Sunday, June 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 722

செம்மஞ்சேரி : எழில்மிகு சென்னையின் இருண்ட காலனி !

3
செம்மஞ்சேரி வீடுகள்
அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத செம்மஞ்சேரியின் கான்கிரீட் காடுகள்

ல்லரசு கனவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்கள் என்றால் உங்கள் மனதில் என்ன தோன்றும்?

பிரமாண்டமான ஷாப்பிங் மால்கள், மல்டி ஃபிளக்ஸ் திரையரங்குகள், ஓங்கி உயர்ந்து நிற்கும் பளபளப்பான மென்பொருள் நிறுவனங்கள், புதிய புதிய பன்னாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்கள், அவற்றின் ஆயிரக்கணக்கான ஏ.டி.எம் நிலையங்கள், சர்வதேச ரக ஆடை நிறுவனங்களின் ஷோ ரூம்கள், பீட்சா கடைகள், கே.எஃப்.சி, காபி டே, மெக்டொனால்ட்ஸ், ஐந்து நட்சத்திர விடுதிகள், மற்றும் வகைவகையான வெளிநாட்டு கார்கள், குளிரூட்டப்பட்ட வால்வோ பேருந்துகள், மெட்ரோ ரயில் கட்டுமானங்கள், புதிது புதிதாக எழும் பல்லடுக்கு குடியுருப்புகள். இந்த ஜடப் பொருட்களோடு சேர்ந்து, ‘சாவதற்குள் சொந்த வீட்டில் படுத்து உறங்க வேண்டும்’ என்பதை லட்சியமாகக் கொண்ட மனிதர்கள்.

மாநகரங்கள் என்றால் பலருக்கும் தோன்றும் சித்திரம் இதுதான். உலகமயம் உருவாக்கிய இந்த நகரங்கள் தோன்றுவதற்காக மறைந்து போனவற்றை யாரும் காண்பதில்லை. சென்னையை அலங்கரிக்கும் இந்த கட்டிடங்கள் எல்லாம் இப்போது எழுந்தவை தான். இதற்கு முன்பும் அங்கே மக்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் அகற்றப்பட்டதால் தான் இவை தோன்றியுள்ளன. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற மறுகாலனியாக்கக் கொள்கை நாடு முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகளை கொன்றிருக்கிறது, நூற்றுக்கணக்கான கைத்தொழில்களை ஒழித்திருக்கிறது. கோடிக்கணக்கானவர்களை பிச்சைக்காரர்களாக்கியிருக்கிறது. நகரங்களில் வாழ்ந்தவர்களை எல்லாம் கூட்டம் கூட்டமாக குப்பைக் கூளங்களை போல நகரத்திற்கு வெளியே விரட்டி, ஓரிடத்தில் குவித்துப் போட்டிருக்கிறது.

மக்களால், மக்களுக்காக, மக்களே தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படும் இந்த மக்களாட்சி முதலாளிகளுக்காக முதலாளிகளின் விருப்பப்படி சென்னைக்குள் வாழ்ந்த ஏழை மக்களை சிறிது சிறிதாக நகரத்தை விட்டு நைச்சியமாக ஆசைகாட்டி ஏமாற்றியும், கட்டாயப்படுத்தி மிரட்டியும் வெளியேற்றி வருகிறது. உலகமயமாக்கலுக்கு ஏற்ப சென்னையின் தரத்தை உயர்த்துவதற்காக வேண்டாத கழிவுகளைப் போல வெளியேற்றப்படும் இவர்களை புறநகர்ப் பகுதிகளான செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், ஒக்கியம், கண்ணகி நகர், நொச்சிக்குப்பம், பெரும்பாக்கம், எண்ணூர் ஆகிய இடங்களில் மொத்தமாகக் கொட்டி குவித்து வருகிறது.

கிழக்குக் கடற்கரை சாலையை ஒட்டியுள்ள ராஜீவ் காந்தி சாலை என்று பெயர் சூட்டப்பட்ட பழைய மகாபலிபுரம் சாலையின் இருபுறமும் பல நூறு கோடி ரூபாய் செலவில் எழுந்து நிற்கும் ஐடி நிறுவனக் கட்டிடங்கள், அவர்களுக்கு தீனி போடுவதற்கான உணவகங்கள், கேளிக்கை மையங்கள், குடியிருப்புகள் இவற்றைப் பார்த்த வண்ணம் பயணித்தால், சோழிங்கநல்லூரைத் தாண்டி வலது திசையில் திரும்பி மூன்று கி.மீ உள்ளே சென்றால் வருகிறது, செம்மஞ்சேரி. சைக்கிள்கள் சென்றாலே புழுதி பறக்கக்கூடிய சாலைகள். அட்டைப் பெட்டிகளை அடுக்கி வைத்தாற் போன்றிருக்கும் குடியிருப்புகள் அகதி முகாமைப் போல தோற்றமளிக்கின்றன. அந்தப் பகுதி முழுவதும் பரபரப்போ, இரைச்சலோ இல்லை. எங்கும் அமைதி. அந்த அமைதியோடு, அவ்வப்போது காற்று கிளப்பி விடுகின்ற புழுதியும், ஆங்காங்கே உள்ள தகரக் கொட்டகை கடைகளும் அமெரிக்க இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ஈராக்கின் பாலைவனப் பகுதிகளை நினைவூட்டுகின்றன.

இது தான் செம்மஞ்சேரி. மறுகாலனியாக்கத்தின் நவீன காலனி. உலகமயமாக்கலின் கீழ் மாநகரங்கள் தான் அக்கிரகாரங்கள். அதிலிருந்து வெளியே தள்ளப்படும் இவையெல்லாம் புதிய சேரிகள். சென்னையை ’தூய்மைப்படுத்தும்’ திட்டத்திற்கு சுனாமியைப் பயன்படுத்திக் கொண்ட அரசு, மக்களைப் பாதுகாக்கிறோம் என்கிற பெயரில் அடையாறு, சாந்தோம், பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான குடிசை வாழ் மக்களை இந்த சுனாமி குடியிருப்புக்குள் கொண்டு வந்து கொட்டி விட்டது. சுனாமி குடியிருப்பு என்கிற பெயரிலுள்ள இந்த குடியிருப்புகள் செம்மஞ்சேரியில் மட்டுமின்றி, வேறு சில இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரைப் பகுதி மக்களைக் கொண்டு வந்த அடுத்த சில ஆண்டுகளில், தி.நகர், சூளைமேடு, நுங்கம்பாக்கம், அடையாறு பகுதிகளில் ’திடீர் தீ விபத்துகளால்’ பாதிக்கப்பட்ட குடிசைப் பகுதி மக்களும் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். இக்குடியிருப்பில் இவர்களிடம் மட்டும் மாத வாடகையாக முன்னூறு ரூபாயும், பராமரிப்புக் கட்டணமாக ஐம்பது ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

மென்பொருள் நிறுவனங்களிலும், பிற தனியார் நிறுவனங்களிலும் பணிபுரிபவர்கள் எப்போதும் வீடு கட்டுவதைப் பற்றியும், அவ்வாறு கட்டப்படும் தனது வீட்டின் கிச்சன், லிவிங் ரூம், டைனிங் ரூம், பெட் ரூம், பாத் ரூம் ஆகியவை எப்படி இருக்க வேண்டும், எங்கு இருக்க வேண்டும் என்கிற கனவிலும் தான் எந்நேரமும் மூழ்கிக் கிடக்கின்றனர். அந்தக் கனவை நனவாக்க வங்கிகளில் கடனைப் பெற்று சில பத்து லட்சங்களிலோ, ஒரு கோடியிலோ ஒரு வீட்டையும் வாங்கி விடுகின்றனர். ஆனால் இங்கிருக்கும் மக்களோ தமது வாழ்விடங்களிலிருந்து ஒரே நாளில் திடீரென்று இந்த கான்கிரீட் காடுகளுக்குள் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள்.

செம்மஞ்சேரி பெண்கள்
நகரத்திலிருந்து வெகு தூரத்திற்கு தூக்கி அடிக்கப்பட்டதால் வேலை வேலை வாய்ப்புகளை இழந்த பெண்கள்

செம்மஞ்சேரி குடியிருப்பில் மொத்தம் 6,800 வீடுகள் உள்ளன. போலீசுக்கும், இராணுவத்துக்கும் தரமாகப் பார்த்து பார்த்து வீடுகளை கட்டித்தரும் அரசாங்கம் ஏழைகளுக்கு ஏனோ தானோவென்று, குழந்தைகள் விளையாடக்கூடிய மணல் வீடுகளைப் போல கட்டிக்கொடுத்திருக்கிறது. சொந்த வீடு லட்சியக்காரர்கள் வீட்டை வாங்கிய பிறகு அதை நிறைக்க பொருட்கள் பொருட்கள், மேலும் மேலும் பொருட்கள் என்று குடியிருக்கும் வீட்டை கடையாக்குவார்கள். வாரா வாரம் ஏதாவது ஒன்றை வாங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற நுகர்வுப்பசி நோய் அவர்களைப் பிடித்தாட்டும். கையில் காசு இல்லா விட்டாலும், வைத்திருக்கும் பழைய பொருட்களை தூக்கிப் போட்டுவிட்டு, கடன் அட்டைகளைத் தேய்த்தாவது புதிய புதிய கைபேசிகள், தொலைக்காட்சிகள், கணினிகள், ஏ.சி, ஏர் கூலர்கள் போன்ற மின்சாதனப் பொருட்களும், ஆடைகளும், வெளிநாட்டு உணவுப் பொருட்களும், வீட்டின் மூலையிலும் பரண்களிலும் மூட்டை மூட்டையாகக் குழந்தைக்கு வாங்கிப் போட்ட விளையாட்டுப் பொருட்களுமாக இவர்கள் பொருட்களோடு தான் வாழ்கிறார்கள், பொருட்களைத் தான் நேசிக்கிறார்கள்.

செம்மஞ்சேரியிலுள்ள எந்த வீட்டிற்குள்ளும் ஒரே ஒரு கட்டிலையோ ஒரே ஒரு பீரோவையோ கூட போட முடியாது. போட்டால் இரண்டு பேர் கூட படுக்க முடியாது. ஏனெனில் ஒவ்வொரு வீடும் 10 க்கு 15 என்கிற அளவில் தான் கட்டப்பட்டிருக்கிறது. எனவே பெரும்பாலான வீடுகளில் இந்தப் பொருட்கள் இருக்காது. மிகச்சிறிய வீடுகள் என்பதால் நான்கு ஐந்து பேர் கொண்ட குடும்பங்கள் ஒரே வீட்டிற்குள் படுக்க முடியாது. எனவே அருகிலேயே இன்னொரு வீட்டை ’வாய்ப்புள்ளவர்கள்’ வாடகைக்கு எடுத்துக்கொள்கின்றனர். இல்லாதவர்கள் மொத்தமாக புளிமூட்டைகளைப் போல ஒருவர் மேல் ஒருவர் கிடக்க வேண்டியது தான்.

குடியிருப்புகளைப் பார்த்தவாறே நடந்து கொண்டிருந்த போது தனது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்த மூதாட்டி ஒருவரைப் பார்த்து, எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

”என் பேரு லட்சுமிப்பா. பட்டிணப்பாக்கம் சீனிவாசபுரம் தான் பொறந்தது வளர்ந்தது எல்லாம். இப்ப அறுபத்தி ஒரு வயசாயிருச்சு. வீட்டுக்காரர் இறந்துட்டாரு. ரெண்டு பிள்ளைங்க.. ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி தனியா இருக்குங்க” என்றார். ”சீனிவாசபுரத்துல இருந்ததுக்கும் இங்கைக்கும் எப்படி இருக்கு? வசதியா இருக்கா ?” என்றதற்கு, ”ரொம்ப கஷ்டம்பா. எந்த வசதியும் இல்ல. அவசரத்துக்கு ஊருக்குள்ள போகணும்னா கூட ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆகுது. டிக்கெட்டுக்கும் செலவு. முன்ன அப்படியில்ல.” என்றார்.

”அப்புறம் ஏன் அரசாங்கம் உங்களை இங்க கொண்டு வந்து விட்டுச்சு? அங்கயே இப்படி ஒரு வீட்டை கட்டிக் கொடுத்திருக்கலாம்ல ?” என்று கேட்டோம். ”சுனாமி வந்தப்ப ஒதுங்கவே இடமில்லாம நின்னோம். சுனாமி எல்லாத்தையும் அடிச்சுக்கிட்டு போயிருச்சு. எல்லோரும் எங்க போறதுன்னே தெரியாம நனைஞ்சுக்கிட்டு நின்னப்ப முதலமைச்சர் அம்மா தான் இரக்கப்பட்டு இங்க கூட்டிட்டு வந்து, தங்க வச்சாங்க. அந்த நேரத்துல அங்க போறேன், இங்க போறேன்னு கேக்க முடியுமா?!” என்று அம்மாவின் சதித்தனம் பற்றித் தெரியாமல் அப்பாவியாக பேசினார்.

”இந்த வீட்ல எத்தனை பேர் இருக்கீங்க?” எனக் கேட்டதற்கு ”நான் மட்டும் தாம்பா. புள்ளைங்க ரெண்டும் தனித்தனியா இருக்குங்க” என்று கூறி அமைதியானார். ”இன்னிக்கு என்ன சமைச்சீங்க?” ”சும்மா புளி சோறு” என்றார். ”ஞாயிற்றுக்கிழமை கறி மீன் எல்லாம் இல்லையா ?” என்று கேட்டோம். ”கறியெல்லாம் அதிகம் சாப்பிடறது இல்லப்பா. இப்ப அதிகம் எடுக்கறது இல்லை” என்று சிரித்தார். அது துயரத்தை வெளிப்படுத்தும் சிரிப்பு.

”எங்கையாச்சும் வேலைக்குப் போறீங்களா?” எனக் கேட்டோம். ”சோழிங்கநல்லூர்ல ஒரு வீட்டுக்கு வேலைக்கு போறேம்பா. காலையில ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிருவேன். போனதும் முதல்ல பழைய பாத்திரங்களை கழுகிப் போட்டுட்டு, துணியை ஊற வைப்பேன். அப்புறமா அஞ்சு ரூமுக்கு மாப் போட்டுத் தொடைக்கணும். அது முடிச்சதும், ஊற வச்ச துணிகளை எல்லாம் மிஷின்ல போட்டு தொவைக்கணும். தொவைச்ச பிறகு, முதல் நாள் துவைச்ச துணிகளை மடிச்சு வச்சுட்டு கிளம்பணும். அவங்க புருசன் பொண்டாட்டி ரெண்டு பேரும் 7.30, 8 மணிக்கெல்லாம் கிளம்பிருவாங்க. அதுக்குள்ள நானும் என்னோட வேலைகளை முடிச்சுட்டு வெளிய வந்துறணும். தெனமும் இது தான் வேலை.”

”எவ்வளவு தர்றாங்க?”. ”1500 ரூபா தாம்பா தர்றாங்க. அதுல பஸ்சுக்கே ஐநூறு ரூவா போயிரும். மிச்சமிருக்க ஆயிரத்துல ஐம்பது ரூவா வீட்டு மெயிண்டன்ஸ்க்கு போனா மாச செலவுக்குன்னு கையில தொள்ளாயிரத்து ஐம்பது ரூபா தான் இருக்கும்.” அறுபத்தியோரு வயதிலும் இவ்வளவு கடுமையாக உழைக்கக் கூடியவர் நல்ல சாப்பாட்டை விரும்பாமலா இருப்பார்? எனினும் ஒரு நாளைக்கு முப்பது ரூபாய்க்கு மேல் செலவு செய்ய முடியாது என்கிற போது இறைச்சியை எப்படி நினைத்துப் பார்க்க முடியும் ?

செம்மஞ்சேரி குடியிருப்புகளை விட மட்டமான வீடுகளை நீங்கள் பார்த்திருக்க முடியாது. பல வீடுகள் ஒழுகுகின்றன. மழைக்கால இரவுகளில் பெரும் காற்றிலோ, மழையிலோ அவை இடிந்து விழுந்தால் இந்த அரசின் நோக்கம் ஒரே நாளில் நிறைவேறி விடும்.

அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் சுவரை ஒட்டியே கட்டப்பட்டுள்ளன. வீடே பத்துக்கு பதினைந்து என்றால் கழிவறை எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். மேல் வீட்டின் கழிவறையிலிருந்து சொட்டும் நீர் கீழ் வீட்டின் வாசலையும் நனைத்துக் கொண்டே இருக்கிறது. ”இங்க பாருப்பா! மேலே இருந்து கக்கூசு தண்ணி கொட்டி கொட்டி சொவரே சொறி புடிச்சா மாதிரி ஆயிடுச்சு!” என்று சுவரைக் காட்டினார் மஞ்சுளா.

மஞ்சுளா பெசண்ட் நகரில் வாழ்ந்தவர். கடற்கரைப் பகுதியில் இருந்த போது மீன்களை வாங்கி விற்கும் வேலையைச் செய்து கொண்டிருந்தார். இப்போது தன் வீட்டு குழம்பிலேயே அரிதாகத் தான் மீன்களைப் பார்க்க முடிகிறது என்கிறார். ”சுனாமி அப்ப எங்களை இங்க கொண்டு வந்து விட்டாங்க. நாலு வருசத்துக்கு முன்னாடி வீட்டுக்காரர் இறந்துட்டாரு. ஒரு பையன், ஒரு பொண்ணு. பொண்ணு மட்டும் படிக்குது.” என்றார் மஞ்சுளா.

”பீச்ல இருக்கும்போது மீன் வித்துக்கிட்டு இருந்தீங்க. இப்ப என்ன பண்றீங்க?” என்று கேட்டோம். ”இங்க இருந்துக்கிட்டு என்ன செய்றது ? ஒன்னும் செய்ய முடியாது. இங்கிருந்து போக வரவே நாலு மணி நேரம் ஆயிடுது. மீன வாங்குனா ஒரே இடத்துல உக்காந்து விக்க முடியாது. தெருத்தெருவா கூவிக்கூவி தான் விக்கணும். அதனால முன்ன மாதிரி வியாபாரத்துக்கெல்லாம் போறதில்லை. அதனால வருமானமும் இல்ல, வாழ்க்கையே கஷ்டமா தான் இருக்குது.”

”வருமானத்துக்கு என்ன பண்றீங்க? பையன் வேலைக்குப் போறாரா” எனக் கேட்டதற்கு

”அது எங்க போவுது?! எப்ப பாத்தாலும் குடி குடின்னு தான் கெடக்குது. இதோ இப்ப கூட உள்ள எட்டிப் பாரு. குடிச்சிட்டு தான் படுத்துக் கெடக்கு. பொண்ணோட வருமானத்துல தான் ஏதோ வாழறோம்.” என்றார். ”பொண்ணு என்ன செய்றாங்க?” எனக் கேட்டதற்கு, ”காய் வெட்டுற வேலைக்கு போவுதுப்பா!” என்றார். ”எங்கே ?” ”ஓட்டல்ல. காலேஜ முடிச்சிட்டு அப்படியே நேரா ஹோட்டலுக்கு போயிரும். நைட்டு வர்றதுக்கு எட்டு, ஒம்பதுன்னு ஆயிரும்.”

”நீங்க இங்க விரும்பியா வந்தீங்க?” எனக் கேட்டதற்கு, ”யாருப்பா விரும்பி வருவாங்க?! ஏமாத்திட்டாங்க. எல்லோருக்கும் சொந்த வீடு தர்றோம்னு சொன்னதும் ஆசப்பட்டு வந்துட்டோம். ஆனா இங்க வந்தப்புறம் தான் இது காடுன்னு தெரியுது. பெசண்ட் நகர்ல இருந்தப்பவாவது ஏதோ நாலு காசு சம்பாரிச்சோம், நல்லா இருந்தோம். இங்க கொண்டு வந்து போட்ட பிறகு என்ன பண்றது, ஏது பண்றதுன்னே தெரியல!” என்றார்.

”இங்கே எல்லா வசதியும் செய்து தரப்பட்டிருக்கா?” என்றதும், அருகில் நின்று கொண்டிருந்த தயாளன் ”எல்லா வசதியும் செய்து தந்துட்டதா வெளிய சொல்லிக்கிறாங்க. ஆனா எந்த வசதியும் இல்ல. மெட்ராசுக்கு போறதுக்கு தான் பல கி.மீட்டர்னா, கரண்ட் பில்லு கட்டுறதுக்கும் பல கி.மீ போக வேண்டியிருக்கு. அதுவும் பஸ்ல தான் போகனும். போக வர மட்டும் இருபத்து நாலு ரூபா ஆகுது. ஏழாயிரம் பேருக்கு இருக்கிறது வெறும் நாலு ரேசன் கடை. அதுலயும் திருடுறானுங்க. கிருஷ்ணாயில் வாங்க ஒம்பது மணிக்கு நின்னா பதினோரு மணிக்கு தான் கவுண்டர் பக்கத்திலேயே போக முடியும். பக்கத்தில போனதும் முடிஞ்சு போச்சுங்கிறாங்க. குடி தண்னில சாக்கடை கலக்குது. வீட்டை சுத்தியுமே சாக்கடை. இங்க எதுவுமே சரியில்லைங்க!” என்றார்.

குடியிருப்புகள் அனைத்தும் குட்டி குட்டி பிளாக்காக கட்டப்பட்டுள்ளன. ஒரு பிளாக்கில் நாலு வீடுகள். அதே போல எதிரிலும் நாலு வீடுகள். இப்படியே இரு பக்கங்களிலும் வீடுகள் வரிசையாகக் கட்டப்பட்டுள்ளன. இரு பக்க வீடுகளின் பின்பக்க சுவர்களுக்கு இடையிலுள்ள இடைவெளி இருபதடி. இவ்வாறுள்ள ஒவ்வொரு இடைவெளியிலும் ஒரு சாக்கடை உள்ளது. இப்படி மொத்தக் குடியிருப்பு முழுவதும் நூற்றுக்கணக்கான குட்டி குட்டி சாக்கடைகளைக் காண முடிகிறது. அதில் அனைத்து வகைக் கழிவு நீர்களும் தேங்கி நின்று, கொசுக்களை உற்பத்தி செய்கின்றன. குடிநீர்க் குழாய்கள் அமைந்துள்ள இடங்களில் அழுக்கு நீர் குட்டை போல தேங்கிக் கிடக்கிறது.

குடும்பத் தலைவர்களான ஆண்கள் பெரும்பாலும் குடிகாரர்களாக இருக்கிறார்கள். எனவே பலரும் நோய்வாய்ப்பட்டு நடுத்தர வயதிலேயே இறப்பதும், குடும்பச்சுமை பெண்கள் தலையில் விழுவதும் இங்கே பொதுவான அம்சமாக இருக்கிறது. வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால் சென்னைக்கு தான் செல்ல வேண்டும். அதிகாலை ஐந்து மணிக்குக் கிளம்பினால் தான் ஏழு மணிக்கு சென்னையின் மத்திய பகுதியை அடைய முடியும். தினம் தினம் போய் வர முடியாதவர்கள் வேலையிடத்திலே தங்கிக்கொண்டு, வாரம் ஒரு முறை வந்து போகிறார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் அச்சகத்தில் தங்கிக்கொண்டு பணிபுரிந்து வந்த தனது கணவர், கடந்த வாரம் பணியிடத்திலேயே இறந்து போனதைப் பற்றி பாத்திமா என்பவர் வருத்தத்துடன் கூறினார்.

இங்குள்ள ஏழாயிரம் குடும்பங்களுக்கு அடிப்படை மருத்துவ வசதியைக் கூட அரசு செய்து தரவில்லை. ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியின் ஆரம்ப சுகாதார மையத்தைத் தவிர வேறு ஒரு மருத்துவமனையும் இங்கு இல்லை. அதே போல பள்ளிக் கூடமும் இக்குடியிருப்பில் இல்லை.

செம்மஞ்சேரி இளைஞர்கள்
பிழைப்பிற்காக அதிகாலை எழுந்து நகரம் சென்று நள்ளிரவு திரும்பும் இளைஞர்கள்!

சொந்த வீடு தருகிறோம் என்று ஆசையூட்டியும், வேண்டாம் என்று மறுத்து நின்றவர்களை கட்டாயப்படுத்தியும் தான் இவர்களை இங்கு கொண்டு வந்து தள்ளியிருக்கிறார்கள். சொந்த வீடு கிடைக்கிறதே என்கிற ஆசையில் வந்தவர்களும் இந்த அட்டைப் பெட்டிகளைப் பார்த்த பிறகு அதிர்ச்சியுற்று ஆத்திரமடைந்தனர்.

அரசாங்கம் திட்டமிட்டு நம்மை வெளியேற்றி விட்டது, நாம் பிறந்து வளர்ந்த இடத்திலிருந்து நம்மை பிடுங்கி எறிந்து விட்டார்கள் என்கிற கோபமும் ,ஆத்திரமும் ஆரம்பத்தில் மக்களிடம் தீவிரமாக இருந்துள்ளது. தமது கோபத்தை இளைஞர்கள் தெரு விளக்குகள் மீதும் காவல் நிலையத்தின் மீதும் காட்டினார்கள். கற்களைக் கொண்டு நூற்றுக்கணக்கான தெரு விளக்குகளை உடைத்திருக்கின்றனர், காவல் நிலையத்தையும் தாக்கியுள்ளனர்.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த எதிர்ப்பும் வற்றி வடிந்து விட்டது. இப்போது எட்டு ஆண்டுகளாகி விட்டது. ஆனால் இப்போதும் கூட, அரசு தங்களை ஏமாற்றி துரோகம் செய்து விட்டதாகவும், ஏழைகள் என்பதால் தான் இப்படி நகரங்களை விட்டு வெளியேற்றி விட்டார்கள் என்றும் கூறுகிறார் யுவராஜ் என்கிற இளைஞர். மக்களில் பலரும் இவ்வாறு தான் கருதுகின்றனர்.

சென்னை நகருக்குள் இன்னும் கூட பல ஆயிரக்கணக்கான குடிசைகள் இருக்கின்றன. அவற்றையும் விரைவில் காலி செய்து வெளியேற்றுகின்ற திட்டத்தின் ஒரு பகுதியாக பெரும்பாக்கத்திலும், கண்ணகி நகரிலும் பல்லாயிரக்கணக்கான எட்டடுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் அறுபத்து எட்டாயிரம் வீடுகள் கொண்ட எட்டடுக்கு குடியிருப்புகளின் கட்டுமானம் கிட்டத்தட்ட தொன்னூறு சதவீதம் முடிவடையும் தருவாயில் இருக்கிறது.

குடியிருப்புகளைக் கடந்து அதன் மேற்கு எல்லைக்குப் பக்கமாக வந்த போது வேறு ஒரு காட்சியைக் கண்டோம். சுனாமி குடியிருப்பு முடிவடையும் அதன் மேற்கு எல்லை ஓரமாக டி.எல்.எஃப் ரியல் எஸ்டேட் நிறுவனம் மிகப் பிரமாண்டமான இரு பிரிவு பல்லடுக்கு கட்டிடத்தை முழுமையாகக் கட்டி முடித்திருக்கிறது. அந்த இரு பிரிவுகளும் மொத்தம் மூவாயிரத்து இருநூறு வீடுகளைத் தாங்கியுள்ளன. அவற்றில் தற்போதே ஆயிரக்கணக்கான வீடுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

அதற்கு அருகிலேயே இன்னொரு உயர் அடுக்கு கட்டிடமும் வெகு வேகமாகக் கட்டப்பட்டு வருகிறது. அதில் குறைந்தது ஆயிரம் வீடுகளாவது இருக்கலாம். அந்த கட்டிடத்திற்கு இடது புறமாக இந்திய இராணுவம் இரண்டாயிரத்து ஐநூறு வீடுகள் கொண்ட ஒரு இராணுவக் குடியிருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறது. வலது புறமோ புகழ்பெற்ற பார்ப்பன பத்மா சேஷாத்ரியின் புதிய பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. அங்கு படிக்கின்ற மாணவர்கள் அனைவரும் வேன்களிலும், கார்களிலும் தான் வருகின்றனர். சுனாமி குடியிருப்பிலுள்ள குழந்தைகள் இந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்க முடியாது. இவற்றைத் தவிர சுற்றிலும் பல்வேறு புதிய கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன

கடந்த எட்டாண்டுகளில் புறநகர்ப் பகுதியான செம்மஞ்சேரி மிகப்பெரிய அளவுக்கு ’வளர்ச்சி’ அடைந்திருக்கிறது. சுற்றிலும் புதிது புதிதாக பல பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்களும், உள்நாட்டு வெளிநாட்டு மென்பொருள் நிறுவனங்களும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் முளைத்துள்ளன. சென்னையிலிருந்து துரத்தப்பட்டவர்களை மறுகாலனியாக்கத்தின் ’வளர்ச்சி’ இப்போது செம்மஞ்சேரியிலும் சுற்றி வளைத்திருக்கிறது. இவர்களை இங்கிருந்து இன்னும் பல பத்து கி.மீட்டர்களுக்கு அப்பால் தூக்கி எறியப் போகின்ற வளர்ச்சியை சுற்றிலும் எதிர்நோக்க முடிகின்றது ! நாடு முன்னேற முன்னேற, ஏழைகள் முடிவில்லாமல் பின்வாங்கிச் செல்ல வேண்டும் போலிருக்கிறது.
__________________________________
புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013
__________________________________

அமெரிக்கா H1-B விசா : ஆடுகளுக்காக அழும் ஒநாய்கள் !

6

ம்ம ஊரில் ஆளும் கட்சியான காங்கிரசும், எதிர்க் கட்சியான பாரதீய ஜனதாவும் பல விஷயங்களில் அடித்துக் கொண்டாலும் அம்பானிக்கு வரிச் சலுகை கொடுப்பது, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்குவது கொடுப்பது போன்ற அவர்களுக்கு முக்கியமான விஷயங்களில் ஒன்று சேர்ந்து கொள்வார்கள். அதைப் போலவே, அமெரிக்காவின் இரண்டு பெரும் கட்சிகளான ஜனநாயகக் கட்சியும், குடியரசுக் கட்சியும் துப்பாக்கி கட்டுப்பாடு, மக்களுக்கு மருத்துவ சேவை, நடுத்தர வர்க்கத்துக்கு வரிக் குறைப்பு போன்ற விஷயங்களில் முட்டிக் கொண்டாலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவை செய்வதில் ஒன்று கூடி விடுகிறார்கள்.

ஊடா மாநிலத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சி மேலவை உறுப்பினர் ஓரின் ஹேட்ச், மின்னசோட்டா மாநில ஜனநாயக் கட்சி மேலவை உறுப்பினர் ஏமி க்ளோபுகர், புளோரிடா குடியரசுக் கட்சி மேலவை உறுப்பினர் மார்கோ ரூபியோ, டெலாவர் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் கிறிஸ் கூன்ஸ் என்று இரு கட்சியைச் சேர்ந்தவர்களின் குழு ஒன்று குடியேற்ற புத்தாக்க சட்டம் (இமிக்ரேஷன் இன்னொவேஷன் ஆக்ட் 2013) எனப்படும் 20 பக்க மசோதா ஒன்றை தயாரித்திருக்கிறது. இந்த மசோதா வெளிநாட்டுக்காரர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வந்து சிறப்பான பணிகளில் வேலை வாங்குவதற்காக கார்ப்பரேட்டுகள் மூலமாக வழங்கப்படும் H-1B விசாக்களின் எண்ணிக்கையை பல மடங்கு அதிகரிக்க கோருகிறது.

சிறப்பான பணி என்பது குறிப்பிட்ட துறையில் ஆழமான அறிவும், அனுபவமும், திறமைகளும் தேவைப்படும் பணிகளைக் குறிக்கிறது. அந்த வேலையைச் செய்ய அத்தகைய படிப்பும், திறமையும், அனுபவமும் படைத்த அமெரிக்கர்கள் கிடைக்காத  நிலையில் நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து ஊழியர்களை வரவழைத்துக் கொள்ள வகை செய்யும் H1-B விசாவுக்கான சட்டம் 1990ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

இப்போது, ஒவ்வொரு ஆண்டும் வணிக நிறுவனங்களில் வேலை செய்ய வருபவர்களுக்கு 65,000 விசாக்களையும், அமெரிக்க பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு 20,000 விசாக்களையும் வழங்குவதற்கு சட்டம் வழி செய்கிறது. பல்கலைக் கழகங்களிலும் லாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வேலை செய்வதற்கான விசாவுக்கு வரம்பு எதுவும் இல்லை என்பதால் 1 லட்சத்துக்கும் அதிகமான விசாக்கள் வரை ஒரே ஆண்டில் வழங்கப்படுகின்றன. 2010ம் ஆண்டில் 1.17 லட்சம் விசாக்களும், 2011ம் ஆண்டில் 1.29 லட்சம் விசாக்களும் வழங்கப்பட்டன.

இப்போது தயாரிக்கப்பட்டுள்ள மசோதா H1B விசாக்களின் குறைந்த பட்ச எண்ணிக்கையை ஆண்டுக்கு 1,15,000 ஆக அதிகரிக்கவும் வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை பொறுத்து விசாக்களின் எண்ணிக்கையை படிப்படியாக 3 லட்சம் வரை அதிகரிக்கவும் கோருகிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் 2 உறுப்பினர்கள் என்ற வீதத்தில் 6 ஆண்டுகள் பதவி காலத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் என்ற மேலவையும், மக்கள் தொகை அடிப்படையிலான தேர்தல் தொகுதிகளில் 2 ஆண்டுகள் பதவி காலத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் 435 உறுப்பினர்களைக் கொண்ட ஹவுஸ் என்ற கீழவையும் இருக்கின்றன. நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் ஒரு மாநிலத்தையே 6 ஆண்டுகளுக்கு பிரதிநிதித்துவப்படுத்தும் செனட்டர்கள் அமெரிக்க அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களாக இருப்பதோடு பெருமளவு கார்ப்பரேட் தொடர்புகளையும், பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளையும் உருவாக்கி வைத்திருப்பவர்கள்.

ஐ.டி. நிறுவனங்கள் பல லட்சம் டாலர்கள் செலவில் இரண்டு கட்சிகளையும் சேர்ந்த 4 செனட்டர்களை வளைத்துப் போட்டு இந்த மசோதாவை தயாரிக்க வைத்திருக்கின்றன. ‘அமெரிக்க ஐ.டி துறையில் தேவைப்படும் திறமைகள் அமெரிக்கர்களிடம் இல்லாத சூழ்நிலையில் இந்தியா, சீனா போன்ற நாடுகளிருந்து வல்லுனர்களை அமெரிக்காவுக்கு கொண்டு வந்து, சரிந்துள்ள அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கு கூடுதல் H1B விசாக்கள் தேவை’ என்று வாதங்களை முன் வைக்கின்றனர்.

H1B விசா திட்டம் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளங்களை குறைத்து லாபத்தை அதிகரித்துக் கொள்வதற்காக அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் லாபியிங் மூலம் 1990ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

2011ம் ஆண்டு H1-B விசா பெற்று வேலை செய்ய வருபவர்களில் 48 சதவீதத்தினர் ஐ.டி. துறை நிறுவனங்களுக்கு வந்திருக்கின்றனர். மைக்ரோசாப்ட், இன்டெல் போன்ற ஐ.டி. துறை பெருநிறுவனங்கள் அவர்களுக்கு தேவைப்படும் ஊழியர்கள் அமெரிக்காவில் இல்லை என்று கணக்கு சொல்லி, H-1B விசாவுக்கான கோட்டாவை அதிகரிப்பதற்காக தொடர்ந்து லாபியிங் செய்து வருகின்றனர்.

H1B பணி விபரங்கள்

சென்ற ஆண்டு, மைக்ரோசாப்டின் கார்ப்பரேட் சட்ட விவகாரங்களுக்கான பொதுக் குழுவின் துணைத் தலைவர், H1B விசாக்களின் எண்ணிக்கையை 20,000 அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். ‘மைக்ரோசாப்டில் மட்டும் பொறியாளர், நிரலாளர், ஆராய்ச்சியாளர்கள் இவர்களுக்கான 400 வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன’ என்றும் ‘அரசு இத்திட்டத்தை அமுல்படுத்தி வல்லுனர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கா விட்டால், இந்த பணிகளை செய்வதற்கு வெளிநாட்டில் கிளைகள் தொடங்கும் நிலை ஏற்பட்டு விடும்’ என்றது மைக்ரோசாப்ட்.

வெளிநாட்டு ஊழியர்களை எடுப்பதன் மூலம் அமெரிக்க ஊழியர்களுக்கான சம்பளங்கள் குறைந்து விடுவதைத் தடுப்பதற்காக H1-B விசாவில் வரும் ஊழியர்களுக்கு அதே தகுதியும், திறமைகளும் உடைய அமெரிக்க ஊழியர்களுக்கு இணையான சம்பளம், அல்லது  அந்த வேலைக்கு பொதுவாக வழங்கப்படும் சம்பளம் இரண்டில் எது அதிகமோ அதை வழங்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

தர்க்கப்படி பார்த்தாலும் அமெரிக்காவில் கிடைக்காத திறமை உடையவர்களை வெளியிலிருந்து இறக்குமதி செய்தால், அவர்களுக்கு சம்பளமாக அமெரிக்க ஊழியர்களுக்கு கொடுப்பதை விட அதிகமாகவோ அல்லது அதே அளவிலோ கொடுக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் ஐடி துறையில் வேலை செய்ய H-1B விசாவில் வருபவர்களுக்கான சம்பளம் அதே மாநிலத்தில் அதே மாதிரியான வேலையைச் செய்யும் அமெரிக்கருக்கு கொடுப்பதை விட $13,000 குறைவு என்றும் மென்பொருள் நிரல் எழுதும் வேலைகளில் H1-Bல் போகும் வெளிநாட்டு ஊழியர்களில் 85 சதவீதம் பேரின் சம்பள வீதம் சராசரி சம்பளத்தை விட குறைவாக இருக்கிறது என்றும், 4 சதவீத H1-B ஊழியர்கள் மட்டுமே உயர் சம்பளம் பெறும் 25% பேரில் இருக்கின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

H1B நிறுவன விபரங்கள்

2010/2011ம் ஆண்டுகளில் H1-B விசா ஸ்பான்சர் செய்த நிறுவனங்களில் மைக்ரோசாப்ட் முதல் இடத்திலும், டி.சி.எஸ். இரண்டாவது இடத்திலும், விப்ரோ 4வது இடத்திலும், காக்னிசன்ட் 5வது இடத்திலும் உள்ளன. காக்னிசன்ட், டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ போன்ற ஆள்பிடித்துக் கொடுக்கும் நிறுவனங்கள் ஆண்டு தோறும் பெரும் எண்ணிக்கையிலான H1-B விசா ஊழியர்களை ஸ்பான்சர் செய்கின்றனர்.

இந்த ஊழியர்கள் வெளி நிறுவனம் மூலம் வேலைக்கு வருபவர்கள் என்ற பேதமே இல்லாமல் அமெரிக்க நிறுவனத்தினுள் ஒரு அமெரிக்க ஊழியர் செய்து வந்த வேலையை செய்தாலும் அவர்களுக்கான சம்பளத்தை ஆள்பிடி நிறுவனமே வழங்குகிறது. அமெரிக்க நிறுவனத்திடம் வாங்கும் கட்டணத்தில் (அமெரிக்க ஊழியருக்கு கொடுப்பதை விட குறைவான தொகை) ஒரு பகுதியை அவர்கள் எடுத்துக் கொண்டு ஊழியர்களுக்கு மிஞ்சிய தொகையை கொடுக்கின்றனர்.

பல ஊழியர்கள் குறிப்பிட்ட வேலை இல்லாமலேயே ஆள்பிடிக்கும் சேவை நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவுக்கு போய்ச் சேருகின்றனர். தாம் இறக்குமதி செய்து வைத்திருக்கும் ஊழியர்களின் பட்டியலை அமெரிக்க நிறுவனங்களிடம் சுற்றுக்கு விட்டு அவர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர்.

தொழிலாளர் நலன்
“நாம ஏன் திவாலாகிறோம் தெரியுமா, இந்த ஆளுக்கு நடுத்த வர்க்க சம்பளமும், மருத்துவ வசதியும் வேணுமாம்!”

அமெரிக்காவில் செயல்படும் அமெரிக்க, இந்திய ஐ.டி. நிறுவனங்கள் H1B விசா மூலம் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதன் நோக்கம் அவர்களுக்கு 20-25 சதவீதம் குறைந்த சம்பளம் கொடுத்து, சக்கையாக பிழிந்து வேலை வாங்கலாம் என்ற நோக்கத்தில்தான். தமிழ்நாட்டுக்கு வடநாட்டில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து சொற்ப சம்பளம், அதிக நேர வேலை, உரிமைகள் மறுப்பு என்று கட்டிட காண்டிராக்டர்கள் சுரண்டுவதற்கு நிகரானது இது.

ஒரு மணி நேர வேலைக்கு $15 முதல் $20 வரை (ரூ 750 முதல் ரூ 1000 வரை) வாங்கும் இந்தியர்களும் அதைவிடக் குறைவாக வாங்கும் சீனர்களும் அடிமைகளாக கிடைக்கும் போது, அமெரிக்காவில் வாழ்வதுதான் சொர்க்கம் என்ற கனவுடன் அவர்கள் அமெரிக்க தூதரகத்துக்கு வெளியில் விசாவுக்காக மணிக்கணக்காக தவம் புரிய தயாராக இருக்கும் போது, குடும்பத்தை பல வருடம் பிரிந்து போய் வேலை செய்ய முன் வரும் போது, ஒரு மணிநேரத்திற்கு $50 முதல் $100 வரை (ரூ 2,500 முதல் ரூ 5,000 வரை) செலவழித்து அமெரிக்கர்களை வேலையில் அமர்த்த முதலாளிகள் என்ன முட்டாள்களா? அந்த அளவிலான சம்பளம் அமெரிக்க சமூகத்தில் நடுத்தர வர்க்க வாழ்க்கைக்கான தேவை என்பதையும், குறைந்த சம்பளத்தில் வேலைக்குப் போகிறவர்கள் கொத்தடிமைகள் போலத்தான் வாழ முடியும் என்பதையும் பற்றி முதலாளிகள் கவலைப்படுவதில்லை.

‘சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொண்டாவது வேலைக்கு வைத்திருங்கள்’ என்று அமெரிக்க ஊழியர்கள் இறங்கி வந்து அந்த சம்பளத்தில் வாழ முடியாமல் தெருவுக்கு வந்து போராடி சாகத் தயாராக இருந்தாலும் அமெரிக்க முதலாளிகள் அதற்கு இடம் கொடுக்கப் போவது இல்லை. முதலாளிகளின் லாபம் அதிகரித்துக் கொண்டே போவதற்கான நடவடிக்கைகளை அவர்களுக்கான அரசும் நிறுத்தி விடப் போவதில்லை.

‘அமெரிக்க ஊழியர் ஒருவரை வேலையை விட்டு நீக்கி விட்டு அந்த இடத்தில் H1-B விசாவில் வெளிநாட்டு ஊழியரை அமர்த்தக் கூடாது’ என்று சட்டம் சொன்னாலும், அந்த இடத்தில் ஆள்பிடி நிறுவனங்கள் மூலம் ஆள் அமர்த்திக் கொள்வதை சட்டம் தடை செய்யவில்லை. இந்தியாவிலிருந்து போகும் பல ஐடி துறை ஊழியர்களுக்கு வேலை கற்றுக் கொடுத்து விட்டு தாம் வேலை இழக்கும் நிலையை பல அமெரிக்க ஊழியர்கள் எதிர் கொள்கின்றனர். அதற்கு எதிராக தொழிற்சங்கம் அமைப்பதும் போராடுவதும் அவர்களுக்கு தலைமுறைகளாக ஊட்டி வளர்க்கப்பட்ட சித்தாந்த போதனைக்கு எதிரானது. வேலை இழந்து, வீடு இழந்து, தெருவுக்கு வந்த பிறகு வால் வீதி ஆக்கிரமிப்பு போன்ற போராட்டங்களில் மறைந்து போகின்றனர்.

H1B விசாவில் அமெரிக்காவுக்கு வேலைக்குப் போகும் இந்திய ஐடி ஊழியர்கள் ஸ்பான்சர் செய்யும் நிறுவனத்தின் அடிமைகளாகவே பணி செய்கின்றனர். 5 ஆண்டுகள் தொடர்ந்து பணி செய்த பிறகு கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்; அதற்கு ஸ்பான்சர் செய்த நிறுவனத்தில் அப்போது வேலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மனதில் கொண்டு குறைந்த சம்பளம், அதிக வேலை நேரம், நினைத்த நேரத்தில் இன்னொரு இடத்துக்கு மாறிப் போவது என்று பல விதமான தொல்லைகளையும் சகித்துக் கொண்டு அடிமைகள் போல வேலை செய்கின்றனர்.

H1B நாடு விபரங்கள்

H-1B விசாவை ஸ்பான்சர் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஸ்பான்சர் செய்த நிறுவனம் வேலையை விட்டு நீக்கி விட்டால், அதே போன்று H-1B விசா கோட்டா வைத்திருக்கும் இன்னொரு நிறுவனத்தில் வேலை தேட வேண்டும் அல்லது அமெரிக்காவை விட்டு வெளியேறி விட வேண்டும்.

H1-B விசாவில் குறைந்த சம்பளத்துக்கு அமெரிக்கா போகும் ஐ.டி. துறை ஊழியர்கள் ஆரம்ப ஆண்டுகளில் அமெரிக்காவில் வாழ்வதற்கு ஒரு தனிமனிதருக்கோ குடும்பத்துக்கோ தேவைப்படும் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாமல், ஏழெட்டு பேர் ஒரே வீட்டில் தங்கிக் கொள்வது, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது என்று அவதிப்படுகின்றனர். கிடைக்கும் தினப்படியில் கொஞ்சம் மிச்சப்படுத்துவது மூலம் காசு சேமிக்கின்றனர். டாலர்-ரூபாய் செலாவணி விகிதத்தால் சில டாலர்கள் சேமிப்பு இந்தியாவில் கணிசமான பணமாக கண்ணில் தெரிகிறது. ‘அமெரிக்காவில் பையன் இருக்கிறான்’ என்று உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பந்தாவும், கல்யாண சந்தையில் அமெரிக்கா ரிட்டர்ன் என்ற மதிப்பும் கூடுதல் கவர்ச்சியை அளிக்கின்றன.

5 ஆண்டுகள் பல்லைக் கடித்துக் கொண்டு வேலை செய்து விட்டால் கிரீன் கார்ட் வாங்க விண்ணப்பிக்கலாம் என்ற எதிர்காலக் கனவும் விதைக்கப்படுகிறது. இன்னும் கொஞ்சம் தம் பிடிக்கத் தயாராக இருப்பவர்கள், திருமணமாகி இருந்தால் மனைவியையும் சார்பு விசாவில் அழைத்துச் சென்று அங்கு ஏதாவது மளிகைக்கடை உதவியாளர், பெட்ரோல் பங்கு உதவியாளர் வேலையில் சேர்த்து விடுகின்றனர். குழந்தை பிறந்தால் பள்ளியில் கல்வி, மருத்துவ வசதி கிடைத்து விடுகிறது.

அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி முற்றி, வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும் சூழலிலும் தங்கள் லாப வேட்டையே குறியாக கார்ப்பரேட் முதலாளிகள் வெளிநாட்டிலிருந்து வேலைக்கு ஆட்களை அழைத்து வரும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான மசோதாவை ஸ்பான்சர் செய்துள்ளனர். முதலாளிகள் லாபியிங் என்ற பெயரில் பிச்சையாக போட்ட பணத்தை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற விசுவாசிகள், தமது பதவிக் காலம் முழுவதும் முதலாளிகளுக்கு நலன் பயக்கும் நடவடிக்கைகள் மூலம் தங்கள் விசுவாசத்தை காட்டுவதுதான் உலகெங்கிலும் பின்பற்றப்படும் தேர்தல் அரசியலின் நடைமுறை.

மேலும் படிக்க

__________________________________________
– அப்துல்
__________________________________________

இஸ்லாமிய சர்வதேசியம் ஒரு மாயமான் !

34

obamaabdullah2லகெங்கிலும் பல்வேறு அமைப்புகள் நடத்தும் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும் இசுலாமிய அமைப்புகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு.

ஆப்கான் எனும் ஏழை நாட்டின் மீதும் அதன் மக்கள் மீதும் அமெரிக்க வல்லரசு தொடுக்கும் அநீதியான ஆக்கிரமிப்பு யுத்தம் என்கிற காரணத்திற்காகத்தான் கம்யூனிஸ்டுகளும் ஜனநாயகவாதிகளும் இந்தப் போரை எதிர்க்கின்றனர். கொல்லப்படும் மக்களின் மதம் என்ன என்று யாரும் கவலைப்படவில்லை.

ஆனால், முசுலீம் மதவாத அமைப்புகளோ, இசுலாத்துக்கெதிராக அமெரிக்கா தொடுத்திருக்கும் போர் என்றும், அதற்கெதிரான தமது புனிதப் போரில் உலக முசுலீம்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் அறை கூவுகின்றனர்.

”முசுலீம்களே, ஜிகாத்துக்குத் தயாராகுங்கள்” என்று டெல்லி ஜும்மா மசூதியின் இமாம் அறைகூவல் விட்ட போது அதை எதிர்த்து கண்டித்தார், நடிகை ஷபனா ஆஸ்மி. ஸ்டார் டி.வி நடத்திய விவாதமொன்றில் ஷபனா ஆஸ்மியை ‘கூத்தாடி-விபச்சாரி’ என்ற பொருள்பட பகிரங்கமாக ஏசினார், இமாம்.

வரவேற்கத்தக்க நல்ல வசவு தான்! காசுக்காகத் தன் உடலை விற்பதுதான் விபச்சாரம் என்றால், டாலருக்காகத் தன்னையும் தன் நாட்டையும் சேர்த்து விற்றுக்கொண்ட தாலிபான், பின்லாடன், சதாம், சவுதி ஷேக்குகள் ஆகியோரைப் பற்றித்தான் நாம் முதலில் புலன் விசாரணை நடத்த வேண்டும்.

ஆனால் முசுலீம் அமைப்புகளோ பின்லாடனையும், தாலிபானையும் இசுலாத்தைக் காக்க வந்த மாவீரர்களாகச் சித்தரிக்கின்றனர். வளைகுடாப் போரின் போது இந்த மாவீரன் பட்டத்தை சதாம் உசேனுக்கு வழங்கியிருந்தனர்.

திப்பு சுல்தான், பேகம் அசரத் மகல், அஷ்பதுல்லா கான், ஓமர் முக்தர் பொன்ற எண்ணற்ற முசுலீம்களை மாவீரர்கள் என்று உலகமே கொண்டாடுகிறது. அவர்கள் முசுலீம்க்ள் என்பதனால் அல்ல; அவர்கள் அப்பழுக்கற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் என்பதனால் நாம் போற்றுகிறோம். நம் வழிகாட்டிகளாக அவர்களை மதிக்கிறோம்.

ஆனால், சதாமும் பின்லாடனும் தாலிபானும் எப்பேர்பட்டவர்கள் ? அமெரிக்க அடிவருடித்தனத்தில் தான் இவர்களது அரசியல் வாழ்க்கையே தொடங்குகிறது.

சதாம் உசேன் : ஒரு கையாள் மாவீரனான கதை :

  • 1958-இல் ஈராக்கில் கம்யூனிஸ்டு ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த அப்துல் கரீம் காசிம் அமெரிக்க, பிரிட்டிஷ், ஐரோப்பிய நிறுவனங்களை வெளியேற்றி எண்ணெய் வயல்களை நாட்டுடைமையாக்கும் சட்டத்தை 1961-இல் கொண்டு வந்தார். காசிமின் ஆட்சியை கவிழ்க்க சி.ஐ.ஏ. போட்ட சதித்திட்டத்தை நிறைவேற்றியது சதாம் உசேனின் பாத் கட்சி. சி.ஐ.ஏ. கொடுத்த கொலைப்பட்டியலின்படி ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் மற்றும் நாட்டுப் பற்றாளர்களை வேட்டையாடிக் கொலை செய்துவிட்டு, எண்ணெய் வயல்களை அந்நிய நிறுவனங்களிடமே மீண்டும் ஒப்படைத்தது.
  • 1973-இல் அமெரிக்க ஆதரவுடன் ஆயிரக்கணக்கான குர்து இன மக்களை (அவர்களும் முசுலீம்கள் தான்) வேட்டையாடிக் கொன்றது சதாமின் ஆட்சி.
  • 1980-இல் ஈரான் மீது படையெடுத்தார் சதாம். அமெரிக்கக் கைக்கூலியான மன்னன் ஷா தூக்கியெறியப்பட்டதற்குப் பழிவாங்க, ஈரான் மீது சதாமை ஏவிவிட்டது அமெரிக்கா. ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐ.நா வில் ஈரான் கொண்டு வந்த முறையீட்டையும் தனது “வீட்டோ” அதிகாரத்தின் மூலம் தடுத்தது. சதாமுக்குத் தேவையான ஆயுதங்களைக் கொடுத்து உதவியது.
  • 1984-இல் ஈரான் மீது இரசாயன ஆயுதத்தை (நரம்பு வாயு) ஏவினார் சதாம். இதற்காக ஐ.நா ஈராக் மீது பொருளாதாரத் தடை விதித்தது. தடையை எதிர்த்தது அமெரிக்கா.
  • 1987-இல் சதாமுக்கு ஆதரவாகத் தனது கடற்படையை அனுப்பி ஈரானை மிரட்டியது அமெரிக்கா. ஈரானியப் பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. எட்டாண்டுகள் நடந்த இந்தப் போரில் கொல்லப்பட்டவர்கள் 10 லட்சம் பேர்.
  • 1988-இல் சொந்த நாட்டின் குர்து இன மக்கள் மீது இரசாயன ஆயுதங்களை ஏவினார் சதாம். “இப்போதாவது ஈராக் மீது பொருளாதரத் தடை விதிக்க வேண்டும்” என்று அமெரிக்க நாடாளுமன்றம் கோரிய போது சதாமுக்கு ஆதரவாக அதைத் தடுத்தார் அன்றைய அமெரிக்க அதிபர் ரீகன்.

சதாம் உசேனால் கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஈரான் – ஈராக் நாடுகளைச் சேர்ந்த முசுலீம் மக்கள் தான். பாலஸ்தீனத்தில் இசுரேல் கொன்ற மக்களைப் போலப் பல பத்து மடங்கு முசுலீம் மக்களைக் கொலை செய்திருக்கிறது, சதாம் ஆட்சி.

அமெரிக்க ஆதரவுடன் திமிரெடுத்து திரிந்து கொண்டிருந்த சதாம் 1991–இல் குவைத்தை ஆக்கிரமிக்கப் போகிறாரென்று ஏற்கெனவே தெரிந்திருந்தும் “செய்யட்டும்” என்று வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் இருந்தது, அமெரிக்கா.

சதாமின் கழுத்துக்குச் சுருக்குப் போட்டு விடுவதும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஈராக்கின் ருமைலா எண்ணெய் வயலை விழுங்கி விடுவதும் அமெரிக்காவின் திட்டம். அமெரிக்க இராணுவத்தை பாக்கு வெற்றிலை வைத்து அழைத்தனர் குவைத், சவுதி ஷேக்குகள்.

ஈராக் மீது படையெடுப்பது என்று முடிவு செய்தவுடனே 30 ஆண்டுகாலம் தனக்கு அடியாள் வேலை செய்த சதாமை ”சர்வாதிகாரி”, ”கொடுங்கோலன்” என்று அமெரிக்கா தூற்றத் தொடங்கியது. இது அமெரிக்காவின் கபட நாடகம் என்பது எல்லோருக்கும் புரிகிறது. ஆனால் உலகறிந்த இந்த அமெரிக்கக் கைக்கூலியை இசுலாமிய அமைப்புகள் கதாநாயகனாகக் கொண்டாடினார்களே அது என்ன வகை நாடகம் ?

ஈராக் மக்களின் படுகொலைக்கும் துன்பத்துக்கும் அமெரிக்காவை கண்டிக்கும் இசுலாமிய அமைப்புகள், அந்த அமெரிக்காவை பாக்கு வைத்து அழைத்த சவுதி ஷேக்குகளை கண்டிக்காத மர்மம் என்ன ?

இசுலாமிய அமைப்புகள் எனப்படுவோர் யாருடைய பிரதிநிதிகள் ? கொல்லப்பட்ட லட்சக்கணக்கான முசுலீம் மக்களின் பிரதிநிதிகளா அல்லது சதாம்கள், ஷேக்குகளின் பிரதிநிதிகளா ? அன்று சதாம் இன்று பின்லாடன்.

பின்லாடன் : சி.ஐ.ஏ. வளர்த்த கடா!

1967 – இல் வளைகுடா நாடான தெற்கு ஏமனிலிருந்து பிரிட்டிஷார் வெளியேற்றப்பட்டவுடன் தெற்கு ஏமனில் சோவியத் ஒன்றியத்தின் சார்பு ஆட்சி அமைந்தது. அது இசுலாமுக்குத் தடையேதும் விதிக்கவில்லை. சொல்லப் போனால் இசுலாமுக்கே ஏகாதிபத்திய எதிர்ப்பு–முற்போக்கு விளக்கம் கொடுத்தது. அவ்வளவு தான். இசுலாமுக்கு ஆபத்தில்லையென்றாலும் தன் சொத்துக்கு ஆபத்து என்பதால் பிரிட்டிஷாரோடு பின்லாடனின் தந்தையும் நாட்டை விட்டு வெளியேறினார்.

கட்டுமானத் தொழில் முதலாளியான பின்லாடனின் தந்தைக்கு மெக்கா, மெதினா நகரங்களை புதுப்பிக்கும் பணி மட்டுமின்றி, சவுதி அரசின் கட்டுமான காண்டிராக்டுகள் ஏராளமாக ஒதுக்கப்பட்டன. சவுதி மன்னர் குடும்பத்துக்கு நிகரான பணக்காரக் குடும்பமானது பின்லாடன் குடும்பம்.

பாலஸ்தீன இசுலாமியத் தீவிரவாத அமைப்பான ஹமாஸின் தலைவர் மற்றும் எகிப்திய இசுலாமியத் தீவிரவாதிகளால் பயிற்றுவிக்கப்பட்ட பின்லாடனை ”சி.ஐ.ஏ.- ஐ.எஸ்.ஐ – சவுதி கூட்டணி” ஆப்கனுக்குக் கொண்டு வந்தது. சோவியத் ஆக்கிரமிப்புக்கெதிரான புனிதப் போரில் கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளைகளும் இறங்கினால் அதைக் காட்டி ஏழை முசுலீம் இளைஞர்களைப் பல நடுகளிலிருந்தும் கவர்ந்திழுக்கலாம் என்பது சி.ஐ.ஏ. – ஐ.எஸ்.ஐ. திட்டம்

பாகிஸ்தான் இராணுவம் சவுதி இளவரசரை அழைத்ததாகவும், அவருக்குப் பதிலாக பின்லாடன் பெயரை சவுதி அரசு சி.ஐ.ஏ வுக்குச் சிபாரிசு செய்ததாகவும் கூறுகிறார் தாரிக் அலி. (Bombs, Blowback and the Future)

ஆப்கன் போருக்கு ஆளெடுப்பது, நிதி திரட்டுவது, போதை மருந்துக் கடத்தல், ஆயுதம் வாங்குவது, ஆயுதக் கிடங்குகள் அமைப்பது ஆகிய அனைத்துப் பணிகளிலும் சி.ஐ.ஏ. – ஐ.எஸ்.ஐ யுடன் தோளோடு தோள் நின்று பின்லாடன் வேலை செய்தது மறுக்கவியலாத உண்மை.

சோவியத் இராணுவம் வெளியேறியவுடன் சவுதி திரும்பிச் சென்றதும் பின்லாடனை குவைத் ஆக்கிரமிப்பு எதிர்கொண்டது. ’அல்காயிதா’ படையின் துணை கொண்டு சதாமை முறியடிக்கலாம் என்ற தனது யோசனையை ஏற்காமல், இசுலாம் தோன்றிய புனித மண்ணில் மாற்று மதத்தினரை (அமெரிக்கப்படையை) கால் வைக்க அனுமதித்தது தான் தனது கோபத்திற்கு காரணம் என்று பின்லாடன் ஒரு பேட்டியில் கூறியதாகச் சொல்கிறார் ஒரு பாகிஸ்தான் பத்திரிகையாளர். ஆனால், அதன் பின்னும் சி.ஐ.ஏ. – ஐ.எஸ்.ஐ. – பின்லாடன் உறவு தொடர்ந்தது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

இன்று பின்லாடன் எனும் மனிதனுக்கு எதிராக அமெரிக்க வல்லரசே கச்சைக் கட்டி நிற்கிறது என்ற காரணத்தினால் பின்லாடனைக் கதநாயகனாக்க முடியாது. அல்லது ஒரு கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளை சுகபோகங்களை விட்டு காட்டில் அலைந்து திரியும் ’தியாகத்தை’ மெச்சியும் பின்லாடனை மதிப்பிட முடியாது.

பின்லாடன் சி.ஐ.ஏ. வளர்த்த கடா. அது அமெரிக்காவின் மார்பிலேயே பாய்கிறது. அதற்காக கடாவிற்கு மாலை போட்டு மாவீரன் பட்டம் கொடுக்க முடியாது.

தாலிபான் : அமெரிக்காவின் காசில் ஐ.எஸ்.ஐ வளர்த்த பாசிசக் கும்பல்!  

பின்லாடன் சி.ஐ.ஏ. வின் வளர்ப்பு மகன் என்றால், தாலிபான்களோ அமெரிக்காவே சோறு போட்டு வளர்த்த சொந்தப் பிள்ளைகள். சோவியத் யூனியனிலிருந்து மத்திய ஆசிய நாடுகளை உடைக்கவும் அங்கு இசுலாமியத் தீவிரவாதத்தைப் பரப்பவும், மத்திய ஆசியாவில் தனது ஆதிக்கத்திற்கு துணை நிற்கவும், எண்ணெய்க் குழாய் அமைக்கவும் தோதான ”இசுலாமிய ஆட்சி” யை ஆப்கனில் அமைப்பதற்காகவே உருவாக்கப்பட்டவர்கள்.

சோவியத் யூனியனை வெளியேற்றுவதற்காக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட முஜாகிதீன்கள் 1992 இல் – ஆட்சிக்கு வந்தனர். அவர்கள் சொந்தக் காலில் நின்றுப் போராடும் விடுதலைப் படையாக இல்லாமல் கூலிப்படையாக வளர்ந்ததன் விளைவு உடனே தெரியத் தொடங்கியது. தோஸ்தம் – ஹெக்மத்யார் – மசூத் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள் அடித்துக்கொண்டு ஆப்கனை நிரந்தரத் துயரில் தள்ளினர்.

சோவியத் ஆக்கிரமிப்பால் பாகிஸ்தானில் அகதிகளாய் குடியேறிய ஆப்கன் மக்களின் பிள்ளைகளுக்கோ இது வெறுப்பை ஏற்படுத்தியது. வறுமை, வேலையின்மை, மடமையை போதிக்கும் மதறஸா கல்வி இவற்றுடன் இந்த வெறுப்பும் சேர்ந்து உருவான இளைஞர்கள் தாலிபான்கள்.

இந்த வெறுப்பையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா. ஆப்கனில் ’கட்டுப்பாடான’ இசுலாமிய ஆட்சியை அமைப்பதற்கு இந்த இளைஞர்களைப் பயிற்றுவிக்க அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் காசு கொடுத்தனர்; பாகிஸ்தான் பயிற்சி கொடுத்தது. அமெரிக்கக் கைக்கூலிகளின் இரண்டாவது தலைமுறை (தாலிபான்) தயாரானது.

இவர்கள் இசுலாமிய அறிஞர்கள் அல்ல; கல்வியறிவு இல்லாத கிராமத்து முல்லாக்கள் ‘இசுலாம் என்று எதைச் சொல்லிக் கொடுத்தார்களோ அதை அவர்கள் உறுதியாகப் பிடித்துக் கொண்டனர். “விவசாயம், கால்நடை மேய்த்தல், கைவினைத் தொழில் என்ற எந்தத் தொழிலும் தெரியாத இந்த கூட்டத்தை என்னவென்று அழைப்பது ? மார்க்சின் மொழியில் சொன்னால் இவர்கள் ஆப்கானிஸ்தானின் லும்பன்கள்” என்கிறார் அகமத் ரஷீத். (Taliban–Islam, oil and the New Great Game)

புரியும்படி சொல்வதானால், இந்து முன்னணி, பஜ்ரங் தள் கும்பல் சங்கராச்சாரியின் தலைமையில் ’இந்து ஆட்சி’ அமைத்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது முல்லாக்களின் தலைமையிலான தாலிபான்களின் இசுலாமிய ஆட்சி.

“காலப்போக்கில் இவர்களும் சவுதி ஷேக்குகளைப் போல வளர்ந்து விடுவார்கள். நம் எண்ணெய்க் குழாய்கள் அமைக்கப்படும்… ஒரு எமிர் (அரசன்) இருப்பார், பாராளுமன்றம் இருக்காது, நிறைய ஷரியத் சட்டம் இருக்கும். அதனால் நமக்கொன்றும் சிரமம் இல்லை.”

– இது தாலிபன் ஆட்சி பற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரியின் கருத்து (அகமத் ரஷீத் நூலிலிருந்து).

ஆனால் தாலிபான்கள் ஷேக்குகளாக வளரத் தொடங்கும் முன் ஒரு உண்மையான அராபிய ஷேக் (பின்லாடன்) அங்கு வந்துவிட்டார். பின்லாடனின் நிதி உதவி, இராணுவ உதவி ஆகியவற்றுடன் இசுலாமிய சர்வதேசியம் என்ற கருத்தில் இரு தரப்புக்கும் இருந்த ஒற்றுமை அவர்களை ஓரணியாக்கிவிட்டது.

இது இஸ்லாத்துக்கு எதிரான போரா ?

இப்போது பின்லாடனும் தாலிபானும் அமெரிக்க ஆதிக்கத்தை ஒழித்து இசுலாத்தை நிலைநாட்டும் புனிதப்போரை நடத்துவதற்காகவே பிறந்து வந்தவர்கள் போல வீர வசனம் பேசுகிறார்கள். ஆப்கன், பாலஸ்தீனம், செசன்யா, போஸ்னியா, காஷ்மீர் என உலகெங்கும் முசுலீம்கள் மட்டும் தான் ஒடுக்கப்படுவது போலச் சித்தரிக்கிறார்கள்.

வரலாற்று அறிவற்ற நபர்கள் மட்டும் தான் இதை நம்ப முடியும். தனது சுரண்டலுக்காகவும் ஆதிக்கத்திற்காகவும் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர்கள் கொலைகளை ஒப்பிடும் போது இவர்கள்  போடும் பட்டியல் மிகச்சிறியது. தனது ஆதிக்கத்தை எதிர்த்த பாதிரியார்களையும் ஆர்ச் பிஷப்புகளையும் கூடச் சுட்டுக்கொல்ல அமெரிக்கா தயங்கியதில்லை என்பதே வரலாறு.

அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பை ”இசுலாத்துக்கெதிரான போர்” என்று சித்தரிப்பதன் மூலம் ஏதோ மத நோக்கங்களுக்காக கிறித்தவ–யூதக் கூட்டணி இசுலாம் மீது போர் தொடுத்திருப்பதாக உலக முசுலீம்களை நம்பச் சொல்கிறார்கள். யூனோகால் எண்ணெய் முதலாளிகளுடன் தாலிபான் முல்லாக்கள் 1997–இல் அமெரிக்கா போனார்களே அது ஹஜ் யாத்திரையும் அல்ல; இப்போது அமெரிக்கா தொடுத்திருப்பது கிறித்தவத்தை நிலைநாட்டும் போரும் அல்ல.

நிறவெறியும், இசுலாமிய மதவெறுப்பும் அமெரிக்க ஏகாதிபத்தியப் பண்பாட்டின் ஒரு முகம். அவ்வளவு தான். அதன் சாரம் உலக மேலாதிக்கம். இதை இருட்டடிப்பு செய்துவிட்டு ஜார்ஜ் புஷ்ஷின் வசனத்தைப் பிடித்துக்கொண்டு ’ஜிகாத்து’க்கு அணி திரளுமாறு கூறுவதன் மூலம் இன்றைய போருக்கு மட்டுமல்ல, நாளைய இசுலாமியக் கொடுங்கோல் ஆட்சிக்கும் இப்போதே அச்சாரம் போடுகிறார்கள்.

எது புனிதப் போர் ?

தாலிபானின் முல்லா ஓமர் “அமெரிக்க இசுரேல், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு எதிராக ஜிகாத்” என்று அறிவித்திருக்கிறார். அருமையான அறிவிப்பு தான் ! ஆனால் தாக்குதலுக்குத் தளம் கொடுத்து நேரடியாக அமெரிக்கக் கைக்கூலி வேலை செய்யும் பாகிஸ்தான் அரசு, உஸ்பெக் அரசு, நேட்டோ கூட்டணியின் துருக்கி, வடக்கு முன்னணிக்கு ஆயுதம் தரும் ஈரான், அமெரிக்காவின் அருமை நண்பனான சவுதி அரேபியா போன்ற முசுலீம் நாடுகளுக்கு எதிராகவும் ’ஜிகாத்’ என்று முல்லா ஓமர் ஏன் கூறவில்லை ?

ஏனென்றால் ”இன்ஃபிடல்களுக்கு” (இசுலாத்தின் நம்பிக்கையற்றவர்களுக்கு) எதிராக மட்டும் தான் ’ஜிகாத் நடத்த முடியும். இந்த இரட்டை வேடத்திற்குப் பெயர் புனிதப் போர் !

சவுதியின் புனித மண்ணில் ”இன்ஃபிடல்கள்” ஆள் வைத்ததனால் கொதித்துப் போன பின்லாடன் ”இன்பிடல்களான” சி.ஐ.ஏ. கொலைகாரர்களிடம் காசும் ஆயுதமும் வாங்கிப் புனிதப்போர் நடத்தினாரே, அது அவமானமாகப் படவில்லையா ?

கஞ்சா வியாபாரம் செய்து புனிதப் போர் நடத்தலாம் என்று தாலிபானுக்கும், பின்லாடனுக்கும் சொல்லிக்கொடுத்தது மறை நூலா, சி.ஐ.ஏ. வின் பயிற்சி நூலா ?

சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆப்கன் போருக்கு ஆட்களும் காசும் தந்து உதவிய சவுதி மன்னர், அதே நேரத்தில் நிகராகுவாவில் ஏழை விவசாயிகளையும், பெண்களையும், குழந்தைகளையும் கழுத்தை அறுத்துக் கொன்ற சி.ஐ.ஏ. காண்ட்ரா கொலைப்படைக்கும் காசு கொடுத்தார். அது பாவம் இல்லையா, கிறித்தவனை கிறித்தவன் கொல்லட்டும் என்ற ராஜதந்திரமா ?

ஆப்கனில் ஜிகாத் நடந்த அதே நேரத்தில் வெள்ளை நிறவெறி அரசின் கூலிப்படையான ரீனாமோ (Renamo) வுக்குக் காசு கொடுத்து மொசாம்பிக் விடுதலையை சீர்குலைத்தது யார் ? அதுவும் சவுதி மன்னர் தான். கருப்பின மக்கள் விடுதலைக்கெதிராக கிறித்தவ–வெள்ளை நிறவெறியர்களுடன் கூட்டு சேர்ந்து சவுதியின் இசுலாமிய அரசு நடத்திய இந்தப் போருக்கு என்ன பெயர் – ஜிகாத் தானா ?

எண்ணெய் வியாபாரத்தில் அமெரிக்கக்கூட்டு –பாலஸ்தீனத்துக்கு வேட்டு !  

பாலஸ்தீன மக்களின் தாயகத்தை மறுத்து, பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கவும், இதுவரை சுமார் ஒரு லட்சம் பாலஸ்தீன மக்களைக் கொல்லவும் இசுரேலின் யூத வெறி அரசுக்கு உடந்தையாக இருக்கிறது அமெரிக்கா. அமெரிக்க அரசை ஆட்டிப்படைக்கும் யூதர்கள் தான் இதற்கு காரணம் என்கின்றனர் இசுலாமிய அமைப்புகள்.

வளைகுடா ஷேக்குகளை அமெரிக்கா ஆட்டிப்படைக்க என்ன காரணம் ? பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எல்லா அரபு நாடுகளும் ஒன்று சேர என்ன தடை ? எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்காவின் கூட்டு; அமெரிக்க நிறுவனங்களில் ஷேக்குகள் வைத்திருக்கும் பங்கு. இந்தக்கூட்டணிக்கு எதிராக யார் புனிதப் போர் நடத்துவது ?

அமெரிக்கக் கைக்கூலியான ஷா அரசைத் தூக்கியெறிந்த ஈரான் மீது ஈராக்கை ஏவிவிட்டதும் இரண்டு தரப்புக்கும் ஆயுதம் விற்றதும் ரீகன்–சவுதிக் கூட்டணி தான் என்று பின்லாடனுக்குத் தெரியாதா ?

இந்தியாவின் ஏழை முசுலீம் சிறுமிகளை கிழட்டு ஷேக்குகள் நிக்காஹ் செய்வதும், பங்களாதேஷ் மூசுலீம் சிறுவர்களை விலைக்கு வாங்கி ஒட்டகத்தின் முதுகில் கட்டி பாலைவனத்தில் பந்தயம் விடுவதும், வீட்டு வேலைக்கு வரும் பெண்களை வைப்பாட்டியாக்கிக் கொள்வதும், சவுதி ஷேக்குகள் விலைமாதர்களுடன் நடத்தும் சல்லாபங்கள் லண்டன் பத்திரிகைகளில் சந்தி சிரிப்பதும் உலகுக்கே தெரியும் – ஷபனா ஆஸ்மியை விபச்சாரி என்று கூறும் இமாம்களுக்கு மட்டும் தெரியாதா ?

வெளிநாட்டு முசுலீம்களுக்கு சவுதியில் குடியுரிமை உண்டா ?

அகதிகளுக்குக் கூட பல நாடுகள் குடியுரிமை வழங்குகின்றன. ஆனால் பாலைவனத்தை பணம் காய்க்கும் தோட்டமாக மாற்றுவதற்கு 20, 30 ஆண்டுகள் உழைக்கும் தெற்காசிய முசுலீம் உழைப்பாளிகளுக்குக் கூட சவுதியில் குடியுரிமை கிடையாது. இந்த அநீதி ஏமனிலிருந்து சவுதிக்கு குடிபெயர்ந்த சர்வதேச இசுலாமியப் போராளி பின்லாடனுக்குத் தெரியாதா ? அல்லது கோடீஸ்வரனாக இல்லாத முசுலீம்களெல்லாம் ”இன்பிடால்கள்” என்று ஷரியத் கூறுகிறதா ?

வளைகுடாப் போரில் அமெரிக்க – சவுதி கூட்டணியை ஏமன் அரசு ஆதரிக்க மறுத்ததனால் ஒரே நொடியில் 10 இலட்சம் ஏமன் தொழிலாளிகளின் (இவர்களும் முசுலீம்கள் தானே) விசாவை ரத்து செய்து நாட்டை விட்டே துரத்தியதே சவுதி அரசு, அப்போது சவுதி தூதரக வாயிலில் எந்த இசுலாமிய அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதென்று சொல்ல முடியுமா ?

சுரண்டல், அடக்குமுறை, களவு, சூது, விபச்சாரம், அமெரிக்கக் கைக்கூலித்தனம் ஆகிய அனைத்தின் ஒன்று திரண்ட வடிவம் தான் சவுதி மன்னராட்சி. ஜனநாயகம், பேச்சுரிமை, எழுத்துரிமை, தொழிற்சங்க உரிமை என்று எந்த உரிமையும் அங்கு கிடையாது. ஆனால் குடிமக்கள் 5 வேளை தொழுகை செய்கிறார்களா என்று கையில் தடிக்கம்புடன் கண்காணிக்கும் முட்வா என்ற ”முல்லா போலீசுப் படை” உண்டு.

“ரசியாவில் எச்சில் துப்பும் உரிமை இல்லை, சீனாவில் சிறுநீர் கழிக்க உரிமை இல்லை” என்று உலக ஜனநாயகத்தைப் பற்றிப் பெரிதும் கவலைப்படும் அமெரிக்க அரசு சவுதியைப் பற்றி மட்டும் ஒரு வார்த்தை பேசியதில்லை. அந்தளவு புனிதமான சகோதரத்துவ உறவு!

தாலிபானின் வீரம் !

சவுதியின் இந்த ஜூனியர் தாலிபான்கள் தான் ஆப்கனின் சீனியர் தாலிபான்களை உருவாக்கினார்கள். இவர்களும் ஆட்சிக்கு வந்தவுடன் “ஐந்து வேளை தொழுகை செய்யாவிட்டால் தடியடி, பர்தா அணியாத பெண்கள் முகத்தில் திராவக வீச்சு, வேலைக்குப் போகும் பெண்களுக்கு தண்டனை” என்று கறாராக இசுலாமிய ஆட்சியை அமுல்படுத்தி அனைவருக்கும் சொர்க்கத்தில் இடத்தை உத்திரவாதம் செய்தார்கள்.

இந்த வீரப்புதல்வர்கள் பாகிஸ்தானில் பயிற்சி எடுத்த போது ஆட்சியிலிருந்தவர் பெனாசிர் பூட்டோ என்ற பெண்மணி. இசுலாமிய நாட்டைப் பெண் ஆளக்கூடாது என்று இவர்கள் எதிர்த்திருக்கலாம்; குறைந்த பட்சம் பர்தா அணியாததற்காக பெனாசிர் முகத்தில் ஆசிட் ஊற்றியிருக்கலாம்; அல்லது நவாஸ் ஷெரீபும், முஷாரப்பும் ஏன் தாடி வைக்கவில்லை என்று கண்டித்திருக்கலாம்.

ஆனால் காசு கொடுப்பவனிடமும், சோறு போடுபவனிடமும் எப்படி எதிர்த்துப் பேச முடியும் ? ஏழை எளிய இளிச்சவாய் முசுலீம்களுக்குத் தானே மத ஒழுக்கம்!

இமாம்களோ, சங்கராச்சாரிகளோ, ஆதீனங்களோ, போப்புகளோ… மதவாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் ஏகாதிபத்தியங்களின் கைக்கூலிகளாகவும் மக்கள் விரோதிகளாகவும் தான் இருந்திருக்கிறார்கள்.

இஸ்லாமிய மதவாதம் அமெரிக்க கையாள்!

இந்தோனேசியாவில் அமெரிக்காவை எதிர்த்த சுகர்னோவின் ஆட்சியைக் கவிழ்த்து 17 லட்சம் மக்களைக் கொலை செய்ய கொடுங்கோலன் சுகார்த்தோவுக்குத் துணை நின்றவை முசுலீம் மதவாத அமைப்புகள். கிழக்கு திமோரில் கொத்துக்கொத்தாக பல லட்சம் கிறித்தவ மக்களை சுகார்த்தோவின் இராணுவம் கொலை செய்த போதும் அமெரிக்கா கண்டு கொள்ளாததற்குக் காரணம் – சுகார்த்தோ ஒரு அமெரிக்கக் கைக்கூலி என்பது தான் .

பாகிஸ்தான் இராணுவம் வங்கதேச முசுலீம்களைக் கொன்று குவித்த போது பாகிஸ்தானுக்கு அமெரிக்கா துணை நின்றதற்கு காரணமும் பாக். அரசு அமெரிக்க அடிவருடி என்பது தான்.

சமீபத்தில் எகிப்திய அரசு கொண்டு வந்த நிலச்சீர்திருத்த சட்டத்தை எதிர்த்துக் கலகம் செய்தவர்கள் வேறு யாருமல்ல; பின்லாடனை இசுலாமிய சர்வதேசியத்துக்குப் பயிற்றுவித்த ஜமாத்–ஏ–இஸ்லாமி அமைப்பினர் தான்.

பாகிஸ்தானில் நிலச்சீர்திருத்தம் என்பதே செய்யப்படாமல், 1000, 2000 ஏக்கர் பண்ணையார்களுக்கு ஆதரவாக நிற்பவையும் மதவாத அமைப்புகள் தான்.

“இசுலாமிய நாடுகளுக்கெதிராக அமெரிக்கா தொடர்ந்து கடைபிடித்து வரும் கொள்கைகள்” என்று பேசுபவர்கள் இரண்டு கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்.

முதலாவதாக ”இசுலாமிய மக்களுக்கெதிராக இசுலாமிய அரசுகள் கடைபிடித்து வரும் கொள்கைகள்” பற்றி இவர்கள் என்ன சொல்கிறார்கள் ?

இசுலாமிய மதவாத அமைப்புகளின் துணையுடன், இசுலாத்தின் பெயரால் ஆட்சி நடத்தும் சர்வாதிகாரிகளின் துணையுடன் தான் அமெரிக்கா முசுலீம் நாடுகளைக் கொள்ளையடித்திருக்கிறது. ஒரு இறை நம்பிக்கை என்ற வரம்பைக் கடந்து பண்ணையார்களின் நிலத்தையும், ஷேக்குகளின் எண்ணெய் வயல்களையும் காப்பாற்றுவதற்கும், முசுலீம் மக்களின் சமூக வாழ்வைக் கட்டுப்படுத்தி ஜனநாயகத்தை மறுப்பதற்கும், இசுலாம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படும் வரையில் அமெரிக்கவுக்குக் கவலையில்லை. அமெரிக்காவும் சர்வாதிகாரத்தைத்தான் விரும்புகிறது – ஜனநாயகத்தை அல்ல;

இசுலாத்தைப் போலவே அமெரிக்காவும் சொத்துடைமையை பாதுகாக்கத்தான் விரும்புகிறது; சோசலிசத்தை அல்ல.

பார்ப்பன – பனியா தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்களுக்கு ஆதரவான பாசிச பாரதிய ஜனதா ஆட்சியின் துணையில்லாமல், இந்தியாவை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிட முடியுமா ? பாரதிய ஜனதாவை எதிர்க்காமல் அமெரிக்க ஆதிக்கத்தை முறியடிக்கதான் முடியுமா ?

பாரதிய ஜனதாவின் தலைமையின் கீழ் அமெரிக்க ஆதிக்கத்தை முறியடிக்க முடியும் என்று எண்ணுவது முட்டாள்தனமென்றால், சதாம் உசேன்கள், பின்லாடன்கள் தலைமையில் அமெரிக்காவை வீழ்த்தலாம் என்று கனவு காண்பதும் முட்டாள்தனம் தான்.

இரண்டாவதாக இசுலாமிய நாடுகளுக்கெதிராக அமெரிக்கா கடைபிடித்து வரும் கொள்ளைகள் எனப்படுபவை, உலக நாடுகளுக்கெதிராக அமெரிக்கா தொடுத்து வரும் தாக்குதலின் ஓர் அங்கம் தான். சந்தேகம் இருப்பவர்கள் வரலாற்றைப் படியுங்கள். அல்லது இந்த இதழில் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க ஆக்கிரமிப்புப் பட்டியலை படியுங்கள்.

உண்மை இவ்வாறிருக்க ”நிகராகுவா, எல்சால்வடார், கவுதமாலா, கொலம்பியா, பிரேசில் போன்ற நாடுகளில் அமெரிக்கா நடத்தும் நரவேட்டையை கண்டுகொள்ள மாட்டோம்; இந்தோனேசிய அரசு கிழக்கு திமோர் (கிறித்தவ) மக்களை வேட்டையாடுவதையும், ஈராக் – துருக்கி குர்து மக்களை இனப் படுகொலை செய்வதையும், தாஜிக் – உஸ்பெக் – ஷியா முசுலீம்களை தாலிபான் படுகொலை செய்வதையும், பாகிஸ்தான் மொஹாஜிர்கள், பலூச்களை நசுக்குவதையும் கண்டுகொள்ள மாட்டோம்; ஆப்கன், போஸ்னியா, செசன்யா, ஈராக் தான் எங்கள் உலகம்” என்ற அணுகுமுறை விபரீதமானது. உலக மக்கள் பிறரிடமிருந்து முசுலீம்களைத் தனிமைப் படுத்தக்கூடியது.

முசுலீம்களை இவ்வாறு தனிமைப் படுத்தத்தான் அமெரிக்காவும் விரும்புகிறது. அதனால் தான் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பிற நாடுகளிலும் பல்லாயிரம் மக்கள் பங்கு கொண்ட போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தும் அமெரிக்கத் தொலைக்காட்சிகள் அவற்றை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன. உலகெங்கும் முசுலீம்கள் மட்டும் தான் அமெரிக்காவை எதிர்ப்பது போலச் சித்தரிக்கின்றன. இசுலாமிய நாடுகள் என்று பிரித்துக் காட்டுவது அந்த வகையில் அமெரிக்காவுக்கு வசதியாகவே உள்ளது.

நாடுகளை மத அடிப்படையில் பிரிப்பது சரியா ?

நாடுகளை இசுலாம், கிறித்தவம் என்று மதத்தின் அடிப்படையில் பிரிப்பதே ஒரு மோசடியாகும். கொழுத்த பணக்கார நாடான சவுதியும் கஞ்சிக்கே வழியில்லாத வங்காள தேசமும் முசுலீம் நாடுகள்; வல்லரசான ஜப்பானும் வறுமையால் விபச்சார விடுதியாகிப் போன தாய்லாந்தும் பவுத்த நாடுகள்; உலக மேலாதிக்கவாதி அமெரிக்காவும் அதனால் நசுக்கப்படும் நிகராகுவாவும் கிறித்தவ நாடுகள் என்று வகை பிரிக்க முடியுமா ?

இவ்வாறு பிரிப்பது அமெரிக்காவைப் போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்குத்தான் பெரிதும் பயன்படும் என்பதை சொல்லத் தேவையில்லை. பணக்காரன் ஏழையைப் பார்த்து நீயும் நானும் ஒரு சாதி என்பதும், முதலாளி தொழிலாளியிடம் நீயும் நானும் ஒரு மதம் என்று சொல்வதும் சொத்தைப் பிரித்துக் கொடுப்பதற்கல்ல, பாதுகாத்துக் கொள்வதற்குத்தான், ”நீயும் நானும் முசுலீம் நாடு” என்று பேசுவதும் இந்த ரகம் தான்.

இதற்கு மேலே ஒரு படி சென்று முசுலீம்களுக்கு தேசமில்லை என்கிறார்கள் மதவெறியர்கள். “காசுமீரி இனம், பண்பாடு என்று எதுவும் தனியாகக் கிடையாது என்றும் இசுலாமிய சர்வதேச இயக்கத்தின் அங்கம் என்ற முறையில் தாலிபான்களை காசுமீருக்கு வரவேற்பதாகவும்” (இந்து – 28.10.2001) இசுலாமியப் பெண்கள் அமைப்பின் தலைவி ஆந்த்ரபி பேட்டியளிக்கிறார்.

சமீபத்தில் பாரதிய ஜனதா அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் சிமி (SIMI) என்ற அமைப்பு, “ஜனநாயகம், மதச்சார்பின்மை, தேசியம், பல கடவுள் வழிபாடு, சோசலிசம்” ஆகியவற்றை ஒழிப்பது தான் எங்கள் கொள்கை என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்கிறது” ”இசுலாமிய ஆட்சி நடைபெறாத நாட்டில், இறைவனின் சட்டமின்றி வேறு சட்டத்திற்குப் பணிந்து வாழும் முசுலீம்கள் நரகத்திற்குச் செல்வார்கள்” என்று கூறும் குரான் வசனத்துடன் தொடங்குகிறது சிமியின் இணையதளம்.

சிமி மீதான தடையை ஜனநாயகவாதிகள் எவ்வாறு எதிர்ப்பது ? “பஜ்ரங் தள் அமைப்பைத் தடை செய்யாதபோது சிமிக்கு மட்டும் ஏன் தடை ?” என்று இந்துத்துவ அரசைக் கண்டிக்க மட்டும் தான் முடியும்.

இத்தகைய மதவாத அமைப்புகள் தங்கள் நடவடிக்கை மூலம் சிறுபான்மையினர் உரிமைக்குக் குரல் கொடுக்கும் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளை இந்து பாசிஸ்டுகளிடம் காவு கொடுக்கிறார்கள். அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை பல்வேறு உலக நாடுகளிலும் ஆப்கன் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் இசுலாமியரல்லாத மக்களையும், அவர்களது ஜனநாயக உணர்வையும் கொச்சைப்படுத்துகிறார்கள்.

இஸ்லாமிய சர்வதேசியம் : ஒரு மாயமான் ! 

இசுலாமிய சர்வதேசியம் பேசுவோர் ஒரு உண்மையை தெரிந்துகொள்ளட்டும். உலக வர்த்தக மையமும் பென்டகனும் தகர்க்கப்பட்ட நியூயார்க்கிலும் வாஷிங்டனிலும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செப்டம்பர் 20 ம் தேதியே துவங்கிவிட்டனர். அதாவது இசுலாமிய சர்வதேசியம் விழித்துக்கொள்ளும் முன்பே தொழிலாளி வர்க்க சர்வதேசியம் விழித்துக் கொண்டுவிட்டத்து. அமெரிக்க அரசின் போர்வெறிப் பிரச்சாரத்தையும் மீறி பல்லாயிரக்கணக்கில் திரண்டவர்கள் கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள், ஜனநாயகவாதிகள்.

தாலிபானின் மொழியில் இவர்களுடைய பெயர் காஃபிர்கள்; ஈரான் முதல் இந்தோனேசியா வரை பல்வேறு நாடுகளிலும் இசுலாமிய ஆட்சிகளால் வேட்டையாடிக் கொல்லப்பட்டவர்களின் வாரிசுகள் தான் போரை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

காஃபிர்கள் ‘முசுலீம்களுக்காக’க் குரல் கொடுக்கத் தொடங்கிய பின்னும், ஆப்கன் குழந்தைகள் அமெரிக்க ஏவுகணைகளுக்கு பலியாகிச் சிதறத்தொடங்கிய பின்னரும், இசுலாத்தின் பிறப்பிடத்திலிருந்து, இசுலாமிய சர்வதேசியத்தின் பிறப்பிடத்திலிருந்து ஒரு சத்தத்தையும் காணோம். இசுலாத்தை உலகெங்கும் பரப்ப ஆண்டுக்கு ஐந்து பில்லியன் டாலர் செலவிடுகிறாராம் சவுதி அரசர். எப்படி இருக்கிறது இசுலாமிய சகோதரத்துவம் ?

இசுலாமிய அமைப்புகள் ஆத்திரப்பட்டுப் பயனில்லை, தங்கள் கோபத்தை அவர்கள் சவுதி அரச குடும்பத்தின் மீது காட்டட்டும். ஏழை முசுலீம்களை ஜமாத்தில் விசாரிப்பது போல சவுதி மன்னரையும் ஜமாத்தில் வைத்து விசாரிக்க முடியுமா என்று முயன்று பார்க்கட்டும். வர்க்க அரசியலின் உண்மை அப்போது விளங்கும்.

இப்படித்தான் 1987–இல் ஹஜ் யாத்திரை சென்ற ஈரானிய முசுலீம்கள் அங்கே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். நிராயுதபாணிகளான 400 யாத்ரீகர்கள் உடனே சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

இந்த சவுதி அரச குடும்பத்தை அமெரிக்கக் கைக்கூலிகள் என்று சாடும் பின்லாடனுக்கு அன்று நடந்த இந்தச் சம்பவம் தெரிந்திருக்காது போலும். அவர் அப்போது ஆப்கனில் அமெரிக்க காசில் புனிதப் போர் அல்லவா நடத்திக்கொண்டிருந்தார் !

_____________________________________________________________

புதிய கலாச்சாரம், டிசம்பர், 2001
______________________________________________________________

பா.ம.க வை நிராகரிக்கும் வன்னியர்கள் – கள ஆய்வு !

76

ர்மபுரி – சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு உழைக்கும் மக்களின் விடுதலைக்கான விடிவெள்ளியாய் முளைத்த நக்சல்பாரி இயக்கம் தீவிரமாய்ச் செயல்பட்டு வந்த மாவட்டம். இம்மாவட்டத்தின் நாயக்கன் கொட்டாய் தான் அந்த எழுச்சியின் குவிமையமாய் இருந்தது. நக்சல்பாரிகளின் தலைமையில் திரண்டெழுந்த உழைக்கும் மக்கள் சாதித் தீண்டாமையின் பல்வேறு வடிவங்களை அடக்கி ஒடுக்கியிருந்தனர்.

1980களுக்குப் பிறகு ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைகளால் நக்சல்பாரி இயக்கங்கள் பின்னடைவுக்கு உள்ளாகியிருந்த நிலையில் சாதி அமைப்புகள் திட்டமிட்ட ரீதியில் வளர்த்து விடப்பட்டன. பல்வேறு சாதி அமைப்புகள் தமது சாதி மக்களைத் திரட்டி தேர்தல் அரசியலில் செல்வாக்கை வளர்க்க முயற்சித்தன. எனினும் சாதிக் கூட்டணியில் துவங்கி, தமிழ் தேசியத்தில் வளர்ந்து, ஓட்டரசியலில் கிடைத்த பதவிகளில் சீரழிந்து, மக்களிடம் செல்வாக்கு இழக்கத் துவங்கி, தற்போது முற்றிலுமாய் அம்பலப்பட்டு நிற்கின்றன.

இந்நிலையில் தான் கடந்த நவம்பர் 7-ம் தேதியன்று நாயக்கன் கொட்டாய் பகுதியிலிருக்கும் மூன்று கிராமங்களின் தலித் குடியிருப்புகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் என்னும் தாழ்த்தப்பட்ட இளைஞருக்கும், செல்லன் கொட்டாயைச் சேர்ந்த திவ்யா என்ற வன்னியர் சாதிப் பெண்ணுக்கும் இடையிலான காதல் திருமணம்தான் இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்று சொல்லப்பட்டாலும், ஆதிக்க சாதிவெறி பிடித்த வன்னியர் சங்கத்தின் திட்டமிடல் தான் முக்கியக் காரணம்.

தர்மபுரி தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக அரசியல் அரங்கில் சாதி மீண்டும் முன்னணிக்கு வந்து விட்டதைப் போல் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ராமதாசின் முயற்சியால் 42 ஆதிக்க சாதிச் சங்கங்கள் ஒன்றிணைந்தன. ‘காதல் நாடகத் திருமணங்களை’ எதிர்ப்பதாகவும், “வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்” தவறாகப் பயன்படுத்தப்படுவதால் அதைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் கோரிக்கைகளை நிறைவேற்றினர். தலித் அல்லாதோர் இயக்கம் ஒன்றும் துவங்கப்பட்டது.

சாதி நல்லிணக்கம் பேசும் திராவிடக் கட்சிகளோ இந்தப் பச்சையான ஆதிக்கசாதி வெறித்தனத்தை எதிர்கொள்ளத் திராணியற்று இருக்கின்றனர். ராமதாசின் குறிப்பான சாதித் திமிரைக் கண்டிப்பதற்கு பதிலாய் பொதுவான சாதி சமத்துவம் பேசுவதாக மழுப்பி வருகினறனர். தலித் இயக்கங்களோ ஒட்டு மொத்தமாக சரணாகதி நிலையை எடுத்துள்ளன. அம்பேத்கரியத்தின் அடிப்படையில் தலித்திய அணி திரட்சியை முன்வைத்த திருமாவளவனோ, பா.ம.க.வின் சாதித் திமிரை எதிர்கொள்ள வக்கற்று, திராவிட இயக்கங்கள்,போலி கம்யூனிஸ்டுகள் பின்னால் நின்று ஆதரவு தேடுகிறார்.

ராமதாசின் வன்னிய சாதித் திமிரை புரட்சிகர இயக்கங்கள் தவிர்த்து வேறு எவரும் களத்தில் நேருக்கு நேராய் சந்திக்கத் தயங்கி வந்த நிலையில், அவர் உரிமை கொணடாடும் அந்த ‘2 கோடி’ வன்னியர்களில் சிலரையாவது நேருக்கு நேர் சந்தித்து விடுவது என்றும், அவர்களிடம் ராமதாஸ் முன்வைக்கும் சாதிவெறி அரசியலுக்கும் எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது என்பதை நேரடியாகக் கண்டறிவது என்றும் தீர்மானித்தோம்.

இந்தக் கள ஆய்வுக்காக இரண்டு வெவ்வேறு பகுதிகளைத் தேர்ந்தெடுத்தோம். சென்னையின் மத்தியில் வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதி ஒனறையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வன்னிய மக்கள் பெரும்பான்மையாக வாழும் இரண்டு கிராமங்களையும்தேர்ந்தெடுத்தோம்.

கள ஆய்வுக்கென தருமபுரி சம்பவம், ராமதாசு, காடுவெட்டி குரு மற்றும் கொங்கு வெளாள கவுண்டர் சங்கத் தலைவர் மணிகண்டன் ஆகியோரது பேச்சுக்கள், சாதிச் சங்கங்களின் செயல்பாடுகள், தந்தை பெரியார் குறித்த கருத்து, சாதி மறுப்புத் திருமணங்களுக்கு மக்களின் ஆதரவு எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் விதமாகவும் கேள்விகளை அமைத்துக் கொண்டோம்.

ஆய்வின் முடிவுகளைத் தனியே பெட்டிகளில் அளித்துள்ளோம். சாராம்சமாகச் சொல்ல வேண்டுமென்றால், பா.ம.கவும் சரி, வன்னியர் சங்கமும் சரி; அல்லது பிற சாதி அமைப்புகளும் சரி – தங்களுக்கு இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் பலம் என்பது அசிங்கமாய்த் துருத்திக் கொண்டிருக்கும் ஊளைச் தசை தான். இவர்களுக்கு மக்களிடையே – அதிலும் குறிப்பாக வன்னியர் சாதியைச் சேர்ந்த பெரும்பான்மை மக்களிடையே எள்ளளவும் மரியாதை இல்லை என்பதை இந்த கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முதல் சுற்று ஆய்வை சென்னையில் வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதி ஒன்றில் நடத்தினோம். ராமதாஸ், காடுவெட்டி குரு மற்றும் இரா.மணிகண்டன் ஆகியோர் காதலுக்கு எதிராகவும், சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராகவும் பேசியதன் விவரங்களை விவரிக்கத் துவங்கிய மாத்திரத்திலேயே மலத்தை மிதித்து விட்டதைப் போல் அசூசையான முகபாவனைகளையே காட்டினர். கேள்வியை முடிக்கும் முன்னதாகவே “இவனுங்க எல்லாம் சரியான காட்டுமிராண்டிங்க சார்”என்று அர்ச்சனையைத் துவங்கி விட்டனர். சென்னை மொழியில் சொல்வதானால், ராமதாசையும் காடுவெட்டியையும் ‘கழுவிக் கழுவி ஊற்றினர்’. இவர்களில் ஆகப் பெரும்பான்மையான மக்கள் தர்மபுரி தாக்குதல் சம்பவத்தை மிகக் கடுமையான வார்த்தைகளில் கண்டித்தனர்.

நகர முடிவுகள்

வன்னியர் சாதியைச் சேர்ந்த வயதானவர் ஒருவர், “நானே வன்னியன் தான் சார். நான் சொல்றேன். இந்த நாயிங்களை நடு ரோட்டுல ஓட விட்டு சுட்டுக் கொல்லணும் சார்” என்று கோபத்துடன் தன்னுடைய சாதிவெறியர்களைச் சாடினார். காதல் என்பதும், திருமணம் என்பதும் தனிப்பட்ட நபர்களின் விருப்பங்கள் என்பதே மக்களின் கருத்தாக இருந்தது. தனிப்பட்ட இருவரின் பிரச்சினைக்காக 300 குடிசைகளை எரித்துள்ளதைக் கேட்டு மக்கள் ஆத்திரப்பட்டனர்; வன்னியர் சங்கத்தைக் கடுமையான வார்த்தைகளில் சாடினர்.

“யாரைக் காதலிக்கலாம், யாரைக் காதலிக்க கூடாதுன்னு சொல்ல இவன்லாம் யாரு சார்? இவன்ட்ட எவன் சார் கேட்டான்? இவன்ட்ட கேட்டா சார் காதல் வருது? அதுல்லாம் காத்து மாதிரி சார்; தடுக்க முடியாது… இவன் சுத்த லூசுப் பய சார். ஒரே சாதின்றதுக்காக குருவோட பொண்ணை கூலி வேலை செய்யிற வன்னியனுக்கு கட்டித் தருவானா சார்? ஒவ்வோரு தரமும் கருணாநிதி-ஜெயா கால்ல விழுவுறானுவோ… அப்பல்லாம் சாதி சாதி பெருமை எங்க போச்சா சார் இவனுக்கு? த்தா… இவனுங்கள தூக்கி உள்ள போட்னும் சார். உள்ளயே கெடந்து சாதிய வளத்துக்கங்கடான்னு அப்டியே விட்ரணும் சார்..” இது வன்னியர் சாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் கருத்து.

மக்களின் ஆத்திரமும், கோபாவேசமும் கவிதையாய்ப் பொங்கியது. சாதாரண உழைக்கும் மக்கள் சாதிச் சங்கங்களே தேவையில்லை என்கிற கருத்தை முன்வைத்தனர். சாதிச் சங்கம் தேவை என்று சொன்னவர்கள் கொஞ்சம் நடுத்தர வர்க்கத்தினராகவும், நடுத்தர வயதினராகவும் இருந்தனர். இவர்களும் மிகச் சிறிய சதவீதத்தினரே. அப்படி வேண்டும் என்று தெரிவித்தவர்களும் ‘கண்ணாலத்துக்கு பொண்ணு பார்த்து தருவான் சார்’ என்று தரகர் வேலை பார்க்கவே சாதிச் சங்கங்கள் தேவையென்றனர். இதே பிரிவைச் சேர்ந்த ஒரு சிலர் சாதி மறுப்புத் திருமணம் தங்களுக்கு உவப்பானதாக இல்லையென்றாலும், இனிமேல் அதையெல்லாம் தடுக்க முடியாது என்பதையும் சேர்த்தே சொன்னார்கள்.

பொதுவான இந்தக் கருத்துக்களுக்கு ஒரு சில விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்தன. இவர்கள் காடுவெட்டியையும், ராமதாசையும் ஆதரித்தனர்; தருமபுரி குடிசை எரிப்பு சம்பவம் சரிதான் என்றனர். ஆனால், ஆச்சரியப்படும் விதத்தில் அவர்கள் யாரும் வன்னியர்கள் இல்லை. தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் – அதிலும் குறிப்பாக தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள்.

சென்னைக் கள ஆய்வில் இன்னும் சில சுவாரசியமான விஷயங்களும் உண்டு.

– அநேகமான குடும்பங்களின் உறவு வட்டத்தில் காதல் திருமணங்கள் நடந்திருக்கின்றன. பெரும்பாலான இளைஞர்கள் ஒன்று வேறு சாதிப் பெண்ணைக் காதலிப்பவர்களாவோ அல்லது சாதி மறுப்புத் திருமணத்தை நடத்தி வைத்தவர்களாகவோ தான் இருந்தனர்.

– திருமண வயதில் பெண்கள் இருக்கும் வீடுகளிலும் கூட சாதி மறுப்பு, காதல் திருமணங்களுக்கு ஆதரவு இருந்தது. இது போன்ற இடங்களில், கூடுதலாக “உங்கள் வீட்டில், உங்கள் பெண்ணே வேறு சாதிப் பையனைத் திருமணம் செய்து கொண்டாலும் இப்படித் தான் பேசுவீர்களா?” என்றும் கேட்டுப் பார்த்தோம். அப்போதும் அதே பதில் தான் வந்தது. அதில் கணிசமானோர், “பையனின் ஸ்டேடஸ் மட்டும் பார்ப்போம் சார். சாதி பிரச்சினையில்லை” என்று வர்க்கத்தை முன்னிறுத்தினர்.

– வர்க்கம், சாதி, பாலினம், வயது என்று எந்த வேறுபாடுகளும் இன்றி ராமதாசை சகலரும் கரித்துக் கொட்டினர். பாட்டாளி மக்கள் கட்சியை சாதிக் கட்சி என்று தூற்றினர். அரசியல் ரீதியாக விவரம் தெரிந்த சில வன்னியர்கள் ராமதாசின் ஆரம்பகால சவடால்களையும், தற்போதைய பல்டிகளையும் ஒப்பிட்டுப் பேசினர்.

– ஆச்சரியப்படும் விதமாக பலரும் திருமாவளவனை தலித் தலைவராக அறிந்திருக்கவில்லை; தமிழ் தேசிய அரசியல்வாதியாகப் பார்க்கின்றனர். ‘ஈழத் தமிழர்களுக்காக ஏதோ செய்யும்’ தலைவர் என்று இவர்கள் திருமாவைப் பற்றிச் சொல்கிறார்கள். தேவர் சாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே திருமாவைப் பற்றி அவ்வாறு குறிப்பிட்டதோடு, தனக்கு மிகவும் பிடித்தமான தலைவர் இவர் என்றும் தெரிவித்தார்.

கடுமையான பிற்போக்குக் கருத்துக்கள் வரக் கூடும் என்றே நாங்கள் ஆரம்பத்தில் எதிர்பார்த்திருந்தோம். அதிலும், வன்னியர்களில் சிலராவது ராமதாசை கேள்விக்கிடமின்றி ஆதரிக்கக் கூடும் என்று நினைத்தோம். தாக்குதல் நிலையில் எவராவது பேசினால் அதை எப்படிக் கையாள்வது என்று விரிவாகத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்கெல்லாம் மக்கள் எங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை.

காலை ஏழு மணிக்குத் துவங்கி நாள் முழுவதும் அலைந்து திரிந்ததில் எமது தோழர்கள் உடல் அளவில் சோர்வடைந்திருந்தாலும், தங்கள் அனுபவங்களை விவரித்த போது அவர்களிடம் எல்லையில்லாத உற்சாகம் கரை புரண்டோடியது. ஆதிக்க சாதி வெறிக்கு எதிர்காலம் இல்லை என்பதை நேரடியாகக் கண்டதில் அவர்கள் அளவிலாத மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

“காலம் மாறிப் போச்சுங்க; இனிமேட்டு ஒன்னியும் செய்ய முடியாது”

அடுத்து சென்னை நகரத்தின் வெளியே சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சிறு நகரம் ஒன்றை அடுத்துள்ள கிராமங்களைத் தேர்ந்தெடுத்தோம். இது கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டிய பகுதி. இப்பகுதியின் மக்கள் தொகையில் வன்னியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் சரிபாதியாக உள்ளனர். இவ்விரு பிரிவினரிடையே சாதிக்கலப்பு நிகழ சாத்தியங்கள் அதிகமுள்ள பகுதி. மட்டுமின்றி, விடுதலைச் சிறுத்தை கட்சியிலும், பா.ம.க.விலும் உள்ளூர் மட்டத் தலைவர்கள் பலரும் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டப்பஞ்சாயத்துகளில் அவ்வப்போது உரசிக் கொள்ளும் வாய்ப்பு உள்ள பகுதி இது.

இந்தப் பகுதியிலிருந்து கிடைத்த ஆய்வு முடிவுகள் சென்னை முடிவுகளில் இருந்து பெருமளவுக்கு மாறுபடவில்லை.

ஊரக விபரங்கள்

காதல் மற்றும் சாதி மறுப்புத் திருமணங்களை ஏற்றுக்கொள்ளும் நிலையில் கணிசமான பேர் இல்லை என்றாலும், பெரும்பான்மையோர் சாதி மறுப்புத் திருமணஙகளை ஏற்றுக்கொள்ளும் நிலையிலேயே உள்ளனர்.

46 சதவீதம் பேர் சாதி மறுப்புத் திருமணங்களை நேரடியாக வரவேற்றுப் பேசினார்கள். மேலும் 25 சதவீதம் பேர் ‘காலம் மாறி விட்டது; இதற்கு மேல் காதலைத் தடுப்பதோ, சாதி மறுப்புத் திருமணங்களை நிறுத்துவதோ சாத்தியமில்லை’ என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். சுமார் 29 சதவீதம் பேர் மட்டுமே காதல் திருமணங்களை எதிர்த்தனர்.

ஒட்டு மொத்தமாக சுமார் 82 சதவீதம் பேர் தர்மபுரி சம்பவத்தை மிகக் கடுமையாக கண்டித்தனர். சுமார் 27 சதவீதம் பேர் சாதிச் சங்கங்கள் தேவை என்கிற கருத்தைக் கொண்டிருந்தாலும் சுமார் 94 சதவீதம் பேர் சாதிச் சங்கங்கள் விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்களுடைய அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு போராட வருவதில்லை என்றே தெரிவித்தனர்.

இளைஞர்கள் பெரும்பாலும் காதல் மற்றும் சாதி மறுப்புத் திருமணங்களை வரவேற்றனர்.

இந்தப் பகுதியில் முன்பு வன்னியர் சங்கத்தின் கிளைத் தலைவராக பொறுப்பு வகித்த இளைஞர் ஒருவரே சாதி மறுப்புத் திருமணம் செய்துள்ள தகவலைக் கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தோம். ராமதாஸ் குறிப்பிடுவது போல் நாடகக் காதல் என்றெல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை என்று மறுத்தவர், காடுவெட்டி குருவின் பேச்சை கடுமையாக விமர்சித்தார். அவரிடம் ராமதாசின் பேச்சுகள் பற்றி குறிப்பிட்டுக் கேட்டோம், “அவர் சொல்வது போல் ஜீன்ஸ், டீ சர்ட் போட்டு மயக்குவது உண்மையென்றால், வன்னிய பெண்கள் அந்தளவுக்கு இளிச்சவாயர்கள் என்று ராமதாஸ் சொல்கிறாரா?” என்று கிண்டலாகக் கேட்டார்.

அவரிடம் பேசி விட்டு சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு புது வீட்டில் நுழைந்தோம். இன்னும் மர வேலைகள் முடியவில்லை; முகப்பிலேயே தச்சு தொழிலாளி ஒருவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டின் உரிமையாளர் தனது மகனுக்கு ரூ 50 லட்சம் கொடுத்து மருத்துவப் படிப்புக்கான சீட்டு வாங்கியதாகவும், அடுத்து மேற்படிப்பு படிக்க இன்னும் ஒரு கோடி ரூபாய் திரட்டி இருப்பதாகவும் நாங்கள் கேட்காமலேயே பெருமையாக சொல்லிக் கொண்டார். தச்சுத் தொழிலாளி இயல்பாக ஜனநாயகப் பூர்வமாகப் பேசினார். தருமபுரி சம்பவத்தைக் கண்டித்ததோடு, சாதி மறுப்புத் திருமணங்களையும் ஆதரித்தார். ஆனால் வீட்டு உரிமையாளரோ, அசப்பில் காடுவெட்டிக் குருவைப் போன்றே பேசினார். “எங்க தலைவராவது சொல்றதோடு விட்டாரு… நானா இருந்தா வெட்டி எறிந்திருப்பேன்” என்று ஆத்திரப்பட்டார்.

சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்ப்பதோடு, வன்னியர் சங்க ஆதரவோடு பேசுபவர்கள் அநேகமாக இவரைப் போல ரியல் எஸ்டேட் மூலம் புதுப் பணக்காரர்களாக ஆனவர்களாகவோ, பெரும் நிலச்சுவான்தார்களாகவோ இருக்கிறார்கள். கூடவே இவர்களை அண்டிப் பிழைக்கும் முறையான வேலைகளுக்குச் செல்லாத உதிரிகளும், லும்பன்களும் சாதி அராஜக அரசியலை ஆதரிக்கிறார்கள். இந்த இரண்டு வகைப்பட்டவர்களைத் தவிர்த்து பெரும்பான்மையான உழைக்கும் மக்களிடம் சாதிக்கு எதிரான கருத்துக்களும், சாதிச் சங்கங்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிற கருத்துக்களையுமே காண முடிந்தது.

ஓரளவுக்கு நடுத்தர வயதுடையோர், தாங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் காதலைத் தடுப்பதோ, சாதிக் கலப்பைத் தடுப்பதோ சாத்தியமில்லை என்பதை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்கிறார்கள்.

நாங்கள் சந்தித்த ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் மூத்த மகன் சமீபத்தில் தான் சாதி மறுப்புத் திருமணம் புரிந்துள்ளார். ஆறு மாதப் போராட்டத்திற்குப் பிறகு தற்போது சேர்த்துக் கொண்டதாகத் தெரிவித்தார். “என்ன இருந்தாலும் கொள்ளி வைக்கப் போறவன் அவன் தானே தம்பி? சாதியா பெத்த புள்ளையான்னு பாத்தா புள்ள தான் தம்பி பெரிசா தோணிச்சி” என்றார். அவரிடம், “இனிமேல் நீங்கள் காதல் திருமணங்கள் சரி என்று ஒப்புக் கொள்வீர்களா?” என்று கேட்டோம். “இல்லை” என்றே பதிலளித்தார்.

மேற்கொண்டு பேசிய போது, பிள்ளைகள் வேலைகளுக்குச் செல்லும் இடங்களில் பல்வேறு சாதிக்காரர்களும் வருவதாகவும், அங்கே பிறருடன் பழக்கம் ஏற்படுவதைத் தடுப்பது சாத்தியமில்லை என்றும், ஆனாலும் பழைய விழுமியங்களைப் பிள்ளைகளுக்கு சின்ன வயதிலிருந்தே ஒழுங்காக சொல்லிக் கொடுத்து வளர்த்தால் காதலில் இருந்து அவர்களைக் காப்பாற்றி விடலாம் என்றும் தெரிவித்தார். அப்படியும் ஒருவேளை காதலித்து வேறு சாதிப் பெண்ணையோ, பையனையோ திருமணம் செய்து விட்டால் அதற்கு மேல் ஒன்றும் செய்யக் கூடாது என்றும் தெரிவித்தார். விடைபெறும் சமயத்தில், “சின்னஞ் சிறுசுக தம்பி! இனிமேட்டு எல்லாம் இவங்க காலம் தானே; எங்க காலமெல்லாம் எப்பவோ போயாச்சு தம்பி” என்று சொல்லி வழியனுப்பினார்.

தொகுப்பாக, பெரும்பான்மை உழைக்கும் மக்களிடையே சாதி வேறுபாடுகள் மங்கி வருவதை நேரடியாகக் கண்டுணர முடிந்தது. இன்றைய நிலையில் ராமதாசுக்கு வன்னியர்களிடையே குறிப்பிடத் தகுந்த ஆதரவு இல்லை என்பதும், இருக்கும் சொற்ப ஆதரவும் அவருக்கு தேர்தல் டெபாசிட்டைக் கூட தக்கவைத்துக் கொள்ள உதவாது என்பதும் இந்த ஆய்வின் முடிவுகள் சுட்டும் உண்மை. எனில், இவர்கள் வெறும் காமெடியர்கள் மட்டும் தானா? சிரித்து விட்டுக் கலைந்து விடலாமா?

ராமதாஸ்-காடுவெட்டி குரு : சமூகத்தில் பரவும் புற்றுநோய் செல்கள்..!

உலகமயமாக்கலின் விளைவாய் நகரமயமாதல் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றது. ஒரு பக்கம் மக்கள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து இடம் பெயரச் செய்யும் பொருளாதாரப் போக்குகள் பல்வேறு சமூகங்களை மேலும் மேலும் நெருங்கி வரச் செய்துள்ளது. இதன் விளைவாய், நகரங்களில் உழைக்கும் வர்க்கத்தினரிடையே சாதிவாரியான பிரிவினைகள் மங்கி வருவதைக் கண்கூடாய்ப் பார்க்க முடிகிறது. ஒரே தரமான வாழ்க்கை வாழும் மக்கள் பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே தங்களை இனம் பிரித்துப் பார்க்கிறார்கள்.

நகரங்களைப் பொறுத்த வரை புதிய பொருளாதாரக் கொள்கைகளின் பலன்களை ருசித்தவர்களாக ஐ.டி சேவைத் துறையைச் சேர்ந்தவர்களும், புதிய ரக உயர்நடுத்தர வர்க்கத்தினரும் இருக்கிறார்கள் என்றால், கிராமங்களில் அன்றைய நிலச்சுவான்தார்களும், இன்றைய ரியல் எஸ்டேட் பணக்காரர்களும் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த சமூகத்தில் சிறுபான்மையினராக உள்ள இவர்களே சுயசாதி அபிமானம் கொண்டவர்களாக உள்ளனர். ‘உயர்’ சாதி நடுத்தர வர்க்கத்து இளைஞன் முகநூலில் தனது சாதி அபிமானத்தை வெளிப்படுத்தத் தயங்குவதில்லை.

ஊரகப் பகுதிகளில் தரகு வேலைகளால் உருவெடுத்த திடீர் பணக்காரர்களுக்கும், பழைய நிலச்சுவான்தார்களுக்கும் கட்டப்பஞ்சாயத்து வேலைகளுக்காகவும், தொழில் போட்டியைச் சமாளிக்கவும் சாதிச் சங்கங்களின் ரவுடித்தனம் தேவைப்படுகிறது. பதிலுக்கு சாதிச் சங்கங்களை வாழவைக்கும் புரவலர்களாக இவர்கள் இருக்கின்றார்கள். வேலையற்ற உதிரிகளையும், லும்பன்களையும் தங்களது அடியாட்களாகச் சேர்த்துக் கொள்கின்றனர். மொத்த சமூகத்தில் இவர்கள் சிறுபான்மை என்றாலும் ஆபத்தானவர்கள்.

முதலில் பொய்யான கதைகளை இட்டுக் கட்டுவது, பின் அதையொட்டி அவதூறுகளைப் பரப்புவது, தொடர்ந்து சிறு சிறு கலவரங்களைத் தூண்டுவது, அதனடிப்படையில் சமூகத்தைப் பிளவுபடுத்துவது – அதன் மூலம் அரசியல் ஆதாயங்களை அறுவடை செய்வது என்கிற இந்துத்துவ பாணியைத் தற்போது ஆதிக்க சாதிச் சங்கங்களும், அவர்களின் அரசியல் அமைப்புகளும் கையிலெடுத்துள்ளன. இதை மிகக் கச்சிதமாக திட்டமிட்ட ரீதியில் வன்னியர் சங்கம் செய்து வருகிறது.

முதலில் மாமல்லபுரம் கூட்டத்தில் காடுவெட்டியின் பேச்சு, பின் வன்னியர்கள் வாழும் பகுதிகளுக்கு தொடர்ச்சியாக சென்று பிரச்சாரம், தொடர்ந்து தர்மபுரி கலவரம், ஸ்ரீமுஷ்ணத்தில் தலித் இளைஞர் படுகொலை – இப்போது ராமதாஸ் தலைமையில் 51 அமைப்புகளைக் கொண்ட கூட்டணி. வேகமாக முளைவிடத் துவங்கியுள்ள நச்சுக் காளான்களை இந்த மட்டத்திலேயே ஒழித்துக்கட்டத் தவறினால், நாளைய தமிழகம் சாதித் தாலிபான்களின் கைகளில் விழுவதைத் தவிர்க்கவே முடியாது.

வன்னியர் சாதிச் சங்கம் உள்ளிட்ட ஆதிக்க சாதிக் கூட்டணியை எதிர்த்து நிற்கும் அரசியல் சித்தாந்த பலமோ, தார்மீக பலமோ தலித் அமைப்புகளிடம் இல்லை என்பதைத் தான் திருமாவின் சரணாகதிப் பேச்சுகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆதிக்க சாதிவெறி என்பது அதே சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கே எதிரானது என்பதை உணர்த்தி, வர்க்க ரீதியில் அம்மக்களை அணி திரட்டுவதால் மட்டுமே இந்தக் கூட்டணியை வீழ்த்த முடியும். அதற்கு கடந்த காலத்தில் தர்மபுரியே முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

– வினவு செய்தியாளர் குழு
__________________________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013
______________________________________________________________________________________________

காஷ்மீர் பெண்கள் பாடத்தடை : ரஹ்மான், நாகூர் ஹனிபாவை என்ன செய்வது ?

34

Kashmir-3பெண்கள் மேடையில் பாடுவது இசுலாத்துக்கு விரோதமானது என்று கூறி காஷ்மீரில் மூன்று பள்ளிப் பெண்கள் நடத்தி வந்த “பெண்கள் இசைக்குழு” வுக்கு எதிராகப் பத்வா பிறப்பித்திருக்கிறார் காஷ்மீரின் தலைமை மதகுரு பஷீருத்தீன் அகமது.

ஸ்ரீநகரில் நடந்த ஒரு இசை விழாவில், “ப்ரகாஷ்” (காலை ஒளி) என்ற தங்களது இசைக்குழுவின் சார்பில் நிகழ்ச்சி நடத்தினார்கள் இந்தப் பெண்கள். உடனே இணையத்தில் இவர்களைப் பற்றிய கேவலமான விமரிசனங்கள் தொடங்கின.

“இசை இசுலாத்துக்கு விரோதமானது, பெண்கள் பாடுவது இசுலாத்துக்கு விரோதமானது, பெண்கள் வீட்டில் வேண்டுமானால் பாடலாம், மேடையில் பாடுவது இசுலாத்துக்கு விரோதமானது” என்று இதற்கு விதவிதமான வியாக்கியானங்கள் தரப்பட்டன.

“இந்த தேவடி…களை டில்லியில் செய்தமாதிரி செய்யணும்” என்பன போன்ற அநாகரிகமான ஏச்சுகள் வரையில் விதவிதமான நச்சு அம்புகள் இணையத்தில் இந்த சிறுமிகளுக்கு எதிராக எய்யப்பட்டன. வளர்ப்பு சரியில்லை என்று இவர்களது பெற்றோரை சிலர் வசை பாடினார்கள்.

“ஆண்களுக்கு எதிரில் இளம்பெண்கள் பர்தா அணியாமல் தோன்றினால், மனித ஆசைகளை கட்டுக்குள் வைக்க முடியுமா? நீங்கள் இதை சுதந்திரம் என்று சொல்கிறீர்களா?” என்று தொலைக்காட்சியில் கேள்வி எழுப்பினார் காஷ்மீரின் தலைமை மதகுரு.

ஆயிஷா ஆந்த்ரபியின் தலைமையிலான “துக்காதர்ன் ஏ மிலாத்” என்ற இசுலாமிய தீவிரவாத பெண்கள் அமைப்பு, இந்த மாணவிகளை சமூகப்புறக்கணிப்பு செய்வதாக அறிவித்தது. இத்தாக்குதல்களைக் கண்டு பீதியடைந்த அந்த மாணவிகள் உடனே தலைமறைவானார்கள்.

ஏனென்றால், இங்கே காதலை மறுத்தால் மூஞ்சியில் ஆசிட் ஊற்றும் காதலர்கள் போல, பர்தாவை மறுக்கும் பெண்கள் மீது ஆசிட் ஊற்றி புகழ்பெற்ற அமைப்புதான் ஆந்த்ரபியின் அமைப்பு.

இனிமேல் அந்தப் பெண்கள் அங்கே வாழ்வது கடினம். நோமா நசீர், ஃபரா தீபா, அனீகா கலீத் என்ற இந்த மூன்று பத்தாம் வகுப்பு மாணவிகளும் இசைக்குழுவைக் கலைத்துவிட்டதாக நேற்று இணையத்தில் அறிவித்துவிட்டார்களாம்.

முதல்வர் பரூக் அப்துல்லாவும், பிடிபி தலைவரை மகபூபா மப்தியும் இப்பெண்களின் உரிமை பறிக்கப் படுவதை ஒப்புக்கு கண்டித்திருக்கின்றனர். வீட்டில் கேபிள் டிவியில் எல்லா கேவலமான சானல்களையும் பார்த்துக் கொண்டு, இந்த பள்ளிப் பெண்களின் உரிமையைப் பறிப்பதா என்று ஒரே ஒரு பேராசிரியை மட்டும் மதவெறியர்களின் முரண்பாட்டை சுட்டிக் காட்டியிருக்கிறார். ஆனால் இப்படி ஒரு கட்டப்பஞ்சாயத்து பத்வா பிறப்பிக்கப் பட்டிருப்பதற்கு எதிராக அங்கே ஒரு கிரிமினல் வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. அறிவுத்துறையினரோ வாய்திறக்கவே அஞ்சுகிறார்கள்.

ஒரு புறம் அரச பயங்கரவாதம், மறுபுறம் மதவெறி பயங்கரவாதம் இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார்கள் காஷ்மீர் மக்கள். பாகிஸ்தான் மக்கள் எதிர்கொண்டிருப்பதும் இத்தகைய நிலைமைதான்.

“மலாலா படித்தாள் என்பதற்காக அவளைச் சுடவில்லை. அவள் மதச்சார்பின்மையைப் பிரச்சாரம் செய்தாள். அதனால்தான் சுட்டோம். அதுவும் கூட எங்கள் விருப்பம் அல்ல. இஸ்லாம் எங்களுக்கு விதித்திருக்கும் கடமை” என்று மலாலாவைச் சுட்ட தலிபான் அமைப்பினர் குர் ஆனிலிருந்து மேற்கோள் காட்டி விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

பாடலாமா கூடாதா, படிக்கலாமா கூடாதா, எப்படி உட்கார வேண்டும், எப்படி எழுந்திருக்கவேண்டும் என்று மனிதர்களுக்கு உத்தரவிடும் சாட்டைக்குச்சியாகவே மதத்தை சித்தரிக்கிறார்கள் இந்து, இசுலாமிய மதவாதிகள். மனுதருமம் என்பது திரிசூலம் என்றால், ஷரியத் என்பது வாள். நாம் மதிப்பளிக்க வேண்டியது மக்களின் இறைநம்பிக்கைக்குத் தானேயொழிய மதச்சட்டங்களுக்கு அல்ல.

பார்ப்பன மதத்துக்கு எதிரான சித்தர் மரபைப் போல, கடுங்கோட்பாட்டு இசுலாமுக்கு இணையான சுஃபி மரபொன்று இசுலாத்தில் இருக்கிறது. சுஃபி இசுலாம் மரபு, இசையுடன் இணைந்தது. அதுதான் உலகமுழுதும் உள்ள இசுலாமிய மக்களின் இறை நம்பிக்கையுடன் கலந்திருப்பது. முக்கியமாக காஷ்மீரில் செல்வாக்கு செலுத்தியது சுஃபி மரபு என்பதனால்தான், இத்தனை ஆண்டுகளாக இசுலாமிய தீவிரவாத இயக்கங்களின் கடுமையான முயற்சிக்குப் பின்னரும் அங்கே பர்தாவைத் திணிக்க முடியவில்லை.

இந்த மரபை ஒழிப்பதுதான் வகாபி இசுலாமிய தீவிரவாதிகளின் நோக்கம்; மலாலாவை சுட்ட தலிபான்களின் நோக்கம். தமிழகத்தின் டி.என்.டி.ஜே உள்ளிட்ட இசுலாமிய அமைப்புகளின் நோக்கம்.

காஷ்மீர் பெண்கள் ஸ்ரீநகரில் பாடிய பல பாடல்கள், சுஃபி ஞானி புல்லே ஷாவின் பாடல்கள் என்கிறார் அந்த இசைக்குழுவின் இயக்குநர் அத்நான் மாட்டூ.

“மசூதியை இடி, கோவிலை இடி, எதை வேண்டுமானாலும் இடி,

ஆனால் மனித இதயத்தை இடித்துவிடாதே,

அங்கேதான் இறைவன் குடியிருக்கிறான்”

என்று பாடியவர் பாபா புல்லே ஷா.

சுஃபி ஞானிகளின் பாடல்களுக்கும் தமிழகத்தின் சித்தர் பாடல்களுக்கும் இடையிலான ஒற்றுமை அதிசயிக்கத்தக்கது.

“நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே

சுற்றி வந்து முணுமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடா

நட்டகல்லும் பேசுமோ, நாதன் உள் இருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ”

என்று பாடிய சித்தர் மரபையும் பாபா புல்லே ஷாவின் இந்தப் பாடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள். மத உணர்வுக்கும் மதவெறிக்கும் இடையிலான வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். இதோ, பாகிஸ்தானின் புகழ்பெற்ற இந்துஸ்தானி பாடகி அபிதா பர்வீன், பாபா புல்லே ஷாவின் பாடலைப் பாடுகிறார்.

O beloved one:

If God were to be found by bathing and washing,

then God would be found by fish and frogs.

If God were to be found by roaming in jungle,

then God would be found by cows and buffaloes.

O Mian Bulleh

God is found by hearts righteous and pure.

You have read a thousand books

but have you read your ‘self’?

You rush to mosques and temples

in indecent haste,

have you tried to enter your ‘self’?

You are engaged in

needless battle with Shaitan

have you ever fought with your ‘nafs’?

You have reached the sky

But have failed to reach

what’s in your heart!

Come to my abode, My friend

morning, noon and night!

Destroy the mosque,

destroy the temple

do as you please;

do not break the human heart

for God dwells therein!

I search for You in jungle and wilderness

I have searched far and wide.

Do not torment me thus My Love

morning, noon and night!

Come to my abode, My Love

morning, noon and night!

தங்கள் இறை நம்பிக்கைக்கு எந்த மரபை வரித்துக் கொள்வது என்பதை இசுலாமிய மக்கள் முடிவு செய்யவேண்டும். “மத உணர்வு” என்று எதை அங்கீகரிப்பது என்பதனை மதச்சார்பற்றவர்களும் விளங்கிக் கொள்ளவேண்டும்.

விக்னேஷை காவு கொண்ட அரசு மருத்துவமனை !

7

பெரம்பூர் மருத்துவமனைரசு மருத்துவமனைகளை அலட்சியப்படுத்தும் அரசின் கொள்கையினால் ஒரு சிறுவன் கொல்லப்பட்டிருக்கிறான். பெரம்பூர் வெற்றி நகர் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி – சுஜாதா தம்பதியரின் மகனான 11 ஆம் வகுப்பு மாணவன் விக்னேஷின் உயிரை பலி வாங்கியிருக்கிறது பெரம்பூரில் உள்ள புறநகர் அரசு மருத்துவமனை.

பெரம்பூர் பெரியார் நகரில் உள்ள மருத்துவமனையில் விக்னேஷ் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தான். வெள்ளிக்கிழமை (ஜனவரி 25ம் தேதி) இரவு கழிப்பறைக்கு செல்லும் போது, போதிய விளக்குகள் இல்லாத நிலையில், ஒரு பலகையை வைத்து மறைத்திருந்த சுவரில் இருந்த ஓட்டைக்குள் விழுந்து நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தான்.

100 படுக்கைகளைக்கொண்ட மருத்துவமனைக்கு ஏற்ற வசதிகள் இன்றி இருக்கிறது இந்த புறநகர் மருத்துவமனை. விக்னேஷ் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டிலிருந்து கழிவறைக்கு போகும் நடைபாதையின் இரு புறமும் புழுதி படிந்த மெத்தை விரிப்புகளும், துருப்பிடித்த கட்டில்களும் கொண்ட வார்டுகள் இருக்கின்றன. அந்த நீண்ட பகுதியில் இரண்டு குழல் விளக்குகள் மட்டுமே பொருத்தப்பட்டிருக்கின்றன.

நான்காவது மாடியில் இருந்த வார்டிலிருந்து இருட்டில் நடந்து தூக்கக் கலக்கத்தில் கழிப்பறைக்குள் நுழைந்த விக்னேஷ் திறந்திருந்த பகுதியில் விழுந்து சாவை தேடிக்கொண்டான்.

இந்த மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 300 – 500 வெளி நோயாளிகள் வருகிறார்கள், அதுவும் செவ்வாய்க் கிழமைகளில் சர்க்கரை நோய் முகாமும் வியாழக் கிழமைகளில் முதியோர் நல முகாமும் நடக்கும் போது 1,000க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வருகின்றனர். முன்பு மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் இருந்து கடந்த ஆண்டு மருத்துவ சேவைகள் இயக்ககத்தின் கீழ் மாற்றப்பட்டது. அதிலிருந்து இந்த மருத்துவமனை புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள் மருத்துவமனை ஊழியர்கள்.

மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் மேற்பார்வையில் இருந்த வரை பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் வந்து நோயாளிகளை பார்ப்பார்கள். அது இப்போது நின்று விட்டது. தொடர்ந்து பணி மாற்றம் செய்யப்பட்டு மருத்துவர்களின் எண்ணிக்கை முன்பு இருந்த 16லிருந்து வெறும் 11ஆக குறைந்திருக்கிறது.

’45 மருத்துவமனை ஊழியர்கள் தேவைப்படும் இடத்தில் வெறும் 25 பேரைக் கொண்டு மருத்துவமனையை பராமரிப்பது முடியாத காரியமாக உள்ளது’ என்கிறார்கள் ஊழியர்கள். முதியோர் மருத்துவம், தாய்மை மருத்துவம், காது-மூக்கு-தொண்டை மருத்துவம், கண் மருத்துவம் போன்ற சிறப்பு பிரிவுகள் இருந்தும் சரியான பராமரிப்பு இல்லாமல், சீரழிக்கப்பட்டிருக்கிறது இந்த மருத்துவமனை.

புறநகர் மருத்துவமனையில் இந்த நிலையென்றால், சென்னை நகரின் வடபகுதியில் இயங்கும் 200 ஆண்டு கால பழைமை வாய்ந்த, புகழ்பெற்ற ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இன்னொரு கொடுமையான நடைமுறை செயல்படுகிறது.

தினமும் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் பலர் குழந்தைகள் உட்பட  ஸ்ட்ரெச்சரிலோ அல்லது நடந்தோ பழைய ஜெயில் சாலையை தாண்டி எதிரில் இருக்கும் சமூக குழந்தை மருத்துவ நிலையத்திற்கு போக வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு திங்கள் கிழமை, புதன் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை சுமார் 100 நோயாளிகள் நரம்பியல் சிகிச்சைக்காக எட்டு மாடி சமூக குழந்தை நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஒரு சில நோயாளிகளை மட்டுமே உதவியாளர்கள் ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்கின்றனர். மற்ற அனைவரும், அறுவை சிகிச்சைக்குப் பின் தேறி வருபவர்கள் கூட உதவியாளருடன் நடந்தே சாலையை கடந்து செல்ல வேண்டும்.

ஸ்டேன்லி மருத்துவமனை

அங்கு சிகிச்சை பெற்று வரும் விஜயலட்சுமி என்ற 48 வயது பெண், “வார்டுக்குள் நடக்கவே சிரமப்படும் நிலையில் சாலையைக் கடக்க வைத்து சமூக குழந்தை நல மருத்துவமனையின் 4வது மாடிக்கு ஏற வைக்கிறார்கள்.” என்று முறையிடுகிறார்.

1990 களில் கட்டப்பட்ட 8 மாடி சமூக குழந்தைகள் நல மருத்துவமனை, குழந்தை நலப் பிரிவு மற்றும் ஆராய்ச்சி பிரிவுகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இப்போது ஸ்டேன்லி மருத்துவமனையின் நரம்பியல், சிறுநீரகவியல், தோல் இயல் போன்ற பிரிவுகள் இங்கு மாற்றப்பட்டுள்ளன.

இரண்டு மருத்துவமனைகளையும் இணைக்கும் நடை மேம்பால கட்டுமானப் பணிக்கும் இரண்டு மின் தூக்கிகள் அமைக்கவும் 2006 ஆம் ஆண்டே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2007ம் வருட மத்தியில் மின் தூக்கிகள் செயல்பட ஆரம்பித்தன. ஆனால், ஊழியர் பற்றாக்குறையினால் சில மாதங்களிலே தொடர்ந்து செயல்படுத்த முடியாமல் நிறுத்தி விட்டனர்.

‘நல்ல உடல் நிலையில் இருப்பவருக்கே சாலைகளில் நடக்கும் போது நோய்க் கிருமிகள் தாக்கும் அபாயம் இருக்கும் போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களையும் வயதான நோயாளிகளையும் அலைக்கழிக்கும் இந்த அலட்சியத்தை சரி செய்ய அரசிடம் பல முறை முறையிட்டும் பலன் இல்லை’ என்கிறார் ஸ்டான்லி மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர்.

டிப்படை மருத்துவ தேவைகளுக்காக அரசை நம்பியிருக்கும் மக்களுக்கு சிகிச்சை என்ற பெயரில் துயரத்தை திணிக்கிறது அரசாங்கம்.  மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளை புறக்கணித்து விட்டு கோயில் யானைகளுக்கு புத்துணர்வு வழங்க 48 நாட்கள் முகாம் நடத்தி பல லட்சங்கள் செலவழிப்பதுதான் ஜெயா அரசின் நிர்வாகத் திறமை.

கட்டிடங்களை சரியாக பராமரிக்காமல், தேவையான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தாமல், மருந்துகள் இல்லாமல்தான் அரசு மருத்துவமனைகள் இயங்குகின்றன.  மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வட்டிக்கு கடன் வாங்கியாவது தனியார் மருத்துவமனைகளை நாடச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கம்.

மேலும் படிக்க

எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை !

8

குடும்பம் தற்கொலைபால் தாக்கரே என்ற பாசிஸ்ட்டின் மரணம்
பலவந்தமாக நம்மீது திணிக்கப்படும் நாட்டில்
பாளையங்கோட்டை மாரியம்மாள், ரவிசங்கர் – எனும்
தொழிலாளர் குடும்பத்தின் தற்கொலை மரணம்
நம்மில் பலரை தொட்டிருக்குமா என்பது சந்தேகமே!

தொழிலாளர்கள் வாழ்வதைப் பற்றியே
கண்டுகொள்ளாத அளவுக்கு வளர்க்கப்பட்ட மனங்கள்
அவர்கள் சாவில் மட்டுமென்ன.. திடீரென
சலனப்பட்டு விடப் போகிறது?

‘உழைத்து வாழுங்கள்’ என சாதாரண மக்களை
நெறிப்படுத்தும் உத்தமர்களே!
பிழைத்து வாழ பிறிதொரு வழி தெரியாமல்
உழைத்து, உழைத்து
உழைப்பைத் தவிர வேறொன்றுமறியாத காரணத்தால்
உங்கள் கண் முன்னே யாரையும் சுரண்டாமல்
உழைத்த வறுமையில் ஆறு பிணங்கள்!

மணிகண்டன், மகாதேவன், மகாலெட்சுமி,
மகாராஜன், மலர்வனம் – என
பதினோரு வயதுக்குட்பட்ட ஐந்து பிள்ளைகளை
நஞ்சு கொடுத்துக் கொல்லுமளவுக்கு
அந்தத் தாயின், தந்தையின் மனதை கல்லாக்கியது எது?

ஒரு துளி உணவை ஊட்டும் முன்பு
தானருந்தி சோதித்து, பிள்ளைக்குத் தரும் தாய்…
குறுக்கிப் படுத்தால் குழந்தைக்கு நோவுமென்று
விரித்துப் படுத்து விதவிதமாய் வயிற்றில் பாதுகாத்த தாய்..
தன் கையாலேயே பிள்ளைக்கு நஞ்சூட்டுகிறாள் என்றால்!
எவ்வளவு கொடூரத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் அவளது வாழ்க்கை.

குலசை முத்தாரம்மன் கோயிலுக்கு மொட்டை போட்டு
குதூகலமாய் தெருவில் விளையாடிய பிள்ளைகளுக்கு
அன்று தெரிந்திருக்கவில்லை
இதுதான் நமக்கு கடைசி விளையாட்டென்று,
இதுதான் நமக்கு கடைசி இரவென்று.

ஏழைகள் என்பதால் முத்தாரம்மனும்
இறங்கி வரவில்லை போல.
வேண்டிக் கொண்ட பிள்ளைகளைத்
தோண்டிப் புதைக்கவே அவளும் துணையிருந்தாள்.

பட்ட கடன் பாக்கி இல்லை
நேர்த்திக் கடனையும் நேர்மையாக முடித்து விட்டு
வாழ்வை முடித்துக் கொண்ட அவர்களின் முகத்தில் விழிக்க
முத்தாரம்மனுக்கு சக்தி உண்டா?

முடிந்தால், நீங்கள் பாருங்கள் அந்த முகங்களை –
உதவிக்கு அழைத்தது போல கைகளை நீட்டியபடி ஒரு பிள்ளை…
உறக்கத்தில் உங்களிடம் நியாயம் கேட்பது போல
நெஞ்சைப் பிடித்தபடி ஒரு பிள்ளை…
வாழ்கிறோமா? சாகிறோமா? என்றறியும்
மூளை வளர்ச்சியின்றியே முடிந்து போன ஒரு பிள்ளை…

பீடி சுற்றிச் சுற்றியே தழும்பேறிய விரல்களும்
உழைப்பில் வாடி வதங்கி வெளிறிய விழிகளுமாய்..
அதோ… கிடக்கிறதே, அதுதான் தாயின் பிணம்.
காலமெல்லாம் வறுமை இழைத்த மரணக் கட்டையாய்
அதோ… தளர்ந்து கிடக்கிறதே… அதுதான் தந்தையின் உடல்.

“வாழ வழியாயில்லை… தற்கொலை கோழைத்தனம்” என
பிணத்தோடு விவாதிக்கும் பெரியோர்களே!
வாழும்போது நீங்கள் வந்திருந்தால்
உழைப்பாளிகளை வாழ விடாத சமூகக் காரணங்களை
சந்திக்க விரும்பாத உங்கள் கோழைத்தனம் தெரிந்திருக்கும்!

பாழும் உலகுதான், ஆனாலும் வாழும் ஆசையில்
எத்தனை முறை யோசித்து யோசித்து தள்ளிப் போட்டிருப்பார்கள்
தங்களது தற்கொலையை…
வாழ விரும்பாத அவர்களது ‘கோழைத்தனம்’
அவர்களது வாழ்விலிருந்து அல்ல,
வாளாவிருக்கும் உங்களது வாழ்விலிருந்தே
உருவானது அவர்களிடம் என்ற உண்மை புரியுமா உங்களுக்கு?

விதவிதமாய் வாழ ஆசைப்பட்டு
அது கிடைக்காமல் அவர்கள் சாகவில்லை,
அவர்கள் வேண்டியது இதுதான் –
சொந்த உழைப்பில் வாழும் சூழ்நிலை.
அடிப்படைத் தேவைகள், பிள்ளைகளுக்கு கல்வி.
மூளை வளர்ச்சியில்லாத பிள்ளைக்கு முறையான மருத்துவம்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையாகக் கிடைக்க வேண்டிய
சமூகத் தேவைகள் சரியாகக் கிடைத்திருந்தால்,
வாழ்வையே மறுக்கும் இந்த சமூக அமைப்பை மாற்றும்
சக்தி அவர்களுக்கு கிடைத்திருந்தால்…
அந்தத் தொழிலாளி குடும்பம் பிணமாகியிருக்காது.
செத்தவர்களால் சிந்திக்க முடியாது!
வாழ்பவர்களே யோசித்து சொல்லுங்கள்…
அவர்கள் தற்கொலைக்கும் உங்களுக்கும்
சம்மந்தமில்லையென நினைக்கலாம்.
அவர்கள் வர்க்கத்துக்கும் உங்களுக்கும்
சம்மந்தமேயில்லையோ?

தாமிரபரணிக் கரையில் தரிசான வாழ்க்கை
கோயம்புத்தூரில் துளிர் விடும் என்ற நம்பிக்கையில்
ஊர்விட்டு ஊர் ஓடி உழைத்துப் பார்த்து
களைத்துப் போய் கடைசியில் பாளையங்கோட்டைக்கே வந்து
பக்கத்து வீடுகளின் வசதிகளைப் பார்த்துக் கூட
பிள்ளைகள் ஏக்கமுறக் கூடாது எனப் பொத்திப் பொத்தி,
தன் வர்க்கமறிந்து உழைத்துப் போராடியும்
வாழ முடியாத சோகத்துக்கு யார் காரணம்?

“குளிர்பானத்தில் விசம் கலந்து குடித்து,
குடும்பமே தற்கொலை” என்று
பிரேதப் பரிசோதனை அறிக்கை சொல்கிறது..

’கண்ணே! மணியே! கருத்தே!’ எனக்
காத்து வளர்த்த பிள்ளைகளை
’எண்ணே, எழுத்தே!’ எனப் பள்ளியில் சேர்த்து
படிக்க வைக்க பணமில்லாமல்
மனம் வெடித்துச் செத்ததாய் அவர்கள் வாழ்க்கை சொல்கிறது..
குளிர்பானத்தில் விசம் கலந்ததை விடவும் கொடியது,
கல்வியை காசாக்கி கடைச் சரக்காக்கியது!

மூளை வளர்ச்சியில்லாத குழந்தைக்கு
முறையாக மருத்துவம் பார்க்க பணமின்றி..
சகலத்திற்கும் அவர்களுக்கு சாவே மருந்தாகிப் போனது.

கருவிகளும், மருந்துகளும், மருத்துவருமின்றி
அரசு மருத்துவமனைகளைக் கொன்ற
அந்த தனியார் மருத்துவம்தான்
அந்தத் தொழிலாளி குடும்பத்தையே
குலை நடுங்கக் கொன்றது.

தன்னைக் கண்டுகொள்ளாத இச்சமூகத்தின் மீது
எந்தத் தனிப்பட்ட கோபமும் ரவிசங்கருக்கில்லை.
விலையில்லா கலர் டி.வி. கூட
அலங்கரிக்காத தன் வீட்டில்,
தான் உழைத்துச் சேர்த்த ஓரிரு பொருட்களையும்
தன் சாவுக்குப் பிறகு,
தான் படித்த சி.எம்.எஸ். பள்ளி விடுதிக்கே
நன்கொடையாக அளித்துவிடுமாறு
கடிதம் எழுதிவிட்டு செத்திருக்கிறான் அந்தத் தொழிலாளி!
சாவுக்குப் பிறகும் சமூகத்தை நேசிக்கும்
அந்தத் தொழிலாளி உணர்வுக்கு நம் பதில் என்ன?

சோகமான தங்கள் வாழ்வை புதைத்துக் கொண்டும்
கேவலமான இச்சமூக அமைப்பை நமக்கு வெளிக்காட்டியும்
விழுந்திருக்கின்றன அவர்கள் பிணங்கள்…

பயப்பட வேண்டாம்!
எங்கேயும் அவர்கள் யாரையும்
காட்டிக் கொடுக்கவில்லை.
சாவிலும் கூட சமூகப் பொறுப்புடன்,
‘எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை’
என்று எழுதிவைத்து விட்டு இறந்திருக்கிறார்கள்!

– துரை.சண்முகம்

______________________________________________________________________________________

புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013
______________________________________________________________________________________

படிக்க :

இணையத்தில் யார் சம்பாதிக்க வேண்டும் – முதலாளிகள் லடாய் !

11
  • ணையத்தில் பதிவு எழுதுபவர்கள் பலர் தமது வலைப்பதிவில் விளம்பரங்களை காட்டி சம்பாதிக்கின்றனர். இனிமேல், அவர்களது பதிவுகளை படிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் ரூ 1 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றால் எப்படி இருக்கும்?
  • தனது இணைய தளத்தில் அல்லது பேஸ்புக்கில் அல்லது கூகுள் பிளஸ்சில் அல்லது டுவிட்டரில் ஏதாவது ஒரு செய்தித் தாளில் வெளியான செய்தியின் சுட்டியை கொடுத்து, இரண்டு வரி சுருக்கமும் எழுதி தொடர்புகளோடு பலர் பகிர்ந்து கொள்கிறார்கள். அதற்காக அந்த செய்தித் தாள்களுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும்?

இப்படித்தான் சிந்திக்கிறார்கள் இவ்வுலகை இயக்குவதாகச் சொல்லிக் கொள்ளும் முதலாளிகள்.

இணையம்‘நாங்கதான் கஷ்டப்பட்டு கொடுக்க வேண்டியதை கொடுத்து அலைக்கற்றை ஏலம் எடுத்து, கேபிள் பதித்து, வாடிக்கையாளர்களை வலை வீசி பிடித்து இணைய இணைப்பு கொடுக்கிறோம். தங்கள் உள்ளடக்கத்தையும் விளம்பரங்களையும் பயனர்களுக்கு கொண்டு சேர்க்க உதவும் எங்களுக்கு இணைய தளங்கள் காசு கட்ட வேண்டும்’ என்று திருவாய் மலர்ந்திருப்பவர் ஏர்டெல் நிறுவனத்தின் முதலாளி சுனில் மிட்டல்.

“எங்களது இணைப்பு சேவையை பயன்படுத்தி யூ-டியூப் போன்ற தளங்களில் வீடியோ பார்க்கும் பயனர்கள், பில் அதிகமாகி விட்டதே என்று எங்களைத்தான் கரித்துக் கொட்டுகிறார்கள்” என்று புலம்பியதோடு,  “யாராவது அதற்கான செலவை கவர் செய்யத்தானே வேண்டும், அதனால் யாருடைய தளத்தை பயனருக்கு கொண்டு சேர்க்கிறோமோ அவர்கள் எங்களுக்கு காசு தர வேண்டும்” என்று ஒரு தீர்வையும் அவர் சொல்லியிருக்கிறார்.

அதாவது ‘கூகுள், யூடியூப், பேஸ்புக் போன்று இணைய தளங்களை நடத்துபவர்கள் ஒவ்வொரு முறை அவர்களது படைப்பு பயனர்களை சென்றடையும் போதும்,  பயனர்களுக்கு இணைய இணைப்பை வழங்கும் தொலைபேசி நிறுவனங்களுக்கு பணம் கட்ட வேண்டும்’ என்பது அவரது கோரிக்கை.

பெரும்பான்மை மக்களுக்கு அடிப்படைத் தேவையாக இல்லாத தொலைபேசி சேவைகளுக்கு குறிப்பிட்ட அளவுதான் கட்டணம் வசூலிக்க முடியும். வாடிக்கையாளர்களிடமிருந்து மேலும் மேலும் கறக்க முயன்றால், ‘ஆணியே புடுங்க வேண்டாம்’ என்று பயன்பாட்டை குறைத்து விடும் அல்லது நிறுத்தி விடும் அபாயம் இருப்பதால், காசு பார்க்க வேறு வழிகளை தேடுகின்றனர், மிட்டல் போன்ற தொலைபேசி நிறுவன முதலாளிகள்.

ஏர்டெல் வாடிக்கையாளர் ஒருவருக்கு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் தொலைபேசினால், அந்த அழைப்பை கொண்டு சேர்க்கும் பணிக்காக ஏர்டெல்லுக்கு பிஎஸ்என்எல் ஒரு தொகையை செலுத்துகிறது. தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கிடையே, இது போன்று உலகளாவிய பண பரிமாற்றங்கள் நடக்கின்றன. தொலைபேசி நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான இந்த வசூல் முறையை இணையத்துக்கும் கொண்டு வரச் சொல்கின்றனர்.

‘தொலைபேசி சேவையிலிருந்து தொழில் நுட்ப அடிப்படையில் வேறுபட்ட இணைய சேவைக்கு இத்தகைய பண வசூல் நடைமுறையில் சாத்தியமில்லை’ என்பதால்  கூகுள் போன்ற இணைய நிறுவன முதலாளிகள் தொலைபேசி நிறுவனங்களின் முதலாளிகளின் கோரிக்கையை நிராகரித்து கடுப்பேற்றுகின்றனர்.

ரம்பம் முதலே இது போன்று பழைய முதலாளிகளின் லாப வேட்டைக்கு கடுக்காய் கொடுத்து கொண்டே இருக்கின்றது, இணைய தொழில்நுட்பம். புதிதாக கிளம்பும் முதலாளிகள் இணையத்தில் மேய்பவர்களுக்கு விளம்பரங்கள் காட்டியோ, பொருட்களை விற்றோ வருமானத்தை அறுவடை செய்ய, பழைய முதலாளிகள் கடுப்படைகிறார்கள்.

2009ம் ஆண்டு உலகளாவிய ஊடகச் சக்கரவர்த்தியாக தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் ரூபர்ட் முர்டோச், ‘தனது நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளை கூகுள் நியூஸ் பக்கத்தில் காட்டி கூகுள் பணம் சம்பாதிக்கிறது. அதனால் தனது செய்திகளுக்கான சுட்டியையும், முதல் இரண்டு வரிகளையும் கூகுள் நியூசில் சேர்க்க விரும்பினால் அதற்கு கூகுள் ராயல்டி தர வேண்டும்’ என்று முழங்கினார்.

பாரம்பரியமாக முதலாளித்துவ பத்திரிகைகளின் வருமானத்தில் பெரும்பகுதி விளம்பரங்கள் மூலம் வருகிறது. வாசகர்களுக்கு பொருட்களை விற்க விரும்பும் நிறுவனங்கள், வெளியிடும் விளம்பரங்களுக்காக கட்டணம் வசூலித்து பத்திரிகைகள் லாபம் ஈட்டுகின்றன. இணைய தொழில்நுட்பம் வளர வளர, மேற்கத்திய நாடுகளில் (ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா) மேலும் மேலும் மக்கள் இணையத்தில் செய்திகளை படிக்க ஆரம்பித்தார்கள். அச்சுப் பத்திரிகைகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து நாளிதழ்களின் விளம்பர வருமானம் சரிய ஆரம்பித்தது.

தொடர்ந்த லாப வளர்ச்சி இல்லாத நிறுவனங்களுக்கு மூச்சுக் காற்றை நிறுத்தி கொன்று விடுவது என்பதுதான் முதலாளிகள் பின்பற்றும் ஒரே அணுகுமுறை. தனது செய்தித் தாள்களுக்கு வருமானத்தை அதிகரிக்க புதிய வாய்ப்புகளைத் தேடிய போது முர்டோச் கும்பலின் கண்ணில் பட்டதுதான் கூகுள் என்ற புது தொழில்நுட்ப நிறுவனம்.

”ஊடக உலகின் சக்கரவர்த்தியான எனது பத்திரிகைகளின் வருமானம் குறைந்து கொண்டிருக்கும் போது நேற்று உருவான இந்த சுண்டைக்காய் பயல், இணையத்தில் விளம்பரங்களை காட்டி கோடி கோடியாக சம்பாதிக்கிறான். இந்த சின்னப் பயலை, நசுக்கி விடுகிறேன்” என்று இது தொடர்பாக வழக்கு தொடரப் போவதாக மிரட்டிய முர்டோச்சிடம், “விருப்பம் இல்லை என்றால் உங்கள் தளத்து சுட்டிகளை சேர்க்க வேண்டாம் என்ற கட்டளையை குறிப்பிட்டு எங்கள் தானியங்கி திரட்டியிலிருந்து விலகிக் கொள்ளலாமே” என்ற நடைமுறையை சுட்டிக் காட்டி அவருக்கு கூகுள் பெப்பே காட்டியது.

உண்மையில், கூகுள் நியூசில் வரும் சுருக்கமான செய்தியைப் பார்த்து நாளிதழ் தளத்துக்கு வரும் வாசகர்கள், நாளிதழின் விளம்பரங்களை கிளிக் செய்து வருமானம் ஈட்டித் தருகிறார்கள். கூகுள் நியூசில் வெளியாகா விட்டால், அவர்கள் அந்தச் செய்தியை பார்க்கப் போவதுமில்லை, செய்தித் தாளின் தளத்துக்கு வரப்போவதுமில்லை. அதனால், செய்தித் தாளின் வாசகர் எண்ணிக்கை குறைந்து விடும்.  அப்படி வாசகர் எண்ணிக்கை குறைந்து பாதிக்கப்பட்ட முர்டோச் குழும பத்திரிகைகள் சென்ற ஆண்டு மீண்டும் கூகுள் நியூசில் சேர்ந்து கொண்டிருக்கின்றன.

2011ம் ஆண்டு உலகளாவிய செய்தித் தாள்கள் விளம்பர வருமானம் 2007ல் இருந்ததை விடக் குறைந்து $76 பில்லியனுக்கு வீழ்ந்தது. செய்தித்தாள்களின் மொத்த விளம்பர வருமானத்தில் 2.2 சதவீதம் மட்டுமே இணைய விளம்பரங்கள் மூலம் வந்தன. இந்த நிலையில், கூகுள் நியூசில் தங்களது சுட்டிகளை காட்டுவதற்கு கூகுளிடம் பணம் வசூலிப்பதற்கான சட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் பத்திரிகை முதலாளிகள் அந்தந்த நாட்டு நாடாளுமன்றங்களில் இப்போது ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

ணையத் தொழில் நுட்பத்தை செரிக்க முடியாமல் பித்தம் பிடித்த முதலாளிகளுக்கு இன்னொரு உதாரணம் இணைய தளங்களின் உள் பக்கங்களுக்கு லிங்க் கொடுப்பதை தடுக்க முயற்சிப்பது.

1996ம் ஆண்டு ‘ஷெட்லேண்ட் நியூஸ் என்ற பத்திரிகை தனது செய்திகளுக்கான நேரடி சுட்டியை கொடுப்பதன் மூலம் தனக்கு வர வேண்டிய வருமானத்தை தடுத்து நிறுத்துகிறது’ என்று ஷெட்லேண்ட் டைம்ஸ் என்ற இன்னொரு பத்திரிகை ஸ்காட்லாந்தில் வழக்கு தொடுத்தது.

‘நேரடியாக குறிப்பிட்ட செய்தியின் பக்கத்துக்கு லிங்க் கொடுப்பது தனது அறிவுசார் சொத்துரிமையை பாதிக்கிறது’ என்று வாதிட்டது ஷெட்லேண்ட் டைம்ஸ். ‘தனது முகப்பு பக்கத்தில் காட்டப்படும் விளம்பரங்களை பார்க்காமல் வாசகர்கள் செய்தியை படித்து விட்டுப் போவது தனது வருமானத்தை பாதிக்கிறது’ என்பது அதன் வாதம்.

இதே போன்ற வாதத்தை பயன்படுத்தி 2006ம் ஆண்டு நவுக்ரி டாட் காம் என்ற வேலை தேடும் தளத்தின் உள் பக்கங்களுக்கு பிக்சி என்ற தளம் நேரடி சுட்டிகளை கொடுப்பதை டெல்லி உயர்நீதிமன்றம் தடை செய்தது.

பொதுவாக இணைய தளங்களில் ஒரு முகப்பு பக்கமும் ஒரு சில அல்லது நூற்றுக்கணக்கான உள் பக்கங்களும் இருக்கின்றன. ஒரு தளத்தின் முகப்புக்கு வந்து அங்கிருந்து மற்ற பக்கஙளுக்கான சுட்டிகளை கிளிக் செய்து போகலாம். அல்லது நேரடியாக குறிப்பிட்ட பக்கத்தின் சுட்டிக்கு வந்து சேரலாம்.

வைய விரிவு வலை எனப்படும் wwwன் அடிப்படை வடிவமைப்பில் ஒரு தளத்துக்குள்ளேயே இருக்கும் பக்கங்களை சுட்டும் லிங்குகளுக்கும்,  இன்னொரு தளத்தின் முகப்பு பக்கத்தையோ அல்லது உள் பக்கங்களையோ சுட்டும்  லிங்குகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இணையத்தில் உள்ள எந்த ஒரு பக்கத்துக்கும் எந்த ஒரு பக்கத்திலிருந்தும் சுட்டி கொடுக்கலாம் என்பதுதான் அந்த வடிவமைப்பின் நோக்கம்.

‘தேடப்படும் சொல்லுக்கு பொருத்தமான பக்கங்களுக்கு நேரடியான சுட்டியை கொடுப்பது’  கூகுள் போன்ற தேடுபொறிகளை பயன்படுத்தி இணையத்தில் தகவல்களை எளிதாக தேடுவதற்கும் இன்றியமையாதது. தமது லாப வேட்டைக்காக இந்த அடிப்படை நுட்பத்தை முடக்க முயன்றன முதலாளித்துவ நிறுவனங்கள்.

றிவியலாளர்களின் புதிய கண்டுபிடிப்புகளை தமது லாப வேட்டை சட்டகத்துக்குள் அடக்க முயலும் முதலாளிகள், பெரும்பான்மை மக்களின் நலனுக்கு தொழில் நுட்பங்களை பலனளிக்காமல் செய்வதோடு அடுத்தக் கட்ட தொழில் நுட்ப வளர்ச்சியையும் முடக்கி விடுகிறார்கள்.

‘பூமியில் உள்ள அனைத்து வளங்களும், மனித குலத்தின் அறிவுச் செல்வங்களும் அனைத்து மனிதர்களுக்கும் உரியன’ என்ற அடிப்படையில் கட்டமைக்கப்படும் சோசலிச சமூகம்தான் மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்கும் முழுமையான தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். தனிச் சொத்துரிமை அடிப்படையிலான முதலாளித்துவம் ஒவ்வொரு கட்டத்திலும் தொழில் நுட்ப வளர்ச்சியை பின்னுக்கு இழுக்கிறது என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை.

மேலும் படிக்க:

சொத்துக் குவிப்பு வழக்கு : திரும்பவும் முதலில் இருந்து …?

6

ல்லிராணியின் சொத்துக் குவிப்பு வழக்கின் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞரான பி.வி.ஆச்சார்யாவின் ராஜினாமா கடந்த ஜனவரி 17 அன்று கர்நாடக மாநில‌ அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடந்த ஆகஸ்டு 14 அன்றே தனக்கு மிரட்டல் விடுவது மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்துவது போன்றவற்றில் எதிரிகள் வெற்றி பெற்று விட்டதாகவும், தனது வயது மற்றும் உடல்நிலையை காரணம் காட்டியும் ஆச்சார்யா பதவி விலகல் கடிதம் கொடுத்த போதிலும் வேறு நபர் நியமிக்கப்படும் வரை தொடருமாறு நீதிபதி மல்லிகார்ஜூனையா கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க அவர் பதவியில் தொடர்ந்தாலும், தற்போது தனி ஒரு குழு அமைக்கப்பட்ட பிறகு அவரது பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இனி முதலில் இருந்து ஜெயா தனது ஆட்டத்தை துவங்குவார். கன்னித் தீவு கதையின் இரண்டாம் பாகத்தை மக்கள் காணப் போகிறார்கள்.

1991 இல் ஆட்சிக்கு வந்த ஜெயாவின் சொத்து மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய்கள் தான். ஆனால் மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கி அவர் சேர்த்த தொகை 1996 முடிவில் 66 கோடி. எனவே இதனை விசாரிக்க உச்சநீதிமன்ற வழிகாட்டலின் பேரில் தனிநீதி மன்றம் அமைத்து விசாரணை நடைபெற்றது. 2001 இல் ஆட்சிக்கு வந்த ஜெயல்லிதா தனக்கு தொண்டை கட்டியிருக்கிறது, தமிழில் மொழிபெயர்த்தால் தான் தன்னைப் போன்ற கான்வெண்ட் தற்குறிகளுக்கு விசயம் புரியும் என்றெல்லாம் கேட்டு வழக்குக்கு வாய்தா வாங்கத் துவங்கினார். பிறகு ஏன் தன்னைப் போன்ற 24 மணி நேரம் உழைக்கும் அன்புச் சகோதரிக்கு வீட்டுக்கு கேள்வி அனுப்பக் கூடாது என நீதிமன்றத்தை கேட்டார் ஜெயா. திருச்சி விமானநிலையத்தின் அதிமுக மகளிரணி ஆட்டத்தை கேள்விப்பட்டிருந்த நீதிபதிகள் தங்களது எழுத்தர்களை அனுப்பி பதில் வாங்கினர்.

இதெல்லாம் சரிப்படாது எனக் கருதிய திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கவே 2005 இல் கர்நாடகா மாநிலத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதில் இவருடைய கூட்டாளிகளான சசிகலா, இளவரசி என பலரும் இவரைப் போலவே வாய்தா வாங்கத் துவங்கினர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடன் முதலில் ப்ரூப் செக் பண்ணி பிழை திருத்தம் கோரினர். அதன்பிறகு தனக்கு படித்துப் பார்க்க நேரம் வேண்டும் என்றனர். சில சமயங்களில் தனது வழக்கறிஞர் வீட்டு உறவினர் இறந்த காரணத்துக்கெல்லாம் சுதாகரன் விடுப்பு கேட்டிருக்கிறார். இப்படி இவர்கள் உச்சநீதி மன்றம், கர்நாடக உயர்நீதி மன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றங்களில் கொடுத்த மனுக்களின் எண்ணிக்கை 130 இருக்கும். இடையில் இந்த விசாரணையே செல்லாது எனக் கோரி 2009 வரை விசாரணை நடக்கவொட்டாமல் செய்தனர். 2011 இல் ஆட்சிக்கு வந்த பிறகு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு தெரியாமலேயே ஜெயா அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை அனைத்து சாட்சிகளையும் முதலில் இருந்து மீண்டும் விசாரிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மனு செய்தது.

அடுத்து ஆச்சார்யாவை நீக்க மனு கொடுத்தார்கள். நீதிபதியே தனியார் பல்கலை ஒன்றில் டிரஸ்டியாக இருக்கிறார் என்பதால் அவருக்கு நீதிபதியாகும் தகுதியே இல்லை என பல மனுக்களை மாற்றி மாற்றி போட்டனர். ஆச்சார்யா இதெற்கெல்லாம் அசைந்து கொடுக்காமல் கொட நாட்டுக்கு போகும் நேரத்தில் நீதிமன்றத்துக்கு வர முடியவில்லையா என நீதிமன்றத்திலேயே கேட்டார். இதனை வழிமொழிந்த இந்து பத்திரிகை, ராமதாசு, விஜயகாந்த் என அனைவர் மீதும் அவதூறு வழக்கை பதிவு செய்தார் அல்லிராணி. சோ போன்ற நபர்கள் ஆச்சார்யா மரபுப் படி குற்றவாளிக்குதான் ஆதரவாக இருக்க வேண்டும் என வாதிட்டனர். இழுத்தடிப்பு மற்றும் மிரட்டல் காரணமாக பதவி விலகுவதாகவும், இந்த போராட்டத்தில் தான் தோற்று விட்டதாகவும், தனக்கு மட்டும் 10 வயது குறைவாக இருந்தால் போராடியிருப்பேன் என்றும் கூறி விடைபெற்றார் ஆச்சார்யா.

இப்போது மீண்டும் வழக்கு துவங்குகிறது. புதிய அரசு வழக்கறிஞர்கள் குழு அனைத்து விபரங்களையும், மனு மற்றும் குற்றப்பத்திரிகைகளையும் படித்துப் பார்க்கவேண்டும். அதற்கு கொஞ்ச காலம் எடுக்கும். அதற்குள் நாடாளுமன்ற தேர்தல் வந்து விடும். அதில் நடக்கும் பகடைக்காய் ஆட்டத்தில் எந்த தரப்பையாவது தன்னை விடுவிப்பதன் மூலம் ஆதரிக்க முன்வருவார் அல்லிராணி. அதன் பிறகு ஒரு ஜவ்வு மிட்டாய். கடைசி வரை தண்டனை கிடைப்பதிலிருந்து தப்பித்து விடுவார் ஜெயா. சட்டம் ஒரு இருட்டறை என்பது உண்மையோ என்னவோ ஜெயாவை பொறுத்தவரை செருப்புக்குச் சமம்.

விஸ்வரூபம் : ” வீழ்ந்தால் விதையாக வீழ்வேன் – காலில் ! “

33

து நேற்று 31.1.2013 மதியம் மும்பையிலிருந்து வெளிவரும் மிட் டே நாளிதழில் வெளிவந்துள்ள கமலஹாசனின் பேட்டி. இது தொலைபேசியில் எடுக்கப்பட்ட பேட்டி என்பது இப்பேட்டியைப் படிக்கும்போது புரிகிறது. இந்தப் பேட்டி வெளிவந்த பின்னர் தான் அம்மாவின் சமரச அறிக்கை வெளிவருகிறது.

அதாவது இந்தப் பேட்டியைப் படித்த பிறகுதான் அம்மாவின் தாயுள்ளம் உருகியது. அப்புறம் கொதிக்கத் தொடங்கியிருக்கிறது என்று தெரிகிறது.

30 ம் தேதி இரவு என்.டி.டி.வி ஒளிபரப்பிய விவாதத்தின் போது, சோவின் முகத்தில் வழக்கமான தெனாவெட்டையும், குரலில் திமிரையும் காணவில்லை. பீதியும் அதை மறைக்க முயன்றதால் தோன்றிய கடுப்புமே இருந்தது.

“மிட் டே” பேட்டியையும் அம்மா படித்திருக்கக் கூடும். “என் திரைப்படத்தின் படச்சுருளை (சென்னையில்) கொளுத்தப் போகிறேன். பாசிசத்திடம் மண்டியிட மாட்டேன்”  என்றெல்லாம் பேட்டியில் கமலஹாசன் பேசியிருக்கிறார். ஒருவேளை ஏடாகூடமாக ஏதாவது செய்து கமலஹாசனுக்கு விளம்பரம் இன்னும் கூடிவிட்டால்? அந்த நினைப்பே திகிலூட்டியிருக்கும். விளைவுதான் அம்மாவின் அறிவிப்பு.

இந்தப் பேட்டியை மொழிபெயர்த்து வெளியிடக் காரணம் இருக்கிறது. இது வெளிவரும் இந்த நேரத்தில் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்திருக்கலாம். ஜெயலலிதா உதவுவதாகச் சொன்ன பிறகு நான் ஏன் உச்ச நீதிமன்றம் போகவேண்டும் (நியூ காஸிலுக்கு – இங்கிலாந்தின் நிலக்கரி சுரங்கவளம் நிரம்பிய பகுதி – எதற்கு நிலக்கரியை தூக்கிக் கொண்டு நடக்க வேண்டும்?) என்று நேற்று இரவு கூறியிருக்கிறார் கமலஹாசன்.

முப்பதாம் தேதி காலை “வீழ்வேன் என்று நினைத்தாயோ?” என்று வசனம் பேசியவர், அடுத்த நாள் “பாசிசத்திடம் சரணடைய மாட்டேன்” என்று பேட்டி கொடுத்தவர், 31 மாலையே அம்மாவுக்கு நன்றி தெரிவித்து விட்டாரே,  எவ்வளவு உயரத்திலிருந்து அவர் பல்டி அடித்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள இந்தப் பேட்டியில் அவர் காட்டும் ‘விசுவரூபம்’ நமக்கு தெரிந்திருப்பது அவசியம்.

தனக்கு எதிராக இப்படி ஒரு பேட்டி கொடுத்திருப்பது தெரிந்தும், அதைப் படித்து கொதித்த பின்னரும் அடங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகி விட்டாரே அம்மா, அதைப் புரிந்து ரசிப்பதற்கும் இதைப் படிக்க வேண்டும்.

________________________________________________________________________________________________________________

‘It’s creative abortion’

பேட்டி கண்டவர் : சுபாஷ் கே ஜா

கேள்வி: தமிழ்நாடு உங்களை ஏன் பழி வாங்க வேண்டும்? நீங்கள் தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்த நட்சத்திர நடிகர்.

கமல்: அவங்க அப்படி நினைக்கவில்லை. நான் சச்சரவு ஏற்படுத்தும் படங்கள் நிறைய எடுக்கிறேன் என்றும் என்னை அடக்கி மண்டியிட வைக்க வேண்டும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். ஆகவே, எனது படத்தில் வரும் பயங்கரவாதிகள் அல்-கொய்தாவைச் சேர்ந்தவர்கள் என்பதை வைத்து என்னை இஸ்லாமுக்கு எதிரானவன் என்று முத்திரை குத்துகிறார்கள். நான் இந்து தீவிரவாதம் பற்றி ஹே ராம் என்ற படம் எடுத்தவன் என்பது அவர்களுக்கு நினைவில்லை. பாப்ரி மசூதி இடிக்கப்பட்ட போது அதனை குரல் எழுப்பி கண்டித்த முதல் நடிகன் நான்தான் என்பதையும் அவர்கள் மறந்து விடுகிறார்கள். நான் முஸ்லீம் சமுதாயத்தின் நண்பன். சொல்லப் போனால், பல பன்னாட்டு விமான நிலையங்களில் எனது பெயரை வைத்து என்னை ஒரு முஸ்லீமாக பார்த்திருக்கிறார்கள்.

கேள்வி: விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமிய பயங்கரவாதத்தைக் காட்டுவதால் நீங்கள் எப்படி இஸ்லாமுக்கு எதிரி ஆகி விடுவீர்கள்? பார்க்கப் போனால், சுபாஷ் கெய்யின் பிளாக் & வொயிட், ரென்சில் டி’சில்வாவின் குர்பான் போன பல நல்ல இந்தி படங்கள் இந்திய முஸ்லீமின் அடையாள நெருக்கடியையும் பயங்கரவாதத்துடனான உறவையும் பற்றி காட்டியிருக்கின்றன.

கமல்: அதையெல்லாம் பற்றி அவர்களுக்கு கவலையே இல்லை. எனது படத்தில் ஒரு பயங்கரவாதி கூட இந்தியன் கிடையாது என்பதை கவனிக்க வேண்டும். திரைப்படத்தில் வரும் எல்லா பயங்கரவாத நடவடிக்கைகளும் ஆப்கானிஸ்தானில் நடக்கின்றன. அல்-கொய்தாவைப் பற்றி குறிப்பிடும் இடங்களுக்கு சில முஸ்லீம் சகோதரர்கள் ஆட்சேபணை தெரிவித்தார்கள், நான் அவற்றை நீக்கி விட்டேன்.

கேள்வி: அல்-கொய்தாவை பயங்கரவாத நடவடிக்கைகளுடன் இணைப்பதை ஏன் ஆட்சேபிக்க வேண்டும்?

கமல்: பகுத்தறிவு வாதத்தையா நாம் இங்கு வழிபடுகிறோம்? நான் செல்வி ஜெயலலிதாவிடம் விளக்கமளிக்க விரும்பினேன். நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அவரைச் சந்தித்து என் நிலைப்பாட்டை விளக்க முயற்சித்தேன். ஆனால், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகச் சொல்லி என்னை சந்திக்க மறுத்தார். நான் உள்துறை அமைச்சரைத்தான் சந்திக்க வேண்டும் என்று சொன்னார். உள்துறை அமைச்சரும் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது என்ற அதை கருத்தைதான் சொல்லப் போகிறார். நான் அவரை சந்தித்து எனது திரைப்படம் பற்றியும், வழக்கின் நிலையைப் பற்றியும் விளக்கியிருக்கிறேன். நான் உள்துறை அமைச்சரை சந்தித்தேன் என்பது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தெரியாமல் இருக்க வழியே இல்லை. ஜெயலலிதாவின் கவனத்துக்கு வராமல் தமிழ்நாட்டில் ஒரு இலை கூட அசைவதில்லை.

கேள்வி: இந்த பிரச்சனை ஒரு திரைப்பட வெளியீட்டைத் தாண்டிய வடிவங்களை எடுத்திருக்கிறது.

கமல்: எல்லாவற்றையும் உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. பிரச்சனை எனது திரைப்படத்தைத் தாண்டி வெகு தூரம் போய் விட்டது என்று நினைக்கிறேன். விளைவுகளை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். விஸ்வரூபம் திரைப்படத்தின் தமிழ் பிரிண்டை கொண்டு போய் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகம் முன்பு எரிக்கப் போகிறேன்.

அவர்கள் என் குழந்தையை கருவிலேயே கொல்கிறார்கள். அதற்கு அப்படி ஒரு முறையான சிதையை நான் வழங்கி விட்டுப் போகிறேன். நான் பாசிசத்துக்கு அடிபணிய மாட்டேன். இது என்னை பொருளாதார ரீதியாக முடித்துக் கட்டும் சதி. என்னைக் கொன்று போடும் சதி. நான் இன்னொரு படம் எடுக்கவே முடியாது என்ற நிலையை ஏற்படுத்தும் சதி, அப்படிப்பட்ட ஒரு நிலை என்னைப் பொறுத்தவரை சாவுக்கு நிகரானது.

நான் சொன்னது போல, இது பகுத்தறிவால் புரிந்து கொள்ள முடியாத ஒரு தாக்குதல். ஆனால், நான் அதை பகுத்தறிவுக்கு உகந்த முறையில்தான் எதிர் கொள்ள வேண்டும், ஏனென்றால் மற்றவர்கள் அப்படி இல்லை என்றாலும் கலைஞர்களான நாங்கள் பகுத்தறிவுவாதிகள்.

கேள்வி: விஸ்வரூபத்தை டி.டி.எச்.சில் வெளியிடுவதற்கான உங்கள் விடாப்பிடியான முயற்சியும், இப்போது தமிழ்நாட்டில் அடிப்படைவாத சக்திகளை எதிர்க்கும் உங்கள் போராட்டமும், திரைப்படத்தை வெளியிடுவதை தமிழ்நாடு அரசு தடை செய்திருப்பதும் பாலிவுட்டில் உங்களை ஒரு புகழ்பெற்ற போராளியாக ஆக்கியிருக்கிறது என்பதை உணர்கிறீர்களா?

கமல்: அப்படியா? இப்பவாவது நடந்ததே! (சிரிக்கிறார்). இந்த விஷயம் நம் எல்லோரையும் பாதிக்கக் கூடிய ஒன்று. இந்தத் தடைகளுக்கு எதிராக சிலர் குரல் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த எதிர்ப்புக் குரல்கள் எதையும் மாற்றி விடப் போவதில்லை. அவர்கள் (தமிழ்நாடு அரசு) நான் அழிந்து போகும் வரை படத்தை தாக்கப் போகிறார்கள். பிறப்பதற்கு முன்பே என் குழந்தையை கொல்வதைப் போன்றது அது. ஒரு கலையின் சிதைவு அது.

கேள்வி: அவர்கள் உங்களை ஏன் தாக்க வேண்டும்.? நீங்கள் டி.டி.எச் விஷயத்தை கையில் எடுத்ததாலா?

கமல்: அதை விட ஆழமானது இது. ஆனால் அதைப்பற்றி நாம் பேச வேண்டாம். எனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது.

கேள்வி: கேட்கவே கஷ்டமாக இருக்கிறதே…. அவர்களால் உங்களை அழித்து விட முடியுமா?

கமல்: அவர்கள் என்னை அழித்து விட முடியும்! நான் மிகவும் கர்வம் பிடித்த மனிதன். லாஸ் ஏஞ்சலீசில் என் திரைப்படத்தின் வெற்றிகரமான உலக வெளியீட்டை முடித்துக் கொண்டு திரும்பி வந்திருக்கிறேன். நான் கேள்விப்பட்டது வரை, இது வரை அமெரிக்காவில் வெளியான வெளிநாட்டுப் படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படம் அது.

கேள்வி: விஸ்வரூபத்தின் இந்தி பதிப்பு எப்போது வெளியிடப்படவிருக்கிறது?

கமல்: பிப்ரவரி 1 என்று திட்டமிட்டிருக்கிறோம். வியாழக்கிழமை அன்று மும்பையில் வெளியீட்டு விழாவுக்கும் திட்டமிட்டிருக்கிறோம். ஆனால், படத்தை வெளியிட விடுவார்களா என்று தெரியவில்லை. என் திரைப்பட வெளியீட்டு திட்டங்கள் பெண்களால் தடுத்து நிறுத்தப்படுவது எனக்கு பழகிப் போன ஒன்றுதான்.

கேள்வி: இந்த முறை உங்கள் வெளியீட்டுத் திட்டங்களை தடுத்து நிறுத்துவதாக நீங்கள் எந்தப் பெண்ணை சொல்கிறீர்கள்?

கமல்: நான் எதையும் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி: தணிக்கைக் குழு அனுமதி கிடைத்த பிறகும் தமிழ்நாடு அரசு உங்கள் திரைப்படத்தை ஏன் தடை செய்தது?

கமல்: தமிழ்நாட்டில் தணிக்கைக் குழு தேவையில்லை என்பது தெளிவு. அவர்கள் தமிழ்நாடு அலுவலகத்தை இழுத்து மூட வேண்டியதுதான்.

கேள்வி: உங்களுக்கு பெருமளவு ரசிகர்கள் இருக்கும் மலேசியாவிலும் இந்த படம் தடை செய்யப்பட்டிருக்கிறது?

கமல்: ஆம். இந்தியாவில் இங்கு இருக்கும் எனது முஸ்லீம் சகோதரர்கள் மலேசியாவில் இருக்கும் அவர்களது முஸ்லீம் சகோதரர்களிடம் பேசியிருக்கிறார்கள்.

கேள்வி: விஸ்வரூபத்துக்கு எதிரான போராட்டங்களை ஆரம்பித்து வைத்த டி.டி.எச். பிரச்சனை உங்கள் திரைப்படத்துக்கான இஸ்லாமிய எதிர்ப்புகளுடன் இணைந்து கொண்டது எப்படி?

கமல்: எனக்கு அந்த கருத்தில் உடன்பாடு இல்லாவிட்டாலும், என் திரைப்படத்தின் டி.டி.எச். வெளியீடு திருட்டு வி.சி.டி. சந்தையை முழுமையாக அழித்து விடும் என்று நான் மதிக்கும் சிலர் கருதுகிறார்கள்.

கேள்வி: வட இந்திய மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளும் விஸ்வரூபத்தை டி.டி.எச்.சில் வெளியிடும் உங்கள் திட்டத்திற்கு எதிராக இருக்கிறார்கள்?

கமல்: என்னுடைய டி.டி.எச். திட்டத்தை எதிர்ப்பதன் மூலம் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் கலைத் திருடர்களுடன் சேர்ந்திருக்கிறார்கள் என்பதுதான் கவனிக்க வேண்டியது.

கேள்வி: அப்படீன்னா, கதை இன்னும் மர்மமாகிறது?

கமல்: என் காவல் துறை நண்பர்கள் ஒட்டுக் கேட்கிறார்கள் என்று நம்புகிறேன். போலீஸ்படை மதத்துக்கு அப்பாற்பட்டது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஒரு வேளை, காக்கி நிறமே ஒரு மதம்தானோ?

கேள்வி: உங்களுக்கு நகைச்சுவை உணர்வு குறையாமல் இருக்கிறது தெரிகிறது.

கமல்: எனது வீழ்ச்சியை அனுபவித்து மகிழும் பலரைப் போல நானும் நடப்பது அனைத்தையும்  அனுபவித்து மகிழ்கிறேன்.

கேள்வி: இது சிரிக்கக் கூடிய விஷயம் இல்லை.

கமல்: நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை, உண்மையிலேயே சொல்கிறேன். என் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டாலும் நான் இதை சொல்ல முடியும்: என் சொத்து முழுவதும், எல்லாமே அடகு வைக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 1க்கு முன்பு நிதி திரட்டி கொடுக்கா விட்டால் எனக்கு சொந்தமான அனைத்தையும் இழந்து விடுவேன்.

கேள்வி: உங்கள் வீட்டை அடகு வைத்தா உங்கள் கனவுகளுக்கு பணம் திரட்டினீர்கள்? அது பழங்கால பழக்கம் இல்லையா.

கமல்: ஆம்! அது பழங்கால பழக்கமாக இருக்கலாம். ஆனால் அதைத்தான் நான் எப்போதும் செய்திருக்கிறேன். ஏன் பழங்கால பழக்கம்? அது சத்யஜித் ரே உணர்வு. பதேர் பாஞ்சாலி எடுப்பதற்கு அவர் எல்லாவற்றையும் அடகு வைத்தார். ரே சார் தனது மனைவியின் நகைகள் அனைத்தையும் அடகு வைத்து பதேர் பாஞ்சாலி எடுத்த கதையை கேட்டு வளர்ந்தவன் நான். நான் இன்னும் பல படிகள் போக விரும்பினேன். சரி, இப்போது என்னை ஒரு ரே-பேன் என்று கூப்பிடலாம் (மனம் விட்டு சிரிக்கிறார்)

கேள்வி: விளையாடுகிறீர்களா, என்ன?

கமல்: ஒரு விளையாட்டு மயிரும் இல்லை. உண்மையாக சொல்கிறேன். திரைப்படம் வெளியாகா விட்டால் நான் எல்லாவற்றையும் இழந்து விடுவேன். நான் ஒரு ஓட்டாண்டியாகி விடுவேன். எந்த ஒரு தனிமனிதனும் சொத்து வைத்திருக்கக் கூடாது என்று நான் நம்புகிறேன். அது மக்களுக்காக இருக்க வேண்டும். நான் என்னவெல்லாம் சொத்து வைத்திருக்கிறேனோ அது எல்லாம் சினிமா மூலம் வந்தது. நான் சினிமாவுக்கே திரும்ப கொடுக்கிறேன். அதனால்தான் நான் அதை சினிமாவில் திரும்பக் கொட்டினேன். எனக்கு கடன் கொடுத்தவர்களுக்கு பிப்ரவரி 1க்குள் பணம் கொடுக்கா விட்டால், எல்லா சொத்துக்களையும் எடுத்துக் கொள்வார்கள். என் கடன்காரர்கள் எனது நிலையைப் பார்த்து பரிதாபப்படப் போவதில்லை. நான் கைது செய்யப்படலாம். அது பிரச்சனையில்லை. காந்திஜி கூட கைது செய்யப்பட்டார்.

கேள்வி: உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்று உங்களுக்கு எப்படி தெரியும்?

கமல்: இதை எல்லாம் நான் முன்பே பார்த்திருக்கிறேன். நான் ஒரு ‘டேப்’ (tap) ஆட்டக்காரன்.

கேள்வி: இந்த நேரத்தில் சினிமா மீது எவ்வளவு காதலை உணர்கிறீர்கள்?

கமல்: நிறைய. எல்லா திரைப்பட தயாரிப்பாளர்களும் சம்பாதிக்கும் அத்தனையையும் சினிமாவுக்கே திருப்பிக் கொடுக்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: ஒட்டு மொத்த திரைப்படத் துறையும் உங்களுக்கு ஆதரவாக ஏன் வரவில்லை?

கமல்: அவர்களுக்கு என்னை தெரியக் கூட செய்யாது. பாலிவுட்டில் சிலர் என் பக்கம் இருக்கிறார்கள்.

கேள்வி: விஸ்வரூபம்தான் உங்கள் எதிரியா?

கமல்: இல்லை. விஸ்வரூபம் எனது குழந்தை, அரசியல்தான் எனது எதிரி. அவர்கள் என் குழந்தையை கருவிலேயே கலைக்க விரும்புகிறார்கள். கிறிஸ்துவர்களுடனும், முஸ்லீம்களுடனும், அரசியல்வாதிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி என் குழந்தையை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமாம். என் படைப்புத் திறனை நான் ஏன் பாசிசத்துக்கு முன் வைக்க வேண்டும்?

கேள்வி: உங்கள் நிதி நெருக்கடி இப்படி இருக்கும் போது, உங்கள் அடுத்த படத்தை எப்படி எடுப்பீர்கள்?

கமல்: ஒரு பொது நிறுவனம் மூலம் நான் பணம் திரட்டுவேன். என்னைப் போலவே சிந்திப்பவர்களை வைத்து என் கனவுகளுக்கு பணம் திரட்டுவேன். ஆனால் நான் மண்டியிட மாட்டேன். பாசிசத்துக்கு அடிபணிய மாட்டேன்.

அனைத்து சாதி அர்ச்சகர் போராட்ட வழக்கு நிதி தாருங்கள் !

11

30.1.2013 அன்று சென்னை மெமோரியல் ஹால் அருகில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஆற்றப்பட்ட உரைகளை கீழே தொகுத்து தந்திருக்கிறோம்.

2006 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்காலத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்ட 206 மாணவர்களை, அர்ச்சகர்களாக நியமிக்க கூடாது என்று மதுரை மீனாட்சியம்மன் கோயில் பார்ப்பன அரச்சகர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றனர்.

திமுக ஆட்சிக்காலத்தில் வழக்கை நடத்தக்கூடாது என்று வேண்டுமென்றே இழுத்தடித்தனர். திமுக அரசும் நடத்துவதில் தீவிரம் காட்டவில்லை. இப்போது அம்மா ஆட்சி வந்துவிட்டது.

பார்ப்பன அர்ச்சகர்களுடன் பேசி சுமுகமாக ஒரு தீர்வு காண இருப்பதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது. சுமுகத்தீர்வு என்பதன் பொருள் என்னவென்றால், சீரங்கம், மதுரை, மயிலை உள்ளிட்ட ஆகம விதிப்படி அமைந்த கோயில்களில் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத மாணவர்களை நியமிக்காமல், அவர்களுக்கு மற்ற மாரியாத்தா, காளியாத்தா கோயில்களை ஒதுக்கிவிடுவது என்பதே. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பயிற்சி முடித்த மாணவர்களை தொடர்பு கொண்டு, வழக்கெல்லாம் வேண்டாம், வேலை போட்டுத் தருகிறோம் என்று ஆசை காட்டத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த வழக்கில் வாதி (petitioner) மதுரைக் கோயில் அர்ச்சகர்கள்; பிரதிவாதி (Respondent) தமிழக அரசு. இதில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் தலையீடு செய்து தன்னையும் வழக்கில் சேர்த்துக் கொண்டிருக்கிறது. வழக்கை மனித உரிமைப் பதுகாப்பு மையம் நடத்துகிறது

ஜனவரி 30 ஆம் தேதியன்று வழக்கின் இறுதி விசாரணை தொடங்கிவிட்டது. பார்ப்பன அர்ச்சகர்கள் சார்பில் வழக்குரைஞர் பராசரன் தனது வாதுரைகளை முன்வைக்கத் தொடங்கி விட்டார். தமிழக அரசின் சார்பில், அம்மாவின் வழக்குகளுக்கு ஆஜராகும் பி.பி.ராவ் என்ற மூத்த வழக்குரைஞர் நியமிக்கப்பட்டிருக்கிறார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் மூத்த வழக்குரைஞர் காலின் கன்சால்வேஸ் ஆஜராகிறார்.

சம்பிரதாயமா, மதச்சார்பற்ற சட்டமா (ceremonial law or secular law)  என்றால் சம்பிரதாயமே மேல்நிலை வகிக்கும். இதுதான் அரசியல் சட்டத்தின் நிலை. திமுக அரசு போட்டிருக்கும் அரசாணை, உரிய சட்டத்தின் துணை இல்லாமல் போடப்பட்டிருப்பதால் அது செல்லத்தக்கதல்லை. அவ்வாறு ஒரு சட்டமியற்ற முடிந்தால் இயற்றிக் காட்டட்டும், நான் உடைத்துக் காட்டுகிறேன். அது அரசியல் சட்டம் வழங்கும் மத உரிமைக்கு எதிரானது. எனவே செல்லத்தக்கதல்ல” என்று கூறி தனது வாதத்தை தொடங்கியிருக்கிறார் பராசரன்.

அரசியல் சட்டத்தின் பிரிவு 25, 26 இன் கீழ் தம.து சாதி உரிமையையே இந்து மத உரிமையாக கோருகின்றனர் பார்ப்பனர்கள். அதாவது, சமூக நடவடிக்கைகளில் குற்றமாக்கப்பட்ட தீண்டாமையை, மத ரீதியில் தமது உரிமை என்று கூறுகின்றனர்.

மிகவும் கடினமான சவாலான இந்த வழக்கை பெரிதும் கஷ்டப்பட்டு இறுதி நிலைக்கு தள்ளிக் கொண்டு வந்திருக்கிறோம். வலிமையான முன்னணி வழக்குரைஞர்கள் பட்டாளம் ஒன்றை நிறுத்தி நடத்தப்பட வேண்டிய அளவுக்கு சிக்கலான சவாலான வழக்கு இது.

அப்படிப்பட்ட வழக்குரைஞர்களை நியமிக்க வேண்டுமானால், நமது தரப்பில் நியமிக்க வேண்டுமானால் பல இலட்சங்கள் தேவை. அது எமது சக்திக்கு அப்பாற்பட்டது. வாய்தாக்களுக்கு அலைந்தும், வாய்தாவை ஆட்சேபிக்க அமர்த்தப்படும் வழக்குரைஞர்களுக்கு கட்டணம் கொடுத்துமே சில இலட்சங்கள் போய் விட்டன.

இந்து சட்டத்தின் மோசடித்தன்மையை, இந்த நாட்டின் போலி மதச்சார்பின்மையை அம்பலப் படுத்துகின்ற வாய்ப்புகளை கொண்ட வழக்கு இது. கேட்பாரற்று கைவிடப்பட்டிருந்த இப்பிரச்சினையை, இதன் அரசியல் முக்கியத்துவம் கருதி நாங்கள் எடுத்துக் கொண்டோம். இதில் போராடுவதற்கும் வெற்றி பெறுவதற்கும் உழைப்பு மட்டும் போதுமானதல்ல, நிதியும் வேண்டும்.

இவ்வழக்குக்கு நன்கொடை தாருங்கள் என்று கோருகிறோம். நன்கொடையை அளிக்க விரும்புகிறவர்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

பணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

KANNAIAN RAMADOSS
PUTHIYA KALACHARAM,
NO.16, MULLAI NAGAR SHOPPING COMPLEX,
SECOND AVENUE, ASHOK NAGAR, CHENNAI, 600 083.
PHONE:044- 23718706.
செல்பேசி: அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876

நெட்பாங்க் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் அல்லது தபால் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கவும்.

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 612801107389
IFSC Code: ICIC0006128
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings

____________________________________________________

– வினவு

 ____________________________________________________

ஆர்ப்பாட்ட செய்தித் தொகுப்பு:

தலைமை உரை :
செ.அ. சுரேசு சக்தி முருகன்,
இணை செயலாளர்,
மனித உரிமை பாது காப்பு மையம்.

40 ஆண்டு காலமாக தமிழகத்தில் நடைபெறும் பார்ப்பன சாதிய கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டத்தின் தொடர்ச்சியாக கருவறையில் நிலவும் தீண்டாமைக்கு எதிராகவே இப்போராட்டம். உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடைப்பெற்று வரும் வழக்கு இறுதி விசாரணையில் இருக்கிறது. வழக்கினை தொடர்ந்த பார்ப்பனர்களோடு தமிழக அரசு சமரசமாக பேசிக் கொள்வதாக கூறி செய்யப்பட்டு வரும் பார்ப்பன சூழ்ச்சியினை அம்பலப்படுத்துவதற்காகவே இப்போராட்டம்.

…. 2002ல் வெளிவந்த ஆதித்தியன் வழக்கு தீர்ப்பில் குறிப்பிட்ட உட்சாதியிலிருந்து அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திய பின்னர், 2006ல் திமுக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அரசாணையையும், இந்து அறநிலைத்துறை சட்டத்தில் திருத்தம் செய்ய அவசர சட்ட திருத்தமும் கொண்டு வந்தது. அர்ச்சகர் பயிற்சியினை 206 மாணவர்களுக்கும் கொடுத்தது.

ஆகமப்படி பார்ப்பனகள் தவிர பிற சாதிக்காரர்கள் அர்ச்சகராகி சாமி சிலையை தொட்டு பூஜைகள் செய்தால் தீட்டாகிவிடும் என்று கூறி, மதுரை மீனாட்சியம்மன் கோவில் சிவாச்சாரியாக்கள் அவசர சட்டத்திருத்தத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றுவிட்டனர். தடையாணை பெற்று 7 ஆண்டுகள் கடந்துவிட்டது. அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் இன்றும் அர்ச்சகராக முடியவில்லை. திமுக அரசும் வழக்கினை விரைந்து நடத்த முயற்சிக்கவில்லை. மனித உரிமை பாதுகாப்பு மையம் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உருவாக பின்புலமாக இருந்தது. அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதனை உச்சநீதிமன்ற வழக்கில் எதிர்மனுதாரராக இணைத்து வழக்கினை நடத்தி வருகின்றது. தற்பொழுது இவ்வழக்கு இறுதிவிசாரணைக் கட்டத்தில் இருக்கின்றது.

இந்நிலையில் கடந்த விசாரணையின்போது அரசு தரப்பிலிருந்து நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தீர்க்கப்பட வேண்டிருப்பது பார்ப்பனரல்லாதோருக்கு சாமி சிலையைத் தொட்டு பூசை செய்ய உரிமை இருக்கிறதா என்பதுதான். இது சொத்து தகராறோ அல்லது பணப்பிரச்சினையோ அல்ல. இது நீதிமன்றத்திற்கு வெளியில் சமரசம் செய்துகொள்ள இயலாத காரியம். 2000 ஆண்டு காலமாக பார்ப்பனீயம் இது போன்ற சூழ்ச்சிகள் மூலம் தான் தன்னை நிலைநிறுத்தி வந்துள்ளது. இப்பார்ப்பன சூதை வெல்ல அனுமதித்தால் கருவறையில் நிலவும் தீண்டாமையை ஒழிக்க முடியாது. இன்னும் பல ஆண்டுகள் நாம் சாதி இழிவை சுமக்க வேண்டியிருக்கும்.

ரங்கநாதன்,
மாநில தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்.

2006 அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை கொண்டு வந்தார்கள். 2007-2008ல் பயிற்சி முடித்தோம். 2006ல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆதிசிவாச்சார்யர்கள் சங்கம் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். சிவாச்சாரியார்கள் சங்கம் மற்ற சாதிக்காரர்கள் சாமி சிலையை தொட்டால் தீட்டாகிவிடும் என்கிறார்கள்…

அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் பலர் பல தனியார் கோவில்களில் பூசை செய்துவர்றாங்க. தீட்டாகவில்லை. தமிழக அரசு விரைந்து வழக்கினை முடிக்க வேண்டும். மதுரை ஆதிசிவாச்சாரியார் சங்கத்துடன் பேசி சுமூக தீர்வு காணுகிறோம் என்று தமிழக அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் சென்ற மாதம் வாய்தா வாங்கி இருக்கிறார்.

. …நாங்கள் படித்த தகுதிக்கேற்ப பெரிய கோவில்களில் பணி நியமனம் வழக்கவேண்டும். காஞ்சி சங்கராச்சாரியார், தேவநாதன் போன்றோர் சாமி சிலைகளைத் தொட்டால் தீட்டில்லை, ஆனால் நாங்கள் தொட்டா தீட்டாகுமா. கோவில் கருவறையில் நிலவும் தீண்டாமையை ஒழிக்க வேண்டும். தமிழக அரசு தகுதிக்கேற்ப பணிநியமனம் செய்ய வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மைய செயலாளர் கண்ணன்

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கப் போகிறேன் என்று கலைஞர் அனைத்து சாதி அர்ச்சகர் ஆகும் சட்டத்தை பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அர்ச்சகராகலாம் என்று கொண்டு வந்தார். …பட்டர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியதும் கலைஞர் பின்வாங்கிவிட்டார். மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்திருக்கும் நிலையில் மனித உரிமை பாதுகாப்பு மைய மாணவர்களை சந்தித்து, ஒவ்வொரு ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உருவாக்கினோம்.

இவர்கள் தீண்டாமையை ஒழிக்கக் கற்றவர்கள். பயிற்சி பெற்ற மாணவர்கள் சிறுசிறு கோவில் வேலை செய்கிறார்கள். தடையாணை பெற்ற பார்ப்பனர்களிடமே வேலைப் பார்ப்பது வேதனை எனக் கருத்து தெரிவிக்கின்றனர்.

உச்சநீதிமன்றம் பார்ப்பன சிவாச்சாரியார்களுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தால் மக்கள் மன்றம் முன் இப்பிரச்சினையை எடுத்துச் செல்வோம்.விடமாட்டோம்.

வெற்றி வேல் செழியன்,
மாநில அமைப்பு செயலாளர்,
பு.ஜ.தொ.மு

தொழிற்சங்கம் என்றால் தொழிலாளர் பிரச்சினை, சம்பள உயர்வு போராட்டத்திற்கு போவோம் என்று நினைப்பார்கள். ஆனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை அமல்படுத்தக்கோரி நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்திருக்கிறேன்.

மற்ற சாதிக்காரங்க கருவறையில் போனால் சாமி வெளியேறிவிடும் என்று சொல்கிறார்கள். தேவநாதன், ஜெயேந்திரன் பண்ண அட்டூழியங்களில் கோவில் இடிந்து வீழ்ந்தல்லவா இருக்கவேண்டும். மீனாட்சி அம்மன் கோவில் பார்ப்பனர்களின் யோக்கியதையை பற்றி அக்கோயிலுக்கு அருகில் உள்ள சாதாரண மக்களிடம் விசாரித்தால் உண்மை தெரியும்.

தின்று தின்று கொழுத்த கோவில் பூஜை செய்யும் பார்ப்பனர்களை காண்ராக்டர்களிடம் வேலைக்கு விட்டால் முதுகெலும்பை உருவி தொங்க விட்டு விடுவார்கள்.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் அறிவழகன்

இந்தியாவை மனுசாஸ்திரங்கள் பிடித்துக்கொண்டு ஆட்டுகின்றது. அர்ச்சகருக்கு படித்தாலும் ஆலயத்திற்குள் நுழையக் கூடாது என்னுமளவிற்கு மனுதர்மம் பிடித்துக்கொண்டு ஆட்டுகிறது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற செந்தில்

பார்த்தசாரதி கோயிலில் அனைத்து சாதியினர் அர்ச்சகராகும் சட்டம் மூலம் 32 மாணவர்கள் பயின்றோம். தினமும் காலையில் நித்ய அனுஷ்டானங்கள் செய்தோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற பயிற்சி விளம்பரத்தைப் பார்த்து அர்ச்சகராகும் நோக்கில் வந்தோம். அந்த வேலையில் திருவண்ணாமலை திரௌபதி கோவிலில் பூஜை செய்து கொண்டு இருந்தேன். நாங்கள் ஒரு வருடமாக பயிற்சி பெற்றோம். மேலும் 6 மாதம் நீட்டித்தார்கள். அப்போதே சந்தேகம் வந்ததது. பயிற்சி பெற்று சான்றிதழ் வாங்க அலைய வேண்டி இருந்தது. திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மறுத்தார்கள். காஞ்சிபுரத்தில் பதிவு செய்துள்ளார்கள் என்று கூறியும் வெகு நேரம் காக்க வைத்து தான் பதிவு செய்தார்கள். நாங்கள் அர்ச்சகராக வேண்டுமென்று முடிவளர்த்து, மாலை போட்டு போகும் போது எங்களை கேலிக்குரியவர்களாகவே பார்த்தார்கள்.

தஞ்சையில் ஒரே குருக்கள் மூன்று கோவில்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். எல்லா கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படவில்லை. எங்களுக்கு அர்ச்சகராகும் நியமன வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

திரு.வி.வி.சுவாமிநாதன்,
முன்னாள் அமைச்சர்,
இந்து சமய அறநிலையத்துறை.

தமிழகத்தில் கட்டாய இந்தி திணிப்பு செய்த போது அதை எதிர்த்து போராடியதற்காக என்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தனர். அப்போது சிதம்பரம் நகர்மன்ற தலைவராக இருந்தேன். நகராட்சி அலுவலகத்திற்கு எதிரில் உள்ள கிளை சிறையில்தான் அடைக்கப்பட்டேன். அறிஞர் அண்ணா அவர்கள் எனக்கும் மற்றவர்களுக்காகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதற்காகதான் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியை இழந்த்து. தமிழகத்தில் தமிழுக்காக பலபேர் போராடி உயீர்நீத்தனர்.

கோவிலில் தமிழ் போகலாம் தமிழன் போக்கூடாது என்றால் எப்படி ஏற்க முடியும். இந்தியை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டம் போல் கருவறை தீண்டாமைக்கு எதிராக மக்கள் போராட்டம் எழும் என தமிழக அரசை எச்சரிக்கிறேன். எனக்கு 87 வயதாகிறது. இத்தகைய போராட்டங்களில் உயிரை விடவும் தயாராக இருக்கிறேன்.திமுக தலைவர் கலைஞர் அவர்கள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டத்திருத்தம் கொண்டு வந்தார். என்ன நெருக்கடியோ தெரியவில்லை சட்டமன்றத்தில் அதை நிறைவேற்றாமல் திரும்ப பெற்றுவிட்டார். திமுக அரசு செய்த தவறை அதிமுக அரசாங்கம் சரி செய்ய வேண்டும்.அதற்கு வருகின்ற சட்டமன்ற கூட்டத்தில் முழுமையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

பழக்க வழக்கம் என்ற பெயரில் கருவறையில் தீண்டாமையை எப்படி கடைபிடிக்க முடியும். அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பிறகு பழக்க வழக்கம் என்பது சமத்துவத்திற்கு எதிராக இருந்தால் அது செல்லாது என 2002 உச்சநீதிமன்றம் ஆதித்தியன் என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. தற்போது மதுரை சிவாச்சாரியர்கள் உச்சநீதிமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்கு தடை வாங்கியுள்ளனர். தமிழக அரசு சமுக தீர்வு என்ற பெயரில் நமது சமூக நீதியை விட்டு கொடுத்துவிடக்கூடாது. மக்களும் கருவறையில் தமிழன் நுழைய வேண்டும் என்ற போராட்டத்தை இந்தி எதிர்ப்பு போராட்டம் போல் நடக்க வேண்டும் என கூறி பேச்சை முடித்தார்.

வழக்குரைஞர் சி.ராஜு,மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாது காப்பு மையம்,

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று 2006 திமுக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு எதிராக மதுரை சிவாச்சாரியர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்த்தரவு பெற்றனர். அதன் இறுதி விசாரணை நாளை 31-1-13 அன்று வர இருக்கிறது.

பயிற்சி முடித்த மாணவர்கள் 206 பேருக்கு ஏதாவது ஒதுக்குப்புற கோவில்களில் பணி நியமனம் கொடுத்து விட்டு கருவறை தீண்டாமைக்கு எதிரான சட்டத்தை அப்படியே விட்டு தப்பித்து விடலாம் என தமிழக அரசு செயல்படுவதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.

மக்கள் அரசின் அங்கம், நாம் உரிமைக்காக போராடினால்தான் அரசு சரியானபடி செயல்படும்.1970 பெரியார் கருவறை நுழைவு போராட்டத்தை அறிவித்த போது அன்றைய திமுக அரசாங்கம் பெரியாரை நாங்கள் கைது செய்ய மாட்டோம் என்று அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமையை ஒழித்து சட்டம் நிறைவேற்றியது. நேராக உச்சநீதிமன்றம் சென்ற பார்ப்பனர்கள் சாதகமான உத்தரவை பெற்றனர். வாரிசுரிமையை ஒழித்து இயற்றப்பட்ட சட்டம் செல்லும் உன உச்சநீதிமன்றம் சொன்னது. அதே நேரத்தில் அர்ச்சகர் நியமனத்தில் பழக்கவழக்கம், ஆகமத்தை அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறியது. தமிழக அரசு வழக்கறிஞர் ஒத்துக் கொண்டார். பல சட்ட வல்லுனர்கள் இன்றும் இந்த தீர்ப்பு யாருக்கு சாதகம் என சொல்ல முடியாத குழப்பமான தீர்ப்பு. ஆனால் பெரியார் அன்று 1972 –ல் இந்த தீர்ப்பு பற்றி கூறும்போது ஆபரேசன் சக்சஸ், நோயாளி மரணம் என்று மிக நுட்பமாக தெளிவுபடுத்தினார். இலைமறையாக இருந்த நம்மீதான சாதி இழிவினை இந்த தீர்ப்பு பூதக்கண்ணாடி வைத்து பெரிதுபடுத்தி காட்டிவிட்டது என்றார்.

40 ஆண்டுகால போராட்டத்தின் தொடர் ஓட்டச் சுடர், இன்று நம் தலைமுறையில் நம் கையில் இருக்கிறது. அய்யா வி.வி.சாமிநாதன் அவர்கள் சிதம்பரம் தில்லை நடராசர் கோவிலில் தமிழ் உரிமையை நிலை நாட்டும் போராட்டத்திலும், கோவிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போராட்டத்திலும் இறுதிவரை நம் உடன் இருந்தவர். பார்ப்பனர்கள் முதலில் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறுவார்கள், பிறகு அரசில் உள்ள அதிகாரிகள், அரசியல்வாதிகள் மூலம் வழக்கை ஒன்றுமில்லாமல் செய்வார்கள். இதுதான் காலம் காலமாக பார்ப்பனர்கள் செய்யும் பித்தலாட்டம்.1982-ல் நடராசர் கோவிலில் நிர்வாக அதிகாரி நியமிக்க வேண்டும் என போட்ட உத்தரவு, 2008-ல் நாங்கள் ஆறுமுகச்சாமியை தரப்பினராக சேர்ந்து பொதுக்கோவில் என்று சொல்லி வெற்றி பெற்றோம். பொதுக்கோவில் என்ற உண்மையை நாங்களா கண்டுபிடித்தோம். அரசு ஏன் செய்யவில்லை. நூற்றாண்டுகளுக்கு பிறகு இன்று உண்டியல் வைக்கபட்டுள்ளது. பலகோடி வருவாயை ஈட்டி உள்ளது.

அது போல் உச்ச நீதிமன்றத்தில் 1972-ல் நடந்த பார்ப்பன சூழ்ச்சி இன்று நடக்காது. பெரியாரின் வாரிசுகளாக இன்று சட்டம் படித்த எங்களைப் போன்றோர் இதை மக்கள் மத்தியிலும் பேசுகிறோம். உச்சநீதிமன்றத்திலும் பேசுவாம். கருவறை தீண்டாமைக்கு எதிராக இம்முறை அரசு மட்டுமல்ல, மக்கள் சார்பில் நாங்களும் வாதாட இருக்கிறோம். ஆகமத்தை ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும் என உறுதியாக நாங்கள் போராடினால் பல கோயில்களை இழுத்து பூட்ட வேண்டியிருக்கும். மதுரையில் மொத்தம் உள்ள 116 அர்ச்சகரில் 28 பேர்தான் முறைப்படி ஆகமம் பயின்றவர்கள். கபாலீசுவரர் கோவிலில் 41 பேரில் 4 பேர்தான் முறைப்படி ஆகமம் பயின்றவர்கள். மீதி பேர்கள் உதவிக்கு போன அப்ரண்டீசுகள் தான், அப்படியே காலப் போக்கில் அர்ச்சகராகனவர்கள். திருப்பரங்குன்றத்தில் முருகன், சிவலிங்கம், பெருமாள் ஆகிய மூன்று கடவுள்களுக்கு ஒரே சிவாச்சாரியரே பூசை செய்கிறார். சிவன் பெருமாள் அர்ச்சகர் எப்படி வைணவக் கடவுளுக்கு எப்படி அர்ச்சகராக முடியும்.  முக்கியமாக ஆகமத்தில் கால பூசையை பற்றி தான் கூறுகிறது. என் பெயர், நட்சத்திரம், கோத்திரம் கூறி ஒரு அர்ச்சனை பண்ணுங்க சாமி என்ற நடைமுறையே எந்த ஆகமத்திலும் கிடையாது. கலக்சனுக்காக மாறிய ஆகமத்தை தீண்டாமையை ஒழிக்க மாற்றக் கூடாதா? கருவறையில் லைட், பேன், ஏ.சி. இதெல்லாம் எந்த ஆகமம் என அடுக்கி கொண்டே போகலாம். பார்ப்பானை தவிர பிற சாதியினருக்கு கொடிமர தரிசனம் தான், தாழ்த்தபட்டவர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் கோபுர தரிசனம்தான் என ஆகமம் சொல்லியது. அரசியலமைப்பு சட்டம் அதனை மாற்றி எழுதியது, என்ன ஆயிற்று? அது போல் கருவறையில் பிற சாதியினர் வந்தால் என்ன ஆகும்?

1972 சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி வாரிசுரிமை அர்ச்சகர் நியமனம் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழக அரசு அமுல்படுத்தியதா என்றால் இல்லை. தமிழகத்தில் மொத்தம் 1144 அர்ச்சகர்கள் அரசு கோவில்களில் உள்ளனர். இதில் 574பேர் வாரிசுரிமைப்படி தான் இன்றுவரை பணி புரிந்து வருகின்றனர். மேலும் 411 பேர் ரெக்கமண்டேசன் லட்டரில் அர்ச்சகராக பணி நியமனம் பெற்றவர்கள். நம் மாணவர்கள் முழுமையாக ஒன்றரையாண்டு காலம் அர்ச்சகர் படிப்பில் கடும் பயிற்சி பெற்று, தீட்சையும் பெற்றனர். சான்றிதழும் பெற்றுள்ளனர். பார்ப்பனர்களின் தகுதியும், அரசின் யோக்கிதையும் இவ்வளவுதான். தாசில்தார், குரூப் ஒன் வேலை போல அர்ச்சகர் வேலை மிக சிறப்பானது அரசாங்கம் எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என நாங்கள் போராடவில்லை. கருவறை தீண்டாமை இந்துமதத்தின் உரிமையாக அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது என பார்ப்பனர்கள், இல்லாத ஆகமத்தை காட்டி உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர். தீண்டாமை எந்த வடிவத்தில் யார் எங்கு கடைபிடித்தாலும் தண்டனைக்குரிய குற்றம் என முடிவு செய்யப்பட வேண்டும். வேலை பிரச்சினை அல்ல சொத்து பிரச்சினை அல்ல, நம்மானப் பிரச்சினை. பிறப்பின் சாதி இழிவை துடைக்கும் இந்த போராட்டத்தில் நாங்கள் இறுதிவரை போராடுவோம்.

அன்று பெரியார் காலத்தில் அர்ச்சகர் பணியினை ஏற்க யாரும் இல்லை. இன்று கருவறையில் தீண்டாமையை ஒழிக்க அர்ச்சகமாணவர்கள் 206 பேர் நாங்கள் இருக்கிறோம் என பார்ப்பனருக்கு சவால் விட்டு நிற்கிறார்கள். நம் காலத்தோடு கருவறைத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும். அதற்கு எத்தகைய போராட்டத்தையும் நடத்த நாம் தயாராக இருக்க வேண்டும். அனைவரும் போராட ஆதரவு தரவேண்டும்.

 

விஸ்வரூபமெடுத்தார் அம்மா !

19

“சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவே தடை” , என்று விசுவரூபம் படத்துக்கான தடை குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் முதலமைச்சர், இதயதெய்வம், புரட்சித்தலைவி, மாண்புமிகு அம்மா அவர்கள். திடீரென்று கூட்டப்பட்ட பத்திரிகையாளர் கூட்டத்தில் (un scheduled press conference – the hindu) இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

நேற்று இரவு தனது இணையப் பதிப்பில் இந்த பேட்டி குறித்த செய்தியை வெளியிட்ட இந்து நாளேடு, “சட்டம் ஒழுங்குதான் என் முன்னுரிமை” என்று தலைப்பிட்டிருந்தது. இன்று இந்துவில் இதே செய்தியின் தலைப்பு “கமலும் முஸ்லீம் தலைவர்களும் ஒப்பந்தத்திற்கு வந்து விட்டால் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் – ஜெயலலிதா” என்று மாறியிருக்கிறது. என்னத்துக்கு தேவையில்லாம அம்மாவின் கோபத்துக்கு ஆளாகணும் என்பதுதான் காரணம்.

ஆனால் இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா லேசாக உண்மையைச் சொல்ல முயன்றிருக்கிறது.

“உருவாகி வரும் புயலை அம்மா கவனித்து விட்டதுதான், அவர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதற்கு காரணம். கமலஹாசனுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரஜனிகாந்த், பாரதிராஜா போன்றவர்கள், நேரடியாக அரசுக்கு எதிராகப் பேசவில்லை என்ற போதிலும், ராஜ்கமல் அலுவலகத்துக்கு வந்து சேரும் திரையுலகத்தினரின் கூட்டம், அவர்களுடைய அடக்கி வைத்திருக்கும் ஆத்திரத்தையும் கமலஹாசனுக்குப் பெருகிவரும் அனுதாபத்தையும் காட்டிவிட்டது.

தாங்கள் அரசால் பாதுகாக்கப் படுவதாக, எதிர்ப்பு தெரிவிக்கும் முஸ்லிம்கள் எண்ணக் கூடும். ஆனால், இணையத்திலும், தெருவிலும் சராசரி குடிமக்கள் பொறுமை இழந்து கொண்டிருந்தனர். அரசின் உளவுத்துறை இதைத் தெளிவாக தனது உயர்மட்டத்துக்கு தெரிவித்து விட்டது. போலீசின் உயர் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை காலை பேசிய பின், நிலைமையை முடிவுக்கு கொண்டு வருவதென்றும், அப்படி முடித்ததற்கான பெருமையையும் தானே தேடிக்கொள்வது என்றும் ஜெயலலிதா முடிவு செய்திருப்பார் போலத் தெரிகிறது.”

டைம்ஸ் ஆப் இந்தியாவின் தகுதிக்கு, இது கொஞ்சம் அதிகமான வீரம்தான். வரப்போவது மான நட்ட வழக்கா, அல்லது இதனை சரிக்கட்டும் விதத்தில் நாளைக்கு ஏதேனும் ஒரு அம்மா துதியா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

நடந்தது என்ன என்பதை சாதாரண குடிமகனுக்குப் புரியும்படி சொல்வதென்றால், “அம்மா பய்ந்துட்டாங்கோ”.

இப்படி ஏத்தி வுட்டு ஏத்தி வுட்டு அம்மாவின் உடம்பை புண்ணாக்கி விட்ட குற்றத்துக்காக நேற்று யார் யாருக்கெல்லாம் கோட்டையில் கச்சேரி நடந்ததோ நமக்குத் தெரியாது.

“சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?” என்று கேட்ட வின்னருக்குப் பிறகு, என்றென்றும் நம் நினைவில் நிற்கக்கூடிய இன்னொரு “வின்னர்” அம்மாதான்.

அம்மாவின் விளக்கங்களை கவனியுங்கள்.

விஸ்வரூபம் வெளியாக இருந்த தியேட்டர்கள் முன்பாக இசுலாமிய அமைப்புகள் நடத்தவிருந்த போராட்டங்கள் வன்முறைச் சம்பவங்களாக மாற வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தனவாம். ஒரு சம்பவத்தை அனுமதித்துவிட்டு அது வன்முறையாக மாறிய பிறகு தடுப்பதற்கு பதிலாக, சம்பவமே ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு ஈடுபட்டதாம்…

“56,440 போலீசாரை, 524 தியேட்டர்களில் எவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடியும்? இது நடைமுறையில் சாத்தியமா” என்று தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியிருக்கிறார் முதல்வர். வகுத்தால் கிடைப்பது 107.7. ஒரு தியேட்டருக்கு 107.7 போலீசார். அவர்களை 3 ஷிப்டுகளாக வேறு கூறு கட்டவேண்டும்.

ரொம்ப கஷ்டம்தான். உயர்நீதிமன்றத்தில் வாதிடும்போது “சென்சார் போர்டு சர்டிபிகேட் ஊழல், போர்டு மெம்பர்களின் அப்பாயின்மென்ட்டே ஊழல்” என்று காரணங்களை அடுக்கினார் அட்வகேட் ஜெனரல். அப்புறம் ஆங்கிலத் தொலைக்காட்சி விவாதத்தின் போது, “இது 31 மாவட்ட ஆட்சியர்கள் போட்டிருக்கும் தடை உத்தரவு. அம்மாவுக்கும் இதற்கும் சம்மந்தமேயில்லை” என்று அடித்துப் பேசினார். ‘இப்படிப்பட்ட சில்லறை விவகாரங்களிலெல்லாம் அம்மாவை ஏன் இழுக்கிறீங்க’ என்ற தோரணையில் இருந்தது அவருடைய பதில்.

நேற்று, ‘போலீசு கணக்கை காட்டி சமாளித்து விடலாம்’ என்று போலீசு அதிகாரிகள் அம்மாவுக்கு ஐடியா கொடுத்திருப்பது போலத் தெரிகிறது.

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கும் சரி, முல்லைப்பெரியார் தாக்குதலுக்கும் சரி, கூடங்குளம் தடியடிக்கும் சரி.. எல்லா விவகாரங்களுக்கும் போலீசு அதிகாரிகள் என்ன எழுதிக் கொடுக்கிறார்களோ, அதை எந்திரக் குரலின் ஏற்ற இறக்கத்துடன் படித்து விடுவார் அம்மா.

இன்றைக்கு வேலை செய்யும் இந்த தத்துவம் பரமக்குடியில் ஏன் வேலை செய்யவில்லை? தேவர் சாதி வெறியர்களை முன்கூட்டியே கைது செய்து பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை தவிர்த்திருக்கலாமே.

கூடங்குளம் அணு உலைக்கு 144 போட்டிருக்கலாமே. அவர்கள் தம் மத உணர்வுக்காக போராடவில்லை. உயிரையும் வாழ்க்கையையும் பாதுகாத்துக் கொள்ளப் போராடுகிறார்கள். ஆனால்சுமார் 9 மாதங்களாக கூடங்குளம் வட்டாரம் முழுவதும் 144 போடப்பட்டுள்ளது. அணு உலையை எதிர்த்தவர்கள் மீது ராஜத்துரோகம் முதல் தேசப்பாதுகாப்பு சட்டம் வரை பாய்ச்சப்பட்டுள்ளது.

போலீசைக் குவிப்பதை விட, மக்கள் கோரிக்கைக்கு செவி மடுத்துவிடலாம் என்ற யோசனை கூடங்குளத்தில் ஏன் தோன்றவில்லை? அங்கே பிற மாநிலங்களிலிருந்தெல்லாம் போலீசு இறக்குமதி செய்யப்பட்டதே, அது ஏன்?

“தமிழ்நாடு சினிமா ரெகுலேசன் ஆக்ட் படி மாநில அரசு படத்தை நிரந்தரமாகவே தடுக்க முடியும்” என்று மாநிலத்தின் அதிகாரத்தை மனிஷ் திவாரிக்கு நினைவு படுத்தும் அம்மாவுக்கு, கூடங்குளம் விவகாரத்தில் மாநிலத்தின் உரிமை பற்றி மறந்து போனது ஏன்?

“நினைத்தால் நான் நிரந்தரமாகவே தடுத்திருக்க முடியும். ஆனால் தடுக்கவில்லை. அதிலிருந்தே தெரியவில்லையா இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லையென்று” -என மடக்கியிருக்கிறார் அம்மா. (“நெனச்சா கஞ்சா கேஸ்ல உள்ள வச்சிடுவேன்” என்ற போலீசின் குரலைப் போல இல்லை?)

மேலும் சில உண்மைகளையும் அம்மா இந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ஜெயா டிவிக்கு படத்தை விற்க மறுத்த காரணத்திற்காகத்தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கை என்ற குற்றச்சாட்டை அம்மா ஆணித்தரமாக மறுத்திருக்கிறார்.

“ஜெயா டிவிக்கும் எனக்கும் சம்மந்தமில்லை. அந்த நிறுவனத்தில் ஒரே ஒரு பங்கு கூட எனக்கு இல்லை”  என்று ஐயந்திரிபற தெளிவு படுத்தியிருக்கிறார்.

போயஸ் தோட்டத்துக்கு உள்ளேயிருந்து கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான செருப்புகள், புடவைகள், நகைகள் ஆகியவையே தன்னுடையதில்லை என்று அம்மா தெளிவு படுத்தியிருக்கும்போது, போயஸ் தோடத்துக்கு வெளியே இருக்கும் ஜெயா டிவிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

அம்மாவுடைய கால் அளவுக்குப் பொருத்தமான செருப்புகளையும், இடுப்புக்குப் பொருத்தமான ஒட்டியாணம், கைக்கு பொருத்தமான வளையல் உள்ளிட்ட நகைகளை செய்து எடுத்துக் கொண்டு வந்து, கஞ்சா பொட்டலத்தை வைத்து எடுப்பது போல, போயஸ் தோட்டத்தில் வைத்து எடுத்தவர் நல்லம நாயுடு. ( சொத்து குவிப்பு வழக்கின் போலீசு அதிகாரி)

அதே போல, யாரோ அம்மாவின் பெயரில் ஜெயா டிவி என்று நடத்திக் கொண்டிருந்தால் அதற்கு அம்மா பொறுப்பாக முடியுமா?

நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூட வேண்டுமென்றே “ஜெயா டிவி” மைக்கை மட்டும் அம்மாவின் முன் வைத்திருந்தார்கள். அதற்கு அம்மா என்ன செய்ய முடியும்? நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், ஒரு நிருபர் கூட அம்மாவை கேள்வியே கேட்கவில்லை. அதற்கும் கூட அம்மாவையே குற்றம் சாட்ட முடியுமா?

“வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வேண்டும் என்று ப.சிதம்பரத்தை புகழ்ந்து கமலஹாசன் பேசியதனால் ஏற்பட்ட கோபம்தான், படத்தை தடை செய்யக் காரணமோ” என்று அவதூறு செய்திருக்கும் கருணாநிதிக்கும் சரியான பதிலடியைக் கொடுத்திருக்கிறார் அம்மா. “நாட்டின் பிரதமரை கமல்ஹாசன் தேர்வு செய்ய முடியாது. 100 கோடி வாக்காளர்கள்தான் தேர்வு செய்ய முடியும் எனும்போது, நான் ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்?” என்று கேட்டிருக்கிறார்.

சரியான கேள்வி. சபாநாயகர் ஜெயக்குமாரின் பிறந்தநாளில், வருங்கால முதல்வர் என்று அவருடைய அடிப்பொடிகள் போஸ்டர் அடித்து ஒட்டியதுதான் அவருடைய அகால அரசியல் மரணத்துக்கு காரணம் என்று பல பத்திரிகைகள் அவதூறாக எழுதியிருந்தார்கள். அதை ஜெயக்குமாரும் நம்பியிருக்க கூடும். தன்னுடைய மரணத்துக்கு இது காரணமல்ல என்ற உண்மையை இந்த அறிக்கையைப் பார்த்து அவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அம்மாவிடம் அரசியல் பக்குவம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. “கமல் எனக்கு எதிரி அல்ல” என்று அம்மா கூறியிருப்பதாக தினமணி முதல் பக்கத்தில் கட்டம் கட்டிப் போட்டிருக்கிறது. ஆனால், “Kamalhasaan is not my rival in anyway” என்று அம்மா கூறியதாக ஆங்கில நாளேடுகளில் வந்துள்ளது. “கமலஹாசன் என் எதிரியாகமாட்டார் – எந்த விதத்திலும்” என்றே இதனை மொழிபெயர்க்க இயலும்.

நம்முடைய மொழி அறிவுக்கும், அம்மா வெளியிட்டிருக்கும் உணர்ச்சிக்கும் இந்த மொழி பெயர்ப்பே பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

கமலஹாசன் என் எதிரியாக மாட்டார் – எந்த விதத்திலும் என்று தலைப்பு போட்டிருந்தால் அம்மா மேலும் மகிழ்ந்திருப்பார் என்பதை தினமணி ஆசிரியருக்கு சுட்டிக்காட்ட கடமைப் பட்டுள்ளோம்.

பின் குறிப்பு:

“அதுக்காக பத்து பேர் சத்தம் போட்டா உடனே அரசாங்கம் சரண்டர் ஆகிவிடுமா” என்ற கேள்வி எதிர்த்தரப்பினரால் எழுப்பப்படும்.

எனவே, “படத்தை வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் என்ற எங்கள் அச்சம் (apprehension) உண்மையானதே” என்று நிரூபிப்பதற்கான முயற்சியில் போலீசு இறங்கும். உளவுத்துறை ஒரு ஊகத்தை வெளியிடுகிறது என்றால் அப்படி நடக்க வேண்டும். நடக்காவிட்டால் நடத்தப்படும்.

இல்லையென்றால் உளவுத்துறையை அம்மா நம்புவாரா, அம்மாவைத்தான் மக்கள் நம்ப முடியுமா? அம்மாவை நம்பியவர்களுக்கு எங்களுடைய இந்த அச்சம் (apprehension) சமர்ப்பணம்.

போஸ்டர் கிழிக்கும் மதுரை ( ஸ்காட்லாண்டு ) போலீசு !

1

அனைத்துச் சாதியினரும்
அர்ச்சகராகும் சட்டத்திற்கு குழி பறிக்காதே!
தீண்டாமையை நிலைநாட்டும் பார்ப்பன சிவாச்சாரியார்களுடன்
உச்சநீதிமன்ற வழக்கில் சமரசம் பேசாதே!

என்ற தலைப்பில் தமிழக அரசைக் கண்டித்து 30-1-2013ல் சென்னையில் மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அறிவித்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் அனைத்து மாவட்டக் கிளைகளும் சுவரொட்டி ஒட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டிருந்தது.

அதன்படி 28.01.2013 இரவு மதுரையில் சுவரொட்டி ஒட்டுவதற்காகத் தோழர்கள் சென்றனர். சுவரொட்டிகளால் எப்போதும் நிரம்பி வழியும் சிம்மக்கல் பகுதியில், சுவரொட்டியை டூவீலரில் வைத்து விட்டு அருகிலுள்ள டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த திலகர்திடல் இன்ஸ்பெக்டர்,

“யார் இது? என்ன போஸ்டர், காட்டுங்க பார்ப்போம்” என்று கேட்டார். போஸ்டரைக் காட்டினோம். அதைப் படித்துப் பார்த்துவிட்டு

“போஸ்டர் ஒட்ட அனுமதி வாங்கியிருக்கீங்களா?”. அனுமதி வாங்கவில்லை.

“அப்படின்னா அனுமதி வாங்கிட்டுத்தான் ஒட்டனும்” என்று சொல்லிவிட்டு செல்போனில் மேலதிகாரியைக் கூட்பிட்டு சுவரொட்டி வாசகங்களைப் படித்துக்காட்டினார். திரும்பத்திரும்ப படித்துக் காட்டினார். இதை ஒட்ட அனுமதிக்கலாமா? கூடாதா என்று கேட்டு விட்டு கடைசியாக,

“ஒட்டக் கூடாது. வேண்டுமானால் நாளைக்கு என்னிடம் எழுத்து முலமாக அனுமதி வாங்கி விட்டு அப்புறம் ஒட்டுங்கள்” என்றார்.

“ஏன்சார், இவ்வளவு போஸ்டர் ஒட்டியிருக்காங்களே. இவங்களெல்லாம் அனுமதி வாங்கியா ஒட்டியிருக்காங்க?”

கூட இருந்த ஏட்டு சொன்னார். “அதெல்லாம் கல்யாணம், காதுகுத்து, கண்ணீர் அஞ்சலி போஸ்டர். நீங்க அரசாங்கத்த கண்டிச்சுல போஸ்டர் ஒட்றீங்க.”

இன்ஸ்பெக்டர் சொன்னார்: “போஸ்டர் ஒட்டக் கூடாதுன்னா ஒட்டக்கூடாது அதைமீறி ஒட்டுனா நாங்க கிழிச்சுடுவோம். உங்க மேல கேஸ் போடுவோம். உங்க பேரு, அட்ரஸ், செல்நம்பர் குடுங்க”
என்று வாங்கிக்கொண்டு உறுமி விட்டுப் போனார்.

அந்தப் பகுதியில் சில சுவரொட்டிகளை ஒட்டிவிட்டு ஆரப்பாளையம் பஸ்நிலையம் பகுதிக்கு வந்தோம். அங்கிருந்து அரசரடி வரும்போது போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். டிராபிக் சார்ஜென்ட் எங்களைக் கூப்பிட்டு “என்ன போஸ்டர்” என்றார். “போஸ்டர் ஒட்டக் கூடாது. இப்படி ஓரமா நில்லுங்க” என்று நிற்க வைத்துவிட்டு கரிமேடு காவல்நிலையத்துக்கு போன் செய்தார். அங்கிருந்து ஒரு பெண் சப் இன்ஸ்பெக்டர் வந்தார், டிராபிக் சார்ஜென்ட் நாங்கள் போஸ்டர் ஒட்ட வந்த விவரத்தைச் சொன்னார். அந்தப் பெண் சப் இன்ஸ்பெக்டர் புதிதாகப் பணியில் சேர்ந்துள்ளவர். அவருக்கு எதுவுமே தெரியவில்லை. பேந்தப் பேந்த விழித்தார்.

போலீஸ் ஜெயலலிதாடிராபிக் சார்ஜென்ட் “இவங்கள விசாரிங்க. என்ன பேசாம நிக்கிறீங்க” என்று கேட்க அவரோ,

“சார் நான் புதுசு இதுவரை ஒரு ரைடோ, டிரெயிலோ கூட வந்ததில்லை. பழக்கமில்ல” என்று சொன்னார். சார்ஜென்ட் பேசாமல் இருக்கவே, அந்தப் பெண் “இந்த ஏரியாவுல போஸ்டர் ஒட்டக் கூடாது. போஸ்டர்ல செல்போன் நம்பரல்லாம் இருக்கா” என்று கேட்டு குறித்துக் கொண்டு போனார்.

அங்கிருந்து பெரியார் பேருந்து நிலையம் பகுதிக்கு வந்தோம். அங்கே திரும்பிய பக்கம் எல்லாம் போலீஸ் காவல். கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு விழித்திருக்கிறார்கள். அந்த போலீஸ் போஸ்டரைப் பறித்துக் கொண்டு போய்விடும் என்பது தெரிந்திருந்ததால், மதுரைக் கல்லூரி பக்கம் போய் ஒட்டிவிடலாம் என்று போனால் அங்கேயும் இரண்டு காக்கிச் சட்டைகள் இருட்டில் குந்திக் கொண்டிருந்தனர். சந்து பொந்துகளுக்குள் சென்று போஸ்டரை ஒட்டி விட்டு திரும்பி வரும் போது இரண்டு போலீஸ்காரர்கள் போஸ்டரைக் கிழித்துக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் ஒட்டிய போஸ்டரை மட்டுமல்ல. அஞ்சா நெஞ்சன், தென்மண்டலத் தளபதி, மத்திய ரசாயனம் மு.க.அழகிரியின் ஜனவரி 30 பிறந்தநாள் போஸ்டரையும் தான்.

அட எழவே, ஜெயலிதாவின் போலீசு என்னவெல்லாம் செய்கிறது. இதே போலீசு திமுக ஆட்சியிலிருந்த போது மு.க. அழகிரிக்கு முந்தானை விரித்தது. மொத்தத்தில் பாசிச ஜெயாவின் போலீசு ராஜியம் அடிப்படை ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் தீவிரமாகப் பறித்துக் கொண்டிருப்பதே உண்மை.

தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு, மதுரை மாவட்டக்கிளை.

மதுரை ஆதீனம் மைனர் அருணகிரியை ஆட்கொண்ட அல்லா !

114

லங்கைத் தமிழ் இஸ்லாமியப் பெண் ரிசானா நபீக் சவுதி அரசாங்கத்தால் தலைவெட்டி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடக்கும் விவாதங்களை அறிவீர்கள். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த, வெகு சிலர் மட்டுமே இந்த விவகாரத்தில் ஷரியத் சட்டத்தையும் சவுதி அரசையும் விமர்சித்து வருகிறார்கள். இவ்விவகாரத்தில் சரியான முறையில் எதிர்வினையாற்றியிருந்த மனுஷ்யபுத்திரனை, தவ்ஹீத் ஜமாத் என்ற மதவெறிக் கும்பலின் தலைவர் பி.ஜைனுலாபிதீன் வார்த்தைகளாலேயே கொலை செய்திருந்ததும், அதைத் தொடர்ந்து வினவு தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையும் வாசகர்கள் அறிந்ததே.

ஷரியத் சட்டத்தின் ‘மாண்பை’ நிலைநாட்ட களமிறங்கியுள்ள பி.ஜே கும்பல், அதற்கு ‘கலர் கலராக’ விளக்கங்களைத் தந்து வருகிறது. நக்கீரனில் மனுஷ்யபுத்திரன், ஆனந்த விகடனில் பாரதி தம்பி – உள்ளிட்டு ஷரியத் சட்டத்தை விமர்சித்தவர்களை “டேய்… மரியாதையா நேரடி விவாதத்திற்கு வாங்கடா… #$%&*#@#$…” என்று சவுதி வஹாபியம் இவர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ள மரியாதையோடும் கண்ணியத்தோடும் கோட்டா சீனிவாசராவ் பாணியில் விவாதத்திற்கு அழைத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை மண்ணடியில் சென்ற 27.1.2013   அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  “இஸ்லாமிய சட்டமே தீர்வு” என்ற தலைப்பில் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு சென்று வந்தோம்.

நாங்கள் சென்றிருந்த போது கோவை ரஹ்மத்துல்லா என்பவர் பேசிக் கொண்டிருந்தார். பேச்சினூடாக பாரதி தம்பி, ஜோஸபின் உள்ளிட்ட பத்திரிகையாளர்களோடு சேர்த்து மனுஷ்யபுத்திரனுக்கும் மண்டகப்படி நடந்து கொண்டிருந்தது. “பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பற்றி யோசித்தீர்களா மிருகங்களே….” என்றவர், “இந்த ரிசானா நபீக் என்ன பத்தினியா.?.” என்று திடீரென்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

எல்லா ஆணாதிக்கப் பன்றிகளின் வாயிலிருந்தும் வருகின்ற வழக்கமான டயலாக் இது. ரிசானா நடத்தை கெட்டவளாவதற்கு குறைந்த பட்சம் ஒரு ஷேக்கின் துணையாவது தேவை என்பது ரஹ்மத்துல்லாவுக்கு தெரியாதா? அந்த ஷேக்கை கண்டு பிடித்து தண்டித்து விட்டார்களா? இத்தகைய குற்றம் செய்யும் ஆண்மகனுடைய உறுப்பை, எதைக் கொண்டு அறுப்பது என்று ஷரியத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா? அல்லது “குருதிப்பணம்” மாதிரி ஏதாவது அபராதம் கட்டிவிட்டு அத்தகைய மைனர் குஞ்சுகள் எஸ்கேப் ஆவதற்கு இறைவன் தன்னுடைய சட்டத்தில் வழி செய்து கொடுத்திருக்கிறானா?

தங்கள் மதத்தையே சார்ந்த பரிதாபத்துக்குரிய ஒரு ஜீவனை  ரகமதுல்லாக்களும் ஜெயினுலாபுதீன்களும் இப்படிக் குதறுவதற்கு காரணம், அவள் ஒரு பெண், அதுவும் ஏழைப்பெண், இலங்கை என்ற ஏழை நாட்டைச் சேர்ந்த ஏழை தமிழ்ப் பெண். இவர்களோ, சவூதி ஷேக்குகளின் பங்களா நாய்கள்.

ரிசானா நபீக்கை தமிழ் சீரியலில் வரும் வில்லி ரேஞ்சுக்கு சித்தரித்து, மொழி தெரியாத நாட்டில் தெற்கு வடக்கு அறியாத ஊரில்  பயங்கரமாகத் திட்டம் தீட்டி குழந்தையைக் கொன்ற கொலையாளி என்பதாக விவரித்து முழங்கிக் கொண்டிருந்த ரஹ்மத்துல்லா, ரிசானாவுக்கு அந்தக் குழந்தையைக் கொலை செய்வதற்கு என்ன நோக்கம் இருந்திருக்க முடியும் என்ற மிகச் சாதாரணமான கேள்விக்கு கூட கடைசி வரைக்கும் பதிலளிக்கவில்லை.

குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய கடமை ஷரியத் சட்டங்களின் படி யாருக்கு உள்ளது, வேலைக்காரிக்கா? பணக்காரப் பெண்களின் கடமைகள் என்ன, ஏழைப்பெண்களின் கடமைகள் என்ன என்று ஷரியத் சட்டத்தில் அல்லா தனித்தனியாக பிரித்து எழுதியிருக்கிறானா? எல்லாப் பெண்ணுக்கும் ஒரே சட்டம்தான் என்றால், பிள்ளைக்கு பால் கொடுக்க முடியாத தாயை அல்லவா முதலில் விசாரிக்க வேண்டும்? 3 மாதக் குழந்தைக்கு பால் கொடுப்பதற்குக் கூட ஆள் வைத்து விட்டு, ஷேக்கின் பொண்டாட்டி எங்கே போயிருந்தார்? பியூட்டி பார்லருக்கா, தொழுகை நடத்தவா?

ஆண்களின் துணையின்றி ரோட்டில் நடந்தாலே சாட்டையால் அடிக்கும் தலிபான்களை நியாயப்படுத்துகின்ற இந்த தமிழக தலிபான்கள், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆண் துணையின்றி ஏழைப் பெண்களை இறக்குமதி செய்கிறார்களே வளைகுடா ஷேக்குகள், அவர்களுக்கு ஷரியத் கூறும் தண்டனை என்ன என்று தெரிவிக்கவில்லை. இப்படி பெண்களை இம்போர்ட் எக்ஸ்போர்ட் செய்யும் டிராவல் ஏஜென்சி முஸ்லிம்களுக்கு என்ன தண்டனை என்றும் கூறவில்லை.

ஒருவேளை, ஷரியத்துக்கு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும், (பெண்களை ஆண் துணையின்றி தனியாக வரவழைக்க கூடாது) என்ற உயர்ந்த நோக்கத்தில்தான் 70 வயது ஷேக்குகள் 13 வயது சிறுமிகளை இந்தியாவிலிருந்து நிக்கா செய்து அழைத்துப் போகிறார்களோ?

கடுகளவாவது நேர்மையோ சொரணையோ இருந்தால், இவர்கள் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.

வார்த்தைக்கு வார்த்தை ரிசானா தான் கொலையாளி என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் உறுதிப் படுத்தியுள்ளதாகச் சொன்ன ரஹ்மத்துல்லா, கடைசி வரை அதன் அறிக்கையின் நகலை கூட்டத்தில் படித்துக் காட்டவே இல்லை. அதிருக்கட்டும். பிரேதப் பரிசோதனை என்கிற பெயரில் இறந்த உடலைக் கிழிக்க இஸ்லாம் அனுமதிக்கிறதா? இல்லை என்று சொல்லும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் உள்ளனர். உயிரோடிருப்பவர்களை வெட்டித்தான் கொல்லவேண்டும் என்று தெளிவாக கூறியிருக்கும் இறைவன், பிணங்களை அறுப்பது, தைப்பது, ஆடோப்சி ரிப்போர்ட் எழுதுவது ஆகியவை பற்றி எதுவும் சொல்லாமலிருக்க வாய்ப்பில்லை. அது குறித்து அல்லா பிறப்பித்திருக்கும் ஆணைகளையும் ரகமதுல்லாக்கள் விளக்குவது நல்லது.

அடுத்து இஸ்லாத்தை அமெரிக்கா உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும் இழிவாகச் சித்தரிக்கிறார்கள் என்றும், இதை அந்த அல்லாவே முன்னின்று முறியடிக்கிறாரென்றும் பேசத் துவங்கினார் ரஹ்மத்துல்லா. அமெரிக்கா நடத்திய ‘ஆய்வு’ ஒன்றின் படி தற்போது உலகில் 175 கோடி(!?) முசுலீம்கள் இருப்பதாக சொன்னார்.

இஸ்லாமியர்களில் பல்வேறு பிரிவினரையும் உள்ளடக்கிய மொத்த மக்கள் தொகை 150 கோடி என்கிறது ஐ.நா சபையின் கணக்கு. வகாபி தீவிரவாதிகளின் கருத்துப்படி ஷியாக்கள், அகமதியாக்கள் மற்றும் சுஃபி மார்க்கத்தினர் கொன்றொழிக்கப்பட வேண்டிய காஃபிர்கள். அந்த வகையில் அளவற்ற அருளாளனான அல்லாவின் திருக்கருணையால் எப்படியும் இவர்கள் கொல்லப்பட்டு விடுவார்கள் என்பதால், இவர்களின் எண்ணிக்கையை மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கையிலிருந்து கழித்திருக்க வேண்டும்.

ஆனால் ரஹ்மத்துல்லாவோ, இன்னும் இருபது ஆண்டுகளில் முஸ்லிம்களின் மக்கட்தொகை 350 கோடிகளாக உயரும் என்று சொல்ல, கூட்டம் ‘அல்லாஹு அக்பர்’ என்று கூச்சலிட்டது. நமக்கோ முல்லா ஜோக் நினைவுக்கு வந்தது.

இந்தியாவில் இன்றைக்கு சிறுபான்மையினராக இருக்கும் இஸ்லாமியர்கள் மதமாற்றத்தின் மூலமும் பிள்ளை பெற்றுத் தள்ளுவதன் மூலமும் சீக்கிரம் பெரும்பான்மை பலம் பெற்றுவிடுவார்கள் என்பதே இந்து முன்னணி ராம கோபாலன்ஜீக்கள் காட்டும் பூச்சாண்டி.

இந்த நச்சுப் பிரச்சாரத்தையே கொஞ்சம் பட்டி பார்த்து பாலீஷ் போட்டு ‘ஆய்வு’ அறிக்கையாக அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளும் அவ்வப்போது வெளியிடுவது வாடிக்கை. இது போன்ற ‘ஆய்வறிக்கைகளின்’ மூலம் தான் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் இஸ்லாமியர்கள் பற்றிய ஒரு அச்சமூட்டும் பிரச்சாரமும், வெறுப்பும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. அதே சரக்கை தவ்ஹீத் மேடையிலிருந்து அவிழ்த்து விட்டு, கைதட்டலும் வாங்கி விட்டார் ரஹ்மத்துல்லா.

தொடர்ந்து பேசிய ரஹ்மத்துல்லா, “இஸ்லாத்தை தவறாகச் சித்தரிப்பவர்களின் வாயிலிருந்தே அல்லா இஸ்லாத்தின் சட்டதிட்டங்களின் ‘மேன்மையைப்’ பற்றிப் பேச வைக்கிறான்” என்று சொல்லி அதற்கு சில சான்றுகளையும் கூறினார்.  “பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் இஸ்லாமியப் பெண்கள் போன்று பர்தா அணிவது மேலானது” என்று மதுரை ஆதினம் அருணகிரி சொன்னாராம். இதைச் சொன்னவுடன் நமக்கு குமட்டிக்கொண்டு வந்தாலும் கூடியிருந்த கூட்டம், அல்லாஹு அக்பர் என்று சொல்லி புல்லரித்தது.

நித்தியானந்தா என்ற பொறுக்கியை இளைய ஆதீனமாக நியமித்துக் கொண்ட மைனர் அருணகிரியின் வாயால், பெண்களின் ஒழுக்கம் குறித்து அல்லா பேசுகிறானாம். என்னத்த சொல்ல, “எல்ல்…லா” புகழும் இறைவனுக்கே!

பாரதிய ஜனதா கட்சி, பெண்கள் பாதுகாப்பாக வாழ வேண்டுமானால் கண்ணியமான உடை உடுத்த வேண்டும் என்று கூறியது கூட அல்லாவின் பவர்தான் என்றார் ரஹ்மத்துல்லா. 2002 இல் குஜராத்தில் பர்தா போட்ட இஸ்லாமியப் பெண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கி கொல்லப்பட்டார்களே, அங்கே அல்லாவின் பவர் “கட்”டாகி விட்டதா, ஷட் டவுனா என்று கூறவில்லை.

ரஹ்மத்துல்லா பேசிய உரையில் வரிக்கு வரி தவறான தகவல்களும் வெற்றுச் சவடால்களுமே நிறைந்திருந்தன.  “25 கோடி மக்கள் தொகை கொண்ட சவுதியில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வருட்த்திற்கு 24 கொலைகளும் 13 கற்பழிப்புகளுமே நடக்கின்றன. இது மொத்த மக்கள் தொகையில் .0001 சதவீதம் தான்” என்றார் ரஹ்மத்துல்லா. அதிகாரப்பூர்வமாக சவுதி வெளியிட்டுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களின் படியே அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 2.7 கோடி தான். இதில் சவுதி தேசத்தவர் வெறும் 1.8 கோடியினர் தான்; மேலும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் 84 லட்சம். கூடவே ஷரியத் அமுல்படுத்தப்பட்டும் குற்றங்களின் சதவீதம் சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது என்பதற்காகவே குற்றங்களின் எண்ணிக்கை விவரங்களை வெளியிடுவதை 2011-ம் ஆண்டு முதலாக சவுதி அரசாங்கம் நிறுத்தியும் வைத்துள்ளது.

இத்தகைய பொய்களையெல்லாம் ‘எதிரி’களிடமிருந்து கடன் வாங்கிக் கொண்டாவது இஸ்லாத்தின் பெருமையை காப்பாற்ற வேண்டியிருக்கிறது போலும். அதுதான் அடுக்கடுக்கான பொய்களையும், அவதூறுகளையும் கரை புரண்ட வெள்ளம் போல பேச வைக்கிறது.

தொடர்ந்து சவுதியைப் பொறுத்தவரையில் இஸ்லாமியச் சட்டங்களின் படி யாராக இருந்தாலும் தண்டனை கொடுத்து விடுவார்கள் என்ற ரஹ்மத்துல்லா, அப்படிக் குற்றங்களில் ஈடுபட்டது சவுதி இளவரசன் குடும்பமாக இருந்தாலும், உயர்ந்த கோத்திரத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலும் சீவிப்புடுவோம் சீவி என்றார் (இதற்கும் ஒரு அல்லாஹு அக்பர்).

ஆனால் இலட்சக் கணக்கான இராக், ஆப்கான் குழந்தைகளையும் மக்களையும் காவு வாங்கிய அமெரிக்க ஏவுகணைகளுக்கு தளம் அமைத்துக் கொடுத்து, அமெரிக்க சிப்பாய்களுக்குத் தேவையான “மேற்படி” ஏற்பாடுகளையெல்லாம் செய்து கொடுத்த சவூதி அரச குடும்பத்தினரின் தலைகளை எந்த சீப்பை வைத்து தவ்ஹீத் காரர்கள் சீவிக்கொண்டிருக்கிறார்கள் என்றோ, அல்லது அல்லா சீவ இருக்கிறார் என்றோ ரஹ்மத்துல்லா சொல்லவில்லை.

பெண்களை பர்தா போட்டு மூடியோ, கல்லால் அடித்தோ, ஆண்களின் தலையை சீவியோ, சாட்டையால் அடித்தோ தான் சவூதி போன்ற நாடுகளில் பெண்களின் கற்பு காப்பாற்றப்படுகிறது என்றால், அப்பேர்ப்பட்ட நாட்டு ஆண்களின் யோக்கியதை எப்படி இருக்கும் என்று ரஹமத்துல்லா சிந்தித்துப் பார்க்கவில்லை. சாட்டையோ வாளோ கிடைக்காமல் போனால், அந்த நாட்டுப் பெண்களின் நிலை என்ன என்பதையும் அவர் சிந்திக்கவில்லை போலும்.

அடுத்து ரிசானா விவகாரத்தில் இஸ்லாமிய ஷரியா சட்டங்களை விமரிசித்து எழுதிய ஜோசபின் பாபா எனும் பத்திரிகையாளரைக் குறித்துப் பேசிய ரஹ்மத்துல்லா,  அவர் கிருஸ்தவராகப் பிறந்த காரணத்தால் தான் இவ்வாறு எழுதி இருக்கிறார் என்றார். மேலும், கிருஸ்தவத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா உங்கள் மதப் புத்தகமே ஆபாசக் குப்பை தானே என்றும் அதற்கு ஆதாரமாக பைபிளின் பழைய ஏற்பாட்டிலிருந்து கதை ஒன்றையும் குறிப்பிட்டுப் பேசினார் (இதற்கும் கூட்டத்திலிருந்து ஒரு அல்லா ஹு அக்பர்).

ஜெயினுலாபிதீன்
பி.ஜெயினுலாபிதீன்

ரஹ்மத்துல்லாவைத் தொடர்ந்து பீ.ஜே விஸ்வரூபம் விவகாரம் பற்றிப் பேசத் துவங்கினார் ஜெயினுலாபுதீன். கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் இந்தப் படத்தை வெளியிட வேண்டுமென்று பத்திரிகைகளில்  எழுதப்படுவது குறித்தும், சினிமாத்துறையினரும் அதே வகையில் கருத்துத் தெரிவித்து வருவதையும் விமர்சிக்கத் துவங்கிய பீ.ஜே,  திரைத் துறையினரைப் பற்றியும் பத்திரிகைகள் பற்றியும் நாலாந்தர மொழியில் வசைபாடத் துவங்கினார்.

பீ.ஜேவின் வாதத்தில் விஸ்வரூபம் இஸ்லாமியர்களுக்கு  எதிரானது என்பதை நிறுவும் நோக்கத்தை விட,  டைம்பாஸ் ரகத்திலான படுக்கையறைக் கிசு கிசுக்கள் மற்றும் புவனேசுவரியின் சாகசங்கள், நடிகையின் கதை போன்றவையே அதிகம் இடம் பெற்றிருந்தன. உள் விவரங்களுடன் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார். இவரை இஸ்லாமிய மார்க்க அறிஞர் என்று சொல்கிறார்கள். ஒரு “மார்க்கமான” அறிஞர்தான்.

பாரதிராஜா வீட்டினர் விபச்சாரிகளா என்று தனது வசைபாடலைத் துவங்கிய பீஜே, ஒவ்வொரு நடிகர் நடிகைகளின்  படுக்கையறையாகப் புகுந்து புறப்படத் துவங்கினார். உச்சகட்டமாக, ஸ்ருதி ஹாசனையும் கமல்ஹாசனையும் பாலியல் ரீதியில் கீழ்த்தரமான முறையில் இணைத்துப் பேசிய போது கூட்டம் புல்லரித்துப் போனது. தீப்பொறி ஆறுமுகம் போன்றோர் பொதுக்கூட்டத்தில் இப்படிப் பேசும்போது, உடன்பிறப்புகள் விசில் அடிப்பார்கள். இது தவ்ஹீத் ஜமாத்தின் கூட்டம் என்பதால், விசிலுக்குப் பதிலாக ‘அல்லாஹு அக்பர்’  என்று கூட்டம் முழங்கியது. சும்மா சொல்லக் கூடாது, இறைவன் மிகமிகப் பெரியவன்தான்!

பீ.ஜேவின் பேச்சு இணையத்தில் கேட்கக் கிடைக்கிறது. அவருடைய பேச்சைக் கேட்கும் சராசரி முஸ்லிம் இஸ்லாமிய மதவெறியன் ஆகக் கூடும். அதே பேச்சு ஒரு சராசரி இந்துவை மதவெறியன் ஆக்கும். முதலாவதாகச் சொன்னது நடக்கவில்லை என்றாலும், இரண்டாவதாகச் சொன்னது நடந்தே தீரும்.

விஸ்வரூபம் மேட்டரில் மீன் பிடிப்பதற்கு நல்ல வாய்ப்பு இருந்தும் ஆர்.எஸ்.எஸ் காக்கி அரை டவுசர்களின் சத்தத்தை அதிகமாகக் காணோமே, என்று ஆச்சரியப்பட்டார் ஒரு நண்பர். மண்ணடி கூட்டத்துக்குப் போன பின்னர்தான் விசயம் புரிந்தது.

“நம்ம சார்பில் பி.ஜே பாய், பேசிக்கொண்டிருக்கும்போது நாமும் எதற்கு தொண்டை தண்ணியை வேஸ்ட் பண்ணவேண்டும்?” என்று ராம கோபாலன்ஜி மைக்கை ஆஃப் பண்ணியிருப்பார்.

000

குறிப்பு:

ஒரு கொள்கை என்ற அடிப்படையிலேயே மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய கோட்பாடுகளில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு நம்பிக்கை கிடையாது. அதனால்தான் சவூதியில் நடந்த ரிசானா கொலையை அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். சில இஸ்லாமிய அமைப்புகள் மட்டும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கு கண்டிக்கின்றன. தற்போது, விஸ்வரூபம் பிரச்சினையை ஒட்டி, அம்மாவின் ஆதரவும் மாநில அரசின் ஆதரவும் தங்களுக்கு இருப்பதால், மதச்சார்பற்ற சக்திகள் தங்களை ஆதரிக்கிறார்களா இல்லையா என்பது பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று இஸ்லாமிய அமைப்புகள் கருதுவதையே அவர்களது பேச்சும் நடவடிக்கைகளும் காட்டுகின்றன. சாதாரண முஸ்லிம் மக்களைத் தற்கொலைப் பாதைக்குள் இவர்கள் தள்ளி விடுகிறார்கள், என்று எச்சரிப்பது எங்கள் கடமை.

டெல்லி பாலியல் வன்முறை – குற்றம் : தூண்டியது யார் ?

4

டில்லியில் கும்பல் வல்லுறவுக்கும் மிகக் கொடூரமான தாக்குதலுக்கும் ஆளாக்கப்பட்ட மாணவி சிகிச்சை பயனின்றி இறந்து விட்டார். பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிய போலீசின் தவறு என்ற கோணத்திலும், இக்குற்றத்துக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்ற கோணத்திலுமே இப்பிரச்சினை இன்று விவாதிக்கப்படுகிறது. இது தொடர்பான சட்டத்திருத்தங்களை சிபாரிசு செய்ய முன்னாள் நீதிபதி வர்மா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

குஜராத்திலும் மும்பையிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கில் வல்லுறவுக் குற்றங்களை நிகழ்த்தி அவற்றை நியாயப்படுத்தியுள்ள பாஜகவும், வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்ட கிரிமினல்களை எம்.எல்.ஏ ஆக்கியிருக்கும் சமாஜ்வாதி கட்சி அமைச்சர் ஆசம்கானும், ‘பணத்துக்காக பொய் சொல்கிறார்கள்‘ என்று பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்களை இழிவு படுத்திய ஜெயலலிதாவும் ‘வல்லுறவுக் குற்றத்துக்கு தூக்குதண்டனை விதிக்க வேண்டும்‘ என்று பேசுகின்றனர். இரவுப் பேருந்துகளை அதிகரிப்பது, இரவுப் பேருந்துகளில் ஊர்க்காவல் படையினரை நியமிப்பது போன்ற நடவடிக்கைகள் அறிவிக்கப்படுகின்றன. ‘வல்லுறவுக் குற்ற வழக்குகளை 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவேண்டும்‘ என்று வேறொரு வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊழலின் காவலர்களே ஊழல் ஒழிப்பு பேசுவது போல, தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடையைத் திறந்து வைத்து விட்டு, குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களுக்கான தண்டனையை அதிகரிப்பது போல, பெண்களுக்கெதிரான குற்றங்களை தூண்டுபவர்களும் குற்றவாளிகளைப் பாதுகாப்பவர்களும்தான் இன்று தண்டனை அதிகரிப்பு பற்றி பேசுகிறார்கள். மேன்மையான பாரதப் பண்பாடு என்ற பெயரிலான ஆணாதிக்க நிலவுடைமைக் கலாச்சாரம், வல்லுறவுகளை கணவன்மார்களின் உரிமையாக்கியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களைத் தம் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்வதை, ஆதிக்க சாதியினரின் அதிகாரமாக்கியிருக்கிறது.

கடந்த செப்டம்பரில் அரியானாவில் ஒரு தலித் பெண்ணை சாதிவெறியர்கள் 8 பேர் வல்லுறவுக்கு ஆளாக்கி, வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினர். அந்த வல்லுறவுக் காட்சியை வீடியோ எடுத்து கைபேசி மூலம் சுற்றுக்கும் விட்டனர். இதைக் காண நேர்ந்த பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். தலித் பெண்கள் மீதான வல்லுறவுக் குற்றங்கள் தண்டிக்கப்படுவதேயில்லை. காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மத்திய இந்தியாவில் இராணுவமும், துணை இராணுவப் படைகளும் நிகழ்த்தும் வல்லுறவுக் குற்றங்கள் சட்டரீதியாகவே பாதுகாக்கப்பட்டு, ‘அமைதியை‘ நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக அரசால் அங்கீகரிக்கப் பட்டிருக்கின்றன.

வல்லுறவுக் குற்றத்தின் தலைநகரம் என்று கூறுமளவுக்கு டில்லி இதில் முதலிடம் வகிக்கிறது. தேசிய குற்றப்பதிவுத் துறை அளிக்கும் புள்ளிவிவரத்தின் படி 2011 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பதிவான வல்லுறவுக் குற்றங்களில் 17.6% டில்லியில் நடந்திருக்கின்றன. பதிவான குற்றங்களில் 2.46% மட்டுமே தற்போது நிகழ்ந்துள்ளதைப் போல முகம் தெரியாத குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்டவை. 97% வல்லுறவுக் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறிமுகமானவர்கள் அல்லது உறவினர்கள் என்கிறது இப்புள்ளிவிவரம். அது மட்டுமல்ல, வல்லுறவுக்கு ஆளானவர்களின் மூன்றில் ஒரு பங்கினர் பெண் குழந்தைகள். உண்மையில் நடைபெறும் வல்லுறவுக் குற்றங்களில் ஐம்பதில் ஒன்று மட்டும்தான் புகாராகத் தரப்படுவதாகவும் இப்புள்ளி விவரம் கூறுகிறது.

முன்னேற்றம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனியாக்க கொள்கைகள், ஏற்கனவே சாதி ஆதிக்கமும் ஆணாதிக்கமும் நிறைந்த இந்தியப் பண்பாட்டை கள் குடித்த குரங்காக்கியிருக்கின்றன. ஊடகங்கள், தொலைக்காட்சி, இணையம் ஆகியவற்றின் மூலம் பரப்பப்படும் பாலியல் வக்கிரங்கள், பெண்களைப் பயன்படுத்தி வீசியெறியத்தக்க நுகர்பொருளாக கருதும் போக்கினை வளர்த்து வருகின்றன. நாட்டையே வல்லுறவுக்கு ஆட்படுத்தி வரும் இக்கொள்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கூவும் குற்றவாளிகள்தான் தண்டனையை தீவிரப்படுத்துவதன் மூலம் வல்லுறவுக் குற்றங்களைத் தடுக்கப்போவதாக நம்பச் சொல்கிறார்கள்.

இத்தகைய பார்வையின்றி டெல்லி சம்பவத்தை வெறும் கிரிமினல் குற்றமாக மட்டும் பார்க்க வைக்கும் வேலையினை ஊடகங்கள் செய்கின்றன. குற்றமிழைக்கும் கயவர்களை மட்டுமல்ல, அவர்களை தூண்டி விட்டு ஆதாயமடையும் சக்திகளையும் தண்டிக்க வேண்டும்.
_________________________________________________
– புதிய கலாச்சாரம், ஜனவரி – 2013
__________________________________________________