Sunday, July 27, 2025
முகப்பு பதிவு பக்கம் 720

மார்கரெட் தாட்சர்: துருப்பிடித்து மறைந்த இரும்புப் பெண்!

8

1979 முதல் 1990 வரை கிரேட் பிரிட்டனின் பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சர் தனது 87-வது வயதில் லண்டனில் காலமானார். பொருளாதாரத் துறையிலும், வெளிநாட்டு உறவுகளிலும் உறுதியான முடிவுகள் எடுத்த மார்கரெட் தாட்சர் இரும்புப் பெண் என்று முதலாளித்துவ அறிஞர்களால் குறிப்பிடப்படுகிறார். உண்மையில் இந்த இரும்பு பின்னர் துருப்படித்து போனதையும் வரலாறு பதிவு செய்திருக்கிறது.

இரும்புப் பெண்
இரும்புப் பெண், துருப்பிடித்த சாதனைகள்

1980களில் பிரிட்டனில் தாட்சரின் தலைமையிலும், அமெரிக்காவில் ரொனால்ட் ரீகன் தலைமையிலும் தனியார் மய, தாராள மய பொருளாதார கொள்கைகள் தீவிரப் படுத்தப்பட்டு உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்துக்கு வழி வகுக்கப்பட்டது. அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி, பாக்லாந்து போரில் அர்ஜென்டினாவை தோற்கடிப்பு, தொழிற்சங்கங்களை வீழ்த்தியது என்று அசைக்க முடியாத செல்வாக்கு படைத்தவராக போற்றப்பட்ட தாட்சர் 1990-ம் ஆண்டு அவரது கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

மார்கரெட் ஹில்டா ராபர்ட்ஸ் என்ற பெயருடன் பிறந்து வளர்ந்து, 1951-ல் டெனிஸ் தாட்சர் என்ற பணக்கார வர்த்தகரை திருமணம் புரிந்து மார்கரெட் தாட்சர் என்று அறியப்பட்ட அவரது புகழின் பின்னணி என்ன? முதலில் இத்தகைய முதலாளித்துவ கட்சி தலைவர்கள் எத்தகைய பிற்போக்குத்தனங்களையும் ஏற்பவர்களே என்பதற்கு ஒரு சான்றைப் பார்த்து விடுவோம்.

1970களில் இறுதியில் லண்டனில் இந்தியாவின் துணை தூதுவராக பணியாற்றிய நட்வர்சிங், பன்னாட்டு ஆயுத புரோக்கரும் சாமியாருமான சந்திராசாமியை தாட்சருடன் சந்திக்க ஏற்பாடு செய்தது பற்றி “வாக்கிங் வித் லயன்ஸ்…..” என்ற தன்னுடைய புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

இந்தி மட்டும் பேசத் தெரிந்த சந்திராசாமி சாமியார் உடையில் நெற்றியில் பெரிய திலகத்துடன் கம்பை ஊன்றிக் கொண்டு, ஆறு மாதங்களுக்கு முன்பு கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த மார்கரெட் தாட்சரை சந்திக்கப் போயிருக்கிறார். கிரேட் பிரிட்டனுக்கான இந்தியாவின் துணைத்தூதர் சாமியாரின் மொழிபெயர்ப்பாளராக உடன் போயிருக்கிறார்.

சாதாரண மாஜிக் ஒன்றை செய்து காட்டி தாட்சரை கவர்ந்து விட்டிருக்கிறார் சந்திராசாமி. ‘அடுத்த முறை சந்திக்க வேண்டும்’ என்று தாட்சர் கேட்க, ‘துணைத் தூதுவரின் வீட்டுக்கு வாருங்கள், சிவப்பு உடை உடுத்து வாருங்கள், கையில் நான் கொடுக்கும் தாயத்தை கையில் கட்டிக் கொண்டு வாருங்கள்’ என்றெல்லாம் சந்திராசாமி உத்தரவிட்டிருக்கிறார். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சிவப்பு உடையில், தாயத்து கட்டிய கையுடன் ஆஜராகி, ‘தான் பிரதமர் ஆவது நடக்குமா, எப்போது நடக்கும், எத்தனை ஆண்டுகள் பிரதமராக இருக்க முடியும்’ என்று ஆர்வத்துடன் பல கேள்விகளுக்கு சாமியாரின் பதில்களை பெற்றுக் கொண்டு போயிருக்கிறார்.

சாமியார் சொன்னபடி பிரதமராகி விட்ட தாட்சர், அடுத்து நட்வர்சிங்கை சந்திக்கும் போது ‘சாமியாரிடம் குறி கேட்டது பற்றியெல்லாம் யாரிடமும் சொல்ல வேண்டாம்’ என்று எச்சரித்திருக்கிறார். பின்னர் தாட்சரின் புகழ் மாயை கலைந்து அம்பலமானதாலோ என்னமோ அதை தனது சுயசரிதையில் விலாவாரியாக எழுதி விட்டிருக்கிறார் நட்வர் சிங்.

மார்கரெட் ஹில்டா ராபர்ட்ஸ், இங்கிலாந்தின் லிங்கன்ஷையரில் உள்ள கிரந்தாம் என்ற ஊரில் 1925-ம் ஆண்டு பிறந்தார். அவர் தனது பள்ளிப் பருவத்தை, ரயில் பாதை ஓரம் இருந்த அவரது தந்தையின் மளிகைக்கடைக்கு மேல் இருந்த வீட்டில் கழித்தார். ‘மளிகைக் கடையில் வரவு, செலவுகளை சமன்படுத்துவது போல ஒரு நாடு தனது வரவு, செலவுகளை சமன்படுத்த வேண்டும்’ என்று பிற்காலத்தில் தனது பொருளாதார அடிப்படையை ‘அறிவுடன்’ விளக்கியிருக்கிறார் தாட்சர்.

1930களில் ஏற்பட்ட பொருளாதார பெருமந்தத்தின் போது இங்கிலாந்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகி, சிறு வணிகர்களும் தொழில்களும் நொடித்துப் போயின. அந்தச் சூழலில் வளர்ந்த மார்கரெட் ராபர்ட்ஸ் 1943-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டின் சாமர்வில் கல்லூரியில் சேர்ந்து 1947-ம் ஆண்டு வேதியல் பட்டப் படிப்பு பெற்றார். அதன் பிறகு ஒரு பிளாஸ்டிக் நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளராக வேலைக்கு சேர்ந்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் காலனி ஆதிக்கம் செலுத்தி வந்த நாடுகளை சுரண்டும்  ஏகபோக அதிகாரத்தை பிரிட்டன் இழந்தது; போரில் அழிக்கப்பட்ட பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியிருந்தது; சோவியத் யூனியன் தலைமையிலான சோசலிச அரசுகளின் தாக்கம் பிரிட்டிஷ் தொழிலாளர்களை தொழிற்சங்கங்களில் ஒன்று சேர்த்திருந்தது; சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சீனா ஆகிய நாடுகள் மேற்கத்திய முதலாளித்துவ விரிவாக்கத்துக்கு மூடப்பட்டிருந்தன; காலனி ஆட்சியிலிருந்து விடுபட்ட இந்தியா போன்ற நாடுகளில் மேற்கத்திய முதலாளித்துவ விரிவாக்கத்துக்கான வாய்ப்புகள் மட்டுப்பட்டிருந்தன. பிரிட்டனில் தனியார் முதலாளிகள் முதலீடு செய்து லாபம் ஈட்டும் கட்டமைப்பும் வாய்ப்புகளும் குறைவாக இருந்தன.

இந்தச் சூழலில், இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனை வெற்றிக்கு வழிநடத்திச் சென்றதாக சிலாகிக்கப்படும் சர்ச்சிலின் கன்சர்வேடிவ் கட்சி, மக்களால் நிராகரிக்கப்பட்டு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தது. தொழிலாளர் கட்சி தலைமையிலான அரசாங்கம் சுரங்கங்கள், பெட்ரோலியத் துறை, மின்சாரத் துறை, பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து போன்ற துறைகளை நாட்டுடமையாக்கியது. தொழில் நிறுவனங்கள் அரசு கட்டுப்பாட்டில் இருப்பது, தேசிய அளவில் பொருளாதார திட்டமிடுவது போன்ற கோட்பாடுகள் செல்வாக்கு பெற்றன. கார் தொழிற்சாலைகள், விமான தொழிற்சாலைகள், உருக்கு ஆலைகள் போன்றவை அரசுடமையாக்கப்பட்டன.

மக்களுக்கு நாடு தழுவிய பொது மருத்துவ சேவை, இலவசக் கல்வி, அரசு வீட்டு வசதி போன்ற நலத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. சமூக நலத்திட்டங்களுக்கான சட்டங்கள் அனைத்தும் சோசலிச அபாயம் கருதி தொழிலாளர் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி என்ற இரு தரப்பின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.

அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. தொழிற்சங்கங்களின் செல்வாக்கு பெருகியது. 1955-ம் ஆண்டு வேலை இல்லாத் திண்டாட்டம் 1 சதவீதமாக குறைந்து வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 2.15 லட்சமாக குறைந்திருந்தது.

இந்த பொருளாதார சூழலில் தொழிலாளர் கட்சி செல்வாக்கு பெற்றிருந்த டார்ட்பர்டு தொகுதியில் போட்டியிடுவதற்கு மார்கரெட் தாட்சரை கன்சர்வேடிவ் கட்சி தேர்ந்தெடுத்தது. இரண்டு தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர் 1959-ம் ஆண்டு தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி செல்வாக்கு பெற்றிருந்த பின்க்ளே தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.

கோழி, கோழி முட்டைத் தொழிலில் பெருமுதலாளியான ஆன்டனி பிஷர் என்பவர் நிதி கொடுத்து உருவாக்கிய பொருளாதார விவகாரங்களுக்கான கழகத்துடன் மார்கரெட் தாட்சர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். ‘அரசாங்கத்தின் அளவை குறைக்க வேண்டும், மக்கள் நலத் திட்டங்களை ஒழிக்க வேண்டும், வரிகளை குறைக்க வேண்டும், சந்தைப் போட்டியை ஊக்குவிக்க வேண்டும்’ என்ற அடிப்படையிலான பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அந்த கழகம் செய்து வந்தது.

1970-ம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த எட்வர்ட் ஹீத் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அமைச்சரவையில் மார்கரெட் தாட்சர் கல்வி, அறிவியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். கல்வித் துறையில் அரசின் செலவுகளை குறைக்கும் முயற்சியில் 7 வயது முதல் 11 வயது வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு பால் வழங்கும் அரசின் திட்டத்தை ஒழித்துக் கட்டியதன் மூலம் ‘மார்கரெட் தாட்சர் – பால் பிடுங்கியவர்’ என்ற பட்டப் பெயரைப் பெற்றார்.

1975-ல் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி தோற்றதை அடுத்து எட்வர் ஹீத்தை எதிர்த்து போட்டியிட்டு கட்சி தலைவராகவும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார் மார்கரெட் தாட்சர். அந்த காலத்தில்தான் ‘3 ஆண்டுகளுக்குள் பிரதமர், 11 ஆண்டுகளுக்கு பிரதமர் பதவி’ என்று சந்திராசாமியின் நல்லாசியை பெற்றிருக்கிறார்.

1979-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்று மார்கரெட் தாட்சர் பிரதமரானார் . 1970களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், சீனா அன்னிய முதலீடுகளை வரவேற்று உற்பத்தி வாய்ப்புகளை அளித்தது, சோசலிச முகாமின் பின்னடைவு இவற்றால் பிரிட்டிஷ் தொழில்களை தனியார் மயமாக்கி உற்பத்தித் துறையை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகள் ஆரம்பமாயின.

தாட்சர் தலைமையிலான அரசு, பெருநிறுவனங்களுக்கான வருமான வரியை குறைத்து, உழைக்கும் மக்கள் மீதான மறைமுக வரிகளை அதிகரித்தது; பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் முதலாளிகளுக்கு விற்கப்பட்டு அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு முதலாளிகளுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்பட்டன; செலவுகளை குறைப்பதாக மக்கள் நலத் திட்டங்கள் படிப்படியாக ஒழித்துக் கட்டப்பட்டன; பொது மருத்துவத் துறை, இலவசக் கல்வி, ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்புத் திட்டங்கள் குறைக்கப்பட்டன.

“சமூகம் என்று ஒன்றும் கிடையாது. தனிப்பட்ட ஆண்களும் பெண்களும் குடும்பங்களும்தான் உண்டு. ஒவ்வொருவரும் தம்மைத் தாமே பராமரித்துக் கொள்ள வேண்டும்.” என்று பல ஆயிரம் கோடி சொத்துக்களை கைப்பற்றி வைத்திருந்த முதலாளிகளுடன் தினமும் உழைத்துப் பிழைக்கும் தொழிலாளிகள் ‘சுதந்திரமாக’ போட்டியிட்டு வதைபட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார், தாட்சர்.

முதலாளிகளின் லாப வேட்டைக்கு உள்நாட்டு தொழிலாளர்களை சார்ந்திருக்கத் தேவையில்லாத நிலையில், மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தங்கள் ஜனநாயகமற்ற முறையில் ஒடுக்கப்பட்டன. தொழிற்சங்கங்களின் செல்வாக்கு ஒழிக்கப்பட்டது.

1984-ல் தேசிய நிலக்கரி வாரியம் 174 அரசு நிலக்கரி சுரங்கங்களில் 20ஐ மூடுவதன் 1.87 லட்சம் வேலைகளில் 20,000ஐ வெட்டுவதாக அறிவித்தது. அதை எதிர்த்து தொழிலாளர்கள் ஒரு ஆண்டு வரை வேலை நிறுத்தம் செய்தனர். அரசு பாராமுகமாக இருந்து வேலை நிறுத்தத்தை முறியடித்தது. 1985-ல் 25 சுரங்கங்கள் மூடப்பட்டன. 1992-ல் 97 சுரங்கங்கள் மூடப்பட்டன. 1994-ல் மீதியிருந்த சுரங்கங்கள் தனியார் மயமாக்கப்பட்டன.

தொழிலாளர்களும் சிறு தொழில்களும் நசிவடைய, சிட்டி ஆப் லண்டன் எனப்படும் ஒரு சதுர மைல் பரப்பில் குவிந்திருக்கும் நிதி நிறுவனங்கள் உலகளாவிய நிதி மூலதன பாய்ச்சல் மூலம் கொழுக்க ஆரம்பித்தன. இங்கிலாந்தில் தொழில் துறை உற்பத்தி வீழ்ச்சியடைந்தது; உழைக்கும் மக்கள் தமது அடிப்படை தேவைகளுக்கு கூட வெளிநாட்டு இறக்குமதியை சார்ந்திருக்க வேண்டியிருந்தது. லண்டனின் நிதித்துறை சூதாடிகள் உலகம் முழுவதும் மூலதன சூதாட்டத்தை நடத்த ஆரம்பித்தனர்.

  • அரசு செலவுக் குறைப்புக்கும் உற்பத்தி திறன் அதிகரிப்புக்கும் நிகராக மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை.
  • போக்குவரத்துத் துறையில் லாபம் இல்லாத தடங்களுக்கு சேவைகள் வெட்டப்பட்டன.
  • தனியார் மயமாக்கப்பட்ட போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய பேருந்து போக்குவரத்து கம்பெனி ஏகபோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
  • தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டு, பயன்பாட்டு கட்டணங்கள் விண்ணைத் தொட்டன.
  • வீட்டு பயனீட்டாளர்களுக்கு மின்கட்டணங்கள் அதிகமாக்கப்பட்டன, மின் கட்டண வீதங்கள் தொழில் துறை முதலாளிகளுக்கு சாதகமாக மாற்றப்பட்டன.
  • தொழிலாளர்களின் எண்ணிக்கை 1979-ல் இருந்ததை விட 1997-ல் 20 லட்சம் குறைந்திருந்தது. கூலியும், சம்பளமும் குறைந்து தனியார் நிறுவனங்களின் லாபம் உயர்ந்தது.
  • அரசுத் துறை நிறுவனங்களை விற்று கிடைத்த காசில் பணக்காரர்களுக்கு வரிகள் குறைக்கப்பட்டன.
  • தனியார் மயமாக்கப்பட்ட ரயில் போக்குவரத்து கடும் சீரழிவுகளுக்கு உள்ளானது.

1980களின் இறுதியில் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுகள் வெளிப்பட ஆரம்பித்து தொழிலாளர்கள், சிறு முதலாளிகள், வணிகர்கள் என்று அனைத்து பிரிவினரின் வெறுப்பையும் சம்பாதித்திருந்தது தாட்சர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அரசு. அடுத்த தேர்தலில் தாட்சரை தலைவராக வைத்திருந்தால் வேலைக்காகாது என்று உணர்ந்த கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் 1990-ம் ஆண்டு தாட்சரை கட்சித் தலைவர், பிரதமர் பதவிகளிலிருந்து பதவி நீக்கம் செய்தனர்.

1984-ம் ஆண்டு பிரிட்டனின் பொருளாதாரத்தில் விவசாயத் துறை 5.5 சதவீதம், தொழில் துறை உற்பத்தி 50.5 சதவீதம், சேவைத்துறை 48.12 சதவீதம் பங்கு வகித்தன. 2009-ல் விவசாயத் துறையின் பங்கு 0.7 சதவீதமாகவும், தொழில் துறை உற்பத்தி 16.15 சதவீதமாகவும் வீழ்ச்சியடைய, சேவைத்துறை 83.16 சதவீத அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது.

1984-ம் ஆண்டு உள்நாட்டு தொழில்துறை உற்பத்தி மதிப்பில் 49.5 சதவீதமாக இருந்த உற்பத்தி பொருட்களின் இறக்குமதி 2009-ம் ஆண்டு 154.6 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதாவது பிரிட்டன் தான் உற்பத்தி செய்யும் பொருட்களின் மதிப்பை விட 1.5 மடங்கு அதிக மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்து பயன்படுத்துகிறது. பொருட்கள் இறக்குமதியில் 83 சதவீதம் தொழில் துறை பொருட்கள்; 12 சதவீதம் மூலப் பொருட்களும் எரிபொருட்களும்.

1984-க்கும் 2007-க்கும் இடைப்பட்ட 13 ஆண்டுகளில், 16 முதல் 24 வயது வரையுள்ள இளைஞர்களுக்குக் கிடைத்துவந்த வேலைவாய்ப்புகளில் 40 சதவீத வேலைகள் ஒழித்துக் கட்டப்பட்டுள்ளன. தற்பொழுது 18 சதவீத இளைஞர்கள் பள்ளிக்கோ, வேலைக்கோ செல்ல வழியற்றவர்களாக ஆக்கப்பட்டு, சமூகத்தின் கடைக்கோடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, நகர்ப்புறத்தில் வசிக்கும் அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 வயது சிறுவன்கூட ஏதாவதொரு கும்பலில் சேர்ந்து ஊரைச் சுற்றுவது சர்வசாதாரணமாகிவிட்டது.

நாட்டின் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை முற்றிலும் ஒழித்துக் கட்டி விட்டு பன்னாட்டு முதலாளிகளும், நிதி நிறுவன சூதாடிகளும் கொழுப்பதற்கான பொருளாதார கொள்கைகளை ஆரம்பித்து வைத்த பெருமை தாட்சரை சேரும்.

பிரதமர் பதவியை விட்டு விலகிய பிறகும் பன்னாட்டு நிறுவனங்கள் தாட்சருக்கான தமது நன்றியை மறந்து விடவில்லை. ஜூலை 1992-ல் பன்னாட்டு சிகரெட் நிறுவனம் பிலிப் மோரிஸ் தாட்சருக்கு புவிஅரசியல் ஆலோசகர் பதவி அளித்து ஆண்டுக்கு $2.5 லட்சம் ஊதியமாகவும், $2.5 லட்சம் அறக்கட்டளைக்கு நன்கொடையாகவும் வழங்கியது. இதைத் தவிர பிலிப் மோரிஸ் ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் நிகழ்த்தும் ஒவ்வொரு உரைக்கும் அவருக்கு $50,000 ஊதியம்  வழங்கப்பட்டது.

ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்குமான போராளி என்று  பொய்யாக போற்றப்படும் தாட்சர் 1999-ல் சிலியின் முன்னாள் கொடுங்கோல் ஆட்சியாளன் அகஸ்டோ பினோசெட் மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட போது அவரை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்தார். 1999-ல் லண்டனில் வீட்டுச் சிறையில் இருந்த அவரை போய் பார்த்தார். மார்ச் 2000-ல் பினோச்சே வழக்குகளை எதிர் கொள்ளாமலேயே பிரிட்டிஷ் அரசால் விடுவிக்கப்பட்டார்.

2005-ம் ஆண்டு முதல் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மார்கரெட் தாட்சர் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி திங்கள் கிழமை லண்டனில் மரணமடைந்தார்.

புகழ் தோன்றிய பத்து வருடங்களுக்குள்ளேயே தாட்சரின் மக்கள் விரோத கொள்கைகள் அம்பலப்பட்டு அனைவரும் வெறுக்கத் துவங்கினர். தற்போது தாட்சரின் மறைவை இங்கிலாந்து மக்கள் கொண்டாடுவதாகவும் செய்திகள் வருகின்றன. முதலாளித்துவத்தின் உலகமயக்கொள்கைக்கு தேவைப்பட்ட நடவடிக்கைகளை தாட்சர் எடுத்தார். அதனாலேயே முதலாளித்துவ உலகத்தால் பாராட்டப்பட்டு, மக்களால் தூற்றப்பட்டார்.

இதுதான் இரும்புப் பெண் துருப்பிடித்து மறைந்த கதை!

– அப்துல்.

மேலும் படிக்க
Thatcher, Chandraswami and I
The iron lady who remade Britain
Margaret Thatcher
UK Business

பட்ஜெட் 2013 – 14 பன்னாட்டு நிதிச் சூதாடிகளுக்குச் சமர்ப்பணம்!

0

மைய அரசின் 2013-14 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கையை காங்கிரசின் விசுவாசிகள் மட்டுமின்றி, இரண்டு சர்வதேச தர நிர்ணய நிறுவனங்களும் பாராட்டியிருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.  ஆறேழு மாதங்களுக்கு முன்பு, இந்தியாவின் தரச் சான்றைக் குறைக்கப் போவதாக மிரட்டிவந்த சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள், இன்று பட்ஜெட்டைப் பாராட்டுகின்றன என்றால், இந்த மனமாற்றம் ஆதாயமில்லாமலா ஏற்பட்டிருக்கும்?

பட்ஜெட் கார்ட்டூன்முடிவடையப் போகும் இந்த நிதியாண்டில் (2012-13) நிதிப் பற்றாக்குறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.7 சதவீதமாக அதிகரிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், சிதம்பரம் அப்பற்றாக்குறையை 5.2 சதவீதமாகக் கட்டுப்படுத்திவிட்டதாக பட்ஜெட்டில் கணக்குக் காட்டியிருக்கிறார்.  இது மட்டுமின்றி, வரும் நிதியாண்டில் (2013-14) அப்பற்றாக்குறையை 4.8 சதவீதமாகக் குறைக்கும் அளவிற்கு பட்ஜெட்டைத் தயாரித்திருப்பதோடு, 2014-15 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை, சர்வதேச நிதி நிறுவனங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு – 3 சதவீதமாகக் குறைந்துவிடும் என்றும் உறுதியளித்திருக்கிறார்.  சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள் சிதம்பரத்தின் பட்ஜெட்டைப் பாராட்டியிருப்பதன் பின்னணி இதுதான்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பெட்ரோலுக்குக் கொடுத்து வந்த மானியத்தை முற்றிலுமாக நிறுத்திய மைய அரசு, அதன் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை அதிகார வர்க்கக் கும்பலிடம் ஒப்படைத்தது; இதனையடுத்து, ஆண்டொன்றுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் அந்த எண்ணிக்கை ஒன்பதாக உயர்த்தப்பட்டது.  டீசலின் விலையை மாதாமாதம் 50 காசு உயர்த்தி விற்கும் முடிவினை அறிவித்து, டீசலுக்கு வழங்கி வந்த மானியத்திற்கும் மங்களம் பாடிவிட்டது, மைய அரசு.  இந்தச் சீர்திருத்தங்களின் மூலம் பட்ஜெட்டிற்கு முன்பாகவே பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு எரிபொருள் மானியத்தை வெட்டித் தள்ளினார், ப.சிதம்பரம்.

கடந்த ஆண்டு (2012-13) பட்ஜெட்டில் உணவு மானியத்திற்கு 80,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.  பின்னர், அதில் 5,000 கோடி ரூபாய் வெட்டப்பட்டு, உணவு மானியம் 75,000 கோடி ரூபாயாகச் சுருக்கப்பட்டது.  மைய அரசு கொண்டு வந்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால், குறைந்தது 1,35,000 கோடி ரூபாய் மானியமாக ஒதுக்க வேண்டும் என்ற நிலையில், ப.சி., தனது பட்ஜெட்டில் உணவு மானியத்திற்கு ஒதுக்கியிருக்கும் தொகை 90,000 கோடி ரூபாய்தான். உணவு மானியத்திற்கு 45,000 கோடி ரூபாய் குறைவாக ஒதுக்கியிருப்பதைப் பற்றிப் பேச மறுக்கும் காங்கிரசு கும்பல், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உணவு மானியத்திற்குச் சற்றுக் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதைக் காட்டித் தன்னை ஏழைப் பங்காளனாகக் காட்டிக் கொள்ள முயலுகிறது.

தங்கம்
கடந்த 2005-06ம் ஆண்டு தொடங்கி 2012-13 ஆம் ஆண்டு முடியவுள்ள எட்டு ஆண்டுகளில் தங்கம், வைரம், சுங்கவரிச் சலுகைகள் 3,14,456 கோடி ரூபாயாகும். இதுவும் உள்ளிட்டு கடந்த எட்டு ஆண்டுகளில் மேட்டுக்குடிப் பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மொத்த வரிச்சலுகை 31,11,169 கோடி ரூபாய். வரிச்சலுகைகள் என்ற பெயரில் சட்டபூர்வமாக நடந்து வரும் இப்பகற்கொள்ளைதான் பற்றாக்குறை என்ற புதைசேற்றுக்குள் இந்தியாவைத் தள்ளி விட்டுள்ளது.

இப்படி எரிபொருள், உணவு, உரம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட மானியங்களை வெட்டியதன் மூலம் அல்லது குறைவாக ஒதுக்கியதன் மூலம் 26,571 கோடி ரூபாயும்;  கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், சாலை வசதி, பாசன வசதி உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வெட்டியதன் மூலம் ஏறத்தாழ 90,000 கோடி ரூபாயும் மக்களிடமிருந்து மறைமுகமாகப் பிடுங்கியிருக்கிறார், ப.சிதம்பரம்.  மேலும், பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளையும், அலைக்கற்றை உள்ளிட்ட இயற்கை வளங்களையும் தனியாருக்குத் தாரை வார்ப்பதன் மூலம் 50,000 கோடி ரூபாய் திரட்டவும் திட்டமிட்டுள்ளார்.  நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க ப.சிதம்பரம் கையாண்டுள்ள இந்த வழிகளை ஜேப்படித் திருட்டுத்தனத்தோடு மட்டுமே ஒப்பிட முடியும்.

தனியார்மயம்-தாராளமயம் நடைமுறைக்கு வந்த பிறகு, நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் என்ற ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களின் கட்டளையை, இந்திய அரசு புனிதமான மதக் கட்டளையைப் போலக் கடைப்பிடித்து வருகிறது.  தற்போதைய காங்கிரசு கூட்டணி அரசு மட்டுமின்றி, இதற்கு முன்பிருந்த அரசுகளும் கூட இக்கட்டளைக்கு ஏற்றபடிதான் பட்ஜெட்டைத் தயாரித்து வந்தன.  பற்றாக்குறையைக் குறைப்பதற்கு மக்களுக்கு அளிக்கும் மானியங்களையும், சமூக நலத் திட்டங்களுக்குச் செலவு செவதையும் படிப்படியாக வெட்டுவது என்ற வழிமுறையைத்தான் இதற்கு முன்பிருந்த அரசுகளும் கடைப்பிடித்தன.

ப.சிதம்பரமும் இதேவழியில்தான் இந்த ஆண்டு பட்ஜெட்டைத் தயாரித்து, பற்றாக்குறையைக் குறைத்துக் காட்டியிருக்கிறார்.  பழைய கள்ளு புதிய மொந்தை என்றபடிதான் பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்றபோதும், அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள சூழ்நிலையில்கூட, விலைவாசி உயர்வு மக்களை வாட்டிவரும் வேளையிலும்கூட ப.சிதம்பரம் மானியங்களை வெட்டத் தயங்கவில்லை என்பதனால்தான் சர்வதேசத் தர நிர்ணய நிறுவனங்கள் சிதம்பரத்தின் பட்ஜெட்டைப் பாராட்டியுள்ளன.

கோடிக்கணக்கான மக்களுக்குக் கிடைக்க வேண்டிய மானிய உதவிகளை வெட்டியது குறித்து குற்ற உணர்வோ, வருத்தமோ கொள்ளாத ப.சிதம்பரம், கையளவேயான பணக்காரர்கள் (42,800 பேர்) மீது, அவர்கள் ஆண்டொன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டும் வருமானத்தின் மீது மட்டும் கொஞ்சம் கூடுதலாக, எறும்பு கடித்தாற் போல வரி விதிக்க நேர்ந்த துயரத்திற்காகப் பெரிதும் சஞ்சலப்படுகிறார். “நாட்டிலுள்ள ஏழை மக்களின் நலன் கருதி இந்தக் கூடுதல் சுமையை நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்” என மன்றாடும் ப.சிதம்பரம், இந்தக் கூடுதல் வரி விதிப்பை அடுத்த ஆண்டே ரத்து செய்துவிடுவதாக அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார்.

“பல லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட சொகுசுக் கார்கள் இந்தியச் சந்தையில் ஒவ்வொரு ஆண்டும் 27,000-க்கும் அதிகமாக விற்கப்படும் வேளையில்;  இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5.5 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோரின் எண்ணிக்கை 1,25,000 ஆக இருக்கும் என சர்வதேசப் பொருளாதாரப் பத்திரிகைகள் குறிப்பிட்டு வரும் நிலையில், வெறும் 42,800 பேர்தான் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவதாக பட்ஜெட்டில் காட்டப்பட்டுள்ள கணக்கே மோசடியானது” எனக் கேலி செய்கிறார், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தைச் சேர்ந்த எஸ்.குருமூர்த்தி.

இந்த 42,800 பேர் மீது 3 சதவீத அளவிற்குக் கூடுதல் வருமான வரி விதிக்கப்பட்டிருப்பதை மட்டும் பெரிதுபடுத்தியிருக்கும் ப.சிதம்பரம், கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வருமான வரியில் மட்டும் 1,90,000 கோடி ரூபாய் அளவிற்கு இந்த பட்ஜெட்டில் வரி விலக்குகள் அளித்திருப்பதை வெளிப்படையாக அறிவிக்காமல் மூடிமறைத்திருக்கிறார்.

2012-13 ஆம் ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் மொத்த வரிச் சலுகைகள் 5,28,163 கோடி ரூபாய்.  அதே ஆண்டில் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை 5,20,925 கோடி ரூபாய்.  பட்ஜெட்டில் துண்டு விழுவதற்கான காரணத்தை இந்தப் புள்ளிவிவரமே தெளிவுபடுத்திவிடுகிறது.

நியாய விலைக்கடை

2005-06 ஆம் ஆண்டு முதல் 2012-13 ஆம் ஆண்டு முடியவுள்ள காலக்கட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட 31,11,169 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான வரிச்சலுகைகள் இந்தியாவை நிதிப் பற்றாக்குறை என்ற புதைசேற்றுக்குள் மட்டும் சிக்க வைக்கவில்லை.  கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான தனியார்மயம் – தாராளமயம் என்ற இப்பொருளாதாரக் கொள்கை தேக்கவீக்கம் என்ற கட்டுமான நெருக்கடிக்குள்ளும் இந்தியாவைத் தள்ளிவிட்டுள்ளது.  குறைந்த கூலி, சம்பள வெட்டு, வேலையிழப்பு, விலைவாசி உயர்வு, மானிய வெட்டு, விவசாய நசிவு என மக்கள் சந்தித்துவரும் பிரச்சினைகள் அனைத்தும் இந்நெருக்கடியின் விளைவுகளாகும்.

உலகமயம் இந்தியாவைப் பொருளாதார வல்லரசாக மாற்றிவிடும் என ஆளும் கும்பல் கூறி வந்த சரடுகளையெல்லாம் இந்தத் தேக்கவீக்கம் வெளுத்துப் போகச் செய்து விட்டதை இன்று யாராலும் மறைக்க முடியவில்லை.   “பொருளாதாரத் தேக்கம், விலைவாசி உயர்வு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆகியவைதான் நாம் தற்பொழுது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள்” எனத் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ள ப.சிதம்பரம், இதிலிருந்து நம்மைக் காப்பாற்ற அந்நிய மூலதனத்திடம் சரணடைவதைத் தவிர வேறு நாதி நமக்கில்லை என்று பிரகடனம் செய்வதோடு, அந்நிய மூலதனத்திற்கு காட்டப்படும் சலுகைகளை யாரும் எதிர்க்கக் கூடாது என்றும் அறிவுரை சொல்கிறார்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ரேஷன் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதைப் பலப்படுத்தக் கூடாது; மாறாக, சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும்.  நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகள் மீதும் கைவைக்கக் கூடாது; அவர்கள் வரி ஏப்பு செவதையும் கண்டுகொள்ளக் கூடாது; மாறாக, மக்களுக்கு வழங்கப்படும் மானியத்தை வெட்ட வேண்டும்.  இந்த மானிய வெட்டைக் கவர்ச்சிகரமான முறையில் நடைமுறைப்படுத்த “உங்கள் பணம், உங்கள் கையில்” திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.  நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சமாளிக்க பங்குச் சந்தை, வங்கி, காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட நிதிச் சந்தையில் அந்நிய மூலதனத்திற்கு இருக்கும் கட்டுப்பாடுகளை அறவே நீக்க வேண்டும் – இவைதான் மன்மோகன் சிங் – ப.சிதம்பரம் கும்பல் தற்போதைய நெருக்கடியைத் தீர்க்க முன்வைக்கும் தீர்வுகள்.

எந்த விஷக் கிருமி இந்திய மக்களை மேலும் மேலும் வறுமை படுகுழிக்குள் தள்ளி வருகிறதோ, எந்த விஷக் கிருமி இந்தியப் பொருளாதாரத்தைத் தேக்க வீக்கம் என்ற கட்டமைப்பு நெருக்கடிக்குள் சிக்க வைத்ததோ, அதே விஷக் கிருமியை இன்னும் தீவிரமாக இந்தியாவிற்குள் இறக்கிவிட்டால், இந்தியா அடுத்த ஆண்டே 13 சதவீதப் பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துவிடும் என நம்மை நம்பச் சொல்கிறார், ப.சிதம்பரம்.  13 சதவீத பொருளாதார வளர்ச்சி என்ற வாய்வீச்சு நிறைந்துள்ள ப.சிதம்பரத்தின் பட்ஜெட் பற்றிச் சுருக்கமாகச் சொன்னால், அது இந்தியாவைப் பன்னாட்டு நிதிச் சூதாடிகளிடம் முழுமையாக அடகு வைக்கும் இன்னொரு அடிமைச் சாசனம் தவிர வேறில்லை.

– செல்வம்
___________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013
___________________________________________________________________________________

ஈழம்: மாணவர் எழுச்சியில் ஒளிந்துகொள்ளும் துரோகிகள், பிழைப்புவாதிகள்!

17

“ஈழத் தமிழருக்கெதிராக இனப் படுகொலை நடத்திய ராஜபக்சே கும்பலின் போர்க் குற்றங்கள் மீதான சர்வதேச விசாரணை, தண்டனை வேண்டும்; பொது வாக்கெடுப்பு வேண்டும்;” இவ்விரண்டு சரியான, அவசியமான கோரிக்கைகளை முன்வைத்துத் தமிழக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள், 1983 ஜூலைக்குப் பிறகு நாம் கண்டதொரு தமிழகம் தழுவிய எழுச்சியை நினைவுபடுத்துகின்றன.

1983 ஜூலையில் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன்  உட்பட 53 ஈழத் தமிழர்கள் வெளிக்கடை சிறையில் வைத்துச் சிங்களக் காடையர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்; அதைத் தொடர்ந்து சிங்கள இனவெறி இராணுவம் கட்டவிழ்த்துவிட்ட வெறியாட்டத்தில் பலநூறு ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பலர் சிங்களக் காடையர்களின் வல்லுறவுக்குப் பலியாகினர். பல்லாயிரக்கணக்கான அகதிகள் தமிழகத்தில் வந்து குவிந்தனர். ஆத்திரமும் கோபமும் அடைந்த தமிழக மக்கள், தன்னெழுச்சியாக, இப்போது நடப்பதைவிட மிகப்பெரிய அளவில் ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் குதித்தார்கள். தமிழகம் முழுவதும் பல  நகரங்கள், கிராமங்களில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் – என அனைத்துத் தரப்பும் தெருவில் இறங்கி, பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், முற்றுகைகள், அன்றைய சிங்கள இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே கொடும்பாவி எரிப்பு எனப் போராட்டங்கள் நடத்தினர்.  அதன் பிறகு, அவ்வாறான மிகப் பெரிய எழுச்சியைத்  தமிழகம் கண்டதில்லை.

எனினும், புலிகளின் துப்பாக்கிக் கலாச்சாரம், பிரிவினைவாதம் என்று பீதி கிளப்பிப் பார்ப்பன ஆதிக்கச் செய்தி ஊடகங்கள் நடத்திய அவதூறுப் பிரச்சாரம், குறிப்பாக, ராஜீவ் கொலைக்குப் பிறகு ஜெயலலிதா அரசு கட்டவிழ்த்துவிட்ட ஈழ எதிர்ப்புப் பிரச்சாரம், ஈழத் தமிழர் வேட்டை – இவை காரணமாக முன்பு நிலவிய ஈழ ஆதரவு எழுச்சி மங்கி, மறைந்து போனது. கடைசியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுவதற்கே மக்கள் அஞ்சும் சூழல் நிலவியது. அந்த நிலையிலும் அரசு துரோக வழக்கு, “தடா” கைதுகளை எதிர் கொண்டும், புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகள் மட்டுமே ஈழ ஆதரவு இயக்கங்களை நடத்தின. அப்போது  நெடுமாறன், வைகோ, ராமதாசு, வீரமணி, மணியரசன் போன்ற புலி ஆதரவாளர்கள்கூட முடங்கிப் போனார்கள்.

அடுத்த இரண்டு பத்தாண்டுகளின்போது, விடுதலைப் புலிகளின் படை வெற்றி முகத்தில் உள்ளதென்றும், ஈழத்தின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கிட்டத்தட்ட புலிகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டனவென்றும், விரைவில் தனி ஈழம் பிரகடனப்படுத்தப் போகிறார்கள் என்றும், அதனைப் பிற நாடுகள் அங்கீகரிப்பது மட்டுமே தேவை என்றும் ஒருபுறம் புலி ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்து வந்தார்கள்.  இன்னொருபுறம் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், அரசின் அச்சுறுத்தல்கள் அதிகரித்தன. புலிகளையும் அதன் ஆதரவாளர்களையும் ஒழித்துக் கட்டுவதென்பது ஜெயலலிதா அரசின் நடவடிக்கை என்பதைத் தாண்டி, அவரது சொந்த முறையிலான வெறி பிடித்த நடவடிக்கையாகவே இருந்தது. இருப்பினும், ஈழ விடுதலைக்கு ஆதரவான எழுச்சி எதுவும் தமிழகத்தில் நடைபெறவில்லை.

2006-இல் மகிந்த ராஜபக்சே அரசு புலிகளுக்கு எதிரான இறுதிப் போரைத் துவங்கியது. மாவிலாறில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை இரண்டரை ஆண்டு காலம் நீடித்த இந்தப் போர் அதிகரித்த அளவில் ஈழத் தமிழின அழிப்புப் போராகவே இருந்தது. 2008-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சிங்கள இனவெறி இராணுவத்தின் கிளிநொச்சி முற்றுகையும் தாக்குதலுமாகத் தீவிரமடையத் தொடங்கின. புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லிக் கொண்டு, போர் விமானங்களும், பீரங்கிகளும், ஹெலிகாப்டர்களும் ஈழத் தமிழர் மீது கொத்துக்குண்டு மழை பொழிந்தன. நூற்றுக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட, எஞ்சியவர்கள் வீடிழந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் காடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். உணவும் மருத்துவமும் கிடைக்காமல் சொந்த மண்ணில் அகதிகளாகவும் நாடோடிகளாகவும் அலைந்தனர்.

அப்போதும்கூட தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு ஈழ ஆதரவு எழுச்சி எதுவும் நடந்துவிடவில்லை. கிளிநொச்சியைக் கைப்பற்றி, வன்னியைத் திறந்தவெளி வதை முகாமாக சிங்கள இராணுவம் மாற்றிவிட்ட நிலையில், புலிகள் முல்லைத் தீவுக்கு விரட்டப்பட்ட நிலையில், “எப்படியாவது போரை நிறுத்துங்கள்; இங்கே நாங்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுகிறோம்” என்று ஈழத் தமிழர்கள்  துயரக்குரல் எழுப்பினர்.  முத்துக்குமார் தீக்குளிப்பும், வழக்குரைஞர்கள் போராட்டங்களும் தமிழகத்தில் ஈழ ஆதரவு உணர்வலைகளை ஏற்படுத்தின. இவற்றில் புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகளின் பங்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. தமிழகமோ மக்களவைத் தேர்தல் திருவிழாக் கொண்டாட்டத்தில் மூழ்கடிக்கப்பட்டிருந்தது. ஈழப் போரோ, முல்லைத் தீவு, முள்ளிவாய்க்கால், இறுதியாக நந்திக் கடற்கரையில் வரலாறு காணாத தமிழின அழிப்புப் படுகொலையை நோக்கி நகர்ந்தது.

காங்கிரசு – கருணாநிதி தலைமையில் ராமதாசு, திருமா திரண்டு மன்மோகன் – சோனியா கும்பலுக்குக் கடிதம் – மனுப் போட்டு மன்றாடுவது, அரை நாள் உண்ணாவிரதம், மனித  சங்கிலி, மேனன் – நாராயணன், பிரணவ முகர்ஜியின் போர் நிறுத்த வாக்குறுதிகள் -இலங்கை விஜயங்கள் எனப் பித்தலாட்ட நாடகங்களை அடுத்தடுத்து அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள். மறுபுறம், ஜெயலலிதா தலைமையில் பா.ஜ.க. முதல் தா.பா.வரை புலி ஆதரவாளர்கள் உட்பட ஓரணியில் திரண்டார்கள். “இந்திய இராணுவத்தை அனுப்பி தமிழீழத்தைப் பெற்றுத் தருவேன்” என்ற வாக்குறுதியோடு ஜெயலலிதா “ஈழத் தாய்” அவதாரம் எடுத்தார். “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று நம்பச் சொன்னார்கள், புலி ஆதரவாளர்கள்.

ஈழம் மாணவர் எழுச்சி2009 மே மாதம் இரண்டாவது வாரத்தில் ஈழத்தில் இனப் படுகொலை உச்சத்தில் நடந்தபோதுகூட,  தமிழகத்தில் அதற்கெதிரான குறிப்பிடத்தக்க பெரும் எழுச்சி எதுவும் நடந்துவிடவில்லை. “நாங்கள் தாய்த் தமிழகத்தை நம்பினோம்; அவர்களும் எங்களைக் கைவிட்டுவிட்டார்கள்”  என்று ஈழத் தமிழர்கள் மனம் உடைந்து கூறினர். இத்தகைய நிலைக்குப் பொறுப்பானவர்கள் யார்? ஈழப் போரை வழிநடத்திய விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் தலைவர் பிரபாகரன் மீது “உலகிலேயே சிறந்த அரசியல், இராணுவ வல்லுநர்; போரில் வெல்வதற்கு ஏதோ தந்திரங்கள் வைத்திருக்கிறார்; புலிகளை வெல்லவே முடியாது” என்ற மாயையை  இறுதிக் கட்டத்திலும் பேணியவர்கள் யார்? சோனியா – அத்வானி, கருணாநிதி – ஜெயலலிதா, அமெரிக்கா, சர்வதேச சமூகம் எனப்படும் அதன் எடுபிடி நாடுகள் ஆகிய மேலாதிக்க பாசிச சச்திகள், பிழைப்புவாதிகள் – துரோகிகள், ஏகாதிபத்திய வல்லரசுகள் மீது அடுத்தடுத்து நம்பிக்கை வைக்கும்படி வாதாடியவர்கள் யார்? ஈழத்தின் “தலைவிதி” முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்கு சில நாட்களுக்கு முன்பு நடக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்துத்தான் அமையவிருக்கிறது என்ற பிரமையை உருவாக்கியது யார்? அவர்கள்தான் அத்தகைய செயலற்ற நிலைக்குப் பொறுப்பானவர்கள்!

இந்தியா, இலங்கை அரசுக்கு நவீன ஆயுதங்களையும் விண்வெளி வேவுச் செய்திகளையும் வழங்குவது மட்டுமல்ல; நேரடியாக போர்க்களத்தில் இந்திய இராணுவ அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் என்பது 2008 அக்டோபரிலேயே அம்பலமானது. புலிகளின் எதிர்த்தாக்குதலில் இந்திய இராணுவ அதிகாரிகள்  போர்க்களத்தில் நிற்பதையும், அவர்களில் சிலர் காயமடைந்ததையும் இலங்கை ஏடுகளே உறுதி செய்தன. இந்தியா ஈழத்தின் எதிரி நாடாகச் செயல்படுவதையும் ராஜபக்சேவுடன் ஈழப் போரை வழிநடத்துவதையும் அறிந்திருந்தபோதும், அப்போதே கருணாநிதியின் துரோகங்களை அறிந்திருந்த போதும், புலி ஆதரவாளர்கள் இந்த உண்மைகளை முன்வைத்து மன்மோகன் – சோனியா மற்றும் கருணாநிதி அரசுக்கு எதிராக எந்தப் போராட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. மாறாக, மன்மோகன் – சோனியா கும்பல் மீதும் இந்தியா மீதும் நம்பிக்கையைப் பேணினார்கள்; பார்ப்பன, மலையாள அதிகாரிகளின் தூண்டுதல், தவறான ஆலோசனைகள் காரணமாகத்தான் இந்திய அரசு போர் நிறுத்தம், ஈழ ஆதரவு நிலையெடுக்க மறுக்கிறது என்றும் இலங்கையிடம் இந்திய அரசு ஏமாந்து விட்டது என்றும், சீனா, பாகிஸ்தான் சதிகளை முறியடிக்க ஈழத் தமிழர் மீது நம்பிக்கை வைத்து ஆதரவளிக்க வேண்டும் என்றும், சோனியாவின் தாய்மையுணர்ச்சிக்கும் மன்மோகனின் மனிதாபிமானத்துக்கும் மன்றாடினார்கள்.

பிழைப்புவாதிகள்
பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து வை.கோ., நெடுமாறன் தலைமையில் சென்னை – உயர்நீதிமன்றம் அருகே நடந்த ஆர்ப்பாட்டம்; பிழைப்புவாதக் கும்பலின் பெருங்கூச்சல்.

“ஈழம் மலர்வதற்கு உத்திரவாதம் இருந்தால் நான் பதவி விலகுகிறேன்” என்ற கருணாநிதியை விட்டு விலகி,  “40 தொகுதிகளையும் உத்தரவாதப்படுத்தினால் ஈழம் தருகிறேன்” என்ற ஜெயலலிதாவின் வாக்குறுதிக்குப் பின்னால் அணி அமைத்தார்கள், புலி ஆதரவாளர்கள். “தனி ஈழம் கூடாது; ஒன்றுபட்ட இலங்கையே சரியானது; புலிகள் பயங்கரவாதிகள்” என்பதுதான் பா.ஜ.க. மற்றும் இ.க.க. கட்சிகளின் அதிகாரபூர்வ நிலை என்றபோதும், அவற்றின் தமிழ்நாட்டுத் தலைவர்களான இல.கணேசன், தா.பாண்டியனை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்கள்.

ஈழப்பிரச்சினையில் மட்டுமின்றி, வேறு பல பிரச்சினைகளிலும் இவர்களது அரசியல் சந்தர்ப்பவாதத்தையும் பிழைப்புவாதத்தையும் தம் சொந்த அனுபவத்தில் பார்த்திருக்கும் தமிழக மக்கள், ஈழத் தமிழ் மக்களின் துயரம் குறித்து தமிழக மக்களுக்கு அனுதாபம் இருப்பினும், காங்கிரசு- தி.மு.க. கூட்டணியின் மீது அதிருப்தியும் வெறுப்பும் இருப்பினும், ஈழ மக்களின் துயரத்தை ஜெ. அணியினர்  துடைத்து விடுவார்கள் என்று நம்பிவிடவில்லை.

பிழைப்புவாதிகள், பாசிஸ்டுகள் மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்குமாறு மக்களிடமும் பிரச்சாரம் செய்தார்கள் புலி ஆதரவாளர்கள். உள்ளூர் பிரச்சினைகள், சாதி உள்ளிட்ட  பல்வேறு காரணங்களால் ஆளும் கட்சி மீது மக்களுக்குத் தோன்றியிருக்கக் கூடிய அதிருப்தியை, ஈழ ஆதரவாக அப்படியே மடைமாற்றிவிட முடியும் என்று கணக்குப் போட்டார்கள். அந்தக் கணக்கு பொய்த்து விட்டது. காங்கிசு-தி.மு.க., கூட்டணியே நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றது.

அதேசமயம், ஈவிரக்கமற்ற முறையில் நடந்துகொண்டிருந்த ஈழப்போரின் கடைசி நாட்கள் இந்திய மேலாதிக்கத்தின் கோரமுகத்தை நமக்குக் காட்டுகின்றன. மே 13 அன்று தமிழகத்தில் தேர்தல் முடிந்தபின் இறுதித் தாக்குதலை வைத்துக் கொள்ளுமாறு இலங்கை அரசுக்கு வழிகாட்டி இயக்கியது, இந்திய அரசு. புலி ஆதரவாளர்களோ, மே 16 அன்று தேர்தல் முடிவுகள் வரும்வரை ‘இறுதி முடிவு’ எதுவும் எடுக்கவேண்டாமென புலிகளுக்கு ஆலோசனை கூறினார்கள்.

தோல்வியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட நிலையிலும், “துப்பாக்கிகளை மவுனிக்கச் செய்வது” என்ற தங்களது இறுதி முடிவை அறிவிப்பதற்கு இந்தியத் தேர்தல் முடிவுகள் தெரியும் வரை (மே 16) புலிகள் காத்திருந்தார்கள். தோல்வியை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்பதும், ஒபாமா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கோரிக்கைகளை ராஜபக்சே அரசு நிராகரித்து விட்டது என்பதும் புலிகள் அறியாததல்ல. புலிகளுக்கு நம்பிக்கையூட்டும் எந்த நிகழ்வும் இந்தக் கடைசி நாட்களில் நடந்துவிடவில்லை. இருப்பினும், அன்றாடம் பல்லாயிரம் மக்களும் புலிகளும் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டபோதும், கடைசியாக புலிகள் இயக்கத் தலைவர்களே கொல்லப்படும் நிலைமை நெருங்கிய போதும், “டில்லியில் ஆட்சி மாறினால் போர்நிறுத்தம் வந்துவிடும்” என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.  கடைசி நாட்களின் நிகழ்வுகள் இதனைத் தெளிவாக நமக்குக் காட்டுகின்றன. இந்த மூடநம்பிக்கை மிகவும் பாரதூரமான இழப்பை ஈழத்தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியது.

ஒருவேளை, ஈழ ஆதரவாளர்கள் எதிர்பார்த்த வெற்றியை ஜெயலலிதாவும் பாரதிய ஜனதாவும் பெற்றிருந்தால், மறுகணமே போர்நிறுத்தம் வந்திருக்குமா? அப்படி ஒரு பிரமை ஒருவேளை புலிகளுக்கு இருந்திருந்தாலும், இங்கிருக்கும் புலிகளின் ஆதரவாளர்கள் அந்தப் பிரமையை நீக்கி, அவர்களுக்குத் தெளிவை ஏற்படுத்தி இருக்கவேண்டும். மாறாக, அத்தகைய பிரமையை உருவாக்கும் திருப்பணியையே இவர்கள்தான் செய்து கொண்டிருந்தார்கள். இந்தப் பிரமைக்கு, தங்கள் உயிரையும் சொந்தங்களையும் காவு கொடுத்தார்கள், ஈழத் தமிழ் மக்கள்.

இவ்வாறு குற்றம் சாட்டுவதன் காரணமாக புலி ஆதரவாளர்கள் நம்மீது ஆத்திரப்படலாம். அது குறி தவறிய ஆத்திரம். மாறாக, இத்தகைய பிரமையை இன்னும் தொடர்வதற்காக அவர்கள் மீதுதான் தமிழ் மக்கள்  ஆத்திரம் கொள்ள வேண்டும்.

மே 21-ஆம் தேதியன்று நெடுமாறன், வைகோ, ராமதாசு முதலானோர் நடத்திய பேரணிக்கு ஜெயலலிதாவை அழைத்தார்கள். அவர் வரவில்லை. அதுமட்டுமல்ல; ஜெயலலிதா விடுத்த அறிக்கையிலும் ‘தனிஈழம்’ என்பதோ, ‘இனப்படுகொலை’ என்பதோ ‘ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி’ என்பதோ வார்த்தை அளவில்கூட இடம்பெறவில்லை. இந்த அம்மையாரின் வெற்றிதான் போர்நிறுத்தத்தைக் கொண்டுவரும் என்று ஈழத் தமிழ் மக்களையும் புலிகளையும் நம்ப வைத்து அவர்களைப் படுகுழியில் தள்ளியிருக்கிறார்கள் புலி ஆதரவாளர்கள். எந்தப் புலிகளை இவர்கள் ஆதரித்தார்களோ, அந்தப் புலிகளையே காவு வாங்கிவிட்டது இவர்களுடைய பிழைப்புவாதத் தேர்தல் அரசியல்.

இவ்வளவுக்கும் பிறகு பார்ப்பன பாசிச ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் ஈழப் பிரச்சினையில் மத்திய அரசிடம் வைக்கும் “தனி ஈழம், போர்க்குற்றவாளி, சர்வதேச நீதி விசாரணை, பொருளாதாரத் தடை” என்றெல்லாம் அடிக்கும் சவடால்கள், தீர்மானங்களை நம்பும்படி உலகத் தமிழர்களிடம் புலி ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

“ஈழத் தமிழருக்கு மிகப் பெரிய அளவு துரோகம் புரிந்தது யார்? கருணாநிதியா, ஜெயலலிதாவா?” என்ற தலைப்பிலான இலாவணிதான் தமிழக அரசியலில் அடுத்த சில ஆண்டுகளுக்கு முதன்மை இடத்தைப் பெறப் போகிறது. ஈழத் தமிழினப் படுகொலை, பாசிச ராஜபக்சே கும்பலின் போர்க் குற்றங்களுக்கான விசாரணை, தண்டனை மற்றும் ஈழத் தமிழினத் தன்னுரிமை ஆகிய பிரச்சினைகள் மீதான கோரிக்கைகள், விவாதங்கள், போராட்டங்கள் எழும்போதெல்லாம் இந்தக் கேள்வி வருகின்றது.

2009 மே-யில் ஈழத் தமிழர் இன அழிப்புப் படுகொலைகள் நடந்தபோது ஆட்சியிலிருந்த கருணாநிதி என்ன செய்தார்? அப்படுகொலையை தி.மு.க., பங்கேற்கும் இந்திய அரசு வழிநடத்திய போதும் அதைக் கண்டு கொள்ளாமல், பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தவர்தானே கருணாநிதி. அந்தப் ’பாவச் செயல்’ இந்த இலாவணியினூடே நம் கண் முன்பு வந்து நிற்கும். ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்; இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்; இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழத்தைத் தனிநாடாகப் பெற்றுத் தருவேன் என்றெல்லாம்  ஜெயலலிதா என்னதான் நீலிக் கண்ணீர் வடித்தாலும், புலிகளின் துப்பாக்கிக் கலாச்சாரம், பயங்கரவாதம், பிரிவினைவாதம் என்ற பீதி கிளப்பியதும், ஈழத் தமிழ் அகதிகளை வேட்டையாடியதும், ராஜீவ் கொலைக் குற்றவாளி பிரபாகரனைப் பிடித்து வந்து தண்டிக்க வேண்டும் என்றும், போர் நடந்தால் மக்கள் கொல்லப்படுவது இயல்புதான் என்றும் ஈழத்தமிழர் மீது வெறுப்பை உமிழ்ந்த ஜெயலலிதாவின் குரூர – வக்கிர முகம் இந்த இலாவணியினூடே நம் கண் முன்பு தோன்றும்.

இந்த இலாவணியில் கருணாநிதி, ஜெயலலிதா தலைமையிலான இரு அணிகளில் அரசியல் ஆதாயம் அடிப்படையில் ஏதாவது ஒன்றில் அணி சேர்ந்து பக்கவாத்தியங்களை வாசிக்கவுள்ளவர்கள்தாம் நெடுமா, திருமா, சீமா, வைகோ, சுப.வீ., வீரமணி, இராமதாசு, பிற உதிரி இனவாத மற்றும் பெரியாரிய அமைப்பினர், பெ.ம., தியாகு போன்ற சிலர் ‘கூச்சப்பட்டுக்கொண்டு‘ இந்த குரூப் போட்டோவில் (அல்லது அணி சேர்க்கைகளிலிருந்து) இரண்டடி விலகி நின்றாலும், இவர்களுக்கிடையிலான வித்தியாசம் வெறும் இரண்டடி மட்டும்தான்.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஈழத் தமிழினத்தின் எதிரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு நேரடியான துரோகம் செய்தார்கள்; ஆனால், இவர்கள் செய்தது, துரோகிகளுடன் கைகோர்த்துக் கொண்ட மறைமுகத் துரோகம். புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் இவர்கள் காட்டும் மாளாத விசுவாசம், தமிழீழத்துக்கான தணியாத தாகம், இவ்விரண்டுக்கான பெருங்கூச்சல் – இவை எதுவும் இவர்களின் மறைமுகத் துரோகத்தை மறைத்துவிட முடியாது.

பாசிச காங்கிரசின் பிராந்திய மேலாதிக்க ஈழ எதிர்ப்பு, ராஜபக்சே கும்பலுடனான போர்க் குற்றங்களில் கூட்டு எல்லாம் தமிழக மக்களிடையே அம்பலப்பட்டு, அக்கட்சி தமிழ்நாட்டிலிருந்து துடைத்தெறியப்படும் நேரம் வந்துவிட்டது. மீண்டும் அக்கட்சி ஆட்சிக்கு வரவும் முடியாது. இனி அதனுடன் கூட்டுச் சேர்ந்தால், இங்கு ஒரு ஓட்டுக்கூடப் பெறவும் முடியாது. கருணாநிதி கட்சி ஆட்சியிழப்பதற்குக் காரணமாக அமைந்த 2-ஜி வழக்கில்கூட காங்கிரசின்  முதன்மையான பங்கு அம்பலமாகி வருகின்றது. இந்த நிலையில் மூழ்கும் கப்பலில் இருந்து தப்பிக்கும் எலியைப் போல எகிறிக் குதித்து விட்டார், கருணாநிதி. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருப்பதால், காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து தான் செய்த குற்றங்களையும், முந்தைய ஆட்சிக் காலத்தின் ஊழல்களையும்விட தற்போதைய ஜெயலலிதா ஆட்சியின் தவறுகள்தாம் தமிழக மக்கள் முன்நிற்கும் என்பதால், எப்படியும் தனது குடும்ப ஆட்சியை மீட்டு விடலாம்  என்பது கருணாநிதியின் கணக்கு.

ஜெயலலிதாவின் கணக்கு வேறாக இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான். இனிமேலும் காங்கிரசு, பா.ஜ.க., எதனுடனும் தமிழ்நாட்டில் கூட்டுச் சேர்ந்து பயனில்லை; 40-உம் தனக்குதான்; கண்ணுக்கெட்டிய தூரத்தில் பிரதமர் பதவி என்ற கனவு நிறைவேறாவிட்டாலும், கணிசமான சீட்டுக்களைப் பெற்றுவிடலாம்; சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்பிவிடவும், குவித்த  சொத்துக்களைக் காத்துக் கொள்ளவும் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் யாருடனும் கூட்டுச் சேரலாம். ஈழச் சிக்கல் குறித்து சில தீர்மானங்களும், வாக்குறுதிகளும், சவடால்களும் அடித்தால் போதும்; தனது  ஈழ எதிர்ப்பு நிலைப்பாடுகளால் தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ள வெறுப்பை ஈழ ஆதரவாளர்கள் என்ற பெயரிலுள்ள தனது விசுவாசிகளே  சரிக்கட்டிவிடுவார்கள்; நோட்டுகளையும், சீட்டுக்களையும் விட்டெறிந்தால் போதும்,  பழைய கசப்புகளை மறந்துவிட்டு தான் எட்டி உதைத்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும்கூடத்  தன் காலில் வந்து விழுவார்கள் என்பது ஜெயாவின் கணக்கு.

தமிழகத்திலுள்ள புலி ஆதரவாளர்களும் தமது ஆதாயத்துக்காக இந்த இரு இலாவணிக்காரர்களில்  ஏதாவது ஒருவரைத் தெரிவு செய்து அணிசேர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், அவர்கள் இந்திய ஆளும் வர்க்கங்களைச் சார்ந்து, இந்திய அரசு மற்றும் அதன் தேர்தல் அரசியல் கட்டமைப்புக்குள் மட்டுமே இயங்கக்கூடியவர்கள்; அதற்கு அப்பாற்பட்டுச் சிந்தித்து செயல்படக் கூடியவர்கள் அல்ல.

பின்வரும் உண்மையே இதை நிரூபிக்கிறது: ஈழப் பிரச்சினைக்காக இந்திய அரசை எதிர்த்துப் போராடுவதும் அதன் பொருட்டு பிற விடுதலை இயக்கங்கள் மற்றும் மக்களின் ஆதரவைத் திரட்டுவதும் ஈழ விடுதலைப் போர் வெற்றி பெற அவசியமானது என்பதை எப்போதும் புலி ஆதரவாளர்கள் ஏற்றதில்லை. ஈழம் பிரிவதையோ, தெற்காசியப் பகுதியில் ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டம் வெற்றி பெறுவதையோ இந்திய அரசும் இந்திய தேசியக் கட்சிகளும் ஒரு போதும் ஏற்கவில்லை; அது ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு எதிரானது; இதுதான் சிங்கள இனவெறி அரசுடன் இந்திய அரசு கூட்டுச் சேர்ந்து ஈழப்போரை நடத்தியதற்கு முதன்மைக் காரணம் என்பதை பலமுறை எடுத்துச் சொல்லியும் ஏற்றதில்லை.

இந்திரா-ராஜீவ், எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா, வாஜ்பாய் – அத்வானியையும் இந்திய அரசையும் இராணுவத்தையும் புலி ஆதரவாளர்கள் நம்பினார்கள். புலி பிரபாகரனே இம்மாதிரியான அணுகுமுறையைத்தான் கொண்டிருந்தார். முள்ளிவாய்க்காலில் முற்றான தோல்வியைச் சந்திக்கும் வரை தெற்கு ஆசியாவில் இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு சிங்கள அரசைவிடப் புலிகள் உறுதியான ஆதரவளிப்போம் என்று நட்புக்கரம் நீட்டினார். நீட்டிய அந்தக் கரத்தை மடக்காமல் இருந்ததுதான் பிரபாகரனின் அரசுதந்திர ஆளுமை என்று இங்குள்ள புலி ஆதரவாளர்கள் புகழ்ந்தார்கள். அப்போதும், இப்போதும் இந்திய மேலாதிக்க எதிர்ப்பு, இந்திய தேசிய இனங்களின் தன்னுரிமை என்ற அரசியல் முழக்கங்களின் கீழ் தமிழ் மக்களை அணிதிரட்ட முயற்சிக்காமல், ஈழத் தமிழினப் படுகொலை தமிழக மக்களிடம் தோற்றுவித்த அனுதாப உணர்வை, அப்படியே குறுக்கு வழியில் இனவுணர்வாக உருமாற்றிவிடலாமென ஈழ ஆதரவாளர்கள் முயல்கிறார்கள். இன்னமும் ஈழத்தின் எதிரிகளையும், துரோகிகளையும் வைத்துத்தான் காரியங்களைச் சாதிக்கமுடியும் என்று நம்புகிறார்கள்.

ஈழத் துரோகிகளும் பிழைப்புவாதிகளும் கூட இப்போது தமிழத்தில் ஏற்பட்டுள்ள மாணவர் எழுச்சிக்குள் முகம் புதைத்துக் கொண்டு எல்லாமும் புதிதாக நடப்பதைப் போல மீண்டும் அதே நாடகத்தை நடத்துகிறார்கள்.

ஆனால் சில மாணவர் குழுக்களின் தலைமை, புலிகளும் புலி ஆதரவாளர்களும் செய்த அதே வகையிலான தவறுகளைச் செய்கின்றனர். இப்போது முன்வைக்கப்படும் இரண்டு கோரிக்கைகளை எவ்வாறு, எந்த வழிகளில்  நிறைவேற்றமுடியும் என்பதை ஆழமாகப் பார்க்க மறுக்கின்றனர். இரண்டு கோரிக்கைகளில் ஒன்றான “பொது வாக்கெடுப்பு” என்பதைத் தமது குறுங்குழுவாத அகநிலைப் பார்வையைத் திணித்தும் திரித்தும் வியாக்கியானம் செய்து மாற்றி அமைத்துக் கொண்டு ஈழ ஆதரவு சக்திகளைப் பிளவுபடுத்தும் முயற்சிகளைச் செய்கிறார்கள். அவர்களும் புலி விசுவாசிகளைப் போலவே  “பொது வாக்கெடுப்பு” என்ற முழக்கத்தை “தனித் தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு” என்பதாக மாற்றி அமைத்து ஈழ ஆதரவாளர்களைப் பிளவுபடுத்தவும்  செய்கிறார்கள்.

“பொது வாக்கெடுப்பு” என்பது ஒடுக்கப்படும் இனம் தனது சுயநிர்ணய உரிமையை (தன்னுரிமையை) நிறைவேற்றிக்கொள்ளும் செய்முறை. ஒடுக்கப்படும் இனம் (இங்கே ஈழத்தமிழினம்) தனது அரசியல் வாழ்வுரிமையைத்தானே  முடிவுசெய்துகொள்ளும் உரிமைதான் தன்னுரிமை. அதாவது ஒடுக்கப்படும் இனம், ஒடுக்கும் இனத்தோடு (இங்கே சிங்கள இனத்தோடு) சேர்ந்து ஒரே அரசின்  கீழ் வாழ விரும்புகிறதா அல்லது தனித்ததொரு அரசு (தனித் தமிழீழ அரசு) அமைத்துக்கொள்ள விரும்புகிறதா என்பதை முடிவு செய்வதற்காக ஒடுக்கப்படும் இன மக்களின் கருத்தறியும் பொது வாக்கெடுப்பு. மேலும் சொல்வதானால், ஒடுக்கப்படும் இன மக்களுக்குள்ளும் (ஈழத் தமிழ் மக்களுக்குள்ளும்) மாறுபட்ட கருத்துக்கள் இருப்பின், பெரும்பான்மையினர் எதை ஆதரிக்கின்றனர் என்பதைத் தீர்மானிப்பதற்கான வாக்கெடுப்பு.

ஆகவே, தன்னுரிமை என்பது   ஒடுக்கப்படும் இனத்துக்கு தனியரசு அமைத்துக்கொள்ளும் உரிமையை உறுதி செய்வதாகும். அது  ஒரு ஜனநாயக உரிமை என்பதால், ஒடுக்கப்படும் இனத்துக்குள்ளாகவே தனியரசு அரசு அமைப்பதற்கு மாற்றுக் கருத்து இருப்பின், அதாவது தனியரசு அரசு அமைப்பதற்கு உடன்படாதவர்கள் அதைத் சொல்லவும், அதுவே பெரும்பான்மைக் கருத்தாக இருத்தால்  தனியரசு அமைப்பதைத் தடுப்பதற்கும் உரிமையுண்டு.  இவ்வாறு எந்வொரு முடிவையும் ஒடுக்கப்படும் மக்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கவில்லை.  ஒடுக்கப்படும் மக்கள் தாமேவந்து முழு ஜனநாயக உரிமையுடன் தீர்மானித்துக் கொள்வதற்குத்தான் பொது வாக்கெடுப்பு. ஈழத் தமிழ் இனத்துக்குள்ள இந்த உரிமையைத்தான் “ஈழத் தமிழர்க்கு  தன்னுரிமை” என்று சொல்கிறோம்.

ஆனால், “ஈழத் தமிழர்க்கு  தன்னுரிமை” என்பது “மழுப்புவது, தனித் தமிழீழத்தை மறுப்பது, எதிர்ப்பது; அதை மூடிமறைக்கும் தந்திரம்” என்று சொல்லிக்கொண்டு  சில மாணவர் குழுக்கள், “பொது வாக்கெடுப்பு” என்ற முழக்கத்தை “தனித் தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு” என்பதாக மாற்றியும், குறுக்கியும் வியாக்கியானம் செய்கின்றனர். “பொது வாக்கெடுப்பு” என்ற முழக்கத்தை இவ்வாறு திரிப்பது,  “பொது வாக்கெடுப்பு’’க்கான உரிமையைப் பெறுவதற்கு முன்பே மாற்றுக் கருத்துக்கான உரிமையை மறுக்கும் சர்வாதிகாரமாகும். இம்மாதிரியான போக்குதான்  துரோகம் ஏதும் செய்யாமலேயே தமிழீழத்துக்காக உறுதியுடன் போராடிய ஈழத்தமிழர்கள் பலரையும், இசுலாமியர்களையும் புலிகள் படுகொலை செய்வதற்கு அடிப்படையாக அமைந்தது.  புலிகள் எத்தனை ஈழத் தமிழர்களை கொன்று போட்டார்கள், இசுலாமியர்களைக் கொன்று போட்டார்கள், எத்தனை ஈழத் தமிழர்களையும் இசுலாமியர்களையும் அகதிகளாக்கினர்கள்? இவர்களும்தானே புலிகளுடன் தமிழீழத்தில் சேர்ந்து வாழமுடியாத நிலை உருவாக்கப்பட்டது. இவர்களும் தமது கருத்துக்களைச் சொல்லவும்தானே “பொது வாக்கெடுப்பு’’? சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை மற்றும் இனப்படுகொலை மட்டுமல்ல, மேற்கூறியவை உள்ளிட்ட அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து ஈழத்தமிழ் மக்கள் தமது கருத்தினை சொல்வதற்குத்தானே பொதுவாக்கெடுப்பு?

ஆனால் தனித் தமிழீழத்தை ஏற்கிறீர்களா, இல்லையா? இப்போதே சொல்லுங்கள், சொல்லாவிட்டால் ஈழத் துரோகிகளாவீர்கள் என்று கையை முறுக்கிக் கருத்துத் திணிப்பு செய்வதன் பொருள் என்ன?  தனித் தமிழீழம்தான் ஒரே முடிவு  என்றால் அப்புறம் எதற்குப் “பொது வாக்கெடுப்பு”?

“பொது வாக்கெடுப்பு” உரிமையைப் பெற்ற பிறகு நடைமுறைக்கு வரக்கூடியதே தன்னுரிமை. வாக்கெடுப்புக்கு முன்னரே முடிவைச் சொல்லவேண்டுமென்றால் அப்புறம் எதற்கு அக்கோரிக்கை, போராட்டம் எல்லாம்?  அதுவும் இந்த உரிமை உலகத் தமிழர் அனைவருக்குமான உரிமை அல்ல. ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் இனத்துக்குள்ள இந்த உரிமையை, புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும் அகதிகளாகவோ, குடியுரிமை பெற்றவர்களாகவோ வாழ்கின்ற மக்கள், தம் எதிர்காலம் குறித்து முடிவு செய்வதற்கான உரிமையை இங்குள்ள தமிழர்கள் எப்படித் தம் கையில் எடுத்துக் கொள்ள முடியும்? அந்த உரிமையை யார் கொடுத்தது? இதற்கும் இந்திய பெரியண்ணன்தனத்துக்கும் என்ன வேறுபாடு?

இராஜபக்சே மீது போர்க் குற்ற விசாரணை, ஈழத்தில் பொது வாக்கெடுப்பு ஆகிய இரண்டையும் நிறைவேற்றுவதில் பாரிய அக்கறை கொண்டவர்கள் பின்வரும் உண்மைகளில் கவனம் செலுத்தவேண்டும்: இவ்விரண்டு கோரிக்கைகளும் நிறைவேற வேண்டுமானால்,

ஒன்று,  சர்வதேச சமூகம் எனப்படும் உலக நாடுகள் இலங்கைக்கு வெளியிலிருந்து சிங்கள இனவெறி, கொலைவெறி பாசிச  ராஜபக்சே கும்பலின் அதிகாரக் கோரப்பிடியிலிருத்து இலங்கையையும் ஈழத் தமிழர்களையும் மீட்கவேண்டும்; ஈழத்தில் ஒரு பொது வாக்கெடுப்பை ஏற்கும் ஜனநாயக அரசை இலங்கையில் நிறுவி இதைச் செய்ய வேண்டும்.

அல்லது,

உள்நாட்டிலேயே சிங்கள இனவெறி, கொலைவெறி பாசிச  ராஜபக்சே கும்பலைக் கொன்றொழிக்க வேண்டும்; அக்கும்பலைச் சிறைப் பிடிக்கவேண்டும். ஒருவேளை இது நிறைவேறினாலும், ஈழத் தமிழினத்தின் தன்னுரிமையையும் அதன் அடிப்படையிலான ஒரு பொது வாக்கெடுப்பையும் ஏற்கும் ஜனநாயக அரசு இலங்கையில் அமைய வேண்டும். இல்லையென்றால், அவ்வாறான அரசு அமைவதற்கான புரட்சி இலங்கையில் நடைபெறவேண்டும்.

ஆனால்,போர்க் குற்றங்களில் பங்காளியான இந்தியா எத்தகைய நிலைமையிலும் இவ்விரண்டு கோரிக்கைகளையும் ஏற்கப்போவதில்லை. புலிகளை ஒழித்துக்கட்டுவதென்று 2006-இல் கூடிப்பேசி, முடிவெடுத்து, ஈழப்போரில் ராஜபக்சேவுக்குத் துணை நின்ற அமெரிக்கா  தலைமையிலான 20 உலக நாடுகளும் இவற்றை ஏற்கப்போவதில்லை.

ஆக, இராஜபக்சே மீது போர்க் குற்றவாளி, ஈழத்தில் பொது வாக்கெடுப்பு – ஆகிய இரண்டையும் நிறைவேண்டுமானால், இலங்கையில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றம் ஏற்படவேண்டும் என்பது தவிர்க்கவியலாத அவசியம்.

அதை எப்படிச் சாதிப்பது என்பது ஈழத் தமிழர்களின் உடனடி, நீண்டகாலக் கடமையாக இருக்கவேண்டும். சிங்கள இனவெறி, பௌத்த மதவெறி பாசிச ராஜபக்சே கும்பலுக்கு எதிரான ஒரு  ஜனநாயக ஐக்கிய முன்னணியைக் கட்டுவது முதன்மையான பணியாகும். பாசிச ராஜபக்சே கும்பல் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலை மிகக்கெடூரமான போர்க் குற்றம். அதோடு ஒப்பிட முடியாதெனினும், சிங்கள ஜனநாயக சக்திகளுக்கெதிரான பாசிச வெள்ளைவேன் ஆள்கடத்தல்களும், படுகொலைகளும், அவசரநிலை-தடுப்புக் காவல் கைதுகளும் ஒடுக்கு முறைகளும் பெருமளவு நடந்து கொண்டுதானிருக்கின்றன.  ஈழத் தமிழர்கள் மீது மட்டுமல்ல, சிங்கள  ஜனநாயக சக்திகள் மீதுமான மனித உரிமை மீறல்களுக்காகவும் பாசிச ராஜபக்சே கும்பல் ஐ.நா. அவையில் குற்றஞ்சாட்டப்படுகிறது. சிங்கள  ஜனநாயக சக்திகளில் கணிசமான பேர் ராஜபக்சே அரசின் கும்பலாட்சி, இசுலாமிய எதிர்ப்பு பவுத்த வெறி, ஈழத்தமிழர் மீதான இராணுவக் கொடுங்கோன்மை ஆகியவற்றை வெறுக்கிறார்கள், எதிர்க்கிறார்கள், அத்தகைய சக்திகளுடன் ஒரு ஐக்கிய முன்னணி சாத்தியமே இல்லை என்று கதவடைத்துக் கொள்வது சரியான அரசியல் அணுகுமுறையே கிடையாது.

இன ஒற்றுமை
யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் சிங்கள இராணுவத்தால் தாக்கப்பட்டதைக் கண்டித்து, கண்டி பேராதனைப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் (இடது); மற்றும் இன ஒற்றுமையை வலியுறுத்தி கிழக்கு இலங்கைப் பகுதியில் நடந்த ஊர்வலம்.

இலங்கைத் தீவில் தற்போது காட்டப்படும் ஈழத்தின் வரைபடத்தைப் பார்த்தாலே பாமரனுக்கும் புரியும்! இவ்வளவு நீண்ட எல்லையைக் கொண்ட ஈழம் தனித்திருந்தால்கூட, போரும் பகையும் இனப் படுகொலைகளும் இல்லாமல் ஈழத் தமிழர்கள் நிரந்தரமான நிம்மதியோடு வாழவேண்டுமானால் பின்வரும் ஒரு நிபந்தனை நிறைவேற்றப்பட வேண்டும்.  ஈழத் தமிழினத்தின் தன்னுரிமையை ஏற்கக்கூடிய ஜனநாயக அரசு அமைப்பு இலங்கையில் ஏற்படுத்தப்பட வேண்டும். சிங்கள இனவெறி, கொலைவெறி பாசிச  ராஜபக்சே கும்பலின் அதிகாரப்பிடியிலிருந்து சிங்களமும் விடுபடவேண்டும். ஈழத் தமிழினத்துக்கெதிராக அது இழைத்த  குற்றங்களுக்காக “பாவமன்னிப்பும் பரிகாரமும்” தேடும் நிலைக்குத் தள்ளப்பட வேண்டும்.

இது சாத்தியமா? யூத மக்கள் மீது தீராத பகைகொண்டு குரூரமான வதைகளும் இனப் படுகொலைகளும் புரிந்தான், நாஜி இட்லர்.  அவனது போர்வெறி, அதிகாரப்பிடியிலிருந்து விடுபட்டு யூத இனத்துக்கெதிராகத் தாம் இழைத்த  குற்றங்களுக்காக “பாவ மன்னிப்பும் பரிகாரமும்” தேடும் நிலைக்கு ஜெர்மானியர்கள் தள்ளப்பட்டனர். பாசிசம் போரில் தோற்கடிக்கப்பட்டதும், நூரம்பர்க் விசாரணையும், தண்டனைகளும்,  சர்வதேசப் பொதுக் கருத்தின் மீது சோசலிசமும், கம்யூனிச சித்தாந்தமும் செலுத்திய செல்வாக்கும் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது. அம்மாதிரியான சர்வதேச நிலைமை இப்போது இல்லையாதலால், ராஜபக்சே கும்பலைத் தூக்கியெறியும் உள்நாட்டுப் புரட்சிதான் இலங்கையில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த வல்லது. இதுதான் சாத்தியமானது.

இனப் படுகொலை நிகழ்ந்துள்ள நிலையில், சிங்கள இனவெறி தலைவிரித்தாடும் நிலையில் இத்தகையதொரு தீர்வே கோமாளித்தனமானது என்று புலி ஆதரவாளர்கள் கேலி பேசலாம். முள்ளிவாய்க்கால் படுகொலை முடிந்து தடயங்களை அழித்து முடிக்கும்வரை ராஜபக்சேவுக்கு வழிகாட்டி இயக்கிய இந்தியா மற்றும் சர்வதேசம் என்றழைக்கப்படும் அமெரிக்க – ஐரோப்பிய ஏகாதிபத்திய நாட்டாமைகளிடம் கெஞ்சுவதும், அவர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என்று கனவு காண்பதும்தான் கோமாளித்தனமானது. புலி ஆதரவாளர்கள் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும், கட்சிகளுக்கும் சலாம் போட்டும், மனுக்கொடுத்தும், தேர்தல் வேலை பார்த்தும், இவர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு ஈழத்தமிழ் மக்களை இழுத்து விட்டும் 30 ஆண்டுகளை அழித்தார்கள். கடைசியாக முள்ளிவாய்க்காலில் பரிதாபத்துக்குரிய அந்த மக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னரும், கொலையுண்ட அந்த உடல்களை வைத்துக் கொலையாளிகளே அரசியல் ஆதாயம் தேடுவதற்கு வழிவகை செய்கிறார்கள். இது கோமாளித்தனமானதல்ல, வக்கிரமானது.

சிங்களப் பேரினவாதமும் இனவெறியும்தான் ஈழத் தமிழ் மக்களின் துயரத்துக்கு அடிப்படைக் காரணமென்றாலும், சிங்களருக்கும் தமிழருக்கும் இடையிலான இன்றைய பகை நிலை நிரந்தரமானதென்றும், 200-க்கும் மேற்பட்ட அரச உயர்பதவிகளை ராஜபக்சே குடும்பமே கைப்பற்றிக்கொண்டு சிங்கள மக்களுக்கே எதிராக அது இழைத்துவரும்  பாசிச பயங்கரவாதக் குற்றங்களும், இலங்கையில் அதிகரித்து வரும் அரசியல், பொருளாதார நெருக்கடிகளும் இந்தப் பகை நிலையை மாற்றாது என்றும் கருதிக் கொண்டு ஈழச் சிக்கலுக்குத் தீர்வைத் தேடக்கூடாது. அவ்வாறான தீர்வு, எளிமையானதாகவும் உடனடியானதாகவும் தோன்றினாலும் கற்பனையானது. இத்தீர்வும் வழிமுறையும் புலிகளையும் ஈழத்தமிழர்களையும் முள்ளிவாய்க்காலுக்குக் கொண்டுபோய் முடித்தது.

இந்தப் பார்வை தனித் தமிழீழத்தை மறுப்பது என்றும் தமிழீழத்துக்கு எதிரானதென்றும் புலி ஆதரவாளர்களால் அவதூறுக்குள்ளாக்கப்படும் என்பது எமக்கு நன்கு தெரியும். எமது இந்தத் தீர்வு ஈழத் தமிழர் தன்னுரிமையை நிபந்தனையாகக் கொண்டதென்பதை மறந்துவிடக்கூடாது. ஈழத்தின் மூன்றில் இரண்டு பகுதியை விடுதலைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டு, 40,000 சிங்கள இராணுவத்தினரை யாழ்க் கோட்டையில் சூழ்ந்து கொண்டநிலையிலும் பிரபாகரன் தனித் தமிழீழத்தைப் பிரகடனம் செய்யவில்லை! பிரபாகரனின் அரசியல் குரு ஆண்டன் பாலசிங்கம் தனித் தமிழீழம்  அல்ல, சுயாட்சிதான் எமது நோக்கம் என்று சொன்ன காலமும் உண்டு! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று சொன்னவர்கள், துப்பாக்கிகளை மௌனித்து இனி அரசியல் போராட்டம்தான் என்று அறிவிக்கும் நிலையும் வந்தது. ஆகவே, எல்லாக் காலத்திலும் எல்லா நிலையிலும் ஒரே தீர்வு என்பது பகுத்தறிவுக்குப் பொருந்தாதது!

___________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013
___________________________________________________________________________________

நாவல் அறிமுகம்: சடையன்குளம்

5

டையன்குளம்– தமிழகத்தின் தென்பகுதி கிராமம் ஒன்றில் தலித் மக்களின் வாழ்வையும், உரிமைக்கான போராட்டத்தையும், உயர்வுக்கான விழைவையும், அது குரூரமாக சாதிவெறியர்களால் நசுக்கப்படுவதையும் ஆவணப்படுத்தியிருக்கும் ஒரு புனைவு [நாவல்]. நகரத்தின் வண்ண ஒளிச்சிதறல்களில் வாழ்க்கையை கழிப்பவர்களுக்கும், தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிரதான சாலைகளிலும் மட்டுமே பயணிப்போருக்கும் சடையன்குளம், நாயக்கன்கொட்டாய் போன்ற தமிழகத்தின் எதார்த்தங்கள் புலப்படாது. இந்த நாவல் சுழலும் கிராமம், கடந்த நூற்றாண்டின் காலச்சக்கரத்தில் கடந்துவிட்ட ஒரு வாழ்க்கையின் பதிவு அல்ல என்பது நாயக்கன்கொட்டாய் தாக்குதலை கவனித்தவர்களுக்குப் புரியும்.

சடையன்குளம், கீழத்தெருவில் வசிக்கும் சாம்பார் [பறையர்] மக்கள், சற்று தள்ளி மிகச்சிறிய எண்ணிக்கையில் வாழும் சக்கிலிய மக்கள் மீது அடக்குமுறை செலுத்துவதில் தேவர், நாயக்கர், செட்டியார், மற்றும் கோனார் சாதியினர் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். ஆதிக்க சாதியினரில் பிறந்த ஆண்கள், பெண்கள். வயதானவர்கள், இளைஞர்கள் அனைவரும் பால் வேறுபாடின்றி சாதி வெறி மனநோய்க்கு ஆட்பட்டுக் கிடக்கின்றனர். கீழத்தெருவில் வசிக்கும் நல்லையா குடும்பம் சந்திக்கும் சவால்களை சடையன்குளம் முதன்மையாக பேசுகிறது.சடையன்குளம்

தம்மீது நிறுவனமாகியுள்ள தொடர் தாக்குதல் குறித்த ஓர்மையோடே தமது வாழ்க்கையை கடத்துகிறார்கள் கீழத்தெரு மக்கள். எனினும் அச்சத்திலும், பீதியிலும் அவர்கள் உறைந்து போய்விடவில்லை. கீழத்தெருவை சார்ந்த முத்துமரியான் தேவர்சாதிப் பெண்ணை காதலிக்கிறான். நல்லையா குடும்பம் செங்கல் சூளைக்கு சென்று உழைத்து பிறகு சொந்தமாக ஒரு செங்கல் சூளையை ஆரம்பிக்கிறார்கள். முத்துமரியான் காதலித்த பெண்ணை அவரிடமிருந்து பிரிக்கிறார்கள். கரசேவை போன்ற ஒரு நடவடிக்கையில் நல்லையாவின் செங்கல் சூளையை துவம்சம் செய்கிறார்கள், தேவர் சாதியினர். அரசாங்கம் மூலம் கிடைத்த ஐந்து செண்ட் நிலத்தில் பயிர்வித்த பருத்தி, அறுவடைக்கு நெருங்கும் போது, அதனை சாதிவெறியர்களிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஊர்க்காத்தானும், நல்லையாவும் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். எனினும், கலைக்க கலைக்க மணல்வீட்டை கட்டும் சிறுகுழந்தையின் பிரயத்தனமாக வாழ்க்கையை ஆடிப்பார்க்கிறார்கள்; ரசிக்கிறார்கள்; காதல்வசப்படுகிறார்கள், கீழத்தெரு மக்கள். உழைப்பின் மீது மட்டும் நம்பிக்கை வைத்த அவர்களை மனித வாழ்வின் அடிப்படை விழைவு உந்தி செலுத்திக் கொண்டே இருக்கிறது.

தேங்கிக் கிடந்த கீழத்தெரு மக்களின் வாழ்க்கையில் தொடிச்சியின் வருகை ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது. தொடிச்சி, நல்லையாவின் மனைவி. முதன் முதலில் அவள் அத்தெருவில் ரவிக்கை அணிகிறாள். கிணற்றில் தண்ணீர் பிடிக்கும்பொழுது மேலத்தெரு நாயக்கர் பெண்களுடன் உரசுகிறாள்.அவர்கள் தண்ணீர் பிடித்த வாளியை அவர்கள் செய்ததை போன்று இவளும் அலசிவிட்டு நீர் எடுக்கிறாள். நல்லையாவை அழைத்து நாயக்கர் ஆண்கள் மிரட்டும் போது வேறு வழியில்லாமல் மனைவியை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். நல்லையாவுக்கு செங்கல் சூளை ஒன்று சொந்தமாக ஆரம்பிக்கும் எண்ணம் வந்த போது தைரியம் அளிக்கிறாள், தொடிச்சி. நல்லையா கொலை செய்யப்பட்ட பிறகு வாழ்க்கையை துணிவுடன் எதிர்கொள்கிறாள். வாழ்க்கை குறித்து திட்டவட்டமான பார்வை அவளிடம் இருக்கிறது. சக்கிலியர் குடியிருப்புக்குள் முதன்முதலில் நுழைகிறாள். சக்கிலியர் மக்களுடன் பறையர் மக்கள் இணைவதை விரும்புகிறாள்.

தொடிச்சி கீழத்தெருவை சேர்ந்தவள் அல்ல. விளாத்திகுளத்திலிருந்து இங்கு திருமணமாகி வந்தவள். திருமணமான புதிதில் தன்னை கட்டுப்படுத்த முனைந்த ஊர்காத்தானை நகைத்தாள். தேவர் சாதியினரின் மிரட்டலுக்கு ‘இதுவே எங்கள் ஊர் என்றால் நிலைமை வேறாக இருக்கும்’ என்று எகிறினாள். பிற்பாடு கீழத்தெரு பெண்கள் தொடிச்சியை பின்பற்றுகிறார்கள்.ஆண்கள் அவளிடமிருந்து தைரியத்தை பெறுகிறார்கள். தொடிச்சி கீழத்தெருவை சேந்தவள் அல்ல என்பது மட்டுமல்ல; அவளுடைய கடந்தகாலம் மிகப்பிற்பாடு இந்நாவலில் இலைமறை காய்மறைவாக வெளிப்படுகிறது. நகரத்தில் நாயக்கர் வீட்டில் வேலை செய்யும் தனது கணவரின் சித்தி மகளை பார்த்து விட்டு வீடு திரும்பும் போது ராமையா என்பவரை பார்க்கிறாள். அவரை தோழர் என்று அழைக்கிறாள். அவரும் நலம் விசாரிக்கிறார். அப்படியே, தனது கணவனுக்கு அரசு கொடுத்த நிலத்தில் மாட்டைப் பூட்டி உழுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சாதிவெறியர்கள் குறித்து கூறுகிறாள். அவர் அடுத்த நாளே தமது தோழர்களுடன் மாட்டோடு வந்து உழுகிறார். எதிர்த்து வந்த தேவர் சாதி வெறியர்களை அந்த விவசாயத் தோழர்கள் அடித்து விரட்டுகிறார்கள்.

தொடிச்சி ராமையாவை சந்தித்து உதவி கேட்டது அவளுக்கு முன்பு கம்யூனிசம் அறிமுகம் ஆகியிருப்பதையும் அவளுடைய உந்துதலுக்கு கம்யூனிச வீரம் அடிப்படையாக உள்ளதையும் இந்த நாவல் கூர்மையான அவதானிப்பில் அறியத் தருகிறது. நாயக்கர் மற்றும் கோனார்களிடம், வீட்டு வேலைகளில் கட்டுண்டு கிடந்த மக்களிடம் இருந்தல்ல; தொடிச்சியின் மூலமே விடுதலை உணர்வு அம்மக்களிடம் அரும்பியது என்பதையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும். ‘தலித் மக்கள் பிரச்சினையை தலித்துகள் மட்டுமே பேசட்டும்; தலித் மக்களின் விடுதலை தேர்வை; பாதையை தலித் மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும்; கம்யூனிஸ்ட்கள், மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்ளட்டும்’ என்ற வகை தலித்திய வாதத்தை தொடிச்சி கதாபாத்திரம் வலுவிழக்க செய்கிறது.

இந்நாவலில் வரும் கிளமன்ட் பாதர், பெர்டின் சிஸ்டர் போன்றோர் மிகை கதாபாத்திரங்கள். தலித் மக்களின் ஊனோடும், உயிரோடும் கலந்தவர்களாக அவர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். கீழத்தெரு பெண்களை கேலி வம்பு செய்யும் நாயக்கர் ஆம்பிளைகளை எதிர்த்து நின்ற தொடிச்சியை துரத்தி வந்த ஆண்களை நோக்கி பெர்டின் சிஸ்டர் துப்பாக்கியை காட்டி பின்வாங்க செய்கிறார். இது கொஞ்சம் மிகையாக தோன்றுகிறது. இதனை கிறிஸ்தவம் செல்வாக்கு செலுத்தும் குமரிமாவட்டத்தை வைத்து பரிசீலித்து சொல்ல முடியும். திருவிதாங்கூர் பகுதியில் நாடார்களை தீண்டத்தகாதவர்களாக நடத்திய நாயர்களை எதிர்த்து நின்றது நேசமணி திரட்டிய இளைஞர் படையும், கம்யூனிஸ்ட்களுமே. நாயர்கள் கைப்பற்றியிருந்த 90 சதவீத நிலங்களை மீட்டுக் கொடுத்தது இவர்கள் தான். கிறிஸ்தவம் கல்வி, மருத்துவம் போன்ற ‘நேர்மறையான’ பணிகளை மட்டுமே ஆற்றியது. அடிக்கப்படுகிற நேரத்தில் கிறிஸ்தவம் பாதிக்கப்படும் மக்களோடு உடன் நின்றதற்கான சான்றுகளுக்கு சரித்திரத்தில் நாம் அபூர்வத் தகவல்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். ”துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் ; அவர்கள் ஆறுதல் அடைவார்கள்”, ”துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது” [ மத் : 5 ] என்பன போன்ற பைபிள் வாக்கியங்கள் என்ன செயலூக்கத்தை ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்கு வழங்க முடியும் ? பாமாவின் கருக்கு கிறிஸ்தவத்தை விசாரணைக்கு உட்படுத்திய எதார்த்த நாவல். ”கடவுளை [கர்த்தர்/இயேசு ] கற்றுத் தந்தவர்கள் எங்களுக்கு கடவுளை அன்பானவர், கருணையுள்ளம் கொண்டவர், பாவம் புரிபவர்களை மன்னிப்பவர், பொறுமையும், பணிவும், சாந்தமும் கொண்டவர் என்றே முன்நிறுத்தினர். கடவுள் நேர்மைத்திறம் கொண்டவர், அநீதிகளை கண்டு கொதிப்பவர், பொய்மையை வெறுப்பவர், அசமத்துவத்துக்கு எதிரானவர் என்று எந்த பாதிரியும் சொன்னதில்லை. ……… பொருளற்ற முறையில் பணிவையும் அடக்கத்தையும், பொறுமையையும், செயலின்மையையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதிரிமார்கள் போதித்தார்கள்” [ கருக்கு பக். 90 ] கருக்கு விவாதத்துக்கிடமான கிறிஸ்தவ சமயஉணர்ச்சியை [argumentative faith ] வெளிப்படுத்துகிறது. சடையன்குளம் கிறிஸ்தவம் மீது கேள்விக்கிடமற்ற விசுவாசத்தை [ absolute faith ] கொண்டிருக்கிறது. கிளமன்ட் பாதரும், பெர்டின் சிஸ்டரும் மாற்றலாகி போவது இந்த நாவல் கிறிஸ்தவத்திற்கு காணிக்கையாகின்ற ஆபத்திலிருந்து தப்புகிறது.

இந்நாவலில் வரும் போலீஸ், தமிழ் சினிமா ஹீரோக்கள் போலீஸாக நடிக்கும் படங்களில் வரும் போலீஸ் போன்று மிகவும் நல்லவர்களாக இருக்கிறார்கள். அனைத்துப் பிரச்சினைகளிலும் தலித் மக்கள் பக்கமே நிற்கிறார்கள். இறுதியில் காவல்துறை தலித்மக்கள் மீது பாய்வது கூட ராமசாமி நாயக்கரின் சதியே காரணமாக அமைகிறது. போலீசின் தனிப்பண்பு என்பது ஆளும்வர்க்க நலன், ஆதிக்கசாதி மனப்பான்மை, இந்துத்துவம், கம்யூனிச எதிர்ப்பு போன்றவற்றின் இயற்கூட்டில் உருவான ஓன்று என்பதற்கு எண்ணற்ற நடைமுறை உதாரணங்களை சுட்ட முடியும். தருமபுரியின் நாயக்கன்கொட்டாய் வன்முறையில் போலீஸ் துணை ஆய்வாளர் ஒருவரின் பங்கு இருந்ததை அனைத்து உண்மை அறியும் குழுக்களும் சுட்டிக்காட்டின. இப்போது ராமேஸ்வரத்தில் வெடித்துள்ள வன்முறையிலும் போலீஸ் டி எஸ் பி ஒருவர் தூண்டுதலாக இருந்ததை பெயர் குறிப்பிட்டு தெரிவிக்கின்றன, ஊடகங்கள். சடையன்குளம் போலீஸ் மீது ஒரு பலகீனமான நம்பிக்கையை வைக்கிறது. ”வர்க்கங்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்த அல்ல; இரு வர்க்கங்கள் இணக்கம் காண இயலாததன் விளைவே அரசு; போலீஸ்” என்றார் மார்க்சிய ஆசான் ஏங்கெல்ஸ். ஒடுக்கப்படும் மக்களிடம் போலீஸ் என்ற அரசின் உறுப்பு செயல்படும் தொழில்கூறு சடையன்குளத்தில் சரியாக உருவமைதி பெறவில்லை என்று தான் சொல்ல முடியும்.

கீழத்தெரு சக்கிலியத் தெருவில் வசிக்கும் முத்துவீரன், சிவன் கோனார் மகளை காதலிக்கிறார். அவளை தகப்பன் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க உதவி செய்வதற்கு கம்யூனிஸ்டாக அறிமுகம் செய்யப்பட்ட ராமையா தேவர் மறுக்கிறார். கட்சி இது போன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்காது என்று விலகிக் கொள்கிறார். எனினும் அவர்களின் காதல் ஓட்டம் திட்டம் கசிந்துவிடாமல் காப்பாற்றுகிறார். கீழத்தெருவின் கடற்கரை கம்யூனிச இயக்கத்தில் இருக்கிறார் என்ற தகவல் மிகப்பிற்பாடே வாசகர்கள் அறிந்து கொள்ள முடியும். தனது மனைவி கிறிஸ்தவத்திற்கு மாறுவதை எதிர்க்கும் தனது தாயை அவர் கடிகிறார். ஜனநாயகபூர்வமாக அந்த முடிவை ஆதரிக்கிறார். எனினும் நல்லையா குடும்ப உறுப்பினர்கள் பெற்ற முக்கியத்துவத்தை நாவலில் கடற்கரை பெறவில்லை. தலித் மக்கள் அதிகாரத்தை நெருங்க நெருங்க சாதி வெறியர்களுக்கு பித்துப் பிடிக்கிறது. பெரும் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். நாவல் சற்று நாடகீயமாக முடிக்கப்பட்டுள்ளது.

தனது எளிய கதை சொல்லல் முறையால் சிறீதர கணேசன் வியக்க வைக்கிறார்.  இந்த சமூகத்தின் மொத்த பாரத்தையும் தமது உழைப்பால் தாங்கும் எளிய மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

– சம்புகன்

நாவல்: சடையன் குளம்
ஆசிரியர்: சிறீதர கணேசன்
வெளியீடு: கருப்புப் பிரதிகள்
பக்கங்கள்: 367
விலை: ரூ. 200

நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044-2841 2367

 

நில அபகரிப்பே இனி விவசாயக் கொள்கை!

3

மிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 138 கிராமங்களில் நடந்துவந்த எரிவாயுக் குழாய்களைப் பதிக்கும் பணிகள், விவசாயிகளின் எதிர்ப்பின் காரணமாக நிறுத்தப்பட்டு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி இப்பிரச்சினை தொடர்பாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.  இதனையடுத்து, “கெய்ல் நிறுவனம் எரிவாயுக் குழாய்களை விளைநிலங்களில் பதிப்பதைக் கைவிட்டு, நெடுஞ்சாலை ஓரமாகப் பதிக்க வேண்டும்; இத்திட்டத்தினால் பழவகை மரங்களையும் மற்றும் பிற கட்டுமானங்களையும் இழந்துள்ள விவசாயிகளுக்கும், நில உரிமையாளர்களுக்கும் உரிய இழப்பீட்டினை வழங்க வேண்டும்” என முடிவெடுத்துள்ள தமிழக அரசு, இம்முடிவுகளை உயர் நீதிமன்றத்திடம் தெரிவிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

கெய்ல் கூட்டம்
கெய்ல் நிறுவனம் எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை விளைநிலங்களில் பதிப்பது தொடர்பாக தமிழக அரசு நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற திருப்பூர் மாவட்ட விவசாயிகள்.

கெய்ல் நிறுவனமோ, “குழாய்களை நெடுஞ்சாலையோரமாகப் பதித்தால் கூடுதல் செலவு ஏற்படும்; குழாய்களுக்குப் பாதுகாப்பு இருக்காது; குழாய்களைப் பதிக்கும் வரை போக்குவரத்து இடையூறு ஏற்படும்; நெடுஞ்சாலையில் பதிப்பதற்குத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளிக்காது” என்ற நொண்டிக் காரணங்களைக் கூறி, குழாய்களை விளைநிலங்களில் பதிக்கும் தனது முடிவை நியாயப்படுத்தி வருகிறது.

குழாய்களை நெடுஞ்சாலைகளில் பதிக்கும் வரைதான் போக்குவரத்து இடையூறு ஏற்படும். ஆனால்,  விளைநிலங்களில் பதிப்பதால் அம்மாவட்டங்களைச் சேர்ந்த 5,842 விவசாயிகளின் வாழ்வாதாரம் அடியோடு நாசமாகிவிடும்.  இந்த எளிமையான உண்மையைக்கூடப் புரிந்துகொள்ள மறுக்கும் அளவிற்கு அதிகாரத் திமிர் கொடிகட்டிப் பறக்கிறது.

திட்டத்தை மாற்றிக் கொண்டு குழாய்களை நெடுஞ்சாலையில் பதிக்கக் கூடுதல் செலவாகும் என்றால், அச்செலவை இந்தத் திட்டம் யாருக்காக போடப்படுகிறதோ, அவர்களிடம் வசூலித்துக் கொள்வதுதான் நியாயமாக இருக்கும்.  மாறாக, திட்டச் செலவைக் குறைக்க, இத்திட்டத்தால் எந்தப் பயனும் அடைய முடியாத விவசாயிகள், தங்களின் விளைநிலங்களை அற்பமான நட்ட ஈட்டிற்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது அடிப்படையிலேயே அநீதியானது.

மத்தியப் பிரதேசம்
மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் இந்திரா சாகர் அணைக்கட்டின் உயரத்தைக் குறைக்கக் கோரி, ஹர்தா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் நடத்திய “ஜல் சத்யாகிரகப்” போராட்டம் (கோப்புப் படம்)

நெடுஞ்சாலைகளில் குழாய்களைப் பதிப்பதைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மறுக்க முடியுமென்றால், தமது விளைநிலங்களில் குழாய்கள் பதிப்பதை விவசாயிகள் மறுக்கக் கூடாதா? ஆனால், இந்த உரிமை விவசாயிகளுக்கு அநியாயமான முறையில் மறுக்கப்படுகிறது.  மாறாக, பொது நோக்கத்திற்காகக் கொண்டு வரப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கு விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டுத் தர வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மறுத்துப் போராடினால், போலீசு, வழக்கு, சிறை போன்ற அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, விளைநிலங்களை வலுக்கட்டாயமாக அபகரித்துக் கொள்கிறது அரசு.

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது இப்பொழுது சர்வசாதாரணமாகவும் துரிதமாகவும் நடந்துவருகிறது.  விளைநிலங்களை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி, அவற்றின் மேல் கொண்டுவரப்பட்டுள்ள விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், தகவல்-தொழில்நுட்பப் பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சுரங்கங்கள், புதிய வேலியிடப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவற்றால் நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு எந்தப் பலனும் கிட்டவில்லை என்பது மட்டுமல்ல, இத்திட்டங்கள் பெரும்பான்மையான மக்களின் நலனில் இருந்தும் போடப்படுவதில்லை.

இந்த எரிவாயுக் குழாய் திட்டத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்.  இத்திட்டம் தொழிற்சாலைகளுக்கு எரிவாயு விநியோகிப்பதற்காகப் போடப்படுகிறது.  இந்தத் திட்டத்தால் பலனடையப் போவது பெரும்பாலும் தனியார் முதலாளிகள்தான்.  ஆனால், அது மூடிமறைக்கப்பட்டு, ஏதோ நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், பொது நோக்கத்திற்காகவும்தான் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஒரு புளுகுணிப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது.  இது போன்ற திட்டங்களை எதிர்ப்பவர்களை, அதற்கு நிலம் தர மறுப்பவர்களை நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றும், நக்சலைட்டுகள் என்றும் குற்றஞ்சுமத்தி, அவர்களை ஒடுக்குவது நியாயமானதென்றும் கருத்து பரப்பப்படுகிறது.  சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மீது ஏவிவிடப்பட்டுள்ள காட்டு வேட்டை; ஒரிசாவின் கலிங்கா நகர் பழங்குடியின மக்கள் மீதும், உ.பி.யின் நொய்டா விவசாயிகள் மீதும் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

உத்தர பிரதேசம்
தமது விளைநிலங்கள் அபகரிக்கப்படுவதை எதிர்த்துப் போராடிய உ.பி. நொய்டா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த விவசாயி. (கோப்புப் படம்)

எனினும், இத்தகைய அடக்குமுறைகளையும் மீறி, சிங்குரிலும் நந்திகிராமத்திலும் விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன; ஒரிசாவில் கோண்டு இனப் பழங்குடி மக்கள் நடத்திய போராட்டத்தையடுத்து, நியம்கிரி மலைப்பகுதியில் பாக்சைட் சுரங்கம் அமைக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.  அம்மாநிலத்தில் கோக்ராஜர் மாவட்ட விவசாயிகளும் மீனவர்களும் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நடத்திவரும் போராட்டம் காரணமாக போஸ்கோ நிறுவனத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது முழுமையாக வெற்றியடையவில்லை.  மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்கத் திட்டமிட்டிருந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அம்மாவட்ட விவசாயிகள் போராடித் தடுத்து நிறுத்திவிட்டனர்.

நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக நடந்துவரும் இத்தகைய போராட்டங்களால் 5 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட திட்டங்கள்  நடைமுறைப்படுத்த முடியாமல் கிடப்பில் இருப்பதாக ஆளும் கும்பலும் அவர்களது எடுபிடிகளும் புலம்பி வருகின்றனர்.  இந்த தேக்க நிலையை உடைக்க விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் விதத்தில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திருத்தப் போவதாக அறிவித்தது, காங்கிரசு கூட்டணி அரசு.

இது தொடர்பான அறிவிப்பை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு வெளியிட்டவுடனேயே, “தனியார் திட்டங்களுக்கு நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்கும் புரோக்கரைப் போல அரசு செயல்படக் கூடாது.  அரசு திட்டங்களுக்கு மட்டுமே நிலத்தைக் கையகப்படுத்தலாமென்றாலும், விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராக வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தக் கூடாது. நிலத்தைத் தர மறுக்கும் உரிமை விவசாயிகளுக்கு அளிக்கப்பட வேண்டும்.  நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு நில உரிமையாளர்களின் ஒப்புதலை மட்டுமின்றி, அந்த நிலத்தைச் சார்ந்து வாழும் மற்ற தொழிலாளர்களின் ஒப்புதலையும் பெற வேண்டும்.  முப்போகம் விளையும் நிலங்களை மட்டுமல்ல, ஒருபோகம் விளையும் நிலங்களைகையகப்படுத்தக் கூடாது” என்பது உள்ளிட்டுப் பல்வேறு திருத்தங்களையும் நிபந்தனைகளையும் விவசாய சங்கங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முன்வைத்தன.

ஆனால், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் புதிய நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்குப் பெயர்தான் கவர்ச்சிகரமாகச் சூட்டப்பட்டுள்ளதே தவிர, அதற்கும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், 118 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டு தற்போது வரை நடைமுறையில் இருந்துவரும் பழைய சட்டத்திற்கும் அடிப்படையில் எவ்வித வேறுபாடும் இல்லை.  நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வில் நியாயமான நட்ட ஈடு மற்றும் ஒளிவுமறைவற்ற தன்மையைப் பெறும் உரிமை மசோதா (Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Bill) என்ற இப்புதிய மசோதா, நட்ட ஈட்டைக் கொஞ்சம் கூட்டிக் கொடுத்து விவசாயிகளிடமிருந்து நிலத்தை அபகரித்துக் கொள்வதைத்தான் தனது அடிநாதமாகக் கொண்டுள்ளது.

தனியார் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலத்தை அவர்கள்தான் வாங்கிக் கொள்ள வேண்டும்; ஆனால், பொதுத்துறை-தனியார்துறை இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொடுக்கும் எனப் புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.  பொதுத்துறை-தனியார்துறை கூட்டு என்பது சாராம்சத்தில் கேந்திரமான துறைகளையும் அவற்றின் மூலம் கிடைக்கும் அளப்பரிய வருமானத்தையும் சுற்றிவளைத்துத் தனியாருக்குத் தாரை வார்க்கும் சதித்தனமான, மோசடியான கொள்கையாகும்.  அப்படிப்பட்ட திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலங்களை அரசு கையகப்படுத்திக் கொடுக்கும் என்ற திருத்தத்தின் மூலம் தனியாருக்கு அரசு புரோக்கராகச் செயல்படுவது மீண்டும் சட்டப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் மிகப் பெரும் முதலீட்டில் தொழிற்சாலைகளைத் தொடங்குவதையும் பொது நோக்கம் எனப் புதிய சட்டம் வரையறுத்துள்ளதால், அரசின் திட்டங்களுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டங்களுக்கும் நிலம் தர முடியாது எனக் கூறும் உரிமை விவசாயிகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது.  முப்போகம் விளையும் நிலங்களைக் கையகப்படுத்துவதைக் கடைசி வாப்பாகத்தான் கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையைத் தவிர, விளைநிலங்களைக் கையகப்படுத்துவதற்கு வேறெந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.

நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு நில உரிமையாளர்களின் ஒப்புதலைத் தாண்டி, அந்நிலத்தை நம்பி வாழும் கூலித் தொழிலாளர்களின் ஒப்புதலைப் பெற வேண்டியதில்லை என்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் கோரிக்கை மசோதாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நிலத்தின் மதிப்பைத் தீர்மானிப்பது, நட்ட ஈடு மற்றும் புனர் வாழ்வு வழங்குவதிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான அம்சங்கள் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன. பழங்குடியின மக்களின் நிலங்களையும் காடுகளையும் கையகப்படுத்துவதற்கு கிராம சபையின் ஒப்புதலைப் பெற வேண்டும்; பாதிக்கப்படும் குடும்பத்தினருக்கு வேலை கொடுக்க வேண்டும்; அதிக நட்ட ஈடு வழங்க வேண்டும் என்ற பழைய பல்லவிதான் புதிய மசோதாவிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

இம்மசோதாவில் தப்பித்தவறிக்கூட கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பாதகமான அம்சங்கள் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே, சுற்றுப்புறச் சூழல் அமைச்சராக இருந்தபொழுது பன்னாட்டு விதைக் கழகங்களின் கைத்தடியாக நடந்துகொண்டு பி.டி. கத்திரிக்காய்க்கு ஆதரவாக வாதாடிய ஜெய்ராம் ரமேஷ்; விவசாயிகளைப் பற்றிக் கிஞ்சித்தும் அக்கறை காட்டாத சரத் பவார் ஆகியோர் இம்மசோதாவை உருவாக்கி முடிவு செய்யும் கமிட்டிகளுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டனர்.  இவர்களுக்கும் மேலாக, இம்மசோதாவை கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமாக உருவாக்குவதில் மைய அரசின் வர்ததக அமைச்சகம், நகர மேம்பாட்டு அமைச்சகம், சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், மின்சாரத் துறை அமைச்சகம், தொழில்துறை அமைச்சகம் ஆகிய ஐந்து துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் காட்டிய முனைப்பு அளப்பரியதாகும்.

விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை, விவசாயிகளையும், விவசாயக் கூலித் தொழிலாளர்களையும் அவர்களின் வாழ்வாதாரத்திலிருந்து அப்புறப்படுத்தும் கொடிய செயலாக ஆளும் கும்பல் கருதுவதில்லை.  மாறாக, இதனை ஒரு வர்த்தக நடவடிக்கையாகவும், இதில் பணத்தைத் தவிர, வேறு உணர்ச்சிகளுக்கு இடமில்லை என்றே கருதுகிறது.  இது மட்டுமின்றி, நட்ட ஈடாகக் கிடைத்த பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து, ஒரு நடுத்தர வர்க்க வாழ்க்கையைத் தொடங்குமாறு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கவும் இவர்கள் தயங்குவதில்லை.

நோய்டா
உ.பி. மாநில நொய்டா பகுதியில் விளைநிலங்களை வளைத்து, மேட்டுக்குடி கும்பலின் களிவெறியாட்டத்துக்காக கட்டப்பட்டுள்ள கோல்்ப் மைதானம் (மேல்படம்) மற்றும் 875 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள எப் 1 கார் பந்தய மைதானம்.

குறிப்பாக, பழம்பெரும் தரகு அதிகார வர்க்க முதலாளிகளுள் ஒருவரான ஆதி கோத்ரேஜ், “விவசாயிகள் அனைவரும் தமது நிலங்களை விற்றுவிட்டு, கிடைக்கும் பணத்தைப் பங்குச் சந்தையிலும் பரஸ்பர நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்யுமாறு” வெளிப்படையாகக் கூறி வருகிறார்.  இந்தியாவிற்கு இனி விவசாயமும் விவசாயிகளும் தேவையில்லை என்பது ஆதி கோத்ரேஜ் என்ற முதலாளியின் கருத்து மட்டுமல்ல, மன்மோகன் சிங் உள்ளிட்டு அனைத்து ஓட்டுக்கட்சிகளின் கருத்தும் ஏறத்தாழ இதுதான்.

சிங்குரிலும், நந்திகிராமிலும் சி.பி.எம். தலைமையில் அமைந்த இடதுசாரிக் கூட்டணி அரசுதான் விவசாயிகளிடமிருந்து நிலங்களைப் பறிப்பதில் மிகவும் மூர்க்கமாக நடந்துகொண்டது.  தலித் சகோதரி மாயாவதி ஆட்சியில்தான் நொடா பகுதி விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதில் நிறுத்தி கெய்ல் நிறுவனத்திற்கு எதிராக முடிவெடுத்துள்ள ஜெயா, 1990-களில் சென்னையையடுத்து ஃபோர்டு கார் கம்பெனியை நிறுவுவதற்காக, 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய-மேய்ச்சல் நிலங்களை வலுக்கட்டாயமாக பறித்துக் கொடுத்தவர்தான்.

இந்தியத் தொழில் கூட்டமைப்பு என்ற தரகு முதலாளிகள் சங்கம் வெளியிட்டுள்ள “2025-இல் தமிழகம்” என்ற அறிக்கையில், “தற்போது 50 சதவீதமாக இருக்கும் தமிழக நகர்ப்புற மக்கள் தொகையை, 2025-இல் 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்; 2025-இல் விவசாயத்தைச் சார்ந்திருக்கும் கிராமப்புற மக்கள் தொகையை 25 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.  அப்படிக் குறைப்பதற்கு நகரமயமாவதைத் தற்பொழுதுள்ளதைக் காட்டிலும் 18 மடங்கு வேகத்தில் தீவிரப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

தரகு முதலாளிகள் தமிழகம் குறித்துச் சொல்லியுள்ள இந்த அபாயகரமான ஆலோசனையைத் தற்போதைய நிதி மந்திரியான ப.சிதம்பரம் வழிமொழிந்துள்ளதோடு, இந்தியா முழுவதும் நகர்ப்புற மக்கள் தொகையை 85 சதவீதம் ஆக்குவதுதான் காங்கிரசின் இலட்சியம் எனச் சபதம் போட்டுள்ளார்.  பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வாழும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏறத்தாழ 70 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.  அம்மாநிலத்தைத் தொழில்மயப்படுத்துவதற்கு இந்த எண்ணிக்கையை 30 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என அம்மாநில அரசே அறிவித்திருக்கிறது.   கிராமப்புற மக்களை விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்தாமல் இந்த இலக்குகளை எட்ட முடியாது.  விவசாயிகளைக் கிராமப்புறங்களிலிருந்து வெளியேற்ற வேண்டுமானால், ஒன்று அவர்களது நிலங்களைப் பிடுங்கிக் கொள்ள வேண்டும்; இல்லையென்றால், நிலங்களைத் தரிசாகப் போடும் அவல நிலைக்கு அவர்களைத் தள்ள வேண்டும்.

விவசாயிகளைக் கிராமப்புறங்களிலிருந்து அப்புறப்படுத்துவதன் மூலம், கார்ப்பரேட் கும்பலுக்கு அடிமாட்டு விலைக்கு நிலம் கிடைப்பது மட்டும் உறுதி செயப்படவில்லை.  இதன் மூலம் வேலை தேடி நகரங்களுக்கும்; தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற ‘வளர்ந்து’ வரும் மாநிலங்களுக்கும் ஓடிவரும் விவசாயிகளைக் கொண்டு ஒரு பெரும் ரிசர்வ் தொழிலாளர் பட்டாளமும் உருவாக்கப்படுகிறது.  இப்படி ஒரு ரிசர்வ் பட்டாளத்தை உருவாக்குவதன் மூலம், மிகவும் குறைவான கூலிக்குத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் வாய்ப்பு முதலாளிகளுக்கு உருவாக்கித் தரப்படுகிறது.  இத்தகைய நில அபகரிப்பும் உழைப்புச் சுரண்டலும்தான் இந்தியத் தரகு முதலாளிகளை உலகக் கோடீசுவரர்களின் பட்டியலில் கொண்டுபோய் குந்த வைத்திருக்கிறது; பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக இந்தியாவை மாற்றியிருக்கிறது.

நிலமற்ற கூலி விவசாயிகளுக்கு உபரி நிலம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதற்கு ஏற்ப நில உச்சவரம்புச் சட்டமும், நிலச் சீர்திருத்த சட்டமும் அமல்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் காங்கிரசு உள்ளிட்டு எந்தவொரு ஓட்டுக்கட்சியும் வாயளவில்கூட இன்று ஏற்றுக் கொள்வதில்லை.  மாறாக, நடுத்தர மற்றும் சிறு விவசாயிகளின் நிலங்களை அபகரிப்பதுதான் இக்கட்சிகளின், இந்திய அரசின் கொள்கையாக உள்ளது. தனியார்மயம்-தாராளமயத்தின் ஆன்மாவாக இருக்கும் இந்த நில அபகரிப்புக்கு எதிராக விவசாயிகள் ஒரு நீண்ட நெடிய போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது.  இந்த நெடிய போராட்டத்தில் சிங்குரிலும், நந்திகிராமிலும், நியம்கிரியிலும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும் விவசாயிகளுக்குக் கிடைத்துள்ள வெற்றிகள் குறிப்பிடத்தக்கவை என்றபோதும், அவற்றை தற்காலிகமானதாகக் கருதமுடியுமே தவிர, இறுதி வெற்றியாகக் கொள்ள முடியாது என்பதை விவசாயிகள் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணமிது.

– திப்பு.

___________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013
___________________________________________________________________________________

காசி ஆனந்தன்: இந்தியக் கொலையாளிக்கு இன்னுமொரு கூட்டாளி!

56

காஷ்மீரில் இன ஒடுக்குமுறை இல்லையாம்! காசி ஆனந்தனின் புதிய கவிதை!

ந்திய அரசை ஈழ விடுதலையின் நட்பு சக்தியாக சித்தரித்தவர்களின் மோசடிகள் பித்தலாட்டங்கள் எல்லாம் அம்பலமாகிவிட்டன. “ஈழவிடுதலைக்கு இந்தியா பகை சக்தி” என்ற உண்மையை போராடும் மாணவர்களும் இன்று புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இந்திய அரசை தாஜா செய்து ஈழத்துக்கு ஆதரவாக மாற்றி விட முடியும் என்று புலி ஆதரவாளர்களும் புலிகளும் கண்ட கனவை, கந்தக வெறியுடன் பொசுக்கியிருக்கிறது இந்திய அரசு.

காசி ஆனந்தன்இந்த சூழலில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் “அக்னிப் பரீட்சை” என்ற நேர்காணல் நிகழ்ச்சியில், ஈழத்து “உணர்ச்சிக் கவிஞர்” காசி ஆனந்தன் பேசியிருக்கும் பேச்சு, அவரது அடிமை உணர்ச்சியை அடையாளம் காட்டியது. “நேற்றும் இன்றும் நாளையும் இந்தியாதான் எங்கள் அண்டைநாடு, ஈழமக்களின் உரிமைகளுக்கு இந்தியாதான் உதவ வேண்டும், இந்தியாவை விட்டு வேற எந்த நாட்டிடம் நாங்கள் ஆதரவு கேட்போம்?” என்று பச்சைப் படுகொலைப் பகைவனை மூடிமறைக்கும் காசி ஆனந்தனின் கொச்சை அரசியலை கேட்க சகிக்கவில்லை!

“இவன்தான் எம் இனத்தைக் கொன்றவன்” எனும் உண்மையைக் கூட உரைக்க வக்கில்லாத இந்தப் சூரப்புலி, கடந்த காலத்தில் ஜனநாயக சக்திகள் பலரை புலிகள் கொன்றது நியாயம் என்றும், கொல்லப்ப பட்டவர்கள் அனைவருமே “இரண்டகர்கள்” (துரோகிகள்) என்றும் தீர்ப்பளிக்கிறார்.

இந்திய மேலாதிக்கத்துக்கு பத்மநாபா கூஜா தூக்கினால் அது இரண்டகம். அதற்கு புலிகள் விதிக்கும் தண்டனை மரணம். அதே கூஜாவை புலிக்கவிஞர் தூக்கினால் அது புரட்சி, எழுச்சி, உணர்ச்சி, கிளர்ச்சி… ! எத்தனை “சி” வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். இது கண்டு “ச்சீ” என யாரேனும் உமிழ்ந்தால் உமிழ்பவன் இனத்துரோகி!

மன்னர்களின் புளித்த ஏப்பத்தையெல்லாம், புலியின் சீற்றம் என்று புகழ்ந்தெழுதி பரிசில் பெற்ற புலவர் மரபில் வந்தவரல்லவா காசி ஆனந்தன்! திருப்பதிக்கே லட்டு விற்கிறார். ஐ.நா மன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால், நாளை காஷ்மீர் பிரச்சினையில் அது தமக்கு எதிராகத் திரும்பிவிடுமோ என்று இந்தியா அஞ்சத் தேவையில்லையாம்.

“இந்திய இராணுவம் காஷ்மீர் மக்கள் மீது குண்டு போட்டதில்லை, காஷ்மீர் பெண்களை வல்லுறவுக்கு ஆளாக்கியதில்லை.” என்று காசி ஆனந்தனின் வாயிலிருந்து வெடித்தன இந்தியக் குண்டுகள். பேட்டி எடுத்த ஜென்ராமால் அடுத்த கேள்வியைக் கூட கேட்க முடியவில்லை. இதே கேள்வியை ப.சிதம்பரத்திடம் கேட்டிருந்தால் கூட இவ்வளவு நெஞ்சுரத்துடன் புளுகியிருக்க மாட்டார். கவிஞரல்லவா, கவிதைக்கு பொய்தானே அழகு!

காஷ்மீர் மக்களிடம் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு நடத்துவதாக சொல்லி, 1947 முதல் ஏமாற்றி வருகிறது இந்திய அரசு. 1990 முதல் இந்தக் கணம் வரை சுமார் 24 ஆண்டுகளாக அங்கே இராணுவம் நிற்கிறது. இன்று அங்கு நிற்கும் இராணுவ, துணை இராணுவப் படையினரின் எண்ணிக்கை 7 இலட்சம் பேர்.

68,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 10,000 பேரைக் காணவில்லை. ஒரு இலட்சம் பேர் சித்திரவதையால் ஊனமாகியிருக்கிறார்கள். வல்லுறவுக்கு அளவே இல்லை. இப்போது கூட, “வல்லுறவு குற்றமிழைக்கும் இராணுவத்தினரை எல்லா கிரிமினல்களையும் போல விசாரிக்க வேண்டும்.. இந்த குற்றத்துக்கு ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் பாதுகாப்பை வழங்கக் கூடாது” என்று வர்மா கமிசன் கூறியதை இராணுவம் நிராகரித்து விட்டது. இதுதான் உண்மை நிலை.

மணிப்பூர் பெண்கள்
இராணுவ அதிகாரியை எதிர் கொள்ளும் மணிப்பூர் பெண்கள்

வடகிழக்கிந்திய மாநிலங்களில் இந்திய இராணுவம் என்ன செய்கிறது என்பதற்கு மணிப்பூர் தாய்மார்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் ஒரு சான்று. ஐரோம் சர்மிளாவின் உண்ணாநிலைப் போராட்டம் இன்னொரு சான்று.

இந்திய இராணுவம் ஈழத்தில் இரண்டு ஆண்டுகள் இருந்தபோது, ஈழத்தமிழர்களை கொன்றிருக்கிறது. வல்லுறவு செய்திருக்கிறது. அதையெல்லாம் கேட்டால் விளக்கமாக சொல்லுவார் கவிஞர். இருப்பினும் அப்பேர்ப்பட்ட இந்திய இராணுவம், கடந்த 24 ஆண்டுகளாக காஷ்மீரில் ஒரு ஈ எறும்பைக் கூட மிதிக்காமல், வாயில் வெள்ளைத் துணியும், கையில் மயிற்பீலியுமாக வலம் வருகிறது என்று நம்மை நம்பச் சொல்கிறார் கவிஞர்.

புதிய தலைமுறை பேட்டியில் மட்டுமின்றி, சென்னையில் நடந்த கவிஞர் தீபச்செல்வனின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியிலும் இதையே பேசினார் காசியானந்தன். அவருடன் அளவளாவிக் கொண்டிருந்த புலி ஆதரவு அறிஞர் பெருமக்கள் யாரும் இதற்காக அவரை விமரிசிக்கவில்லை. இன உணர்வு காரணமாக கவிஞரின் பொய் அவர்களைச் சுடவில்லை போலும்.

“காஷ்மீர் பற்றி நீங்கள் பேசியது ஆபாசமாக இருந்தது” என்று காசி ஆனந்தனிடம் அங்கேயே விமரிசித்தார் ஒரு ம.க.இ.க தோழர். “உங்களுக்கு வரலாறு தெரியாது” என்று கூறியபடியே வெளியேறினார் கவிஞர்.

இது மட்டுமல்ல, புதிய தலைமுறை பேட்டியில், சிங்கள மக்கள் மத்தியிலான ஜனநாயக சக்திகளையும் இராஜபக்சே அரசு கொல்வது பற்றி ஜென்ராம் கேட்டபோது, “தமிழனுக்கு குரல் கொடுத்த காரணத்தினால்தான் அவர்கள் கொல்லப்பட்டார்கள்” என்றார் கவிஞர். ஜேவிபி கிளர்ச்சியின்போதும் பல்லாயிரக்கணக்கில் சிங்கள இளைஞர்களே கொல்லப்பட்டார்களே என்று அவர் கேட்டார். “அது அவர்களுக்குள் கட்சித்தகராறு” என்று அலட்சியமாக பதிலளித்தார். அப்போது கூட சிங்களப் பேரினவாத பாசிஸ்டுகளிடமிருந்து ஜனநாயகத்துக்குப் போராடும் மக்களையும் பிரித்துப் பார்க்க வேண்டுமென்று கவிஞருக்கு கடுகளவும் உரைக்கவில்லை. அவ்வளவு சூப்பர் ஸ்டிராங் இன உணர்வு!

ராஜபக்சே அரசின் ஒடுக்குமுறையை எதிர்ப்பவனாக இருந்தாலும், சிங்களனை நம்ப முடியாதாம்! முள்ளிவாய்க்காலுக்கு மூல காரணமான இந்திய அரசை இன்னமும் இவர் நம்புவாராம். காசி ஆனந்தனின் இந்த அணுகுமுறை அவருடைய தனிப்பட்ட குணாதிசயமல்ல. தம்மை ஜனநாயகவாதிகளாக காட்டிக் கொள்ளும் புலி ஆதரவாளர்கள் பலரிடமும் நிலவும் பண்பு இதுதான். உணர்ச்சிக் கவிஞர் என்பதால் உணர்ச்சியை மறைக்க இயலாமல் கொட்டி விட்டார் அவ்வளவுதான்.

1980 களின் துவக்கம் முதலே புலிகளும் பிற இயக்கங்களும் இந்தியாவின் விடுதலை இயக்கங்களையோ ஜனநாயக சக்திகளையோ தம் நண்பர்களாக கருதவில்லை. இந்திய அரசையும், ஓட்டுக்கட்சிகளையும் நம்பிக் கெட்டார்கள். நம்பிக்கெடுவது அவர்களின் “ஜனநாயக” உரிமை. அதற்கு நாம் எதுவும் செய்ய இயலாது.

ஆனால் காஷ்மீரிலும் வட கிழக்கிந்திய மாநிலங்களிலும் இன ஒடுக்குமுறை இல்லை என்று நம்பச் சொல்கிறாரே, அது ஜனநாயக உரிமையாகாது. அது இந்திய மக்களுக்கு இழைக்கும் இரண்டகம். கவிஞரைக் கேட்டால் அதுதான் இன உணர்வு என்று சொல்லக்கூடும்.

சட்ட மாணவர்களுக்கான பயிலரங்கம்!

3

னித உரிமை பாதுகாப்பு மையம் – மதுரை மாவட்டக் கிளையின் சார்பாக சட்ட மாணவர்களுக்கான பயிலரங்கம் 16.3.13 சனிக்கிழமையன்று காலை மதுரை காந்தி அருங்காட்சியகம், காந்திய சிந்தனை, கல்வி மற்றும் ஆய்வரங்கத்தில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் திரு.ம.லயனல் அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்ற பயிலரங்கம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது,

“வழக்கறிஞர் தொழில் சமூகப் பொறுப்புள்ள தொழில், சட்டத்தின் பெயரால் இன்றைக்கு மக்களுக்கு எதிரான பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. கல்வி அறிவு குறைந்த நமது நாட்டு மக்களுக்கு சட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை. சட்டம் பயின்றவர்கள் அதனைச் செய்ய வேண்டும். மாணவர் சமுதாயம் என்றும் இளமையோடு சமூகத்தின் மையப்பகுதியில் நிலைத்திருப்பது. அதுவே சமூகத்தின் வளர்ச்சியிலும் எதிர்காலத்திலும் முக்கியபங்கு வகிப்பது, அதிலும் குறிப்பாக சட்டம் பயிலும் மாணவர்கள் தனிச் சிறப்பு பெறுகின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங் களின் முன்னோடியாக வழக்கறிஞர்கள் திகழுகின்றனர். அவர்களுடன் சட்ட மாணவர் களும் இணைந்து போராடுகின்றனர். அது பாராட்டுதற்குரியது. ஆனாலும் இன்றைக்கு கல்லூரி மாணவர்கள். ஓட்டுச் சீட்டு அரசியல், சாதி, மதம் ஆகியவற்றால் பிளவுபடுத்தப்பட்டுள்ளனர். அந்தத் தளைகளிலிருந்து மாணவர்கள் தங்களை விடுவித்துக் கொண்டு சமூகமாற்றத்துக்கான புரட்சிகர இயக்கங்களில் இணைத்துக் கொண்டு தங்களது எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அந்த நோக்கத்தில் தான் இந்தப் பயிற்சிப் பட்டறையை மனித உரிமை பாதுகாப்பு மையம்-மதுரைக்கிளை ஏற்பாடு செய்துள்ளது.

இதுபோல் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டம் உள்ளது. மாணவர்கள் தொடர்ந்து பங்கேற்று பயன் பெற வேண்டும்”

என்று தலைமையுரையில் கேட்டுக் கொண்டார்.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தொழில் என்ற தலைப்பில் அடுத்து பேசிய உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு,

தான் மாணவப் பருவத்தில் ஒரு சராசரி மாணவனாக இருந்ததையும், சட்டக் கல்லூரியில் கூட முழு நேரக் கல்லூ ரியில் படிக்க முடியாமல் பகுதி நேரக் கல்லூரியில் படித்ததையும் ஆனால் கடுமை யான உழைப்பு, விடா முயற்சி, பயிற்சி ஆகியவற்றின் மூலமாக இன்றைக்கு குறிப் பிடத் தகுந்த வளர்ச்சியை அடைந்திருப்பதையும் விளக்கிப் பேசினார்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் மூத்த வழக்கறிஞர் கற்றுத் தரும் நோக்கமுடையவராக இருக்க வேண்டும், அவர் கற்றுத் தருவதை கவனமுடன் பயில வேண்டும். வழக்கு விவரங்களை எழுதிப் பார்க்க வேண்டும். மூத்த வழக்கறிஞர் சொல்லுகின்ற வேலையைச் செய்ய எப்போதும் தயாராக இருக்க வேண்டும். பயிற்சிதான் இதில் முக்கியமானது. வழக்கறிஞர் தொழிலில் எத்தனையோ துறைகள் உள்ளன. சிவில், கிரிமினல், வருமானவரி, விற்பனை வரி, அரசியல் சட்டம், குடும்ப விவகாரங்கள், அரசு வழக்கறிஞர், தொழில் தாவா, கம்பெனி சட்டங்கள், நீதிபதி போன்று பல துறைகள் உள்ளன. எல்லாவற்றிலும் நாம் நிபுணராக இருக்க முடியாது. நமக்குப் பொருத்தமான துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் நேர்மையையையும், ஒழுங்கையும் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் கீழமை நீதிமன்றங்களிலும், உயர்நீதிமன்றங்களிலும் எந்தெந்த வகைகளில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் அதற்கான சட்டப் பிரிவுகள், நடைமுறைகள் பற்றி விளக்கினார்.

மாணவர்கள் குறிப்புகள் எடுத்துக் கொண்டதோடு கேள்விகளும் கேட்டு விளக்கம் பெற்றுக் கொண்டனர்.

மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை சட்டத்தின் மூலம் எதிர் கொள்ளுதல் என்ற தலைப்பில் ம.உ.பா மைய துணைச் செயலர், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசினார்.

சட்டத்தைப் பற்றிப் பேச வரவில்லை. நடைமுறையைப் பற்றி சொல்ல வந்திருக் கிறேன் என்று தொடங்கினார். காவல்நிலையத்தில் ஒரு புகாரை எப்படிப் பதிவு செய்ய வேண்டும் என்பதிலிருந்து தொடங்கி நீதிமன்றங்களில் அதற்குத் தீர்வு பெறுகிறவரை என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை ஒவ்வொரு கட்டமாக ஒரு ஆசிரியரைப் போல விளக்கினார். அறிவு எனப்படுவது ஒரு நடைமுறையைப் பற்றிய அறிவுடன் தான் முழுமை பெறுகிறது. தவறான நடைமுறையினால் நாம் எதிர்பார்க்கிற விளைவு கிட்டுவதில்லை என்பதை சிறப்பாக எடுத்துரைத்தார். பிணை, முன் பிணை, குடும்ப நல வழக்குகள், ஒருவர் கைது செய்யப்படும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் டி.கே.பாசு VS மேற்குவங்க அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவை பற்றி விளக்கினார்.

அடுத்து, சமூகப் பொறுப்புள்ள வழக்கறிஞர் தொழிலில் சட்ட மாணவர்கள் பயில வேண்டிய அரசியல், குற்றவியல் சட்ட அடிப்படைகள் என்பது பற்றி உயர்நீதிமன்ற முன்னணி வழக்கறிஞர் திரு.தி.லஜபதிராய் பேசினார்.

தமிழ்நாட்டிலுள்ள சட்டக் கல்லூரியில் சேரும் மாணவர்கள் பெரும்பாலும் கிராமப்புறப் பின்னணியைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் தேசிய சட்டக் கல்லூரி, சட்டப் பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் நடைமுறை சாராத சட்டப் புழுக்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் சட்டப்படியே பார்க்கிறார்கள். சட்டத்துக்குப் புறம்பாக எதையும் செய்ய முடியாது என்றே சொல்கிறார்கள். அவர்களுக்கு மக்களிடம் தொடர்பே இல்லை.

மதுரை அருகே உள்ள தெற்குத் தெரு என்ற ஊரில் கோவில் திருவிழாவில் நடைபெறும் தீமிதியில் பட்டியல் சாதியினர் கலந்து கொள்ளக் கூடாது என்று வழக்கம் இருக்கிறது. ஆனால் சட்டப்படி அது தவறு. ஆனால் வழக்கம், வழக்காறு என்ற அடிப் படையில் தொன்று தொட்டு இருந்து வருவதை மாற்ற முடியாது என்று கூறுகின்றனர். ஆனால் அரசியல் சட்டம் உறுப்பு 13 மிக மிக முக்கியமானது. அது நமக்கு எல்லா உரிமைகளையும் வழங்குகிறது. அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதற்கு எதிராக இருக்கிற எந்தச் சட்டமும் செல்லாது. எந்த நடைமுறையும் செல்லாது. ஆனால் கோவில் நடைமுறைகளில் ஆகம விதிகளைக் காரணம் காட்டி அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஆகமங்கள் சொல்லுகின்ற எத்தனையோ விதிகள் கடைபிடிக்கப் படுவதில்லை. ஆனால் தங்களுக்குச் சாதகமானதை மட்டும் எடுத்துக் கொண்டு நீதி மன்றத்தில் தடையுத்தரவு பெறுகின்றனர். அதற்கு நீதிமன்றங்களும் ஒத்துழைக்கின்றன. ஆனால் அரசியல் சட்டத்திற்கு முரணான எத்தனையோ நடைமுறைகளை போராட்டத் தின் மூலம் மக்கள் மாற்றியிருக்கின்றனர். குறிப்பாக ஆலய நுழைவு, தோள் சீலை போராட்டம், கல்வி உரிமை போன்றவை.

1978ம் ஆண்டு வரை சட்டம் என்று ஒன்று இருந்து அது எதைச் சொல்கிறதோ அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இருந்தது. 1978க்குப் பிறகு இந்திரா காந்தி-மோனா காந்தி கடவுச் சீட்டு (Passport) வழக்குக்குப் பிறகு ஒரு சட்டம் என்பது அரசியல் சட்டத்திற்கு முரணாக இருக்கிறதா என்று பார்க்கப்பட்டது. ஒரு சட்டம் இயற் றப்பட்டால் அந்தச் சட்டம் சரியா? செல்லுமா என்று பார்க்கும் போது பெரும்பாலும் மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் செல்லும் என்றே நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக மிசா, தடா, பொடா, தேசிய பாதுகாப்புச் சட்டம், சிறப்பு ஆயுதப்படைச் சட்டம், குண்டர் சட்டம் இவை போன்றவை. ஒருவரிடம் காவல்துறை பெறும் ஒப்புதல் வாக்கு மூலம் செல்லாது என்பது சட்டம். ஆனால் நடைமுறையில் அதை வைத்தே தண்டனை வழங்கப்படுகிறது (அப்சல்குரு தூக்கு.)

அரசியல் சட்டம் 14, 19 மிகவும் முக்கியமானவை. அது நமது கருத்துச்சுதந்திரத்தை வழங்குகிறது. தொழில், வர்த்தகம், பணி தொடர்பான சட்டத்தின் கீழ் Magic Remedy என்று சொல்லப்படுகின்ற ஆண்மையைப் பெருக்குகிற, முடி வளர்க்கிற விளம்பரங்கள் சட்ட விரோதமானவை. ஆனால் அவற்றையெல்லாம் துக்ளக், தினமணி, தினமலர், தினத்தந்தி போன்ற பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. ‘பேண்டிட் குயின்’ என்ற திரைப்படத்தில் பூலான் தேவி நிர்வாணமாக்கப்படுகிற காட்சி வருகிறது. அதை தணிக்கை குழு அனுமதிக்கவில்லை. உச்சநீதிமன்றம் போய் தீர்வு தேட வேண்டி வந் தது. ஆனால் கோவில் விழாக்களில் ஆபாச வக்கிரம் நிறைந்த குத்தாட்டங்கள் அனும திக்கப்படுகின்றன. கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள். அங்கே 144 தடை உத்தரவு பல மாதங்களாக அமலில் உள்ளது. 2 மாதங்களுக்கு மேல் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் அமல்படுத்த முடியாது. அரசுதான் ஆணை பிறப்பிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. தடையுத்தரவு சரி என்று நீதிபதி சந்துரு தீர்ப்பு வழங்கினார். பேச்சுரிமை, எழுத்துரிமை, வாழ்வுரிமை மறுக்கப்பட் டால் அது பாசிச அரசு – அதை ஏற்றுக் கொண்டால் அது பாசிச நீதிமன்றம்.

குற்றவியல் வழக்கிலே, பாதிக்கப்பட்டவருக்கு உள்ள உரிமைகள் குற்றம் சாட்டப் பட்டவருக்கும் இருக்கிறது என்பது முக்கியமானது. ஒரு வழக்கில் வெற்றி பெறுவ தோடு, இழப்பீடு பெற்றுத் தருவதும் முக்கியமானது. அதுபோல குற்றத்தைத் தொடர்ந்து தடயங்களையும் ஆதாரங்களையும் கண்டுபிடிப்பது முக்கியமானது. திருட்டு வழக்கில் திருடப்பட்ட பொருள், கொலை, தாக்குதல் வழக்கில் ஆயுதங்கள் முக்கியமானவை.

இது போன்ற மேலும் பல எடுத்துக்காட்டுகளுடன் லஜபதிராய் விளக்கினார். வழக்கறிஞர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

மாணவர்களுக்கு குறிப்பேடுகளும். பேனாவும் வழங்கப்பட்டது. அனைத்து மாண வர்களும் குறிப்பெடுத்துக் கொண்டதுடன் தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டும் தெளிவு பெற்றுக் கொண்டனர். 40 மாணவர்களில் 8 பேர் பெண்கள். பயிலரங்கத்தின் இறுதியில் அமைப்புக்குழு உருவாக்கப்பட்டது. 8 பேர் கொண்ட குழுவில் 2 பேர் பெண்கள். இது போன்ற பயிற்சிப் பட்டறைகள் தொடர்ந்து நடத்தவும் மேலும் பல மாணவர்களைத் தொடர்பு படுத்தவும் ம.உ.பா மையத்துடன் பரஸ்பரம் ஒத்துழைக்கவும் குழு பணியாற்றும் என்று மாணவர்கள் தெரிவித்தனர். ம.உ.பா மைய வழக்குரைஞர்கள், நடராஜன், ராஜசேகர், மன்மதன் மற்றும் செயற்குழு உறுப்பினர் எம்.டி.ராஜசேகர் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர். ம.உ.பா மையவெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

தகவல்: ம.உ.பா.மையம்-மதுரைக்கிளை

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம் – நூல் வெளியீடு!

316

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம். கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் என்ற நூலை மனித உரிமை பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு பதிப்பித்துள்ளது. இந் நூலின் வெளியீட்டு நிகழ்ச்சி 14.03.13 வியாழன்று மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க அரங்கத்தில் நடைபெற்றது.

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

மாலை 5.00 மணிக்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவரும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உறுப்பினருமாகிய திரு மு திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். வழக்கறிஞர் மெல்ட்டியு நூலினை அறிமுகம் செய்து உரையாற்றினார். வழக்கறிஞர், ஆய்வாளர், எழுத்தாளர், போராளி ஆகிய பன்முகத் தன்மை கொண்ட திரு தி லஜபதிராய் நூலை வெளியிட, எழுத்தாளர் சிந்தனையாளர் வழக்கறிஞர் க பிரபுராஜதுரை பெற்றுக் கொண்டார்.

தலைமையுரையாற்றிய வழக்கறிஞர் திருநாவுக்கரசு, மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பல்வேறு போராட்டங்களையும் அதில் கண்ட வெற்றிகளையும் எடுத்துரைத்தார். பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றுவதாக வாக்குறுதி அளித்த கருணாநிதி இறுதிவரை உறுதியாக நின்று போராடவில்லை. இப்போது மனித உரிமை பாதுகாப்பு மையம் உறுதியாக நின்று போராடுகிறது. 206 மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சி பெற்று சான்றிதழும் பெற்றுள்ள சூழ்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக பணி நியமனம் பெறாமல் உள்ளனர். கிராமக் கோவில்களில் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் பூசை செய்யும் போது ஓடாத கடவுள் பெரிய கோவில்களில் பூசை செய்யும் போது மட்டும் ஓடிவிடுமா என்று கேள்வி எழுப்பினர்.

நூலின் உள்ளடக்கத்தை முழுமையாகப் படித்துத் தொகுத்துச் சொல்லிய வழக்கறிஞர் மெல்ட்டியூ, 1970-களில் பெரியார் தொடங்கிய போராட்டம் கடந்த 42 ஆண்டுகளாகத் தொடர்கிறது. பெரியாரின் வாரிசுகள் என்று சொல்கிறவர்கள் எல்லாம் ஒதுங்கி விட்டார்கள். மனித உரிமை பாதுகாப்பு மையம் தான் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துகிறது. அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் செய்வதறியாது நின்ற போது மனித உரிமை பாதுகாப்பு மையம் அந்த 206 மாணவர்களையும் சங்கமாகத் திரட்டி அரசுக்கும் அர்ச்சகர்களுக்கும் இடையே நடைபெற்ற வழக்கில் மாணவர் சங்கத்தையும் ஒரு தரப்பினராகச் சேர்த்தது. அரசியல் சாசனச் சட்டம் தீண்டாமையைக் குற்றம் என்று சொல்கிறது, ஆனால் கருவறைக்குள் நிலவும் தீண்டாமையை ஆகம விதிகள், மரபு, பழக்க வழக்கம் என்று சொல்லி அங்கீகரிக்கிறது. ஆனால் 2002ல் கேரளாவைச் சேர்ந்த ஆதித்தியன் தொடுத்த வழக்கில் பார்ப்பனர் அல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. எனவே கருவறைக்குள் நிலவும் தீண்டாமையை ஒழிக்கும் ம.உ.பா மையத்தின் முயற்சியில் நாமும் பங்கேற்க வேண்டும் என்றார். மெல்ட்டியு கத்தோலிக்க கிறித்தவ மத குருவாக இருந்து அங்கே நிலவிய சாதி ஆதிக்கம், தீண்டாமையை எதிர்த்து அப்பதவியைத் தூக்கி எறிந்து விட்டு வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.வழக்கறிஞர்

அடுத்து நூலை வெளியிட்டு திரு லஜபதிராய் உரையாற்றினார். கோவில் அதிகார மையமாகத் திகழுகிறது. 2000 ஆண்டுகளாக அடிமைத்தனம் நிலவுகிறது. 7½ ஏக்கர் கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்ததனால் சென்னகரம்பட்டியில் 2 பேர் பட்டியல் இனத்தவர் கொலை செய்யப்பட்டனர். பூசை செய்யக் கூடியவர்களிடம் அதிகாரம் உள்ளது. ஆகம விதிகளின் படி அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆகமம் என்றால் என்ன?

ஆகமம் எங்கிருந்து வந்தது. ஆகமம் எழுத்து வடிவத்தில் இல்லை. 36 ஆகமங் கள் இருந்த்தாகவும் அதில் காமிகாம ஆகமம். பைகான ஆகமம் ஆகிய இரண்டு ஆகமங்கள் உள்ளதாகச் சொல்கிறார்கள். ஆகமத்தை எழுதியவர் யார்? பிரமன், நாரத னுக்குச் சொன்னான். நாரதன், யாதன வல்க்கியருக்குச் சொன்னான்-யாதன வல்க்கியர் மனுவுக்குச் சொன்னான்-மனு யாருக்குச் சொன்னான்-மனு வெங்காயத்துக்குச் சொன்னான் என்றார் பெரியார். கோவில்கள் எப்போது வந்தன. 9 ஆம் நுர்ற்றாண்டுக்கு முன்பு கோவில்கள் இல்லை. கோவில்கள் பௌத்தர்கள். சமணர்களால் உருவாக்கப் பட்டது. மத்திய ஐரோப்பாவிலிருந்து வந்த ஆரியர்கள் சமண, பௌத்தர்களை விரட்டி விட்டு கோவில்களைக் கைப்பற்றினர். காஞ்சி காமாட்சி, நாகை விசாலாட்சி, மதுரை மீனாட்சி ஆகிய கடவுள்கள் எல்லாம் பவுத்தக் கடவுள்களாக இருந்து இந்துக் கடவுளர் களாக மாற்றப்பட்டார்கள். ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ எழுதிய ராகுல்ஜி. அண்ணல் அம்பேத்கர், திலகர் போன்றவர்கள் எல்லாம் இதுபற்றி எழுதியுள்ளனர். ஆரியர்களின் சொத்து பசு. பால், தயிர், மோர், வெண்ணெய், நெய்-இவை தான் உணவு. மூத்திரம் கிருமி நாசினி-சாணம் எரிபொருளாகப் பயன்பட்டது. அவர்கள் நாடோடிகளாக இருந்தனர். சூரியன் தான் அவர்களது கடவுள்-எனவே சூரிய நமஸ்காரம் அவர்களது வழிபாட்டு முறையில் முக்கியமானது. சங்கராச்சாரி கூட மாடு மேய்க்கிற அதே கோலத்தில் இப்போது கூட இருந்து வருகிறார்.

எனவே கோவில்கள் என்று எடுத்துக் கொண்டால் நாகமலை புதுக்கோட்டை, யானை மலை, பாண்டி கோவில் போன்ற இடங்களில் எல்லாம் மகா வீரர், புத்தர் சிலைகள் தான் உள்ளன. கோவில்களைக் கைப்பற்றிய பார்ப்பனர்களிடமிருந்து வழிபாட்டு உரிமைகளைப் பெறவே பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்த்து.

1969-ல் இளைய பெருமாள் கமிட்டி, 1972-ல் சேஷம்மாள் வழக்கு, ஆந்திராவில் நாராயண தீர்சிதர் வழக்கு, கேரளாவில் ஆதித்தியன் வழக்கு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வழக்கு என்று பல வழக்குகள் தொடுத்தும் ஆகம விதிகளை, பரம்பரை நியமனத்தை மாற்ற உச்ச நீதிமன்றத்துக்கும் அதிகாரமில்லை என்ற நிலை உள்ளது. தமிழக அரசு தொடுத்த வழக்கில் 55வது பிரிவு திருத்தத்தில் அரசு தரப்பில் சறுக்கல் ஏற்பட்டது. அர்ச்சகர் நியமனத்தின் போது ஆகம விதிகளைக் கடைபிடிப்போம் என்று அரசு ஒப்புக்கொண்டது, எனவே தான் பெரியார் “ஆபரேசன் வெற்றி, நோயாளி மரணம்” என்று இதைக் குறிப்பிட்டார்.

தீண்டாமையைக் குற்றம் என்று சொல்கிற அரசியல் சட்டப் பிரிவு 13க்கு எதிராக உள்ளது ஆகம விதிகள், அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமைகள் பெரிதா? ஆகமங்கள் சொல்லுகின்ற வழக்கங்கள், வழக்காறுகள் பெரிதா? அப்படியானால் அரசியல் சட்டத்தை விட ஆகமங்கள் பெரிதா? என்று கேள்வி எழுப்பினார் வழக்கறிஞர் லஜபதிராய். மேலும் மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்துகின்ற இந்த சட்டப் போராட்டம் சரியான சிறந்த முயற்சி. இந்த முயற்சி வெற்றி பெறும்-ஆகமங்கள் குப்பை-சட்ட ரீதியாகப் போராடி வெல்லலாம் என்று கூறினார்.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரைக்கிளை துணைச் செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், அர்ச்சக மாணவர் சங்கம் அமைத்தது, சான்றிதழ் பெற்றுத் தந்தது, வழக்கில் தரப்பினராகச் சேர்த்தது, மதுரை, சென்னை, திருவண்ணாமலை போன்ற இடங்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியது, பார்ப்பன எதிர்ப்பாளர்கள் என்று கூறுகிறவர்களோ, நாமெல்லாம் இந்துக்கள் என்று இந்து ஒற்றுமைக்காக இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அமைப்புகளோ இந்தப் பிரச்சனைக்கு ஆதரவாக வரவில்லை. ம.உ.பா மையம் தான் இந்தப் பிரச்சனையில் முன்நின்று போராடுகிறது.

கடும் உழைப்பினாலும், பொருட் செலவிலும், தோழமை அமைப்புகளின் உதவியோடும் இந்த வழக்கினை நடத்தி வருகிறோம். உச்சநீதிமன்றத்தில் 4 வழக்கு களை நடத்தி வருகிறோம். படித்தவர்கள் விவரம் அறிந்தவர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

இது அர்ச்சகர் பணி என்கிற பிரச்சினை மட்டுமல்ல. தமிழனின் மானப் பிரச்சினை. கருவறைத் தீண்டாமை பிரச்சனை. இந்தியக் குடிமகன் எவர் ஒருவரும் கலெக்டர் ஆகலாம், நீதிபதி ஆகலாம், பிரதமர் ஆகலாம், குடியரசுத் தலைவர் ஆகலாம். ஆனால் அர்ச்சகர் மட்டும் ஆக முடியாது. அது குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவரால் மட்டும் தான் முடியும் என்பது கேலிக் கூத்தாக இருக்கிறது என்று சுட்டிக் காட்டினார்.

வழக்கறிஞர் ப.வெங்கடேசன் நன்றி கூறினார்.

விழாவில் 60 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். அனைத்து நூல்களும் விற்றுத் தீர்ந்தன. மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரைக்கிளை நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தது.


[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்
: மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை.

விவசாயிகளை விரட்டியடிக்கும் ‘வளர்ச்சி’!

8

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து தமிழகத்தின் வழியாக கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு இயற்கை எரிவாயுவைத் தரைவழியாகக் கொண்டு செல்லும் திட்டமொன்றை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது, பொதுத்துறை நிறுவனமான இந்திய எரிவாயு ஆணையம் (கெய்ல்). தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களிலுள்ள 138 கிராமங்களின் வயல்வெளிகளில் இக்குழாய்களைப் பதித்து எரிவாயுவைக் கொண்டு செல்லும் வண்ணம் இத்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

10-farm-landவிளைநிலங்களில் வெறும் 20 மீட்டர் அகலத்திற்கு மட்டுமே இடத்தை எடுத்துக் கொள்ளப் போகிறோம் என கெய்ல் சாதாரணமாகக் கூறுகிறது. சிறு விவசாயிகளுக்குச் சொந்தமாயுள்ள ஒரு ஏக்கர், அரை ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொண்ட பிறகு அவர்களுக்குப் பயிர் செய்வதற்கு என்ன மிஞ்சியிருக்கும்? அந்தத் துண்டு நிலம் இரண்டு துண்டாகிப் பயிர் செய்வதற்கு வாட்டமில்லாமல் போகும்.

“குழாய் பதிக்கப்பட்ட விவசாய நிலத்தின் அருகே வண்டிப் பாதை அமைக்கக் கூடாது; பாசனக் குழாய்களை அமைக்கக் கூடாது; மரம் வளர்க்கக் கூடாது; பாசனக் குழாய்களை அமைக்கக் கூடாது; மரம் வளர்க்கக் கூடாது” என ஏகப்பட்ட நிபந்தனைகளையும்; “பதிக்கப்படும் குழாய்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நிலத்தின் விவசாயியைக் கைது செய்யவும், மூன்றாண்டுகள் வரை சிறையில் தள்ளுவதற்கும்” வகை செய்யும் அநியாயமான சட்டங்களையும் இயற்றி வைத்திருக்கிறது, கெய்ல்.

“வெறும் 20 மீட்டர் அகலத்துக்கு மட்டுமே நிலத்தை எடுத்துப் பயன்படுத்துவதால், நிலத்தின் சந்தை மதிப்பில் 10 சதவீதம் மட்டுமே இழப்பீடாக கம்பெனி வழங்கும்” என அறிவித்திருக்கிறது, கெய்ல். இந்த அற்பத்தனமான கணக்கின்படி, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராஜி என்ற விவசாயிக்குக் கிடைத்துள்ள இழப்பீடு 13 ரூபாய்!

அம்மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு தொடங்கியே நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராகப் போராடி வருகின்றனர். இப்போராட்டத்தையடுத்து நிலம் கையகப்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்த கெய்ல் நிறுவனம், “நிலத்தைக் கையகப்படுத்த போலீசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று கோரி கடந்த ஆண்டு வழக்குத் தொடுத்தது.

இவ்வழக்கில், “விவசாய நிலங்களின் வழியாகக் குழாய் அமைப்பதற்குப் பதிலாக தேசிய நெடுஞ்சாலைகளின் வழியே எரிவாயுவைக் கொண்டு செல்வது உள்ளிட்ட மாற்று வழிமுறைகள் குறித்து விவசாயிகள், கெய்ல நிறுவனம், தமிழக அரசு ஆகிய முத்தரப்பும் கலந்து பேச வேண்டும்; கெய்ல் நிறுவனம் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு உதவியாக போலீசைப் பயன்படுத்தக் கூடாது” என உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து கெய்ல் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கிலும் சென்னை உயர்நீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பையே உறுதி செய்தது.

கெய்ல் நிறுவனமோ இத்தீர்ப்பை மயிரளவுக்குக் கூட மதிக்காமல் நிலப்பறிப்பு நடவடிக்கைகளை மீண்டும் எடுத்தது. தமிழகத்தின் உரிமைகளுக்காக மைய அரசோடு தினமும் மோதுவதாகக் கூறும் அம்மா அரசு, இந்த விசயத்திலோ உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, கெய்ல் நிறுவனத்தின் நிலப்பறிப்புக்கு உதவியாகத் தனது போலீசு பட்டாளத்தை அனுப்பி வைத்தது. நீதிமன்றத்தின் உத்தரவை மீறி நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து விவசாயிகள் பிப்ரவரி மாத இறுதியில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததையடுத்து நிலம் கையகப்படுத்துவதற்கு 3 வாரம் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தவிர்க்க முடியாதது என ஆட்சியாளர்கள் நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், சொல்லிக் கொள்ளப்படும் இந்த வளர்ச்சி நிலத்தைப் பறி கொடுத்த விவசாயிகளுக்குத் திருப்பித் தருவதென்ன? வேலைக்காக நகரங்களை நோக்கி ஓடும் அகதி வாழ்க்கையைத் தவிர!

____________________________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2013
____________________________________________________________________________________________________

காவிரி: சிக்கல் தீரவில்லை!

3

மிழக மக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள், ஆட்சியாளர்களின் துரோகங்கள், வறட்சி, விவசாயிகளின் தற்கொலைகள் – இவற்றுக்குப் பின்னர் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை இந்திய அரசு கடந்த பிப்ரவரியில் அரசிதழில் வெளியிட்டுள்ளது.

ஆறாண்டுகளுக்கு முன்பு 2007-இல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியானபோது, “இத்தீர்ப்பு தமிழகத்துக்குப் பாதகமானது, மைனாரிட்டி தி.மு.க. துரோக அரசு பதவி விலக வேண்டும்” என்று கூப்பாடு போட்டார் பாசிச ஜெயலலிதா. அப்படிக் கூறியவர்தான் இப்போது, “எனது 30 ஆண்டுகால அரசியல் வாழ்வில் கிடைத்த மகத்தான வெற்றி, இது எனக்குக் கிடைத்த பிறந்தநாள் பரிசு, இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாவதற்கு நானே காரணம்” என்று தனக்குத் தானே பெருமை கொண்டாடுகிறார்.

காவிரியில் நீரின்றி சம்பா பயிர்கள் கருகி, அடுத்தடுத்து விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதிலும், தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளே கிடையாது என்று திமிராக அறிவித்ததோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கூட தராமல் அலட்சியப்படுத்தியது ஜெயா அரசு. விவசாயிகளின் போராட்டங்களுக்குப் பின்னரே, 50 சதவீதத்துக்கு மேல் பயிர் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு மட்டும், ஒரு ஏக்கருக்கு ரூ. 15,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதிலும் பயிர் காப்பீடு நிறுவனம் வழங்கும் இழப்பீட்டை அரசே எடுத்துக் கொண்டு மீதமுள்ள ரூ. 5,808 தான் விவசாயிகளுக்குத் தரப்படும். தஞ்சையில் இந்த அற்ப இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சியில், ஜெயாவின் அடிமை அமைச்சர் வைத்தியலிங்கம், விவசாயிகள் கைதட்டாததைக் கண்டு ஆத்திரமடைந்து “உங்களுக்கு அறிவு இல்லையா? நீங்கள் எல்லாம் உணர்ச்சியற்ற பிண்டங்களா?” என்று விவசாயிகளை இழிவுபடுத்தி ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இப்படி விவசாயிகளின் நலனில் மயிரளவும் அக்கறையில்லாத இந்த கும்பல்தான் பாசிச ஜெயாவை “காவிரித் தாய்” என்று துதிபாடிக் கொண்டு அவருக்கு ஒளிவட்டம் போட்டுக் கொண்டு திரிகிறது.

காவிரி போராட்டம்
நிபந்தனைகளின்றி அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகளைக் கைது செய்ததைக் கண்டித்தும், அவர்களை விடுவிக்கக் கோரியும் திருவாரூர் ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தும் விவசாயிகள்.

கடந்த பிப்ரவரி 2007-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இந்த நடுவர் மன்றத் தீர்ப்பு 6 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மிகத் தாமதமாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதன் மூலம், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு நாட்டின் சட்டங்களில் ஒன்றாகியுள்ளது. இருப்பினும், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள முடிவின்படி கர்நாடகம் இச்சட்டத்தை மதித்து செயல்படுமா என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. “காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க அனுமதிக்க மாட்டோம்; காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்தவும் விடமாட்டோம்” என்கிறது கர்நாடக பா.ஜ.க. “காவிரி மேலாண்மை வாரியத்தை இப்போது அமைக்க முடியாது” என்று அடாவடியாகப் பேசுகிறார், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஹரீஷ் ராவத். தற்போது இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரும், தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் ஷெட்டர் பகிரங்கமாகக் கொக்கரிக்கிறார்.

எனவே, காவிரி நடுவர் மன்றத் இறுதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, தன்னாட்சி அதிகாரமுள்ள காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அதன் கட்டுப்பாட்டில், கர்நாடகத்திலுள்ள நான்கு அணைகளையும் நீர்ப்பாசன நிர்வாகத்துக்கு உட்படுத்தி கண்காணித்தால்தான், இந்த இறுதித் தீர்ப்பு நடைமுறைக்கு வருவதற்கான வாப்பு இருக்கிறது. ஆனால், இதற்கு எவ்வித காலக்கெடுவையும் நிர்ணயிக்காத உச்ச நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 25 அன்று காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது மைய அரசின் கடமை என்று கூறி எவ்வித உத்தரவும் பிறப்பிக்காமல் நழுவிக் கொண்டுள்ளது. கர்நாடக முதல்வர் ஷெட்டர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்டு, தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் சார்பில் தாக்கல் செயப்பட்ட துணை மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்துள்ளது.

இவையும் போதாதென்று, தமிழகத்தின் குறுவை சாகுபடிக்கு ஜூன் மாதத்தில் தண்ணீர் வேண்டும் என்பது கூடத் தெரியாமல், விவசாயத்தைப் பற்றிய பொதுஅறிவுகூட இல்லாமல், இறுதித் தீர்ப்பு குறித்த வழக்கின் இறுதி விசாரணையை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. காவிரி நீரில் தமிழகத்தின் நியாயவுரிமையை அலட்சியப்படுத்தி, தமிழக விவசாயிகளின் உயிராதமான இப்பிரச்சினையைத் தட்டிக்கழிக்கும் வகையில்தான் உச்ச நீதிமன்றம் அதிகாரவர்க்கத் தோரணையில் அணுகி வருகிறது.

காவிரி போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரி, திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி. பெட்ரோலிய கிணறுகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தும் காவிரி மீட்புக் குழுவினர்.

உச்ச நீதிமன்றம் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்து நழுவிக் கொள்வதையும், அடாவடித்தனமான கர்நாடக அரசு மீது தனது அதிகாரத்தை ஏவி கட்டுப்படுத்த இந்திய அரசு தொடர்ந்து மறுப்பதையும் இவையனைத்தும் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன. எனவே, அரசிதழில் இறுதித் தீர்ப்பு வெளியிடப்படுள்ளதால் அதிசயம் ஏதும் நடந்துவிடப் போவதில்லை. ஏற்கெனவே1991-இல் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டபோது, கர்நாடக அரசு அதைச் செயல்படுத்த மறுத்தது. மைய அரசோ கைகட்டி நின்றது. கன்னட இனவெறியர்களோ, தமிழர்களுக்கு எதிராக மிகக் கொடிய கலவரத்தை அரங்கேற்றினர்.

இந்நிலையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம் போலவே காவிரி இறுதித் தீர்ப்பானது இன்னுமொரு காகிதச் சட்டமாகவே இருக்கும். தமிழகத்தின் நியாயவுரிமையை நிலைநாட்ட வேண்டிய உச்ச நீதிமன்றமும், கர்நாடகத்துக்கு உத்தரவிட்டு செயல்படுத்த வேண்டிய அதிகாரத்தைக் கொண்டுள்ள மைய அரசும் எந்த நடவடிக்கையுமின்றி நழுவிக் கொள்ளும் தற்போதைய அரசியலமைப்பு முறையில், இந்தச் சட்டம் ஒரு அங்குலம் கூட நகராது. ஆனாலும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் இந்த அநீதிக்கும், கர்நாடகத்தின் அடாவடிக்கும், மைய அரசின் செயலற்ற நிலைக்கும் எதிராக வாய் திறக்காமல், தங்களால்தான் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாகக் காட்டி மலிவான அரசியல் நாடகத்தை நடத்துகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஓட்டுக்குத்தான் விவசாயிகள் தேவையாக உள்ளனரே தவிர, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயமும் விவசாயிகளும் தேவையில்லை என்பதுதான் ஆளும் கும்பலின் மறுகாலனியாதிக்கக் கொள்கையாக உள்ளது. ஏற்கெனவே காவிரி கடைமடைப் பகுதிகளில் இறால் பண்ணைகளை அமைத்து விவசாயத்தை நாசமாக்கிய இக்கும்பல், இப்போது விவசாயிகள் மாற்றுப் பயிர்களுக்கும், நவீன விவசாயத்துக்கும் மாற வேண்டுமென உபதேசிக்கிறது. விவசாயத்தையும் விளைநிலங்களையும் அழித்து வீட்டுமனைகளாக மாற்றுவதையும், கிழக்குக் கடற்கரைப் பகுதி முழுவதிலும் கார்ப்பரேட் கொள்ளைக்கான மின்நிலையங்களையும் அணு மின் நிலையங்களையும் அமைப்பதையும் ஆளும் கும்பல் நோக்கமாகக் கொண்டுள்ளது. இவற்றின் நடுவே நிலத்தடி நீரையும் உறிஞ்சி டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கிவரும் தண்ணீர் வியாபாரிகள் பெருகி வருவதோடு, உலகவங்கி – உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைப்படி தண்ணீரை வர்த்தகப் பொருளாக்கும் வகையில் மைய அரசு தேசிய நீர்க் கொள்கையை வகுத்துக் கொண்டுள்ளது. மொத்தத்தில் விவசாயிகளை விவசாயத்திலிருந்தே விரட்டியடிப்பதும், இனி விவசாயமே செய முடியாத நிலையை உருவாக்குவதுமான மறுகாலனியாதிக்கக் கொள்கைகள் வேகமாகத் திணிக்கப்பட்டு வருகின்றன.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாகியுள்ளதைக் காட்டி, தமிழகத்துக்கு நியாயம் கிடைத்துவிட்டதைப் போன்றதொரு தோற்றத்தை ஓட்டுப் பொறுக்கி பிழைப்புவாதிகள் ஏற்படுத்திவரும் இன்றைய நிலையில், இதனை அம்பலப்படுத்தி காவிரியில் தமிழகத்தின் நியாயவுரிமைக்காகவும், தீவிரமாகிவரும் மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராகவும் தமிழக உழைக்கும் மக்கள் விடாப்பிடியான தொடர் போராட்டங்களை நடத்துவதே இன்றைய முதன்மைத் தேவையாக உள்ளது.

– கதிர்

____________________________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2013
____________________________________________________________________________________________________

அதிதியின் கதை!

0
பாலியல் தாக்குதல்
படம் உதவி : இந்து நாளிதழ்

ணி இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களிலிருந்து, பாதுகாப்பு வழங்குவதற்கான மசோதா 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இரண்டு வருடங்களாக நிலுவையில் இருந்த இச்சட்டம், லோக்சபாவில் செப்டம்பர் 3 2012 அன்றும், ராஜ்யசபாவில், பிப்ரவரி 26 2013 அன்றும் ஏற்கப்பட்டு இப்போது நடைமுறையில் உள்ளது.

பாலியல் தாக்குதல்
படம் உதவி : இந்து நாளிதழ்

இந்த சட்டத்தின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை, ஒழுங்குபடுத்தப்பட்டு நடத்தப்படுவதாக சொல்லப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நடைமுறையிலிருந்து பரிசீலிக்கலாம். பன்னாட்டு நிறுவனங்களானாலும் சரி, உள்ளூர் பெருநிறுவனங்களானாலும் சரி பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் பெண்களின் புகார்கள் பெரும்பாலும் உதாசீனப்படுத்தப்பட்டு அவர்கள் பணியிலிருந்து தூக்கியெறியப்படுகின்றனர் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது கே.பி.எம்.ஜி என்ற பலம் பொருந்திய நிதி மேலாண்மை நிறுவனம்.

உலகம் முழுவதும் 156 நாடுகளில் கிளைகளைக் கொண்ட கே.பி.எம்.ஜி.யின் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத். கொல்கத்தா, புனே, கொச்சி, சண்டிகர், அகமதாபாத்பாத் நகரங்களில் இயங்கும் அலுவலகங்களில் 4,800 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

30 வயதுகளின் இறுதியில் இருந்த சார்டட் அக்கவுண்டன்ட் ஆன, அதிதி போஜ்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  2006ம் ஆண்டு கே.பி.எம்.ஜி, மும்பை கிளையில் பணியாற்றிவந்தார். அவர் பணியிடத்தில் சக ஊழியர்களாலும், மேல் அதிகாரிகளாலும் பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளானர். ஆபாச மின்னஞ்சல்கள், உடைகளையும் உடலையும் விமர்சிக்கும் அருவருக்கத்தக்க பேச்சுகள், முன்னாள் மேல் அதிகாரியுடன் இருந்த உறவினை கொச்சைப்படுத்தி அநாகரிகமாக பேசுதல் போன்ற மூன்றாம் தரமான நடத்தையை இவர் மேல் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர்.

தனக்கு நடந்த தாக்குதல்களைக் குறித்து மனித வளத் துறையினரிடம் முறையிட்ட அதிதிக்கு நியாயம் கிடைக்கவில்லை. ‘குழுவாக இணைந்து வேலை செய்யும் தன்மை இல்லாதவர்’ என்று குற்றம் சாட்டப்பட்டு அந்த இயல்பை மாற்றிகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளார். இதனால் அதிதி தன் வேலையை ராஜினாமா செய்தார். முதலில் அதை ஏற்க மறுத்த நிறுவனம், பின்பு அவரை நிரந்தர பணி நீக்கம் செய்து, அவரது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது.

ஊடகங்களில் விஷயம் வெளியில் வந்ததும் கே.பி.எம்.ஜி நிறுவனம், உச்சநீதிமன்றத்தின் ‘விசாகா வழிகாட்டல் முறைக்கு’ ஏற்ப விசாரணை கமிட்டியை உருவாக்கியது. ‘தன்னை வேலையிலிருந்து தூக்கி எறிந்தவர்களுக்கு, தன்னைக் கட்டுப்படுத்த எந்த அதிகாரமும் இல்லை’ என்று கூறி விசாரணை கமிட்டியை அதிதி புறக்கணித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜூலை மாதம் 2007-இல், பாலியல் தொல்லைகள் தந்த மூன்று பேரின் மீதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கண்டிக்காமல் விட்ட ஏழு மேலதிகாரிகளின் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார்.

அவினாஷ் விஜயசங்கர் – சி.ஏ., விக்ரம் உத்தம் சிங் – நிதித் துறை தலைவர், அபிசர் திவானி -பார்ட்னர், அனீஷ் மலூ – இணை இயக்குனர் ஆகிய குற்றவாளிகள் மீதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக நிலோபர் ஈரானி – இயக்குனர், ரிச்சர்ட் ரெக்கி – சி.ஈ.ஓ., ரஸ்ஸல் பெரேரா, சமீத் மாத்துர் ஆகிய உயர் அதிகாரிகள் மீதும் புகார் பதிவு செய்யப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.எஸ். கந்தேபார்கர், வி.கே.தகில்ரமணி ஆகியோரைக் கொண்ட அமர்வு ஆகஸ்ட் 2008-இல் இந்த வழக்கினை விசாரித்தது. ‘நடந்த பாலியல் குற்றங்களைக் குறித்து, அலுவலகத்தில் அதிதி புகார் செய்ததற்கான ஆதாரங்கள் இல்லையென்றும், நிறுவனத்தின் உட்கட்ட விசாரணையில் அவர் பங்கேற்கவில்லை என்றும்’ காரணங்களை கூறி, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தனர்.

வெற்றி கண்ட கே.பி.எம்.ஜி நிறுவனம், ‘அதிதியின் சார்பாக மகாராஷ்டிரா மாநில பெண்கள் கமிஷன் நடத்திய ஆய்வு நியாயமானதாக இல்லை’ என்று உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. செப்டம்பர் 2008-இல் வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான அமர்வு, ஆய்வு நடவடிக்கைகளை தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. நவம்பர் 2008 உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்க்கும் அதிதியின் மேல் முறையீட்டை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திரன் மற்றும் பன்சல் தள்ளுபடி செய்தனர்.

மூன்று பாலியல் குற்றவாளிகளும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மேலாளர்களும் எந்த விதமான தண்டனையும் இல்லாமல் உயர்ந்த பதவிகளில், லட்சங்களில் சம்பாதித்துக் கொண்டு சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர்.

அதிதி நடந்த கொடுமைகளுக்கு நியாயம் கேட்டு, தேசிய பெண்கள் கமிஷன், மகாராஷ்டிரா மாநில பெண்கள் கமிஷன், மும்பை உயர்நீதி மன்றம், போலீஸ் என்று எல்லாரையும் அணுகியும் நியாயம் கிடைக்காமல் போராடிக்கொண்டிருக்கிறார். மதிப்புடன் வாழும் உரிமையையும் வேலை செய்யும் உரிமையும் இத்தனை ஆண்டுகளாக இழந்துள்ள அதிதி ‘அரசு தன்னை முழுமையாக கைவிட்டுள்ளது’ என்று குமுறுகிறார்.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான, விக்ரம் உத்தம் சிங் கே.பி.எம்.ஜி.யில் முக்கிய பதவி வகித்து வந்திருக்கிறார். பெண்கள் மீதான வன்முறை பற்றிய  ஊடக கவனம் அதிகமான பிறகு அண்மையில் இச்சம்பவம் தொடர்பான செய்திகளும் வெளிவந்து, வழக்கு உயிர்ப்பிக்கப்பட்ட நிலையில்தான் தன் பதவியை சென்ற ஆண்டு இறுதியில் ராஜினாமா செய்துள்ளார்.

நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் ‘பெண்களின் நலன்களை பாதுகாக்கும் நடைமுறைகள் நிறுவனத்தில் இல்லை’ என்பதைக் குறித்து பற்றி மாநில பெண்கள் கமிஷனுக்கு எழுதிய கடிதம் காணாமல் போயிருக்கிறது. அனகா சர்போத்தார் என்ற இக்கமிஷனின் முன்னாள் உறுப்பினர், தான் அந்த கடிதத்தை பார்த்தாக உறுதி செய்தும், கமிட்டியின் மற்ற இரண்டு, பெண் உறுப்பினர்கள் அதை அந்த கடிதத்தை பார்த்ததில்லை என்று கூறுகின்றனர்.

இப்படி எல்லா தரப்பிலும் கே.பி.எம்.ஜி நிறுவனத்தின் செல்வாக்கு கோலோச்சியிருக்கிறது.

ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் அலுவலகங்களை கொண்டிருக்கும் ஐ.எஸ்.எஸ். குழுமத்தை சேர்ந்த ஐ.எஸ்.எஸ். ஹைகேர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பணி புரிந்த பெண் ஊழியர் சகானா வில்லியம்ஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாலியல் தாக்குதல்களைப் பற்றி புகார் கொடுத்துள்ளார். உடனே அவரை நிரந்தர பணி நீக்கம் செய்து பல தவறுகளுக்கு அவரை பொறுப்பாக்கி  குற்றவாளியாக்கியுள்ளது அந்நிறுவனம். சகானா மீது அவதூறு வழக்கையும் தொடுத்துள்ளது.

சகானா வில்லியம்ஸ் நிறுவனத்தின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கூட உயர் நீதிமன்றத்தை அணுகவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்.

‘பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பண பலம், செல்வாக்கு மூலம் எந்த விதமான சட்ட மீறல்களிலிருந்தும் தப்பித்து விட முடிகிறது. அவர்களுக்கு எதிராக போராடும் பாதிக்கப்பட்டவர்களை பலியாக்கி, பொருளாதார ரீதியாகவும், நேரடியாகவும் சுரண்டுகிறார்கள்’ என்கிறார் ஜனநாயக மாதர் சங்கத்தின் மகாராஷ்டிரா மாநிலச் செயலாளர் சோனியா கில்.

“பெண்களுக்கு பணியிடங்களில் நடக்கும் பாலியல் கொடுமைகளிலிருந்து காப்பாற்ற உருவாக்கப்பட புதிய மசோதாவில், நிறுவனங்கள் அதன் விதிமுறைகளை பின்பற்றத் தவறினால் அதைப்பற்றி பாதிக்கப்பட்ட பெண் நீதி மன்றதை அணுக முடியும் என்ற வசதி செய்யப்பட்டிருக்கிறது” என்கிறார் சமூக ஆர்வலர் அனாகா சர்போதார்.

ஆனால், “உட்பிரிவு 10ல் வழக்காடலுக்கு முன் சமரச பேச்சு வார்த்தைக்கு இடம் அளிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் புகாரை திரும்பப் பெற நிர்ப்பந்திக்கப்படும் வாய்ப்பும், அச்சுறுத்தப்படும் சூழலும் ஏற்படும்” என்கிறார் அவர்.

பெண்களின் உழைப்பை மட்டுமின்றி பாலியல் ரீதியாகவும் சுரண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களை எத்தனை புதிய சட்டங்களும் கட்டுப்படுத்தப் போவதில்லை என்பதுதான் நிதர்சனம்.

மேலும் படிக்க
At MNCs sexual harassment complainants face uphill battle

தென்பெண்ணையை தடுக்கும் கர்நாடகாவின் அடாவடித்தனம்!

2

தென்பெண்ணை ஆற்றின் தண்ணீரை தடுக்கின்ற கர்நாடக அரசின் அடாவடித்தனத்தை முறியடிப்போம்!

தென்பெண்ணை போஸ்டர்என்ற முழக்கத்தின் அடிப்படையில் ஓசூர் தாலுக்கா பாகலூரில் உள்ள சர்க்கிள் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 01.04.2013 மாலை 5 மணியளவில் இங்கு செயல்படும் புரட்சிகர அமைப்புகளான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மற்றும் அதன் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக நடத்தப்பட்டது. இவ்வமைப்பின் பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் சின்னசாமி, சங்கர், நாகராஜ், மற்றும் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

விண்ணதிர முழக்கங்கள் எழுப்பி பகுதிவாழ் பொதுமக்களை இந்த ஆர்ப்பாட்டத்தை கவனிக்க செய்தது பொருத்தமாக இருந்தது. இறுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணியின் சூளகிரி பகுதி பொறுப்பாளர் தோழர் முருகேசன் நன்றியுரையாற்றினர், திரளான மக்கள் கூடிநின்று ஆதரவளித்து நன்கொடையும் தந்துச் சென்றனர்.

ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதற்குமுன் பாகலூர் பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகள் அச்சிட்டு ஆலைவாயில்கள், கடைவீதிகள், குடியிருப்புப் பகுதிகள், அரசுமருத்துவமனை, போன்று மக்கள் திரளாக கூடும் இடங்களிலெல்லாம் கூடி தெருமுனைப்பிரச்சாரம் செய்து விநியோகிக்கப்பட்டுள்ளன. பரவலான மக்கள் ஆதரவைப் பெற்று அவர்களிடம் விவாத்தை தூண்டிய அந்த துண்டறிக்கையில் வெளியிடப்பட்ட செய்திகளை அப்படியே இங்கே தருகிறோம்.

நன்றி!

துண்டறிக்கை

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

இயற்கையின் கொடையான தண்ணீர் உயிரின் ஆதாரம் இயற்கையின் விதிப்படி தண்ணீர் என்பது எல்லா உயிரினங்களுக்கும், இந்த மண்ணுக்கும் உரித்தான பொதுச் சொத்து. தற்போதைய தலைமுறைக்கு மட்டுமின்றி வரவிருக்கும் தலைமுறைக்கும் தண்ணீரின் மீது முழு உரிமை உண்டு. கர்நாடகா மாநிலத்தில் சிக்கப்பல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திமலையில் உற்பத்தியாகி ஒசகோட்டம், ஒரத்தூர் வழியாக வரும் “தட்சிணப் பிணாகினி ” ஓடை, கொடியாளம் பகுதியில் தமிழகத்தை தொட்டு தென்பெண்ணை ஆறாக தமிழக எல்லைக்குள் நுழைகிறது.

தென்பெண்ணை ஆர்ப்பாட்டம்இந்த தென்பெண்ணை ஆறு கொடியாளம் தடுப்பாணையைத் தாண்டி ஓசூரில் உள்ள கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை, பாடூர் ஏரிகளை நிரப்பி, தருமபுரியின் சில பகுதிகளை நனைத்து திருவண்ணாமலையில் உள்ள சாத்தனூர் அணையில் வழிந்து விழுப்புரம் வழியாகச் சென்று கடலூரில் கடலில் சென்று கலக்கிறது. வழிநெடுக 2000-த்திற்கும் அதிகமான ஏரிகளை நிரப்பி விவசாயத்திற்கு பாசன வசதியை உருவாக்கியுள்ளது. இதனால் பல லட்சம் விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள். கிருஷ்ணகிரியில் மட்டும் 3 இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் நெல், தென்னை,கரும்பு, வாழை, காய்கறிகள், பூ என பயிரிட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். மேலும் கெலவரப்பள்ளி அணையில் தண்ணீரை சுத்திகரித்து குடி தண்ணீராக பெருமளவு ஒசூர் மக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் ஓசூரிலுள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள் இந்த நீராதாரத்தை நம்பித்தான் செயல்பட்டு வருகின்றன.

இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டுக்கு வரும் ஒட்டுமொத்த தண்ணீரையும் சதித்தனமாக கர்நாடகா அரசு ஒரத்தூர் ஏரியில் மிகப் பெரிய அளவில் ஒரு பம்ப்பிங் ஸ்டேசன் அமைத்து அதன் மூலம் முழுத் தண்ணீரையும் ஒசகோட்டா ஏரிக்கே திருப்பி அங்கிருந்து கோலார் தங்கவயல், மாலூர் பகுதிகளில் உள்ள 200 க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கும், குண்டூர், மானியங்கிரி, சிக்கத்திருப்பதி ஏரிகளுக்கு கால்வாய் மூலம் கொண்டுச் செல்ல 54- கோடி நிதி ஒதுக்கீடும் செய்து அடிக்கல் நாட்டி இப்போது அதனை கடந்த மார்ச் 11ம்தேதி முதல் தீவிரமாக அடாவடித்தனமாக அமுல்படுத்தியும் வருகிறது. ஏற்கனவே தென்பெண்ணையாற்றில் பெங்களூருவின் கழிவுநீர் முழுவதும் கலக்கப்படுகிறது. அவ்வாறு கலக்கப்படுவதால் ஆற்று நீர் அணைத்தும் நாற்றமெடுத்து நாறுகிறது. இந்நிலையில் கர்நாடக அரசின் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால்…பட்டுவேட்டிக்கு கனவு கண்டிருந்தபோதே மிஞ்சியிருந்த கோவணமும் களவாய்போன கதையாக தென்பெண்ணையாறு மற்றொரு கூவமாகி கழிவுநீர் மட்டும் பாயும் சாக்கடையாக மாறிவிடும் அபாயத்தில் உள்ளது.

ஏற்கனவே, காவிரியில் தமிழகத்திற்கு நியாயமாக தர வேண்டிய தண்ணீரை மறுத்து அடாவடி செய்த கர்நாடக அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்பை கூட காலில் போட்டு மிதித்துவிட்டு காவிரி டெல்டா விவசாயிகளை பசியாலும், பட்டினியாலும் வதைத்து நாடோடிகளாக்கியது. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியைக் கைப்பற்ற பலமுறை இனவெறியைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்தியது இந்துமதவெறி பாரதிய ஜனதா கட்சியின் அரசு. இப்போது தென்பெண்ணை ஆற்றை தடுத்து அரைகுறை விவசாயத்தையும் ஒழித்துக்கட்டி, தமிழகத்தை முழு பாலைவனமாக மாற்ற அராஜகமாக களமிறங்கியுள்ளது கர்நாடக இனவெறி பி.ஜே.பி அரசு. தினமும் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுவதால் தமிழகத்துக்கு வரும் தென்பெண்ணை ஆற்றின் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. ஓசூரிலுள்ள கெலவரப்பள்ளி அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென குறைந்துவருகிறது.

கெலவரப்பள்ளி அணையில் இருந்து ஓசூர் நகராட்சி குடிநீர் தேவைக்கு வழங்கப்படும் தண்ணீர் தற்போது 5 லட்சம் லிட்டரும், சிப்காட் தொழிற்பேட்டைக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீராகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது.

1892 ம் ஆண்டு மெட்ராஸ்-மைசூர் மாகாணங்களின் ஒப்பந்தத்தில் இரு மாநிலங்களின் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு புதிய நீர்த்தேக்கம் கட்டவோ, பாசனத் திட்டத்தை செயல்படுத்தவோ முயற்சி செய்தால் அதுகுறித்து தமிழக அரசிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் இதையும் மதிக்காமல் கர்நாடக அரசு அடாவடியாக இந்த தண்ணீர் உறிஞ்சும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு, வாழை, ராகி, உள்ளிட்ட பயிர்கள் மற்றும் முட்டைகோஸ், காலிஃபிளவர், கேரட், குடை மிளகாய், ரோஜா உள்ளிட்ட காய்கறிகள், மலர்செடிகள் அனைத்தும் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

காவிரியை தொடர்ந்து தற்போது தென்பெண்ணை ஆற்று நீரையும் உறிஞ்சுகிறது. மின்சாரம் இல்லையென்றாலும்கூட ஜெனரேட்டரை பொருத்தி 24 மணிநேரமும் வக்கிரமாக உறிஞ்சிவருகிறது கர்நாடக இனவெறி பி.ஜெ.பி அரசு.

கர்நாடக அரசின் இனவெறி நடவடிக்கைகளுக்கு மத்தியில் ஆளும் காங்கிரசு அரசு துணை போகிறது. தி.மு.க., அ.தி.மு.க போன்ற தமிழக ஓட்டுக் கட்சிகள் கர்நாடக அரசின் இந்த இனவெறி நடவடிக்கையை எதிர்க்கவோ, தடுத்து நிறுத்தவோ செய்யாமல் அறிக்கை விடுத்து நாடகமாடிவருகின்றனர்.

பாதிக்கப்பட இருப்பது தமிழக விவசாயிகளும், தமிழக உழைக்கும் மக்களும்தான்! ஆகையால், தமிழக விவசாயிகளையும், தமிழக உழைக்கும் மக்களையும் ஓரணியில் திரட்டி, மத்திய-மாநில அரசுகளுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும். அந்த வகையிலான போராட்டம்தான் தமிழகத்தின் உரிமையை தற்காத்துக் கொள்ள உதவும்! அதற்கான மக்கள் எழுச்சியை உருவாக்க ஓட்டுக்கட்சிகளை புறக்கணித்து நக்சல்பாரிகளின் தலைமையின்கீழ் ஓரணியில் மக்கள் திரட்டப்படவேண்டும்!

முழக்கங்கள்:

தமிழக அரசே!
தென்பெண்ணை ஆற்றை பாதுகாத்திடு!
தண்ணீரை தனியார்மயமாக்கும் தேசிய நீர்கொள்கை 2012 ஒப்பந்தத்தை திரும்பப் பெறு!

உழைக்கும் மக்களே!
தென்பெண்ணை ஆற்றில் தமிழகத்தின் நீர்ப்பாசன உரிமையை மீட்டெடுப்போம்!
விவசாயிகளின் வாழ்வுரிமையை பாதுகாக்க வீதியில் இறங்கிப் போராடுவோம்!
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் தனியார்மய- தாராளமய- உலகமயம் என்கின்ற மறுகாலனியாக்க கொள்கைகளை முறியடிப்போம்!

விவசாயிகள் விடுதலை முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. தமிழ்நாடு.

தொடர்புக்கு: தோழர். ரவிச்சந்திரன், சூடாபுரம் – கைபேசி எண்: 8883092572.
தகவல் : புதிய ஜனநாயகம் செய்தியாளர், ஓசூர்.

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!

1

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2013
புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

1. ஈழத் தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும் பங்காளி ஐ.நா.வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்! தமிழகத்தில் மீண்டும் மக்கள் எழுச்சியைத் தோற்றுவிப்போம்!
– தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்

2. ஈழம் : மாணவர் எழுச்சியில் ஒளிந்து கொள்ளும் துரோகிகள், பிழைப்புவாதிகள்!

3. ஹியுகோ சாவேஸ் (1954-2013) – அமெரிக்காவை மண்டியிட வைத்த வெனிசுலாவின் வீரப்புதல்வன்!
மக்கள் சக்தியின் முன், அமெரிக்க மேலாதிக்கம் காகிதப்புலிதான் என்பதைத் தனது ஆட்சி நெடுகிலும் நிரூபித்துக் காட்டியவர் சாவேஸ்.

4. பெண்கள் மீதான வன்கொடுமைநீர்த்துப் போன சட்டமும் திருந்தாத அதிகார வர்க்கமும்!
பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக் கண்டு ஆணாதிக்க வெறியர்கள் அஞ்சிவிடவில்லை. சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளும் போலீசும் குற்றங்களைத் தடுப்பதுமில்லை.

5. ஆள்மாறாட்டக் குற்றவாளிக்கு உடந்தையாக நிற்கும் அரசியலமைப்பு முறை!

6. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்!
– புரட்சிகர அமைப்புகளின் தொடர் பிரச்சாரம்

7. “அய்யங்கார்” என்பது டிகிரியா, டிப்ளமோவா? – இந்து அறநிலையத் துறையே பதில் சொல்!

8.  ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் எழுச்சிமிகு பேரணி – ஆர்ப்பாட்டம்!

9. நில அபகரிப்பே இனி விவசாயக் கொள்கை!
விளைநிலங்களை அபகரித்துப் போடப்படும் ‘வளர்ச்சி’த் திட்டங்களுக்கும் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கும் இடையே எந்தவொரு சம்பந்தமும் கிடையாது.

10. விவசாயக் கடன் தள்ளுபடி ஊழல்: கோமான்கள் நடத்திய வக்கிரக் கொள்ளை!
கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளின் பெயரால் நடந்துள்ள இந்த ஊழல், காங்கிரசு ஆட்சியின் கேடுகெட்டத்தனத்தைக் காட்டுகிறது.

11. பட்ஜெட் 2013-14 : பன்னாட்டு நிதிச் சூதாடிகளுக்குச் சமர்ப்பணம்!
பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்க அந்நிய நிதிமூலதனமே கதி என்கிறார், ப.சி.

12. ஹைதராபாத் குண்டுவெடிப்பு: காக்கிச் சட்டை வெளியே! காவிப்புத்தி உள்ளே!!
அப்பாவி முசுலீம்கள் எவ்வித ஆதாரமும் இன்றித் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு வேட்டையாடப்படுவது நாடெங்கிலும் கேள்விமுறையின்றி நடந்து வருகிறது.

13. இஸ்லாமிய மதவெறியர்களுக்கு எதிராக வங்கதேச மக்களின் எழுச்சி!
போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இஸ்லாமிய மதவெறியர்களைத் தண்டிக்கக் கோரி வங்கதேச மக்கள் நடத்திவரும் போராட்டங்கள் முசுலீம்கள் குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளை உடைத்தெறிகிறது.

14. மார்ச் 15 மற்றும் 20-ஆம் தேதிகளில் தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள்.

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

பாலியல் குற்றங்களில் நம்பர் 1 இராணுவம் எது?

10

மெரிக்காவின் முன்னாள் இராணுவ வீரர்கள் நான்கு பேர், பணியிடத்தில், இராணுவ அதிகாரிகளாலும், சக ஊழியர்களாலும் அவர்கள் மேல் ஏவப்பட்ட பாலியல் தாக்குதல்களைப் பற்றிய அதிர்ச்சியுட்டும் அனுபவங்களை, அண்மையில் நடந்த செனட் விசாரணையில் பகிர்ந்து கொண்டனர்.  அமெரிக்க இராணுவ நீதிமுறைகளை கேள்விக்குள்ளாக்கி, அதை மாற்றி அமைக்கவும் கோரியுள்ளனர்.

அமெரிக்க இராணுவம்பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் பெண்கள், ஒரு ஆண். ‘இராணுவ சட்ட விதிகள், பாதிக்கப்பட்டவர்கள் மீது எதிர்த்தாக்குதல்களையும், அச்சுறுத்தல்களை தொடுத்து, குற்றவாளிகளை தண்டனை ஏதுமின்றி தப்பிக்க உத்திரவாதம் செய்தன’ என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ரெபேக்கா ஹவ்ரில்லா என்ற பெண் இராணுவ வீரர், ‘இராணுவ கிரிமினல் நீதித்துறை முற்றிலும் ஒழுங்கற்றது’ என்கிறார். இராணுவ சார்ஜண்டாக இருந்த ஹார்வில்லா, 2007 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் போர்முனையில், வெடிகுண்டு அகற்றும் நிபுணராக பணியாற்றியுள்ளார்.

அங்கு ஒரு சக இராணுவ வீரன் அவரை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளான். அவன் மீது புகார் கொடுத்த ஹார்வில்லாவை, பழிவாங்கும் நோக்கில், அவருடைய அந்தரங்க படங்களை சமூக இணைய தளங்களில் வெளியிட்டுள்ளான். தொடர்ந்து, மேல்அதிகாரிகளிடம் முறையீடு செய்தும், எந்தவித பாதிப்பும் தண்டனையுமின்றி குற்றவாளி தப்பித்துவிட்டான்.

ஆனால் குற்றப்பதிவு செய்த ஒரே காரணத்தால், மணிக்கணக்கில் விசாரணை என்ற பெயரில் தொல்லைகளும், கேட்கத்தகாத கேள்விகளும் தான் ஹார்வில்லாவிற்கு மிஞ்சின.

இறுதியில் இராணுவ மத குருவான சாப்லனை அணுகியிருக்கிறார் ஹார்வில்லா. ஆறுதலாக பேசியவ அவர், ‘இந்த பாலியல் தாக்குதல்கள் கடவுளின் விருப்பத்தின் பேரில் நடந்துள்ளன என்றும் கடவுள் மீது முழு கவனமும் திரும்பி, மீண்டும் தடையின்றி தேவாலயத்திற்கு வருவதற்காகவே இத்திருவிளையாட்டை நடத்தியுள்ளார்’ என்று கடவுள் மீது பழியை போட்டுள்ளார்.

பிரையன் லூயிஸ் என்ற பாதிக்கப்பட்ட ஆண், இராணுவத்தில் பணியாற்றும் ஆண் சேவை பிரிவினர் இவ்வாறான பாலியல் தாக்குதல்களுக்கு பெரும்பாலும் ஆளாவதாக கூறுகிறார். 1997-இல் இராணுவ கப்பல் படையில் இணைந்த இவரின் முதல் கடல் பயணத்திலேயே, மேல் அதிகாரி ஒருவரால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதைப் பற்றி புகார் செய்யக்கூடாது என்று மேல் அதிகாரி அச்சுறுத்தியும், கேளாமல், செயல்பட்டதால், பிரையனுக்கு ஆளுமை சிதைவு (personality disorder) ஏற்ப்பட்டுள்ளது என்று முத்திரை குத்தி பதவி நீக்கம் செய்துள்ளனர்.

இராணுவ அதிகாரிகளை எதிர்க்கும், பலரின் எதிர்காலம் இப்படித்தான் சீரழிக்கப்படுகிறது என்றும் எதிர்காலத்தில் அவர்களுக்கு எப்போதும் வேலை கிடைக்காமல், உளவியல் பிரச்சினைகளை முன்னிறுத்தி பதவி நீக்கம் செய்யப்படுகின்றனர், என்கிறார் பிரையன்.

பாதிக்கப்பட்ட பிரிகெட் மெக்காய் என்ற பெண்மணி, தன்னுடைய 19 வயதில் இராணுவத்தில் சேர்ந்துள்ளார். பணியின் ஆரம்பத்திலேயே, தன் சக படைவீரனால் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு, பின் தன்னுடைய இரு மேல் அதிகாரிகளால் தொடர்ச்சியான பாலியல் தொல்லைகளுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.

மேல் அதிகாரி ஒருவர், தன்னுடைய நேரடி கண்காணிப்பில் இயக்கப்படும் பிரிவில் இவரை மாற்றுவதற்கு கோரியிருந்தானாம். அயோக்கியனான அவனுடன், ஒரு நாள் முழுவதும் ஒரே அறையில் இருப்பதைப்பற்றி நினைத்து கூட பார்க்கமுடியவில்லை என்று குமுறுகிறார்
மெக்காய்

‘இராணுவத்தை பொறுத்தவரை இவ்வாறான சீருடை அணிந்த குற்றவாளிகளுக்கு தண்டனை என்பது கிடையாது’ என்றும் ‘பாலியல் ரீதியான தாக்குதல்கள், இராணுவத்தில் ஆள் தேர்வின் போதே, ஆணுக்கும், பெண்ணுக்கும் துவங்கிவிடுகின்றன’ என்கிறார் அவர்.

பணியாற்றும் பெண்களுக்கான நடவடிக்கை கூட்டமைப்பின் இயக்குனராக இருக்கும் அனு பகவதி என்பவர், தான் கடல்துறை அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் தினமும், பிற இராணுவ வீரர்களாலும் அதிகாரிகளாலும் வேலைகளில் வித்தியாசப்படுத்துதலையும், பாலியல் தொந்தரவுகளையும் சந்தித்தாக கூறியிருக்கிறார்.

இளம் சிறார் பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்த போது பிற இராணுவ வீரர்களினால், பல பாலியல் வல்லுறவு தாக்குதல்கள் நிகழ்ந்ததை, கண்ணால் பார்த்து, நீங்கா சாட்சியமாக மனதில் அவை இன்றும் உள்ளன என்று வேதனைப்படுகிறார்.

தவறிழைத்தவர்களுக்கு பதவி உயர்வு, பணி – இடம் மற்றும் பிரிவு மாற்றம் கொடுத்து தண்டனையிலிருந்து தப்பிக்க வைப்பதும், புகார் செய்யும் பாதிப்புக்கு உள்ளானவர்களை ‘பொய் பேசுகிறார்கள், அவதூறு பரப்புகிறார்கள், ஆண்களின் நன்மதிப்பை கேலிக்கூத்து ஆக்குகிறார்கள்’ என்று கூறி வாய்மூடச் செய்யும் முறைதான் இராணுவ நீதிமுறையின் வழக்கமாக இருந்துள்ளது என்று சென்ட் குழுவினர் முன்பு எடுத்து கூறியுள்ளார்.

செனட்டர்களின் குழு, இராணுவ வழக்கறிஞர்களையும், அதிகாரிகளையும் விசாரித்தது. அதில் முக்கியமாக, விமானப்படை ஜெனரல் கிரைக் பிரான்க்ளின் என்பவர் தன் துணை தளபதியான ஜேம்ஸ் வில்கர்சன் என்பவரின், தவறான பாலியல் நடத்தைக்காக, வழங்கப்பட்ட ஒரு ஆண்டு சிறைத்தண்டனையை, தன் அதிகாரத்தின் முலம் ரத்து செய்துள்ள, வழக்கு விசாரிக்கப்பட்டது.

எல்லாவிதமான சாட்சியங்கள் மூலம் ஜேம்ஸ் வில்கர்சன் செய்த குற்றங்கள் நிரூபணம் செய்யப்பட்டும், குற்றவாளியை தப்பிக்க வைக்கும் நோக்கில் தன் அதிகாரத்தைக் கொண்டு ஜேம்ஸினை காப்பாற்றியிருக்கிறார் ஜெனரல் பிரான்க்ளின்.

இவ்வழக்கு இப்போது மறு பரிசீலனைக்கு அனுப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 19,000 ஆண், பெண் இராணுவ ஊழியர்கள் இவ்வாறான பாலியல் தாக்குதலுக்கு ஆளாவதாகவும் அதில் 3,200 தாக்குதல்கள் தான் பதிவு செய்யப்படுகின்றன என்றும் தெரிவிக்கிறார் முன்னாள் பாதுகாப்பு செயலர் லியோன் பனேட்டா.

உலகெங்கும் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்வதற்காக பெரும் செலவில் இராணுவத்தை உருவாக்கி பராமரிக்கும் அமெரிக்கா, தனது இராணுவ வீரர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட பாதுகாக்காமல் ஆளும் வர்க்க ஏவல் படையாகவே வைத்திருக்கிறது என்பதை இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன!

மேலும் படிக்க
Rape victims say US military justice failed them
Mlitary sexual assault

அரசு மருத்துவமனைகளை சீரழிக்கும் மறுகாலனியாக்கம்!

2

ரசு மருத்துவமனைகளை சீரழிக்கும் மறுகாலனியாக்க கொள்கைகளை மோதி வீழ்த்துவோம் என்ற தலைப்பில் திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் 27.03.13 அன்று மாலை 6 மணிக்கு மணலி அண்ணாசிலை அருகில் தெருமுனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் தொடங்கிய தெருமுனைக்கூட்டத்துக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் சொ. செல்வகுமார் தலைமை தாங்கினார். தலைமையுரையில், உலக அளவில் சிறந்த மருத்துவத் துறை என்று பெயரெடுத்துள்ள இந்திய மருத்துவமனைகளின் அவலத்தை அம்பலப்படுத்தத் தொடங்கி, மணலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மாதம் நடந்த பெண் சிசுக் கொலையை போலவே தமிழ்நாடெங்கும், இந்தியாவெங்கும் உழைக்கும் மக்கள் நித்தமும் கொலை செய்யப்படுகின்றனர் என்றும், சென்னை மகப்பேறு மருத்துவமனையில் ஒரு குழந்தையை எலி கடித்ததையும், சரியான பராமரிப்பில்லாததால் விக்னேஷ் என்ற மாணவனை காவு கொண்ட அரசு மருத்துவமனையின் அவலத்தையும், இம்மாதிரியான கொலைகளுக்கு காரணம் அரசின் தனியார் மய கொள்கைகளே. இந்த கொள்கைகள்தான் அரசு மருத்துவமனைகள் திட்டமிட்டு சீரழிக்கப்படுவதற்கும், குடிதண்ணீர், கல்வி, சுகாதாரம் போன்ற அனைத்தும் தனியார்மயமாக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று பதிய வைத்தார்.

சிறப்புரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச்செயலாளரும் திருவள்ளூர் மாவட்ட செயலாளருமான தோழர் ம.சி.சுதேஷ்குமார், அரசு மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தை மாற்றி மாற்றி செயல்படுத்தி வரும் அரசு,  இதன் மூலமாக மக்களை தனியார் மருத்துவமனையை நோக்கி தள்ளுகின்றது. மக்களை ஒடுக்க ராணுவத்துக்கு ரூ 1,60,000 கோடி ஒதுக்கும் அரசு சுகாதாரத் துறைக்கு வெறும் ரூ 24,000 கோடி மட்டும் ஒதுக்குகிறது. கஜானா காலி, பணமில்லாததால்தான் மருத்துவமனையை சீரமைக்க முடியவில்லை என்று கூறுவது அயோக்கியத்தனம். சேவைத்துறையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு “காட்” ஒப்பந்தத்தின்படி அனைத்தையும் தனியார்மயப்படுத்த துடிக்கின்றது அரசு. மருத்துவத்துறை மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் இந்த அரசினுடைய கொள்கைகள் உழைக்கும் மக்களுக்கு எதிரானதாக உள்ளது. அனைத்து ஓட்டு கட்சிகளும் இந்த கொள்கைகளுக்கு துணை நிற்கின்றன. இதற்கு எதிராக போராடாமல் நமக்கு விடிவில்லை. அது நக்சல்பாரி தலைமையில்தான் சாத்தியம் என்று அறைகூவினார்.

திருவள்ளூர் மாவட்ட பிரச்சார குழு சார்பாக புரட்சிகர கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தனியார்மய கொள்கைகளுக்கு சேவை புரியும் ஓட்டுக்கட்சிகளை அம்பலப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்த கலை நிகழ்ச்சி உழைக்கும் மக்களிடையே வரவேற்பை பெற்றது. அரசு மருத்துவமனைகள் சீரழிக்கப்படுவதற்கான காரணம் அரசின் தனியார்மய கொள்கைகளே என்பதை பகுதி மக்களிடத்தில் பதிய வைக்கும் விதமாக அமைந்தது.

இணைப்பு சங்கத் தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் என்ற 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த தெருமுனைக் கூட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தோழர் ஆனந்த்பாபு நன்றியுரைக்கு பின் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் மாவட்டம்