Tuesday, November 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 815

ப. சிதம்பரத்தின் “காவி” உறவு !!

ப.சிதம்பரம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தோழமை என்பது பன்னாட்டு நிறுவனங்களின் நலனை பாதுகாக்கவென்றே தோன்றுகிறது.

ப.சிதம்பரத்தின் முந்தைய கால நடவடிக்கைகைள கவனித்து வருபவர்களுக்கு நாடாளுமன்ற மேலவையில் ஏப்ரல் 15ம் நாளைய விவாதத்தின் போது பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் அருண் ஜேட்லி உள்து றை அமைச்சர் ப.சிதம்பரத்தின் நடவடிக்கைகளை ஆதரித்து பேசியதை பார்த்தால், வியப்பாக எதுவும் தோன்றாது. தண்டேவாடாவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய கொரில்லா தாக்குதல் குறித்த விவாதத்தின் போது சிதம்பரம் மற்றும் பா.ஜ.க. பெரும்புள்ளிகளுக்குமிடையே உள்ள ஆர்வம் என்பது லண்டனின் வேதாந்தா வள நிறுவனத்தின் பணப்பலன் பெருக்கும் நடவடிக்கைகளின் மீது உள்ளார்ந்த ஈடுபாட்டினைச் சார்ந்தே உள்ளது.

ஜனநாயக முற்போக்கு அரசின் முதல் நிதி அமைச்சராவதற்கு முன் தினம் வரை சிதம்பரம் மேற்படி வேதாந்தா பன்னாட்டு நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குனர்களில் ஒருவர் என்பதுடன் அத்தகைய கூட்டு முறையிலான நிறுவனங்களுக்கு வழக்கறிஞருமாவார். தேசிய முற்போக்கு கூட்டணி அரசின் தலைமையில் இயங்கும் போது பா.ஜ.க.தலைமை பால்கோ, ஸ்டெரிலைட் பொதுத்துறை நிறுவனங்களின் ரூ.551/50 கோடி அளவிலான பங்குகளை வேதாந்தா கப்பல் நிறுவனத்திற்கு விற்க முனைந்ததையும், அதே சமயம் பாரத ஸ்டேட் வங்கி முதலீட்டு சந்தை 49 சதவீதத்திற்கான 842.52 கோடி தொகைகளை மட்டும் கையாள அனுமதிக்கப்பட்டிருந்தது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். உலகத்தின் முதல் பொதுத்துறை பங்கு விற்பனைக்காக அமைச்சராக்கப்பட்ட பா.ஜ.க.வின் முக்கியஸ்தர் அருண்ஷோரிக்கும் இதில் பங்கு உண்டு.

ஆனால் சிதம்பரத்திற்கும், சங் பரிவார் என்றழைக்கப்படும் மதவாதிகளுக்கும் இடையே உள்ள கொள்கை ரீதியான ஒன்றுபடுதலின் வேரை பார்க்க வேண்டுமெனில் மிகுந்த ஆழத்தில் நோக்க வேண்டும். அமெரிக்காவின் மாஸ்சூசெட்ஸ்-ல் உள்ள ஹார்வர்டு பிஸினஸ் பள்ளியின் இரண்டாவது ஹரிஷ் சி.மகிந்த்ரா நினைவு சொற்பொழிவில் முன்னாளைய நிதி அமைச்சர் சில குறிப்பிடத்தகுந்த, கூர்ந்து கவனித்தால் எச்சரிக்கை கொள்ளத்தக்க கருத்துக்களை வெளியிட்டார்.

நேரு காலத்தை வெளிப்படையாக தாக்கிய பின் இவ்வாறு கூறுகிறார் “இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 3 பத்தாண்டுகளாக பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசு சார் பொருளாதார மாதிரி பின்பற்றப்படுகிறது” அரசே பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் நிலையில் உலக பொருளாதார சூழலில் இருந்து விலகியே இருந்தது. அந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி சதவீதம் சராசரியாக 3.5 சதவீதமாகத்தான் இருந்தது. நான் அந்த வருடங்களை “இழப்பு” பத்தாண்டுகள் என்றே சொல்வேன் என்றார்.

சங்பரிவார் கொள்கை நோக்கமாக பொதுத்துறை கூடாது என்பதை பிரதிபலிக்கும் விதமாகவே இருந்தது. சிதம்பரம் உலக வங்கி மற்றும் சர்வதேச கண்காணிப்பு நிதியகத்தின் நடவடிக்கைகளை உணர்ச்சியுடன் ஆதரி்க்கும் நபர் என்பதால் 1956ம் ஆண்டின் இரண்டாவது தொழிற் கொள்கை தீர்மானத்தையும், இரண்டாவது ஐந்தாண்டு (1956-61) திட்டத்தையும் கிள்ளியெறியும் மறைமுக திட்டம் வைத்திருந்தார்.

ஆனால் சிதம்பரம் மட்டுமல்ல, பிரதமர் மன்மோகன்சிங் கூட 1938ம் ஆண்டு நேரு தலைமையேற்ற திட்டக்குழுவின் தீர்மானத்திற்கு பதிலாக, 1944ம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான காங்கிரஸ் நிறைவேற்றிய பொருளாதார தீர்மானத்தையே முன்வைக்கிறார். 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜே.ஆர்.டி.டாடாவின் பிறந்தநாள் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் துவக்கவுரையில் கூட பிரதமர் ஜேஆர்டி முக்கிய பங்களிப்பு உள்ள பாம்பே திட்டத்தின் மீதான தனது கவர்ச்சியை வெளிப்படுத்தினார்.

காங்கிரஸின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், சிதம்பரத்தின் “மாவோயிஸ்ட் பிரச்சனையை பழங்குடி மக்களைப் பற்றி கருத்தில் கொள்ளாது வெறும் சட்டம், ஒழுங்குசார் பிரச்சினையாக அணுகியவிதம்” தவறென ஒரு செய்தி ஊடகம் மூலம் கடுமையாக சாடிய போது, அருண்ஜேட்லி சினத்துடன் மறுமொழியாக “நக்சலிசத்தை ஒழித்துக்கட்ட நமக்கு வலுவான தலைமை, உறுதியான நெஞ்சம் மற்றும் நிலைநிறுத்தும் அதிகாரம் தேவை என்பதோடு நாங்கள் மாண்புமிகு உள்துறை அமைச்சரின் நடவடிக்கையை முற்றாக ஆதரிக்கிறோம்” என்கிறார்.

அவர் தன் வாதத்தை இவ்வாறு முன்வைக்கிறார், “தனது உள்துறை அமைச்சரை கீழேதள்ளி வீழ்த்த முனையும் அரசை நாம் விரும்பவில்லை, அரசு பிளவுபடுவதையும் நாம் விரும்பவில்லை, மாவோயிஸத்திற்கு எதிரான போர் தளர்த்தப்படவேண்டுமென இந்த மாண்புமிகு அவையின் பாதியை நிரப்பிக் கொண்டிருக்கும் உறுப்பினர்களின் கருத்துக்களையும் நாம் விரும்பவில்லை”

இருப்பினும் சிதம்பரம் சங் பரிவாரால் நகர்த்தப்படும் சிறிய காய் அல்ல. அவருடைய உள்ளார்ந்த ஈடுபாடு என்பது வேதாந்தா மற்றும் அது போன்ற பெரிய சுரங்க தொழிலின் மீதுதான். அவர் முக்கியத்துவமாக தெரிவிப்பது “இந்தியாவின் கனிம வளங்கள் என்பது நிலக்கரி – உலகின் நான்காவது இருப்பு உள்ள தேசம், இரும்புதாது, மாங்கனீசு, மைக்கா, பாக்சைட், டைட்டானியம் தாது, குரோமைட், வைரம், இயற்கை வாயு, எண்ணைவளம் மற்றும் அரிய கற்கள். பொதுக் கருத்து நமக்கு சொல்வதெல்லாம் இவற்றையெல்லாம் திறனுடன் விரைவாகவும், தோண்டி எடுக்க வேண்டுமேன்பதே”

இப்பொழுது காங்கிரஸ் அல்லது அதன் தலைவர் சோனியா காந்தி சிதம்பரம் பற்றி திக் விஜய் சிங் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் உள்துறை அமைச்சரைப் பற்றி கணிப்பாய்வு மேற்கொள்ள வேண்டும். சிதம்பரத்தின் முன் வரலாறுகள் சோனியாவிற்கு தெரியும். தற்செயலாக ஆர்.பொத்தாக் என்பவர் எழுதிய “வேதாந்தாவின் கோடிகள்” புலனாய்வு பதிவில் ஸ்டெ ரிலைட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1000 சதமாக உயர்த்தி மதிப்பிட்டபோது 2003ம் ஆண்டில் வேதாந்தா நிறுவனத்திடமிருந்து சிதம்பரம் 20000 டாலர்கள் பெற்றார் என குறிப்பிடுகிறார்.

2006ல் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மிகுந்த சூடான விவாதப் பொருளாக இருந்தது. சமாஜ் வாதி, தெலுங்குதேசம், மற்றும் அ.தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் வேதாந்தா நிறுவனத்தால் சந்தையில் விடப்பட்ட நிதியின் நம்பகத்தன்மை குறித்தும், பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கும், அந்த நிறுவனம் நிதியளித்திருப்பது பற்றி காரசார விவாதங்கள் நடைபெற்ற போதிலும் சிதம்பரம் தனது நிலையிலிருந்து எந்தவித பாதிப்பின்றிருந்தார்.

கனிம வளங்கள் தோண்டப்பட்டு அங்கு பூகோள சூழல் தவிர்க்க முடியாத நிலை அடையும் முன், இன்றோ, நாளையோ சோனியா இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். ஆனால் உள்துறை அமைச்சர் புலம் பெயர்ந்து அவதியுறப்போகும் பழங்குடியினரைப்பற்றி சிறிதும் கவலையுறாமல், அவர்கள் நிலத்திலிருந்து கனிம வளங்கள் எடுத்து மிகப்பெரிய உலோக சாம்ராஜ்யம் உருவாக்கத் துடிக்கும் பெரும் நிறுவனங்களைப் பற்றித்தான் அதிக கவலை கொண்டுள்ளார் என்றே தெரிகிறது.

__________________________________________________________

நன்றி: திரு சங்கர்ராய், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 01/05/2010

தமிழில் சித்திரகுப்தன்.

__________________________________________________________

தி.மு.கவில் குஷ்புவா, குஷ்புவுக்கான தி.மு.கவா?

77


vote-012எதோ ஒரு பெந்தகோஸ்தே சுவரொட்டி! உற்றுப் பார்த்தால் சுவிஷேகராக நம்ம குமரி முத்து. அதாங்க ஒன்றறைப் பார்வையுடன் WinAmp தீம் மீயுசிக் போல சிரிப்பாரே, மறந்துவிட்டீர்களா? தி.மு.கவின் பிரச்சார பேச்சாளராகவும் குமுரி முத்துவை அறிந்திருக்கிறேன். தகவல் பிழை என்றால் லக்கிலுக் திருத்துவார். அவர் வேறு எதையும் தி.மு.கவில் திருத்த முடியாது என்பது வேறு விசயம்.

சினிமாவில் பிரபலமாகி சுவிஷேகர்களாக ஏவி.எம்.ராஜன், தீபா, நக்மா இன்னும் நமக்கு தெரியாமல் பலர் இருக்கலாம். சினிமா உலகிலிருந்து கர்த்தரின் ராஜ்ஜியத்திற்கு அவர்கள் இடம்பெயர்வது ஒரு சுவாரசியமான ஆய்வுக்குரியது. அதை விடுத்தால் சினிமா பிரபலங்கள் சந்தை ஓய்ந்ததும் இப்போது தொலைக்காட்சிக்கு ஒதுங்குகிறார்கள். முன்பு அரசியலுக்கும் ஒதுங்கினார்கள்.

சென்ற தேர்தலில் சிம்ரன், கோவை சரளா, முரளி, செந்தில் என்று அ.தி.மு.க களை கட்டியபோது தியேட்டரில் சினிமா, பத்திரிகையில் சினிமா, தொலைக்காட்சியில் சினிமா, இப்போது அரசியல் கூட்டத்திலுமா என்று சிலர் அதிர்ந்திருக்கலாம். பலரும் இரசித்திருப்பார்கள் – அதிலும் சிம்ரன் ஸ்டைலாக தமிலில் இரட்டை லீஃப்புக்கு ஓட்டு கேட்டது நாகப்பட்டினம் சுனாமி காட்சிகளை விட தமிழ் மக்களிடம் பசுமையாய் பதிந்திருக்கும்!

இருந்தாலும் தி.மு.கவில் இருக்கும் சினிமா பிரபலங்களை, நெப்போலியன், சந்திரசேகர் போன்றவர்களை அ.தி.மு.க போலவே மதிப்பிட முடியாது. அவர்களிடம் கொஞ்சமாவது திராவிட பூண்டு வாசனை அடிக்கும். குமரி முத்துவும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். தீப்பொறி அ.தி.மு.கவுக்கு கட்சி மாறியது ஒரு ரகமென்றாலும் குமரி முத்து இப்படி ‘பகுத்தறிவு’ இயக்கத்திலிருந்து சம்மர்சால்ட் அடித்து அய்யோ பாவம் பெந்தகோஸ்தே அழுகைக்கு எப்படி போனார்?

யோசித்துப் பார்க்கையில் குஷ்பு இருக்குமிடத்தில் குமரிமுத்துவுக்கு என்ன வேலையிருந்திருக்கும்? சாமானியர் குமரி முத்துவின் கட்சியாய் இருந்த தி.மு.க இப்போது சீமான்கள்-சீமாட்டிகளின் கட்சியாக நிலைபெற்றுவிட்டதுதான் காரணமோ?
___________________________________________________________

குஷ்பு தி.மு.கவில் சேர்வது உறுதியானதும் அறிவாலயம் அல்லோகலப்பட்டது. தி.மு.கவின் உயர்மட்டக்குழு சந்திக்கும் முக்கியமான இடம் காமராக்களின் மின்னும் புனித ஒளி பட்டுத்தெறிப்பதற்கு ஏற்ப பயபக்தியுடன் தயார் செய்யப்பட்டது. எல்லா அமைச்சர்களும், பகுதித் தளபதிகளும் வெள்ளை வெளேர் உடைகளுடன் கடமையுணர்வோடு ஆஜர்.

நெற்றிப் பொட்டு, மனைவிமார்களின் சுமங்கலிப் பொட்டு, தாலி, பட்டுச்சேலை சகிதம் அம்மா அக்மார்க் தமிழ்பெண்ணாக வருகிறார். அய்யாவுக்கும், தளபதிக்கும் சால்வை போர்த்துகிறார். தளபதி தி.மு.க உறுப்பினர் படிவத்தை நிரப்பி அம்மையாரின் கையெழுத்தை கோருகிறார். அம்மா எழுத்து கோலுக்காக நிமிர்ந்த போது தளபதி தனது எழுத்தாணியையே தருகிறார். உறுப்பினர் கட்டணத்திற்கான தொகையையும் தளபதியே சட்டைப் பையிலிருந்து எடுத்து தருகிறார். அன்பழகன், துரை.முருகன், ஸ்டாலின், கருணாநிதிக்கு அருகே அம்மாவும் உயர்மட்டக்குழு ஆலோசகர் போல அமர்ந்திருக்க ஒளிப்படக் கருவியின் மின்னல்கள் வெட்ட, ஊடகங்களில் செய்திகள் இடியாய் ஒலிக்கின்றன.

தி.மு.கவில் குஷ்புவா, குஷ்புவுக்கான தி.மு.கவா?
____________________________________________

குஷ்புவின் திருமணத்திற்கு முந்தைய பாதுகாப்பான உறவு, தமிழச்சிகளின் கற்பு, பா.ம.க, வி.சிக்களின் எதிர்ப்பு, 23 வழக்குகள், உச்சநீதிமன்ற தீர்ப்பு எல்லாம் எல்லாரும் அறிந்திருப்பீர்கள். அந்தியூர் விஜயாவை விட குஷ்புவின் ‘தியாகம்’ ததும்பும் போராட்டம் தமிழ் மனங்களுக்கு முக்கியமானதில்லையா? இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தை குஷ்புவும் இழக்கத் தயாரில்லை.

அரசியலென்றால் சாக்கடை என்ற ஆனந்த விகடனது நடுத்தர வர்க்க சலம்பல்கள் மேல்தட்டுக்கு பொருந்தாது. தங்களது தொழிலுக்கு பாதுகாப்பாகவோ, தொழிலை விரிவுபடுத்தவோ, அம்பானி, மல்லையா, இராமசாமி, அமிதப், வினோத் கன்னா, சஞ்சய் தத், ஹேமமாலினி போன்ற முதலாளிகள், நட்சத்திரங்களெல்லாம் எம்.பிக்களாகவோ இல்லை அரசியல் கட்சிகளின் லாபி பிரச்சார்களாகவோ பவனி வரும்போது, கோவில் கட்டப்பட்ட நாட்டில் இலட்சகணக்கான இரசிகர்களைக் கொண்ட குஷ்பு, சொந்தப்படம் எடுக்கும் வண்ணம் ஆளாகிவிட்டவர், இல்லத்தரசிகளை ஜாக்பாக்ட் அடிக்க வைத்தவர் இந்த பொன்னாண தருணத்தை இழப்பாரா என்ன?

இந்தியா டுடே பத்திரிகை திருமணத்துக்கு முந்தைய பாதுகாப்பான உறவு குறித்து, குஷ்புவை விருந்தினர் பக்கமாக எழுதச் சொன்னதற்கு என்ன காரணம்? இந்தியா டுடே கடந்த இருபதாண்டுகளில் வளர்ந்துவிட்ட மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தின் அபிலாஷைகளை அப்பட்டமான பிரச்சாரமாக, வாய்ப்புகளாக, அறிமுகங்களாக வாரம் தோறும் பளபளப்பு தாளில் வடிக்கின்ற பத்திரிகை. உலகமயமாக்கத்தால் ஆதாயம் அடைந்த பிரிவினருக்கு இந்தியாவின் சமூக அமைப்பு எண்ணிறந்த வாய்ப்புளை உருவாக்கி கொடுத்திருப்பதை பறைசாற்றுவதே அதன் நோக்கம். அப்படியே அதைவைத்து நுகர்வு கலாச்சாரத்தை விற்பனை செய்யும் முதலாளிகளின் விளம்பரங்களை வைத்து கல்லாவும் கட்டும்.

இந்த திட்டத்திற்கு உட்பட்டே செக்ஸ் சர்வேக்களும் விதவிதமான ஆணுறை விளம்பரங்களுக்கிடையே கொட்டப்படுகின்றன. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வின் பின்னே ஆணுறைகளில் விற்பனையும் இருக்கிறது, அதை சற்றே பயத்துடன் அணுகும் பெண் மனங்களும் இருக்கிறது. விற்பனைக்காக வாடிக்கையாளரின் மனங்களைத் தயார் செய்யும் பணிதான் இந்தியா டுடேயின் ஊடக தந்திரம். அப்படித்தான் அங்கே குஷ்பு வருகிறார்.

குஷ்புவே திருமணத்திற்கு முந்தைய உறவை பாதுகாப்பாக பின்பற்ற சொல்லிவிட்டார் என்றால் அது ஆணுறைகளின் விற்பனையை தமிழ் சென்டிமெண்ட்டை தாண்டி அதிகரித்து விடதா என்ன? இந்தப் பிரச்சினையில் சீமாட்டிகளுக்கே உரிய முறுக்கு குஷ்புவிடம் வெளிப்பட்டாலும் அதை வைத்து தான் ஒரு முன்னுதாரணமான ஆளுமையாக முன்னிறுத்தப்படுவோம் என்பதும் அவருக்கு சற்று தாமதமாக கூட தெரியாமலா போயிருக்கும்? சில தற்செயலான விசயங்களுக்கு பின்னே திட்டமிட்ட உத்தி அவசியமாக தோன்றலாம் என்பது அரசியலில் சகஜம்.

தமிழ் கற்புக்கரசர்களின் கூச்சலைத் தவிர்த்து தமிழகம் ஒன்றும் அதனால் அதிர்ந்துவிடவில்லை. குஷ்புவின் தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாம் இந்த விளம்பரத்தை வைத்து சூடு பிடித்தன. ராதிகா போல குஷ்புவும் தமிழ் இல்லத்தரசிகளின் நேசத்திற்குரிய நட்சத்திரமாக நிலைபெற்றார். தொழிலிலும் ராதிகா அளவுக்கு இல்லையென்றாலும் ஒரு தொழில் முனைவராக ஆளானார். பொருத்தமாக அவரது இயக்குநர் கணவரும் இப்போது நடிகராக நிலைபெற்றுவிட்டார்.

மேல்தட்டினரது தொழிலும், அதற்கேற்ற பண்பாடு குறித்த சிந்தனைகளும் கட்டுப்பாடாய் சேர்ந்தே இயங்குகின்றன. ஒன்றின் தேவையை பிறிதொன்று நிறைவு செய்கின்றது. குஷ்புவின் கற்பு விவகாரத்தில் இந்த உள் கூட்டணியை பலரும் காணாமல் அதை வெறும் பாலியல் சுதந்திரமாகவோ, இல்லை கற்பாகவோ மட்டும் பார்க்கிறார்கள். ஆனால் குஷ்பு அதைத் தாண்டி அந்த உள்கூட்டணியின் நோக்கில் பார்த்திருக்கிறார் என்பது இப்போது தெரிகிறது.
________________________________________________

ஒரு சீமாட்டி கவிதை எழுதினாலும், கற்பு குறித்து பயமுறுத்தினாலும் அவர்களை மாதர் குல மாணிக்கங்களாய் சம்பளம் வாங்காமால் இலவசமாய் பாராட்ட தமிழகத்தில் சில பின்நவீன பண்டிதர்கள் உண்டு. தங்கள் வாழ்க்கையில் கலகத்தை சொற்களாய் மட்டும் பருகியிருப்பவர்களுக்கு இத்தகைய ஜோடனைகள் ஆசுவாசப்படுத்துகின்றன. ஆனால் இவையெல்லாம் இந்திய முதலாளிகளின் அஜெண்டாவில் விற்பனைத் தந்திரங்களாக மிகச் சாதாரணமாக இருக்கின்றன என்பதோ, அதன் விற்பனையாளர்களாக உச்சநீதிமன்றம், காங்கிரசு, இந்தியாடுடே, தி.மு.க இருக்கின்றன என்பதோ இந்தக் கலக கடுகுமணிகளுக்கு புரிவதில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்ததுமே தனியாளாய் தான் நடத்திய நெடும் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் பரிசு என்பதாய் குஷ்பு வீரவசனம் பேசிய போது “இனி அரசியல்தான், காங்கிரசில் சேருவேன்” என்பதை பக்காவான டைமிங்கில் நெத்தியடியாய் அடித்தார். கட்சி, அரசியல், பிரபலம், சர்ச்சை எல்லாம் சேர்ந்து டெல்லி, பாராளுமன்ற உறுப்பினர், முடிந்தால் மந்திரி என்பதெல்லாம் அவருக்கு அவ்வ்வளவு கஷ்டமான விசயங்களில்லையே?

ஆனால் திடீரென்று தி.மு.கவை எப்படி தேர்ந்தெடுத்தார்? அல்லது தி.மு.கதான் காங்கிரசாய் மாறியது எப்படி?
__________________________________________________

எப்படிப் பார்த்தாலும் இது சரியான பொருத்தமான முடிவுதான். இதன் சாமர்த்தியம் தி.மு.கவிற்கா, இல்லை குஷ்புவுக்கா இல்லை இருவருக்குமே கூட இருக்கலாம்.

“உலக அளவில் சிந்தித்து உள்ளூர் மணத்துடன் விற்கவேண்டும்” என்று சொல்வார்களே அதற்கு பொருத்தமான அரசியல் எடுத்துக்காட்டாய் குஷ்பு தி.மு.கவில் இணைந்ததை சொல்லலாம்.

காங்கிரசில் இணைவேன் என்று அவர் சொன்னது தமிழகத்திற்கு அவ்வளவு எடுப்பாக பொருந்தாது. ஒருவேளை அவர் இந்தி நட்சத்திரமாகி, டெல்லியில் வாழ்ந்து, கற்பு மேட்டருக்காக அவரை லல்லு, மாயாவதி எதிர்த்திருந்தால் காங்கிரசில் சேருவது பொருத்தமாக இருந்திருக்கும். தமிழகத்தில் காங்கிரசு ஒரு கட்சியென்றே கூற முடியாது. பல ரோட்டரி, லயன் கிளப் கனவான்கள் ஆளுக்கொரு தொழிலையும், ஒரு கோஷ்டியையும் வைத்து கருணாநிதியின் டெல்லி வருமானங்களுக்காக காட்டும் கருணையில், இங்கே ஒரு கட்சியை சத்தியமூர்த்தி பவனை தலைமையிடமாகக் கொண்டு நடத்தி வருகிறார்கள்.

ஆக தமிழக காங்கிரசின் தலைமைகள், கோஷ்டிகள், வாரிசுகள் எல்லாம் ஹவுஸ்ஃபுல்லான நிலையில் குஷ்பு காங்கிரசை தெரிவு செய்திருந்தால் அவரது எதிர்காலக் கனவுகளுக்கு வாய்ப்பிருந்திருக்காது. இந்த இடத்தில்தான் தி.மு.கவை அவர் தெரிவு செய்தது ஒரு நிர்ப்பந்தம் என்று சிலர் நினைக்கலாம். இல்லை அது சாமர்த்தியமான தெரிவு என்கிறோம்.

காங்கிரசு ஒரு தரகு முதலாளித்துவக் கட்சி அல்லது இந்திய முதலாளிகளின் பிரதிநிதியாய் செயல்படும் கட்சி. பா.ஜ.கவும் அப்படித்தான். என்ன இங்கு தீவிர இந்துத்துவம் என்றால் அங்கே கொஞ்சம் மிதவாக இந்துத்வம். மற்றபடி இருவருமே முதலாளிகளின் விருப்பத்திற்குரிய பிரதிநிதிகள்தான்.

தி.மு.க, அ.தி.மு.க போன்ற பிராந்திய கட்சிகள் இப்படி அகில இந்திய அளவில் செயல்படும் முதலாளிகளின் பிரதிநிதிகளாக செயல்படுமா என்ற கேள்வி இப்போது இல்லை. வள்ளலார், ஆர்.எஸ்.எஸ், ஜெயமோகன் வாசகர் என்று முகம் காட்டும் தரகு முதலாளியான பொள்ளாச்சி மகாலிங்கம் அமெரிக்க கோக்கின் முகவராக இருக்கும் போது, இந்த கட்சிகள்தான் தமிழகத்தில் தமது அடியாட்களாக அரசியல் செய்வார்கள் என்பதை முதலாளிகள் உணர்ந்தே இருக்கிறார்கள். சரத்குமார் அ.தி.மு.கவில் சேர்வதற்கு விஜய் மல்லையா தனி விமானம் அனுப்புவதும், தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜா தனியார் தொலைத்தொடர்பு முதலாளிகளின் ஏவலாளாக பணிபுரிவதும் எதைக்காட்டுகிறது?

மேலதிகமாக இந்த இருகட்சிகளின் தலைமையுமே தரகு முதலாளிகளாக உயர்ந்து விட்டனர். தொலைக்காட்சிகள், மதுபான ஆலைகள், தெற்காசிய பணக்காரர்களின் பட்டியல் என்று ஆளாகிவிட்ட நிலையில் இனியும் தி.மு.கவை பாமரர்களின் கட்சி என்று அழைப்பதை அக்மார்க் தி.மு.க தொண்டன் கூட ஒத்துக் கொள்ளமாட்டான். அ.தி.மு.க தொண்டனும் அப்படித்தான். காங்கிரசின் பொருளாதாரக் கொள்கைகளில் கடுகளவு கூட தி.மு.கவிற்கு மாறுபாடில்லை. கனிமொழி தனது கன்னி பாராளுமன்ற பேச்சைக் கூட இந்திய அமெரிக்க அணுசக்தி அடிமை ஒப்பந்தத்தை பாராட்டுவதற்குத்தான் அர்ப்பணித்தார். மதுரை ரவுடி அழகிரி இன்று இந்திய அரசின் அமைச்சராக ஆஸ்திரேலியா, அமெரிக்காவிற்கு பறக்கிறார். சென்னை வரும் பன்னாட்டு முதலாளிகளை முதல் ஆளாய் ஸ்டாலின் வரவேற்கிறார். ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு நிறைவேறுகின்றன.

விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளுக்காக போலிக் கம்யூனிஸ்டுகள் காட்டும் வறண்டு போன அழுகை எதிர்ப்புகள் கூட கருணாநிதியிடமிருந்து வருவதில்லை. தமிழ், தமிழினம், செம்மொழி மாநாடு, புதிய சட்டப்பேரவை வளாகம் என்று லோக்கல் ஃப்ளேவரில் தி.மு.க முதலாளிகளின் பாதந்தாங்கியாக மாறிவிட்டது. ஆனானப்பட்ட மவுண்ரோடு மகாவிஷ்ணு கூட இன்று கருணாநிதியன் புகழ்பாடவேண்டுமென்றால் அது வர்க்க நலனின்றி சாத்தியமில்லை.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம், மக்களுக்கு தடையற்ற மின்தடை என்று இருந்தாலும் ஊடகங்களில் இலவச தொலைக்காட்சிதான் சாதனையாக வலம் வருகிறது. கிட்டத்தட்ட எல்லா பத்திரிகைகளுமே இன்று தி.மு.கவின் கொ.ப.செயலாளர்களாக இருப்பதும் தி.மு.க முதலாளிகளின் கட்சியாக மாறிவிட்டதும் வேறு வேறல்ல.

இன்று தி.மு.கவின் கூட்டங்கள் ஒட்டுமொத்தமாக கான்ட்ராக்ட்டுக்கு விடப்பட்டு நடத்தப்படுகின்றன. தோரணம் கட்டுவதோ, சுவரொட்டி ஒட்டுவதோ, பிளக்ஸ் பேனரை நிறுத்துவதோ இன்று தி.மு.க தொண்டன் செய்யும் வேலையில்லை. மேல்மட்டம் தரகு முதலாளிகளாக உருவெடுத்த மாதிரி அடுத்த தலைமை லோக்கல் முதலாளிகளாக மாறிவிட்டனர். சுயநிதிக் கல்லூரி இல்லாத தி.மு.க தலைவரைப் பார்ப்பது கடினம்.

தி.மு.கவின் கவுன்சிலர் கூட இன்று ஸ்கார்ப்பியோவிற்கு கம்மியாக பவனி வருவதில்லை. வட்டத்தலைவர் பதவி கூட பெரும் செலவழிப்புகளுடன் அடையும் ஒன்றாக மாறிவிட்டது. சலூனில் முரசொலி படித்து விவாதிக்கும் தொண்டனை இன்று வலைவீசித் தேடினாலும் காணமுடியாது. ரியல் எஸ்டேட் தரகனாக வேலை பார்த்துவிட்டு சன் டி.வியோ, கலைஞர் டி.வியோ பார்ப்பவன்தான் இன்று உண்மையான தி.மு.க தொண்டன்.

இப்படி காங்கிரசு போல தி.மு.கவும் மாறிவிட்ட நிலையில் தமிழகத்தில் முதலாளிகளுக்கான தீர்மனகரமான கட்சியாய் ஆதிக்கம் செய்யும் நிலையில் குஷ்பு எடுத்திருக்கும் முடிவை ஒரு நிர்ப்பந்தம் என்று பரிதாபப்படுபவர்கள் அறிவிலிகளே.

அடுத்து இந்தியாடுடேயின் நாயகியான குஷ்புவை தி.மு.கவும் பயன்படுத்தவேண்டியிருக்கிறது என்பது அதன் வர்க்க சாய்வுக்கு அடுத்த எடுத்துக்காட்டாகும். என்ஜியனரிங், மருத்துவம், அமெரிக்கா, பங்குச்சந்தை என்று மாறிவிட்ட மேல்தட்டு நடுத்தரவர்க்கமும், இந்த வாழ்வை எட்ட முடியாவிட்டாலும் இதையே முன்னுதாரணமாக கொண்டு வாழும் நடுத்தர வர்க்கமும் இன்று தமிழகத்தின் முக்கிய பகுதி மக்களாகி விட்டனர். இவர்களது உலகத்தை ஊதிப்பெருக்கும் இந்தியாடுடே போல, தி.மு.கவும் அதைச் செய்யவேண்டியிருக்கிறது.

இந்த வர்க்கத்திற்கு இனியும் தமிழ், தமிழன் என்ற உணர்ச்சிகரமான ஆனால் என்றோ உணர்ச்சியை இழந்துவிட்ட மனோகரா டைப் வசனங்களெல்லாம் பலனில்லை. சொந்த வாழ்க்கை முன்னேற்றத்தை மட்டுமே தாரக மந்திரமாக வைத்து வாழும் மக்களிடையே அப்துல் கலாம் மட்டுமல்ல, குஷ்புவும் தேவைப்படுகிறார். அதனால்தால் குஷ்பு துணிந்து விடுதலை சிறுத்தைகளையும், பா.ம.கவையும் தி.மு.கவில் சேர்ந்த பிறகு கேலிசெய்கிறார்.

தான் ஒரு தமிழ்ப் பெண்ணாகவே வாழ்கிறேன் என்று அவர் சொல்வதெல்லாம் பிரச்சினையல்ல. அவையெல்லாம் தி.மு.க என்ற உள்ளூர் மணத்தின் பொருட்டு ஏதாவது சொல்ல வேண்டியிருக்கிறது என்பதே. ஆனால் அவர் கூறிய “பாதுகாப்பான உறவு குறித்து தனது கருத்தை மாற்றவில்லை” என்பதும், “தி.மு.கதான் தனக்கு கருத்துச்சுதந்திரம் கொடுக்கக்கூடிய ஒரு கட்சி” என்பதும்தான் முக்கியமான விடயங்கள். கருணாநிதியும், கனிமொழியும் கூட சங்க கால கள்ள காதல் குறித்த தமிழர்களது மரபை குஷ்புவுக்காக மீள் நினைவு செய்கிறார்கள். குஷ்புவின் கருத்துரிமையும், தி.மு.கவின் புதிய வர்க்க சேர்க்கைகளும் இப்படி பரஸ்பரம் கச்சிதமாகப் பொருந்துகின்றன. காங்கிரசுக் கட்சியின் முதலாளித்துவ தாராளவாத ஜனநாயகம் என்ற பண்பாடு திராவிடக் கட்சியான தி.மு.கவிற்கும் உண்டு என்றால் அது ஒரு பெரிய மாற்றம் இல்லையா?

இப்போது சொல்லுங்கள்!

தி.மு.கவில் குஷ்புவா, தி.மு.கவுக்காக குஷ்புவா?

____________________________

மெல் கிப்சனின் அபோகலிப்டோ பொய்யும், மாயா-இன்கா நாகரிகத்தின் உண்மை வரலாறும்!

29

 

இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா பகுதி 2

vote-012பிரபல ஹாலிவூட் நடிகர்-இயக்குனர் மெல்கிப்சனின் “அபோகலிப்டோ”(Apocalypto) திரைப்படம், சில வருடங்களுக்கு முன்னர் உலகத் திரையரங்குகளில் சக்கை போடு போட்டது. மத்திய அமெரிக்காவில் ஸ்பானியர்கள் வருவதற்கு முன்னர் நடந்த சம்பவங்களைக் காட்டுவதாக அந்தப் படம் அமைந்திருந்தது. பண்டைய அமெரிக்க நாகரீகம் குறித்த மக்களின் அறியாமையை மூலதனமாகக் கொண்டு, திரைப்படம் தயாரிக்கப் பட்டிருந்தது. “அழிவின் விளிம்பில் இருந்த மாயா சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள் கொடூரமான மனம் கொண்டவர்கள். பிற இன மக்களின் கிராமங்களை சூறையாடி, அப்பாவிகளை அடிமைகளாக பிடித்துச் சென்று தமது தெய்வங்களுக்கு நரபலி கொடுத்தார்கள். திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் (ஸ்பானிய) கிறிஸ்தவர்கள் வந்திறங்குகின்றனர். அப்போதிருந்து மாயா காட்டுமிராண்டிகளின் சாம்ராஜ்யம் அஸ்தமித்தது.” இது தான் மெல்கிப்சன் என்ற கத்தோலிக்க மத அடிப்படைவாதி சொல்லும் சேதி.

இன்றைய குவாத்தமாலாவிலும், மெக்சிகோவிலும் வாழ்ந்த மாயாக்கள் உயர்ந்த நாகரீகத்தைக் கொண்டிருந்தனர். அவர்கள் மொழிக்கென எழுத்து வடிவம் இருந்தது. கற்றறிந்தோர் குழாமான மதகுருக்கள் பருவநிலை மாற்றங்களை துல்லியமாக கணித்து வைத்தனர். அந்தக் கணிப்புகள் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியது. நாம் இன்று பயன்படுத்தும் நாட்காட்டி தோன்றுவதற்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே, மாயாக்கள் 365 நாட்களைக் கொண்ட வருடத்தை கணித்திருந்தனர். அது மட்டுமல்ல, கணிதத்தில் பூஜ்ஜியத்தின் பாவனையும் அறிந்து வைத்திருந்தனர். அத்தகைய அரிய பொக்கிஷங்கள் யாவும், பின்னர் வந்த கிறிஸ்தவ மதவெறியர்களால் அழிக்கப்பட்டன. அவர்களைப் பொறுத்தவரை, “பைபிளுக்கு அப்பால் உலகில் எந்த நாகரீகமும் இருக்கவில்லை. நாளைய தலைமுறை அதைப்பற்றி எல்லாம் அறிந்து வைத்திருக்கக் கூடாது.” அதைத்தான் மெல்கிப்சனின் அப்போகலிப்டோவும் எதிர்பார்க்கிறது.

உலகின் பிற சாம்ராஜ்யவாதிகளைப் போல, மாயா இனத்தவர்களும் அயலில் இருந்த பிரதேசங்களை ஆக்கிரமித்து அடக்கி ஆண்டதை மறுப்பதற்கில்லை. மாயாக்களின் கோயில்களில் நரபலி கொடுக்கப்பட்டதுமுண்டு. இருப்பினும் மெல்கிப்சன் சித்தரித்ததைப்   போல நரபலி கொடுப்பது ஒரு “தேசிய விளையாட்டுப் போட்டியாக” இருக்கவில்லை. அதே நேரம் சினிமாவில் வருவதைப் போல, “ஆயிரக்கணக்கான உடல்களைப் புதைத்த புதைகுழி” இருந்ததற்கான ஆதாரம் இல்லை. காலனிய காலத்தில் இருந்து தொடரும் பூர்வீக மக்களின் இனவழிப்பை மறைப்பதற்கு மெல்கிப்சனின் அப்போகலிப்டோ என்ற அரசியல் பிரச்சாரப் படம் பாடுபடுகின்றது. வரலாற்றைத் திரிபுபடுத்தி, பொழுதுபோக்கு என்ற பெயரில் ஏகாதிபத்திய அரசியலைத் திணிக்கும் ஆபத்தான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அமெரிக்காவில் ஸ்பானிய வெள்ளையர்கள் காலடி வைத்த பொழுது, பூர்வீக மக்கள் அவர்களை கடவுளின் தூதர்களாக கருதியதாக சரித்திரத்தில் எழுதப்பட்டுள்ளது. ஓரிறைக் கோட்பாட்டைக் கொண்ட கிறிஸ்தவ மதத்தின் கோணத்தில் இருந்து இதைப் பார்ப்பது தவறு. இன்றைய மெக்சிகோவில் அமைந்திருந்த அஸ்டெக் அரசவையில் நடந்த சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்தே அது எழுதப்பட்டது. அஸ்டெக் ராஜ்யத்தின் தலைநகரம் டேனோச்டிட்லான் (Tenochtitlan ) அன்றைய உலகின் பெரிய நகரங்களில் ஒன்றாக இருந்தது. ஒரு லட்சம் மக்கட்தொகையைக் கொண்ட நகரத்தில் அரண்மனை ஜோதிடர்களின் ஜோசியம் அமைதியைக் குலைத்தது. “பெரிய மிருகத்தின் மீதேறி வரும் வெளிறிய நிறம் கொண்ட மனிதர்கள் அஸ்டெக் ராஜ்யத்தை அபகரிப்பார்கள்.” அன்றைய அமெரிக்க கண்டத்தில் குதிரை இருக்கவில்லை. முதன்முதலாக குதிரை மீதேறி வந்த ஸ்பானிய வீரர்களை கண்ட மக்களும், மன்னனும், “கெட்சகோடல்” தெய்வத்தின் தூதுவர்களாகக் கருதினர். (பண்டைய மெக்சிக்கர்கள் பல தெய்வ வழிபாட்டைக் கொண்டவர்கள். அவர்கள் சில நேரம் ஸ்பானியர்களை எமதர்மனின் தூதுவர்களாக கருதியிருக்கலாம்.) விரைவிலேயே ஸ்பானியக் காலனியாதிக்கவாதிகளின் தங்கத்தின் மீதான பேராசை அவர்களின் சுயரூபத்தை தோலுரித்துக் காட்டியது.

தென் அமெரிக்கக் கண்டத்தின் அனைத்து பூர்வகுடிகளும் ஐரோப்பியரை கடவுளின் தூதுவர்களாக கருதி வணங்கி வழிவிடவில்லை. கண்டத்தின் தெற்குப் பகுதியில், (சிலி, ஆர்ஜெந்தீனா)  ஐரோப்பியரால் நிரந்தரமான காலனியை அமைக்க முடியவில்லை. பூர்வீக மக்களின் தொடர்ச்சியான தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் காலனியாதிக்கவாதிகள் பின்வாங்கினார்கள். அந்தப் பகுதிகளை காலனிப்படுத்த இன்னும் பல நூறாண்டுகள் காத்திருக்க வேண்டியேற்பட்டது. போர்த்துக்கல் ஆக்கிரமித்த பிரேசிலில் வனாந்தரங்களும், விஷ ஜந்துக்களும் காலனியாதிக்கவாதிகளின் மிகப்பெரிய எதிரிகளாக இருந்தன. போர்த்துக்கல்லில் இருந்து கிரிமினல் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளித்து குடியேற ஊக்குவித்தார்கள். அப்படி இருந்தும் பலர் அங்கு செல்லத் தயங்கினார்கள்.

ஐரோப்பிய காலனியவாதிகளின் வருகையின் போது, தென் அமெரிக்காவில் மாபெரும் சாம்ராஜ்யம் இருந்தது. அடர்ந்த காடுகளையும், மலைத் தொடர்களையும், பாலைவனத்தையும் இயற்கை அரண்களாக கொண்டிருந்தது. இன்றைய எக்குவடோர் முதல் சிலி வரை 4000 கி.மீ. நீளமான ஒரே தேசம், “இன்கா ராஜ்ஜியம்” என அழைக்கப்பட்டது. வடக்கே இருந்த மாயாக்களைப் போல, இன்காக்கள் அயலில் இருந்த இனங்களை அடக்கி ஆளவில்லை. அவர்களின் ஆட்சி அதிகாரம் குடிமக்களின் அச்சத்தின் மீது கட்டப்பட்டிருக்கவில்லை. மாறாக சிறப்பான அரச நிர்வாகம் அனைவரையும் சமமான பிரஜைகளாக உள்வாங்கியது. இன்கா ராஜ்யத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதன் பொருளாதார திட்டங்கள் பொதுவுடைமை சமூக அமைப்பை ஒத்துள்ளது.

“தவாந்தின்சுஜூ” (நான்கு திசைகளின் நாடு) ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் பலம் வாய்ந்த சாம்ராஜ்யமாக திகழ்ந்தது. தென் அமெரிக்க கண்டத்தில், சுமார் ஒரு மில்லியன் சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டிருந்த தேசத்தில், குறிஞ்சி, பாலை என நான்கு வகை நிலங்களைக் கொண்டிருந்ததால் அந்தப் பெயர். இன்கா மக்களின் உயரிய நாகரீகம் என போற்றப்படும் சாம்ராஜ்யம், பொதுவுடைமை சமூக- பொருளாதார  அமைப்பை அடிப்படையாக கொண்டிருந்தது. இன்கா இனத்தவரின் சாம்ராஜ்யம், பிற இனத்தவர்கள் மீதான அடக்குமுறையின் மீது கட்டப்படவில்லை. மாறாக சிறப்பாக செயல்படும் அரசியல் அமைப்பு முறை, அனைத்து மக்களையும் ஒரே தேசமாக இணைத்தது. சில வரலாற்று ஆசிரியர்கள் அதனை உலகின் முதலாவது கம்யூனிச ராஜ்ஜியம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

தவாந்தின்சுஜூ மக்கள் அனைவரும், “ஐய்லு” எனப்படும் நிர்வாகப் பிரிவுக்குள் அடக்கப்பட்டனர். ஒவ்வொரு பிரஜையும், (முன்பு சோஷலிச நாடுகளில் இருந்ததைப் போல) கூட்டுடமையாக்கப்பட்ட “கம்யூன்” சமூகத்தின் அங்கத்தவர் ஆவார். சக்கரவர்த்தியும், அரச குடும்பத்தினரும், அமைச்சர்களும் (தலைமை) ஐய்லுவை சேர்ந்தவர்கள். மாகாணங்களை சேர்ந்த ஆளுநர்களும் தலைமை ஐய்ளுவுக்குள் அடங்குவர். (அதாவது நமது காலத்து செனட் சபை போல.) போரில் புதிதாக வெற்றி கொள்ளப்பட்ட வேற்றினத்தவரின் பிரதேசமாகவிருப்பினும், அந்த இனத்தை சேர்ந்த ஒரு ஆளுநர் தலைநகர ஐய்ளுவுக்கு தெரிவு செய்யப்படுவார்.

நிலம் முழுவதும் அரசுடமையாக இருந்தது. எந்தவொரு தனியாரும் நிலத்திற்கு உரிமை கோர முடியாது. ஒவ்வொரு கிராமத்திலும், விளை நிலங்கள் மூன்றாக பிரிக்கப் பட்டிருந்தன. ஒரு பகுதி அரச குடும்பத்திற்குரியது. இரண்டாவது பகுதி ஆலயத்திற்கு அல்லது மதகுருக்களுக்கு. மூன்றாவது பகுதி விவசாயம் செய்யும் குடும்பங்களுக்கானது. பிறப்பு, இறப்பு, புதிய குடும்பங்கள் உருவாதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வருடமும் நிலம் புதிதாக பிரிக்கப்பட்டது. எல்லா நிலங்களிலும் அனைவரும் ஒன்று சேர்ந்து வேலை செய்ய வேண்டும். முதலில் அரச நிலத்திலும், இரண்டாவதாக கோயில் நிலத்திலும், மூன்றாவதாக குடிமக்கள் நிலத்திலும் வேலை செய்ய வேண்டும்.

அரச நிலத்தில் பெறப்படும் விளைச்சலால், அரச குடும்பம் மட்டும் பலனடையவில்லை. களஞ்சியத்தில் சேமிக்கப்படும் தானியம், நோயாளிகள், வயோதிபர், போன்ற சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு வழங்கப்பட்டது. மேலும் வெள்ளம், பஞ்சம் தோன்றும் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்க பயன்பட்டது. இன்கா மக்கள் தமது மொழிக்கு எழுத்து வடிவம் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் களஞ்சியப்படுத்தல், நிலப் பிரிப்பு போன்ற நிர்வாக நடைமுறைகளுக்கு சிக்கலான கணக்கெடுப்பு முறை ஒன்றை வைத்திருந்தனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்லும் அரச கணக்காளர் கயிறொன்றில் முடிச்சுகளைப் போட்டு கணக்கிட்டுக் கொள்வார்.

இன்கா நாகரீகத்தில் (வாகன) சில்லின் பாவனை பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. (ஒட்டகம் போன்ற) லாமா என்ற மிருகம் பொதி சுமந்து செல்ல பயன்பட்டது. இருப்பினும் கற்களைக் கொண்டு செப்பனிடப்பட்ட வீதிகள் சாம்ராஜ்யத்தின் எந்தப் பகுதியையும் தலைநகரோடு இணைத்தது. இன்கா ராஜாக்கள், தமக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இனங்களை தண்டிக்கத் தவறவில்லை. அவர்களை ஒட்டுமொத்தமாக வாழிடங்களில் இருந்து வெளியேற்றி எல்லைப்புறங்களில் குடியேற்றினார்கள். மேலும் புதிதாக வெல்லப்பட்ட பிரதேச மக்களின் தெய்வங்களை இன்கா மதத்திற்குள் உள்வாங்கினார்கள். இதனால் இந்து மதம் போன்ற புதிய மத அமைப்பு உருவாகி, ராஜ்ஜியத்தை இலகுவாக பரிபாலனம் செய்ய முடிந்தது. பிற்காலத்தில் செவ்விந்தியர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பொழுது, தமது பாரம்பரிய மத அனுஷ்டானங்களையும் தொடர்ந்து பேணி வந்தார்கள்.

ஸ்பானிய படையெடுப்பாளர்கள் இன்காக்களின் ராஜ்ஜியத்தை கைப்பற்றிய பின்னர், விவசாய நிலங்கள் கைவிடப்பட்டன. உருளைக்கிழங்கும், சோளமும் பயிரிடப்பட்ட நிலங்கள் புதர் மண்டிய காடுகளாகின. இன்கா மக்களின் பிரதான உணவாக இருந்த உருளைக்கிழங்கு, ஸ்பானிய காலனியாதிக்கவாதிகளால் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. பின்னர் அது உலகம் முழுவதும் பரவியது. புதிதாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தங்கம், வெள்ளி தோண்டுவது தான் ஸ்பானிய காலனிய எஜமானர்களின் ஒரேயொரு நோக்கமாக இருந்தது. இன்றைய பொலிவியாவில், பழைய இன்கா சாம்ராஜ்யத்திற்கு அருகில், “பொட்டோசி” என்ற நகரம் உருவானது. ஒரு காலத்தில் ஒரு லட்சம் பேர் வாழ்ந்த நகரம், அருகில் இருந்த வெள்ளிச் சுரங்கங்களுக்காகவே உருவானது. அங்கு அகழப்பட்ட வெள்ளிப்பாளங்கள் கப்பல் கப்பலாக ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்டன.

தென் அமெரிக்காவில் ஸ்பானியர்கள் தங்கம், வெள்ளி அள்ளிச் செல்வதைப் பற்றி கேள்விபட்ட ஒல்லாந்தர்களும், ஆங்கிலேயர்களும் அவற்றை வழிப்பறி செய்தனர். ஒல்லாந்து, ஆங்கில கடற்கொள்ளையர்கள் ஸ்பானிய கப்பல்களை வழிப்பறி செய்து தமது தாயகத்திற்கு கொண்டு சென்றனர். 1628 ம் ஆண்டு, Piet Hein என்ற ஒல்லாந்து கடற் கொள்ளைக்காரன் அபகரித்த செல்வம் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. கியூப கடலோரம் வழிப்பறி செய்யப்பட்டு ஒல்லாந்து கொண்டுவரப்பட்ட கப்பலில், 177000 கிலோ வெள்ளி, 66 கிலோ  தங்கம், 1000 முத்துக்கள் இருந்தன. கொள்ளையடிக்கப்பட்ட சரக்கின் மொத்த பெறுமதி எட்டு மில்லியன் யூரோக்கள்.

ஸ்பானியர்களால் உணவுப்பயிர் உற்பத்தியான விளைநிலங்கள் அழிக்கப்பட்டன. இன்று தென் அமெரிக்காவின் வறுமைக்கு அதுவும் முக்கிய காரணம். ஸ்பானியர்களால் இன்காக்களின் அரச வம்சம் அழிக்கப்பட்டது. குடி மக்களை சுரங்கங்களில் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தினார்கள். இன்காக்களின் காலத்திலும் கட்டாய உழைப்பு நிலவியது. இருப்பினும் அதற்கு பிரதியுபகாரமாக இன்கா அரசு பாதுகாப்பையும், உணவையும் வழங்க கடமைப் பட்டிருந்தது. ஸ்பானியர்களிடம் அப்படிப்பட்ட கடமையுணர்வு இருக்கவில்லை. செலவின்றி பலனடைய நினைத்தார்கள். அன்றைக்கு செவ்வியந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை ஸ்பெயினில் இருந்து வந்த மதப்போதகரான Bartolome de La Casas எழுதி வைத்துள்ளார்.

“தங்கம், வெள்ளி சுரங்கங்கங்களில் இந்தியர்கள் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். பெண்களும் வயல்களில் வேலை செய்தனர். ஸ்பானிய எஜமானர்கள் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவு உணவு வழங்கினார்கள். உறங்கும் பொது கூட, சங்கிலியால் பிணைக்கப்பட்டு கட்டாந்தரையில் படுத்து உறங்கினார்கள். என்பது அல்லது நூறு றாத்தல் எடையுள்ள பொதிகளை சுமந்து கொண்டு 200 மைல் தூரத்தை நடந்து செல்ல வேண்டியிருந்தது. அதே நேரம் ஸ்பானியர்கள் பல்லக்கில் தூக்கி வரப் பட்டார்கள். செவ்விந்தியர்கள் அவர்களின் சக்திக்கு மீறிய அளவு வேலை செய்ய பணிக்கப்பட்டனர். கடும் உழைப்பு காரணமாக சோர்ந்து விழுந்தால் சவுக்கடி கிடைக்கும். களைப்பால் வேலை செய்ய மறுத்தால் சித்திரவதை செய்யப்பட்டனர். அசாதாரணமான உழைப்புச் சுரண்டல் காரணமாக நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மரணமடைந்தார்கள்.”

கரீபியன் கடல் தீவுகளில் இன்று ஒரு செவ்விந்தியரைக் கூட காண முடியாது. தீவுகளில் வாழ்ந்த அனைத்து பழங்குடி இனங்களும் ஐரோப்பியரால் பூரணமாக அழித்தொழிக்கப் பட்டனர். ஸ்பானிய காலனியாதிக்கவாதிகளின் தங்கம் தேடும் பேராசையால் இனவழிப்புக்கு ஆளானார்கள். தங்கச் சுரங்கங்களில் அடிமைகளாக உழைத்த பூர்வீக குடிகள், ஸ்பானிய எஜமானர்களின் இம்சை தாங்க முடியாது, தமது பிள்ளைகளை கொன்று விட்டு, தாமும் கூட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

உழைப்புச் சுரண்டலை சகிக்க முடியாது தற்கொலை செய்த பரிதாபத்துக்குரிய ஜீவன்களை ஸ்பானிய அதிகாரிகள் ஏளனத்துடன் பார்த்தனர். “வேலை செய்து பழக்கமற்ற சோம்பேறிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்…” என்று பரிகசித்தனர். நிச்சயமாக தென் அமெரிக்க பூர்வகுடிகள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதற்கும் தாங்க முடியாத உழைப்புச் சுரண்டலே காரணம். கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால், தாம் சமமான மனிதர்களாக நடத்தப் படுவோம் என எதிர்பார்த்தார்கள். ஆனால் ஸ்பானிய எஜமானர்களைப் பொறுத்த வரை, “கிறிஸ்தவர்களோ இல்லையோ, செவ்விந்தியர்கள் அனைவருமே அடிமைகள் தான்.”

ஸ்பானியர்களின் கொடுமைகளுக்கு அஞ்சி எல்லா அமெரிக்க பூர்வீக குடிகளும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. மெக்சிகோவில் ஹிடால்கோ என்ற பாதிரியார் தலைமையிலும், பெரு நாட்டில் துபாக் அமாரு என்ற இன்கா அரச குடும்ப வாரிசு தலைமையிலும் விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்றன. செவ்விந்தியர்களிடம் இருந்து அனைத்தையும் பறித்துக் கொண்ட ஸ்பானியர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வதும், மண்ணின் மைந்தர்கள் வறுமையில் வாடுவதும், காலனிய காலம் முதல் இன்று வரை நிதர்சனமான காட்சிகள். “எனதருமை மக்களே! ஸ்பானியர்கள் எம்மிடம் இருந்து அபகரித்த மண்ணையும், செல்வத்தையும் மீட்டெடுப்போம்.” என்று அறைகூவல் விடுத்த துபாக் அமாருவின் பின்னால் ஆயிரமாயிரம் மக்கள் திரண்டனர். 1781 ல், துபாக் அமாருவின் விடுதலைப் படை தலைநகர் Cuzco வை  முற்றுகையிடும் அளவுக்கு பெரிதாக இருந்தது. இறுதியில் சொந்த படையை சேர்ந்த தளபதி ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்டு, துபாக் அமாரு கைது செய்யப்பட்டான். காலனியாதிக்கவாதிகளுக்கு எதிரான பூர்வீக மக்களின் புரட்சி முறியடிக்கப்பட்டது.

சிறையில் இருந்த துபாக் அமாருவை பார்க்க வந்த ஸ்பானிய அதிகாரி, கிளர்ச்சியில் பங்கு கொண்டவர்களை காட்டிக் கொடுத்து விட்டு விடுதலையடையும் படி ஆசை காட்டினான். ஆனால் பணிய மறுத்த துபாக் அமாரு, “இங்கே இரண்டு பொறுப்பாளிகள் மட்டுமே உள்ளனர். ஒன்று, விடுதலைப் போராளியான நான். மற்றது, ஆக்கிரமிப்பாளனான நீ. இருவருமே மரணத்திற்கு தகுதியானவர்கள்.” என்றான். தலைநகரின் மத்திய பகுதிக்கு கொண்டு வரப்பட்ட துபாக் அமாருவும், அவன் மனைவியும், பிள்ளைகளும், பலர் பார்த்திருக்கும் வண்ணம் சித்திரவதை செய்யப்பட்டார்கள். துபாக் அமாருவின் கைகளையும், கால்களையும் கையிற்றால் பிணைத்து, நான்கு குதிரைகளில் கட்டி, நான்கு திசைகளில் இழுத்தார்கள். அப்போதும் அவனது கை கால்கள் கிழியவில்லை. பின்னர் தலையையும், கை,கால்களையும் தனியாக வெட்டியெடுத்து, ஒவ்வொரு உடல் பாகத்தையும் ஒவ்வொரு நகரத்திற்கு ஞாபகார்த்தமாக அனுப்பினார்கள். துபாக் அமாருவின் நான்காவது சந்ததி வரையில் அழிக்கப்படுவார்கள் என சூளுரைத்தார்கள்.

காலனியாதிக்கவாதிகளால் பூர்வகுடிகளின் விடுதலை வேட்கையை நான்காவது தலைமுறையிலும் அழிக்க முடியவில்லை. 22 ஏப்ரல் 1997 அன்று, “துபாக் அமாரு புரட்சி அமைப்பு”, பெரு நாட்டின் தலைநகர் லீமாவில் உள்ள ஜப்பானிய தூதுவராலயத்தை கைப்பற்றியது. 126 நாட்கள், 72 சர்வதேச தலைவர்களையும், உயர்மட்ட அதிகாரிகளையும் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். தூதுவராலயத்தை சூழ்ந்த ஊடகங்களின் உதவியுடன், (அமெரிக்க) ஏகாதிபத்தியத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் எதிராக போர்ப்பிரகடனம் செய்தனர். இறுதியில் துபாக் அமாரு போராளிகள் அனைவரும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டு விட்டனர். இருப்பினும் துபாக் அமாருக்கள் அந்த மண்ணில் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டிருப்பார்கள் என்பதை, அந்த சம்பவம் உலகுக்கு எடுத்துக் காட்டியது.

(தொடரும்)

___________________________________________________

– கலையரசன்

vote-012

தொடர்புடைய பதிவுகள்:

ஈழம்: வதை முகாம்களும், பெண் வாழ்வும்

19

நாற்பது வயதுக்குள்தான் இருக்கும் அந்தப் பெண்மணிக்கு. இப்போது அவரைப் பார்க்க அறுபது வயது முதிய பெண் போல தோற்றமளிக்கிறார். ஈழத்தின் வடபகுதி அரசுப் பள்ளியொன்றில் ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருந்தவரின் வாழ்வை வன்னி மீதான பேரினவாத யுத்தம் குலைத்துப் போட்டு விட்டது. ஒரு வழியாக அவர்கள் இங்கே கரைசேர்ந்திருக்கிறார்கள்.

நான் அவர்களைச் சந்திக்கச் சென்றது ஒரு பண்டிகை நாளில் எங்கும் ஒரே வாண வேடிக்கைச் சத்தம். அவர்கள் இல்லத்தில் இன்னொரு அறையில் அவரின் கணவோரோடு பேசிக் கொண்டிருந்த போது எங்கேயோ கேட்ட வெடிச் சத்தம் அப்பெண்ணின் அமைதியைக் குலைக்கிறது. ”வெடிச்சத்தம் கேக்குது. பிள்ளையைக் கூட்டிக்கொண்டு இங்கை வாங்கோ..” என்று அலறுகிறார். கணவர் சென்று தனது மனைவியான அப்பெண்ணை தேற்றுகிறார். சிறிது நேரம் கழித்து விசும்பலாக அப்பெண் குழந்தைகளை நினைத்து அழுகிறார். இவைகளை வேடிக்கை மட்டுமே பார்க்கும் ஒரு பாக்கியத்தை நான் பெற்றிருந்தேன்.

அப்பெண்ணுக்கு நரம்புத் தளர்ச்சி என்னும் குறைபாடு இந்த யுத்தக் காலத்தில் ஏற்பட்டிருக்கிறது. அது மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது இரண்டு குழந்தைகளையும் காணவில்லை. ஆமாம் அவர்களது இரண்டு பெண் குழந்தைகளும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. யாரிடம் போய் கேட்பது? எங்கெ தேடுவது? என்றும் தெரியவில்லை. அவர் தன் குழந்தைகளை மறந்தாக வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் குழந்தைகள் பற்றிய நினைவுகள் மட்டுமே அவரது நினைவுக்கு வந்து தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இன்றைய தேதியில் உலகின் வேறேந்த யுத்தப் பிராந்தியத்திலும், இவ்வளவு தொகையான குழந்தைகள், இளம் பெண்கள் காணாமல் போயிருப்பார்களா? என்று தெரியவில்லை. பாலஸ்தீனத்தில் காணாமல் போகும், காஷ்மீரில் காணாமல் போகும் மனிதர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் இராணுவ வேலிகளுக்குள் காணாமல் போன ஈழ மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு இல்லத்திலும் எவரோ ஒருவரை யுத்தத்தில் இழந்திருக்கிறார்கள். அல்லது காணாமல் போயிருக்கிறார்கள். சிதைக்கபப்ட்டுள்ள இந்த வாழ்வின் மொத்த துன்பங்களையும் அனுபவிக்கப் போவது பெண்கள்தான். ஆமாம் பெண்கள் மட்டுமே. ஏனென்றால் எதிர்காலம் என்ற ஒன்று பெரும் பாரமாக அவர்கள் மிது இறங்கியிருக்கிறது. இராணுவம், பேரினவாதம், கலாசாரவாதம், மறுகாலனியாதிக்கம் என்று அதிகார வர்க்கங்களுக்கிடையில் நிராதரவான பெண்கள் தங்களின் சுயமரியாதைக்காகவே ஏராளமாக போராட வேண்டியிருக்கிறது.

காணாமல் போதல் என்பது சிறுபான்மை மக்களினங்களுக்கு விடுக்கப்பட்ட நீண்ட கால அச்சுறுத்தல். அவர்கள் காணாமல் போன தங்களின் ரத்த உறவுகளை காலம் முழுக்க தேடிக் கொண்டே இருக்கும் படியான ஒரு மன உளைச்சலை, நிம்மதியின்மையை பேரினவாதம் அவர்களுக்கு பரிசளிக்கிறது. காணாமல் போதல் என்னும் நீண்ட கால அச்சுறுத்தல் வழியே அதிக மக்களை இழந்திருப்பது தமிழ் மக்கள்தான். நூற்றில் ஐந்து பேர் ஊனமடைந்திருக்கிறார்கள். நூற்றில் இரண்டு பேர் காணாமல் போயிருக்கிறார்கள். நூற்றில் இரண்டு பேர் மடிந்திருக்கிறார்கள், என்றால் இந்தக் காயங்களை யார் எப்போது ஆற்றுவார்கள்?

கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் 2005 – ஆம் ஆண்டு பிற்பகுதியிலிருந்து காணாமல் போனவர்களாகத் தெரிவிக்கப்பட்டவர்களில் 261 பேருக்கு என்ன நடந்தது என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லையென மக்கள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இவர்களில் 42 பேர் மாத்திரமே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில் கடத்தப்பட்ட யுத்த சூனியப் பகுதிகளுக்குள் சிக்கி காணாமல் போன குழந்தைகள், இளம் பெண்களுக்கு பொறுப்பாளிகள் யார்?

எப்போதெல்லாம் இராணுவக் கண்காணிப்பும். சோதனைகளும் அதிகரிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் பெண் வாழ்வும், குழந்தைகளின் வாழும் சாகடிக்கப்படுகிறது. சந்திக்குச் சந்தி கட்டி எழுப்பப்பட்டிருக்கும் கண்காணிப்புகளும், சீருடை அணிந்த இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள கட்டற்ற சுதந்திரமுமே பெண்களை அதுவும் சிறுபான்மை தமிழ் பெண்களை அபகரித்துக் கொள்ளத் தூண்டுகிறது. இலங்கைத் தீவில் கட்டி எழுப்பட்டிருக்கும் பெரும்பான்மை வாதம் என்பது மிக மோசமான பாசிச பயங்கரவாத ஆபத்து நிறைந்தது. இங்கே ஒரு தமிழரை துன்புறுத்துவதன் மூலம் பெரும்பான்மை வாதம் பௌத்த சிங்கள பேரினவாதத்திடம் தன் நம்பிக்கையை ஒரு மடங்கு அதிகரித்துக் கொள்கிறது. உளவியல் ரீதியானதும், பெரும்பான்மை தேசிய வெறி சார்ந்ததுமான இந்தக் களிப்பு தென்னிலங்கையில் பற்றிப் படர்ந்திருக்கிறது.

மிகச்சரியாகச் சொன்னால் பம்பலப்பிட்டி பாலகிருஷ்ணன் சிவக்குமாரைச் சொல்லலாம். மன நலம் பாதிக்கப்பட்ட அந்த 26 வயது தமிழ் இளைஞர் பேருந்துகளின் மீதும் இரயில் மீதும் கற்களைக் கொண்டு எறிய அந்த தமிழ் மன நோயாளியை கடற்கரையில் நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்க்க அடித்தே கொன்றார்கள் சிங்கள போலீசார். ஒருவன உயிர் போகிற அளவுக்கு அடிப்பதும் அதை பல நூறு பேர் வேடிக்கை பார்ப்பதையும் நினைக்கும் போது சிங்களர்களே ஒரு கூட்டுவெறி மனச்சிதைவுக்கு ஆளாகியிருப்பர்களோ என்றுதான் தோன்றுகிறது.

புலிகள் இருந்தவரை தமிழ் மக்களுக்கு நிச்சயமான ஒரு பாதுகாப்பு நிலை இருந்தது என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது. புலிகளையும் மக்களையும் வேறு படுத்திப் பார்க்க வேண்டும் என்கிற வாக்கியத்தை அடிக்கடி உதிர்த்தது இந்தியா. ஆனால் இலங்கை எப்போதும் புலிகளையும் மக்களையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. அதனால்தான் ஆயிரமாயிரம் போராளிகளுக்கு என்ன நடந்ததோ அதுதான் ஈழத் தமிழ் மக்களுக்கும் நடந்தது. கூட்டுக்கொலையில் எவர் ஒருவரும் தப்பிக்க முடியாத அளவுக்கு குறுகிய நிலப்பகுதிக்குள் மக்களைத் துரத்திக் கொலை செய்தார்கள்.

தேசிய இனப்பிரச்சனையின் நிமித்தம் ஆயுதம் ஏந்திப் போராடும் போராடும் மக்கள் வேறு, போராளிகள் வேறு என்று எப்போதாவது இவர்கள் பார்த்தார்களா? அப்படிப் பார்த்திருந்தால் ஐமப்தாயிரத்திற்கும் மேலதிகமான மக்களை இப்படி கொடூரமாக கொன்றொழித்திருப்பார்களா? என்ற கேள்வியை இந்தியாவை நோக்கி நாம் கேட்டாக வேண்டும். வன்னிப் போர் முள்ளிவாய்க்காலில் கொடூரமான முறையில் முடிவுற்றதைத் தொடர்ந்து இராணுவத்திடம் பிடிபட்ட மக்கள் நந்திக்கடல் என்னும் நீரேரியைக் கடந்து முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டார்கள். சுற்றி வளைக்கப்பட்டுள்ள நிலையில் எங்குமே அவர்கள் தப்பிச் செல்ல இயலாத நிலை. அதுவும் பெண்களுக்கோ குழந்தைகளுக்கோ அது சாத்தியமே இல்லை. பல ஆண்கள் இறுதிப் போரின் போது தப்பியிருக்க, ஆதரவில்லாத பெண்கள் மிக மிக ஆபத்தான முறையில் இராணுவத்தினரிடம் சிக்கியிருக்கிறார்கள். செஞ்சோலை சிறுவர் இல்லக் குழந்தைகளும் அதில் அடக்கம். ஆனால் இன்று வரை அந்தக் குழந்தைகள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

செஞ்சோலை படுகொலைகளைத் தொடர்ந்து செஞ்சோலை சிறுவர் இல்லங்களில் இருக்கும் குழந்தைகள் குழந்தைப் போராளிகளே என்று இலங்கை அரசு சொல்லி வந்த நிலையில் சுமார் 150 பேர் வரையான ஆதரவற்ற குழந்தைகள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அந்தக் குழந்தைகளுக்கு பொறுப்பேற்கவும் யாரும் இல்லை என்கிற நிலையில் இந்தக் கேள்வி இன்றைய புலி ஆதரவாளர்களாலேயோ, மனித உரிமை ஆர்வலர்களாலேயோ, தமிழார்வலர்களாலேயே இன்று வரை முன் வைக்கப்படவில்லை.

மே மாதம் போர் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் கருணா ஒரு அறிக்கை விட்டார். அந்த அறிக்கையில் முள்ளிவாய்க்காலில் எஞ்சியிருக்கும் எவரும் பொது மக்கள் அல்ல எல்லோருமே போராளிகளாகவும், மாவீரர் குடும்பங்களை சார்ந்தவர்களாகவுமே இருக்கிறார்கள் என்றார். போரின் இறுதி அழிவை வழி  மொழிந்த முதல் குரல் அதுதான். அடுத்த சில நாட்களில் முப்பதாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் பேர் வரையிலான போராளிகளும் பொதுமக்களும் அவர்களின் குடும்பங்களோடு கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

பொது மக்களோ, போராளிகளோ, அவர்களின் குடும்பங்களோ, ஒரு குறுகிய நிலப்பகுதிக்குள் குவித்து வைத்து இப்படியான கூட்டுக் கொலைகளை நிகழ்த்துவதும், அக்கொலைகளுக்கு போராளிகள் அல்லது பயங்கரவாதிகள் என்று நியாயம் கற்ப்பிப்பதும் கூட போர்க்குற்றம்தான். ஆனால் அத்தோடு முடிந்து போன ஒன்றாக இக்கொலைகள் இல்லையே?  மே மாதம் 13,14,15, 16,17,18,19 ஆகிய தேதிகளில் வரை நடந்த கொலைகளின் எண்ணிக்கை மட்டும் ஐம்பதாயிரத்திற்கும் மேல். அதன் பின்னர் நடந்தவைகளை உலகமும் சரி ஏனையவர்களும் சரி கொலைகளாக எண்ணும் நிலை இல்லை.

வதை முகாம்களும்… பெண் வாழ்வும்…

போர் முடிவடைந்த உடன் வவுனியா முழுக்க அமைக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட முகாம்ககளுக்கு கொண்டு வரப்பட்ட மக்கள் குறித்து எண்ணிக்கை இன்று வரை வெளியிடப்படவில்லை. வன்னி மககள் தொகை என்பதே அறியப்படாத நிலையில் அதையே இலங்கை ஆட்சியாளர்கள் ஒரு வாய்ப்பாகக் கருதினர். முகாம்களுக்குள் படையினருக்கும், பயங்கரவாதத் தடுப்புப் போலீசுக்கும் வழங்கப்பட்டிருந்த கட்டற்ற சுதந்திரம் அவர்களை பெரும் வேட்டையில் ஈடுபட வைத்தது. போர் முடிந்து சில மாதங்கள் கழித்து ஒட்டு மொத்தமாக இந்த முகாமகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்களில் 57,293 சிறுவர்களும், 7,894 விதவைப் பெண்களும், 3,100 கர்ப்பிணிப் பெண்களும், 11,877 காயமடைந்தோரும் இருப்பதாக பொத்தாம் பொதுவாக ஒரு கணக்கைச் சொன்னது இலங்கை அரசு.

ஆனால் மக்களின் எண்ணிக்கை குறித்து முதலில் ஒரு கணக்கை சர்வதேச தொண்டு நிறுவனங்கள் எடுத்ததாகவும் பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு கணக்கெடுப்பை முகாம்களுக்குள் நடத்திய போது கிட்டத்தட்ட பதின்மூன்றாயிரம் மக்களைக் காணவில்லை. அவர்கள் எங்கே போனார்கள் என்றோ, அவர்கள் என்ன ஆனார்கள் என்றோ இலங்கை அரசு எந்த பதிலையும் சொல்லவில்லை என்று சர்வதேச தன்னார்வக் குழுக்கள் சொன்னதாக தகவல்கள் வெளியாகின. பொதுவாக 13 வயதிலிருந்து நாற்பது வயது வரையிலான எந்தத தமிழரும் முகாமுக்குள் நிம்மதியாக உறங்கவோ உறவினர்களோடு சேர்ந்து வாழவோ சாத்தியமில்லாத சூழுல் அங்கே நிலவுவது மட்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.

ஆண்கள் என்றாலோ, ஆண் பிள்ளைகள் என்றாலோ அவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். பின்னர் அவர்கள் திரும்ப வருவதே இல்லை. அவர்களும் காணாமல் போனோரின் பட்டியலில் சேர்ந்து விடுவார்கள். ஆனால் காணாமல் போனோர் பற்றி முகாம்களுக்கு வெளியில் இருக்கும் மக்களே முறையிட எந்த ஒரு நேர்மையான சட்ட ஆணையமும் இல்லாத போது முகாம்களுக்குள் இருக்கும் மக்கள் யாரிடம் சென்று முறையிடுவார்கள்? எங்கே போய் தொலைந்து போன தன் மகனைத் தேடுவார்கள்?

போர் முடிவடையும் தருவாயில் மே – 15 ஆம் தியதி இலங்கைப் படையினரிடம் பிடிபட்ட சூசையின் மனைவி, குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள், அவர்களின் நிலை என்ன? அவர்களின் 17 வயது இளம் பருவ பெண்ணான மதியின் நிலை என்ன? புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப. தமிழ்ச் செல்வனின் மனைவியும் படையினரிடம் சரணடைந்தார். அவரையும் அவரது குழந்தையையும் கருணா அம்மான் சென்று சந்தித்ததாக செய்தியும் வெளியானது. ஆனால் அதன் பின்னர் அவர்கள் என்ன ஆனார்கள் என்று இன்று வரை எந்தத் தகவலும் இல்லை.

அது போல மகளிர் அரசியல் பிரிவுக்கு பொறுப்பாளராக இருந்த தமிழினி மெனிக்பாம் முகாமில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். தொடர்ந்து அவரை குற்றப் புலனாய்வுத் துறையினரின் கட்டுப்பாட்டில் வைத்தே விசாரிக்கலாம் என்று நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ள நிலையில் அவரும் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பதை யாராலும் அறிந்து கொள்ள இயலவில்லை. அறியப்பட்ட இம்மாதிரியான பிரமுகர்கள் மட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து தாயக விடுதலைக்காக தங்கள் பிள்ளைகளை அனுப்பி இன்று பத்தாயிரத்திற்கும் அதிகமாக பிடித்துச் செல்லப்பட்டு வதை முகாம்களுக்குள்ளும், ரகசிய தடுப்பு முகாம்களுக்குள்ளும் அடைத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்கள், சிறுவர்கள், போராளிகள் இவர்களுக்காக குரல் கொடுக்க ஏன் இன்று எவரும் முன்வரவில்லை.

அரசோடு பேரம் பேசுவதில் மட்டுமே குறியாக இருக்கும் புலம் பெயர் சக்திகள் கூட இந்த அரசியல் கைதிகளுக்காக பேச மறுக்கின்றனர். புத்தி உள்ள பிள்ளை பிழைத்து கொள்ளும் என்பதைப் போல இலங்கைக்கு வெளியே முன்னாள் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்து அவர்களுக்காக பல்வேறு தொழில்களையும் நடத்தி தங்களை வளப்படுத்திக் கொண்டவர்கள் இன்று இலங்கை அரசோடு சேர்ந்து கொண்டு வடக்குப் பகுதியில் முதலீட்டிற்கான வாய்ப்புகளை எதிர்நோக்குவதாகத் தெரிகிறது. ஆக பணம் இருக்கிறவன் பேரினவாதிகளுடன் சமரசமாகப் போகிறான். அல்லது பணத்தால் உறவை புதுப்பித்துக் கொள்கிறான். ஆனால் இப்பெண்கள், இந்தக் குழந்தைகள், இவர்கள் புலிகளிடம் இருந்து கடந்த காலங்களில் எவ்வித ஆதாயங்களையும் பெறாத ஏழைகள். இவர்கள்தான் தாயக விடுதலைப் போருக்காக தங்களின் பிள்ளைகளை அனுப்பி வைத்தவர்கள்.

இவர்களைத் தவிர புலிகளின் இரண்டாம் மட்டத் தலைவர்களான பேபி சுப்ரமணியம், புதுவை இரத்தினதுறை, யோகி என்னும் யோகரத்தினம், பாலகுமார் போன்றோரைக் கூட போர் முடிந்த அன்றே ( 18,19, ) இராணுவம் பிடித்துச் சென்றதாக செய்திகள் வந்தன. இவர்கள் எல்லோரும் உயிரோடு இருக்கிறார்களா? இருக்கிறார்கள் என்றால் இந்த அரசியல் கைதிகளை ஏன் நீதிமன்றத்தில் நிறுத்தவில்லை, என்பதெல்லாம் கூட கேள்விகளாக மட்டுமே நம்மிடம் இருக்கின்றன. கிடையில் சிக்கிக் கொண்ட ஆடுகளுக்கு அதைக் காவல் காக்கும் நரிகளால் என்ன நேருமோ அதுதான் இந்த அரசியல் கைதிகளுக்கு நேர்கிறது.

படையினர் முகாம்களில் உள்ள பெண்களை பாலியல் வன்முறை செய்து விட்டு அவர்களுக்கு உணவோ, உடுதுணியோ கொடுக்கிறார்கள் என்று லண்டன் மருத்துவர் வாணி குமார் குற்றம் சுமத்தினார். வாணி குமார் மட்டுமல்ல சர்வதேச தொண்டு நிறுவனங்களும் இவ்விதமான குற்றச்சாட்டை முகாம்களில் உள்ள இராணுவத்தினர் மீது கூறியிருந்தது. ஆனால் வாணியின் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த பேரழிவு மேலாண்மை, மனித உரிமைகள் துறையின் முதன்மைச் செயலாளர் ராஜீவ விஜயசிங்கே ” வவுனியா முகாம்களில் உள்ள கூடாரம் ஒன்றிற்குள் இரவு 11:00 மணிக்கு நுழைந்த எமது படைவீரர் ஒருவர் அதிகாலை 3:00 மணிக்குப் பின்னரே வெளியில் வந்ததாக எமக்கு ஒரு அறிக்கை கிடைத்தது. மகிழ்வடைவதற்காக அவர் பாலியல் உறவில் ஈடுபட்டிருக்கலாம். சலுகைகளுக்காகவும் அவர் பாலியல் உறவில் ஈடுபட்டிருக்கலாம். அல்லது அங்கு கிரேக்க தத்துவம் தொடர்பாக மட்டும் பேசப்பட்டிருக்கலாம் ” என்று திமிராக பதில் சொல்லியிருக்கிறான்.

புலிகள் இருந்திருந்தால் இவன் கொல்லப்பட்டிருக்கக் கூடுமோ? புலிகள் தேவையில்லாத எத்தனையோ கொலைகளைச் செய்தார்கள், செய்ய வேண்டிய பல விஷயங்களைச் செய்யாமல் விட்டார்கள். அப்படி விடப்பட்டவர்களில் பலரும் இன்று பிரபாகரன் இல்லாதது குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார்களாம். ஒரு தமிழ் பெண்ணின் துன்பத்தை ஏளனம் செய்வதோடு அதிகாரம் கொடுக்கும் திமிரும் இங்கே சேர்ந்து விடுவதால் இந்த எள்ளல் வருகிறது. முகாம்கள் பெண்களுக்கு பாதுகாப்பற்றவையாக மாறியிருக்கிறது. முகாம்களுக்கு வெளியிலும் பெண்களின் பாலியல் சுதந்திரத்தை பேணுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

இலங்கையில் எப்போதெல்லாம் இராணுவம் பாரம்பரிய வசிப்பிடங்களை சுற்றி வளைக்காத பகுதிக்குள் மக்கள் வாழ்கிறார்களோ அதுவே மக்களுக்கு பாதுகாப்பான வாழ்வுக்காலமாக இருந்திருக்கிறது. இதை இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவின் காஷ்மீரிலும், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் மத்திய இந்தியாவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போரிலும் (உலகக் கோடீஸ்வரனான அனில் அகர்வாலுக்குச் சொந்தமான வேதாந்தா என்னும் சுரங்க நிறுவனத்திற்கு பாக்ஸைட் வளங்களை தாரை வார்த்திருக்கும் இந்திய அரசு, அந்த வர்த்தகத்திற்கு தடையாக இருக்கும் பழங்குடிகளையும், மாவோயிஸ்டுகளையும் வேட்டையாடி அழிக்க ஆபரேஷன் க்ரீன் கன்ட் என்னும் போரை மத்திய இந்தியாவில் நடத்தி வருகிறது.) இதே நிலைதான்.

இராணுவ சுற்றி வளைப்பில் ஆண்கள் அழிக்கப்பட்டு பெண்கள் சிக்கிக் கொள்கிற போது பெண்ணுடல் இங்கே பேரினவாதத்திற்கு பலியாகிறது. போர்க்காலங்களில் பெண்ணுடல் இராணுவ வெறிக்கு இறையாவது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் யுத்தமும், சமூகமும் ஆண்களை இழந்த பெண்களை நிராதரவான முறையில் கைகழுவி விடுகிறது. சமீபத்தில் லண்டன் மருத்துவர் வாணிகுமார் சொன்னக் குற்றச்சாட்டுகளை நமது பழமைவாத தமிழார்வலர்கள் எப்படிப் புரிந்து கொண்டார்கள்?

“தமிழ் பெண்கள் ஒரு வேளை உணவுக்காக கற்பை விற்கிறார்களா? வாணிகுமார் தமிழ் பெண்களை இழிவு செய்கிறார். புலியையே முறத்தால் விரட்டிய எமது பரம்பரைப் பெண்களா, சிங்களவனுக்கு தங்களை இறையாக்கிக் கொள்கிறார்கள்” என்று பண்பாட்டுப் பழமை மேலோங்க தமிழ் கற்பின் பெருமை பேசியிருந்தார்கள். வாணிகுமார் எங்குமே தமிழ் பெண்கள் தங்களை விற்றுக் கொள்வதாக சொல்ல வில்லை. பெண்களை அவர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள், வன்முறையான முறையில் புணர்கிறார்கள் என்றுதான் சொல்லிருந்தார். இப்படி பெண்கள் மீதான வன்கொடுமைக்காக பேசுபவரைக் கூட சகித்துக் கொள்ள முடியாத தமிழ் பண்பாட்டுவாதிகள், கிழக்கிலும் வடக்கிலும் மிகப் பெரிய தனிச் சமூகமாக உருவாகி நிற்கும் விதவைப் பெண்களை எப்படி கையாள்வார்கள் அல்லது எதிர்கொள்வார்கள் என்பதற்கு இதுவே சாட்சி….

வடக்கு – கிழக்கு விதவைகள்

இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இலங்கையின் சிறுபான்மை தமிழ் சமூகம் இரு பெரும் பாரிய மனித அழிவுகளைச் சந்தித்துள்ளது. ஒன்று 2004 –  டிசம்பரில் வந்த சுனாமி அனர்த்தனம். இன்னொன்று 2007 – இல் துவங்கி 2009 முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற இன அழிப்பு யுத்தம். ஒரே நாளில் ஆயிரக்கணக்கான உயிர்களை சுனாமி பலி எடுத்தது என்றாலும் அது இயற்கை நிகழ்வு. இயற்கைப் பேரழிவுகளின் போது மனிதர்கள் தங்களுக்குள் உள்ள உறவுகளை பலப்படுத்திக் கொள்கிறார்கள். இயற்கை அனர்த்தனத்தை கூட்டு சேர்ந்தே எதிர் கொள்கிறார்கள். இடம் பெயர்கிறார்கள். உணவைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள். பல நேரங்களில் இயர்க்கை அனர்த்தனம் ஏற்படும் போது வீடு, குடும்பம், சொத்து இவைகளுக்கு அப்பாற்பட்ட மனித அன்பு பாதிக்கப்பட்ட சமூகங்களில் நிலவுவதைப் பார்க்கலாம்.

ஆனால் வன்னி மீதான யுத்தம் என்பது இந்தியாவும், இலங்கையும் சேர்ந்து உருவாக்கிய செயற்கையான யுத்தம். நீண்ட கால அரசியல் பிரச்சனைக்கு நேர்மையான தீர்வு ஒன்றை முன் வைப்பதற்குப் பதில் ஒடுக்கப்படும் இன மக்களை அழித்தொழிக்கும் கொடூரமான போரை முன்னெடுத்தன இந்திய, இலங்கை அரசுகள். எண்பதுகளில் வேர் விட்ட அரசியல் மேலாண்மையற்ற ஆயுதப் போராட்டச் சூழலும் கடந்த முப்பதாண்டு காலமாக மக்களை காவு வாங்கியிருக்கிறது. கடத்தல், காணாமல் போதல், கொலைகள், பாலியல் வன்முறை, கூட்டுக் கொலை என லட்சக்கணக்கில் மக்களை இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் இழந்திருக்கிறது. இதில் பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமான முறையில் உள்ளது.

”வடக்கிலும் கிழக்கிலுமாக 85 ஆயிரம் விதவைகள் உள்ளதாகவும் இதில் 45 ஆயிரம் பேர் யுத்த விதவைகள்” என்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் ஒரு முறை பாராளுமன்றத்தில் சொன்னார். உண்மையில் வடக்கில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் தொடர்பான எண்ணிக்கையை இலங்கை அரசு மறைப்பது போல விதவைகளின் எண்ணிக்கையையும் இலங்கை இன்று வரை சரி வர வெளிப்படுத்தவில்லை. முறையான மக்கள் தொகை கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டு விதவைகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும் என்றால் அவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டும்.

இலங்கையின் கிழக்கு மாகாணமே விதவைகளின் எண்ணிக்கை அதிகமான மாகாணம் என்று சொல்லப்பட்டாலும் போருக்கு தங்களை ஈடுபடுத்தி கொண்ட சிங்களச் சிப்பாய்களின் மனைவிகளும் போரில் விதவைகளாகியிருக்கிறார்கள். சுமார் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் வரை தென்னிலங்கையில் இவ்விதம் விதவைகளாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் சிங்கள விதவைகளுக்கு அரசு பல்வேறு புனர்வாழ்வுத் திட்டங்களை அறிவித்திருப்பதோடு, அவர்கள் இன்று தேசிய நாயகர்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். அதே வேளை வடக்கில் விதவையானவர்களுக்கு மாதா மாதம் அரசு தரும் தொகை வெறும் 100 ரூபாய்தான். விலைவாசி ஏற்றம், படுகுழிக்குப் போய்விட்ட பொருளாதாரம், வறுமை, வேலையிழப்பு உள்ள வடபகுதியில் இந்த நூறு ரூபாயை வைத்து ஒரு பெண் என்ன செய்ய முடியும்?

இம்மாதிரி ஆதரவற்ற பெண்கள் குறித்த புள்ளிவிவரங்களில் எல்லோரும் குறிப்பிடுகிற ஒன்று இவர்களில் பெரும்பாலானோர் நாற்பது வயதுக்குட்பட்ட இளம் விதவைகள் என்பதைத்தான். இந்த வயதும் அது நமக்கு இந்த விதவைபெண்கள் குறித்து எழுப்பும் தோற்றப்பாடும் பாலியல் ரீதியான கலாசார கண்காணிப்பை இப்பெண்கள் மீது சுமத்தும் ஒரு பார்வையாகவும் தெரிகிறது. கடுமையான இந்து சாதி ஒழுக்கங்களைப் பேணும் தமிழ் சமூகத்தில் மாங்கல்ய பாக்கியம் வாய்த்த பெண்களே கௌரவமான சமையல்காரிகளாக நடத்தப்படும் போது, ஆதரவற்ற பெண்களை கடும் ஒழுக்கத்தை பின்பற்றும் சமூகம் எப்படி கையாளும் என்பதை தமிழ் பெண்களின் கற்பு நெறி தொடர்பான தமிழ் கதையாடலில் நாம் காண முடியும்.

ஆனால இந்த எல்லைகள் எல்லாம் ஒரு நாள் உடைபடும். பாலியல் உரிமைகளையும், சுயமரியாதையும் பேண முடியாத பெண்கள், தங்களின் வாழ்க்கையை தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் எண்ணம் வரும் போது சாதி, மத பிற்போக்குக் கோட்பாடுகள் உடைவதை யார்தான் தடுக்க முடியும்? அல்லது தடுப்பதற்கு நமக்கு என்னதான் உரிமை இருக்கிறது?

இவைகளை எல்லாம் எழுதி முடித்த பின்பு இக்கட்டுரையில் பேசப்பட்டுள்ள இப்பெண்கள் குறித்தும் அவர்களின் சமூக, வர்க்கப் பிரச்சனைகள் குறித்தும் நான் என்ன தீர்ப்பிடுவது என்பதை யோசித்தேன். தன்னார்வக் குழுக்கள் இவர்களை தத்தெடுக்க வேண்டும் என்றோ, உலகின் உயரிய பெண்கள் ஆணையம் இப்பெண்களை கவனிக்க வேண்டும் என்றோ, அரசு உதவித் தொகையை உயர்த்துவதோடு, அவர்களின் புனர்வாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றோ நான் எழுதலாம், அல்லது அவர்களின் உழைப்பிற்கான, பாலியல், சுயமரியாதை கௌரவம் உத்திரவாதப்பட வேண்டும் என்றோ, உற்பத்தியில் அவர்கள் நேரடியாக பங்கு பெறும் வழி வகை காணப்பட வேண்டும் என்றோ கூடச் சொல்லலாம். ஆனால் இதை எல்லாம் செய்ய யார் இருக்கிறார்கள்?

வடக்கு கிழக்கின் ஏழைத் தமிழக் குடும்பங்களில் உள்ள ஆண்கள் கொல்லப்பட்ட பிறகு அனாதைகளாக்கப்பட்டுள்ள இந்த பெண்களை காப்பாற்றுவது என்பது என்ன? அவர்களது வாழும் உரிமை நசுக்கப்பட்டுள்ள நிலையில் நம்முடைய மனிதாபிமான மூச்சின் அருகதை என்ன? சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வெற்றி, அதை எதிர்கொள்ள முடியாத அரசியல் தோல்விகள்…. இவற்றின் தொடர்ச்சியை மட்டும் நாம் துண்டித்து பார்க்க முடியுமா? இருந்தாலும் அந்த விதவைப் பெண்களின் நிர்க்கதியற்ற முகங்கள் நம்மை அமைதியாக பார்க்கின்றன, இல்லை கேட்கின்றன.

மறுகாலனியாதிக்கச் சுரண்டலில் இந்த ஜீவன்கள் பாலியல் அடிமைகளாகவோ, சுரண்டல் அடிமைகளாகவோ இருப்பதுதானே வர்த்தக வெறிக்கு உகந்தது… என்றெல்லாம் நினைவுகள் ஆக்கிரமிக்க நான் அந்தி சாய்வதற்குள் என் வீட்டிற்குத் திரும்புகிறேன். எனது வண்டிச் சத்தம் கேட்ட உடன் வாசலுக்கு ஓடி வருகிறாள், என் செல்ல மகள். ”அப்பா எனக்கு பாப்கார்ன் வாங்கித் தர்றீயா?” என்று கைகளைத் தூக்குகிறாள். நான் அவளை எடுத்துக் கொண்டு பாப்கார்ன் வாங்கச் செல்கிறேன். சந்தோசமாகக் கழிகிறது சென்னை வாழ்க்கை.

படிக்க

யார் விபச்சாரி? ‘சோவியத் சுந்தரிகளா’, இந்தியா டுடேவா?

38

vote-012இரண்டு வாரம் கடுமையான வேலைபளு காரணமாக கணினியின் பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூட முடியவில்லை. இதற்குள் அழகிரி அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிசயம் நடந்து விட்டது. இருந்தும் அழகிரியைப் பற்றி எழுதுவதற்கு பதில் போய் முடிதிருத்திவிட்டாவது வரலாம் என்று போனால் அங்கு ஒரு பழசான இந்தியா டுடே கிடந்தது. அதில் சோவியத் சுந்தரிகள் எனும் தலைப்பில் ஒரு அட்டைப்படச் சிறப்புக் கட்டுரை வந்திருந்தது.

இந்தியாடுடே பாலியல் கட்டுரை வெளியிடுவது ஒன்றும் புதிய செய்தியல்ல. அதன் விளம்பரக் காகிதங்களை மட்டும் பார்ப்பவன் என்ற வகையில் அவர்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பாலியல் சர்வே செய்பவர்கள் என்று புரிந்து கொள்ளமுடிகிறது ( போதுமான அளவு வீட்டில் தண்ணீர் வசதி இருப்பதால் நான் காசு கொடுத்து இ.டு வாங்குவதில்லை ). ஆயினும் சோவியத் சுந்தரிகள் எனும் தலைப்பு இந்தியாடுடேவின் பாலியல் அரிப்பை மட்டும் கொண்டு வெளியிடப்பட்ட செய்தியல்ல என்பது தெளிவு. அதனால்தான் அக்கட்டுரையில் சோவியத் பற்றிய விளக்கமும் பிறகு அதன் வீழ்ச்சி குறித்தும் பேசி விட்டுப் பிற்கு தனது வழக்கமான செய்திக்கு வருகிறது.

இந்தியாடுடேவின் அக்கட்டுரை முன்னாள் சோவியத் நாடுகளை சேர்ந்த இளம் பெண்கள் இந்தியாவின் பெருநகரங்களுக்கு பாலியல் தொழில் செய்ய வருவது பற்றியது. சுமார் ஐந்தாயிரம் முன்னாள் சோவியத் நாட்டுப் பெண்கள் இங்கு வந்திருப்பதாகவும், இவர்களில் பலர் துபாயின் வீழ்ச்சிக்குப் பிறகு இங்கு தங்கள் ஜாகையை மாற்றியிருப்பதாகவும் சொல்லியிருக்கிறது அப்பத்திரிக்கை.

இப்பெணகளை ஏற்பாடு செய்து தரும் ஆண்டிகள், அவர்களது சராசரி கட்டணங்கள், மற்ற விபச்சாரிகளை விட இவர்கள் எவ்வகையில் மேம்பட்டவர்கள் என்ற தகவல்கள்,  ஆங்கில தினசரிகளில் இந்த குழுக்கள் தரும் விளம்பரங்களை எப்படி அடையாளம் காண்பது எனும் கைடுலைன் மற்றும் அவர்களது வாடிக்கையாளர் சிலரது கருத்துக்கள் என ஏராளமான தகவல்களை அள்ளி இறைத்திருக்கிறது டுடே. நல்லவேளையாக யாருடைய தொலைபேசி எண்ணையும் தரவில்லை. இத்தனைக்கு மேல் தொலைபேசி எண் தேவையில்லை என்பது வேறு விசயம்.

ஒரு உயர்மட்ட விபச்சாரத் தரகனுக்குரிய வார்த்தை ஜாலங்கள், அழகிகள் குறித்து ஆர்வத்தைத் தூண்டும் வர்ணனைகள், அதிலும் கொஞ்சம் ரகசியத்தை மறைக்கும் லாவகம் என இ.டுடேவின் திறமை திருப்பிய பக்கமெல்லாம் பளிச்சிடுகிறது. பத்திரிக்கை துறையில் நொடித்துப் போனால் இவர்கள் மாற்றுத் தொழில் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை.

அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி இந்தியாவில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை முப்பது லட்சத்திற்கும் அதிகம். பாலியல் தொழிலுக்கு தள்ளும் சமூகச் சூழல் பற்றியோ அல்லது பாலியல் தொழில் நடத்தும் சமூக விரோதிகள் பற்றியோ கொஞ்சமும் கவலைப்பட்டிராத இந்தியாடுடே சோவியத் நாட்டு பெண்கள் சிலரது பாலியல் தொழில் பற்றி செய்தி போடுவதன் காரணம் என்ன?

கம்யூனிசத்தை வெறுக்கிற சமத்துவம் என்ற வார்த்தையைக் கேட்டாலே அலறும் மேல்தட்டு சிந்தனையின் விளைவுதான், தான் நிபுணத்துவம் பெற்ற  விபச்சார செய்திகளை சோவியத் சுந்தரிகள் எனும் தலைப்பில் வெளியிடுகிறது இந்தியாடுடே. கம்யூனிசம் எனும் கருத்தின் மீதான பயம் சோவியத் நாடுகள் சிதறிய பல ஆண்டுகளுக்குப் பிறகும் இவர்களுக்கு இருப்பதன் விளைவுதான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கம்யூனிசத்தை சீண்டிப் பார்க்க வைக்கிறது. கூடுதலாக மேல்தட்டு மக்களின் வெள்ளைத் தோல் மோகம் பற்றி செய்தி போட வேண்டிய கடமையும் அவர்களுக்கு இருக்கிறது. அதன் பலன், கம்யூனிசத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியும் இந்தியாடுடேவின் அடையாளமான பாலியல் இச்சையும் சம அளவில் கலந்த இந்த காக்டெய்ல்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தியாடுடே சிறப்பிதழில் சோ ராமசாமியின் கட்டுரை ஒன்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்ற தலைப்பில் வெளியானது. அதில் சோவும் தனது பெரியார் விரோத சிந்தனைகளை அள்ளித் தெளித்திருந்தான். “பெரியார் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்தார், இப்போதோ பக்தி மாநிலமெங்கும் பரவிவிட்டது, ஜாதிகள் ஒழிக்கப்படவேண்டும் என்றார், ஆனால் இப்போது ஜாதி சங்கங்கள் பல்கிப் பெருகிவிட்டன ஆகவே பெரியார் கொள்கைகள் தோற்றுவிட்டன” என்று எழுதி  தனக்கு தரப்பட்ட வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தினான் சோ.

பக்தி பெருகி விட்டதாம், பக்தி மட்டுமா பெருகியது கொலை, கற்பழிப்பு, ஊழல் தொடங்கி பஸ் ஸ்டாண்டில் செயின் அறுப்பதுவரை எல்லாம்தான் பெருகிவிட்டது. ஜாதி சங்கங்கள் பெருகிவிட்டது யாருக்குத் தோல்வி ? இந்த கொழுப்பெடுத்த கிழவன் உட்பட நம் எல்லோருக்குமான தோல்வி இது, நிச்சயம் பெரியாரின் தோல்வியல்ல. இது சோவுக்கு பதில் சொல்லும் பதிவு அல்ல என்பதால் இதற்குமேல் நீட்ட வேண்டாம். ஆயினும் நாம் கவனிக்கவேண்டியது, ஏன் இந்தியாடுடே பெரியார் பற்றி எழுத சோவை தெரிவு செய்தது, அதன் தலைப்பை ஏன் நாயக்கர் என்று வைத்தது என்பதைத்தான்.

வி.பி. சிங் இறந்தபோதும் இந்த பத்திரிகை செய்தி வெளியிட்டது. இந்தியாடுடேயின் தரம் அதில் முழுமையாக வெளிப்பட்டது. மண்டல் கமிஷனுக்கு எதிராக தீக்குளித்த இளைஞனின் உடலைப்பற்றிய தீ இறுதியில் வி.பி. சிங்கின் உடலை எரித்து விட்டு ஓய்ந்ததாக எழுதியது இப்பத்திரிக்கை. மனதில் வன்மத்தைத் தவிர வேறு எதுவும் இல்லாத ஒருவனால் மட்டுமே சொல்ல முடிகிற வார்த்தைகள் அல்லவா இவை? இடஒதுக்கீடு என்ற வாதத்தை இந்தியாவெங்கும் துவக்கியதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாத வி.பி. சிங்குக்கே இந்த கதி என்றால் பெரியாரும் சோவியத்தும் தப்பிக்க முடியுமா என்ன ?

சோவியத்தின் வீழ்ச்சி இந்தியாடுடேவுக்கு வேண்டுமானால் கொண்டாடத்தக்க செய்தியாக இருக்கலாம் நிச்சயம் அது நமக்கான நற்செய்தியல்ல. இரண்டாம் உலகப் போரில் பெரும் தியாகங்களை செய்தவர்கள் சோவியத் மக்கள். இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு உருவான பல பெரும் தொழிற்சாலைகளுக்கு தொழில் நுட்ப உதவிகளை செய்தது சோவியத் உள்ளிட்ட கம்யூனிச நாடுகள். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் பெரும் எண்ணிக்கையிலான ஏழை மக்களுக்காக எல்லா தலைப்புக்களிலும் புத்தகங்களை மிக மிக மலிவான விலையில் ( ஏறத்தாழ இனாமாக ) வழங்கியது சோவியத். இன்றைக்கு அமெரிக்காவின் சர்வதேச ரவுடித்தனத்தை குறித்து கோபப்படுபவர்கள் சோவியத்தின் வீழ்ச்சி குறித்து கவலைப்படாமல் இருக்க முடியாது.

வெள்ளையனை எதிர்த்து போராடியதால் இருபத்து மூன்று வயதில் தூக்கிலிடப்பட்டார் பகத்சிங், வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டக்காரர்களை காட்டிக்கொடுத்த வாஜ்பாய் பிற்பாடு இந்தியாவின் பிரதமரானார். இதில் யாரை வெற்றிகரமானவர் என்பீர்கள்? திப்பு சுல்தான் வெள்ளையருடனான போரில் தோற்றார், அவரது வாரிசுகள் இன்று தினக்கூலிகள். ஆற்காடு நவாப் தோல்வியே அடையவில்லை. அவர் வாரிசுகள் இன்றும் இளவரசர்களாக வாழ்கிறார்கள். இதில் யாரை நேசிக்கிறீர்கள் தோற்றவனையா அல்லது வென்றவனையா?

லெனின், ஸ்டாலின் காலத்து சோவியத் குறித்து நினைவு கூறவும்  கற்றுக் கொள்ளவும் நமக்கு ஏராளமான செய்திகள் இருக்கின்றன.  நாம் அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம். நாம் தெரிந்து கொள்வதற்கேற்ப ‘சோவியத் சுந்தரிகள்’ இங்கே வருவதற்கான தேவையும், அதை விலாவாரியாக இந்திய டுடே என்ற பத்திரிகை மாமா எழுதுவதற்கான கடமையும் இல்லாமல் போகலாம்.

• வில்லவன்
_____________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

ஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ரேட் அம்பலம்!

124


“கலியுகத்துல நாடு கெட்டுப் போச்சே”ன்னு அவாள்கள் அவ்வப்போது சபிப்பது வழக்கம். இந்த கலியுகப் புலம்பலில் மற்ற பிரச்சினைகளை விட இந்துத்தவத்திற்கு மட்டும் டன் கணக்கில் வில்லங்கம் வந்து சேர்கிறது. நித்தியானந்தா பள்ளியறை பலாபலன்களால் நாடே சிரிப்பாய் சிரித்த அதே பெங்களூருவில் இப்போது சீசன் 2வாக சிறிராம் சேனாவின் விவகாரம் நாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.

ஜனவரி, 2009 இல் மங்களூரு பஃப்பில் குடித்துக் கொண்டிருந்த பெண்களைத் தாக்கி விரட்டியதில் இந்திய அளவில் ஒரே நாளில் பிரபலமானது சிரிராம் சேனா. அதற்கு முன் சிறுபான்மையினரை எதிர்த்து பல கலவரங்கள் செய்திருந்தாலும் மேட்டுக்குடி சீமாட்டிகளுக்கு ஏற்பட்ட அவமானமே பல தேசிய ஊடகங்களுக்கு கவலையாக இருந்தது. அந்தக் கவலையை சேனாவும் இலவசமான பிரபலமாக நன்கு அறுவடை செய்துகொண்டது. இப்போது இதன் தலைவர் பிரமோத் முத்தாலிக் காசு வாங்கிக் கொண்டு கலவரம் செய்வதாக ஒரு கேமராவில் ஒப்புக் கொண்டிருக்கிறார். தெகல்கா – ஹெட்லைன்ஸ் டுடே இணைந்து நடத்திய ஸ்டிங் ஆப்பரேஷனில் இந்த வானரங்கள் வகையாய் சிக்கியிருக்கின்றன.

இந்த நடவடிக்கையின் படி ஒரு நிருபர் டம்மி ஆர்ட்டிஸ்ட்டாக அதாவது ஓவியனாக நடித்து முத்தாலிக்கை அணுகியிருக்கிறார். அதன்படி அவரது ஓவியக் கண்காட்சியை முத்தாலிக்கின் ராமசேனா வானரங்கள் அடித்து கலவரம் செய்தால் பிரபலமாகிவிடலாமென்றும், அதற்கு எவ்வளவு பணம் தரவேண்டுமென்பதே டீல். இதற்காக முத்தாலிக்கை மட்டுமல்ல அவரது இயக்கத்தின் மற்ற தலைவர்களையும் அந்த நிருபர் பார்த்திருக்கிறார். அவர்களும் அந்த கண்காட்சி முசுலீம்கள் இருக்கம் பகுதியில் இருந்தால் பிரச்சினையை பெரிதாக கொண்டு செல்லலாமென்று வழிகாட்டியிருக்கிறார்கள்.

உரையாடலிலிருந்து சில பகுதிகள்:

நிருபர்: நான் பிரபலமானால் எனது வியாபாரம் வளர்வதற்கு உதவியாக இருக்கும். இதைச் செய்வதற்கு உங்களுக்கு எவ்வளவு ஆட்கள் தேவைப்படுவார்கள், எனக்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்கள். இந்த கலவரத்திற்காக நான் போலீசில் புகார் கொடுக்கமாட்டேன், இது நமக்குள்ளே மட்டும் நடக்கும் விசயம். முன்பணமாக எவ்வளவு தரவேண்டுமென்று சொல்லுங்கள், கொடுத்துவிடலாம்.

(இந்த வேலையைச் செய்வதற்கு தயாரான முத்தாலிக் அதற்கான ஏற்பாடுகளை பெங்களூருவிலேயே செய்துவிடலாமென்று சம்மதிக்கிறார்.)

நிருபர்: ஐயா, இதை நான் உறுதி செய்து கொள்ளவேண்டும். உடனடியாக இல்லையென்றாலும் சில நாட்கள் கழித்துக் கூட நான் வருகிறேன். இதற்கு மொத்தமாக எவ்வளவு செலவு பிடிக்குமென்று தெரிந்தால் நான் அதற்கு ஏற்பாடு செய்து விடுவேன்.

முத்தாலிக்: நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் எங்களது கிளைத் தலைவர்…..

நிருபர்: பெங்களூருவில்…?

முத்தாலிக்: ஆமாம், பெங்களூருவில்தான். அவர், வசந்த் குமார் பவானி, பலமான கை. அவரோடு அறிமுகமாகியிருக்கிறீர்களா?

(இறுதியில் முத்தாலிக் கலவரத்தை நடத்துவதற்கு ஒப்புதல் தந்த உடன் மிச்சிமிருந்த ஒரே வேலை தொகையை நிர்ணயம் செய்வதுதான். அதற்கு முத்தாலிக் தனது தளபதிகளான பிரசாத் அட்டாவர் (சேனாவின் தேசிய துணைத் தலைவர்), மற்றும் வசந்த்  குமார் பவானி (சேனாவின் பெங்களூரு தலைவர்) இருவரையும் சந்திக்க சொல்கிறார். இதில் அட்டாவர் என்பவனை சிறையில் சந்திக்கிறார் நிருபர்.)

நிருபர்: நாங்கள் பதினைந்து இலட்சமாக கொடுத்து விடுகிறோம்.

அட்டாவர்: ஆமாம் ஆமாம்? இருந்தாலும் நான் அதை கணக்கட்டு சொல்கிறேன்.

(நிருபர்கள் அட்டாவரை மங்களூர் சிறையில் இருமுறையும், பெல்லாரி சிறையில் ஒரு முறையும் சந்தித்து பேசுகிறார்கள். அட்டாவரும் மங்களூர் பஃப்பில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போல செய்துவிடலாமென்று உறுதி கூறுகிறார்.)

அட்டாவர்: எவ்வளவு பணம் வேண்டுமென்று சொல்வேன்.

நிருபர்: கலவரத்திற்கு எத்தனை நபர்களை கொண்டுவருவீர்கள்?

அட்டாவர்: ஐம்பது.

நிருபர்: ஆக கலவரம் செய்ய ஐம்பது பேர் வருவார்கள்?

அட்டாவர்: நிச்சயமாக. மங்களூர் பஃப்பில் நடந்த மாதிரிதான்.

(ஆனால் கலவரத்தை எப்படி பக்காவாக நடத்த வேண்டுமென்று சொன்னவர் சேனாவின் பெங்களூரு தலைவர் பவானிதான். அவரது உரையாடலைப் பாருங்கள்.)

பவானி: கண்காட்சியைத் திறப்பதற்கு மும்தாஸ் அலியைக் கூப்பிட முடியுமா?

நிருபர்: யார் அது?

பவானி: அவர்தான் கர்நாட வக்ப் போர்டு உறுப்பினர்.

(விசயம் இப்படி நல்லபடியாக போய்க் கொண்டிருந்தாலும் முத்தாலிக் தனது இமேஜூக்கு பிரச்சினை வரக்கூடாது என்பதில் குறியாய் இருந்தார்.)

முத்தாலிக்: இதில் நான் நேரடியாக சம்பந்தப்பட முடியாது. இந்துத்துவ விழுமியங்களின் ஆதரவாளனென்று சமூகத்தில் எனக்கு ஒரு இமேஜ் இருக்கிறது.

நிருபர்: ஆனால் ஐயா, இது யாருக்கும் தெரியாது.

முத்தாலிக்: எல்லாம் சரிதான். ஆனால் எனது மனசாட்சி நான் ஏதோ தவறு செய்கிறேனோ என்று எச்சரிக்கிறது.

நிருபர்: எம்.எப். ஹூசைன் மற்றும் மற்றவர்களது கண்காட்சியில் என்ன செய்தீர்களோ அது போல.

முத்தாலிக்: ஆமா ஆமாம்.

நிருபர்: அதே மாதிரி என் கண்காட்சியிலும் நடக்க வேண்டும். அது பெங்களூருவின் சிவாஜி நகரிலோ, மங்களூருவிலோ இல்லை முசுலீம்கள் இருக்கும் எப்பகுதியிலும் இருக்கலாம்.

முத்தாலிக்: என்ன மாதிரியான உதவியை எதிர்பார்க்கிறார்கள்? அது மங்களூர், பெங்களூரு இரண்டிலும் செய்ய முடியும்.

நிருபர்: அறுபது இலட்சம் போதுமா?

முத்தாலிக்: இதை யார் உங்களுக்கு சொன்னார்கள்?

நிருபர்: வசந்த்ஜியுடன் பேசியிருக்கிறோம்.

முத்தாலிக்: பணத்தை நான் உறுதி செய்ய முடியாது. அது அவர்களின் (சேனாவின் மற்ற தலைவர்கள்) வேலை, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

மேற்கண்ட உரையாடலிலிருந்து ராம சேனாவின் தலைவர் முத்தாலிக்கும் அவரது சகபாடிகளும் கூலிக்கு கலவரம் செய்பவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இனி பிரமோத் முத்தாலிக்கின் ஜாதகத்தைப் பார்க்கலாம்.

______________________________________________

கர்நாடக மாநிலம், பெலகாம் மாவட்டம், ஹுக்கேரியில் பிறந்த முத்தாலிக்கின் தற்போதைய வயது 47. பதிமூன்று வயதாக இருக்கும்போது 1975இல் ஆர்.எஸ்.எஸ்இல் சேர்கிறார். 2004இல் பஜ்ரங்க தள்ளின் தென்னிந்திய அமைப்பாளராக நியமிக்கப்படுகிறார். தேர்தல் அரசியலில் நுழைந்து ஒரு ஆளாக விரும்பினாலும் இவருக்கு பா.ஜ.க சீட்டு கொடுக்கவில்லை. இதனால் மனம் வெறுத்த முத்தாலிக் 2005இல் பஜ்ரங்தளத்தை விட்டு விலகுகிறார். அதே ஆண்டு சிவசேனாவின் கர்நாடக மாநில தலைவராக உருவெடுக்கிறார். பிறகு அதிலிருந்து விலகி 2006இல் ராஷ்ட்ரிய இந்து சேனாவை ஆரம்பிக்கிறார். மாநிலம் முழுக்க சுற்றுப் பிரயாணம் செய்து இந்துவெறிப் பேச்சாளராக பிரபலமாகிறார். இதில் மட்டும் இவர் மீது பதினொரு மாவட்டங்களில் வழக்கு இருக்கிறது. 2008இல் சிரிராம் சேனா ஆரம்பித்ததும்தான் முத்தாலிக் நாடு அறிந்த தலைவராக பிரபலம் ஆகிறார்.

முத்தாலிக்கின் சிறிராம சேனாவின் கைங்கரியங்கள் சில:

  • 2009 ஜனவரியில் இந்து கலாச்சாரத்திற்கு விரோதமென்று கூறி மங்களூர் பஃப்பில் பெண்களை அடித்து கலவரம் செய்தார்கள். இதில் முத்தாலிக்கும் 27 பேர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
  • ஆகஸ்ட்டு 2008 இல் சேனாவின் குண்டர்கள் எம்.எப்.ஹூசைனது கண்காட்சியை டெல்லியில் வைத்து தாக்கி கலவரம் செய்தார்கள்.
  • 2008 இல் மதமாற்றம் என்று குற்றம் சாட்டி கர்நாடகாவின் பல கிறித்தவ தேவாலயங்களை தாக்குகிறார்கள். 2009இல் ஆறு தேவாலயங்களை அடித்து நொறுக்குகிறார்கள்.
  • 2009 பிப்ரவரியில் காதலர் தினத்தை கொண்டாடுபவர்களை பிடித்து திருமணம் செய்து வைக்கப் போவதாக முத்தாலிக் அறிவித்தார். இதை எதிர்த்து சில பெண்கள் அமைப்புகள் முத்தாலிக்கு பிங்க் நிற ஜட்டியை அனுப்பி எதிர்ப்பு தெரிவித்தன. இது நாடெங்கும் ஆதரவை ஏற்படுத்தியது.

________________________________________

நுகர்வுக் கலாச்சாரத்தின் அங்கமாகிப் போன காதலர்தினம், பஃப் இரண்டையும் பாரதக் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று முத்தாலிக் செய்த பிரச்சாரம் நடுத்தர வர்க்க பெற்றோர்களான இந்துக்களின் ஆதரவைப் பெறாமலில்லை. இளையவர்கள் இதை ஆதரிக்கவில்லை என்றாலும் பொதுவில் இந்துக்களின் சாம்பியனாக காட்டிக் கொள்ள இந்தப் போராட்டங்கள் கைகொடுத்திருக்கின்றது. மேலும் மேட்டுக்குடியின் நிகழ்ச்சி நிரலில் இத்தகைய தாக்குதல்கள் வந்த உடன்தான் தேசிய ஊடகங்கள் இதை கவனம் கொடுத்து முக்கியத்துவம் கொடுத்தன. மங்களூரு பஃப்பில் சுமார் 25 குண்டர்களை வைத்தே நடத்திய தாக்குதல் முத்தாலிக் பிரபலம் ஆவதற்கு போதுமானதாக இருந்தது.

இத்தகைய சிறு கும்பலை வைத்து ரகளை செய்யும் இந்தக் கூட்டத்தை இருக்கும் சட்டப்பிரிவுகளின் படியே கூட எளிதாக முடக்க முடியும். ஆனால் அதைச்செய்ய எந்த அரசும் துணியவில்லை என்பதை எந்த ஊடகங்களும் எழுதவில்லை. மேலும் கர்நாடகாவில் இருக்கும் பா.ஜ.க அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அரவணைக்கும் வேலையை செய்து வந்தது. இந்துத்தவா கும்பலில் இருக்கும் தீவிர இளைஞர்களை அணிதிரட்டும் வேலையை இவர்கள் செய்துவருகிறார்கள் என்பது பா.ஜ.க கும்பலுக்கு ஒரு போட்டியாக இருக்கிறது.

காதலர் தினத்திற்கு, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, சிவசேனா என நாடு முழுக்க இவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், இந்த சிறு கும்பல்களை அடக்காமல் அரசு விட்டுவைப்பதும், ஊடகங்கள் இவர்களை பிரம்மாண்டமான சக்தி உடையவர்களாக விளம்பரம் கொடுப்பதும் தான் இவர்கள் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றது.

காசுவாங்கிக் கொண்டு இவர்கள் எதுவும் செய்வார்கள்  என்பது கூட புதிதில்லைதான். ஏனென்றால் விசுவ இந்து பரிஷத்தின் வேதாந்தி கூட ஹவாலா ஊழலில் கேமராவின் முன்னர் சிக்கியவர்தான். விசுவ இந்து பரிஷத் இயக்கம்தான் நாட்டிலேயே மிக அதிகமான வெளிநாட்டுப் பணத்தைப் பெறும் தன்னார்வ அமைப்பாகும். இந்தப் பணத்திற்கு முறையான கணக்குகள் எதுவுமில்லை என்பதுகூட ஊடகங்களில் பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

ஆர்.எஸ்.எஸ் இன் இந்துத்துவ வேகம் போதுமானதல்ல என்ற போட்டியின் விளைவாகத்தான் சிரிராம் சேனா, இந்துமக்கள் கட்சி போன்றோர் தோன்றி பிரபலமாகிறார்கள் என்பது உண்மைதான். ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நேரடியாக மறுகாலனியாதிக்கத்தின் மூலம் பெரும் ஆதாயத்தை அடையும் போது இந்தப் போட்டிக் கூட்டம் இந்துத்தவக் கற்பை முன்வைத்து இப்படி சில்லறை ஆதாயங்களை அடைகிறது. ஐ.பி.எல் ஊழலைக் காப்பதற்கு பா.ஜ.கவின் அருண் ஜெட்லி துணிவதும், பாரதா மாதாவின் கற்பைக் காப்பதற்கு காதலர் தினத்தை சிரிராம் சேன எதிர்ப்பதும் வேறு வேறல்ல.

இந்து மக்கள் கட்சி கூட தமிழ்நாட்டின் சிரிராம் சேனாதான். இந்த காவி லும்பன் கும்பல் சீரிரங்கத்தில் பெரியார் சிலையை இடித்த போதும், சிதம்பரத்தில் தீட்சிதர்களோடு சேர்ந்து கொண்டு தமிழுக்கு எதிராக களம் இறங்கிய போதும் இந்தக் காலிகளை நாங்கள் களத்தில் எதிர்கொண்டு பாடம் புகட்டினோம். ஆனால் இவர்களுக்கு தினமணி நடுப்பக்கத்தில் இட ஒதுக்கீடு செய்து ஆராதிக்கிறது. மற்ற பத்திரிகைகளும் இந்து மக்கள் கட்சி எது செய்தாலும் அதற்கு விளம்பரம் அமைத்துக் கொடுக்கின்றன.

பிரபலமே ஆகாத கவிஞர்களும், ஓவியர்களும் தமிழகத்தில் பிரபலமாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இந்து மக்கள் கட்சிக்கு ஒரு போன் போட்டு டீல் பேசினால் போதும். மிச்சத்தை அவர்களும், ஊடகங்களும் பார்த்துக் கொள்வார்கள். இந்திய அளவில் பிரபலமாக வேண்டுமென்று சொன்னால் அது சீரிராம் சேனாவிடம் போக வேண்டும். அது எப்படி என்பதைத்தான் இப்போது காமராவில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

புதிய ஜனநாயகம் – மே, 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!


புதிய ஜனநாயகம் மே 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. பத்திரிகை செய்தி “மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!” -மாநில அமைப்புக் கமிட்டி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)-இன் எட்டாவது பிளீனச் சூளுரை.
  2. சிதம்பரத்தின் காட்டுவேட்டைக்கு மாவோயிஸ்டுகளின் பதிலடி
  3. பசியைப் போக்குமா? பட்டினியில் தள்ளுமா?
  4. ரவுடி போலீசாருக்கு அரணாக நிற்கும் கருணாநிதிக்குக் கருப்புக் கொடி! வழக்குரைஞர்களின் கலகம்!
  5. கோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!
  6. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமா? ஏகாதிபத்தியக் கைக்கூலி நிறுவனமா?
  7. நக்சல்பாரி புரட்சி நாயகன் தோழர் கனு சன்யாலுக்கு வீரவணக்கம்!
  8. இராணுவச் செலவு அதிகரிப்பு: நாட்டு மக்களைப் பாதுகாக்கவா?
  9. முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராகக் குலுங்கியது புதுச்சேரி!
  10. “கழுதைக்குத் தெரியுமா? கற்பூர வாசனை?” -தியாகிகள் நினைவிட இடிப்புக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம்.
  11. நிதிச் சூதாட்டத்தால் திவாலானது கிரீஸ்!
  12. “டி.ஆர்.பாலுவின் சாராய ஆலைக்கு எதிரான வடசேரி மக்களின் போராட்டம் ஓங்கட்டும்!” -அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.
  13. முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு விழுந்த முதல் அடி! ஓசூர் கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர் போராட்டம் வெற்றி!
  14. பாசிச மோடிக்குப் புரியுமா, ஒரு தாயின் பரிதவிப்பு!
  15. காவிக் கறை படிந்த தீர்ப்புகள்
  16. இருதலைக் கொள்ளி எறும்பாய் ஐதராபாத் நகரம்
  17. காமுகர்களின் கூடாரமாகக் கத்தோலிக்கத் திருச்சபை!
  18. பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் வேட்டைக் காடாகிறது இந்தியா!
  19. “மின்கட்டண உயர்வைத் திணிக்க கருத்துக் கேட்பு நாடகமாடாதே!” -புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்

புதிய ஜனநாயகம் மே 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

பட்டினிச் சாவின் விளிம்பில் இந்தியக் குழந்தைகள்: நாட்டிற்கே அவமானம்!

  • உலகெங்கிலும் உள்ள ஏழை நாடுகளில் வயதுக்கு ஏற்ற வளர்ச்சியின்றி வாழும் ஐந்து வயதுக்குக் கீழான குழந்தைகளின் எண்ணிக்கை 19.5 கோடி.
    இதில் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 6.1 கோடி குழந்தைகள் வயதுக்கு ஏற்ற வளர்ச்சியின்றி உள்ளனர்.
  • உலகெங்கிலும் உள்ள ஏழை நாடுகளில் உயரத்துக்கு ஏற்ற எடையின்றி வாழும் ஐந்து வயதுக்குக் கீழான குழந்தைகளின் எண்ணிக்கை 7.1 கோடி.
    இதில் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 2.5 கோடி குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடையின்றி உள்ளனர்.
  • உலகெங்கிலும் உள்ள ஏழை நாடுகளில் வயதுக்கு ஏற்ற எடையின்றி வாழும் ஐந்து வயதுக்குக் கீழான குழந்தைகளின் எண்ணிக்கை 12.9 கோடி.
    இதில் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 5.4 கோடி குழந்தைகள் வயதுக்கு ஏற்ற எடையின்றி உள்ளனர்.

ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த பல ஏழை நாடுகளை விட, “வல்லரசு” இந்தியா பட்டினி இந்தியாவாக இருக்கிறது என்பதைத்தான் இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
ஒருபுறம்,  நிரம்பி வழியும் இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகள்; இன்னொருபுறமோ, பல கோடி இந்தியக் குழந்தைகள் பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ள அவலக் காட்சி.  ஏழைக் குழந்தைகளின் பட்டினியைப் போக்கப் பயன்படாத இந்த உணவு தானியக் கையிருப்பு யாருக்குப் பயன்படப் போகிறது?  அதோ, உணவு தானியங்களை ஏற்றுமதி செய்து அமெரிக்க டாலரைச் சம்பாதிக்கும் “பசியோடு” காத்துக் கிடக்கிறார்கள் முதலாளிகள்; மன்மோகன் சிங்கின் கண்ணசைவிற்காக!

புதிய ஜனநாயகம் – மே 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

கொளத்தூர்: வன்னிய சாதி வெறி ! நேரடி ரிப்போர்ட் !!

213

அறியப்படாத மேற்கு தமிழகத்தின் ஆதிக்க சாதிவெறி!

vote-012சாதிக்கலவரம், சாதிப் பிரச்சினை என்றாலே நம் எல்லோரின் நினைவுக்கு வருவது தென் மாவட்டங்கள்தான். சாதிவெறியர்கள் என்றாலே அது தேவர் சாதிவெறி என்றுதான் நினைவுக்கு வருகிறதே தவிர ஏனைய ஆதிக்க சாதிகள் குறித்த பார்வை பெரும்பாலும் மக்களிடத்தில் எடுத்துச் செல்லப்படவில்லை என்றே தோன்றுகிறது.

முக்கியமாக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இருக்கும் ஆதிக்க சாதிவெறியர்களின் கொடுமைகள் அதிகம் பேசப்படுவதில்லை. அப்படித்தான்  கொங்கு பகுதிககளில் நடக்கும் சாதிக்கொடுமை சந்திக்கு வருவதே இல்லை. கொங்குப் பகுதிகளில் அதிகம் வசிக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் வன்னியர்களை கவுண்டர் என்று இன்றளவும் அழைப்பதில்லை.

ஆனால் வன்னியர்கள் அதிகம் வாழும் கொங்கு மண்டலத்தின் வடபகுதியில் கவுண்டர் என்றால் அது வன்னியரையும் குறிக்கிறது. “கவுண்டர்ன்னா வெள்ளாளக்கவுண்டரா?” என்று கேள்வி கேட்டால் அவர்கள் முகம் கோணலாகி இல்லை படையாச்சி என்று செருமுவதை பல இடங்களில் கேட்க முடியும். என்னதான்  பணக்காரனாயிருந்தாலும் வன்னியர்கள்,  கொங்கு வேளாளக் கவுண்டருக்கு முன் ‘கீழ்சாதி’தான். வேளாளக் கவுண்டர்கள் “பள்ளி பசங்க” என்று வன்னியர்களை திட்டுவது சாதரணமான ஒன்று.

ஒரு தலித் “என்னா கவுண்டரு” என்று கேள்வி கேட்க முடியாது. ஆனால் ஒரு வேளாளக் கவுண்டர் “ஓ படையாச்சியா? பள்ளியா?” என்று கேள்வி கேட்க முடியும்.  தலித் அல்லாத சாதிக்காரர்கள் என்ன கவுண்டரே என்றால் வன்னிய சாதிக்காரர்களுக்கு ஒரே பெருமைதான். பார்ப்பன இந்து மதம் என்பதே வலம்புரி ஜான் சொன்னதைப்போல தனக்கு மேல் கால்களையும் தனக்கு கீழ் தோள்களையும் எப்போதையும் தேடும்.

ஆதிக்க சாதி என்பதே அடித்து வீழ்த்தப்பட வேண்டியதுதான் அதில் முற்போக்கு இருக்க முடியுமா? இதோ நாங்கள் இருக்கிறோம் என்கிறது வன்னியர் சங்கம். ராமதாஸ் ஒரு முறை சொன்னார் “வன்னிய சங்கம் மட்டும் சாதி வெறியற்றது. நாங்கள் எங்களுக்காக மட்டுமா போராடினோம்? மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வண்ணார், நாவிதர், மருத்துவர் எல்லா சாதிகளையும் நாங்கள்தானே கொண்டு வந்தோம்”.

வன்னியர் சாதி ஆதிக்க சாதியா என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை.  ஒரு முறை என்னுடைய தென் மாவட்டத்து நண்பர் சொன்னார் “வன்னியர் சாதியெல்லாம் ஒடுக்கப்படுற சாதிதான” அவருடன் 3 மணி நேரத்துக்கு மேல் வன்னிய சாதிவெறியினை விளக்க வேண்டியிருந்தது. சாதி ஆதிக்கத்துக்கு தேவர் என்றோ,  நாடார் என்றோ, வன்னியர் என்றோ எதுவும் தெரியாது. தன் கோரப்பற்களால் உழைக்கும் மக்களை கடிப்பது மட்டும்தான் தெரியும். வன்னியர் சாதி ஆதிக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள நாமும் இப்போது அந்தக் கிராமத்துக்குள் நுழைவோம்.

கொளத்தூர் வட்டாரத்தில் கோலேச்சும் வன்னிய சாதிவெறி!

கொங்கு மண்டலத்தின் வடபகுதியில் உள்ள சேலம் மாவட்ட எல்லையையும் ஈரோடு மாவட்ட எல்லையையும் கொணடதுதான் கொளத்தூர். கொங்கு வெள்ளாள கவுண்டர்களும், வன்னியர்களும் பெரும்பான்மையாக வாழும் பகுதி.

கொளத்தூர் இந்தப் பெயரைக் கேள்விப்பட்டவுடனே பலருக்கும் தோன்றும் நினைவு “அட நம்ம வீரப்பன் ஊரு தான”. அது உங்கள் நினைவாயிருக்கலாம். ஆனால் “நம்ம” என்ற வார்த்தை இங்கு வன்னியர்கள் மட்டும்தான் உபயோகிப்பார்கள். கொளத்தூர் பேருந்து நிலையத்தில் பெரிய டிஜிட்டல் போர்டு இருக்கிறது பாருங்கள். அதில் வீரப்பன் படத்தைப் போட்டு “10 லட்சம் மானமுள்ள வீர வன்னியர்களே சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்” என்ற வாசகம் உங்கள் கண்ணுக்கு புலப்படுகின்றதா?

இங்கு மட்டுமல்ல  சேலம் மாவட்டம் முழுக்க வீர வன்னியன் வீரப்பகவுண்டரு படத்தோடுதான், அய்யாவின் படமும் சின்ன அய்யாவின் படமும் இருக்கின்றது. வீரப்பனை தமிழனென்றும், தமிழக விடுதலையை சாதிக்க வந்த போராளி என்றும் கற்பனையில் இன்பம் தேடும் தமிழ்தேசக் குஞ்சுகள் ஒரு எட்டு கொளத்தூர் சென்று பார்க்கவும்.

கொளத்தூரைச் சுற்றி நூற்றுக்கணக்கான கிராமங்கள் இருக்கின்றன. தனிக்குவளை முறை அவ்வப்போது ஒழிக்கப்பட்டதாக சொல்வார்கள். வெளியூர்க்காரன் யார் வந்தாலும் அங்கு டிஸ்போசபிள் டம்ளர் தான். எந்த ஊரில் இறங்கினாலும் புதிய நபர்  எந்தப்பக்கம் செல்கிறாரோ அது அவரின் ஜாதியாக இருக்கலாம். நீங்கள் தவறாக தலித் குடியிருப்புக்குள் சென்று விட்டு பேருந்து நிறுத்தத்தில் வந்து முகவரி விசாரித்தால் கிடைக்கும் மரியாதை அமோகமாக இருக்கும்.

இக்கிராமத்தில் ஒரு தாழ்த்தப்ப்ட்ட மருத்துவர் ஒருவர் அரசு மருத்துவராக பணி புரிந்தார். அவர் ஊசி போடும் போது வன்னியர்களின் மீது கை படுவதால் பறையன் கை படையாச்சி மீது படுவதா என்று” அங்கு வேலை செய்த பெண்ணை வைத்து மருத்துவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி அவரை விரட்டியடித்தார்கள் வன்னிய வெறியர்கள். இதைப்போல பல நிகழ்ச்சிக்கு பேர் வாய்ந்ததுதான் கொளத்தூர் கிராமங்கள்.

நான் ஒருமுறை  கொளத்தூரை ஒட்டிய கிராமங்களில் ஒன்றிற்கு சென்ற போது என் நண்பர் என்னை பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவுடன்  மேற்கு பக்கம் வரச் சொன்னார். நான் இதை மறந்துபோக நிறுத்தத்தில் இறங்கி அவரின் பேரைச் சொல்லி “இந்த வேலை செய்கிறார் எந்தப்பக்கம் போக வேண்டும்” என்றேன். வந்த பதிலே “தெரியாது இடத்தைக் காலி பண்ணு” என்றதுதான்.

கருங்கலூர் துப்பாக்கி சூடின் பின்னணி!

இதோ இது தான் கருங்கலூர். இங்குதான் கடந்த 16-ம் தேதி  துப்பாக்கி சூடு நடைபெற்றது. பா.ம.கவின் கோ.க.மணி இது குறித்து சட்டசபையில் கூட பேசினார்.  பத்திரிக்கைகளில் கூட துப்பாக்கி சூடு ஏன் நடந்தது என்பது பற்றி விரிவாக போடவில்லை. கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கி சூடு, இரு சமூகத்துக்குள்ளே மோதல் இவை தான் செய்தியாக வந்தன.

ஆனால் உண்மை என்ன என்பதை அறிய காலம் அதிகம் பிடித்து விட்டது. காரணம் கடந்த 15.04.10 முதல் 24.04.10 வரை மேட்டூர் – கோவிந்தப்பாடி-க்கு பேருந்து மாலை 5 மணிக்கு மேல் இயக்கப்படவில்லை. நேற்று(25.04.10) அன்று இயக்கப்பட்டதாக சொன்னாலும் பாதுகாப்புடனே சென்றது. 24-ம் தேதி வரை கொளத்தூர் – கோவிந்தப்பாடி வரையிலான கிராமங்களில் போலீசுப்படைகள் குவிக்கப்படிருந்தன. 25ம் தேதிதான் கருங்கலூர் தவிர மற்ற கிராமங்களில் போலீசுப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. தாக்குதல் நடந்த கருங்கலூரில் தற்போது போலீசு குறைக்கப்பட்டிருக்கின்றது.

வன்னிய சாதி வெறியர்களைப் பொறுத்தவரை”பறையனுங்க வேணாமுன்னு தான நாங்க இருக்கோம், எதுக்கும் அவுனுங்கள கூப்புடறதுல்ல, தள்ளி வச்சிருக்கோம் , சும்மா மரியாத கொடு , மரியாத கொடுன்னு தேவையில்லாம பிரச்சினை பண்றாங்க. பெரியவங்க முன்னாடி கால் மேல கால் போட்டுகிட்டு இருக்கானுங்க, பெரியவங்க முன்னாடி சிகரெட்டு குடிக்கறாங்க புகைய வுடுறானுங்க” இது தான் அவர்கள் குற்றச்சாட்டு.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இக்கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் ஊருக்குள் செருப்பு அணிந்து போகக்கூடாது, குடைபிடித்து போகக்கூடாது, வன்னியர் வந்தால் மரியாதை தரவேண்டும், சைக்கிளில் செல்லக்கூடாது என எல்லா கொடுமைகளும் நடந்தது. தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் வன்னிய நாட்டமைகள்தான் வருவார்கள். தீர்ப்பு சொல்வார்கள். பின்னர் இப்பகுதி இளைஞர்கள் தங்களை அப்போது உருவாகிக்கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகளில் இணைத்து சாதி ஆதிக்கத்தை எதிர்த்து வந்தனர்.

அடிவாங்கிக்கொண்டே இருந்த அவ்விளைஞர்கள் அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும் என்று பேசவும் ஆரம்பித்தார்கள். முன்பெல்லாம் சாதாரணமாக 19 வயது வன்னிய பெரியவருக்கு மரியாதை தராத 60 வயது பறைய சின்னக்குழந்தைக்கு அடி விழும். இப்போதெல்லாம் அப்படி நடப்பதில்லை. நாம் அடித்தால் அவர்களும் அடிப்பார்கள் என்ற எண்ணம் வன்னிய வெறியர்களின் மத்தியில் வேர்விட்டவுடனே, இவர்களை எப்படியாவது ஒழித்துக்கட்டவேண்டுமென்று ஒவ்வொரு வருடம் திருவிழாவின் போதும் முயற்சி நடக்கும். சில முறை அப்படிப்பட்ட நிகழ்வுகள்  அரங்கேறி இருக்கின்றன. இந்த ஆண்டு அந்த ஆதிக்க சாதிவெறி அப்பட்டமாக வெடித்துவிட்டது.

இந்தப்பறையர்கள் தான் நாம் என்ன சொன்னலும் கேட்பதில்லையே அவர்களுக்கு ஏன் நாம் வேலை தர வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக சமூகப்புறக்கணிப்பு  விரிக்கப்பட்டது. எப்போதும் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைவதற்கு அனுமதியில்லை, அவர்களுக்கு முடி வெட்டுவதற்கு இங்கு எந்த சலூனும் திறக்கப்படவில்லை. தலித்துக்கள் முடி வெட்ட வேண்டுமானால் கொளத்தூருக்குத்தான் வரவேண்டும். அதுவும் இல்லை எனில் சேரிகளிலேயே முடி வெட்ட தாழ்த்தப்பட்டவரிலேயே ஒருவர் இருக்கிறார். இது அனைத்து கொளத்தூர் கிராமங்களிலும் தொடர்ந்தாலும் கருங்கலூருக்கு சீக்கிரம் திருவிழா வந்து விட்டதால் சீக்கிரமே தாக்குதலும் நடந்து விட்டது.

கருங்கலூர் வன்னிய நாட்டமைகள்  தீர்ப்பு சொன்னார்கள் ” நமக்கு அடங்காத பறையனுங்க இனிமே கோயில் விழாவுக்கு மேளம் அடிக்க கூடாது ,சக்கிலிங்கள வச்சு மேளம் அடிச்சுக்கலாம் “.  திருவிழாவின் முதல் நாள் முடிவில் ஆதி திராவிடர்கள் சிலர் மேளம் அடித்த அருந்ததியர்களிடம் “ஏன் நீங்கள் மேளம் அடித்தீர்கள்?” என்று தகராறு செய்ய, அது வாய்ச்சண்டையில் முடிந்திருக்கிறது.

சில அருந்ததியர்கள் வன்னியர்களிடம் ” நீங்க அடிக்க சொன்னீங்க, அவங்க சண்டைக்கு வராங்க ” என்று சொன்னவுடன் தாக்குவதற்காகவே காத்திருந்த வன்னிய வெறியர்கள் 15ம் தேதி காலை 8 மணியளவில் பா.ம.க கவுன்சிலர் மாரப்பன் தலைமையிலான 200 பேர் கொண்ட கும்பல்  கருங்கலூர் ஆதி திராவிட குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகளை அடித்து நொறுக்குகிறது. 7 பேருக்கு பலத்தக்காயம். அடித்து முடித்த கும்பல் ஆதிதிராவிட குடியிருப்பிற்குள் யாரும் நுழையாதவாறு முற்றுகையிடுகிறது. ஆளும் கட்சி போன் பண்ணுனா உடனே வரும் 108 ஆம்புலன்ஸ் ஊருக்கு வெளியே நான்கு மணி நேரமாக காத்துக் கொண்டிருந்தது.

வன்னியர்களின் தயவில்லாததால் மருத்துவம் பறையர்களுக்கு கிடைக்கவில்லை. தகவல்  கொளத்தூர் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கு தெரிய வர வேறு வழியின்றி அவர்கள் டயர்களை கொளுத்தியும், பேருந்துகளை உடைத்தும் தாக்குதல் சம்பவத்தை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் கொளத்தூர் போலீசு தனது ஜீப்பில் போய் காயமடைந்தவர்களை மீட்டுக்கொண்டு வந்தது. உள்ளூர் வி.சி.யினர் பிரச்சினையை அதிகப்படுத்துவார்கள் என்றெண்ணிய காவல் துறை 16ம் தேதி காலை  கருங்கலூருக்கு வந்தது கவுன்சிலர் மாரப்பன் உட்பட மூவரை கைது செய்ய வந்தது. வஜ்ரா வாகனக்கள் அணிவகுத்து வரிசையாய் நின்றன.

வெறியூட்டப்பட்ட வன்னிய மக்கள் மாதேஸ்வரன் மலைப்பாதையை மறித்து மறியலில் இட்டுபட்டு சாலையில் இருந்த ஒரு லோடு ஜல்லி கற்களையும் போலீசுப் படை மீது வீசித் தாக்குதல் நடத்தியது. ஓடிய காவலர்கள்  துரத்தி துரத்தி மண்டையுடைக்கப்பட்டனர்.

பின்னர் துப்பாக்கிசூடு 9 ரவுண்ட் என்று சொல்லப்படுகின்றது. அதில் காயமடைந்த சின்ன துரை மட்டும் அரசு மருத்துவ மனையில் இருக்க, இன்னும் சிலர் வெளியூரில் ரகசியமாய் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பா.ம.க தலைவர் ஜீ.கே.மணி “சின்ன சின்ன பிரச்சினைக்கெல்லாம்  துப்பாக்கி சூடென்று” அரசை குற்றம் சாட்டினார்.

எது சின்ன பிரச்சினை? தாழ்த்தப்பட்ட மக்களின் வீடு புகுந்து அடிப்பது சின்ன பிரச்சினையா? அவர்களுக்கு (கொளத்துர் தவிர) கொளத்தூர் கிராமங்களில் கோயிலிலே நுழைய அனுமதி இல்லை, தீ மிதிக்கவோ, கரகம் எடுக்கவோ அனுமதி இல்லை, கருங்கலூர் – கோவிந்தப்பாடி வரை தாழ்த்தப்பட்டவர்களுக்கு முடி வெட்ட சலூன் கடைகள் மறுப்புத் தெரிவிக்கின்றன. இதெல்லாம் சிறிய பிரச்சினைதானே ‘சத்திரியர்களுக்கு’?

ஆதிதிராவிடர்கள் மீது தாக்குதலும் தொடுத்துவிட்டு புது புரளியை கிளப்பி விட்டு இருக்கிறார்கள் பா.ம.கவினர். “சக்கிலிங்கள பறையனுங்க வூடு பூந்து அடிச்சுட்டனுங்க, பாவம் சக்கிலி பொம்பளங்க  சிலமண்டையெல்லாம் உடஞ்சு போச்சு, நாங்க ஏண்டா இப்படி பண்ணுறீங்கன்னு சும்மா அவங்க ஊட்டுல போய் ரெண்டு அறை விட்டோம் அவ்வளவுதான், இதை என்னவே பெரிய பிரச்சினையாக்கிட்டாங்க இந்தப்பசங்க ”

ஆதி திராவிடர்களுக்கும் அருந்ததியர்களுக்கும் இடையில் மோதல் ஏதும் நடக்கவில்லை,  அப்படி நடந்தாலும் உன்னை யார் நாட்டாமையாக்கியது? சில ஆண்டுகளாக நடக்காத தாக்குதல் ஏன் இம்முறை நடந்தது?

கருங்கலூர் வன்னிய சாதிவெறியை எதிர்க்கும் தலித் இளைஞர்கள்!

இப்பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆதி திராவிட இளைஞர்கள் அதிகமாவும் அருந்ததியர்கள் சிலரும் இருக்கின்றனர். அருந்ததியர்களைப் பொறுத்தவரை போதிய அளவுக்கு விழிப்புணர்வு இல்லாதிருப்பதாக கூறப்படுகின்றது. பறையர்கள் வன்னியர்களின் மேலாதிக்கத்தை தொடர்ந்து எதிர்த்து வருவது  அவர்களின் கோபத்தை கிளறிக்கொண்டிருந்தாலும் அருந்ததியர்களும்  ஆதிதிராவிடர்களோடு சேர்ந்து எதிர்க்க ஆரம்பித்ததுதான் இத்தாக்குதலுக்கு காரணம்.

சுமார் 2 மாதங்களுக்கு முன்பு அருந்ததிய இளைஞன் ஒருவர் அந்தியூரை சேர்ந்த வன்னிய பென்ணை காதலித்து கூட்டிக்கொண்டு வர, அந்தியூர் பா.ம.க மூலமாக கவுன்சிலர் மாரப்பனுக்கு தகவல் வர,அதற்குள் பயந்து போன இளைஞனின் தந்தை மாரியப்பன் “பையன் தெரியாம கூட்டிட்டு வந்துட்டான் பொன்ணை கூட்டிட்டு போயிடுங்க” என்றிருக்கிறார். அதற்குள் இளைஞனும் அப்பெண்ணும் காவேரிபுரம் விடுதலை சிறுத்தைகளிடம் தஞ்சம் புகுந்து விட்டனர்.

காவேரிபுரம், வி.சிக்களின் செல்வாக்கான பகுதி என்பதால் பா.ம.க  வன்னிய வெறியர்கள்  மாரியப்பனின் வீட்டை அடித்து நொறுக்கி அவரின் மனைவி மற்று இரு உறவினர்களை பலமாக தாக்கியிருக்கின்றனர். பின்னர் அவரின் ஆடு, மாடு, டி.வி.எஸ் வண்டியை திருடிக்கொண்டு போயிருக்கின்றனர். இதை ஒளிந்திருந்து பார்த்த மாரியப்பன் வி.சிக்களிடம் சொன்னவுடன், அவர்கள் அடுத்த நாள் ஈரோடு சாலையில் 3 மணி நேரம் மறியல் செய்கிறார்கள். வேறு வழியின்றி மாரப்பன் உள்ளிட்ட சிலர் மீதி பி.சி.ஆர் வழக்கு போடப்படுகின்றது. ஆனால் மாரப்பனோ கைது செய்யப்படாமல் சட்டத்தில் ஓட்டைகளை வைத்து போலீசின் உதவியால் எப்படியோ முன்ஜாமீன் பெற்று விட்டு தப்பிக்கிறார்.

“வன்னிய பொண்ணை சக்கிலி தொட்டுட்டான் என்பதுதான்  பிரச்சினை, அதுவும் பொண்ணை மீட்க முடியாதிருப்பது வன்னியர்களுக்கு மாபெரும் அவமானம், இன்னும் அவர்கள் ஏதோ ஒரு ஊரில் வாழ்ந்து கொண்டிருப்பது மிகக் கேவலம்”. அதற்கு சின்ன பரிகாரம் பறையர்களின் மீதான தாக்குதல். நாங்க சொல்றதக் கேட்டுக் கொண்டு இருந்தால் ஏன் இந்தப்பிரச்சினை? என்கிறார்கள் வன்னிய சாதி வெறியர்கள்.

இதில் கவனிக்கத்தக்க இன்னொரு விசயம் இருக்கிறது. இது கூட எதேச்சையாக பேருந்தில் ஒருவர் பேசியதைக் கேட்டதுதான் “டி.எஸ்.பி தாழ்த்தப்பட்ட சாதிதான , அவரு போன முறை அந்தப் பையன் வன்னிய பொண்ணை கூட்டிக்கிட்டு வந்தப்போ பாதுகாப்பு கொடுத்தார், டி.எஸ்.பி நம்மாளுங்க கையை பிடிச்சு ஜீப்புல ஏத்துறத பார்த்தவுடனே நம்மாளுங்க செம டென்சன் ஆயிட்டாங்க, போலீசுக்கு செம அடி”.

இப்போது வன்னியர் சங்கத்தினர் கொளத்தூர் கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களூக்கு மீண்டும் பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.  பிரச்சினை எனில் வழக்குக்கான நிதியை நாம் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்றும் அது  வன்னியசாதிக்கு கடைமை என்றும் சாதிவெறி பரப்பி வருகின்றனர்.

உழைக்கும் மக்களின் பிரச்சினையைத் திசைதிருப்பும் வன்னிய சாதிவெறி!

வீரப்பன் தேடுதல் வேட்டையில் அப்பாவி மக்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள். சோளகர் தொட்டி என்ற நூல்  சித்திரவதைகளின் சில பக்கங்கள்தான். வீரப்பனின் கூட்டாளி என்று சந்தேகித்து தினமும் பலரை இழுத்து வரும் அதிரடிப்படை அவர்களை தினமும் உதைத்துக் கொண்டே  இருக்கும். அப்படி அடிபட்டவனில் ஒருத்தன் கூட வன்னியன் இல்லையா, அந்த சித்திரவதை முகாம்கள்  அருகில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்குமா வன்னியர் சங்கம்?

கொளத்தூர் கிராமங்களில் விவசாயம் அறவே இல்லை, விவசாயம் செத்துப்போய் விட்டதே, நம் வாழ்வினை பறித்து விட்டார்களே என்ற கோபம் அரசாங்கத்துக்கெதிராக எப்போதும் வருவதில்லை. பி.டிபருத்தியை பயிரிட்டு நாசாமாய்ப்போன வன்னியனை எப்போதும் வன்னியர் சங்கம் முகர்ந்து பார்ப்பதில்லை. ஆனால் பறையன் கால்மேல் கால் போட்டால் கோபம் வரும். மக்களைத் தின்னும் ஆளும் வர்க்கத்துக்கெதிராக எப்போதும் தூக்கப்படாத அரிவாள், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமையைக் கேட்கும் போது சீறிப்பாய்ந்து வருகிறது.

“வடமாவட்டம் முழுவதும் வன்னியர்கள் ஏமாற்றப்படுகிறார்கள், இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்து, எங்களுக்கு உள் ஒதுக்கீடு கொடு” என்ற போர்வையில் வன்னிய வெறி பரப்பும் பா.ம.கவினர், இந்த தனியார்மய தாராளமய உலகமய சூழலில் இட ஒதுக்கீடு செல்லாக்காசுதான் என்பதைப் பற்றி பேச மறுக்கின்றனர். கல்லூரிகளில் படிக்க லட்சக்கணக்கில்  செலவு, தனியார்மயத்தின் விளைவால் மூடப்பட்ட ஆலைகளால் துரத்தப் படும் தொழிலாளர்கள்  இது எதைப்பற்றியும் பா.ம.க மற்றும் எந்த சாதிச்சங்கமும் பேசுவதில்லை. ஏன் பேசுவதில்லை என்பதல்ல, அவர்கள் பேச மாட்டார்கள் என்பதுதான் உண்மை.

மேட்டூரில் CPM பொரட்சி கட்சியின் சி.ஐ.டி.யூ தான் மிகப்பெரிய தொழிற் சங்கம். ஏற்கனவே தோலர் சீரங்கன்  சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். மாவட்டச்செயலாளரும் இந்த மேட்டூர் தான். இந்தப் பிரச்சினையைப்பற்றி அவர்களுக்கு பேசவே நேரம் இல்லை. மேடை போட்டு எவ்வளவு அழகாக செயாவுக்கு சேலை துவைக்கிறோம் என்று சொல்லவே அவர்களுக்கு  நேரம் சரியாக இருக்கிறது. தனிக்குவளை முறைக்கெதிராக போராடப்போன அந்த சி.பி.எம் தோலர்களையும் காணவில்லை. ஏற்கனவே கொளத்தூர் கிராமங்களில் தீண்டாமை இருப்பதாக  சவடால் விட்ட தோலர்கள் தற்போது தங்களின் வாய்களை இருக்க மூடிக்கொண்டார்கள்.

வன்னிய சாதி வெறியர்கள் மீதான வழக்கை வாபஸ் வாங்க ஜீ.கே. மணி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். முதல் கட்டமாக அமைதிகமிட்டி அமைக்கப்பட்டு 21-ம்தேதி திருவிழா தொடங்கப்பட்டு முடிந்தும் விட்டது. வருகின்ற வாரத்தில் அரசு மூலமாக வழக்குகள் பைசல் செய்யப்படும் என்று தெரிகிறது. இது பற்றி திருமாவளவன் ஏதும் அறிக்கைகூடவிடவில்லை.

ஆளும் வர்க்கங்களிடம் சரணடைந்த விடுதலைச் சிறுத்தைகள்!

இந்த ஆதிக்கத்துக்கெதிராக போராடும் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் விடுதலை சிறுத்தைகள் என்ற ஆளும் வர்க்கங்களிடம் சரண்டைந்த கட்சியில் இருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். சுமார் 4 அண்டுகளுக்கு முன்  வன்னியர் தலித் பிரச்சினை தீவிரமாக இருந்த போது தேர்தலும் வந்தது. ஜி.கே மணி மேட்டூர் தொகுதியில் வேட்பாளராக நின்றார். அவருக்கு வி.சிக்கள் ஓட்டு சேகரித்தனர். பெரும்பான்மை தலித் மக்கள்  பா.ம.கவிற்குத்தான் வாக்களித்தனர். “சாதிவெறி எல்லை மீறிபோன இங்கு பா.ம.கவோடு எங்களால் எப்படி இணைந்து வேலை செய்ய முடியும்? இதோ இப்போது கைகுலுக்கிக்கொண்டால் சாதி பிரச்சினை ஒழிந்து விடுமா?” என்று யாரும் கேட்கவில்லை.

சட்டசபையில் சின்ன பிரச்சினை என்று ஜி.கே மணி பேசும் போது  வி.சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் என்ன செய்து கொண்டிருந்தார்?  வன்னியர்கள் மீதான துப்பாக்கிச்சூடு என்று இதை மாநில பிரச்சினையாக்கினார் ஜி.கே.மணி. அப்போது திருமா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது கட்சியினருக்கு தெரிகிறதா என்பதும் புரியவில்லை.

சாதி ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்கள் வி.சிக்களால் தொடர்ச்சியாக நடத்தப்படுவதில்லை. அவர்களுக்கு திருமாவளவன் புகழ் பாடவே நேரம் சரியாக இருக்கும். வி.சி கட்சிக்கு இப்போதைய  வேலையே கட்டப்பஞ்சாயத்துதான். உழைக்கும் மக்களிடமிருந்து அவர்கள் வெகுதூரம் விலகிப்போய்விட்டார்கள். ஆதிக்கத்துக்கு எதிராக தொடர்ச்சியாக போராடும் தருணங்களிலே ஒரு தேர்தல் வரும். தேர்தலில் எதை எதிர்த்துப் போராடுகிறார்களோ அதற்காக ஓட்டு கேட்கும் அவலமும் நடைபெறும். இந்த இலட்சணத்தில் விடுதலை எப்படி?

இப்படி பாதிக்கப்படும் இளைஞர்கள் போராடினால் அவை கட்சியின் துரோகத்தால் முற்று பெறாமலே போய்விடுகிறது. சாதிவெறியை ஒழிப்பதோ, சாதியை ஒழிப்பதோ அவ்வப்போது எடுக்கப்படும் தாக்குதலுக்கான எதிர் போராட்டத்தால் மட்டும் முடியாது. அது தொடர்ச்சியாக முனைப்புடன் அரசியல், பண்பாட்டு, கலாச்சார வடிவங்களில் ஊன்றி இருக்க வேண்டும். அதன்படி வி.சி இயக்கம் மூலம் சாதி ஒழியும் என்பது பகற்கனவே.

ஆனால் தாழ்த்தப்பட்ட இந்த இளைஞ்ர்கள் திருமாவைபோல கருணாநிதி வீட்டிற்கும், ஜெயா தோட்டத்திற்கும் சென்று  பொறுக்கித் தின்னவில்லை. பாதிப்பு இருக்கும் வரை எதிர்தாக்குதலும் இருக்கும் என்பதுதான் நியதி . அவ்வகையில் அவர்களின் ஆதிக்கத்துக்கெதிரான போரில் பிற உழைக்கும் மக்களும், புரட்சிகர – ஜனநாயக சக்திகளும் அவர்களோடு களமிறங்க வேண்டியது அவசியம்.

______________________________________________________

– சேலம் மாவட்டத்திலிருந்து வினவு நிருபர்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி !!

15

vote-012அமெரிக்காவில் மையம் கொண்ட பொருளாதார சுனாமி ஐரோப்பிய கரைகளை வந்தடைந்துள்ளது.  அட்லாண்டிக் சமுத்திரக் கரையை அண்டிய அயர்லாந்து,  மத்திய தரைக் கடல் நாடுகளான போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி, கிறீஸ்   ஆகிய   நாடுகளும்  சுனாமியின்  அகோரமான  தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. இவற்றில் கிரீசில் ஏற்பட்ட பாதிப்புகள் மட்டும் வெளித் தெரிய ஆரம்பித்துள்ளது. முதன் முதலாக செல்வந்த மேற்கு ஐரோப்பிய வட்டத்தை சேர்ந்த ஒரு தேசம் திவாலாகின்றது. மக்கள் வங்கிகளையும், வங்கிகள் அரசாங்கத்தையும், அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தையும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர்.  யார் குற்றவாளி?

துருக்கி, ஜெர்மனி என்று அந்நிய நாடுகளின் ஆக்கிரமிப்புக்குள் உள்ளாகி சின்னாபின்னமான கிறீஸ், செல்வந்த நாடுகளின் வரிசையில் சேர்ந்த பொருளாதார அதிசயம் எதிர்பாராதது தான்.  பலமான  பொருளாதாரத்தைக்  கொண்ட ஜெர்மனியிடம் இருந்து கடன் பெறக் காத்திருக்கும் கிறீஸ், இரண்டாம் உலகப் போரில் நாஜிகள் திருடிய தங்கத்தை மீட்க முடியாமல் உள்ளது. கேந்திர முக்கியத்துவம் காரணமாக, கிறீஸ் சோஷலிச முகாமில் சேர விடாமல் தடுத்த பிரிட்டன், புராதன கலைப்பொருட்களை இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை.

கிரேக்கம் ஐரோப்பிய நாகரீகத்தின்  தொட்டில் என புகழப்படுவதெல்லாம், பாட நூலில் மட்டும்தான். நாகரீகம் கற்றுக் கொண்ட நாடுகள், தற்போது கிரீசை  அடிமையாக்க  திட்டம்  போடுகின்றன. அந்நிய நாட்டு கடனை வாங்கி ஒலிம்பிக் போட்டி போன்ற ஆடம்பரங்களில் செலவிட்டதால், பொதுநல சேவைக்கு அள்ளிக் கொடுத்ததால், வந்தது இந்த நெருக்கடி என்று திட்டுகின்றன. கொடுத்த கடனை அடைப்பதற்கு 110 பில்லியன் டாலர் கடன் வழங்கப்படுகின்றது. இந்தக் கடனில் ஜெர்மனியின் பங்கு அதிகம்.  ஜெர்மனி நெருக்கடியில் சிக்கிய தனது வங்கிகளின் மீட்சிக்காக ட்ரில்லியன்  யூரோக்களை அள்ளிக் கொடுத்த்து. அதனோடு ஒப்பிடும் போது சகோதர ஐரோப்பிய நாடான கிரீசுக்கு வழங்கியது சொற்பத் தொகை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்தவராக இணையும் நாடுகளுக்கு என்று சில விதிமுறைகள் இருந்தன. வருடாந்த பட்ஜெட்டில் துண்டு விழும் தொகை மூன்று வீதத்திற்கு கூடக் கூடாது. அரசின்  மொத்த  அந்நிய/உள்நாட்டு  கடன்கள் 60 வீதத்திற்கு மேலே அதிகரிக்க கூடாது.மீறினால் அபராதம் விதிக்கப்பட்டது. கிறீஸ் அரசால் ஒரு போதும் அந்த இலக்கை அடைய முடியவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பொய்க் கணக்கு காட்டிக் கொண்டிருந்தது.

மோசடியான கணக்குகளை எழுதுவதற்கு, பொருளாதாரத்தில் சூரப் புலிகளான அமெரிக்க கணக்காளர்களை அமர்த்தியது. அமெரிக்க முதலீட்டு வங்கியான Goldman Sachs அரசாங்கத்தின் கடன் தொகையை குறைத்துக் காட்டி கணக்கை முடித்தார்கள். எப்படி? கிரேக்க அரசின் கடன் பத்திரங்கள் யென், டாலர் நாணயப் பெறுமதிக்கு மாற்றப் பட்டன. அரசாங்கம் கொடுக்க வேண்டிய கடன் நிலுவைகளை எதிர்காலத்தில் கொடுப்பதாக வேறொரு கணக்கில் குறித்தார்கள். மேலதிகமாக Goldman Sachs வங்கியே ஒரு பில்லியன் யூரோ கடனாக கொடுத்து சரிக்கட்டியது.

கிரேக்க மக்கள் கடன் அட்டைகளில் வாழ்ந்து கொண்டிருக்கையில், அரசாங்கம் அந்நியக் கடன்களால் இயங்கிக் கொண்டிருந்தது. நிதி நெருக்கடி தோன்றிய காலத்தில் இருந்தே, வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத மக்கள் கடன் அட்டைகளில் பணம் எடுத்து செலவழிக்கின்றனர். இந்தக் கடனை எல்லாம் எப்போது திருப்பிக் கட்டுவோம் என்பது அவர்களுக்கே தெரியாது. இது நெருக்கடியை இரட்டிப்பாக்குகின்றது. தற்கால கிரேக்க பொருளாதாரம் ஒரு மாயையின் மேலே தான் கட்டப்பட்டிருந்தது.

பாரம்பரிய விவசாய நாடான கிரீஸ், எழுபதுகளுக்குப் பின்னர் விவசாயத்தைக் கைவிட்டது. அதிக வருமானம் ஈட்டித் தரும் உல்லாசப் பிரயாணத் துறையில் நம்பியிருந்தது. இருப்பினும் உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்க அரசு வழங்கிய மானியத்தைக் கொண்டு, விவசாயத் துறையும் மறுமலர்ச்சி கண்டது. அகதிகளாக அல்லது சட்டவிரோதமாக குடியேறிய அல்பேனிய, இந்திய, பாகிஸ்தானிய கூலியாட்கள் வயல்களில் குறைந்த கூலிக்கு வேலை செய்தார்கள். இதனால் கிரேக்க விவசாயிகள் வளமாக வாழ முடிந்தது. தனது நாட்டு விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கும் ஜெர்மனி போன்ற பணக்கார ஐரோப்பிய நாடுகள், கிரேக்க விவசாயிகளுக்கு கொடுத்த மானியத்தை பொருளாதாரத் தவறாக சுட்டிக் காட்டுகின்றன. ஆமாம், கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனைப் போல வாழ நினைக்கலாமா?

இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஜிகளின் ஆக்கிரமிப்பில் இருந்த கிரீசை விடுவிக்க கம்யூனிச கட்சியின் விடுதலைப் படை போராடியது.  எந்த வல்லரசின் உதவியுமின்றி, பெரும்பாலான பகுதிகளை விடுதலை செய்து தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள்.  பெரும்பான்மை  கிரேக்க மக்கள் விவசாய சமூகமாக இருந்தமையும், கம்யூனிஸ்ட்களின் வெற்றிக்கு மூல காரணம். பிரிட்டனின் உதவியுடன்  கம்யூனிசக்  கிளர்ச்சி  முறியடிக்கப்பட்டது.

அதன் பிறகு கிரீஸ் மேற்குலக பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் வந்தது. விவசாய பொருளாதாரம் புறக்கணிக்கப்பட்டு, அந்த இடத்தில் சுற்றுலாப் பொருளாதாரம் புகுத்தப்பட்டது. ஒரு காலத்தில் மீனவ சமூகத்தினர் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த  தீவுகள்  மெருகூட்டப்பட்டன.  பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற பணக்கார ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த உல்லாசப் பயணிகள் கிரேக்க தீவுகளை தமது கோடைகால காலனிகளாக மாற்றினார்கள். அவர்கள் கொண்டு வந்து கொட்டிய பணம் கிரேக்க மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் காரணமாக இருந்தது.

கை நிறையச் சம்பாதித்து வாய் நிறையச் சாப்பிடும் மக்கள், கம்யூனிஸ்ட்கள் சொல்வதைக் கேட்க மாட்டார்கள் என்பது உண்மை தான். சிறிது காலம் தடை செய்யப் பட்டிருந்து, பின்னர் புத்துயிர் பெற்ற கிரேக்க கம்யூனிசக் கட்சியும்  பாராளுமன்ற அரசியல் சாக்கடையில் கலந்து விட்டது. இருப்பினும்  கம்யூனிச அபாயம் கனவில் வந்து மிரட்டினாலும், கிரேக்க அரசு கலங்கிய அப்படியான சந்தர்ப்பங்களில்,” யாமிருக்கப் பயமேன்” என்று ஆட்சியைப் பிடித்தது இராணுவம்.

பாசிசவாதிகளும், தேசியவாதிகளும் நிறைந்திருந்த கிரேக்க இராணுவம், அயல் நாடான துருக்கியைக் காட்டி மக்களைப் பயமுறுத்தி கொண்டிருந்த்து. கிரீசுக்கும் துருக்கிக்கும் ஜென்மப் பகை.  பிற்கால  இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு  தலைமை  தாங்கிய  ஓட்டோமான் துருக்கியர்கள், முழு கிரீசையும் தமது சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக வைத்திருந்தார்கள். கிரேக்க கிறிஸ்தவ மதகுருக்கள் தலைமையில் துருக்கியருக்கு எதிரான விடுதலைப் போராட்டம் நடந்தது.

முதலாம் உலகப் போரின் பின்னர்தான் நவீன கிரேக்க தேசம் உருவானது. அன்றிலிருந்து இன்று வரை தன்னை துருக்கியின் முதன்மை எதிரியாகக் காட்டிக் கொள்வதில், கிரீசுக்கு அலாதிப் பிரியம். நிலப்பரப்பில், மக்கட்தொகையில் பல மடங்கு பெரிதான துருக்கியுடன் இராணுவரீதியாக மோதுவது சாத்தியமில்லை. இருப்பினும் அதைச் சொல்லிச் சொல்லியே ஆயுதங்களை வாங்கிக் குவித்தது. அன்று கிரீசுக்கு  ஆயுதங்களை ஆயுதங்களை விற்றுக் கொண்டிருந்த மேற்குலக நாடுகள், இன்று பொருளாதார பிரச்சினைக்கு அதையே காரணமாகக் காட்டுகின்றன.

கிரேக்கர்களையும், துருக்கியரையும் மதம், மொழி போன்ற அம்சங்கள் பிரித்து வைத்திருந்தாலும், நெருங்கிய கலாச்சார ஒற்றுமைகளை கொண்டுள்ளனர். சராசரி கிரேக்கர்களின் மனோபாவத்தை, மேற்கு ஐரோப்பியருடன் ஒப்பிட முடியாது.  கிறிஸ்தவ மதம் ஒன்றைத் தவிர வேறு எதுவும் அவர்களை பிற ஐரோப்பியருடன் பிணைப்பதில்லை. மத்திய கிழக்கு நாடுகளின் ஒன்றியம் உருவானால், கிரீஸ் அதில் மிகக் கச்சிதமாக பொருந்தும்.  “லஞ்சம், ஊழல் கிரேக்க சமூகத்தை விட்டு இன்னும் அகலவில்லை, அது தான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்…” என்று ஐரோப்பிய பொருளாதார நிபுணர்கள் ஒப்பாரி வைக்கின்றனர். ஐரோப்பிய மத்திய வங்கியும் ஏதோ இப்போது தான் கண்டுபிடித்ததைப் போல பதறுகின்றது.

கிரீசில் சிறிது காலம் வாழ்ந்த அகதிகளுக்கு கூட இதெல்லாம் எப்போதோ தெரியும். அகதித் தஞ்சம் கேட்ட குற்றத்திற்காக சிறை சென்றதும், பணம் கொடுத்து விடுதலையானதும் பல அகதிகளுக்கு அவர்களது தாயகத்தை நினைவுபடுத்தின. சாதாரண கிரேக்க மக்கள் முன்னர் லஞ்ச, ஊழல் பிரச்சினை குறித்து முறையிடவில்லை என்பது உண்மைதான். நமது நாடுகளில் லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்துக் கொள்ளும் மத்திய தர வர்க்கத்தைப் போலத்தான் சராசரி கிரேக்கர்களும் வாழ்ந்தார்கள். லஞ்சப் பேய் ஒரு காலத்தில் தமது இருப்பிற்கே ஆப்பு வைக்கும் என்பதை காலம் தாழ்த்தித்தான் புரிந்து கொண்டார்கள்.

நல்லது. தற்போது எழுந்துள்ள பொருளாதார பிரச்சினைக்கு என்ன தீர்வு? ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை சீர்குலைக்கும் கிரீசை வெளியேற்றி விடலாம். மேற்குலக முதலீட்டு வங்கிகள், அரசாங்கத்தின் கடன்பத்திரங்களில் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.  அரை வாசித் தொகை திருப்பித் தரப் படும் என்று ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. மிகுதி அரைவாசி யார் தருவார்கள்? சந்தேகமில்லாமல் கிரேக்க பிரஜைகள் தான். தமது சம்பளத்தை, ஓய்வூதியத்தை குறைத்து, காப்புறுதிகளுக்கு அதிக கட்டுப்பணம் கட்டி, வங்கிச் சேவைக்கு அதிக கட்டணம் செலுத்தி, கடனை அடைப்பார்கள்.

இந்த நிபந்தனைகளுக்கு கிரேக்க பாராளுமன்றத்தில் ஆளும் சோஷலிசக் கட்சியும், தீவிர வலதுசாரிக் கட்சியும் ஒப்புதல் அளித்துள்ளன. இவையெல்லாம் கிரேக்க மக்களை ஆத்திரமுற வைத்ததில் வியப்பில்லை. இன்றைக்கும் தமது லாபத்தை குறைத்துக் கொள்ளாத முதலாளிகளும், ஆடம்பரங்களைக் குறைத்துக் கொள்ளாத பணக்காரர்களும் கடன் சுமையை பொறுப்பேற்க வேண்டும். தேசத்தின் தவறான முகாமைத்துவத்திற்கு இவர்கள் காரணமில்லையா? அதிகம் படித்த கணக்கியல் நிபுணர்கள் தானே கணக்கில் மோசடி செய்தார்கள்? சிக்கலான பொருளாதார சூத்திரமெல்லாம் சாதாரண பொதுமகனுக்கு புரியாத சிதம்பர ரகசியம். ஆயினும் அப்பாவி பொது மக்கள் தான் பொருளாதார பிரச்சினைக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

கிரீசின் பொருளாதாரப் பிரச்சினை யூரோ நாணயத்தை பாதிக்கின்றது. இது ஒரு வகையில் நன்மையை தந்தாலும், நீண்ட கால நோக்கில் தீங்கு விளைவிக்கலாம். யூரோ நாணயத்தின் பெறுமதி குறைந்துள்ளதால் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளுவதற்கு வழிவகுத்துள்ளது. ஆயினும் பணக்கார ஐரோப்பிய நாடுகள் மட்டுமே இதனால் லாபமடைந்துள்ளன. தற்போது முன்பு இருந்ததைப் போல முன்னேறிய வட ஐரோப்பிய நாடுகள், பின் தங்கிய தென் ஐரோப்பிய நாடுகள் என்ற பிரிவினை மீண்டும் தோன்றியுள்ளது. கிரீஸ், தென் இத்தாலி, தென் ஸ்பெயின், தென் போர்த்துக்கல் என்பன, ஒரு காலத்தில் வறுமையில் வாடிய அபிவிருத்தியடையாத பகுதிகளாக இருந்தன. அந்தப் பகுதி மக்கள் வேலை தேடி செல்வந்த வட- ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தாராளமான நிதி வழங்கல், தென் ஐரோப்பாவின் அபிவிருத்திக்கு உதவியது. குறிப்பாக உல்லாசப் பிரயாணத் துறை, ரியல் எஸ்டேட் போன்ற பொருளாதார அபிவிருத்திகளே இடம் பெற்றன. அங்கேயெல்லாம் உல்லாசப் பயணிகளாக சென்றதும், வீட்டுமனை வாங்கியதும் வட- ஐரோப்பியர்கள் தான். பொருளாதார நெருக்கடியால் அவர்கள் தமது நாடுகளிலேயே தங்கி விட்டார்கள். அவர்களது அரசுகளும் கடும் பிரயத்தனப் பட்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டன. இதனால் என்ன நடந்தது என்றால், தென்னக ஐரோப்பிய பகுதிகளில் வேலைகள் பறி போயின. அந்த இடத்தில் வட ஐரோப்பிய மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

யூரோ நாணய கூட்டமைப்பில் இருந்து கிரீசை வெளியேற்றுவதால், பிற ஐரோப்பிய நாடுகள் தமது பொருளாதாரத்தை பாதுகாக்க நினைக்கின்றன. கிரீசை தொடர்ந்தும் வைத்துக் கொள்வதற்காக ஆகும் செலவு, தற்போது வழங்கிய கடனை விட மூன்று மடங்கு அதிகம். அதனால் கிரீசை கழற்றி விடுவதே உத்தமம். கிரீசும் வேறு வழியின்றி தனது பழைய தேசிய நாணயமான டிராக்மாவை மீண்டும் கொண்டு வர வேண்டும். ஆனால் புதிய டிராக்மாவை யூரோவுக்கு பரிமாற்றம் செய்யும் போது, ஐரோப்பிய ஒன்றியம் குறைந்த விலையை நிர்ணயிக்கும். இதனால் கிரேக்கர்கள் வாங்கிய கடன், திருப்பிச் செலுத்தப் படும் காலம் வரும் போது இரண்டு மடங்காகி இருக்கும். அதனோடு வருடாந்தம் கட்ட வேண்டிய வட்டியையும் சேர்த்துப் பாருங்கள். கிரீஸ் திவாலானதால் பணக்கார ஐரோப்பிய நாடுகளும், ஐ.எம்.எப்.பும் புதிய வருமானத்தை தேடிக் கொண்டுள்ளன.  அதை விட பெறுமதி குறைந்த டிராக்மாவை சுவீகரித்துக் கொண்ட கிரீசுக்கு வட- ஐரோப்பிய உல்லாசப் பிரயாணிகள் அதிகளவில் படையெடுப்பார்கள். சுருக்கமாக சொன்னால், மேற்கு ஐரோப்பிய நாடுகள் கீழே விழுந்த கிரீசை தமது காலனிய சுரண்டலுக்கு உட்படுத்தப் போகின்றன. “கிரேக்க அரசாங்கம் தீவுகளை வெளிநாடுகளுக்கு விற்கப் போகின்றது,” என்ற வதந்தியும் மக்கள் மத்தியில் உலவுகின்றது.

சாதாரண கிரேக்க மக்களின் தார்மீக கோபாவேசம், வேலை நிறுத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் மூலம் வெளிப்படுகின்றது. ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையத்தை மூடும் அளவிற்கு தொழிற்சங்கங்கள் வலுவாக உள்ளன. கிரீசில் போர்க்குணமிக்க தொழிற்சங்கம், கம்யூனிஸ்ட் கட்சி (KKE )  யினுடையது.   ஆயினும் இன்றைய கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிக்கு தயாராக உள்ளதா என்பது கேள்விக்குறி. ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளராக இருப்பதே தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. பாசிச இராணுவ ஆட்சியின் கீழ் கடுமையாக பாதிக்கப்பட்ட கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது ஆயுதமேந்திய வன்முறைப் போராட்டத்திற்கு தயாராக இல்லை. அந்த இடத்தை வேறு சில இடதுசாரி இயக்கங்கள் பிடித்துள்ளன.

எழுபதுகளில் இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததில் ஏதென்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி  மாணவர்களின்  போராட்டம் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. மார்க்சிச-லெனினிசத்தையும், கூடவே அனார்கிசத்தையும் கொள்கையாக கொண்ட தீவிரவாத அமைப்புகள் உருவாகின. நீண்ட காலமாக பிடிபடாமல் இருந்த அதன் தலைவர்கள், மேற்குலகின் நிர்ப்பந்தத்தின் பின்னர் கைது செய்யப்பட்டனர். இத்துடன் கிரீசின் இடதுசாரி தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதாக, ஏகாதிபத்தியம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. எல்லாம் சிறிது காலம்  மட்டும் தான். அமெரிக்காவின் நிதி நெருக்கடி அவர்களின் உறக்கத்தை கெடுத்தது.

கிரீசில் முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டிக் கொண்ருந்தது. பொய், சூதுவாது, மோசடி மூலம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்ட கும்பல் ஒன்று, காவல்துறையை ஏவி மக்கள் எழுச்சியை அடக்க முடியாது தத்தளிக்கின்றது. நிதி நெருக்கடியின் விளைவாக தன்னிச்சையாக தோன்றிய மக்கள் போராட்டம் அதிகார வர்க்கத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. இவையெல்லாம் ஒரு சில தினங்களில் ஓய்ந்து போகும் சலசலப்புகள் என்று தான் பலரும் நினைத்தார்கள். இரண்டு வருடங்கள் போராட்டம் தொடரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

மே 5  அன்று, ஏதென்ஸ் மாநகரில் மூன்று லட்சம் மக்கள் அணிதிரண்ட ஊர்வலம் சாதாரண நிகழ்வல்ல.  அனைத்தையும் இழந்தவர்களின் கலகம், வங்கிகளை கலக்கமடைய வைத்தது. பன்னாட்டு நிறுவனங்கள், வங்கிகள், ஆடம்பர அங்காடிகள், என்று எவையெல்லாம் முதலாளித்துவத்தின் குறியீடாக உள்ளதோ, அவையெல்லாம் இலக்குகளாகின. அமைதிவழிப் போராட்டம் எதையும் சாதிக்காததைக் கண்ட இளைஞர்கள் பலர் தீவிரவாத வழியை நாடுகின்றனர். பெற்றோர்களால் தமது பிள்ளைகளை தடுக்க முடியவில்லை. அல்லது விரும்பவில்லை. அவர்களைப் பொறுத்த வரை இழப்பதற்கு எதுவுமற்றவர்கள். போராட்டத்திற்கு தள்ளப்பட்டவர்கள். அவர்களுக்கு நேற்று வரை அரசியல் வேப்பம்காயாக கசத்தது. இன்று அரசியல் அவர்களை பற்றிக் கொண்டுள்ளது.

கிரேக்க அரசுக்கும், முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுப்பவர்கள் அனார்கிஸ்ட்கள் என்ற இடதுசாரி அமைப்பை சேர்ந்தவர்கள். அவர்களை ஒரு அமைப்பு என்று கூற முடியாது. அப்படி சொல்வதையே வெறுக்கிறார்கள். அவர்களுக்கென்று கட்சி, தலைவர், செயலாளர் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொருவரும் சுதந்திரமான தனிநபர்கள். ரகசிய வலைப்பின்னல் மூலம் சந்தித்துக் கொள்கிறார்கள். பொதுவான போராட்டத்தில் இணைந்து கொள்கின்றனர். செல்லிடத் தொலைபேசி, இன்டர்நெட் போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளை போராட்டங்களை ஒழுங்குபடுத்த பயன்படுத்துகின்றனர்.

இதுவரை காலமும், இந்த சாதனங்களை எல்லாம், முதலாளித்துவம் தனது எதிரிகளை கண்காணிக்கவும், எதிரி நாட்டு அரசுகளை கவிழ்க்கவும் பயன்படுத்தி வந்தது. “ஆஹா, எழுந்தது பார் டிவிட்டர் புரட்சி.” என்று தமது சாதனைகளை தாமே பாராட்டிக் கொண்டிருந்தனர்.  ஆனால் என்றோ ஒரு நாள், மேற்குலக நாடுகளிலும் “டிவிட்டர் புரட்சி” வெடிக்கும் என்று கனவு கண்டிருக்க மாட்டார்கள்.  கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், என்று எங்கெல்லாம் நெருக்கடி தோன்றுகிறதோ, அங்கெல்லாம் மக்கள் போராடக் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் நூறாண்டு கால போராட்டத்தின் ஊடாக பெற்றுக் கொண்ட உரிமைகளை, அவர்கள் ஒரே நாளில் இழக்கத் தயாராக இல்லை.

_______________________________________

•கலையரசன்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

இந்தியாவை எதிர்நோக்கும் அபாயம் ?

இந்தியாவின் மோசமான அச்சுறுத்தல்!

-ஜி எஸ்.வாசு (ஆசிரியர் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்-ஆந்திரா)

________________________________________________________

vote-012“தென் அமெரிக்காவை புரட்டிப் போட்ட சந்தை பொருளாதார அடிப்படை வாதத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளாவிட்டால் தற்போதைய பொருளாதார கொள்கையே நமது சீரழிவிற்கும் காரணமாக இருக்கும்”

கடந்த மாத மத்தியில் சட்டீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடாவில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தப்படும் விவாதங்கள் வேடிக்கையாக இருக்கிறது.  மத்திய ரிசர்வ் காவல் படையினர் மாவோயிஸ்ட்டுகள் விரித்த வலையில் வீழ்ந்தனரா? நாம் இராணுவத்தை பயன்படுத்துவதா? ஆளில்லா விமானத்தை பயன்படுத்தலாமா? இத்தகைய ஒரே மாதிரியான கேள்விகள்தான் கேட்கப்படுகிறதேயொழிய, ஏன் இது நிகழ்ந்தது என்பதை விவாதிக்க ஆளில்லை.

இதை நான் மட்டும் வேடிக்கையாக பார்க்கவில்லை.சத்தீஸ்கர் நிகழ்வையொட்டி நான் நக்சல் இயக்கத்தினரை எதிர்கொள்வதில் அனுபவம் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரியை சந்தித்தேன்.  அவரும் என் போல் இந்த விவாதங்களை ஒரு வேடிக்கையாகத்தான் பார்க்கிறார்.  மேலும், அவர் என்னிடம் இன்னொரு கேள்வியை முன்வைத்தார். “ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை சர்வதேச நிறுவனங்களுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் கட்டாய இடப்பெயர்ச்சிக்கு ஆளாக்கப்படும் போது என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?  அவர்கள் எதிர்தாக்குதலில் ஈடுபடுவது இயல்புதானே?”.  அறியாதது போல், அவரிடம் நான் ஒரு வினாவை முன் வைத்தேன். “நக்ஸலிசத்தை வேரறுக்க புதுடில்லியில் திட்டமிடும் கூட்டங்களில் இது குறித்து விவாதிக்கப்பட்டதா?” – “இல்லை” என்றார் அவர்.  அத்தகைய விவாதங்களில் எப்போதுமே எத்தனை படைப்பிரிவை அனுப்புவது, எங்கே, எத்தகைய நவீன ஆயுதங்களை பயன்படுத்துவது, என்பது மட்டுமே விவாதிக்கப்படும்.

உண்மை நிலை நன்கு தெரிந்திருந்தும், இது தான் இன்றைய போக்கு. “வசந்த கால இடி” (ஸ்பிரிங் தண்டர்) என்ற நக்சலுக்கு எதிரான அதிரடி தாக்குதல் தொடங்கி தற்போது நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த காலத்தில் “மோதல்” (என்கவுன்டர்) என்ற பெயரில் “மாவோயிஸ்ட்டுகள்” என்று சந்தேகப்படுபவர்கள் 10 ஆயிரத்திற்கு மேல் கொல்லப்பட்டதும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் செலவில் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு, அவர்களுக்கு அதி நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதை தவிர்த்து, அந்த இயக்கம் ஒரு மாநிலத்தின் ஒரு மாவட்டத்திலிருந்து 15 மாநிலங்களின் 200 மாவட்டங்களுக்கு பரவுவதற்குத்தான் உதவியுள்ளது. இந்த வளர்ச்சிக்கு மாவோயிஸ்ட்டுகள்தான் காரணம் என்று நான் கூற முடியாது. இன்று விவாதிக்கப்படும் மாவோயிஸ்ட்டுகள் உருவாவதற்கு இந்திய அரசும், அதனது பொருளாதார கொள்கையும்தான் முழுக்காரணம்.

சமீபத்திய எனது ஆந்திர பிரதேச சுற்றுப்பயணத்தில், ஒரு ஆயிரம் பேரை வலுக்கட்டாயமாக இடப்பெயர்ச்சி செய்து உருவாக்கப்பட்ட “சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு” சென்றிருந்தேன்.  தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இருந்த அவர்களது நிலங்களை ஏக்கருக்கு 18 ஆயிரம் முதல் ரு 60 ஆயிரம் வரை கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறது.  அந்த பொருளாதார மண்டல கட்டுமான பணிகள் துவங்கப்பட்ட போது எந்த நிலத்தை உழுது பயிரிட்டு வாழ்ந்து வந்த அந்த மக்களே, அந்த நிலத்தில் நாளொன்றுக்கு ரூ 100 க்கு தினக்கூலியாக செங்கல் சுமப்பவர்களாகவும், கூலி வேலை பார்ப்பவர்களாகவும் மாறிப்போயிருந்ததை பார்க்க முடிந்தது.  அந்த மண்டலத்தின் ஒரு பிரிவை திறந்து வைக்க அந்த மாநிலத்தின் முதலமைச்சர் வந்த போது அந்த பகுதிக்குள் அந்த மக்களால் இடையூறு வரும் என, அவர்கள் வராமலிருக்க காவல் துறையினர் தடுப்பு சுவரே எழுப்பியிருந்தனர்.  இது எனக்கு இந்திய-பாகிஸ்தான் எல்லையைத்தான் நினைவூட்டியது.

மற்றொரு மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தை வேறு ஒரு நிறுவனத்தின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நிலங்களின் உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ 50 லட்சம் வரை விலைபேசி ஒதுக்கியுள்ளது என்பதுதான் கொடுமை.  இத்தகைய தரகர்கள் பகுதியில் உள்ள பாக்சைட் போன்ற இயற்கை கனிமங்களை தனியார் நிறுவனம் தோண்டி எடுக்க அனுமதியில்லாததால், அரசு நிறுவனமே அந்த மூலப் போருட்களை தோண்டி எடுத்து அந்த வெளிநாட்டு தனியார் நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது. இது இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகைள “மாக்கிவில்லியன்” (தனியாருக்கு முக்கியத்துவம் அளிக்கும் கொள்கை) பாணியில் மீறுவதும், அந்த சாசனம் மக்கள் சுரண்டப்படுவதிலிருந்து காக்க அளித்திருக்கும் பாதுகாப்பையும் மீறுவதாகும்.

இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களை சார்ந்து கோடிக் கணக்கில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் நலனில் அதிகார வர்க்கத்தினர் அதிக அக்கரை காட்டி வருகின்றனர்.  பதவி ஏற்கும் காலத்தில் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு உண்மையாகவும், அச்சமின்றி, விருப்பு வெறுப்பின்றி, சாதக பாதகமின்றி செயலாற்றுவேன் என்று உறுதிமொழியேற்று பதவிக்கு வந்தவர்களுக்கு அந்த உறுதிமொழிகைள தற்போது யார் நினைவூட்டுவது?  நாளை இத்தகைய திட்டங்களால் (சிறப்பு பொருளாதார மண்டலங்கள்) பாதிக்கப்பட்டு மாவோயிஸடுகளாக மாறிப் போவதற்கு யாரை குற்றம் சொல்வது?

இது இத்தோடு நின்றுவிடவில்லை. இன்று கிராமப்புற சுகாதார மையங்கள் முற்றாக செயல்படவில்லை.  நகர்புறங்களிலுள்ள அரசு மருத்துவ மனைகள் மூடப்படும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆந்திராவில் இத்தகைய பொருளாதார மண்டலங்கள் உள்ள பகுதிகளில், ஆதிவாசிகள் தீராத வியாதிகளால், வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகளால் நூற்றுக்கணக்கில் மடிந்து வருகின்றனர். இவர்களுக்காக யார் கவலைப்படுகிறார்கள்?  நமது “மக்கள் சுகாதாரத் திட்டம்” முற்றாக பெரிய தனியார் மருத்துவமனைகளிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

சத்தீஸ்கர்- ஆந்திராவில் சிறப்பு மண்டல பகுதிகளில் ஆதிவாசிப் பெண்கள் பாதுகாப்பு படையினரால் பாலியல் பலாத்காரம், கற்பழிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை பற்றி சிறிதும் கவலைப்படாத நாம், டெல்லியிலோ, மும்பையிலோ, ஒரு நடுத்தர வர்க்கப் பெண்மணி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதை நமது பத்திரிக்கைகளில் முதல் பக்க செய்தியாக வெளியிடுகிறோம்.  நான் பின்னர் நடந்ததை கண்டிக்கவில்லை என்று அர்த்தம் அல்ல, ஆதிவாசிகள் மத்தியில் நடப்பதை வெளியிடாதது நமது வர்க்க பாகுபாட்டை காட்டுகிறது என்கிறேன்.  அப்படியென்றால் ஆதிவாசிப்பெண்கள் கற்பழிக்கப்படுவதை நாம் ஏற்றுக் கொள்கிறோமா அல்லது பொறுத்துக்கொள்கிறோமா என்பதே கேள்வி.

இதே நிலைதான் கல்வித்துறையிலும். அரசு நடத்தி வந்த தங்கிப் பயிலும் கல்வி நிறுவனங்களிலிருந்து பல சிறந்த கல்விமான்கள் உருவாகி வந்தது பழங்கதையாகி விட்டது. சுகாதாரத்திட்டம் போல், கல்வியும் லாப நோக்கமுள்ள பெரும் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிட்டது. அந்த கல்வி சாலைகளில் சேர முடியாதவர்கள் கல்வி கற்கவே தகுதியற்றவர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. உலகமயமாதல் கொள்கையால் பலதுறைகள் அழிந்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

கடன் தொல்லையிலிருந்து மீள முடியாத விவசாயிகள், நெசவாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.  நகர்ப்புறங்களில் தங்கம் உள்ளிட்ட, பெட்ரோல், உணவுப்பொருள், பால், காய்கறி, காலணி போன்ற பொருள்கைள விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும் நிறுவனங்களால் உள்நாட்டு தொழில்கள் நசிந்து விட்டது.  இன்று, அத்தகைய பெரும் முதலாளிகள் தாங்கள் இவ்வாறு ஈட்டும் பெரும் பணத்தை கோடி கோடியாக “இந்தியன் பிரிமியர் லீக்” ( ஐ பி எல்) (கிரிக்கெட் போட்டிகள்) போன்ற ஆடம்பர நிகழ்ச்சிகளில் முதலீடு செய்துவிடுகின்றனர். ஒரு காலத்தில் அரசியல்வாதி-வியாபாரிகள் கூட்டை ஏற்காமல் இருந்தோம்.  ஆனால் தற்போது பெருமுதலாளிகளான வியாபாரிகள் சட்ட சபைக்கும், மக்கள் சபைக்கும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று வந்து கொள்கை முடிவுகளை தீர்மானிக்கின்றனர்.

“லால்கர், ஒரிஸ்ஸா அல்லது சத்தீஸ்கர் ஆகிய இடங்களெல்லாம் மாவோயிஸ்ட்டுகள் இயக்கம் வலுவடைவதற்கு, பன்னாட்டு பெரு முதலாளிகளுக்காக ஆதிவாசிகைள இடம் பெயர்ந்து செல்ல வைக்கும் – அரசின் இத்தகைய கொள்கையே காரணம்” என்கிறார் புரட்சிகர எழுத்தாளர் தோழர் வரவரராவ். தென் அமெரிக்க நாடுகளை புரட்டிப் போட்ட உலகமய, சந்தைப் பொருளாதார அடிப்படைவாதத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளாவிடில், தற்போதைய பொருளாதாரக் கொள்கையே நமது சீரழிவிற்கு காரணமாக இருக்கும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மாவோயிஸ்ட்டுகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் போது, அவர்கள் வலியுறுத்தியதெல்லாம் இரண்டே இரண்டு முக்கிய பிரச்சனைகள்தான்.

அ) நிலச்சீர்திருத்தத்தை உடன் அமுல்படுத்துங்கள்
ஆ) ஆதிவாசிகளையும், அவர்களது நிலங்கள் மீது அவர்களுக்கு உள்ள உரிமையை பாதுகாக்கும் சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்பதுதான்.

இதில் விநோதம் என்னவென்றால், இந்திய அரசியல் சாசனத்தில் நம்பிக்கை வைக்காத ஒருபிரிவினர் (மாவோயிஸ்ட்) அரசியல் சாசனத்தின்படி ஆட்சி நடத்திவரும் மற்றொரு பிரிவினருக்கு (ஆட்சியாளர்கள்) என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதே.

உண்மை என்னவென்றால், நகர்ப்புறங்களில் பிரகாசிக்கும் வெளிச்சமே உண்மையான இந்தியா இல்லை என்பதுதான்.  அது கனிந்து கொண்டிருக்கும் ஒரு எரிமலையின் வெளிச்சமே. நமது உள்துறை அமைச்சர் நக்சல் பகுதிகளில் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படுவது பற்றி பேசிவருகிறாரேயொழிய அதற்கான மூலகாரணத்தை உணர மறுக்கிறார்.

“லஞ்சம் நமது நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்” என நமது துணை ஜனாதிபதி நம்ப, மாவோயிஸ்ட்டுகள்தான் பெரும் அச்சுறுத்தல் என நமது பிரதமர் நம்பிவரும் நிலையில், ஒரு கட்டத்தில் பண வீக்கம், ஏற்றத் தாழ்வான வருமான பங்கீடுமுறை, லஞ்சம் நாட்டின் ஸ்திரத்தன்மையை உலுக்குவதோடு, அரசின் அதிகாரத்திலும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக போகிறது. நான் சந்தித்த அந்த உயர் காவல்துறை அதிகாரி மிகவும் நாசுக்காக ஒன்றை கூறினார்.  “எவ்வளவு பாதுகாப்பு படையினரை குவித்து, எவ்வளவு நக்சல்பாரி போராளிகைள கொன்று குறித்தாலும் “மன்மோகனமிசம்” (உலகமய, தாராளமய கொள்கைகள்) இருக்கும் வரை மாவோயிசமும் இருக்கும்”.

தற்போது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல் “மன்மோகனமிசமா” “மாவோயிசமா” என்பதைப்பற்றி நாட்டின் அறிவுசார் சான்றோர்கள் ஆழமாக விவாதிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.

___________________________________________________

நன்றி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ் – 21 ஏப்ரல் 2010

தமிழில்:  சித்திரகுப்தன்

வாசகர்களுக்கு:

நாம் வாழும் இந்தியாவில்

— ஒரு கிலோ அரிசி ரூ 40

— சிம் கார்டு இலவசம்

— பிட்ஸா, ஆம்புலன்ஸ்-காவல்துறையைக்காட்டிலும் விரைவாக வீட்டிற்கு வருகிறது.

— கார் லோன் வட்டி 5 சதம், கல்விக்கடன் வட்டி 12 சதம்

— சட்டசபை கட்டிடம் ஒரு ஆண்டில் கட்டி முடிக்கப்படுகிறது.  ஆனால் மக்கள் பயன்பாட்டிற்கான பாலங்கள் கட்ட பல ஆண்டுகள் ஆகிறது. – – – இது இன்றைய இந்தியா!

_______________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

மும்பை 26/11 – கசாப் மட்டும்தான் குற்றவாளியா?

132

vote-01226.11.08 மும்பையில் இசுலாமிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஈடுபட்டு பலரைக் கொன்ற கசாப்பை உயிருடன் பிடித்து, கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்தில் விசாரணை முடித்து அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம். தண்டனையும் தூக்குதான் என்பதில் சந்தேகமில்லை. இனி வரும் வாரத்தில் இந்திய தேசபக்தியும், அடக்குமுறைச் சட்டங்களை கருணையின்றி பயன்படுத்த வேண்டுமென்ற பாசிசமும் பெருக்கெடுத்து ஓடும்.

மும்பைத் தாக்குதலை பாக்கிலிருந்து வந்த முட்டாள்தனமான பயங்கரவாதியாக மட்டும் சுருக்கிப் பார்த்தால் அது பல குற்றவாளிகளுக்கு ஆதாயமே. கசாப்பை துரித கதியில் தண்டித்த நீதி, குஜராத்தில் 2002ஆம் ஆண்டு முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த மோடியையும், ரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு மூலம் 90களில் ரத்த வெள்ளத்தை ஓடவிட்ட அத்வானியையும் இத்தனை ஆண்டுகளாகியும் ஏன் தண்டிக்கவில்லை? மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு முன்பாக மும்பையை ரத்த வெள்ளத்தில் ஆழ்த்திய பால்தாக்கரே, சிவசேனா கொலைகாரர்களது சுண்டு விரலைக் கூட இந்த நீதி தொட்டதில்லையே?

தாலிபான்களையும், பின்லாடன்களையும் திட்டமிட்டு உருவாக்கிய அமெரிக்கா இன்று இசுலாமிய சர்வதேச பயங்கரவாதிகளை வேட்டையாடுவதாக பிரகடனம் செய்து போரை நடத்தி வருகிறது. அமெரிக்காவுக்குத் தேவைப்பட்டால் ஒரு இசுலாமியப் போராளி முஜாகிதீனாகவும் தேவையில்லை என்றால் பயங்கரவாதியாகவும் மாற்றப்படும் மர்மம் என்ன?

உலக அரங்கில் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை வீழ்த்தாமல், இந்திய அரங்கில் இந்துமதவெறி பாசிஸ்ட்டுகளை அழிக்காமல் இரண்டு அரங்குகளிலும் இசுலாமிய பயங்கரவாதத்தை வேரறுக்க முடியாது.

மும்பையில் தாக்குதல் நடந்த சில நாட்களுக்குள்ளாகவே வினவில் “மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! என்ற தலைப்பில் ஆறு பாகங்களாய் ஒரு தொடர் கட்டுரை வெளியிட்டோம். பொது உணர்ச்சியின் பொய்யான தேசபக்தியில் மூழ்கிய உள்ளங்களை உண்மையான விவரங்கள், உண்மையைக் கண்டுபிடிக்கும் கண்ணோட்டத்துடனும் எழுதப்பட்ட அந்தத் தொடரை தேவை கருதி இங்கு மீள்பதிவு செய்கிறோம்.

கசாப் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நேரத்தில் மறைந்து கொள்ளும் பயங்கரவாதிகளை இனம் காணும் இந்த நெடிய கட்டுரையை மீண்டும் படிப்பதோடு விவாதித்திலும் பங்கேற்குமாறு வாசகரை கோருகிறோம்.

மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் – 1)

முதலாளிகளின் உல்லாசபுரி தாக்கப்பட்டதையே தேசத்தின் மீதான தாக்குதலாக சித்தரிக்கின்றன ஊடகங்கள். மக்கள் அடிபட்டால் கண்டும் காணாமலும் இருப்பவர்கள் முதலாளிகள் தாக்கப்பட்டதும் கதறி அழுகிறார்கள்……மேலும் வாசிக்க…

இந்துமதவெறியால் பிளவுண்ட மும்பை  ! (பாகம் – 2)

நிதியமைச்சகத்தை பிரதமரே வைத்துக் கொண்டிருப்பது அந்நிய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியதோடு, மும்பைத் தாக்குதலால் சீர்குலைந்த பங்குச் சந்தை மீண்டும் எழுந்திருக்கிறதாம். அவர்களது பாதுகாப்புக்காகக் கவலைப்பட்டுச் செய்யப்படும் மாற்றங்கள் கூட அவர்களது பங்குச் சந்தை பாதிக்காதவாறு செய்ய வேண்டுமாம்.…..மேலும் வாசிக்க…

பொடா முதலிய அடக்குமுறை சட்டங்கள் பயங்கரவாதத்தை ஒழிக்கவா?  (பாகம் – 3)

தமிழகத்தில் ஈழம் என்று பேசினால் பொடா, காஷ்மீரில் சுதந்திரம் என்று உச்சரித்தால் பொடா, வடகிழக்கில் இந்தியா ஒடுக்குகிறது என உண்மையை உரைத்தால் பொடா, மோடியின் குஜராத்தில் முசுலீம் என்று சொன்னாலே பொடா…இவைதானே நடந்தது…..மேலும் வாசிக்க…

போலீசு, இராணுவம் – மக்களுக்கா, ஆட்சியாளர்களுக்கா ? (பாகம் – 4)

போலீசும், இராணுவமும் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளைக் காப்பாற்றுகிறது என்பதால்தான் அவர்கள் செல்லப்பிள்ளைகள் போல சீராட்டி வளர்க்கப்படுகிறார்கள். மும்பையில் கொல்லப்பட்ட கமாண்டோக்களின் பிரதான பணியைப் பார்த்தாலே இது விளங்கும்.…..மேலும் வாசிக்க…

காஷ்மீர், அப்சல் குரு…. இந்திய அரசின் பயங்கரவாதம் ! (பாகம் – 5)

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுத்த இந்தியா, அரச பயங்கரவாதத்தின் மூலம் அந்தப் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்கி வந்தது. முதலில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி போன்ற மதச்சார்பற்ற இயக்கங்கள் விடுதலைப் போராட்டத்தில் முன்னிலை வகித்தன. பின்னர் இந்தியா, பாக்கிஸ்தான் இருநாட்டு ஆளும் வர்க்கங்களும் காஷ்மீர் பிரச்சினையை வைத்து தத்தமது நாட்டு மக்களிடம் தேசிய வெறியைக் கிளறிவிட்டு ஆதாயம் அடையப் பார்த்தன.…..மேலும் வாசிக்க…

அமெரிக்கா ஊற்றி வளர்த்த ஜிகாதிப் பயங்கரவாதம் ! (பாகம் – 6)

ஆப்கானில் நாத்திகர்களும் சாத்தானின் வாரிசுகளுமாகிய கம்யூனிஸ்ட்டுகள் ஆக்கிரமித்திருப்பதாகப் பிரச்சாரம் மேற்கொண்ட அமெரிக்கா அவர்களை விரட்டுவதற்கு புனிதப்போர் துவங்குமாறு இசுலாமிய மதவாதிகளை அணிதிரட்ட ஆரம்பித்தது. இன்றைக்கு அமெரிக்காவை எதிர்த்து புனிதப்போர் நடத்தும் பயங்கரவாதிகள் இப்படித்தான் தோற்றுவிக்கப்பட்டனர்.…..மேலும் வாசிக்க…

மும்பை 26/11: விளக்கமும் விவாதமும் – நூல் அறிமுகம்

வினவுத் தளத்தில் மும்பைத் தாக்குதல் குறித்து ஆறு பாகங்களாக வெளிவந்த தொடர் கட்டுரை  இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. இதற்கு வந்த மறுமொழிகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் வந்த பின்னூட்டங்களை தமிழில் மொழிபெயர்த்து சேர்க்கப்பட்டுள்ளன…இசுலாமிய சர்வதேசியம் என்பது நிறைவேறவே முடியாத ஒரு அபத்தம். அன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்டு, இன்று அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பை திசைதிருப்புவதற்கும், இசுலாமிய நாடுகளின் மக்களை அடிமைப்படுத்துவதற்கும் பயன்பட்டு வரும் ஒரு கருவி. அவ்வளவே. ஆனால், மூலதனத்தின் சர்வதேசியமும், அதனை முன் தள்ளும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கமும் நாம் எதிர்கொண்டிருக்கும் உண்மைகள். உலக மக்களால் எதிர்க்கப்பட வேண்டிய உண்மையான எதிரிகள். பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் இந்த உண்மையான எதிரிகளைத் தப்பவிடுவதுடன், அவர்களுடைய கையாளாகவே நமது நாடு மாறிவிடக்கூடாது என்று எச்சரிப்பதே இக்கட்டுரைகளின் நோக்கம்.…..மேலும் வாசிக்க…

_______________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

தேர்வு: ‘காப்பி’ அடித்தால் தப்பா? ஒரு அனுபவம் !!

97

vote-012தோழரொருவரின் மகள் பிளஸ் 2 தேர்வு எழுதியதை விசாரிக்கும் போது இந்த ஆண்டில், அறிவியல் பாடங்களின் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவிகள் கவலைப்படுவதைத் தெரிவித்தார். பத்திரிகைகளிலும் அப்படியே செய்திகள் வந்தன. தேர்வு குறித்த கவலைகள், அடி வயிற்றைப் பற்றிக் கொள்ளும் பதட்டம், விடுமுறையின் இனிய காத்திருப்பு எல்லாம் தாண்டித்தானே வந்திருப்போம். பாழாய்ப் போன நமது கல்வி அமைப்பை சிந்திக்கையில் ஒரிரு வருடங்களுக்கு முன்னர் ஒரு தோழரோடு தேர்வில் காப்பி அடிப்பது குறித்து நடந்த காரசாரமான விவாதம் நினைவுக்கு வந்தது. அப்படியே கொஞ்சம் சைக்கிளை ரிவர்சில் சுற்றி கடந்த காலத்திற்குச் சென்று பார்ப்போம்…..

_____________________________________________________

பத்தாவது வகுப்பில் காப்பி அடித்த கதை!

தந்தை அரசு அதிகாரியாக பணியாற்றியதால் தமிழகத்தின் பல ஊர்களில் வாழ்ந்து படித்த கதையில் இப்போது நேரே பத்தாவது வகுப்பிற்கு போய்விடலாம். ஒன்பதாவது வகுப்பில் எனது விடலைப்பருவ சேட்டைகள் அதிகமடைந்து விடுமுறையில் வீட்டில் பணம் எடுத்துக் கொண்டு பத்து நாட்கள் ஊர்சுற்றி விட்டு பணம் தீர்ந்த பிறகு வீடு திரும்பினேன். இந்தக் குழப்பத்தில் பத்தாவது வகுப்பின் ஒரிரு மாதங்கள் முடிந்து விட்டன.

அது கிராமங்கள் சூழப்பட்ட ஒரு சிறு நகரம் அல்லது பெரிய கிராமம். என் உடன் பிறந்தோர் எல்லாம் அந்த ஊரின் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். நான் மட்டும் சற்று தாமதமாக பத்தாவதில் சேர்ந்தேன். சுற்றுப்பட்டு கிராமங்களிலிருந்து தினுசு தினுசாக மாணவர்கள். ஒரே ஒரு மாணவி. நான் பின்னாடி பெஞ்சில் ஐக்யமானேன். பையன் இனியாவது ஒழுங்காகப் படிக்க வேண்டுமென்று அப்பாவின் முடிவுப்படி கணக்கு, ஆங்கிலத்துக்கு டியூஷன்.

மற்றபடி பள்ளியில் படித்ததை விட ஊர் சுற்றியதுதான் அதிகம். சுற்று வட்டாரத்தின் எல்லா ஓட்டல்களுக்கும் படையெடுத்துப் போய் உணவு வகைகள் தீரும் வரை சாப்பிடுவது, அருகாமை கானக அருவிக்கு சென்று மீன் பிடித்து சுட்டு சாப்பிடுவது, பம்பு செட்டில் மணிக்கணக்கில் குளிப்பது, மிச்ச நேரம் எல்லா வகை விளையாட்டுக்களையும் விளையாடுவது என்றபடி சிறப்பாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் வில்லன் போல இறுதித் தேர்வு வந்தது. கொஞ்சம் பயமும் வந்தது.

அக்காவும் தம்பியும் அப்துல் கலாம் டைப் மாணவர்கள். அதாவது ஒழுங்காக படிப்பவர்கள். தங்கை கொஞ்சம் அய்யோ பாவம். நான் வீட்டீல் ஏற்கனவே ரவுடி என்று பேர் வாங்கியிருந்ததால் படிப்பு குறித்து நானோ மற்றவர்களோ பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. முக்கியமாக என்னைப் போல வகுப்பில் பலர் இருந்ததால் தெம்பாகத்தான் இருந்தேன். என்ன, அவர்களுக்கு நடப்பதுதான் எனக்கும் நடக்கும். இருந்தாலும் இறுதித் தேர்வில் ஃபெயிலாகி விட்டால்……?

வேலையில்லாமல் இருந்த முன்னாள் மாணவர்கள் தேர்வில் பாஸாவதற்குரிய எல்லா ‘வழி’களையும் சொல்லிக் கொடுத்து துணிவூட்டினார்கள். எங்கள் கடைசி பெஞ்ச் அணி கூட்டம் கூடி யோசித்ததில் ஒவ்வொருவரது பலவீனமும் தெரிய வந்தது. கணக்கு, ஆங்கிலம் டியூஷனால் ஓகே. மற்ற பாடங்களுக்கு என்ன செய்வது? இருந்த ஒரே வழி பிட்டடிப்பது அதாவது காப்பியடிப்பது. பழைய வினாத்தாள்கள், முக்கிய பாடங்கள், சூத்திரங்கள், எல்லாம் வைத்து எழுத வேண்டியதை முடிவு செய்து விட்டோம்.

அப்போது நாங்கள் அக்ரகாரத் தெருவில் குடியிருந்தோம். அன்றே பார்ப்பனர்கள் சென்னை, டெல்லி என்று சென்றுவிட்டதால் பார்ப்பனரல்லாதாருக்கும் அதுவும் அரசு அதிகாரிகள் என்றால் கண்டிப்பாக வீடு வாடகைக்கு கிடைக்கும். அக்ரகாரத்திற்கேயுரிய இரண்டு தெருக்களை இணைக்கும் நீண்ட வீடு. கடைசி வாரத்தில் தீவிரமாக படிக்கிறேன் பேர்வழியாக புழக்கடை முற்றத்தில் புத்தகங்களுடன் பல மணிநேரம் முடங்கிக் கிடப்பேன். வீட்டிலோ பையன் தீவிரமாக படிக்கிறான் என்று நினைக்க நானோ அங்கு தீவிரமாக எழுதிக் குவித்தேன். சின்ன சின்ன பேப்பரில் இடைவெளியில்லாமல் ஒரு முழுக் கட்டுரையையும் திணிப்பது  பேப்பரில் சிலை வடிப்பது போல. அல்லது அரிசியில் குறளையெல்லாம் எழுதி பெயர் வாங்குகிறார்களே அப்படி குறுகிய இடத்தில் பெருகிய வார்த்தைகளை குட்டி குட்டியாய் வடிக்கும் கலை என்றும் சொல்லலாம்.

மற்ற மாணவர்கள் எவ்வளவு படித்தாய் என்று வினவும் போது எங்கள் கடைசி பெஞ்ச் மட்டும் எவ்வளவு எழுதினாய் என்று அக்கறையுடன் விசாரிப்போம். ஆரம்பத்தில் ஆங்கிலம், கணக்கிற்கு பிட்டுக்கள் வேண்டாமென்று முடிவெடுத்திருந்தாலும் பின்னர் கொள்கையை மாற்றிக் கொண்டோம். காப்பி அடிப்பது என்று முடிவான பிறகு சில பாடங்களை மட்டும் ஒதுக்குவது நல்லதல்ல என்பதோடு, உருப்போட்ட ஆங்கிலப் பாடங்களைக் கூட காப்பி அடித்து எழுதுவது தனி சுகமாயிற்றே.

ஆவேசமாக எழுதியதாலோ என்னவோ கிட்டத்தட்ட முழுப் புத்தகத்தையும் கவர் பண்ணியதில் பிட்டுக்கள் மலையாக குவிந்து விட்டன. அவசரக் கூட்டம் கூடியது. அதில் ஆய்வு செய்து தீர்வு கண்டோம். அப்போது பேண்ட் இல்லை ட்ராயர்தான். ட்ராயர், சட்டையின் கீழ் தையல்களை பிரித்து குட்டி குட்டி லாக்கர்களை உருவாக்கினோம். அப்புறம் உடல் பாகங்களில் எங்கே என்னென்ன பிட் இருக்கிறது என்ற மேப் அல்லது மாஸ்டர் பிட் தயாரித்தோம். பிறகு எது எங்கே என்று குழம்பி விடக்கூடாதல்லவா. இனி தேர்வுக்கு செல்லலாம்.

தமிழ் முதல் தேர்வில் பிரச்சினையில்லை. ஆங்கில முதல் தேர்வில் அநேக கேள்விகளுக்கு பதில் தெரிந்தாலும் எழுதிய பிட்டுக்கள் வீணாகக் கூடாது என்று பார்த்தே எழுதினேன். வினாத் தாளையும், விடைத் தாளையும் பிரிக்கும் ஒரு மைக்ரோ செண்டி மீட்டரின் இடைவெளியில் பிட்டுக்களைப் பார்த்து எழுதவேண்டும். எழுதிக் கொண்டிருந்த போது தேர்வறை ஆசிரியர் என் மேசையருகே குனிந்து ஒரு பிட்டுப் பேப்பரை எடுத்து என்னிடம் நீட்டியவாறு நோக்கினார்.

முதலிலேயே சிக்கிவிட்டேன் என்ற அதிர்ச்சியில் உறைந்து அவர் முகம் பார்க்க அவரோ, ” இது உன்னுடையதா” என்று கேட்டவாறு கொடுத்து விட்டு போய்விட்டார். தெய்வமே…………..

ஆனால் என்னுடைய பிட்டை கீழே போடுமளவு நான் ஒன்றும் முட்டாளல்ல. எவ்வளவு ஒத்திகைகள், பிரயத்தனங்கள்? அது யாருடையது என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்த தெய்வம் அதைக்கூட பொறுப்பாக எடுத்து நீட்டியதை இப்போது நினைத்தாலும் பூரிக்கிறது. சரி நமக்கு இவ்வளவு வரவேற்பா என்று அடுத்த அடுத்த தேர்வுகளுக்கு உற்சாகத்துடன் தயாரானோம்.

தமிழ், ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வுகளுக்கு பிட்டுக்கள் பெரிய அளவு பயன்படாது. இலக்கணம், அட்டவணைப் பொருத்துதல், கோடிட்ட இடங்களைப் நிரப்புதல் இப்படி சில்லறைத் தொல்லைகள். அதற்கு முன்னாள் மாணவர்கள் கை கொடுத்தார்கள். தேர்வு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் வினாத் தாள் எப்படியோ வெளியே சென்று விடும். காவலுக்கு நிற்கும் காவலர்களை சில அண்ணன்கள் தேநீர்க்கடைக்கு அழைத்துச் செல்ல மற்ற அண்ணன்கள் காம்பவுண்டிற்கு வெளியே நின்று பதிலை கத்துவார்கள். எல்லாம் ஒரு வார்த்தை பதில்தானே. இருப்பினும் நாங்கள் ஒன்ஸ்மோர் கேட்க நினைக்கும்போது அவர்களே அதை இரண்டு முறை ரிப்பீட்டுவார்கள்.

இப்படியாக இலக்கணம் ஒழிந்தது. அடுத்த சனியன் அறிவியல். இதில் என்ன பிரச்சினை என்றால் என்னிடமிருக்கும் பிட்டுக்களுக்கு பொருத்தமான கேள்வி எது என்றே எனக்குத் தெரியாது. முதல் அரை மணிநேரத்தில் திணறிவிட்டேன். அப்புறம் ஆசிரியர் பின்னோக்கி உலவும் நேரத்தில் கேள்வித் தாள்களை மாற்றிக் கொண்டு பதில்களை அறிவாளி மாணவர்களின் உதவியுடன் கண்டு பிடித்தேன். வரலாறு இந்த அளவுக்கு மோசமில்லை. அதில் மட்டும்தான் காப்பியடிக்கவில்லை என்ற அளவுக்கு அந்த பாடத்தில் காதல் இருந்தது. இன்றைய என் நிலமைக்கு இப்படி ஒரு குருத்து அன்றே இருந்திருக்குமோ?

ஒரு வழியாக தேர்வுகள் முடிந்து பிட்டடித்த அனுபவங்களை பரிமாறிக் கொண்டு எப்படியும் பாஸாகிவிடுவோம் என்று முடிவு செய்தோம். விடுமுறையைக் கொண்டாடி வந்த போது அப்பாவுக்கு ஒரு மாவட்டத் தலைநகருக்கு மாற்றல் வந்தது. இந்த ஊரை விட்டு வெளியேறும் போது ஆங்கிலம் எடுத்த ஆசிரியர் என்னைப் பற்றி சொன்ன மதிப்பீடை நினைவு கூரவேண்டும். ” தம்பி இங்க வரும்போது பால் மாதிரி சுத்தமாக வந்த. இப்ப கள் மாதிரி கெட்டுப் போயிட்ட”

அப்புறம் மாலை முரசிலோ, தினத்தந்தியிலோ முடிவுகள் வர எனது எண்ணும் இருந்தது. ஆத்தா நான் பாஸாயிட்டேன் என்று பெரிய த்ரில் இல்லை. கடைசி பெஞ்சு முழுவதும் வெற்றி பெற்றனர். ஆனால் மதிப்பெண்கள் மட்டும் நிறைவாக இல்லை. எனக்கு 338 கிடைத்தது. சரி, பரவாயில்லை ஓசியில் இதுவாவது கிடைத்ததே என்று நார்மலாகி விட்டேன். பெற்றோருக்கு சற்று வருத்தம்தான். அக்கா, தம்பிக்கு ரவுடியை கிண்டலடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. இருந்தாலும் பயம் காரணமாகவோ, நல்ல எண்ணத்தாலோ அவர்களும் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை.

_____________________________________________

+2வில் படித்து வெற்றி பெற்ற கதை!

நகரின் புகழ் பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2. அறிவியல், கணக்குக்கு பெயர் பெற்ற குரூப் 1, 2இல் சேர்க்கத்தான் தந்தை விரும்பினார். என் அக்கா நான் பிட்டடித்த அதே பள்ளியில் பிளஸ் 2 முதல் குரூப்பில், தமிழ்வழிக் கல்வியில் 945 மதிப்பெண்கள் வாங்கி மெரிட்டிலேயே அரசு பொறியியல் கல்லூரி சென்று விட்டாள். மகளைப் போன்று மகனும் அப்படி செல்ல வேண்டுமென்பது தந்தையின் விருப்பம். அறிவியலின் கேள்வித் தாளையே புரிந்து கொள்ள முடியாத பாவத்தில் இருந்த நான் குரூப் 1 என்ற கொடுமையை எப்படி சமாளிப்பது? நான் மூன்றாவதோ இல்லை நாலாவதோ இல்லை இருப்பதிலேயே இழிவாகவோ கருதப்படும் வணிகவியல் – வரலாறு – பொருளாதாரம் எனும் அவியல் குரூப்பை விரும்பினேன். உண்மையில் வரலாறுதான் எனக்கு பிடித்த பாடம். ஆனால் என் தந்தையோ அப்படியே பி.காம், சி.ஏ செல்லலாம் என்று எண்ணினாரோ என்னமோ எனது விருப்பத்தை ஏற்றுக்கொண்டார். நானும் ஒரு பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்தேன்.

எனது தந்தை எங்கள் குடும்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு படித்த முதல் பட்டதாரி. அவருக்காக எங்கள் பாட்டி பட்ட கஷ்டங்கள், கதைகள் எல்லாம் மனப்பாடமாகும் அளவுக்கு கேட்டிருந்தோம். “என் தலையை அடகு வைத்தாவது உங்களை படிக்க வைப்பேன்” இதுதான் அப்பா அடிக்கடி சொல்லும் குடும்ப முழக்கம். அதிலும் எனக்காகத்தான் நிறைய மெனக்கெட்டார். சில புகழ் பெற்ற விடுதிப் பள்ளிகளிலெல்லாம் விட்டுப் பார்த்தார். ஆனாலும் எனக்கு சரஸ்வதி கடாட்சம் ஏனோ கிடைக்கவில்லை.

பிளஸ் 2வில் நிறைய அனுபவங்கள் இருக்கின்றன என்றாலும் நேரே இறுதித் தேர்வுக்கு சென்று விடலாம். அரையாண்டு முடிந்து மூன்று ரிவிஷன் டெஸ்ட்டுகள் நடந்தன. மூன்றிலும் எல்லா பாடத்திலும் வேண்டுமென்றே ஃபெயிலானேன். சும்மா இப்படி பயங்காட்டி எழுதவைக்கும் அந்தத் தேர்வுகள் எனது சுயமரியாதையை இழிவுபடுத்துவதாக எண்ணம். மற்றபடி அப்போது நான் கடைசி பெஞ்ச், வகுப்பு லீடர் என்றெல்லாம் ஆதிக்கம் செய்ததோடு கொஞ்சம் நன்றாக படிக்கும் மாணவன் எனுமளவுக்கு முன்னேறியிருந்தேன். அரையாண்டு ரேங்கிலெல்லாம் முதல் பத்துக்குள் வந்த்தாக ஞாபகம். அதுவே பெரிய விசயம்தானே.

தேர்வுக்கு முந்தைய மாதம் தீடிரென்று ஒரு பல்பு மூளையில் பிரகாசிக்க இப்போதாவது கொஞ்சம் தீவிரமாகப் படிப்போமே என்று இறங்கினேன். பத்தாவதுக்கு பிட்டடித்தது போல அமைந்த வீரர் குழாம் இங்கில்லை. பலரும் அப்துல்கலாம் டைப் மாணவர்கள்தான். அந்தப் பள்ளியும் மாவட்டத்தில் பிரபலமானது என்பதால் சிறுநகர சண்டித்தனங்கள் இங்கே எடுபட முடியாது.

எப்படியோ வீட்டு முற்றத்தில் ஒரு மாதத்திற்கான திட்டத்தோடு படித்தேன். படித்தேன். படித்துக் கொண்டே இருந்தேன். அப்போது அப்பாவும் உடன்பிறந்தோரும் வேறு வேறு ஊர்களில். நானும் அம்மாவும்தான். அம்மா எனக்காக இரவு தூங்கிக் கொண்டிருந்த நேரத்திலும் திடீரென்று விழித்து தேநீர் போட்டுக் கொடுப்பாள். அம்மாவைப் பற்றியும் இந்த மகளிர் தினத்திற்காக “கம்யூனிஸ்ட்டுகளும் அம்மாக்களும்” என்ற தலைப்பில் முக்கால்வாசி எழுதி அப்படியே நிற்கிறது. அடுத்த வருடம் வெளியிட வாய்ப்பு வரலாம். அதனால் இங்கே அம்மாவுக்கு பெரிய இடமில்லை.

நானே இப்படி என்றால் அப்துல் கலாம் டைப் மாணவர்கள் எல்லாம் எவ்வளவு தீவிரமாக படித்துக் கொண்டிருப்பார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனது நண்பன் ஒருவன் யாரெல்லாம் எப்படி எவ்வளவு படிக்கிறார்கள் என்பதை பகிர்ந்து கொள்வான். கடைசியில் தேர்வு வந்தது.

எங்கள் பிரிவு தமிழ் வழிக் கல்வியில் வருகிறது. எல்லோரும் பள்ளிப்படிப்பை தமிழில் படித்து வந்தவர்கள்தான். இதனால் எல்லாரும் பயந்த பாடம் ஆங்கிலம். மற்ற பாடங்களையெல்லாம் நம்பிக்கையோடு படித்தவர்கள் கூட ஆங்கிலத்திற்கு வெகுவாக அஞ்சினார்கள். முக்கியமாக இரண்டாம் தாளில் உள்ள இலக்கணப் பிரிவு. என் வரலாற்றில் நல்ல ஆசிரியர்கள் இருந்தார்களோ என்னமோ எனக்கு ஆங்கில இலக்கணம் எப்படியோ உள்ளே சென்று விட்டது. தேர்வுக்கு முந்தைய நாட்களில் சில மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து நம்பிக்கை ஊட்டினேன். இருப்பினும் அன்று மட்டும் எனது விடைத்தாளை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சிலர் கோர நானும் ஏற்றுக் கொண்டேன்.

அன்றைக்கு ஒருவரிக் கேள்விகளை எழுதி முடித்த பிறகு எனது விடைத்தாள் நானிருந்த அறையில் சுற்றுப் பிரயாணம் செய்து கடைசி அரை மணிநேரத்திற்கு முன்னர் என்னிடம் திரும்பியது. அது வந்த ஐந்து நிமிடங்களுக்குள் பறக்கும்படை என்ற வில்லன்கள் வந்து கழுகு போல சுற்றி வந்தார்கள். என்னைப் பார்த்து எழுதிய மாணவன் ஒருவன் அவனுக்குப் பின்னால் உள்ள மாணவனுக்கு தாளைக் கொடுத்திருந்தான். இருவரும் அந்த வில்லன்களிடம் சிக்கிவிட்டார்கள்.

பிறகென்ன. இருவரும் அறையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்களது பிளஸ் 2 வாழ்க்கை அத்துடன் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு மூன்று ஆண்டுகள் வரை அவர்கள் தேர்வெழுதமுடியாது என்று ஆனதாக நினைவு. அதிர்ச்சியில் எல்லோரும் உறைந்து போனோம். அன்றைக்கு அந்த வில்லன்கள் சற்று முன்னாடி வந்திருந்தால் நான் உள்ளிட்டு பலரும் மாட்டியிருப்போம். பிறகு அந்த மாணவர்கள் எங்கள் நினைவுகளை விட்டு அகன்று போனார்கள். பின்னாடி அதில் ஒருவன் எல்லாப்பாதுகாப்பு படையில் இருப்பதாக கேள்விப்பட்டு ஆறுதலடைந்தோம்.

பரிட்சை முடிவுகள் வந்தன. எனது நண்பன் ஓடி வந்து ” நீதான் வகுப்பில் முதல் மார்க், 947″ என்றதோடு அப்துல்கலாம் டைப் மாணவர்கள் எவரும் 900த்தை தாண்டவில்லை என்பதால் வருத்தத்தில் இருப்பதாகக் கூறினான். சரி அதுதான் ‘இறைவனின்’ திருவிளையாடல் என்றால் யார் என்ன செய்வது? அப்புறம் அந்த நண்பர்களை தேற்றி விட்டு வீடு திரும்பினேன்.

பத்தாவதில் பிட்டடித்துப் பாஸாகி பன்னிரெண்டாவதில் வகுப்பில் முதலிடமென்றால் என்னால் நம்ப முடியவில்லை. அப்பாவிடம் நான் சொன்ன முதல் விசயம் அக்காவை விட இரண்டு மார்க் அதிகம் என்ற பந்தாதான். அதையே என் தந்தை எல்லோரிடத்திலும் சொல்லிச் சொல்லி திருப்தி அடைந்தார். அடுத்து கல்லூரி வாழ்க்கை.

____________________________________________

கல்லூரியில் கடமைக்காக படித்த கதை!

எங்கள் நகரில் இரண்டு கல்லூரிகள் பிரபலம். ஒன்று நன்றாகப் படிப்பவர்களின் கல்லூரி என்றால் மற்றது சுமாராகப் படிக்கும் சாதாரண மாணவர்களின் கல்லூரி. எல்லோரும் இரண்டிலும் விண்ணப்பித்தோம். எனக்கு மட்டும் அப்துல்கலாம் டைப் கல்லூரியில் இடம் கிடைத்தது. மற்ற வகுப்புத் தோழர்கள் சாதா கல்லூரிக்கு சென்றார்கள். அவர்களை பிரிய நேர்ந்தது இன்றைக்கும் எனக்கு வருத்தமே. மற்றபடி புதிய கல்லூரியில் மாணவிகளும் வருகிறார்கள் என்பதுதான் எனக்கு கிடைத்த ஒரே ஆறுதல்.

அந்த ஆறுதலும் நேரில் பார்த்த சில நாட்களில் கரைந்து போனது. மாணவிகள் மட்டுமல்ல, மாணவர்களும் கீ கொடுக்கப்பட்ட பொம்மைகளைப் போல வந்து போனார்கள். பரபரப்போ, கலாட்டாவோ, குதூகலமா எதுவும் இல்லை. கல்லூரிக் காலங்களில் எனது அரசியல் ஆர்வம் முளைவிட்டு எண்ணத்தை ஆக்கிரமித்திருந்த காலம். சமூகப்பணிகளை முடித்து விட்டு கடனே என்று கல்லூரி சென்று வந்தேன். அப்பா எனக்கு வாங்கிக் கொடுத்த சைக்கிள் ஊரைச் சுற்றுவதற்கு கை கொடுத்தது.

தமிழ் வழியில் கற்றிருந்த எனக்கு அதாவது ” உள்வருவன பற்று, வெளிச்செல்வன வரவு ” என்று புரிந்து, கணக்குப் பதிவியலில் – அதாங்க அக்கவுண்டன்சி – கிட்டத்தட்ட சென்டம் வாங்கியிருந்த எனக்கு ஆங்கிலம் புரிபடவில்லை. இதில் ஏதோ சுக்லாவோ, பக்லாவோ அவருடைய தலையணை சைஸ் புத்தகத்தை தினசரி சைக்கிளில் சுமந்து செல்லவேண்டும். உடற்பயிற்சி, அம்மாவின் வக்கனையான சாப்பாடு, நீண்ட சைக்கிள் பயணம் எல்லாம் சேர்ந்து கண்களைச் செருகும். திறந்தபடியே தூங்கும் கலையைக் கற்றுக் கொண்டேன். அந்தப் பேராசிரியரும் அதை தெரிந்தே அனுமதித்திருப்பாரோ?

பொருளாதாரம், வணிகவியல் பேராசிரியர்களெல்லாம் தாங்கள் ஆங்கிலத்தில் பேசுவதே பெருமை என்ற அளவில் மட்டும் கதைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது பார்த்தால் அது ஆங்கிலத்திலும், பாடத்திலும் தரமில்லாத மொக்கைகள் என்று தெரிகிறது. சரி எப்படியோ மூன்று வருடம் குப்பை கொட்டி இறுதி பருவத் தேர்வுக்கு வந்துவிட்டேன்.

இடையில் சாதாரண மாணவர்கள் படிக்கும் கல்லூரி நண்பர்களை அடிக்கடி சந்தித்து அளவளாவுவேன். அப்போதுதான் அங்கே மட்டுமல்ல தமிழகத்தில் பல அரசுக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில வழியில் படித்து விட்டு தமிழில் தேர்வு எழுதும் விசயம் அறிந்தோம். இதில் மதிப்பெண்கள் அதிகம் கிடைக்காது என்றாலும் முதலுக்கு மோசமில்லை. ஆகவே எல்லாத் தியரி பேப்பர்களையும் தமிழில்தான் எழுதி சுமாராக மதிப்பெண் பெற்று இறுதி ஆண்டு வந்தடைந்தோம்.

அப்போது நானும், எனது நண்பனும் என்ன செய்வோமென்றால் பரிட்சைக்கு முந்தைய நாட்களில் அநேக தடவை முதல்நாளில் அந்த கோனார் நோட்ஸ் போன்ற புத்தகத்தை வாங்கி இரண்டாக கிழித்து மாற்றி மாற்றி படிப்போம். அப்துல்கலாம் டைப் மாணவர்கள் இதை கேலியுடன் பார்த்தாலும் யாரும் பயம் காரணமாக நேரில் காட்டுவதில்லை.

இறுதியாண்டு தேர்வுகளில் அதையே கடைபிடித்தோம். எனினும் புள்ளியியல், கணக்குப் பதிவியல் இரண்டுக்கும்  தமிழ் உதவாது. அதை மட்டும் முன் பக்கம் இருந்த அப்துல் கலாம் டைப் மாணவனைப் பார்த்து எழுதினேன். அவன் இப்போது கண்டிப்பாக சி.ஏ படித்துவிட்டு ஏதோ ஒரு அம்பானி கம்பெனியில் கள்ளக்கணக்கு எழுதிக் கொண்டிருப்பான் என்பது மட்டும் நிச்சயம். கடைசியில் புள்ளியலில் மட்டும் ஃபெயில். அதை மட்டும் அடுத்த ஆண்டு டியூஷன் சென்று முடித்தேன். இப்படியாக பி.காம் முடிந்தது.

அப்பறும் பொழுது போகாமல் அஞ்சல் வழிக் கல்வியல் இரண்டு எம்.ஏ படித்து ஒன்றில் தேர்வானேன். அதுவும் எனக்குப் பிடித்த வரலாறும், அரசியல் விஞ்ஞானமும். வரலாற்று பாடங்களையெல்லாம் முன்னதாகவே நூலகத்தில் படித்து முடித்திருந்த படியால் தேர்வில் சுவாரசியமில்லை. இருந்தும் ரசிய வரலாறோ இல்லை ஐரோப்பிய வரலாறோ ஏதோ ஒரு பாடத்தில் மிக நன்றாக எழுதியும் பெயிலாக்கியிருந்தார்கள். இந்த பாடத்தில் நான் டியூஷன் எடுத்த நண்பன் பாசாகியதுதான் கேலிக்கூத்து. இதுதான் அஞ்சல் வழிக்கல்வியின் இலட்சணம். இரண்டாவது எம்.ஏவிற்காக அரசியல் விஞ்ஞானம் படிக்கும் போது தந்தை ஒரு பட்டயப் படிப்பிற்காக சென்னைக்கு அனுப்பவதாக கூறினார். அது படித்தால் வெளிநாட்டிலெல்லாம் வேலை வாய்ப்பு குவியுமாம்.

அப்பாவின் ஆசைக்கு தலையாட்டிய நானோ அரசியல் தொடர்புகளை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பாக சென்னைக்கு விரும்பி வந்தேன். வந்து ம.க.இ.கவில் தோழராகி உண்மையான கல்வி, அறிவு, வாழ்க்கையை இன்றும் தொடர்கிறேன். இன்றுவரை எனது டிகிரி சான்றிதழ்களை வாங்கவில்லை. அதற்கான தேவையுமில்லை. மற்றபடி எனக்கே தெரியாமல் நடக்கும் உறவினர் திருமணங்களில் எனது பெயர் பி.காம், எம்.ஏ என்று பின்னிணைப்புகளுடன் வருவதாக தம்பி கூறுவான். அதைத் தவிர எனது வரலாற்றில் இந்த மொக்கை டிகிரிகளுக்கு மதிப்பேதுமில்லை.

மார்க்சியத்தை அறிந்த பின்தான் எது கல்வி என்பதையும், சமகால வாழ்க்கையை புரிந்து கொள்ள உதவும் அதன் வியப்பூட்டும் பலத்தையும், இளமைத் துடிப்பையும் அனுபவித்து கற்றிருக்கிறேன். அப்போது ரசியாவில் போலி சோசலிசம் உடைந்து கம்யூனிசம் என்றாலே தோல்வி மனப்பான்மை என்று மற்றவர்கள் எக்காளமிட்ட காலம். அக்காலத்தில் மார்க்சியத்தை தோழர்களின் உதவியால் படித்ததும், அதையே நடைமுறையில் மாற்று அரசியல் கொண்டோரிடம் விவாதித்து செழுமைப் படுத்தியதும் என்னைப் பொறுத்தவரை முக்கியமான காலகட்டம். அது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். இது எனக்கு மட்டுமல்ல, பல தோழர்களுக்கும் பொருந்தும்.

____________________________________________

காப்பி அடிப்பதை எப்படி நிறுத்துவது?

சில ஆண்டுகளுக்கு முன்புதான் அந்த தோழர் படித்து முடித்த கையோடு ஒரு கல்லூரியில் மாலைநேர பகுதி ஆசிரியராகச் சேர்ந்திருந்தார். தினசரி கல்லூரி அனுபவங்களை தொலை பேசுவார். வினவிலும் அவ்வப்போது பின்னூட்டமிடுவார். ஒரு முறை பேசும் போது ஆங்கிலப் பாடத்திற்காக காப்பி அடித்த இரு மாணவர்களை நிர்வாகத்திடம் பிடித்துக் கொடுத்தாக கூறினார். எனக்கு கடுமையான கோபம். இருவரும் காரசாரமாக விவாதித்தோம்.

அவரைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு ஒழுக்கமும், கட்டுப்பாடும் அவசியம், அதை இந்த வயதில்தான் கற்றுக் கொடுக்க வேண்டும், தேவையென்றால் இத்தகைய தண்டனைகள் அவசியம் என்கிறார். என்னைப் பொறுத்தவரை சென்னை நகரில் இருக்கும் அந்தக் கல்லூரியில் ஏழை, நடுத்தர மாணவர்கள் படிக்கிறார்கள். ஆங்கிலத்தை நேர்த்தியுடன் பேசும் பின்புலமற்ற, ஆங்கிலம் என்றாலே தாழ்வு மனப்பான்மைக்குள்ளாகும் அவர்களை அப்படி தண்டிப்பது தவறு. ஆங்கிலம் என்ற வில்லனால் அறிவுக்கூர்மையும், திறமையும் கொண்ட பல மாணவர்கள் தத்தமது துறையில் நீர்த்துப் போயிருப்பதை நேரிலேயே கண்டிருக்கிறேன்.

ஆகவே இந்தப் பின்புலத்தைக் கணக்கில் கொண்டு ஆங்கிலப் பாடத்தை காப்பியடிக்கும் அந்த மாணவர்களை அந்த தோழர் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம் என்பதுதான் எனது வாதம். கடைசிவரை தோழர் அதை ஏற்கவே இல்லை.

சென்னையில் கல்லூரியின் படிக்கட்டுக்களைக் கூட மிதிக்காமல் பல ஆயிரங்களை செலவிட்டால் டிகிரி வாங்க முடியும். அப்படி சிலர் வாங்குவதாக பத்திரிகைகளும் தெரிவிக்கின்றன. ஏழை மாணவர்களோ எப்பாடு பட்டாவது படித்து ஒரு வேலை தேட நினைக்கின்றனர். ஆங்கிலம் போன்ற பிரச்சினைக்குரிய பாடங்களில் காப்பி அடிப்பதும் அப்படித்தான்.

இதனால் காப்பி அடிப்பதை நியாயப்படுத்தவில்லை. அதன் பின்புலத்தை மாற்றுவது  குறித்தே என் அக்கறை. காப்பி அடிப்பதால் மாணவர்கள் ஒன்றும் கலகக்காரர்களாகி விடுவதில்லை. அவர்களது சமூக அக்கறையையும் அது தீர்மானிப்பதில்லை. காப்பி அடிப்பதின் தேவையும் வர்க்க பின்புலத்தை வைத்து மாறுகின்றன. பொதுவில் காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு எச்சரிக்கை, அவர்களது கல்லூரி வாழ்க்கையை பாதிக்காத வண்ணம் சிறு சிறு தண்டனைகள் என்று இருக்கலாம். மற்றபடி மெக்காலே பாணி குமாஸ்தாக்களை பொம்மை போல உருவாக்கும் இந்தப் பாடங்களை படித்தோ, காப்பியடித்தோ பாசானாலும் எந்தப் புண்ணியுமும் இல்லை.

பல தனியார் பள்ளி, கல்லூரிகளில் ரிசல்ட் காட்டவேண்டுமென்பதற்காக பார்த்து எழுதுவதை ஏதோ ஒரு முறையில் அனுமதிக்கிறார்கள். இதையெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் மாணவர்கள் காப்பி அடிக்கக் கூடாது என்பதை தீவிரமாக அமுல்படுத்தும் போது காப்பி அடிப்பதை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பணிதொடர்பான பிரச்சினையாக மாற்றவேண்டும்.

அதாவது மாணவர்களின் தவறுகளுக்கு ஆசிரியர்களை பொறுப்பாக்குவது. மாணவன் காப்பி அடித்தால் ஆசிரியரின் ஊக்கத்தொகையை குறைப்பது, அவனுக்கு தனி இலவச டியூஷன் எடுப்பது என்று மாற்றினால்  நன்றாக இருக்கும். மாணவர்களைப் பொறுத்தவரை இந்த மொக்கைப் பாடத்திட்டங்களை ஓரிரு மாதங்களுக்கு படித்தாலே நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும் என்பதை உணரவேண்டும். எங்களைக் கேட்டால் மாணவர்களின் வாழ்க்கையில் அரசியல் செயல்பாடுகள் கலந்தால் இந்த காப்பி அடிக்கும் பிரச்சினை மட்டுமல்ல, விடலைப் பருவ பிரச்சினைகள் கூட தீரும் என்று கருதுகிறோம்.

“என்னது மாணவர்களுக்கு அரசியலா” என்பவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களை சந்தித்து தெளிவடையலாம்.

_________________________________________________

பின் குறிப்பு: இதையே ஒரு தொடராக எழுதுமாறு பதிவுலக நண்பர்களைக் கோருகிறோம். எது கல்வி, எது அறிவு, காப்பியடிப்பது, கல்வி முறை, தேர்வுமுறை, ஆங்கிலம் படிப்பதில் உள்ள பிரச்சினைகள் என்று உங்கள் அனுபவத்தோடு எழுதலாம். வாசகர்கள் இங்கேயே விவாதிக்கலாம்.

_______________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்:


இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா !புதிய தொடர் !!

37

தோழர் கலையரசனின் “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” தொடர் வினவுத் தளத்தில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்று, பின்னர் அது தனி நூலாக வெளிவந்து சென்னை புத்தகக் கண்காட்சியில் பெரும் எண்ணிக்கையில் விற்பனையானது. இப்போது அவர் எழுதும் லத்தீன் அமெரிக்காவைப் பற்றிய தொடரை வெளியிடுவதில் வினவு பெருமை கொள்கிறது. தோழர்கள், வாசகர்கள், பதிவர்கள் அனைவரும் இந்த தொடரைப் படித்து பயன்பெறுவதோடு, அது தொடர்பான அரசியல் விவாதங்களில் பங்கு கொள்ளுமாறும் கோருகிறோம். – வினவு

____________________________________________________________

உலகில் இன்னொரு அமெரிக்கா இருக்கிறது. அனைவருக்கும் தெரிந்த “ஐக்கிய அமெரிக்க நாடுகளை” விட பரப்பளவால் இரண்டு மடங்கு பெரியது. அந்தக் கண்டத்தை சேர்ந்த 500 மில்லியன் மக்கட்தொகை ஸ்பானிய, போர்த்துக்கீசிய மொழிகளைப் பேசுவதால் “லத்தீன் அமெரிக்கா” என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த மொழிகள் பண்டைய லத்தீன் மொழியின் அடிப்படையில் அமைந்ததால் அந்தப் பெயர் வந்தது. சரியான அர்த்தத்துடன் தான் அந்தப் பெயர் சூட்டப்பட்டதா?

வாஷிங்டனை தலைநகராகக் கொண்ட அமெரிக்கா என்ற 50 மாநிலங்களின் குடியரசில், நாற்பது மிலியன் ஸ்பானிய மொழி பேசுபவர்கள் வாழ்கிறார்கள். அது இன்று உலகில் ஐந்தாவது ஸ்பானிய மொழி பேசும் நாடு! நியூ மெக்சிகோ போன்ற மாநிலங்களில் ஆங்கிலத்தை விட, ஸ்பானிஷ் அதிகம் பேசப்படுகின்றது.தென் கிழக்கு ஃப்ளோரிடா என்றழைக்கப்படும் மூன்று மாவட்டங்களில் மட்டும் (மயாமி, ப்ராவர்ட், பாம் பீச்) ஸ்பானிய மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.  இன்னும் கொஞ்சம் மேலே செல்லுங்கள். கனடாவில் லத்தீன் அடிப்படையில் அமைந்த இன்னொரு மொழியான பிரெஞ்சு பேசும் மக்கள் தனியாக “கெ பெக்” (Québec ) என்ற மாநில சுயாட்சியின் கீழ் வாழ்கின்றனர்.

தென் அமெரிக்கா கண்டம் முழுவதும் லத்தீன் மொழிகள் மட்டுமே பேசப் படுகின்றனவா? கயானாவிலும் சிறிய கரீபியன் தீவுகளிலும் ஆங்கிலம் ஆட்சி மொழி. சுரினாமில், நெதர்லாந்து உத்தியோகபூர்வ மொழி. இவை லத்தீன் அடிப்படை அற்ற, ஜேர்மனிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகள். சிலி நாட்டில் கணிசமான அளவு ஜெர்மானியர்கள், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்றார்கள். அவை இன்றும் “குட்டி ஜெர்மனிகளாக” காணப்படுகின்றன. பிரேசிலில் சாவோ பவுலோ (São Paulo) நகரில் வாழும் சில மில்லியன் ஜப்பானியர்கள், இன்றைக்கும் தமது ஜப்பானிய மொழியை மறக்கவில்லை.

பெரு நாட்டு பொருளாதாரத்தில், ஜப்பானிய வணிகர்களின் ஆதிக்கம் தவிர்க்க முடியாதது. அங்கே புஜிமோரி (புலம்பெயர்ந்தாலும் பெயரை மாற்றவில்லை) என்ற ஜப்பானியர் ஒரு தசாப்தமாக ஜனாதிபதியாக வீற்றிருந்தார். பதவியிழந்ததும் பாட்டன்மாரின் தாயகத்தில் சென்று தஞ்சம் புகுந்தார். ஆர்ஜன்தீனாவில் ஒரு மில்லியன் ஆங்கிலேயர்கள், விக்டோரியா இராணி காலத்து தொடர்புக்கு சாட்சியாக வாழ்கின்றனர். புவனொஸ் ஐரெஸ் (Buenos Aires ) நகரில் சாயங்கால தேநீர் விருந்தில் “புவனஸ் அயர்ஸ் ஹெரால்ட்” நாளேட்டுடன், ஆங்கிலம் பேசுவதை இன்றைக்கும் பார்க்கலாம்.

அமெரிக்கா என்ற புதிய பூமியை கொலம்பஸ் கண்டுபிடித்தது ஒரு புறம் இருக்கட்டும். யார் “லத்தீன் அமெரிக்கா” என்ற சொல்லைக் கண்டுபிடித்தார்கள்? நிச்சயமாக 19 ம் நூற்றாண்டு பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகளின் அரசியல் சொல்லாடலாக இருக்க வேண்டும். வட அமெரிக்கக் கண்டத்தில் பெருமளவு பகுதிகளை கபளீகரம் செய்த ஆங்கிலேயரை எதிர்க்க முடியாமல் போர்க்களத்தில் தோல்வியுற்றனர் பிரெஞ்சுக்காரர்கள். லூசியானா (அமெரிக்கா), கெபேக் (கனடா) என்று தமது உடன்பிறப்புகளின் மாநிலங்களையும் பறிகொடுத்தார்கள்.

பிரெஞ்சு அரசுக்கு கொள்கை வகுத்துக் கொடுத்த அறிவுஜீவிகளின் மனதில் தோன்றிய தீர்க்கதரிசனம் வரப்போகும் உலகை மாற்றியது. வட அமெரிக்க ஆங்கிலேயரின் பலத்தை சமன் செய்ய தென் அமெரிக்காவை முன் நிறுத்தினார்கள். எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு வைத்த பெயரான லத்தீன் அமெரிக்கா என்ற சொற்பதம் இன்று வரை நிலைத்து நிற்கிறது.

“கொலம்பஸ் 1492 ம் ஆண்டு அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.” உலக நாடுகள் எங்கும் பள்ளிச் சிறுவர்களின் மனதில் புகுத்தப்படும் சரித்திர பாடம். அமெரிக்கா ஒன்றும் அட்லாண்டிக் சமுத்திரத்தின் அடியில் மறைந்திருக்கவில்லை, கொலம்பஸ் வந்து கண்டுபிடிப்பதற்கு. கொலம்பஸ் வருவதற்கு 35000 வருடங்களுக்கு முன்னரே ஆசியாவில் இருந்து (இன்றைய ரஷ்யாவின் கிழக்கு எல்லை) மக்கள் அமெரிக்கா வந்து குடிபுகுந்துள்ளனர். தெற்கு நோக்கி இடம்பெயர்ந்த ஆசிய இனக்குழுக்கள், நாகரிக வளர்ச்சி அடைந்திருந்தனர். மாபெரும் சாம்ராஜ்யங்களைக் கட்டியுள்ளனர். இந்த நாகரீங்களில் பல, கொலம்பஸ் பஹாமாஸ் தீவில் கால் பதிப்பதற்கு நூறாண்டுகளுக்கு முன்னரே அழிந்து விட்டன. கொலம்பஸ் பிறப்பதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே ஸ்காண்டிநேவியாவில் இருந்து வந்த வைகிங் மக்கள் குடியேறியுள்ளனர். சிறு தொகையினரே என்றாலும், கனடாவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட “நியூ பவுன்ட்லான்ட்”(New Foundland ) எனுமிடத்தில் தமது தடயங்களை விட்டுச் சென்றுள்ளனர். இதைவிட எழுதப்பட்ட ஆவணங்கள் கிடைக்கப் பெறாத பினீசிய(லெபனான்), சீன கடலோடிகளின் கண்டுபிடிப்புகள் பற்றிப் பேசப்படுவதில்லை. அப்படியானால் கொலம்பஸ் எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறார்?

500 வருட கால “ஐரோப்பிய மையவாத அரசியல்” கொலம்பஸின் உதவி இன்றி உயிர் பெற்றிருக்காது. இன்றைக்கு ஐரோப்பிய கலாச்சாரம் உலகை ஆக்கிரமித்திருக்கிறது. ஐரோப்பியரின் அரசியல் ஆதிக்கம் உலகை அச்சுறுத்துகிறது. அதற்கெல்லாம் அவர்கள் கொலம்பஸிற்கு நன்றிக்கடன் பட்டுள்ளனர். ஆம், ஐரோப்பியர்கள் உலகை ஆள வழி திறந்து விட்டவர்தான் கொலம்பஸ்.

அன்றைய ஸ்பானிய இராணி இசபெல்லா தனது நகைகளை விற்று கொலம்பஸின் கடற்பயணத்திற்கு நிதி சேர்த்தார். அவர் கண்களில் கனவுகள் இருந்தன. கடல் கடந்து புதிய பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் கனவு. நூறாண்டுகளுக்கு முன்பு உதிரிகளாக உலகை சுற்றிய கடலோடிகள் எழுதிவைத்த குறிப்புகளுடன் வந்தார், ஜெனோவாவை (இன்று, இத்தாலி) சேர்ந்த கொலம்பஸ். “செல்வந்த நாடான இந்தியாவில் இருந்து சரசேனர்கள் (அரேபிய முஸ்லிம்கள்) திரவியங்களை கொண்டு வந்து விற்று லாபம் சம்பாதிக்கின்றனர். நாம் நேரடியாக வியாபாரத்தில் இறங்க வேண்டுமானால் கடல் பாதையை கண்டுபிடிக்க வேண்டும்.” கொலம்பஸின் திட்டம் இசபெல்லாவின் மனதில் ஆழமான தாக்கத்தை உண்டுபண்ணியது.

கஸ்திலிய நாட்டு (ஸ்பானியாவின் பழைய பெயர்) கொடியுடன் புறப்பட்ட கொலம்பஸின் கப்பல்கள் பஹாமாஸ் தீவில் தரை தட்டின. ஆரம்பத்தில் தங்கம் கிடைக்கிறதா எனத் தேடினார்கள். அது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் கரீபியன் தீவுகளின் மக்களை அடிமைப்படுத்தினார்கள். மூட்டைப்பூச்சிகளைக் கொல்வதைப் போல தேடித் தேடி அழித்தார்கள். இன்றைய உலகம் அதை இனவழிப்பு என்று கூறும். அன்று அதுதான் அரச கொள்கை. கத்தோலிக்க கிறிஸ்தவ மதமும் இனவழிப்புக்கு துணை போனது. முதலில் கரீபியன் கடல் பகுதி தீவுகளை சுத்திகரித்தார்கள். பிறகு ஸ்பானியாவில் இருந்து படைகளைத் தருவித்தார்கள். மத்திய அமெரிக்காவை கைப்பற்ற குறி வைத்தார்கள். இவை அனைத்தும் கொலம்பஸின் காலத்தில் நடந்தவை.

கொலம்பஸ் ஒரு கண்டுபிடிப்பாளன் மட்டுமல்ல, கப்பற்படைத் தலைவன், நிர்வாகி… இவ்வாறு மட்டும் வரலாற்றில் பதியப்பட்டிருக்கலாம். ஆனால் கூடச் சென்ற கொலம்பஸின் தம்பி ஒரு ஆக்கிரமிப்புப் படைகளின் தளபதி. ஆம், கொலம்பஸ் வெறுமனே அமெரிக்காவை கண்டுபிடித்ததுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. படையெடுத்து ஆக்கிரமிக்கவும், அடிமைப்படுத்தவும் வழிகாட்டினான். அதனால் தான் எமது சரித்திரப் பாட நூல்களில் கொலம்பஸிற்கு சிறப்பான இடம் வழங்கப் பட்டுள்ளது. உலகம் கண்டிராத மாபெரும் இனவழிப்புக்கு வித்திட்ட ஒருவர் உதாரண புருஷராக போற்றப்படுகிறார்.

அமெரிக்காவை கண்டுபிடித்தது ஒரு தற்செயல் நிகழ்வல்ல. கொலம்பஸ் புறப்படுவதற்கு 50 வருடங்களுக்கு முன்னரே, ஸ்பானிய, போர்த்துக்கேய கடலோடிகள் அட்லாண்டிக் சமுத்திரத்தில் அருகில் இருந்த தீவுகளை கண்டுபிடித்தார்கள். கனாரி, மடைரா போன்ற தீவுகளை சொந்தமாக்கிக் கொண்டார்கள். ஆப்பிரிக்காவின் சில கரைகளுக்கும் சென்றார்கள். அங்கு வாழ்ந்த மக்களை சிறைப் பிடித்தார்கள். தாய்நாட்டில் அடிமைகளாக வேலை வாங்கினார்கள். அன்றைய ஐரோப்பாவில் அவர்களிடம் தான் சிறந்த கடற்படை இருந்தது. நவீன கப்பல்கள் இருந்தன.

ஆனால் அவர்கள் தாயகம் இன்றைய ஸ்பெயின், போர்த்துக்கல்லின் வடக்கே உள்ள ஒரு சிறிய பிரதேசமாக இருந்தது. இபேரிய உபகண்டம் என்றழைக்கப் படும் அந்தப் பகுதியில், பெருமளவு அரேபியரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. அரபு ஸ்பெயினும், போர்த்துக்கல்லும் ஐரோப்பாக் கண்டத்திலேயே நாகரிக வளர்ச்சி அடைந்த பகுதியாக இருந்தது. உயர்தர கம்பளியை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யுமளவிற்கு வணிகத்தில் சிறந்து விளங்கியது. தொழிற்துறை வளர்ச்சி காணப்பட்டது. வடக்கே இருந்த கிறிஸ்தவ ஸ்பானியர்களும், போர்த்துக்கேயரும் இதைப் பார்த்து பொறாமைப்பட்டார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிரான கத்தோலிக்கர்களின் புனிதப்போர் அறிவிக்கப் பட்டது. உண்மையான ஆண்டவரைக் கொண்ட கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தவர்கள், மோசக்கார முஸ்லிம்களை எதிர்த்து போரிட வேண்டும் என்றார்கள். வத்திக்கானில் இருந்த பாப்பரசரும் ஆசீர்வாதம் வழங்கினார். வரலாற்றில் அது, இரு மதங்களுக்கு இடையிலான போராக பதியப்பட்டது. உலக வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் அரசியல் பிரச்சாரம் அது. புனிதப் போரை நடத்தியவர்களிடம் கத்தோலிக்க மதவெறி மட்டும் காணப்படவில்லை. அவர்கள் மனதில் பூகோள அரசியல் ஆதிக்கமும், செல்வத்தைக் கொள்ளையிட்டு பொருளாதார முன்னேற்றம் காணும் நோக்கமும் மறைந்திருந்தன. ஆனால் அனைத்தையும் மதப் போர்வையால் மூடிக் கொண்டார்கள். மக்களை தம் பின்னால் அணிதிரட்ட மதம் என்ற சித்தாந்தத்தை கையில் எடுத்தார்கள். அவர்களின் நோக்கம் நிறைவேறியது. மதம் மக்களைப் பிரித்தது. போர்க்கள வெற்றிகளைப் பெற்றுத் தந்தது.

அன்றும் இன்றும் புனையப்படும் பிரச்சாரத்திற்கு மாறாக, அரபு முஸ்லிம்களின் ஆட்சியில் இருந்த ஸ்பெயினிலும், போர்த்துக்கல்லிலும் மதப் பிரச்சினை அறவே இருக்கவில்லை. பெரும்பான்மை முஸ்லிம்களும், சிறுபான்மை கிறிஸ்தவர்களும், யூதர்களும் சமாதான சகவாழ்வு வாழ்ந்து வந்தனர். கத்தோலிக்கப் படைகள், அரபு முஸ்லிம்களை ஸ்பெயினில் இருந்து அடித்து விரட்டின. ஸ்பெயினிலும், போர்த்துகல்லிலும் ஆட்சிக்கு வந்த கத்தோலிக்க அரசர்களின் நாட்டில் முஸ்லிம்களுக்கும், யூதர்களுக்கும் இடம் இருக்கவில்லை. அனைவரும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். அல்லாவிட்டால் கொல்லப்பட்டனர்.

ஆயிரம் ஆண்டு கால இஸ்லாமியப் பேரரசை தோற்கடித்த கத்தோலிக்க ஸ்பெயினும், போர்த்துக்கல்லும் ஐரோப்பிய வல்லரசுகளாக மாறின. அவர்கள் வட ஆப்பிரிக்கா மீதும் படையெடுத்தனர். சில பகுதிகளை தக்க வைத்துக் கொண்டனர். (மொரோக்கோவின் வட கரையை சேர்ந்த செயுத்தா,மெலியா இன்றைக்கும் ஸ்பெயினின் பகுதிகள்.) ஆனால் அவர்களது தொலைநோக்கு முழுவதும் தங்கம் விளையும் புது உலகம் மீதிருந்தது. கொலம்பஸின் பின்னர் மாபெரும் கடற்படையணிகள் அமெரிக்கா என்ற கண்டம் நோக்கி பயணமாகின. அதில் ஒரு பகுதி தான் இந்தியாவிற்கு கடல்வழிப் பாதை கண்டுபிடிப்பது. அவர்களுக்கு அதுவரை தடையாகவிருந்த அரேபியரின் அச்சுறுத்தல் இப்போது இல்லை. உலகம் ஐரோப்பியருக்காக திறந்து விடப்பட்டது. அடுத்தடுத்து ஆப்பிரிக்கா, ஆசியா, இலங்கை, இந்தியா எல்லாவற்றையும் ஆக்கிரமித்தார்கள். ஐரோப்பியரின் காலனிய சாம்ராஜ்யங்களின் கீழ் கொண்டு வந்தார்கள்.

உலகை வெல்லக்  கிளம்பிய ஐரோப்பியர்கள், அமெரிக்கக் கண்டங்களை மட்டும் குடியேறுவதற்காக தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் அமெரிக்காவை ஆண்டவரால் தமக்கு நிச்சயிக்கப் பட்ட பூமியாக கருதிக் கொண்டார்கள். மத்திய அமெரிக்காவில் வந்திறங்கிய ஸ்பெயின் அரச பிரதிநிதிகளும், கத்தோலிக்க பாதிரிகளும் ஆண்டவன் கட்டளையை பறைசாற்றினார்கள். “இதனால் அனைவருக்கும் அறிவிக்கப் படுவதாவது. பரிசுத்த வேதாகமத்தின் கர்த்தர் எமக்கு இந்த நாட்டை சொந்தமாக்கும் படி உத்தரவிட்டுள்ளார்…” அவர்களின் அறிவிப்பை செவி மடுப்பதற்கு அந்தப் பிரதேசத்தில் எந்த மனிதப் பிறவியும் காணப்படவில்லை.

_________________________________________________________

–          தொடரும்

தோழர் கலையரசனின் வலைப்பூ முகவரி: http://kalaiy.blogspot.com/

vote-012

தொடர்புடைய பதிவுகள்:

பரிதாப பார்வதியம்மாள் ! பகடையாடும் கருணாநிதி EXCLUSIVE !!

29

ஆறு மாதகால விசா பெற்று மருத்துவ சிகிச்சைக்காக சென்னை  வந்த பார்வதியம்மாளை விமானத்தை விட்டே இறங்க விடாமல் தமிழக போலீசின் உதவியோடு  திருப்பி அனுப்பினார்கள் சென்னை விமான நிலைய அதிகாரிகள். இது தொடர்பாக வினவில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதி விட்டோம். பார்வதியம்மாள் விவாகரம் தொடர்பாக முதலில் அறிக்கை வெளியிட்ட கருணாநிதி “நள்ளிரவு 12 மணிக்கு தகவல் தெரிந்து விமான நிலையத்தை தொடர்பு கொண்ட போது அவரை திருப்பி அனுப்பி விட்டதாகச் சொன்னார்கள்” என்றார். பின்னர் சட்டமன்றத்தில் இது தொடர்பாகப் பேசிய கருணாநிதி “காலையில் நாளிதழ்களைப் பார்த்தே நான் தெரிந்து கொண்டேன் என்று” மாற்றிப் பேசினார்.

ஆனால் கருணாநிதி ஆதரவு தமிழுணர்வாளர்களோ வைகோவும், நெடுமாறனும் பார்வதியம்மாளை வைத்து தமிழின எழுச்சி மாநாடு நடத்தத் திட்டமிட்டிருந்ததாக உளவு நிறுவனம் கொடுத்த தகவலின் பேரிலேயே  பார்வதி திருப்பி அனுப்பப்பட்டதாகவும், ஆளும் கட்சிக்கு நெருக்கமான திருமா, சுப.வீரபாண்டியன் போன்றோர் மூலம் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் கருணாநிதியிடம் பேசி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பார்கள் என்றும் சொன்னார்கள்.

நெடுமாறன், வைகோ போன்றவர்கள் பார்வதியம்மாளை வைத்து ஆடிய ஐ.பி;எல்- ஆட்டம் தோற்றுப் போக அதையே தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட திருமா, சு,ப. வீரபாண்டியன், கி.வீரமணி போன்றோர் பார்வதியம்மாளை திருப்பி அனுப்ப முன்னர் கடிதம் எழுதிய ஜெயலலிதாவைக் கண்டித்து பெரியார் திடலில் கூட்டம் நடத்தினார்கள்.  தொடர்ந்து கருணாநிதியை நேரில் சந்தித்து வீரமணியும், சு,ப.வீரபாண்டியனும் பார்வதியம்மாளுக்கு சிகிச்சை வேண்டி கோரிக்கை விடுத்தனர். வெளியில் வந்து பேசிய சுப.வீ. “பார்வதியம்மாள் மனுக் கொடுத்தால் பரிசீலிப்பதாக முதல்வர் உறுதியளித்திருக்கிறார்”” என்றார்.

இதற்கிடையில் மூத்த வழக்கறிஞர் கருப்பன் பார்வதியம்மாளை திருப்பியனுப்பியது தொடர்பாக வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு வழக்கறிஞர் ,”மனுத்தாக்கல் செய்துள்ளவர் பார்வதியம்மாளின் உறவினரோ, அவருக்கு தொடர்பானரவோ கிடையாது, இந்தியரல்லாத ஒருவரின் விசாவை ரத்து செய்யும் உரிமை குடியுரிமை அதிகாரிகளுக்கு உண்டு எனவும், 2003- ல் தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரிலேயே மத்திய அரசு பார்வதியம்மாள் பெயரை எச்சரிக்கைப் பட்டியலில் சேர்த்துக் கொண்டதாகவும், இந்த நடைமுறையை அறியாத மலேஷியாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் தவறுதலாக விசா கொடுத்துள்ளதாகவும்”  விளக்கமளித்திருக்கிறார்.”

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் “’இந்த ஏழு ஆண்டுகளில் அதாவது பார்வதியம்மாள் வன்னிக்குத் திருபிச் சென்ற 2003- ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை எவ்வளவோ மாற்றங்கள் நடந்து விட்ட நிலையில் தமிழக அரசு தனது நிலையை பரிசீலித்து தனது முடிவை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்””” என்று தெரிவித்திருக்கிறது. மறுநாள் 30-04-2010 அன்று மீண்டும் மனு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு வழக்கறிஞர்  ரவீந்திரன் மாநில அரசு கேட்டுக் கொண்டால் மத்திய அரசு பார்வதியம்மாளுக்கு சிகிச்சை தொடர்பாக பரிசீலிக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மாநில அரசு வழக்கறிஞர் ராஜாகலிபுல்லா “’பார்வதியம்மாளிடம் இருந்து மனு எதுவும் இன்னும் வரவில்லை. வந்தால் அதை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கோரப்படும்”” என்றிருக்கிறார். இந்த அளவில் இந்த வழக்கு நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு மாதம்.

வழக்கு – மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கபடிப் போட்டி

ஈழ ஆதரவாளர்களும், தமிழுணர்வாளர்களும் இன்று இரு பிரிவாக பிரிந்து நிற்கின்றனர். ஒன்று சுப.வீ, வீரமணி, திருமா தலைமையிலான கருணாநிதிக் கூட்டணி, இன்னொன்று நெடுமாறன் வைகோ, தலைமையிலான ஜெ கூட்டணி. முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தில் தொடங்கிய இந்தக் கேடுகெட்ட துரோகத்தனம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜெ, கருணா என்ற இந்த இரண்டு தமிழின விரோதிகளாலும் குறைந்த பட்ச மனித நேய உதவிகளைக் கூட செய்ய முடியாத இரக்கமற்ற போக்கை ஈழ ஆதரவாளர்கள் கண்டுணரத் தயங்குகிறார்கள்.

2003-ல் பார்வதியம்மாளை அனுமதிக்க மறுத்த ஜெயலலிதா அதற்கு முன்னரும் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அனுமதி கோரிய புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுத்தலைவர் ஆண்டன் பாலசிங்கத்தையும் சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்தவர் என்பதோடு, ஆண்டன் பாலசிங்கமும் கருணாநிதி அரசிடம் இவ்விதமாய் மருத்துவ உதவி வேண்டி கேட்ட போது ஜெயலலிதாவைக் காட்டியே கருணாநிதியும் ஆண்டனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த கதைகள் முன்னுதாரணங்களாய் கிடக்கின்றன. சரி 2003-ல் ஜெயலிதா மறுத்தார்; கருணாநிதி ஆட்சிக்கு வந்து ஆட்சியும் முடியப் போகிறதே இந்தக் காலத்திலேனும் அந்த எச்சரிக்கைப் பட்டியலில் இருந்து பார்வதியம்மாள் பெயரை நீக்க முடியாதா? என்ற கேள்விகள் எல்லாம் இருந்த போதும் பார்வதியம்மாள் விவாகரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கபடியாட்டத்தையும் நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய அரசோ’’ 2003-ல் மாநில அரசு கேட்டுக் கொண்டதன் மூலமே விசா மறுத்ததாகவும் மாநில அரசு விரும்பினால் பார்வதியம்மாள் சிகிச்சை தொடர்பான விஷயத்தை மைய அரசு பரிசீலிக்கும்” என்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டது. மாநில அரசோ, “’பார்வதியம்மாளிடம் இருந்து கடிதம் வந்தால் மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கோருவோம்”” என்று சொல்கிறது. சரி அப்படியானால் ஜெயலலிதா 2003-ல் பார்வதியம்மாளுக்கு கொண்டு வந்த தடையை நீக்க வேண்டியது யார் பொறுப்பு? அந்தத் தடையை நீக்காமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாலேயே மீண்டும் மலேஷியத் தூதரகம் விசா வழங்கிவிடுமா, என்ன?

ஆக ஜெ மத்திய அரசுக்கு மாநில அரசின் சார்பில் செய்த பரிந்துரை ரத்து செய்யப்படாதவரை பாவதியம்மாள் சிகிச்சைக்கு வர சாத்தியமில்லை.  ஆனால் மாநில அரசோ “மனுக்கொடுத்தால் மத்தியா அரசுக்கு அனுப்புவோம், அதாவது நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம், செய்யச் சொல்லி நிர்பந்திக்கவும் மாட்டோம், கடிதமோ, மனுவோ எது வந்தாலும் மத்திய அரசுக்கு அனுப்புவோம்” என்று நரித்தனத்துடன் பேசுகிறது. ஆனால் மத்திய அரசோ “இதில் நாங்கள் செய்ய எதுவும் இல்லை எல்லாம் மாநில அரசின் கையில்தான் இருக்கிறது, அவர்கள்தான் பார்வதியம்மாளை அனுமதிக்க வேண்டாம் என்றார்கள், ஆகவே அவர்கள்தான் இப்போது பார்வதியம்மாள் விவாகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் பேச வேண்டும்” என்று சொல்கிறது.

பாருங்கள் யார் முதுகில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. வார்த்தைகளில் விளையாடிய இந்த மத்திய மாநில துரோகிகளின் நிலையைப் பார்த்து புரிந்து கொண்ட நீதிமன்றமோ வழக்கை ஒரு மாதம் தள்ளிப் போட்டு விட்டது. அப்பாடா……. ஒரு மாதம் இந்த ஒரு மாதத்தில் ஈழத்து தமிழறிஞர்களை எல்லாம் அழைத்து தனக்கு ஒரு பாராட்டு விழாவும் விருதும் கூட கருணாநிதி வாங்கிவிடுவார். ஆனால் பார்வதியம்மாள் என்ற எண்பது வயதைக் கடந்து விட்ட அந்த தாய்க்கு பக்கவாதம். சரியாக நினைவில்லை.

ஒரு மாதத்தில் அவருக்கு ஏதாவது ஒன்று ஆனால் கருணாநிதி என்ன செய்வார்? பழியைத் தூக்கி அப்படியே ஜெயலிதா மீது போடுவார். திருமா போய் அஞ்சலி செலுத்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பார். ஏதோ ஒரு வார இதழில் தொடர் எழுதுவார். நெடுமாறனும், வைகோவும் கருணாநிதிதான் காரணம் என்று அறிக்கை விடுவார்கள். கடைசி வரை நிம்மதியில்லாத நிலையில் அவர் மரித்துப் போகக் கூடும். மீண்டும் சில காலத்திற்கு நீங்கள் உற்சாகமிழந்த பின் மீண்டும் உங்களின் கபடி ஆட்டத்திற்கு இன்னொரு ஈழத்து இழிச்சவாயன் கிடைப்பான்.

பார்வதியம்மாளின் கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது

பார்வதியம்மாள் கடிதம் – சில கசப்பான உண்மைகள்!

பார்வதியம்மாள் தொடர்பான வாதம் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த (30-04-2010) அன்றே பார்வதியம்மாளிடம் இருந்து கருணாநிதிக்கு கடிதமும் வந்து விட்டது. மனிதம் அறக்கட்டளையின் அமைப்பாளர் அக்னி சுப்பிரமணியன் என்பவர் மூலம் வந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கடிதம் தமிழுணர்வாளர் சுப.வீரபாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சுய நினைவு பாதித்து பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள பார்வதியம்மாளால் இப்படி ஒரு கடிதத்தை சுய நினைவோடு எப்படி எழுத முடியும்? பார்வதியம்மாள் எழுதியதாகச் சொல்லப்படும் இக்கடிதத்தின் படி விசா விண்ணப்பித்தால் அதற்கான நேர்முகத்திற்கு அவரே செல்வாரா? அவரால் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலுமா? என்பதெல்லாம் இக்கடித்ததின் பின்னால் எழும் கேள்விகள். ஒரு வயதான சுயநினைவு சரியாக இல்லாத அம்மாள் தனது கைப்படக் கடிதம் எழுதவேண்டுமென்றால் இதை விட வக்கிரமும், ஆபாசமும் என்ன இருக்கிறது?

பார்வதியம்மாள் பெற்ற பிள்ளையான விநோதினி எழுதிய கடிதத்தை மறுத்து பார்வதியம்மாளிடமே கடிதம் கேட்கும் மனோபாவம் ஆளும்வர்க்கங்களின் வக்கிர புத்தியா?அல்லது செய்ய முடியாத நிலையை சட்டத்தின் மீது பழி போட்டுத் தப்பித்துக் கொள்ளும் முயற்ச்சியா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.ஆனாலும் பார்வதியம்மாளுக்கு  சிகிச்சையளிக்க மத்திய மாநில அரசுகள் அனுமதித்தால் போதும் என்ற மன நிலையே எல்லோரிடமும் இருக்கிறது.

பார்வதியம்மாள் கடிதம் எழுதுவதற்கு முன்னர் பிரபாகரனின் சகோதரி விநோதினி தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும் ஆனால் பார்வதியம்மாள் கைப்பட மட்டுமே கடிதம் வேண்டும் என்று கேட்கவே இப்போது பார்வதியம்மாளின் கைநாட்டில் கடிதத்தை ஒப்படைத்திருக்கிறார்கள். பார்வதியம்மாள் சென்னையில் வைத்து திருப்பியனுப்பப்பட்ட போது “’இப்போதுதான் எங்களை எல்லாம் நினைவுக்கு வந்ததா?” என்று கேட்ட சுப. வீரபாண்டியன் “சிறிது நேரம் முன்னால் பேசியிருந்தால் கலைஞரிடம் பேசி ஏற்பாடு செய்திருப்பேனே””  என்று அங்கலாய்த்திருக்கிறார்.

இப்போது பார்வதியம்மாள் எழுதிய கடிதம் அவர் கையில்; நெடுமாறனோ, வைகோவோ, ஜெயலலிதாவோ இதில் தலையிட முடியாது. வந்து தடுத்தால் கருணாநிதிக்கு கிடைத்துள்ள துரோகப் பட்டம் அவர்களுக்கும் கிடைக்கும். சுப.வீரபாண்டியனே கலைஞரிடம் பேசி மத்திய அரசுக்கு சம்பிரதாய கடிதம் அல்ல, பார்வதியம்மாளுக்கு சிகிச்சை செய்யும் படியான நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்வார் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஜெகத்ரட்சகன் நடத்திய வள்ளுவர் கோட்டம் விழாவில் கலந்து கொண்டு பல மணிநேரம் குத்தாட்டம் பார்த்ததால் தனக்கு ஏற்பட்ட முதுவலியை ஏதோ உலகப் பிரச்சனை ரேஞ்சுக்கு ஊதிப் பெருக்கிய கருணாநிதி அடுத்தவர் வலிகளையும் அதுவும் தன்னை விட வயதில் மூத்தவரான ஒரு தாயின் வலிகளைகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நமது ‘ஆசை’.

நளினி, பார்வதியம்மாள் ஒரு ஒற்றுமை

“நளினி விடுதலையில் மத்திய அரசு செய்வதற்கு ஒன்றுமே இல்லை, ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை தொடர்பாக முடிவு செய்ய வேண்டியது மாநில அரசின் பொறுப்பு” என்றது மத்திய அரசு.  முதலில் காலம் கடத்தி  நளினி விஷயத்தில் பதில் சொல்லாமல் இழுத்தடித்து வந்த மாநில அரசோ கடைசியில் ” நளினி விவாகரத்தில் நாங்கள் எங்களுக்கு சுயக்கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளோம்”  என்று விடுதலைக்கு ஆப்பு வைத்தது. நளினி மீண்டும் மனு செய்தார். அது விசாரணைக்கு வருவதற்கு முன்னரே நளினியின் அறையில் செல் போனைக் கண்டு பிடித்து அடுத்த ஆப்பை இறுக்கமாக இறுக்கி விட்டார்கள்.

இனி சில ஆண்டுகளுக்கு நன்னடத்தை விதிகளின் கீழ் விடுதலை கோர முடியாத அளவுக்கு பொய் பிரச்சாரம் ஒன்றை நளினிக்கு எதிராக செய்து விட்டது கருணாநிதி அரசு. இதோ பார்வதியம்மாள் விவாகரத்திலும் மத்திய அரசு செய்ய எதுவும் இல்லை எல்லாமே மாநில அரசு கையில்தான் இருக்கிறது என்று விட்டது மத்திய அரசு. மாநில அரசோ பார்வதியம்மாளிடம் மனு வந்தால் மத்திய அரசுக்கு போஸ்ட் பண்ணுவோம் கடிதம் எழுதுவோம் என்று காலம் கடத்தத் துவங்கிவிட்டது.  பல சூழல்களில் பார்வதியம்மாள் விஷயத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வீர்களா? செய்ய மாட்டீர்களா? என்ற நெருக்கடி வரும் போது பார்வதியம்மாள் மீதும் குண்டு வீசப்படலாம். கருணாநிதி வீசாத குண்டுகளா?  அதை எந்த நேரத்திலும் யார் மீதும் செய்யத் தயங்காதவர் அவர். பார்ப்போம் பார்வதியம்மாளை வைத்து எப்படி எல்லாம் விளையாடுகிறார் என்று?

வன்னியில் பல ஆயிரம் மக்களைக்கொன்ற சிங்கள இனவெறியின் அழிவுப் போர் நடந்து ஓராண்டு ஆகப்போகிறது. அப்போது போரின் முடிவைத் தெரிந்து கொண்டே போரை நிறுத்துவதாக நாடகமாடிய இந்த அரசுகளும், தலைவர்களும் இப்போது ஒரு முதிய ஈழத்து பெண்மணிக்கு மருத்துவத்தைக்கூட தரமுடியாமல் சட்ட மொழியில் குள்ளநரித் தந்திரத்துடன் விளையாடுகிறார்கள். இந்த நரிகளை எப்போது வேட்டையாடப் போகிறோம்? நரிகளுக்கு பஜனை பாடும் ஈழ, தமிழின ஆதர்வாளர்களை எப்போது சட்டையைப் பிடித்து நாக்கை பிடுங்குமளவு கேட்கப் போகிறோம்?

_____________________________________________

–          இராவணன்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்