Sunday, June 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 729

இடம்பெயரும் தொழிலாளிகள்: இனவெறியர்களின் வெறுப்பரசியல்!

15

இடம்பெயரும் தொழிலாளர்கள்:
இனவெறியர்களின் பீதியூட்டலும் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியமும்!

சென்னையில், அடிப்படை வசதிகளின்றித் தகரக் கொட்டகையில் வாழ வேண்டிய அவலத்தில் தள்ளப்பட்டுள்ள வடமாநில கட்டுமானத் தொழிலாளர்கள்
சென்னையில், அடிப்படை வசதிகளின்றித் தகரக் கொட்டகையில் வாழ வேண்டிய அவலத்தில் தள்ளப்பட்டுள்ள வடமாநில கட்டுமானத் தொழிலாளர்கள்

நீண்ட தகரக் கொட்டகை. அதில் ஆறடிக்கு நாலடியில்  சிறிய அறைகள். அறை முழுவதும் பாகள் விரிக்கப்பட்டிருக்கின்றன. ஓரத்தில் சூட்கேஸ்கள் தலையணையாக உள்ளன. சுவரில் ஆணியில் தொங்கும் சட்டைகள், பேண்டுகள். இது நான்கு பேர் தங்கும் அறை. இதுபோல் அடுத்தடுத்து பல அறைகள். வெளியே அனைவருக்கும் குளிக்க ஒரு பெரிய தொட்டி. சுகாதாரமற்ற கழிப்பறைகள். கழிவுநீர் அப்பகுதியில் சாக்கடையாகத் தேங்கி நிற்கிறது.  இவைதான் வடமாநிலங்களிலிருந்து வந்து சென்னையில் வானுயர்ந்த கட்டிடங்களை எழுப்பும் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் வாழ்விடங்கள்.

கால்களை நீட்டிப் படுக்கக்கூட இடமில்லாமலும், இரவு முழுவதும் கொசுக்கடியால் அவதிப்பட்டும் உறங்கும் அவர்கள், காலையில் ஒப்பந்ததாரர்களால் கட்டுமானப் பணி நடக்கும் இடங்களுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறார்கள். சென்னையைச் சுற்றி பெருங்குடி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், பெருங்களத்தூர், தாம்பரம், திருவான்மியூர் ரயில் நிலயத்தை ஒட்டிய பகுதி முதலான பல இடங்களிலும் கட்டுமானத் தொழிலாளர்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள்.

அடிப்படை வசதிகள் இல்லாத  சுகாதாரமற்ற சூழலால் இவர்களில் பலர் நோய்வாய்ப்படுகின்றனர். அண்மையில் சென்னையில் வட மாநிலத் தொழிலாளர் இரண்டு பேர்  வாந்தி-பேதியால் மாண்டு போயுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, இவர்களுக்குப் பணியாற்றுமிடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளோ, அவசர மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளோ கிடையாது. சென்னை ஜேப்பியார் கல்லூரி கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் கட்டிடம் சரிந்து விழுந்து உயிரோடு கொல்லப்பட்டனர். ஓமலூர் தவிட்டுக் கம்பெனியில் தீயில் வெந்து வடமாநிலத் தொழிலாளிகள் மாண்டு போயினர். இத்தகைய அவலங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

விவசாயத்தின் அழிவும் தீவிரமாகும் உலகமயமாக்கமும் நாடெங்கும் கிராமப்புற இளைஞர்களை வாரிக்கொண்டுவந்து பெருநகரங்களில் குவித்துக் கொண்டிருக்கிறது. 2007-08 ஆம் ஆண்டின் தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஏறத்தாழ 30 சதவீத மக்கள், இடம் பெயரும் உழைக்கும் மக்களாக உள்ளனர். கடந்த 2001-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஏறத்தாழ ஒரு கோடியே 70 லட்சம் பீகாரிகள் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் கூலித் தொழிலாளர்களாகக் குடியேறியுள்ளனர். இடம் பெயர் தொழிலாளர்களின் மையமாக மும்பை நகரம் மாறியுள்ளது. இங்கு இடம் பெயர்ந்த உழைக்கும் மக்களாக ஏறத்தாழ ஒரு கோடிக்கும் மேலானோர்  உள்ளனர்.

கடந்த ஆகஸ்டு மாதத்தில் தென்மாநிலங்களிலிருந்து உயிருக்கு அஞ்சி வெளியேறும் வடமாநிலத் தொழிலாளர்கள்
கடந்த ஆகஸ்டு மாதத்தில் தென்மாநிலங்களிலிருந்து உயிருக்கு அஞ்சி வெளியேறும் வடமாநிலத் தொழிலாளர்கள்

தமிழகத்தில் ஏறத்தாழ 10 முதல் 15 இலட்சம் பேர் இடம் பெயர்ந்த தொழிலாளர்களாக உள்ளனர். ஆந்திரா, அசாம், பீகார், சட்டிஸ்கர், ஒரிசா, உ.பி. மணிப்பூர், மிஜோரம் முதலான மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்த இக்கட்டுமான கூலித் தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலைக்கு 150 முதல் 300 ரூபாய் வரை ஊதியமாகத் தரப்படுகிறது. இவர்கள் தவிர, நாளொன்றுக்கு ரூ.100,150 கூலியுடன்  தமிழகத்தின்  உணவு விடுதிகள் – தேநீர்க்கடைகளில் பல இளைஞர்கள் பணியாற்றுகின்றனர்.

பல ஆண்டுகளாக இவர்கள் தமிழகத்தில் தங்கியிருந்த போதிலும், இவர்களுக்கு அடையாள அட்டை எதுவும் ஒப்பந்ததாரர்களால் வழங்கப்படுவதில்லை. தொழிலாளர்களுக்கு கேன்டீன், குழந்தைகள் காப்பகம், குடிநீர், கழிவறை முதலான வசதிகளைச் செய்து தர வேண்டியது முதலாளிகளின் கடமையாகும். அல்லது ஒப்பந்ததாரர்கள் அவற்றைச் செய்ய வேண்டும். மாநில அரசு அதனைக் கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், குறைந்த பட்ச கூலி உள்ளிட்டு இந்த அடிப்படை வசதிகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படாத போதிலும் அரசு கண்டுகொள்வதில்லை. இடம் பெயரும் தொழிலாளர்கள் சட்டபூர்வக் கூலியைக்கூட கேட்க முடியாத, அதைப் பற்றி அறிந்திராத நிலையிலேயே உள்ளனர். அவர்களை அமைப்பாக்கி தொழிற்சங்கம் கட்டக்கூட விடாமல்  முதலாளிகளும் ஒப்பந்ததாரர்களும் மூர்க்கமாகத் தடுத்து வருகின்றனர்.

இத்தகைய இடம் பெயரும் உழைக்கும் மக்களுக்கு, தேர்தல் நேரத்தில் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்த முடியாத நிலைமையே நீடிக்கிறது. அது பொதுத் தேர்தலாக இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் அவர்களால் தங்கள் பகுதிக்குச் சென்று வாக்களிக்க முடிவதில்லை. ஆனால், இது பற்றி தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இடம் பெயரும் உழைக்கும் மக்களுக்கு அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழான உணவுப் பொருட்கள் இடம் பெயர்ந்த இடத்தில் வழங்கப்படுவதில்லை. ஏனெனில், அவர்கள் தற்காலிகமாக இடம் பெயர்ந்துள்ள இடத்திற்கான ஆதாரத்தைப் பெற வேண்டியிருக்கிறது. அப்படி ஒருவேளை பெற்றாலும், அந்த இடத்தில் வேலை நிரந்தரமில்லாததால், அடுத்தடுத்து வேறிடத்துக்கு மாறிச் செல்ல வேண்டியிருக்கிறது. அங்கும் ஆதாரத்தைப் பெற வேண்டியிருக்கிறது. இது தீராத நச்சுச் சுழலாக இருப்பதால் இடம் பெயரும் உழைக்கும் மக்கள் தாங்கள் செல்லுமிடங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் ஆதாரத்தைப் பெற முடியாமல் தவித்து நிற்கின்றனர். இதனால் அவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலுள்ளவர்கள் வாங்குவதைப் போலவே, தனியார் அங்காடிகளில் உணவுப் பொருட்களைக் கூடுதல் விலைக்கு வாங்க வேண்டியதாகி, தொடர்ந்து ஏழ்மை நிலையிலேயே உள்ளனர்.

இடம் பெயரும் உழைக்கும் மக்களுக்கு இலவசப் போக்குவரத்து, குடியிருப்பு, வேலைவாப்பு, மருத்துவம், அவர்களது குழந்தைகளுக்கான கல்வி முதலான அடிப்படை வசதிகளைச் செதுதர வேண்டும் எனத் தொழிற்சங்கங்களும், தன்னார்வக் குழுக்களும்,  சில அறிவுத்துறையினரும் அவ்வப்போது குரலெழுப்பிய போதிலும்,  அரசும் முதலாளிகளும் அதை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அரசின் கொள்கை வகுப்பாளர்கள் இவர்களைப் பற்றி அக்கறை காட்டுவதில்லை. இதனால் ஏற்படும் சமூகக் கொந்தளிப்புகளைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையோ, தீர்வோ அவர்களிடம் இல்லை.

இடம் பெயர்ந்த பீகாரி கூலித் தொழிலாளியை சுற்றிவளைத்துத் தாக்கும் இனவெளி பாசிச ராஜ் தாக்கரே குண்டர்களின் அட்டூழியம்
இடம் பெயர்ந்த பீகாரி கூலித் தொழிலாளியை சுற்றிவளைத்துத் தாக்கும் இனவெளி பாசிச ராஜ் தாக்கரே குண்டர்களின் அட்டூழியம்

இந்திய அரசின் அடிப்படை உரிமைகள் சட்டத்தின் 19(1) பிரிவு ‘டி’ மற்றும் ‘இ’ யின் படி, எந்த ஒரு குடிமகனும் நாட்டின் எந்தப் பகுதிக்கும் இடம் பெயரவும் அப்பகுதியில் தொடர்ந்து வாழவும் உரிமை உள்ளது. இருப்பினும், கடந்த 2008-ஆம் ஆண்டில் மும்பை, புனே, நாசிக் நகரங்களில் பிழைப்புக்காகக் குடியேறிய உ.பி. பீகார் மாநிலக் கூலித் தொழிலாளிகள் மீது மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா நடத்திய வன்முறைத் தாக்குதலால் வட இந்திய உழைக்கும் மக்கள் மும்பையை விட்டுத் தப்பியோடிய அவலம் நடந்தது. அண்மையில் வட மாநிலங்களைச் சேர்ந்த ரிச்சர்டு லோயிதம் பெங்களூரிலும், தனா சங்மா குர்கானிலும் கொல்லப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களிலிருந்து பிற மாநிலங்களில் கல்விக்காகவும் பிழைப்புக்காகவும் குடியேறும் மக்களைத் தாக்குவதும் இழிவுபடுத்துவதும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மைய அரசின் உள்துறை அமைச்சகம் எச்சரிக்கிறது. ஆனால், எந்த மாநில அரசும் இதனைப் பொருட்டாக மதிப்பதேயில்லை.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கக் கொள்கையானது, உழைக்கும் மக்களின் பெருந்திரளான இடம் பெயர்தலையும் சமூகத்தில் முறுகல் நிலையையும் தோற்றுவித்துள்ளது. விவசாயத்தின் அழிவும், அதில் முதலீடற்ற நிலையும், திணிக்கப்படும் ஏகாதிபத்திய உலகமயமாக்கமும் இப்பிரச்சினையை மேலும் தீவிரமாக்கி வருகிறது. விவசாயத்தை விட்டு உழைக்கும் மக்கள் பெருந்தொகையில் நகரங்களில் குவிவதையும், தேவையேயில்லாமல் உழைக்கும் மக்களை விசிறியடித்து அலைக்கழிக்கப்பதையும் உலகமயமாக்கம் மூர்க்கமாகச் செது கொண்டிருக்கிறது. அற்பக்கூலியுடன் உரிமைகளற்ற அடிமை நிலையில் வாழும் இம்மக்கள், எஸ்.எம்.எஸ். பீதியால் உயிருக்கு அஞ்சி ஓட வேண்டிய அவலத்தைப் போன்று, எந்நேரமும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில்தான் உயிர் வாழ வேண்டியிருக்கிறது. ஆக்கிரமிப்பாளர்களாகக் காட்டி இடம் பெயரும் தொழிலாளர்கள் மீது இனவெறி, சமூகப் புறக்கணிப்பு, பாலியல் தாக்குதல்கள், அச்சுறுத்துவது, விரட்டுவது, பொய்வழக்கு போடுவது, கைது செய்வது, கொள்ளையர்களாகச் சித்தரித்து சுட்டுக் கொல்வது – என்பதாக நிலைமைகள் தீவிரமாகி வருவதால், வரப் போகும் காலம் மிகவும் சிக்கலாகவே இருக்கும் என்று சில முதலாளித்துவ அறிஞர்களே ஒப்புக் கொள்கின்றனர்.

கூலித் தொழிலாளிகளாகப் பெரு நகரங்களில் குவியும் இடம் பெயரும் தொழிலாளர்கள் யாருடைய வாழ்வையும் பறிப்பதற்காக வந்தவர்கள் அல்ல. இருப்பினும், வடகிழக்கிந்தியர்களை அந்நியர்களாகப் பார்க்கும் மனோபாவம்தான் சமுதாயத்தில் நிலவுகிறது. அவர்கள் வேலை வாப்பைப் பறித்துக் கொள்கிறார்கள், அவர்களால் சமூகத்தின் ஒழுங்கு சிதைகிறது என்றெல்லாம் இனவெறியர்களால் இட்டுக்கட்டப்பட்ட பிரச்சாரத்துக்கு மக்கள் எளிதில் பலியாகியாகிறார்கள். அசாமில் நடந்துள்ள வன்முறை வெறியாட்டங்களும், அதைத் தொடர்ந்து வடகிழக்கிந்திய மக்கள் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து பெருந்திரளாக வெளியேறியதும்,  பிழைப்புக்காக நாட்டுக்குள்ளேயே நடக்கும் குடியேற்றங்களும் இன ரீதியான வன்மத்தை மக்களிடையே மௌனமாக வளர்த்துக் கொண்டிருக்கிறது. நாட்டில் ஏற்கெனவே நீடித்துவரும் சாதி, மத, இன முரண்பாடுகளும் வேலையின்மை, விலையேற்றம் முதலான பிரச்சினைகளும் தீராத நிலையில், இடம் பெயர் தொழிலாளர்கள்தான் இவையனைத்துக்கும் காரணம் என்பதாக வெறியூட்டப்பட்ட நிலையில்தான் நமது சமூக அமைப்பு உள்ளது.

வெளி மாநிலத்தவருக்குக் குடும்ப அட்டை தரக்கூடாது எனக் கோரி த.தே.பொ.கட்சியின் இளைஞர் அமைப்பினர் சென்னையில் நடத்திய ஆர்பாட்டம்
வெளி மாநிலத்தவருக்குக் குடும்ப அட்டை தரக்கூடாது எனக் கோரி த.தே.பொ.கட்சியின் இளைஞர் அமைப்பினர் சென்னையில் நடத்திய ஆர்பாட்டம்

கடந்த 2008-ஆம் ஆண்டில் வட இந்திய மாணவர்கள் ரயில்வே நுழைவுத் தேர்வு எழுத மும்பை வந்த போது இனவெறி பிடித்த ராஜ்தாக்கரேவின் குண்டர்களால் தாக்கி விரட்டப்பட்டனர். மும்பையில் டாக்சி ஓட்டுநர்களான பீகாரிகள் அடுத்தடுத்து தாக்கப்படுகின்றனர். ஆனால், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் இல்லாமல் மும்பை ஒருநாள் கூட இயங்க முடியாது என்பதே உண்மை. டாக்சி ஓட்டுநர்கள், காய்கறி வியாபாரிகள், பால்காரர், செய்தித்தாள் போடுபவர், டெலிவரி பையன்கள் எனப் பலதரப்பட்ட வேலைகளைச் செய்பவர்கள் வடகிழக்கு மாநிலத்தவர்கள்தான். இவர்களில் பெரும்பாலோர் பீகார், உ.பி. முஸ்லிம்களாக இருப்பதால், இவர்களால் மராத்தியர்களின் வாழ்வும் வளமும் பண்பாடும் நாகரிகமும் நாசமாகிவிட்டதாகவும்,  இவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டி வெறியூட்டி வருகிறது ராஜ்தாக்கரே கும்பல். தமிழகத்தின் மணியரசன் கும்பலோ, தமிழகத்தில் பிழைப்புக்காகக் குடியேறியுள்ள வடமாநிலத் தொழிலாளர்களை வெளியேற்ற வேண்டுமென்று வெறியூட்டுகிறது.

பொதுவில் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் ராஜ்தாக்கரே அளவுக்கு வன்மத்தைக் காட்டாதபோதிலும், தமது ஓட்டு வங்கிக்காக இதே பாணியில்தான் செயல்படுகின்றன. காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் குறுகிய இனவெறியூட்டி அரசியல் ஆதாயமடையும் நோக்கில்தான் கர்நாடகா மற்றும் கேரளத்தின் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் செயல்படுகின்றன. ஆனால், உழைக்கும் மக்களின் இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களைத் தகர்த்துக் கொண்டிருப்பதும், வேலையின்மை, விலையேற்றம் முதலானவற்றுக்குக் காரணமாக இருப்பதும் ஏகாதிபத்திய உலகமயமாக்கம்தான். ஒருபுறம் தரகுப் பெருமுதலாளிகளும், புதிய தரகு வர்க்கங்களும், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் கொழுப்பதற்கும், உழைக்கும் மக்கள் மரணப் படுகுழியில் சிக்கித் தவிப்பதற்கும் காரணமாக இருப்பது தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கம்தான். இந்நிலையில், உலகமயமாக்கலை எதிர்க்காமல் குறுகிய இனவெறியூட்டுவதையே இவர்கள் தீர்வாக முன்வைக்கின்றனர்.

மகாராஷ்டிராவில் ராஜ்தாக்கரே கும்பல் மராத்தா இனவெறி-இந்துவெறி தேசியத்தை இதற்குத் தீர்வாக வைக்கிறது. தமிழகத்தில் மணியரசன் கும்பலோ தமிழ்த்தேசியத்தைத் தீர்வாகக் காட்டுகிறது. ராஜ்தாக்கரே முன்வைக்கும் இந்துத்துவ தேசியமோ, மணியரசன் முன்வைக்கும் தமிழ்த்தேசியமோ உலகமய எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல. தாக்கரே கும்பல் என்ரானை வரவேற்று ஆதரித்தது என்றால், மணியரசன் கும்பலோ தமிழகத்தில் முதலீடு செயும் அந்நிய நிறுவனங்களில் தமிழனுக்கு பங்கு கேட்கிறது. ஏகாதிபத்திய உலகமயத்துடன் கூட்டணி கட்டிக் கொண்டுள்ள இவர்கள், வடமாநிலங்களிலிருந்து பிழைப்புக்காக வந்தேறிய தொழிலாளர்களை எதிரிகளாகக் காட்டுகின்றனர். தமிழனுக்கு எதிரியாக வடமாநிலத் தொழிலாளர்களையும், மராத்தியனுக்கு எதிராக பீகார் தொழிலாளர்களையும் நிறுத்தி இவர்கள் இனவெறியூட்டி மோதவிடுகின்றனர்.

ஏகாதிபத்திய உலகமயமாக்கத்தின்கீழ் உற்பத்தியும் உழைப்புப் பிரிவினையும் உலகமயமாகியுள்ள நிலையில், ஏகாதிபத்திய மூலதனத்துக்கு – பன்னாட்டு ஏகபோக தொழிற்கழகங்களுக்கும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்களுக்கும் – எதிரான போராட்டங்களில் தேசிய எல்லைகளையும் தேசிய இன அடையாளங்களையும் கடந்த பாட்டாளி வர்க்க அமைப்புகளும் இயக்கங்களும் ஒன்றிணைய வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனம் கடந்த தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டியமைப்பதன் மூலம்தான் உலகமயமாக்கத்தை வீழ்த்த முடியும். ஆனால், உழைக்கும் மக்கள் உலகமயமாக்கலுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போராடுவதைத் தடுத்து திசைதிருப்பவும், குறுகிய இனவெறியூட்டி ஆதாயமடையவும் ராஜ்தாக்கரே, வட்டாள் நாகராஜ், தமிழகத்தின் மணியரசன் கும்பல் போன்றவை கிளம்பியுள்ளன. வர்க்க ஒற்றுமையைச் சிதறடித்து இனரீதியாகக் கூறுபோட்டுப் பிரிக்கும் அடையாள அரசியலையே தங்களது நிகழ்ச்சிநிரலாகக் கொண்டுள்ள இவர்கள், தங்களது வர்க்கத்தன்மைக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் செயல்படுத்துகின்றனர்.

எல்லாவற்றையும் தேசிய இன முரண்பாடகப் பார்க்கும் மணியரசன் போன்ற இனவாத அடையாள அரசியல்வாதிகளின் காமாலைக் கண்களுக்கு ஏகாதிபத்திய உலகமயமாக்கலையும் அதன் கொடிய விளைவுகளையும் புரிந்து கொள்ள முடியாது. வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராகத் தமிழ் மக்களின் பகையைத் தூண்டுவதென்பது, ஏகாதிபத்திய உலகமயமாக்கத்துக்குத் துணைபோவதுதானேயன்றி, அது தேசிய இனச் சிக்கலுக்கோ தீவிரமாகிவரும் பிரச்சினைகளுக்கோ ஒருக்காலும் தீர்வாக முடியாது. வட இந்தியத் தொழிலாளிகளால் தமிழனக்குப் பாதிப்பு ஏதுமில்லை எனும்போது, இத்தகைய இனவெறியர்கள் தமிழனின் பெயரால், தமிழினத்தின் பெயரால் பேசுவதற்கு எந்த உரிமையும் கிடையாது. ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிரான பாட்டாளி வர்க்க உலகமயமாக்கம்தான் மாற்றுத் தீர்வாக முடியும். பாட்டாளி வர்க்க சர்வதேசியம்தான் பாட்டாளி வர்க்க உலகமயமாக்கத்துக்குப் பொருத்தமான அரசியல் அமைப்பாகவும் இருக்க முடியும். அத்தகைய திசையில், இனவெறியர்களைத் தனிமைப்படுத்தி, ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிராகத் தேசிய எல்லைகளையும் தேசிய இன அடையாளங்களையும் கடந்த போராட்டங்களும் தொழிலாளர்களின் ஒற்றுமையுமே இன்றைய தேவையாக உள்ளது.

____________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012
_______________________________________

மூன்றாவது வழிபாட்டுப் பாடல்…

4

எனது சொற்கள்
மண்ணாய் மணத்த நாளில்
கோதுமைத் தாள்களின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
கொதித்துச் சீறிய நாளில்
இரும்புத் தளைகளின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
கற்களாய் உறைந்த நாளில்
தழுவிச் செல்லும் ஓடையின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
கலகமாய்க் கிளர்ந்த நாளில்
நடுங்கும் நிலத்தின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
புளித்த ஆப்பிளாய் சுருங்கிய நாளில்
நம்பிக்கை தளரா உள்ளங்களின்
நண்பனாயிருந்தேன்.

ஆனால்
சொற்கள் தேனாய்ச் சுரந்த தருணத்தில்….
ஈக்கள் மொய்த்தன
என் உதடுகளில்!

-மஹ்மூத் தார்வீஷ்
(ஆங்கிலம் வழி தமிழில்: புதூர் இராசவேல்)

Mahmoud-Darwish
மஹ்மூத் தார்விஷ்

மஹ்மூத் தார்வீஷ் பாலஸ்தீனப் போராளி. இழந்த தாய்நாட்டை மீட்கப் போராடி வரும் எல்லா பாலஸ்தீன மக்களும் நேசித்த கவிஞரும் கூட. 1948இல் இசுரேல் அரசு தார்வீஷின் கிராமத்தைச் சூறையாடி முற்றிலுமாக அழித்தபோது, அவரது குடும்பம் லெபனானுக்குச் சென்றது. விடுதலைத் தாகம் கொண்ட இளம் போராளியாக தனது இருபதாம் வயதுகளிலேயே இசுரேல் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து பணியாற்றினார். 1970இல் ரசியா சென்று படித்தார்; பிறகு பெய்ரூட்டிலும், பாரீசிலுமாக சுமார் 26 ஆண்டுகள் புலம் பெயர்ந்து வாழ்ந்தார். 1996இல் இசுரேல் திரும்பி, கொந்தளிப்பான ‘மேற்கு கரையில்’உள்ள ரமல்லாவில் தங்கினார்.

கவிதை, உரைநடைப் படைப்புக்களில் 30 தொகுதிகளை வெளியிட்டுள்ள அவர், கலை மக்களுக்கானது என்பதில் தெளிவான பார்வை கொண்டவர். தார்வீஷ் பாலஸ்தீன மக்களின் உயிர்மூச்சு; தாயகம் பிடுங்கப்பட்டவர், நீக்கப்பட்டவர். தாயகம் ஏக்கம் கொண்டவர்களின் கம்பீரமான போராட்ட சாட்சி.

கடந்த ஆகஸ்டு 9, 2008 அன்று அவரது 66ஆவது வயதில் இதயநோய்ச் சிகிச்சையின் போது இறந்து போனார். பாலஸ்தீனத் தாயகத்தின் போராளியாகவும், புலம் பெயர்ந்தோரின் உரிமைக் குரலாகவும், கம்யூனிச உணர்வுமிக்க சர்வதேசவாதியாகவும் வாழ்ந்த கவிஞர் மஹ்மூத் தார்வீஷ்.

______________________________________________

-புதிய கலாச்சாரம், அக்டோபர்’ 2008
______________________________________________

வன்னி அரசுவின் பித்தலாட்டத்தை தோலுரிக்கும் தோழர் ஆம்பள்ளி.முனிராஜ்!

12

வன்னி அரசுவின் (விடுதலை சிறுத்தைகள்) பித்தலாட்டங்களை தோலுரிக்கும்
விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் ஆம்பள்ளி. மு
னிராஜ்.

அன்பிற்குரியவர்களே,

வம்பர் 7-ம் தேதி மாலை 4.30 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் அருகிலுள்ள நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டியிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் மீது பா.ம.க. சாதிவெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஊடகங்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரச்சாரத்தின் மூலம் நாடே இதை அறிந்தது.

பா.ம.க தான் இத்தாக்குதலை திட்டமிட்டு நடத்தியது. இதை மக்கள் மத்தியிலிருந்து ஆய்வு செய்து, அம்பலப்படுத்தி சுவரொட்டி ஒட்டியும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் வெளிக்கொண்டு வந்துள்ளோம். நான் இந்த பகுதியில் தங்கி நீண்டகாலமாக செயல்பட்டவன் என்கிற முறையில் இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், வன்னிய மக்களை பற்றியும் இன்னபிற சாதியினர் பற்றியும் நன்றாக அறிவேன்.

1980-ல் தோழர் பாலன் இங்கு அரசியல் வேலை செய்துகொண்டிருந்த போதும், பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்டு தியாகியாகி அவருக்கும் தோழர் அப்புவுக்கும் நாயக்கன்கொட்டாயில் சிலை வைத்த போதும், அதன்பிறகு 1989 வரை அப்பகுதியில் தங்கி அரசியல் வேலைகளை செய்திருக்கிறேன். தோழர்கள் அப்பு, பாலன் சிலை நிறுவும் கமிட்டிக்கு தலைமை பொறுப்பேற்றுள்ளேன். அங்கிருந்த முன்னணி புரட்சியாளர்கள் மற்றும் அனைத்து சாதி உழைக்கும் மக்களுடனும் ஐக்கியப்பட்டு இணைந்து தான் அந்த சிலைகள் நிறுவப்பட்டன. நக்சல்பாரி வரலாறு இம்மாவட்டத்தில் நீண்ட நெடிய துயரம் நிறைந்த பயணம் கொண்டது. இதனை சாதிக் கண்கொண்டு பார்க்கும் வன்னியரசு போன்ற பிழைப்புவாதிகள் தெரிந்திருக்க நியாயமில்லை.

அங்கு சிலைகள் நிறுவப்பட்டதானாலும், இரட்டை குவளை முறையை எதிர்த்த போராட்டமானாலும், கந்துவட்டி கொடுமைகளை எதிர்த்த போராட்டமானாலும் இது போன்ற பல நூறு பிரச்சினைகள் புரட்சிகர அமைப்புகளின் முன்னிலையில் தீர்க்கப்பட்டிருக்கிறது என்றால் அதை எப்போதும் இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், வன்னியர்கள், இன்னபிற சாதி உழைக்கும் மக்கள் என அனைவரும் சேர்ந்தே செய்துள்ளனர். சிலை அமைப்பதில் உழைப்பு, உணவு, தண்ணீர்,பொருளாதாரம் அனைத்தும் அனைத்து சாதி மக்களின் உணர்வும், உழைப்பும் தான். அனைத்து சாதி மக்களும் ’தோழர்’  ’தோழர்’  என்கிற ஒரே உணர்வில் தான் செயல்பட்டு வந்தனர்.

உதாரணத்திற்கு, மாரவாடி என்கிற ஊரில் ஒரு தாழ்த்தப்பட்ட உழைப்பாளரின் மனைவியை கந்துவட்டிக்காரன் அடித்து உதைத்த போது அந்த பெண்ணுக்கு கருவே கலைந்து போனது. இந்த கந்துவட்டி கொடுமைக்காரன் தருமபுரியிலுள்ள ரவுடி ரங்கன் என்பவனின் தந்தை. கந்துவட்டிக்காரனின் சைக்கிளை பிடுங்கிக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நட்ட ஈடு கொடுத்துவிட்டு சைக்கிளை வாங்கிக்கொள் என்று தோழர் பாலன் தலைமையில் முடிவு செய்து அறிவித்த போது, அதை ஏற்று அவனை மீட்டுக்கொண்டு போனவர் தான் இன்ஸ்பெக்டர் சிவகுரு. இந்த சம்பவத்தில் வன்னியரான அந்த கந்துவட்டிக்காரனை அடித்ததில் முன்னணியில் நின்றவர்கள் வன்னிய மக்கள் தான்.

அத்தகையவர்கள் இன்று தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை தாக்குகிறார்கள் என்றால் இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பா.ம.க சாதிவெறியர்களால் தூண்டப்பட்டு வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதே முதன்மையான காரணம். அதே போல தாழ்த்தப்பட்ட மக்களை வி.சி அமைப்பும் தவறாக வழிகாட்டி இழுத்துச்செல்ல முயற்சிக்கிறது. இப்படி தவறாக வழிகாட்டுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு வன்னியரசின்  இந்த  பித்தலாட்டங்களே போதுமானது.

தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய்க்கு அருகிலுள்ள அண்ணா நகரில் வன்னியர்கள் இருப்பதாகவும், அதில் கிருஷ்ணன் என்கிற வன்னியர் இருப்பதாகவும், அவர் தான் இந்த சாதிவெறி தாக்குதலை பின் நின்று நடத்தியதாகவும் அவர் ம.க.இ.க வைச் சேர்ந்தவர் என்றும் வன்னியரசு கூறியுள்ளார்.

அண்ணா நகரில் வன்னியர்கள் இருப்பதாக கூறுவது முதல் பொய். அங்கு தாழ்த்தப்பட்ட மக்களை தவிர வேறு எந்த சாதியினரும் இல்லை. இரண்டாவதாக தருமபுரி மாவட்டத்தில் ம.க.இ.க அமைப்பே இல்லை. வி.வி.மு என்கிற அதன் தோழமை அமைப்புதான் செயல்படுகிறது.

அண்னா நகரில் வி.வி.மு உறுப்பினரோ, ஆதரவாளரோ கூட இல்லை. எனவே இல்லாத ஒரு நபரை இருப்பதாகவும், இல்லாத ஒரு சாதியை இருப்பதாகவும், இல்லாத ஒரு அமைப்பை இருப்பதாகவும் பச்சை பொய்யை கூறுகின்றார் வன்னியரசு. இப்படி அந்த பகுதி பற்றி தெரியாத, நேரடி பரிச்சயம் இல்லாத, மாநிலத்தின் பிற மாவட்ட மக்களுக்கு தவறான தகவலை கொடுத்து பொய் பிரச்சாரம் செய்கிறார்.

இந்த அமைப்பின் தலைமை பொறுப்பில் இத்தகையவர்களும் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. உண்மையில் வன்னியரசுக்கு கொஞ்சமாவது நேர்மை, நாணயம் இருக்கிறது என்றால் இதே அண்ணா நகருக்கு வந்து அவர் கூறும் ம.க.இ.க கிருஷ்ணனை காட்டட்டும் பார்க்கலாம். எப்போது வருகிறார் என்று தகவல் கூறினால் நானும் வருகிறேன். சவாலை ஏற்கத் தயாரா ?

இப்படிக்கு

ஆம்பள்ளி.முனிராஜ்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
கிருஷ்ணகிரி மாவட்டம்.

மக்களின் சேமிப்புக்கு வந்தது ஆபத்து!

6

  பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என்ற பெயரால், பல பிராண்டுகளை விற்பனை செயும் சில்லறை வர்த்தகத்தில்  51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி, உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் அந்நிய முதலீட்டுக்குத் தாராள அனுமதி, ஊடகத் துறையில் அந்நிய முதலீட்டின் அளவை உயர்த்துவது, சமையல் எரிவாயு விற்பனையில் கட்டுப்பாடு, அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது முதலான நாட்டையும் மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் நடவடிக்கைகளை எடுத்தது,  மன்மோகன்-மாண்டேக்சிங்-சிதம்பரம் கும்பல்.

இதுவும் போதாதென்று, இரண்டாவது கட்டமாக இப்போது காப்பீடு துறையில் நேரடி அந்நிய முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்துவது, ஓய்வூதிய நிதித்துறையில் 26 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்குக் கதவை அகலத் திறந்துவிடுவது, வருடத்திற்கு ஆறு எரிவாயு உருளைகள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் எனக் கட்டுப்பாடு விதிப்பது, ஊக பேரச் சந்தையைக் கட்டுப்படுத்தும் முன்பேரச் சந்தைகளின் கமிசனுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம்  முதலான மக்கள் விரோத முடிவுகளை அறிவித்துள்ளது, இக்கும்பல். நாட்டின் நிதித்துறையில் இருந்து வரும் பெயரளவிலான தற்சார்பை முறிப்பதோடு, நடுத்தர மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் சேமிப்புகளை அந்நிய ஏகாதிபத்திய முதலாளிகள் சூறையாடுவதற்கும் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்றுக் கொண்டிருக்கிறது, இந்த ஏகாதிபத்தியக் கூலிப்படை.

ஒரு துறை சீர்கெட்டிருந்தால் அதைச் சீர்திருத்தலாம். ஆனால், காப்பீடு துறை எந்த வகையிலும் சீர்கெட்டிருக்கவில்லை. காப்பீடு துறை நாட்டுடமையாக்கப்படுவதற்கு முன்புதான் சீர்கெட்டுக் கிடந்தது. இப்போது நடக்கும் ஈமு கோழிப்பண்ணை மோசடிகள் போன்று 1950-களில் காப்பீடு துறையில் தனியார் நிறுவனங்களின் மோசடிகள் புழுத்துப் பெருகியதால்தான் காப்பீடு துறையை அரசே தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. ஆனால், இப்போது மோசடிகளையே மூலதனமாகக் கொண்டுள்ள தனியார் முதலாளிகளிடம் அத்துறையைத் தாரைவார்க்கிறது மன்மோகன் அரசு.

1956-இல் ஆயுள் காப்பீடுத் துறையும் 1971-இல் பொதுக்காப்பீடும் அரசுடமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியக் காப்பீடு சந்தை முழுவதும் அரசுத்துறை நிறுவனங்களிடமே இருந்தன. பொதுச்சொத்துக்களைத் தனியார்மயமாக்கும் நோக்கத்துடன் காப்பீடு துறை சீர்திருத்தத்துக்காக 1993-இல் மல்ஹோத்ரா குழுவை அரசு உருவாக்கியது. அந்தக் குழுவோ, காப்பீடு துறையின் 74 சதவீதப் பங்குகளைத் தனியார் முதலாளிகளுக்கு விற்க வேண்டுமெனப் பரிந்துரைத்தது. இதற்கெதிராக பொதுக்கருத்து வலுவாக இருந்ததால், பங்குகள் விற்பனை தற்காலிகமாகத் தடுக்கப்பட்டது. பின்னர் 1999-இல் பா.ஜ.க. அரசு காப்பீடு துறையைத் திறந்துவிடுவதற்காக ஐ.ஆர்.டி.ஏ. சட்டத்தை நிறைவேற்றியது. அதன் தொடர்ச்சியாக இன்று 24 தனியார் காப்பீடு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த 13 ஆண்டுகளில் எந்தவொரு தனியார் காப்பீடு நிறுவனமும் தொடர்ச்சியாக இலாபத்துடன் இயங்கவில்லை. மாறாக, பலவகையான முறைகேடுகளைத்தான் செதுள்ளன. மும்பையில் ஓ.பி.தீட்சித் என்பவர் பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தால் மோசடி செயப்பட்ட வழக்கு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. (தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, மார்ச் 10,2011)

ஓய்வூதியம் என்பது உழைக்கும் மக்களின் சமூகப் பாதுகாப்புத் திட்டம். அரசுத்துறை ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஒருசில தனியார்துறை ஊழியர்களைத் தவிர, கோடிக்கணக்கான இந்திய உழைக்கும் மக்கள் தங்களின் முதுமைக் காலத்தில் எவ்வித சமூகப் பாதுகாப்பும் இல்லாத அவலநிலையிலேயே உள்ளனர். இருப்பினும்,ஓய்வூதியம் பெற்றுவரும் அரசு ஊழியர்களிடமிருந்து அந்த உரிமையையும்  2003-ஆம் ஆண்டில் பா.ஜ.க. கூட்டணி அரசு  பறித்தது. 2004-க்குப் பிறகு மைய அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது; அதற்குப் பதிலாக அந்த ஊழியரின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் 10 சதவீதத் தொகையோடு, அதற்கிணையான தொகையை தனது பங்காகச் சேர்த்து அவர்களின் வருங்கால வைப்பு நிநிக் கணக்கில் மைய அரசு செலுத்தும் என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தது. மைய அரசைப் பின்பற்றி மாநில அரசுகளும் 2004-க்குப் பிறகு அரசுப் பணியில் சேருவோருக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என்று அறிவித்தன. ஓய்வூதியத் திட்டம் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய நிதியைக் கையாள்வதிலும் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதுவரை தொழிலாளிகளிடமிருந்து மாதந்தோறும் பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வாரியம் என்ற மைய அரசு நிறுவனத்திடமும், அந்த நிதியை முதலீடு செயும் பொறுப்பு இந்திய அரசு வங்கியிடமும் இருந்து வந்தது. ஆனால், இந்த அமைப்புகள் இந்த நிதியைத் திறம்பட முதலீடு செயும் ஆற்றல் கொண்டதல்ல என்று காரணம் காட்டி, வருங்கால வைப்பு நிதியை முதலீடு செயும் பொறுப்பில் ஐ.சி.ஐ.சி.ஐ., கோடக் மகிந்திரா வங்கி, ரிலையன்ஸ் கேப்பிடல், ஹெச்.டி.எஃப்.சி. ஆகிய தனியார் நிதி நிறுவனங்களையும் நுழைய அனுமதித்தது பா.ஜ.க. கூட்டணி அரசு.

பின்னர் ஆட்சிக்கு வந்த காங்கிரசு கூட்டணி அரசு, அமைப்புசாரா துறைகளில் பணியாற்றிவரும் கோடிக்கணக்கான தொழிலாளர்களையும் ஓய்வூதியத் திட்டத்தில் இழுத்துப் போடும் தேசிய ஓவூதியத் திட்டத்தை அறிவித்தது. மைய-மாநில அரசு ஊழியர்கள் இத்தேசிய ஓவூதியத் திட்டத்தில் இணைவது கட்டாயமென்றும், மற்ற துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமது விருப்பப்படி இதில் இணையலாம் என்றும் அறிவித்தது.

இதனையடுத்து தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை அரசின் கடன் பத்திரங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் மட்டும்தான் முதலீடு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணையும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களது வருங்கால வைப்புநிதியை அரசு பத்திரங்களில் மட்டுமின்றி, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களிலும் பங்குச் சந்தையிலும் முதலீடு செயலாம் என்ற தாராளமயம் புகுத்தப்பட்டது. நாடெங்கும் கடும் எதிர்ப்பின் காரணமாக, கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் சில்லறை வணிகம் மற்றும் தொழிலாளர்களின் ஓவூதிய நிதியைக் கையாள்வதில் அந்நிய நிறுவனங்களை அனுமதிக்கும் முடிவுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு, இப்போது மூர்க்கமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இதன் விளைவாக, ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கும் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் அறிவிக்கும் திட்டங்களில் ஏதாவதொன்றை தொழிலாளி தீர்மானித்துக் கொள்ள வேண்டும், அல்லது அத்தொழிலாளியின் சார்பில் முதலீட்டு நிறுவனங்களே  முதலீடு செய்து கொள்ளும். சுருக்கமாகச் சொன்னால், தனது ஓய்வூதிய நிதியைக் கொள்ளையிடும் உரிமையை எந்தத் தனியார் முதலாளியிடம் கொடுப்பது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை தொழிலாளிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளையிலிருந்து விலகிவிடும் உரிமையோ, வேறுவிதமாகப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையோ தொழிலாளிக்குக் கிடையாது. ஓவூதியத் திட்டங்களில் வசூலாகும் பணத்தை   தனியார் நிறுவனங்கள்  எதில், எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்ற விசயத்தில் அரசு தலையிடாது. இதனால் அந்த நிறுவனங்கள் திவாலாகிப் போனால் முழுத்தொகையும் தொழிலாளர்களுக்குக் கிடைக்காது.

தற்போது இந்தியத் தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தில் செயல்படாத கணக்கு’’களில் ரூ.22,636 கோடி உள்ளது. அதாவது, வேலையிழப்பினால், ஆலை மூடலினால் தொழிலாளர்கள் தங்களது மாதச் சந்தாவைத் தொடர்ந்து  செலுத்த இயலாத நிலையில், அவர்களது கணக்கில் வைக்கப்பட்டுள்ள நிதிதான் இது. இத்தொழிலாளர்கள் வேறிடத்தில் புதிய வேலை கிடைத்த பிறகு தங்கள் கணக்கைத் தொடர்ந்தால் இது செயல்படும் கணக்காக” மாறும். இது தவிர, கேட்பாரில்லாத நிதியாக ரூ. 4,000 கோடி இந்த அலுவலகத்தில் உள்ளது. 58 வயது நிறைவடைந்து பணி ஓய்வு பெற்றவர்கள் தங்களது ஓய்வூதியத் தொகையைக் கேட்டுப் பெறாததால் அல்லது கேட்கத் தவறிவிட்டதால் கேட்பு இல்லாமல் உள்ள பணம் இது. இந்தப் பணத்துக்கும் இந்த அலுவலகம் வட்டி போட்டு வைத்துள்ளது.

இவ்வாறான செயல்படா கணக்குகளும் கேட்பு இல்லாக் கணக்குகளும் அரசிடம் உள்ளவரை பாதுகாப்புடன் இருக்கும். இனி இந்தத் தொகை தனியார் ஓய்வூதிய நிறுவனங்களுக்குக் கிடைக்கப் போகிறது. அந்நிறுவனங்கள் குறிப்பிட்ட  சில ஆண்டுகளுக்குப் பின்னர் செயல்படாத கணக்குகளையும் கேட்பு இல்லாக் கணக்குகளையும் ரத்து செய்வதாக அறிவித்து, கோடிக்கணக்கிலான அத்தொகையை விழுங்கினால் இனி யாரும் கேள்வி கேட்க முடியாது.

மறுபுறம், இந்தியக் காப்பீட்டுச் சந்தையில் நுழையும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களோ, தங்கள் நாடுகளில் காப்பீடு துறையில் புகுந்து மொட்டையடித்து பொருளாதாரத்தையே திவாலாக்கியவர்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காப்பீடு நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டதும், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் ஒருகோடியே ஐம்பது லட்சம் கோடி ரூபா பெறுமானமுள்ள ஓய்வூதிய நிதி, பங்குச் சந்தையில் சூறையாடப்பட்டு மாயமாகிவிட்டது. அமெரிக்காவின் ஏகபோக காப்பீடு நிறுவனமான ஏ.ஐ.ஜி. திவாலாகிப் போனது. மேலும், முதலாளித்துவப் பொருளாதாரம் அடுத்தடுத்து சரிந்து வீழ்வதும், பல நிதி நிறுவனங்கள் திவாலானதாக அறிவித்துக் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டுவதும் வழக்கமாக உள்ளன.

இருப்பினும்,  இத்தகைய மலைமுழுங்கிகளால் காப்பீடு துறையும் இந்தியப் பொருளாதாரமும் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறப் போகிறது என்று குறி சோல்கிறார்கள் மன்மோகனும் சிதம்பரமும். இந்த ஏகாதிபத்திய கூலிப்படையினரால் வங்கி, காப்பீடு முதலான உயிராதாரமான துறைகள் தனியாரிடம் தாரைவார்க்கப்பட்டு, அரசின் கண்காணிப்பும் கட்டுப்பாடும் இல்லாததாக இந்திய நிதிச் சந்தை மாற்றப்பட்டுள்ளதையும் இந்தியா இன்னுமொரு வாழைப்பழக் குடியரசாகிவிட்டதையுமே  இச்சீர்திருத்த நடவடிக்கைகள் மெய்ப்பித்துக் காட்டுகின்றன.

_________________________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012

__________________________________________________________________

என்டிடிவி-ஏ.சி நீல்சன்: கல்லாப் பெட்டிச் சண்டை!

8

ந்த பிரபஞ்சத்தில் உள்ள சகலத்தைப் பற்றியும் ஏதாவது ஒரு கருத்து கொண்டிருக்கும் விநோதமான பிராணிகள் தான் செய்தி ஊடகங்கள். அதிலும் இந்தியச் செய்தி ஊடகங்கள் என்றால் இன்னும் விசேஷம். திருட்டை ஒழிப்பது பற்றி திருடனிடமே பேசுவது, ஊழல் ஒழிப்பு பற்றி காங்கிரசிடம் பேசுவது, இறையாண்மை பற்றிப் பாரதிய ஜனதாவிடம் பேசுவது… என்று இந்த வரிசை நீண்டது. இந்த அக்கப்போர்களின் முன்னணியில் இருக்கும் ஊடக நிறுவனம், என்.டி.டி.வி (நியூ டெல்லி டெலிவிஷன்). இப்போது என்.டி.டி.வி நிறுவனத்திற்கே சோதனைக் காலம் வந்திருக்கிறது.

சோதனை, கற்பனை வளம் சம்பந்தப்பட்டதல்ல; கல்லாப் பெட்டி சம்பந்தப்பட்டது. 2008 ஆம் ஆண்டு ரூ. 501 ஆக இருந்த என்.டி.டி.வி.யின் பங்கு விலை 2011 இன் இறுதியில் ரூ. 26 ஐ விடக் குறைந்து விட்டது.  ஜூன் 30, 2012 இல் முடிந்த காலாண்டில் அது ரூ. 22.71 கோடி நஷ்டமடைந்திருக்கிறது.

தனது வீழ்ச்சிக்கும், நஷ்டத்திற்கும் காரணம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மதிப்பிடும் டிஆர்பி கணக்கீட்டில் நடந்த மோசடிகள் தான் என்று பன்னாட்டு நிறுவனமான ஏ சி நீல்சன் மற்றும் அதன் கூட்டு நிறுவனங்கள் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது என்.டி.டி.வி.

ஏ சி நீல்சன் பங்குதாரராக இருந்து நடத்தும் டேம் (TAM) நிறுவனம் இந்தியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான டிஆர்பியை வெளியிடுகிறது. பார்வையாளர் இலக்குக் குறியீட்டுப் புள்ளிகள் (Target Rating Points) என்று சொல்லப்படும் டி.ஆர்.பி ரேட்டிங்குகள் தான் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சந்தையில் உள்ள கிராக்கியை அளவிட்டுச் சொல்கிறது.

பெரு நகரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 8,000 வீடுகளின் தொலைக்காட்சிப் பெட்டிகளில் பீப்பிள்ஸ் மீட்டர் எனப்படும் கணக்கீட்டுக் கருவியைப் பொருத்துகிறது டேம் நிறுவனம். இந்தக் குடும்பத்தினர் எந்த சேனலைப் பார்க்கிறார்கள், எந்த நேரத்தில் எந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள் என்கிற விவரத்தை அந்தக் கருவி பதிவு செய்து கொள்ளும். இப்படிப் பதிவு செய்த தகவல்களை அதனோடு இணைக்கப்பட்டிருக்கும் இணைப்பு மூலமாக இணையம் வழியே டேம் நிறுவனத்துக்கு அனுப்புகிறது.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு நகரிலும் ஒவ்வொரு பிரிவிலும் (செய்தி, கேளிக்கை, விளையாட்டு, இசை) நிகழ்ச்சிகளுக்கான டிஆர்பியை டேம் வெளியிடுகிறது. இதில் வயதுவாரியாக யார், எந்த நிகழ்ச்சியை ரசிக்கிறார்கள்? எந்த நேரத்தில், எந்த குறிப்பிட்ட நிகழ்ச்சி வரவேற்பைப் பெற்றது? என்பதைப் போன்ற தகவல்கள் இருக்கும்.

பொழுதுபோக்கு, செய்தி, விளையாட்டு, இசை என்று வெவ்வேறு வகையாக 500க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் இந்தியாவில் தமது நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன.  அவற்றில் 163 சேனல்கள் டிஆர்பி  (இலக்கு அளவீட்டுப் புள்ளி) அளவீட்டு முறையில் பங்கு பெறுகின்றன. மேற்சொன்ன வழிமுறைகளில் டிஆர்பி கணக்கிடும் முறையில் மாபெரும் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள என்.டி.டி.வி, அதனால் தனக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட $1.39 பில்லியன் (சுமார் ரூ. 7,500 கோடி) நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்துள்ளது .

“டிஆர்பி கணக்கிடுவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் குடும்பங்களின் எண்ணிக்கையை 8,000 லிருந்து 33,000 ஆக உயர்த்த வேண்டும் என்று பல முறை முறையிட்டும் டேம் நிறுவனம் அதைச் செய்யவில்லை” என்று குற்றம் சாட்டுகிறது என்.டி.டி.வி.

“மும்பையில் உங்கள் தொலைக்காட்சியின் டிஆர்பியை நீங்கள் விரும்பும் பிரிவினர் மத்தியில் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக்க வேண்டுமானாலும் செய்து தருகிறோம். கொஞ்சம் செலவாகும்’  என டேம் – நிறுவன ஊழியர்கள் பேரம் பேசியதாக என்.டி.டி.வி குற்றம் சாட்டியிருக்கிறது.

“ஒரு வீட்டுக்கு சுமார் $250 முதல் $500 வரை (சுமார் ரூ. 13,000 முதல் ரூ. 25,000 வரை) கொடுத்தால் அவர்களை நாம் சொல்லும் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பதிவு செய்யும்படி செய்யலாம்” என்றும், “அந்த வீடுகளில் இரண்டாவதாக ஒரு டிவி வாங்கிக் கொடுத்து, அதில் விரும்பிய நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொள்ளும்படியும், கணக்கீட்டுக் கருவி இணைக்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகளில் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட நிகழ்ச்சியை ஓட விடும்படியும் சொல்லி விடலாம்” என்றும் அவர்கள் சொன்னதாக என்.டி.டி.வி தெரிவிக்கிறது.

“20 ஆண்டுகளாகத் தனது நிகழ்ச்சிகளுக்கு நல்ல டிஆர்பி பெற்று, அதன் மூலம் விளம்பரப் பணம் சம்பாதித்த என்.டி.டி.வி, இப்போது அவர்கள் நிகழ்ச்சிகளின் டிஆர்பி குறைந்தவுடன் திடீரென்று புகார் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்கின்றன ஏ சி நீல்சன் குழும நிறுவனங்கள்.

பிரணாய் ராய்
என்டிடிவியின் முதலாளி – பிரணாய் ராய்

இது என்.டி.டி.வி.க்கும், ஏ சி நீல்சனுக்கும் இடையேயான கொடுக்கல் வாங்கல் தகராறு மட்டும் அல்ல.  தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காகவும், பொழுது போக்குக்காகவும் மக்கள் கணிசமான நேரத்தைச் செலவிடும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எந்த அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன என்பதைப் பற்றிய வழக்கு இது. ’எத்தகைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக வேண்டும்? அதை யார் தயாரிக்க வேண்டும்? எந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டும்?’ என்பன போன்ற  முக்கிய முடிவுகள் எப்படி எடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றிய வழக்கு இது.

இது மட்டுமல்லாமல், செய்தித் தொலைக்காட்சிகள் என்பவை தேசத்தின் அரசியல் அரங்கில் எந்தச் செய்திகள் விவாதத்தில் இருக்க வேண்டும், யார் எவ்வளவு நாட்களுக்கு அரசியல் வானின் நட்சத்திரமாய் இருக்க வேண்டும், எந்தக் கருத்து மக்களின் கருத்தாய் பதியப்பட வேண்டும், எது மக்களின் எதிர்ப்பாக சொல்லப் பட வேண்டும், அரச எதிர்ப்புக் கருத்து எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்பவற்றையெல்லாம் ‘தீர்மானிக்கும்’ செல்வாக்கைப் பெறத் துவங்கியிருக்கும் காலகட்டம் இது. எனவே இதனை என்.டி.டி.வி.க்கும், ஏசி நீல்சனுக்கும் இடையேயான சில்லறைத் தகறாராக சுருக்கிப் பார்க்க முடியாது.

2001 ஆம் ஆண்டு ’எந்தெந்த வீடுகளில் கணக்கீட்டுக் கருவிகள் பொருத்தப்படுகின்றன’ என்ற ரகசியப் பட்டியல் கசிய விடப்பட்ட போது, டிஆர்பி பற்றிய விவாதம் நடந்தது. அதைப் பற்றி விசாரிக்க வழக்கம் போல மத்திய அரசு ஒரு கமிசனை நியமித்தது. அந்தக் கமிசன் என்னவானது, அதில் இருந்தவர்கள் என்னவானார்கள், அதன் முடிவு என்ன, முடிவுகள் அமுல்படுத்தப்பட்டதா இல்லையா? என்பது போன்ற எந்த விபரங்களையும் அறிந்து கொள்ள முடியவில்லை.

டிஆர்பி கணக்கீட்டுக் கருவிகள் பொதுவாக பெரு நகரங்களின் நடுத்தர மற்றும் உயர்நடுத்தர வர்க்க குடும்பங்களிலேயே பொருத்தப்படுகிறது. இதில் கணக்கெடுப்பை நடத்தும் நிறுவனம் காசு கொடுத்து தனக்கு வேண்டிய முடிவுகளைப் பெற்று விடுகிறார்கள் என்கிற உண்மை ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் இந்தப் பிரிவினரின் ரசனையையே பொது ரசனையாகவும், இவர்களின் அரசியல் வேட்கையையே பொதுவான கோரிக்கையாகவும் நிலை நிறுத்துகிறார்கள். இந்த உறவு ஆளும் வர்க்கங்களின் விருப்பத்தை இயல்பாகவே ஈடு செய்கிறது.

இந்த வகையில் தான் பெரு நகர மேல்நடுத்தர வர்க்கத்தினரின் மனங்கவர் ஜோக்கரான அண்ணா ஹசாரே, அனைவருக்குமான மீட்பராக சில மாதங்கள் வலம் வந்தார். இது ஒரு புறமென்றால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அடிப்படையாக வைத்து இயங்கும் விளம்பரக் கம்பெனிகளின் வருவாயும் டிஆர்பி ரேட்டிங்கை வைத்தே முடிவாகிறது. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு டிஆர்பி ரேட்டிங் எவ்வளவு என்பதைப் பொறுத்தே அதற்கு விளம்பரத் தொகை ஒதுக்கப்படுகிறது.

இந்தியத் தொலைக்காட்சி சேனல்கள் விளம்பரங்களின் மூலம் சுமார் 21,300 கோடி ரூபாய்கள் வருடாந்திரம் கல்லா கட்டுகின்றன. பற்பசை முதல் சோப்பு வரை, சமையல் எண்ணெய் முதல் குழம்பு மிளகாய்த் தூள் வரை, செல்போன் சேவை முதல் ரயில் பயணம் வரை என மக்கள் வாங்கும் பொருட்கள் அல்லது சேவைகளுக்கான விலையில் கணிசமான பகுதியை முதலாளிகள்  விளம்பரங்களுக்காகச் செலவிடுகின்றனர். தேவையில்லாத பொருட்களை வாங்க வைக்கவும், தேவைப்படும் பொருட்களை தேவைக்கு அதிகமாக வாங்க வைக்கவும் விளம்பரங்கள் முயற்சிக்கின்றன.

என்.டி.டி.வி போன்ற இந்தியத் தொலைக்காட்சி நிறுவனங்களின் 80% வருமானம் விளம்பரங்கள் மூலமாகவே கிடைக்கிறது. சில விநாடிகள் விளம்பரத்தைக் காட்டுவதற்கு சில நூறு ரூபாய்கள் முதல் பல லட்சம் ரூபாய்கள் வரை கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.  சன் டி.வி.யின் முக்கியமான மெகா தொடர் நடுவே வரும் 20 விநாடிகள் விளம்பரத்துக்கான கட்டணம் பல ஆயிரம் ரூபாய்களாகவும், இந்தியா விளையாடும் கிரிக்கெட் பந்தயத்தின் நடுவே அத்தகைய விளம்பரத்துக்கான கட்டணம் லட்சக் கணக்கிலும் எகிறுகிறது.

செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 7 வரை நடைபெற்ற டி-20 உலகக் கோப்பைப் போட்டிக்கான 10 விநாடி விளம்பர இடைவேளைகள் ஒவ்வொன்றுக்கும் ஹூண்டாய், டாடா மோட்டார், பெப்சி, நோக்கியா, டாடா டெலி சர்வீசஸ், யூனியன் பேங்க் போன்ற விளம்பரதாரர்களிடம் தலா ரூ. 3.5 லட்சம் கட்டணம் வசூலிக்கிறது, ஸ்டார் தொலைக்காட்சிக் குழுமம்.  இந்தப் போட்டிகளின் நடுவே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்காக ஸ்டார் குழுமம் ரூ. 250 கோடி சம்பாதிக்கும் என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் மதிப்பிடுகின்றனர்.

ஆனால் ஆரம்பத்தில் தொலைக்காட்சிச் சேவை என்பது பண வேட்டையாடும் களமாகத் துவங்கப்படவில்லை. தொலைக்காட்சி ஒளிபரப்பின் ஆரம்ப காலங்களில் மைக்ரோவேவ் எனப்படும் குறுகிய தூரம் பரவும் மின்காந்த அலைகள் மூலம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அடுத்த கட்டமாக பூமிக்கு மேல் நிறுத்தப்பட்டுள்ள புவிநிலை செயற்கைக் கோள்கள் மூலம் உலகின் எந்தப் பகுதிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொழில்நுட்பம் தற்போது பயன்படுத்தப்படுகிறது.

ஆரம்பத்தில் தொலைக்காட்சித் தொழில்நுட்பமும் அனைவருக்கும் பயன்படக்கூடிய, சமூகத்துக்கு உரிமையான ஒரு பொதுச் சேவையாகவே உருவாகி வளர்ந்தது. நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் போது சிக்னல்களைப் பெற்றுக்கொள்ளும் கருவி (தொலைக்காட்சிப் பெட்டி, ஆண்டெனா, டிஷ்) வைத்திருக்கும் அனைத்து மக்களும் நிகழ்ச்சிகளைப் பார்க்க  முடியும்.

மக்கள் அனைவருக்கும் சொந்தமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுச் சொத்தான அலைக்கற்றைகள், செயற்கைக் கோள்கள் இவற்றின் மூலம் மக்களின் அறிவையும், உணர்வையும் செறிவூட்டும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவது இயல்பானதாக இருந்திருக்கும். அதனால்தான் ஆரம்ப கால தொலைக்காட்சிகள் அரசுகளால் லாப நோக்கமில்லாமல் நடத்தப்பட்டு வந்தன. இந்தியாவில் 1980களின் இறுதி வரையில் அரசுத் தொலைக்காட்சி மட்டுமே இயங்கி வந்தது நினைவிருக்கலாம்.

தூர்தர்ஷன் என்ற பெயரில் ஒளிபரப்பான அரசுத் தொலைக்காட்சியில் மத்திய அரசின் கட்டுப்பாடு, இந்தி மொழி ஆதிக்கம், பிராந்திய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் இன்மை போன்ற பல முக்கியமான குறைபாடுகள் இருந்தன.  தொழில் நுட்பமும், வசதிகளும் மேம்பட மேம்பட அவை நிவர்த்தி செய்யப்பட்டு வந்தன.

ஆனால்  1990 களில் ஆரம்பித்த தனியார்மயமாக்கலின் ஒரு பகுதியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு, தனியார் நிறுவனங்களின் போட்டிச் சந்தைக்கு திறந்து விடப்பட்டது. ’தூர்தர்ஷன் என்றால் ஒரே வயலும், வாழ்வும் போட்டு போரடிப்பான்’ என்று சலித்துக் கொண்ட நடுத்தர வர்க்கத்துக்கு நிவாரணமாக புதிய தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் நமது வான்பரப்பில் இன்று கால் பரப்பி நிற்கின்றன.

பார்வையாளர்களிடமிருந்து தனித்தனியாகக் கட்டணம் வசூலிப்பது நடைமுறையில் சாத்தியமில்லாமல் இருந்த காலத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் வருமானம் ஈட்டுவதற்காக உருவாக்கப்பட்ட உத்திதான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கிடையே விளம்பரங்களைக் காட்டுதல்.

இப்போது செட்டாப் பாக்ஸ், டி.டி.எச் போன்ற மின்னணு தொழில்நுட்பங்கள் வந்து விட்ட பிறகும் தரைவழி மற்றும் செயற்கைக்கோள் வழி ஒளிபரப்பு முறைகளில் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்தியாவின் பெரும்பான்மை மக்களைச் சென்றடைகின்றன. இந்தியத் தொலைக்காட்சி நிறுவனங்கள் சந்தாத் தொகையாக ஆண்டுக்கு ரூ. 11,600 கோடி வருமானத்தை ஈட்டினாலும், விளம்பரங்கள் மூலமாக ரூ. 21,300 கோடி வரை சம்பாதிக்கின்றன.

தொலைக்காட்சி சேனல்களின் டிஆர்பி வெறி ’விளம்பரங்களுக்காகவே நிகழ்ச்சிகள்’ என்ற வகையில் விளம்பரதாரர்களின் ஆதிக்கத்தை வளர்த்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் பகல் நேரத்தில் வேலைக்குச் செல்லாத பெண்களை விளம்பரங்களைப் பார்க்கச் செய்வதற்காக ஒளிபரப்பப்பட்ட சோப் ஓப்பராக்களின் வழித்தோன்றல்கள் தான் நமது வானலைகள் வழி வந்து வீடுகளை ஆக்கிரமிக்கும் இன்றைய மெகா தொடர்கள்.

பிறகு சென்ற நூற்றாண்டின் இறுதியில் செய்தித் தொலைக்காட்சிகள் பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் 24 மணி நேரமும் இயங்கத் துவங்கின. இவர்களின் போட்டிதான் செய்தி தயாரிக்கும் துறையையே தலைகீழாக மாற்றிவிட்டது. செய்தியல்லாதவற்றைச் செய்தியாக்குவது, செய்தியைச் செய்தியில்லாமல் செய்வது, பிரபலங்களின் படுக்கையறையை எட்டிப் பார்ப்பது, அதையே ஆபாச ரசம் சொட்டச் சொட்ட பார்வையாளர்களுக்குப் பரிமாறுவது,  துயர சம்பவங்களில் தனி நபர்களின் உணர்வுகளை கிளறி சுவாரஸ்யத்தை உருவாக்க முயற்சிப்பது, அரசியல் ரீதியில் சில முக்கியமான பிரச்சனைகளைக் கூட தொலைக்காட்சி நிலையத்துக்குள் செய்தியாளர்கள் கத்தும் கத்தலில் அதன் கேந்திரமான பகுதியை மறைத்து, வெறும் பரபரப்பை மட்டுமே நிலைநாட்டி, இறுதியில் நீர்த்துப் போக வைப்பது. சினிமா தொடர்பான செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் மிக மலினமாகக் காட்டுவது – இப்படிப் பல்வேறு வகையில் மக்களின் ஓய்வு நேரங்களைக் கபளீகரம் செய்யும் தொலைக்காட்சி நிறுவனங்கள், அதற்கு வைத்திருக்கும் அளவுகோல் தான் டி.ஆர்.பி ரேட்டிங்.

உழைத்துக் களைத்தவர்கள் உடல் வலியை மறக்கவும், வாழ்ந்து சலித்தவர்கள் மனதை மரத்துப் போகச் செய்யவும் டாஸ்மாக் கடைகளை நாடுவது போல, அன்றாடப் பணிவாழ்வு தொடர்பான நினைவுகளிலிருந்து தப்பிக்கவும், இலக்கற்ற தமது ஓட்டத்தை நியாயப்படுத்தவும் விரும்பும் மக்களுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் புகலிடமாக இருக்கின்றன.

விஜய் டிவியில் ’நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’, அதற்கு இணையாக சன் டிவியில் ’கையில் ஒரு கோடி, ஆர் யூ ரெடி’ போன்ற கேலிக் கூத்துகள் ஒரு பக்கம் நவீன லாட்டரிகளாக சீறிப் பறந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கமோ சூப்பர் சிங்கர், சூப்பர் டான்சர் போன்ற நிகழ்ச்சிகள் வளரும் பருவத்திலேயே சின்னஞ் சிறுவர்களையும், சிறுமியர்களையும் குத்தாட்ட உணர்ச்சிக்கு பழக்கப்படுத்தி வருவதும் கூட டி.ஆர்.பி புள்ளிகளைப் பெற்று, விளம்பர வருவாய் மூலம் கொள்ளை லாபம் சம்பாதிக்கத் தான்.

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமுலாக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த இரு பத்தாண்டுகளில் மக்களின் பொருளாதார வாழ்க்கை மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டே வருகிறது. வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு, சலுகைகள் வெட்டு என்பதைப் பணியிடங்களில் சந்திக்கும் மக்கள் இவற்றினூடாக பொருளீட்டியாக வேண்டும் என்பது தான் எதார்த்தம். புற உலகில் அதிகரிக்கும் தேவைகள், அதை நிறைவேற்றியாக வேண்டிய பதட்டம், அதற்காக வேகமெடுக்கும் வாழ்க்கையில் இளைப்பாறுதலையும் கொடுக்க வேண்டிய உறவுகளுக்கும், நட்புகளுக்கும், சுற்றத்தாருக்கும் பதில் அந்த இடத்தை தொலைக்காட்சிகள் ஆக்கிரமித்துள்ளன.

செய்திச் சேனல்கள் இந்த இடைவெளிக்குள் மக்களின் மூளைகளை அரசியல் நீக்கம் செய்கிறதென்றால், பொழுது போக்குச் சேனல்கள் அந்த இடத்தை வெற்று உணர்ச்சிகளால் நிரப்புகின்றன. தமிழில் நடிகர் லட்சுமி நடத்திய ’கதை அல்ல நிஜம்’,  தமிழ்நாட்டின் குரல் வேட்டை ஆடும் ’சூப்பர் சிங்கர்’,  சிறந்த நாட்டிய ஜோடியை தேர்ந்தெடுக்கும் ’மானாட மயிலாட’ போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெறுபவர்களை மிகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த வைப்பதன் மூலம், பார்வையாளர்களிடம் போலியான உணர்ச்சிகளைத் தூண்டி விடுகிறார்கள்.

மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்த போது, என்.டி.டி.வி.யின் பர்கா தத் பாதுகாப்பு படையினரின் நிலைகளையும், தாக்குதல் நடத்தியவர்களையும் நேரடி ஒளிபரப்பு செய்து தனது தொலைக்காட்சிக்கு டிஆர்பி ரேட்டிங் சம்பாதித்துக் கொடுத்தார்.  நாடாளுமன்றத்தில் வாக்களிக்கப் பணம் கொடுத்து, கையும் களவுமாக பிடிப்பதற்கான ரகசிய திட்டத்தை செயல்படுத்தி, படம் பிடித்த சிஎன்என் ஐபிஎன் தனது ஒளிபரப்பு முடிந்ததும் சத்தம் போடாமல் அந்த டேப்புகளை  நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைத்து விட்டது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நிகழ்வுகளை வெறும் பரபரப்பு என்கிற வட்டத்திற்குள் கொண்டுவரும் செய்திச் சேனல்கள், வேண்டிய மட்டிலும் டிஆர்பி புள்ளிகளைக் கறந்ததும், அந்நிகழ்ச்சியையே மொத்தமாக மதிப்பிழக்கச் செய்து விடுகின்றன.

உண்மையில் விளம்பர வருமானத்துக்காகப் போட்டி போடும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எதற்கு வாய்ப்பு என்பதைத் தீர்மானிக்கும் நாட்டாமை தான் டிஆர்பி. அதன் யோக்கியதை முதலாளிகளுக்கு இடையேயான போட்டி முரண்பாடுகளால் அம்பலமாகி அவ்வப்போது பல்லிளிக்கிறது.  அப்படிப்பட்ட தகராறு தான் என்.டி.டி.வி.க்கும், ஏ சி நீல்சனுக்கும் இடையேயான இப்போதைய வழக்கு.

என்.டி.டி.வி.யைப் பொறுத்தமட்டில் இதில் பெரிதாய் நீதி, நேர்மையெல்லாம் பார்த்துக் கொண்டு களமிறங்கவில்லை. இப்போதே நீதிமன்றத்துக்கு வெளியே தனிப் பஞ்சாயத்து நடத்தி ஒரு கவுரவமான தொகையைப் பெற்று விட்டு, வழக்கை வாபஸ் பெற்று விடவும் அவர்கள் தயார் என்றே செய்திகள் வெளியாகின்றன. அல்லது அவர்களது வழக்கு புஸ்வாணமாகப் போகலாம். எனினும் டிஆர்பி மோசடியால்தான் தனது நிறுவனம் நட்டமடைந்தது என்று பங்குதாரர்களை நம்பவைப்பதற்ககாவது இந்த வழக்கு துணை புரியலாம்.

டிஆர்பி எனும் இலாபத்தை தீர்மானிக்கும் மாயமானை நோக்கி எல்லா தொலைக்காட்சிகளும் வெறி பிடித்தவாறு ஓடுகின்றன. அந்த ஓட்டமே எல்லா சானல்களையும் வேறுபாடு இன்றி ஒன்றாக வடிவமைத்து விடுகிறது. இன்று எந்தச் செய்தியும் பரபரப்பாக யார் முதலில் காட்டுகிறார்கள் என்று போவதால் எல்லா சானல்களிலும் குறிப்பிட்ட செய்தியை ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறோம். ஒரு செய்தி குறித்த பின்னணி விவரங்கள், ஆழமான அலசல்கள் இன்றி அவை வெறுமனே கரைந்து போகும் அலங்கார ஐஸ்கீரிம் போல தோன்றிய வேகத்தில் மறைந்து போகிறது.

இறுதியில் சானல்களின் போட்டி என்பது இத்தகைய குத்து வெட்டுக்களில் வந்து முடிகிறது. விளம்பரங்கள் தரும் முதலாளிகளுக்கு டிஆர்பி ரேட்டிங் முக்கியம் என்றால், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு விளம்பர வருவாய் முக்கியம். இவர்களுக்கிடையே நடக்கும் போட்டி, சண்டையில் யாருடைய வருமானம் குறைகிறது என்பது யாருடைய வருமானம் அதிகரிக்கிறது என்பதோடு இணைந்தது. தொலைக்காட்சி மூலம் கிடைக்கும் வருவாய் யாராவது ஒரு சிலருக்குத்தான் போக வேண்டும் என்ற ஏகபோகம் இதன் மூலம் உருவாகிறது. தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தும் சன் குழுமத்தையும், உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் முர்டோச்சின் குழுமத்தையும் இதற்கு சான்றாக கூறலாம்.

என்.டி.டி.வி அத்தகைய ஆதிக்கத்தை பெற முடியவில்லை என்பதால் இந்தப் புகார், வழக்கு. விளம்பர முதலாளிகளுக்கும், தொலைக்காட்சி முதலாளிகளுக்கும் இடையே இருக்கும் முரண்பாட்டின் வெளிப்பாடுதான் இந்த வழக்கு. மற்றபடி இந்த வழக்கில் நீதி, நேர்மை, நியாயம், அறம் என்பதெல்லாம் மாயை.

______________________________________________________

– புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012

_____________________________________________________________

வன்னி அரசு: பொய் மேல் பொய்!

38

வம்பர் 7 நாயக்கன் கொட்டாய் சாதிவெறித் தாக்குதல் குறித்து விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு, கீற்று தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், தலித்துக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில் ம.க.இ.கவைச் சேர்ந்த வன்னியர்களும் உண்டு என்றொரு அவதூறை எழுதியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் முகமாக “வன்னி அரசு வகையறாக்களின் வன்னிய சேவை “ என்றொரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

அதில் ” அறிவு நாணயம் என்ற சொல்லை அவர் குறைந்தபட்சம் கேள்விப்பட்டிருப்பாரேயானால், தாக்குதலில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டும் மகஇக காரர்கள் யார் என்பதை சொல்லட்டும். அல்லது அவரது கட்டுரையை பெருமகிழ்ச்சியோடு பிரசுரித்திருக்கும் கீற்று, பெரியார் தளம் வலைத்தளங்களுக்கு கொஞ்சமாவது நேர்மை இருக்குமானால் வன்னி அரசுவை விளக்கமளிக்குமாறு கோரட்டும். ” என்று குறிப்பிட்டிருந்தோம். நிறைய வாசகர்களும் கீற்று தளத்தில் இதையே கோரியிருந்தனர்.

தனது பொய் குறித்து பதிலளிக்காமல் இருக்க முடியாது என்ற நிலை உருவான காரணத்தினால், மீண்டும் கீற்று தளத்தில் முழுப்பிதற்றலாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  அக்கட்டுரையில் “இத்தாக்குதலுக்கு பின்னிருந்து அனைத்து எடுபிடி வேலைகளையும் செய்தவர் தோழர் கிருஷ்ணன். இவர் அண்ணாநகர் பகுதியைச் சார்ந்த வன்னியர், ம.க.இ.க.வைச் சேர்ந்தவர்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வன்னி அரசு குறிப்பிட்டிருக்கும் அண்ணாநகர் என்பது முழுக்க முழுக்க தலித்துக்கள் மட்டும் வாழும் கிராமம். அந்த ஊரில் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்களே கிடையாது. மேலும் அக்கிராமத்தில் ம.க.இ.கவோ அதன் தோழமை அமைப்புகளோ கிடையாது. எமது முந்தைய கட்டுரையிலேயே நாயக்கன் கொட்டாய் வட்டாரத்தில் எமக்கு அமைப்பு கிளைகள் இல்லை என்பதால் பென்னாகரம் பகுதி தோழர்கள் சென்று உதவியிருக்கின்றனர் என்று தெளிவாகவே குறிப்பிட்டிருந்தோம்.

இருப்பினும் தான் சொன்ன அபாண்டமான அவதூறை நியாயப்படுத்துவதற்காக இன்னொரு பச்சைப்பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார் வன்னி அரசு. அரசியல் ரீதியான விமரிசனங்களை விடுத்து பொய்களையும், அவதூறுகளையும் வெளியிடுவதில் கீற்று தளத்திற்கு என்ன மகிழ்ச்சியோ தெரியவில்லை.

வன்னி அரசுவின் இந்தக் கட்டுரையில் அவர் தெரிவித்திருக்கும் ‘ஆதாரத்தின்’ யோக்கியதையை மட்டுமே இங்கே அம்பலப்படுத்தியிருக்கிறோம். ம.க.இ.க குறித்து அவருடைய கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் மற்ற உளறல்கள் பதிலளிக்கத்தக்கவை அல்ல. கட்டப்பஞ்சாயத்தில் வயிறு வளர்த்து, ஓரிரு நாற்காலிகளுக்காக தலித் மக்களின் வாக்குகளை ஆண்டைக் கட்சிகளிடம் விலை பேசும் தரகர்கள், புரட்சி எப்படி செய்வது என்று விளக்குகிறார்களாம்.

வன்னி அரசுவின் கட்டுரைகளை கீற்று தளம் தொடர்ந்து வெளியிடுவதில் நமக்கு ஆட்சேபமில்லை. அவற்றை சிரிப்பூ என்ற தலைப்பின் கீழ் வெளியிடுவது பொருத்தமாக இருக்குமென்பது எம் பரிந்துரை.

பிஞ்சுகளை குதறும் வெறியர்கள்…குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!

32
  • திண்டிவனம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த கால் ஊனமுற்ற பழனி, சத்யா தம்பதியினரின் மூன்று வயதுகூட நிரம்பாத மகள் லாவண்யா. மாலை நேரத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த லாவண்யாவை தாயார் அழைக்க பதிலில்லை. மின் தடையால் எங்கும் இருட்டு. பதட்டத்தில் தேடியபோது அருகாமைப் புதரில் பிறப்புறுப்பில் இரத்தம் வடியக் கிடந்த மகளைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைகின்றனர். போலீசு விசாரணையில் எதிர் வீட்டில் உள்ள பாண்டியன் எனும் 25 வயது இளைஞன் மனைவியைப் பிரிந்து வாழ்பவன் அந்தப் பிஞ்சுக் குழந்தையை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியது தெரியவந்தது.
  • தூக்கத்தில் திடீர் திடீரென்று விழித்துக்கொள்ளும் ஆறு வயதான நதியா வழக்கத்துக்கு மாறாக இரவில் சிறுநீர் கழிக்கத் தொடங்கினாள். அவளைக் குளிப்பாட்டும் போதுதான் பிறப்புறுப்பில் நகக்கீறல்கள் இருப்பதைக் கவனித்தாள் அவளது தாய். குழந்தையிடம் பேச்சுக்கொடுக்கும் போதுதான் எதிர் வீட்டிலிருக்கும் இளைஞன் சாக்லெட் கொடுத்து தன்னை ஏதோ செய்ததாகக் குழந்தை சொல்லித் தெரிய வந்தது.
  • போலியோவால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுச் சிறுமியின் முகம் திடீரென்று வீங்கி உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிகிச்சை அளித்த டாக்டர் அச்சிறுமியிடம் மெதுவாகப் பேச்சுக்கொடுத்தபோது பக்கத்து வீட்டு இளைஞன் அச்சிறுமியைத் தவறாகப் பயன்படுத்தி வந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.
  • தெருவில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது ரம்யாவை பலவந்தமாகத் தூக்கிச் சென்ற எதிர்வீட்டின் 45 வயதான சீனிவாசன் பலாத்காரம் செய்யும்போது கையும் களவுமாகப் பிடிபட்டான்.
  • கேக் தயாரிக்கும் பேக்கரி ஒன்றில் பயிற்சிக்காக வந்த கேட்டரிங் படிக்கும் கல்லூரி மாணவர்கள் ஆறு பேர், அங்கு விளையாட வரும் ஐந்து வயதுச் சிறுமியை தங்களது இச்சைக்குப் பல நாட்களாகப் பயன்படுத்திய விவரம் தெரியவந்தபோது அதிர்ச்சியில் உறைந்தது அச்சிறுமியின் குடும்பம்.
  • சென்னை மெட்ரிகுலேசன் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் ஒன்பது வயது மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கழிப்பறையில் வைத்து ஓராண்டாகப் பாலியல் வன்முறை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதே ஆசிரியரால் குதறப்பட்ட வேறு இரண்டு மாணவிகளும் புகார் கொடுத்தனர்.
  • நாகையில் அரசு உதவிபெறும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை 45 வயது ஆசிரியர் ஆய்வகத்தில் வைத்து பாலியல் வன்முறை செய்ததில் அம்மாணவி கருத்தரித்தாள்.
  • மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் நான்கு மாணவிகளை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்முறை செய்தது பொதுமக்களின் போராட்டத்திற்கு பின் தெரியவந்தது. இதற்குத் தண்டனையாக அவ்வாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
  • ஈரோடு ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஏழு வயது மாணவியைத் தவறாகப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. கோவை பள்ளியில் இதே போன்று வன்கொடுமைக்கு ஆளான மாணவி ஒருத்தி தற்கொலை செய்து கொண்டாள்.

•••

குழந்தைகள்-மீதான-பாலியல்-வன்முறைமுதல் சம்பவம் சென்ற மாதத்தில் நடந்தது. பின்னையவை சமீப காலங்களில் நடந்து பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. சிறார்களைப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கும் இத்தகைய சம்பவங்கள் எங்கோ மேலை நாடுகளில் மட்டும் நடக்கும் வக்கிரம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களின் மதிப்பீட்டை இவை மறுதலிக்கின்றன. பல்வேறு ஆய்வுகளும் புள்ளி விவரங்களும் இதையே வழிமொழிகின்றன.

பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறார்களின் உலகத் தொகையில் 19% பேர் இந்தியாவில் இருக்கின்றனர். இந்திய மக்கள் தொகையில் இவர்கள் மூன்றிலொரு பங்கு இருக்கின்றனர். 2007 ஆம் ஆண்டு இந்திய அரசின் குழந்தைகள் நலத்துறையானது குழந்தைகள் மீதான பல்வேறு வன்முறை குறித்து விரிவான கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. பதின்மூன்று மாநிலங்களில் 12,447 குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வில் 53% குழந்தைகள் ஏதோ ஒரு பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், 21.9% குழந்தைகள் மோசமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதில் இருபாலரும் ஏறக்குறைய சரிசமமாக உள்ளனர்.

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 7 இலட்சம் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றார்கள். விலைமாதர்களில் 15% பேர் பதினைந்து வயதுக்குட்பட்டவராவர். 2006இல் துளிர் எனும் அமைப்பு 2211 சென்னைக் குழந்தைகளிடம் ஆய்வு செய்ததில் 42% பேர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியில் சாக்ஷி எனும் தொண்டு நிறுவனம் செய்த ஆய்வில் 350 குழந்தைகளில் 63% பேர் குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்முறைக்குப் பலியானது தெரிய வந்தது.

இறைந்து கிடக்கும் இந்தப் புள்ளிவிவரங்கள் இந்திய சமூகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பது தவிர்க்க முடியாத அங்கமாகியிருப்பதை ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றன. குடும்ப அமைப்பு சிதைந்துவரும் மேலைநாடுகள் போலல்லாமல் இந்தியப் பண்பாட்டிற்கு அச்சாணியாகக் குடும்பங்கள் வலுவாக இருப்பதாக நம்பும் பழமைவிரும்பிகள் கூட இந்த உண்மையை அங்கீகரித்துதான் ஆக வேண்டும்.

செல்பேசிகளும், இருசக்கர வாகனங்களும், தொலைக்காட்சிகளும் மட்டுமே நாம் காணும் மாற்றங்கள் அல்ல. பண்பாடும் கூட மாறித்தான் வருகின்றது. பொருளாதாரத்தில் நாட்டின் முன்னேற்றமும், விவசாயிகளின் தற்கொலையும் ஒருங்கே நிகழ்வது போல பண்பாட்டில், குறிப்பாக பாலுறவில் காதலும் கலவியும் எதிரெதிர்த் துருவங்களாக மாறி வருகின்றன.

பத்திரிக்கைகளின் அரைநிர்வாணப் படங்களும், மழையில் நனைந்து அங்கங்களைக் காண்பிக்கும் ‘மானாட மயிலாட’ நடனமும் இன்று அதிர்ச்சியை ஏற்படுத்துவதில்லை. நேற்று குடும்பத்துடன் பார்க்கத் தகுதியற்றவையாகக் கருதப்பட்ட திரைப்படங்களெல்லாம் இன்று குடும்பத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டன. நேற்று ஆபாசமென ஒதுக்கப்பட்டவை இன்று கலாச்சாரத்தின் அங்கமாக மாறி விட்டன. பத்திரிக்கைகளில் மட்டுமே வந்த கள்ளஉறவுச் செய்திகள், இன்று இல்லத்தரசிகளின் மனதைக் கவரும் ‘தொடர்’களாகி விட்டன. தனது இன்பத்திற்காக எதையும் செய்யலாம் என்ற வக்கிரம் சமூக வாழ்வின் அனைத்து விழுமியங்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றது.

குழந்தைகள்-மீதான-பாலியல்-வன்முறைபார்த்து இரசிக்க வேண்டிய குழந்தைகளைப் பிய்த்துக் குதறும் காமவெறி இன்றைக்குத்தான் தோன்றியது என்று கூற முடியாது. இதன் அடிவேர் பார்ப்பனியத்தின் மூடுண்ட சமூகத்தில் இருக்கின்றது. சாதியத்தைத் தனது ஆன்மாவாக வரித்திருக்கும் சமூகம், ஆண் பெண் உறவையும் சீனப் பெருஞ்சுவரால் பிரித்திருக்கின்றது. சக மனிதனுடனேயே சாதிபார்த்து பழகும்போது காமத்திற்கு வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு பற்றிச் சொல்லத் தேவையில்லை. தேவதாசிகளையும், கோபுரங்களில் விதவிதமான கலவிச் சிற்பங்களையும் பார்வைக்கு வைத்திருக்கும் பண்டைய பாரதம், காமசூத்ராவை உலகிற்கு அளித்த பார்ப்பனியம், மேட்டுக்குடியினர் பாலியல் ருசிகளை அனுபவிப்பதற்கு மட்டும் வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

இந்திய மக்களுக்கு பார்ப்பனியத்தின் சாபத்தால் காதலே மறுக்கப்பட்டிருப்பதால், பாலியல் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. பாலுணர்வு எனும் இயற்கையான உணர்வு திருட்டுத்தனமான விசயமாகப் பார்க்கப்படுகின்றது. நடுத்தர வயதை எட்டிவிட்டால், காமத்தைக் குற்றமாகக் கருதி மறைத்துக் கொள்ளும் போலித்தனமும், காதலில் சுதந்திரமாக இணைவதற்கு சாத்தியங்கள் மறுக்கப்படுவதும் குறுக்கு வழிகளை நோக்கி மனத்தைத் தூண்டுகின்றன.

மணவாழ்க்கையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் கணவன் மனைவிக்கிடையிலான நேசம் பல காரணங்களால் குறையத் தொடங்கும்போது, சலிக்கத் தொடங்கும்போது, அவற்றுக்கான காரணங்களை ஆராய்ந்து யாரும் சீர்செய்து கொள்வதில்லை. பிரிவு என்பது அவ்வளவு சுலபமான ஒன்றாக இல்லை.

இதுதான் வாழ்க்கை என்று விதிக்கப்பட்டிருந்தாலும் மணவாழ்வில் கிடைக்காத இன்பத்தை, குறிப்பாக ஆண்கள் (சில சமயங்களில் பெண்களும்) மணவாழ்விற்கு வெளியே தேடுகின்றார்கள். இவையெதுவும் தற்செயலாக நிகழ்வதில்லை. ஆழ்மனத்தில் கனன்று கொண்டிருக்கும் ஆசை நிறைவேறுவதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. சந்தர்ப்பங்கள் அதற்கு உதவுகின்றன. கள்ள உறவின் தோற்றுவாய் இப்படித்தான் இருக்கின்றது.

இத்தகைய சூழ்நிலைக்கு ஆட்படுவோர் திருட்டுத்தனத்தில் மட்டுமே சுதந்திரத்தைக் காண்கிறார்கள். இவர்களுடைய வாழ்வின் மற்ற வேலைகளை முதலில் மெதுவாகவும், பின்னர் வெகுவேகமாகவும் அரிக்கும் கரையானாகக் காமம் மாறிவிடுகின்றது. சிந்தனையின் மையத்தையே கைப்பற்றிவிடும் இந்த வெறி மற்றெல்லாச் சிந்தனைகளையும் தடுமாற வைக்கின்றது. சமூக வாழ்க்கையில் ஊக்கத்துடன் ஈடுபட வேண்டிய மனிதனை நைந்துபோக வைக்கின்றது. காதலைத் துறந்து காமத்தை மட்டும் ஒரு விலங்குணர்ச்சி போல துய்ப்பதற்கு வாய்ப்பளிக்கும் விபச்சாரமும் கூட இத்தகைய நபர்களின் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவதில்லை.

அதனால்தான் கலவியில் புதிது என்ன? என்ற கேள்வி அடுத்து வருகின்றது. அந்தக்கால மன்னர்களும், ஜமீன்தார்களும், இந்தக்கால பணக்காரர்களும், முதலாளிகளும் எல்லையற்ற காமத்தில் திளைத்தாலும் திருப்தி கொள்வதில்லை. பாலுறவுச் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கும் மேலை நாடுகளிலிருந்து கோவாவின் கடற்கரைக்கும், இலங்கைக் கடற்கரைக்கும் இளஞ்சிறுவர்களைத் தேடி வெள்ளையர்கள் வருகிறார்கள்.

விபச்சாரமே குலத்தொழில் என்று விதிக்கப்பட்ட சில ஆந்திரக் கிராமங்களில் புதிதாகப் பருவமெய்தும் சிறுமிகளுக்குப் பொட்டுக்கட்டும் சடங்கும் அவர்களை ஏலமெடுக்கும் முறையும் இன்றும் தொடர்ந்து நடந்து வருகின்றன. மேட்டுக்குடி வர்க்கத்தின் காமக்களியாட்டம் ஆண்களுக்கு மட்டுமே உரியது என்ற காலமும் மாறி வருகின்றது.

குழந்தைகள்-மீதான-பாலியல்-வன்முறைஉலகமயமாக்கத்தால் பெருகியிருக்கும் பணக்கொழுப்பும், இணையத்தால் திறந்துவிடப்பட்டிருக்கும் இன்பவாயில்களும் இன்று பணக்காரப் பெண்களையும் வாடிக்கையாளர்களாக்கி விட்டன. இவர்களுக்குச் சேவை புரியும் ஆண் விபச்சாரிகளும் மாநகரங்களில் பெருத்து வருகின்றார்கள். மொத்தத்தில் உயர் வர்க்கத்தினர் இதற்கேற்ற மனநிலையையும், பணநிலையையும் ஒருங்கே பெற்றிருக்கின்றனர்.

இந்த வசதி இல்லாதவர்களுக்கு விரலுக்கேற்ற விபச்சாரம் இருக்கின்றது. என்றாலும் அதனைத் தேடிப்போவது அத்தனை சுலபமாய் நடப்பதில்லை. இரகசியம் காக்க முடியாத கள்ள உறவுகளோ கொலையில் முடிகின்றன. இத்தகைய சூழ்நிலையில்தான் ஒழுக்கக்கேடுகளை நியாயப்படுத்தும் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.

இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இந்திய ஆண்களும் பெண்களும் கட்டுப்பெட்டித்தனத்தைக் கைவிட்டு பாலியல் சுதந்திரம் பெற்று வருவதைக் கொண்டாடுகின்றன. கள்ள உறவுகளும், திருமணத்துக்கு முந்தைய உறவுகளும் பெருத்து வருவதாக அவர்கள் வெளியிடும் புள்ளி விவரங்கள், ‘இவையெல்லாம் சகஜம்தான் போலும்’ என்ற கருத்தை வாசகர்கள் மனதில் எளிதில் உருவாக்குகின்றன.

செல்போனில் புழங்கும் நீலப்படங்கள், பாலியல் குற்றங்களையே கவர்ச்சிகரமான அட்டைப்படக் கட்டுரைகளாக்கும் பத்திரிக்கைகள், அவற்றையே தமது கதைக்கருவாகக் கொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகிய அனைத்தும், எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுகின்றன. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர், தான் இழந்து விட்ட இன்பம் குறித்து உள்ளுக்குள் புழுங்கத் தொடங்குகின்றனர். புதிய அதிருப்தியாளர்கள் உருவாக்கப் படுகின்றனர்.

தனிநபரின் காமம் புடைப்பதற்கேற்ற கலாச்சாரச் சூழலும் மறுபுறம் அதைத் தடை செய்யும் சமூகக் கட்டுப்பாடுகளும் கோலோச்சும் வாழ்க்கையில், என்னதான் இருந்தாலும் எல்லோரும் எல்லை மீறி விடுவதில்லை. அல்லது மனத்தளவில் எல்லை மீறினாலும் செயலில் மீறாத வண்ணம் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றார்கள். சமூக விழுமியங்களின் அடிப்படையில் தனது சொந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் பலரும் போராடினாலும் இந்தப் போராட்டத்தில் தோல்வியுறுபவர்களும் இருக்கின்றார்கள்.

கீழே கிடக்கும் பணத்தை உரியவரிடம் சேர்ப்பதா, யாரும் பார்க்கவில்லை என்பதால் சட்டைப்பையில் வைத்துக் கொள்வதா என்று முடிவு செய்ய வேண்டிய தருணம் பலருக்கும் வருகின்றது. ஒருமுறை எல்லை மீறிவிட்டால், பிறகு வக்கிரம் இயல்பாக மாறிவிடுகின்றது. கடுகளவு குற்ற உணர்வுகூட இல்லாமல் அடக்கப்பட்ட காமத்தை இவர்கள் வெறியுடன் தீர்த்துக் கொள்கிறார்கள். இவர்களுக்குப் பிரச்சினையில்லாத தொல்லையில்லாத இலக்கு குழந்தைகள். வயதுவந்த பெண்ணை வல்லுறவுக்கு ஆளாக்குவதும், ஒரு சிறுமியை வல்லுறவு செய்வதும் ஒன்றல்ல. பிந்தையதைச் செய்வதற்கு மிகுந்த வன்மம் வேண்டும்.

பெண்களே வல்லுறவைத் தடுக்க முடியாமல் பலியாகிவிடும் நிலையில், குழந்தைகளோ அதைப்பற்றிய சுவடு கூடத் தெரியாமல், என்ன ஏது என்று அறியாமல் பலியாகிறார்கள். விபச்சாரமும், கள்ள உறவும் வாய்க்காத தருணங்களில் அண்டை வீடுகளில் இருக்கும் பெண் குழந்தையே ஒரு காமுகனுக்கு வெறியூட்டப் போதுமானதாக இருக்கின்றது. பொதுப்பால் என்று போற்றப்படும் ஒரு குழந்தையை இத்தகைய கயவர்கள் வளர்ந்த பெண்ணாக உருவகித்துக் கொள்கின்றார்கள். ஒரு இனிப்பு வாங்கிக் கொடுத்து விட்டு மறைவிடத்தில் வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்கின்றார்கள். சற்றே அறியும் பருவமென்றால் மிரட்டிப் பணிய வைக்கிறார்கள்.

பள்ளிகளில் ஆதிக்கம் செய்யும் ஆசிரியர்கள் இப்படித்தான் மாணவிகளை வேட்டையாடுகின்றனர். பெயிலாக்கி விடுவேன், கொன்று விடுவேன் என்று அந்த மாணவி மிரளும் வண்ணம் மான் வேட்டை நடைபெறுகின்றது. கற்பின் புனிதம் குறித்த கருத்து ஆதிக்கம் செய்யும் சமூகத்தில் ஒரு மாணவி தனக்கு நேர்ந்ததை வெளியிலோ வீட்டிலோ அவ்வளவு எளிதாகச் சொல்லுவதில்லை. விதி விலக்காய் வெளியே தெரியும் சம்பவங்களிலிருந்துதான் இந்த வக்கிரத்தை அறிய வருகின்றோம். முனைவர் படிப்புக்காக கைடு உதவியுடன் ஆய்வு செய்யும் கல்லூரிப் பெண்கள் கூட இந்தக் கயவர்களின் மிரட்டலுக்கு அடிபணிய நேரிடுகின்றது.

சிறுவர்களும், சிறுமிகளும் வயது வந்த எதிர்பாலினத்தவருடன் உறவு கொள்ளும் நீலப்படங்கள்தான் இன்றைய சிறப்பாம். இதைப் பார்த்துத்தான் பணக்காரத் தம்பதியினர் கிளர்ச்சி அடைகிறார்களாம். சிறார்களை வல்லுறவுக்கு ஆட்படுத்தும் போக்கு உழைக்கும் மக்களிடத்தில் இருப்பதை விட மேல்தட்டு நடுத்தர வர்க்கத்திடம்தான் அதிகம் நிலவுகிறதென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களிடம் குடும்ப உறவு பண உறவாகவும், பண்ட உறவாகவும் போலித்தனம் நிரம்பியதாகவும் இருப்பதால் இத்தகைய சீரழிவுகள் அதிகம் நடக்கின்றன.

குழந்தைகள்-மீதான-பாலியல்-வன்முறைகுழந்தைகளை வல்லுறவு கொள்ளும் மனிதர்கள் எவரும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கேடிகளல்ல. அந்தக் குழந்தையின் உறவினராகவோ, அண்டை வீட்டாராகவோ பொதுவாக நன்னடத்தையுடன் வாழ்பவர்கள்தான். இவர்கள்தான் இன்னொருபுறம் தமது கைகளுக்கு அருகாமையில் இருக்கும் பச்சிளம் குழந்தைகளை அவை அறியாவண்ணம் குதறுகின்றவர்களாகவும் இருக்கிறார்கள். தனது நன்னடத்தையைக் காப்பாற்றிவரும் அதே வேளையில் காம வக்கிரத்தைத் தீர்ப்பதற்கு இரகசியமான கருவிகளாகக் குழந்தைகளைப் பயன்படுத்துகின்றார்கள்.

ஒரு குழந்தையின் குழந்தைத் தன்மையை இரக்கமின்றி நசுக்கும் இந்தக் கயவர்கள் எவரும் மனநோயாளிகள் அல்ல. பிடிபடாத வரை இந்த வக்கிரத்தைத் தொடரலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தக் காரியத்தில் இறங்குகின்றார்கள். குழந்தைகளை வல்லுறவு செய்தல் ஒரு விபத்து போலவும் நடப்பதில்லை. அனைத்தும் திட்டமிட்டுதான் நடக்கின்றன.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு குழந்தை முழுமையான வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட வேண்டும் என்பதில்லை. பாலியல் வெறியுடன் ஒரு குழந்தையின் மீது கைகள் படரும் ஒவ்வொரு நிகழ்வும் வல்லுறவுதான். அந்த வகையில் பெரும்பான்மையான குழந்தைகள் இந்த அபாயத்தை சந்திக்கும் நிலையில்தான் இருக்கின்றார்கள். பருவம் வராத குழந்தைகளின் உணர்ச்சியைத் தூண்டி விடுதல், நீலப்படங்களைக் காண்பித்து உணர்வூட்டுதல் போன்றவற்றையும் இந்தக் கயவர்கள் செய்கின்றார்கள். உடலும், வயதும் முதிர்ந்த பின்னர் அறிய வேண்டிய பாலுறவை முன்பே அறிந்து கொண்டு அதற்கு பலியாகின்றார்கள் இந்தக் குழந்தைகள்.

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் சிறார்களுக்கு இது வன்முறையாக நடக்கின்றது. பெற்றோர் அக்கறையோ கண்காணிப்போ இல்லாமல் இணையத்தில் மூழ்கும் மாணவர்களோ பிஞ்சிலே வெம்பி விடுகின்றார்கள். தொலைக்காட்சியின் அத்தனை நிகழ்ச்சிகளும், விளம்பரங்களும் சிறுவர்களைப் பாலியலுக்கு அறிமுகம் செய்கின்றன.

பள்ளி ஆண்டுவிழாவில் குத்தாட்டங்களுக்கு நடனம் ஆடும் சிறுமி, தான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு வயதான பெண்ணின் விரகதாபத்தை அபிநயம் பிடித்துக் காட்டுகின்றாள்; அகமகிழ்கின்றார்கள் பெற்றோர்கள். அபிநயத்தில் ஆரம்பித்து அது அடுத்த கட்டத்திற்கு போவது இயல்பாக நடக்கின்றது.

பாலியல் கொடுமைகளுக்குள்ளாக்கப்படும் குழந்தைகள் அதைப் புரிந்து கொள்ளும் அறிவு வளர்ச்சியைப் பெறும்போது பெரும் மனவியல் சித்திரவதைகளுக்கு ஆளாகின்றார்கள். தனக்கு மிகப்பெரிய கொடுமை நடந்து விட்டதாகவும், தனது புனிதம் கெட்டுப்போனதாகவும், தான் கோழையென்றும், இன்னும் பலவிதமாகவும் அவர்கள் கருதிக் கொள்வதால், இத்தகைய குழந்தைகளை சிகிச்சை அளித்து மீளப்பெறுவது என்பது மிகவும் சிரமமானதாகி விடுகின்றது.

ஆசிரியர்கள் இழைக்கும் கொடுமைகளால் மாணவிகள் அடையும் மனச்சிதைவுக்கு எல்லையில்லை. எதிர்கால வாழ்வை விருப்பத்துடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளும் மனத் துணிவை இவர்கள் இழக்கிறார்கள். விசயம் வெளியே தெரியக்கூடாது என்று மறைக்கப்படுவதால் அது உள்ளுக்குள்ளேயே மனதை ரணமாக்குகின்றது.

பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்கு பல ஆலோசனைகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் முன்வைக்கப் படுகின்றன. குழந்தைகளின் மறைவுறுப்புக்களை யாரும் தொட அனுமதியாத வண்ணம் கற்றுக் கொடுப்பது, குழந்தைகளுடன் தேவையானவற்றை வெளிப்படையாகப் பேசுவது, அவர்களையும் அப்படிப் பேசவைப்பது, விடலைப் பருவத்தினருக்கு செக்ஸ் கல்வி, விளையாடும் குழந்தைகளை ஆசிரியர்களும் குடும்பத்தினரும் கண்காணிப்பது, மாணவிகள் படிக்கும் பள்ளிகளுக்கு பெண்களை மட்டும் ஆசிரியர்களாக நியமித்தல் என்று பல ஆலோசனைகள் பேசப்படுகின்றன.

குழந்தைகள்-மீதான-பாலியல்-வன்முறைஇவற்றையெல்லாம் செய்யலாம்தான். இவை தடுப்பு மருந்து மட்டுமே. நோயின் மூலத்தை அறிந்து அழிக்கும் சக்தி இந்த மருந்திடம் இல்லை. ஆம், குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கும் கயவர்களைத் திருத்துவதற்கு எந்த மருந்தும் அரசிடமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமும் இல்லை. சொல்லப்போனால் இந்த நோயை முற்றச்செய்யும் வேலையைத்தான் உலகமயமாக்கத்தின் பண்பாடு செய்து வருகின்றது. இயற்கையான காமம் செயற்கையாக உப்பவைக்கப்படும் இன்றைய சூழலில் இவை ஒவ்வொன்றையும் எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினமான காரியம்.

முக்கியமாக இந்த மனவிகாரம் உள்ளவர்கள் என எல்லோரையும் சொல்ல முடியாதுதான். அதே சமயம் இந்தக் கொடுமையைச் செய்யப் போகிறவர்கள் யார் என்பதையும் கண்டு பிடிக்க முடியாது. அது அந்தக் குழந்தையின் மாமாவாகவோ, சித்தப்பாவாகவோ, ஆசிரியனாகவோ, அண்டை வீட்டு இளைஞனாகவோ இருக்கலாம்.

நான்கு சுவர்களுக்குள் நமது குடும்பத்தின் நலனை மட்டும் பேணிக் கொள்ளலாம் என்றுதான் பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தெருவில் இறங்காமலா இருந்துவிட முடியும்? ஒழுக்கக் கேட்டையும் வக்கிரத்தையும் தோற்றுவிக்கும் சமூகச் சூழலுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் மட்டும்தான் அவற்றை எதிர்த்து நிற்க முடியும். அந்தக் கிருமிகளிடமிருந்து நம்மையே தற்காத்துக் கொள்ளவும் முடியும்.

_________________________________

புதிய கலாச்சாரம், அக்டோபர் 2008
_________________________________

வடு!

11

கவிதைநிறைய இரவுகள்
கடந்துவிட்டன இதுவரையில்
ஒரு சில இரவுகள் மட்டும்
மறக்க முடியாதவைகளாய்…

அப்படி ஒரு இரவுதான் அதுவும்
தூக்கம் வரவில்லை.
கண்களை மூடினால்
நீண்ட… இருட்டு.
மகிழ்ச்சி நிரம்பி வழியும்போது
தூக்கம் வருவது கடினம்தான்.

நான்தான்
முதலில் பார்த்தது
புது நோட்டுக்கள்
புதுப் புத்தகங்களை சுமந்துகொண்டு
சாயங்காலம் பள்ளிக்குள் நுழைந்த
பழைய லாரி ஒன்றை.

எப்படியும் வந்துவிடும்
புது நோட்டுக்களும்
புதுப் புத்தகங்களும்
நாளை என் கையில்.

வாங்கியவுடன்
முதல் பக்கங்களை பிரித்து
‘மோந்து’ பார்க்க வேண்டும்
அவ்வளவு வாசமாய் இருக்கும்.
சலவைக்கு போட்ட
சேலையொன்றை
எப்பொழுதாவது எடுத்து கட்டும்
அம்மாவிடமிருந்து
வருமே ஒரு வாசம்…
அதுபோல.

முடிந்தவரை
இந்த வருடம்
எழுத்துக்கள் ஒவ்வொன்றையும்
சித்திரத்தை போல
செதுக்க வேண்டும் புதுநோட்டில்.
ஆசிரியர் வாங்கி பார்த்தால்
ஆச்சரியத்தில்
திளைக்க வேண்டும்.

கையில் இருக்கும்
மயிலிறகுகளை
கணக்கு புத்தகத்தில்தான்
முதலில் வைக்க வேண்டும்.
நாளு நாட்கள் கூட
எடுத்துகொள்ளட்டும்
நல்லகுட்டி போட்டால் சரி.

பக்கத்து தெரு
பாண்டித்துரை வீட்டில்தான்
‘நியூஸ் பேப்பர்’  இருக்கும்.
அவனும் கூட
என் ‘சோடு’தான்
ஆனாலும் தைரியமாய்
என் அப்பாவை
பெயர் சொல்லியே அழைப்பான்.
அவன் கொஞ்சம்
கொடுத்தால் போதும்
அட்டைபோட்டு பெயரெழுதி
அழகாய் வைத்துக் கொள்வேன்.

இந்த உரச்சாக்கு பையை
கண்டால்தான் கடுங்கோபம்.
மாமா  புதுப்பை ஒன்று
வாங்கி வரும்வரை,
இதிலேயே புத்தகங்கள்
இருந்து தொலைக்கட்டும்
……………………………..

இன்னும் தூக்கம் வரவில்லை.
நீண்ட விழிப்பிற்கு பிறகு
தூங்கிப் போனேன்.

‘பிரேயர்’
நத்தை வேகத்தில்
நகர்ந்து முடிந்தது.

‘‘ ஸ்காலர்சீப்
புத்தகம் வந்திருக்கு
பள்ளன், பறையன்,
சக்கிலியெனெல்லாம்
அப்படியே நில்லு !
மத்த எல்லோரும்
வகுப்புக்கு போ ’’
எரிச்சலும், கோபமும்
கலந்த குரலொன்று
செவிகளை துளைத்தது.

புதுநோட்டுகளும்
புதுப்புத்தகங்களும்
என் அருகில்தான் இருந்தன

ஆனால்,
முந்தைய இரவு போலவே
தூக்கம் மட்டும்
இன்னும் வரவில்லை.

முகிலன்

————————————————————————–

குறிப்பு: தேனி மாவட்டத்திலுள்ள ஸ்ரீ கிருஷ்ணையர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 80-களில் பணிபுரிந்த  கிளார்க் ரத்தினபாண்டி  தாழ்த்தப்பட்ட மாணவர்களை மிகக் கேவலமான முறையில் சாதிப் பெயர்சொல்லி அழைத்து தன் ஆதிக்க ஜாதித் திமிரை தொடர்ந்து நிலை நிறுத்தி வந்ததன் விளைவே இக்கவிதை.

————————————————————————–

இடானியாவின் கடிதம்…

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்று நிகாரகுவா. 1979 ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் நாள், நிகராகுவாவின் சர்வாதிகாரியும், அமெரிக்க உதவியுடன் ஆட்டம் போட்டவனுமாகிய அனஸ்டூடசியோ சமோசாவின் ஆட்சி வீழ்த்தப்பட்டு மக்கள் வெற்றி கண்ட மகத்தான நாள். இத்தேசியப் புரட்சியில் பங்கு கொண்ட இடானியா என்ற பெண் போராளி 8.3.1979 தேதியில் தனது மகளுக்கு எழுதிய கடிதம் கீழே தரப்படுகிறது. 16.4.1979 அன்று சமோசாவின் இராணுவத்தால் கொல்லப்பட்டபோது இப்போராளியின் வயது 26

இடானியாவின் கடிதம்!

இடானியா
மகளுடன் தோழர் இடானியா (1976)

எனது அன்பு மகளே,

எல்லா இடங்களிலும் மக்களுக்கு
இது ஒரு முக்கியமான நேரம்.
இன்று நிகராகுவாவில்,
நாளை பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில்,
பிறகு உலகம் முழுவதும்.

புரட்சி
ஒவ்வொருவராலும் தரமுடிந்த அனைத்தையும் கோருகிறது.
நமது மனசாட்சியும்தான்.

தனி மனிதர்களான நாம் பிரத்யேகமாகச் செயல்பட்டு
இந்த உருவாக்கத்தில் இயன்றளவு,
உதவிடவேண்டி வலியுறுத்துகிறது.

விரைவிலேயே ஒருநாள்
சக மனிதர்களைப் போல வளர்ந்து முன்னேறி,
விரோதிகளாக அல்லாமல், சகோதர சகோதரிகளாக
சுதந்திரமான சமூகத்தில் வாழ்வது,
உனக்கு சாத்தியமாகுமென்று நம்புகிறேன்.

அப்போது உன்னுடன் கைகோர்த்து வீதிகளில் செல்லும்போது
எல்லோரும் புன்னகைப்பதை குழந்தைகள் சிரிப்பதை
பூங்காக்கள் நதிகளையெல்லாம் பார்க்க விரும்புகிறேன்.

நமது மக்கள் மகிழ்ச்சியான குழந்தைகளாக வளர்வதையும்,
புதிய மனிதர்களாகவும்
எங்குமுள்ள மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை
உணர்ந்தவர்களாக மாறுவதையும் கண்ணுற்ற நாம்
மகிழ்ச்சியுடன் புன்னகை செய்வோம்.

நீ அனுபவிக்கப் போகும் அமைதியும், சுதந்திரமும் கொண்ட
சொர்க்கத்தின் மதிப்பை நீ அறிந்து கொள்ள வேண்டும்.
நான் ஏன் இதைச் சொல்கிறேன்?

ஏற்கனவே நமது மக்கள் வீரத்தில் சிறந்தவர்கள்.
சமூகத்தின் மீதும், சுதந்திரத்தின் மீதும், அமைதியின் மீதும்,
தமக்குள்ள ஆழ்ந்த அன்பினால்,
நாளைய தலைமுறையினருக்காகவும்,
உன்னைப் போன்ற குழந்தைகளுக்காகவும்
தங்கள் ரத்தத்தை தந்துவிட்டார்கள்,
மிக்க விருப்பத்துடன்.

நமது அழகான நிகராகுவாவின்
எத்தனையோ ஆண்களும், பெண்களும், குழந்தைளும்,
அடக்குமுறையிலும், அவமானத்திலும், வேதனையிலும்
துடிப்பது போல இனி ஒரு போதும் துடிக்கக் கூடாது
என்பதற்காக
அவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துவிட்டார்கள்.

ஒருவேளை நான் இவற்றையெல்லாம்
உன்னிடம் நேரில் சொல்லமுடியாமல் போகலாம்.
வேறொருவர் சொல்வதும் முடியாது போய்விடலாம்,
என்பதால் உன்னிடம் சொல்கிறேன்.

அன்னை என்பவள் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பவள் மட்டுமல்ல,
எல்லாக் குழந்தைகளும் தனது கருப்பையிலிருந்து தோன்றியவர்கள் போல,
எல்லா மக்களின் வலிகளையும்
அன்னை என்பவள் நன்கு அறிவாள்.

ஒரு நாள்
நீ
மனித குலத்தின் மீது பேரன்பு கொண்ட
உண்மையாக பெண்ணாக உருவாக வேண்டும்
என்பதே என் விருப்பம்.

நீதியை யார் எப்போது குலைக்க முயன்றாலும்,
அதை எதிர்த்து நின்று காப்பது எப்படி என்று
உனக்கு எப்போதும் தெரிந்திருக்க வேண்டும்.

அப்படி நீ மாறவேண்டுமானால்,
நாம் நாட்டுப் புரட்சியின் தலைவர்களும்,
பிறநாட்டுப் புரட்சியின் மாபெரும் தலைவர்களும்
எழுதிய புத்தகங்களை
நீ படித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.

அனைத்திலும் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்தி
அதன் மூலம் வளர்ச்சியைத் தொடர வேண்டும்.
நீ இதைச் செய்வாய்!
உன்னால் முடியுமென்று எனக்குத் தெரியும்.

உனக்கென
வார்த்தைகளையும், வாக்குறுதிகளையும், வெற்றுப்போதனைகளையும்
விட்டுச் செல்ல நான் விரும்பவில்லை.

உனக்கென நான் விட்டுச்செல்ல நினைப்பது
வாழ்க்கை பற்றிய ஒரு கண்ணோட்டத்தை.
என்னுடையதையும்
(அதுதான் சிறந்தது என்று நான் நினைக்கவில்லை என்றாலும்)
எனது சான்டினிஸ்டா சகோதர – சகோதரிகளுடையதையும்
உனக்கு விட்டுச் செல்கிறேன்.
அதை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்று
நீ கற்றுக் கொள்வாயென்று எனக்குத் தெரியும்.

சரி, என் குண்டுப்பெண்ணே,
உன்னை மறுபடியும் பார்க்கும் பேறு எனக்கு கிடைத்தால்?
அதுகூட சாத்தியம்தான்.
வாழ்க்கை பற்றியும் புரட்சி பற்றியும் நாம் நீண்டநேரம் பேசுவோம்.

நமக்குக் கொடுக்கப்படும் செயல்களை
கடினமாக உழைத்து நிறைவேற்றுவோம்.
கிடார் வாசித்து, பாட்டுப்பாடி ஒன்றாக விளையாடுவோம்.
ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொள்வோம்.

வா,
பூவையும் சுதந்திரத்தையும் போன்ற
உன் அழகு முகத்தை எனக்குக்காட்டு!

உன் சிரிப்பையும் நமது யதார்த்தத்தையும் பிணைத்து
நான் போராடுவதற்கான சக்தியைக்கொடு!

தினமும் உன்னைப்பற்றியே நினைக்கிறேன்.
நீ எப்படியிருப்பாய் என்று கற்பனை செய்கிறேன்.

எப்போதும் உன் மக்களை
மனித குலத்தை நேசி!
உன் அம்மாவின்
அன்பு முழுவதும் உனக்கே!

  • இடானியா.

“என்றென்றைக்குமான வெற்றி கிட்டும் வரை
சுதந்திரத் தாய்நாடு அல்லது வீரமரணம்”

(“சான்டினோவியப் புதல்விகள்” ஆங்கிலப் புத்தகத்திலிருந்து மொழிபெயர்ப்பு: அமரந்தா.) – புதிய கலாச்சாரம், ஜனவரி’ 2000

இருபத்தி ஆறு வயது போராளி இடானியா தனது மகளுக்கு எழுதிய கடிதம்தான் இது. கடிதத்தை கவிதை வடிவில் மாற்றியிருக்கிறோம். வாழ்வின் முழுமை பற்றியும், கடமை பற்றியும், தனிப்பட்ட நேசத்தைக் கூட சமூக உறவின் வெளிச்சத்தில் நேசிக்கும் இந்த இளம் போராளியின் வார்த்தைகளும், வரிகளும் செயலற்றவர்களின் பாதுகாப்பான இதயத்தை உலுக்குகிறது. அவளது சிறிய குண்டுப் பெண்ணுடன் கிடார் வாசித்து புரட்சியின் கடமைகளை நிறைவேற்ற நினைக்கும் எதிர்பார்ப்பு கண்ணீரை வரவழைக்கிறது. ஆம். நல்ல கவிதைகள் கவிதைகளாத்தான் எழுதப்பட வேண்டுமென்பதில்லை. அது போராட்டத்திலிருக்கும் வாழ்க்கையிலிருந்தும் பிறக்கலாம்.

முருகப்பாவுக்கு ‘நேரம்’ சரியில்லை !

14

24-ம் தேதி இரவு ஏழு மணி. ஆவடியிலுள்ள டி.ஐ மெட்டல் ஃபார்ம்மிங் (காருக்கு கதவுகள் தயாரிக்கும் தொழிற்சாலை) ஆலையின் வாசலை கடந்து சர் சர் என்று  பாய்ந்து கொண்டு வந்த ஆறு ஏழு உயர்ரக கார்கள் சடன் பிரேக் அடித்து நின்றன. கார்களிலிருந்து ஆலையின் மேலாளர்கள், உயர் அதிகாரிகள், மொத்த முருகப்பா குழுமத்தின் மிக உயர்மட்டத்திலுள்ள மூன்றாம் கட்ட, நான்காம் கட்ட அதிகாரிகள் என்று இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பதட்டத்துடன் இறங்கி ஆலைக்குள் ஓடினர்.

மாலை நாலரை மணிக்கு ஷிப்ட் முடியும் தருவாயில் அடுத்த ஷிப்ட்டுக்காக வந்த தொழிலாளர்களும் ஷிப்டில் இருந்தவர்களும் இணைந்து  ஆலையின் உற்பத்தியை திடீரென்று நிறுத்தினர். கேந்திரமான உற்பத்தி பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்டவை அனைத்தும் ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில் திங்கட்கிழமை சப்ளைக்காக உடனடியாக உற்பத்தியை துவங்க வேண்டிய நெருக்கடி நிலையில் தான் தொழிலாளர்கள் உற்பத்தியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஆலைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்தனர்.

முருகப்பா குழுமத்தை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இக்குழுமத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. பாரிஸ், ஈ.ஐ.டி பாரி, பாரி அக்ரோ, டி.ஐ சைக்கிள்ஸ், டி.ஐ.டி.சி , டி.ஐ மெட்டல் பார்ம்மிங், பி.எஸ்.ஏ மோட்டார்ஸ், கோரமண்டல் இண்டர்நேஷ்னல், சோழமண்டலம் பைனான்ஸ் என்று இருபத்து எட்டு துறைகளில் இந்தியாவின் பதிமூன்று மாநிலங்களில் இந்நிறுவனம் தனது தொழிற்சாலைகளையும் அலுவலகங்களையும் நிறுவியுள்ளது. இவ்வாறு நாடு முழுவதும் கிளை பரப்பியுள்ள இந்நிறுவனம் ஒரு ’தமிழ் முதலாளி’ கம்பெனி. அதாவது செட்டியார் குடும்பத்தைச் சேர்ந்த தரகு முதலாளித்துவ கம்பெனி.

இக்குழுமத்திலுள்ள டி.ஐ மெட்டல் ஃபார்ம்மிங் நிறுவனம் ஜி.எம், மாருதி சுசுகி, ஹூண்டாய், ரெனால்ட் நிசான், டொயோட்டா போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கும் டாடா, மகேந்திரா போன்ற சில தரகு முதலாளித்துவ கார் தொழிற்சாலைகளுக்கும் இந்திய ரயில்வேவுக்கும் கதவுகளை தயாரித்து கொடுக்கிறது. சென்னையில் இரண்டு ஆலைகளும் குஜராத், அரியானா, மகாராஷ்ட்ராவில் ஒரு ஆலையும் இயங்கி வருகிறது. உத்திரகாண்ட்டில் ஒரு புதிய ஆலை கட்டப்பட்டு வருகிறது.

முருகப்பா ‘முறுக்கு’ கம்பெனி!

தற்போது ஆவடிக்கு அருகிலுள்ள நெமிலிச்சேரியிலுள்ள ஆலையில் தான் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளிருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை கடந்த பதினைந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு பிரதானமாக ஹூண்டாய் மற்றும் ரெணால்ட் நிசான் கார்களுக்கான கதவுகள் தயாரிக்கப்படுகின்றன.

மொத்தம் தொள்ளாயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் வெறும் அறுபத்து எட்டு பேர் மட்டுமே நிரந்தரத் தொழிலாளிகள். இந்திய தன்மைக்கேற்ப பண்ணையார் பானியில் கம்பெனி நடத்தும் இக்குழுமம். தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் முறையே வித்தியாசமானது. தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களுக்கும், நெல்லை, கன்னியாகுமரி போன்ற எல்லையோர மாவட்டங்களுக்கும் சென்று வேன்களில் முருகப்பா குரூப் என்கிற பதாகையை மாட்டிக்கொண்டு ஆள் எடுப்பு முகாம் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.

முருகப்பா குரூப் மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனி, இந்நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. இந்த வேலை உங்களுடைய எதிர்காலத்தை மாற்றும் என்று முறுக்கு கம்பெனிக்கு ஆள் எடுப்பதை போல தனக்கு தேவையானவர்களை பொறுக்கி எடுத்துக்கொண்டு வருகிறது. தற்போது அதிகமான அளவில் வடமாநிலங்களிருந்து சட்டவிரோதமான முறையில் ஒப்பந்ததாரார்கள் மூலம் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். தொழிலாளர்களில் பெரும்பான்மையினரான வடமாநில ஒப்பந்தத் தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனினும் ஆதரிக்கின்றனர்.

பு.ஜ.தொ.மு உதயம்!

இங்கு பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்கள் அனைவரும் ‘புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’ யில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இணைந்துள்ளனர்.

முருகப்பா குழுமத்தின் ஒட்டுமொத்த மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளுக்கெல்லாம் தலைமை அதிகாரியாக இருப்பவர் திருவாளர் பிரசாத். உங்களுக்கு நினைவிருக்கலாம், சில மாதங்களுக்கு முன்பு பு.ஜ.தொ.மு வை தடை செய்ய வேண்டும் என்று முதலாளிகள் மீது கருணை மழை பொழியும் அம்மாவுக்கு கோரிக்கை வைத்தார்களே முதலாளிகள், அந்த முதலாளிகள் சங்கத்தின் துணைச் செயலாளர் இந்த பிரசாத் தான்.

எனவே பு.ஜ.தொ.மு வின் கீழ் தொழிலாளர்கள் சங்கமாக இணைந்ததை நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படியாவது சங்கத்தை உடைக்க வேண்டும் என்று முயற்சித்தனர். யாரும் சோரம் போகும் நிலையில் இல்லாததால் தொழிலாளர்கள் மத்தியில் பல்வேறு அவதூறுகளை கிளப்பிவிட்டனர்.

இவர்கள் நக்சலைட் தீவிரவாதிகள், ஏற்கெனவே பல இடங்களில் நிர்வாகத்திடம் காசு வாங்கிக் கொண்டு ஓடிப் போனவர்கள் என்றும் இன்னும் பலவாறாகவும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் தொழிலாளர்கள் நிர்வாகம் எதை செய்யக்கூடாது என்று சொல்கிறதோ அதை தான் இன்னும் தீவிரமாக செய்தனர். முன்பு நிர்வாகத்திலுள்ள கீழ்மட்ட அதிகாரிகளை பார்த்தால் கூட பணிந்து போகும் தொழிலாளிகள் இப்போதெல்லாம் உயர்மட்ட அதிகாரிகளின் அடாவடிகளுக்கு கட்டுப்படுவதில்லை. எனவே நிர்வாகத்தின் விருப்பத்திற்கு மாறாக பு.ஜ.தொ.மு வில் தான் இணைவோம் என்று இணைந்தனர்.

தொழிலாளர்களை கங்காணிகளாக்கிய முருகப்பா!

தொழிலாளர்கள் சங்கத்தில் உறுதியடைய துவங்கியதும் நிர்வாகம் தனது வேலைகளை காட்டத் துவங்கியது. தொழிலாளர்களை தொழிலாளர்களாகவே வைத்திருந்தால் சட்டப்படி பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டியிருக்கும் என்பதால் தொழிலாளர்களின் தகுதிகளை சூப்பர்வைசர்கள் என்று தந்திரமாக உயர்த்தியது.

தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு மூலம் இதை எதிர்த்து வழக்கு தொடுத்தனர். பிரச்சினை தொழிலாளர் உதவி ஆணையரிடம் சென்றது. இவர்கள் நிர்வாக ஊழியர்கள் அல்ல உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள் தான் என்பதை பு.ஜ.தொ.மு ஆதாரங்களுடன் நிரூபித்தது நிர்வாகத்திற்கு விழுந்த முதல் அடி!

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை!

நிறுவனத்தின் லாபம் மற்றும் வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும் போது நிர்வாகம் தொழிலாளிகளுக்கு வழங்கும் கூலி என்பது லட்சத்தில் ஒரு பங்கு கூட இல்லை.

முருகப்பா கும்பலை பொருத்தவரை ஒவ்வொரு ஆலைக்கும் தனித்தனியே ஒவ்வொரு ஆண்டுக்கும் இவ்வளவு ஊதியம் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து ஒரு தொகையை ஒதுக்கி விடுகின்றனர். டி.ஐ. மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்களுக்கு 2012-ம் ஆண்டுக்கு வழங்க வேண்டிய ஊதியம் ஒரு கோடி தான் ஒன்று ஒதுக்கிவிட்டு அதிலும் ஆட்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்க முடியுமோ, குறைக்கிறார்கள். மிச்சமுள்ள பணத்தை ஆலையின் உயர் அதிகாரிகளுக்கு ஊக்கத் தொகையாக வழங்குகிறார்கள்.

நிரந்தரத் தொழிலாளிகளுக்கே அதிகப்பட்ச ஊதியம் எட்டாயிரம் தான். ஒப்பந்ததத் தொழிலாளர்களுக்கோ மிக மிக அடிமாட்டு கூலியாக மூவாயிரத்து ஐநூறு முதல் நாலாயிரம் ரூபாய் தான் வழங்கப்படுகிறது. எனவே தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்தனர். பேச்சுவார்த்தைக்கு வருகிறேன் என்று வரும் நிர்வாகம் பேச்சுவார்த்தையை வேண்டுமென்றே இழுத்தடிப்பதும், பாதியிலேயே எழுந்து செல்வதுமாக தொழிலாளர்களை தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் குழுமத்தின் நிறுவன நாள் என்று ஒரு நாளை கொண்டாடுகிறார்கள். அன்று அனைத்து அதிகாரிகளும் ஆலையில் கூடி இனிப்புகள் வழங்கி, உரையாற்றி உணவருந்தி பிறகு கலைவார்கள். இந்த ஆண்டின் நிறுவன நாளன்று மழை கொட்டிக் கொண்டிருந்தது. உங்களுடைய கொண்டாட்ட நாள் எங்களுக்கு துக்க நாள் என்று கூறி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழிலாளிகள் அனைவரும் சட்டைகளில் கருப்பு பட்டைகளை அணிந்து கொண்டு விழா நடந்த அரங்கிற்கு எதிரில் கொட்டும் மழையில் நனைந்து கொண்டே நின்றனர். அவர்கள் கொடுத்த இனிப்புகளையும் புறக்கணித்தனர்.

ஏற்கெனவே வருடத்திற்கு எண்ணூற்றி ஐம்பது ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்தது. அதாவது மாதத்திற்கு எழுபத்தியோரு ரூபாய். இன்றுள்ள நிலைமைகளில் இந்த ஊதியம் போதுமானதாக இல்லை என்பதால் தொழிலாளர்கள் கூடுதல் ஊதியத்தை கோரினார்கள். கூடுதலாக நான்காண்டுகளுக்கு இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பது ரூபாய் தருவதாக நிர்வாகம் ஒப்புக்கொண்டது. அதாவது இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பது என்றால் ஆண்டுக்கு இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பது அல்ல அந்த மொத்த தொகையை ஆண்டுக்கு அறுநூற்று என்பத்து எட்டு என்று நான்காண்டுகளுக்கு பிரித்துக்கொள்ள வேண்டும் அவ்வாறு பிரித்துக்கொண்டால் மாதத்திற்கு ஐம்பத்து ஏழு ரூபாய் சொச்சம் வரும். எனினும் பரவாயில்லை என்று தொழிலாளர்கள் அதையும் ஏற்றுக்கொண்டனர்.

ஏற்கெனவே வழங்கி வந்ததைவிட இது மிகக்குறைவான ஒரு ஊதிய உயர்வு. அதை தருவதாக ஏற்றுக்கொண்ட நிர்வாகம் இதை தருகிறேன் ஆனால் ஏற்கெனவே வழங்கி வந்த எழுபத்தியோரு ரூபாயை தரமுடியாது என்று மறுத்தது. இது எப்படிப்பட்ட அயோக்கியத்தனம் ?

தற்போது தொழிலாளர்கள் உற்பத்தியை முடக்கி ஆலையை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட பிறகு நேற்று தொ.உ.ஆணையர் முன் நடந்த பேச்சு வார்த்தையையும் கணக்கில் சேர்த்தால் கடந்த ஒன்றரை ஆண்டில் மட்டும் சுமார் ஐம்பது முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது !

பேச்சுவார்த்தை என்கிற பெயரில் தொழிலாளிகளை அலைக்கழித்து இழுத்தடித்ததாலும், ஊதிய உயர்வு தருகிறேன் என்கிற பெயரில் சீண்டிப்பார்க்கும் விதத்தில் ஏற்கெனவே வழங்கி வந்த ஊதியத்தையே அயோக்கியத்தனமாக வெட்டியதாலும் வேறு வழியே இன்றி தான் தொழிலாளிகள் இயந்திரங்களின் பொத்தான்கள் மீது கை வைத்தனர்.

உள்ளிருப்பு போராட்டம் உற்பத்தி நிறுத்தம்!

24-ம் தேதி மாலை நாலரை மணிக்கு அனைத்து இயந்திரங்களும் நிறுத்தப்பட்டு உள்ளிருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆலையிலிருந்த மேலாளர்கள் மூலம் உடனடியாக மேல்மட்டத்திற்கு தகவல் பறந்தது. அடுத்த சில மணி நேரங்களில் அதிகாரிகள் கூட்டம் திபுதிபுவென ஆலைக்குள் நுழைந்தது. அதற்கு முன்பாக அவர்களுக்கு காவல் காக்கக்கூடிய போலீசு கும்பல் சட்ட விரோதமான முறையில் ஆலைக்கு வெளியில் குவிக்கப்பட்டது. பத்து மணியை கடந்தும் அதிகாரிகள் வெளியே வரவில்லை.

தொழிற்சாலைக்குள் நடக்கும் பிரச்சினை சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்ல ! எனவே போலீசு இதில் தலையிடுவதற்கு சட்டப்படியே அதிகாரம் இல்லை. எனினும் விசுவாசம் காரணமாக போலீசார் ஆலைக்கு வெளியில் ஹூண்டாய் முதலாளி கொடுத்த காரில் அமர்ந்து கொண்டிருந்தனர்.

தொழிலாளிகளுக்காக ஆவடி அம்பத்தூர் பகுதி பு.ஜ.தொ.மு தோழர்களும் நின்று கொண்டிருந்தனர். தோழர்களை நெருங்கிய போலீசு “பத்து மணிக்கு மேல இங்க என்ன கூட்டம் போட்டுக்கிட்டு. எல்லோரும் கலைஞ்சு போங்க” என்று மிரட்டியது. “உள்ள எங்க தோழர்கள் போராடிட்ருக்காங்க, அவங்களுக்காக நாங்க நிக்கிறோம். இது ரோடு. ரோட்ல நிக்கிறதுக்கு இந்த நாட்டின் குடிமகன் என்கிற வகையில் எங்களுக்கு உரிமை இருக்கிறது” என்று தோழர்கள் தெரிவித்தனர். தனது அதிகாரம் செல்லுபடியாகவில்லை என்றதும் சரி சரி ரெண்டு ரெண்டு பேரா பிரிஞ்சி நில்லுங்க என்றனர்.

நிர்வாகம் தன்னுடன் இரு கியூ பிரிவு போலீசாரையும் ஆலைக்குள் அழைத்துச் சென்றிருக்கிறது. அவர்கள்  தொழிலாளிகளை கண்காணிக்கத் துவங்கினர். அதிகாரிகள் தொழிலாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றனர். அருகிலேயே கியூ பிரிவு போலீசாரும் நின்று கொண்டிருந்தனர். பேச்சுவார்த்தை நடத்தலாம் ஆனால் இவர்கள் யார், எதற்காக வந்துள்ளனர் என்று கேட்டனர் அவங்க சும்மா கூட இருப்பாங்க என்றனர். இவங்க யார்னு எங்களுக்கு தெரியும். இது உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலான பிரச்சினை. அவர்களை வெளியேற்றுங்கள் நாம் பேசுவோம் என்றனர். அதன் பிறகும் பல காரணங்களை கூறி அவர்களை நிற்க வைக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் இங்கிருந்து வெளியேறினால் தான் பேச்சுவார்த்தை பற்றியே பேச முடியும் என்று தொழிலாளிகள் கராறாக கூறிவிட்ட்தால் கியூ போலீசு அவமானப்பட்டு வெளியேறியது.

வழக்கமாக பேச்சுவார்த்தை கான்ப்ரன்ஸ் ஹால், அல்லது ஏதாவது ஒரு அறையில் தான் நடக்கும். இப்போதோ அங்கெல்லாம் வர முடியாது இங்கேயே பேசுங்கள் என்று அதிகாரிகளை அங்கேயே நிற்க வைத்து பேசினர். பேச்சுவார்த்தை தோல்வி, மறுபடியும் பேச்சு மீண்டும் தோல்வி என்று இரவு இரண்டரை மணி வரை ஐந்து முறை பேச்சுவார்த்தை தோல்வி, தோல்வி, பேச்சுவார்த்தை என்று விளையாட்டுகாட்டிக்கொண்டிருந்தது நிர்வாகம்.

விளையாட்டு மட்டுமல்ல மிரட்டலும் விடப்பட்டது. “முருகப்பா குரூப்ல உங்களை மாதிரி முப்பதாயிரத்துக்கு மேற்பட்டவங்க வேலை செய்றாங்க. அதுல நீங்க வெறும் அறுபத்து எட்டு பேர் தான். உங்களால என்ன பண்ண முடியும் ? மரியாதையாக வெளியேறிட்டீங்கன்னா நல்லது இல்லைனா விளைவுகள் விபரீதமாக இருக்கும்” என்று பூச்சாண்டி காட்டினர். அந்த விளைவுகளையும் பார்க்கலாமே என்று தொழிலாளிகள் மிரட்டலை சட்டை செய்யாமல் உறங்கச் சென்றனர். பிறகு கூடி பேசிய அதிகாரிகள் மூன்று மணிக்கு ஆலையிலிருந்து வெளியேறினர்.

விடாப்பிடியான இழுபறி நிலை!

இதுவரை உற்பத்தி செய்யப்பட்டிருந்த அனைத்து கார் கதவுகளும் ஹூண்டாய்க்கு அனுப்பப்பட்டுவிட்டன. மறுநாள் அனுப்புவதற்கு கதவுகள் இல்லை. அன்றிரவு எட்டு மணிக்குள் உற்பத்தி துவங்கப்படாவிட்டால் அதற்கடுத்த நாள் ஹூண்டாய் கார்கள் அனைத்தும் கதவுகள் பொருத்தப்படாத நிலையில் அசெம்ப்ளி லைனில் நிற்கும், அங்கு உற்பத்தி ஸ்தம்பிக்கும் என்பது மறுநாள் நிலைமை.

மறுநாள் விடிந்தது. ஆலைக்கு வெளியே பத்து தோழர்களும் தூங்காமல் காத்துக் கொண்டிருந்தனர். போலீசும் நகரவில்லை. சரியாக எட்டு மணிக்கெல்லாம் ஆலைக்குள் வந்த அதிகாரிகள். மறுபடியும் பேசலாம் என்றனர். அதற்குள் இங்கே நடக்கின்ற பிரச்சினைகள் எப்படியோ ஹூண்டாய்க்கு தெரிந்துவிட்டது. உடனே TI  ல் என்ன நிலைமை என்பதை பார்த்துவர ஒரு அதிகாரியை அனுப்பியிருக்கிறது.

இந்நிலையில் காட்சி ஊடகங்களுக்கு தகவல் தெரிந்து சன் நியூஸ், ஜீ தமிழ், கேப்டன் நியூஸ் ஆகிய தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன. மக்கள் போராடக்கூடாது என்று விரும்புகின்ற ’புதிய தலைமுறை’ மட்டும் வெளியிடவில்லை.

ஊடகங்கள் வந்ததையும், தொழிலாளிகள் பேட்டியளித்ததையும் அறிந்த நிர்வாகம் வெளியே வந்த தொழிலாளர்கள் மீண்டும் உள்ளே சென்றதும் ஷட்டரை இழுத்து பூட்டு போட்டது. தொழிலாளர்களை இவ்வாறு உள்ளே தள்ளி கதவை மூடுவது என்பது சிறை வைப்பதாகும், இது சட்டவிரோத நடவடிக்கை.

வெளியில் நின்று கொண்டிருந்த தோழர்களுக்கு இந்த தகவல் கிடைத்ததும் தொழிலாளர்களுடைய பெற்றோர்கள், மனைவி குழந்தைகள் அனைவரையும் அணிதிரட்டி ஆலைக்கு முன்பு கொண்டு வந்து நிறுத்தி முழக்கமிட்ட்னர். காவல்துறை உடனே பெண் காவலர்களை கொண்டு வந்து இறக்கியது. பிறகு ஷட்டர் திறக்கப்பட்டது.

இதற்குள் பிற்பகல் ஆகிவிட்டது. ஆலைக்குள் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டி கோடி கோடியாக விழுங்கும் முதலாளிகள் சல்லித்தனமாக மாதத்திற்கு ஐம்பத்தியேழு ரூபாயை உயர்த்தி கொடுக்க முடியாது என்பதில் பிடிவாதமாக நின்றனர். உழைக்காத உனக்கே இவ்வளவு திமிர் இருந்தால் உழைத்து சாப்பிடுகின்ற எங்களுக்கு எவ்வளவு இருக்கும் என்று தொழிலாளிகளும் பிடிவாதமாக நின்றனர்.

தமிழகத்தில் பன்னிரெண்டு நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிகளில் முதலீடு செய்கின்றன என்று சமீபத்தில் ஜெயலலிதா பெருமைபட்டுக் கொண்ட நிறுவனங்களில் முருகப்பா குழுமமும் ஒன்று. இக்குழுமம் பத்தாயிரம் கோடிகளை முதலீடு செய்யவிருக்கிறது. எனவே அரசு தரப்பிலிருந்து  உடனடியாக பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி தொழிற்துறை செயலர் மூலம் தொழிலாளர் ஆணையருக்கும், இணை ஆணையருக்கும் (JCL) இணை ஆணையரின் உத்தரவுப்படி தொ.உ.ஆணையர் (ACL) “ஞாயிற்று கிழமை என்றாலும் பரவாயில்லை பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்” என்று அழைத்தார்.

மாலை நாலரை மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை இரவு எட்டரை மணிக்கு முடிந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் புதிய ஊதிய உயர்வு கோரிக்கையை ஏற்பதாகவும் ஏற்கெனவே வழங்கி வந்த பழைய ஊதிய உயர்வையும் தொடர்ந்து வழங்குவதாகவும் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது. அதன் பிறகு ஆலைக்குள்ளிருந்த தொழிலாளிகள் வெளியேறினர்.

எழுபதுகளில் இதே அம்பத்தூர் ஆவடி பகுதிகளில் முருகப்பா குழுமத்தில் இதே போல தொழிலாளி வர்க்கம் போராடியுள்ளது. அப்போது ஆட்சியிலிருந்த எம்.ஜி.ஆர், அந்த காலத்து இரும்பு தொப்பி போட்ட போலீசை ஏவிவிட்டு தொழிலாளர்களை ஒடுக்க நினைத்தார். ஆனால் தொழிலாளி வர்க்கம் போலீசை விரட்டி அடித்தது வரலாறு.

அதன் பிறகு கடந்த முப்பது ஆண்டுகளாக முதலாளிகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமலிருந்ததால் குளிர்விட்டு போயிருந்தது. தற்போது அந்த வரலாற்றை மீட்டெடுக்க, முதலாளிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக பு.ஜ.தொ.மு வளர்ந்து வருகிறது. எழுபதுகளுக்கு பிறகு முருகப்பாவில் இத்தகையதொரு போராட்டம் நடைபெற்றதில்லை. அந்த தேக்க நிலையை உடைத்தெறிந்திருக்கிறது பு.ஜ.தொ.மு. முருகப்பாவில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பு.ஜ.தொ.மு விலுள்ள தொழிலாளிகள் முதலாளிகளின் கொட்டத்தை ஒடுக்குவார்கள்.

முன்பு ஒரு முறை நடந்த ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியடைந்த போது பேச்சுவார்த்தை நடந்த இடத்தின் வாஸ்து சரியில்லாதது தான் தோல்விக்கு காரணம் என்று கூறி அந்த இடத்தை இடித்துவிட்டு லட்சக்கணக்கில் செலவு செய்து புதிய கட்டிடத்தை கட்டினார்கள். தோல்விக்கு காரணம் வாஸ்து தான் என்றால் தற்போதைய பேச்சுவார்த்தை தொண்ணூற்று ஒன்பது சதவீதம் ஆலையின் நடு மையத்தில் தான் நடந்திருக்கிறது. என்ன செய்யப்போகிறது முருகப்பா குழுமம்? முழு ஆலையையும் இடித்து விடுமா?

போராட்டம் முடிவுக்கு வந்த அன்றைக்கு இரவோடு இரவாக தொழிலாளிகளை கண்காணிப்பதற்கான உளவு கேமராக்களை ஆலைக்குள் பொருத்தியுள்ளனர். இந்த கேமராக்களுக்கு ஒரு பார்ப்பானை வைத்து பூஜையும் போட்டு நல்ல நேரம் பார்த்து அதை ஆன் செய்துள்ளனர். எத்தனை கேமராக்களை வைத்தாலும் முதலாளித்துவத்திற்கு இனி நல்ல நேரம் இல்லை.

________________________________________________

– வினவு செய்தியாளர்
___________________________________________

ஊழல் எதிர்ப்பு: மேதாவிகளின் நிழல் யுத்தம்!

5

ரசியல் உயர்மட்டத்தில் நிலவும் ஊழல், அதிகார முறைகேடுகள், மோசடிகள் பற்றிய செதிகள் நாளும் வெளிச்சத்திற்கு வருகின்றன. அவை நாளுக்கு நாள் பெரும் அளவிலும் பரவலாகவும், அடி முதல் முடி வரை எல்லா மட்டங்களிலும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. அரசியல் கட்சிகளில் ஆளும் கட்சிகள் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள்; அரசியல்வாதிகள் மட்டுமல்ல, போலீசு, இராணுவம், அனைத்து மட்ட நீதிபதிகள், அதிகார வர்க்கத்தினர்;  கல்வியாளர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், பொறியாளர்கள், அறிவியல் அறிஞர்கள், பொதுத்துறை நிர்வாகிகள் மட்டுமல்ல,  தனியார்துறை தொழில் நிறுவன நிர்வாகிகள் முதல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் வரை எங்கும் நீக்கமற நிறைந்து விட்டன, ஊழல்களும் அதிகார முறைகேடுகளும்.

நடைபெறும் ஊழல்கள், அதிகார முறைகேடுகளில் ஒரு சில மட்டுமே வெளிச்சத்திற்கு வருகின்றன. இவற்றுள்ளும் ஒன்றிரண்டு மட்டுமே மக்கள் கவனத்திலும் செய்தி உலகிலும் சில காலம் நீடித்து நிற்கின்றன. மற்றவை புதிது புதிதான ஊழல்கள், அதிகார முறைகேடுகள் பற்றிய செய்திகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பரபரப்புகள் அடங்கி, மறந்து அல்லது மறைந்து போகின்றன; அல்லது சம்பந்தப்பட்டவர்களாலேயே அமுக்கப்படுகின்றன. வகைமாதிரிக்குக் கூட அல்ல, உள்நோக்கங்களுடன் தெரிந்தெடுத்த, அரிதினும் அரிதாக புகார்கள் விசாரணைக்கு வந்தாலும் புலன் விசாரணை அல்லது நீதிமன்ற விசாரணை, மேல் முறையீடு என்று இழுத்தடிக்கப்பட்டுச் சாகடிக்கப்படுகின்றன. இடைக்காலத்தில் குற்றவாளிகள் வழக்கமான அதிகாரம், சோகுசு வாழ்க்கை என்றுதான் இருக்கிறார்கள். ஜெயலலிதா – சசிகலா கும்பல் 42 வழக்குகளில் சிக்கினாலும் மற்ற எல்லா வழக்குகளிலிருந்தும் தப்பி, சொத்துக்குவிப்பு வழக்கை மட்டும் 15 ஆண்டுகளாக இழுத்தடித்து நாட்டுக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. சட்டத்துறையையும் நீதித்துறையையும் கண்களில் விரலை விட்டு ஆட்டி, எங்களை யாரும் ஆட்டவோ, அசைக்வோ முடியாது” என எக்காளமிடுகிறது.

அரசின் வரவு -செலவுகளை ஆய்வு செய்து வழக்கமாக அறிக்கைகள் தரும் பொதுக்கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பின் கருத்துகள் – முடிவுகளைக் கையிலெடுத்துக் கொள்ளும் எதிர்க்கட்சிகளும் தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் சில ஊழல்கள், அதிகார முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன. மேலும் சில விவகாரங்கள் தகவல் உரிமைச் சட்ட – சமூக ஆர்வலர்களாலும் தன்னார்வத் தொண்டு அமைப்புகளாலும் ஊடகங்கள் நடத்தும் புலனாய்வுகளாலும் அம்பலத்துக்கு வருகின்றன. இன்னும் சில விவகாரங்கள் கார்ப்பரேட் தொழில் கழகங்களுக்கிடையிலும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடையேயும் நடக்கும் தொழில் போட்டிகள் காரணமாக வெளிவருகின்றன.

இரண்டாம் அலைக்கற்றை (2-ஜி) ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டு ஏற்பாடுகள், மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு ஆகியவற்றில் தொடங்கி எஸ்-பாண்ட் அலைக்கற்றை ஒதுக்கீடு, இராணுவ நிலங்கள் விற்பனை, உ.பி.யில் பொது விநியோக (ரேஷன்) பொருட்கள் கடத்தல், கோதாவரி படுகை பெட்ரோலிய உற்பத்தியில் அம்பானியின் வரிஏப்பு, ஏர்-இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் கொள்முதல், மகாராஷ்டிராவில் சுற்றுலா வளர்ச்சித் தொழிலுக்கு பழங்குடி மக்களின் நில அபகரிப்பு ( லவாசா ஊழல்), ஆந்திரா – கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்களின்  சுரங்கக் கொள்ளை; ஒரிசா, ஜார்கந்து, சட்டிஸ்கரில் வேதாந்தா, போஸ்கோ, மிட்டல், எஸ்ஸார், டாடாக்களின் இரும்பு, செம்பு, அலுமினியக் கனிமவளக் கொள்ளை, கடைசியாக நிலக்கரி ஒதுக்கீடு எனத் தொடர்ந்து பல ஊழல், அதிகார முறைகேடுகள் – இவை வெளியில் தெரிந்தவை. இன்னும் வெளிவராதவை, இதெல்லாம் இயல்பானவை, தவிர்க்கமுடியாதவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவை, அமுக்கப்பட்டவை ஏராளம்.

இவற்றுள்ளும், ஆட்சியாளர்களுக்கு எதிராக வீசப்படும் குற்றச்சாட்டுகளைத் திசைதிருப்பிவிட காங்கிரசும், அரசியல் ஆதாயம் கருதி பா.ஜ.க., ஜெயா-சு.சாமி அடங்கிய எதிர்த்தரப்பும், அரசியல் கும்பல் தகராறு காரணமாக மாறன் சகோதரர்களும், டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்திக் கொள்வதற்காகப் பத்திரிகைகளும், வானொளி அலைவரிசைகளும், வீழ்ந்துவிட்ட நம்பகத்தன்மையைத் தூக்கி நிறுத்திக் கொள்வதற்காக  சி.பி.ஐ.யும் உச்ச நீதிமன்றமும் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் மட்டும் அக்கறையும் ஆர்வமும் காட்டின. மற்ற விவகாரங்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டன.

இதற்கிடையே ஊழலுக்கு எதிராக மக்களிடம், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரிடையே நிலவிய பொதுக்கருத்தை – மனநிலையைப்  பயன்படுத்திக் கொள்ள அன்னாஹசாரே, கேஜரிவால், கிரண்பேடி, கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் மூலமாக பா.ஜ.க. ஆகியோர் களத்தில் குதித்தனர். குறிப்பான ஊழல், அதிகார முறைகேடு விவகாரங்களை எல்லாம் புறங்கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டு, பொத்தாம் பொதுவான ஊழல் எதிர்ப்பு மற்றும் ஜன லோக்பால்” கோரிக்கையை முன்வைத்து, அறவழி அடையாளப் போராட்டங்களை நடத்தினர். அரசியல் சாணக்கியம் – சகுனித்தனத்தில் பழம் தின்று கொட்டை போட்ட காங்கிரசு கும்பல் இவர்களை எளிதில் முடக்கியது. பிறகு இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகளோடு பின்னிப் பிணைந்த தனியார்மயம் – தாராளமயம் – உலகமயமாக்கம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கையின் இரண்டாம் கட்ட சீர்திருத்தத்தை முன்தள்ளும் குறிக்கோளை எளிதில் சாதித்து விட்டது.

அன்னா ஹசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பலமும் நம்பகத்தன்மையுமே கட்சி சார்பற்ற அல்லது அரசியலற்றவாதம்தான். அதனால்தான் நடுத்தர வர்க்கத்தின் கணிசமான ஒரு பகுதி ஆதரவை அதனால் ஈர்க்க முடிந்தது. ஆனால், அந்த இயக்கம் பிளவுபட்டு அன்னா, ராம்தேவ் தலைமையிலான ஒரு பிரிவு பா.ஜ.க.வுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. கேஜரிவால் தலைமையிலான மற்றொரு பிரிவு தனியொரு ஓட்டுக் கட்சி அரசியல் அமைப்பாக அவதாரமெடுத்தது. இது ஆளும் கும்பலுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது.

கேஜரிவால் தலைமையிலான பிரிவு தனியொரு அரசியல் இயக்கமாக உருவெடுத்துள்ளதால், காங்கிரசு, பா.ஜ.க., உட்பட தற்போதுள்ள கட்சிகள் எல்லாவற்றுக்கும் எதிரான ஊழல் விவகாரங்களை அம்பலப்படுத்தி, ஆதரவைத் திரட்ட முயல்கிறது. அத்திட்டத்தின் ஒரு பகுதியாக சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ரா, மத்திய அமைச்சர்கள் சல்மான் குர்ஷித், வீரபத்திர சிங், தேசியவாத காங்கிரசுத் தலைவர் சரத்பவாரின் நெருங்கிய உறவினரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித்பவார், பா.ஜ.கட்சியின் தலைவர் நிதின் கட்கரி முதலானோரின் ஊழல், மோசடி, அதிகார முறைகேடுகள் சிலவற்றை அம்பலமாக்கியது. இதனால் மீண்டும் ஊழல் செதிகள் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. ஊழல் எதிர்ப்பு மனநிலை மக்களிடையே, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரிடேயே வேகம் பிடித்துள்ளது. இதை ஆதாயமாக்கிக் கொள்ளும் நோக்கத்தோடு ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை ஒரு கருவியாகக் கொண்டு காங்கிரசு மற்றும் பா.ஜ.க. அணிகளுக்கு மாற்றுச் சக்தியாக அரசியல் அணியை நிறுவுவதற்கான திசையில் காகளை நகர்த்துகிறார்கள். இதற்காக, நாடு முழுவதுமுள்ள தன்னார்வக் குழுக்கள், அரசியலற்ற ஆர்வலர்கள், விளிம்புநிலை அடையாள அரசியல் குழுக்கள் போன்ற சக்திகளை ஒருங்கிணைத்து அரசியல் இயக்கமாக வளர்த்தெடுக்க முயல்கிறார்கள்.

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முன்னணியாளர்கள் அனைவரும் மெத்தப்படித்த அறிவுஜீவிகள்தாம். ஆனாலும் ஊழலின் தோற்றுவாய், அடிப்படையைப் பற்றி பேசாமல் அதைத் தடுப்பதற்கான, தகர்ப்பதற்கான வழிமுறைகளைத் தேடாமல் பொத்தாம் பொதுவாக ஊழல் எதிர்ப்பு-ஒழிப்பு முயற்சிகளை மேற்கொள்வதாக நிழல் யுத்தம் நடத்துகிறார்கள். ‘அரசு அதிகாரம் – அதை வைத்து தனிமனிதர் அல்லது ஒரு கும்பல் ஆதாயம் தேடிக்கொள்ளும் வெறிதான் ஊழலின் ஊற்றுக்கண்; அரசு அதிகாரத்துக்கு வெளியில் இருப்பவர்கள் அனைவரும் ஊழலினால் பாதிக்கப்பட்டவர்கள்’ என்று இந்த அறிவுஜீவிகள் அனைவரும் வாதிட, பாமர மக்களும் அப்படியே நம்பி விடுகிறார்கள்.

ஆனால், இக்கருத்தில் பாதி உண்மைதான் உள்ளது. அரசு அதிகாரத்துக்கு வெளியில் இருந்தாலும், செல்வ – மூலதன ஆதிக்கம் பெற்றிருப்பவர்கள் அதிகாரத்தை விலைக்கு வாங்க முடியும்; அதை வைத்துக் கொண்டு தனிமனித அல்லது கும்பல் ஆதாயத்தைக் குவித்து கொள்ள முடியும். இப்படிச் செய்வது ஊழலின் மறுபாதி – இன்னொரு வடிவம். தனிநபர் ஆதாயம் அல்லது ஒரு கும்பலின் ( இதன் அதிநவீன வடிவம்தான் கார்ப்பரேட் கூட்டுப்பங்கு நிறுவனங்கள்) இலாபவெறியை அடிப்படையாகக் கொண்டதுதான் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற புதிய தாராளவாதப் பொருளாதாரக் கொள்கை. இதையும், இதன் விளைவான தனியார் அல்லது கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) கொள்ளை, இலாபவெறியையும் ஊழலையும் தனியே பிரிக்க முடியாது. இதனால்தான் இப்போது ஊழல் 2 இலட்சம் கோடி, 10 இலட்சம் கோடி என்று பிரம்மாண்ட உச்சநிலைக்குப் போகிறது. அரசும், அனைத்து ஓட்டுக்கட்சிகளும், ஆளும் வர்க்கங்களும் அறிவித்துக் கொண்ட இப்புதிய தாராளவாதக் கொள்கைக்கு மாறாக, 2-ஜி விவகாரத்தை மட்டும் முன்தள்ளிக் கொண்டு போனதால் நாட்டு வளங்களைக் கொள்ளையடிப்பதில் எப்படிப் பங்குப் போட்டுக் கொள்வது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் அரசும், அரசியல் கட்சிகளும், ஆளும் வர்க்கங்களும் அவர்களோடு உச்ச நீதிமன்றமும் மீளமுடியாத சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளன.

‘அரசு அதிகாரத்தைப் பரவலாக்கி மக்களிடம் ஒப்படைக்கும் பஞ்சாயத்து ஆட்சிமுறை வேண்டும்; பொருளாதாரத்தின் உந்துசக்தியாக இலாபநோக்கு மட்டும் இருக்கக் கூடாது; பொருளாதார வளர்ச்சியின் இலக்கு கடைசி மனிதனின் தேவையை நிறைவு செயும் சமத்துவமாக இருக்க வேண்டும்’ என்று “ஊழலுக்கு எதிரான  இந்தியா’’வின் அறிவுஜீவிகள் அறிவித்திருக்கிறார்கள். காந்தி – நேரு – காங்கிரசு எதைச் சோல்லிக் கொண்டு இவ்வளவு காலமும் ஊழல் இந்தியாவைப் பெற்றெடுத்து வளர்த்துள்ளார்களோ, மீண்டும் அங்கிருந்து அதேவழியில் தொடங்கச் சொல்கிறார்கள்.  இது, பாமரர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அறிவுஜீவிகளான இவர்களுக்குத் தெரியாதா  – மக்கள் சர்வாதிகாரமும், அதன்கீழ் தொடர்ந்து நீடித்த உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டமும்தான் எல்லா ஊழல்கள், அதிகார முறைகேடுகளுக்கும் முடிவுகட்டும் என்ற உண்மை!

___________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012
__________________________________________________________

வைத்தீஸ்வரன் கோயில் நாடி சோதிடர் மீது மோசடி வழக்கு!

9

மறைந்த பெரியாரியக்கத் தொண்டர் நாத்திகம் ராமசாமி அவர்களின் நினைவாக அவர் எழுதிய கட்டுரையை வெளியிடுகிறோம்.

– வினவு

__________________________

சோதிடம், ஜாதகம், ராசி பலன், பெயர் ராசி, எண் கணிதம், வாஸ்து, கைரேகை, மச்ச பலன், அங்க லட்சணம், யோனி பொருத்தம், நாடி சோதிடம்…. என்று ஒரு நூறு மடத்தனங்களும் ஆரியக் கலாச்சாரத்திலிருந்து வந்த, இந்து மத மூடத்தடனங்களாகும்.

இந்த முட்டாள்தனங்களை ”ஐதீகம்” என்று சொல்லி நீண்ட காலமாகப் பார்ப்பனர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புத் தொழிலாகச் செய்து கொண்டிருந்தார்கள். மூலதனம் தேவையில்லாத இந்த மோசடித் தொழிலுக்கு மூடர்களே வாடிக்கையாளர்களாக இருந்தார்கள்.

ஆனால், அந்த மோசடித் தொழில் இன்றைக்குத் தமிழர்களிடமும் வேகமாகப் பரவி விட்டது. பத்திரிகைகள், புத்தகங்கள், தொலைக்காட்சிகள் என்று மொத்த ஊடகங்களிலும், முற்றிலும் உண்மை போல் பிரச்சாரம் செய்யப்பட்டு, இன்றைய சமூகத்தில், முதன்மை பெற்ற பெரிய தொழிலாக இந்தச் சமூக விரோத மோசடி உச்சாணிக்குப் போயிருக்கிறது.

தினசரி ரூ. 5000-10000 வாடகை கொடுத்து, நட்சத்திர ஓட்டல்களில் தங்கி, சோதிடம் – வாஸ்து என்று சொல்லி விளம்பரம் போட்டு மிகப்பெரிய மோசடியைப் பகிரங்கமாகச் செய்யும் அளவுக்கு இந்தத் ”தொழில்” நடக்கிறது!

விபச்சாரம்; கள்ள நோட்டு, கரன்சி இரட்டிப்பு, லஞ்சம் போன்ற சமூக விரோதக் கேடுகளைத் தேடிப் பிடிக்கும் காவல்துறையால், எல்லாவற்றுக்கும் மேலான இந்த ஏமாற்று – மோசடிக்காரர்களைத் தடுக்க முடியவில்லை! காரணம் அதற்கான சட்டங்கள் நம் நாட்டில் இல்லை என்பதுதான்!

”இந்த ஆட்சி பெரியார் ஆட்சி; நான் பெரியார் குருகுல மாணவன்” என்று கொல்லிக் கொள்பவர்கள் ”மந்திரத்தில்” வந்த மோதிரத்தை மாட்டிக் கொண்டு படு மண்டூகங்களாகத் திரிகிறார்கள்! ”பகுத்தறிவு ஆட்சி” என்று சொல்லிக் கொண்டவர்களே இப்படி அரைஞாண் கயிற்றில் தாயத்து கட்டிக் கொண்டிருப்பர்களாகி விட்டதால், தந்தை பெரியார் சொன்ன ”மானமும் அறிவும்” இல்லாத தமிழர்களே பல்கிப் பெருகி வருகிறார்கள்! இதன் காரணமாகத்தான் பார்ப்பான்களின் ஆதிக்கத் தொழிலான சோதிடம்; வாஸ்து என்கிற பச்சை ஏமாற்று மோசடியும் வானளாவ வளர்ந்து கொண்டிருக்கிறது!

2 ஆண்டு 3 ஆண்டுகளென்று தண்டனை பெற்று, சிறைச்சாலையில் இருக்க வேண்டியவனெல்லாம் ”சோதிடக் கலாநிதி,” ”வாஸ்து பூஷணம்” என்ற பட்டப் பெயர்களோடு, புலிநகம் மைனர் செயின் போட்டு, சந்தனம் – ஜவ்வாது பூசிக் கொண்டு மோசடித் தொழிலைப் பட்டப்பகல் கன்னக்கோல் கொள்ளையாக, ஒரு பயமும் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறார்கள்! ”சுயநலம்” ஒன்றைத் தவிர, மற்ற எதுவும் தங்கள் வேலையல்ல என்று நடந்து வரும் ஆட்சியாளர் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வைத்தீஸ்வரன் கோயில் என்பது இன்றைய நாகை மாவட்டத்திலுள்ள புகழ் பெற்ற ஒரு கோயில் ஊராகும்.

முற்காலத்தில் இது தேவதாசிகள் நிறைந்த ஊராக இருந்தது. நீதிக்கட்சி ஆட்சியில் தேவதாசிகள் முறையை ஒழித்த பொட்டறுப்புச் சட்டம் வந்த பிறகு, இங்கே தேவதாசிகள் இல்லை!

ஆனாலும் கோயில் உள்ள ஊர்களில் மாட வீதிகளைச் சுற்றி நடக்கும் எல்லா வகையான சமூகக் குற்றங்களும் இந்த ஊரிலும் இன்று வரையில் நடந்து கொண்டுதானிருக்கிறது.

இந்த ஊரிலுள்ள ஈஸ்வரன் கோயிலைத் தரிசனம் செய்தால், தீராத வியாதியெல்லாம் தீரும் என்பது பார்ப்பனர்களின் தொழில் பிரச்சாரமாகும். ஆனாலும் இந்த ஊரிலும் ஏராளமான நோயாளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்!

இந்த ஊருக்குப் போனால் எல்லா சுகபோகங்களையும் அனுபவிக்கலாம் என்ற நிலை இருப்பதால், பக்தி வேஷம் போட்டுக் கொண்டு இங்கே ஏராளமானவர்கள் வந்து குவிகிறார்கள்!

வார விடுமுறை நாட்களிலும், மற்ற அரசு விடுமுறைக் காலங்களிலும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசு உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், சினிமாக்காரர்கள் என்று மேல் தட்டிலுள்ள ஏராளமான பேர் இங்கே வந்து தங்குகிறார்கள்!

இந்த பக்தி – பகல் வேஷ – சமூகக் குற்றவாளிகளை சுலபத்தில் ஏமாற்றலாம் என்று உணர்ந்த சிலர், சில காலமாக ”நாடி சோதிடம்” என்று ஒரு மோசடித் தொழிலை இங்கே ஆரம்பித்தார்கள்! ”நாடி சோதிடம்” என்றால் முக்காலப் பலனும் சொல்லும் சோதிடமாம்! அதாவது கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் ஆகிய மூன்று காலப் பலன்களையும் ஓலைச் சுவடியில் அறிந்து சொல்லுவார்களாம்!

இந்த நாட்டிலுள்ள 120 கோடி மக்களின் முக்காலப் பலாபலன்களையும், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே, பிரும்ம தேவன் ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்து விட்டார் என்றும்; இப்போது ஒரு ஆள் தனது பெயர், கைரேகை, அங்க – மச்ச அடையாளங்களை நாடி சோதிடரிடம் சொன்னால், அவர் தம்மிடமுள்ள அந்த ஓலைச் சுவடிகளில் அந்த ஆளுடைய சுவடியை எடுத்து வந்து படிப்பாரம்! அதிலே அந்த ஆளின் முக்காலப் பலன்களும் இருக்குமாம்!

இந்த ஓலைச் சுவடி படிக்கும் நாடி சோதிடனுக்கு ஆயிரக்கணக்கில் கட்டணம் உண்டு! கட்டணத்தை முதலிலேயே கட்டினால்தான், ஓலைச் சுவடியையே எடுத்து வருவார்கள்!

இந்த மாபெரும் மோசடியை நம்பி வெளியூர்களிலிருந்து வரும் பேராசைக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர் பல ஆயிரங்களை இழந்து போகிறார்கள். நாடி சோதிடம் பொய் என்பதை அவர்கள் உணர்ந்த போதும், தவறான காரியத்துக்காக வந்த இடத்தில், தப்பான சோதிடக்காரனிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்த உண்மையை வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, ஊமையாகிப் போய்விடுவது நடைமுறை!

இந்த நிலையில் சீர்காழி, நாடாளன் தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற வாலிபர் வைத்தீஸ்வரன் கோயில் நாடி சோதிடம் பார்க்க விரும்பினார். இவர் பெரியார் இயக்க வாதியோ, மதநம்பிக்கையற்றவரோ அல்ல – சராசரி விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த, ”இந்து” என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் தமிழர்!

வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போன சீர்காழி – கோபாலகிருஷ்ணன், அங்கே மில்லடித் தெருவில் சிவகாமி என்பவரால் நடத்தப்படும் ”அகஸ்தியமகா சிவ நாடி சோதிய நிலையம்” என்ற பிரபலமான நாடி சோதிடக்காரரிடம் போயிருக்கிறார்.

நாடி சோதிடர் முன் கூட்டியே ரூ.2000 வாங்கிக்கொண்டு, கோபாலகிருஷ்ணன் கட்டை விரல்ரேகை, அப்பா பெயர், அங்க மச்ச அடையாளம், சொந்த ஊர் என்று எல்லா விவரங்களையும் கேட்டுக் எழுதிக் கொண்டு, அதன்படி உள்ளே போய் ஒரு ஓலைச்சுவடியை எடுத்து வந்து, ”இது தான் பிரும்ம தேவனால் உமக்கு எழுதி வைக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடி” என்று படித்துக் காட்டியிருக்கிறார்!

அதில், முழுக்கமுழுக்கப் பொய் – புளுகாகக் காலபலன்களைப் படித்திருக்கிறார்!

”கோபாலகிருஷ்ணன் திருமணம் ஆனவர் என்றும்; மனைவி ஸ்ரீதேவி போன்றவள் என்றும், பட்டப்படிப்புப் படித்து, மின்சாரத் துறையில் பொறியாளர் வேலை பார்ப்பவர் என்றும், கார் மற்றும் மோட்டார் வாகனங்கள் உள்ளவர் என்றும், எதிர்காலத்தில் தலைமைப் பொறியாளர் ஆவார் என்றும், அவரது தாயார் இளம் வயதிலேயே இறந்து விட்டார் என்றும் இஷ்டத்துக்கு ஏராளமாகப் புளுகியிருக்கிறார், மோசக்கார நாடி சோதிடர்!

நாடி சோதிடர் சொன்னதில் ஒரு வார்த்தை கூட உண்மையில்லை – எல்லாமே பொய் என்பதை அறிந்த கோபாலகிருஷ்ணன், பதட்டப்படாமல் சோதிடர் சொன்னவைகள் அத்தனையையும் ஒரு காகிதத்தில் எழுதி வாங்கிக் கொண்டதோடு, ஒலி நாடாவிலும் பதிவு செய்து வாங்கிக் கொண்டிருக்கிறார்.

உண்மையில் கோபாலகிருஷ்ணன் பட்டதாரியல்ல ஒரு விவசாயி, திருமணம் ஆகாதவர். அவரிடம் காரோ, வேறு வாகனங்களோ இல்லை; அவரது தாயார் நல்ல திடகாத்திரமாக உயிருடன் இருக்கிறார்!

இந்த நிலையில் தன்னிடம் பச்சைப் பொய்யைச் சொல்லி ரூ.2000 ம் மோசடியாகப் பறித்துக் கொண்ட நாடி சோதிடரின் சுயரூபத்தை அறிய கோபாலகிருஷ்ணன் மேலும் ஒரு ஆதாரத்தைத் தேடினார்.

2003-ஆம் ஆண்டிலேயே, இளம் வயதில் அகால மரணமடைந்த தனது நண்பர் செங்குட்டுவன் என்பவரின் கைரேகையை எடுத்து வந்து, இதற்கும் முக்காலப் பலன் சொல்லும்படி நாடி சோதிடரைக் கேட்டிருக்கிறார்.

நாடி சோதிடரும் வழக்கம் போல் எல்லா விவரங்களையும் கேட்டறிந்து, நண்பரின் ஓலைச்சுவடியை எடுத்து வந்து படித்துக் காட்டியிருக்கிறார்.

ஜாதகர் – செங்குட்டுவன் தீர்க்காயுளாக 75 வயதுக்கு மேல் நீடுவாழ்வார் என்றும், ஏராளமான குழந்தைச் செல்வமும், ஏனைய செல்வ வளமும் கொண்டு நிறை வாழ்வு வாழ்வார் என்றும், பிரும்ம தேவனின் ஓலைச்சுவடி சொல்லுகிறது என்றும் நாடி சோதிடர் சொல்லியிருக்கிறார்!

கோபாலகிருஷ்ணன் அதையே ஒரு காகிதத்தில் எழுதித்தரும்படி வாங்கிக் கொண்டு, ஓலைச்சுவடியையும் சிறிய கேமராவில் படம் பிடித்துக் கொண்டு, நாடி சோதிடரிடம் கூச்சல் போட்டிருக்கிறார்!

”நீர் சொன்ன சோதிடம் எதுவுமே உண்மையாக இல்லை; வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும்; நாடி சோதிடம் – ஓலைச் சுவடி – பிரும்மா எழுதியது என்பது எல்லாமே பொய்…… மோசடி” என்று கூச்சல் போட, சோதிடர் சிவசாமி கோபாலகிருஷ்ணனையே மிரட்டியிருக்கிறார்!

”நான் யார் தெரியுமா? காலம் காலமாக சோதிடம் பார்ப்பவன்; அரசாங்க மேலிடமே எங்கள் உறவுக்காரர்கள்தான்! என்னை எதுவும் செய்ய முடியாது! மரியாதையாக நீர் போகா விட்டால் போலீசைக் கூப்பிட்டு உம்மை ஒப்படைப்பேன்” – என்று பணத்திமிர் ஆணவத்தோடு மிரட்டிப் பேசியிருக்கிறார்! உடனே கோபாலகிருஷ்ணன் போலீஸ் ஸ்டேஷனில் போய் புகார் கூறியிருக்கிறார். அவர்களோ –

”….விவரம் தெரியாத ஆளாக இருக்கிறீரே! அவர்கள் மேலிட செல்வாக்கு உள்ளவர்கள்! பேசாமல் ஊர் போய் சேரும். இல்லா விட்டால் அவர்களிடம் கலாட்டா செய்ததாக உம்மைப் பிடித்து உள்ளே போடச் சொல்லுவார்கள்; நாங்களும் அவர்கள் சொன்னபடியே உம்மைப் பிடிக்க வேண்டியது வரும் – அதற்குள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊருக்குப் போய்விடும்” என்று எச்சரித்திருக்கிறார்கள்!

சோதிடக்காரரால் ஏமாற்றி மோசடி செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணன், தன்னைப் போல் பலரும் ஏமாற்றப்படக் கூடாது – அதைத் தடுக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தில் நேராக வழக்கறிஞரைத் தேடிப் போயிருக்கிறார்.

பெரியார் இயக்கச் சிந்தனையாளர்களான வழக்கறிஞர்கள் வேலு குபேந்திரன், சீர்காழி சோமசுந்தரம் உள்ளிட்ட 5 வழக்கறிஞர்கள் இந்த வழக்கை எடுத்து நடத்த முன் வந்துள்ளார்கள்.

கோபாலகிருஷ்ணன் நாடிசோதிடர் மீது வழக்குப் போட்டிருக்கிறார் என்ற செய்தி, வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மோசடி சோதிடர்களைப் பதட்டமடையச் செய்துள்ளது.

மோசடியில் சம்பாதித்த ஏராளமான பணமும், ஆட்சி மேலிட ஆதரவும், அடியாட்கள் பலமும் இருப்பதால் அவர்கள் கோபாலகிருஷ்ணனையும், வழக்கறிஞர்களையும் நேரடியாகவே மிரட்டியிருக்கிறார்கள்; இது பற்றிய புகார் சீர்காழி காவல்துறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்ட போது, அவர்கள் முழுப்பாதுகாப்புத் தருவதாக உறுதியளித்துள்ளார்கள்.

நாகை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ள இந்த நாடி சோதிடம் மீதான வழக்கில் பெரியார் இயக்க – முற்போக்குச் சிந்தனையுள்ள மொத்தப் பொதுநலத் தொண்டர்களும் கோபாலகிருஷ்ணனுக்கு ஆதரவாகத் திரண்டு, வழக்கைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோபால கிருஷ்ணனால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மனுவில் –

”புராதன காலத்தில் எழுதப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள் என்று பொய் சொல்லி, போலியாக இவர்களால் தயாரிக்கப்பட்ட பனை ஓலையில் எழுதப்பட்ட சுவடிகளைக் காட்டி, எனக்கு நாடி ஜோதிடம் பார்த்துச் சொல்லுவதாக பொய்யையும், புளுகையும் சொல்லி, பரிகாரம் தேடாவிட்டால் பல சங்கடங்கள் வரும் என்று என்னை மிரட்டி பல ஆயிரம் பணத்தைப் பறித்துக் கொண்டார்கள்.”

எனவே உரிய விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாஜிஸ்டிரேட் – நீலாவதி, நாடி சோதிடர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.

நாடி சோதிடர்களின் இந்த ஓலைச் சுவடிக்கு மூலாதாரம், தெலுங்கு நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு, தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் தெலுங்கு மொழி ஓலைச்சுவடி தான் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்!

மற்றபடி இந்தச் சோதிட மோசடிகளை ஒழிக்க இப்போதைய அரசாங்கம் சட்டம் போடும் என்று நம்புவதற்கில்லை! எனவே சீர்காழி கோபால கிருஷ்ணனைப் போல, தமிழ்நாட்டில் பரவலாக 100 இடங்களிலாவது, சமூக விரோத மோசடி சோதிடர்கள் மீது, சில கிரிமினல் வழக்குகளைத் தொடுத்தாக வேண்டும். வாய்ப்புள்ளவர்கள் திரு. கோபாலகிருஷ்ணனைப் போல துணிந்து முன்வந்து, இந்த சமூக சேவையைச் செய்ய வேண்டும். அவர்களுக்குப் பெரியார் இயக்க உண்மைத் தோழர்களும், முற்போக்குச் சிந்தையுள்ள பொதுவுடைமைக் கருத்தாளர்களும் நிச்சயம் துணை நிற்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

சோதிடப் புரட்டை – பொய்யை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து, அதனை அழித்தொழிக்க அரிமா நோக்குடன் ஆர்த்தெழுந்துள்ள சீர்காழி கோபால கிருஷ்ணனை வாழ்த்திப் பாராட்டுகிறோம்; வெல்லுக, அவரது சுயமரியாதை ஆவேசம்!

________________________________________________________

– நாத்திகம் இராமசாமி, நாத்திகம் – 30.03.2007 இதழில்

__________________________________________________

தலித்கள் மீது தேவர் சாதி போலீசின் கொலைவெறியாட்டம் !

48

கூமாபட்டி-வத்திராயிருப்பு பகுதிகளில் தலித்கள் மீது தேவர் சாதி போலீசின் கொலைவெறியாட்டம் !

 ஆனந்தன்
வண்டியில் இருப்பவர் ஆனந்தன்

பார்ப்பன பாசிச ஜெயலலிதாவின் ஆட்சி வந்து விட்டால் போலீசுக்குக் கொண்டாட்டம் தான். ஜெயலலிதாவின் ஆட்சி போலீசின் ஆட்சி. அதுபோலவே ‘அவாளுடைய’ ஆட்சியும் கூட. பார்ப்பன ஊடகங்கள் தொடங்கி ‘அவாளின்’ அனைத்து தரப்புக்கும் ஒரு நமுட்டு மகிழ்ச்சிதான். அத்தோடு இப்போது முக்குலத்தோர் சாதி வெறியாட்டமும் சேர்ந்து கொண்டு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் அணைப் பகுதியில் நடைபெற்ற மணல் கொள்ளையை எதிர்த்து தன்னந்தனியாகப் போராடிய தலித் விவசாயி கூமாபட்டி ராமசாமியாபுரம் ராஜேந்திரன் கடந்த அக்டோபர் மாதம் 11ந்தேதி அதற்காகத் தீக்குளித்து இறந்தார். அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அனுமதி கோரிய அவரது குடும்பத்தார் மற்றும் அந்த ஊர் மக்களை அனுமதிக்காமல் காட்டு மிராண்டித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தி விரட்டிவிட்டு உடலை போலீசே சிதையில் வைத்து தீ முட்டியது. இறுதி அஞ்சலிக்குச் சென்றிருந்த மதுரை மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் மீதும் தடிகொண்டு தாக்கிய டி.எஸ்.பி.சக்திவேல், இன்ஸ்பெக்டர் சக்ரவர்த்தி, சப்இன்ஸ்பெக்டர் ஐயப்பன் ஆகியோர் மீது உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் அளிக்கப்பட்ட புகாரின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

அதற்குள் மேலும் ஒரு காட்டுமிராண்டித்தனத்தை அரங்கேற்றியிருக்கிறது வத்திராயிருப்பு-கூமாபட்டி போலீசு. கூமாபட்டியை அடுத்துள்ள கான்சாபுரத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் ஆனந்தன். வயது 24. தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கும் தொழில். கடந்த 13/05/12 அன்று கான்சாபுரத்துக்கு தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் வந்த போது நடைபெற்ற தகராறில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார் ஆனந்தன். அவர் மீது காவல்துறை குண்டாஸ் வழக்குப் போட்டது. ஆனால் அந்த வழக்கு விசாரணைக் குழுவின் முன்பாக நிருபிக்க முடியாமல் தள்ளுபடியாகி விட்டது. இருந்தாலும் துடிப்பாகச் செயல்படும் ஆனந்தனின் கொட்டத்தை அடக்க போலீசு துடித்தது. ஆனந்தனைக் கண்ட இடத்தில் கைது செய்யத் தீர்மானித்து கொலை வெறியுடன் அலைந்தது கூமாபட்டி முக்குலத்து சாதிவெறி போலீசு படை.

கடந்த 14/11/2012 அன்று குடும்பத்தினருடன் அவரது வீட்டிலிருந்த ஆனந்தனை இருபது பேர் கொண்ட போலீசு படை வந்து திடீரென கைது செய்து கூமாபட்டி காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்றது. மறுநாள் 15-ம் தேதி இரவு ஆனந்தனின் பெற்றோரை அழைத்து “உன் மகன் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில இருக்கான் போய் பார்த்துக்க” என்று கூமாபட்டி போலீசு ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் மதுரை மனித உரிமை பாதுகாப்பு மையச் செயலாளருக்கு கூமாபட்டி வழக்கறிஞர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டது. ராஜாஜி மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது ஆனந்தன் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் குற்றுயிரும் கொலையுயிருமாக தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனந்தன் நம்மிடம் சொன்னது:

“நான் அம்பேத்கர், இம்மானுவேல் சேகரன் படம் போட்ட பனியன் போட்டிருந்தேன். அந்த பனியனை கழற்றச் சொன்னார் எஸ்.ஐ.சந்திரசேகர். பனியனைக் கிழித்து கீழே போட்டார், அதன்மீது எல்லா போலீசும் சிறுநீர் கழித்தார்கள். அதை எடுத்து திரும்பவும் என்னைப் போடச் சொன்னார்கள். முடியாது என்றதற்காக கடுமையாக அடித்தார்கள். இரவு முழுவதும் கூமாபட்டி காவல் நிலையத்துக்குள் வைத்து என்னை நிர்வாணமாக்கி அடித்தார்கள். மயக்கம் தெளியத் தெளிய லத்தியால் அடித்தார்கள். பூட்ஸ் காலால் வயிற்றில் மிதித்து துவைத்தார்கள். மறுநாள் 15/11/12 மாலை 4.45 மணிவரை அடி ஓயவில்லை. எனது இரண்டு சிறுநீரகங்களும் சிதைந்து சிறுநீர் ரத்தமாக வெளியேறுகிறது. அடிவயிற்றில் உதைத்ததில் ஆசனவாய் வழியாகவும் ரத்தம் வெளியேறுகிறது.”

பின்னர் ஆனந்தன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு 3 முறை டயாலிசிஸ் செய்யப்பட்டிருந்தது. உள்ளுறுப்புகளில் ரத்தக்கசிவு நிற்கவில்லை. பாதுகாப்பில் இருந்த போலீசு ஆனந்தனைச் சந்தித்துப் பேச யாரையும் அனுமதிக்கவில்லை. ஆனந்தனின் உடம்பு முழுவதும் காயம் உள்ளது. லத்தி, இரும்புத்தடி கொண்டு தாக்கிய காயங்கள் உள்ளன. ஆனால் எலும்பு முறிவு இல்லை. கொடுங்காயம் விளைவிக்காமல் கொஞ்ச நாள் அவகாசத்தில் சாவை நோக்கித் தள்ளும் கொலைக்கலையை தமிழக போலீசிடம் உலகமே கற்றுக் கொள்ள வேண்டும். அடிபட்டவரை புகைப்படம் எடுக்க காவல் துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகமும் அனுமதிக்கவில்லை.

கூமாபட்டி எஸ்.ஐ.சந்திரசேகரன், கருப்பசாமி பாண்டியன், ஏட்டுக்கள் முரளி, பெரியசாமி ஆகியோர் தான் சாதி வெறி கொண்டு கீழ்த்தரமாகத் திட்டி மிருகத்தனமாக அடித்தவர்கள் என்று பதிவு செய்தார் ஆனந்தன். 17ந் தேதி மாலை 5.30 மணியளவில் ஸ்ரீவிலிபுத்துர்ர், மாஜிஸ்டிரேட்டிடம் கொண்டு போன போது ஆனந்தன் தனக்கு நேர்ந்த  கொடுமைகளை விளக்கியிருக்கிறார். மாஜிஸ்டிரேட் ஒரு பெண். அவர்தான் மதுரை மருத்துவமனைக்கு கொண்டு போகச் சொல்லியிருக்கிறார்.

ஆனந்தனின் அப்பா ரெங்கநாதன் விவசாயி. அம்மா மலர்விழி பி.காம். டி.கோ ஆப் பட்டதாரி. சகோதரர் ராஜேஷ், கூமாபட்டி போலீசின் கொலை வெறிக்குப் பயந்து சென்னைக்குப் போய்விட்டார்.

ஆனந்தன் மீது பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டு வைத்துக்கொண்டு அவரது வீட்டுக்கு கண்ட நேரங்களில் வந்து அவரது பெற்றோரை மிரட்டி வந்துள்ளது போலீசு. போலீசின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பயந்து தலைமறைவாயிருந்த ஆனந்தனை ஒப்படைக்கக் கோரி போலீசு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது.

ஆனந்தனின் அம்மா மலர்விழியைச் சந்தித்து கேட்ட போது கூமாபட்டி போலீசு அவர்களுக்கு கொடுத்து வந்த இம்சையை வேதனையுடன் விவரித்தார்.

“என்னுடைய மகன் ஆனந்தன் தென்னை ஏறும் தொழில் செய்து வந்தான். பொதுப் பிரச்சனைகளில் தலையிடுவான். போலீசு செய்யும் சட்ட விரோத செயல்களைத் தட்டிக் கேட்பான். போலீசுக்கு பயப்படமாட்டான். எதிர்த்து நிற்பான். அவன் மேல நிறைய பொய் கேசுகளை போட்டு எங்களை வந்து அடிக்கடி தொல்லை பண்ணினாங்க. என்மேல கூட போலீசு ஒரு பொய் கேச போட்டுச்சு. ஒரு பொம்பளையாளுகிட்ட நான் செல்போன் கேட்டதாகவும், அந்தம்மா தராமாட்டேன்னு சொன்ன உடனே அந்தம்மாவை கழுத்தை நெறித்து கொல்ல முயற்சி பண்ணதாகவும் பொய்கேசு போட்டு உள்ள அடச்சாங்க. நான் ஜாமீன்ல வெளியே வந்தேன். இப்பவும் என்மேல கேசு இருக்குது. போலீசு தொல்லை கொடுக்கிறதப்பத்தி டி.எஸ்.பி. கிட்ட புகார் கொடுத்ததுக்கு கூமாபட்டி எஸ்.ஐ. என்னை சாதியச் சொல்லி கேவலமாக திட்டி “உனக்கு ரெண்டு பிள்ளைகள்ல ஒன்று இல்லன்னு நினைச்சுக்கோ. என்றைக்காயிருந்தாலும் அவனுக்கு என்கையால தான் சாவு. தியாகம் செய்யிறதுக்குன்னு பிள்ளை பெத்து விட்டிருக்கியா? தேவடியாப்பிள்ளையை பெத்து விட்டிருக்க” என்று கேவலமாகப் பேசினார்.”

” 2010-ல் ஊர்த்திருவிழாவின் போது கண்ணையா எஸ்.ஐ. வண்டிய (பைக்) அன்பழகன் என்கிற பையன் தீ வச்சுட்டான். அவனப் புடிச்சி ஊர்க்காரங்க ரு.10 ஆயிரம் தெண்டம் வாங்கி எஸ்.ஐ க்கு கொடுத்துட்டாங்க. ஆனா அந்த கேச என் மகன் ஆனந்தன் மேல போட்டுட்டாங்க. தீபாவளியப்ப ஆனந்தனை எப்படியாவது பிடித்துவிடனுமுன்னு கங்கணம் கட்டி அலஞ்சது போலீசு. அதனால் அவனை நான் வெளியூருக்கு அனுப்பிவைச் சுட்டேன். தீபாவளி முடிஞ்சு மறுநாள் (14.11.12) அவன் வந்த உடனே பிடிச்சிட்டுப் போயிட்டாங்க.” என்று சொன்னார் மலர்விழி.

ஆனந்தனின் பெற்றோர்

ஆனந்தன் மீது என்ன புகார். என்ன வழக்கு என்கிற எந்த விவரமும் தெரிவிக்காமல் இழுத்துக்கொண்டு போய்விட்டார்கள். மாஜிஸ்டிரேட்டிடம் கொண்டு போவதற்கு முன் ஆனந்தனின் மாமியாரிடம் மிரட்டி 2 வெற்றுத் தாள்களில் கையொப்பம் வாங்கியிருக்கிறது கூமாபட்டி கிரிமினல் போலீசு. அதில் ஆனந்தன் குடித்துவிட்டு அடிக்கடி வந்து தொல்லை கொடுப்பதாக புகார் எழுதிக் கொண்டது.

எதற்காக இந்த தாக்குதல். ஏன் இந்தக் கொடுமை? என்ன தவறு செய்தார் ஆனந்தன்?

மலர்விழியிடம் கேட்ட போது சொன்னார் : போலீசிடம் இருக்கும் சாதி வெறி தான் இதற்கு காரணம். கேவலம் பள்ளன் பறையனெல்லாம் போலீச எதிர்த்துப் பேசுவதா? அப்புறம் பாண்டியமாரு (தேவர் சாதி) மரியாதை என்னாவது? என்கிற வெறிதான்.

இதுதான் 2011 செப்டம்பர் 11-ல் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவுநாளன்று நடந்தது. அங்கேயும் போலீசில் பெரும்பான்மை முக்குலத்தைச் சேர்ந்தவர்கள் தான். வத்திராயிருப்பு கூமாபட்டி பகுதியிலும் அதே நிலைமை தான் என்று சொல்கிறார்கள்.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தன்மானமுள்ள ஒருவன் போலீசு கையில் சிக்கினால் அந்த ஏரியா முழுவதும் உள்ள சாதி வெறி கொண்ட போலீசு மிருகங்கள் அங்கே அழைக்கப்படும். பெரிய அளவில் திட்டமிடப்பட்டால் உயர் அதிகாரிகள் கூட வருவார்கள். பரமக்குடி செந்தில்வேலன் எஸ்.பி. வந்ததைப் போல. தருமபுரி யிலிருந்து ஆஸ்ராகர்க் மதுரை தேவர் குருபூஜைக்கு அழைக்கப்பட்டதைப் போல. (அந்த நேரத்தில்தான் தருமபுரியில் தலித்களின் மீது வன்னியர்களின் கொலைவெறியாட்டம் நடைபெற்றது).

பிளவக்கல் மணல் கொள்ளைக்கு எதிராக உயிர்நீத்த தியாகி ராஜேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தக்கூட அனுமதி மறுத்த போலீசு, தேவர் குருபூஜை சம்பவத்தில் செத்தவர்களின் உடலை ஊர்வலமாக எடுத்துக்கொண்டு கோரிப்பாளையம் தேவர் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தவும் பழிக்குப் பழியாக கொன்றொழிப்போம் என்று பகிரங்கமாக கொக்கரிக்கவும் அனுமதித்தது.

80களில் விருதுநகர் மாவட்டம் சேத்துர்ர், சிவகிரி, வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்கள் ராயப்பன், கணபதி போன்ற நக்சல்பாரி தோழர்களால் சிவந்திருந்தது. அது மீண்டும் சிவந்து விடாமலிருக்க போலீசு இந்த வெறியாட்டம் போடுகிறது என்று கருதுவதற்கும் இடமிருக்கிறது. அத்துடன் போலீசுத் துறையில் புரையோடிப் போயிருக்கும் ஆதிக்க சாதி வெறி-குறிப்பாக முக்குலத்து சாதி வெறியும் ஒரு காரணம். இது ஜெயலலிதாவின் ஆட்சியில் ஒரு புதிய பரிணாமம்.
________________________________________________________________________
தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை
________________________________________________________________

மண்ணிற் சிறந்த மலர்கள்!

14

பு.மா.இ.மு. வின் போராட்டப் பெண்கள்!
அனுபவமும் – அரசியலும்!!

மச்சீர் கல்விக்கான போராட்டத்தின் வழி ஜெயாவின் ஆணவத்திற்கு பு.மா.இ.மு.(புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி) வைத்த ஆப்பு, தொடர்ந்து தனியார் பள்ளிகளின் கல்விக் கொள்ளையை எதிர்த்த போராட்டங்கள், கல்லூரி மாணவர் போராட்டங்கள், சென்னை கல்வி இயக்குநரகத்தில் நடைபெற்ற மறியல் என அடுத்தடுத்து நடைபெற்ற போராட்டங்களால், சென்னை மாநகர போலீசின் ரத்தம் கொதிநிலைக்கு சென்றிருந்தது.

இத்தகைய சூழலில், மதுரவாயல் ஏரிக்கரைப் பகுதியில் நடந்த ஒரு கொலையில் தவறாக கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரை விடுவிக்குமாறு நியாயம் கேட்டு போலீசு ஸ்டேசனுக்குப் போன தோழர்கள் மற்றும் பகுதி மக்கள் மீது, இரண்டு லோடு அதிரடிப்படையை இறக்கி தாக்குதல் நடத்தியது. பு.மா.இ.மு. வின் பறையிசைக் கலைஞன் தோழர் கிருஷ்ணாவைக் குறிவைத்துத் தாக்கி, அவரையும் தோழர் விவேக்கையும் கை, கால் எலும்புகளை முறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கிடத்திய போலீசு, எதிர்ப் படுக்கையிலேயே படுத்துக் கொண்டு பழைய எக்ஸ்ரே பிலிம்களை பொறுக்கி வந்து தாங்களும் தாக்கப்பட்டு விட்டதாக பிலிம் காட்டியது. அடிபட்ட பிற 64 தோழர்கள் போலீசை ‘பணி’ செய்ய விடாமல் தடுத்ததற்காக சிறை வைக்கப்பட்டனர்.

தாக்குதலுக்குள்ளாகி சிறை சென்ற பு.மா.இ.மு வின் மாணவிகள் மற்றும் இளம் பெண்களைச் சந்தித்தபோது, அவர்கள் போலீசு கொட்டடியில் பெற்ற அனுபவங்களை இயல்பாக விவரித்தனர். தெருவில் தாக்கப்பட்டு வேனில் ஏற்றப்பட்ட நிமிடம் தொடங்கி, சிறைக்கு அனுப்பப்படும் வரையிலும் அவர்கள் போலீசுடன் பெற்ற அனுபவம், அத்தோழர்களின் வலிமைக்கு சான்று கூறுவது மட்டுமின்றி, போலீசுடைய பலவீனத்தின் எல்லாப் பரிமாணங்களையும் நமக்கு காட்டுகிறது. பாருங்கள்.

000

rsyf-women-cardes-1! ஊன்னா… சிவப்பு கொடிய பிடிச்சிட்டு வந்துர்றீங்க…! ஒழுங்கா அவனவன் பேசாம போவல!  ஊரக் கெடுக்கறதே நீங்கதாண்டி. பேசாம வூட்ல அடங்கிக் கிடக்காம எதுக்குடி ரோட்டுக்கு வர்றீங்க.. என்று சொல்லிச் சொல்லி அடிச்சாங்க” என்பது அஜிதா எனும் பெண் தோழரின் அனுபவம். தன்னைப் போல அடிமையாக இருப்பதே இயல்பு என்று எண்ணும் போலீசுக்கு பு.மா.இ.மு வின் பெண்கள் மேல் கோபம் வந்தது இயல்புதான். ஆனால் ‘பேசாம போகிறவர்கள்’ மீது போலீசு கொண்டிருப்பது மதிப்பா அவமதிப்பா என்பதை அத்தகையவர்கள்தான் யோசித்துப் பார்க்கவேண்டும்.

“ஏ.சி. சீனிவாசன், எஸ்.ஐ. கோபிநாத் ரெண்டுபேரும் எங்கள வேனில் தள்ளியபடியே கை நசுங்கும்படி கதைவைச் சாத்தி, ‘தேவடியா முண்டைங்களா சாவுங்கடி’ என்று திட்டியபடியே இருந்தார்கள்” என்பது இன்னொரு மாணவியின் அனுபவம். போராடினாலே போலீசுக்குப் பிடிக்காது; அதுவும் பெண்கள் போராடினால் ஆணாதிக்கத் திமிரும், வக்கிரமும் சேர்ந்து கொள்கிறது. கைது செய்யத்தான் சட்டமிருக்கிறது; போராடும் பெண்களைக் காலித்தனமாகப் பேச போலீசுக்கு யார் உரிமை கொடுத்தது? சட்டமெல்லாம் இளிச்சவாய் குடிமக்களுக்குத்தான். போலீசுக்கு அது கெட்டவார்த்தை என்பதுதான் ஏ.சி. முதல் ஏட்டு வரை நமக்கு கற்றுத்தரும் பாடம்.

அடிப்பது மட்டுமல்ல, வசவுகளால் பெண்களைக் கூச வைப்பதும் போலீசின் தாக்குதலில் ஒன்று. “ஏண்டி போராட வர்றீங்க? ரோட்டுக்கு வந்து போராடுற நீங்கள்லாம் நல்ல குடும்பத்த சேர்ந்தவங்களா?” இது இன்னொரு போலீசின் வசனம் என்கிறார் தோழர் வினிதா. விலைவாசி உயர்வும், கடுமையான பொருளாதார நெருக்கடியும் வீட்டிலிருக்கும் பெண்களை வேலைக்காக ரோட்டில் தள்ளிக் கொண்டிருக்கும் சூழலில், உரிமைகளுக்காகப் பெண் ரோட்டுக்கு வந்தால் மட்டும் ‘குடும்பமே’ சந்தேகத்துக்குரியதாம்! இதை ரோடு மேயும் போலீசு சொல்வதுதான் நகைச்சுவை.

“நான் அமைப்புக்குப் புதுசு.. போலீசு துணியப் புடிச்சு இழுத்து, கேவலமா திட்டி அடிச்சப்பவும்,  நாம என்ன தப்பு செஞ்சோம், நியாயத்துக்காகத்தானே போராடுறோம்னுதான் தோணிச்சி. போலீச திருப்பியும் அடிச்சேன்…” இது 17 வயதான பிரியங்கா எனும் பெண் தோழரின் நியாயம். இது மட்டுமல்ல, தோழர்களோட சேர்ந்து ஜெயில்ல இருக்கணும்னு  தன் வயதை 22 என்று  கூட்டிச் சொல்லியிருக்கிறார்.  கம்யூனிசப் பண்பு எந்த அளவுக்கு தன்னலத்தை மறக்க வைக்கிறது என்பது பிரியங்காவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி. இந்த உயரிய மனிதப் பண்பை நான்கு சுவருக்குள் தானுண்டு தன் குடும்பமுண்டு என்று ஒழுக்கமாக வாழும் குடும்ப அமைப்பிலிருந்து கற்றுக்கொள்ள வழியுண்டா?

அடிவாங்கிய தோழர்களுக்கு தாங்கள் ஏன் தாக்கப்பட்டோம் என்பது தெளிவாகத் தெரியும். ஆனால் அவர்களை அடித்த போலீசின் நிலையைப் பாருங்கள். “ஒரு பொம்பள போலீசு எங்கள விடாம அடிச்சிட்டு,  கடைசில நாங்க ஆஸ்பத்திரியில இருக்குறப்ப, “ஆமா, நீங்க எதுக்கு போராடுனீங்க?” ன்னு கேட்டாங்க. எனக்கு கோபத்துக்கு பதில் சிரிப்புதான் வந்துச்சு” என்றார் ஒரு பெண். எதுக்கு அடிக்கிறோம் என்று தெரிந்து கொள்ளாமலேயே, மக்களை அடித்துத் துவைக்கும் இவர்களின் பெயர் சட்டம் ஒழுங்கின் காவலர்களாம்.  இப்பேர்ப்பட்ட ‘சட்டம் – ஒழுங்கை’ சீர்குலைக்காமல், பேர் வைத்து தாலாட்டவா முடியும்?

“என்னங்கடி! நீங்கள்லாம் ஸ்டூடண்டா! ரோட்ல அடிச்சாதான பார்ப்பாங்க! உள்ளாற ஸ்டேசன்ல ட்ரஸ்ஸெல்லாம் அவுத்துட்டு உன் ‘மாமன்’ விசாரிப்பான் உள்ளாற போங்கடி!” என்று ஒரு பெண் போலீசு, தங்களை ஸ்டேசனுக்குள் இழுத்துத் தள்ளியதாகச் சொல்கிறார் தோழர் கயல்விழி.  “ஏய் என்னடா? இவ்ளோ நேரம் அரஸ்ட் பண்றீங்க; தொடுற எடத்துல தொட்டா தானா ஏறுறாளுவ!” என்று மார்பைத் தொடுவது, இடுப்பைத் தொடுவது, ஷூ காலால் மிதிப்பது ஆண் போலீசின் அணுகுமுறை. போலீசுக்கேது ஆண்பால், பெண்பால்? அது ஒரு அரசு எந்திரம் என்று கோட்பாடாய் சொல்வது, நடைமுறையிலும்  நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

தடிக் கம்பினால் தோழர்களைத் தாக்கிய போலீசை வார்த்தைகளால் எதிர்கொண்ட பெண் தோழர்களின் துணிச்சல் கற்றுக்கொள்ளத் தக்கது. “நாலஞ்சு பெண் போலீசு, தொடர்ந்து திட்டியபடி  அடித்துக் கொண்டே இருந்தாங்க. அடிக்கும் போலீசின் சட்டையில் உள்ள பெயரைப் பார்த்து, “ஏய்! உன் பேரு மாரீஸ்வரிதான! உன்ன இன்னும் ரெண்டு நாள்ல நாங்க என்ன செய்யுறோம் பாரு! சட்டப்படியே உன்ன சந்திக்கு இழுக்கிறோம்” என்று பெண் தோழர்கள் எச்சரித்திருக்கின்றனர்.  உடனே எல்லா போலீசும் தத்தம் பேட்ஜை கழட்டி பாக்கெட்டில் போட்டவர்கள்தான்.  எல்லோரும் வெளியில் போகும்வரை யாரும் பாட்ஜைகுத்தவில்லை” பேட்ஜை கழட்டினால் என்ன, மாணவிகள் மனப்பாடமாக விலங்கியல் பெயர் போல ஒப்பிக்கிறார்கள். மாரீஸ்வரி, கல்பனா, தேவி, சுசீலா.. என்று.

“மரியாதையா பேசு! நாங்க மாணவிகள். வாடி போடின்னு பேசுன, வாங்கிக் கட்டிக்குவ. இதுக்குப் பயந்தெல்லாம் நாங்க போராட்டத்த விட மாட்டோம். நாங்க என்ன ஜெயலலிதா போல கொள்ள அடிச்சோமா?” பதிலுக்குப் பதில் அதிகார வர்க்கத்தின் மென்னியைப் பிடித்துக் கேள்வி கேட்டுள்ளார் தோழர் துர்கா. நியாயத்தின் உறுதிபட்டு லத்திக்கம்பு வெலவெலத்திருக்கிறது.

“உங்க மேல எப்.ஐ.ஆர் போட்டாச்சு, இனி படிப்பே போச்சு. ஃபாரின்லாம் நீங்க போக முடியாது!” என்று ஏட்டு சுசீலா உளற, தோழர் அஜிதாவோ, “நாங்க படிச்சு ஃபாரின் போறது இருக்கட்டும். மொதல்ல நாங்க யூரின் போகணும். அதுக்கு விடுங்க!” என்று கேலி செய்திருக்கிறார்.

இன்னொரு போலீசு “ஏம்மா! படிச்ச, நல்ல குடும்பத்து பொண்ணுங்களா தெரியுறீங்க! போராடி இப்படி அடி வாங்குறீங்களே…” என புத்தி சார்ஜ் செய்ய, “ஏன், இது லத்தி சார்ஜ் பண்றப்ப உங்களுக்கு தெரியாதா? உங்களுக்கும் சேர்த்து தான் போராடுறோம். லட்சம் லட்சமா கொடுத்து உங்க புள்ளகள தனியார் கல்லூரில படிக்க வைக்க முடியுமா? ஐ.ஜி யோட புள்ளை படிக்குற படிப்ப ஏட்டு புள்ளை படிக்குமா?” என்று பெண் தோழர்கள் பதில் சொல்ல, உடனே ஏட்டு சுசீலா, “ஏய்! நான் விஜயசாந்தி படம் பார்த்து ப்ளஸ் டூ முடிச்சு காலேஜே போகாம போலீசு வேலைக்கு  வந்தேன்! உங்கள மாதிரி படிப்ப கெடுத்துக்கல! இங்க வந்தா… உங்களோட கழுத்தறுவுது, தலவலி” என்று புலம்பியுள்ளார். விஜயசாந்தி படத்துக்கு விசிலடித்த ஏட்டக்காவுக்கு பு.மா.இ.மு. தலைவலி ஆனதில் வியப்பில்லை.

என்னதான் தோழர்களைப் போட்டு அடித்தாலும், மேலதிகாரியிடம் முறையிட  முடியாத தனது பிரச்சினையை பெண் தோழர்களிடமே  முறையிட்டார் பெண் போலீசு ஜோதி லட்சுமி.  ”நின்னு, நின்னு காலு வீங்கி, உட்காந்து மோசன் கூட போக முடியல”. வேனில் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும்போது, வேலைப் பிரச்சினை, லீவுப் பிரச்சினை என பெண் போலீசார்  வழிநெடுக  தங்கள் சொந்தப் பிரச்சினைகளையே புலம்பிக் கொண்டு வந்திருக்கின்றனர்.

இவர்களிம் அடி வாங்கிய பெண் தோழர்களோ ஒரு இடத்தில் கூட தனது காயத்தைச் சொல்லிப் புலம்பவில்லை. கழுத்துப் பகுதியில் சதை பிய்ந்து போகும்வரை தாக்கப்பட்ட தோழர் வாணிஸ்ரீ “எங்கள அடிச்சபோது கூட எங்களுக்கு பெரிசா வலிக்கல. தோழர் மணி, கிருஷ்ணா, மருது தோழர்களை அடிச்சு ரத்தமா ஓடுறத பாத்து எங்களால கோபத்த அடக்கவே முடியல. போலீசை எதிர்த்து திட்டி கையால தள்ள ஆரம்பிச்சோம்” என்றார். மிகவும் இயல்பாக அவர்கள் வெளிப்படுத்திய அந்த உன்னதப் பண்புக்கு எதனை ஈடு சொல்ல முடியும்?

கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, கம்யூனிஸ்டுகளின் நியாயத்தை உணர்ந்தவர்களாலும் கூட போராட்டத் தெம்போடு எழ முடிகிறது என்பதற்கு ஒரு சாட்சி குமரேசன் என்ற தோழரின் தாய். வாணிஸ்ரீ யின் ஆடையைக்  கிழித்த போலீசின் மீது அவர் பாய்ந்து அறைந்துள்ளார். போலீசு அந்தத் தாயைக் கன்னத்தில் அறைந்து சாய்க்க, வலியைப் பொருட்படுத்தாத அந்தத் தாய், “ஏய்! உங்ககிட்ட துப்பாக்கி, கம்பு இருக்குறதுனாலதான இந்த ஆட்டம் போடுறீங்க. அந்தப் புள்ளைங்களும் இத எடுத்து வந்தா, எதிரே நிப்பீங்களாடா?” என ஆவேசத்தோடு எதிர்த்துப் பேசியுள்ளார்.  புரட்சியின் வழிமுறையைத் தம் அனுபவம் மூலமாகவே மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தானே, இத்தனை போராட்டங்கள்!

கைது செய்து மண்டபத்தில் அடைத்த பிறகு “ஏய்! நாம எவ்வளவோ ட்ரெயினிங் எடுத்து வந்துருக்கோம். ஆள பாத்தா எலும்பும், தோலுமா இருக்காளுவ. ஒருத்திய கூட நம்மளால தூக்கி ஏத்த முடியல!” என்று இரண்டு ஆண் போலீசார் புலம்பியுள்ளனர்.  கூலிப்படையால் கொள்கைப் படையை தூக்க முடியாதென்பது உண்மைதானே!

இன்னோரு போலீசு “ஏய்! ஆம்பளங்களை கூட ஈசியா வண்டில ஏத்திட்டோம். இந்த பொம்பளங்கள ஏத்தவே முடியல” என்று புலம்பியிருக்கிறது. போராடும் பெண்ணுக்கு தான் சமூகத்தில் ‘வெயிட்’ அதிகம் என்று போலீசுக்குப் புரிந்திருக்கும்  இந்த உண்மை வீட்டில் முடங்கிக் கிடப்பவர்களுக்கு விளங்கினால் நல்லது.

போலீசின் அடியை விடவும், அறிவைப் பார்த்து தான் அஞ்ச வேண்டியிருக்கிறது, இளைஞர் திவாகரை கோயம்பேடு ஸ்டேசனில் வைத்து அடித்த ஒரு போலீசுக்காரன் “டேய்! நான் பாக்சிங்டா, பாக்சிங்டா!” என்று ஆக்சன் காட்டியிருக்கிறான். பாக்சிங் தெரிந்தால் போய் ஒலிம்பிக்கில் விளையாடி இந்தியாவுக்கு பதக்கம் வாங்குவதை விட்டுவிட்டு, கைதானவரிடம் ஒண்டிக்கு ஒண்டி வர்றியா” எனும் அறிவை என்னவென்பது!

போராட்டத்தின்போது போலீஸ்காரர்கள் தனது நான்கு வயது மகனை கையிலிருந்து பறித்துக் கொண்டு ஓட, அந்த சிறுவனோ போலீசு பிடிக்குள்ளிருந்து “போலீசு அராஜகம் ஒழிக!” என்று முழக்கமிட்டதை ஈன்ற பொழுதினும் பெரிதுவந்து சொல்கிறார் தோழர் அபிராமி. தாக்குதல் நடந்த போலீசு நிலையத்தின் வாசலில்,  போலீசு பிடுங்கிப் போட்ட அமைப்புப் பதாகைகளையும், கொடிகளையும், இறைந்து கிடக்கும் தோழர்களது செருப்புகளையும் எடுத்துவர துணிச்சலுடனும், பொறுப்புடனும் சென்றிருக்கின்றனர் தோழர் அபிராமியும் உமாவும். ஸ்டேசனிலிருந்து போலீசு… “ இதெல்லாம் கேசுல இருக்கு. எடுக்க கூடாது” என்று நக்கலடிக்க, அபிராமியோ…” இதெல்லாம், எங்க தோழர்கள் உழச்சி சம்பாதிச்சு வாங்கினது, உன்னைப் போல ஓ.சி.ல உடம்பு வளர்க்குல,” என்று பதில் கொடுத்திருக்கிறார்.

“ஏய்! அதிகம் பேசாத, வாங்குனது பத்தாதா?” என்றவாறு அந்த போலீசுக்காரன் செருப்பைத் தள்ளிவிட “ச்சீ! எங்க தோழர்கள இத்தன அடி, அடிச்சீங்களே, ஒருத்தராவது ஓடுனோமா! பாத்தீல்ல.  சீ தள்ளு! எங்க தோழர்கள் செருப்ப தொடக்கூட உனக்கு யோக்கியதை இல்ல!” என்று சீறியிருக்கிறார்கள் அந்தத் தோழர்கள்.

அவர்களின் கைபட்டு செருப்புத் தோல் சிலிர்த்தது. போலீசின் தோலோ உணர்ச்சியற்று மரத்துக் கிடந்தது.

__________________________________________________________

– புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012
__________________________________________________________

கூவம் நதிக்கரையோரம்…..!

10

சென்னையில் இன்று எந்த ஆற்றைக் கடக்கும் போதும், நமது கை அனிச்சைச் செயலாக மூக்கைப் பொத்தி விடுகின்றது, அல்லது சுவாசிப்பை சில விநாடிகளுக்கு நிறுத்த முனைகிறோம். சில விநாடிகள் அங்கு நிற்க வேண்டுமானால் கூட பல முறை “உச்” கொட்டி நொந்து கொள்கிறோம். ஆனால் சென்னையை தமது உழைப்பால் உயர்த்திக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களும், சென்னையின் பூர்வ குடிகளும் அந்த ஆற்றங்கரைகளில் துர்நாற்றத்தின் மத்தியில் தான் பல ஆண்டுகளாக வாழ்கிறார்கள்.

ஃபில்டர் காபி, மைலாப்பூர், எல்ஐசி, இசிஆர் சாலை, ஷாப்பிங் மால்கள், ஹிந்து பேப்பர், அதை படிக்கும் நடுத்தர வர்க்கம் சென்னையின் அடையாளங்களாக உங்கள் மனதில் நிழலாடினால். உங்கள் கண்களையும் மனதையும் திறந்து வைத்துக்கொண்டு மேலே படியுங்கள்.

சென்னை நகர வளர்ச்சியின் உண்மையான சாட்சியாக இருக்கும் மக்களை துர்நாற்றம் வீசும் ஆறுகளின் ஓரங்களில் நீங்கள் பார்க்கலாம். துர்நாற்றத்தைத் தாங்கிக்கொண்டு சில நொடிகள் நிற்க முடிந்தால் அவர்கள் உலகத்தினுள் நாம் நுழைந்து விடலாம்.

கூவம்

சென்னையின் ஐடி வளர்ச்சியை சுட்டிக் காட்டும் டைடல் பார்க், பின்னால்  அதன் கழிவுகள் கலந்தபடி இருக்கும் அடையாறு கரையோரமாக வாழும் மக்களைச் சந்திக்க சென்றோம். சைதாப்பேட்டை பாலத்தின் மேல் இருந்து பார்த்தபோது, பல சிறுவர்கள் ஆற்றின் ஓரம் சேற்றுப் பகுதியில் விளையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஆற்று நீரை ஒட்டி இருக்கும் குடிசைகள் கரையில் இருக்கின்றனவா அல்லது ஆற்றில் இருக்கின்றனவா என்று பிரித்தறிய சிரமமாக இருந்தது.

பிறந்த சில நாட்களே ஆன குழந்தையை சர்வசாதாரணமாக பெரியவர் ஒருவர் தூக்கிக் கொண்டு சென்றார். கான்கிரீட் தரை போடப்பட்ட குறுகலான ‘தெரு’க்களில் நடந்து குடியிருப்புப் பகுதியின் விளிம்பில் இருக்கும் குடிசைகளுக்கு அருகில் சென்றோம். டைல்ஸ் போட்டு சுத்தமாக இருந்த தெருவோர அம்மன் கோவிலில் இருந்த ஒலிபெருக்கியில் பாடல் அலறிக் கொண்டிருந்தது.

ஒரு ஓலைக் குடிசையின் வெளியே ஒரு பெண்மணி துணி துவைத்துக் கொண்டிருந்தார். குடிசைக்குள் நான்கைந்து குழந்தைகள் திருத்தமாக உடையணிந்து, பாட்டுப் பாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். குடிசையின் மறுபக்க சுவரைத் தாண்டினால் ஆற்று நீரைத் தொட்டு விடலாம்.

‘என்னம்மா குடிசைக்குள்ள தண்ணி வந்திடுச்சு?’ என்று கேட்டபடியே பேச்சுக் கொடுத்தோம். அவர் எல்லாவற்றையும் புட்டுபுட்டு வைத்தார். பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு குழந்தை ஒற்றையடிப் பாதையில் குடு குடுவென ஓடிப் போய் ஆற்று (சாக்கடை) நீருக்கருகில் விளையாடப் போகிறது. துர்நாற்றத்துடன் ஈக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

“ஆமா, குடிசைக்குள்ள தண்ணி புகுந்துடிச்சு. என்ன பண்றது. பை ஸ்டார் ஓட்டல்லையா தங்க முடியும். வேற இடத்துக்கு போனா வாடக கொடுக்க காசு இல்லாம தான் இங்க இருக்குறோம்”

“ராத்திரியானா கொசு புடுங்குது. கொழந்தைங்க ராத்திரிலே எழுந்து அழ ஆரம்பிக்குதுங்க. எல்லாத்தையும் மனசுல அடக்கினு வாழறோம். வேற என்ன பண்ண முடியும்?”

பேசியபடியே லேசாக அழுது, முகத்தைத் திருப்பி கண்ணீரைத் தோள் பட்டையின் ஓரத்தில் துடைத்து சரிப்படுத்திக் கொள்கிறார்.

குழந்தைகளிடம் பேச்சு கொடுத்தோம். அவர்கள் விளையாடுவதில் தான் மும்முரமாக இருந்தார்கள். நாங்கள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஒரு வயதான அம்மா அருகில் வந்து விசாரித்தார்.

அந்த அம்மா 1958-ல் இங்கே வந்து விட்டாராம்.

“அப்பவெல்லாம் நாங்க இந்த ஆத்துல தான் குளிப்போம். துணி தொவைப்போம். காசு போட்டா பாக்கலாம், தண்ணி அவ்வளவு சுத்தமா இருக்கும். மாடி வீடுகள் வரவர மொத்த சாக்கடையும் இதுல கலந்துடறாங்க” என்றார்.

“என்னமா! இங்கயே இருக்கீங்களே! நாத்தம் அடிக்கலையா?”

“நாத்தமா? அடிக்குது. என்ன பண்ணறது?. இங்கேயே வாழ்ந்துட்டோம் வேலைக்கு, பஸ்ஸுக்கு எல்லாம் வசதியா இருக்கு, வேற எங்கெயாவது போனா மட்டும் நம்ம சம்பாத்தியத்துக்கு மாளிகையிலயா தங்கப் போறாம்.”

“என்ன வேல பாக்குறீங்க?”

“இப்பயெல்லாம் வேலைக்கு எங்க தம்பி போக முடியுது. முன்னயெல்லாம் வீட்டு வேலைக்கு போவேன், இப்ப முடியல. இப்ப வடை, போண்டா போட்டு விக்கிறேன். எடுத்து ஏரியா ஃபுல்லா சுத்தி விக்க முடியாது. இங்கேயே வீட்டு திண்ணையில தான் வியாபாரம்.”

நாம் பேசுவதை பார்த்து பக்கத்திலிருப்பவர்கள் இயல்பாக பேச முன் வந்தார்கள். ஈக்களின், பூச்சிகளின் மொய்ப்பும் இடைவிடாது சேர்ந்து கொண்டன.

“ஏதாவது பெரிய செலவு வந்துட்டா கடனெல்லாம் வாங்குவீங்க இல்ல எவ்வளவு வட்டிக்கு கடன் தராங்க?” என்று கேட்டோம்.

“கடனா? எங்களுக்கு யாருப்பா தருவாங்க?”

“சரி! பெரிய செலவு வந்தா?”

“வரக் கூடாது, வராத மாறி நடந்துக்கணும். வந்தா அவங்க மாதிரி ஆயிடும்” என்று ஒரு கூட்டத்தைக் கை காட்டுகிறார். அவர் கை காட்டிய திசையில் பெரிய சண்டை. என்னவென்று விசாரித்தோம். ஏதோ நுண்கடன் நிறுவனத்தின் பிரதிநிதி, பல குழப்பும் கண்டிஷன்களைச் சொல்லி பணம் வசூலிக்க வந்திருக்க,  மக்கள் அவனுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

வெளி ஆட்கள் வந்தால் மக்கள் பார்க்கும் பார்வைக்கு சில அர்த்தங்கள் இருக்கின்றன, ஒன்று ஏதாவது சங்கம், க்ளப்பில் இருந்து வந்த புரவலர்களாக  பார்க்கிறார்கள்.  இலவசமாக குடம், படுக்கை விரிப்புகள் கிடைக்கலாம். அல்லது அரசு அதிகாரிகள் வந்து வேறு இடத்துக்கு மாறிப் போகும் படி வற்புறுத்த வரலாம்.

ஆற்றோரம் வாழும் மக்களின் வாழ்க்கை பாவத்திற்குரியதோ, தலைவிதியோ அல்ல. அது நமது சமூக அமைப்பின் ஒரு கொடிய முகம்.

குடிசைகளை ஒழிக்கவும், ஏழ்மையைக் குறைக்கவும் அரசு பல திட்டங்கள் வைத்திருக்கின்றது. வறுமைக்கோட்டின் வரம்பைக் குறைத்து, ”இந்தியா வல்லரசு ஆயிடிச்சு, ஏழ்மை ஒழிஞ்சிடுச்சி” என்று ஜோக்கர் போல் கத்துவது, குடிசைகளைத் தீ வைத்துக் கொளுத்தி விடுவது, மக்களை சென்னைக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளுக்கு, பள்ளி, மருத்துவமனை போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத இடங்களுக்கு துரத்தியடிப்பது என்றுதான் இந்தத் திட்டங்கள் உருவெடுக்கின்றன.

‘குறிப்பிட்ட தொகையை மாதத் தவணையில் கட்டினால் இடத்தை பட்டா போட்டு கொடுத்து விடுகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இவர்களும் ஒரு சில வருடங்கள் பணத்தை கட்டியிருக்கிறார்கள். ஆனால் நிலைமை மாறி விட்டது. நிலத்தின் விலையேற ஏற, இவர்களின் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. கட்டிய பணமும் போச்சு.

‘இவர்கள் கூவத்தை ஆக்கிரமித்து விட்டார்கள். அதனால் ஆற்று நீர் சாலைக்கு வந்து விடுகிறது’ என்பது தான் அரசின் வாதம். அதனால் இவர்களைக் காலி செய்யச் சொல்லி அதிகாரிகள் டார்ச்சர் கொடுக்கிறார்கள். ஆனால்,  உண்மை என்பது வேறு விதமாக இருக்கிறது.

கூவத்தின் ஓரம் இவர்கள் குடிசை இருப்பது உண்மை தான், ஆனால் இவர்கள் குடிசை போட்டதெல்லாம் ஆற்றின் கரை மீது தான், ஆற்றில் இறங்கி குடிசை போடும் தொழில் நுட்பமோ, அதற்கான கான்கிரீட் வீடுகளைக் கட்டும் வசதியோ இவர்களிடம் இல்லை. மாறாக ஆற்றை உண்மையில் ஆக்கிரமித்திருப்பது யார்?

அமைந்தகரை பூந்தமல்லி சாலையில் இருக்கும் ‘அம்பா மால்’போன்றவை ஆற்றை ஆக்கிரமித்து, பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது, அவர்கள் ஆக்கிரமித்ததால் சுருங்கிப் போன ஆற்றின் அகலத்தை ஈடுசெய்ய மறுகரையில் இருக்கும் குடிசைகளைக் காலி செய்யச் சொல்கிறது, அரசு.

ஏழைகளுக்கு நிரந்தர வீடுகள், குடிசை ஒழிப்பு என்ற பெயரில் இந்த தகிடுதத்தம் நடக்கிறது.  சைதாப்பேட்டையில் நிலத்தின் விலை சரமாரியாக உயர்ந்து விட்டது. இவர்களை அடித்துத் துரத்தி விட்டு அங்கே ஒரு மால் கட்டலாம், நல்ல வருமானம் கிடைக்கும்; அல்லது அபார்ட்மென்ட்டுகள் கட்டி பல கோடிகள் சம்பாதிக்கலாம். மக்கள் வாழ்ந்தால் அல்லது செத்தால் யாருக்கு என்ன நஷ்டம்?

சைதாப்பேட்டையில் தங்கியிருக்கும் மக்களை பள்ளிக்கரணைக்கு மாறச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அரசு தரும் இடம், மிகச் சிறியது. கான்கிரீட் குடிசைகளை மட்டும் கட்டி விட்டிருக்கும் குடிசை மாற்று வாரியம் சுகாதாரம், கல்வி, மருத்துவ வசதி எதற்கும் பொறுப்பேற்பதில்லை. அவர்கள் தினசரி வேலை செய்வதற்கு  சைதப்பேட்டை போன்ற இடங்களுக்கு வர வேண்டும்.

ஆற்றிலிருந்து கொஞ்சம் தூரத்தில் இருக்கும் வீடுகள் அவர்களின் வருமானத்திற்கு ஏற்ப கொஞ்சம் வசதியாகவே இருக்கின்றன. கலைஞர் தொலைக்காட்சி, கேபிள் டிவி போன்றன சில வீடுகளில் நல்ல மின்சார இணைப்புடன் இருக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லை, ஆனால் இலவச தொலைக்காட்சி பெட்டி, மிக்ஸி, மின்விசிறி என்று சில உள்ளன.

மழை வந்துவிட்டால் வாழ்க்கை நரகமாகி விடுகிறது. வீட்டிற்குள் நீர் புகுந்து சகதியாகி விடும். எல்லோரும் எடுக்க முடிந்த பொருட்களை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் அரசுப் பள்ளிக்கு சென்று விடுகிறார்கள்.

மழை முடிந்து திரும்பி வந்தால் வீடு முழுவதும் சகதியாகி விட்டிருக்கும். சில நாட்கள் அதை முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும். மறுபடியும் வீட்டை நிர்மாணம் செய்ய வேண்டும். குடிசைகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கும். சுவர் இடிந்து விழுந்திருக்கும். அனைத்தையும் சரி செய்துகொள்ள வேண்டும். சிறிது கடன் வாங்குவார்கள், அந்த ஆண்டு முழுவதும் சம்பாதித்து அதை அடைப்பார்கள். அடுத்த ஆண்டும் இது தொடரும். அரசு உதவி செய்யலாம்… சரி அதை விடுங்கள்..

மலர் எனும் பெண்மணியுடன் பேசிக் கொண்டிருந்தோம். அவர் ஆற்றோர வாழ்க்கையைப் பற்றி சொல்லியபடி இருந்தார். ‘’ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும், பிள்ளைகள் இல்லையா?” என்று கேட்டோம்.

சிறிது நேரம் நம்மை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர், திடீரென அழத் துவங்கினார். அழகைக்கு மத்தியில் “கஷ்டப்பட்டு வளர்த்த புள்ளைய கூட்டிகிணு போய் கொன்னுடாங்களே” என்றார்.

நாம் சற்றே அதிர்ச்சியடைந்து விசாரிக்க தொடங்கினோம். அவருடைய மகனைக் காதல் பிரச்சனையில்  கொலை செய்து விட்டார்கள். ஆனால் போலிசை விலைக்கி வாங்கி விட்டதால், அதை பைக் ஆக்ஸிடண்ட் என்று வழக்கை முடித்து விட்டார்கள். அந்த அம்மா நீதி கேட்டு இத்தனை ஆண்டுகள் போராடிய படியே இருக்கிறார்.

ஏழை மக்களை எப்படிக் கிள்ளுக்கீரையாக அதிகார அமைப்புகள் நடத்துகின்றன என்பதற்கு இவர் ஒரு வாழும் உதாரணம். தன் மகன் இறந்த அந்த துக்க நேரத்தில் போலீசார் தன்னை ஒரு நாய் போல் நடத்தியதாகச் சொல்கிறார். ‘’பொணத்தை எடுத்துக் கொண்டு செல்” என்பதை தவிர இவர் கேட்ட ஒரு கேள்விக்குக் கூட போலிசு பதில் சொல்லவில்லை. மேலும் இவரைக் கெட்ட வார்த்தைகளால் திட்டி வெளியே துரத்தியிருக்கிறார்கள். இவர் விடாமல் இன்னும் தன் பிள்ளையின் மரணத்திற்கு நீதியை தேடிய படியே போராடிக்கொண்டு இருக்கிறார்.

“போகாத எடம் இல்ல, பெரிய ஆபிஸருங்க, கவுன்சிலரு, எம் எல் ஏன்னு போய்கிட்டே தான் இருக்கேன். அலைச்சல் தான் மிச்சம். கடைசியா இருக்கிற ஒரே நம்பிக்கை அம்மன் தான். வெள்ளிக் கிழமையானா அம்மன் கோயில்ல வெளக்கேத்தி, ரெண்டு எலுமிச்சை பழம் வாங்கி சூலத்துல குத்திட்டு வருவேன். எம் பையன கொன்னவங்கள ஆத்தா பாத்துப்பா” என்று உடைந்து போய் அழுகிறார்.

சைதாப்பேட்டையில் இருந்து வரும் போது என் நண்பனை சந்தித்தேன். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். நான் பார்த்த அனுபவங்களை அவனுக்கு சொல்லியபடி இருந்தேன். ‘’வாழ்க்கை எப்படி இருக்கிறது, பார்த்தாயா?” என்றேன்,

அவன் சற்றே சத்தமாகவும், கோபமாகவும் “இவங்களை எல்லாம் ஏன் போய் பார்க்க வேண்டும். என்னிடம் கேட்டால் நானே சொல்லியிருப்பேனே. எங்கோ டவுன் சௌத்திலிருந்து இங்க வந்து விடுகிறார்கள். முதலில் ஒரு குடிசை போட்டுக் கொள்கிறார்கள். அதன் பிறகு பக்கா வீடு கட்டிக்கொண்டு, காலி செய்ய மாட்டேன் என்று அடாவடி செய்கிறாங்க, அவங்களுக்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கின்றன. இதுதான் பிரச்சனை” என்றான்.

கிராமத்தில் விவசாயம் நசிந்து போய்விட்ட நிலையில், பிழைப்பைத் தேடி சென்னை வருகிறார்கள் பலர். கிராமத்தில் சாதி ஒடுக்குமுறையின் உக்கிரம் தாங்காமல் சென்னைக்கு வருகிறார்கள் சிலர். ஊரில்  சிறு தொழில் செய்ய, விவசாயம் செய்ய  கடன் வாங்கிவிட்டு அடைக்க முடியாமல் இரவோடு இரவாகக் குடும்பத்துடன் சென்னைக்கு ஓடி வந்தவர்கள் அதிகம். ஏதோ ஒரு விதத்தில் நகரம் வாழ வைக்கும் என்று வருபவர்கள் தான் இவர்கள்.

என் அலுவலக மேலாளரான பெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்த போது  உழைக்கும் மக்கள் குடிசைப் பகுதி பற்றிய பேச்சும் வந்தது.

”அவர்கள் எல்லாம் கொஞ்சம் பணக்காரர்களாகி விட்டால் நன்றாக இருக்கும்” என என் ஆசையைச் சொல்ல, நான் வாக்கியத்தைக் கூட முடிக்காத நிலையில் வேகமாகச் சொன்னார், “அவங்கெல்லாம் போயிட்டா நமக்கு வீட்டு வேலை செய்ய ஆள் கிடைக்க கஷ்டமாகிடும்” என்றார். வீட்டு வேலைக்கு ஆள் வேன்டும் என்ற காரணத்திற்காகவே மக்கள் ஏழையாக இருக்க வேண்டும் என்று மேலாளர்களே நினைக்கிறார்கள் என்றால், இந்த நாட்டையே ஆளும் தரகு முதலாளிகளுக்கு இந்த எண்ணம் எவ்வளவு வீரியமாக இருக்கும் என நினைத்தபோது அதிர்ச்சியாக இருந்தது.

குறைந்த கூலிக்கு வேலை செய்ய, நிரந்தர இடமோ, வேலையோ, சம்பளமோ இல்லாத உதிரி பாட்டாளிகளை அவர்கள் அரசின் உதவியுடன் உருவாக்குகிறார்கள். ஒரு வேளை இவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக கிராமத்தில் வாழ்கிறேன் என்று சொன்னாலும், அவர்களை உதிரிப் பாட்டாளிகளாக்கும் திட்டம் முதலாளிகளால் செம்மையாகத் தீட்டப்படும். இதையெல்லாம் என் நண்பன் புரிந்து கொண்டானா என்று தெரியவில்லை. அவனுமே முதலாளிகளால் கொஞ்சம் வசதிகள் அனுமதிக்கப்பட்ட பாட்டாளிதான் என்பதும் அவனுக்கு புரிந்திருக்கவில்லை.

நதிக்கரையில்தான் மனித குல நாகரீகங்கள் தோன்றி வளர்ந்தன. குழந்தைப் பருவத்தில் இருந்த மனித குலத்தை வளர்த்து ஆளாக்கிய நதிக்கரைகளில் கூவமும் ஒன்றாய் இருந்திருக்கும். இன்றும் சென்னை நகரத்தின் கடுமுழைப்பு வேலைகளுக்கு உழைப்பாளிகளை சப்ளை செய்யும் சேரிகளில் கூவம் நதிக்கரை சேரிகளும் அடக்கம். மகிழ்ச்சியான சென்னை வாழ்க்கைக்கு பாடுபடும் இந்த மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் அடையாளம் கூட இல்லை. ஆனாலும் அவர்கள்  வாழ்கிறார்கள். என்றாவது ஒரு நாள் நகரத்திற்கு வெளியே தூக்கியெறியப்படுவது நிச்சயமென்றாலும் அவர்கள் வாழ்கிறார்கள்.

_________________________________________________

– வினவு செய்தியாளர்கள்
____________________________________________