04.03.2023
தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்பி
கலவரம் செய்ய முயலும் பாசிச பாஜகவை தடை செய்வோம்!
மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை !
கடந்த இரண்டு, மூன்று நாட்களாக வடஇந்திய ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு எதிரான வதந்திகளை பரப்பி சதி செய்தது பாசிச பாரதிய ஜனதா கட்சி தான் என்பது தற்பொழுது அம்பலமாகியுள்ளது.
உத்தரப்பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளரான பிரசாந்த் உமாராவ் என்பவன், இந்தியில் பேசியதற்காகவே தமிழ்நாட்டில் 12 பிகார் தொழிலாளிகள் அடித்துக் கொல்லப்பட்டனர் என்ற பொய் செய்தியை திட்டமிட்டு பரப்பியுள்ளான். இது தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக மற்ற தேசிய இனங்களை எதிரியாக்கும் சதி வேலையாகும்.
இச்செய்தியை பாசிச பாரதிய ஜனதா கட்சியினரும் வடநாட்டு ஊடகங்களும் திட்டமிட்டு பரப்புவதன் மூலம் தமிழ்நாட்டில் ஒரு உண்மையிலேயே இனக் கலவரத்தை உருவாக்குவதற்காக சதி செய்து வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு டிஜிபியும் தமிழ்நாட்டின் முதலமைச்சரும் உரிய விளக்கம் அளித்திருக்கிறார்கள். பீகார் மாநில சட்டசபையில் தமிழ்நாட்டில் பீகாரிகள் கொலை செய்யப்படுகிறார்கள் என்று பாசிச பாரதிய ஜனதா கட்சி அமளியில் ஈடுபட்டிருக்கிறது.
மாபெரும் இந்தி எதிர்ப்பு போர் நடந்த காலகட்டத்தில் கூட, இந்தி பேசியவர்கள் யாரும் தமிழர்களால் தாக்கப்பட்டதில்லை என்பதுதான் வரலாறு. உழைக்கும் வடஇந்திய தொழிலாளியையும் சுரண்டும் மார்வாடி, பார்ப்பன, பனியா குஜராத்தி கார்ப்பரேட் முதலாளிகளையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்தவர்கள் தமிழர்கள்.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஒரு பாசிஸ்ட், பீகாரிகள் தமிழ்நாட்டில் கொலை செய்யப்படுகிறார்கள் என்று வதந்தியை கிளப்பி விடுவான். அச்செய்தியை வடஇந்திய ஊடகங்களும் பாசிச பாஜக கும்பலும் இந்தியா முழுமைக்கும் பரவச் செய்யும். அதை வைத்து பீகார் சட்டசபையிலும் பீகாரிலும் கலவரம் செய்வதற்கு பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்யும். இதைப் பற்றி எதுவும் பேசாத அண்ணாமலை, தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று கூறுவார். என்ன ஒரு நாடகம் இது?
தமிழ்நாட்டை பிரித்தாளும் சூழ்ச்சியில் தமிழ்நாட்டை சுற்றி வளைக்கும் போரில் தமிழ்நாட்டில் உறவாடி கெடுக்கும் யுத்தியில் இந்த வதந்தியும் ஒன்று. பிபிசி ஆவணப்படம், ஹிண்டன்பர்க் அறிக்கை, எரிவாயு உருளை விலை ஏற்றம் என அம்பலப்பட்டு அம்மணமாகி போன இந்த மோடி-அமித்சா பாசிச கும்பலை காப்பாற்றுவதற்கும், மோடி-அமித்சா பாசிசக் கும்பலுக்கு எதிரான இந்தியா தழுவிய ஒரு கூட்டணி உருவாகக் கூடாது என்பதற்கும் நடத்தப்பட்ட முன்னோட்டமே பீகார் “தொழிலாளிகள் தமிழ்நாட்டில் கொலை செய்யப்பட்டார்கள்” என்ற வதந்தி.
இந்த வதந்தி தற்பொழுது முறியடிக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் இதை ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கும்பல் தொடர்வார்கள் வதந்திகளைப் பரப்பி கலவரம் செய்து ஆட்சியைப் பிடிப்பதும் தேசிய இனங்களை பிரித்தாள்வதுமே மோடி அமித்ஷா, பாசிச கும்பலின் கைவந்த கலை. இந்த மோடி கும்பலுக்கு ஏற்ற ஜாடிதான் சீமான். அதனால்தான் சுரண்டும் வடஇந்திய மற்றும் தமிழ் முதலாளிகளை பற்றி பேசாமல் சுரண்டப்படும், உழைக்கும் வடஇந்திய தொழிலாளியை தமிழர்களுக்கு எதிரியாக காட்டிக் கொண்டிருக்கிறார். ஆக, பாரதிய ஜனதா கட்சியின் இலக்கும் சீமானின் இலக்கும் ஒன்றே!
ஆகவே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பலை தடை செய் என்பது நம்முடைய முக்கிய கோரிக்கையாக இருக்க வேண்டும். பாசிச பாஜக – ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை தடை செய் என தேர்தல் ஆணையத்தில் கேட்பதல்ல; தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு ஊரிலும் தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் ஆர்.எஸ்.எஸ் – பாஜகவை தடை செய்ய வேண்டும், அதற்கான முன்னெடுப்புகளில் தமிழ் மக்கள் ஈடுபட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு புதுவை
99623 66321.