Sunday, August 10, 2025
முகப்பு பதிவு பக்கம் 647

உலகமயமாக்கம் – இந்துத்துவம் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்

1

உலகமயமாக்கம் – இந்துத்துவம் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் முனைவர் ஆனந்த் தெல்தும்ப்டே

(2002 குஜராத் முஸ்லீம் இனப்படுகொலையைத் தொடர்ந்து 2003 பிப்ரவரி மாதம் மக்கள் கலை இலக்கியக்  கழகம் மற்றும் புரட்சிகர அமைப்புகளால்  நடத்தப்பட்ட பார்ப்பன பயங்கரவாத ஒழிப்பு மாநாட்டில் வாசிக்கப்பட்ட உரை.)

“ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்” என்ற தலைப்பில் முனைவர் ஆனந்த் தெல்தும்ப்டே  ஆழமான தன் உரையை எளிமையான எடுத்துக்காட்டுகள் மூலம் அளித்திருக்கிறார். தவிர்க்க இயலாத காரணங்களால் அவர் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. கீழே அவரது உரையின் சுருக்கம் :

ஆனந்த் தெல்தும்டே
ஆனந்த் தெல்தும்டே

காதிபத்திய உலகமயமாக்கம் ஒரு புறமும், பார்ப்பன பயங்கரவாதம் மறுபுறமும் ஆக இருமுனைத்தாக்குதல் நம் மீது தொடுக்கப்பட்டுள்ளது. உலகமயமாக்கலுக்கு எதிரான மக்கள் இயக்கங்கள் சர்வதேச அளவில் வளர்ந்து வருகின்றன.

உலகமயமாக்கத்திற்கு எதிரான இத்தகைய இயக்கங்கள் வரவேற்கத்தக்கவையே. எனினும் மாறுபட்ட சித்தாந்தங்களைக் கொண்ட பல்வேறு அமைப்புகள் இத்தகைய எதிர்ப்பியக்கத்தை நடத்துவதால் அவற்றுக்கிடையே இந்த எதிர்ப்பியக்கத்தின் திசைவழி குறித்துத் தெளிவின்மை நிலவுகிறது. இந்த அமைப்புகள் நடத்தும் இயக்கங்கள் அரசு சாரா நிறுவனங்களின் (தன்னார்வக் குழுக்களின்) ஏற்பாடுகளே என்பதைக் கவனிக்கும்போது ஐயம் மேலிடுகிறது. மாற்று உலகை அமைப்பது என்ற அவர்களின் கோட்பாடு ஏகாதிபத்தியவாதிகளின் உதவியோடுதான் செயல்படுத்தப்படும் போலும்! உலகமயமாக்கம் என்பது முதலாளித்துவத்தின் இறுதிக்கட்டம்தான் என்பதிலும் இது தவிர்க்க இயலாமல் சோசலிசத்துக்கு இட்டுச் செல்லும் என்பதிலும் நம்பிக்கை உடைய சக்திகள் தன்னார்வக் குழுக்களின் நடவடிக்கைகளால் திருப்தி அடைந்து விட முடியாது.

இந்தியாவில் நிலைமை பாரதூரமாக உள்ளது. உலகமயமாக்கத் தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இந்துத்துவ அமைப்புகளின் தொடர்ச்சியான வெறியாட்டங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர். உலகமயமாக்கத்தை விட அபாயகரமானது இந்துத்துவமே என்று ஒருசாரார் கருதுகின்றனர். இதற்கு மாறாக உலகமயமாக்கமே பேராபத்து விளைவிக்கக் கூடியது என்று கருதுவோரும் உள்ளர்.

உதாரணமாக, இந்துத்துவத்தைத் தீவிரமாக எதிர்த்து வரும் மதச்சிறுபான்மையினர் உலகமயமாக்கத்தை அவ்வளவாக எதிர்ப்பதில்லை. தனியார்மயத்தின் விளைவாக இடஒதுக்கீட்டு வாய்ப்புகளைப் பறிகொடுத்து வரும் தலித்துக்கள் உலகமயமாக்கத்தை எதிர்த்த போதிலும் இந்துத்துவ எதிர்ப்பில் போதிய அக்கறை காட்டுவதில்லை. இதைவிட மோசமானது என்னவெனில், தலித்துக்கள் சங்கப் பரிவாரங்களின் கவர்ச்சிவாத அரசியலுக்கு இரையாகி இந்துத்துவத்தின் காலாட்படையாக மாறி வருவதுதான். பழங்குடியினர் பலரும் மீண்டும் இந்துக்களாக மதம் மாறி வருகின்றனர். உலகமயமாக்கம் பெண்களை அதிக அளவில் பாதிக்கிறது என்று பல ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. அவர்கள் உலகமயமாக்கத்தை எதிர்க்க முன்வந்த போதிலும் இந்துத்துவத்தை எதிர்க்க முன்வரவில்லை என்பது கவனத்துக்குரியது. இதுபோல் உலகமயமாக்கத்தின் விளைவாகத் தங்களின் கல்வியைப் பறிகொடுத்து வரும் மாணவர்களும் இந்துத்துவத்தின் அபாயம் பற்றிச் சரிவர உணரவில்லை. மறுபுறத்தில், இந்துத்துவ எதிர்ப்பில் முனைப்பு காட்டி வரும் பல மதச்சார்பற்ற சக்திகள் உலகமயமாக்கத்தின் ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர்.

உலகமயமாக்கமும் இந்துத்துவமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல; அவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களே. இதைப் புரிந்து கொள்ளாத தெளிவின்மை மக்கள் திரள் இயக்கங்களைக் கட்டுவதில் பின்னடைவை ஏற்படுத்தி ஆளும் வர்க்கங்களுக்குச் சாதகமாக முடியும். உலகமயமாக்கமும் இந்துத்துவமும் மட்டுமல்ல, பாசிசமும் இவற்றோடு நெருக்கமான தொடர்பு உடையதாகும். ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் அடிப்படைத் தத்துவம் நவீன தாராளவாதம் ஆகும். இந்துத்துவமோ சங்கப்பரிவாரங்களின் அரசியல் – பண்பாட்டுச் செயல் திட்டம் ஆகும். உலகமயமாக்கம், இந்துத்துவம் இவ்விரண்டும் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் ஊடகமே பாசிசம் ஆகும்.

தனிநபரின் அதீத ‘சுதந்திரம்’ என்பதுதான் நவீனதாராளவாதத்தின் அடிப்படைக் கோட்பாடு, இக்கோட்பாடு எத்தகைய கூட்டுச் செயல்பாட்டையும் கூட்டத் தன்மையையும் அடியோடு நிராகரிக்கிறது; இவ்விதத்தில் இது கம்யூனிசத்துடன் முரண்படுகிறது; இவற்றை எல்லாம் அகற்றிவிட்டு அதனிடத்தில் நபர்களுக்கு இடையிலான போட்டி மனப்பான்மையை உயர்த்திப் பிடிக்கிறது; மானுட முன்னேற்றத்தின் தாரக மந்திரம் இப்போட்டி மனப்பான்மையே என்று கூச்சலிடுகிறது.

மோடி - அம்பானி
உலகமயமாக்கம் தத்துவார்த்த மட்டத்தில் சமத்துவம் என்பது இயற்கைக்கு முரணானது என்று அது வாதாடுகிறது.

நவீன தாராள வாதத்தை அடிப்படையாகக் கொண்ட உலகமயமாக்கத்தில் ஏழை எளியோர் அதிகாரமற்றோர்க்கு இடமே கிடையாது; ‘திறமை’யற்றோர்க்கும் அங்கு இடம் கிடையாது. சந்தைச் செயல்பாடுகளில் சாமர்த்தியம் காட்டத் தெரியாமல் இருப்பதுதான் திறமையின்மையாகும். நவீன தாராளவாதம் சமத்துவத்தை அடியோடு எதிர்க்கிறது; சுதந்திரமான தொழில் முனைவோரின் உரிமைகளை உயர்த்திப் பிடிக்கிறது. தத்துவார்த்த மட்டத்தில் சமத்துவம் என்பது இயற்கைக்கு முரணானது என்று அது வாதாடுகிறது. இக்கோட்பாட்டின்படி, சமத்துவமின்மைதான் மனிதக் குழு முன்னேற்றத்தின் உந்து சக்தி; அதுபோலவே, சகோதரத்துவத்தையும் இது நிராகரிக்கிறது.

இந்துயிசத்தின் அடிப்படையாகவும் தனிநபர்வாதமே இருந்து வருகிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தகுதியின் அடிப்பையில்தான் அவனுகுரிய சாதி அந்தஸ்தை இந்த உலகில் அடைகிறான். தன்னுடைய சாதிக்கு விதிக்கப்பட்ட கடமையைச் செவ்வனே செய்வதன் மூலம்தான் அடுத்த பிறவியில் ஒரு மனிதன் உயர் சாதியில் பிறக்கும் வாய்ப்பைப் பெறுகிறான் என்கிறது இந்துயிசம்.

கோட்பாட்டு ரீதியாக மட்டுமின்றி அதைத்தாண்டியும் இந்துத்துவம், நவீன தாராளவாதம் ஆகிய இரண்டுக்குமான ஒப்புமைகள் பரவிக் கிடக்கின்றன. சான்றாக, இவை இரண்டும் சமத்துவத்துக்கு முற்றிலும் எதிரானவை. சமத்துவமின்மை (அசமத்துவம்) என்பதுதான் இயற்கையானது என்று இவை இரண்டுமே கருதுகின்றன.

நவீன தாராளவாதம் வழங்கும் சுதந்திரம் காசுக்கு வாங்கப்படும் ஒரு பண்டமாகும். ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான எதையும் – உணவு, உடை, உறைவிடம் உட்பட எதையும் பணத்தைக் கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம். உங்களிடம் பணம் இல்லையென்றால் உங்களுக்குச் சுதந்திரம் இல்லை. எனவே நவீன தாராள வாதம் வழங்கும் சுதந்திரம் பணத்தில் உள்ளது. அது பணம் படைத்தவர்களின் சுதந்திரம் ஆகும்.

சங்கரமடம்
இரு பிறப்பாளர்களான பார்ப்பன, சத்திரிய, வைசிய வர்ணத்தினருக்கு இந்துத்துவம் போதுமான சுதந்திரத்தை வழங்குகிறது.

“இந்துயிசம் சுதந்திரம் என்பதையே அறியாதது” என்று கருதுவது சரியல்ல. இரு பிறப்பாளர்களான பார்ப்பன, சத்திரிய, வைசிய வர்ணத்தினருக்கு அது போதுமான சுதந்திரத்தை வழங்குகிறது. இவர்களுக்குச் சேவை செய்யப் பிறந்த சூத்திரர்களுக்கு இந்தச் சுதந்திரம் இல்லை. பஞ்சமர்களோடு ஒப்பிடும் வகையில் சூத்திரர்களும் சுதந்திரத்தைக் கோரமுடியும். வர்க்கங்கள் தம் சிறப்புத் தன்மையை இழந்து சாதிகளாக உருமாறிய பின் சுதந்திரம் வாங்கத்தக்கதாகி விட்டன.

அநேகமாக எந்த அளவுகோலின்படி பார்த்தாலும் இந்துத்துவத்திற்கும் புதிய தாராள வாதத்திற்குமிடையில் வியக்கத்தக்க ஒத்த தன்மைகள் இருப்பதை நாம் காண்கிறோம்.

இவ்வாறு இந்துத்துவம் என்பது உலகமயமாக்கத்தின் வெறும் பின்தொடர்ச்சி அல்ல; அதன் பண்பு ரீதியான பிரதிபலிப்பும் ஆகும். அரசு மற்றும் குடிமைச் சமூக அமைப்புகள் பாசிசமயமாகி வருவது உலகமயமாக்கத்தின் பின்விளைவு மட்டுமின்றி இந்துத்துவப் பரவலின் இயல்பான விளைவும் ஆகும். ஏனெனில், இந்துத்துவம் தன் பிறப்பிலேயே ஒரு பாசிச ரகம்.

பாசிசப் பண்பு என்பது இந்துத்துவத்தின் பிறவி அடையாளம். மராட்டியத்தில் பூனாவில் பார்ப்பன மன்னர்களான பேஷ்வாக்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் மராட்டியத்தின் பார்ப்பனச் சக்திகள் ஒன்று திரண்டு இழந்த ஆட்சியைப் பெறுவதற்கு முயன்றனர். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த பூனா பார்ப்பனர்களின் கலகம் உண்மையில் இந்த வகையைச் சேர்ந்ததுதான். காலனிய எதிர்ப்புப் புரட்சிகரப் போராட்டங்களாக இவற்றைப் பார்ப்பனர்கள் வர்ணித்தபோதிலும், சாராம்சத்தில், அது பழமைவாதப் பிற்போக்கு வகையிலானதே. தங்களுக்கேற்ற ஒரு வலதுசாரிப் பழமைவாதப் புரட்சியைத் தேடிக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் முசோலினியின் பாசிசத்தில் புகலிடம் தேடினர்.

சங்கப் பரிவாரங்களின் முழக்கமான “ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மதம், ஒரே மொழி” என்பது “ஒரே மக்கள், ஒரே தேசம், ஒரே தலைவர்” என்ற நாஜி முழக்கத்தின் எதிரொலியே.

1947-க்குப் பிறகு பல்வேறு வெகுஜன அமைப்புக்களைக் கட்டமைத்த ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவார அமைப்புகளை நிறுவியது. கம்யூனிச எதிர்ப்பை லட்சியமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் உள்நாட்டு ‘எதிரிகளா’ன முசுலீம்கள் மீது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்ந்துவிட்டது. சிறுபான்மையினரைப் பற்றி வதந்திகளைப் பரப்பி வெகுஜனங்களிடம் வெறியைக் கிளப்பியது. ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களுக்கு எதிராகக் கையாண்ட அதே தந்திரத்தை இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். கையாண்டது. ஆரிய மாட்சிமையை மீட்டெடுப்பதாக ஹிட்லர் கூறியது போல, ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்தியாவில் வேதங்களின் மாட்சிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று முழங்கியது. மேலும் ஆப்கானிஸ்தான், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய தொலைதூர நாடுகளையும் உள்ளடக்கிய அகண்ட பாரதத்தை உருவாக்க வேண்டும் என்று கூறுவதன் மூலம் மேலாதிக்க விஸ்தரிப்பு வெறியை ஏற்படுத்துகிறது.

ஒன்று தெளிவாகத் தெரிகிறது – சங்கப் பரிவாரங்களால் தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்துத்துவம் என்ற போதிலும், அது அவர்களோடு முடங்கி விடவில்லை என்பது கூர்ந்து கவனிக்கத் தக்கது. இன்று அது இந்திய ஆளும் வர்க்கத்தின் தத்துவமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.

பார்ப்பன பயங்கரவாதம்
பார்ப்பன பயங்கரவாதத்தை எதிர்க்கும் போதே ஏகாதிபத்தியவாதிகளின் உலக மயமாக்கலை எதிர்த்தும் போராட வேண்டும்

இந்திரா காந்தி இரண்டாம் முறையாகப் பிரதமர் ஆன காலந்தொட்டே இந்துத்துவம், ஆளும் வர்க்கத்தின் தத்துவமாகத் திகழ ஆரம்பித்தது என்பதும், ராஜீவ்காந்தியின் பதவிக்காலத்தில் இது குறிப்பிடத்தக்க வகையில் வெளிப்பட்டது என்பதும் கவனத்துக்குரியது. இதே காலகட்டத்தில் தான் தாராளமயச் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. நரசிம்மராவ் ஆட்சியின்போது உலகமயமாக்கம் திணிக்கப்பட்டபோதே இந்துத்துவச் சக்திகளின் ஏறுமுகமும் தென்படத் தொடங்கியது. பாரதீய ஜனதாக் கட்சி அல்லது காங்கிரசின் மிதவாத, தீவிரவாத, இந்துத்துவ ரகங்களுக்கு இடையில் உண்மையில் எவ்வித வேறுபாடும் இல்லை. திராவிடப் பாரம்பரியத்துக்குச் சொந்தம் கொண்டாடிய போதிலும், ஜெயலலிதா தமது பார்ப்பனியத்தை பாரதீய ஜனதாவுடன் ஐக்கியப்படுத்துகிறார்; கலைஞரோ பாரதீய ஜனதாவுடன் கூட்டணி கண்டுள்ளார்.

இவற்றில் எல்லாம் இருந்து கிடைக்கும் படிப்பினை என்ன? இந்துத்துவத்தையும் உலகமயமாக்கத்தையும் எதிர்ப்பது என்பதன் பொருள் என்னவெனில், தேர்தல் அரசியலில் இதற்கான தீர்வு இல்லை என்று உணர்வதே ஆகும். தீர்வு, மக்கள் திரள் போராட்டங்களில் இருக்கிறது – பாசிசச் சக்திகளுக்கெதிரான தெருச்சண்டையில் இருக்கிறது.

பாசிச இந்துத்துவத்தை உலகமயமாக்கலில் இருந்து பிரித்துப்பார்க்க முடியாது. எனவே, ஒன்றுக்கு எதிரான போராட்டம் என்பது மற்றொன்றுக்கு எதிரான போராட்டமாகவும் இருந்தே தீரவேண்டும். எனவே, இவற்றுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் அரசியல் ரீதியானவை மட்டுமின்றி கலாச்சார ரீதியானவை என்பதாகவும் அமைய வேண்டும். உள்ளூர் அளவில் மட்டுமின்றி உலகுதழுவியதாகவும் அமைய வேண்டும். பார்ப்பன பயங்கரவாதத்தை எதிர்க்கும் போதே ஏகாதிபத்தியவாதிகளின் உலக மயமாக்கலை எதிர்த்தும் போராட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
____________________________
புதிய கலாச்சாரம், மார்ச் 2003
____________________________

சிறுவனை செருப்பு சுமக்க வைத்த சாதிவெறிக்கு 1 ஆண்டு சிறை

3

செய்தி (தினத்தந்தி) : செருப்பை சுமக்க வைத்த குற்றவாளிக்கு ஓராண்டு ஜெயில் 

மாணவனின் தலையில் செருப்பை சுமக்க வைத்த வழக்கில், முக்கிய குற்றவாளியான நிலமாலைக்கு ஓராண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி சி.குமரப்பன் உத்தரவிட்டார்.”

dalith-vankodumai-cartoon

படம் : ஓவியர் முகிலன்

குடந்தை குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் நீதி இல்லை – மகஇக

1

மக்கள் கலை இலக்கியக் கழகம்

16, முல்லை நகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற் சாலை, அசோக் நகர், சென்னை – 600 083
தொலைபேசி 99411 75876
மின்னஞ்சல் – vinavu@gmail.com    pukatn@gmail.com

பத்திரிகை செய்தி

குடந்தை குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் நீதி இல்லை!

த்தாண்டுகால இழுத்தடிப்பிற்கு பின், குடந்தை தனியார் பள்ளி தீ விபத்து வழக்கு 30.07.2014 அன்று முடிவுக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த 94 குழந்தைகளைக் காவு கொண்டு, தமிழக மக்களை உலுக்கிய இந்த கொடிய கொலை வழக்கு பிற எல்லா வழக்குகளையும் போலவே முடித்து வைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 25 பேரில் தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணன், மாவட்டத் தலைமைக் கல்வி அலுவலர் பழனிச்சாமி, வட்டாட்சியர் பரமசிவம் ஆகியோரை தமிழக அரசே வழக்கிலிருந்து விடுவித்துவிட்டது. இவர்களை விடுவித்திப்பதிலிருந்தே இந்த வழக்கில் தமிழக அரசு யார் பக்கம் என்பதை அறியலாம்.

மறுக்கப்பட்ட நீதிவர்கள் போக ஒருவர் இறந்துவிட, மீதமுள்ள 21 பேரில் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் என 11 பேரை விடுவித்த நீதிமன்றம் பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு வாழ்நாள் சிறையும் கட்டிட உறுதிக்குச் சான்றளித்த பொறியாளருக்கு இரண்டாண்டுகள், ஏனைய எட்டு பேருக்கும் ஐந்தாண்டுகள் வீதமும், தண்டனை வழங்கி புலவர் பழனிச்சாமிக்கு ரூ 51 லட்சம் உட்பட மொத்தம் ரூ 52.5 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்று பேசாதவர்கள் இல்லை. பணபலமும், அதிகார பலமும் கொண்டவர்களை காப்பாற்ற எத்தனை யுகங்கள் வேண்டுமானாலும் வழக்கை இழுத்தடிக்க நமது நீதிமன்றங்கள் தயங்குவது இல்லை. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கைவிட துலக்கமான வேறு உதாரணம் தேவையில்லை. விரைவாக தீர்ப்பு வழங்குவதற்கென்றே உருவாக்கப்பட்ட விரைவு நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்பட்டு பின் அவசியப்பட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டும் வழக்கு முன்னேற்றமில்லாததால் மாவட்ட நீதிமன்றத்திற்க்கு 2012-ல் மாற்றப்பட்டு இரண்டாண்டு விசாரணைக்குப் பின் இப்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 94 குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்ட இந்த வழக்கை நடத்தக்கூடாது என்பதில் அரசு காட்டிய அக்கறையையே இத்தாமதம் காட்டுகிறது.

குற்றத்தில் பள்ளியின் தாளாளர் சரஸ்வதி (நிறுவனர் பழனிச்சாமியின் மனைவி), தலைமை ஆசிரியை சாந்தா லட்சுமி (பழனிச்சாமியின் வளர்ப்பு மகள்) ஆகிய இருவரின் பங்கையும், சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகிய இருவரின் பங்கையும் சமமாகக் கருதி அனைவருக்கும் ஐந்தாண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பள்ளியின் உரிமையாளர்களுக்கும், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் அதிக தண்டனை கொடுப்பதை தவிர்க்கும் முகமாகவே இந்த ‘சமத்துவ’ பார்வை இங்கே முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதேபோல் கல்வித்துறை எழுத்தர்கள் சிவப்பிரகாசம், துரைராஜ், துணைநிலை அலுவலர்கள் தாண்டவன், பாலாஜி ஆகியோருக்கு ஐந்தாண்டுகள் தண்டனையளித்த நீதிமன்றம் நகராட்சி ஆணையர், நகரத்திட்டமிடல் அலுவலர், கல்வித்துறை உயர் அலுவலர்கள் ஆகிய முக்கிய குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளது. விபத்து நடந்தால் கீழ்மட்டத்தில் சிலரைத் தண்டித்துவிட்டு லஞ்ச ஊழலில் பெரும்பங்கைச் சுருட்டுகின்ற உயர் அதிகாரிகள் தப்பித்துக்கொள்ள ஏதுவாகத்தான் நமது சட்டங்களே இயற்றப்பட்டிருக்கின்றன. அதனால்தான் மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் எந்தவித மீறலும் இல்லை என ஜெயலலிதாவால் அறிவிக்க முடிகிறது.

பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள் இறந்து போனதால் மக்களுடைய கோபத்தை தணிப்பதற்குத்தான் இந்த தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது. மற்றபடி இந்தப் படுகொலைக்கு காரணமான தனியார் கல்விக்கொள்ளை என்பது கடந்த பத்து ஆண்டுகளில் இன்னும் பன்மடங்கு தீவிரமடைந்திருக்கிறது. அரசு அதற்குத் துணை நிற்கிறது.

தனியார் பள்ளிகளுக்கான விதிமுறைகளையோ, குடந்தை தீ விபத்தையொட்டி அமைக்கப்பட்ட நீதிபதி சம்பத் அளித்த பரிந்துரைகளையோ கூட இந்தப் பத்தாண்டுகளில் ஒரு தனியார் பள்ளி கூட மதித்து நடைமுறைப்படுத்தவில்லை. அது மட்டுமின்றி நடைமுறைப்படுத்த முடியாது என அரசை மிரட்டவும் செய்கின்றனர். ஆனால் இன்றுவரை ஒரு பள்ளி மீது கூட வழக்கில்லை, தண்டனையில்லை. தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை எந்த பள்ளியும் வசூலிப்பதில்லை. தாம் நிர்ணயித்திருக்கும் கொள்ளைக் கட்டணத்தைத்தான் பகிரங்கமாக வசூலிக்கிறார்கள்.

எனவே இந்தத் தீர்ப்பு கல்வித்துறையில் மலிந்து கிடக்கும் சீர்கேடுகள், முறைகேடுகள், ஊழல்களை எள் முனையளவும் மாற்றப்போவதில்லை.. இந்த விபத்தில் காயமடைந்த குழந்தைகளின் மொத்த கல்வி செலவையும் அரசு ஏற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற பரிந்துரையைச் செய்வதற்கு மேல் நீதி மன்றம் சிந்திக்க விரும்பவில்லை.

நாடு முழுவதும் அன்றாடம் நம் குழந்தைகளின் பேருந்து பயணத்திலிருந்து, வகுப்பறைக் கொடுமைகள், பாலியல் தொல்லைகள், கொலைகள், தற்கொலைகள் என அனைத்திற்கும் மூல முதற்காரணம் தனியார் மயக் கல்வியும், கொள்ளையுமே. இந்தத் தனியார் மயத்தை ஊக்குவித்து வளர்க்கும் அரசும், அதிகார வர்க்கமுமே முதல் குற்றவாளிகள். இவர்களை நீதிமன்றங்கள் ஒரு போதும் தண்டிக்காது. நீதிமன்றங்களும் குற்றவாளிகளின் கூட்டாளிகளே என்பதைத்தான் இத்தீர்ப்பிலிருந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இவண்,
காளியப்பன்,
மாநில இணைப்பொதுச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

ஜான் கெர்ரி: பாஸ்டன் பிராமணர்கள் X புதுதில்லி பார்ப்பனர்கள்

10

ரண்டு நாட்களாகவே நாளிதழ்களை திறந்தால் சண்டமாருதம் வீசுகிறது. “இந்தியாவிற்கு 3 நாள் அரசுமுறை பயணமாக வந்திருக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரை மோடியும் அவரது அமைச்சர்களும் வறுத்து எடுத்து விடுவார்கள்” என்று அனைத்து பத்திரிகைகளும் கிட்டத்தட்ட ஒரே குரலில் எழுதி வருகின்றன. காமடிக்கென்றே விதிக்கப்பட்ட கைப்புள்ளையை ஆக்சன் ஹீரோவாக காட்ட கொஞ்ச நஞ்சம் லாஜிக்காவது வேண்டுமே என்ற கவலை கூட நடுப்பக்க கருத்து கந்தசாமிகளுக்கு இல்லை. தேசபக்தியில் கூடவா லாஜிக் பார்ப்பது என்றொரு லாஜிக்கை அவர்கள் முன்வைக்கலாம்.

ஜான் கெர்ரி, சுஷ்மா சுவராஜ்
மோடி அரசு ‘விசுவரூப’மெடுக்க காரணங்களா இல்லை?

“அமெரிக்கா, இந்தியாவிடமிருந்து பெற விரும்பும் சலுகைகளை மோடி அரசு சும்மா கொடுத்து விடப் போவதில்லை; மோடி அரசு, மன்மோகன் சிங் அரசு போல இல்லை; மிகவும் கடுமையாக பேரம் பேசுவார்கள்”, என்பது ஊடகங்களின் ஏகோபித்த ஏகாந்த கருத்தாக இருக்கிறது.

“உளவு பார்ப்பதை ஏற்க முடியாது: அமெரிக்காவிடம் இந்தியா கண்டிப்பு”  என்கிறது ஒரு தினமணி செய்தித் தலைப்பு, “ஜான் கெர்ரி இந்திய பயணம், இந்தியாவை சமரசப்படுத்தும் அமெரிக்க முயற்சி வெற்றி பெறுமா?” என்கிறது தினகரன். Indo-US dialogue: Sushma Swaraj talks tough with John Kerry on spying, gives some friendly advice என்றது எகனாமிக் டைம்ஸ்.

‘மோடி, பா.ஜ.க மற்றும் இந்திய ஆளும் வர்க்கத்தின் மனதை நோகடித்த அமெரிக்கா சரியாக வாங்கிக் கட்டிக் கொள்ளப் போகிறது’ என்று ரூ 47-க்குள் காலம் தள்ளும் (வறுமைக் கோட்டுக்கு கீழ்) 27 கோடி இந்தியர்களின் விதியைத் தீர்மானிப்பதோடு, அந்த விதியிலிருந்து தப்பி விட்ட எஞ்சிய இந்தியர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். வீடியோ கேம் வர்க்கமென்றாலும் சண்டை சண்டை தானே?

மோடி அரசு ‘விசுவரூப’மெடுக்க காரணங்களா இல்லை?

முதலாவதாக 2005-ம் ஆண்டு மோடி அமெரிக்கா போக திட்டமிட்ட போது அவருக்கு விசா மறுக்கப்பட்டது. அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தது வரை குஜராத் மாநிலத்தை அமெரிக்க தூதரகம் அரசியல் ரீதியாக புறக்கணித்து வந்திருக்கிறது. இந்த சோகத்தை பாஜக மறப்பது கடினம்.

இரண்டாவதாக, பா.ஜ.க உள்ளிட்ட இந்திய நிறுவனங்களை அமெரிக்கா உளவு பார்த்தது குறித்து மோடி அரசு கடுப்பில் உள்ளது. இதை தடுக்க முடியாது என்றாலும் கடுப்பு கடுப்பு தானே?

மூன்றாவதாக, கடந்த டிசம்பர் மாதம் இந்திய தூதரக அலுவலர் தேவயானி கோப்ரகடேவை கைது செய்தது குறித்து இந்திய உணர்வுகள் புண்பட்டிருக்கின்றன. இந்த புண்படலில் பாஜக மட்டுமல்ல காங்கிரசு, கம்யூனிஸ்டுகள் என்று அநேக தேசபக்தி மனங்கள் வாடியது உண்மை.

இந்த அவமானங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு சும்மா இருந்து விடுமா இந்திய அரசு? இருதரப்பு, சர்வதேச உறவுகளில் அமெரிக்காவின் அழுத்தங்களை உறுதியாக எதிர்த்து நிற்க வேண்டாமா இந்தியா? என்று ஊடகங்கள் கைப்புள்ளையை கம்புடன் அடிக்க அழைக்கின்றன.

வளரும் நாடுகள் உணவு மானியம் அளிப்பது பற்றிய ஒப்பந்தம் ஏற்படாமல், சுங்க நடைமுறைகளை தளர்த்துவதற்கான உலக வர்த்தகக் கழக உடன்பாட்டில் கையெழுத்திட மாட்டேன் என்று இந்தியா உறுதிபட கூறியிருப்பதோடு, இதன் மூலம் சுமார் $1 லட்சம் கோடி (ரூ 60 லட்சம் கோடி) மதிப்பிலான உலக வர்த்தகத்தையே இந்தியா தடுத்து நிறுத்தியிருக்கிறதாம்.

மேலும், “அணு சக்தி, மருந்துத் துறை, சில்லறை வணிகம், நிதித் துறை, ஆயுத உற்பத்தி போன்ற துறைகளில் அமெரிக்க நலன்களுக்கு ஏற்ப இந்தியா தனது சட்டங்களையும் நடைமுறைகளையும் வளைக்க தயாராக இல்லை” என்று எழுதுகிறார் தி ஹிந்து நாளிதழிலிருந்து வெளியேற்றப்பட்ட பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன்.

சுஷ்மா - கெர்ரி
“இந்திய – அமெரிக்கஇரு தரப்பு உறவு 21-ம் நூற்றாண்டில் முக்கியத்துவம் வாய்ந்தது.”

“2013-ம் ஆண்டு அமெரிக்க உளவு நடவடிக்கைகள் பற்றி எட்வர்ட் ஸ்னோடன் தகவல்களை வெளியிட்ட போது மன்மோகன் சிங் எதிர்வினை மிகவும் மென்மையாக இருந்தது, நரேந்திர மோடி அரசிடம் அத்தகைய புரிதலை அமெரிக்கா எதிர்பார்க்க முடியாது” என்கிறார் அவர்.

“இந்தியாவுக்கு புறப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு வாஷிங்டனில் உள்ள அமெரிக்க முன்னேற்றத்துக்கான மையத்தில் ஜான் கெர்ரி உரையாற்றும் போது இந்தியாவுடனான உறவை தவிர்க்க முடியாத கூட்டுறவு என்று பல முறை குறிப்பிட்டாலும், அது இந்தியாவுடனான உறவை சீர்செய்ய எப்படி உதவும்” என்று கேள்வி எழுப்பியிருந்தார் சித்தார்த் வரதராஜன்.

இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், இந்திய – அமெரிக்கஇரு தரப்பு உறவு 21-ம் நூற்றாண்டில் முக்கியத்துவம் வாய்ந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்துக்கும், உலகின் மிக வலிமையான ஜனநாயகத்துக்கும் இடையேயான இந்த உறவை வலுப்படுத்த வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அதுதான் அமெரிக்க பன்னாட்டு முதலாளிகளுக்கும், இந்திய தரகு முதலாளிகளுக்கும் தேவை என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

கெர்ரி தன் பங்குக்கு எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் அமெரிக்க வர்த்தக அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கருடன் இணைந்து இந்திய அமெரிக்க உறவு குறித்து ஒரு தலையங்கக் கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் இந்தியாவின் உள்கட்டமைப்பு, இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிப்பது, இந்தியாவில் அன்னிய முதலீடுகளை அனுமதிப்பது, எரிசக்தித் துறை போன்றவற்றில் அமெரிக்கா இந்தியாவுக்கு எவ்வாறு உதவ முடியும் என்று விவரித்திருக்கிறார். குச்சி ஐசுக்கு உருகாதா குழந்தையும் இல்லை. இந்திய சந்தையை விரும்பாத ஒரு மேற்குலக நாடும் இல்லை.

உறவில் இருக்கும் பிரச்சனைகளை சமாளித்து இரு தரப்புக்கும் நலன் பயக்கும் உறவை வளர்த்து செல்வதற்கு தனது தனிப்பட்ட திறமைகளையும், மோடி மற்றும் சுஷ்மா சுவராஜுடனான் தனிப்பட்ட நல்லிணக்கத்தையும் பயன்படுத்திக் கொள்ளப் போவதாக கெர்ரி கூறியிருக்கிறார். கட்டதுரையின் கடமை உணர்வில் உண்மை இல்லாமல் இல்லை.

ஜான் கெர்ரிக்கும் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பா.ஜ.கவுக்கும் இடையே தனிப்பட்ட நல்லிணக்கம் உருவாக்க பல பொது அம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

சுஷ்மா சுவராஜ்
கெர்ரிக்கும் இந்துத்துவ பரிவாரத்துக்கும் இடையேயான ஒற்றுமைகள் இவ்வளவு இருக்க, அவருக்கும் சுஷ்மா சுவராஜூக்கும் அரசியல் ரீதியாக சில ஒற்றுமைகள் இருக்கின்றன.

ஜான் கெர்ரி போஸ்டன் பிராமின்கள் என்று அழைக்கப்படும் அமெரிக்க மேட்டுக் குடி குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர். அவரது அம்மா வழி தாத்தா, 19-ம் நூற்றாண்டில் சீனாவுடன் வணிகம் செய்து பெரும் பணம் ஈட்டியவர். அவரது கொள்ளுத் தாத்தா ஸ்காட்லாந்திலிருந்து முதன்முதலில் அமெரிக்காவில் குடியேறிய போது பாதிரியாராக (பூசாரி) வேலை செய்வதற்கு உரிமம் பெற்றவர். இப்படிப்பட்ட ஒருவர் இந்தியாவின் பார்ப்பன-பனியா கட்சியுடன் இயல்பான உறவை ஏற்படுத்திக் கொள்வது சிரமமாகவா இருக்கப் போகிறது? ஒரு இந்திய பார்ப்பன நபரை ஒரு அமெரிக்க ராஜதந்திரி பிராமணன் விரும்பாமலா இருப்பான்?

கெர்ரிக்கு பாரம்பரிய குடும்பப் பெருமை மட்டும் இருக்கவில்லை. அமெரிக்க மேலவை உறுப்பினர்களில் மிகப்பெரிய பணக்காரர் கெர்ரிதான். அவரது தாயின் குடும்பமான ஃபோர்ப்ஸ் குடும்ப உறுப்பினர்களின் 4 அறக்கட்டளைகள் கெர்ரியின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதுவும் போதாது என்று பா.ஜ.கவின் மனதுக்கு அணுக்கமான மத விஷயத்திலும் கெர்ரி ஒத்து போகிறார். கெர்ரி ஒரு தீவிர கத்தோலிக்கர். அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது பிரச்சாரங்களில் ஜெப மாலை, பிரார்த்தனை புத்தகம், பயணத்துக்கான பைபிள், தேவதையான செயின்ட் கிறிஸ்டபர் மெடல் ஆகியவற்றை ஏந்தியபடியே சென்றிருக்கிறார். மோடியோ வாரணாசியில்  காவி எழுச்சியில்தான் எம்பியே ஆனார்.

கெர்ரிக்கும் இந்துத்துவ பரிவாரத்துக்கும் இடையேயான ஒற்றுமைகள் இவ்வளவு இருக்க,  அவருக்கும் சுஷ்மா சுவராஜூக்கும் அரசியல் ரீதியாக சில ஒற்றுமைகள் இருக்கின்றன.

ஜான் கெர்ரி, 2004 அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு அப்போதைய அதிபர் இளைய புஷ் என்ற இம்சை அரசனிடம் தோல்வியடைந்தவர். சுஷ்மா சுவராஜூம் அத்வானி-வாஜ்பாய்க்கு பிறகு தான் பிரதமர் வேட்பாளர் ஆக வேண்டும் என்று முட்டி மோதி இந்தியாவின் இம்சை அரசன் மோடியிடம் தோல்வியடைந்தவர். இருவருமே தமக்கு வாய்க்காத பதவியில் தமது கட்சிக்காரர் உட்கார்ந்திருக்க, அவர்களது வெளியுறவுத் துறை அமைச்சராக செயல்படுகின்றனர்.

இப்போது இந்தியா வந்திருக்கும் ஜான் கெர்ரி, சுஷ்மா சுவராஜுடன் இந்திய -அமெரிக்க நல்லுறவு குறித்து, ராணுவ உறவு, பாதுகாப்பு, எரிசக்தி போன்ற விவகாரங்கள் அடிப்படையில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அதன் முடிவில் “இந்தியர்களை அமெரிக்கா உளவு பார்த்தது குறித்து பேசினீர்களா” என்று பத்திரிகையாளர்கள் கேட்ட போது, “இது தொடர்பாக இந்திய மக்கள் மிகவும் மனம் புண்பட்டு போயிருக்கின்றனர். இந்தியாவும், அமெரிக்காவும் நட்பு  நாடுகள் என்றால், நண்பர்களை எப்படி ஒட்டுக் கேட்கலாம்” என்று கண்டித்ததாக சுஷ்மா சுவராஜ் சொல்லியிருக்கிறார். கெர்ரியோ “எந்த உளவுத் துறையும் தமது உளவு நடவடிக்கைகளை வெளியில் பேசுவதில்லை. ஒபாமா, இது குறித்து வெளிப்படையாகவும், திறந்த மனதோடும் இருக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளார்” என்று சொல்லி,  ‘உங்களுக்கெல்லாம் இந்த பதில் போதும்’ என்று கேள்வியை தட்டிக் கழித்து விட்டார். அல்லது கெர்ரி பதிலுக்கு நிதின் கட்காரியை ஒட்டுக்கேட்டது யாரு என்று புன்சிரிப்புடன் கேட்டிருந்தால் அம்மையார் சுஷ்மாவுக்கு ரொம்பவும் தர்மசங்கடமாக இருந்திருக்கும். அந்த அளவுக்கு அமெரிக்கர்களிடம் ஒரு டேபிள் மேனர்ஸ் இல்லாமல் இல்லை.

என்.டி.டி.வியில் பிரணாய் ராய்க்கு அளித்த பேட்டியில், “மோடிக்கு விசா மறுத்தது முந்தைய அரசு, இப்போது நாங்கள் வேறு அரசு” என்று முந்தைய காங்கிரசு அரசு மீது பழி போடும் பா.ஜ.க கட்சியின் உத்தியையே அவிழ்த்து விட்டார்,கெர்ரி. அப்படியானால், “முந்தைய அரசு செய்தது தவறு என்று சொல்கிறீர்களா” என்று கேட்டதும், “நான் கடந்த காலத்தைப் பற்றி பேச விரும்பவில்லை, எதிர்கால உறவைத்தான் கட்டமைக்க விரும்புகிறேன்” என்று சொல்லி விஷயத்தை முடித்துக் கட்டினார். இல்லை பேசித்தான் ஆகவேண்டும் என்று நிர்ப்பந்திருந்தால் கடந்த காலத்தில் அது தேவையாக இருக்கலாம், நிகழ்காலத்தில் அது தேவையற்றதாக இருக்கலாமென தேவை-அளிப்பு குறித்த பொருளாதார விதியின் மூலம கெர்ரி பட்டையை கிளப்பலாம்.

ஜான் கெர்ரி - என்.டி.டி.வியில்
“மோடிக்கு விசா மறுத்தது முந்தைய அரசு, இப்போது நாங்கள் வேறு அரசு”

தனக்கு அமெரிக்க அரசு விசா தராததை எல்லாம் மோடி மனதில் வைத்துக் கொள்ள மாட்டார். இல்லை மனதில் வைத்திருந்தால்தான் என்ன என்று யாரும் கேட்டால் மோடியிடம் மட்டுமல்ல யாரிடமும் பதில் இல்லை. எதிர்த்துப் பேச முடியாத ஆளிடம் கோபத்தை காட்டும் முறை வேறுதானே? பிரச்சார கூட்டங்களில் திட்டித் தீர்த்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை அதானியின் நலனுக்காக தனது பதவி ஏற்பு விழாவுக்கே அழைத்து விருந்து வைத்த, பெருந்தன்மையாளர் அவர். இப்போது ஒரு டாடா அல்லது அம்பானியின் நலனுக்காக, குஜராத் மற்றும் இந்துத்துவ சைவ உணவு பாரம்பரியத்தை கைவிட்டு அமெரிக்காவுக்கு கறி விருந்து கூட வைக்கத் தயாராகத்தான் இருப்பார். அதில் மாட்டுக்கறியும் கண்டிப்பாக உண்டு. தரகு முதலாளிகளின் கமிஷனும், கோமாதாவின் புனிதமும் வேறு வேறு அல்ல என்பது ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய சித்தாந்தம்தானே?

மோடி அடுத்த மாதம் அமெரிக்கா போய் அதிபர் ஒபாமாவை சந்திக்க உள்ளார். அதற்குள் அமெரிக்காவின் கோரிக்கைகள் அனைத்தும் மோடி அரசால் வெளிப்படையாகவும், திரைமறைவிலும் நிறைவேற்றி வைக்கப்படும் என்பதற்கான தடயங்கள் இப்போது மட்டுமல்ல பா.ஜ.கவின் மரபணுவிலேயே இருக்கின்றன.

இதற்கு முந்தைய வாஜ்பாயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உலக வர்த்தகக் கழகம் நிர்ப்பந்தித்து வந்த வர்த்தக சுதந்திரத்துக்கு முழு அங்கீகாரம் அளித்து கட்டுப்பாடற்ற இறக்குமதிக்கு அனுமதி அளித்தது. இறக்குமதிகள் மீதான உபரிவரி நீக்கம், இறக்குமதி வரியை 20%-க்கு மிகாமல் கட்டுப்பாடு, சுங்கத் தீர்வை குறைப்பு மூலம் அன்னிய இறக்குமதிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது.

சிறுதொழில் பட்டியலில் இருந்த காலணிகள், விளையாட்டுப் பொம்மைகள் உள்ளிட்ட 14 தொழில்களை அப்பட்டியலிலிருந்து நீக்கி பாட்டா, அடிடாஸ், ரீபோக், நிக் முதலான அந்நிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த வழிவகுத்தது.

பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணய முறை கலைக்கப்பட்டது. யூரியா மீதான விலைக் கட்டுப்பாடு தளர்த்தப்படுதல், சர்க்கரையில் ஊக பேரம் புகுத்தப்படுதல். 49% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் 100% வரை முதலீடு என்று அன்னிய நிறுவனங்களுக்கு இந்தியாவை திறந்து விட்டவர்கள் பா.ஜ.கவினர்.

அன்று பா.ஜ.க அரசு போட்ட அடித்தளத்தை அவர்களை விட பணிவாக முன்னெடுத்துச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டார் முன்னாள் ஐ.எம்.எஃப் ஊழியர் மன்மோகன் சிங்.

அமெரிக்காவுடன் இந்தியாவை மேலும் மேலும் அடிமைப்படுத்துவதற்கான பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக 2009-ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசால் தொடங்கப்பட்ட இந்திய அமெரிக்க நல்லுறவுக்கான வருடாந்திர பேச்சுவார்த்தை பரஸ்பர நலனுக்கான ராணுவ ஒத்துழைப்பு, ஆற்றல்- சுற்றுச் சூழல் மாறுபடுதல், கல்வி வளர்ச்சி, பொருளாதாரம்-வர்த்தகம், விவசாயம், அறிவியல் தொழில்நுட்பம், மருத்துவம், புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய 5 தூண்கள் மீது கவனம் செலுத்துகிறது. அந்த வரிசையின் 5-வது சுற்றுதான் இப்போது கெர்ரி, சுஷ்மா இடையே நடந்திருக்கிறது. ஆக இந்த சந்திப்பே பழைய அஜெண்டாவின் தொடர்ச்சி என்றால் இப்போதைய மனக்குறைகளுக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்?

இவற்றின் விளைவாக 2000-த்திற்குப்  பிறகு இந்தியா-அமெரிக்கா இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் 5 மடங்கு அதிகரித்து $9,600 கோடியை தொட்டிருக்கிறது. அமெரிக்காவில் இந்திய முதலீடு $30 கோடியிலிருந்து $900 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் அமெரிக்க முதலீடு $240 கோடியிலிருந்து $2,800 கோடி ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் செயல்படும் முதல் 15 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 10 அமெரிக்க நிறுவனங்கள். 6 அமெரிக்க நிறுவனங்கள் $200-$300 கோடி வருமானத்தை ஈட்டுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா அமெரிக்காவிடமிருந்து $1000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியிருக்கிறது. அமெரிக்கா ரசியாவை முந்தி இந்தியாவுக்கு ஆயுத விற்பனை செய்யும் நாடுகளில் முதல் இடம் பிடித்துள்ளது.

தனக்கு விசா தர மறுத்ததற்காக மோடியும் அமெரிக்காவை ஒதுக்கி விடவில்லை. தனது இமேஜ் சந்தைப்படுத்தலுக்கு ஆப்கோ வேர்ல்ட் வைடு என்ற அமெரிக்க நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்தார். குஜராத் முழுவதும் சூரிய மின்சக்தி உற்பத்தி அமெரிக்க இறக்குமதியை நம்பியே இருக்கிறது. குறிப்பாக ஆசியாவிலேயே மிகப் பெரியதென்று கூறப்படும் 600 மெகாவாட் சூரிய ஒளிப் பூங்காவை சன் எடிசன் என்ற அமெரிக்க நிறுவனம்தான் குஜராத்தில் நிறுவி இயக்குகிறது. குஜராத்தில் தனது புதிய தொழிற்சாலையை அமைக்க அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு $1 பில்லியன் செலவழிக்கிறது. அதை தனது மண்டல உற்பத்தி மையமாக மாற்றவிருக்கிறது.

எனவே மோடி தனது கட்சிக்காரர்களுக்கும் இந்திய மக்களுக்கும் வேண்டுமானால் டெரரிஸ்டாக இருக்கலாம், அமெரிக்காவைப் பொறுத்த வரை அவர் ஒரு உள்ளூர் புரோக்கர்தான். என்றாலும் புரோக்கர்களுக்கு கோபம் வரும் என்பதையோ, வீரம் உண்டு என்பதையோ நாம் மறுக்க வேண்டியதில்லையே!

–    செழியன்

மேலும் படிக்க

இசுரேல், அமெரிக்காவைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

1

க்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பில் ஜூலை 31, 2014 அன்று தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

அவை குறித்து வரப்பெற்ற சில செய்திகளை கீழே தருகிறோம்.

சென்னை

றுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் பாலஸ்தீனத்தின் மீதான இசுரேலின் ஆக்கிரமிப்புப் போர் தற்போது குண்டுகளைப் பொழிந்து நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை கொன்று அவர்களின் வாழ்விடங்களை தரைமட்டமாக்கி இருக்கிறது. இப்போரினை அமெரிக்கா பின்நின்று இயக்குவதை கண்டித்தும் இந்தியா இசுரேலுடன் கூடிக்குலாவுவதை அம்பலப்படுத்தியும் ஒடுக்கப்படும் நாடுகளின் விடுதலைக்காக நாம் போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாலை நான்கு மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற புஜதொமுவின் மாநில இணைச் செயலர் தோழர்.இரா.ஜெயராமன் “அறுபது ஆண்டுகளாக பாலஸ்தீனத்தின் மீது யூத இனவெறி பிடித்த இசுரேல் நடத்தி வரும் இந்த ஆக்கிரமிப்புப் போர் பல்லாயிரக்கணக்கான மக்களை காவு கொண்டு இருக்கிறது. குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் மூன்று முறை மிகப்பெரிய தாக்குதலை இசுரேல் மேற்கொண்டிருக்கிறது. தற்போது 23 நாட்களாக நீடித்து வரும் போரில் மட்டும் 1500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டு இருக்கின்றனர். வாழ வழி இன்றி பள்ளிக்கூடத்தில் தஞ்சம் அடைந்த மக்களின் மீது கூட தாக்குதல் நடத்தி தன் யூதவெறியினை ஆக்கிரமிப்பு போரின் மூலம் இசுரேல் பறைசாற்றியிருக்கிறது என்றால் அது வெறும் இசுரேல் மட்டும் தனியாக நடத்தும் போர் அல்ல.

உலகத்திலேயே மிகவும் யோக்கியனாக தன்னைக் காட்டிக்கொண்டு ரசியா உக்ரேனிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குகிறது என்று நியாயம் பேசும் அமெரிக்கா அதற்கு பின்னால் நின்று வழி நடத்துகிறது என்பது தான் உண்மை. இந்தியாவோ தற்போது இசுரேலை கண்டிப்பதற்கான நேரமில்லை என்று யூத இனவெறி இசுரேலுக்கு தோள் கொடுக்கின்றது. இந்த அயோக்கியத்தனத்தை நாடு முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்டிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழகம் முழுவதும் புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன” என்று குறிப்பிட்டார்.

அடுத்ததாக கண்டன உரையாற்றிய புமாஇமுவின் மாநில அமைப்பாளர் தோழர்.த.கணேசன்  “மொத்த உலகையே சூறையாடிவரும் உலக பயங்கரவாதியான அமெரிக்கா பின்நின்று இயக்கும் பாலஸ்தீனத்தின் மீதான இசுரேலின் போரினை இந்தியா தோள் கொடுத்துக்கொண்டு இருக்கின்றது என்ற அநியாயத்தினை கண்டிப்பதற்கு கூட நமக்கு உரிமை இல்லாமல் போலீசைக் குவித்து இந்த ஆர்ப்பாட்டத்தை மக்கள் கேட்கக் கூடாது என்பதில் குறியாக இருக்கும் இந்த இந்திய அரசில் எங்கே இருக்கிறது சனநாயகம்? ” என்ற கேள்வியோடு தொடர்ந்தார்.

“பாலஸ்தீனத்தின் மீது இசுரேல் தாக்குதல் என்றுதான் ஊடகங்களும் கூறுகின்றன. இது தாக்குதல் அல்ல, ஆக்கிரமிப்புப் போர் என்ற வரலாற்று உண்மை திட்டமிட்டே மறைக்கப்பட்டு இருக்கின்றது. ஆயிரத்து தொள்ளாயிரத்தின் ஆரம்பங்களில் இசுரேல் என்ற தேசம் ஒன்றே இல்லை. ஆனால் இன்று நாடாக மாற்றப்பட்டு அது பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பு செய்யும் அளவில் வந்திருக்கின்றது என்றால் அதன் பின்னணியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நாசிசக் கொடுங்கோலன் ஹிட்லரின் ஆட்சியில் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட யூதர்கள் பல நாடுகளில் தஞ்சம் அடைந்தார்கள். தஞ்சம் பிழைக்க வந்தவர்களை பாலஸ்தீன மக்கள் அரவணைத்தார்கள். ஆனால் யார் தங்களை அரவணைத்தார்களோ எந்த மண் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததோ அந்த மண்ணையே கைப்பற்றிக் கொண்டார்கள் யூத வெறியர்கள். அப்படி பாலஸ்தீனத்தின் சில நகரங்களை கைப்பற்றிக்கொண்டு 1940-களின் பின்பகுதியில் இசுரேல் என்ற தனி நாட்டை அறிவித்தார்கள். அந்த இசுரேல் என்ற நாட்டை முதலில் அங்கீகரித்தது அமெரிக்கா. காரணம் மத்திய கிழக்காசியப்பகுதியில் தன்னுடைய பேட்டை ரவுடியாக இசுரேலை வளர்த்து அதன் மூலம் தனது உலக மேலாதிக்கத்தை நிறுவுவதுதான்.

அதன் விளைவு பாலஸ்தீனம் என்ற பரந்து விரிந்த தேசத்தை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றி காசாமுனை, மேற்கு கடற்கரை என்ற இரு பகுதிகளாக சுருக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிறிய பகுதியையும் கைப்பற்றி அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவவே லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களின் மீதான இசுரேலின் போர் நடக்கிறது.

இசுரேலுக்கு நண்பனாக இருந்து இந்தப்போரினை ஆதரிக்கும் இந்திய அரசு தான் ஈழத்தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவிக்க ராணுவத்தையும் ஆயுதத்தையும் ராஜபட்சேவுக்கு அளித்தது. அதே இந்திய அரசுதான் வட கிழக்கில் , காசுமீரில் இன விடுதலைக்காகப் போராடுகின்ற மக்களை தாக்கி அழிக்கின்றது. ஈராக்கிலும் ஆப்கானிலும் சொந்த நாட்டு விடுதலைக்காகப் போராடுகின்ற மக்களை தீவிரவாதிகளாக சித்தரித்து கொன்றொழிக்கும் அமெரிக்காவின் பின்புலத்தில் இருந்து கொண்டு தான் இசுரேல் ஹமாஸ் இயக்கத்தினரை தீவிரவாதிகள் என்று கூறி அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கிறது. இந்த அமெரிக்காவையும் இசுரேலையும் ஆதரிக்கும் இந்தியாவோ இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதற்கு எதிராக போராடுகின்ற ,தேசிய இன உரிமைக்காக போராடுகின்ற மக்களையும் அமைப்புக்களையும் தீவிரவாதிகளாக சித்தரித்து தாக்குதலைத் தொடுக்கின்றது. இந்த அமெரிக்கா – இசுரேல் – இந்தியாவின் கள்ளக்கூட்டினை எதிர்க்காமல் சொந்த நாட்டின் விடுதலையைப்பற்றிப் பேச யாருக்கும் உரிமை இல்லை.

எனவே ஒடுக்கப்படுகின்ற ஒரு நாட்டின் விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவாக பாட்டாளிவர்க்கம் என்ற வகையிலும் ஒடுக்கப்படும் தேசம் என்ற வகையிலும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக வீதிகள் தோறும் தெருக்கள் தோறும் நாம் போராட்டங்களை தொடர்ந்து நடத்த வேண்டும். அப்படிப்பட்ட போராட்டங்கள் தான் இசுரேலுக்கு ஆதரவாக செயல்படும் இந்திய அரசுக்கு மரண அடியைக் கொடுக்கும்.” என்று தனது உரையினை தோழர். கணேசன் நிறைவு செய்தார்.

இசுரேலை கண்டிக்கும் வகையிலும் பாலஸ்தீனத்தின் மீதான போரை பின்நின்று வழி நடத்தும் அமெரிக்காவையும் இசுரேலுக்கு நண்பனாக செயல்படும் இந்தியாவையும் அம்பலப்படுத்தும் வகையிலும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட தோழர்களின் எண்ணிக்கையை விட போலீசை அதிகமாகக் குவித்து தான் இசுரேலின் நண்பன் தான் என்பதை ஆர்ப்பாட்டம் முடியும் வரை நிரூபித்துக்கொண்டு இருந்தது தமிழக அரசு.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை

மதுரை

துரையில் ம.க.இ.க., வி.வி.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து மாலை 6 மணியளவில் தலைமை தபால் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ம.க.இ.க மதுரை அமைப்பாளர் தோழர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

யூத மதவெறி இசுரேலின் கொலைமுகத்தை திரைகிழித்தும், அமெரிக்காவின் ஆசியுடன் நடைபெறும் இந்த கோர தாண்டவத்தை ஆதரிக்கும் அமெரிக்க அடிவருடி மோடி அரசின் நாடகத்தை அம்பலப்படுத்தியும் புஜதொமு சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் அமைப்பாளர் தோழர். நாகராஜன் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை செயலர் தோழர்.லயனல் அந்தோனி ராஜ் ஆகியோர் எழுச்சியுரை ஆற்றினர் .

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை .

தருமபுரி

ருமபுரியில் விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அமைப்புகள் சார்பாக தந்தி அலுவலகம் முன்பு மதியம் 3 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக 2 நாட்கள் பேருந்து பிரச்சாரமும், சுவரொட்டி பிரச்சாரமும் செய்யப்பட்டது.

போரை நிறுத்து போரை நிறுத்து
பாலஸ்தீன குழந்தைகளை
பாலஸ்தீன பெண்களை
கொன்று குவிக்கும் இஸ்ரேலின்
ஆக்கிரமிப்பு யுத்தத்தை
உடனே நிறுத்து உடனே நிறுத்து

என்று முழக்கம் எழுப்பப்பட்டது.

வி.வி.மு தோழர் மாயாண்டி தலைமை உரையாற்றினார்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தருமபுரி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜானகி ராமன் தனது உரையில், “அமெரிக்கா தனது மேலாதிக்க நலனுக்காகவே இஸ்ரேலை ஆதரித்து வருகிறது. இதன் ஒரு அங்கமாகவே இந்தியாவின் எதிர்ப்பும் ஆதரவும் அவ்வப்போது மாறுகிறது. ஐ.நா என்பதும் அதன் சர்வதேச மனித உரிமை சட்டம் என்பதும் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவும் கருவியாகவே உள்ளது. இது மனித உரிமை மீறல் மட்டுமல்ல,  இன அழிப்புப்போர்” என்று குறிப்பிட்டார்.

அடுத்து பு.ஜ.தொ.முவின் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன், “இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போருக்கு எதிராக உலெகெங்கும் கண்டனங்கள் அதிகரித்து வரும் போது இந்தியா மவுனம் காக்கிறது. நரேந்திர மோடி கக்கூஸ் உட்கார்ந்ததை தவிர்த்து அவரது அனைத்து அசைவுகளையும் புகழ்ந்து வெளியிட்ட பத்திரிகைகள் அவரது தற்போதைய மவுனம் குறித்து எழுத மறுக்கின்றன” என்று அம்பலப்படுத்தி பேசினார்.

பு.மா.இ.மு தோழர் ராஜா பேசுகையில், “ஹமாஸ் இயக்கம்தான் இந்த போருக்கு காரணம் என்பது பித்தலாட்டமானது. இது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு. இஸ்ரேல் அரசிடம் இராணுவ தளவாடங்கள் பெறும் இந்தியா இதை எதிர்க்காது” என்று குறிப்பிட்டார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

கோத்தகிரி

நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் சார்பில் காலை 9 மணிக்கு கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தலைமை : ஆனந்த்ராஜ்உரை : பாலன்
நன்றியுரை : ராஜா

திரளான தொழிலாளிகளும், தோழர்களும் கலந்து கொண்டனர்.

கோத்தகிரி காசா தாக்குதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

இவண்
நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம்,
கோத்தகிரி

கோவை

மூலதனம் நடத்தும் போர்

“பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்து..!” எனும் முழக்கத்துடன் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் 31-07-2014 அன்று மாலை ஐந்து மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மகஇக மாவட்டச் செயலர் தோழர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். கோவைத் தொழிலாளர் வர்க்கம் ஆவேசமாக முழக்கம் எழுப்பி தனது சர்வதேசிய உணர்வை வெளிப்படுத்தியது.

உள்ளூர் பிரச்சினைகள் ஆயிரம் இருக்க இவர்கள் உலகப் பிரச்சினைக்கு போராட கிளம்பி விட்டார்கள் எனும் விமர்சனத்துக்கு பதிலளித்து பு.ஜ.தொ.மு மாவட்டச் செயலாளர் தோழர் விளவை இராமசாமி கண்டன உரையாற்றுகையில்,

“உலகப் பிரச்சினைகளுக்கு போராடாத எவனும் உள்ளூர் பிரச்சினைக்கும் போராட மாட்டான். வெறுமென கேள்வி மட்டும் எழுப்பி விமர்சனம் மட்டும் செய்து கொண்டிருப்பான். இவர்களை புறம் தள்ளி நாம் போராட்டப் பாதையில் நடைபோட வேண்டும்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப நாம் தமிழர்கள் எனும் அடிப்படையிலும், இந்தியர்கள் எனும் நிலையிலும், மனிதர்கள் எனும் உணர்விலும், கம்யூனிஸ்டுகள் எனும் பெருமிதத்திலும், நமக்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. போராட்டப் பாதையில் புடம் போடப்பட்டு முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். உயர்ந்த பட்ச வர்க்க உணர்வையே நாம் வெளிப்படுத்த வேண்டும். பாலஸ்தீனத்தின் மீதான போர் என்பது மூலதனம் தனது லாப வெறிக்காக நடத்தும் போர். இதுதான் இறுதியானது. இதர காரணங்கள் இரண்டாம் பட்சமே.

முதலாளித்துவம் தனது மூலதனத்திற்கு லாபம் இல்லை என்றால் தொழிலை நடத்தாது. குறைவான லாபத்தையும் ஏற்றுக்கொள்ளாது.

10% லாபம் வரும் என்றால் எங்கு வேண்டுமானாலும் மூலதனம் பயணம் செய்யும்.

20% லாபம் வரும் என்றால் ரொம்பவும் சுறுசுறுப்பாக முதலீடு செய்ய ஓடுகிறது.

50% சதவீதம் லாபம் வரும் என்றால் எல்லா கெடுதலையும் செய்ய துணிவு கொள்கிறது.

100% லாபம் வரும் என்றால் அனைத்து சட்டங்களையும் காலில் போட்டு மிதிக்கத் தயார் ஆகிறது.

300% லாபம் வரும் என்றால் இதற்காக எந்தக் குற்றத்தையும் செய்யத் துணியும்.

தூக்கிலிடப்படுவோம் என்றாலும் துணிந்து எதையும் செய்யும். சமூகக் கொந்தளிப்பும், மோதலும் லாபம் தருமென்றால் அதையும் மூலதனம் ஊக்குவிக்கும் என்று மூலதனம் நூலில் தோழர்.மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

மேற்கண்ட அடிப்படையில் தான் பாலஸ்தீனப் போர் நடக்கிறது. பாலஸ்தீனத்தில் கிடைக்க உள்ள எண்ணெய் வளத்தையும் எரிவாயு வளத்தையும் கொள்ளையடிக்க சர்வதேச மூலதனம் நடத்தும் இந்த போரை பாட்டாளி வர்க்கமாக நாம் எதிர்க்க வேண்டும். முறியடிக்க வேண்டும்” என்று பேசினார்.

இறுதியாக பு ஜ தொ மு மாவட்டத் தலைவர் தோழர் இராஜன் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
கோவை

விழுப்புரம்

“பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்து!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநில விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து 31.07.2014 வியாழன் அன்று மாலை 4.30 மணியளவில் விழுப்புரம், இரயில் நிலைய வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விழுப்புரம்

நூலறிமுகம்: அமெரிக்க வங்கிகளின் கொள்ளை ஆட்சி

11

“அமெரிக்கா: ஜனநாயகக் கட்டுக்கதையும் கொள்ளையடிக்கும் வங்கிகளின் ஆட்சியும்” – ரிச்சர்ட் பேக்கர் என்பவர் எழுதிய நூலை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழாக்கம் நிழல்வண்ணன்.

நூலின் சில கருத்துக்களை பார்ப்போம்.

ரிச்சர்ட் பேக்கர்
ரிச்சர்ட் பேக்கர்

வங்கி என்றால் என்ன? “ஒரு வங்கியை தோற்றுவிப்பதை விட ஒரு வங்கியில் கொள்ளையடிப்பது ஒன்றும் பெரிய குற்றமல்ல” எனும் பெட்ரோல்ட் பிரெக்ட்டின் மேற்கோளுடன் கட்டுரையை ஆரம்பிக்கிறார் எழுத்தாளர்.

2008 பொருளாதார நெருக்கடியின் போது அமெரிக்க அரசு மக்களின் வரிப்பணத்திலிருந்து 42 இலட்சம்  கோடி ரூபாயை வங்கிகளை மீட்பதற்கு செலவிட்டது. இந்த பணத்தை அந்த வங்கிகள் என்ன செய்தார்கள் என்று கேட்ட போதெல்லாம் அதை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று வங்கி முதலாளிகள் மறுத்திருக்கிறார்கள். ஆனால் வாங்கிய பணத்தை இந்த வங்கிகள் தமது அதிகார வர்க்கத்திற்கு அள்ளிக் கொடுத்திருக்கின்றன. 5000 பேருக்கு தலா பத்து இலட்சம் டாலர் ஊக்க ஊதியம் என்ற பெயரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இது ஏதோ முதலாளிகளின் செருக்கா என்றால் இல்லை. அவர்கள்தான் அமெரிக்க அரசை கட்டுப்படுத்துகிறார்கள். அமெரிக்க வங்கிகளின் மொத்த சொத்துக்களில் 60 சதவீதம் பத்து பெரிய வங்கிகளிடம் இருக்கிறது. நிதிச்சாதனங்களின் (derivatives) வர்த்தக மதிப்புகளில் 95% ஐந்து வங்கிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. 5 பெரிய வங்கிகள் தலா 1000 கோடி டாலர்களுக்கும் மேற்பட்ட சொத்துக்களை வைத்திருக்கின்றன.

“அந்தக் காலகட்டத்தின் போது பெரும் தொழில் நிறுவனங்களுக்கும், வால் ஸ்ட்ரீட்டுக்கும், வங்கியாளர்களுக்கும் ஒரு உயர்ந்த வகை அடியாளாகத் தான் எனது பெரும்பாலான நேரங்களைக் கழித்தேன். சுருக்கமாகச் சொன்னால், நான் முதலாளித்துவத்திற்கு ஒரு எடுபிடியாகவும் அடியாளாகவும் இருந்தேன்” என்கிறார் 1935-ல் ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதி ஸ்மெட்லி பட்லர். எனில் இன்றைக்கு அதன் பரிமாணத்தை எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும்? இதன் பொருட்டே 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 900-த்திற்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவத் தளங்கள் இன்று இருக்கின்றன.

ஆங்கில நூல்
ஆங்கில நூலின் அட்டை

இப்படி நிதியாதிக்க கும்பல்களின் பிடியில் சிக்கியிருக்கும் அமெரிக்க மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? 2010-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 187 லட்சம் காலி குடியிருப்புகள் இருந்தன. அந்த ஆண்டில் மட்டும் 38 லட்சம் வீடுகள் கடனுக்காக கைப்பற்றப்பட்டன. இவை மீண்டும் சந்தைக்கு வருகின்றன. காலி குடியிருப்புகளின் எண்ணிக்கையோ மீண்டும் அதிகரிக்கின்றன. எனில் காலி செய்த மக்கள் எங்கே எப்படி வாழ்வார்கள்? இதுதான் அமெரிக்கா. இதுதான முதலாளித்துவம்.

“அமெரிக்க பொருளாதாரத்தை முடக்கச் செய்த நிதி நெருக்கடித் தொடங்கி மூன்று ஆண்டுகளாகியும், பெரிய நிதி நிறுவனத்தின் உயர் பதவியிலிருக்கும் வால்ஸ்ட்ரீட் நிர்வாகி ஒருவர் மீது கூட, ஒரு வழக்கு விசாரணை கூட நடத்தப்படவில்லை என்பது பொது மக்களையும், வால்ட் ஸ்ட்ரீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது” என சி பி எஸ் செய்தி அறிக்கை கூறுகிறது. ஆனால் இது குற்றமாக ஊடகங்களுக்கோ, கட்சிகளுக்கோ தோன்றவில்லை. இதுவும்தான் அமெரிக்கா. அமெரிக்காவின் இருபெரும் கட்சிகளும் கார்ப்பரேட் ஊடகங்களும் முதலாளித்துவத்தின் சேவைக்காகவே அல்லும் பகலும் செயல்படுகின்றன.

2008 வீட்டுக்கடன் குமிழ் நெருக்கடியை முன்வைத்து அமெரிக்க சமூகம், பொருளாதாரத்தின் குறுக்கு வெட்டு தோற்றத்தினை அளிக்கிறது இச்சிறு நூல். சோசலிசமே மாற்று என்பது ஏதோ ஒரு கொள்கை மட்டுமல்ல முதலாளித்துவத்தின் அழிவிலிருந்து பிறந்தே ஆக வேண்டிய மாமருந்து என்பதையும் நிறுவுகிறது. அவசியம் வாங்கிப் படியுங்கள்.

நூல்: அமெரிக்கா – ஜனநாயக மோசடியும் வங்கிகளின் கொள்ளை ஆட்சியும்.
ஆசிரியர்: ரிச்சர்ட் பேக்கர்
தமிழாக்கம்: நிழல்வண்ணன்.
பக்கம்: 48, விலை: ரூ.25
முதல்பதிப்பு – டிசம்பர், 2013

வெளியீடு:
விடியல் பதிப்பகம்,
23/5, ஏ.கே.ஜி.நகர், 3வது தெரு,
உப்பிலிபாளையம் அஞ்சல், கோயம்புத்தூர் – 641015,

தொலைபேசி – 0422-2576772, 9789457941
மின்னஞ்சல் முகவரி: vidiyal@vidiyalpathippagam.org

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை, சென்னை – 2
044 – 28412367

ONGC-ஐ எதிர்த்து வலங்கைமானில் வி.வி.மு பொதுக்கூட்டம்

0
  • டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கவரும் மீத்தேன் திட்டத்தை ரத்து செய்!
  • காவிரி மேலாண்மை வாரியத்தையும,ஒழுங்குமுறை ஆணையத்தையும் உடனடியாக அமைத்திடு!
  • விளை நிலங்களை மலடாக்கி, மக்களின் உயிருக்கு உலைவைக்கும் ONGC-ன் எண்ணெய் எரிவாயுத் துரப்பண பணிகளை கைவிடு!

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து டெல்டா மாவட்டம் முழுவதும் பிரச்சார இயக்கத்தை விவசாயிகள் விடுதலை முன்னணி முன்னெடுத்து வருகிறது. மீத்தேன் எடுப்புத் திட்டத்திற்கு எதிராக கடந்த மே 1-ம் தேதி கிரேட் எஸ்டர்ன் எனர்ஜி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடியதன் தொடர்ச்சியாக, “கீழிருந்து கட்டி எழுப்பப்படும் மக்கள்திரள் எழுச்சிகளின் மூலம் கார்ப்பரேட் பகற்கொள்ளையர்களை விரட்டியடிப்போம்” என்கிற முழக்கங்களை முன்வைத்துடெல்டா பகுதி முழுவதும் வட்டார அளவில் விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட்டக் குழுக்களை கட்டியமைத்து வருகிறது விவசாயிகள் விடுதலை முன்னணி.

இதற்காக உருவாக்கப்பட்டுள்ள மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவின் சார்பாக கடந்த 19.07.2014 அன்று மாலை 06.30 மணியளவில் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் எழுச்சிகரமாக நடத்தப்பட்டது.

டெல்டா மாவட்டங்களின் பிற பகுதிகளில் ஓரளவிற்காவது மீத்தேன் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்து வந்த சூழலில் வலங்கைமான் பகுதியில் விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டங்கள் ஏறத்தாழ இல்லை என்று கூறுமளவுக்குத்தான் இருந்தது. இந்நிலையில் மீத்தேன் எடுப்புத்திட்டத்தின் பின் உள்ள கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளையும், அதற்கு ஆதரவாக அரசும் சதித்தனமான முறையில் காவிரி நீரை தரமறுத்து, டெல்டாவை காய வைத்து பன்னாட்டு-உள்நாட்டு தரகுமுதலாளிகளுக்கு தாரை வார்ப்பதை அம்பலப்படுத்தி விவசாயிகளை இதற்கெதிராக செயல்படத்தூண்டும் வகையில் போராட்டக்குழுவில் இணைத்து கிராமந்தோறும் கமிட்டிகள் உருவாக்கப்பட்டன. எறும்பு ஊரக்கல்லும் தேயும் என்பதைப்போல விடாப்பிடியாக எமது அடுத்தடுத்த முயற்சிகளின் காரணமாக கிராமக்குழுக்களை ஒருங்கிணைத்து வலங்கைமான் ஒன்றியக்குழுவும் ஜனநாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

வலங்கைமான் ஒன்றியம் முழுவதிலுமுள்ள கிராமங்களில் சுவரெழுத்துப்பிரச்சாரங்கள், நூற்றுக்கணக்கான சுவரொட்டிகள்,ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு விவசாயிகளை உணர்வூட்டினர் எமது தோழர்கள். கிராமம் கிராமமாக மெகாபோன் மூலமாக பொதுக்கூட்டத்தை ஒட்டி விளம்பரம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருந்த பெரு விவசாயிகளும்,நிலவுடைமையாளர்களும் தோழர்களின் இடைவிடாத உணர்வுபூர்வமான முயற்சிகளை அங்கீகரித்து தம்மையும் போராட்டக்குழுவில் இணைத்துக்கொண்டனர். நாற்று நடுமிடம், களைபறிப்பு, நூறுநாள் வேலை நடைபெறும் இடம், தேநீர்கடை எனப் பார்க்குமிடமெல்லாம் தோழர்களின் அரசியல் பேச்சுக்களால் பட்டித்தொட்டி எல்லாம் மீத்தேன் திட்ட எதிர்ப்புணர்வை விசிறியெழச் செய்தோம்.

வலங்கைமான் ஒன்றியத்தில் அனுமதி கேட்டவுடன் உள்ளுர் போலீசார் உடனடியாக கொடுத்துவிட்டனர். 30 அல்லது 40 பேர் மட்டுமே வருவார்கள் என்று கருதி பாதுகாப்புக்குக் கூட போலீசாரை அனுப்பிவைக்கவில்லை. உளவுப்பிரிவுப் போலீசார் மட்டும் 4 பேர் வந்திருந்தனர். ஆனால், பொதுக்கூட்டம் துவங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் சாரைசாரையாக விவசாயிகள் டாடா ஏஸ், டிராக்டர் உள்ளிட்ட வண்டிகளில் வந்து குவிந்தனர். சுமார் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துக்கொண்டனர்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக்குழுவின் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர்.கு.ம.பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் வலங்கைமான் ஒன்றியத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி திரு.ரமேஷ் முன்னிலை வகித்தார். வலங்கைமான் ஒன்றிய அமைப்பாளர் திரு.சின்னத்துரை பேசும்போது, “ONGC-க்கு எதிராக நீங்கள் மட்டும்தான் தீவிரமாக எதிர்ப்புப் பிரச்சாரம் செய்கிறீர்கள். அவ்வாறு செய்யாமல் இருப்பதற்கு உங்கள் தலைமைக்கு என்னவேண்டுமோ அதை நாங்கள் செய்துகொடுக்கிறோம்” என்று ONGC தரப்பிலிருந்து பேரம் பேச ஆட்கள் வீடு தேடி வந்ததையும், “விவசாயத்திற்கும் மக்களுக்கும் துரோகம் செய்து என்னால் நிம்மதியாக இருக்கமுடியாது, நீங்கள் நினைப்பதைப் போன்ற இயக்கம் இதுவல்ல” என்று முகத்தில் அடித்தாற்போல் பேசி திருப்பி அனுப்பியதை பொதுக்கூட்டத்தில் பகிரங்கப்படுத்தினார்.

டெல்டா மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர்.மாரிமுத்து , கம்பம் வட்டார வி.வி.மு. செயலர் தோழர். மோகன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இறுதியாக ம.க.இ.க மாநில இணைச்செயலர் தோழர்.காளியப்பன் பேசுகையில், அம்மா உப்பு, அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா தண்ணீர் என தனியார் வியாபாரிகளின் விற்பனை ஏஜெண்டு போல அரசு செயல்படுவதை எள்ளி நகையாடினார். விவசாயத்தை அழித்துத்தான் வளர்ச்சி என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இத்திட்டம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதிராக மட்டுமல்ல அவர்களின் அடியாள்படையாக உள்ள இந்த மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரானதாகவும் இருப்பதால் டெல்டா பகுதி விவசாயிகள் இதனை எதிர்த்து வாழ்வா சாவா போராட்டத்தை நடத்த வேண்டும் என்று உணர்வூட்டிப் பேசியதை விவசாயிகள் உணர்ச்சி பொங்க கைதட்டி ஆரவாரித்தனர்.

அடுத்து நடந்த கலைக்குழுவினரின் எழுச்சிகரமான பாடல்களும் கலைநிகழ்ச்சியும் விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. துவக்கம் முதல் இறுதிவரை கூட்டம் கலையாமல் இருந்தது. பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பல விவசாயிகள் தங்கள் பங்களிப்பாக நிதியுதவியை ரூ.1000, ரூ.2000 என மேடையேறி வழங்கி தம் ஆதரவை வெளிப்படுத்தினர்.

பொதுக்கூட்டத்தைப் பார்த்த அப்பகுதி வணிகர் ஒருவர், “மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது கூட 200 பேர்தான் வந்திருந்தனர். அதுவும் பிரியாணி, சரக்கு வாங்கித்தந்து தான் அழைத்து வந்தனர். ஆனால்,உங்கள் பொதுக்கூட்டத்திற்கு காசு எதுவும் கொடுக்காமலேயே எப்படி இவ்வளவு பேரைத் திரட்டினீர்கள்” என்று ஆச்சரியமாக கேட்டு பாராட்டினார்.

கார்ப்பரேட் முதலாளிகளை விரட்டியடிக்க விவசாயிகளை அணிதிரட்டும் எமது முயற்சியில் மிக சிறப்பானதொரு நிகழ்வாக இப்பொதுக்கூட்டம் அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தகவல்

விவசாயிகள் விடுதலை முன்னணி,
திருவாரூர் மாவட்டம்.
தொலைபேசி 7502607819

நகைச்சுவை நடிகர் வெங்கல்ராவ் – நேர்காணல்

6

சினிமா நேர்காணல் – 3

நாங்கள் சென்றபோது துணைவியார் உதவியுடன் வெங்கல்ராவ் மொட்டை போட்டுக் கொண்டிருந்தார். இந்த மொட்டையும் சமீபத்திய நகைச்சுவை வேடங்களில் அவருக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம்தான். ஆனால் சினிமா உலகில் இந்த அங்கீகாரம் என்ன வாழ்க்கையை வழங்க முடியும்?நேர்காணலை படியுங்கள்!

வினவு:– சினிமாவுக்கு வந்து சேர்ந்த வரலாறை விளக்குங்களேன்!

வெங்கல்ராவ்:– எங்க ஊரு விஜயவாடா பக்கத்துல நாட்டுப்புறம் சார். அதோட பேரு புனாதிபாடு. விவசாயம் தான் தொழில். அதிலயும் கூலி வேல தான். எங்களுக்கு நெலமெல்லாம் அதிகமில்ல. ஜமீன்தார் நெலத்துல தான் வேல அதிகம் செய்வாங்க. சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டாரு. நாங்க அண்ணன் தம்பி நாலு பேரு, அக்கா ஒருத்தரு. அம்மாவால எங்களுக்கு சோறு போட முடியல. காலைல அம்பது இட்லிக்கு நானு எங்கடா போறதுன்னு சொல்வாங்க. ஐதராபாத்தில் ஒரு பத்து வருசம் போராடி பாத்துட்டுத்தான் சினிமாவுக்கு வந்தேன்.

அப்போ சினிமா அங்கே எடுக்காங்க, இங்கே எடுக்காங்க, அங்கே போனா சோறு கிடைக்கும்னு கேள்விப்பட்டேன். அதற்கு யாரை பாக்கணும்னு தெரியாது. அதுக்காக ரொம்ப ட்ரை பண்ணினேன் சார். அப்ப எனக்கு தமிழே வராது. முப்பத்தெட்டு வயசுலதான் மெட்ராஸ் வந்தேன்.

டிக்கட், ரிசர்வேசன் என எதுவமே இல்லாம ஒத்தக் காலில் நின்னுட்டே ட்ரெயின்ல இங்க வந்து பைட்டர் யூனியன்ல கார்டு வாங்கிட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, பெங்காலி, இந்தி, இங்கிலீசுன்னு நடிச்சு ஒரு நல்ல ஃபைட்டரா மாறிட்டேன். தர்மேந்திரா சார், அமிதாப்பச்சன் சார், அப்புறம் தர்மேந்திரா சாரோட பையன், ரஜினி சார், கமல் சார், அப்புறம் விஜயகாந்த் சார், கார்த்திக், சத்யராஜ் சார், தெலுங்கில என்.டி.ராமாராவ், நாகேஸ்வராராவ், பாலகிருஷ்ணா, நாகார்ஜூனா என எல்லோரிடமும் ஃபைட் பண்ணியிருக்கேன் சார்.

35 வருசமா ஃபைட் பண்ணியதில் முட்டி, இடுப்பெல்லாம் ஒரே வலி. அதுனால இனிமே முடியாதுன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன். வடிவேலு ஐயாகிட்ட போயி ‘’ஐயா இத்தன வருசமா இத்தினி லேங்குவேஜ்ல பைட் பண்றேன். ட்ரெயின், குதிரை, மேல கீழ எல்லாம் ஃபாலிங் பண்ணி உடம்பெல்லாம் போச்சு. உங்க கூட காமெடிக்கு வாரேன்யா’’ன்னு கேட்டேன். அவரும் சரிப்பா வான்னு எனக்கு நெறய காமெடி கொடுத்தாரு.

“தலைநகரம்”-ங்குற படத்துல ஜெயில்ல ‘ரா ரா சரசக்க ரா ரா’ன்னு ஒரு சின்ன பிட்டு கொடுத்தாரு. ஏபிசிடி-ங்கிற படத்துல மூக்குல பஞ்சு வச்சிட்டு பஸ்ஸூல பிணமா நடிக்கணும். அத வெச்சு எம் மவன் சம்பாதிப்பாங்கிறதுதான் சீன். இது டில்லி, பம்பாய்னு எங்கெங்கோ போய் பேமசாக்கியிருச்சு. கந்தசாமி படத்துல தலையில வச்ச கைய எடுத்தா அப்படியே கடிக்கிற மாதிரி ஒரு சீன் கொடுத்தாரு. அப்படி அவரு கொடுத்த வாய்ப்புலதான் நான் இன்னைக்கு சோறு சாப்பிடுறேன்.

ஃபைட்டர் சங்கம் இல்லன்னா நான் இல்ல. ஃபைட் மாஸ்டர்களுக்கு நான் செல்லப்பிள்ள மாதிரி. வெங்கல்ராவுக்கு வயசு சாஸ்தினு காமெடி பைட் மட்டும் தருவாங்க.

சினிமா முன்ன மாதிரி இல்ல சார். எம்.ஜி.ஆர் சார், சிவாஜி சார் இருந்த காலம் மாதிரி இப்போ இல்ல. அப்போ நூறு பேருக்கு ஒரு படத்துல வேல இருக்கும். இப்போ அஞ்சு பேருக்குத்தான் வேல. இப்போ சினிமாவ நம்பி யாரும் சோறு சாப்பிட முடியாது. பசங்களுக்கு பீசு கட்ட முடியல. வாடகை கட்ட முடியல. சினிமாக்காரர்ல நூத்துக்கு எழுபத்தி ஐந்து பேருக்கு சொந்த வீடே கிடையாது சார். தெலுங்கு தெலுங்குக்கு போயிருச்சு, மலையாளம் மலையாளத்துக்கு போயிருச்சு, கன்னடம் கன்னடத்துக்கு போயிருச்சு, இந்தி, இங்கிலீசெல்லாம் இங்கிருந்து போயிருச்சு. தமிழ்நாடு ஒன்ன வச்சு எல்லோரும் சாப்பிட முடியல ஐயா.

இந்த சினிமா தொழிலுக்கு வந்ததே தப்புன்னு இப்போதான் தெரியுது. வேற தொழிலும் தெரியாது. வாய்ப்பு வரும், நேரம் வரும்ணு எதிர்பார்த்து எதிர்பார்த்து எல்லாருக்கும் வயசானதுதான் மிச்சமுங்க. எம்.ஜி.ஆர். ஐயா மாதிரி, சிவாஜி ஐயா மாதிரி, ரஜினி சார் மாதிரி, கமலஹாசன் சார் மாதிரி வாய்ப்பு எல்லாருக்கும் வருமா. சினிமாவுல யாருக்கோதான் அதிர்ஷ்டம் வரும்.

வினவு:– உடன் பிறந்தவர்கள் என்ன செய்கிறார்கள்?

வெங்கல்ராவ்:– அக்கா, மாமா எல்லாம் இறந்துட்டாங்க. அவங்க பசங்க இருக்காங்க. மத்தவங்க எல்லாம் விவசாயம்தான் பண்ணுறாங்க. நான் சினிமாவுக்கு வந்து முப்பது வருசமானாலும் யாரையும் இங்க கூட்டி வரவில்லை.

வெங்கல்ராவ் வினவு:– சண்டைக் காட்சிகளில் நீங்க ஏதாவது ஆபத்தான சம்பவங்களை சந்திச்சிருக்கீங்களா?

வெங்கல்ராவ்:– நாலைந்து வாட்டி உயிரு போயிட்டு வந்திச்சு சார். ஆபவாணன் இயக்கத்துல விஜயகாந்த், ராம்கி, நிரோஷா நடித்த செந்தூரப்பூவே படம் தேனியில ஷூட்டிங்க்.

ட்ரெயின் வந்து போன பிறகு மட்டும் படப்பிடிப்பு நடக்கும். பதினைந்து நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெற்றது. ஃபாலிங் பண்ணும்போது, ட்ரெயினை தாண்டி குதிக்கிறதுன்னு எல்லோருக்குமே நிறைய அடிபட்டது. எனக்கு குதிக்கையில் மாரிலயும், கழுத்து பின்னாடியும் அடிபட்டது. அப்பிடி பத்து பதினைஞ்சு வாட்டி அடிபட்டிருக்கிறது.

தயாரிப்பாளர் தரப்புல மாத்திரை கீத்திரை தருவாங்க. சின்ன கம்பெனியா இருந்தால் ஐம்பதாயிரம் ஒரு லட்சம் வரைக்கும் ஆசுபத்திரில செலவு பண்ண முடியாது, பெரிய கம்பெனின்னா கொஞ்சம் பார்ப்பாங்பக. அதற்கப்புறம் படப்பிடிப்புக்கு வரும் வரைக்கும் மாதம் இரண்டாயிரம், மூவாயிரம் வரை குடும்பத்துக்கு தருவாங்க.

நான் எந்த கம்பெனியிலும் வாங்கியதில்லை. அப்படியே அடிபட்டாலும் முரடன் போல ஜம்முனு வந்திடுவேன். நிறைய பேரு காரு, பைக்ல ஜம்ப் பண்ணி ஸ்பாட்லயே இறந்து போயிருக்காங்க.

ரொம்ப முன்னால ராமராஜன் சார் படம்னு நினைக்கிறேன். மாஸ்டர் ஆர்.எஸ்.பாபு சாரோட மச்சானுக்கே கண்ணாடியை உடைக்கையில் பின்புறமாக ஒரு அரையடிக்கு கண்ணாடி பீஸ் இடுப்புக்கு மேலே குத்திக் கொண்டது. ஒரு பக்கம் கையும், காலும் வரவேயில்லை. இவர் பேரும் பாபுதான். ஒரு பத்து வருசம் எந்த வேலைக்கும் போக முடியல. ஆர்.எஸ்.பாபு சார்தான் உதவி செய்தார். கடைசியில அவரு திரும்பவும் வந்து பெரிய பைட்டரா மாறிட்டாரு. இப்போ அவரு பையன் கூட பைட்டராயிட்டாரு.

லோகுன்னு பல்ராம் தம்பி இறந்திருக்கான். ஓசூர்ல ஒரு பைக் ஜம்பர் இறந்திருக்கான். யார் யாரு என்னென்ன படத்துல இறந்தாங்கனு எனக்கு கரெக்டா தெரியாது. பத்து பதினைந்து வருடமாக நான் இந்த பைட்டுக்கெல்லாம் போகவில்லை. காமெடி சீனுக்கு வந்துட்டேன். ஆனால் பைட்டருங்க நிறைய பேருக்கு கை, கால் அடிபட்டு தொழிலுக்கு வர முடியாம போனத பாத்திருக்கேன். அவங்க பேமிலி படுற கஷ்டமெல்லாம் யாருக்கு தெரியும்

வினவு:– அப்படியானால் எதிர்காலத்துக்கு என்னதான் பண்ணுவார்கள்?

வெங்கல்ராவ்:– அட நீ வேற சார். பைட்டருக்கு கவர்ன்மெண்ட் இன்சூரன்சே இல்லங்குறான். நீ பாட்டுக்கு கப்பல் மேல இருந்தெல்லாம் குதிப்பே. அதுக்கெல்லாம் இன்சூரன்சு தர முடியாதுன்னுட்டான். யூனியன்ல தலைவருங்க நிறைய யோசனையெல்லாம் பண்ணுறாங்க. ஆனாலும் முடியாது சார்.

வினவு:– முப்பது ஆண்டு சினிமா வேலையில வாழ்க்கைய எப்படி சமாளிக்கிறீர்கள்?

வெங்கல்ராவ்:– சாப்பிட போக, பசங்களுக்கு பீசு கட்ட, கல்யாணம் கட்டிக் கொடுக்கவும் சரியா போச்சு சார். வாடகை வீட்டில்தான் இருக்கிறேன். (அவர் வீடு ஒரு பத்துக்கு பத்து அறையும், ஒரு ஆள் கூட நுழைய முடியாத சமையல் அறையும் மட்டும்தான். பொது குளியலறைதான். இதற்கு மாதம் நான்காயிரம் ரூபாய் வாடகை). சினிமாவுல கார்ல போனா ஒரு சம்பளம், பைக்ல போனா ஒரு சம்பளம். நான் இப்போதான் சைக்கிள்ல போக ஆரம்பிச்சிருக்கேன். இதுதான் விசயம். நான் ஊருக்கு போனா நீ சினிமாவுல இருக்க, நல்லா காசு வரும், ஏன்டா பிச்சக்காரன் மாதிரி இருக்கனு கேக்குறாங்க.

வினவு:– சண்டை வேலை பாத்த போது எத்தனை நாள் வேலை? என்ன வருமானம் கிடைக்கும்?

வெங்கல்ராவ்:– ஐந்தாறு நாள்தான் வேல கெடைக்கும். மத்த நாட்களெல்லாம் சும்மாதான் இருக்க வேண்டும். அப்போ இரண்டு நாளைக்கு முந்நூற்று ஐம்பதிலிருந்து நானூறு வரை கிடைக்கும். இப்போ அது கொஞ்சம் உயர்ந்து ஆயிரத்து ஐநூறு ஆகியிருக்கிறது.

வினவு:– உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் என்ன செய்கிறார்கள்?

வெங்கல்ராவ்:– ஒரு பையன் இறந்து விட்டான். ஒரே பொண்ணு. ஆந்திராவில் கட்டிக் கொடுத்து விட்டேன். பத்தாவது வரைக்கும் படிக்க வைத்தேன். ஒரு பேரன், பேத்தி. அவங்க படிப்புக்கும் அப்பப்ப ஏதாச்சும் உதவி பண்ணுவேன்.

வினவு:– ஊரில் நிலம் ஏதாவது வாங்கிப் போட்டிருக்கிறீர்களா?

வெங்கல்ராவ்: – ஒண்ணும் வாங்கல. எனக்கு மட்டுமில்ல, சினிமாவுல நெறய பேருக்கு ஒண்ணுமேயில்ல. வடிவேலு சாரோட இருக்கதால வெளியில இருந்து பாத்தா எனக்கு வீடு, காரெல்லாம் இருக்கும்ணு நீங்க நெனைக்கலாம். அதெல்லாம் உண்ம கிடையாது.

ஆனா இந்த தொழில்ல இருக்குற பல பேரு பக்கத்து வீட்ல நூறு இருநூறு கடன் வாங்கியாவது பொழுத பெருமையா கழிப்பாங்க. பைக் வச்சிருப்பான் பெட்ரோல் போட துட்டிருக்காது. கையில காதுல செயின் போட்டிருப்பான் சாப்பாட்டுக்கு வழியிருக்காது. இது அப்படிப்பட்ட தொழில் சார்.

வினவு:– உங்களை தமிழ்நாட்டில் தெலுங்குக்காரன் என்று வித்தியாசம் பார்க்கிறார்களா?

வெங்கல்ராவ்: – அந்த மாதிரி பார்ப்பதில்லை. திறமை இருந்தால் வாய்ப்பு தருவார்கள். அரசியல்வாதிகள் பற்றி எனக்குத் தெரியாது. சினிமா தொழிலில் மட்டும்தான் என்னால் சொல்ல முடியும். நமது பைட்டர் யூனியனில் ஆயிரம் பேர் மலையாளி, இந்திக்காரர், தெலுங்குக்காரர் என பலவிதமாக இருக்கிறார்கள். இவரு இந்திக்காரரு, இவரு மலையாளத்துக்காரரு, இவரு கன்னடத்துக்காரருங்குற டிஃப்ரென்சு இங்கே கிடையாது. ‘உன்னால குதிரை ஓட்ட முடியுமா?’ ‘ம் பண்றேன்யா’ என்றால் ‘சரி வா’, ‘உன்னால ஹீரோக்கு டூப் போட்டு ஜம்ப் பண்ண முடியுமா’ ‘ம் சரிய்யா’ என்றால் ‘சரி வா’ என்பார்கள். கப்பலில் இருந்து குதிக்க யார் தயாரோ அவங்கள கூப்பிடுவாங்க. நீச்சல் தெரியாதுன்னா போ ன்னுடுவாங்க. காஸ்ட் டிஃப்ரன்சு பாக்க மாட்டாங்க.

வினவு:– குதிரைச் சண்டை போடுவீர்களா? இப்போது உங்களை சண்டைக் காட்சிகளுக்கு கூப்பிடுகிறார்களா?

வெங்கல்ராவ்: – குதிரை சண்டை போடுவேன். யானை சண்டை போடுவேன். ட்ரெயின் ஓட்டுவேன். கேப்டன் பிரபாகரன் படம் மாதிரி பல படங்களில் குதிரை ஓட்டியிருக்கிறேன். ‘வா மாமா, ஒரு காமெடி பைட் இருக்கு’ என்று கூப்பிடுவார்கள். ஆனால் இப்போல்லாம் சின்ன பசங்க வந்துட்டாங்க. சும்மா அடிச்சா கில்லி மாதிரி போய் விழணும். நம்மாள முடியாது. வயசாயிட்டுது. நாம ஃபைட்டுக்கு போயி சரியா பண்ணலேன்னா யாரும் நம்மள கேவலமா நெனச்சுறக் கூடாதுன்னு பயமா இருக்கு. அதான் போறதில்ல.

வினவு:– காமெடி சண்டை என்றால் என்ன? சம்பள வித்தியாசம் இருக்குமா?

வெங்கல்ராவ்: – காமெடி சண்டை என்றால் ஹீரோ நம்மள அப்படி திரும்பி பார்க்குறப்போ நம்ம திருப்பி அடிக்காம ‘ஐயா சாமி, என்ன விட்டுரு. எனக்கொன்னும் தெரியாது’ன்னு சொல்லி கையெடுத்துக் கும்பிட்டு பயந்து போனது போல நடிக்கணும். ஆபத்து இல்லாத சண்டை. சம்பள வித்தியாசம் கிடையாது.

வினவு:– சண்டையில் இருந்து காமெடி பாத்திரங்களுக்கு மாறி எவ்வளவு காலம் ஆகிறது.? இதில் சம்பளம் அதிகமா?

வெங்கல்ராவ்:– ஆறு வருசம் ஆச்சு. நான் முப்பத்தைந்து வருசமா சினிமாவில் இருக்கேன். ஆனா இந்த ஆறு வருசத்துலதான் தமிழ்நாட்டுக்கே தெரியுமளவுக்கு மாறி விட்டேன். சம்பளம் ரொம்ப கம்மி சார். சில பேர் மூவாயிரம் தர்றான், சில பேரு நாலாயிரம் தர்றான். சூட்டிங் இப்போ கம்மி. ரெண்டு மாசமா வாய்ப்பே இல்லை.

வினவு:– சினிமாவுக்கு புதிதாக வர விரும்புபவர்களை நீங்கள் வரவேற்பீர்களா?

வெங்கல்ராவ் 3வெங்கல்ராவ்:– என்னோட சொந்தக்கார பசங்களையெல்லாம் நான் கூட்டிட்டு வரல. காரணம் நானே சொந்தமாக ஒரு வீடோ காரோ வாங்க முடியவில்லை. பசங்களுக்கோ, மனைவிக்கோ ஒரு நெய்ச்சோறு போடக் கூட வழியில்லாத நீயெல்லாம் ஏன் இருக்கேனு கேக்குறாங்க. ஃபைட் சீனெல்லாம் நடிக்க கூட்டியாந்து அவங்களுக்கு கை கால் போச்சுன்னா அவங்க அப்பா அம்மாவுக்கு யார் பதில் சொல்றது. சினிமால டான்சு, பைட், கேமராமேன் என எல்லாத்துலயும் நுழையுறதுக்கு இந்த மெட்றாசுல வந்து நெறய பேரு கஷ்டப்படுறாங்க. ஆனா அதுல நூத்துக்கு பத்து பேரு தான் ஜெயிக்கிறாங்க. மீதி தொன்னூறு பேரும் படுற கஷ்டத்த கொஞ்சம் யோசித்துப் பாருங்க

வினவு:– விலைவாசி உயர்வுக்கேற்ப உங்களுக்கு சம்பளம் அதிகரித்துள்ளதா? கேட்டால் உயர்த்தித் தருகிறார்களா?

வெங்கல்ராவ்:– பெரிய ஆர்ட்டிஸ்ட் கேட்டா தருவாங்க சார். நமக்கெல்லாம் தருவாங்களா? ஒரு பத்து நாள் சூட்டிங் இருக்கு வாறியான்னு கேப்பாங்க. நாமும் ஒரு முப்பதாயிரம் வருகிறதே என்று போவோம். போனால் இரண்டு நாட்களுக்குதான் வாயப்பு தருவார்கள். இப்போ அறுபது லட்சத்தில் கூட படமெடுக்கிறார்கள். அதுல என்ன சார் நமக்கு வாய்ப்பு கிடைக்கும். முன்னாடியெல்லாம் பெரிய ராஜ தர்பார், குதிரை அது இதுன்னு நூறு பேராவது நடிப்போம். இப்போ அதெல்லாம் இல்லாததால பத்து பேருக்குதான் சாப்பாடு கிடைக்குது.

எனக்கு சம்பளத்த கூட்டித் தரச் சொல்லி எல்லோரும் சொல்ல மாட்டார்கள். வடிவேலு சார் ஒரு மூவாயிரம், ஐயாயிரம் போட்டுத் தரச் சொல்லி கம்பெனில சொல்வார்தான். ஆனால் எப்போதும் அப்படி தர முடியாதுதானே. பத்து பேரு என்னப் போல இருப்பாங்க இல்லையா. இது சினிமா சார்.

வினவு:– எதிர்காலத்தை பற்றி என்ன திட்டம்?

வெங்கல்ராவ்:– இங்கே வரும்போது போட்டுக்கொண்டு வந்த அதே பேண்டு சட்டையோட திரும்பிப் போக வேண்டியதிருக்குமோ என்று நைட்டெல்லாம் யோசித்துப் பார்க்கிறேன். ஒரு பைட்டராக முடியல, ஒரு பெரிய நடிகராக முடியல. அப்படியே காலம் ஓடிப் போச்சு. நானே நகைய அடகு வச்சுதான் வாடகைய கட்டியிருக்கேன். அடுத்து வாய்ப்பு வந்தால் நகைய மீட்டு வருவேன். இப்படித்தான் காலம் போகுது. ஒரு நோய் நொடி வந்து படுத்தா என்ன செய்யணும்னு கூடத் தெரியல. சினிமா இப்போ தூங்குது சார். முன்னாடி காலைல ஆறு மணிக்கு ரெடியாகி யாரு கூப்பிடுவாங்கனு போனை எதிர்பார்ப்பேன். அஞ்சு மணிக்கெல்லாம் டாண்ணு அலாரம் அடிக்காமலே எழுந்து யார் கூப்பிடுவாங்கனு எதிர்பார்த்த நான் இப்போல்லாம் பதினோரு மணிக்கு எழுந்து பன்னிரெண்டு மணிக்குதான் யூனியன் ஆபிசுக்கு போறேன்.

பல பேரு வேல இருந்தாதான வருவாங்க. பஸ் கண்டக்டர், ஏர்போர்ட் வேல, கப்பல்ல வேலன்னு போயிடுறாங்க. மூட்டை தூக்குவது, குப்பை லாரி ஓட்டுவது, கார்ப்பரேசனில் வேலைக்கு போவது எனப் பலர் போய் விட்டார்கள். ரிப்பேரான வண்டிகளை சரிசெய்து அந்தந்த ஊர்களில் விட்டுவருவது என பல வேலைகளுக்கும் செல்கின்றனர். சினிமாவை நம்பி இப்போ அவர்கள் இல்லை

வினவு:– நீங்கள் அப்படி வெளி வேலைக்கு இதுவரை போகவில்லையா?

வெங்கல்ராவ்:– நான் இதையே நம்பியிருப்பதால வேற எந்த வேலைக்கும் போகல. என்னப் போல நெறைய பேர் வாய்ப்பு வரும் என்று தூங்கிக் கொண்டுதான் பொழுதைப் போக்குறோம்.

வினவு:– உங்களுக்கு பிடித்த கட்சி எது? தலைவர் யார்?

வெங்கல்ராவ்: – சினிமாக்காரனாக இருந்துகொண்டு நான் இதைச் சொன்னால் எதிர்க்கட்சிக் காரனுக்கு நான் பிடிக்காதவனாகி விடுவேன். அதனால் அது வேண்டாம். சினிமாவில் இருந்துகொண்டு அரசியல் பேசக் கூடாது. ஆனால் எனக்கு பிடித்த கட்சி, தலைவர்கள் இருக்கிறார்கள். அதனால்தானே நான் ஓட்டுப் போடுகிறேன். நான் யாருக்கு போட்டேன் என்று ஆண்டவனுக்கு தெரியும். கட்சியை பற்றி நான் பேசி விட்டு தமிழ்நாட்டில் நான் இருக்க முடியாது. தெலுங்கைப் பற்றியும் கேட்காதீர்கள். சென்னையிலேயே பாதி தெலுங்கு பேசுபவர்கள் இருக்கிறார்கள்.

வினவு:– உங்களுக்கு படிக்க தெரியுமா?

வெங்கல்ராவ்:– எனக்கு தெலுங்கு கூட படிக்க, எழுத தெரியாது. எங்க அம்மா, அப்பா கொடுத்த உடம்பை கொண்டு அப்போ என்னால நூறு கிலோ அரிசி மூட்டைய தூக்க முடியும். அத வச்சுதான் பைட்டரா வந்தேன். இப்போ பத்து வருசமா இங்க தொழிலு நல்லா இல்ல. இருந்தாலும் தமிழ் சினிமா போட்ட சோற்றைத்தான் இப்போதும் சாப்பிடுகிறேன்.

வினவு:– எழுதப் படிக்க தெரியவில்லை என்றால் ஏமாற்றி விட மாட்டார்களா?

வெங்கல்ராவ்:– நான் என்ன பத்து லட்சமா சம்பளம் வாங்குறேன். இரண்டு சீனுக்கு போனால் நாலாயிரம் நாலாயிரம் ஆக எட்டாயிரம் வாங்கப் போறேன். நம்ம சம்பளம் என்ன மளிகைக்கடை சாமான்கள் போல நீளமா என்ன, ஏமாறுவதற்கு? இதுக்கு படிப்பு தேவையில்லை

வினவு:– உங்களது அனுபவத்தில் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து பத்து தலைமுறை கதாநாயகர்களை பார்த்து விட்டீர்கள். அவர்களெல்லாம் கோடிகளில் சம்பாதித்துக் கொண்டு போகின்றபோது,  இங்கு வந்தபோது போட்டிருந்த ஆடையோடு நாற்பது ஆண்டுகள் கழித்தும் திரும்ப வேண்டியிருக்குமோ என்று இருக்கும் உங்களது நிலைமையை எப்படி பார்க்கிறீர்கள்?

வெங்கல்ராவ்:– அந்தக் காலத்திலேயே பெரிய திமிங்கல நடிகர்களிடம் போய் நிலம், வீடு வாங்க வேண்டும் என்று சொல்லி பணம் கேட்டு கைகட்டி நிற்கவில்லை. இப்போதும் இருக்கும் நடிகர்களிடமும் போய் கைகட்டி நிற்கப் போவதில்லை. இன்னைக்கு ஒரு பத்தாயிரம் ரூபா வாங்கிட்டா நாளைக்கு நம்ம பாத்து அவன் பணம் கேக்குறான்டானு கேவலமா பேசிருவாங்க. அதுனாலதான் நான் யாருட்டயும் பணம் வாங்கினதில்ல. அப்படியே பணம் சம்பாதித்தவங்க யாரும் என்ன கூப்பிட்டு ‘இந்தாடா இருபது வருசம் கஷ்டப்பட்டுட்டே. இந்தா ஒரு ரெண்டு மூணு செண்டு நெலம் வாங்கிக்கோ’னு சொல்லி பணமும் கொடுக்கல. எப்படி அவரு கொடுப்பாரு. பணமில்லையா. அவரு புள்ளங்களுக்கு வீடு, தோட்டம் வாங்குவாரு.

வினவு:– நீங்க நடிக்க வந்த பிறகு வில்லனாகவோ, அல்லது ஒரு பெரிய நடிகராகவோ முயற்சி செய்யவில்லையா?

வெங்கல்ராவ்:– முதல்ல பைட்டரா வந்துதான் இப்போ நடிகராயிருக்கேன். படிக்கட்டுல மேல போறப்ப ஸ்லிப்பாகி கீழே வர்றேனே தவிர மேல போகல. முயற்சி பண்ணாம இருந்தா இங்க இருக்க முடியுமா ஐயா

வினவு:– உங்களுக்கு என்ன வயது?

வெங்கல்ராவ்:– அறுபத்தி ஐந்துக்கு மேலே இருக்கும். என் மனைவிக்கு அறுபத்தி இரண்டு வயசாகுது. கவர்ன்மெண்ட் தரும் முதியோர் பென்சன் எங்களுக்கு தர மாட்டேங்குறாங்க. நான் யார் யாரையெல்லாமோ பிடிச்சு கவுன்சிலர பிடிச்சு பென்சனுக்கு எழுதிப் போட்டேன். இந்த ஏரியால எல்லோருக்கும் வந்துச்சு. எனக்கும் என் சம்சாரத்துக்கும் மாத்திரம் வரல. ஐந்தாறு வருசமா முயற்சி பண்றேன். கேட்டா என்னோட பிறந்த தேதி கேக்குறாங்க. எங்க அப்பா அம்மாக்கே அது தெரியுமானு எனக்கு தெரியாதே.

வினவு:– குடும்பத்தோடு தியேட்டருக்கு போயிருக்கிறீர்களா?

வெங்கல்ராவ்:– போனதில்லை சார். நான் நடிச்ச படத்தயே அங்க போயி பாக்கவா. பீச்சுக்கு, கோவிலுக்கு எல்லாம் போனதில்லை. என் சம்சாரம் மட்டும் சர்ச்சுக்கு போகும். அவங்க ஏசுநாதரை கும்பிடுவாங்க.

வினவு:– நீங்க சினிமாவில் சம்பாதிக்க முடியாமல் இருப்பதை பற்றி உங்கள் மனைவிக்கு எந்த குறையும் இல்லையா?

வெங்கல்ராவ்:– ‘இத்தன வருசமா இருக்கே, பைட்டரா இருந்தே, இப்போ நடிகராயிட்டே. நமக்கு வீடு இல்ல வாசல் இல்லே’னு அந்த அம்மா சண்ட போடும். நான் காதுலயே போட்டுக்க மாட்டேன். சும்மா படுத்துக்குவேன். ‘எதுக்கு நீ இங்க வந்தே?’ என்று என்னிடம் கேட்பார்கள். ‘நாம அங்கயே இருந்திருக்கலாமே!’ என்பார்கள். எனக்கு அம்மா கொடுத்த ஒன்னரை ஏக்கரில் எல்லாத்தையும் இருபத்தி ஐந்தாயிரத்துக்கு வித்திட்டேன். ‘இப்போ அது இருந்தா ஆறு கோடி ரூபா. நாம தலைமுறை தலைமுறையா உக்காந்து சாப்பிடலாமே’னு சண்டை போடும். ‘அட போமா’ ன்னுடுவேன். ‘நீ சினிமால இருக்க. சம்பாதிக்கே. ஒரு கோவில் பீச்சுன்னு கூட்டிட்டு போக வேணாமா’ ன்னு கேட்டா, ‘பீச்சுல்ல தண்ணியிருக்கும், மண்ணு இருக்கும், உட்கார முடியாது, நான் பாத்திருக்கேன்’ ன்னு சொல்வேன். ‘நீ பாத்திருக்கே நா பாக்க வேணாமா’ என்பார். வயசாகிப் போச்சு, இப்போ போயி எங்க போறது. வேளாங்கண்ணிக்கு போனால் அந்த அம்மனை பாத்துட்டு வருவேன். ஆந்திராவில் ஒரு ஏசுநாதர் கோவிலுக்கும் போய் விட்டுதான் வருவேன்.

இந்த மாதிரி கோவில், ஓட்டல் போன்றவற்றுக்கு வெளியே போவதற்கு அந்த வயதிலேயே எனக்கு விருப்பம் இல்லை. எந்த பண்டம் வேண்டுமானாலும் வீட்டிலேயே பண்ண சொல்லி சாப்பிட்டுக் கொள்வேன். பணமும், நேரமும் மெட்ராசுக்கு வந்தபோதே சில சமயம் இருந்தும் ஓட்டலுக்கெல்லாம் குடும்பத்தோடு போனதில்லை.

வினவு: – குதிரை தாவிக் குதித்தலில் சில சமயம் குதிரைகளே செத்துப் போய் விடுமே. நீங்கள் அதெல்லாம் பண்ணியிருக்கிறீர்களா?

வெங்கல்ராவ்: – நான் ஐந்தாறு தடவை பண்ணியிருக்கிறேன். அதிகமாக பண்ணியதில்லை. குதிரை ரோப் அதன் காலில் சிக்குவதற்குள் நாம் கரெக்டாக டைம் பார்த்து குதித்தாக வேண்டும். சிலர் அதில் கீழே சிக்கி எலும்பு நொறுங்கிப் போகும். அதன் பிறகு அந்த குடும்பத்தை பெண்கள் தான் வேலை செய்து காப்பாற்ற வேண்டும். ஃபாலிங் பண்ணும்போது கால் குத்துமா தலை குத்துமானு தெரியாது சார். ‘தில்’லில்தான் பொழப்பு ஓடும்.

வினவு:– நீங்க நடித்த படங்களின் பெயர் சொல்ல முடியுமா?

வெங்கல்ராவ்: – நான் பைட் பண்ண படமெல்லாம் சொல்லத் தெரியாது. தலைநகரம், கந்தசாமியில் காமெடி, ஏபிசிடி யில் மூக்கில் பஞ்சு வைத்துள்ள காமெடி, இங்கிலீசுக்காரன் படமொன்றில் சத்யராஜ் கதாநாயகன் ஆக நடித்த படத்தில் பிச்சைக்காரன் பாத்திரம், சீனா தானா படத்தில் தலையில் கையை எடுத்து விட்டால் கடிப்பேன், எம்டன் மகன் படத்தில் சுடுகாட்டு சீனில், சரத்குமார் நடித்த கம்பீரம் படத்தில் வடிவேல் சாரை லஞ்சம் கேட்டதற்கு கும்முவது போன்ற சீனில் என நிறைய நடித்திருக்கிறேன்.

வடிவேல் சார் என் தெய்வம். நான் ஆந்திரா போகலாமா என நினைத்த நேரத்தில் எனக்கு அவர் வாய்ப்புகளை கொடுத்தார். அரிசியை வாங்கலாம், பருப்பை வாங்கலாம், அதிர்ஷ்டத்தை வாங்க முடியாது சார். எனக்கும் நேரம் வந்தால் ‘அந்த மொட்டக் காமெடியன் நல்லா நடிக்கிறா’னு தமிழ் நாடே சொல்லும் சார். அதைத் தான் நான் இப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வினவு:– இதற்கு மேல் சினிமாவில் வாய்ப்பே இல்லை என்று ஆகி விட்டால் என்ன செய்வீர்கள்.?

வெங்கல்ராவ்: –என்ன செய்ய முடியும். என்னைப் போல நெறய பேரு ஊருக்கு போயி சேந்துட்டாங்க. பொண்டாட்டி பிள்ளைங்களுக்கு சோறு போட முடியாம தண்ணியடிச்சு தண்ணியடிச்சு என்னோட பிரண்டுகளே பல பேரு சுடுகாட்டுக்குதான் சேந்திட்டாங்க சார்.

____________________________________

வெங்கல்ராவ்பின்குறிப்பு – வெங்கல்ராவ் என்ற இந்த மூத்த கலைஞரிடம்,  எதைப் பற்றி கேட்டாலும் அவரது கருத்தும் கவலையும் மற்ற தொழிலாளிகளுக்கும் சேர்த்தே வருகிறது. இத்தனை தூரம் சினிமா எதார்த்தங்களை சந்தித்திருந்தாலும் அவரிடம் இனியும் சினிமாவில் ஜெயிப்போம் எனும் நம்பிக்கை ஒரு அவலமான அதிருஷ்டமாக இருந்து கொண்டேதான் இருக்கிறது.

நடப்பது சூதாட்டம், இந்த சூதாட்டத்தில் நாம் ஒரு ஜோக்கர் கூட கிடையாது என்று தெரிந்த பிறகும் வெங்கல்ராவ் போன்றவர்கள் தங்களது முயற்சியை கைவிடவில்லை. அதிர்ஷ்டம் வரும் என்ற நம்பிக்கையில்தான் வாடகை கட்ட மனைவியின் காதில் கழுத்தில் இருந்த்தை கழற்றி அடகுக்கடையை நோக்கி செல்கிறார் ராவ். வழியில் பார்க்கும் கவுன்சிலர் முதல் சின்னப் பையன்கள் வரைக்கும் வணக்கம் வைக்கிறார். மாடிப்படிகளில் ஏற முடியாத அளவுக்கு அவரது மூட்டுக்கள் பலமிழந்து போய் விட்டன என்ற போதும் இப்போதும் உழைத்துதான் பிழைக்க வேண்டிய நிலைமை. ஆனாலும் கைகட்டி நிற்க மாட்டேன் என்ற சுயமரியாதை அவருக்குள் நிற்கிறது. வேலையை சரியா செய்யவில்லை என யாரும் எள்ளி நகையாடி விடக் கூடாது என் குறியாக இருக்கிறார்.

இன்னொரு புறம் இனி இந்த தொழிலை விட்டுவிட்டு வேறு எங்கே போவது என்ற கேள்வியும் அச்சுறுத்துகிறது. சினிமாவில் பெரிய வாய்ப்பில்லை, வெளியேயும் வாழ்க்கையில்லை. இப்படித்தான் பல ஆயிரம் சினிமா உலக மாந்தர்கள் எந்த வரலாறும் இல்லாமல் அழிக்கப்படுகிறார்கள். வெங்கல்ராவ் அழகானவர் என்றாலும் வெள்ளித்திரையின் பின்னே இருக்கும் வாழ்க்கை அத்தனை அழகானதல்ல.

___________________________________

– நேர்காணல்: வினவு செய்தியாளர்கள்

இலங்கை இராணுவ கூட்டத்தில் இந்தியா – துயரத்தில் வைகோ, ராமதாசு

5

இலங்கை ராணுவ கருத்தரங்கில் இந்தியா

டந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடனான தமது பிழைப்புவாத கூட்டணியை நியாயப்படுத்த, குஜராத்தில் 2,000-க்கும் மேற்பட்ட முசுலீம் மக்களை இனப் படுகொலை செய்த சங்க பரிவாரத்தின் தளபதி ‘நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரானால், ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்களை படுகொலை செய்த இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவை தண்டிக்க நடவடிக்கை எடுப்பார்’ என்று மோசடி செய்தனர் மதிமுகவின் வைகோவும், பா.ம.கவின் ராமதாசும். அதன் மூலம் மக்கள் விரோதியான பாஜகவுக்கு அங்கீகாரம் தேடித் தரும் பணியில் தமிழ் மக்களின் துரோகிகளாக ஆனாலும் பரவாயில்லை என்று அலைந்தனர்.

மோடியோ வெற்றி பெற்ற பிறகு தனது பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்து சிறப்பித்தது முதல், இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை ஆதரிக்க மறுப்பது, ஐநா குழுவுக்கு அனுமதி மறுப்பு என்று இலங்கை அரசுக்கு ஆதரவான கொள்கையை பின்பற்றி வருகிறார். “இலங்கையுடனான வர்த்தக, தொழில் உறவுகளை மேம்படுத்தி, அந்நாட்டை இந்தியாவின் செல்வாக்குக்குள் கொண்டு வருவதுதான் எங்கள் நோக்கம்” என்று பா.ஜ.க பேச்சாளர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் இந்திய தரகு முதலாளிகளின் தொழில் வளர்ச்சிக்கு இலங்கையில் ஏற்பாடு செய்து தருவதே தமது நோக்கம் என்று இந்திய ஆளும் வர்க்கத்தின், காங்கிரசுக் கட்சியின் கொள்கைதான் தமது கொள்கை என்பதை தெளிவுபடுத்தி விட்டனர்.

இதன் தொடர்ச்சியாக ஆகஸ்டு மாதம் இலங்கை அரசு நடத்தவுள்ள இராணுவக் கருத்தரங்கில் இந்திய இராணுவ உயர் அதிகாரிகளும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் சேஷாத்ரி சாரியும், சுப்பிரமணிய சாமியும் கலந்து கொள்ளவிருக்கின்றனர். சேஷாத்ரி சாரி “வெளிநாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளும் வெளியுறவுக் கொள்கையை தமிழ்நாடு, மேற்கு வங்காள மாநிலங்களைக் கருதி தீர்மானிக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் வைகோ, “இந்திய இராணுவத் தளபதிகளும், பா.ஜ.க. குழுவும் இலங்கை இராணுவக் கருத்தரங்கில் பங்கேற்பது என்பது சகிக்க முடியாத, மன்னிக்க முடியாத மாபாதகச் செயலாகும்.” என்றும் “தமிழர்கள் மீது நெருப்பை அள்ளிக் கொட்டுவதாகும்“ என்றும், “இந்தத் தகவல் தமிழ் மக்களுக்குக் கடும் அதிர்ச்சியையும் மனவேதனையையும் தருகிறது.” என்றும், “இந்திய அரசின் சார்பில் அவர்கள் தெரிவித்த கருத்து, தாய்த் தமிழ்நாட்டு மக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.” என்றும் கூறியிருக்கிறார். ராமதாசோ, “இந்தத் தகவல் தமிழ் மக்களுக்குக் கடும் அதிர்ச்சியையும் மனவேதனையையும் தருகிறது” என்கிறார்.

இந்த இரண்டு பித்தலாட்ட பேர்வழிகளுக்கும் சேஷாத்ரி சாரியும், சுப்பிரமணியசாமியும் பா.ஜ.கவில் இருப்பது தேர்தலுக்கு முன் தெரியாதது போலவும், இப்போது இலங்கை அரசுக்கு ஆதரவாக அவர்கள் பேசுவதும், செயல்படுவதும் மோடி அரசுக்கு தெரியாமல் நடப்பது போலவும், தாம் பா.ஜ.கவிடம் திறமையாக பேசி, புத்திமதி சொல்லி அரசின் கொள்கையை மாற்றி விடப் போவதாகவும் மோசடி செய்கின்றனர்.

பா.ஜ.கவைச் சேர்ந்த பேராசிரியர் அழகப்பன் மறைவு குறித்து, “பாரதீய ஜனதா கட்சியின் அறிவுச் சிந்தனையாளர்கள் குழுமத்தின் ஆலோசகராகத் திகழ்ந்த பேராசிரியர் முனைவர் அழகப்பன் மறைந்தார் என்ற செய்தி கேட்டுத் தாங்க முடியாத அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளானேன்” என்றும் “ஈழத்தமிழர்களுக்காக பாரதீய ஜனதா கட்சியில் எந்தத் தயக்கமும் இன்றித் துணிச்சலாகக் குரல் கொடுத்து வந்த ஒரு அறிவாளியை, சிந்தனையாளரை இழந்து தவிக்கின்றோம்.” என்றும் வைகோ அறிக்கை வெளியிட்டிருப்பதிலிருந்து பா.ஜ.கவின் இலங்கை குறித்த கொள்கையை கண்டிக்கும் அவரது போலித்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பாஜக தயவில் சமூக நீதி பேசி பிழைக்கும் வைகோவும், ஆதிக்க சாதிவெறியில் குளிர் காய நினைக்கும் ராமதாசும் இன்னமும் தமிழர், ஈழம் என்று உச்சரிப்பது தமிழினத்துக்கே அவமானம். தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக பேர்வழிகளே வைகோ ஒரு காமடி பீசு அவர் சொல்வதையெல்லாம் பொருட்படுத்த தேவையில்லை என்று பகிரங்கமாக பேசுகின்றனர். இதெல்லாம் தேவைதான வைகோ என்று திருச்சி வேலுச்சாமி போன்ற காங்கிரசு நபர்களே கேலி செய்கின்றனர். பாஜகவோ ஈழத் தமிழருக்கு மட்டுமல்ல, தமிழக மீனவர்களுக்கும் எதிராகத்தான் அன்றாடம் செயல்பட்டு வருகிறது.

சுப்ரமணிய சாமியோ  பாஜகவின் கொள்கையாளர் குழாமில் அமர்ந்து கொண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை என்று சொல்வது தவறு, அது பயங்கரவாதத்தின் மீதான போர் என்று சப்புக் கொட்டியவாறு எள்ளல் செய்கிறார். இருந்தும் பல்வேறு தமிழனக் குழுக்கள் வைகோவையும், ராமதாசையும் போராளிகளாக மேடை ஏற்றி அழகு பார்க்கின்றனர்.

ஏற்கனவே இந்தியாவுக்கான இலங்கைத் தூதர், வைகோ பாஜக கூட்டணிக்கு வந்தது நல்லது, அவரை திருத்தி விடுவார்கள் என்று கூறியிருந்தார். உண்மைதான், வைகோ மட்டுமல்ல ராமதாசும் திருந்தி விட்டார்.

மேலும் படிக்க

இசுரேலுக்கு ஆயுத உதவி – பாலஸ்தீனத்துக்கு கண்ணீர் அஞ்சலி !

2

சுமார் 80 லட்சம் மக்களைக் கொண்ட இசுரேல் ஆக்கிரமித்திருக்கும்  காசா முனையில் வாழும் 18 லட்சம் மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் தாக்கிக் கொண்டிருக்கிறது. மூன்று வார தாக்குதல்களில் 1300-க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்திருக்கிறது.

பள்ளி வகுப்பறை
அபு ஹூசைன் ஐ.நா பள்ளியில் உடல் உறுப்புகளை பொறுக்கும் பாலஸ்தீனர் (படம் : நன்றி theguardian.com)

காசா முனையில் வசிக்கும் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்ற இசுரேலின் எச்சரிக்கையை அடுத்து ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தியுள்ள அகதிகள் முகாம்களுக்கு பல பாலஸ்தீன குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன. கடந்த மூன்று வாரங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இவ்வாறு சொந்த ஊரிலேயே அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். ஏற்கனவே ஏதுமற்ற அவர்களது போர்க்கால வாழ்க்கையை இந்த இடப்பெயர்வு இன்னும் மோசமாக தாக்கியிருக்கிறது.

காசாவில் உள்ள ஜபாலியா பெண்கள் தொடக்கப் பள்ளிக் கட்டிடத்தில் சுமார் 3,300 பேர் தங்கியிருக்கின்றனர். அந்தப் பள்ளியின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வகுப்பறை எண் 1-ல் பெண்கள், குழந்தைகள் அடங்கிய சுமார் 40 பேர் தூங்கிக் கொண்டிருந்திருக்கின்றனர். அதிகாலை பிரார்த்தனை அழைப்புக்கு சிறிது நேரத்துக்குப் பிறகு இந்த வகுப்பறையின் சுவற்றை பிளந்து கொண்டு ஒரு பீரங்கி குண்டு பாய்ந்திருக்கிறது. உள்ளே தூங்கிக்  கொண்டிருந்தவர்கள் மீது குண்டு சிதறல்கள் மழையாய் சிதற, அவர்களது ரத்தம் சுவர்களையும், தரையையும் நனைத்தது.

சில  நிமிடங்களுக்குப் பிறகு இன்னொரு குண்டு அந்த இரண்டு மாடி பள்ளிக் கட்டிடத்தின் கூரையை துளைத்திருக்கிறது. பெண்கள், குழந்தைகள் 15 பேர் கொல்லப்பட்டனர், 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்தப் பள்ளியில் பொதுமக்களை தங்க வைத்து பராமரிக்கும் பொறுப்பில் இருந்த ஐநா அதிகாரி கலீல் அல் ஹலாபி, தாக்குதல் நடந்த வகுப்பறையை பார்த்த பிறகு “எனது உடல் நடுங்குகிறது. ரத்தச் சிதறலை பார்ப்பதும், குழந்தைகளின் கதறலை கேட்பதும் சகிக்க முடியாததாக இருக்கிறது” என்கிறார்.

வகுப்பறையின் இடிபாடுகளின் மத்தியில் அங்கு புகலிடம் தேடிய மக்களின் சிதறடிக்கப்பட்ட வாழ்க்கையின் எச்சமாக ஒரு பந்து, ஒரு வாளி, சில போர்வைகள், உணவு டப்பாக்கள், செருப்புகள் சிதறிக் கிடந்தன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன், “இந்தத் தாக்குதல் கண்டனத்துக்குரியது, நியாயப்படுத்த முடியாது” என்று கூறி, இதற்கு, பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறார். இந்தப் பள்ளி குறித்தும், அங்கு வசிக்கும் அகதிகள் பற்றியும் விபரங்களை இசுரேலுக்கு தொடர்ந்து அளித்து வந்ததாக ஐநா அதிகாரிகள் கூறுகின்றனர். எனில் இசுரேலுக்கு கொல்லும் இடங்களை காட்டிக் கொடுத்ததா என்று ஐ.நா பதில் சொல்ல வேண்டும். இல்லை என்றால் இந்த கொலைக்கு பொறுப்புடன் பதில் சொல்வது என்பது இசுரேல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு சம்பந்தப்பட்டது. இதுவும் ஐநாவுக்கு தெரியாத ஒன்றல்ல.

வகுப்பறையின் இடிபாடுகள்
தாக்கப்பட்ட வகுப்பறையின் இடிபாடுகளுக்கு மத்தியில் (படம் : நன்றி theguardian.com)

‘இசுரேல் தன்னை காத்துக் கொள்ள காசாவை தாக்குகிறது, ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு, ஆயுதங்களை சேமித்து வைக்க காசா முனையில் வீடுகளுக்கு அடியில் சுரங்கங்கள் தோண்டி வைத்திருக்கிறது, பொதுமக்களை கேடயமாக பயன்படுத்தி இசுரேலை தாக்குகிறது.’ என்று ரூபர்ட் முர்டோச்சின் ஃபாக்ஸ் நியூஸ் (நம்ம ஊர் ஸ்டார் விஜய் டிவியின் தாத்தா) போன்ற அமெரிக்க ஆளும் வர்க்க ஊடகங்கள் வெறி கொண்ட முறையில் பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்தியாவிலும் இந்துத்துவ கும்பல் இணையத்தில் இத்தகைய பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

2007-ம் ஆண்டு காசா மக்கள் தேர்தலில் ஹமாஸ் அமைப்பை தமது பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தது முதல் இசுரேல் காசாவை பொருளாதார ரீதியாக தண்டித்து வருகிறது. அம்மக்களுக்கான வேலை வாய்ப்புகளையும், வணிக சாத்தியங்களையும் முழுவதுமாக ஒழித்துக் கட்டி விட்டு, எகிப்துடன் சேர்ந்து காசாவிற்குள் செல்லும் உணவைக் கூட இத்தனை மக்களுக்கு இத்தனை கலோரி போதும் என்று எண்ணி அனுப்புகிறது.

இந்த மூன்று வார தாக்குதலில் 1,000-க்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீன பொதுமக்கள் (கொல்லப்பட்ட 1,300 பாலஸ்தீனர்களில் 80% பேர் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள்) கொல்லப்பட்டுள்ளனர். மாறாக, அமெரிக்காவும், இந்துத்துவ கூட்டமும் பயங்கரமாக சித்தரிக்கும் ஹமாசின் பதிலடி தாக்குதல்களில் இசுரேல் பொதுமக்கள் 3 பேர் மட்டுமே உயிரிழந்திருக்கின்றனர். (இசுரேல் பாலஸ்தீனத்தை தாக்கிய உயிரிழப்பில் 0.3%) தாக்குதல் நடத்தும் இசுரேல் ஆக்கிரமிப்புப் படையினர் 56 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் எனும் அமைப்பு மதவாத அமைப்புத்தான் என்றாலும் இசுரேலே தாக்கி சீர்குலைக்கும் அளவு அவர்களுக்கு பலமேதுமில்லை.

இசுரேலின் நோக்கமே பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எந்த குரலும் இனி வரக்கூடாது என்ற கொலைவெறிதான். இல்லை ஹமாஸ் பயங்கரவாதி அமைப்புதான் என்று மல்லுக்கட்டி வாதாடும் கனவான்கள் இசுரேல் போன்று ஹமாசும் 1,300 இசுரேலியர்களை கொலை செய்ய குண்டோ, ஆயுதங்களோ வாங்கி கொடுத்து, கொலை செய்த பிறகு நிரூபிக்க வேண்டும். இதன்றி சும்மா பயங்கரவாதம், பயங்கரவாதம் என்று கூக்குரலிடுவது இசுரேலின் பயங்கரவாதத்தை மறைக்கும் பயங்கரவாதமாகும்.

இசுரேல் படைப்பிரிவு
ஜூலை 28 அன்று காசாவின் மீது தாக்குதல் நடத்தும் இசுரேலி படைப் பிரிவு (படம் : நன்றி rt.com)

சென்ற வாரம் பெயிட் ஹானூன் பகுதியில் இருக்கும் ஒரு ஐநா பாதுகாப்பு பகுதியில் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கூடியிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இசுரேல் அறிவித்த 4 மணி நேர போர் நிறுத்தத்தின் போது, தாக்குதல் நடக்காது என்ற நம்பிக்கையில் பொருட்கள் வாங்க கடைகளுக்கு விரைந்த மக்கள் குவிந்திருந்த ஷூஜையா நகர் சந்தையை தாக்கி ஒரு பத்திரிகையாளர் உட்பட 17 பேரை கொன்று 200 பேரை காயப்படுத்தின இசுரேலிய பாதுகாப்பு படைகள்.

அதிகரித்து வரும் இசுரேலின் மூர்க்கமான தாக்குதல் பற்றியும், இசுரேலுக்கு தத்தமது அரசுகள் அளிக்கும் ஆதரவையும் குறித்த மக்களின் கோபத்தை திசை திருப்ப அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாட்டு அரசுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் குழந்தைகளும் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுவதை கண்டிக்கின்றனர். அதே நேரம் இரு தரப்பும் வன்முறையை நிறுத்த வேண்டும் என்று ஆக்கிரமிப்பாளனையும், ஆக்கிரமிப்படுபவர்களையும் ஒரே தட்டில் வைப்பதோடு, காசாவை ஆக்கிரமிக்கவும், தாக்கவும் இசுரேலுக்கு இருக்கும் உரிமையையும் அங்கீகரிக்கின்றனர்.

ஐநா பாதுகாப்பு சபை, இசுரேல், ஹமாஸ் இருதரப்பும், “ஈத் காலகட்டத்திலும் அதற்கு அப்பாலும் மனிதாபிமான போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டு, முழுமையாக அமல்படுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறது.

லண்டன் ஆர்ச் பிஷப் ஜஸ்டின் வெல்பி, “இந்த வன்முறை வட்டம் தாங்க முடியாத துன்பங்களை விளைவித்திருக்கிறது” என்று கூறி “காசாவிலிருந்து வரும் படங்களை பார்க்கும் போது மனம் உடைந்து போகிறது. நாம் கடவுளை நோக்கி கதற வேண்டும். சொர்க்கத்தின் கதவுகளை உடைத்து, அமைதி, நீதி, பாதுகாப்பு இவற்றுக்காக பிரார்த்திக்க வேண்டும். இசுரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கு விலை கொடுக்க வேண்டிய, திறந்த மனதுடனான அமைதி தேடல் மட்டும்தான் இன்னும் மோசமான வன்முறையிலிருந்து அப்பாவி மக்களையும் அவர்களது குழந்தைகளையும், பேரக் குழந்தைகளையும் பாதுகாக்க முடியும்” என்று கடவுள், சொர்க்கம் என்ற மத மோசடிகளோடு, ஆக்கிரமிப்பு குற்றவாளி இசுரேலின் நடவடிக்கைகளை மறைமுகமாக ஆதரித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தாக்கப்பட்ட பள்ளி
ஜபாலியா அகதிகள் முகாமில் இசுரேல் படைகளால் தாக்கப்பட்ட ஐ.நா பள்ளியின் வாசலில் கொல்லப்பட்ட கழுதைகளை பார்க்கும் சிறுவன். (படம் : நன்றி theguardian.com)

“ஐக்கிய நாடுகள் அகதிகள் நிவாரண முகாம் மீது குண்டு வீசி தாக்கப்பட்டதை அமெரிக்கா கண்டிக்கிறது. அது குழந்தைகள் உட்பட அப்பாவி பாலஸ்தீனர்களையும், ஐ.நா மனிதாபிமான ஊழியர்களையும் கொன்றிருப்பதாக தகவல் வந்துள்ளன” என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தேசிய பாதுகாப்புக்குழுவின் பத்திரிகை தொடர்பாளர் ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்.

‘ஹமாஸ் பள்ளிக் கட்டிடத்தின் அருகாமையில் இருந்து இசுரேலிய படைகளை தாக்கியதால், தாக்குதல் வந்த திசையை நோக்கி இசுரேல் படைகள் சுட்டதால் இது நடந்தது’ என்று இந்த தாக்குதலை நடத்தியது தனது படைகள்தான் என்று இசுரேலே ஏற்றுக் கொண்டாலும் இசுரேலை கண்டிக்க அமெரிக்கா முன்வரவில்லை.

மாறாக, காசா முனை மீது தாக்குதல் நடத்தும் இசுரேலுக்கு கூடுதல் ஆயுதங்கள் கொடுக்கிறது. அமெரிக்க பாதுகாப்புத் துறை காசா மீது தாக்குதல் நடத்த இசுரேலுக்குத் தேவையான புதிய ஆயுதங்களை வழங்கப் போகிறது. இவற்றில் 120 மி.மீ பீரங்கிக் குண்டுகள், 40 மிமீ எறிகுண்டுகள் அடங்கும். இவை இசுரேலில் அமெரிக்கா பராமரித்து வரும் $1 பில்லியன் (ரூ 6,000 கோடி) மதிப்பிலான ஆயுதக் கிடங்கிலிருந்து வழங்கப்படும். இனி இசுரேலின் கொலை விகிதம் அதிகரிக்கும். இதை ரசித்துக் கொண்டே நம்மூர் அம்பிகள் ஹமாசின் பயங்கரவாதத்தை கண்டித்து பிரச்சாரமும் செய்வர்.

இதே அமெரிக்கா தன்னால் வளர்த்து விடப்பட்ட இராக் சர்வாதிகாரி சதாம் உசைன் அண்டைநாடான குவைத்தை ஆக்கிரமித்த போது, மேற்கத்திய நாடுகளின் கூட்டணி அமைத்து, தனது முப்படைகளையும் குவித்து போர் தொடுத்தது. அமெரிக்காவின் படையெடுப்புகளும், அறிக்கை கண்டனங்களும், ஆயுத உதவிகளும், அது சொல்லிக் கொள்ளும், ‘ஜனநாயகம்’, ‘மனிதாபிமானம்’, ‘மனித உரிமைகள்’ போன்ற காரணங்களுக்காக செய்யப்படுபவை அல்ல; அதன் ஏகாதிபத்திய பொருளாதார, இராணுவ, அரசியல் நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காக மட்டுமே நடத்தப்படுகின்றன.

உலகெங்கிலும் உள்ள ‘நடுநிலை’ மற்றும் ‘இடதுசாரி’ ஊடகங்களும், அறிஞர்களும் இந்த தாக்குதலின் விளைவாக கொல்லப்படும் குழந்தைகளுக்கும், அப்பாவி மக்களுக்கும் கண்ணீர் வடிக்கின்றனர். நெஞ்சை உருக்கும் அழிவுகளையும், கொல்லப்பட்ட குழந்தைகளின் உடல்களையும் காட்டி சோககீதம் இசைக்கின்றனர். உலகெங்கும் மக்கள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் பற்றிய செய்திகளை வெளியிடுகின்றனர்.

அப்பாவி மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதையே தனது வளர்ச்சிக்கான உத்தியாக கொண்டிருக்கும் மோடியின் அரசு கூட இருதரப்பும் வன்முறையை கைவிட்டு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்கிறது. இசுரேலையும், நாஜி ஹிட்லரையும் அவர்களது உறுதியான தேசியவாதத்துக்காக விதந்தோதும் பார்ப்பனிய இந்துமதவெறி சித்தாந்தவாதிகள் கூட துன்புறும் குழந்தைகளுக்காக கண்ணீர் வடித்து பதிவு செய்யலாம்.

ஆனால், கடந்த 50 ஆண்டுகளாக ஏகாதிபத்தியங்களின் ஆதரவோடு இசுரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்தி வரும் இராணுவ ஆக்கிரமிப்பு போர்களையும், பாலஸ்தீன  பகுதிகளில் திட்டமிட்டு அமல்படுத்தி வரும் சட்ட விரோத யூத குடியேற்றங்கள் பற்றியும், யாசர் அராஃபத்தின் பாலஸ்தீன விடுதலை அமைப்பு போன்ற மதசார்பற்ற அமைப்புகளை சீர்குலைத்து பணியவைத்து வீழ்த்தி விடுவதோடு, ஹமாஸ் போன்ற மதவாத அமைப்புகளை திட்டமிட்டு வளர்த்து விடுவதையும் இவர்கள்  மறந்தும் குறிப்பிடுவதில்லை. அமெரிக்கா இசுரேலுக்கு அளித்து வரும் இராணுவ உதவிகளையோ அம்பலப்படுத்தி கண்டிப்பதில்லை. மாறாக, ஹமாஸ் எப்படி கொடூரமாக காசா மக்களை சுரண்டுகிறது என்று இசுரேலின் பிரச்சார வீடியோக்களை பரப்பி வருகின்றனர்.

இப்போதைய மோடி அரசும், இதற்கு முந்தைய காங்கிரசு அரசுகளும் இசுரேலிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவது, இசுரேலுடன் பொருளாதார தொடர்புகளை வளர்த்துக் கொள்வது என்று மாறாமல் அதே உறவை தொடர்கின்றனர். அதற்கு முன்பு பெயரளவுக்காவது இசுரேல் ஆக்கிரமிப்பைக் கண்டித்த டிராமா கூட இப்போது இல்லை.

இந்நிலையில் இசுரேலின் பயங்கரவாதம், அதற்கு ஆதரவான அமெரிக்க ஏகாதிபத்தியம், இசுரேலை கோட்பாட்டளவில் ஆதரிக்கும் இந்துத்துவ அமைப்புகளை அம்பலப்படுத்தி கோவை மக்கள்  கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் இன்று மாலை 5 மணிக்கு கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளன.

*பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்து’’!

கண்டன ஆர்ப்பாட்டம்

உழைக்கும் மக்களே!

  • அமெரிக்க அடியாள் யூதவெறி இசுரேல் அரசின் பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்புப் போரை எதிர்ப்போம்!
  • இசுரேலைப் பின்நின்று இயக்கும் அமெரிக்க மேலாதிக்கத்தை முறியடிப்போம்!
  • இசுரேலுடன் கூடிக்குலவும் அமெரிக்க அடிமை மோடி அரசை அம்பலப்படுத்துவோம்!

ம.க.இ.க – பு.ஜ.தொ.மு

நாள் : 31-07-2014 மாலை 5 மணி
இடம் : செஞ்சிலுவை சங்கம் முன்பு , கோவை.

தலைமை
தோழர்.மணிவண்ணன்
மாவட்ட செயலாளர், ம.க.இ.க

கண்டன உரை:
தோழர்.விளவை இராமசாமி
மாவட்ட செயலாளர் பு.ஜ.தொ.மு

நன்றி உரை:
தோழர்.இராஜன்
மாவட்ட தலைவர் பு.ஜ.தொ.மு

palastine-notice

மேலும் படிக்க

கும்பகோணம் தீ விபத்து வழக்கு – தனியார்மயம் தண்டிக்கப்படவில்லை !

7

ல்வி தனியார்மயத்தின் கொடூர படுகொலைகளில் ஒன்றான கும்பகோணம் தீ விபத்து வழக்கில் தஞ்சை முதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 94 குழந்தைகள் உயிரோடு எரிக்கப்பட்டு கொல்லப்பட்ட அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரை விடுதலை செய்து 10 பேரை குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும் ரூ 51 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. பள்ளித் தாளாளர் சரஸ்வதி, தலைமையாசிரியை, சத்துணவு அமைப்பாளர்கள் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அரசு அதிகாரிகளுக்கு 5 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பள்ளிக்கு சான்றிதழ் வழங்கிய பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை, அபராதம் வழங்கப்பட்டிருக்கிறது.

பெற்றோர்
தமது குழந்தைகளின் முகங்களை மறக்க முடியாத பெற்றோர், சிறார்களின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து கண்ணீர் சிந்தி கொண்டிருக்கின்றனர். (படம் : நன்றி தி இந்து)

3 ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள், நகராட்சி அலுவலர்கள் உட்பட 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட 94 குழந்தைகள் இன்று உயிரோடு இருந்திருந்தால் 17-18 வயது ஆகியிருக்கும். வாழ வேண்டிய தமது குழந்தைகளின் முகங்களை மறக்க முடியாத பெற்றோர், சிறார்களின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து கண்ணீர் சிந்தி கொண்டிருக்கின்றனர். படுகாயமடைந்த 18 குழந்தைகள் இப்போதும் உயிர் வாழ்வதற்கு போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இப்போது 17 வயதாகும் ராகுல் தீக்காயங்களால் சிதைக்கப்பட்ட கைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். “அப்ப நான், இங்கிலீஷ் மீடியத்துல 3-வது படிச்சிக்கிட்டிருந்தேன். ஷூ, சாக்ஸ், டை எல்லாத்தையும் கழட்டிட்டு மேல கூட்டிப் போய் ஒக்கார வச்சிட்டு, கிரில் கதவப் பூட்டிட்டு டீச்சருங்க எல்லாம் கோயிலுக்குப் போயிட்டாங்க” என்கிறான். “நடந்த கொடுமைக்குக் காரணமா இருந்தவங்களுக்கெல்லாம் சரியான தண்டனை கிடைக்கணும், இது மாதிரி வேற யாருக்கும் இனிமே நடக்கக் கூடாது” என்கிறான்.

“நான் எங்கயுமே வெளியே போக முடியாது. இந்தப் புள்ளக்கி என்ன ஆச்சி? கை ஏன் இப்படி இருக்குன்னு கேக்குறாங்க” என்று சொல்லும் அப்போது 3-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கௌசல்யா, “நான் நெறயப் படிக்கணும்னு ஆசப்படுறேன். ஆனா, எங்க அப்பா கூலி வேலதான் பாக்குறாங்க. அதனால, அரசாங்கம்தான் என்னப் படிக்க வெக்கணும்” என்று கேட்கிறாள். குழந்தைகளை படிக்க வைக்கும் பொறுப்பை அரசாங்கம் கை கழுவ வேண்டும் என்பதுதான் நாட்டின் மிகச்சிறந்த ‘அறிஞர்’களின், நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கை என்பது அவள் உலகில் இன்னும் தெரியாத ஒன்று.

“அத மறக்க நெனச்சாலும் முடியல. சின்னதா ஃபயர் சர்வீஸ் சத்தம் கேட்டாக் கூட ஸ்கூலோட ஞாபகம்தான் வருது” என்று சொல்லும் பா.விஜய், “கேஸ் நடந்தப்ப கும்பகோணத்துல அப்படி ஒரு ஸ்கூலே இல்ல. நீ பொய் சொல்றன்னுல்லாம் சொன்னாங்க. அவங்க புள்ள இப்படிப் பாதிக்கப்பட்டிருந்தா இப்படி கேப்பாங்களா? எங்கள பேசவே விடல. இதுல பாதிக்கப்பட்ட 18 பேரு உயிரோடதான் இருக்கோம்” என்று வேதனையோடு கூறுகிறான்.

கும்பகோணம் பள்ளி
நடுத்தர வர்க்கத்தினரோ முறையான கட்டிடம், பாதுகாப்பான ஏற்பாடுகள் இல்லாத பள்ளிக்கு தமது குழந்தைகளை அனுப்பிய கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோரை குற்றவாளியாக்குகின்றனர்.

விபத்து குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு நியமித்த சம்பத் கமிஷன் நடந்த விபத்துக்கு முழுக்க முழுக்க அரசு அதிகாரிகள்தான் பொறுப்பு என்று முடிவு செய்தது. அறிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, ‘இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ரூ 1 லட்சம், காயம் அடைந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ரூ 50,000, இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு வீட்டு வசதி பட்டா’ என்று ஏற்கனவே வழங்கி விட்டதாக தனது கருணையை முடித்துக் கொண்டது.

சரியான இழப்பீடு கோரி பெற்றோர் தரப்பில் 2010-ல் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வுகுழு அமைக்க உத்தரவிடப்பட்டது. அதை எதிர்த்து செய்த முறையீடு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும் விசாரணை குழு அமைக்காமல் மோசடி செய்து வந்தது தமிழக அரசு. அது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட பிறகு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழ அரசு. அதன் மீதான விசாரணையும் உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது, தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கே பத்து ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன், “ஓலைக் கொட்டகையில் பள்ளி செயல்பட்டதால்தான் கும்ப கோணம் பள்ளித் தீ விபத்து ஏற்பட்டது என்று வழக்கை மாற்றிவிட்டனர்.” என்று குற்றம் சாட்டுகிறார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலர் காளியப்பன், “இன்று வரை ஏராளமான பள்ளிக் குழந்தைகள் விதிமீறல், அலட்சியம், பொறுப்பின்மை காரணமாக அன்றாடம் பலியாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை” என்று கூறுகிறார். பத்மா சேஷாத்ரி மாணவர் ரஞ்சன், சேலையூர் சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி சுருதி, கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளியில் ராம்குமார், நாமக்கல் தனியார் பள்ளியில் அருண்குமார், திருவொற்றியூர் ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளி மாணவி வைஷ்ணவி என்று கல்வி தனியார் மயம் அடுத்தடுத்து இளம் உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.

சீயோன் பள்ளி சுருதிபள்ளிக் கல்வியில் லாபவேட்டையை ஊக்குவிக்கும் தனியார் மயத்தை புகுத்தி, அரசுப் பள்ளிகளை புறக்கணிக்கும் கொள்கை முடிவெடுத்து, சாதாரண ஏழை மக்களைக் கூட தனியார் கல்வி வியாபாரிகளின் லாப வேட்டை தோற்றுவிக்கும் பேரழிவை நோக்கித் தள்ளிய மத்திய, மாநில அரசுகளை ஊடகங்களோ இல்லை கட்சிகளோ அவ்வளவு ஏன் மக்களால் கருத்தளவில் கூட குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படவில்லை. சொல்லப் போனால் கல்வியில் தனியார்மயமே சரி, சாத்தியமென்பதை ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் உறுதிபட நிலைநாட்டியிருக்கின்றன.

குறுகலான ஒரு கட்டிடத்தில் ஸ்ரீ கிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளி, சரஸ்வதி நர்சரி பள்ளி, ஸ்ரீகிருஷ்ணா மகளிர் உயர்நிலைப்பள்ளி என மொத்தம் 700 மாணவ–மாணவிகள் படித்து வந்தது, அங்கு போதிய பாதுகாப்பு வசதியும், தீயணைப்பு கருவிகளும் இல்லாதது இவற்றை சுட்டிக் காட்டும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரோ முறையான கட்டிடம், பாதுகாப்பான ஏற்பாடுகள் இல்லாத பள்ளிக்கு தமது குழந்தைகளை அனுப்பிய கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோரை குற்றவாளியாக்குகின்றனர். தமது குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் இந்த வசதிகள் எல்லாம் இருப்பதாக சமாதானப்பட்டுக் கொள்கின்றனர்.

இவ்வாறாக, இந்த தீவிபத்துக்கு காரணமாக இருந்த முதன்மை குற்றவாளிகளை சம்பவத்துக்கு முன்னரே சமூகத்தின் கூட்டு மனசாட்சி விடுவித்து விட்ட பிறகு அடுத்தடுத்த நிலையில் இருந்த குற்றவாளிகள் மீது சட்டம் தனது கடமையைச் செய்ய ஆரம்பித்தது.

மாநில தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் கண்ணன், வட்டாட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம். பழனிச்சாமி போன்ற உயர் அதிகாரிகள் முதல், கல்வித் துறையின் கீழ்நிலை ஊழியர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பள்ளி நிறுவனர், தாளாளர், ஆசிரியர்கள், சத்துணவு பொறுப்பாளர், சமையல்காரர் என்று 24 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

பெற்றோர்
நீதிக்கு காத்திருக்கும் பெற்றோர் (படம் : நன்றி தி இந்து)

கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒன்றரை ஆண்டுகளில் 501 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. 3,126 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு 2006, ஜூலை 12-ஆம் தேதி மாற்றப்பட்டது.

ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்வாக்கு, பதவி அந்தஸ்து, பண பலம், இவற்றின் மூலம் அவர்கள் அமர்த்த முடிகிற வழக்கறிஞர்கள் இந்த அடிப்படையில் இந்திய நீதித்துறையின் நீதி என்ற விசித்திரமான ஜந்து வாலை ஆட்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களில் மாநில தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் கண்ணன், வட்டாட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம். பழனிச்சாமி ஆகிய மூவரும் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் தமிழக அரசின் பரிந்துரைப்படி அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். விபத்து என்று வந்த பிறகு அரசின் உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டிய தேவை அரசுக்கு இருப்பதால்தான் இது நடந்ததே அன்றி அந்த அதிகாரிகளின் தனிப்பட்ட விருப்பம் மட்டுமல்ல.

இதை அரசின் எல்லாத் துறைகளிலும் பார்க்கலாம். லாக்கப் கொலைக்காக உயர் போலிசு அதிகாரிகள் தண்டிக்கப்படாமல் கீழ் நிலை போலிசுக்காரர்கள் மட்டும் தண்டிக்கப்படுவது போன்று, அல்லது ஏதாவது பெரும் ஊழல் வழக்கோ இல்லை வேறு பிரச்சினைகளிலோ மாட்டிக் கொண்டால் அதிகார வர்க்கத்தின் ஒரு நபரை மட்டும் பலிகடாவாக கொடுத்து மற்றவர் தப்பிவிடுவார்கள். இதுதான் அரசின் தாரக மந்திரம். அது கும்பகோணம் தீ விபத்து வழக்கிலும் ஒளிவு மறைவின்றி நடந்திருக்கிறது. தொடக்கப்பள்ளி கல்வி அதிகாரிகளின் வேலைகளை பார்த்து ஆய்வு செய்து கட்டுப்படுத்த வேண்டிய உயர் அதிகாரிகள் இங்கே வேண்டுமென்றே தப்பவைக்கப்பட்டிருக்கின்றனர். கீழ் நிலையில் வாங்கப்படும் லஞ்சம் மேல் நிலை வரைக்கும் பங்கு வைக்கப்படும் சமத்துவம் இங்கு இல்லை.

நினைவகம்
குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பொறுப்பை தட்டிக் கழித்த, கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு கொடுக்க மறுத்து நீதிமன்ற படியேறும் தமிழக அரசு அவர்களது நினைவாக கும்பகோணத்தில் ஒரு நினைவகத்தை கட்டியிருக்கிறது.

கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பாலகிருஷ்ணன் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பிறகுதான் உச்சநீதிமன்றம் “என்னது இன்னும் வழக்கு முடியவில்லையா?” என்று ஏதோ அதிர்ச்சியடைந்தது போல கேட்டது. என்ன இருந்தாலும், நீதிமன்றங்களில் நீதி கிடைக்கும் என்ற மக்களின் நம்பிக்கையை பெயரளவுக்காவது தக்க வைக்க வேண்டுமல்லவா? இந்த வழக்கை வேகமாக நடத்தி முடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து 2012 செப்டம்பர் 12 அன்று தஞ்சாவூர் முதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 21 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்த தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

“முதலில் இந்த வழக்கில் 3 பேரை விடுவித்தனர். இன்று 11 பேரை விடுவித்துள்ளனர். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக குற்றவாளிகளை விடுவிப்பதை காட்டிலும் மொத்தமாக அனைவரையும் விடுவித்து விடுங்கள். குழந்தைகளை இழந்த நாங்கள் இவர்களுக்கு பதிலாக சிறை தண்டனையையும் சேர்த்து அனுபவித்துக் கொள்கிறோம்” என அழுகின்றனர் கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்.

குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பொறுப்பை தட்டிக் கழித்த, கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு கொடுக்க மறுத்து நீதிமன்ற படியேறும் தமிழக அரசு அவர்களது நினைவாக கும்பகோணத்தில் ஒரு நினைவகத்தை கட்டியிருக்கிறது. கொல்லப்பட்ட குழந்தைகள் அந்த நினைவகத்தில் புகைப்படங்களாகவும், ராகுல், கௌசல்யா, விஜய் உள்ளிட்ட 18 குழந்தைகள் தமது வாழ்க்கை போராட்டத்தினூடாகவும் தனியார் லாபவேட்டையின் ரத்தவெறியை நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றனர்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் மூலம் கல்வி தனியார்மயத்தில் இருக்கிறது. இந்த அநீதியை முறியடிக்கும் வரை கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு இப்போது நீதி வழங்கியதாக யாரும் கருதிக் கொண்டால் அதுதான் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

மேலும் படிக்க

மோடித்வா – ஆண்டவன் நம்புறவங்களைத்தாங்க சோதிப்பான்!

45

பாஜக கருத்து கந்தசாமி – காயத்ரிக்களுக்கு சில டிப்சுகள் !

தந்திடிவி விவாதம்லகின் மிகமோசமான வேலைகள் பட்டியலில் அரசருக்கு வைத்தியம் பார்ப்பதும் அடக்கம். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்புவரை அரண்மனை வைத்தியர்கள் அரசருக்கு வந்த வியாதியை அவர் மலத்தை முகர்ந்து பார்த்து கண்டுபிடிப்பார்களாம். கிட்டத்தட்ட அதே போன்றதொரு வேலையை செய்யும்படி ஆலோசனை சொன்னார் தோழர் ஒருவர். அதாவது தொலைக்காட்சி விவாதங்களில் பேசும் பாஜக ஆட்களின் உரை”வீச்சத்தை” பார்த்து அதைப்பற்றி பதிவெழுத வேண்டும் என்பதுதான் அந்த ஆலோசனை.

அப்படி தொடர்ந்து பார்க்கையில்தான் காவி கட்சிக்காரர்கள் அனுபவிக்கும் கஷ்டம் தெரிந்தது. சிறுவனாக இருந்தபோது படித்த சிறுவர்மலர் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. திரேதாயுகத்தில் ஊர்மக்கள் எல்லோரும் நல்லவர்களாக இருப்பார்கள். கலியுகம் பிறந்த உடனே அவர்கள் எல்லோரும் சுயநலக்காரர்களாகவும் கபடதாரிகளாகவும் மாறுவார்கள். கதையின் முடிவில் ”கலியுகத்தில் மனிதன் எப்படி மாறுகிறான், பார்த்தீர்களா குழந்தைகளே” எனும் அறிவுரையும் இருந்தது. கிட்டத்தட்ட அப்படியான ஒரு நிலைக்கு பாஜககாரர்கள் வந்து அறுபது நாளாகிறது.

ஜசோதாபென் மணாளன் ஆட்சிக்கு வரும் முன்னால் இவர்கள் பேச்சில் இருந்த ‘வீரம்’ என்ன! ஏழை மக்கள் மீதான ‘அக்கறை’ என்ன!! ஆனால் புதிய ஆட்சி வந்த பத்து நாளுக்குள் அவை பழங்கதையாகிவிட்டன. முன்பெல்லாம் தந்தி டிவி விவாதங்களில் தொகுப்பாளர் உட்பட பாஜகவுக்கு ஆதரவாக குறைந்தபட்சம் இரண்டு பேராவது இருப்பார்கள். ஆனால் தமிழக அரசியல் அநாதைகளுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்த பாஜக இன்று விவாதங்களில் அநாதையாக நிற்கிறது. ‘மோடி சாட்சாத் அந்த ஸ்ரீமன் நாராயணனின் அவதாரம்தான்’ என தேர்தலுக்கு முன்னால் சான்றிதழ் கொடுத்த கும்பலில் ஒருவர்கூட இன்று விவாதத்துக்கு வரும் நிலையில் இல்லை.

இதுகாறும் வாயை வைத்தே வண்டியை ஓட்டிய வைகோவும் தமிழருவியும் பாஜகவை தங்கள் நாவன்மையால் தாங்குவார்கள் என நடுநிலைவாதிகளே எதிர்பார்த்திருந்தார்கள். மோடி அடிக்கும் அடி ஒவ்வொன்றும் வைகோவின் ஈழ பிசினசை இருந்த இடம் தெரியாமல் செய்து கொண்டிருக்கின்றன. இனி அவர் பாதயாத்திரை போனால் காறித்துப்பக்கூட ஆளிருக்காது. ஆகவே அவரது நேரடியான ஆதரவுக்குரல் பாஜகவுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. அமையாத சம்மந்தங்களை அமைத்துவைக்கும் தமிழக அரசியலின் தமிழ்மேட்ரிமோனி டாட்காம் தமிழருவி மணியனின் நிலை இன்னும் கேவலம். என்னோடு தேர்தலில் மோதத்தயாரா என விஜயகாந்துக்கு சவால்விட்டு யார் குடிகாரன் என தமிழக மக்கள் குழம்பும் நிலைக்கு இறங்கிவிட்டார் மணியன். இனி அவரை விவாதத்துக்கு இறக்கினால் பாஜக நிலை இன்னும் நாறிவிடும்.

செகப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான் எனும் அபார நம்பிக்கையை கொண்டிருக்கும் தமிழனிடம் மோடிக்காக கேன்வாஸ் செய்ய பத்ரி போன்ற முதலாளிகளும், வெங்கடேசன் போன்ற ஆடிட்டர்களும், பானு கோம்ஸ் போன்ற சமூக ஆர்வலர்களும் (எந்த சமூகத்துக்குன்னு கேக்கப்படாது) களமிறக்கப்பட்டார்கள். இப்போதோ, ‘அவன்தான் ஏட்டையா தாலிகட்டின ஒரிஜினல் புருஷன்’ என பாஜக ஆட்களை கைகாட்டிவிட்டு இந்த அறிவுஜீவிகள் ஒதுங்கிவிட்டார்கள். அமித்ஷாவை கட்சித் தலைவராக்கியதால் தான் ஏமாற்றமடைந்து விட்டதாக ஸ்டேட்டஸ் போட்டு உடைந்து போன நடுநிலை பெஞ்சில் சீட் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டார் பத்ரி.

தற்சமயத்துக்கு பாஜக, டிவி விவாதங்களின்போது ஒரு தனிமரமாய் நிற்கிறது. தேர்தலில் சரித்திரம் காணாத அளவுக்கு தோல்வியடைந்த சிபிஎம்காரர்கள் எல்லா விவாதங்களிலும் அடக்கமாட்டாட்டாத சிரிப்போடு அமர்ந்திருக்கிறார்கள். நாட்டையே விற்குமளவுக்கு பெரும்பான்மை பெற்ற பாஜகவினரோ பிரபல சீட்டிங் சாம்பியன் குரங்கு குப்பன் போல உர்ரென்று இருக்கிறார்கள். தோற்றவர்கள் கூடி ஜெயித்தவனை கலாய்க்கும் கொடுமை கலிகாலத்தில் மட்டும்தானே நடக்கும்? இந்த யுகத்தில் கலவரம் செய்வதைவிட விவாதம் செய்வது கடினமாக இருக்கும் என புருஷஸுக்தம் தெளிவாக சொல்லியிருக்கிறது.

நாட்டின் பாதுகாப்பிற்கே அன்னிய நாட்டின் பார்ட்னர்ஷிப்பைத் தேடும் பாஜகவை விவாதங்களில் தனித்துவிடுவது மகாபாபம். உட்காரும் இடத்தில் கட்டி வந்தவனைப் போன்ற அவர்களது உடல்மொழி பார்க்க சகிக்கவில்லை.  ஆகவே விவாதங்களை எப்படி எதிர்கொள்வது என நம்மாலான ஆலோசனை அவர்களுக்கு சொல்வதுதான் நியாயம்…!!!

வழக்கமாக பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்புக்கள் மூன்று வழிகளில் விவாதத்தை சந்திக்கின்றன.

  1. சலவை நிலையங்களில் உள்பாவாடை காணாமல்போன பிரச்சனை என்றாலும் அதனை இந்திய கலாச்சாரம் பாரம்பர்யத்துடன் இணைத்து பேசுவது. (இந்தியாவில் பாலியல் கல்வி பற்றிய விழிப்புணர்வு அப்போதே இருந்தது, அதற்கான ஆதாரம்தான் காமசூத்ரா நூல்- பாலியல் கல்வி குறித்த விவாதம் ஒன்றில் எஸ்.ஆர்.சேகர்)
  2. பாஜகவை விமர்சிக்க உங்களுக்கு தகுதியில்லை என பதிலளிப்பது.
  3. கேள்விக்கு சம்பந்தமில்லாமல் பதில் சொல்வது. (சாதிக்கொடுமை பற்றி கேள்வி கேட்டால் தங்க நாற்கார சாலையை கொண்டுவந்த்து வாஜ்பாய் என்று பதிலளிப்பது)

இவையல்லாமல் வேறு சில துணை தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன. அடுத்தவன் பேச்சு கேட்காத அளவுக்கு லபலபவென கத்துவது, நிறுத்தாமல் பேசுவது, தொகுப்பாளரை மிரட்டுவது, எல்லா விவாதத்திலும் சிறுபான்மையினரை வம்புக்கு இழுப்பது என்பன அவற்றுள் சில.

இவையெல்லாம் எதிர்கட்சியாக இருந்தவரை போதுமானதாக இருந்திருக்கலாம். ஆனால் ஆளுங்கட்சியானால் இன்னும் கொஞ்சம் திறமையாக நடந்துகொள்ள வேண்டும். அதற்கான ஆலோசனைகளைத்தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். பாஜகவினர் விவாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதை பார்ப்போம்.

கேனத்தனம் நம் பிறப்புரிமை: எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேனத்தனமாக பேசுங்கள். அதனால் உடன் பேசுபவர்கள் இது என்ன விவாதம் என குழம்ப வேண்டும். ஆனால் அந்த கேனத்தனம் தொகுப்பாளரை கடுப்பாக்கிவிடக்கூடாது. (25 ஜூலை தந்தி டிவி விவாதத்தில் பேசிய பாஜக நாராயணன் இயல்பான கேனத்தனத்தோடும், கேனத்தனமான இயல்போடும் சிறப்பாகப் பேசினார். ரங்கராஜ் பாண்டேவே நிலைகுலைந்து போய் இது போங்காட்டாம் என்று சொல்லி ஒதுங்கிவிட்டார்)

விதிமுறைக்குட்பட்டு திமிராக பேசுங்கள்: பட்ஜெட் விவாதம் ஒன்றில், ”பாஜக தேர்தல் அறிக்கை வருமானவரி வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்படும் என சொல்கிறது. ஆனால் நீங்கள் இரண்டரை லட்சம் வரை மட்டுமே விலக்களித்திருக்கின்றீர்கள்” என கேட்கிறார் தொகுப்பாளர். அதற்கு ராகவன், “ஐந்து லட்சமா உயர்த்துவோம்னுதான் சொன்னோம், என்னைக்குன்னு சொன்னோமா” என பதில் சொன்னார். அடுத்த நாலரை வருசங்களுக்கு எந்தப் பக்கிகளின் தயவும் தேவையில்லை என்பது நிஜம் என்றாலும் இந்த யுக்தியை எல்லா பிரிவு ஆட்களும் பயன்படுத்தக்கூடாது. திமிராக பேசுவதற்கான இரண்டாயிரம் வருட அனுபவப்பாத்தியம் கொண்ட ராகவன் போன்றோர் மட்டும்தான் இதனை செய்ய வேண்டும்.

கேள்வியை முடிக்கும் முன்பே பதில் சொல்ல ஆரம்பியுங்கள்: கேள்விகள் என்றாலே பாஜகவுக்கு சிக்கல்தான். ஆகவே கேள்வி ஆரம்பிக்கும்போதே பதிலை சொல்ல ஆரம்பித்தால் தாராளமாக விவாதத்தில் பாதி நேரத்தை காலி செய்துவிடலாம். ஆனால் கேள்வி மோடிக்கு சாதகமாக இருக்கிறதா என கவனமாக பாருங்கள். ஏனென்றால் எல்லா ஊடக முதலாளிகளும் போதிய அளவு கவனிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே சாதகமான கேள்விகள் வர வாய்ப்புக்கள் பலமாக உள்ளது.

தவறிக்கூட புள்ளிவிவரத்தோடு பேசாதீர்கள்: பாஜகவுக்கு காங்கிரசைவிட பெரிய எதிரி புள்ளிவிவரம்தான். அறிவும் நாணயமும் இல்லாதவன்தான் ஒரு வலதுசாரியாக இருக்க முடியும். ஆகவே புள்ளிவிவரத்தோடு பேசுவது பாஜகவின் தகுதிக்கு மீறிய செயல் மட்டுமல்ல. கொள்கை விரோதமும்கூட. தனுஷுக்குகூட போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் செட் ஆகலாம், ஆனால் ஒருபோதும் பாஜககாரனுக்கு அறிவாளி வேடம் பொருந்தாது. ஆகவே இவ்விடயத்தில் உங்கள் ஞானகுரு சூனாமானா சாமியின் வழியை பின்பற்றுங்கள்.

நிதானமாக ஒருபோதும் விவாதிக்காதீர்கள்: மயிருக்கு வாசம் உண்டா எனும் மொக்கை கேள்விக்கே மயிர் பிளக்கும் வாதங்களை வைத்த மரபு நம் மரபு. நீங்கள் சீரியசாக விவாதிக்கும் எல்லா நிகழ்ச்சிகளும் காமெடியாக முடிகின்றன. ஆகவே வாய்ப்பு கிடைக்கையில் உணர்ச்சிவயப்பட்டு பேசி ஆட்டையை கலைத்துவிடுங்கள். தொகுப்பாளர்கள் நியாயமாக நடந்து கொள்வார்களோ என அஞ்ச வேண்டாம். சாய்நாத், ராஜ்தீப் என நாடறிந்த தலைகளையே ராஜினாமா செய்ய வைக்கும் ஆற்றல் பாஜகவுக்கும் அதன் ஸ்பான்சர்களுக்கும் இருக்கிறது.

மேற்சொன்ன ஆலோசனைகளை எளிதாக புரிந்துகொள்ள சாம்பிள் விவாதம் ஒன்றை பார்ப்போம்.

தொகுப்பாளர் : தேர்தலுக்கு முன்னால் தினத்துக்கு மூன்றுமணி நேரமேனும் மோடி பேசிக்கொண்டிருந்தார்.. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மன்மோகன் சிங்கைப்போல மௌனமாகவே இருக்கிறாரே?

பாஜக : கடந்த பத்தாண்டு காலத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து வைத்திருக்கிறது. ஆகவே…

தொகு : நான் மோடியின் மௌனம் பற்றி…

பாஜ : அதத்தாங்க நானும் சொல்றேன். அப்போது சூப்பர் பிரதமாரா சோனியா இருந்தார். இப்போது சுயமாக முடிவெடுக்கும் பிரதமர் வந்திருக்கிறார்.

தொகு : நான் சொல்ல வந்தது என்னன்னா…

பாஜ : வாஜ்பாய் ஆட்சி காலத்தில்தான் தங்க நாற்கார சாலைகள் போடப்பட்டது. அதன் காரணமாகவே…

தொகு :அய்யய்யோ போதுங்க, கொள்கை முடிவுகளில் மன்மோகனுக்கும் மோடிக்கும் ஒரு வேறுபாடும் இருப்பதில்லையே??

பாஜ : என்ன செஞ்சாங்கன்னு பார்க்காதீங்க.. யார் செய்யிறான்னு பாருங்க.  பஞ்சபாண்டவர்கள் பொண்டாட்டியை அடமானம் வைத்தார்கள். கௌரவர்கள் அடமானம் வாங்கினார்கள். மனைவியை அடமானம் வைத்ததனால் பாண்டவர்கள் வில்லன்களாகி விடுவார்களா? அப்படியெல்லாம் நம் பாரத தேசத்தின் பாரம்பர்யத்தின் கௌரவத்தை குறைக்கும்படி பேசாதீர்கள். ஹீரோக்கள் தவறு செய்வார்கள் என எதிர்மறையாக சிந்திக்காதீர்கள். ஹீரோ செய்வதெல்லாம் சரிதான் என பாசிடிவாக அணுகுங்கள்.

தொகு : அவரு வந்தா வளரும்னு சொன்னீங்க. வந்து அறுபது நாளாகியும் நாடு வளந்த மாதிரி தெரியலையே?

பாஜ : ஆட்சிக்கு வந்து இரண்டே மாதத்தில் எதையும் மாற்றிவிட முடியாது.

தொகு : ஆனால் ஆம் ஆத்மியின் டெல்லி ஆட்சியை நீங்கள் நாற்பது நாளுக்குள்ளேயே விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டீர்களே?

பாஜ : எல்லா விஷயத்திலும் அகம் புறம் என இரண்டு உண்டு. இலக்கியத்தின் அகநானூறு, புறநானூறு இருக்கிறது. மூலத்தில் உள்மூலம் வெளிமூலம் இருக்கிறது. அதுபோல நாட்டின் வளர்ச்சியும் இப்போது உள் வளர்ச்சியாக இருக்கிறது. அது வெளியே தெரிய சில காலமாகும்.

தொகு : பள்ளிகளில் பாலியல் கல்வி சொல்லித் தருவதற்கு உங்கள் சுகாதார அமைச்சரே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாரே?

பாஜ : தவறு, ஆபாசமான பாலியல் கல்வியைத்தான் அவர் எதிர்த்திருக்கிறார்.

தொகு : ஆபாசமான பாலியல் கல்வி என்றால் என்ன? அப்படியான கல்வி முறை எங்கேயும் இருப்பதாக தெரியவில்லையே.?

பாஜ : தவறான தகவலை மக்களுக்கு தருகிறீர்கள். ஷகீலா போன்ற நடிகைகளது படங்கள் எல்லாமே பாலியல் விழிப்புணர்வு படங்கள்தானே!! அவற்றைப் பார்த்து பலரும் கெட்டுப்போகிறார்கள். அப்படி யாரும் கெட்டுப்போய்விடக்கூடாது என்பதாலேயே அவர் அப்படிச் சொன்னார். சென்ற ஆண்டு இந்த உண்மையை கண்டுபிடிக்கும் முயற்சியில் எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் கர்நாடக சட்டசபையில் ஈடுபட்டபோதுதான் பத்திரிக்கைகளின் அவதூறுக்கு ஆளானார்கள். ஆகவே இவ்விசயத்தில் பாஜக பெரிய தியாகங்களை செய்திருக்கிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தொகு : வளர்ச்சி வளர்ச்சி என முழங்கிய பாஜக, சமஸ்கிருதத்தை திணிப்பதில் ஆர்வம் காட்டுவது ஏன்?

பாஜ : அதனை சமஸ்கிருத திணிப்பு என ஏன் கருதுகிறீர்கள்? இப்போது பெரிய நகரங்களிலும் ஏன் கிராமங்களிலும் கூட திவசம் கொடுக்க அய்யர் கிடைப்பதில்லை. இப்படியே போனால் கருமாதி திவசம் என்றால் என்னவென்று கேட்கும் நிலை வந்துவிடும். லட்சக்கணக்கான வருட பாரம்பர்யம் உள்ள இந்து பண்பாடு அழிந்துவிடும். சமஸ்கிருத வாரம் கொண்டாடினால் அதில் ஆர்வம் கொள்ளும் பிராமண மாணவர்கள் வேதம் படிப்பார்கள், பிறகு சிறப்பாக கருமாதி, திவசங்கள் நடக்கும். இன்னும் கோடிக்கணக்கான மக்கள் தற்கொலை செய்துகொள்ளப் போகும் சூழ்நிலை வந்த பிறகு இந்த செயலின் நியாயம் உங்களுக்கு புரியும். பத்தாண்டு காலம் காத்திருந்தீர்கள் இன்னும் அறுபது மாதங்கள் மட்டும் காத்திருங்கள், அதற்கு பிறகு யாரெல்லாம் மிச்சமிருக்கிறார்களோ அவர்கள் நிச்சயம் வளர்ச்சியை அனுபவிப்பார்கள்.

தொகு : தேர்தலுக்கு முன்னால் உங்களை பெரிதும் ஆதரித்தது மிடில் கிளாஸ் மக்கள்தான். ஆனால் ஆட்சியமைத்த பிறகு பெட்ரோல் விலையேற்றம், மானியவிலை சிலிண்டர் குறைப்பதற்கான முயற்சி, இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளை ஒழிப்பது என மிடில்கிளாசை பாதிக்கும் செய்திகள்தானே வருகின்றன.

பாஜ : பாருங்க, ஆண்டவன் நம்புனவங்களைத்தான் சோதிப்பான். இந்திரன், கௌதமன் சம்சாரத்தைத்தானே கையைபிடிச்சு இழுத்தான். சிவபெருமான் ஆல்பர்ட்டுகிட்டயும் அப்துல்லாகிட்டயுமா பிள்ளைக்கறி கேட்டான்? இவ்வளவு ஏன் ஸ்ரீகிருஷ்ணன் ஈவ்டீசிங் பண்ணினது இந்துப் பொண்ணுங்களைத்தானே? ஆகவே பக்தனை சோதிப்பதும் போட்டுத்தள்ளுவதும் பாரத பண்பாட்டிலேயே இருக்கிறது. இது இந்து ஞானமரபின் தொடர்ச்சி, ஆரிய சாம்ராஜ்யத்தின் எழுச்சி.

thanthi-tv-2தொகு : தமிழகத்திற்கு மிகக்குறைவான அளவுக்கே ரயில்வே திட்டங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அறுநூறு கோடி திட்டமதிப்பு கொண்ட வேலைக்கு ஒருகோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் கி.பி 2614-ல்தான் பணிகள் முடியுமா?

பாஜ : மக்கள் நாங்கள் நினைப்பதை செயல்படுத்தத்தான் தனி மெஜாரிட்டி கொடுத்திருக்கிறார்கள். ஆகவே திட்டத்தை எப்போது முடிப்பது என்பதை நாங்கள் முடிவெடுத்துக் கொள்வோம். அதை கிபி 2600-ல் முடிப்பதா அல்லது நாப்பி 2614 -ல் முடிப்பதா என்பதை கட்சி தீர்மானிக்கும் (கி.பி – கிருஸ்துவுக்குப் பின் ந.பி = நமோவுக்கு பின்). (குறிப்பு : இது ராகவன் வகையறாக்களுக்கு மட்டும்).

தொகு : எல்லா கிராமங்களுக்கும் தடையற்ற மின்சாரம் கொடுக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சராசரியாக ஒரு கிராமத்துக்கு எட்டாயிரம் ரூபாய் வருகிறது. இதில் எப்படி தடையற்ற மின்சாரம் கொடுக்க முடியும்?

பாஜ : கர்நாடகாவில் சென்ற ஆண்டு மழையில்லாதபோது பாஜக அரசு எல்லா ஊரிலும் மழை வேண்டி யாகங்கள் செய்தது. அதன் விளைவுதான் இன்றைக்கு மேட்டூர் அணை நிரம்புகிறது. ஆகவே தடையற்ற மின்சாரம் வேண்டி கிராமங்கள்தோறும் யாகம் நடத்த எட்டாயிரம் ரூபாய் தாராளமாக போதும்.

தொகு : ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதோடு மட்டுமில்லாமல் இன்னும் 5 ஆண்டுகளில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஏசி பெட்டிகள் இணைக்கப்படும் என செய்திகள் வருகின்றன. இது மக்களை பாதிக்கும் முடிவில்லையா?

பாஜ : ஏன் ஏழைகள் ஏசி ரயிலில் போகக்கூடாதா? சாதாரண மக்களும் ஏசி கோச்சில் பயணிக்க வேண்டும் எனும் உயரிய நோக்கத்தோடு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

தொகு : ஈழத்தமிழர் பிரச்சனையில் உங்கள் அரசும் கங்கிரஸ் நிலைப்பாட்டைத்தானே தொடருகிறது, ஐநா விசாரணையை எதிர்ப்பதாக அரசு தெளிவாக அறிவித்திருக்கிறதே?

பாஜ : இவ்வளவு பேசும் நீங்கள் ஈழத்தமிழருக்காக என்ன செய்திருக்கிறீர்கள்? அவர்கள் கொல்லப்பட்டபோது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்??

தொகு : இது என்ன கேள்வி சார்? ஒரு தொகுப்பாளர் என்ன செய்துவிட முடியும்? செய்யும் காரியங்களை விமர்சனம்தானே செய்ய முடியும்?

பாஜ :  எதையும் செய்ய முடியாத உங்களுக்கு பாஜகவைப்பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. ஈழத்தமிழருக்காக தன் வாழ்வையே அர்பணித்த நெடுமாறனே எங்களை விமர்சனம் செய்யவில்லை என்பதை ஞாபகத்தில் வைத்து பேசுங்கள். குறைந்தபட்சம் சன் டிவி வீரபாண்டியனுக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் வைத்தாவது பேசுங்கள்.

தொகு : உரமானியம் குறைக்கப்படுவதற்கான முன்னேற்பாடுகள் இந்த பட்ஜெட்டில் வந்திருக்கிறதே?

பாஜ : பூச்சி மருந்து விலைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. உரம் விவசாயிகளுக்கு மட்டும் பயனளிப்பது. ஆனால் பூச்சி மருந்து குடித்தால் எல்லா தரப்பு மக்களுக்கும் கண்டிப்பாக பயனளிக்கும். மேலும் உரவிலை உயர்ந்தால்தான் விவசாயிகள் நம் பாரம்பர்ய இயற்கை விவசாயத்துக்கு திரும்புவார்கள்.

தொகு : மரபணு மாற்ற பயிர்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்..

பாஜ : பழைய முறையில் விவசாயம் செய்தால் நாடு என்றைக்கு வல்லரசாவது?? அதனால் நவீன முறை விவசாயத்தை வளர்க்கும் பொருட்டு இம்முடிவை மோடி அரசு எடுத்திருக்கிறது.

தொகு : இப்போதுதான் நீங்கள் பாரம்பர்ய முறை விவசாயத்தை வளர்க்க உரமானியத்தை வெட்டப்படப்போவதாக சொன்னீர்கள். அடுத்த நிமிடமே நவீன விவசாயத்தை ஊக்குவிப்போம் என்கிறீர்கள், எதுதான் உங்கள் நிலைப்பாடு?

பாஜ : ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய மக்களையே கொலை செய்கிறார்கள். அதனை இங்குள்ள முஸ்லீம்கள் கண்டிப்பதில்லை. மேலும் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தங்க நாற்கார சாலைகளால்தான்..

தொகு : அய்யய்யோ.. சார் நிகழ்சியை முடிச்சுக்கலாம். உங்க இறுதி கருத்தை சொல்லுங்கள்.

பாஜ : இறுதி கருத்தை பிரபல சமஸ்கிருத கவிஞர் நபும்சகன்  கவிதையோடு முடிக்கிறேன்.

“ மோடியின் கால்கள்
பின்னால் உதைத்துவிட்டதே
என வருந்தாதே.
விழுந்த உன்னை
தொட்டுத்தூக்க
மோடியின் கைகள்
நிச்சயம் வரும்.
நம்பு, நம்பிக்கைதான் வாழ்க்கை”

–    வில்லவன்

ஈய்ச்சர் லாரிகள் அருகி வருவது ஏன்?

2

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குள் ஒரு ஞாயிறு மதியம் சென்றோம். நுழைந்த உடனேயே வரிசையாக ஈய்ச்சர் மினி லாரிகள் வரிசையாக நிற்பதை பார்க்க முடிந்தது. ஓட்டுநர்கள் பலரும் ஒன்றாக மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஈய்ச்சர் மினி லாரி
ஈய்ச்சர் மினி லாரி

அவர்களில் முதலில் எதிர்ப்பட்டவரை சந்தித்தோம். அவருக்கு சொந்த ஊர் திருத்தணி அருகில். வயது 47 என்று அவர் சொன்னாலும் 60 வயது ஆனவர் போன்ற முதுமை அவரிடம் தென்பட்டது. ”தினசரி பதிவா வேல பாக்குறேன் சார். 600 ரூபா சம்பளம், 12 மணி நேரம் வேல.. இப்போ வாரத்துல மூணு நாள்தான் வேல வருது. வேல இல்லாத அன்னிக்கு 200 ரூபா சம்பளம் கிடைக்கும் சார்” என்றார். அவருக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் சொந்த ஊரில் தறி போட்டுக் கொடுத்திருக்கிறார். ”நீங்க ஏன் அந்த வேலைய பாக்காம லாரி ஓட்ட வந்தீங்க” எனக் கேட்டதற்கு, ”அப்போல்லாம் பவர் லூம் வரல சார். இருந்திருந்தா இங்க வந்திருக்க மாட்டேன். அப்போலாம் கையால செய்யணும் சார். அது நமக்கு வரல” என்றார். ஈய்ச்சர் வண்டியிலேயே இரவு நேரங்களில் தங்கிவிடும் இவர் குளிக்க, காலைக்கடன் முடிக்க லோடு ஏற்றப் போகும் கம்பெனிகளின் கழிப்பறைகளையே பயன்படுத்திக் கொள்கிறாராம். இரண்டு வாரத்துக்கு ஒருமுறை ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போவாராம்.

அவரிடமிருந்து விடைபெற்று ஈய்ச்சர் லாரி உரிமையாளர்களை சந்திக்கலாம் என அவர்களது ஸ்டாண்டிற்கு சென்றோம். எல்லோருமே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். மதுரையை சேர்ந்த முருகன் (வயது 42), முன்னர் 12 லாரிகள் வைத்திருந்த இவர் தற்போது மூன்று லாரிக்குதான் சொந்தக்காரர். பி.ஏ பட்டதாரியான அவர் 1987-ல் தனியார் நிறுவன வேலையை விட லாரி சொந்தமாக வைத்து ஓட்டினால் லாபம் அதிகம் எனக் கருதி ரூ.30 ஆயிரம் முதலீட்டில் பழைய ராணுவ லாரி ஒன்றை வாங்கி ஓட்ட ஆரம்பித்திருக்கிறார். அதில் சம்பாதித்து பல பழைய லாரிகளை வாங்கி, அதற்கு சில ஓட்டுநர்களை அமர்த்தி வேலை கொடுத்திருக்கிறார். அதற்கு ஒரு ஆபீசையும் வாடகைக்கும் அமர்த்தியிருந்திருக்கிறார்.

2005-ல் அவரது அண்ணன் மகளது திருமண செலவுக்காக முதல் லாரியை விற்கத் துவங்கியது முதல் அடுத்தடுத்த ஆண்டுகளில் லோடு முறையாக கம்பெனிகளில் இருந்து கிடைக்காமல் போகவே வரிசையாக ஒவ்வொன்றாக விற்கத் துவங்கினார். இப்போது அவரும் ஒரு லாரி ஓட்டுநர் தான், இன்னொரு ஓட்டுநர் அவரது தம்பி. பழைய லாரி ஆபீசை இரு ஆண்டுகளாக குளிர்பானக் கடையாக மாற்றி அதையும் அண்ணன் தம்பி இருவரும் மாற்றி மாற்றி பார்த்துக் கொள்கின்றனர். கூடவே அவர்களது மனைவியரும் பார்த்துக் கொள்ள வேண்டியதாயிற்றாம்.”ஒருவேளை இந்தத் தொழிலில் இனி ஈடுபட்டால் வாழவே முடியாது என்ற நிலைமை வந்தால் என்ன செய்வீர்கள்?” எனக் கேட்டதற்கு, ”அதுக்குதான் கட வச்சிருக்கேன்..” என்று நம்பிக்கையோடு சொன்னார்.

ஈய்ச்சர் மினி லாரி
”வாரத்துல மூணு நாளு லோடு கெடைக்கும்.. ஒண்ணும் இல்லாம இருக்கதால தான் ஞாயிற்றுக்கெழம கூட ஏதாச்சும் லோடு கெடைக்காதான்னு பாத்துட்டு இருக்கோம்”

35 வயதாகும் அவரை 2003 முதல் 2008 வரை ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தியிருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்திற்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் அந்த நிறுவனம் தினசரி அவருக்கு 900 ரூபாய் வாடகை தந்திருக்கிறது. அம்பத்தூரிலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு தினசரி லோடு எடுத்துக்கொண்டு போக வேண்டும். அந்த சரக்கை இறக்கி வைக்கும் வேலையிலும் இவர் ஈடுபட வேண்டும். இதில் தினசரி டீசலுக்கு மட்டும் அப்போது 400 முதல் 600 ரூபாய் வரை செலவாகுமாம். 12 மணி நேரம் என்ற நேர வரையறை எல்லாம் வேலையில் அவருக்கு கிடையாதாம். அந்த ஐந்தாண்டுகளில் அதிகமான வேலை நேரத்தால் சரியாக தூக்கம் இல்லாமல் போய் இப்போது அவருக்கு கிட்டப்பார்வை பிரச்சினை அவருக்கு வந்து விட்டது. இப்போதைய பொருளாதார நிலைமையால் கண்ணாடி கூட வாங்க இயலவில்லை. ஆனால் தான் வாங்கியிருப்பதாகவும், வீட்டில் வைத்துவிட்டு வந்து விட்டதாகவும் சொல்லிக் கொண்டார்.

”நான் சரியா படிக்கல.. அந்த மேனேஜரு பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கான்.. தெரிஞ்ச பையன்தான் சார். ஸ்டாண்டுல வண்டிய விட்டா தெனமும் வேல வருமான்னு தெரியாது.. அங்கேன்னா தெனமும் வேல.. அப்டியே நம்மள காண்டிராக்டா பெர்மனண்டா வச்சுக்குவாங்கனு பார்த்தேன். கடசில கழட்டி விட்டுட்டாங்க சார்..” என்றார். ”வாரத்துல மூணு நாளு லோடு கெடைக்கும்.. ஒண்ணும் இல்லாம இருக்கதால தான் ஞாயிற்றுக்கெழம கூட ஏதாச்சும் லோடு கெடைக்காதான்னு பாத்துட்டு இருக்கோம்” என்றவரிடம் இயலாமை துலக்கமாக கண்ணில் தெரிந்தது.

”நீங்க புது வண்டி வாங்குனீங்களா ?” என்று கேட்ட போது, ”என்னா சார் நீங்க ! புது வண்டி பதினோரு லட்சம் சார்.. கடசில சேட்டுட்ட வட்டியோட கட்டி முடிச்சா இருபது லட்சம் கட்டணும் சார்.. மாசா மாசம் 33 ஆயிரம் கட்டணும். தெனமும் நமக்கு டீசல் போக கையில நிக்கதே 800 ரூபாதான். அதுவும் இப்போ வாரத்துல வேல மூணு நாளுதான். மாசத்துக்கு பத்தாயிரம் கூட தேறாது.. நீங்க வேற” என்று வெறுப்பாக கூறிய அவர் பழைய வண்டியை சேட்டு மூலமாக வாங்கி இன்னும் வட்டி கட்டி வருகிறார். அநியாய வட்டிதான் பெரும்பாலும் இவர்களிடம் வசூலிக்கப்படுகிறது.

மகேந்திரனின் நண்பர் ஒருவர் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார். முப்பது வயது நிரம்பிய அவர் சில ஆண்டுகளுக்கு முன் வட்டிக்கடை சேட்டு மூலம் சில பத்தாயிரத்தில் ஒரு பழைய ஈய்ச்சர் வண்டி வாங்குகிறார். முறையாக வட்டிப் பணத்தை மாதம்தோறும் இவர் தந்துவிடுவதை பார்த்த சேட்டு இன்னும் பணம் தந்து வண்டிகளின் எண்ணிக்கையை பெருக்க சொல்லுகிறான். அவனுக்கும் அப்போதுதானே நல்ல வருமானம் கிடைக்கும். இவரும் அப்படியே செய்தார்.

ஈய்ச்சர் மினி லாரி
முறையாக வட்டிப் பணத்தை மாதம்தோறும் இவர் தந்துவிடுவதை பார்த்த சேட்டு இன்னும் பணம் தந்து வண்டிகளின் எண்ணிக்கையை பெருக்க சொல்லுகிறான்.

ஐந்தாண்டுகளுக்கு முன் வந்த பொருளாதார மந்தம் அவரது தொழிலை இப்போது ஒன்றுமில்லாமல் செய்து விட்டது. அவரிடம் வேலை பார்த்த ஓட்டுநர்கள் பலர் வேறு வேலைகளுக்கும், ஊர்களுக்கும் சென்று விட்டனர். அதன்பிறகு ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த அளவு எடை கொண்ட பொருட்களை (சுமார் 8 முதல் 10 டன் வரை) வேறு மாநிலங்களுக்கு ஈய்ச்சர் வண்டி மூலமே எடுத்துச் செல்லும் தொழிலை செய்து சம்பாதிக்க முயற்சிக்கிறார். ஒருசில மாதங்களிலேயே அதற்கும் சாத்தியமில்லாத அளவுக்கு உற்பத்தித் துறை விழுந்து விட்டது. இப்போது சிஐடியு ஸ்டாண்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார். தொழில் நட்டமானதற்கு தனது தவறான, கூடா நட்புகள் தான் காரணம் என்று வருத்தப்பட்டார் அந்த இளைஞர். இப்போது எந்த கெட்ட பழக்கமும் தனக்கு இல்லை என நேர்மையாக அவரே முன்வந்து சொன்னார்.

”கம்ப்யூட்டர் கம்பெனியெல்லாம் வந்த உடன எங்கள மெயின் ரோட்ட விட்டு உள்ள தள்ளிட்டாங்க சார். மூவாயிரம் ரூபாய் கொடுத்தால் நாங்க கிழக்கு கடற்கரை சாலை வரைக்கும் போவோம் சார். வீடு காலி பண்ற பல பேருட்ட பேக்கேஜிங் கம்பெனி வச்சிருக்கிறவங்க ஏமாத்துறாங்க சார். படிச்சவங்க.. கம்ப்யூட்டர்ல தேடி போன் போட்டு புக் பண்ணிடுறாங்க. அங்கெல்லாம் பேரம் பேசாம பெரிய தொகைக்கு போயிடுறாங்க.. கேட்டா எங்க வண்டி சின்ன வண்டிங்குறாங்க..அடுக்குற மாதிரி அடுக்குனா அதே பொருள எங்க வண்டிலயும் கொண்டு போலாம் சார்” என்றார்கள். ”காசு கூட முக்கியமில்ல சார்.. ஆனா வேலயில்லாம எப்பிடி சார் இருக்கிறது.” என்பதுதான் மகேந்திரனது ஒரே ஆதங்கமாக இருந்தது. வேலையில்லாமல் இருப்பதை அவரைப் போலவே அங்கிருந்த எவராலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எவ்வளவு குறைவான வாடகைக்கும் வண்டியை கிளப்ப அவர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள் என தெளிவாக தெரிந்தது.

எல்லோருக்குமே சராசரி வயது நாற்பதை தாண்டிக் கொண்டிருந்தது. எளிய வாடகை வீடுகளில் குடியிருக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கு கேட்டதையெல்லாம் வாங்கித் தர முயற்சிக்கிறார்கள். மீதமானவற்றை மட்டும் தங்களுக்கு எடுத்துக் கொள்கிறார்கள். காலை நேரத்தை பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக ஒதுக்கிக் கொள்கிறார்கள். அதனால் தான் பலரும் யாரிடமராவது கார் ஓட்டுநராக போக விரும்பவில்லை. ”எம் பொழப்பு என்னோட போகட்டும்னுதான் புள்ளய படிக்க வைக்கிறேன். ஸ்கூல்ல கொழந்தய விட்டுட்டு கார எடுக்க வீட்டுக்கு போனா ‘என்ன ஆபீசருக்கு இப்போதான் விடிஞ்சுதா’ன்னு மொதலாளிங்க நக்கலடிப்பாங்க சார்.. எரிச்சலா வரும்.. அதாங் கெடைச்ச வரைக்கும் இதே போதும்னு பாக்குறேன் சார்” என்றார் மகேந்திரன்.

eicher-1இங்கு இரண்டு சங்கங்கள் உள்ளன. ஒன்று ஓட்டுநர்கள் சங்கம், இன்னொன்று வேன் உரிமையாளர்கள் சங்கம். இரண்டு சங்கத்துக்கும் ஒரே ஸ்டாண்டுதான், சிஐடியு தான் இருவரையும் வழிநடத்துகிறது. பெரும்பான்மையானவர்கள் ஓட்டுநர் சங்கத்தில் தான் இருக்கிறார்கள். பெரும்பாலும் எல்லோருமே ஒரு வண்டியை மட்டுமே சொந்தமாக வைத்து ஓட்டுபவர்கள். அவரவர் கவுரவத்தை பொறுத்து வெவ்வேறு சங்கங்களில் இருப்பதாக அங்குள்ளவர்கள் கூறினர். வேன் உரிமையாளர் சங்கம் ஒன்றை இப்பகுதியில் சுயேட்சையாக நடத்தி வந்த ஒருவர் இப்போது அண்ணா தி.மு.க.-வில் ஐக்கியமாகிய பிறகு சங்க வேலைகள் எதுவும் நடப்பதில்லையாம்.

இடையில் இந்த ஸ்டாண்டிற்கு முன்னர் தொழிலாளிகளுக்கான ஒப்பந்ததாரராக இருந்த அண்ணா தி.மு.க வை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். இப்போது ஒப்பந்த தொழிலாளிகளை நிறுவனங்கள் எதுவும் வேலைக்கு வைத்துக்கொள்வதில்லை என்பதால் இவருக்கும் வருமானம் இல்லையாம். வேறு வழியே இல்லாததால் இப்போது குட்டி யானை வண்டி வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார். ”வீட்டுல பத்து டிக்கெட்டுபா.. முன்னமே கம்பெனிலருந்து வாடகப் பணம் மாரி பத்தாயிரம் பத்தாயிரம்னு மாசத்துக்கு வந்துக்குனு இருந்துச்சு.. அந்த மெதப்புல மருமகங்கிட்ட குடும்ப செலவுக்கெல்லாம் காசு வாங்கக் கூடாதுன்னுட்டேன்.. இப்போ குடும்ப செலவு மட்டும் 12 ஆயிரமாவது கொறச்சலா ஆகுதுப்பா.. அதான் வீட்டம்மா நகய சேட்டாண்ட வச்சு குட்டி யான வாங்கிட்டேன்.” என்றார். ”வடக்கேருந்து 150 ரூபாக்கு ஆள இட்டாந்திருக்காங்க சார்.. நம்மாளுங்க இந்த ரேட்டுக்கு ஒத்துக்குவானா” என்று சலித்துக் கொண்டார்.

அப்போது நான்கைந்து வட இந்திய இளைஞர்கள் ஒரு சிறு பையில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு கம்பெனிகளைப் பார்த்து வந்து கொண்டிருந்தனர்.

இவர்களைப் பார்த்து சரவணன் என்ற 30 வயது இளைஞர் ”இவனுகளால தான் எங்க பொழப்பே போச்சு சார்” என்று விரக்தியுடன் சொன்னார். ”அவங்க ஊர்ல வேலை கிடைக்காமதான இங்கே வந்திருக்காங்க” எனச் சொன்னவுடன் ”ஒரு பிரியாணி பொட்டலத்த நாலு பேரு சாப்பிட்டா யாருக்குமே பசியடங்காதே சார்” என்று ஒப்பிட்டு சொன்னார் ஐம்பது வயதை தொட்டுக் கொண்டிருந்த செந்தில்குமார். சரவணன் முதலில் தானியங்கி லேத் பட்டறை வைத்துக் கொண்டு மூன்று, நான்கு பேருக்கு வேலை தந்து கொண்டிருந்தவர். மூன்று ஆண்டுகளாக ஆர்டர் கிடைக்காத காரணத்தால் ஈய்ச்சர் வண்டியை வாங்கி ஓட்ட ஆரம்பித்தார். தற்போது ஏழெட்டு மாதமாக அதிலும் சரியான வருமானம் இல்லை. எனவே அவருக்கு திருமணமும் தள்ளிப் போகிறது என வருத்தப்பட்டார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை
அம்பத்தூர் தொழிற்பேட்டையின் ஒரு சாலை

செந்தில்குமாரோ பெரிய குடும்பஸ்தர். கடன் வாங்கி பிள்ளைகளை படிக்க வைக்கிறார். மூத்த பெண் ஐடி துறையில் வேலைக்கு போய் விட்டார். அவளுக்கு திருமணம் முடிவதற்குள் அவளுக்காக வங்கியில் வாங்கிய கல்விக்கடனையும் அடைக்க வேண்டும், திருமணத்துக்கும் நகை வாங்க வேண்டும் என்பதற்காக ஞாயிற்றுக்கிழமையும் வந்து லோடு கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். அடுத்த இரண்டு குழந்தைகளது கல்வி, அன்றாட செலவு உள்ளிட்ட அனைத்தும் இவரது வருமானத்தை தான் சார்ந்திருக்கிறது. சரவணனோ அல்லது செந்தில்குமாரோ இந்தக் கவலைகளைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியமாகத்தான் சொன்னார்கள்.

தெற்காசியாவில் சிறுதொழில் முனைவோருக்கான மிகப்பெரிய தொழிற்பேட்டை இது. 1965-ல் 1250 ஏக்கர் பரப்பில் ஆரம்பிக்கப்பட்ட போது நூறுக்கும் குறைவாகவே இருந்த சிறு தொழிற்சாலைகள் பின்னர் வளர்ந்து 1,700 தொழிலகங்கள் வரை பெருகியுள்ளது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் சேர்ந்து பணிபுரியும் இடமாக திகழ்ந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை இப்போது பெரும்பாலான இடங்களில் பாழடைந்து கிடக்கிறது. மோட்டார் வாகன உதிரி பாகங்கள் மற்றும் இஞ்சினியரிங் உதிரி பாகங்களையே பெரும்பாலும் தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருந்த அப்பகுதியில் இன்று கார்களுக்கு சர்வீஸ் செய்யும் நிறுவனங்கள் மட்டும் தான் ஒன்றிரண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இங்கு செயல்பட்டுக் கொண்டிருந்த ஆயத்த ஆடை நிறுவனங்கள் தொடர்ந்து ஆர்டர் கிடைக்காத காரணத்தால் மூடப்படவே அம்பத்தூரை நம்பி தையல் தொழிலுக்காக வந்து கொண்டிருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தத்தம் கிராமங்களுக்கு திரும்பிப் போய் விட்டனர். அந்த நிறுவனங்கள் இருந்த இடங்களை தற்போது மென்பொருள் நிறுவனங்கள் எடுத்துக்கொண்டு விட்டன.

அம்பத்தூர் தொழிற்பேட்டை
கடந்த சில ஆண்டுகளாக உள்ள பொருளாதார நெருக்கடியால் இங்கு உற்பத்தி பெருமளவு குறையத் துவங்கியது.

டிஐ சைக்கிள்ஸ், டிவிஎஸ், பிரிட்டானியா, டன்லப் போன்ற பெரிய நிறுவனங்கள் அம்பத்தூரில் இருந்தபோதும் பெரும்பான்மை தொழிலாளிகள் சிறு தொழிலகங்கள், சிஎன்சி மிசின், லேத் பட்டறைகளை நம்பிதான் தினசரி இங்கு வந்து கொண்டிருந்தனர். சிறிய லேத் பட்டறைகளை சொந்தமாக ஓரிரு லட்சம் முதலீட்டில் ஆரம்பித்தவர்களும் அவர்களில் உண்டு. இவர்களையும், டைனி எனப்படும் சிறு தொழில் நிறுவனங்களையும் சேர்த்தால் 5,000 நிறுவனங்களாவது அம்பத்தூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை இயங்கி வந்தன. 2008-ம் ஆண்டில் இங்கு வணிக வளாகங்களை நிறுவ முயற்சி நடைபெற்ற போதும், சிறு உற்பத்தியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழக அரசின் சிட்கோ நிறுவனம் அதற்கு அனுமதி தரவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக உள்ள பொருளாதார நெருக்கடியால் இங்கு உற்பத்தி பெருமளவு குறையத் துவங்கியது. பல நிறுவனங்கள் இங்கு தொடர்ச்சியாக மூடப்பட்டன. மூடப்படாத நிறுவனங்களில் உற்பத்திக் குறைப்பும், ஆட்குறைப்பும் ஒருங்கே நிகழத் துவங்கின. 2011-ல் பொருளாதாரத்தில் ஒரு மீட்சி வருவது போல தெரிந்த போதும் 2012 இறுதியில் மீண்டும் இங்கு தொழிற்துறை உற்பத்தி சரியத் துவங்கியது. அச்சரிவு தொழிலாளிகளுக்கு மாத்திரம் பிரச்சினையாக இல்லை. இத்தொழில்களை சார்ந்து இயங்கிய பிற தொழில்களையும் கடுமையாக பாதித்துள்ளது. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சாரார்தான் ஈய்ச்சர் வண்டி ஓட்டுநர்கள்.

ஆரம்பத்தில் சிறு முதலாளிகளை வளரவைப்பது என்ற பெயரில் பெரிய நிறுவனங்கள் தமக்கு தேவையான வேலைகளை செய்து கொள்கின்றன. பிறகு தேவையில்லை என்று முடிவு செய்யும் போது அவர்கள் ஈவிரக்கமின்றி தூக்கி எறியப்படுகின்றனர். அப்படித்தான் ஈய்ச்சர் லாரி ஓட்டுநர்கள் வாழ்க்கை மாறிவிட்டது. முதலில் இவர்களை நிறைய லாரிகள் வாங்க வைத்து தொடர்ச்சியாக வேலை கொடுக்க வைத்து ஆசை காட்டி பிறகு அம்போ என விட்டுவிட்டு போய்விட்டனர். லாரிகளை வைத்தவர்கள் விற்றுவிட்டு தற்போது ஓரிரு லாரிகளை வைத்து மட்டும் பிழைப்பை ஓட்ட முயற்சிக்கின்றனர்.

ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக அமல்படுத்தப்படும் தனியார் மயம், தாராள மயம், உலக மயம் இப்படித்தான் மக்களை அலைக்கழிக்கிறது.

–    வினவு செய்தியாளர்

படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

தஞ்சையில் கால்டுவெல் 200-ம் ஆண்டு நினைவு கருத்தரங்கம்

1

robertcaldwelldதமிழின் பெருமையை, தமிழிலக்கியங்களின் வளமையை தமிழனுக்கும், உலகுக்கும் உணர்த்திய

அறிஞர் ஆயர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின்

200-வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கம்

ஆகஸ்டு 3, 2014 ஞாயிறு மாலை 5.30 மணி
பெசன்ட் அரங்கம், தஞ்சை.

தலைமை

தோழர் காளியப்பன்
மாநில இணைப்பொதுச்செயலாளர்
மக்கள் கலை இலக்கியக் கழகம்

கருத்துரை

காலனியம் : திராவிட இனம் : கால்டுவெல்

பேரா. முனைவர். வீ. அரசு
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர்,
சென்னை பல்கலைக்கழகம்

தமிழ் மறு உயிர்ப்பில் கால்டுவெல் பங்கு

புலவர் பொ. வேலுச்சாமி

அனைவரும் வருக!

caldwell--2-small

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை.

தொடர்புக்கு : 94431 88285, 94431 57641

திரைப்பட சண்டை இயக்குநர் நித்தியானந்தன் நேர்காணல்

1

சினிமா நேர்காணல் – 2

தமிழ் சினிமாவில், நட்சத்திர நடிகர்களின் இமேஜ் எனும் ஒளி வீசுவதற்கு உயிரைக் கொடுத்து நடிக்கும் சண்டை நடிகர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? நடிகர் – நடிகைகளை அட்டைப்படங்களிலும், அனைத்து வகை செய்திகளிலும் திணித்து எழுதும் ஊடகங்கள் எவையும் இத்தகைய கலைஞர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. மாறி வரும் தமிழ் சினிமாவில் சண்டை நடிகர்களின் உலகம் எப்படி இருக்கும்? மாஸ்டர் என்று அழைக்கப்படும் சண்டை இயக்குநர்களில் ஒருவரான மாஸ்டர் நித்தியானந்தனை, சென்னை-வடபழனியில் இருக்கும் தென்னிந்திய திரைப்பட சண்டைக் கலைஞர்கள் சங்க கட்டிடத்தில் சந்தித்து பேசினோம். சினிமா ஓடுவதற்கு மட்டுமல்ல சினிமா உலகைப் புரிந்து கொள்ளவும் சண்டை நடிகர்களின் வாழ்க்கை உதவும். படியுங்கள்!
_______________

நித்தியானந்தன்
சண்டை இயக்குனர் நித்தியானந்தன்

வினவு: ஒரு திரைப்படத்தில் சண்டை நடிகர்கள் அவசியமா?

நித்தியானந்தன்: சார்லி சாப்ளின் போன்ற ஒரு சிலரைத் தவிர வேறு யாரை எடுத்தாலும் ஆக்சன் கதாநாயகர்கள் தான் பிரபலம். புரூஸ் லீ, ஜெட்லீ, ஜாக்கி ஜான், சில்வர்ஸ்டன் ஸ்டோன், ஆர்னால்டு என எல்லோருமே இதற்காகத் தான் மதிக்கப்படுகிறார்கள்.

வினவு: ஆனால் மக்களைப் பொறுத்தவரை நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறீர்கள், உங்களது வாழ்க்கை நிலைமை என்ன? பலருக்கும் தெரியாதே?

நித்தியானந்தன்: மற்றவர்களைப் போலத்தான் நாங்களும். என்ன கூடுதலாக கொஞ்சம் சண்டையெல்லாம் கற்றுக்கொண்டு, கண்ணாடியை உடைக்க தைரியமா முன்னால் வந்து நிற்போம். வறுமை காரணமாக ஐந்தாயிரம், பத்தாயிரம் கிடைக்கும் என்பதற்காகத்தான் இந்த தொழிலுக்கு வருகிறோம். எங்களுக்கும் கொஞ்சம் பயம் இருக்கும். ஆனால் இப்போதைய சண்டைக் காட்சிகளில் உயிரெல்லாம் போயிடாது. முன்னாடி போயிருக்கிறது. அப்போது உண்மையான கண்ணாடியை உடைக்க வேண்டியிருக்கும். இப்போது காயம் மட்டும் படும். எனக்கு கூட கை கால் எல்லாம் காயம் பட்டு இருக்கிறது. (கைகளில் காயம்பட்ட தழும்புகளைக் காண்பிக்கிறார்.)

வினவு: எத்தனை வயதில் இந்த தொழிலுக்கு வந்தீர்கள்? உங்களை எப்படி தெரிவு செய்தார்கள்? அப்போது இந்தத் துறை எப்படி இருந்தது?

நித்தியானந்தன்: நான் 23 வயதில் வந்தேன். இப்போது 54 வயதாகிறது. எங்க அப்பா சண்டை நடிகரா இருந்தார். வணங்காமுடி, தங்கமலை ரகசியம், புதிய பறவை போன்ற படங்களில் சிவாஜிக்கு டூப் போட்டிருக்கிறார். ராயபுரத்தில் தான் வசித்து வந்தார். நானும் அங்குதான் பிறந்து வளர்ந்தேன். எஸ்.எஸ்.எல்.சி படித்தும் வேலை கிடைக்கவில்லை. அதான் இங்கு வந்து விட்டேன். அப்பா வேலை பார்த்த மாஸ்டரிடமே என்னை சேர்த்து விட்டார்.

வினவு: உங்களை ஏன் அதற்கு மேல் படிக்க வைக்க முடியவில்லை?

நித்தியானந்தன்: வருமானம் பத்தல சார். இந்திரா காந்தி ஆட்சியில சண்டைக் காட்சிகளில் ரத்தம் வருவது போல காட்சிகள் அமைக்க கூடாது என்று சட்டம் போட்டார்கள். அதை எதிர்த்து கடுமையான போராட்டம் எல்லாம் நடைபெற்றது. எம்.ஜி.ஆர் வந்து தான் ரத்தம் இல்லாமல் சண்டை எல்லாம் வைத்து படம் எடுத்து, எங்களை வாழ வைத்தார்.

car-3வினவு: உங்களது அப்பா காலத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

நித்தியானந்தன்: ஒரு சண்டைக் காட்சிக்கு ரூ.200 முதல் 300 வரை கிடைக்கும். முதலில் மாஸ்டராக தொழிலை ஆரம்பித்த அவர் பிறகு சண்டை போடுபவராக மாறி விட்டார்.

வினவு: வேறு வேலைக்கு போக முடியாத காரணத்தால் தான் இதற்கு வந்து விட்டீர்களா?

நித்தியானந்தன்: வேலை வாய்ப்பு இல்லை. அடுத்து நான் பார்க்க கொஞ்சம் கலராக (மாநிறம்) கொஞ்சம் உயரமா இருந்ததால கதாநாயகர்களுக்கு டூப் போட முடியும்னு சொன்னாங்க. அதுனால எங்கப்பா என்னய சூப்பர் சுப்பயராயன் மாஸ்டர்ட்ட எடுத்துண்டு போயி விட்டாரு. பீச்ல தினமும் காலைல ஜிம்னாஸ்டிக் பயிற்சி எடுப்போம். அப்புறம் வாரிசு சண்டை நடிகர்களுக்கெல்லாம் யூனியன்ல ஒரு செலக்சன் வைப்பாங்க. அதுல நான் செலக்ட் ஆகிட்டேன்.

வினவு: அந்த செலக்சன்ல என்னென்ன தேர்வுகள் இருக்கும்?

நித்தியானந்தன்: ஜிம்னாஸ்டிக்ல சிங்கிள், டபுள், தொடர்ச்சியா விதவிதமா பல்டி அடித்து காட்டணும். இதுபோக உங்களுக்கு வேறு என்னென்ன தெரியுமோ அதை எல்லாம் செய்து காண்பிக்கணும். கத்தி, வாள், ஸ்கிப்பிங், அப்புறம் கராத்தே இந்த நான்கிலும் தேர்வுகள் நடைபெறும். ரொம்ப இல்லேன்னாலும் ஓரளவு திறமை காட்டினால் தேர்வு செய்து விடுவார்கள். இல்லையின்னா ‘இன்னும் கொஞ்சம் பிராக்டிஸ் பண்ணிட்டு வாப்பா’ எனச் சொல்லி கொஞ்சம் டைம் கொடுப்பாங்க. பிறகு தேர்வு வைத்து அவனையும் உள்ளே எடுத்துக் கொள்வார்கள். ஏனென்றால் வாரிசுக்கு கட்டாயம் ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்பது யூனியன் விதி. இங்கிருக்கும் பலருமே வாரிசுகள் தான்.

வெளியே இருந்து எடுக்க வேண்டுமானால் குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு பிறகுதான் எடுப்பார்கள். உடற்தகுதியுடன், அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து வழக்கு இல்லேன்னு சான்றிதழ் தரணும். கிரிமினல் பின்னணி இருந்தால் சேர்க்க மாட்டாங்க. முன்னாடி சிவக்குமார் சார் மாதிரி உயரம் குறைவான கதாநாயகர்களும் இருந்த காரணத்தால் உயரம் குறைவாக இருந்தாலும் எடுத்தாங்க. இப்போது அது சாத்தியமில்லை.

வினவு: அப்போது யூனியனில் சேர்வதற்கு எவ்வளவு கட்டணம்?

fire-2நித்தியானந்தன்: நான் அப்போது வாரிசாக சேர்ந்ததால் கட்டணம் ரூ.500. மற்றவர்களுக்கு ரூ.5000. இது நடந்தது 1982-ல்.

வினவு: நீங்கள் சேர்ந்த பிறகு நடித்த முதல் படம் எது?

நித்தியானந்தன்: தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரான ராம் லஷ்மண்தான் முதல் படம். தமிழில் கமல், தெலுங்கில் கிருஷ்ணமராஜ், இந்தியில் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் கதாநாயகர்கள். நான் கிருஷ்ணமராஜுக்கு டூப் போட்டேன். இரண்டு காட்சிகளில் வந்தேன். தாவிக் குதிப்பது, டைவ் அடிப்பது போன்றவற்றை செய்தேன்.

வினவு: அதற்கு உங்களுக்கு என்ன சம்பளம் தரப்பட்டது?

நித்தியானந்தன்: மூன்று நாளைக்கு ஆயிரம் ரூபாய் தந்தார்கள். தாஸ் சார் தான் எனக்கு மாஸ்டர். அப்புறம் நிறைய மொழிகளில் நிறைய பேருக்கு டூப் போட்டிருக்கிறேன். என்.டி.ஆர், கிருஷ்ணா, பிரேம் நசீர், ஷோபன் பாபு, ராஜ்குமாருன்னு பலருக்கு டூப் போட்டுள்ளேன். இந்தியில் தர்மேந்திரா, மிதுன் சக்ரவர்த்திக்கும் டூப்பா நடிச்சேன்.

ரஜினிக்கு தங்க மகன், நான் மகான் அல்ல, பிலாப்டா படங்களிலும், கமலஹாசனுக்கு கைதியின் டைரி, சட்டம் படங்களிலும் டூப் போட்டேன். அப்போது நான் உயரமாகவும், ஒல்லியாகவும் இருந்தேன்.

வினவு: நீங்கள் இதுவரை எத்தனை படம் நடித்திருப்பீர்கள்?

நித்தியானந்தன்: சரியாத் தெரியலை.

வினவு: ஒரு ஆயிரம் இருக்குமா?

நித்தியானந்தன்: அதுக்கும் கூட இருக்கும் சார். ஏன்னா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தின்னு எல்லா மொழியிலயும் பண்ணியிருக்கிறேன். கன்னடத்தில் அம்ரீஷ், பிரபாகரன், விஷ்ணுவர்தன், டாக்டர் ராஜ்குமார் என எல்லோருக்கும் டூப் போட்டிருக்கிறேன்.

வினவு: நீங்கள் எந்த சண்டையில் சிறப்பான முறையில் பெயர் பெற்றவர்?

நித்தியானந்தன்: ஜிம்னாஸ்டிக். அப்புறம் ஆபத்தான காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிப்பது. உதாரணமாக உயரமான இடத்தில் இருந்து குதிப்பது போன்றவற்றில்.

jump-4வினவு: அதிகபட்சம் எவ்வளவு உயரத்தில் இருந்து குதிப்பீர்கள்?

நித்தியானந்தன்: சீக்ஸ் பீட்சுன்னு ஒரு திரைப்படம் அதில் தண்ணீருக்கு மேலே இருந்து 80, 100 அடி உயரத்தில் இருந்து குதித்திருக்கிறேன். அது துறைமுகத்தில கப்பலுக்கும் மேலே இருக்குற டவர்ல இருந்து குதிச்ச சீன்.

வினவு: இதெற்கெல்லாம் பயிற்சி, ஒத்திகை எடுப்பீர்களா?

நித்தியானந்தன்: அதெல்லாம் கிடையாது சார். ஏற்கெனவே குதித்திருக்கிறோம் என்ற தைரியம்தான். தொழில்னு வந்த பிறகு அதெல்லாம் பார்க்க கூடாது. நானே இன்னொரு மாஸ்டருக்கு (ஆம்பூர் பாபு) பதிலாகத்தான் அப்படி குதிச்சேன்.

வினவு: தண்ணீர் ஆழம் குறைவான இடங்களில் குதிப்பதுண்டா? ஒகேனக்கால் போன்ற அருவிகளின் மேலே இருந்து குதித்திருக்கிறீர்களா?

நித்தியானந்தன்: அப்படியெல்லாம் குதிக்கவில்லை. எல்லாவற்றையும் ஒரு கணக்கில் கொண்டுதான் செய்வோம். அருவிக்கு மேலே குதித்ததில்லை. ஆனா ஒகேனக்கலில் மோகன்லாலுக்கு பதிலாக வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல டூப்பா நடித்திருக்கிறேன்.

வினவு: ஜிம்னாஸ்டிக், ஆபத்தான சண்டை காட்சியில் பெயர்பெற்றுள்ள நீங்கள் இதில் எத்தனை முறை காயமடைந்துள்ளீர்கள். அதில் குறிப்பிடும்படியான சம்பவம் எதாவது இருக்கிறதா?

நித்தியானந்தன்: நிறைய வாட்டி அடிபட்டிருக்கிறேன். சில முறை உயிர் போகும் நிலைக்கு சென்று திரும்பியிருக்கிறேன். ஒரு மலையாள படத்துக்கு டூப் போட்டிருந்தேன். இப்போ சீப்ராஸ் பில்டிங்னு இருக்கே அது ஒரு காலத்துல சாரதா ஸ்டுடியோஸ்னு இருந்தது. அங்க இரண்டு மாடி உயரத்தில் இருந்து எதிரே இன்னொரு கட்டிடத்திற்கு செல்ல சாரத்தை போல ஒரு கயிறைப் பிடித்துக் கொண்டு வழுக்கிக் கொண்டு கீழிறங்க வேண்டும். வேற பாதுகாப்பு வசதியெல்லாம் இல்லை. பாதி வழியில் கயிறு அறுந்து, தரையில் விழுந்து விட்டேன். நினைவு தப்பி வாயில் ரத்தம் வர ஆரம்பித்து விட்டது. விஜயா மருத்துவமனையில் சேர்த்து இப்போது மியாட் மருத்துவமனையில் இருக்கும் மோகன்தாஸ் டாக்டர்தான் எனக்கு ஆபரேஷன் செய்து காப்பாற்றினார்.

நயகரா
நயகரா அருவிக்கு குறுக்கே நடக்கும் சாகச வீரர்

வினவு: இதெற்கெல்லாம் முன்னரே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து விட்டு படப்பிடிப்பு நடத்த மாட்டார்களா?

நித்தியானந்தன்: அதெல்லாம் செஞ்சாலும் அதையும் மீறி நமக்கு அடிபட்டு விட்டது. கீழே பெட் எல்லாம் போட்டிருந்தார்கள் (ஒரு அடி உயரத்தில் கோணிப்பையில் வைக்கோல் உள்ளே வைத்து சுற்றப்பட்டிருப்பதைத்தான் அவர் பெட் என்கிறார்).

வினவு: எவ்வளவு காலம் அதன்பிறகு ஓய்வெடுத்தீர்கள்? அந்தக் காலங்களில் சம்பந்தப்பட்ட படத் தயாரிப்பாளர் எதாவது உதவி செய்தாரா?

நித்தியானந்தன்: அதெல்லாம் பண்ண மாட்டார்கள். மருத்துவ முதல் உதவி செய்வார்கள். மருத்துவ செலவை கொஞ்சம் ஏற்றுக் கொள்வார்கள். அதன் பிறகெல்லாம் ஒன்றும் கிடைக்காது.

வினவு: சண்டை நடிகர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டமெல்லாம் கிடையாதா?

நித்தியானந்தன்: முன்னாடி இருந்தது. இப்ப கிடையாது. சொந்த பொறுப்பில் தான் அவங்கவங்கதான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வினவு: கோடிக்கணக்கில் செலவழித்து சினிமா எடுக்கும் தயாரிப்பாளருக்கு உங்களது ரிஸ்க் சண்டை மட்டும் தேவைப்படுகிறது. ஆனால் உதவாமல் போகிறார்கள், ஏன்?

நித்தியானந்தன்: இந்த தொழில் ரிஸ்க்குனு தெரிந்துதானே வருகிறோம். அதனால் உதவிய எதிர்பார்க்க முடியாது. கண்ணாடியை உடைப்பது போன்ற ஆபத்துகளுக்கு தக்க ஊதியத்தை தந்து விடுகிறார்கள். வாழ்நாள் முழுதும் உதவி பண்ண முடியாது இல்லையா. ஒரு விபத்து நடக்கிறது, அதில் சில சமயம் உயிர் பிழைத்திருப்போம், சில சமயம் ரொம்ப பிரச்சனையாகும். அது போலத்தான் இதுவும்.

motor-bike-jumpவினவு: ஆனால் உங்களது ரிஸ்க்குகளுக்குத்தானே மக்கள் கைதட்டுகிறார்கள், விசிலடிக்கிறார்கள். அதை வைத்து சம்பாதிக்கும் தயாரிப்பாளர் உங்களுக்கு உதவக் கூடாதா?

நித்தியானந்தன்: சினிமாவில் விபத்து பல இடங்களிலும் நடக்கலாம். நடனமாடும் போது கூட நடக்கலாம். ஆனா சண்டைக் காட்சியில் வாய்ப்பு அதிகம். அதுதானே சண்டைக்காட்சி?

வினவு: ஜிம்னாஸ்டிக் பண்ணும்போது என்ன விதமான விபத்துக்கள் நடக்கும்?

நித்தியானந்தன்: ஜிம்னாஸ்டிக்கில் சம்மர் ஷாட் பண்ணும்போது நம்மோட ஆள் ஒருத்தர் இறந்தே விட்டார். “நாளை உனது நாள்” (விஜயகாந்த், நளினி நடித்த படம், இயக்கம் ஏ.ஜெகநாதன், தயாரிப்பு வாசன் பிரதர்ஸ், ஆண்டு 1984.) படத்தில் பெட் போட்டுதான் ஸ்பிரிங் போர்டில் சம்மர் ஷாட் அடித்தார். முதல் சம்மர் அடித்து இரண்டாவது அடிக்கையில் பாதியில் தலை தரையில் மோதி விட்டது. தண்டுவடத்தில் முறிவு. மறுநாள் இறந்துவிட்டார். அவர் பெயர் ரவி, வயது 28, தண்டையார் பேட்டையை சேர்ந்தவர். சமீபத்தில் ஷாகுல் என்பவர் தெலுங்கு படத்துல நடிக்கும் போது இதே போல் விபத்து நடந்து இறந்து விட்டார். சிட்டிசன் படத்தில் அஜீத்துக்கெல்லாம் அவர்தான் டூப் போட்டுள்ளார்.

வினவு: இப்படி அடிபடுபவர்களுக்கு நிவாரணத் தொகை எதாவது கிடைக்குமா?

நித்தியானந்தன்: யூனியனில் எல்லோரும் ஆளாளுக்கு கொஞ்சம் பணம் போட்டு குடும்பத்தினருக்கு கொடுப்போம். படத்தில் நடித்த கதாநாயகர்களும், தயாரிப்பாளர்களும் மனது வைத்தால் கொஞ்சம் பணம் கிடைக்கும். லோகு என்பவர் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் டூப் போட்டு நடிக்கையில் அடிபட்டு விட்டது. கமல் சார் ஒரு லட்சம் ரூபாய் அவருக்கு கொடுத்தார். அதுபோல அவர்களாக விரும்பினால் எதாவது நடக்கும்.

வினவு: ஜிம்னாஸ்டிக்கிலேயே இவ்வளவு ஆபத்துக்கள் இருக்கிறதா?

நித்தியானந்தன்: ஜிம்னாஸ்டிக்கிலேயே ஒரு ஸ்டூல் தற்செயலாக நழுவி விட்டால் தலைகீழாக விழ வேண்டியதுதான். பயிற்சி எடுத்திருந்தாலும் இப்படி நடக்கும். விபத்துக்களை ஒன்றும் பண்ண முடியாது. எல்லாம் கடவுள் விட்ட வழிதான்.

வினவு: சண்டை காட்சிகளுக்கு முன் எதாவது பிரத்யேகமான உணவு கட்டுப்பாடு, வேறு தயாரிப்புகள் உண்டா?

nithyanandam-2நித்தியானந்தன்: அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. மத்தவங்களுக்கு கம்பெனி கொடுக்கும் அதே உணவைத்தான் சாப்பிடுவோம். ஆபத்து நிறைந்த காட்சிகளை சாப்பிடப் போவதற்கு முன்னரே எடுத்து விடும்படி நாங்கள் இயக்குநரை கேட்டுக் கொள்வோம். அவர்களும் பெரும்பாலும் ஒத்துக்கொள்வார்கள். சாப்பிட்டு விட்டு உடனே செய்தால் ஒரு மாதிரியாக இருக்கும். இல்லாவிடில் மாலை நேரத்தில், சாப்பிட்டு சில மணி நேரம் கழிந்த பிறகு காட்சிகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்வோம். மற்றபடி அங்கு தரும் இட்லி, பொங்கல், கறிக்குழம்பு எல்லாவற்றையும் சாப்பிடுவோம்.

வினவு: அப்படியானால் உடலை சக்தியுடன் பராமரிப்பதற்கான சிறப்பு உணவுக்கு என்ன செய்வீர்கள்?

நித்தியானந்தன்: அதை வீட்டில் சாப்பிட்டுக் கொள்வோம். பழங்கள், முட்டை போன்றவற்றை எடுத்துக் கொள்வோம். ஆளாளுக்கு இது வேறுபடும். சிலர் ஒன்றுமே எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சிலர் பழங்களுடன் பயிறு வகைகள், சத்தான கீரைகள், சூப் போன்றவற்றை எடுத்துக் கொள்வார்கள். எல்லோருக்கும் பொதுவான டயட் என்றெல்லாம் கிடையாது.

வினவு: – ஜிம்னாஸ்டிக், ஆபத்து நிறைந்த ஷாட் போக என்னென்ன சண்டை வகைகள் உள்ளன?

நித்தியானந்தன்: வாள், கத்தி சண்டை, கொம்பு சண்டை, களறி சண்டை, குங்பூ, கராத்தே, குத்துச் சண்டைன்னு நிறைய இருக்கிறது.

வினவு: இப்போதைய மார்க்கெட்டில் சண்டை ட்ரெண்ட் என்ன?

நித்தியானந்தன்: இப்போது எதார்த்தமான சண்டைகளை விரும்புகிறார்கள். அதாவது இரண்டு பேர் சண்டை போட்டால் ஒருத்தரை ஒருத்தர் பிடித்து தள்ளுவது, அடிப்பது போன்றவை. எதார்த்தமான இத்தகைய சண்டைதான் இப்போது ட்ரெண்ட்.

வினவு: பழைய கத்திச் சண்டை, சிலம்பமெல்லாம் இப்போது கிடையாதா?

நித்தியானந்தன்: அதெல்லாம் கிராம சினிமா சப்ஜெக்ட் என்றால் கட்டாயம் கம்பு சண்டை இருக்கும். இதற்கெல்லாம் தனித்தனி ஸ்பெஷலிஸ்டுகள் இருக்காங்க. கம்புச் சண்டை, கத்திச் சண்டை போன்றவற்றுக்கு எங்களுக்குள்ளேயே தனித்தனி சங்கங்கள் உள்ளன.

glass-1வினவு: கண்ணாடியை உடைப்பதில் இப்போது ஆபத்தில்லை, முன்னர் இருந்ததாக சொல்லியிருக்கிறீர்கள். அதை விளக்குங்களேன்.

நித்தியானந்தன்: முன்னாடி ஒரிஜினல் கண்ணாடியை உடைப்பார்கள். அதில் ஸ்பெஷலிஸ்டு நமச்சி வாத்தியார். அப்புறம் டி.எஸ். மணி, கண்ணாடி வரதன்னு பல கில்லாடிங்க இருந்தனர். அப்போ உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு காயம் ஏற்படும். இப்போது வரும் சில்வர் கிளாஸ் சுக்குநூறாக உடைந்து விடும் என்பதால் ரத்த காயம் இருக்கலாமே தவிர உயிருக்கெல்லாம் ஆபத்து இல்லை. இது கடந்த 15 ஆண்டுகளாக அறிமுகமாகியிருக்கும் புதிய டெக்னாலஜி. அதாவது கார், பஸ் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் கண்ணாடி இது.

வினவு: கண்ணாடி, மேசைகளை உடைப்பது எல்லாம் எப்படி எடுக்கிறீர்கள்?

நித்தியானந்தன்: கண்ணாடியில் சில புள்ளிகளில் மறைவாக பட்டாசு மருந்துகளை வைத்திருப்பார்கள். கண்ணாடியின் எதாவது ஒரு புள்ளியில் அடித்தால் அனைத்து பட்டாசுகளும் வெடிக்கும் வகையில் செட்டப் செய்யப்பட்டிருக்கும். சில சமயங்களில் சுத்தியலை வைத்தும் உடைப்போம். கேமராவில் அதை மறைத்து விடுவார்கள். பட்டாசுகள் வெடிப்பதும், நாங்கள் உடைக்க கண்ணாடியில் கை வைக்கும் நேரமும் கரெக்டா இருந்தால் சரியா உடையும். நீங்கள் கவனித்து பார்த்தால் அப்படி உடையும் போது புகை வருவது தெரியும். அது பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படுவது. சுவர்களை மோதி உடைக்கும் இடத்தில் உண்மையான செங்கற்களுடன் நாங்கள் மோதி உடைக்கும் இடங்களில் மாத்திரம் தெர்மோகோல் வைத்து டம்மியான செங்கற்களை வைத்திருப்பார்கள்.

வினவு: கார், பைக்குளில் பறந்து எகிறிக் குதிப்பது பற்றி கூறுங்களேன்.

நித்தியானந்தன்: அதற்கென ஜம்பர்கள் தனியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு தனியாக பயிற்சியெல்லாம் கிடையாது. வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வேகத்தடைகளில் வீலிங் பண்ணி ஜம்ப் பண்ண பயிற்சி எடுப்பாங்க. மற்றபடி தைரியம்தான் வேணும். முன்னாடி அட்டைப் பெட்டிகளை வைத்து மோடி எடுக்கும் பயிற்சி கிடையாது. இப்போது எடுக்கிறார்கள். இதுபோக தண்ணீரில் குதிக்கும் கார், பைக் காட்சிகளை பயிற்சி செய்து பார்ப்பார்கள்.

car-4கார் ஜம்பிங்கைப் பொறுத்தவரை, முதலில் காரை பக்காவாக வெல்டிங் எல்லாம் செய்து விட்டு, அதற்குள்ளே ஒரு கூண்டு போல செய்து டிரைவர் பாதுகாப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்வோம். டமால், டுமால் என தலைகீழாக பல்டி அடித்த பிறகு பார்த்தால் கார் வெளியே அப்பளமாக நொறுங்கியிருக்கும். ஆனால் உள்ளே இருந்த ஆளுக்கு ஒரு சிறு பிசிறு கூட காயமோ பாதிப்போ இருக்காது. ஏனெனில் அவர்தான் கூண்டுக்குள் இருக்கிறாரே.

வினவு: விபத்துக்கள் ஏதும் நடந்து விட்டால் பாதுகாக்க, மருத்துவர், ஆம்புலன்சு போன்ற வசதிகள் படப்பிடிப்பு தளத்தில் இருக்குமா?

நித்தியானந்தன்: வைத்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான இடங்களில் அதெல்லாம் கடைபிடிக்க மாட்டாங்க. ஆனால் விபத்தெல்லாம் நடக்காது. கூண்டு நல்ல பலமாக இருக்கும். அப்புறம் வண்டியில் தேவையான அளவுக்கு மட்டும் தான் பெட்ரோல் வைத்திருப்போம். இல்லாவிடில் தீ விபத்து ஏற்பட்டு விடும் இல்லையா. அதனால் பயப்பட தேவையில்லை. முதலுதவியும் பெரிதாக தேவைப்படுவதில்லை.

வினவு: இங்கே சென்னையில் ஜம்பர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?

நித்தியானந்தன்: ஒரு இருபது பேர் வரை இருப்பார்கள். வேறு மாநிலங்களில் ஒரு சிலர் மட்டும் தான் இருக்கிறார்கள். மும்பையில ரேசர் பைக் போன்ற ஆபத்தில்லாத உயர் ரக பைக்கில் மட்டும்தான் ஜம்ப் செய்வார்கள். நம்மவர்கள் மட்டும்தான் ரிஸ்க்கெடுத்து எல்லா வகை பைக்குகளிலும் ஜம்ப் பண்ணக் கூடியவர்கள்.

வினவு: – நீங்களும் அந்த ரேசர் பைக்கை வாங்க வேண்டியதுதானே?

நித்தியானந்தன்: – இல்ல. அது விலை அதிகம். நம்ம ஆளுங்க சாதா பைக்குலயே அதையெல்லாம் பண்றாங்க. நம்மளயும் சாதா பைக்ல ஜம்ப பண்ண இப்பவும் இந்தி படங்களுக்கு கூப்பிடத்தான் செய்றாங்க. மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு என நாம்தான் முன்னர் இங்கிருந்து சென்று வந்தோம். இப்போது அவர்களும் (கேரளா தவிர) கற்றுக் கொண்டு விட்டார்கள். இப்போ நம்ம மாஸ்டர்கள் அங்க போனால் சில ஸ்பெஷலான ஆட்கள் வேண்டும் என்பதற்காக இங்கிருந்து ஆட்களை அழைத்துக் கொண்டு போவார்கள்.

வினவு: ஜம்பர்களை எப்படி சேர்க்கின்றீர்கள்? அவர்கள் எந்த சமூகப் பின்னணியில் இருந்து வருகிறார்கள்?

Tony Jaa
டோனி ஜா

நித்தியானந்தன்: ஜம்ப் அடிக்கத் தெரிகிறதா என்று ஓரளவு பார்த்து விட்டு சேர்த்துக் கொள்வோம். அவர்களுக்கென தனியாக இங்கு சங்கம் உண்டு. வெளியில் இருந்து வருபவர்கள், ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்காக இருப்பவர்களையும் வண்டி ஓட்டுவதைப் பார்த்து சேர்த்துக் கொள்ளலாமே என்று காலப் போக்கில் சேர்த்துக் கொள்கிறோம். முதலில் சினிமாவில் இவர்களுக்கு காட்சிகள் குறைவு. இப்போது தேவை அதிகரித்து விட்டதால் தனியாக சங்கம் அமைக்கப்பட்டு விட்டது.

வினவு: வயது இதற்கு ஒரு தடையா?

நித்தியானந்தன்: அப்படி சொல்ல முடியாது. நாற்பது வயதிலேயே ஓய்வு பெற்று விடுபவர்களும் உண்டு. ஐம்பத்தைந்து வயதில் ஜம்ப் அடிப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போது இருப்பவர்களில் சீனியர் கேப்டன் குமார், 59 வயசிலும் ஜம்ப் அடிக்கிறார். அவருக்கு இதுதான் தொழில் என்றாலும் இப்போது பகுதி நேரமாக கப்பல்களில் ஒட்டியிருக்கும் கிளிஞ்சல்கள், பாசிகளை அகற்றுவது, மூழ்கிய படகுகளை மீட்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். மீனவ சமூகத்தை சேர்ந்தவர்.

வினவு: சண்டை நடிகர்கள், ஜம்பர்களுக்கு சம்பளம் எவ்வளவு?

நித்தியானந்தன்: – படத்துக்கு படம், மாஸ்டருக்கு மாஸ்டர் அது வேறுபடும். ஆட்டோவில் மீட்டர் போட்டு ஓட்டச் சொன்னாலும் மேலே போட்டுக் கேட்கலையா அது மாதிரிதான் இங்கும். குறைந்தபட்சம் என ஒரு தொகையை யூனியன் முடிவு செய்திருந்தாலும் அதனை விட அதிகமாக பேசி முடிவு செய்வதும் உண்டு. லோ பட்ஜெட்டுன்னா அது கிடைக்காது.

மாஸ்டர்களுக்கு இருபதாயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். காட்சி ஒன்றுக்கு பத்தாயிரம் குறைந்தபட்சம் என்று ஊதியம் யூனியனால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறையக் கூடாது. அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். எந்திரன் படத்திற்கெல்லாம் ஒன்றரை கோடி வரை ஒப்பந்தமாச்சுன்னு நினைக்கிறேன்.

சண்டை போடுபவர்களுக்கு காட்சி ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் சம்பளம். இந்தியில் ஆறாயிரம் ரூபாய்.  ஜம்பருக்கு மூவாயிரம் ரூபாய். இது மூன்று நாட்களுக்கானது. அதற்கு மேல் காட்சியை எடுக்க ஆகும் நாட்களுக்கு பாதி சம்பளம் தரப்படும்.

வினவு: ஒருவருக்கு மாதமொன்றுக்கு எத்தனை நாட்கள் வேலை கிடைக்கும்?

motorcycle-1நித்தியானந்தன்: யூனியனில் இருக்கும் 600 உறுப்பினர்களுக்கு இருநூறு பேருக்கு தினசரி வேலை கட்டாயம் இருக்கிறது. மற்றவர்களுக்கு சொல்ல முடியாதுதான். உயரம், எடை, கட்டுமஸ்தான தோற்றம், திறமைகள் இருந்தால் நிறைய வேலை கிடைக்கும்.

வினவு: சராசரியாக ஒருவருக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

நித்தியானந்தன்: – அதை துல்லியமாக சொல்ல முடியாது. சில சமயம் சூட்டிங் இருக்கும், சில சமயம் இருக்காது. சில நேரம் சூட்டிங் இருந்தாலும் சண்டை போடுபவருக்கு ஓய்வு தேவைப்படும். ஆனாலும் ஓரளவு நன்றாக வேலை கிடைப்பவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை கிடைக்கும். எப்போதும் பிசியாக இருப்பவர்களுக்கு இருபதாயிரம் வரை கூட கிடைக்கும்.

வினவு: வெளியே மற்ற துறைகளில் உள்ள சம்பளத்தை ஒப்பிடும் போது இது குறைவாக இல்லையா?

நித்தியானந்தன்: அதெல்லாம் ஒப்பிடவே கூடாது. இரண்டாவது வேலை குறைந்து விட்டது. சூட்டிங்கும் பெரிதாக நடக்கவில்லை.

வினவு: நீங்கள் அப்படியொன்றும் ஆகா ஓகோவென சம்பாதித்து விட்டது போல தெரியவில்லையே?

நித்தியானந்தன்: அப்படி சொல்ல முடியாது சார். நானெல்லாம் சம்பாதித்ததை மிச்சம் பண்ணியிருந்தால் வசதியாக மாறியிருக்கலாம். தினமும் இரண்டு படம் சூட்டிங் போவேன். ஆனால் அன்றன்று சம்பாதித்த பணத்தை ஆடம்பரமாகவும், ஜாலியாகவும் செலவழித்தே தீர்த்து விட்டோம். அதனால் தான் முன்னேற முடியாமல் போய் விட்டது. அப்போதும் கூட எல்லோருக்குமே தண்ணி பழக்கம் இருந்தது என்று சொல்ல மாட்டேன்.  ஆனால் இப்போது வரும் பசங்க மிகவும் உசாராக இருக்கிறார்கள். மாறி விட்டார்கள்.

வினவு: மாஸ்டர்கள் படத்துல வேலை செய்யும் நிலைமை பற்றி சொல்லுங்களேன்.

jump-2நித்தியானந்தன்: குறைந்தபட்சம் சண்டை ஒன்றுக்கு ரூபாய் இருபதாயிரம் வரை வாங்க வேண்டும் என்பது விதி. சண்டை ஐந்து நாட்கள் வரை கூட எடுக்கப்படும். படம் ஒன்றுக்கு முழுக்கவும் ஒரே மாஸ்டர்தான் இருப்பார். படத்தின் பிரமாண்டம், சந்தையின் வீச்சைப் பொறுத்து இந்தத் தொகை மாறுபடக் கூடும். மாஸ்டருக்கு சண்டை காட்சியுடன் கூடவே படத்தில் லொகேஷன் பார்ப்பது, நிர்வாகம் போன்ற சில வேலைகளும் உண்டு. நமது சென்னையில் 60 மாஸ்டர்கள் வரை இருக்கின்றனர்.

வினவு: நீங்கள் எப்போதிருந்து மாஸ்டர் ஆனீர்கள்?

நித்தியானந்தன்: 2008ல் இருந்து மாஸ்டர் ஆனேன். இதுவரை 30 படங்கள் பண்ணியிருக்கிறேன்.

வினவு: பிற மாஸ்டர்கள் பிசியாக இருக்கையில் வேலையை எடுத்து உங்களிடம் தரும் க்ளாஸ் ஒர்க் (சப் காண்ட்ராக்ட் அல்லது உள் ஒப்பந்தம்) முறை உண்டா? நீங்கள் அப்படி பண்ணியிருக்கிறீர்களா?

நித்தியானந்தன்: தருவார்கள். பண்ணியிருக்கிறேன். அப்படி தருகையில் அவர்களது பெயருக்கு இணையாக டைட்டில் கார்டில் கீழே எனது பெயரும் இருக்கும்.

வினவு: தமிழகம் போலவே பிற மாநிலங்களிலும் மாஸ்டர்கள் இருக்கிறார்களா?

நித்தியானந்தன்: ஆந்திராவில் 20 பேர், கர்நாடகாவில் பதினைந்து பேர், ஒரிசாவில், பாம்பேயில் சிலர் என இருக்கின்றனர்.

வினவு: கேரளாவில் இல்லையா?

நித்தியானந்தன்: கேரளாவுக்கு இங்கிருந்துதான் சண்டை நடிகர்கள் போகிறார்கள். காரணம் அங்கு மிகவும் ஈகோ பார்ப்பார்கள். கதாநாயகனிடம் செருப்பால் அடி வாங்க வேண்டுமென்றால் ‘ஐயோ, அதை ஏன் நான் வாங்க வேண்டும்’ என்று பதிலுக்கு எகிறுவார்கள். எனவே அதற்கெல்லாம் ஆட்கள் இங்கிருந்துதான் செல்கிறார்கள்.

வினவு: – சண்டைக் காட்சிகளுக்கு எந்தெந்த மாவட்டங்களில் இருந்து அதிகம் வருகிறார்கள். சென்னை மீனவர்கள் அதிகமாக இத்துறைக்கு வரக் காரணம் என்ன?

நித்தியானந்தன்: தூத்துக்குடி, திருநெல்வேலி, ஆந்திரா, கேரளாவில் இருந்தும் வருகிறார்கள். எனினும் மொத்தமுள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள்தான். அதிலும் பெரும்பான்மை மீனவர்கள்தான். காரணம் அவர்கள் தைரியமானவர்கள் என்பதோடு, கடற்கரையில் நிறைய நாட்கள் தொடர்ச்சியாக பயிற்சி எடுக்க முடிவது தான்.

வினவு: – மீனவர் தவிர வேறு என்ன சாதியினர் வருகிறார்கள்? பெண் சண்டை நடிகர்கள் உண்டா?

jump-3நித்தியானந்தன்: அப்படி குறிப்பிட்டு சொல்ல முடியாது. எல்லா சாதியில் இருந்தும் இத்தொழிலுக்கு வருகிறார்கள். சௌராஷ்டிரா சாதியினரும் உண்டு. முன்னாடிதான் பிராமின்ஸ் அரசு வேலை, ஐ.ஏ.எஸ்ன்னு போனார்கள். ஜிம்னாஸ்டிக், சண்டை திறமைகளை வளர்த்துக் கொண்டால் யார் வேண்டுமானாலும் வரலாம். பிராமின்சில் இருந்து கண்ணன் என்று ஒரு பையன் இருக்கிறான். எனினும் சிறுபான்மையாகத்தான் இவர்கள் இருக்கின்றனர். முஸ்லீம்கள் சிலரும் உண்டு. பெண்கள் கிடையாது.

வினவு: பெண்கள் சண்டை நடிகர்களாக முன் வருவதில்லையா?

நித்தியானந்தன்: அப்படியெல்லாம் இல்லை. பெண்களுக்கு அதிகம் வாய்ப்பில்லை. தேவைப்பட்டா ஆண்களே அந்த வேடத்தை டூப் போட்டு நடித்து விடுவோம். அந்தக் காலத்தில் வந்த லேடி ஜேம்ஸ்பாண்ட் படங்களில் எல்லாம் அப்படித்தான். மார்பகங்களை மாத்திரம் வைத்து, ஸ்டிரெச் போட்டு பேண்டுடன் நடித்தால் வித்தியாசமாக தெரியாது. ஆங்கில படத்தில் கூட இதுதான் நிலைமை. அவர்களை விட ஆண்களுக்கு தான் தைரியம் ஜாஸ்தி.

வினவு: நீங்கள் சண்டைக் காட்சிகளில் நடிப்பதை உங்களது வீடுகளில் இருக்கும் பெண்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

நித்தியானந்தன்: எப்போதும் ஆபத்தில் இருப்பதால் பயத்துடன் தான் இருப்பார்கள். ஆனால் போக கூடாது என்றெல்லாம் தடுக்க மாட்டார்கள். இத்தனை நாள் இதை வைத்து தானே குடும்பம் நடத்தி இருக்கிறார்கள்.

வினவு: உங்கள் அப்பாவைப் பார்த்து நீங்கள் சண்டை போடுபவராக வந்தது போல உங்கள் மகனையும் இந்த துறைக்கு கொண்டு வருவீர்களா?

நித்தியானந்தன்: என் மகனும் சண்டைக்காரனாகத்தான் இருக்கிறான். ஐந்து வருடம் படம் பண்ணினான். இப்போது பி.எஸ்.சி விசுவல் கம்யூனிகேசன் படிக்க அனுப்பியிருக்கிறேன். அதில் கொஞ்சம் வாய்ப்பிருப்பதால் பார்க்கலாம் என்று. இல்லேன்னா சண்டைதான் வேலை.

வினவு: சண்டை நடிகர்கள் எல்லோரும் தங்களது பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்களா?

Jackie-Chans-Clock-Stuntநித்தியானந்தன்: எல்லோரும் டிகிரி படிக்க வைக்கிறார்கள். தினேஷ் மாஸ்டர் பசங்களையெல்லாம் இஞ்சினியரிங் படிக்க வைத்தார்.  அவரு பையன் தான் வேலையில்லா பட்டதாரி படத்தில் மாஸ்டர். அவன் படித்து முடித்து விட்டு, எளிதாக இருக்கும், ஜாலியாக இருக்கும், வெளிநாடு எல்லாம் போகலாம் என்பதால் சினிமா சண்டை வேலைக்கே வந்து விட்டான்.

வினவு: உங்க வருமானத்த பாத்தா ஜாலி மாதிரி தெரியலையே?

நித்தியானந்தன்: அப்படியில்லை. சில பேருக்குதான் வாய்ப்பு கிடைக்கும். சினிமாவையே எடுத்துக் கொண்டால் எல்லா நடிகர்களும் வெற்றி பெறுவதில்லையே? சிலருக்கு குடும்ப பொறுப்புகள் ஜாஸ்தியா இருக்கும். என்னையே எடுத்துக் கொண்டால் தங்கைக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டியிருந்தது, அம்மாவை காப்பாற்ற வேண்டியதாயிற்று. சில பேருக்கு அந்த கமிட்மெண்ட்ஸ் எல்லாம் இருக்காது.

வினவு: சில காட்சிகளில் தவறுதலாக நீங்கள் கதாநாயகர்களை அடித்து விட்டால் அதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்?

நித்தியானந்தன்: மன்னிப்பு கேட்போம். நம்ம மேல தப்பு இருந்தால் மாஸ்டர் திட்டுவார். அவங்க மேல தப்புண்ணா சமரசம் பண்ணி வைப்பார். இதுபோல நிறைய முறை நடந்துள்ளது.

வினவு: உங்களது அனுபவத்தில் காட்சிக்கு உகந்த முறையில் நன்றாக சண்டை போடும் கதாநாயகன் யார்?

நித்தியானந்தன்: – பிரபு சார், சரத் சார், அர்ஜூன் சார் எல்லோரும் நல்லா பண்ணுவாங்க. இருந்தாலும் ஒரு ஆக்சன், கிக் போன்றவற்றில் ஒரு லைவ்வான அனுபவம் பிரபு சாரிடம் தான் இருக்கும். காரணம் அவர் முறைப்படி குத்துச்சண்டை எல்லாம் கற்றுக்கொண்டு அதன் பிறகு தான் சினிமாவுக்கு வந்தார். அதனால் அவரது சண்டைக்காட்சிகள் பார்க்க அழகாக இருக்கும். முன்னாடியெல்லாம் இப்படி கற்றுக்கொண்டு வருவது பெரும்பாலும் கிடையாது. இப்போது வரும் நடிகர்கள் ஒரு வருடம் குத்துச்சண்டை, ஒரு வருடம் நடனம் என கற்றுக் கொண்டுதான் பிறகு நடிக்க வருகிறார்கள்.

ஜாக்கி சான் காயங்கள்
ஜாக்கி சான் முகத்தில் கண், காது , மூக்கு, உதடு,  தாடை அனைத்தும் எத்தனை தடவை உடைந்தன என்பதை சீன மொழியில் விளக்கும் வரைபடம்.

வினவு: ஒன்றுமே தெரியாமல் வரும் நடிகர்களை சண்டை காட்சியில் இயக்க நிறைய சிரமப்படுவீர்களே?

நித்தியானந்தன்: அவருக்கு ஏற்றது போல சின்னச் சின்ன காட்சிகளாக வைத்து எடுப்போம். நேரம் அதிகரிக்கும். வேறு வழி இல்லை. அவரால் ஒரு சின்ன குத்து விட முடியாதா. அதை வைத்து வைத்து கடைசியில் திறமையாக சண்டை போடுபவராக திரையில் பார்க்கையில் கொண்டு வந்து விடுவோம்.

வினவு: இரண்டு அடி, நான்கு அடி உயரத்திலிருந்து கூட கதாநாயகர்கள் குதிக்க மறுத்து அடம்பிடித்தால் என்ன செய்வீர்கள்?

நித்தியானந்தன்: முதலில் ஆபத்து இல்லை என மாஸ்டர் கதாநாயகர்களிடம் சொல்லுவார். அப்புறம் பெட் எல்லாம் போட்டு எடுக்க முயற்சி செய்வார். அதிலும் காலில் பிரச்சினை என்று எதாவது கதாநாயகன் சொல்லி மறுத்து விட்டால் வேறு வழியே இல்லை. டூப் போட்டு எடுத்து விட வேண்டியதுதான்.

வினவு: இப்படி உண்மையில் பயந்தாங்கொள்ளிகளாகவும், திரையில் வீரன் போலவும் கதாநாயகர்கள் தோன்றுவதற்கு யார் மூல காரணம்?

நித்தியானந்தன்: சண்டை போடுபவர்கள் மற்றும் மாஸ்டர்கள் தான் காரணம். ஒரு பயந்தாங்கொள்ளியை பெரிய மாஸ் ஹீரோவாக காட்டுவது அவர்கள்தான். ஒரு படத்தில் கூட இதைப் பற்றி ஒரு காட்சி வந்தது. உண்மையில் பயந்தாங்கொள்ளியாக இருப்பவர் படத்தில் மட்டும் மாட்டை அடக்குவார், தலையால் முட்டுவார், தீக்குள்ளே குதிப்பார்.

வினவு: சினிமாவின் பிற துறைகளில் தொழிலாளர்களுக்கு சம்பளம் சரியாக தருவதில்லை என்ற பிரச்சினை இருக்கிறது. உங்களுக்கு எப்படி?

நித்தியானந்தன்: அதெல்லாம் சரியாக கொடுத்து விடுவார்கள். அடுத்த படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் பணம் கொடுக்கப்பட்டாக வேண்டும் என்று விதி இருக்கிறது. வரவில்லை எனில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் யூனியனிலிருந்து புகார் கொடுப்போம். பெப்ஸியில் புகார் கொடுப்போம். பிறகு இரு தரப்பையும் கூப்பிட்டு பேசுவார்கள். முடியவில்லை என ஒரு மாத காலம் வரை அவகாசம் கேட்டார்கள் எனில் அட்ஜஸ்ட் பண்ணிப் போய்க் கொள்வோம். எப்படியானாலும் படத்தை வெளியிடுவதற்கு முன் பணத்தை வாங்கி விடுவோம்.

brucelee
புரூஸ் லீ

வினவு: சண்டை காட்சிகளில் எம்ஜிஆர் காலத்து கதாநாயகர்களுக்கும் இப்போதுள்ள கதாநாயகர்களுக்கும் என்ன வித்தியாசம்?

நித்தியானந்தன்: அப்போது சிலம்பம், ஜூடோ போன்ற சண்டைகள் இருந்தால் முறைப்படி கற்றிருக்க வேண்டும். தெரியாம பில்டப் கொடுக்க முடியாது. இப்போது சண்டையே தெரியவில்லை என்றாலும் சண்டை தெரிவது போல காட்ட முடியும். அந்தக் காலத்துல மெனக்கெட்டு அந்தக் கலைகளை கற்றுக்கொள்ள தேவை இருந்தது. இப்போது தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால் கதாநாயகன் கொஞ்சமா காலை தூக்கினால் கூட உயரத்தை உயர்த்தி காட்ட முடியும். துறைமுகங்களில் எப்படி வேலைகள் எல்லாம் தொழில்நுட்பத்தால் இப்போது எளிதாகியிருக்கிறதோ அது போலத்தான். முன்னர் தீயில் குதிப்பதென்றால் உண்மையிலேயே குதிப்பார்கள். அதையெல்லாம் இப்போது தொழில்நுட்பம் வந்து எளிதாக்கியிருக்கிறது.

வினவு: தீ சம்பந்தப்பட்ட காட்சிகளை  எடுப்பது பற்றி சொல்லுங்களேன்.

நித்தியானந்தன்: உடம்பெல்லாம் துணியை சுற்றிக்கொண்டு, தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் உடைகளை அதற்கு மேல் அணிந்து கொள்வோம். தலைக்கு, கண்களுக்கு என பாதுகாப்பு கருவிகள் இருக்கும். உடம்பு முழுக்க தீப்பிடிக்காமல் இருப்பதற்கான சொல்யூஷனை தடவிக் கொள்வோம். படம் எடுக்கையில் தீ மட்டும் தான் தெரியும், போட்டிருக்கும் உடைகளெல்லாம் தெரியாது. வெளியே வந்த உடன் கோணிப்பை, சீஸ் பயர் கொண்டு தீயை அணைத்து விடுவோம். முகங்களில் ஆங்காங்கு காயம், கொப்புளங்கள் ஏற்படலாம். தீயணைப்பு உடைகள் அளவில் சிறியனவாக இருப்பதால் ஒல்லியாக இருப்பவர்கள்தான் இதற்கு போக முடியும். இதில் நம்மிடம் நான்கைந்து பேர் வரை உள்ளனர். ஆபத்து என்பதால் எல்லோரும் இதற்கு முன்வர மாட்டார்கள். ஒரு தீக்காட்சி பண்ணினால் ஐந்தாயிரம் ரூபாய் வரை சம்பளம் இருக்கும்.

வினவு: எம்ஜிஆர் காலங்களில் சண்டை போடுபவர்கள் பக்கவாட்டில் கைகளை வீசி சண்டை போடுவதால் டைமிங் அதிகமாக இருக்கும். இப்போது ஜாக்கி ஷான் போன்றவர்களது சண்டை காட்சிகளில் நேரடியாக குத்து விடுவது போலவும், ஆக்ஷன் நேரம் குறைந்திருப்பதாக தெரிவது உண்மையா?

fire-1நித்தியானந்தன்: எல்லாமே சினிமா லென்சோட ஒளி சிதறடிப்புதான். மற்றபடி அனைவரது சண்டையும் ஒன்றுதான். இப்போது இது ட்ரெண்ட். அப்போது நடிகர்கள் கொஞ்சம் சத்தமாக பேசி நடிப்பார்கள். ஏன்னா அவங்க நாடகத்தில் இருந்து வந்தவர்கள். கடைசியில் உட்கார்ந்து கேட்பவனுக்கும் கேட்க வேண்டும் என்பதற்காக அப்படி பயிற்சி பெற்றவர்கள். தொழில்நுட்பம் வளர்ந்தப்புறம் அது தேவைப்படவில்லை இல்லையா. அது போல்தான் இதுவும்.

வினவு: சண்டை நடிகர்களிடம் நட்சத்திர நடிகர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்?

நித்தியானந்தன்: – எல்லோருமே அன்பாகவும், மதிப்பாகவும் தான் நடத்துவார்கள். ரஜினி சார், பிரபு சார், அர்ஜூன் சார், விஜயகாந்த் சார் என எல்லோருமே ஒவ்வொரு விதமாக நன்றாக நடத்துவார்கள். எல்லோருக்குமே சண்டை நடிகர்கள் என்றால் ஒரு மதிப்பு மரியாதை இருக்கும், நன்றாக பேசுவார்கள், ஒரு அடி பட்டால் வந்து என்ன ஏது என்று பார்ப்பார்கள். மலையாளத்தில் மோகன்லால், கன்னடத்தில் அம்ரீஷ், ராஜ்குமார் சார் என எல்லோருமே நன்றாகத்தான் நடத்துவார்கள்.

வினவு: இவர்கள் தனியாக உங்களுக்கு ஏதாவது பணம், பரிசு எனத் தருவார்களா?

நித்தியானந்தன்: சிலர் விருப்பப்பட்டு ஒரு சண்டைக் காட்சி முடிந்தால் நடிகர்கள் இளைப்பாற கொஞ்சம் பணம் கொடுப்பார்கள். பாக்யராஜ், சத்யராஜ் போன்றவர்கள் கட்டாயம் ஒரு சண்டைக் காட்சி முடிந்தவுடன் ரூ.200 தருவார்கள். பத்தாண்டுகளுக்கு முன்னர் ரஜினி சாரும் தருவார்.

வினவு: – மலையாளத்தில் இப்போது நடிகர்கள் சண்டையெல்லாம் கற்றுக்கொண்டு விட்டார்களா? யார் நன்றாக சண்டை போடுவார்கள்?

நித்தியானந்தன்: மோகன்லால் நன்றாக பண்ணுவார். இப்போது நிறைய இளைஞர்கள் வந்துள்ளார்கள். அவர்களில் பிரிதிவிராஜ் சார் நன்றாக பண்ணுவார்.

வினவு: சண்டைக் காட்சிகளில் புதிய ட்ரெண்டுகள், தொழில்நுட்பம் போன்றவற்றை ஹாலிவுட் திரைப்படங்களை பார்த்து தெரிந்து கொள்வீர்களா?

car-2நித்தியானந்தன்: ஆமாம். என்ன மாதிரியான காட்சிகள், எவ்வளவு தூரத்தை, காலத்தை வைத்து எடுத்துள்ளார்கள் என்பதை கவனித்துக் கொள்வோம். குண்டு வெடிக்க என்ன தொழில்நுட்பம் புதிதாக வந்துள்ளது என்பதெல்லாம் அவற்றைப் பார்த்துதான் தெரிந்து கொள்வோம். மற்றபடி நேரடியாக அவர்களுடன் எல்லாம் எனக்கு தொடர்பில்லை. சிலருக்கு இருக்க கூடும்

வினவு: நீங்கள் பார்த்த சண்டை நடிகர்களில் உலகிலேயே மிகச் சிறந்தவர் யார்?

நித்தியானந்தன்: ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் பெஸ்ட். புரூஸ் லி ஒரு பவர். ஜாக்கி ஷான் அதை கிமிக்சோடு சேர்த்து செய்தார். இப்போது டோனி ஜா வந்திருக்கிறார். ஒவ்வொருத்தரும் முன்னர் இருந்தவர்களைத் தாண்டி இன்னொருபடி மேலே போய்தான் பண்ணியிருக்கிறார்கள்.

வினவு: சண்டைக் காட்சிகளில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடிப்பவர்கள் ஹாங்காங், சீனர்கள் என்று சொல்லலாமா?

நித்தியானந்தன்: அப்படி சொல்ல முடியாது. ஹாலிவுட்டில்தான் நிறைய ரிஸ்க் எடுக்கிறார்கள். சீனர்கள் செய்வது எல்லாம் கிம்மிக்ஸ்தான். பாலத்தில் இருந்து குதிப்பது, விமானத்தில் இருந்து குதிப்பது, அருவியில் மேலிருந்து குதிப்பது போன்றவற்றையெல்லாம் அங்கு உண்மையிலேயே செய்கிறார்கள். கிராபிக்சில் எல்லாவற்றையும் கொண்டு வர மாட்டார்கள். இப்போது கூட ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தில் ஒருவன் அருவியில் இருந்து குதித்திருக்கிறான். ஏனெனில் அவன் ஏற்கெனவே அதற்கு பயிற்சி பெற்றவன். அதனால் எளிதில் பண்ணி விட்டான். என்றாலும் அதில் ரிஸ்க் அதிகம் இல்லையா?

வினவு: அதெல்லாம் இங்கு பண்ணுவதற்கு என்ன தடையாக இருக்கிறது?

நித்தியானந்தன்: பாதுகாப்பு ஏற்பாடுகள் கிடையாது. அவ்வளவு சம்பளமும் இங்கு தர முடியாது. ஹாலிவுட் வேறு, இது வேறு.

வினவு: தமிழில் சண்டை நடிகர்களைப் பற்றி இதுவரை படம் ஏதும் வந்துள்ளதா?

கார் ஜம்ப்
100 மீட்டர் தூரத்தை தாண்டி குதிக்கும் முயற்சி

நித்தியானந்தன்: சசிக்குமார் எடுத்த டிஷ்யூம் திரைப்படம். இதில் எங்களது பிரச்சினைகள், கஷ்டங்கள், ஆபத்துக்களைப் பற்றிப் பேசியிருந்தார். அதுபோக பம்மல் கே. சம்மந்தம் ஒரு காமெடி படமென்றாலும் ஒரு சண்டை மாஸ்டரைப் பற்றி எதார்த்தமாக எடுத்திருந்தார்கள்.

வினவு: சண்டை மாஸ்டர்கள் குணச்சித்திர நடிகராக மாறிப் போவது இப்போது அதிகரித்துள்ளதா?

நித்தியானந்தன்: குறைவுதான். தினேஷ், பொன்னம்பலம், மணவை சங்கர், நந்தா சரவணன், முத்துக்காளை, ராஜேந்திரன் என சிலர்தான் போயுள்ளனர். சிலர் டிவி சீரியல்களுக்கும் நடிக்கப் போயுள்ளனர். இப்போது யூனியனுக்கு பெரும்பாலும் யாரும் வருவதில்லை. செல்பேசி வந்து விட்டதால் அடுத்து என்ன வேலை, சம்பளம் எல்லாவற்றையும் அதிலேயே பேசி முடிவு செய்து விடுகின்றனர்.

வினவு: சண்டை நடிகர்களை ரவுடிகளும், சில அரசியல் கட்சிகளும் தங்களது நலனுக்காக பயன்படுத்திக் கொள்வதாக சொல்கிறார்களே. உதாரணம் அயோத்தி குப்பம் வீரமணி, கபிலன் போன்றவர்கள். அதுபற்றி உங்கள் கருத்தென்ன?

நித்தியானந்தன்: அதெல்லாம் உண்மை கிடையாது. உறுப்பினர்கள் யாராவது இப்படியான செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தால் உடனடியாக உறுப்பினர் அட்டையை ரத்து செய்து விடுவார்கள். வழக்கு ஏதாவது வந்தால் உடனடியாக நீக்க மாட்டார்கள். ஆனால் சம்பந்தப்பட்டவர் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தாக வேண்டும்.

பத்திரிகைக்காரர்கள் இதில் குழப்புகிறார்கள். சினிமாவில் வரும் துணை நடிகர்கள் வேறு, சண்டை போடுபவர்கள் வேறு, ரவுடியாக வருபவர்கள் வேறு. சண்டை போடுபவர்கள் எல்லோருமே உண்மையில் எந்த குற்ற வழக்கிலும் சம்பந்தப்பட்டிருக்க முடியாது. அப்படி சம்பந்தப்படும் பட்சத்தில் உறுப்பினர் அட்டை பறிமுதலாகும் என்பதால் பயந்து போய்தான் இருப்பார்கள். ரவுடிகளாக நடிப்பவர்கள் தனியாக இருக்கிறார்கள். அதில் இருப்பவர்கள் முடியெல்லாம் வளர்த்துக் கொண்டு தனியாக ஒரு ரவுடி போன்ற தோற்றத்தில் கம்பீரமாக இருப்பார்கள். அவர்கள் செய்யும் தவறுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. அவர்கள் தனி குரூப்.

வினவு: துணை நடிகர்கள் சங்கம் தங்களது சங்கத்தில் இல்லாதவர்களை நடிக்க வைத்தால் அதை எதிர்த்து போராடுகிறார்களே. அது போல நீங்கள் ஏன் எதிர்த்து போராடவில்லை?

நித்தியானந்தன்: அது படத்தின் இயக்குநரோட விருப்பம். அதில் எப்படி தலையிட முடியும்? அப்படி வந்தவர்களில் சிலருக்கு முன்னரோ, அதன் பின்னரோ ஒருவித குற்றப்பின்னணி இருக்கும். அப்படி இருப்பவர்கள் எங்களது சங்கத்தில் உறுப்பினராக முடியாது.

வினவு: சண்டை போடுபவர்களது சங்கத்திற்கு இது ஒரு கட்டிடம் தானா? எப்போது இதை கட்டினார்கள்?

நித்தியானந்தன்: இது ஒன்றுதான். முதலில் இது ஒரு குடிசையாக இருந்தது. 1968-ல் இக்கட்டிடம் அடிக்கல் நாட்டப்பட்டு எண்பதுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

வினவு: இப்போது வேலைகள் பிரிந்து மலையாளம், தெலுங்கு ஆகியவற்றுக்கு போய் விட்டதால் இங்கு வேலை குறைந்து விட்டது. அஜீத்தின் வீரம் படத்தில் கூட இங்கிருந்து போனவர்கள் திரும்ப வேண்டியதாகி பிரச்சினை ஆனது. இதனை எப்படி தீர்த்துக் கொள்கிறீர்கள்?

நித்தியானந்தன்: மேல ஐகர்ப் இருக்கு. அதுக்கு கீழே பெப்ஸி இருக்கிறது. அதற்கு கீழே சங்கங்கள் இருக்கின்றன. பிரச்சினை வந்தால் முதலில் ஐகர்ப்பில் புகார் செய்வோம். அது பெப்சிக்கு வரும். சம்பந்தப்பட்ட மாநில சங்கங்களை கூட்டிப் பேசி சமரசம் செய்து வைப்பார்கள்.

வினவு: ஆனால் பிற இடங்களில் வைத்திருப்பது போல தமிழ்நாட்டுக்கு தனியாக தமிழ் பெயரில் சங்கம் அமைக்க வேண்டும் என சிலர் சொல்கிறார்களே?

நித்தியானந்தன்: – அப்படி இயக்குநர்கள் சொல்கிறார்கள். அவர்கள் ஒரு மொழியில்தான் படம் பண்ணுகிறார்கள். நாங்கள் அப்படி கேட்கவில்லையே. நாங்கள் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, போஜ்புரி, பெங்காலி எல்லாம் பண்றோம். இந்திய அளவில் சண்டைக்காட்சிகள் பண்ணுகிறோம். நமக்கு எதுக்கு மொழி? சண்டையில் திறமை இருந்தால் எந்த மொழியில் வேண்டுமானாலும் படம் பண்ண முடியும்.

வினவு: கர்நாடாகா போன்ற மாநிலங்களில் இங்கிருப்பதைப் போல மாஸ்டர்கள் இப்போது வந்து விட்டார்களா?

நித்தியானந்தன்: இப்போது கொஞ்சம் வந்து விட்டார்கள். பெங்காலிலும், இந்தியிலும் கூட வந்து விட்டார்கள். முன்னாடி படம் எடுக்க வேண்டுமானால் ஒரு இயக்குநரிடம் குறைந்தபட்சம் பத்து வருசமாவது குப்பை கொட்ட வேண்டும். இப்போது டிஜிட்டல் கேமரா வந்து விட்டதால் பத்து பேரு பத்து இடத்தில் அவனவன் படம் எடுக்க ஆரம்பித்து விட்டான். முன்னாடி படத் தொகுப்பாளராகணும்னா பிலிம் ரோலை அடுக்கி ரோலை சுற்றி வைக்க வேண்டும். இப்போது செல்பேசியிலும், கணிணியிலும் படத்தொகுப்பை எளிதாக செய்ய கற்றுக்கொண்டு விடுகிறார்கள். அதே போல்தான் சண்டைப் பயிற்சியிலும். முன்னாடி ஒரு மாஸ்டரிடம் சில ஆண்டுகளாவது இருந்துதான் ஆளாக முடியும். இப்போது சில ஹாலிவுட் படங்களைப் பார்த்தே ஆளாகி விடுகிறார்கள். இது ஒரு புதுமையான அறிவு வளர்ச்சிதான். விசயம், தொழில்நுட்பம் இருப்பதால் எளிதாக எல்லோரும் கற்றுக்கொள்ள முடிகிறது.

வினவு: நீங்கள் எடுத்த 30 படங்களில் நன்றாக ஓடியது எந்தப் படம்?

திருத்தணி திரைப்பட விழாவில் மாஸ்டர் நித்தியானந்தன்
திருத்தணி திரைப்பட விழாவில் மாஸ்டர் நித்தியானந்தன்.

நித்தியானந்தன்: நன்றாக ஓடியது என்று சொல்ல மாட்டேன். ஆனால் சண்டைக் காட்சிகள் பலரும் பாராட்டும்படி பேரரசு இயக்கத்தில் பரத் நடித்த திருத்தணி படம் பேசப்பட்டது. நான் அவன் இல்லை பார்ட் 2, மலையாளத்தில் லக்கிஜா போன்ற படங்களெல்லாம் பண்ணியிருந்தாலும் பெரிதாக இவையெல்லாம் ஓடவில்லை. ஆனால் என்னோட வேலை அதில் சுத்தமாக இருந்தது.

வினவு: மாஸ்டர், உங்களது பெயர் திரைப்படங்களில் எப்படி வரும்?

நித்தியானந்தன்: நித்தியானந்தன்தான் பேரு. டைட்டிலில் தீப்பொறி நித்யா என்றிருக்கும்.

வினவு: நீங்கள் எப்போது ஆரம்பித்து எப்போது ஜிம்னாஸ்டிக் பயிற்சியை விட்டீர்கள்? ஏன் ஒரு காலகட்டத்துக்கு பிறகு சண்டைப் பயிற்சியாளர்களுக்கும், மாஸ்டர்களுக்கும் தொப்பையுடன் உடம்பு போட்டு விடுகிறது?

நித்தியானந்தன்: நான் 1978-ல் பள்ளிப்படிப்பு முடித்த பிறகு ஆரம்பித்து பத்து பதினைந்து ஆண்டுகள் வரை பயிற்சி செய்தேன். பெரியளவில் இல்லாவிடிலும் சம்மர் ஷாட், சில தாவிக்குதித்தல்கள் மட்டும் பண்ணினேன். முதலில் ஒல்லியாக இருந்தாலும் வயது ஆக ஆக உடம்பு போட்டு விடுகிறது. திருமணம், சாப்பாடு போன்றவையும் காரணங்கள்தான் சார்.

வினவு: சினிமா துறையிலேயே மற்றவர்கள் உங்களது சங்கத்தில் இருக்கும் ஒற்றுமையை ஒரு பொறாமையோடு பார்க்கிறார்கள்? இந்த ஒற்றுமைக்கு காரணம் என்ன?

நித்தியானந்தன்: இது மற்ற வெளியாள் யாரும் நினைத்தாலும் பண்ண முடியாத கலை. மற்றவற்றையெல்லாம் அப்படி சொல்ல முடியாது. ஏனெனில் இது உயிரை பணயம் வைப்பதாக இருப்பதால் அதைப் பார்த்து மிரளும் தயாரிப்பாளர் ‘ஏய் முதல்ல அவனுக்கு காசக் கொடுய்யா’ என்று சொல்வான். ஏனெனில் எந்த தயாரிப்பாளரும் சண்டை பயிற்சியாளரின் வயிற்றில் அடிக்க மாட்டான். தாமதமாக வேண்டுமானால் பணம் கிடைக்கலாமே தவிர அப்படியெல்லாம் தராமல் ஒரேயடியாக போய்விட மாட்டார்கள்.

வினவு: தமிழ் சினிமா சண்டைப்பயிற்சி வரலாற்றில் மிகவும் பிரபலமான, முக்கியமான, மிகவும் ரிஸ்க் எடுத்து சண்டை போடுபவர் மற்றும் மாஸ்டர் யார்?

நித்தியானந்தன்: மாஸ்டர் ராஜசேகர், (பிட்சா, இவன் வேற மாதிரி என்ற படங்களெல்லாம் பண்ணியவர்) சமீபத்தில் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் மிகவும் ரிஸ்க் எடுத்து மூன்று கண்ணாடிகளை உடைத்தார். அடுத்து மாஸ்டர் குமார். இவர் எகிறி குதிப்பது, தீயில் குதிப்பது எல்லாம் பயப்படாமல் செய்யக் கூடியவர். அந்தக் காலத்தில் சாம்பு என்று ஒரு மாஸ்டர் இருந்தார். முஸ்தபா என்று ஒருவர். நிறைய பேர் இறந்து விட்டார்கள். சிலர் இருக்கிறார்கள். சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் இப்போதும் இருக்கிறார். அவர் நிறைய ஆபத்தான காட்சிகளெல்லாம் பண்ணியிருக்கிறார். படம் எடுக்கையில் பாதி உடம்பு தீயில் பற்றிக்கொள்ளும் விதமாக எல்லாம் பண்ணியிருக்கிறார்.

வினவு: இப்படி ஆபத்தான காட்சிகளில் பயம் தெரியாமல் இருப்பதற்காக பான்பராக் போடுவது, மது சிறிது அருந்திக்கொள்வது, வேறு போதை எல்லாம் செய்வீர்களா?

நித்தியானந்தன்: கிடையாது. பயமெல்லாம் ‘ஸ்டார்ட் கேமரா’ சொன்ன பிறகு சுத்தமாக இருக்காது. கயிற்றின் மேல் நடப்பவனைப் பார்த்தால் நாம்தான் பயப்படுவோம். அவன் அநாயசமாக நடப்பான். எல்லாமுமே பயிற்சிதான். கீழே இருந்து பார்ப்பவனுக்கு இருக்கும் பயம் அதை செய்பவனுக்கு இருக்காது. நமக்கே திரும்ப வந்து திரையில் அல்லது வீட்டில் உட்கார்ந்து பார்க்கையில் இதை நாமா பண்ணினோம் என்று ஆச்சரியமாக இருக்கும்.

வினவு: உங்கள் சங்க கட்டிடத்திற்கு ஏன் விட்டலாச்சார்யா பெயர் வைத்துள்ளீர்கள்? அதிகமான இடங்களில் எம்ஜிஆர் படம் வைத்துள்ளீர்கள்?

நித்தியானந்தன்: சங்கம் வைப்பதற்கு விட்டலாச்சார்யா தான் மூல காரணம். அவர்தான் சங்கம் வைக்க தூண்டுதலாக இருந்தார். அதை வைத்து தான் சம்பளத்தை பேசி முடிவு பண்ண முடியும் என்று எங்களுக்கு வழிகாட்டினார். எம்.ஜி.ஆர் படங்களில் 85% சண்டைக்காட்சிகள் இருக்கும் என்பதால் அதிகமாக எங்களுக்கு வேலை கொடுத்திருக்கிறார். அதனால் தான் வைத்திருக்கிறோம்.

வினவு: தற்போது சண்டை யூனியனில் சேருவதற்கு எவ்வளவு கட்டணம்?

நித்தியானந்தன்: இப்போது மூணேகால் லட்சம்  கட்டினால்தான் சேர முடியும். அதுவும் நிறைய சோதனை, பயிற்சிகள்ள செலக்ட் ஆனாத்தான் கொடுப்பாங்க. ஏதாவது மாஸ்டர் அல்லது உறுப்பினரோட சிபாரிசும் வேண்டும். இருக்கிறவங்களுக்கே வேல அதிகம் இல்லேங்கிறதால இந்த கட்டணத்த அதிகரிச்சிருக்கிறோம். மத்தவங்களும் விரும்பி வருவதில்லை.

வினவு: வெளிநாடு படப்பிடிப்புக்கு உங்களை கூட்டிக்கொண்டு போனால் அந்த நாட்டு சம்பளம், இன்சூரன்சு எல்லாம் செய்து தருவார்களா?

நித்தியானந்தன்: இங்கேயே பேசி முடிவு செய்து கொள்வோம். சம்பளம் பெரும்பாலும் இங்கு 3 நாட்களுக்கு என்று இருப்பதை அங்கு போனால் ஒரு நாளைக்கு என்று பேசி முடிவு செய்து கொண்டுதான் கிளம்புவோம். முறையாக அங்கிருக்கும் கம்பெனிகளுக்கு சொல்லி அனுமதி பெற்று விட்டுதான் படப்பிடிப்பு துவங்கும்.

வினவு: நமது மாஸ்டர்கள் அங்குள்ள சண்டை நடிகர்களை பயன்படுத்துவது உண்டா?

நித்தியானந்தன்: அதுவும் நடக்கத்தான் செய்கிறது. உதாரணமாக பார்கோ, சுவரில் எகிறி எகிறி குதித்து அடிப்பது போன்றவற்றில் அவர்கள் நம்மை விட நன்கு பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். அதுபோன்ற காட்சிகளுக்கு அந்த துறையில் சிறப்பாக பயிற்சி பெற்ற வெளிநாட்டவர்களைப் பயன்படுத்தி நம்மவர்கள் இயக்குகிறார்கள்.

வினவு: – உங்களுக்கு கதாநாயகன் ஆக வேண்டும் என்ற ஆசை எல்லாம் வரவில்லையா? ஏன்?

நித்தியானந்தன்: எனக்கு விருப்பம் எல்லாம் இல்லை. அதுல டயலாக் பேசணும், பாடி லேங்குவேஜ் வேணும். அதுக்கெல்லாம் ஒரு இது வேணும். கஷ்டம்கிறதுக்காக எல்லாம் முயற்சி பண்ணாம இருக்கவில்லை. இதுவே போதும்ணு இருந்துட்டேன்.

வினவு: அப்படி ஒருவேளை இதெல்லாம் கற்றுக்கொண்டு போயிருந்தால் வாய்ப்பு கிடைத்திருக்குமா?

நித்தியானந்தன்: கிடைத்திருக்கும். பத்தில் ஒன்றாவது வெற்றி பெறத்தானே செய்யும். ஆனால் நான் முயற்சியே செய்யவில்லை. அப்படியே சின்ன சின்ன வேடமாக கிடைத்ததால் பெரிதாக எதையும் நினைக்கவில்லை.

stuntman-dies-in-the-expendables-2-shooing
அமெரிக்க மேலாண்மைக்காக படமெடுக்கும் சில்வஸ்டர் ஸ்டாலெனுக்காக பல்கேரியாவில் நடந்த தி எக்ஸ்பண்டபிள் – 2 திரைப்பட படப்பிடிப்பில் ஒரு சண்டை நடிகர் உயிரிழந்தார், இன்னொருவர் காயமடைந்தார்.

___________________________________________

நேர்காணல்: வினவு செய்தியாளர்கள்