Saturday, June 13, 2026
முகப்பு பதிவு பக்கம் 696

25,090 மாணவர்கள் – 157 குடிநீர் குழாய்கள் !

0

25 ஆயிரத்து 90 மாணவர்களுக்கு வெறும் 157 குடிநீர் குழாய்கள்; மாநகராட்சிப் பள்ளிகளின் சீர்கேட்டை மந்திரக்கோலால் மாற்றமுடியாது!

புமாஇமு – மாநகராட்சி கல்வி அதிகாரிகளின் ஆய்வறிக்கை பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்துவோம்!

ன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே, ஆசிரியப் பெருமக்களே,

மாநகராட்சிப் பள்ளி
படம் : நன்றி timesofindia

“கற்கை நன்றே, கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே” என்று அவ்வைப்பாட்டியும், ”கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர் ” என்று வள்ளுவனும் அனைவரும் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். ஆனால், இன்று அரசோ அத்தகைய கல்வியை நாட்டின் பெரும்பான்மை ஏழை மக்களுக்கு மறுத்து வருவதை சென்னை மாநகராட்சிப் பள்ளிகளை பார்க்கும் எவராலும் மறுக்க முடியாது.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் குடிநீர், கழிவறை, போதிய வகுப்பறை, வாத்தியார், தரமான ஆய்வுக்கூடம், நூலகம் ஆகிய அடிப்படை வசதிகளை செய்து, தரம் உயர்த்த வேண்டுமென கடந்த ஓராண்டுக்கும் மேலாக  புமாஇமு பெற்றோர்கள் மாணவர்களைத் திரட்டி, பல கட்ட போராட்டங்களை நடத்தி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இப்படிப்பட்ட தொடர்ச்சியான போராட்டத்திற்கு பிறகே மாநகராட்சி கல்வி அதிகாரிகளுடன் எமது பிரதிநிதிகளும் இணைந்து பள்ளிகளை ஆய்வுசெய்ய மேயரின் அனுமதியைப் பெற்றோம். ஜனவரி 17, 18, 20 தேதிகளில் 10 மண்டலங்களில் 57 பள்ளிகளில் ஆய்வில் இறங்கினோம். பள்ளிகளின் உண்மை நிலையைப் பற்றி கண்ட காட்சிகளையும், ஆசிரியர், மாணவர்களின் உள்ளக் குமுறல்களையும் விரிவான அறிக்கையாக 24 பக்கத்தில் வெளியிட்டிருக்கிறோம்.

புள்ளிவிபரம்
படம் : நன்றி timesofindia

ஏழை கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தரமானக் கல்வியை கொடுக்க போதிய நிதியை ஒதுக்கி, காலதாமதமின்றி உடனுக்குடன் திட்டமிட்டு நிறைவேற்றத்தான் உள்ளூராட்சி நிர்வாகமான மாநகராட்சி பள்ளிகளை நடத்துவது அவசியமாகிறது. ஆனால், ’சிங்காரச்’ சென்னையிலோ மாநகராட்சிப் பள்ளிகள் ’தீண்டத்தகாத சேரிகளாகவே’ நடத்தப்படுகின்றன. மாணவர் எண்ணிக்கை குறைவதைக் காரணம் காட்டி இரண்டு பள்ளிகளை ஒன்றாக இணைப்பது, பள்ளிகளை இழுத்து மூடி வணிக வளாகமாக்குவது, அரசு – தனியார் கூட்டு ஒப்பந்தம் என தனியாரிடம் ஒப்படைப்பது இவையெல்லாம் எப்படி என திட்டம் தீட்டுவதில்தான் தீவிரம் காட்டி வருகிறது மாநகராட்சி.

  • ஆண்டு தோறும் மாநகராட்சியில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் போவது எங்கே?.
  • கல்விக்காக மட்டும் செலவிட அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் 2% செஸ் வரியில், கடந்த 8 ஆண்டுகளில் செலவிடப்படாமல் மாநகராட்சியில் வைத்திருக்கும் தொகை ரூபாய் 175 கோடி. மாநகராட்சியின் 284 பள்ளிகளுக்கு கழிவறை, குடிநீர், வகுப்பறை வசதிகள் செய்துகொடுக்க இந்தப் பணத்தை ஏன் பயன்படுத்தவில்லை?
  • 20 மாணவர்களுக்கு ஒரு குடி நீர் குழாய் இருக்க வேண்டும் என்கிறது அரசு விதி (பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் : 270). ஆனால் 25 ஆயிரத்து 90 மாணவர்களுக்கு வெறும் 157 குடிநீர் குழாய்கள்தான் உள்ளனவே ஏன்?
  • சுமார் 8 மணிநேரம் பள்ளிக்கூடத்தில் அடைந்துகிடக்கும் மாணவர்கள் தண்ணீர் குடிக்காமல், சிறுநீர் கழிக்காமல் எப்படி கல்வி கற்க முடியும்?

இந்த கேள்விகளை கேட்க பெற்றோர்கள், மாணவர்கள் யாரும் முன் வருவதில்லை என்ற காரணத்தால்தான் மாநகராட்சிப் பள்ளிகளின் அவலம் ஒழியவில்லை. நம் பிள்ளைகளுக்கும் கல்வி தரமாக கிடைக்கவில்லை.

எங்கள் மதிப்புக்குறிய பெற்றோர்களே, மாநகராட்சிப் பள்ளிகள் நம் பள்ளிகள். அதை பாதுகாப்பதும், தரம் உயர்த்தப் போராடுவதும் நம் கடமை. கடந்தாண்டு 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சியின் 32 மேனிலைப் பள்ளிகளில் 12 பள்ளிகள் 100% தேர்ச்சியை காட்டி சாதித்துள்ளன. அடிப்படை வசதிகளே இல்லாத மாநகராட்சிப் பள்ளிகளில் ஆசிரியர் பெருமக்களின் கடுமையான உழைப்பினால் பெற்ற இந்த வெற்றி நாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டிய மிகப்பெரிய சாதனை இல்லையா?

தமிழகத்திலுள்ள சுமார் 11,000 தனியார் பள்ளிகளில் பல ஆயிரங்களை பிடுங்கிக் கொண்டு, ஸ்பெசல் கிளாஸ், சுமார்ட் கிளாஸ் என கதையளந்துவிட்டாலும் ஓரிரு பள்ளிகள்தானே 100% தேர்ச்சியை பெறுகின்றன. இதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மாநகராட்சிப்பள்ளிகளுக்கு என்ன குறைச்சல்? ஏன் இந்த பள்ளிகளை தவிர்த்துவிட்டு தனியார்பள்ளிகளில் பல ஆயிரங்களை கொட்டியழ வேண்டும்?

தனியார் பள்ளிகளில் கேட்கும் பணத்திற்காக ஆண்டு முழுவதும், 24 மணி நேரமும் ஓய்வின்றி கடுமையாக உழைத்து ஓடாய் தேய்வதை நிறுத்துவோம். நாம் வியர்வையும், ரத்தமும் சிந்தி உழைத்து கொடுத்த வரிப்பணத்தில் இயங்கும் மாநகராட்சிப் பள்ளிகளை ஒழுங்குபடுத்த சற்று கவனம் செலுத்துவோம். மாநகராட்சிப் பள்ளிகளின் சீர்கேட்டை மந்திரக்கோளால் மாற்றமுடியாது; நம்முடைய போராட்டம்தான் நம் பிள்ளைகளின் தரமானக் கல்விக்கு கலங்கரை விளக்கமாகும்.

ஆம், உங்கள் ஆதரவோடு போராடினோம். மாநகராட்சிப் பள்ளிகளில் ஆய்வு செய்து அறிக்கையை மாநகராட்சியிடம் கொடுத்திருக்கிறோம். மேயரும், ஆணையரும், உதவி ஆணையரும் (கல்வி) பரிந்துரைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்துள்ளார்கள். அதை கண்காணிப்பதும், அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றி மாநகராட்சிப் பள்ளிகளை தரம் உயர்த்தப் போராடுவதும் நம் அனைவரின் கடமையாகும்.

பஞ்சபூதங்கள் என்று சொல்லப்படும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவை மனித வாழ்க்கைக்கு அவசியமென்றால், அந்த மனிதன் அன்பு, கருணை, இரக்கம், நீதிநெறி ஒழுக்கங்கள் எனும் மனித மாண்புமிக்கவனாக, எதையும் சாதிக்கும் பேராற்றல் கொண்டவனாக சமூகத்தோடு இணைந்து வாழும் முழு மனிதனாவதற்கு அவசியமானது கல்வி. விலங்கிடமிருந்து மனிதனை பிரித்துக்காட்டுவது கல்விதான். அது வியாபாரப் பண்டமல்ல. ஒரு உன்னதமான சேவை. எனவே, அரசே தன் சொந்த செலவில் அனைவருக்கும் இலவசமாக, தரமாக கல்வியை வழங்க வேண்டும். அதை விட்டுவிட்டு தனியார்மயமாக்குவது, நாட்டை குட்டிச்சுவராக்குவதற்கு சமம். எனவே, எந்தக் காரணத்தைச் சொல்லியும் மாநகராட்சிப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க முயன்றால் அதை முறியடிப்போம். அதற்கு மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் ஒற்றுமையைக் கட்டியமைப்போம்.

பத்திரிகை செய்திகள்

rsyf-schools-toi

செய்தி :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

கர சேவை கெட்டப்பில் வைகோ – கார்ட்டூன்

11

VAIKO-cartoon

ஓவியம் : ஓவியர் முகிலன்

ராஜ்குமாருக்கு நீதி கேட்டு புதுச்சேரி அரசு அலுவலகம் முற்றுகை !

2

என்.எல்.சி. தொழிலாளி ராஜ்குமாரை சுட்டுக் கொன்ற சிஐஎஸ்எஃப் ன் கொலை வெறியாட்டத்தைக் கண்டித்து மத்திய அரசின் உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை புதுச்சேரி புஜதொமு முற்றுகை – ஆர்ப்பாட்டம்:

நேற்று (17.04.2014) சுரங்கம் 1-ல் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளி ராஜா என்ற ராஜ்குமாரை சுட்டுக் கொன்ற மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நோமன் ராஜ்குமாரின் தலையில் மூன்று முறை சுட்டதில், அந்தத் தொழிலாளி மூளை சிதறி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

ஒப்பந்தத் தொழிலாளியாக சுரங்கம் 1-ல் வேலை பார்த்து வந்த ராஜ்குமாரின் தம்பி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். அவரது தம்பியின் நட்டஈடு கேட்பதற்காக சுரங்கம் 1-ல் உள்ள நிர்வாக அலுவலகத்திற்கு செல்வதற்காக வந்த ராஜ்குமாருக்கு உள்ளே போக அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. தானும் சுரங்கம் 2-ல் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளி என்பதற்கான அடையாள அட்டையைக் காண்பித்த பிறகும் அனுமதி மறுக்கப் படவே அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையை சேர்ந்த நோமனுக்கும் ராஜ்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தனது அதிகாரம் கேள்விக்குள்ளாவதைப் பொறுக்க முடியாமல் தனது துப்பாக்கியால் சுட்டு அவரைக் கொலை செய்துள்ளான் நோமன்.

பாதுகாப்பு என்ற பெயரில் அடியாள் வேலை செய்யும் நோமனை கொலைக் குற்றத்தில் கைது செய்து தூக்கிலிடக் கோரியும், பாதுகாப்பு என்ற பெயரில் கொலைவெறியாட்டம் செய்து வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அங்குள்ள தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் மீது தொடர்ந்து அரசு பயங்கரவாதம் நடத்தி வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் எங்களது புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில், மத்திய அரசின் உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முற்றுகையிட்டார்கள். முற்றுகையில் ஈடுபட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தோழர்கள், அலுவலகம் அமைந்துள்ள பகுதியான, புதுச்சேரி ரெட்டியார்பளையத்தில் ஊர்வலமாக சென்று மக்கள் வசிக்கும் பகுதியின் வழியாக, மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதல் நடத்திய நோமனைக் கைது செய்து தூக்கிலிடக் கோரியும், ரவுடித்தனம் செய்து வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை கண்டித்தும், என்.எல்.சி. நிறுவனம் தனியார்மயமாவதை எதிர்த்துப் போராடுகின்ற தொழிலாளர்கள், உழைக்கும் மக்களை ஒடுக்கியும், தொழிற்சங்க உரிமையை நசுக்கியும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை நெய்வேலியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றும் வரை ஒன்றிணைந்து போராட அறை கூவி அழைக்கும் விதமாகவும் முழக்கங்கள் எழுப்பிக் கொண்டே அலுவலகத்தின் உள்ளேயே சென்று அமர்ந்தும் உள்ளேயேயும் முழக்கங்களைத் தொடர்ந்தனர்.

பதினைந்து நிமிடங்களுக்குப் பின், அலுவலகத்தின் உள்ளே வந்த காவல்துறை, தனது வழக்கமான முறையில் தோழர்களை சமாதானப் படுத்தி வெளியே அனுப்ப முற்பட்டனர். ஆனால், தோழர்கள் மறுத்து, தனது போராட்டத்தைத் தொடர்ந்தனர். மேலும், “அரசு அலுவலகத்தின் உள்ளே வந்து முழக்கமிடுவது சட்ட விரோதமானது” என்றும், “உங்களது கோரிக்கை நியாமானது தான் என்றாலும், அதை சொல்வதற்கான இடம் இது இல்லை” என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீசிடம், “ஒரு தொழிலாளியைச் சுட்டுக் கொன்றது மட்டும் சட்டபூர்வமானதா?” என்றும், “என்.எல்.சி. நிறுவனத்தில் தொழிலாளர்கள் பிரச்சனைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இங்கு தான் நடக்கும். அது பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள அதிகாரிகள் இங்கு தான் உள்ளனர். அதனால், நாங்கள் சரியான இடத்தில் தான் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இங்குள்ள அதிகாரியிடம் சொல்லி மத்திய தொழில் பாதுகாப்புப் படையை வெளியேற்றச் சொல்லுங்கள்” என்று பேசியவுடன் போலிசு அதைப் பற்றி பேச முடியாமல் அமைதியாகி விட்டனர்.

சிறிது நேரம் கழித்து, “நாங்கள் எங்களது மேலதிகாரிகளிடம் தகவல் கூறியுள்ளோம் நடவடிக்கை எடுப்பார்கள். எனவே எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்” என்று போலிஸ் கெஞ்சியும் தோழர்கள் மசியவில்லை. பிறகு முழக்கமிட்டுக் கொண்டே அலுவலகத்திற்கு வெளியே வந்தும் ஆர்ப்பாட்டமும் முழக்கமும் தொடர்ந்தது.

சிறிது நேரத்திலேயே, “உங்கள் கோரிக்கையை தெரிவித்து விட்டீர்கள். அதனால், கலைந்து செல்லுங்கள் மீறிப் போராடினால், கைது செய்யப்படுவீர்கள்” என்று போலிசு கூறத் தொடங்கியது.

“எங்கள் போராட்டம் அடையாளப் போராட்டம் அல்ல. நாங்கள் என்.எல்.சி. நிறுவனத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை வெளியேற்றும் வரை தொடர்ந்து போராடுவோம். நாங்கள் கைதாகமாட்டோம்” என்று சொன்னோம்.

“நீங்கள் கைதாகவில்லை என்று சொன்னால், நாங்களே கைது செய்வோம்” என்று கூறி தள்ளுமுள்ளு ஏற்பட்டு வலுகட்டாயமாக கைது செய்தது போலிசு. ஆனால், கைது செய்த இரண்டு மணிநேரத்தில் விடுவித்தது.

நெய்வேலியில் தொழிலாளி கொல்லப்பட்டதைக் கண்டித்து நியாயம் கேட்டு ஜனநாயக ரீதியாகப் போராடிய தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் சகட்டுமேனிக்கு அடித்துத் துவைத்துள்ளது CISF மற்றும் போலிஸ் வெறிநாய் கூட்டம்.

இதில், ஒரு விசயத்தை மக்கள் தீரமாக புரிந்து கொள்ள வேண்டும். இந்நாட்டில் தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறதே தவிர, சிறு துளி கூட குறையவில்லை. இதற்கான காரணம், உழைக்கும் தொழிலாளி வர்க்கத்தை நிரந்தரத் தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி என்றும், வன்னியர், தலித், முதலியார், ரெட்டியார், கவுண்டர், தேவர், நாடார், முசுலீம், கிறித்தவர் என சாதிரீதியாகவும், மத ரீதியாகவும் பிளவுபடுத்தி, இவற்றை ஏற்றுக் கொண்ட கட்சிகள் மூலம்தான் உரிமைகளைப் பெற முடியும் என்றும் பிழைப்புவாத கட்சிகள், சங்கங்கள் உழைக்கும் மக்களை ஏமாற்றி தங்களது பொது எதிரியை அடையாளம் தெரிந்துகொள்ளாத வகையில் திசை திருப்பி வருகிறார்கள். இதையொட்டித்தான் நடக்கவிருக்கும் தேர்தல் பிரச்சாரமும் வீச்சாக செய்து வருகிறார்கள். வேட்பாளர்களும் அதையொட்டியே நிறுத்தப்படுகிறார்கள்.

ஆனால், ராஜ்குமார் மரணத்தை தொடர்ந்து தொழிலாளர்கள், மற்றும் பொது மக்களை கொலைவெறித்தனமாக தாக்கிய போலிசு நாய்கள் சாதி பார்த்து, மதம் பார்த்து நிரந்தரத் தொழிலாளியா? ஒப்பந்தத் தொழிலாளியா? என்று பார்த்து தாக்கவில்லை.

பொதுவாகவே, “அரசு என்பது மக்களை சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்குமான கருவி என்பது” கம்யூனிச ஆசான்கள் கூறுவதைப் போல மக்களை தங்களது அடிமைகளாத்தான் அரசு பார்க்கிறது. இதைத்தான் நெய்வேலியில் நிரூபணம் ஆகியுள்ளது. இந்தியா முழுவதும் இதுதான் நடந்து வருகிறது.

குர்கான் மானேசர் தொழிற்பேட்டையில் உள்ள மாருதி சுசுகி ஆலையில் சங்கம் ஆரம்பித்ததற்காகவே ஒரு ஆண்டுக்கு மேலாக பிணை வழங்காமல் 147 தொழிலாளர்கள் சிறை வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர். மேலும், 3500 தொழிலாளர்கள் நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அங்கும் தொழிலாளர்கள் எந்த சாதி, மதம் என்ற வேற்றுமையை இந்த அரசும் முதலாளிகளும் பார்க்கவில்லை. ஒரு கிரிமினல் குற்றத்தை விட மோசமான குற்றமாக சங்கம் ஆரம்பித்ததைப் பார்க்கிறது அரசு.

எனவே, அரசு என்பது, உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்பதும், உழைக்கும் வர்க்கத்தை பிளவுபடுத்தும் கட்சிகள், சங்கங்கள் அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகள், தொழிலாளர் வர்க்கத்தின் குடலை அறுப்பவர்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. நிலைமை இவ்வாறு இருக்க பிறகு எதற்கு நமக்குள் சாதி மத வேற்றுமை? ஒப்பந்தத் தொழிலாளி, நிரந்தரத் தொழிலாளி என்ற வேற்றுமை?

தொழிலாளர் வர்க்கமே! உழைக்கும் வர்க்கமே!

  • சாதி மத தொழிலாளர் வேற்றுமையைக் கடந்து, அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக, மக்களை ஏமாற்றும் சட்டமன்ற பாராளுமன்ற போலி ஜனநாயகத்தை புறந்தள்ளி புதிய ஜனநாயக மக்கள் அரசை நிறுவ அணிதிரண்டு போராட அறைகூவி அழைக்கிறோம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.

எங்க ஊரு காதலுக்கு சாந்தியக்காதான் தலப்புதாரி

6

ன்பதாம் வகுப்பு படிக்கும் போதுதான் அந்த சம்பவம் நடந்தது. அரையாண்டு தேர்வுல, மூணு பாடத்துல முதல் மார்க்குன்னு வாத்தியார் சொன்னதும் கூடவே “அடுத்தவருசம்  பொதுத் தேர்வுலயும் பள்ளியிலேயே முதல் மார்க் எடுப்பே”ன்னு பாராட்டுனதும் எனக்கு சந்தோசத்துல தலகால் புரியல.

கிராமத்துப் பெண்
ஓவியம் : நன்றி S.Ilayaraja

“சனி ஞாயிறுதானே இன்னைக்கி மட்டும் மாட்ட ஓட்டிப் போய் மேச்சுகிட்டு வா, நான் வயலுக்கு மருந்து வாங்க டவுனு வரைக்கும் போய்ட்டு வாரேன்னு” அப்பா சொன்னாலும், “ரேசனுக்கு போ, அப்பாவுக்கு கொல்லையில சோறு கொண்டுட்டு போ, அம்மாச்சி வீட்டுக்கு இதக் கொண்டக் குடு, அதக் கொண்டக் குடு”ன்னு அம்மா சொன்னாலும் எதயும் காதுல வாங்கக் கூடாது. கவனம் பூராவும் பத்தாவதுல முதல் மார்க் வாங்கறதுலதான் இருக்கணும்னு, வீடு வர்ர வரைக்கும் படிப்ப பத்துன சிந்தனையோடயே வந்து சேந்தேன்.

கிராமத்துல பொண்ணா பொறந்தவுளுக்கு படிப்பும், அது தர்ற சந்தோஷமும் எப்படி இருக்கும்ணு சொல்லி புரிய வைக்கிறது கஷ்டம். அடிமைங்களுக்கு விடுதலை இல்லேன்னாலும், அது என்னண்ணு புரிஞ்சா எவ்வளவு சந்தோஷப்படுவாங்க, அது மாதிரிதான் நானும்.

வெளஞ்ச வெள்ளாம வீடு வராம வட்டிக்காரனுக்கு படியளந்ததுப் போல, இடிஞ்சுப் போயி உக்காந்திருந்த அம்மாவ பாத்தா வழக்கத்த விட அப்பா சண்ட பெரிசா போட்ருப்பாரு போலத் தெரிஞ்சது. பள்ளிக்கூடத்துல வாத்தியார் பாராட்டுனத சொல்லி நெலமையா சீராக்கிரலாம்னு “அப்பா நான் எத்தனாவது மார்க்குன்னு பாரு”ன்னு பேப்பர எடுத்து ஆசையா கொடுத்தேன்.

கையில பேப்பர வாங்குன வேகத்துல சுக்கு நூறா கிழிச்சிட்டு “நாளையிலேர்ந்து பள்ளிக்கூடம் போக்கூடாது, படிப்பும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் வீட்டுல உள்ள வேலையப் பாரு”ன்னு சொல்லிட்டு பட்டுன்னு எழுந்து போய்ட்டே இருந்தாரு. வாத்தியாரு பாராட்டு, முதல் மார்க்கு, பொதுத் தேர்வுன்னு மனசுல புதுவெள்ளமா வந்த படிப்ப பத்துன உற்சாகம், திடீர்னு வடிஞ்சு வறண்டுப் போய் நின்னுட்டேன்.

அம்மா காரணம் சொல்ல ஆரம்பித்தாள். “படிப்பு படிப்புன்னு மினிக்கிக்கிட்டு போனாளே வட கொண்டார் வீட்டு சாந்தி, சொல்லவே நாக்கூசுது – தேவூரு சின்னசாதி பயலோட ஓடிட்டாளாம். நம்ம குடும்பத்துல நடந்தா நாண்டுகிட்டுதான் சாவனும். அப்பா சொல்றத கேட்டு அடக்கமா நடந்துக்க”ன்னு அன்னைக்கே படிப்ப கழுவி கவுத்துட்டாங்க.

பசியோட இருக்குறவனுக்கு அன்னத்த காட்டி அடிச்சு விறட்டுனா எப்படி இருக்கும்ங்கிறதை அன்னைக்கு புரிஞ்சுக்கிட்டேன்.

இது நடந்து 21 வருசமாச்சு ஒரு தடவக்கூட சாந்தியக்காவ பாத்தது கெடையாது. காலப்போக்குல குடும்பம் கொழந்தன்னு என்னோட வாழ்க்கை நகரத்துக்கு மாறிப் போச்சு. ஊருக்குப் போகும் போது சாந்தியக்கா எப்படிருக்கான்னு அவங்க கிராமத்த சேந்தவங்கக்கிட்ட விசாரிப்பேன். ஒருத்தரும் சரியா சொல்ல மாட்டாங்க. ஆனா அவள நெனைக்காத நாளே கெடையாது.

வாழ்க்கை பிரச்சனைங்களோட வாழுற பொண்ணுங்களுக்கு, வேலைக்கு போற, படிச்ச பொண்ணுங்களப் பாத்தா ஒரு ஏக்கம் வரும். அவங்களுக்கு வேற பிரச்சினைங்க இருக்கிறது தெரிஞ்சாலும், நாம எதையோ இழந்துட்டமோண்ணு வலிக்கும். அப்படி படிப்பு போச்சேங்கற வருத்தம் வரும் போது கூடவே சாந்தியக்கா நெனப்பும் வரும். பின்னாடி வெவரம் வந்த பிறவுதான் நம்ம படிப்பு போனாலும், அக்கா செஞ்சது நம்ம சுத்துப்பட்டு ஊருகள்ல எந்த பொண்ணும் நினைச்சுப் பாக்காததுன்னு தெரிஞ்சது.

மகளிர் தினத்துக்கு நானும் ஒரு பெண்ணப் பத்தின பதிவு எழுதனுன்னு நெனச்சப்ப சாந்தியக்கா ஞாபகம் தான் வந்தது. எப்படியாவது அவளோட நம்பர் வாங்கி பேசி அத மகளிர் தின கட்டுரையா எழுதனுங்கற முடிவோட ஒரு மாசமா பலருட்ட துப்பு கேட்டு நம்பரை வாங்கி சாந்தியக்காட்ட பேசினேன்.

இத்தன வருசம் கழிச்சு பேசுரோமே என்ன நெனப்பாளோங்கற தயக்கத்தோட “சாந்தியக்கா, நான்தான் பேசுரேன், ஞாபகம் இருக்காக்கா”ன்னு  ஆரம்பிச்சேன். பல வருஷத்துக்கு முந்தி பாத்த அதே சாந்தியக்காவோட அன்பான பேச்சு மாறவே இல்ல.

“என்னடா அப்புடி கேட்டுபுட்ட நம்ம புள்ளடா நீ, எத்தன வருசமாச்சு சின்னப்புள்ளையில பாத்தது. நல்லாருக்கியா, அம்மா அப்பாவெல்லாம் நல்லாருக்காங்களா! தம்பி தங்கச்சியெல்லாம் என்ன செய்றாங்க ஒனக்கு கல்யாணம் ஆயி ரொம்ப வருசமா பிள்ள இல்லன்னு கேள்விப் பட்டேன் கொழந்த இருக்காடா, ஊருக்கெல்லாம் வருவியா, இத்தன வருசம் கடந்து நீ பேசற சந்தோசத்துல என்ன கேக்குறது ஏது கேக்குறதுன்னே தெரியல போ…” சாந்தியக்கா மூச்சுவிடாம கேட்டக் கேள்வியில தொண்டக் கதிர் நெல்லு வெளியே தள்ளுற மாதிரி பாசமும் ஏக்கமும் மடை தொறந்து கொட்டுச்சு.

ரொம்ப நாளைக்கு பெறவு பேசுறதால அக்காவ நீ வான்னு பேசவா, இல்லை நீங்க வாங்கன்னு பேசறதான்னு பேச்சுல தடுமாற்றம் இருந்திச்சு. ஆனா அக்காவோட நெருக்கமான பேச்சு பழைய நீ வாவையே கொஞ்ச நேரத்துல கொண்டு வந்துருச்சு.

“நான் சந்தோசமா இருக்கேங்கா, உன்னோட பிள்ளைங்கள்ளாம் என்ன பண்ணுறாங்க வீட்டுக்காரரு பள்ளிக்கூடத்துல வேலப் பாத்தாரு, பெரியாரு கட்சியில இருந்தாரு, இப்ப என்ன செய்றாரு, எப்புடி இருக்காரு?”

“பொண்ணு வெளியூருல காலேஜு படிக்கிறா, பய ஊருக்குல்லேயே பதினொன்னாவது படிக்கிறான். அவருக்கு பள்ளிக்கூடம், டியூஷன்னு வேலையே சரியாப் போவுது. முன்னமாரி கட்சியில இல்ல, ஆனா மாநாடு பொதுக்கூட்டம்னா போவாரு. குடும்பம், பிள்ளைங்க படிப்புன்னு வேலதான் கழுத்து வரைக்கும் இருக்கு, அப்பறம் எங்க கட்சி வேல செய்றது”.

“அந்த ஊருல உள்ளவங்க உன்ன எப்படி பாப்பாங்க, எப்படிக்கா நடத்துவாங்க?”

“தங்க தட்டுல வச்சு தாங்குவாங்கடி. ஒரு வேல சொன்னா ஓடி வந்து கேப்பாங்க. அதெல்லாம் மரியாதையா நடத்துவாங்க. எந்த கொறையும் இல்லடா. ஆனாலும் மத்தமத்த பிள்ளைங்கள்ளாம் தாத்தா, பாட்டி, பெரியம்மா, சின்னம்மான்னு சொந்தக்காரங்க வீட்டுக்கெல்லாம் போகயில நம்ம பிள்ள மட்டும் அனாதையப் போல வீட்லேயே அடஞ்சு கெடக்குதுங்களேன்னு நெனைக்கிம் போது கவலையா இருக்கும்டா. ஆனா பிள்ளைங்க அதையெல்லாம் புரிஞ்சுகிட்டு எனக்கு தைரியம் சொல்லும்”

“உன்னோட அம்மா உயிரோட இருந்தப்ப ஒரு தடவ கூட வந்து உன்னய பாக்கலையாக்கா”

“ஏதாவது செஞ்சுறுவாங்களோன்னு பயந்துகிட்டுதான் கல்யாணம் ஆயி, நாலு மாசம் வர இருக்குற எடம் தெரியாம இருந்தோம். வேற யாராச்சும் இருந்துருந்தா வெட்டிருப்பாய்ங்க. அவரு கட்சி அரசியல்னு இருக்காரு, அவர சுத்தி இவ்வளவு கூட்டம் இருக்கு, நெருங்க முடியாதுன்னு ஒதுங்கி இருக்காய்ங்கன்னு தெரிஞ்சப் பெறகுதான் இந்த ஊருக்குள்ள வந்தோம்.”

இதப் பேசுறப்போ சாந்தியக்கா பழைய காலத்துக்கு போய்ட்ட மாறி தெரிஞ்சிது.

“பாப்பா வயித்துல மூனு மாசமா இருந்துச்சு. எங்க அம்மா வந்து கருவ கலைச்சுரலாம், வீட்டுல கோச்சுகிட்டு போனதா ஊருல சொல்லிறலாம், மாமா கட்டிக்கிறேங்குறான் வந்துருன்னு பத்து தடவைக்கி மேல வந்து கூப்புட்டாங்க. அந்த பேச்ச பேசிகிட்டு இந்த வாசப்படி மிதிக்காதேன்னு திட்டி அனுப்பிச்சேன். அப்புறம் பிள்ளைங்கள்ளாம் பொறந்த பிறகு உங்களையெல்லாம் பாக்கணும் போல இருக்கு, ஆனா ஊருல அசிங்கமா பேசுவாங்களோன்னு பயந்துகிட்டே ஏழட்டுத்தடவ ராத்திரில வந்துட்டு பாத்துட்டு போனாங்க. அப்பறொம் வர்றதே கெடையாது.”

“ஒங்க அம்மா அப்பா சாவுக்குக்கூட நீ வரலையாமே ஏங்கா?”

“இத்தன வருசத்துல ஒரு தடவக் கூட நம்ம ஊருக்கு நான் வந்தது கெடையாது. அதுக்கு காரணம் பயம் கெடையாது. எதுக்கு நம்பளால ஒரு பிரச்சனன்னுதான். அப்பா செத்தது நாலு நாளைக்கப்பறந்தான் தெரியும், அம்மா செத்தது ரெண்டு மாசம் கழிச்சுதான் தெரியும். செத்தது தெரிஞ்சு வந்துறப் போறேன்னு அவசர அவசரமா அடக்கம் பன்னியிருக்கானுவொ. எங்க சித்தப்பங்காறன் வீட்டுலதான், சொத்து மொத்தத்தையும் அடைச்சு பட சாத்திக்கிற (படல்-முள்வேலி) எண்ணத்துல எங்க குடும்பத்த சின்னாபின்னமாக்கி சீறழிச்சுப்புட்டானுவொ.”

“பங்காளிப் பயல்ல பாதிப் பய பானைய தொடாம பருப்பள்ளுற பயலுக, போறெடம் வாரெடத்துல ஏம்புருசன்கிட்ட பேசுவானுவொ. ஆனா சாவ சொல்ல ஒருத்தனுக்கும் மனசில்ல. பணம் பதவின்னு இருக்கோமே எக்குத்தப்பா எங்கெனயாவது மாட்டிகிட்டா கட்சிக்காரன், வாவுவழி தெரிஞ்சு காப்பாத்துவான்னு கணக்குப்பண்ணி பாத்த எடத்துல பேசிவய்க்கிறாய்ங்க வேறோன்னுமில்ல.”

“உங்க தங்கச்சிய கட்டிக் குடுத்து வயுத்துல புள்ள இருக்கும் போதே ஒரு வருசத்துலேயே வீட்டுக்காரு எறந்துட்டாரு பாவம். ஊருல நீதான் காரணம்னு சொல்லுவாங்க, இப்ப அவ எப்புடி இருக்கான்னு தெரியுமா, நீ பாத்தியாக்கா?”

“எல்லாம் எங்க சித்தப்பந்தான் பண்ணுனது. நானு வீட்ட விட்டு ஓடிட்டா நல்ல மாப்புளையே கெடைக்காதா என்ன? சட்டிய பானையாக்குறதுதான் அவன் எண்ணம். ரெண்டு வேலி நெலத்த நாலு வேலியா ஒண்ணு சேத்துக்கிட்டான். சொத்த அமுக்கிகிட்டு செய்யறத செய்யலாம்ன்னு அவசர அவசரமா ஒரு சீக்காளி மாப்பிளைக்கி கட்டி குடுத்து என் தங்கச்சி வாழ்க்கைய கெடுத்துட்டானுவொ. இன்னைக்கி பெத்த பிள்ள எங்கருக்குன்னு சொல்லத் தெரியாம கூட பைத்தியமா அலையிறா. ஊருலேருந்து கந்த துணிய போட்டுகிட்டு வாரா, பாக்க சகிக்கல. இதுக்கெல்லாம் காரணம் அவைங்கெதான். எங்க வதையெல்லாம் அவங்கெளும் அணுபவிச்சு சாவுவாய்ங்கெ”

“சொத்துக்காக சாதிய காரணம் காட்டி உங்கள ஒதுக்கி வச்சுருக்காணுவொ, சுயநலத்துக்காக மறைமுகமா ஒறவு வச்சுக்குறானுவொ, தங்கச்சிக்கு 16 வயசுல உருப்படாத கல்யாணத்த பண்ணி வச்சு ஒரு வாழ்க்கைய அழிச்சிருக்கானுவொ, எல்லாம் புரிஞ்சுருந்தும் எதுக்கு ஒதுங்கி வாழ்ற, நீ எதுத்து கேக்க வேண்டியதுதானே?”

“என்னோட கையெழுத்து இல்லாம சொத்து வாங்கிருக்கானுவொ. இன்னைக்கி நெனச்சாலும் கேஸு போட்டு சொத்தெடுக்கலாம். ஆனா சொத்துக்காதான் என்னை கல்யாணம் பண்ணிகிட்டாருன்னு அவரையும் ஊரு நெனைக்கும். சொத்துக்காக எங்க குடும்பத்தையே அட்ரஸ் இல்லாம பண்ணிட்டாய்ங்க. அடுத்தவங்க குடிய கெடுத்து அவன் மட்டும் வாழவா போறான்?”

“அதுவும் தவிர நானு ஒழிஞ்சல்லாம் வாழளடா. நம்ப ஊர்லேர்ந்து பழகுனவங்க, படிச்சவங்கன்னு நெறையப் பேரு கல்யாணப் பத்திரிக்கை குடுப்பாங்க. அவரு மட்டும் போவாரு. படிப்பு பதவின்னு அவர மரியாதையா நடத்துவாங்க. அது ஒரு மாதிரி போயிரும். நான் போனா ஒருத்தரில்ல ஒருத்தரு சுருக்குன்னு ஒரு வார்த்த சொல்லிட்டா என்ன செய்றது? பின்னாடி புள்ளைங்க மனசொடிஞ்சு போயிரும். அத தாங்கிக்க முடியாது. அதுங்களுக்கு ஒரு பாதிப்பு வரக்கூடாதுன்னு தான் எம்.பி.சி.-ன்னு போடாம பி.சி.-ன்னு பதிவு பண்ணி சர்ட்டிபிகெட் வாங்கிருக்கேன். பிள்ளைங்கதானடா முக்கியம்.”

“சாதிய மீறி, தாலிய மறுத்து தைரியமா கல்யாணம் பண்ணீங்க. எதுக்கு சாதிய அடையாளப் படுத்தி சான்றிதழ் வாங்குனிங்க? இதுக்கு ஒங்க வீட்டுக்காரரு ஒன்னும் சொல்லலையா?”

“அவரு என்னத்த சொல்றது. சாதி போடாம சர்ட்டிபிகேட் வாங்க முடியாது, அப்படி வாங்குனா செல்லாதுன்னு சொல்லிகிட்டாங்க, வெவரம் தெரியலையடா!” என்று எதார்த்தமான மனநிலையோடு பேசினாள்.

“சரிக்கா, நீ போனப்புறம்தான் என் செட்டு பொண்ணுங்க படிப்பை நிறுத்திட்டாங்களே, அது தெரியுமாக்கா?”

“ஆமாண்டி, நான் போவலேன்னாலும் உன்ன என்ன கலெக்டருக்கா படிக்க வைக்க போறாய்ங்கெ? சமைஞ்சு வீட்டுல உக்காந்த எந்த பொண்ணுடி பள்ளிக் கூடம் போகுது? எல்லாம் நம்ம காலத்தோட ஒழியட்டும், உன் பொண்ணையும், என் பொண்ணையும் தலைய அடகு வைச்சாவது படிக்க வைப்போம்”

“நீங்க வீட்டவிட்டு போனதை பற்றி ஊரில் பலமாதிரி பேசுனாங்க. அன்னைக்கி இரவு என்னதாக்கா நடந்தது எப்புடி போனிங்க?

“ஏய்… யப்பா, எப்ப நடந்தத இப்ப கேக்குற. வந்த வழித்தடமே புல்லு மண்டி போச்சுப் போ… வேறெதாச்சும் பேசுவோம்டா.” என்றாள், இனிமே பேசி என்னாகப் போகுது என்ற ஆயசத்துடன்.

“எம் பொண்ணுகிட்ட உங்க கதைய முழுமையா சொல்லி தைரியமா வளக்கணும்க்கா, சொல்லுங்க”

“ஒம் பொண்ணக் கூட்டிக்கிட்டு எங்க ஊருக்கு வா, நான்தாண்டி அந்த பெரியம்மா, இதுதாண்டி என்னோட கதையின்னு நேர்லேயே சொல்றேன்” என்று வெக்கப்பட்டு சிரித்தாள்.

_______________________

இதுவரை சாந்தியக்காவிடம் பேசியதுல சொந்தபந்தம்னு இல்லாம போச்சேன்னு வருந்தப்பட்டாளே தவிர ஒரு இடத்துல கூட மனம் தளர்ந்து போய் புலம்பல. பாத்துப் பழகுற தூரத்துல ‘சின்ன’ சாதியைச் சேர்ந்த ஒருவர கல்யாணம் பண்ணிகிட்டு, சொந்த பந்தங்கள பாக்க முடியாம பழகமுடியாம, அம்மா அப்பாவ இழந்து, சொத்த பறிகொடுத்து, கண்ணுக்கு நேரா தங்கச்சி வாழ்க்க நாசமா போயி எத்தன நெருக்கடி!

சரி, ஊரை விட்டு போய் சாதி மாறி கல்யாணம் பண்ணி ரெண்டு புள்ளைங்ளோட சாந்தியாக்கா இருந்தாலும் அவளோட சாதிய மட்டும் இன்னும் விட முடியல. படிப்பு, வேலைக்கு மட்டுமில்லாம ஊருல ஒரு கவுரவத்தோட வாழணும்னாலே, சாதி கட்டாயம் வேணும்னு எல்லாரும் பேசுனா சாந்தியக்கா தனியா நின்னு என்ன செய்ய முடியும்? ஆனா சாதிப் பேரு எதுன்னு முடிவு பண்ற நேரம் வந்த போது அக்கா தன்னோட ‘பெரிய’ சாதியத்தான் தேர்ந்தெடுத்தாள். இதுலயும் அவளோட பெரியார் கட்சி வீட்டுக்காரருக்கும் பெரிய குறையில்லைங்கிறது அநியாயம்.

இதுக்கு அவர மட்டும் கொறை சொல்லி பிரயோஜனமில்ல. காலேஜ் நடத்துறதலயும், சீட்டு கம்பனி நிர்வகிக்கிறதலயும் மேதைங்களாயிட்ட பிறகு சாதி மறுப்பு கல்யாணம்,போராட்டமெல்லாம் அவரோட கட்சிகிட்ட எதிர்பார்க்கிறது தப்புதான். ஆனாலும் இவங்க என்ன முடிவு எடுத்தாலும் ஊர் உலகம் இவங்கள சாதி மாறி கல்யாணம் பண்ணுனாங்கன்னு எளக்காரமத்தான் பாக்குது. அதுதான் இன்னைக்கும் கூட அக்கா தன்னோட சொந்த ஊருக்கு போக்குவரத்து இல்லாம இருக்கா. என்ன இருந்தாலும் ஒரு கிராமத்துல இது மாதிரி ஊர வீட்டு போய் சாதி மாறி கல்யாணம் பண்ணி வாழ்றது சாதாரண விசயம் இல்ல.

எங்க ஊருல வயசுக்கு வந்த பொண்ணுங்களுக்கு படிப்புங்கறது அரிதா இருந்த காலம்தான் அது. வயசுக்கு வந்த பொண்ணு அடுத்த வீடு போகக் கூடாது. மாமா, மச்சான்னு மொறக்கார ஆம்பள வந்தா எதுக்க வந்து நின்னு பேசக் கூடாது, மறைஞ்சுதாங் இருக்கணும். வயசாளியோ சீக்காளியோ வீட்ல பாத்தவன கண்ண மூடிகிட்டு கட்டிக்கணும். காதல் கீதல்னு வந்து நின்னு, சாதி சனத்துக்கு மத்தில மானத்த வாங்கிருவாங்கன்னு பொண்ணுங்கள வளக்குற மொறையே இறுக்கமா இருக்கும்.

இப்படி கட்டுப்பெட்டியான ஒரு ஊருக்குள்ள இருந்து ‘கீழ்’ சாதிய சேந்த ஒருத்தரோட, வீட்ட விட்டு ஓடிப்போயி காதல் கல்யாணம் பண்ணி கடைசி வரைக்கும் வாழ்ந்து காண்பிச்ச சாந்தியக்கா துணிச்சல்காரிதான்.

எங்கூர் பக்கத்துல சாதி பிரச்சனைக்கு அருவா தூக்கமாட்டாங்க, கலவரம் நடக்காது. ஆனா ஒரு பொண்ணு, காதல் கல்யாணமுன்னு சாதி மாறி போச்சுன்னா எப்படியாவது திரும்ப கூட்டிட்டு வர முயற்சி செய்வாங்க. அப்படி கூட்டிட்டு வந்தா அந்த பொண்ணுக்கு வெளிய தெரியாம மருந்த குடுத்து கொன்னுபுட்டு கமுக்கமா கவுரவத்த காப்பாத்திடுவானுங்க. இல்லன்னா ஊருல ஒருத்தனும் மதிக்காம, சின்னாபின்னப்பட்டு சாந்தியக்கா குடும்பம் போல சீரழிஞ்சு போணும், இதுதான் நீதி.

அப்பேற்பட்ட ஊருல அந்த நீதிய முத முதல்ல தூக்கி எரிஞ்சவ சாந்தியக்கா தான். நாம் வீட்ட விட்டு போனா என்ன நடக்கும்னு தெரிஞ்சுருந்தும் எதுக்கும் கலங்காத தைரியம் அவளுக்கு. அந்த வகையில காதலுக்காக சாதிக் கட்டுப்பாட்ட மீறுன சாந்தியக்காதான் எங்களுக்கு தலப்புதாரி (முதல் ஆள்).

–    சரசம்மா
( உண்மைச் சம்பவம் – பெயர்கள் கற்பனை )

வன்னியன் நாடாளணும்னா அன்புமணி அமைச்சராகணும் – கார்ட்டூன்

12

பா.ஜ.க கூட்டணியை உருவாக்கிய புரோக்கர் தமிழருவி மணியனே தனக்கு தொகுதி கிடைக்காததால் மனம் புண்பட்டு அரசியலை வேணாம் என்று புலம்பி வருகிறார். பா.ஜ.க கூட்டணி இருந்தால்தான் ஒன்று இரண்டு தேத்த முடியும் என்று சின்னய்யாவும், அது தேவையில்ல நாம ‘சமூகநீதி’ கட்சிகளோட பார்த்துக்கலாம்னு அய்யாவும் இன்னமும் ஒரு ஒப்பந்தத்துக்கு வரவில்லை. அதனால்தான், தாமரை கூட்டணியிலிருந்து மாம்பழம் விழுமா, ஓடுமா என்று பத்திரிகைகள் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. இருப்பினும், நடிகன் நாடாளக் கூடாது என்று சொன்ன ராமதாஸ் இந்த நிமிடம் வரை  கூட்டணியில் கேப்டனுக்கு சியர்ஸ் சொல்லுகிறார்.

ramadoss2ஓவியம் : ஓவியர் முகிலன்

டியூப் புராடக்ட்ஸ் : திமுக, சிபிஎம்மை தோற்கடித்த புஜதொமு

8

சென்னை ஆவடியில் உள்ள டியூப் புராடக்ட்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் பிரபல முருகப்பா குழுமத்தைச் சேர்ந்ததாகும். இந்நிறுவனத்தில் செயல்பட்டு வரும் பொதுத் தொழிலாளர் சங்கத்துக்கான தேர்தல் கடந்த மே’2013-ல் நடந்தது. அந்த தேர்தலில் பு.ஜ.தொ.மு அணித் தோழர்கள் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட சி.ஐ.டி.யூ மற்றும் தி.மு.க சார்புடைய அணியினரை விட அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றனர். பு.ஜ.தொ.மு அணியின் தலைமையை ஆலை நிர்வாகம் அரைகுறை மனதுடனே அங்கீகரித்தது. நமது தலைமையை ஏற்ற தொழிலாளர்களுக்கு ’பாடம்’ புகட்ட வேண்டும் என்பதற்காக, தொழிலாளர்கள் இதுவரை அனுபவித்து வந்த பல்வேறு சலுகைகளை வெட்டி வந்தது. மாற்று அணி தொழிலாளர்களை நமக்கு எதிராக உசுப்பேற்றியும் வந்தது. எனினும், சமரசமற்ற நடவடிக்கைகள் மூலமாக தொழிலாளர்கள் மத்தியில் நமது அரசியலை நிலைநாட்டி வந்தோம்.

ஆவடி டியூப் புராடக்ட்ஸ் இந்தியா
ஆவடி டியூப் புராடக்ட்ஸ் இந்தியா (படம் : நன்றி http://www.tiindia.com/article/events/360)

இந்நிலையில் மேற்படி நிறுவனத்தின் சேமநல நிதி டிரஸ்டுக்கான தேர்தல் இன்று (15.3.2014) நடைபெற்றது. 3 பேரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற இந்த தேர்தலில் சி.ஐ.டி.யூ மற்றும் தி.மு.க அணிகளுடன் நமது அணியும் போட்டியிட்டது. பு.ஜ.தொ.மு அணியால் ஏற்கனவே நிர்வாகம் பல சலுகைகளை பறித்து விட்டதாகவும், அடுத்து வரும் தொழிற்சங்கத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பி..எஃப் தேர்தலை கருத வேண்டும் எனவும், நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க பு.ஜ.தொ.மு அணியைத் தோற்கடிக்க வேண்டும் எனவும் சி.ஐ.டி.யூ மற்றும் தி.மு.க அணியினர் பிரச்சாரம் செய்தனர்.

இந்தப் பிரச்சாரத்திலிருந்தே இவர்களது தொழிலாளர் துரோகம் தெரிகிறது. புஜதொமு சமரசமில்லாமல் போராடுகிறது. அதனால் நிர்வாகம் பயந்து கொண்டு உரிமைகளை பறிப்பதாக அச்சுறுத்துகிறது. ஆனால் இந்த மிரட்டலுக்கு பயப்படாமல் போராடுவதால் புஜதொமுவை தொழிலாளர்கள் வரவேற்கின்றனர். இதில் புஜதொமு போல நாம் போராடக்கூடாது, நிர்வாகத்தை அண்டிப்பிழைத்து காலத்தை ஓட்டலாம் என்பதையே தொழிற்சங்க உரிமையாக முன்வைக்கின்றன, திமுக மற்றும் சிபிஎம்மின் தொழிற்சங்கங்கள். தேர்தல் அரசியல் முதல் தொழிற்சங்க தேர்தல் வரை இந்தக் கட்சிகளின் யோக்கியதை இதுதான்.

நிர்வாகத்தின் மறைமுக அச்சுறுத்தல் மற்றும் சமரசவாத சங்கங்களின் அவதூறு ஆகியவற்றை டி.பி.ஐ தொழிலாளர்கள் தவிடுபொடியாக்கி விட்டனர். தொழிலாளி வர்க்கம் தன்னுடைய உரிமையை நிலைநாட்டுவதற்கு பு.ஜ.தொ.மு தலைமையை ஏற்க வேண்டும் என்பதை உணர்ந்து நமது அணி சார்பில் போட்டியிட்ட 3 தோழர்களையும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்துள்ளனர்.

பு.ஜ.தொ.மு அணி
புவனேந்திரன் 237
சிறீதரன் 233
பாலமுருகன் 199

சி.ஐ.டி.யு அணி
ஜெயபால் 178
மேகவர்மன் 144
முருகன் 134

தொ.மு.ச
தனசேகரன் 107
ஸ்டீபன் 175
தணிகைவேல் 147

முருகப்பா குழுமத்தில் ஏற்கனவே டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் ஆலையில் பு.ஜ.தொ.மு – வின் செங்கொடி ஆழமாக ஊன்றி விட்ட நிலையில் தற்போது டி.பி.ஐ நிறுவனத்தில் தொழிலாளர்களது நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். ஒட்டு மொத்த முருகப்பா குழுமத்திலும் பு.ஜ.தொ.மு-வின் செங்கொடி பறக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டக் குழு

ஒசூர் வெக் ஆலையில் புரட்சிகர தொழிற்சங்கம் உதயம்!

0

ஒசூர் வெக் இந்தியா ஆலையில் புரட்சிகர தொழிற்சங்கம் உதயம்!

வெக் இந்தியா
வெக் இந்தியா

னரக மோட்டார்ஸ்களை பெருமளவில் உற்பத்தி செய்துவரும் பிரேசில் நாட்டு நிறுவனமான வெக் இண்டஸ்டீரீஸ் இந்தியா பிரைவேட் லிமிடேட் ஒசூர் சிப்காட்-2 பகுதியில் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற நிறுவனங்கள் பல நூற்றுக்கணக்கில் இந்தியாவில் தொடங்கப்பட்டு உற்பத்தியை குவித்து கொள்ளை லாபமீட்டுகின்றன. இந்தக் கம்பெனிகளுக்கு இந்திய அரசு பட்டுக்கம்பளம் விரித்து அழைத்து அனைத்து சலுகைகளையும் செய்து தருகிறது. ஆளும்கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளாக உள்ள ஓட்டுக்கட்சிகள் அனைத்துமே இந்த சேவைகளை போட்டி போட்டுக் கொண்டு செய்து வருவதோடு மட்டுமின்றி இந்த வேதனைகளையே சாதனைகளாக சொல்லி பீற்றிக் கொள்கின்றன.

‘பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெறுகின்றனர்’ என சவடால் அடிக்கின்றனர். உண்மையில் அப்படி அழைத்துவரப்படுகின்ற கம்பெனிகள் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பதற்காகதான் வருகின்றனவா? அவர்கள் தொழிலாளர்களது உரிமைகளையோ, அல்லது இந்த நாட்டின் சட்டதிட்டங்களையோ மயிரளவுகூட மதித்து நடந்துக்கொள்வதில்லை என்பதையே பல அனுபவங்களும் தொழிலாளர்களின் போராட்டங்களும் ரத்த சாட்சியங்களாக நாட்டுமக்களுக்கு உணர்த்திவருகின்றன. இதுபோன்ற வெளிநாட்டு நிறுவனஙகளில் தொழிற்சங்கம் அமைத்து நிலைநிறுத்துவது என்பதே சவாலான பணியாக உள்ளது.

1WEG India நிறுவன தொழிலாளி விஜயசந்திரன்
1WEG India நிறுவன தொழிலாளி விஜயசந்திரன்

இதற்கு மற்றுமொரு உதாரணம்தான் ஒசூர் சிப்காட் 2 பகுதியில் செயல்பட்டுவரும் பிரேசில நாட்டு நிறுவனமான வெக் இண்டஸ்டீரீஸ் இந்தியா லிமிடெட்.

இந்த நிறுவனத்தில் பெயிண்டிங் பிரிவில் பெயின்டராக வேலைசெய்துவருபவர்தான் விஐயசந்திரன் எனும் தொழிலாளி. இவருக்கு அண்மையில் இரண்டு கிட்னியும் செயலிழந்துவிட்ட நிலையில்கூட அவருக்கு மருத்துவ வசதிகளை செய்துதர மறுத்து வருகிறது அந்த ஈவிரக்கமற்ற லாபவெறி பிடித்த ஆலை நிர்வாகம். இதனை அந்த ஆலையில் இருக்கின்ற சங்கமும் வேடிக்கை பார்த்து வருகிறது.

இந்த நிலையில் ஒசூரில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி எனும் புரட்சிகர அமைப்பு சார்பாக இந்த ஆலைநிர்வாகத்தை கண்டித்து சுவரொட்டி இயக்கம் எடுத்து ஒசூர் முழுவதும் பிரச்சாரம் செய்திருந்தனர். இதனை கண்ட அந்த ஆலையில் வேலைசெய்துவரும் தொழிலாளர்கள் தொடர்பு கொண்டு அவர்களை அழைத்து தங்கள் ஆலையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிளைச்சங்கத்தை ஏற்படுத்திப் போராடி தங்களின் உரிமைகளை மீட்டெடுக்க துணிந்தனர். அதனடிப்படையில் கடந்த 07.02.2014 அன்று சங்க தொடக்க விழா அறிவித்தனர். உடனே ஒசூர் போலீசு ஓடோடிவந்து இங்கே 32 ஆக்ட் இருப்பதை காரணம்காட்டி அனுமதியை மறுத்து 12.02.2014 அன்று நடத்திக் கொள்ளுங்கள் என நைச்சியமாக மிரட்டியது. தற்போதுதான் தொடக்கம் என்பதால் தொழிலாளர்களின் உணர்வுமட்டம் ஆகியவற்றை கணக்கில்கொண்டு பின்வாங்கி 12.02.2014 அன்று போலீசு அனுமதியுடன் தொடக்கவிழா நடத்தப்பட்டது.

இந்த புதிய புரட்சிகர தொழிற்சங்கத்தில் பெரும்பான்மை தொழிலாளர்கள் இணைந்துக்கொண்டனர். இந்த தொழிற்சங்கத்திடம் விஜய சந்திரன் எனும் தொழிலாளியின் மருத்துவம் மற்றும் ஊதிய உயர்வுப்பிரச்சினை, ஆலையில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் பேசித்தீர்க்கவேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் நிர்வாகம் செவிடன் காதில் விழுந்த சங்காக இருந்ததனால, இதனை மக்கள் மத்தியிலும் மாவட்ட நிர்வாகத்தின் மத்தியிலும் கொண்டுச் செல்லும் வகையில் அவ்வாலைத் தொழிலாளர்களை திரட்டி ஒசூர் நகராட்சி அலுவலகம் முன்பே மாபெறும கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக திட்டமிட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

அதனடிப்படையில் கடந்த 14.03.2014 அன்று மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அவ்வமைப்புக்கேயுரிய எழுச்சியோடு நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவ்வாலையின் கிளைச்சங்க செயலாளர் தோழர் வேல்முருகன் தலைமைத் தாங்கினார்.

கண்டன உரையாக

  1. தோழர் ராஜேஸ்வரன், கிளை இணைச்செயலாளர்
  2. செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்
  3. தோழர் பரசுராமன், மாவட்டத்தலைவர்

ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக சாதுசுந்தர்சிங் நன்றியுரையாற்றினார்.

அவர்கள் பிரச்சாரம் செய்த துண்டறிக்கையில் உள்ள செய்திகளை அப்படியே இங்கே தருகிறோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

புதிய ஜனநாயகம் செய்தியாளர், ஓசூர்.

——————————————————–

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! தொழிலாளர்களே!

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளையும் தேவைகளையும் மறுத்து, அற்பக்கூலிக்கு இரத்தம் சுண்ட சுண்ட வேலைவாங்கும் நவீன அடிமைகளின் நகரமாக மாறிவிட்ட ஒசூரில், சிப்காட் 2-ல் இயங்கிவரும் ‘செங்கல்சூளை’தான் பன்னாட்டு நிறுவனமான வெக் இந்தியா எனும் கனரக மோட்டார் தொழிற்சாலை!

இந்த ஆலையில் தொழிலாளர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், நவீன கொத்தடிமைத்தனங்களுக்கு சில உதாரணங்கள்!

  • வெல்டிங், கிரைன்டிங்க், பெயின்டிங்,பிட்டிங் போன்ற அதிக வெப்பத்தையும் நச்சுப் புகை, தூசி, வெளிச்சத்தை உருவாக்கும் வேலைகளை, காற்றோட்டம் இல்லாத இடத்தில் அருகருகே அமைந்து பணிச்செய்யும் சூழல்.
  • உற்பத்தித் தளத்தைவிட உற்பத்திச் செய்யப்படும் மோட்டார்களின் அளவு மிகப்பெரியவை. இது உற்பத்திக்கு பொருத்தமில்லாத தளம். இதனால், மிகப்பெரும் இன்னல்களைத் தொழிலாளர்கள் அனுபவிக்கின்றனர்.
  • 8 மணிநேர வேலைநேரத்தில் ஒரு நிமிடம் கூட சும்மா நிற்கக்கூடாது என்று தொழிலாளர்களை வேலைவாங்கும் இலாப வெறிபிடித்த அதிகாரிகள்.
  • அருகில் உள்ள தொழிலாளியைப் பார்த்து பேசக் கூடாது, உட்கார்ந்து டீ குடிக்கக் கூடாது, தரமற்ற கேண்டீன் உணவு பற்றி பேசக் கூடாது, மீறி கேட்டால் பொய் குற்றம் சட்டப்படும் அபாயம், இவற்றிற்கெல்லாம் உச்சகட்டமாக சிறுநீர் போன்ற இயற்கை உபாதைகளுக்கு கூட செல்வதற்கு அனுமதி இல்லை என ஒரு பண்ணையடிமைவிட கேவலமாக வேலை வாங்கப்படும் நிலைமை உள்ளது.

வெக் இந்தியாவின் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு முதல் தாக்குதல், தொழிலாளி விஜயசந்திரன்!

மேற்கண்ட முதலாளித்துவ பயங்கரவாத பணிச்சூழலில் வேலை செய்தவர்தான் தொழிலாளி விஜயசந்திரன் (வயது 32). ரூ 9000 என்ற அற்பக்கூலிக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு பணிக்கமர்த்தப்பட்டார். வேலையில் சேர்ப்பதற்கு முன்பாக, முறையாக மருத்துவப் பரிசோதனை செய்துதான் எடுத்துக்கொண்டது வெக் இந்தியா ஆலை நிர்வாகம். இவர் டூல் மேக்கர் என்ற பணிக்கு தான் இவ்வாலை மூலம் வேலைக்கு எடுக்கப்பட்டார் . ஆனால், இவருக்கு சிறிதும் அனுபவமற்ற பெயின்டிங் வேலை கட்டாயமாக இவ்வாலை நிர்வாகத்தால் திணிக்கப்பட்டது.

முறையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி தராமல் செயல்பட்டதால் இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ பரிசோதனை செய்து உடல்நிலை பற்றி தொழிலாளர்க்கு விவரம் தெரிவிக்க வேண்டும். கடந்த மூன்றாண்டுகளாக மருத்துவ அறிக்கை விவரம் மறைக்கப்பட்டு வருகிறது. வெக் நிர்வாகத்தால் இவருக்குரிய மருத்துவ அறிக்கை விவரம் சொல்லப்படவில்லை. கடந்தாண்டு சிறுநீரகம் பழுதடைவது ஆரம்ப நிலையில் இருந்ததை தெரிந்தும், விஜயசந்திரனுக்கு இந்த விசயத்தை தெரிவிக்காமல் மறைத்து, தனது சட்டவிரோத பணிச்சூழலில் தொடந்து வேலையில் ஈடுபடுத்தியது. இதனால், இரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. மீண்டும் முழுமையான பரிசோதனை செய்து, இவருக்கு விடுப்பு கொடுத்து முறைப்படுத்தாமல் ஆலை மருத்துவரை கொண்டு வேலையில் ஈடுபடுத்துவதற்கான மருந்துகளை மட்டும் கொடுத்தது. உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் அலட்சியம் காட்டியது, நிர்வாகம்.

இந்த வகையான ஆலைநிர்வாகத்தின் அடக்குமுறையால் விஜயசந்திரனின் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டன. இதனால், இவர் இன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால்தான் உயிர் பிழைப்பார் என்ற நிலையில் உள்ளார். இதற்கு ஆலை நிர்வாகம் இதுவரை எந்த உதவியும் செய்யாமல் இவர் மரணம் அடையவேண்டும் என காத்திருக்கிறது. விஜயசந்திரன் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இரத்த சுத்திகரிப்பு (டையலிஸிஸ்) செய்ய வேண்டிய நிலையில் உள்ளார். மாதம் ரூ 45,000 செலவு செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளார். மிகவும் வறிய அவரது குடும்பத்தினர் தங்களது நகை, வாகனம் மற்றும் உடைமைகளை விற்று அவரது உயிரை காத்து வருகின்றனர். கைக்குழந்தையுடன் அவரது மனைவி அன்றாடம் உணவுக்கே திண்டாடி வருகிறார்.

இவர் மட்டுமல்ல, வெல்டிங், பெயின்டிங், ஹீட் ட்ரீட்மெண்ட், ஸ்பாட்வெல்டிங் போன்ற பிரிவுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பலரும் முறையான பாதுகாப்பு இல்லாததால் பலவித நோய்களுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான மருத்துவ ஆய்வறிக்கையையும் ஆலை நிர்வாகம் ரகசியமாக வைத்துள்ளது. உடல்நிலை மோசமாக இருந்தாலும் உள்ளே இருக்கும் டாக்டர் (பரதேசி படத்தில்வரும் டாக்டரைப் போன்ற நிர்வாகத்தின் எடுபிடி மருத்துவர்) அனுமதி கொடுத்தால் தான் வெளியே வரமுடியும் என்ற அவலநிலை உள்ளது. ஆனால், அந்த மருத்துவரும் அனுமதி கொடுப்பதில்லை.

எனவே, விஜயசந்திரனுக்கு மரணத்திற்கு சமமான ஒரு துன்பத்தை ஏற்படுத்தியதாலும், கடந்த 2013–ஏப்ரல் மாதத்திலேயே கிட்னி செயலிழந்துவிட்டதை தெரிந்தும் அவருக்கு அதனை மறைத்ததற்காகவும், தனது இலாபவெறிக்காக உரிய மருத்துவம் செய்யாததற்காகவும், தொடர்ந்து அபாயகரமான உற்பத்தியில் ஈடுபத்தியதற்காகவும், தற்போது கூடிய விரைவில் கிட்னி மாற்றவில்லையெனில், விஜயசந்திரன் இறந்துவிடுவார் என்று தெரிந்தும் அவரது உயிரைக் காப்பாற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவரது மரணத்திற்காக காத்திருப்பதாலும் (கொலை முயற்சி), ஆலையை பாதுகாப்பு இல்லாமல் நடத்துவதால் விஜயசந்திரனைப் போலவே தொழிலாளர்களுக்கு பாதிப்பு விளையும் என்று தெரிந்தும் தொடர்ந்து இதே பாதுகாப்பற்ற பணிச்சூழலில் தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்துவதாலும் ஆலை நிர்வாகத்தையும், இந்த பணிச்சூழலில் வேலை செய்ய வைக்கும் மேனேஜர்கள், அடிமை மருத்துவர் ஆகியோரை கொலை முயற்சிக் குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்க வேண்டும்.

தொழிலாளியின் உயிரைப் பொருட்படுத்தாமல் ரகசிய பேரம் பேசும் ஆட்காட்டி ஏ.ஐ.டி.யூ.சி.!

இவ்வாலையில் நிர்வாக அதிகாரிகளால் மற்றும் அவர்களது வெளி நண்பர்களால் தொழிலாளர்களில் சிலரை ஏமாற்றி உருவாக்கப்பட்டதுதான் இந்த ஏ.ஐ.டி.யூ.சி. என்ற சங்கம்.

இந்த சங்கத்தின் யோக்கியதை என்ன?…

  • இச்சங்கம் சட்டபூர்வமாக பதிவு செய்யப்படாத சங்கம். சில கட்ட பஞ்சாயத்து நபர்களால் நடத்தப்படுகின்ற சங்கம்.
  • சங்கத்தின் தலைவராகவும் செயலாளராகவும் வெளியாட்களைக் கொண்டுள்ளதே, இது கட்டபஞ்சாயத்து சங்கம் என்பதற்கு ஆதாரம்.
  • இந்த சங்கம் எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா? ஆலையில் தொழிலாளர்கள் மீதான முதலாளித்துவ அடக்குமுறைகளுக்கு எதிராக உணர்வு பெற்ற தொழிலாளர்கள் தங்களுக்காக ஒரு சங்கம் கட்ட முயன்ற போதுதான் ஆலை நிர்வாகத்தால் இச்சங்கம் தொடங்கப்பட்டது.
  • இதுவரை தொழிலாளர்களுக்காக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி தொழிலாளர்களையும் ஏ.ஐ.டி.யூ.சி. முன்னணியாளர்களையும் ஏமாற்றி வருகிறது
  • நடக்காத ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையைக் காரணம் காட்டி, இவ்வாலை நிர்வாகத்தால் பொய் காரணங்கள் கூறி இடைநீக்கம் செய்யப்பட்ட இரண்டு தொழிலாளர்களுக்காக இந்த சங்கம் பேசவில்லை. விஜயசந்திரன் உயிரைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமின்றி பேச முடியாது என்றது.
  • சட்டபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி ஏமாற்றி வந்த இச்சங்கம், இதுவரை தொழிலாளர் துறையில் எந்த வழக்கு பதிவு ஏதுமில்லை என கிருஷ்ணகிரி தொழிலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
  • இச்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஆலையில் உள்ள இச்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், பேச்சுவார்த்தையை சங்க நிர்வாகிகளை கூட வைத்துக் கொள்ளாமல் ரகசியமாக நடத்தி வருகின்றனர். இதற்கு பெயர் கட்டைபஞ்சாயத்து! லோக்கல் மொழியில் சொன்னால், அன்டர் டீலிங்!
  • இதனால்தான் இவ்வாலையில் இவர்கள் நடத்துவதாக கூறிக்கொள்ளும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை எந்த அடிப்படையில் நடத்துகின்றனர் என்பதையோ, என்ன வகையில் கோரிக்கைகள் வைத்துள்ளனர் என்பதையோ, பிற விசயங்கள் எதையும் தொழிலாளர்களுக்கு தெரிவிப்பதில்லை.

இதுபோன்று இச்சங்கத்தின் சட்டவிரோத, தொழிலாளர் விரோத செயல்பாடுகள் பல. சுருக்கமாக சொன்னால், இது சங்கமல்ல. ஆலைநிர்வாகமே உருவாக்கியுள்ள ஒரு கைப்பாவை அமைப்பு. மற்ற ஆலைகளில் துரோக சங்கத்தில் அவ்வாலை தொழிலாளர்கள் இருப்பர். இங்கு ஒருபடி மேலே எல்லாமே வெளியாட்கள்! இவர்கள் இதற்கு முன்பு குளோபல் ஃபார்மாடெக் என்ற ஆலையில் சட்டவிரோத ஒப்பந்தம் போட முயற்சித்து அவ்வாலை தொழிலாளர்களால் அம்பலப்பட்டு போனவர்கள் என்பது ஒரு உதாரணம்.

தொடங்கியது பு.ஜ.தொ.மு.வின் புரட்சிகர சங்கம்!

ஏ.ஐ.டி.யூ.சி.யின் இந்த ஏமாற்று வித்தைகளைப் புரிந்து கொண்டுதான் பு.ஜ.தொ.மு. தொடங்கப்பட்டது. சங்கம் தொடங்கிய முதல் இவ்வாலையில் நடந்து வரும் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக முறையாக குரல் கொடுத்து வருகிறோம். சட்டபூர்வமாக எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். பெரும்பான்மை சங்கமாக பு.ஜ.தொ.மு.விடம் இவ்வாலை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தாமல் தொடர்ந்து தனது சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விஜயசந்திரன் உயிரைக் காப்பாற்ற வலியுறுத்தி பு.ஜ.தொ.மு. சுவரொட்டி இயக்கம், மக்கள் மத்தியில் பிரச்சாரம், சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், ஆலை நிர்வாகம், இந்த வெளியாட்களுடன் ஒப்பந்தத்தை போட்டு தொழிலாளர்களை ஏமாற்றிவிடலாம் என்று கருதுகிறது. இந்த சதியின் மூலம் அடுத்து பல ஆண்டுகளுக்கு தொழிலாளர்களை நாயைவிட கேடாகக் கொடுமைப்படுத்த முடியும். இதுபோன்ற துரோக ஒப்பந்தங்கள் போடப்பட்ட பல ஆலைகளில் (அசோக் லேலாண்டு, கார்போரண்டம்) தொழிலாளர்களை நிரந்தரமாக பிளவுப்படுத்தி குளிர்காய்ந்து வருகின்றன, அவ்வாலை நிர்வாகங்கள். இதேபோல, வெக் இந்தியா தொழிலாளர்களையும் ஒரு கட்டபஞ்சாயத்து கும்பலை வைத்து துரோக ஒப்பந்தம் போட்டு ஏமாற்றிவிடலாம் என்று கருதுகிறது வெக் இந்தியா நிர்வாகம்.

ஆனால், இதனை பு.ஜ.தொ.மு. அப்படியே விட்டுவிடாது. தொழிலாளர்களும் ஏமாந்து இருந்துவிடமாட்டார்கள். இது போன்று ஏற்கனவே குளோபல் ஃபார்மாடெக் ஆலையில் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தி வந்த, துரோக ஒப்பந்தம் போட எத்தனித்த நிர்வாக அதிகாரி ஏகாம்பரம் சிறைக்கு சென்று, களி தின்று, ஓசூரில் செல்லாக்காசாகி போன வரலாறு உள்ளது. ஆகையால், வெக் இந்தியா ஆலைநிர்வாகம் ஜனநாயகமான முறையில் எங்களது கருத்துக்களை எடுத்துக்கொண்டு சட்டபூர்வமான சங்கமான பு.ஜ.தொ.மு.வுடன் பொதுகோரிக்கைக்கான பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும். உடனடியாக, விஜயசந்திரனின் உயிரைக்காப்பாற்ற சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்கு நிதி ஒதுக்க வேண்டும். அவரது குடும்பத்தை பசி, பட்டினியில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்க, தொழிலாளர் வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைப்போம்!

முதலாளித்துவ இலாபவெறிக்கு தொழிலாளர்களை பலியிடுவது என்பது அசோக்லேலாண்டில் சாந்தகுமார் என்ற தொழிலாளி முதல் நோக்கியாவில் அம்பிகா என்ற தொழிலாளி வரை நாடெங்கும் பரவி உள்ளது. ஆலைக்குள் பணிபுரியும் தொழிலாளர்களை மட்டுமல்ல, பல ஆயிரம் உழைக்கும் மக்களைக் காவு கொண்ட போபால் விசவாயு போன்ற படுகொலைகளும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் வருகின்றன. இருப்பினும் இந்த முதலாளித்துவ பயங்கரவாதிகள் தண்டிக்கப்படுவதில்லை. ஆகையால், ஒசூர் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் வெக் இந்தியா ஆலை நிர்வாகம் தொழிலாளர்கள் மீது தொடுத்துவரும் பயங்கரவாத நடவடிக்கைகள் நாளை நம்மையும் தாக்கும் என்பதை உணர வேண்டும். அதேசமயம், ஓட்டு சீட்டு தொழிற்சங்கங்களும், ஆலை நிர்வாகத்தின் கைப்பாவை தொழிற்சங்கங்களும் எந்த காலத்திலும் தொழிலாளர்கள் உரிமைக்காகப் போராடியதில்லை. நாடாளுமன்றத்தில் தனியார்மயம், தாராளமயம் என்ற பெயரில் அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகளை நாட்டிற்குள் தொழில் தொடங்க அழைத்துவரும் இந்த ஓட்டுக்கட்சிகள், இந்த கம்பெனிகள் தொழிலாளர்கள் மீது தொடுக்கும் அடக்குமுறைகளை எதிர்ப்பார்கள் என்று கருதுவது முட்டாள்தனம்!

ஆகையால், மேற்கண்ட நியாயமான கோரிக்கைகளுக்காக பு.ஜ.தொ.மு. சங்கம் போராடி வருகிறது. ஒசூரில் உள்ள பிற ஆலை தொழிலாளர்களே, நீங்கள் எங்களது இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவு கொடுங்கள். ஒசூரில் தொழிலாளர் வர்க்க ஒற்றுமைக்கு குரல் கொடுத்துவரும் பு.ஜ.தொ.மு.வில் இணைந்துள்ள வெக் இந்தியா தொழிலாளர்களாகிய நாங்களும் பிற ஆலை தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம்! ஒசூரில் முதலாளித்துவ பயங்கரவாதத்தை புதைக்குழியில் தள்ளுவோம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வெக் இண்டஸ்ட்ரீஸ் (இந்தியா) பிரைவேட் லிமிட்டெட் கிளைச் சங்கம்
தொடர்புக்கு: 97880 11784 – ஒசூர்

வடிவேலு பேக்கரி VS தா.பா. பேக்கரி

13

“மகிழ்ச்சியாக இணைந்தோம். மகிழ்ச்சியாக பிரிவோம்” என்று சொன்னாராம் ஓ.பன்னீர் செல்வம். ”சேர்ந்திருப்பதாக அவர்கள்தான் சொன்னார்கள், அதுபோல பிரிவையும் அவர்களே அறிவிக்கட்டும். அதுவரை நாங்கள் அவர்களுடன்தான் இருப்போம்” என்கிறார் தா.பா (தா.பாண்டியன்). இதில் சம்மந்தப்பட்ட பெயர்களை நீக்கினால் இது ஏதோ கைவிடப்பட்ட காதலிக்கும் ஏமாற்றிய காதலனுக்கும் இடையேயான உரையாடலைப் போல இருக்கும். போதும் போதாததற்கு ”அவர்கள் வந்தால் ஏற்றுக்கொள்ளத் தயார்” என வாழ்வு கொடுக்கும் பாத்திரத்தை ஏற்றிருந்தார் கருணாநிதி. நாம் பன்னெடுங்காலமாக புராணத்திலும், நாடகத்திலும், சினிமாவிலும் பார்த்து வந்த கற்புநெறி தவறா காதலிகளின் கதையை நினைவுபடுத்துகிறது இன்றைய ‘கம்யூனிஸ்ட்’ கட்சிகளின் நிலை.

ஓ. பன்னீர் செல்வம்
கற்பு நெறி தவறாத காதலர்களாய் கம்யூனிஸ்டுகள் இருப்பதால் “மகிழ்ச்சியாக இணைந்தோம். மகிழ்ச்சியாக பிரிவோம்” என்று சொன்னாராம் ஓ.பன்னீர் செல்வம்.

அதனை இன்னும் உறுதி செய்யும் விதமாக, ஏமாற்றப்பட்டாலும் தனித்து வாழ்வோமேயன்றி இன்னொருவனை ஏற்கமாட்டோம் எனும் பதிவிரதா தர்மத்தை கடைபிடித்திருக்கின்றன இரண்டு ‘கம்யூனிஸ்ட்’ கட்சிகளும். இவர்களது இந்த விரக்தியைக் கண்டு கட்சியைக் கலைத்து விடும் தற்கொலை முடிவை எடுத்து விடுவார்களோ என அஞ்சினேன். நல்வாய்ப்பாக அந்த ‘துன்பியல்’ சம்பவம் நிகழவில்லை. இந்த தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி இல்லை என்று மட்டும் கவனமாக கருத்து சொல்லியிருக்கிறார் தா.பா. துணைவர் மனம் திருந்தி என்னை ஏற்றுக் கொள்வார் எனும் நம்பிக்கை அவ்வாசகங்களில் தென்படுகிறது.

துரோகம் வென்றதாக வரலாறில்லை என மொட்டையாக முகநூலில் சாபம் விடுகிறார் எம்.எல்.ஏ பாலபாரதி. ஆளுக்கு ஒன்பது சீட் போட்டியிடுவது (அம்மாவின் தற்போதைய ராசி எண் ஒன்பதா, ஆறா?) என்ற முடிவை அறிவித்த டி.ராஜா, கால சூழ்நிலைகளால் இப்படி ஒரு முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதாக, மரண அறிவிப்புக்குரிய வாய்ஸ் மாடுலேசனுடன் அறிவிக்கிறார்.

ஹிட்லரின் இந்திய வெர்ஷன் மோடியையே பயப்படாமல் விமர்சனம் செய்யும் இடதுசாரி பேச்சாளர்களில் யாராவது ஒருவர், ஒரு ஆளில்லா சுடுகாட்டில் தனித்து நின்று, ஜெயலலிதாவை எதிர்த்து முழங்க மாட்டாரா என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்தேன். ஆனால் திரும்பிய பக்கமெல்லாம் முகாரி தான் முழங்கியது.

வாஜ்பாய் ஆட்சிக்கு பதின்மூன்றாவது மாதத்தில் மங்களம் பாடிய பிறகு நடந்த தேர்தலில் சீட் கொடுக்காமல் சுப்பிரமணிய சாமியை பபுள்கம்மைப் போல துப்பி விட்டுப் போனார் ஜெயா. இத்தனைக்கும் அவர் வசம் பூணூல் எனும் கவச குண்டலம் இருந்தது. அப்போது சூனா சாமி காட்டிய எதிர்வினையைக்கூட இன்றைக்கு இடதுசாரிகள் காட்டவில்லை. அட, அவர்களின் பிராமணர் பிரிவு தலைவர் டி.கே.ரங்கராஜன் (பாராளுமன்ற மேலவை உறுப்பினர், சிபிஎம்) ஏதாவது சொல்வார் என பார்த்தால் அவரோ அரசியலில் தர்மசங்கடம் என்பதெல்லாம் கிடையாது என சுருக்கமாக துடைத்துக் கொண்டு போகிறார.

கிரி - வடிவேலு
கணபதி அய்யர் அக்காவை கேட்பதெல்லாம் ஒரு பிரச்சனையா… பேக்கரியைத் தருகிறாரா என்பதுதானே முக்கியம். ”எவன் இருந்தாலும் செத்தாலும் உனக்கு ராஜ்யசபா சீட் கிடைச்சுடுது, அப்புறம் நீ எதுக்கு சங்கடப்படப் போற” எனும் டி.கே.ஆர் பற்றிய தா.பாவின் மைண்ட் வாய்ஸ் உங்களுக்கு கேட்டால் அதற்கு சங்கம் பொறுப்பல்ல.

அதுசரி கணபதி அய்யர் அக்காவை கேட்பதெல்லாம் ஒரு பிரச்சனையா… பேக்கரியைத் தருகிறாரா என்பதுதானே முக்கியம்.  ”எவன் இருந்தாலும் செத்தாலும் உனக்கு ராஜ்யசபா சீட் கிடைச்சுடுது, அப்புறம் நீ எதுக்கு சங்கடப்படப் போற” எனும் டி.கே.ஆர் பற்றிய தா.பாவின் மைண்ட் வாய்ஸ் உங்களுக்கு கேட்டால் அதற்கு சங்கம் பொறுப்பல்ல.

இந்த சூழல் இடதுசாரிகளுக்கு ஒன்றும் புதிதல்ல. சென்ற சட்டமன்றத் தேர்தலிலேயே கூட்டணிப் பங்கீட்டுக்கு முன்னால் தன்னிச்சையாக தமது வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயா. அப்போது அடைக்கலம் தேட இவர்களுக்கு ஒரு கருத்த, கண்கள் சிவந்த எம்ஜியார் இருந்தார். ஆனால் இன்றைய நிலைமையில் அவரை அணுகுவது என்பது ஒரிஜினல் கம்யூனிஸ்டாக மாறுவதைக் காட்டிலும் சிரமமான காரியம்.

ஆகவே அவர்கள் வசமுள்ள ஒரே வாய்ப்பு, ஒரு நாய்க்குட்டியைப்போல கண்மூடித்தனமான விசுவாசத்தை அம்மாவிடம் காட்டுவது மட்டுமே. அதற்கும் இல்லையில்லை, அதற்கு மேலேயும் தா.பா தயாராகத்தான் இருந்தார். துரதிருஷ்டவசமாக அம்மா இப்போது நாயைக் கொஞ்சும் மூடில் இல்லை என்பதால் அவர் கனத்த இதயத்தோடும் கண்ணீரோடும் விடைபெற வேண்டியதாயிற்று. அதற்காக நீங்கள் ஜெயாவைக் கோபிக்க முடியாது. தோழர்கள் இன்றைக்கு சுயமரியாதையோடு தேர்தல் களத்தில் நிற்பதென்பது சுயமாய் விளைந்த முடிவல்ல. மம்மி கழுத்தைப் பிடித்து தள்ளியிருக்காவிட்டால் இந்த காட்சியை நீங்களும் நானும் எந்த நாளும் பார்த்திருக்க முடியாது.

ஏகாதிபத்திய நாடுகளும் கார்ப்பரேட் பெருமுதலாளிகளும் கம்யூனிசம் எனும் வார்த்தையையே இல்லாதொழிக்க விரும்புகிறார்கள். அது போலியாக இருந்தாலும்கூட அவர்கள் சகித்துக் கொள்வதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னால் பல்லவன் போக்குவரத்துக் கழகத்துக்கு உலக வங்கி கடன்கொடுக்க முன்வந்தபோது சொன்ன நிபந்தனைகளில் ஒன்று, பேருந்துகளில் உள்ள சிகப்பு நிறத்தை அகற்ற வேண்டும் என்பது. கார்பரேட்டுக்களின் கனவை நிறைவேற்றும் கடமையை ஜெயா ஏற்றிருக்கிறார் (தகரத்தைக் கண்டுபிடிக்கும் முன்பே உண்டியலைக் கண்டு பிடித்தவர்கள் என கம்யூனிஸ்ட்டுக்களை கலாய்த்த  தலைவர் அம்மா). அந்த அவதாரத்துக்கு உதவ வந்த வீடணர்களாக தாபாவும் ஜிராவும் இருக்கிறார்கள்.

அன்பே சிவம்
அன்பே சிவம்: கமல், மக்களைத் திரட்டியா தொழிலாளர் உரிமையை பெற்றுத்தந்தார்? காதலை விட்டுக்கொடுத்துதான் அய்யா கம்யூனிசத்தைக் காப்பாற்றினார். பிரகாஷ் காரத், டி.ராஜா, ஜி.ரா என எல்லா தலைகளுக்கும் ஏகத்துக்கும் வயதாகிவிட்டது. இனிமேல் இவர்கள் கமல்ஹாசனின் வழியில் போயா கம்யூனிசத்தைக் காப்பாற்ற முடியும்?

அப்படியானால் இது ‘கம்யூனிஸ்’டுகளின் இன்றைய தலைமையின் குற்றம் என நீங்கள் கருதினால் அதைவிட பஞ்சமா பாதகம் வேறொன்றில்லை. நியூட்டனையும் ஐன்ஸ்டீனையும் புறந்தள்ளிவிட்டு நீங்கள் இயற்பியல் படித்துவிட முடியுமா? ஆனால் இன்றைய ‘கம்யூனிஸ்ட்’ தலைவர்களது (தொண்டர்களும்தான்) தலைவிதியானது மார்க்சியத்தை நிராகரித்துவிட்டு கம்யூனிஸ்ட் கட்சி நடத்துவதாக அல்லவா இருக்கிறது? திருட்டை ஒரு வேலையாக செய்யும் குழுவில் நியாயம் என்பது திருடர்களுக்கிடையேயான நேர்மை மட்டுமே. முதலாளித்துவத்தையும் ஏற்றுக் கொண்டு பொதுஉடைமை சிந்தனையையும் செயல்படுத்துவதென்பது சாத்தியமில்லாத செயல். இரண்டு எதிரெதிர் துருவமான சிந்தனைகளை ஏற்று செயல்படுத்த வேண்டுமானால் அது இருவருக்கும் பைபோலார் டிஸ்ஆர்டர் வந்த பிறகுதான் சாத்தியம்.

இடதுசாரிகளால் வியந்து போற்றப்பட்ட அன்பே சிவம் படத்து கிளைமாக்சில் சகலகலா வல்லவன் கமல், மக்களைத் திரட்டியா தொழிலாளர் உரிமையை பெற்றுத்தந்தார்? காதலை விட்டுக்கொடுத்துதான் அய்யா கம்யூனிசத்தைக் காப்பாற்றினார். பிரகாஷ் காரத், டி.ராஜா, ஜி.ரா என எல்லா தலைகளுக்கும் ஏகத்துக்கும் வயதாகிவிட்டது. இனிமேல் இவர்கள் கமல்ஹாசனின் வழியில் போயா கம்யூனிசத்தைக் காப்பாற்ற முடியும்? கம்யூனிசத்தை கைவிட்டாயிற்று, கமலஹாசன் காட்டிய வழியிலும் போக முடியாது… பிறகு சரணாகதியடைவதுதானே கடைசி வாய்ப்பு??

நான் ஏதோ ‘கம்யூ’ தலைவர்களை கிண்டலடிப்பதாக புரிந்து கொண்ட ரங்கராஜ தாசர்கள் யாரேனும் எனக்கு கருடபுரணத்தின்படி கும்பிபாக தண்டனை கொடுத்து குப்புற படுக்க வைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆகவே  சில பத்திகளாவது அவர்களது செயல்பாடுகளில் உள்ள கம்யூனிச ‘நெறி’களைப் பற்றி பேசிவிடுகிறேன்.

சோசலிச ரஷ்யாவில் ஒரு தொழிலாளிக்கும் அறுநூறு ரூபிள்தான் சம்பளம், அதிகாரிக்கும் அறுநூறு ரூபிள்தான் சம்பளம். இவ்வளவு ஏன் தேசத்தின் தலைவர் லெனினுக்கும் அதே அறுநூறு ரூபிள்தான் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டது. சோசலிசத்தின் அடிநாதமே எல்லோரும் சமம் எனும் கோட்பாடுதான். சோசலிச ரசியா அளவுக்கு இல்லாவிட்டாலும் அதனை தமிழக இடதுசாரிக் கட்சிகள் முடிந்தவரை பின்பற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இடது,வலது கட்சிகள்
விஜயகாந்த் கட்சியையும் வலியப்போய் ஆதரித்தார்கள். நாளையே பரோட்டா சூரியும், இனா தானா விஜயும் கட்சி ஆரம்பித்தால், முதல் வாழ்த்தும் கூட்டணியும் இவர்களுடையதுதான்.

சில காலம் திமுகவை ஆதரித்தார்கள். எம்ஜியார் தனிக் கட்சி அமைத்தவுடன் அவரை ஆதரித்தார்கள், பிறகு வைகோ கட்சி ஆரம்பித்தபோது அவரையும் ஆதரித்தார்கள். விஜயகாந்த் கட்சியையும் வலியப்போய் ஆதரித்தார்கள். ஆகவே அவர்களுக்கு எந்த பாரபட்சமும் இல்லை. அப்படியானால் சமக சரத்குமாரை அவர்கள் ஏன் ஆதரிக்கவில்லை எனும் குதர்க்கமான கேள்வி உங்களுக்கு எழக்கூடும். அம்மாவையே நேரடியாக ஆதரிப்பவர்கள், அம்மாவின் அடிப்பொடியான சரத்குமாரை தனியாக ஒரு முறை எப்படி ஆதரிக்க முடியும்? ஆனால் ஒன்று, இனாதானா விஜய் கட்சி ஆரம்பித்தாலோ அல்லது நடிகர் சூரி கட்சி ஆரம்பித்தாலோ இடதுசாரிகளின் ஆதரவு அவர்களுக்கு கட்டாயம் உண்டு என்பதை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்.

கம்யூனிஸ்ட்களின் இன்னொரு பண்பு தியாகம். இரண்டாம் உலகப் போரில் ஸ்டாலினின் மகன் ஜெர்மன் ராணுவத்தால் கைது செய்யப்படுகிறார். செய்தியறிந்த ஜெர்மானிய அரசு, ரஷ்யா வசம் கைதியாக உள்ள சில ஜெர்மன் ராணுவத் தளபதிகளை விடுவித்தால் ஸ்டாலின் மகன் விடுவிக்கப்படுவார் என பேரம் பேசுகிறது. பல வீரர்களை போரில் இழந்து கைது செய்த தளபதிகளை ஒரு வீரனுக்காக விடுவிக்க முடியாது என்றார் ஸ்டாலின். அதன் பிறகு அவர் மகன் ஜெர்மன் அரசால் கொல்லப்பட்டார்.

சொந்த மகனை நாட்டுக்காக இழந்த ஸ்டாலின் செய்தது தியாகம் என்றால் இரண்டு எம்பி சீட்டுக்காக தங்கள் தன்மானத்தையே இழந்து ஜெயா விரட்டியடிக்கும்வரை போயஸ் தோட்டத்து வாயிலில் காத்திருந்த இடதுசாரி தலைவர்கள் செய்திருப்பது அந்த தியாகத்தைக் காட்டிலும் மேம்பட்டதில்லையா? தன்மானத்துக்காக சொந்த உறவைக்கூட இழக்கத் தயாராக இருப்பவன்தான் உண்மையான கம்யூனிஸ்ட். அந்த தன்மானத்தையே கட்சிக்காக தியாகம் செய்பவன் கம்யூனிஸ்டைக் காட்டிலும் உயர்ந்தவனாகத்தானே இருக்க முடியும்? இந்த கோணத்தில் யோசியுங்கள் லாஜிக் கொஞ்சம்கூட இடிக்காது.

ஒரு கம்யூனிஸ்ட் என்பவன் கைமேல் பலனை எதிர்பார்த்து வேலை செய்பவன் அல்ல. 1848-ல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்படுகிறது. அதன் பலனை உலகம் கண்டது 1917-ல்தான். இடைப்பட்ட அந்த 70 ஆண்டு காலத்தில் கம்யூனிசப் புரட்சிக்காக உழைத்தவர்களில் பலர் அந்த உழைப்பிற்கான எந்த விளைவையும் தம் வாழ்நாளில் கண்டதில்லை, மார்க்ஸ் ஏங்கல்ஸ் உட்பட. தன் வாழ்நாளில் சாத்தியமில்லை என தெரிந்துதான் அவர்கள் தங்களது லட்சியத்துக்காக உழைத்தார்கள். ஒரு விதத்தில் நமது இடதுசாரி தலைவர்களும் அப்படியே.

மம்மியை இந்துமதவெறி எதிர்ப்பாளராக்கி அழகு பார்க்க வேண்டும் என்பது இந்த இடதுசாரிகளின் வாழ்நாள் இலட்சியம். ஆனால் மம்மியோ பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாமல் காங்கிரசை மட்டுமே பொளக்கிறார். தமிழக காங்கிரஸ்காரர்களே தேர்தல் வேலையை விட்டுவிட்டு சொந்த வேலை பார்க்க கிளம்பி விட்டார்கள். சத்தியமூர்த்திபவன் காத்து வாங்குவதால் அங்கே டீ விற்பவர் கூட இரண்டு மாத விடுப்பில் சென்றுவிட்டதாக தகவல். இந்த தேர்தலில் தமிழக காங். ஒரு செத்த பாம்பு, அதையே இந்த அடி அடிக்கும் ஜெயா, பாஜக பற்றி மூச்சுகூட விடவில்லை. மதவாதத்துக்கு எதிராக ஜெயா செயல்படுவதை பார்க்கும் வாய்ப்பு நம் யாருடைய வாழ்நாளிலும் சாத்தியமில்லை. ஆயினும் ஜெயலலிதாவை மதவாதத்துக்கு எதிரான சக்தியாக்கிப் பார்க்கும் லட்சிய வேட்கை இவர்களிடம் குறையவில்லை. பலமுறை நாய்க்கடி பட்ட பிறகும், அதன் வாலை நிமிர்த்தியே தீருவோம் என்று விடாமல் பின்தொடர்கிறார்களே, அந்த இடத்தில்தான் நிற்கிறார்கள் நம்ம வலது இடதுகள்.

ஜெயா - சோ
மம்மியை இந்துமதவெறி எதிர்ப்பாளராக்கி அழகு பார்க்க வேண்டும் என்பது இந்த இடதுசாரிகளின் வாழ்நாள் இலட்சியம்.

ஒரு காலத்தில் இரண்டு இடதுசாரிக் கட்சியிலும் சேரவேண்டுமானால் சில விதிமுறைகளை பின்பற்றுவதாக உறுதிமொழிப் படிவத்தில் கையொப்பமிடவேண்டும். இப்போது அங்கே உறுப்பினராவது சிம்கார்டு வாங்குவதைவிட சுலபம். தொழிற்சங்கத்துக்காக உயிரைக்கூட கொடுத்த தியாகிகள் அங்கே இருந்தார்கள். இப்போது தொழிற்சங்க நடவடிக்கைக்கான காலம் முடிந்துவிட்டது என ஒரு டி.வி பேட்டியில் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார் டி.கே ரங்கராஜன். கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்களின் குடும்ப உறுப்பினர்கள் கூலி வேலை பார்த்து சாப்பிட்ட காலம் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்புகூட தமிழகத்தில் இருந்தது  ஆனால் இப்போது தளி ராமச்சந்திரனைப் போன்ற ரவுடிகளும் பெருமுதலாளிகளும் கட்சியில் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். கட்சியின் செல்வாக்கு மட்டுமல்ல, அதன் மீதிருந்த நன்மதிப்பும் மிகவேகமாக காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

ஆகப்பெரும்பாலான அரசு நிறுவனத் தொழிற்சங்கங்கள் ஊழியர்களது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றி வைக்கும் தரகுவேலையைத்தான் செய்கின்றன (“எனக்கு கும்பகோணத்துக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொடுத்த சங்கத் தலைவர்களுக்கு நன்றி” என ஒரு பெரிய பேனரை தஞ்சை ரயிலடியில் பார்த்தேன்). தனியார் நிறுவனங்களிலோ முதலாளிகளுக்கு விசுவாசமாக வேலைபார்க்கும் ஒரு நிறுவனப் பிரிவாகவே பல தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன.

தேசிய மற்றும் திராவிடக் கட்சிகளைக் காட்டிலும் நாங்கள் மேம்பட்டவர்கள் என நிரூபிக்கும் ஆதாரமாக இடதுசாரிகள் வசம் அவர்கள் வரலாறு மட்டுமே இன்றைக்கு இருக்கிறது. எந்த ஒரு போலிப் பொருளும் தோற்றத்தில் அசலைப் போல இருக்கவேண்டும் என்பது எல்லா சந்தையிலும் இருக்கிற விதி. கம்யூனிஸ்ட் கட்சிகளின் நல்இயல்புகள், கம்யூனிஸ்டுகளின் ஒழுக்கம் என்பவையெல்லாம் அசலைப்போன்ற ஒரு தோற்றத்தை இதுநாள்வரை நமக்கு காட்டி வந்தன. அப்படியான ஒரு தோற்றமும் இனி அவசியமில்லை எனும் முடிவிற்கு இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதைத்தான் இன்றைய காட்சிகள் நமக்கு காட்டுகின்றன.

பொதுவுடமை சித்தாந்தங்களை இவர்கள் எப்போதோ கைகழுவிவிட்டார்கள், கம்யூனிஸ்ட் போல தோன்றுவதையும்கூட இவர்கள் இப்போது விரும்புவதில்லை. கம்யூனிஸ்ட் எனும் பெயரைத் துறக்கும் பட்சத்தில் ஒரு சீட் கூடுதலாக கிடைக்குமென்றால் அதையும் இவர்கள் துறந்துவிடுவார்கள். அந்த நன்னாளுக்காகவே நான் காத்திருக்கிறேன். ஏனென்றால் அதுதான் அவர்களுக்கும் நல்லது கம்யூனிசத்துக்கும் நல்லது.

வில்லவன்

ரோல்ஸ் ராய்ஸ் – பாரம்பரியமான பிளேடு திருடன் !

0

லக அளவில் சட்டம், நீதி, ராஜா, ராணி, ஜேம்ஸ் பாண்ட், பாண்டின் காதலிகள் என்று ஏகப்பட்ட ‘பாரம்பரியங்களுக்கு’ பெயர் போனது இங்கிலாந்து நாடு. அத்தகைய நாட்டின் ‘பாரம்பரியம்’ மிக்க ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் ஆயுத பேரங்களில் முறைகேடுகள் செய்ததாக அதே நாட்டில் தெரிய வந்தது. இதைக் கண்டு அஞ்சிய இந்திய பாதுகாப்பு அமைச்சகம், தமிழ் சினிமா கிளைமேக்சில் வரும் தினத்தந்தி போலிசு போல சும்மா பெயரெடுக்க விரும்பியது. அதன்படி அந்நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைத்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ்
ரோல்ஸ் ராய்ஸ்

மன்னர்களும், மகாராஜாக்களும் தங்களது பெருமையை பறைசாற்றிக் கொள்ள, சுய தம்பட்டமடிக்க ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை வாங்கிக் குவிப்பது போல இந்தியா போன்ற நாடுகளின் அரசுகள் தங்களது ராணுவ பெருமையை பறைச்சாற்றிக் கொள்ளவும், பாதுகாப்பு அச்சுறுத்தல் பீதியை கிளப்பிவிட்டு தேசபக்தி என்ற பெயரில் பன்னாட்டு ஆயுத நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை வாரி வழங்கவும்  ஆயுதங்களை வாங்கிக் குவிக்கின்றன.

பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் (BAE) சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து சுமார் ரூ 8,500 கோடிக்கு 66 மேம்பட்ட ஜெட் பயிற்றுநர் விமானங்களை (Hawks Advanced Jet Trainer) இந்திய விமானப்படைக்கு வாங்குவதாக 2004-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் 2010-ல் சுமார் ரூ 7,000 கோடிக்கு 57 விமானங்களும், 2011-ல் சுமார் ரூ 3,600 கோடிக்கு 20 விமானங்களும் மேலதிகமாக வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. ரூ 25,000 கோடிக்கும் அதிக மதிப்புடைய 143 விமானங்களுக்கான இந்த ஒப்பந்தங்களின்படி 24 நேரடியாக பிரிட்டனில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் என்றும் மீதமுள்ள 119 விமானங்களை இந்திய பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல்சுக்கு (HAL) உற்பத்தி உரிமம் கொடுக்கப்படும் என்றும் ஒப்பந்தமிட்டுக் கொண்டது பி.ஏ.ஈ சிஸ்டம்ஸ்.

இந்த ஹாக்ஸ் பயிற்றுநர் விமானங்களுக்கு என்ஜின்கள் வாங்குவதற்காக உலகின் விமான என்ஜின் தயாரிப்பில் அமெரிக்காவின் ஜி.இ (GE) நிறுவனத்திற்கு அடுத்த படியாக இரண்டாமிடத்தில் இருக்கும் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்துடன் எச்.ஏ.எல் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருந்தது.

ஆசியப்பகுதி நாடுகளுக்கு என்ஜின் மற்றும் உதிரி பாகங்கள் சப்ளை செய்ய ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் இடைத்தரகர்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், லஞ்சம் கொடுத்ததாகவும், அந்நிறுவனத்தின் முன்னாள் பணியாளரான டிக் டெய்லர் 2012-ம் ஆண்டு அம்பலப்படுத்தினார். இந்தோனேசியாவின் கருடா விமான நிறுவனத்துக்கு ட்ரெண்ட்-700 ரக என்ஜின்களை விற்பனை செய்ய அப்போதைய அதிபர் சுகர்தோவின் மகன் டாமி சுகர்தோவுக்கு சுமார் 2 கோடி அமெரிக்க டாலர்களும், ஒருரோல்ஸ்-ராய்ஸ் காரும் லஞ்சமாக கொடுக்கப்பட்டதை அவர் வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார்.

இம்மாதிரியான முறைகேடுகள் 1980-90-களிலேயே தொடங்கி விட்டதாகவும், இது ஒரேயொரு உதாரணம் மட்டுமே என்றும் சீனா உட்பட பல ஆசிய நாடுகளின் ராணுவ மற்றும் விமான நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை பெறுவதற்கு லஞ்ச முறைகேடுகள் பலவற்றில் ரோல்ஸ் ராய்ஸ் ஈடுபட்டதாக அவர் அம்பலப்படுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்தின் தீவிர பொருளாதார மோசடிகளுக்கான விசாரணை அலுவலகம் (SFO) ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் விற்பனை முறைகேடுகளை விசாரித்து, லண்டன் வாழ் இந்தியர்களான சுதிர் சவுத்திரி மற்றும் அவருடைய மகன் பானு சவுத்திரி ஆகிய ஆயுத புரோக்கர்களை கடந்த மாதம் கைது செய்தது. முதலாளி இங்கிலாந்தானாலும், அவனுக்கு புரோக்கர் வேலை பார்த்தது சாட்சாத் இந்தியர்கள் என்பதால் மோடி பக்தர்களும், காங்கிரஸ் அன்பர்களும் பெருமை கொள்ளலாம்.

ரோல்ஸ் ராய்ஸ் எஞ்சின்
ரோல்ஸ் ராய்ஸ் எஞ்சின் வாங்குவதில் ஊழல்

இப்படி இங்கிலாந்தில் ஊழல் வெளிப்பட்டு பேசப்பட்ட உடன், எச்.ஏ.எல் உடனான ஒப்பந்தங்களில் சட்ட விரோதமான இடைத் தரகர்களை ரோல்ஸ் ராய்ஸ் பயன்படுத்தியது தொடர்பாக ஒரு ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப் போவதாக சி.பி.ஐ அறிவித்திருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் கெயில் மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுக்கான காற்றுசுழலிகளை (Gas Turbine) எச்ஏஎல்லுக்கு சப்ளை செய்ததில் இடைத்தரகர்களை பயன்படுத்தியதாக ரோல்ஸ்-ராய்ஸ் ஒப்புக்கொண்டதாகவும், அந்த சுயவிளக்கத்தை எச்ஏஎல்-ன் ஊழல் தடுப்புபிரிவு பாதுகாப்பு அமைச்சகத்தின் விசாரணைக்கு அனுப்பி வைத்ததாகவும், எச்.ஏ.எல்லுடன் ரோல்ஸ் ராய்சின் இராணுவ ஒப்பந்தங்கள் அனைத்திலும் இடைத்தரகர்களின் பங்கையும், முறைகேடுகளையும் விசாரிக்க சி.பி.ஐ விசாரணைக்கு அனுப்பி வைத்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த ஆஷ்மோர் பிரைவேட்  லிமிடெட் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த அசோக் பத்னி என்பவரை இந்தியாவுக்கான தனது தரகராக 2013 ஜனவரி வரை பயன்படுத்தியதாக ரோல்ஸ் ராய்ஸ் கூறியிருந்தது.

அதாவது இங்கிலாந்து மைனர் ரோல்ஸ்-ராய்ஸ் தானாகவே வாலண்டியராக வந்து வண்டியில் ஏறியதாக, அதாவது 2013 டிசம்பரில் ரோல்ஸ்-ராய்ஸ் அனுப்பிய சுயவிளக்க கடிதத்தின் அடிப்படையில் 2007-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் மீது விசாரணை நடவடிக்கைகள் தொடங்கியதாக நம்மை நம்பச் சொல்கிறார்கள். உண்மையில், இவ்வளவு நாட்களாக தூங்கிக் கொண்டிருந்தது போல நடித்த பாதுகாப்பு அமைச்சகம் ரோல்ஸ்-ராய்ஸ் பெயர் இங்கிலாந்தில் நாற ஆரம்பித்தவுடன், சென்ற ஆண்டு இத்தாலியில் அம்பலமான இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் அசிங்கப்பட்டது போல அசிங்கப்படுவதை தவிர்க்க முந்திக் கொண்டு விட்டது.

மேலும் இவர்கள் விசாரணை என்று அறிவித்த உடனேயே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் எப்படி ஊழல், யாரால் ஊழல், எவ்வளவு பணம் என்பதை விசாரிக்காமலேயே தெரிவித்திருக்கிறது என்பதை நம்ப முடிகிறதா? இதிலிருந்தே பாதுகாப்பு அமைச்சகத்தின் மேல் தட்டுக்கும், இந்த கார் கம்பெனிக்கும் நடந்த விவகாரங்கள் அனைத்தும் அவர்களுக்கு தெரியும் என்பது தெரிகிறது. அந்த நட்பின் அடிப்படையில்தான் இந்த ஒப்புதல் வாக்குமூலம் வேறு பேரங்களை மனதில் கொண்டு வெளியே விட்டிருக்கிறார்கள். ஜெயாவின் சொத்துக் குவிப்பையே இத்தனை ஆண்டுகளாய் நிரூபிக்க முடியாத போது ரோல்ஸ் ராய்சின் ஊழலை மட்டும் ஓரிரு நாட்களில் கொண்டு வந்து விட முடியுமா என்ன?

சி.பி.ஐ விசாரணை அறிவிக்கப்பட்டவுடன், ‘நல்ல புத்தி’ வந்த ரோல்ஸ் ராய்ஸ் ஹாக்ஸ் பயிற்றுநர் விமானங்களுக்கு அடூர் வகை என்ஜின்கள் சப்ளை செய்ய இடைத்தரகர்களுக்கு 18 கோடி கொடுத்ததாகவும், அதை இந்திய அரசுக்கு திருப்பி செலுத்தி விடுவதாகவும் எச்.ஏ.எல்-க்கு கடிதம் எழுதியுள்ளது. அதாவது பிடிபட்டவுடன் திருடிய பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவதாக நாடகமாடுகிறது. ஆனால் இவ்வொப்பந்தத்திற்கு சுமார் ரூ 500 கோடி வரை கமிஷனாக கைமாறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ரோல்ஸ் ராய்ஸ்
ரோல்ஸ் ராய்ஸ் மறைக்கும் பெரிய திமிங்கிலங்கள்

ஹாக்ஸ் பயிற்றுநர் விமானங்களுக்கு அடூர் வகை என்ஜின்கள் மட்டுமின்றி ஜாகுவார், அவ்ரோ, கிரண் போன்ற விமானங்களுக்கும், கடல்-அரசன் (Sea King) ஹெலிகாப்டர்களுக்கும் ரோல்ஸ்ராய்சிடமிருந்து என்ஜின்களை ஹெச்.ஏ.எல் வாங்கி வருகிறது. மேலும் பல்வேறு இராணுவ விமானங்களை பழுது பார்க்கும், பராமரிக்கும் ஒப்பந்தங்களை ரோல்ஸ் ராய்சுடன் இந்திய விமானப்படை போட்டுக் கொண்டுள்ளது. எச்.ஏ.எல் – ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனங்கள் பெங்களூருவில் ஐ.ஏ.எம்.பி.எல் (International Aerospace Manufacturing Private Limited) என்ற விமான என்ஜின் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை கூட்டிணைவில் உருவாக்கியிருக்கின்றன. இத்தனை ஒப்பந்தங்களுக்கு பின்புறமும் கைமாறிய கமிசன் தொகைகள் பல ஆயிரம் கோடிகளை தாண்டலாம். ஆக சிறிய மீனை கொடுத்து விட்டு திமிங்கலங்களை மறைத்து விட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

1980-களில் போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் நடந்த ஊழல் மற்றும் அடுத்தடுத்து அம்பலமான ஊழல்களை அடுத்து, தமது ஆயுத பேரங்களை புனிதப்படுத்திக் கொள்ள, ‘இனி இடைத்தரகர்களை பயன்படுத்துவதில்லை’ என்றும் ‘இடைத்தரகர்களை பயன்படுத்துவதும், கமிஷன் கொடுப்பதும் குற்றமென்றும்’, ‘பாதுகாப்பு துறைக்கு தளவாடங்களை வழங்கும் நிறுவனங்கள் தங்களது மூன்றாண்டுகால நடவடிக்கைகள் குறித்து சுயஉறுதிச் சான்றை அளிக்க வேண்டுமென்றும்’, ‘ராணுவத்துக்கான தளவாடங்களை நேரடி உற்பத்தியாளரிடம் இருந்து மட்டுமே வாங்குவது, மூன்றாம் தரப்பிடம் இருந்து கொள்முதல் செய்வதில்லை’ என்றும் அடுத்தடுத்து புதிய வழிகாட்டி விதிமுறைகளை இந்திய ஆளும் வர்க்கம் அறிவித்துக் கொண்டிருந்தது.

ஆனால் அடுத்தடுத்து வெடித்துக் கிளம்பும் ஊழல் விவகாரங்கள் இந்திய பாதுகாப்புத் துறையும் அதன் கொள்முதல் துறையும் ஊழலில் ஊறித் திளைக்கின்றன என்பதை உறுதி செய்தன. 2012-ம் ஆண்டு அம்பலமான டாட்ரா கனரக வாகனங்களை வாங்குவதில் நடந்த முறைகேடுகளிலும், சென்ற ஆண்டு ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் நடந்த முறைகேடுகளும், இந்த வழிகாட்டி விதிமுறைகளை அரசோ பன்னாட்டு ஆயுத நிறுவனங்களோ கழிவறை காகிதமாகக்கூட மதிக்கவில்லை என்பதை மீண்டும் உறுதி செய்தன. இதில் காங்கிரசு மட்டுமல்ல, கார்கில் சவப்பெட்டி ஊழல் புகழ் பாஜகவிற்கும் பங்கு இருக்கிறது என்பது முக்கியம்.

தேசத்தின் பாதுகாப்பு, இரகசியம் என்ற பெயரில் வெளிப்படை தன்மையற்ற, இடைத்தரகர்களின் வலைப் பின்னல்கள் மூலம் நடக்கும் ஆயுதபேரங்கள் அனைத்திற்குப் பின்னாலும் இம்மாதிரியான ஆயிரக்கணக்கான கோடி ஊழல்கள், முறைகேடுகள் நடக்கின்றன. மற்றொரு உதாரணமாக இந்திய விமானப்படை ஜெட் பயிற்றுநர் விமானங்களை (AJT) வாங்குவதற்கு ஒப்பந்தமிட்டிருக்கும் பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் (BAE) சிஸ்டம்ஸ் நிறுவனமே 2010-ம் ஆண்டு ஊழல் முறைகேடுகளுக்காக இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் 450 மில்லியன் டாலர் வரை (சுமார் 2500 கோடி ரூபாய்) அபராதம் கட்டியிருக்கிறது.

பேரங்களும் ஒப்பந்தங்களும் ரகசிய மூடுதிரைக்குள்ளிருந்து வெளியாகாத வரை ஊழலற்றதாக தோற்றமளிக்கும், வெளியானால் சந்தி சிரிக்கும். இதுதான் வல்லரசு இந்திய இராணுவத்தின் யோக்கியதை. அப்படி வாங்கப்படும் ஆயுதங்கள், கருவிகளின் தரம் என்ன? ஏற்கனவே ரசியாவிடமிருந்து வாங்கப்பட்ட மிக் ரக விமானங்கள் அதிகம் விபத்துக்களை சந்திப்பதாக சீன் போட்டவர்களின் அருகதையை ரோல்ஸ்ராய்சின் ஊழலிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். இப்படி இவர்கள் கமிஷன் பெற்று வாங்கும் ஆயுதங்கள், விமானங்கள், கப்பல்களை வைத்து போர் நடத்தவில்லை என்றாலும் அவற்றின் தரம் காரணமாக வீரர்களே சாகிறார்கள். சென்ற மாதம் இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். சிந்துரத்னா’ என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் திடீர் தீ விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமுற்று 2 பேர் பலியாயினர். இப்படி கப்பற்படையில் மட்டும் ஏராளம் விபத்துக்கள். பாவம் வீரர்கள்!

அண்டை நாடுகளுடனான பாதுகாப்பு அச்சுறுத்தல் பீதியை கிளப்பிவிட்டு அதன் மூலம் ஆயுதங்களையும் கருவிகளையும் வாங்கி நம் வரிப் பணத்தை பன்னாட்டு ஆயுத கம்பெனிகளுக்கு வாரி இறைப்பதற்கு சகல முறைகேடுகளையும் கையாள்கின்றன இந்திய ஆளும் வர்க்கங்கள். இடைத்தரகர்கள், அதிகாரிகள், இராணுவத் தளபதிகள், அரசியல்வாதிகள், கார்ப்பரேட் கம்பெனிகள், ஏகாதிபத்திய நாடுகள் என்று நீளும் இந்த வலைப்பின்னல் அழுகி நாறும் இச்சுரண்டல் அமைப்பின் சீரழிவைக் காட்டுகிறது.

ஆக இராணுவமென்றால் உங்களுக்கு தியாகத்தை நினைவூட்டியவாறு அவர்கள் கல்லாவை சுருட்டிக் கொள்கிறார்கள். தியாகத்தின் விலை அவ்வளவுதான்.

–    மார்ட்டின்.

மேலும் படிக்க

டிக்கெட் இல்லையா – இந்திய ரயில்வே கொல்லும் !

11

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர், ராமன் என்கிற கல்லூரி மாணவர். கடந்த புதன்கிழமை 12.03.2014 அன்று இம்மாணவர், மின்சார ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது, பயணச் சீட்டு எடுக்காததால் பரிசோதகரை பார்த்து தப்பிக்க எண்ணி, கால் தவறி கீழே விழுந்து இறந்து விட்டதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. எனில் இது ஒரு ஒழுக்கமின்மை, மோசடி, மாணவர்களின் விட்டேத்திதனம் குறித்த பிரச்சினையாக அண்ணா ஹசாரேவால் அரசியலைப் பேச நிர்ப்பந்திக்கப்பட்ட மேன்மக்கள் கருதுவார்கள். உண்மை என்ன?

மாணவர்கள் போராட்டம்
படம் : நன்றி தினகரன்

சென்னையை அடுத்துள்ள வேப்பம்பட்டு ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரியில்தான் இம்மாணவரான ராமன், இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தான். கூலி வேலை பார்த்து வந்த, அவனுடைய அப்பா ஆறு மாதங்களுக்கு முன்பு தான் இறந்துள்ளார். அவருக்குப் பிறகு அம்மா தான் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்தார். ராமனுக்கு இரண்டு சகோதரிகள் இருக்கின்றனர். அப்பா இறந்த பிறகு ராமன், பட்டாபிராமில் உள்ள சித்தப்பா வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளான். தினமும் பட்டாபிராமில் இருந்து மின்சார ரெயிலில் பயணிக்க வேண்டியிருந்ததால் ரயில்வே சீசன் பயண அட்டையை பயன்படுத்தி வந்திருக்கிறான்.

அன்று காலை 8 மணியளவில், திருப்பதிக்கு சென்று கொண்டிருந்த மின்சார ரெயிலில் நண்பர்களோடு ஏறியுள்ளான். அந்த வண்டி ஏற்கெனவே பயணிகளால் நிரம்பி வழிந்தபடி வந்ததால், நிற்கக்கூட இடமில்லாமல் இருந்திருக்கிறது. எனவே கூட்டம் குறைவாக இருந்த அடுத்தடுத்த பெட்டிகளை நோக்கி ராமன் நண்பர்களோடு நகர்ந்திருக்கிறான். ஒவ்வொரு நிறுத்தத்திலும் இறங்கி மாறி மாறி இறுதியில் கூட்டம் குறைவாக இருந்த முதல் வகுப்பு பெட்டிக்குச் சென்றிருக்கின்றனர்.

ரயில் திருநின்றவூர் அருகே சென்று கொண்டிருந்திருந்த போது பரிசோதகர் அந்த பெட்டிக்கு வந்திருக்கிறார். ராமனிடம் பயணச்சீட்டை காட்டும்படி கேட்டிருக்கிறார். அவர் மாத சலுகை பயண அட்டையை காண்பித்துள்ளான்.

ஆனால் அந்த சலுகை பயண அட்டை மார்ச் 3-ம் தேதியோடு காலாவதியாகி விட்டிருக்கிறது. பொதுவில் மாணவர்கள் இந்த பயண அட்டையை உரிய தேதிகளில் எடுக்கிறார்கள் என்றாலும் சமயத்தில் ஒரு சில தினங்கள் எடுக்காமலே பயணிப்பது உண்டு. சில பரிசோதகர்களும் மறக்காமல் எடுக்க வேண்டும் என்று எச்சரித்து விட்டுவிடுவார்கள். இங்கே ராமன் அப்படி எடுக்காமல் இருந்ததற்கு மறதி மட்டுமல்ல, வறுமையும் கூடத்தான் காரணம். இதையெல்லாம் கணக்கில் கொள்ளாத பரிசோதகர் சட்டம் பேசி அந்த மாணவனை அச்சுறுத்தியுள்ளார். எப்படியாவது பரிசோதகரின் பிடியிலிருந்து தப்ப ராமன் வழி தேடியிருக்கிறான்.

இதற்கிடையே வேப்பம்பட்டு ரெயில் நிலையம் நெருங்கவே ராமன் இறங்கத் தயாராகியிருக்கிறான். பரிசோதகரோ அவனை இறங்கவிடாமல் வாக்குவாதம் செய்து கொண்டு சட்டையை பிடித்து இழுத்திருக்கிறார். ரெயிலில் இருக்கிறோம் என்பதைக் கூட மறந்து, பரிசோதகர் கேட்கப்போகும் அபராத தொகையை எண்ணி பயந்த ராமன், உயிரைப் பற்றி கூட கவலைப்படாமல் ரயில் நிற்பதற்கு முன்னாலேயே இறங்க முயன்றுள்ளான். பரிசோதகர் அவனை தப்ப விடாமல் பிடிக்க முயற்சித்துள்ளார். இருவருக்கும் இடையில் நடந்த இந்த போராட்டத்தில் கண்ணிமைப்பதற்குள் ராமனின் இரண்டு கால்களும் பிளாட்பாரத்தில் சிக்கி நசுங்கியது, தலை பயங்கரமாக தரையில் மோதி தர தரவென இழுத்துக்கொண்டே சென்றிருக்கிறது. பிறகு ரயில் நின்று, அவசர ஊர்தி வந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்குள் ராமன் இறந்து விட்டான்.

ஒரு மாணவன் ஏழை என்பதால் இத்தகைய கொடூர மரணத்திற்கு ஆளாகியுள்ளான். ஓரிரு நூறு ரூபாய்களை மதிப்புடைய பயண சீசன் அட்டை இல்லை என்பதால் இந்திய ரயில்வேயின் விசாரணைக்கு தனது உயிரை அபராதமாக கட்டி விட்டு விடைபெற்றுக் கொண்டான் ராமன்.

மாணவர் சாவு
படம் : நன்றி தினத்தந்தி

ஆனால் இந்த சம்பவம் அவனுடன் பயணித்த பிற மாணவர்களை வெகுண்டெழச் செய்திருக்கிறது. மற்ற பெட்டிகளிலும், கல்லூரியிலும் இருந்த அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக தகவல் தெரிவித்து, அனைவரையும் ரெயில் நிலையத்தில் அணிதிரட்டினர். பரிசோதகர் ராமமூர்த்தியை கைது செய்யக்கோரி அந்த வழித்தடத்தில் சென்ற அனைத்து ரெயில்களையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொந்தளித்துக் குமுறிக் கொண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களால் ரெயில் நிலையம் கலவரப் பகுதியானது. உடனடியாக போலீஸ் படை வந்தது. அதிகாரிகள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பரிசோதகரை கைது செய்யாத வரை மறியலை கைவிட முடியாது என்று மாணவர்கள் உறுதியாக நின்றனர்.

நடந்து கொண்டிருந்த சமாதான பேச்சுவார்த்தை மாணவர்களுக்கும் போலீசுக்கும் இடையிலான வாக்குவாதமாக மாறியது. பிறகு போலீசு மாணவர்களை மிரட்டியதால், லத்திக்கம்பை எடுத்து காட்டுமிராண்டித்தனமாக விளாசித் தள்ளியது. இதனால் கொந்தளித்த மாணவர்கள் போலீசு மீது சிறு கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போலீசு நடத்திய தடியடி தாக்குதலில் மாணவர்கள் எல்லா திசைகளிலும் சிதறி ஓடினர். பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த வழக்கை ரெயில்வே போலீஸ் விசாரித்து வருகிறது.

இந்த சம்பவத்தை பற்றி செய்தி வெளியிட்டுள்ள பத்திரிகைகளில் ஒரு சில பத்திரிகைகள், இந்த சாவுக்கு காரணம் சட்டையை பிடித்து இழுத்த பரிசோதகர் தான் என்றும், வேறு சில பத்திரிகைகள் ஓடும் ரெயிலிலிருந்து இறங்கிய மாணவன் தான் என்றும் எழுதியுள்ளன. இப்படி இரண்டு விதத்திலும் நடந்திருந்தாலும் இந்த மரணம் தரும் பாடம் என்ன? அற்பமான பயணச்சீட்டு விசயத்தில் ஒரு உயிர் பறிக்கப் பட்டிருருக்கிறது. ரயிலில் உரிய பயணச் சீட்டு எடுக்க வில்லை என்றால் அதற்கு உயிர்தான் அபராதமா, என்று இதன் தீவிரத்தன்மையை நாம் பரிசீலிக்க வேண்டும்.

பொதுவில் மாணவர்களை அதிலும் ஏழை மாணவர்களை பொறுக்கிகளாக கருதுபவர்கள் உடனடியாக மாணவனுக்கு எதிராக விரலை நீட்டி விடுவார்கள். அவனுடைய மரணத்துக்கு அவனே தான் காரணம் என்று இந்த சம்பவத்திற்கு தீர்ப்பை எழுதிவிட்டு அடுத்த வேலைக்கு சென்று விடுவார்கள். பச்சமுத்து கல்லூரியில் பல இலட்சம் கொடுத்து சேர்ந்துவிட்டு, பல்சார் பைக்கில், ஐ போனுடன் சுற்றும் மாணவர்கள் வாழும் காலத்தில்தான், ஒரு பயண சீட்டுக்கு கூட வழியில்லாத ராமன்களும் வாழ்கிறார்கள்.

ராமனது வறுமைக்கு காரணம் அவனது அப்பா உயிருடன் இல்லை. அம்மாவோ மூன்று குழந்தைகளுக்கும் வாழ்வளிப்பதற்க்காக அன்றாடம் கூலி வேலை செய்கிறார். இத்தகைய சூழலில் இருக்கும் ராமன், கட்டணம் எடுக்கவில்லை என்பதை ஒழுக்கமீறலாகவும், கொழுப்பு திமிராகவும் புரிந்து கொள்வதற்கு இதயத்தில் இரக்கம் துளியும் இல்லாதவர்களால்தான் சாத்தியம்.

டிக்கெட் எடுக்கவில்லை என்பதற்காக நம்மில் யாராவது ஓடும் ரயிலிலிருந்து குதித்து விடுவோமா? ராமன் என்கிற அந்த மாணவனின் இடத்தில் பல ஆயிரம் சம்பளம் வாங்கும் வேலையில் இருக்கும் வேறொரு ராமனை வைப்போம், அவர் இப்படி ‘முட்டாள்தனமாக’ குதித்து செத்து போயிருப்பாரா? இல்லை, அது அப்படி நடந்திருக்காது. அவர் அபராதத்தை கட்டிவிட்டு இறங்கிப் போயிருப்பார். அந்த தொகையை கட்ட முடியாதது தான் இந்த ஏழை ராமனின் பிரச்சினை. அப்படி கட்ட முடியுமென்ற வசதி இருந்திருந்தால் அவன் சீசன் டிக்கெட்டே எடுத்திருப்பான். வங்கிகளோ இல்லை வட்டிக் கும்பல்களோ வாக்குத் தவறாத ஏழைகளின் இயல்பு காரணமாகத்தான் தமது கடன்களை வட்டியுடன் வசூலிக்கின்றன. நாமம் போடுபவர்கள் முதலாளிகள்தான்.

பரிசோதகர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான். அவர்களும் இந்த சமூகத்திலிருந்துதான் உருவாகி ரயில்வேயில் பணியாற்றுகிறார்கள். அப்படிப்பட்டோருக்கு திருவள்ளூர் மார்க்கத்தில் வரும் மாணவர்களின் பின்னணி, பிரச்சினை தெரியாமல் இருக்காது. எனினும் அவர் இப்படி கொலை வெறியுடன் ஏன் நடந்து கொண்டார்?

சாதாரண ரயில்
ஆடம்பர ரயில்களுக்கு உள்ள வசதிகள் அடிப்படை மக்கள் பயணிக்கும் சாதாரண ரயில்களுக்கு கிடையாது.

இன்றும் வட இந்தியாவில் சாதாரண மக்கள் ரயிலில் டிக்கெட் எடுப்பதில்லை. இதனாலொன்றும் ரயில்வேக்கு நட்டமோ, இழப்போ ஏற்படுவதில்லை. தமிழகத்திலும் அரசியல் மாநாட்டிற்கு மக்கள் டிக்கெட் எடுக்காமல் ரயில்களை பயன்படுத்தும் வழக்கம் புரட்சிகர அமைப்புகளிடம் இன்றும் உண்டு. முதலாளிகளின் காசில் வயிறு வளர்க்கும் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் ஆம்னி பேருந்துகளையும், ஆடம்பர கார்கள், வேன்களையும் மாநாடுகளுக்காக, வாடகைக்கு எடுக்கும் போது புரட்சிகர அமைப்புகள் தொழிலாளி வர்க்கம் உருவாக்கிய ரயில்வேயை உரிமையுடன் பயன் படுத்திக் கொள்கிறது.

ஆனால் தனியார் மய காலத்தில் பொதுத்துறைகளும் சேவை நோக்கத்தை விடுத்து இலாபமொன்றே குறியாக செயல்பட வேண்டும் என்ற அநீதிக்கு இந்திய ரயில்வேயும் விலக்கு இல்லை. ஏற்கனவே இந்திய ரயில்வேயின் பல்வேறு சேவைகள் தனியார் மயத்திற்கு பகுதி பகுதியாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆடம்பர ரயில்களுக்கு உள்ள வசதிகள் அடிப்படை மக்கள் பயணிக்கும் சாதாரண ரயில்களுக்கு கிடையாது. அது போல ரயில்வே பரிசோதகர்களின் பணியிலும் தற்போது வசூலிக்கும் அபராதத் தொகைக்கு இலக்கு வைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அதன்படி சில இலட்சங்களையாவது மாதந்தோறும் வசூலிக்க வேண்டும். இதனாலேயே பரிசோதகர்கள் கந்து வட்டி ரவுடிகள் போல நடந்து கொள்கிறார்கள்.

மின்சார ரயில்களில் கூடை தூக்கி பிழைக்கும் வியாபாரிகளெல்லாம் இவர்களுக்கு மாதந்தோறும் தட்சணை போல அபராதத்தை கட்ட வேண்டும். இது போக பயணச்சீட்டு எடுக்காதவர்கள் – அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் – இவர்களது இலக்கு. இத்தகைய சூழலில்தான் பரிசோதகருக்கு பயந்து ராமன் அநியாயமாக பலியாக நேர்ந்திருக்கிறது.

அந்த ஏழைத் தாய்க்கு இருந்த ஒரே நம்பிக்கை அவன் மட்டும் தான். இப்போது அந்த மகனும் இல்லை. இனி இரண்டு பெண்களையும் அவர் கரையேற்ற வேண்டும், அவை எல்லாம் இனி அந்த ஏழையின் பாடு. தேர்தல்களில் பிசியாக இருக்கும் கட்சிகள் எதற்கும் ராமனது மரணம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றல்ல.

மக்கள் தாலியை அறுப்பதற்காகவே எம்.எல்.ஏ, எம்.பி.களாகும் நபர்களுக்கு ரயிலில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கும் அரசு, மாணவர்களை அவ்வாறு அனுமதிக்க மறுப்பது ஏன்? அமைச்சர்கள் அனைவரும் வெளிநாட்டு பயணம், விமான பயணம் என பல நூறு கோடிகளை விழுங்கும் போது இந்தியாவில் மாணவர்களுக்கென்று இலவச ரயில் பாஸ் வழங்கினால் குடியா முழுகிப் போகும்?

பரிசோதகர் ராமமூர்த்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும். அது மற்ற பரிசோதகர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். இந்த பரிசோதகரை அம்பு போல ஏவிவிட்ட இந்திய ரயில்வே, மாணவனது குடும்பத்திற்கு நட்ட ஈடு வழங்க வேண்டும். இந்திய ரயில்வேயின் உயர் அதிகாரிகளும் இந்த கொலை வழக்கில் சேர்க்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகளோடு, மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ் வழங்குமாறு தெற்கு ரயில்வேயை நிர்பந்தித்து, மாணவர்கள் போர்க்குணத்துடன் போராட வேண்டும். ராமனது மரணம் இந்த மாற்றத்தை கொண்டு வருமானால் எதிர்காலத்தில் பல ஏழை மாணவர்கள் இப்படி கொல்லப்படுவதிலிருந்து தடுக்க முடியும்.

–    வினவு செய்தியாளர்.

நமது நாட்டுக்குத் தேவை ஒரு புரட்சி !

0
வழக்குரைஞர் ராஜேந்திர பதக்
வழக்குரைஞர் ராஜேந்திர பதக்

டந்த 2012, ஜூலை 18 அன்று குர்கானிலுள்ள மாருதி கார் நிறுவனத்தின் முதலாளித்துவப் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடிய 546 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வீதியில் வீசியெறியப்பட்டனர். நிர்வாகமே சதிசெய்து மனிதவள அதிகாரியைக் கொன்றுவிட்டு, தொழிலாளர் மீது கொலைவழக்கைச் சோடித்து 148 தொழிலாளர்களைச் சிறையிலடைத்தது. ஒன்றரை ஆண்டுகளான பின்னரும் இத்தொழிலாளர்களுக்கு பிணை மறுக்கப்பட்டு வருகிறது. மாருதியின் அடியாளாக அரசும் போலீசும் நீதித்துறையும் இயங்குகின்றன. இம்முதலாளித்துவப் பயங்கரவாதத்தை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வரும் மாருதி தொழிலாளர்கள், தமது சோந்த அனுபவத்தின் மூலமாக இன்றைய அரசியலமைப்பு முறையானது தொழிலாளர்களுக்கு எதிரானது என்ற உண்மையைப் பிரகடனப்படுத்துகின்றனர்.

மாருதி தொழிலாளர்கள் மீதான கொலைக் குற்றத்துக்கு எதிராகப் போராடிவரும் வழக்குரைஞர் ராஜேந்திர பதக் தனது பேட்டியில், “நாம் முதலாளித்துவ உலகில் வாழ்கிறோம். முதலாளிகள் ஓரணியில் இருக்கிறார்கள். அவர்கள் போராடும் தொழிலாளர்களைச் சிறையிலிட்டு வதைக்கிறார்கள். அவர்கள் நீதிபதிகளுக்கு இலஞ்சம் கொடுப்பது உள்ளிட்டு எல்லா வகையான பஞ்சமாபாதங்களையும் செய்யத் தயங்காதவர்கள். இதனால்தான், சிறையிலுள்ள தொழிலாளர்களின் உடல்நலக் குறைவைக் காரணம் காட்டிப் பிணை கேட்டபோதிலும்கூட, அது நீதித்துறையால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அரியானா உயர் நீதிமன்ற நீதிபதிகள், அந்நிய முதலீட்டாளர்களின் தரகர்களாகவே உள்ளனர். இன்றைய அரசியலமைப்பு முறை முதலாளிகளுக்கானதாக உள்ளது. இந்தியாவில் தொழிலாளர் பிரச்சினை வராது என்று உத்திரவாதம் அளித்து அந்நிய முதலீட்டாளர்களை ஆட்சியாளர்கள் அழைக்கிறார்கள். அவர்கள் முதலாளிகளது நிகழ்ச்சி நிரலின்படியே செயல்படுகிறார்கள். மாருதி தொழிலாளர் குடும்பங்கள் பட்டியினியில் பரிதவிக்கின்றன. அவர்களது குழந்தைகள் பள்ளிக்குக்கூடச் செல்ல முடியாத அவலம் தொடர்கிறது.

மாருதி நடைப்பயணம்
கடந்த ஜனவரி 15 முதல் 31 வரை கைத்தால் நகரிலிருந்து டெல்லி வரை முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிராகக் குடும்பத்தோடு நடைப்பயணப் பிரச்சாரத்தை மேற்கொண்ட மாருதி தொழிலாளர்கள்.

சி.பி.எம். கட்சியில் உறுப்பினராக இருந்த நான், அதன் செயல்பாடுகளைக் கண்டு வெறுப்படைந்து அக்கட்சியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளேன். சி.பி.எம். என்பது காங்கிரசு ஆதரவு கட்சியாகிவிட்டது. 2004 லிருந்து 2009 வரையிலான காலத்தில் நாடாளுமன்றத்தில் 62 எம்.பி.க்களை இடதுசாரி முன்னணி பெற்றிருந்த போதிலும், தொழிலாளர் சட்டங்களில் எந்த சாதகமான மாற்றத்தையும் அக்கட்சி செய்யவில்லை. தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தொழிலாளர்களின் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது.

நமது நாட்டுக்கு ஒரு புரட்சி தேவைப்படுகிறது. அது தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் விவசாயிகளை அணிதிரட்டி நடத்தப்பட வேண்டியுள்ளது. இதற்கு தொழிலாளர்கள் ஓரணியில் திரள வேண்டும்” என்று கூறியுள்ள அவர், இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலையும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தின் கோரத்தையும் இப்பேட்டியின் வழியாக நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.

ஜந்தர் மந்தர் ஆர்ப்பாட்டம்
நடைப்பயணப் பிரச்சாரத்தின் நிறைவாக டெல்லி ஜந்தர் மந்தரில் ஜனவரி 31 அன்று மாருதி தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

இன்றைய அரசியலமைப்பு முறை முதலாளிகளின் நலனுக்கானது என்பதைத் தமது சொந்த அனுபவத்தினூடாகப் புரிந்து கொண்டுள்ள மாருதி தொழிலாளர்கள், கடந்த ஜனவரி 15 முதலாக கைத்தால் நகரிலிருந்து டெல்லி வரை (ஏறத்தாழ 300 கி.மீ.) நீதிகேட்டு நடைப்பயணப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். வேலைநீக்கம் செயப்பட்ட மாருதி தொழிலாளர்கள் தமது குடும்பத்துடன் அணிதிரண்டு வழியெங்கும் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் ஆலைகளிலும் அரசு அலுவலகங்களிலும் பிரச்சாரம், கலைநிகழ்ச்சியுடன் இந்த நெடும் பயணத்தை நடத்தியுள்ளனர். வழிநெடுகிலுமுள்ள உழைக்கும் மக்கள் அவர்களுக்கு உணவும், இரவில் தங்குவதற்கு ஏற்பாடுகளும் செய்துகொடுத்து, நிதியுதவியும் செய்து ஆதரித்துள்ளனர். எழுச்சியுடன் நடந்த இந்தப் பிரச்சார நடைப்பயணம், 16 நாட்களுக்குப் பின்னர் ஜனவரி 31 அன்று டெல்லி ஜந்தர்மந்தரில் ஆர்ப்பாட்டத்துடன் நிறைவடைந்தது. பின்னர் அரசுத் தலைவரிடம் நீதிகேட்டுப் போராடும் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.

தீவிரமாகிவரும் முதலாளித்துவ பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக அனைத்துத் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் ஓரணியில் திரண்டு, இன்றைய அரசியலமைப்பு முறையை வீழ்த்த வேண்டிய அவசியத்தையே மாருதி தொழிலாளர்களின் இப்புதிய போராட்டம் மீண்டும் நிரூபித்துக் காட்டுகிறது.

– அன்பு
___________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2014
___________________________________

உலகம் தோன்றியது எப்படி – விண்வெளி பயணம் போகலாமா ?

101

முன்னுரை 

அறிவியலை ஆய்ந்தும், சோசலிசத்தை விரும்பியும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு காரணமான புகழ் பெற்ற அறிவியலாளர் ஐன்ஸ்டீன் பிறந்த தினமன்று இந்த அறிவியல் அறிமுக கட்டுரை மற்றும் வீடியோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஐன்ஸ்டீன்
ஐன்ஸ்டீன்

மனித சமூகம், பண்பாட்டையும், நாகரீகத்தையும் தனது கூட்டுழைப்பால் அடைந்திருந்த காலம் தொட்டு இன்று வரையிலும் உள்ள தலையாய கேள்வி இந்த உலகம், எப்படி ஏன் யாரால் தோன்றியது? இக்கேள்விகளுக்கான விடையை பிரமிப்பூட்டும் விதத்தில் இன்று அறிவியல் விளக்கி நிரூபித்திருந்தாலும் இங்கே மதங்கள் அழிந்து விடவில்லை. மக்களை ஏற்றத் தாழ்வாக பிரித்திருக்கும் வர்க்க சமூகம் இருக்கும் வரையிலும் மதங்கள் அறிவியிலின் ஒளியை தடை செய்து கொண்டுதான் இருக்கும்.

மதங்கள் அனைத்தும் அறியாமையையும், கேள்விக்கிடமற்ற அடிமைத்தனத்தையும் வைத்து மக்களின் அறிவுத் தேடலை தடை செய்கின்றன. இதன் பொருட்டே இம்மதவாதிகள் பல நூறு குதர்க்கங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இணையம் வந்த பிறகு டார்வின் பொய், ஐன்ஸ்டீன் தோல்வி என்று தமது முட்டாள்தனங்களுக்கு தைரியமாக பெருமை கொள்கிறார்கள்.

உழைக்கும் மக்களை மத ரீதியாக பிரித்து வைப்பதன் மூலம் ஆதாயத்தை அடையும்  முதலாளித்துவம், தன் பிடியிலிருக்கும் அறிவியலை வைத்துக் கொண்டு மதங்களின் முட்டாள்தனத்தை அகற்றுவதற்கு முயல்வதில்லை. இதைத் தாண்டி ஒரு சாதாரண மனிதனுக்கு நமது பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பதை புரிய வைப்பதும், மனித சமூகமும் அது வாழும் பூமியும் முதலாளிகளுக்கு சொந்தமல்ல, மக்களுக்கு சொந்தமானது என்று தெளிய வைப்பதும் வேறு வேறு அல்ல.

இந்த ஆவணப்படம் நமது பூமி, சூரியக் குடும்பம், பால்வெளி மண்டலம், பேரண்டம் அனைத்தும் எப்படி தோன்றின, எந்த நிகழ்ச்சிப் போக்கிலிருந்து இந்த மாற்றங்கள் நடக்கின்றன, இவற்றின் முரண்பாடுகள் என்ன, இவற்றுக்கு தோற்றம்-அழிவு உண்டா, அற்பமான துகள்களும், தூசுகளும், வாயுக்களும் ஒரு வரலாற்றுக் காலத்தை படைக்கும் மேன்மையை எப்படி பெற்றன, நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் விண்மீன்களில் நடைபெற்ற அணுக்கரு கூட்டிணைவால் உருவாக்கப்பட்டவை என்பது உண்மையா, இந்த பிரபஞ்சத்தை படைத்த மூலப்பொருட்கள் என்ன, நமது பூமி, சூரியக் குடும்பத்தின் தோற்றம், பெருவெடிப்பு குறித்து ஆதாரங்களுடன் அறிய முடியுமா என் ஏராளமான கேள்விகளுக்கு விடையளிக்கின்றது.

எனினும் மார்க்சியத்தின் இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை கற்றுத் தேர்ந்தவர்களுக்கு இந்தப் படம் மற்றவர்களை விட நன்கு பயன்படும். இயற்கையின் இயக்கவியல் இந்த உலகத்தின் தோற்றத்தில் எப்படி இயங்கியிருக்கிறது என்பதை காட்சி ரீதியாகவும், கருத்து ரீதியாகவும் புரிந்து கொள்வதற்கு இது உதவும்.

இயக்கம்தான், இயற்கையை சுருள் வட்டப் பாதை முன்னேற்றத்தில் இயங்க வைக்கிறது என்பதும் போராட்டமே, மனித குல நாகரீகத்தை மேம்படுத்தும் அச்சாணியாக இருக்கிறது என்பதும் தொடர்பற்றவை அல்ல. இதைத்தான் இந்தப் படத்திலிருந்து அறிவியலோடு சேர்ந்து நாம் அறிய வேண்டிய சமூகப் பார்வை.

இந்தப் படத்தை இத்தகைய தத்துவப் பார்வை விளக்கங்களுடன்தான் எழுத வேண்டும் என்று திட்டமிட்டாலும் நேரப் பிரச்சினை காரணமாக நடக்கவில்லை. என்றாலும் படத்தினை பார்த்து புரிந்து கொள்ளும் அளவுக்கு உரையாடலின் சாரத்தை தமிழில் கொண்டு வந்திருக்கிறோம். தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கும், தமிழோ, ஆங்கிலமோ தெரிந்தாலும் அறிவியல் தெரியாதவர்களுக்கும் இந்த கட்டுரை பயன்படும். கட்டுரையைப் படித்து விட்டு படத்தை பாருங்கள்!

பிரபஞ்ச ரகசியத்தை தெரிந்து கொண்ட மகிழ்ச்சியை அடையுங்கள்!

–    வினவு

நாம் ஒவ்வொரு முறை வானை நோக்கும் போதும், நமது பூமி, சூரியன் மற்றும் இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது, தோன்றியதிலிருந்து எப்போதும் இதே நிலையில் இருந்து கொண்டிருக்கிறதா, எப்படி இயங்குகிறது என்ற கேள்விகளுடன் வியப்புடனே நோக்குகிறோம். இக்கேள்விகளுக்கு விடைதர முயற்சிக்கிறது, நேசனல் ஜியாக்ரபியின் “பிரபஞ்சத்தின் விளிம்பை நோக்கிய பயணம்” என்ற ஆவணப்படம்.

ஒளியை விட அதிகமான வேகத்தில் செல்லும் இப்பயணம் கற்பனை தான் எனினும் அறிவியலில் இது வரை அறியப்பட்ட உண்மைகள், ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாடுகள், சோதனைகளால் உறுதி செய்யப்பட்ட விதிகளினடிப்படையில், ஹப்பிள் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட படங்களுடன், கணினியின் வரைகலை தொழில்நுட்பமும் கைகோர்த்ததில் இப்பயணம் சாத்தியமாகியிருக்கிறது.

இப்பயணத்தின் முதலடி சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நீல் ஆம்ஸ்ட்ராங் தனது காலடித்தடங்களை வைத்த நிலவில் ஆரம்பமாகிறது. நிலவில் வளிமண்டலம் இல்லாததால் பல பத்தாண்டுகளாக அழியாதிருக்கும் ஆம்ஸ்ட்ராங்கின் காலடித்தடங்களை கடந்து பாய்ச்சலில் செல்லும் பயணம் 4.2 கோடி கிலோமீட்டர்களில் பண்டைய கிரேக்கர்களின் காதல் தேவதையான வீனஸை (வெள்ளி நட்சத்திரம்) அடைகிறது.

நிலவு
பயணத்தின் முதலடி சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நீல் ஆம்ஸ்ட்ராங் தனது காலடித்தடங்களை வைத்த நிலவில் ஆரம்பமாகிறது

தினமும் நமது நாட்களை காலை வரவேற்று, மாலையில் விடை கொடுக்கும் வெள்ளி கோளானது மனிதர்கள் வாழ தகுதியற்றதாக, வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு மிகுந்ததாக, அதாவது சீற்றம் மிகுந்ததாக காணப்படுகிறது. அதைக் கடந்தால் 9.1 கோடி கிலோமீட்டர்களில் முற்றிலும் இரும்பினாலான சிறிய கோளான புதனையும் (மெர்க்குரி) அதை சுற்றி வந்து கொண்டிருக்கும் மெசஞ்சர் (messenger) விண்கலத்தையும் நாம் காண்கிறோம்.

பின்னர் பயணத்தில் 15 கோடி கிலோமீட்டர்களில் நமது நட்சத்திரமான சூரியனை அடைகிறோம். சூரியன் நமது புவியைப் போலவோ மற்ற கோள்களைப் போலவோ திடநிலையில் இல்லை. அது ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் மைய ஈர்ப்புவிசையால் ஒன்றிணைந்து பதிமூன்று லட்சம் பூமிகளை உள்ளடக்கி விடுமளவு பெரிதாக பிரமாண்டமான பந்தாக இருக்கிறது. ஈர்ப்புவிசை கொடுக்கும் அழுத்தம் காரணமாக மையக்கருவில் இருக்கும் ஹைட்ரஜன் வாயு மிக அதிக அழுத்தமும் அதனால் அதிக வெப்பமும் அடைவதால் அங்கு பூமியிலிருக்கும் மொத்த அணு உலைகளையும், அணு ஆயுதங்களையும் ஒரே நேரத்தில் வெடிக்க செய்வதை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமான ஆற்றலுடன் அணுக்கரு பிணைப்பு நடைபெறுகிறது. அணு வினை ஒளியையும் வெப்ப ஆற்றலையும்  வெளியிடுவதுடன் வாயுக்களை வெளிநோக்கித் தள்ளுகிறது. அதே வேளை மைய ஈர்ப்புவிசை வாயுக்களை உள்ளிழுக்கிறது. இவ்விரு எதிர் விசைகளின் சமநிலையில் சூரியன் மாபெரும் எரியும் வாயுக்கோளமாக இருக்கிறது. இந்த கணத்தில் சூரியன் தனது இயக்கத்‌தை நிறுத்திக்கொண்டால் அதை நாம் அறிய 8 நிமிடங்கள் ஆகும்.

மையக்கருவின் வெப்பநிலை 1.5 கோடி டிகிரி செல்சியசும், மேற்பரப்பின் வெப்பநிலை சுமார் 5,700 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் இந்நட்சத்திரம் புவியில் உயிர்களின், ஆற்றலின், ஒளியின் மூலாதாரமாக இருக்கிற அதே வேளை நமது பூமியிலிருக்கும் அனைத்து உயிர்களையும் அழித்துவிடுமளவு அதிக ஆற்றலுள்ள, அயனியாக்கப்பட்ட வாயுக்கள்(பிளாஸ்மா) அடங்கிய மிகப்பரந்த சூரியக்கதிர் அலைகளை வெளியிடுகிறது. ஆனால் நமது பூமியின் காந்தப்புலம் நம்மை இப்பேரழிவிலிருந்து தடுத்துக் காப்பாற்றுகிறது.

அடுத்து நாம் ஒரு வால் நட்சத்திரத்தை பார்க்கிறோம். வால் நட்சத்திரங்கள், உறைந்த வாயுக்கள், பாறை மற்றும் தூசியை உள்ளடக்கிய அண்ட பனிக்கட்டிகளாகும். இவற்றில்உயிர் வாழ்வதற்கு தகுந்த சூழ்நிலை இல்லையெனினும், இவை தன்னகத்தே நம் பூமியில் உயிர்கள் உருவாவதற்கு அடிப்படை தேவையான தண்ணீர் மற்றும் கரிம சேர்மங்களை கொண்டிருக்கின்றன. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இதைப் போல் ஒரு வால் நட்சத்திரம் பூமியில் மோதி அங்கு தண்ணீர் மற்றும் கரிம சேர்மங்களை விட்டு சென்ற நிகழ்வு இங்கு உயிர்கள் உருவாக காரணமாக இருந்திருக்கலாம். அதே போல முன்னர் பூமியில் ஒரு வால் நட்சத்திரம் மோதியதால் தான் டைனோசர் இனமே அழிந்து போனது. அவ்வகையில் இவை படைக்கும் சக்தியாகவும், மீப்பெரும் அழிவு சக்தியாகவும் இருக்கின்றன.

இவ்வாறாக ஒவ்வொரு பொருளுக்குள்ளும் நிகழ்ச்சிப் போக்குக்குள்ளும் இடையறாமல் நடக்கும் எதிர்மறைகளின் போராட்டம், ஒற்றுமையால் தான் இப்பிரபஞ்சம் முழுவதுமே இயங்குகிறது.

செவ்வாய்
செவ்வாய் கிரகம் சற்றேறக்குறைய பூமியை ஒத்திருந்தாலும், அதன் பிரமாண்டமான புழுதிப்படலம், எரிமலைகள், பள்ளத்தாக்குகள் நாம் புவியில் கண்டது எதையும் ஒத்திராதது.

சூரியக் குடும்பத்தின் மையமான சூரியனிலிருந்து திரும்பி பயணித்தால் 22.7 கோடி கிலோ மீட்டர்களில், (அதாவது பூமியிலிருந்து சுமார் 7.5 கோடி கிலோமீட்டர்கள்) நாம் பார்க்கும் செவ்வாய் கிரகம் சற்றேறக்குறைய பூமியை ஒத்திருந்தாலும், அதன் பிரமாண்டமான புழுதிப்படலம், எரிமலைகள், பள்ளத்தாக்குகள் நாம் புவியில் கண்டது எதையும் ஒத்திராதது.

செவ்வாயை கடந்து சென்றால் எரிகற்கள் எனப்படும் சிறு விண்கற்கள் மண்டலத்தை கடக்கிறோம். இவற்றில் சில நூற்றுகணக்கான மைல்கள் நீள-அகலம் கொண்டவையாகும். சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இதே மாதிரியான விண்கற்கள் ஈர்ப்புவிசையால் ஒன்றிணைந்து தான் பூமியை, நிலவை போல் கோள்களாகியிருக்கக் கூடும். எனில் இப்போது இவை தமக்கிடையிலான ஈர்ப்பு விசையால் ஒன்றிணையாமல் தடுத்து வைத்திருப்பது எது?

அது நமது சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய கோளும் சூரியனிலிருந்து 77.8 கோடி கிலோமீட்டர் தொலைவிலிருப்பதுமான வியாழனாகும். இதில் 1,321 பூமிகளை உள்ளடக்கி விடலாம். பூமியின் அளவை விட மூன்று மடங்கும் பல நூற்றாண்டுகளாக நீடித்திருப்பதுமான செம்புயலில் ஏற்படும் இடி-மின்னல்கள் நம் பூமியில் ஏற்படுவதை விட 10,000 மடங்கிற்கும், அதிக சக்தியுடையதாகும். சற்று திரும்பினால் வியாழனின் நிலவுகளை- அதில் பனிபடர்ந்த யுரோபாவையும் – நாம் காண்கிறோம்.

அங்கிருந்து பாய்ச்சலில் முன்னேறினால் 142 கோடி கிலோமீட்டர்களில் சனிக்கோளை அடைந்து அதன் அற்புதமான வளையங்களை அவை எப்படி உருவாகின என நாம் வியந்து கொண்டிருக்கும் போது சனியின் துணைக்கோளான (நிலவான) டைட்டனை நோக்கி நம் பார்வை தொடர்கிறது. டைட்டனில் நமது புவியிலுள்ள பருவநிலை போலவே மழை, மின்னல் ஏற்படுவதுடன் நமக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் தேவைப்படும் பெட்ரோலியம், மீத்தேன் படலம் இருக்கிறது.

அதன் பின் 287 கோடி கிலோமீட்டர்களில் நமது சூரியக் குடும்பத்திலேயே அதிகமான அச்சு சாய்வுடன் இருக்கும் பெரிய வாயுக் கோளமான யுரேனசை கடந்து செல்கிறோம். தொடர்ச்சியாக யுரேனசைப் போலவே இருக்கும் நெப்டியூனையும் அதன் நிலவான டிரைட்டனையும் கடக்கிறோம்.

விண்கற்கள்
எரிகற்கள் எனப்படும் சிறு விண்கற்கள் மண்டலத்தை கடக்கிறோம்

பின்னர் 590 கோடி கிலோமீட்டர்களில் தொலைதூர பனிக்கோள் (இப்போது கோள் இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது) புளூட்டோவைக் காண்கிறோம். இது சூரியனை சுற்றிவர 248 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. நமது சூரியக் குடும்பம் இத்துடன் முடிந்து விட்டதா? இன்னும் நமது சூரியனை சுற்றிவரும் கோள்கள், விண்கற்கள் இருக்கின்றனவா?

இப்போது நாம் 1977-ம் ஆண்டு பூமியிலிருந்து விண்ணில் ஏவப்பட்ட வோயேஜர் விண்கலத்தை காண்கிறோம். இது தற்போது சூரியக் குடும்பத்தை தாண்டி நட்சத்திரங்களுக்கிடையிலான வெளியில் தனது பயணத்தை தொடர்கிறது.

அதையடுத்து தொலை தூர சிறு கோள் ஒன்று சூரியனை சுற்றுகிறது. சேத்னா (sedna) எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கோள் சூரியனிலிருந்து சுமார் 930 கோடி மைல்கள் தொலைவில் இருப்பதுடன் சுற்றிவர 10,000 ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொள்கிறது.

நமது சூரியன் எப்படி தோன்றியது, இப்படியே நீடித்திருக்குமா? அழிந்தால் அதன் பின் என்னவாகும், நமது பூமியின் நிலை என்னவாகும், என்பவற்றை அறிய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.

இப்போது நம் குடும்பத்திலிருக்கும் அனைத்து கோள்களையும் சந்தித்து விடை பெற்றுக்கொண்டு, நமது வீட்டிலிருந்து வெளியில் காலடி எடுத்து வைக்கிறோம். தொடரும் நமது பயணம் நட்சத்திரங்களுக்கிடையிலான வெளியை அடைகிறது. இங்கு நமது சூரியனைப் போல கோடிக்கணக்கான விண்மீன்கள் இருக்கின்றன. இவற்றில் உயிரினங்கள் வாழ்கின்றனவா?

இப்பிரபஞ்சம் எல்லையில்லா சாத்தியங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

அடுத்து சுமார் 45 லட்சம் கோடி கிலோமீட்டர்கள் (4.5 ஒளிஆண்டுகள்) தொலைவில் இருக்கும் நமது அண்டை நட்சத்திர மண்டலமான ஆல்பா சென்சூரி என்ற நட்சத்திர மண்டலத்தை காண்கிறோம். இது மூன்று விண்மீன்கள் அடங்கிய அமைப்பாகும். மூன்று நட்சத்திரங்களும் ஈர்ப்புவிசையால் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன.

இந்த தொலைவுக்குபின் நீளத்தின் அளவைகளான கிலோமீட்டரும், மைல்களும் மீச்சிறு அளவாகி பொருளற்றதாகி விடுகிறது. இதன்பின் தொலைவை அளக்க ஒளிஆண்டு என்ற வேறு அளவை பயன்படுத்தவேண்டும். ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள் பயணிக்கும் ஒளி, ஓராண்டில் கடக்கும் 9.46 லட்சம் கோடி கிலோமீட்டர் தொலைவே ஒரு ஒளியாண்டு எனப்படுகிறது.

நமது பயணம் 10.5 ஒளிஆண்டுகளை அடையும் போது எப்சிலோன் எரிடனி என்ற இளம் நட்சத்திர மண்டலத்தை காண்கிறோம். இந்நட்சத்திரத்தின் தூசியும், பனியும் கலந்த பிரமிக்கத்தக்க வளையங்களில் கோள்கள் இன்னும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இதைப் போன்ற செயல்முறையால்தான் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நமது சூரியக் குடும்பம் உருவானது.

வால் நட்சத்திர மோதல்
வால் நட்சத்திர மோதல்

மேலும் பயணிக்கும் போது 20.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் நமது சூரியனை ஒத்த வயதுடைய கிலீஸ்-581 (Gliese581) என்ற நட்சத்திரத்தை காண்கிறோம். இந்த நட்சத்திர மண்டலத்தில் ஏறக்குறைய நமது பூமிக்கும் சூரியனுக்குமிடையிலான அதே தூரத்தில் ஒரு கோள் இருக்கக் காண்கிறோம். இக்கோள் உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கான சூழ்நிலைகளை பெற்றிருக்கலாம், இங்கு உயிரினங்களும் இருக்கலாம். அவை தமது தொலைக்காட்சிகளை இயக்கி நாம் பூமியில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளை இப்போது இங்கு பார்த்துக் கொண்டிருக்கலாம்.

நாம் இதுவரை பார்த்ததிலேயே அதிக பிரகாசமான வானில் மிகப்பிரகாசமான  விண்மீன்களில் 9-ம் இடத்தில் இருக்கும் திருவாதிரை நட்சத்திரத்தை (betelgeuse star) பார்க்கிறோம். ஆனால் இது நட்சத்திரம் அல்ல, நட்சத்திரத்தின் அடுத்த நிலை, இந்நிலை பெரும் சிகப்பு அசுரன் (Red SuperGiant) எனப்படுகிறது. இது நமது சூரியனை விட 600 மடங்கு பெரியது. இன்றிலிருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்குள் இவ்விண்மீன் வெடித்து சிதறிவிடும்.

1344 ஒளியாண்டுகள் தொலைவில் நாம் ஒரு விண்மீன் தொழிற்சாலையை காண்கிறோம். ஓரியன் இருண்ட மேகத்திரள், அதன் ஆழத்தினுள் ஒரு ஒளித்துளி அதைச் சுற்றியுள்ள வாயுக்களை உள்ளிழுத்து அழுத்தி வெப்பமடைய செய்கிறது. இந்த வெப்பமும் அழுத்தமும் அணுவினையை தூண்டுவதற்கு போதுமானதாக இருக்கிறது. ஒரு நட்சத்திரம் பிரசவிக்கிறது. ஓரியன் நெபுலா – இங்குதான் நமது சூரியனைப் போல் சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கான விண்மீன்கள் உருவாகி கொண்டிருக்கின்றன- பிறக்கின்றன.

ஒளிரும் வாயுக்கூட்டம்
ஒளிரும் வாயுக் கூட்டத்தை – நிறமுகிழை- கடந்து செல்கிறோம்.

இப்போது ஒளிரும் வாயுக் கூட்டத்தை – நிறமுகிழை- கடந்து செல்கிறோம். பிரபஞ்சத்தின் மூலப் பொருட்களான ஹைட்ரஜனும், ஹீலியமும் பச்சை, ஊதா நிறங்களிலும், உயிர்கள் தோன்ற, உயிர் வாழ அடிப்படையான ஆக்சிஜனும், நைட்ரஜனும் சிவப்பு, நீல நிறங்களில் காட்சியளிக்கின்றன. கோள்களும், அவற்றில் உயிரினங்களும் தோன்ற விண்மீன்கள் தமது நிலையை மறுத்து வெடித்து சிதற வேண்டும். நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் விண்மீன்களில் நடைபெற்ற அணுக்கரு கூட்டிணைவால் உருவாக்கப்பட்டவை. அந்தவகையில் நம்முடைய குடும்ப கிளை இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. விண்மீன்கள் தான் நம்முடைய மூதாதையர்.

இந்நிற முகிழ்களின் நடுவில்-வெள்ளை குள்ளன் (White Dwarf) ஒருவன் இருக்கிறான். இதில் ஒரு தேக்கரண்டி அளவு நமது பூமியில் ஒரு டன் எடை இருக்குமளவு அடர்த்தி மிகுந்ததாகும்.

சூரியனைப் போலுள்ள நட்சத்திரங்களில் மையக்கருவில் உள்ள எரிபொருளான ஹைட்ரஜன் அனைத்தும் ஹீலியமாக மாற்றப்பட்டு தீர்ந்த பின் மேல் அடுக்கில் உள்ள ஹைட்ரஜனில் அணுப் பிணைப்பு வினை நடைபெறத் துவங்கும். இப்போது அது அளவில் 100 மடங்குக்கும் மேல் விரிவடைந்து அது தனது நட்சத்திர நிலையிலிருந்து மாறி சிவப்பு அசுரன் நிலைக்கு செல்கிறது. எரிபொருளின் அளவில் ஏற்படும் மாற்றங்கள் விண்மீனின் பண்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இன்றிலிருந்து சுமார் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு பின் நமது சூரியன் தற்போது இருக்கும் அளவை விட 100 மடங்கு பெரிதாகி பூமியை விழுங்கி செவ்வசுரன் நிலையை அடையும். அப்போது வியாழனின் நிலவு அல்லது சனிக்கோளின் நிலவு உயிரினங்கள் வாழ்வதற்கான சூழ்நிலையை வந்தடையக் கூடும்.

கருந்துளை
கருந்துளை

நட்சத்திரத்தின் மேற்பரப்பில் இருக்கும் ஹைட்ரஜனும் தீர்ந்து மொத்தமும் ஹீலியமான பின் ஹீலியம் அணுக்கரு பிணைப்பிற்கு உள்ளாகி கார்பனாக மாறத்துவங்கும். காலப்போக்கில் எல்லா ஹீலியம்  எரி பொருளும் தீர்ந்த பின்னர் படிப்படியாக குளிர ஆரம்பிக்கும் போது செவ்வசுரன் நிலையை மறுத்து வெள்ளைக் குள்ளன் நிலையைப் பெறுகிறது. சூரியனை ஒத்த மற்றும் அதைவிட குறைவான நிறையுள்ள விண்மீன்கள் இந்நிலையைப் பெறுகின்றன. இன்றிலிருந்து சுமார் 600 கோடி ஆண்டுகளுக்கு பின் நமது சூரியனும் வெள்ளைக் குள்ளன் நிலையை வந்தடையும். அப்போது சூரியக் குடும்பத்தின் கோள்கள் அனைத்தையும் சூரியன் விழுங்கியிருக்கும்.

சூரியனை விட  மூன்றிலிருந்து ஐந்து மடங்கு நிறையுள்ள விண்மீன்களில் ஹீலியம் எரிபொருளும் தீர்ந்து கார்பன் ஆன பின் மேலும் அணுப்பிணைப்பு நடக்க அதன் நிறையும் – ஈர்ப்பு விசையும் போதுமானதாக இருப்பதால் தொடர்ந்து அணுப்பிணைப்பு நடந்து அதிக நிறையுள்ள தனிமங்கள் உருவாகின்றன. இந்நிலை பெரும் சிகப்பு அசுரன் (Red Super Giant) எனப்படுகிறது. நாம் சற்று முன்பு பார்த்த திருவாதிரை நட்சத்திரம் பெரும் சிவப்பு அசுரன் நிலையில் தானிருக்கிறது.

இச்செயல் முறையால் தொடர்ந்து நிறை அதிகரித்துக் கொண்டே செல்வதால் ஒரு கட்டத்தில் ஈர்ப்பு விசை அதிகரிக்கிறது. அதனால் அது தன் சொந்த எடையை தாங்க முடியாமல் வெடித்து சிதறும். இது சூப்பர் நோவா எனப்படுகிறது. நம் சூரியக் குடும்பம் முழுவதுமே இதைப்போல் ஒரு சூப்பர் நோவா வெடித்து சிதறி வெளியிட்ட வாயுக்கள், துகள்களிலிருந்து தான் தோன்றியது.

வெடித்து சிதறும் நட்சத்திரத்தின் மையக் கருவில் உள்ள அணுத் துகள்கள் ஒன்றிணைந்து அடர்த்தியான நியூட்ரான்களாகின்றன. இது நியூட்ரான் நட்சத்திரம் எனப்படுகிறது. இதில் இருக்கும் துகள்களின் அடர்த்தி மிக மிக அதிகம். இதில் ஒரு தேக்கரண்டி, நமது பூமியில் ஒரு லட்சம் டன் எடையிருக்கும். இங்கு நாம் பல்சார் (Pulsar) என்ற ஒரு வகை நியூட்ரான் நட்சத்திரத்தை பார்க்கிறோம். இது நமது பூமியின் காந்தப்புலத்தை விட பல்லாயிரம் மடங்கு அதிகமான காந்தப்புலத்தையும், ரேடியோ மின்காந்த அலைகளையும் வெளியிடுகிறது.

விண்மீன் தொழிற்சாலைகள்
லட்சக் கணக்கான விண்மீன்கள்

விண்மீன்களின் அளவில் இருக்கும் வேறுபாடும் அதன் அடுத்த நிலைப் பண்பை தீர்மானிக்கிறது. நட்சத்திரம் சூரியனை விட ஐந்து மடங்கிற்கு அதிக நிறையுடன் இருக்கும் பட்சத்தில் இந்நியூட்ரான் நட்சத்திரங்களின் அளவும் நிறையும் அதிகமாக இருக்கும் அதனால் அதன் மையம் மேலும் மேலும் சுருங்குகிறது. அதன் அடர்த்தியும் ஈர்ப்பு விசையும் மிக மிக அதிகரித்து வேறு நிலையை அடைகிறது. இந்நிலை கருந்துளை (Black Hole) எனப்படுகிறது.

இவ்வாறு விண்மீன்களில் அளவில் இருக்கும் வேறுபாடும், அவற்றின் அடுத்த நிலைப் பண்பையும் நிகழ்ச்சிப் போக்கையும் தீர்மானிக்கிறது.

இப்பிரபஞ்சத்தில் அனைத்து பொருட்களுமே ஒளியை பிரதிபலிக்கின்றன. அப்பிரதிபலிப்பையே நாம் கண்ணால் காண்கிறோம். இக்கருந்துளையின் ஈர்ப்புவிசை ஒளியின் துகளையும் வெளியிடாமல் ஈர்த்து விடுமென்பதால், இதைக் காண இயலாது. இதன் ஈர்ப்பிலிருந்து விண்மீன்கள் உட்பட எதுவும் தப்பிச்செல்ல முடியாது. இதில் ஒரு குண்டுமணியளவு பூமியில் ஒரு கோடி டன் எடையிருக்கும்.

நாம் இப்போது நமது விண்மீன் திரளான பால்வெளியைப் பார்க்கிறோம். இதன் நடுவில் மிகப் பிரமாண்டமான மீப்பெரும் கருந்துளை இருக்கிறது. அதை சுற்றி தான் நம் சூரியன் உள்ளிட்ட எண்ணிலடங்கா நட்சத்திரங்களும், பல சிறு கருந்துளைகளும், நியூட்ரான் நட்சத்திரங்களும், பிறவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  பால்வெளியில் 1000-லிருந்து 4000 விண்மீன்கள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

நாம் இப்போது 25 லட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் நாம் நமது அண்டை விண்மீந்திரளான அன்ட்ரோமெடாவை (Andromeda) காண்கிறோம். இங்கிருந்து பூமியை பார்த்தால் குரங்கிலிருந்து பரிணமித்த நமது மூதாதையர்கள் ஆப்பிரிக்க நிலத்தில் நடப்பதை காண முடியும்.

குவாசார்
இந்த அண்டத்தின் மிக சக்தி வாய்ந்த குவாசார் –  100 கோடி சூரியன்களின் நிறையுடையது

இப்போது இரண்டு விண்மீன் திரள்கள் மோதிக்கொண்டு அளப்பரிய ஆற்றலை வெளியிடுகிண்றன. விண்மீன் திரள்கள் அழிகின்றன. ஆனால் அதன் இயக்கம் நின்றுவிடுவதில்லை. புதிய திரள்கள் புதிய வடிவத்தில், புதிய நட்சத்திரங்களுடன் மீண்டும் பிறக்கிறது. பிறப்பு-இறப்பு, படைப்பு-அழிவும் கொண்ட முடிவில்லா சுழற்சியே பிரபஞ்சம் முழுவதையும் பிணைக்கும் இழையாக இருக்கிறது. இதைப்போல் கோடிக்கணக்கான விண்மீன் திரள்கள் நமது பிரபஞ்சத்தில் இருக்கின்றன.

நமது பயணம் மேலும் தொடர்கிறது. 200 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் கோடிக் கணக்கான சூரியன்களின் நிறையைக் கொண்ட மீமீப்பெரும் கருந்துளையைக் காண்கிறோம். அது அதைச் சுற்றியுள்ள  நட்சத்திரங்களை பிய்த்து உள்ளிழுத்து விழுங்குகிறது. மொத்த விண்மீன் திரளையும் இது விழுங்கி விடக்கூடும்.

அண்ட பெருவெடிப்பு
அண்டத்தின் எல்லை – 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அண்ட பெருவெடிப்பு

இப்போது 1400 கோடி ஒளியாண்டுகள் தொலைவிலிருக்கிறோம். இப்போது திரும்பி பார்த்தால் சுமார் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த பெருவெடிப்பை காணமுடியும். இப்பெருவெடிப்பிலிருந்து தான் மீச்சிறு கோளத்தில் அளப்பறிய அழுத்ததுடன் இருந்த அளப்பறிய ஆற்றல் வெடித்து கிளம்பியது. அதிலிருந்து தான் நமது இடம், காலம், வெளி, பிரபஞ்சம் அனைத்தும் தோன்றின. இது வரை பிரபஞ்சம் முழுவதிலும், பொருள் ஆற்றலாக மாறுவதை கண்ட நாம் இங்கு ஆற்றல் பொருளாக மாறுவதை காண்கிறோம்.

பெருவெடிப்பின் ஒளி அண்டம் முழுமையும் இன்றும் விரிந்து பரவிக் கொண்டிருக்கிறது. பூமியில் அதை நாம் தொலைக்காட்சி இரைச்சலாக பார்க்கிறோம். நமது பயணத்தில் கண்ட கோள்கள், விண்மீன்கள், விண்மீன் திரள்கள் முதலான அனைத்து அற்புதங்களும், பெருவெடிப்பிலிருந்து சிதறி பயணிக்கும் துகள்கள்தான். இப்போதுதான் நாம் நினைத்ததை விட எவ்வளவு சிறியவர்கள், பலவீனமானவர்கள் என்று புரிந்து கொள்கிறோம். ஆனால், இந்த பயணத்தின் ஊடாக நாம் இந்த அண்டத்தின் அற்புதங்களை அனுபவித்தோம். அந்த சாதனையை கொண்டாடுவோம்.

–    மார்ட்டின்

(நன்றி: நேஷனல் ஜியாகிரபிக்)

பாஜக ஆசியுடன் வைகோ திருந்துவார் – இலங்கை தூதர் உறுதி !

2

“பா.ஜ.க உடனான கூட்டணி, வை.கோ வின் இலங்கை தொடர்பான  அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று இந்தியாவுக்கான இலங்கை தூதர் கரியவாசம் நம்பிக்கையாகக் கூறியுள்ளார்.  மார்ச் 1-ம் தேதி மத்தியபிரதேச மாநில பா.ஜ அரசின் ஆதரவுடன் சாஞ்சியில்  நடந்த இரண்டாவது தர்மா-தம்மா ( இந்து- பொளத்தம்) கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு நடந்த முதல் கருத்தரங்கம் மற்றும் பல்கலைக்கழக அடிக்கல் நாட்டுவிழாவிற்கு இராஜபக்சே அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாத் கரியவாசம்
பிரசாத் கரியவாசம்

கரியவாசம் அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் (இலங்கையின்) ‘ஒற்றுமை’க்காகப்  பாடுபடுவதாகவும், பா.ஜ.க வும் அது போல (இந்தியாவின்) ஒற்றுமைக்கான ஒரு சக்தியாக விளங்குவதாகவும்” கூறியுள்ளதன் மூலம் இரு பாசிஸ்டுகளும் ஒரே கொள்கையில் ஊறிய மட்டைகள் தான் என்பதை விவரித்துள்ளார். இங்கு ‘ஒற்றுமை’ என்று இவர் கூற விளைவது சிங்கள பேரினவாதமும், பார்ப்பன இந்துமதவெறியும் தத்தமது நாடுகளில் போராடும் தேசிய இன மக்களின் உரிமைகளை மறுத்து துப்பாக்கி முனையில் பிணைத்து வைத்திருக்கும் ‘ஒற்றுமை’யைத் தான்.

இந்தியாவில் தேசிய இனங்களின் இருப்பையே ஏற்க மறுக்கிறது பா.ஜ.க. காஷ்மீரத்தில் உங்கள் நிலைப்பாடு எதுவோ, அதுவே ஈழத்தில் எங்கள் நிலைப்பாடு என்பதாக கரியவாசம் கூறுவதாகவும் இந்த ஒற்றுமை புராணத்தை புரிந்து கொள்ளலாம். ஜனநாயக மறுப்பு என்ற புள்ளியில் இணைந்து கொள்ளும் இந்த பாசிஸ்டுகள் தான் உண்மையிலேயே இயற்கையான கூட்டாளிகள். குஜராத்தில் முஸ்லீம் மக்கள் மீதான இனப்படுகொலைகளை நிகழ்த்திவிட்டு இன்று வளர்ச்சி என்று வேஷம் போடும் மோடியின் செயலிலும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நிகழ்த்திவிட்டு தற்போது அபிவிருத்தி என்று பசப்பி திரியும் ராஜபக்சேவிடமும் என்ன வேறுபாடு இருக்கிறது? அதைத் தான் கரியவாசம் ‘இங்கித’மாக கூறியிருக்கிறார்.

இப்படி ‘ஒற்றுமைக்கான’ சக்தியாக திகழும் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருப்பதால், அந்த சக்தி “வை.கோ வின் அணுகுமுறையில் மாற்றத்தை கொண்டு வரும்”  என்று கருதுகிறார் கரியவாசம். வை.கோவிற்கு விரைவில் நல்ல புத்தி ஏற்பட்டு தன் இலங்கை அரசுக்கெதிரான தனது நிலைப்பாட்டை கைவிடுவார் என்றும் அந்த பேட்டியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இவரது நம்பிக்கையை மெய்ப்பிக்கும் விதமாக சமீபத்தில் பா.ஜ.கவின் யஷ்வந்த் சின்ஹா எனும் மதவெறி பாசிசக் கட்சியின் தலைவர் ஒருவரை வைத்து ‘மனித உரிமை’ கருத்தரங்கம் ஒன்றை நடத்தியிருக்கிறார் வை.கோ. பாஜகவிற்கும் மனித உரிமைக்கும் என்ன தொடர்பு என்ற மிகப்பொதுவான உண்மையைக் கூட வைகோவின் சந்தர்ப்பவாதம் நியாயப்படுத்துகிறது. வழக்கமாக ஈழ இனப்படுகொலை என்று வீராவேசமாக பேசும் வை.கோ, ‘மனிதஉரிமை’ கருத்தரங்கம் என்று நடத்தியதன் பின்னணியில் பா.ஜ வுடனான கூட்டணி கணக்குகளும் இருக்கவே செய்கின்றன. அதன்படி கூட்டணி பேரம்தான் மனித உரிமையை பலிகடாக்கியிருக்கிறது.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றோ குறைந்த பட்சம் போர்க்குற்றம் என்றோ கூட அதிகாரபூர்வமாக ஏற்க பா.ஜ.க தயாரில்லை. ஆனால் தமிழக மக்களை ஏமாற்றி ஓட்டு பொறுக்குவதற்காக இங்கொன்றும் அங்கொன்றுமாக சில பா.ஜ.க வினர் இனப்படுகொலை என்று கட்சி நிலைப்பாட்டுக்கு மாறாக ஏமாற்றி பேசி திரிகிறார்கள். ஆக பா.ஜ.க வின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டிற்கு தன்னால் பங்கம் வரகூடாது அதே சமயத்தில் மக்களையும் ஏமாற்ற வேண்டும் என்ற வை.கோ வின் பரிதவிப்புதான் ‘மனிதஉரிமை’ என்ற தலைப்பு. கூடவே சின்ஹாவுக்கு விருந்து போட்டு கூட்டணியில் நாலைந்து சீட்டு தேறுமா என்று கெஞ்சுவதும் வைகோவின் அஜெண்டாவில் இருந்தது.

வைகோ - பொன்னார்
ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றோ குறைந்தபட்சம் போர்க்குற்றம் என்றோ கூட அதிகாரபூர்வமாக ஏற்க பா.ஜ.க தயாரில்லை.

கடந்த ஆண்டு ஜெனிவா நகரில், ஐநாவின் மனித உரிமைகள் மாநாட்டின் போது “ராஜபக்சே போர்க் குற்றாவளி அல்ல” என்றும் “இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை ஆதரிக்க முடியாது” என்றும், ”அதே சமயம் இலங்கையில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்” என்றும் பா.ஜ.க கூறியதை இதனுடன் பொருத்தி பார்த்தால் இந்த தலைப்புக்கான காரணம் விளங்கும். வை.கோவை மதித்து நாலு சீட்டு கூட கொடுக்கத் தயாரில்லாத பா.ஜ.காரர்கள், மதிமுக கூட்டணிக்காக இந்திய ஆளும் வர்க்க நலனுக்கு எதிராக செயல்படுவார்கள் என்று எந்த கூமுட்டையும் நம்ப மாட்டான். மதிமுக தொண்டனும் நம்ப மாட்டான் என்றாலும் கட்சி உயிர் பிழைத்திருப்பதற்கு இத்தகைய நரிகளை பரியாக்கும் மோசடிகளை ஏற்றுத்தானே ஆகவேண்டும்?

தன் சந்தர்ப்பவாதத்தை மறைக்க, தான் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு இப்படி தமிழின மேக்கப் போட்டு விடுவது வை.கோவின் வாடிக்கைதான் என்றாலும், முன்பு ஜெயாவுக்கு புலிவேசம் கட்டிவிட்டபோது அவர் வாக்கு பெறும் நோக்கத்துடன் நடிப்புக்காக கூறியதைப் போன்று “ஈழம் வாங்கித் தருவேன்” “படை அனுப்புவேன்” என்று கூட சொல்லத் தயாராக இல்லை அவரது இப்போதைய கூட்டாளி பா.ஜ.க. காங்கிரசுக்கு ஓட்டு போடக்கூடாது என்பதைத் தவிர ராஜபக்சேவை குறித்தும், ஈழம் பற்றியும் அவர்களிடத்தில் இருக்கும் கருத்தும் காங்கிரசின் கருத்தும் வேறு வேறு இல்லை. ஆயினும் பா.ஜ.கவை ஈழத்தமிழர்களின் மீட்பராக சித்தரித்து மக்களை ஏமாற்ற முனைகிறார் வை.கோ.

கரியவாசத்தின் அந்த பேட்டி மேலும் சில முக்கியமான விசயங்களையும் சொல்லி செல்கிறது. பா.ஜ.க வின் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சவுஹான், சீதை தீக்குளித்த இடமாக சொல்லப்படும் இலங்கை நுவாரலியாவில் கோவில் கட்டி வருவதாகவும், அதன் மூலம் இந்தியாவிலிருந்து ஆன்மீக பயணிகளை ஈர்த்து இரு நாட்டு உறவுகளை பலப்படுத்தும் தொலைநோக்கோடு அதை அவர் கட்டி வருவதாகவும் பாராட்டியுள்ளார் கரியவாசம்.

இனப்படுகொலை குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க இலங்கை அமைதியாகவும் இயல்பு நிலையிலும் தான் இருக்கிறது என்று காட்டிக்கொள்ள இலங்கை அரசு பகீரத முயற்சி செய்கிறது. சுற்றுலாவை ஊக்குவிப்பது, திரைப்பட விழாக்கள், காமென்வெல்த் மாநாடுகள் என்று தன் இரத்த கறையை மறைக்க முயல்கிறது. இந்த சூழலில் அங்கு சீதைக்கு கோவிலை கட்டி அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஆன்மீக சுற்றுலாவாசிகளை கவர்வது இனப்படுகொலை குற்றத்தை மறைக்க உதவும் என்று தெரிந்தே தான் ம.பி பா.ஜ முதல்வர் அந்த கோவிலை கட்டுகிறார். மேலும் இந்த கோவிலின் பின்னணியில் சங்க வானரங்களின் அகண்ட பாரத கனவும் இருப்பதை மறுக்க முடியாது.

கருணாஸ் போன்ற காமெடி பீஸ்களும் இதர சினிமா நட்சத்திரங்களும் இலங்கைக்கு செல்வதாக தகவல் கிடைத்ததும் அவர்களை தடுத்து ஆர்ப்பாட்டம் செய்யும் தமிழினவாதிகள் இன்று வரை சீதை கோவிலை எதிர்த்தோ, பாஜகவை எதிர்த்தோ, பாஜகவிற்கு பல்லக்கு தூக்கும் வைகோ குறித்தோ ஒரு அறிக்கை கூட விடவில்லை. இதனால் சினிமா நட்சத்திரங்களை எதிர்ப்பது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அதிகாரமும், அரசு பலமும் உள்ள பாஜகவையும் அதன் அடிவருடிகளையும் கண்டிப்பதில் மவுனம் ஏன்?

சீதை கோயில்
நுவரலியாவில் சீதை கோயில் கட்டுகிறது வைகோவின் கூட்டணி கட்சி பாஜக.

விஜய் டி.வி சூப்பர் சிங்கர் பாடகர்கள் இலங்கை போவதாய் தகவல் வந்ததும் வை.கோ வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு கூறினார்:

“ஈழத்தில் நடைபெற்ற படுகொலைகளை மறைப்பதற்காக நரித் தந்திரத்தோடு இந்த இசைவிழாவை நடத்துகிறார்கள். ரோமாபுரி பற்றி எரிந்தபோது நீரோ பிடில் வாசித்தது போல விஜய் தொலைக்காட்சி இசைக் கலைஞர்கள் அங்கு பாடப் போகிறார்களா? ஈழத் தமிழர்கள் எழுப்பிய மரண ஓலம் இன்னும் அங்கு காற்றில் கலந்துதான் இருக்கிறது. காயப்பட்டுப் போன தமிழர்கள் மனங்களில் நெருப்பைப் போடும் வேலையில் விஜய் தொலைக்காட்சி ஈடுபட வேண்டாம்.”

நியாயமான கோபம் தான். மரண ஓலத்தை சம்ஸ்கிருத மந்திர ஒலியால் மறைக்கப் பார்க்கும் பாஜகவுக்கு எதிராக இதே கோபம் வைகோவுக்கு வரவில்லையே ஏன்? ரோம் தீப்பிடித்த போது நீரோ பிடில்தான் வாசித்தான். ஆனால் பாஜகவோ தீ வைத்த இலங்கை அரசை கருத்திலும், அரச உறவுகளிலும் ஆதரித்து உதவி செய்கிறது. அத்தகைய தீவட்டி நீரோக்களுக்கு நல்லெண்ணத் தூதராக பணியாற்றும் வைகோவிற்கு என்ன தண்டனை?

அந்த கோயிலை இடிப்பதற்கு கரசேவை செய்ய தமிழார்வலர்கள் தயாராக இல்லையே ஏன்? வை.கோ, நெடுமாறன் உள்ளிட்ட தமிழினவாதிகள் தம்மளவிலேயே ஒரு தமிழ் ஆர்.எஸ்.எஸ் என்பதால் சீதை கோவிலை எதிர்த்தால் இந்து அல்லது தமிழ் சென்டிமெண்ட் பாதிக்கும் என்று பயப்படுகிறார்கள். கூடவே ஜெயா விரட்டிவிட்ட பிறகு தற்போது வேறு வழியில்லாமல் பாஜகவை அண்டி பிழைப்பை நடத்துவதாலும் அது குறித்து அவர்கள் வாய் திறப்பதில்லை. அருவெருப்பான இந்த பிழைப்புவாதிகளை புரிந்து கொண்டு நிராகரிக்காத வரை ஈழத்தமிழர்களுக்கு எந்த பலனும் இல்லை.

கரியவாசத்தின் பேட்டி, இந்திய ஆளும் வர்க்க நலனை பிரதிபலிக்கும் பா.ஜ.க இலங்கைக்கு எதிராக சிந்திக்காது என்பதையும், தன் பிழைப்புவாதத்திற்காக அவர்களை நம்பச் சொல்லும் வை.கோவின் துரோகத்தையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. ஆனாலும் கரியவாசம் நம்பிக்கை வைப்பது போல வைகோவையெல்லாம் பாரதிய ஜனதா திருத்த வேண்டியதில்லை. ஏனெனில் அவர் இயல்பிலேயே ஒரு பாரதிய ஜனதாவின் தமிழ் பிராண்ட் போர்வாள் என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது.

இவற்றை எல்லாம் காண மறுத்து, ‘வை.கோ கூட்டணி மாறலாம் ஆனால் கொள்கை மாறமாட்டார்’; ‘கொள்கை வேறு கூட்டணி வேறு’ என்று வை.கோ ஆதரவாளர்கள் தங்களுக்கு தாங்களே அனுதாபம் சொல்லிக் கொள்கிறார்கள். பிழைப்புவாதிகளுக்கும், அடிமைகளுக்கும் கொள்கை என்று ஒன்று இருக்க முடியுமா? இருந்தால் அதன் பெயர் கொள்கையா?

–    ரவி

தேவயானி வழக்கை அமெரிக்கா ரத்து செய்தது ஏன் ?

4

தேவயானி கோப்ரகடே மீதான வழக்கை நியூயார்க் மாவட்ட நீதிபதி ஷீரா ஷெய்ன்ட்லின் தள்ளுபடி செய்திருக்கிறார். ‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று தேவயானியையும் அவருக்கு ஆதரவாக பொங்கி எழுந்த இந்திய அரசையும் பார்த்து புலியாக உறுமிய அமெரிக்க நீதித்துறை இப்போது நரியாக வாபஸ் வாங்கியது ஏன்?

தவறான தகவல்களையும், மோசடி ஆவணங்களையும் கொடுத்து சங்கீதா ரிச்சர்ட் என்ற பெண்ணுக்கு விசா பெற்று தன் வீட்டு வேலைகளை செய்வதற்காக அவரை அமெரிக்கா அழைத்து சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு நியூயார்க் இந்திய தூதரகத்தில் பணி புரிந்த தேவயானி கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி கைது செய்யப்பட்டார். ‘இந்தியாவின் பிரதிநிதியான அவர் கைது செய்யப்பட்டது இந்திய தேசமே அவமதிக்கப்பட்டதற்கு இணையானது’ என்று சீன் போட்ட இந்திய அரசு சும்மா ஒரு பேருக்கு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகளை ரத்து செய்தது.

உத்தம் கோப்ரகடே
தேவயானியின் விடுதலைக்காக போராடும் அவரது தந்தை உத்தம் கோப்ரகடே

மறுபுறம், ‘கும்தலக்கடி கும்மாவா, அமெரிக்கான்னா சும்மாவா. எங்க ஊருக்கு வந்தா தப்பு செஞ்சவங்க யாரா இருந்தாலும் புடிச்சி உள்ள போட்டுருவாங்க, சட்டம் தனது கடமையை உண்மையாகவே செய்யும். உங்க இந்தியாவப் போல இல்ல’ என்று கூறி அமெரிக்காவின் ‘சட்டப்படியான ஆட்சி’யைக் கொண்டாடினார்கள் அமெரிக்கவாழ் இந்திய அம்பிகள். இப்படி அமெரிக்க என்ஆர்ஐ-களும், இந்திய மேட்டுக்குடியும் தேசபக்தி, ஜனநாயகம் என்ற வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டு போங்காட்டம் ஆடினார்கள்.

இதே அமெரிக்காவில் சென்ற ஆண்டு போலியான வருமான சான்றிதழ் கொடுத்து அமெரிக்க அரசின் இலவச மருத்துவ வசதியை மோசடியாக பெற்று 12 லட்சம் டாலர் வரை கையாடியதாக குற்றம் சாட்டப்பட்ட ரஷ்ய தூதரக அதிகாரிகள் மீது கை வைக்க அமெரிக்க நீதித் துறை துணியவில்லை.

ரஷ்யாவிடம் அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ஏவுகணைகளும், ஐநா-வில் வீட்டோ அதிகாரமும் இருப்பதால், அந்நாட்டுடன் இந்த விஷயத்தில் மோதி விளையாட அமெரிக்காவுக்கு நேரமில்லை. இந்தியா போன்ற அமெரிக்க எஜமானர்களை விழுந்து தொழும் அடிமை நாடுகளிடம்தான் இது போன்று சில்லறை விவகாரங்களில் தனது சட்டங்களை பாய்ச்சி, சீண்டி, ரசிப்பது முடியும்.

மேலும், அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட மிட் ரோம்னி என்பவர் தேவயானியைப் போலவே தனது வீட்டில் வேலை செய்பவருக்கு குறைந்த சம்பளம் கொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அரசியல் கட்சி எதிராளியின் வண்டவாளங்களை தெருவில் இறக்கி விடும் அமெரிக்க ‘ஜனநாயக’த்தின் தேர்தல் மேலாண்மை உத்தியின் ஒரு பகுதியாக அந்த தகவல் கசிய விடப்பட்டது. ஆனால் மிட் ரோம்னி மீது அமெரிக்க நீதித்துறை இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கைது செய்யப்பட்ட தேவயானியும் சில மணி நேரங்களுக்குள் இந்திய அரசால் இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து கட்டப்பட்ட 2.5 லட்சம் டாலர் பிணையில் வெளியில் வந்து விட்டார்.

‘தேவயானிக்கு தூதரக அதிகாரிகளுக்கான சட்ட பாதுகாப்பு இருப்பதால், அவர் மீது வழக்கு தொடர்ந்தது செல்லாது’ என்று அவரது தந்தை முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி உத்தம் கோப்ரகடேவும், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளும், 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகளும் ஓலமிட்டனர். “தூதரக துணை அலுவலராக இருந்த தேவயானிக்கு தூதரக பணி தொடர்பான நடவடிக்கைகளுக்குத்தான் சட்ட பாதுகாப்பு இருக்கிறதே தவிர, தூதர்களுக்கு இருப்பது போன்று அனைத்து குற்றவியல் சட்டங்களிலிருந்தும் விலக்கு அளிக்கும் முழுமையான பாதுகாப்பு இல்லை” என்று அமெரிக்க அரசுத் தரப்பு வாதிட்டது. இதே அமெரிக்க அரசு, 2004 டிசம்பரில் ருமேனிய நாட்டின் புகாரெஸ்ட் நகரில் குடித்து விட்டு கார் ஓட்டி அந்நாட்டு இசைக் கலைஞர் ஒருவரை கொன்ற அமெரிக்க தூதரக ஊழியர் வான் கோதம் என்ற கடற்படை வீரருக்கு தூதரக சட்ட விலக்கு செல்லுபடியாகும் என்று சாதித்து தானே ராணுவ விசாரணை நடத்தி தண்டனை கொடுத்தது.

மிட் ரோம்னி
தேவயானியைப் போலவே வீட்டுப் பணியாளருக்கு சட்டப்படி ஊதியம் கொடுக்காத மிட் ரோம்னி.

வெளிநாடு செல்லும் போது வீட்டு வேலை செய்ய ஆள் அழைத்துச் செல்ல தேவயானி பயன்படுத்திய இந்த ஏற்பாடு, (அதாவது, விசா பெறுவதற்காக ‘கூடுதல் சம்பளம், முறையான வேலை நேரம்’ என்று வரையறுத்த ஒப்பந்தத்தை சமர்ப்பிப்பது, நடைமுறையில் வாய்மொழி ஒப்பந்தப்படி குறைந்த சம்பளம் கொடுத்து அதிக நேரம் வேலை வாங்குவது), கடந்த 20 ஆண்டுகளாக இந்திய தூதரக அதிகாரிகளால் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், இது தொடர்பாக அமெரிக்க அரசு இது வரை எந்த பிரச்சனையும் கிளப்பவில்லை.

இவ்வாறு, தனது வல்லாதிக்க நலன்களுக்கு ஏற்ப பிற நாடுகளுடன் பேரம் பேசுவதற்காக, மிரட்டவும், விட்டுக் கொடுக்கவும், சீண்டி விளையாடவும் அமெரிக்க மற்றும் பன்னாட்டு சட்டங்கள் அமெரிக்க அரசுக்கு பயன்படுகின்றன.

இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளைப் பொறுத்த வரை உலகில் எங்கு போனாலும் தமது வீட்டு வேலைகளை செய்ய இந்தியாவிலிருந்து ஒரு ‘அடிமை’யை அழைத்துப் போகும் தமது ‘அடிப்படை’ உரிமை பாதிக்கப்பட்டதாக பொருமிய அவர்கள், தேவயானிக்கு இன்று இந்த கதி என்றால், நாளைக்கே வாஷிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான இந்திய தூதரையே வீடு புகுந்து கைது செய்து விடுவார்கள் என்று கவலைப்பட்டனர். “வேலைக்காரிக்குக் குறைவான சம்பளம் கொடுத்தது பெருங்குற்றமா?” என திமிர்த்தனமாக கேள்வி எழுப்பினார்கள். தமது நலன்களுக்கு எதிரான இத்தகைய அமெரிக்க நடத்தையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று சூளுரைத்தனர்.

இந்த மானஸ்தர்கள் இந்திய பிரதமர் முதல் கடைசி குடிமகன் வரை செல்போன், இணைய தொடர்புகளுக்குள் புகுந்து அமெரிக்க உளவுத் துறை ஒட்டுக் கேட்பது குறித்து வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அல்லது போபால் கொலைகாரன் ஆண்டர்சனையோ, யூனியன் கார்பைடையோ காப்பாற்றத்தான் துடித்தார்களே அன்றி தண்டிக்க அல்ல. இதுதான் இவர்களது தேசபக்தி காட்டும் அடிமைத்தனம்.

‘இந்திய-அமெரிக்க உறவுகளில் நெருக்கடி, இந்தியாவின் தன்மானப் பிரச்சனை’ என்று இந்திய ஆளும் வர்க்கம் துள்ளுவதை ரசித்துக் கொண்டிருந்தது அமெரிக்க அரசு.  ‘வல்லரசு இந்தியாவின் காயம்பட்ட இதயத்தை’ ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியும் தத்தமது கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு கிளம்பிப் போய் விட்டார்கள்.

தம் வசம் வேறு என்ன வழி இருக்கிறது என்று மூளையைக் கசக்கிக் கொண்ட இந்திய அதிகார வர்க்கம் தமது ஒட்டுமொத்த எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு தேவயானிக்கு முழுமையான சட்ட பாதுகாப்பு கிடைக்கும் வகையில் அவரை நியூயார்க்கில் உள்ள ஐநா சபையின் இந்திய பிரதிநிதி அலுவலகத்துக்கு பணி நியமனம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டது.

ஆனால், “புதிதாக வழங்கப்படும் ஐநா ஊழியருக்கான முழுமையான சட்ட பாதுகாப்பு முன் தேதியிட்டு செல்லுபடியாகாது, எனவே ஏற்கனவே செய்த குற்றங்களுக்காக வழக்கு தொடர்வதை தடுக்க முடியாது” என்ற அடிப்படையில், ஜனவரி 9-ம் தேதி விசா மோசடி முதலான குற்றங்களை தேவயானி மீது சுமத்தியது நியூயார்க் நீதித் துறை. இருப்பினும் குற்றவாளியின் மீது தன் பிடியை மேலும் இறுக்காமல் தேவயானியின் மனுவின் அடிப்படையில் அவரை அமெரிக்காவை விட்டு போக அனுமதித்தது அமெரிக்க நீதிமன்றம். அந்த மனு மீதான இறுதித் தீர்ப்புதான் இப்போது வழங்கப்பட்டிருக்கிறது.

குற்றம் நடந்த நேரத்திலும், கைது செய்யப்பட்ட போதும் தேவயானிக்கு தூதரக பணிகள் தொடர்பான சட்டப் பாதுகாப்பு மட்டுமே இருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டு அதைத் தள்ளுபடி செய்யக் கோரிய ஜனவரி 9-ம் தேதி ஐநா ஊழியராக நியமிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு முழுமையான சட்ட பாதுகாப்பு உள்ளது என்று நீதிபதி இப்போது தீர்ப்பளித்திருக்கிறார். இவ்வாறாக, இந்த விஷயத்தில் நோண்டியது போதும் என்று தான் கிளப்பிய புழுதியை அடங்க விட்டு அமைதியாகியிருக்கிறது அமெரிக்கா.

ஆளும் வர்க்கத்தின் அதிகார தூதர்கள்
தேவயானி போன்ற ஆளும் வர்க்கத்தின் அதிகார தூதர்களுக்கு அனைத்து வசதிகளும் எளிதாகவே கிடைத்து விடுகின்றன.

தேவயானியின் பிணை நிபந்தனைகளை ரத்து செய்து இந்திய அரசு கட்டியிருந்த பிணைத் தொகையையும் விடுவித்தது நீதிமன்றம். “தேவயானி மீது சாட்டப்படும் குற்றம் அவரது தூதரக பணி தொடர்பாக செய்யப்படவில்லை என்று நீதித்துறை கருதினால் புதிய குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யலாம்” என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. குற்றவாளி பாதுகாப்பாக நாட்டை விட்டு பறந்து விட்ட நிலையில், இந்திய ஆளும் வர்க்கத்தின் முரண்டை பார்த்து விட்ட நிலையில், இந்த விவகாரத்தை அமெரிக்கா அப்படியே புதைத்து மூடி விடும் என்று எதிர்பார்க்கலாம். அல்லது தேவைப்படும் போது நீதிபதியின் இந்த ‘செய்யலாமை’ வைத்து வழக்கை உயிர்ப்பிக்கவும் செய்யலாம்.

ஜனவரி 9-ம் தேதி இந்தியாவுக்குத் திரும்பிய தேவயானி இந்திய வெளியுறவுத் துறையின் “வளர்ச்சி கூட்டிணைப்பு நிர்வாகத்தின் (Development Partnership Administraion)“ இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நியூயார்க் தூதரகத்தில் பதவி, அங்கு பிரச்சனை ஏற்பட்டதும் ஐநா ஊழியராக நியமனம், அதிலிருந்து திரும்பி வந்ததும் நிர்வாக பதவி என்று தேவயானி போன்ற ஆளும் வர்க்கத்தின் அதிகார தூதர்களுக்கு அனைத்து வசதிகளும் எளிதாகவே கிடைத்து விடுகின்றன.

அமெரிக்க நீதி மன்றத்தின் தீர்ப்பு தேவயானியின் குற்றம் குறித்து எதுவும் பேசவில்லை என்றாலும் அவரது தந்தை உத்தம் கோப்ரகடே தன் மகள் மீதான குற்றச்சாட்டுக்களை ரத்து செய்ய உதவிய இந்திய அரசு மற்றும் இந்தியர்களின் ஒத்துழைப்புக்கும், உதவிக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட சங்கீதா ரிச்சர்ட் குடும்பத்தினரை பொய்யர்கள் என்று திட்டியிருக்கிறார்.

இந்தியாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி சட்டங்கள் தற்செயலாக சாமானியர்களின் சார்பில் சில சமயம் இயங்குவது போல காண்பித்தாலும், ஆளும் வர்க்கங்கள் அவற்றை சீக்கிரமே மேன்மக்களுக்கு சாதகமாக சரி செய்து விடுவார்கள் என்பதை இது தெளிவாக்குகிறது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் என்ன தெரிகிறது? சங்கீதா போன்ற சாமானியர்களுக்கு எங்கேயும் நீதி கிடைத்து விடுவதில்லை.  அமெரிக்க எஜமான்களும் இந்திய ஏஜெண்டுகளும் நடத்திய அக்கப்போர் சண்டையில் அவர் ஒரு பகடைக் காயாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். ஒரு சாமானிய இந்திய பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த அநீதிக்கு ஆதரவாகத்தான் அமெரிக்க, இந்திய ஆளும் வர்க்கங்கள் செயல்பட்டிருக்கின்றன. வீட்டு வேலை செய்யும் தொழிலாளிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு பதிலாக, தேசப்பற்று என்ற பெயரில் ஆண்டைகளுக்காக கூக்குரலிட்டார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.

சங்கீதா ரிச்சர்டை கொடுமைப்படுத்திய தேவயானியையும், அவரைப் போன்ற அதிகார வர்க்கத்தை விட்டுக்கொடுக்காத இந்திய அரசையும், இந்திய மக்களை ஒடுக்கியும், ஒடுக்குதலில் உதவும் இந்திய தரகர்களை உச்சி முகர்ந்தும் வரும் அமெரிக்க அரசையும் நாம்தான் தண்டிக்க வேண்டும், அம்பலப்படுத்த வேண்டும். இதன்றி சங்கீதா ரிச்சர்டுக்கோ இல்லை இந்திய மக்களுக்கோ நீதி கிடைத்து விடாது.

– அப்துல்

மேலும் படிக்க

அரசு செவிலியர் பள்ளிகளை ஒழிக்க தமிழக அரசு சதி !

5

டந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 7-ம் தேதி) “அரசு பயிற்சி பள்ளிகளில் பயின்ற செவிலியர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும்” என்கிற செவிலியர் பயிற்சி பெற்ற மாணவர்களின் வழக்கை தள்ளுபடி செய்து, மேல் முறையீடு செய்ய உச்சநீதி மன்றத்திற்கு செல்லும்படி தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதி மன்றம். தனியார்மயத்துக்கு ஆதரவாக வழங்கப்பட்ட இத்தீர்ப்பு வெளியான உடனே நீதி மன்றத்தில் கூடி நின்ற செவிலியர் பயிற்சி பெற்ற மாணவர்கள் நீதிபதிகளையும், அரசையும் கண்டித்து முழக்கமிட்டபடி உயர்நீதி மன்றத்தின் ஐந்தாவது மாடியில் ஏறி தற்கொலை போராட்டம் நடத்தியுள்ளனர்.

செவிலியர் மாணவர்கள் போராட்டம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் 5-வது மாடியிலிருந்து குதிப்பதாக போராட்டம் நடத்திய செவிலியர் மாணவர்கள்.

2010-ம் ஆண்டு செவிலியர் பயிற்சியை முடித்த இம்மாணவர்கள் தங்களுக்கு வேலை வழங்கக்கோரி கடந்த மூன்றாண்டுகளாக பல்வேறு போராட்டங்களை வீதிகளிலும், நீதிமன்றத்திலும் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான 25 செவிலியர் பயிற்சி பள்ளிகள் இயங்கி வருகின்றன. செவிலியர் பயிற்சி படிப்பிற்கான காலம் மூன்றரை ஆண்டுகள்.   2007-ம் ஆண்டில் சேர்ந்து பயிற்சியை முடித்த மொத்தம் 1861 மாணவர்கள், 25 பயிற்சி மையங்களிலிருந்தும் 2010-ம் ஆண்டு வெளியே வந்தனர். 2011-ம் ஆண்டு இந்த மாணவர்களை இரு பகுதிகளாக பிரித்து (969 பேர் ஒரு பகுதியாகவும் 893 பேர் மற்றொரு பகுதியாகவும்) தேர்வுக்குரிய சரிபார்ப்பு செய்யப்பட்டது.

இவர்களில் 969 பேருக்கு முதல் கட்டமாக வேலை வழங்கப்பட்டது. இதற்கிடையில் தமிழக சட்டமன்ற தேர்தல் வந்ததால் பணி அமர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அடுத்ததாக அ.தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததும் தங்களுக்கு வேலை கிடைத்து விடும் என்று மாணவர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. எனவே அரசுக்கு நினைவூட்டினர், ஆனால் அது அசைந்து கொடுப்பதாக இல்லை.

2012-ம் ஆண்டு தனியார் பயிற்சி பள்ளிகளில் படித்த மாணவர்கள், “தங்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் வேலை வேண்டும். தனியார் பயிற்சி பள்ளிகளும் அரசு அனுமதியுடன், அரசு வழங்கிய சான்றிதழ்களின் அடிப்படையில் தான் இயங்குகின்றன. இரண்டு மாணவர்களுக்கும் ஒரே பாடங்கள், ஒரே தேர்வு முறைகள் தான் என்றிருக்கும் போது எங்களுக்கு மட்டும் அரசு வேலை தர மறுப்பது தவறு, இதை அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடுத்தனர். வழக்கை பரிசீலித்த நீதிபதிகள் தனியார் பள்ளிகளில் படித்தவர்களுக்கும் எதிர்காலத்தில் வேலை வழங்குவது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மேல்முறையீடு செய்தனர். அதற்கெதிராக தனியார் பள்ளி மாணவர்கள் மறு ஆய்வு மனு தக்கல் செய்தனர். மாணவர்கள் இவ்வாறு மாறி மாறி நீதி மன்றத்தை அணுகிக் கொண்டிருந்த நிலையில். “இரு தரப்பு மாணவர்களுக்கு இடையிலும் பிரச்சினை நடக்கிறது. அரசுக்கு அனைத்து மாணவர்களும் ஒன்று தான், எனவே இதற்கு தேர்வு தான் ஒரே தீர்வு” என்று கூறி அரசு தந்திரமாக ஒரு வேலையை செய்தது.

MRP (Medical Requretment Board)  மருத்துவ பணி தேர்வாணையம் என்கிற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்க உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணையம் நடத்தும் தேர்வின் மூலம் தான் இனி செவிலியர் வேலைக்கு அனைவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வு அரசு, தனியார் என்று இரு தரப்பு மாணவர்களுக்கும் பொதுவானது என்று கூறி தனியார் பயிற்சி பள்ளிகளுக்கு ஆதரவாக தேர்வாணையம் ஒன்றை உருவாக்க அரசாணை பிறப்பித்தது. இப்படி மெரிட் என்ற பெயரில் தனியார் கல்வி முதலாளிகளுக்கு கல்லாவை கூட்டும் வேலையை  தமிழக அரசு செய்தது.

சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை உயர்நீதி மன்றம்

அரசின் இந்த தனியார் மய ஆதரவு நடவடிக்கைக்கு எதிராக அரசு பள்ளி மாணவர்கள் உடனடியாக நீதி மன்றத்தில் தடை கோரி மனு போட்டனர். மாணவர்களின் மனுவை பரிசீலித்த ராமசுப்பிரமணியம் தலைமையிலான ஒருநபர் அமர்வு, அரசுப் பள்ளி மாணவர்களின் கோரிக்கை சரியானது என்றும், அரசுப் பள்ளியில் பயின்றவர்களுக்கு தான் வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. அரசாணைக்கும் தடை விதித்தது.

இதற்கு அரசு தரப்பிலிருந்து ஆறு மாதங்களாக எந்த பதிலும் இல்லை. மேல் முறையீடும் செய்யவில்லை, வேலையும் வழங்கவில்லை. மொத்தத்தில் தீர்ப்பை அரசு மதிக்கவில்லை. எனவே மாணவர்கள் வீதியில் இறங்கினர். நீதிமன்ற உத்தரவுப்படி வேலை வழங்கக்கோரி மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக 2013-ம் ஆண்டு செவிலியர் மாணவர்களை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

பேச்சுவார்த்தைக்கு பயிற்சி பெற்ற செவிலியர் மாணவர்களை நேரடியாக அழைக்காமல், அரசு செவிலியர் சங்கத்தலைவி லீலாவதி மூலம் அழைத்தது. மாணவர்களும் அதை ஏற்றுக் கொண்டதால் அவர்கள் சார்பில் லீலாவதி கலந்து கொண்டார். ஆனால் இந்த பேச்சு வார்த்தைக்கு சம்பந்தமே இல்லாத வகையில் தனியார் தரப்பையும் அரசு அழைத்திருந்தது. பேச்சு வார்த்தையில் தனியார் பயிற்சிப் பள்ளிகளின் பிரதிநிதி நேரடியாக கலந்து கொண்டார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜய், சுகாதாரத்துறை செயலர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் அரசு மாணவர்கள் வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டால் அனைவருக்கும் உறுதியாக வேலை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. எனவே செவிலியர் சங்கத் தலைவி லீலாவதி, “வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்ளுங்கள், நான் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன்” என்று மாணவர்களிடம் உறுதியளித்தார். அவர் நம்பிக்கையுடன் கூறியதால் மாணவர்களும் வழக்கைத் திரும்ப பெற்றுக் கொண்டனர்.

ஆனால், அதன் பிறகு ஆறு மாதங்கள் ஆகியும் வேலை வழங்கப்படவில்லை. மாறாக மீண்டும் தேர்வாணையத்தை புதுப்பிக்கும் வேலையை துவங்கியது அரசு. எனவே மாணவர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடினர். “அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து வேலை தருவதாக கூறியதால் தான் வழக்கை திரும்ப பெற்றோம், ஆனால் கூறியபடி வேலை வழங்காமல் மீண்டும் தேர்வாணையத்தை புதுப்பிக்கும் வேலையில் இறங்கியிருப்பதால் மீண்டும் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டு தடை பெற்றனர்.

கீழ்ப்பாக்கம் செவிலியர் பயிற்சி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சி மாணவர்கள்.

அரசோ எதுவுமே நடக்காதது போல இன்னொரு ஆறு மாதங்களுக்கு ஆமையை போல நகர்ந்து கொண்டிருந்தது. பிறகு சொல்லி வைத்தாற்போல அரசு தரப்பும், தனியார் தரப்பும் ஒரே நேரத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் தனியார் தரப்பு வழக்குரைஞர் என்ன என்ன வாதங்களை எல்லாம் வைத்தாரோ அதே வாதங்களை அரசு தரப்பு வழக்குரைஞரும் வைத்தார். ஏனென்றால் எல்லாவற்றையும் அவருக்கு தனியார் வழக்குரைஞர் தான் எழுதிக்கொடுத்தார் என்கின்றனர் செவிலியர் மாணவர்கள்.

“இந்தியாவில் உள்ள அனைவருமே இந்திய குடிமகன்கள் தான், எனவே அரசு தனியார் என்றெல்லாம் பார்க்காமல் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்” என்று தனியார் தரப்பு வாதிட்டது. “வேலை இல்லாமல் இருப்பது இரு தரப்பு மாணவர்களுக்குமே பிரச்சினை தான். எங்களுக்கு இரண்டு மாணவர்களும் சமம் தான். இந்த பிரச்சினையால் உரிய இடங்களுக்கு போதிய செவிலியர்களை வேலையில் அமர்த்த முடியவில்லை, துறையில் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே தேர்வின் மூலம் இருவரையும் வேலைக்கு எடுக்க அரசு தயாராக இருக்கிறது. எனவே இருவருக்கும் வேலை வழங்க வேண்டுமானால் அரசாணை மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும்” என்று அரசு தரப்பு வாதிட்டது.

ஒரு பக்கம் மாணவர்களுடன் சட்டப் போராட்டம் நடத்துவது போல நடித்துக் கொண்டு இன்னொரு பக்கம் அரசு தனது சதி வேலைகளை செய்துகொண்டிருந்தது. மூன்றாண்டுகளாக வழக்கு, போராட்டம் என்று செவிலியர் மாணவர்கள் அரசோடு போராடிக் கொண்டிருந்த போது, அரசு சதித்தனமாக இன்னொரு பக்கம் இந்த மூன்றாண்டுகளில் பயிற்சி முடித்து வெளியில் வந்திருந்த அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களிடமிருந்து செவிலியர் வேலைகளுக்கான ஆட்களை திருட்டுத்தனமாக எடுத்துக் கொண்டிருந்தது. இந்த வேலையை நேரடியாக செய்யாமல் என்.ஜி.ஓ- தொண்டு நிறுவனங்களை வைத்து ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு எடுத்துக் கொண்டிருந்தது.

2013-ம் ஆண்டில் மட்டும் இவ்வாறு 10,000 செவிலியர்களை தேர்வு செய்யும் பொறுப்பை இரண்டு என்.ஜி.ஓ-களிடம் ஒப்படைத்திருந்தது. ஆண்டு இறுதியில் அனைவரும் வேலையிலும் அமர்த்தப்பட்டு விட்டனர். என்.ஜி.ஓ-க்கள் மூலம் வேலைக்கு எடுக்கப்படுபவர்கள் அனைவருமே தற்காலிக ஊழியர்கள் ஆவர். வேலைக்கு எடுக்கும் போதே என்.ஜி.ஓ அவர்களோடு ஒப்பந்தம் செய்துகொள்கின்றது. ஒப்பந்த பத்திரத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட பிறகே அவர்களை வேலையில் அமர்த்துகிறது. இவ்வாறு வேலைக்கு எடுக்கப்படும் செவிலியர்கள் எப்போது போகச் சொன்னாலும் வேலையை விட்டு போய் விட வேண்டும்.

இந்த வேலையில் ஈடுபட்டுள்ள இரண்டு என்.ஜி.ஓ-க்களில் ஒன்று அரசு பயிற்சிப் பள்ளி மாணவர்களில் ஒருவரைக்கூட வேலைக்கு எடுக்கவில்லை. எனவே, “ஆள்பற்றாக்குறை நிலவுகிறது, மாணவர்களை வேலைக்கு எடுக்க வேண்டுமானால் அரசாணை மீதான தடையை உடனே நீக்க வேண்டும்” என்றெல்லாம் அரசு தரப்பு நீதி மன்றத்தில் கூறியதெல்லாம் பச்சைப் பொய்கள் என்பதையும் அரசுப் பயிற்சி பள்ளிகளை ஒழித்துக் கட்டி, தனியார் மயத்தை ஊக்குவிக்கும் நோக்கத்திலானவை என்பதையும் இந்த நடவடிக்கைகள் அம்பலமாக்குகின்றன.

அந்த பொய்களை எல்லாம் அப்படியே ஏற்றுக்கொண்டு, “அனைத்து தரப்பு மாணவர்களும் சமமானவர்களாக இருக்கும் போது அரசு மாணவர்களுக்கு மட்டும் தனிச்சலுகை அளிக்கத் தேவையில்லை” என்று அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் என்கிற இரு நீதிபதிகளை கொண்ட அமர்வு அரசாணை மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது.

தனியார் மாணவர்கள்
தனியார் செவிலியர் பயிற்சிப் பள்ளி முதலாளிகளால் கொள்ளையடிக்கப்பட்ட மாணவர்கள்.

எங்களுக்கு அனைத்து மாணவர்களும் ஒன்று தான் என்று அரசும். மாணவர்களுக்குள் அரசு மாணவர்கள், தனியார் மாணவர்கள் என்று ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது என்று நீதி மன்றமும், சமத்துவ விரும்பிகளைப் போல பேசுவதை கேட்பவர்கள், அப்பாவிகளாக இருந்தால் ‘அரசாங்கமும், நீதிமன்றமும் சொல்றது சரிதானே’ என்று நினைக்கலாம். ஆனால் இது மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிற அக்கறையின்பாற்பட்டு வெளியான கருத்து அல்ல.

மருத்துவத்துறையை மொத்தமாக தனியார்மயமாக்க வேண்டுமானால் அரசுப் பள்ளி மாணவர்கள் என்று கூறிக்கொண்டு வேலையில் உரிமை கோருவதை எல்லாம் முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டும். அதை நிறைவேற்ற வேண்டுமானால் சலுகைகள், இட ஒதுக்கீடு போன்ற உரிமைகளை கோர முடியாதபடி, தனியார் நிறுவனங்களை இழுத்து வரவேண்டும். அரசும் நீதிமன்றமும் கூறுவது போல இரு தரப்பு மாணவர்களும் ஒன்றா? இல்லை. நாம் ஏன் அரசு பயிற்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்களை ஆதரிக்க வேண்டும்?

அரசு பயிற்சிப் பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையிலும், பல்வேறு பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழும் அடித்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தனியாரில் அப்படி அல்ல, தனியாருக்கே உரிய அனைத்து முறைகேடுகளுடனும் தனியார் பயிற்சி பள்ளிகள் இயங்குவதால் யார் வேண்டுமானாலும் 500, 600 மார்க் எடுத்திருந்தாலே நன்கொடை கொடுத்துவிட்டு சேர்ந்து கொள்ளலாம். அதாவது, பணம்தான் இடம் பெறுவதற்கான தகுதி. இதனால் இவர்கள் மேட்டுக்குடி என்று பொருள் அல்ல. அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காமலும், வேறு படிப்புகளில் வேலை வாய்ப்பு குறைவு என்பதாலும், பொதுவில் செவிலியர் படிப்பை பெற்றோர்கள் விரும்புகின்றனர். இப்படி வேறு வழியின்றிதான் தனியார் கல்லூரிகளில் சேர்கின்றனர்.

அரசு பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசே உதவித் தொகை வழங்கி அதற்கு ஈடாக மாணவர்கள் படிப்பு காலத்தில் மூன்றரை ஆண்டுகள் பயிற்சி என்கிற பெயரில் அருகாமை மருத்துவமனைகளில் தினமும் எட்டு மணி நேரமும், அதற்கு மேலும், இரவு நேரங்களிலும் கூட கடுமையாக வேலை வாங்கப்படுகிறார்கள். தனியாரில் பயில்பவர்களுக்கு இந்த பயிற்சியே இல்லை. மருத்துவமனையை சுற்றிப் பார்க்க வருபவர்களைப் போல அவ்வப்போது சில நாட்கள் அவர்களை அழைத்து செல்வதோடு அவர்களின் பயிற்சியை முடித்துக் கொள்கின்றன தனியார் பயிற்சிப் பள்ளிகள்.

செவிலியர் பணிஅடுத்து, அரசு பயிற்சி பள்ளிகளில் இணைய வேண்டுமானால் சில நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட வேண்டும். தினமும் எட்டு மணி நேரமும், அதற்கு மேலும் மருத்துவமனைகளில் வேலை செய்ய வேண்டும் என்பதையும், வெளிநாடுகளில் வேலை கிடைத்தாலும் போக மாட்டேன் என்பதையும் நிபந்தனையாக ஏற்றுக் கொண்டவர்களை தான் அரசு பயிற்சி பள்ளிகளில் சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் இந்த நிபந்தனைகள் எதுவும் பணம் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு இல்லை. வெளிநாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்பு என்ற பெயரில்தான் மாணவர்களை தனியார் பயிற்சிப் பள்ளிகள் இழுக்கின்றன.

வெளிநாடுகளில் இப்போது வேலை வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், படித்து முடித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்காமல் போய் விட இங்கு இருக்கும் சொற்ப வேலைகளில் அவர்களுக்கு பங்கு அளிக்க முயற்சிக்கிறது அரசு. இல்லையென்றால் தனியார் செவிலியர் பள்ளி முதலாளிகளின் தொழில் படுத்து விடும்.

தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு என்ன தீர்வு என்ற கேள்வியும் இங்கே எழலாம். தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் பலவும் இத்தகைய செவிலியர் பள்ளிகளை அதிக கட்டணம் வாங்கிக் கொண்டு நடத்துகின்றன. இதனால் அவர்களது மருத்துவமனைகளில் இலவசமாக உழைப்பை சுரண்டிக் கொள்ளலாம். மேலும் பிராண்ட் மதிப்பு என்பதற்காக மாணவர்கள் இவற்றை சகித்துக் கொண்டே ஆகவேண்டும். அடுத்து இந்த தனியார் மருத்துவமனைகள் எதுவும் அரசு போல ஊதியம் கொடுப்பதில்லை. அதனால்தான் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அரசு வேலையை விரும்புகின்றனர். ஆனால் தனியார் மருத்துவமனைகளில் அரசு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் போராடுவதில்தான் இந்தப் பிரச்சினை தீரும். மாறாக அரசு வேலை வேண்டும் என்று அரசு பள்ளிகளை ஒழிக்கும் முயற்சிகளுக்கு அவர்கள் பலியாவது சரியல்ல. அல்லது தனியார் பயிற்சி பள்ளிகள் அனைத்தையும் அரசு ஏற்கவேண்டும் என்றாவது போராட வேண்டும்.இப்படி பள்ளி, மருத்துவமனை என இரண்டு விதத்திலும் தனியார் மயம் மாணவர்களுக்கும், மக்களுக்கும் எதிராக இருக்கிறது.

அகர்வால், சத்தியநாராயணன் அமர்வு வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து முறையிட்ட அரசு மாணவர்கள் “சரிபார்ப்பு முடிக்கப்பட்ட 893 அரசுப் பள்ளி மாணவர்களுக்காவது வேலை வழங்க வேண்டும். நாங்கள் ஏற்கெனவே வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறோம். முறைப்படி நாங்கள் இப்போது வேலையில் அமர்த்தப்பட்டிருக்க வேண்டும். எனவே வேலைக்கு தேர்வாகிவிட்ட நாங்களும், தனியார் மாணவர்களும் ஒன்றாக போட்டியிடுவது எப்படி நியாயமாக இருக்க முடியும்” என்று ஒரு மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்தனர்.

செவிலியர் கைது
தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர் மாணவர்களை கைது செய்து அழைத்து செல்லும் போலீஸ்.

இந்த மனுவை நீதிபதிகள் பாலசுந்தரம், சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்ததுடன் ‘நீதி’க்காக உச்சிக்குடுமி மன்றத்திற்கு செல்லும்படி அறிவுரையும் வழங்கியது. இந்த அற்புதமான தீர்ப்பு வெளியான அன்று தான் (கடந்த வெள்ளிக்கிழமை) செவிலியர்கள் தீர்ப்பை கண்டித்து உயர்நீதி மன்றத்தின் ஐந்தாவது மாடியில் ஏறி தற்கொலை போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்களில் ஐந்து பெண்கள் ஆறு மாத கர்ப்பிணிகளாக இருந்தனர். செவிலியர்களின் பெரும்பாலான போராட்டங்கள் சென்னை நகரில் தான் நடக்கிறது. இந்த போராட்டங்களுக்காக தமிழகம் முழுவதுமிருந்து வருகின்ற பெண்கள் ஒவ்வொரு முறையும் பல்வேறு இன்னல்களை கடந்து தான் வந்து செல்கின்றனர்.

இவர்களில் பெரும்பலான பெண்கள் திருமணமானவர்கள். அரசு வேலை கிடைக்கும் என்று கூறி தான் பெற்றோர்கள் இவர்களை மணம் முடித்து கொடுத்திருக்கின்றனர். ஆனால் மூன்றாண்டுகளாகியும் வேலை கிடைக்காததால், குடும்பத்தில் தினம் தினம் சண்டையாக இருக்கிறது. கணவர் பிரச்சினை செய்யாவிட்டாலும் மாமனார், மாமியார் திட்டுகின்றனர் என்கிறார்கள் பல செவிலியர்கள். திருமணமாகாத செவிலியர்கள் திருமணமானவர்களின் நிலையை எண்ணி திருமணம் செய்துகொள்ளவே தயங்குகின்றனர்.

“வேண்டாத கடவுளே இல்லை சார். ஆனா எந்த கடவுளை வேண்டியும் பிரயோசனம் இல்லையே. எல்லாம் எங்களுக்கு எதிராத்தானே அமையுது. ஒரு நீதி மன்றம் நேர்மையா தீர்ப்பு சொல்லணுமா இல்லைங்களா, இந்த நீதிபதிங்க அரசுக்கும், தனியாருக்கும் ஆதரவா தீர்ப்பு சொல்றாங்களே இது தான் நீதிங்களா” என்று குமுறுகிறார் ஒரு செவிலியர்.

“நீதிபதிங்க மட்டுமா சார் இப்படி இருக்காங்க. நாங்க வாழ்றதா சாகுறதான்னே தெரியாம போராடிட்டு இருக்கோம். இப்படி ஒரு தீர்ப்பு வந்த கோபத்துல தான் அஞ்சாவது மாடியில ஏறி தற்கொலை பண்ணிக்குவோம்னு அரசை மிரட்டி போராடினோம். ஆனா கீழே நின்ன வக்கீலுங்க எல்லாம் எங்களைப் பார்த்து சிரிச்சி கிண்டல் பண்ணதோட, போலீஸ்காரங்களை விட மோசமா நடந்துக்கிட்டாங்க, பொம்பளைன்னு கூட பார்க்காம அடி அடின்னு அடிச்சாங்க. கீழே குதிங்கடி, சீக்கிரம் குதிங்கடின்னு கத்துறாங்க சார். சீக்கிரம் குதிச்சா சாப்பிடவாவது போலாம் டைம் ஆச்சின்னு ஒருத்தன் சொல்றான். இவனுங்க எல்லாம் வக்கீலுங்களா சார்” என்று கோபத்துடன் வழக்குரைஞர்களை திட்டுகிறார் ஒரு செவிலியர்.

செவிலியர் போராட்டங்கள் அனைத்திலும் முதல் ஆளாக நிற்கும் கருப்பசாமி என்கிற செவிலியரை கூட்டமாக சேர்ந்து கொண்டு மிக மோசமான முறையில் கெட்ட வார்த்தைகளில் ஏசியபடியே தாக்கியுள்ளனர். வழக்குரைஞர்கள் இவ்வாறு செவிலியர்களை தாக்கிக்கொண்டிருக்கும் போது வழக்குரைஞர் சங்கத்தலைவர் பால்.கனகராஜ் அதை தடுக்காததோடு, அவரும் சேர்ந்து கொண்டு திட்டியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார் என்கிறார் கருப்பசாமி.

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை தாக்கியதோடு நிற்காமல், காவல் நிலையத்திற்கு சென்று அவர்கள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிந்து சிறையிலும் தள்ள வேண்டும் என்று இந்த வழக்குரைஞர்கள் அடம் பிடித்துள்ளனர். அதற்கு இவர்கள் கூறுகின்ற காரணம் நீதிமன்றம் புனிதமான இடமாம், அதை செவிலியர்கள் அசிங்கப்படுத்தி விட்டார்களாம்.

அந்த நீதிமன்றத்தின் புனிதத்தை கடந்த காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்திலேயே சுபாஷ் ரெட்டி போன்ற பல நீதிபதிகளும் சரி, அதிமுக மகளிர் அணியினரும் சரி, இல்லையென்றால் சுப்ரமணிய சாமி போன்ற புரோகர்களும் நாறடித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் வராத கோபம் இப்போது மட்டும் வருகிறது என்றால் இதை போலீசுக்காரனை விட மோசமான ஆளும் வர்க்க விசுவாசம் என்று தான் கூற வேண்டும்.

போராட்டக்காரர்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்திய வழக்குரைஞர்கள் மட்டுமல்ல அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த வழக்குரைஞர்களும் நம் கண்டனத்துக்குரியவர்கள் தான்.

“இவ்வளவு பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருக்கும் எங்களை வழக்குரைஞர்கள் கூட புரிந்துகொள்ளாதது ரொம்ப வருத்தமா இருக்கு சார்” என்கிறார் கருப்பசாமி.

பயிற்சி பெற்ற அரசு செவிலியர்களுக்கு சங்கம் எதுவும் இல்லை. இப்போது தான் ஒரு சங்கத்தை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர். “இனி உச்சநீதி மன்றத்திற்கு தான் செல்ல வேண்டும் என்று உயர்நீதி மன்றம் கூறிவிட்டதே, என்ன செய்யப்போகிறீர்கள்” என்று கேட்டதற்கு. “25 லட்சம் ரூபாய் செலவாகும் என்று வழக்குரைஞர் கூறியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு பணத்தை எங்களால் திரட்ட முடியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் போராடித்தானே ஆக வேண்டும், என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போம்” என்கிறார் கருப்பசாமி.

அரசின் மறுகாலனியாக்க கொள்கைகளையும், பார்ப்பன பாசிச நடவடிக்கைகளையும் மேலும் செழுமைப்படுத்தி தீர்ப்பாக வழங்கி வரும் உச்சிக்குடுமி மன்றம், செவிலியர்களுக்கு என்ன மாதிரியான தீர்ப்பை வழங்கும் என்பதை ஒரு அடி முட்டாள் கூட அப்படியே வரிக்கு வரி கூறிவிடுவான்.

செவிலியர்கள் நீதி மன்றங்களை மட்டும் நம்பாமல் தமது போராட்டங்களை மக்கள் மன்றத்தில்தான் முக்கியமாக நடத்த வேண்டும். தனியார்மய, தாராளமய கொள்கைகளுக்கு எதிரான மக்களின் போராட்டங்களோடு தமது போராட்டங்களையும் இணைக்க வேண்டும். அதற்காக தமக்கான ஒரு வலுமிக்க சங்கத்தையும் கட்டியமைத்துக் கொள்ள வேண்டும்.

–    வினவு செய்தியாளர்.