Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 480

காவிரி : எந்தப் போராட்டம் வெற்றியடையும் ? கருத்துக் கணிப்பு

3

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோமென உறுதியாக இருக்கும் மத்திய அரசை எதிர்த்து தமிழகமெங்கும் கடந்த ஒரு வாரமாக போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. தொலைக்காட்சி விவாதங்களுக்கு வரும் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க நிலைய வித்வான்கள் தமிழகத்தின் எதிர்ப்பு குறித்து கொஞ்சம் கூட பயப்படுவதில்லை. முப்பதாண்டு வழக்கில் காவிரி உரிமை பறிபோனதற்கு காரணம் தாங்களல்ல, மற்ற கட்சிகள் என்று திசைதிருப்புவதிலேயே கவனமாக இருக்கின்றனர்.

உச்சநீதிமன்றமோ மோடி அரசின் சட்ட விளையாட்டிற்கு மனப்பூர்வமாக ஆதரவளித்து சேவைகள் பல செய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் எப்படி நடக்கவேண்டும், எது தீர்வைக் கொண்டு வருமெனக் கருதுகிறீர்கள்? வாக்களியுங்கள்!

காவிரிக்கான தமிழக மக்கள் போராட்டம் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும்?
(மூன்று பதில்களை தெரிவு செய்யலாம்)

  • மத்திய அரசின் அதிகாரம் தமிழகத்தில் செல்லாது எனும் நிலையை உருவாக்குதல்.
  • பாரதிய ஜனதாக் கட்சி தமிழக மக்களால் தடை செய்யப்பட வேண்டும்.
  • எடப்பாடி அரசு, எம்.எல்.ஏக்கள், எம்.பி-க்கள் பதவி விலகச் செய்தல்.
  • மேலாண்மை வாரியம் அமையாத வரை உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை ஏற்க மறுக்க வேண்டும்.
  • கமல், ரஜினி போன்ற கோழைகளை போராட்டத்தில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்.

கள ஆய்வு : புதுச்சேரி எல் & டி ஆலையில் நவீன கொத்தடிமை தொழிலாளர்கள் !

0

சிய நாடுகளிலேயே முதன் முதலாக எட்டு மணி நேரவேலையை போராடி பெற்ற புதுச்சேரியில் தொழிலாளர்களின் வாழ்க்கை இன்று எப்படிப் பயணிக்கிறது? கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்த அளவு பொறுப்புணர்வுடன் உள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு ஆய்வினை மேற்கொண்டோம்.

சேதராப்பட்டு தொழிற்பேட்டை பகுதியில் எல் & டி ஆலையில் தொழிலாளர்கள் போராடி வருவதைக் கண்டு அங்கு சென்றோம்.

இந்த தொழிற்பேட்டை பகுதியில் சுமார் 300 ஆலைகள் இயங்குகின்றன. எல் & டி போன்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் கணிசமான அளவில் உள்ளன.

இங்கு வேலையில் சேர்வதற்கான முதல் நிபந்தனையே 12 மணி நேரம் வேலை செய்வதற்கு தயார் என்றால் தான் வேலையே கிடைக்கும். 3 ஷிப்ட் என்பதெல்லாம் பொய்யாய், பழங்கனவாய்ப் போய் விட்டன. வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனம், நல்ல சம்பளம் கிடைக்கும் என நம்பி வேலையில் சேர்ந்தவர்களுக்கு முதல் பேரதிர்ச்சியே கேசுவல் தொழிலாளி (Casual Labour) என்பதுதான். அந்த கொடுப்பினை கூட இன்றைக்கு இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை சி.எல். என சேர்த்தவர்கள் தற்போது ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே பணிக்கு சேர்க்கப்படுகின்றனர்.

12 மணி நேரம் வேலை செய்த 9 ஆண்டு அனுபவம் உள்ள, ஐடிஐ முடித்த ஒப்பந்தத் தொழிலாளி வாங்கிய கூலி 180 அல்லது 190 மட்டுமே. 4 மாதம் முன்பு வரை இதுதான் நிலைமை. 15 ஆண்டுகள் வேலை பார்த்த சிஎல் தொழிலாளி வாங்கிய கூலி இதிலிருந்து பெரிய அளவில் வேறுபடவில்லை. இதில் கொடுமை என்னவென்றால் அந்த சிஎல் தொழிலாளி தற்போது ஒப்பந்தத் தொழிலாளியாகி விட்டார். இந்த ரசவாதம் எப்போது நிகழ்ந்ததென அவருக்கே தெரியவில்லை.

இந்த பன்னாட்டு கார்ப்பரேட் ஆலையில் இ.எஸ்.ஐ., பிஎஃப் என்பதெல்லாம் இன்று தொழிலாளிக்குத் தெரியாது. அந்த சிஎல் தொழிலாளிக்கு ஆரம்பத்தில் இ.எஸ்.ஐ. அட்டை தரப்பட்டிருந்தது. நோய்வாய்ப்பட்டபோது அங்கு சென்று மருத்துவம் பார்த்து வந்துள்ளார். சமீபத்தில் அப்படி ஒரு நிலைமையில் அங்கு சென்ற போது உன்னுடைய ஒப்பந்ததாரர் உனக்கு இ.எஸ்.ஐ. பணம் செலுத்தவில்லை. எனவே உனக்கு இங்கு மருத்துவம் பார்க்க முடியாது என திருப்பி அனுப்பி விட்டனர்.

புதுச்சேரியில் அமைந்துள்ள எல் & டி ஆலை

நேராக வந்து நிர்வாகத்திடம் கேட்ட போதுதான் தான் ஒப்பந்தக் கூலியாக மாற்றப் பட்டதும் அந்த ஒப்பந்ததாரர் சேலம் இ.எஸ்.ஐ.யில் பணம் செலுத்துவதாகவும் அவருக்குத் தெரிய வந்துள்ளது. இனி அவர் மருத்துவம் பார்க்க வேண்டுமென்றால் ஒன்று சேலம் போகவேண்டும் அல்லது தனியார் மருத்துவரிடம் 250ரூ கொடுத்து, அவர் சொல்லும் மருந்துகளுக்கு மேற்கொண்டு 500, 700 என செலவளிக்க வேண்டும்.

2017 -ம் ஆண்டின் இடையில் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு கூலியை உடனே கொடு எனப் போராடினர். அப்போதைக்கு வேலை நடக்க வேண்டும் என உடனடியாக கூலியைக் கொடுத்த நிறுவனம் அடுத்த மாதத்திலிருந்தே வழக்கம் போல கூலி தராமல் இழுத்தடித்து எப்போதாவது கொடுப்பது என மீண்டும் தொடங்கினர். அதே நேரம் ஒப்பந்த தொழிலாளர்களை வேலையை விட்டு நிறுத்துவது என தொடங்கினர். இதுவும் வழக்கமான ஒன்றுதான். தொடர்ந்து வேலை தரவில்லை எனில் கேள்வி கேட்கும் தொழிலாளர்களை இலக்கு வைத்து வேலையிலிருந்து நிறுத்தி நிலைமைக்கேற்ப ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது சில மாதங்கள் கழித்து மீண்டும் வேலைக்கு சேர்ப்பார்கள். ஆபத்தானவர்கள் என நிர்வாகம் கருதினால் அவர்களை மீண்டும் வேலையில் சேர்க்கவே மாட்டார்கள். 3 மாதம் பொறுத்திருந்த தொழிலாளர்கள் உடனடியாக AICCTU தொழிற் சங்கத்தைத் தொடங்கினர்.

சங்கத்தின் முதல் கோரிக்கையே கூலி உயர்வும் உரிய தேதியில் கூலி தர வேண்டும் என்பதும் தான். பல சுற்று பேச்சு வார்த்தைக்குப் பின் பத்து ஆண்டுகள் அனுபவம் உள்ள திறன் மிக்க ஒரு தொழிலாளிக்கு 8 மணி நேர வேலைக்கு 120ரூ கொடுத்தவர்கள் 180,190 என சற்றே உயர்த்தியுள்ளனர். ஆனால் அதே நேரம் சங்கம் வலுவாக உள்ள அலு ஃபார்ம் பிரிவிலிருந்த 147 தொழிலாளர்களையும் சிறுது சிறிதாக நிறுத்தி பிப்ரவரி இறுதிக்குள் மொத்தப் பேரையும் நிறுத்தி, அந்த பிரிவையே மூடிவிட்டனர். கடந்த ஒரு மாதமாக அந்தத் தொழிலாளர்கள், நிர்வாகத்தின் சட்ட விரோத வேலை நிறுத்தத்திற்கெதிராக ஆலை வாயில் முன் போராடி வருகின்றனர்.

தொழிற்துறையில் (தொழிலாளர் நலத் துறை என்ற பெயரையே அரசு மாற்றி விட்டது) முறையிட்டுள்ளனர். நிர்வாகம் இதுவரை பேச்சு வார்த்தை நடத்தக் கூட முன்வரவில்லை.
எல் & டி யின் கட்டுமானத்திற்கு தேவையான மர, அலுமினிய கருவிகளை உற்பத்தி செய்யும் ஆலையான இந்த ஆலை 1996 முதல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.

  • அலு ஃபார்ம் I,
  • அலு ஃபார்ம் II,
  • உற்பத்திப் பிரிவு,
  • மர பிரிவு

என 4 பிரிவுகளைக் கொண்ட இந்த ஆலை கட்டுமானப் பணிகளுக்கான பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த 4 பிரிவுகளிலும் வேலை செய்யும் தொழிலாளர்கள் திறன் மிக்க தொழிலாளர்களே. இவர்களின் உழைப்பு இல்லாமல் இந்த ஆலையில் உற்பத்தியே நடக்காது. ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, +2 என கல்வித் தகுதியுடன் தான் ஆகப் பெரும்பான்மையான தொழிலாளர்கள் உள்ளனர். ஒரு சிலர் மட்டுமே பத்தாவது படித்து வேலை பழகி அவர்களும் திறன்மிக்க, அனுபவம் மிக்கவர்களாக உள்ளனர்.

சுமார் 600 பேர் வேலை செய்யும் இந்த ஆலையில் 5 பேர் மட்டுமே நிரந்தரத் தொழிலாளர்கள். மற்றவர்கள் அனைவருமே எந்நேரமும் நிறுத்தப்படும் நிலைமையில் உள்ள சிஎல், தினக் கூலி அல்லது ஒப்பந்தத் தொழிலாளிகள். ஆனால் இவர்களது உழைப்பு இல்லாமல் ஆலையில் எந்தப் பொருளும் உற்பத்தி ஆகாது.

சம வேலைக்கு சம ஊதியம் என சட்டம் சொல்கிறது. ஆனால் இங்கு 8 மணி நேரம் வேலை செய்யும் நிரந்தரத் தொழிலாளிக்கு மாதத்திற்கு 35,000 -க்கு மேல் கூலி வழங்கும் நிர்வாகம் 12 மணி நேரம் அதே வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளிக்கு 180 முதல் 350 வரை தினக்கூலி தருகிறது. தினமும் 12 மணி நேரம் வேலை செய்வதாக கணக்கிட்டாலும் அதிக பட்ச மாதச் சம்பளம் ரூ. 10,000 -த்தைத் தாண்டாது. 12 மணி நேரத்தையும் தாண்டி கூடுதலாக ஓவர் டைம் வேலை செய்தால் மட்டுமே ஒரு கவுரவமான வாழ்க்கை நடத்துமளவு கூலி வாங்க முடியும்.

ஓவர் டைம் என்பது 4 மணி நேரமாயிருக்கலாம் அல்லது அடுத்த 12 மணி நேரமாகவும் இருக்கலாம் மறுநாளுக்கான ஷிஃப்ட்ஐ அவரே செய்ய வேண்டும் என்பதால் அடுத்த நாள் பகல் ஷிஃப்ட் 12 மணி நேரமாகவும் இருக்கலாம். இப்படி 36 மணி நேரம் வேலை வங்கும் நிர்வாகம் அந்தத் தொழிலாளிக்குத் தருவது மிக மிக அற்பக் கூலியே.

ஓவர் டைம் செய்தால் இரு மடங்கு கூலி தர வேண்டும் என சட்டம் சொல்கிறது. கார்பரேட்டுகளும் முதலாளிகளும் எந்த சட்டத்தை மதிக்கிறார்கள்? தொழிலாளர் ஆய்வாளருக்கு இது தெரிந்தேதான் இந்த சட்டம் கேலிக்கூத்தான ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கிறது.

சராசரியாக ஒரு தொழிலாளி, அவரது மனைவி, இரு குழந்தைகள் கொண்ட குடும்பம் என எடுத்துக் கொண்டால் இன்றைய நிலைமையில் ஒரு மாத செலவு எவ்வளவு என கேட்ட போது தொழிலாளிகள் கூறியது: மிக மிக குறைந்த வீட்டு வாடகை ரூ. 2000. மின்கட்டணம், தண்ணீருக்கு ரூ.500. 10-க்கு 15 அடி கொண்ட ஒரு அறைதான் இது. இதன் ஒரு மூலையில் மேடை போல ஒரு ஏற்பாடு செய்து கொண்டு அடுப்பு வைத்துக் கொள்ள வேண்டும். சமையலறை, வரவேற்பறை, படிப்பறை, படுக்கையறை எல்லாமும் இது ஒன்றுதான். இந்த வீடும் முதன்மைச் சாலையை விட்டு உள்ளடங்கிய ஒரு கிராமத்தில் தான் கிடைக்கும்.

அந்த ஊரில் ஆரம்பப் பள்ளி தவிர ஏதும் இருக்காது. உயர்நிலைப் பள்ளி என்றால் தூரமாகப் போகவேண்டும். வேலை நிலைமைகளில் கொண்டு சென்று விட வாய்ப்புகள் மிகக் குறைவு. தனியார் பள்ளி என்றால் கல்வியும் தரமாயிருக்கும், பள்ளிக்கூட வேனிலேயே அவன் வந்து அழைத்துச் சென்று விடுவான். சிக்கல் இல்லை என தனியார் பள்ளியிலேயே குழந்தைகளைச் சேர்க்கின்றனர். ஒரு குழந்தையின் ஒரு மாதப் படிப்புச் செலவு மட்டும் போக்குவரத்து, கல்விக் கட்டணம் உட்பட ரூ.4000. 2 குழந்தைகளின் படிப்புச் செலவு என்றால் ரூ. 8000 ஆகிவிடும். 4 பேருக்கான உணவு செலவு மட்டும் ரூ.3500 ஆகும். இதுவே ரேசன் அரிசியும் குருனை அரிசியும் என கலந்து செய்வதால்தான். மருத்துவச் செலவு மாதத்திற்கு சராசரியாக ஆயிரம் வரை ஆகும். இங்கு எரிவாயு உருளை வெளிச் சந்தையில்தான் வாங்க வேண்டும்: அதற்கு மாதம் 1500 ஆகும். மொத்தமாகப் பார்த்தால் 12,500 முதல் 16,500 வரை ஆகும். இது மிக மிகக் குறைவாகப் போடும் கணக்கு.

வெளியூர் தொழிலாளி என்றால் மாதம் ஒரு முறையாவது ஊருக்குப் போகும் செலவு வரும். அருகாமை என்றால் ரூ. 500-ம் தூரமான ஊர் என்றால் ரூ. 1000 -ம் வரையும் ஆகும். பேருந்துக் கட்டணம் கூடிய பின் ஊர் போவது பற்றி யோசிக்கின்றனர். ஆக கார்ப்பரேட் கம்பனியில் வேலை செய்வதாக பேரு. நல்லது கெட்டதுக்கு ஊருக்குக் கூடப் போக முடியாத அவலத்தில் வாழ்க்கை.

இப்படி நொந்து, நொம்பலப்பட்டு தினம்தினம் செத்து மடிவதற்கு பதில் ஊருக்குப் போய்விடலாமா என்றால் அங்கு ஒன்றுமேயில்லை. காவிரியின் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வந்து ஆண்டுகள் பல ஓடிவிட்டன. விவசாயமே இல்லை. ITI முடித்து விவசாய வேலையும் இல்லாமல் டீக்கடையில் வேலை பார்த்த இளைஞர் ஒருவர் எல் & டியில் வேலை என விண்ணப்பிக்க, வேலைக்கு எடுத்த நிர்வாகம் பயிற்சியும் தந்து ஒப்பந்தத் தொழிலாளியாகச் சேர்த்துள்ளது. கொஞ்ச காலம் கழித்து நிரந்தரமாக்குவார்கள் என நம்பி, திருமணமும் செய்து கொண்ட அந்த இளைஞர் இன்று தெருவில் நிற்கிறார்.

ஆலையின் அருகில் உள்ள இளைஞர்களோ, “சிறப்புப் பொருளாதார மண்டலம் வருகிறது. நிலம் கொடுத்தால் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலையும் கிடைக்கும் என புதுச்சேரி அரசு சொன்னதை நம்பி 14 ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தைக் கொடுத்து விட்டோம். இன்று வரை சிறப்புப் பொருளாதார மண்டலமும் வரவில்லை. அரசு வேலையும் இல்லை. நிலத்தைக் கொடுத்து விட்டதால் விவசாயமும் இல்லை. வேறு வழியின்றி ஆலையில் வேலைக்குச் சேர்ந்தோம். 10,12 ஆண்டுகள் ஆகிவிட்டன. எங்களுக்கு சொந்த வீடு என்பதால் வாடகையில்லை. மற்றபடி எல்லா செலவுகளும் எங்களுக்கும் உண்டு. முன்பு சொந்த நிலத்தில் வேலை செய்தோம். இன்று அடிமைகளாக உழல்கிறோம்” என போராட்டத்தில் குதித்துள்ளனர்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக திறன் மிக்க தொழிலாளியாய் உள்ளவரின் நிலைமையும் இதேதான்.

அதில் ஒரு தொழிலாளி சொல்கிறார்; “ 15 ஆண்டுக்கும் மேலாகிறது. இந்த ஓட்ட டிவிஎஸ்50 வண்டியை மாற்ற வக்கில்லை. ஊருக்குள் சிரிப்பாய் சிரிக்கிறார்கள்” என நொந்து போய் சொல்கிறார். 16 வருடமாக வேலை செய்யும் ஒரு தொழிலாளிக்கு இன்று இரு வருடமாக இ.எஸ்.ஐ. கிடையாது. பி.எஃப். 70,000ரூ இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு எந்த ஆதாரமும் அவரிடம் இல்லை.

2014 வரை நிர்வாகம் தனது சி.எல்., ஒப்பந்தத் தொழிலாளிகள் யாருக்கும் போனசே கொடுத்ததில்லை. தொழிலாளர்கள் தொடர்ந்து நிர்ப்பந்தித்ததன் பின் 1200 – 1500 கொடுத்துள்ளனர். 2017-ல் சங்கம் கட்டிய பின் பேச்சு வார்த்தை நடத்திய நிர்வாகம் அடாவடியாக 8.33% தான் கொடுப்பேன் என போனசு கொடுத்துள்ளது. ஆனால் நிரந்தரத் தொழிலாளிக்கு இந்த ஆண்டு 20% போனசு கொடுத்துள்ளது. ஆனால் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளியை விட ஒன்றரை மடங்கு அதிகமாக உற்பத்தி கொடுக்க வேண்டும். அப்படி தரவில்லை என்றால் வேலையிலிருந்து விரட்டி விடுவார்கள்.

கடந்த 20 ஆண்டில் மட்டும் இப்படி விரட்டப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,000 என நிர்வாகமே கூறுகிறது. அலு ஃபார்ம் தொழிலாளிகளை சங்கம் வைத்ததற்கு வேலையிலிருந்து நிறுத்தியதால் அந்தத் தொழிலாளர்கள் தொழிலாளர் வாரியத்தில் முறையிட்டபோது நிர்வாகத்தின் வாக்கு மூலமாக “ 20 ஆண்டுகளில் 10,000 பேரை நிறுத்தியுள்ளோம். அவர்களும் வந்து வேலை கொடு எனக் கேட்டால் வேலை தர முடியுமா?” என நிர்வாகம் ரைட் ராயலாக சட்டம் பேச தொழிலாளர் அதிகாரியோ இதை அங்கீகரித்து புன்முறுவல் பூத்து நிர்வாகத்தின் கைகூலிகள் தான் என நிரூபித்துள்ளனர்.

உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களின் கதியே இதுதான் என்றால் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் கதி என்னவாயிருக்கும்? அப்படி வந்த பெண்களிடம் பேசிய போது: “2009-ம் ஆண்டிலிருந்து வேலை செய்யறம். மொத 3 வருசத்துக்கு 8 மணி நேரம் வேலை செஞ்சா கூலியா 50 ரூபா தந்தாங்க. பொறவு அடுத்த 3 வருசத்துக்கு கூலி 120 ரூவான்னு நிர்வாகம் சொல்லிச்சு. ஆனா ஒப்பந்தகாரரு இந்தக் கூலியை ஒரு வருசங் கழிச்சிதான் தந்தாரு. அதுவரைக்கும் பழைய 50-ததான் தந்தார். நாங்க கேட்டால் அதை மதிக்கிறதேயில்லை. நிர்வாகமும் கண்டுக்குறதில்ல. அடுத்த மூனு வருசங் கழிச்சி நிர்வாகம் கூலி 140-ன்னு சொல்லிச்சு. வழக்கம் போல ஒப்பந்தக்காரரு ஒரு வருசத்துக்கு பழைய 120 கூலிதான் கொடுத்தார். சங்கம் வச்ச பொறவு 258 என கூலி கூடுனாலும் பிடிச்சம் போக கையில் கெடைக்றது 210 தான்.

மாதிரி படம்

ESI, PF பிடிக்கிறதா சொல்றாங்க. ஆனா ESI ஆஸ்பத்திரிக்குப் போனப்ப உங்களுக்கு இல்லைன்னு சொல்லிட்டாங்க. நிர்வாகத்துகிட்ட கேட்டப்ப ஒப்பந்தக்காரரக் கேளுன்ட்டாங்க. அவரோ ஒங்களுக்கு சேலத்தில்தான் ஆஸ்பத்திரி என சொல்லிட்டாரு. பி.எஃப். பத்தி கேட்டப்போ கட்றோம்னு சொல்றாங்க. அதுக்கு எந்த ஆதாரமும் எங்ககிட்ட இல்ல. இப்ப 2009 -லிருந்து 27 பேர் வேலை செய்யரம். அதுக்கு முன்னாடி 10 வருசமா வேல செஞ்ச 49 பேர நிறுத்திட்டுதான் எங்க 27 பேர வேலைக்கு எடுத்தாங்க. இன்னிக்கு பாதிப் பேருக்கு வேலைன்னா மறுநா அடுத்த பாதிப் பேருக்கு வேலன்னு மாசத்துல பாதி நா…தான் வேலை கெடைக்கும். ஊருக்குள்ள நெலத்தயெல்லாம் அரசாங்கத்துக்கு கொடுத்துட்டதால அங்க எந்த வேலயுமில்லனுதான் கம்பெனிக்கு வந்தம்.”

“இங்க நிக்கவிடாம வேல வாங்குறாங்க. சீக்கிரமா மிசினு பக்கம் கூட்டி முடிச்சுட்டம்னா மரம் வெட்டு, புல்லு வெட்டுன்னு சொல்றது மட்டுமில்லாம கக்கூசு கூட கழுவச் சொல்வாங்க. செய்யலன்ன வேலைய விட்டு தொரத்திடுவாங்க. இப்ப ஒரு 3 வருசமாத்தான் போனசுன்னு 1500 ரூபா கொடுத்தாங்க. அதுக்கு முன்னாடி பைசா… கெடையாது. இப்ப சங்கம் வச்ச பின்னாடி இந்த வருசம் 6000ரூ போனசு கெடச்சது.”

“3000 -க்குள்ள சம்பளம் வாங்கி எப்படி குடும்பம் நடக்குதுன்னு கேக்கறீங்களா? ஏதோ ரேசன்ல போட்ற அரிசிய வச்சி கஞ்சி வச்சி காலத்த ஓட்றம். இப்ப இங்க ரேசன்ல அரிசி போடாததால தமிழ்நாட்லருந்து காசு கொடுத்து வாங்கறம். பிள்ளங்களயெல்லாம் அரசாங்கப் பள்ளிகூடத்துல விட்ருக்கம். ஊருக்குள்ள அரசாங்கம் தந்த சொந்த வீடு. இப்ப இந்தக் கஞ்சிக்கும் கேடு வரும் போலருக்கு. 10 பேர வேலயவிட்டு நிறுத்தரதா சொல்லிட்ருக்காங்க… சங்கத்துல சொல்லியிக்கம்” என தங்களின் வேதனைகளை பகிர்ந்து கொண்டதோடு போராடிப் பார்ப்பது என உறுதியுடன் உள்ளனர். இந்தப் பெண்களில் சிலரது கணவன்மார்கள் டாஸ்மாக் புண்ணியத்தில் குடும்பத்தை சீரழித்து வருவதாக வேதனையுடன் கூறினர்.

ஒப்பந்த தொழிலாளியாக இங்கே வேலைக்கு வந்து கருங்காலிகளாக நிர்வாகத்துக்கு சேவை செய்து அதற்கான பரிசு போல அதிகாரிகளின் பினாமிகளாக உள்ளவர்கள்தான் தற்போதைய ஒப்பந்தகாரர்கள். யாரிடமும் லைசன்ஸ் கிடையாது. 2011 -ல் தொடர்ச்சியாக 4 ஒப்பந்தக்காரர்கள் சம்பளம் தராமலே ஓடிவிட்டனர். நிர்வாகமும் கைவிரித்து விட்டனர். ஒப்பந்தக் கூலிகளாக சேர்ந்தால் முதல் மாதம் சம்பளம் தரமாட்டார்கள். 2-வது மாதத்திலிருந்துதான் சம்பளம் கிடைக்கும். இதையெல்லாம் கேட்டால் வேலையிலிருந்து விரட்டிவிடுவார்கள்.

இந்தப் போராட்டத்தைக் கூட கொச்சைப் படுத்தும் வகையில் கொத்தனார் வீட்டைக் கட்டுவதால் அவர் அந்த வீட்டிலேயாவா குடியிருக்க முடியும்? போ… என்றால் போய்விட வேண்டும். இதுதான் சட்டம் என மோடி இருக்கும் தைரியத்தில் அதிகாரிகள் பேசுகிறார்கள். இவர்களின் யோக்கியதை என்ன? Ultra. Dt. என்கிற 2 இயந்திரங்கள் ரிப்பேராகி நின்றுபோய் விட்டன. முன்பென்றால் தொழிலாளர்களே அதை சரி செய்து உற்பத்தி பாதிக்காத வண்ணம் தொடர்ந்து இயக்குவார்கள்.

ஏனென்றால் வேலை நடக்கவில்லை எனென்றால் வேலை இல்லை என்றால் கூலி இல்லை. குடும்பம் சிக்கலாகும். இப்போதும் அதை சரி செய்யும்படி கூறியதற்கு தொழிலாளர்களோ எங்களுக்கும் தெரியாது என கூறி விட்டனர். ஏன்? இனிமேலும் கொத்தடிமைகளாக இருக்கக் கூடாது என்பதற்குதான். மெத்தப் படித்த மேதாவிகளான அந்த பொறியியல் வல்லுனர்கள் சம்பந்தப்பட்ட இயந்திரங்களின் கம்பனிகளுக்கு ஃபோன் செய்து அங்கிருந்து ஆட்கள் வந்து ரிப்பேர் செய்து கொண்டே………… இருக்கிறார்கள். வேலை தான் முடியக் காணோம்.

சேதராப்பேட்டை தொழிற்பேட்டைப் பகுதியில் இந்த L&T கார்ப்பரேட் நிறுவனம் தான் மற்றெல்லா ஆலைகளுக்கும் கொடூரமான பகாசுரக் கொள்ளைச் சுரண்டலுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது.

இந்த L&T கட்டுமான ஆலை தவிர முதன்மையான L&T TLT என்ற நிறுவனம் ஆயிரக்கணக்கானவர்களை 20, 30, ஆண்டுகளாக கொடூரமாக தினக் கூலி, ஒப்பந்தக் கூலி, சி.எல். என சுரண்டிக் கொழுத்து வருகிறது. ஒப்புக்கு சில தொழிலாளர்களை நிரந்தரமாக வைத்துள்ளது. இவர்களில் பலரும் இதேபோல சி.எல்.-ஆக வேலைக்குச் சேர்ந்து, விரட்டப்பட்டு, பிறகு போராடி, வழக்கு நடத்தி நிரந்தரமானவர்களே. இன்று அதே போலப் போராடும் இந்தத் தொழிலாளிகளுக்கு ஆதரவு கூட தரத் தயாராயில்லாத மனநிலைக்கு தொழிற்சங்க வாதம் அவர்களை பாட்டாளி வர்க்க உணர்வற்றவர்களாக மாற்றி வைத்துள்ளது. இந்த ஆலையில் ஒரிசா மாநிலத் தொழிலாளர்கள் கூடுதலாக உள்ளனர்.

சமீபத்தில் இந்த ஆலையில் வேலை செய்த ஒரு ஒரிசா ஒப்பந்தத் தொழிலாளி வேலையின் போதே மாரடைப்பால் இறந்து போனார். அவருக்கான நட்ட ஈடு தர வேண்டும் என வேலை இழந்த கட்டுமான உற்பத்தி பிரிவு தொழிலாளர்கள் போராடி 15 லட்சம் வாங்கித் தந்துள்ளனர். அவர்கள் இணைந்துள்ள AICCTU சங்கத்தின் இந்தப் போராட்டத்தில் நிரந்தரத் தொழிலாளர்களின் சங்கம் பங்கேற்கவில்லை. இது பாமக கட்சியின் வழிகாட்டலில் உள்ள சங்கம். வெறும் பொருளாதாரப் போராட்டங்கள் தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வைத் தராது என்பதற்கு இந்த நிகழ்வே சான்று.

எனவே லெனின் கூறியது போல சங்கங்கள் தொழிலாளர்களைப் பயிற்றுவிக்கும் புரட்சிப் பள்ளிகளாகச் செயல்பட வேண்டிய அவசர அவசியம் இன்றுள்ளது. இல்லை என்றால் தொழிலாளர் நலச் சட்டங்கள் முற்றாக ஒழிக்கப்பட்டு, அமர்த்து – துரத்து ( HIRE&FIRE ) என்கிற அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் சட்டமே இங்கும் எதிர்ப்பின்றி அரங்கேற்றப்பட்டு விடும்.

120 வருடங்களுக்கு முன் இதே சுரண்டல் நிலைமைகளில் வாழ்ந்த ரசிய தொழிலாளி வர்க்கம் ரஷ்ய மன்னருக்கும் , முதலாளிகளுக்கும் எதிராக போராடி புரட்சி நடத்தியதன் மூலம் ஆலைகளை தனதாக்கி கொண்டது. அதன் தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் தலைவர் வி. சுப்பையா தலைமையில் புதுச்சேரியில் 8 மணி நேர வேலைக்காக நடத்திய போராட்டத்தால், 1936 ஜூலை 30-ல் 12 ஜவுளித் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் 8 மணி நேர வேலைக்கான சட்டத்தை ஃபிரான்ஸ் இயற்றியது. 82 வருடங்கள் கடந்த நிலைமைகளில் அப்படிபட்ட போராட்ட களத்திற்கு மீண்டும் புதுச்சேரி காத்துக்கொண்டிருக்கிறது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.

காவிரி : தன்னுரிமைக்காக போராடும் தமிழகம் !

0

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர் போராட்டம்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றால் தமிழகத்தின் தன்னுரிமைக்காக போராடுவதே ஒரே தீர்வு என்ற முழக்கத்தை முன் வைத்து, கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் 3.4.2018 அன்று பு.மா.இ.மு தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
குடந்தை.

*****

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் போராட்டம்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து 3.4.2018 அன்று நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.

*****

சென்னை பல்கலைக்கழக மாணவர் போராட்டம்…

காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்காததையும் ஸ்டெர்லைட், நியூட்ரினோ, ONGC, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற மக்கள்விரோத திட்டங்களைத் தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது எனவும். மத்திய – மாநில அரசை கண்டித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட (APSC) மாணவர்கள் 3.4.2018 அன்று நண்பகல் 2:00 மணியளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தது போலீசு.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.

*****

கும்பகோணம் வழக்கறிஞர்கள் போராட்டம்…

காவிரி பிரச்சனையையொட்டி குடந்தை வழக்கறிஞர் சங்கம் சார்பாக 3.4.2018 அன்று ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
குடந்தை. தொடர்புக்கு : 97892 61624.

*****

காஞ்சிபுரம் பு.ஜ.தொ.மு. பிரச்சாரம்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட பு.ஜ.தொ.மு. சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. பெரும்பான்மையான பயணிகளும், சிறு கடை வியாபாரிகளும் நின்று ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம் மாவட்டம்.

*****

 


கமல் பேசுவது எந்த செக்சனிலும் வராது ! கருத்துப் படம்

0

ஸ்டெர்லைட் : கமல்ஹாசன் வருகை!

“நடிகனாகவோ, அரசியல் கட்சி தலைவராகவோ இங்கு வரவில்லை. ஓட்டுக்காகவோ, புகைப்படம் எடுக்கவோ இங்கு வரவில்லை. நான் இங்கு தனி மனிதனாகவே வந்துள்ளேன்.”
-கமலஹாசன்

படம்: வேலன்

இணையுங்கள்:

காவிரி இறுதித் தீர்ப்பு: ஒருமைப்பாட்டைப் பிளக்கவிருக்கும் கோடரி!

1

“உச்ச நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு தமிழகத்தின் தண்ணீர் அளவைக் குறைத்து விட்டது, மேலாண்மை வாரியம் குறித்து நேர்படக் கூறவில்லை, பற்றாக்குறை காலத்தில் தண்ணீர்ப் பகிர்வு குறித்து மவுனம் சாதிக்கிறது” – என்பன போன்ற விசயங்களெல்லாம் தீர்ப்பில் நமக்குப் பளிச்சென்று தெரிகின்ற அநீதிகள்.

இந்தியாவின் நதிநீர் வழக்குகளிலேயே இவ்வளவு அநீதியான தீர்ப்பு வந்ததில்லை என்பது ஒருபுறமிருக்க, இத்தீர்ப்பு மற்ற மாநிலங்களின் நதிநீர் சிக்கல்கள் மீது தோற்றுவிக்கக் கூடிய விளைவைப் பார்ப்போம்.

“மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர்த் தாவாக்கள் சட்டம், 1956”-ன்படி, தீர்ப்பாயங்கள்தான் நதிநீர்ச் சிக்கல்களில் தீர்ப்பளிக்கும் இறுதி அதிகாரம் கொண்டவை. தீர்ப்பாயத்தின் முடிவின் மீது மேல்முறையீடு வந்தபோது, உச்ச நீதிமன்றம் அதனை மீண்டும் தீர்ப்பாயத்தின் பரிசீலனைக்கு விட்டிருக்க வேண்டும். காவிரி மேல்முறையீட்டினை உச்ச நீதிமன்றம் விசாரித்தது மட்டுமின்றி, இடைக்காலமாக பல தீர்ப்புகளை வழங்கியது. இப்போது தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பையே மாற்றியிருக்கிறது. இதனை முன்மாதிரியாகக் கொண்டு ஏற்கெனவே தீர்ப்பாயத்தினால் தீர்க்கப்பட்ட ஆற்றுநீர் தாவாக்களில் சம்மந்தப்பட்ட மாநிலங்களெல்லாம் அந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டுக்கு வரும். இனி தீர்ப்பாயங்களே பொருளற்றவையாகிவிடும்.

தமிழகத்தின் “பாரம்பரிய உரிமை” என்பதைப் புறக்கணித்து,  “நியாயமான பங்கீடு” என்ற அடிப்படையில் கர்நாடகத்திற்கு சலுகை வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு, பல ஆற்றுநீர் தாவாக்களில் எதிரொலிக்கும். சுரங்கங்களையும் கனிம வளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கூறு போட்டு விற்று வருகிறது பாஜக-வின் சட்டிஸ்கர் அரசு. மகாநதியின் மேல்பகுதியில் இருக்கும் சட்டிஸ்கர், கீழ்ப் பகுதியில் ஒரிசாவின் சமவெளிப்பகுதி விவசாயத்துக்குப் போகும் நீரை, தனது மாநிலத்தின் கார்ப்பரேட் கனிம நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் திருப்புகிறது. தனது விவசாயிகளைப் பாதிப்பதாகச் சொல்லி ஒரிசா இதனை எதிர்க்கிறது. சட்டிஸ்கர் மட்டுமல்ல, பல்வேறு ஆறுகளில் “மேல் பயன்பாட்டு உரிமை” கொண்ட மாநிலங்களான ம.பி, ஜார்கண்ட், இமாச்சல் பிரதேசம், சிக்கிம் போன்ற பல மாநிலங்களும் “புதிய பயனாளி“ என்ற முறையில் கர்நாடகத்துக்கு, காவிரித் தீர்ப்பு வழங்கியிருக்கும் இந்த சலுகையைத் தங்களுக்கும் வழங்கக் கோரும்.

ஆற்று நீர் பங்கீட்டில் நிலத்தடி நீரையும் சேர்த்திருக்கிறது இத்தீர்ப்பு. இந்த அநீதி, இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் வேறு எங்கும் நடந்ததில்லை. காவிரித் தீர்ப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த தவறான முன்னுதாரணத்தைக் காட்டி, பல மாநிலங்களும் புதிதாக தமக்குள் சச்சரவைத் தொடங்கும். இது மட்டுமல்ல. ஆற்று நீர் பகிர்வில் நிலத்தடி நீரை சேர்த்ததன் மூலம் வரைமுறையற்ற நிலத்தடி நீர் கொள்ளைக்கு மறைமுகமாக உரிமம் வழங்கியிருக்கிறது இத்தீர்ப்பு. இத்தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் நிலத்தடி நீர்க் கொள்ளைக்கு மாநில அரசுகள் பச்சைக்கொடி காட்டும். சூழலியல் பேரழிவுதான் இதன் விளைவாக இருக்கும்.

கர்நாடகத்தின் மொத்த குடிநீர்த் தேவையில் பாதி பெங்களூருவுக்குப் போகிறது. பெங்களூரு பயன்படுத்தும் குடிதண்ணீரில் பாதி வீணடிக்கப்படுகிறது. மீதியில் பெரும்பகுதி மேட்டுக்குடியினரின் ஆடம்பரக் களியாட்டத்துக்குப் போகிறது. பெங்களூரு வெளியேற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் தமிழகத்திற்கு காவிரி நீராக அனுப்பப் படுகிறது. இது தொடர்பாக கர்நாடக அரசின் ஆவணங்களை வைத்தே தமிழக அரசு கர்நாடகத்தின் மீது தொடுத்துள்ள வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. “நியாயமான பங்கீடு” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பெங்களூருவுக்கு தண்ணீரை ஒதுக்கியிருக்கும் இந்த தீர்ப்பு,  மேற்கண்ட “அநியாயங்கள்” பற்றி மூச்சு விடவில்லை. நாடு முழுவதும் நகரமயமாக்கம் மென்மேலும் அதிகரித்து வருகின்ற சூழலில், நகர்ப்புற மேட்டுக்குடி வர்க்கத்தின் தேவையை முன்னிறுத்தி, எல்லா மாநிலங்களும் “நியாயமான” பங்கீட்டினைக் கோருவதற்கான அடிப்படையை “பெங்களூரு முன்னுதாரணம்” உருவாக்கியிருக்கிறது.

தண்ணீரைக் குடிக்கும் பெங்களூரு தீம் பார்க்குகள்

ஒரு ஆற்றின் படுகைக்கு வெளியில் இருக்கும் இடங்களுக்கு அந்த ஆற்றிலிருந்து நீர் ஒதுக்குவதை சர்வதேச விதிகள் ஏற்பதில்லை. ஆனால்  பெங்களூரு நகரின் 65 விழுக்காட்டுப் பகுதி காவிரிப்படுகைக்கு வெளியில் இருந்த போதிலும், அதற்கு நீர் ஒதுக்கியிருப்பதனால், பிற மாநிலங்களும் இதே வழியைப் பின்பற்றி, தத்தம் மாநிலத்தில் படுகைக்கு வெளியில் இருக்கும் நகரங்களின் நீர்த்தேவையும் கணக்கில் சேர்த்து புதிய புதிய நீர்த்தகராறுகளை உருவாக்குவதற்கான வழியை இத்தீர்ப்பு திறந்து விட்டிருக்கிறது.

ஆறுகளை “நாட்டின் பொதுச்சொத்துகள்” என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம், அரசமைப்பு சட்டப்படி, மாநிலங்களின் உரிமையாக உள்ள ஆறுகளை மத்திய அரசின் அதிகாரத்துக்கு கடத்தும் பணியை இத்தீர்ப்பு செய்திருக்கிறது. மாநிலங்களை பிரித்தாள்வதற்கும், ஆதிக்கம் செய்வதற்குமான ஆயுதமாக நதிநீர்ச் சிக்கல்களை இந்திய அரசு ஏற்கனவே பயன்படுத்தி வருகிறது. ஒற்றைத் தீர்ப்பாயம் என்ற அமைப்பின் மூலம் தேசிய இனங்கள் மற்றும் மாநிலங்கள் மீதான தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கும் மோடி அரசு முயற்சிக்கிறது. டில்லியின் சர்வாதிகாரத்துக்கு கொல்லைப்புறக் கதவைத் திறந்து விட்டிருக்கிறது இத்தீர்ப்பு.

ஆறுகளை மாநிலப் பட்டியலிலிருந்து மத்தியப் பட்டியலுக்கு கடத்துவதன் மூலம் தண்ணீர் தனியார்மயக் கொள்கையை நாடு தழுவிய அளவில் திணிப்பதற்கான வாய்ப்பையும் இத்தீர்ப்பு ஏற்படுத்தித் தருகிறது. ஆற்று நீர் சிக்கல்களில் மாநில அரசுகள் குறுகிய பார்வையுடன் நடந்து கொள்வதாகவும், மத்திய அரசு நடுநிலையுடன் நடந்து கொள்ளும் என்றும் ஒரு மயக்கம் மக்களிடம் திட்டமிட்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களின் அதிகாரத்திலிருந்து ஆறுகள் பிடுங்கப்பட்டவுடனேயே தண்ணீரைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை டில்லி தீவிரப்படுத்தும். எந்த மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஆனாலும் “காசு கொடுத்தால்தான் பாசனத்தண்ணீர்” என்ற விதியின் அடிப்படையில் நாடு முழுவதும் “சமத்துவத்தை” நிலைநாட்டும் முயற்சி தொடங்கும். “சமத்துவம்” நிலைநாட்டப்பட்டுவிடும்.

தமிழக விவசாயிகளின் நெஞ்சின் மீது இறங்கியிருக்கும் இறுதித்தீர்ப்பு என்ற இந்தக் கோடரி, இந்தியா முழுவதும் ஆற்று நீர்த் தகராறுகளைத் தீவிரப்படுத்தும். சொல்லிக் கொள்ளப்படும் இந்திய ஒருமைப்பாட்டையும் பிளக்கத் தொடங்கும்.

புதிய ஜனநாயகம் – ஏப்ரல், 2018

காவிரியை மீட்போம் : போராடும் தமிழகம் !

0

மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் டில்லிக்கு எதிராகத் தமிழகம் குமுறிக் கொண்டிருக்கிறது. தமிழகப் பிரதிநிதிகளை சந்திக்க மறுக்கிறார் மோடி. “பாரதிய ஜனதாவை வெற்றி பெற வையுங்கள். காவிரித் தண்ணீர் தமிழகத்துக்கு வரும்” என்கிறார் அக்கட்சியின் தேசிய செயலர் எச்.ராசா. இது வெறும் வாய்க்கொழுப்பு பேச்சல்ல. “வல்லுறவுக்கு ஒப்புக்கொள். வாழ்க்கை கொடுக்கிறேன்” என்பதுதான் தமிழ் மக்களுக்கு மோடி அளிக்கும் மன் கி பாத். மோடி அரசின் அடிமைகளாக ஆளும் தமிழக அரசோ நீதிமன்ற அவமதிப்பு என்று நாடகம் நடத்துகிறது.

கல்லானாலும் கணவன் என்ற புனிதக்கோட்பாடு எப்படி மோசடியானதோ அத்தகையதுதான் சமத்துவமும் சமநீதியும் இல்லாத தேசிய ஒருமைப்பாடு. இந்திய அரசு வகுத்த சட்டத்தை, இந்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவதற்கு அவர்களே மறுக்கும்போது, இந்திய அரசின் அதிகாரத்துக்கும், சட்டங்களுக்கும் தமிழகம் கட்டுப்பட வேண்டுமெனக் கூறும் உரிமையோ அருகதையோ இந்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் கிடையாது. தன்னுரிமை என்பது ஒரு தேசிய இனத்தின் உரிமையை உத்திரவாதப்படுத்தும் அடிப்படை உரிமை. தன்னுரிமைக்கு குரல் கொடுப்பதன் மூலம், இந்திய அரசின் ஒருமைப்பாட்டு மாய்மாலத்துக்கும் பாரதமாதா பஜனைக்கும் நாம் முடிவு கட்டவேண்டும்.

“முறித்துக் கொண்டால் தண்ணீர் வந்துவிடுமா?“ என்று குறுக்குக் கேள்வி கேட்பார்கள். வருமா, வராதா என்பது எதிர்காலத்தில்தான் தெரியும். அதே நேரத்தில், வராது என்பதைத்தான் சேர்ந்திருந்த காலம் உணர்த்தியிருக்கிறது. படிப்படியாக காவிரி உரிமையை இழந்திருக்கிறோம் என்பதுதான் ஐம்பதாண்டு வரலாறு காட்டும் உண்மை. 1924 இல் 575.68 டி.எம்.சி, 1984 வரை சராசரி 361, 1991 இடைக்காலத் தீர்ப்பில் 205, 2007 தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் 192, 2018 உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் 177.25 டி.எம்.சி. இது தான் தமிழகத்துக்கு தேசிய ஒருமைப்பாடு அளித்திருக்கும் பரிசு.

பல மாநிலங்களைக் கடந்து பாயும் காவிரி போன்ற ஆறுகளின் மீது மாநிலங்கள் பெற்றுள்ள உரிமை என்பது இந்திய அரசியல் சட்டத்தால் வழங்கப்பட்டதல்ல. ஆறுகளின் மீதான மக்கட் சமூகத்தின் உரிமை என்பது அரசியல் சட்டத்துக்கும், மாநிலப் பிரிவினைக்கும் முந்தையது. அது அரசியல் சட்டம் போட்ட பிச்சையல்ல. மக்கட் சமூகங்கள் அனுபவித்து வந்த இறையாண்மை மிக்க உரிமை. அந்த உரிமைகளும், அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எண்ணற்ற நதிநீர் ஒப்பந்தங்களும் அங்கீகரிக்கப்படும் என்று வாக்களிக்கப்பட்டதன் அடிப்படையில்தான் இந்தியா என்ற “பெரிய ஒப்பந்தம்” உருவானது.

கூட்டாட்சிக் கோட்பாட்டின்படி, ஒரு மாநிலம் என்பது அரை இறையாண்மையைக் கொண்ட (quasi sovereign) தேசம். தேசிய இனத்தின் அடிப்படையில் அமைகின்ற தனி நாட்டின் இன்னொரு வடிவம்தான் மாநிலம். ஒன்றிய அரசின் அரசியல் சட்டத்தின் கீழ் மைய அதிகாரம் என்று வரையறுக்கப்பட்டவை தவிர்த்த அனைத்தும் மாநிலங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டவைதான். அதனால்தான் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் சர்வதேச விதிகளான ஹெல்சிங்கி விதிகள் போன்றவற்றை இந்திய நதிநீர் தீர்ப்பாயங்களும் நீதிமன்றங்களும் பயன்படுத்துகின்றன.

இருப்பினும் கர்நாடக அரசு மட்டுமின்றி, இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் இந்த சர்வதேச விதிகள், நெறிகள் ஆகிய எதுவும் தங்களைக் கட்டுப்படுத்தாது என்றும், தமிழகத்தை தீண்டாச்சேரியாக நடத்தும் புதிய வகை மனுநீதிதான் தங்கள் சட்டம் என்றும் கூறுகின்றன. அக்கிரகாரங்கள் சேரிகளைப் பிரித்து தனிநாடாக்கியிருப்பது போலவே, இந்திய அரசு தமிழகத்தையும் தனி நாடாக்கியிருக்கிறது.

தமிழகமெங்கும் ஒரு வாரமாக போராட்டம் தீவிரமடைந்திருக்கின்றன. விவசாய சங்கங்கள், தி.மு.க உள்ளிட்ட இதர எதிர்க்கட்சிகள், வணிகர் அமைப்புகள், ஜனநாயக சக்திகள், புரட்சிகர அமைப்பினர் அனைவரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தைக் கண்டித்து போராடி வருகின்றனர்.

அந்த போராட்டச் செய்திகளோடு இன்றைய நேரலையை துவக்குகிறோம். போராட்டம் குறித்த செய்திகளை நீங்களும் (vinavu@gmail.com) அனுப்பலாம்.

இணைந்திருங்கள் ! (பதிவுகள் முடியும் இடத்தில் அடுத்தடுத்து வரும் load more entries…ஐ அழுத்தவும்.)

  • வினவு

தன்னுரிமை கேட்டால் காவிரி உரிமை வரும் ! தோழர் மருதையன்

2

கருத்துப்படம்: வேலன்

காவிரி: தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்!

மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்போகிறதாம். நீதிமன்றமா அவமதிக்கப்பட்டிருக்கிறது? நீதிமன்றம்தான் தமிழகத்தை அவமதித்திருக்கிறது. இந்திய அரசு அவமதித்திருக்கிறது. குமுறிக் கொந்தளிக்கும் வண்ணம் தமிழகம் அவமதிக்கப்பட்டிருக்கிறது. காவிரிச் சிக்கலில் ஒருமுறை இருமுறையல்ல, நூறுமுறை அவமதிக்கப்பட்டிருக்கிறோம். இறுதித் தீர்ப்பு என்ற பெயரில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வஞ்சகத் தீர்ப்பைக்கூட அமல்படுத்த மறுக்கிறது மோடி அரசு.

கர்நாடகத் தேர்தல்தான் இதற்குக் காரணம் என்று இன்னும் இதற்கு விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள் சில மூடர்கள். கர்நாடகத்தில் பாஜக வும் காங்கிரசும் வெற்றி பெற முடிவதால், காவிரிச் சிக்கலில் அக்கட்சிகள் கர்நாடகத்துக்கு ஆதரவான நிலை எடுப்பதாகவும், தமிழகத்தில் அவர்கள் வெற்றி பெற முடியாத நிலை இருப்பதனால்தான் நமக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் இந்த அநீதிக்கு பொழிப்புரை வேறு வழங்குகிறார்கள் சில அறிவாளிகள்.

பாஜக-வை காறி உமிழும் தமிழகத்தின் கழுத்தறுக்கும் மோடி

எனக்கு ஓட்டுப் போட்டால் பணம் தருவேன் என்று சொல்பவன் ஊழல் பேர்வழியென்றால், எனக்கு ஓட்டுப் போடாவிட்டால் தண்ணீரைத் தடுப்பேன் என்று கூறுபவன் கொலைகாரக் கிரிமினல். அத்தகைய கிரிமினல்களின் தேசியம்தான் பார்ப்பன இந்து தேசியம். பார்ப்பன இந்து மதம் சூத்திரனையும் பஞ்சமனையும் எப்படி நடத்துகிறதோ அப்படித்தான் தமிழகத்தை நடத்துகிறது டில்லி. இது வெறும் தண்ணீர் பிரச்சினை மட்டுமில்லை. தமிழினத்தின் மீது பார்ப்பன பாசிசம் கொண்டிருக்கும் ஜென்மப்பகை. அதன் விளைவுதான் தமிழகத்தின் மீதான இந்த அவமதிப்பு.

ஆணையம் அமைக்கப்படாததால் அவமதிக்கப்பட்டிருப்பது நீதிமன்றமல்ல. தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவு, தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, தண்ணீர் திறந்து விடுமாறு பல முறை உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் போன்ற எதற்கும் எந்தக் காலத்திலும் கர்நாடக அரசு செவி சாய்த்ததில்லை. இருந்த போதிலும் அவை எதையும் தனக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாக உச்ச நீதிமன்றம் கருதியதில்லை. நடவடிக்கை எடுத்ததுமில்லை. அப்படியொரு மானமோ மதிப்போ நீதிமன்றங்களுக்கு என்றைக்கும் இருந்ததில்லை.

“1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதியின் வாயிலில் பஜனை செய்யப்போகிறோம்” என்று கையில் கடப்பாரையை வைத்துக் கொண்டு, உச்ச நீதிமன்றத்துக்கு வாக்குறுதி கொடுத்தது பாரதிய ஜனதாக்கட்சி. “எந்த அசம்பாவிதமும் நடக்காது” என அன்றைய உ.பி மாநில பாஜக அரசின் முதல்வர் கல்யாண் சிங் உச்ச நீதிமன்றத்துக்கு உத்திரவாதம் அளித்தார். இதையெல்லாம் “நம்பி” உச்ச நீதிமன்றம் கடப்பாரை பஜனைக்கு அனுமதி அளித்தது. மசூதி இடிக்கப்பட்டது. நாடு முழுவதும் பல்லாயிரம் முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த நீதிமன்ற அவமதிப்புக்கு கல்யாண் சிங் ஒரே ஒரு நாள் தண்டனை பெற்றார்.

பாபர் மசூதி இடிப்பிற்கு துணை நின்ற கல்யாண் சிங் செய்யாத நீதிமன்ற அவமதிப்பா?

பாபர் மசூதி இடிப்பு என்ற அந்தப் படுபாதகச் செயலின் பயனாக வாஜ்பாயி, மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அனைவரும் அதிகாரத்தில் அமர்ந்தனர். பாபர் மசூதி இடிப்பு குற்றத்தை சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் என்றோ, மதச்சார்பின்மை மீதான தாக்குதல் என்றோ சொல்வதற்குப் பதிலாக, “நீதிமன்ற அவமதிப்பு” என்று சித்தரிப்பது எத்தகைய அயோக்கியத்தனமோ அத்தகையதுதான், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோடி அரசின் நடவடிக்கையை “நீதிமன்ற அவமதிப்பு” என்று சித்தரிப்பதும்.

கோடிக்கணக்கான விவசாயிகளுக்கும், தமிழ்ச்சமூகத்துக்கும், நெடிய பாரம்பரியம் மிக்க வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த நாகரிகத்துக்கும் எதிராக இந்திய அரசு இழைத்திருக்கும் அவமதிப்பு குறித்துதான் நாம் கவலை கொள்ளவேண்டுமேயன்றி, ஊழலிலும் அதிகார முறைகேட்டிலும் பார்ப்பனத் திமிரிலும் ஊறி, நாறிக் கொண்டிருக்கும், நீதிமன்றம் என்ற அதிகார நிறுவனத்தின், இல்லாத மதிப்புக்காக அல்ல.

காவிரி ஒப்பந்தம் செல்லாதாம்! எனில், இந்தியா எனும் ஒப்பந்தம்?

இந்தியா என்பது முந்தாநாள் வெள்ளைக்காரனால் உருவாக்கப்பட்ட நாடு. 1947 இல் உருவாக்கப்பட்ட ஒரு ஒப்பந்தம். காவிரியும் காவிரிக்கரையில் தழைத்த வேளாண்மையும் மொழியும் கலையும் பண்பாடும் இந்தியாவை விடப் பன்னெடுங்காலம் மூத்த வரலாற்று உண்மைகள். பாரதமாதா ஒரு புனைவு. காவிரி அநீதி என்பது உண்மையின் மீது புனைவு ஆதிக்கம் செலுத்துவதால் நேர்ந்துள்ள அநீதி.

இந்திய அரசு வெளியிட்டுள்ள மாநிலங்கள் பற்றிய வெள்ளை அறிக்கையின்படி, 1947 ஆகஸ்டு 15 க்கு முன், இந்தியா என்றழைக்கப்படும் நிலப்பரப்பின் 52% பிரிட்டிஷ் ஆட்சின் கீழும், 28% 550 சமஸ்தானங்களின் கீழும், மீதி இடங்கள் சுயேச்சையான அரசுகள் அல்லது சமஸ்தானங்களின் கீழும் இருந்தன. காவிரி மட்டுமல்ல, கிருஷ்ணா, கோதாவரி உள்ளிட்ட எல்லா ஆறுகளும், இப்படி நூற்றுக்கணக்கான ஆட்சியதிகாரங்களின் கீழ் இருந்த நிலப்பரப்புகளின் வழியேதான் பாய்ந்திருக்கின்றன.

மைசூர் – மதறாஸ் இடையேயான காவிரி ஒப்பந்தம் போலவே, மற்ற ஆறுகளுக்கும் ஒப்பந்தங்கள் பல இருந்தன. அவை அனைத்தும் மதிக்கப்படும் என்ற அடிப்படையில்தான் இந்தியா என்ற ஒப்பந்தம் உருவானது. அன்று வேளாண்மையே முதன்மைத் தொழில். அது குறிப்பிட்ட வட்டாரம் சார்ந்தது, இனத்தைச் சார்ந்தது என்ற காரணத்தினால்தான், வேளாண்மையையும் நீர்ப்பாசனத்தையும் மாநிலப் பட்டியலில் வைத்திருந்தது பிரிட்டிஷ் ஆட்சி.

நாம் காவிரியின் மைந்தர்கள் பாரதமாதாவின் புத்திரர்கள் அல்ல!

மொழி, இனம் என்ற உண்மைகளை பாரதமாதா என்ற புனைவு வெறுத்தது. மொழிவழி மாநிலம், மொழி உரிமைகள் என்ற கருத்துகள் மீதே பார்ப்பன இந்து தேசியம் நஞ்சைக் கக்கியது. இந்தியை தேசிய மொழியாக்க முயன்றது. இவை அரசியல் நிர்ணய சபை விவாதத்திலிருந்து நாம் அறியக்கூடிய உண்மைகள். இந்து தேசியவாதிகள் கூட்டாட்சிக் கோட்பாட்டின் மீது கொண்டிருந்த வெறுப்பின் விளைவுதான் பாகிஸ்தான். இருப்பினும் ஆறுகளையும் நீர்ப்பாசனத்தையும் அரசியல் சட்டத்தின் மாநிலப்பட்டியலில் வைக்க நேர்ந்தது அவர்கள் மீது சுமத்தப்பட்ட தவிர்க்கவியலாதவொரு நிர்ப்பந்தம்.

பல மாநிலங்களைக் கடந்து பாயும் காவிரி போன்ற ஆறுகளின் மீது மாநிலங்கள் பெற்றுள்ள உரிமை என்பது இந்திய அரசியல் சட்டத்தால் வழங்கப்பட்டதல்ல. ஆறுகளின் மீதான மக்கட் சமூகத்தின் உரிமை என்பது அரசியல் சட்டத்துக்கும், மாநிலப் பிரிவினைக்கும் முந்தையது. அது அரசியல் சட்டம் போட்ட பிச்சையல்ல. மக்கட் சமூகங்கள் அனுபவித்து வந்த இறையாண்மை மிக்க உரிமை. அந்த உரிமைகளும், அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எண்ணற்ற நதிநீர் ஒப்பந்தங்களும் அங்கீகரிக்கப்படும் என்று வாக்களிக்கப்பட்டதன் அடிப்படையில்தான் இந்தியா என்ற “பெரிய ஒப்பந்தம்” உருவானது.

அந்த ஒப்பந்தத்தை நடைமுறையில் செல்லாக் காகிதமாக்கிவிட்டது தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. 1924 மைசூர் – மதறாஸ் ஒப்பந்தம் தொடராது என்று 1947 க்கு முன் ஒருவேளை கூறப்பட்டிருந்தால், இந்தியாவை விட காவிரி முக்கியம் என்ற முடிவுக்கு தமிழக மக்கள் வந்திருப்பார்கள்.

சீறிப் பாயும் காவிரி !

கூட்டாட்சிக் கோட்பாட்டின்படி, ஒரு மாநிலம் என்பது அரை இறையாண்மையைக் கொண்ட (quasi sovereign) தேசம். தேசிய இனத்தின் அடிப்படையில் அமைகின்ற தனி நாட்டின் இன்னொரு வடிவம்தான் மாநிலம். ஒன்றிய அரசின் அரசியல் சட்டத்தின் கீழ் மைய அதிகாரம் என்று வரையறுக்கப்பட்டவை தவிர்த்த அனைத்தும் மாநிலங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டவைதான். அதனால்தான் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் சர்வதேச விதிகளான ஹெல்சிங்கி விதிகள் போன்றவற்றை இந்திய நதிநீர் தீர்ப்பாயங்களும் நீதிமன்றங்களும் பயன்படுத்துகின்றன.

இருப்பினும் கர்நாடக அரசு மட்டுமின்றி, இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் இந்த சர்வதேச விதிகள், நெறிகள் ஆகிய எதுவும் தங்களைக் கட்டுப்படுத்தாது என்றும், தமிழகத்தை தீண்டாச்சேரியாக நடத்தும் புதிய வகை மனுநீதிதான் தங்கள் சட்டம் என்றும் கூறுகின்றன. அக்கிரகாரங்கள் சேரிகளைப் பிரித்து தனிநாடாக்கியிருப்பது போலவே, இந்திய அரசு தமிழகத்தையும் தனி நாடாக்கியிருக்கிறது.

நெறி கெட்ட ஒருமைப்பாட்டை சுமப்பதற்கு தமிழகம் நளாயினி அல்ல!

மீண்டும் சொல்கிறோம். இந்தியா என்பது ஒரு ஒப்பந்தம். பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களாயினும், உழைக்கும் வர்க்கத்தினரை பொது எதிரிக்கு எதிராக ஒன்றுபடுத்தவேண்டும் என்ற ஒரு நோக்கத்தைத் தவிர வேறு எந்தப் புனித நோக்கத்துக்காகவும் நாம் ஒருமைப்பாட்டை விரும்பவில்லை. புருசனை வைப்பாட்டி வீட்டுக்குச் சுமந்து சென்ற நளாயினியைப்போல நாம் தேசிய ஒருமைப்பாட்டை சுமக்கத்தேவையில்லை.

கல்லானாலும் கணவன் என்ற புனிதக்கோட்பாடு எப்படி மோசடியானதோ அத்தகையதுதான் சமத்துவமும் சமநீதியும் இல்லாத தேசிய ஒருமைப்பாடு. இந்திய அரசு வகுத்த சட்டத்தை, இந்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவதற்கு அவர்களே மறுக்கும்போது, இந்திய அரசின் அதிகாரத்துக்கும், சட்டங்களுக்கும் தமிழகம் கட்டுப்பட வேண்டுமெனக் கூறும் உரிமையோ அருகதையோ இந்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் கிடையாது. தன்னுரிமை என்பது ஒரு தேசிய இனத்தின் உரிமையை உத்திரவாதப்படுத்தும் அடிப்படை உரிமை. தன்னுரிமைக்கு குரல் கொடுப்பதன் மூலம், இந்திய அரசின் ஒருமைப்பாட்டு மாய்மாலத்துக்கும் பாரதமாதா பஜனைக்கும் நாம் முடிவு கட்டவேண்டும்.

“முறித்துக்கொண்டால் தண்ணீர் வந்துவிடுமா?“ என்று குறுக்குக் கேள்வி கேட்பார்கள். வருமா, வராதா என்பது எதிர்காலத்தில்தான் தெரியும். அதே நேரத்தில், வராது என்பதைத்தான் சேர்ந்திருந்த காலம் உணர்த்தியிருக்கிறது. படிப்படியாக காவிரி உரிமையை இழந்திருக்கிறோம் என்பதுதான் ஐம்பதாண்டு வரலாறு காட்டும் உண்மை. 1924 இல் 575.68 டி.எம்.சி, 1984 வரை சராசரி 361, 1991 இடைக்காலத் தீர்ப்பில் 205, 2007 தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் 192, 2018 உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் 177.25 டி.எம்.சி. இது தான் தமிழகத்துக்கு தேசிய ஒருமைப்பாடு அளித்திருக்கும் பரிசு.

எல்லா ஆறுகளுக்கும் மேலாண்மை வாரியம்! தமிழகம் மட்டும் தீண்டாச்சேரி!

கடைசியாக 177.25 டி.எம்.சி. தண்ணீரையாவது உத்திரவாதப் படுத்துவதற்கு மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் கோருகிறது. இதனை மறுத்து கர்நாடக அரசின் தலைமைச் செயலர் மத்திய நீர்வளத்துறைக்கு கடிதம் எழுதுகிறார்:
“உச்ச நீதிமன்றம் திட்டம் வகுக்குமாறுதான் கூறியிருக்கிறது, மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லவில்லை. மேலாண்மை வாரியம் அமைக்குமாறு காவிரி தீர்ப்பாயம் கூறியதும்கூட பரிந்துரைதான், அது உத்தரவல்ல. காவிரி முடிவு அமலாக்க குழு வேண்டுமானால் அமைக்கலாம், அது பேரிடர் காலத்தில் நீர் பகிர்வை நிர்ணயிக்கலாம். ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி என்பதற்கு மேல், கர்நாடகம் தனது எல்லைக்குட்பட்ட உபரி நீரை எப்படி கையாள்கிறது என்பது குறித்துக் கேட்கும் உரிமை தமிழகத்துக்கு இல்லை. மேலாண்மை வாரியம் என்பதே கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது” என்று கூறுகிறது கர்நாடக அரசின் அந்தக் கடிதம். கர்நாடக அரசின் கடிதத்தில் கண்டுள்ள கருத்தை சென்ற ஆண்டே உச்ச நீதிமன்றத்தில் சொல்லி விட்டது மோடி அரசு. மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உத்தரவிடுவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றார் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்கி.

மேலாண்மை வாரியத்தை கர்நாடக அரசு எதிர்ப்பதற்கு காரணங்கள் இருக்கின்றன. பொதுவான அமைப்பு அணை நீரை மேலாண்மை செய்தால் காவிரி கர்நாடகத்துக்கு சொந்தமான ஆறாக இல்லாமல் நான்கு மாநிலங்களுக்கும் சொந்தமானது என்று ஆகிவிடும். பற்றாக்குறை என்ற பொய்யும் அம்பலமாகிவிடும் என்பதே கர்நாடக அரசின் எதிர்ப்புக்குக் காரணம். மைய அரசும் உச்ச நீதிமன்றமும் நடுநிலை பிறழ்வதற்கு என்ன காரணம்? ஏன் தமிழகத்துக்கு மட்டும் தனி நீதி?

கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா, மகாநதி, நர்மதை, யமுனை, ரவி, பியாஸ் முதலான பல ஆறுகள் ஒரு பொதுவான அமைப்பால் மேலாண்மை செய்யப்படும்போது, அந்த நீதி காவிரிக்கு மட்டும் ஏன் பொருந்த மறுக்கிறது?

பற்றாக்குறையோ, உபரியோ அவற்றை உரிய விகிதத்தில் பகிர்ந்து கொள்வது என்பதுதான் சர்வதேச நியதி. மகாராட்டிரத்தில் உற்பத்தியாகும் கிருஷ்ணா நதியின் உபரி நீரை மகாராட்டிரம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களும் எப்படி பகிர்ந்து கொள்வது என்று தீர்ப்பளித்திருக்கிறது கிருஷ்ணா தீர்ப்பாயம். மராட்டியத்தில் உற்பத்தியாகும் கிருஷ்ணா நதியின் உபரி நீருக்காக வாதாடும் கர்நாடகம், காவிரியின் உபரி நீரைப் பற்றிப் பேசும் உரிமை தமிழகத்துக்கு கிடையாது என்கிறது. உச்ச நீதிமன்றமும் இந்திய அரசும் கள்ள மவுனம் சாதிக்கின்றன.

சிந்து, ஜீலம், சீனாப் ஆறுகள் உற்பத்தியாகும் இடம் இந்தியாவில் இருப்பதால், இந்தியாவின் எல்லைக்குட்பட்ட உபரி நீரைப் பற்றி பாகிஸ்தான் பேச முடியாது என்று இந்தியா கூற முடியாது. பாகிஸ்தானுக்கு இழைக்க முடியாத அநீதியை, தமிழகத்துக்கு இழைக்கிறது இந்திய அரசு.

ஆற்றைப் பிரிப்பது பிரிவினையில்லையாம்! நாட்டைப் பிரிப்பதுதான் பிரிவினையாம்!

ஆற்றைப் பிரிப்பதென்பது பருவக் காற்றைப் பிரிப்பதாகும், மழையைப் பிரிப்பதாகும். நிலத்தைத்தான் எல்லையிட்டுப் பிரிக்க முடியுமேயன்றி காற்றையோ, மழையையோ அவ்வாறு பிரிப்பது இயற்கை நியதிக்கே எதிரானது.

ஒருவேளை, கர்நாடகம் இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடாகப் போக விரும்பினால் அதனை கன்னட இனத்தின் தன்னுரிமை என்று அங்கீகரிக்கலாம். ஆனால் காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, மகதாயி ஆறுகளைத் தன் விருப்பம் போல அணை கட்டித் தடுக்கும் உரிமையோ, “எங்கள் ஊரில் பெய்த மழைநீர் எனக்குத்தான் சொந்தம்” என்று சொந்தம் கொண்டாடும் உரிமையோ கர்நாடகத்துக்குக் கிடையாது. ஆற்றின் தலைப்பகுதியில் இருக்கும் எந்தவொரு நாட்டுக்கும் அத்தகைய உரிமையை சர்வதேச விதிகள் அனுமதிக்கவில்லை.

ஒரு தனிநாட்டின் அரசு இழைக்க முடியாத அநீதியை டில்லியின் துணையுடன் கர்நாடகம் இழைக்கிறது. தமிழகம் தன்னுரிமை கோருவதற்கு முன்னரே, பிரிவினையை இந்தியா அமல்படுத்தத் தொடங்கிவிட்டது.

கர்நாடகம் பற்றாக்குறை மாநிலம் என்பது பொய்!

காவிரி நீர்ப்பிரச்சனை என்பது தண்ணீர் பற்றாக்குறை தோற்றுவித்த குழாயடிச் சண்டையல்ல. கர்நாடகம் நீர்வளம் குறைந்த மாநிலமும் அல்ல. தனது அநீதியான தீர்ப்பை நியாயப்படுத்தம் பொருட்டும், தமிழகத்தின் தண்ணீர் பங்கைக் குறைக்கும் பொருட்டும், நீர்வளம் கொழிக்கும் அந்த மாநிலத்தை தண்ணீருக்குத் தவிக்கும் மாநிலம் போல சித்தரிக்கிறது உச்ச நீதிமன்றம்.

தமிழின விரோதிகள் சுப்பிரமணிய சுவாமியும் மோடியும்!

கிருஷ்ணா, துங்கபத்ரா, கோதாவரி, மகதாயி, காவிரி உள்ளிட்ட பல ஆறுகளிலிருந்து கர்நாடகத்துக்கு கிடைக்கின்ற சராசரி நீரின் அளவு மட்டும் ஆண்டுக்கு 1690 டி.எம்.சி. கர்நாடகத்தில் துங்க பத்திரை ஆற்றில் கட்டப்பட்டுள்ள ஹொஸ்பேடே நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 132 டி.எம்.சி. கிருஷ்ணாவின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அலமாட்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 120 டி.எம்.சி. இவை இரண்டு எடுத்துக் காட்டுகள் மட்டுமே. இன்னும் காவிரியில் கபினி, ஹேரங்கி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட பல அணைக்கட்உகள். தமிழகத்திலோ ஆகப்பெரிய நீர்த்தேக்கமான மேட்டூரின் கொள்ளளவே 93 டி.எம்.சி தான். அடுத்த பெரிய நீர்த்தேக்கமான பவானிசாகரின் கொள்ளளவு 33 டி.எம்.சி. மற்றவையெல்லாம் சிறிய அணைகள். நிலத்துக்கு மேல் இருக்கும் இந்த உண்மைகளையெல்லாம் புறக்கணித்து விட்டு, தமிழகத்தின் நிலத்துக்கு அடியில் பெரும் நீர்வளம் இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

கீழ்ப்பகுதி உரிமையை மேல் பகுதி தடுத்தால், அதன் பெயர் அணைக்கட்டு அல்ல, திருட்டு!

தென்மேற்குப் பருவக்காற்று மேற்குத் தொடர்ச்சி மலையால் தடுக்கப்படுவதால்தான் கேரளத்திலும் கர்நாடகத்திலும் மழை அபரிமிதமாகப் பொழிகிறது. மலையின் கிழக்குப்புறம் இருக்கும் தமிழகம் மழை மறைவுப்பகுதியாகிவிட்ட போதிலும், சமவெளியான தமிழகத்தை நோக்கி அந்த மழைநீர் ஆறுகளாக ஓடிவருகிறது. மேற்கு நோக்கி ஓடும் கர்நாடகத்தின் ஆறுகள் சுமார் 2000 டிஎம்சி தண்ணீரை அரபிக்கடலுக்கு கொண்டு சேர்க்கின்றன. கிழக்கு நோக்கி ஓடி வரும் ஆறுகளான காவிரி, கிருஷ்ணா, கோதாவரி போன்றவைதான் தமிழகத்திலும் ஆந்திரத்திலும்சமவெளிப்பகுதியின் விவசாயத்துக்கு ஆதாரமாகின்றன.

தண்ணீர் மலையிலிருந்து சமவெளிக்கு இறங்குவது இயற்கை விதி. அதனை இறங்க விடாமல் தலைப்பகுதியிலேயே ஆற்றைத் தடுத்து நிறுத்துகிறது கர்நாடக அரசு. இது தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமல்ல, இயற்கைக்கும் பல்லுயிர்ச்சூழலுக்கும் எதிரான வன்கொடுமை.

ஆற்றின் தலைப்பகுதிகளைக் காட்டிலும் கீழேயுள்ள சமவெளிப் பகுதிகளில் விவசாயம் செழிப்பதென்பது உலகெங்கும் காணப்படும் நியதி. ஆற்றின் கரையோரம் உள்ள நாடுகள் வேளாண்மையில் முன்னேறியிருப்பதும், பின்தங்கிய நாடுகள் புதிதாக வேளாண்மையைத் தொடங்கும்போது தண்ணீர்ப் பங்கீட்டில் முரண்பாடு தோன்றுவதும் இயல்பே.

ஆற்றின் கீழ்ப்பகுதியில் உள்ளவர்களுக்கான பயன்பாட்டு உரிமையை (Lower riparian right) அணைகள் கட்டுவதன் மூலம் மேல் பகுதியில் உள்ளவர்கள் பறித்து விட முடியும் என்ற காரணத்தினால்தான், எல்லா நதிநீர் ஒப்பந்தங்களிலும் தலைப்பகுதியில் உள்ளவர்கள் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதுதான் சர்வதேச நியதி. சிந்து நதி ஒப்பந்தத்தில் பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியா மீதான கட்டுப்பாடுகள்தான் அதிகம். 1924 ஒப்பந்தத்தில் மைசூர் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் அத்தகையவையே. இது தமிழகத்துக்கு சேரவேண்டிய நீரை, மேல் பகுதியில் இருக்கும் கர்நாடகம் திருடிக்கொள்ளாமல் இருப்பதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு.

“நியாயமான பகிர்வு” என்ற நீதிமன்றத் தீர்ப்பில் மறைந்திருக்கும் அநியாயம்!

ஆற்றின் மேல் பகுதியில் உள்ள நாடுகள், கீழே உள்ள நாடுகளுக்குரிய தண்ணீரை அபகரிக்க நினைக்கும்போது, அவர்கள் ஹெல்சிங்கி விதிகள் வலியுறுத்தும் Lower riparian right என்பதைப் புறந்தள்ளி, நியாயமான பகிர்வு (equitable sharing) என்ற கோட்பாட்டை வலியுறுத்துகிறார்கள். “நியாயமான” என்ற சொல்லை வலியவனும் ஆதிக்கத்தில் இருப்பவனும் தனது நலனுக்கு ஏற்ப வளைத்து விளக்கம் சொல்லிக்கொள்ள இயலும் என்பதே இதற்குக் காரணம்.

ஆற்றின் தலைப்பகுதியில் இருக்கும் பின்தங்கிய நாடுகள் காலப்போக்கில் வளர்ச்சியடைந்து, அவர்களின் தண்ணீர்த் தேவை அதிகரிக்கும் சூழல் ஏற்படும்போது என்ன செய்வது என்ற கேள்விக்கும் தீர்வு காணப்பட்டிருக்கிறது. கீழ்ப்பகுதியில் இருப்பவர்களின் நலனுக்கு பாரிய பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஒரு சமரசத் தீர்வை எட்டுவது என்பதே அந்தத் தீர்வு. இத்தகையதொரு தீர்வினை எட்டும்பொருட்டுத்தான் குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிக்காத (causing no significant harm) நீர்ப்பகிர்வு முறை என்ற கோட்பாடு பயன்படுத்தப்படுகிறது.

ஹெல்சிங்கி விதிகளைப் பின்பற்றவில்லையெனினும், மேற்கண்ட கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கும் பட்சத்தில், டெல்டாவில் குறுவைப்பட்ட சாகுபடியை உத்திரவாதம் செய்யும் விதத்திலும், சம்பாவுக்கு அதிகத் தீங்கு ஏற்படாத வண்ணமும் நீர்ப்பகிர்வு இருந்திருக்கும். மாறாக, கர்நாடகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கும் நோக்கத்துக்காகத்தான் equitable sharing என்ற கோட்பாட்டை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியிருக்கிறது.

தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, குடிநீர்த்தேவையைக் கணக்கில் கொள்ளவில்லை என்று கூறி தமிழகத்தின் ஒதுக்கீட்டில் 14.75 டி.எம்.சி யைக் குறைத்திருக்கும் உச்ச நீதிமன்றம், ஒப்பந்த விதிகளை மீறி, காவிரியின் குறுக்கே கர்நாடகம் அடுக்கடுக்காக அணைகள் கட்டிக்கொண்டதையும், ஒப்பந்தத்துக்கு விரோதமாக பாசனப்பரப்பை பன்மடங்கு விரிவு படுத்திக்கொண்டதையும், அதன் விளைவாக டெல்டாவின் பாசனப்பரப்பு சுருங்கி வருவதையும், தண்ணீரின்றி நடக்கும் விவசாயிகள் தற்கொலையையும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

பாகிஸ்தானுக்கு சலாம்! தமிழக அரசு குலாம்!

பருவ மழையும், அதன் காரணமாகப் பெருக்கெடுத்து வரும் ஆற்று நீரும்தான் வேளாண்மையின் விதைப்புப் பருவங்களைத் தீர்மானிக்கின்றன. எனவேதான், ஆற்றின் தலைப்பகுதியில் உள்ள நாடுகள் தண்ணீரைத் தடுத்து வைத்துக் கொண்டு, பருவம் தவறித் தன் விருப்பம்போலத் திறந்து விடுவதை சர்வதேச விதிகள் அனுமதிப்பதில்லை. ஜீலம் நதியின் துணை நதியான கிஷன்கங்காவில் நீர்மின்நிலையம் அமைக்கிறது இந்தியா. அந்த நீர்மின் நிலையம் ஆற்றின் இயல்பான நீரோட்டத்தைப் பெரிதும் பாதிக்கும் என்று ஆட்சேபிக்கிறது பாகிஸ்தான் அரசு. நடுவர் மூலம் தீர்த்துக்கொள்ளலாமென்று பாகிஸ்தானிடம் சமரசம் பேசுகிறது மோடி அரசு.

ஆனால் காவிரித் தீர்ப்பு வந்த நாளிலிருந்து இன்று வரை இப்படி ஒரு பதில் கூட மோடியிடமிருந்து தமிழகத்துக்குக் கிடைக்கவில்லை.

ராஜஸ்தானின் பாலைவனம் சோலைவனமாகிறது! தஞ்சை பாலைவனமாக்கப்படுகிறது!

பாகிஸ்தான் இருக்கட்டும். ராஜஸ்தானுக்கு வருவோம். ராஜஸ்தானும் அரியானாவும் ரவி, பியாஸ், சட்லெஜ் படுகையைச் சேர்ந்த மாநிலங்கள் அல்ல. ஆனால் இந்திரா காந்தி கால்வாய் என்றழைக்கப்படும் ராஜஸ்தான் கால்வாய் வழியே வழியே 8.6 மில்லியன் ஏக்கர் அடி (MAF) தண்ணீரும், பக்ரா கால்வாய் வழியே 1.5 MAF தண்ணீரும் கங்கைக் கால்வாய் வழியே 1.1 MAF தண்ணீரும் ராஜஸ்தானுக்குப் பாய்கின்றன. இவையன்றி யமுனையும் ராஜஸ்தனில் பாய்கிறது.

உச்சநீதிமன்றம்

அரியானா யமுனைப் படுகையில் இருக்கும் மாநிலம். அரியானாவுக்கு 5.6 MAF தண்ணீர் யமுனையிலிருந்து கிடைக்கிறது. கூடுதலாக சட்லெஜ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பக்ரா அணையிலிருந்து, அந்த ஆற்றின் படுகையிலேயே இல்லாத அரியானாவுக்கு 4.33 MAF தண்ணீர் போகிறது. இவையன்றி கக்கர் ஆற்றிலிருந்து 1.1 MAF தண்ணீர் கிடைக்கிறது. இதற்கும் மேல் சட்லெஜ் – யமுனை இணைப்புக் கால்வாய் மூலம் ஆண்டுக்கு 1.88 MAF தண்ணீர் வேண்டும் என்று அரியானா கோருகிறது. பஞ்சாப் மறுத்து வருகிறது. ரவி – பியாஸ் நதிநீர் வழக்கு எனப்படும் இவ்வழக்கில் அரியானாவுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பளித்துள்ளது.

மேற்கண்ட இந்த இரு மாநிலங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். 1954 இல் 3360 கி.மீ வலைப்பின்னலாக உருவாக்கப்பட்ட பக்ரா கால்வாய் மூலம் மட்டும் அரியானாவில் ஏறத்தாழ 35 லட்சம் ஏக்கர் பாசனத்துக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. 1983 இல் உருவாக்கப்பட்ட இந்திரா காந்தி கால்வாய் மூலம் மட்டும் ராஜஸ்தானில் சுமார் 29 லட்சம் ஏக்கர் பாலை நிலம் சோலையாக்கப்பட்டிருக்கிறது.

இங்கே தஞ்சை பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது. டெல்டா மாவட்டப் பகுதிகள் முழுவதும் சுமார் 25,000 கி.மீ நீளத்துக்கு மேல் குறுக்கு நெடுக்காக வெட்டப்பட்டிருக்கும் கால்வாய்கள் இந்திய அரசால் உருவாக்ப்பட்டவை அல்ல. சோழர் காலம் தொடங்கி வெள்ளையர் ஆட்சிக்காலம் வரை நமது உழவர்களால் உருவாக்கப்பட்டவை.

“தென்னிந்தியாவில் 10,000 முதல் 11,000 ஆண்டுகளுக்கு முன்னரே நெல் பயிரிடப்பட்டிருக்கிறது. வேளாண் சமூகத்தின் தகவல் தொடர்புக்கான மொழியின் தொடக்கக் கூறுகள் அப்போதே உருவாகியிருக்க வேண்டும்” என்று திராவிட மொழிகளின் தொன்மையைப் பற்றிக் கூறுகிறார் பரோடாவில் உள்ள மொழியியல் ஆய்வுக்கழகத்தின் இயக்குநர் கணேஷ் என் தேவி.

இந்து – இந்தி தேசியத்தின் சமூக அடித்தளமாக விளங்கும் அரியானாவிலும் ராஜஸ்தானிலும் பாலைவனத்தை சோலைவனமாக மாற்ற முயற்சிக்கும் இந்திய அரசு, பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட தென்னிந்தியாவின் நெற்களஞ்சியத்துக்குத் தீ வைத்துக் கருக்கிப் பாலைவனமாக்குவதற்குக் காரணம் தமிழகத்துக்கு எதிராக டில்லி கொண்டிருக்கும் வன்மம் அன்றி வேறென்ன?

காவிரித் தீர்ப்பும் பாபர் மசூதி இடிப்பும் !

ரவி, சட்லெஜ் படுகையிலேயே இல்லாத ராஜஸ்தானுக்கும் அரியானாவுக்கும் ஆதரவாகப் பரிந்து தீர்ப்பு வழங்கும் உச்ச நீதிமன்றம், காவிரியில் பல ஆயிரம் ஆண்டுகாலப் பயன்பாட்டு உரிமை கொண்ட தமிழகத்தின் பங்கை வெட்டிச் சுருக்குகிறது. பற்றாக்குறை காலப் பகிர்வு குறித்து வேண்டுமென்றே மவுனம் சாதிக்கிறது.

“பக்ராவில் அமைக்கப்பட்டுள்ளதைப் போன்ற மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிடில், இந்த உத்தரவினால் எந்தப்பயனும் இல்லை” என்று காவிரி தீர்ப்பாயம் வலியுறுத்திச் சொல்லியிருப்பதை இருட்டடிப்பு செய்துவிட்டு, “ஒரு அமலாக்கத் திட்டம் உருவாக்குங்கள்” என்று பொதுவாகச் சொல்லி தீர்ப்பை அமலாக்காமல் இருப்பதற்கு திட்டம் வகுத்துக் கொடுக்கிறது.

காவிரி நீர் இல்லாமல் நிலத்தடி நீரை ஒட்ட உறிஞ்சி, அதன் விளைவாக கழிமுகப் பகுதியெங்கும் கடல்நீர் உள்ளே வந்து, குடிநீரே இல்லாமல் விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில், தமிழகத்தில் நிலத்தடி நீர்வளம் அபரிமிதமாக இருப்பதால், தமிழகத்தின் பங்கில் 14.75 டி.எம்.சி யைக் குறைப்பதாக தீர்ப்பு வழங்குகிறது. காவிரி ஒன்றை மட்டுமே பெரிதும் நம்பியிருக்கும் மழை மறைவுப் பகுதியான தமிழகத்திடமிருந்து தண்ணீரைப் பிடுங்கி, மழை வளம் மிகுந்ததும், கிருஷ்ணா, துங்கபத்திரா, கோதாவரி, மகதாயி, காவிரி என எண்ணற்ற நதிகள் பாயும் மாநிலமுமான கர்நாடகத்துக்கு வழங்கலாமெனச் சொல்லும் நீதிமன்றத்திடம் என்ன வகையான நீதியை எதிர்பார்க்க முடியும்?

காவிரித் தீர்ப்பும் பாபர் மசூதி இடிப்பும் ஒப்பிடத்தக்கவை. சட்டவிரோதமாக பாபர் மசூதி இடிக்கப்பட்டதை, தனது தீர்ப்பின் வாயிலாக சட்டபூர்வமாக்கியது அலகாபாத் உயர்நீதிமன்றம். தற்போது உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. காவிரியில் 1924 முதல் ஐம்பதாண்டுகள் ஒப்பந்தம் இருந்தது. ஒப்பந்தம் முடியுமுன்னரே அதனை மீறி அணை கட்டத்தொடங்கியது கர்நாடக அரசு. கடந்த ஐம்பதாண்டுகள் கர்நாடக சட்டமீறலின் ஆண்டுகள். இதுகாறும் கர்நாடக அரசு மேற்கொண்ட சட்டமீறல்கள்தான் இனி சட்டம் என்று இறுதித் தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதால், கர்நாடகம் இதையாவது இனி அமல்படுத்தித்தானே தீரவேண்டும் என்று சிலர் பாமரத்தனமாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தீர்ப்பை அமல்படுத்தாமல் இருப்பதற்கான உரிமையை சேர்த்து வழங்கப்பட்டிருப்பதுதான் இந்த இறுதித் தீர்ப்பு என்பது இப்போதுதான் அவர்களுக்குப் புரியத் தொடங்கியிருக்கிறது.

இனப்பகையை விதைக்கும் பார்ப்பன தேசியம்! எலும்பைக் கவ்வியிருக்கும் கர்நாடகம்!

பிரித்தாளும் சூழ்ச்சியில் ஏகாதிபத்தியத்தை விட மூத்தது பார்ப்பனியம். படிநிலை சாதியமைப்பின் கோட்பாட்டைப் பயன்படுத்தி பிளவையும் மோதலையும் உருவாக்கும் கலையை அது இனங்களுக்கு இடையேயும் பயன்படுத்துகிறது. சாதிப்பிளவில் ஆதாயம் பெறுகின்ற சாதிகளைப் போலவே, இனப்பகையிலும் சில இனங்கள் தற்காலிக ஆதாயம் பெறத்தான் செய்யும். காவிரிச் சிக்கலில் பார்ப்பன தேசியம் விட்டெறிந்த எலும்பைக் கர்நாடகம் கவ்வியிருக்கிறது.

பன்னாட்டு முதலாளிகளும் பனியாக்கள் மார்வாரிகளும் பெங்களூருவைப் பங்கு போட்டு விழுங்கிக் கொண்டிருக்க, தமிழனை எதிரியாகக் காட்டி கன்னட இனவெறியை தூண்டப்படுகிறது. பாரதிய ஜனதாவைப் பொருத்தவரை, கர்நாடகத்தில் முஸ்லீமின் இடத்தில் வைக்கப்பட்டிருப்பவன் தமிழன்.

இனம், மொழி, மதம், சாதி அடிப்படையில் சக மனிதனுக்கு எதிரான வெறுப்பை விதைப்பதே பார்ப்பனியத்தின் இந்து தேசிய உணர்வு. நாம் சக இனத்தின் மீதான வெறுப்பிலிருந்து தமிழினத்தின் உரிமையைக் கோரவில்லை. பார்ப்பன தேசியத்தை வெறுக்கிறோம். அதன் மொழி, இன ஆதிக்கத்துக்கு எதிராக சமத்துவத்தைக் கோருகிறோம்.

பார்ப்பன தேசியவாதிகளும் தமிழகத்தை வெறுக்கிறார்கள். சமஸ்கிருதத்தால் விழுங்க முடியாத மொழி தமிழ் என்பதால் ஏற்பட்ட வரலாற்றுப் பகையுணர்ச்சியில் தொடங்கி, “இந்தியனாய் இருந்து கொண்டு இந்தி தெரியாமல் இருக்கிறாயா?” என்று எரிச்சலடையும் வட இந்திய உளவியல் வரை இந்த வெறுப்பு பல தளங்களில் இயங்குகிறது. அதுதான் தென்னிந்திய மாநிலங்களிலேயே தமிழகத்தை தீண்டத்தகாததாகக் கருத வைக்கிறது. தீண்டாச்சேரிக்குள் பார்ப்பான் நுழைவதைத் தீய சகுனமாகக் கருதும் தலித் மக்களைப் போலவே, பாரதிய ஜனதாவின் நுழைவைத் தமிழகம் வெறுக்கிறது.

தமிழ் மக்களின் மனத்தை வெல்ல முடியாது என்பது பாரதிய ஜனதாவுக்கும் தெரியும். காங்கிரசுக்கும் தெரியும். அதனால்தான் இந்தக் கோட்டைக்குள் நுழைவதற்கு பல டிரோஜன் குதிரைகளை அவர்கள் உருவாக்கினார்கள், இன்னமும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

காஷ்மீரை தேசிய நீரோட்டத்தில் கொண்டு வருவதற்காக இந்திரா காந்தி செய்த முறைகேடுகளின் விளைவாகத்தான் அங்கே 90 களில தனிநாடு கோரிக்கை தீவிரம் பெற்றது. அங்கே இந்திரா செய்தவற்றைத்தான் இன்று தமிழகத்தில் பாரதிய ஜனதா முயற்சித்துப் பார்க்கிறது.

மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் டில்லிக்கு எதிராகத் தமிழகம் குமுறிக் கொண்டிருக்கிறது. தமிழகப் பிரதிநிதிகளை சந்திக்க மறுக்கிறார் மோடி. “பாரதிய ஜனதாவை வெற்றி பெற வையுங்கள். காவிரித் தண்ணீர் தமிழகத்துக்கு வரும்” என்கிறார் அக்கட்சியின் தேசிய செயலர் எச்.ராசா. இது வெறும் வாய்க்கொழுப்பு பேச்சல்ல. “வல்லுறவுக்கு ஒப்புக்கொள். வாழ்க்கை கொடுக்கிறேன்” என்பதுதான் தமிழ் மக்களுக்கு மோடி அளிக்கும் மன் கி பாத்.

இந்தியா என்பது ஒரு நாடே அல்ல என்றான் ஏகாதிபத்திய வெறியனான பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். பாரதிய ஜனதாவுக்கோ அகண்ட பாரதம்தான் கனவு. ஆனால் கோல்வால்கரின் கனவை நனவாக்க அவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சி, சர்ச்சிலின் கனவை நிச்சயம் நனவாக்கி விடும்.

-மருதையன்.

புதிய ஜனநாயகம் – ஏப்ரல், 2018

ஆதார் : பார்ப்பனியத்தின் டிஜிட்டல் பாசிசம் !

3

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 7

மின் தரவுகளின் அடிப்படையில் இந்தியர்களை உளவு பார்ப்பது, இந்திய மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து அதன் மேல் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தைப் பிரயோகிப்பது, இதன் மூலம் மொத்த சமூகத்தையும் கண்காணிப்பிற்கும் கட்டுப்படுத்தலுக்கும் உட்படுத்துவது என்பது ஆளும் வர்க்கத்தின் திட்டம். யாருடைய கட்டுப்பாடு?

இணையம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? இன்னும் குறிப்பாகக் கேட்பதானால், உலகம் முழுவதையும் போர்த்தியுள்ள இணைய வலைப்பின்னல் உருவாக்கும் மின் தரவுகள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன?

மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வுகளுக்குத் தேவையான பிரதான கச்சாப் பொருளாக கட்டமைவற்ற மின் தரவுகளே (Unstructured Data) இருப்பதால், இவை உற்பத்தியாகும் மூலாதாரங்களைக் கட்டுப்படுத்துகின்றவர்களே மின் தரவுகளையும் கட்டுப்படுத்துகின்றனர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், கூகுள், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், ஐ.பி.எம் போன்ற அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களே இந்த மின் தரவுகளைக் கட்டுப்படுத்தும் இடத்தில் இருக்கின்றன.

மேலும், இணையம் என்கிற சிக்கலான வலைப்பின்னலில் பயணிக்கும் மின் தரவுகளைத் தொழில்நுட்ப ரீதியில் இடைமறிப்பதற்கும், மறையாக்கம் (Encrypt) செய்யப்பட்ட தரவுகளை மறைவிலக்கம் (Decrypt)  செய்வதற்குமான தொழில்நுட்பங்கள் அமெரிக்காவிடம் உள்ளன. வேறு வகையாகச் சொல்வதென்றால், இணையத்தில் மின் தரவுகளாகப் பகிரப்படும் எந்த ஒரு தகவலையும் அமெரிக்காவால் இடைமறித்து சேகரிக்க முடியும் – அவற்றைப் பகுப்பாய்வுக்கான கச்சாப் பொருட்களாக பயன்படுத்திக் கொள்ள முடியும். ஹேக்கர்கள் திருடர்கள் என்றால், அமெரிக்கா சீருடையணிந்த திருடன் என்று வைத்துக் கொள்ளலாம். தொகுப்பாகச் சொல்வதானால், தனியுரிமை (Privacy) என்பதே மெய்நிகர் உலகில் பொருளற்ற வார்த்தை தான்.

இந்தியாவைப் பொருத்தவரை இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில்தான் கணினிமயமாக்கத்தை மையப்படுத்தப்பட்ட அளவில் கட்டுப்படுத்தும் துறையாக ஆக்கும் பொருட்டு “தேசிய தகவலியல் மையம்” (National Informatics Center) துவங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் என ஒவ்வொரு துறையாக கணினி மயமாக்கப்பட்டது. இந்தப் போக்கில் வருமானவரித்துறை, சுங்கத்துறை, கலால்துறை, நீதித்துறை மற்றும் நாடெங்கும் உள்ள மத்திய மாநில அரசுகளின் உளவுத் துறைகளும், காவல்துறையும் கணினி மயமாக்கப்பட்டன.

அரசின் ஒவ்வொரு துறையுடனும் இணைக்கப்பட்ட மக்களின் தகவல்கள் மின் தரவுகளாக பல்வேறு அரசு துறைகளின் கீழ் இருந்த கணினிகளில் சிதறிக் கிடந்தன – 2008 வரை. அந்த ஆண்டு நடந்த மும்பை தாஜ் நட்சத்திர ஓட்டல் தாக்குதலை அடுத்து நடந்த விசாரணைகளில் அந்த தாக்குதலுக்குத் திட்டமிட்ட டேவிட் ஹெட்லி அதற்கு முன் பல முறை இந்தியா வந்து சென்றிருப்பதும், குறிப்பான காரணங்களின்றி நடந்த அந்த பயணங்கள் உளவு அமைப்புகளுக்கு சந்தேகம் ஏற்படுத்தவில்லை என்பதும் தெரியவந்தது. ஒரு குறிப்பிட்ட நபர் தொடர்பாக வெவ்வேறு துறைகளால் சேகரிக்கப்படும் மின் தரவுகள் இவ்வாறு சிதறிக் கிடப்பதை உணர்ந்த பின்னரே, இவற்றை ஒருங்கிணைந்த முறையில் பகுப்பாய்வு செய்ய வேண்டிய தேவையை உணர்ந்ததாக அரசு கூறியது.

நேட்கிரிட் (NATGRID – National Intelligence Grid) – என்றழைக்கப்படும் தேசிய புலனாய்வுச் சட்டகம் தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் உருவாக்கப்பட்டதாக அரசு கூறியது. ஆரம்பத்தில் ரா, ஐ.பி, பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவு (FIU) உள்ளிட்ட உளவு அமைப்புகளின் மின் தரவுகள் மற்றும் வருமான வரி, அமலாக்கத்துறை, போதைத் தடுப்புப் பிரிவு போன்ற 11 மத்திய அமைப்புகளின் மின் தரவுகளை நேட்கிரிட்டில் சேகரித்து பகுப்பாய்வுக்கு உட்படுத்தினர்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மேற்கண்ட துறைகளுடன் வங்கித் துறை, கடன் அட்டைகள், குடியேற்றத் துறை, இரயில்வே மற்றும் விமானப் பயண விவரங்கள், பல்வேறு மாநிலங்களின் காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் என இருபத்தோரு துறைகளின் மின் தரவுகளை நேட்கிரிட் சேகரிக்கத் துவங்கியுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்காணிப்பது என்கிற முகாந்திரத்தில் துவங்கி பின்னர் மெல்ல மெல்ல உள்நாட்டு மக்களின் தனிப்பட்ட விவரங்கள் வரை மூக்கை நுழைக்கும் பகாசுர உளவுத் தகவல் சேமிப்புக் கிடங்காக நேட்கிரிட்டை விரிவு படுத்தியுள்ளார் மோடி.

சர்வாத்ர கண்கள் – அதாவது அனைத்தும் தழுவிய பார்வை கொண்டதாக நேட்கிரிட் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பொதுவிடங்களில் உள்ள சி.சி.டிவி கேமராக்கள், சாட்டிலைட் படங்கள், தொலைபேசி அழைப்பு விவரங்கள் (CDR) உட்பட குடிமக்களைப் பற்றிய பல்வேறு தகவல்களை மின் தரவுகளாக பகுப்பாய்வு செய்யும் தொழில்நுட்ப சாத்தியங்களை நேட்கிரிட் கொண்டுள்ளது (செல்பேசி குறுஞ்செய்திகள் மற்றும் VOIP அழைப்பு விவரங்கள் உள்ளிட்டு). இதன் மூலம் ஒரு தனிநபரின் இணையச் செயல்பாடுகளை மட்டுமின்றி, அவரது தனிப்பட்ட வாழ்வின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்கும் ஆற்றலை நேட்கிரிட் பெற்றுள்ளது.

மேலும் மத்திய கண்காணிப்பு அமைப்பு (CMS – Central Monitoring System) ஏற்கனவே செல்பேசி இணைப்புகளை இடைமறித்து உரையாடல்களைப் பதிவு செய்யும் வேலையைத் துவங்கி விட்டது. இவ்வமைப்பு சேகரிக்கும் தொலைபேசி உரையாடல் பதிவுகளும் மின் தரவுகளாக சேகரிக்கப்பட்டு நேட்கிரிட்டுக்கு அனுப்பப்படுகின்றது.

2011 -ம் ஆண்டு ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் சுமார் 3,400 கோடி ரூபாய் நிதி இதற்கென ஒதுக்கப்பட்டது. எதிர்காலத்தில் மேலும் சுமார் 950 துறைகளில் இருந்தும் மின் தரவுகளைச் சேகரிக்கும் விதமாக நேட்கிரிட்டை விரிவு படுத்தும் திட்டமும் அரசிடம் உள்ளது. நேட்கிரிட் உருவாக்கப்பட்டதன் நோக்கமாகச் சொல்லப்படும் “ஒருங்கிணைந்த பார்வை” என்பதை முழுமையாகப் பெறுவதற்குத்தான் இவற்றுடன் ஆதார் எண்களை இணைத்தாக வேண்டும் என்று மோடி அரசு கொடுத்து வரும் நிர்ப்பந்தம். ஏற்கனவே அவ்வாறான ஒரு இணைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தால் அதில் வியப்படைவதற்கு ஏதுமில்லை.

எனினும், அதிகாரப்பூர்வமாக நேட்கிரிட்டுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி கேள்வி எழுப்பப்பட்ட போது, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவ்வாறான திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதாவின் பேச்சு மாத்துக்களின் வரலாற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டே அமைச்சரின் உறுதிமொழியையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.

நிதி மசோதாவாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு புறவாசல் வழியாக நுழைக்கப்படும் ஆதார் எதற்காகத் தொடங்கப்பட்டது? இதற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விளக்கங்களை அரசு சொல்லி வருகின்றது. ‘குடிமக்கள் அனைவருக்குமான ஒருங்கிணைந்த அடையாள எண்’ என்பதில் தொடங்கி ‘நலத்திட்டங்களைச் சரியானவர்களின் கைகளில் சேர்ப்பதற்கு’ என்பது வரை பல்வேறு விளக்கங்கள் சொல்லப்பட்டு விட்டன.

உண்மையில் பாஸ்போர்ட் பெறுவதற்காக அளிக்கப்படும் முகவரியை போலீசார் நேரடியாக வந்து சோதித்தறியவதைப் போல் ஆதார் எண் பெறுவதற்காக நாம் கொடுக்கும் முகவரி சோதிக்கப்படுவதில்லை. அதே போல், ஆதார் அட்டையில் அச்சிடப்படும் புகைப்படத்தின் தரம்  உருவ அடையாளத்திற்கான அத்தாட்சியாக ஏற்றுக் கொள்ளும் விதமாகவும் இல்லை. எனில், ஆதாரின் நோக்கம் என்ன?

“ஆதார் என்பது வெறும் அடையாளம் மட்டுமல்ல, அது ‘அடையாள செயற்தளம் (Identity Platform) என்று 2011 -ம் ஆண்டு பெங்களூருவில் மென்பொருள் பொறியாளர் கருத்தரங்கு ஒன்றில் பேசும் போது நந்தன் நிலகேனி குறிப்பிடுகிறார். அதாவது, மொத்த அடையாளங்களின் ஒட்டுமொத்தமாக (Abstraction layer) ஆதாரை விரிவுபடுத்துவது அரசின் திட்டம். தொலைபேசி வலைப்பின்னலுடனான இணைப்பு, இணையத்துடனான இணைப்பு, வங்கி வலைப்பின்னலுடனான இணைப்பு, போக்குவரத்து, வருமான வரி, மருத்துவம், பொருட்களை வாங்குவதற்கான பணாப்பரிவர்த்தனை – என மக்களுடைய அன்றாட நடவடிக்கைகளில் அவர்கள் எவற்றுடனெல்லாம், யாருடனெல்லாம், எதற்காகவெல்லாம் தொடர்பை ஏற்படுத்துகின்றனரோ அந்த அனைத்துத் தொடர்புகளுக்கும் மக்கள் முன் வைக்கும் அடையாளங்களின் ஒட்டுமொத்த இணைப்புப் புள்ளியாக ஆதாரை நிறுவுவது அரசின் நோக்கமாக உள்ளது. ஒரு தனிநபருக்கென இருக்கும் தனியுரிமைசார் வெளிகள் (Private Spaces) அனைத்தையும் ஆதார் எண் என்கிற நூலிழை கொண்டு இணைப்பதே ஆளும் வர்க்கத்தின் நோக்கமாக உள்ளது.

ஒருவர் தான் உழைத்துச் சம்பாதித்த பணத்தைச் செலவிடும் முறையை மட்டும் கண்காணித்தால், அவர் யாருக்குப் பணம் கொடுக்கிறார், யாரிடம் வாங்குகிறார், எதற்காக கொடுக்கல் வாங்கல் நடக்கிறது, ஒருவரின் சம்பளம் எவ்வளவு, கடன் எவ்வளவு, வீட்டுச் செலவு எவ்வளவு, சேமிப்பு எவ்வளவு என சகலவிதமான பொருளாதார நடவடிக்கைகளையும் ஆராய்வதற்கான வாய்ப்பை இந்த ‘ஒருங்கிணைப்பு’ வாரி வழங்குகின்றது.

மேலும், தொலைபேசி மற்றும் இணைய நடவடிக்கைகளும் அரசின் கண்காணிப்பு எல்லைக்குள் இருப்பதால், ஒருவரது சமூக செயல்பாடுகள் மட்டுமின்றி தனிப்பட்ட செயல்பாடுகளையும் துல்லியமாக கண்காணிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. ஒருவர் தனிப்பட்ட முறையிலும், பொதுவெளியிலும் செலவிடும் நேரத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அவரது தனிப்பட்ட ஆர்வம், ஆளுமை மற்றும் பண்புகளைக் கண்காணிக்க முடியும்.

நம்மிடம் இருந்து சேகரிக்கப்படும் மின் தரவுகள் அனைத்தும் செயற்கை நுண்ணறிக் கணினிகளின் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுவது என்பது நமது நிகழ்கால நடவடிக்கையை உளவு பார்ப்பது என்பதோடு நிற்பதில்லை. நம்முடைய எதிர்கால நடவடிக்கைகளின் திசையைத் தீர்மானிக்கும் வாய்ப்பையும் ஆளும் வர்க்கத்தின் கைகளில் வழங்குகின்றது.

ஆதாரின் அமலாக்கத்திற்கு பல்வேறு விதவிதமான காரணங்களைப் பொதுவெளியில் சொல்லி வரும் அரசு, குறிப்பான சில காரணங்களை அதன் ஆவணங்களின் பக்கங்களுக்குள் சிக்கலான வார்த்தைகளின் பின் ஒளித்து வைத்துள்ளது. உயிரியளவு விவரங்கள் (Biometric information) பதிவு செய்யப்படுவது போலி அட்டைகளைத் தடுப்பதற்கே என்பது நீதிமன்றத்தில் அரசு முன்வைத்த விளக்கம்; ஏன் உயிரியளவு விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றது என்பதை நந்தன் நிலகேனியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “தேசியப் பாதுகாப்பு முக்கியமான விசயம் அல்லவா?” என்று பதிலளித்துள்ளார்.

மேலும், மக்களின் மரபணு மாதிரிகளைச் சேகரித்து அவற்றை ஆதார் எண்ணுடன் இணைக்கும் எதிர்காலத் திட்டம் அரசுக்கு உள்ளதாக அரசின் வழக்கறிஞரே தெரிவித்துள்ளார். இப்போது இந்தப் புதிரின் வெவ்வேறு பாகங்களை இணைத்து புரிந்து கொள்ள முடிகிறதா?

தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைந்த தகவல் கிடங்கு (Database) ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது பாதுகாப்புத் துறை மற்றும் உளவுப் பிரிவு அதிகாரிகளின் நீண்ட கால கோரிக்கை. மக்களின் மீதான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டின் இறுக்கத்தை இது உத்திரவாதப் படுத்தும் என்பது ஆளும் வர்க்கத்தின் நம்பிக்கை.

ஏற்கனவே நேட்கிரிட் பல்வேறு மூலங்களில் இருந்து வரும் தகவல்களைச் சேகரித்து வருகின்றது. மேலும் ஒவ்வொரு தனிநபரின் நிதி நடவடிக்கைகள் மற்றும் வங்கிச் செயல்பாடுகள் உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகள் தொடர்பான மின் தரவுகள் தனியாக பராமரிக்கப்படுகின்றது. அதே போல், உள்நாட்டு மற்றும் அயல்நாட்டுப் போக்குவரத்து விவரங்கள், கைப்பேசி உரையாடல்கள் உள்ளிட்டு ஒருவரின் அனைத்து விதமான சமூக நடவடிக்கைகள் தொடர்பான மின் தரவுகளும் தனித் தனித் தீவுகளாக சேமிக்கப்பட்டுள்ளன. இப்போது ஆதார் எண் அந்த வெவ்வேறு தரவுமூலங்களுக்கான இணைப்புக் கண்ணியாக விளங்கும்.

இதன் சாத்தியங்கள் என்ன, சமூக விளைவு எப்படியிருக்கும் என்பவை குறித்து சிந்திக்குமுன் நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமானதொரு விசயம் இருக்கிறது. 130 கோடி இந்தியர்களின் மின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ய இந்திய அரசு பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் எதுவும் சொந்த முறையில் உருவாக்கப்பட்டவை அல்ல. பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்கிய மின் தரவுப் பகுப்பாய்வு மென்பொருட்களின் (Data Analytic Software) தயவைத் தான் இந்திய உளவு நிறுவனங்கள் சார்ந்துள்ளன. எனவே தரவுகளைத் திருடுவதற்கு வெளியில் இருந்து யாரும் ஹேக் செய்ய வேண்டிய தேவையே இல்லை. அவை பன்னாட்டுத் திருடர்களின் கைகளில்தான் பத்திரமாக இருக்கின்றன.

ஒரு மனிதன் தனது சொந்த உடலின் மீதும், தனிப்பட்ட வாழ்வின் மீதும், சமூக வாழ்வின் மீதுமான உரிமையை இழப்பதற்கு அடிமைத்தனம் என்பதைத் தவிற வேறு பொருள் இல்லை. மக்களுடைய உடலின் மீது அவர்களுக்கு உள்ள உரிமையை மறுப்பது பார்ப்பனியத்தின் மிக முக்கியமான குணாம்சம். இதனை இருபத்தோராம் நூற்றாண்டில் மீண்டும் நிலைநாட்ட வந்திருக்கிறார் மோடி.

மக்களுக்கு சூடு போடுவதையும் அவர்களைத் தொடர்ந்த கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதையும் மின்னணுவியல் முறையில் சாதிக்க மோடி தலைமையிலான இந்துத்துவ கும்பல் முனைவதால் நாம் இதை டிஜிட்டல் பாசிசம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.
(தொடரும்)

– சாக்கியன், வினவு
புதிய கலாச்சாரம், ஜூலை 2017

இந்த கட்டுரையின் பிற பாகங்களுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

_____________

இதனை முழுமையான மின் புத்தகமாக வாங்க

20.00Read more

அச்சு நூல் தேவைப்படுவோர் மலிவு விலைப் பதிப்பை பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) கெட்டி அட்டை புத்தகப் பதிப்பை பெற ரூ 100-ம் (நூல் விலை ரூ. 60, தபால் கட்டணம் ரூ. 40) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

மார்க்ஸ் எனும் அரக்கன் ! வீடியோ

1

கார்ல் மார்க்ஸ் – முதலாளித்துவவாதிகளின் அடிவயிற்றில் புளியைக் கரைக்கும் பெயர்,  அவர்களால் தவிர்க்கமுடியாத பெயரும் கூட. பொருளாதார மந்தம் ஏற்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பின்னரும் சர்வதேச சந்தை, வீழ்ச்சியில் இருந்து எழ முடியாமல் தத்தளித்து வருகிறது. முதலாளித்துவ அறிஞர்கள் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றியும் வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் எவையும் கவைக்குதவவில்லை. இந்த முதலாளித்துவ நெருக்கடிக்கான காரணத்தை அறிந்து கொள்ள அவர்கள் தவிர்க்க முடியாமல், கார்ல் மார்க்சிடம் வரவேண்டியது இருக்கிறது. அதனை பெரும்பான்மை முதலாளித்துவ அறிஞர்களே ஏற்றுக் கொள்கின்றனர். இந்த காணொளி, வரலாற்றில் மார்க்சின் பங்களுப்பையும், முதலாளித்துவம் குறித்த அவரது கண்ணோட்டத்தையும் உங்களுக்கு அறியத் தருகிறது. பாருங்கள் ! பகிருங்கள் !

காவிரி : அவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள் !

13

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் கெடு நேற்றே (29.03.2018) முடிந்தது. பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதாக நாடகம் நடத்தும் அதிமுக அரசு, தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப் போவதாக செய்தி வெளியிட்டிருக்கிறது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடவேண்டுமென்றால் அது மோடி அரசு மீது மட்டுமல்ல, நீதிமன்றத்தின் மீதேயும் போட வேண்டியிருக்கும். ஏனெனில் கடந்த ஆண்டுகளில் காவிரி குறித்து உச்சநீதிமன்றம் அளித்த இடைக்கால தீர்ப்புக்களோ, உத்தரவுகளோ கூட இங்கே அமல்படுத்தப்பட்டதில்லை. அதை தமிழகத்தை ஆண்ட அரசுகளும் கேள்வி கேட்டதில்லை.

இந்திய அரசும், காங்கிரசு – பா.ஜ.க முதலான தேசியக் கட்சிகளும், நீதித்துறையும் சேர்ந்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்திருக்கும் போது அதே வளையத்திற்குள் போய் பேசுவதால் தீர்வு கிடைத்து விடுமா? கடந்த காலங்களிலேயே சட்டப் போராட்டம் நடத்திய தமிழக அரசிற்கு எந்த தீர்வும் வழங்கப்படாத நிலையில் இனி மேல் வழக்குப் போட்டு என்ன ஆகிவிடப் போகிறது? தமிழக அரங்கில் நடக்கும் போராட்டம் ஒன்றே அரசையோ, நீதிமன்றத்தையோ பணியவைக்குமே அன்றி மூத்த வழக்கறிஞர்களை வைத்து அவமதிப்பு வழக்குப் போட்டால் சில பல கோடிகள் கட்டணமாக நட்டமாகுமே அன்றி வேறு பலன் இல்லை.

மோடி அரசு காலால் இட்டதை தலையால் செய்யும் எடப்பாடி – ஓபிஎஸ் அரசாங்கம் காவிரி பிரச்சினையில் நடத்தும் நாடகம் கூட குருமூர்த்தி வகையறாக்கள் எழுதும் வசனப்படிதான். அதனால்தான் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை செல்லமாகக் கண்டித்து அ.தி.மு.க-வினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்களாம். தமிழக்த்தில் அதிமுகவினர் நடத்தும் உண்ணாவிரதக் காட்சிகள் ஆதித்யா சானலோடு போட்டி போடும் காமடி சானலாகும். அரசு என்ற முறையில் அரசியல் ரீதியாக அழுத்தமோ எதிர்ப்போ தெரிவிக்காமல் இப்படி அழுகுணி ஆட்டம் போடும் அதிமுகவினர் சுருட்டும் வாய்ப்புள்ள கடைசி காலத்தில் இப்படி ஒரு முட்டுச் சந்து காவிரியால் வரவேண்டுமா என்றே கவலைப்படுகின்றனர்.

தி.மு.கவோ அனைத்துக் கட்சிகளோடு இணைந்து போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறது. தீர்மானமும் போட்டிருக்கிறது. சட்டமன்றத்தில் வெளியேறி சாலையில் ஓரிரு நிமிடங்கள் அமர்ந்து போராட்டம் நடத்தும் மு.க.ஸ்டாலின் உடனேயே போலீஸ் வந்து கைதாகச் சொன்னால் கைதாகி விடுகிறார். இத்தகைய அடையாளப் போராட்டங்களை தனியாக செய்தாலோ, இல்லை பல கட்சிகளை கூட்டாக சேர்ந்து செய்தாலோ என்ன நடந்து விடும்? மத்திய அரசை கேள்வி கேட்கின்ற, முடக்குகின்ற போராட்டங்களை விடுத்து தி.மு.கவும் வெளியே நிலவும் தமிழக மக்களின் எதிர்ப்புணர்விற்கு ஏதாவது செய்தாகவ வேண்டுமே என்று  கவலைப்படுகிறதே ஒழிய வாழ்வா, சாவா என்ற பார்வையோ, போராட்டமோ அறிவிப்போ இல்லை.

ஆங்கில ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின் படி தி.மு.க-வினர் மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கின்றனராம். மெரினாவில் போராடுவதற்கு தடை உள்ளதே என்று கேட்ட போது, அதனால் என்ன தி.மு.க தலைமை நிலையமான அறிவாலயத்தில் அமர்ந்தால் யார் என்ன  செய்ய முடியும் என ஒரு தி.மு.க தலைவர் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தி வெளியிட்டிருக்கிறது. மோதிப் பார்க்க வேண்டிய இடத்தில், நேரத்தில் ஒதுங்கிப் போவதாக இருக்கிறது இந்த அறிவாலயத்தில் அமரும் ஆலோசனை!

காவிரிப் பிரச்சினையைப் பொறுத்த வரை தமிழக மக்களின் எதிர்த்தரப்பாக பா.ஜ.க, காங்கிரசு, அ.தி.மு.க மூன்று கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றன. தி.மு.க அந்த அணியில் இல்லை என்றாலும் அதை உரத்துச் சொல்ல வேண்டும் என்பதை “உடன் பிறப்புக்கள்” உணர வேண்டும். ஏனெனில் மோடி அரசின் நேரடி நடவடிக்கைகள் அனைத்தும் தமிழகத்தின் வாழ்வாதாரத்திற்கு சாவு மணி அடிக்கும் நேரத்தில் தி.மு.க விரும்பும் ஓட்டுக் கட்சி அரசியலுக்கே கூட அவர்கள் பா.ஜ.க-வை போர்க்குணமிக்க முறையில் எதிர்த்தாக வேண்டும். அதனால் மெரினாவில் தமிழக மக்கள் அணிதிரண்டு போராடுவார்கள், அதற்கு தி.மு.க உடன் நிற்கும் என்று அறிவிப்பதை விடுத்து அண்ணா அறிவாலயத்தில் ஒதுங்கினால் அது போராட்டமா திண்டாட்டமா என்பதை உடன் பிறப்புக்களே முடிவு செய்யட்டும்.

பா.ஜ.க-வைப் பொறுத்த வரை அவர்களுக்கு இங்கே ஒரு வார்டு கவுன்சிலருக்குரிய வாக்குகள் இல்லை என்றாலும், ஊடகங்களால் நோட்டாவை விட குறைவாக வாக்கு வாங்கும் கட்சியாக அறிவிக்கப்ட்டாலும் அனைத்து ஊடகங்களிலும் இவர்களே நிலைய வித்வான்களாக இருந்து கொடுமைகளை ஊதி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கு கெடு முடிந்த பிறகு தமிழக பாஜக தலைவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன. செல்போனை அணைத்து விட்டு அறைக்குள் முடங்கியிருக்கின்றனராம். ஏற்கனவே இவர்கள் மீது தமிழக மக்கள் கடும் வெறுப்பில் இருக்கும் போது காவிரி துரோகத்திற்காக இத்தனை நாள் போட்ட நாடகத்தை கூட தற்போதும் தொடர முடியவில்லை என்று அந்த வித்வான்கள் யோசிக்கின்றார்கள்.

இதில் ரவுடி வித்வானான எச். ராஜா மட்டும் வெளிப்படையாக கர்நாடக தேர்தலில் பா.ஜ.க வென்றால் மட்டுமே காவரி நீர் இங்கு வரும் என்று பகிரங்கமாக பேசியிருக்கிறார். இன்னும், நீட் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் உத்திரவை ஏற்காத தமிழகம் காவிரியில் மட்டும் உச்சநீதிமன்றத்தின் உத்திரவை அமல்படுத்தக் கோருவது ஏன் என்றும் ’மடக்கி’யிருக்கிறார். இந்த திமிர்தான் பா.ஜ.கவின் இயல்பான முகம்.

நீட் பிரச்சினையிலோ இல்லை காவிரி பிரச்சினையிலோ தமிழகம் தனது உரிமைகளைத்தான் கோருகிறது. அநீதியாக தனக்கு அதிக பங்கு தரவேண்டும் என்று கோரவில்லை. காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பைவிட குறைவாகவே காவிரி நீர் பங்கை ஒதுக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும், இறுதியில் மேலாண்மை வாரியத்தை அமைத்தாவது எங்களது குறைந்த பட்ச பங்கை தாருங்கள் என்றுதான் தமிழகம் கேட்கிறது. இதை எள்ளி நகையாடுவதற்கு எச்.ராஜாவிற்கு நிறைய பார்ப்பனக் கொழுப்பு இருக்க வேண்டும். ராஜாவைத் தவிர மற்றவர்கள் தொலைக்காட்சி விவாதத்தைக் கூட தவிர்க்கிறார்களாம். என்ன செய்ய? கெடு முடிந்த பிறகு மத்திய அரசு வாரியம் அமைக்கும் என்ற அந்தப் பொய்யை இனி அடித்துக் கூற முடியாதே!

தமிழக மக்களைப் பொறுத்த வரை இது வாழ்வா சாவா போராட்டம்! போராடுவோம்!

கையூர் தியாகிகளின் 75-ஆவது ஆண்டு நினைவு நாள் ! விவசாயிகளே விழித்தெழுங்கள் !

0

கையூர்.  கேரளத்தின் வடகோடியில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு குட்டி கிராமம்.  அந்தக் கிராமம் தான்  விவசாயிகள் இயக்கத்தின் தொட்டில் என அழைக்கப் படுகிறது.

நம்பியார், நாயனார் என்ற இரண்டு நிலப்பிரபுக்களின் இரும்புப் பிடியில் புழுக்களைப் போல வாழ்ந்து கொண்டு இருந்தனர் அந்தக் கிராமத்தின் கூலி-ஏழை விவசாயிகள்.

நிலப்பிரபுக்களிடம் அனுமதி வாங்காமல், யாரும் திருமணம் கூட செய்ய முடியாது.  அனுமதியுடன் சேர்த்து திருமணச் செலவுகளுக்காக பத்து ரூபாயோ பதினைந்து ரூபாயோ கடனாகத் தருவார் நிலப்பிரபு.  கடனுக்கு வட்டியாக நிலப்பிரபுக்கள் கூறும் ஏவல்களை செய்ய வேண்டும்.  மேலும், தமது தோட்டத்தில் தான் விளைவித்த நெல்லையும், காய்கறிகளையும், பழங்களையும் அவருக்கு காணிக்கையாக செலுத்த வேண்டும்.  பின் சில ஆண்டுகள் கழித்து வட்டிக்கும் முதலுக்கும்  தமது துண்டு நிலத்தை நிலப்பிரபுக்களிடம் ஒப்படைத்து அவர்காட்டும் தாள்களில் ரேகை பதிய வேண்டும்.  பின் அவரிடமே பண்ணையடிமையாக காலம் கழிக்க வேண்டும்.  நிலப்பிரபு நல்ல மன நிலையில் இருந்தால், அவரிடமே நிலத்தை குத்தகைக்கு எடுக்கலாம்.  குத்தகையாக விளைச்சல் முழுவதையும் செலுத்த வேண்டும்.  நிலப்பிரபு பெரிய மனது வைத்து ஏதோ கொஞ்சம் நெல்லை திருப்பித் தருவார்.  காலில் விழுந்து அந்தக் கருணையை ஏற்க வேண்டும்.

கையூர் தியாகிகளின் நினைவுத் தூண்.

இத்தகைய சூழலில் தான் கம்யூனிஸ்டுகள் அந்த கிராமத்திற்கு அறிமுகமானார்கள்.  அவர்களின் வழிகாட்டலின் கீழ் சங்கம் கட்டினார்கள் கூலி-ஏழை விவசாயிகள்.  உழுபவனுக்கு நிலம் என முழங்கினார்கள்.  குத்தகை விவசாயிகள் அறுவடையை கைப்பற்ற துணையாக நின்றது சங்கம்.  விவசாயிகள் தமது தேவைகளை தீர்த்துக் கொள்ள வழிகாட்டியது சங்கம்.

மடித்துக் கட்டிய வேட்டியுடன், தோளில் போட்ட துண்டுடன், காலில் செருப்பு அணிந்து நம்பியார், நாயனார் முன் நடக்க வைத்தது சங்கம். திருமணம் முதல் மரணம் வரை நிலப்பிரப்புக்களிடம் கையேந்த வேண்டிய நிலையை ரத்து செய்தது சங்கம்.

நிலப்பிரபுக்களின் சுரண்டித் தின்ற வயிறு எரிந்தது.  வெள்ளை எஜமானின் காலில் விழுந்து கெஞ்சினார்கள் ஜென்மிக்கள். (ஜென்மி = நிலப்பிரபு).  “விவசாய சங்கம் கட்டி, பிரிட்டிஷ் சர்க்கார் ஒழிகன்னு கோஷம் போடறானுங்க” என வெள்ளையனின் கால்களை நக்கினார்கள்.

ஒரு போலீசுக்காரனை ஜென்மீக்களின் காவலாக அனுப்புகிறது பிரிட்டிஷ் அரசு.  விவசாயிகளின் பேரணியை மறித்து பாலர் சங்கத் தொண்டன் ‘சூரிக்கண்டன் கிருஷ்ணன்’ என்ற சிறுவனை எட்டி உதைக்கிறான் அந்தப் போலீசு சுப்பராயன்.  வெகுண்டெழுந்த விவசாயிகளின் எதிர்ப்பை பார்த்து அஞ்சி ஓடி ஆற்றில் குதித்து மூழ்கிச் சாகிறான் சுப்பராயன் எனும் அந்த கைத்தடி.

போலீஸ் சுப்பராயனின் சாவுக்கு பழிதீர்க்க கையூர் வருகிறது போலீசுப் படை.  வாச்சாத்தி, ஜாலியன் வாலாபாக், தாமிரபரணி, கொடியன்குளங்கள் அரங்கேறுகின்றன.   வீடுகள் கொளுத்தப் படுகின்றன, விவசாயிகளின் மண்டைகள் உடைக்கப் படுகின்றன.  உயிரை விட்டவர்கள் கணக்கும், பாலியல் வன்புணர்வுக்கு ஆளானவர்கள் கணக்கும் யாருக்கும் இதுவரை தெரியவில்லை. எஞ்சியவர்களை கைது செய்து வழக்கு போடுகிறது அரசு.  விவசாய சங்கத்தின் தலைவர்களும் சரணடைகின்றனர்.

1) மடத்தில் அப்பு (சங்கத் தலைவர்)
2) கோயில்தட்டில் சிருகண்டன் (சங்கச் செயலாளர்)
3) பொடவரா குஞ்ஞம்பு (சங்கத் தொண்டர்)
4) பள்ளிக்கல் அபூ பக்கர் (தொண்டர் படை தலைவர்)
5) சூரிக்கண்டன் கிருஷ்ணன் (பாலர் சங்கத் தலைவர்)

ஆகிய அய்ந்து பேருக்கும் மரண தண்டனை விதிக்கிறது நீதிமன்றம்.  பின்னர் சூரிக்கண்டன் கிருஷ்ணன் சிறுவர் என்பதால் அவரது மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை விதித்தது.

மற்ற நால்வரையும்  29 மார்ச், 1943 ஆம் தேதி கண்ணூர் சிறையில் தூக்கில் ஏற்றிக் கொன்றது பிரிட்டிஷ் அரசு. தூக்குத் தண்டனைக்கு சிலநாட்கள் முன்பாக சிறையில் அவர்களை சந்திக்கிறார்கள் சில தோழர்கள்.

அப்போது,”மக்களுக்காக நான் என்னவெல்லாம் செய்தேனோ, அதை எல்லாம் எனக்குக் கற்றுத் தந்தது கட்சிதான்.  நான் என் கடமையை சரியாக செய்ததாக கட்சி கருதினால், அதுவே எனக்குப் போதும்” என்கிறார் சங்கச் செயல் வீரர் தோழர் குஞ்ஞம்பு.

“நமது தியாகிகளின் வாழ்வில் இருந்து தான் நாங்கள் ஊக்கம் பெற்றோம்.  அவர்களோடு இணைந்து கொள்ளும் வாய்ப்பு எங்களுக்கும் கிடைக்கும் என கனவிலும் கருதவில்லை.  சாவதற்கு நாங்கள் அஞ்சவில்லை என தோழர்களிடம் கூறுங்கள்.  என் அம்மா மிகவும் வயதானவர்.  அவருக்கு ஆறுதல் கூறுங்கள்.  என் தம்பிகள் மிகவும் சிறியவர்கள்.  அவர்களை கட்சி பணி செய்யச் சொல்லிக் கொடுங்கள்”, என்கிறார் தொண்டர் படைத் தலைவர் தோழர் அபூ பக்கர்.

“கட்சி வளர்ந்து வருகிறது என்ற நல்ல செய்தியோடு வந்திருக்கிறீர்கள்.  கூடுதல் பலத்தோடு நாங்கள் தூக்குமேடை ஏறுவோம்.  நாங்கள் கட்சியில் சேர்ந்ததே இந்த நாட்டு மக்களின் விடுதலைக்காக உழைக்கவும் சாகவும் தானே”, என்கிறார் சங்கத் தலைவர் தோழர் அப்பு.

“நாங்கள் சாதாரண விவவாயிகளின் மகன்கள்.  எங்கள் நான்கு பேரை தூக்கில் போடலாம்.  ஆனால், இந்தியாவிலோ கோடிக்கணக்கான விவசாயிகள் இருக்கிறார்கள்.  அவர்கள் அனைவரையும் அழித்து விட முடியாது.  அவர்களின் வாழ்விற்கும் விடுதலைக்கும் கூடுதலாக உழைக்க முடியவில்லையே என்பது தான் கவலையாக இருக்கிறது”, என்கிறார் சங்கச் செயலாளர் தோழர் சிருகண்டன்.

இந்திய விவசாயிகள் இயக்கத்தின் முதல் தியாகிகளான அப்பு, சிருகண்டன், குஞ்ஞம்பு, அபூ பக்கர் தூக்கு மேடை ஏறி, இதோ எழுபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.

நெடுவாசல், கதிராமங்கலம், காவிரி டெல்டா விதர்பா, பீகார், தெலுங்கானா, ராஜஸ்தான் என நாடெங்கிலும் வயல்வெளிகளில் விவசாயிகளின் பிணங்கள் முளைக்கின்றன. இன்றோடு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிகிறது. மோடி அரசின் துரோகங்களுக்கு நாம் வைக்கும் முற்றுப்புள்ளி எப்போது? கையூர் தியாகிகளின் நினைவுநாளில் உறுதி பூணுவோம்.

  • இரணியன் பால்ராஜ்.

குறிப்பு :

1) கையூர் போராட்டம் பற்றி கன்னட எழுத்தாளர் நிரஞ்சனா எழுதிய “சிரஸ்மரனே” நாவல் தமிழில் “நினைவுகள் அழிவதில்லை” என பி.ஆர்.பரமேஸ்வரன் மொழிபெயர்பில் வந்துள்ளது.  என்.சி.பி.ஹெச் வெளியிட்டு உள்ளது.
2) “மீன மாசத்திண்டே சூரியன்” கையூர் போராட்டம் பற்றிய மலையாளத் திரைப்படம். யூ டியூபில் கிடைக்கும்.
3) “நினைவுகள் அழிவதில்லை” கையூர் போராட்டம் பற்றிய தமிழ்த் திரைப்படம், யூ டியூபில் கிடைக்கும்.

ஐயர் மனசுல பெரியார் !

2

யார் கடவுள்…
பக்திக்கு பலி கேட்பவனா?
பசிக்கு உணவு அளிப்பவனா?
சிந்தித்துப் பார்.
– என்றார் பெரியார்.
அதை நானும் வழி மொழிகிறேன் என்றுபேசினார் ஒரு பார்ப்பனர். நம்ப முடியவில்லையா? எனக்கும் அதே அதிர்ச்சிதான்.

சென்னையின் கோடம்பாக்கத்தில் உள்ள புறநகர் இரயில் நிலையம். அதன் நுழைவாயிலில் பிள்ளையாருக்கும் அம்மனுக்கும் சேர்த்து சின்னதாக ஒரு கோயில். இரயிலுக்கு போறவங்க வரவங்க அவசரமா ஒரு பிராத்தனையுடன் கன்னத்துல போட்டுகிட்டு கையில கிடைச்ச சில்றைய உண்டியல்ல போட்டுட்டு பரபரப்போ போயிட்டும் வந்துட்டும் இருந்தாங்க.

மாலை 6 மணிக்கி சென்னையில ரயில் நிலையம் எப்படி இருக்கும். தெரிஞ்சவங்களே எதிர்ல வந்தாக் கூட தெரியாதது போலதான் இருக்கும். அத்தனை பரபரப்பான உலகத்துல வாழ்ந்துட்டு இருக்கோம்.

இந்த பரபரப்புக்கும் நடுவுல ஒரு அம்மா பத்து ரூவாய் நோட்டை அம்மன் மடியில வச்சு கும்பிட்டுட்டு போனாங்க. அடுத்த அஞ்சு நிமிசத்துல அழுக்கு படிஞ்ச சட்ட போட்ட 30 வயசு மதிக்க தக்க ஒருத்தரு வந்து அம்மன கும்பிட்டுட்டு அந்த அம்மா வச்ச பத்து ரூவா பணத்த எடுத்துட்டு போகப் போனாரு.
பிள்ளையாரு பக்கத்துல இத பாத்துட்டு உக்காந்திருந்த அந்த கோவில் குருக்களான ஐயரு பதறிட்டாரு.

“ஏய் யாருய்யா நீ. அம்மன் மடிமேல இருந்த பணத்த எதுக்கு எடுக்குற”
“அதுவா அய்ரே! நான் முக்கியமா ஒரு காரியத்துக்கு போரேன். எனக்கு அம்மன்னா ராசி அம்மனுக்கு சொந்தமானது எங்கூட இருந்தா போற காரியம் நிறைவேறும் அதுக்குதான்.”
“அதுக்காக கருவறைக்குள்ள கால் வச்சு எடுப்பியா”
“வெளிய நின்னு எடுத்தா எட்டாது அய்ரே”
“திருடுனது மட்டும் இல்லாமே திமிரா வேற பேசுறியா”
“அந்தம்மா வச்ச காச நியுந்தா எடுப்ப அப்ப நீ திருடனா. திருட்டுன்னு சொல்லி அசிங்கப் படுத்தாதே அய்ரே. ராசின்னு செல்றேன்ல…..”

காச எடுத்தவர் ஐயர்ட கொஞ்சம் செல்லமா கோச்சிகிட்டது போல தெரிஞ்சது.
“ராசின்னா சாமி மடியில உள்ள ஒரு ரோஜாப் பூவ எடுத்துக்க வேண்டியதுதானே எதுக்கு காச எடுக்குற”

“ரோஜாப்பு எடுக்க மட்டும் நான் உள்ள போகலாமா அய்ரே.”
“காசு வேணும்னு என்ன கேட்டா குடுக்க போறேன். சாமி காச எதுக்கு எடுக்குற. போறவங்க வாரவங்க எல்லாம் இஷ்டத்துக்கு நடக்குறதுக்கு நாங்க எதுக்கு. சொல்லு பாப்போம்.”

“சாமிக்கி இன்னா செலவு இருக்கு சொல்லு. காச வச்சு அது இன்னா பன்னப் போகுது. ஒனக்கும் எனக்கும் தான் செலவுருக்கு. அதான் மல்லுகட்டிகினு கெடக்குறோம். நான் சொல்றது சரிதானே அய்ரே”

ஏடாகூடமா பேசுறாரு இவர்ட்ட என்ன பேச்சுன்னு தோணுச்சோ இல்ல அவரு பேசுறது சரின்னு தோணுச்சோ ஐயர் மௌனமாய்டாரு. காசு எடுத்தவரு மேல பேசுனாரு.

“சாமிகிட்ட போயி காச நானு எடுத்தது தப்புன்னா அந்தம்மா உள்ள போயி வச்சதும் தப்புதானே. அப்ப எதுக்கு உள்ள போயி வச்சிங்கன்னு சண்ட போடல. காசு வருதுண்ணா மட்டும் கணக்கு பாக்க மாட்டிங்க அப்புடிதானே அய்ரே.”

அழுக்கு சட்டக்காரர் விதண்டா வாதமா பேசினாலும் லாஜிக்கா பேசுனாரு. ஐயரும் சாதி வெறியோட பேசாமெ கொஞ்சம் நிலமைய யோசிச்சு பாத்து போசுனாப் போலதான் இருந்துச்சு.

ஒரு நாணயமான அந்த சண்டைய நிதானிச்சு பாக்கவோ கேக்கவோ அங்க யாருக்குமே நேரமில்ல. அடுத்த அஞ்சு நிமிசத்துக்கான மின்சார ரயிலுக்குக் கூட தாமதிக்காம ஓடிட்டே இருந்தாங்க. நமக்கு பக்கத்துல நடந்தது என்னன்னு தெரிஞ்சுக்க நேரமில்லாம அலாரம் கட்டிட்டு ஓட வேண்டிய தேவை மனுசனுக்கு.

“நீங்க பாத்துட்டு தானம்மா இருந்தீங்க அவர் செஞ்சது நியாயமா?” என்னப் பாத்து கேட்டாரு ஐயரு.

நான் ஒரு நண்பர பாக்குறதுக்காக கோயில் பக்கம் காத்திருந்த வேளையிலதான் இந்த சண்டை நடந்தது. சண்டைய பாத்தது பாவமா? என்ன நாட்டாமையாக்கி பஞ்சாயத்த ஏம்பக்கம் திருப்பினாரு ஐயரு.

எனக்கு எப்பவுமே பஞ்சாயத்துல பிராது குடுக்குற ரோல் தான் இருக்குமே தவிர தீர்ப்பு சொல்ற நாட்டாமை ரோல் வந்ததே கிடையாது. ஐயரு அப்புடி சொன்னதும் என்னடா செய்றதுன்னு சமாதானப் படுத்தினேன்.

“விடுங்க சாமி. பாவம் கையில காசு இல்லாம எடுத்துருப்பாரு”
“என்னம்மா இப்படி சொல்றீங்க. இருக்கப்பட்டவங்க காசு போடுவாங்க இல்லாதபட்டவங்க எடுப்பாங்கன்னு சொல்றாப்போல இருக்கு. அப்ப கோயில்… நிர்வாகத்த எப்படி நடத்துறது.”

ஐ!…. ஐயரே நமக்கு சாதகமா பஞ்சாயத்த வேற பக்கம் திருப்புறாரு நாமும் அதே ரூட்டுல போயிடுவோம். திரும்பவும் காசு எடுத்தது குத்தமா குத்தம் இல்லையா என்ற பட்டிமன்றம் வேண்டாமுனு நினைச்சேன்.

“கோயில் நிர்வாகம் நீங்க பாக்கனுமா? ஏன் அரசாங்கம் பாத்துக்காதா?”
“இது என்ன அறநிலைத்துறைக்கு சொந்தமான கோயிலா அவங்க பாக்குறதுக்கு. கோயில் மராமத்து செலவு எங்களுக்கு சம்பளம் எல்லாமே உண்டியல நம்பித்தான். கோயில் திருவிழா விசேசம், கட்டுமானம் போல பெரிய செலவுகள இந்த பகுதி பெரியவா நிதி வசூல் செஞ்சு பாப்பாங்க.”

“உண்டியல்ல விழற காச யாரு எடுப்பாங்க.”
“கோயில்ல முன்ன ரெண்டு ஐயரு இருந்தோம். காசு பிரிச்சுக்கறதுல சண்ட சச்சரவு… பிறகு அதிகாரிங்க டெண்டர் விட்டுட்டாங்க. டெண்டர் எடுத்தவங்க சம்பளம் தருவாங்க. தட்டுல விழறத நாங்க எடுத்துப்போம்.”

“உண்டியல்ல காசு விழாம போச்சுன்னா டெண்டர் எடுத்தவங்க எப்புடி சாமி சம்பளம் குடுப்பாங்க.”

“முன்ன விட இப்பதான் கோயிலுங்கள்ள உண்டியல் அதிகமா நெறையுது. தெரியுமா உங்களுக்கு.”
“மக்களுக்கு முன்னவிட இப்ப கடவுள் பக்தி அதிகமாச்சின்னு சொல்றீங்களா?”
“மக்களுக்கு கஷ்டம் அதிகரிச்சுப் போச்சுன்னு சொல்றேன்.”
“சாமி சொல்றது சரியா புரியலையே”னு விளக்கம் கேக்கும் போது ரெண்டு பேரு சாமி கும்பிட வந்தாங்க.

மளிகைக் கடை அண்ணாச்சி பேசிக்கிட்டே மளிகைப் பொருள பொட்டணம் போட்றாப் போல, ஐயரும் பேசிகிட்டே கற்பூறத்த சாமி முகத்துல காட்டிட்டு விபூதி குங்குமத்த கொடுத்தாரு.
ஐயருக்கு பக்தியே இல்லன்னு யாரும் நெனச்சுரக் கூடாது. ஆரம்பத்துல பயபக்தி நிறைய இருந்துருக்கும். இப்ப இதுவே தொழில்ன்னு ஆனதால தொழில் அனுபவத்துல ஐயரு அர்சனைய அசால்டா செய்றாருன்னு சொல்லலாம்.  அவரும் விடாமெ பேசிட்டுதான் இருந்தாரு.

“எவ்வளவு சம்பாரிச்சாலும் மனுசனுக்கு பிரச்சன கொறைய மாட்டேங்குது. திருட்டு, கொள்ள, வழிப்பரின்னு கெட்ட விசயமும் அதிகரிச்சு போச்சு. அதனால உண்டியல் நெறையிது.”
“என்ன சாமி சொல்றீங்க. கெட்ட விசயத்துக்கும் கடவுளுக்கும் என்ன சாமி சம்மந்தம்.”

“கடவுளப் பத்தி சொல்லல. தப்பு செய்றவங்க பன்னுன பாவத்த போக்க பாதிய உண்டியல்ல போட்றாங்கன்னு சொல்றேன்.”
“களவாண்டதுல கடவுளுக்கும் பங்கு இருக்குன்னு… சொல்ல வர்றீங்களா சாமி.”

“நீங்க கடவுள தப்பா நெனைக்கிறீங்க”
“லஞ்சம் வாங்கிட்டு கண்டுக்காம விட்றது தப்பில்லையா சாமி.”

“திருடிட்டு வந்த தின்பண்டத்த ஒருத்தர் உங்களுக்கும் கொஞ்சம் தர்ரார்னு வச்சுப்போம். திருட்டு பொருளுன்னு தெரியாம தின்னுட்டிங்க. தின்னதுக்காக திருட்ட நீங்க ஏத்துப்பீங்களா? சொல்லுங்க.”
“திருடன்னோ திருட்டு பொருளுன்னோ எனக்கு எதுவும் தெரியாம இருக்கலாம் சாமி. ஆனா கடவுளுக்கு எல்லாம் தெரியுமே.”

“நீங்க வேண்டிக்கிட்டது ஏதோ நடக்கல போல அதான் கடவுள் மேல கொஞ்சம் கோபமா இருக்கீங்க.”
“எனக்கு கடவுள் மேல கோபம் இல்ல சாமி, தந்தை பெரியார் மேல பாசம் அதிகம்.”

“அப்புடி சொல்லிட்டு போங்க. நானும் கடவுள எந்த அளவு மதிக்கிறேனோ அந்த அளவு பெரியாரையும் மதிக்கிறம்மா.”

“என்னா சாமி சொல்றீங்க. உங்கவா எல்லாருக்கும் பெரியார் எதிரியாச்சே?”

“யாரும்மா சொன்னது அப்புடி… பெரியாரு இல்லன்னா நாம ரெண்டு பேரும் இப்படி ஒன்னா உக்காந்து பேசிட்டு இருக்க முடியுமா?”

“பெண்ணுரிமை பத்தி சொல்றீங்களா?”

“அதுவும்தான். ஆனா நான் சொன்னது அது இல்ல. பெரியார் காலத்துல பத்து தர்மகர்தா, பத்து பெரும் பணக்கார ஐயர் இவங்க கைதான் ஓங்கி இருந்துச்சு. ஐயர்னு சொல்லிகிட்டு நாங்களும் பணக்கார ஐயர் கிட்ட நிக்க முடியாது. தர்மகர்தா வந்தா அர்சன தட்டு புடிக்கிற ஐயரு எல்லாம் அடிமையா ஒடிங்கிதான் நிக்கனும். நாங்க ஜாதி ஒன்னுதான். காசு பணத்த வச்சு பாத்தா வேற ஜாதி.

பெரியாரு சாதிய ஒழிக்கனுன்னு சொன்னதே சமத்துவத்த கொண்டு வரணுன்னுதான். அதுக்காக பண்ணையாருங்க (தர்மகர்தா) கூட கூட்டு வச்சுகிட்டு திமிரா இருந்த ஐயருங்கள எதிர்த்தாரு. அத புரிஞ்சுகிட்டு எங்களுக்கு கொஞ்சம் விட்டு கொடுத்தாங்க அந்த பணக்கார ஐயருங்க.”

“என்ன சாமி நீங்களே உங்க ஆளுங்களுக்கு எதிரா பேசுறீங்களே?”

“எங்காளுங்க பன்னுனா தப்பில்லையா.”

“நீங்க பெரியார பத்தி உயர்வா சொல்றீங்க. ஆனா எச் ராஜா பெரியார் சிலைய ஒடைக்கனுன்னு சொல்றாறே.”

“அந்தாளு ஒரு உளறு வாயி. அது அவரோட தனிபட்ட கருத்து. பெரியாரு பகுத்தறிவு பாசறை. சிந்தனை வாதி. பெரியார் சாதிய ஒழிக்கனுமுன்னு சொன்னதுக்கு காரணமே தர்மகர்த்தா – பணவசதி படைச்ச ஐயருங்க திமிருதான்.”

அதுக்குப் பிறகு நான் என்னத்தை பேச? இப்ப ஐயரே பேச்ச முடிக்கலாம்னுட்டாரு.

“தப்பா எடுத்துக்காதிங்க. எனக்கும் நிறைய பேசனுன்னு ஆசைதான் ஆனா காலையிலதான் பல்லுக்கு வேர் சிகிச்சை பண்ணிட்டு வந்தேன். சத்தமா பேச முடியல. இதுவரைக்கும் பேசுனதே ஒரு பக்கம் வலிக்கிது. இன்னொரு நாளைக்கி பேசலாமா?”

பல் சிகிச்சை எடுத்துக்கிட்டே இவரு இப்படி பேசுராறுன்னா, நல்லா  இருக்கும் போது இன்னும் நல்லா பேசுவாரேன்னு, இன்னொரு வாட்டி பேசுறேன் சாமின்னு வணக்கம் சொல்லிட்டு வந்தேன்.

இதை  பல தோழருங்கிட்ட சொன்னதும் அவங்களுக்கும் ஆச்சரியம்தான். என்ன இருந்தாலும் பார்ப்பனருங்கிட்டயே சமத்துவத்தை கொண்டு வந்ததற்கு பெரியார்தான் காரணமுன்னு ஒரு ஐயரே சொல்லிட்டாரே!

– சரசம்மா
(உண்மைச் சம்பவம்)