Wednesday, July 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 61

குறைந்தபட்ச ஆதாரவிலைக்கான போராட்டமும் – பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசின் இன்றியமையாத் தேவையும்

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. டெல்லிக்குள் நுழைவதற்காக பஞ்சாப், அரியானா எல்லைப் பகுதிகளில் குவிந்துள்ளனர் விவசாயிகள்.

இந்நிலையில், பாசிச மோடி அரசை கண்டித்து அரியானாவில் விவசாயிகள் பிப்.17 அன்று பேரணி நடத்தினர். அதேபோல் பஞ்சாபில் முக்கிய நகரங்களில் உள்ள பாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிட்டு தர்ணா போராட்டமும் நடத்தியுள்ளனர்.

இதற்கிடையே, ஷம்பு எல்லையில் பேட்டியளித்த விவசாய சங்கத் தலைவர் சர்வன் சிங் பந்தேர் “விசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு காண நினைத்தால் குறைந்தபட்ச ஆதார விலைக்கான அவசர சட்டத்தை ஒரே இரவில் ஒன்றிய அரசு கொண்டு வரலாம். அதன் பிறகு மற்ற கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம்” என்று கூறியுள்ளார். ஒன்றிய அமைச்சர்களுடன் இன்று நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் பந்தேர் இவ்வாறு கூறியிருப்பது முக்கியமானது.

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை சட்டப்படி அமல்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 2020 ஆம் ஆண்டில் டெல்லியில் நடத்திய மாபெரும் போராட்டத்திற்கான பிரதான காரணம், அந்தச் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதார விலை எனும் உரிமையை அடியோடு பறித்துவிடும் என்பதுதான்.


படிக்க: விவசாயிகள் போராட்டமும் எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதமும்


இந்தியாவில் விவசாயிகள் தொடர்ச்சியாக நட்டத்திற்கு ஆளாவதற்கும், அதன் காரணமாக ஏற்படும் நெருக்கடியின் காரணமாக லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்வதற்கும் அடிப்படையான காரணங்களில் மிகவும் முக்கியமானது குறைந்தபட்ச ஆதார விலை எனும் உரிமை விவசாயிகளுக்கு இல்லாததாகும்.

நெல், கோதுமை தவிர மற்ற வேளாண்பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை உறுதி செய்யப்படாத நிலையே இன்று உள்ளது. அதிலும் பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் மட்டுமே நெல், கோதுமை ஆகியவை முழுமையாக அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இந்த நிலை இல்லை. பெரும்பாலும் இடைத்தரகர்களால்தான் கொள்முதல் செய்யப்படுகின்றன.

ஒரு பக்கம் அதிகமாகிக் கொண்டே செல்லும் மூலதனச் செலவுகள், இன்னொரு பக்கம் விலையேற்றத்தால் ஏற்படும் வாழ்வாதாரச் செலவுகளின் உயர்வு காரணமாக இந்திய விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர். விவசாயிகளின் இந்த நெருக்கடியான பொருளாதார நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இடைத்தரகர்களும், கமிசன் மண்டிகளும் விவசாயிகளை சுரண்டுகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட விலைக்குக் குறைவாகவே விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர். இதையெல்லாம் தடுப்பதற்கு எந்த அரசும் எந்த நடவடிக்கையும்  எடுப்பதில்லை.

ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயிக்கிறது. ஆனால் நெல், கோதுமை தவிர மற்ற பயிர்களுக்கு உறுதி செய்யப்பட்ட அரசு கொள்முதல் கிடையாது. இது விவசாயிகளை சந்தை சக்திகளின் பிடியில் விட்டுவிடுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் அரசு நெல் கொள்முதல் செய்வதில் உள்ள ஊழலும், குளறுபடிகளும், அலட்சியமும் அதனால் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்றாக மாறிப் போய்விட்டது. மற்ற பயிர்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அவற்றுக்கெல்லாம் குறைந்தபட்ச ஆதாரவிலை இருக்கிறதா என்பது பற்றி பெரும்பான்மையான விவசாயிகளுக்கே தெரியாத நிலைதான் உள்ளது.

இந்தியாவின் உணவு தானிய இருப்பை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று உலக வர்த்தகக் கழகம் அழுத்தம் கொடுக்கிறது. இதன் மூலம் கார்ப்பரேட்டுகள் சந்தையில் கொள்ளையடிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். அதற்கேற்பவே ஒன்றிய அரசுகளும் செயல்பட்டு வந்தன. இந்திய உணவுக் கழகத்திற்கான மானியங்களை வெட்டுவது, கொள்முதலை குறைப்பது, மோசமான பராமரிப்பு இவையெல்லாம் உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைக்கு அடிபணிந்தே நடைபெறுகின்றன.

உண்மையில், இதுவரை அரசு கடைப்பிடித்து வந்த குறைந்தபட்ச ஆதாரவிலை என்பதே சந்தையில் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு ஏற்பத்தான் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. சந்தை சக்திகளின் பிடியில்தான் ஏற்கெனவே விவசாயிகள் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். எந்த வித சுயசார்பு நிலையிலும் விவசாயிகள் வாழ அரசு உதவி செய்வது கிடையாது.

இதனால்தான் விளைபொருள்கள் அதிகமாக விளையும் போது சந்தை சக்திகளால் குறைவான விலை நிர்ணயிக்கப்பட்டு விவசாயிகள் கடன் நெருக்கடி, தற்கொலைக்குத் தள்ளப்படுவதும், விளைச்சல் இல்லாதபோது பதுக்கிவைக்கப்பட்ட விளைபொருள்களைக் கொண்டு கார்ப்பரேட், சந்தைக் கும்பல் கொள்ளையடிப்பதும் தொடர்ச்சியாக நடக்கிறது.


படிக்க: பாசிச அடக்குமுறைகளைத் தகர்த்து முன்னேறுகிறார்கள் விவசாயிகள்! போராட்டத்தீயை அணையாமல் பாதுகாப்போம்!


ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வரத் துடிக்கும் மூன்று வேளாண்திருத்தச் சட்டங்களோ குறைந்தபட்ச ஆதாரவிலை என்ற ஒன்றையே இல்லாமல் செய்து கார்ப்பரேட்டுகளிடம் கையேந்துபவர்களாக விவசாயிகளை மாற்றி விடும். மூலப்பொருள்கள், உற்பத்தி, பதப்படுத்துதல், விநியோகம் என எல்லா அம்சங்களிலும் விவசாயிகள் கார்ப்பரேட் கும்பலை நம்பி வாழ வேண்டிய மோசமான நிலைக்கு தள்ளப்படுவர். பன்மடங்கு விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்கும். இதனையெல்லாம் தெளிவாக உணர்ந்துதான் விவசாயிகள் தீவிரமாக போராடுகின்றனர்.

குறைந்தபட்ச ஆதாரவிலை என்பது விவசாயிகளுக்கு லாபம் தருவதாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, உற்பத்தி, பதப்படுத்துதல், விநியோகம் என அனைத்திலும் அரசின் பங்களிப்பு இருக்க வேண்டும். இதை சட்டப்பூர்வமாக உறுதி செய்யும்போதுதான் இந்திய விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளி வீசும்.

விவசாயிகளின் போராட்டம் ஏற்படுத்திய நிர்ப்பந்தத்தால் தற்போது ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும் என்று கூறுகிறார். அதேபோல் பாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவதாக இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது. இவையெல்லாம் போராட்டம் ஏற்படுத்திய நிர்ப்பந்தத்தில் தான் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர முழுமையான தீர்வை அளிக்கப் போவதில்லை. ஏற்கனவே கூறியபடி, கார்ப்பரேட் சந்தையின் ஆதிக்கத்திற்குட்பட்டே, உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் இவர்களால் செயல்பட முடியும்.

இதனைக்கூட ஏகாதிபத்திய கார்ப்பரேட் கும்பலும், அதானி – அம்பானி கார்ப்பரேட் கும்பலும் விரும்பாது. இந்த தனியார்மய – தாராளமய பொருளாதார, நிர்வாக கட்டமைப்புக்குள், கார்ப்பரேட்டுகளின் அதிகாரக் கட்டமைப்புக்குள் நின்று கொண்டு இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழி எதுவும் இல்லை; ஏமாற்றங்கள்தான் மிஞ்சும்.

அப்படியெனில், தீர்வு தான் என்ன? விவசாயிகளுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம் வழங்கக் கூடிய மாற்றுக் கட்டமைப்பை, அதாவது பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை உருவாக்குவதுதான் ஒரே தீர்வு. விவசாயிகளுக்கு எதிரான அனைத்து சட்டங்களையும் ரத்து செய்வதும், அவர்களுக்கான கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்துவதும், நியாயமான விலை கிடைக்கச் செய்வதும் அப்போதுதான் சாத்தியமாகும். தனியார்மய – தாராளமய கொள்கைகளை முறியடித்து விவசாயிகளின் நலனை முதன்மையாகக் கொண்ட கொள்கைகளும், செயல்பாடுகளும் அங்குதான் சாத்தியமாகும்.

விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கான போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் போராட்டத்தை பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்பதற்கான போராட்டத்துடன் அடுத்தக்கட்டமாக இணைத்து எடுத்துச் செல்ல வேண்டும். விவசாயிகளை மட்டுமல்ல, நமது நாட்டின் விடிவிற்கான ஒரே தீர்வும் அதுதான்.


இனியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அம்பலமாகும் மோடியின் திரைமறைவு வேலைகள்!

2014-ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, மாநிலங்களுக்குரிய நிதிப் பங்கீட்டை 42 சதவிகிதத்திலிருந்து 33 சதவிகிதமாக குறைப்பதற்காக, நிதி ஆணையத் தலைவர் ஒய்.வி. ரெட்டியுடன் சதித்திட்டத்தில் ஈடுபட்டதையும், அதற்கு ஒய்.வி.ரெட்டி அடிபணிய மறுத்ததையும் நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் அம்பலப்படுத்தியிருக்கிறார். ஒய்.வி. ரெட்டியுடனான மோடியின் திரைமறைவு பேச்சுவார்த்தைக்குத் தொடர்பாளராக இருந்த இந்த சுப்ரமணியம், அப்போது பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளர் பொறுப்பு வகித்தவர்.

சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையம் அரசு சாரா சிந்தனைக் குழாம், கடந்த ஆண்டு நடத்திய கருத்தரங்கில் சுப்ரமணியம் கலந்துகொண்டு உரையாற்றிய காணொளி சமூக வலைதளத்தில் வெளியானது. இக்காணொளி வெளியான பிறகு மோடி அரசின் சதித்திட்டம் அம்பலமானது. இதையடுத்து, பிரதமர் அலுவலகத்தின் தொடர் மிரட்டல்களால், அந்தக் காணொளியானது சமூக வலைதளத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

2013-ஆம் ஆண்டு அக்டோபரில் ஒய்.வி.ரெட்டி தலைமையிலான நிதி ஆணையக் குழு குஜராத் சென்றிருந்த போது, அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடி மாநில நிதிப்பகிர்வு தொடர்பாக தற்போதைய கருத்திற்கு நேரெதிரான கருத்துகளை முன்வைத்தார்.

‘‘நிதி ஆணையத்தின் தற்போதைய அணுகுமுறை மோசமான நிதி ஒழுக்கம் கொண்ட மாநிலங்களுக்கு சாதகமாக உள்ளது. அதே நேரத்தில், அதிக வளர்ச்சி விகிதம் உள்ள மாநிலங்களை ஏமாற்றமடையச் செய்கிறது. ஆணையம் தனது அணுகுமுறையை மாற்றி, வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க உத்வேகம் அளிக்கும் நோக்கில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும்; ஒன்றிய அரசு மாநிலங்களுக்குரிய நிதிப்பங்கீட்டை 42 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்’‘ என்று நிதி ஆணையத்தின் விதிமுறைகளை திருத்த வேண்டுமென்றார் மோடி. ஆனால், பிரதமரான உடன் இதற்கு நேரெதிரான நிலையெடுத்தது மட்டுமின்றி, சட்டத்திற்குப் புறம்பான முறையில் சதித்திட்டத்திலும் ஈடுபட்டிருக்கிறார் மோடி.

பட்ஜெட் எனும் மோ(ச)டி வித்தை!

மாநிலங்களுக்கான நிதிப் பங்கீட்டைக் குறைப்பதற்கான திரைமறைவுப் பேச்சுவார்த்தையில் மூக்குடைபட்ட மோடி, நிதிக்குறைப்பை பட்ஜெட் மூலம் நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறார். இரண்டே நாள்களில் தயாரிக்கப்பட்டது என மோடி பெருமையாகக் கூறிய 2015-2016 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு கடுமையாகக் குறைக்கப்பட்டது என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறார் சுப்ரமணியம்.

‘‘ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கான நிதி ரூ.36,000 கோடியிலிருந்து ரூ.18,000 கோடியாக சரிபாதி அளவுக்குக் குறைக்கப்பட்டது. இந்தத் துறைதான் அங்கன்வாடிகள் மூலமாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உணவு வழங்கக்கூடிய திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. அதேபோல, முந்தைய பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட 18.4 சதவிகித நிதி குறைவாக ஒதுக்கப்பட்டது’‘ என்பதையும் சுப்ரமணியம் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

‘‘ஒன்றிய அரசின் பட்ஜெட்டுகளில் உண்மைத்தன்மையானது பல்வேறு அடுக்குகளால் மூடிமறைக்கப்பட்டிருக்கிறது, ஹிண்டன்பர்க் போன்ற ஒரு நிறுவனம் ஆய்வு செய்தால் மட்டுமே வெளிப்படையான பட்ஜெட் சாத்தியமாகும்’‘ என்றும் சுப்ரமணியம் அக்கருத்தரங்கில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செஸ் மற்றும் கூடுதல் வரிகள் – கொள்ளைக்கான புதிய வழிகள்!

செஸ் மற்றும் கூடுதல் வரிகள் என்பவை வரிக்கு மேல் விதிக்கப்படும் வரிகளாகும். இவை சிறப்புத் தேவைகளுக்காக ஒன்றிய அரசால் வசூலிக்கப்படுபவையாகும். இவ்வாறு வசூலிக்கப்படும் நிதியை ஒன்றிய அரசு மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 271-இல் வரையறுக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஒன்றிய மோடி அரசானது, தனது விருப்பத்திற்கு ஏற்ப செஸ் மற்றும் கூடுதல் வரிகளை விதித்து மக்களை ஒட்டச் சுரண்டிக் கொழுக்கிறது.

ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு சிகரெட், பான்மசாலா, பெட்ரோலியம், நிலக்கரி, கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நீர், மணமூட்டப்பட்ட-இனிப்புச் சுவையூட்டப்பட்ட குளிர்பானங்கள், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் ஆகியவற்றின் மீதும், வருமான வரி மீதும், சுகாதாரம் – கல்வி, சாலை மற்றும் உள்கட்டமைப்புகள், தேசிய பேரிடர் தற்செயல் வரி மற்றும் ஜி.எஸ்.டி. விதிப்பால் ஏற்பட்ட இழப்பீட்டை ஈடு செய்வது என்ற பெயரில் செஸ் மற்றும் கூடுதல் வரிகளை ஒன்றிய அரசு விதித்து வருகிறது.


படிக்க: நிதி ஆயோக்-இன் மோசடி அறிக்கை: மோடியின் பாசிச ஆட்சியில் வறுமை ஒழிந்த வேடிக்கை!


குறிப்பாக, ‘‘2017-18-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், ஐந்து இலட்ச ரூபாய் வரையிலான தனிநபர் வருமானத்திற்கான வரி 10 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. இதனால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்வதற்காக ரூ.50 லட்சம் ரூபாய்க்கு அதிகமான தனிநபர் வருமானத்தின் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டது; 2018-19 ஆம் நிதியாண்டில், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 9 என குறைத்தது. இந்த இழப்பை ஈடு செய்வதற்காக சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் வரி அதிகரிக்கப்பட்டது’‘ என்ற பட்ஜெட் மற்றும் நிர்வாகத்திற்கான பொறுப்பு மையம் என்ற சிந்தனைக் குழாமைச் சார்ந்த மாலினி சக்ரவர்த்தியின் புள்ளிவிவரத்தை சுப்ரமணியம் ஆதாரமாகக் காட்டியிருக்கிறார்.

இவ்வாறு விதிக்கப்படும் செஸ் மற்றும் கூடுதல் வரி ஆகியவற்றால் ஒன்றிய அரசின் வரி வருவாய் அதிகரித்திருப்பதும் அக்காணொளியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 2011-12 ஆம் நிதியாண்டில் காங்கிரஸ் ஆட்சியில் வசூலிக்கப்பட்ட மொத்த வரிவருவாயில் செஸ் மற்றும் கூடுதல் வரிகளின் பங்கானது 10.4 சதவிகிதமாகும். ஆனால், மோடி ஆட்சியில், செஸ் மற்றும் கூடுதல் வரிகளால், 2017-18 ஆம் நிதியாண்டில் ரூ. 2.66 லட்சம் கோடியாக இருந்த வருவாயானது 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.4.99 லட்சம் கோடியாக, மொத்த வரி வருவாயில்13.9 சதவிகிதத்திலிருந்து 18.4 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.

மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு மோடி அரசு பதவியேற்ற போது 9.48 சதவிகிதமாக இருந்த பெட்ரோல் மீதான கலால் வரி (மாநிலப் பகிர்வுக்கு உட்பட்டது), 2017-ஆம் ஆண்டு வரை அப்படியே மாற்றமில்லாமல் நீடித்தது, ஆனால் அதன்பிறகு படிப்படியாக 1.9 சதவிகிதமாக மோடி அரசால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசுக்கு வரவேண்டிய பகிர்வுத் தொகை பாதிக்கு மேலாகக் குறைந்து விட்டது.

அதே சமயத்தில், முழுமையாக ஒன்றிய அரசு மட்டுமே எடுத்துக் கொள்ளும் செஸ் வரி கடுமையாக அதிகரிக்கப்பட்டு வந்துள்ளது. 2014-இல் பெட்ரோல் மீது 12 சதவிகிதமாக இருந்த செஸ் வரியானது 2017-இல் 17.46 சதவிகிதமாகவும், 2020-இல் 22.98 சதவிகிதமாகவும், அதே ஆண்டு இறுதியில் 32.9 சதவிகிதமாகவும் மோடி அரசால் அதிகரிக்கப்பட்டது. தற்போது 27.9 சதவிகிதமாக வசூலிக்கப்படுகிறது. செஸ் வரி குறைக்கப்பட்டாலும் பெட்ரோல் மற்றும் டீசல் மீது, சாலை மற்றும் உள்கட்டமைப்புகள் என்ற வகையில் கூடுதலாக வரி விதிக்கப்படுகிறது.

அந்தவகையில், பெட்ரோல், டீசல் மீதான வரிகளைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்ததன் மூலம் ஒன்பதே ஆண்டுகளில் சுமார் 32 இலட்சம் கோடிகளுக்கும் அதிகமாக மக்களிடமிருந்து மோடி அரசு பிடுங்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியிருக்கிறார்.

அதிகரிக்கும் கடன் – நிதி ஆயோக்கே அறியாத ரகசியம்!

பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியை வெட்டுவது, செஸ் மற்றும் கூடுதல் வரிகள் விதிப்பது ஆகியவற்றின் மூலம் தனது கஜானாவை நிரப்பிக் கொள்ளும் ஒன்றிய அரசு, கூடுதல் நிதியாதாரங்கள் என்ற பெயரில் பல அரசுத்துறை நிறுவனங்களின் மூலம் வெளிநாட்டுக் கடன்களை வாங்கிக் குவித்திருப்பது சுப்ரமணியம் பேசிய காணொளி மூலம் அம்பலமாகியிருக்கிறது. இந்தக் கடன்கள் எதற்காக, எந்தக் காலத்தில், எந்தக் கால வரம்பிற்குள் திருப்பி செலுத்துவதாக வாங்கப்பட்டன, கடன்களுக்கான வட்டிவிகிதம் என்ன எதுவும் தெரியவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். நிதி ஆயோக் தலைவருக்கே இந்த நிலைமை என்றால், நாடு எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை உணர முடியும்.

கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 100 லட்சம் கோடிகளை கடனாகப் பெற்றிருக்கிறது மோடி அரசு. இதனால் இந்தியாவின் கடன் ரூ. 155 லட்சம் கோடியாக அதிகரித்து மூன்று மடங்கு உயர்வு கண்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் இது 174 இலட்சம் கோடியாக அதிகரித்து விடும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

இவைமட்டுமின்றி, பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்வது என்ற பெயரில் தேசியப் பணமாக்கல் திட்டத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு அம்பானி-அதானி மற்றும் டாடாவிற்கு தாரை வார்க்கிறது மோடி அரசு.


படிக்க: சி.ஏ.ஜி. அதிகாரிகள் இடமாற்றம்: ‘பரிசுத்த ஆவி’யாகிவிட்டது மோடி அரசு!


இத்தனை இலட்சம் கோடிகளை மோடி அரசு என்ன செய்தது? மக்களுக்கும் நாட்டுக்கும் பலனளிக்கக்கூடிய வகையில் எத்தனை தொழிற்துறை, கல்வி, சுகாதார, விவசாய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன? என்ற கேள்விகளுக்கு மதுரை எய்ம்ஸ் திட்டமே சிறந்த சான்று. ஆனால், இதற்கு நேர்மாறாக கடந்த 9 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட் முதலைகள் பெற்ற 25 லட்சம் கோடி வாராக்கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறது பாசிச மோடி அரசு.

மறுபுறத்திலோ, பேரிடர் நிவாரண நிதியாக தமிழக அரசு கோரிய ரூ 21,692 கோடியில், இரண்டாம் தவணையான ரூ 450 கோடியையும் சேர்த்து ரூ. 950 கோடி மட்டுமே ஒதுக்கியிருந்தது மோடி அரசு. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் சில ஆயிரம் கோடிகளே இருப்பதால் அவ்வளவுதான் ஒதுக்க முடியும் என்றும், மீதமுள்ள தொகையை மாநில அரசுதான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்கிறார் பா.ஜ.கவின் நாராயணன் திருப்பதி. கடந்த எட்டாண்டுகளில் தமிழக அரசு கோரிய பேரிட நிவாரண நிதியில் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.எஸ்.டி, செஸ் மற்றும் கூடுதல் வரிகள் என்ற பெயரில் மாநிலங்களுக்கான வரி வருவாயின் பெரும்பகுதியைக் கைப்பற்றிக் கொள்ளும் மோடி அரசு, பேரிடர் காலங்களிலும் கூட மாநிலங்களே சமாளித்துக் கொள்ள வேண்டும் என்று ஒதுங்கிக் கொள்வதன் மூலம், மாநிலங்களைக் கப்பம் கட்டும் சிற்றரசாக நடத்தி வருவதையே தெளிவாகக் காட்டுகிறது.

வெளிச்சமாகும் மோடி வேடம் – வேடிக்கை பார்க்கும் எதிர்க்கட்சிகள்!

ஒன்றிய அரசின் ஒடுக்குமுறைக் கருவிகளில் ஒன்றாக விளங்கும் நிதி ஆயோக்கின் தலைவரே மோடி அரசை இன்று அம்பலப்படுத்தி இருக்கிறார். ஆனாலும் கூட, மாநில உரிமைகள் பறிக்கப்படுவதையும், பா.ஜ.க.வையும் எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள், மோடியின் திரைமறைவு பேச்சுவார்த்தை அம்பலமானது குறித்து வழக்கம்போல வெறும் அறிக்கையோடு முடித்துக் கொண்டுள்ளன. மோடியின் தோல்வி முகத்தைத் தீவிரப்படுத்தும் வகையில் கிடைக்கின்ற எந்த வாய்ப்பையும் பயன்படுத்தவோ, மக்களிடம் அம்பலப்படுத்தவோ செய்யமாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் சபதம் எடுத்துக் கொண்டு இருப்பதைப் போல அவற்றின் செயலற்ற தன்மை இருந்து வருகிறது.

ஏனெனில், மோடியின் தீவிர கார்ப்பரேட் சேவைக்கும் பாசிசத்துக்கும் அடிப்படையான தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற அதே மறுகாலனியாக்கக் கொள்கையைத்தான் இக்கட்சிகளும் தாங்கள் ஆளும் மாநிலங்களில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதாவது மோடியின் வழியில் சென்றுகொண்டே, ஒன்றிய அரசிடம் மாநில உரிமைகளையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்ட முடியுமென எதிர்பார்ப்பது முரணானதும், மக்களை ஏமாற்றுவதுமாகும்.

ஆகவே, பாசிசத்தை எதிர்க்கின்ற ஜனநாயக சக்திகள், மோடி அரசின் ஜி.எஸ்.டி, ஒரே நாடு – ஒரே வரி – ஒரே தேர்தல், புதிய கல்விக் கொள்கை, புதிய குற்றவியல் சட்டம் போன்ற இந்துராஷ்டிர கட்டுமானங்களுக்கு மாற்றாக ஜனநாயகப்பூர்வமான, மக்கள் நலன் கொண்ட சமூக-அரசியல்-பொருளாதாரத் திட்டங்களை முன்வைத்து மக்களைத் திரட்ட வேண்டியிருக்கிறது.


அப்பு

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாஜக சுருட்டிய 6 ஆயிரம் கோடி கருப்புப் பணம் | தோழர் அமிர்தா

பாஜக சுருட்டிய 6 ஆயிரம் கோடி கருப்புப் பணம் | தோழர் அமிர்தா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தமிழ்நாடு அரசே! கொலைகார ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்று!

17.02.2024

தமிழ்நாடு அரசே!
கொலைகார ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்று!

மக்கள் அதிகாரம் வலியுறுத்தல்!

பத்திரிகை செய்தி

தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கும் மக்களின் உயிருக்கும் கேடு விளைவித்து வரும் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம், மீண்டும் தூத்துக்குடியில் செயல்படுவதற்காக மேற்கொள்ளப்படும் சதி வேலையை மக்கள் போராட்டங்கள் மூலமாக முறியடிக்க வேண்டும் என்ற மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தூய காற்று, நீர், நிலத்துக்காக போராடிய தூத்துக்குடி மக்களை மறைந்திருந்தும், வாகனத்தின் மீது ஏறிநின்றும் கொலைகார வேதாந்தா நிறுவனத்துடன் சேர்ந்து சுட்டுக் கொன்றது தமிழ்நாடு போலீசு. நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர், சிறைப்படுத்தப்பட்டனர். இதில் மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் உட்பட 15 பேர் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஸ்டெர்லைட்டை மூடாமல் உடல்களை பெற மாட்டோம் என்று தியாகிகளின் உறவினர்கள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினர். தமிழ்நாடு மட்டுமல்ல, உலகம் முழுவதுமே தூத்துக்குடி மக்களின் தியாகத்துக்கு தலைவணங்கியது. அதன் விளைவாக தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடியது. தனது நிறுவனம் மூடப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம். மக்கள் அதிகாரம் உட்பட பலர் அதற்கு எதிராக மனு தாக்கல் செய்து ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர் முறை குற்றவாளியே என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தனர். 25 ஆண்டுகள் செயல்பட்ட அந்த நிறுவனம் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுமதி பெறாமல் இயங்கியதையும் பல அபாயகரமான கழிவுகள் அனுமதிக்கப்பட்டதை விட பல மடங்கு மண்ணுக்குள் ஊடுருவி இருந்ததையும் வாதங்கள் வெளிக்கொண்டு வந்தன.

மக்கள் போராட்டங்களின் நியாயத்தையும் வேதாந்தா ஸ்டெர்லைட்டின் அநியாயத்தையும் ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் அன்றைய நீதி அரசர்கள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு, ஸ்டெர்லைட்டை மூடி தமிழ்நாடு அரசு மேற்கொண்ட செயல் சரியே என்று தீர்ப்பளித்தது.

இன்று வரை ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்தின் கைக்கூலிகளும் அடியாட்களும் தூத்துக்குடியில் போராட்டம் நடத்துகிறார்கள். ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது என்று துண்டு பிரசுரம் கூட கொடுப்பதற்கு தூத்துக்குடியில் போலீசு அனுமதி மறுக்கிறது.


படிக்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்ட சைலேஷ் குமார் யாதவ் டிஜிபியாக பதவு உயர்வு!


எனினும் என்ன விலை கொடுத்தாலும் ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க விட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். இப்படிப்பட்ட சூழலில் தான், ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அதன் இறுதி கட்ட விசாரணை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், தமிழ்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டெர்லைட்டை மூட சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறு என்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி 6 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒத்துக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம்; அதன் பிறகு ஆலையை திறப்பதா, வேண்டாமா என்பது தொடர்பாக முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆலை என்றும் காப்பர் நாட்டுக்கு தேவை என்றும் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட்டை மூடியது அரசு அல்ல; வீரம் செறிந்த தூத்துக்குடி மக்களின் தியாகமே ஸ்டெர்லைட்டை மூடியது. உச்ச நீதிமன்றம் அல்லது எந்த ஒரு அதிகார அமைப்பாக இருந்தாலும் சரி மீண்டும் ஸ்டெர்லைட்டை திறப்பதற்கு முனைந்தால் அது தூத்துக்குடி மக்களின் போராட்டமாக மட்டும் இருக்காது.

உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்டை திறப்பதற்கான முயற்சிகளை தமிழ் நாடு அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும். மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிச அடக்குமுறைகளைத் தகர்த்து முன்னேறுகிறார்கள் விவசாயிகள்! போராட்டத்தீயை அணையாமல் பாதுகாப்போம்!

பாசிச அடக்குமுறைகளைத் தகர்த்து முன்னேறுகிறார்கள் விவசாயிகள்!
போராட்டத்தீயை அணையாமல் பாதுகாப்போம்!

விவசாயிகள் போராட்டம் 4-வது நாளை எட்டியுள்ளது. டெல்லிக்குள் நுழைவதற்காக பல்லாயிரக்கணக்கில் பேரணியாக வந்து அரியானா எல்லையில் முற்றுகையிட்டிருக்கின்றனர் விவசாயிகள்.

பாசிச பாஜக அரசின் அத்துணை அடக்குமுறைகளையும் தகர்த்தெறிந்து விட்டுத்தான் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். புல்டோசர்கள், முள் ஆணி தடுப்புகள், முள்கம்பி வேலிகள், தடுப்பு வேலிகள், டயர் கில்லர்கள், ஒலி (Sonic) ஆயுதங்கள், ட்ரோன்கள் மூலம் தொடர்ச்சியான கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல்கள் அனைத்தையும் எதிர்கொண்டுதான் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். விவசாயிகள் போராட்டம் நடத்தும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

பாசிச மோடி அரசு தனது கார்ப்பரேட் எஜமானர்களுக்காக வெளிப்படையாக ஒரு போரை போராடும் விவசாயிகள் மீது நடத்திக் கொண்டிருக்கிறது.

அரியானா மாநிலம் ஷம்பு எல்லையில் போராட்டத்தில் பங்கேற்ற 63 வயதான விவசாயி கியான் சிங் கண்ணீர் புகைக்குண்டு வீச்சின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். அதேபோல் ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ரயில்வே போலீஸ் அதிகாரியான ஹீரா லால் (65), ஷம்பு எல்லையில் நடத்தப்பட்ட கண்ணீர் புகைக்குண்டுவீச்சு தாக்குதலால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.

மேலும் ஷம்பு எல்லையில் ஹரியானா போலீசார் நடத்திய 20 நிமிட கண்ணீர் புகைக்குண்டு மற்றும் பெல்லட் குண்டு தாக்குதலில் 10 க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்த நிலையில், 3 பேரின் கண்பார்வை பறிபோயுள்ளது. 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


படிக்க: பாசிச மோடி கும்பலை பணியவைக்கும்வரை விவசாயிகள் போராட்டம் ஓயாது


பிப்.16 அன்று ஹரியானாவில் உள்ள ரேவரியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் பாசிஸ்டு மோடி. “ராமரை கற்பனை என்றவர்கள் தற்போது ஜெய் ஸ்ரீராம் என்கிறார்கள்” என்று அந்தக் கூட்டத்தில் காங்கிரஸை விமர்சித்துப் பேசியுள்ளார். ஆனால் ஒரு வார்த்தை கூட விவசாயிகள் போராட்டம் பற்றியோ, கோரிக்கைகள் பற்றியோ பேசவில்லை. மக்கள் மீது எந்த மனிதாபிமானமும் இல்லாத, கொடூரமான மனநிலை கொண்ட பாசிச சர்வாதிகாரி எப்படி இருப்பான் என்பதற்கு இதை விட சிறந்த சான்று எதுவும் இருக்க முடியாது.

ஒருபக்கம் விவசாயிகள் மீது தாக்குதலை நடத்திக்கொண்டே, வக்கிரமாக இன்னொரு பக்கம் பேச்சுவார்த்தை நாடகத்தை பாசிச மோடி கும்பல் விவசாயிகளிடம் நடத்தியது. ஒன்றிய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் பேச்சுவார்த்தை நாடகத்தை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா ஆகியோரும் பங்கேற்றனர். 5 மணி நேரம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

உலகமே கவனிக்கும் வகையிலான ஒரு போராட்டத்தை விவசாயிகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் கார்ப்பரேட் ஊடகங்களோ விவசாயிகள் போராட்டத்தை ஒரு சாதாரண செய்தியைப் போல ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. செய்தித்தாள்களும் உட்பக்க செய்தி என்ற அளவிற்கே எழுதிக் கொண்டிருக்கின்றன. இது மோடிகும்பலின் மீதான அச்சமும், கார்ப்பரேட் விசுவாசமும் அன்றி வேறென்ன?

பாசிச மோடி கும்பல், வேறு பிரச்சினைகளைக் கிளப்பிவிட்டு விவசாயிகள் போராட்டத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கான முயற்சிகளை கண்டிப்பாக எடுக்கும். இதற்குத் தகுந்தாற்போலத்தான் முதுகெலும்பில்லாத கார்ப்பரேட் ஊடகங்கள் அனைத்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆனாலும் விவசாயிகள் உறுதியாக, விடாப்பிடியாக போராடிக் கொண்டிருக்கின்றனர். நாடு முழுவதும் மக்கள் மத்தியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு பெருகிக் கொண்டே வருகின்றது.


படிக்க: பிப்.16: விவசாயிகளின் நாடுதழுவிய போராட்டம் வெல்லட்டும்!


ஐக்கிய விவசாயிகள் முன்னணி – அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து கூட்டாக பிப் 16  அன்று நடத்திய நாடுதழுவிய தொழிலாளர் – விவசாயிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

பாசிச மோடி கும்பலுக்கு விவசாயிகள் போராட்டம் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாளை (பிப்.18) மீண்டும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் பாசிச மோடி அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஆனால் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை விவசாயிகள் பின்வாங்கப் போவதில்லை.

ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி – அம்பானி, அதானி பாசிசம் தான் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் முதன்மையான எதிரி. மக்கள் மத்தியில் இந்தக் கும்பல் அம்பலப்பட்டு விட்டது. இந்த பாசிசக் கூட்டத்தை வீழ்த்துவதற்கான பாதையில் கடும் அடக்குமுறைகளையும் தாண்டி விவசாயிகள் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்தப் போராட்டத்தீயை அணையாமல் பாதுகாக்க வேண்டும். அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் விவசாயிகளோடு ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் இந்தப் பாசிசக் கும்பலை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கியெறிய முடியும்.


இனியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



🔴LIVE: அரசுப் பள்ளிகளின் கல்வி சிக்கல்களும் தீர்வுகளும் | நூல் வெளியீடு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்

🔴LIVE: அரசுப் பள்ளிகளின் கல்வி சிக்கல்களும் தீர்வுகளும்
| நூல் வெளியீடு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்

ஊடகச் சந்திப்பு
இன்று (17/2/2024) முற்பகல் 10.30 மணி,
பத்திரிகையாளர் சங்கம், சேப்பாக்கம், சென்னை.

நூல் வெளியீடு
பிற்பகல் 12 மணி

மாநில கலந்தாய்வரங்கம்
பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நிதி ஆயோக்-இன் மோசடி அறிக்கை: மோடியின் பாசிச ஆட்சியில் வறுமை ஒழிந்த வேடிக்கை!

ந்திய அரசாங்கத்தின் கொள்கை சிந்தனை குழுவான நிதி ஆயோக் கடந்த ஜனவரி 15-ஆம் தேதி இந்தியாவின் வறுமைநிலை சம்பந்தப்பட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகையில் 24.82 கோடி பேர் ‘‘பல பரிமாண வறுமையில்’‘ இருந்து மீண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அந்த அறிக்கையில், 2013 – 2014-இல் 29.17 சதவிகிதமாக இருந்த ‘‘பல பரிமாண வறுமை குறியீடு – எம்.பி.ஐ. (Multi-dimensional Poverty Index -MPI)’‘, 2022 – 2024-இல் 11.28 சதவிகிதமாக குறைந்துள்ளது என்றும் கடந்த ஒன்பது ஆண்டுகளில் சுமார் 24.82 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் வறுமை மிக அதிக அளவில் குறைந்துள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இதன்படி, உத்தரப்பிரதேசத்தில் 5.94 கோடி பேரும், பீகாரில் 3.77 கோடி பேரும், மத்தியப் பிரதேசத்தில் 2.30 கோடி பேரும் மற்றும் ராஜஸ்தானில் 1.87 கோடி பேரும் வறுமையில் இருந்து மீண்டதாக குறிப்பிட்டுள்ளது.

‘‘உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றான தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (National Food Security Act) பொது விநியோக முறையானது 81.35 கோடி பயனாளிகளை உள்ளடக்கி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு உணவு தானியங்களை வழங்கி வருகிறது. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானிய விநியோகத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பது போன்ற சமீபத்திய முடிவுகள் அரசாங்கத்தின் உறுதிபாட்டை எடுத்துக் காட்டுகின்றன’‘ என்கிறது நிதி ஆயோக் அறிக்கை.

இவ்வாறு, மோடி அரசாங்கம் ‘‘வறுமையை ஒழிப்பதற்கான முன்முயற்சிகளையும், உறுதியான அர்ப்பணிப்புகளையும் மேற்கொண்டு வருவதாக’‘ நிதி ஆயோக் அறிக்கை புகழ் பாடியுள்ளது. மேலும், 2030-க்கு முன் வறுமையை பாதியாக குறைக்கும் ‘‘நிலையான வளர்ச்சி இலக்கை’‘ (Sustainable Development Goal) இந்தியா அடையக்கூடும் என்றும் ‘பெருமிதம்’ கொள்கிறது.

மோடி தனது எக்ஸ் தளத்தில், ‘‘நிதி ஆயோக்கின் அறிக்கை, மிகவும் ஊக்கமளிக்கிறது, வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. நமது பொருளாதாரத்தில் மாற்றங்களை செய்வதில் கவனம் செலுத்துகிறது. அனைத்துத் துறை வளர்ச்சிக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்’‘ என ‘உறுதிமொழி’ பூண்டுள்ளார்.


படிக்க: பாசிச மோடி அரசை பணியவைத்த லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்


இப்படியாக, நிதி ஆயோக் மோடி அரசையும், மோடி நிதி ஆயோக்கையும் மாறி மாறி போற்றி புகழ்ந்து தள்ளியுள்ளனர்! சங்கிகளும் இந்த அறிக்கையை மோடி அரசின் சாதனையாக கொண்டாடி வருகின்றனர்.

மோடி ஆட்சியில் வறுமை ஒழிந்து வருகிறதா? நிதிஆயோக்கின் இந்தக் கட்டுக்கதையை கேட்பதற்கே வேடிக்கையாக இருக்கிறதல்லவா!

நிதி ஆயோக் இந்தக் கட்டுக்கதையை உருவாக்க எடுத்துக்கொண்ட தரவுகள், ஆய்வுமுறை என அனைத்துமே மோசடியானது என்பதனை தற்போது பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

தரவுகளை மூடி மறைத்துவிட்டு, வறுமை ஒழிந்துவிட்டதாம்!

கடந்த ஒன்பது ஆண்டுகளில், கிட்டத்தட்ட 24.82 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று நிதி ஆயோக் தனது அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால், இந்த முடிவிற்கு வந்தடைய நிதி ஆயோக் பயன்படுத்திய பல பரிமாண வறுமை குறியீடும், அதற்காக எடுத்துகொள்ளப்பட்ட அல்கிரே ஃபாஸ்டர் (Alkire Foster) என்ற ஆய்வுமுறையும் (Methodology) அடிப்படையிலேயே தவறானது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

‘‘இந்தியாவில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டமிடல்’‘ என்ற புத்தகத்தின் ஆசிரியரும், ஓய்வுபெற்ற இந்திய பொருளாதார சேவை அதிகாரியுமான கே.எல்.தத்தா, ‘‘இந்த எம்.பி.ஐ. முறையானது, இலக்குகளை நிர்ணயிக்க திட்டமிடுபவர்கள் அல்லது கொள்கை வகுப்பாளர்களால் பயன்படுத்தப்படுவதில்லை; வறுமை குறைப்புக்கான திட்டங்களை உருவாக்க உள்ளீடாகவும் பயன்படுத்தப்படுவதில்லை. சுருக்கமாக, எம்.பி.ஐ. வறுமையை பிரதிநிதித்துவப்படுத்தாது. வறுமை விகிதத்திற்கு மாற்றாக எம்.பி.ஐ. மதிப்பீட்டை காட்ட அரசாங்கம் முயற்சிக்கிறது. இது சரியல்ல’‘ என்கிறார்.

எம்.பி.ஐ. மூலம் வறுமையை கணக்கிட முடியாது என்று கூறும் பொருளாதார வல்லுநரான ஜீன் டிரேஸ், ‘‘குறுகிய கால வாங்கும் சக்தியை அளவிட எம்.பி.ஐ-யில் எந்த குறியீடும் இல்லை’‘ என்கிறார்.

பல பரிமாண வறுமை குறியீடு (எம்.பி.ஐ.) என்பது மக்களுக்கான சேவைகளை அளவிடக்கூடிய குறியீடு மட்டுமே. அதாவது, அரசாங்கத்தால் மக்களுக்கு வழங்கப்படக்கூடிய சலுகைகள் அல்லது மக்களுக்கு கிடைக்கக்கூடிய சில வசதிகளை அணுக முடியாதவர்களின் சதவிகிதத்தையே எம்.பி.ஐ. நமக்கு தெரிவிக்கும். ஆனால், வறுமையை அளவிட தனிநபரின் நுகர்வு செலவினங்களும் (வாங்கும் சக்தி) விலைவாசி உயர்வுக்கேற்ப ஊதியம் அளிக்கப்படுகிறதா என்பதையும் முதன்மையாக கணக்கிட வேண்டும்.

மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தப்பிறகு, 2014 முதல் 2022 வரையிலான எட்டு ஆண்டுகளில் நுகர்வு செலவினம் குறித்து எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை. அப்படியிருக்க மக்களின் வறுமையை கணக்கிட அடிப்படையான நுகர்வு செலவினங்களை பற்றிய தரவுகளே இல்லாமல், எம்.பி.ஐ. தரவுகளை கணக்குக்காட்டி இந்தியாவில் வறுமை ஒழிந்துவருகிறது என்று மோசடியான அறிக்கையை தயாரித்துள்ளது நிதி ஆயோக்.

மேலும், பல பரிமாண வறுமை குறியீட்டை கணக்கிட, தேசிய குடும்ப சுகாதார ஆய்வுகளின் (National Family Health Survey) தரவுகளைத்தான் நிதி ஆயோக் பயன்படுத்தியிருக்கிறது. இத்தரவுகளிலும் மிகப்பெரிய குளறுபடிகள் நடைபெற்றுள்ளது. பா.ஜ.க. 2014-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கடைசியாக 2005-06-இல் தான் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 3 (NFHS 3) எடுக்கப்பட்டிருந்தது. எனவே மோடி ஆட்சிக்கு வந்தப்பிறகு 2015-16-இல் எடுக்கப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 4-இல் 2006-2016 வரையிலான நிலைமைகளின் தரவுகள் இடம்பெற்றன, அதாவது, காங்கிரஸ் ஆட்சியின் தரவுகளும் இடம்பெற்றிருந்தன.

இதன்காரணமாக தங்களது கணக்கெடுப்பிற்கு தேவையான 2014-2016 வரை ஆண்டுவாரியான தரவுகள் இல்லாததால் மொத்தமாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 4-இல் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கான சராசரியை எடுத்து நிதி ஆயோக் பயன்படுத்தியுள்ளது. மேலும் எம்.பி.ஐ-யின் 12 அம்சங்களுக்கும் தேவையான ஆண்டுவாரி தரவுகள் இல்லாததால் ஆண்டுகளின் தொகுப்பான வளர்ச்சி விகிதத்தை கணக்கில் எடுத்துக் கணக்கிட்டுள்ளது, நிதி ஆயோக். அதாவது, காங்கிரஸ் ஆட்சிகாலத்தின் தரவுகளை எடுத்துக்கொண்டு மோடி ஆட்சியில் வறுமை ஒழிந்துவருகிறது என பொய் கணக்கு காட்டியுள்ளது நிதி ஆயோக்.

இதுபற்றி பேசியுள்ள இங்கிலாந்து பாத் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் சந்தோஷ் மெஹ்ரோத்ரா, ‘‘விலைவாசி உயர்வுக்கேற்ற ஊதியம் ஆறு ஆண்டுகளாக தேக்க நிலையில் இருந்தது. இது வாங்கும் சக்தியில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியது. காங்கிரஸ் அரசாங்கத்தில் 7.9 சதவிகிதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த ஒன்பது ஆண்டுகளில் (மோடி ஆட்சியில்) 5.7 சதவிகிதமாக குறைந்துள்ளது. இரண்டு ஆட்சிக் காலத்திலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவிகிதம் வெவ்வேறாக இருக்கும்பட்சத்தில் எப்படி இரண்டையும் தொகுத்து தரவுகள் எடுக்கமுடியும்’‘ என நிதி ஆயோக்கை கேள்வியெழுப்புகிறார்.

அடுத்ததாக, நிதி ஆயோக் ஆய்விற்கு எடுத்துக்கொண்ட  2019 மற்றும் 2021ஆண்டின் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 5 (NFHS 5)-இன் லட்சணத்தைப் பார்ப்போம்.  2020-இல் கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் 22 மாநிலங்களில் இந்த ஆய்வு நடத்தப்படவில்லை. இதன் காரணமாக, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 5-இல் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான தரவுகள் ஏதும் இடம்பெறவில்லை. கொரோனா காலத்தில் மக்கள் அடைந்த பாதிப்புகள் பற்றிய விவரங்களே இல்லாத ஆய்வின் தரவுகளைதான், நிதி ஆயோக் தனது எம்.பி.ஐ. ஆய்வறிக்கையை தயாரிக்க எடுத்துக்கொண்டுள்ளது. மேலும், கொரோனாவிற்கு பிறகும் தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் கணக்கெடுப்பு நடத்தப்படாமல் கைவிடப்பட்டதால்,வெறுமனே கொரோனாவிற்கு முந்தைய கால தரவுகளையே 2023 வரை நீட்டித்துக்கொண்டு ஆய்வை நடத்தியுள்ளது, நிதி ஆயோக்.


படிக்க: எது கேலிக்கூத்து? நிதிஷ்குமாரின் ‘பல்டி’யா,  இந்திய ‘ஜனநாயகமா’


மொத்தத்தில், கொரோனா பேரழிவாலும், அதனை கையாண்ட மோடி அரசின் பாசிச அணுகுமுறைகளாலும் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் எதிரொலிக்காத வகையில்தான் நிதி ஆயோக்கின் இந்த பல பரிமாண வறுமை குறியீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

உண்மையில், கொரோனா பெருந்தொற்றின்போது, எந்தவித திட்டமிடலும் இல்லாமல் மோடி அரசு பிறப்பித்த காலவரையற்ற ஊரடங்கு உத்தரவினால், லட்சக்கணக்கான மக்கள் நோய் தொற்றாலும், பசியாலும் மடிந்து போயினர். புலம்பெயர் தொழிலாளர்கள் நிர்கதியாக்கப்பட்டு பல மைல் தூரம் நடந்தே சொந்த ஊர்களுக்கு சென்றனர். எண்ணற்ற சிறு, குறு தொழில்கள் நலிவடைந்தன. பலர் வேலையிழந்து நிர்கதியாக்கப்பட்டனர்.  பல குடும்பங்கள் நஷ்டத்தில் இருந்து மீளமுடியாமல் இன்றளவும் தவித்து வருகின்றன. ஏழை-எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் கல்வியை தொடரமுடியாமல் இடைநிற்றலும் அதிகரித்தது. கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தில்தான் நமது நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பின் உண்மை நிலையும் வெளிச்சத்திற்கு வந்தது. உலகளவில் கொரோனா பெருந்தொற்றை மோசமாக கையாண்ட முதல் ஐந்து பேரில் மோடியும் ஒருவராக உள்ளார். மோடி அரசின் இந்த பேரழிவை பற்றிய தரவுகளை மறைத்துவிட்டு, வறுமை ஒழிந்துவருகிறது என்ற அப்பட்டமான பொய்யை தைரியமாக நிதி ஆயோக் கூறியுள்ளது.

உண்மையில், வறுமையில் இருந்து இத்தனை கோடி மக்கள் மீட்கப்பட்டுவிட்டார்கள் என்று நிதி ஆயோக் அறிக்கை கூறுவதற்கு நேர்மாறாக, மோடி அரசின் பொருளாதார பயங்கரவாத தாக்குதல்களால் இந்திய உழைக்கும் மக்களின் நிலைமை மேலும் மேலும் மோசமடைந்துதான் வருகிறது.

இந்தியாவின் உண்மை நிலைமை

தேசிய பல பரிமாண வறுமை குறியீடு என்பது சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கை தரம் ஆகிய மூன்று பரிமாணங்களின் அடிப்படையில் அளவிடப்படுகிறது. இந்த பரிமாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.ஐ-யின் 12 அம்சங்களான (Indicators) குழந்தைகளின் ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் இளம்பருவ இறப்பு, குழந்தை பிறப்பின்போது தாயின் ஆரோக்கியம், பள்ளிப் படிப்பு ஆண்டு, பள்ளி வருகை, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிநீர், மின்சாரம், வீடு, சொத்து மற்றும் வங்கிக் கணக்குகள் ஆகியவை வளர்ச்சி அடைந்துள்ளன என்று அப்பட்டமாக பொய் கூறுகிறது நிதி ஆயோக் அறிக்கை.

ஆனால், அண்மையில் வெளியான இந்தியாவின் வறுமை நிலை குறித்த பல அறிக்கைகளும் சம்பவங்களும் உண்மை நிலையை பளிச்சென்று எடுத்துக்காட்டுகின்றன.

கடந்தாண்டு அக்டோபர் 12-ஆம் தேதி இரண்டு ஐரோப்பிய நிறுவனங்களால் வெளியிடப்பட்ட உலகளாவிய பசி குறியீட்டு அறிக்கையில், 125 நாடுகளில் இந்தியா 111-வது இடத்தைப் பிடித்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஒரே ஆண்டில் நான்கு இடங்கள் பின்னுக்கு சென்றுள்ளது.

மற்றொரு ஆய்வறிக்கையின்படி, ஊட்டச்சத்து குறைபாடு கடுமையாக உள்ள நாடுகளின் பட்டியலிலும் இந்தியா இடம்பிடித்துள்ளது. ஒரு நாட்டில் உயரத்திற்கு ஏற்ப எடை இல்லாமல் இருக்கும் குழந்தைகளின் விகிதம் 15 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்குமானால் அது ‘‘மிக அதிக கவலைக்குரியது’‘ என வரையறுக்கப்படுகிறது. அவ்வாறு வரையறுக்கப்பட்ட ஒரே நாடு இந்தியா மட்டுமே. இந்தியாவில் 18.7 சதவிகித குழந்தைகள் உயரத்திற்கு ஏற்ப எடை இல்லாமல் இருக்கின்றனர்.

நிதி ஆயோக் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘‘பிரதமர் மோடியின் தலைமையில் நாடு கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. கிசான் சம்மன் நிதி விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றியுள்ளது’‘ என மோடி அரசின் ‘சாதனைகளை’ விவரிக்கிறார். ஆனால் உண்மையில், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி 2022 – 2023 ஆண்டுக்கான நிதியாண்டில் ரூ.68,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்தாலும், இந்த திட்டத்தால் நிலமற்ற கூலி தொழிலாளர்களுக்கு எந்த பயனும் கிடைப்பதில்லை, அவர்களின் தேவைகள் புறக்கணிக்கப்படுகிறது என தரவுகள் கூறுகின்றன.

அதைவிட, விவசாய மானியங்கள் குறைப்பு, விவசாயக் கடன் வழங்காமை, உரம் பூச்சிக்கொல்லி விலை உயர்வு, விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குதல் உள்ளிட்ட மோடி அரசின் விவசாய விரோத நடவடிக்கைகளால் மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் தற்கொலை 11,290 ஆக அதிகரித்திருக்கிறது. விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலை எண்ணிக்கையும் 6,083 ஆக அதாவது 41 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. மோடி ஆட்சியில் விவசாயிகளின் உண்மை நிலையை உணர்த்த டெல்லியில் அவர்கள் நடத்திய மாபெரும் போராட்டமே போதுமான சாட்சி.

இளைஞர்களின் வேலைவாய்ப்பு விகிதத்தை பொறுத்தவரை, கடந்தாண்டு ஜூலை மாத நிலவரப்படி, இந்தியாவில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.95 சதவிகிதமாக உள்ளது. இந்த கொடுமையில் இருந்து மீள எந்த துயரத்தை வேண்டுமானாலும் எதிர்கொள்ளலாம்  என்ற நிலைக்கு இந்திய இளைஞர்கள் வந்துவிட்டார்கள். இதற்கான அண்மைக்கால சான்றுதான், ஹரியானா மாநிலத்தில் நடந்த சம்பவம்.

கடந்த ஜனவரி மாதத்தில், ஹரியானா மாநிலம், ரோதக்கில் இஸ்ரேல் நாட்டில் வேலை செய்ய தச்சர்கள், கட்டுமானப் பணியாளர்கள் என 10,000 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் அரசு சார்பில் நடத்தப்பட்டது. இந்த வேலைகளில் சேர ஒடிசா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் குவிந்த அவலம் அரங்கேறியது.

இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது கொடூரமான இன அழிப்புப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. போர் சூழல் நிலவுகின்ற இஸ்ரேலுக்கு செல்வது உயிருக்கு உத்தரவாதமில்லை என்று தெரிந்தும், நம் நாட்டில் அதிகரித்து வரும் வேலையின்மையால் அவர்களுக்கு வேறுவழி தெரியவில்லை. ’‘இங்கே பட்டினியில் கிடந்து சாவதை விட, இஸ்ரேலில் வேலைபார்க்கும்போது சாவது எவ்வளவோ மேலானது’‘ என்கிறார் முதுகலை பட்டதாரியான ரோஹ்தேஷ்.

மேலும், மோடியின் ஆட்சியில் உழைக்கும் மக்கள் பலர் வீடற்ற அகதிகளாக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இந்த நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. இதனை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் காணொளி ஒன்று பரவியது. அதில், மும்பை உள்ளூர் ரயில் தண்டவாளங்களில் குடும்பத்துடன் அடுப்பு, பாத்திரங்கள் வைத்து உணவு சமைத்து கொண்டிருந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அருகில் சில சிறுமிகள் தண்டவாளங்களில் அமர்ந்து படித்து கொண்டிருந்தனர். எப்போது வேண்டுமானாலும் ரயில் வரலாம் என்ற ஆபத்தை உணராமல் குழந்தைகள் தண்டவாளங்களில் விளையாடி கொண்டும்; இன்னும் சிலர் தண்டவாளங்களில் தூங்கிக்கொண்டும் இருந்தனர். வறுமையின் கோரப்பிடியில் ஆபத்தான ரயில் தண்டவாளங்களில் தஞ்சம் புகுமளவிற்கு எண்ணற்ற உழைக்கும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நிலைமை இவ்வாறு இருக்கையில்,  2030-க்கு முன் வறுமையை பாதியாகக் குறைக்கும் ‘‘நிலையான வளர்ச்சி இலக்கை’‘ (Sustainable Development Goal) இந்தியா அடையக்கூடும் என்று கூசாமல் கதையளக்கிறது நிதி ஆயோக்.

‘வறுமை ஒழிப்பு’ அல்ல நலத்திட்ட ஒழிப்பு

மோடி அரசின் ஊதுகுழலாக இருக்கும் நிதி ஆயோக், தற்போது வறுமை ஒழிந்து வருவதாக மோசடியான அறிக்கை வெளியிட்டிருப்பது தனித்த நிகழ்வல்ல. இதனை எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் பிம்பத்தை ஊதிப் பெருக்குவதற்கான உத்தியாகவே நிதி ஆயோக் கையாண்டுள்ளது. மேலும், மோடி பிம்பத்தை காப்பாற்றுவதற்காக உண்மையான அறிக்கைகளை மறைக்கும் வேலைகளையும் நிதி ஆயோக் செய்து வருகிறது.

கிராமப்புற மற்றும் நகர்ப்புறக் குடும்பங்களின் வருமானம் மற்றும் செலவு விவரங்களை சேகரிப்பதற்காக நுகர்வோர் செலவின ஆய்வு (Customer Expenditure Survey) நடத்தப்படுகிறது. 2022-23 ஆம் ஆண்டுக்கான ஆய்வு முடிந்துள்ள நிலையில், அதன் முடிவுகளை கடந்த டிசம்பர் மாதமே வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு வெளியிடாமல், நிறுத்தி வைத்துள்ள நிதி ஆயோக், 2023-24 க்கான ஆய்வையும் முடித்துவிட்டு, இரண்டு ஆய்வுகளின் முடிவுகளையும் தொகுத்து ஒன்றாக வெளியிடுவோம் என்கிறது. இரண்டு ஆய்வு முடிவுகளையும் ஒரே நேரத்தில் வெளியிடுவதற்கு காரணமாக, ‘முடிவுகளின் நிலைத்தன்மையை’ ஆராயப்போவதாக பொய்சாக்கு சொல்கிறது நிதி ஆயோக்.

உண்மையில், இதில்தான் சூட்சமம் அடங்கியிருக்கிறது. ‘‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’‘-இன் தரவுகளின்படி இந்த ஆய்வு முடிவுகள் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகுதான் வெளியிடப்படும். அதாவது, நுகர்வோர் செலவின ஆய்வுக் குறித்தான அறிக்கை முடிவு வெளியிடுவதற்கு முன்பே நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துவிடும். இதன் மூலம், தேர்தல் முடியும்வரை இந்தியாவில் நிலவும் உண்மையான வறுமை விகிதத்தை திட்டமிட்டே மறைக்க முயற்சிக்கிறது மோடி கும்பல்.

இந்தியாவின் அவலநிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் ஆய்வறிக்கைகளை நிதி ஆயோக் முடக்கி வைப்பது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் 2017-18 க்கான நுகர்வோர் செலவின ஆய்வு நடத்தியபோது அதன் முடிவுகள் தரமற்றவையாக உள்ளன என காரணம் காட்டி முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தியது. ஆனால், பின்னர் அந்த ஆய்வு முடிவுகள் கசிந்த போதுதான் இந்தியாவில் வறுமைநிலை தீவிரமாகி இருப்பதை அந்த ஆய்வு அறிக்கை முடிவுகள் பட்டவர்த்தனமாக எடுத்துரைக்கிறது என்பது தெரியவந்தது. அப்போதும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காகத்தான் இந்த முடிவுகள் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்பட்டது.

இவற்றின்மூலம், தற்போது இந்த ஆய்வு வெளியாகியிருப்பது 2024 நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தியே என்பது தெளிவாகிறது. இதுமட்டுமின்றி வறுமை ஒழிந்துவருகிறது என்று நிதி ஆயோக் அறிக்கை கொடுத்திருப்பதற்கு பின்னாலும் அந்த அறிக்கையை பூரித்து மோடி கருத்து தெரிவித்ததற்கு பின்னாலும் மிகப்பெரிய பாசிச சதித்திட்டம் ஒளிந்துள்ளது.

தற்போது இந்தியாவில் 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நிதி ஆயோக்கின் ஆய்வறிக்கையில் 24.82 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த 25 கோடி பேருக்கான ரேஷன் பொருட்கள் வெட்டப்படுவதற்கான அபாயம் உள்ளது.

கார்ப்பரேட் திட்டங்களை மூர்க்கமாக அமல்படுத்திவரும் பாசிச மோடி அரசு அதற்கு ‘தொந்தரவாக’ உள்ள பல திட்டங்களை ஒழித்து வருகிறது. ஏற்கனவே மாநிலக் கட்சிகள் வழங்கிவரும் மக்கள் நலத் திட்டங்களை ‘‘ரேவ்டி கலாச்சாரம்’‘ என இழிவுப்படுத்தி அத்திட்டங்களை ஒழிப்பதற்கான வேலைகளை செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிதி ஆயோக்கின் இத்தரவுகளை காரணம்காட்டி அடித்தட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் பல நலத்திட்ட உதவிகளை வெட்டி அவர்களை பேரழிவுக்குள் தள்ளுவதற்கான பேரபாயம் உள்ளது.

ஆக மோடி ஆட்சியில் வறுமை ஒழிப்பு என்பதெல்லாம் வெறும் கற்பனை கதைகளாகத்தான் இருக்கும். நிலவுகின்ற அரசு கட்டமைப்பிற்குள் உழைக்கும் வர்க்கத்தைப் பீடித்திருக்கும் வறுமையை ஆளும்வர்க்கம் ஒருபோதும் ஒழிக்காது. அதுவும் மோடி போன்ற பாசிஸ்டுகளின் ஆட்சியில் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக உழைக்கும் மக்கள் மேலும் மேலும் கொடூரமாக சுரண்டப்பட்டு சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் என்பதுதான் எதார்த்தம்.


வெண்பா

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | மதுரை

விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | மதுரை

இணைப்பு 1:

இணைப்பு 2:

இணைப்பு 3:

இணைப்பு 4:

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நரேந்திரா கும்பலின் இந்து ராஷ்டிரா கனவில் டிராக்டர்கள் புகுந்துடுச்சி | தோழர் அமிர்தா

நரேந்திரா கும்பலின் இந்து ராஷ்டிரா கனவில் டிராக்டர்கள் புகுந்துடுச்சி | தோழர் அமிர்தா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: தெற்காசியாவில் சரியும் அமெரிக்க மேலாதிக்கம்!

ங்கதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 7-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஆளுங்கட்சியான அவாமி லீக் தேர்தலை நடத்துவதன் மீது நம்பிக்கையில்லை என்று கூறி, பிரதான எதிர்க்கட்சியான வங்கதேசத் தேசியவாதக் கட்சி உள்ளிட்ட பதினேழு எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன. மொத்தமுள்ள 300 இடங்களில் 223 இடங்களைப் பெற்று, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் வெற்றியடைந்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து நான்காவது முறையாக வென்று பிரதமராகியுள்ளார் ஷேக் ஹசீனா.

முறைகேடுகள், எதிர்க்கட்சியினர் மீதான கைது நடவடிக்கைகள் மற்றும் வன்முறை வெறியாட்டங்களுக்கு மத்தியில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளதால், இத்தேர்தல் முடிவுகள் செல்லாது என அறிவிக்க வேண்டுமென்றும் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டுமென்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் ஷேக் ஹசீனா

பொதுவாக முதலாளித்துவ நாடாளுமன்றத் தேர்தல்கள், மக்களை ஏய்ப்பதற்கான ஒரு சடங்காகவே எல்லா நாடுகளிலும் நடத்தப்படுகின்றன. வங்கதேசத் தேர்தலோ சொல்லிக்கொள்ளப்படும் போலி ஜனநாயகச் சடங்குகளை கூட பின்பற்றாமல் முற்று முழுதான எதேச்சதிகாரமான முறையில் நடத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே, எதிர்க்கட்சித் தலைவர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் வேட்டையாடத் தொடங்கியது ஷேக் ஹசீனாவின் அரசு. கடந்த சில மாதங்களில் மட்டும், வங்கதேசத் தேசியவாதக் கட்சி (பி.என்.பி.) உட்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 20,000-க்கும் அதிகமானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கடந்த அக்டோபர் 28 அன்று எதிர்க்கட்சிகள் முன்னெடுத்த பேரணி வன்முறையில் முடிந்ததை அடுத்து ஏறக்குறைய 8,000 பேர் வரை கைது செய்யப்பட்டனர். தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாள் வரை இந்த வேட்டையை தொடர்ந்த ஹசீனா அரசு, ஜனவரி 6 அன்று வங்கதேசத்தில் ஏற்பட்ட ரயில் தீ விபத்தைக் காரணம் காட்டியும் எதிர்க்கட்சியினரை கைது செய்து சிறையிலடைத்தது. சிறையிடப்பட்ட பலர் அடுத்தடுத்து சிறையிலேயே உயிரிழந்து வருகின்றனர். மேலும், 2009-ஆம் ஆண்டிலிருந்து 600-க்கும் மேற்பட்டோர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்காக ‘‘மேயர் டாக்’‘ என்னும் தனி அமைப்பே இயங்கி வருகிறது.


படிக்க: வங்கதேச ஆயத்த ஆடை தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டம் வெல்லட்டும்!


பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க பலர் காடுகளில் தஞ்சம் புகுந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். காட்டுப்பகுதியில் கூடாரம் அமைத்து தலைமறைவாகத் தங்கியுள்ள பி.என்.பி. கட்சியின் ஆதரவாளரான 28 வயது பெண் ஒருவர் பி.பி.சி-க்கு அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக உள்ளோம், நாங்கள் எங்கள் மறைவிடங்களை மாற்றிக் கொண்டிருக்கிறோம். எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை’‘ என்கிறார்.

தனக்கு போட்டியாக உள்ள பி.என்.பி. கட்சியை செல்வாக்குமிக்க தலைவர்கள் இல்லாத கட்சியாக ஒடுக்கிய பிறகே தேர்தலை எதிர்கொண்டார் ஷேக் ஹசீனா. பி.என்.பி. கட்சியின் தலைவரும் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமருமான கலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மகனும் கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் நாடு கடத்தப்பட்டு லண்டனில் உள்ளார். இவ்வாறு அக்கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் தேர்தலுக்கு முன்னரே சிறையில் அடைக்கப்பட்டு விட்டனர்.

எதிர்க்கட்சிகளே பங்குபெறாமல் தேர்தலை எதிர்கொண்ட ஷேக் ஹசீனா, இது நேர்மையான முறையில் நடத்தப்படும் தேர்தல்தான் என்ற பிம்பத்தை ஏற்படுத்த, சுயேட்சை வேட்பாளர்கள் என்ற பெயரில் அவாமி லீக் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களையே தேர்தலில் பங்குகொள்ள வைத்தார். மேலும் தனது கூட்டாளியான ஜாதியா கட்சியை (எர்ஷாத்) எதிர்க்கட்சியாக தேர்தலில் பங்குகொள்ள வைத்து, தனது கட்சிக்கு தேர்தலில் போட்டி இருப்பதாகக் காட்டிக்கொண்டார். இதன் காரணமாக மக்கள் அதிருப்தியடைந்ததனால் வெறும் 41 சதவிகித வாக்குகளே இத்தேர்தலில் பதிவாகின. ஒட்டுமொத்தத்தில், நாடாளுமன்றத் தேர்தலின் வழியாகவே ‘‘ஒரு கட்சி சர்வாதிகாரம்’‘ வங்கதேசத்தில் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இத்தகைய எதேச்சதிகாரியான ஷேக் ஹசீனாவை இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் வாழ்த்துவதும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை விமர்சிப்பதும், அந்தந்த நாடுகளின் நலன் சார்ந்தே நடந்து வருகிறது.

‘ஜனநாயத்திற்காக’ நீலிக்கண்ணீர் வடிக்கும் அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள்

வங்கதேசத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான மேத்யூ மில்லர், ‘‘இந்தத் தேர்தல் சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ நடைபெறவில்லை என்ற கருத்தை அமெரிக்கா மற்ற பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. மேலும், தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கவில்லை என்பதற்கு நாங்கள் வருந்துகிறோம்’‘ என்று கூறியிருக்கிறார்.

‘‘ஜனநாயகத் தேர்தல்கள் நம்பகமான, வெளிப்படையான மற்றும் நியாயமான போட்டியைச் சார்ந்தவை. மனித உரிமைகளுக்கான மரியாதை, சட்டத்தின் ஆட்சி மற்றும் உரிய செயல்முறை ஆகியவை ஜனநாயக செயல்முறையின் இன்றியமையாத கூறுகள். ஆனால் நடந்து முடிந்துள்ள தேர்தலில் இந்தத் தரநிலைகள் பூர்த்தி செய்யப்படவில்லை’‘ என்று விமர்சித்துள்ளது பிரிட்டன்.

வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கணிசமான எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டிருப்பது கவலை அளிப்பதாகக் கூறிய பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம், ‘‘பிரச்சார காலத்திற்கு முன்னும் பின்னும் நடந்த மிரட்டல் மற்றும் வன்முறைச் செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம். அரசியல் வாழ்வில் இத்தகைய நடத்தைக்கு இடமில்லை’‘ என்றது.

வங்கதேசத்தில் போலி ஜனநாயக நாடாளுமன்ற விதிமுறைகளைக் கூட மதிக்காமல், எதேச்சதிகாரமான முறையில் தேர்தல் நடந்திருப்பது முதன்முறையல்ல. கடந்த 15 ஆண்டுகால ஷேக் ஹசீனா ஆட்சியில், அந்நாட்டில் நடந்த அனைத்துத் தேர்தல்களும் வெவ்வேறு அளவுகோல்களில் இதே எதேச்சதிகாரத் தன்மையுடனேயே நடந்துள்ளன. குறிப்பாக, 2008-ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்த பிறகு வங்கதேசம் படிப்படியாக எதேச்சதிகார நாடாக மாற்றப்பட்டு வருகிறது. சிறுபான்மையினர், தொழிலாளர்கள், விவசாயிகள், உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்களும் அடக்குமுறைகளும் சுரண்டலும் தீவிரமடைந்து வருகின்றன. இடதுசாரிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் எதிரிகள் ஆகியோர் கைது செய்யப்படுவது, காணாமல் ஆக்கப்படுவது, கொலை செய்யப்படுவது என காட்டுமிராண்டித்தனமான முறையில் வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.

2008-க்குப் பிறகு இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் ஆளும் அவாமி லீக் கட்சி பல்வேறு தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டும், மேற்கு நாடுகள் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தன. இந்தத் தேர்தல் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக பல பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதோடு, பலர் கொல்லப்பட்டும் உள்ளனர். ஷேக் ஹசீனா அரசாங்கம் தேர்தல் நடத்துவதன் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையும் எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

அப்போதெல்லாம் வங்கதேசத்தின் ’ஜனநாயகம்’ கேள்விக்குள்ளாக்கப்பட்டது குறித்து அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் வாயைத் திறந்ததில்லை. இதே ஷேக் ஹசீனாவின் ஆட்சியில்தான் வங்கதேசத்தின் ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் மிகக் கடுமையாகச் சுரண்டப்பட்டு வருகின்றனர். இந்தச் சுரண்டலின் மூலம் ஆதாயமடைந்து வருபவை அமெரிக்க, ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களே. ஆனால், இந்தத் தேர்தலின்போது ஷேக் ஹசீனாவின் எதேச்சதிகார போக்கும் நடந்து முடிந்த தேர்தலும் உலகம் முழுக்க பேசுபொருளானதற்கு, மேற்குலக ஊடகங்கள் திட்டமிட்டு இதனைக் கையிலெடுத்ததே காரணம். அமெரிக்க – பாகிஸ்தான் ஆதரவு கலிதா ஜியா கட்சியின் மீதான கடுமையான ஒடுக்குமுறையும், சீனா- ரஷ்யாவுடன் ஷேக் ஹசீனா அரசு நெருக்கமான உறவுகளை உருவாக்கி வருவதுமே அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளின் கூப்பாடுக்குக் காரணம்.

வங்கதேசத்திலும் ஆட்டம் காணும் அமெரிக்க மேலாதிக்கம்

அமெரிக்காவின் ஒற்றைத்துருவ உலக மேலாதிக்கத்திற்குப் போட்டியாக வளர்ந்துவரும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் தெற்காசிய நாடுகள் வர்த்தக ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் தொடர்ந்து நெருக்கமாகி வருகின்றன. இந்நிலையில், தற்போது வங்கதேசமும் அந்த பட்டியலில் இணைந்திருப்பது அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மீண்டும் ஷேக் ஹசீனா ஆட்சியை பிடித்திருப்பதன் மூலம் வங்கதேசம் மென்மேலும் சீனாவின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் செல்வதை இந்த ஏகாதிபத்தியங்கள் விரும்பவில்லை.

கடந்த 2010-ஆம் ஆண்டு முதலே வங்கதேசத்திலும் அவாமி லீக் கட்சியிலும் தனது செல்வாக்கை அதிகரித்து வருவதன் மூலம் அங்கு சீனா மேலாதிக்கம் பெற்று வருகிறது. குறிப்பாக, தெற்காசியாவில் உள்ள மியான்மர் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளைப் போல வங்கதேசத்தையும் சீனாவை சார்ந்துள்ள நாடாக மாற்றும் இலக்கில், அங்கு சீனாவின் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.

கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதியிட்ட ‘‘தி பிசினஸ் ஸ்டாண்டர்டு’‘ இதழின் கட்டுரையொன்று பின்வருமாறு குறிப்பிடுகிறது: ‘‘சாலை முதல் ரயில், துறைமுகம் மற்றும் விமான நிலையம் வரை, ஆற்றுக்கு அடியில் சுரங்கப்பாதை முதல் உயரமான அதிவிரைவுச் சாலை வரை, நீர் பயன்பாடு முதல் மின் ஆளுமை வரை, நிலக்கரி முதல் சூரிய ஆற்றல் வரை, நிதி, தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்துடன் சீனா தனது இருப்பை வங்காளதேசத்தில் எங்கும் உணர வைக்கிறது.’‘

இக்கூற்றை நிரூபிக்கும் வகையில், 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 26 பில்லியன் டாலர்களை வங்கதேசத்தில் சீனா முதலீடு செய்துள்ளது. 2022-ஆம் ஆண்டில் 940 மில்லியன் டாலர் முதலீட்டுடன் வங்கதேசத்தின் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டாளராக சீனா மாறியது. மேலும், வங்கதேசத்தின் முதன்மையான முதலீட்டாளராகவும் வர்த்தக பங்குதாரராகவும் சீனா இருந்து வருகிறது.


படிக்க: வங்கதேசத்தில் ஆடைத் தொழிலாளர்கள் போராட்டம்!


தற்போது இந்தியப் பெருங்கடலை அடைவதற்காக சீனா பயன்படுத்திவரும் மலாக்கா நீரிணையில் அமெரிக்கா அவ்வப்போது தொந்தரவு செய்து வருகிறது. இதனால், சீனா-மியான்மர் பொருளாதார வழித்தடத்தில் வங்கதேசத்தை இணைத்து, வங்கதேசத்தின் கங்கா-பத்மா-பிரம்மபுத்ரா நதியை பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் வழியை உருவாக்கவும் வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளது. மேலும், பட்டுப்பாதை திட்டத்தில் வங்கதேசத்தை இணைத்து 40 பில்லியன் டாலர் மதிப்பீட்டிலான திட்டங்களை நடைமுறைப்படுத்த ஒப்பந்தம் செய்திருக்கிறது சீனா.

சமீப காலமாக ரஷ்யாவும் வங்கதேசத்தில் தனது முதலீடுகளை அதிகரித்து வருகிறது. வங்கதேசத்தில் 2,400 மெகாவாட் திறன் கொண்ட ரூப்பூர் அணுமின் நிலையத் திட்டத்தில் ரஷ்யா 12 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது. இதனால் அமெரிக்கா எரிச்சலடைந்து தடைகள் விதித்ததன் காரணத்தினால், கடந்த 2022-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அணுசக்திப் பொருட்களை ஏற்றிச் செல்லும் ரஷ்யக் கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் இந்தியாவின் தலையீட்டினால் சரக்குகள் சாலை வழியாக கட்டுமானத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. அணுமின் நிலையக் கட்டுமானத்திற்கான இந்தக் கடனை சீன யுவானில் திருப்பிச் செலுத்துவதன் மூலம் ரஷ்யா மீதான அமெரிக்கப் பொருளாதராத் தடைகளைக் கடந்து செல்ல இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.

இது மட்டுமின்றி, வங்கதேசத்தின் ஆயுத இறக்குமதியில் சீனாவும் ரஷ்யாவும் முதலிரண்டு இடங்களில் இருந்து வருகின்றன. மேற்சொன்ன அடிப்படையில் எல்லா வகையிலும் இவ்விரு நாடுகளின் மேலாதிக்கம் வங்கதேசத்தில் வளர்ந்து வருகிறது என்பது புலனாகிறது.

வங்கதேசத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கம் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதால், கடந்த சில ஆண்டுகளாகவே வங்கதேசத்திற்கு எச்சரிக்கை விடுப்பது, குடைச்சல் கொடுப்பது போன்ற வேலைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. 2021 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் நடந்த ஜனநாயக உச்சி மாநாட்டிற்கு வங்கதேசத்திற்கு அழைப்பு விடுக்காமல் தவிர்க்கப்பட்டது. மேலும், 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் மனித உரிமை மீறல்களை காரணம்காட்டி வங்கதேசத்தின் உயரடுக்கு துணை ராணுவப் படையான ரேபிட் ஆக்ஷன் பட்டாலியனுக்கு (ஆர்.ஏ.பி.) அமெரிக்கா தடை விதித்தது. அதனோடு, பல மூத்த ஆர்.ஏ.பி. அதிகாரிகளின் சொத்து முடக்கம் மற்றும் விசா தடை ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆர்.ஏ.பி. தலைவர்களை ‘‘மரணக் குழுக்கள்’‘ என்று குறிப்பிட்டதோடு, வங்கதேசத்தில் பலர் காணாமல் போனதுடன் அந்த அதிகாரிகளை தொடர்புபடுத்தியது. இந்த நிகழ்வு அச்சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் உச்சமாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் ‘‘வங்கதேசத்தில் ஜனநாயகத் தேர்தல் செயல்முறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நபர்கள்’‘ என்று கூறி வங்கதேசத்தின் ஆளும்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் விசா கட்டுப்பாடுகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.

இந்நிலையில், நோபல் பரிசு பெற்றவரும் ஹிலாரி கிளிண்டனின் நெருங்கிய நண்பருமான வங்கதேசத்தை சேர்ந்த முகமது யூனுஸை வைத்து வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர அமெரிக்கா முயற்சி செய்கிறது என்று செய்திகள் வெளியானதையடுத்து, முகமது யூனுஸ் மற்றும் அவரது நண்பர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தது ஷேக் ஹசீனா அரசு.

அமெரிக்காவிற்கு மாறான இந்தியாவின் அணுகுமுறை

ஷேக் ஹசீனாவின் வெற்றி குறித்து அமெரிக்காவிற்கு நேரெதிரான அணுகுமுறையை இந்தியா கையாண்டிருப்பது அமெரிக்காவிற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி சீன சார்பு கட்சியாக உள்ளதால் பி.என்.பி. தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம். ஆனால், பி.என்.பி. பாகிஸ்தான் சார்பு கட்சி என்பதாலும் கடந்த காலங்களில் வர்த்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு போன்ற எந்த விவகாரத்திலும் இந்திய ஆளும் வர்க்கத்துடன் அக்கட்சி ஒத்துழைக்கவில்லை என்பதாலும் ஷேக் ஹசீனாவே மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமென்று இந்தியா விரும்பியது.

இதன் காரணமாக, ஷேக் ஹசீனாவின் வெற்றியை மேற்குலக நாடுகள் கடுமையாக விமர்சித்தபோதும் ஷேக் ஹசீனாவை தொடர்புகொண்டு அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார் மோடி. மேலும், மேற்குலக நாடுகள் ஷேக் ஹசீனாவை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தபோது கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் வங்கதேசத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, ‘‘வங்கதேசத் தேர்தல் என்பது அவர்களின் உள்விவகாரம், வங்கதேச மக்கள் தான் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும்’‘ என்றார்.

தமது நாட்டு ஆளும் வர்க்கங்களின் நலனையும், அவர்கள் வங்கதேசத்தில் போட்டுள்ள முதலீடுகளையும் முன்னிறுத்தியே இந்தியா இந்த அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. குறிப்பாக, ஹசீனா ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்குமான நெருக்கம் அதிகரித்தது. சீன முதலீடுகள் வங்கதேசத்தில் அதிகரித்து வந்தாலும் இந்தியாவுடனான நெருக்கத்தை ஷேக் ஹசீனா துண்டித்துக் கொள்ளவில்லை. குறிப்பாக, வங்கதேச எல்லைப் பகுதியான வடகிழக்கு மாநிலங்களில் செயல்பட்டுவரும் கிளர்ச்சிக் குழுக்களை ஒடுக்குவதில் மோடியும் ஹசீனாவும் கைகோர்த்தனர். எனவே, கடந்த 2015-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தத்தை மேற்கொண்டதன் மூலம் இந்தியாவின் சில நிலப்பகுதிகளை விட்டுக்கொடுத்து 41 ஆண்டுகால எல்லைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்தார் மோடி. இதன் விளைவாக, வங்கதேசத்தில் இந்தியாவின் முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கின.

குறிப்பாக, ரூப்பூர் அணுமின் நிலையத்தை கட்டும் பணியில் ரஷ்யாவுடன் இந்தியாவும் இணைந்து ஈடுபட்டு வருகிறது. மேலும், கடந்தாண்டு வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராம் மற்றும் மோங்லா துறைமுகங்களில் போக்குவரத்து மற்றும் சரக்குக் கப்பல்களை அனுப்புவதற்கு இந்தியாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வங்கதேசத்திற்கு சரக்குகளை கொண்டு செல்லும் நேரத்தையும் செலவையும் குறைக்க முடியும். கடல் போக்குவரத்து மட்டுமின்றி இரு நாடுகளும் ரயில் போக்குவரத்தாலும் இணைக்கப்பட்டுள்ளன.

இது தெற்காசியாவில் இந்தியாவை தனது பேட்டை ரவுடியாக பாவித்து வந்த அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியாகும். அமெரிக்காவின் ஒற்றைத்துருவ உலக மேலாதிக்கம் சரிந்து வருவதன் விளைவாய் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு போட்டியாக வளர்ந்து வருவது ஒருபுறம். மற்றொருபுறம், இத்தனை ஆண்டுகளாக அமெரிக்காவின் மேலாதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளின் தன்மையும் தற்போது மாறி வருகிறது. முன்பு போல அமெரிக்கா சொல்வதற்கெல்லாம் அடிபணிந்து போகாமல், தன் நாட்டு ஆளும் வர்க்கத்தின் நலனை முன்னிறுத்தி அணுகுவது என்ற நிலைக்கு பல நாடுகள் நகர்ந்துள்ளன.

இந்தியாவின் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலுக்கு தெற்காசிய நாடுகளை உள்ளடக்கிய ‘அகண்ட பாரதம்’ கனவு உள்ளதாலும், அக்கனவு அதானி-அம்பானிகளின் நலன்களுடன் பிணைக்கப்பட்டிருப்பதாலும் அதற்கேற்ற வகையில் தெற்காசிய பிராந்தியத்தில் காய் நகர்த்தி வருகிறது. வங்கதேசம் தொடர்பான இந்தியாவின் நடவடிக்கையிலிருந்து இதைத் புரிந்துகொள்ள முடியும். ஆனால், தனது மேலாதிக்கம் சரிந்து வருவதனால் அமெரிக்காவால் இந்தப் போக்கை தடுக்கவும் முடிவதில்லை.

மேலாதிக்கப் போட்டி: உழைக்கும் மக்களைச் சூழ்ந்து வரும் பேராபத்து

கடந்தாண்டில் தெற்காசியாவில் உள்ள இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அடுத்தடுத்து பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு, உழைக்கும் மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். அவை அனைத்தும் அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் விளைவாய் நடந்தவை.

இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் சீனாவின் கடனாலும் முதலீட்டாலும் சீன மேலாதிக்கத்திற்குக் கீழ் சென்று கொண்டிருந்தன. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அமெரிக்கா, அந்நாடுகளுக்கான சலுகைகளை ரத்து செய்வது, நிதியை முடக்குவது, சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் மறுகாலனியாக்கத் தாக்குதல்களை தொடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதனாலேயே அந்நாடுகள் அடுத்தடுத்துப் பொருளாதார நெருக்கடியில் சிக்கின. அந்த வகையில், வங்கதேசமும் தற்போது இத்தகைய சவாலை எதிர்கொண்டுள்ளது.

வங்கதேசத் தேர்தலுக்கு முன்பாகவே, அந்நாட்டின் முக்கியப் பொருளாதார ஆதாரமாக உள்ள பல பில்லியன் டாலர் மதிப்புகொண்ட ஆயத்த ஆடைத் தொழில் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கும் அபாயம் உள்ளது என்ற பேச்சு அடிபட்டது. தொழிலாளர் உரிமைகளை ஷேக் ஹசீனா அரசு மதிக்கவில்லை என்ற காரணத்தை வைத்துக் கொண்டு இத்தகைய தடையை அமெரிக்கா முன்னெடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. வங்கதேசத்தின் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் 80 சதவிகிதத்திற்கு அதிகமான பங்கைக் கொண்டுள்ள அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும், அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தால் வங்கதேச மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாவர். மேலும், வெளிநாட்டவர்களுடன் இணைந்து பி.என்.பி. சதி செய்வதாகவும், வெளிநாடுகளில் இருந்து அவர்கள் உத்தரவுகளைப் பெறுவதாகவும் தேர்தல் பிரச்சாரத்தில் ஷேக் ஹசீனா கூறியது குறிப்பிடத்தக்கது.

இன்னொருபுறம், அமெரிக்காவின் பிடியில் இருக்கும் சர்வதேச நாணய நிதியத்திடம் இரண்டாம் கட்ட கடனைப் பெறுவதற்கான வேலைகளில் வங்கதேச அரசு ஈடுபட்டுள்ளது. இதன்மூலம், வருங்காலத்தில் வங்கதேச மக்கள் மீது விலைவாசி உயர்வு, சலுகை துண்டிப்பு, மக்கள் நல திட்டங்கள் ரத்து, மின்சாரம்-எரிபொருள் கட்டண உயர்வு போன்ற மறுகாலனியாக்கத் தக்குதல்கள் தொடுக்கப்படுவதற்கான அபாயமும் உள்ளது. இதனால், ஏற்கெனவே விலைவாசி உயர்வு, பணவீக்கம், ஊதிய வெட்டு போன்ற நெருக்கடிகளில் பாதிக்கப்பட்டுவரும் வங்கதேச மக்களின் வாழ்நிலை இன்னும் மோசமான நிலைக்குச் செல்லும்.

எனவே, வங்கதேசத்தின் உழைக்கும் மக்கள் இந்த அபாயத்தைப் புரிந்துகொண்டு இதற்கெதிரான போரட்டங்களை முன்னெடுப்பது அவசியமாகிறது. ஏற்கெனவே, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிரம்மாண்டமான போராட்டங்களில் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், வங்கதேசத்தைக் குறிவைக்கும் அனைத்து ஏகாதிபத்தியங்களுக்கும், அவர்களது அடிவருடிகளான உள்நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கும் எதிரான போராட்டங்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். சீனா – அமெரிக்கா இடையிலான மேலாதிக்கப் போட்டியாலும், இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கத்தாலும், நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள தெற்காசியவை சேர்ந்த அனைத்து நாட்டு உழைக்கும் மக்களும் இத்தகைய போராட்டங்களில் ஈடுபடுவதும், இதற்கேற்ப புரட்சிகர – ஜனநாயகச் சக்திகளின் ஒருங்கிணைப்பை உருவாக்குவதும் நமது கடமையாகும்.


துலிபா

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கார்ப்பரேட் கடன் தள்ளுபடி ரூ 14 லட்சம் கோடி விவசாயிகளுக்கு பட்டை நாமம் | தோழர் அமிர்தா

கார்ப்பரேட் கடன் தள்ளுபடி ரூ 14 லட்சம் கோடி விவசாயிகளுக்கு பட்டை நாமம் | தோழர் அமிர்தா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பின் ஜல்லிக்கட்டு போட்டியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த ஜனவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: 2017 ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்து ஏழாண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது?

கோவில் வழிபாடு உள்ளிட்ட சமூக நடவடிக்கைகளில் நிலவும் சாதி ஆதிக்கத்தை எதிர்த்து சமத்துவத்திற்காகப் போராடுவதை போல ஜல்லிக்கட்டிலும் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கு போராட வேண்டும். தமிழ் தேசிய இனத்தின் பண்பாட்டு மரபில் தலையிட்டு ஜல்லிக்கட்டை தடை செய்த பாசிச ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு எதிராக தமிழ் மக்களின் மரபாக ஜல்லிக்கட்டு வரித்துக் கொள்ளப்பட்டதன் அடையாளம்தான் 2017 ஜல்லிக்கட்டுக்கான போராட்டம்.

ஆனால், அன்றைக்கும் கூட, அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும்தான் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டுமென்று, அ.தி.மு.க. அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனை மீறி தலித் மக்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முற்பட்டபோது, போலீசால் தாக்குதல்கள் நடத்தப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டன. இன்றும் அரசினால் அனுமதிக்கப்பட்ட இடங்களில்தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன. இதுவே, மிகப்பெரிய உரிமை பறிப்பாகும்.

அதேபோல், ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் அவதூறுகளைத் தவிர்த்து, போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக மாடுகளுக்கு போதையேற்றுவது, விளையாட்டு வீரர்கள் போதையில் கலந்து கொள்வதைத் தடுப்பது, விளையாட்டு வீரர்களுக்குப் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்வது, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது போன்ற அவசியமான கட்டுப்பாடுகளும் முறைப்படுத்துதல்களும் தேவையாக உள்ளது.

ஆனால், இவை மட்டுமே ஒரு விளையாட்டை ஜனநாயகப்படுத்தும் முறை அல்ல. பல இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சாதி ஆதிக்கம் வெவ்வேறு வகைகளில் வெளிப்படையாகக் கடைபிடிக்கப்படுகிறது. அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு போன்ற பெரிதும் அறியப்பட்ட, ஊடகங்களால் கவனம் கொடுக்கப்படுகின்ற இடங்களில் நேரடியாக சாதி கடைப்பிடிக்கப்படவில்லை. எனினும், பல இடங்களில் பல்வேறு வழிகளில் சாதி கடைப்பிடிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தலித் பின்னணி கொண்ட திறமையான வீரர்களை, ஆதிக்கச் சாதியினர் பெரும்பான்மையாக உள்ள அணிகளில் இணைத்து, அவர்களை முன்னணியில் வரவிடாமல் தடுப்பது; வெளியூரில் இருந்து வருகின்ற தலித் மக்களின் மாடுகளுக்கு அனுமதி கொடுக்காமல் தவிர்ப்பது; அனுமதி கொடுக்கப்பட்ட உள்ளூர் தலித் மக்களின் மாடுகளை இயன்றவரை போட்டியில் ஈடுபடுத்தாமல் விட்டுவிடுவது போன்ற வகைகளில் சாதி தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக மக்கள் வேதனைப்படுகின்றனர். இவையெல்லாம் களையப்பட வேண்டும்.

அரசு தலையிடத் தொடங்கிய பின்னர், இப்போட்டிக்கான விதிமுறைகள் பொதுத்தன்மை பெற்று வருகின்றன. இருப்பினும், இவை இன்னும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டியை நெறிப்படுத்துவது என்ற முகாந்திரத்தில், இப்போட்டியை உழைக்கும் மக்களிடமிருந்து பிரிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.

ஆகையால், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் மரபு ரீதியான பகுதிகளில் பாதுகாப்பான வகையில் விளையாட்டு மைதானங்களை அமைக்க வேண்டும். தற்போது தி.மு.க. அரசு மதுரையில் அமைத்திருக்கும் மைதானமும் (முதலாவது ஜல்லிக்கட்டு மைதானமாகும்), அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே அன்றி, கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் செல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.

சில மாடுகளின் உரிமையாளர்கள் வீரர்களைத் தாக்குவது, வீரர்கள் முறைமீறல்களில் ஈடுபட்டால், அவர்களை போலீசை கொண்டு தாக்குவது போன்றவை நடக்கின்றன. இதனை தடுக்க முறையான விளையாட்டு நெறியாளர்கள், கள நெறியாளர்கள் போன்ற முறைகள் உருவாக்கப்பட வேண்டியுள்ளது.


படிக்க: எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி – இதனை எப்படிப் பார்ப்பது?


மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் யார், வெற்றி பெற்ற மாடு எது என்பதற்கான விதிமுறைகளில் பொதுவில் குழப்பங்கள் இல்லையெனினும், முறைப்படுத்தல் தேவைப்படுகிறது. வாடிவாசலில் இருந்து மாடுகளை அவிழ்த்துவிடுவது, அதனைப் பிடிப்பது, சில காளை மாடுகள் விளையாட்டு மைதானத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே சுற்றிவருவதால் வீரர்கள் காயமடைவது என பல அம்சங்களில் இம்முறைப்படுத்துதல் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டில் பரிசுப்பொருளாக வழங்கப்படும் மோட்டார் சைக்கிள், அண்டா, மின்விசிறி, மெத்தை, நாற்காலி, பானை போன்றவையெல்லாம் இன்றைய வீரர்களுக்கு பயனளிப்பவை அல்ல. முதலிடம் பெற்ற வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது. ஆனால், தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டியில் அதிக மாடுகளை அடக்கி முதலிடம் பெற்றுவரும் அபிசித்தர் என்ற வீரர் தனக்கு கார் வேண்டாம், அரசு வேலை வேண்டும் என்று கோருவதானது, நாட்டில் நிலவும் வேலையின்மையின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.

கிரிக்கெட் போன்ற விளையாட்டுப் போட்டிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றியிருக்கும் நிலையில், ஜல்லிக்கட்டையும் முறைப்படுத்துவது என்ற பெயரில் கார்ப்பரேட் ஆதிக்கம் புகுத்தப்படுவதற்கான முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும், மக்களின் பங்கேற்புடனான, சமத்துவத்தை வளர்க்கும் வகையிலான, மக்கள் பண்பாடாக அது தொடர்ந்து வளர்க்கப்பட வேண்டும்.

ஆனால், மக்கள் மத்தியில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், சாதி-மத வேறுபாடுகளை ஒழிக்காமல் விளையாட்டுப் போட்டிகளை மட்டும் ஜனநாயகப்படுத்துவது தனியாக நடந்தேறிவிடாது. மேற்கண்ட அளவுக்கு இவ்விளையாட்டு முறைப்படுத்தப்பட்டதற்கு காரணம் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்தவகையில், சமத்துவ சமுதாயத்தைப் படைக்கும் நோக்கிலான ஒரு மக்கள் எழுச்சிதான், விளையாட்டைப் போன்று பண்பாட்டு, கலை, இலக்கியங்களிலும் ஜனநாயக உணர்வை வளர்த்தெடுக்கும்.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிச மோடி கும்பலை பணியவைக்கும்வரை விவசாயிகள் போராட்டம் ஓயாது

விவசாய விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஹரியானா எல்லையில் லட்சகணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் விவசாயிகள் மீது மோடி அரசால் கொடூரமான அடக்குமுறைகள் செலுத்தப்பட்டாலும் அதனையெல்லாம் மீறி விவசாயிகள் டெல்லியை நோக்கி முன்னேறுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான செய்திகளை ஒரு நாள் மட்டுமே ஊடகங்கள் வெளியிட்டன. நேற்று (14.02.2024) நடந்த போராட்டச் செய்திகளை, பா.ஜ.க. பினாமி செய்தித்தாள்கள் (Godi Media) அனைத்தும் பத்தோடு பதினொன்றாக பின்தள்ளிவிட்டன.


படிக்க: விவசாயிகள் போராட்டமும் எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதமும்


கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி கோரிக்கைகளை நிறைவேற்றகோரி பஞ்சாபின் பல பகுதிகளிலிருந்து விவசாயிகளின் டிராக்டர் பேரணி தொடங்கியது. அன்றிலிருந்து இன்று வரை விவசாயிகள் மீது கொடூரமான ஒடுக்குமுறைகளைச் செலுத்தி வருகிறது மோடி அரசு. ஹரியானா மாநிலத்தின் 15 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது; விவசாயிகளை ஒடுக்க துணை ராணுவப் படையினரும் ஹரியானா மாநில போலிசும் குவிக்கப்பட்டுள்ளனர். கண்ணீர் புகைகுண்டுகளை வீசுவது, தண்ணீர் பீரங்கிகளை கொண்டு தாக்குவது, துப்பாக்கிச்சூடு நடத்துவது என விவசாயிகள் மீது அடக்குமுறைகள் செலுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளை தடுத்து நிறுத்த முள்வேலி அமைப்பது, தடுப்பு சுவர்கள் அமைப்பது, ஆணிகளை புதைப்பது போன்ற காட்டுமிராண்டித்தனமான முறைகளையும் கையாண்டு வருகிறது பாசிச மோடி அரசு.

இந்நிலையில், போராட்டத்தின் நான்காவது நாளான இன்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது பாசிச மோடி அரசு. மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஷ் கோயல் மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோருடன் இந்த பேச்சுவார்த்தை சந்திப்பு நடைபெறவுள்ளது.

ஏற்கனவே விவசாயிகளுடன் இரண்டுமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அது தோல்வியடைந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, முந்தைய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட இக்காலகட்டத்தில் விவசாயிகளின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள கணக்குகளை முடக்கும் வேலையை மோடி அரசு மேற்கொண்டது ஊடகங்களில் அம்பலமாகியிருந்தது. தற்போது, ஒருபுறத்தில் போராடும் விவசாயிகளை கடுமையாக ஒடுக்கிகொண்டே மற்றொருபுறத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள மோடி அரசின் இந்த நயவஞ்கத்தை விவசாயிகள் புரிந்து கொண்டு போராட்டத்தில் உறுதியாக நிற்கின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்.கே.எம். (என்.பி) விவசாய சங்கத்தின் மூத்த தலைவர் ஜக்ஜித் சிங் “நாங்கள் ஹரியானாவுடனான மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளில் அமைதியாக முகாமிட்டுள்ளோம். அரசாங்கம் முதலில் ஒரு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றாலும், கூட்டத்திற்கு நாங்கள் தயங்கவில்லை என்பதை மையத்திற்கு தெரிவித்தோம். ஒருபுறம் ஹரியானா அரசு கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பிரயோகித்து, மறுபுறம் பேச்சு வார்த்தை நடத்துகிறது”” என்ற பா.ஜ.க அரசின் நாடகத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், அம்பாலா அருகே ஹரியானாவின் ஷம்பு கிராமம் மற்றும் பஞ்சாபின் எல்லையான கானௌரி-ஜிண்ட் ஆகிய பகுதிகளை விவசாயிகள் அடைந்தபோது, பா.ஜ.க. ஆளும் ஹரியானாவிற்குள் நுழைய விடாமல் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். விவசாயிகள் எல்லையில் உள்ள பல தடுப்புகளை உடைக்க முயன்றபோது விவசாயிகள் மீது டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். இது போராடும் விவசாயிகளை ஒடுக்க இனவெறி இஸ்ரேல் அரசால் மேற்கொள்ளப்படும் வழிமுறை என்பது ஆங்கில செய்தி ஊடகங்களில் செய்திகள் வெளியாகி மோடி அரசின் கோரமுகம் அம்பலப்பட்டுப்போனது.


படிக்க : பிப்.13: டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம்! | தோழர் வெற்றிவேல்செழியன்


2020-ஆம் ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடியபோதும் இத்தகைய தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. ஆனால், அதனையெல்லாம் கடந்து விவசாயிகள் மோடி அரசை பணியவைத்தனர். குறைந்தபட்ச ஆதார விலை என்ற விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கையானது, பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசுக்கான கோரிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இது இந்த அரசியல் அமைப்பு சட்டத்தால் நிறைவேற்றப்படாது என்பதே இத்தனை ஆண்டுகால அனுபவமாக உள்ளது. எனவே, விவசாயிகளின் ஜனநாயகப்பூர்வமான இக்கோரிக்கை மாற்று ஜனநாயக கட்டமைப்பின் தேவையை மக்களுக்கு உணர்த்துகிறது.

எனவே, மோடி அரசின் இந்த ஒடுக்குமுறைகள் எல்லாம் விவசாயிகளை தடுத்துவிட போவதில்லை. நாளுக்கு நாள் போராடும் விவசாயிகளின் எண்ணிக்கையும் போராட்டத்தின் வீரியமும் அதிகரித்துகொண்டு தான் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் விவசாயிகள், உழைக்கும் மக்கள், மாணவர்கள் மத்தியில் விவசாயிகள் போராட்டத்திற்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. ஆளும் பாசிச மோடி அரசை அடிபணிய வைக்கும் வரை இந்த போராட்டம் ஓயப்போவதில்லை என்பது திண்ணம்.


சோபியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



காதலும் உழைப்பும்தான் மனித குலத்தின் ஆதாரவேர்கள்…

காதலும் உழைப்பும்தான் மனித குலத்தின் ஆதாரவேர்கள்…

ஆம் தோழர்களே காதல்தான் இந்த உலகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது…

நுகர்வு கலாச்சாரத்தில் சிக்கி தவிக்கும் காதலை மீட்டெடுக்க வேண்டிய தருணம் இது.

எது காதல் ஆண் பெண் மீதும் பெண் ஆண் மீதும் கொள்வது மட்டுமா காதல்..

விதவிதமான ஆடைகளையும் நகைகளையும் வாங்கி கொடுப்பது காதலா,

அது இல்லை தோழர்களே,

அடுத்த மனிதனின் நலனுக்காக உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு மனிதனின் கோபமும் போராட்டமும் காதல்தான்…

காதலர் தினத்தன்று பூங்கொத்து கொடுப்பது இருக்கட்டும்,

காதலர் தினத்தன்று காதல் கடிதங்கள் எழுவது இருக்கட்டும்,

இந்த காதலர் தினத்தை வேறு விதமாக கொண்டாடுங்கள்.

கோரிக்கை மனுக்களை காதலியுடன் காதலுடன் அமர்ந்து எழுத கற்றுக் கொள்ளுங்கள்,

சமூகத்தில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் உங்களுடைய பங்கு உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்!

வினையாற்றுங்கள்! தோழர்களே

வினையாற்றுங்கள்!

உலகையே புரட்டிப் போட்ட மூலதனம் என்ற நூலுக்கு ஜென்னி போட்ட ரொட்டிதான் மூலதனம் அல்லவா,
ஆகவே தோழர்களே காதலியுங்கள்!

உங்கள் காதல் சமத்துவத்தை உண்டாக்கட்டும்..‌.

உங்கள் காதல் சமூக மாற்றத்தை உண்டாக்கட்டும்…

உங்கள் காதல் சமூகத்தை முன்நகர்த்தி செல்லட்டும்…

காதலியுங்கள் தோழர்களே!

காதலியுங்கள் மார்க்ஸ் ஜென்னி போல்…


தினேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தி கேரவன் பத்திரிகையின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் பாசிச மோடி அரசை கண்டிக்கின்றோம்!

2023-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021-இன் திருத்தப்பட்ட விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து சமூக ஊடகங்களை ஒடுக்கும் நோக்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது ஒன்றிய பாசிச மோடி அரசு.

இந்நிலையில், தி கேரவன் பத்திரிகையின் பிப்ரவரி மாத இதழில் “இராணுவ நிலையத்திலிருந்து அலறல்கள்” (Screams from the Army Post) என்கிற தலைப்பில் கட்டுரை வெளியாகியுள்ளது.

ரஜௌரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் இராணுவத்தினரால் செய்யப்பட்ட சித்திரவதை குறித்து கேரவன் இதழில் பத்திரிகையாளர் ஜதீந்தர் கவுர் துர் (Jatinder Kaur Tur) எழுதிய அக்கட்டுரையை 24 மணி நேரத்திற்குள் கேரவன் பத்திரிகையின் இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், நீக்கத் தவறினால் முழு இணையதளமும் தடை செய்யப்படும் என்றும் தி கேரவன் பத்திரிகைக்கு மிரட்டல் விடுத்துள்ளது ஒன்றிய பாசிச மோடி அரசு.

இது குறித்து தி கேரவன் தனது X தள பக்கத்தில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69A இன் கீழ் நோட்டீஸ் பெற்றுள்ளதாகவும், (அரசின்) இந்த உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளது. அரசு உத்தரவின் உள்ளடக்கம் குறித்து இரகசியம் காக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதழில் வெளிவந்த கட்டுரை, டிசம்பர் 22, 2023 அன்று பூஞ்ச் நகரில் அடையாளம் தெரியாத ராணுவத்தினரால் மூன்று ஆண்கள் கொலை செய்யப்பட்டதை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. இச்செய்தி ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு,  புகாரும் அளிக்கப்பட்டது. இராணுவக் காவலில் அவர்கள் கொலை செய்யப்பட்டதாக உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர். மேலும், அவர்கள் சித்திரவதை செய்யப்பட்ட வீடியோக்கள் ஊடகங்களில் வைரலாகியிருந்தன. இதனையடுத்து தான் உள்ளூர் மக்களிடம் விசாரித்து தி கேரவன் பத்திரிக்கை கட்டுரையாக வெளியிட்டுள்ளது.

தி கேரவன் தனது கட்டுரையில், கொலை செய்யப்பட்ட 3 ஆண்களின் குடும்பங்களுக்கு கொலை செய்யப்பட்டது குறித்து விளக்கம் ஏதும் அளிக்காமல் ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கியதாக கூறியுள்ளது. மேலும்,  கொல்லப்பட்ட மூன்று ஆண்களும் 25 பேர் கொண்ட இராணுவத்தினால் அழைத்துச் செல்லப்பட்டு கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டனர் என்றும் அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

மூன்று ஆண்களின் கொலைகள் தொடர்பாக போலீஸ், இராணுவம் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளை  அணுகியபோது, கேரவன் பத்திரிக்கையின் கேள்விகளுக்கு இந்த அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துள்ளனர்.


படிக்க: “தி காஷ்மீர் வாலா” சுதந்திர ஊடகம் முடக்கம்: கருத்துச் சுதந்திரத்தின் மீதான மோடி அரசின் கொலைவெறித் தாக்குதல்!


கடந்த ஆண்டு ஜூன் மாதம், தி கேரவன் பத்திரிகையுடன் தொடர்புடைய மல்டிமீடியா பத்திரிகையாளர் ஷாஹித் தந்த்ரே (Shahid Tantray), ஜம்மு – காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் அடக்குமுறை குறித்து ஆராய்ந்தது தொடர்பாக இரண்டு கட்டுரைகளை வெளியிட்டதற்காக அவரையும், அவரது குடும்பத்தினரையும் பல மாதங்களாக  ஜம்மு – காஷ்மீர் போலீசு தொடர்ந்து அச்சுறுத்தி மிரட்டல் விடுத்த சம்பவம் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகள், செய்தி இணையதளங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் வெளியான கட்டுரைகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரிவிக்காமலேயே அகற்ற தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு அவசரக்கால அதிகாரங்களை வழங்கியுள்ளது. இச்சட்டத்திருத்தத்தின் மூலம் பத்திரிகை சுதந்திரத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது பாசிச மோடி கும்பல். இதைப் பயன்படுத்தித் தான் தி கேரவன் பத்திரிகையின் ஊடக சுதந்திரத்தை இந்த பாசிச கும்பல் தற்போது நசுக்கியுள்ளது.

பாசிச மோடி கும்பல் தனது இந்துராஷ்டிர கனவிற்காக பத்திரிகை சுதந்திரத்தை பறித்துக் கொண்டிருக்கிறது. பாசிச மோடியின் ஆட்சி ஊடகங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அச்சுறுத்தலான சூழலை உருவாக்கியுள்ளது. இனி பாசிச கும்பலின் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் குறித்து வாயையே திறக்க முடியாத நிலை ஏற்படும். தி கேரவன் பத்திரிகையின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கத் துடிக்கும் பாசிச மோடி அரசின் நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.


மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
9488902202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube