பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரைக்கு அருகாமையில் உள்ளது ஏரிப்புறக்கரை. அதிக அளவில் மீனவர்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் வசிக்கும் கிராமம். கிராமத்திற்குள் நுழைந்தால் வீதியெங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக குழுமியிருக்கிறார்கள். வருபவர்கள் அதிகாரிகளா? நிவாரணம் கொடுக்க வரும் தன்னார்வலர்களா? என்ற எதிர்பார்ப்பு அவர்களுடைய கவலை தோய்ந்த முகத்தில் தெரிகிறது.
பெரும்பாலும் கூரை வீடுகள், ஓட்டு வீடுகள்தான். அங்கொன்றும், இங்கொன்றுமாக மெத்தை வீடுகள் அவ்வளவுதான். எந்த வீட்டின் மீதும் கூரையும் இல்லை, ஓடும் இல்லை… மொத்தமும் வாரி சுருட்டிக்கொண்டு சென்றுள்ளது கஜா.
ஏதோ ஒரு தொண்டு நிறுவனம் பொருட்கள் கொடுக்க வருவதாக சொன்னதும் சில நிமிடங்களுக்குள் மொத்த கிராமத்தினரும் நீண்ட வரிசைக்கு வந்து விட்டனர். அவர்களை எல்லாம் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர் சில இளைஞர்கள்.
சற்றுதொலைவில் பேருந்து நிறுத்தத்தின் கீழ் அமர்ந்திருந்த ஊர் பெரியவர்கள் மற்றும் மீனவ கிராம தலைவர் ராஜேந்திரனிடம் பேசினோம். “இங்க ரெண்டு பகுதி இருக்கு. ஏரிப்புறக்கரை, காரையூர்தோப்பு. இந்த இரண்டு ஏரியாவுலயும் மொத்தம் 500 மீனவக் குடும்பம் இருக்கு. மொத்த மக்கள் தொகை 2,000 பேர். எல்லாரும் கடலுக்கு மட்டும்தான் போவோம். அதேமாதிரி தாழ்த்தப்பட்ட மக்கள் 400 குடும்பம், 1,800 பேர் இருக்காங்க. இவங்களோட வேலை விவசாயம். அதுபோக மீனவர்களுக்கு உதவியாளர்களா வருவாங்க. அக்கம்பக்கமா எந்த வேலை இருந்தாலும் போயிடுவாங்க.
ராஜேந்திரன்.
இந்த ஒரு ஊர் மட்டுமில்ல.. காந்தி நகர்ல இருந்து கண்டியன் கொல்லை வரை 1,500 மீனவக் குடும்பம் இருக்கும். கீழத்தோட்டம் மட்டும் கடற்கரை பகுதி. இந்த மொத்த ஏரியாவுலயும் பில்டிங் வீட்ட தவிர மற்ற அனைத்து வீடும் பெருமளவு அழிஞ்சிடுச்சி. எங்களுக்கு கடலை நம்பித்தான் வாழ்க்கையே இருக்கு. கடல் இல்லனா நாங்க இல்ல. இந்த புயலால மொத்த படகும், வலையையும் இழந்து நிக்கிறோம். விவசாயிகளுக்கு எப்படி வீடும், நிலமும் சேதமோ, அதே மாதிரி எங்களுக்கு படகும், வலையும் டேமேஜ் ஆகிடுச்சி.
இங்க மொத்தம் 98 பைபர் படகு இருக்கு. அதை நம்பி 1,000 லேபர் இருக்காங்க. ஒரு படகு மூனு லட்சம் இஞ்சினையும் சேர்த்து. ஒருமுறை படகை ரிப்பேர் பண்ணனும்னா ஒன்னரை இலட்சம் செலவாகும். இஞ்சினை மட்டும் செலவு பாக்கனும்னா இருபதாயிரம் ஆகும். இப்ப இந்த புயலால 85% படகு சேதமாகிடுச்சி. இப்ப ஓரளவுக்கு ஒட்டத்துல ஒரு பத்து படகுதான் இருக்கு. அதே மாதிரி வலை யாருக்கும் மிஞ்சல. எல்லாம் சேதமாகிடுச்சி. அடிச்ச காத்துல சேத்துக்குள்ள போயிட்டு பூந்துகிச்சி. இழுத்தா எதுவும் வர்ல. அப்படியே வந்தாலும் எல்லாம் நரம்பு வலை தானே… அறுத்துக்கினு வருது. இப்ப வலையோட சேர்த்து ஒரு படகு வாங்கனும்னா அஞ்சி லட்சம் ஆவும். எங்கப் போறது?
ஒரு அஞ்சாறு பேரு மட்டும் 2, 3 படகு வச்சிருக்காங்க. இந்த ரெண்டு மூனு இருக்கவங்களுக்கு ஒன்னாவது மிஞ்சிச்சின்னா ஆறுதலா இருந்திருக்கும். அதுவும் இல்ல. எல்லாமும் இழப்பாயிடுச்சி. ஒரு மீனவனுக்கு வீடு மாடி வீடா, கூரை வீடா என்பது பிரச்சனை இல்ல. அதுல அவன் மதிப்பு இல்ல. அவன் எத்தன படகு வச்சிருக்கான் என்பதுல தான் இருக்கு. அதனால இந்த புயல்ல வீடு போனது கூட கவலை இல்ல. ஆனா படகு போனதுதான் ரொம்ப மனவேதனையா இருக்கு.
அரசுதான் நிவாரணம் அறிவிச்சி இருக்கே?
கவர்மெண்ட் அறிவிச்சிருக்க இந்த நிவாரணம், முழுசா சேதமடைஞ்ச போட்டுக்கு 85 ஆயிரம்னு சொல்லிருக்கு. இது நான்குல ஒரு பங்குதான். இத வச்சிக்கினு எப்படி படக வாங்குறது? இல்ல படகத்தான் எப்படி சீர்திருத்தம் பண்றது?
எங்க ஏரியா எம்.எல்.ஏ-வைப் பார்த்து நஷ்டஈடு பத்தாது. உயர்த்த சொல்லி பேசலாம்னு இருக்கோம். அப்பவும் எந்த நடவடிக்கையும் எடுக்கலனா தஞ்சை மாவட்ட மீனவர்கள் எல்லாம் சேர்ந்து மீன்வளத்துறை அமைச்சரை சந்திக்கலாம்னு இருக்கோம்.
நிவாரண பணிகள், உணவு தங்குமிடம் எல்லாம் எப்படி இருக்கு?
ஒருவேளை சாப்பாடு மட்டும் முகாமுக்கு அனுப்பிடுவாங்க. இப்ப பிஸ்கட் குடுத்திருக்காங்க. மத்தபடி வேற எதையும் செய்யிறது இல்ல. இங்க மொத்தம் அஞ்சி முகாம்கள் இருக்கு. இரண்டு மீனவர்களுக்கு. மூன்று தலித் மக்களுக்கு இருக்கு. இரண்டு வேளைக்கு கிராமத்து சார்பாதான் சாப்பாடு சமச்சி போடுறோம். கஜா புயல் வந்த பிறகு இந்த முன்னெச்செரிக்கை அறிவிப்பைத் தவிர வேற எதுவும் செய்யல. இதுவரைக்கும் ஆளும் அரசு ஒருத்தன் கூட வந்தும் பாக்கல.
கடலுக்கு போற ஒருத்தனுக்கும் யாருமே துணை இல்ல. போட், வலை, ஐ.டி கார்ட் இழந்தா உடனடியா தரனும். அவனோட வாழ்க்கையே அதுலதான் இருக்கு அப்படின்னு எந்த அரசும் சிந்திக்காது. இது வரைக்கும் சாப்பாடே முறையா தரல. இவனுக என்ன பண்ணிடப்போறனுங்க?
புயல் வந்த நாள்ல இருந்து கடல் பக்கம் போக புடிக்காம வீட்டுலயே முடங்கிட்டோம். வேறபோக்கு இல்ல. கவுந்துகிடந்த படகை எல்லாம் இப்பதான் நிமித்தி வச்சோம். இன்னும் சில படகு எங்க தூக்கி போட்டு கெடக்கோன்னு தெரியல.
இந்த துறை அதிகாரிங்க வந்து கணக்கெடுத்துனு போனாத்தானே ஏதாவது ஆறுதலாவது இருக்கும். எவனும் வந்து கணக்கெடுக்கல. எங்களுக்கு தெரிஞ்ச அனைத்து மட்டத்திலும் சொல்லிட்டோம். இதுவரைக்கும் ஒருத்தனும் வர்லன்னா பாத்துக்கோங்களேன். இப்படியே இருந்தா எங்க வாழ்வாதாரம் என்ன ஆவுறது?
நிவாரண முகாம்
1 of 2
நாங்க ஏற்கனவே வேலை இல்லாம இருக்கோம். ஒரு மீனவனுக்கு வருஷத்துல 6 மாசத்துக்கு தான் வேலை. மீன்பிடிக்க தடை, விழாக்காலம், மழைக்காலம்னு ஒரு ஆறு மாசம் சும்மாவே போயிடும். ஒரு நாளைக்கு கடலுக்கு போனா 1000 ரூபா கெடைக்கும். இன்னொரு நாளைக்கு 10000 ரூபா கெடக்கும்… அந்த சமயம் கெடக்கிற பணத்த வச்சிதான் வேலை இல்லாத நாள ஓட்டிக்கிட்டு இருந்தோம். இப்ப அதுவும் இல்ல.
இன்னொரு பிரச்சனை என்னன்னா, கொஞ்சம் பணக்கார மீனவங்க எல்லோரும் விசைப்படகுல போயிட்டு இரட்டை மடி வலையை வீசி மீன் பிடிக்கிறாங்க. இந்த வலையில மாட்டுன மீனு எதுவும் மிஞ்சாது. முட்டை முதல் குஞ்சி வரை வாறி இழுத்து வந்துடும். இந்த இரட்டை மடி வலை பயன்படுத்த அரசால் தடை விதிக்கப்பட்டிருக்கு. இருந்தும் அதை சில மீனவர்கள் பயன்படுத்துறாங்க. அதுக்குப்புறம் கடலுக்கு போற நாட்டுப்படகு மீனவனுக்கு மீனு கெடக்காது.
இந்த விசைப்படகால ஏற்கனவே எங்களுக்கு சிக்கல்தான். இப்ப இந்த புயல் ஒரு சேதாரம்.. இயற்கை ஒரு பாதிப்புனா. அரசாங்கமும் பெரிய பாதிப்பாதான் இருக்கு. எங்களோட வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராட்டம் பண்ணுறதைத் தவிர வேற வழியில்லை” என்கிறார்கள்.
“ஜோத்பூரிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்” என நவம்பர் 17 அன்று ஊடகங்கள் பரபரப்பைக் கிளப்பின. சில ஊடகங்கள் 1000 கிலோ என்றும் வேறு சில 2000 கிலோ நாய்க்கறி என்றும் மனம் போன போக்கில் செய்திகளை வெளியிட்டன.
வழக்கமாக போலீசு கூறும் கட்டுக்கதைகளை அப்படியே ’க்’, ’ச்’ விடாமல் வெளியிடும் ஊடகங்களுக்கு, இது போன்ற நடுத்தர வர்க்கத்தை நடுங்கச் செய்யும் பரபரப்புச் செய்தி என்றால் சும்மாவா? அதுவும் சைவ உணவு வெறியர்களாக அசைவத்தின் மீது வன்மம் கக்கும் பார்ப்பன ஊடகங்களுக்கு சொல்லவா வேண்டும்? இவ்விவகாரம் ஊடகங்களில் இருந்து உடனடியாக சமூக வலைத்தளங்களுக்குப் பரவி அங்கும் நாய்க்கறியே பேச்சானது. மீம் கிரியேட்டர்கள் நாய்க்கறிக்கும் மீம்களை தட்டிவிடத் துவங்கினர். கூடுதலாக வாட்சப் வதந்திகளும் பஞ்சமில்லாமல் பறந்தன. பார்ப்பனிய கார்ப்பரேட் ஊடகங்கள்தான் வாட்சப் வதந்திகளையும் உருவாக்குகின்றன என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட இறைச்சி
ஜோத்பூரிலிருந்து சென்னைக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சுமார் 1000 கிலோ இறைச்சி வந்த பெட்டிகளை கடந்த நவம்பர் 17-ம் தேதியன்று ரயில்வே போலீசு பரிசோதித்தது. அந்த இறைச்சி வந்த பார்சலை பிரித்துப் பார்த்ததும் அதில் இருக்கும் இறைச்சி குறித்து சந்தேகம் இருப்பதாகக் கூறி உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளை பரிசோதிக்க அழைத்தது. கூடுதலாக ஊடகங்களில் நாய்க்கறி கைப்பற்றப்பட்டது என்ற வதந்தியை செய்தியாக கிளப்பிவிட்டது போலீசு. இல்லை போலீசின் பெயரில் விலங்கு நல ஆர்வலர்களாக நடிக்கும் பார்ப்பனிய என்ஜிவோக்காளவும் இருக்கலாம். ஒரு சிலர் போலீசு மாமூல் பிரச்சினை காரணமாக இச்செய்தி வெளிவந்ததாக கூறுகின்றனர்.
நாய்க்கறியல்ல என்று நேர்காணல் அளிக்கும் சகிலா
இந்நிலையில் ஜோத்பூரிலிருந்து கறியை ஆர்டர் செய்திருந்த சகிலா என்பவர், அந்த பார்சலில் வந்தவை அனைத்தும் ஆட்டுக்கறிதான் என்றும் சந்தேகம் இருந்தால் அந்த கறியை பரிசோதனைச் சாலையில் கொடுத்து பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறினார். இதை சவாலாகவும் வீடியா ஆதாரங்களுடனும் கூறினார். மேலும் அவர்களுக்கு மாமூல் கொடுக்காததால்தான் இப்படி புரளியைக் கிளப்பியுள்ளனர் என்றும் கூறினார்.
ஆனால் ஊடகங்கள் சகிலாவின் தரப்பு வாதத்தை மழுங்கடித்துவிட்டு போலீசு கிளப்பிவிட்ட சந்தேகத்தை மட்டும் பிடித்துக் கொண்டன. அனைத்து செய்தி ஊடகங்களும் இந்தச் செய்தியை பரபரப்பு செய்தியாக்கியதன் தொடர்ச்சியாக அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் ஆட்டுக்கறி விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர், வியாபாரிகள்.
”நாங்கள் அதை துவக்கத்திலிருந்தே சர்ச்சைக்குரிய கறி என்றுதான் கூறிவந்தோம்.” – ரயில்வே பாதுகாப்புப்படை எஸ்.பி லூயிஸ் அமுதன் – மீசையில் மண் ஒட்டவில்லை
நாய்க்கறி சந்தேகத்தைக் கிளப்பிவிட்ட ரயில்வே போலீசு, அதன் பின்னர் ஊடகங்களுக்கு கொடுத்த நேர்காணல் அனைத்திலும், உணவுத்துறை அதிகாரிகள் அந்த ‘சந்தேகத்திற்குரிய’ இறைச்சியை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றிருப்பதாகவும், தாங்கள் ஆரம்பத்திலிருந்தே அதனை சந்தேகத்திற்குரிய இறைச்சி என்றே குறிப்பிட்டு வந்ததாகவும் கூறியிருக்கிறது.
தொடங்கி வைத்த ரயில்வே போலீசே ‘ஜகா’ வாங்கிய பின்னரும், ஊடகங்கள் அதனை விட்டபாடில்லை. ஆய்வு முடிவுகளில் ’அது நாய்க்கறி இல்லை’ என வந்தாலும் ஊடகங்கள் அதனை ஆட்டுக்கறி என்று நம்பத் தயாரில்லை என்பது அவர்களது செய்திகளில் பளிச்சென தெரிகின்றது.
இன்று (22-11-2018) மதியம்வரை அது என்ன இறைச்சி என உறுதியாகாத நிலையில், புதிய தலைமுறை இணையதளத்தில் நவம்பர் 22, அன்று காலையில் வெளியிட்ட, ‘நாய்க்கறி விவகாரம்: ராஜஸ்தான் சென்றது தனிப்படை’ என்ற தலைப்புக் கொண்ட செய்தியை, “ஜோத்பூரிலிருந்து சென்னைக்கு வந்த ரயிலில் நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்” என்றே தொடங்குகிறது.
வதந்தியைக் கிளப்பிவிட்ட போலீசே ’சந்தேகத்திற்குரிய இறைச்சி’ எனக் கூறிய பின்னரும் அதை நாய்க்கறி என்றே 22-11-2018 அன்று காலையில் எழுதியிருக்கிறது பாஜக கூட்டணியில் இருக்கும் பச்சமுத்துவின் புதிய தலைமுறை. மாலையில் ஆட்டுக்கறி என்று உறுதி செய்யப்பட்ட பின்னர், நல்லபிள்ளையாக ”நாய்க்கறி அல்ல, ஆட்டிறைச்சிதான்” என்ற செய்தியோடு நிறுத்திக் கொண்டது. ஒரு தன்னிலை விளக்கமும் இல்லை.
பத்திரிகைகளின் ‘மனு’ தர்மம்
1 of 5
தினத்தந்தி
தினமலர்
தினமணி
தமிழ் இந்து
புதிய தலைமுறை
ஒருவேளை இவ்விவகாரத்தில் ’சகிலா’ என்பவர் சம்பந்தப்படாமல் இருந்திருந்து, ஒரு ‘ஹரிஹரன்’ சம்பந்தப்பட்டிருந்தால், ஊடக அறத்தின்படி சந்தேகத்திற்குரிய இறைச்சி என புதிய தலைமுறை செய்தி வெளியிட்டிருக்கலாம்.
அது நாய்க்கறியா என சந்தேகத்தை கிளப்பிவிட்ட போலீசு, இப்போது அந்த விவகாரத்தை விட்டுவிட்டு, ’மீன்’ என்ற பெயரில் ஏன் பார்சல் ’புக்’ செய்யப்பட்டது என்ற புதிய பஞ்சாயத்தை முன் வைத்து பார்சல் ’புக்’ செய்தவரைக் கைது செய்ய ராஜஸ்தான் விரைந்திருக்கிறதாம்.
இதுகுறித்து தமிழ்நாடு இறைச்சி விற்பனையாளர் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “ஆய்வு செய்யாமல் ஒரு இறைச்சியை நாய் இறைச்சி என்று எவ்வாறு செய்திபரப்பலாம்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஹைதர் அலி இது குறித்துக் கூறுகையில், “ இராஜஸ்தானின் வெள்ளாடு வகையின் வால் ஒரு அடி வரையில் வளரக் கூடியவை. தமிழக வெள்ளாடு வகைகள் குட்டை வால் கொண்டவை. வடமாநிலங்களில் ஆட்டின் விலை குறைவாக இருப்பதாலும், இந்த ஆட்டின் சுவை நன்றாக இருக்கும் என்பதாலும் இந்த ஆட்டையே பெரும் ஹோட்டல்களுக்கு சப்ளை செய்கின்றனர். இதில் ஆட்டுக்கறியை நாய்க்கறி என்று புரளியைக் கிளப்பிவிட்ட ரயில்வே அதிகாரிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது ஆட்டுக்கறியாக இல்லாமல் நாய்க்கறியாக இருந்திருந்தால், வியாபாரிகள் மறியல் போராட்டம் செய்திருக்க மாட்டார்களல்லவா ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து நக்கீரன் இணையதளம், தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர், ராயபுரம் ஏ.அலி-யிடம் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளது.
இக்காணொளியில் வால் நீளமான ஆடுகள், சென்னையில் உரிக்கப்படும் காட்சியை பேட்டியின் இடையே காட்டுகிறார் அலி. அதில் காணப்படும் ஆடுகளின் வால் பெரியதாகவே இருக்கிறது.
அது ஆட்டுக்கறியா ? நாய்க்கறியா ? என்ற கேள்விக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பதிலளிக்கவில்லை என்று நியாயம் பேசிய போலீசு இன்று ஆய்வறிக்கையில் ஆட்டுக்கறி என்று வந்த பிறகு மீன் என்று வழக்கு போடுகிறது.
இந்த மோசடி ஒன்றும் புதிதல்ல. அக்லக் கொலையில் முதல் ஆய்வில் ஆட்டுக்கறியாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது, அடுத்த ஆய்வில் மாட்டுக்கறியாக உயிர்த்தெழுந்து வந்து அறிக்கையில் அமர்ந்தது போல, இங்கும் தாமதமாக வரவிருக்கும் ஆய்வு அறிக்கையில் நாய்க்கறி ஏதேனும் உயிர்த்தெழுமோ என்றெல்லாம் சந்தேகங்கள் அவாளின் மனதை ஆக்கிரமித்திருந்த சூழலில் அது ஆட்டுக்கறிதான் என ஆய்வறிக்கை தெளிவாகக் கூறியிருக்கிறது.
இந்த ஆட்டுக்கறியை , நாய்க்கறி என்பதாக உறுதியாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் அனைத்து துவாரங்களையும் மூடிக் கொண்டு அமைதியாக இருக்கின்றன . மவுனத்தைக் கலைக்க வேண்டியது நாம்தான்! உரக்கக் கேட்போம் “ஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனது எவன்டா ?”
“மலிவான ஆற்றலின் சகாப்தம் ஒரு முடிவுக்கு வருகிறது. சமூகங்கள், ஆற்றல் பயன்பாடு மற்றும் உள்கட்டமைப்பை மறுவடிவமைக்க வேண்டும் அல்லது அப்படி செய்யத் தவறியதற்கான கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட புதிய ஆய்வு ஒன்றின் முடிவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
உலகளாவிய நீடித்து நிலைக்கத்தக்க மேம்பாடு குறித்த அறிக்கைக்காக (Global Sustainable Development Report) ஐ.நா. கேட்டுக்கொண்டதற்கிணங்க பின்லாந்தின் பயாஸ் ஆய்வுக்கூடத்தைச் (BIOS Research Unit) சேர்ந்த உயிரியற்பியல் (BioPhysicist) விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை 2019-ம் ஆண்டு வெளியிடப்பட இருக்கிறது.
இந்த அறிக்கை சில துல்லியமான முன்னனுமானங்களைக் கொண்டுள்ளது. இன்று மேலாதிக்கத்தில் பொருளாதாரத் தத்துவங்களும், நவீன முதலாளித்துவக் கருத்தாக்கங்களும், சமூகத்திற்கு புதைப்படிவ எரிபொருட்கள் (பெட்ரோலிய) உள்ளிட்ட மலிவான ஆற்றல் இன்று போல என்றுமே கிடைத்துக்கொண்டே இருக்கும் என்ற தவறான அனுமானத்தைக் கொண்டிருக்கின்றன. அதன் காரணமாகவே அத்தத்துவங்களும், கருத்தாக்கங்களும் இன்றைய சூழலுக்கு போதுமானவையாக இல்லை என்ற வாதத்தை விஞ்ஞானிகள் குழுவினர் முன்வைகின்றனர். மேலும் காலநிலை மாற்றங்கள் உள்ளிட்ட திரும்பப்பெறப்பட முடியாத எதிர் விளைவுகள் மற்றும் கட்டுப்பாடில்லா நுகர்வு மற்றும் வளர்ச்சியின் விளைவாக ஏற்படும் சமூக அரசியல் பின்விளைவுகளை, இந்த கருத்தாக்கங்கள் கணக்கில் கொள்வதில்லை என்றும் கூறினார்கள்.
“மனிதகுல வரலாற்றில் முதன்முறையாக குறைவான ஆற்றல் செயல்திறன் கொண்ட ஆற்றல் வளங்களுக்கு பொருளாதாரங்கள் மாறுவேண்டியிருக்கிறது. அதன் காரணமாக அடிப்படையான மற்றும் இதர மனித நடவடிக்கைகளுக்கு போதுமான ஆற்றலை உற்பத்தி செய்வதற்கு மிக அதிக முயற்சிகளை மனித சமூகங்கள் செய்ய வேண்டியிருக்கிறது” என்று அறிக்கையில் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே புதிய ஆட்சிமுறை வடிவங்கள் மற்றும் பொருளாதார கொள்கைகளைப் பற்றி சிந்திப்பதற்கு விஞ்ஞானிகள் குழு உலக சமூகங்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
“ குறிப்பாக எதிர்வரும் காலக்கட்டத்திற்கான, பரவலாக பொருந்தக்கூடிய பொருளாதார வடிவங்கள் (economic models) எதுவும் வடிவமைக்கப்படவில்லை என்று உறுதியாக கூற முடியும்” எனக் குறிப்பிட்டு, உலகப் பொருளாதாரம் ஒரு புதிய சகாப்தத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். ”எங்களது கவனம் முழுதும் மாற்றம் நடக்க உள்ள அடுத்த சில பத்தாண்டுகளைப் பற்றியே இருக்கிறது“ என்கின்றனர் அக்குழுவினர்.
இதற்கு என்ன செய்ய வேண்டும் ? இதுகுறித்த முக்கியப் பிரச்சினைகள் சிலவற்றை விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்
குறைவான ஆற்றல் பயன்படுத்துதல் மற்றும் ஆற்றல் உள்கட்டமைப்பை உருமாற்றுதல் :
வாகனப் புகை
காலநிலை மாற்றத்தின் எதிர்விளைவுகளை மட்டுப்படுத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் உதவக்கூடும். ஆனால் இவற்றில் முதலீட்டுக்கும் கிடைக்கும் ஆற்றலுக்குமான (energy return on investment) விகிதம் மிகக் குறைவு. அதாவது புதைவடிவ எரிபொருள் மூலங்களை விட புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் பெறுவதற்கு முதலீட்டு செலவு அதிகம். வளர்ந்து கொண்டிருக்கும் ஆற்றல் தேவையை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அல்லது ஏனைய குறை கரியமில ஆற்றல் தீர்வுகளால் பூர்த்தி செய்ய முடியாது என்று கூற முடியாவிட்டாலும் மிகவும் கடினம்” என்று விஞ்ஞானிகள் குழு கருதுகிறது. இந்த அப்பட்டமான உண்மை காரணமாக “மொத்த ஆற்றல் பயன்பாட்டை குறைப்பதற்கு கணிசமாக அழுத்தம் தேவைப்படுகிறது” என்று அவர்கள் கருதுகிறார்கள்.
திறன் மிக்க குறைவான பயணம்:
உலகிலுள்ள அனைத்து நகரங்களிலும் நடத்தல், மிதி வண்டி ஒட்டுதல் மற்றும் மின்மயப்படுத்தப்பட்ட பொது போக்குவரத்து பயன்பாட்டிற்கு வலியுறுத்த வேண்டும். இதற்கு சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து பயன்பாடுகளை குறைக்க வேண்டும். மேலும் நகர கட்டுமான திட்டங்கள் மற்றும் வண்டி தயாரிப்பு, இருப்புப்பாதைகள், சாலைகள் மற்றும் மின்னேற்ற நிலையங்கள் (charging stations) உள்ளிட்ட போக்குவரத்து உள்கட்டமைப்புகளில் மாற்றங்கள் தேவை.
உணவுப்பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெறுதல்:
வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் உணவுப்பொருட்கள் உற்பத்தியில் கண்டிப்பாக தன்னிறைவு பெற வேண்டும். ஏனெனில் வருங்காலத்தில் உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்வதற்கு சில பகுதிகளை மட்டுமே நம்பி இருப்பது பேராபத்து என்றும் கூறுகின்றனர். மேலும் பால் மற்றும் இறைச்சி பயன்பாட்டிலிருந்து பெரும்பாலும் தாவர உணவு பயன்பாட்டிற்கு மாற வேண்டும் என்றும் ஆலோசனை கூறுகின்றனர் .
நீடித்து நிற்கும் மர வீடுகளை கட்டுதல்:
சிமெண்ட் ஆலையிலிருந்து வெளிவரும் புகை
“தற்போது சிமிட்டிக்கலவை மற்றும் எஃகு பயன்பாடு கட்டுமானத் துறையில் மேலாதிக்கம் செலுத்துகிறது. அதன் உற்பத்தி மற்றும் இதர சுழற்சி முறைகள் ஆற்றலை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. எனவே கரியமில வாயு மற்றும் இன்னப்பிற மாசுக்கள் உருவாக்கத்திற்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு இவை பங்காற்றுகின்றன” என்று விஞ்ஞானிகள் குழு கூறியிருக்கிறது. இதற்கு மாறாக நீடித்து நிற்கும் மரத்தாலான கட்டிடங்கள் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுக்குள் வைக்க உதவும் என்று அறிவுறுத்தினார்கள்.
மேற்சொன்ன மாற்றங்களை செய்வதற்கு முன்னெப்போதுமில்லாத அளவிற்கு நடவடிக்கைகள் தேவை என்கின்றனர் விஞ்ஞானிகள்.
“சந்தை அடிப்படையிலான நடவடிக்கை போதுமானது அல்ல. ஒரு விரிவான பார்வையுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்ட திட்டங்கள் இருக்க வேண்டும். இல்லையெனில், உலகளாவிய நீடித்து நிலைப்பதற்கான குறிக்கோள்களை அடைவதற்கான விரைவான அமைப்புமுறை மாற்றம் சாத்தியமே இல்லாமல் போகும்” என்று எச்சரித்துள்ளனர்.
ஒவ்வொரு சமூகமும் நிலையான பொருளாதாரத்தை அடைவதற்கு சொந்தமாக தீர்வுகளை கண்டறிய வேண்டும் என்று அறிஞர்கள் குழு அறிவுறுத்தியுள்ளது. எனினும் அதன் மாற்றங்களின் ஒவ்வொரு நிலையிலும் அரசின் தலையீடு தேவைப்படக்கூடும்.
நீடித்து நிலைத்திருத்தலுக்கான மாற்றங்களை தொடங்குவதற்கு முன்னேறிய அரசுகளே முன்னிலை வகிக்க வேண்டும். ஒருபுறம் மிகப்பெரிய பொது முதலீட்டு திட்டங்களையும் மறுபுறம் கடுமையான கட்டுப்பாட்டுகள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு திட்டங்களையும் செயல்படுத்த மிகப்பெரிய பொருளாதார கொள்கை தேவைப்படுகிறது. நவீன உலகப்பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவிலான நீடித்து நிலைத்திருத்தலுக்கான மாற்றத்திற்கு நிதி அளிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் தேவையான சட்ட அதிகாரமும் திறனும் அரசுகளுக்கு மட்டுமே இருக்கின்றன.
கட்டுப்பாடில்லா நுகர்வு மற்றும் வளர்ச்சியின் விளைவாக ஏற்படும் சமூக அரசியல் பின்விளைவுகளை, முதலாளித்துவம் கணக்கில் கொள்வதில்லை
சுமார் 15,000 விஞ்ஞானிகளைக் கொண்ட உலக விஞ்ஞானிகள் கூட்டணி (the Alliance of World Scientists) எந்தெந்த வழிகளிலெல்லாம் மனிதனின் நடவடிக்கைகள் உயிர்க்கோளத்தை அரிக்கின்றன என்பதை விளக்கி ‘மனிதநேயத்திற்கான எச்சரிக்கை’ (Warning to Humanity) என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தனர். இந்த அறிக்கை வெளியிடப்பட்டு ஓராண்டிற்குள்ளேயே பின்லாந்து விஞ்ஞானிகள் குழுவின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
விஞ்ஞானிகள் ஐந்து வகையான பரந்துபட்ட தீர்வுகளை முன் வைக்கின்றனர்:
சுற்றுச்சூழலை கெடுக்கும் செயல்பாடுகளை நாம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மேலும் நாம் சார்ந்திருக்கும் இப்புவியின் சூழல் அமைப்பின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும். சான்றாக புதைப்படிவ எரிபொருளுக்கு மாற்றாக தீங்கற்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களுக்கு மாறுவதன் மூலம் பசுமைக் குடில் வாயுக்களை குறைப்பதுடன் நீர், நிலம் மாசுபடுதலையும் கட்டுப்படுத்த வேண்டும். மூன்றாம் உலக நாடுகளின் தேவைக்கேற்ப அதாவது அளவில் சிறிய மற்றும் எளிமையான ஆற்றல் வளங்களை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். காடுகளை அழித்தல், விவசாய நிலங்களை அழித்தல், நிலம் மற்றும் கடல் சார்ந்த தாவர மற்றும் விலங்கு இனங்கள் அழிக்கப்படுவதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும்.
மனித சமூகத்திற்கு இன்றியமையாத வளங்களை நாம் திறம்பட கையாள வேண்டும். ஆற்றல், நீர் மற்றும் ஏனைய வளங்களை திறம்பட பயன்படுத்துவதற்கும் அவற்றை பாதுகாப்பதற்கும் மறுசுழற்சி செய்வதற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
மக்கள்தொகையை கட்டுக்குள் வைக்க வேண்டும். மேம்பட்ட சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளின் அவசியத்தை அனைத்து நாடுகளும் உணரும் போதும் திறமையான, தன்னார்வ குடும்ப திட்டமிடலை மேற்கொள்ளும் போதும் மட்டுமே இது சாத்தியமாகும்.
வறுமையை குறைத்து முடிவில் இல்லாதொழிக்க வேண்டும். “இது போன்ற துணிச்சலான இலக்குகள் நம்முடைய நாட்டிற்கு தேவை என்று நான் நம்புகிறேன்” என்று தி எர்த் நிறுவனத்தின்(The Earth Institute) முன்னாள் இயக்குனரான ஜெஃப்ரி சாக்ஸ் கூறுகிறார். வரும் 2030-ம் ஆண்டிற்குள் வறுமையை குறைந்தது பாதியாக குறைக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
நாம் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் மேலும் குழந்தைகளைப் பெறுவதற்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை பெண்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும். பெண்களுக்கு கல்வியறிவு கிடைக்கும் போது அவர்களுக்கு குறைவான குழந்தைகளே இருக்கும். அக்குழந்தைகளுக்கு அதிக வளங்கள் கிடைப்பதால் நல்லவிதமாக பேணப்பட்டு முன்னேற்றம் அடைவார்கள்” என்று பில் நியே (Bill Nye) கூறுகிறார். மேலும், “எந்த அளவிற்கு பெண்கள் வேகமாக கல்வியறிவை பெறுகிறார்களோ அந்த அளவிற்கு ஒவ்வொரு மனிதருக்கும் வரும் காலங்களில் அதிக வளங்கள் கிடைப்பதை அறிவியல் கல்வி வழியாக நாங்கள் செய்ய விரும்புகிறோம்” என்கிறார்.
அறிவியலாளர்கள் சுற்றி வளைத்துக் கூறும் கருத்து என்ன? உலகைக் காக்க அதன் இயற்கை வளத்தை காப்பாற்ற, இருக்கின்ற வளங்களை அனைத்து மக்களுக்கும் பகிர்ந்து கொடுக்க உலகளாவிய பொருளாதார கொள்கைகள், முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அந்தக் கொள்கை சந்தைப் பொருளாதாரத்திற்கு எதிராக இருக்கும். எனில் அதன் பெயர் சோசலிசம்.
எனது கிளினிக்கிற்கு கடந்த சில வருடங்களாக நோய் நிமித்தம் சந்திக்கும் பெண்மணியின் கதை;
எப்போது வந்தாலும் தனது கணவரை பற்றியும் அவரது குடிப்பழக்கம் எப்படி தங்கள் வாழ்க்கையை சீரழிக்கிறது என்றும் என்னிடம் கூற ஒரு நிமிட கதையாவது வைத்திருப்பார்.
அந்த சிறுகதைகளை கேட்பதைத் தவிர அவருக்கு வேறெதுவும் என்னால் செய்ய இயலாத போதும்.. நான் அந்த கதைகளுக்கு செவி கொடுப்பதே அவருக்கு ஆறுதலாய் அமைந்ததென்பதை உணர்ந்தேன்.
இப்படியாக சில சமயம் கணவர் உடன் வரும்போது என்னிடம் கூறி அவரது கணவரை கண்டிக்க கூறுவார்.
நானும் என்னால் இயன்ற அளவு அவரது கணவரை குடியின் கொடூரங்களை கூறி விடுங்களேன்; என்று அச்சமூட்டி, எச்சரித்து பிறகு சில காலம் கெஞ்சி, கொஞ்சியும் கூறினாலும் குடியை அவர் நிறுத்தியபாடில்லை.
குடி நோய் சூழ் கொண்ட மனிதனுக்கு மருத்துவனே எதிரியாகத்தான் தெரிவான்.
காரணம் அவன்தானே சதா குடிக்காதே என்று பயமுறுத்திக் கொண்டே இருக்கிறான்.
சில மாதம் முன்னர் கணவனும் மனைவியும் என்னை சந்திக்க வந்திருந்தபோது நிகழ்ந்த நிகழ்வை உரையாடலாய் காண்போம்
சில வாரங்கள் முன்பு அவரது மனைவி வந்தார் முதுகு வலி என்று;
“சார்.. அந்த பாழாப்போனவன் திரும்பவும் குடிக்க ஆரம்பிச்சுட்டான் சார்.. நேத்து வீட்டுக்கு வந்து பிள்ளைங்கள கேவல கேவலமா கேக்குறான். பிள்ளைங்களாம் ஒரே அழுகை.. என்னனு கேட்டதுக்கு.. என்னை கீழ தள்ளிவிட்டு மண்டை ஒடஞ்சிருச்சு சார். பெரியாஸ்பத்திரிக்கு போய் நைட் தையல் போட்டுட்டு வந்தேன். முதுகு நல்லா வலிக்குது.”
“மா.. உங்க நிலைமைய நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு. பேசாம போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுங்கம்மா.. உங்க சொந்த ஊரு எது. அங்க போய் இருங்க.. அது தான் உங்களுக்கும் உங்க பிள்ளைங்களுக்கும் நல்லது போல தெரியுது”
“எனக்குனு நாதி இல்ல சார். இந்த ஆள லவ் பண்ணி வீட்ட எதிர்த்து கல்யாணம் பண்ணேன். நல்லாதான் இருந்தான். இந்த பாழாப்போன ஃப்ரெண்ட்ஸ்னு நாலு பேரு. சேர்ந்து தண்ணி.. தண்ணினு எங்க உசுர வாங்குறான். எப்ப அவனுக்கு சாவு வரும்னு இருக்கு. நிம்மதியா தாலிய அறுத்துப்போட்டுட்டு இருந்துருவேன் சார்” என்று கதறி அழுதார்..
அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன், சில நாட்கள் முன்பு
என்னை சந்தித்தார் அந்த பெண்மணி
” என்னமா.. வீட்டுக்காரரு என்ன பண்றாரு இப்ப? கொஞ்சம் பரவாயில்லையா..? ”
“போன வாரம் தான் சார் இறந்து போனாரு.. குடிச்சுட்டு வண்டில வீட்டுக்கு வரும் போது ரோட்டுல அடிபட்டு சார்…”
நான் ” ஐயோ… கவலைப்படாதீங்கமா.. நீங்க அவரால பல கொடுமைகளை அனுபவிச்சுருக்கீங்க.. நீங்க கடைசியா என்ன பாக்கும் போது கூட சாவு வந்தாதான் நிம்மதியா இருப்பேன்னு சொன்னீங்க.. அதுவே நடந்துருச்சு.. கஷ்டமா இருக்குமா”
“என்ன குடிச்சுட்டு வந்தாலும் அடிச்சாலும் வீட்டுக்கு தேவையானத செஞ்சுடுவாரு சார். தினக்கூலிய என் கைல குடுத்துட்டு தான் குடிக்கவே வாங்கிட்டு போவாரு.. நான் பட்டினியா கெடந்தா தாங்க மாட்டாரு சார்.. குடி மட்டும் இல்லனா என் கூட இருந்துருப்பாருல சார்”
என்ன பேசுவது என்று எனக்கு இப்போது வரை தெரியவில்லை. ஒரு துளி கண்ணீரை தவிர எனக்கு வேறு பேசவும் தோணவில்லை. நிச்சயம் மரணம் ஓர் வடிகட்டி தான் என்பதை உணர்ந்த தருணம்.
ஆயிரம் வலிகள் ஒருவர் நமக்கு தந்திருந்தாலும் அவரை பிரிந்த பின் அவர் தந்த இன்பங்களை மனம் தேடுவது மனித இயல்பு.
மரணம் ஒரு வடிகட்டி
நன்றி :ஃபேஸ்புக்கில் –Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை.
தமிழகத்தின் கிழக்கே நீண்டு நெடிந்து படர்ந்துள்ள வங்காள விரிகுடா கடற்கரையையொட்டி அமைந்துள்ள முக்கிய நகரங்களில் ஒன்று அதிராம்பட்டினம். அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் கடற்புறத்தை ஒட்டி அமைந்துள்ள மீனவர் கிராமம் ஏரிப்புறக்கரை.
இங்கு சுமார் இருநூற்றுக்கும் அதிகமான மீனவக்குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நூற்றுக்கும் அதிகமான நாட்டுப்படகு (ஃபைபர் போட்) வைத்து மீன்பிடித்துத் தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். தற்போதைய கஜா புயலானது இவர்களின் வாழ்க்கையையும் விட்டு வைக்கவில்லை.
அங்கு நாம் பார்த்துப் பழகிய மெரினா போன்றோ அல்லது புதுச்சேரி போன்றோ கடற்கரையானது காணப்படவில்லை. ஒரு வாய்க்காலில் ஃபைபர் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்க்கும் போது ஆங்காங்கே குப்புறக் கிடந்த படகுகள் மற்றும் சிதறிக் கிடந்த வலைகளைக் காண முடிந்தது.
சுற்றுவட்டாரத்தில் பெரும்பாலான மக்கள் எங்களை விடவும், மீனவ மக்களுக்கு அதிக பாதிப்பு எனத் தங்களின் சொந்த பாதிப்பையும் கூட பின்னால் வைத்துதான் பேசினர். அப்போது அங்கு தனது வலைகளை சீர்படுத்திக்கொண்டிருந்த மீனவர் சங்கரிடம் விசாரித்த போது அவர் விவரிக்கத் தொடங்கினார்.
மீனவர் சங்கர்.
“இன்னைக்குதான் எங்க படகுகளையெல்லாம் மேல ஏத்தி வச்சி இருக்கோம். புயல்ல அப்புடியே தண்ணில தலகுப்புற கிடந்தது இந்த படகெல்லாம். அப்புடி நிலமை இருந்த போதும் கூட அரசாங்கத்துல இருந்து யாரும் வரல…
அதுக்குப்பின்னாடி நாங்க இந்த ECR ரோட்டுல உக்காந்த பொறவுதான் ஆர்.டி.ஓ., கலெக்டரு எல்லாம் வந்தாங்க. ஆனா யாரும் இங்க வந்து முறையா பாக்கல. எங்ககிட்ட எத்தன படகு சேதமுன்னு கேட்டு எழுதிகிட்டு போயிட்டாங்க. அதுக்கப்புறம் இன்னைக்குத்தான் ஜே.சி.பி.-ய கொண்டாந்து தண்ணில கெடந்த படகுகளை மேல ஏத்தி போட்டாங்க. அதுக்கப்புறம் நாங்க பாத்து எது.. எது எங்களோட வலை, பொட்டின்னு தேடி எடுத்துவச்சி பழுது பாத்துட்டு இருக்கோம்.” என்றார்.
சரி உங்க ஊரப் பத்தி, தொழில பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்…
“எங்க ஊரு பேரு ஏரிப்புறக்கரை… இங்க சுத்தி ரெண்டுபக்கமும் பெரும்பாலும் விவசாயம்தான் செய்யுறாங்க… நடுவுல மட்டும் நாங்க ஒரு இருநூறு குடும்பத்துக்கு மேல மீனவர்கள் வாழ்ந்துட்டு வாரோம்.
என்ன எங்க தொழிலு கடலுக்கு போயி கிடைக்கிற இறாலு.. நண்டு.. அப்பைக்கப்ப கொஞ்சம் மீனு கிடைக்கும். அத கொண்டாந்து இங்க அதிரம்பட்டனத்துல வித்து வாழ்க்கைய ஓட்டிகிட்டு இருக்கோம்.
இங்க உள்ள மீனவர்கள் பொருத்த வரைக்கும் விசைப் படகு மாதிரி தங்கி மீன் பிடிப்பது கிடையாது. ஒரே நாள்ல காலைல 4 மணிக்கு கிளம்புனா போற தூரத்த பொறுத்து அன்னைக்கு சாயங்காலம் 3 மணில இருந்து 6 மணி வாக்குல திரும்பி வந்துடுவோம். இங்க கரையில வியாபாரிங்க பைக்குல வந்து எங்க மீன வாங்கிட்டு போயி அதிராம்பட்டினம் மார்க்கெட்டுல விப்பாங்க.
எங்க தொழில பொருத்தவரைக்கும் எல்லாமே கடன்லதான் ஓடிகிட்டு இருக்கு. நாங்க ஒரு ஐம்பதாயிரம் ஒருலச்சமுன்னு வலையும் கடன்லதான் வாங்கி இருக்கோம். கடலுக்கு நாங்க ஒரு 3 – 4 பேர் போனாத்தான் எங்களுக்கு வேலைகள் பாக்குறதுக்கு வசதியா இருக்கும். கெடைக்குற வருமானத்த பங்கு பிரிச்சிப்போம். ஆனா சரியா மீன் கிடைக்காம போச்சுன்னா எங்களுக்கு ஒன்னும் கிடைக்காது. அதனால இப்பல்லாம் ஒரு படகுக்கு 2 பேர் ஒருத்தருன்னுதான் போறோம்.
மீனவர் ரகுராமன்.
நாங்க கடல்ல 15 நாட்டிக்கல் வரைக்கும் கூட போவோம். சில நேரங்கள்ல மீன் கிடைக்காம இன்னும் உள்ளார போறதும் உண்டு. அப்பத்தான் வலைய சீர் செய்யுறதுக்கு, படகு மெயிண்டன் பன்னுறதுக்குன்னு கொஞ்சம் பணத்த ஒதுக்க முடியும்.
அதே போல வலைகள அப்பய்க்கப்ப சீர்படுத்தனும் ஏன்னா ஒருமுறை மீன் பிடிச்சா அதுக்கப்புறம் வலையில் இருக்குற ஓட்ட பெருசா போயிடும். அடுத்தமுறை அந்த வலைய போட்டமுன்னா மீனோ இல்ல நண்டோ வலையில தங்காது. அதுமாதிரி வலை அழிஞ்சி போகும்போது அதுக்கு திரும்பவும் கடன் வாங்கிதான் வலை வாங்கி போடனும். சில நேரம் கடல்ல வலை இழுத்துகிட்டு போயிடும். அதுக்கு அடையாளமா ஒரு கொடி கட்டி கடல்ல கொம்ப போட்டுடுவோம். பல ஆயிரம் மதிப்பு இருக்கக்கூடிய வலைகளுக்கு அடையாளம் பாதுகாப்பு எல்லாமே இந்த ஒரு கொம்பு மட்டும்தான்.
ஏது எப்படியோ எங்களுக்கு வருமானம் வருதோ இல்லையோ கடன்மட்டும் ஏறிகிட்டு இருக்கும். வர வருமானம் பூரா அந்த கடனுக்கு வட்டிகட்டுறது அன்னாட குடும்ப செலவுக்குதான் சரியா இருக்கும்.
அந்த வருமானமும் எல்லா நாள்லயும் இருக்காது. ஏன்னா இங்க பக்கத்துல மல்லிப்பட்டனத்துல விசைப்படகுகள் அதிகம். அதனால மீன்பிடிக்குறதுல எங்களுக்குள்ள பிரச்சினை வரக்கூடாதுன்னு அவங்க ஒரு நாள் நாங்க ஒரு நாளுன்னு மாத்தி மாத்தி போறதால மாசம் 15 நாள் தான் வேலை இருக்கும்.
அதுக்கப்புறம் புயல் அறிவிப்புன்னு அரசாங்கம் சொல்லிடுச்சின்னா நாங்க கடலுக்கு போக மாட்டோம். அப்ப வருமானம் போயிடும். இதுமாதிரிதான் எங்க வாழ்க்கயே கடல்ல அன்னாடம் காய்ச்சியாக மாறி இருக்கு.
அதுமட்டும் இல்லாம கொஞ்சம் மீன் ஏதாவது கிடைக்குமுன்னு முன்ன போனா இலங்கை கடற்படை வந்து புடிச்சிட்டு போயிடும். எங்க பொருளுக்கும் உயிருக்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது.
இந்த புயலால உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு …
“பொதுவாவே மழைபேஞ்ச்சா இங்க இந்த வாய்க்கால் பூரா நிறைஞ்சிடும். ஆனா அது கொஞ்ச நாள்ல இறங்கிடும். அப்ப நிறுத்தி வச்சி இருக்குற படகுகள் கொஞ்சம் ஒன்னோட ஒன்னு மோதுறதால பாதிக்கும் அத நாங்களே சரி பண்ணிப்போம். ஆனா இந்த மாதிரி ஒரு புயல நான் பாத்ததில்ல. எங்க அப்பா தாத்தா காலத்துல என்ன நடந்துச்சோ தெரியாது. இதுதான் பெரிய பாதிப்பு.
அரசாங்கம் புயல் எச்சரிக்க குடுத்ததும் பலரும் இங்க இருக்குற புயல் கட்டிடத்துல தங்கிட்டோம். படகுகளையும் மேல ஏத்தி கட்டிட்டோம். ஆனாலும் படகுகள் எதையும் காப்பாத்த முடியல. எல்லாம் தண்ணியில பெறண்டு போயி அதுல இருந்த வலை, பாக்ஸ் (பெட்டி) எல்லாமும் வாய்க்கால்ல கெடந்துது.”
இப்ப ஏற்பட்ட பாதிப்புகள சரி செய்ய என்ன பண்ணனும்?
“இப்ப பாத்தா எல்லா போட்டும் சேதமாகி போயி இருக்கு. இந்த படக வச்சிகிட்டு நாம கடலுக்குள்ள போக முடியாது. அதனால அதுல இருக்குற ஓட்டைகள சரி பண்ணனும் அதுக்கு கொறஞ்சது ஒரு இருபதாயிரம் வரைக்கு செலவாகும். எஞ்சின் தான் ரொம்ப முக்கியமானது. அது இப்ப தண்ணில மூழ்கிப் போனதால எல்லாத்தையும் பிரிச்சி ரிப்பேர் செய்யனும். அதுக்கே, 30,000/- ஆயிடும். வலைகளெல்லாம் இப்ப எதுக்கும் பிரயோஜனம் இல்லாம போயிட்டு. வலைகள் வாங்கனுமுன்னா அது கொறஞ்சது நாப்பதாயிரம் வரைக்கும் ஆயிடும். நாங்க ஒரு ஐம்பதாயிரத்துல இருந்து ஒரு இலட்சம் வரைக்கும் அவுங்கவுங்க பாதிப்ப பொருத்து செலவு பண்ணனும்.
இதெல்லாம் சரி செஞ்சி தொழிலுக்கு போகறதுக்கு கொறஞ்சது ரெண்டுமாசம் ஆயிடும். இப்ப ஒரு பத்து நாளைக்கு அரசாங்கம் சோறு போடும். ஆனா, அதுக்கப்புறம் நாங்க என்ன செய்யுறது. திரும்பவும் படகு, வலை, குடும்ப செலவு எல்லாத்துக்கும் கடன் தான். இந்த கடன்லயே எங்க ஆயிசு போயிடும் போல இருக்கு.”
அரசாங்கம் நிவாரணம் எல்லாம் உங்களுக்கு சரியா கிடைக்கும்னு நினைக்குறீங்களா?
“அரசாங்கத்த தவிர வேற யாரும் எங்களுக்கு நிவாரணம் தரமுடியாது. ஏன்னா, இன்னிக்கு பல ஊர்கள்ல இருந்தும் காலேஜி பசங்க, முசுலீம் அமைப்புகள் எல்லாம் வந்து சாப்பாடு போடுறது பெட்சீட் துணி மணி எல்லாம் செய்யுறாங்க. அது ஜனங்களா தன்னார்வமா வந்து செய்யுறது. அத சும்மா சொல்லக்கூடாது ரொம்ப உதவி பண்ணுறாங்க ஆனா அது மட்டும் எப்புடி நிவாரணமாகும்? எங்களுக்கு வாழ்வாதாரத்த உத்திரவாதம் செஞ்சா தானே நாங்க பொழைக்க முடியும்.
ஏதாவது செய்யணுமுன்னு நாங்க எதிர்பாத்துகிட்டு தான் இருக்கோம். எங்களுக்கும் அரசாங்கத்தவிட வேற வழி ஏதுமில்ல… ஆனா செய்யுமான்னு தெரியல… செய்யலன்னா திரும்பவும் போராட்டம்தான் செய்யணும்..
இது வரைக்கும் கடற்கரையில மட்டும் தான் பாதிப்பு இருக்கும். ஆனா இந்த முறை மேல ஏரி பூரா ஊரையும் நாசம் பண்ணி இருக்கு. தென்னை, நெல் எல்லாம் வீணா போயி இருக்கு. அங்கயும் போய் பாருங்க கொஞ்சம்…” என தனது வாழ்க்கை சோகத்திலும் அடுத்தவர் பாதிப்பையும் தன் பாதிப்பாக பார்க்கின்றனர் மீனவ மக்கள்.
சென்னை பெருவெள்ளத்தின் போதும், கேரள வெள்ளத்தின் போதும் யாரும் கேட்காமலேயே ஓடோடி வந்த மீனவ மக்களை வர்தா புயலின் போதும் சரி, ஒக்கி புயலின் போதும் சரி நிற்கதியாய் தவிக்கவிட்டது இந்த அரசாங்கம். அந்த வரிசையில் கஜா புயலையும் சேர்த்து விட்டார்கள்.
மனித மூளைதான், ஊடுறுவல் மற்றும் தகவல் திருட்டின் அடுத்த கட்ட இலக்காக இருக்கக்கூடும் என இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அவர்கள் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில், நரம்பு மண்டல பதிய தொழில்நுட்பங்களின் (neural implant technologies) மூலமாக நமது நினைவை வெளிப்படுத்தவோ, இழக்கவோ செய்யக்கூடிய அபாயங்கள் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கெனவே அடிப்படையான மூளை பதியங்கள் இங்கு இருந்தாலும், தற்போதைய அறிவியல் வளர்ச்சி, நினைவகத்தின் வேதிவினைகளில் நிபுணத்துவம் பெறும் அபாயத்தின் முனைக்கு வந்துவிட்டதைக் காட்டுகிறது.
தற்போது, ஆழ் மூளை தூண்டுதல் (Deep Brain Stimulation) எனும் சிகிச்சை முறையில், உடலில் ஒரு கருவி வைக்கப்பட்டு, குறிப்பான இடங்களில் பொருத்தப்படும் அதன் மின்வாய்களின் மூலம் மின் தூண்டுதல்களை செலுத்தி நரம்பு மண்டலத்தை சிதைக்கும் நடுக்குவாத (Parkinson’s) நோய்க்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது.
கருப்பு ஆடி (Black Mirror) எனும் தொலைக்காட்சி தொடர்களில் காட்டப்படும் நினைவுப் பதிய கருவிகள் தற்போது நடைமுறையில் உள்ள DBS அமைப்பு முறையினாலெயே கூடுமானவரையில் உருவாக்கப்பட்டிருக்கும். இத்தகைய அமைப்பு முறைகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து காஸ்பெர்ஸ்கி ஆய்வகமும் (Kaspersky Labs) ஆக்ஸ்போர்ட பல்கலைக்கழகமும் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. அவர்களது ஆய்வு முடிவுகள் மிகவும் சிறப்பாக வெளிவந்துள்ளன.
அவர்களின் அனுமானப்படி, நினைவக பதியக் கருவிகளை பொருத்தி நினைவை கட்டுப்படுத்தக் கூடிய தொழில்நுட்பம் அடுத்த இருபது ஆண்டுகளில் கிடைத்துவிடும். அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மேம்பட்ட ஆராய்ச்சி திட்டங்கள் முகமையால் (Defense Advanced Research Projects Agency) நிதியளிக்கப்பட்ட ஆய்வு சமீபத்தில், மூளை குறியாக்க மின் குறியீடுகளை மனிதனிடமிருந்து பிரித்து அவர்களுக்கே திருப்பி அனுப்பச் செய்வதன் மூலம் மூளையின் குறை நேர நினைவு (short-term memory) செயல்திறனை 37 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே இருக்கும் பதியங்களில், பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் வலுவற்ற நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள். மருத்துவர்கள் மற்றும் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் பயன்படுத்தும் மருத்துவ மேலாண்மைக் கருவிகளுடன் தகவல் பரிமாற்றத்துக்காக இணைகையில் இத்தகைய பாதுகாப்பு அபாயங்கள் இருக்கின்றன. இத்தகைய கருவிகளில் தற்போது நடைமுறையில் உள்ள அதிநவீன கருவிகள் கூட புளூடூத் தொழில்நுட்பத்திலேயே தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன. இந்த புளூடூத் தொழில்நுட்பம், புகழ் பெற்றதாகவும், எளிமையானதாகவும் இருப்பினும் இது பாதுகாப்புக் குறைபாடு கொண்டதாகவே இருக்கிறது
தகவல் திருட்டை தடுக்கும் வழிதான் என்ன?
கெடு நோக்கம் கொண்டவர்கள் இந்த கருவியின் கட்டுப்பாட்டை ஊடுறுவி கைப்பற்றுவது மட்டுமல்லாமல், உடலுக்கு வலியையும் உடலின் இயக்கத்தை சீர்குலைக்கவும் செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல், தொழில்நுட்பம் போதுமான அளவுக்கு வளர்ந்த பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகளை கைப்பற்றுவதன் மூலம் பணயத்தொகை கேட்டு அவர்களை மிரட்டவும் முடியும் என்று அவ்வறிக்கை எச்சரிக்கை செய்கிறது.
அத்தகைய கருவிகளுக்கு இயல்பாகவே ஒரு பின்வாசல் வழி ஒன்று தேவைப்படுகிறது. நெருக்கடி நேரத்தில் மருத்துவ நிபுணர்கள் அதன் வழியாக அக்கருவியை அணுக முடியும். அதே நேரத்தில் இதில் உள்ள சிக்கலையும் ஆராய்ச்சிக் குழு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. விஐபி நோயாளி ஒருவரின் கருவியை அணுகும் வழியை ஒருவருக்கு மருத்துவ நிபுணர்கள் விற்பதை எதுவும் தடுக்கப் போவது இல்லை. அதே போல, தயாரிப்பின் போது அமைக்கப்பட்ட கடவுச்சொல்லை (factory-preset password) மாற்றுவதற்கு மறந்து போவதை தடுக்கப் போவது இல்லை.
இதுவரையிலும் நரம்புமண்டல தூண்டுதல் கருவிகளைக் குறிவைத்து தாக்குதல்கள் நடைபெறாமல் இருப்பதற்கு, அத்தொழில்நுட்பம் இன்னமும் பரவலாகாமல் இருப்பதே காரணம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். தாக்கம் ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளை காலம் கடப்பதற்கு முன்னரே சரி செய்வதற்கான நேரம் இன்னமும் இருக்கிறது.
மூன்று அதிமுக குண்டர்களின் விடுதலைக்கு என்னவெல்லாம் பொழிப்புரை போடுகிறார்கள்? சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கில் ஏ1 குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் மறைந்து போன ஜெயா! அந்தப் பெரும் கொள்ளையில் கொசுறு வழக்குதான் கொடைக்கானல் ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு. நீதிமன்றத்தால் 2000-ம் ஆண்டில் ஜெயாவிற்கு தண்டனை விதிக்கப்பட்ட போது அதிமுக காலிகள் மாநிலம் முழுவதும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
எரித்துக் கொல்லப்பட்ட 3 மாணவிகள் மற்றும் எரிக்கப்பட்ட பேருந்து
அப்போது கோவை வேளாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் சுற்றுலா சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். தருமபுரியில் அப்பேருந்தை வழிமறித்த அதிமுக காலிகள் தீவைத்தனர். இதில் மூன்று மாணவிகள் பரிதாபமாக உடல் கருகி பலியாகினர்.
இந்த வழக்கில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இவர்கள்தான் எம்.ஜி.ஆர் எனும் பாசிசக் கோமாளியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசால் தற்போது விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
எடப்பாடி – மோடி அரசுகள் கூட்டாக நடத்திய இந்த கேடுகெட்ட செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட அப்பாவிகள் ஏழு பேர் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்தும் விடுதலை செய்யப்படாத நிலையில் மேற்கண்ட மூன்று பேர் எப்படி விடுதலை செய்யப்பட்டனர் என்று பலரும் கேள்விகள் எழுப்பினர்.
இதற்கு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சார்பில் தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் ஆளுநர் விளக்கமளித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு 1858 கைதிகளை 161-வது பிரிவின் கீழ் விடுவிக்குமாறு ஆளுநருக்கு தமிழக அரசு பிப்ரவரி மாதம் கோப்பு அனுப்பியதாம். அதில் 5 ஆண்டுகளுக்கு பதில் 10 ஆண்டுகள் நிறைவு செய்த கைதிகளைத்தான் விடுவிக்க வேண்டுமென ஆளுநர் மாளிகை கூறியதால் மே 3 அன்று புதிய ஆணை தமிழக அரசால் வெளியிடப்பட்டதாம். இதன் பிறகு ஒவ்வொரு கைதிக்கென தனித்தனி கோப்புக்கள் சிறைத்துறை டிஜிபி தலைமை தாங்கிய குழுவால் அனுப்பப்பட்டதாம். அதன்படி ஆளுநரின் ஒப்புதலோடு இதுவரை 1627 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனராம்.
மூன்று மாணவிகளை பேருந்தோடு எரித்த அதிமுக காலிகள்
அதில் மூன்று அ.தி.மு.க கைதிகளின் விவரங்களை பரிசீலித்த ஆளுநர் திருப்பி அனுப்பினாராம். அதே கோப்பை தமிழக அரசு அக்டோபர் மாதம் 25 அன்று மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியதாம். பிறகு தமிழக அரசின் தலைமைச் செயலர், தலைமை வழக்கறிஞர், உள்துறை செயலர் ஆகியோர் அக்டோபர் 31 அன்று ஆளுநரை சந்தித்து விளக்கமளித்தனராம். அதிமுக ரவுடிகள் மூன்று பேரும் கும்பல் மனநிலையில் அப்படி செய்துவிட்டதாக சுட்டிக் காட்டினராம். பிறகு ஆளுநர் வழக்கறிஞரின் கருத்தைக் கேட்டாராம்.
ஆளுநர் புரோகித்துக்கு தலைமை வழக்கறிஞர் சில முக்கியமான ’லா பாயிண்டு’களை தெளிவாக்கினாராம். “இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டபோது தெரிவிக்கப்பட்ட ஐந்து கருத்துக்களாவன: 1. பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்க வேண்டும் என்ற கும்பல் மனநிலையில் செய்யப்பட்ட நடவடிக்கையின்போது மரணங்கள் ஏற்பட்டன. 2. அரசியல் தலைவர் தண்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்க அவர்கள் விரும்பினர். 3. கொல்லப்பட்டவர்களை இவர்கள் முன்பின் அறியாதவர்கள் 4. முன்கூட்டிய திட்டமிடல் ஏதும் இல்லை. 5. எல்லாமே ஒரு கணத்தில் நடந்துவிட்டது.”
அதற்கப்பால் தெளிவான ஆளுநர், ”அரசு வகுத்த விதிமுறைகளுக்குள் இந்த மூவரும் வருவர்” என வழக்கறிஞர் சொல்லியதை ஏற்று விடுவிக்கும் ஆணையை பிறப்பித்தாராம்.
இந்திய அரசியல் சட்டம் குடியரசுத் தலைவருக்கும் மாநில ஆளுநர்களுக்கும் சில நீதித்துறை அதிகாரங்களை வழங்கியிருக்கிறது. குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் அளிக்கப்பட்ட தண்டனைகளுக்கு மன்னிப்பு வழங்கவும் அவற்றை நிறுத்தி வைக்கவும், குறைக்கவுமான அதிகாரம் குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு உண்டு.
அரசியல் சட்டப் பிரிவு 72-ன்படி குடியரசுத் தலைவரும், பிரிவு 161-ன்படி மாநில ஆளுநர்களும் அந்த அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். குடியரசுத் தலைவர் மரண தண்டனைக்கும்கூட மன்னிப்பு வழங்க முடியும். ஆளுநர்கள் மரண தண்டனை தவிர்த்த மற்ற தண்டனைகளை மன்னிக்கவும் குறைக்கவும் மட்டுமே அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். இவை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் இந்த நிர்வாக அதிகாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்தான் மூலம்தான் நடைபெறுமே அன்றி குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ தன் விருப்பப்படி செய்ய முடியாத ஒன்று.
இந்திய ரப்பர் ஸ்டாம்ப் ராம்நாத் கோவிந்த் மற்றும் தமிழக ரப்பர் ஸ்டாம்ப் பன்வாரிலால் புரோஹித்
ரப்பர் ஸ்டாம்ப் எனும் விதி இங்கேயும் செயல்பட்டுத்தான் ஆகவேண்டும். அதிகபட்சம் இவர்கள் அமைச்சரவை அனுப்பும் பரிந்துரைகளை திருப்பி அனுப்பலாமே அன்றி அவற்றை மறுக்க முடியாது. அந்தபடிக்கு இந்த மூவர் விடுதலைக்கு ஆளுநர் அளித்திருக்கும் விளக்கத்தை பார்த்தால் அது ஏதோ அவரது தீவிர கருணை மற்றும் சட்ட ஆராய்ச்சியின் படி அளிக்கப்பட்டதைப் போன்ற தோற்றம் தருகிறது. இப்படி விளக்கும் கூறுவதே முதலில் பாரிய தவறு.
ஏனெனில் சிறைவாசிகளை விடுவிக்கக் கோரும் அரசின் பரிந்துரைகள் டெக்னிக்கலாக சரியாக இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். ஆயுள் தண்டணைக் குறைப்பு என்றால் பத்து ஆண்டுகள் சிறையில் இருந்திருக்க வேண்டும் என்று சில விதிகள் வைத்திருக்கிறார்கள். அவற்றைத்தான் ஆளுநர் சரிபார்க்க வேண்டுமே அன்றி குற்றவாளிகள் யார் அவர்களது குற்றம் என்ன என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை.
அப்படிப் பார்த்தால் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிக்கிய அப்பாவிகள் எழுவரையும், இந்துமதவெறியர்களின் செல்வாக்கால் தமிழக அரசாங்கங்கள் கடந்த ஆண்டுகளில் சிறைபிடித்த நூற்றுக்கணக்கான முசுலீம் கைதிகளையும் அல்லவா விடுவித்திருக்க வேண்டும்? அவர்களை என் விடுவிக்கவில்லை?
கேட்டால் அடிமை எடப்பாடி அரசின் டி.வி நிலைய வித்வான்கள் எழுவர் விடுதலைக்கு நாங்கள் பரிந்துரை அனுப்பிவிட்டோம், ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும், அவர் தாமதப்படுத்துவதற்கு காரணம் டில்லிதான் என்று கையைத் தூக்குகிறார்கள். அப்படித் தூக்கும் போது அவர்களது உடைகளும் கீழே கழன்று அம்மணமாக விழுவது கூட அவர்களுக்குத் தெரியவில்லை.
ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருக்கும் எழுவர்
மக்கள் அதிகாரம் அமைப்பு இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”விசாரணை அதிகாரிகளின் சுயபரிசீலனை வாக்குமூலங்கள், இராசிவ் காந்தி குடும்பத்தினரின் மன்னிப்பு, உச்ச நீதிமன்றத்தின் சாதகமான தீர்ப்பு, விடுதலைக்கான தமிழக அரசின் பரிந்துரை… என அ.தி.மு.க. கொலையாளிகளை விட இராசிவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களின் விடுதலைக்கான காரணிகளே இங்கு அதிகமாக உள்ளன. ஆயினும், இவர்கள் தமிழின உணர்வாளர்கள் என்பதாலேயே, எல்.டி.டி.இ., தீவிரவாதம், பிரிவினைவாதம், தேசப்பாதுகாப்பு போன்ற பூச்சாண்டி வேலைகளைக் காட்டி இவர்களின் விடுதலை திட்டமிட்டவகையில் தள்ளிப்போடப்பட்டு வருகின்றது.” என்று குற்றம்சாட்டியிருக்கிறது.
மேலும், “தமிழர்களின் மீதான வன்மம் காரணமாக இவர்களின் விடுதலை இனியும் தாமதிக்கப்படுமானால் அது ஒட்டுமொத்தத் தமிழர்களையும் போராட்டக் களத்திற்குத் தள்ளுவதாகவே அமையும்” என்று எச்சரித்திருக்கிறது மக்கள் அதிகாரம்.
பிரிவு 161-ன்படி விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசின் கீழ் மட்டுமே வரும். அதற்கு ஆளுநர் எனும் ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை போட்டு அங்கீரிக்கத்தான் வேண்டும். அதற்கு தில்லி மோடி அரசு உத்தரவு வேண்டும் என்றால் இவர்கள் என்ன எழவுக்கு கோட்டையில் குந்தியிருக்கிறார்கள்? இப்படி ஒரு வாதம் விளக்கம், மம்தா ஆளும் வங்கத்திலோ, சந்திரபாபு நாயுடு ஆளும் ஆந்திரத்திலோ வருமா என்று பலர் எடப்பாடி அடிமைகளைக் கேட்கின்றனர்.
ஆனால் எடப்பாடி கும்பலோ தனது கட்சி கும்பலை திருப்திப் படுத்துவதற்காக மூவர் விடுதலையை பயன்படுத்துவதோடு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்து பொறுக்கித் தின்ன காத்திருப்பதால் தனது அடிமைத்தனம் எனும் அம்மணத்தை வெட்கமின்றி ஏற்கிறது.
இந்த அடிமைகள் பேசத்தவறிய லா பாயிண்டுகளை பாஜக எஜமான்கள் அள்ளி விடுகிறார்கள். எழுவர் விடுதலை என்பது பயங்கரவாத வழக்கு தொடர்புடையதாம். அதில் சிபிஐ, இதர தேசிய முகமைகள் விசாரித்திருப்பதால் மாநில அரசு தலையிட முடியாதாம். இந்த அத்துப் போன வாதங்களையெல்லாம் மறுத்து உச்சநீதிமன்றம் தெளிவாக கூறிவிட்டதே என்றால், ஏன் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.
இவர்களே ஒரு பயங்கரவாதிகள் என்பது ஒருபுறமிருக்க, ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே எனும் பயங்கரவாதியை அன்றைக்கிருந்த காங்கிரசு கட்சியின் மராட்டிய அரசு பத்தாண்டு முடிந்தது என்று விடுதலை செய்தது. இதற்கு மேல் புருலீயா ஆயுத வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ராஜீவ் கொலை வழக்கு கூட பிரிவு 302-ன் கீழ் தான் நடந்தது. அது குறித்த ஜெயின் கமிஷன் அறிக்கை மீதான விசாரணை இன்னும் முடியவில்லை. இவர்களது பொய்க் குற்றசாட்டிற்காக 27 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்பது மிகப்பெரும் அநீதியல்லவா?
பாஜக பாசிஸ்டுகளின் ராமராஜ்ஜியம்
பாஜக பாசிஸ்டுகளைப் பொறுத்தவரை எழுவர் விடுதலை செய்யப்பட்டால் தமிழகத்தில் இந்துத்துவ எதிர்ப்பு அலை இன்னும் அதிகமாய் ஓங்கும். அதனால் தேர்தலில் தமது ஆதாயம குறையுமென்பதோடு, பாஜக எதிர்ப்பு அரசியல் போராட்டங்களை வளரவிடாமல் தடுப்பதற்கும் இந்த அக்கிரமத்தை செய்கின்றனர்.
மேலும் கும்பல் வன்முறை மனநிலை எனும் இந்த விளக்கத்தின்படி பார்த்தால் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி இந்துமதவெறியர்கள் தினசரி பத்து பேர்களைக் கொன்றாலும் ஒன்றும் பிரச்சினை இல்லை. இப்போதே அவர்களை முறையாக கைது செய்து வழக்கு போடுவது இல்லை என்பதோடு எதிர்காலத்தில் யாராவது அப்படி போட்டாலும் ஆளுநர்கள் விடுவித்து விடுவார்கள்.
இந்த நாட்டின் அரசமைப்பு சட்டப்படி நடக்கவில்லை என்பதோடு, சட்டத்தை மீறுகின்ற முதல் அமைப்பாகவும் அதுதான் இருக்கிறது. எழுவர் விடுதலைக்காக தமிழகம் வீதிக்கு வந்து போராடாத வரை பாஜக பாசிஸ்டுகள் அடிமை எடப்பாடி மூலம் அதை தடுக்கவே செய்வார்கள்!
சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா, “பிரதமர் அலுவலகம் சட்டவிரோதமாகவும் உள்நோக்கத்துடனும் தன்னைப் பதவியிலிருந்து அகற்றியிருப்பதாக” மோடி அரசின் மீது உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார்.
“ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிட்டால் அர்ஜென்டினாவைப் போன்ற பொருளாதார- அரசியல் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்” என்று மோடி அரசை எச்சரிக்கிறார் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா. “வாராக்கடன் என்று பல்லாயிரம் கோடி நிலுவை வைத்திருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் பட்டியலைக் கொடுக்குமாறு” ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும், பிரதமர் அலுவலகம் மற்றும் நிதியமைச்சகத்துக்கும் நோட்டீசு அனுப்புகிறார் தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆசார்யா.
2014 -இல் மோடி பிரதமர் நாற்காலியில் அமர்ந்தபோது அரங்கேற்றிய நாடகங்களை இப்போது சற்று நினைவு படுத்திப் பாருங்கள். “ஊழலற்றவர், உறுதியானவர், விரைந்து முடிவெடுப்பவர், மந்திரிகளையும் அதிகாரிகளையும் கண்ணில் விரல் விட்டு ஆட்டக்கூடியவர், ஒவ்வொரு நாளும் அவர்கள் என்ன உண்கிறார்கள், என்ன உடுத்துகிறார்கள் என்பது வரை கண்காணித்து இயக்கக் கூடியவர்” என்றெல்லாம் ஆளும் வர்க்க ஊடகங்களால் ஊதி உப்ப வைக்கப்பட்ட மோடியின் பிம்பம் காற்றுப் போன பலூனாக மாறிவருகிறது.
***
“மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷியிடம் 5 கோடி ரூபாய் இலஞ்சம் வாங்கியதாக” தனக்குக் கீழே உள்ள சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்கிறார், சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா. அஸ்தானாவின் கீழிருந்த டி.எஸ்.பி. தேவேந்திரகுமாரை, “மிரட்டிப் பணம் பறித்த குற்றம், ஆவணங்களைத் திருத்திய குற்றம்” ஆகியவற்றுக்காக கைது செய்து, சி.பி.ஐ. அலுவலகத்துக்குள்ளேயே சி.பி.ஐ. ரெய்டு நடத்துகிறது. இதை எதிர்கொள்ள, “அலோக் வர்மாவும் இலஞ்சம் வாங்கியிருப்பதாக” ஊழல் கண்காணிப்பு இயக்குநர் கே.வி.சவுத்ரியிடம் புகார் கொடுக்கிறார் அஸ்தானா.
(இடமிருந்து) மோடி அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, அமலாக்கத்துறை இணை இயக்குநர் ராஜேஸ்வர் சிங், சிபிஐ துணைக் கண்கானிப்பாளர் அஜய்குமார் பஸ்லி.
அஸ்தானா மீது அலோக் வர்மா தாக்கல் செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கையில், துபாயில் மொயின் குரேஷி ஆட்களிடம் இலஞ்சம் வாங்கிய விவகாரத்தில் “ரா” நிறுவனத்தின் சிறப்பு இயக்குநர் சமந்த் குமார் கோயலின் பெயர் இருக்கிறது. இதற்குப் பதிலடியாக, “அலோக் வர்மாவுக்கு நெருக்கமான அமலாக்கத்துறை (Enforcement Directorate) இணை இயக்குநர் ராஜேஸ்வர் சிங்கிற்கு பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. உடன் தொடர்பு இருப்பதாக”க் குற்றம் சாட்டுகிறது “ரா’’. “ஊழல் பேர்வழிகளுடன் சேர்ந்து கொண்டு தன்னைப் பழிவாங்குவதாக” வருவாய்த்துறை செயலர் ஹஸ்முக் அதியா மீது குற்றம் சாட்டுகிறார் அமலாக்கத்துறை இணை இயக்குநர் ராஜேஸ்வர் சிங்.
கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும், ஊழல் ஒழிப்பாளர்கள் என்றும் கூறப்படும் அமலாக்கத்துறை, ஊழல் கண்காணிப்புத் துறை, ரா, சி.பி.ஐ. போன்ற நிறுவனங்களின் உண்மையான யோக்கியதையையும், மோடியால் எல்லா பதவிகளிலும் திணிக்கப்பட்டுள்ள குஜராத்தைச் சேர்ந்த கூலிப்படை அதிகாரிகளின் யோக்கியதையையும் மேற்சொன்ன நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.
***
தற்போது குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் மோடியின் ‘குஜராத் இறக்குமதி’ யான அஸ்தானா, கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு வழக்கையும் லாலுவுக்கு எதிரான வழக்கையும் கையாண்டவர்; மல்லையா வழக்கைக் கையாள்பவர்.
6000 கோடி வங்கிக்கடனை ஏமாற்றி விட்டு வெளிநாட்டுக்குத் தப்பிய குஜராத் முதலாளி சந்தேசராவின் லஞ்ச டயரியில் இடம்பெற்றவர்; தனது மகள் திருமணத்தை சந்தேசராவுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் நடத்தியவர்.
ஊழல் கண்காணிப்பு இயக்குநராக மோடியால் நியமிக்கப்பட்டிருக்கும் கே.வி சவுத்திரி, வருமானவரித் துறையின் தலைமை இயக்குநர் பதவியில் இருந்த போது, ராடியா டேப் , ஸ்டாக் குரு ஊழல், எச்.எஸ்.பி.சி. கருப்பு பண வழக்குகள் போன்றவற்றைக் கிடப்பில் போட்டவர்.
மோடியின் இன்னொரு ‘குஜராத் இறக்குமதி’யான வருவாய்த்துறை செயலர் ஹஸ்முக் அதியா என்பவரோ, வங்கி மோசடி குற்றவாளிகளான நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோருக்கு உதவி செய்ததாக குற்றம் சாட்டப்படுபவர்.
மோடியின் நம்பகமான அதிகாரிகள் எனப்படுவோர், குஜராத் தரகு முதலாளிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் அதிகார வர்க்கத்துடன் கொண்டிருக்கும் நேரடி உறவுக்கான நிரூபணங்கள். சரியாகச் சொல்வதெனில், இப்போதைக்கு நமக்குத் தெரிய வந்திருக்கும் சில நிரூபணங்கள்.
***
இயக்குநர் அலோக் வர்மா, சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் அஸ்தானா மீது இலஞ்ச வழக்குப் பதிவு செய்து, அவர் விசாரித்து வந்த வழக்குகளான அகஸ்தா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வழக்கு, மல்லையா வழக்கு, நிலக்கரி ஊழல், ராபர்ட் வத்ரா வழக்கு, தயாநிதி மாறன் வழக்கு ஆகியவற்றை அவரிடமிருந்து பறித்தவுடனே, அலோக் வர்மா, அஸ்தானா ஆகிய இருவரின் பதவிகளையும் முடக்குவதாக நள்ளிரவு 12.30-க்கு உத்தரவு பிறப்பிக்கிறார் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சவுத்திரி.
(இடமிருந்து) மோடிக்கு நெருக்கமானவரும் இலஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளவருமான சிபிஐ சிறப்பு இயக்க்நர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ துணைக் கண்காணிப்பாளர் தேவேந்திர குமார், வருவாய்த்துறை செயலர் ஹஸ்முக் அதியா, ‘ரா’ நிறுவனத்தின் சிறப்பு இயக்குநர் சமந்த் குமார் கோயல் மற்றும் சிபிஐ-யின் பொறுப்பு இயக்குநர் நாகேஸ்வர ராவ்.
அந்த இடத்தில் சி.பி.ஐ. இன் தற்காலிக இயக்குநராக நாகேஸ்வர ராவை நியமித்து நள்ளிரவு 1 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கிறார் மோடி. உடனே நள்ளிரவில் ஐ.பி., ரா ஆட்களுடன் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரால் சி.பி.ஐ. அலுவலகம் முற்றுகை யிடப்படுகிறது. அலோக் வர்மாவின் பதவி முடக்க உத்தரவு இரவு 2.30-க்கு அவரது வீட்டில் வழங்கப்படுகிறது.
இரவு ஒரு மணிக்குப் பதவியேற்ற நாகேஸ்வர ராவ், அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த 11 அதிகாரிகளுக்கும் இரவோடு இரவாக மாற்றல் உத்தரவு பிறப்பிக்கிறார். அதிகாலையில் அலோக் வர்மாவின் வீட்டை ஐ.பி. அதிகாரிகள் உளவு பார்க்கிறார்கள். அவர்களை விரட்டிப் பிடித்து, டெல்லி போலீசிடம் ஒப்படைக்கின்றனர் அலோக் வர்மாவின் பாதுகாப்பு அதிகாரிகள்.
நடந்திருக்கும் இந்த சம்பவங்கள் அனைத்தும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் நடைபெறும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாதவை. “ஒரு ஜனநாயக நாட்டில் நடக்க முடியாதவை” எனக் கருதப்படுபவை.
***
தங்களது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், கிரிமினல் நடவடிக்கைகளை மறைத்துக் கொள்ளவும் பார்ப்பன பாசிசக் கும்பல் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை நிரூபிப்பதற்கான சான்றுகள் வந்தவண்ணமிருக்கின்றன.
அஸ்தானாவின் ஊழல் குறித்து நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருக்கும் ஐதராபாத்தை சேர்ந்த சதீஷ்பாபு சனா என்பவர், “தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை” என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்து விட்டுத் தலைமறைவாகியிருக்கிறார்.
இந்த வழக்கை விசாரித்த அதிகாரியும் தற்போது அந்தமானுக்கு மாற்றப்பட்டிருப்பவருமான டி.எஸ்.பி. அஜய் குமார் பஸ்ஸியும் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். “அஸ்தானாவின் ஊழலுக்கும் அதில் “ரா” அதிகாரிகள் தொடர்புக்கும் ஆதாரம் இருப்பதாகவும், தான் மாற்றல் செய்யப்பட்டுவிட்டதால், தற்போது அந்த வழக்கைக் கையாளும் அதிகாரிகள் சாட்சியங்களை அழித்து விடுவார்கள் என்றும், தன்னுடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும்” தனது மனுவில் அவர் கூறுகிறார்.
இந்த நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் இதே வேளையில், “குஜராத் பா.ஜ.க. அமைச்சர் ஹரேன் பாண்டியாவை கொலை செய்யும் காண்டிராக்டை டி.ஜி.பி. வன்சாராதான் தனக்கு ஒப்படைத்தார்” என்று சோரபுதீன் சிறையில் தன்னிடம் கூறியதாக, சோரபுதீன் கொலை வழக்கை விசாரித்து வரும் மும்பை நீதிமன்றத்தில் நவம்பர் 5 ஆம் தேதியன்று கூறியிருக்கிறார் அரசு தரப்பு சாட்சியான ஆசம்கான்.
சனாதன் சன்ஸ்தா பயங்கரவாதிகளும், பா.ஜ.க. அரசும் வேறு வேறு என்றும், என்ன இருந்தாலும் அரசமைப்பு சட்டத்துக்கும் மரபுகளுக்கும் கட்டுப்பட்டுத்தான் பா.ஜ.க. அரசு ஆட்சி நடத்தியாக வேண்டும் என்றும் நம்பிக் கொண்டிருந்த பல பேருடைய மூட நம்பிக்கைகளையும் மோடி – அமித் ஷா கும்பல் தகர்த்து வருகின்றது.
அரசமைப்பின் எல்லா நிறுவனங்களும் பார்ப்பன பாசிஸ்டுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மோடி – அமித் ஷா கும்பலின் கூலிப்படையாக செயல்பட்ட குஜராத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மைய அரசின் அதிகாரத்தை ஆக்கிரமித்திருக்கின்றனர். அந்த வகையில், 2014 தேர்தலின்போது மோடி அளித்த ஒரு வாக்குறுதி நிறைவேறியிருக்கிறது. “குஜராத் மாடல்” அதன் உண்மையான பொருளில் இந்தியாவின் மீது திணிக்கப்படுகின்றது.
***
மற்றப்படி எல்லா வாக்குறுதிகளும் பொய்த்துவிட்டன. எல்லா முனைகளிலும் தோல்வி! பண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் இருந்த நிலையிலிருந்தும் அழிக்கப்பட்ட சிறுதொழில்கள் – விவசாயம், அதிகரிக்கும் வேலையின்மை, விவசாய விளைபொருட்களின் விலை வீழ்ச்சி, பெட்ரோல் விலையில் மோடி நடத்தும் கொள்ளை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அரசு ஆசியுடன் அடுத்தடுத்து தப்பியோடும் வங்கிக் கொள்ளையர்கள், ரியல் எஸ்டேட் வீழ்ச்சி… எனப் பொருளாதாரம் பேரழிவின் விளிம்பில் நிற்கிறது.
அம்பானி உள்ளிட்ட குஜராத்தி பனியா முதலாளிகளுக்குக் கஜானாவைக் கொள்ளையடித்து வழங்குவதுதான் மோடி – அமித் ஷா கும்பலின் நோக்கம் என்பதைத் துலக்கமாக நிரூபிக்கிறது ரஃபேல் ஊழல்.
2013-இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அடைந்த தோல்விகளைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான தோல்வியை மோடி அரசு எதிர்கொண்டிருக்கிறது. சொல்லிக்கொள்ளப்படும் ஜனநாயக நிறுவனங்களை ஆக்கிரமிப்பதையும், சிதைப்பதையும் அப்பட்டமாகவும் திமிர்த்தனமாகவும் அரங்கேற்றி வருகிறது.
ஆளும் வர்க்கம் விரும்பியவாறு பொருளாதாரத்தைத் தேக்க நிலையிலிருந்து மீட்பதற்கும் மோடியால் இயலவில்லை. இவையனைத்தும் நிரூபிக்கப்பட்ட பின்னரும், ஆளும் வர்க்கம் மோடியைக் கைவிடவில்லை. மோடி – அமித் ஷா கும்பலின் குற்றங்கள், தோல்விகள் அனைத்தையும் மறைத்து, இந்த அரசைப் பாதுகாக்க முனைந்து நிற்கின்றன கார்ப்பரேட் ஊடகங்கள்.
“இந்தச் சூழலில், நாடு முன்னேற வேண்டுமென்றால் இன்னும் பத்து ஆண்டுகளுக்காவது உறுதியான ஆட்சி தேவை” என்று கூறியிருக்கிறார் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல். இதனை பாசிசக் கும்பலின் கருத்து என்று மட்டும் கருதி ஒதுக்கிவிட முடியாது. அது ஆளும் வர்க்கத்தின் கருத்தும்கூட.
பொதுச்சொத்துகள், வங்கிப்பணம், அரசு கஜானா ஆகியவற்றின் மீது அவர்கள் நடத்திவரும் தீவட்டிக் கொள்ளையைத் தலைமை தாங்கி நடத்திக் கொடுப்பதற்கும், மக்களை ஒடுக்குவதற்கும், திசை திருப்புவதற்கும் அவர்களின் முதல் தெரிவு பார்ப்பனப் பாசிசம்தான்.
எனினும், மோடி அரசு மக்களின் வெறுப்புக்கு இலக்காகி இருப்பதை ஆளும் வர்க்கத்தினரால் மறுக்கவியலவில்லை. “என்ன செய்வது, மோடிக்கு வேறு மாற்று இல்லையே” என அவநம்பிக்கையைப் பரப்புவதன் மூலம், பார்ப்பன பாசிசத்தை ஏற்றுக் கொள்வதற்கு மக்களுடைய மனதைப் பக்குவப்படுத்துகிறார்கள்.
***
மக்களைத் திசை திருப்புவதற்கும், இந்து தேசவெறி, மதவெறிக்கு பலியாக்குவதற்கும் வேறொரு உத்தியை ஆர்.எஸ்.எஸ். கையாள்கிறது. உச்ச நீதிமன்றத்தின் சபரிமலை தீர்ப்பு, பட்டாசு தீர்ப்பு போன்றவற்றையும், அயோத்தி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாததையும் காட்டி, “இந்த ஜனநாயகத்தின் நிறுவனங்கள் இந்துக்களின் உணர்வுக்கு எதிராக இருப்பதாக” பரப்புரை செய்கிறது.
உத்திர பிரதேசத்தில் ஊர்களுக்கு சமஸ்கிருத பெயர் மாற்றம், ராமன் சிலை, அயோத்தி கோயில் என்று மதவெறியைக் கிளப்புகிறது. “நிறுவனங்களைப் பாதுகாப்பது முக்கியம்தான். ஆனால் நிறுவனங்களை விடத் தேசம் பெரிது” என்று எச்சரிக்கிறார் அருண் ஜெட்லி.
“அர்பன் நக்சல்களால் தேசத்துக்கு ஆபத்து” என்று தொடங்கி, இப்போது, தான் கோரிய வண்ணம் பணத்தை விடுவிக்க மறுக்கும் ரிசர்வ் வங்கி, தனக்குக் கட்டுப்பட மறுக்கும் சி.பி.ஐ. தலைமை, தொந்தரவு கொடுக்கும் தகவல் ஆணையம், இந்துக்களின் உணர்வை மதிக்காத நீதிமன்றம், பிறகு எதிர்க்கட்சிகள் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நிறுவனங்களை”த் ‘தேசத்தின் எதிரி’யாகச் சித்தரிக்கும் திசையில் பார்ப்பன பாசிசத்தின் அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
அவள் வெளியே வந்தபோது, எங்கு பார்த்தாலும் அவள் எதிர்பார்த்த இரைச்சல், உத்வேகமயமான ஜனங்களின் கூச்சல் நிறைந்து ஒலித்தது. வாசல் நடைகளிலும், ஜன்னல்களிலும் கூட்டம் கூட்டமாக நின்றவாறு பாவெலையும் அந்திரேயையும் ஜனங்கள் ஆவல் நிறைந்த கண்களுடன் பார்ப்பதைக் கண்டதும் அவளது கண்கள் இருண்டு, அந்த இருளில் ஏதோ ஒரு புது நிற ஒளி நிழலிட்டு ஆடுவது போல் அவளுக்குத் தோன்றியது.
ஜனங்கள் அவர்களோடு குசலம் விசாரித்துக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் அன்று சேமம் விசாரித்த பாவனையில் ஏதோ ஒரு புதிய அர்த்தம் பொதிந்திருப்பதாகத் தோன்றியது. அவர்கள் அமைதியோடு சொன்ன வார்த்தைகள் அவள் காதில் அரை குறையாக விழுந்தன.
“அதோ, தலைவர்கள் போகிறார்கள்.”
”நமக்குத் தலைவர்கள் யாரென்றே தெரியாது.”
“நான் ஒன்றும் தப்பாய்ச் சொல்லவில்லையே.”
வேறொரு வாசலிலிருந்து யாரோ உரக்கச் சத்தமிட்டுச் சொன்னார்கள்:
“போலீஸார் அவர்களைப் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள்; அத்துடன் அவர்கள் தொலைந்தார்கள்”
“அவர்கள்தான் ஏற்கெனவே இவர்களைக் கொண்டு போனார்களே!’
ஒரு பெண்ணின் அழுகுரல் ஜன்னல் வழியாகப் பாய்ந்து வந்து தெருவில் எதிரொலித்தது.
”நீ செய்யப்போகிற காரியத்தை யோசித்துப்பார். நீ ஒன்றும் கல்யாணமாகாத தனிக்கட்டைப் பிரம்மச்சாரியில்லை!”
அவர்கள் அந்த நொண்டி ஜோசிமவ் வீட்டின் முன்பாகச் சென்றார்கள். ஜோசிமவ் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது காலை முறித்துக் கொண்டுவிட்டான். அதிலிருந்து அவன் நொண்டியாய்ப் போனான்; தொழிற்சாலை மாதாமாதம் அவனுக்குக் கொடுக்கும் ஓய்வுச் சம்பளத்தில் காலம் தள்ளி வருபவன் அவன்.
”பாவெல்!” என்று தன் தலையை ஜன்னல் வழியாக வெளியே நீட்டிக்கொண்டு கத்தினான் அவன். “அடே போக்கிரி அவர்கள் உன் கழுத்தை முறித்து விடுவார்களடா. உனக்கு என்ன நேரப் போகிறது பார்!”
தாய் ஒரு கணம் நடுநடுங்கி, பிரமையடித்து நின்றாள். அவள் உள்ளத்தில் கூர்மையான கோப உணர்ச்சி ஒரு கணம் ஊடுருவிச் சென்றது. அவள் அந்த நொண்டியின் கொழுத்துத் தொள தொளத்த முகத்தைப் பார்த்தாள். அவன் ஏதோ திட்டிவிட்டு தலையை உள்ளே இழுத்துக்கொண்டான். அவள் வெகு வேகமாக நடந்து சென்று தன் மகனை எட்டிப் பிடித்தாள். அவனுக்குப் பின்னாலேயே நடந்தாள். கொஞ்சம் கூடப் பிந்தாமல் நடக்க முயன்றாள்.
பாவெலும் அந்திரேயும் எதைப்பற்றியும் கவலை கொண்டதாகவோ கவனித்ததாகவோ தெரியவில்லை. அவர்களைக் குறித்துச் சொல்லப்படும் பேச்சுக்கள் கூட அவர்கள் காதில் விழவில்லை. அவர்கள் அமைதியாகவும் அவசரமில்லாமலும் நடந்து சென்றார்கள். போகும் வழியில் அவர்களை மிரோனவ் நிறுத்தினான். அவன் ஒரு அடக்கமான மத்திம வயது ஆசாமி. அவனது நேர்மையும் நாணயமும் பொருந்திய வாழ்வினால் எல்லோரிடமும் நன்மதிப்பு பெற்றிருந்தான்.
”நீங்கள் கூட வேலைக்குப் போகவில்லையா. தனீலோ இவானவிச்?” என்று கேட்டான் பாவெல் .
“இல்லை. என் மனைவிக்கு இது பிரசவ நேரம். மேலும், எல்லோரும் இப்படி உற்சாகமாயிருக்கிற நாளிலே….” அவன் தனது தோழர்களை ஒரு முறை சுற்றிப் பார்த்து விட்டுத் தணிந்த குரலில் சொன்னான்.
”நீங்கள் இன்று தொழிற்சாலை மானேஜருக்கு ஏதோ தொந்தரவு கொடுக்கப் போவதாக, சில ஜன்னல்களை உடைத்தெறியப் போவதாக, பேச்சு நடமாடுகிறதே. உண்மைதானா?” என்று கேட்டான்.
”நாங்கள் ஒன்றும் குடிகாரர்களில்லையே” என்றான் பாவெல்.
”நாங்கள் வெறுமனே தெருவழியே அணிவகுத்துச் செல்லுவோம். கொடிகளைத் தாங்கிக் கொண்டும், பாட்டுக்களைப் பாடிக்கொண்டும் செல்லத்தான் உத்தேசம்” என்றான் ஹஹோல். ”நீங்கள் எங்கள் பாட்டுக்களைக் கேளுங்கள். அதுதான் எங்கள் நம்பிக்கையின், கொள்கையின் குரல்!”
“உங்கள் கொள்கையெல்லாம் எனக்குத் தெரியும் என்று ஏதோ சிந்தித்தவாறே சொன்னான் மிரோனவ். ”பிறகு நான்தான் எங்கள் பத்திரிகைகளைப் படிக்கிறேனே. ஆ! பெலகேயா நீலவ்னா! நீயுமா?’ என்று தாயைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு சத்தமிட்டான்; “நீயுமா இந்தப் புரட்சியில் கலந்துவிட்டாய்?”
“சாவதற்கு முன்னால் நான் ஒரு முறையேனும் சத்தியத்தோடு அணி வகுத்துச் செல்ல வேண்டும்!”
”அடி சக்கை! ஆனால், நீதான் தொழிற்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பிரசுரங்களைக் கொண்டு வந்தாய் என்று அவர்கள் சொல்லிக் கொள்வது உண்மை என்றுதான் தோன்றுகிறது.”
“யார் அப்படிச் சொன்னது?” என்று கேட்டான் பாவெல்.
“ஹம். அவர்கள் அப்படித்தான் சொன்னார்கள். சரி, நான் வருகிறேன். நீங்கள் கட்டுப்பாடோடு நடந்து கொள்ளுங்கள்.”
தாய் அமைதியோடு புன்னகை புரிந்தாள். அவர்கள் தன்னைப்பற்று அப்படிப் பேசிக் கொண்டார்கள் என்பதைக் கேட்பதற்கு அவளுக்கு ஆனந்தமாயிருந்தது.
“நீயும் கூடச் சிறைக்குப் போவாய், அம்மா!” என்று சிரித்துக் கொண்டே சொன்னான். பாவெல்.
சூரியன் மேலெழுந்தது. வசந்த பருவத்தின் புதுமையிலே தனது கதகதப்பைப் பொழியத் தொடங்கியது. மேகங்கள் கலைந்து போய்விட்டன. அவற்றின் நிழல்கள் தெளிவற்று உலைந்து போய்விட்டன. மேகங்கள் தெருவுக்கு மேலாக மெதுவாக நகர்ந்து. வீட்டுக் கூரைகள் மீதும், மனிதர்கள் மீதும் தவழ்ந்து. அந்தக் குடியிருப்பு முழுவதையுமே தூசி தும்பு இல்லாமல் துடைத்துச் சுத்தப்படுத்துவது போலவும், மக்களது முகங்களில் காணப்பட்ட சோர்வையும் களைப்பையும் நீக்கிக் களைத்துவிடுவது போலவும் தோன்றியது. எல்லாமே ஒரே குதூகலமயமாய்த் தோன்றியது. குரல்கள் பலத்து ஒலித்தன; ஆலையின் யந்திர ஒலத்தை மக்கள் ஆரவாரக் குரல்கள் அமுங்கடித்து விழுங்கிவிட்டன
மீண்டும் ஜன்னல்களிலிருந்தும் வாயிற் புறங்களிலிருந்தும் ஜனங்கள் பேசிக்கொள்ளும் பல்வேறு பேச்சுக்கள் தாயின் காதில் விழத்தொடங்கின. அந்தப் பேச்சுக்களில் சில விஷம் தோய்ந்ததாகவும், பயமுறுத்துவதாயும் இருந்தன. சில உற்சாகமும் சிந்தனையும் நிறைந்து ஒலித்தன. ஆனால் இந்தத் தடவை அவளுக்கு அந்தப் பேச்சுக்களை வெறுமனே கேட்டுக்கொண்டு மட்டும் போக முடியவில்லை. அந்தந்தப் பேச்சுக்குத் தக்கவாறு எதிருரை கூறவும் விளக்கவும், வந்தனம் கூறவும் விரும்பினாள் அவள். பொதுவாக அன்றைய தினத்தின் பல்வேறான வாழ்க்கை அம்சங்களிலேயும் அவள் பங்கெடுத்துக் கொள்ள விரும்பினாள்.
ஒரு சின்னச் சந்து திரும்பும் மூலையில் சுமார் நூறு பேர்கள் கூடி நின்றார்கள். அவர்களுக்கு மத்தியிலிருந்து நிகலாய் வெஸோவ்ஷிகோவின் குரல் உரத்து ஓங்கி ஒலித்தது.
“அவர்கள் பழத்தைப் பிழிந்து சாறு எடுப்பது போல், நம் ரத்தத்தைக் கசக்கிப் பிழிகிறார்கள்” என்று சொன்னான் அவன். அவனது வார்த்தைகள் ஜனங்களது மூளையை முரட்டுத்தனமாகத் தாக்கின.
”அது சரிதான் ஆமாம்!” என்று பல்வேறு குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித்தன.
”இந்தப் பயல் ஏதோ தன்னாலான மட்டும் முயல்கிறான். இரு. நான் போய் அவனுக்கு உதவுகிறேன்” என்று சொன்னான் ஹஹோல்.
பாவெல் அவனைத் தடுத்து நிறுத்துவதற்கு முன்னால் அவன் தனது நெடிய மெலிந்த உடலோடு, ஒரு கார்க்கைத் திருகித் துளைத்துச் செல்லும் திறப்பான் போல. அந்தக் கூட்டத்துக்குள் ஊடுருவி உள்ளே சென்றுவிட்டான்.
“தோழர்களே! இன்று நாம் யார் என்பதைப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்துவதென்று முடிவு செய்திருக்கிறோம். இன்று நாம் நமது கொடியை உயர்த்துவோம். நமது கொடியை – அறிவு. நியாயம், சுதந்திரம் முதலியவற்றின் சின்னமான நமது கொடியை ஏந்திப்பிடிப்போம்!”
செழித்துக் கனத்த குரலில் அவன் சத்தமிட்டான்: “தோழர்களே! உலகில் பல்வேறு இன மக்கள் குடியிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். யூதர்கள், ஜெர்மானியர்கள், ஆங்கிலேயர்கள், தாத்தாரியர்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் நான் அதை நம்பவில்லை. உலகில் இனங்கள் இரண்டே இரண்டுதான் – ஒன்றுக்கொன்று ஒத்துக்கொள்ளாத இரண்டே மனித குலங்கள்தான் இருக்கின்றன. ஒன்று பணக்காரர் குலம்; மற்றொன்று பஞ்சை ஏழைகளின் குலம்! ஜனங்கள் வெவ்வேறு விதமாக உடை உடுத்தலாம்; வெவ்வேறு மாதிரியான மொழிகளில் பேசலாம். ஆனால் பிரஞ்சுக்காரராகட்டும். ஜெர்மானியராகட்டும். ஆங்கிலேயராகட்டும் – அவர்களில் பணக்காரராயிருப்பவர்கள் உழைக்கும் மக்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை மட்டும் நீங்கள் தெரிந்து கொண்டால், அவர்களை அனைவருமே தொழிலாளர்களை ஒன்று போலவே நடத்துகிறார்கள், என்பதை அவர்கள் தான் தொழிலாளரை உறிஞ்சிக் குடிக்கும் கொள்ளை நோய் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்!”
கூட்டத்தில் யாரோ சிரிப்பது கேட்டது.
”ஆனால், அதே சமயத்தில் – தாத்தாரியனானாலும், பிரஞ்சுக் காரனானாலும் அல்லது துருக்கியனானாலும் – எந்த நாட்டுத் தொழிலாளியானாலும் சரி அவர்களையும் நீங்கள் பாருங்கள். அப்படிப் பார்த்தால், ருஷியாவிலுள்ள தொழிலாளர்கள் எப்படி நாயினும் கேடு கெட்டு வாழ்கிறார்களோ அதே வாழ்க்கையைத்தான் சகல நாட்டுத் தொழிலாளர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்?”
அந்தச் சந்துப் பாதையில் மேலும் மேலும் ஜனங்கள் கூடினார்கள். அவர்கள் தங்கள் கழுத்துக்களை எட்டி நீட்டிக்கொண்டும் குதிக்காலால் எழும்பி நின்று கொண்டும் ஒரு வார்த்தை கூடப் பேசாது அவன் பேசுவதைக் கேட்டார்கள்.
அந்திரேய் தன் குரலை மேலும் உயர்த்தினான்,
“வெளி நாடுகளிலுள்ள தொழிலாள மக்கள் இச்சாதாரண உண்மையை ஏற்கெனவே தெரிந்து கொண்டுவிட்டார்கள். இன்று, இந்த மே மாதப் பிறப்பன்று……”
“போலீஸ்!” என்று யாரோ கத்தினார்கள்.
நாலு குதிரைப் போலீஸ்காரர்கள் அந்தச் சந்துக்கள் நேராக வந்து குதிரைகளைக் கூட்டத்துக்குள் செலுத்தினார்கள். தங்களது கையிலிருந்த சவுக்குகளால் வீசி விளாசி அறைந்து கொண்டு சத்தமிட்டார்கள்.
”கலைந்து போங்கள்!”
மக்கள் தங்கள் முகங்களைச் சுழித்துக்கொண்டே அந்தக் குதிரைகளுக்கு வழிவிட்டு ஒதுங்கினார்கள். சிலர் பக்கத்திலிருந்த வேலிப்புறத்தில் ஏறிக்கொண்டு விட்டார்கள்.
”அடடே! குதிரைகளின் முதுகிலே பன்றிகளைப் பாரு டோய்!” ‘வீராதி வீரருக்கு வழிவிடு’ என்று இவை கத்துவதைக் கேளுடோய்’!’ என்று எவனோ உரத்துக் கத்தினான்.
ஹஹோல் தெருவின் மத்தியில் அசையாது நின்று கொண்டிருந்தான். இரண்டு குதிரைகள் அவன் பக்கமாக தலையை அசைத்தாட்டிக்கொண்டே நெருங்கி வந்தன. அவன் ஒரு பக்கமாக ஒதுங்கினான். அந்த சமயத்தில் தாய் அவனது கையைப் பற்றி பிடித்து அவனைத் தன் பக்கமாக விருட்டென்று இழுத்தாள்.
“நீ பாவெல் பக்கமாக நிற்பதாய் எனக்கு வாக்குக் கொடுத்திருக்கிறாய். ஆனால், இங்கேயோ தன்னந்தனியாக எல்லாத் தொல்லைகளையும் நீயே ஏற்கிறாய்” என்று முணுமுணுத்தாள் அவள்.
”ஆயிரம் தடவை மன்னிப்புப் போதுமா?” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் ஹஹோல்.
ஒரு கனமான, பயங்கரமான நடுக்கம் நிறைந்த ஆயாச உணர்ச்சி தாயின் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து மேலெழும்பி அவளை ஆட்கொண்டது. அவளது தலை சுழன்றது. இன்பமும் துன்பமும் மாறிமாறி ஏதோ ஒரு மயக்கம் உண்டாயிற்று. மத்தியானச் சாப்பாட்டுக்கு எப்போதடா சங்கு அலறும் என்று ஆதங்கப்பட்டுத் தவித்தாள் அவள்.
அவர்கள் தேவாலயம் இருந்த சதுக்கத்துக்கு வந்து சேர்ந்தார்கள். தேவாலயச் சுற்றுப்புறத்தில் உற்சாகம் நிறைந்த இளைஞர்களும் குழந்தைகளுமாக சுமார் ஐநூறு பேர் கூடியிருந்தார்கள். கூட்டம் முன்னும் பின்னும் அலைமோதிக் கொண்டிருந்தது. மக்கள் பொறுமையற்று தங்கள் தலைகளை நிமிர்த்தி உயர்த்தித் தூரத்தையே ஏறிட்டுப் பார்த்து எதையோ எதிர்நோக்கித் தவித்துக்கொண்டு நின்றார்கள். ஒரே உத்வேக உணர்ச்சி எங்கும் பரிணமித்துப் பரந்தது. சிலர் செய்வது இன்னதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் பிரமாதமான தைரியசாலிகள் போலப் பாவனை பண்ணிக் கொண்டிருந்தார்கள். பெண்களின் கசமுசப்புக்குரல் மங்கியொலித்தது. அவர்கள் பக்கத்திலிருந்து ஆண்கள் விலகிச் சென்றார்கள்; வைது திட்டும் வசவுக் குரல்கள் மங்கி ஒலித்தன. அந்தக் கும்பிக் குமைந்து நின்ற கும்பலில் ஒரு இனந்தெரியாத வெறுப்புணர்ச்சி சலசலத்தது.
”மீத்யா!” என்று ஒரு ஒடுக்கக் குரல் கேட்டது. ‘உன்னைக் கவனித்துக் கொள்!”
”என்னைப் பற்றிக் கவலைப்படாதே” என்று ஒலித்தது பதில்.
சிஸோவின் அழுத்தமான குரல் அமைதியாகவும் ஆணித்தரமாகவும் ஒலித்தது: ”இல்லை. நாம் நமது பிள்ளைகளைப் புறக்கணித்து உதறித் தள்ளிவிடக்கூடாது. நம்மைவிட அவர்களுக்கு அதிகமாக அறிவு உண்டு. துணிச்சல் உண்டு. சாக்கடைக் காசு சம்பவத்தின்போது, அதைத் துணிந்து எதிர்த்து நின்றது யார்? அவர்கள் தான் அதை நாம் மறந்துவிடக்கூடாது. அவர்கள் அதற்காகச் சிறைக்குச் சென்றார்கள்; ஆனால் அதனால் பயன் அடைந்ததோ நாம் அனைவரும்தான்.”
ஜனங்களுடைய குரல்களையெல்லாம் விழுங்கியவாறு. ஆலைச் சங்கு தனது அழுமூஞ்சிக் குரலில் அலறியது. கூட்டத்தாரிடையே ஒரு சிறுநடுக்கம் குளிர்ந்தோடிப் பரவியது. உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து நின்றார்கள். ஒரு கணநேரம் எல்லோரும் வாய்மூடி கம்மென்று இருந்தார்கள். எல்லோரும் விழிப்போடு நின்றார்கள். பலருடைய முகங்கள் வெளுத்துப் பசந்தன.
“தோழர்களே!’ பாவெலின் செழுமையான மணிக்குரல் கணீரென ஒலித்தது. தாயின் கண்களில் கதகதப்பான நீர்த்திரை உறுத்துவது போலிருந்தது. அவன் விசுக்கென்று தாவிச் சென்று தன் மகனருகே நின்று கொண்டாள். எல்லோரும் பாவெலின் பக்கமாகத் திரும்பினார்கள்; காந்தத்தால் இழுக்கப்பட்ட இரும்புத் தூளைப் போல எல்லோரும் அவனைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டார்கள்.
தாய் அவனது முகத்தைப் பார்த்தாள். தைரியமும் கர்வமும் கனன்று பிரகாசிக்கும் அவனது கண்களை மட்டுமே கவனித்துப் பார்த்தாள்.
“தோழர்களே! இன்று நாம் யார் என்பதைப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்துவதென்று முடிவு செய்திருக்கிறோம். இன்று நாம் நமது கொடியை உயர்த்துவோம். நமது கொடியை – அறிவு. நியாயம், சுதந்திரம் முதலியவற்றின் சின்னமான நமது கொடியை ஏந்திப்பிடிப்போம்!”
திடீரென்று ஒரு வெள்ளையான கொடிக்கம்பம் வானில் மேலோங்கி, மீண்டும் கூட்டத்திடையே தாழ்ந்து இறங்கியது. அந்தக் கொடிக்கம்புக்கு வழிவிட்டு மக்கள் விலகினர். ஒரு கணநேரம் கழித்துத் தொழிலாளர் வர்க்கத்தின் விசாலமான செங்கொடி, அண்ணாந்து நோக்கும் மக்களின் முகங்களுக்கு மேலாக நிமிர்ந்து உயர்ந்தது; ஒரு பெரும் செம்பறவையைப் போல் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது!
பாவெல் தன் கையை உயர்த்திக் கொடியை ஆட்டினான். பல பேருடைய கைகள் அந்த வெண்மையான கொடிக்கம்பைப் பற்றிப் பிடித்தன. அவற்றில் தாயின் கரமும் பங்கெடுத்துக் கொண்டிருந்தது.
”தொழிலாளர் வர்க்கம் நீடூழி வாழ்க!” என்று கோசமிட்டான் பாவெல்.
நூற்றுக் கணக்கான குரல்கள் அந்த கோஷத்தை எதிரொலித்தன.
”சோஷல் – டெமொக்ரடிக் தொழிலாளர் கட்சி நீடுழி வாழ்க! இதுதான் நமது கட்சி , தோழர்களே, நமது கருத்துக்களின் ஜீவ ஊற்று!”
ஜனக்கூட்டம் பொங்கியது; அந்தக் கொடியின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் அதனை நோக்கி விரைந்து சென்றனர். எனவே மாசின், சமோய்லவ், கூஸெவ் சகோதரர்கள் முதலியோர் அனைவரும் பாவெலை அடுத்து வந்து நின்று கொண்டார்கள். நிகலாய் தன் தலையைக் குனிந்து, கூட்டத்தைப் பிளந்து கொண்டு முன்னேறினான். தனக்கு இனந்தெரியாத வேறு சில உற்சாகம் நிறைந்த வாலிபர்கள் தன்னை நெருங்கித் தள்ளிக்கொண்டு முன்னேறுவதை தாய் உணர்ந்தாள்.
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
சென்னையில் நடைபெற்ற நவம்பர் புரட்சிதின விழா நிகழ்வில் நடப்பு அரசியல் நிகழ்வுகள் மீதான எதிர்வினையாற்றும் விதமாக ஓவியர் முகிலனின் அரசியல் கேலிச்சித்திரங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் தொகுப்பு
‘பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம்’ என எழுதப்பட்ட பதாகையை பிடித்த காரணத்துக்காக டிவிட்டர் சமூக வலைத்தளத்தின் தலைமைச் செயல் அதிகாரி இந்துத்துவ லிபரல் பார்ப்பனர்களின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். ”சாதி படிநிலையில் மேலே உள்ள பார்ப்பனர்களின் ஆணாதிக்கத்தனம் ஒழிக்கப்பட வேண்டும்” என பொருள்படி எழுதப்பட்ட அந்தப் பதாகையின் கருத்தை டிவிட்டரோ அதன் செயல் அதிகாரியோ பிரதிபலிக்கவில்லை என டிவிட்டர் இந்தியாவின் சட்டம் மற்றும் கொள்கை பிரிவு அதிகாரி விஜயா கட்டே தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இந்தியா வந்திருந்த டிவிட்டரின் தலைமைச் செயலதிகாரி ஜாக் டோர்சே, டிவிட்டர் தளத்தில் வலதுசாரி ட்ரோல்களால் தாக்குதலுக்குள்ளான பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் அடங்கிய பெண்கள் குழுவை சந்தித்துப் பேசினார். அப்போது, தலித் செயல்பாட்டாளர் ஒருவர் கொடுத்த ‘பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம்’ என்ற பதாகையுடன் டிவிட்டர் செயல் அதிகாரி நின்ற படம் டிவிட்டரில் வெளியானது. அந்த டிவிட்டர் பதிவையொட்டி பிரபலமான லிபரல் பார்ப்பனர்கள் பலர் இது பார்ப்பனர்களுக்கு எதிராக உள்ளதாகவும் இதை எப்படி டிவிட்டர் செயல் அதிகாரி ஆதரிக்கலாம் என்றும் பொரிந்து தள்ளினர்.
இந்து மதம் என்ற அடைப்புக்குள் அனைவரையும் ஒற்றை கலாச்சாரம் மற்றும் அரசியலின் கீழ் அணிதிரட்ட விரும்பும் இந்து தேசியவாதிகள், மேல்சாதியை சேர்ந்தவர்களே டிவிட்டர் செயல் அதிகாரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
சித்ரா சுப்ரமணியன் என்ற லிபரல் பார்ப்பன பத்திரிகையாளர், “பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம் என்பது வன்முறையை தூண்டுவதாக இல்லையா? டிவிட்டர் போன்ற செல்வாக்குமிக்க தளம் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்” என கேட்கிறார்.
முன்னாள் இன்போசிஸ் அதிகாரி டி. வி. மோகன்தாஸ் பை, வலதுசாரி எழுத்தாளர் ராஜுவ் மல்ஹோத்ரா, பார்ப்பன கருத்தாளர் சுமந்த் சி ராமன், முன்னாள் நீதிபதி ’லிபரல் பார்ப்பனர்’ மார்க்கண்டேய கட்ஜு ஆகியோர் இது பார்ப்பனர்கள் மீதான தாக்குதல் என பாய்ந்திருக்கிறார்கள்.
வலதுசாரி, லிபரல் பார்ப்பனர்கள் நான்கைந்து பேரின் டிவிட்டுகள், டிவிட்டர் அதிகாரிகளை மன்னிப்புக் கேட்க வைக்கப் போதுமானதாக இருக்கிறது. உடனே, டிவிட்டர் இந்தியாவின் அதிகாரியும் மன்னிப்புக் கேட்கிறார்.
“இந்திய சமூகத்தில் வெறும் 3% மட்டுமே பிரதிநிதித்துவம் உள்ள பார்ப்பனர்கள் எத்தகைய செல்வாக்கு மிக்கவர்கள் என்பது இந்த விவகாரத்தின் மூலம் வெளிவந்துள்ளது” என முகப்பு செய்தி வெளியிட்டுள்ளது டெலிகிராப் நாளிதழ்.
பார்ப்பன ஆணாதிக்கத்தை நொறுக்குவோம் என்பது எப்படி பார்ப்பனர்களுக்கு எதிரானதாக இருக்க முடியும் என சமூக ஊடகங்களில் பலர் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். சித்ரா சுப்ரமணியனின் டிவிட்டுக்கு பத்திரிகையாளர் அனு பூயான், ‘பார்ப்பனர்கள் என்பது பெயர் சொல், பார்ப்பனீயம் என்பது வினைச் சொல். இதை புரியாததுபோல் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்துவதுதான் ஆபத்தானது. நீங்கள் பார்ப்பனிய ஆணாதிக்கம் இல்லவே இல்லை என்று சொல்கிறீர்களா?’ என எதிர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம் என்பது பார்ப்பனர்களுக்கு எதிரானது என முழங்கிய நான்கைந்து அறிவுஜீவிகளுக்கு எதிராக #SmashBrahminicalPatriarchy என்ற ஹேஷ்டேக்கில் மக்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
அவற்றில் சில உங்கள் பார்வைக்கு:
“தலித்துகளுக்கு அவர்கள் என்ன செய்திருக்கிறார்களோ அது தங்களுக்கு இறுதியில் நேர்ந்துவிடுமோ என்று பார்ப்பன மேலாதிக்கவாதிகள் கவலைப்படுகிறார்கள். அதன் விளைவாகவே இத்தகைய கோபம் உண்டாகிறது”
Brahmin supremacists are worried that people will eventually do to them what they have done to the Dalits. That explains the angst against #SmashBrahminicalPatriarchy
இந்த துணைக் கண்டத்தின் ஆணாதிக்கம் சாதியத்துடன் கட்டப்பட்டது. சாதியத்தை கருத்தியல் கருவியாக இரண்டாயிரம் ஆண்டுகளாக இயக்குவது பார்ப்பன ஆண்களே.
It's Brahminical patriarchy because patriarchy in the subcontinent is tied with the caste system, and the ideological apparatus for its functioning has been provided by the Brahmin man. For two millenia straight! #SmashBrahminicalPatriarchy
பார்ப்பனராக இருப்பது எப்படி? கல்வியறிவு பெறுங்கள். அம்பேத்கர், தலித் எழுத்தாளர்களை படியுங்கள். கொடூரமான மேலாதிக்கத்துடன் பார்ப்பனிய ஆணாதிக்கம் எப்படி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மனக் கதவுகளை திறந்து பாருங்கள்.
— Raghu /godavar /#DestroyTheAadhaar /#UrbanNaxal (@godavar) November 19, 2018
நீங்கள் சாதியை ஒழிக்கும்போது, பார்ப்பனராக இருப்பதை மறுப்பீர்கள். நீங்கள் பார்ப்பனராக இருப்பதை நிறுத்திக் கொண்டால், பார்ப்பனிய ஆணாதிக்கம் என அழைப்பதில் அர்த்தமிருக்காது. இப்போது உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என தெரிந்திருக்கும்.
If you annihilate caste, you will cease being a Brahmin. If you cease being a Brahmin, we can't call it Brahminical patriarchy. Now you know what to do. #SmashBrahminicalPatriarchy
பார்ப்பனிய ஆணாதிக்கமே ஆர்.எஸ்.எஸ்ஸின் அடிப்படை கருத்தியல். சாதியமும் பாலின மேலாதிக்கமும் அதன் மரபணுவில் உள்ளவை. அது பாலின அடிப்படையில் வேறுபாடுகளை உருவாக்குகிறது. பெண்களுக்கு வீட்டுப்பணிகளை தருகிறது. அதோடு, ஒருபோதும் தலித் ஒருவர் சர்-சங்-சலாக்காக(ஆர்.எஸ்.எஸ். தலைவராக) முடியாது.
Did u know that RSS's core ideology is that of Brahiminical patriarchy. Caste and gender hierarchy is in its DNA. It practices gender segregation, gives domestic role to women, no Dalit will ever be Sarsanghchalak.
இப்படி டிவிட்டர் முழுவதும் வலதுசாரி, லிபரல் பார்ப்பனர்களுக்கு பதிலடி கொடுக்கும் பல பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. தமிழ் முகநூல் பக்கத்திலும் #SmashBrahminicalPatriarchy என்ற ஹேஷ்டேக்கில் எழுதிவருகிறார்கள்.
“பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம்” என்ற வாசகம் பொறித்த அட்டையை கையில் பிடித்திருந்ததற்காக, டிவிட்டர்-ன் தலைமை நிர்வாக இயக்குனரான ஜாக் டோர்செய்-ஐ மன்னிப்புக் கேட்க வைத்திருக்கிறார்கள் பார்ப்பனர்கள். இந்திய மக்கட்தொகையில் வெறும் 3% மட்டுமே இருக்கும் சிறும்பான்மையினரான பார்ப்பனர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அந்த வாசகம் இருப்பதாகவும், ஒரு சர்வதேச நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருக்கும் அவர் அதனை வைத்திருப்பது உலக சிறும்பான்மையினருக்கே எதிரான ஆதிக்க போக்காக இருக்கிறதென்றும் ஒரு நாள் முழுக்க ட்வீட் செய்து மன்னிப்பு கோர செய்திருக்கிறார்கள்.
உலகின் ஒட்டுமொத்த மனிதத்தன்மையற்ற குரூர செய்கைகளுக்கு எதிராக , ஆதிக்கத்தின் – பெண்ணடிமைத்தனத்தின் பிறப்பிடமான பார்ப்பனியத்தை எதிர்த்தால், பார்ப்பனர்கள் மன்னிப்பு கேட்கச் செய்வார்கள் என்றால், அதனை மீண்டும் மீண்டும் எதிர்ப்பது நம் ஒவ்வொருரின் தலையாய கடமையாகும்.
பத்திரிகையாளர் நந்தினி வெள்ளைச்சாமியின் பதிவு இது:
“கடந்த வாரம் டெல்லி வந்திருந்த டிவிட்டர் சிஇஓ ஜாக் டோர்சே, பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்தார். அப்போது, தலித் செயற்பாட்டாளர் ஒருவர் ‘Smash Brahminical Patriarchy’ என எழுதப்பட்ட பதாகையை ஜாக்கிடம் கொடுத்து புகைப்படம் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைக்கண்டு கொதித்துப்போன சங்கிகள், வலது அமைப்பைச் சேர்ந்தவர்கள் டிவிட்டர் மீதும் ஜாக் மீதும் கோபம் கொண்டு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அப்படி பதிவுகளை வெளியிடுபவர்கள், ”உரிமைகள் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களாக” கூறிக் கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். ‘எழுத்தாளர்’ ராஜீவ் மல்ஹோத்ரா, ‘தி நியூஸ் மினிட்’ இணை நிறுவனர் சித்ரா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அடக்கம். நம்மூர் ‘சமூக செயற்பாட்டாளர்’ கஸ்தூரி, ‘அரசியல் விமர்சகர்’ சுமந்த் சி.ராமனும் இதில் அடக்கம்.
இது மார்க்கண்டே கட்ஜூவின் கதறல்.. ஊடகவியலாளர் பர்கா தத்தும் அந்த புகைப்படத்தில் இருந்தது அவரை மிகவும் பாதித்திருக்கிறது. “அப்படி பண்ணாதீங்க ஜாக்”னு பர்கா தத் ஜாக்கிட்ட சொல்லிருக்கணுமாம்.”
வெறும் 3 சதவீதம் மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு மீதியுள்ள 97 சதவீத மக்களை ஆள்கிறார்கள். இந்த மேலாதிக்கத்தை கேள்வி கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? பார்ப்பன மேலாதிக்கத்தை நொறுக்குவோம் என்பதில் என்ன தவறு இருக்கிறது? ஆம். இந்த மேலாதிக்க அமைப்பை நொறுக்கத்தான் வேண்டும்’ என அம்பேத்கரிய சிந்தனையாளர்கள் கூறுவதை செயல்படுத்த வேண்டிய தருணம் இது என்பதை பலரும் வலியுறுத்துகிறார்கள்.
தஞ்சை டெல்டா மாவட்டங்களில் விவசாயம் என்றதும் நமது நினைவுக்கு வருவது நெற்பயிற்தான். ஆனால் இந்த கஜா புயலின் தாண்டவத்துக்குப் பின்னர்தான் இங்கு நடக்கும் தென்னை விவசாயம் பலருக்கும் தெரிய வந்துள்ளது. நம்ப முடியாத காவிரி ஆற்று தண்ணீர், விளைவித்தாலும் விலை போகாத நெற்பயிர், காசு கிடைக்காத கரும்பு என இப்பகுதி விவசாயிகள் தென்னையை நோக்கி நெட்டித் தள்ளப்படுகின்றனர்.
இவர்களை ஏதோ ஒரு வகையில் விவசாயத்தில் இருத்து பிடித்து வைத்திருப்பதில் தென்னைக்கும், கடலைக்கும் ஒரு பங்கு உண்டு. அதேபோல கடந்த 20 ஆண்டுகளில் இப்பகுதி விவசாயிகள் மரவள்ளி கிழங்கையும் பரவலாக பயிரிட்டு வருகின்றனர்.
கருவக்குறிச்சி பகுதியைப் பொருத்தவரை இளைஞர்கள் பலரும் கடன் வாங்கி வெளிநாடுகளுக்குச் சென்று, அதிலும் குறிப்பாக சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கடும் உழைப்பு கோரும் கட்டிட வேலை போன்ற வேலைகளுக்குச் சென்று சில ஆண்டுகள் உழைத்து இங்கு வந்து தென்னை விவசாயம் மேற்கொள்கின்றனர். தற்போது தென்னந்தோப்புகளும் விலையேறிப் போனதால், புதிதாக தலையெடுக்கும் விவசாயிகளால் அதையும் செய்ய முடிவதில்லை. இவர்களுக்கு தற்போதுள்ள மாற்றுப் பயிர் மரவள்ளியாகத் தான் உள்ளது.
தஞ்சை மாவட்டம் கருவாக்குறிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் மரவள்ளி பயிர் செய்யப்பட்டுள்ளது. இது பத்துமாத பயிர். நிலத்தை பண்படுத்துவது தொடங்கி மீண்டும் நிலத்தை அறுவடைக்குப் பின் சரி செய்வதுவரை, கிட்டத்தட்ட ஒருவருடம் இதில் உழைப்பு செலுத்த வேண்டியுள்ளது. இதனைப் பதியமிட்டு விவசாயம் செய்ய ஆரம்பிக்கும் காலத்தில் வருமானம் இருக்காது. அச்செலவீனங்களை ஈடுகட்ட அதனுடன் ஊடுபயிராக வேர்கடலை பயிரிடுகின்றனர். இவ்வாறு ஏதோ ஒருவகையில் விவசாயத்தை இப்பகுதி மக்கள் விடாப்பிடியாக செய்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழகத்தின் சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில்தான் மரவள்ளி சாகுபடி அதிகம் என்பதால் இந்தக் கிழங்குகளை இப்பகுதிக்கு வந்து சேலம் மாவட்ட வியாபாரிகள் தான் வாங்கிச் செல்கின்றனர். தற்போது ஏதாவது கைகொடுக்கும் என பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி பயிர்களையும் கூட இந்த கஜா புயல் நிலைகுலைத்துப் போட்டுள்ளது.
இந்த நிலையில்தான் கருவாக்குறிச்சி பகுதியில் மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டுள்ள ரவிச்சந்திரன் என்பவரைப் பார்த்தோம்.
அவரும் அப்பகுதி விவசாயிகளைப் போன்றே கடந்த இரு ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை பார்த்துவிட்டு கடந்த ஆண்டுதான் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கு முன்பே அவருடைய குடும்பத்துக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை நான்கு இலட்சத்துக்கு ஒத்திக்கு (லீசுக்கு) விட்டுள்ளனர். தற்போது சிங்கப்பூரில் கஷ்டப்பட்டு அதில் சேமித்த பணத்தை வைத்து நிலத்தின் ஒருபகுதியை மீட்டு அதில் மரவள்ளி போட்டுள்ளார். அதிலிருந்து வரும் வருமானத்தில் வாங்கிய கடனை அடைத்து மீண்டும் சில காலம் வெளிநாடு சென்று சம்பாதித்து நிலத்தை முழுவதுமாக மீட்கலாம் என்ற கனவோடு வந்துள்ளார். தற்போது அவரின் கனவில் மண்ணை வாரி இறைத்துள்ளத்துள்ளது கஜா புயல்.
“தாய் தகப்பன விட்டு, பொண்டாட்டி புள்ளைகள பாக்காம சிங்கப்பூரு போயி கொஞ்ச நஞ்சம் சேத்து வெச்சி. இங்கே.. வந்து ஏதாவது பன்னலாமுன்னு பாத்தா இப்ப இந்த புயல் வந்து எல்லாத்தயும் கெடுத்துடுச்சி. இந்த வருசம் நல்லாவே கிழங்கு புடிச்சிது. ஆனா நமக்கு கட்டுபடியாகுற வெல கிடைக்கல. சரி கொஞ்சம் காத்திருந்து வெல கிடைக்கும்போது இத வித்துடலாமுன்னு பாத்தா எல்லாம் வீணாயிடும் போலருக்கு சார்…”
புயலால தென்னை போன்ற மரங்களுக்குதானே அதிக பாதிப்பு, மரவள்ளிக்கு எப்படி இழப்பு..?
“ஆமாங்க இங்கே.. தென்ன முழுசா போச்சி… ரொம்ப பெரிய பாதிப்புதான். அதே போல மரவள்ளியும் பாதிச்சி இருக்கு. இது மேலாப்புல.. வேர் வச்சி கொஞ்சத்துலேயே கெழங்கு புடிக்குங்க.. அதனால அடிச்ச காத்துக்கு அப்புடியே பெறட்டிகிட்டு கெழங்கெல்லாம் வெளிய வந்து நிக்குது. இது இப்புடி வெளிய வந்தா சீக்கிரமே கெட்டு போயிடும். பெறவு வெல கெடைக்காது.. எல்லாம் வீண்தான்.”
சரிங்க பொதுவா கிழங்கு கொஞ்சம் தாங்குமே… என வாயெடுத்த உடனே “கிழங்கு பொருத்தவரை தாக்குபுடிக்கும்தான் ஆனா இந்த வருசம் வெல சரியா இல்லாம முன்னாடியே புடுங்கி ஏத்தி இருக்க வேண்டியது தள்ளி போச்சி. இப்ப வெளிய நீட்டிட்டு இருக்கிற கெழங்க காவந்து பன்றதே ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஆடு, மாடு வந்தா மேஞ்சி நாசமாக்கிடும். ஏன்னா இது அதுகளுக்கு ரொம்ப புடிக்கும். நாங்களே கழிச்சி போடுற கெழங்குகள மாட்டுக்குத்தான் போடுரோம். நல்ல பால் சுரக்கும். அதே போல எலி, அணில்னு எல்லாம் சேந்துச்சுன்னா மொத்தமும் நட்டம் தான். இன்னும் ஒரு வாரத்துக்குள்ள எப்புடியாவுது இத ஏத்தலன்னா எல்லாம் பாழ்தான்”
சரி இத எப்புடி நீங்க விக்குறீங்க.. இங்கயே பக்கத்துல சந்தைகள் உண்டா?
“இத பொருத்தவரைக்கும் இங்க எதும் எங்களால விக்க முடியாது. எதாவது சும்மா யாராச்சும் கேட்டா கொஞ்சங் குடுக்க முடியும். மத்தபடி இதுக்கு சேலம் ஆத்தூர் பக்கத்துல இருந்துதான் வியாபாரிங்க வருவாங்க. அங்கதான் கெழங்கு மாவு ஆலைங்க இருக்கு.. அது இல்லாம அங்க இருந்துதான் கேரளாவுக்கு சிப்ஸ் போட போகுது. அந்த சிப்ஸ் வெளிநாடுகளுக்கு போகும். அதுவும் கூட வியாபாரிங்க இங்க வந்து அவுங்களுக்கு கட்டுபடியாகுற வெலக்கிதான் வாங்கிட்டு போவாங்க.”
நீங்க எவ்வளவு ஏக்கர் இந்த மரவள்ளி போட்டு இருக்கீங்க?
“நம்மள்து 3 ½ ஏக்கர் போட்டு இருக்கோம்.”
அதுல இருந்து எவ்வளவு கிழங்கு கெடைக்கும்.. எவ்ளோ வருமானம் வரும்?
“சார் இந்த கெழங்கு போட சுமார் 70,000/- செலவு ஆகும். ஒருவருச வேல.. சுமாரா நம்ம நெலத்துல மட்டும் ஐம்பது டன்னுக்கு நெருக்கமா வரும். அதுக்கு ஏத்தமாதிரி ஒரு டன்னுக்கு 5,000 ரூபா வெல போச்சின்னா அது நல்ல வருமானம்னு சொல்லலாம்ங்க.. இப்ப 4,000-க்கு கூட யாரும் வியாவாரிங்க வரமாட்டேங்குறாங்க. இப்ப இந்த புயல் பாதிப்பால வியாபாரிங்க இன்னும் அடிமட்ட ரேட்டுக்கு கேப்பாங்க. சரி முழுக்க நட்டமா போறதுக்கு ஏதாவது வந்த வெலைக்கு தள்ளலாம்முன்னு பாத்தாகூட வியாபாரிங்க வரதுக்கு இன்னும் எத்தன நாளாகுமுன்னு தெரியலங்க.
நெலத்த உழுது பக்குவப்படுத்துறது, பதியம் போடுறது, பாத்தி கட்டுறது, மருந்தடிப்பது, அப்புறம் கெழங்கு புடுங்குறது, ஏத்துகூலி இதெல்லாம் இருக்கு அதுமட்டுமில்ல புடுங்கி போட்ட பின்ன இந்த குச்சியெல்லாம் ஏறகட்டனும் அதுக்கு ஆளு கூலி. இப்புடி ஒரு எழுபது எழுபத்தஞ்சு ரூபா (ரூ. 70,000 முதல் 75,000 வரை) செலவு வந்துடும். இப்புடி இருக்கும் போது டன் ஐயாயிரம் கெடச்சா 50 டன்னுக்கு ரெண்டரை லச்சம் வரும். அதுல செலவக் கழிச்சா எவ்வளவு வரும்முன்னு பாருங்க.
ஒரு ஒன்னு எண்பது (ரூ 1,80,000) வரும்.. அத மாசமுன்னு பிரிச்சா 15,000/- ரூபாதான் வரும் இதுக்கே எங்க அப்பா, சம்சாரம் எல்லாரும் வேல பாக்கணும். இதுலதான் ஒரு வருசத்துக்கு குடும்ப செலவ பாக்கணும் பொறவு நல்லது கெட்டது செய்யனும் இது எல்லாத்துக்கு கடன் வாங்கணும். அது எல்லாம் இத நம்பிதான் கணக்கு பண்ணி இருப்போம்.
இதுதான் வருசாவருசம் எங்க நெலமையா இருக்கு. வெளிநாட்டுக்கு போயி ஏதாவது கொஞ்சம் சேத்துட்டு வந்தாதா பரவால்லாம இருக்கு அதுவும் கடன குடுக்கறதுக்கு பத்தாம தான் இருந்துட்டு வந்தது ‘ஏதோ ஓங்கி அடிக்கிறத கொஞ்சம் தாங்கி புடிக்கிறதா’ இருந்துச்சி இந்த மரவள்ளி கிழங்கு. இந்தவருசம் அதுவும் போச்சி…
விலைவாசி நிலவரம் அன்றாடம் மாறிக் கொண்டே இருக்கிறது. அதுவும் ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள இந்தியா போன்ற நாடுகளில் அதன் மாற்றங்களும், வேறுபாடுகளும் அபரிதமானவை. அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்ற துறைகளில் பணியாற்றுவோர் அடிப்படையாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய விசயம் இந்த விலைவாசி நிலவரம். ஆனால் அனேகருக்கு அவை குத்து மதிப்பாகவே தெரியும். குடும்ப சுமையை சுமக்கும் பெண்கள் அன்றாட சமையல் பொருட்களின் விலைவாசியை நன்கு அறிவார்கள். பெரும்பாலான ஆண்கள் அறிய மாட்டார்கள். இவையன்றி தத்தமது வாழ்க்கைக்கு தேவைப்படாத பொருட்கள், சேவைகள் குறித்து மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
அல்ஜசீரா தனது இணையதளத்தில் உலக நாடுகளில் நிலவும் விலை நிலவரத்தை வினாடி வினாவாக கேட்டிருக்கிறது. அதில் இந்தியா மற்றும் சில நாடுகளின் நிலவரங்களை எங்களது சரிபார்ப்போடு இணைத்து இங்கே கேள்விகளாக கேட்டிருக்கிறோம். விலை நிலவரம் அனைத்தும் இந்திய ரூபாயில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த விலையை இந்தியாவின் சராசரி விலையாக கருத வேண்டும். தமிழகம் – சென்னை நிலவரத்தை வைத்து மட்டுமல்ல, ஒரிசா – பீகார் போன்ற பின்தங்கிய மாநிலங்களின் நிலவரத்தையும் சேர்த்துதான் இந்தியாவின் விலைவாசி நிலவரம் இருக்கிறது. இங்கே ஒருசில தமிழக நிலவர கேள்விகளையும் இணைத்துள்ளோம். இன்றைய சமூகத்தின் விலைவாசி குறித்த உங்களது பார்வைக்கு ஒரு தேர்வு! முயன்று பாருங்கள்!
கஜா புயலுக்கு பின்னர் காவிரி டெல்டா மாவட்டங்களின் பல கிராமங்கள் அனைத்து தொடர்புகளில் இருந்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. தற்போது நான்கு நாட்களாக அந்தந்த கிராம மக்களே களத்தில் இறங்கி சாலைப் போக்குவரத்து, மற்றும் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி இருந்தும் வேலைகளை முடிக்க முடியவில்லை.
குறைந்தபட்சம் முக்கிய சாலைகளில் விழுந்திருந்த மரத்தை மட்டும் அதன் ஓரமாகவே ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இன்னும் அந்த வேலையையே செய்ய முடியாமல் பல நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களும் இருக்கிறது. இந்த இடங்களில் ஆட்கள் பற்றாக்குறையால் பெரிய அளவுக்கு செய்ய முடியவில்லை.
அரசே நிவாரணப் பணிகளை மேற்கொண்டால் ஒழிய அவை சாத்தியமில்லை என்னும் அளவிற்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது. முக்கியமாக மின் கம்பங்கள் அனைத்தும் சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கின்றன. பல முக்கியமான சாலைகளையே சீரமைக்காத அரசு நிச்சயம் குக்கிராமங்களை கண்டு கொள்ளப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.
திருவாருர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் உள்ள பல கிராமங்கள் வெளிச்சத்தை பார்த்து ஐந்து நாட்கள் ஆகிறது. இன்னும் பார்ப்பதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை. இதற்கே இந்த தாலுகாவில் பாதிப்புகள் அதிகம்தான் என்றாலும் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, போன்ற பகுதிகளைவிட குறைவுதான். இருப்பினும் இந்த இடத்தை சீரமைக்கவே தடுமாறி வருகிறது அரசு. குறைந்தபட்சம் மின்துறை ஊழியர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு பணியாற்றி வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு உரிய தேவையைக்கூட பூர்த்தி செய்யவில்லை அரசு. கிராம மக்களே அவர்களுக்கு உணவும், தங்குவதற்கு இடமும் கொடுத்து, அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.
மின் ஊழியர்களின் அர்ப்பணிப்பான உழைப்பு
1 of 3
மின் ஊழியர்களுக்கு உதவும் உள்ளூர் இளைஞர்கள்.
இருட்டும் வரையிலும் தொடரும் பணி
கடலூரில் இருந்து வந்திருந்த மின் ஊழியர்கள், “நாங்க இருபது பேர் 18-ம் தேதிதான் வந்தோம். வந்ததுல இருந்து இரண்டு நாள்ல 13 போஸ்ட் தான் நட முடிஞ்சது. ஒரு போஸ்ட் நடறதுக்கு அஞ்சி மணி நேரம் ஆவுது. என்ன பண்ண முடியும். இயந்திரம் இருந்தா மட்டும் போதாது. மனித உழைப்பு அவசியமா இருக்கு. அது ரொம்ப குறைவா இருக்கு. இருந்தாலும் எங்களால எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு வேலை செய்யுறோம். மழை பெய்யிறதால தரையும் ஈரமா இருக்கு. போஸ்ட்ட தூக்கி நட்டதும் மேல ஏற முடியல. சாய ஆரம்பிச்சிடுது. அதுக்கேத்த நேரம் ஒதுக்குறதே போதும்னு ஆகிடுது. மம்மட்டி, கட்டப்பாரை எதுவும் போதுமானதாவும் இல்ல. அதுவே பெரிய பிரச்சனை. காலையில ஏழரை மணிக்கு வேலைய ஆரம்பிச்சா நைட்டு எட்டு மணி வரைக்கும் போகுது… குடிக்க தண்ணி கூட இல்ல. இருப்பினும் மக்கள் படுற கஷ்டத்தை பாக்க முடியல…. இப்ப செய்யிற வேலை ஒரு வருஷத்துக்கான வேலை. இது இன்னும் எத்தன நாள்ல முடியும்னு சொல்ல முடியாது. அந்த அளவுக்கு சேதாரம் ஆகி இருக்கு” என்கிறார்கள்.
இந்த தாலுகாவில் வசிக்கும் மக்கள் என்ன சொல்கிறார்கள்… பார்க்கலாம்!
பாலன் – வடுவூர்.
புயல் அடிச்சி ஓஞ்சதும் நாங்களே எங்க கிராமத்தை சரி செய்ய ஆரம்பிச்சிட்டோம். முதல்ல வீட்டுல இருந்த மரத்தை எல்லாம் சரி செய்தோம். அது வரைக்கும் அரசாங்கத்துல இருந்து யாரும் வர்ல. அப்புறம் நாங்களே ஈ.பி ஆபிசுக்கு போயிட்டு எழுதி கொடுத்தோம். அதுக்கப்புறமா வந்தாங்க. மொத்தம் 240 போஸ்ட் எங்க ஊர்ல. அதுல 140 வரைக்கும் சாஞ்சிடுச்சி. எங்க பக்கம் எல்லாம் முடிய எத்தன நாள் ஆவும்னு தெரியல.
புருஷோத்தமன் மற்றும் ராமகிருஷ்னன், மூவர் கோட்டை.
வடுவூர் முதல் கொண்டையார் வரை மின்சாரம் வந்து விட்டதாக சொல்கிறார்கள்… இன்னும் இரண்டு நாட்களில் எங்களுக்கும் வந்து விடும் என்று சொல்கிறார்கள். எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இருந்தாலும் அதனை நம்புகிறோம். இன்னும் நான்கு கிலோ மீட்டர் வரை சரி செய்ய வேண்டும். நாங்களே சாலையில் இருந்த மரங்களை அறுத்து வழியை ஏற்படுத்தினோம். ஊரே சேர்ந்து இருபதாயிரம் செலவு பண்ணி சாலையை சீரமைச்சி இருக்கோம்.
குடி தண்ணீர் கிடையாது. இந்த ஆத்து தண்ணி மட்டும் இல்லையென்றால் எங்க கதை சிரிப்பாய் சிரித்து விட்டிருக்கும். 200 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கிறது. அதனை இறைக்க கரண்ட் இல்லாம கஷ்டப்பட்டுட்டு இருக்கோம். வெளியில தனியார் வந்து டேங்கை நிரப்ப மணிக்கு 1500 ரூபா கேக்குறான். பேட்டரிக்கு சார்ஜர் ஏத்த 500 லிருந்து 750 வரைக்கும் வாங்குறானுங்க.. இன்னா பன்ன முடியும்???
ஒக்கநாடு கீழையூர் பெண்கள்
புதிய வீடு கட்டும்போது அமைக்கப்பட்ட பயன்படுத்தப்படாத செப்டிக் தொட்டியில் இருந்த தண்ணீரை எடுத்துக் கொண்டிருந்தனர். “இப்படி ஒரு நிலை வரும்னு நாங்க நெனச்சிக்கூட பார்த்ததில்ல. மூனு நாளா தண்ணிக்கு எங்க எங்கயோ அலஞ்சி கெடந்தோம். இந்த தொட்டி இருக்கிற நெனப்பே வர்ல…. முன்னமே தெரிஞ்சிருந்தா எங்கயும் அலஞ்சிருக்க மாட்டோம்”.
பாலமுருகன், தி.மு.க., ஒக்கநாடு பஞ்சாயத்து.
எங்க பஞ்சாயத்துல 150 கிராமம் இருக்கு சார். மொத்தமா நாற்பதாயிரத்துக்கு மேல் தென்னை மரங்கள் அடியோட புடுங்கி கிடக்கு. 50 ஈ.பி பாயிண்ட்ல 30 பாயிண்ட் சேதமடைந்து இருக்கு. கிட்டதட்ட 7000 போஸ்ட் மொத்தமா முறிஞ்சிடுச்சி. இப்ப இருப்பு இருக்கிறது வெறும் 1500 தான். அரசாங்கம் அறிவிப்புல தான் இருக்கே தவிர செயல்பாட்டுல இல்ல. புயல் வந்து 4 நாள் ஆவுது. இதுவரைக்கும் 25% வேலைதான் முடிஞ்சிருக்கு. இன்னும் முழுசா முடிய 45 நாள் ஆகும். மெட்டிரியல் இருந்தா 15 நாள்ல முடிஞ்சிடும்.ஆனா அதுக்கேத்த மெட்டிரியல் இல்ல. கணக்கெடுப்புக்கு வரல, பாதிக்கப்பட்டவங்கள பார்க்க வரல…. எதுவுமே செய்யல. மக்களே எல்லாத்தையும் செஞ்சிக்குறாங்க. மின் ஊழியர்களுக்கு கிராம மக்கள்தான் முடிஞ்சத செய்யுறாங்க!
சசிக்குமார்- முக்குளம் சாத்தனூர்.
வீடு இடிஞ்சி விழும்போதெல்லாம் என் பசங்களோட இந்த வீட்டுக்குள்ளே தான் சார் இருந்தேன். ஆடு, மாடு கட்டியிருந்த கொட்டாவும் சாஞ்சிடுச்சி. எப்படியோ உசுரு மிஞ்சினதே என் புள்ளங்களோட நல்ல நேரம்தான்.
நீடாமங்கலம் யூனியன்ல 38 பஞ்சாயத்து, 100-க்கும் மேற்பட்ட கிராமம் இருக்கு சார். ஆனா இது வரைக்கும் எந்த அதிகாரியும் வந்து பாக்கல. எங்க ஊரு வி.ஏ.ஒ. மட்டும் வந்து பார்த்து குறிச்சிக்கினு போனாரு. அவ்ளோதான். அவரும் இன்னும் வர்ல. ஓவேல்குடி, முக்குளம், தளிக்கோட்டை, கருவாக்குறிச்சி காலனி, முக்குளம் தர்காசு இத சுத்தி இருக்க எந்த ஊர்லயும் வேலை நடக்கல…. இங்க அதிகம் தென்னை இல்ல.. ஆனா சோளம், நெல்லு, கடலை, மரவள்ளி இந்த மாதிரிதான் பயிர் வச்சிருக்கோம். வேற எந்த பொழப்பும் இங்க இல்ல. அப்படி இருக்கும்போது அரசாங்கம் வர வேணாமா? நாங்க மத்த நேரத்துல எதுவும் கேட்கல. இப்ப தண்ணி கூட இல்லாம இருக்கோம். இப்பயாவது வந்து உதவ வேணாமா? இங்க எல்லாம் அதிகம் குடிசைதான். எல்லா வீடும் தரை மட்டமா ஆயிடுச்சி. ஒரு ஆறுதலுக்காவது வர வேணாமா சார்… அதான் இப்ப எல்லா ஊர் மக்களும் போயிட்டு மன்னார்குடியில சாலை மறியல் பண்ணிட்டு வந்தோம்.!
நாட்கள் வெகு வேகமாகக் கழிந்து சென்றன. அந்த வேகத்தில் மே தினத்தின் வரவைப் பற்றிச் சிந்திப்பதற்குக்கூடத் தாய்க்கு நேரம் கிடைக்கவில்லை. ஆனால் இரவில் மட்டும், பகல் முழுதும் ஓடியாடி, வேலை செய்து ஓய்ந்து களைத்துப் படுக்கையில் சாய்ந்தபிறகு மாத்திரம், அவள் இதயத்தில் இனந்தெரியாத ஒரு மங்கிய வேதனை இலேசாக எழும்.
”அது மட்டும் சீக்கிரம் வந்துவிட்டால்…”
காலையில் ஆலைச் சங்கு அலறியது. அந்திரேயும் அவளது மகன் பாவெலும் சீக்கிரமே தங்கள் சாப்பாட்டை முடித்துவிட்டு வேலைக்குச் செல்வார்கள். அவளுக்கு ஏதாவது பதிற்றுக் கணக்கான வேலைகளை விட்டுச் செல்வார்கள். பகல் முழுதும் அவள் கூண்டுக்குள் அகப்பட்ட அணிற் குஞ்சு மாதிரி ஓடியாடி வேலை செய்வாள். சாப்பாடு தயாரிப்பாள். பசை காய்ச்சுவாள், சுவரொட்டி விளம்பரங்களுக்கு மை தயாரிப்பாள். திடீர் திடீரென்று எங்கிருந்தோ வந்து தோன்றி பாவெலுக்குப் பல செய்திகளைக் கொண்டு வந்துவிட்டு, மாயமாக மறைந்து செல்லும் இனந்தெரியாத மனிதர் பலரை வரவேற்பாள். அவர்கள் வந்து சென்ற பிறகு அவர்களுக்கிருந்த பரபரப்பு அவள் மனதிலும் குடிபுகுந்துவிடும்.
அநேகமாக ஒவ்வொருநாள் இரவும் தொழிலாளரை மே தினக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளும் சுவரொட்டி அறிக்கைகள் வேலிப் புறங்களிலும் போலீஸ் நிலையக் கதவுகளிலும் ஒட்டப்பட்டு வந்தன. ஒவ்வொரு நாளும் அம்மாதிரியான அறிக்கைகள் தொழிற்சாலையிலும் காணப்பட்டன. காலையில் போலீஸ்காரர்கள் தொழிலாளர் குடியிருப்பு வட்டாரத்துக்கு வந்து, அந்த அறிக்கைகளைக் கிழித்தெறிவார்கள். சுரண்டியெடுப்பார்கள். ஆனால் மத்தியானச் சாப்பாட்டு வேளையில் புதுப்பிரசுரங்கள் காற்று வாக்கில் பறந்து போகிறவர் காலடியில் விழுந்து புரளும். நகரிலிருந்து துப்பறியும் குழுவினர் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் மூலைக்கு மூலை நின்றுகொண்டு சாப்பாட்டு வேளையில் தொழிற்சாலைக்கு உற்சாகமாய்ப் போவதும் வருவதுமாய் இருக்கும் தொழிலாளர்கள் ஒவ்வொருவருடைய முகங்களையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். நிலைமையைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் போலீஸ்காரர்களின் பரிதாபகரமான நிலையைக் கண்டு ஒவ்வொருவரும் ஆனந்தப்பட்டார்கள். வயதான தொழிலாளர்கள்கூடச் சிரித்துக்கொண்டே தமக்குள் பேசிக் கொண்டார்கள்.
“இவர்கள் செய்கிற காரியத்தைத்தான் பாரேன்!”
எங்கு பார்த்தாலும் தொழிலாளர்கள் கும்பல் கும்பலாக நின்று மே தின அறைகூவலைப் பற்றி காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். வாழ்க்கை எங்கும் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அந்த வசந்த பருவத்தில் வாழ்க்கை அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனெனில் எல்லோருடைய மனத்திலும் ஒரு புதிய உணர்ச்சி பூத்துக் கிளர்ந்தது. சிலருக்கு முன்னிருந்ததைவிட பன்மடங்கான எரிச்சலும் புகைச்சலும்தான் மனத்தில் மூண்டது; அவர்கள் இந்தப் புரட்சிக்காரர்களை வாயாரச் சபித்தார்கள். சிலருக்கு ஒரு மங்கிய கவலையும் இனந்தெரியாத நம்பிக்கையுணர்ச்சியும் ஏற்பட்டன. சிலர் – அதாவது மிகவும் குறைந்த ஒருசிலர் மட்டும் – தாம்தான் இந்த ஜனங்களைக் கிளறிவிட்டதற்குப் பொறுப்பாளிகள் என்ற உணர்வினால் உள்ளுக்குள் மிகுந்த பூரிப்பும் உற்சாகமும் கொண்டு திரிந்தார்கள்.
பாவெலுக்கும் அந்திரேய்க்கும் இப்போது எல்லாம் தூங்குவதற்குக்கூட முடியவில்லை. அவர்கள் காலை நேரத்தில்தான் திரும்பி வருவார்கள். வெளுத்துக் களைத்து என்னவோபோல் வந்து சேர்வார்கள். ஊரின் ஒதுக்குப்புறங்களிலும் காடுகளிலும் அவர்கள் கூட்டங்கள் நடத்தி வந்தார்கள் என்பது தாய்க்குத் தெரியும். குடியிருப்பைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் குதிரைப் போலீஸ்காரர்கள் இரவெல்லாம் ரோந்து சுற்றிக்கொண்டிருந்தார்கள் என்பதும், துப்பறியும் வேவுகாரர்கள் எங்குப் பார்த்தாலும் ஊர்ந்து திரிந்து தனியாகச் செல்லும் தொழிலாளர்களை வழிமறித்து அவர்களைச் சோதனை போடுவதும் கூட்டங்கூட்டமாக வரும் தொழிலாளர்களைக் கலைந்து போகுமாறு செய்வதும் சில சமயங்களில் சிலரைக் கைது செய்து கொண்டு போவதுமாக இருக்கிறார்கள் என்பதும் அவளுக்குத் தெரியும். எந்த நேரத்திலும் கைதாகக் கூடிய நிரந்தரமான அபாயத்தில்தான் பாவெலும் அந்திரேயும் இருந்தார்கள் என்பதும் அவளுக்குத் தெரியும். அவர்கள் அப்படிக் கைதாக நேர்ந்தாலும், அவள் அதையும் வரவேற்கத்தான் செய்வாள். பின்னால் வரப்போகும் பெரும் ஆபத்துக்கு ஆளாவதைவிட, இப்போதே கைதாகிவிடும் ஆபத்து மேலானது என்பது அவள் எண்ணம்.
என்ன காரணத்தினாலோ இஸாயின் கொலை விஷயம் மறைக்கப்பட்டுவிட்டது. இரண்டு நாட்களாய் உள்ளூர்ப் போலீஸ்காரர்கள் புலன் விசாரித்தார்கள். சுமார் ஒரு டஜன் தொழிலாளர்களைக் கண்டு விசாரணை செய்த பின்னர் அவர்கள் அந்தக் கொலை வழக்கை விட்டுவிட்டார்கள்.
மரியா கோர்சுனவா தாயோடு பேசியபோது, போலீஸ்காரர்களின் அபிப்பிராயத்தை வெளியிட்டுச் சொன்னாள். மற்றவர்களோடு எவ்வளவு சுமூகமாகப் பழகி வந்தாளோ, அதே மாதிரி அவள் போலீஸ்காரர்களிடமும் பழகி வந்ததால் அவர்களது அபிப்பிராயம் அவளுக்கும் தெரிய நேர்ந்தது.
“கொலைகாரனை எப்படித்தான் கண்டுபிடிப்பது? என்று காலையில் சுமார் நூறு பேர் இஸாயைப் பார்த்திருக்கிறார்கள். அவர்களின் தொண்ணூறு பேர் அவனைத் தாங்களே ஒழித்துக்கட்ட நேர்ந்திருந்தால், அது குறித்துச் சந்தோஷப்பட்டிருப்பார்கள். அவனும்தான் என்ன? ஏழு வருஷ காலமாய் ஒவ்வொருத்தரையும் என்ன பாடு படுத்தி வைத்தான்.”
ஹஹோல் இப்போது எவ்வளவோ மாறிப் போய்விட்டான். அவனது முகம் மெலிந்து ஒட்டிப் போயிற்று. கண்ணிமைகள் கனத்துத் தடித்துப்போய்விட்டன. எனவே, அவன் அவனது பெரிய கண்களில் பாதியை மூடிக் கவிந்துவிட்டன. அவனது நாசியோரங்களிலிருந்து வாயை நோக்கி மெல்லிய வரிக்கோடுகள் விழுந்திருந்தன. அவன் வழக்கமான விஷயங்களைப் பற்றி மிகவும் குறைவாகப் பேசினான். அறிவும் சுதந்திரமும் ஆட்சி செலுத்தும் வெற்றி மகோன்னதமான எதிர்காலத்தைப் பற்றி தனது ஆசைக் கனவை அவன் மற்றவர்களிடம் எடுத்துக் சொல்லி அவர்களை மெய்சிலிர்க்கச் செய்யும்போதும், அவன் அதிகமான ஆர்வத்தோடு பேசினான்.
இஸாயின் மரணத்தைப் பற்றிய பேச்சு தேய்ந்து இற்றுக் செத்துப்போனவுடன், அவன் ஒரு கசந்த புன்னகையுடன் சொன்னான்:
”அவர்கள் மக்களை மட்டும்தான் மதிக்கவில்லை என்பது அல்ல. மக்களின் மீது ஏவிவிடும் வேட்டை நாய்களாக உபயோகிக்கும் தங்களது கைக்கூலிகளைக்கூட அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். அக் கைக்கூலிகள் தொலைந்து போனதற்காக அவர்கள் வருந்தமாட்டார்கள்; தங்கள் காசு தொலைந்து போனால்தான் வருத்தப்படுவார்கள்!”
“இந்தப் பேச்சு போதும், அந்திரேய்!” என்று உறுதியுடன் கூறினான் பாவெல்.
“இதெல்லாம் உண்மைதான். ஆனால் இது மட்டும் ஆறுதல் தராது” என்று சோர்வோடு பதில் சொன்னான் ஹஹோல்
அவன் இதையே பல தடவை சொல்லி வந்தான். எனினும் அதைச் சொல்லும்போது, முன்னிருந்ததைவிட வார்த்தைகள் அனைத்தையும் அடக்கிய விசேஷமான அர்த்தத்துடன் கடுப்புக் காரவேகமும் பெற்று ஒலித்தன.
வெகு நாட்களாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாளும் வந்துவிட்டது – மே தினம்! மே மாதப் பிறப்பு!
ஆலைச் சங்கு வழக்கம் போலவே அலறியது. கடந்த இரவு முழுவதும் கண்ணையே இமைக்காது விழித்துக் கிடந்த தாய் சங்குச் சத்தம் கேட்டதும் உடனே படுக்கையிலிருந்து துள்ளியெழுந்து முந்தின நாள் மாலையில் தயாரித்து வைத்திருந்த தேநீரை கொதிக்க வைத்தாள். வழக்கம்போலவே தன் மகன் படுத்திருக்கும் அறைக் கதவைத் தட்ட நினைத்தாள். ஆனால் கதவைத் தட்டி அவனை எழுப்பாமலிருப்பது நல்லது என்று எண்ணியவளாய் ஏதோ பல்லவிக்காரியைப் போல, தன் கையை மோவாயில் கொடுத்துத் தாங்கிக்கொண்டு ஜன்னலருகே சென்று கீழே உட்கார்ந்தாள்.
வெளிறிய நீல வானத்தில் ரோஜா நிறமும் வெண்மையும் கலந்து மேகப் படலங்கள் மிதந்து சென்றன. ஆலைச் சங்கின் அலறலால் பயந்தடித்துக்கொண்டு பறந்தோடும் ஒரு பெரிய பறவைக் கூட்டம் போலத் தோன்றியது அந்த மேகக் கூட்டம். தாய் அந்த மேகத் திரளைப் பார்த்தாள். தனது இதயத்தில் எழுந்த சிந்தனைகளோடு தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள். அவளது தலை கனத்துப் போயிருந்தது. இரவு முழுவதும் தூங்காததனால் கண்கள் வறண்டு சிவந்து கனன்று போயிருந்தன. அவளது இதயத்தில் எதோ ஒரு அதிசயமான அமைதி குடிகொண்டிருந்தது. அவளது மனதில் சாதாரணமான எண்ணங்கள் நிரம்பித் ததும்பிச் சுறுசுறுப்போடு இயங்கிக்கொண்டிருந்தன.
“நான் தேநீரை ரொம்ப சீக்கிரம் கொதிக்க வைத்தேன். தண்ணீர் பூராவும் சீக்கிரம் கொதித்துக் காய்ந்துவிடும்…… அவர்கள் இருவரும் மிகவும் களைத்துப் போயிருக்கிறார்கள். இன்றைக்குக் காலையிலாவது அவர்கள் கூடக் கொஞ்ச நேரம் தூங்கட்டும்……”
காலைக் கதிரவனின் இளங்கதிர்க் கீற்று மிகுந்த உவகையோடு ஜன்னலின் மேலாக எட்டிப் பார்த்தது. அந்தக் கதிரை நோக்கித் தன் கையை நீட்டினாள் தாய். அவளது சருமத்தின் மீது அந்த இளங்கதிர் தோய்ந்து அதனால் சிறிது கதகதப்பு ஏற்பட்டபோது அவள் தனது மறு கையால் அந்தக் கதகதப்பான பாகத்தைத் தடவிக் கொடுத்துக் கொண்டாள். அதேவேளையில் சிந்தனைவயப்பட்டு லேசாக சிரித்துக் கொண்டாள். பிறகு அவள் அங்கிருந்து எழுந்து தேநீர்ப் பாத்திரத்தின் குழாயைச் சுத்தம் செய்யாமல் திருகிவிட்டாள். பின்பு முகம் கை கழுவிவிட்டு தன் முன்னால் கையால் சிலுவை கீறிக்கொண்டு பிரார்த்திக்கத் தொடங்கினாள்.
அவள் முகம் ஒளிபெற்றது. வலது புருவம் ஏறியேறி இறங்கிக் கொண்டிருந்தது.
ஆலைச் சங்கின் இரண்டாவது ஓசை அவ்வளவு உரத்துக் கேட்கவில்லை. அதில் பழைய அதிகாரத் தொனியும் தொனிக்கவில்லை. அதனது கனத்த ஈரம் படிந்த குரலில் சிறு நடுக்கம் தென்பட்டது. வழக்கத்துக்கு மீறி அது வெகுநேரம் அலறிக் கொண்டிருப்பதாகத் தாய்க்குப்பட்டது.
அடுத்த அறையிலிருந்து ஹஹோலின் தெளிவான ஆழ்ந்த குரல் ஒலித்தது.
”கேட்கிறதா, பாவெல்?”
யாரோ தரைமீது நடந்து செல்வது கேட்டது. அவர்களில் யாரோ ஒருவர் நிம்மதியோடு கொட்டாவிவிடும் ஓசையும் கேட்டது.
“தேநீர் தயார்” என்று கத்தினாள் தாய்.
”நாங்கள் எழுந்து விட்டோம்” என்று உற்சாகமாகப் பதிலளித்தான் பாவெல்.
”சூரியன் உதயமாகிவிட்டது. வானத்தில் ஒரே மேகமாயிருக்கிறது. இன்றைக்கு மேகமில்லாது இருந்தால் நன்றாயிருக்கும் என்றான் ஹஹோல்.
அவன் தூக்கக் கலக்கம் தெளியாது முகத்தைச் சுழித்துக்கொண்டு சமையலறைக்கு தடுமாறிக்கொண்டே ஆனால், உற்சாகமாக வந்தான்.
“வணக்கம். அம்மா? எப்படித் தூங்கினீர்கள்?”
தாய் அவனருகே சென்று மெதுவாக சொன்னாள்,
“நீ அவன் பக்கமாகவே போகவேண்டும், அந்தியூஷா.”
“நிச்சயமாய்” என்றான் ஹஹோல். ‘அம்மா, ஒன்று மட்டும் உங்களுக்கு நிச்சயமாயிருக்கட்டும். நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும்வரையிலும், ஒருவர் பக்கம் ஒருவராகத்தான் இருவருமே முன்னேறிச் செல்வோம். தெரிந்ததா?”
“நீங்கள் இரண்டு பேரும் என்ன குசுகுசுக்கிறீர்கள்?’ என்று கேட்டான் பாவெல்.
”ஒன்றுமில்லை, பாஷா!”
”வேறொன்றுமில்லை. என்னைக் கொஞ்சம் நன்றாக முகத்தைக் கழுவிக்கொண்டு போகச் சொல்கிறாள். அப்படிப் போனால்தான் பெண்கள் எல்லாம் என்னைப் பார்த்து மயங்குவார்கள்?” என்று கூறிக்கொண்டே ஹஹோல் முகம் கை கழுவுவதற்காக வாசற்பக்கத்துக்குச் சென்றான்.
“துயில் கலைந்து அணியில் சேர விரைந்து வாரும் தோழர்காள்!” என்று லேசாகப் பாடினாள் பாவெல்.
நேரம் ஆக ஆகப் பொழுதும் நன்கு புலர்ந்து வானம் நிர்மலமாயிற்று. மேகத் திரள்கள் காற்றால் தள்ளப்பட்டு ஒதுங்கி ஓடிவிட்டன. சாப்பாட்டு மேஜையைத் தயார் செய்யும் போது தாய் எதையெதையோ எண்ணித் தலையை அசைத்துக்கொண்டாள். அவளுக்கு எல்லாம் ஒரே அதிசயமாயிருந்தது. அவர்கள் இருவரும் அன்று காலையில் கேலியும் கிண்டலுமாய்ச் சிரித்துப் பேசிப் பொழுதைப் போக்கினார்கள்; ஆனால் நண்பகலில் அவர்களுக்கு என்ன ஆபத்து காத்திருக்கிறது என்பதோ அவருக்கும் தெரியாது. இருந்தாலும். அவள் அதனால் கலவரமடையவில்லை. அமைதியாகவும் குஷியாகவும் இருந்தாள்.
”அவர்கள் மக்களை மட்டும்தான் மதிக்கவில்லை என்பது அல்ல. மக்களின் மீது ஏவிவிடும் வேட்டை நாய்களாக உபயோகிக்கும் தங்களது கைக்கூலிகளைக்கூட அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். அக் கைக்கூலிகள் தொலைந்து போனதற்காக அவர்கள் வருந்தமாட்டார்கள்; தங்கள் காசு தொலைந்து போனால்தான் வருத்தப்படுவார்கள்!”
காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதற்கென்று நெடுநேரம் தேநீர் அருந்தினார்கள். பாவெல் தனது கோப்பையிலிருந்து சர்க்கரையை வழக்கம் போலவே மிகவும் மெதுவாகக் கலக்கிக் கரைத்தான். ரொட்டியின் மீது உப்பைச் சரிசமமாகத் தூவிக்கொண்டான். அதுதான் அவனுக்கு எப்போதும் பிடித்த பொருள். ஹஹோல் மேஜைக்கடியில் கால்களை அப்படியும் இப்படியும் மாற்றி மாற்றி வைத்துக் கொண்டிருந்தான். அவனுக்குத் தன் கால்களை எப்படி வைத்தாலும் செளகரியமாயிருப்பதாகத் தோன்றவில்லை. தேநீரில் பட்டுப் பிரதிபலிக்கும் சூரிய ஒளி சுவரிலும் முகட்டிலும் ஆடியசைந்து நர்த்தனம் புரிவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“நான் பத்து வயதுப் பையனாக இருக்கும்போது, எனக்குச் சூரியனை ஓர் கண்ணாடிக் கிளாசுக்கள் பிடித்து வைத்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்ததுண்டு” என்றான் அவன். “எனவே நான் ஒரு கிளாஸை எடுத்துக் கொண்டு சூரியன் விழும் இடத்துக்குச் சென்று கண்ணாடிக் கிளாஸால் டபக்கென்று அமுக்கிப் பிடித்தேன். கண்ணாடி உடைந்து என் கையில்தான் காயம்பட்டது. அத்துடன் வீட்டிலும் அடி வேறு விழுந்தது. அடிபட்ட பிறகு நான் வீட்டு முற்றத்துக்கு வந்தேன். அப்போது சூரியன் ஒரு சேற்றுக் குட்டையில் தெரிந்தது.
உடனே என் ஆத்திரத்தையெல்லாம் வைத்துக் கொண்டு அந்தச் சூரியனை மிதிமிதியென்று மிதித்துத் தள்ளிவிட்டேன். என் மேல் காலெல்லாம் சேறு தெறித்துப் பாழாயிற்று. இதற்காக நான் மீண்டும் ஒருமுறை அடி வாங்கினேன். அந்தச் சூரியனைப் பழிவாங்க எனக்கு ஒரே ஒரு வழிதான் பட்டது. சூரியனைப் பார்த்து நாக்கைத் துருத்தி வக்கணை காட்டினேன். “ஏ சிவந்த தலைப் பிசாசே எனக்கு இந்த அடி ஒண்ணும் வலிக்கலே வலிக்கவே இல்லை!” என்று கத்தினேன். அதில் எனக்கு ஓரளவு ஆறுதல் கிடைத்தது.”
”நீ ஏன் அதைச் சிவந்த தலைப் பிசாசு என்றாய்?” என்று கேட்டுச் சிரித்தான் பாவெல்.
“அதற்குக் காரணம் வேறு, எங்கள் வீட்டுக்கு எதிர்த்தாற்போல் ஒரு பெரிய சிவந்த தலைக் கொல்லன் இருந்தான். அவன் தாடியும் சிவப்பு. அவன் ஒரு குஷிப் பேர்வழி. அன்பானவன். சூரியன் அவனைப் போலவே இருந்ததாக எனக்குத் தோன்றியது.”
தாய்க்கு இந்த வேடிக்கைப் பேச்சுக்களைக் கேட்பதற்குப் பொறுமையில்லை. எனவே, அவள் பொறுமையிழந்து கேட்டாள்.
“இன்றைக்கு நீங்கள் எப்படி அணிவகுத்துப் போகப் போகிறீர்கள்? அதைப்பற்றி ஏன் பேசவில்லை?”
“அதெல்லாம் ஏற்கெனவே முடிவு பண்ணி ஏற்பாடாகிவிட்டது. அதை இப்போது போட்டுக் குழப்புவானேன்?” என்று அமைதியாகச் சொன்னாள் ஹஹோல். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தால் நாங்களெல்லாம் கைதாகிவிட்டாலும் நிகலாய் இவானவிச் உன்னிடம் வந்து இனி ஆக வேண்டியதைக் கூறுவான். அம்மா!”
“ரொம்ப நல்லது” என்று பெருமூச்சுடன் சொன்னாள் தாய்.
“நாம் கொஞ்ச நேரம் உலாவிவிட்டு வந்தாலென்ன?” என்று ஏதோ நினைவாய்ச் சொன்னான் பாவெல்.
”இப்போது வீட்டிலேயே இருப்பதுதான் நல்லது. நேரம் வருவதற்கு முன்னாலேயே போலீஸ்காரர்களின் கண்களை ஏன் உறுத்தவேண்டும் என்கிறாள். உன்னை அவர்களுக்கு ஏற்கெனவே நன்றாய்த் தெரியும்” என்றான் அந்திரேய்.
பியோதர் மாசின் அவசர அவசரமாக உள்ளே வந்தான். அவனது முகம் பிரகாசமுற்றுக் கன்னங்கள் சிவந்து காணப்பட்டன. அவனது ஆனந்தமயமான உத்வேகம் அவர்களது காத்துக்கிடக்கும் சங்கடத்தை தளர்த்தியது.
“எல்லாம் ஆரம்பமாகிவிட்டது. ஜனங்கள் எழுச்சி பெற்றுவிட்டார்கள்! முகங்கள் எல்லாம் வெட்டரிவாள் மாதிரி கூர்மை பெற்றுப் பிரகாசிக்க அவர்கள் தெருவிலே வந்து கூடிவிட்டார்கள். நிகலாய் வெஸோவ்ஷிகோல், வசீலி கூஸெவ், சமோயலவ் எல்லோரும் தொழிற்சாலை வாசலில் நின்று கொண்டு பிரசங்கம் செய்கிறார்கள். எவ்வளவு தொழிலாளர்கள் வீட்டுக்குத் திரும்பிப் போய்விட்டார்கள்! வாருங்கள், போவதற்கு நேரமாகிவிட்டது. அப்போதே மணி பத்தடித்துவிட்டது” என்றான் அவன்.
”சரி. நான் போகிறேன்” என்று உறுதியாகச் சொன்னான் பாவெல்.
”அவன் காற்றில் எரியும் மெழுகுவர்த்தி மாதிரி இருக்கிறான்” என்றாள் தாய். பிறகு அவள் அங்கிருந்து எழுந்து சமையலறைக்குள் உடை மாற்றிக்கொள்ளப் போனாள்.
”எங்கே புறப்படுகிறார்கள், அம்மா?” என்று கேட்டான் அந்திரேய்.
”உங்களோடுதான்” என்று பதிலளித்தாள் தாய்.
அந்திரேய் தன் மீசையை இழுத்து விட்டவாறே பாவெலைப் பார்த்தான். பாவெல் தனது தலைமயிரைப் பலமாகக் கோதி விட்டவாறே தாயிடம் போனான்.
“அம்மா, நானும் உன்னிடம் எதுவும் பேசமாட்டேன்; நீயும் என்னிடம் எதுவும் பேசக்கூடாது. சரிதானே?”
“ரொம்ப சரி, ரொம்ப சரி. கடவுள் உங்களுக்கு அருள் செய்யட்டும்” என்று முனகினாள் அவள்.
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு