Tuesday, July 1, 2025
முகப்பு பதிவு பக்கம் 421

ஜே.என்.யு. மாணவர் உமருக்கு துப்பாக்கிக் குண்டு ! இதுதான் மோடியின் சுதந்திரதினச் செய்தி !

ஜே.என்.யு. மாணவர் தலைவர் உமர் காலித் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகாமல் தப்பியிருக்கிறார். டில்லியின் மையப்பகுதியில், நாடாளுமன்றத்துக்கு வெகு அருகில் இருக்கிறது கான்ஸ்டிடியூசன் கிளப் அரங்கம். நாடாளுமன்ற உறுப்பினர்களும் பத்திரிகையாளர்களும் வந்து போகும் அந்த அரங்கின் வாயிலில் 13.08.2018 அன்று இந்தக் கொலை முயற்சி நடந்திருக்கிறது.

உமர் காலித்

“அச்சத்திலிருந்து சுதந்திரம்” என்ற தலைப்பில் அங்கு நடைபெறவிருந்த கூட்டத்தின் நோக்கமே  இத்தகைய கொலைகளுக்கு எதிராக குரலெழுப்புவதுதான்.

கூட்டத்தில் பேச வந்திருந்த உமர், கடையில் தேநீர் குடித்து விட்டு நகர்ந்திருக்கறார். அவரை பிடறியில் கைவைத்து கீழே தள்ளி, கைத்துப்பாக்கியால் வயிற்றில் சுட முனைந்திருக்கிறான் கொலையாளி. அவன் கையைப் பிடித்து தள்ளியிருக்கிறார் உமர். உமருடன் வந்திருந்த பனோஜ்யோத்ஸ்னா லாகிரி என்ற இளைஞரும் ஷாரிக் உசேன் என்பவரும் கொலையாளியைப் பிடித்து தள்ளியிருக்கின்றனர். இந்த தள்ளுமுள்ளுக்கு இடையில் ஒரு தோட்டா வெடித்திருக்கிறது. அவன் துப்பாக்கியை தெருவில் வீசி விட்டு ஓடியிருக்கிறான்.

“நமக்கும் கவுரி லங்கேஷின் தருணம் வந்து விட்டது என்றுதான் அந்தக் கணத்தில் நினைத்தேன். நண்பர்கள் மட்டும் அவனைப் பிடிக்கவில்லையென்றால் நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன்” என்று கூறுகிறார் உமர் காலித்.

2016 பிப்ரவரியில் கண்ணையாகுமார், அனிர்பன் பட்டாசார்யா, உமர் காலித் ஆகியோர் மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்குகளும் தாக்குதல்களும் உலகத்தின் கவனத்தை ஈர்த்தன. மோடி அரசை உலக அரங்கில் அம்பலப்படுத்திய அந்த நிகழ்வுக்குப் பின்னரே, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தையும், அதன் முற்போக்கான மாணவர் சமூகத்தையும் பார்ப்பன பாசிஸ்டுகள் குறிவைக்கத் தொடங்கி விட்டனர்.

துப்பாக்கியை தெருவில் வீசி விட்டு ஓடியிருக்கிறான்.

குறிப்பாக உமர் காலித்துக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தை ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறது அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி. சமூக ஊடகங்களின் வாயிலாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விதம் விதமான பொய்ப்பிரச்சாரங்கள் சங்கிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சிதான் இந்தக் கொலை முயற்சி. தபோல்கர் முதல் கவுரி லங்கேஷ் வரையிலான அனைவரின் விசயத்திலும் இப்படித்தான் நடந்திருக்கிறது.

உமர் சுடப்பட்ட செய்தி ஊடகங்களில் வரத்தொடங்கிய மறுகணமே, இந்த சம்பவத்தையே மறுக்கின்ற பொய்ப்பிரச்சாரமும் தொடங்கிவிட்டது. “சம்பவம் நடந்த போது நான் அங்கேதான் இருந்தேன். துப்பாக்கி சூடு நடந்தது உண்மை. ஆனால் உமர் காலித் அந்த இடத்தில் இல்லவே இல்லை” என்று தைனிக் பாஸ்கர் (இந்தியில் வெளிவரும் தினமலம்) நாளேட்டின் நிருபர் சந்தோஷ்குமார் ஒரு வீடியோவை சுற்றுக்கு விட்டிருக்கிறார். உடனே இதனை ஏ.பி.பி. நியூஸ் சானலின் நிருபர் விகாஸ் பதவுரியா டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். மோடியை அவதூறு செய்வதற்காக உமர் நடத்தும் நாடகம் என்றும், தாக்கியதே உமர்தான் என்றும் பலவிதமாக இந்தக் கதை சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுவிட்டது. இதனைப்  பரப்பியவர்களில் பலர் டிவிட்டரில் மோடியால் பின் தொடரப்படுபவர்கள்.

ஒருபுறம், அடையாளம் தெரியாத அந்த கொலையாளிக்கு எதிராக கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்திருக்கிறது டெல்லி போலீஸ்.  இன்னொரு புறம், பா.ஜ.க. எம்.பி.யும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான மீனாட்சி லேகி “அப்படி ஒரு தாக்குதலே நடக்கவில்லை என்றும் இது உமர் நடத்தும் நாடகம்” என்றும் வாதாடிக் கொண்டிருக்கிறார். அக்லக் கொலை முதல் அனைத்தில் கடைப்பிடிக்கப்படும் உத்தி இதுதான்.

“சுட்டவன் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு வெறுப்பையும் அச்சத்தையும் இரத்த வெறியையும் பரப்புவோரும், தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமே இல்லாத தைரியத்தை கொலைகாரர்களுக்கு வழங்குபவர்களும்தான் உண்மையான குற்றவாளிகள்” என்று கூறியிருக்கிறார் உமர் காலித்.

***

டில்லி சம்பவத்துக்கு 3 தினங்களுக்கு முன், கடந்த 10 ஆம் தேதியன்று மகாராட்டிர பயங்கரவாத தடுப்பு போலீசார் காவி பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த மூன்று பேரைக் கைது செய்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து பத்து கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ஜெலட்டின் குச்சிகள், டெடனேட்டர்கள் உள்ளிட்ட வெடி பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

“சுட்டவன் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு வெறுப்பையும் அச்சத்தையும் இரத்த வெறியையும் பரப்புவோரும், தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமே இல்லாத தைரியத்தை கொலைகாரர்களுக்கு வழங்குபவர்களும்தான் உண்மையான குற்றவாளிகள்” என்று கூறியிருக்கிறார் உமர் காலித்.

இரண்டு வார காலம் இவர்களது நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து அதன் பின்னர்தான் கைது செய்திருப்பதாகவும்,  இவர்கள் அனைவரும் பயங்கரவாத நடவடிக்கைகளில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் மகாராட்டிர போலீஸ் கூறுகிறது. இவர்களைக் கைது செய்திருக்காவிட்டால், பக்ரீத் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி பல இடங்களில் இவர்கள் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியிருப்பார்கள் என்றும் அதற்குத் தயார் நிலையில்தான் எல்லா வெடிபொருட்களும் இருந்தன என்றும் கூறுகிறது போலீஸ்.

யார் இந்த மூவர்?

வைபவ் ராவத் (40) ஹிந்து கோவன்ஷ் ரக்ஷா சமிதியின் (பசு பாதுகாப்பு படை) உறுப்பினர். தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோரது கொலைகளில் தொடர்புள்ள “சனாதன் சன்ஸ்தா”வின் ஆதரவாளர்.

சுதன்வா காண்டலேகர் (39) “ஸ்ரீ சிவபிரதிஷ்டான் இந்துஸ்தான்” என்ற அமைப்பின் உறுப்பினர். அந்த அமைப்பின தலைவர்தான் பீமா கோரேகானில் தலித்துகளுக்கு எதிரான கலவரத்தை நடத்தியதில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சம்பாஜி பிடே.

சரத் கசால்கர் (25) பசு பாதுகாப்பு குண்டர் படை வைத்துக் கொண்டு இறைச்சிக் கடைகளை சூறையாடுவது,  தாக்குவது போன்ற நடவடிக்கைகளை வழக்கமாக கொண்டவர்.  குண்டுகள் இவரது வீட்டிலிருந்து தான் கைப்பற்றப்பட்டன.

இருப்பினும், இவர்களை “காவி பயங்கரவாதிகள்” என்றோ “இந்துத்துவ பயங்கரவாதிகள்” என்றோ ஊடகங்கள் குறிப்பிடவில்லை. “சுதந்திர தினத்தை சீர்குலைக்க சதி” என்ற தலைப்பில் இது தலைப்புச் செய்தியாகவும் வெளியிடப்படவில்லை.

அன்று, மாலேகான் குண்டுவெடிப்புக்கு காரணமான பிரக்யா சிங் தாகூர்உள்ளிட்ட இந்துத்துவ பயங்கரவாதிகளைக் கைது செய்த  போலீசு அதிகாரி,  ஹேமந்த் கர்கரே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இவர்களைக் கைது செய்த போலீசு அதிகாரிகளுக்கும் அந்த கதி நேரலாம்.

ஏனென்றால், “சிவபிரதிஷ்டான் இந்துஸ்தான்” அமைப்பின் தலைவர் சம்பாஜி பிடே,  மோடியின் குருநாதர். “என் குருநாதர் பிடே இங்கு வருமாறு உத்தரவிட்டார். இதோ நான் வந்திருக்கிறேன்” என்று 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திலேயே பேசியிருக்கிறார் மோடி.

கைது செய்யப்பட்டிருக்கும் “பிரிஞ்ச் எலிமென்ட்” சுதன்வா காண்டலேகருக்கும் பிடே தான் குருநாதர்.  அதற்காக, பிரதமர் மோடியை பிரிஞ்ச் எலிமென்ட் என்று சொல்லிவிட முடியுமா என்ன?

செங்கோட்டையிலிருந்து கொடியேற்றுபவரை பிரிஞ்ச் எலிமென்ட் என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, அது அவதூறு அல்லவா?

***

மர் மீதான கொலை முயற்சி நடந்த பின்னரும் திட்டமிட்ட நேரத்தில் அந்தக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

பிரசாந்த் பூஷண், உமர் காலித் உள்ளிட்ட பேச்சாளர்களுடன்,

ஜார்கண்டில் பசுக்குண்டர்களால் கொல்லப்பட்ட அலிமுதீனின் மனைவி மரியம்,

  • சென்ற ஆண்டு டில்லிக்கு அருகில் ரயிலில் கொலை செய்யப்பட்ட 16 வயது இளைஞன் ஜுனைத் -இன் அம்மா மரியம்,
  • மர்மமான முறையில் காணாமல் போன ஜே..என்.யு மாணவர் நஜீப் அகமதுவின் தாயார் பாத்திமா நபீஸ்
  • சமீபத்தில் ராஜஸ்தான், ஆல்வாரில் பசுக்குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்ட ரக்பர்கானின் சகோதரன் அக்பர்
  • கோரக்பூர் குழந்தைகள் மரணத்துக்காக பொய்க்குற்றம் சாட்டி தண்டிக்கப்பட்டிருக்கும் டாக்டர் கஃபில் கான்,
  • கடந்த ஜூன் 11 ஆம் தேதியன்று கோரக்பூரில் 3 துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு உயிர் தப்பிய டாக்டர் கஃபில் கானின் சகோதர் காஷிப் ஜமீல்

– ஆகியோர் கான்ஸ்டிடியூசன் கிளப்பின் அந்தச் சிறிய அரங்கில் “அச்சத்திலிருந்து சுதந்திரம்” குறித்துப் பேசியிருக்கின்றனர்.  கூட்டம் முடிந்து வீடு திரும்பிய டாக்டர் கஃபில் கானின் கைபேசிக்கு  “அடுத்த இலக்கு – நீ” என்றொரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது.

நமக்கும் அப்படியொரு குறுஞ்செய்தி வரும் – அதற்குள் விழித்துக் கொள்ளத் தவறினால்!

வினவு செய்திப் பிரிவு

ஊடகங்களை கொலை செய்வது எப்படி ? மோடி கையேடு

புன்ய பிரசூன் பாஜ்பாய்

ளும் பா.ஜ.க. அரசு ஊடகங்களை எப்படி கட்டுப்படுத்துகிறது? இதற்கான விடையை நாம் ஆய்வுகளில் தேட வேண்டாம். தனது அனுபவத்தில் இருந்து முன்வைக்கிறார் புன்ய பிரசூன் பாஜ்பாய். இந்தி சேனலான, ஏ.பி.பி. தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நெறியாளரான புன்ய பிரசூன் பாஜ்பாய், ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ என்ற பிரைம் டைம் விவாத நிகழ்ச்சியை நடத்துபவர்.

பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்டீஸ்கரை சேர்ந்த ஒரு பெண் விவசாயி, சீத்தாப்பழ விவசாயம் மூலம் தனது லாபம் இரட்டிப்பானது என்று பேசினார். அவர் பொய்யாக அப்படி பேசியதையும், அரசு அதிகாரிகள் அந்தப் பெண்ணுக்கு பயிற்சி அளித்து பேச வைத்தனர் என்பதையும் தனது மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் அம்பலப்படுத்தினார் புன்ய பிரசூன்.  இதை தொடர்ந்து எழுந்த அழுத்தங்களால், மோடியின் பெயரை சொல்லக்கூடாது; மோடியின் வீடியோ மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது; மோடி பற்றி விமர்சனம் செய்யக்கூடாது என்று கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டார். இறுதியில் பணியில் இருந்து ராஜினாமாவும் செய்தார்.

தனக்கு என்ன நேர்ந்தது என்பதை விளக்கி புன்ய பிரசூன் எழுதியிருக்கும் கடிதம், அவருக்கு நேர்ந்ததை மட்டும் விவரிக்கவில்லை. இந்திய அளவில் ஊடகங்களின் குரலை ஒடுக்குவதற்கு மோடி நடத்தும் ’சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை’ வெளிக்கொண்டு வருகிறது.

***

நான் பணியாற்றும் ஏ.பி.பி. தொலைக்காட்சியின் உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாக ஆசிரியர் திடீரென ஒரு நாள் என்னை அழைத்தார். ”உங்கள் மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெயரை குறிப்பிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் பெயரை சொல்லுங்கள். மோடி பெயர் எந்த இடத்திலும் வர வேண்டாம்’’ என்றார்.

மோடியின் புகைப்படமும், வீடியோவும் இடம்பெறக்கூடாது என்றார் உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாக ஆசிரியர். “அரசு என்பது மோடி மட்டும்தானா? மோடியை தவிர்த்துவிட்டு உங்களால் ரிப்போர்ட் செய்ய முடியாதா?” என்று கேட்டார்.

“அது எப்படி சாத்தியம்? அரசின் அனைத்துத் திட்டங்களையும் பிரதமர் மோடிதான் அறிவிக்கிறார்; அவர்தான் தொடங்கி வைக்கிறார். துறையின் அமைச்சர்கள் கூட மோடிக்கே முழு பெருமையையும் சமர்ப்பிக்கின்றனர். அப்படி இருக்கும்போது மோடியின் பெயரை எப்படி தவிர்க்க முடியும்?” என்று கேட்டேன்.

‘’நீங்கள் செய்வதும், சொல்வதும் சரியாக இருக்கக்கூடும். ஆனால், நான் சொல்வதைக் கேளுங்கள். தற்காலிகமாகவேனும் மோடி பெயர் எங்கும் வேண்டாம்’’ என்றார்.

ஆனால் அவரது உத்தரவை செயல்படுத்துவது அத்தனை எளிமையானதாக இருக்கவில்லை. உதாரணமாக, இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை குறித்து நான் விவாதிப்பதாக இருந்தால் 2022-க்குள் 40 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு அளிக்கப்படும் என்ற மோடியின் அறிவிப்பு குறித்தும், இதுவரை 2 கோடி இளைஞர்களுக்கு மட்டுமே திறன் மேம்பாடு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நான் பேச முடியாது. நாடு முழுவதும் திறக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி நிலையங்களில் 10-இல் 8 பூட்டிக்கிடக்கிறது என்பதையும் பேச முடியாது.

மோடி பெயரைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக ‘தற்போதுள்ள அரசு’ என்ற சொல்லை பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தோம். ஆனால் இது தொலைக்காட்சி ஊடகம். காட்சிகளைக் காட்டியாக வேண்டும். எங்கள் ‘வீடியோ லைப்ரரி’ முழுக்க மோடி காட்சிகள்தான் நிறைந்திருக்கின்றன. 2014-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதிக்குப் பிறகு எங்கள் எடிட் இயந்திரங்கள் மோடியை மட்டுமே எடிட் செய்தன. 80 சதவிகிதம் புகைப்படங்களும், வீடியோவும் மோடியுடையது மட்டும்தான். ஆகவே மோடி என்ற பெயரை பயன்படுத்தாமல் ‘தற்போதைய அரசு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும், டி.வி. திரையில் மோடியின் புகைப்படங்களே இடம்பெற்றன. ஆனால் அடுத்த 100 மணி நேரத்துக்குள் அடுத்த உத்தரவு வந்தது.

மோடியின் புகைப்படமும், வீடியோவும் இடம்பெறக்கூடாது என்றார் உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாக ஆசிரியர். “அரசு என்பது மோடி மட்டும்தானா? மோடியை தவிர்த்துவிட்டு உங்களால் ரிப்போர்ட் செய்ய முடியாதா?” என்று கேட்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ‘தற்போதுள்ள அரசால்’ 106 திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து திட்டங்களையும் அறிவித்தவர் மோடி. துறை சார்ந்த அமைச்சர்கள் செய்ய வேண்டிய வேலையை; தேடிக்கொள்ள வேண்டிய பெருமையை, அவரே தன் பெயரால் செய்தார். ஆகவே, மோடியின் பெயரை குறிப்பிடக்கூடாது; புகைப்படத்தைக் காட்டக்கூடாது என்றால், யார் குறித்தும், எது குறித்தும் முணுமுணுக்கக் கூடாது என்றுதான் அர்த்தம்.

ஜூன் கடைசி வாரத்தில் பா.ஜ.க.-வில் இருந்து வேறொரு அழுத்தம் வரத் தொடங்கியது. பா.ஜ.க. சார்பாக எங்கள் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க யாரும் வர முடியாது என்று மறுத்தார்கள். அதில் இருந்து சில நாட்கள் கழித்து பா.ஜ.க. பிரமுகர்கள் ஏ.பி.பி. தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்க மறுத்தனர். எங்கள் நேரலை விவாதம் ஒன்றில் கலந்துகொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியான ஒரு பேராசிரியருக்கு திடீரென ஒரு செல்போன் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசியவர் அடுத்த விநாடி, ஸ்டுடியோவில் இருந்து எழுந்து, மைக் ஒயரை கழட்டிவிட்டு, அவர் போக்கில் வெளியேறிச் சென்றார். இவை அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பானது. அந்த செல்போன் அழைப்பு வந்தபோது, அவரது முகம் அச்சத்தால் வெளிறிப் போயிருந்ததைக் கண்டேன்.

இப்படி பா.ஜ.க. தனது எல்லா அழுத்தங்களையும் செலுத்தினாலும் விளைவு வேறாக இருந்தது. ஏ.பி.பி. சேனல் மிகக் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்ட ஜூலை 5 முதல் ஜூலை 12 வரையிலான டி.ஆர்.பி. ரேட்டிங்கில் ஏ.பி.பி. தொலைக்காட்சி பலமடங்கு மேலே சென்று, இந்தி செய்திச் சேனல்களில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தைப் பெற்றது. விவாதங்களில் பா.ஜ.க.-வினர் பங்கேற்பதும், பங்கேற்காததும் ரேட்டிங்கில் ஒரு பொருட்டாக இருக்கவில்லை. மேற்கண்ட ஜூலை 5-12ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட நாள் ஒன்றில், ஜார்கண்ட் மாநிலம் கோட்டா என்ற இடத்தில் அமைக்கப்படவிருந்த அனல் மின் நிலையம் குறித்து ரிப்போர்ட் செய்தோம். அது அதானிக்கு சொந்தமான அனல் மின் நிலையம். இதற்கு நிலத்தை விற்கும்படி விவசாயிகள் மிரட்டப்பட்டனர். “நிலத்தை தரவில்லை என்றால் உயிரோடு எரித்துவிடுவதாக அதானி ஆட்கள் மிரட்டினார்கள்” என்று மக்கள் கதறினார்கள். இவை அனைத்தும் அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. அந்த வார ரேட்டிங்கில், அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு மட்டும் வழக்கத்தை விட 5 புள்ளிகள் கூடுதலாக கிடைத்திருந்தது.

அரசின் பொய்களை அம்பலப்படுத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு; அரசை எதிர்த்து நிகழ்ச்சிகளை நடத்தும் ஒரு சேனலுக்கு டி.ஆர்.பி. ரேட்டிங் அதிகரித்தால், மற்ற தொலைக்காட்சிகள் மத்தியில் அது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது யூகிக்க முடியாதது அல்ல. டி.ஆர்.பி. ரேட்டிங்கை அடிப்படையாக வைத்துதான் ஒரு சேனலுக்கான விளம்பர வருவாய் தீர்மானிக்கப்படுகிறது. மோடியை விமர்சித்தாலும் டி.ஆர்.பி. ரேட்டிங் வரும் என்றால், விளம்பரதாரர்கள் இந்தப் பக்கம் சாய்வார்கள்; மோடி புகழ்பாடும் சேனல்களுக்கு விளம்பர வருவாய் குறையும். ஒரே நேரத்தில் இரட்டை பாதிப்பு. இந்த தருணத்தில்தான், மோடி அரசு எங்கள் கழுத்தை நெறிக்க முடிவு செய்தது.

அது இரண்டு பகுதிகளாக நடந்தது. ஒன்று, விவாதம், நிகழ்ச்சிகள், பேட்டி என ஏ.பி.பி. சேனலின் அனைத்தையும் பா.ஜ.க. சார்பில் புறக்கணிப்பது. இரண்டாவது, ஏ.பி.பி. சேனலின் வருடாந்திர பொது நிகழ்ச்சியை புறக்கணிப்பது. பொதுமக்கள் முன்னிலையில் பெரும் அரசியல் கட்சியின் தலைவர்களை ஒன்றாக அமர வைத்து நடத்தப்படும் இந்த நிகழ்வு எங்கள் தொலைக்காட்சியால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கௌரவம் மிக்கதும், வருமானம் ஈட்டித் தரக்கூடியதுமான இந்நிகழ்வு சேனலுக்கு பல வகைகளில் முக்கியமானது. இதற்கு பா.ஜ.க. சார்பிலோ, மோடி அரசாங்கத்தின் சார்பிலோ யாரும் வரமாட்டோம் என மறுத்தார்கள். அதிகாரத்தில் இருக்கும் ஆளும் தரப்பினர் யாரும் இல்லாமல் எப்படி அந்நிகழ்வை நடத்த முடியும்?

இதன்பிறகுதான் ஜூலை 6-ஆம் தேதி சர்ச்சைக்குரிய ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளை கண்காணிப்பதற்காக பா.ஜ.க. அரசு நியமித்திருக்கும் 200 பேர் கொண்ட குழுவில் இருந்து ஒரு நண்பர் எனக்கு அழைத்தார். “எதுவும் நடக்கலாம். எச்சரிக்கையாக இருங்கள்” என்றார். இதன்பிறகு ’மாஸ்டர் ஸ்ட்ரோக்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது மட்டும் எங்களுடைய செயற்கைக்கோள் இணைப்பு தடைபடத் தொடங்கியது. அந்த ஒரு மணி நேரம் மட்டும் தொலைக்காட்சித் திரை கருப்பானது. ’மாஸ்டர் ஸ்ட்ரோக்’ முடிந்ததும், மிகச் சரியாக 10 மணிக்கு டி.வி. திரை பழையமாதிரி சரியாகிவிடும். எங்கள் தொழில்நுட்பக் குழுவால் இதை சரிசெய்யவே முடியவில்லை. உடனே தொலைக்காட்சியின் ஸ்க்ரோலிங் பகுதியில்,’’கடந்த சில நாட்களாக பிரைம் டைம் நிகழ்ச்சியின்போது எங்கள் ஒளிபரப்பில் சில தடங்கள் ஏற்படுகிறது. அதை சரிசெய்ய முயற்சித்துவருகிறோம். அதுவரை நேயர்கள் ஒத்துழைக்கவும்” என்ற செய்தியை ஒளிபரப்பினோம். ஆனால் இரண்டே மணி நேரத்தில் அந்த செய்தி அகற்றப்பட்டது. அதை ஒளிபரப்பக்கூடாது என்று நிர்வாகத்துக்கு அரசுத் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால் நிர்வாகம் அந்த முடிவை எடுத்தது.

‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் சமயத்தில் ஏ.பி.பி. நியூஸ் நெட்வொர்க்கின் ஒளிபரப்பு முடக்கப்பட்டது.

இதே நேரத்தில் ஏ.பி.பி. சேனலின் மிகப்பெரிய விளம்பரதாரரான ‘பதஞ்சலி புராடக்ட்ஸ்’ நிறுவனம், தன்னுடைய அனைத்து விளம்பரங்களையும் திடீரென நிறுத்திக்கொண்டது. மற்ற விளம்பர நிறுவனங்களுக்கும் இத்தகைய அழுத்தம் தரப்படுவதாக எங்களுக்குத் தொடர்ந்து தகவல் வந்து கொண்டிருந்தது. ஒருநாள், இந்த நீண்ட நெருக்கடி நிலை ஒரு முடிவை எட்டியது. ஏ.பி.பி. தொலைக்காட்சி குழுமத்தின் உரிமையாளர் மற்றும் தலைமை நிர்வாக ஆசிரியர் என் முன்னே கைகளை இறுக மடக்கிக்கொண்டு நின்றனர்.

“என்ன செய்வது? இந்த சூழ்நிலையில் நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? அநேகமாக விடுமுறையில் செல்லலாம் அல்லது ராஜினாமா செய்யலாம்” என்றார்.

இந்த அதிர்ச்சிகளை விட ஓர் அதிசயம் நடந்தது. நான் என்னுடைய ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த அடுத்த சில நிமிடங்களில், ஏ.பி.பி. சேனலில் பதஞ்சலி விளம்பரங்கள் மீண்டும் ஒளிபரப்பாகத் தொடங்கின. மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் வழக்கமாக 15 நிமிடங்கள் விளம்பரங்களுக்கு ஒதுக்கப்படும். பா.ஜ.க. அழுத்தம் காரணமாக இது வெறும் 3 நிமிடங்களாக சுருங்கியிருந்தது. நான் ராஜினாமா செய்தபிறகு இது திடீரென 20 நிமிடங்களாக அதிகரித்தது. நான் ராஜினாமா செய்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி இரவில் இருந்தே செயற்கைக்கோள் இணைப்பில் எந்த தொந்தரவும் இல்லை. டி.வி. திரைகள் கறுப்பாகாமல், வழக்கம்போல் ஒளிபரப்பாகின.

– தி வயர் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் சுருக்கம்.
தமிழாக்கம்: வழுதி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – மக்கள் அதிகாரம் 6 தோழர்கள் NSA-விலிருந்து விடுதலை !

  • மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் என்.எஸ்.ஏ-விலிருந்து விடுதலை!
  • துப்பாக்கிச்சூடுக்கும் சேர்த்து சிபிஐ விசாரணை !
  • தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு !

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டின் கூலிப்படையாக நின்று போலீஸ் நடத்திய அரச பயங்கரவாதப் படுகொலையை அம்பலப்படுத்தும் விதத்தில் இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் திரு. சி.டி.செல்வம், திரு.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு இரண்டு தீர்ப்புகளை அளித்திருக்கிறது.

முதலாவதாக, தூத்துக்குடி போராட்டத்தின் முக்கிய குற்றவாளியாக ஸ்டெர்லைட் நிர்வாகத்தாலும், போலீசாலும், பாரதிய ஜனதா கட்சியினராலும் சித்தரிக்கப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு.

தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்டு தற்போது உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் !

தூத்துக்குடி பேரணியில் கலந்து கொண்ட ஒரே குற்றத்துக்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கலியலூர் ரஹ்மான் அவருடைய மகன்களும் மாணவர்களுமான முஹம்மது அனஸ், முகமது இர்ஷத் ஆகியோரையும், கோட்டையன், சரவணன், வேல்முருகன் ஆகிய தோழர்களையும் சேர்த்து மொத்தம் ஆறு பேரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு காலத்துக்கு சிறை வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டது செல்லத்தக்கதல்ல என்று அவர்கள் 6 பேரையும் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இரண்டாவதாக, தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக மக்களுக்கு எதிராகப் போடப்பட்ட வழக்குகளையும், துப்பாக்கி சூடு தொடர்பான போலீசுக்கு எதிரான வழக்குகளையும் தமிழக காவல்துறையை சேர்ந்த சிபி சிஐடி விசாரிக்கக் கூடாது என்று கூறி அவற்றை சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகள் மற்றும் ரிட் மனுக்கள் மீதுதான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

மே 22 அன்று நடைபெற்ற சம்பவத்துக்காக, குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயரில் தாங்களே தயாரித்துக் கொண்ட  பொய்யான வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து, சுமார் 175 வழக்குகளை தூத்துக்குடி போலீஸ் பதிவு செய்திருந்தது. கைது செய்யப்பட்ட ஒவ்வொருவர் மீதும் 20 முதல் 120 வழக்குகள் வரை போட்டு, அவர்களை பிணையில் வரவே முடியாமல் செய்வது என்பதுதான் போலீசின் நோக்கம். இது குறித்து விரிவாக ஏற்கனவே எழுதியிருக்கிறோம்.

வாக்குமூலங்களின் அடிப்படையில் ஒரு சம்பவத்திற்கு 175 முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்வதென்பது சட்டவிரோதமானது என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றிருந்தோம். குற்ற எண் 190, 191 ஆகிய இரண்டின் கீழ்தான் அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்பட  வேண்டும் என்ற அந்தத் தீர்ப்பு போலீஸ் அராஜகத்துக்கும் அத்துமீறல்களுக்கும் உதவிய அடித்தளத்தை தகர்த்து விட்டது.

இந்த இரண்டு வழக்குகளையும் தமிழக காவல்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள சிபிசிஐடி விசாரிப்பது பொருத்தமல்ல என்றும் இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ள உயர் நீதிமன்றம் அதற்கான காரணங்களையும் கூறியுள்ளது.

முழுமையான தீர்ப்பின் நகல் இன்னும் கைக்கு வரவில்லை எனினும் அதன் சுருக்கத்தை கீழ்வருமாறு தொகுத்து தருகிறோம்.

144 தடை முதல் துப்பாக்கிச்சூடு கொலை வரை எந்தக் கேள்விக்கும் அரசு விளக்கமளிக்கவில்லை!

முதலாவதாக மே 21 ஆம் தேதி அன்று இரவு சுமார் பத்து முப்பது மணிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதே ஒரு அசாதாரணமான நடவடிக்கை அந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் போது மாவட்ட ஆட்சியர் அங்கு இல்லை உத்தரவு குறித்து உரிய முறையில் மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

இரண்டாவதாக துப்பாக்கி சூட்டுக்கு ஒரு துணை தாசில்தார் உத்தரவிட்டிருக்கிறார் உத்தரவிட்ட துணை தாசில்தாரின் அதிகார எல்லை துப்பாக்கி சூடு நடந்த இடம் அல்ல. தான் சுமார் 12.5 கிலோமீட்டர் தூரம் பேரணியுடன் நடந்து வந்ததாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கிய பிறகு அங்கே துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவு பிறப்பித்ததாகவும் அவர் கூறுவது சந்தேகத்துக்குரியதாக உள்ளது

மேலிட உத்தரவுக்கு கட்டுப்பட்டோ அல்லது பெரும் பணம் கிடைக்குமென்பதற்காவோ உங்களால் ஒரு சிறுமியைக் கொல்ல முடியுமா?

துணை தாசில்தாரின் உத்தரவுப்படி நடைபெற்ற துப்பாக்கிச் சூடு மட்டுமின்றி, ஆங்காங்கே தனித்தனியே போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் உத்தரவிட்டது யார் என்பதை விசாரிக்க வேண்டியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டின் போது பின்பற்றப்பட வேண்டிய காவல்துறையின் நிலை ஆணைகள் பின்பற்றப்படவில்லை.

இத்தகைய துப்பாக்கிச்சூடு நடைபெறும் தருணங்களில் இ.பி.கோ 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படவில்லை.

மேலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பன்னிரண்டரை கிலோ மீட்டர் தூரம் பேரணியாக மக்கள் வந்திருக்கின்றனர்.  போலீசார் இதனை எப்படி தடையின்றி அனுமதித்தனர் என்ற கேள்விக்கு காவல்துறையிடமிருந்து பதில் இல்லை.

இந்த வழக்கின் போது மனுதாரர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அவை எதற்கும் அரசுத் தரப்பிலிருந்து உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை.

மேற்கூறிய காரணங்களினால் இந்த வழக்கை தமிழக காவல்துறை நிர்வாகத்தின் கீழ் இருக்கும் சிபிசிஐடி துறையினர் விசாரிப்பதை விட, சிபிஐ விசாரிப்பதே பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

இந்தக் காலத்தில் சில நாட்களுக்கு அம்மாவட்டங்களில் இணையத் தொடர்புகள் அங்கே துண்டிக்கப்பட்டிருக்கின்றன. (இதை எதிர்த்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் பத்திரிகையாளர் கவின்மலரை மனுதாரராக கொண்டு ஒரு மனு தாக்கல் செய்து தடையை நீக்கியிருந்தோம்) இந்த இணைய முடக்கத்துக்கு தேவை இருந்ததா என்பது குறித்தும் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

நான்கு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் !

இந்த வழக்கை ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து நான்கு மாதங்களுக்குள் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் அத்துமீறல் குறித்து போலீசார் மீது தூத்துக்குடி மக்கள் புகார் கொடுத்தால் அவை குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும்.

– என்று நீதிபதிகள் சி.டி. செல்வம், பஷீர் அஹ்மத் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் என்ற கார்ப்பரேட் நிறுவனமும் தமிழக அரசும் காவல் துறையும் இணைந்து நடத்திய அரச பயங்கரவாதக் கொலை வெறியாட்டத்திற்கு எதிராக பல்வேறு வழக்கறிஞர்களும் அமைப்புகளும் நடத்திய சட்டப் போராட்டத்திற்கு கிடைத்ததுள்ள குறிப்பிடத்தக்க வெற்றியாகும் இந்த தீர்ப்பு.

பொய்ப் பிரச்சாரம் செய்தவர்களை மறந்து விடாதீர்கள்!

இந்த தருணத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போலீஸும் தமிழக அரசும் பாரதிய ஜனதா கட்சியும் ரஜினிகாந்த் போன்ற நபர்களும் சில ஊடகங்களும் பரப்பி வந்த பொய்ப்பிரச்சாரத்தை மக்கள் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கோருகிறோம்

மக்கள் அதிகாரம் அமைப்புதான் நடைபெற்ற வன்முறைகள் அனைத்திற்கும் காரணம் என்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் அரிராகவன், வாஞ்சிநாதன் ஆகியோர்தான் இந்தப் போராட்டத்தை வன்முறையாக மாற்றியவர்கள் என்றும் ஒரு பொய்ப் பிரச்சாரம் திட்டமிட்டே கட்டவிழ்த்து விடப்பட்டது. அவர்கள் இருவரையும் போலீஸ் கைது செய்தது. பலர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டம் போன்றவை ஏவப்பட்டன.

மீனவ பிரதிநிதிகளை மிரட்டி மக்கள அதிகாரத்திற்கு எதிராக புகார் மனு

மக்கள் அதிகாரம் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற பிரச்சாரத்தை பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக மேற்கொண்டது. தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள்தான் வளர்ச்சித்திட்டங்களை தடுப்பதாக தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் நேற்று மோடியும் கூறியிருக்கிறார். இது மத்திய உளவுத்துறையும் சங்கபரிவார அமைப்பினரும் இணைந்து பரப்பும் பொய்.

இந்த பொய்யின் அடிப்படையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்துவதற்குத்தான் ரஜனி தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டார். தூத்துக்குடி மட்டுமல்ல, எட்டு வழி சாலைக்கு எதிராகப் போராடும் விவசாயிகள், சமூக ஆர்வலர்களையும் ஒடுக்குவதையும், தமிழ்நாடு முழுவதும் கருத்துரிமையை பறிப்பதையும் இந்தப் பொய்யின் அடிப்படையில்தான் பாஜகவும் தமிழக அரசும் நியாயப்படுத்தி வருகின்றனர்

யார் பயங்கரவாதிகள் யார் சமூகவிரோதிகள் என்பதை இந்த தீர்ப்பு தெளிவாக இனம் காட்டுகிறது. மக்கள் அதிகாரம் வன்முறையைத் தூண்டியதற்கு வீடியோ ஆதாரம் இருக்கிறது என்றெல்லாம் பாஜகவினர் தொலைக்காட்சிகளில் சவடால் அடித்தார்கள். ஆனால் துப்பாக்கிச் சூடு தொடர்பாக மனுதாரர்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் தமிழக அரசிடமிருந்து பதில் இல்லை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.

இது இறுதித் தீர்ப்பு அல்ல என்பது உண்மைதான். ஆனால் 13 பேரைப் படுகொலை செய்து, பலரை துப்பாக்கிக் குண்டுக் காயத்துக்குள்ளாக்கி,

நூற்றுக்கணக்கான மக்களை சிறைவைத்து அவர்கள் வாழ்க்கையைக் கெடுத்து, போலீசு ரெய்டுகள் மூலம் தூத்துக்குடி மக்களை பீதிக்குள்ளாக்கிய போலீசார், தங்களது நடவடிக்கைகள் எதற்கும் நீதிமன்றத்தில் விளக்கமளிக்க முடியவில்லை என்பதை நீதிமன்றத்தில் அம்பலமாக்கியிருக்கிறோம்.

144 தடை உத்தரவை மீறினார்கள் என்பது மட்டும்தான் மக்கள் செய்த குற்றம். ஆனால் எல்லா சட்ட நெறிமுறைகளையும் மீறியிருப்பவர்கள் போலீசும், தமிழக அரசும், அவர்களுடைய எசமானான ஸ்டெர்லைட் முதலாளியும்தான்.

இந்த அளவில் ஒரு தீர்ப்பைப் பெறுவதற்கு மிகக் கடுமையான விடாப்பிடியான சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. இந்தப் போராட்டத்தில் எமக்கு உறுதுணையாக இருந்து, அரசு தரப்பு எத்தனை வாய்தா வாங்கி இழுத்தாலும் அலுக்காமல் வந்து, கட்டணம் ஏதும் பெற்றுக் கொள்ளாமல் வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் முதல் இந்தப் பணிகளில் இரவு பகலாக உழைத்த இளம் வழக்கறிஞர்கள் வரை அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தியாகம் வீண் போகக் கூடாது! ஸ்டெர்லைட்டை திறக்க விடக்கூடாது!

இந்த தருணத்தில்  ஸ்டெர்லைட் நிர்வாகம் மீண்டும் ஆலையை திறப்பதற்கான நடவடிக்கைகளிலும் வெற்றி பெற்று வருகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. முதல் படியாக பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. முன்னர் சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டபோது, அபராதம் கட்டிவிட்டு ஆலையை நடத்துமாறு தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இதை நாம் மறந்து விடக்கூடாது.

தாமிர உருக்காலைகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று தனிச்சட்டம் இயற்றுவது ஒன்றுதான் தீர்வு என்று ஆலைக்கு சீல் வைப்பதாக தமிழக அரசு அறிவித்த அன்றே கூறினோம். மீண்டும் அதையே வலியுறுத்துகிறோம்.

மோடி அரசு என்பது அனில் அகர்வாலின் அரசு. ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எல்லா விதத்திலும் அது உதவும். தமிழக அரசின் யோக்கியதை பற்றி சொல்லத் தேவையில்லை.

நிர்வாக கட்டிடத்திற்கு ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே எந்த நோக்கத்திற்காக 13 உயிர்களை பலி கொடுத்தோமோ, எந்த நோக்கத்திற்காக படுகாயம், பொய் வழக்கு, சித்திரவதை என்று பல துன்பங்களை அனுபவித்தோமோ அந்த நோக்கம் வெற்றி பெற வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு ஒருக்காலும் அனுமதிக்கக்கூடாது.  இது தூத்துக்குடி மக்களின் பிரச்சினை மட்டுமன்று. தமிழக மக்கள் அனைவரின் பிரச்சினை.

கார்ப்பரேட் அடியாள் அரசாக இருந்துகொண்டு குஜராத்தி பனியா மார்வாரி முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் நாட்டை கூறு போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் மோடி அரசு, தமிழகத்தில் என்ன செய்கிறதோ, அதைத்தான் நாடு முழுவதிலும் செய்கிறது.   எனவே இது நாட்டு மக்கள் அனைவரின் பிரச்சினை.

இந்தியாவிற்கு முன்னரே ஆப்பிரிக்க நாடுகளில் ஸ்டெர்லைட் நடத்திய படுகொலைகள் அம்பலமாகி இருக்கின்றன.  வேதாந்தா என்பது ஒரு சர்வதேச கார்ப்பரேட் கிரிமினல் நிறுவனம். இதனை எதிர்த்த போராட்டத்தை பல்வேறு நாட்டு மக்களும் ஆதரிப்பார்கள்.

இந்த போராட்டத்தில் நாம் பெறுகின்ற வெற்றி, வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் மக்கள் மீது கொடுக்கப்படும் தாக்குதல்களை எதிர்த்து தம் வாழ்வுரிமைக்குப் போராடும் மக்கள் அனைவருக்கும் ஒரு ஊக்கமாக அமையும்.

இந்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெறுவதற்கு, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்பதை அறிவோம். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் உடனே உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யவிருக்கிறோம்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களாகிய நாங்கள் என்றும் எப்போதும் போராடுகின்ற தூத்துக்குடி மக்களோடும், போராடும் தமிழக மக்களோடும் இருக்கிறோம். அரச பயங்கரவாத குற்றவாளிகள் தண்டிக்கப்படும்வரை, கொலைகார ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படும் வரை ஓயமாட்டோம்.

இவண்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

சதீஷ் ஆச்சார்யா : அவர்கள் குனியச் சொன்னார்கள் – இவர்கள் படுத்தே விட்டார்கள் !

கார்ட்டூனிஸ்ட் சதிஷ் ஆச்சார்யா.

மோடி அரசின் இந்துத்துவ செயல்பாடுகளை விமர்சிக்கும் ஒருசில பத்திரிகையாளர்களில் கார்ட்டூனிஸ்ட் சதிஷ் ஆச்சார்யாவும் ஒருவர். பசுவை முன்வைத்து நடந்து வரும் கும்பல் படுகொலைகள் குறித்தும், மோடி அரசின் பண மதிப்பு நீக்கல் நடவடிக்கை குறித்தும், அன்றாடம் இந்துத்துவ கும்பல் அவிழ்த்துவிடும் வன்முறைகள் குறித்து இவர் வரைந்த கார்ட்டூன்கள் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்படுபவை.  ஊடகங்களை கட்டுப்படுத்த முனைந்திருக்கும் மோடி – அமித் ஷா கும்பலின் ஆட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் சதீஷ் ஆச்சார்யா. தன்னுடைய சுயாதீன குரல் எப்படி நசுக்கப்பட்டது என்பதை அவரே விவரிக்கிறார்…

‘கார்ட்டூனை நீக்கிவிட்டு, படத்தைப் போடுங்கள்’

சதிஷ் ஆச்சார்யாவின் முகநூல் பதிவு.

இப்படித்தான் ‘மெயில் டுடே’வுக்காக வரையப்பட்ட என்னுடைய கார்ட்டூன் பத்தி சனிக்கிழமை நிறுத்தப்பட்டது. அப்பத்திரிகையின் ஆசிரியர் இப்படித்தான் ஒரு கார்ட்டூனையும் கார்ட்டூனிஸ்டின் கருத்தையும் பார்த்தார். இப்படித்தான் ஒரு குரலை ஒடுக்கினார்.

அவர் வெளியிட மறுத்த கார்ட்டூன் சீனாவின் ஆக்டோபஸ் கரங்கள், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் செல்வாக்கு செலுத்துவதைப் போல இந்தியா மீது நீள்கின்றன என்பதை சொன்னது. ஆசிரியர் இந்த கார்ட்டூன்  ‘அவநம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் சீன பிரச்சினையை மிதமிஞ்சியும் சொல்கிறது’ என்றார்.

இந்தியாவின் நலன்களை கருத்தில் கொண்டு வளர்ந்துவரும் சீனாவின் செல்வாக்கை இப்படித்தான் ஒரு கார்ட்டூனிஸ்ட் பார்ப்பார் என நினைத்தேன். ‘இது விவாதத்துக்குரியதுதான், ஆனால், ஒரு கார்ட்டூனின் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும்’ என நான் அவரிடம் சொன்னேன். அதற்கு எதிர்வினையாக ஆசிரியர் குழுவிடம் கார்ட்டூனை நீக்கிவிட்டு, படத்தைப் போடுங்கள் என்றார் ஆசிரியர்.

‘மெயில் டுடே’ வெளியிட மறுத்த சதிஷ் ஆச்சார்யாவின் கார்ட்டூன்.

என்னுடைய சுதந்திரத்தை பாதுகாக்கவும் கார்ட்டூன் பத்தியின் புனிதத்தை பாதுகாக்கவும் பல நாட்களாக நான் போராடிக்கொண்டிருக்கிறேன். உண்மையில் ஓர் ஆசிரியருக்கு கார்ட்டூன் என்பது மூன்று கால இடத்தை நிரப்புவது, அவ்வளவே. ஆனால் ஒரு கார்ட்டூனிஸ்டுக்கு அதுதான் உலகமே. அந்த உலகத்தில் கார்ட்டூனிஸ்டால் தன்னுடைய கருத்தை முழுமையாக வெளிப்படுத்தும் சுதந்திரம் உண்டு.  அந்த உலகத்தில் தன்னுடைய சொந்த படைப்பின் எல்லைகளை சவாலாக எதிர்கொள்ள முடியும். அந்த உலகத்தில் போராட்டத்தை, விமர்சனத்தை, புலம்பலை, உற்சாகம் உள்ளிட்டவற்றுக்கு குரல் தர முடியும்.

இதுதான் என்னுடைய அனுபவம்:

‘நீங்கள் வரைந்த பசு கார்ட்டூன் ஆசிரியருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை’ என பசுவை வரைந்ததற்காக என்னுடைய கார்ட்டூனை முதலில் நிராகரித்தார்கள்.

கும்பல் கொலைகள் பற்றிய என்னுடைய கார்ட்டூனுக்காக ‘இதில் ஒரு சிறு பிரச்சினை இருக்கிறது. இந்தியா டுடே குழுமம் மத அடையாளத்தோடு வருகிற கார்ட்டூன்களை வெளியிடக்கூடாது’ என்றார்கள்.

மோடி மீதான கார்ட்டூனுக்கு, ‘மோடிக்குப் பதிலாக, ஏதேனும் பா.ஜ.க.-காரரை பயன்படுத்தமுடியுமா?’ என்று என்னிடம் கேட்டார்கள்.

மேலும், ‘ஆசிரியர் இந்த கார்ட்டூனில் உள்ள இஸ்லாமிய கண்ணோட்டத்தை விரும்பவில்லை’

‘கார்ட்டூனை நீக்கிவிட்டு, படத்தைப் போடுங்கள்’ – கார்ட்டூனிஸ்ட் மஹமுத்தின் கார்ட்டூன்.

மேலும், ‘பண மதிப்பு நீக்கத்தையும் 100 சதவீத மின்வசதி ஏற்படுத்துவதையும் தொடர்புபடுத்துவது ஆசிரியருக்குப் பிடிக்கவில்லை’.

மேலும் பல, ‘இது சரியான பொருளில் இல்லை’, ‘இது ஏற்க முடியாதது’ என நிராகரிப்புக்கான காரணங்களாக சொல்லப்பட்டன.

இப்படி நிராகரிக்கப்பட்ட கார்ட்டூன் பிற ஊடகங்களால் பயன்படுத்தப்பட்டு, சிலவை சமூக ஊடகங்களில் வைரலாக பரவின. பல பத்திரிகையாளர்கள் அவற்றை ரீ ட்விட் செய்தார்கள்.

என்னைச் சுற்றிலும் இருக்கும் தடைகளைக் கடந்து, கார்ட்டூன்களை படைப்பது எனக்கு சவாலாக உள்ளது. விரக்தியிலிருந்து வெளியேறி, என் மூத்த பத்திரிகையாளர் நண்பர்களை அனுகினேன். அவர்களை என்னை ஆறுதல்படுத்தினார்கள். சிலர் காத்திருக்கச் சொன்னார்கள்; சிலர் உறுதியாக இருக்கச் சொன்னார்கள்.

ஃப்ரீலான்ஸ் கார்ட்டூனிஸ்டாக மற்ற ஊடகங்களுக்கும் பணியாற்றும் எனக்கு, இந்த மாதிரியான சூழலில் விட்டுக்கொடுத்துப் போவது எளிதானது. ஆனாலும் என்னுடைய உரிமைக்காக நான் போராட வேண்டும் என நினைக்கிறேன். என்னுடைய பெயரில் வெளிவரும் கார்ட்டூன் பத்திக்கு, அதற்குரிய நியாயத்தை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

முடிவில், எனக்கான இடம் ஆசிரியரால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என கடுமையுடன் நினைவு படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் என்னுடைய கார்ட்டூனை நீக்கிவிட்டு, ஒரு படத்தை அவர்களால் போட முடிகிறது.

உண்மையில், இதில் ஒரு விடுவிப்பு கிடைத்திருக்கிறது. பசுவை பற்றிய கார்ட்டூன் பற்றியோ, கும்பல் கொலைகள்  பற்றியோ, மோடி கார்ட்டூன் பற்றியோ இந்து-முஸ்லிம் கார்ட்டூனில் இடம்பெறுவது குறித்தோ நான் இப்போது கவலைப்படவேண்டியதில்லை. ஒரு கார்ட்டூனை வரைய அமரும் முன், ஆசிரியர் என்ன சொல்வாரோ என நினைக்க வேண்டியதில்லை.

ஆனால், அவமானப்படுத்தும் அனுபவம் என்னை காயப்படுத்துகிறது.

ஒரு கார்ட்டூனிஸ்டாக, என்னுடைய ஆசிரியர் என்னுடைய கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று நான் எதிர்ப்பார்க்கிறேன். கார்ட்டூனிஸ்டுகள் ஒரு ஆசிரியரின் குரலை பிரதிபலிக்க வேண்டியதில்லை. கார்ட்டூனிஸ்டுகள் சுதந்திரமான குரலை வெளிப்படுத்த வேண்டியவர்கள்.

உண்மையில், ஓர் ஆசிரியர் அவருக்குள்ள உரிமையில் ஒரு கார்ட்டூனிலிருந்து வேறுபடலாம், அதுபற்றி கார்ட்டூனிஸ்டிடம் பேசலாம். ஆனால், அதிகாரத் தோரணை இல்லாமல் அவர் திறந்த மனதுடன் அதைச் செய்ய வேண்டும்.

சதிஷ் ஆச்சார்யாவின் கருத்துரிமைப் பறிப்புக்கெதிராக சக கார்ட்டூனிஸ்டுகள் வரைந்த கார்ட்டூன்.

என்னுடைய கார்ட்டூன்கள் ‘மெயில் டுடே’ திறந்த தலையங்கப் பக்கத்தில் இடம்பெறக்கூடியது. அங்கே பத்தி எழுதும் சில பத்திரிகையாளர்களுக்கு என் கார்ட்டூன்களைக் காட்டிலும் சுதந்திரம் இருந்தது.

அதிர்ஷ்டவசமாக, எனக்கு வேறு சில பத்திரிகைகள் உள்ளன. அங்கே உள்ள ஆசிரியர்கள் என்னுடைய கருத்துக்கு மதிப்பளிக்கிறார்கள். என்னுடைய கருத்துடன் ஒத்துப்போகவில்லை எனினும் என்னுடைய கார்ட்டூனை நம்புகிறார்கள். இதுபோன்ற திறந்த மனுதுடைய ஆசிரியர்களை நாம் நிறைய பெறுவோம் என நம்பிக்கை உள்ளது. மேலும், என்னிடம் சமூக ஊடகம் உள்ளது, அங்கே சுயாதீனக் குரல்களை கேட்பவர்கள் இருக்கிறார்கள்.

முரண்பாடாக, பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான அமித் ஷாவின் இணையதளத்தில் நான் வரைந்த அவரை உள்ளடக்கிய கார்ட்டூன்களை சேமித்து வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான கார்ட்டூன்கள் அவரை மிகவும் கடுமையாக எதிர்க்கக்கூடியவை.

நிகழ்பவற்றை நோக்கும் போது, ‘அவர்கள் குனியச் சொன்னார்கள்; இவர்கள் படுத்தே விட்டார்கள்!’ என்கிற மிகப் பிரபலமான வரிகள் நினைவுக்கு வருகின்றன.

த வயர் இணையதளத்தில் வெளியான கார்ட்டூனிஸ்ட் சதீஸ் ஆச்சார்யாவின் முகநூல் பதிவின் தமிழாக்கம்.

தமிழாக்கம்: கலைமதி

மதுரை காமராசர் பல்கலை : செல்லாத துரை ஆனார் செல்லத்துரை !

துரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையின்  நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் 13-08-2018 அன்று தீர்ப்பளித்து விட்டது.

“செல்லாத துரை” ஆன செல்லத்துரை, பத்திரிகையாளர் சந்திப்பில்…

செல்லத்துரையின் சார்பில் முன்னாள் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்கி, கிரி ஆகியோர் ஆஜராகினர். தமிழக அரசு தரப்பில் கே.கே.வேணுகோபால், வினோத் கன்னா ஆகியோரும், ஆளுநர் சார்பில் சேகர் நாப்தேயும் ஆஜராகி வாதாடினர்.

செல்லதுரையின் நியமனத்துக்கு எதிராக, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பு (Save MKU) ஆகியவற்றின் சார்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், கோவிலன், வாஞ்சிநாதன் ஆகியோர் ஆஜராகினர்.

“துணைவேந்தர் பதவிகள் ஏலமெடுக்கப்பட்ட பதவிகளே” என்று உலகத்துக்கே தெரிந்த போதிலும் அவையெல்லாம் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத உண்மைகள். எனவே “நிரூபிக்க முடிந்த” உண்மைகளின் அடிப்படையில்தான் வழக்கு நடத்தப்பட்டது.

முதலாவதாக செல்லத்துரையின் மீது ஒரு கொலைமுயற்சி வழக்கு இருக்கிறது. இதற்கு முந்தைய துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் நியமனத்தை எதிர்த்துப் போராடிய பேராசிரியர் சீனிவாசன் மீது தாக்குதல் தொடுத்த வழக்கு 2014 முதல் நிலுவையில் இருக்கும்போதே இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது முதல் முறைகேடு.

துணைவேந்தராக நியமிக்கப்படுபவர் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாவது பேராசிரியராகப் பணியாற்றியிருக்கவேண்டும். இது துணை வேந்தரைத் தெரிவு செய்வதற்கான தேடுதல் குழு (Search committee) ஏற்படுத்தியிருக்கும் வரையறை. ஆனால் அந்த தகுதி செல்லத்துரைக்கு இல்லை என்பது இரண்டாவது முறைகேடு.

வழக்கின் மனுதாரர், லயனல் அந்தோணிராஜ், மதுரை மாவட்ட செயலர், ம.உ.பா.மையம்.

துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட பேரா.மு.ராமசாமி செல்லத்துரையின் நியமனத்தை ஏற்க மறுத்த காரணத்தால் அவருக்கு நெருக்கடி தரப்பட்டு அதன் காரணமாக அவர் தேடுதல் குழுவிலிருந்தே ராஜினாமா செய்திருக்கிறார். இத்தகைய ராஜினாமா மதுரை பல்கலைக்கழகத்தில்தான் முதன்முறை நடந்திருக்கிறது. இது மூன்றாவது முறைகேடு.

மு.ராமசாமிக்குப் பின் தேடுதல் குழுவின் கன்வீனராக நியமிக்கப்பட்ட முருகதாஸ், “துணைவேந்தர் பதவிக்கு தெரிவு செய்யப்படுபவர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கக்கூடாது” என்ற விதியை நீக்குகிறார். இது நான்காவது முறைகேடு.

தேடுதல் குழுவில் நியமிக்கப்பட்ட  மூவரில்  ராமகிருஷ்ணன், ஹரிஷ் மேத்தா ஆகிய இருவரும் “நாங்கள் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் செல்லத்துரையை சிபாரிசு செய்தோம்” என்று பிரமாண வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டனர். இவ்வாறு தேடுதல் குழுவினரே நிர்ப்பந்தம் என்று ஒப்புக்கொள்வதும் இதுதான் முதன்முறை. இது ஐந்தாவது முறைகேடு.

இவை அனைத்தையும் பரிசீலித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, தார்மீக ரீதியில் செல்லத்துரையின் நியமனம் தவறு என்ற அடிப்படையில் அவரது மேல் முறையீட்டு மனுவை நிராகரித்துள்ளது.

நாடெங்கும் உயர் கல்வி நிறுவனங்கள் ஊழல்மயமாகியிருக்கின்றன. அவற்றை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் இந்துத்துவ சக்திகளையும் தனது கைப்பாவைகளையும் உயர்கல்வி நிறுவனங்களின் மீது திணித்து வருகிறது மோடி அரசு. இது நீதிமன்றத்தின் மூலம் தீர்த்து விடக் கூடிய பிரச்சினை அல்ல. ஆசிரியர்களும் மாணவர்களும் விடாப்படியாகப் போராடுவதும் எதிர்த்து நிற்பதும்தான் இதற்குத் தீர்வு.

இது செல்லதுரை என்ற ஒரு நபருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமல்ல. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 2008- ‘11 காலகட்டத்தில், கற்பக குமாரவேல் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட காலத்திலிருந்தே போராடி வருகிறது. பின்னர் 2011-‘14 காலத்தில் ஜெ ஆட்சியின் கீழ் கல்யாணி மதிவாணனின் முறைகேடுகளையும், அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதையும் எதிர்த்து ம.உ.பா.மையம் போராடியது.

இந்த போராட்டத்தின் ஊடாகத்தான் “சேவ் எம்.கே.யு” (Save MKU)  என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.   இதன் அமைப்பாளரான பேரா.சீனிவாசன் தாக்கப்பட்டார்.  இந்த தாக்குதல் தொடர்பாக கல்யாணி மதிவாணன் மற்றும் செல்லத்துரையின் மீது  கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வைப்பதற்கே நீண்டதொரு சட்டப் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

பின்னர் கல்யாணி மதிவாணனின் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றோம். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று ஜெ அரசின் ஆதரவோடு வெற்றி பெற்றார் கல்யாணி மதிவாணன். இருந்த போதிலும் எந்தவிதமான கொள்கை முடிவுகளையும் அவர் எடுக்க முடியாத வண்ணம் நீதிமன்றம் மூலம் தடை பெற்றோம்.

வழக்கறிஞர் பிரபு ராஜதுரை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

கல்யாணி மதிவாணனின் பதவிக்காலம் முடிந்தவுடன் செல்லத்துரை நியமிக்கப்பட்டார்.  அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மதுரை அமர்வில் வழக்கு தொடுத்தோம். உடனே வழக்கு விசாரணையை சென்னைக்கு மாற்றினார்கள்.  மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிரபு ராஜதுரை கட்டணமில்லாமல் வழக்கு நடத்திக் கொடுத்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை அக்டோபர் 2017-இல் முடிந்து விட்டது.  இருப்பினும்  தீர்ப்பு  6 மாத காலத்திற்குப் பிறகு, ஏப்ரல் 2018-ல்தான் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியால் வழங்கப்பட்டது. செல்லத்துரையின் நியமனம் ரத்து செய்யப்பட்டது.

உடனே உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வுக்கு மேல் முறையீடு செய்து, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை கோரினார் செல்லத்துரை. உச்ச நீதிமன்றம் சென்று அதனைத் தடுத்து நிறுத்தினோம்.  (இந்த வழக்கை நடத்திவிட்டு டெல்லியிலிருந்து திரும்பி வரும்போதுதான் ஸ்டெர்லைட் போராட்டத்துக்காக சென்னை விமானநிலையத்தில் வைத்து வாஞ்சிநாதன் கைது செய்யப்பட்டார்.)

வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்.

துணைவேந்தர் செல்லத்துரையால் லட்சக்கணக்கில் கட்டணம் வாங்கும் உச்ச நீதிமன்றத்தின் சூப்பர் ஸ்டார் வழக்கறிஞர்களை அமர்த்திக் கொண்டு வழக்கு நடத்த முடிந்தது. எமக்கோ உச்ச நீதிமன்றத்தில் எதிர்வழக்காட  லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. இன்னொருபுறம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பான வழக்குகள், போலீசு ரெய்டு, தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற அடக்குமுறைகளை ம.உ.பா மைய வழக்கறிஞர்கள் சந்திக்க வேண்டியிருந்தது.

பலமுறை இந்த வழக்குக்காக டெல்லிக்கு அலைவதற்கான செலவுக்குரிய நிதி, மதுரைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியப்பெருமக்கள் நன்கொடையாக வழங்கினார்கள். வீமன், சீனிவாசன், முரளி விஜயகுமார், புவனேசுவரன் ஆகியோர் மதுரைப் பல்கலைக் கழகத்தைக் காப்பாற்றும் இந்தப் போராட்டத்தில் பெரும்பங்காற்றினார்கள்.

நியமிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழக துணைவேந்தரை வழக்கு தொடுத்து பதவி நீக்கம் செய்திருப்பது தமிழகத்தில் இது முதன் முறையாகும். ஒரு துணை வேந்தருக்கான தகுதி என்ன, அவரை தெரிவு செய்வதற்கு தேடுதல் குழு வகுத்திருக்கும் நெறிமுறை என்ன என்பது குறித்து எந்த வித வரையறையும் இதுவரை பின்பற்றப்படுவதில்லை என்பதால் தேர்வு முறையே மோசடியாக இருந்து வருகிறது.  துணைவேந்தர் நியமனம் தொடர்பாக சில நெறிமுறைகளை வகுத்து பின்பற்றியாக வேண்டும் என்ற கட்டாயத்தை இந்த வழக்கு அரசுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

காமராசர் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இதுதான் நிலை. நாடெங்கும் உயர் கல்வி நிறுவனங்கள் ஊழல்மயமாகியிருக்கின்றன. அவற்றை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் இந்துத்துவ சக்திகளையும் தனது கைப்பாவைகளையும் உயர்கல்வி நிறுவனங்களின் மீது திணித்து வருகிறது மோடி அரசு. இது நீதிமன்றத்தின் மூலம் தீர்த்து விடக் கூடிய பிரச்சினை அல்ல. ஆசிரியர்களும் மாணவர்களும் விடாப்படியாகப் போராடுவதும் எதிர்த்து நிற்பதும்தான் இதற்குத் தீர்வு.

இவண்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

தொடர்புடைய பதிவுகள்:

நூல் அறிமுகம் : தேசப்பிரிவினைக்கு காரணம் யார் ?

ரலாறு கற்றுத்தரும் பாடங்களை உள்வாங்குவது மிக அவசியம் ஆகும். இந்து மதவாதம் மற்றும் முஸ்லிம் மதவாதம் காரணமாக இந்திய தேசம் பிரிவினைக் கொடுமைக்கு ஆளாகியது. பிரிவினை துயரங்களும் அந்த பிரிவினையை எதிர்த்துப் போராடிய அனுபவமும் சோகமான, ஆனால் முக்கியமான படிப்பினையை உணர்த்தியுள்ளன. அந்த படிப்பினை விழலுக்கு இறைத்த நீராக வீணாகிவிடக்கூடாது.

பிரிவினையின் துயரங்கள் கணக்கற்றவை. உலகில் எத்தனையோ தேசங்கள் பிரிந்துள்ளன. செக்கோஸ்லேவாகியா செக் எனவும் ஸ்லோவாகியா எனவும் பிரிந்தன. சோவியத் ஒன்றியத்திலிருந்து பல குடியரசுகள் பிரிந்தன. யூகோஸ்லேவியா பல குடியரசுகளாக சிதைந்தது. சூடான் இரண்டாக பிரிந்தது. இந்த பிரிவினைகளில் சில பின்விளைவுகளை உருவாக்கின. ஆனால், எந்த பிரிவினையும் இந்திய பிரிவினையை போல துயரங்களை விளைவித்தது இல்லை…

பிரிவினையின் சில அம்சங்கள் திரும்ப திரும்ப இந்த தேசத்தின் மீது தாக்கத்தை உருவாக்கிக் கொண்டே வந்துள்ளன. குறிப்பாக இந்து – முஸ்லிம் மக்களின் உறவில் இது ஆழமான தாக்கத்தை உருவாக்குகிறது. எப்பொழுதெல்லாம் மதவாதம் தீவிரம் காட்டுகிறதோ அப்பொழுதெல்லாம் பிரிவினை தொடர்பான விவாதங்களும் வேகம் எடுக்கின்றன. குறிப்பாக முஸ்லிம் மக்களின் தேசபக்தி கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது…….

பிரிவினை ஏன் நிகழ்ந்தது? பிரிவினைக்கு சில தனிநபர்கள் மட்டும் காரணமா? அல்லது அதற்கான  புறச்சூழல்கள் இருந்தனவா? பிரிவினையைத் தூண்டிய கருத்தாக்கங்கள் எத்தகையவை? பிரிவினையை எதிர்த்த குரல்கள் குறிப்பாக முஸ்லிம் குரல்கள் இருந்தனவா? அவை ஏன் வெற்றிபெறவில்லை? பிரிவினை நமக்கு கற்றுத் தரும் பாடம் என்ன?

இதற்கான பதில்கள் கண்டு பிடிக்கும் சிறிய முயற்சிதான் இந்த நூல்.

– முன்னுரையிலிருந்து,

இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று கார்ல் மார்க்ஸ் அவர்களால் சித்தரிக்கப்பட்ட 1857 ஆயுத எழுச்சியில் மத – மொழி வேறுபாடின்றி தங்களை எதிர்கொண்டதை நன்கு உணர்ந்த நிலையில், ஏகாதிபத்தியம் தனது பிரித்தாளும் சூழ்ச்சியைத் தீவிரமாக்கியது. ஒருபுறத்தில் இந்து, முஸ்லீம், சீக்கிய மத வேறுபாடுகள்; பல்வேறுபட்ட மொழி வேறுபாடுகள்; அடுத்து தாழ்த்தப்பட்ட, பழங்குடிகள் உள்ளிட்டு சாதி அடிப்படையிலான வேறுபாடுகள் என ஒருவருக்கு எதிராக மற்றொருவரை தூண்டிவிட்டு காலனி ஆதிக்க வாதிகள் தமது பிரிவினை நாடகத்தை தொடர்ந்து செயல்படுத்தி வந்தனர்.

1930-களில் வெளிப்படத் துவங்கிய தனிநாடு கோரிக்கையைத் தொடர்ந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் காங்கிரஸ், முஸ்லீம் லீக் என இந்த இடைவெளியைப் பெருக்கிக் கொண்டே போனது. மறுபுறத்தில் இந்து மகாசபை, சமஸ்தான மன்னர்கள் என இந்து மத வெறியர்களும் இதற்குத் தூபம் போட்டுக் கொண்டேயிருந்தனர்.

முதலில் அது 1935-ஆம் ஆண்டில் பீகார் பகுதியிலிருந்து இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரிசா என்ற மாநிலத்தை மொழி அடிப்படையில் உருவாக்கியது. பின்பு 1936 ஆம் ஆண்டில் சிந்த் பகுதியை மும்பை ராஜதானியிலிருந்து பிரித்து மத அடிப்படையில் வடமேற்கு மாகாணத்தை உருவாக்கியது. அதைப் போன்று பலுச்சிஸ்தான் உள்ளிட்டு முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள ஐந்து பகுதிகளையும், இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள எட்டு பகுதிகளையும் இந்த நேரத்தில் பிரிட்டிஷ் ஆட்சி படிப்படியாக உருவாக்கியிருந்தது.

இதைத் தொடர்ந்து 1937 இல் இந்தியாவிலிருந்து பர்மாவை முற்றிலுமாகப் பிரித்தது. இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் அதை தனியொரு பிரிட்டிஷ் காலனியாக பிரித்திருப்பதாகவும் அதற்குக் காரணம் கூறியது. இது பின்னாளில் மத அடிப்படையில் இந்தியாவைப் பிளவுபடுத்துவதற்கான அடித்தளத்தை உருவாக்கியது என்றே கூறலாம்.

– டி.கே.ரங்கராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்.

பிரிவினையின் பெரும் துயரங்கள்; பிரிவினையை இலட்சியமாக முன்வைத்த முஸ்லிம் லீக்; பிரிவினை கருத்துக்களை விதைத்த சங்பரிவாரம்; சவார்க்கரை அம்பலப்படுத்தும் அம்பேத்கர்; மத ஒற்றுமையைப் பறைசாற்றிய சில நிகழ்வுகள்; மத்திய காலம் – மத மோதலா? மத ஒற்றுமையா?; இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சி பற்றிய ஒரு சமூக மதிப்பீடு; பிரிட்டிஷாருக்கு எதிராக தென்னிந்திய போராட்டங்களும் மத ஒற்றுமையும்; இந்து – முஸ்லிம் மதவாத அரசியலின் தொடக்கம்; பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்த இஸ்லாமிய அமைப்புகள்; பிரிவினை எதிர்ப்பு கருத்து ஏன் தோல்வி அடைந்தது? என்பது உள்ளிட்ட உட்தலைப்புகளில் அவசியமான புகைப்படங்களுடனும் விரிவான விளக்கங்களை அளிக்கிறார், நூலாசிரியர்.

  • வினவு செய்திப் பிரிவு

நூல்: தேசப்பிரிவினைக்கு காரணம் யார்?
முஸ்லீம மதவாதமா? இந்து மதவாதமா?
ஆசிரியர்: பாரத் கபீர்தாசன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
பேச: 044 – 2433 2424, 2433 2924.

பக்கங்கள்: 112
விலை: ரூ.100

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்களை நாம் எப்படி கையாள வேண்டும் ?

பாரி சாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டு பிடிக்கிறார் ? பாகம் – 3

பாரிசாலன் தொடர்ந்து இலுமினாட்டிகளை கண்டுபிடித்து கொண்டேயிருப்பார். ஏனென்றால் இலுமினாட்டிகள் பரிசாலனுக்குள்தான் மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள், அங்கேயே வசிக்கிறார்கள்.

110010001111

ந்த எண்களில் உங்களால் ஒரு pattern இருப்பதை கவனிக்கமுடிகிறதா? உங்களால் இதில் ஒரு pattern இருப்பதாய் நம்பவோ, உணரவோ, காணவோ, சந்தேகிக்கவோ முடிகிறதா? உண்மையில் நான் என்போக்கில் கோர்த்த எண்கள் அவை.

ஆனால் நமது மனம் ஏற்கனவே சொன்னதுபோல காணும் எல்லாவற்றிலும் pattern (படிவம்) தேடும் இயல்புடையது. இந்த இயல்புதான் சதியாலோசனை கோட்பாடுகளுக்கான மைய புள்ளி.

அதாவது எதைச்சையாக நடக்கும்/நடந்த நிகழ்வுகளுக்கு/சம்பவங்களுக்கு தொடர்பு ஏற்படுத்தி ஒரு சித்திரத்தை, கோர்வையான ஒரு கதையை சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் ஏற்படுத்தி கொள்கிறார்கள். உண்மையில் பலநூறு பேர் சம்மந்தப்பட்ட ஒரு இரகசியத்தை வெளியில் கசியாமல் கட்டிக்காப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. இன்னும் சொல்லப்போனால் சாத்தியமே இல்லை.

இரண்டுக்கு மேற்பட்டவர்களுக்கு தெரிந்த இரகசியங்கள் எப்படி என்றாலும் வெளியில் கசிந்தே தீரும் என்பதை நிறுவ algorithm (படிமுறை) எழுதியிருக்கிறார்கள். truth alone நிஜமாகவே triumphs. அதாவது சதியாலோசனை என்று ஒன்று இருக்குமானால் அது வெளிப்பட்டே தீரும். சுபாஷ் சந்திரபோஸ் தப்பி பிழைத்தது உண்மையானால் அது இந்நேரத்திற்கு முழு ஆதாரங்களோடு வெளிப்பட்டிருக்கும்.

அப்படியென்றால் சதியாலோசனை என்றே ஒன்று உலகத்தில் இல்லையா? அரசாங்கங்கள் சொல்லும் எல்லாவற்றையும் நாம் நம்பித்தான் ஆகவேண்டுமா? நிச்சயம் இல்லை. நாம் எல்லாவற்றையும் சந்தேகிப்பதும், அலசி பார்ப்பதும் தவறே அல்ல. இன்னும் சொன்னால் நாம் அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் சில சதியாலோசனை கோட்பாடுகள் உண்மை என்று பின்னால் வெளிப்படலாம்.

மோடியை கொலை செய்ய வந்த தீவிரவாதிகள் என போலீசால் என்கவுண்டர் செய்யப்பட்ட இஸ்ரத் ஜஹான்.

உதாரணத்திற்கு, குஜராத்தில் நடந்தவை திட்டமிட்ட அரசியல் படுகொலை என்பது ஒரு சதியாலோசனை கோட்பாடாகத்தான் முதலில் வெளிப்பட்டது. பின்னர் நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அதை உறுதி செய்தன. அப்படியென்றால் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களுக்கும் நமக்கும் என்னதான் வித்தியாசம்? இருக்கிறது. மிக பெரிய வித்தியாசம் இருக்கிறது. அதுதான் emotional investment (உணர்ச்சிவயப்பட்ட முதலீடு).

” ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்” இந்த பாடலை இளையராஜாவின் பாடல் என்று நம்பி கொண்டுள்ளீர்கள். ஒரு நாள் உங்கள் நண்பர் மச்சி இந்த பாட்டு சங்கர் கணேஷ் போட்டது என்கிறார். அடுத்த நொடியிலிருந்து நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றி கொள்கிறீர்கள். ஏனென்றால் இது ஒரு தகவல் பிழை சம்பந்தப்பட்டது. அதை திருத்துவதில்/மாற்றிக்கொள்வதில் உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் அதில் உணர்ச்சிவயப்பட்ட முதலீடு (emotional investment) செய்திருக்கிறார்கள்.

“மோதி” ஜி-க்கு முட்டுக்கொடுப்பதில் கில்லாடி கிழக்கு பதிப்பகம் பத்ரி. பொன். ராதாகிருஷ்ணனுடன்

பத்ரி, பானு கோம்ஸ் போன்றவர்கள் பி.ஜே.பி.க்கும்,மோடிக்கும் பணமதிப்பு நீக்கம் போன்ற நடவடிக்கையின் போது கூட யோசிக்காமல் மணியாட்டுவதற்கு காரணம் அவர்கள் பி.ஜே.பி.ன் மீதும் மோடியின் மீதும் emotional investment செய்திருக்கிறார்கள். மோடியை கோமாளி ஆக்குவது என்பது அவர்களையே அவர்கள் கோமாளி ஆக்கிக்கொள்வதை போன்றது அவர்களுக்கு.

சாதிவெறியர்களுக்கும்/மதவெறியர்களுக்கும் இதுவே பொருந்தும். அவர்கள் அதில் emotional investment செய்திருக்கிறார்கள். அவர்களிடம் எத்தனை ஆதாரம் கொடுத்தாலும். எத்தனை விளக்கம் கொடுத்தாலும், எத்தனை உதாரணங்கள் காட்டினாலும் அவர்களால் அவர்களுடைய நம்பிக்கைகளை மாற்றி கொள்ளமுடியாது.

உங்கள் சந்தேகங்கள்
உண்மையாக இருக்க வேண்டும்/உண்மையாகத்தான் இருக்கும் என்று நீங்கள் நம்பத் தொடங்கும் புள்ளியில் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களுக்கும் உங்களுக்கமிருக்கும் வேறுபாடு மறைந்து விடுகிறது.

அதுபோலத்தான் பாரிசாலன் அவருடைய சதியாலோசனை கோட்பாட்டு நம்பிக்கையின் மீது பெரும் emotional முதலீடு செய்துள்ளார். அவரை கட்டிவைத்து அடித்தாலும் மூளையில் கரண்ட் shock குடுத்தாலும் அவர் மாறப் போவதில்லை. அவருடைய emotional investmentயை தற்காத்துக்கொள்ள அவர் எந்த எல்லைக்கும் போவார்.

நாம் ஒரு விஷயத்தை சந்தேகிக்கும் பொழுது அந்த குறிப்பிட்ட விஷயத்தின் மீது emotional investment செய்யக் கூடாது. உண்மை எப்படி வெளிப்படுகிறதோ அதை அப்படியே ஏற்று கொள்ளும் மனத்தோடிருக்க வேண்டும். உங்கள் சந்தேகம் உண்மையென்றும் ஆகலாம் பொய்யென்றும் ஆகலாம்.

அதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும். உங்கள் சந்தேகங்கள் உண்மையாக இருக்க வேண்டும்/உண்மையாகத்தான் இருக்கும் என்று நீங்கள் நம்பத் தொடங்கும் புள்ளியில் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களுக்கும் உங்களுக்கமிருக்கும் வேறுபாடு மறைந்து விடுகிறது.

ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்றவர்களுடைய பேட்டிகளை பார்த்தவர்களுக்கு அவர்கள் ரொம்பவும் ஆதாரப்பூர்வமாக பேசுவதை போன்ற எண்ணம் ஏற்படும்.

இதற்கு ஒரு காரணம் நம் ஊரில் இருக்கும் பெரும்பான்மையான ஊடவியலாளர்களுக்கு ஒருவரை பேட்டி எடுப்பது என்றால் என்னவென்றெ தெரியாத நிலையில் இருப்பதாலும், பேட்டி எடுப்பது என்றால் கோமாளித்தனமான நாலு template  கேள்விகளை கேட்பது என்கின்ற புரிதலில் இருப்பதாலும் ஏற்படுவது. அதை தாண்டி ஒரு முக்கியமான காரணமிருக்கிறது.

நிலவில் மனிதன் கால்பதித்தான் என்கின்ற தகவல் நமக்கு தெரியும். எந்த நாட்டை சேர்ந்தவர்கள், அவர்களின் பெயர், கால்பதித்த நாள் போன்ற அடிப்படை தகவல் தாண்டி நமக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. அது நிகழ்வதற்கு முன் ஏற்பட்ட சவால்கள், சோதனைகள், பயிற்சிகள், அதற்கு பின் உள்ள அறிவியல், விஞ்ஞானம் எதுவும் நமக்கு தெரியாது. அதை ஒரு தகவலாக பெற்றோம். விஞ்ஞானத்தையும், விஞ்ஞானிகளையும், ஊடகங்களையும் நம்பினோம். அந்த தகவலை நம்பி ஏற்றுக்கொண்டோம்.

ஆனால் நிலாவில் மனிதன் கால்பதிக்கவில்லை என்பதை நம்பும் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் அதற்கு சம்மந்தமான ஆதாரங்களை, தகவல்களை திரட்டி தெரிந்து வைத்திருப்பார்கள். நாம் அவர்களிடம் உரையாடும்பொழுது நிலவில் எப்படி நிழல் தெரிந்தது, நிலவில் எப்படி அமெரிக்க கொடி அசைந்தது போன்ற கேள்விகளை எழுப்புவார்கள். அதற்கு நமக்கு பதில்தெரியாத பட்சத்தில் (விஞ்ஞானிகள் இயற்பியல் விதிகளை வைத்து எல்லா கேள்விகளுக்கும் விடை அளித்துவிட்டார்கள்) நமக்கு சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர் சொல்வதில் உண்மையிருப்பதாய் தோன்றும்.

சுருக்கமாக சொன்னால் ஒரு குருட்டுத்தனமான உணர்வு சார்ந்த நம்பிக்கையை நம்மால் ஒருபோதும் அறிவியலை கொண்டும், உண்மைகளை கொண்டும், தர்க்கங்களை கொண்டும் உடைக்கமுடியாது. உண்மைகளை கொண்டு உணர்வுகளை வெல்ல முடியாது.

அதாவது சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் தங்களுடைய emotional investmentயை பாதுகாத்துக் கொள்ள தங்களுக்கு சாதகமான தகவல்களை மட்டும் சேகரித்து வைத்துக்கொண்டு தங்களுடைய நம்பிக்கையை இறுக பற்றிக்கொள்வார்கள். அவர்களுக்கு தங்களுடைய நம்பிக்கைக்கு எதிரான தகவல்களை பற்றி எந்த அக்கறையோ முனைப்போ இல்லை. இதனால்தான் பாரி பேசுவதை கேட்கும் ஒரு அப்பாவிக்கு, ‘தம்பி நல்லா கருத்தா பேசறாப்ல’ என்று தோன்றும்.

கிட்டத்தட்ட 70 ஆண்டுக்கு மேலான அரசியல் வாழ்வை கொண்ட, பல்வேறு அரசியல் மாற்றங்களை/நிலைப்பாடுகளை முன்னெடுத்த பெரியாரை ஒருவர் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்வதற்கே பல ஆண்டுகள் பிடிக்கும்.

ஒரு 24 வயது சிறுவன் அவருடைய 4,5 வரிகளை மேற்கோளிட்டு மாமா பிசுக்கோத்து வாங்கி குடு என்கின்ற தோரணையில் பெரியாரை இலுமினாட்டி என்கிறான். பாரிசாலன் பெரியாரை பற்றி சொல்லும் கருத்துக்கள் எல்லாம் யாழினிது குழலினிது என்பர் பாரியின் மழலை சொல் கேளாதவர் என்கின்ற வகைமைக்குள்ளேயே வரும்.

உதாரணத்திற்கு எல்லா கற்பிதங்களையும், எல்லா புனிதங்களையும், எல்லா சமூக நிறுவனங்களையும் கேள்விக்குட்படுத்திய/சோதனைக்கு உட்படுத்திய ஒருவரை பாரி தம்பி நிர்வாணமாக இருக்கும் ஒரு secret society இரகசிய சங்கத்தை பெரியார் அவருடைய ஐரோப்பா பயணத்தில் சந்தித்தார் அப்பனா அவரு இலுமினாட்டிதான என்கிறார்.

அதாவது to begin with he got no clue what periyar stood for in the first place. பெரியாரை பற்றிய, அவருடைய வாழ்வியல் முறைமை பற்றிய அடிப்படையான புரிதலே இல்லாத காரணத்தால்தான் பாரிசாலன் வகையறாக்களுக்கு பெரியார் இலுமினாட்டியாக தெரிகிறார். ஹீலர் பாஸ்கரை பொறுத்தவரை அவர் சொல்வதை அவரே நம்புகிறாரா என்பதில் எனக்கு தீவிரமான சந்தேகமிருக்கிறது.

அவருடைய பேச்சு என்பது சினிமா நடிகர்களின் புகைப்படங்களை வைத்து கிளி ஜோசியம் சொல்லுகிறவரை ஒத்துள்ளது. பத்து ரூபாய் குடுத்து விட்டு நகர்ந்து விடலாம், ஆனால் சிறுவன் பாரிக்கு அவர் சொல்வதில் அவருக்கு தீவிரமான நம்பிக்கையிருப்பதை உணரமுடிகிறது.

அவருடைய ஓவ்வொரு பேச்சிற்கும், பேட்டிக்கும் கிடைக்கும் கவனிப்பும், ஆதரவும் மிகுந்த அதிர்ச்சியாகவும், கவலையாகவும் உள்ளது. ஏற்கனவே சொன்னதைப்போல அடிப்படையான அறிவியலுக்கு, தர்க்கத்துக்கு (reasoning) ஒரு தலைமுறையே பயிற்றுவிக்கப் படவில்லை என்பதைத்தான் பாரிசாலன் அடிப்பொடிகள் நமக்கு உணர்த்துகிறார்கள்.

கோமாளி ரஜினியின் பாபா முத்திரையை மாபெரும் இலுமினாட்டி சதியாக கப்சா விடும் நாம் தமிழர் சீமான்!

ஒரு அரசியல் கட்சியை வழிநடத்தும் சீமான் ஒரு செய்தி தொலைக்காட்சியில் வந்து ரஜினிகாந்தை இலுமினாட்டி என்று சொல்லும் கோமாளித்தனத்தை நிகழ்த்தும் அளவிற்கு இந்த இலுமினாட்டியை நம்பும் பொடியன்கள் தாக்கம் வளர்ந்திருக்கிறது. இது மிகுந்த கவலைக்கும், அச்சத்திற்கும் உரியது.

இது போன்ற சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களும், cult group (வெறி ஈடுபாட்டு குழுக்கள்) போல செயல்படுபவர்களும் இதுவரை மானுட சமூகத்திற்கு பேரழிவையே விளைவித்திருக்கிறார்கள். இவர்களிடம் நாம் மிகுந்த கவனத்தோடும், விழிப்போடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்.

பாரிசாலன், பாஸ்கர் போன்ற ஆட்களை நாம் எப்படித்தான் கையாளுவது?

மனவியல் நிபுணர்கள் இவர்களிடம் விவாதத்தில் ஈடுபடுவது வீண் என்கிறார்கள். நீங்கள் எவ்வளவு தீவிரமாக அவர்களை மறுக்கிறீர்களோ அவர்கள் அதே தீவிரத்தோடு தங்களின் நம்பிக்கைகளை பற்றிக்கொள்வார்கள். அவர்களோடு நீங்கள் ஒருபோதும் விவாதித்து வெல்ல முடியாது. ஒரு போதும் அவர்களிடம் விவாதித்து அவர்களை மீட்க முடியாது. அவர்களிடம் நீங்கள் உரையாடும் நிலை வரும் பொழுது வெறும் அப்பட்டமான உண்மைகள்/தரவுகளை மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுங்கள்.

உதாரணத்திற்கு தடுப்பூசி போட தொடங்கியபின் இத்தனை சதவிகிதமாக இருந்த போலியோ நோயாளிகளின் எண்ணிக்கை இத்தனை சதவீகிதமாக குறைந்துள்ளது என்கின்ற plain fact-டை மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்து விடுங்கள். இது தொடர்ந்து நடக்கும் பொழுது ஒருவேளை சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களுக்கு மனதில் ஒரு மாற்றம் நிகழலாம் என்று மனவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

சுருக்கமாக சொன்னால் ஒரு கண்மூடித்தனமான உணர்ச்சி சார்ந்த நம்பிக்கையை நம்மால் ஒருபோதும் அறிவியலை கொண்டும், உண்மைகளை கொண்டும், தர்க்கங்களை கொண்டும் உடைக்க முடியாது. உண்மைகளை கொண்டு உணர்வுகளை வெல்ல முடியாது.

பாரிசாலன் தொடர்ந்து இலுமினாட்டிகளை கண்டுபிடித்து கொண்டேயிருப்பார். ஏனென்றால் இலுமினாட்டிகள் பரிசாலனுக்குள்தான் மாடு மேய்த்துக்கொண்டிருக்கிறார்கள், அங்கேயே வசிக்கிறார்கள்.

(முற்றும்)

பின் குறிப்பு : வெவ்வேறு சமயங்களில் நான் சதியாலோசனை கோட்பாடுகளை பற்றி பார்த்தவை,கேட்டவை,படித்தவை கொண்டும், why do people believe in conspiracy theories என்ற கேள்விக்கு google சுட்டிய முதல் 10 கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டும் இந்த கட்டுரை எழுதப்பட்டது.

ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.
நன்றி : தி டைம்ஸ் தமிழ்

முந்தைய பாகங்கள் :

  1. பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்கள் இலுமினாட்டிகளை எப்படி சமைக்கிறார்கள் ?
  2. பாரி சாலன் – ஹீலர் பாஸ்கர் : பெரியார் ஒரு இலுமினாட்டி என்று ஏன் நம்புகிறார்கள் ?

கருத்துக் கணிப்பு : கேரள மழை வெள்ளமும் – மத்திய அரசின் நிவாரணப் பணியும் !

ந்த ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று மழைக்காலம் கேரளாவிற்கு தாங்கவொண்ணா துன்பத்தை அளித்திருக்கிறது. ஒரே நாளில் 26 பேர் மரணம். ஒரே நேரத்தில் 27 அணைகள் திறப்பு! இடுக்கி அணையின் ஐந்து மதகுகளும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டிருப்பது வரலாற்றில் முதன்முறை!

வயநாடில் பெய்த கனமழை அங்கிருக்கும் சாலைகளை அடித்துச் சென்றிருக்கிறது. ஆகஸ்டு 12 வரை மழை வெள்ள மரணம் 37 ஆக உயர்ந்திருக்கிறது. இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 14 மாவட்டங்களில் உயர்நிலை எச்சரிச்சை விடுவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணனூர், வயநாடு மாவட்டங்களில் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். 1,500 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. நிவாரண முகாம்களுக்கு மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். வெள்ளப் பகுதிகளில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத நிலை. மண் சரிவு, மழையால் பல நூறு வாகனங்கள் சேதம்! 10,000 கி.மீட்டர் சாலைகளும் சேதம்!

இந்தியாவிலேயே நெருக்கமான மக்கள் குடியிருப்பைக் கொண்ட மாநிலம் கேரளம். அதனாலும் சேதம் அதிகரித்து வருகிறது. அதே போன்று ஆண்டு தோறும் அங்கு பெய்யும் மழைப்பொழிவும் அதிகம். இப்போதோ பெருமழை, பெருத்த சேதம்.

வெள்ளப் பாதிப்புகளால் சுமார் 8,000 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் முதலமைச்சர் பினரயி விஜயன், 1,200 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதியாக வழங்க வேண்டுமெனவும், உடனடியாக 400 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இத்தகைய வெள்ளம் சூழ்ந்த இடத்திற்கு மக்கள் போகவேண்டாம் என அமெரிக்க அரசு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. ஒரு வல்லரசு நாட்டின் மனிதாபிமானத்தை பாருங்கள்! அவர்கள் நாட்டு மக்களைப் பற்றி மட்டும் கவலைப் பட்டுவிட்டு, கேரள மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று கடந்து போகிறார்கள்.

நீரில் கால் படாமல் விமானத்திலேயே சுற்றி வந்த ராஜ்நாத் சிங்.

இந்திய அரசோ தற்போதுதான் மனமிறங்கி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அனுப்பியிருக்கிறது. அவரும் நீரில் கால் படாமல் விமானத்திலேயே சுற்றி வந்து விட்டார். முதலில் ஒரு 85 கோடி ரூபாய், பிறகு ஒரு 100 கோடி ரூபாய் நிவாரணத்தை ‘மனமிறங்கி’ வழங்கியிருக்கிறார்கள்.

இனி மத்திய அரசின் அதிகாரிகள் குழு மெதுவாக சில பலநாட்கள் கழித்து கேரளா வரும்! வந்து நட்சத்திர விடுதிகளில் டீ, சம்சா சாப்பிட்டு விட்டு சில பல இடங்களை பார்த்ததாக செய்தி வரும். பிறகு கேரளாவிற்கு தேவையான இறுதி நிவாரணம் எப்போது வரும், எவ்வளவு வரும் என்பது யாருக்கும் தெரியாது. இதை வர்தா புயலின் போதே நாம் பார்த்திருக்கிறோம். ஒக்கி புயலின் போதும் இவர்கள் என்ன செய்தார்கள் என்பது சமீபத்திய வரலாறு.

“ஐக்கியத்தின் சிலை” என்ற பெயரில் குஜராத்தில் வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைக்கப் போகிறார்கள். உலகின் உயர்ந்த சிலை என்ற சாதனையை நிகழ்த்தப் போகும் இதற்கு செலவு எவ்வளவு தெரியுமா? குறைந்த பட்சம் ரூ. 2000 கோடி. இதை மத்திய – குஜராத் மாநில அரசுகள் வழங்குகின்றன. வரும் அக்டோபர் 2018-இல் மோடி திறந்து வைக்கப் போகிறார்.

இப்போது சொல்லுங்கள்!

கேரள மழை வெள்ள சேதங்களுக்கான மத்திய அரசின் நிவாரணப் பணியை எப்படி மதிப்பீடுவீர்கள்?

  • மிக மோசம்
  • மிக நன்று
  • பரவாயில்லை
  • தெரியவில்லை

ட்விட்டரில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

ஃபேஸ்புக்கில் வாக்களிக்க:

  • வினவு செய்திப் பிரிவு

விஸ்வரூபம் 2 தோல்வி : சாருஹாசன் தம்பி கடும் அதிர்ச்சி !

5

மெரினாவில் கருணாதியை புதைச்சுண்டாளாமே, இனி எப்படி அங்கே காத்தாடறது என்று மயிலாப்பூர் ஆத்துல ‘மகா ஜனங்கள்’ சீதபேதியில் அலைந்து கொண்டிருக்கின்றனர். இந்நேரம் பார்த்து ஆழ்வார்பேட்டை ‘ஆண்டவனுக்கு’ சோதனை மேல் சோதனை!

சோதனை மேல் சோதனை!

விஸ்வரூபம் 2 படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்று இந்திய வெண் திரை வர்த்தக நிபுணர்களிடம் கேட்ட போது பலரும் உதட்டை பிதுக்குகிறார்களாம். கலைஞரின் மரணத்தை ஒட்டி தென்னிந்தியாவில் வசூல் எப்படியிருக்கும்? கணிக்க முடியாது என்கிறார்கள். இந்தி மொழியில் ஏதோ முதல் நாள் ஓரிரண்டு கோடி ரூபாய் வந்தால் அதிகம் என்கிறார்கள்.

கடைசியில் கருணாநிதியின் மரணம் இந்திய அரசு உளவுத் துறையான “ரா”-வில் பணிபுரியும் ஒரு தேசபக்தனான புலனாய்வு ஏஜெண்டை இப்படி சோதிக்க வேண்டுமா? ஒருவேளை இதுவும் திராவிட – பாகிஸ்தான் சதியாக இருக்குமோ?

மும்பை – இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை உண்மையிலேயே எக்ஸ்பிரஸ் வேகத்தில் “விஸ்வரூபம் – 2” விமர்சனத்தை இன்று மங்களகரமான வெள்ளிக்கிழமை ஆகஸ்டு 10 காலை 9:55:32-க்கு வெளியிட்டு விட்டது. என்னவென்று பார்த்தால் அது வெளியே – உள்ளே மற்றும் உள்ளுள்ளே எங்கு சொன்னாலும் கிசுகிசுத்தாலும் வெட்கக் கேடு!

“கமலஹாசனது படம் சம்பந்தமே இல்லாமல் ஒரு குழப்பம்” என்று சுப்ரா குப்தா நன்னா சுப்ரபாதம் போல தலைப்பு போட்டு எழுதியிருக்கிறார். குழப்பம் என்பதே பொருளற்றது என்றால் சம்பந்தமே இல்லாத ஒரு குழப்பம் என்றால் அது எப்பேற்பட்ட உலகமகாக் குழப்பமாக இருக்கும்?

இந்தியா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் என்று உலகளவில் பயணிக்கும் இப்படத்தில் கமலஹாசன், பூஜா குமார், ஆன்ட்ரியா, சேகர் கபூர், ராகுல் போஸ், அனந்த் மகாதேவன், வகீதா ரஹ்மான், ஜெய்தீப் அகல்வாத் ஆகியோர் நடித்திருக்க, சாருஹாசனது தம்பிதான் இயக்கியிருக்கிறார். இந்த மரணமொக்கைக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏதோ பாவம் பார்த்து அளித்திருக்கும் ரேட்டிங் ஒன்றரை நட்சத்திரம்!

“விஸ்வரூபம்” பாகம் ஒன்றிலாவது ரா எஜெண்டான மேஜர் விஸம் அகமத் காஷ்மீரி, விஸ்வநாதன் என்ற பெயரில் கதக் நடனம் போட்டு ஏதோ கொஞ்சம் பொழுதை போக்க வைத்தாராம். இதை ஃபர்ஸ்ட் போஸ்ட் இணையதளத்தின் விமர்சகர் முன்தேதியிட்ட போனசாக ஆற்றுப்படுத்துகிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சகரோ முதல் பாகத்தை ஏதோ ஒரு பொழுது போக்கு காமிக்ஸ் புத்தகம் போலவாவது எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்.

ஏன் இந்த ஃபிளாஷ்பேக் சீராட்டுக்கள்? கமலஹாசன் போன்ற ஞானிகளை, வணிக பொழுதுபோக்கு வி.ஐ.பி-களை முற்றிலும் வறுக்க முடியாதில்லையா? இருப்பினும் இரண்டாம் பாகத்தை அப்படி வணிகத்தின் பொருட்டும் இப்பத்திரிகைகள் சுமக்க முடியவில்லை! இது யதார்த்தம்! பிறகு இப்பத்திரிகை படிப்பவர்கள் அடுத்த இந்திப் பட விமர்சனங்களுக்கு இங்கு வராவிட்டால் சினிமா எக்ஸ்பிரஸ் சினிமா நகரப் பேருந்தாகி விடுமல்லவா?

ஆகவே, பாகம் இரண்டு ஒரு சோகமான சம்பந்தமே இல்லாத குழப்பம் என்கிறார் சுப்ரா குப்தா, இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சகர்.

ஓபனிங் சீனீல் ஒட்டு போட்ட தியாக விழுப்புண்களுடன் கமல் விமானத்தில் ஏற்றப்படுகிறார். கூடவே மனைவியான நிருபமாவும், அழகான உதவியாளரான அஷ்மிதாவும். முன்னவர் தன்னை அணுசக்தி விஞ்ஞானியாக கூறிக் கொண்டாலும், பெண் என்ற முறையில் ஆண்களை வீழ்த்தி உளவு பார்க்கவே விரும்புகிறாராம்.

பின்னவர் புத்திசாலித்தனமாக உளவாளியாக டமாரம் அடித்தாலும் அதை ஐந்து நட்சத்திர விடுதிகளில் ஒரு மாடலிங் நடிகர் போல தேடுகிறாராம். இந்த அவியல் கூட்டணியில் பாத்திர வார்ப்பு எனும் சமையல் பொருத்தம் சகிக்கவே முடியவில்லையாம்.

ஆக இந்தக குழப்பக் கூட்டணி கதைக்களமான நம்பிக்கையற்று இருக்கும் நாடுகளான இந்தியா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் பயணிக்கிறது. படத்தின் பாத்திரங்கள், உளவாளிகள், சதிகாரர்கள், மறந்து போகக் கூடிய அம்மாக்கள், சென்டிமெண்ட் மகன்கள், உள்ரூமில் உத்தரவு போடும் திறமையான உளவுத்துறை மேலதிகாரிகளுக்காக உருவாக்கப்பட்ட அழகான பெண்கள் – இவர்கள் ஒருவருக்கொருவர் கொல்லாமல், கைச் சண்டை, கத்திச் சண்டை போடுகிறார்கள். கத்திகள், துப்பாக்கிகளை கொண்டு செல்வதிலும், லோடிங் அன்லோடிங் செய்வதிலும் பிசியாக இருக்கிறார்கள்.

ஹெலிகாப்டர்கள் விண்ணில் பாய்கின்றன, ஏவுகணைகள் மண்ணில் சீறுகின்றன, கையெறி குண்டுகள் தூக்கி எறியப்படுகின்றன. (என்ன ஒரு உலகமகா கண்டுபிடிப்பு!) கடைசியில் கமல்ஹாசன் தரித்திருக்கும் பேராயுதங்களோடு அபாயகரமான முறையில் கிராபிக்ஸ் உதவியுடனும், சிறப்பு ஒலி மிக்சிங் தயவிலும் சண்டையிட்டு இந்திய தலைநகராம் புது தில்லி குண்டு போட்டு அழிக்கப்படும் அபாயத்திலிருந்ந்து காக்கிறார்.

சிறந்த வகை உளவுத்துறை புலனாய்வு படங்களில் இருக்கும் எனர்ஜி நிறைந்த அதிரடிக் காட்சிகள், வண்ணமயமான பாத்திரங்கள் – அதாவது நாயகன் – வில்லனுக்கு இடையே மங்கிய கோடுதான் இருக்கும், தடகள வீரனைப் போன்ற ஆண்கள், அவர்களுக்கு சமமாக இருக்கும் பெண்கள்…… இவை எவையும் எதுவும் விஸ்வரூபத்தில் லேது என புலம்புகிறார் எக்ஸ்பிரஸ் விமர்சகர்.

கமலின் வயதான தாயாக நடித்திருக்கும் வகீதா ரஹ்மான் படத்தில் அல்சைமர் எனப்படும் மறதி நோய் கொண்டவராக வருகிறார். இவரது பாத்திரத்தை தவிர ரா-வின் உயர் அதிகாரிகளாக அறைக்குள் டெக்னிக்கல் உத்தரவு போடும் சேகர் கபூர், ஆனந்த் மகாதேவன், அல்கைதா ராகுல் போஸ், துப்பாக்கியை விட்டுப் பிரியாத கைகளைக் கொண்ட ஜெய்தீப் அஹல்வாத் அனைவரும் தெண்டமாக வந்து போகிறார்களாம். ஆக மறதியாக நடிக்கும் ஒரு பாத்திரத்தை தவிர மற்றவை அனைத்தும் மறந்தும் கூட குறிப்பிடும்படியானவர்கள் அல்லவாம்.

charuhasanஇதற்காக கமல்ஹாசன் யாரைக் குற்றம் சாட்ட முடியும்? சாருஹாசனின் தம்பியைத் தவிர! ஏனெனில் இந்தக் குப்பையை எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்தவர் அந்தத் தம்பியேதான். நேரமும், பவுடரும் இருப்பதால் தசாவாதாரம் போட்டு விட்டு “தஸ்” பைசா கூட வசூலாகவில்லையே என்று எந்த அவதாரத்திடம் கேட்பது?

இவ்வளவிற்கும் இந்தப்படம் “இஸ்லாம் ஃபோபியா” எனப்படும் முசுலீம்களை அவதூறுடன் கருதும் உலகப் பொதுக் கருத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதை ஆங்கில விமர்சகர்கள் போகிற போக்கில் சொல்கிறார்கள். அதை முதல் பாகத்திலேயே பார்த்து விட்டோம்.

முதல் பாகம் எடுக்கும் போது கமலுக்கு தோன்றியிருக்கும் – மூன்று நாடுகளில் எடுக்கிறோம், தெரிவு செய்யப்பட்ட ஷாட் போக கனதியான அடிகள் மீதியிருக்கின்றன, அதை வைத்து ஒட்டுப் போட்டு இன்னொரு பாகம் போட்டால் என்ன என்று……….!

முதல் விஸ்வரூபம் வரும் போது அம்மா காப்பாற்றினார். இரண்டாவதில் அய்யா கெடுத்து விட்டார்! இருப்பினும் இரண்டாவதில்தான் உலக நாயகன் அது ஏதோ மய்யமாமே, கட்சி ஆரம்பித்திருக்கிறார். பிக்பாஸ், பிக்பாஸ் சீசன் 2, விஸ்வரூபம் 2 ஆகியவற்றில் கமல்ஹாசனுக்கு கிடைக்கும் பெரும் பணத்திற்கான இலவசமான விளம்பரமே அவரது அரசியல் பில்டப்புகள்!

இந்தி விஸ்வரூப பிரமோஷனோடு என்.டி.டிவி.யில் பேட்டியளித்தவர், நீங்கள் மோடி ஆதரவா, எதிர்ப்பா? எனும் மாபெரும் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். அதை பதில் என்று சொன்னால் பல்லியே நம்மிடம் பிராது பறையும்!

அதாவது அவர் மோடி ஆதரவோ அல்லது மோடி எதிர்ப்போ இல்லையாம். தனிநபர்களை எப்போதும் ஆதரித்தோ, எதிர்த்தோ பேசமாட்டாராம். சித்தாந்தத்தோடுதான் அவர் எப்போதும் உறவு கொள்வாராம்? இந்த உளறல்களை சகித்துக் கொள்கிறார்களே அந்த நெறியாளர்கள், அவர்களின் பொறுமை உண்மையிலேயே வேர்க்க் வைக்கிறது. சரிங்க கமல் ஆபிசர், அது என்ன சித்தாந்தம்? வறுமைக்குதான் அவர் எதிரே அன்றி, கட்சிகள் அல்லவாம். இந்தியா வளரவேண்டும் என்பதைத் தாண்டி அவருக்கு வேறு கொள்கையே இல்லையாம்? இதைத்தானய்யா மோடி முதல் நமது மக்கள் கட்சி கார்த்திக் வரை சொல்கிறார்கள்?

சரி இந்த எழவையெல்லாம் விட்டுத் தொலைப்போம். சகித்துக் கொள்வோம். ஆனா பாருங்க, இவரது அண்ணன் சாருஹாசன் அப்பைக்கப்ப ஒன்று சொல்வாரே, அதை மட்டும் எப்போது நினைத்தாலும் கிட்னி பதறுகிறது!

ரஜினிக்குத்தான் தமிழகத்தில் செல்வாக்கு, அவருக்குத்தான் மக்கள் வாக்கு அளிப்பார்கள், கமலுக்கு வாக்கு போட மாட்டார்கள் என்று எல்லா தொலைக்காட்சியிலும் சாருஹாசன் பேசித் தீர்த்து விட்டார். சரி இப்படி வெளிப்படையாக தம்பியை தரைமட்டமாக்குகிறாரே என்று பார்த்தால் அடுத்து ஒரு பன்ஞ் நைசாக வரும்.

அதாவது புத்திசாலிகளை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள், அதனால்தான் கமலை மறுத்து, ரஜினியை ஏற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு ஒரு தினுசாக பார்ப்பார் இந்த பெரியவர்! பிக்பாசில் கூட தம்பியும் ஏதாவது பன்ஞ் மாதிரி சொல்லிவிட்டு ஆடியன்சை பார்ப்பார். பல நேரம் கை தட்டல்களில் டைமிங் தாமதமாகும். என்ன இருந்தாலும் செட்டப் செய்த கைகளிடம் செட்டப் செல்லப்பாவே இருந்தாலும் டக்கு டக்குனு கை தட்டல் வருமா என்ன?

காரியவாதம், பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் இன்ன பிற வாதங்களுக்காக கட்சியும், காட்சியும் நடத்தி வரும் கமல்ஹாசனை ஏதோ மாபெரும் புத்திசாலி, நல்லவர் வல்லவர் என்று போடுகிறாரே, சாருஹாசன்… இப்படி நாலு பேர் இருக்கும் போது ஏன் விஸ்வரூபம் 2 வெளிவராது?

– வேல்ராசன்

மேலும் :

தி இந்துவுக்கு ஒரு கேள்வி : எது ஊடக நெறி ? மு.வி.நந்தினி

1

தி இந்துவுக்கு கேள்வி : ஊடக நெறி என்பது மக்கள் நலனை முன்னிறுத்துவதா?அல்லது ரகசிய சந்திப்புகளை மூடி மறைப்பதா?

பாராமுகம் பார்ப்போம் – மு.வி.நந்தினி

மிழக முன்னணி ஊடகங்களின் முதலாளிகளும் தலைமை பத்திரிகையாளர்களும் பிரதமர் நரேந்திர மோடியை ‘இரகசியமாக’ சந்தித்த படங்கள் சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சையானது. சமூக ஊடகங்களின் கேள்விகளை எதிர்கொண்டு எந்தவொரு தமிழ் ஊடகமும் பதிலளிக்கவில்லை. தி ஹிந்து பத்திரிகையின் ரீடர்ஸ் எடிட்டர் ஏ. எஸ். பன்னீர்செல்வன் இதுகுறித்து அந்தப் பத்திரிகையில் எழுதியிருந்தார். (இணைப்பு கீழே)

அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்ததும் பிரதமர் மோடி தமிழக பத்திரிகையாளர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்ததும் செய்தியாக்கப்படாததற்கு என்ன காரணம் என ஏ. எஸ். பன்னீர்செல்வம் விளக்கியிருந்தார். விளக்கத்தின் சாரம், (ஆஃப் த ரெக்கார்ட்) சந்திப்புகளை வெளியே சொல்வது சம்பந்தப்பட்டவர்களின் நம்பிக்கையை மீறுவதாகும் என்பதே.

ஏ. எஸ். பன்னீர்செல்வன்

லிபரலாகவும் ஜனநாயக தன்மையுடன் எழுதுவதாகக் காட்டிக்கொள்வது ஊடகங்களில் ஒருவகை. தி இந்து அப்படியாகத்தான் தன்னை முன்னிறுத்தி வருகிறது. இந்த முகத்திரையை பலரும் கிழித்தெறிந்துவிட்டார்கள். ரீடர்ஸ் எடிட்டரின் வழியாக மோடி சந்திப்பின் பின்னணி குறித்து ‘விளக்கம்’ அளித்து தனது நடுநிலையை தக்கவைக்க முயற்சிக்கிறது தி இந்து. ஆனால், உண்மை என்பது ஒருபோதும் நடுநிலையாக இருப்பதில்லை.

100 பெண் பத்திரிகையாளர்களை ராகுல் காந்தி சந்தித்த படங்கள், அவருடைய சமூக வலைத்தளத்திலேயே வெளியிடப்பட்டன. காங்கிரஸ் தலைவராக மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் ராகுல் காந்தி, ஊடகங்களுடனான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள சந்திக்கிறார் என்கிற விளக்கம் காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டது. தேர்தலுக்கு முன் அனைத்து கட்சிகளும் இப்படியான ‘சந்திப்பு’களை நடத்துவதுண்டு. பொதுவாக ஆதரவான, எதிரான ஊடகங்களும் இந்த சந்திப்புகளுக்கு அழைக்கப்படுவார்கள்.

இது ஒருவகையில் ஊடகங்களை ‘வளைக்கும்’ செயல்பாடு என்றாலும் ராகுல் காந்தி சந்திப்பின் வெளிப்படைத்தன்மை, மோடி சந்திப்பில் இல்லை என்பதே சர்ச்சைகளையும் சந்தேகங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது. ஊடகங்களின் தனிப்பட்ட சந்திப்பு செய்தியாக்குவதில்லை அல்லது சில நேரங்களில் படங்களை மட்டும் வெளியிடுவார்கள். ராகுலின் சந்திப்பு இணைய ஊடகங்களில் செய்தியாக பதிவானது. ராகுலுடன் என்ன பேசினார்கள் என்கிற விவரமும்கூட வெளியாகியிருக்கிறது. பிரபல பத்திரிகையாளர் சேகர் குப்தா ஆசிரியராக இருக்கும் தி பிரிண்ட் இணையதளம் இதை பதிவாக்கியிருக்கிறது.

தி இந்துவின் ரீடர்ஸ் எடிட்டர் ஏ.எஸ். பன்னீர்செல்வம், இணையதளங்களில் ராகுல் பத்திரிகையாளர் சந்திப்பு வெளியானதை குறிப்பிடுகிறார். ஆனால், மோடியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக ஊடகவியலாளர்களின் சந்திப்பு இரகசியமாக ஏன் வைக்கப்பட்டது என்கிற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. மோடி – ஊடகவியலாளர்கள் சந்திப்பு குறித்து பா.ஜ.க. தரப்பிலிருந்தும்கூட ஏன் விளக்கப்படவில்லை? நான்காண்டுகளில் பத்திரிகையாளர்களையே சந்திக்காத பிரதமர் என பெயர் பெற்ற மோடியை சந்திக்கும் வாய்ப்புப் பெற்ற தமிழக ஊடகவியலாளர்கள் ’பெருமை’யுடன் அதை பகிர்ந்திருக்கலாமே, அதை ஏன் செய்யவில்லை?  உள்நோக்கத்துடனான சந்திப்பு என சொல்ல அத்தனை வாய்ப்புகளையும் அள்ளிக் கொடுத்துவிட்டு, விளக்கமும் ஏன்? படங்களை வெளியிட்டு பிரதமரை சந்தித்தோம் என ஒற்றை வரி விளக்கத்தில் என்ன ’நம்பிக்கை இழப்பு’ ஏற்பட்டுவிடப்போகிறது?

மோடி – தமிழ் ஊடக பிரமுகர்களின் சந்திப்பு தனிப்பட்ட சந்திப்பு எனில், இது தொடர்பான புகைப்படங்கள் எப்படி வெளிவந்தன? மோடியின் அலுவலகத்தில் PMO (பிரதம அமைச்சரின் அலுவலகம்) புகைப்படக்காரர் மட்டும் எடுத்த படங்கள் தமிழக பா.ஜ.க பிரமுகர்கள் மூலம் கசிய விடவைத்தது ஏன்? ஆக அவர்கள் இவர்களை சந்திததார்கள். அதை அவர்களே ‘பெருந்தன்மையாக’ வெளியிடுகிறார்கள். பன்னீர் செல்வமோ இது தனிப்பட்ட சந்திப்பு என நமக்கு கிளாஸ் எடுக்கிறார்.

மோடி ஆட்சிக்கு வந்தபின், தங்கள் சித்தாந்தத்துக்கு ஒத்துப் போகாத பத்திரிகையாளர்களை நிறுவனங்களிலிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ அழுத்தம் கொடுத்து பணிநீக்கம் செய்வது தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. சமீபத்திய உதாரணம் ஏ.பீ.பி. ஊடகவியலாளர்கள் இருவரின் நீக்கம். தன்னுடைய மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி எப்படிப்பட்ட புரட்டுகளை சொல்கிறார் என தோலூரித்த செயலுக்காக அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த விஷயம் இணைய ஊடகங்களில் பரபரப்பானபோது மோடியுடனான தமிழக ஊடகவியலாளர்களின் சந்திப்பு நிகழ்ந்தேறியது.

மோடியை சந்தித்த பெரும்பாலான ஊடகங்களின் சார்புதன்மை வெளிப்படையானது. சில ஊடகவியலாளர்கள் நடுநிலைமை பேண முயற்சிக்கலாம். அதை நடுநிலைமை என்பதைவிட சந்தர்ப்பவாதம் என சொல்வது பொருத்தமாக இருக்கும். இந்த நடுநிலையாளர்களின் ஊடக அறம் என்பது வலதுசாரித்தனத்துடன்  சமரசம் செய்துகொள்ள எப்போதும் தயாராகவே உள்ளது.

பி.ஜே.பி. கும்பலின் மிரட்டலுக்கு பயந்து ஏ.பி.பி. ஊடக முதலாளிகளால் பழிவாங்கப்பட்ட பத்திரிகையாளர்கள்: (இடமிருந்து) மிலிந்த் கொண்டேகர், புன்ய பிரசுன் பாஜ்பாய் மற்றும் அபிசார் சர்மா.

வலதுசாரி ட்ரால்களால் பாதிக்கப்படும் ஒரு செய்தியாளருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான நீதியைக்கூட இவர்களால் பெற்றுத்தர முடிவதில்லை. நடுங்கிக் கொண்டு பாதிக்கப்பட்ட செய்தியாளரை ”வீட்டிலேயே இருந்துகொள், பிரச்சினை முடிந்ததும் வெளியே வா” என்பார்கள். ”தாலி தேவையா” என்கிற விவாத சர்ச்சை முதல் சமீபத்திய எஸ்.வி.சேகர் வீட்டில் கல்லெறிந்த ஊடகவியலாளர்கள் விவகாரம், மிகச் சமீபத்திய பெண் கடவுள் கவிதை பகிர்வு சர்ச்சை வரை பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களை தொடர்புடைய ஊடக நிறுவனங்கள் திரையில் வரவேண்டாம் என தற்காலிக தடை விதித்தன. ட்ரால்கள் மட்டுமே இதற்கு காரணமென்றால், எந்தவொரு ஊடகவியலாளரும் பணியாற்ற முடியாது. முழுக்க முழுக்க இதன் பின்னால் இருப்பது ஊடகங்களை வெளிப்படையாக மிரட்டும் பா.ஜ.க.வினர் மீதான பயம். சார்புதன்மையுடனோ, சந்தர்ப்பவாத நடுநிலைமையுடனோ இயங்கும் ஊடகங்களால் எப்படி மக்கள் நலனை முன்னிறுத்த முடியும்?

மோடியுடனான தமிழக ஊடகவியலாளர் சந்திப்புக்கு சப்பையான விளக்கங்களை சொல்லும் ரீடர்ஸ் எடிட்டருக்கு கீழ்வரும் பத்தி எதிர் விளக்கம் தருமென நம்பலாம். “எட்வர்ட் ஸ்னோடனும் விக்கிலீக்ஸும் பரம இரகசியமாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ஆவணங்களை இணையத்தின் வழியாக மக்கள் பார்வைக்கு வைத்தார்கள். இந்த ஆவணங்களை வெளியிடக்கூடாதவை எனக் கருதி சர்வதேச ஊடகங்கள் ஒதுங்கிக் கொள்ளவில்லை. மாறாக, அந்த ஆவணங்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து வெளியிட்டன. ஒரு அரசாங்கத்தால் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட ஆவணங்களை ஏன் ஊடகங்கள் செய்தியாக்கின? ஏனெனில் அதில், மக்களின் நலன் அடங்கியிருந்தது” சமகால ஊடகங்கள் குறித்த கட்டுரை ஒன்றில் பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் எழுதியது இது. மக்கள் நலனை முன்னிறுத்துவதா? அல்லது இரகசிய சந்திப்புகளை மூடி மறைப்பதா? எது ஊடக நெறி?

  • மு. வி. நந்தினி.

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.

நூல் அறிமுகம் : ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை ஜாலியா – பிரச்சினையா?

“ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை ஜாலியா, பிரச்சினையா?” என்ற தலைப்பில் ஐ.டி துறையில் வேலை செய்யும் மென்பொருள், பி.பி.ஓ, கே.பி.ஓ, கால் சென்டர் ஊழியர்கள் எதிர்கொள்ளும் வேலை இழப்பு பிரச்சனை தொடர்பான சிறு நூலை பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

புத்தகத்தின் பெயர் : ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சினையா?

இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • ஐ.டி துறையில் ஆட்குறைப்பு
  • நிறுவனம் நினைத்தவுடன் வேலையை விட்டு அனுப்ப முடியுமா?
  • தொழிலாளர் நலனும் நாட்டின் நலனும்
  • முதலாளி பெருசா, தொழிலாளி பெருசா?
  • எச்.ஆர் அதிகாரிகளே, திருந்துங்கள்!
  • ஆன்சைட்டும், அதிக சம்பளமும் பாதுகாப்பா?
  • அப்ரைசலை எப்படி கவனமாக கையாள வேண்டும்?
  • ஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் ஏன் தேவை?
  • நிர்வாகங்களே, ஊழியர்களே யூனியனை ஆதரியுங்கள்!
  •  ஐ.டி ஆட்குறைப்பு – நாம் அறிவாளிகளா? அப்பாவிகளா?
  • இணைப்பு : சங்கம் வைக்கும் உரிமை ஐ.டி துறைக்கும் பொருந்தும் – தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை கடிதம்

பக்கங்கள் : 64
விலை : ரூ 60

இந்த நூல் ஆங்கிலத்திலும் வெளியாகி உள்ளது.
ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை , ஐ. டி. ஊழியர்கள் பிரச்சினை , ஐ.டி. ஊழியர்கள் சிறு வெளியீடு , IT Employees problem , ஐ.டி ஆட்குறைப்பு
ஐ.டி ஊழியர்களும், மாணவர்களும் புத்தகத்தின் பிரதிகளை பெற்று நண்பர்களிடையேயும், சக ஊழியர்களிடையேயும் வினியோகிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் தெரியாத பிற மாநில ஊழியர்களுக்கு ஆங்கில நூலை வினியோகிக்கலாம்.
உங்களுக்கு தேவையான பிரதிகளுக்கு தமிழ், ஆங்கிலம் எண்ணிக்கை குறிப்பிட்டு combatlayoff@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது 9003009641 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

பிரதிகளுக்கான விலையை புத்தகத்தை பெற்றுக் கொண்டு ரொக்கமாகவோ, எமது சங்கத்தின் வங்கிக் கணக்கிலோ செலுத்தலாம்.

தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (ஐ.டி. ஊழியர் சங்கம்)
தொடர்புக்கு : +91 90030 09641

பாரி சாலன் – ஹீலர் பாஸ்கர் : பெரியார் ஒரு இலுமினாட்டி என்று ஏன் நம்புகிறார்கள் ?

பாரி சாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டு பிடிக்கிறார் ? பாகம் 2

ஒருவர் வதந்திகளை பரப்புவராக/நம்புவராக, கிசுகிசுக்களை நம்புவராக/பரப்புபவராக, புரணி பேசுபவராக/கேட்பவராக இருக்கும் பட்சத்தில் மற்றவரும் தங்களை போன்றே இயல்புள்ளர்கள் என்று நம்ப/கருதத் தோன்றும்.

ம்மில் சிலர் கூட சில சதியாலோசனை கோட்பாடுகளை நம்பக் கூடியவர்களாக இருப்போம். அல்லது ஒரு வேளை அது உண்மையாக இருக்குமோ என்கின்ற அளவிலாவது சிலவற்றை நம்புவோம். சதியாலோசனை கோட்பாடுகளை நாம் நம்ப விரும்புவதற்கு/நம்ப தொடங்குவதற்கு நமக்கென்று சில தர்க்கங்கள் இருக்கும்.

கடற்புலிகள், வான் புலிகள், கரும்புலிகள் என்று ஒரு ராணுவத்தை கட்டி 20 ஆண்டு காலத்துக்குமேல் சிம்ம சொப்பனமாக இருந்த புலிகளின் தலைமை மிக சாதாரணமாக ஒரு நேரடி சண்டையில் சுட்டு கொல்லப்பட்டார் என்ற தகவல் புலிகளின் ஆதரவாளர்களால் ஜீரணிக்க முடியாத தகவல். அப்பொழுது நக்கீரனில் வந்த ஒரு சிறுபிள்ளைத்தனமான கட்டுரையை நானும்கூட நம்பினேன் அல்லது நம்ப விரும்பினேன்.

Prabhakaranஏன் என்றால் தர்க்கரீதியாக அவ்வளவு சாதுர்யமான, புத்திசாலித்தனமான, வலிமையான, அனுபவமிக்க ஒரு போராளி இயக்கத்தின் தலைவர் 2 ஆண்டுகளுக்கு மேல் நடந்த சண்டையின் முடிவில் தப்பி செல்லவோ அல்லது குறைந்த பட்சம் தனது சடலம் கிடைக்காத வகையிலோ கூட செயல்படமுடியாமல் போனார் என்னும் நிகழ்வை என்னால் அப்பொழுது தர்க்கரீதியாக ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இது போல நாம் சதியாலோசனைக் கோட்பாடுகளை நம்பத் தொடங்குவதற்கு பின்னணியில் சில தர்க்கங்கள் இயங்குகின்றன. அந்த தர்க்கங்கள் எல்லா நேரங்களிலும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. சில நேரங்களில் நமது தர்க்கங்கள் நமது உணர்வுகளால் உந்தப்படுபவை. மனவியல் நிபுணர்கள் அதை மூன்று முக்கிய வகைமைகளாக பிரிக்கிறார்கள்.

  • 1) விகிதசமன் சாய்வு (proportionality bias)
  • 2) உறுதியூட்டு சாய்வு (confirmation bias)
  • 3) முன்னிறுத்து சாய்வு (projection bias)

ஒரு கிளாசிக் example…(ஒரு செவ்வியல் சான்று)

உலகத்தின் சக்தி வாய்ந்த நாடு அமெரிக்கா. உலகத்தின் சக்தி வாய்ந்த மனிதர் அமெரிக்க ஜனாதிபதி. உலகத்தின் சக்தி வாய்ந்த இராணுவம் அமெரிக்க இராணுவம். உலகத்தின் சக்தி வாய்ந்த உளவு அமைப்பு அமெரிக்க உளவு நிறுவனம். அமெரிக்க இராணுவமும் உளவு அமைப்பும் தங்களது ஜனாதிபதிக்கென்று பிரத்யேக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன.

மிக மிக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க ஜனதிபதியை சுட்டு கொன்றவன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன். ஆனால் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களால் இதைத்தான் ஏற்றுக்கொள்ள முடிவதேயில்லை.

உலகிலேயே மிகவும் பாதுகாக்கப்பட்ட மனிதர் அமெரிக்க ஜனாதிபதிதான். இப்படி பட்ட அமெரிக்க ஐனாதிபதி தனது மனைவியோடு தெருவில் காரில் சென்று கொண்டிருக்கும் போது மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் 6-வது மாடியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் நகரும் காரில் சென்று கொண்டிருந்த கென்னடியை சரியாக இரண்டே தோட்டாக்களில் சுட்டு வீழ்த்தினார் என்பது proportionate ஆக இல்லை இல்லையா? அதாவது ஒரு நம்பமுடியாத ஆச்சர்யமான அதிர்ச்சியான சம்பவத்திற்கு காரணம் மிக மிக எளிமையான ஒன்றாக இருக்க முடியாது என்பது நமது மனதின் சாய்வு(bias).

இந்நிலையில் இந்த சதி செயலின் பின்னணியில் KGP, CIA (்சோவியத் ரசிய, அமெரிக்க உளவு நிறுவனங்கள்) எல்லாம் சம்மந்தப்பட்டிருக்கிறது என்னும் ரீதியில் உலவும் சதியாலோசனை கோட்பாடுகளில் ஒரு தர்க்கம் இருப்பதாய் நாம் உணரத் தொடங்குகிறோம். இதுதான் proportionate bias (விகிதப்படியான சாய்வு).

இரண்டாவது நமக்கு பரிச்சயமான ஒன்று. நாம் தினம் தினம் கடைபிடிக்கும் ஒன்று. திருமாவளவன் பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்து ஒரு மேடையில் பேசுகிறார். அவருடைய ஆதரவாளர்கள் அண்ணன் weight (கெத்து) காமிச்சுட்டாரு என்னும் ரீதியில் மகிழ்ச்சி அடைவார்கள்.

பெரியாரின் கொள்கைகளால் மண்டை காய்ந்து போய் உள்ளவர்கள் பெரியார் இலுமினாட்டி என்னும் சதியாலோசனை கோட்பாடுகளை இயல்பாக நம்புவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே பெரியாருக்கு எதிரான சாய்வு இருக்கிறது.

அதற்கு பதில் சொல்லும் விதமாக ராமதாஸ் ஒரு மேடையில் பேசுகிறார். உடனே அவருடைய ஆதரவாளர்கள் பார்த்தில்ல…ஐயா ஐயாதான் என்பார்கள். அதவாது இரண்டு தரப்பு ஆதரவாளர்களுமே அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் நம்பிக்கையை/ஆசையை/ சார்பை மேலும் பற்றிக்கொள்கிறார்கள். இதுதான் confirmation bias (உறுதியடைந்த சாய்வு).

தலைவர் பிரபாகரன் மரணச்செய்தியை தினமலர் மனமகிழ்வோடு சந்தேகத்துக்கு இடமின்றி நம்பி முதல் பக்க செய்தியாக்கிய போது அதன் ஆதரவாளர்கள் அதை முழுவதுமாக நம்பி ஏற்றுக் கொண்டார்கள். ஏனென்றால் அவர்கள் அது நிகழ வேண்டும் என்று பல வருடங்களாக காத்திருந்தவர்கள்.

ஆனால் நாம் அவர் தப்பி முக்கிய தளபதிகளோடு வேறு நாட்டில் நலமாக இருக்கிறார் என்பதையொத்த conspiracy theory-(சதிக் கோட்பாடு)களை நம்ப தொடங்கும் நிலையிலிருந்தோம். ஏனென்றால் அவர் தப்பித்திருக்க வேண்டும் என்று விரும்பினோம்.

பெரியாரின் கொள்கைகளால் மண்டை காய்ந்து போய் உள்ளவர்கள் பெரியார் இலுமினாட்டி என்னும் சதியாலோசனை கோட்பாடுகளை இயல்பாக நம்புவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே பெரியாருக்கு எதிரான சாய்வு இருக்கிறது.

அறிவியல் முறைகளை அறிந்திருக்காதவர்கள், அறிந்துகொள்ளும் திறனோ/வாய்ப்போ இல்லாதவர்கள் தடுப்பூசி தேவையில்லை என்பதை நம்புவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே அறிவியலுக்கு எதிரான ஒரு சாய்வு இருக்கிறது. அந்த சாய்வை ஊக்கப்படுத்தும் / உறுதிப்படுத்தும் எல்லா தகவல்களும் அவர்களுக்கு உண்மையாக தெரியும். பெரியார் தமிழர் விரோதி என்னும் உண்மையை சீமான் உற்று பார்த்து கண்டுபிடிப்பது இந்த பின்னணியில்தான்.

இறுதியாக projection bias (முன்துருத்தும் சாய்வு). நாம் நினைப்பதைத்தான் எல்லோரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள் அல்லது நான் நம்புவதைத்தான் எல்லோரும் நம்புகிறார்கள் அல்லது நான் செய்வதைத்தான் எல்லாரும் செய்கிறார்கள் என்று இருக்கும் ஒரு சாய்வு நிலை.

ஒருவர் வதந்திகளை பரப்புபவராக/நம்புபவராக, கிசுகிசுக்களை நம்புவராக/பரப்புபவராக, புரணி பேசுபவராக/கேட்பவராக இருக்கும் பட்சத்தில் மற்றவரும் தங்களைப் போன்றே இயல்புள்ளவர்கள் என்று நம்ப/கருதத் தோன்றும்.

இதன் காரணமாக அவர்களுக்கு தாங்கள் நம்பும் சதியாலோசனை கோட்பாடுகளை மொத்த உலகமும் நம்புவதாக, மொத்த உலகமும் அதன் மேல் ஆர்வம் கொண்டுள்ளதாக, மொத்த உலகமும் அதனை பற்றி விவாதித்து கொண்டுள்ளதாக நினைத்துக் கொள்வார்கள். இதன் விளைவாக அவர்கள் நம்பும் சதியாலோசனை கோட்பாடுகளை அவர்கள் தீர்க்கமாக நம்புவார்கள்.

why-people-believe-in-conspiracy-theories jpg
ஒருவர் வதந்திகளை பரப்புவராக/நம்புவராக, கிசுகிசுக்களை நம்புவராக/பரப்புபவராக, புரணி பேசுபவராக/கேட்பவராக இருக்கும் பட்சத்தில் மற்றவரும் தங்களை போன்றே இயல்புள்ளர்கள் என்று நம்ப/கருத தோன்றும்.

எளிமையாக சொன்னால் conspiracy theories are for losers (தோல்வியடைந்தவர்களுக்குத்தான் சதிக் கோட்பாடுகள்) என்று மனவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். தேர்தலில் தோற்கும் எல்லா கட்சியினரும் எல்லா நேரத்திலும் ஒரு சதியாலோசனை கோட்பாட்டை முன்வைக்கிறார்கள். வென்றவர்கள் ஜனநாயகம் வென்றது என்கிறார்கள்.

விளையாட்டில் எந்த நாடு தோற்கிறதோ அந்த நாட்டின் ரசிகர்கள் மேட்ச் பிக்சிங் என்று சந்தேகிக்கிறார்கள். வென்ற நாட்டின் ரசிகர்கள் சூப்பரப்பு என்கிறார்கள். நாம் எப்பொழுது பலவீனமாக, தனிமையாக, குழப்பமாக, விரக்தியாக, தோல்வியுற்று நிற்கிறோமே அப்பொழுது தான் நாம் ஒரு சதியாலோசனை கோட்பாடை பற்றி கொள்கிறோம்.

14-ம் நூற்றாண்டை சேர்ந்த தத்துவ அறிஞர் வில்லியம் முன்வைத்த கோட்பாட்டின் பெயர் Occam’s razor principle. இந்த கோட்பாட்டின் படி எல்லா சிக்கலான கேள்விகளுக்கும் பெரும்பாலான சமயங்களில் மிக மிக எளிமையான பதிலே சரியான விடையாகியிருக்கும் என்பதே.

உதாரணத்திற்கு மிக மிக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியை சுட்டுக் கொன்றவன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன் என்ற மிக சாதாரணமான சுவாரஸ்யமற்ற பதிலே சரியாக இருக்க வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால் சதியாலோசனைக் கோட்பாடுகளை நம்புபவர்களால் இதைத்தான் ஏற்றுக்கொள்ள முடிவதேயில்லை.

எளிமையாக சொன்னால் conspiracy theories are for losers (தோல்வியடைந்தவர்களுக்குத்தான் சதிக் கோட்பாடுகள்) என்று மனவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

பொதுவாக பல்வேறு சோதனைகளின் மூலம் அடிப்படையான கணிதம், தர்க்கம், அறிவியல் கோட்பாடுகள் போன்றவற்றில் இளம்பிராயத்திலேயே பயிற்றுவிக்கப்பட்டர்வர்கள் சதியாலோசனை கோட்பாடுகளை பெரும்பாலும் நம்புவதில்லை என்று மனவியல் ஆய்வுகள் நிறுவுகின்றன.

அதே நேரத்தில் மெத்த படித்த மேதாவிகள் பலரும் சதியாலோசனைக் கோட்பாடுகளை நம்புகிறவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனாலும் கல்வியறிவு பெற்றவர்கள் சதவிகித அடிப்படையில் சதியாலோசனைக் கோட்பாடுகளை குறைவாகவே நம்புகிறார்கள்.

குழந்தை பருவத்தில் ஏற்படும் மனரீதியான பாதிப்புக்குள்ளானவர்கள், புறக்கணிப்புக்குள்ளானவர்கள், தனித்து விடப்பட்டவர்கள் மத்தியிலும் சதியாலோசனை கோட்பாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. மேல் சொன்னவைகள் எல்லாம் ஏன் சிலருக்கு அல்லது நமக்கு சில நேரங்களில் நாம் ஏன் சில சதியாலோசனை கோட்பாடுகளில் ஒரு தர்க்கம் இருப்பதாய் உணர்கிறோம் என்பதை புரிந்து கொள்ள உதவியிருக்கும்.

எல்லா சதியாலோசனைக் கோட்பாடுகளும் பொய் என்று ஒதுக்குவது சரியா?
பாரிசாலனுக்கு ஏன் எளிமையான உண்மைகள் கூட புரிவதில்லை?

எப்பொழுதும் எல்லா பேட்டிகளிலும் பாரிசாலன் சொல்வதே சரி என்பது போன்ற தோற்றம் ஏன் ஏற்படுகின்றது?

ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.
நன்றி : தி டைம்ஸ் தமிழ்

முந்தைய பாகம் :
பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்கள் இலுமினாட்டிகளை எப்படி சமைக்கிறார்கள் ?

காத்து வாங்க வருமிடத்தில் அவாளுக்கு கலைஞரைப் பார்த்தால் வியர்த்து வாங்காதா ?

மறையாத சூரியன்

போராட்டத்திற்கு
மெரினாவில் இடமில்லை
என்பதிலேயே புரிந்துவிட்டது
கலைஞருக்கு
மெரினாவில் இடமில்லை
என குரலெழுந்ததன்
காரணம்.

கலைஞர்
உயிர் வாழ போராடிய
காவேரி மருத்துவமனை – வாயிலில்,
குருமூர்த்தி  வாயி.. லில்,
”கலைஞர் நாட்டுக்கே உரியவர்
நல்லவர், பெரியவர்” என
சந்தியா வந்தன நடிப்பு!

அவர் இறந்த
அடுத்த நொடியே
கலைஞருக்கு மெரினாவில்
இடம் தரக் கூடாது என
கட்டுக்கடங்காத, கர்ப்பம் தாங்காத
பார்ப்பனக் கொழுப்பு!

பல முறை
வதந்திகளின் மலர் வளையத்தோடு
திரிந்த ஆரியப் பாம்புகள்
சந்துக்கு சந்து டுவிட்டரில் சிலிர்ப்பு!
முகநூலில்
பூநூல் முளைப்பு.

வெறுக்க வேண்டியதை
வெறுத்ததனால்
ரிஷிக்கோத்திரங்களுக்கு
கலைஞர் மீது வெறுப்பு!

விட்டாரா கலைஞர்?
பிறந்த குழந்தை
உதைப்பதில் என்ன பெருமை!
இறந்த குழந்தை
எட்டி உதைத்தது போல்
பார்ப்பன வெறுப்பின் முகத்தில்
காலை நீட்டிவிட்டு
கம்பீரமாய்
மெரினாவில் கலைஞரின் விதைப்பு!

இறந்தவர் முகத்திலோ
இன்னும் யோசிப்பதுபோல
ஒரு திளைப்பு.
வயிற்றெரிச்சல் குலங்களின்
முகத்திலோ
வற்றாத  சவக்களை,
செத்துப்பிழைத்த தவிப்பு.

மக்களுக்காக
தினையளவு சிந்திப்பவரையும்
மக்களுக்கு பிடிக்கும்.
கலைஞரை
மக்களுக்கு பிடிக்கும்
காரணம் இதுதான்.

அடிமைத்தனத்தை
எதிர்ப்பதே அறிவு
என தெளிந்த பருவம் முதல்
முதிர்ந்த பருவம் வரை,
உலகின் கொடிய
ஆரியப் பார்ப்பன
மனித விரோத மனுநீதியை
எதிர்த்துச் சமர் புரியும்
வலியை உணர்பவர்களுக்கு
வருகிறது
கலைஞருக்காக கண்ணீர்!

தனக்காக மட்டும்
சிந்திக்கும் வரம்பிருந்தும்
வாழ வாய்ப்பிருந்தும்
தமிழ் நரம்பெங்கும்
பார்ப்பன எதிர்ப்பு விசையை
பாய்ச்ச மறவாத
ஒரு கால நதியை
இழந்த சோகம் இது.

பிறருக்கானதாய்
இருக்க வேண்டும் வாழ்க்கை
தனக்கானதாய்
இருக்க வேண்டும் மரணம்
இந்த தகுதியுடையோரை
வெறுப்பதில்லை மக்கள்.

சமத்துவபுரத்தில்
அவாளுக்கும்
இடம் ஒதுக்கினாலும்,
சமத்துவம் என்றாலே
அவாளுக்கு வெறுப்பு
மயிலாப்பூர் தீர்த்தம் மட்டுமல்ல
வங்க கடலும்
அவாளது என்ற நினைப்பு!

பின்னே,
காத்துவாங்க வருமிடத்தில்
கலைஞரைப் பார்த்தால்
வியர்த்து வாங்காதா?

பாலம் கட்ட
ராமன் என்ன என்ஜினியரா?
குரங்கு என்ன கொத்தனாரா?
என்ற கரகரப்பு
தொண்டைக்கு வந்து படுத்தாதா!

கண்ணுக்கெட்டிய தூரம் வரை…
கலைஞர் மறைந்ததாய்
அவாள் நம்பவில்லை
தமிழர்களே!
தயவுசெய்து
அந்த நம்பிக்கையை
கெடுக்காதீர்கள்!

  • துரை. சண்முகம்

வெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்

மே நாள் சிலிர்ப்புகள் – துரை. சண்முகம்

நான்தாம்பா ரஜினிகாந்த்! | துரை.சண்முகம்

கனடாவில் எனது முதல் சம்பளம் | அ.முத்துலிங்கம்

வாழ்நாள் ஆசை என்று ஒவ்வொருவருக்கும் ஒன்று இருக்கும். என்னுடைய ஆசை கனடாவில் ஒரு நாளாவது வேலை செய்வது. வேலை என்றால் தொண்டு வேலை அல்ல; அது நிறையச் செய்துகொண்டிருக்கிறேன். சம்பளத்துக்கு வேலை.

என்ன வேலை என்றாலும் பரவாயில்லை. தோட்ட வேலை. சூப்பர் மார்க்கெட்டில் வண்டில் தள்ளும் வேலை. உணவகத்தில் கோப்பை எடுக்கும் அல்லது கழுவும் வேலை. மூளை உபயோகிக்கும் வேலை மட்டும் வேண்டாம். அதுவும் கணக்கு எழுதும் வேலை எனக்கு தேவையே இல்லை. வாழ்நாள் முழுக்க அதைத்தானே செய்தேன். சுப்பர்மார்க்கட்டில் வண்டி தள்ளும் வேலைக்கு முயற்சி செய்தேன்.

வாடிக்கையாளர்கள் சாமான்களை வண்டிலிலே வைத்து தள்ளிச் சென்று காரிலே சாமான்களை ஏற்றி வண்டியை விட்டுவிட்டு போவார்கள். அவற்றை சேகரித்து சூப்பர்மார்கட் உள்ளே கொண்டு போய் நிறுத்தவேண்டும்.

Supermarket-Trolleyஅதைக் கெடுத்தவர் புலம்பெயர்ந்த தமிழர்தான். அவர் அங்கே 30 வருடமாக வேலை செய்கிறாராம். 20 வண்டிகளை சேகரித்து ஒரேயடியாக உள்ளே தள்ளிக்கொண்டு போவதில் ஒரு சாதனை வைத்திருந்தார். அந்தச் சாதனையை நான் முறியடித்துவிடுவேன் என பயந்தாரோ என்னவோ, அந்த வேலை எனக்கு கிடைக்காமல் தடுத்துவிட்டார்.

வேறு பல வேலைகளுக்கு முயற்சிகள் செய்தாலும் அவை தோல்வியிலேயே முடிந்தன. இப்படி நான் சோர்ந்துபோய் இருந்த சமயம்தான் ஒரு நாள் அதிகாலை டெலிபோன் மணி அடித்தது. மற்றப் பக்கம் இருந்தவர் ஒரு நிமிடம் பேசிய பின்னர்தான் அவர் ஆங்கிலம் பேசுகிறார் என்று எனக்குப் புரிந்தது. அவர் சீனாக்காரராக இருக்கலாம்.

தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்புக்கு வரமுடியுமா என்று என்னிடம் கேட்டார்.

எப்போது என்று கேட்டேன்.

இன்றைக்கு.

எத்தனை மணிக்கு?

காலை 9 மணி.

என்ன இடம்?

அவர் முகவரியை சொல்லச் சொல்ல எழுதினேன். தூரமான தேசம். தொலைந்துபோவதற்கான வாய்ப்ப்புகள் அதிகம். நான் அது பற்றி யோசிக்கும்போதே வாய் ’சரி வருகிறேன்’ என்று சொல்லிவிட்டது.

Translatorஒன்பது மணிக்கு ஒரு நிமிடம் இருக்கும்போது போய்ச் சேர்ந்தேன். நான் சந்தித்தது ஒரு யூதப் பெண்மணி. பெயர் எமூனா என்றார். அவர் உடையும், இருந்த தோரணையும், பேசிய விதமும் எனக்குப் பிடித்துக்கொண்டது. கருணை உள்ளவர் என்று உடனேயே என் மனதில் பதிந்தது.

காப்புறுதி நிறுவனம் சார்பில் விபத்தில் மாட்டிய ஒரு தமிழ் பெண்மணியின் உடல், மன நிலையை அவர் மதிப்பீடு செய்யவேண்டும். இவருடைய மதிப்பீட்டின் அளவுகோல் படி அந்தப் பெண்ணுக்கு இழப்பீடு வழங்கப் படும் என்பதை எமூனாவே என்னிடம் சொன்னார்.

விபத்தில் மாட்டிய பெண்ணின் பெயர் சின்னநாயகி என்று எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பெரியநாயகி கேள்விப்பட்டிருக்கிறேன். சின்னநாயகி புதிதாக இருந்தது.

அவர் ஒரு திருமண விழாவுக்கு உறவுக்காரருடன் காரில் போய்க்கொண்டிருந்தபோது வேறு காருடன் மோதி விபத்து நடந்தது. மூன்று நாள் மருத்துவமனையில் நினைவு தப்பிக் கிடந்தார். உடம்பில் பல இடங்களில் முறிவு. தலையில் பலமான அடி. காரில் பயணம் செய்த மற்றவர்கள் சிறிய காயங்களுடன் தப்பிவிட்டனர். ஒருமாத காலமாக இவருக்கு சிகிச்சை நடந்தது. இப்பொழுது வீட்டில் இருந்து சிறிது சிறிதாக தேறி வருகிறார். இந்த விவரங்கள் நான் பின்னர் தெரிந்து கொண்டதுதான்.

சின்னநாயகி கட்டையாக உருண்டையாக இருந்தார். முகத்திலே நிரந்தரமான வலிபோன்ற தோற்றம். யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆசிரியையாக வேலை செய்து புலம்பெயர்ந்தவர். அவருக்கு கணவரும் ஒரு மகனும் மட்டுமே.

நோயாளியும் மொழிபெயர்ப்பாளரும் அவர்களுக்குள் பேசுவது தடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் சின்னநாயகி இடைவேளைகளில் தன் சரிதத்தை எனக்குச் சொல்லிவிடுவார். மகன் அவரை இங்கே இறக்கிவிட்டு வேலைக்கு போயிருக்கிறார். பின்னேரம் வந்து அவரை வீட்டுக்கு கூட்டிப் போவார். ‘என்ரை நிலைமையை எடுத்துச் சொல்லுங்கோ’ என்று அடிக்கடி எனக்கு நினைவூட்டினார்.

நான் மொழிபெயர்ப்பதற்கு தயாராக இருந்தேன். எமூனா ஆரம்பித்தார்.

இன்று எப்படி உடம்பு இருக்கிறது?

வலிதான். வலியில்லாத ஒரு நிமிடத்தைக்கூட நான் அனுபவித்தது கிடையாது.

இரவு தூங்கினீர்களா?

நித்திரை மாத்திரை போட்டுவிட்டு படுத்தேன். மூன்று மணி நேரம் தூங்கினேன். பின்னர் எழும்பி இன்னொரு வலி மாத்திரை போட்டேன். சிறிது நடந்தேன். சுடுதண்ணீர் வைத்துக் குடித்தேன். தூங்க முடியவில்லை.

உங்களுக்கு சொல்லித்தந்த உடல் பயிற்சிகளை செய்கிறீர்களா?

பயிற்சி செய்தால் வலி இன்னும் கூடுகிறதே. ஏதோ கொஞ்சம் ஏலக்கூடியதை செய்கிறேன்.

கல்யாணவீடு, பிறந்தநாள் கொண்டாட்டம் இப்படியான நிகழ்வுகளுக்கு போகிறீர்களா?

அப்படிப் போனால் உங்களுக்கு நல்லது என்று சொல்லியிருக்கிறேன். முகத்தில் சிரிப்பு வரும்.

போகிறேன். என்னுடைய அக்கா அதுகளுக்கு கூட்டிப் போவார்.

நல்லது. நல்லது. உங்கள் சுவாச…….

திடீரென்று சின்னநாயகி எழுந்து நின்று தாதி வெப்பமானியை உதறுவதுபோல கையை உதறினார். என்ன என்று கேட்டபோது மருத்துவருடைய குறிப்பை மறந்துவிட்டார் என்றும் அதை எடுத்துவர வெளியே போகவேண்டும் என்றார். சிறிது நேரத்தில் குறிப்பை எடுத்து வந்து எமூனாவிடம் நீட்டினார்.

உங்கள் மருத்துவரும் சுவாசப் பிரச்சினை பற்றி எழுதியிருக்கிறார். இது என்ன புதிதாக இருக்கிறது?

மூச்சு விடக் கஷ்டம். பாதி மூச்சுத்தான் வருகிறது. சுவாசப்பை நிறைவதே இல்லை. உடனே களைப்பும் வருகிறது என்றுவிட்டு இளைத்தார்.

நீங்கள் உங்கள் சமூகக் கூட்டங்களில் பாடியுள்ளதாக முன்பு சொன்னீர்களே. எங்கே ஒரு பாட்டுப் பாடுங்கள் பார்ப்போம்.

உடனே சின்னநாயகியிடம் ஒரு மாற்றம் வந்தது. முகத்திலே சிரிப்பும் தோன்றியது. அழகாகக்கூட தெரிந்தார்.

சுவாசமே சுவாசமே
என்ன சொல்லி என்னை சொல்ல
காதல் என்னை கையால் தள்ள
இதயம்தான் சரிந்ததே உன்னிடம்
சுவாசமே சுவாசமே.

அவர் படித்த சங்கீதத்தில் கொஞ்சம் மீதி இன்னும் இருந்தது. இரண்டு மைல் ஓடியதுபோல அவருக்கு மேலும் கீழும் இழுத்தது. நான் திகிலுடன் மொழிபெயர்க்க வேண்டுமா என்பதுபோல பார்த்தேன்.

எமூனா வேண்டாம் என்றார்.

தொடர்ந்து சின்னநாயகி பேசினார். திடீரென்று வலி வருகிறது. சிவப்பு வலி மாத்திரை போட்டாலும் போகுதில்லை. மஞ்சள் போட்டாலும் போகுதில்லை. அது நினைத்த பாட்டுக்கு வருகிறது. நினைத்த நேரம் போகிறது.

கழுத்து வலியா?

இல்லை, கை வலி.

அங்கேயுமா? நடுச்சாமத்தில் வலி வந்தால் என்ன செய்வீர்கள்?

கையை நீட்டிக்கொண்டு சுடுதண்ணீர் பைப்பை திறந்துவிடுவேன். முதலில் குளிர்ந்த தண்ணீர் வரும். பின்னர் அது சூடாகி சுடுநீர் வரும். அதை மாறி மாறிப் பிடிப்பேன். வலி போகாது. கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.

உங்கள் கணவரையும் நீங்கள்தான் பார்க்கவேண்டுமா?

வேறு ஆர்? நான்தான் பார்க்கவேண்டும். அவர் மறதி என்னிலும் மோசம். குளிர் பெட்டியை திறந்து தலையை நுழைத்து எதையோ தேடுவார். ஆனால் மறந்துவிடும். கதவு வந்து அவர் முதுகில் அடிக்கும். அப்படியே உறைந்த கல்லைப்போல நிற்பார்.

போனதடவை உங்களுக்கும் மறதி வருகிறது என்று சொன்னீர்களே.

அதுதான் மோசம். பக்கத்து கடைக்கு போனால் என்ன சாமான் வாங்க வந்தேன் என்பது நினைவில் இல்லை. ஒருநாள் எங்கே நிற்கிறேன் என்பது மறந்துவிட்டது. என்னுடைய வீட்டு முகவரியும் ஞாபகத்தில் இல்லை. 9 வயதுச் சிறுமி ஒருத்தி என்னப் பிடித்து அழைத்துப்போய் வீட்டில் சேர்த்தாள்.

உங்கள் பெயரையும் முகவரியையும் டெலிபோன் நம்பரையும் ஓர் அட்டையில் எழுதி அதை எந்நேரமும் கழுத்தில் தொங்க விடவேண்டும். அதை கடந்த தடவை சொன்னேனே.

அதுவும் எனக்கு மறந்துபோனது.

சரி, மருந்தாவது கிரமமாக எடுக்கிறீர்களா?

Tabletஎங்கே எடுக்கிறேன். எனக்கு அதைப் பார்த்து நேரத்துக்கு நேரம் தவறாமல் தர ஒருவரும் இல்லையே. சிலவேளை முற்றிலும் மறந்துபோகிறேன்.

இப்படி எங்கள் அறிவுரைகளை உதாசீனம் செய்தால் எப்படி உடம்பு சுகப்படும்?

திடீரென்று ஒரு பழைய பாடலை சின்னநாயகி சொன்னார். ’அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி/ எடுத்த கருமங்கள் ஆகா – கொடுத்த/ உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்/ பருவத்தால் அன்றி பழா.

நான் அங்குமிங்கும் தலையை திருப்பினேன். அதையும் மொழிபெயர்ப்பதா என்பதுபோல பரிதாபமாக எமூனாவைப் பார்த்தேன். அவர் மொழிபெயர்க்கச் சொன்னார்.

சுருக்கமாக ’எது எது எப்போ நடக்கவேண்டுமோ அது அது அப்போ நடக்கும்’ என்றேன்.

உங்கள் கால்வலி எப்படி?

உடனேயே சின்னநாயகியின் முகம் மலர்ந்தது. சொல்லவேணும் சொல்லவேணும் என்று நினைத்து வந்தனான். எல்லாம் மறந்துவிட்டது. அந்த வலியை விளங்கப்படுத்தவே முடியாது. எலும்புக்குள் இருந்து தொடங்கும். வித்தியாசமானது.

அது என்ன வித்தியாசமான வலி?

வித்தியாசம் என்றால் வித்தியாசம்தான். அமெரிக்கா காசும் காசு. கனடா காசும் காசு. ஆனால் வித்தியாசம் இருக்கிறதல்லவா?

எமூனா சிரித்தார். நானும் சிரித்தேன்.

உடனேயே சின்னநாயகி உசார் வந்து இடது கால் சப்பாத்தை அதிகாரிக்கு காட்டுவதற்காக சட்டென்று குனிந்து அகற்றினார். ஒருவிதமான மோசமான நாற்றம் எழுந்தது. சதை அழுகிய மணம். காற்றின் நிறம்கூட மாறியதுபோல எனக்குப் பட்டது. எமூனா பார்க்கும் முன்னரே நான் அவர் பாதத்தை பார்த்துவிட்டேன்.

வீங்கி வரிவரியாக சிவந்துபோய் முயல்குட்டி போல உட்கார்ந்திருந்தது. அதற்குள் இருந்து என்னவோ வெளியே வரத் துடித்தது. கால் விரல்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிப்போய் வாத்தின் விரல்கள்போல ஆகிவிட்டன.

’மூடுங்கள் மூடுங்கள்’ என்று எமூனா கத்தினார். நாங்கள் அங்கேயிருந்த ஒரு மணி நேரத்தில் முதல் தடவையாக எமூனா குரலை உயர்த்தினார்.

இப்பொழுது வலி எண் என்னவென்று அமைதியாக கேட்டார்.

எந்த வலி?

எது ஆகக்கூடிய வலியோ அது?

ஒன்று என்றார். நான் மொழிபெயர்க்காமல் அவரிடம் ஒன்றா என்று கேட்டேன். ஆமாம் முதல் நம்பர் வலி. இதை மீறியது இல்லை என்றார்.

நான் எமூனாவிடம் 10 என்று சொன்னேன். அதாவது ஆகக் கூடிய வலி. அவர் அதை எழுதிக்கொண்டார்.

சில நாட்கள் கழித்து அந்தப் பெண்ணுக்கு இழப்பீடு கிடைத்துவிட்டதாக அறிந்தேன். தொகை தெரியவில்லை. ஒரு லட்சம் டொலராக இருக்கலாம். ஒரு மில்லியன் கூட இருந்தாலும் அதிசயப்படக் கூடாது. அந்த இழப்பீட்டுப் பணத்தில் என் பங்கும் இருந்தது. எமூனா வைத்திருந்த கோப்பில் சின்னநாயகியின் படம் ஒன்று இருந்தது. விபத்துக்கு முன்னர் எடுத்ததாக இருக்கலாம். நான் அதை என் பக்கத்தில் இருந்து தலை கீழாகப் பார்த்தேன். சிரித்த முகம். ஒரு கணநேரத்தில் நடந்த விபத்தில் அவர் முகம் அப்படி மாறிவிட்டது. இனிமேல் அவருக்கு அதுதான் முகம். ஒரு மில்லியன் டொலர்கூட அந்த வலி முகத்தை மாற்றமுடியாது.

* * *

ன்று என்னுடைய சம்பளக் காசு வந்தது. மொழிபெயர்த்த வேலைக்காக சீனாக்காரர் அதை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அது பேசாமல் போய் எனக்குத் தெரியாமல் என்னுடைய வங்கிக் கணக்கில் அமர்ந்துவிட்டது. காசு அனுப்பிய விவரம் குறுஞ்செய்தியாக வந்தது. ஒருவரும் எனக்கு மின்னஞ்சலில் பணம் அனுப்பியது கிடையாது. நான் கம்புயூட்டரை திறந்து என் வங்கிக் கணக்கில் சென்று பார்த்தேன். உண்மைதான், 50 டொலர் அங்கே புதிதாக உட்கார்ந்திருந்தது. என் முதல் சம்பளம். அப்படியே, அது என்ன வார்த்தை, உடம்பு எல்லாம் புளகாங்கிதம் அடைந்தது.

hands salary 1நான் மனைவியை வரச்சொல்லி கத்தினேன். நான் கீழே நிலவறையில் கம்ப்யூட்டருக்கு முன் அமர்ந்திருந்தேன். அவர் வேலையாக மேலே இருந்தார். 12 படிகளையும் ஒவ்வொன்றாகக் கடந்து கீழே வந்தார். நான் கம்புயூட்டரைக் காட்டினேன்.

அவர் நெடுநேரம் பார்த்தார். மிருகக்காட்சி சாலையில் நூதனமான ஒரு மிருகத்தைப் பார்ப்பதுபோல உற்றுப் பார்த்தார். தெரிகிறதா? என்றேன். ஓமோம் என்று அதிசயமாகத் தலையாட்டினார். 50 டொலர் அங்கே இருப்பதை அவரும் உறுதி செய்தார். என் முதல் சம்பளக் காசு.

மனம் குதித்தது. என்ன செய்வது? என்ன செய்வது? ஒரு காலத்தில் இலங்கையில் 19 வயது நடந்தபோது எனக்கு முதல் வேலை கிடைத்தது. அரசாங்க பஸ்களின் நூற்றுக்கணக்கான டயர் நம்பர்களை கணக்கெடுத்து எழுதிக் கொடுப்பது. என்னுடன் சேர்ந்து 50, 60 மாணவர்கள் வேலை செய்தார்கள். ஒரு வாரம் கழித்து வேலை முடிந்தபோது சம்பளம் தந்தார்கள். 150 ரூபா. முதல் சம்பளம். அத்தனை பெரிய காசை நான் பார்த்தது கிடையாது. என் அப்பாவும் பார்த்ததில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அன்றிரவு முழுக்க தூங்காமல் யோசித்தேன்.

மணிக்கு இரண்டு தடவை காசை எண்ணிப் பார்த்தேன். வீட்டிலேயே திருடர்கள் இருந்ததால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அடுத்தநாள் கடைக்குப் போய் ஒரு கைக்கடிகாரம் வாங்கினேன். சரியாக 150 ரூபாய். வைலர் கைக்கடிகாரம். உடனேயே நேரத்தை பார்த்தேன். 10.11. சிறிது நேரம் கழித்து 10.12. இன்னும் கொஞ்ச நேரம் கழித்து 10.13. அன்று முழுக்க ஒவ்வொரு நிமிடமும் அதைப் பார்த்தேன். என் மனம் ஓடியதுபோலவே அதுவும் போட்டியாக ஓடியது.

அது அப்போது. இப்பொழுது கனடா நாட்டில் என்னுடைய முதல் சம்பளமாக கிடைத்த 50 டொலரை என்ன செய்வது? எத்தனை பெரிய காசு? இந்திய ரூபாயில் 2600. இலங்கை ரூபாவில் 6000. யப்பானிய யென்னில் 4200. இத்தாலியன் லீராவில் 64,150. இன்றிரவு தூங்காமல் இதைப் பற்றி யோசிப்போம். நாளை இரவும் யோசிப்போம். எத்தனை கொண்டாட்டமான நிகழ்வு. அதில் கொஞ்சம் வலியும் இருந்தது.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் 
முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

***
(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

போர் என்பது பணம் | கேலிச்சித்திரங்கள்

லகில் 2016-இன் கணக்குப் படி 1.69 டிரில்லியன் டாலர் பணத்தை அனைத்து நாடுகளும் செலவிட்டுள்ளன. இப்பணம் உலக ஜி.டி.பி. எனும் உலகின் மொத்த உள்நாட்டு வருமானத்தில் 2% ஆகும். உலக அளவில் வல்லரசு நாடுகளே பெருமளவு பணத்தை இராணுவத்தில் செலவழிக்கின்றன.

இரத்த வியாபாரம்

போர்தான் பணம்

போர்வெறியர்கள்

காரணமும் விளைவும்

ஆயுத முதலை

பயமுறுத்துதல்

ஆயுத கேக்

வழக்கொழிந்தது

சிசிபஸ் (கிரேக்க புராணத்தில் ஏவோலஸ்-ன் மகன் – இவர் செய்த தவறுகளுக்காக ஒரு பெரும் பாறையை கீழிருந்து மலை உச்சிக்கு உருட்டிச் செல்லும் தண்டனையை ஹேட்ஸ் கொடுத்தார்)

நன்றி: cartoonmovement.com