கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையில் போதிய பேராசிரியர்கள் இன்றியும் முறையான ஆய்வகங்கள் இன்றியும் செயல்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்து மாணவர்கள் 18-02-2019 அன்று உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் அருகாமையிலுள்ள கிராமப்புறங்களிலிருந்து வருகைதரும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள்.
காலையில் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கு முன்வராமல் போலீசைக் கொண்டு போராட்டத்தை ஒடுக்க முனைந்தது கல்லூரி நிர்வாகம். கல்லூரி முதல்வரின் மிரட்டல் மற்றும் போலீசின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் உள்ளிருப்புப் போராட்டத்தை மாணவர்கள் உறுதியுடன் தொடர்ந்தனர்.
மூன்று மணிநேரத்திற்கும் மேல் நீடித்த மாணவர்களின் உறுதியானப் போராட்டத்தைக் கண்டு மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார் கல்லூரி முதல்வர்.
வாக்குறுதியளித்தபடி ஒருவார காலத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் மீண்டும் எமது போராட்டம் தொடரும் என்ற எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர், மாணவர்கள்.
படிக்க:
♦ கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் !
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம்.. எதிர்த்து நில் ! ஏன் இந்த மாநாடு ?
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி என்றில்லை; தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகள் அனைத்திலும் இதுதான் நிலைமை. பல கல்லூரிகளில் முதல்வர் பணியிடமே காலியாகத்தான் கிடக்கிறது. தமது கல்விச் சூழலை பாதுகாத்துக் கொள்வதற்கே மாணவர்கள் ஒன்றுதிரண்டு உறுதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையே இந்த சம்பவம் உணர்த்தியிருக்கிறது.
தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர்.
தொடர்புக்கு: 97888 08110.