Sunday, June 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 733

முதலாளித்துவ பயங்கரவாதம்: திருச்சியில் டேவிட் தீக்குளிப்பு!

15
ஜான்சன்-டேவிட்
ஜான்சன்-டேவிட்

சித்தார் வெசல்ஸ் முதலாளியின் லாபவெறிக்கு எதிராகவும், அடக்குமுறைக்கு எதிராகவும், CVL – unit-7ல் வேலைபார்த்த திண்டுக்கல் வேடபட்டியை சேர்ந்த ஜான்சன் டேவிட்(24) என்ற தொழிலாளி தீக்குளித்து மரணம் அடைந்தார். அங்கொன்றும் இங்கொன்றுமாய் அடங்கமறுக்கும் தொழிலாளி வர்க்கம் தன்னை ஒட்ட உறிஞ்சும் முதலாளிவர்க்கத்திற்கு சாவுமணி அடித்துக் கொண்டிருக்கின்றது. 2800 தொழிலாளர்களின் குடும்பத்தை பட்டினியில் இருந்து காப்பாற்ற ‘ அவர்களுக்கு வேலைகொடு!’ என ஜான்சன் டேவிட் தன்னை ஒரு மெழுகுவர்த்தியாய் உருக்கிக் கொண்டது தொழிலாளிவர்க்கத்துக்கு பேரிழப்பாகும்.

பாய்லர் தயாரிப்பில் BHEL-ஐ தவிர இந்தியா முழுவதும் வேறுயாரும் உற்பத்தி செய்ய முடியாதநிலையில் 25 வருடத்திற்கு முன்பு BHELலில் வேலைபார்த்த 7 அதிகாரிகள் V.R.S கொடுத்துவிட்டு வெளியேறினர். வெறும் 2 கோடி முதலீட்டைக் கொண்டு பாய்லர் தயாரிப்தற்கான சித்தார் வெசல்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினர். தற்போது திருச்சி- புதுக்கோட்டை மாவட்டங்களில் 7 இடங்களில் தனது கிளையை பரப்பியுள்ளனர்.

கடந்த 25 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி, உழைத்து உரம்மேறிய கைகளால் இயந்திரங்களை இயக்கி, கண்களை அசர விடாமல் கண்விழித்து வெல்டிங் ராடுகளை பற்றவைத்து கம்பெனியின் இலக்கை(டன்னேஜ்) அடைய போராடியதன் விளைவாய் எழுந்து நிற்பதுதான் CVL-ன் எழு யூனிட்டுகளும். 2011-2012 ஆண்டில் மொத்த உற்பத்தி 2400 கோடிகளையும், இதில் கிடைத்த லாபத்தை வைத்துகொண்டு சித்தார் அக்ரோ புட்ஸ், சித்தார் மருத்துவமனை என்று பல்வேறு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளட. இந்த பிரமிப்பூட்டும் வளர்ச்சியின் பின்னே தொழிலாளர்களின் இரத்தமும் சதையும் கலந்துள்ளது. இந்நிறுவனம் தொழிலாளர் சட்டவிதி முறைகள் எதையும் பின்பற்றுவதில்லை. 150 தொழிலாளர்கள் மட்டுமே நிரந்தர தொழிலாளர்கள். மீதமுள்ளவர்கள் கான்ராக்ட் தொழிலாளர்கள், அப்ரன்டீஸ் தொழிலாளர்கள், வேலையிருந்தால் கட்டாயம் கூடுதல் உழைப்பு செலுத்த வேண்டும்.

ஒரு சிப்ட்டில் வேலை செய்தவர் அடுத்த சிப்ட்டில் வேலை செய்பவர் வந்தால்தான் வெளியே வர அனுமதிப்பார்கள். இப்படி பல மணிநேரம் தொடர்ச்சியாக வேலை செய்ய வைப்பது, தூங்குகின்றார்களா என சோதிக்க சூப்பர்வைசர்கள் கண்காணிப்பு, கண்டுபிடித்து கொடுத்தால் நபர் ஒன்றுக்கு ரூ.50 டிப்ஸ், பத்துபேரை பிடித்து கொடுத்தால் ரூ.500 டிப்ஸ், இதற்கான தொகையை கொடுக்க பாதிக்கப்பட்ட தொழிலாளியின் ஒருநாள் சம்பளத்தில் பாதியை பிடித்தம் செய்து கொள்வதும் நடக்கின்றது. இதற்காவே இலவு காத்த கிளியாக காத்திருகின்றார்கள் சில சூப்பர்வைசர்கள்.

சட்டபடி கிடைக்க வேண்டிய ESI, PF, இன்கிரிமென்ட்-ஐ கூட 8 ஆண்டு, 6 ஆண்டு வேலைசெய்யும் தொழிலாளிக்கு கொடுப்பதில்லை. திருடன் தன்காரின் நம்பர்பிளேட்டை மாற்றுவது போல் PF நம்பரை மாற்றுவது அதன்மூலம் கிடைப்பதை சுருட்டுவது, 5 நிமிடம் வேலைக்கு தாமதம் என்றாலும் ஒருமணி நேரத்திற்கான சம்பளத்தை பிடித்தம் செய்வது. பணிநிரந்தரம் கேட்டால் வேலையை விட்டே விரட்டுவது. ஆலை பராமரிப்புக்கு உரிய செலவு செய்யாமல், பாதுகாப்பு கருவிகள் இல்லாமல் உயர்அழுத்த மின்சாரத்தில் இயங்கும் கருவிகளை இயக்கும் தொழிலாளர்கள் கடந்த இருமாதங்களில் 155 பேர் அடிப்பட்டுள்ளனர். இரு தொழிலாளிகள் உயிர் இழந்துள்ளனர். இப்படி பல அடக்குமுறைகளையும் ஏவிதான் பல ஆயிரம் கோடிகளை லாபமாக ஈட்டியுள்ளது.

இதற்கெதிராக கடந்த சில மாதமாகவே CITU சங்கம் தனக்கேயுரிய பாணியில் அடையாளப் போராட்டங்களை நடத்தியுள்ளது. இதற்கு செவிசாய்க்காத CVL நிர்வாகத்தின் HR (முன்னால் திருச்சி மாவட்ட SP) கலியமூர்த்தி தன் செல்வாக்கை பயன்படுத்தி பிரச்சனையின் போதெல்லாம் 200, 300 போலீசை ஆலை வாசலில் குவித்து பயமுறுத்துவது, சங்க முன்னணியாளர்களை கைது செய்வது, அவர்களின் மீது கொலை முயற்சி என பொய்வழக்கு போடுவது, போராட்த்தில் ஈடுபட்டதை காரணம்காட்டி வேலை நீக்கம் செய்வது,  என்பதோடு இதை காட்டி மற்ற தொழிலாளர்களை பயமுறுத்தியும் வந்துள்ளனர்.

இத்தகைய முதலாளித்துவ பகற்கொள்ளையையும், பயங்கரவாதத்தையும் பாதுகாக்க கடந்த தி.மு.க ஆட்சியில் வனத்துறை அமைச்சர் செல்வராஜ், தற்போது அ.தி.மு.க அமைச்சர் சிவபதி, ஆகியோர் காண்ட்ராக்ட்காரர்களாக காட்டபடுகின்றார்கள். இது தவிர ஒரு சில ரவுடிகளையும் காண்ட்ராக்டர்களாக கணக்கு காட்டுகின்றது நிர்வாகம். தொழிலாளர்களையோ, நிறுவனத்தையோ நேரில் கூட பார்க்காத இந்த பிராடு காண்டராக்ட்காரர்களுக்கு மாதம் மாதம் நிறுவனத்தில் இருந்து பங்கு அனுப்பப்படுகின்றது.

இதையும் எதிர்த்து போராடினால் ஒடுக்குவதற்காகவே குண்டாந்தடி கலியமூர்த்தியை HR ஆக போட்டு மாதம் 5 லட்சம் சம்பளம் கொடுக்கின்றது. மனித உரிமை என்றால் என்ன என்று கேட்க்கும் இந்த மிருகமே தற்பொழுது மனிதவளத்துறை அதிகாரி.

தற்பொழுது ஏற்ப்பட்ட உலக பொருளாதார நெருக்கடியினால் தொழிற்சாலைகளில் வேலை குறைந்துள்ளது. 3 யூனிட்டுகள் இழுத்து மூடப்பட்டு 5000 தொழிலாளர் வீட்டுக்கு அனுப்பட்டுள்ளனர். வேலை இல்லாது ஒரு சில மாதம் கூட தொழிலாளர்களை பராமரிக்க தயார் இல்லாமல் கடந்த செப்டம்பர் 24ம் தேதி சட்டப்படியான முன் அறிவிப்பு ஏதுமின்றி கட்டாயப்படுத்தி வெளியேற்றியுள்ளது. ராஜினாமா கடிதம் தந்தால்தான் கடைசி மாத சம்பளத்தை தருவோம் என்று மிரட்டி, ராஜினாமா கடிதம் தந்த நபர்களுக்கு மட்டும் சம்பளம் தந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் கடந்த 17ம் தேதி திருட்டுத்தனமாக புதிதாக வேலைக்கு சேர்த்த 300 தொழிலாளர்களிடம் மாருதி தொழிற்சாலை செய்தது போன்று டீ குடிக்க, கழிபறைக்கு செல்ல 10 நிமிடம், தாமதமானால் கூட வேலையைவிட்டு நீக்கி கொள்ளலாம் என்பன போன்ற 100 நிபந்தனைகள் கொண்ட கடிதத்தில் சட்டத்திற்கு புறப்பாக முன்கூட்டியே ராஜினாமா கடிதம் பெற்றுக்கொண்டு வேலையில் சேர்த்துள்ளனர்.

இதை எதிர்த்து குமுறியவர்களில் ஒருவர்தான் ஜான்சன் டேவிட். 18.10.2012 அன்று “எங்களுக்கும் வேலைகொடு! எங்களையும் வாழவிடு!” என கைகளை உயர்த்தி முழக்கமிட்டவாறு தன் கையில் எழுதி வைத்திருந்த பிரசுரங்களை தொழிலாளர்கள் மத்தியில் தூக்கியெரிந்து விட்டு பெட்ரோலை ஊற்றிக்கொண்டு வந்திருந்த தன் உடலை, பேன்ட் பாக்கட்டில் வைத்திருந்த லைட்டரை பயன்படுத்தி தீ வைத்து கொண்டார்.

டேவிட்டின் மரண வாக்குமூலம்

 டேவிட்டின்-மரண-வாக்குமூலம்-1டேவிட்டின்-மரண-வாக்குமூலம்-2

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

டேவிட்-தீக்குளிப்பு
பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்

 

திருச்சியில் இயங்கும் பு.ஜ.தொ.மு இத்தொழிலாளர் பிரச்சனைகளை ஒட்டி பல முறை சுவரொட்டி இயக்கம் மேற்கொண்டு தொழிலாளர்கள் மத்தியில் நன்கு அறிமுகமாகியிருந்ததால் நமக்கு தீக்குளிப்பைப் பற்றி தொழிலாளர்கள் தகவல் தந்தனர். தகவல் கிடைத்த உடனே தோழர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தொழிலாளியை பார்த்து ஆறுதல் கூறி அடுத்தக்கட்ட வேலையில் இறங்கினோம். 18.10.2012 காலை 9 மணிக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தொழிலாளி மறுநாள் 19.10.2012 அன்று அதிகாலை 1.30 மணி அளவில் உயிர் இழந்தார். இத்தகவலை அனைத்து தொழிலாளர்களுக்கும் சொல்லி அடுத்த நாள் காலையில் மருத்துவமனையில் தொழிலாளர்கள் குவிந்தனர். அவர்கள் மத்தியில் “கொலைகார முதலாளி போதிராஜ், கலியமூர்த்தியையும், காண்ட்ராக்ட்டர் கந்துவட்டி குணாவையும் கைது செய்! மாருதி தொழிலாளர்களிடம் இருந்து பாடம் கற்போம்! பற்றியெறிய வேண்டியது நாமல்ல என்பதை உணர்த்திடுவோம்!” என்ற  முழக்கத்தை துண்டறிக்கையாகவும், சுவரொட்டியாகவும் அச்சிட்டு தொழிலாளர் மத்தியில் வினியோகித்தும், சுவர்களில் ஒட்டியும் பிரச்சாரம் செய்தது தொழிலாளர் மத்தியில் பு.ஜ.தொ.மு.வரவேற்ப்பை பெற்றதுடன் இவர்கள் சரியாக செய்கின்றனர் என அங்கீகரிக்கவும் செய்தனர்.

தொழிலாளார்கள் இறந்தவரைபற்றி நினைவுகூறும் போது “ நாம ஏங்க சாகனும், முதலாளியையும், HR யையும் போட்டாதாங்க பிரச்சினை முடிவுக்கு வரும். நான் திருமணம் ஆகாதவன் மற்ற ஆயிரக்கணக்கான தொழிலாளிகளோ திருமணமாகி பிள்ளை குட்டிகளுடன் வேலை இல்லாம கஸ்ட்டபடுறாங்க. அவங்களுக்கு வேலை கிடைக்க உயிர் விட வேண்டுமானால் நான் முதலில் தீ குளிப்பேன்” என உண்ணாவிரத பந்தலில் டேவிட் சொன்னதை நாங்க புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டோமே என நம்மிடம் கதறி அழுதார்கள் தொழிலாளர்கள்.

தீக்குளித்து சாவுக்கு போராடும போதுகூட அவருடைய மரணத்தை கண்டு துளிகூட அச்சமில்லாமல் “ சக தொழிலாளிக்கு மீண்டும் அதே கம்பெனியில் வேலைகிடைக்க வேண்டும் அதற்காக என் உயிர் போவதை பார்த்து பெருமைப்படுகிறேன்” எனக் கூறியதை சொல்லி கதறினார்கள். தீக்காயம் பட்டு பல மணி நேரமாகியும் அவரது கண்ணில் ஒருசொட்டு கண்ணீர் கூட வரவில்லை. தன்நிலையை பார்த்து கதறி அழும் அம்மா, அப்பா, தங்கை, மாமா மற்றும் உறவினர்களுக்கும் அவர் தெம்பூட்டினார். “நான் செத்தா என்னம்மா மற்றவற்களுக்கு வேலை கிடைக்குமில்ல, அதனால அவங்க குடும்பம் சந்தோசப்படுமில்ல” என ஆறுதலும் கூறினார்.

செத்தார்-வெசல்ஸ்
பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்

இவரது போராட்டத்தை பயன்படுத்தி அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுத்து சம்மந்தப்பட்ட நபர்களான முதலாளி, HR, காண்ராக்ட்காரர்களையும் கைது செய்ய வைத்து நிர்வாகத்தை பணிய வைக்காமல் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை காக்க வைத்து இரண்டு நாளும் பேச்சுவார்த்தை நாடகமாடி, நாடக ஒப்பந்தத்தில் சம்மந்தப்பட்ட நபர்களிடம் கையெழுத்து வாங்காமலேயே கோரிக்கை வெற்றி என தம்பட்டம் அடித்து தொழிலாளர்களின் இறுதி அஞ்சலிக்கு கூட தியாகத் தோழன்.டேவிட்டின் முகத்தை காட்டாமல் திருட்டுத் தனமாக மறைத்து ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பிவிட்டு முதலாளியின் உண்னையான ஊழியர் நான்தான் என கச்சிதமாய் காரியம் முடித்தது CITU பிழைப்புவாத தொழிற்சங்கம். இதைக்கண்டு கொதித்தெழுந்த தொழிலாளர்களின் கூட்டத்தை போலீசு தன் பங்குக்கு லத்தியை காட்டி விரட்டிவிட்டது.

டேவிட்டின் முடிவு தவறாக இருந்தாலும், ஆயிரக்கணக்கான தொழிலாளருக்காக நான் முன் நிற்கிறேன் என்ற தொழிலாளிக்கே உரிய வர்க்க உணர்வோடு உயிர்மூச்சு போகும்வரை இருந்தாரே, அத்தகைய உயரிய பண்பை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். சரியான தொழிற்சங்க தலைமையின் கீழ் அணிதிரளும் பட்சத்தில் தொழிலாளி வர்க்கத்திடம் இந்த முதலாளி போத்திராஜ், HR கலியமூர்த்தி மட்டுமல்ல எவனாக இருந்தாலும் மண்டியிட்டே ஆகவேண்டும். அப்படிப்பட்ட முன்னுதாரணம் மாருதி தொழிலாளர்கள் கற்றுக் கொடுத்துள்ளனர். அவர்களின் பாதையில் முன் செல்வோம். தோழர்.டேவிட்டின் வர்க்க பாசத்துக்கு ஒரு வரலாறு உண்டென்று நிரூபிப்போம். அதுவே அவரது தியாகத்துக்கு இறுதி அஞ்சலியாக அமையும்.

___________________________________________________________________

செய்தி : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருச்சி.

____________________________________________________________________

காதலர்களுக்கு எதிராய் பார்ப்பன – வேளாள – வன்னியக் கூட்டணி!

30

காதலுக்கு தடை“வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா…வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்கிறேன்” – கடந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க விழாவில் தங்களது கொள்கையை விளக்கி சிறப்புரை ஆற்றிய காடுவெட்டி குரு இவ்வாறு பேசியிருக்கிறார். காடுவெட்டி பேசிய அதே மேடையில் சமூக நீதிப் போராளி மருத்துவர் ராமதாசும் அவரது புத்திரனும் பசுமைப் போராளியுமான அன்புமணி ராமதாசும் அமர்ந்திருந்து காடுவெட்டியின் பேச்சை ரசித்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பா.ம.கவைச் சேர்ந்த இளைஞர்கள், காடுவெட்டியின் பேச்சை பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளனர்.

இதற்குச் சில வாரங்கள் முன்பு (15/04/2012) தான், தமிழகத்தின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த கரூரில் ஒரு திருமண மண்டபத்தில் கூடிய கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையினர், கலப்புத் திருமண எதிர்ப்புப் பிரச்சார இயக்கத்தை ஆரம்பித்திருந்தனர். அதன் அழைப்பிதழில் சிறப்புப் பேச்சாளராக காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.கே குப்புசாமியின் பெயர் இடம் பெற்றிருந்தது. வேறு சாதியில் திருமணம் முடிப்பதால் கொங்குக் கலாச்சாரம் சீர்கெட்டுப் போய் விடுவதாகவும், பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுப்பதால் கொங்கு வேளாளர்களின் நிலவுடைமை பாதிக்கப்படுவதாகவும் மேற்படி கூட்டத்தில் பேசப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பார்ப்பனர் சங்க இதழான பிராமின் டுடே பத்திரிகையில் அதன் தலைவரான நாராயணன், “ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை நடைமுறைகளின்படி நீண்டகாலம் கலப்பில்லாமல் உருவாகும் மரபணு சார்ந்தவர்களின் சந்ததியினர்தான் அந்த மரபணுவின் குண நலனை இயல்பாகப் பெறுகிறார்கள். எல்லாமே இதன்மூலம்தான் என்று நாம் சொல்லாவிட்டாலும் சில பிராமண இயல்புகள் இம்மாதிரி தொடர் நிகழ்வின் அடிப்படையில் வலுப்பெறுகின்றன என நம்பத் தயாராகவே உள்ளோம். இறுதியிட்டு உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும் சிறிதளவாவது அறிவியல் அங்கீகாரம் பெற்றுவிட்ட இந்த ஒரு விஷயத்திற்காவது கலப்புத் திருமணம் என்னும் விஷப் பரிட்சையிலிருந்து நம் சமூகம் விலகி இருக்கலாமே” என்று திமிர்த்தனமாக எழுதுகிறார்.”.

இந்தக் கூத்துகளெல்லாம் கடந்த நாற்பதாண்டுகளாக சமூக நீதி கோலோச்சும் தமிழகத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறது. சமூக விடுதலையின் அடையாளம் தான் சாதிவாரியான எழுச்சி என்று சொல்லிக் கொண்டு ராமதாஸை தொண்ணூறுகளின் துவக்கத்தில் தலைமேல் தூக்கி வைத்துக் கூத்தாடிய பின்னவீனத்துவ அறிவுஜீவி கும்பலோ சம்பிரதாயமான முணுமுணுப்பைக் கூட வெளிப்படுத்தாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது. ராமதாசுக்கு ‘தமிழ்க்குடிதாங்கி’ பட்டமளித்து மகிழ்ந்த விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் இருக்கும் இடமே தெரியவில்லை. பார்ப்பனிய எதிர்ப்பை முன்வைத்த பெரியாரின் வழிவந்தவர்களோ நாராயணனின் திமிர்த்தனமான அறிவிப்புக்கு எந்தவிதமான எதிர்வினையையும் ஆற்றவில்லை.

இது ஒருபக்கமிருக்க, சமீப காலமாக தமிழகத்தில் கௌரவக் கொலைகளின் எண்ணிக்கை அபாயகரமான அளவில் அதிகரித்து வருவதை நாளேடுகளில் வெளிவரும் செய்திகளின் மூலமே அவதானிக்க முடிகிறது. எவிடென்ஸ் என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம்  ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 2010-ம் ஆண்டு 6,009 பெண் தற்கொலைகள் பதிவாகியுள்ளதாகவும் அதில் 629 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், கொலை செய்யப்பட்ட பெண்களில் 18-30 வயதுடைய பெண்கள் 236 பேர் என்றும், இதில் கணிசமானவை கௌரவக் கொலைகளாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கிறது.

உள்ளூர் அளவில் போலீசு ஆதிக்கசாதி சார்பாகவே இருக்கிற காரணத்தால், பெரும்பாலான மரணங்களில் முறையான விசாரணையோ, பிரேதப் பரிசோதனையோ செய்யப்படுவதில்லை என்பதால் அனேகமான கௌரவக் கொலைகள் மறைக்கப்பட்டு விடுகின்றது. போலீசு மட்டுமின்றி, அதிகார வர்க்கமும் நீதித் துறையுமே பார்ப்பனர்களாலும் ஆதிக்க சாதியினராலுமே இட்டு நிரப்பட்டிருப்பதாலும் இந்திய அரசின் சிவில் மற்றும் நீதி நிர்வாக இயந்திரங்களின் ஆன்மாவாக பார்ப்பனியமே இருப்பதாலும் குற்றவாளிகள் அனேகமாக தண்டனையில் இருந்து தப்பி விடுகின்றனர்.

காதல் கலப்புத் திருமணங்கள் உண்டாக்கும் இனக்கலப்புகளின் மேல் பார்ப்பனியத்திற்கு வரலாற்று ரீதியான வயிற்றெரிச்சல்கள் ஒருபக்கமிருந்தாலும், சமீப காலங்களில் இந்தப் போக்குகள் தீவிரமடைந்திருப்பது கவனத்துக்குரியது. தொழில்வளர்ச்சியின் பரவலும் , சமூகவளர்ச்சிக் குறியீட்டுப் புள்ளிகளும் தமிழகத்தை வடமாநிலங்களில் இருந்து ஒப்பீட்டளவில் ஓரளவுக்கு மேம்படுத்திக் காட்டினாலும், பார்ப்பனியக் காட்டுமிராண்டித் தனங்களுக்கு தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்களில்லை என்பதையே இந்தப் புள்ளி விபரங்கள் அறிவிக்கிறது.

பெரியாருக்குப் பின் அவரது வழித்தோன்றல்களான திராவிடக் கம்பெனிகள் இன்று பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கைகளை முற்றிலுமாகக் கைகழுவி விட்டு அப்பட்டமாக தரகு அதிகாரவர்க்கமாகத் திரிந்து போய் நிற்கிறார்கள்.  முகவரியில்லாத அரசியல் அநாதைகளாகத் திரிந்து கொண்டிருந்த சிறு சிறு சாதிக் கட்சிகளோடு தேர்தல் கூட்டணி வைத்து அவர்களை வளர்த்து விட்டதோடு தமது செயல்பாடுகளையும் ஆதிக்க சாதியினரின் வாக்கு வங்கிகளைக் காப்பாற்றிக் கொள்வது என்கிற அளவுக்குச் சுருக்கிக் கொண்டுள்ளனர்.

அதிகரித்து வரும் பொருளாதாரத் தாக்குதல்களுக்கு இலக்காகும் சாமானிய மக்களின் கவனம் வர்க்க ரீதியிலான அணிசேர்க்கையை நோக்கிச் செல்வதை சாதிக் கட்சிகள் தடுத்து தம்பக்கம் அணிதிரட்டுவதற்கு முயல்கின்றன.  இன்னொரு பக்கம் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் பலன்களை அறுவடை செய்து புதிய நடுத்தர வர்க்கமாக எழுந்துள்ள ஒரு புதிய பிரிவினரும் பார்ப்பனிய சாதி மனோபாவத்துக்கு இலக்காகி உள்ளனர். ஓரளவுக்குப் படித்து பன்னாட்டுக் கம்பெனிகளில் வேலைக்குச் சேர்ந்து பொருளாதார ரீதியில் ஒப்பீட்டளவில் ஒரு மேம்பட்ட நிலையைப் பெற்று விட்டாலும், சமூகதளத்தில் இவர்களுக்கும் ‘ஆண்ட பரம்பரைப்’ பெருமிதம் தேவையாய் இருக்கிறது.

முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் சாதி ரீதியிலான குழுமங்களில் அதிகளவில் சேர்வது பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பக் கம்பெனிகளில் வேலை செய்யும் இளைஞர்கள் தாம். இணையப் பரிச்சயம் உள்ள இவர்கள், சுய சாதியில் பெண் தேடுவதற்கென்றே சாதி வாரியாக வரன்களைத் தேடித் தரும் பிரத்யேக இணையதளங்களும் சமீப காலமாக பெருகி வருகின்றது.

ஆக, தொழில் வளர்ச்சியோ அதன் மூலம் ஏற்படும் பொருளாதார முன்னேற்றமோ சாதி போன்ற பிற்போக்குக் கருத்தியல்களை பலவீனப்படுத்தி விடுவதில்லை. பார்ப்பனியம் தனது வரலாற்றில் மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப புதியவைகளை எப்படி உட்செறித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டதோ அதே போல இன்றைய தொழில்நுட்பயுகத்தின் சகல வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு வளர்ந்து வருகிறது.  அதற்கு பக்கபலமாக அதிகாரவர்க்கமும் ஆளும் வர்க்கமும் இருக்கும் போது, தனது அடித்தளத்தின் மேல் நிகழ்த்தப்படும் கலப்புத் திருமணம் சாதாரண தாக்குதல்களைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் கொலை வரை செல்லும் துணிவைப் பெறுகின்றது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கவுரவக் கொலைகள் பற்றிய புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனமான எவிடென்ஸ், இதைத் தடுக்க வலுவான சட்டங்கள் தேவை என்கிறது. வேறு என்.ஜி. ஓக்களும் அறிவுஜீவிகளும் கூட இதையே வலியுறுத்துகின்றனர். ஒருவேளை அப்படிப்பட்ட வலுவான சட்டங்கள் இயற்றப்பட்டாலுமே கூட, அதனை அமுல்படுத்தப் போவது பார்ப்பனியமயமான அதிகார வர்க்கத்தின் இயந்திரங்கள் தான் எனும் போது, கிடைக்கப் போகும் நீதியின் யோக்கியதை என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

உத்திரபிரதேசத்தின் டி.ஐ.ஜியான எஸ்.கே மாத்தூர், வெளிப்படையாகவே காதல் திருமணம் புரிந்த பெண்ணின் தந்தையிடம் அப்பெண்ணைக் கௌவரவக் கொலை செய்யத் தூண்டும் விதமாகப் பேசியதற்கு ‘தண்டனையாக’ பணியிட மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளார். எஸ்.கே மாத்தூரின் பேச்சு பகிரங்கமாக ஊடகங்களில் அம்பலமாகி, பெண்ணிய இயக்கங்கள் போராடியதன் பின் தான் இந்த நடவடிக்கையும் கூட எடுக்கப்பட்டுள்ளது.

ஆக, வெறுமனே வலிமையான சட்டங்கள் இயற்றுவதால் மட்டுமே தீர்ந்து விடக் கூடிய பிரச்சினையல்ல இது. அப்படிப்பட்ட சட்டங்கள் தற்போது இல்லாமலுமில்லை. சமூகத் தளத்திலும் அரசியல் அரங்கிலும் பார்ப்பனியம் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டு, அதிகார மட்டத்தில் அதன் செல்வாக்கு வீழ்த்தப்பட்டால் மட்டுமே சாதி வெறியர்களைத் தண்டிக்க முடியும்.

__________________________________________________

தமிழரசன்.
__________________________________________________

அம்பேத்கரியம் சாதித்தது என்ன?

98

‘‘புதிய ஜனநாயகம்” 2012 செப்டம்பர் இதழில் தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா? புரட்சியா?” என்ற கேள்வியை எழுப்பும் நீண்ட கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதில், பல எடுத்துக்காட்டுகளுடன் சில முடிவுகளும் கேள்விகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் தொகுப்பு பின்வருமாறு:

  • Žஇதுவரை இத்தனை ஆண்டுகளாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அரசு மேற்கொண்ட சமூக நீதிக்கான இடஒதுக்கீடுகளும், தீண்டாமை-வன்கொடுமைத் தடுப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டங்களும், வளர்ச்சி-முன்னேற்றத்துக்கான திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் இம்மக்கள் வாழ்வில், சமூகத்தில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்துவிடவில்லை. மாறாக, இத்தகைய முயற்சிகள் மூலம் சாதிய சமத்துவத்தை ஒருக்காலும் ஏற்படுத்தி விட முடியாது என்பதையே நாளும் பெருகிவரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைத் தாக்குதல்கள் திரும்பத் திரும்பக் காட்டுகின்றன.
  • Žஆங்கிலேயக் காலனியவாதிகளால் கட்டியெழுப்பப்பட்டு, காந்தி-நேரு-காங்கிரசினால் வரித்துக் கொள்ளப்பட்ட இந்திய அரசுக் கட்டமைப்பு என்பது சாதிய சமுதாய அமைப்பு குலைந்து போகாமல் காப்பதற்கானதுதான். இதன் அங்கங்களான அதிகார வர்க்கம், இராணுவம், போலீசு, நீதிமன்றங்கள் எல்லாம் சாதிய சமுதாய அமைப்பைக் கட்டிக் காப்பதற்காக உள்ளவைதாம்.இந்த நேக்கத்துக்காகவே போதனையும் பயிற்சியும் அளித்து வளர்க்கப்பட்ட மேற்படி அரசு அமைப்பினரே ஒரு தனிவகை சாதியினர். சமத்துவத்தையோ, ஜனநாயகத்தையோ இந்தத் தனிவகைச் சாதிய அமைப்பு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இத்தகைய அரசு அமைப்பை, தனிவகைச் சாதியினை தாக்கித் தகர்த்து விட்டு, தமக்கென ஒரு புதிய அரசுக் கட்டுமானத்தை நிறுவிக் கொள்வதுதான் அரசியல் புரட்சி; இவ்வாறான அரசியல் புரட்சி ஒன்றின்றி சமூகப் புரட்சி சாத்தியமே கிடையாது. இப்போதுள்ள அரசுக் கட்டுமான அமைப்பை அப்படியே தக்க வைத்துக் கொண்டு ஒடுக்கப்படும் சாதியினர் தமது நலன்களுக்கான சமத்துவம், ஜனநாயகம், சமூக நீதியை நிறுவுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியாது.
  • பெரியார், அம்பேத்கர் முதலியவர்களுக்கு எவ்வளவுதான் நேர்மையான, உயரிய நோக்கங்கள் இருந்தபோதும் அவர்கள் முன்வைத்த தீர்வுகள் இந்தக் கட்டமைவைத் தகர்த்து, புதிய கட்டுமானத்தை நிறுவுவதற்கான புரட்சிகர உள்ளடக்கத்தையும் வழிமுறைகளையும் கொண்டவையாக இல்லை. மார்க்சிய ஆசான்களாலேயே முன்வைக்கப்படாத, உலகில் வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பான சாதியாதிக்க சமூகத்தைக் கொண்டது இந்திய நாடு, என்கிற பேருண்மையைப் பெரியாரும் அம்பேத்கரும் மட்டுமே கண்டுபிடித்து விட்டதாக அம்பேத்கரிய, பெரியாரியவாதிகளால் உரிமை பாராட்டப்படுகிறது. ஆனால், அச்சாதி ஆதிக்க சமூகத்தைத் தகர்க்கவும், சமத்துவ, ஜனநாயக சமுதாயத்தை உருவாக்கவும் கூடிய, உலகில் வேறெங்கும் இல்லாத தனிச் சிறப்பான, புரட்சிகரமான தீர்வுகளையும் வழிமுறைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளார்களா?
  • அடுக்கடுக்கான படிநிலை சாதிய சமுதாயத்தில்  சாதி இந்துக்களுக்கு மட்டுமே சாதி ஆதிக்கமும் அதிகாரமும் உள்ளது. அவை பலவீனமடைவதாக உணரும்போதெல்லாம் ஆதிக்க சாதிகள் புதுப்புது நடைமுறைகள் மூலம் மீண்டும் தமது அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். ஆகவே, வேண்டுவது மேலும் மேலும் சீர்திருத்தங்கள் அல்ல! கெட்டி தட்டிப் போயிருக்கும் சாதியாதிக்க சமுதாயத்தை உலுக்கித் தலைகீழாகப் புரட்டிப் போடும், உழைக்கும் மக்கள் தலைமையிலான சமூக அரசியல் புரட்சி! தலித்” தலைவர்களும் அமைப்புகளும் அத்தகைய புரட்சிக்குத்தான் பணியாற்றுகிறார்களா?தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக மற்றும் அரசியல் நிலைமை, சாதிய ஒடுக்குமுறை பற்றி இங்கே தொகுக்கப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டுகள், தமிழ்நாட்டில் உள்ளவை மட்டும்தாம். நாட்டின் பிற மாநிலங்களில், குறிப்பாக அரியானா, பீகார், முன்னாள் உ.பி. மற்றும் முன்னாள் ம.பி., ஒரிசா, மராட்டியம், கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் உள்ள நிலைமைகளோ படுமோசமானவை.ஆகவே, நாட்டிலுள்ள தலித் அரசியல் கட்சிகளும், தலித் விடுதலை இயக்கங்களும், தலித் அறிவுஜீவிகளும் உடனடியாகச் செய்ய வேண்டியது ஒன்றுண்டு. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமை, வன்கொடுமைகளை முறியடிப்பதற்கும், சமூக விடுதலைக்கும் அம்பேத்கர் காலந்தொட்டு இதுவரை, இவ்வளவு காலமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஏற்படுத்தியுள்ள விளைவுகளைத் தொகுத்தறிய வேண்டியுள்ளது. சுயதிருப்தியை உதறிவிட்டு சுயபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.
அம்பேத்கர் புனா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைப்போல சித்தரிக்கும் ஓவியம்
அம்பேத்கர் புனா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைப்போல சித்தரிக்கும் ஓவியம்

ஓட்டுக் கட்சி அரசியலில் குதித்து சந்தர்ப்பவாத அரசியல் கூட்டுகள் அமைத்துக் கொண்டு, தாழ்த்தப்பட்ட ஆதிக்கச் சாதிகளுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் விசுவாசமாக நடந்து கொண்டு, மக்களுக்குத் துரோகமிழைத்தும் கருங்காலித்தனம் செய்தும் ஒரு சில தனிநபர்கள் குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், துணைப் பிரதமர், மத்திய-மாநில அமைச்சர் பதவிகளைக் கைப்பற்ற முடிந்தது. இடஒதுக்கீடு மூலம் அரசுப் பதவிகளைப் பிடித்து, அதிகார வர்க்கம்-போலீசின் உயர்ந்த பதவிகளையும்கூட ஒரு சிலர் பிடிக்க முடிந்தது. (அவர்களிலும் மாயாவதி, ராம்விலாஸ் பசுவான், முத்துக்கருப்பன் போன்ற ஒரு சிலர்  கோடீசுவரர்களாகவும் முடிந்தது.) தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையில் இத்தகையவர்கள் ஒரு சதவீதத்தினர் கூட கிடையாது. அதேசமயம், இப்படி உயர்ந்தவர்கள்கூட ஆதிக்க சாதியினருக்குச் சமமான சமூக மதிப்பைப் பெற்றுவிட முடியவில்லை. துணைப் பிரதமராக இருந்த ஜெகஜீவன்ராம் முதல் மத்திய அமைச்சராக இருந்த தென்காசி அருணாச்சலம் வரை சாதி அடிப்படையில் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

ஆனால், தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்டு, அதிகரித்த அளவில் வன்கொடுமைத் தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு சமூகம் என்ற முறையில் சமத்துவம், விடுதலை என்பதை நோக்கி ஒரு சிறு அளவுகூட முன்னேறி விடவில்லை.  அம்பேத்கரால் முன்வைக்கப்பட்ட தலித்-சூத்திரக் கூட்டு என்ற பகுஜன் சமாஜ் வழியில் நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் முதன்முறையாக தலித் முதலமைச்சரானார், மாயாவதி. அவர் ஆட்சியில்கூடத் தாழ்த்தப்பட்ட  மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுத்து நிறுத்தப்படவில்லை; முன்னைவிடப் பெருகித்தான் வந்துள்ளன.

அதற்குக் காரணம், பத்து மாநிலங்களில் கால் பதித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, ராம்விலாஸ் பசுவான், அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், அதாவாலே, திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்ற தலித் தலைவர்கள் ஓட்டுக் கட்சி அரசியலில் புகுந்து சீரழிந்து போய் விட்டார்கள்; அம்பேத்கரின் தத்துவத்தையும் வழிமுறைகளையும் புரிந்து கொள்ளவுமில்லை; பற்றி  நிற்கவும் இல்லை-என்று நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியே சிந்திக்கும் காஞ்சயிலைய்யா, ஆனந்த் தெல்தும்டே போன்ற இன்றைய தலித் சிந்தனையாளர்களும் அறிவுஜீவிகளும் வாதிடுகிறார்கள்.

உண்மையில், தலித் அரசியல் தலைவர்கள் அம்பேத்கரைத் தமது சமூக மற்றும் அரசியல் குறியீடாகவும் அடையாளமாகவும் கருதுகின்றனர். அம்பேத்கரை வழிபாட்டுக்குரிய ஒரு அரசியல் தெய்வமாகவே முன்வைக்கின்றனர்.  அவரது தத்துவம் மற்றும் வழிமுறைகள் மீதான விமர்சனப்பூர்வ ஆய்வுகள், மதிப்பீடுகள் எதையும் தாழ்த்தப்பட்ட சமூகம் முழுமைக்கும் எதிரான தாக்குதல்களாகவே சித்தரிக்கின்றனர். அம்பேத்கரின் சிலைகளை அவமரியாதை செய்யும் சாதி இந்துக்களை வெறுப்பதைப் போல அம்பேத்கரின் கருத்துக்களை விமர்சிப்பவர்களை வெறுக்கிறார்கள். திருமாவளவன் போன்ற தலித் தலைவர்களுக்கு எதிரான விமர்சனங்கள்கூட இதற்கு நிகராகவே வெறுக்கப்படுகின்றன.

விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரனை விமர்சிப்பவர்கள் மட்டுமல்ல; அவர் கொல்லப்பட்டு விட்டார் என்ற உண்மையைச் சொல்பவர்கள் தமிழினத் துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். திருமாவளவனின் குறைபாடுகள், சந்தர்ப்பவாதங்களை எடுத்துரைப்பவர்கள் தலித் எதிரிகள் என்று சித்தரித்துத் தாக்கப்படுகிறார்கள். இந்தச் சூழலில் அம்பேத்கரியம் பற்றிய விமர்சனப்பூர்வமான மதிப்பீடுகள் எவ்வாறு சித்தரிக்கப்படும் என்று சொல்ல வேண்டியதில்லை! என்றாலும், அப்பணி இன்றைய நிலையில் அவசியமாக உள்ளது.

தீண்டாமை மற்றும் சாதியக் கட்டமைப்புக்கு எதிராக அம்பேத்கரின் பங்களிப்புகளை சாரமாகத் தொகுத்துச் சொல்வதற்குப் பதிலாக, அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மாமேதையாகவும், புரட்சியாளராகவும் காட்டுவதற்காக அம்பேத்கரின் மேற்கோள்கள், தொகுப்பு நூல்கள், உரைகளுக்குள் தலையைக் கவிழ்த்துக் கொள்ளும்படி தலித் அறிவுஜீவிகள் சொல்கிறார்கள். ஆனால், தீண்டாமை, சாதியக் கட்டமைப்பைத் தகர்ப்பதற்கு அரசியல் மற்றும் சமூகத்தளங்களில் அவர் முன்மொழிந்த தீர்வுகளும் நடைமுறைகளும் தோற்றுப் போவிட்டன என்பதுதான் எதார்த்த உண்மையாக உள்ளன.

இந்த உண்மையை, தலித் ஆய்வுகளுக்கான இந்தியக் கழகம் 2008-ஆம் ஆண்டு ஏற்பாடு செய்த அம்பேத்கர் நினைவு முதற் சொற்பொழிவில் பிரெஞ்சு பேராசிரியர் கிறிஸ்டோப் ஜெஃப்பர்லோ மிகவும் எளிமையாகவும் சாரமாகவும் நிரூபித்திருக்கிறார். தீண்டாமைக்கும் சாதியக் கட்டமைப்புக்கும் எதிராக அம்பேத்கர் தன் வாழ்நாளில் நான்கு மூல உத்திகளை மேற்கொண்டார் என்று தொகுக்கிறார் கிறிஸ்டோப் ஜெஃப்பர்லோ.

அம்பேத்கர், நேரு அரசில் சட்டத்துறை அமைச்சராகப் பதிவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்
அம்பேத்கர், நேரு அரசில் சட்டத்துறை அமைச்சராகப் பதிவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்

‘‘சமனற்ற வெவ்வேறு படிநிலைகளைக் கொண்ட (இந்திய) சமூகம், கீழ்நிலை சாதிகள் (சூத்திரர்கள்)  – தலித்துகள் என்றும், சூத்திரர்களும் தலித்துகளுமே பல சாதிகள் என்றும் பிளவுபட்டுள்ளனர். டாக்டர் அம்பேத்கரின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, முதலாவதாக தலித் மக்களை ஐக்கியப்படுத்துவது; பிறகு தலித்துகள் – சூத்திரர்கள் அடங்கிய பகுஜன் சமாஜ் மக்களை ஐக்கியப்படுத்துவது. இரண்டாவதாக, அவர்கள் அனைவருக்கும் தனியொரு அடையாளத்தை உருவாக்கிக் கட்டமைப்பது; அது அவர்களுக்கு சமஸ்கிருதமயமாக்கத்திலிருந்து (பார்ப்பனமயமாக்கத்திலிருந்து) விடுபடுவதற்கான மாற்று வழியைத் தரும். இந்த இரண்டு நோக்கங்களையும் ஈடேற்றுவதற்காக நான்கு வெவ்வேறு மூல உத்திகளை – போர்த்தந்திரங்களை –  தமது நாற்பதாண்டுகால நீண்ட பொதுவாழ்வில் அம்பேத்கர் நடைமுறைப்படுத்தினார்.

1. தீண்டத்தகாதவர்களுக்கு மண்ணின் மைந்தர்கள் என்ற அடையாளத்தை உருவாக்கினால், அவர்கள் சாதிகள் அடிப்படையில் அல்லாத ஒரு மாற்று அடையாளத்தைப் பெறுவார்கள் என்று அம்பேத்கர் நம்பினார்; அவர்கள் தமது சுயமரியாதையை மீட்பதற்காகவும், தம்மிடையே உள்ள உட்பிரிவுப் பிளவுகளைக் கடப்பதற்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தாம் மண்ணின் மைந்தர்கள் என்ற பெருமைக்குரிய வரலாற்றை அவர்களுக்கு உருவாக்கித் தருவதற்கு அம்பேத்கர் முயன்றார். தீண்டத்தகாதவர்கள் பூர்வீகத்தில் பௌத்தர்கள், இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதை உணருவார்களேயானால், அவர்கள் தமக்குள் நிலவும் சாதியப் பிளவுகளைக் கடந்து தாம் ஒரே இனக்குழுவினர் என்ற நிலைப்பாடு எடுப்பார்கள்; இதனால் பழைய, ஒட்டுமொத்தக் கட்டமைப்புக்கும் எதிராக எழுந்து நிற்பார்கள் என்று அம்பேத்கர் நம்பிச் செயல்பட்டார்.

2. தேர்தல் அரசியல் ஈடுபாடு. இந்து சமுதாயத்தில் உண்மையில் நிலவும் முரண்நிலை – பிளவு, பிராமணர் – பிராமணர் அல்லாதவர் என்பதல்ல; தீண்டத்தக்கவர் – தீண்டத்தகாதவர் என்பதாகும்; இதனால் அனைவருக்கும் சமமான வாக்குரிமை தரும் பிரதேச அடிப்படையிலான தொகுதிகள் என்ற தேர்தல் முறை ஏற்கக்கூடியதல்ல. இதனால் ஒவ்வொரு தொகுதியிலும் தீண்டத்தகாதவர்கள் சிறுபான்மையினர் ஆகிவிடுவார்கள் என்பதால், அவர்கள் பிரதிநிதித்துவம் பெற முடியாமல் போகும். ஆகவே, தீண்டத்தகாதவர்களுக்கென தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் அல்லது தீண்டத்தகாதவர்களைத் தனியான வாக்காளர்களாகக் கொள்ளவேண்டும் என்று அம்பேத்கர் கோரினார்.

இரண்டாவது வட்டமேசைக்குப் பிறகு வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஒதுக்கீடு செய்து, தீண்டத்தகாதோரைத் தனி வாக்காளர் தொகுப்பாக அங்கீகாரம் செயப்பட்டது. அது இந்து சமூகத்தை வகுப்புவாரியாகப் பிளவுபடுத்தி விடும் என ஆத்திரமுற்ற காந்தி, ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்து உண்ணாநிலையை மேற்கொண்டார். 71 பிரதிநிதிகளை மட்டுமே கொண்ட தனிவாக்காளர் தொகுப்புமுறையைக் கைவிட்டால், 148 தனித் தொகுதிகள் ஒதுக்கீடு தருவதாக  காந்தி கும்பல் பேரங்கள் நடத்தியபோது, அம்பேத்கர் பணிந்து புனா ஒப்பந்தத்தை ஏற்றார். (காந்தியின் உண்ணாநிலை, தீண்டத்தகாத மக்களுக்கு எதிராக இந்து சமூகத்தை ஆத்திரங்கொள்ளச் செய்துவிடும்; விளைவுகள் விபரீதமாகிவிடும் என்பதால் காந்தியின் நிர்ப்பந்தத்தை ஏற்கும்படியானது என்று அம்பேத்கரும் பிற தலித்துகளும் வாதிடுவதுண்டு).

அந்த அடிப்படையில், 1936-இல் அம்பேத்கர் நிறுவிய இந்தியத் தொழிலாளர் கட்சி அடுத்த ஆண்டு நடந்த தேர்தல்களில் பெருந்தோல்விகளைச் சந்தித்தது. அதற்கு முக்கியக் காரணம், அம்பேத்கர் தன்னைப் பொதுவில் தொழிலாளர்களின் தலைவராகக் காட்டிக் கொண்டு, தீண்டத்தகாதவர்களுக்கு அப்பாலுள்ள வெகுமக்கள் ஆதரவோடு பரந்த சமூக அடித்தளத்தைப் பெற முயன்ற அதேசமயம், வர்க்க அடிப்படையிலான மார்க்சியப் பார்வையை நிராகரித்து, இந்திய சமூகத்தின் அடிப்படை அலகாக சாதியம் மட்டுமே இருக்க முடியும் என்ற முரண்பட்ட இரட்டை நிலையை மேற்கொண்டதுதான். மேலும் மராட்டியத்திலேயே மகர், மாங்க், சாம்பர் ஆகிய உட்பிரிவுகளைக் கடந்த தலித் ஒற்றுமையை ஏற்படுத்துவதிலேயே அவர் தோல்வியடைந்ததை இந்தியத் தொழிலாளர் கட்சி நிராகரிக்கப்பட்டது காட்டியது. அடுத்து, அவர் நிறுவிய பட்டியல் சாதிகளின் பேரவையும் தேர்தல் களத்தில் பெருந்தோல்வியைக் கண்டது. சாதிய அடித்தளத்தைப் பரவலாக்குவது மற்றும் தீண்டத்தகாத மக்கள் நலன்களை மட்டும் காப்பது ஆகிய நிலைகளிடையே ஊசலாடியதுதான் அவரது அரசியல் தோல்விக்கும் பின்னடைவுக்கும் காரணமாயின. இறுதியில், சாதிய அடிப்படையைக் கடந்ததாக இந்தியக் குடியரசுக் கட்சியை அம்பேத்கர் நிறுவினாலும், அவரே நேரடியாகத் தோல்வியைத் தழுவி, தேர்தல் அரசியலில் பின்னடைவே நிரந்தரமானது.

3. அம்பேத்கரின் அரசியல் செயல்பாடு, அரசியல் கட்சிகளை உருவாக்கித் தேர்தல்களில் பங்கெடுப்பதோடு நின்றுவிடவில்லை. தனது தனிப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் ஆங்கிலேய அல்லது காங்கிரசு அரசாங்கங்களில் செல்வாக்குகளை ஏற்படுத்தித் தீண்டத்தகாதவர்களின் நலன்களுக்கான தமது நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ளவும் கடுமையாக முயன்றார். ஆங்கிலேய ஆட்சியின் கீழ், ஒருபுறம் மேல்சாதிகளின் பிரதிநிதியாகிய காங்கிரசின் ஆதிக்கம் நிலவிய தேசவிடுதலை இயக்கத்தை நிராகரித்தார். இதனால் தனது சமத்துவ உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட ஆங்கிலேயர்களுடன் நெருக்கம் கண்டு, சாதி இந்துக்களுக்கு எதிராகத்  தலித்துகள் பாதுகாப்பைப் பெறமுடியும் என்று நம்பினார். மறுபுறம், இந்தியராகிய அம்பேத்கரால் தனது நாடு ஒரு அந்நிய சக்தியினால் ஆதிக்கம் செலுத்தப்படுவதையும், அதற்கு மேல் அவர் மிகவும் நேசித்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மதிப்பீடுகள் நசுக்கப்படுவதையும் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனால் ஒருவகைக் குழப்பத்தில் மூழ்கி இருந்த அம்பேத்கர் 1930-களில் காங்கிரசுக்கு எதிரான பகைமை நிலைமை காரணமாக தேசிய உணர்வுகளை மீறி, ஆங்கிலேயர்களுடன் சமசரம் செது கொண்டு தீண்டத்தகாதவர்களுக்கு ஓரளவு சாதகமான பலன்களைப் பெற முயன்றார். இதனால் ஆங்கிலேயர் ஆட்சியில் தலித் தலைவர்கள் சில பதவிகளையும் தீண்டத்தகாதோர் சில சலுகைளையும் பெற்றனர். ஆனால், அம்பேத்கரின் கட்சிகள் அடுத்தடுத்துத் தேர்தல் தோல்விகளைச் சந்தித்ததால் ஆங்கிலேய ஆட்சியில் தலித்துகளின் அமைப்புகள் என்ற வகையில் தலித்துகள் விரும்பிய ஆதாயங்களை அடைய முடியவில்லை.

1956, அக்.14 அன்று மகாராஷ்டிராவிலுள்ள நாகபுரியில் பல்லாயிரக்கணக்கான மகர் சாதியினரோடு புத்த மதத்தைத் தழுவும் அம்பேத்கர்
1956, அக்.14 அன்று மகாராஷ்டிராவிலுள்ள நாகபுரியில் பல்லாயிரக்கணக்கான மகர் சாதியினரோடு புத்த மதத்தைத் தழுவும் அம்பேத்கர்

1946-லிருந்து ‘விடுதலை’யை நோக்கி நாடு நகர்ந்தபோது நடைமுறை அரசியலுக்குத் தகுந்தபடி காங்கிரசுக் கட்சியுடன் அம்பேத்கர் நெருக்கமானார்.  காந்தியின் நிர்ப்பந்தம் காரணமாக 1947 ‘விடுதலை’க்குப் பிறகு அமைந்த அமைச்சரவையில் அம்பேத்கரைச் சட்ட மந்திரியாக்கினார், நேரு. எந்தவித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை; வெளியிலிருப்பதை விட அரசாங்கத்தில் பங்கேற்றுப் பட்டியலினச் சாதிகளின் நலன்களுக்கு எளிதில் சேவை செய முடியும் என்பதால் காங்கிரசு ஆட்சியில் அம்பேத்கர் பங்கேற்றார். அரசியல் நிர்ணயச் சட்ட வரைவுக் கமிட்டித் தலைவர், சிறுபான்மையினர் கமிட்டி உறுப்பினர் என்று பல கமிட்டிகளில் அம்பேத்கர் பங்கேற்று தலித்துகளின் நலன்களுக்கான விவாதங்களில் பங்கேற்றார். என்றாலும் வல்லபா பட்டேல், ராஜேந்திர பிரசாத், பட்டாபி சீதாராமையா போன்ற காங்கிரசுப் பிற்போக்காளர்களின் முயற்சியாலும் நேருவின் துரோகத்தாலும் இந்து சிவில் சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் அம்பேத்கர் முறியடிக்கப்பட்டார். ஆட்சியாளர்களுடன் அம்பேத்கர் மேற்கொண்ட கூட்டுறவு மூலம் அமெரிக்க மற்றும் ஆங்கிலேய பாணியிலான, வலுவான முதலாளிய மைய அரசமைப்பை உருவாக்குவதில் வெற்றி பெற்ற அம்பேத்கர், அதற்குள்ளாகவே இந்து சமூக அமைப்பில் சீர்திருத்தங்களைப் புகுத்தும் முயற்சியில் முறியடிக்கப்பட்டு, கசப்பான உணர்வுடன் அரசாங்கத்திலிருந்து வெளியேறினர். தொடர்ந்து வந்த இந்தியக் குடியரசின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியும் அடைந்தார்.

4. மதமாற்றம்: அம்பேத்கரின் கடைசி மூலஉத்தி. சாதிய அமைப்பிலிருந்து விடுபடுவதற்கு வேறொரு மதத்திற்கு மாறிவிடுவது என்ற முடிவு இந்து மதம் பற்றிய அம்பேத்கரின் ஆவிலிருந்து தர்க்கரீதியாக வந்ததாகும். “நமக்குத் தேவை சமூக சமத்துவம்; முடிந்தவரை இந்து அமைப்புக்குள் அதைப் பெறுவோம்; இல்லையானால் பயனற்ற இந்து அடையாளத்தைத் தூக்கியெறிவோம்; இந்துத்துவத்தை விட்டொழிக்க வேண்டுவது அவசியமானால், இந்துக் கோவில்கள் பற்றி எங்களுக்குக் கவலையில்லை” என்று 1927 ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் மாநாட்டுக்குத் தலைமையேற்று அம்பேத்கர் பேசினார். அதைத் தொடர்ந்து பத்துப் பன்னிரண்டு மகர் சாதியினர் இசுலாத்துக்கு மதம் மாறினர்.

பின்னர், 1935 இயோலா மாநாட்டில், இந்து மதத்தில் இருப்பதால்தான் நாம் இழிவுகளையும் வேதனைகளையும் அனுபவிக்கிறோம்; இந்துத்துவத்துடனான எல்லாத் தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டு நிபந்தனையற்ற சமத்துவம், தகுதி, வாப்புகளை உறுதிப்படுத்தும் வேறெந்த மதத்துக்கும் மாறிப் போய் விடுங்கள்” என்று தீண்டத்தகாதோருக்கு அம்பேத்கர் அறைகூவல் விடுத்தார். வெவ்வேறு மதங்களை ஒப்பீடு செய்து, தாழ்த்தப்பட்டோருக்கு அம்மதத் தலைவர்களிடையே உள்ள வரவேற்பையும் ஆய்வு செய்தார். பிறகு 1936-இல் சீக்கிய மதத்திற்கு மதம் மாறுவதைத் தெரிவு செய்தார்.

சீக்கியராக மதம் மாறும் தீண்டத்தகாதோருக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு புதிய அரசியல் சட்டம் இயற்றும்படி ஆங்கிலேயரிடம் அம்பேத்கர் கோரினார். பஞ்சாபிலுள்ள சீக்கியருக்கு மட்டுமே அது பொருந்தும் என்று ஆங்கிலேயத் தலைவர்கள் நிராகரித்தனர். பஞ்சாபிலிருந்த சீக்கியத் தலித்துகள், அங்கு ஜாட் சாதியினர் தமக்கு இழைக்கும் கொடுமைகளை எடுத்துச் சொன்னார்கள். சீக்கியர்களின் அரசியல் தலைமையான அகாலிகளும் தீண்டத்தகாதோரின் பெருந்திரள் மதமாற்றத்தை எதிர்த்தனர். சாதி இந்துக்களின் சமூகப் புறக்கணிப்பு மற்றும் திருப்பித் தாக்கும் நடவடிக்கைகளைக் கண்டஞ்சிய அம்பேத்கர், மதமாற்ற முயற்சிகளை அப்போதைக்குக் கைவிட்டார்.

தீண்டாமை மற்றும் சாதி ஆதிக்கத்துக்கு எதிரான பிற மூல உத்திகள் தோல்வியடைந்த பிறகு, மீண்டும் மதமாற்றத் தீர்வை அம்பேத்கர் கையிலெடுத்தார். இறப்பதற்குச் சில வாரங்கள் முன்பாக 1956 அக். 14 அன்று மிகப் பெரிய விழாவொன்றில் நாகபுரியில் பல நூறாயிரக்கணக்கான மகர் சாதியினர் புத்த மதத்தைத் தழுவினர். புத்த மதத்தை இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே சட்டமும் சாதி இந்துத் தலைமையும் கருதுவதால் கடும் எதிர்ப்பு கிளம்பவில்லை. ஆனாலும், இந்துமதத்துக்கு எதிரான நடவடிக்கை என்று பிரகடனம் செயும் வகையில் மராட்டியத் தீண்டத்தகாதோர் குடியிருப்புப் பகுதியிலிருந்த இந்துக் கடவுளர் சிலைகள் சாதி இந்துக்களிடமே ஒப்படைக்கப்பட்டன.

இதன் மூலம் புத்த மதத்தைத் தழுவிய மக்கள் தமக்குத் தாமே ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டாலும், சமுதாயத்தில் நிலவும் சாதியப் படிநிலையிலிருந்து அம்மக்கள் விடுதலை பெறவே இல்லை. நகர்ப்புறக் குடிசைப் பகுதிகளிலும், கிராமப்புற பகுதிகளில் நிலமற்ற விவசாயிகளாக வாழும் பௌத்த பெருந்திரள் மக்கள் பழைய முறையிலேயே வாழ்கிறார்கள். ஒரு முக்கிய வேறுபாடு, தங்களுக்கு முன்பு மறுக்கப்பட்ட (சடங்கு – சாத்திர) நடைமுறைகள் தமக்குத் தடை செயப்பட்டவை என்பதற்காக அல்ல, தாமே தனியினம் என்ற உணர்வுடன் அவற்றைப் பின்பற்றுவதைக் கை விட்டுள்ளனர். மேலும், சம்பர்கள் போன்ற பிற தீண்டத்தகாதவர்கள் புத்தமதத்தைத் தழுவுவதை நிராகரித்து விட்டனர். புத்த மதத்தைத் தழுவிய மகர்களிலும் ஏழை-எளிய மக்கள் பழைய வழக்கங்களைத் தொடர்கிறார்கள்.

இவ்வாறு தீண்டாமையையும் சாதிய அமைப்பையும் தகர்ப்பதற்கு அம்பேத்கரே முன்வைத்து நடைமுறைப்படுத்திய தீர்வுகளையும் போதனைகளையும் நேர்மையாகத் தொகுத்தறியும் எவரும், அவை தமது நோக்கங்களை ஈடேற்றக் கூடியவை என்று கூற முடியாது. மாறாக, அவை எதிர்மறைப் படிப்பினையைத்தான் கொடுத்திருக்கின்றன.

அம்பேத்கரியம்-7

முதலாவதாக, தீண்டத்தகாதோர் இந்த மண்ணின் மைந்தர்கள் என்ற அடையாளத்தையும் தலித்துகள்-சூத்திரர்களை ஐக்கியப்படுத்தி, அவர்கள் அனைவருக்கும் சாதி அடிப்படையில் அல்லாத தனியொரு மாற்று அடையாளத்தையும் தருவதன் மூலம் சாதிய உட்பிரிவுகளைக் கடந்த ஐக்கியத்தை ஏற்படுத்தி விடமுடியும் என்று அம்பேத்கர் நம்பினார். அதற்கு நேர்மாறாக ஒவ்வொரு சாதிய உட்பிரிவுகளும் தனித்தனி சாதி அடையாளத்தை வலுப்படுத்தி கொள்கிறார்கள். ஓட்டுக்கட்சி அரசியலின் வாக்கு வங்கி உருவாக்கம் மற்றும் சாதிய அரசியல், சமூக ஆதிக்கத்துக்கு இது அவசியமாக உள்ளது. தலித் மக்களிடையேகூட சாதிய உட்பிரிவு அடையாளங்கள் இறுக்கத்தையும் சீரழிவையும்தான் ஏற்படுத்தியிருக்கின்றன.

இரண்டாவதாக, தேர்தல் அரசியல் ஈடுபாடு தலித் அரசியல் தலைவர்கள், அமைப்புகளை மிக மோசமான அரசியல் சந்தர்ப்பவாதத்திலும் பிழைப்புவாதத்திலும் மூழ்கடித்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்கள் அடகு வைக்கப்படுகின்றன. தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறுவதற்கு மாறாக, தேர்தல் அரசியல் மீது நம்பிக்கை வைக்கும்படி சீரழிக்கப்படுகிறார்கள். சாதி, மத அடிப்படையில் மக்களை அணிதிரட்டி ஆதிக்க சாதியினர் ஆதாயம் அடையும் சூழலில் தலித் கட்சிகளின் சக்தியை பிற அரசியல் கட்சிகள் அங்கீகரிக்க மறுப்பதாக தலித் அரசியல் தலைவர்கள் அவர்களிடம் கெஞ்சுகிறார்கள்.

மூன்றாவதாக, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தீண்டாமை, வன்கொடுமை மற்றும் சாதியக் கட்டமைப்பை முறியடிப்பதற்கு பதிலாக, ஆட்சியாளர்களின் தயவில் இம்மக்களுக்கு சலுகைகளையும் பதவிகளையும் பெற்று விட முடியும் என்ற நம்பிக்கை. இதன் காரணமாக, ஆட்சியாளர்களையும் அதிகார அரசு அமைப்பையும் பகைச் சக்திகளாகக் கருதி அவர்களை எதிர்த்துப் போராடி, வீழ்த்த வேண்டிய பணிகளை – பாதையை நிராகரிக்கின்றனர். மாறாக, எப்போதும் தற்காலிக நிவாரணங்களையும், எதிரிகளுடன் சமரச-சரணடைவுப் போக்கையுமே மேற்கொள்கின்றனர்.

இவைதாம் அம்பேத்கரிடமிருந்து தலித் தலைவர்கள் கற்றுக்கொண்டவை. இவைதாம் அம்பேத்கரியம் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தவை!

இதற்கு மாறாக, தீண்டாமையையும் சாதிய சமுதாயத்தையும் பாதுகாத்துவரும், ஆதிக்க சாதிகளுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் சேவை செயும் அரசுக் கட்டமைப்பைத் தாக்கித் தகர்க்கவேண்டும்.  சமூக, அரசியல் ஜனநாயகப் புரட்சி மூலம் சமுதாயத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் புரட்சியால்தான் தீண்டாமையும் சாதியமும் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். அரசியல், ஜனநாயகப் புரட்சியில் பங்கேற்பதன் ஊடாகத்தான் சாதிகளைக் கடந்த உழைக்கும் மக்களின் ஒற்றுமையும் சமத்துவமும் ஏற்பட முடியும்.

எதிரிச் சக்திகளுடன் நேரடியான மோதலும் புரட்சியும் இல்லாமல், பழைய சாதிய சமூகக் கட்டமைப்புக்குள்ளாகவே கொண்டு வரப்படும் சீர்திருத்தங்களால் அம்பேத்கரே முன்மாதிரியாகக் கருதிய மேலைநாடுகளில் கூட சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அடங்கிய ஜனநாயகம் வந்துவிடவில்லை. ஆகவே, தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமை-சாதிய சமூகத்திலிருந்து விடுதலைக்கு வேண்டுவது சீர்திருத்தங்கள் அல்ல; மேற்கத்திய பாணியிலான ஜனநாயகப் புரட்சி கூட அல்ல. புதிய ஜனநாயகப் புரட்சி!

படிக்க

____________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2012

__________________________________________________

அரசு மருத்துவமனைகள்: எலிகளின் இடத்தில் பெருச்சாளிகள்!

4

அரசு-மருத்துவமனைகள்-1சென்னை போன்ற பெருநகரங்களில், மேலைநாடுகளின் தரத்துக்கிணையான மருத்துவ சிகிச்சையை  அளிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் தனியார் மருத்துவமனைகள் எண்ணிக்கையில் பெருகிக் கொண்டுள்ளன. அதே நகரங்களில் இருக்கும் அரசு  மருத்துவமனைகளில் நவீன மருத்துவக் கருவிகளோ,  அத்தியாவசிய மருந்துகளோ இருப்பதில்லை. சென்னை பொதுமருத்துவமனையில்  புற்றுநோ, இதயநோய் ஆகியவற்றுக்கான 39 மருந்துகள் இருப்பில் இல்லை என்று மருந்துக்கிடங்கின் பதிவேடே கூறுகிறது. அவசர சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் அத்தியாவசியமான 25 வகை மருந்துகள் மிகக் குறைந்த அளவில்தான் சப்ளை செயப்படுகின்றன.

திருச்சி மருத்துவமனையில் கழிவறைகளுக்கு எதிரில் நோயாளிகளைக் கிடத்திச் சிகிச்சையளிக்கின்றனர்.  மின்தடை காரணமாக அறுவைச் சிகிச்சைகள் கூடப் பல மருத்துவமனைகளில் நடைபெறுவதில்லை.

இவை அனைத்தையும் சகித்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றால், அங்கேயுள்ள மருத்துவர்களின் பொறுப்பின்மையால் பல ஏழைகளின் உயிர்கள் பறிக்கப்படுகின்றன. திருச்சி மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகளை அறுவைச் சிகிச்சையின் மூலம் பெற்றெடுத்த காளியம்மாளிடம் ஒரு குழந்தை இறந்துவிட்டதெனச் சோன்ன மருத்துவர்கள், குப்பையோடு குப்பையாக மார்பிலும் காலிலும் கத்திக் காயங்களோடு பச்சிளங்குழந்தையின் பிணத்தை ஒரு அட்டைப்பெட்டியில் போட்டுத் தந்துள்ளனர்.

நாகர்கோவிலில் குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ருக்மணிக்குச் சுவாசிக்க ஆக்சிஜனுக்குப் பதில், மயக்கமடையச் செயும் நைட்ரஸ் ஆக்சைடை செலுத்தியுள்ளனர். சில நிமிடங்களில் உடல் எல்லாம் நீலம் பாரித்து வீங்கி விரைத்துப்போனார், ருக்மணி.

அரசு மருத்துவமனைகளின் மோசமான நிலைமை நன்றாகவே தெரிந்தபோதிலும், அதனை நாடிவரும் மக்களின் கூட்டமோ சிறிதும் குறைவதில்லை. தனியார் மருத்துவமனைக்குச் சென்று தரமான சிகிச்சை பெற வேண்டுமானால்  கந்துவட்டிக்குக் கடன் வாங்கினால்தான் சாத்தியம் எனும் அவர்களின் இயலாமைதான், அரசு மருத்துவமனை நோக்கி மக்களைத் தள்ளுகிறது.

அரசு மருத்துவமனைகளோ, தினசரி அகற்றப்படாத குப்பைகளாலும், பராமரிப்பில்லாத கழிவறைகளாலும், முறைப்படி அழிக்கப்படாத மருத்துவக் கழிவுகளாலும்  நோபரப்பும் மையங்களாகியுள்ளன. மருத்துவமனை வளாகங்களுக்குள் எலிகளும் தெருநாகளும் பன்றிகளும்  சுற்றித் திரிகின்றன.

சென்னை  கஸ்தூரிபா அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 15 அன்று பிறந்த பெண் குழந்தை ஒன்றை அங்குள்ள இங்குபேட்டரில் வைத்திருந்தனர். எடைகுறைவாகப் பிறந்த அக்குழந்தை சில நாட்களில் இறந்துவிட்டது. மருத்துவமனை நிர்வாகம், எலிகளால் கடிக்கப்பட்டிருந்த பிணத்தைத்தான் குழந்தையின் பெற்றோரிடம்  மறுநாள் ஒப்படைத்தது. கொதித்தெழுந்த உறவினர்களும், அப்பகுதி மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து, உடனடியாக அதிரடி நடவடிக்கை எனும்பேரில் 2 மருத்துவர்களைப் பணியிடை நீக்கம் செத அரசு, எலிப் பொந்துகளை சிமெண்டால் அடைத்தும், எலிபிடிக்க ஆட்களை அனுப்பியும் மக்கள் நலத்தின் மீது அக்கறையுள்ளது போல நடித்தது. இந்த எலிவேட்டையின்போது மதுரை மருத்துவமனையில் சாரைப்பாம்புகள் பிடிபட்டுள்ளன. ஈரோட்டில் நோயாளியைப் பார்க்க வந்தவர் மருத்துவமனைக்குள்ளேயே பாம்பால் கடிபட்டு இறந்துள்ளார்.

பெரும்பாலான அரசு மருத்துவமனைகள்,   மூன்று பேர் தேவைப்படும் இடத்தில் ஒருவரை மட்டும் வைத்துக்கொண்டு துப்புரவுப் பணிகளை ஒப்பேற்றுகின்றன. பல மருத்துவமனைகளில்,   துப்புரவுப் பணிகளை ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டனர். அறுவைச்சிகிச்சைகளில் கழித்துக்கட்டப்படும் சதைத்துண்டுகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை ஒப்பந்த நிறுவனங்கள் முறைப்படி அழிப்பதில்லை.  அக்கழிவுகளால் ஈர்க்கப்படும் தெருநாகள், எலிகள் போன்றவற்றின் புகலிடமாகின்றன, மருத்துவமனைகள். எலிகளை ஒழிப்பதற்கு மிகக்குறைவான நிதி ஒதுக்கப்படுவதால் அப்பணிகளைச் செய்ய யாரும் முன்வருவதில்லை.

சென்னை இராயப்பேட்டை மருத்துவமனை சவக்கிடங்கில் போதுமான குளிர்சாதன வசதி இல்லாததால் மக்கள் நெருக்கமிக்க அப்பகுதி பிணநாற்றத்தில் மூழ்கியுள்ளது.

அரசு மருத்துவமனைகள் இவ்வாறு கேவலமாகப் பராமரிக்கப்பட்டுவந்தபோதிலும், அங்கு ஏழைகளுக்கு மருத்துவம் இலவசமாகத்தான் இன்னமும் வழங்கப்படுகிறது. இந்த இலவச மருத்துவத்திற்கும் உலை வைக்க அரசு தயாராகி விட்டது.

அடுத்த ஆண்டில் செயல்படத் தொடங்கும் பன்னிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திற்காக டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டி என்பவரின் தலைமையில் நியமிக்கப்பட்ட உயர்மட்ட நிபுணர் குழு தந்திருக்கும் பரிந்துரைகள், சுகாதாரத்துறையைக் கூறுபோட்டுத் தனியாருக்குத் தந்துவிடத் துடிக்கிறது.

இராணுவத்துக்கு ரூ.ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடியை ஒதுக்கியிருக்கும் அரசு,  சுகாதாரத்துறைக்கு ஒதுக்கியது வெறும் 24 ஆயிரம் கோடிதான். இந்த நிதியையும் பாதிக்கும் மேல் குறைக்க நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தை பொதுச்சுகாதாரத்துக்கு உலக சுகாதார நிறுவனம், ஒதுக்கக் கோருகின்றது. ஆனால் ‘நிபுணர்’களோ இதனை 1.58 சதவீதமாகக் குறைத்து, மிச்சத்தை அந்தந்த மாநில அரசுகளே திரட்டிக்கொள்ளட்டும் என வழிகாட்டுகின்றனர்.

அரசு மருத்துவமனைகள் வழங்கும் சிகிச்சைகளை நிர்வகிக்கப்படும் சிகிச்சை (மேனேஜ்டு கேர்) எனும் பெயரில்  மாற்றி அமைக்கச் சோல்கிறது திட்ட முன்வரைவு. இம்முறைப்படி, தற்போது அரசு மருத்துவமனைகளில் இருக்கும் நோகாண் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, அறுவைச் சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு போன்றவை கூறுகளாகப் (செல்போன் சேவைகளில் இருக்கும் பேக்கேஜ்கள் போல) பிரிக்கப்பட்டு, அவை கார்ப்பரேட் மருத்துவ நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். மக்களுக்குத் தனித்தனி சேவைகளாக வழங்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசின் நிதியை அதற்கெனப் பெற்றுக்கொள்ளும். மகப்பேறு, குழந்தை நலம், தடுப்பூசி ஆகியவற்றை மட்டும் அத்தியாவசிய சுகாதாரக் கூறு (பேக்கேஜ்) என்ற ஒரு பிரிவில்  அரசின் நலத்துறை தன்வசம் வைத்துக் கொண்டு, மற்ற எல்லா நோய்ச் சிகிச்சைகளையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கும். பயனாளிகளான நோயாளிகள் அனைவரும் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்படுவர். காப்பீடு பெற்றவர்கள் மட்டுமே சிகிச்சை பெறத் தகுந்தவராவர்.

இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்ட மேலைநாடுகளில் ஏழைமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட முன் அனுபவமுள்ளது. மருத்துவக் காப்பீட்டில் இணைக்கப்பட்ட அம்மக்களுக்கு அவர்கள் கட்டிவரும் பிரீமியத் தொகைக்கேற்ற சிகிச்சைகள் மட்டுமே வழங்கப்பட்டன. சிகிச்சை செலவைக் குறைத்து இலாபத்தை அதிகரிக்க சேவையின் தரத்தைக் குறைத்துக் கொண்டன, கார்ப்பரேட் நிறுவனங்கள்.  நோயாளிகளின் மருத்துவக் காப்பீடு குறைவாகவும்,  கண்டறியப்பட்ட நோய் கடுமையானதாகவும் இருந்தால், நோயாளிகள் தங்களது பிரீமியத்தை உயர்த்திக்கொண்டால் மட்டுமே (டாப் அப்) அந்நோய்க்கு சிகிச்சை தொடங்கப்படும். உதாரணமாக, ஒரு நோயாளிக்கு நோய்கண்டறியும் பிரிவுக்கு மட்டும் காப்பீடு இருக்கும்போது இதயநோய் கண்டறியப்படுகிறது என்றால், அவர் சிகிச்சைக்கான காப்பீடு பிரீமியத்தை ‘டாப் அப்’ ஆக செலுத்தினால் மட்டுமே அவருக்கு இதயநோக்கான சிகிச்சை ஆரம்பமாகும். அங்கே கருணை, மனிதாபிமானம் அனைத்துமே செல்லாக்காசுதான். இதே முறைதான் அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தில் இங்கே வரப்போகிறது.

முந்தைய தி.மு.க. அரசு, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் பெயரில் ஸ்டார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்திற்கு ரூ.500 கோடிக்கும் மேல் வழங்கி, நூற்றுக்கணக்கான தனியார் மருத்துவமனைகளை அத்திட்டத்தில் சேர்த்தது. அரசு மருத்துவமனைகளிலிருந்து நோயாளிகளை ‘கலைஞர் காப்பீடு’ பெற்ற தனியார் மருத்துவமனைகளுக்கு ‘ஆற்றுப்படுத்தினர்’ அரசு மருத்துவர்கள்.  தனியார் மருத்துவமனைகளோ, ஸ்டார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்திடம் சிகிச்சைக்கான செலவை வசூலித்துக்கொண்டன.

விரிவாக்கப்பட்ட மருத்துவக் காப்பீடு திட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கும் முதல்வர் ஜெயா
விரிவாக்கப்பட்ட மருத்துவக் காப்பீடு திட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கும் முதல்வர் ஜெயா

கருணாநிதியின் இந்தத் தனியார்மயத் திட்டத்தைக் கடுமையாகச் சாடிய ஜெயலலிதாவோ, ஆட்சிக்கு வந்தபின்னர், விரிவுபடுத்தப்பட்ட காப்பீட்டை அறிமுகப்படுத்தி, மருத்துவம் தனியார்மயமாவதை  மேலும் தீவிரப்படுத்தினார்.

அம்மாவின் திட்டப்படி, அரசு மருத்துவமனைகளில் செயல்படும் கட்டண சிகிச்சை முறை தற்போது தனியார் காப்பீட்டு நிறுவனத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி மருத்துவக் காப்பீடு வைத்துள்ளவர்கள், கட்டணப் பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டால், அதற்கான செலவுகளை தனியார் காப்பீடு நிறுவனம் அந்தந்த மருத்துவமனைக்குத் தந்துவிடும். கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை அரசு மருத்துவமனைகள் ரூ.94 கோடி ரூபாவரை  காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளன.

சுகாதாரத்துறை அமைச்சர், இந்த வருவாயைக் கொண்டு மருத்துவமனைகள் தங்களது மேம்பாட்டுப் பணியை செய்து கொள்ளலாம் என்கிறார். இதுதான் திட்டக்கமிசன் வகுத்தளித்துள்ள ‘வருவாயை ஈட்டிக்கொள்ள வேண்டிய’ முறை. இனி பொது சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனை மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்காது.

மக்களைப் பழக்கப்படுத்துவதற்காக ‘விரிவுபடுத்தப்பட்ட’ மருத்துவக் காப்பீட்டின் பிரீமியத்தை அரசே செலுத்தி வருகிறது. அடுத்து மக்களே இந்த பிரீமியத்தை செலுத்தவேண்டும் என்று மாற்றப்படலாம்.

அப்போதும் அரசு மருத்துவமனைகள் இருக்கும். ஆனால், மருத்துவக் காப்பீடு பெறாதவர்களுக்கு அங்கே இடம் இருக்காது. நோய் கண்டறியப்படுகையில், அதற்குரிய கூடுதல் காப்பீடு செலுத்தாவிட்டால் ஆரம்ப கட்ட சிகிச்சைகூட கிடைக்காது. ‘சிகிச்சை பெறக் காசு இல்லாவிட்டால் செத்துத் தொலை’ என்பதுதான் இந்த சீர்திருத்தத்தின் விளக்கவுரை.

காசு இல்லாவிட்டால் குடிக்க நீரில்லை. காசில்லாவிட்டால் கல்வி இல்லை. இனி, காசில்லாவிட்டால் மருத்துவமும் இல்லை என முடிவு செய்து விட்ட இந்த அரசை அடித்து நொறுக்கி அழிக்காமல் விட்டுவைத்தால், நிச்சயமாக நமக்கு எதிர்காலமே இல்லை.

____________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2012

__________________________________________________

தலித்துக்கள், முஸ்லிம்களுக்கு வீடுகளில்லை!

165

ஜூலை 8, 2012 இந்து நாளிதழில் இந்தியாவின் பெருநகரங்களின் பல பகுதிகளில் முஸ்லீம்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் குடியிருக்கும் உரிமை மறுக்கப்படுவது குறித்த ஆய்வுக் கட்டுரை வெளியாகியிருந்தது. முஸ்லீம் தம்பதியினர் போல வீடு வாடகைக்கு விடப்படுவதாக சொன்ன விளம்பரதாரர்களை தொடர்பு கொண்ட இந்து நாளிதழ் நிருபர்களின் அனுபவங்களும் வீட்டுத் தரகர்கள் மற்றும் வாடகைக்கு அல்லது வாங்குவதற்கு வீடு தேடும் பிற முஸ்லீம்களின் அனுபவங்களும் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இதற்கான எதிர்வினைகள் மூன்று வகையில் அமைந்திருந்தன.

1. ‘நான் முஸ்லீம், தலித் என்று பார்ப்பதில்லை. என் வீட்டில் அசைவ உணவு சமைக்கப்படுவதன் மூலம் வீடு அசுத்தப்பட்டு விடக் கூடாது என்பதுதான் நோக்கம்’

2. ‘முஸ்லீம்கள் பயங்கரவாதிகள், இந்துக்கள் விரும்பாத பழக்கங்களை விடாப்படியாக பின்ப்பற்றுகிறார்கள், அதனால் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று வாடகைக்கு விட மறுக்கிறோம்’

3. ‘முஸ்லீம்கள் இயல்பாகவே சக முஸ்லீம்களுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்கள். மற்ற மதத்தினர் வசிக்கும் பகுதிகளில் வாழ விரும்புவதில்லை’

வெஜிடேரியன் மட்டும் என்பது ஒரு மேல் பூச்சு மட்டும்தான், முஸ்லீம்களுக்கும் தலித்துகளுக்கும் குடியிருக்கும் உரிமை மறுக்கப்படுவதற்கு உண்மையான காரணம் சாதி, மத அடையாளங்கள்தான்’ என்பதற்கு இந்து நாளிதழின் சர்வேயில் பல உதாரணங்கள் இருக்கின்றன.

  • பெங்களூரைச் சேர்ந்த தலித் பெண்ணியவாதியான ருத் மனோரமா ஜெயநகரில் இருந்த தனது அலுவலகத்தை அருகில் இருக்கும் இன்னொரு பெரிய கட்டிடத்துக்கு மாற்ற முயற்சித்த போது அந்த வீட்டின் உரிமையாளர்களான பார்க்க நாகரீகமான, ஆங்கிலம் பேசும், முதிய பார்ப்பன தம்பதியினர் அவருக்கு வாடகைக்கு விட மறுத்து விட்டார்கள். அலுவலகத்தில் உணவு சமைக்கப் போவதில்லை என்ற உண்மை தெரிந்திருந்தும் அவருக்கு வீடு மறுக்கப்பட்டதற்கு காரணம் அவர் ஒரு தலித் கிருத்துவர் என்று தெரிந்திருந்துதான் காரணம்.
  • தலித் கவிஞரும் கன்னடா புத்தக ஆணையத்தின் தலைவருமான சித்தலிங்கையாவுக்கும் ஆதிக்க சாதியினர் பிடியில் இருக்கும் தெற்கு பெங்களூரில் இதே மாதிரி அனுபவம் ஏற்பட்டது.  “என் பெயரை வைத்து நான் ஒரு (ஆதிக்க சாதி) லிங்காயத் என்று வீட்டு உரிமையாளர்கள் நினைத்தார்கள். ஆனால் எனது சாதி என்ன என்று கேட்பதற்கு அவர்களும் கூச்சப்படவில்லை, நானும் தலித் என்று சொல்வதில் தயக்கம் காட்டவில்லை”. அவர் தலித் என்று தெரிந்த உடன் வீட்டு உரிமையாளர்கள் பேச்சு வார்த்தையை உடனடியாக முடித்துக் கொண்டார்கள்.
  • தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பேராசிரியர் ரிஸ்வான் கைசர் சாக்கேத்திலும் முனிர்கா டிடிஏ குடியிருப்பிலும் வீடு தேடும் போது “எல்லாம் நன்றாகவே போய்க் கொண்டிருக்கும், எனது பெயரை வெளியில் சொல்லும் வரை” என்கிறார்.

இந்து நாளிதழின் ஆய்வறிக்கையில் வீடு மறுக்கப்பட்டவர்கள் அனைவரும் தாமாக விரும்பி வாடகைக்கு கேட்டு தொடர்பு கொண்டவர்கள்தான். அவர்களாக சொந்த ‘விருப்பத்தினால்’ முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளில் வாழ போய் விடவில்லை. தாம் விரும்பும் பகுதிகளில் பார்ப்பனீய ஆதிக்க சாதியினரால் குடியிருக்கும் உரிமை மறுக்கப்பட்ட பிறகுதான் வேறு வழியில்லாமல் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளில் இடம் தேடிக் கொள்கிறார்கள்.

  • தங்கள் பகுதிகளில் முஸ்லீம்களுக்கு வீடு வாடகைக்கு கொடுப்பதையும் விலைக்கு விற்பதையும் வீட்டு உரிமையாளர்கள் சங்கங்கள் மூலம் கும்பலாக எதிர்க்கிறார்கள் ஆதிக்க சாதி இந்துக்கள். ‘தனது வீட்டை தாழ்த்தப்பட்ட சாதி அல்லது சிறுபான்மை மதத்தை சேர்ந்த யாருக்காவது வாடகைக்கு விடும் வீட்டு உரிமையாளரை பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்கிறார்கள்’ என்கிறது இந்து நாளிதழின் ஆய்வறிக்கை.
  • வீடு வாடகைக்கு கேட்டு தொடர்பு கொண்ட ‘முஸ்லீம்’ தம்பதியினரை முஸ்லீம்களுக்கு என்று ‘ஒதுக்கப்பட்ட’ இடங்களில் வீடு பார்க்குமாறு கை காட்டுகிறார்கள் வீட்டுத் தரகர்கள்.

◦   தில்லியில் ரோகிணி பகுதியின் தரகர் ரித்தாலா என்ற இடத்தையும்,

◦   ஜனக் புரா பகுதி தரகர் போகல் என்ற காஷ்மீரி மற்றும் ஆப்கன் அகதிகள் வாழும் பகுதியையும்,

◦   நியூ பிரெண்ட்ஸ் குடியிருப்பு பகுதிக்கான தரகர் ஜாமியா நகருக்கு அருகில் இருக்கும் சுக்தேவ் விஹார், ஜசோலா போன்ற பகுதிகளையும் பரிந்துரைத்தார்கள்.

  • முஸ்லீம்களில் மேட்டுக் குடியினர் கூட இந்த ஒதுக்கீட்டிலிருந்து தப்ப முடியவில்லை. கிழக்கு தில்லியின் வசுந்தரா என்க்ளேவில் இருக்கும் அபுல் ்பசல் அபார்ட்மெண்ட் மற்றும் மயூர் விஹாரில் இருக்கும் பஞ்சாபி சவுதாகர் போன்ற குடியிருப்புகள் முஸ்லீம்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மற்ற பகுதிகளில் பணக்கார மேட்டுக் குடி குடியிருப்புகளில் படித்த பணக்கார முஸ்லீம்களுக்குக் கூட வீடு விற்பதும் வாடகைக்கு விடுவதும் மறுக்கப்படுகின்றன.
  • மும்பையின் “வாக்கேஸ்வரில் சில கட்டிடங்களை தவிர பிற பகுதிகளில் முஸ்லீம்கள் உள்ளே நுழைந்து விட முடியாது. முஸ்லீம்களுக்கு வீடு வாடகைக்கு விடவோ விற்கவோ மறுப்பது நகரம் முழுவதும் நடக்கிறது. ஜூஹூ, பாந்த்ரா, பெட்டார் ரோடு, கோலாபா பகுதிகளில் 95% உரிமையாளர்கள் முஸ்லீம்களுக்கு உறுதியாக மறுத்து விடுகிறார்கள். வீடு காலியாக இல்லை அல்லது உறவினர்கள் வருகிறார்கள் என்று ஏதாவது சாக்கு கண்டுபிடிக்கிறார்கள்.” என்கிறார் ஒரு வீட்டுத் தரகர்.

‘சாதி மத ரீதியான பிரிவினைக்கு அரசு அமைப்புகளும் பொறுப்பு’ என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த பாரி என்ற வீட்டுத் தரகர். பெங்களூர் டெவலப்மென்ட் அதாரிட்டி உருவாக்கிய குடியிருப்பு பகுதிகளை சாதிவாரியாக கணக்கெடுத்தால் உயர் தர மனைகள் ஆதிக்க சாதி விண்ணப்பதாரர்களுக்கும், தலித்துகளுக்கும் முஸ்லீம்களுக்கும் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கான குடியிருப்புகளில் மட்டுமே ஒதுக்கீடு கிடைக்கிறது.

ஏதோ தீவிரவாதத்தை வளர்ப்பதற்காகத் திட்டமிட்டே, முஸ்லீம்கள் தனியாகக் குடியிருப்பதுபோல செய்தி நிறுவனங்களும், இந்து மதவெறியர்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்வது அப்பட்டமான பொய். சாதி ஆதிக்க உணர்வு நிரம்பி வழியும் சமூகத்தில் அனைத்துத் தனிக் குடியிருப்புகளுக்கும் காரணம் பார்ப்பனியம்தான். பார்ப்பன ‘மேல்’ சாதியினர் தங்களது புனிதத்தைக் காக்க, தனியாக வாழ்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களும் முஸ்லீம்களும் தனியாக வாழ்வது அவர்கள் மேல் திணிக்கப்பட்ட ஒன்று.

சென்னையைச் சேர்ந்த சுபைர் அகமது என்ற ஆட்டோ ஓட்டுனர்  “கடந்த 30 ஆண்டுகளில் நான் இந்துக்களுக்கு சொந்தமான பல வீடுகளை வாடகைக்கு எடுத்திருக்கிறேன். ஆனால் அது நீண்ட தேடலுக்கு பிறகுதான் சாத்தியமாகிறது. சில வீட்டுக்காரர்கள் ‘நான் அசைவ உணவு சாப்பிடுபவன், வீட்டை சுத்தமாக வைத்திருக்க மாட்டேன்’ என்று சொல்லி வாடகைக்கு தர மறுக்கிறார்கள். கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டு உரிமையாளர் முன்பு ஒரு முறை அந்த பகுதியில் முஸ்லீம் பயங்கரவாதிகள் வாழ்ந்தார்கள் என்று சொல்லி எனக்கு வீடு தர மறுத்தது என்னை மிகவும் அவமானப்படுத்தியது.” என்று தனது அனுபவத்தை சொல்கிறார்.

முசுலீம்களும் கிறித்தவர்களும் தனியாக  வாழ்வது பற்றி பீதியைக் கிளப்பும் இந்துமதவெறியர்கள்தான், தனிக்குடியிருப்பு – தனி வாழ்க்கை முறையை விதியாக்கி – மதமாக்கி – சாதியாக்கி இன்று வரையிலும் அமல்படுத்துகிறார்கள். உலக மனித குலத்தின் ‘சேர்ந்து வாழ்தல்’ என்ற சமூகப் பண்பாட்டிற்கு எதிராகப் ‘பிரிந்து வாழ்தல்’ என்ற மனித விரோதப் பண்பையே பார்ப்பனியம் தனது உயிராகக் கொண்டுள்ளது.

பார்ப்பனர்களுக்கு மட்டும் - விளம்பரம்
பார்ப்பனர்களுக்கு மட்டும் – விளம்பரம்

ஊருக்கு நடுவே கோவில், கோவிலுக்கருகில் குளம், இரண்டைச் சுற்றியும் அக்கிரஹாரம், அக்கிரஹாரத்தில் பார்ப்பனர்கள். அக்கிரஹாரத்தைச் சுற்றி மேலத் தெருக்கள். மேலத்தெருக்களில் வேளாளர், ரெட்டி, நாயுடு, முதலியார், செட்டியார் போன்ற ‘மேல்’சாதியினர். இதை அடுத்து கீழத்தெருக்களில் ‘பிற்படுத்தப்பட்ட மேல்’ சாதியினர். இவர்களை அடுத்து நாவிதர், வண்ணார், குயவர் போன்ற சேவைச் சாதியினர். ஊருக்கு வெளியே சேரி. சேரியில் பள்ளர், பறையர், சக்கிலியர். இந்த பார்ப்பன செட் – அப்பில் இல்லாத கிராமங்கள் எதுவும் இந்தியாவில் கிடையாது.

சாதி இந்துக்கள் பலரும் முசுலீம் மக்களுக்கெதிராகக் கொண்டுள்ள பண்பாட்டு வெறுப்பு, முசுலீம் மக்களின் ஏழ்மை இவைகளே அவர்களிடம் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்துகிறது. நகரங்களில் சேர்ந்து வாழ நினைத்தாலும் முசுலீம்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் யாரும் வீடு தருவதில்லை. அநேக நகரங்களில் முசுலீம்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் அருகருகிலோ, கலந்தோதான் வாழ்கின்றனர். அதிலும் இவர்களில் பெரும்பான்மையினர் ஏழைகளாக இருப்பதாலும் சேர்ந்து வாழ்கின்றனர். கிறித்தவ மதத்திலும் வர்க்க சாதி வேறுபாட்டுக்கேற்பவே சேர்ந்தோ, தனியாகவோ வாழ்கின்றனர்.

கிராமங்களில் சாதி அடிப்படையில் தமக்கென்று வசதியான வசிப்பிடங்களை ஒதுக்கீடு செய்து கொண்ட பார்ப்பன நரித் தந்திரம், நகரங்களில் ‘வெஜிடேரியன்கள் மட்டும்’ என்ற நிபந்தனையை பயன்படுத்தி பார்ப்பனர் அல்லாதவரையும் சிறுபான்மை மதத்தினரையும் தாம் வாழும் பகுதிகளிலிருந்து ஒதுக்கி வைக்கிறது.

ஒருவர் உணவு விடுதி நடத்தும் போது ‘அந்த விடுதியில் என்ன உணவுகள் கிடைக்கும், அவற்றை என்ன விலையில் விற்கலாம்’ என்று முடிவு செய்வது மட்டும்தான் அவருக்கிருக்கும் உரிமை. அவர் போட்டுள்ள விலைப்பட்டியலின் படி விலை கொடுக்க தயாராக இருக்கும் யார் வேண்டுமானாலும் அங்கு சாப்பிட வரலாம். சாதி, மதம், பாலினம் போன்ற காரணங்களை காட்டி ஒரு தரப்பினருக்கு உணவு வழங்க மறுப்பது இன பாகுபாடாக கருதப்படும், அது சட்டப்படி குற்றமாகும்.

நகர்ப் புறங்களில் நிலம் வாங்கி, வீடு கட்டி வாடகைக்கு விடுபவர்களுக்கும் அதே உரிமைகளும் கடமைகளும் இருக்கின்றன. ‘வீட்டின் எந்த பகுதியை வாடகைக்கு விடுவது என்ன வாடகைக்கு விடுவது’ என்று முடிவு செய்வது முதலாளித்துவ சொத்துரிமை அடிப்படையிலான உரிமை. அப்படி முடிவு செய்து வாடகைக்கு விடுவதற்காக வீட்டை  சந்தையில் வைத்த பிறகு அந்த வாடகையை கொடுக்கத் தயாராக இருக்கும் யாருக்கும் வீட்டை வாடகைக்கு விட வேண்டும். அவரது சாதி, மதம் அல்லது உணவுப் பழக்கம் அடிப்படையில் வீடு மறுப்பது குற்றமாக கருதப்பட வேண்டும்.

பாகுபாடு காட்டும் இந்த ஒதுக்கீட்டை நடைமுறையில் நிரூபிப்பது சிரமமாக இருப்பதால் பெரு நகரங்களிலும் நவீன ‘அக்கிரஹாரங்களும்’, ‘மேலத் தெருக்களும்’ வேலி போட்ட அடுக்கு மாடி குடியிருப்புகளின் வடிவில் தொடர்கின்றன.

கிராமங்களில் டீக்கடைகளில் இரட்டைக் குவளை முறையை எதிர்க்கும் சட்ட பூர்வமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து ‘பூப்போட்ட டம்ளர் தலித்துகளுக்கு, பிளைன் டம்ளர் ஆதிக்க சாதியினருக்கு’ என்று கள்ளத் தனமாக செயல்படும் பார்ப்பனீயம் முதலாளித்துவ சமூகத்தின் அனைத்து சட்ட திட்டங்களுக்கும் பெப்பே காட்டி விட்டு தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்பதுதான் நிதர்சனம்.

வீடுகள் தனிநபர் உடமைகளாக இருக்கும் நிலை ஒழிக்கப்பட்டு வசதிகளையும் வாய்ப்புகளையும் பெறுவதற்கான சம உரிமையை அனைவருக்கும் உறுதி செய்யும் பாட்டாளி வர்க்க சர்வாதிகார சோசலிச அரசினால்தான் இத்தகைய பாகுபாடுகளை ஒழிக்க முடியும்.

படிக்க:

பூக்காரம்மா….!

13
பூக்காரம்மா

பூக்காரம்மாபூக்கள்; மென்மைக்கும், பெண்மைக்கும் அடையாளமாக சங்ககாலம் முதல் கவிஞர்களின் சொற்களில் சிக்கிக் கசங்கும் இந்த பூக்களின் அழகிலும் வாசத்திலும் மனதை பறிகொடுக்காதவர்கள்தான் யார்? ஒவ்வொரு பூவுக்கும் ஒரு தனி வாசம் உண்டு என்றாலும், இருபதுக்கும் குறையாத பூ வகைகளின் வாசமும், வியாபரிகளின் தொழிலாளர்களின் வியர்வை வாசத்தோடு சேர்ந்து நம்மை மூர்ச்சையடைச் செய்து பூக்களின் போர்களமாக காட்சியளிக்கும் இடம்தான் சென்னை கோயம்பேடு பூ மார்கெட்.

அதிகால 2-3 மணியிலிருந்தே காய்-கனி விற்பனையில் பரபரப்பாகிவிடும் கோயம்பேடு வளாகத்தில் பூ விற்பனை முழுவீச்சீல் துவங்கும் நேரம் காலை 10 மணி. பெரு வியாபாரிகள், சிறு வியாபாரிகள், கோவில், சுபகாரியம் மற்றும் திருமண ஒப்பந்தக்காரர்கள், தனி நபர்கள் என்று பூக்களை பல தேவைகளுக்காக கொள்முதல் செய்வோருக்கு இடையில் சில்லறை வியாபரத்திற்காக உதிரிப்பூக்களை வாங்குகின்றனர் நமக்கு மிகவும் பரிச்சையமான பூக்காரம்மாக்கள்.

அப்படி ஒரு பூக்காரம்மாள்தான் வசந்தா, வயது 56. கணவர் குடிகாரர், பெற்ற பிள்ளை இருவர் இருந்தும் இவர்களை பராமரிக்கும் நிலையில் அவர்கள் இல்லை. வசந்தாவும் யாரையும் நம்பி வாழும் நிலையை வேண்டாம் என்றே கருதுகிறார்.

காலை 5 மணிக்கு எழுந்து தன் வீட்டு வேலைகளை முடித்த கையோடு, கோயம்பேடு அங்காடிக்கு பஸ், ஷேர் ஆட்டோ என்று மாறி சென்று, கையிலுள்ள பணத்திற்கு தகுந்தார்போல 1 சேர் (300 கிராம்) ரூ- 100-150-வரை சாதாரண தினங்களிலும் விசேஷ நாட்களில் ரூ 200 முதல் 250 வரை விற்கும் உதிரிப்பூக்களை வாங்கிவருகிறார். வீடு திரும்பும் வழியிலே பேருந்து -ஷேர் ஆட்டோகளில் அமர்ந்தபடியே. உதிரிப்பூக்களை கட்ட துவங்கி விடுவார். வீட்டுக்கு வந்ததும் ஓய்வுக்கு எல்லாம் வழியே இருக்காது, மிச்சம் இருக்கிற பூக்களை தானாகவோ அல்லது பிறர் உதவியுடன் கட்டி முடித்த கையோடு அவைகளை கூடையில் வைத்துக் கொண்டு வாடிக்கையாக கொடுக்கும் வீடுகளுக்கு சென்று கொடுத்துவிட்டு அப்படியே மீதி பூ இருப்பின் அவைகளை கூவி விற்றுவிட்டு வருவது தான் வழக்கம் என்றார்.

இந்த காலத்திலே வெறும் பூ வியாபாரத்தை மட்டும் நம்பி குடுபம் நடத்த முடியுமா? என்று கேட்கும் வசந்தா தான் பூ விற்கும் வாடிக்கையாளர்கள் இருவரிடத்தில்  வீட்டு வேலைகளை செய்துவிட்டு, அங்கு அவர்கள் தரும் காபியோ, டிபன்னோ சாப்பிட்டுவிட்டு மீண்டும் கோயம்பேடுக்கு பயணமாகிறார்.  மாலை பூ விற்பனைக்கான பூ வாங்கி வர வேண்டுமே. பயணத்திலே முடியும் வரை கட்டி விட்டு, மார்க்கேட் ரோட்டில் தனக்கென ஒதுக்கப்பட்டுள்ள மரப்பலகையில் வைத்து மீதி பூக்களை கட்டியபடியே பூ வியாபாரத்தை துவங்கிறார்.  இரவு பத்து மணிக்கு முடிகிறது இந்த வியாபாரம். அதன் பின்னர் இரண்டு பேருந்துகள் மாறிப்போய் வீடு சென்று, காலையில் சமைத்த வைத்ததை உண்டு 4-5 மணி நேரம் கூட முழுமையாக உறங்குவதற்குள் மீண்டும் அவரது அடுத்த நாள் துவங்கிவிடுகிறது.

வசந்தா ஒவ்வொரு நாளும் மூலதனமாக போட்ட காசுக்கு மேல், போக்குவரத்து செலவு போக கையில் ரூ 50-இல் இருந்து ரூ 100 வரைதான் தங்குகிறது, சில நாட்களில் முதலுக்கே மோசம் ஆகும், பூக்களாயிற்றே முதல்நாள் விற்கவில்லையெனில் மறுநாள் பயன்படாது. அப்படியான நேரங்களில் மீதமாகும் பூக்களை கோவிலுக்கும், வீட்டு பக்கத்திலே இருக்கும் பெண்களுக்கும் கொடுத்து விடுகிறார். வீட்டு வேலையில் வரும் சம்பளம், தொடந்து பூ வாங்கும் வாடிக்கையாளர்கள் மூலமாக வரும் வருமானம்தான் ரூ 1500 வாடகை, ரூ 300 மின்சார கட்டணத்துக்கு ஆதாரம். உணவு உட்பட மற்ற அனைத்து செலவுகளுக்கும் பூ வியாபாரம் – அதில் நட்டமானால் கடன் என்ற சுழற்சிதான். வசந்தாவின் அன்றாட வாழ்வின் பாடுகளை கேட்கும் போது நமக்கு ஏற்படும் வேதனை கூட அவர் பேச்சில் தெரியவில்லை.

பூக்காரம்மா-262 வயதுடைய  கமலாம்மாள், கணவர், மூன்று மகன்கள், மூன்று மகள்கள், மருமகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் என்று எல்லாரும் இருக்கிறார்கள். கணவர் குடிப்பழக்கத்துக்கு அடிமை, பத்து மாடு வைத்து இருக்கிறார்கள்; மாடுகள் பால் கரப்பதற்கும் மட்டும் கணவர் உதவுவாராம்; அதுவும் காலையில் மட்டும் தான்; மாலையில் முழு போதையில் அவர் இருப்பதால் இவர் தான் அதையும் செய்யவேண்டும். பிள்ளைகள் எல்லாம் தனிக்குடித்தனம் போய்விட்டார்கள். யாரும் இவருக்கு உதவுவதில்லை. இவர் 10 வருடமாக பூவியாபாரத்தில் ஈடுபடுகிறார்.

கமலாம்மாள் பால் வியாபாரத்தோடு பல வருடங்களாக பாரிமுனையில் இருந்த கொத்தவால்சாவடிக்கு காலை மூன்று மணிக்கு எழுந்து போய், காய், பழம் வாங்கி வந்து வியாபாரம் செய்தவர். கொத்தவால்சாவடி மூடி பல வருடம் ஆகியும் இன்றும் காலை 3 மணிக்கு மேல் தன்னால் தூங்க முடிவதில்லை என்கிறார். அங்காடி கோயம்பேட்டுக்கு இடம்மாறியதினால் ஏற்பட்ட சிக்கல் தவிர சர்க்கரை, ரத்த கொதிப்பு போன்ற நோய்களால் உடல் பாதிப்பு இருப்பதால் 25 வருடமாக செய்துவந்த காய்கறி-பழ வியாபரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, 10 வருடங்களாக பூ வியாபாரத்திற்கு மாறிவிட்டார்

“இவ்வளவு பிரச்சனையில ஏன் பூ, பால் வியாபாரம் சேர்த்து செய்யுறான்னு நினைக்காதிங்க இரண்டிலும் நிறைய பாடுபடனும்  என்னை இங்கே எல்லாரும் கல்யாணமாகி வந்ததுலே இருந்து, ”பால்க்காரம்மா, பால்க்காரம்மா வீடு” தான் எங்க வீட்டுக்கு பேரு, அதிலும் கணவர் வழி வந்த பரம்பரை வேலை, அதனாலே தான் அதையும் விட முடியாம, பூ வியாபாரத்தோடு சேர்த்து செய்யிறேன்” என்றார்.

காலை 3 மணிக்கு எழுந்து, மாட்டு கொட்கையில் உள்ள வேலையை பார்த்துவிட்டு, வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, காலையில் பால், தயிர் வாடிக்கையாளர்கள் வீட்டில் சென்று கொடுத்துவிட்டு. கையோடு கோயம்பேடு சென்று பூ வாங்கி வருவராம். விலைக்கு ஏற்ப ”5 அல்லது 6” சேர் பூக்கூட வாங்கி வருவதுண்டு. வீட்டுக்கு வந்து சேரவே மணி மதியம்1 ஆகிவிடும். மாலை வரை பூவை கட்டிவிட்டு, மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு பால் வழங்கும் வேலை இருப்பதால் முழத்துக்கு 1ரூ விதம், பிறரிடம் கொடுத்து, பூக்களை கட்டி வாங்கிக் கொள்கிறார். பால் வியாபாரம் முடிந்தவுடன், பூ வியாபாரத்தை தொடங்கி, வாடிக்கையாளர்களிடம் கொடுத்தும், தெருக்களில் கூவி விற்பது தான் மாலை நேர வேலை. ஒவ்வொரு தெருவையும் 3-4 முறை கண்டிப்பா சுற்றி ஆக வேண்டும், கால், கை, இடுப்பு வலிக்கும், ஆனால் நடப்பது நல்லது அதான் சிரமம் பார்க்காம செய்யுறேன் என்றார். கமலாம்மாளும் கடைவைத்து பூ விற்று வந்தவர்தான், ஆனால் அவருடைய கணவன் போதையில் கடைமுன் செய்யும் அலம்பல்களை சகிக்கமுடியாமல் கடையை மூடிவிட்டு இப்போ தெருவிலேதான் வியாபாரம் செய்கிறார்.

மாடு பராமரிப்பு போக, அதில் வரும் பணத்தில் அவர் குடிப்பதற்காக வாங்கும் கடனுக்கே முக்கால்வாசி போக கையிலே மீஞ்சியிருக்கும் பணம் மற்றும் பூ வியாபாரத்திலே வரும் வருமானம்தான் அவருடைய மற்ற செலவுகளுக்கு. வாடிக்கையாக பூ வாங்குகிறவர்கள் மாதாமாதம் சேர்த்து கொடுக்கும் பணத்தில் கணவருக்கு தெரியாமல் சீட்டு போட்டு வைக்கிறார், ஏதாவது அவசர செலவு வந்தால், அதுதான் ஆதாரம்.

“பூ வியாபாரத்துல வருமானம் ஒரு நாள் இருக்கும், ஒரு நாள் போட்ட முதலும் கிடைக்காது.  50 அல்லது 100  ரூபாய்தான் செலவு போக கையிலே தங்கும். இதுதான் சாப்பாட்டுக்கு, பேரப்பசங்களை பார்த்தா அதுங்க கையிலே ஏதாச்சும் கொடுப்பேன். கையிலே சுத்தமா காசு இல்லாத நேரமும் இருக்கும் அப்போ கடன் சொல்லிதான் பூ வாங்கி, வித்து கடனை மறுநாள் கட்டுவேன். இப்படிதான் போவுது எங்க வாழ்க்கை. பிள்ளைங்க என்னை இப்ப பார்க்கலேனாக்கூட போகட்டும். என் கை, கண், கால் எல்லாம் இப்போ நல்லாதான் இருக்கு, நான் கம்பு ஊன்றி நிற்கும் போது எதனா செஞ்சா போதும். உடம்பு வலி ஒரு நாளைப் போல் இருக்காது, கஷ்டம்னு பார்தா சோறு எங்கிருந்துவரும்” என்கிறார். வயது 62 ஆகியும் இன்னமும் நாளெல்லாம் உழைத்து தன் குடும்பத்தை காப்பாற்றும் கமலாம்மாள்.

அப்பார்ட்மென்ட் வாசலில் பூ விற்கும் முனியம்மாவுக்கு வயது 58 இருக்கும். கணவனை இழந்து 10 வருடம் ஆகிறது. தன் ஒரே மகள் திருமணமாகி ஒரே வருடத்தில் தன் கணவனை இழந்து வீட்டோடு வந்துவிட்டாள். இது நடந்து 17 வருடம் ஆகி 17 வயதில் ஒரு பேத்தியும் இருக்கிறாள். மகளும், முனியம்மாவும் வீட்டு வேலைக்கு போகிறார்கள், கணவன் இருந்த வரை கூலி வேலைக்கு போய் சம்பாதித்துவந்தார். அவர் இறந்தபின் முனியம்மாவுக்கு பூ வியாபாரம்தான். இரத்த கொதிப்பு வியாதியால் அவதிப்படும் அவருக்கு அடிக்கடி மயக்கம், தலைச்சுற்றல், கால் வீக்கம் வருவதால் வீட்டு வேலைக்கு போகாமல், இரு அப்பார்ட்மெண்ட்டை தினமும் சுற்றி பெருக்குவது, வாரத்துக்கு ஒரு முறை மாடிப் படி சுத்தம் செய்வதுடன் இந்த பூ வியாபாரத்தையும் செய்கிறார்.

காலை 4-5 மணிக்கு எழுந்து, மகளும் இவருமாக வீட்டு வேலையை முடித்துவிட்டு பக்கத்தில் இருக்கும் இரண்டு – மூணு வீட்டுக்கு முறைவாசல் செய்துவிட்டு பேத்தியை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, இவர் மட்டுமாக பஸ், ஷேர் ஆட்டோவில் சென்று பூ வாங்கி வருகிறார். ஒரு வாரம் முழுக்க கடன் சொல்லி பூக்களை வாங்குகிறார், கையில் கிடைக்கும் காசைக்கொண்டு அடுத்த வாரம் கடனை அடைக்கிறார். வாங்கிவரும் பூக்களை அப்பார்ட்மெண்டு பின்புறத்தில் உட்கார்ந்து கட்டிவிட்டு, பூக்களை அப்பார்ட்மெண்டு வாடிக்கையாளர்களிடம் கொடுத்துவிட்டு மீதியை அப்பார்ட்மெண்ட் கேட்டில் மாட்டி வைத்து விடுகிறார். கேட்டுக்கு பக்கத்திலேயே நின்றபடி சத்தமில்லாமல் தெருவில் வருவோர் போவோரிடம் விற்றுவருகிறார். பலமாக சத்தம் போட்டு விற்றால் அப்பார்ட்மென்ட்டில் வாழ்பவர்களுக்கு தொந்திரவாக இருக்கும் அப்புறம் அப்பார்ட்மெண்ட் வேலை போய்விடும் என்று அசோசியேஷனில் சொல்லிவிட்டார்களாம்.

“யானைக் கால் போல் வீங்கியிருக்கும் இந்த காலை வைத்துக் கொண்டு நான் எங்கு போவேன். ஆண் துணையில்லாத என் குடும்பத்தில் நானும் போய் சேர்ந்துட்டா, என் மகளும் பேத்திக்கும் யாரு துணை? பூ வியாபாரத்தில் 50 ரூபா ஒரு நாளுக்கு கிடைத்தா பெரிசு. சும்மா இருந்தா யாரு கொடுப்பாங்க. வேலை கஷ்டம்மாதான் இருக்கு, வயசுக்கு வந்த பெண்பிள்ளை இருக்கே? வர காசு வாடகை ரூ 2000 கொடுக்கவும், ரூ 300 -400 மின்சார கரடணத்துக்கு சரியா இருக்கும். மூணுபேரு சாப்பிடனும், துணிமணி வேனும், பேத்தி தனியார் பள்ளியில் படிக்குறா அதுக்கு பீஸ், டியூஷன் காசு வேற சமாளிக்கனும். மாத்திரை மருந்து எல்லாம் இரத்த கொதிப்புக்கு சாப்பிடுறது இல்லை, பிரச்சினையின்னா மெடிக்கல்ஸில் மருந்து வாங்கி சாப்பிடுவோம் மற்றது எல்லாம் கடவுள் விட்ட வழி” என்கிறார் முனியம்மா.

சுசீலா வயது 40. இவர் கடந்த 12 வருடமாக தினமும் கொளத்தூரிலிருந்து வடபழனி வந்து பூ கட்டி வியாபாரம் செய்துவிட்டு இரவு 10 மணிக்குமேல் பஸ் ஏறி மீண்டும் கொளத்தூருக்கு போகிறார்.

வடபழனியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் மகள் படிப்பதற்காகவே, அதன் அருகில் இருக்கும் தன் அம்மா வீட்டில் விட்டு தன் ஒரே மகளை வளர்த்துவருகிறார். கணவனுக்கு கோயம்பேட்டில் கூலி வேலை விடியற்காலை 2 -3 மணிக்கு அவரை வேலைக்கு அனுப்பிவிட்டு, வீட்டு வேலை முடித்து தானும் கோயம்பேடுக்கு போய் பூக்களை வாங்கி எடுத்துக் கொண்டு, அப்படியே வடபழனியில் சிறியதாக பழக்கடை வைத்து இருக்கும் தன் பெற்றோருக்கும் தேவையான பழங்களை வாங்கி வந்து வியாபாரத்தை தொடங்கிவிடுகிறார்.

“சில நாள் பூவுடன் சேர்த்து கீரை, தேங்காய், எலுமிச்சைபழமெல்லாம் விக்கிறதுண்டுங்க, வடபழினிங்கறதுனால விசேஷ நாள்ல பூ வியாபாரம் சுருக்க முடிஞ்சிடும் ஆனா அன்னிக்கெல்லாம் உதிரிப்பூ கிராக்கியா விக்குறதுனால வருமானம் மத்த நாளைவிட கம்மிதான். வியாபாரம் நல்லா இருந்தா செலவும் போக கையில் ரூ 100 கிடைக்கும். பூ விக்காம மிஞ்சிப்போச்சுன்னா கோவிலுக்கு கொடுத்துவிட்டு வீட்டுக்கு போயிடுவேன். தினமும் வீடு போக 11 மணியாகிடும். மறுநாள் காலை மீண்டும் 2.30 மணிக்கெல்லாம் எழுந்திருச்சி அவரை வேலைக்கு அனுப்பனுமே. கஷ்டம்தான், ஆயிரம் பிரச்சினை இருந்தாலும், செய்யுற தொழில் சாமிக்கு சமானம், நமக்கு ஒரு வேளை சோறு போடுதுல்லே அதை குறை சொல்ல்லாமா? என் பொண்ணு படிச்சு நல்ல வேலைக்கு போவனும் என்ன மாதிரி பூவெல்லாம் கட்டி கஷ்ட்டப்படக் கூடாது” என சொல்லிமுடித்தார் சுசீலா.

முன்புபோல கல்யாண, சுபகாரியங்களுக்கு, பூ தேவைகளை, தெரிந்த பழக்கமான பூக்காரம்மாக்களிடம் சொல்லி வைத்து வாங்கும் பழக்கமும் இப்போது மிகவும் குறைந்துவிட்டது. இப்போது கல்யாணம் மற்றும் எல்லா சுபகாரியங்களை கான்டிராக்டர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். அந்த நிகழ்ச்சிக்கு தேவையான சமையல் முதல் வரவேற்ப்பு, மேடை அலங்காரம், வாழைமரம் கட்டுவது, பூ, மாலைகள் என்று சகலமும் அவர்களே ஏற்பாடு செய்வார்கள். 100-200 முழம்கூட தேவைப்படும் இவ்விசேஷங்களுக்கு பூ கட்டி தருவது அதில் வரும் பணம் பூக்காரம்மாக்களுக்கு பெரிய தொகை. ஆனால் அது இப்போது இல்லை

கடந்த 20 ஆண்டுகளாக தாராளமய பொருளாதாரம் தோற்றுவித்திருக்கும் புதிய தலைமுறையினர் பூ வைப்பது பேஷன் அல்ல கட்டுப்பெட்டித்தனமானது என்ற கருதுகின்றனர்.  தங்கள் உடைக்கு பொருந்தாது, முடியின் ‘ஸ்டைலுக்கு’ ஒத்துவராது என  பூக்களை புறக்கணிக்கின்றனர். அழகு, பேஷன் என்றால் அது மேற்கத்திய பெண்களாகவே நடை, உடை, அலங்காரம் எல்லாம் இருத்தல் அவசியம் என்று நினைக்கும் ஆண், பெண்களை ஊடகங்கள் தயார் செய்கிறது. மற்றபடி நம் நாட்டு ‘பண்பாட்டை’ கொண்டாடும் ‘டிரெடிஷினல் டே” என்று ஐ.டி கம்பெனியிலிருந்து, கான்வென்ட் பள்ளிகள் கல்லூரிகள் என்று கடைப்பிடித்து வருகிறார்கள். அன்று மட்டும் பூக்களுக்கு கூந்தலேறும் சலுகை அளிக்கப்படுகிறது.

பூக்காரம்மா-3இப்படி ஒருபக்கம் ஆசாமிகள் பூக்களை கைவிட்டாலும் சாமிகள் கைவிடுவதில்லை, பக்தியானாலும் பகட்டாக காட்டிக்கொள்ளும் இக்காலத்தில் சாமிகளுக்குதான் பூ அதிகமாக வாங்கப்படுகிறது. ஆடி மாதம் துவங்கி வரிசையாக வரும் பண்டிகைகளில் பூக்களின் விலை அதிகம் இருக்கும் நாட்களை முன்கூட்டியே அறிந்த மக்கள் 2 நாட்கள் முன்பே தேவையான பூக்களை வாங்கி குளிர்சாதன பெட்டியில் வைத்துக் கொண்டு சாமிக்கு வழிபடுவோரும் உண்டு. தேவையான வகை, அளவு பூக்களை பூக்காரம்மாக்களிடம் முன்கூட்டியே சொல்லி வைத்து வாங்குவோரும் உண்டு. மலர்களுக்கு மவுசு கூடும் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில்தான் பூக்காரம்மாக்களுக்கு துன்பமும் கூடுகிறது வாங்கி வரும் பூவின் விலையே அதிகம் இருப்பதால் விலையை கூட்டி விற்கிறார்கள்.

ஆனால் வாடிக்கையாளர்களில் விலை உயர்வின் நியாயத்தை பொருட்படுத்தாமல் எப்படியாவது அதைக் குறைக்க பேரம் பேசும் ஆட்கள்தான் பெரும்பான்மை. நகைக்கடை, துணிக்கடை, ஹோட்டல், கால் டாக்ஸி, சினிமா, தியேட்டர், சூப்பர் மார்கேட், மால்கள், பழமுதிர் சோலைகள் போன்ற இடங்களிலெல்லாம் சொல்லும் விலையை கொடுத்துப் புரட்சி போராட்டம் செய்யும் நடுத்தர மக்கள், ஐந்துக்கும் பத்துக்கும் கணக்கு பார்ப்பது பூக்காரர்கள், காய், பழங்களை தள்ளு வண்டியில் ஏற்றி விற்கும் உழைக்கும் மக்களிடம்தானே. சரவணபவன் அண்ணாச்சியைப் போல, ஒரு இட்லிக்கு அதன் செய்பொருள், உழைப்பு, மதிப்பை கொண்டு விலையை நிர்ணயிக்காமல், பிராண்ட் மதிப்பு, ஏ.சி. அதற்கு செலவாகும் மின்சாரம், எல்லாம் சேர்த்து, வெளியே விற்பதை விட 5 மடங்கு அதிகமாக பில்போடுவதற்கு உழைக்கும் மக்களின் நாணயம் இடம் கொடுப்பதில்லை. முடிந்தவரை சரியான விலைக்கு பூ விற்கும் இவர்கள் நேரம் போகப்போக பழைய விலைக்கு நட்டத்துக்கு கொடுக்கிறார்கள் போட்ட காசு வரவில்லையென்றாலும் வருவது வரட்டும் என்று விற்றுத்தீர்க்கிறார்கள். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி விலையைக் குறைத்து வெற்றிப்பெருமிதம் அடைகின்றனர் வாடிக்கையாளர்கள்.

நடுத்தர-மேல்தட்டு வர்கங்களைப்போல சொத்து சேர்க்கவோ, வீடு கார், மற்றும் பிற நுகர்பொருள் மோகத்தில் பூக்காரம்மாக்கள் கடன்படுவதில்லை, மிஞ்சிப் போனால் சீட்டு கட்டுகிறார்கள் அதில் நகை எடுப்பதும், பின்பு அதனை தேவைக்கு ஏற்ப விற்பதும், அடகு வைப்பதும் – எடுத்த சீட்டு பணத்தின் மீதியுள்ள தவணைகளை கட்டி முடிப்பதும் என்று எந்தத்திட்டத்துக்கும் கட்டுப்படாத நிச்சயமின்மையே அவர்கள் வாழ்க்கையின் எதார்த்தம்.  இதில் குழந்தைகள் கல்வி திருமணம் என்று வந்துவிட்டால் கடனில் சிக்கி அத்தோடு வாழ்க்கையே கடன்பட்டு போய்விடுகிறது.

பூக்காரம்மாக்கள் சினிமா நாயகர்கள் அல்ல ஒரே பாட்டில் கோடீசுவரர்களாக.  ஆண்டுக்கணக்கில் அதிகாலை எழுந்ததுமுதல் நள்ளிரவு சில மணிநேரம் உறங்குவது வரை இடைவிடாது கடுமையாக உழைத்த்தாலும் இவர்கள் இன்னமும் அன்றாடங்காய்ச்சிகள்தான். இன்றைய விலைவாசியில் இந்த வியாபாரத்தின் மூலம்அவர்கள் சம்பாதிக்கும் ஐம்பது-நூறெல்லாம் எவ்வளவு குறைவானது என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை. அதை சமாளிக்க வீட்டு வேலை போல இரண்டாவதாக ஒரு வேலையையும் சேர்ந்து செய்யவேண்டிய நிர்பந்த்த்தை வாழ்க்கை அவர்கள் மீது சுமத்துகிறது.   பூ வியாபாரத்தால் இவர்களுடைய வாழ்நிலையில் பெரிய மாற்றம் அடைந்துவிட போவதில்லை என்பதை இவர்களுக்கு தெரியாமலில்லை. இருப்பினும் அவர்களிடம் இழப்பதற்கும், கொடுப்பதற்கும் தங்கள் உடல் உழைப்பு தவிர வேறு ஒன்றுமில்லை. இப்படி நாள் முழுதும் உழைத்தால்தான் ஒரு வேளை சோறு நிச்சயம். தான் பாடுகளை பிள்ளைகளும் படக்கூடாது என மீட்டர் வட்டிக்கு வாங்கியாவது பிள்ளைகளை தனியார் பள்ளயில் படிக்க வைக்கிறார்கள். அரசாங்கம் தங்களுக்கு உதவுமென்றால்லாம் நம்புவதில்லை, அப்படி நம்புவதற்கு இவர்கள் மாத சம்பளத்தோடு செட்டில்லான வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டு ரோடு சரியில்லையென்றால் வாட் ஸ்டேட் கவர்மென்ட் வாட் சென்ட்ரல் கவர்மென்ட்னு சொல்லுற நடுத்தரவர்க்க அறிவு ஜீவிகள் இல்லையே.

ஒரு முழம் பூவுக்கு ஒரு ரோஜாப்பூவை இனாமாக கொடுப்பதும் வாடிக்கையாளர்கள் தேவை அறிந்து அவர்களுக்கு தேவையான பூக்களை கட்டி கொடுப்பதும், ஏழை பள்ளி மாணவிகளை கையில் வைத்து இருக்கும் காசுக்கு ஏற்றவாரு பூக்கொடுப்பதும், துன்பமயமான வாழ்க்கையின் சுவடு கூட முகத்தில் தெரியாமல் வாடிக்கையாளர்களிடம் மலர்ந்த முகத்துடன் மலர்களை விற்கும் இந்த பூக்காரம்மாக்கள் போராளிகளே, பூ வாசத்துடன் கறைந்து விடும் இவர்களின் கடின உழைப்பின் வியர்வையும், கண்ணிரும் மகத்தானவையே!

_________________________________________

– வினவு செய்தியாளர்கள், (படங்கள் – கூகிள்)
__________________________________________

நரோடா பாட்டியா படுகொலை தீர்ப்பு: பத்துக்கு ஒன்பது பழுதில்லை!

18
நரோடா பாட்டியா
நரோடா பாட்டியா முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பொழுது ஈவிரக்கமின்றி எரித்துக் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள்

குஜராத் முசுலீம் படுகொலை தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான வழக்குகளுள், ஒன்பது வழக்குகளை மட்டும் உச்ச நீதிமன்றம் தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து, அவற்றின் புலன் விசாரணையைச் சிறப்புப் புலனாவுக் குழுவிடம் ஒப்படைத்திருந்தது.  அவ்வழக்குகளில் ஒன்றான நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் 32 பேரைத் தண்டித்துத் தீர்ப்பு அளித்திருக்கிறது, சிறப்பு விரைவு நீதிமன்றம்.

அகமதாபாத் நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முசுலீம்களின் காலனியான நரோடா பாட்டியாவில் நடந்த இத்தாக்குதலின்பொழுது 97 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த 97 பேரில் 30 பேர் ஆண்கள்; 32 பேர் பெண்கள்; 35 பேர் குழந்தைகள் மற்றும் சிறுவர்-சிறுமியர்.  இப்படுகொலையின்பொழுது கொல்லப்பட்டோரில் பெரும்பாலோர் கண்டம் துண்டமாக வெட்டப்பட்டு, குற்றுயிராகக் கிடந்த அவர்களின் மேல் மண்ணெண்ணெ ஊற்றப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டனர்; பெண்கள் கும்பல் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, பின் தீவைத்துக் கொல்லப்பட்டனர்; இப்படி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டவர்களுள் 20 நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தையும், ஒன்பது மாத நிறை கர்ப்பிணியான கவுசர் பானுவும் அடக்கம்.

இப்படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள 32 பேரில், அப்படுகொலை நடந்த சமயத்திலும் தற்பொழுதும் நரோடா பாட்டியா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவுள்ள மாயாபென் கோட்னானி; குஜராத் மாநில பஜ்ரங் தள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாபு பஜ்ரங்கி; பா.ஜ.க.வைச் சேர்ந்த அகமதாபாத் மாநகராட்சி மன்ற உறுப்பினர் கிஷன் கோரானி ஆகியோரோடு, விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த  பிபின் பாஞ்சால், அசோக் சிந்தி, சுரேஷ் சாரா உள்ளிட்டு, அவ்வமைப்பைச் சேர்ந்த ஏழு உள்ளூர் தலைவர்களும் அடக்கம்.

கோத்ரா ரயில் தீ விபத்து நடந்த மறுநாளே 10,000-க்கும் அதிகமான இந்து மதவெறிக் குண்டர்கள் நரோடா பாட்டியைச் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்திய சமயத்தில், அத்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த கோட்னானி கைத்துப்பாக்கியோடு அப்பகுதியைச் சுற்றிசுற்றி வந்ததோடு, இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்குத் தேவையான ஆயுதங்களையும், மண்ணெண்ணெயையும் சப்ளை செய்தார். பெண்களையும் குழந்தைகளையும் தீயில் போட்டுத் துடிதுடிக்கக் கொன்ற வெறியாட்டத்துக்குத் தலைமை தாங்கிய மாயாபென் கோட்னானி ஒரு மகப்பேறு மருத்துவர் என்பது முரண்நகைக்கு எடுத்துக்காட்டு; அப்படிபட்ட ஈவிரக்கமற்ற கொலைகாரியை, மோடி தனது அமைச்சரவையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத் துறையின் துணை அமைச்சராக்கி அழகு பார்த்தார் என்பது அவரது குரூரப் புத்திக்கு எடுத்துக்காட்டு.  இப்படுகொலையின் இன்னொரு தளகர்த்தாவான பாபு பஜ்ரங்கி, தான் எப்படியெல்லாம் முசுலீம் பெண்களையும், குழந்தைகளையும் துடிதுடிக்கக் கொன்றேன் என்பதை தெகல்கா இதழின் நிருபர் ஆஷிஷ் கேதான் எடுத்த இரகசிய பேட்டியில் எகத்தாளத்தோடு பட்டியலிட்டிருக்கிறான்.

நரோடா பாட்டியா
நரோடா பாட்டியா படுகொலைக்காகத் தண்டிக்கப்பட்டுள்ள இந்து மதவெறி பயங்கரவாதிகள் மாயாபென் போட்னானி (இடது) மற்றும் பாபு பஜ்ரங்கி

மாயாபென் கோட்னானி, பாபு பஜ்ரங்கி ஆகியோர் தலைமையில் வந்த இந்து மதவெறி பயங்கரவாதக் கும்பல்தான் நரோடா பாட்டியா படுகொலையைத் தூண்டிவிட்டு நடத்தியது என்பதற்கு இப்படி அநேக ஆதாரங்களும், நேரடி சாட்சியங்களும் இருந்தபோதும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மிகக் கொடூரமாக நடத்தப்பட்ட இப்படுகொலையை, கோத்ராவில் இந்துக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்வினையாகவும், இந்துக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு நடத்திய தாக்குதலாகவும் கூறிவந்தார்.  ஆனால், சிறப்பு விரைவு நீதிமன்றத்தின் பெண் நீதிபதி ஜோஸ்னா யாக்னிக், இத்தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட சதிச் செயல்; இதனை கோத்ராவின் எதிர்வினை எனக்கூறி, தாக்குதலின் கொடூரத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது எனத் தீர்ப்பில் குறிப்பிட்டு, மோடியின் வஞ்சகமும் திமிரும் நிறைந்த புளுகு மூட்டையை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

மாயாபென் கோட்னானியை நரோடா பாட்டியா படுகொலையின் சூத்திரதாரியெனக் குறிப்பிட்டுள்ள  நீதிபதி ஜோஸ்னா யாக்னிக், அவருக்குச் சதி, கொலை, முசுலீம்களுக்கு எதிரான மதவெறியைத் தூண்டிவிடுதல் உள்ளிட்டப் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் மொத்தமாக 28 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்திருக்கிறார்; பாபு பஜ்ரங்கிக்குச் சாகும் வரையில் சிறை தண்டனையும், சுரேஷ் சாரா உள்ளிட்ட இந்து மதவெறிக் கும்பலைச் சேர்ந்த ஏழு உள்ளூர் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் 31 ஆண்டுகள் சிறை தண்டனையும்; மற்ற 22 குற்றவாளிகளுக்கு 14 ஆண்டு கால ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது.

கோட்னானி உள்ளிட்டுக் குற்றவாளிகள் அனைவரும் பல்வேறு கிரிமினல் சட்டப்பிரிவுகளின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைக் காலத்தை ஏககாலத்தில் இன்றி, முழுமையாகவும் மொத்தமாகவும் சிறையில் கழிக்க வேண்டும் எனத் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.  குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஒருவர் தலைமறைவாக இருப்பதால், அவருக்கான தண்டனை தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை.  அதேசமயம், இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்த போலீசு ஆவாளர் மைசூர்வாலா உள்ளிட்ட 29 பேருக்கு எதிரான சாட்சியம் வலுவாக இல்லையெனக் கூறப்பட்டுச் சந்தேகத்தின் பலனின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Ž Ž”இத்தீர்ப்பு இந்திய அரசின் மதச்சார்பின்மையை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்திருப்பதாகவும் பொதுமக்களின் உரிமையைக் காப்பதில் அரசின் உறுதியை வெளிப்படுத்தியிருப்பதாகவும்” குறிப்பிட்டு, நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளில் ஒரு சாரர் இத்தீர்ப்பை வானளாவப் புகழ்ந்து வருகின்றனர். அதாவது, தற்பொழுதுள்ள அரசியல் அமைப்பு, சட்டதிட்டங்களின்படியே இந்து மதவெறி பயங்கரவாதிகளை, அவர்கள் அதிகாரப்பீடத்தின் உச்சியில் இருந்தாலும் தண்டித்துவிட முடியும் என்ற நம்பிக்கையைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட இத்தீர்ப்பை உதாரணமாகக் காட்டிவருகின்றனர்.

இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கதெனினும், அப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதியை வழங்கவில்லை. குறிப்பாக, இப்படுகொலைக்குத் துணையாக நின்ற எந்தவொரு போலீசுக்காரனையும் இத்தீர்ப்பு தண்டிக்கத் துணியவில்லை. நரோடா பாட்டியா படுகொலை நடந்தபொழுது அந்தப் பகுதியின் போலீசு ஆவாளராக இருந்த கே.கே. மைசூர்வாலா, இவ்வழக்கின் முதன்மைக் குற்றவாளியான பின் பாஞ்சாலுடனும், நரோடா காவ் என்ற பகுதியில் முசுலீம்களை வேட்டையாடிக் கொண்டிருந்த விசுவ இந்து பரிசத்தின் மாநிலப் பொதுச் செயலர் ஜெதீப் படேலுடனும்; அகமதாபாத் நகரத் துணை போலீசு கமிசனர் பி.பி. கோந்தியா, மாயாபென் கோட்னானி மற்றும் ஜெதீப் படேலுடனும்; படுகொலையை நடத்திவந்த மாயாபென் கோட்னானி முதலமைச்சர் அலுவலகத்துடனும், உள்துறையின் துணை அமைச்சராக இருந்த  கோர்தன் ஜடாபியாவுடனும் கைபேசி வழியாகத் தொடர்பு கொண்டிருந்ததற்கான ஆதாரங்களை, குறிப்பாக படுகொலை நடந்து கொண்டிருந்த சமயத்தில் அவர்களுக்கு இடையே நடந்த உரையாடல்களை ராகுல் சர்மா என்ற போலீசு அதிகாரி சி.டி.யில் பதிவு செது, அதனை நானாவதி கமிசனிடம் சாட்சியமாக அளித்தார்.

ராகுல் சர்மா நானாவதி கமிசனிடம் அளித்த சி.டி.யைப் பரிசீலனை செய்த வழக்குரைஞர் முகுல் சின்ஹா அதனை நரோடா பாட்டியா வழக்கிலும் சாட்சியமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாகச் சிறப்பு நீதிமன்றத்தில் வாதாடினார்.  இதனையடுத்து அந்த சி.டி.யின் உண்மைத்தன்மையைப் பரிசீலித்து, அறிக்கை அளிக்குமாறு சிறப்புப் புலனாவுக் குழுவிற்கு நீதிபதி யாக்னிக் உத்தரவிட்டார். ஆனால், சிறப்புப் புலனாவுக் குழு நீதிமன்றம் கோரிய அறிக்கையை உரிய காலத்தில் அளிக்காமல், தீய உள்நோக்கத்தோடு காலம் கடத்தியது.  வழக்கை விசாரித்த சிறப்பு விரைவு நீதிமன்றமும் இத்தாமதத்தையே காரணமாகக் காட்டி, கொலைகாரர்களுக்கு அனுசரணையாக நடந்துகொண்ட போலீசு அதிகாரிகளைத் தண்டிக்காமல் விடுவித்துவிட்டது.  அதனால்தான், இப்படுகொலையின்பொழுது தனது 19 உறவினர்களை இழந்து நிற்கும் இம்ரான் அக்தர் ஷேக்,  இத்தீர்ப்பை 50% நீதி எனக் குறிப்பிட்டுள்ளார்.

நரோடா-பாட்டியா
நரேந்திர மோடி அரசு நடத்திய முஸ்லீம் படுகொலைக்கு நீதி கேட்டு நெடியதொரு போராட்டம் நடத்திவரும் தீஸ்தா சேதல்வாத், வழக்குரைஞர் முகுல் சின்கா மற்றும் தெகல்கா நிருபர் ஆஷிஷ் கேதான்.

இரண்டாவதாக, இத்தீர்ப்பு நீதிமன்றத்தின் முனைப்பு காரணமாகவோ, உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாவுக் குழுவின் நீதி வழுவாத் தன்மையின் காரணமாகவோ கிடைத்துவிடவில்லை.  இப்படிபட்ட தீர்ப்பினைப் பெறுவதற்கு, இந்து மதவெறிக் கும்பல் நடத்திய தாக்குதலின்பொழுது தப்பிப் பிழைத்தவர்களும், நேரடி சாட்சிகளும் அவர்களுக்கு உறுதுணையாக நின்ற தீஸ்தா சேதல்வாத், வழக்குரைஞர் முகுல் சின்கா உள்ளிட்ட பல சமூக ஆர்வலர்களும் உள்ளூர் நீதிமன்றம் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை ஒரு பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது.  அப்போராட்டம் சட்டவரம்புகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டதுதான் என்றபோதும், அதற்காக அவர்கள் தங்கள் உயிரையே பணயம் வைக்க வேண்டியிருந்தது.

தெகல்கா ஆங்கில வார இதழின் நிருபர் ஆஷிஷ் கேதான் இப்படுகொலைகள் பற்றி இரகசியமாகப் புலனாவு செய்து வெளியிட்ட கொலைகாரர்களின் வாக்குமூலங்கள், நரோடா பாட்டியா வழக்கில் மாயாபென் கோட்னானி, பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட இந்து மதவெறிக் கும்பலின் தலைவர்களைத் தண்டிக்க முக்கிய சாட்சியங்களாகப் பயன்பட்டுள்ளன.  ஆஷிஷ் கேதான் இந்த இரகசியப் புலனாவை ஆறு மாதங்களாக நடத்தி வந்ததைப் பற்றி இப்படிக் கூறிகிறார் – “இந்தப் பயணத்தில் பயமும் நம்பிக்கையும்தான் என் தோழர்கள்.  உண்மையைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையும், அதனாலேயே விழுங்கப்படுவோம் என்ற பயமும்; கொலைகாரர்களை வேட்டையாட முடியும் என்ற நம்பிக்கையும் நான் வேட்டையாடப்படலாம் என்ற பயமும்; பயம் நிரந்தர நிழலாகத் தாக்குவதற்குத் தயாராகத் தோளில் அமர்ந்துள்ளது.”

இப்படி உயிரைப் பயணம் வைத்து எடுக்கப்பட்ட இந்தப் புலனாய்வின் உண்மைத்தன்மையை நரோடா பாட்டியா வழக்கைக் கண்காணித்து வந்த உச்ச நீதிமன்றம்கூட உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை.  தெகல்கா இதழ் வெளியிட்டுள்ள சாட்சியங்களை நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி தீஸ்தா சேதல்வாத் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், “நாங்கள் உடனடியாக இதில் தலையிட மாட்டோம்; காலம் வரும்பொழுது தெகல்காவின் டேப் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என அலட்சியமாகத் தீர்ப்பளித்தார்கள், நீதிபதிகள்.  இதன் பின் இது குறித்து தேசிய மனித உரிமை கமிசனிடம் தீஸ்தா முறையிட்டார்.  அப்பொழுது அக்கமிசனின் தலைவராக இருந்த நீதிபதி ராஜேந்திர பாபு, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி  இந்த டேப்பின் உண்மைத்தன்மை குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்திரவிட்டார்.

‘‘சி.பி.ஐ.-க்குப் பதிலாக, இந்த டேப்பின் உண்மைத்தன்மையை விசாரிக்கும் பொறுப்பு ராகவன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாவுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், இந்த சாட்சியங்களை அவர்கள் குழிதோண்டி புதைத்திருப்பார்கள்” எனக் குறிப்பிடுகிறார், தீஸ்தா சேதல்வாத்.   இது மட்டுமின்றி, நரோடா பாட்டியா படுகொலை வழக்கு விசாரணை சிறப்புப் புலனாவுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகும்கூட, அக்குழு மாயாபென் கோத்னானியைக் குற்றவாளியாக வழக்கில் சேர்க்காமல் இழுத்தடித்து வந்தது. இதற்கு எதிராகவும் நாங்கள் போராடிய பிறகுதான் அவரது பெயர் சேர்க்கப்பட்டது எனச் சிறப்புப் புலனாவுக் குழுவின் யோக்கியதையை அம்பலப்படுத்தியிருக்கிறார், அவர் (தெகல்கா, இதழ் எண்.36, பக்.42-43).  .

உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாவுக் குழுவின் விசாரணை என்பது உண்மையில் நயமாகவும், வஞ்சகமாகவும் நடந்த குஜராத் போலீசு விசாரணைதான் எனக் குற்றஞ்சுமத்துகிறார், ஆஷிஷ் கேதான் (தெகல்கா, இதழ் எண்.36, பக்.37).  இச்சிறப்புப் புலனாவுக் குழு மாயாபென் கோட்னானி, பாபு பஜ்ரங்கி போன்ற சில முதலைகளை மட்டும் பலிகொடுத்துவிட்டு,  படுகொலை குற்றச்சாட்டிலிருந்து மோடி என்ற திமிங்கலத்தையும், உயர் போலீசு அதிகாரிகள், துணை அமைச்சர்கள் உள்ளிட்ட பல சுறாமீன்களையும் தந்திரமாகத் தப்பவைத்துவிட்டது.

‘‘இவை போன்ற பல ஓட்டைகளை நீதிமன்றத்திடமும், சிறப்புப் புலனாவுக் குழுவிடமும் காணமுடியும்.  இவற்றுக்கு எதிராகவெல்லாம் நாங்கள் போராட வேண்டியிருந்தது; இப்படிப் போராட வேண்டியிருந்த ஒவ்வொரு முறையும் நாங்கள் பல அச்சுறுத்தல்களை, மோசடியான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது” எனக் குறிப்பிடுகிறார், தீஸ்தா.

நரோடா-பாட்டியா
இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்கு எதிராகக் துணிந்து சாட்சியமளித்த (இடமிருந்து) மெஹ்முதா பீபி, ஷாஜஹான் மிஸ்ரா, சையத் ரூபினா உள்ளிட்டோர்

நரோடா பாட்டியா வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராகச் சாட்சியம் அளித்தவர்களுள் பெரும்பாலோர் பெண்கள்.  இவ்வழக்கு விசாரணை நெடுகிலும் அவர்கள் காட்டிய துணிவு அசாத்தியமானது எனக் குறிப்பிடுகிறார், தீஸ்தா.  ஏனென்றால், இவ்வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபொழுதே, முக்கிய குற்றவாளிகளான மாயாபென் கோட்னானி, பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட இந்து மதவெறிக் குண்டர்களை, அவர்கள் கைது செயப்பட்டு சிறையில் தள்ளப்பட்ட இரண்டே மாதங்களுக்குள் பிணையில் வெளியே அனுப்பிவிட்டது, சிறப்பு விரைவு நீதிமன்றம்.  அரசியல் பலத்தோடு வெளியே சுதந்திரமாகச் சுற்றி வந்த இந்தக் கும்பல் சாட்சிகளைப் பணம் கொடுத்துக் கலைக்கவும், மிரட்டிப் பிறழ் சாட்சியாக மாற்றவும் தீவிரமாக முயன்று வந்தது.

இதனால், இப்படுகொலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சியம் அளித்தவர்களுக்கும் துணை இராணுவப் படையினரின் பாதுகாப்பைப் போராடிப் பெற வேண்டிய கட்டாயத்திற்குள் நாங்கள் தள்ளப்பட்டோம்;  சாட்சியம் அளித்தவர்களுக்குத் தேவைப்படும் அனைத்துவிதமான சட்ட ஆலோசனைகளையும் உதவிகளையும் நாங்கள் தினந்தோறும் அளித்து வந்தோம்; சாட்சியங்கள் ஒவ்வொருவரும் தமக்கான வழக்குரைஞரை வைத்துக் கொள்ளும் சட்ட உரிமையைப் பயன்படுத்தி, வழக்குரைஞர்களை ஏற்பாடு செய்து கொண்டோம். இவை போன்ற பல முன்னேற்பாடுகளை, பாதுகாப்புகளை ஏற்படுத்தியதால்தான், நீதியைப் பெற முடிந்திருக்கிறது” எனத் தாங்கள் நடத்திய போராட்டத்தை விவரிக்கிறார், தீஸ்தா சேதல்வாத்.

குஜராத் படுகொலைகளுக்கு இணையாக நடந்த மும்பைப் படுகொலையில் தொடர்புடைய இந்து மதவெறி பயங்கரவாதிகளுள் ஒருவர்கூட, அப்படுகொலை நடந்து இருபது ஆண்டுகள் கடந்த பின்னும் ஏன் தண்டிக்கப்படவில்லை என்ற கேள்வியைக் கேட்டுப் பாருங்கள், அப்பொழுதுதான் தீஸ்தா உள்ளிட்டோர் நடத்தி வரும் போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர முடியும்.  இப்படிபட்ட போராட்டம் இல்லையென்றால், இந்திய நீதித்துறை இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்குகளை ஊறப் போடவும் தயங்கியிருக்காது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.

நரோடா பாட்டியா சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கோட்னானி தண்டிக்கப்பட்டிருப்பது; களத்தில் நின்று முசுலீம்களை வேட்டையாடிய இந்து மதவெறிக் கும்பலுக்கும், உயர் போலீசு அதிகாரிகள், முதலமைச்சர் அலுவலகம், துணை அமைச்சர்கள் ஆகியோருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் அம்பலமாகியிருப்பது; ஐ.பி.எஸ். அதிகாரிகளான சஞ்சீவ் பட், சீறிகுமார் ஆகியோர் இப்படுகொலைக்கும் மோடி அரசுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆதாரங்களோடு உச்ச நீதிமன்றத்திடமும், நானாவதி கமிசனிடமும் அளித்திருப்பது ஆகிய இவையனைத்தும் இப்படுகொலையை மோடி அரசுதான் திட்டமிட்டு, தூண்டிவிட்டு நடத்தியது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன.

எனினும், உச்ச நீதிமன்றம்கூட இந்தக் கோணத்தில் இப்படுகொலையைப் பார்க்காமல், தனித்தனி வழக்குகளாக விசாரணை நடத்துவதை அனுமதித்து வருகிறது.  சங்கப் பரிவார அமைப்புகள்தான் இந்தப் படுகொலையை நடத்தியிருக்கின்றன என்பது அம்பலமான பிறகும், அவ்வமைப்புகளைத் தடைசெயச் சோல்லி எந்தவொரு நீதிமன்றமும் உத்தரவிட மறுக்கின்றன.  இடதுசாரிகள் உள்ளிட்டு, மதச்சார்பற்ற கட்சிகள் என்று பீற்றிக் கொள்ளும் எந்தவொரு ஓட்டுக்கட்சியும்கூட இந்தக் கோரிக்கையை முன் வைக்க மறுக்கின்றன.  இந்த நாட்டின் கிரிமினல் சட்டங்களும், நீதித்துறையும், அரசியலமைப்பும் குஜராத் முசுலீம் படுகொலை தொடர்பாகக் காட்டிவரும் இந்தச் சலுகைதான் கொலைகாரன் மோடிக்கு, தன்னை வளர்ச்சியின் நாயகனாக மக்கள் முன் காட்டிக் கொள்ளுவதற்கும்; நான் குற்றவாளி எனில், என்னைத் தூக்கிலிடுங்கள்” எனச் சவால் விடுவதற்குமான துணிவைத் தந்திருக்கிறது.

____________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2012

__________________________________________________

கூமாபட்டியில் போலீசின் வெறியாட்டம்: நேரடி ரிப்போர்ட்

7

போலீசுணல் கொள்ளையை எதிர்த்து கடந்த 9/10/2012 அன்று இரவு கூமாபட்டியில் தீக்குளித்த விவசாயி ராஜேந்திரன் 11/10/2012 அன்று காலையில் சிகிச்சை பலனளிக்காமல் மதுரை மருத்துவமனையில் உயிரிழந்தார். உடனே போராட்டக் குழு கூடி அவரின் தியாகத்துக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மக்களுக்கு உணர்வூட்டும் வகையிலும் அவரின் உடலை அந்தப் பகுதியெங்கும் ஊர்வலமாக எடுத்துச் செல்வது என முடிவு செய்யப்பட்டது.

இதை அறிந்த ஓட்டுக் கட்சிகள் விவசாயி ராஜேந்திரன் கடைசியாய் செயல்பட்டுக் கொண்டிருந்த திமுக உட்பட அனைத்தும்  அப்படி ஊர்வலமாக எடுத்துச் சென்றால் தாம் அம்பலப்பட நேரும் என்றெண்ணி தடுக்கும் முயற்சிகளில் இறங்கின. இதனிடையே மதுரை மருத்துவமனையில் இருந்த இராஜேந்திரன் மகன் ராஜ்குமாரிடம் தோழர்கள், நாளிதழ்களில் குடும்ப பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம் என்பது போல் திரித்து வெளியிடப் பட்டிருக்கும் செய்தியைக் காட்டி நிலமையை விளக்கி இருக்கிறார்கள்.

இராஜேந்திரன் என்ன காரணத்துக்காக தீக்குளிக்க நேர்ந்தது என்பதை தெளிவாக பதிவு செய்திருக்கிறார். எனவே, தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காதவரை உடலை வாங்க மறுத்து போராடுவது தான் தியாகியான அவருக்கு நாம் தரும் கண்ணியமாக இருக்கும் என அறிவுரை கூறுகின்றனர். ஆனால் உறவினர்கள் என்ற போர்வையில் உடன் வந்த தரகர்கள் இருவர், ஊரில் சென்று பார்த்துக் கொள்ளலாம் இங்கு எந்தப் பிரச்சனையும் வேண்டாமென்று பேசிப் பேசி ராஜ்குமாரை சம்மதிக்க வைத்து விடுகின்றனர்.

மாலை சரியாக நான்கு மணிக்கு கூமாபட்டி முக்கு ரோட்டில் வந்திறங்கிய நம்மை வரிசையாக அணிவகுத்து நின்ற போலீசு வாகனங்களே வரவேற்றன. ஊர்மக்கள் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் உரைந்து போயிருந்தனர். குழு குழுவாய் போலீசார்கள் ஒன்று சேர்ந்து முக்கு ரோட்டுக்கும் பேருந்து நிருத்தத்துக்கும் இடையே அணிவகுப்பு நடத்துவது போல் நடந்து கொண்டிருந்தனர். மட்டுமல்லாது வீதியில் யாரும் நின்று பேசிக் கொண்டிருக்கக் கூடாது என்று விரட்டிக் கொண்டிருந்தனர்.
தேனீர்கூட குடிக்கக் கூடாதா என்று ஒருவர் கேட்டபோது கடையை அடைக்க வேண்டியிருக்கும் என்று திமிர்த்தனம் காட்டியது ஒரு லத்தி.

இவ்வளவு போலீசை குவித்து, மூங்கில் தடுப்புகளுடன் கலவர தடுப்பு போலிசை குவித்து அணிவகுப்பு நடத்துமளவுக்கு என்ன அவசியம் இருக்கிறது? இராஜேந்திரன் தீக்குளிப்புக்கு தமிழக அரசு மணல் கொள்ளைக்கு துணை போனதே காரணம் என பொதுமக்கள் விவசாயிகள் போராட்டக் குழு சார்பில் ஊர் முழுதும் ஒட்டப்பட்டிருந்தது. அது உண்மை தானே, ஊர் மக்கள் மணல் அள்ளி கடத்தக் கூடாது என்று தடுத்திருக்கிறார்கள், பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள், உள்ளூர் தாசில்தார் முதல் தலைநகர் முதல்வர் வரை மனு கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் நிர்வாகமோ, காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உண்மையை சுவரொட்டியாக ஒட்டியதால் மக்களை அச்சுறுத்த அணிவகுப்பு நடத்துகிறார்கள். ஊர்வலமாக உடலை கொண்டு செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்த பலர் போலீசின் கெடுபிடிகளால் காணாமல் போயிருந்தனர். கூமாபட்டி சென்று நிலமையை கவனித்த பிறகுதான் புகைப்படமோ, ஒளிப்படமோ எடுக்க தேவையான முன்னேற்பாடுகளுடன் சென்றிருக்கவில்லை என்பது எங்களுக்கும் உறைத்தது.

ஒடுங்கிப் போயிருந்த ஊர் மக்களை தோழர்களும் ஊரார் சிலரும் ஒன்று திரட்டினர். ம.உ.பா.மைய தோழர் லயனல் அவர்களிடையே சிறிய உரை ஒன்றை நிகழ்த்தி தைரியமூட்டினார். வந்திருந்த போலீசு உயரதிகாரிக்கும் மக்களுக்கும் இடையேயான வாதம் தொடங்கியது. நாங்கள் சடங்கு செய்ய வேண்டும், ஏன் எங்களை விரட்டுகிறீர்கள் என்று இளைஞர்கள் எகிறினார்கள். மக்கள் கூட்டம் கூடுவதையோ, அஞ்சலி செலுத்துவதையோ நீங்கள் தடுக்க முடியாது என்பதை சட்ட நுணுக்கங்களுடன் தோழர் லயனல் வாதாடினார். முடிவில் சடங்கு செய்து கொள்ளுங்கள், இரங்கல் கூட்டம் போட்டுக் கொள்ளுங்கள், ஆனால் வேறு எந்த பிரச்சனையும் ஏற்படுத்தக் கூடாது என்று போலிஸ் தெரிவித்தது.

இதனிடையே போலிசு வழமையான நரித்தனத்துடன் பிரித்தாளும் தந்திரத்தை அரங்கேற்றியது. குடித்திருப்பவர்களெல்லாம் பேச வேண்டாம். ஒதுங்கிக் கொள்ளச் சொல்லுங்கள் இல்லாவிட்டல் பிரச்சனையாகிவிடும் என்று மக்கள் மேல் அக்கரை கொண்டவர்போல பேசினார் அந்த அதிகாரி. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வீதிக்கு வீதி டாஸ்மாக்கை திறந்து குடிப்பது தீய பழக்கமல்ல, ஒரு பொழுதுபோக்கு என்று இளைஞர்களை பாழாக்கி வைத்திருக்கும் அரசின் அங்கமான அதிகாரி கூறினால் அது மக்களின் மீதான அக்கரையாக இருக்க முடியுமா?

அவர் என்ன எதிர்பார்த்தாரோ அது உடனே அங்கு நடந்தது. சிலர் குடித்திருதவர்களை நீங்கள் ஒதுங்குங்கள் என்று தனிமைப்படுத்த முயல, அவர்கள் ஏன் நாங்கள் நின்றால் என்ன தப்பு என்று எதிர்க் கேள்வி எழுப்ப, கூட்டம் பிளவுபடுவது போல் தோன்றியது.உடனே தோழர்கள் ‘இப்போது அது முக்கியமான பிரச்சனை அல்ல’ என்று விளக்கி சமாதானம் செய்தனர்.

சிறிது நேரத்தில் ராஜ்குமார் உறவினர்கள் சிலருடன் ஆம்புலன்ஸோடு வந்திறங்கினார். பார்த்ததுமே ஊரிலுள்ள நிலவரம் அவருக்கு புரிந்து போனது. அந்த காவல்துறை உயரதிகாரியிடம் சென்ற ராஜ்குமார், இதுவரை எந்த நிர்வாக அதிகாரியும் வந்து பார்க்கவில்லை. எனக்கு சில கோரிக்கைகள் இருக்கின்றன. எனவே வட்டாட்சியர் வந்த பிறகு தான் உடலை கொண்டு செல்வேன் என்றார். பேசிக் கொண்டிருக்கும் போதே ஆம்புலன்ஸ் வந்தது. தயாராக நின்ற போலீசு பட்டாளம் ஆம்புலன்ஸை சூழ்ந்து கொண்டு நிறுத்தவிடாமல் சுடுகாட்டுப் பாதையில் திருப்பி விட்டது. சடங்கு நடத்தலாம் இரங்கல் கூட்டம் நடத்தலாம் என்று சொல்லி விட்டு நிறுத்தாமல் கொண்டு செல்கிறார்களே உடனே குறுக்கே பாய்ந்து நிறுத்த முயன்றனர். ராஜ்குமார் ஆம்புலன்ஸின் முன்னால் படுத்துவிட்டார்.

உடனே இரண்டு மூன்று காவல்துறை நாய்கள் அவரை கையையும் காலையும் பிடித்து ஒரு மூட்டையைப் போல் தூக்கி வீசினார்கள். எந்த முன்னறிவிப்பும் இன்றி தடியடி தொடங்கியது. ஒரு பெண் போலீஸ்தான் அதை தொடங்கி வைத்தது. போலீசு இப்படி காட்டுமிராண்டித்தனமாய் நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்காத ஊர் மக்கள் அடியைத் தாங்க முடியாமல் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். தோழர் லயனல் இதில் குறி வைத்து தாக்கப்பட்டார்.

ஆம்புலன்ஸ் ஓட்டுனரை ஏற்கனவே தயார் செய்தே அழைத்து வந்திருக்கிறார்கள். இல்லையென்றால் பிரச்சனை என்று தெரிந்தவுடன் நிறுத்திவிட்டு ஒதுங்கி விடுவது தான் ஓட்டுனர்களின் வழக்கம். ஆனால் இங்கு தடியடி நடந்து கொண்டிருக்கும் போதே ஒட்டுனர் மெதுவாக உருட்டி சுடுகாட்டுப் பாதையில் விரைந்து விட்டார். வேறு வழியின்றி ஆம்புலன்ஸின் பின்னால் ஓடினார்கள் இளைஞர்கள். தொடர்ந்து அடித்து விரட்டியது போலீசு.

எரியூட்டும் இடத்தில் ஏற்கனவே ஓட்டுக் கட்சிகள் தயார் செய்து வைத்திருந்தவர்கள் சுறுசுறுப்பாக காரியத்தில் இறங்கினார்கள். சிதையில் ஏற்றி விறகு அடுக்கி எரியூட்டத் தயாரானார்கள். கொள்ளி வைக்க வேண்டிய மகன் ராஜ்குமார் எங்கேவென்று தெரியவில்லை. வாங்கிய அடியில் அவரும் சிதறி ஓடியிருந்தார். ஊர் பெருசுகள் நீங்கள் தடியடி நடத்தியது தவறு என முணுமுணுக்கத் தொடங்கினர். நிலைமையை உணர்ந்த போலிசும் அடக்கி வாசித்தது.

உடலை சிதையில் ஏற்றி அரை மணி நேரம் கடந்து விட்டது.என்ன செய்வது என்று கைபிசைந்து நின்றார்கள் உறவினர்கள். போலிசோ தாமே சிதைக்கு நெருப்பு மூட்டத் தயாரானது. இதற்குள் உறவினர்கள் ஒருவழியாய் ராஜ்குமாரை தேடிக் கண்டுபிடித்து அழைத்து வந்தனர். நடந்த சம்பவத்தால் இளைஞர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். அத்தனை ஓட்டுக் கட்சிகளும் இந்த ஒற்றைச் சம்பவத்தால் அம்பலப்பட்டு நிற்கின்றன.

இறந்து போன இராஜேந்திரன் ஒரு திமுக காரராக இருந்தாலும், நகர திமுக இதற்காக துளியும் அசைந்து கொடுக்கவில்லை. ஆனால் ஊர் மக்களோ தங்கள் சொந்த அனுபவத்தில் ஓட்டுக் கட்சிகள் என்றால் என்ன? காவல் துறை யாருக்காக வேலை செய்கிறது என்பதை உணர்ந்து கொண்டார்கள். அதேநேரம் ஒரு புரட்சிகர அமைப்பின் பாத்திரம் இது போன்ற நெருக்கடியான தருணங்களில் எப்படி இருக்கும் என்பதையும் நேரடியாக கண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இராஜேந்திரன் தமக்குறிய பங்களிப்பை செவ்வனே செய்திருக்கிறார் என்றே கூற வேண்டும்.

இனி இந்த மக்கள் மணல் கொள்ளையர்களை அடித்து விரட்டுவதற்கு குறைவாக வேறெதையும்  எண்ண மாட்டார்கள் என்பது அவர்களின் கண்களில் தெரிகிறது.

___________________________________________

– வினவு செய்தியாளர்கள்.

_________________________________________________

ஒற்றை பிராண்ட் ஆதிக்கத்திற்கு மத்திய அரசின் தரகு வேலை!

0

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு இந்தியாவில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும், உள் கட்டமைப்பை வளர்க்கும்’ என்று நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் போல பேசும் ஆளும் கும்பல் உண்மையில் அன்னிய மூலதனத்துக்கு நாட்டை இரையாக்குவதில்தான் அக்கறையாக இருக்கிறது என்பதற்கான நடைமுறை உதாரணம் ஒன்று வெளியாகியிருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் பலசரக்கு சில்லறை வணிகத்தில் 51 சதவீதம் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவையும் ஒற்றை நிறுவன பொருள் (Single brand) சில்லறை விற்பனையில் 100 சதவீதம் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதையும் ஒன்றாக அறிவித்திருந்தது மத்திய அரசு. மற்ற கட்சிகளின் எதிர்ப்புகளையும், மக்கள் போராட்டங்களையும் தொடர்ந்து மார்ச் மாதம் நடைபெறவிருந்த மாநில தேர்தல்களை கணக்கில் கொண்டு பலசரக்கு சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை 51 சதவீதம் வரை அனுமதிக்கும் முடிவை மட்டும் ஒத்தி போட்டது அரசு. ஆனால் ஒற்றை நிறுவன சில்லறை விற்பனையில் 100 சதவீதம் அன்னிய முதலீடு அனுமதிக்கும் முடிவை எதிர்க் கட்சிகள் யாரும் கண்டு கொள்ளாமல் விட்டு விட, அரசு அதை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தது.

அதைத் தொடர்ந்து ஸ்வீடனை சேர்ந்த அறைகலன் நிறுவனம் ஐக்கியா $1.5 பில்லியன் (சுமார் ரூ 8,000 கோடி) முதலீட்டிலும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆடம்பர காலணி நிறுவனம் பாவேர்ஸ் $20 மில்லியன் (சுமார் ரூ 110 கோடி) முதலீட்டிலும் இந்தியாவில் கடைகள் திறப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தன.

  • அரசின் கொள்கைப்படி 100 சதவீதம் அன்னிய முதலீட்டுடன் சில்லறை விற்பனைக் கடை நடத்தும் நிறுவனங்கள் தமது விற்பனையில் 30 சதவீதம் மதிப்பை உள்நாட்டு சிறு/குறு/நடுத்தர நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும்.

இதன் மூலம் இந்தியாவில் சிறு தொழில்கள் வளர்ச்சி பெற வழி வகுப்பதாக காட்டிக் கொண்டது அரசாங்கம்.

  • இரண்டாவதாக, விற்பனையில் 30 சதவீதம் மதிப்பை அன்னிய முதலீடு மூலம் சில்லறை விற்பனை செய்யும் நிறுவனமே  உள்நாட்டிலிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விதியும் சேர்க்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் ‘வெளிநாட்டு நிறுவனம் உயர் நுட்பப் பொருட்களை உற்பத்தி செய்யும் கட்டமைப்பை  இந்தியாவிலேயே ஏற்படுத்தும், அதன் மூலம் இந்தியாவில் தொழில் நுட்பமும் உற்பத்தித் திறனும் வளரும்’ என்று படம் காட்டியிருந்தது ஆளும் வர்க்கம்.

  • இன்னொரு நிபந்தனையாக ‘முதலீடு செய்யும் நிறுவனமே விற்கப் போகும் பிராண்டின் உரிமையாளராக இருக்க வேண்டும்’ என்பதும் விதிக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் ‘குறிப்பிட்ட பிராண்டை உருவாக்கிய நிறுவனத்தின் தொழில் நுட்ப அறிவும் நிர்வாகத் திறனும் நாட்டுக்குள் வந்து சேரும்’ என்று வாதிடப்பட்டது.

இந்தியாவில் முதலீடு செய்யும் வரும் பெரும்பான்மை அன்னிய நிறுவனங்களைப் போலவே, பாவேர்ஸ் நிறுவனம் மொரிஷியசில் ஒரு  லெட்டர்பேட் கம்பெனி ஆரம்பித்து இந்த கொள்கையின் கீழ் முதலீடு செய்ய விண்ணப்பித்திருந்தது. ஆனால் பாவேர்ஸ் பிராண்ட் இங்கிலாந்து நிறுவனத்திடம் இருந்தது.

ஏற்கனவே ஜரா ஹோல்டிங் என்ற நிறுவனம் மாசிமோ தத்தி என்ற பிராண்டுக்கான கடை திறக்க முதலீடு செய்வதாக கொடுத்த விண்ணப்பம் பிராண்ட் உரிமைக்கான கொள்கைப்படி அன்னிய முதலீடு வளர்ச்சி வாரியத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

ஐக்கியா நிறுவனம், விற்பனையில் 30 சதவீதம் மதிப்பை உள்நாட்டில் சிறு/குறு/நடுத்தர நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வதைப் பற்றி ஆட்சேபணை தெரிவித்தது. ‘தான் கொள்முதல் செய்ய ஆரம்பிக்கும் நிறுவனங்கள் காலப் போக்கில் வளர்ந்து பெரு நிறுவனங்களாகி விடுவதால், அந்த நிபந்தனையை பின்பற்ற முடியாது’ என்று சொன்னது. மேலும் இந்தியாவிலேயே கொள்முதல் செய்யும் நிபந்தனையை நிறைவேற்றுவதற்கு 10 ஆண்டு அவகாசம் கேட்டது.

இரண்டாவதாக, ‘தனது கொள்கைப்படி பொருட்களை விற்பதற்கும் கொள்முதல் செய்வதற்கும் தனித்தனி பிரிவுகள் இருக்கின்றன. அதனால் இந்தியாவில் அவை தனித்தனி நிறுவனங்களாக செயல்பட அனுமதிக்க வேண்டும்’ என்றும் அடம் பிடிக்கிறது.

கூடவே கடைக்கு பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக உணவு விடுதி ஒன்றையும் நடத்தப் போவதாக சொல்லியிருக்கிறது.

வெளிநாட்டு முதலாளிகளின் நலனுக்கும், நாட்டு நலனை கொஞ்ச நஞ்சம் பாதுகாப்பதாக காட்டுவதற்கு ஏற்படுத்தியிருந்த விதிகளுக்கும் முரண்பாடு ஏற்பட்டவுடன் அரசாங்கம் என்ன செய்திருக்கும்?

‘இது எங்க நாடு, எங்க தொழில் வளர்ச்சிக்காக, எங்க நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக இந்த நிபந்தனைகள் வைத்திருக்கிறோம். அதன்படி நடப்பதாக இருந்தால் உள்ளே வாங்க, இல்லை என்றால் வேறு இடத்தைப் பாருங்க’ என்று சொல்லவில்லை!

அன்னிய முதலீட்டாளர்களுக்கு ஒரு துன்பம் என்றதும் மன்மோகன் சிங் மனம் கசிந்துருகியது. அவரது தலைமையிலான அரசாங்கம் சென்ற வாரம் பலசரக்கு சில்லறை விற்பனையில் 51 சதவீதம் அன்னிய முதலீட்டை அனுமதித்த அதே நேரத்தில் ஒற்றை பிராண்ட் விற்பனையில் அன்னிய முதலீட்டுக்கான விதிமுறைகளையும் மாற்றி அமைத்தது.

  • ‘குறிப்பிட்ட பிராண்ட் உரிமையாளரிடமிருந்து பிராண்டை பெறுவதாக ஒப்பந்தம் வைத்திருந்தால் யாரை வேண்டுமானாலும் முதலீடு செய்ய அனுமதிப்போம்’ என்று பாவேர்ஸின் மௌரீஷியஸ் வழியான முதலீட்டுக்கு வழி வகுத்தார்கள்.

இனிமேல் வரி ஏய்க்கும் மௌரீஷியஸ் வழியில் பல நிறுவனங்கள் இந்தியாவுக்குள் கடை விரிக்க முடியும்.

வால்மார்ட் போன்ற ஏதாவது ஒரு வர்த்தக நிறுவனம் பல பிராண்டுகளை விற்பதற்கு தனித்தனியாக அனுமதி பெற்று ஒரே இடத்தில் எல்லா கடைகளையும் வைத்து நடைமுறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டுடன் பலசரக்கு விற்பனைக் கடை அமைத்துக் கொள்ளலாம்.

ஐக்கியாவின் விருப்பத்துக்கேற்ப உள்நாட்டில் கொள்முதல் செய்ய வேண்டிய விதியை தளர்த்தியிருக்கிறார்கள்.

  • ‘விற்பனையின் 30 மதிப்பிலான கொள்முதலை இந்திய நிறுவனங்களிடமிருந்து, குறிப்பாக முடிந்த அளவு சிறு/குறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும்’ என்று விதியை மாற்றுவதாக அரசாங்கம் சென்ற மாதம் விளக்கமளித்தது. முடியும் முடியாது என்பதை அந்தந்த நிறுவனமே தீர்மானித்துக் கொள்ளலாம்.

இதன்படி, 30 சதவீதம் உள்நாட்டு கொள்முதல் நிபந்தனையை நிறைவேற்ற என்பது டாடா குழுமத்திலிருந்தோ, அம்பானியின் உற்பத்தியிலிருந்தோ கூட கொள்முதல் செய்து கொள்ளலாம்.

  • இரண்டாவதாக 5 ஆண்டுகளில் மொத்த கொள்முதல் நிறுவனத்தின் இந்திய விற்பனையில் 30% இருந்தால் போதும் என்றும் நோக்கியாவின் பேரத்துக்கு படிந்தது அரசு.

அதாவது அன்னிய முதலாளியின் ஒரு நிறுவனம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் உற்பத்தியான பொருளை கொண்டு வந்து விற்கலாம். 30 சதவீதம் கொள்முதல் நிபந்தனையை கடைப்பிடிப்பதற்கு உள்ளூரில் வேறு ஏதாவது பொருளை வாங்கி கணக்கு காட்டலாம். உதாரணமாக, இந்திய கைவினைப் பொருட்களை வாங்கி ஏற்றுமதி செய்கிறோம் என்று கூட விதியை வளைத்துக் கொள்ளலாம்.

இதைத் தொடர்ந்து ஐக்கியா மற்றும் பாவேர்ஸ் நிறுவனங்களின்  அன்னிய முதலீட்டு விண்ணப்பம் ‘தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சித் துறை’யில் அனுமதி பெற்று ‘அன்னிய முதலீடு வளர்ச்சி வாரியத்துக்கு’ அனுப்பப்பட்டுள்ளது. ‘தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சித் துறை’ விண்ணப்பம் கொள்கைப்படி சரியாக இருக்கிறதா என்று பார்த்த பிறகு தனது கருத்துக்களுடன் அன்னிய முதலீட்டு வளர்ச்சி வாரியத்துக்கு அனுப்பி வைக்கிறது.

ஐக்கியா ரூ 7,500 கோடி முதலீடு போட்டு தனது விருப்பப்படி விதிகளை மாற்ற வைத்து சில்லறை விற்பனையில் இறங்கத் தயாராகிறது. பாவேர்ஸ் ரூ 110 கோடி மதிப்பிலான முதலீட்டில் இந்திய மக்களை சுரண்ட வழி வகுக்கப்பட்டு விட்டது. தம்பட்டம் அடிக்கப்பட்ட இந்தியத் தொழில் வளர்ச்சிக்கான நிபந்தனைகளை காற்றில் பறக்க விட்டிருக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.

இந்த கொள்கை மாற்றங்களைத் தொடர்ந்து பிரெஞ்சு ஆடை நிறுவனம் சீலியோ, இத்தாலிய ஆடை நிறுவனம் குருப்போ காயின், இத்தாலிய நலவாழ்வு நிறுவனம் ஆர்ட்சானா, ஸ்வீடனைச் சேர்ந்த பேஷன் நிறுவனம் எச்&எம், டாம்மி ஹில்பிகர் போன்ற நிறுவனங்களும் இந்திய மக்களை சுரண்டுவதற்கு வரிசையில் நிற்கின்றன.

நாட்டின் வளர்ச்சிக்காக ஆட்சி புரிவதாக போக்கு காட்டியவாறே தங்களது எஜமானர்களான ஏகாதிபத்தியங்களுக்கு விசுவாசம் காட்டுவதுதான் நமது அதிகார வர்க்கத்தின் லட்சணம்.

படிக்க

இரண்டு கார்ப்பரேட் கொள்ளைகள் – இருவேறு அணுகுமுறைகள்!

2

ஸ்பெக்ட்ரம் ஊழல் – நிலக்கரி ஊழல் !

இரண்டு கார்ப்பரேட் கொள்ளைகள் – இருவேறு அணுகுமுறைகள் !

நிலக்கரி-ஊழல்-3நிலக்கரி வயல்கள் ஒதுக்கீடு, மீப்பெரும் அனல் மின்நிலையத் திட்டங்களை நிறுவி இயக்குவது, டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தைப் பராமரித்து இயக்குவதில் அரசு – தனியார் கூட்டு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் ஆகிய மூன்றிலும் நடைபெற்றுள்ள கார்ப்பரேட் கொள்ளையால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து இந்திய அரசின் தலைமை தணிக்கைத் துறை அதிகாரி அளித்திருந்த அறிக்கைகள் கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.  தலைமைத் தணிக்கைத் துறை அதிகாரி தந்துள்ள அறிக்கைகளின்படி, 2004-2009 – ஆம் ஆண்டுகளில் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி வயல்களை ஒதுக்கீடு செய்ததில் நடந்துள்ள முறைகேடுகளால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 1.86 இலட்சம் கோடி ரூபாய்; மகாராஷ்டிரா மாநிலத்தில் சித்ராங்கி எனுமிடத்தில் மீப்பெரும் அனல் மின்நிலையத்தை நிறுவி இயக்குவதற்காக அனில் அம்பானிக்குக் காட்டப்பட்டுள்ள முறைகேடான சலுகையால், அம்பானி என்ற தனியொரு முதலாளிக்குக் கிடைக்கவுள்ள நிகர இலாபம் 11,852 கோடி ரூபாய்; டெல்லி சர்வதேச விமான நிலையத்தைப் பராமரித்து இயக்குவதற்காக ஜி.எம்.ஆர். குழுமத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளால், அடுத்த 60 ஆண்டுகளில் அந்நிறுவனத்திற்குக் கிடைக்கவுள்ள வருவாய் 1,63,557 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவை மூன்றில், ‘தேசிய’ப் பத்திரிகைகளும் பா.ஜ.க.வும் நிலக்கரி வயல்கள் ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி மட்டும்தான் கூச்சல் போட்டு வருகின்றன; மற்ற இரண்டு கார்ப்பரேட் கொள்ளைகள் பற்றி எந்தவொரு எதிர்க்கட்சியும் தேசியப் பத்திரிகைகளும் வாயே திறக்கவில்லை.  நிலக்கரி வயல் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்த விதமும், ஊழலும் 2 ஜி ஒதுக்கீட்டில் நடந்த ஊழலைக் காட்டிலும் சதித்தனம் நிறைந்தது, பிரம்மாண்டமானது என்ற போதிலும், நிலக்கிரி ஊழல் ‘தேசிய’வாதிகளால் அடக்கியே வாசிக்கப்படுகிறது; அல்லது கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது.

2 ஜி ஊழல் வழக்கில் தி.மு.க. வையும், அக்கட்சியைச் சேர்ந்த ராஜாவையும் போட்டுப் பார்க்க பெரும் முனைப்புக் காட்டிவரும் சுப்பிரமணிய சுவாமியும்; 2 ஜி ஊழலை மையப்படுத்திப் பிரச்சாரம் செய்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ள அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவும் நிலக்கரி வயல் ஒதுக்கீடு முறைகேடு பற்றி இதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை; ராஜாவையும் தி.மு.க.வையும் பக்கம் பக்கமாக எழுதி அம்பலப்படுத்திய ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர் உள்ளிட்ட தமிழக கிசுகிசு ஏடுகள், நிலக்கரி ஊழல் விவகாரத்தில் கள்ள மௌனம் சாதிக்கின்றன.

2 ஜி ஒதுக்கீடு முறைகேடு மூலம் தி.மு.க. 200 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செதிருப்பதாகக் குற்றஞ்சுமத்தி எழுதிய பத்திரிகைகள், அப்படிப்பட்ட பொதுப்பணத்தைச் சுருட்டிக்கொண்ட குற்றச்சாட்டு எதையும் நிலக்கரி முறைகேட்டின் முக்கியப் புள்ளியான மன்மோகன் சிங் மீதோ, காங்கிரசு மீதோ சுமத்துவதில்லை.  இந்த விசயத்தில் முடிவெடுக்காமல் அமைதியாக இருந்ததுதான் மன்மோகன் சிங்கின் குற்றமே தவிர, தனிப்பட்டரீதியாக அவர் எந்த ஆதாயத்தையும் இதன் மூலம், அடையவில்லை என அவை எழுதுகின்றன.  இம்முறைகேடு பற்றி முறையான விசாரணை தொடங்குவதற்கு முன்பே மன்மோகன் சிங்கை உத்தமனாக்கி விட்டன.

நிலக்கரி முறைகேட்டை அடக்கி வாசிப்பது தலைமை தணிக்கை அதிகாரியிடமிருந்தே தொடங்கிவிடுகிறது.  இந்த முறைகேடான ஒதுக்கீட்டினால் தனியார் நிறுவனங்கள் அடைந்த அதிரடி இலாபம் 4.79 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இருக்கக்கூடும் எனக் கூறி வந்த தணிக்கைத் துறை, தனது அறிக்கையில் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 1.86 இலட்சம் கோடி ரூபாய்தான் எனக் குறைத்துக் காட்டியிருக்கிறது.

ஆ.ராசா 2 ஜி அலைக்கற்றை விற்பனையை அரசின் கொள்கை முடிவுப்படிதான் – முன்னால் வந்தவருக்கு முன்னுரிமை – விற்பனை செய்தார்.  அவ்விற்பனையில் அவர் வரிசையை மாற்றிக் கொடுத்து விட்டார் என்பதுதான் ராசா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு.  ஆனால், நிலக்கரி வயல் ஒதுக்கீட்டிலோ, வயல்களை ஏலத்தில்தான் விடவேண்டும் என்ற கொள்கை முடிவை 2004-ம் ஆண்டு எடுத்துவிட்டு, அந்தக் கொள்கைக்கு ஏற்பச் சட்டத்திருத்தம் செய்யாமல் கிடப்பில் போட்டுவிட்டு, நிலக்கரி வயல்களைக் கேட்டு விண்ணப்பித்த பெயர்ப்பலகை நிறுவனங்களுக்கெல்லாம் பெருமாள் கோவில் உண்டக்கட்டியைப் போல, நிலக்கரி வயல்களைத் தூக்கிக் கொடுத்திருக்கிறார், மன்மோகன் சிங்.

நிலக்கரி-ஊழல்-1

நிலக்கரி வளம் 1973-ஆம் ஆண்டில் தேசியமயமாக்கப்பட்டாலும், அப்பொழுதே இரும்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி வயல்களை ஒதுக்கிக் கொடுக்கும் எனச் சலுகை அளிக்கப்பட்டிருந்தது.  தனியார்மயம் – தாராளமயம் அமலுக்கு வந்த பின், 1993-ல் மின்சாரம், சிமெண்ட் உற்பத்தியில் ஈடுபடும் அல்லது அத்தொழில்களைத் தொடங்கப் போவதாகச் சொல்லும் தனியார் நிறுவனங்களுக்கும் நிலக்கரி வயல்களை ஒதுக்கீடு செயலாம் என அச்சலுகை விரிவாக்கப்பட்டது.  2006-ல் மின்சாரம், சிமெண்ட், இரும்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு நிலக்கரியை விற்பதாகக் கூறும் ஏஜெண்டுகளுக்கும் நிலக்கரி வயல்களை ஒதுக்கலாம் எனத் தாராளமயம் புகுத்தப்பட்டது.  இதன் பிறகுதான் தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி வயல்களைத் தூக்கிக் கொடுப்பது முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சூடு பிடித்தது.

1993 தொடங்கி 2003 வரையில் 41 வயல்கள் மட்டுமே ஒதுக்கீடு செயப்பட்டிருந்தபொழுது, 2004 ஆம் ஆண்டு தொடங்கி 2009 ஆம் ஆண்டுக்குள் 175 வயல்கள் தன்னிச்சையாக ஒதுக்கீடு செயப்பட்டுள்ளன.  இவற்றுள் 111 நிலக்கரி வயல்கள் தனியார் நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்டுள்ளன.  நிலக்கரி வயல்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது சூடுபிடித்த நேரத்தில், அதாவது 2006 முதல் 2009 முடிய அத்துறையின் பொறுப்பு பிரதமர் மன்மோகன் சிங்கிடமிருந்து குறிப்பிடத்தக்கது.

காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினரான நவீன் ஜிண்டாலுக்குச் சொந்தமான ஜிண்டால் இரும்பு மற்றும் எரிசக்தி நிறுவனம்; மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள யவட்மால் தொகுதியைச் சேர்ந்த காங்கிரசு எம்.பி. விஜய் தர்தாவின் தம்பியும் மகாராஷ்டிரா மாநில அமைச்சருமான தேவேந்திர தர்தா இயக்குநராக உள்ள ஜே.ஏ.எஸ். குழுமம்; நிலக்கரித் துறை அமைச்சர் சிறீ பிரகாஷ் ஜெய்ஸ்வாலின் உறவினரான மனோஜ் ஜெய்ஸ்வாலால் நடத்தப்படும் அபிஜித் குழுமம்; பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் நிதின் கட்காரியின் உதவியாளர் அஜய் சஞ்சேட்டிக்குச் சோந்தமான எஸ்.எம்.எஸ். இண்டஸ்ட்ரீஸ்; பா.ஜ.க.வைச் சேர்ந்த நீனா சிங்கின் கணவர் வீ.கே. சிங்கிற்குச் சோந்தமான நவபாரத் பவர் லிமிடெட் ஆகியவையும் நிலக்கரி வயல்களைப் பெற்றுள்ளன.  ஆனாலும், இந்த அரசியல் தலைவர்கள், “நாங்கள் லாபியிங் செய்து வயல்களைப் பெறவில்லை; தகுதியின் அடிப்படையில் பெற்றோம்” என்கிறார்கள்.  அதாவது பனைமரத்தடியின் கீழ் உட்கார்ந்து கள்ளைக் குடித்துவிட்டு, பாலைத்தான் குடித்தோம் எனச் சத்தியம் செய்கிறார்கள்.

2 ஜி ஒதுக்கீடில் ராஜா – கனிமொழி – நீரா ராடியா இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களை வெளியிட்டு, லாபியிங் பற்றிக் கூச்சல் போட்ட முதலாளித்துவப் பத்திரிகைகளுள் ஒன்றுகூட, நவீன் ஜிண்டாலும், விஜய் தர்தாவும், அஜய் சஞ்சேட்டியும் நிலக்கரி வயல்களை எப்படிப் பெற்றார்கள் என்ற புலனாய்விற்குள் இறங்கவுமில்லை.  நிலக்கரி வயல்களை ஒதுக்கீடு செய்வதில் நடந்துள்ள லாபியிங் இவர்களோடு மட்டும் நின்று விடவுமில்லை.

கூடங்குளத்தில் இன்னும் மின் உற்பத்தித் தொடங்கப்படவேயில்லை; ஆனாலும், அவ்வணு உலையை எதிர்த்துப் போராடும் மீனவர்கள் மீது நாட்டின் வளர்ச்சியைச் சீர்குலைப்பவர்கள் எனக் குற்றஞ்சுமத்தி, அவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஏவி விடப்படுகிறது.  அதேசமயம், நிலக்கரி வயல்களைப் பெற்று, திட்டமிட்டே உற்பத்தியில் ஈடுபடாமல் இருந்து, ‘வளர்ச்சியை’ச் சீர்குலைத்திருக்கும் டாடா, அம்பானி, ஜிந்தால், ரிலையன்ஸ், மிட்டல், மனோஜ் ஜெஸ்வால் உள்ளிட்ட பெரும் தரகு முதலாளிகள் மீது என்ன நடவடிக்கை பாய்ந்திருக்கிறது?

நிலக்கரி-ஊழல்-2இந்த ஒதுக்கீடு தொடர்பாக விசாரணை நடத்திவரும் சி.பி.ஐ., கணக்குக் காட்டுவதற்காக ஏழு உப்புமா கம்பெனிகள் மீது மோசடி உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது.  அமைச்சரவை இடைக்குழு, 58 வயல்களைப் பெற்றுள்ள 29 நிறுவனங்களுக்கு, “நீங்கள் ஏன் நிலக்கரியைத் தோண்டவில்லை?” என நோட்டீஸ் அனுப்பிவிட்டு, அவர்களின் பதில்களைக் கேட்டு வருகிறது.  அமைச்சரவை இடைக்குழு சிபாரிசு செய்தபடி 4 நிலக்கரி வயல்களின் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு மேல் தனியார் நிறுவனங்கள் மீது எந்தப் பூச்சாண்டியும் பாயவில்லை.

ஏல முறையில் ரோடு போடும் வேலையை விடுவதிலேயே ஊழலும் முறைகேடுகளும் தாண்டவமாடும்பொழுது, நிலக்கரி ஒதுக்கீட்டில் ஏல முறையைக் கொண்டு வந்திருந்தால் இந்த ஊழல் நடைபெற்றிருக்காது என பா.ஜ.க., பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட பலரும் வாதாடுவது நகைப்புக்குரியது.  தனியார்மயம் என்பதே ஊழல்தான்.  ஊழலற்ற தனியார்மயம் என்பதே கிடையாது.  ஒரிசாவில் பல இலட்சம் கோடி ரூபாய் பெறுமான இரும்புக் கனிம வளத்தை போஸ்கோ என்ற அந்நிய நிறுவனத்திற்கு வெறும் 50,000 கோடி ரூபாய் மூலதனத்திற்குத் தாரை வார்த்திருக்கிறார்களே, அது ஊழலில்லையா? இப்படிச் ‘சட்டபூர்வமாக’ நீர், நிலம், அலைக்கற்றை, கனிம வளங்கள் ஆகியவையும் பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்படுவதை, இக்கும்பல் வளர்ச்சி என்ற பெயரில் நியாயப்படுத்துகிறது.

தனியார்மயத்தின் பின் சட்டவிரோதமான முறையில் நடந்துள்ள ஊழல்கள் என்று பார்த்தால், கடந்த இருபது ஆண்டுகளில் பங்குச் சந்தை மோசடி தொடங்கி நிலக்கரி வயல் ஒதுக்கீடு முறைகேடு முடிய பல நூறு ஊழல்கள் நடந்திருப்பதை, நடந்துவருவதை யாரும் மறுக்க முடியாது.  ஆனால், அவற்றுள் ஒரு சில ஊழல்களைத்தான் எதிர்க்கட்சிகளும், தேசியப் பத்திரிகைகளும் தங்களது அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப மக்கள் முன் வைத்துள்ளன.

உதாரணத்திற்குச் சொன்னால், 2 ஜி ஊழல் தி.மு.க. மட்டுமே செய்த ஊழலாக மக்கள் முன் கொண்டு செல்லப்பட்டது.  அதேசமயம், முகேஷ் அம்பானி, காங்கிரசு கட்சியின் முரளி தியோரா சம்பந்தப்பட்ட கே.ஜி. எண்ணெய் வயல் ஊழல், காங்கிரசு கட்சியின் பிரஃபுல் படேல் சம்பந்தப்பட்ட ஏர் இந்தியா ஊழல் உள்ளிட்ட பல மெகா ஊழல்கள் வெளியே கசிந்த நிலையிலேயே அமுக்கப்பட்டன.  2 ஜி வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த ராஜா, கனிமொழி ஆகியோர் வழக்கை எதிர் கொள்ளும்போது, காங்கிரசின் ப.சிதம்பரம் குற்றமற்றவராக நீதிமன்றத்தால் அறிவிக்கப்படுகிறார். இவை அனைத்துக்கும் மேலாக, “2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏலமுறையில் விட வேண்டும் என்று கூறியிருப்பதால், அதே நடைமுறை அனைத்து இயற்கை வளங்களுக்கும் பொருந்தாது” என 2ஜி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பதன் மூலம், நிலக்கரி ஒதுக்கீட்டில் நடந்துள்ள கார்ப்பரேட் கொள்ளை தொடர்பாக யார் மீதும் ஊழல் குற்றமோ, வழக்கோ தொடுக்க முடியாது என்ற நிலையை உருவாக்கிவிட்டது.

படிக்க

____________________________________________

புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2012
____________________________________________

பிரதமர் வீட்டு மரத்தில் பணம் காய்க்கிறது!

9

மன்மோகன்-சிங்வேறு எப்படி தலைப்பு வைக்க?

கடந்த மே மாதம் 22 அன்று தன் வீட்டில் ‘பர்த்டே பார்ட்டி’ வைத்தார் பிரதமர் மன்மோகன் சிங். ம்ஹும். இது அவர் ‘பிறந்த’ நாள் அல்ல. அவர் தலைமையேற்றுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா அல்லது நான்காம் ஆண்டு தொடக்க விழா. அவர் வேறு, ஐ.மு.கூ., அரசின் தொடக்க நாள் வேறு அல்ல. எனவே இப்படியொரு பர்த்டே பார்ட்டி வைக்கும் தகுதி அவருக்கு மட்டுமே உண்டு.

நியாயமாகப் பார்த்தால், அவரது வளர்ப்புத் தந்தையான இப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த விழாவில் பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் வேலைகள் தொடர்பான களைப்பில் இருந்ததால், ஒபாமா இதில் பங்கேற்கவில்லை. அதனால் என்ன… வளர்ப்புத் தந்தையின் ஆசி எப்போதும் பிரதமருக்கு உண்டு. வெள்ளை மாளிகையில் இருந்தபடியே அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அந்த நேரத்தில் தன் வீட்டில் இருந்தபடி அமெரிக்கா இருக்கும் திசையில் நெடுஞ்சான்கிடையாக தரையில் விழுந்து மன்மோகன் சிங் வணங்கியிருப்பார் என்று கருதவும் இடமுண்டு. மூத்தோர்களிடம் அப்படித்தானே ஆசி பெற வேண்டும்?

இந்த விருந்தில் கலந்து கொள்ளும்படி மெத்தப் படித்த அதிகாரிகள் மூலமாக 603 பேருக்கு அழைப்பு அனுப்பியிருந்தார், மன்மோகன் சிங். ஆனால், 375 பேர் மட்டுமே கலந்துக் கொண்டனர். மற்றவர்கள் ஒருவேளை பன்னாட்டு நிறுவனங்களுடன் ‘புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட சென்றிருக்கலாம். எனவே வராதவர்கள் குறித்து பிரதமர் கவலைப்படவில்லை.

ஆனால், 603 பேருக்கு சமைத்த உணவை என்ன செய்வது? கொட்டி விட வேண்டியதுதான். இந்தியாவே ஏகாதிபத்திய நாடுகளின் குப்பைக் கூடமாகத்தானே இருக்கிறது? அந்த ஜோதியில் இதுவும் ஐக்கியமாகட்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள்.

இப்படி கடலில் கரைந்த பெருங்காயமாக கொட்டப்பட்ட உணவின் விவரங்களை அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஒருபோதும் இந்த உணவு வகைகளை சாமான்ய மக்கள் தங்கள் கண்களால் காணப் போவதில்லை. தரிசிக்கும் பாக்கியத்தை பிரதமரும் அருளப் போவதில்லை. எனவே பெயர்களையாவது தெரிந்துக் கொள்வோம்.

இறால் கசுடி, மலபாரி மீன், செட்டிநாடு சிக்கன், கோஸ்ட் பர்ரா கபாப், டம் ஆலூ, அச்சாரி பைங்கன், பீஸ் மஜார் மட்டர், பிரியாணி, பேபி நான், மட்டர் பராத்தா, மிஸ்ஸி ரொட்டி, பழரசம், நெய்யில் வறுக்கப்பட்ட பாதாம் பருப்பு… ஆகியவை சில சாம்பிள்கள் மட்டுமே.

வந்த 375 பேரும் வயதானவர்கள் ஆயிற்றே… கொழுப்பு, சர்க்கரை, பிபி… என வயதுக்குரிய நோய்கள் இருக்காதா… எப்படி இவை அனைத்தையும் சாப்பிட முடியும் என்றெல்லாம் கேட்கக் கூடாது. (உடல்) கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே. சரியா?

மேலே குறிப்பிட்ட உணவுகள் அனைத்தும் அடங்கிய ஒரு ‘ப்ளேட்’டின் விலை வெறும் 7 ஆயிரத்து 721 ரூபாய்தான். ஜுஜூபி காசு.

உடனே திட்டக்குழு உச்சநீதி மன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரம் ஒன்றில், ஒரு கிராமப்புற ‘ஆம் ஆத்மி’ (நம்ம மனுசங்க) ஒருவர் ரூபாய்.28ஐ கொண்டும், நகர்ப்புற ‘ஆம் ஆத்மி’ ஒருவர் ரூ.32ஐ கொண்டும் ஒருநாள் பொழுதை கழிக்க முடியும் என்று கூறியிருக்கிறதே –

அப்படிப் பார்த்தால், பிரதமர் அளித்த பர்த்டே பார்ட்டியில் ஒரு நபருக்கு அளிக்கப்பட்ட உணவின் விலையைக் கொண்டு, திட்டக்குழுவின் கணக்கின்படி 275 ‘ஆம் ஆத்மி’களுக்கு ஒரு நாளைக்கு உணவு அளித்திருக்க முடியும். எனில் 603ஐ 275 ஆல் பெருக்கினால் என்ன வருமோ அத்தனை ‘ஆம் ஆத்மி’களுக்கு ஒரு நாளைக்கு உணவு வழங்கியிருக்கலாமே…

என்றெல்லாம் குதர்க்கமாக கேள்வி கேட்கக் கூடாது. பிறகு அமெரிக்க சாமி கண்ணைக் குத்தும்.

இந்தக் கணக்கு எல்லாம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ரமேஷ் வர்மா என்பவர் பெற்றுள்ள தகவல்கள். இரவு உணவுக்காக செலவழிக்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.11 லட்சத்து 34 ஆயிரத்து 296. உணவுக் கூடாரம் உள்ளிட்ட ஏற்பாடுகளுக்காக ரூ.14 லட்சத்து 42 ஆயிரத்து 678ம், பூக்களுக்காக ரூ.26 ஆயிரத்து 444ம், செலவிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ரூபாய் 28 லட்சத்து 95 ஆயிரத்து 503 செலவாகியுள்ளது.

இதெல்லாம் அரசு கருவூலத்தில் இருந்து செலவழிக்கப்பட்ட தொகை… மக்களின் வரிப்பணம் என்றெல்லாம் சொன்னால் அடி விழும்.

இவை பிரதமர் வீட்டு மரத்தில் காய்த்தவை. ஏனெனில், டீசல் விலை உயர்வு, எரிவாயு உருளைக் கட்டுப்பாடு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை ஆகியவற்றை நியாயப்படுத்தி பேசும் போது, ‘பணம் மரத்தில் காய்க்கவில்லை’ என்று பிரதமர்தான் கூறியிருக்கிறார்.

அதாவது கோடிக்கணக்கான கோடிகளை காய்க்கும் மரம், என் வளர்ப்புத் தந்தையின் மாளிகையில்தான் இருக்கிறது. என் வீட்டில் வெறும் லட்சங்களில் காய்க்கும் மரம் மட்டுமே வளர்கிறது. அதை வைத்துக் கொண்டு ஏழை, எளியவர்களான – திட்டக்குழு பரிந்துரைக்கும் ஒரு நாள் உணவை வாங்கக் கூட வழியற்ற – ‘வறுமைக் கோட்டுக்கு கீழே’ வாழும் 603 பேருக்கு இரவு உணவை மட்டுமே வழங்க முடியும் என்று உணர்த்தியிருக்கிறார்.

வாழ்க பிரதமர். வளர்க அவர்தம் பர்த்டே பார்ட்டி. ஜெய் ஹிந்த்.

ரஜினிக்கு 240 கோடி, ராபர்ட் வதேராவுக்கு 300 கோடி…எப்படி?

8
ஹன்ஸ்-ராஜ்-சக்சேனா
ஹன்ஸ் ராஜ் சக்சேனா

“நதிமூலம், ரிஷிமூலம் மட்டுமல்ல தரகு முதலாளிகளுக்கு வரும் நிதிமூலத்தையும் ஆராயக் கூடாது.” அப்படித்தான் இந்திய அரசும் இந்திய ஊடகங்களும் நினைக்கின்றன.

இதற்கு உதாரணம், சக்சேனா. ஹன்ஸ்ராஜ் சக்சேனா. முன்னாள் சன் பிக்சர்சின் தலைமை செயல் அதிகாரியான இவர், சென்ற ஆண்டு கைது செய்யப்பட்டார். சன் பிக்சர்சுக்கு தமிழ்ப் படங்களை வாங்கிய விதத்தில் ஏகப்பட்ட முறைகேடுகளை செய்ததாகவும், பண விஷயத்தில் தயாரிப்பாளர்களை ஏமாற்றியதாகவும் புகார் வந்ததை அடுத்து இந்த கைது நடவடிக்கை அரங்கேறியது. உடனே தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர், பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

இதெல்லாம் பழைய செய்திகள். அனைவரும் அறிந்த தகவல்கள். இதனை தொடர்ந்து காவலர்கள் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக நீதி மன்றத்தில் இவர் அழுத காட்சி, உருக்கமான புகைப்படமாக நாளிதழ்களில் வெளியாகின. தொடையில் காயம், முக வீக்கம், நடக்க முடியாமல் தடுமாற்றம் என பீம்சிங் படங்களுக்கு இணையான உணர்ச்சிப்பூர்வமான கட்டம், காட்சி ஊடகங்களை நிரப்பின. இவருடன் கைதானவரும், இவருடன் இணைந்து பணிபுரிந்தவருமான அய்யப்பன், தன் இடுப்பில் வேட்டியை கட்ட முடியாமல் கட்டியிருந்தார். செய்தியாளர்கள் முன்பு வாய் விட்டு கதறி அழுதார்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், இந்தக் கைது நடவடிக்கை நடந்ததால், ‘அம்மாவின்’ வீரம் பக்கம் பக்கமாக புகழப்பட்டது. இனி தமிழ்ச் சினிமா பிழைக்கும்… மாஃபியாக்களின் ஆதிக்கத்தில் இருந்து தமிழ்ச் சினிமாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்திருக்கிறார்…’ என்றெல்லாம் பிரபலங்கள் பேட்டி கொடுத்தார்கள். கடந்த ஆட்சியில் சன் பிக்சர்ஸ் அடித்த கொட்டங்கள் கவர் ஸ்டோரியாக மின்னின.

சில மாதங்கள் கழித்து சக்சேனா, அய்யப்பன், தம்பிதுரை ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். இவர்கள் மூவரையும் உடனடியாக சன் நெட் ஓர்க் பணி நீக்கம் செய்தது. இதன் மூலம், சன் நெட் ஓர்க் புனிதமான நிறுவனம் போலவும், அதன் பெயரைச் சொல்லி சக்சேனா மட்டுமே அடாவடி செய்ததாகவும் ஒரு சித்திரம் உருவானது.

இதுவரை சொல்லப்பட்டவை அனைத்தும் கடந்த ஆண்டு நிகழ்ந்தவை.

இந்த ஆண்டு இதற்கு நேர் மாறாக சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன. ‘அது வேற வாய்… இது நார வாய்…’ என்ற வடிவேலுவின் நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது!

தன்னுடன் சன் பிக்சர்சில் பணியாற்றியவர்களும், தன்னுடன் சேர்ந்து குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்களும், தன்னுடன் சேர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுமான அய்யப்பன், தம்பிதுரை ஆகியோருடன் இணைந்து இப்போது சக்சேனா, தமிழ்ப் படங்களை வெளியிட்டு வருகிறார். எந்த தயாரிப்பாளர் சங்கம் இவர்கள் கைது செய்யப்பட்டதை பட்டாசு வெடித்து கொண்டாடியதோ, அதே கவுன்சிலை சேர்ந்தவர்கள் இப்போது சக்சேனாவுடன் பட வெளியீடு குறித்து பேசி வருகின்றனர்.

அத்துடன் ‘சன் பிக்சர்ஸ்’ போல ‘சாக்ஸ் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனத்தையும் இவர் தொடங்கியிருக்கிறார். ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை குறித்து உருவான ‘சாருலதா’ படத்தை தமிழகம் முழுக்க வெளியிட்டது ‘சாக்ஸ் பிக்சர்ஸ்’தான்.

இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு சத்யம் திரையரங்கில் நடந்தது. அப்போது பேசிய சக்சேனா, சன் டிவி தன்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டதையும், தனக்கு ஏற்ப்பட்ட துன்பங்களிலிருந்து தான் மீண்டடெழுவதற்கு முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார். அந்த முயற்சின் தொடக்கமே ‘சாக்ஸ் பிக்சர்ஸ்’ எனவும் குறிப்பிட்டார். இந்த பேனரில் மேலும் படங்களை அவர் தயாரிக்கவுள்ளதாகவும், அது தவிர வரும் ஜனவரி 15, தைப்பொங்கல் தினத்தில் புதிய தமிழ் தொலைக்காட்சியை ஆரம்பிக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டார். இத் தொலைக்காட்சிச் சேவை சிறுபடத் தயாரிப்பாளர்களுக்கு உதவும் நோக்கினை முதன்மையாகக் கொண்டிருக்கும் என்றும் திருவாய் மலர்ந்தார்.

அதாவது எந்த சிறு தயாரிப்பாளர்களை சாக்ஸ் அழிக்க முயற்சித்தார் என முன்பு குற்றம்சாட்டப்பட்டாரோ, அதே சிறு தயாரிப்பாளர்களைத்தான் இப்போது ஆதரித்து கரை சேர்க்கும் அவதாரமாக மலர்ந்திருக்கிறார்.

இதையே ‘சுண்டாட்டம்’ பட ஆடியோ வெளியீட்டின்போதும் குறிப்பிட்டிருக்கிறார். தன்னால் தமிழகம் முழுக்க 200 திரையரங்குகளில் ஒரு படத்தை வெளியிட முடியும் என்று சொல்லியிருக்கிறார்.

அதாவது அக்யூஸ்டின் கையில்தான் கஜானா சாவி இப்போதும் இருக்கிறது!

இவையனைத்தையும் தூக்கி சாப்பிடும் விதமாக ஒரு செய்தி, தமிழ்த் திரையுலகம் முழுக்க பரவி வருகிறது. ரஜினியை வைத்து படம் தயாரிக்க இவர் முடிவு செய்திருக்கிறாராம். இதற்காக ரஜினியை அணுகி பேசியிருக்கிறாராம். 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும். நாள் ஒன்றுக்கு ரூபாய் 8 கோடி வீதம், ரூபாய் 240 கோடியை சம்பளமாக தருகிறேன் என தூண்டில் வீசியிருப்பதாகவும், யோசித்து சொல்வதாக ரஜினி சொல்லியிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.

இதை சாக்ஸ், மறுக்கவில்லை. ‘எல்லா தயாரிப்பாளர்களையும் போல் நானும் ரஜினியை வைத்து படம் தயாரிக்க விரும்புகிறேன்…’ என பட்டும்படாமலும் பதில் சொல்லியிருக்கிறார். ஆனால், ரூ.240 கோடி சம்பளமா என்பதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். ஒருவேளை ரஜினி, இவர் தயாரிப்பில் நடித்தாலும் உண்மையான சம்பளம் வெளியில் தெரியாது என்பதே உண்மை.

இது ஒருபுறம் இருக்கட்டும்.

தலைமை செயல் அதிகாரியாக சன் பிக்சர்சில் பணிபுரிந்த இவர், லட்சங்களில் சம்பளம் வாங்கியவர். சன் டிவிக்கு படம் வாங்கிய வகையில் கமிஷன் அடித்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு. மற்றபடி சாதாரண குமாஸ்தாவின் மகன். கலாநிதி மாறனின் கல்லூரி கால நண்பர். பரம்பரை சொத்தெல்லாம் கிடையாது.

அப்படிப்பட்டவருக்கு இப்போது எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது? சிறு படங்களை தொடர்ச்சியாக வெளியிட ஆரம்பித்திருப்பவர், தனியாக தொலைக்காட்சி ஒன்றை உருவாக்க இருப்பவர், ரஜினியை வைத்து படம் தயாரிக்க விரும்புபவர், இவர்தான். பகிரங்கமாக இதை சொல்லியிருப்பவரும் இவரேதான். இதற்கெல்லாம் மூலதனம் எங்கிருந்து வருகிறது? யார் கொடுக்கிறார்கள்?

சாதாரணமாக ஒரு மாடு வாங்க வேண்டும் என்றால் கூட என்ன சொத்து இருக்கிறது… எப்படி வட்டியுடன் திருப்புவாய், யார் ஜாமீன் கையெழுத்து போடுவார்கள்… என்றெல்லாம் கடன் கொடுப்பவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள். அப்படியிருக்க கோடிக்கணக்கில் எந்த உத்திரவாதத்துடன் யார் இவருக்கு கடன் கொடுக்கிறார்கள்? யார் இவர் சார்பாக ஜாமீன் கையெழுத்து போடுகிறார்கள்?

சன் டிவியால், தான் ஏமாற்றப்பட்டதாக அழுது புலம்புகிறார். ஆனால், இவர் வெளியிடும் அனைத்துப் படங்களின் தொலைக்காட்சி உரிமங்களையும் சன் டிவியே வாங்கியிருக்கிறது. அவ்வளவு ஏன்,  ‘சாக்ஸ் பிக்சர்ஸ்’ பெருமையுடன் வழங்கும் என்ற லோகோவுடன் ரிலீசான ‘சாருலதா’ படத்தின் சேட்டிலைட் உரிமை சன் டிவியிடம்தான் இருக்கிறது. அப்பட தொடர்பான புரொமோஷன் நிகழ்ச்சிகளும் சன் டிவியில்தான் அதிகளவில் ஒளிபரப்பானது. தவிர, அய்யப்பனின் உறவினர் வில்லனாக நடித்த ‘தடையறத் தாக்க’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தையும் அதே சன் டிவிதான் வாங்கியிருக்கிறது.

காங்கிரசு கட்சியின் தலைவியான சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா இப்படித்தான் ரூபாய் 300 கோடிக்கு அதிபதியாகி இருக்கிறார். என்ன தொழிலை அவர் செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், ரூபாய் 50 லட்சம் மூலதனத்தில் அவர் தொடங்கிய தொழில், இப்போது ரூபாய் 300 கோடி மதிப்புள்ளதாக மாறியிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய வீடு, மனை, நிலம் விற்பனை நிறுவனமான டி.எல்.எஃப்., வதேராவுக்கு நம்பிக்கையின் பேரில் வட்டியில்லாமல் ரூபாய் 65 கோடியை கடனாக கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், இதுபோல் எல்லா நிறுவனங்களுக்கும் எந்தப் பிணையும் இல்லாமல் டி.எல்.எஃப்., ரூபாய் 65 கோடியை வாரி வழங்குமா?

விடை தெரியாத கேள்வி அல்ல. பதில் சொல்ல விருப்பமில்லாத வினா இது.

வதேராவுக்கு எதன் பேரில் டி.எல்.எஃப்., ‘கடன்’ கொடுத்ததோ, அப்படித்தான் சக்சேனாவுக்கும் ‘கடன்’ கிடைக்கிறது போலும். சோனியாவின் மருமகன் என்ற அந்தஸ்து வதேராவுக்கு இருப்பதால் அவரால் குறுகிய காலத்தில் மிகப்பெரும் தொழிலதிபராக உயர முடிந்திருக்கிறது. அவருக்கு உதவிய டி.எல்.எஃப் போன்ற நிறுவனங்கள் பிரதிபலனாக தமது தொழிலை விரிவுபடுத்தியிருக்கின்றன.

ஆனால் அரசியல்வாதிகளின் இத்தகைய ஊழல்கள் வெளிவருவது போல முதலாளிகளின் ஊழல்கள் வெளிவருவதில்லை. அதுதான் சக்சேனா விசயத்திலும் நடக்கிறது. இவருக்கு ஏது இவ்வளவு பணம் என்ற கேள்வியை எந்த ஊடகமும் எழுப்பவில்லை. மேலும் யாருடைய பணம் ரஜினிக்கு 240 கோடி ரூபாய் வருமானமாக போகிறது என்பதும், அவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தின் வசூலை எப்படி எடுப்பார்கள், இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் கருப்பு பணமாய் மட்டும் செய்யப்படும் மர்மம் எல்லாம் கண்டுபிடிக்க முடியாதவை.

ஆனால் ரஜினி படத்திற்கு கிடைக்கும் விளம்பர வருவாயை மனதில் கொண்டு ஊடகங்கள் அனைத்தும் இது பற்றி கள்ள மௌனம் சாதிக்கும். அதனால்தான் வதேரா கேள்விக்கு உட்படுத்தப்பட்டது போல சக்சேனா விசாரணைக்குள் வரமாட்டார்.

நதிமூலம், ரிஷிமூலம் மட்டுமல்ல தரகு முதலாளிகளுக்கு வரும் நிதிமூலத்தையும் ஆராய வேண்டும். பகிரங்கமாக அம்பலப்படுத்த வேண்டும். அப்போதுதான் கஜானாவின் சாவி திருடர்களிடமே இருக்கும் விந்தையை மக்கள் அறிந்து கொள்வார்கள்.

படிக்க

மருந்து கம்பெனிகளுக்கும் டாக்டருக்கும் என்ன உறவு? மெடிகல் ரெப் விளக்குகிறார்….

19

மருந்து-கம்பெனி

“டாக்டர் ஆகனும் நாட்டுக்காக சேவை செய்யனும் அதுதான் என் லட்சியம்” பத்தாம் வகுப்பு வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளிவந்ததும் தமிழக பத்திரிகைகளில் மாணவர்களின் புகைப்படங்களுடன் இது போன்ற செய்திகள் வரும். அடுத்த வருடம் அதே செய்தி வேறு மாணவர்களின் புகைப்படத்துடன் வரும். இவர்கள் அனைவருமே மருத்துவர்களாகிவிடுகிறார்களா ?

எனது நண்பனும் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியானதும் இப்படித்தான் சொன்னான். பிறகு பன்னிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண்கள் குறைந்ததால் சீட் கிடைக்கவில்லை. வழியின்றி எம்.எஸ்.சி. மைக்ரோபையாலஜி படித்தான். வேலை தேடி அலைந்தபோது, சரியான வேலை கிடைக்காததால் மருந்து விற்பனைப் பிரதிநிதி (மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ்) ஆனான். அது சென்னை நிறுவனம். மாதம் பத்தாயிரம் சம்பளம், பெட்ரோல் அலவன்ஸ், செல்போன் பில், இன்சென்டிவ் என சுகமான வாழ்க்கை அவன் விரும்பிய மருத்துவ துறையிலேயே கிடைத்தது.

ஓரிரு ஆண்டுகளில் பதவி உயர்வுடன் ஒரு பன்னாட்டு கம்பெனிக்கு சென்றுவிட்டான். மாதச்சம்பளம் பதினெட்டாயிரம், புது வண்டி, புளூ பேன்ட், புளூ ஷர்ட், புளூ டை, ஷூ என்று அவன் வீட்டிலிருந்து வெளியே வரும் ஒவ்வொரு நாளும் எனக்கு பொறாமையாக இருக்கும்.   விரைவில் தனது கல்விக்கான கடனைக்கூட அடைத்துவிட்டான். இப்போது வீடு கட்டிக்கொண்டிருக்கிறான். நான் இன்னும் அதே ஓட்டை வண்டியில் தான் சுற்றிக்கொண்டிருக்கிறேன். எங்கள் தெருவில் அனைவருமே அவனை பாராட்டுவார்கள்.

அவன் பணிபுரியும் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட, அந்த மருந்து கம்பெனியில் மொத்தம் ஐம்பது வகையான மருந்துகளை விற்கிறார்கள். இவனுடைய பிரிவின் கீழ் மட்டும் பதினெட்டு வகை மருந்துகள். காலையிலும் மாலையிலும் வெவ்வேறு பகுதி மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவர்களை சந்தித்து, தனது கம்பெனி மருந்துகளை அறிமுகப்படுத்தி அவை என்னென்ன நோய்களை எல்லாம் குணப்படுத்தும் என்பதை மருத்துவர்களுக்கு கூறுவான். அதன் பிறகு சில சந்திப்புகளில் மருத்துவருடனான நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டதும் சில இலவச மருந்துகளை கொடுத்து டிரை பன்னி பாருங்க சார் ரிசல்ட் நல்லா இருக்கும் என்று சில மருந்துகளை இலவசமாக கொடுப்பான்.

மருத்துவர்களும் அவற்றை சிலருக்கு இலவசமாக வழங்குவார்கள். அந்த மருந்து அட்டைகளில் விலை அச்சிடப்பட்டிருக்காது. இலவச மருந்துகள் வேலை செய்கிறதா ? என்பதை அறிந்துகொண்ட பிறகு, மருத்துவர் அதை பரிந்துரைப்பார். அத்துடன் தனது மருத்துவகத்திற்கு அருகில் உள்ள மருந்துக் கடைகளில் அந்த குறிப்பிட்ட மருந்துகளை வாங்கி வைக்கச் சொல்லிவிடுவார். உடனே இவன் அந்த கடையை அணுகி டாக்டர் இந்த மருந்துகளை பரிந்துரைக்கத் துவங்கிவிட்டார். அவை எங்களுடைய கம்பெனி மருந்துகள் தான் உங்களுக்கு இந்த மருந்தில் இத்தனை சதம் கமிஷன், எவ்வளவு வேண்டும் என்று ஆர்டர் எடுத்துக்கொள்வான். அத்துடன் நமது நண்பன் கம்பெனி கொடுக்கும் சிறு சிறு அன்பளிப்புகளை உடனுக்குடன் டாக்டரிடம் வழங்கி தனது நிறுவன மருந்துகளையும் நினைவில் நிறுத்துவான்.

மருந்து-கம்பெனி-3நீங்கள் செல்லும் மருத்துவமனைகளில் பார்க்கலாம். பேப்பர் வெயிட் இருக்கும். உள்ளே ஒரு மாத்திரையின் பெயர் இருக்கும். உடற்கூறு படம், டார்ச் லைட், எடைபோடும் இயந்திரம், முட்டியைத் தட்டிப் பார்க்கும் கருவி, பிரசர் செக் கருவி என அனைத்தும் இருக்கும். அனைத்திலும் பலவகையான விளம்பரங்கள் பதிக்கப்பட்டிருக்கும். இவை அனைத்தையும் மருத்துவர்களுக்கு மருந்து கம்பெனிகள் தான் வழங்குகின்றன.

இப்படி எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் இவன் அறிமுகம் செய்த மருந்துகளை பரிந்துரைத்த மருத்துவர் திடீரென்று அவற்றை குறைத்துக் கொண்டாலோ, அல்லது வேண்டுமென்றே வேறு மருந்துகளை பரிந்துரைத்தாலோ நண்பன் உடனே தனது மேனேஜரை அழைத்துக்கொண்டு மருத்துவரை சந்திப்பான்.

சில புதிய ஆஃபர்கள் வந்திருப்பது போல பேசி மீண்டும் தனது மருந்துகளையே பரிந்துரைக்க வைப்பான். அதற்காக தான் மேனேஜரை உடன் அழைத்துச் செல்கிறான். அவர் இப்போது தூண்டிலில் சில பெரிய புழுக்களை போடுவார். மருத்துவரை மொத்தமாக அமுக்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்களையும், FAMILY TOUR கூப்பன்களையும் வழங்குவார். அவை உள்நாடு வெளிநாடு என்று பேரத்தை பொருத்து அமையும். மருத்துவர் அதற்கும் அடங்கவில்லை என்றால் நேரடியாக பணம் வெட்டப்படும் !

சூளைமேட்டில் ஒரு மருத்துவர், மனைவி நகைகளை எல்லாம் விற்று கடன்பட்டு புதிதாக ஒரு மருத்துவமனை கட்டியிருக்கிறார். இவரைப் போன்ற சிலர் கடனைக் கட்ட வேண்டும் என்ன செய்வது ? என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இலவச மருந்துகள் வேண்டாம், பொருட்களும் வேண்டாம் நேரடியாகவே விசயத்திற்கு வருகிறோம் என்று ஒவ்வொரு கம்பெனியுடனும் ஒரு உடன்பாட்டிற்கு வருகிறார்கள். அவை அனைத்தும் மிகப்பெரிய மருந்து கம்பெனிகள்.

டயாபடீஸ் ஸ்பெசலிஸ்டா ?

வருசத்துக்கு பத்து லட்சத்துக்கு பரிந்துரைத்தால் எனக்கு எத்தனை சதவீதம் ?

என துறை வாரியாக சதவீத கணக்கில் பேரம் பேசி பரிந்துரை செய்கிறார்கள்.

எனக்கு தெரிந்து தி.நகரில் உள்ள அகார்டு ஓட்டலில் மாதம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை துவங்கி நள்ளிரவு வரை கீழ்தளத்தில் விருந்துகள் நடைபெறும். DOCTOR’S CONFERENCE என்கிற பெயரில் நடத்தப்படும் சோரம் போகும் இந்த விழாவில் பேருக்கு சில மருத்துவர்களை பேச சொல்வார்கள். பிறகு தான் உண்மையான டாக்டர்ஸ் கான்பரன்ஸ் துவங்கும் ! அந்த மருந்து கம்பெனியின் மூத்த அதிகாரிகள் பேசுவார்கள். பிறகு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வண்ண வண்ண மது வகைகள் விருந்தளிக்கப்படும். அதன் பிறகு உணவு வகைகள் பரிமாறப்படும். இந்த கூட்டங்களுக்கு பெண் மருத்துவர்களும் வருவதுண்டு. ஒவ்வொரு கூட்டங்களிலும் மருத்துவர்கள் போதை அதிகமாகி சரிந்து விழுவது நடக்கும்.

கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விசயம் இங்கு வரும் மருத்துவர்கள் யாரும் சொந்த வாகனங்களில் வருவது இல்லை.இவர்களை அழைத்து வருவதற்காக விலையுயர்ந்த தனியார் வாகனங்கள் வாடகைக்கு அமர்த்தப்படுகின்றன. மாலை கூட்டம் துவங்கியது முதல் நள்ளிரவு வீட்டில் கொண்டு சேர்ப்பது வரை அனைத்தையும் மெடிக்கல் ரெப்புகள் செய்வார்கள். கவனிப்புகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் இது போன்ற சிறப்பு கவனிப்புகள் குறிப்பிட்டவகை ஸ்பெஷலிஸ்டுகளுக்கு மட்டும் தான்.

கம்பெனிகளுக்கு மிகவும் அதிக வருமானம் ஈட்டித் தரும் மருத்துவர்களையும், பிரபல மருத்துவர்களையும் கவனிக்கும் விதமே வேறு. இவர்களுக்கான டாக்டர்ஸ் கான்பரன்ஸ் அயல்நாடுகளில்தான் நடக்கும். அதிலும் மது, மாது, உணவு என சகல சௌபாக்கியங்களும் உண்டு. அதே நேரத்தில் அனைத்து மருத்துவர்களும் இவ்வாறு இல்லை. எனினும் ஏதோ ஒரு வகையில் அனைத்து மருத்துவர்களும் மருந்து கம்பெனிகளிடமிருந்து எதையாவது பெறுகிறார்கள். ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் மிகப்பெரும்பான்மையினர் இப்படி தான் உள்ளனர்.

அடுத்து ஒரு குறிப்பிட்ட மருந்தின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று நிறுவனம் முடிவு செய்துவிட்டால், அதற்கு தேவை இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை, அதை விற்றாக வேண்டும். மருந்துகளை மொத்தமாக விற்கும் விற்பனையாளர்களையும், மருந்து கடைக்காரர்களையும் அணுகி வழக்கமா கொடுக்கிற கமிஷனை விட அதிகமா தர்றோம், கூடவே இலவச மருந்துகளையும் தருகிறோம் என்று பேசி அந்த குறிப்பிட்ட வகை மருந்துகளை தள்ளிவிடுகின்றனர்.

மருந்து-கம்பெனிஇன்னொரு முக்கியமான விசயம். மருத்துவர்களுக்கு வழங்குவதற்காக கொடுக்கப்படும் இலவச மருந்துகளை குறிப்பிட்ட அளவுதான் கொடுக்க முடியும். மீதம் உள்ளதை என்ன செய்கிறார்கள் ? இங்கே தான் ராதாகிருஷ்ணன் வருகிறான். ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் ராதாகிருஷ்ணன் விலை அச்சிடப்படாத இந்த இலவச மருந்துகளை மொத்தமாக அள்ளிச் செல்கிறான் !

பத்து ரூபாய் மருந்துக்கு இரண்டு ரூபாய் ஐம்பது பைசா தருகிறான். இந்த கழிவு விலையில் மெடிக்கல் ரெப்புகள் தமது அறைகளில் சேமித்து வைத்திருக்கும் அனைத்து மருந்துகளையும் ராதாகிருஷ்ணன் வரும் ஒரு நல்ல நாளில் விற்றுவிடுவார்கள். அவற்றை ஆந்திராவுக்கு எடுத்துச்செல்வது தான் ராதாகிருஷ்ணனின் வேலை. அதன் பிறகு அவை எந்த மாநிலத்து ஏழை மக்களுக்கு வழங்கப்படுகின்றன என்பது தெரியவில்லை !

அரசு நிறுவனங்களால் ஐம்பது பைசா, ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அதே மாத்திரைகள் இப்போது பன்னாட்டு நிறுவனங்களால் ஏழு ரூபாய்க்கும், எட்டு ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு உள்நாட்டில் அதிகபட்சமாக 8,800 ரூபாய்க்கு தயாரிப்பட்ட மருந்துகள், பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய மருந்து சந்தைக்குள் நுழைந்த பிறகு ஒரு லட்சம் வரை விற்கப்படுகிறது.

♦♦♦♦

நானும் உழைச்சு தான் சாப்பிடுகிறேன் என்கிறார்கள் மெடிக்கல் ரெப்புகள் ! மருத்துவர்களுக்கு நடப்பதை போலவே இவர்களுக்கும் மாதா மாதம் மீட்டிங் நடைபெறுகிறது. அதில் மருத்துவர்களை எப்படி அணுக வேண்டும், எப்படி பேச வேண்டும், எப்படி வீழத்த வேண்டும் என்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த பயிற்சி உரைகளுக்கு பிறகு இவர்களை உற்சாகப்படுத்த உற்சாக பானங்களும், உணவும், பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

பன்னாட்டு நிறுவனங்களுக்காக மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் இப்படித்தான் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்களும் மருந்துச் சீட்டு எழுதும் போது நோயாளியின் நோயைப் பற்றி மட்டும் நினைத்துக் கொள்வதற்குப் பதில் தனக்கு கிடைக்கும் பரிசு, சலுகைகளை நினைத்தவாறு எழுதுகிறார்கள்.

பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருக்கும் மருத்துவத் துறை இப்படித்தான் இயங்குகிறது. முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் தொழில் அறம் என்பது இதுதானே?

மேலும் படிக்க


______________________________

– மல்லன்.
___________________________

வெனிசுவேலா: இல்லத்தரசிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் நாடு!

9

வெனிசுவேலாவில் வீட்டில் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பெண்களின் வேலை அங்கீகரிக்கப்பட்டு அவர்கள் வயதான காலத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமை வழங்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

பொதுவாக முறை சாரா துறைகளில் வேலை பார்க்கும் உழைக்கும் மக்களும், வெளியில் சென்று வேலை பார்க்காமல் குடும்பத்தை கவனித்துக் கொள்வதில் தமது வாழ்நாளை செலவிடும் பெண்களும் வயதான பிறகும் தொடர்ந்து உழைக்க வேண்டியிருக்கிறது, முடியா விட்டால் தமது குழந்தைகள் அல்லது உறவினர்கள் தயவில் அல்லது தரும பிரபுக்களின் தயவில் காலத்தை ஓட்டி வேண்டியிருக்கிறது.

உழைக்க முடியாதபடி உடல் நிலை தளரும் போது சாகும் வரை ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள் கௌரவத்துடன் வாழ்வது போல மற்ற பிரிவினர் வாழ முடிவதில்லை என்பது நிதர்சனம்.

திரிசூலம் ரயில் நிலையம் அருகில் மலைக்கு போகும் வழியில் ஒரு பாட்டியை பார்த்தோம். அவருக்கு சுமார் 70 வயது இருக்கலாம். இரண்டு மகள்களாம். தஞ்சாவூரைச் சேர்ந்த அவரது கணவர் சிறு வயதிலேயே இறந்து போயிருக்கிறார். இவர் சென்னைக்கு குழந்தைகளுடன் வந்து வீட்டு வேலை பார்த்து வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். இப்போது இரண்டு பெண்களும் கல்யாணம் ஆகி குடும்பத்தோடு வாழ்கிறார்களாம். ‘என்ன ஆனாலும் மருமகன் வீட்டில் போய் இருக்கக் கூடாது’ என்றார்.  தினமும் அருகில் விமான நிலையத்தின் குப்பை கூடைகளில் வீசப்படும் தண்ணீர் பாட்டில்களை சேகரித்து கோணிப்பைகளில் நிரப்புகிறார்.

நாங்கள் பார்க்கும் போது மூன்று பைகளை நிரப்பியிருந்தார், இரண்டு நாள் வேலையின் பலன் என்று சொன்னார். அவற்றை கடையில் கொடுத்தால் ரூ 200 கிடைக்குமாம். ‘என் வயித்துப்பாட்டுக்கு அது போதும், என்னைக்கு என்னால முடியாதுன்னு ஆகுதோ அன்றைக்கு தற்கொலை செய்து கொண்டு செத்து போவேன்’ என்று இயல்பாக சொன்னார்.

இது போன்று கோடிக்கணக்கான முதியவர்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள். தமது குழந்தைகள் அல்லது மற்ற உறவினர் வீடுகளில் போய் வசித்தாலும் அவர்களுடைய ‘தயவில்’ வாழ வேண்டிய அவலம். மூன்றாம் நபர்களின் தயவில் அடிமைத்தனத்தை ஏற்றுக் கொண்டு வாழ்வது அதை விட குறுகிப் போகச் செய்யும் ஒன்று.

உடலில் தெம்பு இருக்கும் வரை சலிக்காமல் உழைக்கும் விவசாயிகள், பெண்கள், கூலி தொழிலாளர்கள் முதிய வயதில் கௌரவத்துடன் வாழ வழி செய்து கொடுப்பது எத்தனை சமூகங்களில் நடக்கிறது?

வெனிசுவேலா-2

வெனிசுவேலாவின் மக்கள் ஆட்சி நிர்வாகம் இந்த திசைகளில் சிந்திக்கிறது. இப்போதைய அதிபரான ஹூயுகோ சாவெஸ் 1998-ல் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு 1999-ல் புதிய அரசியல் அமைப்பு சட்டம் எழுதப்பட்டது. பொதுவாக ஆவணங்கள் எழுதப்படும் போது குடிமக்களை குறிப்பதற்கு அவன் (ஆங்கிலத்தில் he) என்ற சொல்லைத்தான் பயன்படுத்துவார்கள். வெனிசுவேலாவின் அரசியல் அமைப்பு சட்டம் பாலின வேறுபாடு இல்லாத மொழியில் எழுதப்பட்டது. அந்த அடிப்படை சட்டத்திலேயே பெண்களுக்கான உரிமைகள் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டன.

  • ஒரே வேலையை செய்யும் போது ஆண்களுக்கு  சமமான ஊதியம் பெறும் உரிமை,
  •  வீட்டிலும் பொது இடங்களிலும் வன்முறைக்கு ஆளாகாமல் வாழும் உரிமை,
  •  குழந்தைப் பேறு காலத்தில் தேவையான அரசு உதவிகளையும் அரசாங்கம் மூலம் பெறும் உரிமை

என்று ஆண்களையோ பிற உறவினர்களையோ சார்ந்திராமல் தமது வாழ்க்கையை சுதந்திரமாக நடத்துவதற்கான உரிமையை பெண்களுக்கு பதிவு செய்தது அரசியலமைப்பு சட்டம்.

தொடர்ந்து வந்த 13 ஆண்டுகளில் இன்னும் பல நல்வாழ்வு திட்டங்களும் அமல் படுத்தப்பட்டுள்ளன.

  • பணக்கார நிலப்பிரபுக்களின் நிலம் கைப்பற்றப்பட்டு ஏழை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட போது, பெண்களை குடும்பத் தலைவராக கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
  • நாடெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள சமூகக் குழுமங்களில் 70% உறுப்பினர்கள் பெண்கள்.
  • உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து மத்திய அரசு வரை ஒவ்வொரு மட்டத்திலும் பெண்கள் அதிகார பதவிகளை வகிக்கிறார்கள்.

உலகிலேயே எண்ணெய் ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் வெனிசுவேலா நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஆதாயங்கள் கடந்த 13 ஆண்டுகளில் மக்கள் நலத்திட்டங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. வெனிசுவேலா நாடு தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. 9.16 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் (தென்னிந்தியாவை விட ஒன்றரை மடங்கு பெரியது) 2.9 கோடி மக்கள் வசிக்கும் நாடு (கேரளாவை விட கொஞ்சம் குறைவு).

1980களில் எண்ணெய் விலைக் குறைவால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட போது ஐஎம்எப் உலக வங்கியின் பரிந்துரைகளின் படி புதிய தாராளமய, தனியார்மய கொள்கைகள் அமல் படுத்தப்பட்டன. அது மக்களின் வாழ்க்கையை இன்னமும் கடும் நெருக்கடிக்குள் செலுத்தியது. மொத்த மக்கட் தொகையில் 80 சதவீத மக்கள் வறுமையிலும் பட்டினியிலும் பரிதவிக்க, 20 சதவீத தரகு முதலாளித்துவ மேட்டுக் குடியினரும் அதிகார வர்க்கத்தினரும் மட்டுமே ஆடம்பர சுகபோகங்களில் மூழ்கித் திளைத்தனர்.

வாழ்விழந்த மக்கள் தனியார்மய தாராளமயத் தாக்குதல்களுக்கு எதிராக தன்னெழுச்சியாகத் திரண்டு போராடினர். ஏதுமற்ற மக்கள் நகர்ப்புற சூப்பர் மார்க்கெட்டுகளைச் சூறையாடுவது பலமுறை நடந்தது. துறைமுகங்களில் இறக்குமதியாகும் உணவுப் பொருட்களைப் பட்டினிப் பட்டாளம் பறித்தெடுப்பதும் தொடர்ந்தது. அன்றைய அமெரிக்கக் கைக்கூலி அதிபர் கார்லோசின் அரசு, நாடெங்கும் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி, இராணுவத்தை ஏவி இப்போராட்டங்களை ஒடுக்கி, பல்லாயிரக்கணக்கானோரைக் கொன்றொழித்து பாசிச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது.

சாவேஸ்

முன்னாள் ராணுவ அதிகாரியான ஹூயுகோ சாவெஸ் 1998 அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு தனியார்மய தாராளமயக் கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தி வந்த சூழலில், சாவெஸ் இவற்றை எதிர்த்து மக்கள் நலக் கொள்கைகளை முன்வைத்துப் பிரச்சாரம் செய்தார். ஓட்டுக் கட்சிகளின் ஊழல் ஒடுக்குமுறை ஆட்சிகளால் வெறுப்புற்றிருந்த உழைக்கும் மக்கள், தமது உணர்வுகளைப் பிரதிபலித்த சாவெசை ஆதரித்தனர்.

அவரது தலைமையிலான ஆட்சி ஏற்பட்ட பிறகு, வெனிசுவேலாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான PDVSA நாட்டுடமையாக்கப்பட்டு பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் ஆதிக்கம் வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டது. பெண்கள், குழந்தைகள், பழங்குடி மக்கள் உள்ளிட்ட பரவலான உழைக்கும் மக்களுக்கு தேவையான நல வாழ்வு திட்டங்களுக்கு எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாய் பயன்படுத்தப்படுகிறது.

  • கடந்த 10 ஆண்டுகளில் சமூக நல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு 60.6% அதிகரித்திருக்கிறது. ஆண்டுக்கு $77 பில்லியன் அல்லது சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது.
  • 70% அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலையிலும் மதியமும் இரண்டு வேளை சத்துணவு வழங்கப்படுவதோடு மாலை வீட்டுக்குப் போவதற்கு முன்பு சிற்றுண்டியும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஊட்டச்சத்து குறைவு வீதம் வெகுவாக குறைந்திருக்கிறது.
  • நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான இலவச மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. வெனிசுவேலாவின் எண்ணெயை கியூபாவுக்கு ஏற்றுமதி செய்து அங்கிருந்து மருத்துவ சேவைக்காக மருத்துவர்களையும், பிற ஊழியர்களையும் வரவழைத்திருக்கிறார்கள். குழந்தை பிறப்பின் போது பெண்களின் இறப்பு வீதம் வெகுவாக குறைந்திருக்கிறது. அரசு மருத்துவ திட்டத்தின் கீழ் குழந்தை பெறும் பெண்களில் 99.3% பேர் உயிர் பிழைக்கிறார்கள்.
  • சிறு குழந்தை இறப்பு வீதம், வறுமை வீதம் போன்றவையும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.
  • பெண்களுக்கான வங்கி அமைக்கப்பட்டு பெண்கள் சிறு தொழில் செய்ய ஊக்கம் அளிக்கப்படுகிறது. 25 லட்சம் பெண்களுக்கு 1.5 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹூயுகோ சாவெஸ் தலைமையிலான வெனிசுவேல அரசு உள்நாட்டில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதோடு மட்டுமில்லாமல் பன்னாட்டு அரங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உலக நாடுகளை அணி திரட்டும் முயற்சியிலும் ஈடுபடுகிறது.

  • சாவெஸ், எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பை வலுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார்.
  • அமெரிக்க எதிர்ப்பாளரான கியூபா அதிபர் காஸ்ட்ரோவை தனது ஆசான் என்று போற்றி ஆதரிக்கும் அவர், பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள கியூபாவுக்குச் சலுகை விலையில் பெட்ரோலிய எண்ணெய் கொடுத்து உதவுகிறார்.
  • வெனிசுலாவிலிருந்து தெற்கே அர்ஜெண்டினா வரை எரிவாயு குழாய் பதித்து தென்னமெரிக்க கண்டத்து நாடுகளுக்கு மலிவு விலையில் எரிவாயுவை விநியோகிப்பதை சாவெஸ் தனது நீண்டகாலத் திட்டமாக அறிவித்துள்ளார்.
  • மேற்கத்திய ஏகாதிபத்திய நிறுவனங்கள் அல்லாமல், இந்தியா, சீனா, ரஷ்யா முதலான இதர நாடுகளை இத்திட்டத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைத்துள்ளார். இத்திட்டமானது அமெரிக்க எதிர்ப்பு கொண்ட பிராந்திய ஐக்கியத்தைக் கட்டியமைக்கும் என்று கூறுகிறார்.
  • தென் அமெரிக்காவில் ஐஎம்எப்பின் ஆதிக்கம் கிட்டத்தட்ட முற்றிலும் இல்லாமல் ஆகி விட்டது. 2005-ம் ஆண்டில் இந்த பிராந்தியம் ஐஎம்எப்பிடமிருந்து வாங்கப்பட்ட கடன்களில் 80%ஐ செலுத்திக் கொண்டிருந்தது. 2004ம் ஆண்டில் $100 பில்லியனாக இருந்த ஐஎம்எப் கடன்களின் மதிப்பு  2008-ம் ஆண்டு $20 பில்லியனாக குறைந்தது.  உலகளாவிய கடன்களில் 1%மான $50 மில்லியன் மட்டுமே இந்த பகுதியில் கொடுக்கப்பட்டிருந்தது.

ஐரோப்பாவில் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரேக்க நாடு வெனிசுவேலாவின் முன்னுதாரணத்தை பின்பற்ற வேண்டும் என்று குரல்கள் எழுந்திருக்கின்றன.

வெனிசுவேலா-4

மக்கள் நலனில் அக்கறை கொண்ட பல சீர்திருத்த நடவடிக்கைகளை சாவெஸ் தலைமையிலான அரசாங்கம் செயல்படுத்தியிருந்தாலும் இன்னும் பல சவால்கள் வெனிசுவேலாவின் முன்பு இருக்கின்றன.

  1. அதிபர் சாவெஸ் தேர்தல் மூலம் பதவிக்கு வந்துள்ளாரே தவிர, அந்நாட்டின் ஆளும் வர்க்கங்களான தரகுப் பெருமுதலாளிகளும், நிலப்பிரபுக்களும் வீழ்த்தப்படவில்லை. அவர்களின் சொத்துக்கள் நட்டஈடின்றி பறிமுதல் செய்யப்படவில்லை.
  2. இந்த ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் வகையில் பாசிச முறையில் கட்டியமைக்கப்பட்டுள்ள அரசு எந்திரம் அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறை, சிறைச்சாலை அடங்கிய ஒட்டுமொத்த அரசு எந்திரம் தூக்கியெறியப்படவில்லை.
  3. மக்கள் போராட்டங்களால் தற்காலிகமாக ஆளும் வர்க்கங்கள் பின்வாங்கிக் கொண்டுள்ளதே தவிர, அதன் பொருளாதார பலமும் ஆதிக்கமும் வீழ்த்தப்படவில்லை. தேசிய வருமானத்தில் பெரும் பகுதியை ஈட்டித் தரும் அரசு பெட்ரோலியத் துறையை, நிர்வகித்துக் கட்டுப்படுத்தம் அதிகாரம் கொண்டதாகவே மேட்டுக்குடி கும்பல் இன்னும் நீடிக்கிறது. நாடாளுமன்றம், நீதித்துறை, மாநில அரசுகளின் நிர்வாகம் முதலானவற்றில் எதிர்த்தரப்பு பலமிக்கதாகவே உள்ளது.
  4. பத்திரிகை ஊடகத் துறையில் சாவெஸ் எதிர்ப்பு தரகு முதலாளிகளே ஏகபோகமாக உள்ளனர். பெரும்பான்மை அதிகார வர்க்கமும் சாவெஸ் எதிர்ப்பாளர்களாகவே உள்ளனர். ‘எனது கொள்கைகளைச் செயல்படுத்த முடியாமல் பெரும் முட்டுக் கட்டையாக இருப்பது அதிகார வர்க்கம்தான்” என்று சாவெஸ் வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறார்.
  5. அமைப்பாக்கப்படாத கூலித் தொழிலாளர்கள் சாவெஸ் அரசை ஆதரிக்கும் அதேசமயம், அமைப்பு ரீதியிலான மேட்டுக்குடி தொழிலாளர்கள் அரசியல் உணர்வின்றி, ஆளும் வர்க்கங்களுக்கு விலைபோகுமளவுக்கு பிழைப்புவாதத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். கிராமப்புற விவசாயிகளும் நகர்ப்புற ஏழைகளும் சாவெசுக்கு ஆதரவாக உள்ள போதிலும், அவர்கள் புரட்சிகரமான கட்சி ஒன்றால் திரட்டப்படவில்லை.
  6. வெனிசுவேலாவின் பொருளாதாரம் இன்னமும் எண்ணெய் ஏற்றுமதியையே பெருமளவு சார்ந்திருக்கிறது. ஏற்றுமதி வருமானத்தில் சுமார் 95%, மத்திய அரசின் வருவாயில் 40%, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12% எண்ணெய் துறையிலிருந்தே வருகின்றன. ஆனால், அரசுத்துறை எண்ணெய் நிறுவனத்தின் மூலம் ஏறத்தாழ 45,000 தொழிலாளிகளே வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர். இது வெனிசுவேலாவின் மொத்த உழைப்பாளர் எண்ணிக்கையில் 1%க்கும் குறைவானதாகும்.

வெனிசுவேலாவின் ஏற்றுமதியைச் சார்ந்த எண்ணெய் உற்பத்தியும் விரிவாக்கமும் உலக ஏகாதிபத்தியப் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது; அதன் ஆதிக்கம், கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. புரட்சி என்பது, இத்தகைய ஏகாதிபத்திய கட்டுமானத்தைத் தகர்த்தெறிவதாகும். ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று, சுயசார்பான தேசிய பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதாகும்.

  1. பின்தங்கிய ஏழை நாடான வெனிசுவேலாவில் விவசாயத்துக்கு முன்னுரிமையும், விவசாயத்துக்கு உதவும் வகையிலும் சமூகத் தேவைகளை ஈடு செய்யும் வகையிலும் சிறுதொழில் உற்பத்திக்கு இரண்டாம்பட்ச முன்னுரிமையும், கனரகபெருந்தொழில் துறைக்கு மூன்றாம்பட்ச முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டும். இதன் மூலமே சுயசார்பான தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைத்து, ஏகாதிபத்திய ஆதிக்கத்திலிருந்து வெனிசுவேலா விடுதலையடைய முடியும். ஆனால் சாவெசின் பொருளாதாரத் திட்டங்கள் கனரக எண்ணெய் தொழிற்துறைக்கு முதல் முக்கியத்துவமளிப்பதாகவும், எண்ணெய் உற்பத்தியை விரிவுபடுத்த ஏகாதிபத்திய நிதிமூலதனத்தைச் சார்ந்திருப்பதாகவும் திரும்பத் திரும்ப உலக ஏகாதிபத்தியப் பொருளாதாரக் கட்டமைவில் பின்னிப் பிணைவதாகவுமே உள்ளன. எண்ணெய் ஏற்றுமதியில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, நிலச்சீர்திருத்தம் விவசாய சீர்திருத்தங்களுக்கான முதலீட்டைப் பெறுவது என்ற சாவேசின் திட்டம் இதனாலேயே முன்னேற முடியாமல் நிற்கிறது.
  2. நிலப்பிரபுக்களின் பயன்படுத்தப்படாத பெரும்பண்ணைகளை (லத்திபண்டியா) கிராமப்புற விவசாயிகள் எழுச்சியின் மூலம் கைப்பற்றி தமது அதிகாரத்தை நிறுவுவது என்ற புரட்சிகரப் பாதைக்குப் பதிலாக, நிலப்பிரபுக்களுக்கு நட்டஈடு கொடுத்து அரசே நிலத்தைக் கைப்பற்றி அவற்றை விவசாயிகளுக்கு விநியோகித்து, கூட்டுறவு மூலம் விவசாயத்தை உயிர்ப்பித்து தன்னிறைவையும் சுயசார்பையும் நிலைநாட்டுவது என்கிற முதலாளித்துவ சீர்திருத்த வழியையே சாவெஸ் செயல்படுத்த விழைகிறார். ஆனால் நகரங்களில் குவிந்துள்ள மக்களை நாட்டுப்புறங்களுக்கு அனுப்பி விவசாயத்தை உயிர்ப்பிக்க வேண்டுமானால், அரசு கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஆதரவளிக்க வேண்டும். எண்ணெய் வருவாயிலிருந்து இம்முதலீட்டைச் செய்ய வேண்டுமானால், வெனிசுவேலாவின் எண்ணெய் உற்பத்தியையும் ஏற்றுமதியையும் அதிகரிக்க வேண்டும்; சந்தைக்கும் விரிவாகத் திட்டங்களுக்குமான முதலீடுகளுக்கு மீண்டும் ஏகாதிபத்தியப் பொருளாதாரக் கட்டமைவையே சார்ந்திருக்க வேண்டும். இது மீள முடியாத நச்சுச்சூழல்.

இந்த சீர்திருத்தங்கள் ஏகாதிபத்திய சக்திகளின் இடைவிடாத தாக்குதல்களுக்கு இடையில்தான் நடத்தப்படுகின்றன.

வெனிசுவேலா-5

  1. 2002-ம் ஆண்டு சாவெஸ் தலைமையிலான அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளைக் கண்டு ஆத்திரமடைந்த பன்னாட்டு எண்ணெய் ஏகபோக நிறுவனங்களும் தரகுப் பெருமுதலாளிகளும் நிலப்பிரபுக்களும் அதிபர் சாவெசைப் பதவியிலிருந்து தூக்கியெறிய கூட்டுச் சதியில் இறங்கி கலகங்களைத் தூண்டி விட்டனர்.

பத்திரிகை முதலாளிகள் சாவெசுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். ஊழல் அதிகாரிகள் அதிபரின் உத்தரவுகளைச் செயல்படுத்த மறுத்து முட்டுக் கட்டை போட்டனர். 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதியன்று அமெரிக்காவின் ஆசியுடன் திடீர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டு, அதிபர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டு சாவெஸ் சிறையிடப்பட்டார். அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. திட்டமிட்டுக் கொடுத்த இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு, ‘ஜனநாயகத்துக்கான தேசிய அறக்கட்டளை” என்ற அமெரிக்க அரசின் துணை அமைப்பு கோடிக்கணக்கான டாலர்களை வாரியிறைத்தது. அமெரிக்கக் கைக்கூலியான எண்ணெய் நிறுவன முதலாளி புதிய அதிபராக்கப்பட்டார்.

அதிபர் சாவெசை ஆதரித்து நகர்ப்பற ஏழைகளும் கிராமப்புற விவசாயிகளும் நாடெங்கும் போராடத் தொடங்கினர். சாவெசை ஆதரித்து இராணுவமே பிளவுபட்டது. எல் வேலவின் சேரிப் பகுதியில் பெண்கள், ராணுவ தலைமையகத்தை சூழ்ந்து கொண்ட கூட்டத்தை ஒருங்கிணைத்து, மக்களை எதிர் கொள்ள வந்த ராணுவ வீரர்களை இடித்துரைத்து ஆயுதங்களை கீழே போட வைத்தார்கள். தனது நண்பர்களை திரட்டி மோட்டார் பைக்குகளில் போய் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியிருந்த தொலைக்காட்சி நிலையத்தை மீட்டார் ஒரு பெண்.

வெனிசுவேலாவில் பெருகிய அதிருப்தி கலகத்தாலும், அமெரிக்காவையும் அதன் எடுபிடி கொலம்பியாவையும் தவிர, இதர தென்னமெரிக்கக் கண்டத்து நாடுகள் எவையும் இச்சட்டவிரோத ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரிக்காததாலும் அம்பலப்பட்டுத் தனிமைப்பட்டு போன நிலையில், இத்திடீர் ஆட்சிக் கவிழ்ப்பு 28 மணி நேரத்தில் படுதோல்வியடைந்தது. சாவெஸ் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றார்.

  1. சாவெஸ் முன்வைக்கும் சோசலிசத் திட்டங்களுக்கு ஏற்ப அந்நாட்டின் அரசியல் சட்டத்தைத் திருத்தியமைப்பதா, கூடாதா என்பதற்கான கருத்துக் கணிப்புத் தேர்தல் 2007-ம் ஆண்டு இறுதியில் நடைபெற்றது. ஏறத்தாழ 90 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட வெனிசுவேலாவில், இக்கருத்துக் கணிப்புத் தேர்தலில் 45% பேர் வாக்களிக்கவில்லை. எஞ்சிய 55% வாக்காளர்களில் 28% பேர் சாவேசின் திட்டங்களுக்கு எதிராகவும், 27% பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர்.

வெனிசுவேலாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளிப்படையாகவே அரசியல் சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தது. அமெரிக்கக் கொலைகார உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வும் அமெரிக்காவின் “”எயிட்”, “”நெட்” முதலான நிறுவனங்களும் கோடிக்கணக்கான டாலர்களை வாரியிறைத்து பிரச்சாரம் செய்ததோடு, வதந்திகளைப் பரப்பி மக்களைப் பீதியூட்டின. ஏகாதிபத்திய கைக்கூலி நிறுவனங்களான தன்னார்வக் குழுக்களும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் சாவேசின் திட்டங்களை எதிர்த்துப் பிரச்சாரம், விளம்பரங்களில் ஈடுபட்டதோடு வீதிகளில் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்தன.

வெனிசுவேலாவின் தரகு முதலாளிகள் சாவெஸ் எதிர்ப்புக் குழுக்களுக்கு வெளிப்படையாக நிதியுதவி செய்ததோடு, அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கிச் செயற்கையான தட்டுப்பாட்டையும் விலையேற்றத்தையும் உருவாக்கினர். வெனிசுவேலா உழைக்கும் மக்களின் குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்து, கட்டாயக் கல்வியின் பெயரால் குழந்தைகளைப் பள்ளிகளில் அடைக்கத் திட்டமிட்டுள்ளதாக வதந்திகளைப் பரப்பி, தனியார் தொலைக்காட்சிகள் அவதூறு பிரச்சாரம் செய்தன.

கத்தோலிக்க மதகுருமார்களும் திருச்சபைகளும் சாவேசுக்கு எதிராக அணிவகுத்துப் பிரச்சாரம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி, வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டன. இக்கும்பல் நடத்திய சாலை மறியல் போராட்டத்தைத் தடுத்த சாவெஸ் ஆதரவாளர், கிறித்துவ மதவெறி குண்டர்களால் கொல்லப்பட்டார். சாவெஸ் அரசின் ஆளுநர்களும் மாநகராட்சித் தலைவர்களும் ஏகாதிபத்தியாவதிகளால் விலை பேசப்பட்டனர்; அல்லது நடுநிலை வகிக்குமாறு நிர்பந்திக்கப்பட்டனர். அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் அதிபர் சாவெஸ் நிரந்தரமாகச் சர்வாதிகாரம் செய்யத் துடிப்பதாக எதிர்த்தரப்பினர் திரும்பத் திரும்பக் குற்றம் சாட்டினர்.

வெனிசுவேலா-6

அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதற்கான வரம்பை நீக்கிவிட சாவெஸ் விழைவதையே இப்படி சர்வாதிகாரியாகத் துடிப்பதாக ஏகாதிபத்தியவாதிகள் சித்தரித்து அவதூறு செய்கின்றனர். ஆனால் சாவெஸ் அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் தனிநபர் சர்வாதிகாரத்தை நிலைநாட்ட விழையவில்லை. மாறாக, ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்ட மாற்றுப் பொருளாதார அரசியலமைப்பு முறை தொடர்ந்து நீடிக்கவே விழைந்தார். அத்தகைய கொள்கைகளைச் செயல்படுத்தும் நிறுவனமாக அதிபர் பதவியைக் கருதி, அதனைக் காலவரம்பின்றி நீடிக்க விரும்பினாரே தவிர, தனிநபர் என்ற முறையில் பதவி சுகத்தை வரம்பின்றி அனுபவிப்பவதற்காக அல்ல. ஏகாதிபத்தியக் கைக்கூலிகளை அதிபராகக் கொண்ட மறுகாலனியாதிக்கக் கொள்கை தொடர்ந்து நீடிப்பதா, அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களை அதிபராகக் கொண்ட சுயசார்பான கொள்கை தொடர்ந்து நீடிப்பதா என்பதுதான் அந்த கருத்துக் கணிப்புத் தேர்தலில் மையமான விவகாரம்.

வெனிசுவேலாவின் தரகுப் பெருமுதலாளிகளும் வர்த்தக சூதாடிகளும் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி, செயற்கையான தட்டுப்பாட்டையும் விலையேற்றத்தையும் செய்தபோது, அதற்கெதிராக சாவெஸ் அரசு உறுதியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. தட்டுப்பாட்டைப் போக்க பல கோடிகளைச் செலவிட்டு வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்தபோதிலும், ஊழல் மிகுந்த அதிகார வர்க்கத்தின் இழுத்தடிப்புகளால் அவை உழைக்கும் மக்களுக்குப் போய்ச் சேரவில்லை.

அரசியல் சட்டத்தைத் திருத்தக் கூடாது என்று எச்சரிக்கும் வகையில், தரகுப் பெருமுதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் வெனிசுவேலாவில் போட்டுள்ள முதலீடுகளை திரும்பப் பெறப் போவதாக வதந்தியைப் பரப்பி பீதியூட்டின. தனியார் வங்கிகளும் இதற்குப் பக்கபலமாக நின்று நாட்டின் பொருளாதாரத்தையே அச்சுறுத்தின. ஆட்சிக் கவிழ்ப்பு நடக்குமோ எனுமளவுக்குப் பீதி நிலவியது. இருப்பினும், இதற்கெதிராக சாவெஸ் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுமாறியது.

2007-ம் ஆண்டு கருத்துக் கணிப்பின் தோல்விக்குப் பிறகு பிப்ரவரி 2009-ம் ஆண்டு நடத்தப்பட்ட அதிபர் பதவிக்கான வரம்புகளை ரத்து செய்வது பற்றிய கருத்துக் கணிப்பில்  சாவெஸூக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் பதிவாயின.

2009-ம் ஆண்டு பரவிய உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக உலகப் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ள வெனிசுவேலாவில் நிதி நெருக்கடி ஏற்பட்டது, 2011-ம் ஆண்டில் பண வீக்கம் 28% ஆக அதிகரித்துள்ளது. 2011-ல் அரசின் வரவு செலவு பற்றாக்குறை உள்நாட்டு உற்பத்தியில் 5.2% ஆக இருக்கிறது. வெனிசுவேலா நாணயத்தின் மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.

இன்னும் மூன்று மாதங்களில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. 13 ஆண்டுகளாக நாட்டின் அதிபராக இருக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹியூகோ சாவேஸூம், தான் ‘அனைத்து தரப்பினரையும் பிரதிநிதிப்படுத்துவதாக’ சொல்லும் ஹென்ரிக் கேப்ரில்ஸூம் அக்டோபர் 7-ம் தேதி தேர்தலில் போட்டியிட பதிவு செய்துள்ளனர்.

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ‘அவரது உடல் நிலை பற்றிய சந்தேகங்களை நீக்கி, தன்னை மக்கள் முன் நிறுத்திக் கொண்டால் வரும் தேர்தலிலும் இனி வரும் தேர்தல்களிலும் சாவெஸ் வெற்றி பெறுவது உறுதி, 2030-ம் ஆண்டு வரை அவர் அதிபராக இருப்பதற்கு தேவையான மக்கள் ஆதரவை பெற்றிருக்கிறார்’ என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் சாவேஸின் பலம் மக்கள் நலன் சார்ந்த பார்வையும், விருப்பமும் என்றால் அதை முற்றிலும் செயல்படுத்தக்கூடிய மக்களை அமைப்பாக்கித் திரட்டி வைத்திருக்கும் கட்சியாக அவரது பின்னணி இல்லை என்பதே பலவீனம். தனிநபராக இருந்து மட்டும் ஒரு நாட்டை அப்படி முன்னேற்றிவிட முடியாது. சோசலிசம் என்பது உடமை வர்க்கங்களுக்கும், உடமையற்ற வர்க்கங்களுக்கும் இடையே நிலவும் வர்க்கப் போராட்டத்தின் விளைவாக மலருவது. அதை கற்பனை விருப்பங்களால் நிறைவேற்றிட முடியாது. இந்த சூழல்தான் சாவேஸை இறுதியில் வெல்லமுடியாதபடி அலைக்கழிக்கிறது.

பெண்கள் உள்ளிட்ட மனித குலத்தின் முழுமையான விடுதலையை சாத்தியமாக்கும் சோசலிச சமூகத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றின் தலைமையிலான புரட்சி ஒன்றே வழியாகும்.

சோசலிசம் என்பது பாட்டாளி வர்க்கக் கட்சியால் தலைமை தாங்கப்படும் பாட்டாளி வர்க்கப் புரட்சியில் மலர்வதேயின்றி, தேர்தல் மூலம் அதிகாரத்துக்கு வருவதல்ல. அதிகாரத்திலிருந்து வீழ்த்தப்பட்ட ஏகாதிபத்தியவாதிகள், தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்களின் சொத்துக்களையும், உரிமைகளையும் பறித்து, உழைக்கும் மக்கள் தமது சர்வாதிகாரத்தைச் செலுத்தி அதிகாரம் செய்வதுதான் சோசலிசமே அன்றி, சுரண்டும் வர்க்கங்களுக்கு ஜனநாயகப் பன்மைவாதம் அளிப்பதல்ல. பாட்டாளி வர்க்க சித்தாந்தமோ, பாட்டாளி வர்க்கப் புரட்சியோ, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமோ இல்லாமல் சோசலிசத்தை நிறுவ முடியாது; தனிநபரின் உயர்ந்த நோக்கங்களால் சோசலிசத்தைக் கட்டியமைக்கவும் முடியாது.

வலுவான, அரசியல் படுத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் சோசலிச புரட்சி ஒன்றை நிறைவேற்ற முடியாத சூழல் நிலவினாலும், ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் முதலாளித்துவ சக்திகளுக்கு எதிராகவும் வெனிசுவேலா மக்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு உலகெங்கிலும் உள்ள புரட்சிகர சக்திகள் ஆதரவு அளிக்கின்றன.

________________________________________________

– செழியன்
________________________________________________

குறிப்பு – இந்தக் கட்டுரை கடந்த மாதத்தில் எழுதப்பட்டது. நேற்று (08/10/2012) வெளியான தேர்தல் முடிவுகளின்படி சாவேஸ் மீண்டும் வென்றிருக்கிறார்

கூடங்குளம்: போர்க்குணம் கமழும் எழுச்சி! – போராட்டத் தொகுப்பு!

21
கடலில் மனிதச் சங்கிலி போராட்டத்தை நடத்தும் இடிந்தகரை மக்களை அச்சுறுத்தும் வகையில் தாழப்பறந்து செல்கிறது, கடற்படை விமானம்
கடலில் மனிதச் சங்கிலி போராட்டத்தை நடத்தும் இடிந்தகரை மக்களை அச்சுறுத்தும் வகையில் தாழப்பறந்து செல்கிறது, கடற்படை விமானம்

ணு உலைக்கு எதிராக இடிந்தகரை, கூடங்குளம் மக்கள் செப்டம்பர் 9, 10 தேதிகளில் நடத்திய போராட்டமும், அம்மக்கள் மீது ஏவப்பட்ட கொடிய போலீசு அடக்கு முறையும், தமிழக மக்களின் பொதுக்கருத்தை அணுஉலைக்கு எதிராகக் குறிப்பிடத்தக்க அளவிற்குத் திருப்பியிருக்கின்றன. மின்வெட்டு முன்னைவிட அதிகரித்திருந்த போதிலும், ‘அணு மின்சாரமே சரணம்’ என்ற ஆலாபனை மக்களிடம் எடுபடாத சூழல் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இந்த மாற்றத்தைச் சாதித்ததில் ஜெயலலிதாவுக்கும் அவரது அபிமான போலீசுக்கும் பெரும்பங்கு உண்டு.

மார்ச் 18 அன்று ஜெ. அரசால் தொடுக்கப்பட்ட போலீசு தாக்குதல், ஜெயலலிதா குறித்த பிரமையை அகற்றியதென்றால், செப்.10 தாக்குதல் மூலம் போலீசும் நீதிமன்றமும் தங்கள் மீதான பிரமைகளையும் கைவிட்டு விடுமாறு வலியுறுத்தியிருக்கின்றன.

செப்.6 – ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, செப்.11 அன்று அணு உலையில் எரிபொருளை நிரப்ப இருப்பதாக என்.பி.சி.ஐ.எல். அறிவித்தது. அணு உலையை நோக்கி அமைதியான முறையில் ஊர்வலமாகச் செல்ல இருப்பதாக செப்.7-ஆம் தேதியன்று அறிவித்தார் உதயகுமார்.

ஏற்கெனவே மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் அப்பகுதியைக் கலவரப் பகுதி போல மாற்றியது போலீசு. ராஜேஷ் தாஸ், ஜார்ஜ், வரதராஜு, பிதாரி ஆகியோர் தலைமையிலான போலீசு படைகள் கூடங்குளம்- இடிந்தகரை வட்டாரம் முழுவதையும் சுற்றி வளைத்தன. இக்கட்டான இத்தருணத்தில் போராடும் மக்களுக்குத் துணை நிற்கும் பொருட்டு, செப்.9 அன்று காலை, கடல் வழியே இடிந்தகரைக்குச் சென்று விட்டார்கள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் 9 பேர்.

செப்.9 அன்று காலை, அணு உலையின் வாயிற்புறம் நோக்கி ஊர்வலமாக மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்து, கைது செது கொண்டு செல்வதற்கான பேருந்துகளுடன் போலீசு காத்திருக்க, அணு உலையின் பின்புறம் நோக்கி, கடலோரமாகச் செல்லத் தொடங்கியது மக்களின் பேரணி.  இதனைச் சற்றும் எதிர்பாராத போலீசார் மக்களைத் தடுத்து நிறுத்துவதற்காக அணு உலையின் பின்புறத்துக்கு வந்து சேர்வதற்குள், மக்கள் அணு உலைக்கு சுமார் முக்கால் கி.மீ. தூரத்திற்கு வந்து விட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒருபுறம் நிற்க, பல வண்ணச் சீருடை அணிந்த போலீசு படைகள் அவர்களை வழிமறிக்க, மக்கள் அனைவரும் அப்படியே கடலோரம் அமர்ந்து விட்டனர்.

வயது முதிர்ந்தவர்கள் சிலரைத் தவிர, முற்றுகைப் போராட்டத்திற்கு ஊரே திரண்டு வந்திருந்தது. சிறுவர்-சிறுமியர் மட்டுமல்ல, தாமார்கள் கைக்குழந்தைகளையும் போராட்டத்திற்குக் கொண்டு வந்திருந்தார்கள். வெயில் ஏறிக் கொண்டிருந்தது. தாகத்தால் தவிக்கும் மக்களுக்காக கடல் வழியே படகுகள் மூலம் கொண்டு வந்து இறக்கிய தண்ணீர் பாக்கெட்டுகளை, போராட்டத்தை ஒடுக்க வந்த போலீசு படையினரும் கேட்டு வாங்கி குடித்துக் கொண்டார்கள்.

கையில் மைக்குடன் மக்களை நோக்கி வந்த போலீசு எஸ்.பி, உயர்நீதிமன்றம் நன்றாக ஆலோசித்து அணு உலையை திறக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. முதல்வர் அமைத்த குழுவும் அணு உலை பாதுகாப்பானது என்று கூறியிருக்கிறது. வேண்டுமானால் நீங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு அப்பீல் செயலாம். இங்கே 144 தடை உத்தரவு போட்டிருக்கிறோம். நீங்கள் இப்படிக் கூடுவது சட்டவிரோதம். கலைந்து செல்லுங்கள்” என்று மைக்கில் அறிவித்தார்.

முன்வரிசையில் இருந்த ஒரு பெண் மைக்கை அவரிடமிருந்து வாங்கி, இந்த மண்ணும் கடலும் எங்களுடையது. நாங்கள் வாழ விரும்புகிறோம். நீங்கள் சோல்லும் யார் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் போகமாட்டோம்” என்று அறிவித்தார்.

தமிழகப் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட தூத்துக்குடி மீனவர் அந்தோணி ஜான் (இடது) | இந்தியக கடற்படையால் கொல்லப்பட்ட இடிந்தகரை மீனவர் சகாயம்
தமிழகப் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட தூத்துக்குடி மீனவர் அந்தோணி ஜான் (இடது) | இந்தியக கடற்படையால் கொல்லப்பட்ட இடிந்தகரை மீனவர் சகாயம்

உதயகுமாரைக் கூப்பிடு” என்று ராஜேஷ்தாஸ் அதட்ட, உதயகுமார் எதற்கு? எங்களுடன் பேசு!” என்றார்கள் மக்கள். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ்தாஸ், இடிந்தகரைக்கே வந்து உதயகுமாரைத் தூக்கிடுவேன்” என்று சோல்ல, மறுகணமே யாரடா தூக்குவே” என்று கிளம்பினார்கள் இளைஞர்கள். அடிபட்ட நாயைப் போல ஒரு உறுமலுடன் பின்வாங்கியது போலீசு.

நாங்கள் இங்கேயே தொடர்ந்து உட்கார்ந்திருப்போம். அரசியல் கட்சித் தலைவர்களும் சிவில் சமூகத்தினரும் இங்கே வந்து எங்களுக்கு ஒரு நியாயம் சோல்லட்டும்” என்று மக்கள் கூட்டத்தின் வேறொரு பகுதியில் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளித்துக் கொண்டிருந்தார் உதயகுமார்.

9-ஆம் தேதி இரவு முழுவதும் சில்லென்ற கடற்காற்றில், நடுக்கும் குளிரில் கடல் நீர் காலைத் தொட்டுச் செல்லும் தூரத்தில், சின்னஞ்சிறு குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் கடற்கரையிலேயே உறங்கினர். போலீசார் திருமண மண்டபங்களுக்கு உறங்கச் சென்று விட்டனர். இரவு முழுவதும் மக்களுக்கு காவல் நின்றார்கள் சில இளைஞர்கள். வேறு சிலர் கூட்டத்தின் பக்கவாட்டிலிருந்து போலீசு உள்ளே நுழைய முடியாமல் தடுப்பதற்காக அந்தப் பகுதிகளில் வலைகளை இழுத்துக் கட்டிக்கொண்டிருந்தார்கள்.

செப்-10 அன்று காலையிலேயே தாக்குதலுக்கான முன் தயாரிப்புகளைத் தொடங்கிவிட்டது போலீசு. ராஜேஷ்தாஸ் தலைமையில் வந்த அதிரடிப்படை வலைகளை அறுத்தெறிய, மக்கள் முட்களை பிடுங்கிப் போட்டு போலீசைத் தடுத்தனர். தடியடி தொடங்கியது. கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும், பார்வையையும் செவிப்புலனையும் தாக்கி நிலைகுலைய வைக்கும் ஸ்டன் கிரனேடு எனும் எறிகுண்டுகளையும் வீசியபடியே, மேற்குப் புறத்தின் மேட்டுப் பகுதியிலிருந்து அதிரடிப்படை மக்கள் மீது இறங்கியது. மக்களைக் கடலை நோக்கித் துரத்தியது.

தடியடிக்கு அஞ்சி மக்கள் சிதறியோடவில்லை. மாறாக, மணலை அள்ளி வீசியும், முட்களை எறிந்தும் போலீசை விரட்டினர். கண்ணீர்ப் புகை குண்டுகளை எதிர்கொள்ளும் முறை மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. மேலும், மக்கள் மீது வீசப்பட்ட ஸ்டன் கிரெனேடுகள் 2001-ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட காலாவதியான குண்டுகள். கண்களும் மூக்கும் உதடுகளும் எரியவே செவதறியாமல் மக்கள் திகைத்தனர். கடலில் இறங்கி, தம் எதிர்ப்பைத் தொடர்ந்தனர்.

அதேநேரத்தில், குண்டுகளை வீசியபடியே இடிந்தகரை ஊருக்குள் நுழைந்த ஒரு போலீசு படை போராட்ட பேனர்களைக் கிழித்து எறிந்ததுடன், மேடையில் சிறுநீர் கழித்தது. மாதாகோயில் சிலையையும் சேதப்படுத்தியது. சுனாமி காலனி மற்றும் அருகாமையில் உள்ள வைராவி கிணறு ஆகிய பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளையடித்ததுடன், பொருட்களை உடைத்து நாசப்படுத்தியும், பெண்களை கேவலமாக ஏசியும் தாக்கியும் தனது வக்கிரங்களைத் தீர்த்துக் கொண்டது.

போலீசின் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து உதயகுமார் உள்ளிட்டோர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப் படுத்தப்பட்டு விட்டனர். போராட்டப் பந்தலில் யாருமில்லை. போலீசு தாக்குதலுக்கு யாரும் அஞ்சவில்லை. மாறாக, பின்வாங்க நேர்ந்ததை எண்ணி அவமான உணர்ச்சிக்கு ஆளாகியிருந்தனர். ஊருக்குள் புகுந்து போலீசு மீண்டும் தாக்குதல் தொடுக்கும் என்று எதிர்பார்த்ததால், பந்தலுக்கு வராமல் மக்கள் ஆங்காங்கே சிதறியிருந்தனர்.

கைதாகப் போவதாக அறிவித்த உதயகுமாரைச் சுற்றி நின்று தடுக்கும் இடிந்தகரை மக்களின் உணர்ச்சிப் பெருக்கு
கைதாகப் போவதாக அறிவித்த உதயகுமாரைச் சுற்றி நின்று தடுக்கும் இடிந்தகரை மக்களின் உணர்ச்சிப் பெருக்கு

போலீசால் தாக்கப்படுவதில் தனிப்பட்ட அவமானம் ஏதும் இல்லை என்றும், தாக்குதலுக்கு அஞ்சாமல் போராட்டத்தைத் தொடர்வதுதான் சரியான பதிலடியாக இருக்கும் என்றும் விளக்கி இளைஞர்களைத் திரட்டினார்கள், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர்கள். ம.உ.பா.மையத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவை,  போராட்டப் பந்தலில் உரையாற்றுமாறு கோரிய இளைஞர்கள், கோயில் மணியை அடித்து மக்களைப் பந்தலில் திரட்டினார்கள். போலீசால் உடைத்தெறியப்பட்ட மைக்குகளை சரி செதார்கள். இந்தத் தாக்குதல் மூலம் நம்மை சிதறச் செவதும் ஆத்திரமூட்டுவதும்தான் போலீசின் நோக்கம். அந்த நோக்கத்தை முறியடிக்க வேண்டும். நமக்காக தமிழகமெங்கும் மக்கள் போராடத் தொடங்கியிருக்கும் சூழலில், மீண்டும் இதே இடத்தில் ஒன்றுதிரண்டு போராடுவது நம் கடமை” என்று பேசினார் தோழர் ராஜு. அதன்  பிறகு ஊர்க்கமிட்டியுடன் பேசி, 48 மணி நேர உண்ணாவிரதம் தொடங்குவதாகப் போராட்டக் குழுவின் சார்பில் அறிவித்தார், மை.பா.யேசுராசன்.

பத்தாம் தேதியன்று காலை கடற்கரையில் தாக்குதல் நடக்கும்போதே, அணு உலையின் வாயிற்புறத்தில், கூடங்குளம் மக்கள் போலீசுக்கு எதிராக வீரமிக்க போராட்டமொன்றை நடத்தினர். இடிந்தகரையில் பல்லாயிரக்கணக்கில் போலீசு குவிக்கப்பட்டிருப்பதால், அம்மக்கள் கொடூரமாகத் தாக்கப்படுவர் என்றஞ்சி, அப்படையின் ஒரு பிரிவினை தம் பக்கம் இழுப்பதற்காக, அங்கே தாக்குதல் தொடங்கியவுடனே, இங்கே சாலை மறியலைத் தொடங்கினர்.

கலைந்து செல்லுமாறு மெகா போனில் பேசிய டி.எஸ்.பி, இடிந்தகரை மீனவர்களுக்கும் கூடங்குளம் நாடார் சாதியினருக்கும் ஏற்கெனவே நடந்த மோதல்களை நினைவுபடுத்தி, சாதிப்பிளவை ஏற்படுத்த முயன்றார். அதனைக் காறி உமிழ்ந்து நிராகரித்து விட்டனர் கூடங்குளம் மக்கள். முன்வரிசையில் நின்ற மாணவர்கள் போலீசின் கண்ணீர்ப் புகை குண்டுகளை எதிர்கொண்டனர்.

சின்னஞ்சிறிய அந்த ஊரின் முக்கிய சாலையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கே, அவ்வூர் இளைஞர்களுடன் போலீசு பல மணி நேரம் யுத்தம் நடத்த வேண்டியிருந்தது. போலீசுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு ‘லைவ் டெலிகாஸ்ட்‘ செய்த தொலைக்காட்சிகள் தம்மையுமறியாமல் மக்களின் இந்த வீரத்தை ஒளிபரப்பினர்.

செப்.11 காலை ‘மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தும் பொருட்டு, தான் கைதாக முன்வருவதாக’ தொலைக்காட்சிகள் மூலம் அறிவித்தார் உதயகுமார். இந்த முடிவு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் பரப்பியது. “இம்முடிவு தவறானது, இதன் மூலமெல்லாம் போலீசு அடக்குமுறையை நிறுத்தமுடியாது. இந்த முடிவு போராட்டத்தின் பின்னடைவுக்கே வழி வகுக்கும்” என்று இடிந்தகரை போராட்ட மேடையில் அன்று காலையிலேயே பேசினார், தோழர் ராஜு.

எனினும், தனது முடிவில் உறுதியாக இருந்த உதயகுமார் அன்று பிற்பகல் இடிந்தகரை பந்தலுக்கு வந்து, தான் கைதாகவிருப்பதாக ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். உணர்ச்சிமயமான ஒரு தருணத்தில், ‘கைதாகக் கூடாது’ என்று கூறி, அவரை அங்கிருந்து படகில் தூக்கிச் சென்றனர் இளைஞர்கள். அதன் பின்னர், அன்று இரவு இடிந்தகரை வந்த கேஜ்ரிவாலும் கைதாகக் கூடாது என்ற கருத்தையே வலியுறுத்தினார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற துறைமுக முற்றுகைப் போராட்டம்
தூத்துக்குடியில் நடைபெற்ற துறைமுக முற்றுகைப் போராட்டம்

செப்.12 அன்று வழக்குரைஞர் தோழர் வாஞ்சிநாதன் தலைமையில் ம.உ.பா.மையத்தின் சார்பில் பத்து வழக்குரைஞர்கள் கொண்ட உண்மை அறியும் குழு கூடங்குளம் சென்று, போலீசு அடக்குமுறைக்கு ஆளான மக்களை வீடுவீடாகச் சென்று சந்தித்தது. போராடிய குற்றத்துக்காக அந்த ஊர் முழுவதையுமே போலீசு வேட்டையாடியிருந்தது. வீடுகள், சோத்துகள், வாகனங்கள், வேன்கள் நாசமாக்கியது மட்டுமின்றி, பொருட்களையும் இரு சக்கர வாகனங்களையும் போலீசு திருடியும் சென்றிருந்தது. வீடு வீடாகப் புகுந்து பெண்களை இழிவுபடுத்தி, பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கும் ஆளாக்கியிருந்தது. ஊர் முழுவதும் தண்ணீர் சப்ளை துண்டிக்கப்பட்டிருந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ராஜத்துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் கைது செயப்பட்டிருந்தனர். ஊரில் வயது முதிர்ந்தவர்கள் சிலரைத் தவிர, ஆண்களே இல்லை. எனினும், இத்தனை அடக்குமுறைகளுக்குப் பின்னரும், அணு உலை எதிர்ப்பிலிருந்து கடுகளவும் அப்பெண்கள் பின்வாங்கவில்லை.

போலீசு அராஜகம் குறித்த விவரங்களைத் தொகுத்துக் கொண்டு உண்மையறியும் குழு அன்றிரவு இடிந்தகரை வந்தது. கூடங்குளத்தில் போலீசு நடத்திய வன்முறை பற்றி, தோழர் வாஞ்சிநாதன் பேசியதை, மிகுந்த அக்கறையுடனும் அனுதாபத்துடனும் இடிந்தகரை மக்கள் கேட்டனர். இரு பகுதி மக்களுக்குமிடையிலான ஐக்கியத்தையும் தோழமை உணர்ச்சியையும் இது மேம்படுத்தியது.

செப்.13 காலை முதல் ‘கடலில் மனிதச் சங்கிலி’ என்ற அறிவிப்பு மக்களிடையே பெரும் உற்சாகத்தை தோற்றுவித்திருந்தது. போராட்டம் துவங்கு முன்னர், மக்களிடையே உரையாற்றுமாறு அழைக்கப்பட்ட தோழர் ராஜு, தேடப்படும் குற்றவாளியென உதயகுமாரைச் சித்தரிக்கும் வாய்தா ராணி ஜெயலலிதாவின் அரசை எள்ளி நகையாடினார். அணு உலைக்கு எதிராக கல்பாக்கத்திலும் மற்ற கரையோர கிராமங்களிலும் தொடங்கிவிட்ட போராட்டத்தைச் சுட்டிக்காட்டி, கிரிமினல் வழக்கு போடுவதன் மூலம் மக்கள் போராட்டத்தை ஒடுக்கவும் முடியாது, நீதிமன்றத் தீர்ப்பைக் காட்டி அணு உலையை இயக்கவும் முடியாது என்று விளக்கினார்.

போராட்ட முழக்கங்களை வாஞ்சிநாதன் எழுப்ப, ஆயிரக்கணக்கான மக்கள் விண்ணதிரும் முழக்கங்களுடன் கடலில் இறங்கினர். அச்சுறுத்தும் நோக்கத்துக்காகவே தலைக்கு மேலே பத்தடி உயரத்தில் பறந்த கடற்படை விமானம் மக்களின் ஆத்திரத்தை மேலும் தூண்டியது. மீண்டும் மீண்டும் தலைக்கு மேலே சீறிச்சென்ற விமானத்தின் ஒலியால் பலர் மயங்கி விழுந்தனர். ஒரு சிறிய பாறையின் மீது நின்று மக்களுக்கான பாதுகாப்பு கயிறுகளைக் கட்டிக் கொண்டிருந்த மீனவர் சகாயத்தின் தலைக்கு மிக அருகில் விமானம் பறந்ததால், அவர் நிலைகுலைந்து மயங்கிச் சரிந்தார். அபாயகரமான நிலையில் அன்றிரவே நாகர்கோயில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

செப்.14 மதியம் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஒலியின் அதிர்ச்சி காரணமாக மூளை மற்றும் இதயத்தின் ரத்தநாளங்கள் வெடித்ததுதான் அவரது மரணத்துக்குக் காரணம். தனக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது போல நழுவிக்கொள்ள முயன்றது போலீசு. மருத்துவமனையிலேயே உடனிருந்த ம.உ.பா.மையத்தின் நாகர்கோயில் செயலர் வழக்குரைஞர் பூபதி, வழக்கு பதிவு செது உடலைப் பரிசோதனைக்கு அனுப்புமாறு போலீசுடன் போராடினார். சகாயத்தின் மனைவி மற்றும் உறவினர்களும் இதில் உறுதியாக இருந்தனர்.

செப்.15 அன்று சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செது அவரது உடலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தது போலீசு. அடுத்து, மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்கும் பொருட்டு, பிரச்சினையை ஆறப்போடுவதற்காகப் பிரேத பரிசோதனையை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் நாடகம் அரங்கேறத் தொடங்கியது.

இடிந்தகரை மக்கள் மீது போலீசு நடத்திய தாக்குதலைக் கண்டித்து, திருச்சி ம.க.இ.க, பெ.வி.மு. அமைப்புகள், செப்.13 அன்று சிறீரங்கத்துக்கு வந்த ஜெயாவிற்குக் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்திய பொழுது அ.தி.மு.க. குண்டர்களால் மண்டை உடைக்கப்பட்ட தோழர்
இடிந்தகரை மக்கள் மீது போலீசு நடத்திய தாக்குதலைக் கண்டித்து, திருச்சி ம.க.இ.க, பெ.வி.மு. அமைப்புகள், செப்.13 அன்று சிறீரங்கத்துக்கு வந்த ஜெயாவிற்குக் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்திய பொழுது அ.தி.மு.க. குண்டர்களால் மண்டை உடைக்கப்பட்ட தோழர்

செப்.16, ஞாயிறு அன்று காலை தோழர் ராஜு தலைமையில் ம.உ.பா. மைய வழக்குரைஞர்கள், அருகாமை மீனவ கிராமத்து இளைஞர்களை இணைத்துக் கொண்டு மருத்துவமனை வாயிலிலேயே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது கடற்படை நடத்திய படுகொலை என்றும், சிறுவனைச் சுட்டுக் கொன்ற சென்னை இராணுவ அதிகாரியைக் கைது செதது போல, கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செது கைது செயவேண்டும் என்றும், மக்கள் அஞ்சலி செலுத்தும் பொருட்டு சகாயத்தின் உடலை கரையோர கிராமங்கள் வழியே கொண்டு செல்வது மக்களின் உரிமை என்றும் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளித்தார் ராஜு. ஞாயிற்றுக்கிழமையும் சவப்பரிசோதனை நடக்கவில்லை.

செப்.17 காலை மருத்துவமனை வாயிலில், சகாயத்தின் உறவினர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் சில இளைஞர்கள் உடலைப் பெறுவதற்காகக் காத்திருந்தனர். 50 வேன்களில் நூற்றுக்கணக்கான அதிரடிப்படை போலீசாரும், வஜ்ரா வேன்களும், கண்ணீர்ப் புகை குண்டுகளும் வந்து இறங்கின. உடலைப் பெற்றவுடனேயே வேனில் ஏற்றியது போலீசு. வழிநெடுக அஞ்சலி செயக் காத்திருந்த மக்களை, அவர்களைவிட எண்ணிக்கையில் அதிகமான போலீசார் சுற்றி வளைத்திருந்தனர்.

வழியில் எங்குமே மக்களை அஞ்சலி செலுத்த அனுமதிக்காமல், நேரே இடிந்தகரை எல்லையில் கொண்டு போ உடலை ஒப்படைத்தது போலீசு. போர்க்குணமிக்க முழக்கங்களுடன் ஊர்வலமாக மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சகாயத்தின் உடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கடற்படையால் கொல்லப்பட்ட சகாயம், மணப்பாடு கிராமத்தில் அநீதியான முறையில் நேருக்குநேர் சுட்டுக்கொல்லப்பட்ட அந்தோணி ஜான் ஆகியோரது தியாகங்கள் நீதிக்காகக் காத்திருக்கின்றன.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு, ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் அளித்து வரும் ஆதரவென்பது, அடையாள ஆதரவோ தார்மீக ஆதரவோ அல்ல. அணு உலைத் திணிப்பின் அரசியல் பின்புலத்தை அம்பலப்படுத்தும் வகையிலும், மின்வெட்டைக் காட்டி அணு உலையை நியாயப்படுத்தும் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையிலும் தமிழகமெங்கும் இவ்வமைப்புகள் தொடர்ந்து பிரச்சாரம் செது வருகின்றன. பிப்ரவரி 11 அன்று கூடங்குளத்தில் நடத்திய போராட்டத்தை அடுத்து, சென்னையில் மிகப்பெரும் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது.

தொடர்ந்து, மார்ச் மாதத்தில் ஜெ. அரசின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்ட நாட்களில், ம.உ.பா.மையத்தின் வழக்குரைஞர்கள் இடிந்தகரையிலும் கூடங்குளத்திலும் மக்களுடன் இருந்தனர். தற்போது செப்.9 முற்றுகைப் போராட்டத்திலும் மக்களோடு மக்களாக உடனிருந்து பணியாற்றியிருக்கின்றனர்.

அதேபோல, போலீசு அடக்குமுறைகளை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து வந்த சூழலில், போராட்ட நிலைமைகள், போலீசு அடக்குமுறைகள் குறித்த செதிகளை ‘வினவு’ இணையதளம் உடனுக்குடன் வெளிக்கொண்டு வந்தது. முள்ளிவாக்காலைப் போல போலீசால் முற்றுகையிடப்பட்டிருந்த அந்தப் பகுதியிலிருந்து நேரடி பேட்டிகளையும் ஒலிபரப்பியது. இத்தளத்தின் மூலம் களநிலைமைகள் ஏராளமான வாசகர்களைச் சென்றடைந்தன.

இடிந்தகரை மக்கள் மீது போலீசு நடத்திய தாக்குதலைக் கண்டித்து, உயர் நீதிமன்ற வழக்குரைஞர்களைத் திரட்டி, மனித உரிமைப் பாதுகாப்பு மையன் சென்னையில் நடத்திய கோட்டை நோக்கிச் செல்லும் பேரணி
இடிந்தகரை மக்கள் மீது போலீசு நடத்திய தாக்குதலைக் கண்டித்து, உயர் நீதிமன்ற வழக்குரைஞர்களைத் திரட்டி, மனித உரிமைப் பாதுகாப்பு மையன் சென்னையில் நடத்திய கோட்டை நோக்கிச் செல்லும் பேரணி

செப்.10 அன்று நடைபெற்ற போலீசு அடக்குமுறைக்கு எதிராக, செப்.11 அன்றே ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; ஆகிய அமைப்புகளின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. பல இடங்களில் தோழர்கள் கைது செயப்பட்டனர். மதுரை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்களைத் திரட்டி சாலை மறியல் போராட்டமும், சென்னையில் கோட்டை முன் வழக்குரைஞர்களின் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டன. தூத்துக்குடியில் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து நூற்றுக்கணக்கானோர் நடத்திய போராட்டத்தில், அந்நகரைச் சேர்ந்த ம.உ.பா.மைய வழக்குரைஞர்கள் முன்நின்றார்கள்.

செப்.13 அன்று சீரங்கத்துக்கு வந்த ஜெயலலிதாவுக்கு, விமான நிலையத்திலிருந்து வரும் பாதையில் கருப்புக் கொடி காட்டினார்கள் திருச்சி ம.க.இ.க; பெ.வி.மு. தோழர்கள். அ.தி.மு.க. காலிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, 3 குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் பொவழக்கில் சிறை வைக்கப்பட்டார்கள்.

செப்.22 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற துறைமுக முற்றுகைப் போராட்டத்திலும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் கலந்து கொண்டனர். கூடங்குளத்தில் போலீசின் மனித உரிமை மீறல்கள் குறித்து, நீதி விசாரணை கோரி வழக்குரைஞர் வாஞ்சிநாதன் தொடுத்துள்ள வழக்கு மதுரை உயர் நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.

ŽŽŽ        செப். 9 முற்றுகைப் போராட்டமும், அதில் இடிந்தகரை, கூடங்குளம் மக்கள் காட்டிய போர்க்குணமும், அரசையும் ஆளும் வர்க்கத்தையும் அச்சம் கொள்ள வைத்திருக்கிறது. போர்க்குணமிக்க மக்கள்திரள் போராட்டங்களுக்கும், போராட்ட முறைகளுக்கும் ஊக்கம் தந்திருக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டக் கரையோர மக்களை அணு உலைக்கு எதிரான போராட்டக் களத்திற்குள் இழுத்து வந்திருக்கிறது.

அணு உலையின் அபாயம் குறித்து ஆழமாகப் புரிந்து வைத்திருக்கும் அந்த மக்களிடம், அதிகார வர்க்கத்தின் நைச்சியமான பேச்சுகளோ, போலீசின் உருட்டல் மிரட்டல்களோ செல்லுபடியாகவில்லை. அம்மக்கள் போராட்டத்தில் காட்டிய உறுதி, கண்மூடித்தனமான அணுஉலை ஆதரவுக் கருத்து கொண்ட நபர்களையும் சிந்திக்க வைத்திருக்கிறது.

இதற்கு நேர் மாறாக, நாராயணசாமியின் உளறல்களும், அணுசக்தி துறை அதிகாரிகளின் முன்னுக்குப்பின் முரணான, பித்தலாட்டமான பேச்சுகளும், அவர்கள் மீதான அவநம்பிக்கையை அதிகரித்திருக்கின்றன. அணு உலை ஆதரவு சவடால் அடித்து வந்த தமிழகத்தின் காங்கிரசு, பா.ஜ.க. கும்பல்கள்கூட இன்று அடக்கி வாசிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இன்னொருபுறம், அணு உலையின் பாதுகாப்பு குறித்து அசாத்திய அக்கறை கொண்டுள்ளதைப் போல, வாச்சவடால் அடித்துவரும் உச்ச நீதிமன்றம், பொயான நம்பிக்கையை மக்களிடம் விதைத்து வருகிறது. குறிப்பிட்ட சில பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செத பின்னர், அணு உலையை இயக்குமாறு உத்தரவிடுவதற்கு மேல் வேறு எதையும் உச்சநீதிமன்றம் செயாது. செயவும் இயலாது என்பதே உண்மை நிலை.

அணுமின் நிலையங்களுக்கு எதிராக அறிவியல்பூர்வமாக எத்தனை ஆதாரங்களை எடுத்து அடுக்கினாலும், வாதங்களை முன்வைத்தாலும் அவையெல்லாம் அரசின் முடிவைத் மாற்றப் போவதில்லை. ரசியாவுடனான ஒப்பந்தம், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவை பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளை இலாபத்துக்காகவும், இந்திய அரசின் இராணுவ நோக்கத்துக்காகவும் போடப்பட்டவை; மக்கள் நலனுக்கு எதிரானவை; நாட்டின் பொருளாதாரத்தைச் சூறையாடுபவை என்று தெரிந்தேதான், அவை நம்மீது திணிக்கப்படுகின்றன.

ஜெயா, பா.ஜ.க., மமதா போன்றவர்களைப் பொருத்தவரை, அவர்கள் தேர்தல் அரசியல் ஆதாயத்துக்காகத்தான் அணு உலை எதிர்ப்பு, வால்மார்ட் எதிர்ப்பு பேசுகிறார்கள். இருப்பினும் இவர்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்துபவர்கள், போகாத ஊருக்கு வழிகாட்டுகிறோம் என்று தெரிந்தேதான் மக்களுக்கு இந்தப் பிரமையை ஊட்டுகிறார்கள்.

அணு உலை எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வைகோ, ராமதாசு, நெடுமாறன் உள்ளிட்டோராக இருக்கட்டும், சில்லறை வணிகத்தில் பன்னாட்டு முதலீட்டையும், மின்சாரம் தனியார்மயத்தையும் எதிர்ப்பதாக கூறும் வலது-இடது கம்யூனிஸ்டுகளாக இருக்கட்டும், அவர்கள் இதனை இந்த நாடாளுமன்ற ஜனநாயக அரசியலுக்கு உட்பட்டுச் சாதிக்க முடியாது என்று தெரிந்தும், மக்களுக்குப் போலி நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நடந்து கொண்டிருப்பது ஒரு போர். தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தி வரும் ஆளும் வர்க்கங்கள், சிங்குர், நந்திகிராம், கலிங்கா நகர், குர்கான், மானேசர் என்று பல இடங்களில் இது போர்தான் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டார்கள். இடிந்தகரையிலும் கூடங்குளத்திலும் இன்னுமொருமுறை இதனைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

இந்தப் போரில் எதிரியைத் தோற்கடிப்பது ஒன்றுதான் நம் முன் திறந்திருக்கும் ஒரே வழி. வேறு வழிகள் எதுவும் இல்லை. இதனைப் புரிந்து கொள்வதும், இதற்குப் பொருத்தமான முறையில் மக்களை போராட்டத்திற்கு அணிதிரட்டுவதும்தான் நம் முன் உள்ள பணி.

____________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2012
__________________________________________________

படிக்க