1-10-2018
- திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய்!
- சிறைக்குள் வைத்து சித்ரவதை செய்வது கோழைத்தனம் !
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களைப், பல வழக்குகளில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்து பல வகைகளில் துன்புறுத்துகிறது அரசு. அவர் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் பாசிச பா.ஜ.க மோடி அரசைக் கண்டித்தும், அடிமை எடப்பாடி அரசைக் கண்டித்தும் பேசியதற்காகவும் போராடியதற்காகவும் போடப்பட்டவையாகும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு படுகொலைகளைப் பற்றி வெளி நாடுகளில் பேசினார் என்பது பா.ஜ.க. மோடி அரசின் ஆத்திரத்துக்குக் காரணமாகும்.
தோழர் திருமுருகன் காந்தியை வேலூர் சிறையில் காற்றோட்டம் இல்லாத தனி அறையில் சக சிறை வாசிகளிடம் பேச முடியாத வகையில் சிறை வைத்துள்ளனர். கட்சியினரோ, உறவினரோ, நண்பர்களோ, சந்திக்கவிடாமல் செய்வது, சென்னை, சீர்காழி, நாகர் கோவில், என தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களுக்கு அழைத்து சென்று அலைக்கழிப்பது, சரியான நேரத்தில் உணவு கொடுக்காமல் இருப்பது, சிறை உணவில் ஒவ்வாமையை உருவாக்கும் ஏதோ ஒரு மர்மமான மருந்தைக் கலந்து கொடுப்பது, தேவையான நேரத்தில் உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்காமல் இருப்பது என உளவியல் ரீதியாக அவரை சித்ரவதை செய்து அச்சுறுத்தி வருகின்றனர். சிறை அதிகாரிகள் மற்றும் போலீசாரின் இத்தகைய மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை அவர் குற்றவியல் நீதிபதியிடம் முறையிட்டு வருகிறார் ஆனாலும் அடக்குமுறைகள் தொடர்கின்றன.
தமிழக அரசின் இத்தகைய அடக்கு முறைகளைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். சிறைத்துறையோ, போலீசாரோ அதற்காக சிறிதும் கவலைப்பட வில்லை. திருமுருகன் காந்தி துன்புறுத்தப்படும் செய்திகள், அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் அரசு செய்கிறது.
போராடுபவர்களுக்கும், பொது மக்களுக்கும், சிறையைப் பற்றி ரத்தத்தை உறைய வைக்கும் வகையில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என மோடி எடப்பாடி அரசுகள் விரும்புகின்றன. கார்ப்பரேட் கொள்ளைக்கும், காவி பாசிசத்திற்கும் எதிராகப் போராடினால் பொய் வழக்குகள், கைது, சிறை, சித்ரவதை, என்று மக்கள் அஞ்சி நடுங்க வேண்டும் என்பதற்காகத்தான் திருமுருகன் காந்தியின் மீது மட்டுமல்ல, முகிலன், வழக்கறிஞர் முருகன், பேராசிரியர் ஜெயராமன், தோழர் வளர்மதி, மற்றும் மக்கள் அதிகாரத் தோழர்கள் ஆகியோர் மீது தேச துரோக வழக்கு, உபா சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டம், என்பதோடு அல்லாமல் பல ஊர்களில் எண்ணற்ற வழக்குகளை பதிவு செய்து வைத்துக் கொண்டு தொடர்ந்து கைது செய்து நீண்ட நாட்கள் பிணை கிடைக்கவிடாமல் செய்து சிறையில் அடைத்து வைக்கும் கொடுமையான அடக்குமுறைகளும் தொடர்கின்றன. இதைவிடக் கொடூரமான சிறை சித்ரவதை அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடி முறியடித்த கடந்தகால போராளிகளின் சிறை வரலாறு நெடியது.
படிக்க:
♦ திருமுருகன் காந்தி மீது ஊபா சட்டம் ! ம.க.இ.க கண்டனம் !
♦ குண்டர் சட்டம் : போராடுபவர்களை ஒடுக்கும் மாஃபியா அரசு !
அனைத்திலும் தோற்றுப்போன, பெரும்பான்மை மக்களை வஞ்சிக்கும் பாசிச அரசுகள் இனியும் அதிகாரத்தில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது. அரசை விமர்சித்துப் பேசுவது குற்றம், வாழ்வாதாரங்களைக் காக்கப் போராடுவது குற்றம், என்றால் சட்டத்தின் ஆட்சி, மக்களாட்சி என்பது எங்கே இருக்கிறது?. அரசின் பாசிச அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் எதிர்த்து நின்று போராடி முறியடிப்பதுதான் ஒரேவழி.
வழக்கறிஞர். சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
rajupp2019@gmail.com.