லகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக சொல்லப்படும் இந்தியாவை ஒரு தேர்தல் எதேச்சதிகார நாடாக அறிவித்துள்ளது ஸ்வீடனைச் சேர்ந்த வி-டெம் ஆய்வு நிறுவனம். இந்த நிறுவனம் பாரதிய ஜனதா கட்சியை எதேச்சதிகார ஆளும் கட்சியாக கடந்த ஆண்டு வரையறுத்தது.

ஜனநாயகத்தின் கருத்தியல் மற்றும் அளவிடும் அமைப்பான வி-டெம் அறிக்கையை ஸ்வீடனின் துணை வெளியுறவு அமைச்சர் ராபர்ட் ரைட்பெர்க் முன்னிலையில் வெளியிடப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் காணப்படும் எதேச்சதிகாரத்தை நோக்கிய சரிவு, தற்போது உலகம் முழுவதும் சர்வாதிகாரமயமாக்கப்படும் இந்த ‘மூன்றாம் அலையில்’ ஜனநாயகத்தில் இருந்து சரிவு ஏற்பட்ட நாடுகளின் நடைமுறையை ஒத்திருப்பதாகவும் ஊடகங்கள், கல்வியாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் சுதந்திரம் முதலில் குறைக்கப்பட்டு பிறகு, மிகப் பெரிய அளவில் சரிவைக் கண்டுள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது.

கடந்த ஆண்டு, இந்தியா மிகவும் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மேலும் பல தரவுகளுடன், 2019 முதல் இந்தியாவின் நிலை “தேர்தல் எதேச்சதிகார நாடாக”  உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி பிரதமரான பிறகு, தணிக்கைகள் வழக்கமாகிவிட்டன எனவும் அரசாங்க விஷயங்களுடன் மட்டுமே அவை நின்றுவிடவில்லை எனவும் அறிக்கை கூறுகிறது. மோடிக்கு முன்னர் இந்திய அரசு தணிக்கை செய்வதை அரிதாகவே பயன்படுத்தியது எனவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

படிக்க :
♦ சகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் ?
♦ டிராக்டர் பேரணியை இழிவுபடுத்தும் ரதயாத்திரை கும்பல்

இந்த அம்சத்தில், இந்தியா இப்போது பாகிஸ்தானைப் போலவே எதேச்சதிகாரமாகவும், அதன் அண்டை நாடான பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தை விடவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாகவும் வி- டெம் அறிக்கை கூறுகிறது.

“பொதுவாக, இந்தியாவில் மோடி தலைமையிலான அரசாங்கம் விமர்சகர்களை மவுனமாக்குவதற்கு தேசத்துரோகம், அவதூறு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான சட்டங்களைப் பயன்படுத்தியுள்ளது. உதாரணமாக, பாஜக ஆட்சியைப் பிடித்தபின் 7,000-க்கும் மேற்பட்டோர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆளும் கட்சியை விமர்சிப்பவர்கள்.” என்கிறது ஆய்வறிக்கை.

அரசாங்கம் பொது சமூகத்தை கட்டுப்படுத்துவதாகவும் மதச்சார்பின்மைக்கான அரசியலமைப்பின் உறுதிப்பாட்டுக்கு எதிராக செயல்படுவதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சிவில் சமூக அமைப்புகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்த வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டமான Foreign Contributions Regulation Act – FCRA -ஐ பயன்படுத்துவதாகவும் அறிக்கை கூறுகிறது. இந்துத்துவாவுடன் தொடர்புடைய சிவில் சமூக அமைப்புகள் முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிக்கப்படுவதாகவும் கூறுகிறது இந்த அறிக்கை.

2019-ம் ஆண்டும் திருத்தப்பட்ட சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம் அரசியல் எதிரிகளை துன்புறுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்கும் சிறையில் அடைப்பதற்கும் பயன்படுத்தப்படுவதாகவும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக போராடும் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாகவும் அறிக்கை ஆய்ந்தறிந்து கூறுகிறது.

“கல்வி புலத்தில் எழும் மாற்றுக் கருத்துகளை மவுனமாக்குவதற்கும் உபா பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடும் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களை பல்கலைக் கழகங்களும் அதிகாரிகளும் தண்டித்துள்ளனர்” என்கிறது வி-டெம் ஆய்வு.

“எதேச்சதிகாரம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதற்கான ஒரு முக்கியமான வெளிப்பாட்டு தன்மையை ஆய்வு கண்டறிந்துள்ளது. கல்வி புலம் மற்றும் சிவில் சமூகத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் முதலில் ஊடகங்களை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இவற்றின் மூலம் பிரிவினையைத் தூண்டி அரசியல் எதிரிகளை அவமதிக்கவும் அரசாங்க இயந்திரங்கள் உதவியுடன் தவறான தகவல்களை பரப்புவதும் நடைபெற்றது. இத்தனை தூரம் கடந்த பிறகே, ஜனநாயகத்தின் அடிப்படைகளான தேர்தல் மற்றும் பிற அமைப்புகள் மீது தாக்குதல் நடத்த முடியும். அதுதான் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என்கிறது அறிக்கை.

கடந்த 10 ஆண்டுகளில் தாராளமய ஜனநாயக நாடுகளின் உலகளாவிய வீழ்ச்சி வேகமடைந்துள்ளதாகவும் , குறிப்பாக ஆசிய-பசிபிக் பிராந்தியம், மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் 2020-ம் ஆண்டிலும் இது தொடர்ந்தது.

கடந்த பத்து ஆண்டுகளில், ஜனநாயகமயமாக்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாகக் (16) குறைந்து, உலக மக்கள் தொகையில் வெறும் 4 விழுக்காடாக மட்டுமே உள்ளது எனவும் ஆய்வு கூறுகிறது. இந்தியாவைத் தவிர, மற்ற ஜி 20 நாடுகளான பிரேசில், துருக்கி ஆகியவையும் ஜனநாயகத்தில் சரிவைக்கண்ட முதல் 10 நாடுகளில் அடங்கும்.

படிக்க :
♦ பிரேசில் அதிபருக்கும் மோடிக்கும் என்ன ஒற்றுமை ?
♦ பிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் !

கடந்த வாரம், அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் பற்றிய ஃப்ரீடம் ஹவுஸ் அறிக்கை இந்தியாவை பகுதி அளவு சுதந்திர நாடாக குறைத்துள்ளது.

நரேந்திர மோடி 2014-ல் பிரதமரானதிலிருந்து மனித உரிமை அமைப்புகள் மீது அதிகரித்த அழுத்தம், கல்வியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான மிரட்டல் மற்றும் முஸ்லிம்களை இலக்காகக் கொண்ட கும்பல் வன்முறைகள் உள்ளிட்ட பெருந்தொகையான தாக்குதல்களால், நாட்டின் அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் மோசமடைந்துள்ளன என்கிறது அறிக்கை. 2019-ல் தேர்தலுக்குப் பிறகு மோடி மீண்டும் தேர்வுபெற்றதும் ஜனநாயகச் சரிவு துரிதப்படுத்தப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது.

ஒருபுறம் அரசாங்கத்தின் கொடூர ஆளுகையில் நாடே கொந்தளிப்பில் இருக்கிறது. இந்த கொடூர ஒடுக்குமுறை மக்களால் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல்களின் மூலமாகவே அமல்படுத்தப்படுகிறது. பாசிஸ்ட்டுகள் தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட பிறகும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் கவிழ்த்து, குதிரை பேரங்கள் மூலம் ஆட்சியமைப்பது ஆகியவை நம் கண் முன்னேயே நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. இதனையே தரவுகளோடு சுட்டிக்காட்டுகிறது இந்த அறிக்கை.

அனிதா
நன்றி: ஸ்க்ரால்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க