Tuesday, July 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 62

தேர்தல் மோசடி என்பது பா.ஜ.க கையாளும் ஒரு வழிமுறை மட்டுமே

ந்தியா டுடே” பத்திரிக்கை நடத்திய “தேசத்தின் மனநிலை” என்ற கருத்துக்கணிப்பின்படி, தற்போதைய நிலையில் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டால், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 335 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 272 இடங்களை விட இந்த எண்ணிக்கை (335) அதிகம் தான்.

இந்திய மக்கள் மோடியின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் , சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இருப்பினும் பா.ஜ.க மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்ற “இந்தியா டுடே” வின் கருத்துக் கணிப்பைப் பற்றி சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.

அவ்வாறு சமூக ஊடகங்களில் பேசிய பெரும்பாலான நபர்களுடைய கருத்துகளின் சாரம் இதுதான், “மக்கள் ஓட்டுப் போட்டுதான் பா.ஜ.க ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நிலை இல்லை. அவர்கள் (பா.ஜ.க) தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வேறு வழிகள் வைத்திருக்கிறார்கள் “. அதாவது, தேர்தல் வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்வது போன்ற வழிகளில் தான் பா.ஜ.க அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறுகிறது. இந்த கருத்துதான் பெரும்பாலான பா.ஜ.க எதிர்ப்பாளர்களின் கருத்தாக உள்ளது. இந்த கருத்து ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிச இயக்கத்தை பற்றியும், அது மக்களிடையே மிக விரிவான அளவில் தாக்கம் செலுத்திக்கொண்டிருப்பதைப் பற்றியும் சிறிதும் புரிதலற்ற வகையில் கூறப்படுகிறது.

தேர்தல் களத்தில் வெவ்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி பா.ஜ.க மோசடிகள் செய்து வருவது உண்மை தான். ஆனால் தேர்தல் களத்தில் பா.ஜ.க-வின் ஆதிக்கத்திற்கு அது மட்டுமே காரணமல்ல. குறிப்பாக சொன்னால், தேர்தலில் மோசடி செய்வதை பா.ஜ.க தன்னுடைய கடைசி வாய்ப்பாகத் தான் வைத்திருக்கிறது.


படிக்க: அசோகா பல்கலைக்கழகம்: கருத்து சுதந்திரத்தின் மீதான காவி பயங்கரவாத தாக்குதல்


2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், முறைகேடு நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக குற்றம் சாட்டிய அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதார உதவிப் பேராசிரியர், சப்யசாச்சி தாஸ் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பா.ஜ.க-வின் தேர்தல் மோசடிகள் பற்றி மிகத்தெளிவாக பதிவு செய்துள்ளார். பா.ஜ.க-விற்கு எதிரான வாக்குகள் இருக்கக்கூடிய முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமுள்ள தொகுதிகளில், வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை பதிவு செய்வதில் மோசடி நடந்திருப்பதை சப்யசாச்சி தாஸ் அம்பலப்படுத்துகிறார். இந்த மோசடி தேர்தல் ஆணையத்தின் உதவி இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் இந்த மோசடிகள், பா.ஜ.க-விற்கும் எதிர்க்கட்சி வேட்பாளருக்கும் மிக நெருக்கமான போட்டி இருக்கும் தொகுதிகளில் தான் அதிகம் நடந்திருக்கிறது. அதாவது பா.ஜ.க மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர் இருவரும் வெற்றி பெறுவதற்கு சமமான வாய்ப்புள்ள தொகுதிகளில் தான் மோசடிகள் அதிகம் நடந்திருப்பதாக ஆய்வு முடிவை முன்வைக்கிறார் சப்யசாச்சி தாஸ். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது ஒன்றுதான், தேர்தல் மோசடிகள் என்பது பா.ஜ.கவின் பிரதான யுத்தி அல்ல.

அப்படியென்றால் பா.ஜ.க-வின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் என்ன? அது சாதி, மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துவதும், மக்களின் சமூக கலாச்சார வாழ்க்கையை இந்துத்துவமயம் ஆக்குவதும் தான் பா.ஜ.க-வின் தேர்தல் வெற்றிக்கு முக்கியமான காரணமாகும்.

சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பரிவாரங்களான விஷ்வ இந்து பரிஷத் (VHP), அகில பாரத்திய வித்யார்தி பரிஷத் (ABVP ), இந்து முன்னணி, பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளின் மூலம் தான் பா.ஜ.க சென்றடைந்துகொண்டிருக்கிறது.

சரஸ்வதி வித்யா பீடம் என்ற அமைப்பின் மூலம் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளிகள் வழியாக மாணவர்கள் மத்தியில் இந்துத்துவ கருத்துகள் விதைக்கப்படுகின்றன. வனவாசி கல்யாண் ஆஸ்ரமம் என்ற பெயரில் பழங்குடி மக்களின் வழிபாட்டு முறைகளை ஒழித்து இந்து மதத்திற்குள் கொண்டு வருகிறார்கள். VHP, பஜ்ரங் தள் போன்ற குண்டர் அமைப்புக்கள் லவ் ஜிஹாத், பசுப் பாதுகாப்பு, முஸ்லிம் கடைகளில் பண்டங்கள் வாங்கக்கூடாது போன்ற கோஷங்களை முன்வைத்து முஸ்லிம்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி மக்களை மத முனைவாக்கம் செய்கிறார்கள்.


படிக்க: காவிகளின் கூடாரங்களாகும் பல்கலைக்கழகங்கள்


தமிழ்நாடு போன்ற மதவெறி எடுபடாத மாநிலங்களில், சாதி சங்கங்கள், சாதிய அமைப்புகளை தங்களது கைக்குள் போட்டுக்கொண்டு பட்டியல் சமூக மக்கள் மீதான சாதிய வன்கொடுமைகளை நடத்துகிறார்கள். இதன் மூலம் மக்களை பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் அடைகிறார்கள். மாணவர்களின் தற்கொலையை, மதமாற்றம் செய்ய நிர்பந்தம் செய்ததால் ஏற்பட்ட தற்கொலை என்று பொய் செய்திகளை பரப்பி கலவரம் செய்ய முயற்சிப்பது, கிராமப்புறங்களில் கோவில் கட்டிக்கொடுத்து அதன் மூலம் ஆட்களை திரட்டி சாதி முனைவாக்கம் செய்வது, அப்பாவி மக்களின் பக்தியை தவறாக பயன்படுத்தி விளக்கு பூஜைகள் ஏற்பாடு செய்வது, கோவில் திருவிழாக்களை நடத்த நன்கொடை கொடுப்பது போன்ற வழிகளில் தன்னுடைய மதவாத கருத்துகளை பரப்பும் வலைப்பின்னல்களை பா.ஜ.க உருவாக்கி வருகிறது. இப்படி தான் பா.ஜ.க தனக்கான அடித்தளத்தை அமைத்துக்கொள்கிறது. இந்த விரிவான வேலைகளின் மூலமாகத்தான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க சமூகத்தில் மதவாதத்தை வளர்க்கிறது.மக்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தளங்களிலும் வேலை செய்து தேர்தலுக்கான வாக்குகளாக பா.ஜ.க மாற்றிவருகிறது. அதன் மூலமாகத்தான் பா.ஜ.க தேர்தலில் வெற்றி பெறுகிறது.

இப்படி சமூகத்தின் அனைத்து தளங்களிலும் மதவெறியை பரப்ப ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அதன் பரிவாரங்களுடன் தீவிரமாக வேலை செய்து வருகிறது. அதே போல் சமூக மாற்றத்தை விரும்புபவர்களும், பாசிசத்தை எதிர்க்கும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும், புரட்சிகர இயக்கங்களும் மக்களை சித்தாந்த ரீதியாக அணி திரட்டி, அரசியல்படுத்தி போராடுவதன் மூலமாகவே பாசிச பா.ஜ.கவை வீழ்த்த முடியும். மாறாக, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் பரந்து விரிந்த செயல்பாடுகளை மறைத்துவிட்டு வெறுமனே தேர்தல் மோசடிகள் பற்றி மட்டும் பேசிக்கொண்டே இருப்பது, நம்முடைய செயல் முனைப்பற்ற சோம்பேறிதனத்திற்கு ஒரு காரணமாக மட்டுமே இருக்கும்.

பா.ஜ.க தேர்தல் வெற்றிகளுக்கு பிரதான காரணம் தேர்தல் மோசடிகள் தான் என்று ஒருவர் விடாப்பிடியாக நம்பினால் அவர் செய்வதற்கென்று ஒன்றுமில்லை. ஆகையால் பரந்துபட்ட மக்களிடம் மதவாத கருத்துகளை விதைக்கும் செயல்பாடுகள் தான் பா.ஜ.க-வின் வெற்றிக்கு காரணம் என்ற யதார்த்த உண்மையை ஜனநாயக சக்திகள் ஒப்புக்கொண்டு மக்களிடையே இடையறாது உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டியுள்ளது. மக்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு தளங்களிலும் பணி செய்யவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ராமர் கோவில் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான பட்டாபிஷேகம்

ந்துக்களின் வெற்றி”, “இந்தியாவின் பெருமிதம்”, “500 ஆண்டுகாலப் போராட்டத்தின் வெற்றி”, “ராம ராஜ்ஜியம் அமைந்துவிட்டது”, “புதிய வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது” என ராமர் கோவில் திறப்பை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தனது நூறு ஆண்டுகால இந்துத்துவச் சித்தாந்தத்திற்கும் அரசியலுக்கும் கிடைத்த வெற்றியாக கொண்டாடித் தீர்த்துள்ளது.

ராமர் கோவில் திறப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி “ஜனவரி 22, நாள்காட்டியில் இது ஒரு தேதி மட்டுமல்ல, ஒரு புதிய சகாப்தம் பிறந்துள்ளது. இப்போது நாம் இந்தியாவின் 1,000 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும். ராமர் கோவில் இந்தியாவின் “தேசிய உணர்வு”, ராமர் இந்தியாவின் அடித்தளம், ராமர் இந்தியாவின் கருத்து, ராமர் இந்தியாவின் சட்டம், ராமர் இந்தியாவின் மாண்பு, பெருமை, கொள்கை எல்லாமே ராமர்தான்” என்றார்.

ராமர் கோவில் திறப்பை பிரம்மாண்டமாகவும் வெற்றிகரமாகவும் நடத்தியதற்காக மோடிக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை ஒன்றிய அமைச்சரவை நிறைவேற்றியிருந்தது. அதில், ‘‘பல நூற்றாண்டுகள் பழமையான இந்திய நாகரிகத்தின் 500 ஆண்டுகாலக் கனவு தற்போது நனவாகியுள்ளது. மேலும், 1947-இல் தேசத்தின் உடல் சுதந்திரம் பெற்றதென்றால், அதன் ஆன்மா தற்போதுதான் விடுதலை பெற்றுள்ளது’‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமர் கோவில் திறப்புக் குறித்து பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ‘‘உலக நாடுகளுக்கு உதவி செய்யும் புதிய இந்தியாவின் அடையாளம் ராமர் கோவில்’‘, ‘‘இன்று கோவில் எழுந்ததற்கான ஆன்மீக கொண்டாட்டங்களில் பங்கேற்கும் அதே வேளையில் பாரதத்தை புனர் நிர்மாணம் செய்து அதன் மூலம் உலக புனர் நிர்மாண பணியில் ஈடுபட உறுதி எடுத்துக்கொள்வோம். இந்த பேரொளியை மனதில் வைத்து முன்னேறி செல்வது காலத்தின் கட்டாயம்’‘ என்று பாசிசக் கும்பலின் அகண்ட பாரதக் கனவை வலியுறுத்தி பேசினார். இவர்களை போலவே, பா.ஜ.க. தலைவர் ஜே.பி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என ஒட்டுமொத்த காவிக் கும்பலும் தங்களது வெற்றியை உச்சிமுகர்ந்து பேசியுள்ளது. பாசிசக் கும்பலின் வார்த்தைகளிலிருந்தே அவர்கள் எத்தகைய வெற்றிக்களிப்பில் உள்ளனர் என்பதை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும்.

இந்த ‘கொண்டாட்டத்தின்’ மூலம், பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டப்பட்டது இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்ற உணர்வே ஏற்படாத வகையில், பக்தி என்ற பெயரில் மதவெறியை ஊட்டி ‘இந்து மக்களின்’ ஜனநாயக உணர்வை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது காவிகும்பல். மேலும், மோடியின் பத்தாண்டுகால ஆட்சியில் அம்பானி-அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்வதற்காக உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப்பட்ட ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு போன்ற பொருளாதார தாக்குதல்களையும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக இஸ்லாமிய சிறுபான்மையின மக்கள், தலித் மக்கள், பெண்கள்மீது இழைக்கப்பட்ட அநீதிகளையும் கொடுமைகளையும் மூடிமறைத்து, ராமர் கோவில் திறப்பை ஒட்டுமொத்த ‘இந்திய மக்களின் வெற்றியாக’, ‘இந்தியாவின் சாதனையாக’ சித்தரிக்க முயன்றது பாசிசக் கும்பல். அதாவது, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி தங்களுடைய பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்கான ஆயுதமாக ராமர் கோவில் திறப்பை கையிலெடுத்துள்ளது.

‘தேசிய விழாவான’ ராமர் கோவில் திறப்பு

ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு, வி.எச்.பி., இந்து முன்னணி போன்ற தனது குண்டர் படையினருடன் ஆர்.எஸ்.எஸ் கும்பல். ‘கிரஹ சம்பர்க் அபியான்’ என்ற பெயரில் வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இந்தியா முழுவதும் பல இடங்களில் பெரிய எல்.இ.டி. திரைகளை அமைத்து, ராமர் கோவில் திறப்பை மக்களிடம் நேரலையில் ஒளிபரப்பு செய்தது. நாடு முழுவதும் ஆங்காங்கே பிரசாதம் தருவது, வீட்டில் விளக்கேற்ற சொல்வது என ஒட்டுமொத்த ‘இந்து’ மக்களிடமும் ‘இது நமக்கான விழா’ என்ற பிம்பத்தை கட்டமைக்க முயன்றது காவிக் கும்பல்.

நாடு முழுவதிலுமிருந்து கார்ப்பரேட் முதலாளிகள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள் என 8000 பேருக்கு ராமர் கோவில் திறப்பில் கலந்துக்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. அம்பானி, பிர்லா போன்ற கார்ப்பரேட் முதலாளிகள், கங்கனா ரனாவத், ரஜினி, அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் போன்ற ஆயிரக்கணக்கான சங்கிகள் ராமர் கோவில் திறப்பிற்கு சென்று ஆரவாரம் செய்தனர்.


படிக்க: எது கேலிக்கூத்து? நிதிஷ்குமாரின் ‘பல்டி’யா,  இந்திய ‘ஜனநாயகமா’


ஆர்.எஸ்.எஸ்-இன் இந்த மதவெறி பிரச்சாரம் பலரிடம் தாக்கம் செலுத்தவும் செய்தது. உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெண்கள், ராமர் கோவில் திறப்பு நாளான ஜனவரி 22-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் தங்கள் குழந்தைகளை வெளியே எடுக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்ட கொடுமையெல்லாம் அரங்கேறியது. ‘‘ராம் லாலா வருகையுடன் எங்கள் வீட்டில் குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்புகிறோம்’‘ என பிரசவத்திற்கு காத்திருக்கும் அப்பெண்களின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இது காவிக் கும்பலின் மதவாத பிற்போக்கு கருத்துகள் சமூகத்தில் எந்தளவிற்கு தாக்கம் செலுத்தியிருக்கின்றன என்பதற்கு சான்றாகும்.

இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பிற நாடுகளிலும் ராமர் கோவில் திறப்பை ‘இந்தியாவின் தேசிய விழா’வாக காட்டியது, பாசிசக் கும்பல். ராமர் கோவில் திறப்பில் கலந்துக்கொள்வதற்கான அழைப்பிதழ் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி என 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. அந்தந்த நாடுகளில் ராமர் கோவில் திறப்பை நேரலை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கிலாந்தில் மட்டும் 300 இடங்களில் ஒளிபரப்பப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரத்தில் ராமர் கோவில் திறப்பையொட்டி ‘‘ராம் ரத யாத்திரை’‘ என்ற பெயரில் ஊர்வலம் நடத்தப்பட்டது. அமெரிக்காவில், ‘‘இந்து அமெரிக்க சமூகம்’‘ என்ற அமைப்பு ஏற்பாடு செய்த கார் பேரணியில், காவிக்கொடிகளுடன் ‘‘ஜெய் ஸ்ரீ ராம்’‘ என்று கோஷமிட்டவாறு 216 கார்களை கொண்டு ஊர்வலம் நடத்தப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்-இன் சர்வதேச அமைப்பான எச்.எஸ்.எஸ். அமைப்பு உலகின் பல நாடுகளில் வளர்த்துவிடப்பட்டுள்ளதன் மூலம் இதனை சாத்தியப்படுத்தியுள்ளது பாசிசக் கும்பல்.

மேலும், ஒட்டுமொத்த அரசுக்கட்டமைப்பையும் கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ராமர் கோவில் திறப்பை ‘அரசு விழா’வாகவும் மாற்றியது. இந்தியா முழுவதும் ராமர் கோவில் திறப்பிற்காக ஜனவரி 22-ஆம் தேதி அன்று ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. அந்நாளில் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தைகள்  மூடப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கியும் அறிவித்தது.

பா.ஜ.க. ஆளும் குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், திரிபுரா, அசாம், கோவா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் பள்ளிகளுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டது. புதுச்சேரி மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசங்களிலும், பா.ஜ.க. ஆட்சி செய்யாத ஒடிசாவிலும், காங்கிரஸ் ஆளும் இமாச்சலப்பிரதேசத்திலும் கூட விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், அசாம் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. சத்தீஸ்கர் பா.ஜ.க. அரசு அயோத்திக்கு செல்வதற்கு இலவச ரயில் சேவையை அறிவித்தது. பல மாநிலங்களில், பள்ளிக்கல்லூரிகளில் ராமர் கோவில் திறப்பிற்கு பூஜைகளும் ராமன் பெயரில் போட்டிகளும் நடத்தப்பட்டன.

தமிழ்நாட்டில், கூட’‘ராமர் கோவில் திறப்பிற்கு பூஜை செய்ய தி.மு.க. அரசு தடைவிதிக்கிறது’‘ என்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர் ஆர்.என்.ரவி, தினமலர் உள்ளிட்ட சங்கிக்கூட்டம் கலவரத்தை தூண்ட முயற்சித்தது. ஆனால், காவிக்கும்பலின் அனைத்து சதித்திட்டங்களும் தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்பட்டது.

காட்டுமிராண்டித்தனத்தின் உச்சமாக, ராமர் கோவில் திறப்பு காரணமாக அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளும் ஜனவரி 22-ஆம் தேதி 2:30 மணி வரை மூடப்படும் என்று அறிவித்தது பா.ஜ.க. பாசிசக் கும்பல். மருத்துவமனைகள் மூடப்பட்டால் பல லட்சகணக்கான மக்கள் பாதிக்கப்படுவர் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும் இம்முடிவை திரும்ப பெற்றது.

‘தேசிய நாயகன்’ ராமனல்ல மோடிதான்

புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு, சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டது, ஜி20 உச்சி மாநாடு என நாட்டில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும், மோடியின் பெயர் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மோடி – அமித்ஷா கும்பல் வேலைசெய்து வருகிறது. அந்த வரிசையில் ராமர் கோவில் திறப்பும் முழுக்க முழுக்க மோடியை முன்னிறுத்தியே நடத்தப்பட்டது. ‘‘ராமர் கோவில் திறப்பை நிகழ்த்திக்காட்டியவர் மோடிதான்’‘, ‘‘இது மோடியின் சாதனை’‘, ‘‘மோடி, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்’‘ என்றுதான் ஜனவரி மாதத் தொடக்கத்திலிருந்தே சங்கிக்கூட்டமும், பா.ஜ.க. அரசும், அதன் ஊதுகுழலான ஊடகங்களும் பிரச்சாரம் செய்து வந்தன.

‘‘பிரதமர் 11 நாட்கள் விரதம் இருக்கிறார், வெறும் தரையில் படுத்து உறங்குகிறார், கோவில் கோவிலாக சுற்றுகிறார், கோவில்களை சுத்தம் செய்கிறார்’‘ என மோடியை ஒரு துறவியைப் போல இந்திய ஊடகங்கள் காட்சிப்படுத்தின. திறப்பு விழாவிற்கான அனைத்து போஸ்டர்களிலும், பேனர்களிலும் ராமன் புகைப்படம் சிறிய அளவில் ஒரு ஓரமாக இருக்க, மோடியின் முகமே பிரம்மாண்டமாக முன்னிறுத்தப்பட்டது. கோவில் திறப்பு ராமனுக்கா? மோடிக்கா? என்று சந்தேகம் எழும் அளவிற்கு ராமனை விட மோடிதான் பாசிசக் கும்பலால் முதன்மைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், பாரப்பனரல்லாதவரான மோடியின் கைகளால்தான் ராமன் சிலை நிறுவப்படப்போகிறது என்பதைக் கேட்டு பொங்கியெழுந்த சங்கராச்சாரியர்கள், மோடி- அமித்ஷா கும்பலை கடித்து குதறத் தொடங்கினார்கள். மோடி ராமர் கோவிலுக்குள் சென்று பூஜை செய்வதை சகித்துக்கொள்ள முடியாத பார்ப்பன கும்பல், முழுமையாகக் கட்டி முடிக்காமல் அரசியல் ஆதாயத்திற்காக கோவிலைத் திறக்கிறார்கள், சனாதனத்தையும் வேத மரபையும் மீறுகிறார்கள் எனக் கோவில் திறப்பிற்கு செல்லாமல் புறக்கணித்தனர்.

சங்கராச்சாரியர்களால் ஏற்பட்ட இந்த நெருக்கடியை மோடிக் கும்பல் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கோவில் கட்டிமுடிக்கப்படாமல் அவசர அவசரமாக திறக்கப்படுவது விவாதப்பொருளாகி பாசிசக் கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில், ‘‘மோடி இந்துவிரோதி’‘ என்றும் ‘‘சங்கராச்சாரியர்கள் மோடி விரோதி’‘ என்றும் விவாதங்கள் கிளம்பின. இதன்பிறகு பேசிய அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி என்ற சங்கராச்சாரியர், ‘‘நான் மோடிக்கு எதிரானவன் அல்ல, ஆனால் தர்ம சாஸ்திரத்துக்கும் எதிரானவனாகவும் இருக்க முடியாது’‘ என்று பதுங்கினார். ஆனால், பா.ஜ.க. ஆட்சியைப் பிடிப்பதற்கு மோடி பிம்பம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்திருந்த ஆர்.எஸ்.எஸ். கும்பல், மோடிதான் ராமன் சிலையை நிறுவவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.

இந்திய ஊடகங்களின் கரசேவை

பாபர் மசூதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் மோடிக் கும்பலின் மதவெறிச்செயலை காறி உமிழ்ந்துக்கொண்டிருந்த போது, இந்திய ஊடகங்களோ ‘‘ராமர் கோவில் இந்தியாவின் பெருமிதம்’‘ என காவிக்கும்பலுடன் சேர்ந்து ஊளையிட்டுக் கொண்டிருந்தன. ராமர் கோவில் திறப்பு இந்தியாவின் அனைத்து இந்தி, ஆங்கில செய்தி ஊடகங்களாலும் அதன் மாநில மொழி ஊடகங்களாலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காவி உடையும் மாலையும் அணிந்துக் கொண்டு தொலைக்காட்சி நிருபர்கள் அயோத்தியின் மைதானங்களைச் சுற்றிக்கொண்டிருந்தனர்.

டிசம்பர் 6, 1992-இல் பாபர் மசூதி இடிப்பை படம் பிடித்ததற்காக ‘‘இந்தியா டுடே’‘ பத்திரிகையாளர்கள் உட்பட பல பத்திரிகையாளர்கள் காவிக்குண்டர் படையால் கொடூரமாக தாக்கப்பட்டனர். அன்று ‘‘அயோத்தி: தேசத்தின் அவமானம்’‘ என்ற அட்டைப்படத்துடன் பத்திரிகையை வெளியிட்ட இந்தியா டுடே, ராமர் கோவில் திறப்பையொட்டி ‘‘ராமர் வருகிறார்’‘ என்ற வாசகத்துடன் கூடிய ஊடக வாகனத்தை அயோத்தியில் நிறுத்தி செய்திகளை வெளியிட்டது.

இந்தியா டுடே போன்று ‘‘தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்’‘, ‘‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’‘ போன்ற பல முக்கிய செய்தித்தாள்களின் பக்கங்கள் மோடி, யோகி ஆதித்யநாத் மற்றும் ராமர் கோவிலின் புகைப்படங்களால் நிரப்பப்பட்டிருந்தன. ‘‘ராமர் திரும்புகிறார்’‘, ‘‘இந்தியாவிற்கான ராமர் கோவில்’‘, ‘‘ஐந்து நூற்றாண்டுகளுக்கான காத்திருப்பு’‘, ‘‘தேசம் முழுவதும் பக்தி அலை’‘ என்ற தலைப்புகளில் செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால், இந்த ஊடக செய்திகளில் தப்பித்தவறி ஒரு இடத்தில் கூட பாபர் மசூதி என்ற வார்த்தை இடம்பெறவில்லை.


படிக்க: பாசிச மோடி அரசை பணியவைத்த லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்


பத்திரிகையாளரும் சமூக ஆய்வாளருமான பமீலா பிலிபோஸ் ‘‘தி வயர்’‘ இணையதளத்தில் எழுதிய கட்டுரையில், ஊடகங்களில் பாபர் மசூதி இடிப்பிற்கு முன்னர் ‘‘பாபர் மசூதி-ராம ஜென்ம பூமி மோதல்’‘ என்று பயன்படுத்தப்பட்டுவந்த கருத்தாக்கம் மசூதி இடிப்பிற்குப் பிறகு ‘‘சர்ச்சைக்குரிய இடம்’‘ என்று மாற்றப்பட்டதையும், அதன் பிறகு ‘‘பாபர் மசூதி’‘ என்ற சொல் கைவிடப்பட்டு, ராமர் கோவிலாக மாற்றப்பட்டதையும் விரிவாக விளக்கியுள்ளார். மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெரும்பாலான ஊடகங்கள் பாசிசக் கும்பலுக்கு ஊதுகுழலாக மாற்றப்பட்டதன் விளைவாக, தற்போது பாபர் மசூதியை இடித்துதான் ராமர் கோவில் கட்டப்பட்டது என்ற உண்மை இந்திய ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ராமர் கோவில் திறப்பால் வெறி முற்றிப்போன ஆர்.எஸ்.எஸ். காவி பயங்கரவாதிகள், ராமர் கோவில் திறப்பு நாளன்றும் அதற்குப் பிறகும் இந்தியா முழுவதிலும் இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தினர். மசூதிகளிலும் கிறித்துவ ஆலயங்களிலும் காவிக் கொடி ஏற்றப்பட்டன. ஆனால், ராமர் கோவில் திறப்பையொட்டி மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையையும் ஒளிபரப்பிக் கொண்டிருந்த ஊடகங்களோ, சிறுபான்மையின மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களை பற்றி வாயை திறக்கவில்லை.

எதிர்க்கட்சிகளின் ‘எதிர்ப்பு’

ராமர் கோவில் திறப்பிற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்தே, இந்நிகழ்வில் கலந்துகொள்பவர்கள், புறக்கணிப்பவர்கள் பற்றிய விவாதமும் தொடங்கியது. சி.பி.ஐ.(எம்) கட்சி மட்டும் ராமர் கோவில் திறப்பை புறக்கணிப்பதாக டிசம்பர் மாதத்திலேயே அறிவித்திருந்த நிலையில், காங்கிரசும் ‘‘இந்தியா’‘ கூட்டணியில் உள்ள பிற எதிர்க்கட்சிகளும் மோடிக் கும்பலால் இந்துவிரோதிகள், தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுவோம் என்ற அச்சத்தில் அமைதி காத்துவந்தன.

இந்நிலையில், ஜனவரி 10-ஆம் தேதிக்குப் பிறகு காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி என இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றாக ராமர் கோவில் திறப்பை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதை ஜனநாயக சக்திகள் பலரும் வரவேற்றிருந்தனர். இந்தியா கூட்டணியை பாசிசத்திற்கு எதிராக முன்னிறுத்தும் ‘பாசிச எதிர்ப்பாளர்கள்’ சிலர் இதை ஒரு புரட்சிகர நடவடிக்கை என்றுகூட கூறினார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளின் ‘எதிர்ப்பு’ எத்தகையது என்பதை அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளும், அவர்கள் கூறிய கருத்துகளுமே அம்பலப்படுத்தின.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி, ‘‘2019 உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கடைப்பிடித்து, ராமரை வணங்கும் லட்சக் கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஸ்ரீ மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மற்றும் ஆதீர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. விடுத்த ராமர் கோவில் திறப்பு நிகழ்ச்சிக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்’‘ என ‘ராம பக்தர்களுக்கு’ மனக்கசப்பு ஏற்படாத வகையில் அறிக்கை விட்டிருந்தது.

காங்கிரசின் மற்றொரு முக்கிய தலைவரான சசிதரூர், ‘‘நான் திறப்பு விழாவிற்கு போக மாட்டேன். ஆனால், பிறகொரு நாள் போவேன். ராமர் கோவிலுக்கு போவது என்பது தனி நபர் விருப்பம்’‘ எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையின் புறக்கணிப்பு முடிவை ‘‘அவமதிப்பு’‘ என்று காங்கிரசின் சில தலைவர்களே கண்டித்தனர். போபால் காங்கிரஸ் கட்சியின் அலுவலக வாயிலில், ‘‘ராஜீவ் காந்தியின் கனவு நனவாகியுள்ளது’‘ என ராமர் கோவில் திறப்பிற்கு போஸ்டரே ஒட்டினர்.

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ராமர் கோவில் திறப்பை புறக்கணிப்பதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதேவேளையில், ‘‘ராமர் கோவில் கட்டுவது தனது தந்தை பாலா சாகேப் தாக்கரேவின் கனவு. இன்று கோவில் கட்டப்படுவது மகிழ்ச்சியின் தருணம்’‘ என்று சிலாகித்தார். தேசியவாதக் காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் ராமர் கோவிலுக்கு நிச்சயம் செல்வோம் என வாக்குறுதி அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினை தவிர, ராமர் கோவில் திறப்பை புறக்கணிப்பதாக கூறிய எந்த எதிர்க்கட்சி தலைவரும் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து மறந்தும் வாய்திறக்கவில்லை. பா.ஜ.க. தன் தேர்தல் ஆதாயத்திற்காக ராமர் கோவிலை பயன்படுத்திக் கொள்கிறது என்பது மட்டுமே இவர்களின் கவலை. அதனால்தான், ராமர் கோவில் கட்டப்பட்டது இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று பிரச்சாரம் செய்யவில்லை. இதுவே எதிர்க்கட்சிகளின் பா.ஜ.க. ‘எதிர்ப்பின்’ எதார்த்த நிலை.

போலி மதச்சார்பின்மை – போலி ஜனநாயகக் கட்டமைப்பு
இந்துராஷ்டிரத்திற்கான தூண்கள்

ஜனவரி 22 அன்று இந்தியாவின் சில இடங்களில் கூட்டங்கள், ஒருங்கிணைப்புகள், ஆவணப்பட திரையிடல்கள் மூலம் ராமர் கோவில் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவற்றில் பெரும்பாலானவை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை (Preamble) வாசிப்பதாகவும் அதிலுள்ள மதச்சார்பின்மை என்ற வார்த்தை குறித்து விவாதிப்பதுமாகவே இருந்தது. சமூக வலைதளங்களில் அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரை பகிரப்பட்டது; கல்லூரிகளில் முகவுரை வாசிக்கப்பட்டது. ராமர் கோவில் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதப்பட்ட சில கட்டுரைகளும் இந்தியாவின் போலி மதச்சார்பின்மையை வட்டமடித்தவாறே இருந்தன.

ராமர் கோவில் திறப்பு மூலம் இந்தியாவின் ‘மதச்சார்பின்மையை’ பா.ஜ.க. கும்பல் சிதைக்கிறது, அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டும் என்பதே மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளின் உள்ளடக்கமாகும்.

ஆனால், இந்தியாவில் உண்மையான மதச்சார்பின்மை என்று ஒன்றில்லை. நிலவுகின்ற போலி மதச்சார்பின்மை சிதைக்கப்படுவது முதன்முறையும் இல்லை. ராமர் கோவில் திறப்பு ‘அரசு விழாவாக’ மாற்றப்பட்டதற்கும் இந்தியாவில் பாசிசம் வளர்வதற்குமான காரணமாக, பலரால் தீர்வாக காட்டப்படும் போலி மதச்சார்பின்மை, போலி ஜனநாயகக் கட்டமைப்பு, அரசியல் அமைப்பு சட்டம் ஆகியவைதான் உள்ளன.

ஏனெனில், மதச்சார்பின்மை என்ற வார்த்தை அரசியலமைப்பில் பெயரளவில் சேர்க்கப்பட்ட ஒன்றுதான். 1950-இல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை மதச்சார்ப்பற்ற நாடு என்று குறிப்பிடவில்லை. 1976-இல் கொண்டுவரப்பட்ட 42-வது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலமே ‘‘இந்தியாவை மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயகக் குடியரசாக அமைப்பதற்கு உறுதி பூணுவதாக’‘ இந்திய அரசியல் சாசனத்தின் முகவுரையில் சேர்க்கப்பட்டது. அதற்கான விளக்கம், வரையறை எதுவும் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்படவில்லை.

உண்மையில் மதச்சார்பின்மை என்றால், மனிதனின் அன்றாட வாழ்க்கையைக் கட்டுப்படுத்தவும், ஒழுக்கத்தை வரையறுக்கவும் மதம் பெற்றிருக்கின்ற அனைத்து சட்டப்பூர்வமான அதிகாரங்களையும் பறிப்பது, மதத்துடனான அனைத்து உறவுகளிலிருந்தும் அரசு தன்னைத் துண்டித்துக்கொள்வது, மதம் தனிநபர் நம்பிக்கை சார்ந்த சொந்த விவகாரம் என்று வரையறுப்பது என்பதே அதன் அர்த்தம். ஆனால், இந்தியாவில் மதமும் அரசியலும் அவ்வாறு பிரிக்கப்படவில்லை. அது தெரியாமல் நிகழ்ந்த தவறல்ல, தெரிந்தே செய்யப்பட்ட மோசடி.

மதமும் அரசியலும் தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டும் என்பதை மேற்கத்திய சிந்தனை என்று கூறி ஆர்.எஸ்.எஸ்-இன் முன்னோடிகள், கடுமையாக எதிர்த்தனர். இதனால், 1947 ‘சுதந்திரத்திற்கு’ பிறகு இந்தியாவின் பிரதமரான நேரு, மதச்சார்பின்மைக்கு சரியான மொழிப்பெயர்ப்பு வார்த்தை இல்லை, என்பதால் அது தவறாக புரிந்துக்கொள்ளப்படுகிறது, உண்மையில் ‘‘இந்திய அரசு அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும். அவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்கும்’‘ என்று மதச்சார்பின்மைக்கு உலகிலேயே வேறு எங்கும் அளிக்கப்படாத ஒரு புதிய விளக்கத்தை கொடுத்தார்.

இதனையடுத்து இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் மதச்சார்பின்மை என்ற வார்த்தை அரசியலைமைப்பின் முகவுரையில் பெயரளவில் சேர்க்கப்பட்டதே ஒழிய, அதனை இந்திரா காந்தியோ காங்கிரசோ நடைமுறையில் பின்பற்றியதில்லை. மேலும்,  பெயரளவில் இருந்த மதச்சார்பின்மையை தனது வாக்குவங்கிக்காக சிதைக்க தொடங்கியதும் காங்கிரஸ்தான்.

சான்றாக, 1983-ஆம் ஆண்டு விஷ்வ இந்து பரிஷத் ஆதரவுடன் கட்டப்பட்ட பாரத் மாதா கோவிலை இந்திரா காந்தி திறந்து வைத்துள்ளார். அவருக்கு அடுத்து பிரதமரான ராஜீவ் காந்தி குறித்து நாம் பேச வேண்டியதில்லை. ‘‘பாபர் மசூதி இடத்தில் இருந்த தற்காலிக ராமர் கோவிலின் பூட்டை ராஜீவ் காந்திதான் திறந்து வைத்தார். வரலாற்றை மறந்துவிடக் கூடாது’‘ என்று மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பேசியதே போதுமானவை. எனவே, பெரும்பான்மை மக்களின் வாக்குகளை கவர்வதற்காக காங்கிரசும் மதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி பெயரளவில் இருந்த மதச்சார்பின்மையை சிதைத்து வந்தது என்பதே உண்மை.

அதேபோல், 1949-இல் பாபர் மசூதிக்குள் ராமன் சிலையை இந்து மதவெறியர்கள் திருட்டுத்தனமாக வைத்தது முதல் இறுதியாக 2019-ஆம் ஆண்டு பாபர் மசூதி நிலத்தை ராமர் கோவில் கட்ட தாரைவார்த்தது வரை பாபர் மசூதியை காவி பாசிஸ்டுகள் ஆக்கிரமித்த ஒவ்வொரு கட்டத்திலும் இந்திய நீதிமன்றங்களின் கரசேவை அடங்கியிருக்கிறது. இந்த தீர்ப்புகள் அனைத்தும் தீர்வாக முன்னிறுத்தப்படும் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டிருக்கின்றன. அதனால்தான், ராமன் கோவில் திறப்பில், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு மோடி நன்றி தெரிவித்திருந்தார், அவர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இதற்கு நேர்மாறாக ராமர் கோவில் திறப்பையொட்டி, ‘‘மதச்சார்பற்ற இந்தியாவை பா.ஜ.க. கும்பல் இந்து தேசமாக மாற்றிவிட்டது’‘, ‘‘தாங்கள்தான் உண்மையான இந்துக்கள் என்று எதிர்க்கட்சிகள் நிரூபிக்கவேண்டிய நிலைக்கு பா.ஜ.க. தள்ளியிருக்கிறது’‘ என்று ஜனநாயகச் சக்திகள் பலரால் விவாதிக்கப்படுகிறது.

நிலவுகின்ற போலி மதச்சார்பின்மையும், போலி ஜனநாயகமும் அரசியல் அமைப்பு சட்டமுமே இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்கு பாசிசக்கும்பலுக்கு போதுமானதாக உள்ளது என்பதை ராமர் கோவில் திறப்பு நன்கு உணர்த்தியிருந்தாலும், இந்த கட்டமைப்பில் உள்ள பிரச்சினையை மறைத்து விட்டு பா.ஜ.க மட்டும்தான் பிரச்சினை என்ற பிம்பத்தை கட்டமைக்க முயல்கின்றனர்.  இந்தக் கட்டமைப்பை மீட்டெடுக்க முடியும் என்று போலியான நம்பிக்கையை தொடர்ந்து விதைத்து வருகின்றனர். ஆனால், இந்த போலி ஜனநாயக அரசுக்கட்டமைப்பை பயன்படுத்தி பாசிசக்கும்பல் தனது சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு உருவாக்கியிருக்கும் ஜி.எஸ்.டி, நீட் போன்ற இந்துராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானங்களை என்ன செய்யப்போகிறார்கள்? என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இருக்காது.

தற்போது, ராமர் கோவில் திறப்பிற்கு பிறகு நாடுமுழுவதும் இஸ்லாமியர், கிறித்துவர்கள், தலித் மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்களை தொடுத்து வருகிறது பாசிசக்கும்பல். அடுத்தது வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவருவதற்கு குழு அமைத்து வேலை செய்துவருகிறது. இவையெல்லாம், பாசிசக் கும்பல் இந்துராஷ்டிரத்திற்கான அடுத்தக்கட்ட பாய்ச்சலை நோக்கி முன்னேறி வருகிறது என்பதையே காட்டுகிறது. எனவே, இந்த போலி ஜனநாயக மாயயையில் மறைந்துக்கொண்டு உண்மையைக் காண மறுப்பதனால், பாசிசச் சர்வாதிகாரம் நிலைநிறுத்தப்படுவதை தவிர வேறு எதுவும் நடக்கப்போவதில்லை. உண்மையான ஜனநாயக உரிமைகள், மதச்சார்பின்மை பெறுவதற்கு நிலவுகின்ற போலி ஜனநாயக கட்டமைப்பை அடித்து வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசுக்காக போராடுவது ஒன்றே தீர்வு.


மதி

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவசாயிகள் போராட்டமும் எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதமும்

விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை என்ற சட்டப்பூர்வ உரிமையைக் கோரி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டம் தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே விவசாயிகள் அறிவிப்பை வெளியிட்டதுடன், அதற்கான தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக, பிப்ரவரி 11-ஆம் தேதி முதலாக விவசாயிகளின் கோரிக்கைகள், அவர்கள் போராட்டத்திற்கு தயாராவது, விவசாயிகள் டெல்லியில் நுழைவதைத் தடுப்பதற்கு ஒன்றிய அரசு இராணுவத்தைக் கொண்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது உள்ளிட்ட செய்திகள் ஆங்கில செய்தி ஊடகங்களில் வந்து கொண்டிருந்தன.

அதுவரை, காங்கிரசு, சி.பி.எம்., சி.பி.ஐ. உள்ளிட்ட தேசிய கட்சிகளும் தமிழ்நாட்டில் இருக்கும் முதன்மையான பா.ஜ.க. எதிர்க்கட்சிகளும் விவசாயிகளின் இந்தப் போராட்டம் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் செய்தி ஊடகங்கள், தி.மு.க., சி.பி.எம்-இன் செய்தி ஊடகங்களும் இது தொடர்பாக எந்த செய்திகளையும் வெளியிடாமல், விவசாயிகளின் போராட்டத்தை இருட்டடிப்பு செய்தன.


படிக்க : மீண்டும் டெல்லி சலோ: பாசிஸ்டுகளை வீழ்த்த மக்கள் போராட்டங்களே திறவுகோல்!


இந்நிலையில், பிப்ரவரி 13-ஆம் தேதியான நேற்று டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகள் மீது நாட்டின் எதிரிகளைத் தாக்குவதைப் போன்றதொரு தாக்குதலை இந்திய இராணுவத்தைக் கொண்டு நடத்தியது மோடி அரசு. இதனைதொடர்ந்து, டெல்லி விவசாயிகளின் போராட்டம் உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், நாட்டின் முதன்மையான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரசின் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே ஊடகங்களுக்கு அளித்த பேட்டி வெளியாகியிருந்தது. அந்தப் பேட்டியில், “மத்தியில் காங்கிரசு ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை இப்போது அறிவிக்கிறேன். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எங்களின் முதல் வாக்குறுதி இது. ஆட்சிக்கு வந்ததும் இந்த வாக்குறுதியை நிச்சயம் செயல்படுத்துவோம்” என்று கூறியுள்ளார்.

விவசாயிகளின் இந்தக் கோரிக்கையானது, குறிப்பாக, வடமாநில விவசாயிகளுக்கு உயிராதாரமான ஒரு கோரிக்கை என்பது மோடி ஆட்சி வருவதற்கு முன்பாக, 2014-லிருந்தே பேசப்பட்டுவரும் விவாதப்பொருளாகும். பாசிச மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தப் பின்னர், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாகக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் நயவஞ்சகமாக விவசாயிகளை ஏமாற்றியது. அன்றிலிருந்து குறைந்தபட்ச ஆதாரவிலைக்கான கோரிக்கைக்கான போராட்டங்கள் அதிகரித்து வருவது காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு நன்கு தெரியும்.

விவசாயிகள் போராட்ட காட்சி

2020-ஆம் ஆண்டின் இறுதியில் டெல்லி விவசாயிகள் தொடங்கிய, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான, “டெல்லி சலோ” போராட்டத்தின் போதே இது அதிகம் விவாதிக்கப்பட்ட விசயமும் ஆகும். இந்தப் போராட்டத்தின் வெற்றியானது, மோடி-அமித்ஷா கும்பலை அரசியல் ரீதியாக தோல்வி முகத்திற்குத் திருப்பியது.

தமிழ்நாட்டிற்கு ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல, வட மாநிலங்களுக்கு விவசாயிகள் போராட்டம் மோடி கும்பலைப் பணியவைத்தப் போராட்டமாகும்.

மோடி-அமித்ஷா கும்பலுக்கு எதிராக ஒன்றிணைவதாகக் கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள், விவசாயிகள், உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டங்களை ஆதரித்து அவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, மோடி-அமித்ஷா கும்பல் உருவாக்கியுள்ள, “பொம்மை” நாடாளுமன்றத்தில் வாதப் “போரில்” ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டுவதாக நாடகமாடுகின்றனர்.

இப்போதும் கூட, விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னதாகவே காங்கிரசு உள்ளிட்ட எந்த எதிர்க்கட்சிகளும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஆதரிப்பதாக சிறு வாக்குறுதியையும் கொடுக்கவில்லை.

கார்ப்பரேட் வர்க்கங்களுக்கு சேவை செய்வது, ஆனால், பா.ஜ.க-வை எதிர்ப்பது என்று உழைக்கும் மக்களுக்கு துரோகம் செய்யும் திட்டத்தை தங்களது கொள்கையாக எதிர்க்கட்சிகள் கொண்டிருப்பதுதான் இதற்குக் காரணமாகும்.


படிக்க : பிப்.13: டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம்! | தோழர் வெற்றிவேல்செழியன்


மோடி-அமித்ஷா கும்பலுக்கு எதிர்ப்பைக் காட்டுவதன் மூலமாக மட்டுமே, மக்களிடம் உள்ள மோடி எதிர்ப்பலையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அப்பட்டமான சந்தர்ப்பவாதப் போக்கையே எதிர்க்கட்சிகள் கடைப்பிடிக்கின்றனர்.

பாசிச பா.ஜ.க-வின் அடிக்கட்டுமானங்களான ஜி.எஸ்.டி., நீட், புதியக் கல்விக் கொள்கை, சி.ஏ.ஏ., கிரிமினல் சட்டத்திருத்தம், தொழிலாளர்கள் சட்டத்திருத்தம், காஷ்மீருக்கான சிறப்புரிமை ரத்து  உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்கள், திட்டங்களை திருப்பப் பெறுவதாக வாக்குறுதிகள் எதையும் கொடுக்காமல், விவசாயிகள் விளைவிக்கும் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை, தொழிலாளர்களுக்கு எட்டுமணி நேர வேலை, சிறு தொழில்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை தாமாக முன்வந்து ஆதரிக்காமல், எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தைப் “பாதுகாக்கப்” போவதாகக் கூறுகின்றன.

தங்களது இந்த சந்தர்ப்பவாதப் போக்கை எதிர்க்கட்சிகள் கைவிட்டு, விவசாயிகள்-தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டத்தில் முன்நிற்காதவரை எதிர்க்கட்சிகளை மக்கள் நம்பப்போவதில்லை. ஆகையால், விவசாயிகள், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை கொள்கை ரீதியாக முன்வைத்து மக்களின் களப்போராட்டங்களில் பங்கேற்பதன் மூலம் மட்டுமே எதிர்க்கட்சிகளால் பாசிச பா.ஜ.க-வை தேர்தலில் கூட வீழ்த்த முடியும்.


தங்கம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி – இதனை எப்படிப் பார்ப்பது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த ஜனவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டுள்ளார். இதனை எப்படிப் பார்ப்பது?

ஸ்லாமிய மக்களுக்கு எதிராக வெறுப்பு அரசியலைத் தூண்டி, அவர்களைப் படுகொலை செய்து, அவர்களது இரத்தத்தில் பாசிசத்தை அரங்கேற்றிவரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் அடிமையான அ.தி.மு.க.வை எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரிப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி முறிவு தேர்தல் நாடகம் என்பது பாமர மக்களும் அறிந்த ஒன்று. பா.ஜ.க-தான் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மீது அடக்குமுறையை ஏவியது; அக்கட்சியை தடைசெய்வதற்கான முயற்சியிலும் இறங்கியது. இப்படிப்பட்ட பாசிச பா.ஜ.க-வை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி, இஸ்லாமிய மக்களை ஜனநாயகப் பூர்வமாகவும் பாசிசத்திற்கு எதிராகவும் அணிதிரட்ட வேண்டியது எஸ்.டி.பி.ஐ-யின் கடமையாகும்.

பல இஸ்லாமிய அமைப்புகள் தி.மு.க. கூட்டணியில் உள்ளன அல்லது தி.மு.க.வை ஆதரிக்கின்றன. எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இஸ்லாமிய சிறைவாசிகளை தி.மு.க. அரசு விடுதலை செய்யவில்லை என்று அ.தி.மு.க.வை ஆதரிப்பதாக கூறுகின்றனர். ஆனால், அதற்காக அப்பாவி இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து அவர்கள் சிறைக்குச் செல்வதற்கு காரணமான பா.ஜ.க.விற்கு அடிமையாக இருக்கும் அ.தி.மு.க.வை ஆதரிப்பது எந்தவகையில் சரி என்பதை அக்கட்சியில் இருக்கும் இஸ்லாமியர்கள்தான் கூற வேண்டும்.

இன்றைய எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்ல, ஜெயலலிதா ஆட்சி காலம் முதல் இஸ்லாமிய மக்கள் மீதான அடக்குமுறைகள் எத்தனை எத்தனை? தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவந்து இலட்சக்கணக்கான இஸ்லாமிய மக்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் பா.ஜ.க.வின் சதித்திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்ததைப் பற்றி எஸ்.டி.பி.ஐ.யினர் ஏன் பேசுவதில்லை என்பதை சிந்திக்க வேண்டும்.

ஆகையால், பாசிசம் அரங்கேறி வருகின்ற சூழலில், பாசிச எதிர்ப்பு சக்திகளைப் பிளவுப்படுத்தி, பா.ஜ.க.வின் ‘பி டீம்’-ஆக வடக்கே ஓவைசி போல தமிழ்நாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி செயல்படுவதை இஸ்லாமிய மக்கள் புரிந்து கொண்டு அ.தி.மு.க.-எஸ்.டி.பி.ஐ. கும்பலைப் புறக்கணிக்க வேண்டும்.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பிப்.13: டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம்! | தோழர் வெற்றிவேல்செழியன்

பிப்.13: டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம்! | தோழர் வெற்றிவேல்செழியன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



எது கேலிக்கூத்து? நிதிஷ்குமாரின் ‘பல்டி’யா,  இந்திய ‘ஜனநாயகமா’

‘‘நாடு நெருக்கடியில் உள்ளது, அரசியல் சாசனம் ஆபத்தில் உள்ளது, மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன, தேசிய நலன் கருதி, கருத்து வேறுபாடுகளை கலைந்து, ஜனநாயகத்தை காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’‘ – இவை கடந்த ஆண்டு ஜூன் மாதம், பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தில் பா.ஜ.க-விற்கு எதிராக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உதிர்த்த வார்த்தைகள்.

அதே நிதிஷ்குமார்,  ஜனவரி 28-ஆம் தேதி பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து ஒன்பதாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அவருடன் பா.ஜ.க-வின் தலைவர்கள், சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய்குமார் சின்ஹா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

நிதிஷ்குமாரின் இந்தச் செயலை பலரும் விமர்சித்து வந்தாலும், பெரும்பான்மையான விவாதங்கள் நிதிஷின் இச்செயல் ‘‘இந்தியா கூட்டணிக்கு எந்தெந்த வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்’‘ என்ற கோணத்தில்தான்  நடத்தப்படுகின்றன. இன்னும் சிலரோ, நிதிஷ்குமாரை விமர்சிக்க சென்றால், அவர் ‘ஒருங்கிணைத்த’ இந்தியா கூட்டணியையும் விமர்சிக்க நேரும் என்பதால் பா.ஜ.க-வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதோடு நிறுத்திக்கொள்கின்றனர்.

ஆனால், நிதிஷ்குமாரின் யோக்கியதையைப் பற்றிப் பேசும் இவர்கள், அவர் அங்கம் வகித்த இந்தியா கூட்டணியைப் பற்றியும், நிதிஷ்குமார் போன்ற கேடுகெட்ட பிழைப்புவாதிகளை உருவாக்கும், வளர அனுமதிக்கும் இந்திய ‘ஜனநாயகத்தின்’ உண்மைநிலை பற்றியும் வாய்திறப்பதில்லை.

‘பல்டி’ குமார்

நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியிலிருந்து விலகி பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என ஒருவார காலமாகவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. ‘‘நிதிஷ்குமார் தான் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர், அவர் இவ்வாறு செய்யமாட்டார்’‘ என்று இந்தியா கூட்டணியின் ஆதரவாளர்கள் சிலர் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் அவர்கள் முகத்தில் எல்லாம் கரியை பூசுமாறு நிதிஷ்குமார் அந்தர் பல்டி அடித்துள்ளார்.

2022-இல், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு நிதிஷ்குமார், ‘‘இனி என் வாழ்நாளில், எந்த வகையிலும் பா.ஜ.க. வழியில் செல்ல மாட்டேன்’‘, ‘‘பா.ஜ.க-வுடன் இணைவதைவிட என் உயிரை மாய்த்துக்கொள்வதே மேலானது’‘ என்றெல்லாம் சவடால் அடித்திருந்தார்.


படிக்க: நிதிஷ்குமார் – “INDIA” கூட்டணி – பாசிச எதிர்ப்பு | தோழர் சிவா


அதேபோல, ‘‘சாதிவெறியைப் பரப்பும் நிதிஷ்குமாருடன் பா.ஜ.க. இனி ஒருபோதும் கைக்கோர்க்காது, பீகார் முதலமைச்சருக்கு பா.ஜ.க-வின் கதவுகள் இனி ஒருபோதும் திறக்காது’‘ என்று கூறியிருந்தார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

ஆனால் இன்று நிதிஷ்குமாரின் பதவியேற்பு விழாவில் முதல் ஆளாக சென்று முதல்வரிசையில் அமர்ந்திருந்த, பா.ஜ.க-வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, ‘‘நிதிஷ்ஜீ மீண்டும் என்.டி.ஏ. கூட்டணிக்கு திரும்பியது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஜே.டி.யூ. மற்றும் நிதிஷ்ஜீ-யின் இயல்பான கூட்டணி என்.டி.ஏ. மட்டுமே’‘ என்று பாசிஸ்டுகளுக்கே உரிய இரட்டை நாக்குடன் நிதிஷ்குமாரை வரவேற்று சிலாகித்துள்ளார்.

கேட்பதற்கே கேலிக்கூத்தாக இருக்கிறதல்லவா?

ஆனால், நிதிஷ்குமார் இப்படி பல்டி அடிப்பது முதல்முறையல்ல, ‘‘பல்துராம்’‘ (மாறிக்கொண்டே இருப்பவர்) என்று பெயர் சூட்டும் அளவிற்கு அவர் பல்டி அடிப்பதில் இழிபுகழ்பெற்றவர்.

கடந்த பத்தாண்டுகளில் மட்டும் நிதிஷ்குமார் நான்குமுறை கூட்டணி தாவியுள்ளார். 2013-ஆம் ஆண்டு பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தனது பிரதமர் கனவு கலைந்துபோனதாலும், இஸ்லாமிய மக்களின் வாக்குவங்கியை காப்பாற்றி கொள்வதற்காகவும், பா.ஜ.க-வுடனான தனது 17 ஆண்டுகால கூட்டணியை முறித்து ‘மதச்சார்பற்ற’ வேடம் தரித்தார், நிதிஷ்குமார். அதன்பிறகு 2015-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ‘‘மெகா கூட்டணி’‘ அமைத்து தேர்தலில் வென்று முதலமைச்சராக பதவியேற்றார்.

ஆனால்,  2017-இல் மெகா கூட்டணியில் இருந்த லாலு பிரசாத் யாதவ் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி நிதிஷ்குமாரை அக்கூட்டணியில் இருந்து பெயர்த்தெடுத்து தனது கூட்டணியில் இணைத்துக்கொண்டது மோடி-அமித்ஷா கும்பல். அதன்பிறகு வந்த 2020 சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வின் என்.டி.ஏ. கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்டு ஆட்சி அமைத்தார். அத்தேர்தலில் நிதிஷ்குமாரின், ஐக்கிய ஜனதா தளத்தை விட பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றியிருந்தது. என்னதான் நிதிஷ்குமார் முதலமைச்சராக இருந்தாலும், பா.ஜ.க-வே பீகாரில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இப்படியேப்போனால், தனது கட்சியையே பா.ஜ.க. விழுங்கிவிடும் என்று அஞ்சிய நிதிஷ்குமார் மீண்டும் 2022-இல் பா.ஜ.க-வுடனான என்.டி.ஏ கூட்டணியை முறித்துக்கொண்டு மெகா கூட்டணியில் இணைந்துக்கொண்டார்.

இதற்கடுத்து தான் பா.ஜ.க-விற்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க போவதாக நிதிஷ்குமார் அறிவித்து, அதற்கான முயற்சியில் இறங்கினார். கடந்தாண்டு ஜூன் மாதத்தில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நிதிஷ்குமார் தலைமையில் நடத்தப்பட்டதையடுத்து, 28 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி உருவாகியது. அதாவது, பா.ஜ.க-விற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கபடியாடிக்கொண்டிருந்த பிழைப்புவாதியான நிதிஷ்குமாரின் தலைமையில்தான் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டு ஏழு மாதங்கள் கூட ஆகாத நிலையில் மறுபடியும் பல்டியடித்து பா.ஜ.க-வுடனே இணைந்துள்ளார்.

நிதிஷ்குமாரின் கூட்டணி தாவல்:பதவி ஒன்றே நோக்கம்

நிதிஷ்குமார் தற்போது பா.ஜ.க. கூட்டணியில் இணைந்ததற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகிறது. முதலில், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்படுவோம் என்று நிதிஷ்குமார் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், இந்தியா கூட்டணியில் ஒற்றை ஒருங்கிணைப்பாளர் பதவியே உருவாக்கப்படவில்லை. இரண்டாவதாக, ‘‘இந்தியா கூட்டணியின் முகமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை முன்னிறுத்தலாம்’‘ என்று மம்தா பானர்ஜியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் முன்வைத்தது, இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகலாம் என்று எண்ணியிருந்த நிதிஷ்குமாரின் கனவில் மண்ணைப் போட்டது.

இதனால் எரிச்சலடைந்த நிதிஷ்குமார், அதற்கடுத்து நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவை குறிவைத்து ‘‘இந்திதான் நம் தேசிய மொழி, அவர்கள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும், மொழிபெயர்க்க முடியாது’‘ என்று திமிராக பேசியிருந்தார். இது பெரும் பேசுபொருளானது. அப்போதே, நிதிஷ்குமார் கூட்டணியை விட்டு விலகப்போகிறார் என்று பேச்சுகள் எழுந்தன.

மற்றொருபுறம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நிதிஷ்குமாருடன் கூட்டணியில் இருந்த ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவ் தன் மகன் தேஜஸ்வி யாதவை முதல்வராக்குவதற்கான இரகசியச் சந்திப்பு நடத்தியதாக செய்திகள் வெளியாகியது. இதனையடுத்து அச்சந்திப்பில் ஈடுபட்டிருந்த ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக இருந்த லாலன் சிங்கின் பதவியை நிதிஷ்குமார் பறித்தார்.

இதனுடன், பீகாரில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் (ஓ.பி.சி.) வாக்குகளை கவர்வதற்காக, கடந்தாண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் வகையில் நிதிஷ்குமார் சட்டம் இயற்றியிருந்தார். இதனையடுத்து, சாதிவாரி கணக்கெடுப்பு தேசிய அளவில் பேசுப்பொருளானதோடு நடந்துமுடிந்த ஐந்து மாநிலத் தேர்தலிலும் இந்தியா கூட்டணியினரால் பா.ஜ.க-விற்கு எதிரான ஆயுதமாக முன்னெடுக்கப்பட்டது. இது பா.ஜ.க-வை நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

அதற்குபிறகு பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை கவர்வதற்கான வேலையில் பா.ஜ.க. தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, பீகாரின் முன்னாள் முதல்வராக இருந்த, பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சாதி மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய கர்பூரி தாக்கூர் என்பவருக்கு பாரத் ரத்னா விருதை அறிவித்துள்ளது. இது பீகாரில் நிதிஷின் ஓ.பி.சி. வாக்குவங்கியில் மேலும், சரிவை ஏற்படுத்தும் என்றும் பேசப்படுகிறது.

ஒருபுறம்,தேர்தல் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையிலும் தொகுதி பங்கீட்டை கூட முடிக்க முடியாமல் இந்தியா கூட்டணி திணறி வருகிறது. அதேபோல் அக்கூட்டணியில் தனக்கு பிரதமர் வேட்பாளர் வாய்ப்பு இல்லை என்பதும் உறுதியாகிவிட்டது. இதனைவிட, இந்த கூட்டணியில் நீடித்தால் லாலு பிரசாத் யாதவே தனது முதல்வர் பதவியை பறித்துவிடுவார் என்ற அச்சமும் நிதிஷ்குமாருக்கு உள்ளது. எனவே, இந்தியா கூட்டணியை போன்றதொரு ‘மூழ்கும் கப்பலில்’ இருந்து பதவியை பறிக்கொடுப்பதைவிட பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்து அடிமையாக இருந்தாலும் முதல்வர் பதவியுடன் ‘கௌரவமாக’ இருக்கலாம் என்ற முடிவுக்கு நிதிஷ்குமார் வந்துவிட்டார். இந்த பிழைப்புவாத கணக்கே நிதிஷ்குமாரின் தற்போதைய அந்தர் பல்டிக்கான காரணம்.


படிக்க: மீண்டும் டெல்லி சலோ: பாசிஸ்டுகளை வீழ்த்த மக்கள் போராட்டங்களே திறவுகோல்!


ஒருபுறம் நிதிஷ்குமார் பிழைப்புவாதத்திற்காக இந்தியா கூட்டணியிலிருந்து விலகி பா.ஜ.க-வுடன் கூட்டு சேர்ந்துள்ளார். இன்னொருபுறம் கூட்டணியை விட்டு வெளியேறாவிட்டாலும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கும், இக்கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் ஒத்த கருத்திற்கு வர முடியாத காங்கிரஸ் கட்சிக்கும் இதே பிழைப்புவாத கண்ணோட்டம்தான் உள்ளது. தங்களுக்கு இடையிலான பதவி, அதிகார போட்டியை கூட சுமூகமாக முடித்துகொள்ள முடியாதளவிற்கே இக்கட்சிகளின் பா.ஜ.க. எதிர்ப்பு உள்ளது. மற்றப்படி இவர்களுக்கு பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டும் என்ற உறுதிப்பாடோ அதற்கான கொள்கையோ கிடையாது.

பாசிச எதிர்ப்பாக இருந்தாலும் பா.ஜ.க. எதிர்ப்பாக இருந்தாலும் மாற்று திட்டமும், கொள்கைகளும் முக்கியம் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பா.ஜ.க.விற்கு எதிரான மாற்றுத்திட்டம் ஏதும் இல்லாமல் ‘பா.ஜ.க. எதிர்ப்பு’ என்ற ஒன்றை  மட்டும் வைத்துகொண்டு உருவாக்கப்படும் கொள்கையற்ற கூட்டணி சந்தர்ப்பவாதமாக, பிழைப்புவாதத்திற்கானதாக மட்டுமே இருக்கும்.

இந்திய ‘ஜனநாயகத்தின்’ கேலிக்கூத்து

ஓட்டுக்கட்சிகளின் பிழைப்புவாதத்தை விமர்சிக்கும் அதேவேளையில், ஒரே நாளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, வேறொரு கட்சியுடன் கூட்டணி வைத்து, அதேநாளில் முதல்வராக பதவியேற்க முடியும் என்ற இழிநிலைக்கு வாய்ப்பு வழங்கும் இந்திய ‘ஜனநாயகத்தின்’ கேலிக்கூத்தை பற்றியும் நாம் பேச வேண்டியுள்ளது.

பதவி, அதிகாரத்திற்காக கூட்டணி மாறுவது, கட்சித் தாவுவது எல்லாம் இந்திய தேர்தல் ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘மாண்புகளே’. தேர்தலுக்கு முன்னர் ஒரு கூட்டணியில் இருந்து, பிரச்சாரம் செய்து, மக்களின் வாக்குகளைப் பெற்று, ஆட்சியைப் பிடிக்கலாம்; தேர்தலுக்கு பிறகு அந்த கூட்டணியை முறித்துகொண்டு, யாருக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்களோ அவர்களுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை தொடரலாம்.

அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு பதில் சொல்ல வேண்டுமென்ற அவசியம் ஓட்டுக்கட்சிகளுக்கு கிடையாது. அதேப்போல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி கட்சியோ, கூட்டணியோ தாவினால் அவர்களை தண்டிப்பதற்கான அதிகாரத்தையும் இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பு மக்களுக்கு வழங்குவதில்லை. அவர்கள் என்ன ஆட்டம் போட்டாலும் மக்கள் சகித்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்திய ஜனநாயகத்தின் அவலநிலை.

இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பை மற்ற ஓட்டுக்கட்சிகளைவிட, பா.ஜ.க. தன்னுடைய பாசிசச் சர்வாதிகாரத்தை நிறுவுவதற்காக ‘திறம்பட’ பயன்படுத்தி வருகிறது. இதற்காக, ஆளும் கட்சிகளின் கூட்டணிகளை உடைப்பது, எம்.எல்.ஏ-க்களை குதிரைபேரம் மூலம் விலைக்கு வாங்குவது, அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டி பணியவைப்பது எனப் பல்வேறு சட்டப்பூர்வமான உத்திகளை பா.ஜ.க. கும்பல் கையாண்டுவருகிறது. இதன்மூலம் மக்கள் யாருக்கு ஓட்டுப்போட்டாலும் பா.ஜ.க-தான் அங்கு ஆட்சிசெய்யும் என்ற புதியநிலையை உருவாக்கியுள்ளது.

எனவே, இங்கு நிதிஷ்குமார் கூட்டணி தாவியது மட்டும் பிரச்சினை அல்ல, நிதிஷ்குமாரை போன்ற கடைந்தெடுத்த பிழைப்புவாதிகளையும் பா.ஜ.க-வை போன்ற பாசிசக் கும்பலையும் வளர அனுமதிக்கும் இந்தியாவின் போலி ஜனநாயகக் கட்டமைப்பே முதன்மையான பிரச்சினை. ஆகவே, நிதிஷ்குமாரை போன்ற பிழைப்புவாதிகளும், பா.ஜ.க. பாசிசக் கும்பலும் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பை தகர்த்தெறிவதற்கான தேவையை உணர வேண்டும். மேலும், தேர்தல் பிழைப்புவாதிகளையும் பாசிஸ்டுகளையும் வளர அனுமதிக்காத, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை திருப்பி அழைப்பதற்கான உரிமையை மக்களுக்கு வழங்குகின்ற பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராட வேண்டும்.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தமிழ்நாட்டில் தொடரும் சாதி – தீண்டாமை கொடுமைகள்

ர்மபுரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி அன்று தாரணி மற்றும் சின்னதாயி என்ற பெண்கள் வயலில் கூலி வேலை செய்ய வந்த பட்டியல் சமூக பெண்களுக்கு தேநீரை டம்ளரில் கொடுக்காமல், தேங்காய் சிரட்டையில் கொடுத்து  தீண்டாமை கொடுமை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

செல்லி மற்றும் அவருடன் சேர்ந்து மற்ற நான்கு பெண்களும் புவனேஷ்வரன் என்பவரின் நிலத்தில் கூலி வேலைக்கு சென்ற பொழுது கொங்கு வேளாளர் சாதியை சேர்ந்த  புவனேஷ்வரனின் மனைவி தாரணி மற்றும் அம்மா சின்னதாயி இருவரும் அவர்களுக்கு தேங்காய் சிரட்டையில் தேநீர் வழங்கினர்.

இதை அங்கிருந்தவர்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில் பாதிக்கப்பட்ட பெண், செல்லி கொடுத்த புகாரின் பேரில் தாரணி மற்றும் சின்னத்தாயி ஆகிய சாதிவெறியர்களும் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி குறியீடுகளில் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு இருப்பதாக சொல்லிக் கொள்ளப்படும் வேளையில் தான் இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான சம்பவம் நடந்திருக்கிறது.


படிக்க: ஆர்.எஸ்.எஸ், ஆதிக்க சாதிவெறி அமைப்புக்களை தடை செய்! | துண்டறிக்கை


வெகு காலத்திற்கு முன்பு,  இந்திய நிலப்பரப்பு முழுவதும் சாதிய ஒடுக்குமுறை மிக மோசமான மனிதத்தன்மையற்ற  வடிவங்களில் அமலில் இருந்தது. அப்போழுது தெருக்களில் காலணி அணிந்து நடக்கக்கூடாது, பொதுக் கிணறுகளில் தண்ணீர் குடிக்கக்கூடாது, நகைகள் அணியக்கூடாது, தோலில் துண்டு போடக்கூடாது, இரட்டை குவளை முறை போன்ற எண்ணற்ற தீண்டாமை கொடுமைகள் அமலில் இருந்ததாகவும் அவை நீண்ட சமூக போராட்டங்களின் மூலமாக ஒழிக்கப்பட்டது என்றும் நமக்கு வரலாறாக சொல்லப்படுகிறது. ஆனால் இவையெல்லாம் இன்னும் ஒழிக்கப்படவில்லை. பல்வேறு வடிவங்களில் இன்றும் தொடர்கிறது.

இதுவொரு தனித்த நிகழ்வல்ல. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்த சாதிய வன்கொடுமைகள் மிக மோசமான வடிவங்களில் பட்டியல் சமூக மக்கள் மீது தொடுக்கப்படுகிறது. ஊர் மக்கள் முன்னால் காலில் விழ வைப்பது, சிறுநீர் கழிப்பது, குடிநீர் தொட்டியில் மலத்தை கலப்பது, சிறுவர்கள் தங்களுடன் ஒரே வகுப்பில் படிக்கும் சிறுவர்கள அரிவாளால் வெட்டுவது, கொலை செய்வது போன்ற அருவெறுக்கத்தக்க  வடிவங்களில் இந்த சாதி வன்கொடுமைகள் வெளிப்படுகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஒரு பட்டியல் சமூகத்தை  சேர்ந்த பள்ளி மாணவர் மற்றும் அவரது சகோதரி மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை நடத்தியது சக மாணவர்கள் தான் என்ற உண்மை நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதுபோன்ற சம்பவங்கள் கடந்த 100 ஆண்டுகளாக சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவு என்று பேசி வந்த திராவிட இயக்கங்கள் செழித்து வளர்ந்த மாநிலத்தில் தான்  நடந்துள்ளது.


படிக்க: ஆதிக்கச் சாதிவெறியாட்டங்கள்: தமிழ்நாட்டைச் சுற்றிவளைக்கும் ஆர்.எஸ்.எஸ்!


சராசரியாக பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்முறை தமிழ்நாட்டில் வருடத்திற்கு 1200 என்ற கணக்கில்  பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு சாதி வன்கொடுமைகளின் எண்ணிக்கை  2000 என உயர்ந்து விட்டது.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, “கடந்த ஐந்து ஆண்டுகளில், 300 சாதி தொடர்பான கொலைகள் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டியல் சமூகத்தினர்” என்று‌ தெரியவந்துள்ளது.

இந்த வன்கொடுமை சம்பவங்களை கையாள்வதில் ஆளும் வர்க்க அரசு (அது திமுகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும்) ஆதிக்க சக்திகளுக்கு சாதகமாகவே நடந்து கொள்கிறது.

வேங்கைவயலில் குடிநீர் தேக்கத் தொட்டியில் மலம் கலந்தது; மேல்பாதி என்னும் கிராமத்தில் பட்டியல் சமூக மக்களை கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுத்தது;  நாங்குநேரியில் பட்டியல் சமூக மாணவர் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் சக வகுப்புத் தோழர்களால் தாக்கப்பட்டது; ஆகிய மூன்று சம்பவங்களை எடுத்துக்கொண்டு பார்த்தால், வேங்கைவாயலில் குற்றவாளிகளை இதுவரை போலீசு கண்டுபிடிக்கவில்லை. மேல்பாதியில் போலீஸுக்கு குற்றவாளிகளை தெரியும்; ஆனால் இன்னும் அவர்களை கைது செய்யவில்லை. நாங்குநேரியில் குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே உள்ளனர். இதிலிருந்து இந்த அரசு கட்டமைப்பின் ஒவ்வொரு அங்கமும் ஆதிக்க சாதிகளுக்கு சாதகமாக செயல்படுகிறது என்பது தெளிவாகிறது.

நாங்குநேரி, மேல்பாதி, வேங்கைவயல் மற்றும் சமீப காலங்களில் நடந்த இதுபோன்ற சாதிய வன்கொடுமைகளை இந்த மாநிலத்தில் மேல் விழுந்த சில “கருப்பு புள்ளிகள்” என்று ஒதுக்கிவிட முடியாது. இவற்றையெல்லாம்  பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட  வன்முறையின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். இந்த வன்கொடுமைகளுக்கு பின்னணியில் சாதிவெறி இயக்கங்கள், கட்சிகள் ஆகியவை இருக்கின்றன. இந்த சாதிவெறி இயக்கங்களை பாஜக தனது கலவர நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறது.

வெறுமனே குற்றவாளிகளை கண்துடைப்பிற்காக கைது செய்வது, பின்பு ஜாமீன் வழங்குவது போன்ற நடைமுறைகளால் இந்த சாதிய வன்கொடுமைகளை தடுக்க முடியாது. சாதிவெறி அமைப்புகளை தேர்தல் ஆதாயங்களுக்கு வளர்த்துவிட்டதானது, இன்றைக்கு நிறைய உள்ளூர் சாதிவெறி லும்பன் கும்பல்கள் தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் வளர்வதற்கு வழியமைத்துக் கொடுத்துள்ளது. இந்த லும்பன் கும்பல்களை அரசு எந்த வகையிலும் கண்காணிப்பு செய்வதில்லை. இந்த லும்பன் சாதிவெறி கும்பல்கள் அவற்றின் இயல்பிலே கேவலமான பிழைப்புவாத இதழாக இருப்பதால் அவர்களை யாரும் எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தி கொள்ளமுடியும் என்ற நிலை உள்ளது. இதனை தான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பயன்படுத்தி சாதி வெறியாட்டங்களை கட்டமைகப்பதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொள்கிறது. ஒவ்வொரு சாதியிலும் உள்ள கிராமப்புற நகர்ப்புற ஏழை இளைஞர்களை அணுகி அவர்களுக்கு பதவியும் சன்மானமும் கொடுத்து வளர்த்து விடுகிறது. நாட்டின் சமூகப் பொருளாதார ஏழ்மை, வேலை வாய்ப்பின்மை, வறுமை காரணமாக இந்த சாதிவெறி லும்பன் கும்பல்கள் இயல்பாகவே வளர்கிறது.

இந்த சமூக யதார்த்தத்தை புரிந்துகொண்டு சாதிவெறி அமைப்புகளை தடை செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமைகளை தடுக்க முடியாது.


சித்தன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிச மோடி அரசை பணியவைத்த லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

டந்த டிசம்பர் மாதத்தில் நடந்த நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய விதேயக் ஆகிய பாசிசச் சட்டங்களை விவாதங்கள் ஏதுமின்றி நிறைவேற்றியிருந்தது மோடி அரசு. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் இந்த கருப்பு சட்டத்திற்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் முன்னெடுத்த பிரம்மாண்டமான போராட்டம் பாசிஸ்டுகளை பயங்கொள்ள வைத்தது. அனைத்து தரப்பு உழைக்கும் மக்களுக்கும் எதிராக பாசிசத் தாக்குதல்களை ஏவக்கூடிய இச்சட்டத்திருத்தத்திற்கு எதிராக பெரியளவில் வினையாற்றப்படாமல் இருந்தவந்த மோன நிலையை லாரி ஓட்டுநர்களின் முன்னுதாரணமிக்க இப்போராட்டம் உடைத்திருக்கிறது.

பாசிஸ்டுகளால் நிறைவேற்றப்பட்டுள்ள பாரதிய நியாய சன்ஹிதா (இந்திய தண்டனைச் சட்டம்) குற்றவியல் சட்டத்தில், வாகன விபத்தை ஏற்படுத்துவோருக்கு தண்டனைகளை வழங்கும் ‘‘விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்தல்’‘ (Hit and Run) என்ற சட்டப்பிரிவு 106(2)-இல் மோசமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த சட்டப்பிரிவுக்கு எதிராக கடந்த ஜனவரி 1-ஆம் தேதி சரக்கு மற்றும் எரிபொருள் விநியோகம் செய்யும் லாரி ஓட்டுநர் சங்கங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. குறிப்பாக, காவி பாசிஸ்டுகளின் ‘கோட்டை’ என்று சொல்லப்படுகின்ற குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா போன்ற பசுவளைய மாநிலங்களில் இப்போராட்டம் நடந்தது பாசிஸ்டுகளுக்கு பெரிய அடியாக விழுந்தது.

இப்போராட்டத்தில் ஓட்டுநர்கள் லட்சக்கணக்கான லாரிகளை பல கி.மீ. தூரங்களுக்கு அணிவகுத்து நிற்கவைத்தனர். சரக்கு மற்றும் டேங்கர் லாரி ஓட்டுநர்களுடன் இணைந்து தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பல மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு பிரம்மாண்டமாக போராட்டம் நடந்தது. வடக்கு மற்றும் மேற்கு இந்திய மாநிலங்களில் அமைந்துள்ள சுமார் 2,000 பெட்ரோல் நிலையங்கள் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டதாக ‘‘பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா’‘ (Press Trust of India) என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. காய்கறிகள், பழங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகமும் பாதிக்கப்பட்டது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், மும்பை-அகமதாபாத் போன்ற பல முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தங்களின் வாகனங்களை சாலைகளின் குறுக்கே நிறுத்தி மோடிக்கும்பலின் கருப்புச் சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதோடு சில இடங்களில் லாரி ஓட்டுநர்களுக்கும் போலீசுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. போரடிய ஓட்டுநர்களை கைது செய்வது, அவர்களை கலைப்பதற்கு துப்பாக்கிசூடு நடத்தியது போன்ற பாசிச ஒடுக்குமுறைகளையும் செலுத்தியது மோடிக்கும்பல்.


படிக்க: புதிய தண்டனை சட்டத்தை எதிர்த்து சாலைகளில் இறங்கிய லாரி ஓட்டுனர்கள்!


இதற்கு முன்னர் இருந்த இந்திய தண்டனைச் சட்டம் 304(A)-இல் சாலை விபத்தில் எதிர்பாராத விதமாக ஒருவர் உயிரிழந்தால், விபத்து ஏற்படுத்திய ஓட்டுநருக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது திருத்தப்பட்டுள்ள பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் 106(2)-இல், ‘‘சாலை விபத்தில் எதிர்பாராதவிதமாக ஒருவர் உயிரிழந்தால், விபத்து ஏற்படுத்திய ஓட்டுநருக்கு அபராதத்துடன் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கலாம். ஓட்டுநர் தப்பித்துவிட்டாலோ அல்லது உயிரிழப்பு குறித்து உடனடியாகப் போலீசாருக்கு புகாரளிக்கத் தவறினாலோ பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஏழு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கலாம்’‘ என்று மாற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக இச்சட்டமானது, சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை கொலைக் குற்றமாக வரையறுக்கிறது. பழைய சட்டத்தின்படி, சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டால் பெரும்பாலும் ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பதே நீதிமன்றத்தால் தண்டனையாக வழங்கப்பட்டுவந்தது. ஆனால் புதிய சட்டத்தின்படி, சிறைத்தண்டனை, அபராதம் ஆகிய இரண்டும் கட்டாயமாக்கப்படுகிறது.

மேலும், இச்சட்டத்தின்படி, சாலைகளில் மூடுபனி போன்ற புறச்சூழல் காரணமாக விபத்து நேர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டாலும் ஓட்டுநர்கள் சிறைத்தண்டனையை அனுபவித்தாக வேண்டும். பெரும்பாலும் விபத்தை ஏற்படுத்தியபிறகு, பொதுமக்களால் அடித்துக்கொல்லப்படுவோம் என்ற அச்சத்தில் வேறுவழியின்றி தப்பித்துச் செல்வதாக ஓட்டுநர்கள் கூறுகின்றனர். ஆனால் புதிய சட்டம் தப்பித்து செல்வதற்கு மேலும் கடுமையான தண்டனைகளை வழங்குகிறது.

கார், மோட்டார் சைக்கிள் போன்ற சிறிய வாகனங்களோடு சரக்கு லாரிகள் போன்ற பெரிய வாகனங்கள் மோதுவதால் ஏற்படும் விபத்துகளில், பெரிய வாகனங்களின் ஓட்டுநர்களை குற்றவாளிகளாக கருதும் பார்வை நாடு முழுவதும் ஏற்கெனவே இருக்கிறது என அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் (AIMTC) தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் சரக்கு வாகன ஓட்டுநர்கள் மேலும் பாதிப்புகளுக்கு உள்ளாவர்.


படிக்க: மீண்டும் தில்லியில் விவசாயிகள் போராட்டம் – பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை இதுதான்!


கூடுதலாக, இச்சட்டத்தில் அதிகபட்சமாக ஏழு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதும் லாரி ஓட்டுநர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘‘எங்களுக்கு சம்பளமாக ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை மட்டுமே கிடைக்கிறது. அப்படியிருக்க, எப்படி லட்சக்கணக்கான ரூபாய் அபராதமாக செலுத்த முடியும்? இந்த முடிவை திரும்ப பெறாவிட்டால் வேறு வேலைகளை செய்ய வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். இது எங்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது’‘ என்று கூறுகிறார் 46 வயதான லாரி ஓட்டுநர் ஜகத் பால் ஷர்மா.

இதற்கிடையே, லாரி ஓட்டுநர்களின் போராட்டம் வளர்ந்து, இச்சட்டத்திருத்தத்தின் பாசிச நோக்கம் பிற தரப்பு மக்களிடம் அம்பலப்பட்டு, போராட்டத்தின் வீரியம் அதிகரித்துவிடும் என்ற அஞ்சிய மோடி அரசு, போராட்டம் தொடங்கிய அடுத்த நாளே ஒன்றிய உள்துறைச் செயலர் அஜய் பல்லாவை ஏ.ஐ.எம்.டி.சி. பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்தது. பேச்சுவார்த்தையின்போது, புதிய சட்டப்பிரிவுகள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்றும், ஏ.ஐ.எம்.டி.சி. பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே சட்டம் அமல்படுத்தப்படும் என்றுக் கூறி பின்வாங்கியது பாசிசக் கும்பல். இதனால், லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த வைப்பதாக அறிவித்தனர். மேலும், போராடிய லாரி ஓட்டுநர்களை இழிவாகப் பேசிய மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஷாஜாபூர் மாவட்ட ஆட்சியர் கிஷோர் கன்யாலை பணிமாற்றம் செய்ததன் மூலம் ஓட்டுநர்களுக்கு சாதகமாகத்தான் மோடி அரசு செயல்படுகிறது என்ற பிம்பத்தை உருவாக்கவும் முயன்றது பா.ஜ.க. அரசு.

சமீபத்தில் நடந்துமுடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றதையடுத்து, வடமாநிலங்கள் பா.ஜ.க-வின் கோட்டை என்ற பிம்பத்தை சங்கிகள் கட்டமைத்துவந்த சூழலில் நாடாளுமன்றத்தில் ஐந்து இளைஞர்கள் புகைக்குப்பி வீசி போராட்டத்தில் ஈடுபட்டதும், அதற்கடுத்து வடமாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும் அந்த பிம்பத்தை தவிடுபொடியாக்கியுள்ளது. மேலும், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான இசுலாமிய மக்களின் போராட்டத்தை தொடர்ந்து பாசிசச் சட்டத்திட்டங்களுக்கு எதிரான மக்களின் களப்போராட்டங்கள் காவி பாசிஸ்டுகளை அச்சங்கொள்ள செய்யும் என்பதற்கு லாரி ஓட்டுநர்களின் போராட்டம் மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.

இருப்பினும், லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தை கண்டு மோடி அரசு அஞ்சியிருந்தாலும், பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்திருப்பது என்பது போராட்டத்தை கலைப்பதற்கான உத்தியே. ஏனெனில், இம்மூன்று சட்டங்களின் வரைவு வந்தபோது, ‘‘மருத்துவர்களின் அலட்சியத்தால் நோயாளிக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்’‘ என்ற அம்சத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, இச்சட்டத்தை மக்களவையில் நிறைவேற்றிய அன்று ‘‘இந்திய மருத்துவ கவுன்சிலின் கோரிக்கைக்கேற்ப சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும்’‘ என்று பேசிய அமித்ஷா, சட்டத்தில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் அடுத்தநாளே மாநிலங்களவையில் நிறைவேற்றினார். எனவே, லாரி ஓட்டுநர்களுடன் பரிசீலித்துவிட்டே சட்டத்தை அமல்படுத்துவோம் என்று மோடி அரசு தற்போது கொடுத்துள்ள வாக்குறுதியும் அந்தவகையில் சேர்ந்ததே.

எனவே, பாசிச மோடி அரசால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை நாடு தழுவிய போராட்டமாக, அனைத்து தரப்பு உழைக்கும் மக்கள் மத்தியிலும் கட்டமைத்து அதனை பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டியது புரட்சிகர, ஜனநாயகச் சக்திகளின் கடமையாகும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ரஃபா எல்லை: இது இன்னொரு முள்ளிவாய்க்கால்!

12.02.2024

ரஃபா எல்லையில் பாசிச இஸ்ரேலின் இன அழிப்பு போர்!
இது இன்னொரு முள்ளிவாய்க்கால்!

போரை முடிவுக்கு கொண்டு வர
மக்கள் போராட்டங்களை கட்டி எழுப்புவோம்!

பத்திரிகை செய்தி

ல மாதங்களாக தொடர்ந்து காசா முனை மீது பாசிச இஸ்ரேல் அரசால் நடத்தப்படும் இன அழிப்பு தாக்குதலின் விளைவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் எகிப்தின் ரஃபா எல்லையில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருக்கின்றனர்.

அகதிகளாக குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி, நிற்க இடம் இன்றி தவிக்கும் அந்த மக்கள் மீது தினமும் குண்டுகளை வீசி இன அழிப்புப் போரின் இறுதிக் கட்டத்தை நெருங்கி இருக்கிறது பாசிச இசுரேல் அரசு.

தன் குடும்பத்தை இழந்த பிறகு தன்னை காப்பாற்றுங்கள் என்று கதறிய ஹிந்த் ரஜாப் என்ற சிறுமியையும் அச்சிறுமியை காப்பாற்ற சென்ற ஆம்புலன்சு வாகனங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு குண்டு வீசியது என்பது போன்ற தெரிந்த ஒரு சில சம்பவங்களும் தெரியாத பலநூறு நிகழ்வுகளும் சம்பவங்களும் தினம்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஈழப் போரின் இறுதி கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன அழிப்பு செய்யப்பட்டது போன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில், ரஃபா எல்லையில் இன ஒழிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இன அழிப்பை நிறுத்துங்கள் என்று முள்ளிவாய்க்காலில் ஏகாதிபத்திய மற்றும் வல்லரசு நாடுகள் பொய்யாக கூச்சலிட்டது போல இப்போதும் கூறிக் கொண்டிருக்கின்றன. இஸ்ரேலிய பிணைக் கைதிகள் செத்தாலும் சரி ஹமாஸை ஒழிப்பது என்ற பெயரில் ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களையும் ஒழிக்கின்ற வேலையின் இறுதிக்கட்டம் தான் இது.

பாசிஸ்டான இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் இஸ்ரேலில் நடந்து கொண்டிருக்கும் போதும் கூட, இன அழிப்புப் போரை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

அக்டோபர் 7ஆம் தேதி முதல் இந்த அறிக்கை தயாரித்துக் கொண்டிருக்கும் இந்த நொடி வரை இஸ்ரேல் அரசு மேற்கொண்ட போரினால் இறந்து போனவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 176 பேர்.

முள்ளிவாய்க்காலை போன்றதொரு மாபெரும் இன அழிப்பை சில நாட்களுக்குள் நடத்தி முடிக்க இஸ்ரேல் அரசு தயாராகிவிட்டது.

முள்ளிவாய்க்கால் போரை நம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதன் விளைவு ஓரிரு நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ரஃபா எல்லையில் அகதிகளாக குழுமி இருக்கும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்களைப் பாதுகாப்போம்! மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டி அமைப்போம்! பாசிச இஸ்ரேல் அரசையும் அதற்கு துணை போகும் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள மோடி – அமித்ஷா கும்பலைப் போன்ற பாசிஸ்டுகளையும் வீழ்த்துவோம்!


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிச மோடியின் ஆட்சியை வீழ்த்த டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகளை வரவேற்போம்!

12.02.2024

பாசிச மோடியின் ஆட்சியை வீழ்த்த
டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகளை வரவேற்போம்!

பத்திரிகை செய்தி

பாசிச மோடியின் ஆட்சியை தகர்க்க பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி- அதானி பாசிசம் வீழ்த்த வந்து கொண்டிருக்கிறார்கள்.

கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான வேளாண் சட்டத்திருத்தத்திற்கு எதிராக 2020 ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினர். ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்த இந்த போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். புதிய வேளாண் சட்ட திருத்தம் திரும்ப பெறப்படும் என்று அறிவித்து அவர்களை ஏமாற்றி போராட்டத்தை திரும்பப் பெற்றவுடன் துரோகம் விளைவித்த பாசிச மோடி அரசுக்கு எதிராக பிப்ரவரி 13 ஆம் தேதி டெல்லியை முற்றுகையிட விவசாயிகள் தீர்மானித்தனர்.

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப்பெறும் வரை திரும்ப மாட்டோம் என்று சூளுரைத்து டெல்லியை முற்றுகையிட வருகிறார்கள். அவர்கள் வருவதை தடுக்க 144 தடை உத்தரவு சட்டம் பல இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார் கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

டெல்லி எல்லையையொட்டிய மாவட்டங்களான அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத் மற்றும் ஹிசாரில் இணையதள சேவை மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை துண்டித்த பாசிஸ்டுகள் டிராக்டர்கள் வரும் வழியெல்லாம் இரும்பு முட்களை பொருத்தியுள்ளார்கள். எல்லைகளின் முக்கிய சாலைகளில் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து விதமான தடைகளையும் மீறி விவசாயிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் அதிகாரம் நீதி கேட்டுப் போராடும் விவசாயிகளை வரவேற்கிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்த நாட்டு மக்களின் ஆதரவு எப்போதும் உள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களை உருவாக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மீண்டும் தில்லியில் விவசாயிகள் போராட்டம் – பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை இதுதான்!

பிப்ரவரி 13 அன்று டெல்லியில் மீண்டும் ஒரு மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

டெல்லியில் 2020-இல் தொடங்கி ஓராண்டு நடைபெற்ற கோடிக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற மாபெரும் போராட்டத்தைப் பார்த்து அஞ்சிய ஒன்றிய பாஜக அரசு மூன்று வேளாண் சட்டங்களை மட்டும் ரத்து செய்தது. ஆனால் விவசாயிகளின் மற்ற கோரிக்கைகள் எதையும் இன்றுவரை நிறைவேற்றவில்லை.

குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக்குதல், அனைத்து பயிர்களுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கொள்முதல் விலை, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கான கடன் தள்ளுபடி, மின்சாரத்துறையில் தனியார்மயமாக்கலை நிறுத்துதல், பயிர்க்காப்பீட்டை உறுதி செய்தல், லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலையின் முக்கிய குற்றவாளியான அஜய் மிஸ்ரா தேனியை பதவி நீக்கம் செய்து வழக்கு தொடர்வது உள்ளிட்ட எந்த கோரிக்கைகளையும் பாசிச மோடி அரசு நிறைவேற்றாமல் திமிராக நடந்து கொண்டது.

தொடர்ச்சியாக இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) தலைமையில் பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்து வந்தனர். ஆனாலும் இதையெல்லாம் பாசிச மோடி கும்பல் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.


படிக்க: பாசிச யோகி அரசை அடிபணிய வைத்த உத்தரப்பிரதேச விவசாயிகளின் போராட்டம்!


கடந்த ஜனவரி 26 அன்று கூட நாடு முழுவதும் மாபெரும் டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தினர். பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்த பேரணியில் நாடு முழுவதும் கலந்து கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாகத்தான் நாளை (பிப்ரவரி 13) டெல்லியில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இவ்வளவு நாட்கள் போராட்டங்களை பொருட்டாகவே மதிக்காமல் இருந்த பாசிச மோடி கும்பல், விவசாயிகள் போராட்டத்தை அறிவித்தவுடன் யோக்கியவான்களைப் போல பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.

மத்திய விவசாயத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, மத்திய உணவு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் ஆகியோர் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல்கட்ட பேச்சுவார்த்தை துவங்கியது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் எல்லாம் தங்களை ஏமாற்றும் வேலை என்பதை உணராதவர்கள் அல்லர் விவசாயிகள். திட்டமிட்டபடி பிப் 13 அன்று டெல்லி எல்லையை முற்றுகையிட தயாராகி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் மூலம் டெல்லி எல்லையை முற்றுகையிட விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

இதையடுத்து போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை பாசிச மோடி அரசும், பாஜக ஆளும் மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன. குறிப்பாக ஹரியானா பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. டெல்லி எல்லையையொட்டிய மாவட்டங்களான அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத் ஆகிய இடங்களில் இணையம் மற்றும் குறுந்தகவல் சேவைகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எல்லைகளின் முக்கிய சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.


படிக்க: நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டுப் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்த ஹரியானா விவசாயிகள்!


மேலும் டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநில எல்லைகளில் கூடுவதற்கு டெல்லி காவல்துறை 144 தடை உத்தரவு போட்டுள்ளது.

கார்ப்பரேட்களின் அடிமையான மோடி அரசு விவசாயத்தை முழுக்க கார்ப்பரேட்மயமாக்குவதற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் மூலம் அதானி, அம்பானி மற்றும் ஏகாதிபத்திய கார்ப்பரேட் கும்பல்கள் கொள்ளையடிப்பதற்கு வழிவகை செய்து வருகின்றது. அதன் ஒவ்வொரு நடவடிக்கையும் இதை நோக்கித்தான் முன்னேறி வருகிறது. மோடி ஆட்சியில் அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலைகள் இதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

பாசிச மோடி அரசின் சதித்தனங்களை போராடும் விவசாயிகள் தெளிவாகவே உணர்ந்துள்ளனர். தேர்தலை எதிர்பார்க்காமல், இந்த அரசுக் கட்டமைப்புக்கு வெளியே எழுச்சிகரமான, விடாப்பிடியான போராட்டங்கள் மூலமாகத்தான் தீர்வு காண முடியும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளனர்.

பாசிச மோடி கும்பலையும், அம்பானி, அதானி கார்ப்பரேட் கும்பலையும் வீழ்த்துவதற்கான பாதையை விவசாயிகள் நமக்கு காட்டுகின்றனர். விவசாயிகள் போராட்டத்தை உறுதியோடு ஆதரிப்பதன் மூலம் அதனை நோக்கி வேகமாக முன்னேறுவோம்!


இனியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



உத்தராகண்ட்: முஸ்லீம்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்

த்தராகண்ட் மாநிலமானது சமீப காலத்தில் செய்திகளில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியது உத்தராகண்ட் மாநில பிஜேபி அரசு. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அம்மாநிலத்தின் ஹல்த்வானி நகரிலுள்ள பன்பூல்புராவில் பிப்ரவரி 8-ஆம் தேதியன்று முஸ்லீம் மக்கள் வாழும் பகுதியில் கலவரம் வெடித்து ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஹல்த்வானி நகரின் கபூர் பஸ்தி, தோலக் பஸ்தி, இந்திரா நகர், பன்பூல்புரா ஆகிய பகுதிகளில் 4000 இஸ்லாமிய குடும்பங்கள் ஏறத்தாழ 100 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், ”இம்மக்கள் வசிக்கும் இடம் ரயில்வே துறைக்கு சொந்தமானது. ஒரு வாரத்திற்குள் அனைவரும் இந்த இடத்தை விட்டு காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் வலுக்கட்டாயமாக காலி செய்யப்படுவீர்கள்” என்று எச்சரித்தது. இப்பகுதி மக்கள் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

ஆனால், பிப்ரவரி 8 அன்று திடீரென பன்பூல்புராவில் உள்ள மதராசா மற்றும் மசூதியை ’பொது இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக’க் கூறி நகராட்சி அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்க வந்தனர்.

”போலீசு புனித தளங்களை இடிப்பதற்கான உத்தரவுகளை எங்களிடம் காண்பிக்கவும் இல்லை; நாங்கள் கூறுவதை கேட்பதற்கு தயாராகவும் இல்லை” என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தங்களது புனித தளங்கள் தொடர்ந்து இடிக்கப்படுவதைக் கண்டித்து பெண்கள் உட்பட அனைவரும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். மக்களின் எதிர்ப்பையும் மீறி மசூதியையும் மதராசாவையும் இடித்ததால் மக்களுக்கும் போலீசுக்கும் மோதலாகி கலவரமாக மாறியது.

மக்கள் வேறு வழியில்லாமல் கற்களை கொண்டு போலீசு மீதும் அதிகாரிகள் மீதும் எரிந்துள்ளனர். இதில் சில போலீசுக்காரர்கள் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கலவரம் வளர்ந்ததையடுத்து நைனிடால் மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங் கலவரக்காரர்களை கண்டால் சுடுவதற்கும் ஊரடங்கு பிறப்பித்தும் உத்தரவிட்டார். இந்த உத்தரவிற்கு பிறகு 5 பேரை சுட்டுக்கொன்று இருக்கிறது போலீசு.


படிக்க: இந்து ராஷ்டிரமாக உருவெடுத்து வருகிறது உத்தரகாண்ட்!


“போலீசு இரவிலும் துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. நாங்கள் வீட்டில் அச்சத்துடன் இருக்கிறோம். இது நிறுத்தப்பட வேண்டும்” என்று மக்கள் தங்கள் பயத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதுவரை 50 பேரை போலீசு கைது செய்துள்ளது; 5000 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

”இது திட்டமிடப்பட்ட தாக்குதல், மக்கள் கற்களை ஏற்கெனவே தங்களிடம் வைத்திருந்தனர். மேலும், இந்த இடிப்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் தான் நடந்திருக்கிறது” என்று முதலமைச்சர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அனைத்து அதிகார வர்க்கமும் இந்த தாக்குதலுக்கு நியாயம் கற்பிக்கிறது.

நாமும் இது திட்டமிடப்பட்ட தாக்குதல் தான் என்று கூறுகிறோம்! முஸ்லீம் மக்கள் மீதான திட்டமிடப்பட்ட தாக்குதல். இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமென்றால் முஸ்லீம் மக்கள் மீதான திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதம். ஏனெனில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே மதராசா இடிக்கப்பட்டுள்ளது.

மதராசாவும் மசூதியும் பன்பூல்புராவில் 2002 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டிடம் நசூல் நிலத்தில் (பொது நிலம்) கட்டப்பட்டுள்ளதாகவும் இதனை காலி செய்ய வேண்டும் என்றும் கார்ப்பரேஷன் ஜனவரி 30 அன்று நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால், இந்த நிலம் 1937-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் குத்தகைக்கு விடப்பட்டதாகவும் 1994-இல் தனது குடும்பத்திற்கு விற்கப்பட்டதாகவும் உத்தராகண்ட் உயர்நீதிமன்றத்தில் சாஃபியா மாலிக் வழக்கு தொடர்ந்துள்ளார். சாஃபியா மாலிக்கின் தந்தை இக்குத்தகையை புதுப்பிப்பதற்காக 2007 ஆம் ஆண்டில் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தார். ஆனால், அது இன்றுவரை விசாரிக்கப்படவில்லை.

மாலிக் தொடர்ந்த வழக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி விசாரித்த உத்தராகண்ட் உயர்நீதிமன்றம் பிப்ரவரி 14 ஆம் தேதிக்கு அவ்வழக்கை ஒத்திவைத்துள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் தனது இந்து முனைவாக்கத்தை தீவிரப்படுத்த இதுபோன்ற கலவரங்களை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் அதிகார வர்க்கத்தின் துணை கொண்டு இன்னும் அதிக அளவில் அரங்கேற்றும் என்பது நிதர்சனம்.


ஹைதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ரஃபா நகரின் மீதான தாக்குதல்: இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல்

பாசிச யூத இனவெறி இஸ்ரேல் அரசு காசா பகுதியில் தனது இனப்படுகொலை நடவடிக்கையைத் தொடங்கிய போது பாலஸ்தீன மக்களை தெற்கு காசாவில் அமைந்துள்ள ரஃபா நகரிற்குச் செல்லுமாறு அச்சுறுத்தியது. தற்போது ராபா நகரில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு மக்கள் நெருக்கமாக அடைக்கப்பட்டுள்ள ரஃபா நகரில் இஸ்ரேலிய இராணுவம் நேற்று (பிப்ரவரி 9) குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையாக இஸ்ரேலை விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இஸ்ரேல் ராணுவம் தனது தரைப்படை தாக்குதலை ரஃபா நகருக்குள் விரிவுபடுத்த உள்ளதாக செய்திகளும் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் தனது இனப்படுகொலையைத் தொடங்கி ஐந்து மாதங்களைக் கடந்துள்ள நிலையில், இதுவரை கிட்டத்தட்ட 28,000 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது ரஃபாவிற்கு வடக்கே உள்ள கான் யூனிஸ் நகரில் குவிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய தரைப்படைகள் ரஃபா நகருக்குள் நுழையுமானால் இலட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவர்.

ரஃபா நகரில் இஸ்ரேலிய இராணுவம் நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்துரைக்கும் வகையிலான புகைப்படங்களின் தொகுப்பு:

நன்றி: முகம்மது அபெத் [Mohammed Abed/AFP]

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாலஸ்தீனம்: ஹமாஸின் போர்நிறுத்தத் திட்டத்தை நிராகரித்துள்ள யூத இனவெறி இஸ்ரேல் அரசு!

டந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதியிலிருந்து தொடங்கிய பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போர் நூறு நாட்களைக் கடந்தும் மிகக் கொடூரமான முறையில் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது. பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி உலகின் பல நாடுகளில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன; பல நாட்டு அரசுகள் ஐ.நா சபையில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன; சர்வதேச நீதிமன்றம் போரை நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் இஸ்ரேல் தொடர்ந்து காசாவில் இனப்படுகொலையை நடத்திக் கொண்டிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த பிப்ரவரி ஏழாம் தேதியன்று ஹமாஸ் அமைப்பு போரை நிறுத்துவதற்கான நான்கரை மாதங்களுக்கான மூன்று கட்டத் திட்டத்தை முன்மொழிந்துள்ள போதும், யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசு அதை உடனே நிராகரித்துள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக கத்தார் மற்றும் எகிப்திய அரசுகளால் தங்களுக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவுக்கு பதிலளிக்கும் வகையில் போர் நிறுத்தத்திற்கான திட்டத்தை முன்மொழிந்துள்ளது, ஹமாஸ் அமைப்பு.

45 நாட்களை உள்ளடக்கிய முதல் கட்டத்தின் போது இஸ்ரேலிய அரசு இஸ்ரேலிய சிறைகளில் இருந்து 1,500 பாலஸ்தீனியப் பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிப்பதற்கு ஈடாக, தாங்கள் தங்களிடம் உள்ள அனைத்து பெண் பிணைக் கைதிகள், 19 வயதிற்குட்பட்ட ஆண் கைதிகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை விடுவிக்கிறோம் என்று ஹமாஸ் அமைப்பு முன்மொழிந்துள்ளது.

இந்த முதல் கட்டத்தில் இஸ்ரேலிய அரசு, காசாவின் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து தனது இராணுவப் படைகளை திரும்ப பெற வேண்டும; தினமும் அத்தியாவசியத் தேவைகளான உணவு, குடிநீர், மருந்துகள், எரிபொருள் போன்ற நிவாரணப் பொருட்கள் காசா மக்களுக்கு வழங்கப்படுவதை தேவைகளுக்கு ஏற்ப அதிகப்படுத்த வேண்டும்; காசா முழுவதும் முழுமையாகவும், பகுதியளவும், செயல்பாட்டில் இல்லாத மருத்துவமனைகளை புணரமைக்க வேண்டும்; மக்கள் தங்குவதற்கு தேவையான அளவில் முகாம்களை அமைக்க வேண்டும் என்றும் ஹமாஸ் கோரியுள்ளது.

பரஸ்பர இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவந்து முழுமையான அமைதிக்குத் திரும்புவதற்குத் தேவையான பேச்சுகள் இஸ்ரேல் அரசுக்கும் தங்களுக்கும் முடிவடையும் வரை இரண்டாம் கட்டத்தின் அமலாக்கம் தொடங்காது என்றும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்டத்தில் தங்களிடம் மீதமுள்ள பணயக் கைதிகளான ஆண்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், மூன்றாம் கட்டத்தில் மீதமுள்ள உடல்கள் மற்றும் எஞ்சியுள்ளவை பரிமாறிக் கொள்ளப்படும் எனவும் முன்மொழிந்துள்ளது ஹமாஸ்.


படிக்க: பாலஸ்தீனம் என்ற வார்தையையே அழிக்கத் துடிக்கும் யூத மதவெறி இஸ்ரேல்! | காணொளித் தொகுப்பு


இவ்வாறு மூன்று கட்ட போர்நிறுத்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பாலஸ்தீன மக்களின் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போரை தற்காலிகமாக தடுத்து நிறுத்த முடியும் என்று எதிர்பார்க்கிறது, ஹமாஸ் அமைப்பு.

ஆனால், இஸ்ரேலிய அரசு காசா பகுதியை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்; ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழித்தொழிக்க வேண்டும்; பாலஸ்தீன மக்களை கொத்து கொத்தாக இன அழிப்பு செய்து தங்களின் யூத இனவெறியை தீர்த்துக்கொள்ள வேண்டும் போன்ற நோக்கங்களிலிருந்து ஹமாஸ் அமைப்பின் போர்நிறுத்தத் திட்டத்தை நிராகரித்துள்ளது.

ஹமாஸ் போர்நிறுத்தத் திட்டத்தை முன்மொழிந்த அன்றே, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதை நிராகரித்தார். முழுமையான வெற்றியை அடையும் வரை காசா மீதான போரை இஸ்ரேல் அரசு தொடரும் என்று உறுதியளித்தார். இதற்கு முன்னரும் ஹமாஸ் அமைப்பினரின் போர் நிறுத்தம், காசா பகுதியிலிருந்து இஸ்ரேலிய இராணுவத்தினரை வெளியேற்றுதல் போன்ற பல கோரிக்கைகளை நிராகரித்தே வந்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் போர்நிறுத்தத் திட்டத்தை நிராகரித்துள்ளதன் மூலம், யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசு பாலஸ்தீன மக்கள் மீது திட்டமிட்டு இன அழிப்புப் போரை நடத்தி வருவதும்; போர்க்குற்றவாளி இஸ்ரேல் அரசு தான் என்பதும் மீண்டும் உறுதியாகியுள்ளது.

இஸ்ரேலிய அரசின் இத்தகைய நடவடிக்கை மூலம், ஹமாஸிடம் பணயக் கைதிகளாக உள்ளவர்களை மீட்க வேண்டும் என்ற எண்ணம் இஸ்ரேல் அரசுக்கு துளியும் கிடையாது என்பதும் மீண்டும் தெளிவாகிறது. இதற்கு முன்னர் நவம்பர் மாத இறுதியில் பணயக் கைதிகளை மீட்பதற்காக இஸ்ரேல் அரசு ஒரு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்ததும் கூட, தங்கள் குடும்பத்தினரை மீட்டுத் தரக் கோரி இஸ்ரேலுக்குள் நடைபெற்ற யூத இன மக்களின் போராட்டம் மற்றும் உலகின் பல நாடுகளில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டங்களின் விளைவே ஆகும்.


படிக்க: காசா: குழந்தைகளை நரவேட்டையாடும் இரத்தவெறி பிடித்த இஸ்ரேல் | காணொளிகள்


ஹமாஸ் அமைப்பினரை அழித்தொழித்து, காசாவை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது. நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட, காசாவின் எகிப்தின் ரஃபா எல்லையை ஒட்டியுள்ள தெற்குப் பகுதியில் அடிப்படை வசதிகளின்றி மிகுந்த நெருக்கடியான சூழலில் வசித்துவரும் அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீதும் குண்டுமழையை பொழிந்து இனப்படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது, பாசிச இஸ்ரேல் அரசு.

இஸ்ரேலிய தாக்குதலால் பாலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்கள் காண்போரின் நெஞ்சைப் பிழிகின்றன. இஸ்ரேலிய தாக்குதலால் இறந்துபோன பாலஸ்தீனியரின் உடலை பூனைகள் கடித்துக் குதறும் வீடியோ, தண்ணீர் தாகத்தால் சாலையில் தேங்கியுள்ள சுத்தமற்ற தண்ணீரை ஐந்து வயதிற்குப்பட்ட சிறுவன் குடிக்கும் வீடியோ போன்ற பாலஸ்தீன மக்களின் அவலநிலையை தெரியப்படுத்தும் வீடியோக்கள் அல்ஜசீரா போன்ற செய்தி ஊடகங்களால் அன்றாடம் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சமீபத்திய காசா சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலின் தாக்குதலால் குறைந்தது 27,585 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கக்கூடும். 67,100 மேற்பட்ட மக்கள் கை, கால் போன்ற உடல் உறுப்புகளை இழந்து படுகாயமடைந்துள்ளனர். தங்களுடைய குடியிருப்புகளில் இருந்து 85 சதவிகித மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாகியுள்ளனர்.

எனவே இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை நிர்பந்திக்கும் வகையில் மாபெரும் தேசங்கடந்த மக்கள்திரள் போராட்டங்களை கட்டியமைப்பதன் மூலமே, பாலஸ்தீன மக்களின் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போரை தடுத்த நிறுத்த முடியும். பாசிஸ்டுகளை பணிய வைக்க கடந்த கால வரலாறு நமக்கு கற்றுக்கொடுத்துள்ள பாடமும் அதுதான்.


உதயன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நடிகர் விஜய்: ஒரு சினிமா கழிசடை, ஆளும் வர்க்க அரசியல் கழிசடையாக பரிணாமம்

மிழ்நாட்டின் தற்போதைய முக்கிய செய்திகளில் ஒன்று, நடிகர் விஜய்-இன் அரசியல் வருகை. இந்த வருகையை விஜய் ஒரு லெட்டர்பேட் மூலம் ’எளிமையாக’ அறிவித்தார். மானங்கெட்ட ஆளும்வர்க்க ஊதுகுழலான ஊடகங்களோ பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தின.

விஜய்-இன் அரசியல் வருகையைப் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதுகிற அளவுக்கெல்லாம் ஒரு இழவும் இல்லை. என்னடா இப்படி ’அபசகுனமாக’ எழுதறாங்களே என்று யோசிக்காதீர்கள். ஏனென்றால், விஜய் இன் அரசியல் வருகையே தமிழ்நாட்டைப் பீடித்திருக்கும் ’அபசகுனம்’ தான்.

காவி கார்ப்பரேட் பாசிச சூழலில் நாடே சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டை சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கும் நிலையில், உழைக்கும் மக்களின் வாழ்க்கையே அதற்காக காவு கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் விஜய் இன் அரசியல் வருகையை இந்நிகழ்வுகளோடு இணைத்துத் தானே பார்க்க முடியும்.

நாட்டில் திட்டமிட்டு தூண்டிவிடப்படும் சாதி, மத கலவரங்களும், விவசாயிகள், தொழிலாளிகள் மீதான அரசியல், பொருளாதார, அதிகார அடக்குமுறைகளும் அதிகரித்து வரும் நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நடைமுறையில் இதைக் கண்டித்து அறிக்கை விடுவதற்கு கூட துப்பற்ற கோழையாகத்தான் நடிகர் விஜய் இருக்கிறார். அரசியல்வாதியாக அல்ல, குறைந்தபட்ச சமூக பொறுப்புணர்வுடன் கூட மேற்கண்ட பிரச்சினைகளைப் பற்றி விஜய் ஒருபோதும் நேரடியாகக் கண்டித்துப் பேசியதில்லை.

கட்சி தொடங்குவதாக அறிக்கை வாயிலாக அறிவிப்பு கொடுத்தார் விஜய். அவரது அறிக்கையில் மாநில உரிமைகள் பற்றிப் பேசுகிறார். ஆனால் உண்மையில் நீட் திணிப்பு, ஜிஎஸ்டி, வேலைவாய்ப்பின்மை, தமிழ்மொழி புறக்கணிக்கப்படுதல், கீழடி இருட்டடிப்பு என தமிழ்நாட்டின் உரிமைகள் ஒன்றிய பாசிச பாஜக அரசால் பறிக்கப்படும்போதெல்லாம் வாயே திறந்ததில்லை. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு சினிமாவில் மிகவும் பிசியாக இருந்தார். இப்போது வந்து மாநில உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக கட்சி தொடங்குவதாக கூறுகிறார்.

ஆனால், யார் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கிறார்கள் என ஆர்.எஸ்.எஸ் –பிஜேபி கும்பலை நேரடியாக குறிப்பிட்டுக் கூட விமர்சிப்பதற்கு தைரியமில்லாத நபர்தான் நடிகர் விஜய்.


படிக்க: சினிமா அரசியல் போதை மிருகம் = விஜய்


ஆளுநர் ரவி தமிழகம் என்று கூற வேண்டும் என பார்ப்பன குயுக்தியோடு சொன்ன பின்பு தமிழ்நாடு என்றுதான் சொல்ல வேண்டும் என முடிவு செய்து கொண்டோம். இது பார்ப்பன எதிர்ப்பு மரபின் அடிப்படையில் தமிழ்நாடு எடுத்த முடிவு. ஆனால் விஜயோ தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டி, தனது பார்ப்பன அடிமை உணர்வை வெளிப்படுத்துகிறார். இதை அவர் புரிந்து செய்தாரா, புரியாமல் செய்தாரா என்பதல்ல பிரச்சினை, அவரின் நடவடிக்கைகள் பார்ப்பன பாசிசத்திற்கு சேவை செய்கிறது என்பதைத்தான் கூறுகிறோம்.

அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரின் சிந்தனைகளின் அடிப்படையில் செயல்படப்போவதாக விஜய் கூறுகிறார். ஆனால் நடைமுறையில் அதற்கான சுவடே கிடையாது. கொள்கை கோட்பாடெல்லாம் சும்மா அறிக்கைகளில் பெயரளவுக்கு இருந்தாலே போதும்; ரசிகர்கள் மத்தியில் ப்ளைன் கிஸ் கொடுத்தாலே போதும் என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது. அந்தளவுக்கு தமிழ்நாட்டின் இளைஞர்களை முட்டாளாகக் கருதுகிறார். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் சாதி வன்கொடுமைத் தாக்குதல்கள் குறித்தெல்லாம் ஒரு வார்த்தை கூட கண்டித்துப் பேசியதில்லை.

ஊழலை எதிர்க்கப் போவதாக தம்பட்டம் அடிக்கிறார். உண்மையில் அரசின் தனியார்மயக் கொள்கைகளே ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கின்றன. அதில் சினிமா எனும் கருப்புப் பணம் புரளும் கார்ப்பரேட் வணிகத்தில் அவரும் பிரதானமாக பங்கு வகிக்கிறார். அதாவது ஊழலில் பங்கு வகிக்கிறார் என்று சொல்கிறோம். பொத்தாம் பொதுவாக அடித்துவிட்டால் மக்கள் நம்புவார்கள் என்று கருதுகிறார்.

இதையெல்லாம் தாண்டி அவரது சினிமா துறை சம்பந்தப்பட்ட விசயங்களில் கூட நேரடியாக தலையிட்டு பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பவர் அல்ல விஜய். அரசியலில் ஈடுபடாத மற்ற நடிகர்கள் குரல் கொடுக்கும் அளவுக்கு கூட விஜய் பேசியதில்லை.

இப்படிப்பட்ட ஒரு பேர்வழிதான் இன்று அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்கு சேவை செய்வதாக சொல்கிறார். இவரைத்தான் ஊடகங்களும் வாராது வந்த மாமணியைப் போல விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றன.


படிக்க: லியோ + மறுகாலனியாக்க சீரழிவு + அரசு


இன்றைய சூழலை நாம் புரிந்து கொண்டால்தான் நடிகர் விஜய் யின் அரசியல் வருகை எவ்வளவு ஆபத்தானது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களின் வாழ்வுரிமைகள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் வேலையில்லாத் திண்டாட்டம் நாடு முழுவதும் மோசமாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் வண்ணப்புகைக் குண்டு வீச்சே, வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்த்த போர்க்குணமிக்க இளைஞர்களின் மனநிலைதான்.

காவி – கார்ப்பரேட் பாசிச பயங்கரவாதமோ மேலும் மேலும் மக்களை நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது. மூச்சு கூட விடமுடியாத நிலையை நோக்கி மக்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனை எதிர்த்து குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிச அடக்குமுறைக்கு எதிரான மனநிலை நாடு முழுக்க வளர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கெதிராக அரசியல் ரீதியாக மாணவர்களும், இளைஞர்களும் திரண்டு விடக் கூடாது என்பதில் ஆளும் வர்க்கமும், பாசிச கும்பலும் தெளிவாக இருக்கின்றன.

ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பே பாசிசமயமாகியிருக்கும் நிலையில் பொதுவாக ஊழல், தேர்தல் அரசியலில் மாற்று என்பதாக மீண்டும் மீண்டும் மக்களை புதைகுழிக்குள் தள்ளுவதே ஆளும் வர்க்கத்தின் நோக்கம்.

இந்த நோக்கத்தை சிறப்பாக ஈடேற்றுவதற்குத்தான் விஜய்-இன் அரசியல் வருகை பயன்படும். தமிழ்நாட்டின் இலட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை பாசிச எதிர்ப்பு அரசியலை, புரட்சிகர அரசியலை நோக்கி நகராமல் வைப்பதற்குத்தான் விஜய்-இன் அரசியல் வருகை பயன்படும்.

மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் உதிரித்தனமான சிந்தனையை அவரது திரைப்படங்கள் எந்தளவுக்கு உருவாக்கியதோ, அதைவிட மோசமான சிந்தனையைத்தான் அவரது அரசியல் வருகையும் ஏற்படுத்தும். நடைமுறையில் தன்னை நம்பி வரும் இளைஞர்களை பார்ப்பன பாசிசத்திற்கு அடியாட்படையாக மாற்றுவதற்குத்தான் விஜய்-இன் அரசியல் நுழைவு பயன்படப் போகிறது. இது எவ்வளவு பெரிய ஆபத்து!

தனது சொத்துகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், புகழ்போதைக்காகவும் நடிகர் விஜய் காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலின் அடியாட்படையாகப் பயன்படப்போகிறார் என்றும் எம்.ஜி.ஆர், விஜயகாந்த் வரிசையில் விஜய்யும் ஒரு ஆளும் வர்க்க அரசியல் கழிசடை என்றும் இந்த நோக்கில் இருந்துதான் சொல்கிறோம்.

தமிழ்நாட்டு மாணவர்களே, இளைஞர்களே, இத்தகைய ஆளும் வர்க்க அரசியல் கழிசடைகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்! புறக்கணியுங்கள்!


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube