Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 711

மாவட்டக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட குரோம்பேட்டை மாணவர்கள்

2

மாவட்ட கல்வி அலுவலகம், செங்கல்பட்டு – குரோம்பேட்டை மாணவர்கள் RSYF தலைமையில் முற்றுகை.
அடிப்படை வசதிகள் கோரி மனு

மாணவர்கள் தனது பேராற்றலின் ஒரு சிறு அளவினை காட்டினாலே அது நினைத்ததை சாதிக்கும் என்பதை நிரூபிக்கும் அனுபவத்தைக் கொண்டது இந்த மனு கொடுக்கும் போராட்டம் .

குரோம்பேட்டை பள்ளியைச் சேர்ந்த 150 மாணவர்கள், அவர்களுக்கு நாங்களும் துணை நிற்போம் என்று பல்லாவரம், கோடம்பாக்கம், தாம்பரம், மதுரவாயல் என 50 மாணவர்கள் என ஏறக்குறைய 200 மாணவர்கள் அணி திரண்டு தங்கள் வர்க்க உணர்வினை வெளிப்படுத்திய நிகழ்வு.

குரோம்பேட்டை பள்ளி அடிப்படை வசதிகளுக்காக கடந்த 3 மாதங்கள் தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில் நாம் (RSYF) போராடி வருகிறோம்.

3 மாதங்களில் குரோம்பேட்டை பகுதியைச் சுற்றியுள்ள 5 பகுதிகளில் தொடர்ச்சியான பிரச்சாரம், சுவரொட்டி, கையெழுத்து இயக்கம், என வேலைகள் நடந்தன. அதேபோல், மாணவர்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம், பள்ளியின் பிரச்சினைகளில் உடனுக்குடன் தலையிடுவது, பிரச்சாரம், சுவரொட்டி என தொடர்ச்சியாக வேலைகள் நடந்தன.

முதலில் தலைமையாசிரியரிடம் மனு கொடுத்ததன் அடிப்படையில், நமது நெருக்குதல் மற்றும் அவரது சொந்த முயற்சியின் காரணமாக முதல் கட்டமாக 4 கழிவறைகள் ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்கு அடுத்த கட்டமாகவே இருக்கின்ற கழிவறைகளை பராமரிக்க பணியாள் நியமனம் செய்வது, கூடுதலாக கழிப்பறைகள் கட்டுவது, குடிநீர் குழாய்கள் அமைப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்றக் கோரி இந்த மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினோம்.

நம்பிக்கை பெற்ற அம்மாணவர்கள் தன்னெழுச்சியாக அணிதிரண்ட நிகழ்வு இது. சில மாணவர்கள் தங்கள் வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களையும் கொண்டு வந்து நிறுத்தி விட்டனர். மாணவர்கள் அலைஅலையாக வருவதைப் பார்த்த மக்கள் அவர்களை வியப்புடன் பார்த்தனர். குரோம்பேட்டை ரயில்நிலையத்தில் மாணவர்களே மக்களுக்கு பிரசுரங்களை விநியோகித்து வேலைகள் செய்தனர்.

செங்கல்பட்டில் இறங்கி நீண்ட பேரணியாக சென்றோம். மாணவர்கள் இவ்வளவு பேர் வருவதை பார்த்த அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். மக்களிடம் நமது நோக்கத்தைப் புரியவைப்பதற்காக நாம் அவர்களிடம் பிரசுரம் கொடுத்தோம்.

கல்வி அலுவலகத்தை நமது படை நெருங்குவதற்கு முன்பே போலீசு தகவலறிந்து ‘’சட்டம் ஒழுங்கை’’ நிலைநாட்ட வந்தது. மாணவர்கள் தம் சக்தியை உணர்ந்து கொள்ள தொடங்கியுள்ள இத்தருணத்தில், அதுவும் RSYF தலைமையில் அவர்கள் அணிதிரள்வது என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் தானே.

நம்மிடம் வந்து, “இவ்வளவு மாணவர்களை கூட்டி வந்திருக்க கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகி விடும்” என்று சப் – இன்ஸ்பெக்டர் பேசினார்.

“3300 பேர் படிக்கும் பள்ளியில் 4 கழிவறைகள்தான் நீண்ட நாட்களாக உள்ளது. இதனை சரிசெய்து கொடுக்காததால் தான் நாங்கள் வந்துள்ளோம். இதில் எங்கே சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும். அவர்கள் தங்கள் பிரச்சினைகளை சொல்வதற்காகத்தான் இங்கே வந்துள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினையெல்லாம் வராது” என அவர்களுக்கு பதில் கொடுத்தோம்.

தகவலறிந்து பத்திரிக்கையாளர்கள், டி.வி. நிருபர்கள் என வந்து சேர்ந்தனர்.

DEO இல்லாததால் அதற்கு கீழ்நிலையில் உள்ள அதிகாரியிடம் மாணவர் தலைவர்களோடு சென்று பேசினோம். நாம் நமது கோரிக்கைகளை கூறினோம். மாணவர் படை திரண்டு வந்திருப்பதைக் கண்ட அவர், உடனே கலெக்டர், DEO, CEO என எல்லோருக்கும் தொடர்பு கொண்டு தகவல் சொன்னார்.

இந்த சூழலில் மாணவர்கள் நமது கோரிக்கை முழக்கங்களை அப்பகுதி அதிரும் வகையில் பு.மா.இ.மு. பேனர், கொடி, சகிதமாக, எழுப்பிக் கொண்டிருந்தனர்.

நமது கோரிக்கைகளை கேட்ட அதிகாரி, ஒரு வாரத்திற்குள் பள்ளிக்கு வந்து ஆய்வு செய்து, அரையாண்டு விடுமுறைக்குள் வேலைகளை தொடங்கி விடுவதாக வாக்குறுதி அளித்தார்.

இதனை மாணவர்கள் மத்தியில் அவரே பேச வேண்டும் என்று கூறினோம்.

மாணவர்கள் மத்தியில் வந்து அவர் இந்த விசயத்தை கூறினார். மேலும் நீங்கள் சென்று படியுங்கள். நாங்கள் செய்து கொடுக்க ஏற்பாடு செய்கிறோம் என அறிவுரை கூறினார்.

அதற்குப் பின் பேசிய பு.மா.இ.மு. மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் “அரசு முதலிலேயே செய்து கொடுத்திருந்தால் நாங்கள் வரவேண்டிய அவசியமில்லை. செய்யாததால் தான் நாம் வந்துள்ளோம்” என்று நிலைமையை உணர்த்தினார்.

பத்திரிக்கையாளர்களுக்கு தோழர்கள் பேட்டியளித்தனர்.

“எங்கள் பள்ளியின் நிலைமையை நாங்களே கூறுகிறோம்” என 4 மாணவர்களும் பேட்டியளித்தனர். பள்ளியில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளை எதார்த்தமாக கூறினர். இதுவும் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டியது. அதாவது, நமது கோரிக்கையை நாம் அணிதிரண்டு போராடினால் மக்களிடம் பரவலாக கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கைதான் அது.

இந்த நிகழ்வு மாணவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையினையும், தாங்கள் யார் என்பதை அறிவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் இதனை உணர்ந்துள்ளனர்.

பக்கத்தில் உள்ள ITI-யில் படிக்கும் மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஒரு மாணவர் தங்கள் ITI யில் உள்ள பிரச்சினைகளிலும் தலையிடுவீர்களா? என்று கேட்டார்.

பல்லாவரம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் நமது பள்ளியின் அடிப்படை பிரச்சினைகளுக்காகவும் நாம் உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று வெளிப்படுத்தியுள்ளனர்.

மறுபடியும் பேரணியாக செங்கல்பட்டு ரயில் நிலையத்தை நோக்கி புறப்பட்டோம். அமைப்பின் பேனர், கொடியோடு 200 மாணவர்களும் உணர்வோடு பேரணியில் நடந்து வந்தனர்.

இதனை நாம் எல்லா அரசுப்பள்ளி மாணவர்களின் மனநிலையாக மாற்றியமைப்பதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை.

மாற்றியமைப்போம்!

மனு

நோட்டிஸ்

படத் தொகுப்பு – 1

படத் தொகுப்பு – 2

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

மேட்டுக்குடி இந்தியாவின் பெண் வெறுப்பு !

2

இந்தியாவின் கலாச்சார உயரடுக்கின் பெண் வெறுப்பு
(கவிதா பானோட் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

சென்ற வாரம் இந்தியாவில் ஒரு மிகப்பெரிய விஷயம் நடந்தேறி இருக்கிறது. அதிகாரமும்  செல்வாக்கும் மிக்க தனது மேலதிகாரியை எதிர்த்துக் குரல் எழுப்பிய ஒரு பெண்ணின் துணிச்சலின் விளைவாக அதிகம் படித்த நவநாகரிகமான, நகர மயமாகிய, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் கலாசாரத்தைத் தழுவிய வர்க்கம் முதன் முறையாக, தன்னைத் தானே உற்று நோக்கிக் கொள்ளும்படி, வெகுகாலமாக, தான் அடைகாத்து வரும் ஆணாதிக்கத்தையும் பெண்கள் மீதான காழ்ப்பையும் எதிர் கொள்ள நேரிட்டிருக்கிறது.

பெண்பல ஆண்டுகளாக இதே வர்க்கம் தான், தங்களை விட இளைத்த வர்க்கங்களிடையே நிலவும் ஆணாதிக்க மனப்பான்மையை – காவல் துறையினர், மத அடிப்படைவாதிகள், பண்படாத அரசியல்வாதிகள், உழைக்கும் வர்க்க புலம் பெயர் தொழிலாளி, அல்லது தெருவில் பெண்களிடம் வம்பிழுக்கும் காலிகள் – இவர்களையெல்லாம் ஓயாது கண்டித்தும், ஏளனம் செய்தும், தோலுரித்துக் காட்டியும் வந்துள்ளது. ஆனால், இந்த உயர்ந்த வர்க்கத்தினரைச் சேர்ந்த ஆண்கள் ஒரு போதும் பெண்கள் மீதான தங்களது கண்ணோட்டத்தைச் சுயபரிசீலனை செய்து கொண்டதில்லை. போலவே இவ்வர்க்கத்தின் பெண்களும் இவர்களின் ஆணாதிக்கப் பார்வையைப் பல வழிகளில் அனுமதித்து வருவதோடல்லாமல், கண்டும் காணாமலும் செல்வதுமான தங்கள் குற்றத்தை உணர்ந்ததுமில்லை.

இந்தச் சம்பவமோ அதற்கு ஷோமா சௌத்ரியின் எதிர் வினையோ எனக்குச் சிறிதும் வியப்பளிக்கவில்லை. நான் பார்த்த வரை மிகவும் முற்போக்கான, பரந்த நோக்குள்ளதாகக் கருதப்படும் ஆங்கில ஊடகங்களிலும், கலை இலக்கிய உலகிலும் பெண்களைப் பற்றி மிகவும் பிரச்னைக்குரிய பார்வைகள் ஆழமாகப் பதிந்திருப்பதையும், அது குறித்து எந்த ஆணோ பெண்ணோ கேள்வி எழுப்பாமலிருப்பதையும் எப்போதோ கண்டு கொண்டேன்.

சல்மான் ருஷ்டி முதல் இந்தத் தலைமுறையைச் சார்ந்த சமித் பாசு, பலாஷ் கிருஷ்ண மெஹ்ரோத்ரா வரை ஆண் எழுத்தாளர்களின் பலரது படைப்பில் இதைக் காணலாம்.   அவர்களது பெண் பாத்திரங்கள் (நாயகிகள்) பெரும்பாலும் பக்குவப்படாத கற்பனை மிஞ்சிய உருவங்களே ஒழிய முப்பரிமாணமும் கொண்ட பெண்களாக இருப்பதில்லை. ஐம்பதுகளில் யஷ்பால் எழுத்தில் உருவான இந்திக் கதைகளின் நாயகிகளைப் போன்ற கரிசனம், புரிதல், மற்றும் செறிவுடன் தங்கள் பெண் பாத்திரங்களை உருவாக்கும் இந்திய அல்லது வெளி நாட்டு இந்திய ஆங்கில ஆண் எழுத்தாளர்கள் யாரையும் என்னால் காண முடியவில்லை.

ஆணாதிக்கம்பெண்கள் மீதான இவர்களது காழ்ப்பு அவர்களது முகநூல் சுவர்களில், உடலுறவு பற்றிய அவர்களது நிலைச் செய்திகளில், அழகிய, பெருமைக்குரியவர்களாகக் கருதப்படும் பெண்களுடனான அவர்களது புகைப்படங்களில் தெறிக்கிறது. அவர்கள் கலந்து கொள்ளும் இலக்கியக் கூட்டங்களில், விருந்துகளில், உரையாடல்களில், அலுவலகங்களில் எல்லாம் அது வெளிப்படுகிறது. ’கெட்ட பசங்க’ என்ற தலைப்பிட்டு நடத்தப்படும் புத்தக வாசிப்பு நிகழ்வுகளில் கூட. பெருமதிப்பிற்குரிய எழுத்தாளரும் ஆசிரியருமான ஒருவர் தனது மாணவியை பாலியல் ரீதியாக கவர முயற்சித்ததும், புகழ் வாய்ந்த பத்திரிகையாளர் ஒருவர் உடன் வேலை பார்க்கும் பெண்ணையும் பாலியல் ரீதியாகச் சீண்டியதும் இங்கே சகஜமாக நடந்துள்ளது. ஆண்கள் இதழான மேக்ஸிம் இந்தியாவுக்காக எழுதும் ஆண் எழுத்தாளர்கள் பலர் செல்வாக்குள்ள அழகுப் பெண்களுடன்  புகைப்படங்கள் எடுத்து கொள்ளும் அளவிற்கு தமக்கு தொடர்பு இருப்பது பற்றிப் பீற்றிக் கொள்பவர்கள் தாம். இவர்கள் தாம் (எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வலைப்பூ எழுத்தாளர்கள்) ஆபாசக் கார்ட்டூன் மீது அரசு கொண்டு வந்த தடையை எதிர்த்துப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய வீரர்கள்.

எப்படி இந்த அறிவு ஜீவி ஆண்கள் பெண்களை வெறும் கண்ணுக்கழகான, கைக்கடக்கமான காமப் பொருட்களாகப் பார்க்கிறார்கள் என்பதற்கு இதைப் போல் கணக்கிலடங்கா எடுத்துக்காட்டுக்களை என்னால் தரமுடியும். ஆம், அப்படிப்பட்ட பார்வைக்கும், அப்பொருட்களை எங்கு எப்போது விரும்பினாலும் நுகரலாம் என்ற மனப்பான்மைக்கும் வெகு தூரமில்லை; வேகமான சரிவு பாதைதான்.

இந்தச் சூழலில், இப்படிப்பட்ட ஆண்களுடன் வேலை செய்தும், வாழ்ந்தும் வருகிற நிலையில் பெண்கள் தங்கள் இயல்புக்காகவே நேசிக்கப்படுவோம் என்று எதிர்பார்க்க முடியாது. தாங்கள் செய்யும் வேலைக்காகவே மதிக்கப்படுவோம் என்றும் கருத முடியாது.

உண்மை என்னவென்றால் முன்னேறியாக வேண்டுமென்றால் மிதமான ஆணாதிக்கப் பார்வையைக் கண்டும் காணாது இருக்க வேண்டும். தங்கள் மூளைக்குள் ஒலிக்கும் அந்த முரணான குரலை அடக்கி விட்டு, தங்கள் அறிவுக்கும் திறமைக்குமான சலுகைகள் தாம் அளிக்கப்படுவதாக நம்பிக் கொள்ள வேண்டும். ஆனால், மீண்டும் மீண்டும், பெண்கள் உடல் சார்ந்த பண்டங்களாக மட்டுமே குறுக்கப் படுகின்றனர். இங்கே அப்படிப் பாதிக்கப்பட்டவரில் ஒருவர் தான் தெகல்காவினால் பணிக்கு அமர்த்தப்பட்ட அந்தப் பெண் ஊழியர். இருப்பினும், தெகல்காவுடன் நேரடியாக தொடர்பில்லாத திங்க் என்ற நிறுவனத்தால்  பெரிய இடத்து விருந்தினர்களான டி நீரோ போன்ற ஆட்களைக் கவனித்துக் கொள்ள, விழாவைத் தொகுத்தளிக்க உதவும் அழகிய முகமாக அவர் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்.

இருவரும் மனமொத்து நிகழ்ந்ததாக அந்தச் சம்பவத்தைத் திருத்தி எழுத முனைந்த தேஜ்பாலின் தனிப்பட்ட இமெயிலுக்குப் பதிலிறுக்கும் விதமாக அந்தப் பெண் எழுதுகிறார் – “புயலும், இடிமேகங்களும் அல்ல, நான் எந்த அலுவலுக்காக அன்று உங்களைச் சந்தித்தேன் என்பது உங்கள் நினைவில் இருந்திருக்கக் கூடாதா என்று ஆதங்கப்படுகிறேன்…நமது உரையாடல் ‘விளையாட்டாகவோ’ சரசம் நிறைந்ததாகவோ இருக்கவில்லை; நீங்கள் ‘காமம்’ குறித்தும் ‘விருப்பம்’ குறித்தும் பேசிக் கொண்டிருந்தீர்கள். ஏனென்றால் எப்போதுமே என்னிடம் அப்படிப்பட்ட பேச்சைப் பேசவே விரும்புவீர்கள்; ஒரு போதும் என் வேலையைப் பற்றி அல்ல.”

ஒவ்வொரு பெண் ஊழியரும் இதைச் சந்திக்கிறார்.

பெண்நான் ஓராண்டு வெகு உற்சாகத்துடனும் கடமையுணர்ச்சியுடனும் ஓஷியன்ஸ் இலக்கிய நிறுவனத்தில் உதவியாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கு என் பணி முடிவுக்கு வந்த விதம் இவ்வாறானது. பிரபல நடிகரொருவர் பங்கேற்கவிருந்த அலுவலக விழாவொன்றில் மேடை மீது ஒரு விளம்பர அட்டையைத் தாங்கியவாறே ஒய்யார வலம் வருவதற்கு என்னையும் உள்ளிட்ட ஒன்பது பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். எங்கள் விருப்பம் குறித்துக் கேட்கப்படக் கூட இல்லை, என்னவோ அது எங்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு பெருமை போல அதை செய்யும்படி உத்தரவிடப்பட்டது. புதிதாகச் சேர்ந்திருந்த முன்னாள் மாடல் ஒருவர் எங்களுக்கு எப்படி நடப்பது, என்ன உடுத்துவது என்றெல்லாம் கற்றுத் தருவார் என்றும் சொல்லப்பட்டது. நானும் கலை வரலாற்று நிபுணர்களாகப் பணிபுரிந்து கொண்டிருந்த இன்னும் இரு பெண்களும் இதற்கு மறுத்தோம். ’நாங்கள் இதைச் செய்யமாட்டோம், இதற்காக இங்கே நாங்கள் பணிக்கமர்த்தப்படவில்லை’ என்று சுட்டிக் காட்டினோம். சினமுற்ற எங்கள் முதலாளி ’சொன்னபடி செய்யாவிட்டால் ராஜினாமா செய்துவிடுங்கள்’ என்று சீறினார். நான் ராஜினாமா செய்தேன் – எனக்கு இயன்ற அந்த வசதி என்னுடன் சேர்ந்து போராடிய அவ்விரு பெண்களுக்கு உட்பட பலருக்கும் இருக்காது.

கலை, ஊடகம் மற்றும் பதிப்பகத் துறை நிறுவனங்கள் பல ஆண்டுகளாக தேஜ்பால் மற்றும் என் முன்னாள் முதலாளி போன்ற சக்தி வாய்ந்த ஆண்களின் தலைமையில் செயல்பட்டு வருகின்றன. அசைக்கமுடியாத ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த கடவுளர்களின் தலைமையில் அவை சமய மரபுகள் போல் விளங்கி வருகின்றன. ஊழியர்களோ, குறிப்பாகப் பெண்கள் அவர்களைச் சுற்றி பக்தைகள் போல் வலம் வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகப் பெண்கள் தலைமைப் பொறுப்புகளை ஏற்கத் தொடங்கி இருந்தாலும் அவர்கள் ஆண்கள் சென்ற அதே பாதையைத் தான் பின்பற்றுகின்றனர்; அவர்கள் நடத்தியது போலவே, அதே சக்தியை உள்வாங்கிக் கொண்டு; தங்கள் நிறுவனத்தின் ஏனைய பெண்களை அதே போல் எந்த மரியாதையும் இன்றி நடத்துகின்றனர்.

நான் ராஜினாமா செயததைக் கேட்டு எனது உடனடி மேலதிகாரியான பெண்மணி ஒன்றுமில்லாததை நான் காரணமில்லாமல் பெரிதுபடுத்தி விட்டதாக மிகவும் கோபமடைந்தார். தனது பதினைந்து ஆண்டு பத்திரிகை மற்றும் பதிப்பகத் துறை அனுபவத்தில் இது போல் என்னவெல்லாமோ செய்து தான் முன்னிலைக்கு வரவேண்டி இருந்ததாகக் குறிப்பிட்டார். மேலும் இச்சம்பவத்தை நான் பகிர்ந்து கொண்ட வேறொரு பெண் பத்திரிகை ஆசிரியரோ அலட்சியமாகத் தோளைக் குலுக்கினார். ’அழகான இளம் பெண்களை’ நிறுவனங்கள் இவ்வாறு பயன்படுத்திக் கொள்வது எங்கேயும் நடப்பது தான். அவ்வளவு ஏன், தான் கூட தனது அழகைப் பயன்படுத்தித் தான் பணியாற்றும் இடங்களில் சலுகைகள் பெறத் தயங்கியதே இல்லை என்றும், முக்கியமான கூட்டங்களுக்குச் செல்லும் போது அழகாக உடையணிந்து கொண்டு போய் நினைத்ததைச் சாதித்ததுண்டு என்றும் கூறினார். இதே ஆசிரியர் தான் சமீப காலமாக இந்தியாவுக்கு மேற்கத்திய மாடல்கள், கவர்ச்சி நடிகைகள் எழுதிய டயட் மற்றும் உடற்பயிற்சி புத்தகங்கள், மில்ஸ் அண்ட் பூன் காதல் புத்தகங்களின் இந்தியப் பதிப்புகள், மற்றும் சிக் லிட் என்று சொல்லப்படும் இளம் பெண்களைக் குறிவைக்கும் காதல் கதைகள் போன்றவற்றை இந்தியாவுக்குக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். இங்கிருக்கும் சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்வதாகச் சொன்னாலும், மேற்கத்திய முதலாளித்துவ மாதிரியைக் கொண்டு இந்தச் சந்தையை உருவாக்கியதே இவர் போன்ற பத்திரிகை ஆசிரியர்கள் தாம்.

இந்த உயரடுக்கு உலகத்தின் பிரச்னைகளில் பெரும்பங்கு வகிப்பதே கண்மூடித்தனமாக மேற்குலக நாகரிகங்களைத் தழுவும் முயற்சியில், அதன் ஆண் முதலாளித்துவத்தையும் உடல் மற்றும் பாலியல் சுதந்திரத்தை மட்டுமே குறிக்கோளான அதன் பெண்ணியச் சிந்தனைகளையும் சேர்த்துத் தழுவி, சிதைந்து போனதொரு கலாசாரத்தைத் துப்பி இருக்கிறது; இதில் பெண்கள் வெறும் போகப் பொருட்களாக மாறிப் போனது மட்டுமன்றி தாங்கள் விரும்பி போராடிய சுதந்திரம் தங்களுக்குக் கிடைத்து விட்டதாக நம்பவும் ஆளாகி இருக்கிறார்கள்.

இந்தியாவிலும் ஒரு குறிப்பிட்ட வர்க்கப் பெண்கள் – நகரத்தின் மேல்தட்டுப் பெண்கள் தங்களைப் பெண்ணியவாதிகளாக நம்பிக் கொண்டாலும் தாங்கள் மேலே செல்ல இயலாத முட்டுச் சந்தில் செலுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை உணரவில்லை. மாறாக, பெண்களைக் காமப் பொருட்களாகச் சித்தரிக்கும் விளம்பரங்கள் மீதான தடைகளை அகற்றக் கோரி கட்டுரைகள் எழுதி வருகிறார்கள். தாங்கள் பெண்ணியவாதிகள் என்று பறைசாற்றியபடியே, வோக், காஸ்மாபாலிடன், எல்லி, போன்ற பளபளக்கும் மேற்கத்திய ஃபேஷன் இதழ்களில் மாடல்களாகக் கூட பணியாற்றுகிறார்கள்.

மேட்டுக்குடியின் பெண்ணியப் போராட்டங்களெல்லாம் கீழ்த்தட்டு மக்களின் ஆண்களையே குறிவைக்கின்றன. ஆண் பெண் இருபாலரும் எழுதும் அப்படிப்பட்ட எழுத்துக்களிலும் Pink Chaddi,  Mend the Gap, Slut Walk, Blank Noise Project போன்ற இயக்கங்களிலும் நிலவும் வர்க்கக் காழ்ப்பு என்னை சங்கடத்துக்குள்ளாக்குகிறது.

எளிய வர்க்கத்தினர் பல உண்மையான பிரச்னைகளைச் சந்தித்து வரும் நிலையில், இந்த மேல்தட்டு எழுத்துக்களும் போராட்டங்களும் தெருவில் போகும் அந்த நாகரிகம் குறைந்த ஏழை மனிதன் மீதிருக்கும் இவர்களது ஆழ்ந்த அச்சத்தைத் தான் வெளிப்படுத்துகிறது.  அலுவலகத்தில் மிகவும் எளிமையான, ஆங்கிலம் பேசத்தெரியாத ஒரு குமாஸ்தாவை அவனது மத அடிப்படைவாதத்துக்காக இவர்கள் ஏளனம் செய்வதாகத் தான் அமைகிறது. அவன் மதஅடிப்படைவாதியோ இல்லையோ அது பொருட்டில்லை.

உண்மையில் மேல்தட்டுப் பெண்களுக்கு உள்ள சக்தியையும், உழைப்பாளி மற்றும் கீழ் நடுத்தர வர்க்க ஆண்களின் மேல் இவர்களுக்குள்ள ஆதிக்கத்தையும், (தெருவில் விசிலடித்துத் திரியும் தருணங்களைத் தவிர) உணர்ந்து கொள்ள யாரும் அதிகம் முயற்சி எடுப்பதில்லை.

ஆகவே ”ஸ்லட்” (பாலியல் சுதந்திரம் பெற்ற பெண்) ஆகவும் ’பப்’களுக்குச் செல்வதற்கும் தங்களுக்கு வேண்டும் உரிமைக்காகவும் போராடுவது, மேற்குலகில் ஆனது போல் பெண்களுக்கு இன்னொரு சிறையாகத் தான் முடியும். – அது இன்னும்  ஆபத்தான சிறை, ஏனெனில் அங்கு பெண்கள் தாங்கள் சுதந்திரம் அடைந்து விட்டதாக நம்பிக் கொண்டிருப்பார்கள்.

ஆணாதிக்கம், பாலியல் சில்மிஷங்கள், இவையெல்லாம் ’அறியாமையில் திளைக்கும்’ பாமர மக்களோடே சார்புபடுத்திப் பார்க்கப் படுவதால், மேல்தட்டுப் பெண்களுக்கு தாங்கள் அவமதிக்கப்படுவதையும், வன்முறைக்கு ஆளாவதையும், பாலியல் ரீதியாகத் தாக்கப்படுவதையும், பொருள் மயமாக்கப்படுவதையும் உணர முடிவதில்லை. அல்லது, அத்தகைய சூழலில் (தங்கள் தவறுகளால்) சிக்க வைக்கப்பட்டதாக உணர்வதால் பேச இயல்வதில்லை. ஏனென்றால் இவையெல்லாம், அழகான, பண்பட்ட, பரந்த நோக்குடைய பசப்புப் பேச்சுக்களால் போர்வையிடப்பட்டிருக்கின்றன. ஆகவே, வெளிப்படையான ஆணாதிக்கத்தை விடவும், பழம்பஞ்சாங்க ஆண்களின் அடக்குமுறையை விடவும் ஆபத்தானது என்று உணர வேண்டும்.

இந்தியப் பெண்கள் தற்போது தங்கள் சுதந்திரமான ஆசைகள், அபிலாஷைகள், காதல் மற்றும் உடல்ரீதியான சுதந்திரம் குறித்தெல்லாம் சிந்திப்பதால், பொதுப் புத்தியில் பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்ற பிம்பங்களெல்லாம் மாறி வருகிற இவ்வேளையில்,  அதிகாரபலம் வாய்ந்த ஆண்கள், குறிப்பாக நவநாகரிகமான மேல்தட்டுப் பிலுக்கர்கள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ள முனைகிறார்கள்.

அவர்களது செய்கைகளுக்கு நீங்கள் பணியாவிட்டால் நீங்கள் முற்போக்கானவள் இல்லை, பழமையான கட்டுப்பெட்டித் தனமானவள் என்பது தான் உங்களைச் சிக்கவைக்கும் கணக்கு. “ஒருவருக்கு மேற்பட்டவரை நீ காதலிக்கலாம்” என்றிருக்கிறார் தேஜ்பால், அப்பெண்ணிடம், கிட்டத்தட்ட ஒரு சவாலை முன்வைப்பது போல்.

காதல் இங்கு எங்கு வந்தது? ஆண்கள் பெண்களை அவர்கள் இயல்புப்படியே பார்க்க இயலாத வரை, அவர்களைத் தங்கள் சொந்த இன்பத்துகான காமப் பொருட்களாக நோக்கும் பாங்கு மாறாத வரை இங்கே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உண்மையான காதல் என்பது சாத்தியமே இல்லை.

வெளிப்படையாகப் பேசவும், தங்கள் இனத்தின் தடைகளை உடைக்கவும் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் யாவையும் அவர்களைத் தங்கள் சுயவிருப்புக்காக இணங்க வைக்கவும், பின்பு அதற்கு அவர்களே காரணம் என்று சிக்கவைப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தேஜ்பால் போதையேறிய தனது இமெயிலில் இவ்வாறு எழுதுகிறார்: “..அன்று நமது உரையாடல் சரசம் நிறைந்ததாக இருந்ததை நினைவு கூர்வாயாக. நாம் விளையாட்டாகவும் சரசமாகவும் காமம், உடலுறவு குறித்தும், ஒழுக்கம் என்பதன் மாயை பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். மேலும், புயல் காற்றடித்த ஒரு நாள் மாலை, நான் இடிமேகங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது என்னை வந்து சந்தித்தாயே..அதையும்.”

இப்படித் தான் பெண்கள்  திறமையாகக் கையாளப்படுகிறார்கள். நடந்ததற்கு அவர்கள் தான் பொறுப்பு என்பது போலவும், எல்லாவற்றிலும் அவர்களுடைய பங்கும் இருப்பது போலவும். யாரோ ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்தால் அக்குற்றம் தெள்ளத் தெளிவாகிறது. ஆனால் இது போன்ற சூழல்களில் பெண்கள் தாங்களும் காரணம் தானோ என்ற நினைப்பினால் பெரும்பாலும் அமைதி காத்திவிட நேர்கிறது.

ஆண் பெண் உறவுகள் மாறி வரும் கால கட்டங்களில் இது போல் இன்னும் பல நிகழ்வுகள் அரங்கேறக் கூடும் – பெண்கள் அவற்றை உள்ளது உள்ளபடி பார்க்க வேண்டியதும், ஆண்கள் தங்களைச் சுற்றியுள்ள பெண்களோடு எவ்விதமாகத் தங்களைப் பொருத்திப் பார்க்கிறோம் என்று ஆழ்ந்த சுயபரிசீலனை செய்து கொள்வதும் மிகவும் அவசியமாகிறது. நடந்த இந்தச் சம்பவம் நம்மை இது போன்ற முயற்சிகளுக்கு ஊக்குவிப்பதாய் அமையவேண்டும்; ஆண் பெண் உறவுகளுக்குப் புதிய நியதிகளை வரையறுக்கும் முயற்சியாய் அது அமைய வேண்டும்.

– கவிதா பானோட்
தமிழில் – தீபா

நன்றி: www.Kafila.org

லண்டனில் பிறந்து வளர்ந்தவர் கவிதா பானோட். இந்திய-பிரிட்டிஷ் இலக்கிய நிகழ்ச்சி ஒன்றை இயக்குவதற்காக தில்லி வந்தவர் இந்தியாவின் முதல் இலக்கிய நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார். இவரது எழுத்துக்கள் பல ஆங்கில இதழ்களிலும் தொகுப்புகளிலும்  வெளிவந்துள்ளன.

அறிவும், ஆரோக்கியமும் செழிக்கச் செய்த ஆசான்கள் – திப்பு

0

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் 9 

றிவு செல்வத்தை ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு வளர்த்து எடுத்து கொண்டு செல்லும் உன்னதமான ஆசிரியப் பெருந்தகைகள் என்றென்றும் சமூகத்தால் போற்றப்படவேண்டியவர்கள்.ஆசிரிய பணிக்கு நியமனம் பெறுவதனாலேயே ஒருவர் அப்படி போற்றுதலுக்கு உரியவர் ஆகிவிடுவதில்லை.அந்த பணியை கடனுக்கு செய்யாமல் செவ்வனே நிறைவேற்றுபவர்கள் மட்டுமேஅப்படி ஒரு சிறப்பை பெறுகிறார்கள்.அந்த வகையில் ஆசிரிய பணியை உளமார செய்த நல்லாசிரியர்கள் வாய்க்கப் பெற்ற நல்வாய்ப்பாளர்களில் நானும் ஒருவன்.

தமிழ்வழிக் கல்விஎனது நினைவில் நீங்காத இடம் பெற்றுள்ள அப்படியான ஆசிரியர்கள் பற்றி எழுதுவது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதலாவதாக உயர்நிலை வகுப்புகளில் தமிழ் ஆசிரியராக வந்த அய்யா மாதவன் அவர்கள். தமிழ் வகுப்பு என்றாலே ”bore” என்ற அசட்டுத்தனத்திலிருந்து எங்களை மீட்டவர் அவர். தமிழை சுவையாகவும் அழகாகவும் சொல்லித் தந்தவர். நகைச்சுவையாக பேச வல்லவர். அவரது வகுப்பு என்றாலே சிரிப்பும் கும்மாளமும் தூள் பறக்கும்.

பத்தாம் வகுப்பில் அணியிலக்கணம் நடத்தும் முன்பு, இதை புரிந்து கொள்ள முதலில் அடிப்படை இலக்கணத்தை நீங்கள் நன்கு புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லி பத்து பதினைந்து நாட்கள் அதற்காக வகுப்பு எடுத்தார்.எந்த மொழியில் நாம் கல்வி கற்கிறோமோ அந்த மொழியை கசடற கற்பதே கல்வியில் சிறந்து விளங்குவதற்கான அடிப்படை என்பார். நீங்கள் தமிழ் வழி மாணவர்கள் தமிழை இலக்கணப் பிழையின்றி எழுத கற்றுக்கொண்டால் பாடங்களை மனப்பாடம் செய்யாமலே புரிந்ததை வைத்து விடை எழுதி வெற்றி பெற முடியும் என்று சொல்லித் தந்தார். அய்யா மாதவன் காட்டிய வழியில் நாங்கள் சென்றதால் A, B, C என ஆறு பத்தாம் வகுப்பு பிரிவுகள் கொண்ட எங்கள் பள்ளியில் எங்கள் வகுப்பு கூடுதலான தேர்ச்சி விகிதம் பெற்றது.

அடுத்து பனிரெண்டாம் வகுப்புக்கு ஆங்கில ஆசிரியராக வந்த நாகராஜன் சார் அவர்கள். அதுவரை எனக்கு ஆங்கிலம் துப்புரவாக தெரியாது. ஆங்கிலம் அச்சடிக்கப்பட்ட தாளை நீட்டினால் படிப்பேன், அவ்வளவுதான். பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வை கடந்தது எல்லாம் வெறும் மொட்டை மனப்பாடத் திறனை வைத்துத்தான். பனிரெண்டாம் வகுப்பு கல்வி ஆண்டு துவங்கிய ஒரு வாரத்தில் ஆங்கிலம் முதல் தாள் பாடங்கள் எதையும் நடத்தாமல் இரண்டாம் தாள் பாடங்கள் சிலவற்றை நடத்தப் போவதாக அறிவித்தார் நாகராஜன் சார். அப்போது, “இந்த நான்கைந்து நாட்களுக்கு பாடங்களை கூர்ந்து கவனியுங்கள். அடுத்த வாரம் உங்களுக்கு ஆங்கிலம் அத்துப்படியாகி இருக்கும்” என்றார்.

முதலில் voice and tense நடத்தினார். present, past, future tense களை விளக்கினார். அந்தந்த காலத்துக்கான continuous tense களை விளக்கினார். அடுத்து perfect tense களை நடத்தும் முன் ஒவ்வொரு verb க்கும் மூன்று காலப் பதங்கள் இருப்பதை விளக்கி present tense, past tense, past participle பதங்களை விளக்கிச் சொன்னார். தொடர்ந்து முக்காலத்துக்குமான perfect tense, perfect continuous tense களை நடத்தினார். சற்றே ஆங்கிலம் புரிய ஆரம்பித்தது. அடுத்து active voice, passive voice களை புரியும்படி விளக்கி சொன்னார்.

ஆங்கிலப் பேச்சு
“இவ்வளவுதாண்டா இங்கிலிபிசு”

ஆகா, என்ன ஒரு ஆச்சரியம். ஆம், கடைசிச் சுழற்றில் cube-ன் ஒவ்வொரு பக்கமும் அதனதன் வண்ணக் கன சதுரங்கள் போய் உட்கார்ந்து கொள்வது போல் மூளையில் ஆங்கில இலக்கணம் போய் உட்கார்ந்து ஆங்கிலம் புரிந்து விட்டது. எழுவாய், பயனிலை, வினைச் சொல் என்ற வரிசையில் தமிழில் நாம் எழுதும் சொற்றொடர் சற்றே மாறி subject, verb, object என்ற வரிசையில் ஆங்கிலத்தில் அமைவதும், செய்வினையும் செயப்பாட்டு வினையும் active voice, passive voice ஆக மனதில் பதிந்து, “இவ்வளவுதாண்டா இங்கிலிபிசு” என்றது. இன்று பல ஆயிரம் கட்டணம் வாங்கிக் கொண்டு சொல்லித் தரப்படும் ஆங்கிலத்தை தான் வாங்கும் சில ஆயிரம் ஊதியத்திற்காக அல்லாமல் தனது மாணவர்கள் கல்வியில் மேம்பட வேண்டும் என்ற நோக்கில் கடும் சிரத்தை எடுத்து சொல்லி தந்த எங்கள் நாகராஜன் சார் என்றென்றும் எமது நன்றிக்குரியவர்.

அடுத்து எங்கள் உடற்பயிற்சி கல்வி ஆசிரியர் தஸ்தகிர் சார் அவர்கள். விளையாட்டு வகுப்பில் ஒரு பந்தை கொடுத்து மாணவர்களை மைதானத்துக்கு துரத்தி விடுவதோடு தன கடமை முடிந்தது என நில்லாமல் உடற்பயிற்சிகள் பலவற்றை சொல்லித் தருவார். அதன் நன்மைகளை எடுத்துச் சொல்வார். ஆரோக்கியமான உடல் இருந்தால்தான் மூளை நன்கு செயல்படும். படிப்பும் நன்றாக வரும் என்பார். நன்றாக விளையாடுபவன் நன்கு படிக்க மாட்டான், நன்றாக படிப்பவன் நன்கு விளையாட மாட்டான் என்பதெல்லாம் மூட நம்பிக்கை என்பார். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளச் சொல்லி உற்சாகமூட்டுவார். மாணவர்களை வரிசையாக வந்து pull ups, push ups எடுத்துக் காட்டச் சொல்வார். கூடுதலாக எடுக்கும் மாணவர்களை பாராட்டி கௌரவிப்பார். சாதாரணமாகவே விளையாட்டு வகுப்பு என்றாலே மாணவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். தஸ்தகிர் சார் எங்களுக்கு அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி தந்தார்.

தஸ்தகிர் சார் ஊட்டிய ஆர்வத்தின் காரணமாக இன்றளவும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை விடாமல் கடைப்பிடித்து வருகிறேன். குறிப்பாக தண்டால் [push ups] செய்யும்போதெல்லாம் தஸ்தகிர் சார் நினைவுக்கு வருகிறார். தொடர்ந்த உடற்பயிற்சியின் காரணமாக அசைவ உணவு உண்ணும் பழக்கம் இருந்தும் கூட, நடுத்தர வயதை கடந்த பின்னும் கூட குருதி அழுத்தம் , சர்க்கரை நோய் போன்றவை ஏதுமின்றி ஆரோக்கியமாக இருக்கிறேன்.

பள்ளிக்கல்வி முடித்து கல்லூரிக்கு சென்ற போது அந்தச் சூழலே மிகவும் பிடித்தமானதாக இருந்தது. முதன் முறையாக ஆசிரியர்கள் வாங்க போங்க என்று மரியாதை கொடுத்து பேசினார்கள். வகுப்பு துவங்கி சற்று தாமதமாக போனாலும் excuse me என்ற ஒற்றை சொல் yes என்ற பெருந்தன்மையை காட்டி உள்ளே சென்று அமர வைத்தது. இயல்பான விடலை பருவ சேட்டை காரணமாக சில ஆசிரியர்களிடம் ஏற்பட்ட பிணக்கு கூட அக மதிப்பீட்டு மதிப்பெண்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. எனது கல்லூரி ஆசிரியர்களிடம் பாடங்கள் மூலம் கற்றுக் கொண்டதை விட பழகி கற்றுக் கொண்டது ஏராளம். குறிப்பாக மோகன்ராஜ் சார் அவர்களின் நகைச்சுவை ததும்பும் பேச்சும் கனிவும் கண்டிப்புமாக எங்களை சொந்த தம்பிகள் போல் நடத்திய பாங்கும் மறக்கவொண்ணாதவை. மொத்தத்தில் எனது இன்றைய ஆளுமையில் [அப்படி ஒன்று இருப்பதாக நான் நம்புகிறேன். தயவு செய்து நீங்களும் நம்புங்கள், உங்களுக்கு புண்ணியமா போகும்] கல்லூரி வாழ்க்கைக்கு கணிசமான பங்குண்டு.

நாடும் நாமும் செழிக்க இத்தகைய நல்லாசிரியர்கள் பெருகட்டும்.

– திப்பு

புதுச்சேரி தோழர்கள் மீது அதிமுக வெறிநாய் ஓம்சக்தி சேகர் கும்பல் தாக்குதல் !

33

ன்பார்ந்த உழைக்கும் மக்களே !

கரையான் கட்டிய புத்துக்குள் கருநாகம் புகுந்ததைப்போல தமிழ் நாட்டில் தமிழ் மக்களால் கட்டப்பட்ட சிதம்பரம் நடராசர் கோயிலில் பார்ப்பன தீட்சிதர்கள் புகுந்துக்கொண்டு இந்த கோயில் தங்களுக்குத்தான் சொந்தம்! இங்கு தமிழர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது, கோயிலில் தமிழில் பாடக்கூடாது என்றும், தமிழ் மொழி வேசி மொழி என்றும், தமிழில் பாடினால் தீட்டு என்றும், தமிழன் வேசி மகன் என்றும் இழிவுப்படுத்தி பல நூற்றாண்டுகளாக கொட்டம் அடித்து வந்தார்கள்.

நந்தனாரையும், வள்ளலாரையும் சாதிவெறி பிடித்துஎரித்து சாம்பலாக்கி விட்டு ஜோதியாகி விட்டார்கள் என்று வரலாற்று உண்மையை மறைத்த கொலைகார கிரிமினல்கள். கோயிலின் ஆண்டு வருமானம் 30,000 ரூபாய்தான் என்று தில்லை நடராசன் தலையிலும், உயர் நீதிமன்ற நீதிபதி தலையிலும் அடித்து சத்தியம் செய்து ஆண்டு வருமானம் 1 கோடி ரூபாயை ஆட்டையை போட்டும், கோயிலின் தங்க ஆபரணங்களை திருடியும் ஏமாற்றும் திருடர்கள். இந்த சாதிவெறி பிடித்த, இனவெறி பிடித்த, கொலைவெறி பிடித்த அரக்கர்களின் கொட்டத்தை அடக்கியது 2008 மார்ச்-2 ல் எமது தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் பு.ஜ.தொ.மு , வி.வி.மு, பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள்.

எந்த மொழியை வேசி மொழி என்றார்களோ அந்த மொழியால், எந்த தமிழனை வேசி மகன் என்றார்களோ அந்த தமிழனால் தில்லை நடராசன் சன்னதியில், சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் முழங்கப்பட்டது. வெண்தாடி வேந்தன் பெரியாருக்கு பிறகு வீழ்ந்த முதல் அடி. அடுத்து கோயிலின் மீது தீட்சிதர்கள் செலுத்தி வந்த ஆதிக்கத்தை ஒழித்து அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இது பார்ப்பன கும்பலுக்கு விழுந்த இரண்டாவது அடி.

இவ்வாறு தொடர்ச்சியாக விழுந்த அடியால் நிலை குலைந்து போன பார்ப்பன தீட்சித கும்பல் வெறி கொண்டு பார்ப்பன பாசிச ஜெயாவையும், சு.சாமி, சோ மற்றும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து பரிவார கும்பலை நாடி தனது அதிகாரத்தை மீண்டும் கோயிலில் நிறுவிக் கொள்ள,  தமிழக ஜெயலலிதா அரசு முதற்கொண்டு, உச்ச நீதி மன்றம் வரை தனது பூணூல் அதிகாரத்தை கொண்டு, கோயிலில் தமிழர்களின் வழிபாட்டு உரிமையை மீண்டும் நசுக்கிவிட முயல்கிறது. எந்த தமிழர்களின் ஓட்டை பெற்றுக்கொண்டு முதலமைச்சராக இருக்கிறாரோ அந்த தமிழர்களின் கோயில் வழிபாட்டு உரிமையை நசுக்கவும், கோயிலை தீட்சிதர்களுக்கு சொந்தமாக்கவும் உதவி வருகிறார் பார்ப்பன பாசிச ஜெயா. ஆகையால்தான் ஆண்டுக்கு 1 கோடிக்கு மேல் வருவாய் வருவதையும் பார்க்காமல், இவர் ஆட்சி பொறுப்புக்கு வருவதற்கு காரணமான மக்களை இழிவு படுத்துவதையும் அவர்களது வழிப்பாட்டு உரிமை பறிக்கப்படுவதையும் பார்க்காமல் தீட்சிதர்களின் வழக்குக்கு எதிராக ஒரு சிறு துரும்பு எதிர்ப்பைக் கூட காட்டாமல் தீட்சிதர்கள் வெற்றி பெறும் வகையில் சட்ட ரீதியாக அனைத்து வாய்ப்புகளையும் மறைமுகமாக செய்து வருகிறார்.

இதை அம்பலப்படுத்திய பிரசுரத்தை மக்களிடம் வினியோகித்து, ஜெயாவை கண்டித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட எமது பு.ஜ.தொ.மு தோழர்களை புதுச்சேரி சட்டமன்ற அ.தி.மு.க எம்.எல்.எ வெறிநாய் ஓம் சக்தி சேகர் தனது ரவுடிகளுடன் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கே வந்து மூன்று தோழர்களை சட்டையை பிடித்து கிழித்து கடுமையாக அடித்து தோழர்கள் மக்கள் மத்தியில் நிதி திரட்டி வைத்திருந்த உண்டியலை பிடிங்கிக் கொண்டும் போலிஸ் நிலையத்தில், எங்களது அம்மாவை எப்படி விமர்சிக்கலாம்? என்றும் இவர்கள் மக்களிடம் மிரட்டி காசு வாங்குகிறார்கள் என்றும்  புகார் கொடுத்து விட்டு பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்து விட்டு சென்று விட்டனர்.

தோழர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலையறிந்து மற்ற தோழர்கள் காவல் நிலையத்துக்கு சென்றவுடன் இன்ஸ்பெக்டர், “நமது தோழர்களை பார்த்து உங்களை பற்றி எனக்கு தெரியும் நீங்கள் மக்களிடம் கட்டாயப்படுத்தி வங்கமாட்டீர்கள், 1 ரூபாய் கொடுத்தாக் கூட வாங்கிகிட்டு செல்வீங்க, அவர்களுக்கு உங்களை பற்றி தெரியவில்லை. நீங்கள் உங்கள் தோழர்களை அழைத்துச் செல்லுங்கள்” என்று அனுப்பி வைத்தார்.

நமது சார்பாக ஓம் சக்தி சேகரை கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஓட்டு பொறுக்கும் போது மக்களின் காலில் விழுந்து ஓட்டு பொறுக்குவது, பிறகு மக்களை காலில் போட்டு மிதிப்பது இதுதான் ஓட்டு சீட்டு அரசியலின் ரவுடித்தனமான ஜனநாயகம். இந்த போலி ஜனநாயகதத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் ஓட்டு வாங்கி காசு சம்பாரிக்கும் அ.தி.மு.க ஜெயா கும்பல் தமிழர்களின் குடலையே அறுக்கும் சதிகார கும்பல் என்பதை பார்ப்பன ஜெயா மட்டும்மல்ல இவரின் அடிமை ரவுடி ஓம் சக்தி சேகர் எம்.எல்.எ வும் நிரூபித்து காட்டி விட்டான்.

இந்த சம்பவத்தை நிறைவேற்றுவதற்கு ஓம்சக்தி சேகர் பத்திரிக்கையாளர்களை கூடவே அழைத்து வந்துதான் தனது காலித்தனத்தை அரங்கேற்றியுள்ளான். பத்திரிகை ஊடகங்களோ அதாவது தினத்தந்தி, தினகரன், தினமலர் ஆகிய பத்திரிகைகள் பிரசுரத்தில் உள்ள கோரிக்கைகளையும் தோழர்களின் பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தையும் பார்க்காமல் பத்திரிகையின் நாணயத்திற்கு விரோதமாக ”மக்களிடம் பணம் வசூல் செய்தார்கள்” என்றும் தோழர்கள் “தாக்கப்பட்டவுடன் தோழர்களில் சிலர் ஓடிவிட்டார்கள்” என்றும் கொச்சையாக கம்யூனிஸ்டுகளின் பிரச்சார வடிவத்தை இழிவுபடுத்தும் வகையிலும் ஓம் சக்தி சேகர் சொன்னதை அப்படியே வாந்தி எடுத்தும் எழுதியுள்ளார்கள்.

மேலும், தமிழர்களின் உரிமையான தில்லைக் கோயிலை தீட்சிதர்களுக்கு சொந்தமாக்க முயலும் அதிமுக ஜெயாவை விமர்சித்து எழுத துப்பில்லாமல், ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி (எம்எல்ஏ) காலித்தனமாக நடுரோட்டில் ஜனநாயகத்திற்கு உட்பட்டு பிரச்சாரம் செய்த தோழர்களை ஜனநாயத்திற்கு விரோதமாக, தோழர்களைத் தாக்கி நடந்து கொண்டதை பற்றி எழுத துணிவில்லாமல் கயமைத்தனமாக பார்ப்பனியத்திற்கு ஆதரவாக மக்கள் விரோத ரவுடிக் கும்பலுக்கு ஆதரவாக செயல் படும் போக்கில் நடந்து கொண்ட இப்பத்திரிகைகளை எங்கள் அமைப்பின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.

மக்கள்தான் இந்த உண்மையை புரிந்து கொண்டு இந்த பார்ப்பன பரிவார ஜெயா கும்பலை விரட்டியடிக்க வேண்டும். தில்லை கோயிலை மீட்டெடுத்து தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என உங்களை அறைகூவி அழைக்கிறோம். அதிமுக வெறிநாய் ஓம்சக்தி சேகர் ரவுடி கும்பலுக்கு புதுச்சேரி உழைக்கும் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்  :
பு.ஜ.தொ.மு – புதுச்சேரி

தில்லைக் கோயில் முதல் அறநிலையத்துறை அலுவலகம் வரை விடாது போராட்டம் – வீடியோ

3

னித உரிமைப் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள தில்லைக் கோயிலை தீட்சிதர் சொத்து ஆக்காதே என்ற தலைப்பிலான வீடியோ. இதில் தில்லைக் கோவிலில் தோழர்கள், வழக்கறிஞர்கள் துணையுடன் சிவனடியார் ஆறுமுகசாமி சிற்றம்பல மேடையில் நடத்திய போராட்டமும், சென்னை இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டம் குறித்த வீடியோவும் இடம்பெற்றிருக்கின்றன.

கல்விக் கொள்ளையன் வேல்டெக் ரங்கராஜனை கைது செய் !

2

துண்டுச் சீட்டுக் கூட கொடுக்காமல் பல லட்சங்களை டொனேசன், கேபிடல் பீஸ், கட்டணம் என்ற பெயரில் மாணவர்களிடம் கொள்ளையடிக்கும் பிரபலமான பொறியியல் கல்லூரிகளின் வரிசையில் இருப்பதுதான் ஆவடியில் உள்ள வேல்டெக் பொறியியல் கல்லூரி. இந்த கல்லூரியின் தாளாளர் ரங்கராஜனை கல்வி வள்ளல்களில் ஒருவராக சித்தரிக்கிறது அரசு. இந்த கல்வி வள்ளலின் யோக்கியதை அவ்வப்போது வெளிவந்தாலும் அது ரங்கராஜனின் பணபலம், அதிகார பலத்தால் மூடி மறைக்கப்படும்.

ஆனால் இப்போது பெண் பேராசிரியைகளை அடுத்தடுத்து இழிவுபடுத்தி – மிரட்டி சட்டவிரோத வேலைநீக்கம் செய்ததன் மூலம் வேல்டெக் ரங்கராஜனின் அட்டூழியங்களும், அராஜகங்களும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கல்லூரிக்காக உழைத்த பேராசிரியர்களை சட்டவிரோத வேலை நீக்கம் செய்துவிட்டு, சம்பளத்தையும், சான்றிதழ்களையும் தர மறுக்கும் வேல்டெக் ரங்கராஜனின் அயோக்கியத்தனங்களை சென்னை நகரம் முழுக்க சுவரொட்டி மூலம் நாறடித்து அக்கல்லூரி பாடம் புகட்டும் போராட்டத்தை தொடங்கியிருக்கிறது பு.மா.இ.மு. போராட்டம் தொடரும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

முதல் கோணல், முற்றும் கோணல் – சீனிவாசன்

4

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் 8 – சீனிவாசன்

ள்ளி பருவத்தை மீண்டும் எண்ணி பார்க்கையில், பொதுவில் அனைவரும் மகிழ்ச்சி அடைவதே இயல்பு. ஆனால் எனக்கோ பள்ளிக்கால நினைவுகள் எல்லாம், நான் மறக்க நினைக்கும் ஒரு கொடுங்கனவாகவே இன்றும் இருக்கிறது. கல்வி என்பது அறிவு, நல்லொழுக்கம், நுட்பத் தகைமை என்பவற்றைக் கற்றலையும், கற்பித்தலையும் குறிக்கும் என்கிறது விக்கிப்பீடியா. இந்த அடிப்படையில் ஆசிரியர்களால் கற்றலும் கற்பித்தலும் எனக்கு நிகழ்ந்திருக்கிறதா என கேள்வி எழுப்பினால், பள்ளிக் கல்வியில் தொடங்கி தொழில் நுட்பக் கல்வி வரை இல்லை என்பதே என் பதிலாக இருக்கும். உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி என்பது போலவே வீடு பள்ளியும் என்னை தொடக்க கல்வியிலிருந்தே வாட்டி வதைக்கத் தொடங்கி விட்டது. எப்படியாவது இந்த படிப்பிலிருந்தும் பள்ளியிலிருந்தும் தப்பித்து விட வேண்டும் என்பதே என்னுடைய அன்றைய எண்ணமாக இருந்தது. பள்ளி என்பது வெறும் புத்தகங்களும்,கட்டிடமும் மட்டுமில்லையே அதை உயிர் துடிப்பானதாக்குவது ஆசிரியர்கள் தானே! ஆனால் என் பள்ளி வாழ்வில் எந்த ஒரு ஆசிரியரும் பள்ளி செல்வதை இனிமையான அனுபவமாக்கியதில்லை.

முதல் கோணல், முற்றும் கோணல்

பிரம்படிமதுரையை ஒட்டியுள்ள ஒரு சிறுநகரத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்துதான் எனது பள்ளிக் கல்வி ஆரம்பமாயிற்று. கண்டிப்பிற்கும் கட்டுபாட்டிற்கும் பேர் போன பள்ளி அது. சாக்கலேட் பேப்பரில் பொம்மை செய்ய தெரியாதது தொடங்கி, கூட்டல் கணக்கு கழித்தல் வரை நான் வீட்டிலும் பள்ளியிலும் வாங்கிய அடிகள் ஏராளம். “அப்படி அடிச்சதாலதான் நீ இன்னைக்கு இந்த நிலமைல இருக்குற” எனும் சமாதானம் இப்போதும் சிலர் சொல்லக் கூடும். ஆனால் பிரச்சனை அதுவல்ல…கற்கும் நிலையிலுள்ள குழந்தைக்கும் கற்பிக்கும் ஆசிரியர் மற்றும் பெற்றோருக்கு இடையிலான தகவல் தொடர்பு ஒருவழிப்பாதையாக மாறுவது இங்கேதான். கற்பதில் எனக்குள்ள பிரச்சனை என்ன? என்பது அவர்களுக்கு தேவையில்லாத ஒன்று. குறிப்பிட்ட இலக்கை தரும் இயந்திரமாய் நான் மாற்றப்பட்டேன். அறிதலுக்கான ஆர்வம் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டு, வெற்றி தோல்வியும் அதன் பயனாய் விளையும் தண்டனை பயமும் நெஞ்சில் விதைக்கப்பட்டது. தமிழோ கணக்கோ மண்டைக்குள் நிரப்பிக்கொண்டு தேர்வுத் தாளில் கொட்டுவதே எனது பணியாயிற்று. நான் பார்த்த அனைத்து ஆசிரியரும் “மாணவர்களை இயந்திரமாக்கும்” இந்த வகையிலேயே அடங்குவர்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

எனது தொடக்க கல்வியிலிருந்து திருத்தாமல் விடப்பட்டு இன்று வரை தொடர்ந்து வரும் சில பிழைகளை பார்க்கலாம். இன்றும் லகர, ழகர, ளகர த்திற்கு நாக்கு சரியாய் புரள்வதில்லை. இந்த பிழை ஒப்பீட்டளவில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை சுற்று வட்டாரத்தில் உள்ளோர்களிடமே அதிகம் காணப்படுகிறது. பல முறை தமிழ் தொடங்கி அனைத்து பாடங்களையும் சத்தம் போட்டு வகுப்பறையில் வாசித்திருந்தாலும், இந்த பிழையை என் வகுப்பாசிரியர்கள் யாரும் திருத்தியதில்லை என்பதை நினைக்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. சென்னையை சேர்ந்த சில நண்பர்கள் இதை சுட்டிய காட்டிய பொழுது வெட்கமாக இருந்தது. இன்றும் “ழகர” ஒலிக்குறிப்புகள் வரும்பொழுது சற்று வெட்கத்துடனே பேச வேண்டியுள்ளது. இது பரவாயில்லை எனும் விதமாக இன்னொரு பிழையும் உள்ளது. “ர, ற, ந, ன, ண” விற்க்கு வெவ்வேறு ஒலிக்குறிப்புகள் இருப்பதே எனக்கு கல்லூரி படிப்பு முடித்து சில வருடங்கள் ஆன பிறகும் தெரியாது. எதேச்சையாக ஏதோ ஒரு வார இதழை படிக்கும் பொழுது, தெரியவந்தது . இந்த சிறிய விசயம் கூட தெரியாமல் நம் பள்ளிக்கல்வியே முடிந்துவிட்டது என்று அதிர்ச்சியாக இருந்தது. வகுப்பறையில் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலத்திற்க்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தமிழிற்கு கொடுக்கப்படுவதில்லை. தமிழின் நேரம் மற்ற ஆசிரியர்களால் எடுத்துக கொள்ளப்படுகிறது. தமிழின் நேரமெடுத்து கொண்ட மற்ற பாடங்களிலாவது அறிவு இருக்கிறதா என்றால் அதுவும் கேள்விக்குறியே.

சில நாட்களுக்கு முன்பு வட்டத்தின் சுற்றளவு தேவைப்பட்ட பொழுது கூகிளைத்தான் நாட வேண்டியிருந்தது, கணிதத்தில் நான் படித்த வடிவியல் சுத்தமாக நினைவில் இல்லை. இயந்திரவியலில் பட்டயம் பெற்ற எனது அறிவுதான் இப்படி உள்ளது என நினைத்தால், பட்டம் பெற்றவரின் அறிவும் அதே அளவுதான் உள்ளது. வெர்னியரும்,மைக்ரோ மீட்டரும் (அளவீட்டு கருவிகள்) பிடிக்கத் தெரியாமல் நான் பட்ட அவமானத்தை, கல்லூரியிலிருந்து புதிதாய் பட்டம் பெற்று வெளிவரும் இளைஞனும் படுகிறான். என்னுடன் பணிபுரியும் இன்னொரு பொறியாளருக்கு, தமிழும் ஆங்கிலமும் பிழையின்றி வாசிக்கவோ எழுதவோ தெரியாது. இவரும் இயந்திரவியலில் பட்டம் பெற்றவர். நீங்கள் எத்தனை மோசமானவராக இருந்தாலும், இந்த கல்விமுறையையே நீங்கள் ஏமாற்றி பொறியியல் பட்டம் பெற்று விடலாம் என்பதற்கு இவர் ஓரு சாட்சி. இவர் பல பெரிய நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்த விதத்தை சுவையான சிறு கதையாக எழுதலாம். பெரிய விசயங்களை விட்டுவிடலாம் சில அடிப்படையான விசயங்கள் மாணவர்களுக்கு தெரியாமல் இருந்தால் அதை அம்மாணவருக்கு வகுப்பெடுத்த அத்தனை ஆசிரியர்களின் தோல்வி என்றே கருத வேண்டியிருக்கும்.

குற்றமும் தண்டனையும்

என்னை பொருத்தளவில் ஆசிரியர் மூன்றே வகை. ஒன்று அதிகம் அடிப்பவர், இரண்டாமவர் நடுத்தரமாய் அடிப்பவர், மூன்றாமவர் அடிக்காதவர். ஆசிரியர்களை இந்த அளவில் எளிமைப்படுத்துவது சரியா? என சிலர் நினைக்கக் கூடும். நான்காவதிலிருந்து பத்தாவது வரை டியூசன் வழியாகவே அனைத்தையும் படித்ததின் விளைவாகவே இதை சொல்கிறேன். பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர் எதையும் ஆழமாக நடத்துவதில்லை. அதையும் தாண்டிய தனிக்கவனம் மாணவனுக்கு தேவைப்படுகிறது. அந்த கவனம் சிலருக்கு படித்த பெற்றோர் வாயிலாய் கிடைத்தாலும் நிறைய மாணவர்களுக்கு டியூசன் வழியாகவே கிடைக்கிறது. என்னுடன் படித்த அத்தனை மாணவர்களும் (கிட்டத்தட்ட) ஏதேனும் ஒரு ஆசிரியரிடம் டியூசன் படித்தவர்கள்தான். இங்கும் புரிதலை தவிர்த்து மனப்பாட கல்விமுறையே கோலோச்சுகிறது என்பது தனிக்கதை. எனக்கு கிடைத்த அனுபவம் இவ்வாறிருக்க கற்பித்தலின் அடிப்படையில் நான் எப்படி பள்ளிஆசிரியர்களை வகைப்படுத்த முடியும்? தண்டனையின் அடிப்படையிலேயே அவர்களை வகைப்படுத்த முடியும். குச்சியால் அடிப்பது, கிள்ளுவது, விரல் இடுக்கில் பேனாவை வைத்து திருகுவது என தண்டனைகள் பலவிதம், நான் படித்த பள்ளியில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் ஒவ்வொரு தண்டனை முறையில் வல்லவர்கள்.

விடுதியில் தங்கிப்படித்த என் நண்பன் ஒருவனுக்கு நடந்தது தண்டனை முறையின் கொடூரத்தை அறிந்து கொள்ள உதவும். படிப்பதெற்க்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில், பொழுது போகாமல் என் நண்பன் அவனது நோட்டு புத்தகத்தில் (Rough note ல் ஏதேனும் ஆவணத்தில் அல்ல) ஆசிரியர் ஒருவரின் கையெழுத்தை போட்டு பார்த்துள்ளான். அதை தற்செயலாய் கண்ட விடுதி காப்பாளர்(அவரும் ஆசிரியரே), அவனுக்கு நிபந்தனையுடன் அளித்த தண்டனைதான் கொடூரத்தின் உச்சம். பத்து அடிகள் பின்புறத்தில் விழும், அடிக்கும் பொழுது வலி தெரியாமல் இருக்க பின்புறத்தை தேய்க்க கூடாது இதுவே நிபந்தனை. நிபந்தனையை மீறி அப்படி தேய்த்தால், ஒவ்வொரு அடிக்கும் பத்து அடி கூடுதலாய் விழும். வலி தாங்க முடியாமல் என் நண்பன் பாதியிலேயே பின்புறத்தை தேய்க்க, அடி பல மடங்குகளாகியது. ஆசிரியரின் கை ஓய்ந்துபோகும் வரை அவனுக்கு அடி விழுந்து கொண்டே இருந்தது. ஆசிரியர் மனநிலை மோசமாக இருக்கும்பொழுது அற்பமான தவறுகள் நிகழ்வதே, பெரும்பாலும் தண்டனைகள் தீவிரமாவதற்கான காரணம்.

தண்டனைகள் ஒரு புறமென்றால் ஒழுக்க விதிகள் மறு புறம். நான் படித்த பள்ளி வளாகத்தினுள் ஆசிரியர்கள் மட்டுமே சைக்கிள் ஓட்ட முடியும். மாணவர்கள் இறங்கி சைக்கிளை தள்ளிக் கொண்டுதான் செல்ல வேண்டும். சில ஆசிரியர்களை முந்தி நடந்து செல்வது குற்றம், அவர்களுக்கு பின்னால் பொறுமையாக நடந்து செல்ல வேண்டும். அதிக மதிப்பெண் பெறுபவர்களே ஆசிரியர்களின் செல்லங்களாய் இருப்பதும் , குறைந்த மதிப்பெண் பெறுபவர்கள் கடுமையான பாகுபாட்டுடன் நடத்தபடுவது இயல்பு. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நடுவே இயல்பான நட்புறவு என்பது இல்லாது, ஆண்டான் அடிமை பாணியிலான உறவே இங்கு நிலைக்கிறது.  இவற்றையெல்லாம் தாண்டி என்னிடம் தனிப்பட்ட முறையில் அன்பு செலுத்திய ஆசிரியர்கள் சிலர் உண்டு. ஆனால், அந்த அன்பு தன் குழந்தைகள் அனைவரிடம் சமமாய் தாய் அளிக்கும் பாரபட்சமற்ற அன்பை போன்றதல்ல என்பதுதான் வேதனை.

என்னதான் முடிவு?

இத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், இன்றைய தனியார் பள்ளிகளை போல சீரழிந்து போனது அல்ல என் பள்ளி. ஆசிரியரே பிட் அடிக்க உதவுவது, புளு பிரிண்ட் கொடுப்பது, பத்தாம் வகுப்பு பாடத்தை எட்டாம் வகுப்பிலே படிப்பது போன்ற பிரச்சனைகளை நான் சந்தித்தது இல்லை. நான் படித்த பள்ளியில் கல்வி வணிகமயமானது அல்ல. நான் ஆண்டு பள்ளிக்கட்டணமாய் அதிகபட்சம் கட்டியதே ஐம்பது ரூபாய்தான். கல்வி வியாபாரமாக மாறி வருவதே கல்வியில் பல புது பிரச்சனைகளை கொண்டுவருகிறது. பல தனியார் பள்ளிகளின் வணிகத்திற்க்கு ஆதாரமாய் இருப்பதே மாணவர்களின் மதிப்பெண்தான், மதிப்பெண்கள் அளிக்கும் விளம்பரத்தை வேறெதுவும் தனியார் பள்ளிக்கு அளிக்க முடியாது. இந்த மதிப்பெண்களுக்காக தனியார் பள்ளிகள் கல்வியில் எத்தகைய குறுக்கு வழிக்கும் செல்ல துணிவார்கள்.

வணிகர்களிடம் ஒருபோதும் சேவையை எதிர்பார்க்க முடியாது. எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் கல்வி வணிகமல்லாத சூழலில் அரசின் கையில் இருக்கும் பொழுதே, கல்வியில் மேம்பாடு என்பது சாத்தியம். அனைத்து துறைகளிலும் தனது பொறுப்பை கைகழுவி கொண்டிருக்கும் தற்போதைய அரசு, கல்வியை மேம்படுத்தும் என்பது கானல் நீரே. கவரப்பட்டு, ராமம்பாளையம்  போல் மீட்பருக்கான வருகை எல்லா பள்ளிகளுக்கும் கிடைக்காது. நமக்கான மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசை நிறுவுவதே அத்தகைய நல்லாசிரியர்களை ஊரெங்கும் உருவாக்கும். கல்வியில் மட்டுமல்ல சமூகத்தில் நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இதுவே தீர்வு…

– சீனிவாசன்

பொது தீட்சிதர்களா, பொதுக் கோவிலா ?

278

பக்தர்களே சிந்தியுங்கள்!

சிவனடியார் ஆறுமுகசாமி
தொண்ணூறு வயதில் போராடும் சிவனடியார் ஆறுமுகசாமி.

தொண்ணூறு வயது… தள்ளாத முதுமை… ஆனால் தன்மான மனது, சுயமரியாதை உணர்வை தள்ளாத உறுதியுடன் கொட்டும் மழையில் சிவனடியார் ஆறுமுகசாமி தமிழ் மக்களின் குறிப்பாக பக்தர்களின் உரிமையை நிலைநாட்ட தில்லையம்பலத்திலே ”தேவாரம் பாடியே உயிர்துறப்பேன், கோயில் மக்களின் பொதுச்சொத்து!” எனப் போராடும் காட்சி, வரலாற்றில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று! தமிழ்ச் சுவடிகளையே அழித்து, பெற வந்த சோழனையே எதிர்த்து, தொழ வந்த நந்தனையே எரித்து வெறியாடும் தீட்சிதர்களின் குகைக்குள் நுழைந்து கோயிலின் பொது உரிமைக்காகப் போராடுவது என்பது சாதாரண விசயமல்ல. தமிழுக்கும், சைவத்திற்காகவும் ‘மடம்’ வளர்ப்பதாகச் சொல்லும் எந்தத் தொந்திகளும் முன் வராத நிலையில், தமிழுக்காகவே உயிர் வளர்ப்பதாகச் சொல்லும் எந்தத் ‘தலைகளும்’ சுரணையற்ற நிலையில் ”சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுச்சொத்து, தீட்சிதர்களின் கொள்ளைக்கு அரசே துணை போகாதே!” என ஆறுமுகச்சாமி எழுப்பும் உரிமைக் குரல் பக்தர்களுக்கு அப்பாற்பட்ட விசயமா என்ன?

கோயிலை அரசு நிர்வாகம் செய்ய போராடிப் பெற்ற உரிமைகளை அனுபவிக்காத பக்தர்கள் உண்டா? அரசு நிர்வாகம் ஏற்ற குறுகிய காலத்திலேயே உண்டியல் வசூலின் லட்சங்களும், முறையான தரிசனம், விழாக்களும் கொள்ளைக் கூடாரத்தின் இருட்டை விலக்கி வெளிப் பிரகார வெளிச்சங்களும்… இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பக்தர்கள் பெற்று வந்த பலனை, தனி ஒரு தீட்சிதர் கும்பலுக்கு தர வேண்டிய அவசியமென்ன?

சிவனடியாரும், அவரோடு சேர்ந்து போராடுபவர்களும் முன் வைக்கும் கோரிக்கை என்ன? கோயிலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கேட்டார்களா? இல்லையே! இல்லை கோயில் தொடர்பான பூஜை, நைவேத்யங்கள், நடராச தரிசனங்களை நாங்கள் மட்டும்தான் செய்வோம் என்று வம்புக்கு வந்தார்களா? இல்லையே! அவர்கள் முன் வைப்பது கோடிகளில் புரளும் கோயிலின் நிர்வாகத்தை மட்டும் மக்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு அரசு அமைப்பிடம் மேற்பார்வையிடச் செய்வது, கோயில் நகைகள் உட்பட வரவு செலவு கணக்கை தணிக்கை செய்து ஒழுங்குபடுத்த அதிகாரிகளை நியமிப்பது என்ற ஜனநாயகமான, நியாயமான கோரிக்கைகளைத்தானே முன் வைக்கிறார்கள், இது பக்தர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாம்தானே! இதற்கு தீட்சிதர்கள் ஏன் முரண்டு பிடிக்கவேண்டும்! நெடுநாள் கோயில் பணி செய்வதாலேயே கோயில் எனக்குத்தான் சொந்தம் என்றால்? இந்த நியாயத்தை எல்லா இடத்துக்கும் பொருத்த ‘அவாள்’ தயாரா? சட்டப்படியும், ஆதாரப்படியும் உரிமையில்லாத ஒரு கோயிலை தங்களது ‘தனிச்சொத்து’ என்று தீட்சிதர்கள் வாது செய்வதை நியாய உணர்வுள்ள எந்த பக்தனும் ஏற்க முடியுமா?

நெடுநாள் ஒரு காலை உயர்த்திக் காட்டி கால் கொலுசு களவாடப்பட்டதை அம்பலவாணன் குறிப்பாக அம்பலப்படுத்திக் காட்டியும், மது, மாமிசம், மர்டர் என தீட்சித லீலைகள் ‘காவல்’ புராணத்தில் பதிவான நிலையிலும்… கேட்பதற்கே நாதியற்ற நிலையில் கோயிலின் ‘இறைப் புனிதத்தையும்’ நிலைநாட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையமும், சிவனடியார் ஆறுமுகச்சாமியும் வாராது வந்தது பக்தர்களுக்கு அந்த நடராசனே தந்த வரமல்லவா? அரசிடம் போனால் கோயில் அவ்வளவுதான் என்று புரளி கிளம்பிய தீட்சிதர்களின் குரலில் குழப்பமடைந்த பக்தர்களே… இந்த இடைப்பட்ட காலத்தில் முன்னை விட கோயிலின் தரிசனங்களும், விழா விமர்சைகளும், கோயில் பராமரிப்பும் நீங்கள் கண்ணாரக் கண்ட போராட்ட தரிசனங்கள் அல்லவா!

தீட்சிதர்கள்
போராடியவர்கள் யாரும் தீட்சிதர்களின் வேலை வாய்ப்பை பறிக்கவுமில்லை, அவர்களின் மந்திர ஒலியை மறைக்கவுமில்லை.

போராடியவர்கள் யாரும் தீட்சிதர்களின் வேலை வாய்ப்பை பறிக்கவுமில்லை, அவர்களின் மந்திர ஒலியை மறைக்கவுமில்லை, இல்லை இவ்வளவு நாள் பக்தர்களின் நிதியை கொள்ளையடித்து, கோயிலுக்கு ஒரு வெள்ளை கூட அடிக்காத ‘அவாளை’ விரட்டிடவுமில்லை, இப்படியிருக்க, கோயில் அரசு நிர்வாகத்திற்குப் போனால் பூலோகமே இருண்டு விடும் என்பது போல் தீட்சிதர்கள் அலறுவதும், அதை நாம் நம்பும்படி அவர்கள் பிரச்சாரம் செய்வதும் எவ்வளவு பொய் என்பதை உணரமுடியாத அளவுக்கு பக்தர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல! இறைவன் தாள் பணிவதுதான் பக்தி உணர்வு, திருட்டு தீட்சிதனின் காலில் விழ வேண்டிய அவசியம் பக்தர்களுக்கில்லை!

யோசித்துப் பாருங்கள், இறைப் பணியாளர்களாய் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் தீட்சிதர்களின் கவனம் இறைவனின் அருள் வேண்டி நிற்கிறதா? ஏக்கரா கணக்கில் உள்ள கோயிலின் பொருள் வேண்டி நிற்கிறதா? பூஜை பண்ண எனக்கு இன்னும் பூ கொடு, நெய் கொடு, ஆலயத்தை சுத்தப்படுத்து, குளத்தை தூர்வாரு, கொடி மரத்துக்கு தகடு சுற்று, வரும் பக்தர்களுக்கு வசதியை ஏற்படுத்திக் கொடு, கட்டணம் இல்லாத தரிசனம் கொடு என்றெல்லாம் தீட்சிதர்கள் வாயிலிருந்து ஒரு நாளும் ஒரு வார்த்தை உண்டா? இப்படி கோயில் நலன் சார்ந்து ‘அவாள்’ குரல் கொடுத்தால், அடடா! பக்தி பரவசம் என்று தீட்சிதர்களை நாமும் கொண்டாடலாம், இதையெல்லாம் பற்றி குடுமிக்கும் கவலைப்படாமல், கோயிலை எங்களுக்கு சொத்தாக்கு, நகைகளை நாங்களே வைத்திருப்போம், தேவாரம் பாடக்கூடாது, உண்டியல் கூடாது… என்று பொருள் நோக்கிலேயே குதியாட்டம் போடுபவர்கள் குருக்களா இல்லை கொள்ளைக் கும்பலா? பக்தர்களே அர்ச்சனை தட்டை அவாளிடம் கொடுத்ததோடு நம் வேலை முடிந்துவிட்டது என்று கண்ணை மூடிக்கொள்ளாமல், சன்னதியில் நடக்கும் விவகாரங்களை கொஞ்சம் கண்னைத் திறந்து பாருங்கள்! போராடுபவர்களின் குரல் பக்தர்களின் நலனுக்கானது என்ற உண்மை தரிசனமாகும்.

விருதகிரீஸ்வரர் கோயில்
விருத்தாசலத்தில் விருதகிரீஸ்வரர் கோவிலில் பார்ப்பன சிவாச்சாரியர்களுக்கு ஆப்பு வைத்த போராட்டம் (2012-ம் ஆண்டு)

பக்தர்கள் கேள்வி கேட்க கூடாதென்று எந்தக் கடவுளும் சொன்னதில்லை! நக்கீரரை கேள்வி கேட்க வைத்து, அஞ்சாமல் உண்மை பேசிய அவருக்கு அருள் கொடுத்தவர்தான் சிவன், பக்தனுக்கு பகுத்தறிவு தப்பு என்றும் எந்தக் கடவுளும் சொன்னதில்லை. பஸ்சுக்கும், செலவுக்கும் காசை வைத்துக்கொண்டு உள்ள நிலைமைக்கு ஏற்ற மாதிரி உண்டியலில் காசு போடும் பகுத்தறிபவர்கள்தான் பக்தர்களும். கும்பிட நமக்கொரு கோயில் வேண்டும் என்பதுதான் பக்தர்களின் எதிர்பார்ப்பாய் இருக்க முடியுமே ஒழிய, அந்தக் கோயிலை தீட்சிதனுக்கு சொந்தமாக்க வேண்டும் என்பது எந்த பக்தனின் வேண்டுதலுமல்ல! பக்தர்களே உங்கள் மவுனத்தை தீட்சிதர்கள் தங்களுக்குச் சாதகமாக்க அனுமதிக்காமல், பொதுக்கோயில் உரிமைக்காக உங்கள் பக்திக்கடனை வெளிப்படுத்துங்கள்! தீட்சிதர்களின் அநீதிகளுக்கு எதிராக பக்தர்களிடம் நியாயம் கேட்டு போராடுபவர் இன்றைய சிவனடியார் ஆறுமுகசாமி மட்டுமல்ல, அன்றைக்கு வடலூர் ராமலிங்க அடிகளார் சிதம்பரம் கோயில் தீட்சிதர்களின் முறைகேடுகளையும், அநீதிகளையும் தட்டிக்கேட்டு இவர்கள் தகாத கும்பல் என்று எட்டிச் சென்றவர்தான். இந்த வரலாற்றின் வரிசையில் பக்தர்களே தீட்சிதர்களின் அக்கிரமங்களுக்கு எதிராக உங்கள் காணிக்கையாக போராட்ட உணர்வை தாருங்கள்! குருக்களுக்கே கோயில் சொந்தம் என்று தீட்சிதர்கள் சொல்லும் போது இதெல்லாம் ரொம்ப அநியாயம் என்று ஆர்த்தெழவேண்டாமா?

பல்லாயிரம் உழைக்கும் மக்கள் கட்டியெழுப்பிய கோயிலை, தமிழக உழைக்கும் மக்களின் பணத்தாலும், அரிசி, பருப்பாலும் நைவேத்திய மணம் கமழும் தமிழகத்தின் கோயிலில், தமிழுக்கும், தமிழனுக்கும் தீண்டாமை என்ற கொடுங் குற்றம் மட்டுமன்றி, தமிழக மக்களின் பாரம்பரிய சொத்தான கோயிலை, பிட்சைக்கு வந்த தீட்சிதர்கள் தங்கள் தனிப்பட்ட சொத்தாக்குவது என்ன நியாயம்? ஓமம் வளர்க்க வீட்டுக்குள் நுழைந்தவன் ஒட்டு மொத்த சொத்தையும் எழுதிக் கேட்டால் எந்த பக்தனும் எழுதித் தருவானா? நாம் பக்தர்களாக இருக்கலாம், அது தனிப்பட்ட விவகாரம், அதற்காக தீட்சினுக்கு அடிமையாயிருக்க வேண்டிய அவசியம் இல்லை!

போராடிப்பெற்ற சிறு உரிமைகளால் பலன் பெற்ற பக்தர்களே, சிந்தியுங்கள்! சிதம்பர ரகசியம் எளிமையானது! நமக்குத் தேவை பொது தீட்சிதர்களா? பொதுக் கோயிலா? இரண்டில் ஒன்றுதான் சிதம்பர ரகசியம்! பக்தர்களே பதில் சொல்லுங்கள்!

– துரை.சண்முகம்

தில்லைக் கோயில்: இறுதிக் கட்டப் போராட்டம்! ஆதரவு தாரீர் !

120

ன்பார்ந்த தமிழ் மக்களே,

போராடி மீட்டெடுக்கப்பட்ட தில்லைக்கோயில், மீண்டும் தீட்சிதர்களின் பிடிக்கே சென்று விடாமல் தடுக்கும் பொருட்டு, உச்ச நீதிமன்றத்திலும் தமிழகத்தின் மக்கள் மன்றத்திலும் விடாப்பிடியாகப் போராடி வருகிறோம்.

சுப்பிரமணிய சாமி, உச்சநீதிமன்றம்
ஜெயலலிதா அரசும், சுப்பிரமணிய சாமியும், தீட்சிதர்களும் இணைந்த பார்ப்பனக் கூட்டணிக்கு எதிராகப் போராட உங்களை அறைகூவி அழைக்கிறோம்.

ஜெயலலிதா அரசு கோயிலிலிருந்து அறநிலையத்துறை அதிகாரியை வெளியேற்றப் போகிறது என்று சுப்பிரமணியசாமி அறிவித்தவுடன், திங்கள்கிழமை காலை சிவனடியார் ஆறுமுகசாமியுடன் எமது வழக்குரைஞர்களும் உறுப்பினர்களுமாக 30-க்கும் மேற்பட்டோர் தில்லைக் கோயிலுக்குள் சென்றனர். “தில்லைக்கோயிலை தமிழக அரசு தீட்சிதர் வசம் ஒப்படைத்தால் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடியபடியே உயிர் துறப்பேன்” என்று அறிவித்தார் ஆறுமுகசாமி. கொட்டும் மழையில் அவர் வழிபாடு தொடங்கியது, போராட்டமும்  தொடங்கியது. அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

அதே நேரத்தில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு தோழர்கள் சென்னை இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லாயிரம் கோடி மதிப்புள்ள பொதுச் சொத்தான கோயிலை தீட்சிதரின் தனிச் சொத்தாக மாற்றுவதற்கு அறநிலையத்துறை ஆணையர் தீட்சிதர்களோடு சேர்ந்து நடத்தும் கூட்டுச் சதியை இப்போராட்டம் கேள்விக்குள்ளாகியது. ஆணையரிடமிருந்து பதில் இல்லை. போராடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இப்போராட்டங்களின் விளைவாக அரசாணையை திரும்பப் பெறும் தனது சூழ்ச்சியை மறைத்துக் கொண்டு சுப்பிரமணிய பிரசாத் என்ற கூடுதல் அட்வகேட் ஜெனரலை நேற்று உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறது தமிழக அரசு.

ஆறுமுகசாமி போஸ்டர்“தமிழக அரசு வாதாடியது” என்று கணக்கு காட்டுவதற்காக அவர் நேற்று பதினைந்து நிமிடம் நேரம் நீதிமன்றத்தில் பேசினார். அவ்வளவுதான். ஆனால்  “TN Justifies appointment of E.O for Chidambaram temple” என்று தலைப்பு போட்டு இந்து நாளேட்டில் இன்று செய்தி வெளி வந்திருக்கிறது. தீட்சிதர்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு காட்டியதைப் போல ஒரு நாடகம்!

நேற்று முழுவதும் தீட்சிதர்களுக்கு எதிராக சத்தியவேல் முருகனார் சார்பில் மூத்த வழக்குரைஞர் துருவ் மேத்தா வாதாடியிருக்கிறார். நேற்று மாலை ஆறுமுகசாமியின் சார்பில் காலின் கன்சால்வேஸ் தனது வாதுரையைத் துவக்கியிருக்கிறார். இன்று நீதிமன்றம் இல்லை. நாளை வழக்கு விசாரணை தொடர்கிறது. காலின் தனது வாதத்தை தொடர்வார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் ஒரு வழக்குரைஞர் குழு டெல்லியில் முகாமிட்டு மூத்த வழக்குரைஞர்களை ஒருங்கிணைத்துப் பணியாற்றி வருகிறது.

வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, “தமிழக அரசு நிர்வாக அதிகாரியை வாபஸ் பெறா விட்டால், நீதிமன்றம் தமிழக அரசுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும்” என்று சுப்பிரமணியசாமி இந்து நாளேட்டிற்கு பேட்டியளித்திருக்கிறார். இதனையொட்டி சாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரவிருக்கிறோம்.

ஜெயலலிதா அரசும், சுப்பிரமணிய சாமியும், தீட்சிதர்களும் இணைந்த பார்ப்பனக் கூட்டணிக்கு எதிராகப் போராட உங்களை அறைகூவி அழைக்கிறோம்.

திராவிட இயக்கக் கொள்கைகளில் பற்று கொண்டவர்களும், கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாகக் கூடாது என்ற அக்கறை கொண்டவர்களும், ஆலயத் தீண்டாமையை எதிர்ப்பவர்களும், தமிழ் வழிபாட்டை ஆதரிப்பவர்களும் தமிழக அரசின் இந்தப் போக்கிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தின் சுயமரியாதைப் பாரம்பரியத்தையும், தமிழ் உணர்வையும் எதிர்த்து பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி என்ற அரசியல் தரகனும், தீண்டாமை வெறி பிடித்த தீட்சிதர்களும் வெற்றி பெறுவதை நாம் அனுமதிக்க கூடாது.  கோயிலை இந்து அறநிலையத்துறையின் வசம் ஒப்படைப்பதற்கு ஆதரவாக சாத்தியமான வழிகளில் எல்லாம் குரலெழுப்புங்கள் என்று அனைவரையும் கோருகிறோம்.

பெற்ற வெற்றியைப் பறி கொடுத்து விடக்கூடாது என்பதற்காக, பெரும் தொகையைக் கடன் வாங்கி,  வழக்கை முன்னெடுத்துச் செல்கிறது மனித உரிமைப் பாதுகாப்பு மையம். செலவுகளை சமாளிப்பதற்கு வழக்கு நிதி கோருமாறு டில்லியிலிருந்து கோரிக்கை அனுப்பியிருக்கிறார் வழக்குரைஞர் ராஜு.

கீழ்க்கண்ட எமது வங்கிக் கணக்கிற்கு வழக்கு நிதியை அனுப்பி விட்டு, மின் அஞ்சல் வாயிலாக விவரத்தை தெரிவிக்கவும். நீங்கள் அனுப்பும் நன்கொடைக்கு ரசீது அனுப்பப்படும்.

நன்றி.

வினவு

—————————–

நெட்பாங்க் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் (vinavu@gmail.com) அல்லது தொலைபேசி (Mobile – (91) 97100 82506) மூலம் தெரிவிக்கவும்.

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 6 1 2 8 0 1 1 0 7 3 8 9
IFSC Code: I C I C 0 0 0 6 1 2 8
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings
____________________________

பணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

KANNAIAN RAMADOSS
PUTHIYA KALACHARAM,
NO.16, MULLAI NAGAR SHOPPING COMPLEX,
SECOND AVENUE, ASHOK NAGAR, CHENNAI, 600 083.
PHONE : 044- 23718706.
செல்பேசி : அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876
__________________________________

வெஸ்டர்ன் யூனியன் மூலம் பணம் அனுப்புபவர்கள் KANNAIAN RAMADOSS என்ற பெயருக்கு அனுப்பி விட்டு மின்னஞ்சல் மூலம் (vinavu@gmail.com) விவரங்களைத் தெரிவிக்கவும்.

நீதிபதி கங்குலியின் குற்றத்திற்கு நீதி கிடைக்குமா?

1

முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதியும், தற்போதைய மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவருமாக இருப்பவர் ஏ.கே. கங்குலி. அவர் உச்சநீதி மன்ற நீதிபதியாக இருக்கையில் அவரிடம் பயிற்சி பெற வந்திருந்த கொல்கத்தா சட்ட பல்கலைக் கழக மாணவி ஒருவர் கடந்த மாதம் பாலியல் அத்துமீறல் புகார் ஒன்றை எழுப்பியுள்ளார். நவம்பர் 6-ம் தேதி ஜர்னல் ஆப் இந்தியன் லா அண்ட் சொசைட்டிஸ்-ஐ சார்ந்த வலைப்பூவில் ஸ்டெல்லா ஜேம்ஸ் என்ற பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் இதுகுறித்து எழுதியதைத் தொடர்ந்து, இப்பிரச்சினை வெளியுலகுக்கு தெரிய வந்தது. இந்த வலைப்பூவை நடத்துவோர் ”இயற்கை நீதி: சமூகம் மற்றும் இயற்கைக்கான சட்ட தரணிகள்” என்ற தன்னார்வக் குழுவினைச் சேர்ந்தவர்கள்.

ஏ.கே.கங்குலி
நீதிபதி ஏ.கே.கங்குலி

வழக்கறிஞர் எம்.எல். சர்மாவும், அரசு வழக்குரைஞர் வாகன்வாதியும் இந்த குற்றச்சாட்டைப் பற்றி உச்சநீதி மன்றத்தில் முறையிட்டனர். முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி மீதான் பாலியல் புகாரை தானே முன்வந்து விசாரிப்பதன் அடிப்படையில் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான உச்சநீதி மன்ற பெஞ்ச் அதற்காக மூன்று நீதிபதிகள் அடங்கிய ஒரு விசாரணைக் குழுவை நவம்பர் 12 அன்று அமைத்தது.

நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எல். தத்து, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய அக்குழுவின் முன் அப்பெண் தன் வாக்குமூலத்தையும், மூன்று பிரமாண பத்திரங்களையும் தாக்கல் செய்தார். 2012-ல் மேற்கு வங்காள தேசிய நீதித்துறை மற்றும் அறிவியல் பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டு படிப்பின் போது நீதிபதி ஒருவரிடம் பயிற்சி மேற்கொள்ளும் பொருட்டு தற்போது ஓய்வுபெற்று விட்ட உச்சநீதி மன்ற நீதிபதி ஏ.கே. கங்குலியிடம் தான் பணிக்கு சேர்ந்ததாகவும், பாலியல் ரீதியாக தொல்லைப்படுத்தியது அவரே என்பதையும் விசாரணையில் அவர் பதிவு செய்யவே, விசாரணைக் குழுவினர் கங்குலியையும் அழைத்து அவரது வாக்குமூலத்தையும் பதிவுசெய்தனர்.

தற்போது அம்மாணவி பயின்ற கொல்கத்தா சட்ட பல்கலையில் கங்குலி ஒரு கவுரவ பேராசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விசாரணைக்கு பின் கங்குலி தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை செய்தியாளர்களிடம் முழுதுமாக மறுத்தார். நவம்பர் 28-ம் தேதி விசாரணைக் குழு தனது விசாரணை அறிக்கையை உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியிடம் அளித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 3-ம் தேதி உச்சநீதி மன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற கங்குலி தற்போது மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார். “கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி இரவு தில்லியின் உயர்தர ஐந்து நட்சத்திர விடுதியொன்றில் பலத்த போலீசு பாதுகாவலுடன் தங்கியிருந்த நீதிபதி கங்குலி அறைக்கு சென்ற தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார்” என்பதுதான் அவர் மீதான ஸ்டெல்லா ஜேம்சின் குற்றச்சாட்டு. அவர் பதவி விலக வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரசு கட்சியின் எம்.பி. கல்யாண் முகோபாத்யாயா, பாரத் பச்சோ சங்கதன் என்ற தன்னார்வக் குழுவினர் உள்ளிட்ட பல்வேறு பெண்கள் அமைப்பினர்கள் தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்த போதும், பதவி விலகுவது பற்றி தான் இதுவரை முடிவு செய்யவில்லை எனத் திமிராக அறிவித்து விட்டார் நீதிபதி ஏ.கே.கங்குலி.

சோலி சொராப்ஜி
முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி

“கங்குலி ராஜினாமா செய்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும்” என்று வக்கீல் வண்டுமுருகனாக வந்து நிற்கிறார் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி. குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்பதை கங்குலி தெளிவுபடுத்தி விட்டதாகவும், எனவே ராஜினாமா செய்வதற்கு அவசியமோ, தேவையோ இல்லை என்றும், கங்குலி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும் கங்குலிக்கு ஆதரவாக சொராப்ஜி களமிறங்கியுள்ளார். “முக்கிய பதவியில் இருப்பவர் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் தங்களது பதவியில் இருந்து விலகி நடைபெறும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பது கட்டாயம் ஒன்றும் இல்லை” என்றும், சம்பவம் நடந்த நாளுக்கும், புகார் கொடுத்த நாளுக்குமிடையில் நீண்ட இடைவெளி இருப்பதையும் சுட்டிக்காட்டி, அப்பெண்ணுக்கு இருக்கும் உள்நோக்கம் இன்னதுதான் எனத் தெளிவாக தெரியாத காரணத்தால் அதனை தலைமை நீதிபதிதான் விசாரித்து அறிய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீண்ட இடைவெளி ஏன்? என்ற ஒற்றைக் கேள்வியின் பின்னால் குற்றவாளிகளை ஒளித்து வைக்கும் வேலையை சோலி சொராப்ஜி போன்ற மூத்த வழக்கறிஞர்கள் துவங்குவது தான் அப்பெண்ணின் நீண்ட மௌனம் மற்றும் இடைவெளிக்கு காரணம் அவருக்கும் தெரியாமல் இல்லைதான். இதுபோன்ற அவதூறுகளுக்கும், பாதிக்கப்பட்ட பெண்களின் தனிப்பட்ட ஒழுக்கம் குறித்த ஆணாதிக்க வக்கிரம் நிறைந்த கேள்விகளுக்கும், பதில்களுக்கும் பயந்துதான் பல பெண்களும் பாலியல் வல்லுறவே நடைபெற்றாலும் அதுபற்றி பொதுவெளியில் தங்களது வாயைத் திறப்பதேயில்லை.

உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு வந்துபோகும் வாய்ப்புள்ள பெண்ணுக்கே அது வாய்ப்பூட்டு போட்டுள்ளதை பார்த்து ஜனநாயகத்தை நம்புவோர் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.

தற்போது வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்ட இரண்டு வார கால இடைவெளியில் தன்னை தவறான நோக்கம் கொண்ட பெண்ணாக சித்தரிக்க விசாரணையின் போது முயற்சிகள் நடப்பதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார் ஸ்டெல்லா ஜேம்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.  ஒரு சட்ட மாணவிக்கு புகாரை முன்னரே தெரிவிக்க வேண்டும் என்பது கூடவா தெரியாதா? என்ற ரீதியில் நீதிபதிகளின் விசாரணைகள் தன்னிடம் நடந்ததாகவும் கூறியிருந்தார்.

இவரைப் போலவே மூன்று பெண்கள் நீதிபதி கங்குலியால் பாலியல்ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் யாரும் தங்களது எதிர்கால நலனைக் கருதி புகார் தெரிவிக்க முன்வரவில்லை என்றும் வலைப்பூவில் எழுதியிருந்தார். அவர்கள் அனைவரும் உச்சநீதி மன்ற வழக்கறிஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட இரு பெண் வழக்கறிஞர்களை சந்தித்த போதும் அவர்கள் ஸ்டெல்லா போல தைரியமாக வெளியில் வந்து பேசத் தயங்கியதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

தனக்கு தெரிந்த நான்கு பெண்கள் பிற நீதிபதிகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார். தானறிந்த உச்சநீதி மன்ற பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு அவரது மூத்த வழக்கறிஞர் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் தனது மூத்த வழக்கறிஞரிடமிருந்து தொடர்ச்சியான கடும் பாலியல் தொல்லையை எதிர்கொண்ட அவரது தோழி அங்கே வேலையிலிருந்து விலகினாராம். அதன்பிறகு அவருக்கு எந்த வேலையும் சரியாக கிடைக்கவில்லை என்றும், வேலைக்கான எல்லா நேர்காணல்களிலும் அச்சம்பவம் பற்றியே எல்லோரும் கேட்பதால் அவரால் எந்த இடத்திலும் வேலைக்கு சேர முடியாத இக்கட்டான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏ.கே. கங்குலி பதவி விலகினால் அது ஒரு தவறான முன்னுதாரணமாகி விடும் என்கிறார் சோலி சொராப்ஜி. 2012 டிசம்பரில் தேசமே தில்லியில் ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மருத்துவ மாணவிக்கு ஆதரவாக போராடிக் கொண்டிருந்தது. இந்த நிலையிலும் கூட தன்னிடம் பயிற்சிக்கு வந்த சட்ட மாணவி மீதான கங்குலியின் பாலியல் அத்துமீறலில் ‘தனக்கு மேலே யாருமில்லை’ என்ற உச்சநீதி மன்ற நீதிபதி ஒருவரின் அதிகாரத் திமிராகத்தானே வெளிப்படுகிறது.

”நான் அப்பெண்ணை உடல்ரீதியாக துன்புறுத்தவில்லை” என்று சட்ட ஓட்டையை பயன்படுத்தி லாவகமாக தப்பிக்க முயற்சிக்கிறார் கங்குலி. தன்னிடம் வேலை பார்க்கும்போது இத்தகைய குற்றச்சாட்டுக்களை அப்பெண் முன் வைக்கவில்லை என்றும், தன் மீதான குற்றச்சாட்டை தருண் தேஜ்பால் பாலியல் வல்லுறவு சம்பவம் போன்ற பிற வழக்குகளுடன் ஒப்பிட வேண்டாம் என்றும், கங்குலி செய்தியாளர்களிடம் ‘வேறுபடுத்தி’ கூறியிருக்கிறார்.

தன்னிடம் முதலில் பயிற்சிக்கு வந்த மாணவி பேறுகால விடுப்பில் சென்று விட்ட பிறகு, இந்தப் பெண் தானாக முன்வந்துதான் பயிற்சிக்கு சேர்ந்தார் என்றும், எப்போதுமே தன்னிடமிருந்து விலக அவருக்கு சுதந்திரம் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் கங்குலி. தன்னிடம் இதுபோல பயிற்சி பெற முன்னர் வந்துள்ள பல இளம் வழக்கறிஞர்களையும் தனது குழந்தைகளைப் போலவே தாம் நடத்தியுள்ளதாகவும், இந்தக் குற்றச்சாட்டால் தான் முதலில் அதிர்ச்சியடைந்ததாகவும், பின்னர் உள்ளுக்குள் மிகவும் உடைந்து போனதாகவும் கூறியுள்ளார். சூழ்நிலையால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இக்குற்றச்சாட்டுகளினால் தான் உண்மையில் வெட்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் பயின்ற மாணவர்கள் பலர் இன்று நல்ல நிலைமையில் இருப்பதாகவும், அவர்களில் யாரும் இதுவரை இப்படியொரு புகாரை தன் மீது சுமத்தவில்லை என்றும் கூறியுள்ளார். தன் மீதான அப்பெண்ணின் பாலியல் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் உறுதியாக கூறிய அவர், தான் இதனை விசாரணைக் கமிட்டி முன் தெளிவுபடுத்தி விட்டதாகவும், இப்படி நீதிபதிகள் மீது புகார் தெரிவிக்கப்படும் பட்சத்தில் அதனால் நீதித் துறைக்குதான் கடுமையான பாதிப்பு என்றும் எச்சரித்திருந்தார்.

”என்னுடைய வீட்டுக்கு பலமுறை அப்பெண் வந்துள்ளார். என்னுடன் இரவு உணவு கூட சாப்பிட்டிருக்கிறார். தன்னுடைய இணைய பக்கத்தில் கூட என்னை மிகவும் மதிப்பதாகத்தான் சொல்லி இருக்கிறார். முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார். என் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த பிறகு அவரிடம் இரண்டு முறை பேச முயன்றேன். ஆனால் அவர் பேச மறுத்து விட்டார். என் மகளைப் போலதான் அப்போது அவரை நடத்தினேன்.  நீதிபதிகள் மீது இப்படியான புகார்களை எழுப்பினால் நாங்கள் பணி புரிவதே கடினம். இந்நிலைமை நீடித்தால் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை போய் விடும்” என்றும் வருத்தப்பட்டிருக்கிறார் கங்குலி.

இதற்கு அப்பெண் ”விடுமுறை நாளில் கூட வந்து ஆர்வத்துடன் பயிற்சி பெற்ற எனக்கு பாலியல் அத்துமீறல்தான் பரிசாக கிடைத்தது. என் தாத்தா வயதில் இருந்த சமீபத்தில் ஓய்வுபெற்ற  உச்சநீதி மன்ற நீதிபதி ஒருவர் விடுதி அறையில் நடந்து கொண்ட விதம் எனக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. உடனே பலரும் பார்த்திருக்க நான் விடுதியின் அறையிலிருந்து தனியாகவும், அமைதியாகவும் வெளியேறி வந்தேன். யாரிடமும் இதுபற்றி அப்போது சொல்லவில்லை. அந்த கசப்பான நினைவுகளை இப்போதும் என் நினைவுகளிலிருந்து அகற்ற முடியவில்லை” என்கிறார். சட்டத்தின் மூலம் வாழ்வின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையை விதைத்த ஐந்தாண்டு கால சட்டப் படிப்பும், நடைமுறையில் தேவையான சட்டங்கள் இல்லாத போது வீண்தான் என்பதை சொந்த அனுபவத்தில் தான் கண்டு கொண்டதாகவும், பெரிய பதவியில் இருப்பவரை எதிர்ப்பது குறித்து முதலில் தயங்கியதாகவும், இக்குற்றச்சாட்டு வழியாக குற்றவாளிகளின் முழுமையை புரிந்து கொள்ள முயற்சிக்க கூடாது என்பதற்காகவும் இதுவரை, தான் அமைதி காத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது நெருங்கிய நண்பர்களே நகைச்சுவை என்ற பெயரில் இச்சம்பவம் பற்றி தன் மனது புண்படும்படி பேசியதையும் குறிப்பிட்டிருந்தார். இதுபோன்று ஆண்களின் அத்துமீறல்கள் நடக்கும் சூழலில் பாதிக்கப்படும் தன்னைப் போன்ற பெண்கள் எந்த விதமாக எதிர் வினையாற்ற வேண்டும் என்ற கோபமான தன் கேள்வியோடு முடிக்கப்பட்டுள்ள அக்கட்டுரையின் துவக்கத்தில், எழுதுவதன் நோக்கமாக தன்னைப் போல பிற பெண்கள் பாதிக்கப்படாமல் இருக்கவே என்றும் சொல்லியிருந்தார்.

பாஜகவின் சுஷ்மா சுவராஜும் ஏ.கே.கங்குலியை மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தியுள்ளார். ‘சீசரின் மனைவியைப் போலவே சீசரும் குற்றமற்றவறாக இருக்க வேண்டும்’ என்று கூறி இதனை வலியுறுத்தியுள்ள சுஷ்மா. சீசரை இளம்பெண்ணை வேவுபார்த்த மோடிக்கு பொருத்துவாரா எனத் தெரியவில்லை. அவரது கட்சியின் சு.சாமி கூறுகையில் கங்குலி மீதான குற்றச்சாட்டுக்காக அவர் பதவி விலகத் தேவையில்லை என்றும் கூறுகிறார். அதாவது நேர்மையான நீதிபதிகளை, ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக துணிந்து செயல்படும் நீதிபதிகளை களங்கப்படுத்தவே இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் எழுவதாக குற்றம்சாட்டுகிறார் சு.சாமி. இப்படி நியாயப்படுத்தா விட்டால் ஜெயேந்திரனது வக்கிரங்களுக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்குமல்லவா!

2ஜி வழக்கினை விசாரித்த போது சி.பி.ஐ.யிடமே கண்டிப்பான முறையில் நடந்துகொண்ட ஒரு நேர்மையான நீதிபதி. அவர் இப்படி செய்திருப்பார் என்பது நம்பும்படியாகவே இல்லை என்பது சு.சாமி உள்ளிட்ட பலரது வாதம். காரணம் விசாரணை முடிந்த பிறகும் 2ஜி வழக்கில் சிதம்பரத்தை மேலும் விசாரிக்க கோரி சு.சாமி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சட்டத்தை மீறியே கங்குலிதான் ஏற்றுக் கொள்ளச் செய்து, லட்சுமண ரேகையை மீறுவதால்தான் ராமாயணம் பிறக்கிறது என்று அதற்கு தத்துவ விளக்கம் வேறு சொன்னார்.

அல்டமாஸ் கபீர்
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர்.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகளில் ஒருவரான அல்டமாஸ் கபீர் கூறுகையில் ”கங்குலி மீதான குற்றச்சாட்டை நான் ஒரு போதும் நம்பவில்லை” என்று கங்குலிக்கு ஆதரவாகவே கொடி பிடித்துள்ளார். சென்னை உயர்நீதி மன்றத்திலும் தலைமை நீதிபதியாக 2008-ல் மே முதல் டிசம்பர் வரை கங்குலி இருந்துள்ளார்.

தனக்கு மேல் முறையிட ஒரு நீதிமன்றம் இல்லை என்பதால் தாங்கள் இந்திய அளவில் உச்சபட்ச நீதித்துறை அமைப்பாக இருப்பதாக உச்சநீதி மன்றமே தெரிவித்துள்ளது. 1997-ல் பன்வாரி தேவி மீதான பாலியல் வல்லுறவு வழக்கின் மூலம் பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்க உச்சநீதி மன்றம் அனைத்து அரசு, தனியார் பணியிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் வழிகாட்டியுள்ளது. ஆனால் உச்சநீதி மன்றத்திலேயே நடைபெறும் பாலியல் அத்துமீறல்களைப் பற்றி விசாரிக்க இந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதிதான் உச்சநீதிமன்றம் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது.

உச்சநீதி மன்றத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் நீதிபதிகள் ஊழல் வழக்கில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல. எந்த நீதிபதியையும் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை கொண்டுதான் பதவி விலக்க முடியும் என்கிறது சட்டம். இதனால் தமிழகத்தின் ராமசாமி உள்ளிட்ட பல நீதிபதிகள் தப்பியிருக்கின்றனர். நியாயமாகவும், நேர்மையாகவும் நீதிபதிகள் நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை இதுவரை நீதிமன்றத்தை திரைப்படங்களில் பார்ப்பவர்களுக்கு மட்டும் வேண்டுமானால் இருக்கலாமே தவிர, அன்றாடம் வாய்தாக்களுக்கு அலையும் மக்களுக்கு எள்ளளவும் இல்லை.

பார்ப்பனீயமும், ஆணாதிக்கமும், அதிகார வர்க்கமும் சேர்ந்தியங்கும் இந்திய நீதித்துறை அமைப்பில் சாமானியர்களுக்கோ, சிறுபான்மையினருக்கோ, தாழ்த்தப்பட்டவர்களுக்கோ நீதி கிடைத்து விடுவதில்லை. அதனால்தான் காஞ்சி சங்கராச்சாரி என்ற கொலைகாரன் விடுவிக்கப்படுவதும், பதானி டோலா மற்றும் லட்சுமண்பூர் பதேவின் ஆதிக்கசாதி கொலையாளிகள் விடுதலையாவதும் நடக்கிறது. மறுபுறம் சிறுபான்மை இசுலாமியர்கள் எவ்வித ஆதாரமுமில்லாமல் கலவர வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு விசாரணையில்லாமல் சட்டவிரோதமான முறையில் நீண்ட காலம் சிறையில் வாடுகிறார்கள்.

இப்பேற்பட்ட உச்சநீதிமன்றத்தில் பாலியல் வக்கிரத்திற்கு ஆளான ஒரு பெண்ணுக்கு மட்டும் நீதி கிடைத்து விடுமா என்ன?

–    வசந்தன்

பாஜகவிற்கு தீயாய் வேலை செய்யும் வதந்திக் கம்பெனிகள் !

22

ந்தப் புகைப்படத்தில் இருந்தது ஒரு பேருந்து நிறுத்தம். நல்ல பளபளப்பான சாலையும், பயணிகள் காத்திருப்பதற்கான ஏற்பாடுகளும் தேர்ந்த ஓவியரால் வரையப்பட்ட சித்திரம் போல் அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. அந்தப் புகைப்படத்தின் கீழே இவ்வாறாக எழுதப்பட்டிருந்தது – “இது என்ன சிங்கப்பூரா? இல்லை சார், இது புனர் நிர்மாணிக்கப்பட்ட (இந்த வார்த்தையை MODI-FIED என்று எழுதுகிறார்கள்) அகமதாபாத். இதற்காகத்தான் குஜராத் மக்கள் (இந்துக்களும் முசுலீம்களும்) கூலிக்கு மாரடிக்கும் பத்திரிகைகள் சொல்வதற்கு மாறாக மோடியை மதிக்கிறார்கள்”

மோடியின் புகழ்
சமூக வலைத்தளங்களில் கட்டியமைக்கப்படும் மோடியின் புகழ்.

மேற்படி புகைப்படம் முகநூலில் பல லட்சம் பேர்களால் பகிரப்பட்டது. அசகாய சூரர் மோடியின் இந்த சாதனையை பல்லாயிரக்கணக்கானோர் பின்னூட்டங்கள் மூலம் விதந்தோதிக் கொண்டிருந்தனர். எல்லாம் ’சிறப்பாக’ போய்க் கொண்டிருந்த போது பலூன் பட்டென்று உடைந்தது. அந்தப் புகைப்படத்தில் இருப்பது அகமதாபாத் இல்லையென்றும் சீனத்தின் குவாங்சௌ மாகாணத்தில் உள்ள பேருந்து நிலையமென்றும், இங்கே செய்யப்பட்டிருப்பது மலிவான ‘வெட்டி ஒட்டும்’ வேலை என்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமானது.

செய்யப்பட்டருந்த ‘ஒட்டு’ வேலையின் தரம் பற்றி சொல்லியாக வேண்டும். புகைப்படத்தில் காட்டப்பட்டிருந்த பேருந்துகளில் ஓட்டுநர் இருக்கை இடப்புறமாக அமர்ந்திருந்தது. இந்தியாவிலோ இடது போக்குவரத்து முறை இருப்பதால் வாகனங்களில் ஓட்டுநர் இருக்கை வலப்புறமாகவே அமைந்திருக்கும். இதைக் கூட கவனிக்காமலா இத்தனை லட்சம் பேர் இதை பரப்பியிருக்கிறார்கள் என்ற ஆச்சர்யம் மேலிட்டது எனக்கு. ஆச்சர்யங்கள் அதோடு முடியவில்லை. இந்த ஓட்டு வேலை அம்பலமானதைத் தொடர்ந்து இணைய விவாதங்கள் எப்படி நடந்து கொண்டிருக்கின்றன என்பதை கவனித்துக் கொண்டிருந்தேன். ஆச்சர்யம் – நூற்றுக்கணக்கானோர் மோடியை ஆதரித்து சளைக்காமல் மறுமொழி இட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் உதாரணத்திற்கு ஒன்றைப் பாருங்கள் –

“சரி, இப்ப என்ன? அது அகமதாபாத் இல்லை சீனா தான். போட்டோஷாப் தான் (ஒட்டு வேலை) செய்திருக்காங்க. இருக்கட்டுமே? இப்பல்லாம் யார் தான் போட்டோஷாப் செய்துக்கலை? நீங்க ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்தா கூட லேசா அங்கங்க டச்சப் பண்ணி தானே கடைசியா பிரிண்ட் அவுட் எடுக்கறீங்க? உலகப் புகழ் பெற்ற மாடல் அழகிகளின் புகைப்படங்கள் கூட ஒட்டு வேலை செய்து தானே வருது? அது இருக்கட்டும், நீங்க ஏன் இன்னொரு கோணத்தில் யோசிக்க கூடாது? ஒரு வேளை மோடியின் அகமதாபாத் பேருந்து நிலையத்தைப் பார்த்து அதில் ஒட்டு வேலை செய்து தன்னோட நாட்டுடையது என்று சீனாக்காரன் சொல்லியிருக்கலாமில்லே? நீங்க ஏன் அந்தக் கோணத்தில் பார்க்கலை?”

உண்மையில் சொல்லப் போனால் அசந்து போய் விட்டேன். மோடியின் பிரச்சாரங்களை ஆப்கோ என்கிற அமெரிக்கர்கள் ஒழுங்கமைத்து வருவதையும், கூலிக்கு ஆளமர்த்தி இணையப் பிரச்சாரங்களில் ஈடுபடுத்தியிருப்பதையும், இணையத்தில் மோடிக்காக கூவுபவர்கள் பலர் கூலிகள் என்பதையும், அவர்கள் சொல்வதில் நூற்றுக்கு நூறு அத்தனையும் பொய்கள் என்பதையும் நான் ஏற்கனவே அறிந்தே வைத்திருந்தேன். இவ்வளவு தெரிந்திருக்கும் நம்மையே அசரடிக்கிறார்களே, விவரம் புரியாத அப்பாவி கோயிந்துகளின் நிலைமை எப்படியிருக்கும் என்று யோசித்துக்கூட பார்க்கமுடியவில்லை.

கோப்ராபோஸ்ட்
அரசியல் எதிரிகளை அவதூறு செய்வதற்கு பேஸ்புக்/டுவிட்டர்.

மோடிக்காக மேற்படி பிரச்சாரங்கள், மேற்படி நபர்களால், மேற்படி முறைகேடான வழிகளில் செய்யப்பட்டு வருவது அனேகம் பேருக்குத் தெரியும் என்றாலும், அத்ன் முழுமையான பரிமாணத்தை கோப்ராபோஸ்ட் தனது இரகசிய கேமராவில்இரகசியமாக பொறிவைத்துப் பிடித்து வெளியிட்டுள்ளது. இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக இரகசியமாக இயங்கி வரும் ”இணைய பிம்ப மேலாண்மை” (ONLINE REPUTATION MANAGEMENT – ORM) சேவை வழங்கி வரும் நிறுவனங்களிடம் எதிர்கட்சியைச் சேர்ந்த கற்பனையானதொரு இரண்டாம் கட்ட தலைவரின் செல்வாக்கை உயர்த்தச் சொல்லி கேட்பது என்கிற முகாந்திரத்தில் கோப்ராபோஸ்ட் இணையதளத்தின் சையது மஸ்ரூர் ஹசன் இந்த இரகசிய விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்.

இணைய பிம்ப மேலாண்மை சேவையை வழங்கி வரும் சுமார் இரண்டு டஜன் நிழல் நிறுவனங்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது இரகசிய கேமரா பதிவொன்றில் மேற்படி நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த பிபின் பத்தாரே சொல்வதைக் கேளுங்கள் –

”இதோ நம்ம ப்ரவீன் ஜாரா தேர்தல்ல ஜெயித்தாரில்லே… அதுக்கு நாங்க என்ன செஞ்சோம் தெரியுமா? அவரோட தொகுதில சில முசுலீம் வாக்காளர்கள் இருந்தாங்க. முசுலீம்கள் இவருக்கு ஓட்டுப் போட மாட்டாங்கன்னு எங்களுக்குத் தெரியும். ஒரு பகுதியில சுமார் 60 சதவீத அளவுக்கு முசுலீம் ஓட்டுக்கள் இருந்தது. நாங்க என்னா செஞ்சோம்னா… ஒரு கலவரத்தை உருவாக்கிட்டோம். அவங்க ஆள் ஒருத்தனையே பிடிச்சி ஒரு கையெறி குண்டை வெடிக்க வச்சிட்டோம். ஓட்டுப்பதிவு நாளன்னிக்கு அவங்க ஆளுங்க ஒரு பய வெளியே வரலையே.. அந்த 60 சதவீத ஓட்டுக்களையும் அப்படியே அமுக்கிட்டோம். இந்த மாதிரியெல்லாம் எங்களால செய்ய முடியும்”.

இவர்கள் கரங்கள் நீளும் எல்லை மெய் நிகர் உலகமான இணையம் மாத்திரமல்ல; நேரடியாக களத்தில் இறங்கி கலவரங்களை ஒழுங்கமைத்து நடத்துவது, அதற்காக உள்ளூர் ரவுடிகளோடு கூட்டணி வைத்துக் கொள்வது என்று மெய் உலகத்தினுள்ளும் சர்வசாதாரணமாக நீள்கிறது. சுதந்திரமான தேர்தலை நடத்த உள்ளூர் போலீசு படையிலிருந்து மத்திய ஆயுதப் படைகள் வரைக்கும் இறக்குகிறோம் என்று தேர்தல் பாதுகாப்பு  குறித்து பீற்றிக் கொள்வதன் லட்சணம் இது தான். தேர்தல் காலங்களில் சாதாரண சுவரெழுத்து எழுதக் கட்டுப்பாடுகள் எனும் பெயரில் தடை விதிக்கும் தேர்தல் ஆணையமோ, தேர்தல் வெற்றிக்காக மத அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்துவதைக் கண்டு கொள்வதில்லை.

யாரிடம் காசு வாங்குகிறார்களோ, அவர் சார்பாக முகநூல் உள்ளிட்ட சமூக வளைத்தளங்களில் பக்கங்களை உருவாக்குவது, லட்சக்கணக்கான போலி கணக்குகள் துவங்கி அந்த பக்கங்களைத் தொடரச் செய்வது என்பதெல்லாம் இந்த துறையில் இவர்கள் செய்யும் அடிப்படை வேலைகள். சம்பந்தப்பட்ட தலைவரைப் பற்றி பல்வேறு துதிபாடல்களை உருவாக்குவது, அதை லட்சக்கணக்கில் பரப்புவது மட்டுமின்றி அந்த தலைவரின் அல்லது அந்தக் கட்சியின் எதிர்தரப்பைப் பற்றி வதந்திகளை உருவாக்கவும் செய்கிறார்கள்.

ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள், எந்த வார்டில் எத்தனை வாக்காளர்கள், அவர்களின் இன, மத, மொழிவாரியான துல்லியமான சதவீதக் கணக்குகளை கையில் வைத்திருக்கிறார்கள். இவற்றைக் கொண்டு ஒரு போட்டியாளருக்கு சாதகமான ஓட்டுக்களை அறுவடை செய்ய என்ன விதமான வதந்திகளை உருவாக்குவது, எப்படிக் கலவரத்தைத் தூண்டி ஒரு பிரினரை ஓட்டளிக்காமல் செய்வது, கலவரங்களின் மூலம் ஓட்டுக்களை மதரீதியாகவும் சாதிரீதியாகவும் எப்படி பிளவுபடுத்துவது – இதிலிருந்து ஆதாயம் பெறுவது எப்படி என்பது வரை துல்லியமான திட்டங்கள் இவர்களிடம் உள்ளன.

வருமான வரிச் சட்டம், இணையத்திற்கான சைபர் சட்டம், மதக் கலவரங்களைத் தடுப்பதற்கு என்று பேரளவுக்கு உள்ள அனைத்து விதமான சட்டப்பிரிவுகளையும் மிகச் சாதாரணமாக மீறிச் செயல்படும் இவர்களின் கையில் இத்தனை துல்லியமான தகவல்களும் புள்ளி விவரங்களும் இருந்தால் என்னவாகும் என்பதை 2002 குஜராத் கலவரத்திலிருந்தே நாம் புரிந்து கொள்ள முடியும். தற்போது அதை கச்சிதமாக அறுவடை செய்வதன் வழியை இந்த நிறுவனங்கள் செய்து கொடுக்கின்றன.

தில்லியைச் சேர்ந்த வெப்ஸ்ட்ரீக்ஸ் என்கிற பிம்ப மேலாண்மை நிறுவனத்தின் விஷால் சைனி என்பவர் இரகசிய கேமராவின் முன் தெரிவித்திருக்கும் கருத்தின் படி, ஒரு வீடியோவை யூட்யூப் இணையதளத்தில் வைரலாக பரப்புவதன் மூலம் சமூகத்தையே இரண்டாகப் பிளப்பது வெகு சாதாரணமாக சாதிக்க முடியும் வேலை தான் என்பதாகும். வைரல் மார்க்கெட்டிங்குக்குஅதற்கு உதாரணமாக சமீபத்தில் நடந்த முசாபர்நகர் மதக்கலவரத்தைக் காட்டுகிறார். VIRAL  என்பது ஏதேனும் ஒரு விஷயத்தை இணையத்தில் திடீரென்று பிரபலமாக்கி லட்சக்கணக்கில் பரப்பி, பரபரப்பூட்டுவது. இதைக் கட்டண சேவையாகவே முகநூல் உள்ளிட்ட சமூக வளைத்தளங்கள் செய்து வருகின்றன.

இது போன்ற நிழல் நிறுவனங்கள் சமூக வலைத்தளங்களோடு நெருக்கமாக கூட்டணி வைத்துள்ளன. சமூக வலைத்தளங்களில் எந்த விதமான செய்திகளை, யார், எதற்காக வாசிக்கிறார்கள். வாசிப்பவர்களின் வயது, பால், மொழி, பிராந்தியம் உள்ளிட்டவைகளை கட்டணத்திற்காக பெற்றுக் கொள்கிறார்கள். அதனடிப்படையில் மொழி, இன, மத, சாதி, பிராந்திய அடிப்படையிலான அணுகுமுறையை வகுத்துக் கொள்கிறார்கள். அதற்கு ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்,

நரேந்திர மோடியை இசுலாமியர்களுக்குப் பிடிக்காது. இது ஒரு உண்மை. நரேந்திர மோடி பிரதமராக வேண்டுமென்றால் அவர் மேல் படிந்திருக்கும் இந்துத்துவ முத்திரையை போக்கி அனைத்து மக்களுக்குமான தலைவர் என்கிற பிம்பத்தை உருவாக்க வேண்டும். இதுவும் ஒரு உண்மை. இப்போது பிம்ப மேலாண்மை நிழல் நிறுவனங்கள் என்ன செய்வார்கள் என்பதை வெப்போலாக்ஸ் என்கிற பிம்ப மேலாண்மை நிழல் நிறுவனத்தின் தலைவர் ரவி அகர்வால் என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள் – “மோடியின் இரசிகர்களாக முசுலீம்கள் இருப்பது போல சில போலிக்கணக்குகளைத் துவங்கி மோடி புகழ்பாட வேண்டும். என்றாலும் அந்த மாதிரி நிறைய முசுலீம்கள் இருப்பது போலும் தெரியக் கூடாது, இல்லாதது போலும் தெரியக்கூடாது”

லைக்குகள்
எத்தனை லைக்குகள் வேண்டும்?

நரேந்திரமோடியின் புகழ் பரப்பும் வேலையை காண்டிராக்டாக பெற்ற ஒரு நிறுவனம் அதை மட்டும் செய்யக் கூடாது. எதிரிகள் பற்றி வதந்தி கிளப்ப வேண்டும், மோடிக்கு எதிராக இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்குச் சென்று காட்டமாக வாதிட வேண்டும், மோடியின் பொய்கள் அம்பலமாகும் இணைய தளங்களுக்குச் சென்று சப்பைகட்டு கட்ட வேண்டும், மோடிக்கு எதிராக செயல்படுபவர்களை இழிவு படுத்த வேண்டும். இதற்காக இவர்கள் எந்த எல்லைகளுக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள். அந்த எல்லைகள் உங்கள் கற்பனைகளையெல்லாம் கடந்த ஒன்று.

இதோ பெங்களூரைச் சேர்ந்த ட்ரையாம்ஸ் என்கிற நிழல் நிறுவனத்தைச் சேர்ந்த த்ரிகாம் பட்டேல், மோடியை அரசியல் ரீதியாக எதிர்ப்பவர்களையும் மோடி எதிர்ப்பு பத்திரிகையாளர்களையும் எப்படிக் கையாள்வது என்பது பற்றிச் சொல்வதைக் கேளுங்கள் – “அதுக்கெல்லாம் உங்களுக்கு ஒரு சாத்தானின் மூளை வேணும். அதெல்லாம் ரவுடிகள் பார்த்துக்குவாங்க. எனக்கு சில தனியார் துப்பறியும் நிறுவனங்களைத் தெரியும். அவங்க ஆட்கள் ரெண்டு பேரை விட்டு இவனை நெருக்கமா கண்காணிக்கனும். இவனோட விருப்பம் என்ன, எங்கேருந்து வந்தான், எங்கெல்லாம் போறான், அவனோடு தனிப்பட்ட விருப்பங்கள் என்ன….. இந்த மாதிரி இவனோட தனிப்பட்ட தகவல்களை எங்க தகவல் கிடங்கில் சேர்த்து வச்சிக்குவோம்”

இவ்வாறாக சேகரிக்கப்படும் தகவல்கள் மோடி எதிர்ப்பாளர்கள் மேல் ஏதாவது ஒரு எதிர்பாராத சந்தர்ப்பத்தில் பாய்ந்து நிலைகுலைய வைக்க கூடும்.

இவையொரு பக்கம் இருக்க, மோடியின் புகழ்பாடுவதற்காக வாங்கும் காசில் புகழ் பாடுவது மற்றும் எதிரிகளை வசைபாடுவது என்பதைக் கடந்து, ஒரு சில மோடி ’எதிர்ப்பு’ இணையதளங்களையும் இவர்களே நடத்துகிறார்கள். தவறான தரவுகளின் அடிப்படையில் மோடி எதிர்ப்புக் கட்டுரைகளை இவர்களே வெளியிடுகிறார்கள். பின் இவர்களே பல நுற்றுக் கணக்கான பெயர்களில் வந்து அந்த செய்தியை ஆதாரப்பூர்வமாக ‘அம்பலப்படுத்துகிறார்கள்’. மோடியை எதிர்ப்பவர்கள் எல்லாம் இப்படித்தான் சரியான தகவல்கள் இன்றி அவதூறாக எழுதுவார்கள் என்பதை இதன் மூலம் பரவலாக பிரச்சாரம் செய்து கொள்கிறார்கள்.

காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இவர்களின் சேவையை பெற்றுக் கொள்வதாக கோப்ராபோஸ்டின் இரகசிய விசாரணையில் இருந்து தெரிய வருகிறது. மற்ற எல்லாக்கட்சிகளைக் காட்டிலும் பாரதிய ஜனதாவும், பிற எல்லா தலைவர்களைக் காட்டிலும் மோடியுமே பிம்ப மேலாண்மை சேவை நிறுவனங்களுக்கு கோடிகளைக் கொட்டிக் கொடுப்பதில் முன்னணியில் இருக்கிறார்கள். பாரதிய ஜனதாவின் சார்பில் தான் இந்த நிறுவனங்களுக்கு ஏராளமான வருவாய் கிடைப்பதாகச் சொல்கிறார்கள். என்றாலும், என்.ஜி.ஓக்கள், அரசு அலுவலர்கள், பெரும் கார்ப்பரேட்டுகளும் கூட இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிய வருகிறது.

ஒரே நிறுவனமே, மோடி சார்பாக ஒரு காண்டிராக்டையும் காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மி சார்பாக ஒரு காண்டிராக்டையும் பெற்று வேலை பார்த்தும் வருகிறார்கள். ஒவ்வொரு தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தவும் தனித்தனி சர்வர்களை அமைத்துள்ளார்கள். என்றாலும், கூவுபவர்கள் ஒரே கூலிகள் தான். அதாவது, ஒரு கூலியின் மேசையில் வலது பக்கம் வைக்கப்பட்டிருக்கும் லேப்டாப்பில் மோடிக்கு ஆதரவாக ராகுலை ஏசி ஒரு மறுமொழியைப் போட்டு விட்டு அதே மேசையில் இடது பக்கமாக வைக்கப்பட்டிருக்கும் லேப்டாப்பில் ராகுலுக்கு ஆதரவாக மோடியை ஏசி ஒரு கமெண்டு போடுவது இவர்களின் அன்றாடப் பணி.

மொத்தமும் மேட்ரிக்ஸ் உலகம் ஒன்றினுள் நுழைந்து விட்டதைப் போன்ற அனுபவமே நம்மைக் கவ்வுகிறது.காங்கிரசோ பாரதிய ஜனதாவோ இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஆனால், இப்படியாகச் செய்யப்படும் பிரச்சாரங்களும், அதன் மூலம் ஏற்படுத்தப்படும் செல்வாக்கும், மக்கள் கருத்தும் தான் ஒரு தேர்தலின் போக்கைக் கட்டுப்படுத்தும் என்றால் அந்த ஜனநாயகத்தின் யோக்கியதை எப்படியிருக்கும்?

இந்த அழுகுணி ஆட்டத்திற்காக மோடியைக் குறை சொல்வதில் பிரயோஜனமில்லை. இது தான் மோடி. இந்தப் பண்பு தான் இந்துத்துவத்தின் பண்பு. இது தான் இந்து சனாதன தர்மம் போதிக்கும் அறம். இது பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்ட ஒன்று தான். கருப்பையைப் பிளந்து குழந்தையை வெளியே இழுத்துக் கொன்றவர்கள் தான் இந்து தத்துவ ஞான மரபின் வாரிசுகள். இத்தாலி பாசிஸ்ட் கட்சியின் மாணவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூலவர்கள். நாடே சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருந்த போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வெள்ளையனின் காலை நக்கிக் கிடந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பெற்றெடுத்த கள்ளக் குழந்தையான பாரதிய ஜனதாவின் வழிமுறைகள் வேறு விதமாக இருந்தால் தான் நாம் அதிர்ச்சியடைய வேண்டும்!

பெங்களூரின் ஸ்ரீராம் சேனா காசு வாங்கிக் கொண்டு கலவரம் செய்து அம்பலப்பட்ட விசயம் ஏற்கனவே பலருக்கும் தெரியும். அதையே இப்போது கார்ப்பரேட் பாணியில் செய்யப் போகிறார்கள். நேற்றுவரை வதந்திகளை உருவாக்கி தனது இரத்த வேட்டையை நிறைவேற்றிய இந்துமதவெறியர்களுக்கு இப்போது தொழில்நுட்பம் உதவி செய்கிறது. இந்த அழுகுணி ஆட்டத்த்தை மக்களிடம் வேரறுக்காமல் எந்த மக்களுக்கும் நிம்மதி இல்லை.

–  தமிழரசன்

ரங்கநாதன் மாஸ்டர் – முருகேசன்

8

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் 7 – முருகேசன்

“இந்தப் பய கண்ணு ரெண்டையும் விட்டுப்புட்டு தொலிய உரிச்சிடிங்க சார். ஒரு சொல் பேச்சும் கேட்க மாட்டான். சரியான கல்லுளி மங்கன். கையால அடிக்காதீங்க சார்; நல்ல புளிய மிளாரு இருந்தா தான் இவனுக்கெல்லாம் சரிப்படும்”

இவ்வாறான புகழ் வார்த்தைகளோடு என்னை ரங்கநாதன் மாஸ்டரிடம் அறிமுகப்படுத்தினார் அப்பா. ரங்கநாதன் மாஸ்டர் ஆறடிக்கு இரண்டங்குலம் குறைவாக இருப்பார். நல்ல கம்பீரமான உடல்வாகு; இரண்டு பிச்சுவாக் கத்திகளின் பிடிகளை மூக்கு ஓட்டைகள் இரண்டுக்குள்ளும் சொருகி வைத்தது போலிருக்கும் முறுக்கிய மீசை. உருண்டை முகத்தில் அகண்டு உருண்ட கண்கள். நெற்றியின் இருபுறமும் மேலேறியிருக்க, காதோரங்களில் அடர்த்தியான மயிர்கள். பார்த்தாலே அடிவயிற்றைப் பிடித்து நாலைந்து கைகள் பிசைவது போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அவர் அரசினர் உயர் நிலைப் பள்ளியில் வேலைபார்த்து வந்தார். நான் தனியார் மிஷனரி பள்ளி ஒன்றில் படித்து வந்தேன்.

ரங்கநாதன் மாஸ்டர்
ரங்கநாதன் மாஸ்டர் எனது நினைவுகளில் நீங்காத இடம் பிடிப்பதற்குக் காரணம், அவர் எனது அப்பாவின் நினைப்பை பொய்யாக்கியதே

நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது ரங்கநாதன் மாஸ்டரை நண்பர் ஒருவர் மூலமாக அறிந்திருந்த அப்பா, எப்படியாவது என்னை ’உருப்பட்டாக’ வைக்க வேண்டுமென்று முடிவெடுத்து அவரிடம் ட்யூஷனுக்கு அனுப்பி வைத்தார். ”அடியாத மாடு படியாது” என்கிற கொள்கையில் உறுதியாக இருந்தவர் அப்பா. அந்த தத்துவத்தின் அடிப்படையில் அவர் எடுக்கும் முடிவுகள் எப்போதும் கோக்குமாக்காகவே இருந்திருக்கின்றன.

ஏன் தனியார் பள்ளி என்பதற்குக் கூட வினோதமான சில காரணங்களை வைத்திருந்தார்; அவையாவன – 1) புரியாத பாஷையில் பேசினால் தான் இவன் பயப்படுவான் 2) வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் தூரத்தில் இருந்தால் தான் பயப்படுவான் 3) பழக்கமில்லாத / தெரியாத ஆட்களிடம் தான் ஒழுங்காக நடந்து கொள்வான்…. இப்படியாக அடுக்கிக் கொண்டே செல்வார். சுருக்கமாக சொல்வதாக இருந்தால் அச்சமூட்டுவதற்கும் ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதற்குமே பள்ளிக்கூடம் என்பதில் தெளிவாக இருந்தார். அவர் எதிர்பார்த்த இரண்டும் வந்தது; படிப்பு வரவில்லை. ”அட, இதை யோசிக்கலையே” என்று மோட்டுவளையையும் நான் வாங்கி வரும் கோழி முட்டைகளையும் மாறி மாறிப் பார்த்து தாடையைச் சொரிந்து கொண்டிருந்த ஏதோவொரு தருணத்தில் தான் அவரது நண்பர் ரங்கநாதன் மாஸ்டரைப் பற்றி சொல்லியிருக்கிறார்.

“ஆஹா, ஒழுக்கம், பயம், படிப்பு – ஒரே கல்லில் மூன்று மாங்காய்களாச்சே” என்கிற எதிர்பார்ப்போடு தான் அப்பா அன்றைக்கு என்னை ரங்கநாதன் மாஸ்டரிடம் பிடித்துக் கொடுத்தார். என்றாலும்,  இந்த தொடரை எழுத வினவில் அழைப்பு வந்த போதும் சரி, எனது இத்தனையாண்டு கால வாழ்கையின் எண்ணற்ற சந்தர்பங்களிலும் சரி – ரங்கநாதன் மாஸ்டர் எனது நினைவுகளில் நீங்காத இடம் பிடிப்பதற்குக் காரணம், அவர் எனது அப்பாவின் நினைப்பை பொய்யாக்கியதே.

சொல்ல நிறைய உள்ளதால் விஷயத்தை எங்கேயிருந்து துவங்குவது என்று குழப்பமாகவே உள்ளது. எங்கள் ரங்கநாதன் மாஸ்டரின் பழைய லேம்ப்ரெட்டா ஸ்கூட்டரில் இருந்து துவங்கினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

லேம்ப்ரெட்டா எனப்படும் பிராணி யாதெனில், இரண்டு சக்கரங்களையும் சில உதிரி பாகங்களையும் பின்னிரு சக்கரங்களையும் இஞ்சினையும் அணைத்தவாறு மூடியிருக்கும் பெருத்த இரண்டு ஆமையோடுகளை ஒத்த இரும்பு கூடுகளையும் கொண்ட ஸ்கூட்டர். இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனையில் இருந்த லேம்ப்ரெட்டாவை பஜாஜின் தாத்தா என்று அழைக்கலாம். உற்பத்தியிலிருந்து நிறுத்தப்பட்ட அந்த ஸ்கூட்டரை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த ஓரிரு இந்தியர்களில் ரங்கநாதன் மாஸ்டரும் ஒருவர்.

அதில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அவரே சொந்த முறையில் சரி செய்து கொள்வார். அதன் சர்வீஸ் மேனுவலை இத்தாலியில் இருந்த அதன் தலைமை அலுவலகத்துக்கு எழுதிப் போட்டு வரவழைத்தார். ஐரோப்பிய மொழியில் இருந்த அதை எங்கெங்கோ திரிந்து யார்யாரையோ பார்த்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைத்திருந்தார் ரங்கநாதன் மாஸ்டர். இதெல்லாம் நடந்தது இணையம் பரவலாகியிராத 1996ம் ஆண்டு – அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இதுவரையில் கூட ஆச்சர்யமல்ல.

ஏதேனும் உதிரி பாகம் பழுதாகியிருந்தால், அதை அப்படியே வரைந்து (மேனுவலைப் பார்த்து அதன் துல்லியமான டைமென்ஷன்களைக் குறித்து) லேத்து பட்டறைக்கு இவரே சென்று செய்து வாங்கி வருவார். அந்த வண்டிக்கு இவரே சொந்தமாக ஒரு சர்வீஸ் ரெக்கார்டு வைத்திருந்தார்; அதில் ஒவ்வொரு சிறிய பாகங்களையும் (நட்டு போல்டுகள் உள்ளிட்டு) எப்போது மாற்றியது, ஏன் மாற்றியது என்பது வரை குறித்து வைத்திருந்தார். தகரத்தில் ஆணியால் கீறினால் எழும் சப்தத்தோடு கிளம்பும் அதை அந்தத் தெருவிலிருந்த மக்கள் வினோதமாக பார்ப்பதைக் கவனித்திருக்கிறேன்.

“சார், இதை தூக்கி பழைய இரும்புக்கு போட்டுட்டு புதுசா சேத்தக் இல்லாட்டி வெஸ்பா வாங்கிடலாமே சார்?” – சொல்ல மறந்து விட்டேனே, அவரது முரட்டுத் தோற்றத்துக்கும் தோழமையான பழக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.

”டேய் முழியாங்கண்ணா, ஒரு பொருளை வாங்கினா அதுக்கு போட்ட காசை விட ரெண்டு மடங்கு வேலை வாங்கனும்டா.. நாளைக்கு நீ சம்பாதிச்சி எதுனா வாங்குவேயில்ல அப்ப தெரியும் பாரு நான் சொல்றதோட அர்த்தம்”

”சரி சார்.. சர்வீசுக்காவது வெளியே கொடுக்கலாமில்லே?”

“குடுக்கலாம் தான்… ஆனா, நாம பயன்படுத்தற பொருள் என்னா செய்யுது, ஏன் செய்யுதுன்னு தெரிஞ்சி வச்சிகிட வேணாமா? அதெல்லாம் நம்ம வேலையில்லையா? நம்ம வேலைய நாம தானே செய்யனும். முடியலை, தெரியலைன்னா வெளியே போகலாம். அதுவரைக்கும் நாமே பார்த்துக்கிடனும் தானே?”

இப்போது உங்களுக்கு ரங்கநாதன் மாஸ்டரைப் பற்றி ஓரளவுக்குப் புரிந்திருக்க வேண்டும். என் அப்பாவின் எதிர்பார்ப்பை எப்படிப் பொய்யாக்கினார் என்று அடுத்து சொல்கிறேன்.

”டேய் முழியாங்கண்ணா, கணக்குல எத்தினி மார்க்குடா எடுத்திருக்கே?”

“நுப்பது சார்”

“ம்ம்ம்… தமிழ்லே?”

”நுப்பத்தஞ்சி சார் ”

“சரி, அறிவியல்லே?”

“இருவத்திரெண்டு சார்”

“ஓக்கே. உன்னேட பரீட்சை பேப்பர்லாம் குடு பார்க்கலாம்”

படிக்கும் பழக்கம்
பின்னாட்களில் இந்தப் பழக்கம் தான் என்னைக் கரையேற்றியது என்பது அவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்களை தயக்கத்தோடு நீட்டுவேன். வாங்கி ஒவ்வொன்றாகப் பொறுமையாகப் பார்ப்பார். நான் எழுதியிருந்த விடைகளின் சில பகுதிகளை வாய் விட்டுப் படித்துக் கொள்வார்.

“எல்லாம் சரியா தான் இருக்கு. சரி இன்னிக்கு படிக்க வேண்டிய பாடத்தை எடுத்துக்கோ” தாள்களை என்னிடமே திருப்பிக் கொடுத்து விடுவார்.

குழப்பமாக இருக்கிறதா? ரங்கநாதன் மாஸ்டர் எப்போதுமே அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டுமென்று சொன்னதேயில்லை. உதாரணமாக எட்டாம் வகுப்பு உயிரியலில் மனித செல்கள் பற்றி ஒரு பாடம் வருகிறது. அதைப் பற்றி அவர் ட்யூஷனில் விளக்குவார். மேலும் அவரது சேகரிப்பில் இருந்த அறிவியல் நூல்களில் இருந்து மனித செல்கள் பற்றிய குறிப்புக்கள் எடுத்து என்னை ஒரு முறை விளக்கச் சொல்லி கேட்டுக் கொள்வார். பரீட்சை எழுதச் செல்லும் போது பாட புத்தகத்தில் இருப்பதை அல்ல, எழுதப்படும் பொருள் குறித்து எனக்கு என்னவெல்லாம் புரிந்திருக்கிறதோ அதை எனது மொழியில் (பாட புத்தகத்தில் இருக்கும் மொழியில் அல்ல) எழுதி வரச் சொல்வார்.

ரங்கநாதன் மாஸ்டரின் நூலகத்தைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். ஒரு தனிநபரின் சேகரிப்பில் மிக அதிகமான புத்தகங்களை நான் அங்கு மட்டுமே கண்டிருக்கிறேன். எங்கள் ஊர் கிளை நூலகத்தில் இருப்பதைக் காட்டிலும் அதிக புத்தகங்கள் அதில் இருக்கும். அனைத்தும் துறைசார்ந்த நூல்கள். எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது ஆங்கில் இரண்டாம் பாடத்தில் Mayor or Casterbridge என்ற ஆங்கில நாவல் ஒன்றின் சுருக்கப்பட்ட வடிவம் சேர்க்கப்பட்டிருந்தது. பள்ளியில் கொடுத்த புத்தகத்தை நான் ஒரு நாள் கூட திறந்து பார்த்திருக்க மாட்டேன். ரங்கநாதன் மாஸ்டரின் சேகரிப்பில் இருந்த விரிவான வடிவத்தைப் படித்து அதிலிருந்து தான் பரீட்சைக்குத் தயாரித்திருந்தேன். அதே போல் வரலாறில் நதிக்கரை நாகரீங்கள் என்றால், அதைப் பற்றித் தனிச்சிறப்பான நூல்களில் இருந்து குறிப்பெடுக்க வேண்டும்.

அனேகமாக நான் விடைத்தாள்களில் எழுதியவற்றுக்கும் பள்ளிப் பாட நூல்களில் இருந்தவற்றுக்கும் கடுகையொத்த அளவிற்கு தொடர்பிருந்திருக்கலாம்; மற்றவையெல்லாம் எனக்கு என்னெவெல்லாம் புரிந்திருந்ததோ அவை தான் – அதுவும் எனது சொந்த வார்த்தைகளில் எனது சொந்த வாக்கிய அமைப்பில். சரியாக இருக்கலாம் அல்லது தவறாக இருக்கலாம் – அது பிரச்சினையில்லை. மனப்பாடம் செய்து வாந்தியெடுக்க கூடாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.

“அப்படியே மக் அடிச்சி. அப்படியே பேப்பர்ல வாந்தி எடுக்கறதுக்கு நீ என்கிட்டே வந்திருக்க கூடாது. டெக்ஸ்ட் புக்லே இருக்கிறது அவனுக்கு புரிஞ்சது. நாம் எழுத வேண்டியது நமக்கு என்ன புரிஞ்சிருக்கோ அதை மட்டும் தான். மார்க்கு போட்டா போடறான், போடாட்டி போறான். பேப்பர் திருத்தறவன் பெரிய புடுங்கியெல்லாம் கிடையாது. எனக்குத் தெரியாதா அவுனுக பவுசு?” – இது தான் ரங்கநாதன் மாஸ்டர். இதனால் தான் அவரிடம் என்னைத் தவிர வேறு யாருமே ட்யூஷனுக்குச் சென்று நிலைத்ததில்லை. என் அப்பாவைச் சமாளிக்க வேறு உத்தியை வைத்திருந்தார்.

“இந்தா பாருங்க.. பய்யனை நம்ப விட்டாச்சில்லே கவலைய விடுங்க. அவன் உருப்படியா வளர்றது என்னோட பொறுப்பு. உங்களுக்கு என்னா வேணும்? பத்தாங் கிளாசுலயும் பண்ணெண்டாங் கிளாசுலயும் பர்ஸ்ட் கிளாசு. அவ்வளவு தானே? அதுக்கு நான் பொறுப்பு. சும்மா வீட்ல வச்சி படி படின்னு ரச்சை பண்ணிட்டு இருக்கக் கூடாது. என்னா புரியுதா? பய்யன் ஒழுங்க வளர்றானானு பாருங்க; படிப்பு மார்க்கெல்லாம் ரெண்டாவது தான். சரியா?”

என் அப்பாவிடம் பேசும் போது மட்டும் தான் அவரது மீசையை அனிச்சையாக தடவிக் கொள்வதை கவனித்திருக்கிறேன். மிக எளியவரான அப்பாவால் அதற்கு மேல் தர்க்கம் செய்து கொண்டிருக்க முடியாது. ”சரிங்க சார்வாள்” என்றவாறே பின்வாங்கி விடுவார். மேலும் அவரது பிரசங்கத்தின் இறுதி வாக்கியங்கள் மொத்தமாக அப்பாவின் வாயை அடைத்து விடும்.

எனது மதிப்பெண்கள் குறைவாக உள்ளது என்பதை அப்பா கவுரவக் குறைவாக கருதினார். ஆனால், பின்னாட்களில் இந்தப் பழக்கம் தான் என்னைக் கரையேற்றியது என்பது அவருக்கு இப்போது வரை தெரிந்திருக்க நியாயமில்லை.

பள்ளி முடிந்ததும் பாலிடெக்னிக். எனது விருப்ப பாடமான இயந்திரவியலின் அன்றைய சந்தை நிலவரப்படியான விலை 30 ஆயிரம். அப்பாவிடம் இருந்த 15 ஆயிரத்துக்கு மின்னணுவியல் பிரிவும் மீதம் 3 ஆயிரம் ரூபாயும் தான் கிடைத்தது. அந்த மூவாயிரத்தில் குமார் சர்ட்ஸில் 90 ரூபாய்க்கு ஆறு சட்டைகளும் 150 ரூபாய்களுக்கு மூன்று பேண்டுகளும் மிஞ்சிய காசை டிப்பாசிட்டாக கட்டி வீட்டுக்கு கேஸ் கனெக்சனும் வாங்கினார். அது வரை மண்ணெண்ணெய் பம்பு ஸ்டவ் தான். சரி அது கிடக்கட்டும்.. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளின் தரக்குறைவைப் பற்றி இன்றைக்கு நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் அல்லவா? இதெல்லாம் இப்போது துவங்கியது என்றா நினைக்கிறீர்கள்? தொண்ணூறுகளின் இறுதியில் நிலைமை எப்படி இருந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள எங்கள் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் விரிவுரையாளர் கோதண்டராமன் சார் சொன்னதைக் கேளுங்கள் –

”தோ பாருங்க.. நீங்கெல்லாம் ஆயிரக்கணக்கில் குடுத்து சேர்ந்திருக்கீங்க. ஒழுங்கா பாசாகி வேலைக்குப் போறது தான் உங்களுக்கு முக்கியம். என்னா புரியுதா? இந்த புக்குல மொத்தம் அஞ்சி யூனிட்டு இருக்கு. ஒரு யூனிட்ல இருந்து 20 மார்க்குக்கு செமஸ்டர்ல கொஸ்டின் வரும். மூணு யூனிட் எடுத்தா அறுபது மார்க்கு – பஸ்ட் கிளாஸ். அதுக்கு மேல யாருக்காச்சும் விருப்பம் இருந்தா என்கிட்டே அஞ்சி வருச கொஸ்டின் பேப்பர் டம்ப் இருக்கு. வாங்கி பிரிப்பேர் பண்ணிக்கங்க. டெர்ம் எக்ஸாம்ல பெயில் ஆகிறவன் எல்லாம் என்கிட்டே ஸ்பெஷல் ட்யூசன் வந்துடுங்க. என்னா.. புரியுதா?”

தொழில்நுட்ப அறிவு
மின்னணுவியல் ஆனாலும் சரி தற்போது குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் கணினித் துறையானாலும் சரி – பொறியியலில் இளங்கலை அல்லது முதுகலையே படித்தவர்களோடு தொழில்நுட்ப அறிவில் சரிக்கு சமமாக போட்டியிட முடிகிறது.

கல்லூரியின் நூலகம் எனது வசிப்பிடமானது. ஒவ்வொரு யூனிட்டிலும் உள்ள தலைப்புகளையும் துணைத் தலைப்புகளையும் தனியே குறித்துக் கொள்வேன். ஒரு பவுண்டு நோட்டில் அத்தனை தலைப்புகளுக்கும் நூலத்தில் உள்ள நூல்களில் இருந்து குறிப்புகள் எடுத்துக் கொள்வேன். ட்யூஷனைத் தவிர்த்துக் கொண்டதால் செய்முறைத் தேர்வுகளில் 50 மார்க்குகளைத் தாண்டியதில்லை; அதே நேரம் எழுத்துத் தேர்வுகளில் 90-க்கு குறைந்ததில்லை.

மொத்தம் அறுபது மாணவர்களில் இறுதி வரை அரியர்ஸ் வைக்காமல் தேர்வானவர்கள் 8 பேர். அதில் இண்டர்னல் மார்க்குகளின் துணையின்றி, விரிவுரையாளர்களின் பகையைச் சம்பாதித்துக் கொண்டு இரண்டாவதாகத் தேர்வாகி வருவது சாதாரண சாதனையல்ல. அந்த மூன்றாண்டு கால அழுத்தத்தின் விளைவாக அக்கடமிக்கலான படிப்பின் மேலான நாட்டமே முற்றிலும் வடிந்து போனது. என்றாலும் இன்று வரையில் மின்னணுவியல் ஆனாலும் சரி தற்போது குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் கணினித் துறையானாலும் சரி – பொறியியலில் இளங்கலை அல்லது முதுகலையே படித்தவர்களோடு தொழில்நுட்ப அறிவில் சரிக்கு சமமாக போட்டியிட முடிகிறது என்றால் அதற்கு ரங்கா மாஸ்டர் மட்டுமே காரணம்.

அறிதலில் இருந்து பொருள் நுகர்வு வரைக்கும் இன்றைக்கு எனது கண்ணோட்டம் நிறைய மாறியிருக்கிறது. வளர்ந்திருக்கிறது. என்றாலும், இன்றைய கண்ணோட்டங்கள் பலவற்றுக்குமான அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்தவர் ரங்கா மாஸ்டர் தான். வாசிப்பின் தேவையையும் நோக்கத்தையும் எனது வாழ்வின் கால் நூற்றாண்டுகளைக் கடந்த பின்னர் மிகத் தாமதமாகவே நான் கண்டடைந்தேன் என்றாலும் அதன் சுவையையும் அணுக வேண்டிய முறைமைகளையும் எனது பள்ளிப் பருவத்திலேயே அறிமுகம் செய்து வைத்த ரங்கா மாஸ்டரை என்றென்றைக்குமாக மறக்க முடியாது. இத்தனையாண்டுகள் கழிந்த பின்னும் இன்றும் தினசரி ஏதாவதொரு உரையாடலில், அல்லது எதையாவது புதிதாக கற்கும் போது, அல்லது சிக்கலான தொழில்நுட்ப புதிர் எதற்காவது விடை தேடி விழித்துக் கொண்டு நிற்கும் போது சட்டென்று தோன்றும் – “இதே நம்ம ரங்கா சாரா இருந்தா என்ன சொல்லியிருப்பாரு?”

எப்படித் துவக்குவது என்கிற குழப்பத்தைப் போலவே எங்கே முடிப்பது என்பதும் குழப்பமாகவே இருக்கிறது. சொல்ல நிறைய இருப்பினும், பழைய சம்பவங்களைச் சொல்கையில் அவற்றின் மீது ஏதோவொரு வகையில் பழையதை சிலாகித்து பின்திரும்பி நோக்கும் ’ஆட்டோகிராப்’ சாயல் படிந்து விடும் அபாயம் இருப்பதால் இந்த இடத்தில் நிறுத்திக் கொள்கிறேன்.

–     முருகேசன்

தில்லை கோயில் உரிமைக்காக நடந்த போராட்ட விவரங்கள் !

3

தில்லை கோவில் மீதான தமிழ் மக்களின் உரிமைக்காக சிதம்பரத்தில் நடந்த ஆறுமுக சாமி – புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் !

சிதம்பரம் நடராசர் கோவிலை இந்து அறநிலையத் துறையிடமிருந்து பிடுங்கி தீட்சிதப் பார்பனரிடம் ஒப்படைப்பதற்கு சு.சாமியும் ஜெயாவும் கூட்டு சதி செய்யும் அயோக்கியத்தனத்தை முறியடிக்கும் வகையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகளும் சிதம்பரத்தில் கடந்த நான்கு நாட்களாக போராடி வருவதை அறிவீர்கள். இதன் ஒரு பகுதியாக டிசம்பர் 2, 2013 திங்கள் கிழமை காலை ஏழு மணி முதல் இரவு பதினோரு மணி வரை மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர் பழனிசாமி, விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் ஹரிகிருஷ்ணன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் கருணா தலைமையில் எமது தோழர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலை முற்றுகையிட்ட செய்தி பின்வருமாறு :

சிவனடியார் கோயிலில் நுழைவு
மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களுடன் சிவனடியார் கோயிலில் நுழைகிறார்.

காலை ஏழு மணி :

சிதம்பரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் மேற்கண்ட அமைப்புகளைச் சார்ந்த வழக்கறிஞர்களும் தோழர்களும் ஒன்று குவிந்தனர். கடந்த இரு தினங்களாக மையம் கொண்டுள்ள புயல் வலு வடைந்து கனமழை பொழியத் தொடங்கியது. இரண்டு தினங்களுக்கு முன்பு உண்ணாநிலை போராட்டத்தை ஆதரித்து பிரச்சாரம் மற்றும் வாழ்த்துரை வழங்க வந்திருந்த தோழர்கள் மீண்டும் வந்தனர்.

காலை எட்டு மணி :

கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் கோவில் வளாகத்தில் எமது தோழர்கள் சிற்றம்பல மேடைக்கு அருகில் சென்றனர். கோவிலில் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் என ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். ஒன்பது மணி கால பூஜை முடிந்தவுடன் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடுவதற்கு ஆறுமுக சாமி தயாரானார். தேவாரம் பாடுவது மட்டும் இன்றி உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் திறமையான மூத்த வழக்கறிஞரை நியமிப்பதற்கும் தொடர்ந்து தமிழில் பாடுவதற்கும் என்ற இரு கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை பாடப் போவதாக அறிவித்து சிற்றம்பல மேடைக்கு அருகில் அமர்ந்திருந்தார்.

மணி ஒன்பது :

கால பூஜை முடிந்தவுடன் ஆறுமுக சாமி பாடுவதற்கு மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும் தயாராக ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். கோவில் வளாகத்திற்குள் பக்தர்களை ஒழுங்கு படுத்தும் பணியிலிருந்த காவலர்களிடம் ஆறுமுகசாமி மேடையில் பாட ஏற்பாடு செய்யுமாறு கோரினர். பக்தர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி தமது கோரிக்கைகளை முன் வைத்து பாடுவதாக ஆறுமுகசாமியும் சொல்லிக் கொண்டிருந்தார்.

காலை பத்து மணி :

போலீஸ் பாதுகாப்புடம் தமிழில் பாடும் சிவனடியார்.
போலீஸ் பாதுகாப்புடம் தமிழில் பாடும் சிவனடியார்.

கால பூஜை முடிந்தவுடன் ஒரு சில நிமிடங்கள் மேடையில் தேவாரம் பாடிய ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் இறக்கி விட்டனர். சிறப்பு பூஜை முடிந்த பிறகு பாட அனுமதிப்பதாக கூறிக் கொண்டிருந்தனர். ஆறுமுக சாமி இந்தக் கோரிக்கைகளை முன் வைத்து போராடிக் கொண்டிருப்பதை பேருந்துகளிலும் கோவிலைச் சுற்றியுள்ள நான்கு விதிகளிலும் 2,200 துண்டறிக்கைகளை தோழர்கள் பல குழுக்களாகப் பிரிந்து விநியோகம் செய்தனர். கோரிக்கைகளின் நியாயத்தையும் தில்லைக் கோயில் தீட்சிதப் பார்ப்பனரிடம் செல்லும் அபாயத்தையும் விளக்கிப் பேசிக் கொண்டிருந்தனர்.

பேருந்துகளில் உழைக்கும் மக்கள், “ கொட்டும் மழையிலும் நீங்கள் தமிழ் மொழி உரிமைக்காகப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது “ என்று வாழ்த்தினர்.

காலை 11 மணி :

வாஞ்சிநாதன், சிவனடியார் ஆறுமுகசாமி
கோரிக்கைகளை வலியுறுத்தி சிவனடியார் ஆறுமுகசாமியும் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் வாஞ்சிநாதனும் போராட்டம்.

பூஜை முடிந்தவுடன் ஆறுமுக சாமியை மேடையில் ஏறிப் பாட தீட்சிதர்கள் அனுமதித்தனர். தேவாரத்தை அரை மணி நேரத்திற்கும் மேலாக மனமுருகிப் பாடிக் கொண்டிருந்தார். அதே வேளையில் சிற்றம்பல மேடைக்குக் கீழே ஒரு பெண்மணியும் தேவாரத்தைப் பாடிக் கொண்டிருந்தார். பிறகு கீழே இறங்கிய ஆறுமுக சாமி சிற்றம்பல மேடைக்கு எதிரில் அமர்ந்து தனது கோரிக்கையைப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

செய்தியைக் கேள்விப்பட்ட பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அங்கே திரண்டனர். ஆறுமுக சாமியிடம்,”ஏன் திடீர்னு போராடுறிங்க” என்று கேள்விகளைக் கேட்டு போராட்டத்தின் நோக்கத்தை வெளியில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். தனது கோரிக்கைகளை துண்டறிக்கையாக கொடுத்தார். அது பற்றி மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் விளக்கமளித்தனர். இதற்கிடையே போலீசைக் குவிக்கத் துவங்கினர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தீட்சிதர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு கோவிலுக்குள் திரளத் துவங்கினர்.

மணி 12 :

ஆறுமுக சாமி மேடையில் பாடிய பிறகும் சிற்றம்பல வளாகத்தை விட்டு வெளியில் வராமல் அங்கேயே அமர்ந்து போராடிக் கொண்டிருப்பதைப பற்றிய செய்தி வெளியில் பரவ ஆரம்பித்தது. உடனடியாக அங்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர், வட்டாட்சியர், மற்றும் அறங்காவலர் போன்றவர்கள் ஆறுமுக சாமியிடம் சமரசமாகப் பேசத் துவங்கினர். தமிழக அரசின் சார்பில் இரண்டு வழக்கறிஞர்கள் நியமிக்கப் பட்டு இருப்பதாக கூறினர். ஆனால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரை நியமித்தது பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை தான் இங்கேயே அமர்ந்து பாடிக் கொண்டிருப்பதாக ஆறுமுகசாமி அறிவித்தார்.

மணி மதியம் 1 :

பத்திரிகை பேட்டி
சிவனடியாரிடம் கேள்வி கேட்கும் ஊடகங்கள்.

மத்திய பூஜை முடிந்தவுடன் ஒரு மணிக்கு மனிதப் பதர்களை வெளியே தள்ளிவிட்டு உத்தம சிகாமணிகளான தீட்சிதர்கள் மட்டும் உள்ளே இருப்பதை அனுமதிக்கும் ஆகம விதியை காரணம் காட்டி பக்தர்களையும் நமது தோழர்களையும் அதுவரை மூன்று வெவ்வேறு கோணங்களில் வெளித் தெரியாமல் போராட்டத்தை படமெடுத்து பதிவு செய்து கொண்டிருந்த நமது புகைப்படக் கலைஞர்களையும் வெளியேற்றத் துவங்கினர். நடுவில் ஆறுமுக சாமியும் அவரைச் சுற்றி மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்களும் எமது தோழர்களும் பாதுகாப்பு அரணாக நின்று கொண்டிருந்தனர்.

“ஆகம விதிகளை எல்லாம் காலில் போட்டு மிதிக்கும் தீட்சிதர்கள் ஆகம விதிப்படி நடையைச் சாத்தப் போவதாகக் கூறுவதை ஏற்க முடியாது. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை சிற்றம்பல வளாகத்தை விட்டு வெளியேற முடியாது” என்று உறுதியுடன் இருந்தனர். பல கோடி மதிப்புள்ள சிதம்பரம் கோயிலையும் அதன் நிர்வாகத்தையும் தீட்சிதர்களிடம் வாரிக் கொடுக்க தயாராக இருந்த பார்ப்பன ஜெயா அரசாங்கம் ஆகம விதி மீறப்பட்டால் சர்வமும் அழிந்துவிடும் என்பதைப் போல தீட்சிதர்களிடம் மண்டியிட்டுக் கொண்டிருந்தது. அறங்காவலர் அலுவலகத்திற்கு வந்து அமர்ந்து தமது போராட்டத்தைத் தொடருமாறு ஆறுமுகச் சாமியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தது.

மணி 2 :

ஏறக்குறைய ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்துக் கொண்டிருந்த போராட்டத்தை ஒடுக்க முடியாத போலீசு, “உங்களைக் கைது செய்வதாக இல்லை. தயவு செய்து எங்களுடன் ஒத்துழையுங்கள்” என்று புலம்பினர். அதற்கு பதிலடி கொடுத்த நமது தோழர்களோ “பிரச்சனையை குறுக்கிப் பார்க்காதீர்கள். கோரிக்கையின் தன்மையை உணர்ந்து ஒன்று அதை நிறைவேற்ற வழி செய்யுங்கள். அல்லது எங்களைக் கைது செய்து கொள்ளுங்கள்” என்று உறுதி காட்டினர்.

இதைத் தொடர்ந்து 2.40 மணிக்கு ஆறுமுக சாமியையும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் 12 பேரையும் வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு. தோழர்கள் 20 பேரையும் கைது செய்து மண்டபத்துக்குக் கொண்டு சென்றது. ஏதோ தீவிரவாதிகளைக் கைது செய்வதைப் போல வழி நெடுக பீதியூட்டிக் கொண்டு சென்றது.

கைது செய்யப்பட்ட தோழர்களைப் பார்க்கச் சென்றவர்களை மிரட்டியும் தீட்சிதர்களைக் கண்டித்து முழக்கமிட்ட தோழர்களை வேனில் ஏற்றியும் தனது தீட்சிதர் விசுவாசத்தைக் காட்டியது.

மணி மூன்று :

கைது செய்யப்பட்ட தோழர்களை மண்டபத்துக்கு கொண்டு சென்றவுடன் ஆங்காங்கே பாதுகாப்பு மற்றும் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிற தோழர்களை ஓரிடத்தில் ஒன்றிணைத்து நமது கோரிக்கைகளின் நியாயத்தைப் பற்றி விளக்கமாக வெளியிடப்பட்டிருந்த 4,000 துண்டறிக்கைகளுடன் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்ய அனுப்பி வைத்தோம். பார்ப்பன அக்ரகாரம் முதல் உழைக்கும் மக்கள் நிரம்பிய பகுதிகள் வரை அனைத்து மக்களும் நமது போராட்டம் பற்றித் தெரிந்து கொண்டு இரண்டு மணி நேரத்தில் ரூபாய் மூன்றாயிரம் நன்கொடையாகக் கொடுத்தனர்.

மணி 4, 5, 6 :

மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது மண்டபத்திற்குள்ளே தமது போராட்டத்தின் நியாயத்தை நமது தோழர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். வழக்கமாக கைது செய்தால் ஒன்று ஆறு மணிக்குள்ளாக நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைப்பார்கள் அல்லது எந்த வழக்குமின்றி விடுவித்து விடுவார்கள். ஆனால் போலீஸ் இரண்டையும் செய்யாமல் நைச்சியமாக நம்மிடம் பேசிக் கொண்டே நேரத்தைக் கடத்தினர். கோவிலுக்குள் உடனே நம்மைக் கைது செய்யாமல் இரண்டு மணி நேரம் போராடட்டும், செய்தி வெளியே போகட்டும் என்று தாமதப்படுத்தியதாக டி.எஸ்.பி. ராஜாராம் சப்பைக்கட்டு கட்டினார். உண்மையில் போராட்ட செய்திகள் வெளியேவராமல் அமுக்க முயன்று தோற்றுப்போனது போலீசு. பத்திரிகையாளர்கள், தோழர்கள், வழக்கறிஞர்களின் ஒருங்கிணைத்த முயற்சியால் மாலை ஐந்து முதல் ஊடகங்களில் நமது போராட்டசெய்தி வெளி வந்தது.

மாலை ஏழு முதல் பத்து வரை :

மண்டபத்தில் அடைக்கப்பட்ட தோழர்களின் போலீசுக்கு எதிரான தொடர் போராட்டத்தால் ஒரு முடிவுக்கு வந்தனர். “உங்களை வெளியே விட்டால் மீண்டும் கோவிலுக்குள் சென்று போராட மாட்டேன் என்று உறுதி கொடுங்கள் விடுவிக்கிறோம்” என்றது போலீசு. ஆனால், “இவ்வாறெல்லாம் உறுதி மொழி கூறி வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை” என்று உறுதியாக நின்றதால்,”நடை சாத்தும் வரை உங்களை விடமாட்டோம், அதன் பிறகு விட்டு விடுகிறோம்” என்று பாமரத்தனமாக கூறினார்கள். மணி பத்து முப்பதுக்கு நடை சாத்தப்பட்டது தோழர்களும் விடுவிக்கப்பட்டனர். காலை முதல் ஓயாமல் பெய்த கன மழை ஓயத் தொடங்கியது. ஆனால் சூழ்ந்திருக்கும் பார்ப்பன இருளையும் பார்ப்பன கும்பலின் தமிழ் மக்களுக்கு எதிரான சாதித் துவேசத்தையும் எதிர்த்த எமது போராட்டம் ஓயாது என்ற முடிவுடன் பகுதிகளுக்குத் திரும்பினர்.

பத்திரிகைச் செய்திகள்

[படங்களைப் பெரிதாகப்  பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்

வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு.
கடலூர், விழுப்புரம், புதுச்சேரி

தாது மணல் கொள்ளைக்கு எதிராக தோழர் மருதையன் உரை – ஆடியோ

0

தாதுமணல் கொள்ளையன் V.V.மினரல்ஸ் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்! சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்! என்ற முழக்கத்தோடு நவம்பர் 23,2013 அன்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் நிகழ்த்திய உரை.

எம்பி3 டவுன்லோட்

1. அதிக பிட்ரேட் – 62 MB
2. குறைந்த பிட்ரேட் – 15 MB

ஆன்லைனில் கேட்க – யூடியூப்

தாது மணல் கொள்ளைக்கு எதிராக தோழர் ராஜூ உரை – ஆடியோ

0

தாதுமணல் கொள்ளையன் V.V.மினரல்ஸ் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்! சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்! என்ற முழக்கத்தோடு நவம்பர் 23,2013 அன்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ நிகழ்த்திய உரை.

எம்பி3 டவுன்லோட்

1. அதிக பிட்ரேட் – 26.3 MB
2. குறைந்த பிட்ரேட் – 6.6 MB

ஆன்லைனில் கேட்க – யூடியூப்