திருச்சியில் உழைக்கும் மகளிர் தினக் கூட்டம்
வீட்டிலும் வெளியிலும்
உழைப்பும் உணர்வும்
கரும்புச் சக்கையாய்
பிழியப்படும் பெண்ணே,
உனது நிலை மாற
வழி காட்டத்தான்
உலக உழைக்கும் மகளிர் நாள்!
எல்லாத் துறையிலும்
பெண்களின் உழைப்பு
கட்டிட வேலை முதல்
கணினி வேலை வரை…
உரிமைகள் பறிப்பு.
முதலாளி முதல்
கணவன் வரை
சுரண்டல் அடக்குமுறை நீடிப்பு.
ஆறு முதல் அறுபது வரை
எல்லா வயதிலும்
எல்லா இடத்திலும் பாதிப்பு.
எதிர்த்து கேள்வி கேட்டால்
“பொம்பளையா லட்சணமா நடந்துக்க”
என உபதேசக் கொழுப்பு!
என்னதான் செய்வது
வாருங்கள்… விவாதிப்போம்!
முகநூலில் வலை விரிக்கும்
தந்திரங்கள்,
முகத்துக்கு நேரே
நல்லவன் போல நடித்து
உடல்மேயக் காத்திருக்கும்
வக்கிரங்கள்.
சம்பாதிப்பதற்காக
பெண் வெளியே போவதை
குடும்பப் பாங்காகவும்
சந்திக்கும் பிரச்சனைகளுக்காக
பெண்
போராட வெளியே வந்தால்
குடும்பத்துக்கு ஆகாததாகவும்
இழுத்துப் பிடிக்கும்
ஆணாதிக்க நுட்பங்கள்.
காதலால் சுரண்டப்படும்
பெண்ணின் ஆளுமைகள்…
சுகமான சுமைகள் என
குடும்பத்தால் அழிக்கப்படும்
பெண்ணின்
சமூக விருப்பங்கள்…
கூண்டுக் கிளிகளாய்
சுயநலத்தில் அடைத்துவிட்டு
வாட்ஸ்அப், ஸ்மார்ட் போன்
இணையத்தளம்
இரை மட்டும் போதுமா?
அரசியல் வளர்ச்சிக்கு வழியில்லாது
அறிவியல் வளர்ச்சி மட்டும்
முன்னேற்றுமா?
வாருங்கள் வழி காண்போம்!
கூந்தலுக்கு அயர்னிங்…
புருவத்திற்கு லைனிங்…
உதட்டுக்கு சயினிங்…
என உறுப்புகளை சந்தையாக்கும்
அழகு வெறி.
ரகரகமாய் உடுத்தி…
புதுசு புதுசாய் தின்று…
விதவிதமாய் சுற்றி…
உணர்வுகளை வணிகமாக்கும்
நுகர்வு வெறி.
கற்றுக்கொடுக்க
கையைப் பிடித்து இழுக்கும்
டி.வி. சேனல்கள்.
சுற்றிலும் நடக்கும்
சமுதாய உண்மைகளை
உணரமுடியாதபடிக்கு
சுரணையை இழக்க வைக்கும் சீரியல்கள்.
இது வளர்ச்சியா? இகழ்ச்சியா?
வாருங்கள் பேசுவோம்!
போலீஸ் ஸ்டேசன் போனாலும்
புடவையை உருவுகிறான்,
அரவிந்தர் ஆசிரமம் போனாலும்
ஆடைகளை அவிழ்க்கிறான்.
பேருந்தில் வருபவன்
நோட்டம் பாத்து உரசுகிறான்
மாண்பமை நீதி அரசனோ
நேரிடையாய் அழைக்கிறான்.
தாழ்த்தப்பட்ட பெண்
தலை நிமிர்ந்தால்
நிர்வாணமாக்கி தூக்கு,
தன் மகளே
சாதி மாறி மணம் புரிந்தால்
எரித்து சாம்பலாக்கும்
ஆதிக்க சாதிவெறி.
பெண் என்பதை விட
தாழ்த்தப்பட்டவள் என்பதற்காகவே
சிதைக்கப்பட்ட உடல்கள் எத்தனை?
சைடிஷ்சுக்கும்
சகோதரிக்கும்
வித்தியாசம் தெரியாமல்
குதறும் கொடூர குடிகாரர்களை
உருவாக்கும் டாஸ்மாக்குகள்.
திறக்கப்படும்
ஒவ்வொரு மது பாட்டிலுக்குள்ளும்
புதைக்கப்படும்
பெண்களின் இதயங்கள்.
ஊத்திக் கொடுக்க ஐ.ஏ.எஸ்.சு
காத்து நிற்க போலீசு
ஆணையும் பெண்ணையும்
எதிர் எதிராக்கி
அடக்கிச் சுரண்டும் மூலதன அரசு!
சட்டம், நீதி, மதம், அதிகாரவர்க்கம்
கலாச்சாரம், அரசியல், அரசாங்கம்
என இந்தக் கட்டமைப்பே
நமக்கு எதிராக இருக்கையில்
இதை ஒழிக்காமல் ஏது வாழ்க்கை?
சட்டை பழசானாலே
பழைய மாடல் என
தூக்கி எறியும் மனசு
சமுதாயம் குப்பையானால்
அதை வீசி எறியாமல்
எப்படி கிடைக்கும் புதுசு?
ஆணும், பெண்ணும்
உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைந்தால்
உதவாத இந்த சமூக அமைப்பை
ஒழித்துக்கட்ட முடியும்.
சமத்துவ வாழ்வுக்கான
சுரண்டலற்ற சமூக அமைப்பை
உருவாக்க முடியும்!
அதற்கொரு அமைப்பாய்
திரள வேண்டும் என்கிறோம் நாங்கள்
நீங்கள்?
பேசலாம்!
நேரில் வாருங்கள்!
– தோழர் துரைசண்முகம்
சமூக விடுதலையே! பெண் விடுதலை!
குருதியில் மலர்ந்த மகளிர் தினம் மார்ச்-8.
திருச்சியில் பெண்கள் விடுதலை முன்னணி நடத்தும்
அரங்குக்கூட்டம்.
நாள்: 08.03.2015 ( ஞாயிற்றுக்கிழமை )
இடம்: செவனா ஹோட்டல், மத்திய பேருந்து நிலையம், திருச்சி
நேரம்: மாலை 6.30மணி
தலைமை
தோழர்.அம்சவள்ளி, பொதுக்குழு உறுப்பினர், பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி
சிறப்புரை
கவிஞர் தோழர் துரை.சண்முகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை
தோழர் மீனாட்சி, வழக்கறிஞர், மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை
தோழர் பவானி, மாவட்டபொருளாளர், பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி
மக்கள் கலை இலக்கியக் கழகம் மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்.
அனைவரும் வாரீர்! வாரீர்!
செய்தி:
பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி.
தொடர்புக்கு: 9750374810.
பட்ஜெட் 2015 : மக்களுக்கான மரண அறிவிப்பு
அந்தக் காலத்தில் குடுகுடுப்பைக்காரர்களின் தொல்லைகள் அதிகமிருக்கும். நள்ளிரவில் ’ஜக்கம்மாவோடும்’ கிழிந்த கோட்டு, அழுக்கு டர்பன் சகிதம் “நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது” என்று தங்கள் அருள் வாக்கைத் துவங்குவார்கள். “இந்த வீட்டம்மா தாலியறுக்கப் போறா.. ” என்று கொளுத்திப் போடுவதற்கு முன்பும் கூட ‘நல்ல காலம் பொறக்குது’ என்று கூவ மறக்க மாட்டார்கள்.

சம்பந்தப்பட்ட ‘அருள்வாக்கை’ கேட்டவர்கள் விடியும் வரை திக்குதிக்கென்று இதயம் துடிக்க விழித்தே கிடப்பார்கள். ராத்திரி கொளுத்திப் போட்ட பிட்டுக்கு சன்மானத்தை வாங்க மறுநாள் ஜக்கம்மாவின் மகன் வந்தே ஆக வேண்டும். காலை சாவகாசமாய் வந்து பரிகாரம் சொல்லி அரிசியோ காசோ பிடுங்கிப் போவார்கள். இப்போது காலம் மாறி விட்டது. குடுகுடுப்பைக்காரர்களுக்கு கிழிந்த கோட்டு கிடைப்பதில் தட்டுப்பாடு வந்ததோ, தெருநாய்களின் தொல்லையோ தெரியவில்லை; குடுகுடுப்பைக்காரர்களின் நடமாட்டம் குறைந்து விட்டது.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் 10 லட்சம் ரூபாய் கோட்டு, “அச்சே தின் (நல்ல காலம்)” என்ற அருள் வாக்கு இவற்றோடு நவீன குடுகுடுப்பைக்காரனாக அவதரித்தார் மோடி. தேர்தல் முடிந்த உடன் இரயில் கட்டணத்தை பாரதிய ஜனதா அரசு உயர்த்திய போதே மக்களின் தாலியறுக்கும் காலம் மலரத் துவங்கியது. தற்போது நில அபகரிப்புச் சட்டத்தில் ஓங்கி வீசும் ‘நல்ல காலத்தின்’ நறுமணம், 2015-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் ஊரெங்கும் நாற்றமெடுக்கத் துவங்கியுள்ளது.
“இது கார்ப்பரேட்டுகளுக்கான பட்ஜெட்” என்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம். “இந்த நிதி நிலை அறிக்கையின் படி முதல் ஆண்டில் ரூ 20 ஆயிரம் கோடி, இரண்டாம் ஆண்டில் ரூ 40 ஆயிரம் கோடி, மூன்றாம் ஆண்டு ரூ 60 ஆயிரம் கோடி, நான்காம் ஆண்டு 80 ஆயிரம் கோடி கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ள சிதம்பரம், “ஆக மொத்தம் ரூ 2 லட்சம் கோடி சலுகைகளை கார்ப்பரேட்டுகளுக்கு இந்த நிதி நிலை அறிக்கை அறிவித்துள்ளது. இதே காலகட்டத்தில், பெரும்பான்மை மக்களுக்கான திட்டங்களுக்கான ஒதுக்கீடு பெருமளவு வெட்டப்பட்டுள்ளது. இதிலிருந்தே இந்த அரசு ஏழைகளுக்கானதில்லை என்று தெரிகிறது” என்கிறார்.

ச்சே.. சத்ய சோதனை. கரடியே காறித் துப்பி விட்டதய்யா..!

கார்ப்பரேட்டுகளின் வருமான வரியை 4 ஆண்டுகளில் 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைப்பதாக அறிவித்துள்ள மோடி அரசு, இணையத்தில் தனக்காக களமாடி வரும் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்கும் தனிநபர் வருமான வரிக்கான தற்போதுள்ள வரிவிலக்கு உச்சவரம்பை அதிகரிக்கவில்லை.
மாறாக, தனியார் காப்பீடு, மருத்துவ, இதர வகைகளில் பாலிசி எடுத்தால் ரூ 4.4 லட்சம் அளவுக்கு சலுகை கிடைக்கும் என்று ஃபிலிம் காட்டுகிறார்கள். இதில் ஆதாயம் முதலாளிகளுக்கு, பீதி நமக்கு என்பதை நடுத்தர வர்க்கம் உணர்வதில்லை.
என்றாலும், சமூக வலைத்தளங்களில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னும் பின்னும் மோடி என்னவெல்லாம் பேசினார் என்பதைப் பீராய்ந்து திரைச்சொட்டுகளாக (Screen shots) வெளியிட்டு வருகின்றனர் நம்பிக் கெட்ட நடுத்தர வர்க்கத்தினர்.
கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்’சுமை’யை குறைத்த கையோடு, ஒட்டு மொத்த மக்களையும் பாதிக்கும் வகையில் சேவை வரியை 12.36%-லிருந்து 14% ஆக உயர்த்தியிருக்கிறார், ஜெட்லி. மேலும், மோடியும் அவரது மேட்டுக்குடி பாதந்தாங்கிகளும் துடைப்பம் எடுத்து தெருக்களை பெருக்குவதாக போஸ் கொடுக்கும் ஸ்வச்ச பாரத் (தூய்மை இந்தியா) திட்டத்துக்கு வாய்க்கரிசி போட, தேவைப்படும் போது சேவை வரியை 2% கூட்டவும் வசதி செய்திருக்கிறார் அவர்; மோடி தான் போடும் நாடகங்களுக்கான விளம்பரக் கட்டணமாக கார்ப்பரேட்டுகளுக்கு படியளக்கும் பில்லை மக்கள் தலையில் கட்டியிருக்கிறார். கேட்டால் நாடெங்கும் கழிப்பறைகள் கட்டுவதாக உதார் விடுகிறார்கள். எனில், ஸ்வச்ச பாரத் திட்டத்தின் விளம்பரச் செலவு எவ்வளவு, கழிப்பறை கட்டிய செலவு எவ்வளவு என்று வெள்ளை அறிக்கை விட்டால் இதன் மோசடியை உணர முடியும்.

அதோடு கூடவே, தூய்மை இந்தியா திட்டத்துக்கு கார்ப்பரேட்டுகள் ஒதுக்கும் நன்கொடைகளுக்கு 100% வரிவிலக்கு என்று முதலாளிகள் வரி ஏய்க்க இன்னொரு ஓட்டையை திறந்து விட்டிருக்கிறார் ஜெட்லி.
மேட்டுக்குடியினர் வரிவிலக்கு பெறும் தர்ம காரியங்களில், யோகாவுக்கு செலவு செய்யும் பணத்தையும் சேர்த்து பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போன்ற சாமியார் கம்பெனிகளுக்கும் நன்றிக் கடன் செலுத்தியிருக்கிறார் மோடியின் நிதி அமைச்சர்.
உயர்குடியினரின் முக்கிய புனித தளங்களான “ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்கள் புதிதாக துவங்கப்படும்” என்று நிதி நிலை அறிக்கையில் அறிவித்துள்ள அதே வேளை, கல்விக்கான ஒதுக்கீடு கடந்தாண்டை விட 2 சதவீதம் குறைந்துள்ளது. இந்த வெட்டு, சாதாரண மக்களுக்கான அரசு பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டில்தான் நடக்கும் என்று புரிந்து கொள்ளலாம்.
மேலும், 2 சதவீதம் குறைவு என்ற இந்தக் கணக்கு என்பது கடந்த நிதியாண்டில் செலவிடப்பட்ட தொகையில் இருந்து கணக்கிடப்பட்டதாகும். உண்மையில் கடந்தாண்டு நிதி நிலை அறிக்கையில் செலவிடப்போவதாக பீற்றிக் கொண்ட தொகையில் இருந்து கணக்கிட்டால் 16.54 சதவீதம் இந்தாண்டு நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது. அதாவது, சென்ற நிதி ஆண்டிலேயே அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து சுமார் 85.5 சதவீதம் தான் உண்மையில் செலவிடப்பட்டுள்ளது.

பொதுப்பணித் துறையில் சுமார் ரூ 1.25 லட்சம் கோடி செலவிடப்படும் என்ற நிதி நிலை அறிக்கையின் வாசகங்களை ஜெட்லி வாசித்துக் கொண்டிருக்கும் போதே, சிமெண்டு, எஃகு மற்றும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயரத் துவங்கியது. ஜெட்லி கார்ப்பரேட்டுகளுக்கு எழுதப் போகும் மொய்தான் அந்த ரூ 1.25 லட்சம் கோடி என்பதை அவர்களது புனிதத் தலமான பங்குச் சந்தையின் பக்தர்கள் முதலில் உணர்ந்து விட்டார்கள்.
ஒரு பக்கம் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள பாரதிய ஜனதா, விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என்று சகல பிரிவினரின் மேலும் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது.
2013-ம் ஆண்டு ரூ 17,778 கோடியாக இருந்த விவசாயத் துறைக்கான நிதி ஒதுக்கீடு, தற்போதைய 2015-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ரூ 11,657 கோடியாக வெட்டிக் குறுக்கப்பட்டுள்ளது. இதில் பாசன வசதிகளுக்காக கடந்தாண்டு ரூ 1,797 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போதைய நிதி நிலை அறிக்கையில் ரூ 772 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசுகளின் சார்பாக செயல்பட்டு வந்த விவசாய பொருட்களுக்கான சந்தைக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (APMC – Agricultural produce marketing committee) கட்டுப்பாட்டிலிருந்து பழங்கள் மற்றும் அத்தியாவசிய காய்கறிகள் விடுவிக்கப்பட்டு ஏற்கனவே விளைச்சலுக்கு போதிய விலையில்லாமல் அவதிப்பட்டு வந்த விவசாயிகளை லாபவெறி கொண்ட கார்ப்பரேட்டுகளின் கையில் ஒப்புக் கொடுத்துள்ளது மத்திய அரசு.

மோடி பதவியேற்ற பின் விவசாயிகள் தற்கொலை 26 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எஞ்சிய விவசாயிகளின் தலையில் திணித்து அவர்களை உயிரோடு குழியில் தள்ளி தற்போதைய பட்ஜெட்டின் மூலம் மண்ணைப் போட்டு மூடியுள்ளது மத்திய அரசு.
தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தம், தொழிற்சாலை பாதுகாப்பு விதி முறைகளை தளர்த்தியது, விவசாயிகள் வாழ்க்கையை அழித்தது, கல்விக்கான ஒதுக்கீட்டை குறைத்து மாணவர்களுக்கு துரோகம் செய்தது, சமையல் வாயு மானியத்தை டி.பி.டி.எல் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து நடுத்தர வர்க்க குடும்பப் பெண்களை அல்லாடவிட்டது என்று எந்தப் பாரபட்சமும் இல்லாமல் சகல தரப்பினரையும் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது குடுகுடுப்பைக்கார அரசு.
அரசின் தாக்குதலில் ஓய்ந்து வீழும் மக்களுக்கு போதிய மருத்துவம் கூட கிடைக்காது என்பதாக மருத்துவத் துறைக்கான ஒதுக்கீட்டையும் 15 சதவீத அளவுக்கு குறைத்துள்ளது, மோடி அரசு. ஏற்கனவே உள்ள நிதி ஒதுக்கீடு போதாமல் அரசு மருத்துவமனைகள் நாற்றமெடுக்கும் பாழடைந்த குடோன்களைப் போல காட்சியளித்து வரும் நிலையில் இனி வரும் காலங்களில் ஏழை மக்களின் வாழ்க்கையை தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளிடம் சமர்ப்பித்துள்ளார் மோடி.

ஒருபக்கம் மக்களின் தலையில் கொள்ளியை வைத்துள்ள இதே பட்ஜெட்டில் கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கப்பட்டுள்ள சலுகைகள் தவிர இராணுவத்திற்கு ரூ 2.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கி அறிவித்துளார் நிதியமைச்சர். வெள்ளைக்காரன் இந்தியாவுக்கென்று எப்போது இராணுவத்தையும் போலீசையும் ஏற்படுத்தினானோ அன்றிலிருந்து இன்று வரை ஒட்டுமொத்த நாட்டையும் உறிஞ்சிக் கொழுக்கும் பிரம்மாண்டமான தின்னிப் பண்டாரமாக உருவெடுத்துள்ளது இராணுவம்.
இது பாசிசவாதிகளின் காலம் என்பதால், அவர்கள் தங்கள் குண்டாந்தடிகளுக்கு வெண்ணை தடவி பளபளப்பாக வைப்பதில் பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்திய இராணுவம் என்ற தின்னிமடக் கூட்டத்திற்கு இரண்டரை லட்ச ரூபாயில் மோடி வைத்திருக்கும் மொய் விருந்தைப் பொருத்தவரை தீனி இராணுவத்திற்கு – மொய் பன்னாட்டு ஆயுத தளவாட தயாரிப்பு நிறுவனங்களுக்கு.

இந்த விருந்தில் தனக்கும் ஒரு இடம் வேண்டும் என்று ஒண்டிக் கொள்வதற்காக தி ஹிந்து நாளிதழில் மோடியை விதந்தோதி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார், சின்ன அம்பானி அனில்.
சின்ன அம்பானி ஒரு முறை மோடியை சந்தித்த போது, “அனில், நம்ம நாட்டில் விடப்படும் கண்ணீர் கூட நம்மோடது இல்லை தெரியுமா? நம்மோட பாதுகாப்பு படைகள் பயன்படுத்தும் ஒவ்வொரு கண்ணீர் புகை குண்டும் இறக்குமதியாகிறது” என்று கண்ணீர் விட்டாராம், மோடி. அதனால், நாட்டு மக்களை கண்ணீர் விட வைக்கும் குண்டுகளை உள்ளூர் முதலாளிகளே உற்பத்தி செய்வதற்குத்தான் “மேக் இன் இந்தியா” திட்டத்தை கொண்டு வந்திருக்கிறாராம் மோடி.
“சி.பி.ஐ, சி.வி.சி, சி.ஏ.ஜி (புலனாய்வு, ஊழல் ஒழிப்பு, தணிக்கை) போன்ற துறைகளின் கண்காணிப்பிலிருந்து பாதுகாப்புத் துறை அதிகாரிகளை விடுவித்து ஒத்துழைப்பு, போட்டி, கூட்டுமுயற்சிகள் என்ற அடிப்படையில் அவர்களை முடிவெடுக்க வைக்க வேண்டும்” என்று கார்ப்பரேட் ஊழலையே சட்டபூர்வமாக்கும் படி கேட்டிருக்கிறார், அம்பானி. மேலும், தனியார் பங்களிப்புக்கு அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டிருக்கிறார். ‘மார்க்சிஸ்ட்’ ராமின் தி ஹிந்து பத்திரிகை அனில் அம்பானியின் கோரிக்கைகளை கடை விரிக்கும் கார்ப்பரேட் விளம்பரப் பத்திரிகையாக மாறியிருப்பதும் மோடியிச இந்தியாவின் புதிய நடைமுறை என்று புரிந்து கொள்ள வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு மறைமுக பங்களிப்பை செய்துள்ள அதே நேரம், இந்த விலையேற்றம் விமானப் பயணிகளைப் பாதிக்க கூடாது என்பதால் விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கு மட்டும் சலுகைகள் வழங்கியுள்ளது மத்திய அரசு.
நடக்கும் ஒவ்வொரு அநீதியையும் பார்க்கும் போது இது யாருக்கான அரசு என்பதை விளங்கிக் கொள்ள முடியாதவர்களுக்கு பாடம் எடுக்க வருகிறார் பொருளாதார அறிஞர் அசோக் தேசாய்.

இந்து பத்திரிகையில் அவர் எழுதியுள்ள பட்ஜெட் அலசல் கட்டுரையில், “2008 – 10 காலகட்டத்தில் நாடு கண்ட வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சி என்பது வாஜ்பாயின் சாதனையை காங்கிரசு தட்டிப் பறித்துக் கொண்டதாகும்” என்றும், “அப்படி வாஜ்பாயால் கிடைத்த வளர்ச்சியின் பலனை உணவு மானியம், வேலை வாய்ப்பு என்று மக்கள் மீது காங்கிரசு வீணடித்து விட்டது” என்றும் குறிப்பிட்டுள்ளார். 2008 – 10 காலத்தில் உலகமே பொருளாதார பெருமந்தத்தில் குப்புறக் கவிழ்ந்து கிடந்த போது வாஜ்பாயால் விளைந்த வரலாறு காணாத வளர்ச்சியென்று கட்டுரையாளர் ஜல்லியடிப்பதற்குள் நாம் நுழையத் தேவையில்லை.
ஆனால், “மக்களின் வாக்குகளை இத்தகைய திட்டங்கள் மூலம் வளைத்துப் போடும் காங்கிரசின் திட்டத்தை முறியடிக்க, சளைக்காமல் வார்த்தைகளை அருவியாய் கொட்டும் ஒரு புதிய தலைவரை, அவரது இந்துத்துவ சாதனைகளிலிருந்து விடுவித்து காங்கிரசின் சொந்தக் குதிரையான வளர்ச்சியை திருடிக் கொள்ள களமிறக்கியது பா.ஜ.க.” என்று சொல்லும் அவர், “நரேந்திர மோடியை ஆதரித்த மக்களுக்கும், பா.ஜ.க.வின் தேர்தல் பணப்பெட்டியை நிரப்பிய வர்க்கங்களுக்கும் பதில் செய்ய வேண்டிய நேரம் இது” என்று மோடியின் தேர்தல் வெற்றிக்கு அவரது சவடால் பேச்சுக்களும், கார்ப்பரேட்டுகள் கொட்டிய பண மூட்டைகளும்தான் ஆதாரம் என்பதை தெளிவாக்கி விடுகிறார்.

ஆனால், மோடி அரசு காங்கிரசு கொண்டு வந்த மக்களுக்கான திட்டங்களை ஊத்தி மூடி விட்டு அவற்றுக்கான நிதியை முதலாளிகளின் வளர்ச்சியை நோக்கி திருப்பி விடாததை கடுமையாக விமர்சிக்கிறார்.
“அந்தத் திட்டங்களின் மேல் பாரதிய ஜனதாவுக்கு எந்தக் கடப்பாடும் இல்லை” என்கிறார் அவர் . அதாவது, ‘அந்தத் திட்டங்களில் பலன் பெற்றவர்கள் உனக்கா ஓட்டுப் போட்டார்கள், ஏன் அவர்களுக்கு கொட்டியழ வேண்டும். அந்தப் பணத்தை முதலாளிகளுக்கு திருப்பி விடு” என்பதே இதன் பொருள்.
நிதிப் பற்றாக்குறையை குறைக்க ‘உணவு மானியம், உர மானியம் போன்ற வீண் செலவுகளை ஆய்வு செய்து குறைக்க வேண்டும்’ என்றெல்லாம் சொல்லும் முதலாளித்துவ ஆய்வாளர்கள், முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பது என்று வரும் போது பற்றாக்குறையைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறுவது உலகெங்கும் உள்ள நடைமுறை. அதையே பின்பற்றி “மக்களுக்கான திட்டங்களை வெட்ட தைரியம் இல்லை என்றால், பற்றாக்குறையை அதிகமாக்கிக் கொள்ளலாம்” என்றும் ஆலோசனை கூறுகிறார், தேசாய்.
மோடியின் அரசு யாருக்கு சாதகமானது என்பதை இதற்கு மேலும் தெளிவாக யாராலும் விளக்கி விடமுடியாது என்பதால் இந்து பத்திரிகைக்கும் அசோக் தேசாய்க்கும் நாம் நன்றியுடையவர்களாகிறோம்.
மோடி ஜக்கம்மா சகிதம் வந்து சொல்ல ஆரம்பித்த “நல்ல காலம் பொறக்குது…” அருள்வாக்கின் பிந்தைய பகுதியான “நாடே நாண்டுகிட்டு சாகப் போகுது” என்பதை இப்போது நடைமுறையில் செயல்படுத்திக் காட்டத் துவங்கி விட்டார்.
இது புலம்பும் நேரமோ, மோடியின் பேச்சுமாத்துகளை கேலி கிண்டல் செய்து சிரித்துக் கொள்ளும் தருணமோ அல்ல – ஏமாற்றப்பட்டவர்களின் ஆத்திரத்தை செயலில் காட்ட வேண்டிய நேரம் – தெருவிலிறங்கிப் போராட வேண்டிய நேரம்.
– தமிழரசன்
படங்கள் : சமூக வலைத்தளங்களிலிருந்து
திருவாரூர் : உழைக்கும் மகளிர் தினத்தில் சூளுரைப்போம்!
மார்ச்– 8 உலக மகளிர் தினம். பெருவாரியான பெண்கள் மகளிர் தினத்தில் வீரம் செறிந்த வரலாற்றைப் பற்றியும் பெண்ணுரிமை என்னும் சொல்லாடலின் ஆழ்ந்த அர்த்தத்தையும் அறியாமலே இருப்பது இன்று நம்மை வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது. இன்னொரு பக்கம் ஆளும் வர்க்கப் பிழைப்புவாத அமைப்புகள் இந்நாளைக் கொச்சைப்படுத்திக் கோலப் போட்டி, சமையல் போட்டி, அழகிப் போட்டி, நடனம், குத்தாட்டம் என அறியாமை இருள் நிரம்பிய நுகர்வு கலாச்சார வெறியிலும் ஆழ்த்தி வைக்கின்றன.
17ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு புரட்சியின் போது பாரிசில் பெண்கள் அடிமைத்தனமாக நடத்தப்படுவதை எதிர்த்துக் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக் கிளர்ச்சியில் ஈடுப்பட்டனர். பெண்களோடு ஆண்களும் இணைந்து கொள்ள அந்த நாட்டு அரசாங்கமே ஆட்டங்கண்டது. இப்போராட்டம் அனைத்தும் ஐரோப்பிய நாடுகளுக்கும் காட்டுத்தீ போல் பரவியது. இத்தாலியிலும் பெண்கள் தங்கள் வாக்குரிமைக்காக ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அந்நாட்டு அரசு வேறு வழியில்லாமல் 1848 மார்ச் 8 அன்று வாக்குரிமையைக் கொடுத்தது. இது அனைத்துலகப் பெண்கள் தினம் மலர வித்தாக அமைந்தது.
நியூயார்க் நகரில் நெசவுத் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் 16 மணி நேர வேலை செய்து மிகக் கொடூரமாகச் சுரண்டப்பட்டனர். அதை எதிர்த்து 1857–ல் உழைக்கும் வர்க்கப் பெண்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் இறுதியாக 1908-ல் வாக்குரிமைக்காகக் கொதித்தெழுந்து போராடியதில் அமெரிக்காவே அதிர்ந்து போனது. இவற்றின் விளைவு அனைத்துலகப் பெண்கள் மாநாடு 1910-ல் ஜெர்மன் கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடி உலக மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு, மார்ச் 8-ம் நாளை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடத் தீர்மானித்தனர். 1917-ல் ரஷ்யாவில் சோசலிசப் புரட்சி நடந்த பின்பு 1920-ல் இருந்து மார்ச் -8 மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு தான் 8 மணி நேர வேலை, பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, வாக்குரிமை என அனைத்து உரிமையும் போராடித்தான் கிடைத்ததேயொழியே அரசு பாவ – புண்ணியம் பார்த்துக் கொடுக்கவில்லை.

இப்படிப் பெண்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் இன்று தனியார்மயம்- தாராளமயம்-உலகமயம் எனும் சேற்றில் மூழ்கடிக்கப்படுகின்றன. ஐ.டி துறையில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் நவீனக் கொத்தடிமைகளாக இராப்பகலாகச் சுரண்டப்படுகின்றனர். ஷாப்பிங் மால்கள், ஜெராக்ஸ் கடைகளில் காலை முதல் மாலை வரை நொந்து கிடக்கின்றனர். விவசாயம் அழிக்கப்பட்டு விரட்டியடிக்கப்படும் பெண்களோ சித்தாள் வேலை தேடி வீதி வீதியாக அலைந்து பரிதவிக்கின்றனர். ஆயத்த ஆடைகள்,பஞ்சாலைகளிலும் தங்களின் இளமையை இழந்து விட்டுக் கோடிக்கணக்கான பெண்கள் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர்.
இவை ஒருபுறம் போக, அரை நிலப்பிரபுத்துவ சமூகம் தாங்கிப் பிடிக்கும் ஆணாதிக்கப் பிற்போக்குத்தனமும், வளர்ச்சி என்ற பெயரில் திணிக்கப்படும் அமெரிக்க நுகர்வு வெறி வக்கிர கலாச்சாரமும், 6 வயது சிறுமி முதல் 60 வயது மூதாட்டி வரையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகி்ன்றன. பெண்களையும் சிக்கிக் சீரழிக்க வைக்கின்றன.
இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடத்தில் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுகிறார். ஒவ்வொரு 7-வது நிமிடத்தில் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. ஒவ்வொரு 42 நிமிடத்திற்கும் ஒரு வரதட்சணை சாவு நடக்கிறது. இன்னும் இந்த புள்ளி விவரம் அதிகரித்துக் கொண்டே போகிறது.
அரசே முன்னின்று சாராயத்தை ஊத்திக் கொடுத்து, தமிழச்சியின் தாலியை அறுக்கிறது. அரசு அனுமதியுடன் பரப்பப்படும் ஆபாச இணையதளமும், ஆபாச பத்திரிகைகளும், போதைப் பொருட்களும் பெண்கள் தைரியமாகச் சமூகத்தில் நடமாட முடியாத நிலைக்கு ஆளாக்கியுள்ளது.
2013-ம் ஆண்டு டெல்லியில் ‘நிர்பயா’ என்ற மாணவி பாலியல் வல்லுறவுத் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து பெண்கள் – மாணவர்கள் போராட்டத்தையொட்டி அரசு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜெ.எஸ்.வர்மா தலைமையில் கமிட்டி அமைத்து, அக்கமிட்டி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் இழைக்கும் முதன்மைக் குற்றவாளிகள் சீருடையணிந்த போலீசு, துணை இராணுவம் மற்றும் இராணுவத்தினர் என்று கூறியது.
இவ்வாறு, பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறப்படும் அரசு எந்திரமே தற்போது பெண்களுக்கு எதிராக மாறி நிற்கிறது. திரும்பவும் சட்டத்தைக் கடுமையாக்கி இந்தக் குற்றக் கும்பல்களிடமே கொடுப்பதில் என்ன பயன்? உழைக்கும் பெண்கள், போராடும் ஆண்களுடன் வர்க்கமாகத் திரண்டு இந்த அரசுக் கட்டமைப்பையே நொறுக்கித் தகர்த்தெறிந்து, மக்கள் அதிகாரத்தை நிறுவுவதே ஒரே வழி. இந்த அநீதிக்கு எதிரான போராட்டத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
உலக மகளிர் தினத்தில் சூளுரைப்போம்!
மத்திய – மாநில அரசுகளே…
- ஆபாச இணையதளங்களைத் தடை செய்!
- சாராய ஆலைகளை, டாஸ்மாக்கை இழுத்து மூடு!
- போதைப் பொருட்களைத் தடை செய்!
ஆளும் வர்க்கங்களால் ஏவப்படும் பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு எதிரான
பேரணி – ஆர்ப்பாட்டம்
தொடக்கம் : நகராட்சி அலுவலகம் எதிரில், திருவாருர் – மாலை 4.00 மணி
நாள் : 07-03-2015 சனிக்கிழமை
இடம் : பேருந்து நிலையம் அருகில், திருவாரூர் – மாலை 5.30 மணி
தலைமை : தோழர் ஆசாத், மாவட்ட அமைப்பாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
சிறப்புரை :
தோழர் கு.ம.பொன்னுசாமி, மாவட்ட அமைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழு.
தோழர் நிர்மலா, மாவட்டத் தலைவர், பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி.
தோழர் காளியப்பன், மாநில இணைச் செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.
தகவல்
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி
திருவாரூர். தொடர்புக்கு : 9943494590
Email: rsyftvr1917@gmail.com
தொடர்புக்கு : 9943495900
மராட்டியத்தில் மாட்டிறைச்சிக்கு தடை – பா.ஜ.க பாசிசம்
வங்கத்து பார்ப்பனரான பிரணாப் முகர்ஜி, மராட்டிய பேஷ்வா பார்ப்பனர்களின் கோரிக்கையை ஏற்று ஏழைகளின் உணவான மாட்டுக்கறியை தடை செய்யும் சட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்.

மராட்டியத்தில் பசுக்களை கொல்வதற்கு தடை விதிக்கும் சட்டம் 1976-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இதில் எருதுகள் மற்றும் காளைகள் மட்டும் இறைச்சிக்கென்று சான்றிதழ் தரப்பட்டு அனுமதிக்கப்பட்டது. கருப்பு நிறத்திலான எருமை மாடுகள் அதில் எருதோ பசுவோ இச்சட்டத்தில் வராது. அவாளின் புனிதம் என்பது வெள்ளைநிற பசுவுக்கு மட்டும்தான்.
1995-ம் ஆண்டில் பா.ஜ.க-சிவசேனை ஆட்சியின் போது வெள்ளை நிற காளை, எருதுகளையும் தடை செய்யுமாறு மசோதா நிறைவேற்றினார்கள். அப்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் பட்ட மசோதாவுக்கு இப்போதுதான் பிரணாப் முகர்ஜி அனுமதி அளித்து மக்கள் வயிற்றில் மண்ணள்ளி போட்டிருக்கிறார்.
இனி மராட்டியத்தில் எருமை இறைச்சி மட்டும்தான் கிடைக்கும். மற்ற மாட்டிறைச்சி கிடைக்காது. “இப்புதிய சட்டத்தால் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழைப்பார்கள், பிற இறைச்சி விலைகள் உயரும்” என்று மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்தியாவின் வணிக தலைநகரமென்று அழைக்கப்படும் மும்பையை தூக்கி நிறுத்தும் கடுமுழைப்பாளிகளுக்கு இனி மாட்டுக்கறி கிடையாது.
பொதுவில் இந்தியாவில் எருமை இறைச்சி அதிகமாக உண்ணப்படுவதில்லை. நாட்டின் ஒட்டு மொத்த மாட்டிறைச்சியில் உள்நாட்டு நுகர்வில் 25 சதவீதம்தான் எருமை இறைச்சி. ஏற்றுமதியில் எருமை இறைச்சிதான் முதலிடம். உலக அளவில் பிரேசிலுக்கு அடுத்த பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர் இந்தியாதான். இத்தகைய சூழலில் மாட்டிறைச்சி தடை சட்டம் ஏற்படுத்தும் பொருளாதார விளைவுகளைக் கூட பா.ஜ.க.விற்கு முதுகு சொறியும் அறிவாளிகள் பேசமாட்டார்கள்.

ஆர்.எஸ்.எஸ் எனும் நச்சும்பாம்பை அளித்த நாக்பூர் நகரம்தான் தற்போதைய மராட்டிய பா.ஜ.க முதல்வர் தேவேந்திர பட்னாவிஸையும் அளித்திருக்கிறது. ஷாகா சென்று பேஷ்வா பெருமையை கற்றுக் கொண்டவர் பின்னர் ஏ.பி.வி.பி, பா.ஜ.க என பரிணாம வளர்ச்சியில் முதல்வராகியிருக்கிறார். பசுக்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்ற கனவு நிதர்சனமாயிருப்பதாக டிவிட்டரில் பூரித்திருக்கிறார்.
“1996-ம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட மசோதா குறித்து பிறகு வந்த எந்த அரசாங்கங்களும் கவலைப்படவில்லை. நாங்கள்தான் தேர்தல் வாக்குறுதியில் சொன்னவாறு இதைச் சட்டமாக்கியிருக்கிறோம்” என்கிறார் பா.ஜ.க.வின் மும்பை பாராளுமன்ற உறுப்பினர் கீர்த்தி சோமையா. மாட்டுக்கறி தடையில் ஆரம்பித்து இனி கோமியத்தை தேசிய டானிக்காக மாற்றுவதைக் கூட இந்த சோமையாக்கள் செய்யலாம்.
இனி தடையை மீறி மாட்டுக்கறி விற்றால் ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மேலும் இந்த குற்றத்திற்கு பிணை வழங்கக் கூடாது என்றும் சட்டத்தை திருத்தியிருக்கிறார்கள். 1976 சட்டத்தில் சிறை ஆறு மாதங்களாகவும், அபராதம் ரூ 1000 ஆகவும் இருந்தது. இரண்டும் தற்போது பத்து மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.

பார்ப்பனியத்தின் இந்த பசு புனிதம் என்பது ஏதோ உயிர் குறித்த கருணை அல்ல. மாட்டுக்கறியை அதிகம் உண்ணும் தாழ்த்தப்பட்ட மக்களையும், மாட்டுக்கறி வர்த்தகத்தில் அதிகம் இருக்கும் முசுலீம் மக்களையும் குறிவைத்து தாக்குவதற்கே இந்த சட்டத்தினை கையிலெடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் மனிதர்கள் மீதான கொலைவெறியே பசுப்புனித போர்வையில் வருகிறது.
பல மாநிலங்களில் மாட்டுக்கறி தடைச் சட்டமிருந்தாலும், விவசாயத்திற்கு பயன்படாத மாடுகளை வெட்டலாம் என்று அனுமதி அளித்து வருகிறார்கள். தற்போது அதையும் ஒழித்திருப்பதால் மராட்டியத்தில் தொடங்கியிருக்கும் பார்ப்பனிய வைரஸ் நாடு முழுவதும் பரவ வாய்ப்பிருக்கிறது.
பெரும்பான்மை மக்களின் மலிவான மாட்டிறைச்சியை தடை செய்வதால் ஆடு, கோழி, போன்ற மற்ற இறைச்சிகளின் விலை உயரும். இதனால் ஏழைகள் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கமும் கூட கணிசமாக பாதிக்கப்படுவார்கள். மாட்டிறைச்சி மூலம் மலிவாக கிடைக்கும் புரதச் சத்து இன்றி நமது குழந்தைகள் வாடிப்போவார்கள். ஆட்டிறைச்சி விலையில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும் மாட்டிறைச்சி இனி இல்லை என்றால் அதன் விளைவுகள் எண்ணிப்பார்க்க முடியாதது.
இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாக மாட்டிறைச்சி வணிகர் சங்கத்தை சேர்ந்த ஆரிஃப் சவுத்திரி தெரிவித்திருக்கிறார். ஆனால் மோடி அரசின் உத்தரவுகளை தீர்ப்புகளாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நீதிமன்றங்கள் மூலம் நீதி கிடைப்பது அரிது.

மாட்டிறைச்சி தடையால் விற்பவர்கள், உண்பவர்களுக்கு மட்டுமில்லை விவசாயிகளுக்கும் பேரிடி காத்திருக்கிறது என்கிறார் ஆரிஃப் சவுத்திரி. இந்தியாவிலேயே அதிகம் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் மராட்டிய மாநிலத்தில்தான் இருக்கிறார்கள். மடிவற்றிய, வயதான, உழைக்க பயன்படாத மாடுகளை இந்தியா முழுவதும் அனைத்து விவசாயிகளும் விற்று வருகிறார்கள். இனி இந்த மாடுகளை விற்கக் கூடாது என்றால் ஏழை விவசாயி என்ன செய்வார்?
மாடுகள் விவசாயத்திற்கு பயன்படுகிறது என்ற காரணத்தால்தான் விவசாயிகள் மாட்டிறைச்சி உண்பதில்லை. அதே போன்று விவசாயத்திற்கு பயன்படாது போகும் மாடுகளை வைத்து பராமரிப்பதும் அவர்களால் சாத்தியமில்லை. இனி மராட்டிய மாநிலத்தில், மும்பை அல்லது பூனா, நாக்பூர் நகரங்களில் கைவிடப்பட்ட மாடுகள் இலட்சக்கணக்கில் சுற்றுவது உறுதி. ஜீவ காருண்யம் பேசும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் வேண்டுமானால் இம்மாடுகளை வீட்டில் வைத்து பராமரிக்க தயாரா?
அப்படி பராமரிக்க வேண்டும் என்று சட்டமாக்கினால் இந்தியாவில் அதிகம் மாடுகளை கொல்வது ஆர்.எஸ்.எஸ் கூட்டமாகத்தான் இருக்கும். “அரசு அறிக்கை ஒன்றின்படி மராட்டிய மாநிலத்திற்கு தேவைப்படும் கால்நடை தீவனத்தில் 61 சதவீதம் பற்றாக்குறை இருக்கும் போது இந்த சட்டம் வருகிறது. இதனால் வயதான மாடுகள் கொல்லப்படுவது தடுக்கப்படும் போது ஆரோக்கியமாக இருக்கும் மாடுகளுக்கு கிடைக்கும் தீவனம் குறையும், மாடுகளோடு விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள்” என சாங்லியில் மாட்டிறைச்சி கடை வைத்திருக்கும் ராஜேந்திர தாண்டே கூறுகிறார். “இல்லை, இனி ஒரு மாட்டை பராமரிக்க மாதத்திற்கு ரூ 5,000 அளிக்கப்படும்” என்று மோடி கூறத் தயாரா? அப்படி அறிவித்தால் இந்தியா ஒரே நாளில் திவாலாகிவிடும்.

“முந்தைய காங்கிரசு கூட்டணி ஆட்சியில் கருணையே இல்லாமல் மாடுகள் கொல்லப்பட்டு அதுதான் பிங்க் புரட்சியாக கொண்டு வரப்பட்டது” என்று தேர்தலின் போது மோடி சாடினார். ஆனால் இந்த கேடி ஆட்சியில்தான் மாட்டிறைச்சி ஏற்றுமதி முன்னைவிட அதிகமாகியிருக்கிறது. மாட்டுக்கறி என்றால் முசுலீம்கள் கொல்வார்கள், அவர்களே உண்பார்கள் போன்ற தவறான பொதுப்புத்திக்கு மாறாக இந்துக்கள்தான் அதிகம் உண்பது கண்கூடு. ஆனால் பஞ்சம சூத்திரர்களை இவர்கள் இந்துக்களாக ஏற்பதில்லை என்றால், சிறுபான்மையான பார்ப்பன ‘மேல்சாதி’ இந்தக்களுக்காக என்ன எழவுக்கு மாட்டிறைச்சியை தடை செய்ய வேண்டும்?

நாய்களுக்காக கண்ணீர் விடும் மேனகா காந்தி போன்ற ராயல் சீமாட்டிகள், “மாட்டிறைச்சி விற்பனையால் வரும் பணம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுகிறது” என்று அறிக்கையே விடுகிறார்கள். முந்தைய நாளில் மணக்க மணக்க கறி சாப்பிட்டு விட்டு அடுத்த நாள் காலையில் போகும் மலத்தைத் தாண்டி என்னய்யா இதில் பயங்கரவாதம் இருக்கிறது?
“மும்பையில் இருக்கும் மல்டி கசின் உணவங்களில் இனி மாட்டிறைச்சி இல்லை என்றால் மேற்குலக வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்” என்கிறார் ஓட்ட சங்க தலைவர். ஒரு வேளை இந்த மேட்டுக்குடி மக்களுக்கு மட்டும் விலக்கு கொடுப்பார்களோ என்னமோ?
காங்கிரசுக் கட்சி இந்த சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்திருக்கிறது. என்ன இருந்தாலும் இவர்கள்தானே இந்துமதவெறியர்களின் மூதாதையர்களை உற்பத்தி செய்தவர்கள். இந்தச் சட்டம் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தாமல் வெளிப்படையாக அமல்படுத்த வேண்டும் என்கிறது கதர் வேட்டி கும்பல்.
முசுலீம்களை தனிமைப்படுத்தி ஒடுக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் அயோக்கியத்தனத்தினை அம்பலப்படுத்துகிறது பண்டைய இந்திய வரலாறு. இந்திய விவசாயிகளின் மாடுகள் மீதான உறவை கணக்கில் கொண்டே இங்கே பாபர், ஹுமாயூன், அக்பர் போன்ற முகலாய மன்னர்கள் பசுவதை தடைச் சட்டத்தை அமல்படுத்தியிருக்கின்றனர். கடைசியாக மைசூரின் ஹைதர் அலி, 1857 முதல் இந்திய சுதந்திரப் போருக்கு தலைமை தாங்கிய முகலாய மன்னர் பகதூர் ஷா காலம் வரை இந்த நல்லிணக்கம் சாதாரணமாகவே நிலவியிருக்கிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ஆர்ய சமாஜத்தினை நிறுவிய தயானந்த சரஸ்வதி இதை இந்துத்துவ அரசியலாக்கினார். ‘பசுவதை என்பது இந்துத்துவத்தின் மீதான தாக்குதல்’ என்று அப்போதுதான் திசை திருப்பினார்கள். அதே இந்துத்துவம் தான் அக்காலத்தில் பஞ்சம சூத்திர மற்றும் பெண்கள் மீது சொல்லொணாத் துயங்களை நிகழ்த்தியிருக்கிறது. ‘முசுலீம்கள் மாட்டின் தலையை வெட்டி கோவிலின் முன் போட்டார்கள்’ என்று கடந்த நூற்றாண்டில் எண்ணிறந்த கலவரங்களை இந்துமதவெறியர்கள் நடத்தியிருக்கிறார்கள். இப்படித்தான் இங்கே சட்டப்படியே பசுவதை தடையை புனிதமாக்கினார்கள். குஜராத்தில் மாடுவெட்டினால் ஏழு ஆண்டு சிறை தண்டனை. பொது இடங்களில் இறைச்சி விற்பனை கிடையாது.
எனினும் மோடி எனும் கேடியின் இந்துத்துவ பாசிசத்தை ஏற்றுக் கொள்வதற்கு இது ஒன்றும் குஜராத் அல்ல. நாடெங்கும் மாட்டுக்கறி தடையை எதிர்த்து கருத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சமூக வலைத்தளமான டிவிட்டரில் மாட்டுக்கறி தடையை எதிர்க்கும் ஹேஷ் டேக் முன்னிலையில் இருக்கிறது.
Dear Govt. With beef, let’s ban teeth. We can live on vegetable smoothies and this way your politicians can’t make hate speeches anymore 🙂
— Vir Das (@thevirdas) March 3, 2015
“மாட்டுக்கறி உண்பவர்களின் உரிமைக்காக தான் ஐந்து வருடம் சிறை செல்லத் தயார்” என்கிறார் எழுத்தாளர் ஷோபா டே. பாலிவுட் நட்சத்திரங்களான ஃபர்ஹான் அக்தர், அயுஷுமான் குரானா, ரிச்சா சாதா, வீர் தாஸ், ரன்வீர் ஷோரி முதலியோர் இச்சட்டத்தை மனித உரிமைகள் மீதான மீறல் என்று கண்டித்திருக்கின்றனர்.
மும்பை வாழ் தமிழ் மக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். கோயம்பேடு கருவாடு விற்பனை தொடர்பாக “தி இந்து” எடுத்த அடக்குமுறைக்கு எதிராக வினவு எடுத்த ஆவணப்படத்தில் இது குறித்த விரிவான பார்வை இடம் பெற்றிருக்கிறது.
பார்ப்பனியத்தின் உணவுத் தீண்டாமையை அகற்றுவோம். பா.ஜ.கவின் பல்லைப் பிடுங்குவோம்!
தொடர்புடைய செய்திகள்:
கருவறை நுழைவு, லஞ்ச ஊழல், தலித் அமைப்புகள் – கேள்வி பதில்
கருவறை நுழைவுப் போராட்டம், அரசு பதவிகளில் லஞ்சம் மற்றும் தலித் அமைப்புகள் குறித்து புதிய ஜனநாயகம் பத்திரிகையில் 1993-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான கேள்வி-பதில்கள் பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டம் இன்னும் வீறு பெறுவதன் அவசியத்தையும், இந்த அரசியல் அமைப்பே லஞ்ச ஊழலை ஊக்குவிப்பதாக இருப்பதையும், தலித் அமைப்புகளின் அரசியல் செயல்பாட்டு வரம்பையும் விளக்குகின்றன.
கேள்வி: பார்ப்பனர்களே தங்களது தவறைத் திருத்திக் கொண்டு சூத்திரர்களின் கருவறை நுழைவை அனுமதித்தால் உங்கள் போராட்டம் என்னவாக இருக்கும்?
இது நல்ல, வளமான கற்பனை மட்டுமல்ல, காலங்கடந்த கற்பனையும் கூட.
சூத்திரர்களும், பஞ்சமர்களும் கோவிலுக்குள்ளேயே நுழையக் கூடாது என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தடுக்கப்பட்டு வந்தார்கள். இப்போது அத்தடை சட்டப்படி நீக்கப்பட்டு கோவிலுக்குள் அனுமதிக்கப்படவேண்டும் என்றுள்ளது.
ஆனால், சட்டப்படியான அத்தடை நீக்கமும் அனுமதியும் கூட பார்ப்பனர்கள் தாங்களே தவறை உணர்ந்து திருத்திக் கொண்டதன் விளைவு அல்ல. பெரியார், அம்பேத்கார் போன்றவர்களின் போராட்டங்களின் விளைவும் நிர்ப்பந்தமும்தான்.
அதேபோல் பஞ்சமர்களும், சூத்திரர்களும் கருவறை நுழைவதை அனுமதிப்பது, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவது உட்பட சம உரிமை பெறுவது, தாய்மொழி வழிபாடு போன்றவற்றை பார்ப்பனர்கள் தாங்களே உணர்ந்து திருத்திக் கொள்ளமாட்டார்கள் என்பதை நமது போராட்டங்களுக்கு அவர்கள் காட்டும் கொலை வெறி எதிர்ப்பே நிரூபிக்கிறது. ஆகவே, நமது கோரிக்கைகள் ஏற்கப்பட்டாலும் அது அவர்களாகவே உணர்ந்து திருத்துவதாக இருக்காது; அந்தப் பிரமையும் நம்மிடம் கிடையாது. நமது போராட்டங்களின் விளைவும், நிர்ப்பந்தமும் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

இந்துக் கோவில் மற்றும் கருவறை நுழைவுப் பிரச்சினையில் இன்னும் விளக்கப்பட வேண்டிய, தீர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் நிறைய உள்ளன. பார்ப்பனர்கள் மட்டுமே தமது தவறை உணர்வது, திருத்திக் கொள்வது என்பதோடு இப்பிரச்சினை தீராது. பார்ப்பனரல்லாத – சத்திரிய, வைசிய வழிவந்த மேல் சாதியினரும் தமது தவறை உணர்ந்து திருத்திக்கொள்வது; பஞ்சமர் (தாழ்த்தப்பட்டவர்), சூத்திரர் தமது அடிமை விலங்கோடு அடிமை உணர்வைத் தகர்த்துத் தலை நிமிர்ந்து நிற்பது ஆகியவையும் நமது போராட்டத்தில் அடங்கும். பெரியாரும் தமது இறுதிக் காலத்தில் இந்த அம்சங்களை வலியுறுத்தி இருக்கிறார். இன்றைய சமூக நிலைமைகளும் இவற்றின் அவசியத்தைக் கோருகின்றன.
கோவிலுக்குள்ளேயே நுழையக் கூடாது என்கிற தடை சூத்திர, பஞ்சம சாதிகளுக்குத்தான் இருந்தது. பார்ப்பனரல்லாத மேல் சாதியினருக்கு இத்தடை எப்போதுமே கிடையாது. சூத்திர, பஞ்சம சாதியினர் கோவிலுக்குள்ளேயே நுழையக் கூடாது என்கிற தடை சட்டப்படிதான் நீக்கப்பட்டிருக்கிறதே தவிர சமூக நடைமுறைப்படி அல்ல. பார்ப்பனர் மட்டுமின்றி, பார்ப்பனியத்தை ஏற்று ஆதாயம் அடையும் பார்ப்பனரல்லாத மேல் சாதியினரும் சூத்திர, பஞ்சம சாதியினர் கோவிலுக்குள் நுழைவதை இன்னமும் சமூக நடைமுறையின்படி தடுத்து வருகின்றனர்; இதற்கு கர்நாடகாவில் உள்ள பதனவாலு, தமிழகத்தில் உள்ள சிவகங்கை ஆகிய சமீபத்திய நிகழ்ச்சிகள் சான்றுகளாக உள்ளன.
ஆகவே, சூத்திரரும், பஞ்சமரும் சமூகநீதியும, சம உரிமையும் பெறவேண்டுமானால் பார்ப்பனரோடு, பார்ப்பனரல்லாத மேல் சாதியினரது ஆதிக்கத்தையும் எதிர்த்துத் தமது போராட்டத்தைத் தொடர வேண்டும். சட்டப்படி பெற்ற உரிமையை நிலைநாட்டுவதற்குத் தமக்குள்ள அடிமை உணர்வைத் தகர்த்துத் தலைநிமிர்ந்து நின்று போராடுவதும் அவசியம்.
கோவில் கருவறைக்குள் நுழைவதற்கு பார்ப்பனருக்கு மட்டுமே இப்போது சட்டப்படிக்கு அனுமதி உண்டு; பார்ப்பனரல்லாத அனைத்துச் சாதியினருக்கும் இதற்கு அனுமதி கிடையாது; தடையும் தீண்டாமையும் தான் நிலவுகிறது. ஆகவேதான் பார்ப்பனர் மட்டுமே இத்தடை, தீண்டாமையைக் காப்பதற்கு மூர்க்கமாகப் போராடுகின்றனர். அதோடு நமது கருவறை நுழைவுப் போராட்டத்திற்கு பார்ப்பனரல்லாத அனைத்துச் சாதியினரிடமிருந்தும் பரவலான ஆதரவு கிடைக்கிறது.
பார்ப்பன- பனியா கும்பலால் தலைமை தாங்கப்படும் இந்து மதவெறி பாசிச சக்திகளைத் தனிமைப்படுத்தித் தாக்க வேண்டியது நமது உடனடி அரசியல் கடமையாகவும் உள்ளது. இக்காரணங்களால் இப்போதைக்குக் கருவறை நுழைவுக் கோரிக்கைக்குப் போராடுகிறோம்.
அதேசமயம் “திருவரங்கம் கருவறை என்ன? எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலுக்குள் நுழைவதைக்கூட பார்ப்பனரல்லாத மேல் சாதியினர் தடுத்துத் தாக்கினரே? இதுதான் சமூகநீதியா? சம உரிமையா?” என்று பஞ்சமர் (தலித்துகள்), சூத்திரர் கேட்பது முற்றிலும் சரியே, நியாயமே. அவற்றுக்குப் பதில் சொல்வதும், தீர்வுகாணப் போராடுவதும் அனைத்துப் புரட்சிகர, ஜனநாயக இயக்கங்களின் கடமையும் ஆகும்.
நமது போராட்டத்தில் இந்த அம்சமும் இணைந்திருப்பதால்தான் தி.க.–வின் வீரமணி போன்றவர்கள் ஆத்திரப்படுகிறார்கள்; அவதூறு பொழிகிறார்கள்.
கேள்வி: பதவிக்கு வருவதற்குமுன் ‘’நேர்மையாகவும், ஊழல் செய்யாமலும், கொள்கை உறுதியோடும் இருப்பேன்’’ என்று சொல்பவர்கள் பதவிக்கு வந்தவுடன் கொஞ்சநாள் கழித்து ஊழல், லஞ்சம் வாங்கி மக்களுக்கு எதிராக மாறிவிடுகிறார்கள் அதற்குக் காரணம் அவர்களது கொள்கையில் இருக்கும் பலவீனமா? அல்லது நமது அரசியல் மற்றும் அதிகார முறையில் இருக்கும் கோளாறா?
நேர்மையாகவும் லஞ்ச ஊழலில் ஈடுபடாமலும், கொள்கை உறுதியோடும் இருப்பவர்கள் இன்றைய அரசியல் மற்றும் அதிகார முறையில் பதவிக்கு வரமுடியாது; அப்படியே தப்பித்தவறி பதவிக்கு வந்தால் ஒன்று நேர்மை, கொள்கை உறுதியைக் கைவிட்டு லஞ்ச ஊழலில் ஈடுபட்டு மக்களுக்கு எதிராகத் திரும்ப வேண்டும் அல்லது அப்பதவியில் இருந்து துரத்தியடிக்கப்படுவர்; நேர்மையான, தூய்மையான கொள்கை உறுதி கொண்டவர்களைக் கூட ஆசையூட்டி, மாசுபடுத்தி சீரழித்துவிடக் கூடியதாக இன்றைய அரசியல் மற்றும் அதிகார முறையும் சமூக, பொருளாதார, பண்பாட்டு அமைப்பும் உள்ளன.

http://truthdive.com/2012/09/04/corrupt-duo.html (கோப்புப் படம்)
‘தவிர்க்க முடியாது எந்த அமைப்பிலும் இக்குறை நிலவவே செய்யும்’ என்று மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்யுமளவுக்கு இது புரையோடிப்போயிருக்கிறது. அதாவது பதவிக்கு வரவும், பதவியைத் தக்கவைத்துக் கொள்ளவுமே நேர்மை, கொள்கை உறுதியைக் கைவிட்டு லஞ்ச ஊழலிலும், மக்கள் விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதை இன்றைய அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு அமைப்பு அவசியமாக்கியுள்ளது.
ஆகவே, இந்த அமைப்பையை தூக்கி எறிந்துவிட்டு ஒரு புதிய அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு அமைப்பு முறையை ஏற்படுத்துவதையே கொள்கையாகக் கொண்டிருக்க வேண்டும். இந்த லட்சியத்தை உத்திரவாதப்படுத்தும் அமைப்பும் கொள்கையும் இல்லாமல் வெறுமனே நேர்மை, ஒழுக்கம், கொள்கை உறுதி, கறைபடியாத கைகள், மக்கள் நல்வாழ்க்கை போன்ற வாக்குறுதிகளைப் பிரகடனப்படுத்துபவர்களின் கொள்கை பலவீனமானதாக மட்டுமல்ல, பெரும்பாலும் பித்தலாட்டமாகவே உள்ளது.
அதோடு அந்த லட்சியம், கொள்கையை நேர்மையாகவும், உறுதியாகவும் பின்பற்றக் கூடியதுதான் என்று வாழ்விலும் செயலிலும் நடந்து காட்டி சோதித்தறியப்பட்ட தலைமை வேண்டும். அவற்றில் இருந்து விலகிச் சரிந்துபோகும் தலைமையை எதிர்க்கவும் கலகம் செய்யவும் தேவையான ஜனநாயக அமைப்பும் துணிச்சல்மிகு அணிகளும் வேண்டும். தமது சொந்த உழைப்பால் வாழும் உழைக்கும் மக்கள், குறிப்பாக பாட்டாளிகளுக்கே அத்தகைய துணிச்சலும், வீரமும் இருக்க முடியும். இப்படிப்பட்டவர்களை முதுகெலும்பாகக் கொள்ளாமல் பிழைப்புவாதப் பிரமுகர்களையும், பொறுக்கி (உதிர்) வர்க்க அணிகளையும் கவர்ச்சிவாத அரசியல் கொள்கைகளையுமே இன்றைய அரசியல் கட்சிகள் கொண்டுள்ளன. ஆகவே அவர்கள் பதவிக்கு வரும் முன்பு ஒன்றாகவும், வந்தபின் வேரொன்றாகவும் நடந்து கொள்வதில் வியப்பில்லை.
கேள்வி: தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளை மீட்கப் பாடுபடுவதாகச் சொல்லி அமைப்பு நடத்தும் டி.பி.ஜ. (தலித் சிறுத்தைகள் இயக்கம்) திருமாவளவன் போன்ற தோழர்களைப் பற்றிய தங்கள் மதிப்பீடு, கருத்து என்ன? இப்படியான அமைப்புகளை நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா?
தாழ்த்தப்பட்டவர்கள், தலித்துக்களுக்கானவை என்கிற பெயரில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான அமைப்புகள் தமிழ் நாட்டில் மட்டும் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வை.பாலசுந்தரம், சுந்தரராஜன், ஜான்பாண்டியன், இளையபெருமாள், தமிழரசன் போன்ற பிழைப்புவாத, ஆளும்வர்க்க (மேல்சமூக)க் கைக்கூலிகளால் தலைமை தாங்கப்படுகின்றன. இவை அதிகபட்சமாகச் சாதிப்பதெல்லாம் அம்பேத்காருக்கு சிலைவைப்பதும் விழா நடத்துவதும், நன்கொடைகளை வசூலிப்பதும், அறிக்கைகள் பிரசுரங்கள் வெளியிடுவதும், தங்களுக்குச் சொந்த ஆதாயம் தேடிக் கொள்வதும்தான்.
கூடவே, நடுத்தர வர்க்கத்தினராக மாறிவிட்ட தாழ்த்தப்பட்ட சில தனிநபர்களின் நலன்களுக்காக நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு போன்ற சலுகைகள் பெறுவதற்கான அரசியல் தரகு வேலை பார்க்கின்றன. மற்றபடி கிராமப்புறங்களில் கூலி ஏழை விவசாயிகளாகவும், நகரப் புறங்களில் உதிரிப் பாட்டாளிகளாகவும் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களைப் பெருமளவில் திரட்டி, முறைப்படியான அமைப்பைக் கட்டுவதற்கு அவர்கள் முயலுவதுமில்லை; அம்மக்கள் அன்றாடம் சந்திக்கும் சாதி ஒடுக்குமுறை, சுரண்டல்களுக்கு எதிராக, நேரடியாகக் களத்தில் இறங்கித் தலையீடு செய்து போராடியதும் இல்லை. ஆகவே தாழ்த்தப்பட்டவர் விடுதலைக்கான போராட்டங்களில் அவற்றை நம்பிக் கூட்டுச் சேர முடியாது என்று கருதுகிறோம்.
ஆனால், மேற்கண்ட அமைப்புகளின் போக்குகள், நடைமுறைகளுக்கு மாறாக தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டி களத்தில் இறங்கி அரசியல், சமூக ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட உறுதி பூண்டு தலித் சிறுத்தைகள் இயக்கம், இம்மானுவேல் பேரவை போன்ற சில புதிய அமைப்புகள் தோன்றியுள்ளன. இத்தகைய நடைமுறையில் உறுதியோடிருக்கும் பட்சத்தில் இப்புதிய அமைப்புகளை ஜனநாயக சக்திகளாகக் கருதி நேர்மறையில் அணுகி, போராட்டங்களில் ஐக்கியப்படுவதுதான் சரியானது என்று கருதுகிறோம்.
புதிய ஜனநாயகம், ஜூலை 1993
நீலமலையில் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி – நேரடி ரிப்போர்ட்
நீலமலை தேயிலைக்கு மட்டுமல்ல எஸ்டேட் கொடுமைகளுக்கும் புகழ் பெற்றது. தேயிலை பறிக்கும் தொழிலாளர்களுக்கு இன்றும் கூலி மிகக் குறைவு என்பதோடு இப்போது உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது. நகர மயமாதலின் விளைவாகவும், கார்ப்பரேட் சாமியார்கள் மற்றும் கார்ப்பரேட் கல்வி நிறுவனங்களின் வன ஆக்கிரமிப்புகளினாலும் அடிக்கடி என்பதைவிட ஏறத்தாழ தினமுமே மக்கள் வசிக்கும் பகுதிக்கு வனவிலங்குகள் வருகின்றன.
ஒரு நாளைக்கு தேயிலை பறித்தால் கிடைக்கும் ரூ 170 கூலியில் வாழ்க்கை நடத்தும் இம்மக்கள் கார்ப்பரேட்டுகளைப்போல் கரண்டு வைத்த கம்பி வேலியா வைக்க முடியும்? இல்லை மோடி முதல் லேடி வரை பயன்படுத்தும் கருப்பு பூனை கமாண்டோக்களை வைத்தா உலா வர முடியும்?

மகாலட்சுமி மூன்று குழந்தைகளுக்குத் தாய். பல வருடங்களாக உழைத்து தளர்ந்தவர். அவரது கணவர் சிவக்குமாரும் அவ்வண்ணமே. இடிந்து விழும் நிலையில் சிறிய வீடு. அதிலும் கூட்டுக் குடும்பம் என கிட்டதட்ட அன்றாடங்காய்ச்சிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
14-02-2015 சனிக்கிழமை அன்று வழக்கம் போல் 5 கி.மீ. தொலைவில் உள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்றிருக்கிறார். காலை 11.15 மணிக்கு தேநீர் இடைவேளை. அன்று சனிக்கிழமை ஆதலால் விரைவாக வேலையை முடித்து விடலாம் என எண்ணி தேநீர் குடித்த கையோடு மீண்டும் தோட்டத்திற்கு விரைந்துள்ளார். சக தொழிலாளி மஞ்சுளா சிறிது தொலைவில் இருந்தார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
அப்போது அங்கு பதுங்கி இருந்த புலி ஒரே பாய்ச்சலில் மகாலட்சுமியின் பின் கழுத்தை கவ்வியுள்ளது. அலறல் சத்தம் கேட்டு மஞ்சுளா ஒடிச்சென்று பார்க்கையில் மகாலட்சுமியின் கழுத்தை கவ்வி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. அவரின் அலறலைக் கேட்டு சுற்றியுள்ள தொழிலாளர்கள அனைவரும் கூடியுள்ளனர். கிட்டதட்ட 100-லிருந்து 150 பேர் வரை கூடியும் புலி அசராமல் அங்கேயே இருந்திருக்கிறது.
வனக்காவலர்கள் சிலரும் அப்போது துப்பாக்கி சகிதம் அங்கே உடன் வந்தனர். அவர்களில் ஒருவர் புலியைச் சுட முனைய மற்றொருவர் அதிகாரி, “ஒப்புதலின்றி சுடக்கூடாது” எனக்கூறி தடுத்துள்ளார். அங்கேயே நெடுநேரம் சுற்றிக் கொண்டிருந்த புலி பின் ஓடிவிட்டது. பின்னர் வந்த வன அதிகாரி (சோமசுந்தரம்), “இந்தக் காயங்களைப் பார்த்தால் புலி கடித்தாற் போல் தெரியவில்லை. ஏதோ நாய் கடித்தாற் போல் இருக்கிறது” எனத் திமிருடன் பேச,அவ்வளவு நேரம் அங்கே இருந்து புலி பாய்வதையும் உறுமுவதையும் பார்த்துக் கொண்டிருந்த மக்கள், ஆத்திரத்தின் உச்சிக்கே செல்ல, அந்த அதிகாரி நையப் புடைக்கப்பட்டார். மக்கள் கூட்டம் அடித்தவாறே கீழே இழுத்து வந்து,
“சொல்லு, இப்ப சொல்லு என்ன கடிச்சது?” எனக் கேட்க
“புலிதான், புலிதான்” எனக்கூறிய வார்த்தைகளில் உயிர்தப்பினார். மன்னிப்பும் கேட்டிருக்கிறார். புலி குதறுவதை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பார்த்தும் இந்த அதிகாரி இவ்வளவு திமிராக நாய்தான் கடித்தது என்று சொன்னால் யாருக்குத்தான் கோபம் வராது?

பின், மகாலட்சுமியின் உடலை கீழே கொண்டு வந்து வைத்து சாலை மறியலையும் போராட்டமும் துவங்கியது. கேரள தொலைக்காட்சிகள் வந்து நேரலையை துவங்கிவிட்டன.நேரம் ஆக ஆக மக்கள் கூட்டம் அதிகரித்தது; சுற்றியிருக்கும் ஊர்களிலிருந்து மக்கள் அலை அலையாய் வரத் துவங்கியுள்ளனர். காவல் துறையால் கட்டுப்படுத்த முடியாத அளவு கூட்டம் அதிகமாகிக் கொண்டே சென்றுள்ளது. கடை வைத்திருப்போர் அனைவரும் போராட்டத்துக்கு ஆதரவாக கடையடைப்பு செய்துள்ளனர்.
காவல் துறையினர் தந்திரமாக செல்பேசிக்கான சிக்னல்களை நிறுத்தியுள்ளனர். உணர்வுரீதியில் திரண்ட மக்கள் படையின் முன் இந்த அரசு அடியாட் படையின் தந்திரங்கள் எவ்விடம்!
இஸ்லாம் மக்கள் பள்ளி வாசலிலும்,கிறிஸ்தவ மக்கள் தேவாலயத்திலும் அறிவிப்பு கொடுத்து தத்தம் சமுதாய மக்களை திரட்டியுள்ளனர். இதர பிரிவு மக்களும் காரில் மைக்கை கட்டி ஊர் ஊராக சென்று மரண அறிவிப்பையும் போராட்ட அறைகூவலையும் ஒரு சேர செய்து முடித்தனர். இரவு ஆக ஆக கூட்டம் அதிகமாகியே வந்துள்ளது.
உணவு, குடிநீர் என இந்தப்படை கலைந்துவிடாமல் இருக்க கணிசமாக உள்ள இஸ்லாமிய மக்களும் இதரரும் சேர்ந்து அனைவருக்குமே கிட்டத்தட்ட 5,000 பேருக்கு உணவும் தேநீரும் இரவு முழுவதும் வழங்கியுள்ளனர். கொட்டகை போட்டு ஆண்கள் பெண்களும் அங்கேயே தங்கியுள்ளனர்.
இரவு 10 மணிக்கு மேல் வேறு வழியில்லாமல் வந்த கலெக்டர் சங்கரிடம் பொதுமக்கள் ரூ. 10 லட்சம் நிவாரணமும், அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணியும் புலியை உடனே சுட உத்தரவிடவும் கோரினர். அதற்கு முன்பே இந்தப் போராட்டத்தில் ஆதாயம் தேட வந்த ஓட்டுக் கட்சி அரசியல் முதலைகளை விரட்டியுள்ளனர். குறிப்பாக, ஏற்கனவே யானையால் இறந்த ஒருவர் சாவில் பொறுக்கித் தின்ற பகுதி அ.தி.மு.க. வினரை செருப்பால் அடிக்காத குறையாய் விரட்டியுள்ளனர்.
கலெக்டர் சங்கர், “காலை 6 மணிக்கு முன் வெளியேவராதீர்கள். உங்கள் கோரிக்கையை பரிசீலிக்கிறேன்” எனக்கூற,
“யோவ்,அந்தப் பொம்பள செத்தது காலை 11.30 க்கு இதுக்கு பதில் சொல்லு” எனக்கூற கலெக்டர் செய்வதறியாது நின்றிருக்கிறார்.
“நாளைக்கு நீ வாயா, காட்டுக்குள்ள நாங்க தைரியமா போறோம். நீ வருவியா” என பெண்கள் கேட்க, கலெக்டர் அமைதியாய் நின்றிருக்கிறார்.
“பயம் இருக்குல்ல, அப்ப மரியாதையாய் சுட உத்திரவு இடு” எனக் கூறியுள்ளனர்.
இரவு 2 மணிக்கு மேல் கலெக்டர் சென்றுவிட்டார்.
அவர் சென்ற பிறகு, போலீசும் வனத்துறையும் திருட்டுத்தனமாக மகாலட்சுமியின் உடலை எடுத்துச் செல்ல முயன்றிருக்கிறது. பொதுமக்கள் விழிப்பாக இருந்து கல், கம்புகளுடனேயே தடுத்துள்ளனர்.
இரண்டாம் நாள் காலையும் அனைவருக்கும் உணவும், டீயும் வழங்கப்பட்டிருக்கிறது. காலையில் கலெக்டர் வராததால் கடுப்படைந்த மக்கள் வன அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்துள்ளனர். காலை 11 மணியளவில் கறுப்புக் கொடிகளுடன் சுமார் 1000 பேர் சென்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
இவை அனைத்தும் தன்னெழுச்சியாக நடந்ததும் சாதி, மத பேதமற்ற இந்த அசாத்தியமான ஒற்றுமையுமே இந்த போராட்டத்தின் சிறப்பு. பின் முற்றுகையின் முற்றிய வடிவமாக மக்களின் வீரியமான வெளிப்பாடாக ஒருவர் ஜீப்பை உடைக்க உடனே அது மொத்தக் கூட்டத்தின் திட்டமாக பரிணமித்து அனைவருமே ஜீப்களையும், அலுவலகத்தையும், லேப்டாப்புகளையும், அடித்து உடைத்தனர். கோப்புகளும் மிச்சமுள்ள ஜீப்புகளும் கொளுத்தப்பட்டன. அங்கிருந்த ஒன்றிரண்டு அதிகாரிகளும் காட்டுக்குள் ஒட்டமெடுத்தனர். இவையெல்லாம் கூட்டம் கூடியதால் நடந்த “மாஸ் வயலன்ஸ்” அல்ல. ஒரு தொழிலாளியின் உயிரை கிள்ளுக்கீரையாக நினைத்து அலட்சியத்துடனும், திமிருடனும் நடத்திய அதிகார வர்க்கத்திற்கு எதிராக ஒரு சாமானியனின் கோபமே இந்த வெளிப்பாடு.
பின்பு, மக்கள் போராட்டப் பந்தலுக்கு திரும்பினர். இதன்பின்னரே அங்கு வந்த வருவாய் அதிகாரி நிவாரணம் தருவதையும், புலியை சுட்டுக்கொள்ள உத்திரவிடப் போவதையும் உறுதிப்படுத்தினார்.
தமிழக வனத்துறையும், கேரள வனத்துறையும் இணைந்து சுமார் 500 பேர் துப்பாக்கிகள் சகிதம் காட்டுக்குள் இறங்கி சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஒரு கடைநிலை வனக்காவலரால் இறுதியில் புலி சுடப்பட்டிருக்கிறது. இப்புலி சுமார் 325 கிலோ எடையுள்ளது. இதை கண்டுபிடிக்க வைத்த கேமராவில் இதே போல் சுமார் 6,7 புலிகள் தென்பட்டுள்ளன.
மக்கள் மத்தியில் உள்ள கருத்து என்னவெனில், “வனத்தை வளர்க்க புலிகளை வனத்துறையே கொண்டுவந்து விடுகிறது” என்பதே. இது உண்மையெனில், வனத்தை பராமரிக்க, கார்ப்பரேட் சாமியார்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வக்கில்லாத அரசாங்கம் இதுபோன்ற வழிகளில் மக்களின் உயிர்களை காவு வாங்குகிறது. காட்டில் புலிகளை கணக்கு காட்டி சுற்றுச்சூழல் மனிதாபிமானிகளாக காட்டிக் கொள்ளும் தந்திரமும் இதில் இருக்கிறது. இப்படி புலியையும், மக்களையும் ஒருசேர பணயம் வைக்கிறது அரசு.
“புலியை சுட உத்திரவிடப்படும்” என்ற உத்திரவாதத்துக்கு பின்னரே மகாலட்சுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
புலியை வேட்டையாடிய அரசு அடுத்ததாக போராடிய மக்களை வேட்டையாட தயாராகி வருகிறது. குறிப்பாக, முற்றுகையில் ஈடுபட்ட மக்களை வன அலுவலகத்தில் உள்ள கேமராவில் பதிவுகளின் மூலம் கண்டறிந்து உள்ளூர் வன காவலர்கள் துணையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சக நண்பர்களை வேட்டையாட உள்ளது.
இடையில் நீலமலை ஆர்ப்பாட்டத்தை நடத்தியது கடத்தல்காரர்கள் எனும் கதையை என்ஜிவோக்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மூலம் அவிழ்த்து விட்டுள்ளார்கள். கடத்தலுக்கு தடையாக இருக்கும் வனத்துறைக்கு ஒரு பாடம் கற்பிக்கவே கடத்தல்காரர்கள் இப்பிரச்சினையில் மக்களை தூண்டி விட்டுள்ளதாக கூசாமல் பொய்யுரைக்கின்றனர். இத்தகைய சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தைரியமிருந்தால் மகாலட்சுமியின் குடியிருப்பு பகுதிக்கு வந்து சொல்லிப் பார்க்கட்டும். ஒரு வேளை கடத்தல் தொழில் அங்கே நடக்கிறது என்றால் அது வனத்துறை மற்றும் ஒட்டுப் பொறுக்கி கட்சி தலைவர்கள் இன்றி சாத்தியமில்லை.
எல்லா அபாயங்களோடும், குறைந்த பட்ச ஊதியத்தோடும் வேலை செய்யும் தேயிலைத் தோட்ட தொழிலாளி கொல்லப்பட்டிருக்கிறார். அந்தக் கொலையை புலி செய்திருந்தாலும் புலியை ஏவிவிட்டது இந்த அரசும் அதிகார வர்க்கம்தான். வனத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், விடுதிகளுக்கும் அள்ளிக் கொடுத்தால் புலி மட்டுமல்ல யானை சிறுத்தை அனைத்தும் மக்கள் குடியிருப்பிற்குத்தான் வரும்.
குடிகெடுத்த அரசுக்கெதிரான நீலமலை மக்கள் போராட்டத்தை ஆதரிப்போம். அடக்குமுறையை கண்டிப்போம்.
– செய்தி, புகைப்படங்கள் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கோவை
______________________________________
இதனைத் தொடர்ந்து, 27-02-2015 காலை 10.30 மணியளவில் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் – கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புலி கடித்து அப்பாவிப் பெண் பலியானதை தொடர்ந்து நியாயம் கேட்டு போராடிய மக்களை போலிசு பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்து சிறையிலடைத்து வருகின்றது.
அவர்களை விடுதலை செய்யக் கோரியும், வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும், போராடும் மக்களை கைது செய்வதை நிறுத்தக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரியும், வனவிலங்குகள் வாழ்விடங்களான காடுகளை அழித்து ஆக்கிரமித்துள்ள பெருநிறுவனங்களிடமிருந்து பிடுங்கி அரசுடைமையாக்கக் கோரியும், மக்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் வாழ்க்கை சூழலை உருவாக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இந்த ஆர்ப்பட்டத்திற்கு தோழர் விஜயன் தலைமேயேற்று நடத்தினார். தோழர் ஆனந்தராஜ் சிறப்புரையாற்றினார். தோழர் ராஜா நன்றியுரை வழங்கினார். தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள், வாகன ஓட்டுனர்கள் பங்கேற்றனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
- இறந்த தொழிலாளிக்கு ஆதரவாக போராடிய மக்களை கைது செய்வதை உடனே நிறுத்து
- கைது செய்தவர்களை நிபந்தனை இன்றி விடுதலை செய்
- உரிமைக்காக போராடிய மக்களை போலீசை ஏவி அடக்குமுறை செய்வதை உடனை நிறுத்து.
- மக்களின் வாழ்விடத்திற்கு வந்து வனவிலங்குகள் மக்களை தாக்குவதற்கு காரணமான காடுகளை ஆக்கிரமித்துள்ள பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதை உடனே நிறுத்து
தகவல்
இரா ஆனந்தராஜ், தலைவர்,
நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்,
ஜீப் நிலையம் மார்க்கெட், கோத்தகிரி
ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டம் – நேரடி ரிப்போர்ட்
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொழிலாளர் காப்பீட்டு கழகத்தின் (ESIC-Employees State Insurance Corporation) கீழ் இயங்கி வரும் ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள், தமது வாழ்வையே நிர்கதியாக்கியிருக்கும் இந்திய அரசை எதிர்த்து நாடு தழுவிய பல முனைப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

“இனி ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகள், மருத்துவம் சார்ந்த படிப்புகளை அளிப்பதில் இருந்தும் மருத்துவக் கல்லூரி நடத்துவதில் இருந்தும் விலகிக்கொள்ளும்” என தொழிலாளர் காப்பீட்டுக் கழகம் தனது திட்ட குழுவில் முடிவெடுத்து அறிவித்திருக்கிறது. இதனால் நாடெங்கிலும் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள் இழுத்து மூடப்படும் அவசரகால நிலையில், அவற்றில் பயிலும் ஒட்டுமொத்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது.
ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகள் என்பவை 1948 தொழிலாளர் காப்பீட்டு சட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் தொழிலாளிகளிடம் இருந்து பெறப்படும் பணத்தை வைத்தே நடத்தப்படுகின்றன. இத்தகைய மருத்துவமனைகளில் தொழிற்சாலைத் தொழிலாளிகளும், சிறுவணிகத் தொழிலாளிகளும் தங்களது சொந்த செலவில் மருத்துவவசதி பெற்று வருகின்றனர்.
இலாபம் ஒன்றையே குறிக்கோளாய் கொண்டிருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வெளிவரும் மருத்துவர்களின் தரம் மோசமாக இருந்து வரும் சூழலில் மருத்துவர்களுக்கான பற்றாக்குறையை தீர்க்கவேண்டுமெனில் பொதுத் துறையின் உதவியோடு மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதுதான் இந்த அரசு முன் இருந்த குறைந்தபட்ச தற்காப்பு உத்தியாக இருந்தது.

ஆகையால், மருத்துவர்களின் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகளிலேயே மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கான சட்டத் திருத்தம் 2010-ம் ஆண்டு ஈ.எஸ்.ஐ சட்டத்தில் கொண்டுவரப்பட்டது. மேலும், இச்சிறப்புச் சட்டத்தின் 59-வது உட்பிரிவு ‘பி’ன் படி, “ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை முடிக்கும் மாணவர்கள் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைகளிலேயே ஐந்து ஆண்டு காலம் பணிபுரிய வேண்டும்”. இதனால் ஒரு ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஆண்டுக்கொன்று 100 மருத்துவர்களை உருவாக்கி பணியமர்த்திக்கொள்ள முடியும்.
தற்பொழுது நாட்டில் தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் கீழ் 12 முதுகலை மருத்துவப்படிப்புகளுக்கான நிறுவனங்களும், 18 இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கல்லூரிகளும் 9 பல் மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.
இத்தகைய நிலையில் தான் ‘பொற்காலம் வந்துவிட்டது’ என்று கூவும் பா.ஜ.க அரசு, மாணவர்களின் தலையில் இடியை இறக்கும் விதமாக, “ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகளை மேற்கொண்டு நடத்த முடியாது” என்றும், “மருத்துவக் கல்லூரிகள் நடத்துவது தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் நலன்களுக்கு உகந்ததல்ல” என்றும் திமிராக அறிவித்து தனது பொறுப்பை கைகழுவி இருக்கிறது.

இவ்வறிவிப்பு வெளிவந்த 05-01-2015 முதலே நாடெங்கிலும் ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நமது சென்னை ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்களும் பேரணி, வகுப்புகளை புறக்கணித்து போராட்டம், மனிதச் சங்கிலி, டில்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கெடுத்தல், மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்தல் என தமக்குத் தெரிந்த அனைத்து வழிகளிலும் போராடி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக 24-02-2015 செவ்வாய்க் கிழமையன்று சென்னை ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் அடையாள உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தை நடத்திய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அவர்கள் எதிர்நோக்கும் பாதிப்புகளையும், அவர்களது கோரிக்கைகளையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.
சென்னை ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் இளங்கலை பட்டத்துக்கு (எம்.பி.பி.எஸ்) படிக்கும் 191 மாணவர்களும் முதுகலை (எம்.எஸ்.) பட்டத்துக்கு படிக்கும் 38 மருத்துவ மாணவர்களும் இருக்கின்றனர். இதில் முதுகலை படிப்பு நான்காண்டுகளுக்கு முன்பும் இளங்கலை படிப்பு இரண்டாண்டுகளுக்கு முன்பும் ஆரம்பிக்கப்பட்டன.
ஏற்கனவே தொழிலாளர் காப்பீட்டுக் கழக மருத்துவமனையில் முதுகலை படித்து முடித்த மாணவர்களின் பட்டங்களை இந்திய மருத்துவக் கவுன்சில் இன்னமும் அங்கீகரிக்கவில்லை. இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரம் இன்றி முதுகலை பட்டம் பெற்ற மாணவர்கள் தமிழ் நாட்டில் வேறு எந்த மருத்துவமனைகளிலும் பணிபுரிய இயலாது. ஏற்கனவே படித்து முடித்த மாணவர்களின் நிலை இவ்வாறிருக்க, முதுகலை படித்துக்கொண்டிருக்கிற மாணவர்கள் நிலை தற்போதைய அறிவிப்பால் என்னவாகும் என்பதை விளக்கித் தெரிய வேண்டியதில்லை.

இளங்கலையை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் வகுப்புகளை தொடர்வதற்கான அனுமதியை மட்டுமே இந்திய மருத்துவக் கவுன்சில் வழங்கியிருக்கிறது. ஐந்தரை ஆண்டு படிப்பை முடித்து முதல் அணி மாணவர்கள் வெளியேறிய பிறகுதான் இளங்கலைப் பட்டத்திற்கான அங்கீகாரம் மருத்துவக் கல்லூரிக்கு கிடைக்கும். ஆனால் தற்பொழுதோ இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையிலேயே மருத்துவப் படிப்புகளை கைவிடுவதாக அறிவித்திருக்கிறது, அரசு. இதனால் இருதரப்பு மாணவர்களும் நிர்க்கதியாக நிற்கின்றனர்.
தீர்வு என்ற வகையில் முதல் கருத்தாக, “ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மாநிலங்களின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாற்றப்படுவர்” எனவும், “இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும்” எனவும் அறிவித்திருக்கிறது, மத்திய அரசு.
நாங்கள் சந்தித்த சென்னை ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மாநில அரசுகளின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடமாற்றம் செய்வது பித்தலாட்டம் என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கின்றனர்.

இரண்டாண்டுகள் ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டால் படிப்பை முதலில் இருந்து தொடங்க வேண்டும். இது மாணவர்களுக்கு இழைக்கின்ற அப்பட்டமான துரோகமாகும். ஒரு வேளை, அப்படி இடமாற்றம் செய்யப்பட்டாலும் கூட இம்மாணவர்களுக்கான இடங்கள் அடுத்தாண்டு பொதுப்பட்டியலில் சேரும் மாணவர்களைக் குறைப்பதன் மூலமே சாத்தியப்படுத்தப்படும். ஆக இடமாற்றம், மறுசேர்க்கை என்பதைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக மாணவர்கள் பலிகடாவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
இரண்டாவதாக, “மாநில அரசே இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளை ஏற்று நடத்த வேண்டுமென்கிற கோரிக்கை” வைக்கப்படுகிறது. இப்படி ஏற்றுநடத்தும் பட்சத்தில் ஆசிரியர் நியமனம், உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவக் கல்லூரியின் மொத்த செலவுகளையும் மாநில அரசே ஏற்கவேண்டுமென ‘அச்சே தீன்’ மோடி மஸ்தான் அரசு மாணவர்களை கைகழுவி விட்டு விட்டு தரகுமுதலாளிகளுக்கு கால்கழுவிக் கொண்டிருக்கிறது.
இதுதொடர்பாக தற்பொழுது நடைபெற்று வரும் அனைத்து பேச்சுவார்த்தைக் கூத்துகளும் ஒரு உண்மையை திட்டமிட்டு மறைக்கின்றன. அதாவது இது ஏதோ மத்திய – மாநில அரசுகளுக்கிடையிலான சண்டை, ஒரு நிர்வாகப் பிரச்சினை அல்லது ஒரு நிர்வாக மாற்றம் என்றே உணரப்படுகிறது. ஆனால் தொழிலாளர்களின் நலனுக்கான உருவாக்கப்பட்ட இந்த கட்டமைப்பை கலைக்கும் முகமாக செய்யப்பட்டிருக்கும் ஒரு முக்கிய நடவடிக்கை என்பதை அனைவரும் மறைக்கின்றனர். தொழிலாளர் உரிமைக்கும் போராட்டங்களுக்கும் பெயர் போன மேற்கு வங்கத்தில் இதை உணர்ந்து ஓரளவு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
கொல்கொத்தாவில் நடந்த போராட்டத்தில் “தீதி” (மமதா பானர்ஜி) அரசு, தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. அம்மாநிலத்தில் மாணவர்களின் வீச்சான போராட்டங்களைச் சமாளிக்கும் பொருட்டு அம்மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மோலாய் கட்டக், ஜோட்காவில் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்திருக்கிறார். தமிழ் நாட்டில் அப்படி எல்லாம் நடக்கும் வாய்ப்பில்லை; அ.தி.மு.க அடிமைகள் அம்மாவின் பிறந்தநாள் உற்சவ பரவசத்தில் இருப்பது ஒருபக்கம் என்றாலும் தமிழ் நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் யார் என்பது அ.தி.மு.க காரனுக்கே தெரியாது!
“மேற்கு வங்கத்தில் தனியார்-பொதுத்துறை கூட்டின் மூலமாக பத்துக்கும் மேற்பட்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்படும்” என தரகுமுதலாளிகளுக்கு ஆதரவு அளிப்பதில் முனைப்பாக இருக்கும் “தீதி” அரசு ஈ.எஸ்.ஐ மருத்துவமனைப் பிரச்சனையை பீ துடைத்த குச்சியாகவே கருதுகிறது. எனினும் எப்படியாவது மாணவர்களின் போராட்ட உணர்வைத் தணித்து நிலைமையை சுமூகமாகவே முடிக்க “தீதி” அரசும் முயல்கிறது. அம்மா அரசுக்கு அந்த முயற்சி கூட தேவையில்லை.
“தேவைப்பட்டா நீ நடத்து” என்பதாக மத்திய அரசு பிரச்சனையில் இருந்து ஒதுங்கி ஒன்றரை மாதங்களாகிறது. இன்னும் 11-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்படவில்லை.
நாங்கள் சந்தித்த சென்னை ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாணவர்கள் சுட்டிக்காட்டினர். தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் படிப்பிற்கு மட்டும் அனுமதி அளித்துவரும் இந்திய மருத்துவக் கவுன்சில், முந்தைய ஆண்டுக்கான பரிந்துரைகளின்படி உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள், நிறைவேற்றப்பட்ட பிறகே அடுத்த ஆண்டுக்கான அங்கீகாரத்தை வழங்கும். ஒருவேளை இதுவே தனியார் கல்லூரிகளாக இருந்தால் ககன் தேசாய் போன்ற ஆட்களுக்கு படியளந்தால் போதுமானது என்கிற மாற்று உலகத்தையும் நாம் மறந்துவிடக் கூடாது.
மாநில அரசுகளைப் பொறுத்தவரை மருத்துவர்களின் பற்றாக்குறையை போக்குவதற்கு ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகளை ஏற்று நடத்துவது ஒரு வாய்ப்பு என்றாலும் தொழிலாளர் காப்பீட்டு கழகம் மருத்துவக் கல்லூரியை மட்டுமே மாநிலங்களின் வசம் தள்ளிவிடுகிறது. மருத்துவமனை தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் வசமே இருக்கும் என்பதை அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால் இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின் படி மருத்துவமனையும் மருத்துவக் கல்லூரியும் அருகாமையில் 10 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். ஏற்கனவே உள்கட்டமைப்பு கட்டுமான பணிகள் பாதியில் நிற்கிற பொழுது கட்டுமான பணிகளை மேற்கொண்டு தொடர மைய அரசோ மாநில அரசோ தயாராக இல்லை. இரண்டுமே நிதிப் பற்றாக்குறை என்பதைக் காரணம் காட்டி மருத்துவக் கல்லூரிகளை குளிப்பாட்டி இளநீர் கொடுத்து சாகடிக்க தயாராகிவிட்டன.
தமிழ் நாட்டைப்பொறுத்தவரை ஓமந்தூரார் வளாகத்தில் இருக்கும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையோடு மருத்துவக் கல்லூரி ஒன்றை கொண்டு வருவது கருத்துரு அளவில் இருப்பதாக போராட்ட மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக அரசு ஈ.எ.ஸ்ஐ மருத்துவக் கல்லூரியை ஏற்று நடத்துவதற்கான பேச்சுவார்த்தையை தொழிலாளர் காப்பீட்டுக் கழகம் மேற்கொண்டிருப்பதாக அதன் இயக்குநரக தலைவர் (Director general) தெரிவித்திருக்கிறார்.
என்.டி.டிவி வெளியிட்ட செய்திக் குறிப்பு மைய-மாநில அரசுகளிடம் நடைபெற்றுவரும் பேரத்தை கோடிட்டு காட்டி, பேரம் படிவது மாணவர்களிடையே கவலை உருவாக்கியிருப்பதாக பிரச்சனையை தெரிந்தே பூசி மொழுகுகிறது. உதாரணமாக, “தொழிலாளர் நல அமைச்சகம் தமிழக அரசிடம் ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியை ஏற்று நடத்துவதற்கும் உபகரணங்கள் வாங்குவதற்கும் ரூ 376 கோடி தேவைப்படும் “என்று கூறியிருப்பதாகவும் “அ.தி.மு.க அரசு இதுகுறித்த தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை” எனவும் கூறியுள்ளது. ஏற்கனவே, “புதிய மருத்துவக் கல்லூரியை கட்டுவதற்கு 186 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்குவதற்கு தயாராக இருப்பதாகவும் மேற்கொண்டு இழுபறியான பேரங்கள் நடைபெறலாம்” என்று இரு அரசுகளும் துண்டு போட்டு கைகுலுக்கி இருப்பதைப் படம்பிடித்திருக்கிறது!
மாணவர்களே இப்பிரச்சனையை பொது அரங்கில் கணிசமாக அம்பலப்படுத்தியிருக்கின்றனர். சான்றாக, அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு, “அரசுக் கட்டமைப்புகளை ஒழித்துக்கட்டுவதன் நோக்கமே ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை கைவிடுவதற்கான நோக்கம்” என்பதை தன் கண்டன அறிக்கையில் பதிவு செய்திருக்கிறது.
“ஈ.எஸ்.ஐ. கழகம் மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிப்பது என்ற முடிவெடுத்த பொழுதே அதற்காக 12,000 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது. மேலும் ஈ.எஸ்.ஐ யின் உபரி கையிருப்பு 34,000 கோடியாகும். இவையனைத்தும் தொழிலாளர்களின் பணமாகும். மேலும் ஆண்டொன்றுக்கு தொழிலாளிகளிடம் இருந்து பெறப்படும் காப்பீடு தொகை 14,000 கோடியாக இருக்கிறது. இது இனி வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும்” என்கிறது அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் கண்டன அறிக்கை.
நிலைமை இப்படியிருக்க, குறிப்பாக 2014-2015 பட்ஜெட்டில் பொற்கால மோடி அரசு, சுகாதாரத்துறைக்கான பட்ஜெட்டை 20% சதவீதம் வெட்டிச் சரித்திருக்கிறது. இது கிட்டத்தட்ட 6,000 கோடி ரூபாயாகும். மேற்கொண்டு பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு அடகுவைத்திருக்கிறது. இந்நிலையில், ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகள் இயங்குவதற்கு நிதிப்பற்றாக்குறை காரணம் என்பது கடைந்தெடுத்த பித்தலாட்டமின்றி வேறென்ன?
மொத்த ஈ.எஸ்.ஐ நிதியில் 1/8 பங்கைத் தவிர நயா பைசா கூட மைய அரசு, தொழிலாளர்களுக்காக ஈ.எஸ்.ஐ விசயத்தில் கிள்ளிப்போடவில்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால் தொழிலாளர் காப்பீட்டு கழகத்தின் 163 குழுக்கூட்டத்தின் அறிக்கையோ மருத்துவக் கல்லூரியின் பல்வேறு செலவுகளை (capital cost, recurring cost and revenue cost ) சமாளிக்க முடியாது என்று புளுகியிருக்கிறது. தொழிலாளர்களின் பணத்தை தொழிலாளர்களுக்கு அல்லாமல் வேறு எதற்கு மடைமாற்றுகின்றனர் என்ற கேள்வியும் இங்கு இயல்பாகவே எழுகிறது.
தொழிலாளர் அமைச்சகத்தால் ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை நடத்த முடியவில்லையென்றால் சுகாதார அமைச்சகமே இக்கல்லூரிகளை ஏற்று நடத்த வேண்டுமென டெல்லி மாணவர்கள் குழு கோரிக்கை வைத்திருக்கிறது. இதுவரை உள்கட்டமைப்பிற்காக செலவழிக்கப்பட்ட 5,000 கோடி ரூபாய், மக்களின் பணம் என்பதையும் அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறது.
உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருக்கிற சென்னை ஈ.எஸ்.ஐ கல்லூரி மாணவர்கள் அரசின் நிலைப்பாட்டைக் கொண்டு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக தெரிவித்திருக்கிறார்கள். இதற்கிடையில் முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்களை பிரித்தாளும் சூழ்ச்சியும் நடைபெற்று வருவதை கவனிக்க முடிந்தது.
“இளங்கலை மாணவர்களின் மாற்று இடத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஈ.எஸ்.ஐ. நிர்வாகம் வழிவகை செய்யும்” என்றும், “தேவைப்பட்டால் நீதிமன்றங்களை நாடலாம்” என்றும், “அதுவரை வகுப்பைப் புறக்கணிக்க வேண்டாம்” என்றும் இளங்கலை மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வலியுறுத்துவதாக தற்போதைய களச் செய்திகள் தெரிவிக்கின்றன. பெற்றோர்களின் இத்தகைய நிலைப்பாட்டை முதுகலை மாணவர்கள் முற்றாக நிராகரித்திருக்கின்றனர்.
கர்நாடகாவைப் பொறுத்தவரை மாணவர்கள் ஏதாவது ஒரு அரசு ஏற்று நடத்தினால் போதுமானது என்ற அளவில் போராட்டத்தை சுருக்கியிருக்கின்றனர். மேற்குவங்கத்தில் மாணவர்கள் ரிட் மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.
டெல்லியின் கள சூழ்நிலை ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது.
- மருத்துவக் கல்லூரிகளை கைவிடுகிற ஈ.எஸ்.ஐ யின் 163 குழுக்கூட்டத்தின் முடிவை இரத்து செய்!
- மருத்துவக் கல்லூரிகளை மைய அரசே ஏற்று நடத்தும் என சுற்றறிக்கை அனுப்பு!
- உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் நியமனம், இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரங்களைப் புதுப்பிக்கிற பணிகளை தொடர்ந்து நடத்து!
- ஒரு வேளை ஈ.எஸ்.ஐ கழகம் மருத்துவமனைகளை ஏற்று நடத்த முடியாவிட்டால் சுகாதார அமைச்சகத்தின் கீழ் மருத்துவக் கல்லூரிகளை ஏற்று நடத்து! தனியார்மய முயற்சிகளைக் கைவிடு!
- கற்றுத் தரும் மருத்துவப் பேராசியர்களை கல்விஅல்லாத பணிக்கு மாற்றுவதை கைவிடு! ஏற்கனவே வணிகமயமாக்கப்பட்டிருக்கும் சுகாதாரத்துறையை மேலும் நீர்த்துப்போகும் பொருட்டு மருத்துவக் கல்லூரியின் அறிவு வளங்களைச் சூறையாடாதே!
- மாணவர்களின் மேற்கண்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை ஆதரிக்கிற நேரத்தில் பிரச்சனையின் மைய அரசியலையையும் நாம் தொட்டுச் செல்ல வேண்டியது அவசியமாகும்.
மருத்துவக் கல்லூரியை கைவிடுகிற மைய அரசின் செயல்பாட்டில் மாணவர்களுக்கான பாதிப்பு மட்டும் இல்லை என்பதை போராட்டக் குழுவோடு நாமும் உணரவேண்டியது அவசியமாகும். தொழிலாளர் உழைப்பால் உருவாக்கப்பட்டிருக்கிற ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள் கைவிடப்படுவது தொழிலாளர் நலன்களை கழுவி ஊற்றுகிற தனியார்மய கார்ப்பரேட் கொள்ளையேயன்றி வேறல்ல! ஏற்கனவே தொழிலாளர் நலச்சட்டங்கள் காயடிக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவே மோடி அரசு ஈ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் இருந்து கல்லூரிகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.
தொழிலாளர்களின் உரிமைகளை கேள்வி கேட்பாரின்றி ஆணையங்கள், கழகங்கள் என்பதன் பெயரில் ஒரே ஒரு சுற்றறிக்கை மூலம் நிர்மூலமாக்குவதும் மாணவர்கள் இன்று நடுத்தெருவில் நிற்பதும் மைய மாநில அரசுகள் கேள்விக்கு அப்பாற்பட்டவையாக அதிகார துஷ்பிரோயகத்தின் உச்சாணிக்கொம்பில் அம்மணமாக அமர்ந்திருப்பதையும் குறிப்பாக அரசின் ஒட்டுமொத்த தோல்வியையுமே இம்மாணவர்களின் போராட்டங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஒட்டு மொத்த நாட்டையும் பாதிக்க கூடிய பிரச்சினைகளுக்கு, தொழிலாளிகளுடன் இணைந்து போராட வேண்டிய தேவையை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டங்கள் பொது வெளிக்கு கொண்டு வந்திருக்கின்றன.
கடைசியாக, நாங்கள் போராட்ட வளாகத்தைவிட்டு வெளியே வரும் போது, ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிகிச்சைக்கு வந்த தொழிலாளிகள் மற்றும் அவர்தம் குடும்பங்களிடம் தங்களது போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு கையெழுத்து இயக்கம் நடத்திக்கொண்டிருந்தனர். தனியார்மய முதலாளித்துவ சீரழிவில் சிதறிப்போயிருக்கும் அறிவுத்துறையினர் தற்பொழுது பாட்டாளிவர்க்கத்திடம் கையெழுத்துக்காக நிற்பதை ஓர் கனிந்த சூழல் என்றே கருதுகிறோம்.
இந்த கனிந்த சூழல் கனலாய் எழுந்து நாட்டை விற்று வரும் அரசையும், அந்த அரசை நடத்தி வரும் மோடி கும்பலையும், வீழ்த்தட்டும்!
செய்தி, புகைப்படங்கள் – சென்னை செய்தியாளர்கள்
இது தொடர்பான செய்திகள்
- Achchhe Din Unfolding: 13 ESI Medical Colleges to be Shut Down!
- ESIC medical college students stage protest
- ESIC Medical College students take out protest march
- Future of ESIC Medical Colleges Uncertain, Students Tense
- Around 1400 Medical Students’ Future At Stake As ESIC Decides To Shut Down Colleges!
- ESI medical students protest against closure decision
- Fate of ESIC medical college in Joka in limbo
ஓம் சீமான் ! ஜெய் சீமான் !
ஒரு வேளை இன்றைக்கு முருகன் தன் அப்பாவிடம் கோபித்துக்கொண்டு மலையேறியிருந்தால் அவரது காஸ்ட்யூம் எப்படியிருந்திருக்கும்? அதிகம் போனால் அவரது கோவணம் ஜாக்கி ஜட்டியாக பரிணமித்திருக்கும், அவ்வளவுதான். ஆனால் முருகப்பெருமானின் கொள்ளுப்பேரன் சீமான் அப்படி சென்சார் விதிகளுக்கு முரணாக நடந்துகொள்பவரல்ல. அவர் தனி ஈழத்துக்காக முழங்குகையில் கருப்பு தேநீர் சட்டையும் தமிழக மக்களின் விடுதலைக்காக முழங்குகையில் வெள்ளை ஆடையும் பச்சை துண்டும் அணிந்தாரேயன்றி தன் முப்பாட்டனைப்போல கலாச்சாரத்தை சிதைக்கும் சிற்றாடையை அணியவில்லை.

ஆடை மட்டுமல்ல அரசியல் இலக்குகளிலும் முருகனைக் காட்டிலும் பெரிய அளவில் சிந்திப்பதே அண்ணனின் சிறப்பு. சிவக்குமார் போன்ற தயிர்சாத கதாநாயகர்கள் மட்டும் முருகனாக நடித்திருப்பதால் முருகனை வீரமான கடவுள்களின் பட்டியலிலேயே தமிழன் வைத்திருக்கவில்லை. தன்னை முருகனின் பேரனாக அறிவித்ததன் மூலம் முருகனை ஒரே இரவில் வீரனாக்கியிருக்கிறார் சீமான்.
பிரணவ மந்திரத்தை மறந்த தன் மாமா பிரம்மனை சிறைவைத்தான் முருகன். ஆனால் அண்ணனோ அதைவிடவும் கறாரானவர், அவர் தன் மாமாவையே (மாமனார்) ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் இருந்துதான் தெரிவு செய்தார். தன் காதலியைக் கூட தமிழ்தேசிய நிலைப்பாட்டின் வழியே முடிவு செய்த தலைவன் சீமானன்றி வேறொருவர் இருப்பதாக வரலாறும் இல்லை, இன்னொருவர் வருவார் என்று சொல்லும் துணிவுள்ள சோதிடரும் இவ்வுலகில் இல்லை.
அண்ணன் தன் காதல் மனைவியை பாலச்சந்திரனின் படுகொலையை கண்டித்து களமாடியபோதுதான் கண்டடைந்தார் என்று தமிழ் என்சைக்ளோபீடியாக்கள் அறுதியிட்டு உறுதி கூறுகின்றன. காதல் மட்டுமல்ல முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு அந்த துயர நிகழ்வின் தொடர்ச்சியாக சீமான்ஜி தன் மதுப்பழக்கத்தையே விட்டுவிட்டதாக வரலாறு சொல்கிறது.
அண்ணனின் ஒவ்வொரு சொல்லும் செயலும் தமிழ் தேசியத்தின் கூறுகளோடு இணைந்தே வெளிப்படுகின்றன. அவரது ஆனந்தவிகடன் பேட்டி (04/03/2015) நாம் தமிழரின் கொள்கை ஆவணத்தைக் காட்டிலும் அழுத்தமானது. அந்த பேட்டியில் காட்டியிருக்கும் புகைப்படமோ அதைவிட அழுத்தமானது. அண்ணன் வேல் பிடித்த காட்சியையும், அண்டாவில் கறிக்குழம்பு சமைக்க கரண்டி பிடித்த காட்சியையும் கண்டவர்கள், அவர் கையில் ஏ.கே 47 இருந்திருந்தால் 29 நிமிடத்தில் ஈழம் கிடைத்திருக்கும் என்பதை 100 சதம் நம்பியிருப்பார்கள். இத்தனை திறமையிருந்தாலும் ’ஐநா சபையில் 30 நிமிடம் பேச அவகாசம் கிடைத்திருந்தால் ஈழம் வாங்கியிருப்பேன்’ என அவர் சொன்னது எத்தனை தன்னடக்கமான பதில் பாருங்கள்.

வலது கம்யூனிஸ்ட் கட்சியின் கல்யாணசுந்தரம், எம்.ஜி.ஆரின் அதிமுகவிற்காக எழுதிய ‘சோசலிசம்தான்’ அண்ணாயிசம் எனும் புதுத் தியரி. அதேபோல முருகனின் கொள்ளுப்பேரனாகிய சீமான் சமூக வலைத்தளங்கள் எனும் வதைமுகாமில் சிக்கி சின்னாபின்னமான வேளையில் ஒரு புது தியரியை உருவாக்கியிருக்கிறார். தமிழ்தேசியம் எனும் அண்டாவில் அரசியல் எனும் வஸ்துவைக் கொட்டி ஆன்மீகம் எனும் குச்சியை விட்டு கலக்கி கம்பி பதம் வந்ததும் பக்குவமாக இறக்கியதுதான் ”வீரத்தமிழர் முன்ணணி”. தமிழனுக்கென்று ஒரு மதம் “தமிழம்”, அவன் மறைநூல் திருக்குறள், அவன் கடவுள் முருகன். அதுமட்டுமல்ல மொத்த தமிழினத்துக்கும் இனிஷியலாக ‘ரா’ வை அறிவித்திருக்கிறார் (ராவணனை தமிழ் இனத்தின் அப்பனாக அங்கீகரித்திருக்கிறார் சீமான், உளவுத்துறையான ”ரா” என புரிந்துகொண்டு வாண்டடாக வந்து வடுக வந்தேறி ஜீப்பில் ஏறாதீர்கள்).
இப்படியொரு அரசியல், ஆன்மிக மற்றும் கலாச்சாரப் புரட்சியை ஆரம்பித்த முதல் தலைவர் சீமான்தான். இதுமட்டுமல்ல இன்னும் பல விடயங்களில் அவரே முதலானவராக இருக்கிறார். தான் கலந்துகொள்ளும் எல்லா போராட்டங்களுக்கும் மனைவியை உடன் அழைத்துச்செல்லும் தலைவர் யார்? தன் ஹனிமூன் பயணமாக கூடங்குளத்துக்கும், இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கும் பயணித்த ஒரு தலைவனை இல்லையில்லை தொண்டனையாவது உங்களால் அடையாளம் காட்ட இயலுமா? அதுகூட தேவையில்லை அண்ணனைவிட வலுவானவர் என “ஆர்ம்ஸை” மடக்கிக் காட்டி நிரூபிக்கும் வல்லமை கொண்ட ஒரே ஒரு தலைவரையாவது உங்களால் காட்ட முடியுமா? இவ்வளவு ஏன், டிவியில் காம்பியரிங் செய்த ஒரே ஒரு உலகத்தலைவரை காட்டுங்கள்… அதை நிரூபித்தால் அடுத்த நொடியே தம்பிகள் அனைவரும் களமாடுவதை விட்டுவிட சித்தமாயிருக்கிரார்கள்.
இவ்வளவு விடயங்களில் அவர் முதல்வராக இருந்தும், அவரை முதல்வர் வேட்பாளர் என்று அவரே அறிவித்துக் கொண்டால் இந்த வடுக வந்தேறிகள் எள்ளி நகையாடுகிறார்கள். ஜதியும் சுதியும் சேர்ந்து நடத்திய சதிராட்டத்தால் அவர் சமீபகாலமாக அமைதி காப்பதாக சில வந்தேறிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் அது உண்மையில் அச்சமல்ல, தமிழ் தேசியத்தின் அடிப்படை விதி. கருவாடு மீனாகி கறந்த பால் மடிபுகுந்தாலும் ஒரு தமிழ்தேசியவாதி ஜெயாவை எதிர்த்து எதையும் பேசமாட்டான். அந்த விதியின் மீதான மரியாதை காரணமாகவே செந்தமிழன் (தற்போது பச்சைத்தமிழன்) சீமான் ஜெயாவை எதிர்த்து எதையும் பேசுவதில்லை. அதனால் அவரை கோழை என்றோ பச்சோந்தி என்றோ யாரும் கருதிவிடவேண்டாம்.

இந்தியாவில் காங்கிரஸ் தோற்கவும், தமிழகத்தில் தி.மு.க தோற்கவும், இலங்கையில் ராஜபக்சே தோற்கவும், கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானிடம் ஸ்காட்லாந்து தோற்கவும் அண்ணனின் வீரம்தானே காரணம்!!! அண்ணனின் அந்த அமைதியிலும் ஒரு வீரம் இருக்கிறது… ஈழத்தாயின் எண்ணப்படி தமிழகத்தில் முதல்வர் வேட்பாளராகும் தகுதி அவர் ஒருவருக்கு மட்டுமே இருக்கிறது. அந்தச் சூழலிலும் தன்னை ஒரு முதல்வர் வேட்பாளராக அறிவித்துக்கொண்டிருக்கிறார் தமிழ்தேசியவாதியான சீமான். இவ்வளவு துணிச்சலான தமிழ்தேசியவாதியை நீங்கள் முப்பாட்டன் முருகன் காலத்தில்கூட பார்த்திருக்க முடியாது.
தற்சமயம் களத்தில் இருக்கும் நூற்று சொச்சம் முதல்வர் வேட்பாளர்களிடையே சாட் பூட் திரீ போட்டாலோ அல்லது டம்புள்ஸ் எடுக்கும் போட்டி வைத்தாலோ ஜெயிக்கும் வாய்ப்பு அண்ணனுக்கு மட்டுமே உண்டு. ஆனாலும் அவர் எந்த நம்பிக்கையில் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவித்துக்கொண்டிருக்கிறார் என்பதை சொல்ல வேண்டிய கடப்பாடு நமக்கு உண்டு.
இணையத்தில் சீமான் விமர்சிக்கப்படும்போதெல்லாம் அவரது தொண்டர்கள் நான்கு நாட்களுக்கு தலைமறைவாவார்கள். அதன் பிறகு ஒரு விளக்கத்தோடு வருவார்கள் பாருங்கள், அந்தக் கோணம் சீமானாலேயே சிந்திக்க முடியாததாக இருக்கும். புலி பதுங்குவது பாய்வதற்காகவே, பூனை ஒதுங்குவது பிராண்டுவதற்காகவே எனும் பழமொழிக்கேற்ப ஒளிந்திருந்து திடீரென தாக்கும் கொரில்லாப்படையாக செயல்படும் இத்தகைய தம்பிகள் இருக்கும் நம்பிக்கையில்தான் அண்ணன் தமிழக முதல்வராகும் முடிவை எடுத்திருக்கிறார். தமிழனுக்கென்று ஒரு நாடு என்று சொல்லிவிட்டு இப்போது முதல்வர் பதவியை இலக்கு வைப்பதா என கேட்போருக்கு ஒரேயொரு பதில்தான் சொல்ல முடியும்… ”இது தமிழ் தேசியத்தின் போர்த்தந்திரம், தமிழ்ப்பிள்ளைகளின் சமையல் மந்திரம்”.
இவ்வளவு விளக்கியபிறகும், சீமானால் எப்படி முதல்வராக முடியும் என கேள்வி எழுப்புபவர்கள் வரலாறு தெரியாதவர்களாகத்தான் இருப்பார்கள். சாதாரண டிவி தொகுப்பாளராக இருந்த அர்ஜுன் ”முதல்வன்” படத்தில் முதல்வராகவில்லையா? சாதாரண சுகாதாரப் பணியாளராக இருந்த கே.ஆர்.விஜயா ”மேயர் மீனாட்சி’ படத்தில் மேயர் ஆகவில்லையா? கல்லூரி மாணவனாக இருந்த அஜ்மல் ”கோ” படத்தில் தமிழக முதல்வராகவில்லையா? என்ன தம்பி பேசுறீங்க நீங்க??
சரி, முதல்வரானால் அவர் என்னதான் செய்வார் என்று கேட்பவர்களுக்கான பதில்… அவர் என்ன செய்தார் என்று பாருங்கள் என்பதுதான். தமிழனுக்கென்று புதிய மதத்தை உருவாக்கினார், சாதியைப்பற்றி ஒரு வார்த்தையேனும் சொல்லியிருப்பாரா?. அதிலிருந்தே அவரது பண்பாட்டுப் பற்று விளங்கவில்லையா?

கிரானைட் மாஃபியா பி.ஆர்.பி.யால் வாழ்வாதாரத்தை இழந்த ஆயிரக்கணக்கானவர்கள் தமிழகத்தில் உண்டு. அப்படிப்பட்ட பி.ஆர்.பியையே அய்யா என விளித்து, “அவரிடமே வாங்கித் தின்றுவிட்டு அவரையே குற்றவாளியாக்குவது நியாயமா” என கேட்கும் கருணையுள்ளம் சீமானைத்தவிர யாருக்கு வரும்? ஜெயா இருக்கும் திசைநோக்கி எழும் அவரது இந்த அறச்சீற்றம் உங்கள் இதயங்களைத் தொடவில்லையா அல்லது அப்படி நடிக்கிறீர்களா?
அவர் வைகுண்டராஜன், பி.ஆர்.பழனிச்சாமி போன்ற தமிழ்தேச முதலாளிகளை மட்டும்தான் ஆதரிக்கிறார். வேதாந்தா, ரிலையன்ஸ் போன்ற கம்பெனி முதலாளிகள் வீட்டு திருமணத்துக்கு போனதாகவோ இல்லை அவர்களை தனது திருமணத்துக்கு அழைத்ததாகவோ ஒரு செய்தியையேனும் உங்களால் காட்ட முடியுமா! இப்படியொரு மறத்தமிழன் தமிழகத்தை ஆள்வதுதானே தமிழனுக்கு நல்லது!!.
முப்பாட்டன் முருகன், பாட்டன் வள்ளுவன், அப்பன் ராவணன் என விகடன் பேட்டியிலேயே தமிழனின் இனிஷியல் உறவுகளை தந்தவர் ஆட்சிக்குவந்தால் சித்தப்பா, மச்சினன், ஓர்ப்படியாள் என எண்ணற்ற உறவுகளை உங்களுக்குத் தரமாட்டாரா?? தமிழனுக்கென்று ஒரு மதம், தமிழனுக்கென்று ஒரு கடவுள், தமிழனுக்கென்று ஒரு சரக்கு, தமிழனுக்கென்று ஒரு சைடு டிஷ் வேண்டுமென உங்கள் உள்ளம் கேட்கவில்லையா? வீரநடை, இனியவளே போன்ற சூப்பர்ஹிட் படங்களை எடுத்து இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூனாக இருந்திருக்க வேண்டியவர் இன மீட்சிக்காக களமாடுகிறார், அவரை முதல்வராக்குவது தமிழனின் கடமையில்லையா? ஆகவே ஒரேயொரு முறை அவரை முதல்வராக்குங்கள். ஆடுமாடு மேய்ப்பது அரசு வேலையாகும். புளிசாதம் தேசிய உணவாகும். இன்னும் தமிழ் மதத்தின் மீட்சிக்கான எல்லா வேலைகளும் செய்யப்படும்.
லெக் பீசுக்காக கட்சி மாறும் வடுகனாக இல்லாமல், பரோட்டாவுக்காக தனித்து களம் காணும் தமிழனாக ஒன்றிணைவோம்.
“2021 ஆம் ஆண்டின் முதல்வர் அண்ணன் வாழ்க!!”
“2021 ஆம் ஆண்டின் மக்கள் முதல்வர் அண்ணி வாழ்க!!”
– வில்லவன்
KGF – BEML தொழிலாளர் போராட்டம் வெல்க!
KGF – BEML தொழிலாளர் போராட்டம் வெல்க!
தொழிலாளர்களே!
- BEML நிர்வாகம் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த 1,200 தொழிலாளர்களுக்கு பணிநிரந்தரம், பணிபாதுகாப்பை வழங்க மறுப்பது பொதுத்துறை தனியார்மயமாக்கத்தின் ஒருபகுதி!
- பணிநிரந்தரம், பணிபாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக BEML தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் வெற்றி பெற துணை நிற்போம்! பொதுத்துறை தனியார்மயத்திற்கெதிராக வீறுகொண்டு போராடுவோம்!
- சட்டபூர்வமான உரிமைகள் பறிக்கும் இந்த அரசுக்கு எதிராக, சட்ட வரம்புகளை மீறி போராட தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டியப்போம்!
KGF-ல் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிட்டெட் நிறுவனம் (BEML) செயல்பட்டு வருகிறது.
இதில் EMD என்பது (புல்டோசர் போன்றவை தயாரிப்பது) முதன்மை பகுதி. இங்கு 3,000 நிரந்தரத் தொழிலாளர்கள் வரை பணிபுரிகின்றனர். RC2 ரயில்கோச் யூனிட் 2 என்பது ரயில் பெட்டி தயாரிக்கும் இடம். HFU என்பதும் ஹைட்ராலிக் தொடர்பான பாகங்கள் தயார் செய்கின்ற பகுதி. H&P, R&P ஆகிய பிற பகுதிகளும் உள்ளன. இவற்றில் மொத்தமாக 1,200-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.
இவர்கள் எல்லோரும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த தொழிலாளர்கள். இவர்களை ஆலை நிர்வாகமே நேரடியாக பணியில் அமர்த்தியது. தங்கச் சுரங்கம் மூடப்பட்ட பிறகு, தங்க சுரங்கத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு முதன்மை முக்கியத்துவம் என்ற அடிப்படையில் இவர்கள் எல்லோரும் பணியில் அமர்த்தப்பட்டவர்கள். இவர்கள் எல்லோருக்கும் ஒரு நாள் கூலி ரூ 90 – ரூ 120 வரை மட்டுமே.
சில ஆண்டுகளுக்கு RC2 பகுதி தொழிலாளர்கள் போராடிய போது கூட இந்த நிறுவனம் ஊதிய உயர்வு வழங்கவில்லை. மாநில அரசின் மூலம் ரூ 30 மட்டும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இவர்களை ஒப்பந்ததாரர் மூலம் எடுத்ததாக கணக்கு காட்டியுள்ளது, நிறுவனம். மேலும், இவர்கள் எல்லோரும் நேரடி உற்பத்தியில் ஈடுபடுவர்கள். இத்தொழிலாளர்கள் இல்லையென்றால் ஆலையே இயங்காது என்ற நிலைமை உள்ளது.
இவ்வாறு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஹெல்மெட், கிளவுஸ், பாதுகாப்பு கவசங்கள் என எதுவும் கிடையாது. ஆனால், BEML-க்கு தொழிலாளர் பாதுகாப்புக்கான சிறந்த நிறுவனம் என்ற விருது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது!
வேலைக்கு எடுக்கும் போது பணிநிரந்தரம் செய்வதாக சொல்லி வேலையில் எடுத்தது, நிறுவனம். ஆனால், இதுநாள் வரை மிகச் சிலரே பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, இத்தொழிலார்கள் எல்லோரும் 8 – 5 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள். இவர்களில் இதுவரை 150 பேருக்கு 4 ஆண்டுகள் பயிற்சிக்காலம் (டிரையினிங்) என்ற பெயரில் பணிநிரந்தர ஆணை வழங்கினர். ஏற்கனவே பல ஆண்டுகள் வேலை செய்திருந்தாலும் 4 ஆண்டுகள் பயிற்சிக்காலம் (டிரையினிங்) முடிக்க வேண்டும். இதையும் தொழிலாளர்கள் தீவிரமாக போராட்டத்தில் இறங்குவார்கள் என்ற நிலைமை ஏற்படுவதிலிருந்து திசைத் திருப்பும் நடவடிக்கையாகவே 20, 30 பேர் என பல தவணைகளில் செய்துள்ளது BEML நிர்வாகம்.
பண்நிரந்தர ஆணை, நியாயமான ஊதியம், மருத்துவ வசதி, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். இவ்வளவு நாள் எப்படியும் பணிநிரந்தரம் கிடைத்துவிடும் என்று காத்திருந்தனர். ஆலை நிர்வாகம் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்காத வகையில் தொழிலாளர்களை ஒரு மயக்கத்திலேயே வைத்திருந்து தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியை திருடி வந்தது. இந்த முறை தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினால் தான் தீர்வு என்ற நிலையில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஆலை வாயில் முழக்கம் போடுவது, மதிய உணவு புறக்கணித்தல், கருப்பு பேட்ஜ் அணிதல் போன்ற எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்த தொழிலாளர்கள் பிப்ரவரி 27-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் செய்து வருகின்றனர். 5 பிரிவுகளில் வேலை செய்யும் 1,200 தொழிலாளர்களும் ஒற்றுமையாக இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு ஆலையின் முன்னால் பந்தல் போட அனுமதி மறுத்து வருகிறது போலீசு. “ஆலை முன்பாக கூட்டம் கூடுவதற்கு அனுமதி இல்லை” என்கிறது ஆலை நிர்வாகம். இதற்கு போலீசு, “உள்ளூரில் திருவிழா நடப்பதால் பாதுகாப்புக்கு போலீசு இல்லை” என்று சப்பைக் காரணத்தை சொல்கிறது. இதனையே உள்ளூர் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரும் கூறுகிறார். ஆலையின் முன்பு கூட்டம் கூடுவதற்கு நீதிமன்றத்தில் முறையிட்டுள்ள தொழிலாளர்கள் ஆலையின் முன்பாக கூடுவதை நிறுத்தியுள்ளனர்.
மொத்தத்தில் சட்டபூர்வ உரிமைகளைக் கூட அனுமதிக்க இந்த அரசு தயாராக இல்லை. குறைந்த பட்ச ஜனநாயகம் என்ற ஒன்றும் இன்று இல்லை என்பது தெளிவாக உள்ளது. தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்க அரசின் அனைத்து அங்கங்களும் கைகோர்த்து இருப்பதை தொழிலாளர்கள் உணரவேண்டும். ஆகையால், சட்டத்திற்கு உட்பட்ட போராட்டம் என்பது தற்கொலைக்கு சமமானது. இந்த சட்டவரம்புகளுக்கு வெளியே தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டிமையத்து போராடுவது மிகவும் அவசியமானது.
[துண்டறிக்கையை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]
இத்தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தொழிலாளர்கள் இன்னும் நேரடியாக ஆதரவு தெரிவிக்காத நிலைமை இருப்பதால் ஆலையில் ஓரளவிற்கு உற்பத்தி நடக்கிறது. நிரந்தரத் தொழிலாளர்கள் 12 மணிநேரம் வேலை செய்ய வைக்கப்படுகின்றனர். போராட்டம் தொடர்ந்தால் இது நிரந்தரத் தொழிலாளர்கள் மத்தியிலும் மாற்றத்தைக் கொண்டுவரும். அதுவரை தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருந்து போராட்டத்தை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும்.
மற்றொருபுறம், BEML-ஐ தனியார்மயமாக்கும் வேலை வெகுதீவிரமாக நடக்கிறது. இத்தொழிலாளர்களுக்கு பணிநிரந்தரம் செய்யாமல் வைத்திருப்பது என்பது பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கத்தின் ஒருபகுதி. அவ்வாறு பொதுத் துறை தனியார்மயமாக்கத்திற்கு எதிராக போராடுகின்ற சக்திகளுடன் இணைந்து போராட முன்வரவேண்டும். தனியார்மயத்திற்கு எதிரான போராட்டமாக இப்போராட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.
மத்தியில் ஆட்சி புரிகின்ற மோடி அரசு, இயற்கை வளங்களை சூறையாடி நாட்டை கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக்காடாக மாற்றி வருகிறது. இதற்கேற்ப அனைத்துப் பிரிவு மக்களின் உரிமைகளையும் கடுமையாக நசுக்கி வருகிறது. தொழிலாளர்களுக்கு இருக்கும் ஏட்டளவிலான சில உரிமைகளையும் பறித்து தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக்குகிறது.
இவற்றை உணர்ந்து BEML தொழிலாளர்களின் போராட்டத்தை அனைத்துப் பிரிவு தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் ஆதரிக்க புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அறைகூவுகிறது. தனியார்மயமாக்கத்திற்கு எதிராகவும் தொழிலாளர் உரிமைப் பறிப்புக்கு எதிராகவும் தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டியமைப்போம்! உரிமைகளை மீட்டெடுக்க வீதியில் இறங்கிப் போராடுவோம்!
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தொடர்புக்கு:
97880 11784 – ஒசூர்
98459 38763 – கே.ஜி.எஃப்
காஷ்மீர் முதல்வர் உரை : வா ரே வா.. கொன்னுட்டீங்க பாய் !

“ஜம்மு காஷ்மீரில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்ததற்கு பாகிஸ்தான், போராளி அமைப்புகள், ஹுரியத் ஆகியோர்தான் காரணம்… அவர்கள் ஏதாவது செய்திருந்தால் நாம் அமைதியாக தேர்தலை நடத்தியே இருக்க முடியாது. நான் இதை பிரதமரிடம் தெளிவாக கூறிவிட்டேன் என்பதை இங்கே அதிகார பூர்வமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.”
நேற்று மாலை ஜம்மு காஷ்மீர் முதல்வராகப் பதவி ஏற்றவுடன் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் முப்தி முகமது சயீத், ஆற்றிய உரை இது. முப்தி இதைப் பேசும்போது, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த துணை முதல்வரான பாஜக வின் நிர்மல் சிங், மூச்சு கூட விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பை முதல்வர் முப்தி வெளியிடுவதற்கு சில நிமிடங்கள் முன்பு முகமெல்லாம் பெருமை பொங்க 56 இஞ்ச் மார்பழகன் சூப்பர்மேன் மோடியும், 55 இஞ்ச் அஞ்சா நெஞ்சன் அமித் ஷா வும், பதவியேற்பு விழா மேடையில் முப்தி முகமது சயீதை கட்டித் தழுவினார்கள். ஜோக்கடித்து மகிழ்ந்தார்கள்.
அத்வானி, ஜோஷி இரண்டு பேரையும் வரவழைத்து பதவியேற்பு விழா மேடையில் ஒரு குரங்கு குல்லாயை மாட்டி உட்கார வைத்திருந்தார் மோடி; வேறெந்த உயர்ந்த நோக்கமும் இல்லை. ஏற்கெனவே பா.ஜ.க.வின் திண்ணையில் உட்கார வைத்து கஞ்சி ஊற்றப்படும் அந்தக் கிழடுகளுக்கு, மொய்யை திரும்பச் செய்கிறார் மோடி, அவ்வளவுதான்.
அல்லல் பட்டு ஆற்றாது அழுத அத்வானியின் கண்ணீரைத் துடைத்து, அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில், மோடிக்கு ஆழமாக ஆப்பு வைத்து விட்டார் முப்தி பாய். மோடியை சும்மா அடித்தாலும் பரவாயில்லை. “இந்த மேட்டரை நான் பிரதமரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன்” என்று சொல்லி அடித்திருக்கிறார்.
போனமாசம் கேஜ்ரிவால் ஆப்பு. இந்த மாசம் முப்தி ஆப்பு. இன்னும் எத்தனை ஆப்புகள் மோடியின் மீது இறங்கினால் அத்வானியின் ஆன்மா சாந்தியடையுமோ, அது நமக்குத் தெரியாது.
அத்வானி கதை இருக்கட்டும். 56 இஞ்ச் மார்புள்ள பிரதமரால் வழிநடத்தப்படும் பாரத தேசத்தை, பாரத மண்ணில் நின்று கொண்டே ஒரு முசல்மான் இவ்வளவு கேவலமாகப் பேசுவதைக் கேட்டு அங்கே கூடியிருந்த எழுச்சி பெற்ற ஹிந்துக்கள் என்ன செய்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? அனைவரும் எஸ்கேப்.
‘அடுத்த 6 வருசத்துக்கு அதிகாரத்தில் அமர்ந்து ஆட்டையப் போடலாம்’ என்று இதமான கனவில் மிதந்து கொண்டிருந்த காக்கி அரை டவுசர்களின் முகத்தில், சுளீர் என்று ஐஸ் வாட்டரை அடித்து விட்டார் பாய்.
“காஷ்மீர் மக்களுக்கு நன்றி சொல்லவில்லை, தேர்தல் கமிசனுக்கு நன்றி சொல்லவில்லை, போலீசுக்கும் ராணுவத்துக்கும் நன்றி சொல்லவில்லை. பாகிஸ்தானுக்கும் தீவிரவாதிகளுக்கும் நன்றி சொல்கிறாரே முதல்வர் இது அடுக்குமா? ஓபனிங்கே சரியில்லையே இந்த கூட்டணி நீடிக்குமா?” என்று பலவாறாக நோண்டுகிறார்கள் மீடியாக்காரர்கள்.
காங்கிரசின் குலாம் நபி ஆசாத் மடக்குகிறார். டிவிட்டரில் ஓமர் அப்துல்லா பா.ஜ.க.வை கலாய்க்கிறார். ஜம்மு பாந்தர்ஸ் கட்சி “மோடியின் பதில் என்ன” என்று உறுமுகிறது. “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வோம் என்று சொன்னீர்களே, அதென்னாச்சு, இதென்னாச்சு” என்று கூகிளில் புகுந்து தேடியெடுத்து தேதிவாரியாக பா.ஜ.க. வினர் பேசியதையெல்லாம் எடுத்துப் போட்டு, என்.ஆர்.ஐ ஹிந்துக்கள் டார்ச்சரை தொடங்குகிறார்கள். “அதெல்லாம் சும்மனாச்சிக்கும் சொன்னதுப்பா” என்று தனித்தனியே அவர்களை ஆஃப் பண்ணலாமென்றால், அதுக்குள் விசயம் அனுமார் வாலில் வைத்த தீ மாதிரி இணையம் முழுவதும் பற்றி எரிகிறது.
இதற்கிடையில், பிரதமர் வடிவேலுவின் நிலைமை புரியாமல், ஜம்முவில் பஜ்ரங் தள் அரைக்கிராக்குகள் முப்திக்கு கொடும்பாவி கொளுத்தி, சவால் விட்டு சண்டைக்கு கூப்பிடுகிறார்கள். எம்.எல்.ஏ சீட் கிடைக்காத அதிருப்தி ஹிந்துக்கள், கொடும்பாவிகளுக்கு மண்ணெண்ணெய சப்ளை செய்கிறார்கள். இன்னொரு பக்கம் டி.வி.காரர்கள் தீவிரவாதியை விரட்டும் விஜயகாந்த் போல பா.ஜ.க.வினரை தேடித்தேடி துரத்துகிறார்கள். இருந்த போதிலும், யாராலும் ஒரு ஆளைக்கூடப் பிடிக்க முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ் எவ்வளவு பயங்கரமான தலைமறைவு இயக்கம், என்பது மீடியாக்காரர்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.
முப்தி பேசிமுடித்த அடுத்த 4 மணி நேரத்துக்கு பா.ஜ.க.வின் தேசியத் தலைவர்கள் யாரையும் காணவில்லை. எல்லோரும் “சுவிட்சுடு ஆஃப்”. இந்த இக்கட்டான சூழ்நிலையில் காஷ்மீரில் தேர்தலை நடத்திய தேர்தல் கமிசன், “தேர்தலை நடத்தியது நாங்கள், நன்றி பாகிஸ்தானுக்கா? “முதல்வர் இப்படி பேசியிருப்பது எங்களுக்கு மிகவும் வேதனையளிக்கிறது” என்று அறிக்கை விட்டு விட்டது.
இதற்கு மேல் ஒரு ஆளும் கட்சி எப்படி வலிக்காத மாதிரி நடிக்க முடியும்? ஒரு அறிக்கையை ரெடி பண்ணி விட்டார்கள். “தேர்தல் வெற்றிகரமாக நடந்ததற்கு தேர்தல் கமிசனுக்கும், ராணுவத்துக்கும் இந்திய அரசியல் சட்டத்தில் நம்பிக்கையுள்ளவர்களுக்கும் நன்றி சொல்கிறோம்” என்று அறிக்கை விட்டார் பா.ஜ.க செயலர் ஸ்ரீகாந்த் சர்மா.
“அது நீங்க சொல்றது. அவரு சொன்னதைப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க, அதைச்சொல்லுங்க” என்று திரும்பத் திரும்ப கேட்டுப் பார்த்து விட்டார்கள் மீடியாக்காரர்கள். “நாங்க என்ன சொல்றோம்னா” என்று தொடங்கி “இதுதான் அந்த இன்னொரு வாழைப்பழம்” என்று முடிக்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
ஆனானப்பட்ட டைம்ஸ் நௌ அப்பாடக்கர்கள், பா.ஜ.க.வினரின் தொண்டை வரை மைக்கை திணித்து நோண்டிப் பார்த்து விட்டார்கள். முடியவில்லையே. முப்தி முகமதுக்கு எதிராகவோ, ஹூரியத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராகவோ ஒரே ஒரு வார்த்தையைக் கூட பா.ஜ.க.வினரின் வாயிலிருந்து மட்டுமல்ல வயிற்றிலிருந்து கூட வரவழைக்க முடியவில்லை.
“ஹூரியத், தீவிரவாதிகள், பாகிஸ்தான் ஆகியோருடன் பேசக்கூடாது என்பது பா.ஜ.க.வின் நிலை. ‘அவர்களுடன் பேசுவதைத் தவிர வேறு வழியில்லை என்று பிரதமரிடம் சொல்லி விட்டேன்’ என்கிறார் முப்தி. பேசுவீர்களா, மாட்டீர்களா? உங்கள் நிலை என்ன? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்” என்று பா.ஜ.க. தலைவர்களைக் கேட்கிறார்கள் நிருபர்கள்.

“சமாதானம், முன்னேற்றம், நல்லாட்சி இதுதான் எங்கள் நிலை – ஆமென்” என்று தமிழ் சினிமா பாதிரியாரைப் போல சாந்த சொரூபியாக பதிலளிக்கிறார்கள் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர்கள்.
“காஷ்மீர் பிரச்சினை நாட்டின் உயிராதாரமான பிரச்சினை ” என்றும், “நேரு துரோகம் செய்து விட்டார்” என்றும், “சியாமா பிரசாத் முகர்ஜி கொலை செய்யப்பட்டு விட்டார்” என்றும், “காஷ்மீரை மீட்காமல் ஓயமாட்டோம்” என்றும் பாரதிய ஜனதாவினர் தொண்டை நரம்பு புடைக்க கத்தி வருவதும், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது- பா.ஜ.க.வின் மூலமுதல் கொள்கைகளில் ஒன்று என்பதும் எல்லோருக்கும் தெரியும். மொத்தத்தில் பா.ஜ.க.வின் பாகிஸ்தான் எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்பு தேச வெறி அரசியலுக்கு ஏவுதளமே காஷ்மீர்தான்.
பல ஆயிரம் உயிர்களையும் பல இலட்சம் கோடி மக்கள் பணத்தையும் அழித்தும், அங்கே ஒரு அங்குலம் வெற்றியைக் கூட சாதிக்க முடியவில்லை. இனிமேலும் சாதிக்க முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். அயோத்தி முதல் காஷ்மீர் வரை அனைத்துமே தமது பாசிச அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுக் கொள்வதற்கு இவர்கள் பயன்படுத்தும் துருப்பு சீட்டுகள். அவ்வளவே. அதனால்தான் இவர்கள் பதுங்குகிறார்கள், பம்முகிறார்கள்.
இந்த விசயத்தில் பாரதிய ஜனதாவினர் பாசிஸ்டு நரிகள் என்றால், முப்தி முகமது சயீதோ ஒரு கிழட்டுப் போக்கிரி. “பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து விட்ட துரோகி” என்று காஷ்மீர் மக்கள் தன்னை ஏசுவார்கள் என்பது அவருக்குத் தெரியும். தீவிரவாத அமைப்புகளோ, ஹுரியத்தோ தன்னைக் குற்றம் சாட்ட முடியாத வண்ணம் தப்பிக்க வேண்டுமானால், தன்னை இந்து மதவெறியர்கள் தாக்குவதற்கு வழி செய்து கொள்ள வேண்டும் என்பதே முப்தியின் திட்டம். அது நிறைவேறிவிட்டது.
காஷ்மீர் மக்கள் தன் மீது காறி உமிழாமல் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்திருக்கிறார் முப்தி. டில்லியிலிருந்து காஷ்மீருக்கு மோடியை வரவழைத்தார்; மேடையில் நடு சென்டராக உட்கார வைத்தார்; அப்புறம் பொறுமையாக தொண்டை வரை காறி, மோடியின் முகத்தில் துப்பியிருக்கிறார். முப்தி உமிழ்ந்த எச்சில் மோடியின் முகத்தில் இன்னும் வழிந்து கொண்டுதான் இருக்கிறது.
துடைத்துக் கொள்ளலாம்தான். துடைத்துக் கொண்டால், மறுகணமே பார்ப்பவர்கள் “முப்தி துப்பிய எச்சிலுக்கு உங்கள் பதில் என்ன?” என்று கேள்வி எழுப்புவார்களே! அதனால்தான் முப்தி முகமது தனது மூஞ்சியில் துப்பியதே தெரியாதவர் போல பாவ்லா பண்ணுகிறார்.
“ஏண்டா, உனக்கெல்லாம் வெக்கமே கெடயாதா?“ என்றொரு வசனத்தை அடிக்கடி கேட்டிருப்பீர்களே, அதை சந்தானத்தின் குரலில் கேட்டுக் கொள்ளவும். அதுதான் இந்தக் கட்டுரையின் கடைசி வரி.
பின்குறிப்பு:
முப்தி முகமது சயீதின் மகள் மெகபூபா முப்தியை பேட்டி கண்டார் என்.டி.டிவி யின் பர்க்கா தத். மெகபூபாவின் வாயிலிருந்து ஒரு சின்ன வருத்தத்தை வரவழைத்து பிரச்சினையை சுமுகமாக முடிக்கும் தரகு வேலையாகவே இருந்தது பர்க்காவின் முயற்சி. ஆனால் மெகபூபா மசியவில்லை. “முப்தி சொன்னது நூற்றுக்கு நூறு சரி” என்றே வாதிட்டார். மொத்தத்தில் மோடியை இன்னொரு மூத்திர சந்தில் கொண்டு போய் அடித்த கதையாகி விட்டது பேட்டி.
இதற்கிடையில் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தேசபக்த எதிர்க்கட்சிகள் பொங்குகிறார்கள். பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகளும் சேம் சைட் கோல் அடிக்கிறார்கள். எல்லோரும் பிரதமரை பதில் சொல்லச் சொல்கிறார்கள். எழுந்தார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். “நான் பிரதமர் மோடியிடம் பேசிவிட்டுத்தான் பதில் அளிக்கிறேன். முப்தி தெரிவித்தது அவருடைய தனிப்பட்ட கருத்து” என்றார். அவரு சொன்னது அவரோடு கருத்துங்கிறதுதான் மோடி சொன்ன கருத்தாம். இது மோடியிடம் ஏற்கெனவே ஊமைக்காயம் பட்ட ராஜ்நாத் சிங், மோடியின் அல்லையில் குத்தியிருக்கும் உள்குத்து.
இரயில்வே பட்ஜெட் : மோடி பிராண்டு ஓட்டை வாளி !
இந்தாண்டுக்கான இரயில்வே நிதிநிலை அறிக்கையை இந்து பத்திரிகை உள்ளிட்ட தேசிய, பிராந்திய, ஆங்கிலம் என அனைத்து ஊடகங்களும் போற்றி புராணம் பாடுகின்றன. “புதிதாக இரயில்களை அறிவிப்பது, கட்டணக் குறைப்பு என்று கவர்ச்சி திட்டங்கள் இல்லாமல் முன்னேற்றத்திற்கான ஒரு தொலை நோக்கு பார்வை கொண்டாதாக இருக்கிறது இந்த நிதி நிலை அறிக்கை” என்கிறார்கள் முதலாளித்துவ பொருளாதார மேதைகள்; “இதை அரசியலற்ற பட்ஜெட், நுகர்வோருக்கான பட்ஜெட்” என்கிறார்கள். அதாவது, ரயில்வே மக்களுக்கான பொது சேவைக்கானது என்பதை மாற்றி முதலாளிகளுக்கான லாப வணிகத்துக்கானது என்பதை கொண்டாடுகிறார்கள்.

ஜால்ரா கச்சேரி களை கட்டிக் கொண்டிருக்கும் போது வழக்கம் போல் காங்கிரசு, போலி கம்யூனிஸ்டுகள், திரிணாமூல் காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சம்பிரதாயமான முறையில் “இது பயனற்றது” என்று ஜால்ராவைத் திருப்பித் தட்டியுள்ளன. எதிர் லாவணி பாடியுள்ள எதிர்க்கட்சிகளும் தாங்கள் விட்ட ‘காட்டமான’ கண்டன அறிக்கைகள் மறுநாள் பத்திரிகைகளில் வந்ததா இல்லையா என்று கூட கவலைப்பட்டிருக்க மாட்டார்கள் என்பது தனி கதை.
ஒவ்வொரு ஆண்டும் இரயில்வே துறைக்கான நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் சடங்கு நடந்தேறும் போதும் செய்யப்படும் அறிவிப்புகள் என்ற மோசடியைப் பார்த்து ஈமு கோழி நிறுவன அதிபர்களே வெட்கப்பட்டுக் கிடக்கிறார்கள் என்பது தான் உண்மை. அதற்கு முந்தைய ரயில்வேத் துறை அமைச்சர்கள் பறக்கவிட்ட குமிழிகளின் நிலை என்னவென்பதை சுருக்கமாகப் பார்க்கலாம்.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா – மர்ச்சாலா பகுதிகளுக்கு இடையிலான இருப்புப் பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட ஆண்டு – 1997. மேற்படி திட்டத்திற்காக பதினெட்டு ஆண்டுகள் கழித்து தற்போது தான் நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் பிடிக்கும் இந்த திட்டத்திற்கு இப்போது ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய கோடிகளை ஒதுக்கி, அதில் ஒப்பந்ததாரர் தின்று கழித்தது போக மிஞ்சிய தொகையில் வேலை நடந்து, இடைப்பட்ட காலத்தில் பணிகளின் மறுமதிப்பீட்டில் அதிகரித்த தொகைக்கான ஒப்புதல் கிடைத்து, அதற்கான நிதி ஒதுக்கீடு நடந்து, ஒரு வழியாக வேலை முடியும். மர்ச்சாலா மக்கள் இந்த இருப்புப் பாதையில் ஓடும் இரயிலில் ஏறி பத்து நூற்றாண்டுகள் கழித்து நல்கொண்டா வந்து சேர்ந்திருப்பார்கள்.

கடந்த இருபதாண்டுகளில் இரயில்வே துறையால் அறிவிக்கப்பட்ட சுமார் ரூ 6 லட்சம் கோடி மதிப்பிலான 362 திட்டங்கள் நிதி நெருக்கடியின் காரணமாக முடங்கிக் கிடக்கின்றன என்று கடந்த ஜனவரி 15-ம் தேதி ஜீ தொலைக்காட்சியில் நடந்த ராஜ்நீதி என்ற நிகழ்ச்சியில் குறிப்பிட்டார் சுரேஷ் பிரபு. ஒவ்வொரு நாளும் சுமார் 2.3 கோடி பயணிகள் இரயில்வே சேவையைப் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு நாளும் சுமார் 2.4 கோடி டன் அத்தியாவசிய சரக்குகள் இரயில்வே சேவையைப் பயன்படுத்தி நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக பயணிக்கிறது. இந்நிலையில் சென்ற ஆண்டு ஜூலை மாதம் பாரதிய ஜனதாவின் அப்போதைய இரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவால் அறிவிக்கப்பட்ட 58 புதிய ரெயில்கள் இப்போது எங்கே ஓடிக் கொண்டிருக்கின்றன என்கிற தகவல் தெரியவில்லை.
சாலைப் போக்குவரத்துக் கட்டணம் வானத்து மேகங்களைக் கிழித்து அதற்கும் மேலே பறக்கும் நிலையில் சாதாரண மக்களின் மலிவான போக்குவரத்துத் தேர்வாக இருப்பது இரயில் பயணம் ஒன்று தான். சாதாரண மக்களுடைய அன்றாடப் பிழைப்பின் பிரிக்க முடியாத அங்கமாகவும் அத்தியாவசிய சரக்குகளை தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு சேர்க்கும் இரத்த நாளங்களாகவும் விளங்கும் இரயில்வே துறையில் இத்தனை நாட்களாக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலானவை வெறும் வாயில் சுட்ட வடைகள் தான். நிறைவேறிய சொற்ப திட்டங்களும் ஆமை இனமே வெட்கித் தலைகுனியும் வேகம் கொண்டவை. அதில் நடக்கும் லஞ்சம், ஊழல், கமிஷன் போன்ற லாகிரி வஸ்துக்களை இங்கே கணக்கில் சேர்க்கவில்லை.

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவின் உரையில் முன்வைக்கப்பட்டுள்ள சில அம்சங்கள் –
– இரயில் நிலையம் சுத்தமாக உள்ளதா என்பதைக் கண்காணிக்க சி.சி.டி.வி கேமரா
– இன்பச் சுற்றுலாவை ஊக்கப்படுத்த பிரத்யேகமான சுற்றுலா இரயில்கள்
– மும்பை அகமதாபாத் இடையே புல்லட் இரயில்
– முக்கிய நகரங்களை இணைக்கும் அதிவேக ’வைர நாற்கர’ இருப்புப் பாதைத் திட்டம்
– இரயில் நிலையங்களில் வைஃபை மூலம் இணைய இணைப்பு
– இரயில்களில் தொலைக்காட்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு வசதி (infotainment)
– இரயில் கோச்சுகளில் விமானங்களில் உள்ளது போன்ற கழிவறை
– இரயில் நிலையங்களில் உயிரிக் கழிவறை
– இரயில் கோச்சுகளில் செல்போன்கள் ரீசார்ஜ் செய்யும் வசதி
– இரயில் நிலையங்களைச் சுத்தமாக பராமரிக்க 50,000 பேர்கள் கொண்ட தனி(யார்) படை
இன்னும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு சுமார் ரூ 8.56 லட்சம் கோடி தேவைப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஒரு புறம் ஏற்கனவே உள்ள இருப்புப் பாதைகளை முறையாகப் பராமரித்து விபத்துகளைத் தடுக்கவே பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இன்னொரு புறம், ஏற்கனவே உள்ள இரயில்கள் போதாமல் மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு பயணிக்கிறார்கள். ஊரகப் பகுதிகளில் இருந்து பெருநகரங்களுக்குத் தொழிலாளிகளைச் சுமந்து வரும் இரயில்கள் ஒவ்வொன்றும் பிராய்லர் கோழிகளைச் சுமந்து செல்லும் டி.வி.எஸ் மொப்பட்டைப் போல் காட்சியளிக்கிறது. சாதாரண மக்கள் பயணிக்கும் முன்பதிவு தேவையில்லாத பொதுக் கோச்சுகளோ பன்றிகளே நுழைய சங்கடப்படும் கோலத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இரயில் பயணம் என்பது மக்களின் தலையில் எழுதப்பட்ட மோசமான விதி என்ற நிலையில், “கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை” என்கிறார் இரயில்வே அமைச்சர்.
வாலாஜாபேட்டையில் இருந்து நெஞ்சாங்கூடு நசுங்க காலை ரெயிலில் பயணித்து சென்னைக்கு வேலைக்கு வரும் சாதாரண மக்களுக்குத் தேவை குத்துப் பாட்டுக்களோ, செல்போன் ரீசார்ஜோ அல்ல – மேலும் புதிய இரயில்களும், இணைக்கப்படாத பகுதிகளை இணைப்பதும், புதிய வழித்தடங்களில் மலிவான சேவையுமே மக்களுக்குத் தேவை. ஆனால், முட்டையிடும் கோழியின் பிட்டி வலியைப் பற்றி ஐந்து நட்சத்திர ஓட்டலில் ‘புல்ஸ் ஐ’ தின்னும் சுரேஷ் பிரபுவுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதே ஐந்து நட்சத்திர ‘புல்ஸ் ஐ’ பார்ட்டிகளுக்கு சொகுசு வசதிகளை செய்து கொடுப்பதுதான் அவருக்கு இடப்பட்ட கட்டளை.
அத்தியாவசியத் திட்டங்களுக்கே காசு இல்லை என்று ஒரு மாதத்திற்கு முன் புலம்பியவர், இந்தப் புதிய ஆடம்பரங்களுக்கு எங்கே இருந்து நிதி திரட்டப்போகிறார்?
மோடி அரசு பதவியேற்ற உடனேயே டீசல் விலையேற்றத்தைக் காரணமாகச் சொல்லி இரயில்வே பயணிகள் கட்டணம் 14.2 சதவீத அளவுக்கு உயர்த்தப்பட்டது. தற்போது சர்வதேச எண்ணைச் சந்தையில், இரசியாவின் பொருளாதாரத்தைச் சீரழிக்க அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் கச்சா எண்ணை கடுமையாக வீழ்ந்துள்ளது – விளைவாக, டீசலின் விலை கணிசமாக குறைந்துள்ளது. டீசல் விலை உயர்ந்தபோது உயர்த்தப்பட்ட பயணிகள் கட்டனம், பின்னர் குறைந்த போது குறைக்கப்படவில்லை. இந்த வகையில் சேமிக்கப்பட்ட ரிசர்வ் தொகையை புதிய திட்டங்களுக்குப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்திக் குறிப்பு.
இது தவிர, “உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் கடன் வாங்குவது குறித்துப் பேசி வருவதாகவும் ஓய்வூதிய நிதியில் இருந்து கணிசமான தொகையை இரயில்வே துறைக்குத் திருப்பி விடுவது குறித்து அலோசனைகள் நடந்து வருவதாகவும்” சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். உலக வங்கியும் ஆசிய வளர்ச்சி வங்கியும் உள்ளே நுழைகிறது என்றாலே தனியார் முதலாளிகள் உள்ளே நுழைவதற்கான முன்னோட்டமாக அதைப் புரிந்து கொள்ளலாம். கூடுதலாக, ஓய்வூதிய நிதியை இரயில்வேத் துறையை நோக்கித் திருப்பி விடும் பாரதிய ஜனதாவின் யோசனையையும் இணைத்துப் பார்த்தால் புதிருக்கான விடை தெளிவாகிறது.
ஓய்வூதிய நிதியை இரயில்வேயில் கொட்டுவது, மக்களின் இரத்தப் பணத்தில் வைஃபை இணையம், குளு குளு சொகுசுப் பெட்டிக்குள் குத்தாட்டப் பாடல்கள் என்று மக்களுக்கான சேவையாக இயங்க வேண்டிய இரயில்வே துறையை பணக்காரர்களுக்கான விற்பனை பொருளாக மாற்றுவது, பின் இரயில்வே துறையை மொத்தமாகத் தூக்கி பன்னாட்டு முதலாளிகளின் கையில் ஒப்படைப்பது, உள்ளே நுழைந்த தனியார் முதலாளிகள் கட்டணக் கொள்ளை அடிப்பதற்கு விளக்குப் பிடிப்பது என தனியார் மயத்துக்கான விரைவு தடத்தை போடுவதுதான் மோடி அரசு வழங்கியிருக்கும் இந்த ரயில்வே பட்ஜெட்டின் நோக்கம்.
மோடி சொல்லும் “அச்சே தின்”, இரயில்வே துறையைப் பொறுத்த வரை வெகு சீக்கிரத்தில் வரப் போகிறது – “அச்சே தின”ங்களை அள்ளிக் கொள்ள முதலாளிகளும் மேட்டுக்குடியினரும் ஆர்வத்துடன் காத்துக் கிடக்கிறார்கள்.
இது தொடர்பான செய்திகள் :
- RAILWAY BUDGET 2014-15: A ROADMAP FOR PRIVATISATION
- Railway Budget 2015: 15 things common man can cheer about
- 25 railway projects of previous Budgets still pending
- Focus on pending railway projects, MP urges govt
- Railway projects worth 6 lakh crore pending due to lack of funds: Suresh Prabhu
- Railway Budget 2014-15 and 2015-16:Comparative Analysis between the two
- Railway Budget: A brief analysis of last six years’ budget
- Suresh Prabhu’s Rail Budget 2015 if for the common man, not political allies
உயரும் மின்கட்டணம் – பொறியாளர் காந்தியின் விளக்கம்
கடந்த 2013-14-ம் நிதி ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நட்டம் ரூ 13,985 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது, முந்தைய நிதி ஆண்டோடு ஒப்பிடுகையில் ரூ 2,305 கோடி அதிகம். மேலும், மின்வாரியத்தின் மொத்தக் கடன் ரூ 74,113 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது மாநிலத்தின் மொத்தக் கடன் சுமையில் சரி பாதி.

இது தொடர்பாக, பொறியாளர் காந்தி அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் ஏறத்தாழ ரூ 16,000 கோடி அளவிற்கு மின்கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதிலும், மின்வாரியத்தின் நட்டம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறதே, இதற்கு என்ன காரணம்?
2012-13, 14 ம் ஆண்டுகளில் முறையே ரூ 7,874 கோடி, ரூ 937 கோடி மற்றும் ரூ 4,225 அளவுக்கு கட்டண உயர்வு வந்துள்ளது. ஒரே காரணம் தனியார் மின்சாரம் மட்டுமே.
1997-98-ல் வெறும் 99.8 கோடி யூனிட் ஆக இருந்த தனியார் கொள்முதல் (அதுவும் காற்றாலை போன்ற மின்சாரமே கொள்முதல் செய்யப்பட்டது) 2007-08-ல் 2392 கோடி யூனிட் என அதிகரித்திருக்கிறது. இன்று மொத்தத் தேவையில் 30.35 சதம்வரை உயர்ந்து தவிர்க்க முடியாத அளவுக்கு வளர்ந்துவிட்டது.
அரசு மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்திச்செலவு யூனிட் ரூ 3 என்றளவில் இருந்தாலும் தனியாரின் உற்பத்தி விலை ரூ 5.50-லிருந்து ரூ 14.00 வரை வேறுபடுகிறது. 30.35 சத பங்கு தனியார் கொள்முதலும் அதிக விலையும், மின் வாரியத்தின் நட்டத்தை கூட்டிக் கொண்டே செல்கின்றது.

எஸ்.டி.சி.எம்.எஸ் எலெக்ட்ரிக் நிறுவனம், அபான் பவன் நிறுவனம், பென்னா எலெக்ட்ரிசிடி ஆகிய தனியார் நிறுவனங்கள் யூனிட் ஒன்று ரூ 5 விலையில் மின்சாரத்தை வழங்கிவரும் நிலையில் , ஜி.எம்.ஆர் பவர் கார்ப்பரேஷன், சாமல்பட்டி பவர் கார்ப்பரேஷன், பிள்ளை பெருமாள் நல்லூர் பவர் கார்ப்பரேஷன், மதுரை பவர் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ 14 வரை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுவதன் பின்னணி என்ன?
அபான் பவன், பென்னா ஆகியவை எரிக்காற்றையும், எஸ்.டி.சி.எம்.எஸ். பழுப்பு நிலக்கரியையும் எரிபொருளாய் கொண்டவை. மற்ற நான்கு நிறுவனங்களும் எச்.எப்.ஓ. (ஹெவி ஃபர்னஸ் ஆயில்) என்ற நீர்ம எரிபொருள் அதாவது டீசல் போன்றவற்றை எரிபொருளாகக் கொண்டவை. அவற்றின் விலை கடுமையானதுதான்.
தற்பொழுது சந்தித்து வரும் மின்பற்றாக்குறை எவ்வளவு? இதனை அரசே தனது சொந்த முறையில் பூர்த்தி செய்து கொள்ள முடியாதா?
கோடைக் காலத்தில் தோராயமாக 2,000 மெகாவாட் பற்றாக்குறை உள்ளது. புதிய உற்பத்திக்காக கட்டுமானத்தில் இருந்தவற்றை குறைந்தபட்சம் 2012-ல் கொண்டுவந்திருந்தால் அந்த ஆண்டு முதல் மின்வெட்டைத் தவிர்த்திருக்கலாம். புதிய நிலையங்கள் துவங்குவதிலும் தேவையில்லாமல் மூன்றாண்டுகள் வீணடிக்கப்பட்டன. துவங்கிய புதிய நிலையங்கள் முழு உற்பத்தியின்றி, பழுதடைந்து பகுதித்திறனாக முடங்கியுள்ளன. (மேட்டூர் 200 மெகாவாட், வட சென்னை 600 மெகாவாட், வல்லூர் 500 மெகாவாட், வழுதூர் 100 மெகாவாட்)
தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்பதாலேயேதான், பல மின்திட்டங்கள் முடக்கப்பட்டிருக்கிறதா? இல்லை, இது தனியார் நிறுவனங்களுக்கு சாதகமான நடவடிக்கையா?
தனியார் மின்சாரக் கொள்முதல் என்பது கொள்ளை லாபம் தரும் ஊழல் வழி. இதனை யாரும் தவிர்க்கமாட்டார்கள். (2400 கோடி யூனிட் கொள்முதலில் ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் கமிசன் கூட நல்ல இலாபம்தான்)
மின்வாரிய நட்டம், ஆண்டுதோறும் எதிர்கொள்ளும் மின்கட்டண உயர்விலிருந்து மீள, தாங்கள் முன்வைக்கும் மாற்றுத்திட்டம் (அ) ஆலோசனை என்ன?
அ) அடிப்படையில் மின்சாரம் சேவைப்பொருளாக மீண்டும் கொள்ளப்பட்டு அரசே அளிக்க வேண்டும்.
ஆ) இடை மானியம், சமுதாய நோக்கில் தொடர வேண்டும்.
இ) புதிய உற்பத்தி முழுவதும், அரசுத்துறையில் இருக்க வேண்டும்.
ஈ) மின்சாரம், உணவுக்கு அடுத்த அடிப்படை வளம். இதில் எல்லா குடிமக்களுக்கும் பங்களிக்கப்படுவதே ஜனநாயக கடமை.
உ) அடிப்படையில் ”சந்தைப் பொருளாதாரம்” மாற்றப்பட வேண்டும்.
– நேர்காணல்: இளங்கதிர்
கோவை போலீசுக்கு பு.மா.இ.மு எடுத்த ஜனநாயக வகுப்பு
கோவை நகரம் நாளுக்கு நாள் முற்றி வரும் மக்கள் போராட்டங்களை தினந்தோறும் எதிர் கொண்டு வருகிறது. தன்னியல்பில் பாசிசமயமாகி வரும் அரசக் கட்டமைப்பில் இதர மாவட்டங்களுடன் ஒப்பு நோக்கின் இன்னும் ஒரு படி மேலே இருக்கும் நகரம் இது. இந்துத்துவ சில்லறை லெட்டர் பேட் அமைப்புகளின் கொட்டம் வேறு ஒரு பக்கம். புரட்சிகர அமைப்புகள் இத்தகைய அசுத்தங்களை அகற்றி புதுக் குருதி ஏற்றும் வேலையை செய்து வரும் வேளையில், அதற்கு அவ்வப்போது எதிர் வரும் வேகத் தடைகளை அகற்றும் தருணங்கள் சுவாரசியமானவை.
கடந்த வாரம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த நமது தோழர்கள் கோவை அரசுக் கலைக் கல்லூரியில் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். கலைக் கல்லூரி கோவையின் மையப் பகுதியில் இருக்கிறது. மாணவர்கள் இளைஞர்களின் பிரதான பிரதேசமாதலால் இதயத்தின் இடது வெண்ட்ரிக்கிள் போல எப்போதும் துடிப்புடன் இருக்கும் பகுதி.
வழக்கம் போல் சிறிய தட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் உறுப்பினர் அட்டைகள் சகிதமாக மாணவர்களுடன் அரசியல் பேசியவாறு காலையில் துவங்கிய வேலை மதியம் வரை சுமுகமாகவே போனது.
மதியம் 12:30 போல ஒரு ஆட்டோ ஓட்டுனர் நம்மை அணுகி, ஆஞ்சநேயர் கோவிலில் பிரசாதம் வாங்கும் உடல் மொழியில் மிக பவ்யமாக, “ஒரு நோட்டீஸ் தருவீங்களா…?” எனக் கேட்டார். அப்போதே பட்சி சொல்லிற்று; ஒன்றிற்கு இரண்டாகக் கொடுத்து அனுப்பினோம்.
சரியாக 3 நிமிடங்களில் 5 காக்கி போலீஸும் ஆறேழு மஃப்டி போலீஸும் (ரகசிய போலீசாமா…!) ஸ்பாட்டுக்கு வந்து எங்களை மறித்து நின்றனர்.
போலீஸ் : “என்ன பண்ணிக்கிட்டுருக்கீங்க…? இங்க இதெல்லாம் செய்யக் கூடாது.”
புமாஇமு : “ஏன் செய்யக் கூடாது..?”
போலீஸ் : “பர்மிஷன் வாங்காம இதெல்லாம் செய்யக் கூடாது.”
புமாஇமு : “யார்கிட்டயும் பர்மிஷன் வாங்கத் தேவையில்ல சார்.”
போலீஸ் : “நீங்க மாணவர்களை பிரெய்ன் வாஷ் பண்ணுறீங்க”
புமாஇமு : “நாங்க ஒண்ணும் சாதி மத பிரச்சினைய கிளப்பல…. சார்.”
போலீஸ் : “நீங்க வந்தா எல்லா கட்சிக் காரங்களும் கேட்பாங்க…! த.மா.கா கேட்டாங்க., அவங்களுக்கும் நாங்க விடல. அதனால நீங்களும் பண்ணக் கூடாது; பொது மக்களுக்கு இடையூறு ஆகுது”
புமாஇமு : “என்ன இடையூறு ஆகுது..? இப்ப நீங்க வந்தவுடன் தான் இங்க கூட்டம் அதிகமாகியிருக்கு மக்கள் இங்க என்னவென்றே வேடிக்கை பார்க்கறாங்க…! நாங்க இதுவரை எங்களிடம் பேசுகின்ற மாணவர்களிடம் தான் பேசுறோம். யாரையும் கட்டாயப் படுத்தல.”
போலீஸ் : “இல்லைன்னா இல்ல தான். நீங்க பண்ணக் கூடாது.”
புமாஇமு : “இல்லைன்னு எந்த செக்சன்ல் சொல்லிருக்குன்னு தெளிவா சொல்லுங்க சார். பொத்தாம் பொதுவா இல்லைன்னு சொன்னாலாம் நாங்க போக முடியாது. இது எங்க உரிமை.”
சிஆர்பிசி, சிபிசி என நாம் பேசத் துவங்க இவங்க ஏதோ நமக்கு சம்பந்தமில்லாததை பேசுறாங்க போல “என்னமோ போடா மாதவா” என்ற தொனியில் சட்டம்&ஒழுங்கு காவல் துறையினர் பேந்தப் பேந்த விழித்தவாறே நின்றிருந்தனர்.
சீனியர் போலீஸ் சிரிப்பு போலீஸாக மாறியது கண்டு அறச் சீற்றம் கொண்டார் ஒரு பெண் போலீஸ்,
“என்னம்மா ரொம்ப ஓவரா பேசிக்கிட்டே போற., சொன்னா கேக்க மாட்டியா நீ.” என்று கூறியவாறே தோழர்களை போட்டோ எடுக்க முனைந்தது போலீஸ்.
புமாஇமு : “நிறுத்துங்க.. ஃபோட்டோ எடுக்காதீங்க….” எனத் தடுக்கையில்,
அந்த போலீஸ், “ஏய், என்ன” எனக் கூற, அவ்வளவு தான் ஆக்ரோஷமானார்கள் தோழர்கள்.
புமாஇமு : “என்ன ‘ஏய்’ னு சொல்ற.,? எங்கள பார்த்தா எப்பிடி தெரியுது? நாங்க உங்கள போட்டோ எடுத்தா சும்மா இருப்பியா…?”
என நமது தோழர் எகிற, அவர்களும் பதில் பேச நமது தோழரும் ஏகத்துக்கும் எகிறத் துவங்க சுற்றியிருந்த மாணவர்களோ படு உற்சாகத்துடன் இதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
நிலைமை கை மீறுவதை உணர்ந்த காக்கிகள் பின் வாங்கினர். சமாதானமாக பேச முயன்றனர். “இன்ஸ்பெக்டர் கூப்ட்டாரு” என காக்கிகள் கிளம்பிவிட்டனர். ஆனாலும் மஃப்டி போலீஸ்கள் விடாமுயற்சியுடன் சிலர் தன்மையாகவும் நாசூக்காக பேசியும் அங்கேயே உலாத்திக் கொண்டும் இருந்தனர் சூடுபட்ட பூனைகளாக.
புமாஇமு : “சார்., நாங்க கிளாஸ்க்குள்ள போயி பசங்கள டிஸ்டர்ப் பண்ணல. வெளிய நின்னுதான் பேசுறோம். உள்ளயே இந்த வேலைய செஞ்சுகிட்ருக்க பிஜெபி ய நீங்க எதுவும் கேட்கல ஆனா எங்கள கேட்குறீங்க..?”
(இப்படியான சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே மறு புறம் மாணவர்கள் ஆர்வமாக வந்து உறுப்பினரானார்கள்)
போலீஸ் : “அவங்க பண்ணது புகாரா வரலயேப்பா.. நீங்க செய்றது தான் வந்திருக்கு.”
புமாஇமு : “யார் அப்படி புகார் சொன்னாங்க…?”
போலீஸ், “பசங்க தான்” எனக் கூறினர். எந்த பசங்க எனும் போது கூற மறுத்து விட்டார்.
கோவை அரசுக் கலைக் கல்லூரியில் கணிசமான அளவு தி.க. வினரும் ஏ.பி.வி.பி. யினரும் இருக்கின்றனர். இதில் ஏ.பி.வி.பி. யினரின் சில்லுண்டித்தனங்கள் மோசமானவை.
அவ்வமைப்பின் முன்னணியினர்
- தமது வகுப்பு மாணவர்களின் ஃபோனை வாங்கி கனவு பெண்ணை கண்டுபிடிக்க இந்த நெம்பருக்கு அழையுங்கள் என அலைபேசி கம்பெனிகள் செய்யும் மாமா வேலையை போன்றே ‘உறுப்பினர் ஆகணுமா, இந்த நெம்பருக்கு கூப்பிடுங்க’ என விளம்பரம் செய்யப்பட்டிருக்கும் பிஜேபி யின் நெம்பருக்கு இவர்களே மிஸ்டு கால் கொடுப்பது
- வகுப்பில் மிக சொற்பமாக இருக்கும் இஸ்லாமிய மாணவர்களை மிக மோசமாக கிண்டல் செய்வது
- கல்லூரிக்குள்ளேயே ஆங்காங்கே கூட்டங்களை போட்டு மினி மதவெறி ஷாகா நடத்துவத
- இதை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரு சில மாணவர்களையும் அடக்குவது
என்பன போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது போன்று மத முனைவாக்கம் (Polarizing) செய்து கொண்டிருக்கும் உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பின் தொடுப்புகளை (Outfits) மிக மென்மையாக கையாள்கிறது பார்ப்பன ஏவல் துறை. இதன் எதிர்முனையாக இருக்க வேண்டிய தி.க. வினரோ, பு.மா.இ.மு வளர்ச்சியை பார்த்து ஏக்கப்பெருமூச்சு விடுகின்றனரே அன்றி, காவிக்கூட்டத்தை எதிர்த்து ருத்ர தாண்டவம் ஆடுவதில்லை. இப்படியான நிலைமை இங்கிருக்கிறது.
சுமார் இரண்டு மணி நேரம் நம்மிடம் என்ன பேசியும் முடியாமல், மஃப்டிகளும் போலீஸ்களும் கிளம்பும் போது அதில் ஒரு பெண் காக்கி “வாங்க சார்., நாம HOD கிட்ட புகார் எழுதி வாங்கிட்டு இவங்கள பாத்துக்கலாம்” என அப்பட்டமாக கூறுகிறார். ஒரு பொய்ப் புகார் எழுதி வாங்கப் போவதை அப்படி கூறிவிட்டு போகிறார்.
நாமும், “நீங்க முடிஞ்சத பாத்துக்கங்க சார்” எனக் கூறி அவர்களை வழியனுப்பி விட்டு வந்து நமது வேலையை தொடர்ந்தோம். அதன் பின்னர் பல மாணவர்கள் மிக ஆர்வமாக உறுப்பினராக இணைந்தனர். அது வரை, நாம் யாரு என்ன விஷயம் எனப் பேசியவாறு சேர்க்க வேண்டியிருந்தது. ஆனால் இதன் பின் வேலை கொஞ்சம் எளிதாகியது என்னவோ நிஜம்.
ஒரு முதுகலை மாணவர் வந்து “எனக்கொரு கார்டு போடுங்க..” என உரிமையாகக் கேட்டார்.
“என்னங்க., நோட்டீஸ் படிச்சிங்களா..? எதுவுமே கேட்கலயே நீங்க…” என நாம் கூறுகையில் அதற்கு அவர்,
“ரோட்டுல நின்னு மாணவர்கள் உரிமைக்காக போலீஸ் கிட்ட அரசியல் பேசுறீங்க….! இத விட என்ன வேணும். இன்னைலேர்ந்து நானும் புமாஇமு உறுப்பினர்” எனக் கூறினார்.
அதன் பின், மாலை ஆறு மணி வரை தொடர்ந்து நடைபெற்று முடிவடைந்தது உறுப்பினர் சேர்க்கை. இது தொடரும்….
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை
