

தமிழ்நாடு.
“காவல்துறைதான் கைதிகளின் விடுதலையை தீர்மானிக்கிறது!”:
அரசியல் செயல்பாட்டாளர் தியாகு நேர்காணல்
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, தன் வாழ்நாளில் 15 ஆண்டுகள் சிறையில் கழித்தவர் தியாகு. சிறைப்பட்டோரின் உரிமை, சிறைகளின் நிலைமை, அரசு எந்திரங்களின் மனோபாவம் பற்றி அரசியல் செயல்பாட்டாளர் தியாகு பேசுகிறார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்வதில் பாகுபாடு காட்டக் கூடாது என்ற கோரிக்கை எழுப்பப்படும் நேரத்தில் இந்த நேர்காணல் முக்கியத்துவம் பெறுகிறது. த டைம்ஸ் டாட் தமிழ் காமிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ்.
எந்த மாநிலத்தில் சிறைச்சாலை சீர்திருத்தங்கள் சிறப்பாக இருக்கின்றன என்று கருதுகிறீர்கள்?
கேரளா. இதற்குக் காரணம் ஆட்சியாளர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதால் அல்ல. மேற்கு வங்காளச் சிறைகள் தமிழ்நாட்டை விட மோசமாக இருக்கும். ”போல்ஷ்விக்குகள் அதிகாரத்திற்கு வந்ததால் உருசியாவில் சிறைகள் நன்றாக இருந்தன. அதற்குக் காரணம் அவர்கள் போல்ஷ்விக்குகள் என்பதால் அல்ல; மாறாக அவர்கள் சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள் என்பதால்” என்று பகத் சிங் எழுதியுள்ளார்.
கேரளாவில் இ.எம்.எஸ்., ஏ.கே.கோபாலன் போன்றோர் சிறையில் இருந்தனர். வி்.ஆர். கிருஷ்ணய்யர் வழக்கறிராக, சட்டமன்ற உறுப்பினராக, சிறைத்துறை அமைச்சராக, நீதிபதியாக பல அனுபவங்களைப் பெற்றவர். எனவே கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், கம்யூனிஸ்டு ஆட்சி செய்தாலும் சிறைகள் நன்கு பராமரிக்கப்பட்டு இருக்கும்.
கேரளாவில் கைதிகளின் உழைப்பிற்கு தரும் ஊக்க ஊதியத்தை (incentive) அதிகப்படுத்தினார்கள். அதை வைத்து டோக்கன் கொடுத்து சிறை கேண்டீனில் வடை, தேநீர் போன்றவை கைதிகள் வாங்கிச் சாப்பிட முடியும். வெளியே போகும் போது பணமும் கிடைக்கும். அதே போல கேரளாவில்தான் வேலைக்கு மட்டும் சீருடை, அறையில் இருக்கும் போது வேட்டி அணிந்து கொள்ளலாம் என்று மாற்றம் கொண்டுவந்தார்கள்.
சி.ஏ.பாலன் எழுதிய தூக்குமர நிழலில் நூலைப் படித்தால் அப்போதைய சிறை எப்படி இருந்தது என்று புரிந்து கொள்ள முடியும். மொழிப் போராட்டம், கல்லக்குடி போராட்டம், விலைவாசிப் போராட்டம் என்று தி.மு.க. பெற்ற சிறை அனுபவத்தால் இயல்பாகவே தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் சிறைத்துறை சீர்திருத்தங்கள் ஓரளவு சிறப்பாக நடைபெற்றன.
1967-இல் தி.மு.க. ஆட்சி , கைதிகள் குல்லாய் அணியத் தேவை இல்லை என்று அறிவித்தார்கள். வாரம் ஒரு முறை கடிதம் எழுதலாம், 15 நாட்களுக்கு ஒருமுறை நேர்காணல் பார்க்கலாம் என்ற வசதிகள் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மேம்பாடு அடைந்தன. 1974 நாங்கள் நடத்திய சிறைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக 1977 எம்.ஜி.ஆர். ஆட்சியில் நீதிபதி நரசிம்மன் கமிசன் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரை அடிப்படையில்தான் புழல் சிறை கட்டப்பட்டது.
நெருக்கடி நிலைக்கால சென்னை சிறைக் கொடுமைகள் பற்றிய இசுமாயில் கமிசன் அறிக்கையும் சிறைச் சீர்திருத்தங்களுக்குப் பரிந்துரைகள் செய்தது. என்னுடைய சுவருக்குள் சித்திரங்கள், கம்பிக்குள் வெளிச்சங்கள் நூல்களில் இவை பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறேன். சிறைச்சாலைகளை எல்லா அரசுகளும் வைத்துள்ளன.
முதலாளித்துவ அரசாக இருந்தாலும் சரி; கம்யூனிஸ்டு அரசாக இருந்தாலும் சரி. ஈழத்தில் தலைவர் பிரபாகரன் நடத்திய ஆட்சியாக இருந்தாலும் சரி. சிறைகளற்ற சமூகம் இதுவரை அமையவில்லை. சிறைச்சாலைகள் ஒரு மனிதனின் நுரையீரல் போல. நுரையீரல் சரியாக இருந்தால்தான் மூளை, இதயம், கை, கால் போன்ற மற்ற உறுப்புகள் சரியாக இருக்கும்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நீண்ட கால சிறைவாசிகளை முன்விடுதலை செய்யப் போவதாக தமிழ் நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளாரே?
காந்தி நூற்றாண்டு விழா, அண்ணா நூற்றாண்டு விழா என்று ஏற்கெனவே கைதிகளை முன்விடுதலை செய்துள்ளனர். கைதிகளை முன் விடுதலை செய்வதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளது.
முன்னர் விடுதலை அறிவிப்பு வந்தால் குறிப்பிட்ட ஒரே நாளில் கைதிகளை விடுதலை செய்வார்கள். கைதிகள் குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டாடுவார்கள். ஆனால் முதலமைச்சர் அறிவிப்பு வந்து சில மாதங்கள் ஆன பின்னரும் இதுவரை நூறு கைதிகள் கூட விடுவிக்கப்படவில்லை; அதுவும் பகுதி, பகுதியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசு விதித்த நிபந்தனைகளின் படியே விடுதலைக்கு தகுதியான 1500 பேர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இதில் பாகுபாடு காட்டக்கூடாது. மத மோதல் வழக்கு (communal cases) வழக்கு என்ற காரணத்தைக் காட்டி பல இசுலாமிய சிறைப்பட்டோர் விடுவிக்கப்படவில்லை.
அவர்களில் ஒரு சிலர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலேயே உள்ளனர். இப்படி முன்விடுதலை செய்யும் போது செய்த குற்றத்தைப் பார்க்கக் கூடாது; குற்றவாளியை மட்டும்தான் பார்க்க வேண்டும்.
நீதிமன்றத்தில் விசாரிக்கும் போது சாட்சி, ஆதாரம் உள்ளிட்ட குற்றத்தைப் பற்றி மட்டும்தான் பார்க்க வேண்டும்; குற்றத்திற்கான தண்டனையை முடிவு செய்யும் போது குற்றத்தையும், குற்றவாளியையும் (வயது, முதல் குற்றமா? எந்த சூழலில் குற்றம் நடந்தது போன்ற காரணிகள்) பார்க்க வேண்டும்; முன்விடுதலை செய்யும் போது குற்றவாளியை மட்டுமே பார்க்க வேண்டும்; செய்த குற்றத்தைப் பார்க்கக் கூடாது என்பவை எல்லாம் உலகம் முழுவதும் ஒத்துக் கொள்ளப்பட்ட நடைமுறைகள்.
எனவே முன்னாள் பிரதமரைக் கொன்றவர்களை விடுதலை செய்யக் கூடாது போன்ற வாதங்கள் சரியல்ல. எத்தனை ஆண்டு கழிந்தாலும் அவர் முன்னாள் பிரதமராகத்தான் இருப்பார். குற்றத் தீர்ப்பு பெற்று தண்டனையும் விதிக்கப்பட்டு பல்லாண்டு காலம் சிறையில் கழித்த ஒருவரை விடுதலை செய்ய வேண்டிய நேரத்தில் குற்றத்தைச் சொல்லி விடுதலை மறுப்பது தண்டனையின் நோக்கத்தையே அபத்தமாக்கி விடும்.
குற்றத்திற்கு தண்டனை வழங்குவதற்கு நான்கு நோக்கங்கள் சொல்வார்கள்: ஆங்கிலத்தில் நான்கு R சொல்வார்கள்: Revenge, Retribution, Reformation, Rehabilitation! அதாவது Revenge – பழிக்குப் பழி; Retribution – வஞ்சம் தீர்த்தல்; Reformation – சீர்திருத்தம்; Rehabilitation – மறுவாழ்வு. வரலாற்று வழியில் இந்த நோக்கங்களின் முக்கியத்துவம் மாறியுள்ளது.
சீர்திருத்தத்துக்கும் மறுவாழ்வுக்கும் முக்கியத்துவம் தர வேண்டிய இக்காலத்தில் அரசே வஞ்சம் தீர்க்கும் உணர்ச்சியை வளர்ப்பதை ஏற்க முடியாது. சிறை என்பது சீர்திருத்தக் கூடமாக இருக்க வேண்டும். எவரையும் நிரந்தரமாகச் சிறையிலடைத்து வைத்து சீர்திருத்தம் செய்ய முடியாது. எந்த ஒருவரையும் கால் நூற்றாண்டு காலம் சிறையில் வைத்துக் கொண்டு விடுதலை செய்ய மறுப்பது சீர்திருத்தக் குற்றவியல் நெறிகளுக்கு முரணானது.
ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும் என்று சொல்லுகிறார்களே?
மன்னிப்பு, தண்டனை நீக்கம், தண்டனைக் கழிவு, தண்டனைக் குறைப்பு என்பதெல்லாம் சட்டத்தில் இருப்பவைதான். ஒரு கைதியைப் பற்றி, அவர் குடும்பச் சூழல் பற்றி சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்திற்கே தெரியும். சட்டம் ஒழுங்கும், சிறைகளும் மாநில அதிகாரப் பட்டியலில் உள்ளன.
இந்த அதிகாரங்களில் மாநில அரசு இறைமை (sovereign) கொண்டது. அரசமைப்புச் சட்டம் உறுப்பு 161-இன் கீழ் ஒரு கைதியை முன்விடுதலை செய்யும் முழு அதிகாரமும் மாநில அரசுக்கு உண்டு. இப்படித்தான் வி.ஆர். கிருஷ்ணய்யர் மத்திய அரசை எதிர்த்து சி.ஏ. பாலன் தூக்குத் தண்டனைக் குறைப்பில் நிலை எடுத்து வெற்றி பெற்றார். நமக்கு ஏன் வம்பு என்ற மனநிலையில் யாரும் முடிவு எடுக்கத் தயங்குகிறார்கள்; நீதிமன்றம் உட்பட!
நான் 15 ஆண்டுகள் சிறையில் இருந்து இருக்கிறேன். எனக்குத் தெரிந்து சாகும் நிலையில் உள்ள பல கைதிகளை சிறைக் கண்காணிப்பாளரே மாநில அரசுக்குத் தெரியப்படுத்தி விட்டு, அரசின் இசைவை எதிர்பார்த்து, விடுதலை செய்து இருக்கிறார். இறக்கும்போது ஒருவர் தன் வீட்டில் இறக்க வேண்டும் என்ற கருத்துப்படி (pleasure of dying at home) இதைச் செய்தார்கள்.
இப்போது அபு தாகீர் என்பவர் தீரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது இரண்டு கண்களும் பார்வை இழந்து விட்டன. அவரை விடுதலை செய்ய மாநில அரசு தயாராக இல்லை. நீதி மன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. அமைச்சருக்கு, அரசுச் செயலாளர்களுக்கே தங்கள் அதிகாரம் என்னவென்று தெரியவில்லை. முன்விடுதலை பற்றிய கோரிக்கை வந்தால் அதைக் காவல்துறைக்கு அனுப்புகிறார்கள்..
காவல்துறைக்கும் முன்விடுதலைக்கும் என்ன தொடர்பு? இதை யாரும் கேள்வி கேட்பதில்லை. இங்கு நடப்பது மக்களாட்சியா? காவல் துறை ஆட்சியா? அரசாங்கம் பத்தாண்டுகள் சிறையில் இருந்தவர்களை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் விடுதலை செய்வதுதான் மனிதத் தன்மையுள்ள செயலாக இருக்கும். அதுவே நாகரிக சமுதாயத்திற்கான பண்பாக இருக்கும்.
நீங்கள் சிறைத்துறை அமைச்சராக இருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுப்பீர்கள்?
கியூபா, தென்னாப்பிரிக்கா நாடுகளில் உள்ள சிறைகள் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அமெரிக்காவில் சிறைகள் மோசமாக உள்ளன. பிரான்சு நாட்டுத் தண்டனை முறையின் கொடுமையைப் பட்டாம்பூச்சி புத்தகத்திலிருந்து அறியலாம்.
நேற்றைய பாவி இன்றைய புனிதராகலாம்; இன்றைய பாவி நாளை புனிதராகக் கூடாதா என்ன? சிறைத் துறையை மேம்படுத்துவதில் அரசின் அங்கங்களான சட்டமியற்றும் பேரவைகள், நீதிமன்றங்கள், அரசு எந்திரம் என்ற அனைத்திற்கும் பங்கு உண்டு. நான்காவது கொற்றம் (Fourth estate ) என்று அழைக்கப்படுகிற ஊடகங்களுக்கும் இதில் பொறுப்பு உண்டு.
அமெரிக்காவில் சிறைப்பட்டவர்களை அரசின் அடிமைகள் (Slaves of States) என்று சொல்லும் காலம் ஒன்று இருந்தது. பிறகு நாகரிகம் வளர்ந்து ”சிறைக்குரிய கட்டெல்லைக்கு உட்பட்டு குடிமகனுக்குரிய எல்லா உரிமைகளும் சிறைப்பட்டோருக்கு உண்டு” என்ற கருத்து அங்கும் இங்கும் வளர்ந்துள்ளது.
சிறைப்பட்டோருக்கு வெளி உலகத்தோடு தொடர்பு கொள்ள எந்த தடையும் இருக்கக் கூடாது. நீதிமன்றம், அரசு, மனித உரிமை ஆணையம், ஊடகம் போன்றவற்றோடு தடையற்ற தொடர்பு கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் இருக்க வேண்டும். ஒரு சில வரையறைகளோடு, இணையதள வசதிகள் கூட ஏற்படுத்தலாம். இப்படிச் செய்தால் சிறைக்கைதிகள் மீது நடைபெறும் அடக்குமுறைகள் குறையும்.
கிருஷ்ணய்யர் சொல்லும் Sight Proof, Sound Proof prisons என்ற நிலை மாற வேண்டும். நாங்கள் திருச்சி சிறையில் இருந்த போது எங்களைப் பார்க்க வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.கல்யாண சுந்தரத்தைக் கூட பார்க்க அனுமதி மறுத்து விட்டார்கள். சிறைக் கண்காணிப்பாளர் தன்னை king of kings (அரசருக்கு அரசர்) என்றுதான் சொல்லிக் கொள்வார்.
நெருக்கடி காலகட்டத்தின் போது ஸ்டாலின், சிட்டிபாபு, ஆற்காடு வீராசாமி போன்ற தி.மு.க. தலைவர்களே இழிவுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டார்கள் என்றால் சாதாரணக் கைதிகளுக்கு யார் பாதுகாப்பு? கோவைச் சிறையில் சினிமா அரங்கு போன்றவற்றைக் கட்டிக் கொடுத்த ஒரு கண்காணிப்பாளரே பின்பு பாம்புத் தோல் கடத்திய வழக்கில் சிறைக்கு வந்தார். நாளை யார் வேண்டுமானாலும் சிறைக்கு வர நேரிடும் என்பது அனைவருக்கும் நினைவிருக்க வேண்டும்.
கிரண் பேடி போன்ற அதிகாரிகள் சிறையில் நல்ல பணி ஆற்றியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே?
இருக்கலாம். என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் மேலிருந்து வரும் சீர்திருத்தம் பெரிய மாற்றம் கொண்டுவராது. இங்கு கூட நடராசன் என்ற அதிகாரி பற்றி பெருமையாகச் சொன்னார்கள். நான் சொன்னேன் அவரை ஒரே ஒரு மாற்றத்தைச் செய்யச் சொல்லுங்கள் என்றேன்.
அதாவது நேர்காணலின் போது கைதிகளைச் சந்திக்க வரும் உறவினர்கள் கும்பல், கும்பலாக இரும்புத் தடுப்பிற்கு வெளியே இருப்பார்கள். இதை மாற்றி கண்ணாடித் தடுப்பு வைப்பாரா? புல்லட் புரூப் கண்ணாடி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும் அவர்களும் இவர்களும் அமைதியாகப் பார்த்துப் பேசிக் கொள்ள வழி செய்யுங்கள் என்றேன். உறவினர்களும் கைதிகளும் தூதரகங்களில் இருப்பது போல மைக், கேட்கும் கருவி மூலம் தடையறப் பேசலாமே! செலவும் அதிகம் ஆகாதே! கைதிகளின் கண்ணியம் பற்றியெல்லாம் அக்கறை இல்லை என்றால் நல்லது எப்படி நடக்கும்?
நீதிமன்றங்களுக்கு இதில் பொறுப்பு இல்லையா ?
ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பல நல்ல தீர்ப்புகளைத் தந்துள்ளது. கிருஷ்ணய்யர், சின்னப்ப ரெட்டி, சந்திரசூட், தேசாய், பகவதி போன்ற நீதிபதிகள் பல நல்ல தீர்ப்புகளை தந்துள்ளனர். இவை செயலாகின்றனவா என்று யார் பார்ப்பது?
வாரம் ஒரு முறை மாவட்ட நீதிபதி சிறைச்சாலையைப் பார்வையிட வேண்டும், புகார்ப் பெட்டி வைக்க வேண்டும், உயர் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்பதெல்லாம் இருக்கின்றன. இந்தியா முழுக்க ஒரே ஒரு மாவட்ட நீதிபதி கூட இதைச் செய்வதில்லை. நடைமுறையில் நிலைமை படுமோசமாக உள்ளது.
கைதிகளின் முன்விடுதலை பற்றி முடிவு செய்ய ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது அறிவுரைக் கழகங்கள் (Advisory Board) கூடி முடிவெடுக்க வேண்டும். ஆனால் அது கூட்டப்படுவதே இல்லை. அதனால்தான் முக்கியத் தலைவர்கள் பிறந்த நாளின் போது விடுதலை செய்யப்படும் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாகத் தெரிகிறது. கடந்த காலங்களில் இந்த அறிவுரைக் கழகங்கள் வழமையாகச் செய்த பணிதான் இது.
இதைப் பற்றி எந்த பத்திரிகையாவது கேள்வி எழுப்புகிறதா? இப்போது கூட தினமலர் நாளிதழ் இந்த முன்விடுதலை பற்றி எள்ளலாகத்தான் செய்தி வெளியிடுகிறதே ஒழிய, 18 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சிறையில் இருப்போரின் உளவியல் பற்றியெல்லாம் அதற்கு அக்கறை இல்லை.
கைதிகளுக்கு சங்கம் வைக்கும் உரிமை வேண்டும். சிறைச்சாலையில் வெளி உலகத்தின் பார்வை வேண்டும். (Social oversight of Prisons), அதனால்தான் மரங்களின் மீதும், கட்டடங்களின் மீதும் போராட்ட சமயங்களில் கைதிகள் ஏறிக் கொண்டு பொது மக்களுக்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறார்கள். தரையில் இருந்து முழங்கினால் சிறைக் கைதிகளின் மண்டையைப் பிளந்து விடுவார்கள்.
1983 -இல் நாங்கள் திருச்சி சிறையில் இருந்த போது தேர்தல் நடத்தி எங்கள் பிரதிநிதிகள் மூலம் சிறை நிர்வாகத்தில் பங்கு எடுத்தோம். சிறை அதிகாரியை துரை என்று கூப்பிடுவதை நிறுத்தினோம். போதைப் பழக்கம், சீட்டு விளையாட்டு குறைந்தது; குறள் வகுப்புகள் நடத்தினோம். உணவின் அளவு, தரம் இவற்றைப் பார்த்துக் கொண்டோம். கண்காணிப்பாளர் வீட்டு நாய்க்குக் கூட சிறையிலிருந்து சாப்பாட்டு தர மாட்டோம் என்று ஊழலை எதிர்த்து நின்றோம்.
1974-ஆம் ஆண்டு தோழர் ஏ.ஜி. கஸ்தூரிரெங்கன் தலைமையில் சிறைப்படுத்தப்பட்டோர் நலவுரிமைச் சங்கம் என்ற ஒன்றை அமைத்து பத்து நாட்கள் உண்ணாவிரதம் இருந்து போராடினோம். போராட்டத்தால் கிடைத்த பலன் குறித்து ஏ.ஜி.கே. “அப்ப நீர்ல மோர் கலந்தாங்க; இப்ப மோர்ல நீர் கலக்குறாங்க” என்று சொல்வார். சிறைப்படுத்தப்பட்ட அனைவரும் ஒடுக்கப்பட்ட தோழர்கள் என்பார்.
நீங்கள் நீதிபதியாக இருந்தால் எஸ்.வி.சேகருக்கு பிணை கொடுத்திருப்பீர்களா?
கொடுத்திருப்பேன். எதிரியாக இருந்தாலும், குற்றவாளிக்குரிய உரிமைகளை மதிக்க வேண்டும். Bail is the rule, and jail is an exception (பிணை என்பது விதி; சிறை விதிவிலக்கு) என்பதுதான் கொள்கை, வழக்குகளை விரைவாக நடத்த வேண்டும். குற்றவாளியா இல்லையா என்பது விரைவில் முடிவு செய்யப்பட வேண்டும்.
இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?
வழக்கம் போல் இயக்கம், எழுத்து தவிர இப்போது சிறப்பாகச் செய்து கொண்டிருப்பதைச் சொல்கிறேன். சிறையிலிருந்த போது கார்ல் மார்க்சின் தாஸ் கேபிடல் மூன்று பாகங்களையும் தமிழில் மூலதனம் என்று மொழி பெயர்த்து அவை ஐந்து புத்தகங்களாக வெளிவந்தன. வெளிவந்து சில ஆண்டுகள் கழிந்து விட்டன.
இப்போது அதன் முதல் பாகத்தையே மூலமுதல் என்ற பெயரில் தூய தமிழில் மீள் மொழியாக்கம் செய்து வருகிறேன். முன்வெளியீட்டுத் திட்டம் அறிவித்துள்ளோம். வருகிற சென்னை புத்தகக் கண்காட்சியின் போது வெளியிடலாம் எனக் கடுமையாக உழைத்து வருகிறோம். நீங்கள் வரும் போது கூட அந்த வேலைதான் செய்து கொண்டிருந்தேன்.
பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர். த டைம்ஸ் தமிழ் இணையத்துக்காக பல்வேறு சமூக அரசியல் சார்ந்த செயல்பாட்டாளர்களை நேர்காணல் செய்து எழுதிவருகிறார்.
ஒளிப்படங்கள் நன்றி: தோழர் தியாகு முகநூல் பக்கம்.
நன்றி : த டைம்ஸ் தமிழ்
சங்க பரிவாரத்திற்கு எதிராக யார், என்ன பேசினாலும் அவர்களுக்குக் கிடைக்கும் பதில்களில் முதன்மையானது ”பாகிஸ்தானுக்குப் போ” என்பதுதான்.
சங்க பரிவாரத்தின் அட்ராசிட்டி தாங்க முடியாமல், “தேச விரோதி” பட்டமும், “சமூக விரோதி”பட்டமும் பெற்றாலும் பரவாயில்லை என ஒருவேளை நீங்கள் பொங்கியெழ நேர்ந்து, அதன் காரணமாக நீங்கள் சங்க பரிவாரத்தால் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டால்?
பாகிஸ்தானில் வாழ அந்நாட்டைப் பற்றி சிறிதேனும் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா ? இந்த வினாடி வினாவை முயற்சித்துப் பாருங்களேன் !
கேள்விகள்:
பாகிஸ்தான் : பொது அறிவு வினாடி வினா
பதிலளிக்க:
– வினவு செய்திப் பிரிவு
காதரீன் மேயோ எழுதிய இந்திய மாதா என்ற புத்தகம் 1928 இல் வெளியிடப்பட்டது. அமெரிக்கப் பெண்மணியான அவர் இந்தியாவை சுற்றிப் பார்த்து, தான் பார்த்ததையும் , கேட்டதையும் புத்தகமாய் எழுதி வெளியிட்டார். இந்தியத் துணைக்கண்டத்தின் பார்ப்பனிய முகத்தை புத்தகம் தொட்டுக் காட்டியதால் உலகம் அதிர்ச்சியுற்றது. அதில் அப்போது நடப்பில் இருந்த மகப்பேறு முறைகள் குறித்து அறியும் போது யாராலும் அதிர்ச்சியுறாமல் இருக்க முடியாது.
1. பிரசவம் என்பது ஒரு தீட்டு சம்பந்தப்பட்ட நிகழ்வு. வழக்கம் போல தீட்டால் ஏற்படும் கொடுமைகள் அனைத்தும் நடந்தன.
2. பிரசவம் பார்ப்பது மருத்துவச்சி என்ற ஒரு தனி சாதி பெண்கள். தீண்டப்படாத சாதியினர்.
3. பிரசவம் ஒரு தீட்டான நிகழ்வாய் இருப்பதால், அது ஒரு தனியான, ஒதுக்குப்புறமான, உபயோகமற்ற, வெளிச்சமும் காற்று வசதியும் அற்ற ஒரு அறையில் தான் நடக்கும். தீட்டு காரணமாய் பெரும்பாலும் பழைய அழுக்கான துணிகளே பயன்படுத்தப்படும்.
4. பிரசவம் பார்க்கும் மருத்துவச்சிகள் பாரம்பரியமாக தாங்கள் கேள்விப்பட்ட முறைகளையும், அப்போது தங்களுக்கு உதிக்கும் திடீர் யோசனைகளையும் பயன்படுத்தியே பிரசவம் பார்த்தனர்.
5. வலி வந்து நேரமாகி விட்டால் தங்கள் கைகளை உள்ளே விட்டு சிசுவின் கையோ காலோ எது கிடைக்கிறதோ அதைப் பிடித்து வெளியில் இழுப்பர். ஒருவரால் முடியாவிட்டால் இரண்டு மருத்துவச்சிகள் முயல்வர். நிச்சயம் இரண்டு உயிர்களில் ஏதாவது ஒன்றாவது போய் விடும்.
6. வலி வந்து தாமதமாகி விட்டால் பெண்ணை சுவர் ஓரமாய் நிறுத்தி வைத்து மருத்துவச்சி ஓடி வந்து பெண்ணின் வயிற்றில் முட்டுவர். அல்லது கைகளால் குத்துவர்.
7. பிரசவம் முடியும் வரையிலும் பெண்ணுக்கு எந்த ஆகாரமும் இல்லை. வலி நான்கு நாட்கள் இருந்தாலும் ஆகாரம் இல்லை.
8. பிரசவம் சீக்கிரம் நடக்க தேளைக் கொண்டு கொட்ட விடுவது, பாம்புத் தோலைக் காட்டி பயப்படுத்துவது போன்ற கொடுமைகளும் நடந்துள்ளன. சில சமயங்களில் பெண்ணை தலைகீழாக குலுக்குவதும் உண்டு.
9. தீட்டு காரணமாய் பிரசவம் அன்னியர் கண் படாமல் இருட்டறையில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தான் நடக்கும். மூடிய அறையில் புகை நிறைந்திருக்கும் சமயத்தில் அன்னியர் யாராவது பார்த்து விட்டார்கள் என்ற சந்தேகம் எழுந்தால் மருத்துவச்சி உடனே சில துர்நாற்றம் தரும் புகையை உண்டாக்குவாள். துர்நாற்றம் தீட்டை போக்கி விடும்.
10. பிரசவத்தில் பெண்ணின் உயிர் போய் விடும் என்ற சந்தேகம் வந்தால் அந்த பெண்ணின் கண்களில் மிளகாய் தூள் நிரப்பப்படும். இறந்த பின் அவள் பேயாக மாறி வழி கண்டுபிடித்து வந்து பழி வாங்கலைத் தடுக்கவே இந்த முறை.
11. அதே போன்று பேயாய் மாறி பழி வாங்கலைத் தடுக்க பெண்ணின் கைகளை தரையில் வைத்து ஆணியடித்தலும் உண்டு. சற்று பிழைக்க வாய்ப்புள்ள பெண்களும் இதனால் இறந்து போயிருப்பார்.
12. தொப்புள் கொடி அறுக்க இரும்புத் தகடோ, கண்ணாடித் துண்டோ , மூங்கில் கழியோ உபயோகப் படுத்தப்படும்.
13. அறுபட்ட தொப்புள் மீது சாம்பலோ, சாணியோ, மண்ணோ தடவப்படும்.
மருத்துவம் வளர்ச்சியுறாத காலத்தில் உலகம் முழுதும் பிரசவங்கள் பாதுகாப்பாய் நடந்திருக்க வாய்ப்பில்லை. அரை குறை வைத்தியங்களே நடந்திருக்கும். ஆனால் இந்தியாவில் பிரசவம் ஒரு தீட்டு சம்பந்தப்பட்ட நிகழ்வாய் இருந்ததால் உலகில் எந்த பகுதியிலும் அனுபவிக்காத கொடுமைகளை இங்கே பெண்கள் அனுபவித்துள்ளனர்.
இதில் தீட்டு இல்லாதிருந்திருந்தால், சமூகத்தின் பொது அக்கறை இதில் இருந்திருக்கும். குறைந்தபட்சம் ஒரு வெளிச்சமுள்ள காற்றோட்டமுள்ள இடத்திலாவது பிரசவம் நடக்க வேண்டும் என்ற அறிவாவது பெற்றிருப்பர். தீட்டு பிரசவம் குறித்த ஒரு பொது அறிவை வளர விடாமல் தடுத்துவிட்டது.
சாதியத்தையும், பார்ப்பனியத்தையும், தீட்டையும், இந்து மதத்தையும் பிரித்துப் பார்ப்பது முடியாத ஒன்று.
– மூன்று வருடங்கள் முன்பு எழுதியது.
எங்கள் குடும்பங்களில் பிரசவித்த பெண்ணுக்கு தண்ணீர் தர மாட்டார்கள்.
தாகம் எடுத்து உயிர் போவதாய் இருந்தாலும் தர மாட்டார்கள். ஒரு கால் டம்ளர் தண்ணீர் மட்டும் போனால் போகிறதென்று தருவார்கள். இந்த பத்தியம் இரண்டு வாரங்களுக்கு இருக்கும். சுத்தமற்ற தண்ணீர் குடித்தால் நோய் வரும் என்பதற்காக ஆரம்பத்தில் தவிர்த்திருப்பார்களோ என்னவோ. ஆனால் கடைசியில் அது ஒரு சடங்காகவோ கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய ஒன்றாகவோ மாறி விட்டது .
முதல் குழந்தை பெற்ற போது ( 90 களில் ) தண்ணீர் தாகத்தால் என் பெரிய அக்கா பட்ட துன்பத்தை நேரில் பார்த்திருக்கிறேன். முதல் இரண்டு வாரங்கள். மிகப் பெரிய அவஸ்தை. ஒரு நாளைக்கு மீறிப் போனால் ஒரு டம்ளர் தண்ணீர் தான் கிடைக்கும்.
நாட்கள் கழிந்த பின் அவளிடம் மெதுவாய் கேட்டேன், எப்படி சமாளித்தாய் என்று. அம்மா குளிக்க வைக்கும் போது தலையோடு தண்ணீர் ஊற்றுவாள். அப்போது அதில் கொஞ்சம் தெரியாமல் குடித்துக் கொள்வேன் என்று சொன்னாள்.
நன்றி: ஃபேஸ்புக்கில் – துணைத் தளபதி மார்கோஸ்
பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியாதான் முதலிடம். பெண்கள் மீதான குற்றங்களுக்கு வேடிக்கை பார்க்காமல் ஒன்றுபட்டு போராடுவோம்! என்ற கோரிக்கைகளோடு, பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரத் தாக்குதலுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம், பெண்கள் விடுதலை முன்னணியின் சார்பில் கடந்த 04.08.2018 அன்று, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் டெம்போ நிறுத்தம் அருகில் நடைபெற்றது.
தோழர் பழனியம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் ஜானகிராமன் ஆகியோர் பங்கேற்று உரை யாற்றினர்.
முன்னணியாளர்கள் தமது உரையில், ”காஷ்மீரில் 8 வயது ஆசிபா , அயனாவரத்தில் 11 வயது சிறுமி, புதுக்கோட்டையில் 17 வயது சிறுமி, அரியானாவில் வேலை கேட்டு சென்ற இளம்பெண் என சிறுமிகளையும், பெண்களையும் 10, 20, 40 பேர் சேர்ந்து குதறும் கொடூரம் தினந்தோறும் நடக்கிறது. செய்திகளைக் கேட்டாலே நெஞ்சம் பதறுகிறது.
எந்த மிருகமும் கூட்டு வல்லுறவில் ஈடுபடுவதில்லை. அவற்றை விடவும் மோசமானவனாக மனிதன் தாழ்ந்து போகக் காரணம் என்ன? 20 வயது கூட நிரம்பாத இளைஞனும், 60 வயதைத் தாண்டிய கிழவனும் சேர்ந்து சூறையாடுகிறார்களே யார் இவர்கள்? ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? எந்தக் கேள்விக்கும் பதில் தேடாமல், குழந்தைகளையும், பெற்றவர்களையும் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி விளம்பரம் போடுவது அயோக்கியத் தனமில்லையா?
பெண்கள் வாழத்தகுதியற்ற நாடுகளில் இந்தியா தான் முதலிடம் என்பதற்கு இந்த சம்பவங்களை விட வேறு சாட்சி என்ன வேண்டும்? எச்ச ராஜா கும்பல் இது பற்றி வாய் திறக்க மறுப்பது ஏன்? கோவிலுக்குள் வைத்து வல்லுறவு செய்யும் இந்துமத வெறியர்கள், பாவமன்னிப்பு கேட்க சென்ற பெண்ணைச் சீரழிக்கும் பாதிரிகள், ஒடுக்கப்பட்ட பெண்களைச் சூறையாடும் ஆதிக்க சாதிவெறிக் கும்பல் என ஆணாதிக்க, காமவெறி நிரம்பி வழியும் மூளைகளைத்தான் சாதி, மதங்கள் உருவாக்கி வருகின்றன. பெண்கள் என்றாலே நுகர்ந்து தள்ள வேண்டிய இன்பம் தரும் பண்டம் என்ற வெறியை உருவாக்கும் இன்டர்நெட், ஸ்மார்ட் போன் வடிவத்தில் சனியன் சட்டைப்பையில் உட்கார்ந்திருக்கிறது.
ஆபாசச் சீரழிவுகளைத் தடுக்க மறுக்கும் அரசிடம், சாராயக் கடைகளை நடத்தும் அரசிடம் கெஞ்சிக் கூத்தாடினால் என்ன நடக்கும்? வீதி, வீதிக்கு, வாசலுக்கு வாசல் சி.சி.டி.வி. கேமரா வைக்கச் சொல்லுவான்.
வீதியில் கேமரா வைப்பதால் சிந்தனை சீரழிவதைத் தடுக்க முடியுமா? கேப்பையில் நெய் வடிகிறது என்பதை நம்பும் கேனைகளாக எத்தனை நாட்களுக்கு இருக்கப் போகிறோம்? சாராய போதையில் தன்னை மறந்து, இண்டர்நெட் காம வெறியில் திளைத்து சமூகத்தின் கேடுகளாக மாறுவது நின்றுவிட்டால், எல்லாரும் சிந்திக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும்? கார்ப்பரேட் கம்பெனிகள் அடிக்கும் கொள்ளையை, காவிக்கூட்டம் நடத்தும் கலவரங்களைக் கேள்வி கேட்கும் திறன் மக்களின் மூளைகளுக்கு வந்துவிடும். அப்படி நடந்து விடாமல் தடுக்கத்தான் எல்லா அசிங்கங்களையும் அரசே பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.
பெண்களை இழிவுபடுத்தி சிதைக்கும் ஆணாதிக்கத்தை, பாலியல் வக்கிரத்தை உருவாக்கிப் பரப்பும் சாதி – மத பிற்போக்கினையும், நுகர்வு வெறியை – காமவெறியைத் தாண்டிவிடும் ஆபாசக் குப்பைகளையும் ஒழிக்காமல், எந்த வீட்டிலும் தாய், மகள், மனைவி, சகோதரி என யாரையும் பாதுகாக்க முடியாது. வலுவான சட்டம், கடுமையான தண்டனை எதுவும் நிரந்தரத் தீர்வாகாது என்பதை உணர்வோம்!
பிற்போக்கு, ஆபாசக் குப்பைகளை ஒழித்து, பெண்ணை சக மனுசியாக மதிக்கும் புதிய வகைப்பட்ட, சமத்துவமான பண்பாட்டை உருவாக்க, அனைவரும் போராட்டக்களத்தில் கரம் கோர்ப்போம்! பல இலட்சம் பேர் கூடிய மெரீனா போராட்டத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். பல மாதம், வருடம் என்று நீண்ட எல்லாப் போராட்டங்களிலும் பெண்கள் பாதுகாப்பாகவே இருந்தார்கள். ஆம், போராட்டங்களே பெண்களை, சமூகத்தைப் பாதுகாக்கும். வாருங்கள் போராடுவோம்!” என அறைகூவல் விடுத்தனர்.
தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி, தமிழ்நாடு.
அர்த்தம் தெரியாமல் இந்த உலகத்தில் பல காரியங்களை நாம் செய்து கொண்டிருக்கிறோம். அர்த்தம் இல்லாமலும் பல காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறோம்.
பூனை குறுக்கே வந்துவிட்டது என்பதற்காக புறப்பட்ட பயணத்தைத் தள்ளி வைக்கிறவர்கள் உண்டு. பல்லி விழுந்து விட்டது என்பதற்காக பஞ்சாங்கத்தைப் புரட்டிக் கொண்டிருக்கிறவர்கள் உண்டு.
பகுத்தறிவு சிந்தித்துச் செயல்பட வைக்கும். என்ன செய்கிறோம் என்பதை தெளிய வைக்கும். ஏன் செய்கிறோம் என்பதையும் புரிய வைக்கும்.
அளவுக்கு மீறின சகுன நம்பிக்கைகள் இருக்கிறது பாருங்கள்… அதோடு பயமும் சேர்ந்து கொள்ளுமானால் அவ்வளவுதான். மனிதனின் மனநிலை பாதிக்கப்படும். இது மனவியல் நிபுணர்களின் கருத்து.
ஒருத்தருக்கு ஏழாம் நம்பர்தான் ராசியான நம்பராம். ஏழாம் தேதிதான் எந்தக் காரியத்தையும் ஆரம்பிப்பார். ஏழு எழுத்து வருகிற மாதிரி பெயரை மாற்றி வைத்துக் கொண்டார். ஏழு மணிக்குத்தான் தினமும் எழுந்திருப்பார். ஏழாம் நம்பர் வீட்டில்தான் குடியிருப்பார். கல்யாணம்கூட ஏழாம் தேதிதான் பண்ணிக் கொண்டார்.
அவர் ஒருநாள் குதிரைப் பந்தயத்துக்குப் போனார். குதிரைகளின் பெயரையெல்லாம் பார்த்தார். ஒரு குதிரையின் பெயர் ஏழு எழுத்தில் இருந்தது. ஏழுதானே இவருக்கு அதிர்ஷ்ட நம்பர். அதனால் உடனே அந்தக் குதிரையின் மேல் பணத்தைக் கட்டினார். பந்தயம் நடந்தது. அவர் சொன்னார் சோகமாக: நான் பணம் கட்டின அந்தக் குதிரை ஏழாவதா வந்து சேர்ந்தது!
இப்படி சகுணங்களும், மூட நம்பிக்கைகளும், சம்பிரதாயங்களும் நம்மைக் கோமாளிகளாக்கி விடுகின்றன. அப்படி ஆகிவிடக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில் அருமை நண்பர் மஞ்சை வசந்தன் அவர்கள் சம்பிரதாயங்கள் பற்றி அரிய செய்திகள் பலவற்றை இந்த நூலிலே ஆய்வு செய்து தந்திருக்கிறார். – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
செவ்வாய், வெள்ளி, புதன், சனி கிழமைகளின் எண்ணெய்த் தேய்க்கும் சம்பிரதாயத்தில் தொடங்கி, ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு விளக்கு செல்வது வரை 100 வாழ்வியல் நடப்புகளை அக்குவேறு ஆணிவேராகப் பிய்த்து எடுக்கிறார் நூலாசிரியர். மரத்துப் போய்விட்ட மனிதத் தோல்களுக்கு தகுந்த தார்க்குச்சிகளும் இதில் உண்டு.
– கலி.பூங்குன்றன்
முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக அதை அப்படியே ஏற்றுக்கொள்வதும் தவறு; முன்னோர்கள் சொன்னவை அனைத்தும் மூடத்தனமானவை என்று ஏற்றி எறிவதும் தவறு. எதையும் ஏன் என்று ஆராய்ந்து சரியென்றால் மட்டும் ஏற்க வேண்டும் என்பதே அறிவிற்கு அழகு. மரபுவழியாக எவ்வளவோ செயல்களைக் காரணம் புரியாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வருகிறார்கள். சரியா? தேவையா? பயன் என்ன? பாதிப்பு என்ன? என்பதை ஆராய்வது இல்லை.
‘முன்னோர்கள் செய்தார்கள் நாமும் செய்ய வேண்டும்.’ முடிவு எளிதாகிவிடுகிறது. அம்முடிவின்படி பொருள் விரையம், பொழுது விரையம், உழைப்பு விரையம் என்பதையெல்லாங்கூட பொருட்படுத்தாமல் எப்படியும் செய்து முடிக்கின்றனர். காரணம் புரியாமல் கடமையாகச் செய்யப்படுவதால், அது அர்த்தமற்ற சடங்காக மட்டுமே அமைந்து போகிறது. பல பயித்தியக்காரச் செயல்களாகக் கூட பரிணாமம் பெற்று விடுகின்றன.
– மஞ்சை வசந்தன்
***
பார்ப்பன இந்துமதம் உருவாக்கி வளர்த்த சம்பிரதாயம், சடங்குகளும், தற்போது, ஹீலர் பாஸ்கர் வகையறாக்கள் பரப்பிவரும் இலுமினாட்டி சதிக்கருத்துகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டும் மூடநம்பிக்கைகள் என்ற வகைப்படுத்தலில் ஒன்று சேர்கின்றன.
மரபுவழியாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த பழக்கவழக்கங்களே மிகவும் சரியானதென்றும்; நவீன அறிவியலை மறுதலித்து, இயற்கைக்குத் திரும்புதல் என்ற பெயரில் ஹீலர் பாஸ்கர் மற்றும் பாரிசாலன் வகையறாக்கள் வைக்கின்ற வியாக்யானங்கள் அபத்தமானவை என்பதை புரிந்துகொள்வதற்கும் இந்நூல் உதவி புரியும்.
இன்றும் நம் மக்கள் அன்றாட வேலை தொட்டு, குடியிருக்கும் வீடு வரை எண்ணிறந்த முட்டாள்தனங்களை பின்பற்றி வருகின்றனர். அதற்காகவே பெரும் பணத்தையும் செலவழிக்கின்றனர். இவற்றை எதிர்த்தும், அம்பலப்படுத்தியும் மக்களிடையே பிரச்சாரம் செய்து விழிப்பூட்டுவதற்கும் இந்நூல் உதவும்.
நூல்: சம்பிரதாயங்கள் சரியா
ஆசிரியர்: மஞ்சை வசந்தன்
வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,
பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை – 600 007. பேச: 044 – 2661 8161.
பக்கங்கள்: 114
விலை: ரூ.70
தங்களது புரிதலுக்கு அப்பாற்பட்ட, தங்களது அறிவிற்கு அப்பாற்பட்ட, தங்களது நம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு தரவையோ, ஆதாரத்தையோ, சம்பவத்தையோ எதிர்கொள்ளும் போது அவர்களது மனம் தங்களுக்கு தெரிந்த தகவல்களை வைத்து ஒரு படிவத்தை உருவாக்கிக்கொள்கிறது. அதாவது மலைபாம்பு சந்திரனை விழுங்கிவிடுகிறது.
உங்களிடம் வந்து உலகம் உண்மையில் உருண்டையானது அல்ல. மாறாக அது தட்டையானது. இந்த உண்மையை உலகில் உள்ள எல்லா அரசாங்கங்களும் சேர்ந்து நம்மிடமிருந்து மறைக்கிறார்கள் என்று ஒருவர் மிக சீரியசாக சொன்னால் நீங்கள் அவர் சொல்வதை நம்புவீர்களா?. சரி இது பரவாயில்லை.
இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஹிட்லர் உள்ளிட்ட முக்கிய நாஜி தலைவர்கள் தப்பி நிலவுக்கு சென்று விட்டார்கள். அவர்கள் இன்னமும் நிலவில் வசித்து வருகிறார்கள் என்று ஒருவர் உங்களிடம் வந்து சொன்னால் அவர் சொல்வதை நம்புவீர்களா? சரி வெளிநாடுகளை விடுங்கள்.
நேதாஜி விமானா விபத்தில் சாகவேயில்லை. அவர் ரஷ்யா சிறையில் அடைத்து வைக்கப்பட்டு அங்கேயே இறந்தார். நேரு உள்ளிட்ட இந்திய தலைவர்களுக்கு இது தெரியும் என்று ஒருவர் பல ஆதாரங்களை காட்டி சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
“நேதாஜி விமானா விபத்தில் சாகவேயில்லை. அவர் ரஷ்யா சிறையில் அடைத்து வைக்கப்பட்டு அங்கேயே இறந்தார். நேரு உள்ளிட்ட இந்திய தலைவர்களுக்கு இது தெரியும் என்று ஒருவர் பல ஆதாரங்களை காட்டி சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?”
சரி தமிழக அளவில் வருவோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கப்பட்ட நாட்களுக்கு முன்பே இறந்துவிட்டார். அவரது கால்கள் வெட்டி எடுக்கப்பட்ட நிலையில்தான் அவர் புதைக்கப்பட்டார் என்று ஒருவர் பல ஆதாரங்களோடு சொன்னால் அவர் சொல்வதை நம்புவீர்களா?
சிலர் மேல் சொன்ன எல்லாவற்றையும் நம்புவார்கள். சிலர் ஒன்றிரண்டை, சிலர் எதையுமே நம்பமாட்டார்கள். மேல் சொன்னவை எல்லாம் சதி ஆலோசனை கோட்பாடுகள்(conspiracy theories) என்று சொல்லப்படும் மறைக்கப்பட்ட/திரிக்கப்பட்ட ரகசிய உண்மைகள் என்று பலராலும் நம்பப்படும்/பரப்பப்படும் கோட்பாடுகளுக்கான உதாரணங்கள்.
இவையில்லாமல் பல்லி வம்ச அரசாட்சி. வேற்றுகிரக வாசிகளின் வந்து போவது, ஸ்டான்லி குப்பிரிக் நிலவு கால்பதிப்பு என்று எண்ணற்ற அதிரி புதிரியான சதியாலோசனை கோட்பாடுகள் காற்றில் உலவுகின்றன.
மற்ற விலங்குகளை விட மனிதர்கள் பலவகையிலும் மேம்பட்ட அறிவுத்திறனை பெற்றிருக்கிறார்கள். இந்த மேம்பட்ட அறிவுத்திறனே, நம்மை உணவு சங்கிலியில் உயரத்தில் வைத்து மற்ற எல்லா ஜீவராசிகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றலை தந்திருக்கிறது.
மனிதர்களின் அறிவுத்திறன் பல்வேறு தளங்களில், பல்வேறு நிலைகளில் இயங்குகிறது. அதில் நமக்கிருக்கும் ஒரு முக்கியமான திறன் நமக்கு கிடைக்கும் எக்கச்சக்கமான தரவுகளை, தகவல்களை பெற்று, பகுத்து, சேமித்து பின்பு தேவையான நேரங்களில் அதை பயன்படுத்திக்கொள்ளும் சாமர்த்தியம். நாம் ஒவ்வொரு நாளும் ஏராளமான தரவுகளை, அனுபவங்களை, உணர்வுகளை சேமிக்கிறோம். இவையெல்லாவற்றையும் மூளை பெற்று, பகுத்து, சேமிக்க, பின்பு அதை விரைவாக தேவையான பொழுது எடுத்து பயன்படுத்த, நாம் பரிணாமத்தில் ஒரு திறனை(skill) வளர்த்து கொண்டிருக்கிறோம்.
கணினி எப்படி எல்லா தரவுகளையும் 0 மற்றும் 1 என்று சேமித்து வைத்து பயன்படுத்துகிறதோ அதே போல நமது மூளையும் எல்லா தகவல்களையும் பெற்று ஒரு படிவமமாக(pattern) சேமித்து வைத்துக் கொள்கிறது. நாம் எல்லா தகவல்களையும் படிமமாகவே பெறுகிறோம், படிவமாகவே சேமித்து வைக்கிறோம். ஒரு படிவமாக இருக்கும் எல்லாமும் நமக்கு இனிமையாக ரசனைக்குரியதாக இருக்கிறது.
உதாரணத்திற்கு ஏராளமான மரங்களுக்கிடையில் நீங்கள் சம்மந்தமில்லாமல் எங்கோ நின்று கொண்டிருக்கும் ஒரு புகைப்படமும், புகைப்படத்தின் ஒரு ஓரத்தில் நீங்கள் நிற்க உங்களுக்கு பின் வரிசையாக மரங்களிருக்கும் வகையில் படம் பிடிக்கப்பட்ட ஒரு புகைப்படமும் இருந்தால் உங்களுக்கு எது பிடிக்கும்? இரண்டாவதுதான் இல்லையா? ஏனென்றால் இரண்டாவதில் ஒரு pattern இருக்கிறது.
இரண்டாவதை உங்கள் மூளை அணுகுவது எளிதாகவும், இனிமையாகவும் இருக்கிறது. அதனால் உங்களுக்கு அது பிடித்து போகிறது. நீங்கள் கிட்டார் எடுத்து வாசித்தால் உங்களுக்கே மூளை வெடித்து சிதறுவதை போல கொடூரமாக உள்ளது. ஆனால் கிட்டார் தெரிந்தவர் வாசித்தால் இனிமையாக இருக்கிறது. ஏனென்றால் அவரது மீட்டலில் ஒரு pattern இருக்கிறது. ஒருவகையில் எல்லா கலை வடிவங்களும் செயற்கையாக படிவங்களை உருவாக்குபவையே.
இந்நிலையில் நிஜவாழ்வில், நிஜ உலகில் நடப்பவை எல்லாம் நமது மூளையின் புரிதலுக்கு உட்பட்டேதான் நடக்குமா? நம்மால் எல்லா தரவுகளையும், தகவல்களையும் ஒரு படிவமாக்க முடியுமா? ஒரு படிவத்திற்குள் அடங்காத ஒரு தகவலை, ஒரு நிகழ்வை, ஒரு உணர்ச்சியை நமது மூளை எப்படி அணுகும்?
தெரியாத விஷயங்களை அறிவியல் ‘x’ என்று பெயரிட்டு தனக்கு தெரியாது என்று அறிவித்து விடுகிறது. ஆனால் அதுபோன்ற இயல்பு நமது மூளைக்கு கிடையாது.
நிஜவாழ்வில், நிஜ உலகில் நடப்பவை எல்லாம் நமது மூளையின் புரிதலுக்கு உட்பட்டேதான் நடக்குமா? நம்மால் எல்லா தரவுகளையும், தகவல்களையும் ஒரு படிவமாக்க முடியுமா? ஒரு படிவத்திற்குள் அடங்காத ஒரு தகவலை, ஒரு நிகழ்வை, ஒரு உணர்ச்சியை நமது மூளை எப்படி அணுகும்?
வானில் அது பாட்டுக்கு போய் கொண்டிருக்கும் மேகங்களை பார்த்து ஆடு மாடுகளை வரைய கூடியது நமது மனம்/மூளை. அதாவது படிவமற்ற மேகங்களை நமக்கு தெரிந்த உருவங்கள் மூலமாக ஒரு படிவமாக்கி உள்வாங்கி கொள்ளும் திறன்/இயல்பு நமக்கிருக்கிறது. இதன் மூலமாகவே நாம் கருணையற்ற சமரசமற்ற காலத்தின் போக்கை நாம் கொஞ்சமாவது தைரியத்தோடு அணுகுகிறோம். அதாவது எல்லாமும் எனது கட்டுப்பாட்டில், எனது புரிதலுக்குள் தான் இருக்கிறது என்னும் நம்பிக்கையில்.
இந்த நம்பிக்கை சவாலுக்கு உள்ளாகும்போது, இந்த நம்பிக்கை சோதனைக்கு உட்படும்போது என்னாகும்? நமது மூளை செயற்கையான படிவங்களை உருவாக்கி அந்த நம்பிக்கையை தற்காத்துக் கொள்ளும்.
சூரியகிரகணம் என்பது மலைபாம்பு சூரியனை விழுங்குவது என்னும் புரிதலை முன்வைத்து ஆதி கால மனிதர்கள் கிரகணத்தை குறித்து ஒரு படிவத்தை உருவாக்கியது இதன் அடிப்படையிலேயே. சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களை இதன் பின்னணியிதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
எம்.ஜி.ஆர் தங்கம் பஸ்பம் சாப்பிடுவாப்ல. அதுலதான் எதோ கோளாறாகி செத்தாப்ல என்னும் ரீதியில் பேசும் சதியாலோசனை கோட்பாளர்களிடம் அப்படியா ஜி கேக்கவே அதிர்ச்சியா இருக்கு..டீக்கு காசு குடுத்துடுங்க கிளம்பலாம் என்று அவர்களை கையாளலாம். அவர்கள் குழந்தைகள். சுவாரஸ்யமானவர்கள்.
தங்களது புரிதலுக்கு அப்பாற்பட்ட, தங்களது அறிவிற்கு அப்பாற்பட்ட, தங்களது நம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு தரவையோ, ஆதாரத்தையோ, சம்பவத்தையோ எதிர்கொள்ளும் போது அவர்களது மனம் தங்களுக்கு தெரிந்த தகவல்களை வைத்து ஒரு படிவத்தை உருவாக்கிக் கொள்கிறது. அதாவது மலைபாம்பு சந்திரனை விழுங்கி விடுகிறது.
சரி. கழுதை மேய்க்கிற பையனுக்கு இவளோ அறிவா என்று பொறாமை படாமல் நாம் விலகி செல்லலாம் என்றால் அதில் ஒரு சிக்கலிருக்கிறது. அதாவது எம்.ஜி.ஆர் தங்கம் பஸ்பம் சாப்பிடுவாப்ல. அவரு அதுலதான் எதோ கோளாறாகி செத்தாப்ல என்னும் ரீதியில் பேசும் சதியாலோசனை கோட்பாளர்களிடம் அப்படியா ஜி கேக்கவே அதிர்ச்சியா இருக்கு..டீக்கு காசு குடுத்துடுங்க கிளம்பலாம் என்று அவர்களை கையாளலாம். அவர்கள் குழந்தைகள். சுவாரஸ்யமானவர்கள்.
ஆனால் காலநிலை மாற்றம் – climate change என்பது பொய், நோய் தடுப்பூசி போடவே கூடாது, actually (உண்மையில்) பெரியாரே ஒரு இலுமினாட்டி guy (ஆள்) என்னும் ரீதியில் conspiracy theory – (சதிக்கோட்பாடு)ஐ நம்பும், பரப்பும் ஆட்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
ஏன் என்றால் அவர்களால் உயிரிழப்புகள் தொடங்கி சமூக குழப்பம் முதல் பல ஆபத்தான சிக்கல்கள் உருவாகும். இந்நிலையில்தான் நாம் அவர்களை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
சதி ஆலோசனை கோட்பாளர்களை பற்றி மனநல நிபுணர்கள் உலகம் முழுவதும் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். பாரி சாலன் என்பவர் தனி ஆள் கிடையாது. தோப்பு.
தொடர்புடைய கட்டுரைகள்:
திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !
இந்த எண்களில் உங்களால் ஒரு pattern (படிவம்) இருப்பதை கவனிக்கமுடிகிறதா? கவனித்து வையுங்கள்…
அமெரிக்க மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஏதாவது ஒரு சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களாக இருக்கிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் சொல்லுகின்றன.
1890 முதல் 2010 வரை New York times (நியூயார்க் டைம்ஸ்) மற்றும் Chicago tribune (சிகாகோ டிரிபியூன்) பத்திரிகைகளுக்கு வந்த 100,000-க்கு மேற்பட்ட கடிதங்களை ஆய்வுக்கு உட்படுத்தியபோது ஒன்று அல்லது அதற்கு மேலான சதி ஆலோசனை கோட்பாடுகளை வலியுறுத்திய கடிதங்களின் சதவிகிதம் மிகவும் consistent -ஆக (தொடர்ச்சியாக) எல்லா காலங்களிலும் இருந்திருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அதாவது எல்லா காலங்களிலும் சதியாலோசனை கோட்பாடுகளில் மனிதர்களின் மனங்கள் ஈர்ப்பு கொண்டே இருந்திருக்கிறது. சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களை வடிகட்டிய முட்டாள்கள், கோமாளிகள் என்று அறிவியலாளர்கள் ஏளனம் செய்து ஒதுக்கிவிட்டு கடந்து சென்ற காலம் முடிவுக்கு வந்திருக்கிறது.
அமெரிக்க மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஏதாவது ஒரு சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களாக இருக்கிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் சொல்லுகின்றன.
தகவல் தொழில்நுட்பம் நினைத்து பார்க்கமுடியாத வளர்ச்சியை அடைந்திருக்கும் இந்த காலத்தில் நல்லவையோ, கெட்டவையோ, உண்மையோ, பொய்யோ தகவல் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் பரவுகிறது. இது சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களுக்கும், பரப்புவர்களுக்கும் முன்னெப்போதும் இல்லாத வலிமையை அளித்திருக்கிறது.
அதாவது தடுப்பூசிகள் உண்மையில் நோயை தடுக்க போடப்படுபவை அல்ல மாறாக அவை நோயை பரப்பவே போடப்படுகின்றன என்கின்ற சதியாலோசனை கோட்பாளர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தகவலை அவர்களிடம் இருக்கும் குதர்க்கமான கோமாளித்தனமான தரவுகளை வைத்து விளக்கி, ஊடகங்களில் பரப்பி ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுவதை தடுத்து பின்னாட்களில் அந்த குழந்தைகளை நோயில் தள்ளி வெற்றிகரமாக சாகடிக்க முடியும்.
இதன் பின்னணியில்தான் மனநல நிபுணர்களும், மூளை நிபுணர்களும் இந்த சதி ஆலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களை குறித்தும், அதை பரப்புகிறவர்கள் குறித்தும் தீவிரமான ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்கள். சதி ஆலோசனை கோட்பாடுகள் எதனால் உருவாகின்றன? அல்லது சதியாலோசனை கோட்பாடுகளை ஏன் உருவாக்குகிறார்கள்? மனிதர்களுக்கு சில இயல்பான psychological (உளவியல்) தேவையும், அவசியமும் உள்ளன. அவற்றில் சில முக்கியமான தேவைகளாக கீழ் உள்ளவைகளை மனோதத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்தத் தேவையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் அடைய முயற்சிக்கிறார்கள்.
அறிவியல் சார்பு, இறையியல் சார்பு, மதம் சார்பு, சாதி சார்பு, தத்துவ நிலைப்பாடுகள் சார்பு, கலைகள் சார்பு என்று பலவகையான சார்புகளை கொண்டு நாம் நமது மனதின் அடிப்படை தேவைகளை அணுகுகிறோம். அதில் ஒரு சார்புதான் சதியாலோசனை கோட்பாடுகள் மீதான நம்பிக்கை சார்ந்த சார்பு.
உலகில் நடக்கின்ற எல்லா நிகழ்வுகளையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. உதாரணத்திற்கு நீங்கள் ஒவ்வொரு முறை பிரியாணி செய்யும் போதும் அடிபிடித்து விடுகிறது. தொடர்ந்து 10 முறை இதுவே நடக்கிறது. உடனே உங்கள் மனம் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்கத் துடிக்கும் இல்லையா?
நீங்கள் தர்க்கபூர்வமானவர் என்றால் இனிமேல் இந்த பாத்திரத்தில் இனி பிரியாணியே செய்யக் கூடாது. இதில் செய்தாலே அடிபிடிக்கிறது என்று ஒரு காரணத்தை கண்டுபிடித்தவுடன் உங்கள் மனம் அமைதி அடையும்.
நீங்கள் மத நம்பிக்கையுள்ளவர் என்றால் கோவிலுக்கு போய் மாசக்கணக்கில் ஆகிறது. மொதல்ல வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போகணும். மனசே சரியில்ல. எப்ப பிரியாணி செஞ்சாலும் அடிபிடிக்கிறது என்று ஒரு விடையை அடைவீர்கள்.
சீமானின் தம்பி என்றால் நம்ம பெரும்பாட்டனும் பெரும்பாட்டியும் நல்லா கருப்படிச்ச மண்பானையில் பிரியாணி செஞ்சு சாப்டாங்க. பிரியாணி அடிபிடிக்காம வந்துச்சு. உடம்பும் நல்லா இருந்துச்சு. எப்போ தமிழன் திராவிடத்திடம் மண்டியிட்டானோ அப்பவே அலுமினியம் டபரா வெள்ளையா இருக்குனு மண்சட்டிய கைவிட்டுட்டான். இப்போ பிரியாணி முரட்டுத்தனமா அடிபிடிக்குது என்று ஒரு விடையை கண்டுபிடிப்பார்கள்.
இதுவே பாரிசாலன் வீட்டில் பிரியாணி கருகியிருந்தால் அலுமினிய டபராவை இரண்டாம் உலகப்போரில் sausage வேக வைக்க ஜெர்மனிய சிப்பாய்கள் பயன்படுத்தியதைப் பார்த்த இலுமினாட்டிகள் இப்படியே போனால் எவர் சில்வர் வியாபாரம் படுத்துவிடும் என்று பிளான் பண்ணி நல்லவர் ஹிட்லரை வீழ்த்தி அலுமினியம் டபரா தொழில்நுட்பத்தையும் திருடி உலகம் முழுவதும் விற்று லாபம் பார்த்தார்கள் என்றும் இதற்கு இலுமினாட்டி பெரியாரும் உடந்தை. அதற்கு சாட்சிதான் பெரியாருடைய அலுமினிய மூத்திர சட்டி என்று தனது வீட்டில் பிரியாணி கருகியதற்கான விடையை கண்டுபிடித்திருப்பார்.
உண்மையில் அந்த பிரியாணி கருகியதற்கு மேல் சொன்ன எந்த காரணமுமே இல்லாமல் வேறொரு காரணம் இருந்திருக்கலாம். அல்லது காரணமே இல்லாத ஒரு random occurrence (தற்செயலான நிகழ்வு)ஆக இருந்திருக்கலாம்.
ஆனால் அதை நம் மனம் ஏற்காது. ஒரு நிகழ்வின்/சம்பவத்தின் காரண காரியத்தை புரிந்துகொள்வதின்/விடைகாண்பதின் மூலமே நமக்கு ஒரு நிலைத்தன்மை கிடைக்கிறது. அதனால் தான் நாம் அடுத்த பத்து ஆண்டுகளில் நாம் செய்ய வேண்டியதை திட்டமிட முடிகிறது.
நமது புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு சம்பவம் நடக்கும் பொழுது உதாரணத்திற்கு மலேஷியா விமானம் காணாமல் போனதை போன்ற ஒரு சம்பவம் நடக்கையில், தங்களுக்கு அதற்கான விடை தெரியவில்லை அல்லது அது தங்களுது புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், அந்த உண்மையை சந்திக்கும் தைரியம் இல்லாதவர்கள் பாரிசலானின் பிரியாணி டபரா தியரி போன்ற கோமாளித்தனமான கோட்பாடுகளை உருவாக்குகிறார்கள் அல்லது நம்பத் தொடங்கிக்கிறார்கள்.
தொடர்புடைய கட்டுரைகள்:
பாட்டி வைத்தியத்திற்கும் பாதுகாப்பான மகப்பேற்றிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை !
நாம் எல்லாமும் நமது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்னும் நம்பிக்கையில்தான் ஒரு சமூக ஒழுங்கோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். செல்லூர் ராஜு தெர்மாகோல் அறிவியலை அடுத்த எலேக்ஷன் வரைதான் முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதால்தான் நம்மால் நிம்மதியாக தூங்க போக முடிகிறது. ஏனென்றால் தேர்தல் ஓட்டு என்னும் கட்டுப்பாடு(control) நம்மிடம் உள்ளது.
செல்லூர் ராஜு நிரந்தர மந்திரி. நம்மால் அவரை ஒன்றுமே செய்யமுடியாது என்ற நிலையில் நம் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சியையும், கையறு நிலையையும், பயத்தையும் யோசித்து பாருங்கள்.
அதிகாரம்/கட்டுப்பாடு(control) நமக்கு தைரியத்தையும் நம்பிக்கையும் சமூக ஒழுங்கையும் அளிக்கிறது. control இல்லாத போது நாம் பயம் கொள்கிறோம். இந்த பயம் நம்மை பீடித்து கொள்ளும் போது நாம் ஒரு சதியாலோசனை கோட்பாடுகளை நம்ப தொடங்குகிறோம்.
அதாவது அதிகாரம்/கட்டுப்பாடு(control) நமக்கு தைரியத்தையும் நம்பிக்கையும் சமூக ஒழுங்கையும் அளிக்கிறது. control இல்லாத போது நாம் பயம் கொள்கிறோம். இந்த பயம் நம்மை பீடித்து கொள்ளும் போது நாம் ஒரு சதியாலோசனை கோட்பாடுகளை நம்ப தொடங்குகிறோம்.
உதாரணத்திற்கு ஒருவர் பிறப்பு தொட்டு சாதியை பயின்று வருகிறார். தான் ஒரு மிகவும் கண்ணியமான, கம்பீரமான, கலாச்சாரமிக்க உயர் சாதி பார்ப்பன இந்து என்று தன்னை கருதி கொள்கிறார். திடீரென்று ஒரு பெரியவர் வந்து அவரை ஓத்தா ஒம்ம ஒய்யால என்று திட்டி அவரது நம்பிக்கையை கழட்டி தோரணம் கட்டுகிறார்.
அதுவரை அந்த உயர் சாதி இந்து தனது கட்டுப்பாட்டில் இருப்பதாய் நினைத்து கொண்டிருந்த அவரது நம்பிக்கைகள், வாழ்வுமுறை எல்லாவற்றையும் அடித்து நொறுக்கின்றார். இந்நிலையில் அந்த சாதி ஹிந்துவிடம் ஜி மேட்டர் தெரியுமா அந்த கிழவன் இலுமினாட்டி ஜி என்று ஒருவர் வந்து சொன்னால் அவர் உடனடியாக அதை நம்ப தொடங்குவதோடு தான் இழந்த கட்டுப்பாட்டை திரும்ப மீட்டுக் கொள்வார்.
அதாவது தனக்கு ஒரு சிக்கல் நேரும்போது, ஒரு குழப்பம் ஏற்படும்போது, பயம் தோன்றும்போது, வெற்றிடம் ஏற்படும்போது மனிதர்கள் சாதியாலோசனை கோட்பாடுகளுக்கு ஆளாகிறார்கள். For some people conspiracy theories act as a defensive mechanisms against their insecurities and limitations.
இறுதியாக, கிளு கிளுப்பு சம்மந்தப்பட்டது. பிறருக்கு தெரியாத விஷயம் எனக்கு தெரியும் என்பது ஒரு கிளுகிளுப்பான விஷயம். இதற்கு ஆட்படாத மனிதர்களே கிடையாது நான் உட்பட. இதன் அடிப்படையில்தான் கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஸ்டீபன் ஹூக்கிங்சின் பின்னணியே தெரியாமல் எனக்கு அவரை ரொம்ப நல்லா தெரியும் என்னும் தோரணையில் அவருக்கு இரங்கல் கவிதை எழுதினார்.
பாய்ஸ் படத்தில் செந்தில் பேசுவதாய் சுஜாதா ஒரு வசனம் எழுதி இருப்பார். “data is knowledge” (தகவல்தான் அறிவு). சதியாலோசனை கோட்பாடுகளை பரப்புவர்களை கவனித்தால் பேசும்பொழுது “உங்களுக்கு இது தெரியுமா” என்று தொடர்ந்து கேட்டு ஒரு வரி தகவல்களாக சொல்லி கொண்டே இருப்பார்கள்.
தனக்கு ஒரு சிக்கல் நேரும்போது, ஒரு குழப்பம் ஏற்படும்போது, பயம் தோன்றும்போது, வெற்றிடம் ஏற்படும்போது மனிதர்கள் சாதியாலோசனை கோட்பாடுகளுக்கு ஆளாகிறார்கள்.
அதன் பொருள் உனக்கு தெரியாத தகவல் எனக்கு தெரிந்திருக்கிறது அதனால் நான்தான் லபுக்குதாஸ் என்னும் தோரணை மற்றும் உனக்கு தெரியாததை நான் தெரிந்து வைத்திருக்கிறேன் எனவே தயவு செய்து என்னை மதித்து ஏற்று கொள்ளுங்கள் என்ற ஏக்கம், இவையிரண்டையும் நீங்கள் கவனிக்கலாம்.
சில மனநல ஆய்வுகள் narcissism – சுயமோகி( a person who has an excessive interest in or admiration of themselves – எவரொருவர் தம்மைப் பற்றி அபரிதமான அக்கறை அல்லது பெருமிதங்களை கொண்டுள்ளாரோ) என்னும் மன நோய்க்கும் சதியாலோசனை கோட்பாடுகளை பரப்புவர்களுக்கும், நம்புவர்களுக்கும் இருக்கும் தொடர்பை குறித்து நிறுவுகின்றன.
தங்களை மற்றவர்கள் கவனிக்க வேண்டும், தாங்கள் மற்றவர்களுக்கு தெரியாத தகவல்களை கண்டடைந்து வைத்திருக்கிறோம், தாங்கள் அறிவிலிகளை வழி நடத்தும் பொறுப்பிலிருக்கிறோம், உலகில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் முழுவதுமாய் புரிந்து கொள்ளும் ஆற்றலோடு இருக்கிறோம், தான் தன்னை போன்றே சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களோடு ஒரு குழுவாகிருக்கிறோம் என்கின்ற மிக ஆழமான விருப்பமும், ஏக்கமுமே அவர்களை சதியாலோசனை கோட்பாடுகளை நோக்கி தள்ளுகிறது.
மனித மனங்களுக்கு சதியாலோசனை கோட்பாடுகள் ஏன் தேவைப்படுகிறது என்பதை பற்றி நமக்கு இப்பொழுது ஒரு புரிதலிருக்கும். சதியாலோசனை கோட்பாடுகள் எப்படி தர்க்கரீதியான வலிமையை பெறுகிறது? சதியாலோசனை கோட்பாடுகளை நம்பவேண்டிய நிலை ஏன் நம்மில் சிலருக்கு ஏற்படுகிறது? என்பதை பற்றியும் பாரிசலானையும் ஹீலர் பாஸ்கரையும் எப்படி டீல் செய்யவேண்டும் என்பதையும் அடுத்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
( தொடரும் )
ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.
நன்றி : தி டைம்ஸ் தமிழ்
திருப்பூர் தாராபுரம் அருகே குண்டடம் வண்ணாம்பட்டியை சேர்ந்த விவசாயி முத்துச்சாமி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 11 வயதில் ராஜலட்சுமி என்ற மகளும், 4 வயதில் மாணிக்க சத்திய மூர்த்தி என்ற மகனும் உள்ளனர்.
முத்துச்சாமி தனது குடும்பத்தினருடன் தாராபுரம் அருகே உள்ள கெத்தல்ரேவ் என்ற கிராமத்தில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்திருக்கின்றார். அங்கேயே குடிசை வீடு போட்டு குடும்பத்துடன் விவசாயத்தை பார்த்து வந்திருக்கின்றனர். உதவிக்காக தனது தந்தை வேலுச்சாமி மற்றும் தாயர் மயிலாத்தாள் ஆகியோரையும் உடன் வைத்து விவசாயம் செய்து வந்திருக்கிறார்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் பொய்த்து போகவே, அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி விவசாயம் செய்திருக்கிறார். மீண்டும் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாத நிலையில் விவசாயத்தில் கடுமையான நட்டம் ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக முத்துச்சாமியின் மனைவி செல்வி திருப்பூர் அருகே உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்திருக்கின்றனர்.
இந்நிலையில் வங்கி மற்றும் தனி நபர்களிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை தொடர்ந்து நீடித்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் மிகுந்த மன உளைச்சலில் முத்துச்சாமி இருந்திருக்கிறார். இதன் காரணமாக குடும்பத்திற்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு கடன்காரர்கள் வந்து கடனை கேட்டு நெருக்கும் போது அவமானம் தாங்க முடியாமல், முத்துச்சாமியின் மனைவி செல்வி தனது பெற்றோர் வசிக்கும் ரங்கபாளையம் கிராமத்திற்கு சென்றிருக்கிறார்.
இதையடுத்து முத்துச்சாமி தனது தாய், தந்தை மற்றும் குழந்தைகளுடன் கெத்தல்ரேவ் என்ற கிராமத்திலேயே வசித்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் நெருக்கடி தாங்க முடியாத நிலையில் குடும்பத்தினருடன் ஊரை விட்டு வெளியேறி விடலாம் என பேசியிருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு வயதின் காரணமாக நடமாட முடியாத தந்தை வேலுச்சாமியை மட்டும் விட்டு விட்டு, அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்த தனது மகள் ராஜலட்சுமி, மகன் மாணிக்க சத்தியமூர்த்தி ஆகியோரை முத்துச்சாமி வீட்டிற்குள்ளே தூக்கிட்டுள்ளார்.
அதன் பின்னர் தனது தாய் மயிலாத்தாளுடன் தானும் வீட்டிற்கு வெளியில் இருந்த வேப்பமரத்தில் ஏணியை போட்டு ஏறி, அதில் தூக்கு கயிற்றை மாட்டி அதிலிருந்து குதித்து இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
இன்று அதிகாலையில் முத்துச்சாமியின் தந்தை வேலுச்சாமி எழுந்து பார்த்த போது தனது மனைவி, மகன், பேரன், பேத்தி ஆகியோர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து அழுது ஊரை கூட்டியிருக்கிறார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு வந்த போலீசார் பிரேதங்களை கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கிராமமே சோகத்தில் மூழ்கி இருக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகள் மக்களின் பணத்தை ஆட்டையைப் போட்டு விட்டு வெளிநாடுகளில் உல்லாசமாக திரிகின்றனர். வழியனுப்பி வைத்த ஆட்சியாளர்கள் விமானத்தில் போய் நலம் விசாரித்து வருகின்றனர்.
டாடா, அதானி, அம்பானிகள் போன்ற முதலாளிகள் பல்வேறு சலுகைகள் பெயரில் மக்கள் சொத்தை மானியமாக பெற்றுக் கொண்டு இலாபம் குவிக்கையில், சாதாரண ஏழை விவசாயிகள் தூக்கிட்டுச் சாவதுதான் விதியா? ஒரு குடும்பமே இப்படி தமது வாழ்க்கையை அழிப்பது அவர்களுடைய தோல்வியா? இல்லை உழைத்து வாழ்வதற்கு கூட இந்த நாட்டில் வழி இல்லை எனும் நிலை ஏற்படுத்திய இந்த அரசமைப்பின் தோல்வியா?
தகவல்: மக்கள் அதிகாரம், திருப்பூர்.
தொடர்புக்கு: 99658 86810
சட்டக் கல்வியின் இன்றைய நிலை என்ன? என்ற தலைப்பில் 27.07.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில் “சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியை மூடாதே !” என்ற தலைப்பில் சட்டக்கல்லூரி மாணவர் விஜயகுமார், வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் நாகராஜின் தந்தை ஆகியோர் ஆற்றிய உரையாற்றினார்.
சென்னை சட்டக்கல்லூரி என்பது தமிழகம் முழுவதிலிருந்து வரும் மாணவர்களில் திறமையான மாணவர்களைத் தெரிவு செய்து இக்கல்லூரி வாய்ப்பு வழங்குகிறது. மேலும் நீதிமன்ற வளாகத்திலேயே அமைந்துள்ள ஒரே கல்லூரி. பல நீதிபதிகளை உருவாக்கிய பாரம்பரியம்மிக்க கல்லூரி. இக்கல்லூரியை இடம்மாற்றம் செய்ய நினைக்கிறது அரசு.
மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கல்லூரி கட்டிவிட்டதால் இனி இங்கு சட்டக்கல்லூரி இயங்க வாய்ப்பில்லை என சிலர் கூறுகின்றனர். ஆனால் இதே கல்லூரி செங்கல்பட்டிற்கு மாற்றப்பட்டது மீண்டும் இங்கு திரும்பி வரவழைக்கப்பட்டு தற்போதுவரை இயங்கி வருகிறது. செங்கல்பட்டிற்கென தற்போது ஒரு சட்டக்கல்லூரியையும் உருவாக்கி தந்துள்ள வரலாறு உள்ளது.
அதே போல தொடர்ந்து கல்லூரி இதே வளாகத்தில் இயங்கும். அதற்கு மாணவர்கள், வழக்கறிஞர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையை தனது உரையில் வெளிப்படுத்தினார் மாணவர் விஜயகுமார்.
சட்டக்கல்லூரியை இடம் மாற்ற இவர்கள் சொல்லும் காரணங்களில் ஒன்று மாணவர்களிடையே நடந்த ஒரு மோதல் சம்பவம். எனில் நீதிமன்ற வளாகத்துக்குள்ளாக 160 ஆண்டுகளில் நடக்காத ஒரு நிகழ்வு வழக்கறிஞர்கள், நீதிபதிகள் தாக்கப்பட்டது எனில், நீதிமன்றத்தை இடம் மாற்றிவிடலாமா ? என்ற கேள்வியுடன் தொடங்கி ஏன் சட்டக் கல்லூரியை இடம் மாற்றக்கூடாது என்பதையும் மாணவர்களிடம் தற்போது உள்ள விழிப்புணர்வையும் விளக்கிப் பேசினார் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார்.
ஏழை எளிய மக்களை வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும் உருவாக்கிய வரலாறு உள்ள இந்த சட்டக்கல்லூரியை இங்கிருந்து யாரைக் கேட்டு இடம் மாற்றுகிறார்கள்.
அரசு இக்கல்லூரியை மாற்ற கூறும் காரணங்களை இங்கு உள்ள வழக்கறிஞர்கள், மாணவர்களிடம் விவாதித்திருக்க வேண்டும் என்பதையும். காஞ்சிபுரத்திலும், திருவள்ளூரிலும் புதிதாக கட்டப்படுள்ள கல்லூரியை நேரில் பார்த்து அதன் அனுபவத்தில் இருந்து மாணவர்களுக்கு அங்கு படிப்பது எவ்வளவு சிரமமாக இருக்கும் என்பதையும் விளக்கிப் பேசினார்.
யூ-டியூப் காணொளி:
ஃபேஸ்புக் காணொளி:
பாருங்கள் ! பகிருங்கள் !
அசாம் இராணுவப் பிரிவைச் சேர்ந்த இராணுவ அதிகாரி தரம்வீர் சிங் மணிப்பூர் உயர்நீதி மன்றத்தில் அளித்துள்ள வாக்குமூலத்தில் தனது படையணியைச் சேர்ந்த இராணுவ நுண்ணறிவுப் பிரிவினர் போலி மோதல் படுகொலைகளிலும், சூறையாடல்களிலும், ஆட்கடத்தலிலும் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவத்தைச் சேர்ந்த ’3 படையணி நுண்ணறிவுப் பிரிவினை’ச் சேர்ந்தவர் லெப்டினண்ட் கர்னல் தரம்வீர் சிங். இவரை அவருடன் வேலை பார்க்கும் லெப்டினண்ட் கர்னல் நந்தா, மேஜர் ரத்தோர் ஆகியோர் உள்ளிட்டு ஆயுதமேந்திய இராணுவத்தினர் கடத்தியதாகக் கூறி அவரது மனைவி மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி லெப்டினண்ட் கர்னல் தரம்வீர் சிங் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தாம் இராணுவத்தினராலேயே கடத்தப்பட்டது குறித்து வாக்குமூலம் ஒன்றை அளித்தார் தரம்வீர் சிங். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் நகல் ஒன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு கிடைத்துள்ளது. அந்த வாக்குமூலத்தில், கடந்த ஜூலை 1, 2018 அன்று காலையில், லெப்டினன்ட் கர்னல் நந்தா, மேஜர் ரத்தோர் ஆகியோருடன் ஆயுதமேந்திய இராணுவத்தினர் சிலரும் சேர்ந்து மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள தமது குடியிருப்பிலிருந்து தம்மைக் கடத்திக் கொண்டு போய் வீட்டுச்சிறை வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றம், தரம்வீர் சிங்கை ஆஜர்படுத்த உத்தரவிட்ட பின்னர்தான் அதாவது கடத்தப்பட்டு 5 நாட்களுக்குப் பின்னர்தான் அவரை கோர்ட்டில் நேர்நிலைப்படுத்தியிருக்கின்றனர் அவரைக் கடத்திய இராணுவ அதிகாரிகள்.
தனது வாக்குமூலத்தில், சில மூத்த அதிகாரிகள் செய்த தவறுகளை மேலிடத்திற்கு தாம் புகாரளித்ததற்கு பழி வாங்கும் விதமாக, தமக்கு எதிராக அவர்கள் திட்டமிட்டு நடத்திய பிரச்சாரத்தில் தாம் பாதிப்படைந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார் தரம்வீர் சிங்.
மேலும் தமது வாக்குமூலத்தில், அசாமில் கடந்த 2016-ம் ஆண்டு இராணுவத்தால் நடத்தப்பட்ட போலி மோதல் கொலைகளைப் பற்றியும், கொள்ளைகளைப் பற்றியும் தெரிவித்துள்ளார். நாகலாந்தின் திமாபூர் பகுதியிலிருந்து அப்பாவி இளைஞர்களை கடத்தி வந்து போலி மோதல் மூலம் இராணுவ நுண்ணறிவுப் படையின் ஒரு பிரிவு ரங்கபஹர் கண்டோன்மண்ட் அருகே அவர்களை கொலை செய்ததையும், அவர்கள் நடத்திய சூறையாடல்கள் குறித்தும் கடந்த செப்டெம்பர் 9, 2016 அன்று தாம் புகார் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய கட்டுரைகள்:
சட்டீஸ்கர்: 20 அப்பாவி மக்களை கொலை செய்த இந்திய இராணுவம்!
காஷ்மீர் மக்களின் கண்களை பறிக்கும் இராணுவம்
மேலிடத்திலிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகவும், தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியின் காரணமாகவும் தாம் அந்த புகாரைத் திரும்பப் பெற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த அதிகாரப் பூர்வமான 13 பக்க புகார் கடிதத்தினை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றத்தில் அனுமதியும் கோரியுள்ளார்.
தரம்வீர் சிங்கின் வாக்குமூலம், கடந்த 2010, 2011 ஆண்டுகளில், இராணுவத்தின் ”3 படையணி நுண்ணறிவுப் பிரிவின்” ஒரு குழுவினர் நடத்திய மூன்று போலி மோதல் கொலைகள் குறித்தும் ஒரு சூறையாடல் சம்பவம் குறித்தும் குற்றம்சாட்டுகிறது.
அவரது வாக்குமூலத்தில், கடந்த மார்ச் 10, 2010-ல் பிஜம் நவோபி, ஆர்.கே.ரோனெல், ப்ரேம் ஆகிய 3 மணிப்பூர் இளைஞர்கள், நாகலாந்தில் உள்ள திமாபூரில் அவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டிலிருந்து இராணுவத்தின் ”3 படையணி நுண்ணறிவுப் பிரிவினால்” கடத்தப்பட்டு, இராணுவ உணவு விடுதிக்குப் பின்புறத்தில் வைத்து கொல்லப்பட்டனர் என்பதை விரிவாக பதிவு செய்துள்ளார். அச்சமயத்தில் வந்த ஊடகங்களின் தகவல்களின்படி, மார்ச் 17, 2010 அன்று அசாமின் கார்பி அங்லாங் காவல் நிலையத்துக்கு உட்பட்ட லக்கிஜன் பகுதியில் அம்மூவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
இது தொடர்பாக ஒரு வழக்கு கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேஜர் டி. ரவி கிரண் என்பவர்தான் இது குறித்து முதன்முதலில் கடந்த மார்ச் 12, 2010 அன்று பொது ஆணை அலுவலருக்கு கடிதம் எழுதியவர். அவர் எழுதிய கடிதத்தில் மூன்று மணிப்பூர் இளைஞர்கள், இராணுவத்தின் நுண்ணறிவு கண்காணிப்புப் பிரிவினரால் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தமது வாக்குமூலத்தில் இதைப் போன்ற மற்றுமொரு சம்பவத்தை விவரிக்கிறார் தரம்வீர் சிங். மணிப்பூரைச் சேர்ந்த புனித டாமினிக் கல்லூரி மாணவர் சதீஷ் மற்றும் அவரது நண்பரும் அதே குழுவினரால் பிப்ரவரி 5, 2010 அன்று ஷில்லாங்கிலிருந்து கடத்தப்பட்டு மசிம்பூர் காடுகளில் வைத்து கொல்லப்பட்டனர். பிப்ரவரி 23 அன்று சதீஷின் பெற்றோர் தமது மகன் காணாமல் போனது குறித்து மணிப்பூர் டிஜிபியிடம் புகார் அளித்திருக்கிறார். ஆனால் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை
திமாபூரில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்த மக்கள் விடுதலைப் படையின் போராளி ஜித்தேஷ்வர் சர்மா என்ற ஜிப்சி மற்றும் அவரது நண்பர் ஒருவரையும் இழுத்துச் சென்று படுகொலை செய்துள்ளது இதே பிரிவு. அவர்களது உடல்களை அப்பிரிவின் உணவு விடுதிக்குப் பின்னால் புதைத்துள்ளனர். அப்பிரிவைச் சேர்ந்த சிலருக்கு புதைக்கப்பட்ட சரியான இடம் தெரியும் என்றும் அந்த வாக்குமூலத்தில் தரம்வீர் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நுண்ணறிவுக் குழுவைச் சேர்ந்தவர்களே, ஒரு பெண்ணையும் அவரது குழந்தையையும் திமாபூரிலிருந்து கடத்தி ஒரு கோடி வரை அவரது குடும்பத்தாருடன் பேரம் பேசி பிணையத் தொகையாகப் பெற்றுள்ளனர் என்பதையும் அந்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கும் அவரது குடும்பத்தாரின் உயிருக்கும் ஆபத்து உள்ள்ளதாகவும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தரம்வீர் சிங் கடத்தப்பட்டதாகக் கூறுவதை ஆதரமற்றதாகக் கூறி இராணுவம் மறுத்துள்ளது. அவர் பணிக்காக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாகக் கூறியிருக்கிறது இராணுவம். தரம்வீர் சிங்கோ விடுமுறையில் குடும்பத்தோடு மணிப்பூரின் இம்பாலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொலை கொள்ளை ஆட்கடத்தல் குறித்து உள்ளூர் இராணுவ செய்தித் தொடர்பாளரிடம் கருத்துக் கேட்கப்பட்ட போது, நீதிமன்ற விசாரணையில் இவ்வழக்கு இருப்பதனால், இது குறித்து கருத்து தெரிவிக்க தமக்கு அதிகாரம் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் கொலைகளையும், கடத்தி பணம் பறிக்கும் இழிவையும், கொள்ளைகளையும் இராணுவத்திலிருந்தபடியே சட்ட வரைமுறைக்கு உட்பட்டு புகாரளித்த ஒரு இராணுவ அதிகாரியையே இவ்வளவு உளவியல்ரீதியாக சித்திரவதை செய்துள்ளனர். அவரைக் கடத்திச் சென்று அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளது இராணுவம். ஒரு லெப்டினண்ட் கர்னல் பதவியிலுள்ள இராணுவ அதிகாரிக்கே இதுதான் கதியென்றால், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சாதாரண மக்களின் நிலை என்னவென்பதை புரிந்து கொள்ள முடியும்.
– வினவு செய்திப் பிரிவு
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் வெளிவந்த செய்திப் பதிவின் தமிழாக்கம்.
சமீபத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் ஒன்றில் பேச நேர்ந்தது. அதன் உள்ளடக்கம் ஒன்றும் தனிச் சிறப்பானதல்ல, ஓரிரு நிமிட இணைய உலாவலில் கிடைக்கும் ஆலோசனைகளை மட்டுமே கொடுத்தோம். அவற்றை எளிமையாகவும் பயன்பாட்டுக்கு உகந்த வகையிலும் தரவேண்டும் என்பதால் அந்த உரைகளை ஆங்கிலத்தில் மட்டுமே தர முடியாது என வாதிட்டு அதனை ஆற்றுப்படுத்துனர் தரப்பின் சார்பாக செயல்படுத்தி விட்டோம்.
“மத்தவங்க எல்லாம் நெறைய சொன்னாங்க (ஆங்கிலத்தில்), அதை கேட்டுட்டு போய் நம்ம பிள்ளைக்கு சொல்ல முடியலையேன்னு கஷ்டமா இருந்தது. நீங்க தமிழ்ல பேசினதுக்கு நன்றி சொல்லிட்டு போக வந்தோம்”
நிகழ்ச்சி முடிந்து நீண்ட நேரம் பல பெற்றோர்களை சந்திக்க வேண்டியிருந்தது. சற்றேறக்குறைய 45 நிமிடங்களுக்கு ஒரு தம்பதி மட்டும் காத்திருந்தார்கள். வழமையாக அப்படி காத்திருப்பவர்கள் சற்றே பெரிய பிரச்சினையை விவாதிக்க வைத்திருப்பார்கள் என்பது எங்கள் அனுமானம். ஆனால் அவர்களை சந்தித்தபோது அந்த ஊகம் அடிப்படையற்றதாகிவிட்டது. அவர்கள் சொன்னது இதைத்தான் “மத்தவங்க எல்லாம் நெறைய சொன்னாங்க (ஆங்கிலத்தில்), அதை கேட்டுட்டு போய் நம்ம பிள்ளைக்கு சொல்ல முடியலையேன்னு கஷ்டமா இருந்தது. நீங்க தமிழ்ல பேசினதுக்கு நன்றி சொல்லிட்டு போக வந்தோம்”.
சில மாதங்களுக்கு முன்னால் பதட்டநோய் அறிகுறியோடு 14 வயது மாணவர் ஒருவர் வந்தார். காலை 5.30 மணிக்கு ஆரம்பிக்கும் அவர் அன்றாடப் பணிகள் இரவு 8.30 வரை நீள்கிறது. காலை விளையாட்டுப் பயிற்சி, மாலை இரண்டு டியூஷன்கள். எதற்காக இரண்டு டியூஷன் என்று கேட்டேன். ஒன்றில் வீட்டுப் பாடங்களை முடிப்பேன் இரண்டாவது டியூஷனில் கணக்கையும் அறிவியலையும் ”தமிழில்” சொல்லிக் கொடுப்பார்கள் என்றார். அதாவது ஆங்கிலத்திலேயே பாடம் நடத்தப்படும் பள்ளியில் பெரும் பணம் கட்டி படிக்கும் மாணவர் அந்த பாடங்களை புரிந்து கொள்ள தமிழில் விளக்கும் டியூஷனுக்கு கூடுதலாக செலவளிக்கிறார்.
ஒரு உபரித் தகவல், சென்னையில் வீட்டுக்கே வந்து பாடம் நடத்தும் ஆசிரியருக்கு ஒருமணிநேர ஊதியம் 500 ரூபாய். அந்த வேலைக்கு வருடத்துக்கு 60 ஆயிரம் என ஒரே பேக்கேஜ் வாங்கும் ஆசிரியர்கள் உண்டு.
அதாவது ஆங்கிலத்திலேயே பாடம் நடத்தப்படும் பள்ளியில் பெரும் பணம் கட்டி படிக்கும் மாணவர் அந்த பாடங்களை புரிந்து கொள்ள தமிழில் விளக்கும் டியூஷனுக்கு கூடுதலாக செலவளிக்கிறார்.
ஆற்றுப்படுத்துனர்கள் மற்றும் உளவியல்சார் வேலைகளில் இருப்போருக்கான பயிலரங்கங்களில் அடிக்கடி பங்கேற்க வேண்டியிருக்கும். அங்கெல்லாம் கூட ஆங்கில உரைகளின் போது ஒரு கடுமையான இறுக்கத்தை காண இயலும். அதையே தமிழில் நடத்துகையில் பார்வையாளர்களது பங்கேற்பு பிரம்மிக்க வைப்பதாக இருக்கும். அப்படியான நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் எல்லோரும் தமிழ் வழியில் கற்றவர்கள் அல்ல. பல தருணங்களில் ஓரிருவர் தவிர ஏனையோர் ஆங்கில வழியில் படித்தவர்களாகவே இருப்பார்கள்.
அனுபவ ரீதியாக மதிப்பிடுகையில், வீட்டு உரையாடலை ஆங்கிலத்தில் நடத்தும் நபர்கள் மற்றும் தமிழ் தெரியாமல் ஆங்கிலத்திலேயே உரையாட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் மட்டுமே ஆங்கில உரைகளின் போதும் பாடங்களின் போதும் சிரமமில்லாமல் கவனிக்கிறார்கள் (பல உயர் மத்தியதர வர்க்க வீடுகளில் பேச்சு மொழி ஆங்கிலமாக இருக்கிறது). பெருநகரங்களில் கூட இந்தப் பிரிவு மக்கள் அதிகபட்சம் 10% விழுக்காட்டுக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்களது அடியொற்றியே பெரும்பாலான கல்வி நிலையங்கள் செயல்படுகின்றன.
ஆங்கிலத்தின் மீதான பிடிவாதமான மோகம் (அப்சஷன்) ஒரு மதத்தைப் போல நம்மை பீடித்திருக்கிறது. அதற்காக எதையும் தியாகம் செய்யும் மனநிலையில்தான் பெரும்பான்மை பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
“ஒன்பது வருசமா அங்க படிக்கிறான், இன்னும் ஒழுங்கா இங்கிலீஷ் பேச வரல. இந்த வருசம் ஸ்கூலை மாத்திரலாம்னு இருக்கேன்” என சலித்துக் கொண்டார் ஒரு நண்பர். அவர் ஒரு பள்ளி ஆசிரியர் என்பது உபரித் தகவல்.
இந்த ஆங்கில பக்தி எப்படியெல்லாம் அறிவுத் திறனை சிதைக்கிறது?
முதலில் அது வகுப்பறையை உயிரோட்டமற்ற இடமாக மாற்றுகிறது. கற்பித்தல் என்பது தெரிந்தவற்றில் இருந்து தெரியாதவற்றை நோக்கி மாணவர்களை அழைத்துச் செல்லும் பணி. ஒரு ஆசிரியர் தனக்கு தரப்பட்ட பாடத்தின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படும்படியான சூழலை உருவாக்கினாலே போதும். மற்றவற்றை ஒரு மாணவனே கூட தேடிக் கண்டடைய எல்லா வாய்ப்புக்களும் இன்று கிடைக்கின்றது. அந்த ஆர்வத்தை உருவாக்க எளிமையான மொழிநடையும், உதாரணங்களும் கூடவே துடிப்பான உரையாடல்களும் தேவை. இந்த மூன்றையும் சிதைப்பது ஆங்கிலத்தில் பேசவேண்டும் எனும் கட்டாய சூழல் (அது தமிழில் பேசும்போதும் நிகழலாம் என்றாலும் கட்டாய ஆங்கிலம் அதனை மூர்க்கமாக செய்கிறது).
மொழியை எளிமையாக்க முடியாமல் ஆசிரியர் உபதேசிப்பதைப் போல பாடம் நடத்துகிறார், தமிழ் உரையாடல் சூழலில் வளர்ந்த மாணவர்கள் அதனை புரிந்துகொள்ள இயலாமல் ஆர்வமிழக்கிறார்கள். மாணவர்கள் எளிதில் கவனம் சிதறும் இயல்பு கொண்டவர்கள் என்பதால் அவர்கள் குறும்பு செய்யவோ அல்லது வேறு யோசனைக்கு செல்லவோ நேர்கிறது. இது அதிகரிக்கையில் ஆசிரியர் ஆர்வமிழக்கிறார். என் பார்வையில் இதுவே பள்ளி ஒழுங்கீனத்தின் (பாடத்தை கவனிக்காதிருப்பது, வகுப்பு நேரத்தில் சேட்டைகள் செய்வது உள்ளிட்ட) ஆரம்ப காரணி. மேலும் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருப்பதால் ஆசிரியர் தமது அறிவின் பரப்பை ஆங்கில மொழித்திறன் எனும் குறுகிய எல்லைக்குள் அடக்க வேண்டியிருக்கிறது. இதனால் உதாரணங்களை அவர் தவிர்க்க நேரலாம். எதிர்திசையில் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்க இயலாமல் போகிறது.
மொழியை எளிமையாக்க முடியாமல் ஆசிரியர் உபதேசிப்பதைப் போல பாடம் நடத்துகிறார், தமிழ் உரையாடல் சூழலில் வளர்ந்த மாணவர்கள் அதனை புரிந்துகொள்ள இயலாமல் ஆர்வமிழக்கிறார்கள்.
பல சமயங்களில் பாடத்தில் சந்தேகம் என்பது முழு பாடத்தையுமே மீண்டும் கேட்பதாக இருப்பதை பார்த்திருக்கிறேன்.
ஆண்டு விழாக்களில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பது பாட்டு, நடனம் மற்றும் மைம் போன்ற உரையாடல் அவசியமற்ற நிகழ்ச்சிகளில் மட்டும்தான். காரணம் ஆங்கில உரையாடல்கள் தேவைப்படும் நாடகங்கள் அவர்களுக்கு சிரமமாக இருக்கிறது (எலைட் பள்ளிகளையும் சேர்த்தே சொல்கிறேன்). இன்னுமொரு காரணி அவர்களை நாம் சிந்திக்க விடுவதில்லை, ஆகவே (நடனம் போன்ற) பயிற்சி மட்டுமே தேவைப்படும் பிற வாய்ப்புக்களை மட்டும் தெரிவு செய்கிறார்கள்.
ஜி.ஹெச்.க்யூ, இ.பி.க்யூ போன்ற உளவியல் சார் மதிப்பீட்டுக்கான கேள்வித் தாள்களை நிரப்ப அனேகமாக எல்லா மாணவர்களும் தடுமாறுகிறார்கள் (இதிலும் எலைட் பள்ளி மாணவர்கள் அடக்கம்). ஆங்கில ஞானத்தை நோக்கி தவமிருக்கும் பெற்றோரும் பள்ளிகளும் வளர்க்கும் பிள்ளைகளின் நிலை இது.
ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் எனும் கட்டாயம் உள்ள பள்ளிகளில் நாம் கேட்கும் வார்த்தைகள் மிக சுவாரஸ்யமாக இருக்கும். ஹேய் கம்டா, கோடா, கிவ்டா ஆகியவை சில உதாரணங்கள். ஒருமுறை மாணவர் ஒருவர் ’’ஹி இஸ் கிண்டலிங் மீ’’ என சக மாணவர் மீது குற்றம் சாட்டினார்.
தனியார் பள்ளிகளில் ஒரு சர்வே நடத்திப் பாருங்கள். பெரும்பான்மையானவர்கள் தமிழ் சிரமமாக இருக்கிறது என்பார்கள். எந்த மொழியில் பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறார்களோ அதே மொழியை ஒரு பாடமாகக் கற்பது சிரமமாக இருக்கிறது அவர்களுக்கு. இந்த முரண்பாடு நமது கல்வியமைப்பின் பெரும் தோல்வி!
கணக்கும் ஆங்கிலமும் சிரமமாக இருக்கிறது என்று சொல்லும் மாணவர்களைத்தான் இருபதாண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கிறோம். இப்போது தனியார் பள்ளிகளில் ஒரு சர்வே நடத்திப் பாருங்கள். பெரும்பான்மையானவர்கள் தமிழ் சிரமமாக இருக்கிறது என்பார்கள். எந்த மொழியில் தங்களுக்கு பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறார்களோ அதே மொழியை ஒரு பாடமாகக் கற்பது சிரமமாக இருக்கிறது அவர்களுக்கு. இந்த முரண்பாடு நமது கல்வியமைப்பின் பெரும் தோல்வியின் சிறிய அறிகுறி.தமிழ் எளிதாக இருக்கிறது என்று சொன்ன ஒரேயொரு மாணவரைத்தான் கடந்த ஓராண்டில் சந்தித்திருக்கிறேன். அவர் ஒரு ஆங்கிலோ இந்தியன் மாணவர்
இங்கே வழக்கமான கற்றல் நடைமுறை என்பது கேள்விகளையும், அதற்கான பதில்களையும் மனப்பாடம் செய்ய வைத்து இந்த கேள்விக்கு இந்த பதில் எழுத வேண்டும் என்பதாக இருக்கிறது. ஆரம்ப வகுப்புக்களில் மாணவர்களை தேர்வுக்கு தயாரிக்க இந்த வழிமுறையே எல்லா இடங்களிலும் பின்பற்றப்படுகிறது. அது 12-ம் வகுப்புவரை தொடர்கிறது. எதற்காக ஒன்றாம் வகுப்பிலேயே வாக்கியங்களை எழுதும்படியான பாடத்திட்டத்தை நம் நாட்டில் வைத்திருக்கிறோம் என்பது புரியவில்லை. அதைக்கூட ஒரு ஆசிரியரால் சமாளிக்க முடியும். ஆனால் அதோடு சேர்த்து மாணவனுக்கு பரிச்சயமில்லாத ஒரு மொழியையும் அவர் கற்றுத்தர வேண்டியிருப்பதால் அவர்களுக்கு இதைத்தவிர வேறு வாய்ப்பில்லை.
சர்வதேச பாடத்திட்டத்தில் பெரும்பாலும் மனப்பாடம் செய்து பதில் எழுத இயலாது, பதிலை நீங்கள் பரிந்துரைக்கப்படும் புத்தகங்களில் இருந்து படித்து அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே அதில் பயிலும் தன் மகனுக்கு பதிலை கண்டுபிடித்து – எழுதித்தந்து – பிறகு சொல்லிக் கொடுக்க தனி ஆசிரியரை நியமித்திருக்கிறார் ஒரு தொழிலதிபர்
ஏன் அரசுப் பாடத்திட்டத்துக்கு தனியார் பதிப்பக புத்தகங்களை வாங்குகிறீர்கள்? என்று ஒரு பள்ளி ஒருங்கிணைப்பாளரை கேட்டேன். அரசு புத்தகங்களை வாங்கினா “இதை படிக்கனும்னா நாங்க கவர்மெண்ட் ஸ்கூல்லயே பையனை சேர்த்துருவோமே” ,ன்னு பெற்றோர்கள் குறைபட்டுக்குறாங்க என்கிறார் அவர். இந்த காரணத்துக்காவே கூடுதல் பாடங்கள் தனியார் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஹிந்தி அதில் முக்கியமானது. சென்ற ஆண்டுக்கான எங்கள் ஆய்வறிக்கையில் ஆற்றுப்படுத்துனர் சேவையை 35% எட்டாம் வகுப்பு மாணவர்கள் நாடியிருக்கிறார்கள்.
அடுத்த பெரும் எண்ணிக்கை ஏழாம் வகுப்பினர். இந்த எண்ணிக்கை ஒன்பதாம் வகுப்பில் 7.3% சதவிகிதமாக வீழ்கிறது, காரணம் ஹிந்தியும் கணினி அறிவியலும் 9, 10 வகுப்புக்களுக்கு கிடையாது. 10 மற்றும் 11-ம் வகுப்புக்களில் ஆற்றுப்படுத்துனரை நாடுவோர் எண்ணிக்கை மீண்டும் 22% ஆக உயர்கிறது- காரணம் பொதுத்தேர்வு அழுத்தம் மற்றும் பதின்பருவ குழப்பங்கள். ஆக பாடச்சுமையானது அவர்களது மனநலத்தில் தாக்கம் செலுத்துவது கண்கூடாக தெரிகிறது. இது 2000 மாணவர்கள் உள்ள ஒரு பள்ளியின் தரவு, பொதுவான சூழல் இதைவிட குறைவாகவோ அல்லது அதிகமாகமான சிக்கலுடையதாக இருக்கலாம்.
அல்லேலூயா கும்பல்கள் இயேசு வருவார் என வெறித்தனமாக நம்புவதைப் போல நாமும் ஆங்கில வழியில் படிப்பையே ஒரே மீட்பராக கருதும்படிக்கு தயாரிக்கப்பட்டிருக்கிறோம். அந்த முரட்டு நம்பிக்கைக்காக நாம் மிகப்பெரிய விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
அரசுப்பள்ளிகளில் இருக்கும் ஆங்கிலவழி வகுப்புக்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்பது தெரியவில்லை. அல்லேலூயா கும்பல்கள் இயேசு வருவார் என வெறித்தனமாக நம்புவதைப் போல நாமும் ஆங்கில வழியில் படிப்பையே ஒரே மீட்பராக கருதும்படிக்கு தயாரிக்கப்பட்டிருக்கிறோம். அந்த முரட்டு நம்பிக்கைக்காக நாம் மிகப்பெரிய விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதில் பல ஒருக்காலும் மீளப்பெற இயலாதவை.
ஆங்கில வழியின் மூலம் நாம் பெருந்தொகையான மாணவர்களையும் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் நாம் வெவ்வேறு வழிகளில் தண்டிக்கிறோம். ஓரளவு கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் அவர்களுக்கான சிறப்பு பயிற்சியில் தமிழை சிறப்பாக கற்பதை எங்கள் தரவுகளில் இருந்து அறிய முடிகிறது. காரணம் அதில் சொற்களை சேர்த்து வார்த்தையை உருவாக்குவது எளிது. தமிழில் அறிவு என்பதை அ -றி -வு என கோர்த்து எழுதுவது எளிது. ஆனால் ஆங்கிலத்தில் knowledge என எழுத்துக்களின் தொகுப்பை நீங்கள் மனப்பாடம் செய்ய வேண்டும். தமிழில் அப்படியல்ல, நீங்கள் கேட்பதை அப்படியே எழுத்தாக்க முடியும். கற்பதற்க்கு எளிய மொழியை புறந்தள்ளுவதன் மூலம் நாம் (பெரும்பாலான) மாணவர்களின் கற்றலை இரட்டை சுமையாக்குகிறோம்.
ஆங்கிலத்தில் பேசுவதும் எழுதுவதும் அதி அத்தியாவசியம் என நீங்கள் நம்பினாலும்கூட அதனை நாளுக்கு ஒரு மணிநேர பயிற்சியின் மூலம் சிறப்பாக செய்ய வைக்க இயலும். ”கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை” என்பது ராணுவ முகாம்களில் சொல்லப்படும் வாக்கியம். அதனை நாம் கல்வியில் செயல்படுத்துகிறோம். அதனால் பள்ளிக்கூடங்கள் போர்க்களங்களாக மாறியிருக்கிறது.
– வில்லவன்
அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.
‘இயற்கை வாழ்வியல்’ எனும் கோமாளித்தனத்தால் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் ரத்தப் போக்கு ஏற்பட்டு திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண் கிருத்திகா கடந்த ஜூலை (2018) இறுதியில் உயிரிழந்தார்.
இந்த மூடத்தனம் குறித்து மருத்துவர்கள் உள்ளிட்டு பலரும் எச்சரித்து வந்த நிலையில், கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் நிஷ்டை என்ற கோஷ்டியினர் வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கு பயிற்சியளிக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஆகஸ்ட் 26 -ம் தேதி நடத்த உள்ளதாக அறிவித்து விளம்பரங்கள் செய்திருந்தது.
மேற்படி அமைப்பு ஹீலர் பாஸ்கரால் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‘வீட்டிலேயே பிரசவம்’ விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் இதைப் பற்றி அவரது கருத்தை அறிந்து கொள்ள ஊடகங்கள் முயன்ற போது பேட்டியளிக்க மறுத்துள்ளார் பாஸ்கர்.
எனினும், இது பற்றி தமிழக டி.ஜி.பி, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தன்னிடம் நேரில் வந்து விளக்கம் கேட்டால் மட்டுமே உரிய விளக்கம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாஸ்கரின் மோசடி விளம்பரம் குறித்து ஜான்சன் என்பவர் கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அரசின் சுகாதாரத்துறையும் விளம்பரம் குறித்த தகவல் அறிந்து விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
நிஷ்டை கோஷ்டி குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் இந்த விளம்பரம் குறித்து ஆய்வு செய்து இருப்பதாகவும், அவர்கள் குறித்து முழு தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கோவை மண்டல சுகாதாரத்துறை இணை இயக்குர் பானுமதி அறிவித்தார்.
விசாரணையின் போது இலவசமாக பிரசவம் பார்க்கப் பயிற்சி தருவதாக கூறி ஒவ்வொரு நபரிடமும் தலா 5 ஆயிரம் ரூபாய் நன்கொடை வசூலித்துள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து ஹீலர் பாஸ்கர்(42) மீதும் அவரது அலுவலக மேலாளர் சீனிவாசன்(32) என்பவரின் மீதும் சட்டப்பிரிவு 420 மற்றும் 511 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக கைது செய்துள்ளனர் போலீசார்.
தொடர்புடைய கட்டுரைகள்:
திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !
பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !
பாட்டி வைத்தியத்திற்கும் பாதுகாப்பான மகப்பேற்றிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை !
கைது செய்யப்பட்டிருப்பதாலேயே பாஸ்கரோ பாரி சாலனோ திருந்தி விடப்போவதில்லை; தங்கள் சதிக் கோட்பாடுகளைப் பிரச்சாரம் செய்யாமல் இருக்கப் போவதுமில்லை. இந்தக் கைதை தங்களது செய்ல்பாடுகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாக கம்பெனியின் சந்தையை விரிவு படுத்தவும் வாய்ப்பு உள்ளது.
இப்போதே பாஸ்கர் – பாரி ஆதரவு வாட்சப் குழுமங்களில் இவர்களின் கைதுகளுக்குப் பின் உள்ள சர்வதேச இலுமினாட்டி வலைப்பின்னலின் தொடர்பு குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருவதை கவனிக்க முடிகிறது.
மேலும், அறிவியலுக்குப் புறம்பான மூடத்தனங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்குமான அடிப்படை எங்கே இருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதே கோவையில் சிங்காநல்லூர் பகுதியில் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் நோயுற்ற வயதான பெண்மணி ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் ‘இயேசு வந்து காப்பாற்றுவார்’ என நம்பி வீட்டைப் பூட்டிக் கொண்டு ஜெபித்துள்ளனர் பெந்தேகோஸ்தே சபையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர். பின்னர் அந்தப் பெண்மணி இறந்த பின்னும் மேலும் சில வாரங்களுக்கு வீட்டைத் திறக்காமல், சாப்பிடாமல் தொடர்ந்து ஜெபித்து வந்துள்ளனர்.
பின்னர் அக்கம் பக்கத்தவர்கள் துர்நாற்றம் வருவதை அறிந்து காவல்துறைக்கு தகவல் அளித்து கதவை உடைத்துத் திறந்த பார்த்தால் குழந்தைகள் உட்பட அக்குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் எலும்பும் தோலுமாக உயிருக்குப் போராடிய நிலையில் அழுகிய பிணத்தோடு வழிபாடு செய்து வந்தது தெரிய வந்தது .
அப்போது காவல் துறையினரிடம் ‘தங்களது ஜெபத்தால் இயேசு இறங்கி வந்து மரித்துப் போன தங்கள் தாயை உயிர்ப்பித்து தந்து விடுவார்’ என நம்பியே தொடர்ந்து ஜெபித்ததாக அக்குடும்பத்தினர் தெரிவித்தனர். இச்செய்தி அப்போதே பத்திரிகைகளில் வெளியானது.
சமீபத்தில் தில்லியில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த 11 பேர் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட செய்தி பத்திரிகைகளில் வெளியானது. இன்னும் அந்த தற்கொலைகளுக்கு என்ன காரணம் என்பதை போலீசார் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருவதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும், அக்குடும்பத்தினர் ஏதோவொரு இந்து மதப் பிரிவையோ சாமியாரையோ பின்பற்றி வந்தனர் என்பதும், குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட விதத்தில் தற்கொலை செய்து கொண்டால் மோட்சம் கிடைக்கும் என அங்கிருந்த டைரிகளில் எழுதி வைக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் வெளியானது.
காசியில் செத்தால் மோட்சம் என்பதற்காக அங்கே சாவதற்காகவே செல்வோர் எத்தனை பேர்? அனாதைப் பிணங்களைச் சுமந்து கங்கை நதி மாசடைந்திருப்பது குறித்து எத்தனை ஆய்வுகள் வெளியாகியுள்ளன? இன்னும் பாரசீகத்தில் ஐ.எஸ் எனும் காட்டுமிராண்டிக் கூட்டம் இசுலாத்தின் பெயரில் எண்ணிறந்த கொடூரங்களை நிகழ்த்தி வருகிறது.
தொடர்புடைய கட்டுரை:
ஆன்மீகத்தால் அச்சுறுத்துகிறார் செந்தமிழன்!
ஆக, மூடத்தனங்களுக்கு ஹீலர் பாஸ்கர், பாரி சாலன் போன்ற ஒரு சில தனிநபர்கள் மட்டும் காரணமல்ல.
அறிவியலுக்குப் புறம்பான பிற்போக்குத்தனமான சிந்தனை முறையும் அந்த சிந்தனை முறை நீடித்து நிற்பதற்கான சமூகச் சூழலும் தான் ஹீலர் பாஸ்கர் பாரி சாலன் போன்றோரை உற்பத்தி செய்கின்றது.
இவர்கள் மூடத்தனங்களுக்கு பலியாகும் அளவுக்கு பலவீனமாய் உள்ள மக்களைப் பயன்படுத்திக் கொள்ளும் குற்றவாளிகள் எனும் வகையில் இவர்கள் தண்டனைக்குரியவர்கள் ஆகிறார்கள். இந்தியாவில் மதம், சடங்கு பெயரில் ஏற்கனவே இருக்கும் மூடநம்பிக்கைகள் உலகமய – இணைய காலத்தில் வேறு அவதாரங்கள் எடுக்கின்றன. இவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பது, இவர்களது பயிற்சி முகாம்களை அம்பலப்படுத்துவது, மக்களிடம் பிரச்சாரம் செய்வது அனைத்தும் இடையறாமல் செய்ய வேண்டியிருக்கிறது.
அறிவியலுக்குப் புறம்பான மூடத்தனங்களை எள்ளி நகையாடும் நிலைக்கு சமூகம் வளரும் போது இவர்கள் வெறும் காமெடியன்களாக புறக்கணிக்கப்பட்டும் சிறுமைப்பட்டும் போவார்கள். அவ்வாறான ஒரு சமூக சூழலை உண்டாக்கப் போராடுவதும், அதற்காகப் பிரச்சாரம் செய்வதும் நம் அனைவரின் கடமையும் ஆகிறது.
தொடர்புடைய செய்திகள் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் பார்ப்பன எதிர்ப்பு சாதித்தீண்டாமை எதிர்ப்பில் அக்கறையுள்ள ஜனநாயக சக்திகள் பலரது தொடர் போராட்டங்களின் பலனாக, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 36,000 கோயில்களில் தகுதியும் பயிற்சியும் பெற்ற எந்தசாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கப்படலாம் என்ற அரசாணை தி.மு.க.வின் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் கடந்த 2006 இல் பிறப்பிக்கப்பட்டது.
இவ்வுத்தரவைத் தொடர்ந்து, பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை, ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும்; சென்னை மற்றும் திருவரங்கத்தில் வைணவ அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியும் தொடங்கப்பட்டது.
இப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த 34 மாணவர்களும்; பிற்பட்ட சாதியைச் சார்ந்த 76 மாணவர்களும்; மிகவும் பிற்பட்ட சாதியைச் சேர்ந்த 55 மாணவர்களும்; இதர சாதியைச் சேர்ந்த 42 மாணவர்களும் என மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர்.
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கலாம் என்ற அரசாணையை எதிர்த்து, மதுரை ஆதி சைவ சிவாச்சாரியர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதை சாக்காக வைத்து பயிற்சி முடித்த மாணவர்களுக்கும் பணி நியமனம் இதுவரை மறுக்கப்பட்டு வந்ததோடு, 2007-2008 கல்வியாண்டிற்குப் பிறகு அரசின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளும் மூடப்பட்டன.
இந்நிலையில், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் மாரிச்சாமி என்பவர் மதுரை அருகேயுள்ள இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அய்யப்பன் கோயிலில் அர்ச்சகராக பணி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர் என்பதைத் தாண்டி, அரசின் போட்டித் தேர்வில் பங்கேற்று அதிலும் தனது திறமையை நிரூபித்த பின்னர்தான் இந்தப் பணியும் வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், தகுதியின் பெயரில் பார்ப்பனரல்லாத பிற்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக பணி நியமனம் பெற்றிருக்கிறார், என்பதுதான் இங்கே கவனிக்கத்தக்கது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களில் முன்னுரிமை அடிப்படையில், மாரிச்சாமியுடன் ஒன்றாக பயிற்சி முடித்த 205 மாணவர்களுக்கும் உடனடியாக பணிநியமனம் வழங்க வேண்டுமென்றும் மூடப்பட்ட அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறக்கக்கோரியும் கடந்த 02.08.18 அன்று இந்து அறநிலையத்துறை ஆணையரை சந்தித்து மனு அளித்தனர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்.
இதற்கு முன்னதாக, இதே கோரிக்கைகளுடன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க.வின் செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களையும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள். இவ்விரு சந்திப்புகளிலும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.
***
அர்ச்சகர் பயிற்சி முடித்து அரசின் தகுதிச் சான்றிதழைக் கையில் வைத்திருந்தும் நேரடி நியமனம் கிடையாது. டி.என்.பி.எஸ்.சி. மூலமாக போட்டித்தேர்வில் பங்கேற்று நேர்முகத்தேர்வை எதிர்கொண்டுதான் வேலை பெறமுடியும் என்கிறார், இந்து அறநிலையத்துறை ஆணையர். இந்து அறநிலையத்துறை சார்பாக செய்தித்தாளில் வெளியிடப்படும் விளம்பரத்தைப் பார்த்தோ, எந்தக் கோயிலில் காலியிடம் இருக்கிறதோ அங்குள்ள செயல் அலுவலரை அணுகியோ வேலைவாய்ப்புக்கு தனியே விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.
அரசின் மோசடியை அம்பலப்படுத்துகிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர், ரங்கநாதன்.
தமிழகத்தில் நிலவும் சாதித்தீண்டாமை, கருவறைத்தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் வரலாற்றை சுருங்கச்சொல்கிறார், வழக்கறிஞர் பொற்கொடி.
பாருங்கள், பகிருங்கள்!