Saturday, June 13, 2026
முகப்பு பதிவு பக்கம் 423

ஓசூர் சாதி ஆணவப் படுகொலை : என்ன செய்யப் போகிறோம் ? ஃபேஸ்புக் தொகுப்பு

மீண்டுமொரு சாதி ஆணவப் படுகொலை தமிழகத்தில் நடந்தேறியிருக்கிறது. ஓசூர் அருகே உள்ள சூடு்கொண்டபள்ளி கிராமத்தைச் சார்ந்த வன்னியர் சாதியைச் சேர்ந்த சுவாதியும், பறையர் சாதி இளைஞர் நந்தீஸ் என்பவரும் காதலித்து, மூன்று மாதங்களுக்கு முன்பு ஊரைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருப்பூர் சென்று தங்கி வாழ்க்கை நடத்தியர்கள், மீண்டும் ஒசூருக்கு திரும்பி வந்துள்ளனர்.

ஒசூரில் உள்ள மரக்கடை ஒன்றில் நந்தீஸ் வேலைப் பார்த்துவந்த நிலையில், சென்ற வாரம் இருவரும் காணாமல் போயிருக்கின்றனர். 13.11.2018 அன்று,  நந்தீஸும் சுவாதியும் கர்நாடகா மாண்டியா பகுதியில் காவேரி ஆற்றின் கரையில் பிணமாக கரை ஒதுங்கியுள்ளனர்.

இருவரும் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதும், முகங்கள் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக எரிக்கப்பட்டிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட சுவாதி மூன்றுமாத கர்ப்பமாக இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.  அவமானத்தின் அடையாளமாக சுவாதி மொட்டையடிக்கப்பட்டும் அவர் அணிந்திருந்த தாலியால் கழுத்து இறுக்கப்பட்டும் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். ஒரு ரவுடி கும்பல் மூலம் சுவாதியின் பெற்றோர் இக்கொலையை நடத்தியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

தங்களுக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு தன் குடும்பமே காரணம் என காவல் நிலையத்தில் சுவாதி புகார் அளித்திருக்கிறார். இந்நிலையில் சுவாதியின் அப்பா ஸ்ரீனிவாசன், சகோதரர்கள் வெங்கடேஷ், அஸ்வதப்பா, உறவினர்கள் கிருஷ்ணன், வெங்கட்ராஜ், ஓட்டுநர் சாமிநாதன் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஸ்ரீனிவாசன் ஆவணப்படுகொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தக் கொடூர கொலைகளைக் கண்டித்தும், காரணமான சாதி வெறியர்களைக் கண்டித்தும், ஆணவப் படுகொலைகளைக் கண்டுகொள்ளாத தமிழக அரசு குறித்து முகநூலில் எழுதப்பட்ட சில பதிவுகள் இங்கே…

சிவபாலன் இளங்கோவன்:

“Caste is the state of mind” என்கிறார் அம்பேத்கர். எவ்வளவு கூர்மையான விவரிப்பு!

மற்றவர்களை போல அவர் ‘சாதி ஒரு மனநோய்’ என சொல்லவில்லை, மாறாக மிக மிக நுணுக்கமாக அது ஒரு ‘மனநிலை’ என்கிறார். நோய்கள் குணமடையக்கூடியன ஆனால் மனநிலை மாறாதது. நோய் என்பது நமது விருப்பத்தை தாண்டி, நமது கட்டுபாட்டை தாண்டி நம்மில் நிகழ்வது. ஒரு நோயில் இருந்து விடுபடவே ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான். ஆனால் மனநிலை அப்படியல்ல அது விரும்பி ஏற்றுக்கொள்வது அல்லது விரும்பி உள்வாங்கிக்கொள்வது. ஏதோ சில சாதகங்களுக்காக ஒரு மனநிலையை ஒரு மனிதன் தனக்குள் விரும்பி வரித்துக்கொள்கிறான். சாதி அது போன்ற ஒரு மனநிலை தான். அதன் வழியே கிடைக்கும் ஆதாயத்திற்காக ஒருவன் விரும்பி அதை தரித்துக்கொள்கிறான். இங்கு ஆதாயம் என்பது வேறொன்றுமல்ல இன்னொரு மனிதனை அதன்பொருட்டு பிரித்துப்பார்ப்பதே, அவன் மீது சாதி ரீதியாக தனக்கு கிடைத்த ஆதாயத்தை பிரயோகிப்பதே.

இன்னும் நுணுக்கமாக பார்த்தால் அம்பேத்கர் இதை ‘trait’ என சொல்லவில்லை. ‘state’ என்று தான் விழிக்கிறார். ‘trait’ என்பது மரபணுவில் (Genes) பதிந்தது, மரபு ரீதியாக வருவது அதாவது ஒருவனுடைய ‘trait’ என்பது அவன் பிறப்பதற்கு முன்பே தீர்மானிக்கப்படுகிறது. ‘state’ என்பது கற்றுக்கொள்வது. ஒருவன் பிறந்ததற்கு பிறகு இந்த சமூகத்திடம் இருந்து கற்று கொண்டதில் தனக்கு தேவையானதை, சாதகமானதை உள்வாங்கிக்கொண்டு அதை எப்போதும் வெளிப்படுத்தி கொண்டிருப்பது தான் ‘state’. அம்பேத்கர் சாதிய மனநிலை என்பது மரபணுவில் கடத்தப்படும் பண்பல்ல மேலும் ஒருவன் பிறக்கும் போது அத்தகைய மனநிலை ஏதுமற்றவனாக தான் பிறக்கிறான் ஆனால் அவன் வளரும்போது இந்த சமூகம் இந்த மனநிலையை அவனுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக புகுத்திவிடுகிறது என்கிறார்.

படிக்க:
கௌரவக் கொலைகள் – விடாது வரும் இந்திய சாதனை!
தெலுங்கானா பிரணய் : இந்தியாவை உலுக்கிய சாதிவெறிப் படுகொலை !

சாதிய மனநிலை ஒருவனுக்கு வந்ததுக்கு சாதிய சமூகம் மட்டுமே காரணம். ஒருவன் இத்தகைய மனநிலையை தனக்குள் கொள்ளும்போது அவன் அதை மட்டுமே பிரதானமாக கொண்டு சக மனிதன் மீதுள்ள கரிசனத்தை நிராகரிக்கிறான். சகமனிதன் மீதான கரிசனம் மற்றும் சகமனிதர்களுடன் இணைந்திருத்தல் தான் “Socialization”ல் பிரதானமானது. “Human are social animal” என்ற கூற்றுப்படி பார்த்தால் இந்த “Socialization” அவ்வளவு முக்கியமானது. சாதி என்பது இந்த “Socialization”க்கு நேர் எதிரானது. சாதிய மனநிலையை கொண்டிருக்கும் ஒருவன் “Human are social animal” என்ற பண்புகளற்று போகிறான், அதன் படி அவன் வெறும் மிருகம் என்ற பதத்திற்கு உள்ளே தான் வருகிறான். அப்போது அவன் வெளிப்படுத்தும் பண்புகளும் மிருகத்தை ஒத்தவையாகவே இருக்கின்றன.

இந்த மிருகங்களிடம் இருந்து மனிதர்களை காப்பது இன்றைய காலகட்டத்தில் மனிதனுக்கு முன் உள்ள மிகப்பெரிய சவால். அதற்கான வேலையை இந்த சமூகத்தில் படிந்துள்ள சாதிய விழுமியங்களை தகர்ப்பதில் இருந்தே தொடங்க வேண்டும். அதை நோக்கி முற்போக்கு இயக்கங்கள் செயல்பட வேண்டும். குறிப்பாக பெரியாரிய இயக்கங்கள் வெறும் ‘கடவுள் மறுப்பு’ பிரச்சாரங்களில் இருந்து வெளியே வந்து நேரடியாக சாதிய பண்பாடுகளை, பெருமிதங்களை, புனிதங்களை இளைய தலைமுறைகளிடம் அம்பலப்படுத்த வேண்டும். அதற்கான பிரச்சாரங்களை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வீதிகளிலும் செய்திட வேண்டும். அதில் ஒருங்கிணைந்து செயல்பட நாம் எல்லாரும் தயாராக வேண்டும்.

சாதியை அழிக்கும் புயல் எந்த வங்கக்கடலில் இருந்து தொடங்காது, அதை நம் மனதில் இருந்தே கொள்ள வேண்டும். ஏனென்றால் “Caste is the state of mind”.

ஜாதி-மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்கள் ஜாதியை விட்டொழித்துவிட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், பருகும் தண்ணீரிலிருந்து, கடைசியாய் போய்சேரும் சுடுகாடு வரையிலும் ஜாதி இருக்கிறதே அதை என்ன செய்ய?

கிருபா முனுசாமி:

தொடர்ந்து நிகழ்ந்தேறும் ஜாதிய ஆணவ படுகொலைகள் குறித்தோ, ஒடுக்கப்பட்ட பெண்கள் – சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகள் குறித்தோ எதுவுமே எழுத முடியாத ஒரு கையாலாகாத மனநிலையில் இருந்தேன். ஆனால், நேற்று வெளிவந்த ஓசூர் ஜாதி மறுப்பு தம்பதிகளின் சிதைந்த உடல்களை கண்டபிறகு அமைதியாக இருக்க முடியவில்லை. நான், ஒரு தனிநபராகவே, கிட்டத்தட்ட 8 ஆண்டுகாலமாக ஜாதியையும், அதன் அடிப்படையிலான வன்முறைகளையும் எழுதிய வண்ணமே இருக்கிறேன். எனக்கு முன்பிருந்தே பல ஆண்டுக்காலங்களாக எழுதிவரும் முன்னோடிகளையும் பார்க்கின்றேன். ஜாதி ஒழிப்பிற்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்த பெருந்தலைவர்களும், அவர்தம் தொண்டர்களும் நம் சமூகத்தில் இருந்துவந்து தான் இருக்கிறார்கள். வடஇந்தியாவையும், மற்ற பிற இனங்களையும் ஒப்பிடும் பொழுது, தமிழ்நாடு மிகவும் முன்னேறிய மாநிலமாகவும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரீகமடைந்தது தமிழ்க்குடி என்றும் பெருமை பேசி வந்தாலும், ஜாதிய வன்கொடுமையில் தமிழகம் சளைத்ததாக தெரியவில்லை.

கல்வி-பொருளாதார முன்னேற்றம் அடைந்தவர்கள் இவ்வித ஜாதிவெறிக்கு விதிவிலக்கா என்றால், அதுவும் இல்லை! அவரவர் அளவில், அவரவர் எல்லைகளில் ஜாதியை மிகவும் இறுக்கமாக பற்றிக்கொள்பவர்களாக அவர்களும் இருக்கிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு? ஜாதி-மறுப்பு திருமணங்கள் என்று மட்டும் நாம் எண்ணுகிறோம் என்றால், சிக்கல் நம்மிடமும் இருக்கிறது. நம் சிந்தனையை விரிவுப்படுத்த வேண்டிய தேவை மேலோங்கி இருக்கிறது.

சுசீலா ஆனந்த்:

சேரிகளை,குடிசைப் பகுதிகளை கைவிட்ட இடது, பெரியாரிய சிந்தனையாளர்கள் தான் கேட்பாரற்று நடக்கும் ஆணவ கொலைகளுக்குக் காரணம். அந்த பலவீனத்தை மறைக்கவே சாதி ஓட்டுகளால் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தை நெருக்கும் வேஷங்கட்டி முகநூலில் இறங்கி இருக்கிறோம். ஒவ்வொரு படுகொலையின் போதும் அவர்கள் வீடுகள் போய் கேதம் விசாரித்து விட்டு வருவதை அரசியல் செயல்பாடாக கருதி திருப்தி கொள்கிறோம்.

சமூகநீதிக்கான அரசியல் செயல்பாடென்பது சேரியென்றும் / குடிசைப் பகுதியென்றும் ஊர்களின் / நகரங்களின் ஒடுக்கப்பட்டோர் குடியிருப்பு பகுதிகளில் இயக்கம் கட்டுவது!! அதற்கான திட்டம் வகுப்பது!! ஆங்கிலத்தில் இதைத் தான் strategy என்பார்கள். இருக்கிறதா நம்மிடம்?

தொலைத்த இடத்தில் தேடாமல் தேடும் இடத்தில் கிடைக்குமா சமநீதி? 😡 ஒன்பதோடு பத்தாக கடக்கவிருக்கும் ஒசூர் சாதி ஆணவப்படுகொலை நினைவாக…

படிக்க:
காதலர்கள் அடித்துக் கொலை ! இரத்தம் குடிக்கும் பார்ப்பனியம் !!
சாதிவெறி கதிரவன், முருகன்ஜியைக் கைது செய் – ஆர்ப்பாட்டம்

ஜமாலன்:

மற்றொரு ஆணவக்கொலை. திருமணம் முடிந்த மகளையும், அவளது கணவனையும் வெட்டி ஆற்றில் போடும் மனம் எப்படி தாய், தந்தை பாசம் கொண்டதாக இருக்க முடியும். உண்மையில் இத்தகைய மேல்தள மனதிற்குள் இருப்பது சாதி என்கிற ஆணவம் மட்டுமே. பாசம் என்பதெல்லாம் உள்ளுர சொத்துடமை, சாதிய ஆணவம் சார்ந்த உறவுகளை மறைக்கும் பொதுச்சொல். இ்ங்கு சொத்து என்பது தனது மகள், தனது சாதி, அதன் பெருமிதம் என்கிற பண்பாட்டுப் பெருமதிகள். இந்திய சாதியத்தில் உயர்சாதி-தாழந்தசாதி என்கிற பண்பாட்டு ஆதிக்கம் அதிகம். அது ஒரு பண்பாட்டு மூலதனமாகவே மாறி, ஒவ்வொரு உடலிலும் சாதியாக முதலீடாகியுள்ளது. வெட்கமறுவதற்க்குகூட லாயக்கற்ற ஒரு சமூகமாக மாறிக்கொண்டுள்ளது.

அடிப்படையான பிரச்சனை 1948-ல் உருவான ஃபோர்ட் பவுண்டேஷனும், அதன் பல வடிவங்களில் உலக அளவில் உருவான என்ஜிவோ இயக்கங்களுமே. அவற்றின் நோக்கம் புரட்சிகர சிந்தனைக்கு மாற்றாக சீர்திருத்த வாதத்தை முன்வைப்பதும், புரட்சிகர அமைப்புகளுக்கு மாற்றாக சீர்திருத்த அமைப்புகள், சட்டவாத அமைப்புகள், தீண்டாமை ஒழிப்பு இயக்கங்கள் இப்படி பல வடிவங்களில் செயல்படுவது. அறிவுஜீவிகள் தளத்தில் அறிவை அடகுவாங்கி அவர்கள் வழியாக என்ஜிவோ தனது கருத்தியல் தளத்தை ஒரு அரசியல் ஆழ்மனதாக உருவாக்கி உள்ளது. அதுதான இடதுகளின் தோல்வி.

விநாயக முருகன்:

தமிழ்நாட்டில் ஒருகாலத்தில் பெண் சிசுக்கொலைகள் அதிகம் இருந்தன. அதற்கான சிறப்புச்சட்டம் இயற்றி இப்போது அது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று சொன்னாலே அந்த ஸ்கேனிங் செண்டரை இழுத்து மூடி மருத்துவரையும் உள்ளே தூக்கி வைத்து விடுவார்கள். மெடிக்கல் கவுன்சில் அவர்களது டாக்டர் பட்டத்தை பத்தாண்டுகளுக்கு (என்று நினைக்கிறேன்) ரத்து செய்துவிடுவார்கள். இதற்கு பயந்துக்கொண்டே யாரும் இப்போது அதை செய்வதில்லை. ஜாதிய படுகொலைகளுக்கும் இதுபோன்றதொரு சிறப்புச்சட்டம் கொண்டுவர படவேண்டும். அதை மற்ற கொலைகேஸ் போல விசாரிக்கக்கூடாது. சிறப்பு சட்டம் மூலம் இரண்டு மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்கபட வேண்டும். குறிப்பாக பெண்ணின் அல்லது ஆணின் பெற்றோரை (தேவைப்பட்டால் இரண்டு பேர்களையும் சேர்த்தே) முதன்மை குற்றவாளியாக்கி தண்டனை கொடுக்கப்படும்வரை ஜாமீனில் வெளிவரமுடியாத அளவுக்கு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். இதுபோன்ற சிறப்புச்சட்டம் பற்றி உச்சநீதிமன்றமே ஏற்கனவே சொல்லியுள்ளது.

படிக்க:
கொளத்தூர்: வன்னிய சாதி வெறி ! நேரடி ரிப்போர்ட்
விழுப்புரம்: வன்னிய மக்கள் ஆதரவுடன் வன்னிய சாதிவெறிக்கு கண்டனம்!

‘வயதுவந்த இருவர் மனம் ஒப்பித் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தால் அதற்கு குடும்பத்தின் அனுமதியோ, சாதி, சமூகம் ஆகியவற்றின் அனுமதியோ தேவை இல்லை’ எனத் தெளிவாகக் கூறியிருக்கும் உச்சநீதிமன்றம், ஆணவக் கொலையைத் தடுப்பதற்காகவும், அதனால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் , அந்தக் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களைத் தண்டிப்பதற்காகவும் சிறப்பு சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் இயற்றவேண்டும் என பரிந்துரை செய்திருக்கிறது. அப்படியான சட்டம் இயற்றப்படும் வரை மத்திய, மாநில அரசுகள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

தடுப்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள், தண்டிக்கும் நடவடிக்கைகள் என மூன்று தலைப்புகளில் வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் அளித்திருக்கிறது.

சாதி பஞ்சாயத்துகளைத் தடுப்பதற்கு சிஆர்பிசி 144 பிரிவின்கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கலாம், பிரிவு 151ன் கீழ் கைதும் செய்யலாம் எனக் கூறியிருக்கும் உச்சநீதிமன்றம், சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளைப் பாதுகாக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை உள்ளடக்கிய சிறப்புப் பிரிவையும் பாதுகாப்பு இல்லங்களையும் ஏற்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆணவக் குற்றங்களைத் தடுக்கத் தவறும் அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுத்துத் தண்டிக்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இந்த உத்தரவு இனிமேல் பதியப்படும் வழக்குகளுக்கு மட்டுமின்றி ஏற்கனவே கிடப்பில் இருக்கும் வழக்குகளுக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அனைத்து மாநில அரசுகளும் இதை நடைமுறைப் படுத்தவேண்டும் எனவும் கண்டிப்போடு உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனாலும் இன்னமும் எதுவும் விடிந்தபாடில்லை. சிறப்புச்சட்டம் வந்து சிலர் உள்ளே போகும் வரை இங்கு கொலைகள் விழுந்தபடிதான் இருக்கும்.

படிக்க:
அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா?
தமிழகம்: ஆதிக்க சாதிவெறித்தனத்தின் புதிய பரிமாணங்கள்!

பிரதாபன் ஜெயராமன்:

ஒசூரில் இரண்டு இந்துக்கள் திருமணம் செய்ததால், கொலை செய்து ஆற்றில் வீசியிருக்கிறார்கள். இந்துக்கள் கட்சி என தம்பட்டம் அடிக்கும் பாஜக எங்கே? இந்துக்களுக்காக போராடுவதாக சொல்லும் ஆர்.எஸ்.எஸ் சங்கீ அடிமைகள் எங்கே?

கோபாலகிருஷ்ணன் சங்கரநாராயணன்:

டிவிட்டர் ஐடி இருந்தால், இயக்குநர் பா. ரஞ்சித் ஓசூர் ஆணவக் கொலையால் வெகுண்டெழுந்து போட்டிருக்கும் ட்வீட்களுக்கு வரும் கமெண்டுகளைப் பாருங்கள்.

மிகப் பெரும்பாலானவை, ‘நீ சாதிய வெச்சுப் படம் எடுக்கறத நிறுத்து’, ‘நீதான் சாதியப் பிடிச்சுக்கிட்டுத் தொங்கற’ வகையிலானவைதான். இப்படிச் சொல்பவர்கள் பெரும்பாலானோர் அஜித், விஜய், விக்ரம், யுவன் சங்கர் ராஜா படங்களை ப்ரொஃபைல் பிக்காக வைத்திருக்கும் இளைஞர்கள். சிலர் வெளிப்படையாகவே சுயசாதிப் பெருமை பேசும் கயவர்கள். அவர்களும் இளைஞர்களாகவே இருக்கக்கூடும். அடுத்தத் தலைமுறையையும் சாதி வெறித் தின்றுகொண்டிருக்கிறது. அதைத் தடுக்க என்ன செய்யப் போகிறோம்?

தலித் என்பது சாதி அல்ல. அது சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்களைக் குறிப்பிடுவதற்கான சொல் என்ற மிக எளிய விஷயத்தைக்கூட இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் அறியமாட்டார்கள். இந்தியா முழுவதும் இதே நிலைதான். ‘Dalit girl commits suicide’ என்று செய்தித்தாள்கள், இணையதளங்கள் செய்திவெளியிட்டால், அதற்கு வரும் 95% எதிர்வினைகள், ‘இதில் எங்கிருந்து சாதி வந்தது?’ என்று கேட்பதாகத்தான் இருக்கும்.

படிக்க:
கொங்கு பயங்கரவாதி யுவராஜை என்கவுண்டர் செய்யலாமா ?
திருவண்ணாமலை வெங்கடேசைக் கொன்ற வன்னிய சாதி வெறியர்கள் !

சம்பந்தப்பட்ட செய்தியாளரை, செய்தித் தளத்தைச் சாதியவாதி, சாதி வெறிபிடித்தவர் என்று வசைபாடுவதாகவும் இருக்கும். ஒவ்வொரு முறை அவற்றைப் பார்க்கும்போதும் அது குறித்த ஆற்றாமைப் பொங்கிவரும். ஆனால் எதுவும் செய்ய முடியாது. என்னதான் செய்யப் போகிறோம்?

தலித் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பிரத்யேகமானவை, சாதிய சமூகத்தில் அவர்களில் பலருக்கு நிம்மதியாக வாழ்வதே அன்றாடப் போராட்டம், இதைப் பேசுவது அந்தச் சாதிகளுக்குப் பரிந்து பேசுவதாகாது, அந்த மக்களும் மற்றவர்களைப் போல் வாழ வேண்டும் என்றும், நாம் நாகரீகமானவர்கள் என்று நமக்கு நாமே உறுதி செய்துகொள்வதற்கான உணர்வென்றும், சாதிமய இந்தியாவின் பெரும்பான்மையான இளைஞர்களுக்கு எப்படிப் புரியவைக்கப் போகிறோம்?

சைவ உணவுப் பழக்கத்தால் உடல், மனநலக் குறைபாடு ஏற்படுமா ?

சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களைக் காட்டிலும் உடல் நலனும்  ஆயுளும் குறைவாக பெற்றிருக்கிறார்கள் என்கிறது ஆஸ்திரிய மருத்துவ பல்கலைக்கழக ஆய்வு. இறைச்சி உண்ணாதவர்களுக்கு உடல் மற்றும் மனநல குறைபாடுக்கான சாத்தியங்கள் அதிகளவு உள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஆஸ்திரியாவைச் சேர்ந்த கிராஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன.  சைவ உணவு பட்டியலில் நல்ல கொழுப்புச் சத்து குறைவாக உள்ளதும், அதிகப்படியாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் உண்பதும் கேன்சர், ஒவ்வாமை மற்றும்  மன அழுத்தம், பதட்டம் போன்ற மனநல பிரச்சினைகளை உண்டாக்க வாய்ப்புள்ளது என்கிறது மருத்துவப் பல்கலை ஆய்வு.

இறைச்சி உண்பவர்கள், காய்கறிகள் உண்பவர்களின்  உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் வேறுபாடுகளை ஆராய்ந்ததில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன. காய்கறிகளை உண்பவர்கள் குறைவான மது அருந்துவதாகவும் சராசரி உடல் எடையைவிட குறைவான எடையை கொண்டுள்ளதாகவும் இந்த ஆய்வு சொல்கிறது. ஒட்டுமொத்தத்தில் இவர்களின் உடல் நலனும் மனநலனும் மிகவும்  பின்தங்கிய நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். குறைவான இறைச்சி உண்பவர்களும்கூட உடல்நலனில் அக்கறை செலுத்தாதவர்களாக இருக்கிறார்களாம்.

“எங்களுடைய ஆய்வின்படி, காய்கறிகளை உண்ணும் ஆஸ்திரிய இளம்பருவத்தினர் குறைவான ஆரோக்கியம் உள்ளவர்கள். (புற்றுநோய், ஒவ்வாமை, மனநல குறைபாடுகளை பெற்றிருக்கிறார்கள்) மேலும் அவர்கள் வாழ்க்கைத் தரம் சிறப்பாக இல்லை. அவர்களுக்கு அதிகப்படியான மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது” என ஆய்வின் முடிவில் ஆய்வாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

படிக்க:
தென்னிந்தியாவின் உணவு இட்லி தோசையா – இறைச்சியா ? மு.வி.நந்தினி
மாட்டுக்கறி தின்னா உனக்கென்னடா ? சிவவிடுதி லட்சுமி பேசுகிறார் – வீடியோ

இந்துத்துவ அடிப்படைவாதிகள் சைவமே சிறந்தது என முன்னெடுக்கிற அரசியல் மூலம் பெரும்பகுதி உழைக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது. குறிப்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சைவ உணவுப் பழக்கம் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. ஹரியாணா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்தர பிரதேசம் ஆகியவற்றில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் சைவம் உண்ணுகிறவர்களாக உள்ளார்கள்.

குரங்கிலிருந்து மனிதர்களை பரிணமிக்கச் செய்ததில் இறைச்சியின் பங்கு முக்கியமானது என அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன. உண்மையில், சங்கிகளின் சிந்திக்க திராணியற்ற ‘மாட்டு மூளை’க்கு அவர்களின் சைவ உணவுதான் காரணமா என்பதை ஆய்வுக்கு உட்படுத்தினால், நிச்சயம் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரக்கூடும்.

செய்தி ஆதாரங்கள்:
Vegetarian India A Myth? Survey Shows Over 70% Indians Eat Non-Veg, Telangana Tops List
♦ Vegetarians are ‘less healthy and have a lower quality of life than meat-eaters’, scientists say

எங்களில் எவரும் வெகுஜனப் புகழைத் தூசியளவு கூட மதித்ததில்லை – மார்க்ஸ்

மார்க்ஸ் பிறந்தார் – 22
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

9. ஒரு மேதையும் அவருடைய சூழலும் – 2

மார்க்ஸ் மிகவும் அடக்கமான முறையில் வாழ்க்கை நடத்தி வந்தார் என்றாலும் அரசியல் அகதிகளுக்கு அவர் குடும்பத்தில் இடமும் உணவும் ஆறுதலும் தவறாமல் கிடைக்கும்.

வில்ஹெல்ம் லீப்க்னெஹ்ட் பிற்காலத்தில் பின்வருமாறு நினைவுகூர்ந்தார்:

“எங்கள் (ஜெர்மனியிலிருந்து ஓடி வந்த இளம் அகதிகள் – ஆசிரியர்) மீது மார்க்சைக் காட்டிலும் திருமதி மார்க்ஸ் தான் அதிக வன்மையான முறையில் கூட ஆதிக்கம் செலுத்தினார். அந்த அம்மையாரிடம் பெருமிதம், தன் சொந்த கெளரவத்தைப் பற்றிய உணர்வு இருந்தது…. அந்த அம்மையார் சில சமயங்களில் எனது காட்டுமிராண்டிகளை அடக்கி மென்மையாக்கிய இஃபிஜீனியாவாக, வேறு சமயங்களில் மனப்போராட்டம் மற்றும் சந்தேகங்களில் அறுக்கப்பட்ட மனிதனிடம் அமைதியை ஏற்படுத்துகின்ற எலியனோராக இருந்தார்கள்;எனக்குத் தாயாக, நண்பராக, துணைவராக, ஆலோசகராக இருந்தார்கள் பெண்ணைப் பற்றிய இலட்சிய வடிவமாக இருந்தார்கள்; இன்றும் அப்படியே நினைக்கிறேன், நான் லண்டனில் தார்மிக முறையிலும் உடல்நலத்திலும் சீர்குலைந்து விடாதிருந்தேன் என்றால் அதற்காக அந்த அம்மையாருக்கே நான் நன்றி செலுத்துவேன், இதை நான் பன்முறை சொல்வேன்.”(1)

வில்ஹெல்ம் லீப்க்னெஹ்ட்

ஜென்னியின் அசாதாரணமான அழகும் அறிவும் மார்க்சைச் சந்திக்க வருபவர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு அதிகமான மகிழ்ச்சியைக் கொடுத்தன. ஹேய்னெயும் ஹேர்வெக்கும் ஃபிரெய்லிக்ராத்தும் ஜென்னியைப் போற்றினார்கள். மிக அடக்கமான அரசியல்வாதிகள் கூட ஜென்னியைப் பற்றிப் பேசுகின்ற பொழுது கவிஞர்களாக மாறினார்கள்.

முதலாவது அகிலத்தின் அமைப்பாளரும் தையற்காரருமான பிரெடெரிக் லெஸ்னர் பின்வருமாறு எழுதுகிறார்:

“நம்பகமான ஒவ்வொரு தோழருக்கும் மார்க்சின் வீடு எப்போதும் திறந்தே இருந்தது. மற்ற பலரையும் போலவே மார்க்ஸ் குடும்பத்தாருடன் மகிழ்ச்சிகரமாகக் கழித்த பல மணி நேரங்களை நான் என்றுமே மறக்கமாட்டேன். குறிப்பாகத் திருமதி மார்க்ஸ் பிரகாசமான பிரதிபலிப்பை ஏற்படுத்தினார், அவர் உயர்ந்த அழகான பெண்மணி, மிகவும் பிரசித்தி பெற்றிருந்தாலும், மிக நல்ல பண்புடையவர்; அன்புடன், சிரிக்கப் பேசி அளவளாவும் தன்மையுடையவர், வீண் பெருமையும் திமிரும் இல்லாதவராகத் திகழ்ந்தார்.

அவர் முன் எவரும் சொந்தத் தாய் அல்லது சகோதரி முன் இருப்பது போன்று உணர்வார்கள். அவர் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் மிகுந்த உற்சாகம் காட்டி வந்தார்.

பூர்ஷ்வா வர்க்கத்திற்கு எதிராகக். கிடைக்கும் வெற்றிகள், எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி, அவருக்கு மிகப் பெரிய திருப்தியையும் மகிழ்ச்சியையும் கொடுத்தன.”(2)

தன் கணவர் சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றுமே மற்றவர்களைக் காட்டிலும் ஜென்னியைத்தான் அதிகமாகப் பாதித்தது. ஜெர்மனியின் பிற் போக்குவாதப் பத்திரிகைகள் 1848-ம் வருடப் புரட்சிக்காரர்களைப் பற்றி அவதூறு செய்த பொழுது, விஷத்தில் தோய்க்கப்பட்ட அம்புகள் மார்க்சைக் குறிபார்த்துத் தொடுக்கப்பட்ட பொழுது ஜென்னியே மிகவும் பாதிக்கப்பட்டாள், நோயில் விழுந்தாள்.

படிக்க :
அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள். கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று!
டார்வின், உயிரினங்களின் தோற்றம், இயற்கைத் தேர்வு – ஒரு அறிமுகம்

மூலதனத்தின் முதல் தொகுதி வெளியிடப்பட்ட பிறகு, சகாப்த முக்கியத்துவம் நிறைந்த இப்புத்தகத்தை ஜெர்மனியில் முற்றிலும் புறக்கணித்து விட்டார்களே என்று ஜென்னி மிகவும் வருந்தினாள். மார்க்சின் மேதைக்குத் தகுந்த அங்கீகாரம் இல்லையே என்பதைப் பற்றி அவள் வேதனைப்பட்டாள்.

தன் மரணத்துக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர்  ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் மார்க்சைப் பற்றிச் சிறிய குறிப்பு வெளியிடப்பட்டிருந்ததைப் பார்த்து ஒரு குழந்தையைப் போல மகிழ்ச்சி அடைந்தாள். ஜென்னியின் மரணத்துக்குப் பிறகு மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் இச்சம்பவத்தை வேதனையுடன் நினைவுகூர்ந்தார்.

1881-ம் வருடத்தின் கடைசியில் ஜென்னி மரணமடைந்த பொழுது எங்கெல்ஸ் இனி மூரும் (மார்க்சுக்கு அவர் குடும்பத்தில் கொடுக்கப்பட்டிருந்த செல்லப் பெயர். -ப-ர்) இறந்து விட்டார்” என்று கூறினார்.

இதைக் கேட்ட மற்றவர்கள் திகைப்படைந்தனர். மார்க்சும் ஜென்னியும் ஒருவர் இல்லாமல் மற்றொருவர் மெய்யாகவே வாழ முடியாது, மார்க்ஸ் இனி மேல் உயிர்தரிக்க மாட்டார் என்பதை எங்கெல்ஸ் நன்றாக அறிந்திருந்தார். அவர் கூறியபடி நடந்தது.

மனிதகுலம் காதலைப் பற்றி பல கதைகளையும் காவியங்களையும் தொல்கதைகளையும் படைத்திருக்கிறது. அவற்றில் மார்க்ஸ்-ஜென்னி காதல் கதை மிக மேன்மையானது. மார்க்ஸ் நண்பர்களிடம் காலப் போக்கில் மாற்றமடையாத பாசத்துடன் பழகினார்.

மார்க்சும் எங்கெல்சும் தங்களுக்கு ஏற்பட்ட எல்லாச் சோதனைகளையும் ஒன்றாகவே சகித்துக் கொண்டார்கள், அவர்கள் ஒருவரையொருவர் அதிககாலத்துக்குப் பிரிந்திருக்கமாட்டார்கள், தங்களுடைய பொது இலட்சியத்துக்காக இணைந்து பாடுபட்டார்கள்.

மார்க்சின் வாழ்க்கை வெளித்தோற்றத்தில் பளபளப்பான வர்ணங்களோ, அசாதாரணமான சம்பவங்களோ இல்லாமற் தோன்றலாம். ஆனால் புரட்சிக்காரர், அரசியல் போராட்டக்காரர், கட்டுரையாளர், விஞ்ஞானி என்ற முறையில் அவருடைய வாழ்க்கையில் ஆன்மிகப் பரபரப்பு நிறைந்திருக்கிறது. அதில் உணர்ச்சிக் கொந்தளிப்புகள், போராட்டம், துணிவுடைமை, உண்மைக்கும் பாட்டாளி வர்க்க இலட்சியத்துக்கும் தன்னலமற்ற சேவை ஆகியன இருக்கின்றன.

மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ்

அவருடைய வாழ்க்கை என்பது ஐரோப்பியத் தொழிலாளர்களின் வர்க்க உணர்வின் உருவாக்கத்தின் மொத்த வரலாற்றுச் சகாப்தமே. அவர்தான் கம்யூனிஸ்டுச் சங்கம் என்ற பெயரில் கம்யூனிஸ்டுக் கட்சியின் சிறு கிளையை முதன்முறையாக அமைத்தவர், சமூகத்தைத் திருத்தியமைப்பதற்குரிய போராட்டத்துக்கு உத்வேகமூட்டுகின்ற, தெளிவான வேலைத்திட்டமாகிய கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையை – எங்கெல்சின் துணையுடன் – தயாரித்தளித்தவர்.

Neue Rheinische Zeitungஇல் அவர் எழுதிய கட்டுரைகள் 1848-ம் வருடப் புரட்சியின் போது துணிகரமாகப் போராடுவதற்கு எழுச்சியூட்டின. 1864-ம் வருடத்தின் இலையுதிர்காலத்துக்குப் பிறகு முதலாவது அகிலத்தின் பணிகளுக்கு முழுமையான கவனம் செலுத்துவதற்காக அவர் தன்னுடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளை நிறுத்தி வைத்தார். முதலாவது அகிலத்தின் இதயமாக அவர் விளங்கினார்.

பல்வேறு நாடுகளிலிருந்த தொழிலாளர் இயக்கத்தை ஒன்றுபடுத்தி, பாட்டாளி வர்க்கத் தன்மையில்லாத, மார்க்சுக்கு முந்திய சோஷலிசத்தின் பல்வேறு வடிவங்களையும் (மாஜினி, புரூதோன், பக்கூனின், இங்கிலாந்தின் மிதவாதத் தொழிற்சங்க இயக்கம், ஜெர்மனியில் லஸ்ஸால் வாதிகளின் வலதுசாரித் திருப்பம், இதரவை) கூட்டு நடவடிக்கையினுள் கொணர்வதற்கு முயற்சி செய்து, இக்குறுங்குழுக்கள் மற்றும் மரபுகள் அனைத்தின் தத்துவங்களையும் எதிர்த்துப் போராடி மார்க்ஸ் பல்வேறு நாடுகளிலும் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் ஒன்றுபட்ட செயல்தந்திரத்தை உருவாக்கினார். பாரிசில் கம்யூன்வாதிகள் நடத்திய புரட்சிகரமான சண்டைகளை அவர் இளமை வேகத்தோடு கவனித்தார். கம்யூன் நடவடிக்கைகளை ஆராய்ந்தார்.

மார்க்ஸ் மக்களிடமிருந்து ஒதுங்கித் தந்தக் கோபுரத்தில் வசித்த விஞ்ஞானி என்று கூறுகின்ற முதலாளி வர்க்கக் கற்பனையை இவை அனைத்தும் மறுக்கின்றன. விஞ்ஞான உலகக் கண்ணோட்டத்தை விரித்துரைக்கின்ற மாபெரும் இலட்சியத்துக்காகத் தன்னுடைய வாழ்க்கையில் கணிசமான பகுதியை அர்ப்பணித்த மார்க்ஸ் நேரடியான அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான வேலைகளுக்குக் காலம் செலவிடுவதற்குச் சிறிதும் தயங்கவில்லை.

மார்க்சின் நண்பர்களில் ஒருவரான லுட்விக் கூகல்மன் மார்க்ஸ் அரசியல் பிரச்சாரம் செய்வதில் ஈடுபடக் கூடாது, மூலதனத்தின் மூன்றாவது தொகுதியை எழுதி முடிப்பதில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும், ஏனென்றால் புரட்சி இலட்சியத்துக்கு இது மிகவும் முக்கியமானது என்று அவரிடம் வாதாடிய பொழுது மார்க்ஸ் ஆத்திரமடைந்தார், அவருடன் தன்னுடைய உறவுகளை முறித்துக் கொண்டார்.

அவருடைய அரசியல் வாழ்க்கையை விஞ்ஞான வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாது; ஒரு துறையில் அவருடைய நடவடிக்கை மறு துறையில் அவருடைய நடவடிக்கைக்கு உரமாகவும் தூண்டுகோலாகவும் இருந்தது. இரண்டு துறைகளிலும் இலட்சியங்கள் மற்றும் வழிமுறைகளின் தூய்மைக்காக மார்க்ஸ் ஈவிரக்கமின்றிப் போராடினார். அத்தூய்மையிலிருந்து பிறழ்வது அவமானகரமானது என்று கருதினார்.

தனிப்பட்ட புகழ் மற்றும் அந்தஸ்தை அடைவதற்காகப் புரட்சிகரமான கோஷங்களை உபயோகிப்பது பாட்டாளி வர்க்க இலட்சியத்துக்குச் செய்யப்படுகின்ற மிகக் கேவலமான துரோகம் என்று மார்க்ஸ் கருதினார். வாயாடித்தனமான அரசியல் சூழ்ச்சிக்காரர்கள் ஆர்ப்பாட்டமான சொற்றொடர்களுக்குப் பின்னால் தங்களுடைய திறன்மையின்மையையும் சூன்யத்தையும் மறைத்துக் கொள்கிறார்கள்.

இவர்களுடைய போலிப் புகழை மார்க்ஸ் வெறுத்தார். இவை அனைத்துக்கும் பின்னால் அருவருப்புத் தருகின்ற போலித்தனமான அற்பவாதம் இருப்பதை மார்க்ஸ் தவறாமல் கண்டுபிடித்தார். மார்க்ஸ் வீண் வார்த்தைகளையும் ஆர்ப்பாட்டமான நடிப்பையும் மன்னிக்கமாட்டார்.

ஃபெர்னாண்டு  லஸ்ஸால்

ஜெர்மானிய சமூக-ஜனநாயகவாதிகளின் தலைவரான ஃபெர்னாண்டு  லஸ்ஸால் மலிவான முறையில் புகழ் பெறுவதற்காகப் பாடுபடுவதையும்  அவருடைய அகம்பாவத்தையும், விளையாட்டுதனத்தையும் உணர்ச்சிப் பசப்பையும் கூலிப் புத்தியையும் வீரப்பெருந்தகையின் நடையுடை பாவனைகளையும் கலந்து கிராமந்தர நடிகர் மேதை மற்றும் பிரபுவின் பாத்திரத்தை நடிப்பதைப் போல அவர் நடந்து கொள்வதையும் மார்க்சும் ஏங்கெல்சும் இரக்கமின்றி கேலி செய்தார்கள். அந்த “மார்கிஸ் போஸாவைக்” குறிப்பதற்காக அவர்கள் உபயோகித்த கிண்டலான பட்டப் பெயர்கள் எண்ணிலடர்கா!

பிரெஞ்சு முதலாளித்துவ அரசியல்வாதியும் வரலாற்றாசிரியரான லுயீ பிளாங்கைப் பற்றியும் மார்க்ஸ் இதே மாதிரியான அணுகுமுறையைக் கடைப்பிடைத்தார்.

“…. எங்களில் எவரும் வெகுஜனப் புகழைத் தூசியளவு கூட மதித்ததில்லை. இதற்குச் சான்று; உதாரணமாக, அகிலம் இருந்த காலத்தில் பல நாடுகளிலுமிருந்து எண்ணற்ற பாராட்டுகள் எனக்கு வந்ததுண்டு; நான் தனிநபர் வழிபாட்டை வெறுத்த காரணத்தால் இப்பாராட்டுக்களில் ஒன்றுகூட விளம்பரமாகப் பயன்படுவதற்கு நான் அனுமதித்ததில்லை; நான் அவற்றுக்குப் பதிலும் எழுதவில்லை, அப்படிப் பதிலளித்திருந்தாலும் அது அவர்களைக் குட்டுவதற்காகவே இருக்கும்.

எங்கெல்சும் நானும் முதன்முறையாக கம்யூனிஸ்டுகளின் இரகசியச் சங்கத்தில் (கம்யூனிஸ்டு சங்கம். –ப-ர்.) சேர்ந்த பொழுது அதிகாரத்தை வகிப்பவர்களிடம் குருட்டுத்தனமான மூடநம்பிக்கைகளை ஊக்குவிக்க முற்படுகின்ற அனைத்தும் விதிமுறைகளிலிருந்து நீக்கப்படுவதை நிபந்தனையாக முன்வைத்தோம்.”(3)

ஒரு நபர் எதை விரும்புகிறார் என்பதைக் கொண்டு மட்டுமல்லாமல் அவர் எதை வெறுக்கிறார் என்பதைக் கொண்டும், எதற்கு அனுதாபம் காட்டுகிறார் என்பதை மட்டுமல்லாமல் எதை அருவருப்பாகக் கருதுகிறார் என்பதைக் கொண்டும் அவர் எப்படிப்பட்டவர் என்று கூற முடியும். உங்கள் எதிரி யார் என்பதைச் சொல்லுங்கள், நீங்கள்யார் என்று நான் சொல்கிறேன்.

குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளில் ஒருவரான கார்ல் ஹுர்த்ஸ் 1848-இல் கொலோனில் ஜனநாயகச் சங்கங்களின் காங்கிரசில் கார்ல் மார்க்ஸ் சொற்பொழிவாற்றியதைக் கேட்டார்.

மார்க்ஸ் “Burger (முதலாளி, அற்பவாதி) என்ற சொல்லை எவ்வளவு தீவிரமான அருவருப்புடன் உச்சரித்தார் என்பதை அவர் தன்னுடைய வாழ்க்கை முழுவதிலும் மறக்கவில்லை. மார்க்ஸ் தன் கட்டுரைகளிலும் புத்தகங்களிலும் கடிதங்களிலும் ஏராளமான அற்பவாதிகளுக்கு அவரவர் தகுதிக்குத் தகுந்தவாறு பரிசு வழங்கியிருக்கிறார். அந்த நபர் தன்னுடைய விமர்சனத்துக்குத் தகுதியுடையவரா என்பதைப் பற்றி மார்க்சுக்கு அக்கறையில்லை. அதன் பலனாகப் பல அனுமதேயங்கள் மார்க்சினால் விமர்சிக்கப்படுகின்ற புகழைப் பெற்றார்கள்.

லேஸ் ஸிங்கைப் பற்றி ஹேய்னெ பின்வருமாறு கூறியது மார்க்சுக்கு முற்றிலும் பொருந்தும்: “அவர் தன் எதிரிகளை அழிக்கின்ற பொழுது அவர்களை அமரர்களாக்கினார்.” இந்த அற்பமான எழுத்தாளர்களை மார்க்ஸ் தன்னுடைய அறிவார்ந்த இகழ்ச்சிக்கு, மேன்மையான நகைச்சுவைக்கு இலக்காக்கினார்; அம்பரில் புதைந்திருக்கும் கொசுக்களைப் போல அவர்கள் இப்பொழுது அவருடைய நூல்களில் நிரந்தரமாகப் பாதுகாக்கப்பட்டிருக்கிருர்கள்.”(4)

மார்க்சின் வாழ்க்கை முழுவதிலும் அற்பவாதிகள் (மூன்றாம் நெப்போலியன் முதல் பத்திரிகை நிருபர்கள் வரை) அவதூறுகள், ஒடுக்கு முறைகள், பொய்களின் மூலமாக அவரைப் பழிவாங்குவதற்கு முயற்சி செய்தார்கள்; அவை பலனளிக்கவில்லை என்றால் அவருடைய புத்தகங்களை முற்றிலும் புறக்கணித்துவிடுவதன் மூலம் பழிவாங்கினார்கள்.

எனினும் எல்லாக் கடுமையான சோதனைகளுக்குப் பிறகும் எந்த விஷயத்திலும் மார்க்ஸ் அற்பவாதிக்கு விட்டுக் கொடுக்கவில்லை, “அற்பவாதிக்குக் கீழ்நிலையில்” இருக்கவில்லை, எப்பொழுதுமே அவனுடன் போராடுவதற்குத் தயாராக இருந்தார். “ஆம், எப்படியிருந்தபோதிலும் அற்பவாதிக்குக் கீழே இருப்பதைக் காட்டிலும் அற்பவாதிக்கு எதிர்ப்பு என்பது நமக்கு நல்ல மூதுரையாகும்.”(5) என்று மார்க்ஸ் ஒரு கடிதத்தில் எழுதினார்.

படிக்க :
அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !

அரசியல் துறையில் அற்பவாதி, விஞ்ஞானத் துறையில் அற்பவாதி ஆகிய இருவரிடமும் மார்க்ஸ் ஒரே அளவுக்கு இரக்கமின்றி நடந்து கொண்டார்.

விஞ்ஞானத் துறையில் அற்பவாதம் கவனிக்கப்பட்ட விவரங்களிலிருந்து தப்ப முடியாத முடிவுகளைப் பெறுவதற்கு அஞ்சுகின்ற, விஞ்ஞானத்துக்கு அப்பாலுள்ள எல்லாக் கருத்துக்களையும் புறக்கணித்து விஷயங்களின் தர்க்கவியலைத் தயக்கமில்லாமல் பின்பற்றிச் செல்ல அஞ்சுகின்ற கோழைத்தனமாக, சிந்தனைக் கயமையாக வெளிப்பட்டது.

அற்பவாதி விஞ்ஞானத் துறையில் உண்மையைத் தேடுவதற்கு மாறாக, உண்மையை மறைப்பதிலும் திரித்துக் கூறுவதிலும் அக்கறை காட்டுகிறார். தன்னுடைய நேர்மையற்ற மழுப்பலின் மூலம் ஆளும் வர்க்கத்தினருடைய நிலையையும் அதன் மூலம் தன்னுடைய நிலையையும் வலுப்படுத்துவதற்குப் பாடுபடுகிறார். உண்மைப்-போலியான பேச்சுக்குப் போலி விஞ்ஞான உடையை மாட்டுவதன் மூலம் அவர் உண்மையைக் குழிதோண்டிப் புதைக்கிறார்.

அற்பவாதி விஞ்ஞானத்தைக் கருவியாக உபயோகித்து விஞ்ஞானத்துக்குச் சம்பந்தமில்லாத தன்னுடைய சொந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சிக்கிறார். அவர் “கீழான நோக்கங்களுக்கு” அதை உபயோகிக்கிறார். “ஆனால் ஒரு மனிதர் விஞ்ஞானத்தை விஞ்ஞானத்திலிருந்து வருவிக்கப்படாத ஒரு கருத்துக்கு, (அது எவ்வளவு தவறானதாக இருந்தாலும்) வெளியே, அந்நிய, வெளிப்புற நலன்களிலிருந்து வருவிக்கப்பட்ட கருத்துக்குத் தகவமைக்க முயற்சிக்கும் பொழுது நான் அந்த நபர் இழிவானவர் என்கிறேன்.”(6)

இவை சவுக்கால் அடிப்பதைப் போன்ற, கன்னத்தில் அறைவதைப் போன்ற சொற்கள். மால்தஸ், ரொஷேர் மற்றும் பாஸ்தியாவைப் போன்ற விஞ்ஞானப் புரட்டர்களை நோக்கி மார்க்ஸ் இந்தக் கணைகளை வீசுகிறார். பாதிரியாரான மால்தசைப் பற்றி மார்க்ஸ் அளவிட முடியாத அருவருப்பை அடைகிறார்; ஏனென்றால் “இந்தக் கழிசடை” கொடுக்கப்பட்ட விஞ்ஞானக் கருதுகோள்களிலிருந்து (அவற்றை அவர் தவறாமல் திருடுகிறார்) ஆளும் வர்க்கங்கள் “விரும்பக் கூடிய” முடிவுகளையே வருவிக்கிறார்(7)

இந்த வர்க்கங்களை “மனதில் நினைத்துக் கொண்டு” விஞ்ஞான முடிவுகளைத் தயாரிக்கிறார், ஆனால் அவருடைய முடிவுகள் “ஒடுக்கப்பட்டிருக்கின்ற வர்க்கங்களைப் பொறுத்தமட்டில் இரக்கமற்றவையாகும்”. “இங்கே அவர் இரக்கமில்லாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் இரக்கமில்லாதவரைப் போல பாவனை செய்கிறார்: அதில் அவருக்கு இருள்கவிந்த மகிழ்ச்சி இருக்கிறது…”(8)

விஞ்ஞானத் துறையில் இத்தகைய விஞ்ஞானி அடுத்தவருடைய உழைப்பை அபகரிப்பது வழக்கம்; ஆனால் இங்கும் அவர் தனக்கு உண்மையானவராக நடந்து கொள்கிறார். “ஒரு கருத்தைக் கண்டுபிடிப்பவர் முழுமையான நேர்மையுடன் அதை மிகைப்படுத்திக் கூறலாம்: காப்பியடிப்பவர் அதை மிகைப்படுத்துகின்ற பொழுது அத்தகைய மிகைப்படுத்துதலே அவர் ஒரு தொழிலாக மாற்றிவிடுகிறார்.”(9)

விஞ்ஞானத் துறையில் சிந்தனைக் கயமையை இப்படி ஆவேசமாகக் கண்டிக்கும் பொழுது மார்க்ஸ் தன்னுடைய வெறுப்புக்களை மட்டுமல்லாமல் அனுதாபங்களையும் – உண்மையான விஞ்ஞானியைப் பற்றி, தன்னலமற்ற முறையில் உண்மைக்குச் சேவை புரிவதைப் பற்றித் தன்னுடைய கருத்தை – வெளிக்காட்டுகிறார்.

குறிப்புகள்;

(1)F. Lassalle, Nachgelassene Briefe und Schriften, stuttgart-Berlin, 1922, Bd, III, S. 355.
(2)W. Lienknecht, Karl Marx zum Gedachtnis. Ein Lebensabriss und Erinnerungen, Nurnberg, 1896, S. 65-66.
(3)மார்க்சையும் எங்கெல்சையும் பற்றிய நினைவுக் குறிப்புகள்,முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1973,பக்கம் 246.
(4)Marx, Engels, Selected Correspondence, Moscow, 1957, p. 291.
(5)Heines Werke imfunf Banden, Bd, 5, Weimer, 1956, S. 90.
(6) Marx, Engles, Werke, Bd, 30, S. 495.
(7)Karl Marx, Theories Of Surplus-value, Part II, Moscow, 1975, p. 119.
(8) Ibid., p. 118.
(9) Ibid., p. 120.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள் :

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
  8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
  9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
  10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
  11. தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !
  12. ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?
  13. கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
  14. கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !
  15. சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்
  16. எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !
  17. துன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !
  18. கார்ல் மார்க்ஸை மார்க்சியவாதியாக்கிய நகரம் பாரீஸ்
  19. விலங்குத் தன்மை மனிதனுக்குரியதாகிறது மனிதத் தன்மை விலங்காகிறது !
  20. அந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது !
  21. மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய காதல் கடிதம் !

அந்தப் பெரு வாழ்வுக்காக நான் எதையும் செய்யச் சித்தமாயிருக்கிறேன்

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 24

மாக்சிம் கார்க்கி

ரு நாள் அதிகாலையில், பாவெலும் அந்திரேயும் வேலைக்காகப் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் மரியாகோர்சுனவா ஜன்னல் கதவைத் தட்டியவாறு சத்தமிட்டாள்:

”அவர்கள் இஸாயைக் கொன்றுவிட்டார்கள்! வா, போய்ப் பார்க்கலாம்…”

தாய் திடுக்கிட்டாள். அவளது மனத்தில் கொலைகாரனின் பெயர் மின்னிப் பளிச்சிட்டு மறைந்தது.

“யார் கொலை செய்தது?” என்று கேட்டுக்கொண்டே ஒரு போர்வையை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டாள் தாய்.

“கொன்றவன் அவன் பக்கத்திலே உட்கார்ந்து ஒப்பாரி வைக்கவில்லை. கொன்று தள்ளிவிட்டு ஓடியே போய்விட்டான்!”

அவர்கள் இருவரும் தெருவழியே போய்க்கொண்டிருக்கும்போது மரியா மீண்டும் தொடர்ந்து பேசினாள்.

“இனிமேல், அவர்கள் மூலை முடுக்கெல்லாம் தேடி அலசிப் பார்த்து கொன்றவனைக் கண்டுபிடிக்க முனைவார்கள். உன்னுடைய ஆட்கள் நேற்றிரவு வீட்டுக்குள்ளே இருந்தது நல்ல காலத்துக்குத்தான். அதற்கு நானே சாட்சி. நான் இரவு நடுநிசிக்குப் பிறகு வீட்டுக்கு வந்தேன். அப்போது உன் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்த்தேன். நீங்கள் அனைவரும் மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருந்தீர்கள்…”

“நீ என்ன சொல்கிறாய் மரியா? அவர்களை எப்படிச் சந்தேகிக்க முடியும்?” என்று பயத்தால் வெலவெலத்துப் போய்க் கேட்டாள் தாய்.

“பின்னே? யார்தான் கொன்றிருப்பார்கள்? எல்லாம் உன் சகாக்களோடு” என்று தீர்மானமாகச் சொன்னாள் மரியா: ”அவன் உங்களை வேவு பார்த்துத் திரிந்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே…”

தாய் திடுக்கிட்டு நின்றாள். அவள் தொண்டை அடைத்தது. தன் நெஞ்சை ஒரு கையினால் அழுத்திப் பிடித்துக்கொண்டாள்.

“அதனால் என்ன? வீணாகப் பயப்படாதே. அவனுக்கு இந்தக் கதி கிடைத்தது ரொம்ப சரி. சீக்கிரம் வா. இல்லையென்றால் அவர்கள் உடலை அப்புறப்படுத்திவிடுவார்கள்” என்றாள் மரியா.

நிகலாய் வெஸோவ்ஷிகோவைப் பற்றிய சந்தேகம் தாயினது கால்களை பின்னுக்கு இழுத்து நிறுத்துவதுபோல் தோன்றியது.

“அவன்தான். அவன் இவ்வளவு தூரத்துக்குப் போய்விட்டானா?” என்று தனக்குள் நினைத்துக்கொண்டாள் தாய்.

தொழிற்சாலை மதில் சுவர்களுக்குப் பக்கத்தில் சமீபத்தில்தான் எரிந்து சாம்பலாய்ப் போய் மூளியாய் நின்ற ஒரு வீட்டுக்குப் பக்கத்தில், ஒரே கூட்டமாக ஜனங்கள் நின்று கொண்டிருந்தார்கள். தேனீக்களைப் போல இரைந்து கொண்டும், எரிந்து கருகிப்போன மரக்கட்டைகளின் மீது ஏறி நடந்து கொண்டும், சாம்பல் குவியலைக் கிளறிக்கொண்டும் ஜனங்கள் மொய்த்தனர். அங்கு எத்தனையோ பெண்களும், குழந்தைகளும், கடைக்காரர்களும், சாரயக்கடைப் பையன்களும், போலீஸ்காரர்களும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களோடு மார்பகம் நிறைய மெடல்களும், அடர்ந்து சுருண்ட வெள்ளி நிறத் தாடியும் கொண்ட உயரமான கிழவன் மூமூ அரசியல் போலீஸ்காரன் ஒருவனும் நின்றுகொண்டிருந்தான்.

பாதியுடம்பு தரையில் கிடந்தவாறும் பாதியுடம்பு உட்கார்ந்த பாவனையிலும் இஸாய் கிடந்தான். அவனது முதுகு ஒரு கருகிப்போன கட்டையின் மீது சாய்ந்திருந்தது. தலை வலது தோளின் மீது சாய்ந்து சரிந்து கிடந்தது. வலது கை, கால்சராய்ப் பைக்குள் புகுத்தப்பட்டவாறு இருந்தது. இடது கரத்தின் விரல்கள் மண்ணையள்ளி இறுகப் பிடித்திருந்தன.

தேனீக்களைப் போல இரைந்து கொண்டும், எரிந்து கருகிப்போன மரக்கட்டைகளின் மீது ஏறி நடந்து கொண்டும், சாம்பல் குவியலைக் கிளறிக்கொண்டும் ஜனங்கள் மொய்த்தனர்.

தாய் அவனது முகத்தைப் பார்த்தாள். நீண்டு பரந்து கிடக்கும் அவனது கால்களுக்கிடையே கிடக்கும் தொப்பியை வெறித்துப் பார்ப்பதுபோல் அவனது ஒரு கண் பிதுங்கி நின்றது. வாய் ஏதோ வியப்புற்றது போல் பாதி திறந்து தொங்கியது. அவனது சிவந்த தாடி ஒருபுறமாக சாய்ந்து ஒட்டி நின்றது. மெலிந்த உடம்பும் குறுகிய தலையும் புள்ளி விழுந்த ஒட்டிய முகமும் மரணத்தினால் மேலும் குறுகிச் சிறுத்துவிட்டது போலத் தோன்றின. தாய் தனக்கு நேராகக் கையால் சிலுவை கீறிவிட்டுப் பெருமூச்செறிந்தான். உயிரோடிருந்த காலத்தில் அவனைக் கண்டாலே அவளுக்கு வெறுப்புத்தான் தோன்றும். இப்போதோ அவனுக்காக ஒருவித அனுதாப உணர்ச்சி அவள் உள்ளத்தில் தோன்றியது.

“இரத்தக் கறையையே காணோம்” என்று யாரோ தணிந்த குரலில் சொன்னார்கள். “இல்லை, முஷ்டியால் குத்தித்தான் கொன்றிருக்க வேண்டும்.”

“காட்டிக் கொடுக்கிற பயலுக்குப் பாடம் கற்றுக் கொடுத்தாகிவிட்டது” என்று யாரோ ஒருவன் வக்கிரமாகச் சொல்லிக்கொண்டான்.

அந்த அரசியல் போலீஸ்காரன் பெண்கள் கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னே சென்றான்.

“யாரது? யார் இப்படிச் சொன்னது?” என்று அவன் பயங்கரமாகக் கேட்டான்.

அவனது முன்னிலையில் ஜனங்கள் பயந்து கலைந்து சென்றார்கள். சிலர் ஓடியே போய்விட்டார்கள். யாரோ ஒருவன் வர்மத்தோடு சிரித்துக்கொண்டான்.

தாய் வீட்டிற்குத் திரும்பினாள்.

“அவனுக்காக யாருமே வருத்தப்படவில்லை” என்று தனக்குள் நினைத்துக்கொண்டாள் அவள்.

அவளது கண்களுக்கு முன்னால், நிகலாயின் தடித்த உருவம் தோன்றுவது போலிருந்தது. அவன் தனது ஈரமும் இரக்கமுமற்ற குறுகிய கண்களால் அவளை வெறித்து நோக்குவது போலவும் ஏதோ அடிபட்டுவிட்டதுபோல் வலது கையை நொண்டி நொண்டி வீசி வருவதுபோலவும் அவளுக்குப் பிரமை தட்டியது.

அந்திரேயும் பாலெலும் வந்தவுடனே, அவள் அவர்களிடம் அந்த விஷயத்தைப் பற்றி அவசர அவசரமாக விசாரித்தாள்.

“இஷாயைக் கொன்றதற்காக யாரையாவது கைது செய்திருக்கிறார்களா?”

“இதுவரை ஒன்றும் கோள்விப்படவில்லை” என்றான் ஹஹோல்.

அவர்கள் இருவரும் மிகவும் மனம் கசந்து போயிருக்கிறார்கள் என்பதை அவள் அறிந்துகொண்டாள்.

“யாராவது நிகலாயின் பேரை வெளியிட்டார்களா?” என்று மெதுவாகக் கேட்டாள் தாய்.

“இல்லை” என்றான் மகன். அவனது கண்கள் நிலைகுத்தி நின்றன. அவனது குரலில் தெளிவு இருந்தது. “அவர்கள் அவனை சந்தேகிப்பதாய்த் தெரியவில்லை. அவன் இங்கு இல்லை. நேற்று மத்தியானம் அவன் ஆற்றுக்குப் போனான். போனவன் இன்னும் திரும்பவில்லை. நான் அவனைப்பற்றி விசாரித்தேன்……”

“எல்லாம் கடவுள் அருள், அவன் அருள்” என்று நிம்மதி நிறைந்து பெருமூச்செறிந்தாள் தாய்.

ஹஹோல் அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டுத் தலையைக் கவிழ்ந்துகொண்டான்.

“அங்கே அவன் கிடக்கிறான். என்ன நடந்துவிட்டது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் வியந்து விழிப்பது போலக் கிடக்கிறான்” என்று லேசாகப் பேசத் தொடங்கினாள் தாய்: “அவனுக்காக யாருமே வருத்தப்படக் காணோம். யாருமே ஒரு நல்ல வார்த்தை சொல்லக் காணோம். அவன் அவ்வளவு சிறுமைப்பட்டுக் கவனிப்பாரற்றுக் கிடக்கிறான். என்னவோ ஒரு உடைந்து விழுந்த உதவாக்கரைச் சாமானைப்போல் நாதியற்றுக் கிடக்கிறான்.”

சாப்பாட்டு வேளையின்போது, பாவெல் திடீரெனத் தன் கையிலிருந்த கரண்டியை விட்டெறிந்துவிட்டுக் கத்தத் தொடங்கினான்.

“இது எனக்குப் புரியவே மாட்டேனென்கிறது!”

“எது?” என்று கேட்டான் ஹஹோல்.

ஒரு மனிதன் தன்னுடைய சகமனிதர்கள் மீது காட்டு மிருகத்தைப்போல் பாய்ந்து கடித்துத் தின்ன முனைந்தால், அவனை நான் மிருகத்தைக் கொல்வதைப்போல் கொன்று தீர்க்கத்தான் செய்வேன்.

”நாம் உணவுக்காகக் கால்நடைகளைக் கொல்கிறோம். அதுவே மோசம். காட்டு மிருகங்களால் ஆபத்து வருமென்று தெரிந்தால் அவற்றையும் நாம் கொன்று தீர்க்கிறோம். அது சரிதான். அது எனக்கும் புரிகிறது. ஒரு மனிதன் தன்னுடைய சகமனிதர்கள் மீது காட்டு மிருகத்தைப்போல் பாய்ந்து கடித்துத் தின்ன முனைந்தால், அவனை நான் மிருகத்தைக் கொல்வதைப்போல் கொன்று தீர்க்கத்தான் செய்வேன். ஆனால் இவனை மாதிரி அனுதாபத்துக்குரிய ஒரு ஜந்துவைத் தீர்த்துக் கட்டுவதென்றால்? இவனை எப்படித்தான் ஒருவன் தாக்க நினைப்பான்?

ஹஹோல் தன் தோள்களைக் குலுக்கிக்கொண்டான்.

“இவனும் ஒரு காட்டு மிருகத்தைப்போல மோசமானவன்தான்” என்றான் ஹஹோல், “நாம் கொசுவை எதற்காகக் கொல்கிறோம்? நம்முடைய உடம்பிலிருந்து அது ஒரு துளி ரத்தத்தை உறிஞ்சிவிட்டது என்பதற்குத்தானே?”

”அது உண்மைதான். நான் அதைச் சொல்லவில்லை. அது எவ்வளவு அருவருப்புத் தரும் விஷயம் என்பதைத்தான் குறிப்பிட்டேன்.”

“வேறு வழியில்லை” என்று அந்திரேய் மீண்டும் தன் தோளைக் குலுக்கிவிட்டுச் சொன்னான்.

“அந்த மாதிரி ஜந்துவை நீ கொல்லுவாயா?” என்று சிறிது நேரம் கழித்துக் கேட்டான் பாவெல்.

ஹஹோல் தனது அகன்ற கண்களால் பாவெலையே வெறித்துப் பார்த்தான். பிறகு தாயின் பக்கம் திடீரெனத் தன் பார்வையைத் திருப்பினான்.

”நம்முடைய கொள்கையின் நலத்துக்காகவும், என்னுடைய தோழர்களின் நலத்துக்காகவும் நான் எதையுமே செய்வேன்” என்று துக்கமும் உறுதியும் தோய்ந்த குரலில் சொன்னான் அந்திரேய்; “அதற்காக, நான் என் சொந்த மகனைக் கூடக் கொல்லுவேன்!”

”ஆ! அந்திரியூஷா!” என்று திகைத்துப்போய் வாய்க்குள் முணுமுணுத்தாள் தாய்.

“வேறு வழியில்லை, அம்மா” என்று கூறி அவன் புன்னகை புரிந்தான். ”நமது வாழ்க்கை அப்படிப்பட்டது.”

“நீ சொல்வது சரி. வாழ்க்கை அப்படிப்பட்டதுதான்!” என்றான் பாவெல்.

இதயத்துக்குள்ளே ஏதோ ஒன்று தட்டியெழுப்பிய மாதிரி திடீரென உத்வேக ஆவேசத்தோடு துள்ளியெழுந்தான் ஹஹோல்.

“அதற்கு நாமென்ன செய்ய முடியும்?” என்று கைகளை ஆட்டிக்கொண்டே சத்தமிட்டான் ஹஹோல். “மக்கள் இனத்தை நாம் அனைவரும் மனப்பூர்வமாக ஒருவருக்கொருவர் நேசிக்கப்போகும் காலத்தைத் துரிதப்படுத்துவதற்காக, நாம் சிலரைப் பகைத்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. நம்முடைய முன்னேற்றப் பாதையில் முட்டுக்கட்டை போடுபவர்களை நாம் துடைத்துத் தீர்த்துவிடத்தான் வேண்டும். தனக்குச் சுகவாழ்வும் பெயரும் கிட்ட வேண்டும் என்பதற்காக. எவனொருவன் பணத்தை வாங்கிக்கொண்டு மக்களை விலைக்குக் காட்டிக் கொடுக்கிறானோ, அவனை நாம் அழித்துத்தான் தீரவேண்டும். நேர்மையான மனிதர்களின் மார்க்கத்தை எவனாவது ஒரு யூதாஸ்* வழிமறித்தால், அவர்களைக் காட்டிக்கொடுப்பதாகச் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தால், அவனை ஒழித்துக் கட்டத்தான் நான் முனைவேன்! அவனை ஒழித்துக்கட்டாவிட்டால், நானும் ஒரு யூதாஸ் மாதிரியே ஆகிவிடுவேன்! அப்படிச் செய்ய எனக்கு உரிமை கிடையாது என்கிறாயா?

ஆனால் நம்மை அடக்கியாள்கிறார்களே, நமது முதலாளிகள், – அவர்களுக்கு மட்டும் உரிமை இருக்கிறதா? படைபலத்தையும் கொலையாளிகளையும் வைத்திருக்க, சிறைக் கூடங்களையும் விபசார விடுதிகளையும் நாடு கடத்தும் இடங்களையும் வைத்திருக்க, தங்களது சுகபோகத்தையும் பாதுகாப்பையும் அரணிட்டுப் பாதுகாக்கும் சகலவிதமான கொலைச் சாதனங்களையும் வைத்துக்கொண்டிருக்க, அவர்களுக்கு மட்டும் என்ன உரிமை இருக்கிறது? சில சமயங்களில் அவர்களது ஆயுதத்தையே பிரயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தச் சங்கடத்துக்கு நான் ஆளானேன் என்றால் அது என்னுடைய தவறா? என்னுடைய குற்றமா? இல்லை. நானும் அதை உபயோகிப்பேன். அவர்கள் நம்மை நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தால் நானும் சும்மாயிருக்கமாட்டேன். நானும் என் கையை ஓங்குவேன். அந்த உரிமை எனக்கு உண்டு….. அவர்களில் ஒருவரையேனும் நான் ஒரே போடாய்ப் போட்டுக் கொல்லுவேன். எனக்குப் பக்கத்தில் வரும் பகைவனின் தலையை நான் நொறுக்கத்தான் செய்வேன். மற்றவர்களைவிட, எனது வாழ்க்கை லட்சியத்துக்கு அதிகமான தீங்கிழைக்க முனையும் அந்தப் பகைவனை நான் அறையத்தான் செய்வேன். வாழ்க்கை அப்படி அமைந்து கிடக்கிறது.

மக்கள் இனத்தை நாம் அனைவரும் மனப்பூர்வமாக ஒருவருக்கொருவர் நேசிக்கப்போகும் காலத்தைத் துரிதப்படுத்துவதற்காக, நாம் சிலரைப் பகைத்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. நம்முடைய முன்னேற்றப் பாதையில் முட்டுக்கட்டை போடுபவர்களை நாம் துடைத்துத் தீர்த்துவிடத்தான் வேண்டும்.

ஆனால் அந்த மாதிரி வாழ்க்கையை நான் விரோதிக்கத்தான் செய்கிறேன்; அந்த மாதிரி இருப்பதற்கு நான் விரும்பவும்தான் இல்லை. அவர்களது ரத்தத்தால் எந்தவிதப் பயனும் விளைந்துவிடப் போவதில்லை. அது வெறும் விருதா ரத்தம். விளைவற்ற ரத்தம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நமது ரத்தம் மட்டும் பூமியில் மழை மாதிரி பொழிந்து கொட்டுமேயானால், நாம் சிந்திய ரத்தத்திலிருந்து உண்மை பிறக்கும்; சத்தியம் அவதாரம் செய்யும்! ஆனால் அவர்களது நாற்றம்பிடித்த ரத்தமோ எந்தவித மச்ச அடையாள மறுக்கள் ஏதுமின்றி மண்ணோடு மண்ணாய் மறைந்து மக்கிப்போய்விடும்! எனக்கு அது தெரியும். இருந்தாலும் இந்தப் பாபத்தை நான் என் தலையில் ஏற்றுக்கொள்கிறேன். கொலை செய்துதான் ஆக வேண்டுமென்றிருந்தால், நான் கொல்லத்தான் செய்வேன். ஞாபகம் இருக்கட்டும்! நான் எனக்காகத்தான் பேசிக்கொள்கிறேன். எனது பாபம் என்னுடனேயே சாகும். அந்தப் பாபம் எதிர்காலத்தில் கறைபடியச் செய்யாமல் தொலையும்! அந்தப் பாபம் என்னைத் தவிர, வேறு எவரையும், வேறு எந்த ஆத்மாவையும் கறைப்படுத்தாது மறைந்து மாயும்!”

அவன் அறைக்குள்ளே கீழும் மேலும் உலவினான். எதையோ வெட்டித் தள்ளுவது மாதிரி – தன் இதயத்திலிருந்து எதையோ வெட்டித் தள்ளுவது மாதிரி – கைகளை வீசிக்கொண்டான். தாய் அவனைப் பீதியும் துக்கமும் கலந்த மனத்தோடு பார்த்தாள். அவனது இதயத்துக்குள்ளே ஏதோ ஒரு பலத்த காயம் ஏற்பட்டு, அவனை வேதனைப்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதை மட்டும் அவள் உணர்ந்தாள். அந்தக் கொலையைப் பற்றிய இருண்ட பயங்கர ஆபத்தான எண்ணங்கள் அவளை விட்டுப் பிரிந்தன. நிகலாய் வெஸோவ் ஷிகோவ் அந்தக் குற்றத்தைச் செய்திராவிட்டால், பாவெலின் நண்பர்களில் மற்றவர் எவருமே அதைச் செய்யக்கூடியவர்கள் அல்ல. பாவெல் தன் தலையைத் தொங்கப்போட்டவாறு ஹஹோலின் பலம் பொருந்திய அழுத்தம் வாய்ந்த பேச்சைக் கேட்டவாறு இருந்தான்.

“தங்கு தடையற்று நீ முன்னேறிச் செல்ல வேண்டுமானால், சமயங்களில் நீ உன் விருப்பத்துக்கு மாறான காரியங்களைக்கூடச் செய்யவேண்டும். அதற்காக நீ சகலத்தையும், உன் பரிபூரண இதயத்தையும் விட்டுக்கொடுக்கத் தயாராயிருக்க வேண்டும். கொள்கைக்காக நீ உன் உயிரை இழப்பது மிகவும் லேசான காரியம். அதைவிட மகத்தானவற்றை, உன்னுடைய சொந்த வாழ்வில் உனக்கு மிகவும் அருமையும் விருப்பமும் நிறைந்தவற்றைக்கூட நீ தியாகம் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட மகத்தான தியாகத்தினால்தான், நீ எந்த ஒரு சத்தியத்துக்காகப் போராடுகிறாயோ அந்தச் சத்தியம் எப்படி ஒரு மகாசக்தியாக வளர்ந்தோங்கிப் பெருகுகிறது என்பதை உன்னால் பார்க்க முடியும். அந்தச் சத்தியம்தான் இந்த உலகத்தில் உனக்கு மிகவும் அருமை வாய்ந்த அரிய பொருளாக இருக்கும்!”

அவன் அறையின் மத்தியில் சட்டென நின்றான். முகமெல்லாம் வெளுத்துப்போய், கண்களைப் பாதி மூடியவாறு கையை உயர்த்தி அமைதி நிறைந்த உறுதியோடு மேலும் பேசத் தொடங்கினான்.

“மக்கள் தங்கள் அழகைத் தாமே பார்த்து வியக்கின்ற காலம். மற்றவர்களுக்கெல்லாம் தாம் தனித்தனித் தாரகைகளைப்போல் ஒளி வீசப்போகும் காலம் வரத்தான் போகிறது என்பது எனக்குத் தெரியும். அந்தப் புண்ணிய காலத்தில் உலகத்தில் சுதந்திர மனிதர்கள் நிறைந்திருப்பார்கள்; அந்த மனிதர்கள் தமது சுதந்திரத்தால் பெருமை அடைவார்கள். சகல மக்களின் இதயங்களும் திறந்த வெள்ளை இதயங்களாக இருக்கும். அந்த இதயங்களில் பொறாமை இருக்காது; பகைமையைப் பற்றிய அறிவு கூட இருக்காது. அப்போது வாழ்க்கை என்பது மனித குலத்துக்காக மகத்தான சேவையாக மாறிவிடும்; மனிதனது உருவம் மகோன்னதச் சிகரத்தில், வானத்தை முட்டும் கொடுமுடிவரையில் உயர்ந்து சென்று கொலு அமரும். ஏனெனில் சுதந்திர புருஷர்களுக்கு எந்தச் சிகரமும் எந்த உயரமும் எட்டாத தூரமல்ல; தொலைவல்ல. அப்போது, மக்கள் அனைவரும் அழகின் பொருட்டு சத்தியத்தோடு, சுதந்திரத்தோடு வாழ்வார்கள். உலகத்தைத் தங்களது இதயங்களால் பரிபூரணமாக அதிகப்படியாகத் தழுவி, அதனை முழுமனத்தோடு காதலிப்பவர்களே அந்த மனிதர்களில் மகோன்னதப் புருஷர்களாக விளங்குவார்கள்; எவர் மிகுந்த சுதந்திரமாக வாழ்கிறாரோ அவரிடமே மகோன்னதமான அழகு குடி வாழ்கிறது. அவர்களே அந்தப் புத்துயிரின் புண்ணிய புருஷர்கள்; மகாபுருஷர்கள்!”

அவன் ஒரு நிமிஷ நேரம் மெளனமாயிருந்தான். பிறகு மீண்டும் நிமிர்ந்து நின்றுகொண்டு, தனது ஆத்மாவின் அடித்தளத்திலிருந்து எழும் குரலோடு பேசத் தொடங்கினான்.

“அந்தப் பெரு வாழ்வுக்காக – நான் எதையும் செய்யச் சித்தமாயிருக்கிறேன்………”

அவனது முகம் சிலிர்த்து நடுங்கியது, பெரிது பெரிதான கண்ணீர்த் துளிகள் கன்னங்களில் வழிந்தோடியது.

பாவெலின் முகம் வெளுத்தது. அவன் தலையை நிமிர்த்தி, தனது அகன்ற கண்களால் அவனைப் பார்த்தான். ஏதோ ஒரு இருண்ட பீதி தன் மனத்தில் திடீரெனக் கவிந்து பெருகுவது மாதிரி உணர்ந்த தாய் திடுக்கிட்டு நாற்காலியை விட்டுத் துள்ளியெழுந்தாள்.

“இதென்ன, அந்திரேய்?” என்று மெதுவாகக் கேட்டான் பாவெல்.

ஹஹோல் தன் தலையை மட்டும் குலுக்கியசைத்துவிட்டு, உடம்பை விறைப்பாக நிமிர்த்தி நின்றவாறு தாயை ஏறிட்டுப் பார்த்தான். ”ஆமாம், என் கண்ணால் பார்த்தேன். நானறிவேன்.”

அவள் ஓடோடிப் போய் அவனது கைகளை இறுகப் பற்றினாள். அவன் தனது வலது கையை விடுவிக்க முயன்றான். ஆனால், அவளோ அவனது கைகளை இறுகப் பிடித்தவாறு இரகசியமாகச் சொன்னாள்:

”உஷ்! ஐயோ, என் கண்ணே! என் அருமை மகனே…”

“ஒரு நிமிஷம் பொறுங்கள். அது எப்படி நடந்தது என்று நான் சொல்கிறேன்” என்று கரகரத்துச் சொன்னான் ஹஹோல்.

“இல்லை, வேண்டாம். வேண்டவே வேண்டாம். அந்தியூஷா” என்று அவள் தனது நீர் நிறைந்த கண்களோடு அவனைப் பார்த்து முணுமுணுத்தாள்.

பாவெல் மெதுவாக நெருங்கி வந்தான். அவனது கண்களிலும் ஈரம் கசிந்திருந்தது. அவனது முகம் வெளுத்திருந்தது. அவன் லேசாகச் சிரித்துக்கொண்டே சொன்னான்.

“நீதானோ என்று அம்மா பயந்துவிட்டாள்!”

”நானா – நானா பயந்தேன்? நான் அதை நம்பவே மாட்டேன். என் கண்ணாலே பார்த்தால் கூட நான் நம்பமாட்டேன்!”

“பொறுங்கள்” என்று தன் தலையை உலுப்பிக் கொண்டும் கைகளை விடுவிக்க முயன்று கொண்டும் சொன்னான் ஹஹோல்.

“அது நான் இல்லை. ஆனால் நான் அதைத் தடுத்திருக்க முடியும் …….”

”அந்திரேய் வாயை மூடு” என்றான் பாவெல்.

அவன் தன் நண்பனது கையை ஒரு கையால் பற்றிப் பிடித்தான், மறுகையை ஹஹோலின் தோளின்மீது போட்டு, நடுநடுங்கும் அவனது நெடிய உருவத்தை தடவிக்கொடுத்தான். அந்திரேய் பாவெலின் பக்கம் திரும்பி உடைந்து கரகரக்கும் குரலில் பேசினான்.

தனக்குச் சுகவாழ்வும் பெயரும் கிட்ட வேண்டும் என்பதற்காக. எவனொருவன் பணத்தை வாங்கிக்கொண்டு மக்களை விலைக்குக் காட்டிக் கொடுக்கிறானோ, அவனை நாம் அழித்துத்தான் தீரவேண்டும்.

“பாவெல், அப்படி நடக்கவேண்டும் என்று நான் விரும்பியிருக்க மாட்டேன் என்பது உனக்குத் தெரியும், நடந்தது இதுதான். நீ போன பிறகு நான் திராகுனவுடன் அந்த மூலையில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது இஸாய் வந்தான். எங்களைக் கண்டதும் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்று கொண்டு எங்களை ஓரக்கண் போட்டுச் சிரித்தான். ‘அவனைப் பார். அவன் இரலெல்லாம் என் பின்னாலேயே சுற்றித் திரிகிறான். ‘அவனை நான் அடிக்காமல் விடப்போவதில்லை’ என்றான் திராகுனவ். பிறகு அவன் போய்விட்டான். வீட்டுக்குத்தான் போகிறான் என்று நான் நினைத்தேன். பிறகு இஸாய் என்னிடம் வந்தான் ……..”

ஹஹோல் பேச்சை நிறுத்திவிட்டு மூச்செடுத்துக்கொண்டான்.

“அந்த நாயைப் போல், அவனைப்போல் என்னை இதுவரை எவனுமே அவமானப்படுத்தியதில்லை.”

தாய் பேசாது மேஜைப் பக்கமாக வந்து அவனை உட்கார வைத்தாள். அவனருகிலே வந்து அவனது தோளோடு தோள் உரசி ஒட்டிக்கொண்டிருக்க அவளும் உட்கார்ந்து கொண்டாள். பாவெல் வெறுமனே நின்றவாறு, தன் தாடியை உவகையற்று இழுத்து உருவிவிட்டுக்கொண்டிருந்தான்.

“அவர்களுக்கு நம் அனைவரது பெயர்களும் தெரியுமென்றும், போலீஸ் பட்டியலில் நம்முடைய பெயர்களெல்லாம் இருக்கின்றன வென்றும், மே தினக் கொண்டாட்டத்திற்கு முன்னால் நம்மையெல்லாம் அவர்கள் உள்ளே தள்ளப் போவதாகவும் அவன் என்னிடம் சொன்னான். நான் பதில் பேசவில்லை. வெறுமனே அவனைப் பார்த்துச் சிரித்தேன். ஆனால் என் உள்ளமோ உள்ளூரக் கொதித்துக் கொண்டிருந்தது. நான் ஒரு புத்திசாலிப் பையன் என்றும், இந்த மாதிரி வழியில் செல்வது தவறு என்றும், எனக்கு அவன் போதிக்க ஆரம்பித்துவிட்டான். மேலும் நான் இந்த வழியைக் கைவிட்டு விட்டு ……..”

அவன் பேச்சை நிறுத்திவிட்டு, இடது கையால் முகத்தைத் துடைத்துக்கொண்டான். அவனது கண்களில் ஏதோ ஒரு வறண்ட பிரகாசம் பளிச்சிட்டது.

“எனக்குப் புரிகிறது” என்றான் பாவெல்.

“இதைக் கைவிட்டு விட்டு, நான் சட்ட உத்தியோகம் பார்ப்பது நல்லது என்று சொன்னான் அவன்!” என்றான் ஹஹோல்.

ஹஹோல் தன் முஷ்டியை ஓங்கி ஆட்டினான்.

”சட்டம் நாசமாய்ப் போக!” அவன் பற்களை இறுகக் கடித்தவாறே பேசினான். “அவன் என் முகத்தில் அறைந்திருந்தால் கூட, எனக்கு – ஒருவேளை அவனுக்கும் – எளிதாக இருந்திருக்கும். ஆனால் அந்தப் பயலோ என் இதயத்தில் அவனது நாற்றம் பிடித்த எச்சிலைக் காறித் துப்பிவிட்டான். அந்த வேதனையை என்னால் தாங்க முடியவில்லை.”

அந்திரேய் பாவெலிடமிருந்து தன் கையை வெடுக்கென்று பிடுங்கினான், அதன் பின் கசப்பும் கரகரப்பும் நிறைந்த குரலில் பேசத் தொடங்கினான்:

”நான் அவனது முகத்தில் ஓங்கியறைந்துவிட்டு, விலகிப் போனேன். அப்போது எனக்குப் பின்னால், “மாட்டிக் கொண்டாயா?” என்று திராகுனவ் மெதுவாகச் சொல்லியது எனக்குக் கேட்டது. அவன் அந்த மூலையிலேயே காத்துக்கொண்டிருந்தான் போலும்…”

சிறிது நேரம் கழித்து, ஹஹோல் மீண்டும் தொடர்ந்து பேசினான். ”நான் திரும்பியே பார்க்கவில்லை. என் மனதில் மட்டும் என்னமோ ஒரு உணர்ச்சி அடி விழுந்த சத்தத்தை மட்டும் நான் கேட்டேன். இருந்தாலும் ஏதோ ஒரு தவளையை மிதித்துவிட்ட மாதிரி அருவருப்போடு நான் என் வழியே நடந்தேன். வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது, திடீரென்று ஜனங்கள் சத்தம் போட்டுக்கொண்டு வந்தார்கள்.

படிக்க:
அமித்ஷாவின் பெயரை முதலில் மாற்றுங்கள் : வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் !
தருமபுரி சவுமியா படுகொலை | நேரடி ரிப்போர்ட் | வீடியோ

‘இலாயைக் கொன்றுவிட்டார்கள்’ என்று சத்தம் கேட்டது. என்னால் அதை நம்ப முடியவில்லை. எனது கையில் வலியெடுத்தது, என்னால் வேலையைப் பார்க்க முடியவில்லை. எனக்கு உண்மையில் வலி இருந்ததா என்பது தெரியாது. இருந்தாலும், என் கை மரத்துத் திமிர்பிடித்துப் போயிற்று…”

அவன் தன் கையை வெறித்துப் பார்த்துக்கொண்டான்.

“என் கையில் படிந்துவிட்ட இந்தக் கறையை என் வாழ்நாள் முழுவதுமே என்னால் கழுவிவிட முடியாது.”

“ஆனால் உன் இதயம் பரிசுத்தமாய் இருக்கிறதே!” என்று மிருதுவாகச் சொன்னாள் தாய்.

“நான் அதற்காக என்மீது குறை கூறிக்கொள்ளவில்லை. இல்லவே இல்லை” என்று உறுதியாகச் சொன்னான் ஹஹோல்.

“இந்தச் சம்பவம் அருவருக்கத்தக்க சம்பவம். இந்த வேண்டாத விவகாரத்தில் நான் சம்பந்தப்பட்டிருக்க வேண்டாம்.”

“நீ சொல்வது எனக்குப் புரியவில்லை” என்று தோளை உலுப்பியவாறு சொன்னான் பாவெல், “நீ அவனைக் கொல்லவில்லை. அப்படியே செய்திருந்தாலும்……”

”கேளு. தம்பி! ஒரு கொலை நடந்து கொண்டிருப்பது தெரிந்தும், அதைத் தடுப்பதற்கு எதுவும் செய்யாமல் சும்மாயிருப்பதென்றால்…..”

”எனக்குப் புரியவேயில்லை” என்று பாவெல் அழுத்திக் கூறினான். பின் சிறிது யோசனைக்குப் பின்பு, ”அதாவது புரிகிறது. ஆனால் வருந்துவதற்கு ஒன்றும் இல்லை.”

ஆலைச்சங்கு அலறியது. அதனது அதிகாரபூர்வமான ஆணையைக் காதில் வாங்கிக் கொண்ட ஹஹோல் தலையை ஆட்டியபடி சொன்னான்:

“நான் வேலைக்குப் போகவில்லை.”

“நானும்தான்.”

“நான் குளிக்கிற இடத்துக்குப் போகப்போகிறேன்” என்றான் அந்திரேய். அவன் லேசாகச் சிரித்தான். பிறகு தன் துணிமணிகளைச் சேகரித்துக் கொண்டு, உற்சாகமேயற்று வீட்டைவிட்டு வெளியில் சென்றான்.

தாய் அன்பு ததும்பும் கண்களோடு அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

”நீ என்ன வேண்டுமானாலும் சொல்லு, பாவெல்” என்று பேசத் தொடங்கினாள் தாய். “ஒரு மனிதனைக் கொலை செய்வது மகா பாபம் என்று எனக்குத் தெரியத்தான் செய்கிறது. என்றாலும் நான் யாரையுமே குற்றஞ்சாட்ட மாட்டேன். நான் இஸாயிக்காக அனுதாபப்படுகிறேன். அவன் ஒரு குள்ளப்பிறவி. அவனை இன்று பார்த்தபொழுது, அவன் என்னைப் பார்த்துச் சொன்ன விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. உன்னைத் தூக்கில் போடப் போவதாக அவன் என்னைப் பயமுறுத்தினான். ஆனால், அவன் இப்போது செத்துப்போய் விட்டான். அவன் மறைந்து போனான் என்பதற்காக சந்தோஷப்படவோ, அவன் சொன்ன சொல்லுக்காக அவனைப் பகைப்பதற்கோ என்னால் முடியாது. அப்போது நான் அவன் மீது அனுதாபம் கொண்டேன். இப்போது அந்த அனுதாபம் கூட இல்லை …….”

அவன் மீண்டும் மௌனமாகிச் சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு வியப்பு நிறைந்த புன்னகையோடு மேலும் பேசினான்:

”அட கடவுளே பாஷாக்கண்ணு! நான் சொல்வதையெல்லாம் கேட்கிறாயா?”

உண்மையில் அவள் பேச்சை அவன் கேட்கவில்லை. எனவே அவன் முகத்தைச் சுழித்துக்கொண்டே பதில் சொன்னான். தரையைப் பார்த்தவாறே நடந்து கொண்டிருந்த பாவெல் பின்வருமாறு சொன்னான்:

”இதுதானம்மா வாழ்க்கை! ஜனங்கள் ஒருவருக்கொருவர் எப்படி புதிருமாய் நிற்கிறார்கள் என்பதைப் பார்த்தாயா? நீ உன் விருப்பத்துக்கு விரோதமாக ஒருவனை அடித்து வீழ்த்திவிடுகிறாய். ஆனால் தாக்கப்படுவது யார்? உனக்கு இருக்கும் உரிமைகளைவிட எந்த அளவிலும் அதிக உரிமையற்ற ஓர் அப்பாவிப் பிராணியையா தாக்குவது? இந்தச் சந்தர்ப்பத்தில் அவன் உன்னைவிட அதிருஷ்டக் குறைவான பிறவி; காரணம் – அவன் ஒரு முட்டாள். போலீஸ், அரசியல் போலீஸ், ஒற்றர்கள் எல்லோரும் நமது எதிரிகள். ஆனால், அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே. நம்மைப்போலவே, ரத்தம் உறிஞ்சப்படும் வர்க்கம்தானே. அவர்களையும் மனிதர்களாகக் கருதுவதில்லை. உலகம் அப்படியிருக்கிறது. ஒரே மாதிரி இருக்கிறது! ஆனால் அந்த முதலாளிகளோ ஜனங்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை மூட்டிவிடுகிறார்கள். பயத்தினாலும், அறிவின்மையாலும் ஜனங்களின் கண்களைக் குருடாக்கி, கையையும் காலையும் தளையிட்டுக் கட்டி, மக்களைக் கசக்கிப் பிழிந்து ரத்தத்தை உறிஞ்சித் தீர்க்கிறார்கள். மக்களை ஒருவருக்கொருவர் உதைக்கவும், நசுக்கவும் தூண்டிவிடுகிறார்கள்; அவர்கள் மக்களைத் துப்பாக்கிகளாகவும், குண்டாந்தடிகளாகவும், கற்களாகவும் உருமாற்றி, ‘பார்! இது தானடா அரசு என்று கூறுகிறார்கள்.”

அவன் தன் தாயருகே சென்றான். பிறகு பேசினான்.

“அது மகா பாவம், அம்மா! லட்சோப லட்சம் மக்களைக் கொன்று குவிக்கும் பஞ்சமாபாதகப் படுகொலை! மனித இதயங்களைக் கொன்று தள்ளும் கோரக் கொலை …… நான் சொல்வது புரிகிறதா, அம்மா? அவர்கள், இதயங்களைக் கொல்லும் ஈவிரக்கமற்ற கொலைகாரர்கள்! அவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறதா? நாம் ஒருவனைத் தாக்கினால், அதை எண்ணி வருந்துகிறோம், வெட்கப்படுகிறோம்; நாம் அனைவருமே அப்படிப்பட்ட செயலை அருவருத்து வெறுத்துத் தள்ளுகிறோம். ஆனால் அவர்களோ ஆயிரக்கணக்கான மக்களை அமைதியாக, ஈவிரக்கமற்று, ஈர நெஞ்சமற்று, வேதனையற்று – சொல்லப் போனால் பரிபூரணமான இதய திருப்தியோடு – கொன்று தள்ளுகிறார்கள்! அவர்கள் ஜனங்களைக் கசக்கிப் பிழிந்து உயிரைப் பருகுவதற்குரிய ஒரே காரணம் என்ன தெரியுமா? தங்களது தங்கத்தையும், வெள்ளியையும், சொத்து சுகங்களையும் பாதுகாப்பதற்காக. நம் மீது அவர்கள் செலுத்தும் அதிகாரத்தை ஆட்சியை நிலைக்கவைக்கும் சகல சட்டதிட்டங்களையும் பாதுகாத்துப் போற்றி வளர்ப்பதற்காகவேதான். அம்மா, நீ இதைக் கொஞ்சம் யோசித்துப்பார். மக்கள் குலத்தைக் கொன்று குவிப்பதும், மக்கள் குலத்தின் இதயங்களைச் சின்னாபின்னப்படுத்துவதுமான காரியத்தை அவர்கள் எதற்காகச் செய்கிறார்கள்? தங்கள் இனத்தையோ தங்கள் உயிரையோ பாதுகாப்பதற்கான தற்காப்பு முயற்சி அல்ல அது! ஆனால், தங்கள் உடைமைகளைப் பாதுகாப்பதற்காகத்தான் அவர்கள் இப்படிப்பட்ட கோரக் கொலையில் ஈடுபடுகிறார்கள். தங்கள் இதயத்துக்குள்ளே இருப்பதை அவர்கள் பாதுகாக்க விரும்பவில்லை. இதயத்துக்கு வெளியேயுள்ள பொருள்களைத்தான் அவர்கள் காப்பாற்ற எண்ணுகிறார்கள்…”

அவன் அவளது கரங்களை எடுத்து, அவற்றை அழுத்திப்பிடித்தவாறு பேசினான்:

”நீ மட்டும் இந்தச் செய்கையிலுள்ள கசப்பையெல்லாம் உணர்ந்துவிட்டால், இந்தச் செய்கையின் வெட்ககரமான கேவல நிலையை உணர்ந்துவிட்டால், நாங்கள் எந்த சத்தியத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதை லகுவில் புரிந்து கொள்வாய். அந்தச் சத்தியம் எவ்வளவு மகத்தானது, புனிதமானது, அருமையானது என்பதையும் நீ கண்டு கொள்வாய்!”

தாய் உணர்ச்சி வசப்பட்டு எழுந்தாள். தனது இதயத்தையும் தன் மகனது இதயத்தையும் ஒன்றாக்கி ஒரே ஜோதியாக, பிரகாசமான ஏக ஜோதிப் பிழம்பாக ஆக்கிவிட வேண்டும் என்ற ஆசை அவள் மனத்தில் நிறைந்து நின்றது.

”கொஞ்சம் பொறு , பாவெல்” என்று சிரமத்தோடு முனகினாள் அவள், “என்னால் அதை உணர முடியும் …… கொஞ்சம் பொறுத்திரு.”

(தொடரும்)

அடிக் குறிப்புகள்:
(1) யூதாஸ் – ஏசு கிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்தவன். அவரோடு கூடவே இருந்து துரோகம் செய்தவன். – மொ-ர்.

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

பரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா ? மறுக்கிறதா ?

28

ரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இடைவேளை நேரம். எனக்குள் ஒரு பதற்றம் உருவாகியிருந்தது. எந்த தவறும் இழைக்காத, தன் காதலை கூட வெளிப்படுத்தாத, ஒரு பெண்ணால் ‘காதலிக்கப்பட்ட’ குற்றத்துக்காக அடித்து நொறுக்கப்படும் பரியேறும் பெருமாள், முகத்தில் ஒண்ணுக்கு அடித்து அவமானப்படுத்தப்படுகிறான்.

அவமானம் என்ற சொல் அந்த காட்சி ஏற்படுத்திய தாக்கத்தை போதுமான அளவுக்கு விளக்கவில்லை. அது எண்ணிப் பார்க்க முடியாத அமைதியின்மையை, கொந்தளிப்பை உருவாக்கியிருந்தது.

இடைவேளைக்குப் பிறகான படம் தொடங்கியது. தன்னை இழிவு செய்தோரை நாயகன் ஏதாவது செய்வான் என எதிர்பார்த்தேன்; செய்ய வேண்டும் என விரும்பினேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. அவன் மீது அடுத்தடுத்த அவமானங்கள்; தாக்குதல்கள். கொலை முயற்சி வரை செல்கிறது. அப்போதும் அவன் எதுவும் செய்யவில்லை.

‘ஊர் நண்பர்கள், கல்லூரி வட்டம் எல்லாம் இருக்கிறதே… இவன் ஏன் சகித்துக் கொண்டு போகிறான்?’ என என் மனம் படபடத்தது. ‘இது என்ன யதார்த்தமா? சினிமாதானே… அதிலாவது எதிர்த்து அடித்தால் என்ன?’ என நினைத்தேன். பரியன் அப்போதும் சகித்துக் கொண்டு போனான்.

கல்லூரி வளாகத்துக்குள் அவனுடைய தந்தையின் வேட்டியை உருவி ஓட விடுகின்றனர். பார்ப்போர் எவரையும் சாட்டையால் அடிக்கும் காட்சி இது. இதற்கு முன் தன் சுயமரியாதைக்கு நேர்ந்த அவமானத்தை பொறுத்துக் கொண்ட பரியன், தன் தந்தைக்கு நேர்ந்த இழிவு பொறுக்காது இம்முறை கத்தியை எடுக்கிறான். ‘உன் அப்பாவுக்கு இப்படி நடக்குறது ஒண்ணும் புதுசு இல்லையே’ என அவனுடைய தாய் அமைதிப்படுத்துகிறாள். ‘குடியானவங்களை எதிர்த்துக்கிட்டு ஊருக்குள்ள இருக்க முடியுமா? அனுசரிச்சுப் போப்பா’ என்ற கிராமத்து தலித் அம்மாவின் குரலாய் அது வெளிப்படுகிறது.

இறுதிக் காட்சியில் அவன் மீது நிகழ்த்தப்படும் கொலைமுயற்சியை முறியடிக்கிறான். அவனும் எதிர்த்தரப்பும் இரண்டு தேநீர் குவளைகளுடன் அமர்கிறார்கள். ‘காலம் மாறும்’ என்கிறது எதிர்த்தரப்பு. ‘நீங்க அடக்குற வரைக்கும் எதுவும் மாறாது’ என்கிறான் பரியன். இருவரும் அவரவர் மனநிலையுடன் எதிர்காலத்தை நோக்கி நடந்து செல்கின்றனர். மேசையில் இருக்கும் இரண்டு தேநீர் குவளைகளுக்கு மத்தியில், சமாதானத்தின் வெள்ளைக்கொடியாய், ஒரு வெண்ணிற மலர் அசைந்தாடியபடி கிடக்கிறது.

படம் பார்க்கும் போது அதுவும் யதார்த்தத்தை அழுத்தமாகவும், கலை நயத்தோடும் கூறும் ஒரு படைப்பில் நாம் விலகி நின்று பார்ப்பது சிரமம். அப்படி நான் ஒன்றிய பட அனுபவத்தையும், பின்னர் அசை போட்டு வந்த கருத்துக்களையும் இணைத்து யோசிக்கிறேன்.

படத்தின் முதல் பாதியில் எனக்குள் எழுந்திருந்த கொந்தளிப்பும், கோபமும் படம் முடியும் போது இல்லை. அப்போது இருந்த மனநிலை அவநம்பிக்கை மட்டுமே. ‘இதுதான் ஊர். இப்படித்தான் இருக்கிறது சூழல். இதற்குள் உன்னால் எதுவும் செய்ய முடியாது. எப்படியாவது படித்து ஏதேனும் செய்து ஊரை விட்டு கிளம்பு’ என்ற ஒருவிதமான அவலம் கலந்த எண்ணமே எஞ்சியிருந்தது.

இயக்குனர் மாரி செல்வராஜ், தன்னுடைய பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் உருவாக்க விரும்பிய கலை – அனுபவம் – கண்ணோட்டம் வேறொன்றாகக் கூட இருக்கலாம். ஆனால் எனக்கு மட்டுமல்ல… நான் உரையாடிய பல நண்பர்களுக்கும் மேற்கண்ட அவல – தன்னிரக்க மனநிலையைதான் படம் ஏற்படுத்துகிறது.

ஒரு திரைப்படம் இத்தகைய அவ நம்பிக்கையை உருவாக்கலாமா? அல்லது இதை வெறும் அவநம்பிக்கை என்று உணர்வது தவறா?

பொதுவில் ஹீரோ அனைத்து வில்லன்களையும் அடித்து நொறுக்கி நீதியை நிலை நாட்டும் கதை அனுபவத்திலேயே நாம் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம். அத்துடன் கொஞ்சம் முற்போக்கு அரசியலும் அறிமுகமாகும் போது என்ன தோன்றும்? ஒரு தலித் இளைஞன் தன் மீது கணந்தோறும் நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளுக்கு இவ்வாறுதான் எதிர்வினையாற்ற வேண்டுமா? ‘காலம் மாறும்’ என எதிர்த்தரப்பு வாய்விட்டு சொல்வதற்கே இத்தனை இழிவுகள் சுமக்க வேண்டுமாயின், உண்மையாகவே காலம் மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? இப்படிப் பல கேள்விகள்.

அதேநேரம் இந்த திரைப்படத்தின் சித்தரிப்பு ஒரு சமூக யதார்த்தம் இல்லையா என்ற கேள்வியும் இணைந்தே எழுகிறது. இந்தப் படமும் கூட பெருமளவு தனது பேசுபொருளில் யதார்த்த வாழ்விற்கு நாணயமாகவே பயணிக்கிறது.

ஒரு தலித் இளைஞன் தன் மீது நிகழ்த்தப்படும் சாதிய வன்கொடுமைகளை அந்த இடத்திலேயே எதிர்த்துக் கேட்பதற்குரிய சமூக சூழல் இங்கு இல்லை என்பது ஓர் உண்மை. அல்லது அப்படிக் கேட்க முடியுமாயின் அந்த சமூகச் சூழலில் இத்தகைய சாதிய வன்கொடுமைகள் பெரிய அளவுக்கு இருக்க வாய்ப்பில்லை.

இப்பூமியில் பிறந்த அந்தக் கணத்தில் இருந்தே சாதியின் விதவிதமான, நுணுக்கமான இழிவுகளை, அவமானங்களை, ஆதிக்கக் கூறுகளை சுமக்குமாறே ஒரு தலித் சமூகக் கட்டுப்பாடுகளால் வளர்க்கப்படுகிறான். அது சமூக இயங்கியலின் பிரிக்கவியலாத ஒரு பகுதியாக, செயலில், உணவில், பேச்சில், உடையில், கல்வியில், பண்பாட்டில் ஒட்டியிருக்கிறது. ஆகவே சகித்துக் கொள்வதும், பொறுத்துக் கொள்வதும் அவனுடைய சுய உணர்ச்சியின் தேர்வு இல்லை. புற உலக யதார்த்தத்தின் நிர்ப்பந்தம். இன்னொரு விதமாகச் சொன்னால் இத்தகைய அடிமை உலகிற்கு வெளியே ஒரு ஜனநாயக வெளிக்கு அறிமுகமாகும் போதுதான் அவன் தன் நிலையை உணர்ந்து கொதிக்கிறான். இதைத்தான் மாரி செல்வராஜின் திரைப்படமும் சித்தரிக்கிறது.

சட்டக் கல்லூரி எனும் ஜனநாயக வெளியில் பரியனின் சுயம் முட்டி மோதி பல்வேறு அளவுகளில் பரிணமிக்கிறது. இதுவரையிலான தமிழ் சினிமாவை எடுத்துக்கொண்டால் தலித் Vs தலித் அல்லாதோர் என்பதையே முழு நீள கதைக் களமாகக் கொண்டு வெளிவந்த திரைப்படங்கள் மிக சொற்பம். அதையே ஒரு தலித்தின் பார்வையில் வெளிப்படுத்தும் படங்கள் இன்னும் அரிது. அந்த வகையில் பரியேறும் பெருமாள் சாதிய சமூகத்தின் யதார்த்தத்தை நெருக்கமாக காட்சிப் படுத்துகிறது. அந்த அனுபவப் பார்வை அனைத்து மக்களிடமும் சங்கமிக்கும் போதுதான் பல்வேறு பிரச்சினைகளே என்னவென்று புரியும்.

அதேநேரம் இதைத்  தமிழகம் தழுவிய தலித் வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றம் எனவும் கருத முடியாது. தன்னை சாதிவெறியோடு சிலர் தாக்கியதை கதாநாயகன் சொல்லும்போது, ‘எவம்ல உன்னை அடிச்சது… உன் காலேஜ்ல நம்ம பயக இருப்பாம்ல… அவனுங்களை கூட்டிட்டுப் போ… அவன் வரலன்னா நான் ஊர்லேர்ந்து அழைச்சுட்டு வர்றேன்’ என கோபம் கொப்பளிக்க ஓர் புளியங்குளம் இளைஞர் சொல்கிறார். கொங்கு மண்டலத்தில் இப்படி ஓர் அருந்தியர் இளைஞர் சொல்வதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. திருச்சி, தஞ்சையில் ஒரு பறையர் இளைஞரை இப்படி கல்லூரியில் அடித்து, அவர் ஆள் சேர்த்துக் கொண்டு திருப்பித் தாக்கிவிட முடியாது.

ஆனால் தென் தமிழக நிலைமை இதிலிருந்து வேறுபட்டிருக்கிறது. தேவேந்திர குல வேளாளர் மக்கள், தென் தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட, தீண்டத்தகாத பிரிவினராகவே நடத்தப்படுகின்றனர் என்ற போதிலும், எதிர்த்து நின்று திருப்பித் தாக்கும் வலிமையை அவர்கள் கடந்த கால நிகழ்வுகளினூடே பெற்றுள்ளனர்.

கொஞ்சம் நிலவுடைமை விவசாயத்தாலும், பெரும் எண்ணிக்கையில் நகரங்களுக்குச் சென்று பொருளீட்டிய முன்னேற்றத்தாலும், சில பல பகுதிகளில் அவர்கள் பெரும்பான்மையாக வாழ்வதாலும் இந்த திருப்பித் தாக்கும் சக்தியை பெற்றிருக்கின்றனர். 1990-களின் மத்தியில் கொடியங்குளத்தில் துவங்கி நடந்த தென் மாவட்ட ‘கலவரங்களு’க்குப் பிறகு அவர்களுடைய சமூக வாழ்வின் தன்மை மாறியிருக்கிறது என்றும் சொல்லலாம்.

தனக்கு கிடைத்த முதல் பட வாய்ப்பை, தான் நம்பும் அரசியலை பேசுவதற்காக மாரி செல்வராஜ் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் சாதிய உள்ளடக்கம் கொண்ட கதைகளை கையாளும் போது ஊரைவிட்டு தள்ளி வைப்பதற்கான சாத்தியம் அதிகம் இருக்கிறது என்றாலும் கூட, உறுதியாக இப்படி ஒரு கதைக் களத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர். அத்தகைய உறுதியைக் கொடுப்பதற்கு இயக்குநர் ரஞ்சித் தயாரிப்பாளராகவும் கிடைத்திருக்கிறார்.

ஆனால், ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்துக்கு ஏன் எதிர்ப்புகள் வரவில்லை? திரைப்படங்களில் தங்கள் சாதிப் பெயர் வெளிப்பட்டாலே துள்ளிக் குதிக்கும் சாதி வெறியர்களை நாம் காண்கிறோம். வசனத்தில் ஒரு சொல் இடம் பெற்றாலே கடும் எதிர்ப்புகள் எழும். இந்த திரைப்படம் நேரடியாக சாதியைக் கையாள்கிறது; தலித்கள் எப்படி அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்று சித்தரிக்கிறது. படத்தில் வரும் ஆதிக்க சாதித் தரப்பு தென் மாவட்ட தேவர்கள் என்பதை குறியீடுகளால் உணர்த்துகிறது. எனினும் எந்த சிறு எதிர்ப்பும் எழாதது ஏன்? மேலும் தேவர் மகன் 2, சண்டியர் படங்களுக்காக ‘வீறு’ கொண்டு எழுந்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் இப்படத்தினை எதிர்க்கவில்லை.

தாங்கள் தலித்துக்களே இல்லை என்று பா.ஜ.க-வுடன் பயணிக்கும் அவரது ஆதரவாளர்கள் இப்படத்தில் சித்தரிக்கப்படும் கொடூரமான காட்சிகளால் தமது சாதியினர் இழிவுபடுத்தப்படுவதாகவும், தங்கள் சாதி அப்படிப்பட்டது இல்லை, தாங்கள் ஆண்ட பரம்பரை என்றும் மற்ற தலித்துக்கள் மீதான சாதிய கொடூரங்கள் தங்களுக்கு பொருந்தாது என்றும் எவரும் எதிர்க்கவில்லை. இருப்பினும் இதை விட முக்கியமானது ஆதிக்க சாதி பக்கமிருந்து எதிர்ப்பு வரவில்லை. ஏன்?

தேவர்கள் என்று இல்லை… பொதுவாக ஓர் ஆதிக்க சாதி விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டால், இதர ஆதிக்கத் தரப்பும் ஓரணியில் இணைந்து கொள்ளும். தருமபுரி இளவரசன் – திவ்யா பிரச்னையின் போது, ராமதாஸ் உடன் கவுண்டர் சங்கங்களும், தேவர் அமைப்புகளும் கை கோர்த்துக் கொண்டன. அடக்கும் தரப்பு என்ற அடிப்படையில் இந்த இணைவு நடக்கிறது. அப்படி, பரியேறும் பெருமாள் விசயத்தில் எந்த ஆதிக்க சாதியினரும் எதிர்க்குரல் எழுப்பவில்லை என்பது மட்டுமல்ல… கணிசமானோர் ஆதரிக்கவும் செய்கின்றனர்.

அப்படியானால் இயக்குனர் மாரி செல்வராஜும், தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தும் இப்படத்தின் மூலம் நிகழ்த்த விரும்பிய உரையாடல் வெற்றியடைந்திருக்கிறதா ?

‘கலையின் வழியே அரசியல் கருத்துக்களை வீச்சுடன் பரப்ப முடியும். சமூக மாற்றத்தில் கலையின் பங்கு அரசியல் இயக்கங்களை விட முதன்மையானது’ என இயக்குனர் பா.ரஞ்சித் பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறு வேறு வார்த்தைகளில் கூறியிருக்கிறார். இந்தப் படமும் சாதிய சமூகத்தை ஒரு கணம் அழுத்தமாக சிந்திக்க வைப்பதால் இது வெற்றி என்றே அவரும், மாரி செல்வராஜும் நினைக்க கூடும். இப்படத்திற்கு வந்த பாராட்டுக்களும் (ஆதிக்க சாதியில் பிறந்தோரின் பாராட்டுக்கள்) அவர்களை அப்படி நினைக்க வைக்கும்.

சாதி வெறியில் திளைத்திருக்கும் வெறியர்களை கலையால் ஓர் அங்குலம் கூட அசைக்க முடியாது என்பது ஒருபுறமிருக்க, அத்தகைய சாதிவெறி இல்லாமலும், அதேநேரம் சாதிய அடையாளம் தரும் மரபுவழி ஆதாயங்களை துறக்க முடியாமலும் இருக்கும் மவுனப் பெரும்பான்மையின் உள்ளத்தை இப்படம் அசைத்திருக்குமா? 

இல்லை. எதிர்க்கப்பட வேண்டிய அளவுக்கு ‘பரியேறும் பெருமாள்’ எந்த சேதாரத்தையும் அம்மக்களிடம் ஏற்படுத்தி விடவில்லை. அவர்களுடைய சாதி ஆதிக்கம் அளித்திருக்கும் வாழ்க்கையின் சின்னஞ்சிறு செங்கல்லை கூட இது அசைக்கவில்லை. ஊருக்கு நடுவில் நின்று ‘இவன் என்னை ஒடுக்குகிறான், இழிவு செய்கிறான்’ என்று பரியன் கத்துவதால் ஒடுக்கும் தரப்பை சேர்ந்தவன் அவமானம் அடைந்து, குற்றவுணர்வு கொண்டு திருந்துவான் என நாம் எதிர்பார்க்கலாம். அல்லது கொடுரமான சாதிவெறியின் உள்ளத்தை ஒரு கணம் உலுக்கலாம் என்று எதிர்பார்ப்பதும் தவறில்லை.

ஆனால் அரிவாளால் சாதி பேசாமல், சாதி தரும் பொருளாயாத வசதியால் அமைதியாக சாதி பெருமிதத்தை பேசும் மக்களின் உளவியல் கோட்டையை இந்தப் படம் தொட்டுப் பார்க்கவில்லை. சாதி வெறியர்களைப் பொறுத்தவரை ‘நாம் அன்றாடம் செய்வதை இந்தப் படத்தின் திரையில் காட்டுகிறார்கள். இதைப் பார்த்து இன்னும் கொஞ்சம் அச்சம் ஏற்பட்டால் நல்லதுதான்’ என்றே நினைப்பார்கள்.

சாதி வெறியற்ற ‘அமைதியான’ சாதி ஆதிக்க மக்களோ “எதற்கு காதல், கலப்பு மணம் என்று பிரச்சினை? இப்போதைக்கு அவரவர் சாதியில் மணம் முடிப்போம். ஏதோ காலம் மாறி இந்தப் பிரச்சினை மாறினால் மாறட்டும்” என்று ஏற்கெனவே அவர்கள் வைத்திருக்கும் சிந்தனையை இப்படம் ஊக்குவிக்கிறது. படத்தின் வழியாகவும் இதை பார்க்கலாம்.

கோபமிருந்தாலும் சில இடங்களில் முதிர்ச்சி தரும் பணிவுடன் ஆதிக்கசாதி வெறியர்களிடம் மண்டியிடுகிறான் பரியேறும் பெருமாள். குட்டக் குட்ட குனியும் பரியன், தன் மீது இரக்கத்தை கோரும்  பலவீனமான தாழ்வுணர்ச்சியை படம் நெடுக வெளிப்படுத்துகிறான். தன் மீதான வலிகளையும் அவமானங்களையும் சகித்துக் கொண்டு மனதுக்குள்ளேயே குமைவதால் எதிர்த்தரப்புக்கு என்ன இழப்பு? எவ்வளவு அடித்தாலும் தாங்கும் தலித் மக்களை ஆதிக்க சாதி மனம் விரும்பவே செய்யும். அடித்து கை வலிக்கும் தருணத்தில் சற்றே பச்சாதாபம் கொள்ளும். பரியன் மீது நாயகியின் அப்பா கொள்ளும் பரிவு இத்தகையதே. அந்தப் பரிவைத்தான் அரிவாள் தூக்காத சாதிய சமூகமும் வெளிப்படுத்துகிறது.

கதாநாயகி குடும்பத்தின் சாதிப் பெருமைக்கு சின்னஞ்சிறு பங்கம் கூட ஏற்படாத வண்ணம் கதாநாயகனின் நடத்தை இருப்பதால்தான், ‘வாயேன் டீ சாப்பிடலாம்’ என அழைக்கிறார் அந்த தந்தை. தாங்கள் நடத்திய சாதிக் கொடுமைகளை தன் மகளிடம் சொல்லாமல் இருந்ததற்காக ‘தேங்க்ஸ்’ சொல்லும் அவர், கூப்பிட்டு வைத்து முகத்தில் ஒண்ணுக்கு அடித்ததற்காக ஒரு ‘சாரி’ கூட சொல்லவில்லை. சமூகத்தில் இன்னும் அந்த அளவுக்கு இணக்கம் ஏற்பட்டுவிடவில்லை என்பதால் இதை இயக்குநர் தெரிந்தே செய்த தவறாகவும் கொள்ள முடியாது. ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு குவளை தேநீர் அருந்தி சாதியொழிப்புப் பற்றி உரையாடினால் அது எப்படி இருக்கும்? அதிகபட்சம், ‘நீங்களா பார்த்து சாதி வெறியை விட்டுருங்க சார்’ என பரியன் வேண்டுகோள் வைக்கலாம். அதைத் தாண்டி வேறு என்ன செய்ய முடியும்?

இறுதிக்காட்சிக்கு முந்திய காட்சியில், உடைக்கப்பட்ட கார் கண்ணாடி வழியே, நாயகியின் அப்பாவை நோக்கி பரியன் காறி உமிழ்கிறான். அது எதிர்ப்பின் வடிவமாக அல்ல… கையறு நிலையில் மண்ணை வாரித் தூற்றுவதைப் போல்தான் பார்வையாளர் மனதில் தங்குகிறது. மொத்தத்தில் ஒரு தலித் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று ஓர் ஆதிக்க சாதி மனம் விரும்புகிறதோ, அதை திரையில் நிகழ்த்திக் காட்டுகிறது இந்தப் படம். ஆகவே இதை எதிர்க்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு எழவில்லை.

“…மேலும் குறிப்பாக யாருடைய மனதையும் புண்படுத்தாமல், ஒரு கீறல் கூட விழாமல் இப்படத்தை எடுத்ததற்காக வாழ்த்துகள்…” என்று இயக்குநர் பாரதிராஜா இப்படத்தையும் இயக்குநர் மாரி செல்வராஜையும் ‘மனதாரா’ பாராட்டியிருக்கிறார். ஆம். இப்படம் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை!

அப்படியானால் பரியன் என்ன செய்திருக்க வேண்டும்? எதிர்த்து அடித்திருக்க வேண்டுமா?

‘திமிறி எழு, திருப்பி அடி’ என்று இங்கே தலித் இயக்கங்கள் 1990-களில் முன்வைத்த முழக்கம் இப்போது துடிப்புடன் இல்லை. அப்போது அவர்கள் தமது பகுதிகளில் மட்டும் பேசினார்கள். தேர்தலை புறக்கணித்திருந்தார்கள். பின்னர் தேர்தல் அரசியலில் சங்கமித்த பிறகு ஆதிக்க சாதியோடு பெரிய அளவுக்கு முரண்படாமல் இருந்தால்தான் ஆளும் வர்க்க அரசியலில் நீடிக்க முடியும் என்பதை பட்டுணர்ந்தார்கள். இன்று திருமாவளவனை ஆதரிக்கும் ‘பிற சமூக’ சமூகவலைத்தள முற்போக்காளர்களும் கூட அவரை ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள் கொஞ்சம் விட்டுக்கொடுத்து ஏற்க வேண்டும் என்பதாக மன்றாடுகிறார்களே தவிர அதை ஆணையிடும் நிலையில் இல்லை.

அரசியல், சமூக, பொருளாதார கட்டுமானங்களால் மக்களின் மனங்களில் ஆழப் பதிந்துள்ள சாதியை வெறுமனே மனித மூளைகளில் பதிந்துள்ள தவறான கருத்தாகவே மேற்கண்ட பார்வை கருதுகிறது. ஆகவே கருத்து மாற்றமும், அதற்கான பிரச்சாரமும், இணைந்த செயல்பாடுகளுமே பொருத்தமான வடிவங்கள் என்பதால், ‘திருப்பித்தாக்கு’ என்பதை சமூக யதார்த்தத்தை மீறிய கற்பனை எதிர்பார்ப்பாக விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமல்ல… ரஞ்சித் போன்றவர்களும் கருதுகிறார்கள். இது சாதி ஆதிக்க சமூக யதார்த்தத்தின் விளைவா இல்லை அந்த யதார்த்தத்தை தவறாக புரிந்து கொண்ட அரசியலின் விளைவா?

பரியேறும் பெருமாள் சாதிவெறியை எதிர்த்து ஏன் சாகசங்கள் செய்யவில்லை என்பல்ல நமது விமர்சனம். ஆனால் கற்பனையில் கூட நடக்காதென தோற்றமளிக்கும் சாதி ஆதிக்கத்தை எதிர்க்கும் பாதை எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதையே இந்த விமர்சனம் படத்தினூடாக முன் வைக்கிறது.

மாரி செல்வராஜ் சித்தரித்துள்ள பரியன் கதாபாத்திரம், இழிவுகளை சுமந்து கொண்டு, எப்பாடுபட்டாவது படிப்பின் துணையுடன் முன் செல்ல எத்தனிக்கிறது. இதுவும் கூட ஒரு யதார்த்தம்தான். அதாவது தமது வறிய பொருளாதார நிலையை படிப்பு – வேலை வாய்ப்புகளால் உயர்த்திக் கொள்வதன் மூலம் சாதிய இழிவுகளை மெல்ல மெல்ல குறைக்கவோ மறுக்கவோ முடியும் என்ற மனநிலை அது. சாதி அமைப்பின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் தலித் இளைஞர்கள், எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு எப்படியாவது கல்வியின் கரம் பற்றி தப்பிக்க முயல்கின்றனர். அப்படி சாதிக் கொடுமையை சகித்துக் கொண்டு படித்து முன்னேறுவது சாத்தியமா என்றால் சாத்தியம்தான், ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் வரும் அந்த சட்டக் கல்லூரி முதல்வரைப் போல.

அவர் ஒரு காலத்தில் செருப்பு தைப்பவரின் மகன். அவரே சொல்வதைப் போல, ‘பன்னி மாதிரி என்னை தொரத்தி தொரத்தி அடிப்பானுவ.. ஒரு கட்டத்துல சுதாரிச்சேன். எது முக்கியம்னு தெரிஞ்சுக்கிட்டு பேய் மாதிரி படிச்சேன். அன்னைக்கு என்னை அடிச்சு தொரத்துவனவன்லாம் இன்னைக்கு அய்யா, சாமின்னு சலாம் போடுறான்’ என்கிறார். ஆனால், அவர் பெற்ற கல்வியின் அறிவால், தன் மாணவனுக்கு நேரும் வன்கொடுமையை அவரால் தடுக்க முடியவில்லை. ‘ரூம்ல தூக்கு மாட்டிக்கிட்டு சாவறதை விட அடிதடில செத்தா பரவாயில்ல’ என்றுதான் கையறு நிலையுடன் சொல்ல முடிகிறது. இந்த கையறு நிலையை  வெளிப்படுத்த அவருக்கு கல்வி எதற்கு?

ஆகவேதான் சமூக பொருளாதார விடுதலை என்பது வெறும் படிப்பு – வேலைகளால் வந்து விடுவதில்லை. அது அரசியல் விடுதலை எனும் போராட்டங்களோடு இணைக்கப்படாத வரை பெரிய பயனில்லை. ஏனெனில் இந்தியாவில் வர்க்கமும் சாதியும் ஒன்று என்பதற்கு ஆகப் பொருத்தமான உதாரணங்களில் தலித்துக்கள் முதன்மையானவர்கள்.

தலித்துக்கள் மட்டுமல்ல சூத்திர சாதிகளில் உள்ள கணிசமான மக்களும் வறிய நிலையில்தான் இருக்கிறார்கள். இந்த சாதிகளில் 5 அல்லது 10 சதவீதம் பேர் படித்து ஆளானாலும் மீதிப் பேரின் விடுதலை எப்படி என்பதே நம் கேள்வி. பரியேறும் பெருமாள் திரைப்படமும் அப்துல்கலாம், எம்.எஸ்.உதயமூர்த்தி, நீயா நானா கோபிநாத் போன்ற டெம்ப்ளேட்டுகளின் தனி மனித முன்னேற்றத்தைப் பரிந்துரைக்கிறது.

உண்மையில், “அடிச்சுகிட்டு செத்தா பரவாயில்ல, அவன (ஆதிக்க சாதி) அடக்க முடியல, இவன (பரியன்) மட்டும் அடங்கிப் போகச் சொல்லணுமா” என்று கல்லூரி முதல்வர் சொல்லும் போது திரையரங்கில் கைத்தட்டல் பறக்கிறது. சொல்வது ‘கல்வியால் முன்னேறிய பிரின்சிபல்’ என்பதால் அல்ல. அதுதான் யதார்த்தம் என்பதால். ஒருவேளை, இதே வசனத்தை பரியனின் அப்பா பேசியிருந்தால் (சொல்ல வாய்ப்பில்லை என்றாலும்) கை தட்டல் இன்னும் கூடுதலாக கிடைத்திருக்கக் கூடும்.

படத்தின் கதையோட்டத்தோடு முரண்பட்டாலும் இதுவும் தவிர்க்க முடியாத ஒரு யதார்த்தம்தான்.இதன்படி படைப்பில் தோன்றும் இயக்குநர், தயாரிப்பாளரின் இந்தப் பார்வைப் பழுதிற்கு இந்த சேம் சைடு கோலை உதாரணமாக சொல்லலாம்.

*****

‘ஏன் எல்லாவற்றையும் பொருத்துக் கொண்டேன்?’ என்ற கேள்விக்கு பரியன் பாத்திரம் நேரடியாக பதில் சொல்கிறது. இறுதிக் காட்சிக்கு முந்தைய சண்டையில், உடைந்த கார் கண்ணாடியின் வழியே நாயகியின் அப்பாவை நோக்கி பரியன் பேசும்போது, ‘நீங்கள் எனக்கு இழைத்த சாதிய இழிவுகளை உங்கள் மகளிடம் சொல்லியிருந்தால் அவள் உங்களை அப்பா என்று அழைத்திருக்க மாட்டாள். கேவலமாக மதித்திருப்பாள். முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு தானும் தூக்கில் தொங்கியிருப்பாள். அதனால்தான் எல்லாவற்றையும் பொருத்துக் கொண்டேன்’ என்று சொல்லி விட்டு, ‘உன் சாதிப் பெருமை நான் போட்ட பிச்சை’ என்கிறான் நாயகன். அதாவது ‘நான் சாதி இழிவை ஏற்றுக் கொள்வதால்தான் நீ சாதிப் பெருமிதத்துடன் இருக்க முடிகிறது’. இதை ‘காதலி’க்காக செய்யப்படும் தியாகமென்று மட்டும் குறுக்கி விட முடியாது

இத்தகைய சிவாஜி கணேசன் சென்டிமெண்ட் பார்வை மூலம் ஆதிக்க சாதி மன அமைப்பில் வாழ்வோரை என்ன செய்ய முடியும்? என்ன உரையாடல் நடத்த முடியும்? “எதற்கு பிரச்சினை, தனித்தனியாக அவரவர் வேலையை பாருங்கள், காலம் மாறும்” என்று அனைவரும் வழமையான உலகத்திற்கு திரும்புவதைத் தவிர இப்படம் வேறு புதிய மருந்து எதையம் தரவில்லை. இந்தப் பழுதான கண்ணோட்டம் மாரி செல்வராஜுடையது மட்டுமன்று… பலர் இதை ஒத்த கருத்துக்களை சொல்கின்றனர்.

‘ஊருக்கு வெளியே சேரி இருப்பதால், நீங்கள் எங்களை ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள் என்று பொருள் இல்லை. சேரிதான் ஊர். ஊரை நாங்கள் ஒதுக்கி வைத்திருக்கிறோம்’ என்று சிலர் சொல்வதுண்டு. ஆண்ட சாதி பெருமிதம் பேசும் மனநிலையின் அப்பாவித்தனமான எதிர் விளைவு இது. ஊர் பொதுக்கோயிலில் தலித்களை விடுவதில்லை என்றால், அந்த கோயிலில் சமமான வழிபாட்டு உரிமையை பெற போராட வேண்டும். மாறாக அர்ஜுன் சம்பத் கும்பல் பரிந்துரைப்பதைப் போல, தலித்கள்  தனியே கோயில் கட்டிக்கொள்வது இதற்கு தீர்வு அல்ல. அப்படி கோயில் கட்டிக் கொள்வதால் அந்த சமூக தீண்டாமை முடிவுக்கு வருவதும் இல்லை.

சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், ‘பெண்கள் மட்டும் செல்லும் வகையில் சில குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கித் தரலாம்’ என்று ஒருவர் சொன்னார். லிபரல் தன்மையுள்ள இந்த கருத்து, சம அளவுக்கு தீண்டாமையை அங்கீகரிக்கிறது. ‘ஜல்லிக்கட்டில் ஆதிக்க சாதியினர் மட்டுமே காளையைப் பிடிக்க முடியும் என்றால், தலித்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஒரு தனி ஜல்லிக்கட்டு நடத்துவோம்’ என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது சிலர் பேசினார்கள்.

இவை அனைத்துமே சமத்துவத்தை கோரும் சாதி ஒழிப்புக்கு பதில், தனித்தனியாக சாதிகள் தமது ஏற்றத்தாழ்வான படிநிலையோடு வாழ்வதற்கு வழி கோலுகின்றன. எனவே, ‘உன் சாதிப்பெருமை நான் போட்ட பிச்சை’ என்பது இழிவையே, கம்பீரமாக முன்வைக்கும் மோசமான ஓர் அடிமையின் மனநிலை. ‘அதுதான் யதார்த்தம்’ என்றால் சாதி ஆதிக்கமும் கூட யதார்த்தம்தான் என நாம் கடந்து போய்விடலாமா?

இதன்படி, ‘அம்பானி கோடீஸ்வரனாக இருப்பது நான் போட்ட பிச்சை’ என ஒரு தொழிலாளி பெருமிதம் அடைய வேண்டும். ‘ஆணாதிக்கம் நாங்கள் போட்ட பிச்சை’ என்று பெண்கள் பெருமிதம் கொள்ள வேண்டும்.

வேறு என்ன செய்திருக்க முடியும்? மாரி செல்வராஜ் எடுக்காத படத்துக்கு நாம் விமர்சனம் எழுத முடியாது. ஆனால் அவர் எடுத்துள்ள படத்திலேயே, அவர் கையாண்டுள்ள கதையிலேயே சமத்துவத்திற்காக போராடச் சாத்தியமுள்ள களம் இருக்கிறது. பரியனின் நண்பனாக வரும் ஆனந்த் என்ற பாத்திரம், படத்தில் வெறும் காமெடியனாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

ஒரே ஒரு காட்சியில், ‘நான் சாதி பார்த்தா உன்னிடம் பழகுகிறேன்?’ என்று கேட்கிறார். உண்மையில் அது ஒரு நம்பிக்கையான குரல். ஆனந்த் பொய் சொல்லவில்லை. தமிழக கல்லூரிகளில் பல ஆனந்த்துகளை நாம் பார்க்க முடியும். அவர்கள் சாதி ஒழிப்பு அரசியல் பேசுவோராக இருப்பதில்லை என்றாலும், மாற்றத்தை விரும்பும் செயல்துடிப்பு மிக்க அந்த வயதுதான், ஆயிரம் கால ஆதிக்க உணர்வை மீறிச் செல்லும் உத்வேகத்தையும் அளிக்கிறது. மேலும், உழைக்கும் வர்க்கம் என்ற அளவில் எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுடன் ஓர் ஐக்கியத்தை உருவாக்கிக் கொள்வது ஒப்பீட்டளவில் எளிது. இதற்கான சாத்தியம் கதையின் உள்ளடக்கத்திலேயே இருந்தும் கூட இயக்குனர் அதை நிராகரிக்கிறார்.

ஆனந்தின் தந்தை கவுன்சிலர், அவரது அரசியல் செல்வாக்கால் சட்டக் கல்லூரியில் சீட் வாங்குகிறார், பட்டத்தையும் முடித்து விடுவார் என்ற சித்தரிப்புகளையெல்லாம் செய்த இயக்குநர், பரியன் எனும் இளைஞனின் போராட்டத்தில் ஏன் ஆனந்துகளை சேர்க்கவில்லை? சொல்லப் போனால் இந்தப் படமே பரியனின் பிரச்சினையை பரியனின் பார்வையில் அல்லாது ஆனந்தின் பார்வையில் சொல்லியிருக்கலாமோ என்று கூடத் தோன்றுகிறது. தமிழ்வழிக் கல்வி, ஆங்கிலப் பிரச்சினையால் பொறுமை இழக்கும் பிரச்சினையும் பரியனுக்கு மட்டுமே உரியதல்ல. அதில் ஆனந்துகள் அனைவரும் வருகிறார்கள்.

தொடந்து கொலை செய்யும் அந்த முதியவர் பாத்திரம், பரியனின் புகைப்படத்தைப் பார்த்து, ‘இந்தப் பையன் நல்லவனாச்சேப்பா.. நான் வேணும்னா பேசிப் பார்க்கட்டுமா?’ என்று கேட்கிறார். அது ஓர் முக்கியமான இடம். சாதிவெறி பிடித்த ஒரு கொடூர கொலைகாரன் என்ற போதிலும், அடியாழத்தில் புதைந்துள்ள வர்க்க உணர்வில் இருந்து பிறக்கும் அந்த குரலை பின் தொடரும் வண்ணம் படத்தில் கதையோ காட்சிகளோ இடம் பெறவில்லை. அதற்கு இயக்குனர் அனுமதிக்கவில்லை.

‘சாதி ஒழிப்பை சேரியில் பேசாதீர்கள். ஊரில் போய் பேசுங்கள்’ என்று பா.ரஞ்சித் பல மேடைகளில் பேசுகிறார். அதன்படி பார்த்தாலும் இந்தப்படம் அப்படிப் பேசவில்லை. அல்லது ரஞ்சித் சொல்லும் பொருள், ஊரில் சென்று ‘இனியாவது திருந்துங்கடா’ என்று கேட்பதாக இருக்கிறது. நாம் சொல்வது, இனியாவது நாம் சேராவிட்டால் முன்னேற்றமில்லை என்பதே.

ஆதிக்க சாதி வெறியின் கொடூரத்தையும் அதனால் அல்லலுறும் ஒரு தலித் இளைஞனின் அவலத்தை மட்டுமே இப்படம் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது. ஆனால் ஆதிக்க சாதியின் ஏழைகளையும், ஏழ்மையிலிருந்து விடுபடுவதற்காக போராடும் தலித் மக்களையும் இணைக்கும் யதார்த்தத்தை இப்படம் கடந்து போகிறது.

விடுதலைக்கு வழி காட்டும் இந்த யதார்த்தம் நம் கண்ணுக்கு சட்டெனத் தெரிந்து விடாது. தெரிய விரும்புவோர் வர்க்க அரசியலோடு களத்தில் பயணிப்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை.

– வழுதி

எச்ச ராஜாவோடு ஒரு ’ ஆன்டி இந்தியன் ’ நேருக்கு நேர் ! காணொளி

சென்னையில் மகஇக, புமாஇமு, புஜதொமு, பெவிமு ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து நடத்திய நவம்பர் புரட்சி தினவிழாவில் எச்ச ராஜாவை பேட்டி காண்கிறார் ஒரு ’ஆன்டி இந்தியன்’ நிருபர்.

சபரிமலையில் பெண்கள் அனுமதி குறித்தும், கேரள வெள்ளத்தில் சவுதி உதவித்தொகையை மறுத்தது குறித்தும் ஒவ்வொரு இந்தியரின் அக்கவுண்டிலும் 15 லட்சம் போடுவதாக சொன்னது குறித்தும் அசராமல் பதில் சொல்கிறார் எச்ச ராஜா.

முசுலீம்கள், தலித் மக்களின் மீதான தாக்குதல்கள் குறித்தும், ஜி.எஸ்.டி குறித்த கேள்விகளுக்கு எச்ச ராஜா அளிக்கும் பதில்தான் உச்சகட்டம்.
காணொளி:

பாருங்கள் ! பகிருங்கள் !

கொள்ளைப் பணம் – குத்தாட்டத்துடன் கோலாகலமாக துவங்கிய நியூஸ் ஜெ சேனல் !

றைந்த சொத்துக் குவிப்பு குற்றவாளி A1 ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அ.தி.மு.க. என்ற கட்சி அமளிதுமளியாகி, ஒருவழியாக பா.ஜ.க.வின் மற்றொரு அணியாக மாறி ஆட்சி செய்து வருகிறது. ஆட்சிக்கு வந்தநாள் முதல் இவர்களின் அக்கப்போர் மற்றும் கொள்ளையை தமிழகமே அறியும். ஜெயா தொலைக்காட்சியும், ‘’நமது எம்.ஜி.ஆர்” என்ற பத்திரிக்கையும் ஜெயாவின் மரணத்திற்கு பிறகு மன்னார்குடி கும்பல் வசப்படுத்திக் கொண்டதால் கடந்த பிப்ரவரி மாதம் ஜெயாவின் பிறந்த நாளில் “நமது அம்மா” என்ற பத்திரிகையை எடப்பாடி ஓபீஎஸ் அணி தொடங்கியது. தற்பொழுது “நியூஸ் ஜெ” என்ற செய்தி தொலைக்காட்சியையும் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த தொலைக்காட்சிக்கு கவுண்டர் அணியின் கலை அணியான சிவக்குமார் – சூர்யா – கார்த்தி அணியினர் ஆலோசனை அளித்திருக்கிறதாம். பிறகு முக்கியமான பத்திரிகையாளர்கள் பலரை பணியில் அமர்த்தியிருக்கின்றனர். கொள்ளைப் பணத்தில் ஊதியம் வாங்கும் அந்த ஊடகவியலாளர்களிடம்தான் இனி நாம் ஊடக அறம் குறித்து பாடம் கேட்க வேண்டும்.

ஆனால் அதிமுக அரசும் கட்சியும் எப்படி ஒரு தொலைக்காட்சியை கார்ப்பரேட் தரத்தில் திடீரென உருவாக்கியது என்பது ஆச்சரியமான ஒன்றல்ல. பணந்தானே நிரந்தரமான தரம்!

ஆற்றுநீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் திட்டத்தை அறிமுகப்படுத்திய அறிவியல் விஞ்ஞானி செல்லூர் ராஜு முதல் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குவதற்கு மக்கள் சோப்பு போட்டு குளிப்பதே காரணம் என்று சொன்ன சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன்  வரை தமிழக மீம் கிரியேட்டர்களுக்கு அளப்பரிய சேவையை செய்து வருகின்றனர். ஆனால் இந்த நகைச்சுவைகளுக்கு பின்னால் கொள்ளையோ கொள்ளை என அதிமுக கும்பல் முழு தமிழகத்தையும் வழித்து துடைத்து வருகிறது.

அந்தக் கொள்ளைக்கு ஏற்படும் எதிர்ப்பை சமாளிக்க இப்போது அல்ட்ரா மாடர்னாக நியூஸ் சானலை துவங்கியிருக்கிறார்கள்.

கடந்த 12-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் இந்த சேனலுக்கான லோகோ மற்றும் இணையதள தொடக்க விழா நடைபெற்றது. இது முதல் நாளிலேயே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு விட்டது. காரணம், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதை உடனுக்குடன்  “நியூஸ் ஜெ” டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். அதில் “நாட்டை ஆளும் மன்னனின் வால் (வாள்) முனையை விட பேனாவின் கூர் முனை வலிமையானது” என்பதை எழுத்து பிழையுடன் அப்பக்கத்தில் வெளிவந்ததைப் பார்த்து இணையவாசிகள் அனைவரும் கலாய்த்து விட்டார்கள். இனி நியூஸ் ஜே சானல் எடிட்டர்கள் இத்தவறு இல்லாமல் மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவின் தரத்தில் அதிமுக நியுசை ஒளிபரப்புவார்கள்.

சேனலுக்கான துவக்க விழா சென்னை ராஜ முத்தையா சாலையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கத்தில் 14.11.2018 அன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக அண்ணா சாலையில் இருக்கும் பல்லவன் பணிமனையில் இருந்து ஸ்டேடியம் வரை போலிசை குவித்து போக்குவரத்துக்கும், குத்தாட்டத்தை பார்ப்பவர்களுக்கும் இடையூறு இல்லாமல் ஒழுங்குபடுத்தினர்.

முன்னதாக காலையில் அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் ஜெயாவின் பழைய சிலையை அகற்றி விட்டு புதிய சிலையை பழனிச்சாமியும்-பன்னீர்செல்வமும் திறந்து வைத்தனர். திறப்பதற்கு முன் ஒரு துண்டை போட்டு சிலையை மூடினார்கள். இந்த துண்டுதான் நேற்றைய மீம்களுக்கு ஃபுல் சப்ளை!

இந்த கூத்து முடிந்ததும், மாலை துவக்க விழாவில் கலந்து கொள்வது திட்டம். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்களை வரவழைத்து இருக்கிறார்கள்.  தாரை தப்பட்டைகள், மேளம்தாளம் முழங்க விழா ஆரம்பித்தது. தாண்டியா மேளம், கொக்காலி கட்டை ஆட்டம், குதிரை சாரட், கேரளா செண்டை மேளம், பங்கரா டான்ஸ், கரகாட்டம், தாண்டியா கேர்ள்ஸ், நடன குதிரை, பேண்டு வாத்தியம், வெல்கம் கேர்ள்ஸ், மயிலாட்டம், ஒயிலாட்டம் என அனைத்து ஆட்டக்காரர்களையும் அழைத்து வந்து ரணகளப்படுத்தி இருந்தனர். ஆட்டக்காரர்கள் கூலிக்கு வந்திருந்தாலும் உண்மையில் வாங்கிய பணத்திற்காக ’உயிரைக் கொடுத்து’ வேலை செய்தார்கள். போக்குவரத்து நெரிசல், சத்தத்திலும் தளராமல் தொண்டர்களை குஷிபடுத்தினர். ஒருவேளை சம்பளம் டபுளோ இல்லை அரசு ஆளும் கட்சி விழா என்ற பயமோ தெரியவில்லை.

கட்சித் தொண்டர்கள் அத்தனை பேரும் மிதமிஞ்சிய மப்பில் இருந்ததால் யாரிடமும் பேச முடியவில்லை. வருபவர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கவே விதவிதமான நடனங்கள். இந்த குத்தாட்டங்களை பார்த்து ரசித்தவாறே அரங்கத்தினுள் சென்றனர். அரங்கத்தினுள்ளும் “ஆடலும் பாடலும்” நிகழ்ச்சி என்று ஒரே அமர்களம்தான்.

முக்கியமாக கட்சியின் தேசிய கீதமான “ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்.. சுகம்..” என்ற பாடல் தவறாமல் இடம் பெற்றது. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த தேசிய கீதம் நமது காதுகளை பஞ்சராக்குமோ தெரியவில்லை.

இந்த புதிய சேனலின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்று இருப்பவர், அம்மாவால் அடிப்படை உறுப்பினர் பதவிகூட பிடுங்கப்பட்டு கடைசி வாய்ப்பாக கடந்த சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் மீண்டும் பதவிக்கு வந்த விழுப்புரம் சி.வி.சண்முகத்தின் தம்பி சி.வி. ராதாகிருஷ்ணன் என்பதால் கணிசமான ஆட்கள் விழுப்புரத்தில் இருந்து அழைத்து வந்திருந்தனர்.

வந்திருந்த பலரும் பாவம்…! வயதானவர்கள்…! வெறும் 200 ரூபாய்க்கு அழைத்து வரப்பட்டதாக கூறினார்கள். இதுபோக சரக்கு மற்றும் உணவு தனி. “எதற்காக வந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. கூப்பிட்டார்கள் வந்தோம்” என்று கணிசமானவர்களும், “டி.வி தொடங்குறாங்க.. அதனால வந்தோம்” என வெகுசிலரும் வெகுளித்தனமாக கூறினார்கள்.

அதேபோல், காலையில் திறக்கப்பட்ட அம்மா சிலை பத்தி என்ன நினைக்கிறீங்க ? என்றோம். “அதெல்லாம் எங்களுக்கு எதுவும் தெரியாது” என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு அரக்க பரக்க கிளம்பினார்கள். அதைவிடக் கொடுமை, நடக்க முடியாதவர்களையும், தூக்கிப் போட்டு வந்திருக்கிறார்கள் என்பதுதான். பேருந்தை விட்டு இறங்ககூட முடியாமல் அதற்குள்ளேயே அமர்ந்திருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் கையெடுத்து கும்பிட்டுக் கொண்டே, “நடக்க முடியாம உக்காந்துட்டோம்” என்றார்கள் முதியவர்கள்.

இதுதான் அ.தி.மு.க..குத்தாட்டம், குடி, கொள்ளைப்பணம் என்ற அம்மாவின் கொள்கை தவறாமல் எடப்பாடி ஓபிஎஸ் கும்பல் ஆட்சி செய்து வருகிறது.

இதையும் பாருங்க:

#MeToo : உழைக்கும் வர்க்கப் பெண்களின் பகிர்வுகள் !

#மீ டூ இயக்கம் சமீபத்தில் துவங்கப்பட்டதாக இருக்கலாம், ஆனால் அது இந்தியாவுக்குப் புதிதல்ல.  இதற்கு முன்பே பன்வாரி தேவி பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டத்தைத் துவங்கியிருந்தார்.

ராஜஸ்தானின் கிராமம் ஒன்றைச் சேர்ந்த பன்வாரிதேவி அங்கே “சாத்தின்” என்கிற மக்கள் நலப் பணியாளராக வேலை செய்து வந்தார். தனது பணியின் ஒரு அங்கமாக அக்கிராமத்தில் நடக்கவிருந்த குழந்தைத் திருமணம் ஒன்றைத் தடுத்து நிறுத்தியதால் ஆதிக்க சாதியினரால் கூட்டு வல்லுறவு செய்யப்பட்டார்.

பன்வாரி தேவியைப் போல் ஒவ்வொரு உழைக்கும் வர்க்கப் பெண்ணிடமும் நம்மிடம் பகிர்ந்து கொள்ள ஒரு #மீ டூ கதை புதைந்து கிடக்கின்றது. குடும்பமே நம்பிக் கொண்டிருக்கும் இப்பெண்களின் குறைந்த கூலி, பணிப் பாதுகாப்பின்மை, சமூகப் பாதுகாப்பின்மை போன்றவைகளோடு சாதி மற்றும் வர்க்க ஒடுக்குமுறைகளையும் இவர்கள் எதிர் கொள்கின்றனர். இவைதான் தங்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை எதிர்த்துப் பேசாமல் இப்பெண்களை மௌனிக்க வைக்கின்றன.

படிக்க :
♦ #Metoo : இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் விளைவு என்ன ? ஒரு முழுமையான அறிக்கை !
♦ நாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் ?

எந்தக் குறிப்பிட்ட பெண்ணாலும் #மீடூ இயக்கம் முன்னெடுக்கப்படவில்லை. தங்களிடம் அத்துமீறிய ஆண்களைக் குறித்த விவரங்களை அம்பலப்படுத்தும் ஒவ்வொரு பெண்ணும் அதைத் தங்கள் சொந்த இயக்கமாக ஏற்றுக் கொள்கின்றனர். பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக போராடும் பெண்கள் ஒவ்வொருவரையும் இந்தப் போக்கு மிக இறுக்கமாக பிணைத்துள்ளது.

அதே போல் ‘அவள் ஆபாசமாக உடையணிந்தோ, ஆணைக் கவரும் விதமாக நடந்து கொண்டோ, பெண்ணின் குணக் கேட்டினாலோ, அவளே விரும்பியதாலோ’தான் பாலியல் அத்துமீறல் நடந்தது என பொதுவாக பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து சொல்லப்படும் பொய்களையும் இந்த இயக்கம் தகர்த்துள்ளது.

பாலியல் அத்துமீறல் என்பது மிகச் சாதாரணமாக எல்லா இடங்களிலும் நடந்து கொண்டிருப்பதை இவ்வியக்கம் வெளிப்படுத்தியுள்ளது. அதேபோல் பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கவுரவமும், அவளுடைய குடும்ப கவுரவமும் பறிபோய் விடும் என்கிற கட்டுப்பெட்டித்தனமான கற்பனைகளையும் இவ்வியக்கம் கலைத்துள்ளது. தங்களுடைய தனிப்பட்ட பாதுகாப்பு, பணிப் பாதுகாப்பு மற்றும் மன நிம்மதி என அனைத்தையும் பணயம் வைத்து பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக பெண்கள் எழுந்து நிற்கின்றனர்.

விசாகா வழிகாட்டுதல்கள் மற்றும் பாலியல் குற்றத் தடுப்பு மற்றும் நிவாரணச் சட்டம் (2013) போன்றவைகள் இருந்தாலும், உழைக்கும் வர்க்கப் பெண்கள் பணியிடங்களில் சந்திக்கும் பாலியல் அத்துமீறல்களுக்காக நீதி வேண்டிப் போராடியே வருகின்றனர். நம் கண்ணுக்குத் தெரியாத பல பணிச் சூழல்களிலும், இறுக்கமான வர்க்க, சாதி மற்றும் ஆணாதிக்க கண்ணோட்டம் நிலவும் இடங்களிலும் சட்டம் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.

வீட்டுப் பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள், துப்புரவுத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளிகள் போன்ற இடங்களில் இவ்வாறான சூழலே நிலவுகின்றன. இந்த துறைகளில் எல்லாம் கீழ்மட்ட அளவில் புகார் தெரிவிக்க காகித அளவிலான கமிட்டிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மாதிரியான சூழலில் உழைக்கும் வர்க்கப் பெண்கள் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக தொழிற்சங்கங்களின் மூலமே போராடுகின்றனர்.

கடந்த நவம்பர் 3ம் தேதி மாலை, அனைத்திந்திய முற்போக்குப் பெண்கள் சங்கம் (AIPWA),  பெங்களூர் மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர் சங்கம், பின்னலாடைத் தொழிலாளர் சங்கம், வீட்டுப் பணியாளர் உரிமைச் சங்கம் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்களோடு இணைந்து “#மீடூ : உழைக்கும் வர்க்கப் பெண்களின் பகிர்வுகள்” எனும் நிகழ்ச்சி ஒன்றை பெங்களூரில் ஏற்பாடு செய்தது.

பல்வேறு பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களது பணிச் சூழலும் வேலையின் தன்மையும் பாலியல் அத்துமீறல்களுக்கு ஏதுவானதாக இருப்பதைக் குறித்துப் பேசினர். பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக குரல் எழுப்பினால் வேலை இழப்பும், சம்பள இழப்புமே தங்களது பணிச் சூழலில் இயல்பாக எதிர்கொள்ள வேண்டிய எதார்த்தம் என்பதைக் குறிப்பிட்டனர்.

ரத்னா என்கிற துப்புரவுத் தொழிலாளி தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். “ஐந்து மாதங்களாக தரப்படாத எங்களது கூலியைக் கேட்டதற்கு சூப்பர்வைசர் தனது கால் சட்டையை பொது இடத்தில் அவிழ்த்துக் காட்டினார்” எனக் குறிப்பிட்டார் ரத்னா. தனது எஜமானரின் மகன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை அவரிடம் சொன்னபோது தான் வேலையை விட்டு நீக்கப்பட்டதாகச் சொன்னார் தாஹிரா எனும் வீட்டுப் பணியாளர்.

ஓசூரைச் சேர்ந்த பின்னலாடை நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ராஜேஷ்வரி, தான் பணிபுரியும் ஆலையின் மேலாளர்கள் எப்படியெல்லாம் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவார்கள் என்பதை விளக்கினார். ”நான் ஆலையில் பணிபுரியத் தகுதியில்லை என்றும் பணம் சம்பாதிக்க ரோட்டில் நிற்க வேண்டும் என்றும் என்னிடம் சொன்னார்கள். அதே போல் பின்னலாடை நிறுவனங்கள் நிறுவப்பட்டிருக்கும் விதத்தின் காரணமாகவே நாங்கள் உடல் ரீதியான தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்றார் ராஜேஷ்வரி.

உழைக்கும் வர்க்கப் பெண்கள் தங்களுக்கு நிகழும் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் மூலம் போரட ஆரம்பித்துள்ளனர்.

பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடையே மட்டும் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதில்லை, பயணிகளால் பெண் நடத்துநர்கள் அடையும் தொல்லைகள் மிக அதிகம் என்கிறார் பெங்களூரு மாநகராட்சி பேருந்துக் கழகத்தில் பணிபுரியும் பெண் மெக்கானிக் பர்வீன்.

“நாங்கள் சில வேளைகளில் குடிகாரர்களையும் கையாள வேண்டியுள்ளது. பேருந்துச் சீட்டு வழங்கியதில் வசூலான ஆயிரக்கணக்கான ரூபாய்கள் எங்கள் பையில் இருக்கும். அது போன்ற சமயங்களில் பாலியல் அத்துமீறல் செய்பவர்களோடு சண்டைக்குப் போனால், அந்த சச்சரவில் பணத்தை இழக்க வேண்டியிருக்கும். பின்னர் அந்தப் பணத்தையும் எங்கள் கையில் இருந்தே கட்ட வேண்டியிருக்கும் என்பதாலேதான் பெண் நடத்துநர்கள் பாலியல் தொந்திரவுகளை கண்டும் காணாமலும் கடந்து போகின்றனர்” எனக் குறிப்பிடுகிறார் பர்வீன்.

படிக்க :
♦ பெண்கள் மீதான வன்முறை: முதல் எதிரி அரசுதான் !
♦ மீ டூ : நாம் யார் பக்கம் நிற்பது ? வில்லவன்

இந்த நிகழ்வில் மூன்றாம் பாலினத்தவர், பாலியல் தொழில் செய்பவர்கள் மற்றும் மாணவர்களும் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்திரவுகளைக் குறித்துப் பேசினர். “நான் ஒரு ஊடக நிறுவனத்தில் வேலை செய்து வந்த போது பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். பின்னர் நான் அந்த சம்பவத்தைக் குறித்து பிரச்சினை செய்து விடுவேன் என்கிற அச்சத்தில் வேலையை விட்டே நீக்கி விட்டனர்.

எங்களைப் போன்றவர்கள் போலீசிடமும் புகார் அளிக்க முடியாது; ஏனெனில் அவர்களும் எங்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவார்கள். நாங்களெல்லாம் அத்துமீறுவதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என போலீசார் சொல்வார்கள். #மீடு இயக்கம் பாலியல் சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களின் துயரங்களை கருத்தில் கொள்ளவில்லை” எனப் பேசினார் சானா என்கிற திருநங்கை.

பாலியல் தொழில் செய்பவர்கள் மேல் நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்கிறார் மது பூஷன் என்கிற சமூக செயல்பாட்டாளர்.

வீட்டுப் பணியாளர்களின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்களைக் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தால் அவர்கள் அதைக் கண்டு கொள்ள மறுப்பதாக குறிப்பிட்டார் பெண்கள் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த பாரிஜாதம். “அவர்களும் பாரபட்சமாகவே அணுகுகின்றனர்” என்கிறார் பாரிஜாதம்.

நவம்பர் 3-ம் தேதியன்று நடந்த நிகழ்வில் பகிர்ந்து கொள்ளப்பட்ட அனுபவங்களைத் தொகுத்து அறிக்கை ஒன்றைத் தயாரித்து கர்நாடக அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையிடமும், கர்நாடக மாநில பெண்கள் கமிஷன், பெங்களூரு மாநகராட்சியின் புகார் பிரிவு மற்றும் பெங்களூர் மாநகரப் பேருந்துக் கழகம் ஆகிய அமைப்புகளிடம் சமர்பிக்க திட்டமிட்டுள்ளது அனைத்திந்திய முற்போக்கு பெண்கள் சங்கம்.
தமிழாக்கம் :

நன்றி : தி வயர்

உழைக்கும் மக்களின் உற்சாகத் திருவிழாவாகிய நவம்பர் புரட்சி தின விழா

சியப் புரட்சியின் 101-வது ஆண்டையொட்டிமக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவோம் !” என்ற முழக்கத்தின் கீழ், புரட்சிகர அமைப்புகளின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்நிகழ்வுகளின் தொகுப்பு  – பாகம் 4

திருவள்ளூர் :

வம்பர் புரட்சி நாளை கொண்டாட்டம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக 11.11.2018 அன்று குடும்ப விழாவாக கொண்டாடப்பட்டது. முன்னதாக 21.10.18, 28.10.18 மற்றும் 04.11.18 ஆகிய தேதிகளில் வெட்டுகாலனி மற்றும் கம்மவர்பாளையம் பகுதிகளில் கைப்பந்து, கபடி மற்றும் சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம், செஸ், கேரம், ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆர்வமாக கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து 11.11.2018 அன்று மாலை 04:30 மணி முதல் இரவு 09:00 மணி வரை கும்மிடிப்பூண்டியில் சிவம் GR திருமண மண்டபத்தில் நவம்பர் புரட்சி தின விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

நவம்பர் புரட்சி நாள் சூளுரையாக ‘மக்களை மரணக்குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம்!’ என்கிற முழக்கத்தின் கீழ் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நவம்பர் புரட்சி விழாவிற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் K.M. விகந்தர் அவர்கள் தலைமை தாங்கினார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச்செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருவள்ளூர் மாவட்ட துணைச் செயலாளர் தோழர் J.அருள், விடுதலை சிறுத்தைகள் கட்சி கும்மிடிப்பூண்டி ஒருங்கிணைப்பாளர் திரு ப.நேசகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பழங்குடியினர் விடுதலை இயக்கத்தின் மாநில துணைச்செயலாளர் வழக்கறிஞர் தோழர் K.சரவணன், கும்மிடிப்பூண்டி வட்டார வழக்கறிஞர்கள் சங்க துணைச்செயலாளர் வழக்கறிஞர் திருஇரா.வேலு, செந்தமிழ்ச் சோலை, கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கவிஞர் சுரேஷ் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

மேலும், CPM கட்சியின் கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர், தோழர் E.இராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் தோழர் வீரபாண்டியன் மற்றும் தி.மு.க.வின் திருவள்ளூர் மேற்கு ஒன்றிய செயலாளர் திருமு.மணிபாலன் ஆகியோரும் வாழ்த்துரை வழங்குவதாக தெரிவித்திருந்தனர். எதிர்பாராத வேலைகள் காரணமாக அவர்கள் பங்கேற்கவில்லை.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார். விழாவின் மைய முழக்கமான ஏகாதிபத்திய முதலாளித்துவத்தாலும், பார்ப்பன பாசிசத்தாலும் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களையும், பாசிச அடக்குமுறைகளையும் அம்பலப்படுத்தினார்.

மேலும், முதலாளித்துவம் உலகம் முழுவதிலும் அழுகி நாறிக்கொண்டிருக்கிறது என்பதையும், இதற்கு மாற்று சோசலிசம்தான் என்பதை புரட்சிக்கு பிறகு சோசலிச ரசியா நடைமுறைப்படுத்திய அரசியல், பொருளாதார பண்பாடுகளுடன் ஒப்பிட்டு விளக்கினார். இந்திய மண்ணிலும் சோசலிச அரசு அமைவதை யாராலும் தடுக்க முடியாது என்பதை வலியுறுத்தியதோடு, அதற்காகப் பாடுபட நாம் அனைவரும் இந்த நவம்பர் புரட்சி விழாவில் சபதமேற்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

சிறப்புரையை தொடர்ந்து கங்கை அம்மன் நாடக மன்றம் நிகழ்த்திய ‘நரகாசுரன் ரிடர்ன்ஸ்’ என்கிற தலைப்பில் தெருக்கூத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் நரகாசுரன் கதாபாத்திர வேடம் அனைவரையும் மிகவும் ஈர்த்தது. அதைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட T.K.வரதராஜ ஆசான் சிலம்பம் கலைக்கூடம் சார்பில் சிறுவர்கள் நிகழ்த்திய சிலம்பாட்ட நிகழ்ச்சி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், சிறுவர்கள் நிகழ்த்திய உரைவீச்சு, பாடல், திருக்குறள் வாசிப்பு என அனைத்து நிகழ்ச்சிகளும் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் உற்சாகத்தையும், உணர்வையும் ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.

விழா இறுதியில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கும், விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் விழாக்குழு சார்பில் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளார் முன்னணி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் – 9444461480.

விழுப்புரம் :

விழுப்புரம் – அயனம்பாளையம் கிராமத்தில் உழைக்கும் மக்களின் உற்சாகத் திருவிழாவாக மாறிய நவம்பர் – 7. 

தகவல்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, விழுப்புரம். தொடர்பு:91593 51158.

வேதாரண்யம் :

101-வது நவம்பர் 7 ரசிய புரட்சியை கொண்டாடும் வகையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் நவம்பர் 11-ம் தேதி அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

பகுதிமக்கள், ஜனநாயக சக்திகள், மாணவர்கள், இளைஞர்கள் என 80-க்கு மேற்பட்டவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மண்டபம் முழுவதும் புரட்சிகர முழக்கங்களும், சமூக அவலங்களை எடுத்துக்கூறும் ஒவியங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர் மணி தலைமையில் நடைபெற்ற இவ்விழா பள்ளி மாணவர்களின் பறையிசை முழக்கத்துடன் தொடங்கியது. ஈஸ்வரி சிலம்பாட்ட குழுவின் சிலம்பாட்டம் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தது.

மக்கள் அதிகாரம் அமைப்பின் பட்டுக்கோட்டை வட்டார கமிட்டி ஒருங்கிணைப்பாளர் தோழர் மாரிமுத்து மற்றும் இளம் விவசாயி தோழர் சோம சுந்தரம் ஆகியோர் உரையாற்றினர். மத்திய மாநில அரசுகள் எப்படி திட்டமிட்டு விவசாயத்தை அழிக்க துடிக்கிறது என்பதை தமது உரையில் குறிப்பிட்டனர்.

பள்ளி மாணவர்களின் புதிய விடியல் கலைக்குழு சார்பாக நடத்தப்பட்ட பார்ப்பன பாசிசத்தை மோதி வீழ்த்துவோம் நாடகம் வரவேற்பைப் பெற்றது. இக்குழுவினர் பாடல், நடனம் என பன்முக திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, மக்கள் அதிகாரம் தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் காளியப்பன் மக்களுக்கு எளிமையாக புரியும் வகையில், ரசிய புரட்சியின் சாதனைகளையும் நமது நாட்டின் நிலைமைகளையும் நடைமுறை உதாரணங்களிலிருந்து  எடுத்து கூறினார்.

இறுதி நிகழ்வாக, பகுதியில் செயல்படும் ஜனநாயக சக்திகள் மற்றும் போராடும் புரட்சிகர அமைப்பிற்கு ஆதரவளிக்கும் முன்னணியாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும்,  நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

தகவல்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, வேதாரண்யம் வட்டம், நாகை மாவட்டம். தொடர்புக்கு: 63837 46095.
தொகுப்பு:

சோரியாசிஸை ( PSORIASIS ) கட்டுப்படுத்துவது எப்படி | ஃபருக் அப்துல்லா

சோரியாசிஸ் எனும் தோல் நோய் தற்போது மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இந்த நோய் வந்தால் பாதிக்கப்பட்டவரின் தோல் வறட்சி கண்டு செதில் செதிலாக உறிந்து கொண்டு வரும்.

வரலாற்று காலத்தில் இருந்தே இந்த நோய் இருந்ததற்கான தடயங்கள் இருக்கின்றன. எகிப்தின் மம்மிகளை ஆராய்ச்சி செய்ததில் அந்த காலகட்ட மக்களுக்கும் இந்த சோரியாசிஸ் இருந்ததை அறிய முடிகிறது.

“மருத்துவத்தின் தந்தை” எனப்படும் ஹிப்போகிரேட்டஸ்

“மருத்துவத்தின் தந்தை” எனப்படும் ஹிப்போகிரேட்டஸ் சோரியாசிஸ்க்கு பெட்ரோலியத்தின் உப பொருளான தாரை பூச வேண்டும் என்று கண்டறிந்தார்.

கிபி 2-ம் நூற்றாண்டில் கேலன் எனும் மருத்துவர் சோரியாசிஸிற்கு மருந்தாக வைபர் எனும் பாம்பின் சூப்பை தடவ வேண்டும் என்று கூறியுள்ளார். பின்பு இந்த இருபது நாற்றாண்டுகளில், இந்த சோரியாசிஸ்-க்கு பல மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்பட்டு வந்தன.

நாய் மற்றும் பூனையின் சாணம், வாத்து எண்ணெய், விந்தணுவை பூசுவது, சிறுநீருடன் வெங்காயம் மற்றும் உப்பை கலந்து பூசுவது போன்ற பல மருத்துவ நம்பிக்கைகள் உலவி வந்தன.

*****

ந்த நோய்க்கான காரணம் தெள்ளத்தெளிவாக இன்னும் அறியப்படவில்லை.

  • ஜீன்களில் ஏற்பட்ட கோளாறுகள் அந்த கோளாறுகளை உருவாக்கும் சூழலியல் மாறுபாடுகள்
  • கிருமித்தொற்றுகள்(infection)
  • மனஅழுத்தம் (psychological stress)

இவைதான் இப்போதைக்கு அறியப்பட்ட காரணங்கள்.

சோரியாசிஸில் பல வகைகள் உண்டு அவற்றுள் முக்கியமானவை :

1. செதில் வகை (plague எனப்படும் psoriasis vulgaris ) இந்த வகைதான் 90%
2. Guttate psoriasis
3. Inverse psoriasis ( செந்நிற திட்டுகள் தோன்றும்)
4. Pustular – கொப்புளம் கொப்புளமாக வரும்
5. Erythrodermic psoriasis ( உடல் முழுவதும் சிவப்பு நிற படை வருவது)

இந்த செதில்கள் பொதுவாக தலைப்பகுதியிலும், முன்னங்கையின் பின்பகுதி, காலின் முன்பகுதி போன்றவற்றில் இருக்கும்.

ஏன் செதில்கள் தோன்றுகின்றன ?

தோலின் மேல்பகுதியான எபிடர்மிஸ் (epidermis) எனும் பகுதி அதிகமான அளவில் வளர்ச்சி அடைவதால் உருவாகிறது.

தோலின் க்றுக்கு வெட்டு தோற்றம்.

நன்றாக இருக்கும் தோலின் எபிடர்மிஸில் உள்ள செல்கள் புதிதாக மாற்றப்பட 28 முதல் 30 நாட்கள் ஆகும்.

ஆனால் சோரியாசிஸ் பாதிக்கப்பட்ட தோலின் செல்கள் புதிதாக மாற்றப்பட 3 முதல் 5 நாட்களே எடுத்துக்கொள்கின்றன. அதனால்தான் இத்தனை வளர்ச்சி அடைந்து செதில்கள் தோன்றுகின்றன.

சோரியாசிஸிற்கு இருக்கும் மருத்துவ முறைகள் என்ன ?

  • பாதிக்கப்பட்ட தோலின் மீது வறட்சியை போக்கும் க்ரீம்கள் (emollients)
  • ஸ்டீராய்டு கிரீம்கள்
  • விட்டமின் டி(vitamin-D) நிரம்பிய கிரீம்கள்
  • நோய் முற்றிய நிலையில் இருந்தால் அல்ட்ரா வயலெட் லைட் தெரபி (UV-B therapy) – PUVA therapy

அதனினும் முற்றிய நிலை இருப்பின் தோலின் வளர்ச்சியை கட்டுப்படுத்த சைக்லோஸ்போரின், மெத்தோட்ரெக்சேட் போன்ற மருந்துகளை எடுக்கலாம்.

சோரியாசிஸை முழுவதுமாக குணப்படுத்த இயலுமா ?

ஆட்டோ இம்யூன் வியாதிகள் அனைத்துக்கும் மூலம் நமது ஜீன்கள் செய்யும் தகராறு. ஆதலால் நம்மால் அந்த நோய்களை கட்டுப்படுத்ததான் முடியும். முழுவதும் குணப்படுத்த முடியாது

சோரியாசிஸ் (மாதிரிப் படம்)

சரி.. ஜீன்கள்தான் காரணம் என்றால் அவற்றிற்கு உகந்தவாறு நமது வாழ்வியலை அமைத்துக்கொண்டால் இந்த பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்கலாம்தானே??

நிச்சயம் முடியும். சோரியாசிஸை நமது வாழ்வியல் மாற்றங்களை கொண்டு கட்டுப்படுத்த முடியும்.

சோரியாசிஸை கட்டுப்படுத்துவது எப்படி ?

1. தானியங்கள் நமது ஜீன்களின் எதிரிகள். அதிலும் க்ளூடன் அடங்கிய கோதுமை நமது ஜீன்களுக்கும் , குடலுக்கும் ஒவ்வாத உணவு. ஆகவே அவற்றை தவிர்க்க வேண்டும்.

2. குடலின் ஆரோக்கியம் சரியாக இருந்தால் சோரியாசிஸ் நோய் கட்டுக்குள் இருக்கும் என்கிறது ஆய்வுகள்.

Gut health என்பது குடலில் உள்ள நல்ல பேக்டீரியாக்களின் ஆராக்கியத்தை பொறுத்து இருக்கிறது. ஆகவே, நல்ல பேக்டீரியாக்களை சரியாக பராமரிப்பதும், leaky gut இல்லாமல் பார்த்துக்கொள்வதும் மிக முக்கியம்.

ரீபைன்டு எண்ணெய், எண்ணெயில் பொறித்த பண்டங்கள், குளிர்பானங்கள், ஃபாஸ்ட் புட் ஐட்டங்கள், மைதா/ ஆட்டா/ சிறுதானியம் போன்ற அனைத்தையும் தவிர்க்க வேண்டும்

3. பால் மற்றும் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

4. நாட்டுக்கோழி கறி, புல் மேய்ந்த ஆட்டுக் கறி, நாட்டுக்கோழி முட்டை போன்றவற்றை எடுப்பது நல்லது.

5. இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் எடுப்பது நல்லது.
தக்காளி, பெப்பர், மிளகாய், உருளை போன்ற காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.

6. தினமும் நண்பகல் சூரிய வெயிலில் 20 நிமிடம் நிற்பது நல்லது. அது நமது உடலின் விட்டமின் டி அளவுகள் உயர வழி வகுக்கும். விட்டமின் டி நிரம்பிய மாத்திரைகளை மருத்துவர் அறிவுரைப்படி எடுக்கலாம்.

படிக்க :
தொழு நோயாளிகளின் உலகிற்கு வருகிறீர்களா ?
ஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் ! வீடியோ

7. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிரம்பிய மீன்களை ( மத்தி போன்ற சிறிய வகை மீன்கள் ) அதிக அளவில் உண்ணலாம். முடியாதவர்கள் ஒமேகா 3 மீன் மாத்திரைகளை எடுக்கலாம்.

8. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை மட்டும் சமையலுக்கு பயன்படுத்துதல் நல்லது. தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட தோலில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

9. மது, புகை போன்ற பழக்கங்களை அறவே விட்டு விட வேண்டும்.
காபி, டீ போன்றவற்றை நிறுத்துவது நல்லது. தேவைப்படின் கிரீன் டீ பருகுவது நல்லது.

10. இவையனைத்துடன் தங்களின் தோல் நோய் சிறப்பு மருத்துவரின் அறிவுரைப்படி மருந்துகளை எடுத்து வர வேண்டும்.

சோரியாசிஸ் தொற்று வியாதி அல்ல. அதனால் சோரியாசிஸ் வந்தவரை மனதளவில் ஊனப்படுத்தாமல் குடும்பத்தாரும் சுற்றத்தாரும் அவருக்கு ஆறுதலாக இருக்க வேண்டும்.

சோரியாசிஸை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இயன்றால் முடியாதது எதுவுமில்லை !

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை.

தொழிற்சங்க உரிமையை காக்க கிளர்ந்தெழுவோம் ! புதுச்சேரி புஜதொமு ஆர்ப்பாட்டம் !

தொழிற்சங்க உரிமையைப் பறிக்கும் பன்னாட்டுகார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுவோம் !

ரு மாத காலத்திற்கும் மேலாக தொடர்ச்சியாகப் போராடும் யமஹா, என்ஃபீல்டு, எம்.எஸ்.ஐ., ஈடான் தொழிலாளர்களது போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் புதுச்சேரியில் இயங்கிவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில், தொழிற்பேட்டைப் பகுதியான TBV பேருந்து நிறுத்தத்தில், 20.10.2018 அன்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தொழிலாளிகள் தங்கள் உரிமைகளைக் கேட்க சட்டப்படி தொழிற்சங்கம் வைத்தால், தொழிற்சங்கம் வைத்ததற்காக வேலையைப் பறிக்கும் நடவடிக்கையில் பன்னாட்டு கம்பெனிகள் செயல்படுகின்றன. மேலும் தொழிலாளர் போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதை விளக்குகின்ற வகையிலும், இன்றைய நமது தேவை, உரிமை பறிப்புக்கு எதிரான போராட்டத்துடன், அரசியல் அதிகாரத்திற்கான போராட்டமாகவும் மாற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை, இணைப்பு சங்கத் தோழர்கள், ஆதரவாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொழிற்பேட்டை வாயில், தொழிலாளர் பேருந்து நிறுத்தம், பேருந்து, சிக்னல்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், இப்பிரச்சினைகள் தொழிலாளர் மத்தியில் பரவலான பேசுபொருளாக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு புஜதொமு மாவட்டத் தலைவர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். புஜதொமு பொதுச்செயலாளர் தோழர். மகேந்திரன், பொருளாளர் தோழர். செல்லக்கண்ணு ஆகியோரும், பகுதியில் போராடும் ஈடான் நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவர் தோழர். பாஸ்கர், சேதுராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவர் தோழர். மாதேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும்,  தாங்கள் வாழும் பகுதியில் உள்ள மக்கள் பிரச்சினைகளும் வேறு வேறல்ல. தொழிலாளர்களை ஒடுக்கும் முதலாளிகளது செயல்களும், அரசின் நடவடிக்கைகளும் வேறு வேறல்ல. இவை அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளது.

எனவே, தொழிலாளர்களாகிய நாம் மட்டும் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ள வேற்றுமைகளைப் பார்த்து தனித்தனியே பிரிந்து கிடப்பது, எதிரிகளுக்குத்தான் பலத்தைக் கூட்டுகின்றன. எனவே தொழிலாளர்களது பலம் என்பது அவர்களது வர்க்க ஒற்றுமையில்தான் இருக்கிறது என்பதை விளக்கி உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் போராட்டங்கள், மக்கள் பிரச்சினைகள் ஒட்டி வட்டாரக் கலைக்குழு தோழர்கள் பாடிய புரட்சிகர பாடல்கள், கலந்து கொண்ட தோழர்கள் மற்றும் நிகழ்ச்சியைப் பார்த்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.

ஆம் , நாமும் ஏதாவது செய்யத்தான் வேண்டும்

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 23

மாக்சிம் கார்க்கி

சந்தம் வந்தது; பனிப்பாறைகள் உருகி வழிந்தோட ஆரம்பித்தன; மீண்டும் சேறும் புழுதியும் நிறைந்த தரை மட்டும் மிஞ்சியது. நாளுக்குநாள் மிகத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. அந்தக் குடியிருப்பு முழுவதுமே கழுவப் பெறாமல், கந்தல் கந்தலாகிப்போன துணிகளால் போர்த்தப்பட்டிருப்பது போலத் தோன்றியது. பகல் நேரங்களில் கூரைச் சரிவுகளிலிருந்து தண்ணீர் சொட்டும்; பாசி படிந்து அழுக்கேறிப்போன சுவர்களில் வேர்வை பூத்து வடிவதைப்போல், நீர் ஆவியாக மாறிப் பரவும். இரவு நேரங்களில் துளித்துளிப் பனித்துண்டுகள் வெள்ளை வெளேரென்று மின்னிக்கொண்டிருக்கும். சூரியனை அடிக்கடி பார்க்க முடிந்தது. வழக்கம்போல் சாக்கடைச் சிற்றோடைகள் குட்டைகளை நோக்கி முணுமுணுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தன.

மே தினக் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன.

அந்தப் புதிய தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் துண்டுப் பிரசுரங்கள் குடியிருப்பிலும் தொழிற்சாலையிலும் சிதறிப் பரவின. அந்தப் பிரச்சாரத்தால் பாதிக்கப்படாமலிருந்த இளைஞர்கள்கூட, அந்தப் பிரசுரங்களைப் படித்துவிட்டுத் தமக்குள் பேசிக்கொண்டார்கள்.

“ஆமாம். நாமும் ஏதாவது செய்யத்தான் வேண்டும்”

“நாள் நெருங்கிவிட்டது!” என்று வறட்டுப் புன்னகையோடு சொன்னான் வெஸோவ்ஷிகோவ்; “நாம் ஒருவருக்கொருவர் கண்ணாமூச்சி விளையாடியது போதுமப்பா, போதும்.”

பியோதர் மாசின் ஒரே உத்வேக சித்தனாயிருந்தான். மிகவும் மெலிந்து போயிருந்த அவனது நடுக்கம் நிறைந்த அசைவுகளும் பேச்சுக்களும் கூண்டிலே அடைபட்டுள்ள வானம்பாடியை நினைவூட்டின. மெளனமே உருவான யாகவ் சோமவும் அவனோடு எப்போதும் சுற்றித் திரிந்தான். அவனிடம் காணும் அழுத்தம் வயதுக்கு மீறியதாய்த் தோன்றியது. சிறை வாசத்தால் தலைமயிரில் பழுப்புக்கண்ட சமோய்லவ், வலீலி கூஸெவ், புகின், திராகுனவ் முதலியவர்களும் வேறு சிலரும் ஆயுதம் தாங்கிய ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என வற்புறுத்தினார்கள். ஆனால் பாவெல், ஹஹோல், சோமவ் முதலியவர்கள் அந்த யோசனையை நிராகரித்தார்கள்.

களைத்துச் சோர்ந்து விதிர் விதிர்த்துக்கொண்டிருந்த இகோர் வேடிக்கைப் பேச்சை ஆரம்பித்துவிட்டான்.

”தோழர்களே! இன்று அமுலிலிருக்கும் சமுதாய அமைப்பை மாற்றியமைப்பது ஒரு மகத்தான சாதனைதான். ஆனால், அந்தப் போராட்டத்தின் வெற்றிக்கு அறிகுறியாக, நான் ஒரு ஜோடி புது பூட்சுகள் வாங்கப்போகிறேன்” என்று நனைந்து கிழிந்து பழசாய்ப் போன தனது செருப்புக்களைக் காட்டிக்கொண்டே பேசினான் அவன். ”என்னுடைய ரப்பர் செருப்புகளும் செப்பனிட்டுச் சீர்படுத்த முடியாத அளவுக்குப் பிய்ந்துபோய்விட்டன. எனவே தினம் தினம் என் கால்கள் ஈரமாவதுதான் மிச்சமாயிருக்கிறது. பழைய சமுதாய அமைப்பைப் பகிரங்கமாக எதிர்த்துப் போராடுகிற வரையிலும் நான் சாகமாட்டேன். நான் செத்து மண்ணோடு மண்ணாகப் போக விரும்பவில்லை. எனவே நாம் ஆயுதம் தாங்கி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்ற தோழர் சமோய்லவின் ஆலோசனையை நான் நிராகரிக்கிறேன். அதற்குப் பதிலாக, நான் ஒரு திருத்தப் பிரேரணை கொண்டு வருகிறேன். முதன் முதலில் நான் என் கால்களில் ஒரு ஜோடி புது பூட்சுகளை ஆயுதம் போலத் தரித்துக்கொள்கிறேன். நாமெல்லோரும் கண்மூடித்தனமாகப் போராட முனைவதைவிட, இப்படிப்பட்ட நடவடிக்கை – அதாவது நான் பூட்ஸ் தரித்துக்கொள்ளும் நடவடிக்கை – சோஷலிசத்தின் வெற்றியைத் துரிதப்படுத்தும் என்பது எனது அசைக்க முடியாத, தீர்மானமான நம்பிக்கை!”

இந்த மாதிரியான வேடிக்கைப் பேச்சோடு பேச்சாய், அன்னிய நாடுகளில் மக்கள் எப்படித் தங்கள் வாழ்க்கையைச் சுலபமாக்கிக்கொள்ளப் போராடுகிறார்கள் என்பதையும் அவன் அவர்களுக்கு எடுத்துச் சொன்னான். அவனது பேச்சு தாய்க்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் மனத்தில் ஏதோ ஒரு அதிசயப் பற்றுதல் உண்டாயிற்று. பொறாமையும் குரோதமும் வஞ்சகமும் கொடுமையும் நிறைந்து, தொந்தி தள்ளிப்போன சிவந்த மூஞ்சிக்காரர்கள்தாம் மக்களைக் கொடுமைப்படுத்தி, அவர்களை ஏமாற்றிப் பிழைத்துவரும் பரமவைரிகள் என்று அவளுக்குத் தோன்றியது. ஆட்சியாளரின் கொடுமையால் நசுக்கப்பட்டுக் கிடக்கும் மக்களை அவர்கள் மன்னனுக்கு எதிராகத் தூண்டி விடுவார்கள். மக்கள் மன்னனை எதிர்த்துப் போராடிக் கவிழ்த்தவுடனே இந்தக் குள்ள மனிதர்கள் மக்களைச் சாமர்த்தியமாக ஏமாற்றி அதிகாரத்தைத் தாங்களே கைப்பற்றிக்கொள்வார்கள். மக்களை விரட்டியடிப்பார்கள், மக்கள் எதிர்த்துப் போராட முனைந்தால் அவர்களை ஆயிரம் ஆயிரமாகக் கொன்று குவிப்பார்கள்.

ஒருநாள் தாய் தனது தைரியத்தையெல்லாம் சேகரித்துக்கொண்டு, இகோரின் பேச்சுக்களால் தன் மனத்தில் தோன்றியுள்ள கற்பனைச் சித்திரத்தை அவனிடம் விளக்கிக் கூற முனைந்தாள்.

“நான் சொல்வது சரிதானே, இகோர்?” என்று அசட்டுச் சிரிப்போடு கேட்டாள் அவள்.

அவன் கடகடவென்று சிரிக்கத் தொடங்கினான், சிரிக்கும்போது அவனது கண்மணிகள் உருண்டு புரண்டன. மூச்சு வாங்கும்போது அவன் நெஞ்சைத் தடவிக் கொடுத்துக்கொண்டான்.

“அப்படித்தான், அம்மா, அப்படித்தான்! சரித்திரத்தின் உயிர்நாடியையே நீங்கள் தொட்டுவிட்டீர்கள். நீங்கள் சொன்ன சித்திரம் இருக்கிறதே, அதில் கொஞ்சம் ஒட்டு வெட்டு வேலை செய்து மிகைப்படுத்தி அலங்காரம் பண்ணிவிட்டீர்கள் என்றாலும் நீங்கள் சொன்னவற்றிலெல்லாம் உண்மை இருக்கத்தான் செய்கிறது. இந்தத் தொந்தி விழுந்த குள்ள மனிதர்கள் இருக்கிறார்களே, இவர்கள்தான் மகா பாதகர்கள். மக்களை உறிஞ்சி உறிஞ்சி உயிர் வாழும் விஷப் பாம்புகள். பிரெஞ்சுக்காரர்கள் இவர்களை பூர்ஷ்வா என்று சொல்வது ரொம்ப சரி; ரொம்பப் பொருத்தம். பூர்ஷ்வா என்றால் ஒன்றும் அறியாத பாமர மக்களை அடித்துச் சுரண்டி, அவர்களது இரத்தத்தையே உறிஞ்சிக் குடிப்பவர்கள் என்று பொருள்.”

“நீங்கள் பணக்காரர்களைத்தானே சொல்கிறீர்கள்?” என்று கேட்டாள் தாய்.

”அவர்களையேதான். அதுதான் அவர்களது துரதிருஷ்டம்! ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் உணவில் தாமிரத்தைக் கொஞ்சங்கொஞ்சமாகச் சேர்த்து ஊட்டி வந்தால், அந்தத் தாமிரம் அந்தப் பிள்ளையின் எலும்புகளின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. அந்தப் பிள்ளை குள்ளப் பிறவியாகவே போய்விடுகிறது. ஆனால், ஒருவனை தங்கம் என்று விஷத்தை ஊட்டி வளர்த்தாலோ? அப்போது அவன் இதயமே குன்றிக் குறுகி உணர்ச்சியற்றுச் செத்துப் போய்விடும்; பிள்ளைகள் ஐந்து காசுக்கு வாங்கி விளையாடுகிறார்களே ரப்பர் பந்து, அந்த மாதிரிப் போய்விடும்!”

ஒரு நாள் இகோரைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது பாவெல் சொன்னான்:

“அந்திரேய்! உண்மை என்ன தெரியுமா? எந்த மனிதன் சிரித்துச் சிரித்து, விளையாட்டாய்ப் பேசுகிறானோ, அவனது இதயத்தில்தான் வேதனை இருந்துகொண்டே இருக்கிறது. இதுதான் வழக்கம்.”

ஹஹோல் பதில் சொல்வதற்கு ஒருகணம் தயங்கினான்; கண்களைச் சுருக்கி விழித்தான்.

‘நீ சொல்கிறபடி பார்த்தால் ருஷ்ய தேசம் முழுவதுமே சிரித்துக் சிரித்து வயிறு வெடித்துச் சாகத்தான் வேண்டும்!”

நதாஷா வந்து சேர்ந்தாள். அவளும் சிறையிலிருந்துதான் வந்தாள். ஆனால் வேறு ஒரு நகரிலுள்ள சிறையில் இருந்தாள். சிறைவாசம் அவளை எந்தவிதத்திலும் மாற்றிவிட்டதாகத் தெரியவில்லை. அவளது முன்னிலையில் ஹஹோல் வழக்கத்துக்கு மீறிய உற்சாகத்துடன் நடந்து கொள்வதாகத் தாய்க்குத் தோன்றியது. அவன் ஒவ்வொருவரையும் கேலியும் கிண்டலுமாக பேசினான். அவளை வாய்விட்டுக் கலகலவென்று சிரிக்க வைத்தான். ஆனால் அவள் சென்ற பிறகு, அவன் தனது வழக்கமான சோக கீதத்தைச் தீட்டியடித்துக் கொண்டு கால்களை இழுத்து இழுத்துப்போட்டு அறைக்குள் குறுக்கும் மறுக்கும் நடக்கத் தொடங்கினான்.

சாஷாவும் அடிக்கடி வந்து கொண்டிருந்தாள். அவள் வரும்போதெல்லாம் புருவங்களைக் சுழித்தபடி ஒரே பரபரப்போடுதான் வருவாள். என்ன காரணத்தாலோ அவளது முகபாவம் எப்போது பார்த்தாலும் ஒரே வக்கிரமும் முறைப்பும் கொண்டதாகவே இருந்தது.

ஒருமுறை அவளை வழியனுப்பிவிட்டு வருவதற்காக பாவெல் வாசல் நடை வரைக்கும் போனான். போகும்போது அவன் கதவைச் சாத்தாமல் விட்டுவிட்டுப் போனதால் அவர்கள் வெளியே பேசிக்கொண்ட பேச்சு தாயின் காதிலும் விழுந்தது.

“நீங்கள்தான் கொடியைச் சுமந்துகொண்டு போகப் போகிறீர்களா?’ என்று கேட்டாள் சாஷா.

”ஆமாம்.

“முடிவாகிவிட்டதா?”

“ஆம், அது என் உரிமை.”

“மீண்டும் கிறைக்குப் போகவா?”

பாவெல் பதில் பேசவில்லை.

“நீங்கள் போகாமலிருக்க முடியாதா…..” என்று ஆரம்பித்தாள் அவள். ஆனால் வார்த்தை தடைப்பட்டது.

“என்னது?”

“இல்லை. அந்தப் பொறுப்பை வேறு யாருக்காவது விட்டுவிடுங்களேன்.”

“இல்லை” என்று உறுதியாகச் சொன்னான் அவன்.

”நன்றாக யோசியுங்கள். உங்களுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது. எல்லோரும் உங்களை விரும்புகிறார்கள். நஹோத்கா நீங்களும் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றவர்கள். நீங்கள் வெளியில் இருந்தால் எவ்வளவு நல்ல காரியங்களைச் செய்ய முடியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஆனால், கொடியைத் தாங்கி நீங்களே சென்றால், அவர்கள் நிச்சயம் உங்களைக் கைது செய்வார்கள். வெகு தூரத்துக்கு, வெகு காலத்துக்கு நாடு கடத்திவிடுவார்களே”

அந்தப் பெண்ணின் குரலிலிருந்த பயபீதியையும் தாபத்தையும் தாயால் உணர முடிந்தது. சாஷாவின் வார்த்தைகள் அவளது இதயத்தில் பனித் துளிகளைப் போல் குளிர்ந்து விழுந்தன.

”இல்லை, நான் யோசித்தாகிவிட்டது. எதுவும் என் உறுதியை மாற்றிவிட முடியாது” என்றான் பாவெல்.

“நான் கெஞ்சிக் கேட்டால் கூடவா?”

பாவெலின் குரல் திடீரென்று உத்வேகமும் கரகரப்பும் பெற்றது.

“நீங்கள் இதுமாதிரிப் பேசக்கூடாது. ஊஹும். இப்படிப் பேசக்கூடாது நீங்கள்?”

“நானும் மனிதப் பிறவிதானே” என்று மெதுவாகக் கூறினாள் அவள்.

“ஆமாம். அதிசயமான மனிதப் பிறவி!” என்று அவளைப்போலவே மெதுவாய்ச் சொன்னான் அவன். எனினும் அவனுக்குத் தொண்டை அடைபடுவது போலிருந்தது. நீங்கள் எனக்கு மிகவும் பிரியமானவர். அதனால்தான் – அதனால்தான் – இந்த மாதிரி நீங்கள் பேசக்கூடாது”

“சரி, வருகிறேன்” என்றாள் அவள்.

அவளது காலடியோசையின் போக்கிலிருந்து அவள் அவசர அவசரமாய் ஓடுகிறாள் என்பதைத் தாய் உணர்ந்து கொண்டாள். பாவெல் அவளைத் தொடர்ந்து வெளி முற்றத்துக்குச் சென்றான்.

தாயின் இதயம் பயத்தால் குன்றிக் குறுகி வேதனைப்பட்டது. அவர்கள் எதைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள் என்பது அவளுக்கும் புரியவில்லை என்றாலும் தன்னைப் பொறுத்தவரையில் தனக்கு ஒரு பேராபத்து விளையப்போகிறது என்பதை மட்டும் அவள் மனதுக்குள் உணர்ந்தாள்.

“அவன் என்னதான் செய்ய விரும்புகிறான்?”

பாவெல் அந்திரேயோடு வந்து சேர்ந்தான்.

“ஐயோ. இலாய், இஸாய் அவனை என்னதான் செய்கிறது?” என்று தலையை அசைத்துக்கொண்டே சொன்னான் ஹஹோல்.

“இந்த மாதிரிக் காரியத்தைக் கைவிட்டுவிட வேண்டும் என்று நாம் அவனை ஒரு முறை எச்சரிக்கத்தான் வேண்டும்” என்று முகத்தைச் சுழித்தவாறு சொன்னான் பாவெல்.

“பாவெல், நீ என்ன திட்டம் போடுகிறாய்?” என்று தலையைத் தாழ்த்திக்கொண்டு கேட்டாள் தாய்.

.“எப்போது? இப்போதா?”
“மே முதல்… முதல் தேதிக்கு.”

“அதுவா?” என்று குரலைத் தாழ்த்திக்கொண்டு சொல்லத் தொடங்கினான் பாவெல். நான் கொடியைத் தாங்கிக்கொண்டு, அணி வகுப்புக்குத் தலைமை தாங்கிச் செல்லப் போகிறேன். இந்தக் காரணத்துக்காக, அவர்கள் மீண்டும் என்னை ஒருவேளை சிறையில் தள்ளுவார்கள்.”

தாயின் கண்களில் குத்தல் எடுத்தது. வாய் உலர்ந்து வறண்டது. பாவெல் அவள் கரத்தைப் பிடித்தெடுத்துத் தடவிக் கொடுத்தான்.

“அம்மா! இதை நான் செய்யத்தான் வேண்டும். என்னை உனக்குப் புரியவில்லையா, அம்மா!”

படிக்க:
நான் உலகம்.. தொழிலாளி நானே உலகம் ! பாடல்
புரட்சிக்கு ஏங்குது நாடு இதுதான் தருணம் போராடு !

“நான் எதுவுமே சொல்லவில்லை, அப்பா!” என்று தலையை லேசாக நிமிர்த்தியவாறு சொன்னாள் அவள். ஆனால் அவனது கண்களிலுள்ள உறுதி நிறைந்த ஒளியை அவளது கண்கள் சந்தித்தன. அவள் மீண்டும் தலையைக் குனிந்து கொண்டாள்.

அவன் பெருமூச்செறிந்தான். அவள் கரத்தை நழுவ விட்டான்.

“நீ இதைக்கண்டு வருத்தப்படக்கூடாது, அம்மா. சந்தோஷப்பட வேண்டும்” என்று அவன் கண்டிக்கும் பாவனையில் பேச ஆரம்பித்தான். “மரணத்தை நாடிச் செல்லும் தங்கள் மைந்தர்களை, புன்னகையோடு வழியனுப்பி வைக்கும் தாய்மார்கள் என்றைக்குத் தோன்றப் போகிறார்கள், அம்மா!”

“அடேடே! உபதேசிகர் வந்துவிட்டாரடா!….” என்று முனகினான் ஹஹோல்.

“நான்தான் எதுவுமே சொல்லவில்லையே” என்று திரும்பச் சொன்னாள் தாய். “நான் உன் வழியில் குறுக்கே நிற்கவில்லை, ஆனால் எனக்குச் சங்கடமாயிருக்கும்போது, நான் ஒரு தாய்போல நடந்துகொள்வதைத் தடுக்க முடியாது…”

அவன் அவளை விட்டு விலகிச் சென்றான்; அவனது வார்த்தைகளின் குத்தலை உணர்ந்தாள் அவள்.

“ஒரு மனிதன் தன் இஷ்டப்படி வாழ்வதற்குக்கூட, குறுக்கே நிற்கிறது ஒருவகைப் பாசம்!”

“இல்லை, பாஷா. அப்படிச் சொல்லாதே” என்று அவள் நடுங்கிக்கொண்டு சொன்னாள். அவன் மேற்கொண்டும் ஏதாவது கூறி தன் இதயத்தைப் புண்படுத்திவிடக்கூடும் என அவள் பயந்தாள்;

“எனக்குப் புரிகிறது. நீ வேறு ஒன்றுமே செய்யமுடியாது. உன் தோழர்களுக்காக, நீ இப்படிச் செய்யத்தான் வேண்டும்…”

“இல்லை. எனக்காகவேதான்” என்றான் அவன்.

அந்திரேய் வாசல்நடைக்கு வந்தான். வாசல்நடை அவன் உயரத்துக்குச் சிறிதாக இருந்ததால், அவன் தன் கால்களை ஓரளவுக்குச் சரித்து நின்று கொண்டான். கதவு நிலையிலே தோளைக் சாய்த்து, மற்றொரு தோளையும் தலையையும் முன்புறமாக நீட்டிக்கொண்டு நின்றான்.

“மகாப்பிரபு! இந்த எண்ணத்தைக் கைவிடுவதால் ஒன்றும் குடிமுழுகப் போவதில்லை” என்று தனது அகன்ற கண்களை பாவெலின் மீது பதித்துப் பார்த்துக்கொண்டே சொன்னான் அவன். ஏதோ ஒரு கல்லிடுக்கிலிருந்து எட்டிப் பார்க்கும் பல்லியைப் போலிருந்தது அவன் நின்ற நிலை.

தாயோ அழுது கொட்டத் தயாராக நின்றாள்.

”அட கடவுளே, மறந்துவிட்டேனே’ என்று சொல்லிக்கொண்டே அவள் வாசல்நடையைக் கடந்து வெளியே வந்தாள். தான் அழுவதைத் தன் மகன் பார்த்துவிடக்கூடாது என்றுதான் அவள் அப்படிச் செய்தாள். வெளியே வந்ததும் அவள் ஒரு மூலையில் தலையைச் சாய்த்துக் கொண்டு வெளிக்குத் தெரியாமல் பொருமிப் பொருமி அழுதாள். அவளது இதயத்தின் செங்குருதியே அவளது கண்ணீரோடு கலந்து கொட்டிப் பெருகுவதுபோல் அவள் உணர்ந்தாள்.

மூடியும் மூடாமலும் கிடந்த கதவின் வழியாக அவர்கள் இருவரும் தணிந்த குரலில் விவாதித்துக் கொண்டிருப்பது அவள் காதில் விழுந்தது.

”இது என்னப்பா வேலை? அவளைத் துன்புறுத்துவதில் உனக்கொரு ஆனந்தமா?” என்று கேட்டான் ஹஹோல்.

“இதுபோல் பேச உனக்கு உரிமை கிடையாது” என்று கத்தினான் பாவெல்.

”சரிதான். நீ உன்னை ஒரு முட்டாளாக்கிக் கொண்டிருப்பதை நான் மூச்சுக்காட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தால், நான் அருமையான நண்பன்தானப்பா. நீ ஏன் அப்படிச் சொன்னாய்? உனக்கு எதுவுமே புரியாதோ”

“அதெல்லாமில்லை, எதுவானாலும் சரி, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கறாராய்ச் சொல்லிவிட வேண்டும். பயப்படக் கூடாது.”

“அவளுக்குக் கூடவா?”

”எல்லோருக்கும்தான்! பாசமாகட்டும், நேசமாகட்டும். அது என் காலைக்கட்டி என்னை முன்னேறவிடாமல் தடுக்குமானால், அவற்றை நான் விரும்பவே இல்லை…”

“அடாடா! வீராதி வீரன்! போய் மூக்கைத் துடைத்துக்கொள். இதையெல்லாம் சாஷாவிடம் போய்ச் சொல். அவள் தான் ….”

“அவளிடம் ஏற்கெனவே சொல்லியாயிற்று?”

“சொல்லிவிட்டாயா? பொய் சொல்கிறாய். நீ அவளிடம் மிருதுவாகப் பேசினாய். அன்போடு பேசினாய். நான் கேட்காவிட்டாலும் எனக்கு அது தெரியும். ஆனால் நீ உன் சூரத்தனத்தையெல்லாம் உன் தாயிடம் வந்து காட்டுகிறாய். ஆனால், உன் சண்டப்பிரகண்டமெல்லாம் சல்லிக் காசுக்குப் பிரயோஜனமில்லை.”

பெலகேயா தன் கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். ஹஹோல் ஏதாவது கடுமையாகப் பேசிவிடப் போகிறானோ என்ற பயத்தில் அவள் அவசர அவசரமாகக் கதவைத் திறந்துகொண்டு சமையலறைக்குள் வந்தாள்.

“புர்.. ர்…. அப்பப்பா என்ன குளிர்?” என்று சத்தமாகச் சொன்னாள். எனினும் அவள் குரலில் பயமும் சோகமும் கலந்து நடுங்கிற்று. “இதை வசந்த காலம் என்றே சொல்ல முடியாது.”

அடுத்த அறையிலே கேட்டுக்கொண்டிருக்கும் பேச்சுக் குரலை மூழ்கடிப்பதற்காக அவள் சட்டியையும் பெட்டியையும் அப்படியும் இப்படியும் உருட்டி அரவம் உண்டாக்கிக்கொண்டிருந்தாள்.

“எல்லாமே மாறிப்போய்விட்டது” என்று அவள் மேலும் உரத்த குரலில் பேசத் தொடங்கினாள். “மக்கள் புழுங்கித் தவிக்கிறார்கள்; சீதோஷ்ணம் என்னவோ குளிர்ந்து வெடவெடக்கிறது. இந்த மாதத்திலெல்லாம் சூரிய வெப்பம் உறைப்பதுதான் வழக்கம். நல்ல வெயிலும், நிர்மலமான வானமும்……..”

பேச்சுக்குரல் நின்றுவிட்டது. எனவே தாய் சமையலறையின் மத்தியில் வந்து நின்றுகொண்டு என்ன நடக்கிறது என்று காது கொடுத்துக் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பினாள்.

ஹஹோல் மீண்டும் மெதுவாகப் பேசினான். “நீ அதைக் கேட்டாயா? இதற்குள்ளாகவே உன் புத்தியில் பட்டிருக்க வேண்டும். அதை விட்டுத்தள்ளு! உன்னைவிட அவளுக்குப் புத்தி அதிகம். தெரிந்ததா?”

“கொஞ்சம் தேநீர் சாப்பிடுங்களேன்” என்று நடுநடுங்கும் குரலில் கேட்டாள் தாய். தன் குரலில் தோன்றிய நடுக்கத்தை உடனடியாய் மழுப்புவதற்காக, “அப்பப்பா. நான் ஒரேடியாய் விறைத்தே போனேன்” என்று சொல்லிக்கொண்டாள்.

பாவெல் அவளிடம் மெதுவாகப் போய் சேர்ந்தான். அவனது தலை தொங்கிப்போயிருந்தது: குற்றமுள்ள குறுஞ்சிரிப்பு அவன் உதடுகளில் கோணி வதங்கியது.

”என்னை மன்னித்துவிடு அம்மா. நான் இன்னும் சின்னப்பிள்ளை மூமூ முட்டாள்…..”

“என்னைத் துன்புறுத்தாதே அப்பா” என்று அவனது தலையைத் தன் மார்போடு அணைத்தவாறு பரிதாபகரமாகக் கத்தினாள் அவள். ஒன்றுமே சொல்லாதே, நீ உன் இஷ்டப்படி வாழ்வதற்கு உரிமையுள்ளவன். கடவுள் உனக்கு அருள் செய்வார் அப்பா. ஆனால் – என் இதயத்தைப் புண்படுத்தாதே. தாய் தன் பிள்ளைப் பாசத்தை விட்டுவிட முடியுமா? அவள் தன் பிள்ளையை நேசிக்கத்தான் செய்வாள். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். நீங்கள் எல்லோருமே எனக்குப் பிரியமானவர்கள், நீங்கள் அனைவரும் நேசிக்கத் தகுதியுள்ளவர்கள். உங்களுக்காக நான் அனுதாபப்படாவிட்டால், வேறு யாரப்பா அனுதாபம் கொள்வார்கள்? நீங்கள் அனைவரும் – நீ தலைமை தாங்கிச் செல்ல, உனக்குப் பின்னால் மற்றவர்கள் அனைவரும் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டுச் செல்வீர்கள்……. பாஷா!”

அவளது நெஞ்சுக்குள் கனன்றெரிந்து கனலெழுப்பும் மகத்தான சிந்தனைகள் துடித்துக்கொண்டிருந்தன. சோகங்கலந்த இன்பம் அவளது இதயத்தில் ஊடாடியது. எனினும் அதை வெளியிட்டுக் கூற அவளுக்கு வார்த்தை கிடைக்கவில்லை. வாய் பேச முடியாத ஊமை நிலையின் சித்திர வேதனையோடு, அவள் தன் மகனை ஆழமும் கூர்மையும் பெற்ற வேதனை நிறைந்த கண்களோடு வெறித்துப் பார்த்தாள்.

”ரொம்ப சரி, அம்மா என்னை மன்னித்துவிடு. எனக்கு இப்போதுதான் எல்லாம் தெரிகிறது. இனி நான் இதை மறக்கவே மாட்டேன். சத்தியமாய்ச் சொல்லுகிறேன் மறக்கவே மாட்டேன்” அவன் புன்னகை அரும்பும் தன் முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக்கொண்டான். அவனது முகத்தில் குதூகலம் தொனித்தது; அவமானத்தால் குன்றியும் போயிருந்தது.

அவள் அவனை விட்டுப் பிரிந்து அடுத்த அறைக்குள் சென்றாள்.

”அந்திரியூஷா!” என்று பரிவு கலந்த தொனியில் கூப்பிட்டாள் அவள். “அவனை அதட்டாதே. நீ பெரியவன்…”

”பூ! அவனை நான் அதட்டுகிறதாவது? அவன் என்னிடம் உதைபட வேண்டியது ஒன்றுதான் பாக்கி!” என்று திரும்பிப் பார்க்காமலேயே கத்தினான் ஹஹோல்

அவள் அவனிடம் நேராகச் சென்று தன் கரத்தை நீட்டினாள்.

“நீ எவ்வளவு நல்லவன்.”

ஹஹோல் திரும்பினான். உடனே தன் தலையை ஒரு மாட்டைப்போல கவிழ்ந்து வைத்துக் கொண்டும், கைகளைப் பின்புறமாகக் கட்டிக் கொண்டும் சமையலறையை நோக்கி நடந்தான். எகத்தாளமாக அவன் குத்திப் பேசுவது தாயின் காதில் ஒலித்தது.

”பாவெல், ஓடிப்போய்விடு! உன் தலையை நான் கிள்ளித் தூர எறிவதற்குள் போய்விடு! அம்மா, நான் சும்மா விளையாட்டுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் பயந்துபோய்விடாதீர்கள். நான் இங்கே தேநீருக்குத் தண்ணீர் போடுகிறேன். வேறொன்றுமில்லை. அடடே! அருமையான அடுப்புக் கரி இருக்கிறதே – ஊறப்போட்ட கரியா?”

அவன் மெளனமானான். தாய் சமையலறைக்குள் நுழைந்தபோது, அவன் அடுப்புக்கு எதிராக இருந்து உலையை ஊதிக்கொண்டிருந்தான்.

நீ உன் இஷ்டப்படி வாழ்வதற்கு உரிமையுள்ளவன். கடவுள் உனக்கு அருள் செய்வார் அப்பா. ஆனால் – என் இதயத்தைப் புண்படுத்தாதே. தாய் தன் பிள்ளைப் பாசத்தை விட்டுவிட முடியுமா? அவள் தன் பிள்ளையை நேசிக்கத்தான் செய்வாள்.

”பயப்படாதீர்கள். அம்மா, அவனை நான் தொடவேமாட்டேன்” என்று தலையை திருப்பாமலே சொன்னான் ஹஹோல், “நான் ரொம்ப சாது, வெந்துபோன கிழங்கு மாதிரி. அப்புறம் – ஏ, வீரசூரா, நீ இதை ஒன்றும் கேட்க வேண்டாம். தெரிந்ததா? உண்மையிலேயே எனக்கு அவன்மீது ரொம்பப் பிரியம். ஆனால் அவன் போட்டிருக்கிறானே, ஒரு கையில்லாச் சட்டை, அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு அந்தப் புதுச் சட்டை மேலே ஒரே மோகம். அதைப் போட்டால் ரொம்ப நன்றாக இருக்கிறதாம். எப்போது பார்த்தாலும் அதையே போட்டுக்கொண்டு தொப்பையைத் தள்ளிக்கொண்டு போகிறதும் வருகிறதும். ஒவ்வொருவனையும் வழிமறித்து, ‘பார்த்தாயா? எவ்வளவு அருமையான சட்டை’ என்று பெருமை பீற்றிக்கொள்கிறதும்தான் அவனுக்கு வேலையாய்ப் போயிற்று. நன்றாய்த்தானிருக்கட்டுமே. அதற்காக ஒவ்வொருத்தனையும் இடித்துக் கொண்டு செல்லாவிட்டால் என்ன? ஏற்கெனவே இங்கு நெரிசல்.”

“ஏய்! எவ்வளவு நேரம்தான் நீ இப்படிக் கதை அளக்கப் போகிறாய்?’ என்று சின்னச் சிரிப்போடு கேட்டான் பாவெல். நீதான் எனக்கு ஒரு தடவை புத்தி சொல்லியாயிற்றே, இன்னும் என்ன?”

ஹஹோல் தரையிலே உட்கார்ந்து தன்னிரு கால்களையும் அடுப்புக்கு இருபுறமும் நீட்டிப் போட்டுக்கொண்டு அவனைப் பார்த்தான். தாய் வாசல் நிலையருகில் நின்று அந்திரேயின் பின் தலையை அன்பு ததும்பக் கவனித்துக்கொண்டிருந்தாள். அவன் தன்னிரு கைகளையும் பின்னால் ஊன்றியவாறு உடலைத் திருப்பி, பாவெலையும் தாயையும் பார்த்தான்.

”நீங்கள் இரண்டு பேரும் ரொம்ப நன்றாயிருக்கிறீர்கள்” என்று சொல்லிக்கொண்டே ஓரளவு சிவந்து கன்றிப்போயிருந்த தன் கண்களை இமை தட்டிக்கொண்டான்.

பாவெல் குனிந்து அவன் கையைப் பிடித்தான்.

“அடடே, இழுக்காதே. என்னைக் கீழே தள்ளிவிடுவாய்” என்றான் ஹஹோல்.

“எதற்காக வெட்கப்படுகிறீர்கள்?” என்று கேட்டாள் தாய், ”நீங்கள் இரண்டு பேரும் கட்டித் தழுவி முத்தமிடுங்கள்.”

“என்ன, இந்த யோசனை எப்படி?” என்று கேட்டான் பாவெல்.

“பேஷாய் வா இப்படி” என்று சொல்லிக்கொண்டே எழுந்தான் ஹஹோல்.

அவர்கள் இருவரும் கட்டித் தழுவினார்கள். ஈருடலும் ஓருயிருமாக அங்கு நட்பு பிரகாசித்தது. தாயின் கண்களில் கண்ணீர் வழிந்தது. இது அழுகைக் கண்ணீர் அல்ல, ஆனந்தக் கண்ணீர்.

”பெண்களுக்கு அழுவதில் பிரியம்” என்று வழிந்த கண்ணீரை வெட்க உணர்ச்சியோடு துடைத்துக்கொண்டே பேசத் தொடங்கினாள் தாய். ”அவர்கள் ஆனந்தம் வந்தாலும் அழுவார்கள், துக்கம் பொங்கினாலும் அழுவார்கள்….”

ஹஹோல் பாவெலை மெதுவாக விலக்கிவிட்டான்.

”போதும்” என்று கூறிக்கொண்டே தனது கண்களையும் துடைத்துவிட்டுக்கொண்டான் அவன். “ஆடி முடிந்துவிட்டது கன்றுக்குட்டி, இனி வெட்டிப் போடுவோம் வேகவைக்க. உன் அடுப்புக் கரியை உடைப்பிலேதான் கொண்டு போடவேண்டும். ஊதி ஊதி என் கண்களில்தான் கரி விழுந்து போயிற்று”

”இந்த மாதிரிக் கண்ணீருக்கு வெட்கப்படவே தேவையில்லை.” என்று மெதுவாகச் சொல்லிவிட்டு ஜன்னலருகே சென்று உட்கார்ந்தான் பாவெல்.

அவனது தாய் அவனருகே சென்று உட்கார்ந்தாள். அவளது இதயத்தில் புதிய தைரியம் நிறைந்திருந்தது. அந்தத் துணிச்சலினால், அவளது துக்கம் ஒருபுறமிருக்க, அவளது மனம் நிறைவும் நிம்மதியும் பெற்று விளங்கியது.

“அம்மா. நீங்கள் ஒன்றும் எழுந்திருக்க வேண்டாம். நானே எல்லாவற்றையும் கொண்டு வந்துவிடுகிறேன்” என்று கூறிக்கொண்டே அந்த அறையை விட்டு அடுத்த அறைக்கு வந்தான் ஹஹோல். ”கொஞ்ச நேரம் சும்மா இருங்கள். உங்கள் இதயத்தை இந்த மாதிரிப் பிழிந்தெடுத்த பிறகு கொஞ்சம் ஓய்வு தேவைதான்…”

அவனது செழுமை நிறைந்த குரல் மீண்டும் அவர்களிடையே ஒலிக்க ஆரம்பித்தது.

“இப்போது நாம் வாழ்க்கையிலேயே ஒரு புதிய ருசியைக் கண்டோம். மனித வாழ்க்கையிலேயே ஒரு புதிய சுகத்தை அனுபவித்தோம்!”

“ஆமாம்” என்று தன் தாயைப் பார்த்துக்கொண்டே பதில் சொன்னான் பாவெல்.

”இந்த அனுபவம் எல்லாவற்றையுமே மாற்றிவிட்டது” என்றாள் அவள், “நம்முடைய துன்பமும் வேறு, இன்பமும் வேறு…….”

“அப்படித்தானம்மா இருக்க வேண்டும்” என்றான் ஹஹோல். “என் அருமை அம்மா! இன்று ஒரு புதிய இதயம் பிறந்தது. புதிய இதயம் வாழ்வு கண்டது. மனிதன் முன்னேறிச் செல்கிறான்; பகுத்தறிவினால் அனைத்தையும் ஒளிரச் செய்தவாறே முன்னேறுகிறான். போகும்போதே “சர்வதேசத்தின் மக்கள் கூட்டமே! ஒரே குடும்பமாக ஒரே இனமாக ஒன்று சேருங்கள்” என்று அறைகூவி அழைக்கிறான். அவனது அறைகூவலுக்கு எதிரொலியாக, உறுதிவாய்ந்த சகல இதயங்களும் ஒன்றுகூடிக் கலந்து மாபெரும் பேரிதயமாகி மகத்தான பலம் பெற்று மணிநாதமாக ஒலிக்கின்றன…”

நடுங்கித் துடிதுடிக்க முயலும் தன் உதடுகளை இறுகக் கடித்துக்கொண்டாள் தாய். அழுகை முட்டிக்கொண்டு வரும் தன் கண்களையும் அவள் இறுக மூடிக் கண்ணீரை உள்ளடக்கிக்கொண்டாள்.

பாவெல் ஏதோ பேசப் போவதைப்போல் கையை உயர்த்தினான். ஆனால் தாய் அவனைத் தன்பக்கம் இழுத்து மெதுவாக இரகசியமாகச் சொன்னாள்.

“அவன் பேசட்டும்; நீ குறுக்கிடாதே” என்று குசுகுசுத்தாள்.

”பெண்களுக்கு அழுவதில் பிரியம்” என்று வழிந்த கண்ணீரை வெட்க உணர்ச்சியோடு துடைத்துக்கொண்டே பேசத் தொடங்கினாள் தாய். ”அவர்கள் ஆனந்தம் வந்தாலும் அழுவார்கள், துக்கம் பொங்கினாலும் அழுவார்கள்….”

ஹஹோல் எழுந்து வந்து கதவருகே நின்று கொண்டான். “மக்கள் இன்னும் எத்தனையெத்தனை துன்பங்களையோ பார்க்கப் போகிறார்கள். எவ்வளவோ இரத்தத்தை இன்னும் சிந்திப் பெருக்கப் போகிறார்கள். என்னுடைய இதயத்திலும் என்னுடைய அறிவிலும் நான் கொண்டிருக்கும் வேட்கைக்கு என்னுடைய துயரங்கள் எம்மாத்திரம்? என் உடம்பிலுள்ள இரத்தம்தான் எம்மாத்திரம்? இவை போதாது. நான் ஒளிக்கிரணம் வீசும் தாரகையைப்போல் இருக்கிறேன். நான் எதையும் தாங்க முடியும்; எதையும் சகித்துக்கொள்ள முடியும். ஏனெனில், என் இதயத்தினுள்ளே பெருகும் பேரானந்தத்தை எந்தச் சக்தியும், எவரும் அழித்துத் துடைத்துவிட முடியாது. அந்தப் பேரானந்தத்தில் தான் என்னுடைய முழு பலமும் அடங்கியிருக்கிறது.”

அவர்கள் நடுநிசிவரையில் உட்கார்ந்து தேநீர் பருகினார்கள். வாழ்க்கையைப் பற்றியும் மாந்தர்களைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் ஆர்வத்தோடு பேசிக்கொண்டார்கள்.

எப்போதாவது ஒரு கருத்து தனக்குத் தெளிவாகிப் புரியும் சமயத்தில், தாய் தனது கடந்த காலத்தை எண்ணிப் பெருமூச்செறிந்து கொள்வாள். அந்தக் கருத்தை நன்கு உணர்ந்து கொள்வதற்காக, அதைத் தனது துன்பம் நிறைந்த இங்கிதமற்ற பழைய வாழ்க்கைச் சம்பவங்களோடு பொருத்திப் பார்த்துக்கொள்வாள்.

அவர்களது உரையாடலிலிருந்து உற்சாகத்தில் அவளது பயபீதிகளெல்லாம் மறைந்தோடிப் பறந்துவிட்டன. அன்று, அவளது தந்தை அவளைப் பார்த்துக் கடுமையாகக் கூறியபொழுது தோன்றிய அந்த உணர்ச்சி மீண்டும் அவளிடம் தோன்றியது.

“முகத்தைச் சுழிப்பதிலே எந்தப் பிரயோசனமும் இல்லை. எவனோ ஒருவன் முட்டாள்தனமாக, உன்னைத் தன் மனைவியாக ஏற்றுக்கொள்வதற்கு முன்வந்துவிட்டானோ, உடனே அவனை ஏற்றுக்கொள், சந்தர்ப்பத்தை நழுவவிடாதே. எல்லாப் பெண்களும் கல்யாணம் செய்துதான் தீர வேண்டும். கல்யாணம் பண்ணி, குழந்தைகளைப் பெற்றுப் போட வேண்டியதுதான் தலைவிதி. குழந்தைகளோ ஒரே தொல்லை பிடித்த பாரச்சுமைதான். எல்லோரையும் போன்ற மனிதப் பிறவிதானே நீயும்?” என்று கூறினார் அவளது தந்தை.

படிக்க:
நாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் !
வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கிறதாம் – மோடியின் அடுத்த ஜும்லா

இந்த வார்த்தைகளைக் கேட்டபோது அவளது கண் முன்னால் ஏதோ ஒரு தப்பிக்க முடியாத, தவிர்க்க முடியாத ஒரே ஒரு மார்க்கம்தான் தோன்றுவது போலவும், அந்தப் பாதையே அவள் முன்னால் இருண்டு வெறிச்சோடிக் கட்டாந்தரையாக நீண்டு கிடப்பது போலவும் தோன்றியதுண்டு. அந்தக் தவிர்க்க முடியாத நெடுவழியில் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவளது இதயத்தில் ஒரு குருட்டு அமைதியை உண்டாக்கியது. இன்றும் அதுபோலவே இருந்தது அவளுக்கு தனக்கு வரப்போகும் புதிய துயரத்தை அவள் உணர முனைந்தபோது, தனக்குத்தானே, யாரோ ஒரு இனந் தெரியாத நபருக்குச் சொல்வது போலப் பேசிக்கொண்டாள்.

“வருவதை ஏற்றுக்கொள்.”

இந்த எண்ணம் அவளது இதய வேதனையைச் சமாதானப்படுத்தியது; அவளது இதயத்துக்குள்ளே தந்தி நாதம் போல் ஒலி எழுப்பியது.

ஆனால் அவளது மனத்தின் அதல பாதாளத்திலே, மங்கிய, எனினும் இடைநீங்காத நம்பிக்கையொன்றை அவள் வளர்த்து வந்தாள். எந்தச் சக்தியும் தன்னிடமிருந்து சகலவற்றையும் பறித்துச் சென்றுவிட முடியாது. நிச்சயம் ஏதாவது மிஞ்சவே செய்யும் மூமூ என்பதே அந்த நம்பிக்கை.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

புயல் எவ்வாறு தோன்றுகிறது ? காணொளி

ரு வெப்ப மண்டல புயலின் தோற்றம், வலுவடைதல், வலுவிழத்தல் என்ற மூன்று கட்டங்களை கடந்து வருகிறது. கடற்பரப்பில் 26.5 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பம் தொடர்ந்து நீடிக்கும் போது காற்று சூடாகிறது. சூடாகும்போது காற்று விரிவடைகிறது. இலகுவாக மாறிய காற்று மேலே எழும்புகிறது. காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்படுகிறது.

இங்கு காற்றின் அழுத்தம் குறைவதால், அருகாமைப் பகுதியிலிருந்து காற்று உள்நுழைந்து, அந்தக் காற்றும் சூடாகி கடற்பரப்பில் மேலே எழும்புகிறது…

படிக்க:
மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?
பரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா ? மறுக்கிறதா ?
நாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் !

இந்த நிகழ்வு ஏற்படும் புவியின் துருவப்பகுதியின் அடிப்படையில் கடிகார வட்டச் சுழலாகவோ, எதிர் கடிகார வட்டச் சுழலாகவோ சுழன்று சூறாவளியாகிறது.

இந்த வெப்ப மண்டலச் சூறாவளிகளால் மிகப் பலத்த காற்றுடன் மிக பலத்த மழையையும் உருவாக்க முடியும். இவற்றுடன் இந்தச் சூறாவளிகள் உயரமான அலைகளையும் அழிவு உண்டாக்கக்கூடிய புயல் அலை எழுச்சிகளையும் உருவாக்க முடிகிறது.

கடற்பரப்பில் தோன்றி நிலத்தை நோக்கி நகரும்போது இந்தப் புயல்கள் வலுவிழக்கின்றன.

படிக்க:
கஜா புயல் : கலங்கி நிற்கும் மக்களுக்கு கை கொடுப்போம்
♦ எது முன்னெச்சரிக்கை ? எது சிறந்த அரசு ? எது நிவாரணப் பணி ? குமுறுகிறார் ஒரு விவசாயி !

வேகத்தை வைத்து புயல்களை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். தென்னிந்தியா இத்தகைய வெப்பமண்டலப் பகுதியில் வருவதால் ஆண்டுதோறும்  அதிகப் புயல்களை நாம் சந்திக்கிறோம். உலகம் முழுவதும் புயல் குறித்த விழிப்புணர்வும் நவீன அறிவியலும் வளர்ந்துள்ளதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதில்லை. ஆனால் இந்தியா மட்டும் இதில் விதிவிலக்கு.

இதற்கு முன்னர் வந்த ஒக்கிப் புயலின் தாக்கம் மற்றும் அதன் பேரழிவை வெளிக் கொணரும் ஆவணப்படம் – கண்ணீர்க் கடல் !

 

முதல் உலகப் போருக்குக் காரணம் காலனிய போட்டியா ? மன்னர் கொலையா ?

0
கலையரசன்

முதலாம் உலகப் போர் முடிவடைந்து நூறு வருடங்கள் ஆகிவிட்டன. 28-6-1914 அன்று, சரயேவோ (பொஸ்னியா) நகரில், ஆஸ்திரிய முடிக்குரிய இளவரசர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதுவே முதலாம் உலகப் போரின் தொடக்கமாக கருதப்பட்டு வந்தது. உண்மையில் அது “உலகப்” போர் அல்ல. ஐரோப்பிய நாடுகள் மட்டுமே பங்கெடுத்த “ஐரோப்பியப்” போர் ஆகும். ஆனால், அது ஒரு காலனியாதிக்க காலகட்டம் என்பதால், ஐரோப்பிய நாடுகள் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியதால், அது இன்றளவும் “1-ம் உலகப் போர்” என்று அழைக்கப்படுகின்றது.

நூறு வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரிய இளவரசரை சுட்டுக் கொன்ற கவ்ரிலோ பிரின்சிப்பிற்கு சரயேவோ நகரில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் கவ்ரிலோ பிரின்சிப் (Gavrilo Princip) பற்றி சில குறிப்புகள்.

கவ்ரிலோ பிரின்சிப் சிலை.

உலகம் முழுவதும், அரசியல் காரணங்களுக்காக திரிபுபடுத்தப்பட்ட வரலாறு எழுதப்பட்டு வந்துள்ளது. அனேகமாக எல்லா வரலாறுகளும் “அங்கீகரிக்கப்பட்ட பொய்கள்” தான். இளவரசர் பெர்டினன்ட் கொலை செய்யப்பட்ட சம்பவம்தான், 1-ம் உலகப் போரை தொடக்கி வைத்தது என்று எல்லா சரித்திர நூல்களிலும் எழுதி இருக்கிறார்கள். உண்மையில், அதற்கு முன்னரே ஐரோப்பிய நாடுகள் போருக்கு தயாராக இருந்துள்ளன. இளவரசரின் படுகொலை என்ற ஒரு சிறு தீப்பொறி, போரை பற்ற வைப்பதற்கு ஒரு சாட்டாக அமைந்திருந்தது.

இளவரசரை சுட்டுக் கொன்ற கவ்ரிலோ பிரின்சிப் ஒரு “பயங்கரவாதி” அல்லது “செர்பிய தேசியவெறியன்” என்று குறிப்பிட்டு எழுதுகிறார்கள். அநேகமாக ஆஸ்திரிய சாம்ராஜ்யவாதிகளின் கண்ணோட்டத்தில் இருந்தே அந்த வரலாறு எழுதப்பட்டுள்ளது.

கவ்ரிலோ பிரின்சிப் உண்மையில் ஒரு பயங்கரவாதி அல்ல. யூகோஸ்லேவியா என்ற தாயக விடுதலைக்காக ஆயுதமேந்திய விடுதலைப் போராளி. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், ஐரோப்பாவில் பல நாடுகளில் மன்னராட்சி நிலவியது. அந்தக் காலத்தில் தேசியவாதம் ஒரு முற்போக்கான கொள்கையாக கருதப்பட்டது.

படிக்க:
அமெரிக்க – சீன வர்த்தகப் போர் : வீழக் காத்திருக்கும் உலகப் பொருளாதாரம் !
நாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் !

பொஸ்னியாவும், குரோவாசியாவும் ஆஸ்திரிய சக்கரவர்த்தியின் ஆளுகையின் கீழ் இருந்தன. ஆஸ்திரியா அந்தப் பிரதேசத்தை காலனி மாதிரி நடத்தி வந்தது. பொஸ்னியா முழுவதும் நான்கு இடைத்தர பாடசாலைகள் மட்டுமே கட்டப்பட்டன. பிரிட்டிஷ்காரர்கள் இந்தியா (அல்லது இலங்கையில்) ரயில் பாதை, நெடுஞ்சாலை அமைத்தார்கள் என்று சொல்லிக் கொள்வதைப் போன்று, ஆஸ்திரிய காலனிய ஆதரவாளர்களும் கூறி வந்தனர். ஆனால், அந்த ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள் யாவும், பொஸ்னியாவின் இயற்கை வளங்களை, ஆஸ்திரியாவுக்கு எடுத்துச் செல்வதற்காக போடப்பட்டவை. ஆஸ்திரிய காலனிய சுரண்டலில் இருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டம் பயங்கரவாதம் ஆகாது.

கவ்ரிலோ பிரின்சிப் கைது செய்யும் இராணுவ வீரர்கள். (சித்திரம்)

சரித்திர பாடநூல்கள் குறிப்பிடுவது போன்று, கவ்ரிலோ பிரின்சிப் ஒரு “செர்பிய தேசியவாதி” அல்ல. அன்று அவனுடன் ஒரு பொஸ்னிய முஸ்லிம், குரோவாசியர் ஆகியோரும் கூட்டுச் சேர்ந்து தான் தாக்குதலுக்கு திட்டம் போட்டனர். அவர்களின் நோக்கம் செர்பியா, பொஸ்னியா, குரோவாசியா ஆகிய பகுதிகளை இணைத்த யூகோஸ்லேவியா குடியரசு.

மேற்குறிப்பிட்ட தகவல்கள், சரித்திர பாட நூல்களில் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இன்று செர்பிய தேசியவாதிகள் கவ்ரிலோ பிரின்சிப் தங்களது நாயகன் என்று தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். வெளியுலகமும் அந்தக் கருத்தியலை ஏற்றுக் கொண்டு பரப்பி வருகின்றது.

இதில் இருந்து நமக்குக் கிடைக்கும் பாடம், உண்மையான தேசியவாதத்தை விட, குறுந்தேசியவாதமும், இனவாதமும் ஏகாதிபத்தியத்திற்கு நன்மை தரத்தக்கது. அதனால், உலகம் முழுவதும் அந்தக் கோட்பாட்டை வளர்ப்பதில் குறியாக உள்ளது.

முகநூலில் : கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம்  தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

தீபாவளியால் மகிழ்ச்சியடைந்தோர் : அமேசான் – ஃபிளிப்கார்ட் – டாஸ்மாக் – சர்கார் படம் !

விழாக்காலம் என்றால் குழந்தைகள் நினைவுக்கு வருவார்கள். தற்போது டாஸ்மாக் வசூலும், புதுப்பட ரிலிசுமே பண்டிகைகளை நினைவுபடுத்தி வருகின்றது. தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 10-ம் தேதி முதல் அமேசான், பிளிப்கார்ட் முதற்கொண்டு தமிழக அரசின் டாஸ்மாக், சினிமாக்கள் வரை மக்களை சுரண்டுவது எப்படி என திட்டமிட்டு இலக்கு நிர்ணயித்திருக்கிறார்கள்.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான் “தி கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல்” என்றும், “பிக் பில்லியன் டேஸ்” என்று பிளிப்கார்ட்டும் போட்டி போட்டுக்கொண்டு இதுவரை இல்லாத சலுகைகளை வழங்குவதாகக் கூறி தமது வசூலை அள்ளியிருக்கிறார்கள்.

அமேசான் மூன்று கட்டங்களாக சலுகைகளை வழங்கி மக்களிடம் விரட்டி விரட்டி விற்பனை செய்திருக்கிறது. அதன் விளைவு, கடந்த ஆண்டை விட 117 சதவீதம்  கூடுதல் வாடிக்கையாளர்களைப் பெற்று பன்மடங்கு விற்பனையையும் உயர்த்தியுள்ளது. “இந்தியாவில் பெரும்பாலன வாடிக்கையாளர்கள் அமேசானில் இணைந்துள்ளனர். பிரைம் வாடிக்கையாளர்களும் இரு மடங்கு உயர்ந்துள்ளனர். இ-காமர்ஸில் இது ஒருநாள் விற்பனையே. மேலும் இந்தியாவில் விற்பனை செய்வதில் அதிக முதலீடு செய்வோம்” என்கிறார் அமேசானின் இந்திய தலைவர் அமித் அகர்வால்.

பிளிப் கார்ட் நிறுவனத்தை கடந்த மே மாதம் வால்மார்ட் வாங்கியதால் அதன் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்த இணைய வர்த்தகப் போரால் மின் சாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் அனைத்தும் அதிகபட்சமாக 75 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்தது பிளிப் கார்ட்.

“தி கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல்” மூலம் 10 கோடிக்கும் அதிகமான பொருட்களை தள்ளுபடியில் விற்பனையை அறிவித்த அமேசான், சிட்டி பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு 10 சதவீத கேஷ்பேக், அமேசான் பே-பேலன்ஸ் மூலமாக ஷிப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3 சதவீத தொகை திரும்ப கிடைக்கும் என சாத்தியமான அனைத்து வகைகளிலும் சலுகையை அறிவித்து வாடிக்கையாளர்களின் பாக்கெட் மணியைக்கூட “ஸ்வைப்” செய்தது.

படிக்க :
♦ இணைய வணிகம் – மெய்நிகர் போதை | வில்லவன்
♦ அமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் !

இவ்வாறு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒருபுறம் சுரண்ட, தமிழகத்தில் எடப்பாடி அரசும்- தமிழ்த் திரைத்துறையும் மக்களின் பட்டாபட்டி டிராயரைக்கூட அவிழ்த்து அலைய விட்டிருக்கிறது.

தமிழக அரசு இந்த ஆண்டு தீபாவளிக்கு சரக்கு விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு, ரூ.320 கோடி என்று நிர்ணயித்த இலக்கை எட்டி மகத்தான சாதனையை புரிந்திருக்கிறது. பட்டாசு, பலகாரப் பொருட்கள், புத்தாடை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்பனை குறைந்த நிலையில், ரூ.602 கோடிக்கு சாராய சரக்குகளை விற்பனை செய்திருக்கிறது.

இதைவிட அதிர்ச்சியான செய்தி, “ரூபாய் ஆயிரத்திற்கும் மேல் சரக்கு அடிப்பவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும்” என அதிமுகவின் பிரமுகர் ஒருவர் பார் முன்பு பேனரே வைத்திருந்தார்.

வழக்கமாக டாஸ்மாக்கின் ஒருநாள் விற்பனை 70-80 கோடிதான். ஆனால் கடந்த 3-ம் தேதி சனிக்கிழமை 124 கோடி, ஞாயிறு 150 கோடி, திங்கள் 148 கோடி, செவ்வாய் தீபாவளி அன்று 180 கோடி விற்பனையாகி உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 175 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு 131 கோடி, அதற்கு முந்தைய தினத்தில் 113 கோடி என மொத்தம் 244 கோடிக்கு விற்பனையானது. இந்த விஷயத்தில் ஜெயலலிதாவையே விஞ்சி விட்டார் எடப்பாடி பழச்சாமி.

அதேபோல ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைகளின்போது புதுப்புதுப்படங்களை வெளியிட்டு பிளாக்கில் விற்று கொள்ளையடிக்கிறார்கள் திரைத்துறை முதலாளிகள். . “திருட்டுக்கதை” என்று நீதிமன்றம் வரை சென்று சமரசமாகி வந்திருக்கும் “சர்க்கார்” திரைப்படமும் வெளியான இரண்டு நாட்களில் பல கோடிகளை வசூலித்தாக பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சர்கார் படமோ, கபாலி மற்றும் பாகுபலியின் இரண்டாம் பாக வசூல் சாதனையை முறியடித்து விட்டதாக கொண்டாடித் தீர்க்கின்றனர். தமிழகம் முழுவதும் முதல் நாளில் 31.6 கோடியும், “சென்னையில் மட்டும் 2.41 கோடியும் வசூல் செய்துள்ளது.

படிக்க :
♦ ரஜினிக்கு 240 கோடி, ராபர்ட் வதேராவுக்கு 300 கோடி…எப்படி?
♦ ஊத்திக் கொடுப்பதும் சீரழிப்பதுமா…அரசின் வேலை?

அண்டை மாநிலமான கேரளாவில் 6.6 கோடியும், கர்நாடகாவில் 6.1 கோடியும், ஆந்திராவில் 3.8 கோடியும் அள்ளியுள்ளது. இதன் மூலம் சர்கார் வசூல் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது என்று வர்ணிக்கிறார்கள் திரைத்துறை மேதாவிகள்.

இந்தியாவில் மட்டுமா? “அமெரிக்காவில் 2.31 கோடியும், ஆஸ்திரேலியாவில் 1.16 கோடி, இங்கிலாந்தில் 1.17 கோடி வசூலித்ததுள்ளது” என்கிறார் விமர்சகரும், திரைத்துறை வர்த்தக ஆய்வாளருமான தரன் ஆதர்ஷ். இதில் நிர்ணயிக்கப்பட்ட கட்டண டிக்கெட் வரவு எவ்வளவு என்பது மற்றும் தேவ ரகசியம். தற்போதைய செய்திகளின் படி சர்கார் திரைப்படத்தின் வசூலால் வினியோகஸ்தர்களுக்கு நட்டம் என்கிறார்கள். அதைத் தாண்டி அவர்களுக்குச் சென்ற வசூலில் மக்கள் இழந்தது எவ்வளவு என்பதுதான் கேள்வி!

இவற்றோடு தீபாவளி அன்று தொலைக்காட்சிகள் அனைத்தும் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் விளம்பர வருவாயை அதிகரித்துக் கொண்டன. அதே பட்டிமன்றம், சிறப்புத் திரைப்படம் என்று எந்த பிராயத்தனமும் இல்லாமல் சானல்களின் வசூல் சுமூகமாக நடந்தேறியது.

மோடி அரசின் நான்காண்டு ஆட்சியில் அடுக்கடுக்கான தாக்குதல்கள் மக்களின் மீது தொடுக்கப்பட்டது. குறிப்பாக பணமதிப்பழிப்பு நடவடிக்கை ஒட்டு மொத்த தொழில் துறையையே புரட்டி போட்டது. பலர் வேலையிழந்தனர். இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.  அடுத்து வந்த ஜி.எஸ்.டி-யும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி என்று இந்திய பொருளாதாரம் அதளபாதாளத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறது.

அன்றாடம் வாழவே வழியில்லாமல் செய்வதறியாமல் திகைத்து வருகிறார்கள் மக்கள். அதிலிருந்து அவர்களை மீட்டுருவாக்கம் செய்யாமல் மேலும் மேலும் அவர்களை எப்படி சுரண்டுவது என்றுதான் சிந்திக்கிறது மோடி அரசு.

தமிழகத்தில் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டம், வழிப்பறி, கொள்ளை, என்று பெரும் இளைஞர்கள் சமூகத்தையே லும்பன்களாகவும், குடி வெறியர்களாகவும், சினிமா – நுகர்வு வெறியர்களாகவும் மாற்றி அதை நோக்கியே பயணிக்க வைக்கிறது.

படிக்க :
♦ பதினான்காவது நாளாக யமஹா தொழிலாளர் போராட்டம் !
♦ மோடி அரசின் ரஃபேல் ஊழலுக்கு முன்னால் போபர்ஸ் எல்லாம் ஜுஜூபி !

தமிழகத்தில் நடந்து வரும் யமஹா,என்பீல்டு தொழிலாளர்களின் போராட்டம் முதற்கொண்டு சத்துணவு ஊழியர்கள் போராட்டம் – இந்தியாவில் மோடி அரசின் ரஃபேல் ஊழலும், சி.பிஐ மாற்றம் – ரிசர்வ் வங்கியில் மத்திய அரசின் தலையீடு என்று எல்லாமும் பெருவாரியான மக்களின் பார்வைக்கு வராதபடி பின்னுக்கு தள்ளப்பட்டன. கவனிக்கபட வேண்டிய நாட்கள் எல்லாம் இந்த விழா விளம்பரத்தில் கவனிக்க தவறியுள்ளது தமிழ்ச்சமூகம். பேப்பரை திறந்தாள் முதல்பக்கத்திலேயே மனதை கொள்ளைகொல்லும் அமேசான் விளம்பரமும், டி.வி பெட்டியை திறந்தால் தீபாவளி நிகச்சிகளும், சர்க்கர் பட சர்ச்சை பற்றியும்தான் பேச்சு. இதைத்தான் இந்த அரசும் விரும்புகிறது.

தமிழ் திரைப்படங்களில் சரக்கு அடிப்பதையே ஹீரோயிசமாக காட்டுவது – அந்த ஹோரோக்களையே தங்கள் பொருட்களின் விளம்பர தூதராக முன்னிருத்துவது – சினிமா நாயகர்கள்தான் தங்களின் தேவதூதன் என மக்களை திரும்பத் திரும்ப நம்ப வைப்பது என்று  ஒரு சுழல் வட்டப் பாதையில் அரசு மற்றும் முதலாளிகளின் நலன்களோடு பின்னிப் பிணைந்துள்ளது.

தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடும் அளவு மக்களிடம் பணமில்லை எனும் போதே இவ்வளவு பெரிய கொள்ளை நடந்திருக்கிறது. பணத்தோடு மக்களின் நேரத்தையும்  திருடியிருக்கிறார்கள். சிந்தனையையும் திசை திருப்புகிறார்கள். இந்த நச்சு சூழலை முறிப்பது எப்போது?