குதளத்தை மாற்ற வேண்டிய நெருக்கடியில் இருக்கின்றன இந்தியப் பொதுத்துறைவங்கிகள். விண்டோஸ்- xp இயங்குதளம் மாற்றப்படா விட்டால் வைரசுகளாலும் ஹேக்கர்களாலும் மிகப்பெரும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும் என்று தொழில்நுட்ப பிரச்சனையாகப் பார்க்கிறார்கள். இது ஒரு அளவில் தொழில்நுட்ப பிரச்சனைதான். ஆனால் யாருக்கு? பில்கேட்ஸின் தொழிலில் ஏற்படும் இலாபத்தின் மீதான நுட்பப் பிரச்சனை இது.
வைரசுகள், ஹேக்கர்களின் பங்கு என்ன? நடுத்தரவர்க்கம் நைஜீரியாக்காரனை ஹேக்கராக நினைத்துக் கொண்டிருக்கிறது. மொசார்ட்டும் சிஐஏவும் ஊடுருவ சாத்தியம் இல்லாத கணினிகள் ஏதாவது இருக்கிறதா? முதலாளித்துவ சமூகத்தில் மருந்துகளுக்காகத்தான் நோய்களே தவிர, நோய்களுக்கு மருந்துகள் இல்லையென்பது அனைவருக்கும் தெரியும். ரத்தமும் சதையுமாக இருக்கிற மனிதனின் பாதுகாப்பிற்கே இந்த முதலாளிகள் மயிரளவு மதிப்பும் தரவில்லையெனும்போது ஆன்டி வைரஸ் மென்பொருட்கள் வெறும் சிலிக்கான் சில்லில் இயங்கும் கணினிகளை வைரஸிருந்து பாதுகாக்கப் போகிறது என்பது நேர்மையான மோசடி. எப்பொழுதெல்லாம் ஆன்டி வைரஸ் இருக்கிறதோ அப்பொழுதுவரை கணினிகளைத் தாக்கும் வைரஸ்கள் இருக்கும் என்பதுதான் இலாபமீட்டும் விதி என்கிற பொழுது நமது அறிவுஜீவிகள் எதற்கு முட்டுக் கொடுக்கின்றனர் என்பதைப் பரிசீலிக்க வேண்டும். இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காகத்தான் விண்டோஸ்- xp இயங்குதளம் நிறுத்தப்படுகிறது என்பதை உங்களில் யார் ஏற்றுக் கொள்கிறீர்கள்?
கார்ப்பரேட் கொள்ளைச் சின்னம் – மைக்ரோசாப்ட் விண்டோஸ் XP
“நீ நெல் கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன்; இருவரும் ஊதி ஊதி தின்போம்” என்ற கணக்காக இந்திய மைக்ரோசாப்ட் கிளையின் பொது மேலாளர் அம்ரிஷ் கோயல் ‘பல்வேறு நிறுவனங்கள் இயங்குதளம் குறித்த எச்சரிக்கையை சட்டை செய்யவில்லை எனினும் சிறப்பு சலுகை விலைகளை மைக்ரோசாப்ட் தரத் தயாராக இருப்பதாக’ காலால் இட்ட உத்திரவை தலையால் அறிவிக்கிறார். மற்றபடி இதன் சாரம் இந்தியாவில் காசுகொடுத்து வாங்கிய சற்றேறக் குறைய 40 இலட்சம் விண்டோஸ்- xp குறுந்தகடுகளை நங்கநல்லூர் ஆஞ்சனேயருக்கு வடமாலையாக சாத்துங்கள், காணிக்கையை மைக்ரோசாப்டுக்கு செலுத்துங்கள் என்பது தான்.
இப்பிரச்சனையின் ஊடாக மூன்றுவிதமான கும்பல்களை நாம் அடையாளம் காணவேண்டியிருக்கிறது.
முதலாவதாக இதை வெறும் இயங்குதள பிரச்சனையாக பார்க்கிறவர்கள், சுதந்திர மென்பொருட்களுக்கான இயக்கத்தை சமூக இயக்கமாக பிரதானப்படுத்துகிறார்கள். பாராளுமன்ற ஜனநாயகத்தை நம்பும் இடதுசாரி மாணவர் குழுக்கள் இதில் அடக்கம். உபுண்டு மற்றும் பொதுவான மென்பொருட்களை உருவாக்குவதன் மூலம் இதை தீர்க்க முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால் இது பிரச்சனையை ஒரு போதும் தீர்க்காது. மேலும் இது பிரச்சனையை தீர்க்கும் வழியுமல்ல.
நாம் இவர்களிடத்தில் முன் வைக்கும் வாதம் இது தான்; மைக்ரோசாப்டைத் தவிர்த்து மெக்டோனால்ட்ஸ் (உணவு விடுதிகள்) கடந்த ஆண்டு பல மில்லியன் பவுண்ட் கோழி இறக்கைகள் எஞ்சியிருப்பதாகவும், அவற்றை எப்படி விற்று தீர்ப்பதென வருடாந்திர அறிக்கைகளில் விவாதித்திருக்கிறார்கள். அவர்கள் வந்தடைந்த முடிவுகளில் ஒன்று மக்கள் வாங்கும் சக்தியற்று இருக்கிறார்கள் என்பது. இதற்காக ஒருவர் இலவச கோழி இறக்கை இயக்கத்தை நடத்துவது சரியாக இருக்குமா? அல்லது முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை கூர்மைப்படுத்தி இலாப வெறியை அம்பலப்படுத்துவது சரியாக இருக்குமா? என்பதற்கு பதில் சொல்ல வேண்டும். மற்றபடி இலவச மென்பொருட்களுக்கான இயக்கம் வெறும் பிழைப்புவாதமன்றி வேறல்ல.
இரண்டவாதாக ‘முதலாளித்துவ எதிர்ப்பு’ என்பதை வார்ப்புரு அரசியல் (Template Politics) என்று கருதுபவர்கள். அபரிதமான உற்பத்தி, மூலதனக் குவியல் போன்ற சீரழிவுகளை அபாயகரமான முதலாளித்துவம் என்று வரையறுப்பார்களே தவிர முதலாளித்துவம் அபாயகரமானது என்று சொல்வதில்லை. வரலாறு இவர்களை பொறுக்கித் தின்பவர்களாகத்தான் பார்க்கிறது. ஓராயிரம் முறை இவர்கள் இதைச் சொல்லும் பொழுது ஒரு இலட்சம் முறை அது தவறு என்று திருப்பிச் சொல்வதற்கான வாய்ப்புகளைத் முதலாளித்துவம் தான் தருகிறது என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள். விண்டோஸ்- xp திரும்பப் பெற்ற விஷயத்தில் இவர்களின் நிலைப்பாடு என்ன? அபாயகரமான முதலாளித்துவமா? அல்லது முதலாளித்துவம் அபாயகரமானதா?
விண்டோசை இழுத்து மூடுவோம்
மூன்றாவதாக பிரச்சனைகளை களைய தர்மகர்த்தா முறையை ஆதரிப்பவர்கள். ‘அறம் செய்ய விரும்பு’ என்று முதலாளிகளிடத்தில் கோரிக்கையை வைத்துவிட்டு தொழிலாளிகளிடத்தில் நைச்சியமாக ‘ஏற்பது இகழ்ச்சி’ என்று கூறும் நீதிமான்களும் இதில் அடக்கம். மேலும் மதங்கள், மடங்கள், ஆன்மீகப் பெரியவர்கள் எல்லாம் வரிசைகட்டி நிற்கிறார்கள். ஏற்பது இகழ்ச்சி என்பதால் தான் விவசாயிகள் கடன் கட்டமுடியாமால் தன்மானம் காக்க தற்கொலை செய்கிறார்கள். ஆனால் அறம் செய்ய விரும்பும் கூட்டம் ஒரு பக்கம் காசு கொடுத்து வாங்கிய இயங்குதளம் இயங்காது என இறுமாப்புடன் கூறுவதுடன் மறுபக்கம் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை என்று கவுச்சியுடன் அம்மணமாக நிற்கிறது. மல்லையா போன்றவர்கள் திவாலை அறிவித்துவிட்டு மக்கள் பணத்தை சூறையாடுகிறார்கள். உரிமையை தொலைத்த வாடிக்கையாளர்கள் அவலநிலையில் நீதிக் கருத்துகளில் மோசடியாக்கப்படுகிறார்கள்.
இப்பேற்பட்ட கார்ப்பரேட் மாஃபியாவான பில்கேட்சைத்தான் மாணவர்களின் முன்னோடியாக ஊடகங்களும், கல்வி முதலாளிகளும் இந்தியாவில் முன்னிறுத்துகின்றனர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இந்தியர் தலைவராக வந்தார் என்றெல்லாம் வெட்கம் கெட்ட முறையில் துள்ளிக் குதிக்கிறார்கள்.
ஒரு இயங்குதள விற்பனையை வைத்து முதலாளித்துவத்தை எடைபோட அவசியமேயில்லை. உண்மையில் சொல்லப்போனால் தொகுப்பாக நாம் வைத்த வாதங்கள் நடுத்தரவர்க்கத்தின் கோரிக்கையாகத்தான் எஞ்சியிருக்கிறது.
ஆண்டைக்கும் அடிமைக்கும் நடக்கும் வர்க்கப்போராட்டத்தில் அதாவது ‘ஆயிரக்கணக்கானவர்களுக்கு எதிராக கோடிக்கணக்கானவர்களின்’ போராட்டத்தில் நடுத்தரவர்க்கம் வாழ்வையும் இன்ப துன்பங்களையும் வெற்றி தோல்விகளையும், வாங்குவதாகவும் விற்பதாகவும் பார்த்துப் பழக்கப்பட்ட முதல் கூட்டம். இதே முதலாளித்துவத்தின் கொடூரத்தை பாட்டாளி வர்க்கம் அதாவது தன் உடல் உழைப்பை விற்றுப் பிழைப்பவர்கள் எந்தளவுக்கு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நோக்கும் பொழுது நமக்கான அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கு ‘இரு கைகளாலும் இரு முனைகளிலும் போரடினால்’ மட்டும் போதாது பல முனைகளிலும் போராட வேண்டும் என்பதையே இச்செயல் நமக்கு உணர்த்துகிறது.
சமூக விஞ்ஞானத்தில் சாரமாக ஒன்றை முன்வைப்பார்கள்; ‘முதலாளித்துவம் தனக்கு சவக்குழி தோண்டுவோரையும் சேர்த்தே உற்பத்தி செய்கிறது’. அப்படியானால் விண்டோஸ் இயங்குதளத்தில் இதை எழுதி அதன் மூலமாகவே நீங்களும் வாசிக்கீறிர்கள் என்பது தற்செயலான நிகழ்வல்ல!
“ஒரு துளி மை… உரிமை, கடமை, பெருமை” என்பது போன்ற தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் எந்தத் தொகுதியில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகளும், கிராமப்புற மக்கள் மனதில் எந்தக் கட்சி பெரும்பான்மை இடத்தை பிடித்துள்ளது என்று ஊகங்களுமாக அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் என்று தேர்தல் குறித்த செய்திகள் அனல் பறக்கும் இந்த நேரத்தில் கிராம வாசியான நான் கிராமத்து மக்களுடன் பேசி அவர்களது மனநிலையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
படம் : நன்றி ஜெகதீஸ்வரன் http://sagotharan.wordpress.com
தேர்தல் குறித்து பேசணும்னு நெனச்சதும் முதலில் ஞாபகத்துக்கு வந்தது நாவம்மா ஆத்தா.
1996 சட்டமன்ற தேர்தல் நடந்தப்ப எனக்கு ஓட்டு போடும் வயசு, ஆனா வாக்காளர் பட்டியல்ல என் பேரு இல்ல. கல்யாணம் முடிஞ்சு வெளியூருக்கு போய்ட்ட பக்கத்து தெரு பொண்ணோட ஓட்டு வீணா போகுதுன்னு ஆயாசப்பட்ட உள்ளூர்ல உள்ள கட்சிக்காரங்க, கட்டாயப் படுத்தி கள்ளவோட்டு போட கூப்பிட்டாங்க.
“எலக்சன்னு ஊரே திருவிழா கூட்டமா இருக்கு, கட்சிக்காரங்க வாங்கி குடுத்த தண்ணிய ஊத்திட்டு ஒவ்வொருத்தனும் தலமாண்டு நிக்கிறானுங்கெ. ஓட்டு போட்ற எடத்துல நாலு தெரு ஆம்பளைங்களும் இருப்பாங்க. வயசுப் பொண்ண ரோடு சுத்தி அனுப்ப சொல்றீய கெழவி. ஒனக்கு கூறு இருக்கா” என்று என் அம்மா பொலம்பியத அலச்சியப் படுத்தி என்னை போக சொன்னா நாவம்மாத்தா.
“ஆமா ஒம்மக அப்புடியே கிளி மாரி இருக்கா, கொத்திட்டு போப்போறாங்கெ. போடி இவளெ! ‘மரியாத இல்லாம ரப்பு ரப்புன்னு போறா பாரு’ன்னு சொல்றவனுவ ஆம்பளைவ்வொ, அவனுவொளெ வந்து மதிச்சு கூப்புட்றானுவொ. இவவேற வூட்டுக்குள்ளேயே அடஞ்சு கெடக்கணுங்கறா. நீ போடி, ஒங்க அம்மா கெடக்கா. நீ போயி மாடி வீட்டுக்காரெ சொல்ற கச்சிக்கு ஓட்ட போட்டுட்டு வாடி. எப்புடியாவது இந்த தடவ செயிச்சுப்புட்டா எம்மகனுக்கு வேல வாங்கி தர்ரேன்னு சொல்லிருக்கான்”. 18 வருசத்துக்கு முன்னால நான் ஓட்டு போடுறதுக்கு சப்போட்டா இருந்தது நாவம்மாத்தா. இப்படி பேசிய நாவம்மாத்தா இன்னைக்கி என்ன சொல்றான்னு பாப்போம்.
“என்னாத்தா இந்த தடவ யாருக்கு ஓட்டு போடப் போற?”
“மயிருக்கு போட்றென் ஓட்டு. போரியல்ல (போர்வல்) போயி தண்ணி எடுக்குறேன்னு விழுந்து வாரி கால கீழ ஊண முடியாம கெடக்குறேன். இவய்ங்கெளுக்கு ஓட்டு போடலன்னா மோசமாம்! நெனவு தெரிஞ்ச நாளுமொதலா, எவம் போரியலு தொறந்துடுவா, ஒரு கொடம் தண்ணி தூக்கிட்டு வரலான்னு தொன்னாந்துட்டு இருக்கறதே பொழப்பா போச்சு. தண்ணிக்கி ஒரு வழி செய்ய மாட்டேங்கறாய்ங்கெ ஓட்டு ஒன்னுதான் கொறச்ச” என்று வெறுப்போட சொன்னா.
“ஓட்டு போட்றது நம்ம கடமன்னெல்லாம் சொல்றாங்க, நீ அவமதிச்சு பேசுறீயேத்தா?”
“மாடி வீட்டுக்காரனுக்கு ஓட்டுப் போட்டோம், இன்னொரு மாடிவீடு கட்டிட்டான். மேலத்தெரு தொப்பைக்கி ஓட்டுப் போட்டோம், அவெம்பாரு நெல்லரைக்கிற மிசுனு கட்டுனான். அம்பலக்காரவூட்டு காசிக்கி ஓட்டுப் போட்டோம், ஊருல பாவப்பட்ட சனம் நடவு நட்டுட்டு இருந்த கோயில் நெலத்த புடிங்கி அண்ணாங்காறன்ட குடுத்துட்டான். ஏவ்வீட்டுக்காரு சாவறதுக்கு முன்னாடிலேர்ந்து ஓட்டு போட்றேன், நமக்கு ஒன்னும் நடக்கல. ஒழுவுற வீட்டுக்கு ஓல போடாய்க்கல, இந்த மண்ண பேத்துட்டு ஒரு சிமெண்டு போடாய்க்கெல. நம்ம பொழப்பு நாறுது கடமெ உரிமென்னுட்டு வந்துட்டா”.
“ஆத்தா நீ ஓட்டு போட்டதா சொல்றது எல்லாம் பஞ்சாயத்து தலைவர தேர்ந்தெடுக்குற தேர்தல். இப்ப பிரதமர தேர்ந்து எடுக்குறதுக்கான தேர்தல். இதுல யாருக்கு ஓட்டு போடுவே?”
“அதெல்லாம் எனக்கு தெரியாது. நம்மூருகாரய்ங்கெதான வந்து ரெட்டலைக்கி போடு, கை சின்னத்துக்கு போடு சூரியனுக்கு போடுன்னு கேக்குறாய்ங்கெ. நீ சொல்றதெல்லாம் எனக்கு தெரியாது. “
“நம்மூர் காரவங்கள விடுத்தா. பெரிய தலைவர்கள் இருக்காங்கள்ள அவங்களுக்கு யாருக்கு ஓட்டு போட்டே?”
“ஏன்டி ஒம்மா வீட்ல இல்லையா, வேல பாக்காம இங்க வந்து வம்பு வளத்துகிட்டு இருக்க” என்று அலுத்துகிட்டு, “முன்னாடி இந்துராகாந்தி மொதலமச்சரா இருந்தப்ப அந்தம்மாவுக்கு ஓட்டுப் போட்டேன். செயலலிதா மொதலமச்சரா இருந்தப்ப இந்த அம்மாவுக்கு ஓட்டுப் போட்டேன். நம்மளாட்டம் அவங்களும் ஒரு பொம்பளையாச்சே பாவன்னு ஓட்டு போட்டேன்”.
“செத்துபோன இந்திரா காந்தி பிரதமர், செயலலிதா முதலமைச்சர்?, ரெண்டையும் கொழப்பறையே”
“யாரா இருந்தாலும் நம்மள ஆள்றவங்கதானேடி அவங்க.
“அதுவும் சரிதான். ஆனாலும் இத்தன வருசம் ஓட்டு போட்றே ஒருத்தரும் ஒரு நல்லதும் செய்யல. யாரும் சரி இல்லேங்றீயாத்தா?”
“இந்தரா காந்தி அம்மா நல்லவங்க. முன்னெல்லாம் மழ(ழை) பேஞ்சா நம்ம ஓட வாக்யால்ல நெரம்பி தண்ணி போவும். நம்ம ஊருக்கு மேற்க இருக்குற எந்த ஊருக்கும் போக முடியாது. ஆத்துல நடுப்பறி கயித்த கட்டிதான் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போகணும். அந்தம்மா மொதலமச்சரா இருந்தப்பதான் பாலம் கட்டுனுச்சு. எம்மகனுக்கு பாசுபோட்டு குடுத்துச்சு. இன்னொங் கொஞ்ச காலம் இருந்துருந்தா எம்புள்ளைக்கி வேல கெடச்சுருக்கும். எம்புள்ள துபாய் போனப்ப மறக்காம இந்தரா காந்தி சமாதிக்கி போயி பூவெல்லாம் போட்டு கும்புட்டுட்டு போனான். அந்தம்மாவெதான் பாவி பயலுவொ அனியாயமா கொன்னுபுட்டாய்ங்கெ” என்று தன் பரிதாப நிலையை மறந்து இந்திரா காந்திக்கு இரக்கப் பட்டாள் நாவம்மாத்தா.
“எங்க வீட்டுக்காரு செத்தப் பிறகு படாத கஷ்டமுல்ல, இருந்தாலும் கடன ஒடன வாங்கி பட்டப்படிப்பு படிக்க வச்சேன். பஸ்சுக்கு போக கூட காசுருக்காது, போட்டுட்டு போக ஒரு நல்ல சட்ட இருக்காது எப்புடியாவது படிக்க வச்சுட்டா ஒரு வேல கெடச்சுரும் நம்ம பாரம் கொஞ்சம் கொறையுன்னு ஆசபட்டேன். நான் சொல்ற கச்சுக்கு ஓட்டுப் போடு, ஒம்மகனுக்கு வேல வாங்கி தர்ரேன்னு எல்லாப் பயலும் சொன்னாங்கெ. அவைங்கெ சொன்னதெல்லாம் தண்ணிலெ எழுதுன எழுத்தாப் போச்சு. நம்மூர்ல ஒரு வேல கெடச்சுருந்தா ஏம்புள்ள வெளிநாடு வரைக்கும் சம்பாதிக்க போயி செத்து கண்ணாடி பொட்டில பொணமா வந்துருக்க மாட்டானே”ன்னு மகன் ஞாபகம் வந்தவளாய் தலையிலேயே அடிச்சுகிட்டு அழ ஆரம்பித்தாள்.
“அழாதாத்தா நான் ஏதோ கேக்கப் போயி ஒம்மகனெ ஞாபகப் படுத்திட்டேனோ?”
“ஏதோ கேக்கப் போயின்னு யாஞ்சொல்ற உண்மெ அதானே! வேல கெடைக்குன்னுதான் படிக்க வச்சேன், கெடைக்கெல. இருந்த ஒரு ஏக்கர் நெலத்தையும் வித்துட்டு சம்பாரிக்க வெளிநாடு போனான். எங்க கால சூழ்நெல, பின்னாடியே எமன் போயி உயிர பறிச்சுப்புட்டான். அங்க உள்ளவெ யாரோ கொன்னுட்டானுவொன்னு சொல்றாங்கெ, வேல தாங்காம நெஞ்சடச்சு செத்துட்டான்னு சொல்லாங்கெ. அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம். நெலத்துக்கு நெலமும் போயி பிள்ளைக்கி பிள்ளையும் போயி இன்னைக்கி எங்குடும்பம் அனாதையா நிக்கறதுக்கு காரணம் இவனுங்கதானே.
ஏம்புள்ள செத்ததுல இருந்து நானு ஓட்டு போடல. என்னா பண்ண. முடிஞ்சுச்சு அவைங்கெளால. எம்புள்ள செத்த பணத்த வச்சு லச்சலச்சமா கொட்டிக் கொடுத்து எம்பேரப்புள்ள படிக்கிறான். அவனுக்காவது ஒரு கெவுரு மெண்டு வேல கெடைக்கிதான்னு பாப்போம்”ன்னு மகன் இறந்த துக்கம் தொண்டைய அடைக்க தள்ளாத வயதுலயும் தன் நம்பிக்கைய பேரன் மீது மாத்தி பேசினாள்.
சாதி, அடிமைத்தனம், பிற்போக்கு சடங்கு இதெல்லாம் கடைபிடிச்சு நம் வாழ்க்கையில் மாறியது என்ன என்பதை தன் வாழ்க்கை சூழலிலிருந்து புரிந்து கொள்ளும் பாமர மக்கள் அதை தூக்கி எறிந்து விட்டு அதிலிருந்து வெளிவருகிறார்கள். அதுபோல ஓட்டு போடுறது சடங்குதான்னு கிராம மக்களால் அறிவு பூர்வமாக உணர முடியலைனாலும், இந்த தேர்தலும் நமக்கான உரிமையை வழங்கி நம் வாழ்க்கை தரத்தை உயர்த்தாது என்பதை நடைமுறையில் இருந்தே புரிந்து கொண்டுள்ளனர் என்பதற்கு நாவம்மாத்தா ஒரு உதாரணம்.
தேர்தல் அரசியல் அணு உலையை மூடாது ! மக்கள் போராட்டமே தீர்வு ! கூடங்குளம் அரங்க கூட்டப் பதிவுகள் !
மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் 14-4-2014 அன்று திங்கள் கிழமை மாலை 3-00 மணிக்கு கூடங்குளம் அற்புதம் சாமுவேல் திருமண மண்டபத்தில் அரங்கக் கூட்டமும் – கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. கூடடத்திற்கு முதல் நாள் மாலையிலும், மறுநாள் காலையிலும் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் கூடங்குளம் பகுதி மக்களுடன் இணைந்து தெருக்களில், கலைக் குழு தோழர்களின் இசை முழக்கத்தோடு துண்டறிக்கை விநியோகம் செய்து கூட்டத்திற்கு அழைத்தனர். அங்கு வந்த காவல்துறை, “இது தேர்தல் நேரம் பறையடிக்க கூடாது” என்றது.
“துண்டறிக்கை விநியோகம் செய்கிறோம், வீட்டுக்குள் இருக்கும் மக்களை வெளியே அழைக்க பறையடிக்கிறோம்” என்று பதிலளித்தோம். உயர்நீதிமன்ற உத்தரவு இருந்ததால் கையைப் பிசைந்த காவல்துறை, “பிரச்சனை ஏதும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிச் சென்றனர்.
அதன்பின் கூட்டம் துவங்கும் முன் அரங்கின் அருகில் வேன், ஜீப்பில் வந்த காவல்துறை கூட்டத்திற்கு வரும் மக்களை மிரட்டும் வகையில் வீடியோ எடுத்தது. வழக்கறிஞர்கள் சென்றவுடன் வீடியோவை மறைத்துக் கொண்டது. கூடங்குளம் காவல் ஆய்வாளரோ ஜீப்பில் ஊர் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து மக்களை அச்சுறுத்தினார். இத்தனை அச்சுறுத்தலையும் மீறி மக்கள் கொஞ்சம்,கொஞ்சமாக கூட்ட அரங்கிற்கு வரத் தொடங்கினர். குறிப்பாக பெண்கள் ஆர்வத்தோடு கூட்டத்திற்க்கு வந்தனர். இடிந்தகரை ஊர்கமிட்டி சார்பில் கவுன்சிலர் புனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கலை இலக்கிய கழக மைய கலைக் குழுவின் பாடலோடு அரங்கக் கூட்டம் தொடங்கியது. தலைமை உரையாற்றிய, மனித உரிமைப் பாதுகாப்பு மைய மதுரை மாவட்ட துணைச் செயலாளரும், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தோழர் வாஞ்சிநாதன்
“காவல்துறை அச்சுறுத்தல், நெருக்கடிகளை மீறி இக்கூட்டத்திற்கு கூடங்குளம் மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். நாடு முழுவதும் தேர்தலில் உள்ளபோது 3&4-வது அணு உலைகளுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் புதிய திட்டங்களோ, ஒப்பந்தங்களோ மேற்கொள்ளக் கூடாது என்ற நிலையில் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் வாங்கி இவ்வொப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாதாரண பொதுக்கூட்ட அனுமதிக்கே சாமியாடும் தேர்தல் ஆணையம் இம்மாபெரும் அநீதியை, மத்திய அரசோடு சேர்ந்து இழைத்துள்ளது. இதை தேர்தலில் ஓட்டுப் பொறுக்கும் எந்தக் கட்சியும் பேசவில்லை. இது மக்களுக்கு இழைக்கப் பட்ட மாபெரும் துரோகம். இன்றுவரை இயங்க முடியாமல் உள்ள கூடங்குளம் அணு உலை, ஒரு தோற்றுப்போன திட்டம். தற்போது டீசல் மூலமே அணு உலை இயக்கப்படுகிறது.
அரங்கில் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி தேவை இல்லை என்பது உலகறிந்த சட்டநிலை. ஆனால் அரசியல் சட்டத்தையே காவல்துறை கூடங்குளத்தில் மதிக்கவில்லை. துண்டறிக்கை கூட விநியோகிக்கக் கூடாது என்கிறார்கள். இது காசுமீரில் கூட இல்லாத நிலை. கூடங்குளம் போலீசு ஆட்சியின்கீழ் உள்ளது. இதை மாற்ற வேண்டும்.
மார்ச் -19, செப் -20 போராட்டத்தின் போது கடல்வழியாக வந்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் போராட்டத்தில் பங்கேற்றோம்; இடிந்தகரை மக்கள் மீது போலீசு தாக்குதல் நடத்திய போது போலீசை தாக்கிய வீரமிக்கமக்கள் கூடங்குளம் மக்கள். அன்று ஜெயலலிதா உங்களில் ஒருத்தியாக இருப்பேன் என கூறிவிட்டு, சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்தவுடன் மக்கள் மீது தடியடி நடத்தினார்.
காங்கிரஸ், பி.ஜே.பி. இரண்டு கட்சிகளுமே அணுஉலைக்கு ஆதரவாகவே உள்ளது. உச்சநீதி மன்றம் ஊழல் நீதிபதிகளின் கைகளில் உள்ளன. அந்த உச்சநீதிமன்றமே பொய் வழக்குகளை வாபஸ் பெறுமாறு சொல்லியும் கேட்க மறுக்கிறது போலீஸ். தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ஜெ, ஸ்டாலின், விஜயகாந்த், யாருமே அணுஉலை பற்றி வாயே திறக்கவில்லை. கேஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியினர் அணு உலை பற்றி நிலைப்பாடே எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
அணு உலை விசம் என்பது தெரியும். விசம் குடித்தால் சாவு என்பதும் தெரியும். ஆனால் விசம் குடிப்பதா?இல்லையா? என்ற முடிவெடுக்கவில்லை என்பது அயோக்கியத்தனம். ஓட்டுப் பொறுக்கும் யாரையும் நம்பி நாம் இருக்க முடியாது. இந்தியாவில் இன்றும் பெரிய அளவிலான மக்கள் போராட்டம் எல்லாம் தமிழகத்தில் தான் நடைபெற்றுள்ளது. முல்லை பெரியாறு போராட்டத்தில் 1 லட்சம் மக்கள் கேரள எல்லைக்குச் சென்றார்கள். போலீசால் தடுக்க முடியவில்லை. கேரள அரசியல்வாதிகள் மிரண்டு போனார்கள். தமிழக ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளை நம்பாத போராட்டம் அது. அணையை உடைக்கும் பேச்சையும் போராட்டத்திற்குப் பின் நிறுத்தி விட்டனர். அது போல நாம் இந்தப் போராட்டத்தை நடத்த முடியும். இழப்பில்லாமல் எதுவும் பெற முடியாது. நந்திகிராம் மக்கள் போராட்டம், நியமகிரி மக்கள் போராட்டம் நமக்கு முன்னுதாரணம். மீண்டும் ஒரு விடுதலைப் போரை கட்டியெழுப்புவோம்.
ஒவ்வொரு ஊரிலும் 100 இளைஞர்கள் இப்பகுதியிலிருந்து வந்தால் அரசை எதிர்த்துப் போராடுவது நடக்காத ஒன்றல்ல. எங்கள் மீதும் கூடங்குளம் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. என்ன செய்தது போலீஸ். காரணம், நாங்கள் பயப்பட மாட்டோம் என்பதே. சிறைக்கு சென்றாலும் திரும்ப வந்து போராடுவோம் என்ற காரணத்தால் எங்களைக் கைது செய்யவில்லை. போலீசுக்கு அஞ்ச வேண்டாம். நாங்கள் வழக்கு நடத்துவோம். உங்கள் பிரச்சனையை தேர்தலில் யாரும் பேசவில்லை. எனவே ஓட்டு போட்டுப் பயனில்லை. இது மக்களை நம்பிய போராட்டம். தேர்தல் தீர்வைத் தராது. தேர்தல் நாளை கருப்பு தினமாக அறிவிப்போம். ஓரு நீண்ட காலப் போராட்டத்தில் ஒட்டு மொத்த மக்களையும் இணைத்து நிச்சயமாக ஒருநாள் அணு உலைகளை மூடுவோம்.”
கூடங்குளம் வெங்கடாசலபதி
நம்மூர் போராட்டத்திற்கு வெளியூர்காரர்கள் நமக்கு வரவேற்பளிக்கிறார்கள். இது நமக்கு வெற்றியை தேடித்தரும். நாம் நடத்தும் போராட்டம் மிகப்பெரிய போராட்டம். எனவே நாம் மட்டும் போராடி வெற்றி பெற முடியாது. நாம் பயந்துவிடும் மக்கள் அல்ல. இருந்தாலும் அனைத்து மக்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டும். அனைத்துக் கட்சிகளும் அணு உலை வேண்டும் என்கிறார்கள். வல்லரசு நாடாக நம் நாடு மாற வேண்டும் என்று பலரும் கூறுகிறார்கள். நல்லரசுதான் வேண்டும். தேர்தல் கட்சிகள் அனைத்தும் மக்கள் விரோதமானவை. அவர்கள் பங்கேற்கும் தேர்தலை புறக்கணிப்போம். கடலூர் சிறைக்கு செல்லும் போது ம.க.இ.க., பு.மா.இ.மு தோழர்கள் இரவு 2 ம்ணிக்கு நம்மை வரவேற்றனர். அவர்கள் நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள். ஆனாலும் நமக்காக எங்கு போராடக் கூடாது என்று போலீஸ் தடை விதித்ததோ அங்கேயே போராடினார்கள். நமக்கு ஆபத்து என்றால் தோழர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். எனவே போராடுவோம், வெற்றி நிச்சயம்.
உவரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.வி.அந்தோணி
பிறக்கும் போதும், இறக்கும் போதும் போராடுகிறோம். மக்கள் வாழும் இடத்தில் நாசகார அணு உலையை நிறுவி இக்கால, எதிர்கால மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் முயற்சிக்கு எதிராகப் போராட வேண்டும். பொதுத்தேர்தல் நடத்தும் அரசே, அணுஉலை வேண்டுமா? வேண்டாமா? என்று ஓட்டுப்பெட்டி வைத்துப் பாருங்கள். மக்களிடம் கேட்டு முடிவெடுங்கள். அரசாங்கம் அப்படி நடக்குமா? உறுதியாக நடக்காது. இது தான் ஜனநாயகம். நாம் முன்பு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல இடிந்தகரையில் மட்டும் போராட்டம் செய்யாமல் மற்ற பகுதிகளிலும் போராட்டம் நடத்த வேண்டும். இதை ஒவ்வொரு முறையும் இடிந்தகரை சமுதாயக் கூட்டத்தில் நான் சொல்லியுள்ளேன். போராட்டத்தில் முன்னணியாக இருந்த சிலர் பாதை மாறி சென்று விட்டார்கள்.
ஆனாலும் இது மக்கள் போராட்டம். ஏன் அவசரமாக 3-வது, 4-வது அணுஉலைக்கு கையெழுத்து போடப்பட்டுள்ளது? காங்கிரஸ் ஆட்சி மாறும் முன்னர் லஞ்சம் பெற வேண்டும் என்ற காரணத்தாலா? நாம் தொடர்ந்து போராட வேண்டும்.
இடிந்தகரை கவுன்சிலர் புனிதா
1,2 அணு உலைகள் தவிர வேறு அணுஉலைகளை திறக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று திருநெல்வேலி கலெக்டரிடம் பேசிய போது உறுதி கூறினார். ஆனால் இப்போது 3, 4-வது அணு உலைகளைத் திறந்தது எப்படி? போஸ்டர் ஒட்டாதே அது பண்ணாதே, இது பண்ணாதே என்று கூறும் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு முன்பு அணு உலை ஒப்பந்தம் போட அனுமதித்தது எப்படி? இடிந்தகரை மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்திய போது உடனிருந்தவர்கள் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள். அதை நாங்கள் மறக்க மாட்டோம். கலைக்குழு தோழர்களுடன் சென்று மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்து தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். அணு உலையில் இருக்கும் யுரேனியம் பல பெண்களின் கர்ப்பத்தைக் கலைக்கிறது. மிருகங்களின் முடி உதிர்கிறது. கொஞ்சம் பேர் பேசி எதுவும் செய்ய முடியாது. மத்திய அரசு கேட்காது. அனைத்து மக்களையும் இணைத்துப் போராடி அணு உலைகளை மூடுவோம்.
நெல்லை மாவட்ட மீனவர் கூட்டமைப்புத் தலைவர்- ஜோசப்
கண்ணெதிரே ஒரு கனவை கலைத்து போட்டது காந்தி தேசம். கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்க்கு ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். இடிந்தகரை, கூடங்குளம் உள்ளிட்ட மீனவர் கிராமங்களில் போராடி வருகிறோம். வெளியூர்களுக்குச் சென்று போராட வேண்டும் என்று கேட்ட போது அதனைப் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இடிந்தகரை முற்றுகை போராட்டத்தின் போது தடியடி நடத்தப்பட்டது. அப்போது மக்கள் மத்தியில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் இருந்து சட்ட ரீதியாகவும், களத்தில் போராடியும் உதவினார்கள்.
தேர்தல் தீர்வல்ல. போராட்டமே அணு உலையை மூடும் என்பது அடிப்படைக் கொள்கை. மக்கள் நலனுக்காக போராடிய மூன்று பேர் இடிந்தகரையில் ஹவுஸ் அரெஸ்ட் செய்யப்பட்டிருந்தார்கள் அவர்களை மறக்க முடியாது. அவர்களுக்கு நன்றி. எந்த அரசியல் கட்சியும் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை உண்மையாக ஆதரிக்கவில்லை. எனவே தேர்தலைப் புறக்கணிப்போம் என்று கூறினேன். அவர்கள் ஏற்கவில்லை அவர்கள் எலெக்சனில் நிற்கிறார்கள். ஏன் என்று தெரியவில்லை.
இந்த போராட்டத் தலைவர்களைப் போன்றவர்கள்தான் மனித உரிமைப்பாதுகாப்பு மையத் தோழர்களும், ம.க.இ.க தோழர்களும். சாதி மறுப்பு திருமணங்கள் , வரதட்சணை பெறாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள் இத்தோழர்கள். பல லட்சம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் வழக்கறிஞர்கள் மத்தியில் உழைக்கும் மக்கள் போராடும் இடங்களிளெல்லாம் சென்று குரல் கொடுப்பவர்கள் ம.உ.பா.மையத் தோழர்கள். தொடர்ந்து அவர்களோடு சென்று நம்பிக்கையோடு போராடுவோம். போராட்டங்கள் பல்வேறு மாற்றங்களை உருவாக்கும். 150 ஆண்டுகள் போராடித்தான் சுதந்திரம் பெற்றுள்ளோம்.
தொலைக்காட்சியிலும், ஊடகங்களிலும் பார்க்காத அரசியலை சுட்டிக்காட்டியவர்கள் ம.உ.பா.மையத் தோழர்கள். ஜனநாயகம் பொய் என்று உணர வேண்டும். தேர்தல் அதிகாரத்தில் அமர்வதற்கும், சுரண்டுவதற்கும் மட்டுமே தவிர, ஜனநாயகம் என்று கூறுவது ஏமாற்று. இது கார்ப்பரேட் முதலாளிகளுக்கான ஜனநாயகம். அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியப் பிரதமரை உருவாக்குகிறது.இந்நாடு உழைக்கும் மக்களுக்கானதல்ல. இன்றோ நாளையோ தங்கள் போராட்டம் வெற்றி பெறும் என்று தோழர்கள் போராடவில்லை. 100,500 ஆண்டுகளுக்குப் பின் வரும் சமுதாயத்துக்காகப் போராடுகிறார்கள். அவர்களுக்கு தோளோடு, தோள் கொடுத்துப் போராட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ம.உ.பா.மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு
மாற்றுக்கருத்தைப் பேச அனுமதிக்க வேண்டும். இதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனை மறுப்பது காவல்துறை, கோர்ட், அதிகாரிகள். இது ஜனநாயகமா? இந்நாட்டில் அதிகாரிகளே உண்மையான அதிகாரம் கொண்டவர்கள்.இவர்களை ஒருபோதும் மக்கள் தேர்ந்தெடுப்பதில்லை. 3 எம்.பி சீட்டுக்காக இப்பகுதி மக்கள் போராடினார்களா? ம.தி.மு.க. உள்ளிட்ட மற்ற சில கட்சிகள் அணு உலையை எதிர்ப்பதாகச் சொல்லியுள்ளார்கள். ஆம் ஆத்மி அணு உலை தொடர்பாக எந்தக் கருத்தும் சொல்லாத நிலையில் அவர்களை ஆதரிக்கலாமா? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நல்லக்கண்ணு எளிமையானவர், நேர்மையானவர், மக்களுக்காக சிறை சென்றவர். அவரின் தியாகம் தா.பாண்டியன் பொறுக்கித் தின்னத்தான் பயன்படுகிறது. அதேபோல் உதயகுமாரின் தியாகம் ஆம் ஆத்மி பொறுக்கித் தின்னவா?
மன்மோகன் சிங் சொல்லும் வளர்ச்சி யாருக்கானது? தேர்தலில் போட்டியிட்டு நமக்கு என்ன கிடைக்கும்? ஏதாவது உரிமை கிடைக்குமா? வாக்களிப்பதைத்தவிர நமக்கு எந்த உரிமையும் இல்லையென்றால் அது எப்படி நாடாகும்? மக்களை நுகர்பொருளாகக் கருதும் அரசுதான்,கட்சிகள்தான் இங்குள்ளது. நேற்று ஒன்று, இன்று ஒன்று என்று மாற்றி பொய் பேசும் நபர்களை நாம் மதிப்பதில்லை. அதை விட மோசமாக பேசும் இந்த ஓட்டுக்கட்சிகளுக்கு ஏன் நாம் ஓட்டுப் போட வேண்டும்? அணு உலை ஆபத்து என்பது சிறுவனுக்கு கூடத் தெரியும். அணு உலையின் பின்னணி அரசியல் யாருக்குத் தெரியும்? மயிர் பிளக்கும் விவாதம் அணு உலைக்குத் தேவையில்லை. மக்கள் விரும்பவில்லை, மக்கள் உயிரோடு விளையாடக் கூடாது. எனவே அணு உலை வேண்டாம். ஓட்டுக் கட்சிகள் ஏன் இக்கோரிக்கைக்குப் போராடவில்லை?. அஜ்மல் கசாப் மீது நாட்டுக்கு எதிராகப் போர் தொடுத்ததாக போடப்பட்ட தூக்குத் தண்டனை வழங்கக்கூடிய வழக்கு, கூட்டப்புளி சிறுவன் மீதும், இடிந்தகரைப் பெண்கள் மீதும், 67 வயது முதியவர் மீதும் போடப்பட்டது ஏன்? முதல் அணு உலை தோல்வியடைந்து மூடப்பட்டு விட்டது. பாதுகாப்பானது என பிதற்றிய அப்துல்கலாம் இன்று ஏன் பேச வில்லை?
தேர்தலில் பங்கேற்ற பின்னர்தான் சி.பி.எம்., சி.பி.ஐ., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் சீரழிந்தது. மக்களுக்கு எந்த நல்லதும் செய்யவில்லை. துரோகம் செய்தார்கள். ஆம் ஆத்மியுடன் சேர்ந்து அணு உலைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு போவதாகச் சொல்கிறார்கள். செப்டம்பர் 10 முற்றுகையின்போது போலீசிடம் உதயகுமார் சரணடையக் கூடாது, நாம் ஒரு குற்றமும் இழைக்கவில்லை என்று மக்களிடம் நாங்கள் பேசினோம். அப்போது உதயகுமார் நான் வெளிநாட்டிடம் பணம் வாங்கவில்லை என்று மாதா கோவிலில் சத்தியம் செய்து கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.
உணர்ச்சிவயப்பட்ட மக்கள் உதயகுமாரை சரணடைய விடாமல் தங்கள் பாதுகாப்பில் கொண்டு சென்றார்கள். வெளிநாட்டில் பணம் வாங்குவது குற்றம், சொந்த நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் என்பதால்தான் உதயகுமார் கதறி அழுதார். ஆனால் தற்போது உதயகுமார் சேர்ந்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அமெரிக்க போர்டு பவுண்டேசனிடம் 4 லட்சம் அமெரிக்க டாலர் பணம் வாங்கியுள்ளார்.
இவ்வாறு தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதன் நோக்கம், உண்மையான மக்கள் போராட்டத்தின் முனைகளை மழுங்கச் செய்வது தான். அணு உலை எதிர்ப்பு போன்ற பன்னாட்டு நிறுவன, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களில் மக்களிடையே புகுந்து தீவிரமாகப் போராடுவது போல் நடித்து, போராட்டத்தின் திசையை மாற்றி,போராட்டத்தை வலுவிழக்கச் செய்து, மக்களை விரக்தி அடையச் செய்து, போராட்டத்தைக் கைவிடச் செய்வதே வெளிநாடுகளில் பணம் வாங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணி. இந்தியா முழுவதும் 2 லட்சம் தொண்டு நிறுவனங்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளன. அதில் ஒன்றுதான் கெஜ்ரிவாலின் தொண்டு நிறுவனம். ஆம் ஆத்மியில் இணைந்துள்ள ஞானி சொல்கிறார், முன்புதான் கெஜ்ரிவால் பணம் வாங்கினார். இப்போது வாங்கவில்லை என்று. ஆனால் 2014–ம் ஆண்டுக்குப் பணம் கேட்டு கேஜ்ரிவால் விண்ணப்பித்துள்ளார் என்று சொல்கிறார் போர்டு பவுண்டேசனின் இந்தியப் பிரதிநிதி ஸ்டீவன் சோல்நிக்.
கேஜ்ரிவால் கபீர், பி.சி.ஆர்.எப், பரிவர்த்தன் என மூன்று தொண்டு நிறுவனங்கள் வைத்து நடத்துகிறார். இது இல்லாமல் ஊழலுக்கு எதிராக இந்தியா என்று வைத்திருப்பது தனி. மேலும் இன்று ஆம் ஆத்மியில் பாராளுமன்ற வேட்பாளர்களாக இருப்பவர்களில் பலர் தொண்டு நிறுவனங்களை வைத்து பிழைப்பு நடத்தி வருபவர்கள். மீரா சன்யால் – பிரதான், மல்லிகா சாராபாய்-தர்பனா, யோகேந்திரயாதவ்-ஐ.சி.எஸ்.எஸ்.ஆர். என்ற நிறுவனங்கள் வைத்து பணம் வாங்குபவர்கள்.
அட்மிரல் ராமதாஸ் கூடங்குளம் போராட்டத்திற்கு வந்தவர், மகசேசே விருது பெற்றவர், இவரது மகள் கவிதா போர்டு பவுண்டேசன் தலைமை நிர்வாக அதிகாரி. இந்தியா , இலங்கை,நேபாளம் ஆகிய நாடுகளுக்கு பணம் ஒதுக்கீடு செய்பவர். இது போல் மகசேசே விருது வழங்கும் ராக்பெல்லர் பவுண்டேசன் கமிட்டி உறுப்பினர்களில் கவிதாவும் ஒருவர். இவர் கணவர் கல்பீர் அகமது தெற்காசியாவில் ரசியா, சீனா நாட்டு நிறுவனங்கள் அணு உலை அமைக்க விடாமல் அமெரிக்க சார்பிற்காக செயல்படுபவர். அரவிந்த கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்.
ஆம் ஆத்மியின் மனீஷ் சிசோதியா, ஜீ.டி.வி. யாதவ் ஆகியோர் சி.என்.என். போன்ற கார்ப்பரேட்டில் பணியாற்றியவர்கள். இவ்வாறு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்புதான் ஆம் ஆத்மி கட்சி. தமிழகத் தலைவர் கிறிஸ்டினா சாமியும், அவரது கணவர் ஆரோக்கிய சாமியும் அரஸ்ட், சுவாதி என்ற தொண்டு நிறவனங்களை நடத்தி வருகின்றனர். இப்படிப்பட்டவர்களைக் கொண்ட ஆம் ஆத்மி எப்படி அணு உலையை மூடும்? தேர்தலில் பங்கேற்று அணு உலையை மூட முடியாது. தனியார்மயத்தை ஆதரிக்கின்ற ஆம் ஆத்மி கட்சிதான் ஊழலுக்கு மாற்று என்பதைப் போல மக்களிடம் பொய்க் கருத்து உருவாக்கப்படுகிறது.
விட்டெறிந்த காசுக்கு மக்கள் ஓட்டுப் போடுவார்கள் என்று நினைக்கும் ஓட்டுச் சீட்டுக் கட்சிகளுக்கு நாம் பாடம் புகட்டுவோம். மூன்று மாவட்டங்களிலும் மக்கள் வாக்களிக்கவில்லை என தேர்தல் அதிகாரிகள் வாக்கு பெட்டியை காலியாக திருப்பி எடுத்து சென்றால் இந்திய செய்தியாக அது மாறி விடும். அந்த நிலையை உருவாக்கி இருந்தால் இவ்வளவு போராட்டங்களுக்கு பிறகும் 3,4, அணு உலைகளுக்கு ஒப்பந்தம் போட்டு அறிவிக்கும் தைரியம் மத்திய அரசுக்கு வராது. இது போராடும் பிற பகுதி மக்களுக்கு முன்னுதாரணமாக அமையும்.
150 ஆண்டுகள் சுதந்திர போராட்டத்தில் உடனே வெற்றி பெறுவோம் என நினைத்து கட்டபொம்மன் ஆங்கிலேயனை எதிர்க்கவில்லை, மருது சகோதரர்கள் தூக்கில் தொங்கவில்லை, திப்பு சுல்தான் சாதாரண வீரனாக போரிட்டு மடியவில்லை. அந்நிய ஆதிக்கம் அநீதியானது அடிமைத்தனமானது. நாட்டுபற்று, மான உணர்வுதான் விடுதலையை சாதித்தது. கூடங்குளம் இடிந்தகரை மக்களின் போராட்டம் இந்திய முழுவதும் போராடக் கூடிய மக்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியது. தஞ்சை டெல்டா விவசாயிகளின் மீத்தேன் வாயு திட்ட எதிர்ப்புப் போராட்டம், திருவண்ணாமலை ஜிண்டால் எதிர்ப்புப் போராட்டம், சேலம் ஈரோடு கெயில் நிறுவன எதிர்ப்புப் போராட்டம், தாது மணல்- அணு உலைக்கு எதிராக கடலோர தென் மாவட்ட மக்கள் போராட்டம், கிரானைட் கொள்ளைக்கு எதிரான போராட்டம், இதுவல்லாமல் நாடு முழுவதும் நடக்கும் எண்ணற்ற மக்கள் போராட்டங்கள் மத்திய மாநில அரசுகளின் அதிகார பலத்தை கேள்விக்குள்ளாக்கும். ஐந்து மாவட்டத்திற்கு போராட்டத்தை விரிவு படுத்தி மக்களை ஒன்றிணைத்தால் ஐந்து மாவட்ட போலீசார் கூடங்குளத்தில் மட்டும் எப்படி முகாம் இட முடியும்?.
இத்தகைய ஜனநாயகத் தேர்தல் திருவிழா, அரசமைப்பு முறை, பன்னாட்டு முதலாளிகளுக்கானது. வெறும் 650 கோடி முதல் போட்டு 8,000 கோடி லாபம் சம்பாதித்து ரூ 21,000 கோடி வரி மோசடி செய்த பன்னாட்டு நிறுவனமான நோக்கியாவை இத்தேர்தல் அரசியல் தண்டிக்குமா? நோக்கியாவை ஓட்டுக்கட்சிகள் எதிர்க்குமா?
அனைத்து ஊழல்களுக்கும் அடிப்படையானவர்கள் முதலாளிகளே. இவர்கள்தான் நாட்டில் அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள். இவர்களை எந்த ஆட்சியும் தண்டிக்காது. வட்டியில்லா கடன், குறைந்த விலைக்கு நிலம், இலவச குடிநீர், சாலை வசதி, 5 ஆண்டுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி வரி கிடையாது என பல்வேறு சலுகைகள் முதலாளிகளுக்கு வழங்கப்படுகிறது. அனைத்து தொழில் திட்டங்களும் இப்படித்தான் செயல்படுத்தப்படுகிறது. இதைத்தான் நாட்டின் வளர்ச்சி என்கிறார்கள்.
எல்லா மக்களும் தனித்தனியே போராடுகிறார்கள். ஆனால் எதிரி பொதுவானவனே. இவர்களை வீழ்த்த அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும்.
மேற்கண்ட உரைகளுக்குப் பின் மக்கள் கலை இலக்கியக்கழக மையக் கலைக்குழுவின் சிறப்பான கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தேர்தல் அரசியல், அணு உலைப் போராட்டம், இயற்கை வளங்களை முதலாளிகள் கொள்ளையிடுவது, உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து போராடுவதன் அவசியம், பகத்சிங் போன்ற ஏகாதிபத்திய – முதலாளித்துவ எதிர்ப்பாளர்களின் பாதையை மக்கள் தேர்ந்தெடுப்பதின் அவசியம் குறித்தான பாடல்கள் பாடப்பெற்றன.
இறுதியில் காவல் துறையின் இரும்புக் கரங்களுக்குள் மாட்டிக் கொண்டிருந்த கூடங்குளம் மக்கள், அதிலிருந்து வெளியேறும் முதற்படியாக இக்கூட்டத்தை உணர்ந்தனர். பல்வேறு நெருக்கடிகள், விரக்தி, பங்குனி உத்திர திருவிழாவிற்கு நிறைய மக்கள் சென்று விட்ட நிலை என்பதையும் தாண்டி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்புடன் நடந்த இக்கூட்டம் அடுத்த கட்டப் போராட்டத்திற்க்கு மக்கள் தயார் என்பதை உணர்த்தும் விதமாக இருந்தது.
தகவல் :
மனித உரிமை பாதுகாப்புமையம்–தமிழ்நாடு
தொடர்புக்கு:
வழக்கறிஞர் சிவராஜ பூபதி
94866 43116
நாகர்கோவில்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
பாபா சாகேப்அம்பேத்கர் கொள்கைகளின் வழிகாட்டிகளாக சுயதம்பட்டம் அடித்து வந்த மூன்று தலித் ராமன்களின் கதை இது. ராம்தாஸ் அதவாலே, ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் ராம் ராஜ் ( இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் இவ்வாறே அழைக்கப்பட்டார்; இப்போது உதித் ராஜ் என்று பெயர் மாற்றி உள்ளார். எனினும் முதல் பெயரே அவருக்கு பொருத்தமாக உள்ளது.) ஆகியோர் அதிகாரத்தின் அற்பப் பருக்கைகளை பொறுக்குவதற்காக தமது கொள்கைகளை பா.ஜ.க.வின் தேர்ச் சக்கரத்தில் நசுங்க அனுமதித்துள்ளனர். இவர்களில் பஸ்வான் தன்னை தேர்ந்த பிழைப்புவாதியாக ஏற்கனவே நிலைநிறுத்திக் கொண்டவர். ரயில்வே, தொலைத்தொடர்பு, தகவல் தொடர்பு, சுரங்கம், உருக்கு, ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சராக வாஜ்பாய், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் மற்றும் மன்மோகன் சிங் அமைச்சரவைகளில் பணியாற்றியவர்.
மோடியுடன் ‘சமூக நீதி’ காக்க புறப்பட்ட தலித் போராளி ராம் விலாஸ் பஸ்வான்
மற்ற இரண்டு ராமன்களும் மிகச் சமீப காலம் வரையிலும் பாரதிய ஜனதாவின் வகுப்புவாதத்திற்கு எதிராக முழக்கமிட்டவர்கள். இவர்களில்அதவாலேயின் சந்தர்ப்பவாதம் அவர் 2009 பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்று தனது மந்திரியாகும் கனவு சிதைந்து போனதை அடுத்து வெளிப்பட்டது. அதன் பிறகு முன்னர் சித்தார்த் விகாரின் பாழடைந்த அறையிலிருந்து தன்னை மீட்டு குளிரூட்டப்பட்ட அறையில் மராட்டியத்தின் காபினட் மந்திரியாகும் வாய்ப்பை வழங்கிய, காங்கிரஸ் கட்சியில் இருந்த தனது ஆசான்களை சபிக்கத் தொடங்கினார். உதித் ராஜின் முந்தைய பா.ஜ.க எதிர்ப்பு நிலையிலிருந்து அடித்த குட்டிக்கரணத்தை விளக்குவது சற்று சுவாரஸ்யமாக இருக்கும். இவர் ராஜஸ்தானின் கோட்டா வேதாகமக் கல்லூரி மற்றும் பாதிரியார் பயிற்சி பட்டறையிலிருந்து முனைவர் பட்டம் பெற்று டாக்டர் உதித் ராஜ் ஆனார்.
ஒரு வகையில் இந்திய ஜனநாயகம் கண்டுள்ள சரிவோடு ஒப்பிடுகையில் தலித் தலைவர்களின் இந்த சந்தர்ப்பவாத வித்தைகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்த ஏதுமில்லை. இதனை எல்லோரும் தான் செய்து வருகிறார்கள். பிறகு, ஏன் தலித் தலைவர்கள் செய்தால் மட்டும் ஆத்திரம் வருகிறது? இன்னும் சொல்லப் போனால் இவர்களில் பலரும் இதுகாறும் காங்கிரஸ் கட்சியோடு உறவு கொண்டிருந்தவர்கள் தான். அப்போது வராத கோபம் பா.ஜ.க.விடம் போனால் மட்டும் வருவது ஏன்? காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே பெரிய வேறுபாடுகள் ஏதுமில்லை என்பது உண்மைதான். எனினும் பா.ஜ.க குறித்த எச்சரிக்கை உணர்வு அவர்கள் இதுகாறும் என்ன செய்து வந்தார்கள் என்பதோடு அது சார்ந்து உருவான மக்கள் கருத்தையும் வைத்து எழுந்திருக்கிறது. காங்கிரஸை போலல்லாது பா.ஜ.க ஒரு சித்தாந்தத்தால் உந்தப்பட்ட கட்சி. அதன் மைய சித்தாந்தத்தை சுற்றியிருக்கும் அலங்காரச் சொல்லாடல்களை நீக்கி விட்டுப் பார்த்தால் அது பாசிஸத்தின் சித்தாந்தம் என்பது விளங்கும். இது அம்பேத்கர் கொள்கைகளுக்கு நேரெதிரான ஒன்று. நிலவுகின்ற சூழலுக்கு தம்மை தகவமைத்துக் கொள்ளும் பொருட்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஆதரிப்பதாக பா.ஜ.க கூறலாம். ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் முஸ்லிம்களை கவரும் நடவடிக்கைகள் சிலவற்றில் ஈடுபட்டாலும் அவர்களின் சித்தாந்த மனம் இந்த மக்கள் பிரிவுக்கு நிச்சயமாக எதிரானது தான். அம்பேத்கருக்கு துதி ஆராதனை செலுத்திக் கொண்டே அவர் கொள்கைகளுக்கு துரோகமிழைக்கும் இந்த தலித் தலைவர்களின் செயல்பாடுகள் வெறுக்கத்தக்கவை.
அம்பேத்கரின்கொடை!
தனதுஆய்வின் தொடக்கத்தில் அம்பேத்கர் இந்து மதத்தை சீர்திருத்தும் எண்ணத்தோடு இருந்தார். சாதிகளை மூடுண்ட வர்க்கங்கள் என்று கருதினார். அகமண முறையால் இந்த சாதியமைப்பு மூடுண்டதாக நினைத்தார். சாதிக் கலப்பு திருமணங்கள் மூலம் இதில் ஒரு உடைவு ஏற்படும் என்று எண்ணினார். அந்த உடைவு சாத்தியமான பிறகு சாதிகள் ஒழிந்து வர்க்கங்களாக பண்பு மாற்றம் பெறும் என்று நம்பினார். இதனடிப்படையில், அவரது ஆரம்ப கால திட்டங்கள் இந்து சமூகத்தின் தீமைகளை அனைவரும் அறியும் வண்ணம் வெளிப்படுத்துவதாக இருந்தது. அதன் மூலம் இந்து மதத்தின் சீர்திருத்ததிற்காக முற்போக்கு எண்ணம் கொண்டோரின் கவனத்தை ஈர்ப்பது என்று இருந்தது.
அதில் கிடைத்த மிக மோசமான அனுபவம் அவரை வேறு விதமாக சிந்திக்க வைத்தது. தர்ம சாஸ்திரங்களில் வேர் கொண்டுள்ள இந்து சமூகத்தை சீர்படுத்த இயலாது என்று தெளிந்தார். இந்த தர்ம சாஸ்திரங்களை தகர்த்தால் ஒழிய சாதிகளை ஒழிக்க முடியாது என்று தீர்மானித்தார். இறுதியாக, தனது இறப்புக்கு முன்னதாக சாதிகளை ஒழிக்கும் புதிய முறை ஒன்றைக் கண்டுபிடித்தார். அதன்படி, பவுத்ததில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடைய இந்த முடிவு ஒரு பின்னறிவு அல்ல. சாதியொழிப்பு தான் அம்பேத்கரின் மையமாக எப்போதும் இருந்தது. இடைப்பட்ட காலத்தில் அவர் செய்தது அனைத்திலும் தலித் மக்களின் அரசியல் அதிகாரத்திற்காக நின்றார். தனது லட்சிய சமூகத்தின் கருத்தாக்கங்களாக அவர் போற்றிய சுதந்திரம், சமத்துவம், மற்றும் சகோதரத்துவத்திற்கு பாதகமான சாதியமைப்பை தகர்க்க நினைத்தார். வரலாற்று இயக்கப் போக்கை நிர்ணயிப்பதில் சில தர்க்கங்களும், விதிகளும் செயல்படுவதை மார்க்சியர்கள் அறிந்த முறையில் அவர் அறிந்திருக்கவில்லை. அதன் காரணமாக பயனீட்டுவாதம் (Pragmatism) என்ற கொள்கையை கடைபிடித்தார். தனது கொலம்பியா பல்கலைக்கழக ஆசிரியர் ஜான் டிவேயிடமிருந்து இதனை பெற்றார்.
இந்துமத வெறியனிடம் சீடனாக பணியாற்றிய அதுவாலே ராமதாஸ்
பயனீட்டுவாதம் கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் செயல்படுத்தும் போது அவை பெறும் வெற்றியை அவற்றின் பொருத்தப்பாட்டிற்கு அளவுகோலாக கொண்ட ஒரு அணுகல்முறை. பயனீட்டுவாதம் நிரந்தரமான கோட்பாட்டு அணுகுமுறையை விட்டொழிக்கிறது. ஒரு கொள்கையின் நடைமுறை விளைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் மூலம் அது பெறும் அர்த்தம், உண்மைத் தன்மை, மற்றும் பயனைத் தீர்மானிக்கிறது. நோக்கத்தின் நேர்மையும், கடைபிடிப்பவரின் தார்மீக நெறியும் அதன் மூலக் கொள்கையாக இருக்கும். அம்பேத்கரின் போராட்டங்கள் இதற்கு உதாரணமாக அமைகின்றன. பயனீட்டுவாதத்தின் மூலக் கொள்கையில் சமரசம் செய்ய நேர்ந்தால் பயனீட்டுவாதம் எந்த தவறையும் நியாயப்படுத்தும் ஒன்றாக சுருங்கி விடும். அம்பேத்கர் இயக்கத்தின் பின்காலப் பொழுதில் இது தான் நடந்தது. தலித் தலைவர்கள் அம்பேத்கரியம் என்ற பெயரில் தமது சொந்த நலன்களை தீவிரமாக துரத்தினர் எனலாம் அல்லது தலித் நலன்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினர் என்றும் சொல்லலாம்.
இந்திய அரசியல் உருவாக்கிக் கொண்ட விதிப்படி உங்கள் கையில் கொஞ்சம் பணம் இருந்தால் நீங்கள் மக்கள் ஆதரவு பெற்றவராகி விடுவீர்கள். இந்த நச்சு வட்டம் அதன் தொடக்கப் புள்ளியை கடந்த பின், கட்டுப்படாமல் முன் சென்று கொண்டே இருக்கும். பன்னிரெண்டாம் வகுப்பே படித்த அதவாலே கோடிக்கணக்கான மதிப்புப் பெறும் சொத்துக்களையும் சேர்த்து விட்டு சிறப்புமிக்க கல்வியறிவும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையின்பால் உறுதியான கடப்பாடும் கொண்ட அம்பேத்கரின் பாரம்பரியத்திற்கு உரிமை கொண்டாடுவதற்கு மேலே கண்ட இந்திய அரசியல் வழமையே காரணம். இது அதவாலேக்கு மட்டுமல்ல; அரசியல் வியாபாரிகளாக மாறியுள்ள அனைத்து தலித் ராமன்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்று. இவர்கள் அனைவரது வியாபாரமும் அம்பேத்கர் பெயரிலும், தலித் மக்களை மேம்படுத்துவதாக சொல்லியும் நடைபெறுகின்றன.
தலித்நலன்என்றால்தான்என்ன?
பசுமை நிலம் நோக்கிச் செல்லும் அம்பேத்கரியர்கள் தலித் நலன் என்று ஜெபித்துக் கொண்டே ஓடுகிறார்கள். இவர்கள் அம்பேத்கர் காலத்திலும் இருந்தனர். அம்பேத்கர், காங்கிரஸ் கட்சியில் இணையும் தலித் தலைவர்களை விமர்சித்தார். காங்கிரஸ் ஒரு எரியும் வீடு என்றார். மராட்டியத்தில் அப்போது காங்கிரஸ் தலைவர் யஷ்வந்த் ராவ் சவான் வீசிய வலையில் அம்பேத்கரியர்கள் விரும்பி வழுக்கி விழுந்தனர். தமது மாறுபட்ட புதிய இடம் தலித் மக்களை மேம்படுத்தும் என்றனர். அம்பேத்கர் மட்டும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படவில்லையா? என்று தர்க்கம் புரிந்தனர். இப்போதும் அவர்களது தர்க்கங்களுக்கு குறைவில்லை.
பல பிரிவுகளைக் கொண்ட ஆர்.எஸ்.எஸின் அரசியல் பிரிவு தான் பா.ஜ.க. இந்துத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டு தேசியத்தை பறைசாற்றும் அமைப்பு அது. பண்பாட்டையும், மதத்தையும் இணைத்துக் கொண்ட விபரீத ரசக் கலவையான இந்துத்துவத்தை பரப்பும் இவர்கள் அம்பேத்கரியர்களின் வெறுப்புக்குரியவர்களாக இருக்க வேண்டும். பல்லாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.கவுடன் ஒட்டுறவு இல்லாத நிலைமையே இருந்தது. ஆனால், இதற்கு மேலாக அப்படியில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலித் மீன்களை பிடிக்க சமரசதா (அதாவ்து சமூக அமைதி – சமத்துவமல்ல) என்றொரு வலையை வீசி அதில் நல்ல பலனையும் கண்டுள்ளது. அதன் காரணமாக தலித் அமைப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸுக்கும் இடையேயான சித்தாந்த வேறுபாடுகள் இன்று மங்கியுள்ளன. இதில், சுவாரஸ்யமான உண்மை என்னவெனில் இந்த தலித் பிரதிநிதிகள் ஆளும் வர்க்க மற்றும் ‘உயர்’ சாதிய கட்சிகளை தான் தமது காப்பகமாக கருதுகிறார்களே ஒழிய இடதுசாரிகளை அல்ல. தலித் தலைவர்களின் பல்வேறு தவறுகளை சற்று ஒதுக்கி வைத்து பார்த்தால் கூட இடதுசாரிகளே இவர்களின் இயற்கையான நண்பர்களாக இருக்க முடியும். ஆனால், அவ்வாறு இணைய முடியாமல் இருப்பதற்கான ஒரே காரணம் ஆளும் வர்க்க கட்சிகள் அளிப்பவற்றை இடதுசாரிகளால் வழங்க முடியாது என்பதால் தான்.
தலித்துகள் நலன் என்று சொல்லி எதற்காக இந்த குட்டிகரணங்கள் போடுகிறார்கள், அம்பேத்கரிய தலைவர்கள்? 90% தலித் மக்கள் நிலமற்ற கூலிகளாகவும், சிறிய மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளாகவும், கிராமப்புற கைவினைஞர்களாகவும், சேரி வாழ் மக்களாகவும், நகர வாழ்க்கையோடு இணைந்த முறைசாரா தொழில்களில் ஈடுபடுகிறவர்களாகவும் துயர் மிகுந்த வாழ்க்கையை நடத்துபவர்கள் என்பதை இந்த அம்பேத்கரிய தலைவர்கள் அறியாதவர்களா? அம்பேத்கரே இந்த உண்மையை தனது வாழ்வின் அந்திமக் காலத்தில் தான் உணர்ந்து தனது இயலாமையை எண்ணி வருந்தினார். மிகுந்த தந்திரங்களோடு செய்யப்பட்ட சூழ்ச்சிமிகு நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் பசுமைப் புரட்சி திட்டங்கள் மூலம் கிராமப்புறங்கள் வரையிலும் முதலாளித்துவ உறவுகளை விரிவாக்கம் செய்ததில் இந்த தலித் தலைவர்களுக்கு பெரும் பங்கு உள்ளது. அதே நேரத்தில், இதனால் பாதிக்கப்படும் தலித் மக்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்தும் எந்த நடவடிக்கையையும் இவர்கள் மேற்கொண்டதில்லை. தலித் மக்களின் வாழ்க்கையில் இது பெரும் கேட்டை விளைவித்துள்ளது. அவர்களுக்கிடையே இருந்த கூட்டுச் சார்பை சிதைத்து பணக்கார வர்க்கத்தின் கொடிய அடக்குமுறைக்கு உட்படுத்தியது. அது மட்டுமில்லாமல், ‘உயர்’சாதி நிலப்பிரபுக்களின் பிடியிலிருந்து பின்தங்கிய சூத்திர விவசாயிகளை விடுவித்து பார்ப்பன கொடுங்கரங்களுக்குள் கொண்டு வந்தது.
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குடன் தலித தலைவராக சொல்லிக் கொள்ளும் உதித் ராஜ்
இந்த இடைபட்ட காலத்தில் இடஒதுக்கீடு புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டு மறைந்து போனது. கிராமப்புற ஏழை தலித் மக்கள் இடஒதுக்கீடு வாய்ப்புகளை தமது நகர்ப்புற பங்காளி தலித்கள் பறித்துக் கொள்வதை உணர்ந்தனர். கடைசியில் அந்த இட ஒதுக்கீட்டிற்கும் வந்தது ஆபத்து. நடைமுறைக்கு வரத் துவங்கிய புதிய தாராளமயக் கொள்கைகள் இட ஒதுக்கீட்டிற்கு முழு முற்றுப்புள்ளியை வைத்தன. நமது ராமன்கள் கடினமான இந்த உண்மைகளை மறந்து விட நினைக்கிறார்கள். இந்த ராமன்களில் ஒருவரான உதித் ராஜ் அழிந்தொழிந்து போன இட ஒதுக்கீட்டை ஒற்றைச் செயல்திட்டமாக வைத்து நாடு தழுவிய அமைப்பைக் கட்டினார். ஆளும் வர்க்கங்களின் இட ஒதுக்கீடு சார்ந்த மோசடிகளை அம்பலபடுத்தி மக்கள் இயக்கங்களை கட்டுவதற்கு பதிலாக, இட ஒதுக்கீடு என்ற பொய் மானைக் காட்டி மேலும் மக்களை ஏய்க்க ஆளும் வர்க்கங்களுக்கு உழைக்கிறார்கள். 90% தலித் மக்களின் தேவையை உணராதவர்களா இவர்கள்? அவர்களுக்கு நிலம், நியாயமான வேலை, இலவச சமச்சீர் கல்வி, உடல்நலம், ஜனநாயக வெளிப்பாட்டுக் களங்கள், மற்றும் முன்னுதாரணமிக்க சாதி எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவையே முதன்மையான தேவைகள்.
பா.ஜ.கராமனின்அனுமன்கள்!
நமதுராமன்கள் சில சோற்றுப் பருக்கைகளுக்காக தலித் நலன்களை காவு கொடுக்கிறார்கள் என்பதே உண்மை. இந்த தலித் ராமன்களில் உதித் ராஜ் மெத்தப் படித்தவர். நேற்று வரை சங் பரிவாரம் மீது மிகக் கடுமையான விமர்சனக் கணைகளைத் தொடுத்தவர். ‘தலித்களும் மதச் சுதந்திரமும்’ என்ற என்ற தலைப்பில் அவர் எழுதிய நூலில் பா.ஜ.க மீதான அவரது தாக்குதல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவர் முதலில் மாயாவதியை துரத்துவதற்காக தனது வியாபார உத்திகள் அனைத்தையும் பயன்படுத்திப் பார்த்தார். அதில் அவர் தோல்வி கண்ட நிலையில் தலித் மக்களின் ஜென்மப் பகைச் சக்தியான பா.ஜ.கவில் அடைக்கலமாகி உள்ளார். தனக்கு தலித் மக்களிடேயே உள்ள சிறு ஆதரவை அடிப்படையாக வைத்து பா.ஜ.கவுக்கு அனுமன் சேவை வழங்க முன்வந்துள்ளார். உதித்ராஜ் போலல்லாது மற்ற இரண்டு ராமன்களும் – பஸ்வான் மற்றும் அதவாலே ஆகியோர் தமது தலித் ஆதரவு தளங்களை மூலதனமாக வைத்து தங்களுக்குரிய பங்குகளை உயர்த்திக் கொண்டு உள்ளனர். மொத்தம் ஏழு தொகுதிகளை பஸ்வான் பெற்றுள்ளார். அவற்றில் மூன்றை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளார். தனக்கு ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியுடன் ஒரு மக்களவை தொகுதியையும் பெற்றுள்ளார், அதவாலே.
மறைந்த நாம்திவோ தாசலின் அடியொற்றிய காகிதச் சிறுத்தையாக முன்பு வலம் வந்தவர், அதவாலே. அம்பேத்கர், அம்பேத்கரிய தலித்கள் என்றால் வெறிபிடித்த பகைஞனான பால் தாக்கரேவின் மடியில் சீடனைப் போன்று விழுந்து கிடக்கிறார், அதவாலே. இந்த குட்டித் தலைவர்கள் தமது பழைய கூட்டாளிகளால் ‘அவமானப்பட்ட தலித்களை’ ஆற்றுபடுத்தும் நோக்கத்திற்காக பா.ஜ.கவுடன் இணைந்ததாக விளக்கம் கொடுக்கிறார்கள். தாங்கள் அவமானப்பட்டதாக எந்த இடத்திலும் சொல்லவில்லை. அதவாலேயின் அவமானம் அவருக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதை அடுத்து தொடங்கியது. தலித் மக்கள் போராடி உயிர்த் தியாகம் செய்து அம்பேத்கர் பெயர் சூட்டப் போராடிய மரத்வாடா பல்கலைக்கழகத்தின் தற்போதைய பெயரையே நீட்டிக்க முடிவு செய்த போது எதிர்ப்பின்றி இசைந்தார், அதவாலே. தலித் மக்கள் மீது வன்கொடுமைகள் புரிந்த கிரிமினல்கள் மீதான வழக்குகள் ஒட்டுமொத்தமாக திரும்பப் பெறப்பட்ட போதும் மவுனமாக வெட்கமின்றி இருந்தார். இவை சில உதாரணங்கள் மட்டுமே. பஸ்வான் மற்றும் அதவாலேயின் முழு அரசியல் வாழ்க்கையே தலித் மக்களுக்கு துரோகமிழைத்த வரலாறு தான்.
பா.ஜ.கவின் ராமனுக்கு அனுமன் சேவை செய்ய புறப்பட்டுள்ளார்கள், இவர்கள் இப்போது. இவர்களின் முகமூடியை கிழித்தெறிந்து இவர்களது உண்மை முகத்தை அறிந்து கொள்ளவதற்கு இது சரியான நேரம் அல்லவா?
_________________________________________
கடந்த 20 ஆண்டுகளாக தென் தமிழக கடற்கரையில் கடல் அன்னையின் மார்பை அறுத்து விற்றுக் கொண்டிருப்பவர் வைகுண்டராஜன். கடந்த 10 ஆண்டுகளாக தமிழக மக்களின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்துக் கொண்டிருப்பது மிடாஸ் முதலான சாராய ஆலைகள்.
1974 – 75 களில் அரசின் கனிமவளத் துறையில் வேலை பார்த்த செல்வராஜ் என்ற அதிகாரியும், தூத்துக்குடி மணல் மாணிக்கமும் இணைந்து முதலில் கார்னெட் மணல் கம்பெனி தொடங்கினார்கள். பின்னர் மணல் மாணிக்கம் செல்வராஜை மிரட்டி, விரட்டி விட செல்வராஜை, வி.வி. மினரல்ஸ் வைகுண்டராஜன் சந்தித்து தாது மணல் தொழிலில் இறங்கியிருக்கிறார். செல்வராஜ் முதன்முதலில் ரூ 150/- செலவில் வைகுண்டராஜனுக்கு லைசென்ஸ் வாங்கிக் கொடுத்தார். சட்டவிரோதமாக கடற்கரை மணலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கடத்தல் வேலையை செய்து வந்தார் வைகுண்டராஜன்.
1990-ம் ஆண்டு வரை இந்திய அரசின் தொழிற் கொள்கை கனிம வளங்களை அரசு மட்டுமே எடுக்க அனுமதித்தது. தனியாருக்கு சில கட்டுப்பாடுகள் இருந்தன. 1991-ல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தனியாரும் கனிமத் தொழிலில் அனுமதிக்கப்பட்டனர். 1990-க்கு முன்பு சட்டவிரோதமானவையெல்லாம், பின்பு சட்டப்பூர்வமாக்கப்பட்டது.
அரிய வகைக் கனிமங்கள் நிரம்பிய மணல் தாதுவை அள்ளி தொழிற்சாலைகள் மூலம் கார்னெட், இல்மனேட், ரூட்டைல், சிர்கான், மோனோசைட் ஆகிய தனித்தனி கனிமங்களாகப் பிரித்து, அவற்றை தூத்துக்குடி துறைமுகம் வழியாக கொரியா, அபுதாபி, ஜெர்மனி, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
இதில் வைகுண்டராஜனின் வி.வி. மினரல்ஸ் மற்றும் அவரது குடும்ப நிறுவனங்கள் தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரையிலான 15 கி.மீ நீளமுள்ள கடற்கரையை 40 ஆண்டுகள் குத்தகைக்கு அரசிடமிருந்து பெற்றுள்ளதோடு, 2300 ஏக்கர்கள் பட்டா நிலங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக தங்கள் நிறுவன இணையதளத்தில் தெரிவித்துள்ளனர். இந்த நிலங்களையும் அரசிடமிருந்து மிகக் குறைந்த குத்தகைக்கு தான் பெற்றுள்ளார்கள். உதாரணத்திற்கு இருக்கன்துறை கிராமத்தில் 100 ஏக்கர்கள் அரசு நிலம் ஆண்டுக்கு 16 ரூபாய்க்கு வைகுண்டராஜனுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
1 லட்சம் டன் கார்னெட்டில் 4000 டன் மோனோசைட் இருக்கும். இதில் 4 சதவீதம் தோரியம் இருக்கும். கூத்தன்குழி என்ற கிராமத்தில் பாதிப்பேர் வி.வி.-ல் வேலை செய்கிறார்கள். அவர்களில் பலர் வேலை செய்யாமலே ரூ. 5,000 – 10,000 சம்பளம் வாங்குகிறார்கள். கம்பெனிக்கு ஆதரவாக இவர்கள் கலெக்டரிடம் மனுக் கொடுப்பார்கள். எதிர்ப்பவர்களை அடிப்பார்கள். கடற்கரை சமூகத்தையே பிளந்து வைத்துள்ளார்கள். எல்லா ஊர்களையும் பிரித்து வைத்துள்ளார்கள். ஒற்றுமை வரக் கூடாது என வேலை செய்கிறார்கள்.
1991 முதல் 1996 வரை, 2001 முதல் 2006 வரை மற்றும் 2011-லிருந்து தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவே வைகுண்டராஜனின் தொழில் கூட்டாளியாக இருந்திருக்கிறார். மேலும் ஆட்சி மாறினாலும் DEPARTMENT OF ATOMIC ENERGY, MINISTRY OF MINES AND MINERALS அதிகாரிகள், CONTROLLER OF MINES, INDIAN BEREAU OF MINES அதிகாரிகள் உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளும், மாநில அரசில் – மாவட்ட ஆட்சித்தலைவர், தாசில்தார், மீன்வளத் துறை, தொழிற்துறை, கனிம மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள், தலைமைச் செயலக அதிகாரிகளும் வைகுண்டராஜனுக்கு ஊழியம் செய்து வருகின்றனர்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தனது எலைட் டிஸ்லரிசுக்கு பங்கம் ஏற்படாத வகையில் உறவைப் பேணும் ஜெகத்ரட்சகன்
ஆந்திராவில் இராஜசேகர ரெட்டியின் ஆட்சிக் காலத்திலேயே பல கோடி ரூபாய் கைமாறியதன் பலனாக கும்மிடிப்பூண்டி முதல் சிறீகாகுளம் வரை உள்ள கடற்கரை பகுதியில் மணல் எடுக்க வைகுண்டராஜனுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு சாத்தான்குளம், திசையன்விளை பகுதிகளில் வரவிருந்த டாடா-வின் டைட்டானியத் தொழிற்சாலைக்கு தனது அரசியல் செல்வாக்கால் பல்வேறு முறைகளில் எதிர்ப்பு தெரிவித்தவர் என்றால் இவரது செல்வாக்கைப் புரிந்து கொள்ளலாம்.
1999-ம் ஆண்டிலிருந்து வைகுண்டராஜன் நிறுவனங்களால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு மட்டும் 96,120 கோடி ரூபாய்கள்.
2003-04ம் ஆண்டில் அம்மாவின் பொற்கால ஆட்சியில் அரசே மது விற்பனையை ஏற்று நடத்துவது என்று முடிவு செய்த போது, அதன் ஒரு முனையில் மக்களின் சங்கை அறுக்கும் போது கொட்டும் ரத்தத்தை உறிஞ்சும் உரிமையை பெற்றவர் வைகுண்டராஜன். வைகுண்டராஜன், அவரது மனைவி, சகோதரர்கள், சகோதரர் மனைவி இன்னும் சிலரை பங்குதாரர்களாகக் கொண்ட மிடாஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து 2003-04ல் 12.85 லட்சம் பெட்டி மதுபானங்கள் வாங்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளில் இது 51.04 லட்சம் பெட்டிகளாக அதிகரித்தது.
2006-ம் ஆண்டு அராஜக ஜெயலலிதாவை தேர்தலில் தோற்கடித்து (‘ஜனநாயகத்தின் வெற்றி’) ஆட்சிக்கு வந்த கருணாநிதி, ஜெயலலிதா தன் அடியாள் வைகுண்டராஜன் மூலமாக சம்பாதிப்பதற்கு முற்றுப் புள்ளி வைக்கவில்லை. அந்த கொள்ளையில் திமுகவும் பங்கேற்பதற்கு தோதாக அக்கட்சியின் பினாமி ஜெகத்ரட்சகன் அவரது மனைவி, மகனுக்குக்குச் சொந்தமான இலைட் டிஸ்டிலரீசுக்கு 2008-ல் உரிமம் வழங்கப்பட்டு 2011-12க்குள் ரூ 712 கோடி விற்பனை வருவாய் அவருக்கு கிடைக்கிறது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு 2012-13ல் அது ரூ 466 கோடியாக குறைகிறது.
மேலும் உளியின் ஓசை, பெண் சிங்கம் ஆகிய படங்களை தயாரித்து கருணாநிதிக்கு வசனம் எழுத வாய்ப்பும் அதற்கான ஊதியமும் வழங்கிய ஜெயமுருகன் (அதாவது கருணாநிதியின் பினாமி) நிறுவனமான எஸ்.என்.ஜி டிஸ்டிலரீஸ் 2008-ல் உரிமம் பெற்று 2011-12ல் ரூ 940 கோடி விற்பனையை எட்டியது. 2012-13ல் அது ரூ 834 கோடியாக குறைந்தது.
இதற்கிடையில் எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஜெயா-சசி கும்பலின் கொள்ளை தொடர்கிறது. இக்கும்பல் மிடாஸ் நிறுவனத்தை வைகுண்டராஜனிடமிருந்து தம் பெயருக்கு மாற்ற முடிவு செய்கின்றனர்.
2009-10ம் ஆண்டில் மிடாஸ் நிறுவனத்தை சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்வீல்ஸ் எஞ்சினியரிங் என்ற நிறுவனங்கள் வாங்குகின்றன. ஹாட் வீல்ஸ் நிறுவனத்தில் சசிகலா, இளவரசி ஆகியோர் தலா 31% பங்குகளும், ஸ்ரீ ஜெயா ஃபைனான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் 38% பங்குகளையும் வைத்திருக்கின்றன.
90% இளவரசிக்கு சொந்தமான ஸ்ரீ ஜெயா ஃபைனான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ஸ் நிறுவனத்துக்கு ஜெயலலிதா 2008-09ல் ரூ 1.85 கோடியும், 2009-10ல் ரூ 1.92 கோடியும் கடனாக கொடுக்கிறார் (மொத்தம் – ரூ3.77 கோடி). கூடவே ஜெயலலிதாவும் கூட்டாளியாக இருக்கும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் இந்நிறுவனத்துக்கு ரூ 5 கோடி பங்கு விண்ணப்பத் தொகை கொடுக்கிறது. அதாவது ஸ்ரீ ஜெயா ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு ஜெயலலிதாவிடமிருந்து ரூ 8.77 கோடி ரூபாய் தரப்பட்டிருக்கிறது. அதை பயன்படுத்தி மிடாஸ் நிறுவனத்தில் மூன்றில் ஒரு பங்குகளை வாங்கியிருக்கிறது. மேலும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் வைகுண்டராஜனுக்கு சொந்தமான ஃபேன்சி டிரான்ஸ்போர்டுக்கு ரூ 3.06 கோடி 2005-06ல் முன்பணம் கொடுத்தது. இதையும் மிடாஸ் நிறுவனத்துக்கான அச்சாரப் பணம் என்று வைத்துக் கொள்ளலாம்.
ஜெயலலிதா இந்த பணத்தை எல்லாம் அந்த காலத்தில் அவர் குடி கொண்டிருந்த கொடநாடு எஸ்டேட்டில் அடகு காத்தே சம்பாதித்தார் என்று வைத்துக் கொள்ள வேண்டும்.
2011 தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வர் ஆன பிறகு தி.மு.கவின் பினாமி நிறுவனங்களின் கொள்ளை ரத்து செய்யப்படவில்லை. அவற்றின் வருமானம் குறைக்கப்பட்டு மிடாஸின் வருமானம் அதிகரிக்கப்பட்டது. முந்தைய ஆண்டு ரூ 360 கோடியாக இருந்த மிடாஸின் வரிவிதிப்புக்கான வருமானம் 2011-12ல் ரூ 857 கோடியாகவும், 2012-13ல் ரூ 1,077 கோடியாகவும் உயர்ந்தது. அதாவது இரண்டு ஆண்டுகளில் முதலமைச்சருக்கு சொந்தமான நிறுவனத்திற்கு மூன்று மடங்கு அதிக வருமானம் ஈட்டித் தர அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் ஆர்டர் கொடுத்திருக்கிறது.
2011 மே மாதம் அ.தி.மு.க அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்பு தமிழ்நாட்டில் கடற்கரை மணல் எடுக்க வழங்கப்பட்டிருந்த 43 லைசென்ஸ்களில் 36 வைகுண்டராஜனின் நிறுவனங்களுக்கு தரப்பட்டிருந்தன. மீதமுள்ள 7 லைசென்ஸ் பெற்றவர்களை பொய் புகார்கள் அளித்து தன் அதிகார பலத்தில் செயல்பட விடாமல் தடுத்து விட்டார் வைகுண்டராஜன். அ.தி.மு.க. அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் அளிக்கப்பட்ட 8,9 லைசென்ஸ்கள் முழுவதும் வைகுண்டராஜனுக்கே வழங்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதாவின் பினாமிகளாக சசிகலா கும்பல் செயல்பட்டு வரும் போது ஒரு பேக்-அப் ஆக இருந்தவர் பெரியவர், நேர்மையாளர் என்று நாட்டுக்கே உபதேசம் செய்யும் உபதேசியார் துக்ளர் சோ ராமசாமி. 2011 டிசம்பர் மாதம் சசிகலா ஜெயலலிதாவால் போயசு தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, சோ ராமசாமியும் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனும் 9 நிறுவனங்களுக்கும் இயக்குனர்களாக நியமிக்கப்படுகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சசிகலா மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்த பின்னர் சோ ராமசாமி நவம்பர் 2012-ல் இயக்குனர் பதவியிலிருந்து விலகுகிறார். பூங்குன்றன் மார்ச் 2013-ல் விடுவிக்கப்படுகிறார்.
ஆகஸ்ட் 6, 2013-ல் வைகுண்டராஜனின் தாது மணல் கொள்ளையில் சட்டங்களுக்கு விரோதமான நடவடிக்கைகள் குறித்து தூத்துக்குடி ஆட்சியர் ஆசிஷ் குமார் சோதனைக்குப் பிறகு அறிக்கை வெளியிட்டார். அதாவது, கொள்ளை அடிப்பதை விதிமீறல் இல்லாமல் செய்யலாமே என்ற கடமை உணர்வை மட்டும்தான் அவர் காட்ட முடியும். கொள்ளையையே தடுத்து நிறுத்த எவ்வளவு துடிப்பாக இருந்தாலும் அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, முதலமைச்சர், நாட்டின் பிரதமருக்கே அப்படி செய்ய உரிமை கிடையாது. அதைத் தீர்மானிப்பது உலக வங்கியால் அமல்படுத்தப்படும் தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கைகள்தான். அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் வேண்டுமென்றால் இந்த பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையில் வடியும் துளிகளை நக்கிக் கொள்ளலாம்.
அப்படி நக்குவதை அம்பலப்படுத்திய ஆசிஷ் குமார் இரண்டே நாட்களில் இடமாற்றம் செய்யப்படுகிறார். அதே மாதம் ககன்தீப் சிங் பேடி தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியின் அறிக்கை 6 மாதங்கள் ஆகியும் அறிக்கை வெளியிடப்படவில்லை.
இந்த விபரங்களை திரட்டி அ.தி.மு.கவின் ஜெயா-சசி-வைகுண்டராஜன் கும்பலும், தி.மு.கவின் கருணாநிதி-ஜெகத்ரட்சகன்-ஜெயமுருகன் கும்பலும் மாற்றி மாற்றி தமிழகத்தை மொட்டை அடித்துக் கொண்டிருப்பதை அம்பலப்படுத்தியிருக்கும் ஆம் ஆத்மி கட்சி பொதுவில் தமிழகத்தில் திமுக, அதிமுகவை எதிர்த்து அரசியல் மேலாண்மை பெற விரும்புகிறது. ஆனால் இந்த விவரங்களுக்கு முன்னரே தமிழகத்தை கொள்ளையடித்த ஜெயா சசி கும்பல் குறித்து ஊரே அறிந்திருந்தாலும் ஆம் ஆத்மி வாயே திறக்கவில்லை.
கொள்கையே இல்லாத, அன்னிய முதலீட்டை அல்லது கார்ப்பரேட்டுகளை எதிர்க்காத ஆம் ஆத்மி கட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு, வைகுண்டராஜன், ஜெகத்ரட்சகன் போன்ற அடியாட்களை ஒழித்துக் கட்டி விடுமா என்ன? முதலில் தென் மாவட்டங்களில் போட்டியிடும் உதயகுமாரனும், புஷ்பராயனும், சேசுராஜனும் தங்களது தொகுதிகளில் வைகுண்டராஜன் பெயரை வாய் விட்டு சொல்ல முடியுமா?
கார்ப்பரேட் கொள்ளையை சட்டபூர்வமாக நடத்த வேண்டும் என்பதற்காகவே ஓட்டுக் கட்சிகள் மற்றும் அதிகார வர்க்கத்தில் ஊழல், லஞ்சம், அரசின் அதிகார வர்க்க தடைகள் முதலியவற்றை ஆம் ஆத்மி எதிர்க்கிறது. எல்லாம் ‘முறைப்படி’ நடந்தால் இவர்களுக்கு பிரச்சினை இல்லை. எனினும் இந்த முரண்பாட்டில் ஜெயா சசி கும்பல் மற்றும் திமுக, துக்ளக் சோ, வைகுண்டராஜன் அனைவரும் தமிழக வளத்தை சுரண்டியும், சாராயம் விற்றும் பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடித்த செய்திகள் வெளியே வந்திருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை சட்டபூர்வமாகவும், சட்ட விரோதமாகவும் கொள்ளை அடிக்கும் இரு தரப்பு முதலாளிகளையும் ஒழிக்க வேண்டும் என்கிறோம்.
சொந்த வாழ்க்கையில் யோக்கியன் போல வேசம் போட்ட ஒரிஜினல் பார்ப்பான் சோ, அதிமுகவை எதிர்ப்பதாக நாடகம் போடும் திமுக, ஒரு ரூபாயிலேயே இவ்வளவு சொத்துக்களை குவித்துக் கொண்ட ஜெயா சசி கும்பல், மணலிலேயே மாபெரும் கொள்ளையை நடத்தி, ஜெயாவின் சொத்துக்களுக்கும், அரசியலுக்கும் புரவலராக திகழும் வைகுண்டராஜன் முதலியோரை தமிழக மக்கள் உள்ளது உள்ளபடி தெரிந்து கொள்வதற்கு இந்த விவரங்கள் போதுமானது.
பன்னாட்டு சுரண்டலுக்கு நம் நாட்டை பலி கொடுக்கும் இந்த கார்ப்பரேட் மற்றும் ஓட்டுப் பொறுக்கி, அதிகாரவர்க்க கும்பல்கள் உருவாக்கியிருக்கும் மொத்த அரசமைப்பையே தூக்கி எறிவதுதான் நாட்டையும், நம் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கான ஒரே வழி.
பாசிச அடக்குமுறைக்கு எதிராகக் கொந்தளித்து நிற்கும் மக்களை ஜனநாயக – அறவழிமுறைகளைத் தாண்டி போய்விடாதவாறு தடுக்கும் பிரபஞ்சப் பெருங்கடமை முடித்து, ஓட்டுப் பொறுக்கப் புறப்பட்டார் உதயகுமாரன்!
நரேந்திர மோடி, ஜெயலலிதா, பிரகாஷ் காரத் – பரதன் ஆகியோரோடு சுப. உதய குமாரனுக்கும் நமது மக்கள் நன்றி சொல்லவேண்டும். நரேந்திர மோடி – இந்து தேசிய மதவெறி பாசிசம், ஜெயலலிதா – பிழைப்புவாதப் பொறுக்கி அரசியல், பிரகாஷ் காரத், பரதன் – போலிக் கம்யூனிசம், சுப. உதயகுமாரன் – அரசு விதித்துள்ள எல்லையை, தடையை மீறாதவாறு அரசு சாராத தொண்டு நிறுவனங்களின் கீழ் மக்களைத் திரட்டி ஒரு கட்டுக்குள் வைப்பது; இப்படி இவர்களெல்லாம் அறிவிக்காமல் செயல்படுத்திய அவரவர்களுடைய அரசியல் கொள்கை, இலட்சியத்தின் வரம்புகளை மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்தையும் கடைக்கோடி எல்லை வரை, நாட்டையும் மக்களையும் இழுத்துக்கொண்டுபோய் அதன் ஓட்டாண்டித்தனத்தையும் நிரூபித்துக் காட்டி விட்டார்கள்.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய ஆம்-ஆத்மி கட்சியின் தொண்டர்கள் புடைசூழச் செல்லும் சுப.உதயகுமாரன்.
இந்திய ஜனநாயகத்தின் போலித்தனத்தை மக்களுக்குப் புரிய வைத்து, அவர்களைப் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரட்டுவதற்கு கம்யூனிசப் புரட்சியாளர்கள் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார்கள். ஆனால், மேற்படி நபர்கள் அதைவிடக் குறுகிய காலத்திலேயே எதிர்மறையில் மக்களுக்குப் புரியவைத்து வருகிறார்கள். இந்த உண்மையை கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் கடந்த ஆண்டு அக்டோபர் 16-ம் தேதியிட்ட ஆனந்த விகடன் இதழுக்கு அளித்துள்ள ஒரு நேர்காணலில் ஒப்புக்கொண்டுள்ளார்.
கூடவே, இன்னும் சில உண்மைகளையும் போட்டுடைத்து விட்டார். கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்துக்குத் தலைமையேற்று வழிநடத்திய “அரசுசாரா தொண்டு நிறுவனங்களின்” வரம்புகளையும், அப்போரட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இனி ‘தம் தலைவிதியைத் தாமே தீர்மானித்துக்கொள்ளவேண்டும், விடைபெறுகிறோம்! தாங்கள் ஓட்டுக்கட்சி அரசியலுக்குப் போகிறோம்!’ என்றும் சொல்லாமல் சொல்லி விட்டார்.
“போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது… இடிந்தகரையில் சில ஆயிரம் மக்களின் போராட்டமாக இருந்த இது, இன்று தமிழகம் முழுக்கப் பரவியிருக்கிறது” என்று நேர்காணலைத் தொடங்கிய உதயகுமாரன், அந்த அடுத்த கட்டம் மீண்டும் ஜெயலலிதாவைச் சந்தித்து முறையிடப்போவதை நேரடியாகவும், தேர்தல் களத்தில் குதிக்கப்போவதை மறைமுகமாகவும் அறிவித்தார்.
“ஒரு பக்கம், மக்கள் உயிரைக் கடுகளவும் மதிக்காத பொய்களைத் துணிந்து சொல்கிற தரங்கெட்ட பாசிஸ சூழல் இங்கே நிலவுகிறது. இன்னொரு பக்கம், தாதுமணல் கொள்ளையர்கள் இடிந்தகரைக்குள் புகுந்து பணம் கொடுத்தும், சாதிய எண்ணத்தைத் தூண்டிவிட்டும், மிரட்டியும் எங்கள் மக்களுக்குள் பிரிவினையை உருவாக்கி வருகின்றனர். இந்த இரண்டு பிரச்னைகளையும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல நாங்கள் எண்ணுகிறோம். இதனால்தான் இங்கிருந்து வெளியேவரும் முடிவை எடுத்துள்ளோம். ஆனால், இந்த முடிவுக்கு மக்கள் இன்னும் சம்மதிக்கவில்லை. இதனால் வெளியேறும் தேதியும் முடிவு செய்யப்படவில்லை.”
“இரண்டு ஆண்டுகளாக எங்களைப் பாதுகாத்தவர்கள் இந்த மக்கள். ஆகவே, ஊர் கமிட்டியிடமும், பெண்கள் – இளைஞர்களிடமும், நாங்கள் முதல்வரைச் சந்திக்கச் செல்லும்போது, ஒருவேளை கைது செய்யப்படலாம். அப்படி நடந்தால், நீங்கள் உங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும். ஒற்றுமையாக இருந்து போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும். நாங்கள் சிறைக்குச் செல்வதால், இந்தப் போராட்டம் முடங்கிவிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறோம்!” என்று போருக்குப் போகும் வீரனைப் போல சிறைக்குச் செல்லப்போவதாக விடைபெறும் உதயகுமாரன் தேர்தல் களத்தில்தான் குதித்தார்! அதற்குமுன் ஓட்டுக்கட்சித் தலைருக்கே உரிய பாணியில் வீராவேச மாகப் பல கேள்விகளை வீசுகிறார்.
“உச்ச நீதிமன்றமே, ‘மக்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்’ என கூறியிருக்கிறது. உயர் நீதிமன்றமும் இதே கருத்தை வலியுறுத்துகிறது. பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும்கூட இந்தப் பொய் வழக்குகளைக் கைவிட வேண்டும் என்று கோருகின்றனர்.
இவர்கள் அத்தனை பேரும் சொல்வதைக் கேட்காமல், வழக்குகளை வாபஸ் வாங்க மாட்டோம் என்றால், எங்கள் மக்கள் அப்படி என்ன தவறு இழைத்தார்கள்? பொதுச் சொத்துகளைக் கொள்ளை அடித்தோமா? சொத்துக் குவிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டிருக்கிறோமா? அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டோமா? இது ஜனநாயக நாடா? அல்லது அதிகாரிகள் தங்கள் மனதின் வன்மங்களைத் தீர்த்துக்கொள்ளும் எதேச்சதிகார நாடா?”
“இது இடி அமீன் ஆட்சி செய்த உகாண்டா அல்ல; ஹிட்லர் ஆட்சி செய்த ஜெர்மனியும் அல்ல. இது ஜனநாயக நாடு. ஊருக்குள் வந்து அடித்துத் துவைத்துப் போட்டுவிட்டுப் போய் விட முடியாது. அப்படிச் செய்தால், நாடாளுமன்றத் தேர்தல் வருகிறதே… அதில் மக்கள் பதில் சொல்வார்கள்!”
இந்த நேர்காணலில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உதயகுமாரன் ஒரு தேர்ந்த ஓட்டுக்கட்சி அரசியல்வாதியைப் போல பேசியுள்ளார். ஆனால், அவர் அளித்துள்ள பதில்கள், எழுப்பியுள்ள கேள்விகள் கபடத்தனங்களை ஒளித்து வைத்துக் கொண்டுள்ளன. உதயகுமாரனே பதில் சொல்ல வேண்டியவையாகவும் உள்ளன.
மக்கள் உயிரைக் கடுகளவும் மதிக்காத, பொய்களைத் துணிந்து சொல்கிற “தரங் கெட்ட பாசிஸ சூழல்” யாரால் உருவாகியது? “தாதுமணல் கொள்ளையர்கள் இடிந்தகரைக்குள் புகுந்து பணம் கொடுத்தும், சாதிய எண்ணத்தைத் தூண்டிவிட்டும், மிரட்டியும் மக்களுக்குள் பிரிவி னையை உருவாக்கி” வருவது ஜெயலலிதாவுக்குத் தெரியாதா? இந்த இரண்டு பிரச்சினைகளையும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு உதயகுமாரன் எடுத்துச்சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
“மக்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்” என்று உச்சநீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் கூறியும் அதைக் கேட்காமல், வழக்குகளை விலக்கிக் கொள்ளாமல், உச்ச நீதி மன்றத்தில் வழக்காடுவது யார்? ஜெயலலிதா தானே! அவரிடம் போய் “எங்கள் மக்கள் அப்படி என்ன தவறு இழைத்தார்கள்? பொதுச் சொத்துக்களைக் கொள்ளை அடித்தோமா? சொத்துக் குவிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டிருக்கிறோமா? அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டோமா? இது ஜனநாயக நாடா? அல்லது அதிகாரிகள் தங்கள் மனதின் வன்மங்களைத் தீர்த்துக்கொள்ளும் எதேச்சதிகார நாடா?” என்று உதயகுமாரன் கேட்கவேண்டியதுதானே?
ஜெயலலிதாவிடம் போய் “இது இடி அமீன் ஆட்சி செய்த உகாண்டா அல்ல; ஹிட்லர் ஆட்சி செய்த ஜெர்மனியும் அல்ல. இது ஜனநாயக நாடு. ஊருக்குள் வந்து அடித்துத் துவைத்துப் போட்டுவிட்டுப் போய்விட முடியாது. அப்படிச் செய்தால், நாடாளுமன்றத் தேர்தல் வருகிறதே… அதில் மக்கள் பதில் சொல்வார்கள்!” என்று சவால்விட வேண்டியதுதானே? அதை விட்டு, காந்தியை விஞ்சும் சாந்தசொரூபியாக ஆட்சியாளர்களிடம் மன்றாடுகிறார்.
இதற்கெல்லாம் காரணம் ஒன்றுதான். அதையும் அதே நேர்காணலில் உதயகுமாரன் சொல்லிவிட்டார்: “ஆளும்வர்க்கம், சாதாரண மக்களின் குரல்களுக்கு மதிப்பு அளிப்பதில்லை என்பதை இங்குள்ள மக்கள் உணர்ந்துள்ளனர். அதே நேரத்தில் இந்த அரசுடன் மோதி வெற்றிபெறக்கூடிய சூழலும் இங்கு இல்லை.
நான் அடிக்கடி சொல்லும் உதாரணம்… ஒரு கணவன் – மனைவி இருக்கின்றனர். வாட்டசாட்டமான உடல்பலம் கொண்ட கணவன், மனைவியை அடித்து நொறுக்குகிறான் என்றால், அந்த மனைவி தானும் ஜிம்முக்குப் போய் உடலை வலுவாக்கி, அவனை அடிக்க முடியாது. மாறாக, கணவனின் தொந்தரவுகள் குறித்து அக்கம் பக்கத்தாரிடம் குற்றம் சுமத்தி, அவனுக்கு உணவு தர மறுத்து, அவனுடைய இயல்பு வாழ்க்கையைத் தடுத்து நிறுத்தி வழிக்கு வரவைக்க வேண்டும். இது ஓர் ஒழுக்கபூர்வமான அழுத்தம் (a moral pressure). எங்கள் போராட்டமும் இத்தகையதுதான். இது, அறவழிப் போராட்டம். இப்படித்தான் இதைச் செய்ய முடியும். இதற்கு மேல் அரசை எதிர்த்து எங்களால் போராட முடியாது. அரசிடம் இருக்கும் அசுர பலத்தை எதிர்த்து நிற்கும் சக்தி எங்களிடம் இல்லை!”
அரசிடம் இருக்கும் அசுர பலத்தை எதிர்த்து நிற்கும் சக்தி தங்களிடம் இல்லை என்றால் போராட்டக் களத்திலிருந்து ஒதுங்கிக் கொள்வதுதான் நேர்மையானது. அதற்கு மாறாக, இப்போராட்டத்தில் மக்களுடன் களத்தில் இறங்கிய ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் போராட்டத் தலைமையைக் கைப்பற்ற முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டினார், உதயகுமாரன்.
“பிரெஞ்சுப் புரட்சியின்போது அவர்கள் வலது தோளில் துப்பாக்கி கனத்தபோது, துப்பாக்கியைக் கீழே போடவில்லை. இடது தோளுக்கு மாற்றினார்கள்” என்று சொல்வார்கள். ஆனால், உதயகுமாரன் என்ன செய்கிறார்? போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துப் போகிறோம் என்று சொல்லிக்கொண்டு, ஏற்கெனவே மக்களே நம்பிக்கையிழந்துவிட்ட, அழுகிப் புளுத்து நாறும் ஓட்டுக்கட்சி அரசியலுக்குள் குதித்துவிட்டார். ஆனால், சந்தர்ப்பவாத அரசியல்வாதியைப் போல வளைத்து வளைத்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்ததை நியாயப்படுத்துகிறார்.
ஆனந்த விகடனின் அந்த நேர்காணலின் இறுதியில் “இந்தப் போராட்டத்தில் இப்போதும் நம்பிக்கை அளிக்கிற அம்சங்களாக எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?” என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது. அதற்கு ஒரு தேர்ந்த ஆன்மீகத் தத்துவஞானியைப்போல பிரசங்கம் செய்துமுடிக்கிறார்.
“உண்மை, ஒழுக்கம், நேர்மை, நிதானம்… ஆகியவற்றை நாங்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும், சொந்த நலன்களை மறந்து முழு அர்ப்பணிப்புடன் மக்களுக்காகப் போராடுபவர்கள். ‘தூய்மை, பொறுமை, நிலைத்திருத்தல்’ என விவேகானந்தர் குறிப்பிடும் மூன்று முக்கியமான அம்சங்களைக் கடைப்பிடித்து வருகிறோம். ‘பைய வித்து முளைக்கும் தன்மைபோல்’ என்று பாரதியாரின் வாக்குக்கேற்ப, இந்தப் பிரபஞ்சத்தைக் காப்பாற்றும் பெரும் கடமையுடன் எங்கள் பயணம் தொடர்கிறது!”
“இந்தப் பிரபஞ்சத்தைக் காப்பாற்றும் பெரும் கடமை” என்று உதயகுமாரன் சொல்லும்போது அது இந்நாட்டையும் மக்களையும் மட்டுமல்ல, இந்த உலகத்தையே அணுஉலை ஆபத்திலிருந்து காப்பதுதான் என்று யாரும், குறிப்பாக கூடங்குளம் அணு உலைக்கெதிராகப் போராடும் மக்கள் கருதிவிடக் கூடாது. அப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான எல்லா ஜனநாயக வாசல்களையும் – வழிமுறைகளையும் பாசிச அரசு மூடிவிட்ட பிறகு என்ன செய்வது? கொந்தளித்து நிற்கும் மக்கள் அந்த ஜனநாயக வாசல்களையும் – வழிமுறைகளையும் தடைகளையும் தாண்டிப்போய்விடாதவாறு தடுத்துத் திசைதிருப்பி விடவேண்டும் என்ற புனிதக் கடமையைதான் உதயகுமாரன் சொல்கிறார். ஓர் ஒழுக்கபூர்வமான அழுத்தம் (a moral pressure). அறவழிப் போராட்டம். இப்படித்தான் இதைச் செய்ய முடியும். இதற்கு மேல் அரசை எதிர்த்து மக்களால் போராட முடியாது. அரசிடம் இருக்கும் அசுர பலத்தை எதிர்த்து நிற்கும் சக்தி மக்களிடம் இல்லை என்று அவர்களை இருத்தி வைப்பது. உதயகுமாரன் போன்றவர்கள் தலைமையேற்கும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இதைத்தான் தமது இலக்காகக் கொண்டு செயல்படுகின்றன.
– பச்சையப்பன்
___________________________________ புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2014
___________________________________
சாகித்திய அகாடமி விருது வென்றதால் பிரபலமானவரும், மீனவ மக்களின் நலன் பேணுபவராக, தன்னை காட்டிக்கொள்பவரும்தான் ஜோ டி குரூஸ் என்ற எழுத்தாளர் . இவர் எழுதிய “ஆழி சூழ் உலகு, கொற்கை” எனும் இருநாவல்களில் “கொற்கை” நாவலுக்குத்தான் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
ஆழி சூழ் உலகு – நாவல் எழுதும் போது குரூஸின் மனதில் காவி குடியேறியிருக்கவில்லை.
இந்த விருதுக்கு முன்பே இவர் தனது அரசியல், தத்துவ நோக்கை பார்ப்பனியத்திடமிருந்து பெற்றுக் கொண்டதாக மாறிப் போனார். இதன் தொடர்ச்சியாக ‘இந்திய ராஜபக்சே’ கொலைகார மோடி பிரதமராக வருவதை ஆதரித்து சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். 2002 குஜராத் முசுலீம் மக்கள் இனப்படுகொலையின் நாயகனை பகிரங்கமாக ஆதரிக்கும் முடிவையடுத்து அவர் எழுதிய “ஆழி சூழ் உலகு” நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடவிருந்த நவயனா பதிப்பகம், பதிப்பித்து வெளியிடும் பணியினை நிறுத்துவதாக அறிவித்தது. நாவலை மொழிபெயர்த்த எழுத்தாளர் – ஆய்வாளர் வ.கீதாவும் ஜோ டி குரூஸுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக தனது மொழிபெயர்ப்பை திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
முதலில் அரசியலிருந்து துண்டிக்கப்பட்ட கலை இலக்கியம், எழுத்தாளர் சுதந்திரம் போன்ற போதை வஸ்துக்கள் சூழ்ந்திருக்கும் இலக்கிய உலகில், இப்படி ஒரு முடிவை எடுத்ததற்காக நவயனா பதிப்பகத்திற்கும், வ.கீதாவுக்கும் நமது பாராட்டினைத் தெரிவித்துக் கொள்வோம்.
மோடிக்கு ஆதரவளிக்க கோரி ஃபேஸ்புக்கில் பிரச்சாரம் செய்திருந்த குரூஸ், மோடி ஒரு புரட்சியாளர், தொலைநோக்கு பார்வை கொண்டவர், தன் செயலுக்கு தானே பொறுப்பேற்கிற(!) தகமையாளர், இந்திய கடற்கரை மக்களின் வாழ்க்கையை புரிந்து கொண்டவர் என்றெல்லாம் அடுக்கிவிட்டு அதனால் மோடியை ஆதரிக்குமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நவயனா பதிப்பகம், மூன்று தலைமுறை மீனவமக்களின் தனித்துவமான வரலாற்றை தன் நாவலில் பதிவு செய்த எழுத்தாளரான ஜோடிகுரூஸ், மோடி போன்ற ஒரு பாசிஸ்டை ‘தொலைநோக்குடையவர்’ என்று கூறி ஆதரிப்பது தங்களுக்கு அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாகவும், மோடி ஆதரவு என்பது அவரது தனிப்பட்ட கருத்து என்ற போதிலும் இது போன்ற நபர்களுக்கு தங்கள் பதிப்பகத்தில் எந்த இடமுமில்லை என்றும் கூறி புத்தகத்தை பதிப்பிக்கும் முடிவை திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது. பதிப்பிக்கும் முடிவை திரும்பப் பெறுவதால் ஏற்படும் இழப்பைக் குறித்த கவலையை விட ஜோ-டி-குரூஸ் எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாடு குறித்து தாங்கள் அதிகம் கவலைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. நாவல் வெளிவரும் முன்னரே குரூஸ் குறித்து தெரிய வந்தது மகிழ்ச்சி என்றும் அறிவித்துள்ளது.
வ.கீதாவுக்கும் நவயானா பதிப்பகத்துக்கும் நமது பாராட்டினைத் தெரிவித்துக் கொள்வோம்.
இந்த புத்தகத்தை மொழிபெயர்த்துள்ள வ.கீதா, வெளியிட்டுள்ள செய்தியில், மோடியை ஆதரித்து ஜோ-டி-குரூசின் அறிக்கையை படித்து தான் வேதனையடைந்ததாகவும், அவருக்கு தனிப்பட்ட அரசியல் கருத்தை கூற எல்லா உரிமையும் இருக்கிறது என்றும், ஆனால் மோடியுடன் தொடர்புடைய எவருடனும் இணைந்து செயல்பட தான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் 2002 குஜராத்தை படுகொலைகளை நாம் மறக்கக் கூடாது, யாரையும் மறக்கவிடக்கூடாது என்றும் தெரிவித்தவர், ஜோ-டி-குரூசின் ஆழி சூழ் உலகு மீனவ மக்களின் வாழ்வை படம் பிடிக்கும் சிறப்பான நாவல், அதை ஆதரிப்பதாகவும், ஆனால் குரூஸ் தன் எழுத்தாற்றலை ஒரு அபாயகரமான பாசிச அரசியலுக்கு விற்க முடிவு செய்துள்ளது குறித்து மிகவும் கவலைப்படுவதாகவும் அதனால் தன் மொழிபெயர்ப்பை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.
புத்தகம் பதிப்பிப்பது இவ்வாறு முடிவுக்கு வந்ததும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக மோடியை தூக்கி பிடிக்கும் கார்ப்பரேட் ஊடகங்களில் குய்யோ முய்யோ என்று குதிக்கிறார் குரூஸ். மீனவ மக்களுக்கு மட்டுமல்லாமல் மொத்த சமூகத்திற்கும் அநீதி இழைத்திருக்கும் குரூஸ், “ஏழைகளை பற்றி எழுதினால் அதற்காக என்னை இடதுசாரி என்று நீங்களாகவே எப்படி கருதிக் கொள்ளலாம்?” என்று இப்புத்தகத்தை பதிப்பிக்க முன்வந்த நவயனா பதிப்பகத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆயிரக்கணக்கான மக்களை ஈவு இரக்கமில்லாமல் கொன்றொழித்த கொலைகாரனை கண்டிப்பதற்கு இடதுசாரியாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல, ஒரு மனிதனாக இருந்தாலே போதும். அப்படி குறைந்தபட்ச மனிதநேயம் கூட இல்லாத குரூஸ் ஒரு இலக்கியவாதியாக இருந்து என்ன பயன்? மனிதபிமானம் கூட இல்லாத ஒரு நபருக்கு இலக்கியமோ இல்லை நாவலோ அவை வரவேற்பை பெற்றிருந்தாலும் கூட அதை வைத்து மட்டும் தகுதியோ அங்கீகாரமோ கோர முடியாது.
இதுதான் இலட்சணமென்றால் குரூஸை நாம் ஒரு மனிதனாக ஏற்பதே சாத்தியமில்லை. இதற்கு மேல் இவரை மனித குலத்திற்காகப் போராடும் இடதுசாரியாக யாராவது கருதினால் அது நிச்சயமாக பெரும் பிழைதான். நாங்களும் இதற்காக சம்பந்தப்பட்டவர்களை ‘கண்டிக்கின்றோம்’.
மேலும், தான் மோடியை ஆதரிப்பதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார் குரூஸ். குஜராத் மாடல் வளர்ச்சியும், உறுதியான தலைமையும் தான் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் என்று உணர்ந்திருப்பதாலேயே இவர் மோடியை ஆதரிக்கிறாராம். வேலை நிமித்தமாக குஜராத்திற்கு 12 ஆண்டுகளாக சென்று வருவதாகவும் குஜராத்தின் வளர்ச்சி குறித்து அறிந்திருப்பதாகவும், மோடி ஆளும் வர்க்கத்தை பயன்படுத்தி ஏழைகளை உயர்த்துவதாகவும் தெரிவித்துள்ளார் குரூஸ்.
குரூஸ் அடுக்கிய இந்த வார்த்தைகளைத்தான் தமிழக தொலைக்காட்சிகளில் பாஜக கோயாபல்ஸுகள் அடித்து பேசுகிறார்கள். இதையே கோயாபல்ஸ்தனத்தில் கொட்டை போட்ட அரவிந்த நீலகண்டன் போன்ற பெருச்சாளிகளிடம் பேசி உள்ளே இறக்கியிருக்கிறார் குரூஸ். இதற்கு நம்பகத்தன்மை வேண்டும் என்பதற்காக, தான் குஜராத்திற்கு 12 வருடமாக சென்று வருவதாக கூறுகிறார். சரி, வளர்ச்சி எனும் இந்த பொய் மூட்டையை விடுவோம், இத்தனை ஆண்டுகளில் அவர் குஜராத் கலவரங்களில் உறவுகளையும், வாழ்வையும் இழந்த ஒரு முசுலீமைக் கூட சந்திக்கவில்லையா? இல்லை அவர்களது குடியிருப்புகளுக்கோ, தடுப்பு முகாம்களுக்கோ போவதற்கு வழி தெரியவில்லையா? இசுலாமியர்களை விடுங்கள், தற்கொலை செய்த விவசாயிகள், மலத்தை கையால் அள்ளும் தொழிலாளிகள், வெளி மாநிலங்களில் இருந்து வந்து குறைந்த கூலிக்கு கொத்தடிமையாக இருக்கும் தொழிலாளிகள் இவர்களைக் கூட குரூஸ் ஏன் சந்திக்கவில்லை?
தமிழகத்தில் குமுதம் முதலாளி, ஜூவி ஆசிரியர் குழுவினர் உட்பட நாடெங்கும் உள்ள ஊடகங்களை மோடி அரசாங்கம் அழைத்து வந்து செட்டப் காட்சிகளையும், கணக்குகளையும் காட்டி பிரச்சாரம் செய்கின்றனர். அதையே தனது சொந்த அனுபவமாக முன்வைக்கிறார் குரூஸ். இதனால் குஜராத் போனவர்களெல்லாம் குஜராத் மக்களைப் பற்றி தெரிந்தவர்கள் என்பது கோயாபல்ஸ் கோமகன்களது உத்தியே அன்றி உண்மை அல்ல.
குஜராத்தில் ஒடுக்கப்பட்ட இசுலாமிய மக்களையும் இதர உழைக்கும் மக்களையும் கண்டுகொள்ளவில்லை என்பதிலிருந்தே இவர் தமிழக மீனவ மக்களுக்காக கவலைப்படுவது நாடகம் என்பது புரிகிறது.
குரூஸ் சொல்கிறபடி குஜராத்தில் ஏற்றம் பெறும் ஏழைகள் யாரென்றால் அதானி, டாடா, அம்பானி போன்ற ஒரு வேளை கஞ்சிக்கு வழியில்லாதவர்கள்தான்
ஏழைகளை உயர்த்த ஆளும் வர்க்கத்தை மோடி பயன்படுத்துவதாக குரூஸ் சொல்கிறார். இது தான் பித்தலாட்டத்தின் உச்சகட்டம். ஜோ-டி-குரூசின் நேர்மையை இதன் மூலம் யாரும் உரசிப் பார்த்துக் கொள்ளலாம். குஜராத்தில் தொழிலாளர்களின் சராசரி ஊதியம் நகர்ப்புறத்தில் 106 ரூபாய், கிராமப்புறத்தில் 86ரூபாய். இந்தியாவிலேயே குறைந்த ஊதியம் குஜராத்தில்தான். இதை எதிர்த்து தொழிலாளர்கள் போராட முடியாது மீறி போராடினால் போலீசின் குண்டாந்தடி தான் வரும். இப்படி தொழிலாளர்களை சுரண்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாய்பளிப்பதால் தான் அவரை வளர்ச்சியின் நாயகன் என்று கொண்டாடுகிறார்கள் முதலாளிகள்.
குரூஸ் சொல்கிறபடி குஜராத்தில் ஏற்றம் பெறும் ஏழைகள் யாரென்றால் அதானி, டாடா, அம்பானி போன்ற ஒரு வேளை கஞ்சிக்கு வழியில்லாதவர்கள்தான்.. மற்றபடி உண்மையான ஏழைகளை சிவலோக பதவிக்கு தான் உயர்த்தியிருக்கிறார். இதை அங்கு நடக்கும் விவசாயிகள் தற்கொலைகள் மூலம் புரிந்து கொள்ளலாம். 2012-ல் மட்டும் அதிகாரபூர்வ புள்ளிவிவரப்படி 564 விவசாயிகள் குஜராத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
கடல் எனும் பிரம்மாண்டமான இயற்கைத் தாயின் மடியில், வாழ்வதற்காக கருணையோடும் வீரத்தோடும் போராடும் மீனவ மக்களின் ரத்தமும் சதையுமான வாழ்க்கையை உயிர்ப்போடு சித்தரித்த “ஆழி சூழ் உலகு”
ம.க.இ.க உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் குஜராத் வளர்ச்சியின் மாயையை தமிழகத்தில் திரை கிழித்த பிறகு, குஜராத்தின் வளர்ச்சி குறித்த பம்மாத்து முன்பு போல் அப்படியே செல்லுபடியாகாது என்பதால் ஜூ.வி யே கூட தன்னை நடுநிலையாளனாக காட்டிக்கொள்ள குஜராத்தின் பலவீனங்களை துளியாவது பட்டியலிடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இது ஒரு ஏமாற்றும் தந்திரம் என்றாலும் மட்டையடியாக வளர்ச்சிதான் என்று சொன்னால் மதிப்பு இருக்காது.
ஒரு வேளை குரூஸ் எதுவும் தெரியாத அப்பாவி என்றால் முதலாளித்துவ அமைப்புகளே தூக்கிப் பிடிக்கும் குறியீடுகளிலும் கூட குஜராத் பின்தங்கியிருக்கிறது என்பதோடு தமிழ்நாடு முன்னிடங்களில் இருக்கிறது என்பதை நினைவூட்ட சில புள்ளிவிவரங்கள்.
வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழைகள் குஜராத்தில் 23% தமிழகத்தில் 17% கேரளாவில் 12% தான். கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கையில் இந்தியாவில் குஜராத்திற்கு 18-வது இடம், மாநிலத்தின் உற்பத்தி மொத்தத்தில் மராட்டியம் முதலிடம், தமிழகம் மூன்றாமிடம், குஜராத் ஐந்தாமிடம். கடந்த 12 ஆண்டுகளில் தொழில் முதலீடுகளின் வரவில் மகாராட்டிரம் முதலிடம், தமிழகம் 4வது இடம், குஜராத் 5வது இடம்! குஜராத்தின் வளர்ச்சியை அம்பலப்படுத்தி வினவில் ஏராளமான கட்டுரைகள் வந்துள்ளன.
அதே நேரம் மேற்கண்ட விவரங்கள் குறித்து அறியாத அளவுக்கு ஜோ-டி-குரூஸ் அவ்வளவு முட்டாளாக இருக்க வாய்பில்லை. மோடியை ‘டெவலெப்மன்ட்’ என்ற பெயரில் ஆதரிக்கும், ஏதோ ஒரு சாதாரண நடுத்தர வர்க்க கோயிந்து கிடையாது இவர். இந்துத்துவ கருத்தியலை கடைவிரிக்கும் இவரது பிரசங்கங்கள் யூடியூபிலும், இந்துத்துவ ஆதரவு தளங்களிலும் ஏராளம் காணக் கிடைக்கின்றது. ஆக இவர் மோடியை ஆதரிப்பதன் பின்னணி, வளர்ச்சியோ வெங்காயமோ கிடையாது. பார்ப்பனிய இந்துமதவெறி பாசிசத்தை இவர் கருத்தளவில் மனதார ஏற்றுக் கொண்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் உவரியில் மீனவ குடும்பத்தில் பிறந்த இவர் நெய்தல் நிலமக்களின் வாழ்வையும், அவர்கள் மீதான கத்தோலிக்க திருச்சபையின் சுரண்டல்களையும் உள்ளடக்கி எழுதிய முதல் நாவலான ஆழி சூழ் உலகு தமிழ் இலக்கிய உலகில் நல்ல வரவேற்பை பெற்றது. கடல் எனும் பிரம்மாண்டமான இயற்கைத் தாயின் மடியில், வாழ்வதற்காக கருணையோடும் வீரத்தோடும் போராடும் மீனவ மக்களின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை அந்த நாவலில் உயிர்ப்போடு இருப்பது உண்மையே.
ஒரு வேளை இளவயதிலேயே ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களுக்கு சென்று ‘மீன் நாற்றத்தை’ கழுவி சுத்தப்படுத்தி ஊதுபத்தி – சாம்பிராணியாக குரூஸ் மாற்றப்பட்டிருந்தால் நமக்கு, “ஆழி சூழ் உலகி”ற்கு பதில் ‘காவி கொல் கடற்கரை’தான் கிடைத்திருக்கும்.
இந்த நாவலில் இடம்பெற்றிருக்கும் காலம் அவரது இள வயது ஞாபக சேமிப்பில் மட்டும் இருப்பதால், நல்ல வேளையாக நாவலில் இந்துத்துவம் இல்லை. ஆனால் நாவல் எழுதப்பட்ட வயது, வேலை நிமித்தம் ஏற்பட்ட வர்க்க மாற்றம், நாவலை எழுதத் தூண்டிய, திருத்திய பதிப்பாளர், பிறகு ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன் என்று எல்லாமும் சேர்ந்து அவரை இந்துஞான மரபில் இழுத்துக் கொண்டிருந்த போது அதில் ஊற்றப்படும் நெருப்பாக திருச்சபை பாவி பாதிரிகள் நடந்து கொண்டனர். ஒரு வேளை இளவயதிலேயே ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களுக்கு சென்று ‘மீன் நாற்றத்தை’ கழுவி சுத்தப்படுத்தி ஊதுபத்தி – சாம்பிராணியாக குரூஸ் மாற்றப்பட்டிருந்தால் நமக்கு, “ஆழி சூழ் உலகி”ற்கு பதில் ‘காவி கொல் கடற்கரை’தான் கிடைத்திருக்கும்.
இதனிடையில் ஆழிசூழ் உலகில் திருச்சபையை நாறடித்து விட்டார் என்று குரூஸ் ஊர் விலக்கம் செய்யப்பட்டார். அவரது உவரி வீடும் தாக்கப்பட்டது. இது குரூஸுக்கு தாங்கவொண்ணாத வடுவாக அமைந்து விட்டது. அந்த வடுவை பயன்படுத்திக் கொண்டுதான் ஆர்.எஸ்.எஸ் அயோக்கியர்கள் அவரது சிந்தனையில் காவி வண்ண ரோடு போட்டிருக்கிறார்கள். இதை தொடர்ந்து குரூஸ், கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக இருக்க வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டார். இப்படித்தான் அவரது கத்தோலிக்க ஆதிக்க எதிர்ப்பு பார்ப்பனியத்திற்கு மடை மாற்றப்பட்டது.
கத்தோலிக்கம் கடற்கரை மக்களுக்கு இழைத்துள்ள கொடுமைகளை விலாவரியாக விளக்கும் குரூஸ், தன் பாரம்பரிய வேர்களை பார்ப்பனிய எதிர்ப்பு மரபில் தேடுவதற்கு பதில் பார்ப்பனியத்திலேயே தேடி தஞ்சம் அடைந்தார். மதங்கள் அனைத்துமே தோன்றிய காலம் தவிர்த்து ஆளும் வர்க்க ஆன்மீக அடியாட்களாக விரைவிலேயே மாறினாலும் இந்துமதம் மட்டும்தான் தோற்றத்திலேயே ஆளும் வர்க்கத்தின் நோக்கை நிறைவேற்றி வருகிறது. கிறித்தவம் இந்தியாவிற்குள் நுழைந்ததற்கு வேண்டுமானால் காலனிய நோக்கம் இருந்தாலும், வளர்ந்ததற்கு காரணம் பார்ப்பனிய கொடுங்கோன்மைதான். இது குறித்து கண்ணை மறைக்கும் காவிப் புழுதி தொடரில் நிறைய கட்டுரைகள் இருப்பதால் இங்கே தவிர்க்கிறோம்.
ஆக வர்ணாசிரம சாதிய கொடுமைகள் பொறுக்க முடியாமல் தான் மக்கள் வேறு மதம் மாறினார்கள். ஆனால் விரைவிலேயே கிறித்தவ மதமும் பார்ப்பனியத்தின் வருணாசிரமத்தை ஏற்றுக் கொண்டுதான் இங்கே நீடிக்க முடிந்தது. ஒடுக்கப்பட்ட பழங்குடி, தாழ்த்தப்பட்ட, மீனவ மக்களுக்கு கிறித்தவம்தான் முதன் முதலில்தான் சேவை செய்தது என்றாலும் நிறுவன ரீதியில் அது பார்ப்பனிய சமூக அதிகாரத்தை ஏற்றுக் கொண்டே செயல்பட்டது. இந்த வரலாற்று உண்மைகளை மறுத்து ஆர்.எஸ்.எஸ் கும்பல் முன் வைக்கும், இந்துமதத்தில் சாதி இல்லை – இடைச் செறுகல், வியாசர் ஒரு மீனவப் பெண்ணின் மகன், பரதவ மக்கள் தொன்மையான இந்துமத நாகரீகத்தின் தொல்குடிகள், கிறித்தவ-இசுலாம் அன்னிய சதி, பாரதத்தை குலைக்க கிறித்தவ-இசுலாமிய நாடுகள் சதி போன்ற கோயாபல்ஸ் விளக்கத்தில் திளைத்த குரூஸ் தற்போது அவற்றையே நம்புகிறார், பேசி வருகிறார்.
தன் இந்துத்துவ சித்தாந்த அரிப்பின் தொடர்ச்சியாக மோடியை ஆதரிக்கும் இவர் அதை விடுத்து மோடி பிரதமாரவது தான் மீனவ மக்களுக்கு நலன்னுக்குகந்தது என்று அதை மீனவ மக்களின் மேல் ஏற்றி கூறுவது மோசடியானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. மீனவ மக்களின் வரலாறும், நாட்டின் வரலாற்றுணவர்வும் தெரியாமல் தன்னை மீனவ மக்களின் பிரதிநிதியாக இவர் முன்வைப்பது மேட்டிமைத்தனமானது. மேலும் அந்த மக்களின் வாழ்வை மாற்றுவதற்கு இவர் தன்னறிய எந்த விதமான சமூக, அரசியல் போராட்டங்களிலும் கலந்து கொண்டதில்லை. அவையெல்லாம் ‘கீழ்த்தரமானது’ என்று கருதும் சிற்றிலக்கியவாதிகளின் சமூக விரோத சிந்தனைதான் இவருடையதும். மேலும் சாகித்ய அகாடமி விருது பெற்றது மீனவ மக்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று உளறுமளவுதான் இவருடைய சமூக பார்வை உள்ளது.
கூடங்குளம் மக்கள் போராட்டம்
ஆளும் வர்க்கங்களின் இந்தியாவும், அரசும்தான் மீனவர் உள்ளிட்ட உழைக்கும் மக்களை ஒடுக்கி வருகிறது. அந்த இந்தியாவில் இருந்து வரும் ஒரு அரசு விருதை ஏற்க மறுத்தால்தான் ஒருவன் சமூகப் போராளியாக இருக்க முடியும். மாறாக அடிப்பவனது பாராட்டையே உச்சி மோந்தால் அது அடிமைத்தனமே அன்றி விடுதலை உணர்வல்ல. இந்த இலட்சணத்தில் தனக்கு கிடைத்த விருதை மீனவ மக்களுக்கும் மாற்றி கொடுத்தால் தான் மட்டுமல்ல, மக்களும் அடிமையாகவே இருந்து விட்டு போகவேண்டும் என்ற அதிகாரத்துவமே அன்றி வேறல்ல.
மீனவ மக்களுக்கு உயிராதாரமாக திகழும் கடலையும கடற்கரையையும் காப்பதற்காக இன்று கூடங்குளம் அணுவுலையையும், தாதுமணல் கொள்ளையையும் எதிர்த்து போராடி வருகிறார்கள் கடற்கரை பகுதிமக்கள். அந்த மீனவ மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி அந்நிய கைக்கூலிகள் என்றும் கிறித்தவ பாதிரிகளின் சதி என்றும் இன்றளவும் வன்மம் கக்கிவரும் இந்துமதவெறி கும்பலுடன் கொஞ்சி குலாவி வெட்கமில்லாமல் அவர்களுக்கு ஓட்டும் கேட்கிறார் குரூஸ். ஏற்கனவே அவர் தன்னை மீனவ மக்களின் பிரதிநிதி என்று கூறிக் கொண்டாலும் உண்மையில் இனி துரோகிதான். தமிழினவாதியான வைகோ செய்த துரோகத்தைப் போல, மீனவ மக்களை காட்டி கொடுக்கிறார் குரூஸ்.
சில மாதங்களுக்கு முந்தைய ஆனந்தவிகடனில் பின்வரும் கேள்வியை எழுப்பியிருந்தார் குரூஸ். “அணு உலைக்கு எதிராக பல ஆண்டுகளாக மக்கள் போராடுகிறார்கள். ஆனால், கத்தோலிக்கம் மிகப் பெரிய கள்ள மௌனம் சாதிக்கிறது.” உண்மை தான். சரி, நீங்கள்ஓட்டு போடச்சொல்லும் மோடி இடிந்தகரைக்கு வந்து அணுவுலையை மூட வேண்டும் என்று அறிவித்தாரா என்ன? கத்தோலிக்கமாவது கள்ள மவுனம் தான் சாதிக்கிறது, ஆனால ஜோ-டி-குரூசின் ஆசி பெற்ற இந்துத்துவா கும்பல் தான் இடிந்தகரை போராட்ட குழு பெண்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக் குழுவினரை தாக்கிய இந்து முன்னணியினருக்கு எதிராக செருப்பைக் காட்டும் பெண்.
பன்னாட்டு முதலாளிகளுக்கு சேவை செய்வதற்காக, இந்திய கடற்கரை நெடுகிலும் அணுவுலைகளை நிறுவி நெய்தல் நில மக்களின் வாழ்வாதாரமான கடலை அழிக்கத் துடிக்கும் கட்சிகளில் ஒன்றான பா.ஜ.க வை ஆதரித்துக்கொண்டே ஆழிசூழ்உலகு என்றும், நெய்தல் நிலம் என்றும் பேசும் நயவஞ்சகம் கொண்டவராகத்தான் இருக்கிறார் ஜோ-டி-குரூஸ். சொந்த மக்களையே ஏமாற்றும் இப்படிப்பட்ட பித்தலாட்டகாரரின் கண்கள், குஜராத்தின் முஸ்லீம்களுக்காக கண்ணீர் வடிக்கும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?
பொதுவில் அடுத்தவருக்காக கவலைப்படும் மீனவ மக்கள் மத்தியிலிருந்து எப்படி இப்படி ஒருவர் பேசமுடியும்? அவரது நாவலிலேயே தனது உயிரை தியாகம் செய்து கொண்டு இளையவர்களின் உயிரைக் காத்த மீனவர்கள் ஏராளமிருக்கிறார்கள். ஆனால் குருஸோ தனது நலனுக்காக மீனவ மக்களை பலிகடா ஆக்குகிறார். அந்த வகையில் ஆழி சூழ் உலகு எனும் நாவலே குரூஸை காறித் துப்பும். ஆமாம், குரூஸ் அவர்களே, அந்த நாவல் இனியும் உங்களுக்கு சொந்தமில்லை என்று அறிவியுங்கள், நேர்மையிருந்தால்.
கடற்கரை சமூகத்தில் பிறந்திருந்தாலும் ஜோ-டி-குரூஸ் போன்றவர்கள் வர்க்க ரீதியில் சாதாரண மீனவர் அல்லர். இவர் மிகப்பெரிய தனியார் நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் வேலை செய்துவருபவர். இவருக்கும் உழைக்கும் மீனவர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இருவரின் வாழ்க்கையும் தன்மையிலேயே வெவ்வேறானவை. அதனால் தான் தன்னுடைய பழைய நினைவுகளில் ஆழி சூழ் உலகு படைத்த இவர் இன்று கந்த புராணத்தில் தன் வரலாற்றை தேடிக்கொண்டிக்கிறார். உவரிக்கும் அயோத்திக்கும் அன்டர்கிரவுன்ட் லிங்க் இருப்பதாக உளறுகிறார். உழைக்கும் கடல்சார் பழங்குடிகளான மீனவர்களிடம் இயல்பாகவே இருக்கும் முரட்டுத்தனம் நிறைந்த அன்பு, மனிதநேயம் போன்றவை இது போன்ற கோட்டு சூட்டு போட்ட அதுவும் காவி டை கட்டும் ஜென்டில்மென்களிடம் இருக்க வாய்ப்பில்லை.
இந்தியா முழுவதும் மோடி அலை வீசுவதாக ஆர்.எஸ்.எஸ் கும்பலும், கார்ப்பரேட் ஊடங்களும் கூறித்திரியும் வேளையில் தமிழகத்திலிருந்து இலக்கிய உலகில் இப்படி ஒரு எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுவே வட இந்தியாவிலோ இல்லை ஏனைய மாநிலங்களிலோ நடப்பது அரிது. காரணம் இங்கே பெரியாரும், திராவிட இயக்கமும் பொதுவுடமை இயக்கத்தினரும் செய்த களப்பணி. இன்றைக்கு பெரியார் மரபு இங்கே இல்லாமல் செய்யும் பணி நடைபெற்று வந்தாலும் அதை தொடர்வதற்கு புரட்சிர அமைப்புகள் களத்தில் நிற்கும்.
ஜெயமோகன் போன்ற அற்பங்கள் இதை ஏதோ இடதுசாரி சதிவேலை என்றும், இந்தியா முழுவதும் இடதுசாரி அறிஞர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றும் உளறுகின்றன.
மாறாக, ஜெயமோகன் போன்ற அற்பங்கள் இதை ஏதோ இடதுசாரி சதிவேலை என்றும், இந்தியா முழுவதும் இடதுசாரி அறிஞர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றும் உளறுகின்றன. ஜயேந்தரன் கைது செய்யப்பட்ட போது அவரை விடுதலை செய்ய முயன்றும், மோடி குறித்த செய்திகளை அதிகம் வெளியிடவில்லை என்று சித்தார்த் வரதராஜனை நீக்க காரணமாக இருந்த இந்து ராம்தான் இடது சாரி என்றால் ஜெயமோகன் முப்பது ஆண்டுகளாக எதையும் படிப்பதில்லை என்று தெரிகிறது. இன்று இந்தியா முழுவதும் மோடிக்கு ஆதரவாகத்தான் பேச, எழுத வேண்டும் என்று அனைத்து ஊடகங்களும், கலை இலக்கியத்துறையும் மாறிவிட்ட பின் இடதுசாரி சதி என்று உளறுவதற்கு இந்த அறிஞர் எவ்வளவு சரக்கு அடித்தாரோ தெரியவில்லை. மேலும் மோடியைப் பற்றி விமரிசிக்க கூடாது என்று பல பத்திரிகையாளர்கள் எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர், நீக்கப்பட்டிருக்கின்றனர்.
இதனால்தான் தமிழகத்தில் சாகித்ய அகடாமி எனும் ஜால்ரா விருது வாங்கிய ஒரு எழுத்தாளர் மோடியை ஆதரித்தார் என்ற காரணத்திற்காக அவரது ஆங்கில பதிப்பு முயற்சி நிறுத்தப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இதுவே வட இந்தியாவில் இருந்தால் வ.கீதா குஜராத் போலீசால் என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பார். அங்கே இருக்கும் ஜெயமோகன்கள் அதை நியாயப்படுத்தி எழுதவும் செய்வார்கள்.
அடுத்து இந்தப் பிரச்சினையில் இலக்கியவாதிகளும், கடைசி பெஞ்சிலாவது அறிவுஜீவி அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் மேன்மக்களும் எழுப்பும் கருத்துச் சுதந்தரப் பிரச்சினையை பார்க்கலாம். இந்தக் கேள்விகளுக்கு வ.கீதாவின் பதிலிலேயே விளக்கம் உள்ளது.
குறிப்பிட்ட பதிப்பகம் குரூஸின் நாவலை ஆங்கில மொழியாக்கம் செய்வதாக ஒப்பந்தம் போடுகிறது, பிறகு ரத்து செய்கிறது. இங்கே ரத்து செய்வதற்கு காரணம் எழுத்தாளரின் மனித விரோத செயல் என்று பதிப்பகம் கருத்து கூறுகிறது. சரி, இதில் எழுத்தாளர் பாதிக்கப்பட்டிருந்தால் சட்டபூர்வமாக வழக்கு போடலாம். போட்டாலும் நீதிமன்றம் அந்த நாவலை வெளியிட்டே தீர வேண்டும் என்று உத்திரவிட முடியாது. வேண்டுமானால் எழுத்தாளருக்கு நிவாரணத் தொகை கொடுக்குமாறு உத்திரவிடலாம். இவ்வளவிற்கும் நவயன்யா பதிப்பகம் இந்த நாவல் முயற்சியால் பொருளாதார இழப்பு இருக்கிறது என்றுதான் சொல்லியிருக்கிறது. மேலும் எல்லா பதிப்பங்களும் அவர்களது அரசியல் நிலைப்பாடு தொடர்புடையதாகவே நூல்களை வெளியிடுகிறார்கள்.
கிழக்கு பதிப்ப்கத்தின் பத்ரி, நக்சலைட்டுகளே இந்த நாட்டின் தேசபக்தர்கள் என்றோ, ஆனந்த விகடனில் மோடி ஒரு கேடி என்றோ, உயிர்மை பதிப்பகத்திலிருந்து திமுகவின் சமூகநீதித் தோல்வி என்றோ புத்தகங்களை போடுவார்களா? இல்லை காலச்சுவடு கண்ணன், சு.ராவின் கவிதைகள் வழியாக அவரது அற்பவாத உலகம் எனும் நூலை ஏன் வெளியிடவில்லை என்று யாராவது கேட்க முடியுமா?
ஒரு பதிப்பகம் எந்த நூல்களை தெரிவு செய்து வெளியிடுகிறது என்பது அதன் உரிமை, சுதந்திரம் என்று ஒத்துக் கொண்டால் அதே உரிமை ஒத்துக் கொண்ட நூலை ரத்து செய்வதற்கு உரிமை உள்ளது என்பதை ஏற்கவேண்டும். இங்கே இவர்கள் ஆராதிக்கும் சட்டத்தின் பார்வையிலேயே கருத்து சுதந்திரத்தை காலி செய்யலாம். இருப்பினும் இதற்கு அடுத்தபடியாக இவர்கள் எழுப்பும் தார்மீக கருத்துக்களையும் பார்க்கலாம்.
ஒரு எழுத்தாளரின் இலக்கியத்தை ஆராதிக்கும் நீங்கள் அவரது அரசியல் கருத்து சொல்லும் உரிமை காரணமாக அவரது இலக்கிய முயற்சிகளை தடை செய்தால் அது பாசிசமில்லையா என்கிறார்கள். இங்கே ஒடுக்கப்படும் மக்களின் குரலை இலக்கியத்தில் பதிவு செய்திருக்கிறார் என்பதாலேயே குரூஸின் நாவலை பாராட்டுகிறார்கள். அந்த பார்வையிலிருந்தே அவரது மோடி ஆதரவு குரலை கண்டிக்கிறார்கள், அதன் பொருட்டு அவரோடு இணைந்து செய்யும் பதிப்பக முயற்சிகளை கைவிடுகிறார்கள். இதற்கு அவர்களுக்கு உரிமை இல்லையா?
ஈழத்தமிழரின் அவலத்தை ஒருவர் நாவலாக்கி பாராட்டு பெற்ற பிறகு, அவர் ராஜபக்சேவின் ஆட்சியை ஆதரிக்கிறார் என்றால் அவரை பழைய பாராட்டிற்காக தூக்கி சுமப்போமா, இல்லை உறவை வெட்டி எறிவோமா? இது வெறுமனே நூல் அல்லது கருத்துச் சுதந்திரம் குறித்த பிரச்சினை இல்லை. சரியான கருத்துக்களுக்கும், தவறான கருத்துக்களுக்கும் நடைபெறும் போராட்டம்தான் இப்பிரச்சினையின் மையம். இதை விடுத்து கருத்து சுதந்திரம் என்ற ஒன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதாக கற்பித்துக் கொண்டவர்களால் இந்த சமூகத்திற்கு எந்த விதத்திலும் பயனில்லை.
இறுதியாக ஒரு மனிதன் இலக்கியம் படைக்கிறானா, ஏன் கம்யூனிசம் பேசுகிறானா என்பதை வைத்து மட்டும் மதிப்பிட முடியாது. முதலில் அடிப்படை மனித நேயமும், மதிப்பீடுகளும் அவனிடம், வாழ்க்கையிலும், பேச்சிலும் இருக்கிறதா என்பதே முக்கியம். ஆனால் இந்த தகுதியைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒருவன் உண்மையான கம்யூனிஸ்டாக மாற முடியுமென்றால், ஒரு இலக்கியவாதிக்கு அந்த நிபந்தனை இருப்பதில்லை. காரணம் எழுதுபவன் சமூக இயக்கத்தினை அறிந்து எழுதுவதற்கும் பொறுப்பேற்று பணிபுரிவதற்கும் உள்ள வேறுபாடுதான். ஆகவேதான் எழுதுவதோ இல்லை இலக்கியம் படைப்பதோ ஒரு மனிதனின் ஆகப் பெரும் தகுதியாக கூறமுடியாது என்கிறோம்.
சுருங்கச் சொன்னால் மோடி எனும் காட்டுமிராண்டியை ஆதரிக்கும் குருஸுக்கு இலக்கியம் ஒரு கேடா என்பதே நமது கேள்வி.
வ.கீதா மற்றும் நவயன்யா பதிப்பகம் ஆகியோர் தைரியமாக மோடியின் அதிகாரத்திற்கு பயப்படாமல், குரூஸ் உடனான தொடர்பை துண்டித்தது போன்று இந்துமதவெறி பாஜகவையும், மோடியையும் தூக்கிச் சுமக்கும் வை.கோ வை கண்டிக்கவோ அவருடனான தொடர்பை துண்டித்துக் கொள்ளவோ எந்த தமிழினவாதியும் முன்வரவில்லை. ஆரியத்தை எதிர்த்து படை நடத்துபவர்களும், இந்திய ‘ஏகாதிபத்தியத்திலிருந்து’ தமிழ்தேசிய விடுதலைக்கு ‘களமாடும்’ பல உதிரி தமிழின அமைப்புகளும் வை.கோவை நிச்சயம் கண்டிக்கமாட்டார்கள் என்பதே உண்மை. என்ன செய்வது இயற்கையில் எல்லா பிராணிகளுக்குமே முதுகெலும்பு இருக்கிறதா என்ன?
இவர்கள் இல்லையென்றால் என்ன, மோடிக்கு எதிராக தமிழகம் தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் தனது பதிவை செய்து கொண்டே இருக்கிறது, இருக்கும். மோடி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் குரூஸின் நாவல் ஆங்கிலத்தில் மட்டுமல்ல, பல்வேறு மொழிகளிலும் கூட வெளிவரும். ஆனால் பார்ப்பனிய பாசிசத்திற்கு பல்லக்கு தூக்கிய அவரது வார்த்தைகள் ஒரு போதும் நிம்மதியைத் தந்துவிடாது. பாசிசத்திற்கும், ஒடுக்குமுறைக்கும் கொடி பிடித்த பல்வேறு மனிதர்களை – அவர்கள் இலக்கியவாதிகளாக இருந்தாலும் – வரலாறும் வரலாற்றை படைக்கும் மக்களும் குப்பைக் கூடைக்குத்தான் அனுப்பியிருக்கிறார்கள்.
மறுகாலனியாக்கத்துக்கான போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்! உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசமைப்பைக் கட்டியெழுப்புவோம்! கொலைகார மோடி தலைமையிலான பார்ப்பன பாசிச பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பலை விரட்டியடிப்போம்!
தமிழகம் தழுவிய இயக்கம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
ஓட்டுப்போடுவது உங்கள் ஜனநாயகக் கடமை என்கிறது தேர்தல் கமிசன். என்ன ஜனநாயகம் இங்கே வாழ்கிறது? எல்லாக் கட்சிகளிலும் மன்னராட்சியைப் போல மனைவி, மகன், மாமன், மச்சான் ஆட்சி! அப்புறம் கோடீசுவரர்கள், சாதிவெறியர்கள், ரவுடிகள் – இவர்களெல்லாம்தான் வேட்பாளர்கள். இவர்களில் எவனாவது உழைத்துச் சோறு தின்பவனா? இவர்களுடைய தொழில் என்ன? சுயநிதிக் கல்லூரி முதலாளி, தண்ணீர் வியாபாரி, மணற்கொள்ளையன், கிரானைட் திருடன், லாட்டரி சீட்டு வியாபாரி, ரியல் எஸ்டேட் முதலைகள். இப்படி தனியார்மயக் கொள்கையைப் பயன்படுத்திக்கொண்டு மக்களைக் கொள்ளையடிக்கும் நபர்களுக்கு ஓட்டுப் போட்டு பதவியில் அமர்த்துகிறீர்களே, இது ஜனநாயக கடமையா அல்லது மடமையா?
நீங்கள் தேர்ந்தெடுக்கும் எம்.பி. நல்லவனாகவே கூட இருக்கட்டும். அவனால் என்ன செய்துவிட முடியும்? டில்லியிலோ சென்னையிலோ உட்கார்ந்திருக்கும் எம்.பி. – எம்.எல்.ஏ.க்களா நம்மை ஆட்சி செய்கிறார்கள்? பிறப்பு – இறப்பு, சாதிச்சான்று, பத்திரப்பதிவு, ஓட்டுநர் உரிமம், ரேசன் அட்டை, முதியோர் பென்சன், குடிநீர், மின்சாரம், சாலைவசதி, பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட நமது அன்றாடப் பிரச்சினைகள் அனைத்தையும் கையாள்பவர்கள் மாவட்ட ஆட்சியர், ஆர்.டி.ஓ, தாசில்தார், போக்குவரத்து, கல்வி, மின்வாரிய அதிகாரிகள் போன்ற அந்தந்தத் துறை அதிகாரிகள்தான். நீங்கள் சி.எம். செல்லுக்கு மனுச் செய்தாலும், பி.எம். செல்லுக்கு புகார் செய்தாலும் அதன்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரமுள்ளவர்கள் இந்த அதிகாரிகள்தான். மாதம் மும்மாரி பொழிகிறது என்று இவர்கள் எழுதித் தருவதைத்தான் அமைச்சர்கள் சட்டமன்றத்தில் ஒப்பிக்கிறார்கள்.
இந்த அதிகார வர்க்கத்தினரை நாம் தேர்ந்தெடுப்பதும் இல்லை, இவர்களை நீக்குவதற்கும் நமக்கு அதிகாரமுமில்லை. தேர்தலே நடக்கவில்லையென்றாலும் இவர்கள்தான் அரசை நடத்துகிறார்கள். அரசாங்கத்தை நடத்துவார்கள். ஏனென்றால், அரசு என்பதே இவர்கள்தான். யார் வென்றாலும் தோற்றாலும் இவர்கள் நம்மீது செலுத்தும் சர்வாதிகாரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். எனவேதான், இது தேர்ந்தெடுக்கப்பட்டோரின் ஆட்சியல்ல, ஜனநாயகமல்ல – இரட்டை ஆட்சிமுறை என்கிறோம்.
இந்த அதிகார வர்க்கம் தலை முதல் கால்வரை பன்னாட்டு முதலாளிகள், தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்களுடைய ஆதிக்கத்தைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்குச் சேவை செய்வதற்கும் ஏற்பத்தான் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. ஒரு ஆலை முதலாளி சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியத்தைத் தொழிலாளிக்கு மறுத்தாலோ, சட்டவிரோதமாக தொழிற்சங்க உரிமையைப் பறித்தாலோ அதற்காக எந்த கலெக்டரும் முதலாளியைக் கைது செய்வதில்லை. மணற்கொள்ளையை விவசாயிகள் எதிர்த்தால், தாசில்தாரும் போலீசும் விவசாயிகள் மீதுதான் பொய்வழக்கு போடுகிறார்கள். இவையெல்லாம் நாம் அன்றாடம் காணும் காட்சிகள். ஆகவேதான் இது ஜனநாயகமல்ல, ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்கிறோம். இதற்கு மக்களிடமிருந்தே நியாயவுரிமை பெறுவதற்காகத்தான் தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த அதிகாரிகளுக்கும் அரசாங்கங்கத்துக்கும் கூட தனியார்மயம் – தாராளமயம் என்று அழைக்கப்படும் மறுகாலனியாக்கம் அமலாகத் தொடங்கிய பிறகு உலகவங்கி, உலக வர்த்தக கழகம் போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள்தான் ஆணையிட்டு வருகின்றன. தானியக் கொள்முதலை நிறுத்து, கல்வி-மருத்துவத்துக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறை – என்று உத்தரவிடுகின்றன. உலகவங்கியின் அதிகாரம் ஊராட்சி மன்றம் வரை வந்துவிட்டது. அதுமட்டுமல்ல, மின்சாரம், தொலைபேசி, சாலைகள் அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு விட்டதால், அனைத்திலும் வல்லுநர்கள் என்ற பெயரில் கார்ப்பரேட் அதிகாரிகள் அரசு அதிகாரத்துக்குள்ளேயே நுழைந்து விட்டார்கள். மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் முதலானவற்றை அந்தந்தத் துறைக்கான ஒழுங்குமுறை ஆணையம்தான் தீர்மானிக்கிறது. அதாவது, அரசு நிர்வாகமே தனியார்மயம் ஆகிவருகிறது. மின்கட்டணத்தைக் குறைக்கும் அதிகாரம் தனக்கு இல்லையென்று எல்லாம் வல்ல அம்மா சட்டமன்றத்திலேயே கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?
இந்த மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாகத்தான்
விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். விவசாயம் அழிந்து பிழைப்புத்தேடி ஊர் ஊராக ஓடுகிறார்கள்.
கல்விக்குப் பணம், குடிதண்ணீருக்குப் பணம், மருத்துவமனையில் கால் வைத்தால் பணம், டோல்கேட்டுக்குப் பணம் என்று திரும்பிய பக்கமெல்லாம் மக்களின் ரத்தம் உறிஞ்சப்படுகிறது.
இன்னொருபுறம் விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்டுகள் ஆகின்றன; கனிம மணற்கொள்ளையால் கடல் வளம் அழிகிறது; ஆலைக்கழிவுகளால் ஆற்றுநீர் நஞ்சாகிறது.
ஆற்று மணற்கொள்ளையால் நிலத்தடி நீரும் காற்றின் ஈரமும் அழிந்து மழை பொய்க்கிறது. மிச்சமிருக்கும் நீரையும் சூறையாடி காசாக்குகிறார்கள் தண்ணீர்க் கொள்ளையர்கள்.
விவசாயம் அழியும் என்று தெரிந்தே மீதேன் திட்டமும், கெயில் குழாய் திட்டமும் திணிக்கப்படுகின்றன.
இவை அனைத்திலும் லாபம் ஈட்டுபவர்கள் முதலாளிகள். கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்தை வளர்க்கும் திட்டங்களைத்தான் மக்களுக்கான வளர்ச்சித்திட்டம் என்ற பெயரில் அரசு நம்மீது திணித்து வருகிறது. எந்தக் கட்சி வென்றாலும் அமலாக்கவிருப்பது இதைத்தான். இதனைத் தீவிரமாகவும் திறமையாகவும் அமல்படுத்துவது யார் என்பதில்தான் கட்சிகளுக்கிடையில் போட்டி நடக்கிறது. இதில் ஏதாவது ஒரு கொள்ளிக்கட்டையை எடுத்து கூரையில் செருகிக் கொள்ளலாம் என்பதுதான் நமக்கு வழங்கப்பட்டிருக்கும் வாக்குரிமையின் உண்மையான பொருள்.
இப்படிச் சொல்வது மிகையானது என்று எண்ணுகிறீர்களா? நாட்டைப்போலவே, நம் வீடும் சமூகமும் பற்றியெரிவதை நீங்கள் காணவில்லையா? பள்ளி மாணவிகளைக் கெடுக்கும் வாத்தியார்கள், ரவுடிகளாகக் கல்லூரித் தாளாளர்கள், கிட்னி திருடும் டாக்டர்கள், அங்கீகாரமே இல்லாத பல்கலைக்கழகங்கள், ஆசி வாங்கப்போனால் முந்தானையை உருவும் சாமியார்கள், வயிற்றில் குழந்தையோடு தவிக்கும் கைவிடப்பட்ட காதலிகள், திரும்பிய பக்கமெல்லாம் சங்கிலிப் பறிப்பு – என்று நச்சரவங்களுக்கு நடுவே குடித்தனம் நடத்துவது போல நாடே மாறியிருக்கிறதே, இதற்கெல்லாம் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?
காரணம் என்னவென்றால், எந்தச் சட்டங்களையும் மரபுகளையும் மதித்து நடக்க வேண்டும் என்று ஆளும் வர்க்கம் மக்களுக்கு அறிவுறுத்துகிறதோ, அந்தச் சட்டங்களை அவர்களே மதிப்பதில்லை. அதாவது, இந்த ஜனநாயகக் கோயிலில் மக்கள் பக்தர்கள் என்றால், ஆளும் வர்க்கமும், அதிகார வர்க்கமும், ஓட்டுப்பொறுக்கிகளும் தேவநாதன்கள், ஆசாராம் பாபுகள், நித்தியானந்தாக்கள்!
எம்.எல்.ஏ. எம்.பி.க் களில் 30% பேர் மீது கிரிமினல் வழக்குகளாம்!
அலைக்கற்றை, ஆதர்ஷ், நிலக்கரி வழக்குகள் அனைத்திலும் முக்கியக் குற்றவாளிகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!
பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் என்று எல்லா மட்டத்திலும் குற்றவாளிகள்!
பாலியல் வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு டி.ஜ.ஜி. 15 ஆண்டுகளாகத் தலைமறைவு!
வேறொரு டி.ஜி.பி. யை பிடித்துக் கொடுத்தால் பத்து லட்சம் சன்மானம் என்று அறிவிக்கிறது சி.பி.ஐ!
தேசபக்தியின் திருவுருவமாகச் சித்தரிக்கப்படும் இராணுவ அதிகாரிகளோ அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு பாக். தீவிரவாதிகளைக் கொன்றதாகக் கணக்குக் காட்டி பதவி உயர்வு வாங்குகிறார்கள்.
ஓய்வு பெறுவதைத் தள்ளிப்போடுவதற்காக பிறந்த தேதியை மாற்றி போர்ஜரி செய்கிறார் இராணுவத்தின் தலைமைத் தளபதி.
தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல் பேர்வழிகள் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினாலும் மவுனம் சாதிக்கிறது உச்ச நீதிமன்றம்.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் பத்திரிகைகளோ கவர் வாங்கிக்கொண்டு கருத்துக் கணிப்பு வெளியிடுகின்றன.
மொத்தத்தில், இந்த அரசியல் கட்டமைப்பு முழுவதுமே நொறுங்கிச் சரிந்து வருகிறது. சமூகத்தின் உறுப்புகள் அனைத்திலிருந்தும் சீக்குப்பிடித்து அழுகிச் சீழ் வடிகிறது. இதன் காரணமாக, பாதிக்கப்படுபவர்கள் ஏழை மக்கள். ஆனால், நம்மீதுதான் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது என்ற பெயரில் கொடூரமான அடக்குமுறை ஏவப்படுகிறது.
நாம் அனுபவிக்கும் இந்தக் கொடுமைகளைப் பற்றியெல்லாம் ஏன் எந்தக் கட்சியும் பேசுவதில்லை என்று யோசித்துப் பாருங்கள். ஏனென்றால், அவர்கள் ஆளும் வர்க்கங்களின் கையாட்கள். பாதிக்கப்படுபவர்களாகிய நாம்தான் நமக்கான தீர்வை யோசிக்க வேண்டும். மாறாக, மன்மோகனுக்குப் பதிலாக மோடி என்று சிந்திப்பது தீர்வு அல்ல, நமக்கு நாமே வழங்கிக் கொள்ளும் தண்டனை.
சின்னத்தை மாற்றிப் பயனில்லை; நாம் சிந்திக்கும் முறையை மாற்றவேண்டும். இந்தப் போலி ஜனநாயக அரசு, ஒருபோதும் நமக்குச் சேவை செய்யாது. உழைக்கும் மக்களின் நலன் காக்கும் புதிய ஜனநாயக அரசினை நாம்தான் புதிதாக உருவாக்க வேண்டும்.
அதன் முதல்படி தேர்தல் புறக்கணிப்பு. அடுத்த அடி இந்த மக்கள் விரோத அதிகாரத்தைத் தகர்க்கும் போராட்டங்கள்! மனு கொடுப்பதும், ஓட்டுப் போடுவதும், வழக்கு தொடுப்பதும் நம் உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்ள உதவாது. மக்கள் எழுச்சிகளின் மூலம் நம் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வோம்.
இந்தப் போலி ஜனநாயகத்தை ஒழித்து, ஒரு புதிய ஜனநாயக அரசமைப்பை நிறுவுவதுதான் நமது போராட்டத்தின் இலக்கு.
புதிய ஜனநாயக அரசமைப்பில் இன்றைய இரட்டை ஆட்சிமுறைக்கு மாறாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளுக்குச் சட்டமியற்றவும் அதனை அமல்படுத்தவும் அதிகாரம் இருக்கும்.
அதிகாரிகள், போலீசு, இராணுவம், நீதித்துறை அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்படும். தவறிழைக்கும் மக்கள் பிரதிநிதிகளின் பதவியைப் பறிக்கவும், தண்டிக்கவுமான அதிகாரம் வாக்களித்த மக்களுக்கு இருக்கும்.
இன்று மக்கள் பிரதிநிதிகளாக பவனி வரும் தரகு அதிகார வர்க்க முதலாளிகள், நிலப்பிரபுக்கள், சாதி-மத ஆதிக்க சக்திகள், சமூக விரோதிகளின் வாக்குரிமை பறிக்கப்படும். உழைப்போர்க்கு மட்டுமே வாக்குரிமை வழங்கும் மக்கள் அதிகாரம் நிறுவப்படும்.
புதிய ஜனநாயக அமைப்பில் கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அனைத்தும் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படும். கல்வி, மருத்துவம், தண்ணீர், போக்குவரத்து, தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சேவைத்துறைகளும் நாட்டுடைமை ஆக்கப்படும்.
டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள், பன்னாட்டுக் கம்பெனிகளின் சொத்துக்களும் நிலப்பிரபுக்கள், ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் சொத்துக்களும் நாட்டுடைமை ஆக்கப்படும்.
நிலமற்ற உழவர்களுக்கு நிலத்தைச் சொந்தமாக்குவதுடன், பாசன வசதி, உழுபடைக் கருவிகள், உள்ளீடு பொருட்களை உழவர்களுக்கு வழங்கி விவசாயம் ஊக்குவிக்கப்படும். விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட உழவர் கமிட்டிகளுக்கு வழங்கப்படும்.
நெசவு, மீன்பிடி, சிறுதொழில்கள், சிறுவணிகம் உள்ளிட்ட சிறு – நடுத்தர முதலாளிகளின் உள்நாட்டுத் தொழில்கள் ஊக்குவிக்கப்படும். பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேற்றப்படும். இயற்கை வளங்களைச் சூறையாடி நீர், நிலம், காற்று உள்ளிட்ட சுற்றுச்சூழலை நஞ்சாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டப்படும்.
கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் நடக்கக்கூடிய காரியமா? என்று நீங்கள் சிந்திக்கக் கூடும். மன்னராட்சியையும் பிரிட்டிஷ் ஆட்சியையும் அகற்றுவது நடக்காத காரியம் என்றுதான் பலரும் அன்று எண்ணினார்கள். தொழிற்சங்க உரிமை முதல் தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுப்பாதையில் நடக்கும் உரிமை உள்ளிட்ட அனைத்தும் மக்கள் போராடி நிலைநாட்டிக் கொண்ட உரிமைகளேயன்றி, ஓட்டுக்கட்சிகள் வழங்கிய இலவசத்திட்டத்தில் கிடைத்தவை அல்ல. ரசியாவிலும், சீனாவிலும் வேறு பல நாடுகளிலும், போராட்டத்தின் மூலம்தான் மக்கள் தங்களுக்கு உரிமையும் அதிகாரமும் உள்ள அரசமைப்பை அன்று உருவாக்கிக் கொண்டார்கள்.
போராடத் தவறியதால்தான், அன்று போராடிப் பெற்ற உரிமைகளையும் கூட இன்று ஒவ்வொன்றாய் நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்தப் போலி ஜனநாயகத்தில் வாக்குரிமை என்பது, நமக்கு எதிராக நாமே வாக்களித்துக் கொள்ளும் உரிமைதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்! போதும். இன்னொருமுறை அந்தத் தவறைச் செய்யாதீர்கள்! போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணியுங்கள்! புதிய ஜனநாயகத்தை உருவாக்கும் மக்கள் எழுச்சிகளுக்கு அணிதிரளுங்கள்!
இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு.
தொடர்புக்கு
அ.முகுந்தன்,
110, இரண்டாம்தளம், மாநகராட்சி வணிக வளாகம்,
63, என்.எஸ்.கே.சாலை, கோடம்பாக்கம்,
சென்னை – 600 024.
புதுவை பல்கலைக்கழகமானது மத்திய மனித வள மேம்பாட்டுத் அமைச்சகம் (MHRD) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஆகிய அமைப்புகளின் கீழ் இயங்கும் மத்தியப் பல்கலைக்கழகம்தான் என்றாலும், பொதுவாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) போன்ற பிற மத்தியப் பல்கலைக்கழக மாணவர்களிடம் காணப்படும் அரசியல் விழிப்புணர்வு அவ்வளவு பரவலாகவும் வீரியமாகவும் இங்கு இல்லை. ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை நடத்திவரும் விதமும் நிர்வாகத்தை மொத்தமாகக் குத்தகை எடுத்திருக்கும் பார்ப்பனக் கும்பலின் எதேச்சதிகாரமும் மாணவர்களை தன்னெழுச்சியான போராட்டங்களை நோக்கித் தள்ளிக்கொண்டு வந்துள்ளன.
புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சந்திரா கிருஷ்ணமூர்த்தி சென்ற 2013 பிப்ரவரியில் பொறுப்பேற்றது முதல் பார்ப்பன அதிகாரம் அங்கு முழுவீச்சில் கோலோச்சத் தொடங்கியது. அவர் முதலாளிகளின் சேவைக்கு தன்னை அர்பணித்துள்ள மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினியின் நெருங்கிய நண்பர் மற்றும் அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினர் என்ற அடிப்படைத் தகுதிகளைப் பெற்றிருந்ததாலேதான் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அவர் பொறுப்பேற்ற பின்னர் பல்கலைக்கழகத்தின் அகாடமிக் ஸ்டாஃப் காலேஜ் இயக்குனராக இருக்கும் ஹரிஹரன் என்ற அதிகாரத் திமிரில் ஊறியிருக்கும் பார்ப்பனர் எல்லா நிர்வாக அலுவல்களையும் கவனிக்கலானார். இவர் சென்னையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு விதிமுறைகளுக்கு மாறாக அங்கீகாரம் கொடுத்த சிபிஐ வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆவார். இவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இதுவரையில் துணை வேந்தர் சிபிஐக்கு அனுமதி அளிக்க மறுத்து அவரை பாதுகாத்து வருகிறார். இவர் மீது இன்னும் சில கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தெரிகிறது. அவருக்குத் துணையாக ராம தீர்த்தம் என்ற பழுத்த பார்ப்பன “சட்ட மேதை”யை துணைவேந்தரும் ஹரிஹரனும் பணியில் அமர்த்தினர்.
இயக்குநர் ஹரிஹரன்
இவர்களில் முக்கியமாக ஹரிஹரன் செய்துவந்த கேள்விமுறையற்ற அதிகார அட்டுழியங்கள் எல்லாத் தரப்பினரையும் பாதித்தன. தினக் கூலி காண்டிராக்ட் பணியாளர்களான செக்யூரிட்டி பணியாளர்களிடம் கூட வஞ்சத்துடனும் சர்வாதிகாரத்துடனும் நடந்துகொண்ட ஹரிஹரன், யாரை எங்கே என்ன பணியில் அமர்த்துவது, ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் எந்த மாணவர், பேராசிரியர் அல்லது அலுவலரை எப்படி தண்டிப்பது உள்ளிட்ட எல்லா அதிகாரங்களையும் ஏகபோகமாக தன் கையில் வைத்திருந்தார்.
அதே நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தினுள் கோஷ்டி மோதல்களும் பெண்கள் உள்ளிட்ட மாணவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பற்ற சூழலும் பெருகி வந்தது. குறிப்பாக, பெண்கள் விடுதிகளுக்கு உள்ளேயும் சுற்றியும் ஒரு மர்ம கிரிமினல் காமுகன் ஆடையில்லாமல் உடல் முழுவதும் எண்ணையைப் பூசிக்கொண்டு இரவிலும் பகலிலும் நடமாடி அச்சுருத்தியிருக்கிறான்.
கடந்த இரு மாதங்களாக அவனது நடமாட்டம் மாணவிகளை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து அந்தக் காமுகனைப் பிடிக்குமாறு பலமுறை வலியுறுத்தியும் நிர்வாகம் அதற்காக எந்த உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதோடு அந்தப் பிரச்சனை பெரிதாகிவிடாமல், போராட்டங்கள் எதுவும் நிகழ்ந்துவிடாமல் பல்வேறு சாக்குகளைச் சொல்லிச் சமாளித்துக் கொண்டிருந்தது. அந்த மர்ம கிரிமினல் மாணவிகளை அச்சுறுத்துவது தொடரவே மாணவிகள் பெருமளவில் கூடி போராடத் தொடங்கினர்.
இச்செய்தி நாளிதழ்களிலும் பிற ஊடகங்களிலும் பரவலாக வெளியானதால் நிர்வாகத்திற்கு நெருக்கடி முற்றியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மூன்றாம் தேதி பட்டப் பகலில் சுமார் 2.45 மணிக்கு அவன் பெண்கள் விடுதிக்குள் நுழைந்து, அங்கு அவனைத் தடுத்துப் பிடிக்க முயன்ற பெண் பாதுகாவலரைத் தள்ளி விட்டுவிட்டு ஓடிவிட்டான். இந்தச் சம்பவம் மாணவியர் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் நிர்வாகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கடும் சந்தேகத்தையும் உருவாக்கியது. உண்மைக் குற்றவாளியைப் பிடிக்க வக்கற்ற நிர்வாகமும் பாதுகாப்புக்கான ஒப்பந்தக் கம்பெனியும் புதிய காரணங்களையும் திசைதிருப்பும் முயற்சிகளையும் செய்தன.
தற்போது பல்கலைக்கழக வளாகத்தின் பாதுகாப்புக்கான பொறுப்பை ஏற்றுள்ள கம்பெனி எம்.டி. ஹரிஹரனுக்கு நெருக்கமான நபர் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில்தான் விதிமுறைகளைத் திருத்தி அதற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இந்த நிறுவனம் பொறுப்பேற்றவுடன் முன்பிருந்த எல்லாப் பாதுகாப்புப் பணியாளர்களும் எந்த முன்னறிவிப்பும் இன்றி நீக்கப்பட்டனர் என்பதும், அதில் ஹரிஹரன் விரும்பியவர்கள் மட்டுமே மீண்டும் ஒருமாதம் அலைந்து திரிந்து போராடியபின் பணியில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர் என்பதும் எல்லோரும் அறிந்த நிகழ்வுகள்தான். இவ்வாறு ஹரிஹரனின் சர்வாதிகாரமும் நிர்வாகத்தின் கையாலாகாத் தனமும் அம்பலமான நிலையில், ஓர் அப்பாவி மாணவனைப் பிடித்து அவர்தான் பெண்கள் விடுதிக்குள் நுழைந்தார் என்று சாதிக்க முயன்றது ஹரிஹரன் கும்பல்.
புதுவை பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் முதலாண்டு படிக்கும் ஏழை மாணவர் ராதா கிருஷ்ணன். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து உயர்கல்வி படிக்க வந்துள்ள அவர் தன் தாய் மற்றும் ஒரே தம்பியின் உதவியினாலேயே படித்து வருகிறார். கடந்த 06.04.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை சுமார் 11.20 மணியளவில் புதுவைப் பல்கலைக்கழக சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் விடுதியிலுள் தான் தங்கியிருக்கும் அறையில் இருந்துள்ளார். அப்போது பல்கலைக் கழகத்தில் விடுதியில் தங்கிப் படிக்கும் சில மாணவர்கள் காணாமல்போன தங்களுடைய பேண்ட்களைத் தேடிக் கொண்டு சந்தேகத்தின் பேரில் ராதா கிருஷ்ணனின் அறைக்கு வந்தனர். குழந்தைக்காலம் தொட்டே வறுமையில் வளர்ந்த அவர் மறைத்து வைத்திருந்த பிற மாணவர்களுடைய பேண்ட்கள் மற்றும் சட்டைகளை அவர்களிடத்து ஒப்படைத்திருக்கிறார். தவிர தன்னிடமிருந்த மற்ற துணிகளை உரிய விடுதி மாணவர்களிடம் அப்போதே ஒப்படைத்துவிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்நேரத்தில் அவ்விடத்திற்கு வந்த ஆண்கள் விடுதித் தலைமைப் பாதுகாப்பாளர் (Chief Warden for Men – Incharge) சுடலைமுத்து என்ற பேராசிரியர் நடந்த நிகழ்வுகளை முழுமையாக விசாரித்தார். மேலும் அங்கு வேறெதும் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொண்டார். ஆனால் அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக அவ்விடத்திற்கு வந்த பாதுகாப்பு அதிகாரி (Security Manager) சியாம், ராதா கிருஷ்ணனைப் பார்த்து ‘இதுமட்டும்தான் திருடினியா, இல்லை லேப்டாப், வாட்ச், சைக்கிள் போன்றவற்றையும் திருடினாயா?’ என்று கேட்டு கையில் வைத்திருந்த லத்திக்கழியால் ஐந்தாறு அடிகள் உடம்பில் சரமாரியாக அடித்துள்ளார். அதோடு மிக வேகத்துடன் தனது கார் டிரைவரை கூப்பிட்டு அவரைக் காரில் ஏற்றச் சொல்லியுள்ளார். அப்போது அவரைக் காரில் ஏற்றி செக்யூரிட்டி-க்கு கொண்டு சென்றனர். அங்கேயும் கையினாலும் லத்திக்கழியினாலும் பலமாக அடித்து மிருகத்தனமாக நடந்துகொண்டுள்ளது அந்த ஹரிஹரனின் அடிவருடிக் கூட்டம்.
அவ்விடத்தில் பூஷன் என்ற பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்கு தான்தான் அத்தாரிட்டி என்று அறிவித்துக் கொண்டுள்ள ஹரிஹரனின் விசுவாசி, அந்த மாணவரை லத்திக்கழியைக் கொண்டு பலமாகத் தாக்கியுள்ளார். பல்கலைக்கழகத்தில் இதற்கு முன்பு காணாமல்போன மாணவர்களின் பொருட்கள் திருடுப் போனதற்கும் ராதா கிருஷ்ணன்தான் காரணம் என்ற குற்றத்தையும் அவர்மீது போட்டுள்ளார். ‘நீ பேண்ட், சட்டையை மட்டும் திருடவில்லை. எத்தனையோ லேப்டாப், வாட்ச், ஹெட்செட், செல்போன், மிதிவண்டி திருடியதாக புகார் வந்திருக்கு. டேய்! உண்மையைச் சொல்லு இதற்கெல்லாம் நீதான் பொறுப்பு. சொல்லு, இந்தக் காரியங்களைச் செய்தது நீ ஒருத்தன்தானா? இல்லை ஒரு கேங்கே இருக்கா?’ என்று தொடர்ந்து அடித்துச் சித்திரவதை செய்து மிரட்டியுள்ளார்.
அந்நேரத்தில் அங்கு நுழைந்த ஹரிகரன், ராதா கிருஷ்ணனைப் பார்த்து ‘டேய்! அன்றைக்கு லேடீஸ் ஹாஸ்டலுக்குள் போனவன் நீதானடா?’ என்று சொல்லி மிரட்டியுள்ளார். அதற்கு அவர் , “ஐயா, நான் பேண்ட், சட்டையை எடுத்தது உண்மைதான். அவற்றை நான் விற்கவோ அல்லது வேறெந்த மோசமான நோக்கத்துடனோ எடுக்கவில்லை. மேலும் அவற்றை உடனடியாக உரிய மாணவர்களிடம் ஒப்படைத்துவிட்டேன். வேறெந்த குற்றமும் நான் செய்யவில்லை, பெண்கள் விடுதிக்குள் நான் நுழையவில்லை’ என்று கெஞ்சி மன்றாடியுள்ளார்.
இந்த அப்பாவி ஏழை மாணவனை வைத்தே பெண்கள் விடுதிப் பிரச்னையை ஊத்தி மூடிவிடுவது என்று முடிவு செய்துகொண்ட ஹரிஹரன், ‘ஒத்துக்கடா, ஒத்துக்கடா’ என்று சொல்லி அவரைக் கடுமையாக ஓங்கி ஓங்கி அடித்துள்ளார். அப்போது அவரின் அழைப்பின் பேரில் அவ்விடத்திற்கு வந்த ஒரு பெண் காவலர் (Security) ‘03.04.2014 அன்றைக்கு என் மேல் மிளகாய்ப் பொடியைத் தூவி தப்பி ஓடிய பையன் இவன்தான்’ என்று அபாண்டமாக அவர்மேல் சாட்டப்பட்டிருந்த குற்றத்தை உறுதி செய்துள்ளார். அப்போது ‘டேய் பொம்பள பொறுக்கி மாட்டுனியா’என்று திட்டிக் கொண்டே மேற்சொன்ன பூஷன் அவரை அடித்துள்ளார்.
மேலும் ஹரிகரன், “டேய்! கிரிமினல்! கிரிமினல்! ஒத்துக்கோடா அந்த பொம்பளையே நீதான்னு சொல்லிட்டாடா, மேலும் இது இல்லாமல் கம்பளைண்ட் கொடுத்த இரண்டு பெண் பிள்ளைகளோட அப்பா எல்லாம் போலீஸ் அதிகாரிங்க, நீ ஹாஸ்டலுக்குள் வந்ததை இவங்க பாத்தாங்களாம். போலீஸ் நிலையத்தில் கம்ப்ளைண்ட் கொடுக்கப் போறாங்களாம். உன் வாழ்க்கையே தொலைஞ்சுதுடா, எஃப்.ஐ.ஆர் போட்டு உள்ளே தள்ளிடுவாங்க ஒழுங்கா குற்றத்த ஏத்துக்கோடா” என்று கடுமையாக மிரட்டிக் கொண்டிருந்த வேளையில் செக்யூரிட்டி அதிகாரிகளான பூஷன் குணசேகரன் உள்ளிட்டோர் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
ஹரிகரன், ‘நீ ஒத்துக்கோடா உனக்கு யூனிவர்சிட்டில படிக்கிறதுக்கு எந்தப் பிரச்சனையும் வராம பார்த்துக்கறேன். நீ என் பிள்ளை மாதிரி இருக்குற. உன் காலில் வேணும்னாலும் விழுறேன்டா!’ என்று நைச்சியமாகப் பேசி அந்த ஏழை மாணவனைத் தனது பார்ப்பனச் சதிக்குள் சிக்கவைக்கப் பார்த்துள்ளார்.
கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான ராதா கிருஷ்ணன், செய்வதறியாமல் திகைத்துள்ளார். தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்களின் அதிர்ச்சியிலிருந்து இன்னுமும் கூட தன்னால் மீள முடியவில்லை என்று வேதனையுடன் கூறுகிறார் அவர். தன் மேல் முதல் தகவல் அறிக்கை போட்டுவிட்டால் என்னாகும் என்று அஞ்சியும், கல்வி கற்பதற்கு 40,000 ரூபாய் வட்டிக்குக் கடன்வாங்கி படிக்கவைக்கும் தன் அம்மா மற்றும் தம்பி ஆகியோரின் உழைப்பு வீண் போகக்கூடாது என்ற கவலையினாலும் உடைந்துபோன அவரை உடம்பில் விழுந்த அடிகளும் சேர்ந்துகொண்டு வருத்தியுள்ளன.
அதற்கடுத்ததாக, சிறிது நாட்களுக்கு முன்பு மகளிர் விடுதிக்குள் எவர் எவரோ சென்று பெண்களைப் பயமுறுத்திய குற்றத்தையெல்லாம் ராதா கிருஷ்ணன் பெயரில் சுமத்திக் கொண்டிருந்தனர்.
“இரவு எத்தனை மணிக்கு Girls Hostel-க்கு போவ, என்னென்னவெல்லாம் பண்ணுவ?” என்று அடித்துக்கொண்டே கேட்டுள்ளார் பூசன். பிறகு மேல்சட்டை அணியாத நிலையில் இருந்த அவரை மகளிர் விடுதி நோக்கி ஜீப்பில் அழைத்துச் சென்றனர். இடையிடையில் ஓரிருமுறை அவரை அடித்த ஹரிகரன், சரஸ்வதி பெண்கள் விடுதிக்கு முன்பு ராதா கிருஷ்ணனை நிற்கவைத்து, அங்குள்ள அனைத்து மாணவிகளையும் அழைத்து, “இதோ இவன்தான் இத்தனைநாள் அட்டூழியம் செய்த மகாபாவி’ என்று அவர் அணிந்திருந்த டீ சர்ட்டை கழுத்தோடு இறுக்கிப் பிடித்துப் பிடரியில் ஓங்கி அடித்துள்ளார்.
பிறகு பெண் பாதுகாவலரின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவிய இடம் இதுதானென ஓரிடத்தைக் காட்டி அவர்கள் அங்கேயே ராதா கிருஷ்ணனை குத்த வைத்து உட்காரச் செய்து ஒரு யூகத்தினடிப்படையில் அங்குமிங்கும் விடுதிகளின் மேல் ஏறிக்காட்டுமாறு வற்புறுத்தியுள்ளனர். வேறுவழியின்றி பெண்கள் விடுதியில் அவர்கள் கூறியவாறு அவர் ஏறிக்காண்பிக்கும் செயலைச் செய்ய, அதனை முழுவதுமாக பூசன் கேமிராவில் படம் பிடித்துக் கொண்டுள்ளார். உடல் வலியால் ஏற முடியவில்லை என்று மறுத்தபோதும் கூட அவரை விடவில்லை அந்தக் கும்பல். பிறகு அங்குள்ள கங்கா பெண்கள் விடுதிக்கும் அழைத்துச்சென்று அங்கேயும் அனைத்து மாணவிகளையும் அழைத்து, ‘இவன் ஒரு சைக்கோ, இவன்தான் இத்தனைநாள் இங்கே நிர்வாணமாக வந்தவன்’ என்று நாகூசாமல் ஹரிகரன் மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார். ‘இவன் யாரு தெரியுமா? நம்ம யுனிவர்சிட்டியில் எம்.ஏ. தமிழ் படிக்கிறவன், தமிழ் படிக்கிற கம்மனாட்டி என்று துறையை இதில் சம்மந்தப்படுத்தி ‘தமிழ் ஒரு நீச பாஷை’ தமிழர்கள் நீசர்கள் என்ற பார்ப்பனியக் கண்டுபிடிப்பையும் எல்லா மாநில மாணவிகளிடமும் பரப்பியிருக்கிறார் ஹரிஹரன்.
பின்னர் “பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறமுள்ள ஏதோ ஒரு பள்ளத்தையும் கடந்துதான் அன்றைக்கு நீ ஓடினியாமே” என்று எவரோ, என்றைக்கோ ஓடிய இடத்திற்கும் ராதா கிருஷ்ணனை அழைத்துச் சென்றார்கள். அவரைத் தாறுமாறாகத் திட்டிக்கொண்டும், கேமிராவில் படம் எடுத்துக்கொண்டும் இருந்தனர். ஓர் இடத்தைக் காட்டி அங்கிருந்துதான் அவர் ஓடியிருக்க வேண்டுமென்று சொல்லி அவரை நடக்கவைத்துப் படமெடுத்துள்ளனர். அப்போது மாலை நேரமாகிவிட்டதால் ராதா கிருஷ்ணனை செக்யூரிட்டி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மகளிர் விடுதிக்குள் நுழைந்தது அவர்தான் என்றும், மேலும் பல குற்றங்களை அவர்தான் செய்தார் என்றும் கட்டாயப்படுத்தி வெள்ளைத்தாளில் எழுதி வாங்கி கொண்டனர். அங்கு பசியால் தள்ளாடிய நிலையில் இருந்த அவரைக் கொலைக் குற்றம் செய்த சிறைக் கைதியைவிடவும் மோசமாக நடத்தினர். அவரிடம் எந்த நபரையும் பேசக்கூட அனுமதிக்கவில்லை. காலை முதல் மாலைவரை உணவு உண்ணாததாலும் மாறிமாறி பலரது கைகளாலும் லத்திகளாலும் அவரவர் ஆசைதீர அடித்ததால் அவரது உடம்பு மேலும் ரணமானது. சுமார் ஒன்றரை நாட்கள் அவரை அடைத்து வைத்திருந்ததில் மொத்தம் மூன்றே மூன்று இட்லிகள்தான் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
மறுநாள் 07.04.2014 அன்று திங்கட்கிழமை காலையில் கழிவறைக்குச்செல்லவும்கூட உடலில் திராணி இல்லாமல் போய் குற்றுயிராகக் கிடந்தார் அந்த மாணவர். இது “வி.சி மேடம் போட்ட கட்டளையென்றார்” பூசன். இப்படியே பொழுது கழிய மதியம் 3.30 மணியளவில் இதுபற்றிய ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டம் தொடங்கலானது. இதற்கு சற்று முன்னர்தான் தமிழியற்புல முதல்வருக்கு இது பற்றி தகவல் கொடுக்கப்பட்டது. தான் ஹரிஹரன் கும்பலின் வலுக்கட்டாயத்தினால் மகளிர் விடுதிக்குள் சென்றேன் என்ற பொய்யை எழுதிக் கையெழுத்துப் பெற்றுக்கொண்டனர் என்றும், தன்னை மிருகத்தனமாக அடித்தும் மிரட்டியும் பெண்கள் விடுதிக்குள் நுழைந்தது தான்தான் என்பதுபோல நடிக்கவைத்து படம்பிடித்துக் கொண்டனறேன்றும் ராதா கிருஷ்ணன் தன் நிலையை எடுத்துரைத்தார்.
இவர்கள் மிக அழகாக ஜோடித்த எல்லா கட்டுக்கதைகளையும் உடைத்தெறிய ஆதாரமாக தான் பெண்கள் விடுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் நாள் மற்றும் நேரத்தில் (03/04/2014: 2.45 PM) தான் நூலகத்தில் இருந்ததைக் கூறினார், ராதா கிருஷ்ணன். அவரது கூற்று உண்மையெனில், நூலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களில் அவர் நுழைந்ததும் வெளியேறியதும் பதிவாகி இருக்கவேண்டும்; எனவே நூலகத்தின் காமிராப் பதிவுகளை ஆய்வு செய்வது என்று குழு முடிவுசெய்தது. அவ்வாறு சோதித்துப் பார்த்ததில் ராதா கிருஷ்ணன் ஏப்ரல் மூன்றாம் தேதி 1.40 PM மணிக்கு நூலகத்தினுள் நுழைந்ததும், அவர் அங்கேயே இருந்ததும், பின்னர் 5.10 PM மணிக்கு நூலகத்திலிருந்து வெளியேறியதும் மூன்று காமிராக்களில் தெளிவாகப் பதிவாகியிருந்தது. மேலும் அவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததர்க்கான அடையாளங்கள் அவரது உடலில் காணப்பட்டன.
ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் இருந்த பேராசிரியர்கள் சிலர் நடுநிலையானவர்கள் என்பதால் நிர்வாகத்தின் மீதுதான் தவறு என்றும் அந்த மாணவர் பிற மாணவர்களின் சட்டையை எடுத்ததைத் தவிர வேறெந்தத் தவறும் செய்திருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அறிக்கை சமர்ப்பித்தது. இந்நிலையில் தொடர் சித்திரவதைக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளான ராதா கிருஷ்ணன் அடுத்தநாள் வகுப்பில் மயக்கமடைந்து விழுந்துவிடவே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னரே சுயநினைவுக்கு வந்தார். அவருக்கு நடந்த அநீதி மாணவர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக மாணவிகள் பலர் முன்னின்று போராடி ஹரிஹரன் கும்பலுக்குத் தண்டனை பெற்றுத்தர தயாராக இருந்தனர்.
நிர்வாக வளாகத்தினுள் முற்றுகையில் ஈடுபட்ட மாணவர்களில் ஒரு பகுதி.
கடந்த புதன் (ஏப்ரல் ஒன்பதாம் தேதி) அன்று மாணவர்கள் சுமார் முன்னூறு பேர் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டுப் ஹரிஹரன் நேரில் வந்து மன்னிப்புக் கேட்கவேண்டுமென்று வலியுறுத்திப் போராடத் தொடங்கினர். பார்ப்பனக் கூட்டாளி என்பதற்காகவே பதிவாளராக தற்காலிகப் பொறுப்பு வகித்துவரும் பேராசிரியர் இந்துமதி வந்து மாணவர்களைச் சமாதானப் படுத்த முயன்றார். மாணவர்கள் அவருடன் பேசத் தயாரில்லை என்று கூறித் துரத்திவிடவே நிர்வாகம் மாலை வரை மாணவர்களின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுக் கலைந்துபோக வைக்கலாம் என்று கணக்குப் போட்டது.
ஆனால் மாலையில் இன்னும் வீரியமடைந்த மாணவர்கள் நிர்வாகக் கூட்டங்கள் நடைபெறும் அரங்கினுள் நுழைந்து அங்கு நடைபெற இருந்த ஓர் ஏலத்தைத் தடுத்து ஏலப் பெட்டியைக் கைப்பற்றிக் கொண்டனர். வேறுவழியின்றி ஒழுங்கு நடவடிக்கைக் குழு மற்றும் துணைவேந்தர் நீங்கலாக பதிவாளர் இயக்குனர் என அனைவரும் வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
போராட்டத்தில் தீவிரமாக களமிறங்கிய மாணவிகள்
இது கண்துடைப்பு வேலை என்பதை உணர்ந்த மாணவர்கள், “என்ன நடவடிக்கை எடுக்கப்படும், எவ்வளவு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும், யார் யார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதைத் தெளிவாக எழுத்தில் வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். இதற்கிடையில் நிர்வாகம் காவல்த்துறையை உள்ளே அழைத்தது. காவல்துறை ஆய்வாளரை சூழ்ந்துகொண்ட மாணவர்கள் தமது நியாயங்களை எடுத்துக் கூறி, “இதில் நிர்வாகத்திற்கு அடியாள் வேலை பார்க்க வேண்டாம்” என்று விளக்கினர். ஆய்வாளரும் இது சட்டம் ஒழுங்குப் பிரச்சனை அல்ல என்றும் நிர்வாகமே பேசித் தீர்க்குமாறும் கூறிவிட்டு தேர்தல் வேலையைப் பார்க்கக் கிளம்பிவிட்டார். மாணவிகள் பதிவாளரைச் சூழ்ந்துகொண்டு வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தி விடவே அடுத்தநாள் பதினோரு மணிக்கு என்ன நடவடிக்கை என்பது பற்றியும் அதன் விபரங்களையும் தெரிவிப்பதாக எழுதிக் கொடுத்தார்.
நிர்வாகம் ஏதேனும் தீர்வு வழங்கி ஹரிஹரன் கும்பல் மீது பெயரளவுக்காவது ஏதாவது நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையோடு மாணவர்கள் அடுத்தநாள் கூடினர். ஆனால் நிர்வாகமோ ஒழுங்கு நடவடிக்கைக் குழுசமர்ப்பித்திருந்த அறிக்கையை மட்டும் படித்துவிட்டு ‘நீங்கள் கேட்டதற்கு இதுதான் பதில்’ என்று கூறி மோசடி செய்தது. சட்ட விரோதமாக ஒருவரை அடைத்து வைத்திருந்தது, அடித்துத் துன்புறுத்திச் சித்திரவதை செய்தது, ஒவ்வொரு பெண்கள் விடுதியாகக் கூட்டிச் சென்று அவமானப் படுத்தியது, அவரது அனுமதி இல்லாமல் அவரைப் படம் பிடித்தது, மிரட்டி தாங்கள் விரும்பியவற்றை எழுதிக் கையெழுத்துப் பெற்றது என்று அடுக்கடுக்கான குற்றங்களைச் செய்த ஹரிஹரன் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நிர்வாகம் முன்வராது என்பதை உணர்ந்த மாணவர்கள் தாமாகவே புறப்பட்டு பூஷன் அறையை உடைத்து உள்ளிருந்த பொருட்களைக் கலைத்துப்போட்டனர்.
மாணவிகளே இதனை முன்னின்று செய்து பெண்களின் போராட்ட உறுதியைப் பறைசாற்றினர். தங்களுக்கு கிடைக்கவேண்டிய சரியான தீர்வை வேண்டுமென்றே நிர்வாகம் ஒருசார்புத்தன்மையோடு மறுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாத மாணவர்கள் கோபமுற்று பின்னர் ஹரிஹரனின் வீடு மற்றும் கார் ஆகியவற்றை சேதப்படுத்திய நிகழ்வு, ஆளும் வர்க்கம் நீதியை நிலைநாட்டத் தவறி, மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும்போது மக்கள் நீதியை நிலைநாட்டுவார்கள் என்பதை உணர்த்துகிறது. நிர்வாகம் 15 ஏப்ரல் செவ்வாய் அன்று ஹரிஹரன் கும்பலுக்கு எதிராக உருப்படியான நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் இன்னும் தீவிரமடையும் என்ற எச்சரிக்கைக் கடிதம் துணைவேந்தரிடம் அளிக்கப்பட்டுள்ளது. பூஷன், ஹரிஹரன் இருவரும் மாணவர்கள் தமது சொத்துக்களைச் சேதப்படுத்திவிட்டதாகக் கூறி காவல்த்துறையில் புகார் அளித்துள்ளனர்.
நீதி வேண்டி Director of Studies அலுவலகத்தை முற்றுகையிட்டபோது எடுத்த படம். நன்றி: தி ஹிந்து
மாணவர்கள் தன்னெழுச்சியாகவே நடத்திய இந்தப் போராட்டத்தில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தொடக்கம் முதல் உடனிருந்து ஆலோசனைகள் வழங்கியும் பங்கேற்றும் வருகிறது. குறிப்பாக, குறிப்பிட்ட மாணவர் அந்தக் குற்றங்களைச் செய்தாரா இல்லையா என்பதைவிட முக்கியமான பிரச்சனை ஹரிஹரனுக்கோ பாதுகாப்பு ஒப்பந்ததாரருக்கோ அதனை விசாரிக்கும் அதிகாரம் கிடையாது என்பதும், விசாரணை நடத்தப்பட்ட முறை முற்றிலும் கிரிமினல் தனமானது என்பதும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இந்த பல்கலைகழக நிர்வாக சீர்கேட்டிற்கு பளிச்செனத் தெரியும் ஒரு உதாரணம் ராதா கிருஷ்ணணனை அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து பொய் வாக்குமூலம் வாங்கிய பூசன் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் ஒரு உறுப்பினர். இதையும் அம்பலப்படுத்தி மாணவர் மத்தியில் பேசப்பட்டது. மேலும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் ஹரிஹரன் கும்பலைத் தண்டிக்கக் கோரியும் பல்கலைக்கழகம் பார்ப்பனமயமாகிவிட்டதைக் கண்டித்தும் பல்கலைகழக வளாகம் மற்றும் புதுவை நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
ஹரிஹரன் மற்றும் கூட்டாளிகளை அம்பலப்படுத்தி புதுவை நகரில் ஒட்டப்பட்ட சுவரொட்டி.போராட்டத்தை ஒட்டி பல்கலைகழக வளாகத்தினுள் ஒட்டப்பட்ட A3 அளவு சுவரொட்டி.
அதுமட்டுமன்றி ஹைதராபாத் உள்ளிட்ட பிற மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் அந்தந்த வளாகங்களில் புதுவைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அராஜகப் போக்கைக் கண்டித்துச் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளதோடு அந்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கையெழுத்தியக்கமும் தொடங்கியுள்ளனர். போராட்டம் ஒன்றுதான் தம் விடுதலையையும் உரிமைகளையும் பெற ஒரே வழி என்பதைப் புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் ராதா கிருஷ்ணனுக்கு நடந்த அநீதிக்கு எதிரான போராட்டத்தின் மூலம் தாமாகவே தம் சொந்த அனுபவத்தில் உணரத் தலைப்பட்டுள்ளனர்.
இவண்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (பு.மா.இ.மு.)
தமிழ்நாடு & புதுச்சேரி
“விதைகளோடு தர்ப்பூசணியை சுவைப்பது தொந்தரவாக இருக்கிறதே, ஏதும் தொழில் நுட்ப தீர்வு கிடையாதா” என்று கேட்ட போது ஒரு தோழர் ஆண்டிகளது கதை ஒன்றைச் சொன்னார்.
நாலு வோட்டு பெறுவதற்காக நாய் மாதிரி நாக்கை தொங்க விட்டு அலைவதற்கும் நரேந்திர மோடி தயாராகி விட்டார்.
சோம்பேறிகள் மடத்தில் வாசம் செய்யும் இரண்டு ஆண்டிகள் பேசிக் கொள்கிறார்கள்.
முதல் ஆண்டி : “பக்கத்து தெருவில் கோயில்ல வாழைப்பழம் கொடுக்கிறாங்களாம், போய் வாங்கிக்கலாமா”.
இரண்டாவது ஆண்டி : “உரிச்சி கொடுக்கறாங்களா, உரிக்காம கொடுக்கறாங்களா”.
எடுப்பது பிச்சை என்றாலும் தோல் உரிக்கப்பட்ட வாழைப்பழத்தை தின்றால் வேலை மிச்சம் என்று சோம்பேறித்தனத்தை நியாயப்படுத்தும் சுதந்திரம் ஆண்டிகளுக்கு உண்டுதான். ஆனால் இன்னும் பழுக்காத பச்சை வாழைக்காயை பிரசாதமாக கொடுக்கிறார்கள்; அதுவம் காலியாகி, பழமென்று நம்பி நாய் கடித்து போட்டுவிட்ட பாதிதான் கீழே கிடக்கிறது; அது தெரிந்தும் விடாமல் சாப்பிட்டு பெருமாள் கோவில் படிக்கட்டு பிச்சைக்காரர்கள் மத்தியில் அங்கீகாரம் கிடைக்காதா என்று அலையும் அற்பத்தனமான ஆண்டிகளை என்ன சொல்வது?
கதையை விஞ்சும் நிஜம். ஆம். நாலு வோட்டு பெறுவதற்காக நாய் மாதிரி நாக்கை தொங்க விட்டு அலைவதற்கும் நரேந்திர மோடி தயாராகி விட்டார். ரஜினியை வீடு தேடி மோடி சந்தித்தது குறித்த பத்திரிகை செய்திகளை சலித்து பார்த்தால் வாக்குக்காக அலையும் அந்த நாக்கின் யோக்கியதையை அறியலாம்.
நேற்று (13.04.2014) சென்னை பொதுக்கூட்டத்திற்காக வந்த மோடி, ரஜினி வீட்டிற்கு சென்று 45 நிமிடங்கள் இருந்திருக்கிறார். மோடி வீடு புகுந்ததும், கதவை சாத்திவிட்டு ஊடகவியலாளர்களை வீட்டுஅருகிலேயே அனுமதிக்கவில்லை. ‘வரலாற்று’ இகழ்மிக்க இந்த சந்திப்பு முடிந்ததும் மோடி வெளியே வந்து காரில் செல்ல ஆயத்தமானதும், ரஜினி அவரை திரும்ப அழைத்து பத்திரிகையாளர்களிடம் பேசுகிறார். ஏன்? ஒரு வேளை மோடி அப்படியே வெளியே போய் விட்டால் பாஜக முதலைகள் ஆளுக்கொரு கதை விட்டு, ‘ரஜினி தாமரைக்கு ஓட்டு போட மக்களுக்கு வேண்டுவதாக மோடியிடம் உறுதி கொடுத்தார்’ என்று வந்தால் முதலுக்கே மோசமாகிவிடும்.
காரில் ஏறிய மோடி உர்ரென்று இஞ்சி தின்ற கொரில்லா போல இருந்ததற்கும் காரணம் இருக்கிறது. சார்த்திய கதவுக்குள்ளே மோடி எதிர்பார்த்தது போல ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் மோடியின் காதுகளில் விழவில்லை. அதுதான் அந்த இஞ்சியின் கோரம்.
காரில் ஏறிய மோடி உர்ரென்று இஞ்சி தின்ற கொரில்லா போல இருந்ததற்கும் காரணம் இருக்கிறது
இதற்கு ஆதாரம் என்ன?. ஊடகங்களிடம் அவர் தெரிவித்த வார்த்தைகளை கவனமாக ஆய்வு செய்தால் யாரும் ரசிக்கலாம். மட்டுமல்ல இன்றைக்கு வந்த தினமலருக்கு போட்டியாக, வரும் நாட்களில் ரஜினியை அட்டைப்படமாக போட்டு வெளிவரப் போகும் விகடன், சோ வகையறாக்களிலும், பூட்டிய கதவுக்குள் மோடிக்கு ஆதரவு தெரிவித்த ரஜினி குறித்து விதவிதமான சேதிகள் கூச்ச நாச்சமில்லாமல் புனையப்படும். அதன் பொருட்டும் நாம் இதை கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.
கீழே ரஜினி பேசியதும், அடைப்புக்குறியில் நாங்கள் எழுதிய பொருள் விளக்கத்தையும் சேர்த்து போட்டிருக்கிறோம்.
“இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை. (முதல் வாக்கியமே மோடிக்கு வேட்டு வைக்கிறது. தேர்தலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார் ரஜினி)
மோடி எனது நல்ல நண்பர். (ரஜினி எனக்கும்தான் நணபர், நானும் அவர் வீடு சென்று பார்க்க முடியும், என்ற காங்கிரசு தலைவர் ஞானதேசிகன் கூறியதை பாருங்கள், ரஜினியை பார்க்க எந்த பிரபலங்கள் வந்தாலும் பார்க்கலாம், கூர்க்காவும் தடுக்க மாட்டார், சூப்பர்ஸ்டாரும் தயங்க மாட்டார்.)
எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார் மோடி.ஒவ்வொரு வாரமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். (இந்த நல விசாரிப்பை பல்வேறு அரசியல் தலைவர்களும் செய்திருப்பார்கள். அவர்களையெல்லாம் பட்டியல் போட்டால் இருமுடி பலசரக்கு சீட்டு போல மைல் கணக்கில் நீண்டு விடும். அடுத்து உடல் நலத்தை விசாரிப்பவர்களெல்லாம் ரஜினியோடு நெருக்கமான நண்பர்களாக இருக்க வேண்டுமென்றால், ரஜினியின் செல்பேசி முகவரி மெமரி கார்டு வெடித்து விடும்.)
இன்றைக்கு என் வீட்டுக்கு வந்து டீ சாப்பிட விரும்பினார். அதன்படி நானும் அவரை வரவழைத்து உபசரித்தேன். அவர் என்னோடு டீ சாப்பிட்டார். ( நன்றாக கவனியுங்கள், ரஜினி தானே வலிய போய் மோடியை அழைக்கவில்லை. மோடியே தொந்தரவு செய்து வந்ததால்தான் இது நடந்தது. அதுவும் ஐந்து ரூபாய் பெறாத டீ மட்டும்தான். நெருங்கிய நட்பில் இல்லை என்றால் வருபவர்களுக்கு டீயைத் தவிர வேறு இல்லை.)
மோடியின் வருகை எனக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது. (பிறகு வீட்டுக்கு டீ தானம் கேட்டு வந்தவர் வருகையால் துக்கம் வந்தது என்றா சொல்ல முடியும். ஒரு வேளை துக்கம் துண்டையை அடைத்தாலும் அதை துப்ப முடியாத படி மோடியின் என்கவுண்டர் போலீசு நினைவுக்கு வந்திருக்குமோ?)
அவர் இந்தியாவில் வலுவான தலைவர். திறமையான நிர்வாகி. அவருக்கு எனது வாழ்த்துக்கள். எல்லாம் நல்லபடி நடக்க வாழ்த்துகிறேன். அவரது எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன். அவர் நினைப்பது எல்லாம் நிறைவேற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். (இதெல்லாம் காலில் விழுபவர்களுக்கு பெருசுகள் சொல்லும் பொதுவான ஆசீர்வாதமன்றி வேறு எதுவுமல்ல. அதிலும் மோடி என்ன நினைக்கிறாரோ அது வெற்றி பெற வேண்டும் என்றுதான் ஆண்டவனிடம்தான் பிராத்திக்கிறார். மாறாக தமிழக மக்களிடம் கோரிக்கை வைக்க விரும்பவில்லை. கடவுள் இல்லை என்ற உண்மை ரஜினியை எப்படியெல்லாம் காப்பாற்றுகிறது பாருங்கள்.)”
பிறகு மோடி பேசிய போது, “தமிழ்நாட்டில் நாளை புத்தாண்டு. எனவே, எல்லோருக்கும் வாழ்த்துக்கள்” என்று மட்டும் தெரிவித்தார். உர்ரென்று இருப்பதோடு வார்த்தைகளும் ஓரிரண்டோடு பேசிவிட்டு பறந்து போன மாயம் என்ன? எல்லாம் எதிர்பார்த்து வந்தது கிடைக்கவில்லை என்று வெறுப்பைத் தவிர வேறு என்ன?
இருப்பினும் ஊடகங்கள் அனைத்தும் தமிழக தேர்தல் காலத்தில் மாபெரும் பரபரப்பு என இந்த சந்திப்பை ஊதிப் பெருக்குகின்றன. தினமலரோ ஒரு படி இல்லை, ஒரு ஒளியாண்டு தூரம் மேலே போய் செய்தியை பச்சையாக திரிக்கிறது. அதாவது மற்ற தினசரிகள் எல்லாமே மோடிதான் ரஜினி வீட்டிற்கு வந்து ஒரு டீ குடிக்க விரும்பியதாக ரஜினி தெரிவித்தாக கூறியிருந்தன. ஆனால் தினமலர் மட்டும் இதை அப்படியே திரித்து ரஜினிதான் டீ குடிக்க வருமாறு மோடியை அழைத்ததாக புளுகியிருக்கிறது. இந்த லட்சணத்தில் தமிழகத்தில் மோடி அலை வீசுவதாகவும் இந்த ரஜினி சந்திப்பு அதை சுனாமி போல மாற்றிவிட்டதாகவும் ஊளையிடுகிறது பார்ப்பன தினமலர். பிச்சை எடுக்க வந்தவனை, பிச்சை போடுபவன்தான் அழைத்தான் என்று கூசாமல் எழுதுவதற்கு இந்த உலகில் தினமலரால் மட்டுமே முடியும்.
தினமலரே பரவாயில்லை என்று ஜூனியர் விகடனில் திருமாவேலன் பிய்த்து உதறுவார், காத்திருப்போம் அந்த கருமம் வரும் வரை.
உண்மையில் இந்த சந்திப்பு இவ்வளவு கேவலமாக பாஜகவின் ஆசையில் மண் அள்ளிப் போடுமளவு நடந்தது ஏன்?
அதற்கு இந்த சந்திப்பின் கிளைமேக்ஸ் உணர்ச்சியை தடயமாக வைத்து இது எப்படி நடந்திருக்கும் என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
தேர்தல் அறிவிப்பு வந்த உடனேயே ஏதாவது கூட்டணி வைத்து காவிக் கொடியை ஒரு சாண் குச்சியிலாவது ஏற்ற வேண்டும் என்று பாஜக துடித்தது. அதற்காக விஜயகாந்த பின்னால் விரட்டியடிக்கப்பட்ட தெரு நாய் போல சளைக்காமல் சுற்றி வந்தது. இந்த கேவலம் முடிவுக்கு வந்த போதே ரஜினி ஏதாவது நமக்கு வாய்ஸ் கொடுத்தால் ஏதாவது ஐந்து பத்து – ஓட்டுதான – தேற்றலாமே என்று பாஜகவிற்கு எச்சில் வழிந்தது. அதைத்தான் பல்வேறு நிர்வாகிகள் விரைவில் ரஜினி ஆதரவு தெரிவிப்பார் என்று ஊடகங்களில் அன்றாடம் ஜபித்து வந்தார்கள்.
இருப்பினும் ரஜினி கண்டு கொள்ளவில்லை. அதனால்தான் பாஜக தலைவர்களே மானம் கெட்டு ரஜினியிடம் தொடர்பு கொண்டு கேட்டிருப்பார்கள். அதற்கு காரியவாத பெருச்சாளியான ரஜினி, “ஜி இப்போ அரசியெல்லாம் வேண்டாமே, ப்ளீஸ்” என்றிருப்பார். பிறகு பொன்னார் கொஞ்சம் வேறு விதமாக மிரட்டியிருப்பார். அதாவது “ரஜினி சார், மோடிஜியை பார்க்க நீங்க ஒத்துக்கிட்டதாக அவரிடம் தெரிவித்து விட்டோம், இப்போ வேணாம்னா சொன்னா நல்லா இருக்காது, ப்ளீஸ்” என்று கொஞ்சம் மிரட்டலோடு கெஞ்சியிருப்பார்கள்.
சரி, நாளைக்கே பிரதமர் ஆகிறவர், வேண்டாமென்று சொன்னாலும் பிரச்சினை, ஓகேன்னு சொன்னா அம்மா வைக்கப் போகிற ஆப்பு நினைவுக்கு வருகிறது. கூடவே கோச்சடையானுக்கும் சேர்த்து வைத்துவிட்டால் பிறகு வடிவேலு கதைதான். எனவேதான் மோடிஜி வரட்டும், ஆனா நோ அரசியல் ஒன்லி சாயா என்று ரஜினி ஒப்பந்தம் போட்டிருப்பார்.
இதுவரைக்கும் யார் வீட்டிற்கும் நாம் போகவில்லை. ரஜினி வீட்டிற்கு போனால் பிறகு மேக்னா நாயுடு வீட்டிற்கும் போக வேண்டி வருமோ என்றெல்லாம் மோடி கொஞ்சம் தயங்கியிருப்பார். மேலும் வல்லரசு இந்தியாவுக்கு தலைமை தாங்கப் போகிறவர் போயும் போயும் ஒரு கூத்தாடி வீட்டுக்கு சாயாவுக்காக போகணுமா என்று ஒரு ஈகோ இல்லாமல் இருக்காது. இருந்தாலும் பத்து இருபது ஓட்டு கிடைப்பதாக இருந்தால் வெட்கம் மானம் பார்க்க கூடாது என்று மோடியும் கடைசியில் ஒத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த சந்திப்பு முடிந்த பிறகு அதை வைத்து தாமரைக்கு ரஜினி ஆதரவு என்று போஸ்டர், மோடி ரஜினி படம் போட்டு அறுவடை செய்யலாம் என்று பொன்னார் அன்கோ அசால்ட்டாக நினைத்திருக்கிறது. மேலும் சாணக்கிய குரு சோவோடும் ரஜினி கலந்திருக்க வேண்டும். “மோடியை பாருங்க, ஆனா ஆதரவுன்னு வெளிப்படையா சொல்ல வேண்டாம், இங்கே அம்மாதான் ஜெயிக்க வேண்டும். பாஜக நிச்சயமாக வெற்றிபெரும் இடங்களில் மட்டும் தாமரைக்கு ஓட்டு போடலாம் என்று நானே சொல்லிவருகிறேன், எனவே உசராக இருங்கள்” என்று எச்சரித்திருப்பார்.
இப்படித்தான் ரஜினி மோடி சந்திப்பு மகா கேவலமாக மேலே விவரித்தபடி நடந்திருக்கிறது. மேலும் 90-களின் இறுதியில் ரஜினிக்கு பெரிய வாய்ஸ் இருப்பதாக ஊடகங்கள் கொடுத்த பில்டப்பை நம்பிய ரஜினி அப்போதும் அரசியலுக்கு வரும் தைரியத்தையும், உழைப்பையும் பெற்றிருக்கவில்லை. திரைப்படங்களில் சுறுசுறுப்பாக அதுவும் கிராபிக்ஸ் உதவியுடன் மின்னிய சூப்பர் ஸ்டார், நிஜத்தில் அச்சமும், அறியாமையும் கலந்த ஒரு சோம்பேறித்தனமான காரியவாதி மட்டுமே.
அவருக்கென்று தனியாக செல்வாக்கு ஏதுமில்லை என்பதாலேயே 2004 தேர்தலில் அவர் அதிமுக – பாஜகவிற்கு ஆதரவு கேட்டும் ஒரு சீட்டு கூட தமிழகத்தில் கிடைக்கவில்லை. அத்தோடு ரஜினிக்கு ப்யூஸ் போய்விட்டது. இருப்பினும் அவ்வப்போது ஊடகங்கள் மட்டும் அவருக்கு உயிர் கொடுத்து வந்தன.
ஆக இன்று ரஜினியிடமிருந்து ஒரு கட்சிக்கு வாக்கு கிடைக்க வேண்டுமென்றால் அது ரஜினி, லதா, ஐஸ்வர்யா, சவுந்தர்யா என்று நாலு ஓட்டு மட்டும்தான் கிடைக்கும். பிறகு ரஜினி வீட்டை பாதுகாக்கும் செக்யூரிட்டிகள் கூட அவரது வாய்சுக்காக ஓட்டும் போட மாட்டார்கள், சினிமாவுக்கு சீட்டும் எடுக்க மாட்டார்கள்.
ஆனாலும் சோ, விகடன், இந்து, குமுதம், தினமலர் முதலான பார்ப்பனிய ஊடகங்கள் சூப்பர் ஸ்டாருக்கு சோப்பு போடுவதோடு அவருக்கென்று செல்வாக்கு இருப்பதாக மாயையை உருவாக்க முயல்கின்றன. அதை பாஜகவிற்கு பயன்படுத்தவும் விரும்பின.அந்த அடிப்படையில்தான் இந்த எச்சக்கலை டீ சந்திப்பு நடந்திருக்கிறது. ஆனாலும் ரஜினி அதை மறக்க முடியாத எச்சக்கலையாக மாற்றி விட்டார். வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருந்தால் பலரும் எதிர்ப்பார்கள், குறிப்பாக இசுலாமியர்கள் எதிர்ப்பார்கள், ஆப்கானிலிருந்து அல்கைதா ஏதும் வந்து குண்டு வைத்து விட்டால் என்ன ஆகும் போன்ற பயமெல்லாம் ரஜினிக்கு இருக்காது என்பதல்ல.
ஆனால் அவர் இமயமலை போகிறார், பாபாவைப் பற்றி பேசுகிறார், ஆன்மீகம் படிக்கிறார், துக்ளக் கூட்டத்திற்கு தவறாமல் வருகிறார், இதற்கு முன் அத்வானியை ஆதரித்திருக்கிறார், அவர் இயல்பான இந்துத்துவ ஆதரவாளர் என்று பாஜக வானரங்கள் நம்புவதில் குறையில்லை. இருப்பினும் அம்மா விருப்பத்திற்கு மாறாக நடந்தால் பிழைக்க முடியாது என்ற பயமும் ரஜினிக்கு உண்டு. வடிவேலு போல இழப்புகளை தாங்கிக் கொள்ளும் உறுதி இவருக்கு கிடையாது.
ஆக இவை அனைத்தும் கூடித்தான் இந்த சந்திப்பை காமடியாக மாற்றியிருக்கிறது. ஆனாலும் பாஜகவும், மோடியும் தங்களது வெற்றிக்காக கேப்டன் பின்னாலும், சூப்பர்ஸ்டார் பின்னாடியும் ஓசிக்கறிக்கு அலையும் ஒரு சொறி நாயைப்ப போல அலைகிறார்கள் என்பது முக்கியம். இவர்தான் வருங்கால பிரதமர் என்று முன்னிறுத்தப்படுகிறார் என்றால் தில்லானா மோகனாம்பாள் வைத்திக்களே பிரதமராக வரலாமே?
எது எப்படியோ இந்த சந்திப்பின் மூலம் பாஜகவையும், மோடியையும் செருப்பால் அடித்த்து போல ஒரு எஃபெக்ட் கொடுத்ததற்கு ரஜினியை நாம் பாராட்டத்தான் வேண்டும். மற்ற மாநிலங்களில் விஐபிக்கள் மோடியை தேடி வந்து ஆதரிக்கிறார்கள். இங்கு மோடியே தேடி வந்து ஆதரவு பிச்சை கேட்டாலும் கிடைக்கவில்லை. இதுதாண்டா பெரியார் பிறந்த மண்!
இதற்கு மேல் ரஜினி வீட்டில் ராகுல் காந்தி வந்து பானி பூரி சாப்பிட விரும்பினாலும், மு.க.ஸ்டாலின் வந்து அவிச்ச வேர்க்கடலை சாப்பிட முனைந்தாலும், அவ்வளவு ஏன் நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக்கே மோர் அருந்த வந்தாலும் ரஜினி வரவேற்பார், மோடிக்கு சொன்னது போல அவர்கள் விரும்பியது நிறைவேற ஆண்டவனிடம் பிராத்திப்பதாகவும் சொல்வார்.
சரி எல்லாரது விருப்பங்களிலும் எது நிறைவேறும் என்று கேட்டால் “ அது அவன் கையில், என் கையிலில்லை” என்று மேலே பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வார்? இது எப்படி இருக்கு?
தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடகங்கள் என்றைக்குமே தங்களது முதலாளிகளின் விருப்பத்தின்பேரில்தான் செயல்படுகின்றன. அவை ஒரு நாளும் நடுநிலைமையோடு செயல்பட்டதில்லை. இதுநாள்வரை நாம் கூறியபோதெல்லாம் ஏற்காதவர்களுக்கு இந்த உண்மையை ஆம் ஆத்மி கட்சியினர் தமது பிரச்சாரத்தின் மூலம் விளக்கி வருகின்றனர்.
(கடிகாரச் சுற்றுப்படி) மோடிக்கு ஆதரவாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக தி இந்து நாளிதழிலிருந்து வெளியேற்றப்பட்ட சித்தார்த் வரதராஜன்; ஓபன் மேகசின் பத்திரிகையிலிருந்து நீக்கப்பட்ட அர்தோஷ் சிங் பால்; சன் டி.வி.யால் ஓரங்கட்டப்பட்டுள்ள வீரபாண்டியன்; சி.என்.என் ஐ.பி.என் நிர்வாகத்தால் கண்டிக்கப்பட்ட நிகில் வாக்லே.
சி.என்.என். – ஐ.பி.என். ஆங்கிலத் தொலைக்காட்சியில் எரிவாயு விலை உயர்வு தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில், கோதாவரி எண்ணெய் வயலில் இருந்து எடுக்கப்படும் எரிவாயுவின் விலையை அம்பானிக்கு உயர்த்திக் கொடுத்திருக்கும் காங்கிரசு அரசின் முடிவை நியாயப்படுத்திப் பேசினார் ஒரு வல்லுநர். அந்த விவாதத்தில் பங்கேற்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், மேற்படி வல்லுநருக்குப் படியளப்பவர் முகேஷ் அம்பானி என்ற உண்மையை அம்பலப்படுத்தி னார். “உங்கள் தொலைக்காட்சியே அம்பானிக்குச் சோந்தமானதுதானே, பிறகு உங்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்” என்று பிரசாந்த் பூஷண் கூற, அதுவரை நடுநிலையாகப் பேசுவது போல பாவ்லா காட்டி வந்த பிரபல ஊடகவியலாளர் கரண் தாப்பர், ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகளின் பாணியில் கூச்சல் போட்டு பிரசாந்த் பூஷணைப் பேசவிடாமல் தடுக்க வேண்டியதாயிற்று.
அதேபோல சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருக்கும் பத்திரிக்கையாளர் ஆசிஷ் கேத்தான், “எனக்கு பத்திரிகைத் துறையைப் பற்றித் தெரியாதா? உங்கள் தொலைக்காட்சி நடுநிலையாக நடந்து கொள்ளும் என்று என்று என்னை எப்படி நம்பச் சொல்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.
“தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்கள் தங்களை இருட்டடிப்பு செய்கின்றன, மோடியை பிரதமராக்கத் திட்டமிட்டு விளம்பரப்படுத்துகின்றன” என்று குற்றஞ் சாட்டித் தான் ஆம் ஆத்மி கட்சியினர் தற்போது ஊடகங்களைத் தோலுரித்து வருகின்றனர். தனியார்மயத்தின் ஆதரவாளரான கேஜ்ரிவால், தேர்தல் பிரச்சார உத்தியாகத்தான் இதனைச் செய்கிறார் என்ற போதிலும், ஆம் ஆத்மி கட்சியினர் முன்வைக்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஊடகங்களால் முடியவில்லை. “உங்களை இருட்டடிப்பு செய்வதாகக் கூறுகிறீர்களே, நாங்கள் உங்களைப் பிரபலப்படுத்தாவிட்டால், நீங்கள் இன்றைக்கு ஆளாகியிருக்க முடியுமா? உங்களைப் புகழ்ந்தால் இனிக்கிறது, விமர்சனம் செய்தால் வலிக்கிறதா” என்று எதிர்க்கேள்வி எழுப்புகின்றன ஊடகங்கள். ஊடகங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
அன்னா ஹசாரேயும், அர்விந்த் கேஜ்ரிவாலும் அவர்களது ஊழல் ஒழிப்பு இயக்கமும் கார்ப்பரேட் முதலாளிகளின் ஊடகங்களால்தான் திட்டமிட்டே ஊதிப் பெருக்கிக் காட்டப்பட்டன. வேறு செய்தியே கிடையாது என்பது போலவும், இதைத்தவிர நாட்டில் வேறு மக்கள் போராட்டங்களே நடக்கவில்லை என்பது போலவும் அன்று ஊடகங்களால் நடத்தப்பட்ட இந்த ஆபாசக் கூத்துதான் இன்று அரவிந்த் கேஜ்ரிவால் பிரபலமாவதற்குக் காரணமாக அமைந்தது என்பது மறுக்கவியலாத உண்மை.
அரவிந்த் கேஜ்ரிவாலையும் அன்னா ஹசாரேவையும் ஆளும் வர்க்க ஊடகங்கள் அன்று விளம்பரப்படுத்தியதற்கு ஒரு நோக்கம் இருந்தது.
அன்று மத்திய இந்தியா முழுவதும் ஒரு அறிவிக்கப்படாத போரை இந்திய அரசு நடத்தி வந்த காலகட்டமாகும். கார்ப்பரேட் முதலாளிகளின் கனிமவளக் கொள்ளைக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கத்தான் மாவோயிஸ்டுகள் மீதான தாக்குதலை அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது என்பது பரவலாக அம்பலமாகியிருந்தது.
அதேசமயம், காமன்வெல்த் ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் எனத் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக ஊழல்களும் அம்பலமானதுடன், இந்த ஊழல்களில் கார்ப்பரேட் முதலாளிகளின் பாத்திரத்தை நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் அம்பலமாக்கின.
இந்தச் சூழலில்தான் குறிப்பான எந்த ஊழலைப் பற்றியோ, அதில் சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் முதலாளிகள் பற்றியோ பேசாமல், தனியார்மயக் கொள்கைக்கும் ஊழலுக்கும் இடையிலான நேரடி உறவு பற்றியும் பேசாமல் பொதுவாக ஊழல் எதிர்ப்பு பேசிய அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு நாடகம், மிகப்பெரிய மக்கள் எழுச்சியாக கார்ப்பரேட் ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டது. அதிகார வர்க்க ஊழலால் அன்றாடம் பாதிக்கப்படும் ஆம் ஆத்மியையும் (எளிய மனிதனையும்) ஊழலின் ஊற்றுக்கண்ணான முதலாளி வர்க்கத்தையும் ஒரே தரப்பாக நிறுத்தி, இருவருமே ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்கி, ஊழலை வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட பிரச்சினையாக காட்டிய இந்தத் தந்திரம் கேஜ்ரிவாலின் சொந்த சரக்கு அல்ல; உலக வங்கி தந்த சரக்கு.
பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகளால் மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுவது, காடுகள், நிலங்கள் பறிக்கப்படுவது மற்றும் விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரச்சினைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரசியல்வாதிகளின் ஊழல் ஒழிக்கப்பட்டு விட்டால் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் மக்களுக்குச் சொர்க்கத்தைக் கொண்டு வந்துவிடும் என்ற பிரமையை சிவில் சொசைட்டி அமைப்புகள் என்றழைக்கப்படும் ஏகாதிபத்தியத் தொண்டு நிறுவனங்கள் மூலம் உலக வங்கி பரப்பி வந்தது. களத்தில் இறக்கப்பட்ட பல தன்னார்வக் குழுவினரில் அரவிந்த் கேஜ்ரிவாலும் ஒருவர். இதன் காரணமாகத்தான் அன்னாவின் ஊழல் ஒழிப்பு இயக்கத்துக்கு இந்திய கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் பேராதரவு வழங்கி, தனது ஊடகங்கள் மூலம் அதனை ஊதி ஊதிப் பெரிதாக்கி காட்டியது. அன்று கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் கேஜ்ரிவாலை விளம்பரப்படுத்தியதற்கான காரணம் இதுதான்.
வெறும் ஊழல் ஒழிப்பு முழக்கம் ஓட்டுக்களைப் பெற்றுத்தராது என்று புரிந்திருந்த கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கிய பின், மக்களின் ஆதரவைப் பெறும் பொருட்டு டெல்லியின் மின் கட்டண உயர்வையும், தண்ணீர் கட்டணத்தையும் எதிர்த்த நடவடிக்கைகளில் இறங்கினார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் போலீசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராகத் தெருவிலிறங்கினார். கேஜ்ரிவாலின் இந்த நடவடிக்கைகளின் நோக்கம் தேர்தல் அரசியலில் செல்வாக்கு பெறுவதுதான் என்ற போதிலும், இத்தகைய ‘வரம்பு மீறிய’ நடவடிக்கைகளைச் சகித்துக் கொள்ள ஆளும் வர்க்கங்கள் தயாராக இல்லை என்பதால் கேஜ்ரிவாலை அராஜகவாதி என்று சித்தரிக்கத் தொடங்கின ஊடகங்கள்.
ஊழல் ஒழிப்பு, சிறந்த அரசாளுமை என்பது உலக வங்கியின் முழக்கம்தான் என்ற போதிலும், ஊழல் ஒழிப்பு நாடகத்துக்கு கேஜ்ரிவாலைப் பயன்படுத்திக் கொண்ட ஆளும் வர்க்கங்கள், சிறந்த அரசாளுமைக்கு மோடியை ஒருமனதாகத் தெரிவு செய்து வைத்திருந்தன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க ஊடகங்கள் தங்களது முதலாளிகளின் விருப்பத்தை மென்மேலும் பிரதிபலிக்க ஆரம்பித்தன. மோடிக்கெதிரான செய்திகளை எழுதக் கூடாது என கிட்டத்தட்ட அனைத்து முன்னணி பத்திரிகைகளும் தங்களது செய்தியாளர்களுக்கு வாய்மொழி உத்தரவே போட்டன. இதனை மீறிய மூத்த பத்திரிக்கையாளர்கள் பலர், தயவு தாட்சண்யமின்றித் துரத்தியடிக்கப்பட்டனர்.
‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த சித்தார்த் வரதராஜன், அதிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஊர்ஊராகச் சென்று மோடி நடத்திரும் ‘ஆவி எழுப்புதல் கூட்டங்கள்’ குறித்த செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிட மறுத்தது, சுப்பிரமணிய சாமியின் அறிக்கைகளைப் பிரசுரிக்க மறுத்தது, முகேஷ் அம்பானி குறித்த ஒரு அம்பலப்படுத்தலை வெளியிடத் திட்டமிட்டிருந்தது என்பன போன்ற காரணங்களுக்காக அவர் பதவி பறிக்கப்பட்டது. அதேபோல மோடியை அம்பலப்படுத்திச் செய்திகளை வெளியிட்ட’ ஓபன் மேகசின்’ பத்திரிகையின் அரசியல் பிரிவு ஆசிரியரான அர்தோஷ் சிங் பால், பத்திரிகையின் உரிமையாளர்களான கோயங்கா குழுமத்தினரால் நீக்கப்பட்டிருக்கிறார்.
மோடியை அம்பலப்படுத்திப் பேசுவதைக் கைவிடவேண்டும் என சி.என்.என். – ஐ.பி.என். தொலைக்காட்சியின் துணை ஆசிரியர் சகாரிகா கோஷுக்கும், அதே நிறுவனத்தின் மராத்திய சேனலின் ஆசிரியரான நிகில் வாக்லேவுக்கும் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். அவ்வளவு தூரம் போவானேன், மோடியை எதிர்மறையாக சித்தரித்த காரணத்துக்காக, வீரபாண்டியன் நடத்திவந்த “நேருக்கு நேர்” நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டது சன் தொலைகாட்சி.
மோடியை பிரதமராக்க வேண்டும் என்பது தற்போது இந்திய ஆளும் வர்க்கம் கொண்டிருக்கும் கருத்து. பொதுச்சொத்துகளையும் இயற்கை வளங்களையும் சூறையாடும் தங்களது வெறிக்கும் தாராளமயக் கொள்கைகளைத் திணிக்கும் அவசரத்துக்கும் பொருத்தமான ஒரு பாசிஸ்ட் என்ற முறையில் அவர்கள் மோடியை முன்தள்ளுகிறார்கள். ‘திறமைசாலி’ என்று சொல்லி பத்தாண்டுகளுக்கு முன்னர் மன்மோகன் சிங்கை மார்க்கெட்டிங் செய்த அதே உத்திதான்.
கார்ப்பரேட்டும் பாசிஸ்ட்டும் இணைந்த இந்தக் கூட்டணி நடுநிலை முகச்சாயங்களைக் களைந்து விட்டு, தங்கள் நோக்கத்துக்கு ஒத்து வராத பத்திரிகையாளரை உடனே வெளியேற்றி விடுகிறது. இந்திய ஊடகத்துறையைப் பொருத்தவரை, அதனைக் கட்டுப்படுத்தும் தரகு முதலாளிகளில் முக்கியமானவர் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் 30-க்கும் அதிகமான தொலைக்காட்சி அலைவரிசைகளைக் கட்டுப்படுத்துகிறது. இதில் சி.என்.என். – ஐ.பி.என்., சி.என்.பி.சி., டிவி18 மற்றும் ஐ.பி.என். 7 உள்ளிட்ட மிகப் பிரபலமான 17 செய்தி ஊடகங்களும் அடக்கம்.
2008-ம் ஆண்டில் ஒ.எஸ். ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்தபோது தெலுங்கு தேச கட்சியின் தீவிர ஆதரவாளரான ராமோஜி ராவுக்குச் சொந்தமான ஈநாடு(ஈ.டி.வி.) தொலைக்காட்சியில் சுமார் 2600 கோடி ரூபாயை முகேஷ் அம்பானி முதலீடு செய்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநில மொழிகளில் ஒளிபரப்பாகும் 12 ஈ.டிவி அலைவரிசைகளை ரிலையன்ஸ் இந்தியா நிறுவனம் மறைமுகமாகக் கட்டுப்படுத்தத் துவங்கியது.
பின்னர் 2012-ம் ஆண்டில் ராகவ் பாலின் நெட்வொர்க் 18 நிறுவனத்தில் 4000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ததன் மூலம் இரண்டு டஜன் முன்னணி ஆங்கில, இந்தித் தொலைக்காட்சி நிலையங்களை, அம்பானி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு முகேஷ் அம்பானி உதவுவதாக வாக்களித்திருந்த விசயம் நீரா ராடியாவின் தொலைபேசிப் பதிவுகளின் மூலம் அம்பலமானது.
நிதி நிறுவன வலைப்பின்னல்கள் மூலம் அடையாளம் தெரியாத முறையில் முதலீடு செய்வது சட்டபூர்வமாக்கப்பட்டிருப்பதால், அம்பானி போன்ற தரகு முதலாளிகளோ, பன்னாட்டு நிறுவனங்களோ எந்தெந்த ஊடகங்களில் எத்தனை பங்குகளை வைத்திருக்கிறார்கள் என்ற உண்மை யாருக்கும் தெரிவதில்லை. எடுத்துக்காட்டாக, தெகல்கா வார இதழின் முதலீட்டாளர்களில் இரண்டு நிறுவனங்களைத் தவிர, மீதமுள்ள 4 முதலீட்டாளர்கள் யார் என்றே தெரியவில்லை. 10 ரூபாய் முகமதிப்புள்ள பங்குகளை 13,189 ரூபாய் கொடுத்து அவர்கள் வாங்கியிருக்கின்றனர். முன்னர் குஜராத் இனப்படுகொலை குறித்த புலனாய்வுக் கட்டுரைகள் பலவற்றை வெளியிட்ட தெகல்காவிடம், ஒரு பெண்ணை உளவு பார்ப்பதற்கு மோடி தனது உளவுத்துறை அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்தியது குறித்த தொலைபேசிப் பதிவுகள் தரப்பட்ட பின்னரும், அது அவற்றை வெளியிடவில்லை. பின்னர் கோப்ரா போஸ்ட் என்ற இணையப் பத்திரிகை மூலம்தான் மோடியின் அந்த முறைகேடு அம்பலமானது.
மோடி எதிர்ப்பாளராக அறியப்பட்ட ஒரு பத்திரிகையிலேயே இத்தகைய திரைமறைவு வேலைகள் நடக்குமென்றால், மற்ற பத்திரிகைகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. மோடியின் உளவுத்துறை பெண்ணைத் துரத்திய இந்த விவகாரம் குறித்தோ, குஜராத் வளர்ச்சி என்ற பித்தலாட்டம் குறித்தோ, மோடியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களுக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்பது குறித்தோ, ஊடகங்கள் எதுவும் ஒரு வார்த்தை பேசாமல் மவுனம் சாதிப்பதன் மூலம் மோடி அலையை திட்டமிட்டே உருவாக்குகின்றனர்.
சுரங்கம், மின் நிலையங்கள், ஐ.டி. துறை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த முதலாளிகள், பல்வேறு ஊடகங்களிலும் பங்குகளை வாங்கிப் போட்டு வைத்துக் கொள்வதன் மூலம், தங்கள் முறைகேடுகள் – கொள்ளைகள் குறித்த செய்திகளே வெளிவராமல் தடுத்து விடுகின்றனர். கெயில் குழாய் எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு தொடங்கி தனியார் கல்விக் கொள்ளைக்கெதிரான போராட்டங்கள் வரையிலானவை இப்படித்தான் இருட்டடிப்பு செயப்படுகின்றன.
இது மட்டுமின்றி, கனிமவளக் கொள்ளை உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்கள், பல்வேறு ஊடகங்களுக்கும் தங்கள் நிறுவனத்தின் பங்குகளை வழங்கி ‘பிரைவேட் டிரீட்டி’ என்றழைக்கப்படும் தனிப்பட்ட ஒப்பந்தங்களைப் போட்டுக் கொள்கின்றனர். தங்களுக்கு எதிரான செய்திகள் வெளிவராமல் தடுப்பது மட்டுமின்றி, இந்த ஊடகப் பங்குதாரர்கள் மூலம் பொய் – புனைசுருட்டுகளைப் பரப்பி, பங்குச்சந்தையில் தமது பங்குகளின் மதிப்பை இவர்கள் உயர்த்திக் கொள்கின்றனர் என்பது செபி அமைப்பாலேயே நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டு.
வேட்பாளர்கள் பத்திரிகைகளில் வெளியிடும் விளம்பரங்களுக்கு மக்களிடம் மதிப்பிருக்காது என்பதால், ஊடகங்களுக்குப் பணத்தைக் கொடுத்து, வெளியிட வேண்டிய செய்தியையும் எழுதிக் கொடுத்து, அவற்றை செய்தி போல வெளியிட வைக்கும் ‘பெய்டு நியூஸ்’ என்ற மோசடியினை 2009-ல் சாநாத் அம்பலமாக்கினார். அதன் பின்னர் பிரஸ் கவுன்சில் நடத்திய விசாரணையில் பிரபல ஊடகங்கள் அனைத்தும் சிக்கின. ஆனால், குற்றவாளிகளின் பெயர்களை வெளியிட பிரஸ் கவுன்சில் இந்தக் கணம் வரை மறுத்து வருகிறது. இது மட்டுமல்ல, இனி காசு வாங்கிக் கொண்டு செய்தி போடமாட்டோம் என்று ஒரு உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தருவதற்குக்கூட பெரும்பான்மையான பத்திரிகை முதலாளிகள் தயாராக இல்லை என்று சமீபத்தில் தனது வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறார் ராஜ்தீப் சர்தேசாய் (சி.என்.என். – ஐ.பி.என்.) .
தூர்தர்சன் தொலைக்காட்சியை ஆளும் கட்சிகள் தமது பிரச்சார சாதனமாக மாற்றிக் கொள்ளும் நிலையைத் தாராளமயக் கொள்கை மாற்றிவிடும் என்றும், தனியார் தொலைக்காட்சிகளிடையேயான போட்டி கருத்துலகில் ஜனநாயகத்தை நிலைநாட்டிவிடும் என்று கூறினார்கள் ஆளும் வர்க்க அறிவுத்துறையினர். பிறகு சன், ஜெயா போன்ற தொலைக்காட்சிகள் கட்சி சார்பானவை என்றும் மற்ற தொலைக்காட்சிகள்தான் நடுநிலையாளர்கள் என்றும் பசப்பினார்கள்.
கட்சித் தொலைக்காட்சிகளின் பக்கச்சார்பு மக்கள் அனைவருக்கும் தெரியும். நடுநிலையாளர்கள் என்று தமக்குத்தாமே பெயர் சூட்டிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகையினர்தான் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்கள் ஆளும் வர்க்க கருத்துகளைப் பிரதிபலிப்பதில் கண்டிப்பான கற்பு நெறியாளர்களாக இருப்பதுடன், தங்கள் வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு சொல்லுக்கும், தங்கள் வர்க்கத்தினரிடமிருந்தே ரேட்டு பேசி காசு வசூலிக்கும் விலை மாந்தர்களாகவும் இருக்கிறார்கள். இந்திய ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் நான்காவது தூணின் யோக்கியதை இதுதான்.