தோழர் வே. ஆனைமுத்து- வின் மறைவு சமூகத்தின் பேரிழப்பு || ம.க.இ.க அஞ்சலி

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவரும் பெரியாரின் பெருந்தொண்டரும், திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடியுமான தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் தனது 96-ம் வயதில் மாரடைப்பால் காலமானார்.

பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பொது வாழ்வுக்கு வந்த தோழர் ஆனைமுத்து, பொதுவுடைமைச் சிந்தனையின்பால் கொண்ட ஈர்ப்பால், 1988-ம் ஆண்டு மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி எனும் கட்சியைத் துவக்கினார்.

இந்தியாவைப் பீடித்திருக்கும் பார்ப்பனிய ஏகாதிபத்திய சுரண்டல்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி தனது தளராத வயதிலும் எழுதிவந்தார்.  சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை எவ்வித சமரசமுமின்றி நடத்தி வந்திருக்கிறார்.

தோழர் வே. ஆனைமுத்து

தந்தை பெரியாரின் எழுத்துக்களையும் சொற்பொழிவையும் பொருள்வாரியாக பிரித்து அதனை மூன்று தொகுதிகளாகக் கொண்டுவர பெரு முயற்சி எடுத்து அதனைக் கொண்டுவந்தார். இதற்குக் கடுமையான உழைப்பைச் செலுத்தியவர் தோழர் ஆனைமுத்து.

பார்ப்பனியத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான கருத்தியல் போராட்டத்தை தனது சிந்தனையாளன் இதழ் மூலமாக கொண்டுவந்தார். தனது வாழ்நாள் முழுவதும் மார்க்சிய – பெரியாரிய – அம்பேத்கரிய சிந்தனையை உயர்த்திப் பிடித்தவர்.

மண்டல் கமிசனின் அறிக்கைக்கான பரிந்துரைகளை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியவர். மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டுக்கான சட்டப் போராட்டத்தில் தொடர்ந்து முன் நின்று நடத்தி வெற்றிபெற்றார்.

வாழ்நாள் முழுவதையும் பார்ப்பனிய ஏகாதிபத்திய எதிர்ப்புக்காக அர்ப்பணித்த தோழர் வே. ஆனைமுத்து இறுதிவரை எளிமையாக வாழ்ந்தவர். இன்று பாசிசம் இந்தியா முழுவதையும் வாரிச் சுருட்டத் துடித்துக் கொண்டிருக்கும் சூழலில் தோழர் வே. ஆனைமுத்துவின் மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பேரிழப்பு !

இவண்:
தோழர். ப.இராமலிங்கம்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
மக்கள் கலை இலக்கியக் கழகம்
தமிழ்நாடு- 97916 53200