Sunday, June 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 732

மோடியின் குற்றத்தை மறைக்கும் ஒளிரும் குஜராத்! ஆனந்த் தெல்டும்டே!!

40

குஜராத்-மோடி

சற்று அதனை நினைத்துப் பார்க்கும் போதே எனக்கு முதுகுத்தண்டு சில்லிடுகின்றது. குஜராத்தில் முசுலிம் மக்கள் எவ்வாறு இந்துத்துவ சக்திகளால் தேர்ந்த திட்டமிடலுடன் மனித குலம் வெட்கித் தலைகுனியும் வண்ணம் 2002 -ஆம் ஆண்டு கொன்றழிக்கப்பட்டார்கள் என்பதை நேரில் பார்த்த அனுபவம் எனக்குண்டு. அது 2002 -ஆம் ஆண்டின் மார்ச் மாதம் 4 -ஆம் தேதி. இனப்படுகொலைகள் தொடங்கி 5 நாட்கள் ஆகியிருந்தது. குஜராத்திலிருந்து வந்து கொண்டிருந்த ரத்தம் தோய்ந்த கதைகள் எவர் ஒருவரையும் போலவே என்னையும் கலக்கமுறச் செய்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் ஒரு மனித உரிமைச் செயல்பாட்டாளனுக்கு  இருக்க வேண்டிய துணிச்சலுடன் நான் அகமதாபாத் விரைந்தேன். அகமதாபாத், நான்  ‘ இந்திய மேலாண்மைக் கழகத்தில்’ படித்த காலத்தில் என் நேசத்துக்குரிய நகரமாக இருந்தது.

அகமதாபாத்திற்கு நான் பயணித்த விமானத்தின் இருக்கைகள் பத்து சதவீதம் மட்டுமே நிரம்பியிருந்தது. விமான நிலையத்தில் இறங்கிய போது எவ்வித மோசமான அறிகுறிகளும் தென்படவில்லை. நகருக்குள் காரில் சென்ற போது எங்கும் கடந்த மூன்று நாட்களின் கொடூரத் தழும்புகள் அதன் தீவிரத்துடன் என் முன் எழுந்து நின்றது. என்னுடன் காரில் உயர்வர்க்கத்தைச் சேர்ந்த  முசுலிம் நண்பர் ஒருவர் உடன் வந்தார். வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அவருடன் செல்லத் திட்டமிட்டேன். கார் ஓட்டுநர் எனது நோக்கம் பற்றி எதுவும் புரியாமல் சற்று கலக்கத்துடன் இருந்தார். எனினும் அதனை வெளிக்காட்டாதவராக ஒரு செயற்கையான அமைதியை முகத்தில் தவழ விட்டுக் கொண்டிருந்தா ர்.

எங்களுடைய முதல் சுற்றிலேயே 20 பேர் கொண்ட கும்பல் ஒன்றால் வழிமறிக்கப்பட்டோம். அடுக்கடுக்காகக் கேள்விகளை எம் முன் வீசினார்கள். பயத்தை எந்தச் சூழ்நிலையிலும் வெளிப்படுத்தக் கூடாது என்ற முடிவில், தைரியத்தை சற்று வரவழைத்துக் கொண்டு, நான் ஒரு இசுலாமியராக இருந்தால் என்னை என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். எனது கேள்வி அந்த கூட்டத்துக்குள் சிறு சலசலப்பை உண்டாக்கியது. உடனே கார் ஓட்டுநர் குறுக்கிட்டு அவர்களுடன் குஜராத்தி மொழியில் பேசலானார். நான் மும்பையிலிருந்து வந்திருக்கும் ஒரு பெரிய அதிகாரி என்று தெரிவித்தார். எதற்கும் தயாரான கூட்டம் அது. எங்கள் காரை சேதப்படுத்தவும் செய்யலாம்; எங்களைத் தாக்கவோ, ஏன் உயிரைப் பறிக்கவோ கூட செய்திருப்பர். ஆனால், சந்தர்ப்பவசமாக எங்களை எச்சரித்து மட்டுமே அனுப்பினர்.

தற்காலிமாக உருவெடுத்த கல்லறைகளில் அப்பாவி மனிதர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கொடுங்கனவில் இருந்து மீள முடியாமல் தப்பிப் பிழைத்தவர்களின் வெறுமை சூழ்ந்த கண்கள்; முகாம்களில் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து, ஈக்கள் மொய்க்க அரைப் பட்டினியோடு சில குடும்பத்தினர் இருந்தார்கள். இன்னொரு பக்கம் தன்னார்வத் தொண்டர்கள் முகாமில் முடக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உழைத்துக் கொண்டிருந்ததோடு, ஊடகங்களுக்கு நிலைமைகளை விளக்கிக் கொண்டும் இருந்தார்கள். கண்ணுக்கு எட்டும் தூரத்தில் பாதி எரிந்து சாம்பலான வீடுகள் பாதிக்கப்பட்ட மக்களின் இழந்த வாழ்க்கையைப் பற்றிய நினைவுகளை எழுப்பிக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு முகாமிலும் சோகம் மற்றவற்றை விஞ்சிய வண்ணம் ஒரு காப்பியத் துயரமாக விரிந்து எங்கள் உணர்ச்சிகளைக் கொன்று தின்றது. மதியம் IIM  மாணவர்களைச் சந்தித்தேன். அதன் பிறகு ‘பிரஷாந்த்’ மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என்னிடம் காண்பித்த படுகொலை காட்சிகளில் இருந்த பாதி எரிக்கப்பட்ட குழந்தைகளின் படங்கள் என்னைக் கதறியழச் செய்தது. அன்று மாலை ‘நடத்தை அறிவியல் மையத்தில்’ நடைபெற்ற கூட்டம் என் உணர்ச்சிகளுக்குச் சற்று உயிர் கொடுத்தது. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தமது பாதிப்புகளை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு, மறுநிர்மாணப் பணிகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், நரேந்திர மோடி மிகக் குரூரமாக தனது அரசாங்கத்தை முற்றிலுமாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து விலக்கிக் கொண்டார். இதன் மூலம், நாம் ஒவ்வொருவரும் நம்புவது போல இந்தப் படுகொலைகளுக்குப் பின்னால் முதல்வர் நரேந்திர மோடி இருப்பதற்கான திட்டவட்ட ஆதாரத்தை அவரே அளித்துக் கொண்டிருந்தார். மனித குலம் மோடியின் நடத்தையைக் கடுமையாக கண்டித்த பிறகே லேசாக சில ஒட்டு வேலைகளை அவர் செய்தார்.

வெட்கமில்லை, வேதனையுமில்லை

எண்ணிறந்த உண்மையறியும் குழுக்கள் குஜராத்தைப் பார்வையிட்டு, துயரத்தின் ரத்தம் தோய்ந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்தார்கள். அனைத்து அறிக்கைகளும் இந்த மனிதப் பேரழிவுக்குப் பின்னால் மாநில அரசும், மோடியின் தனிப்பட்ட பங்கும் இருப்பதைச் சுட்டிக் காட்டுவதில் தமக்குள் ஒத்திருந்தன. 2005 மே மாதம் ராஜ்யசபாவில் 254 இந்துக்களும், 790 முசுலிம்களும் கோத்ரா சம்பவத்திற்கு பிந்தைய வன்முறையில் கொல்லப்பட்டதாக அரசு ஒரு கணக்கை முன்வைத்தது. 223 மக்கள் காணாமல் போனவர்களாகவும், 258 பேர் காயம்பட்டவர்களாகவும், 919 பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டதாகவும் மற்றும் 606 குழந்தைகள் அநாதைகள் ஆனதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்தப் புள்ளி விபரங்களின் மோசடியை மனித உரிமை ஆர்வலர்கள் கேள்விக்குள்ளாக்கினர்.  இந்துக்கள் படுகொலையில் சேர்க்கப்பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் ஆதிவாசிகள் மற்றும் தலித் மக்கள். முசுலிம் மக்கள் படுகொலையில் இவர்கள் காலாட்படையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். சேதப்படுத்தப்பட்ட சொத்துக்கள் அனைத்துமே இசுலாமிய மக்களுடையவை.

அரசமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது போல மோடி அனைத்து மக்களுக்கும் பொதுவான முதலமைச்சராக இரூந்திருந்தால் மக்களின் வாழ்க்கை மீதும், உடைமை மீதும் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக நேர்மையான முறையில் வருத்தத்தைத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் மோடியும், அவருடைய சீடர்களும் திரும்பத் திரும்ப முசுலிம் மக்கள் படுகொலைக்கும், சந்தேகமான முறையில் 2002 பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி சபர்மதி ரயிலின் ஒரு பெட்டி எரிக்கப்பட்டதற்கும் குமட்டலூட்டும் முடிச்சினைப் போட்டு பேசி வந்தார்கள். இந்த வக்கிரம் மோடி மற்றும் பி.ஜே.பியை இன்னும் அதிகமாக அம்பலப்படுத்தியது. அவர்கள் நினைப்பது போல அவர்கள் குற்றத்தை மறைக்கவில்லை.

அரசு சார் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களின் விசாரணை முடிவுகள், நீதிமன்றங்கள் மற்றும் உலகெங்கிலுமிருந்து வந்த கண்டனங்களால் ஏற்பட்ட அவமானங்கள் எதனையும் பொருட்படுத்தாமல் மோடி தனது வில்லங்க செயல்பாடுகள் மூலம் இந்த இனப்படுகொலையை நியாயப்படுத்தி வருகின்றார். கோத்ரா சம்பவத்தின் எதிர்விளைவே இந்த இனப்படுகொலைகள் என்றும் பேசி வருகிறார். மைய அரசு அமைத்த பானர்ஜி கமிஷன் கோத்ரா ஒரு எதிர்பாராத சோக சம்பவம் என்று கூறியது. இந்த அறிக்கையை மாநில அரசு உடனடியாக எதிர்த்தது. கோத்ரா ரயில் எரிப்பின் பயனாளிகள் யாரென்பதை வைத்துப் பார்த்தால், அந்த ரயில் எரிப்புக்குக் காரணமானவர்கள் இந்துத்துவ சக்திகளாகக் கூட இருக்கக் கூடும் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. மோடி பெற்ற மாபெரும் வெற்றிகளுக்கும் இன்று பிரதமர் வேட்பாளராக மோடி முன்தள்ளப்படுவதற்கும் அடிப்படை கோத்ரா சம்பவத்திற்கு பிந்தைய முசுலிம் படுகொலைகள் என்பதை ஒருவர் மறந்து விட முடியாது.

ஒளிரும் குஜராத்தின் பொய்கள்

2002 படுகொலைகளுடன் தொடர்பற்றது எனினும் மோடியின் பிம்பத்தைக் கடந்த பத்தாண்டுகளாகக் கட்டமைக்க பயன்பட்ட பொய் எதுவென்றால், குஜராத் முன்னேறுகிறது; ஒளிர்கிறது என்பதாகும்.  இது 2002 இல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்று கோருபவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படுகிறது. இந்த கோரிக்கையை எழுப்பும் மனித உரிமை ஆர்வலர்கள் குஜராத் மக்களனைவருக்கும் எதிராக இருப்பதாக அவர்களை பழித்துப் பேச பயன்படுத்துகிறார்கள்.. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் கோரிக்கையை திசைதிருப்பும் விதமாக ‘மறப்போம் , அடுத்த கட்டத்துக்கு நகர்வோம்’ என்றும் பேசி வருகிறார்கள். முகாம்களை திடீரென மூடிய மோடி, ‘அனைத்தும் சரியாகி விட்டது’ என்று அறிவித்தார். அதன் பிறகு 2003 இல் ‘ஒளிரும் குஜராத் சம்மேளனம்’ எனும் கொண்டாட்டம் ஒன்றை அறிவித்தார். முதலீட்டாளர் அனைவருக்கும் பண்டைய நவாப் பாணியில் மானியங்களை வாரி வழங்கினார். இது முதலாளிகளின் பாராட்டைப் பெற வைத்ததோடு, பிரதமர் வேட்பாளராகத் தன்னை முன்னிறுத்தவும் பயன்பட்டது. குஜராத்தின் வளர்ச்சிக்குப் பெருந்தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக பெரியளவுக்கு விளம்பரப்படுத்தப்பட்டது.

ஆனால் தகவல் பெறும் உரிமையின் கீழ் அதனை விசாரித்ததில், விளம்பரப்படுத்தப்பட்ட தொகையில் 25 % மட்டுமே, அதாவது மகாராஷ்டிரா, தமிழகம் அளவுக்கு மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2003 -இல் திட்டக்குழு எடுத்த கணக்கெடுப்பின்படி குஜராத்தின் 25 மாவட்டங்களில் 20 பின்தங்கிய மாவட்டங்கள் பட்டியலில் இருந்தது. அவற்றில் 6 மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களின் பட்டியலில் இருந்தது. சமூக வளர்ச்சிப் புள்ளி விகிதத்தில் பின்தங்கியிருப்பதோடு, சமூகத் திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில், 18 பெரிய  மாநிலங்களில்  17வது இடத்தில் இருக்கிறது.

தன்னை நவீன குஜராத்தின் சிற்பி என்று கட்டமைத்துக் கொள்ள மோடி, மிகப்பெரிய அளவுக்கு மக்கள் தொடர்புப் பணிகளைக் கட்டவிழ்த்து விட்டார். உண்மை என்னவென்றால், குஜராத் ஏற்கெனவே தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத்தின் வளர்ச்சி விகிதம் 12 சதவிகிதத்திலிருந்து 13 சதவிகிதமாக இருந்தது. இன்று அது 11 சதவிகிதமாக, தேசிய வளர்ச்சி விகிதத்தில் சற்றே மேம்பட்ட நிலையில் இருக்கிறது.

மாநிலத்தின் கஜானாவை பெருமுதலாளிகளுக்குக் கொள்ளையடிக்கத் திறந்து விட்டதன் மூலம் குஜராத்திலிருந்து கோடீஸ்வரர்கள் உருவாக துணை புரிந்தார் மோடி. அதே நேரத்தில் சாதாரண மக்கள் மேலும் வறிய நிலைக்குத் தள்ளப்பபட்டனர். சர்வதேச உணவுக்கொள்கை ஆய்வு நிறுவனத்தின் ‘2008 இந்திய மாநிலங்களின் வறுமை நிலவரம்’ பற்றிய அறிக்கையில் குஜராத், ஒரிசாவை விடக் கீழாக உள்ளது. 17 பெரிய மாநிலகளில் 13 வது இடத்தில், அதாவது சட்டிஸ்கார், ஜார்கண்ட், பீகார் மற்றும் மத்திய பிரதேசத்துக்குக் கொஞ்சம் மேலே இருக்கிறது.

ரத்த சோகையால் பாதிக்கப்படும் பெண்களின் சதவிகிதம் 1999 இல் 46 .3 % இருந்து 2004 இல் 55 .5 ஆக உயர்ந்துள்ளது. குழந்தைகளில் 74 .5 ஆக இருந்த ரத்தசோகை சதவிகிதம் 80 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2006 இல் எடுத்த மூன்றாவது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பில் இந்த உண்மைகள் காணக் கிடைக்கின்றது. மாநில காங்கிரசு கட்சியின் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா கூற்றுப்படி  16000 குஜராத்திகள் மோடியின் ஆட்சிக் காலத்தில் தற்கொலை செய்துள்ளனர் .  அவர்களில் 9 ,829 பேர் தொழிலாளர்கள், 5 ,447 பேர் விவசாயிகள், 919 பேர் பண்ணை தொழிலாளர்கள்.

சத்பவனா நாடகம்

ஒரு சிறு குற்றவுணர்ச்சி கூட இல்லாமல், இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர் ஒருவரைக் கூட நேரில் சென்று பார்க்காமல் அதன் 10 வது ஆண்டு நினைவு தினத்தில் சத்பாவனா நாடகத்தை நிகழ்த்தினார் மோடி. தனிச்சிறை போன்ற சேரியில் அடைத்து, வகுப்புவாதத் தீ படரும் ஆபத்தை எண்ணி இப்போதும் பயத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள், அகமதாபாத்தின் முசுலிம் மக்கள். ஆனால் மோடியோ முசுலிம்கள், தலித்துகள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களில் சிலரை மட்டும் பொறுக்கி எடுத்து ‘வகுப்பு ஒற்றுமை’ என்று விளம்பரப்படுத்துகிறார். நீதியை எதிர்பார்த்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் காயங்களில் உப்பைத் தேய்ப்பதற்கு சற்றும் குறைவில்லாத மோசடி இது. தனது பாவங்களுக்கு மோடி தண்டிக்கப்படுவார் என்பது நாம் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று.

பணம் படைத்தவர்களையும், செல்வாக்கு மிக்கவர்களையும் காப்பாற்றும் அதே வேளையில், சாதாரண மக்களை வெறும் கற்பனாவாத நம்பிக்கையில் ஆழ்த்தும் ஒரு அரசமைப்பு நம்முடையது என்பது நிரூபணம் ஆன ஒன்று. பத்து ஆண்டுகளாக நடந்து வரும் சட்டப் போராட்டங்கள் சில நீதித் துணுக்குகளை, அதுவும் மோடிக்கு ஆதரவான முறையிலே வழங்கியுள்ளது. கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி எஹ்சான் ஜாப்ரியின் மனைவி ஜாக்கியா ஜாப்ரி தொடர்ந்த வழக்கு தனது கணவருடன் 66 பேர் குல்பெர்க் சொசைட்டியில் கொல்லப்பட்டது சம்பந்தமானது. 62 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட இந்த வழக்கில் உச்சநீதி மன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழு [SIT ] அவர்கள் 62 பேர் மீதோ அல்லது இந்தப் படுகொலைக்கு மூளையாகச் செயல்பட்ட மோடி மீதோ எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை. ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் சாட்சியம் கண்டுகொள்ளப்படவில்லை. மோடியின் குற்ற நடவடிக்கைகளின் எல்லை 2002 இனப்படுகொலையோடு முடிந்து விடக் கூடிய ஒன்றுமல்ல. ஹரேன் பாண்டியா வழக்கில், அவர் குடும்பத்தினர் போலீசின் விசாரணை நடவடிக்கையில் திருப்தியில்லாமல் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி போலி மோதல் முறையில் கொல்லப்பட்டவர்களின் வழக்குகள் நிறைய நிலுவையில் நிற்கின்றன. அவற்றில் ஒன்றின் நீதிக்காக நான் போராடி வருகிறேன்.  19 வயது மாணவி, இஷ்ரத் ஜகான் போலி மோதல் முறையில் கொல்லப்பட்ட  இந்த வழக்கு பலராலும் போலியானது என்று கூறப்படும் ஒன்று. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் இருக்கும் இந்த வழக்கில் நீதி கிடைக்குமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இந்த சம்பவமும், வழக்கின் போக்கும் மற்ற ‘பயங்கரவாதத் தாக்குதல்களின்’ உண்மைத் தன்மையை ஒருவர் ஊகித்தறியப் போதுமானதாக உள்ளது. இது போன்ற கட்டுக்கதைகள் மோடி போன்ற மக்கள் விரோத அரசியல்வாதிகளின் நலனைக் காப்பாற்ற தயாரிக்கப்பட்டதேயன்றி வேறென்ன?

இப்போது நம்முன் இருக்கும் கேள்வி இது தான்.  இங்கிருந்து நாம் எத்திசையில் பயணிக்க இருக்கிறோம்?

_____________________________________________________________________________

ஆனந்த் தெல்டும்டே [எழுத்தாளர் மற்றும் மனித உரிமைச் செயல்பாட்டாளர், மும்பை]

தமிழில் – சம்புகன்

நன்றி: எகனாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லி, மார்ச் 17 2012 .

________________________________________________________________________________

சதி… சதி….ஐ.எஸ்.ஐ சதி…

9
ஐஎஸ்ஐ-சதி

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 22

பஞ்பாப், காசுமீர் பிரச்சினைகள் மூலம் பாரதத்தைத் துண்டாக்குவதற்கும், பம்பாய்கோவை தொடர் குண்டு வெடிப்புகள் மூலம் பாரதத்தைச் சீர்குலைப்பதற்கும், பாகிஸ்தான் இந்நாட்டு முசுலீம்களைப் பயன்படுத்துகிறது. பாகிஸ்தானின் சதி வேலை உளவுப் பிரிவான .எஸ்..இன் ஏஜெண்டுகளாக பல முசுலீம் அமைப்புகள் செயல்படுகின்றன.

கடந்த 20 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்து வரும் அவதூறு.

.எஸ்.ஐ. எனப்படும் பாகிஸ்தானின் தேசிய உளவு நிறுவனமான ‘இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ்’, ‘பாரத் மாதாகீ ஜெய்’ யைவிட அதிகமாக ஆர்.எஸ்.எஸ்.கும்பலால் ஜெபிக்கப்படும் மூன்றெழுத்து மந்திரமாகும். அவர்கள் மட்டுமல்ல செய்தி ஊடகம், ஓட்டுக் கட்சிகள், அரசு அனைவருமே தேசபக்தி சாமியாட்டத்திற்கு ஐ.எஸ்.ஐ பூச்சாண்டி காட்டுவது ஒரு கேலிக்கூத்தாகி வருகிறது. கட்டுரையாளர் ஒருவர் குறிப்பிடுவதைப்போல ‘ரேசன் தட்டுப்பாடு, சுகாதாரக் கேடுகள் போன்றவைக்கும் ஐ.எஸ்.ஐ. தான் காரணம் எனக் கூறும் நாள் தூரத்தில் இல்லை.’

இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் முத்திரையாக அறியப்பட்ட ஐ.எஸ்.ஐ., இந்து மதவெறியர்களால் தேசத்துரோகிகளுக்கான முத்திரையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் 12 கோடி முசுலீம் மக்களையும் ஐ.எஸ்.ஐ.யின் ஏஜெண்டுகளாகச் சித்தரித்துத் தனிமைப்படுத்துவதே அவர்களின் முதன்மையான நோக்கம்.

அடுத்து அரசின் உளவுத்துறை, பாதுகாப்பு படையினரின் முறைகேடுகளை வெளிச்சமாக்கி இந்திய அரசை எதிர்க்கும் மனித உரிமை அமைப்புகள் மற்றும் புரட்சிகர – ஜனநாயக சக்திகளை தேசத்துரோக முத்திரை குத்துவது இரண்டாம் நோக்கமாகும். இப்படி ஐ.எஸ்.ஐ. பூச்சாண்டியை வைத்து பெரும்பான்மை மக்களது தேசபக்தி உளவியலை சதித்தனமாகத் திரட்டி வரும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அவதூறை இடுப்பொடிக்க வேண்டியது மிகமிக அவசியமாகும்.

காலிஸ்தான்: காங்கிரசின் சதி!

பசுமைப்புரட்சியின் மூலம் பணக்காரர்களான சீக்கிய விவசாயிகளுக்கும், ஏற்கனவே பணக்காரர்களாயிருந்த நகர்ப்புறத்து இந்து வியாபாரிகளுக்கும் தோன்றிய முரண்பாடே பஞ்சாப் பிரச்சினையின் அடிப்படையாகும். அந்த முரண்பாட்டைப் பயன்படுத்தி அகாலி தளத்தை வீழ்த்த நினைத்தவர் இந்திரா காந்தி. அதன்படி காங்கிரசு கும்பலால் அகாலிதளத்திற்கு எதிராக வளர்க்கப்பட்டவர் பிந்தரன் வாலே.

ஏற்கனவே பஞ்சாபி மொழி, நதிநீர் பிரச்சினை போன்ற கோரிக்கைகள் சீக்கியர்களுக்கு மட்டுமே சொந்தமானதாகச் சித்தரித்து, பஞ்சாபி மக்களை இந்து, சீக்கியர் என மதரீதியாகப் பிளப்பதில் காங்கிரசு, இந்துமத வெறி அமைப்புகள் வெற்றி பெற்றிருந்தன. இப்படி பஞ்சாப் பிரச்சினைக்கு அச்சாரம் போட்டு, எண்பதாம் ஆண்டுகள் முழுவதும் பஞ்சாபை இரத்தக் களறியில் மூழ்கடித்தவர்கள் யார்? நிச்சயமாக ஐ.எஸ்.ஐ. இல்லை.

அரசு பயங்கரவாதத்தால் பாதிப்படைந்த சீக்கிய இளைஞர்களைப் பயன்படுத்துவதற்கே ஐ.எஸ்.ஐ. மூக்கை நுழைத்தது. மேலும் பஞ்சாபில் ஐ.எஸ்.ஐ. நடத்திய சதிவேலைகளைவிடப் பல மடங்குக் கொடூரங்களை நடத்தியது இந்திய அரசுதான். கே.பி.எஸ்.கில் என்ற போலீசு பயங்கரவாதியினால் ஆயிரக்கணக்கான சீக்கிய இளைஞர்கள் கொல்லப்பட்டனர்; காணாமலும் போயினர். இன்றைக்கும் பஞ்சாப் மக்களிடம் நீங்கள் யாரை வெறுக்கிறீர்கள் பாக்கிஸ்தான் உளவுப்படையையா, இந்தியப் பாதுகாப்பு படையினரையா என்று கேட்டுப் பாருங்கள். நூறுசதம் இந்திய படை என்றே பதில் வரும்.

காசுமீர் யாருடைய சதி?

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் காசுமீர் மக்களின் அவலநிலை ஐ.எஸ்.ஐ. பெயர் சொல்லியே நியாயப்படுத்தப்படுகிறது. ”காசுமீர் யாருடன் சேர்வது என்பதையோ, தனிநாடாக இருப்பதையோ நாங்களே முடிவு செய்கிறோம்” எனும் காசுமீர் மக்களின் கோரிக்கையை இந்தியா ஏற்பதில்லை. சிம்லா ஒப்பந்தப்படியும், ஐ.நா. உடன்படிக்கைப்படியும் பேச்சு வார்த்தை மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதை இந்திய அரசு மறுத்து வருகிறது. அதையே மூலதனமாக வைத்து பாகிஸ்தானும் காசுமீர் போராட்டத்தை தனது நலனுக்காகப் பயன்படுத்தி வருகிறது. இரு நாட்டு அரசுகளும் தமது மக்களின் சமூக பொருளாதார அவலங்களைத் தீர்க்க வக்கின்றி, தேசிய வெறியைக் கிளப்பி விடும் கருவியாக காசுமீரைப் பயன்படுத்துகின்றன. இதில் இந்தியாவின் பங்கே முதன்மையானது.

பாகிஸ்தானின் உள்ளார்ந்த நோக்கம் கேடானது என்றாலும், காசுமீர் போராட்டத்தை ஆதரிக்கிறோம் என்றும், காசுமீர் புனிதப்போருக்குச் செல்லும் எந்தத்  தனி நபரையும் தடுக்க மாட்டோம் என்றும் வெளிப்படையாகப் பேசுகிறது. போராளிகளும் ஆசாத் காசுமீர் மற்றும் பாகிஸ்தானின் பிற பகுதிகளில் மக்களிடம் பிரச்சாரம் செய்தும், நிதி வசூலித்தும், போராளிகளைத் தெரிவு செய்தும் இயங்கி வருகின்றனர். இதில் ரகசியம் எதுவுமில்லை. ஆனால், காசுமீர் போராட்டத்தை ஐ.எஸ்.ஐ சதி என்று ஒடுக்கி வரும் இந்திய அரசின் நடவடிக்கைகள் முற்றிலும் சதித்தனமாக இருக்கின்றன. ‘தேசபக்தியும் ஜனநாயகமும்’ அப்படித்தான் இயங்க முடியுமோ?

இந்திய இராணுவம் உருவாக்கிய ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டு

கிளிண்டன் வருகையின் போது காசுமீர் சித்சிங்கபுராவில் 35 அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலையைச் செய்தவர்கள் பாக்கிஸ்தான் ஆதரவுப் போராளிக் குழுக்கள் என்று பிரச்சாரம் செய்யப்பட்டாலும் இன்றுவரை அதற்குச் சான்றாதாரம் எதுவுமில்லை. மாறாக இந்திய இராணுவம்தான் செய்தது என்ற விமர்சனத்தையும் ஒதுக்க முடியாது. சீக்கயர்களைக் கொன்ற ‘பயங்கரவாதிகள்’ ஐவரை பாத்ரிபால் கிராமத்தில் சுட்டுக் கொன்ற இந்திய இராணுவம், தினத்தந்தி ‘போஸில்’ மீசையை முறுக்கியது. ஆனால், கொல்லப்பட்டவர்கள் அப்பாவி முசுலீம் கிராம மக்கள் என்பது உடன் தெரிய வந்து, காசுமீர் மக்கள் வெகுண்டெழுந்தனர். அப்படி பிராக்போராவில் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களில் 11 பேர் மறுபடியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்துடன் விசயம் முடிந்து விடவில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம் உ.பி.மாநிலம் அலிகார் பல்கலைக்கழகத்தில் ‘மாலிக்’ என்ற லஷ்கர் – இ தோய்பா (பாகிஸ்தான் ஆதரவுக் குழு) உறுப்பினர் கைது செய்யப்பட்டார். ”எங்கள் குழுதான் சீக்கியர் கொலை உள்ளிட்ட மூன்று படுகொலைச் சம்பவங்களை நடத்தியது” என்று இவர் கொடுத்த வாக்கு மூலத்தைக் காட்டி இந்திய இராணுவம் மீண்டும் மீசை முறுக்கியது. முறுக்கிய வேகத்திலேயே மண்ணைத் தொட்டது.

அலிகார் முசுலீம் பல்கலைக்கழக விடுதியில் மாலிக் தங்கியிருந்தது, அவரது மாணவர் அடையாள அட்டை, வாக்குமூலம் அனைத்துமே இந்திய அரசு உளவுத் துறையினரால் ‘செட் அப்’ செய்யப்பட்டது என்பது தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படுகொலைகளை விசாரிக்க காசுமீர் அரசு நியமித்திருக்கும் ‘பாண்டியன் கமிசனிடம்’ எப்படித் திறமையாக பொய் சொல்வது என்று இந்திய இராணுவ மற்றும் உளவுத்துறை அமைப்புகள் தற்போது மண்டை காய்ந்து வருகின்றன. இப்படி காசுமீரை குற்றுயிரும் குலையுயிருமாக மாற்றியது யார்? இந்திய அரசா, ஐ.எஸ்.ஐ.யா?

இந்திய அரசு போட்டுக் கொடுத்த இராஜபாட்டையில் ஐ.எஸ்.ஐ. கம்பீரமாக நுழைந்தது. மதச் சார்பற்ற காசுமீர் போராட்டத்தை இசுலாமியச் சார்பாக மாற்றியும், விடுதலைக் குழுக்களை உடைத்து பாகிஸ்தான் ஆதரவு குழுக்களாக மாற்றியும் ஐ.எஸ்.ஐ. செயல்படுவதற்கான முகாந்திரத்தை இந்தியாதான் ஏற்படுத்தியது. தற்போது அதிகாரத்திலிருக்கும் இந்து மதவெறியர்களோ பாகிஸ்தானுக்கு மேலும் உதவுகின்றனர்.

சென்ற பாராளுமன்றத் தேர்தலின் போது லஷ்கர்-இ-தொய்பா குழுவின் அப்துல்லா முன்டாசர், ”பா.ஜ.கட்சி அதிகாரத்திற்கு வரவேண்டுமென இறைவனைத் தொழுகிறோம். அப்போதுதான் நாங்கள் இன்னும் பலமான சக்தியாக உருவாக முடியும்,” என்று சொல்லியிருந்தார். ஐ.எஸ்.ஐயின் நண்பர்கள் இந்திய முசுலீம்களா, இந்து மதவெறியர்களா என்ற கேள்விக்கு இதைவிடத் திருத்தமான பதில் வேறு உண்டா?

வெள்ளை அறிக்கையும் வெளிறிப்போன அத்வானியும்

ஒருமுறை சென்னை வந்த இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ், பா.ம.க. இராமதாசைச் சந்தித்தாராம். ராஜ்குமார் கடத்தலையொட்டி இரு மாநில மக்களிடமும் கலவரங்களைத் தூண்டிவிட ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டிருப்பதால் அதை விளக்கி வீரப்பனுக்கு ஒரு கடிதம் எழுதி நெடுமாறனிடம் கொடுத்தனுப்பும் படியும் அமைச்சர் கேட்டுக் கொண்டதாக ஜு.வியில் ஒரு செய்தி வந்திருந்தது. இந்து மதவெறியர்களுக்கு நிகராக இந்திய செய்தி நிறுவனங்களும் இத்தகைய ஐ.எஸ்.ஐ. பூச்சாண்டியைக் கேவலமாகப் பயன்படுத்தி வருகின்றன. இந்தக் கேவலத்தின் தமிழக உதாரணம் புளுகுணி தினமலர்.

எதிர்க்கட்சியாக இருந்த போதே ஐ.எஸ்.ஐ. குறித்த உண்மைகளை மைய அரசு வெளியிடுமாறு அத்வானி வகையறாக்கள் அடிக்கடி கேள்விக்கணைகள் விடுவது வழக்கம். இப்போது உள்நாட்டுப் பாதுகாப்பையே பொறுப்பேற்று நடத்தும் ‘தேசபக்தர்’ அத்வானி பதவி ஏற்ற புதிதில் ஐ.எஸ்.ஐ. குறித்த ‘வெள்ளை அறிக்கை’ விரைவில் வெளியிடப்படும் எனச் சபதம் எடுத்தார்.

மாதங்கள் பல கடந்தும் அறிக்கையை வெளியிடவில்லையே ஏன்? ”எங்கள் வண்டவாளங்களை வெளியிட்டால், உங்கள் உளவுத்துறையான ‘ரா’வின் (ரிசர்ச் அன்ட் அனலாசிஸ் விங்) தில்லுமுல்லுகளை வெளியிடுவோம்” என பாக்கிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்தது. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக ஆகிவிடுமோ என்றஞ்சிய அத்வானி தற்போது வெள்ளை அறிக்கை குறித்து கேட்டால் நரசிம்மராவ் பாணியில் செத்த பிணம் போல முகத்தை வைத்துக்கொள்கிறார். இருநாட்டு உளவுத்துறை அதிகாரிகளைப் பொறுத்தவரை ‘நாம் இருவரும் திருட்டுப் பேர்வழிகள்தான், சதி வேலை செய்வது – வெற்றி பெறுவது அவரவர் சாமர்த்தியம்’ என்ற இராஜதந்திர அறிவோடும், தேவையற்ற சர்ச்சைகளை எழுப்பும் வெள்ளை அறிக்கை வேண்டாம் என்ற பரஸ்பர புரிதலோடும் இருக்கின்றனர்.

இதுபோக வெளிவராத அந்த வெள்ளை அறிக்கையில் ‘தினமலர்’ பாணி புளுகுகளை அத்வானி புனைந்திருப்பது தற்போது அம்பலமாயிருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் எட்வர்டோ பெலைரோ பேட்டி ஒன்றில் கீழ்க்கண்ட செய்தியைக் கூறியிருக்கிறார். ”குஜராத் – கட்ச் பகுதியில் உள்ள மதரஸா – மசூதிகளில் சமீபகாலமாக ஐ.எஸ்.ஐ. நடவடிக்கை அதிகரித்திருப்பதாக அத்வானி புனைந்திருக்கிறார். குஜராத் உளவுத்துறை ஐ.ஜி.யோ ‘அப்படி ஏதும் தகவல்கள் எங்களுக்கு வரவில்லையே’ என்று அத்வானியிடம் மறுத்திருக்கிறார். வெகுண்டெழுந்த அத்வானி, ‘அப்படியெல்லாம் மறுக்கக்கூடாது. செல்லுங்கள் தீர விசாரித்து தகவல்களை (நான் விரும்பியபடி) பெற்று வாருங்கள்” என்று ஆணையிட்டாராம்.

ஐ.எஸ்.ஐ.யின் சதி வேலைகளை இப்படிச் சதித்தனமாகப் புனைந்துரைக்கும் இந்த தேசபக்தத் திலகம் 27-4-2000 அன்று லோக்சபாவில் பேசும்போது, ”இந்தியாவைச் சீர்குலைக்க ஐ.எஸ்.ஐ. தொடுத்திருக்கும் ஜிகாத்திற்கு இந்திய முசுலீம்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்” என்று கூறினார். அப்படித்தான் இந்திய முசுலீம்கள் தாங்கள் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

பாரதீய ஜனதா: ஐ.எஸ்.ஐ-யின் தலைமை ஏஜெண்டு!

முசுலீம் மக்களின் தலையை நசுக்கி இரத்த யாத்திரை நடத்திய அத்வானியும் அவரது வானரக் கூட்டமும் பாபர் மசூதியை இடித்து, நாடெங்கும் கலவரம் நடத்தி குறிப்பாக பம்பாயில் பல நூறு முசுலீம் மக்களின் உயிரைக் குடித்தனர். 12 கோடி முசுலீம் மக்களை எதிர்த்து பத்தாண்டு காலம் இவர்கள் நடத்திய வெறிக் கலவரங்கள் – கொலைகள் காரணமாகத்தான் இசுலாமியத் தீவிரவாதம் முளைவிட்டது.

‘நமது சிறுபான்மை மக்கள் இந்திய அரசின் மீது நம்பிக்கை இழந்துவிட்டால், ஐ.எஸ்.ஐயின் இரையாக அவர்கள் சிக்குவது நடக்கும்’ என்கிறார் எல்லைப் பாதுகாப்புப் படையின் உளவுப் பிரிவி ஐ.ஜி. விபூதி நாராயண்ராய். ஐ.எஸ்.ஐயின் வலைக்கு பற்றாக்குறை வராமல் இரை தேடிக் கொடுப்பது இந்துமத வெறியர்களே என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்? முசுலீம் மக்களைத் தனிமைப்படுத்துவதே இந்துமத வெறியர்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ.இன், ஒரே குறிக்கோளாகும். எனவே ஐ.எஸ்.ஐ-யின் மிகப் பெரிய, அதிகாரப்பூர்வமற்ற சம்பளம் வாங்காத ஏஜெண்டுகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்தான் என்பதே உண்மை.

அடுத்து, கைது செய்யப்படும் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகளில் இந்து – சீக்கியர் – கிறிஸ்தவர் என அனைத்து மதங்களைச் சேர்ந்தோரும் இருக்கிறார்கள். ஆனால், அதிலிருக்கும் முசுலீம்கள் மட்டும் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கப்படுகிறார்கள். 1999 பாராளுமன்றத் தேர்தலின் போது பாகிஸ்தானிற்கு உளவு சொன்னதாகக் கைது செய்யப்பட்ட உள்துறை அமைச்சக நபர்களில் ஒருவர் கூட முசுலீம் இல்லை. உ.பி., பா.ஜ.க. அமைச்சர் ரகுராஜ் பிரதாப் சிங், ஐ.எஸ்.ஐ ஏஜெண்ட் என்றும், உள்ளூர் ரவுடி பிரதேஷ் சிங் கும்பலுக்கு கணிசமான ஆயுதங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

தாவுத் இப்ராஹிமின் டெல்லித் தளபதியாகச் செயல்பட்ட ரொமேஷ் சர்மா ஒரு இந்துதான். இவனது கட்டித்தில்தான் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் சேஷனது ‘தேசபக்தி அமைப்பு’ அலுவலகம் செயல்பட்டது. டெல்லி வாழ் காங்கிரஸ், பா.ஜ.க. தலைவர்கள் பலர் இவனோடு தொடர்புள்ளவர்கள்தான். இவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை; ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டாக அடையாளமும் காணப்படவிலை. தாவுதின் தளபதியாகச் செயல்பட்டு பின் பங்காளிச் சண்டையால் பிரிந்து போனவன் சோட்டாராஜன். பின்னர் இந்து மத வெறியர்களால் ‘இந்து தாதா’வாகப் போற்றப்பட்டான். பாங்காக்கில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் இவனை தாவுத் கும்பல் சுட்டுக் காயப்படுத்தியது. இவனைக கைது செய்ய வேண்டுமென்றால் எங்களுக்கு முறையான தகவல் வேண்டும் என்கிறது தாய்லாந்து அரசு. தாவுத்துடன் சேர்ந்தும், பிரிந்தும் இவன் நடத்திய கொலைகள் ஏராளம். மேலும், ஐ.எஸ்.ஐ.யின் வேண்டுகோளுக்கேற்ப பல முறைகேடுகள் நடத்தியவன்.

இவனை இந்தியா கொண்டு வர பம்பாய் போலீசு முயன்றபோது, தேசபக்தர் அத்வானியின் அலுவலகத்திலிருந்து ‘வேண்டாம்’ என்று உத்திரவு வருகிறது. தாவுதை எதிர்த்துப் போர் நடத்தும் ‘இந்து வீரனை’, சிவசேனா ஆதரவு பெற்ற ரவுடித் தலைவனை பாசத்தோடு பராமரிக்கிறது பா.ஜ.க. அரசு. தற்போது தாய்லாந்து போலீசிடமிருந்து ராஜன் தப்பி இருக்கிறான். இதற்கு ஏற்பாடு செய்ததே பா.ஜ.க. அரசுதான் என்று குற்றம் சாட்டுகிறார் மராட்டிய காங்கிரசு அமைச்சர்.

உளவு வேலை: ‘மேல்சாதி’ மேட்டுக்குடியின் திறமை!

நாடறிந்த பிரபலமான இராணுவத் தளவாட தேசத் துரோக வழக்குகளான கூமர் நாராயணன் சதி வழக்கு, போபார்ஸ் பீரங்கி வழக்கு, ஜெர்மன் நீர் மூழ்கிக் கப்பல் பேர வழக்கு, தெகல்ஹா இராணுவ ஊழல், கார்கில் சவப்பெட்டி ஊழல் போன்றவற்றில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கூட முசுலீம் இல்லை. மாறாக காங். – பா.ஜ.க.வைச் சேர்ந்த பலர் நேரடியாகவும், பினாமியாகவும் குற்றம் சாட்டப்பட்டனர். போபர்ஸ் பணத்தைச் சுருட்டிய தரகு முதலாளிக் கும்பலான லண்டன் வாழ் இந்துஜா சகோதரர்கள் இந்து மதவெறியாளர்களின் சர்வதேசப் புரவலர்களாவார்கள்.

அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா, இராணுவத் தலைமையகம் பென்டகன், இவர்களுக்காக மென்பொருள் தயாரிக்கும் மைக்ரோ சாப்ட் ஆகிய நிறுவனங்களில் ஏராளனமான ‘இந்து’ இந்தியர்கள் வேலை செய்கின்றனர். இந்தியா உள்ளிட்டு முழு உலகையும் உளவு பார்க்கும் விண்கோள், மென்பொருள் தயாரிப்பில் ஈடுபடும் இவர்கள் சி.ஐ.ஏ. கைக்கூலிகள் என்று அழைக்கப்படுவதில்லை, இந்தியாவின் தேசத் துரோக பாரம்பரியத்தில் ‘இந்து’ ‘மேல்சாதி’ – மேட்டுக்குடியினரின் பங்குதான் பெரும்பான்மையானது என்பதை எவரும் மறுக்க இயலாது.

‘ரா’ சைவப்புலியா?

‘போதைப் பொருள் கடத்தல், வடகிழக்குப் போராட்டம், வங்க தேச – நேபாள – பாக். எல்லை மாவட்டங்களில் சதி’ என ஐ.எஸ்.ஐ. பற்றிய குற்றப்பட்டியலை இந்துமதவெறியர்கள் பாராயணம் செய்வது வழக்கம். ஆயினும் இந்திய உளவுத் துறையான ‘ரா’வின் தகிடுதத்தங்களைப் பார்க்கும்போது ஐ.எஸ்.ஐ. ஒரு கொசு என்பது புரியவரும். ”’ரா’ அமைப்பு இத்தகைய எதிர்ச் சதிவேலைகளில் ஈடுபடவில்லை என்று சொல்ல மாட்டேன். ‘ரா’வை விட ஐ.எஸ்.ஐ. கொடூரமானது, தொழில் முறையில் தீவிரமானது” என்கிறார் பி.எஸ்.எப்-இன் உளவுத் துறைத் தலைவர் விபூதி நாராயண்.

இந்தியத் தலைமைக் கணக்காளரின் சோதித்தலுக்கு உட்படத் தேவையில்லாத ‘ரா’வின் செலவுப் பட்டியல் இரகசியமானது. எத்தனைக் கோடி ரூபாய், எதற்காகச் செலவழிக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. தகவல் தரும் தரகர்களுக்கு மது, மாது  சப்ளை செய்து குஷிப்படுத்த நாடெங்கும் ஆடம்பர மாளிகைகளை  ‘ரா’ நிறுவனம் வாடகைக்கு எடுத்திருக்கின்றது. மேற்கண்ட உளவுத் துறை அதிகாரியே ‘ரா’வை சைவப்புலி என்று ஒரு பேச்சுக்குச் சொல்லக்கூடத் தயங்குகிறார் என்றால் யதார்த்த நிலை எப்படியிருக்கும்?

காசுமீர் போராட்டத்திற்குப் பதிலடியாக பாகிஸ்தானில் நடக்கும் பஞ்சாப் – சிந்து தேசிய இனப் போராட்டங்கள், முஜாகீர் என்றழைக்கப்படும் இந்தியாவிலிருந்து சென்ற முசுலீம்களின் போராட்டம் ஆகியவற்றை சகல – சதி வேலைகளோடு ‘ரா’ ஆதரிக்கிறது. லாகூரிலும், கராச்சியிலும் அடிக்கடி நடக்கும் குண்டு வெடிப்புகளை இந்தியா நடத்தியது என பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.

வடகிழக்கிலும், ஈழத்திலும் போராளிக் குழுக்களை ஒன்றுக்கொன்று மோதவிடுவது, அப்பாவி மக்களைக கொலை செய்யத் தூண்டுவது, டம்மி குழுக்களை உருவாக்குவது என ‘ரா’வின் கொலைகார – சதிப் பட்டியல் நீளமானது. அதன்மூலம் இந்தப் போராட்டங்களை முட்டுச் சந்துக்குள் கொண்டு வந்து தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவது என்ற தந்திரத்தில் ‘ரா’ கொட்டை போட்ட பெருச்சாளியாகும். ஒரு வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படை நடத்திய அட்டூழியங்கள் ஏராளம் எனும்போது அண்டை நாடுகளிலும், எல்லை மாநிலங்ளிலும் ‘ரா’ நடத்திய பயங்கரவாதங்கள் பற்றிச் சொல்லி மாளாது.

சி.ஐ.ஏ. தனது சதிப்பின்னலை உலகம் முழுவதும் நடத்த, ‘ரா’ தெற்காசியாவில் நடத்துகிறது. சென்ற ஆண்டு இஸ்ரேல் சென்று வந்த அத்வானி ‘மொசாத்தின்’ (இசுரேலின் உளவுப் பிரிவு) ஆசிகளையும், பயங்கரவாதத் தொழில்நுட்பத்தை அளிக்கும் ஒப்பந்தங்களையும் வாங்கி தந்தார். இந்தியாவிலும் எஃப். பி.ஐ., சி.ஐ.ஏ. கிளைகள் தற்போது வெளிப்படையாகத் துவக்கப்பட்டுள்ளன. இனி சி.ஐ.ஏ மேற்பார்வையில் ‘ரா’வின் வேலைகளில் அமெரிக்கத் திறமை பளிச்சிடும்.

எனவே இந்திய முசுலீம் மக்கள் ஐ.எஸ்.ஐ.இன் கைக்கூலிகள் எனச் சித்தரிக்கும் இந்து மதவெறியர்களின் ‘தேசபக்த வேடத்தை’த் தோலுரிக்க வேண்டும். அடுத்து ஐ.எஸ்.ஐக்கு தியாக மனப்பான்மை கொண்ட முசுலீம் இளைஞர்களை ஆர்.எஸ்.எஸ். கூட்டமே கையளிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இறுதியாக இந்த ஐ.எஸ்.ஐ. பூச்சாண்டி முசுலீம்களை மட்டுமல்ல புரட்சிகர –  மனித உரிமை அமைப்புக்களையும் துரோகிகளாகச் சித்தரிக்கிறது என்பதையும் அம்பலப்படுத்த வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். அமெரிக்கக் கைக்கூலிகள்!

இரண்டாம் உலகப்போர் முடிவுற்று கம்யூனிசம் பரவி வந்த காலம். கம்யூனிசத்தை முறியடிக்க அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. அப்போது இந்தியாவில் கம்யூனிச எதிர்ப்பில் தீவிரமாயிருந்த ஒரு இயக்கத்தைக் கேள்விப்பட்ட அமெரிக்கர்கள் முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரியான ஜே.ஜே.குர்ரான் என்பவரை 1950-களில் அனுப்பி வைத்தனர்.

அவரும் நாகபுரி வந்து ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் தங்கி இரண்டாண்டுகள் ஆய்வு செய்து தன் எஜமானர்களுக்குத் தெரிவித்தார். ‘மிலிடன்ட் இண்டுயிசம் இன் பொலிட்டிக்ஸ் – (இந்திய அரசியலில் இராணுவ இந்துத்துவம்) என்ற அவரது நூலில், கம்யூனிச எதிர்ப்பிற்காவே இந்திய முதலாளிகள், நிலப்பிரபுக்கள் பலரும் ஆர்.எஸ்.எஸ்.க்கு பணஉதவி அளிப்பதாகவும், இந்தியாவில் கம்யூனிசத்தை வீழ்த்த ஆர்.எஸ்.எஸ். மட்டுமே உள்ளது என பாராட்டும் தெரிவிக்கிறார்.

இப்படி ஆரம்பத்திலேயே ஆண்டையின் விசுவாத்தைப் பெற்றதனால் இன்றுவரை இவர்கள் அமெரிக்கச் சேவையை தொடருகின்றனர். அமெரிக்காவில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்கு அமெரிக்க தலைவர்கள் பலர் வருகின்றனர். அமெரிக்க அதிபருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அடிக்கடி தொடர்பு கொள்கின்றனர். பாபர் மசூதியை இடித்த கையோடு ராம ஜென்ம பூமி தலைவர், கிளிண்டனுக்கு எழுதிய கடிதத்தில், ‘நீங்கள்தான் பூவுலகின் தர்மம் காக்க அவதரித்த நவீன கிருஷ்ணர்’ என்று உருகுகிறார். இவர்களது அமெரிக்க அடிமைத்தனத்திற்கு ஒரு சான்று:

‘விஜயபாரதம்’ (ஆர்.எஸ்.எஸ். வார இதழ்) தீபாவளி மலர் ஒன்றில், ஆர்.எஸ்.எஸ்.இன் அப்போதைய தென்னிந்திய கொ.ப. செயலரான சண்முகநாதன் என்ற பேர்வழி ‘அகண்ட பாரதம் விரைவில் மலரும்’ என்ற தலைப்பில் கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார்.

‘ஆசியா 2025’ என்ற எதிர்கால உலக அரசியல் நிலைமை பற்றிய ஜோசியம் ஒன்றை அமெரிக்கா வெளியிட்டிருக்கிறதாம். அதன்படி 2020 ஆண்டிற்குள் பாகிஸ்தான் இந்தியாவுடன் சேர்ந்துவிடுமாம். பாகிஸ்தான் அணு ஆயுதத் திட்டங்களை அமெரிக்கா அழிக்குமாம்.  பாகிஸ்தானுடன் சேரும் சீனாவை அமெரிக்கா மிரட்டி வைக்குமாம். அமெரிக்க இராணுவம் ஆசியாவில் தனது நம்பகமான கூட்டாளியாக இந்தியாவைத் தேர்ந்தெடுத்து சீனாவை ஒதுக்குமாம். இப்படி அமெரிக்கா இந்தியாவைக் கணித்திருப்பது பற்றி புல்லரிக்கிறார் சண்முகநாதன்.

இந்தியாவின் பல கட்சிகளில் சி.ஐ.ஏ. ஏஜெண்டுகள் இருந்ததுண்டு. ஒரு கட்சியே சி.ஐ.ஏ. ஏஜெண்டாக உள்ளது என்றால் அது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ. கும்பல்தான்.

– தொடரும்

__________இதுவரை____________

கடவுள், ஆன்மா, முக்தி…….. கேள்வி பதில்!

கேள்வி பதில்

கேள்வி: கடவுளை மறுத்தால்…..பரம்பொருள், ஆன்மா, பிறப்பற்ற நிலை, ஆன்மாவை உணர்வது என்று கூறுகிறார்களே…சற்றே விளக்குங்கள்!

– பி.தினேஷ் குமார்.

அன்புள்ள தினேஷ் குமார்,
உங்கள் கேள்விக்கான பதிலை இரண்டு விதத்தில் புரிந்து கொள்ளலாம்.

கடவுள் குறித்த அனைத்து விளக்கங்களும், செய்திகளும், கற்பனைகளும் நம்மால் சிந்தனையில் மட்டுமே அறியப்படுகிறது. சிந்தனை என்பது மூளையின் செயல்பாடு. நமக்கு வெளியே இருக்கும் உலகத்திலிருந்து புலன்கள் மூலம் கடவுள் குறித்த அனைத்தும் மூளையில் பதியப்பட்டு நாம் பேசுகிறோம், சிந்திக்கிறோம் அல்லது உணர்கிறோம். ஆன்மீகவாதிகள் சொல்லும் பரவச நிலை, சமாதி நிலை, முக்தி நிலை இன்ன பிற நிலைகளெல்லாம் கூட மூளையின் அறிதலோடு மட்டுமே கட்டுண்டு கிடக்கின்றன. டாஸ்மாக் குவார்ட்டரினால் கூட இத்தகைய நிலைகளை எளிதில் ‘உண்மை’யாகவே அடைய முடியும். அது மூளையின் மயக்க நிலை, அல்லது போதை நிலை.

ஒரு வேளை இந்த பரவச நிலைகளை அடையும் வண்ணம் நாம் பக்குவப்படவில்லை என்று ஆன்மீகவாதிகள் கூறுவார்களாயின் அதுவும் கூட மூளையின் உதவியோடுதான் அறியப்படுகிறது. கடவுளை ஒன்றியவர் என்று ஒருவர் கூறும் அனுபவம் கூட இவ்விதமே கடவுளை ஒன்றாதவர்களை சென்றடைகிறது. மனித உடலில் உயிரின் இயக்கம் நின்ற பிறகு மூளையின் செயல்பாடும் முடிவுக்கு வந்துவிடுகிறது. அதன் பிறகு டிடிஎஸ் எபெக்டில் கடவுள் வந்தாலும் செத்தவர் அதை உணர முடியாது. எனவே ஆன்மா, பருப்பொருள், கடவுள், என்று என்ன பெயரிட்டு அழைத்தாலும் அது மூளையின் செயல்பாடான சிந்தனையேயன்றி வேறல்ல. அந்த சிந்தனையும் வெளியே இருக்கும் மனித சமூகத்தின் வழியாக கற்றுக் கொள்ளப்படுகிறதே அன்றி சுயம்புவாக தோன்றிவிடுவதில்லை.

ஆகவே நாம் சிந்தித்தால் மட்டுமே ‘கடவுள்’ இருப்பார். சிந்திக்கவில்லை என்றால் கடவுள் இல்லை. அதன்படி நாய், குரங்கு, மாடு, ஆடு இன்னபிற சிந்திக்க இயலாத ஜீவராசிகளுக்கு கடவுள் கிடையாது. அவர்களெல்லாம் எங்களைப் போன்ற ‘நாத்திகர்கள்’. ஆக கடவுளை, ஆன்மாவை, பரம்பொருளை தோற்றுவிப்பவன் மனிதனே அன்றி கடவுள் அல்ல. பிறப்பற்ற நிலை, ஆன்மாவை உணர்வது அனைத்தும் மனித சிந்தனையால் தோற்றுவிக்கப்படும் கனவுலகமே அன்றி உண்மை அல்ல. இந்த கனவுலகின் கற்பனைக்கு கூட யதார்த்த உலகின் அறிவை மூளை கற்றிருப்பது அவசியம்.

அதாவது காட்டில் ஒரு மனிதக் குழந்தையை விட்டு அது தானே வளருகிறது என்றால் அது நாட்டில் இருக்கும் மனிதர்களின் கடவுளை அறியவே முடியாது. அதை அருகில் இருந்து உசுப்பேற்றி சொல்லிக் கொடுப்பதற்கு இன்னொரு மனிதன் வேண்டும். எல்லா மதங்களும் சொல்லும் சொர்க்கத்தின் வசதி, ஆடம்பரம், கேளிக்கைகளைக் கூட இகலோக இன்பங்களிலிருந்தே மனிதன் கற்பித்துக் கொள்கிறான். அல்வாவைச் சாப்பிட்டிருந்தால் மட்டுமே அமுதத்தின் சுவை எப்படி இருக்கும் என்று சிந்திக்க முடியும்.

இயற்கையின் நீட்சியாக நாம் என்றும் இருக்கிறோம். மனித வாழ்வு முடிந்த பிறகு நாம் மனிதன் எனப்படும் சிந்தனை அடங்கிய வாழ்வை மட்டுமே முடித்துக் கொள்கிறோமே அன்றி நமது உடல் சிதைவடைந்து வேறு ஒரு பொருளாக மாறுகிறது. அந்த பொருள் பிறிதொரு காலத்தில் வேறு தன்மை கொண்ட பொருளாக மாறும். ஆகவே இயற்கை அல்லது பருப்பொருள் என்ற அளவில் நாம் என்றும் மரணிப்பதில்லை. ஆனால் இந்த உண்மையை மனிதனாக இருக்கும் போது மட்டும் உணர்கிறோம். மற்ற பொருட்கள் அப்படி உணர முடியாது. அந்த வகையில் இயற்கை தன்னைத்தானே உணரும் உன்னத பொருள் என்று மனித மூளையைச் சொல்லலாம்.

ஒரு மனிதன் சேகரித்த அறிவும், திறமையும், கருத்தும் அவனது மரணத்தோடு அழிந்து விடுவதில்லை. அவனைச் சுற்றி இருக்கும் மற்ற மனிதர்கள் மூலம் அந்த அறிவு வாழையடி வாழையாக கைமாற்றித் தரப்படுகிறது. ஆகவே நாம் இன்று சிந்திக்கும் விசயமும், கண்டுபிடிக்கும் பொருளும் நாளைக்கு, பல நூறு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் இன்னும் மேம்பட்ட நிலையில் இருக்கும். அந்த வகையில் நமது சிந்தனைக்கும் ‘அழிவில்லை’ இதைத்தாண்டி ஆன்மீகவாதிகள் சொல்லும் பிறப்பற்ற நிலை, முக்தி நிலை என்று எதுவுமில்லை. அவை தன்னைத்தானே சமாதானம் செய்து கொள்ளும் சுய இன்ப கற்பனைகள்.

இரண்டாவதாக கடவுள் குறித்த கருத்தோ, நம்பிக்கையோ, பற்றோ எதுவும் நமது உயிர் வாழ்க்கையின் நிபந்தனையாக என்றுமே இருப்பதில்லை. நீங்கள் வேலை செய்தால் ஊதியம், ஊதியமிருந்தால் சாப்பாடு, தங்குமிடம், வாழ்க்கை. மற்றபடி எவ்வளவுதான் கவனத்தோடு தியானமோ, நம்பிக்கையோ கொண்டிருந்தாலும் நமது வாழ்க்கைப் பிரச்சினைகள் தீர்ந்து விடாது. மாறாக அந்த பிரச்சினைகளுக்கான ஒரு கற்பனையான இடைக்கால நிம்மதியை வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை தரலாம். அதனால்தால் இந்த உலகம் மனிதர்களை வைத்து மட்டுமே இயங்குகிறது, கடவுளை வைத்து அல்ல. அதனால்தான் வீட்டு சாக்கடை அடைத்தால் கூட நகர சுத்தி தொழிலாளிகளைத்தான் அழைக்கிறோமே அன்றி கடவுளை அல்ல. அந்த வகையில் இந்த உலகை இயக்க வைக்கும் உழைக்கும் மக்கள்தான் கடவுள். கருவறையில் உட்கார்ந்து அக்கார அடிசலைக் கூட சாப்பிடத் துப்பில்லாமல் தேமே என்றிருக்கும் கடவுள் வெறும் கற்சிலைதான்.

இறுதியாக நீங்கள் வாழ்க்கைப் பிரச்சினைகளை போராடி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற போராட்ட குணம் வேண்டுமென்றால் இல்லாத கடவுள் குறித்த நம்பிக்கையை அகற்ற வேண்டும். அந்த வகையில் கடவுள் இல்லை என்பது இளமைத்துடிப்புள்ள பண்பாகும். கடவுள் உண்டு என்றால் அது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு போராட வேண்டாம் என்று சொல்கிற கிழட்டுத் தத்துவமாகி விடுகிறது.

ஆகவே நீங்கள் இளமைத் துடிப்புடன் எப்போதும் வாழ விரும்புகிறீர்கள் என்றால் கடவுளை புரிந்து கொள்ளுங்கள்…அதாவது இல்லை என்பதை!

அமெரிக்க அதிபர்: பில்லியன் டாலர் பதவி! பி.சாய்நாத்

2

பணத்தை பின் தொடர்! தலைவனைக் கண்டுபிடி! – பி.சாய்நாத்.

நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் தரப்பு $1.25 பில்லியன் (சுமார் ரூ 7,000 கோடி) வரை செலவழித்திருக்கும். வெற்றி பெற்றவர் நிதி தந்தவர்களுக்கு கைமாறு செய்வதற்கான வழிகளை ஏற்படுத்தித் தருவதிலேயே ஆட்சிக் காலத்தை செலவழிக்க வேண்டியிருக்கும்.

ராக் ஒபாமா மறுபடியும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதோ, மிட் ரோம்னி ஜெயிக்க முடியுமா என்பதோ விஷயமில்லை. பில்லியன் டாலர்கள் இல்லாத யாரும் போட்டி போடுவதைப் பற்றி கனவு கூட காண முடியாது என்பதுதான் விஷயம். அந்த அளவு பணமிருந்தால் கூட போட்டி போடுவது மட்டும்தான் உத்தரவாதம், வெற்றி பெறுவது உத்தரவாதம் இல்லை. போட்டியாளர் அதிகம் செலவழிக்க முடிந்தால் வெற்றி கை நழுவிப் போய் விடும்.

மேட்டுக் குடியைச் சேர்ந்த மிகச் சிறு பிரிவினரைத் தவிர சேருவதற்கான விலையை கொடுக்க முடியாத மற்ற அனைவரும் இந்த விளையாட்டிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். “1%த்தினருக்காக 1%த்தினர் நடத்தும்” ஜனநாயகம் என்று பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்ளிஸ் இதற்கு பெயர் சூட்டியிருக்கிறார்.

நவம்பரில் பரபரப்புகள் ஓய்ந்த பிறகு கணக்கு பார்த்தால் இரண்டு முக்கிய போட்டியாளர்களும், அவர்களது கட்சியினரும், ‘சுயேச்சையான குழுவினரும்’ மொத்தமாக $2.5 பில்லியன் செலவழித்திருப்பார்கள். நாடாளுமன்றத் தேர்தல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மொத்தச் செலவு $6 பில்லியனை (சுமார் ரூ 32,000 கோடி) தாண்டும் என்கிறது நாட்டின் தேர்தல் செலவுகளை கண்காணிக்கும் சென்டர் பார் ரெஸ்பான்சிவ் பொலிடிக்ஸ் என்ற அமைப்பு. 12 கோடி இந்தியப் பள்ளிக் குழந்தைகளுக்கு மூன்று ஆண்டுகள் மதிய உணவு வழங்குவதற்கு போதுமான தொகை அது.

ஒரு சதவீதத்தை விட குறைவு

அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரு தரப்பும் சம அளவு பணம் செலவழிப்பதாக வைத்துக் கொண்டால், வெற்றி பெறும் தரப்பு எல்லா செலவினங்களையும் சேர்த்து $1.25 பில்லியன் செலவழித்திருக்கும். திரு ரோம்னி வெற்றி பெற்று 2016ல் மீண்டும் போட்டி போட விரும்புவதாக வைத்துக் கொள்வோம். அடுத்த தேர்தலில் போட்டியிட இதே அளவு தேர்தல் நிதியை திரட்ட வேண்டுமானால் நான்கு ஆண்டு பதவிக் காலத்தின் ஒவ்வொரு நாளும் சராசரியாக $850,000 (சுமார் ரூ 4.5 கோடி) சம்பாதிக்க வேண்டியிருக்கும்.

அந்த அளவு நிதி வழங்குபவர்கள் விரும்பும் சட்டங்களை நிறைவேற்றுவதை தவிர வேறு எதையும் செய்வதற்கு அவருக்கு நேரம் இருக்கப் போவதில்லை. இதை உறுதி செய்து கொள்ள வேண்டுமென்றால் திரு ஒபாமாவைக் கேட்டுப் பார்க்கலாம்! தேர்தல்களைப் பொறுத்த வரை 1 சதவீதத்திலும் குறைவான சிறு பகுதியினரே முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள். (அளவிலும் வடிவத்திலுமான வேறுபாடுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்தியத் தேர்தல்களுக்கும் இது பொருந்தும்).

அமெரிக்க அதிபர் தேர்தல் பணபலத்திற்கு பிணைக் கைதியாக இருப்பது இட்டுக் கட்டப்பட்ட விஷயமில்லை. CounterPunch.orgல் டேவிட் லிண்டார்ப் சுட்டிக் காட்டுவது போல 2008 ஒபாமா தேர்தல் பிரச்சாரத்துக்கு கார்ப்பரேட்டுகளைத் தவிர பெருமளவு பங்களித்தவர்கள் நிதி நிறுவனங்கள்தான். கோல்ட்மேன் சாக்ஸூம், ஜே பி மார்கன் சேஸூம், அரசியல் ஆர்வலர் குழுக்கள் மூலம் $2.5 மில்லியன் வழங்கிய சிட்டிகுரூப்பும் இவர்களில் அடங்குவர்.

இன்னொரு $1.5 மில்லியன் யூபிஎஸ் மற்றும் மார்கன் ஸ்டேன்லி போன்ற பெரிய வங்கிகளிடமிருந்து வந்தது. மக்கள் பணத்திலிருந்து வங்கிகளுக்கு அரசாங்கம் வாரி வழங்கிய மீட்பு நிதியில் ஒரு பகுதியை கைப்பற்றுவதற்காக வங்கி ஒன்றை விலைக்கு வாங்கிய ஜெனரல் எலக்ட்ரிக்கும் இதில் அடங்கும்.

திரு லிண்டார்ப் சுட்டிக் காட்டுவது போல திரு ஒபாமா தான் பட்ட கடன்களை எல்லாம் முறையாக அடைத்தார். டிம் கெயிட்னரை நிதி அமைச்சராக நியமித்தது அந்த கைமாறுகளில் ஒன்று. புஷ் ஆட்சிக் காலத்தில் நியூயார்க் மத்திய வங்கியின் தலைவராக இருந்த திரு கெய்ட்னர், “நிதி நெருக்கடிக்கு வழி வகுத்த, டெரிவேட்டிவ் மோசடிகளை  கண்டு கொள்ளாமல்“ இருந்து புகழ் பெற்றவர்.

லாரன்ஸ் சம்மர்ஸ் என்பவரை தனது தலைமை பொருளாதார ஆலோசகராக நியமித்தார் ஒபாமா. அந்த சம்மர்ஸ்தான் பில் கிளின்டன் ஆட்சியில் நிதி அமைச்சராக டெரிவேட்டிவ்கள் மீதான கண்காணிப்பை விலக்கியும், வங்கிகள் மூலதன வங்கிகளுடன் இணைவதற்கு அனுமதி அளித்தும் நிதி நெருக்கடிக்கு வித்திட்டவர்.  இன்னும் பல பதவிகளையும் நிதித்துறை ஆட்களுக்கு வாரி வழங்கினார் ஒபாமா. ஆனாலும், இந்த முறை திரு ரோம்னி திரு ஒபாமாவை விட அதிக அளவு வால்ஸ்ட்ரீட் நிதியை திரட்டியிருக்கிறார்.

2012ல் இரண்டு அதிபர் தேர்தல் பிரச்சாரங்களும் நேரடியாக செலவழிக்கும் தொகை 2008ல் செலவழித்ததை விட சிறிதளவு குறைவாக இருப்பதைப் போல தோன்றலாம். வேட்பாளர்களும் கட்சிகளும் செய்யும் செலவை மட்டும் கணக்கில் எடுத்தால் அப்படித் தோன்றுகிறது. ஆனால், சூப்பர் பிஏசிகள் எனப்படும் அரசியல் ஆர்வலர் குழுக்கள் தனியாக செலவழிக்கும் பணம் இதில் சேரவில்லை.

அந்த குழுக்கள் பெருமளவு நிதி திரட்டுவதற்கான சாத்தியங்கள் உடையவை. தமது பிரச்சாரங்களை வேட்பாளர்களுடன் ஒருங்கிணைத்து நடத்தக் கூடாது என்ற கட்டுப்பாடு அவற்றின் மீது பெயரளவில் உள்ளது. ஆனால், உண்மையில் வேட்பாளர்களின் நடைமுறை நீட்சிகளாகவே அவை செயல்படுகின்றன. கார்ப்பரேட்டுகள் நேரடியாக செலவழிப்பதன் மீதான கட்டுப்பாடுகளை 2010ம் ஆண்டின் உச்ச நீதி மன்ற தீர்ப்பு தூக்கி எறிந்து விட்ட பிறகு இன்னும் கூடுதல் பணம் பாய ஆரம்பித்திருக்கிறது.

பெரு நிறுவனங்களிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் சூப்பர் பிஏசிக்கள் திரட்டக் கூடிய நிதிக்கு வரம்பு எதுவும் இல்லை. ஒரு வேட்பாளரை ஆதரிக்கவோ, அல்லது தோற்கடிக்கவோ எவ்வளவு செலவழிக்கலாம் என்பதற்கும் வரம்பு இல்லை. (அவை நேரடியாக ஒரு வேட்பாளருக்கு நிதி அளிக்க முடியாது. நன்கொடை அளித்தவர்களின் விபரங்களை மத்திய தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்).

சிஆர்பி மதிப்பீட்டின்படி அக்டோபர் 16ம் தேதி வரையில், “சூப்பர் பிஏசிக்களாக பதிவு செய்து கொண்ட 935 குழுக்கள் $433 மில்லியனுக்கும் அதிகமான நிதியை திரட்டியுள்ளன. 2012 தேர்தல் களத்தில் $375 மில்லியனுக்கும் அதிகமான செலவு செய்திருக்கின்றன.

‘வெளிப்புற சுயேச்சை குழுக்களால் செலவழிக்கப்பட்ட இந்தத் தொகையில் பெரும்பகுதி தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு போனது’ என்கிறது நியூயார்க் டைம்ஸ். அயோவாவில் மட்டும் இரண்டு பிரச்சாரங்களுடனும் தொடர்புடைய ‘சுயேச்சை’ குழுக்கள் மாநிலத்தின் ஆறு பிரதிநிதிகளை வெல்வதற்கான முயற்சியில் 100,000க்கும் அதிகமான விளம்பரங்களை ஒளிபரப்பின.

இதற்கிடையில் நிபுணர்கள் இரண்டாவது ஒபாமா-ரோம்னி விவாதம் சூடாக நடந்ததாக புளகாங்கிதம் அடைகின்றனர். இரு தரப்பினரும் தன்னெழுச்சியாக விவாதித்தனர் என்று பாராட்டுகின்றனர். அது ‘ஒரு அரங்கக் கூட்ட வடிவத்தில் இருந்தது’ என்று சிலாகிக்கின்றனர்.

பார்வையாளர்கள் கூட்டம் நடத்துபவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, முன் கூட்டியே மட்டுறுத்துனருடன் ஒத்திகை நடத்தியிருக்க, கேட்கப்படவிருக்கும் அனைத்து கேள்விகளும் முன் கூட்டியே பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருக்க அரங்கக் கூட்ட வடிவம் என்பதில்  எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை.

விவாதத்தின் போது இரண்டு தரப்புமே ‘ஏற்றத் தாழ்வு’ என்ற வார்த்தையை உச்சரிக்கவில்லை. அந்தச் சொல்தான் சென்ற ஆண்டு நாட்டின் எண்ணற்ற நகரங்களில் ஆக்கிரமிப்பு இயக்க போராட்டங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. பல முன்னணி பொருளாதார மேதைகளை கவலை கொள்ள வைக்கும் விஷயமாக அது இருக்கிறது. சமீபத்திய வருவாய்த் துறை தரவுகளில் அது வெளிப்பட்டிருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்னர் வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் வறுமை பற்றிய விபரங்களிலும் அது வெளியாகியிருந்தது.

“கார்ப்பரேட் கிரைம்” என்பதைப் போலவே இதுவும் ஒரு சொல்லக் கூடாத வார்த்தையாக மாறியிருக்கிறது. ‘ஒரே மாதிரியான வேலை செய்யும் பெண்களுக்கு ஆண்களுக்கு கிடைப்பதில் 72 சதவீதம் சம்பளம் மட்டுமே வழங்கப்படுவது ஏன்’ என்று கேட்டவரிடமிருந்து இதைப் பற்றிய ஒரே குறிப்பு வந்தது. ‘திரு ரோம்னி மேல் மட்டத்தில் உள்ளவர்கள் தனிப்பட்ட விதிமுறைகளின்படி விளையாட அனுமதிக்க விரும்புவதாக குற்றம் சாட்டிய போது’ அந்த விஷயத்தை பேசுவதற்கு ஓரளவு அருகில் வந்தார். இரண்டு பேருமே கேள்விக்கு பதில் சொல்லும் போது கூட அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை.

‘சென்ற ஆண்டு வால் ஸ்ட்ரீட்டில் ஊதியங்கள் 4 சதவீதம் அதிகரித்து அவற்றின் மொத்த மதிப்பு $60 பில்லியனை (ரூ 3 லட்சம் கோடி) எட்டியது’ என்கிறது நியூயார்க் டைம்ஸ். 2007, 2008ம் ஆண்டுகளை தவிர்த்து மற்ற எந்த ஆண்டையும் விட அதிகமான தொகை இது. “நியூயார்க்கின் நிதித் துறை ஊழியர்களின் சராசரி சம்பளம் ($362,950 – சுமார் ரூ 1.88 கோடி) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட 16.6% அதிகம்”. இதே நேரத்தில் வேலை தேடும் 2.5 கோடி மக்களுக்கு வேலை இல்லை. உணவு கூப்பன்களை சார்ந்திருக்கும் மக்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவு உயர்ந்திருக்கிறது. 5 கோடி மக்கள் உணவு நிச்சயமின்மையால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பொருளாதார நிபுணர் பால் புஹ்ஹைட் சுட்டிக் காட்டுவது போல, அமெரிக்காவில் வாழும் “10 பணக்கார அமெரிக்கர்கள் சென்ற ஆண்டு ஈட்டிய பணத்தை வைத்து இந்தப் பூமியில் உள்ள பட்டினியால் வாடும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு ஆண்டு முழுவதும் உணவு தர முடியும்”.

அந்த விவாதத்தில் இன்னும் ஓரிரு விஷயங்கள் இந்தியர்களுக்கு ஆர்வமளிக்கக் கூடியவை. இரண்டு வேட்பாளர்களுமே பெட்ரோல் விலைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று விரும்பும் வாக்காளர்களை குறி வைத்து பெட்ரோல் விலை பற்றி கவலை தெரிவித்தார்கள். நம் நாட்டிலோ அவர்களின் சீடர்கள் ‘பெட்ரோல் விலையின் மீதான ஒழுங்குபடுத்தலை ஒழித்துக் கட்டி சந்தையில் தீர்மானிக்கும்படி விட வேண்டும்’ என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதை விட சுவாரஸ்யமானது எரிசக்தி தட்டுப்பாடு குறித்த விவாதத்தில், திரு ஒபாமா அணுசக்தியை ஒரு முறை கூட குறிப்பிடவில்லை என்பது. தூய்மையான ஆற்றல் என்ற வரிசையில் கூட அவர் அதைச் சேர்த்துக் கொள்ளவில்லை. (ஆனால், இந்தியா அந்த நம்பிக்கையில் திட்டங்களை செயல்படுத்துவதில் அவருக்கு மகிழ்ச்சிதான்). “காற்று, சூரிய ஒளி, உயிர் எரி பொருட்கள்” இதுதான் அவரது மந்திரம். திரு ரோம்னி அணுசக்தியை ஒரே ஒரு முறை குறிப்பிட்டாலும், அதற்கு சிறப்பான இடம் எதையும் கொடுக்கவில்லை.

விவாதத்தை கட்டி அமைத்தல்

‘யார் இந்த விவாதங்களை ஏற்பாடு செய்கிறார்கள் என்றும் அவை எப்படி நடத்தப்படுகின்றன’ என்றும் பார்ப்போம். போன வாரம், ஒபாமா மற்றும் ரோம்னி பிரச்சாரங்கள் பேரம் பேசி ஏற்படுத்திக் கொண்ட ரகசிய ஒப்பந்தத்தைப் பற்றிய ரால்ப் நாடாரின் கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அதிபர் விவாதங்களுக்கான ஆணையம் (சிபிடி) என்ற பிரச்சார குழுக்களின் கார்ப்பரேட் வாரிசு அந்த ஒப்பந்தப்படிதான் செயல்படுகிறது.  ‘விவாதங்களுக்கான நடைமுறையில் இரு தரப்பு பிரச்சார குழுக்களின் இரும்புப் பிடி மூச்சு முட்ட வைப்பது, நேர்மையற்றது, முழுமையானது’ என்கிறார் ரால்ப் நாடார்.

இது எப்போதுமே இப்படி இருந்ததில்லை. 1987 வரை 10 ஆண்டுகளுக்கு மேலாக அதிபர் தேர்தல் பிரச்சார விவாதங்களை பெண் வாக்காளர்களின் கூட்டமைப்பு நடத்தி வந்தது. அந்த நடைமுறை எப்படி மாறியது? சுயேச்சையான விவாதங்களை நடத்தி வந்த கூட்டமைப்பு, விவாதங்கள் மீதான தனது கட்டுப்பாட்டை எப்படி இழந்தது? 1987ல் அந்த பொறுப்பை கை விடுவதற்கு அது ஏன் கட்டாயப்படுத்தப்பட்டது? அல்லது அந்த முடிவு அதன் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டதா?

இது பற்றிய விபரங்களை கேட்டு எழுதியதும், அந்தக் கூட்டமைப்பின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் பெட்சி கார்டனரிடமிருந்து உடனடியாக பதில் வந்தது. விவாத வடிவத்தை தேர்ந்தெடுப்பதிலும், மட்டுறுத்துனரை தேர்ந்தெடுப்பதிலும், கேட்கப்பட வேண்டிய கேள்விகளை முடிவு செய்வதிலும் கட்சிகளின் பிரச்சாரக் குழுக்கள் பெருமளவு அழுத்தத்தையும் கட்டுப்பாட்டையும் செலுத்தி வந்தன என்கிறார் அவர். கூட்டமைப்பின் அப்போதைய தலைவர் நேன்சி நியூமென் வெளியிட்ட அறிக்கையையும் அனுப்பி வைத்திருந்தார்.

அப்போது ஜார்ஜ் எச் டபிள்யூ புஷ்-மைக்கேல் டுகாகிஸ் போட்டி நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வெளியிடப்பட்ட நியூமேனின் அறிக்கை வேறு பல விஷயங்களுடன் இதையும் சொல்கிறது. “தொலைக்காட்சி கேமராக்கள் எதைப் படம் பிடிக்க வேண்டும் என்பதைக் கூட இரு தரப்பினரும் தமக்கிடையே முடிவு செய்து கொண்டானர். வேட்பாளர்களிடம் கேள்வி கேட்கவிருப்பவர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதையும் அவர்களே முடிவு செய்து கொண்டார்கள். அரங்கத்தை தமது ஆதரவாளர்களைக் கொண்டு நிரப்புவதாக அவர்கள் முடிவு செய்திருந்தார்கள். விவாத வடிவத்தையும் அவர்கள் முடிவு செய்து கொண்டார்கள்.”

“இரு தரப்பு பிரச்சாரக் குழுக்களின் ஒப்பந்தம் திரைமறைவில் செய்யப்பட்ட ஒரு உருவாக்கம். அந்த ஒப்பந்தம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்ட ஒன்று என்றார்கள் அவர்கள். அதில் ஒப்பமிட்டு அதன் அனைத்து நிபந்தனைகளுக்கும் ஒத்துப் போக வேண்டியதுதான் நாங்கள் செய்ய வேண்டியது. அதைச் செய்யா விட்டால் விவாதத்தை நடத்தும் உரிமையை நாங்கள் இழந்து விடுவோம். வின்ஸ்டன்-சேலமில் மட்டுறுத்துனரின் ஆரம்ப உரையை தாங்கள் பார்த்து ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்ற அளவுக்குக் கூட அவர்கள் வலியுறுத்தினார்கள்.”

“கூட்டமைப்புக்கு இரண்டே வழிகள்தான் இருந்தன. விவாதம் இந்த கோல்மால்களை தாண்டி உண்மையாக நடக்கும் என்று நம்பி திரைமறைவு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வது அல்லது இந்த நாடகத்துக்கு எங்களது நம்பகமான பெயரை கொடுக்க மறுத்து வெளியேறுவது”

“எனவே, பெண் வாக்காளர்களுக்கான கூட்டமைப்பு அமெரிக்கப் பொது மக்களை முட்டாளாக்கும் அந்த முயற்சிக்கு துணையாக இருக்கப் போவதில்லை என்று அறிவிக்கிறது”

__________________________________________________________________________

– பி.சாய்நாத், நன்றி: தி இந்து
தமிழாக்கம் – செழியன்

__________________________________________________________________________

வெட்டுக்கிளிப் பாட்டி – வீடியோ!

8
abuela-grillo
வெட்டுக்கிளி பாட்டி

abuela-grillo

ண்ணீர் தனியார்மயமாதலையும் மக்களுக்குச் சொந்தமான அனைத்து இயற்கை வளங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழலின் மூலம் கைப்பற்றி தமது லாப வேட்டைக்கு எப்படி பயன்படுத்திக் கொள்கின்றன என்பதையும் உலகெங்கிலும் உள்ள யாருக்கும் புரியும் வகையில் எளிமையாக உருவாக்கப்பட்ட குறும்படம் அபுயுலா க்ரிலோ (வெட்டுக்கிளிப் பாட்டி).

பொலிவியாவில் 2000 வருடம் தண்ணீர் தனியார் மயமாக்கப்பட்டது. அதன் விளைவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் அதை எதிர்த்து கோபகன் நகரில் அமைதி ஊர்வலம் நடத்தினர். ஆனால் அரசு ஆயுதப் படைகள் அவர்க்ளை குறிவைத்துத் தாக்க, பேரணி கலவரமாக மாறியது. தளராமல் தொடர்ந்த பொலிவிய மக்கள் போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றது.

அந்த அனுபவத்தினால் உந்தப்பட்ட பொலிவியாவின் இளம் அனிமேஷன் கலைஞர்க்ள், டென்மார்க் அனிமேஷ்ன் பள்ளி ஒன்றின் உதவியுடன், தண்ணீர் தனியார்மயமாதல் பற்றிய அருமையான, கூர்மையான குறும்படத்தை உருவாக்கியுள்ளனர்.

பொலிவியாவின் நாட்டுப்புறக் கதை ஒன்றின் பாத்திரமான “வெட்டுக்கிளிப் பாட்டி” என்ற மூதாட்டி எங்கு சென்றாலும் அவரை பின் தொடர்ந்து நீர் மேகம் வருகிறது, அவர் பாடும் போது அங்கு மழை பொழிகிறது. மழை பெய்வதால் பயிர் செழிக்கிறது, வளம் பெருகிறது, மக்கள் செழிப்பாக வாழ்கிறார்கள்.

ஒரு முறை மக்கள் அவரை அவமானப்படுத்தியதன் காரணமாக வெட்டுக் கிளிப் பாட்டி பாடியபடி நகரம் நோக்கி சென்று விடுகிறார். நகரத்தில் அவரைப் பிடிக்கும் கார்ப்பரேட் ஆசாமிகள் அவரை பாட வைத்து, பொழியும் தண்ணீரை பாட்டில்களில் அடைத்து விற்க ஆரம்பிக்கிறார்கள்.

வெட்டுக்கிளிப் பாட்டி ஓரிடத்தில் அடைபட்டு விட்டதால், நாட்டில் தண்ணீர் பஞசம் தலை விரித்து ஆடுகிறது. ஆனால் பாட்டி இருக்கும் இடமோ கார்ப்பரேட் நிறுவனம். அந்த நிறுவனம் பாட்டியைக் கொடுமைப்படுத்தி அவரது கண்ணீரையும் பாட்டிலில் பிடித்து மக்களுக்கு விற்கின்றது, தண்ணீரின் விலையையும் ஏற்றிக் கொண்டே போகிறது.

பாட்டி தப்பிக்க முனைந்தாலும் முடியவில்லை. பாட்டி அடைத்து வைக்கப்பட்டிருப்பதை அறிந்த மக்கள் ஒன்று திரண்டு பேரணியாக அவரை விடுவிக்க வருகிறார்கள்.

தனியார் நிறுவனமோ அரசு உதவியுடன் போலிசை மக்கள் மீது ஏவுகிறது. இறுதியில் போலீஸ் தோற்கடிக்கப்பட்டு மக்கள் போராட்டம் வெற்றி பெறுகிறது. பாட்டி சுதந்திரமாக பாடிக் கொண்டு வெளியில் நடக்க பெருமழை பெய்து தண்ணீர்  பெருகி சுதந்திரமாக ஓடுகிறது.

இந்தியாவின் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா “இலவசமாக கிடைப்பதால் தான் மக்கள் தண்ணீரை வீணாக்குகிறார்கள். தண்ணீரை தனியார் மூலம் விற்பதன் மூலம் அதைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்கிறார்.

தண்ணீரை வீணாக்குவது சாதாரண மக்கள் அல்ல அவர்களுக்கு அடிப்படைத் தேவைகளுக்குக் கூட போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. ஆடம்பர விடுதிகளிலும், பணக்கார வீடுகளிலும்தான் நீச்சல் குளங்கள், குளிக்கும் தொட்டிகள் என்று தண்ணீரை பெருமளவு வீணடிக்கின்றனர்.

ஆனால், அரசு தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகள் கொடுத்து இயற்கை வளங்களை அளவுக்கதிகமாக பயன்படுத்தவும் வீணாக்கவும் அனுமதிக்கிறது.

சுற்றுச் சூழல் பற்றியும் இயற்கை வளங்களை பாதுகாப்பது பற்றிப் பேசும் தன்னார்வக் குழுக்கள் பெரு நிறுவனங்களிடமே நிதி உதவியும் நன்கொடையும் பெற்றுக் கொள்கின்றன. யாரை எதிர்க்க வேண்டுமோ அவர்களையே புரவலர்களாக கொண்டு செயல்படுகின்றன தன்னார்வ குழுக்கள்.

தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து முறியடிக்கும் போராட்ட வழியை நடைமுறையில் நிரூபித்துக் காட்டிய பொலிவிய மக்களின் அனுபவப் பாடத்தை பதிவு செய்திருக்கிறது இந்தக் குறும்படம்.

முதலாளிகளின் பிடியில் இருக்கும் போது அவர்களது லாப வேட்டைக்காக விஷத்தையும் வக்கிரத்தையும் உமிழும் கலை, மக்கள் கலைஞர்கள் கையில் செய்திகளையும், சுரண்டல்களையும் உண்மையையும் வெளிப்படுத்துகிறது என்பதையும் இந்தக் குறும்படம் நமக்குச் சொல்லுகிறது.

போலீசு அமைப்பையே கலைக்கக் கோரிப் போராடுவோம்!

14

‘‘போலீசாரைச் சுதந்திரமாகச் செயல்படவிட்டால்தான் குற்றங்களைத் தடுக்க முடியும்; சமூக விரோதிகளை ஒடுக்க முடியும்” என்ற பொய் பார்ப்பனக் கும்பலால் மட்டுமின்றி, பத்திரிகைகள், நடுத்தர வர்க்க அறிவுத்துறையினராலும் திட்டமிட்ட முறையில் பொதுமக்கள் மத்தியில் திரும்பத்திரும்ப பரப்பப்படுகிறது.  இது மட்டுமின்றி, “தி.மு.க. ஆட்சியைவிட, அம்மாவின் ஆட்சியில்தான் தமிழக போலீசு, எவ்விதமான அரசியல் தலையீடும் இன்றி, அப்படிச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்படுகிறது” என்றும் இவர்கள் ஜெயாவைக் குற்றங்களைச் சகித்துக் கொள்ளாத இரும்பு மனுஷியாகப் புகழ்ந்து தள்ளிவருகிறார்கள்.

ஆனால், உண்மையோ இவர்கள் சொல்லி வருவதற்கு நேரெதிராகவே உள்ளது.  பார்ப்பன ஜெயா பதவியேற்ற பிறகும் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்துவரும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள், அவர்களே கூறிக்கொள்ளும் சட்டம்  ஒழுங்கைக் காப்பதில் ஜெயா ஆட்சி படுதோல்வியடைந்துவிட்டதையே எடுத்துக்காட்டுகின்றன.  இன்னொருபுறம் ஜெயாவின் ஆட்சியில் சுதந்திரமாகச் செயல்பட்டு வரும் தமிழக போலீசு, இக்குற்றங்களைக் கட்டுப்படுத்தாத அதேசமயம், பொதுமக்கள் தமது நியாயமான கோரிக்கைகளுக்காக நடத்தும் சட்டபூர்வமான போராட்டங்களைக்கூடப் பொறுத்துக் கொள்ளமுடியாமல், வெறிபிடித்த நாயைப் போலப் போராடும் மக்கள் மீது பாய்ந்து குதறிவருகிறது; கொட்டடிக் கொலை  சித்திரவதை, கும்பல் பாலியல் வன்புணர்ச்சி என அனைத்துவிதமான வக்கிரமான அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டும் வருகிறது.

  • பெரியகுளத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுக்குத் தாயான வசந்தி என்ற பெண் கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதியன்று, தான் அடகுவைத்த பொருளை மீட்பதற்காக நரியூத்து என்ற ஊருக்குச் சென்றுவிட்டு, மீண்டும் பெரியகுளம் திரும்புவதற்காக அன்றிரவு எட்டு மணி போல பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டு இருந்தார்.  அப்பொழுது அவர் முன்னால் திடீரென பைக்கில் வந்து நின்ற இரண்டு போலீசார் வசந்தியைச் சந்தேக கேஸில் கடமலைக்குண்டு போலீசு நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்தனர்.
காக்கிச்சட்டையில் ஒரு காமக்கொடூரன்: கடமலைக்குண்டு ப்போஈசு நிலைய ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார்
காக்கிச்சட்டையில் ஒரு காமக்கொடூரன்: கடமலைக்குண்டு ப்போஈசு நிலைய ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார்

அன்றிரவு 11 மணிக்கு அப்போலீசு நிலைய ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார் வசந்தியை நெருங்கி, “கொஞ்சநேரம்தான், நான் சொல்றதைக் கேட்டா, உடனே உன்னை ஊருக்கு அனுப்பி வைக்கிறேன்னு” வக்கிரமாகப் பேசிக்கொண்டே, வசந்தியின் ஆடைகளை அவிழ்த்து, அவரைப் பாலியல் பலாத்காரப்படுத்த முயன்றான்.  வசந்தி அப்போலீசு அதிகாரியின் வக்கிரமான பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காமல் எதிர்த்து நின்று போராடியபொழுது, “ச்சீ நாயே…., ஒழுங்கா அவுத்துட்டுவா, இல்லைன்னா விபசார கேஸ் போட்டு நாளைக்குப் பேப்பர்ல உன்படம் வரும்” என அதிகாரத் திமிரோடு மிரட்டினான். அவனின் அம்மிரட்டலுக்கும் பணியாமல் வசந்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்து போராடவே, வசந்தியைத் தயார் செய்யும் வேலையை டூட்டியில் இருந்த ஒரு போலீசுக்காரனிடம் ஒப்படைத்தான் அப்போலீசு அதிகாரி.

அதிகாரியின் கட்டளையை ஏற்றுக் கொட்டடிக்குள் நுழைந்த காக்கிச் சட்டை அணிந்த மிருகமொன்று, வசந்தியை லத்தியைக் கொண்டு மாறிமாறித் தாக்கி, அவரது ஆடைகளை வலுக்கட்டாயமாகக் களைந்து அம்மணமாக்கி, தனது டூட்டியைச் செய்தது.  அதற்குப் பின் கொட்டடிக்குள் நுழைந்த ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார் வசந்தியின் எதிர்ப்பையும் மீறி, அவரைப் பாலியல் பலாத்காரப்படுத்தினான்.  இதனால் உதிரப் போக்கு அதிகமாகி, வசந்தி தன்னுணர்வு இழந்து மயக்கமடைந்தார்.

வசந்தியைச் சீரழித்த போலீசு அதிகாரி போன பிறகு, காவலுக்கு நின்ற போலீசார், வசந்தியை எழுப்பி, தரையில் ஒழுகித் தேங்கிக் கிடந்த இரத்தத்தை, அவரது சேலையைக் கிழித்துத் துடைக்கச் செய்தனர்.  வசந்தி இரத்தத்தையெல்லாம் துடைத்துவிட்டு, பாத்ரூம் போய்விட்டுத் திரும்பிய பிறகு, அப்போலீசு நிலையச் சிறப்புத் துணை ஆய்வாளர் அமுதனால் மீண்டும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி, மயக்கமடைந்தார்.  தங்களின் வக்கிரமான காமவெறியைத் தீர்த்துக் கொண்ட போலீசு, தமது கைஅரிப்பைத் தீர்த்துக் கொள்ள, அடகுப் பொருளை மீட்பதற்காக வசந்தி வைத்திருந்த 6,700 ரூபாயைத் தெனாவட்டாகத் திருடிக் கொண்டது.

தங்களின் இக்குற்றங்களை மறைத்துக் கொள்வதற்காக, “நரியூத்து பகுதியைச் சேர்ந்த புஷ்பம் என்ற பெண்மணியின் வீட்டிற்குள் புகுந்த வசந்தி, புஷ்பத்தைக் கம்பு, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக் காயம் ஏற்படுத்தி, அவரிடமிருந்து மூணே முக்கால் பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றுவிட்டதாக” வசந்தியின் மீது ஒரு திருட்டுக் குற்றத்தைச் சுமத்தி, அவரைச் சிறையிலும் தள்ளியது, கிரிமினல் போலீசு கும்பல்.  ஒரு மாதம் கழித்துச் சிறையில் இருந்து வெளியே வந்த வசந்தி நடந்த உண்மையை வெளியாட்கள் யாரிடமும் சொல்லிவிடக் கூடாது எனத் தொடர்ந்து போலீசாரால் மிரட்டப்பட்டதால், அவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்று காப்பாற்றப்பட்டார்.

“மேலிடம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் குற்றம் புரிந்த போலீசாரின் பெயர்களை வெளியிடவில்லை” எனக் குறிப்பிட்டு, வசந்திக்கு நேர்ந்த கொடுமைகளை அம்பலப்படுத்தி எழுதியது ஜூனியர் விகடன் (8.7.2012).  ஆனால், அம்மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் பிரவீன் குமார் அபினபு, “திருட்டு வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகவே வசந்தி பொய் சொல்கிறார்” என அறிக்கைவிட்டு கிரிமினல் போலீசாருக்குச் சாதகமாக நடந்துவருவதையடுத்து, ஜூ.வி., வசந்தியைப் பாலியல் பலாத்காரப்படுத்திய இரண்டு போலீசு அதிகாரிகளின் பெயர்களையும் அம்பலப்படுத்தியது; “வசந்திக்கு இழைக்கப்பட்ட இக்கொடுமைகளைப் பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும்; வசந்திக்குப் பாதுகாப்புத் தர நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என தவமணி என்ற வழக்குரைஞரும், மதுரையைச் சேர்ந்த எவிடென்ஸ் என்ற மனித உரிமை அமைப்பும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறது. (ஜூ.வி.25.07.2012)

  • திருட்டு கேஸ் விசாரணை என்ற பெயரில் சென்னை-கானத்தூர் போலீசால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கூலித் தொழிலாளி ஹூமாயூன்
    திருட்டு கேஸ் விசாரணை என்ற பெயரில் சென்னை-கானத்தூர் போலீசால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கூலித் தொழிலாளி ஹூமாயூன்

    சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரைச் சேர்ந்த ஹுமாயூன் என்ற தையல் தொழிலாளியும் அவரது நண்பரும் மற்றொரு கூலித் தொழிலாளியுமான சௌகத் அலியும் நகை திருட்டு வழக்கு தொடர்பாக கானத்தூர் போலீசு நிலையத்திற்கு விசாரணைக்காக ஜூலை 8 அன்று இழுத்துச் செல்லப்பட்டனர்.  திருட்டுப் புகார் கொடுத்தவர்கள் ஹுமாயூன் மீதுதான் சந்தேகம் இருப்பதாகச் சொல்லியிருந்ததால் சௌகத் அலியை விடுவித்துவிட்ட போலீசார், ஹுமாயுனை போலீசு நிலையத்திலேயே சிறை வைத்தனர்.  முதல்நாள் ஹுமாயூனை உயிரோடு பிடித்துச் சென்ற போலீசார், மறுநாள், “ஹுமாயூன் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துத் தற்கொலை செய்து கொண்டதாக” அப்பாவிகளைப் போல அறிக்கை வெளியிட்டனர்.

‘‘ரேஷனிலேயே மண்ணெண்ணெய் கிடைக்காதபொழுது, ஸ்டேஷனில் மண்ணெண்ணெய் எப்படி வந்தது?” என தி.மு.க. தலைவர் மு.க., இக்கொட்டடிக் கொலையை அம்பலப்படுத்தி நையாண்டி செய்து அறிக்கை அளித்தவுடன், “ஸ்டேஷனில் இருந்த போலீசார் ஹுமாயூனைத் தனியாக விட்டுவிட்டு வாகனச் சோதனைக்காகச் சென்றுவிட்டார்கள்; விசாரணைக்குப் பயந்துபோயிருந்த ஹுமாயூன் அந்தச் சமயத்தில் ஸ்டேஷனில் வேறொரு வழக்கு தொடர்பாகப் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார்.  ஹுமாயூனை நாங்கள் யாரும் கொடுமைப்படுத்தவில்லை.  தீ வைத்துக் கொண்ட அவரை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்ற முயன்றோம்” எனக் கதையளந்தது போலீசு.  பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய்க்குப் பக்கத்திலேயே போலீசார் தீப்பெட்டியையும் வைத்துவிட்டுப் போய்விட்டார்கள் போலும்!

  • சென்னைதி.நகர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமாரும், அவரது நண்பர்கள் கார்த்திக் உள்ளிட்ட சிலரும் கூடுவாஞ்சேரிக்குச் சென்றுவிட்டு நள்ளிரவு நேரத்தில் காரில் சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தபொழுது, அவர்களது காரை வாகனச் சோதனைக்காக வண்டலூர் அருகே போலீசார் நிறுத்தினர்.  காரை ஓட்டிவந்த ரஞ்சித்குமாரின் நண்பர் கார்த்திக் காரிலிருந்து இறங்கிய அதேசமயம், வாகன சோதனையை நடத்திவந்த போலீசு இன்ஸ்பெக்டரின் கைத்துப்பாக்கி திடீரென வெடித்து, துப்பாக்கிக் குண்டு காரின் கதவையும் துளைத்துக் கொண்டு சென்று ரஞ்சித்குமாரின் தொடையைத் துளைத்தது.

இன்ஸ்பெக்டரின் கைத்துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்ததா அல்லது காரில் வந்தவர்களிடம் தனது அதிகாரத் திமிரைக் காட்டி, மிரட்டும் நோக்கத்தோடு சுட்டாரா என இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தவில்லை; மாறாக, தமது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, “கூடுவாஞ்சேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் மீது சில ரவுடிகள் தங்களிடமிருந்த பெரிய ஆயுதமான காரை (!) ஏற்றிக் கொல்ல முயற்சி செய்தபொழுது போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக’’ச் செய்தி கொடுத்துத் தங்களது கிரிமினல் குற்றத்தை மூடிமறைத்துவிட்டதோடு, காரை ஓட்டிவந்த கார்த்திகையும் கைது செய்தனர்.

  • திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மறுகால்குறிச்சியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான வானுமாமலை, அவ்வப்போது மணல் அள்ளிவந்து விற்பனை செய்வதும் உண்டு.  மணல் அள்ளும் மாஃபியா கும்பலிடம் இலஞ்சம் வாங்கி வாங்கி அரிப்பெடுத்துப் போன நாங்குநேரி போலீசார் வானுமாமலையிடமும் இலஞ்சம் கேட்டுத் தகராறு செய்தபொழுது, அவர் தர மறுத்துவிட்டார்.  போலீசு இலஞ்சம் கேட்டுத் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த நாங்குநேரி போலீசு ஆய்வாளர் விஜயகுமார், கௌபாய் படங்களில் வருவது போல, வானுமாமலையை அவரது கிராமத்திற்கே தேடிவந்து சுட்டுக்கொன்று தப்பியோடிவிட்டார்.
போலீசு
எருதாட்டத்திற்குத் திடீரென விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, சேலம்-நெய்க்காரன்பட்டி கிராம மக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தின் பொழுது அம்மக்களை வீடு புகுழ்து தாக்க முற்படும் போலீசு

இந்த நான்கு சம்பங்களுமே திருட்டு, பாலியல் வன்முறை, கொட்டடிச் சித்திரவதை  கொலை, சாட்சியங்களை அழித்தல் எனக் கொடிய கிரிமினல் குற்றங்கள் சம்பந்தப்பட்டவை.  ஒரு சாதாரண மனிதன் இக்குற்றங்களைச் செய்திருந்தால் அல்லது அவன் மீது இப்படிப்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தாலே இந்நேரம் அவன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருப்பான்.  ஆனால், இந்நான்கு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட போலீசார் மீது எவ்வித கிரிமினல் வழக்கும் இதுவரை தொடுக்கப்படவில்லை.

போலீசார், தமது சக ஊழியர்களைக் காப்பாற்ற முயலுகிறார்கள் என்பதாக மட்டும் இந்தப் பிரச்சினையைச் சுருக்கிப் பார்த்துவிட முடியாது.  சாமானியனுக்குப் பொருந்தக்கூடிய சட்டத்திற்குத் தான் கட்டுப்பட்டு நடக்க வேண்டியதில்லை என்ற திமிரோடு போலீசு நடந்துவருவதையும்; சட்டத்திற்கு மேலான தனிவகைப்பட்ட சாதியாக இருந்துகொண்டு, சமூகத்தையே அச்சுறுத்தி வருவதையும்தான் இச்சம்பவங்கள் மீண்டும் எடுத்துக் காட்டுகின்றன.

சென்னை கூடுவாஞ்சேரி பகுதியில் நடந்த வாகனச் சோதனையின் பொழுது, போலீசாரின் துப்பாக்கி வெடித்துக் குண்டுக்காயம்பட்டு, சிகிச்சை பெற்றுவரும் ரஞ்சித்குமார்
சென்னை கூடுவாஞ்சேரி பகுதியில் நடந்த வாகனச் சோதனையின் பொழுது, போலீசாரின் துப்பாக்கி வெடித்துக் குண்டுக்காயம்பட்டு, சிகிச்சை பெற்றுவரும் ரஞ்சித்குமார்

மாலை ஆறு மணிக்கு மேல் பெண்களை போலீசு நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லக் கூடாது என்கிறது சட்டம்; ஆனால், கடமலைக்குண்டு போலீசாரோ வசந்தியை இரவு எட்டு மணிக்கு பொதுமக்களின் கண்முன்னாலேயே ஆட்டோவில் இழுத்துப்போட்டுத் தூக்கிச் சென்றுள்ளனர்.  குற்றவாளிகளைக் கண்காணிப்பது என்ற பெயரில் ரோந்து வந்த போலீசார்தான் வசந்தியைத் தூக்கிக் கொண்டுபோய் சீரழித்துள்ளனர்.  இலஞ்சம் தர மறுத்து, போலீசாரோடு மோதியதால் வானுமாமலை போலீசால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.  வாகனச் சோதனையின்பொழுது போலீசின் துப்பாக்கி வெடித்து, ரஞ்சித்குமார் குண்டடிபட்டுக் காயமடைகிறார்.

வாகன சோதனை நடத்தும் இடங்களில், போலீசு கேட்கும் ஆளறிச் சான்றுகள் இல்லாதவர்களைச் சந்தேகக் கேஸில் கைது செய்து, போலீசு நிலையத்திற்கு கூட்டிச் சென்று, அவர்களின் கைவிரல்கள், அங்க அடையாளங்கள், முகவரிகளைப் பதிவு செய்து கொள்ளும் அளவிற்கு போலீசிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதால், இப்பொழுதெல்லாம் இரவு 11 மணிக்கு மேல் சட்டபூர்வ கிரிமினல் கும்பலான போலீசு ராஜ்ஜியம்தான் கொடிகட்டிப் பறக்கிறது.  இது மட்டுமின்றி, சென்னை நகரத்தில் வாடகைக்குக் குடியிருக்கும் ஒவ்வொரு குடும்பமும் போலீசிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற போலீசின் கட்டளை, சிவிலியன்கள் அனைவரையுமே சந்தேக லிஸ்டில் வைத்துக் கண்காணிக்கும் மமதையை போலீசுக்கு வழங்குகிறது.

இவையனைத்தும் போலீசு வழங்கப்பட்டுள்ள ரோந்து சுற்றும் அதிகாரம், ஆயுதம் ஏந்தும் அதிகாரம், போதிய ஆதாரம் எதுவுமின்றியே ஒருவரை விசாரணைக்காகக் கைது செய்யும் அதிகாரம் உள்ளிட்ட பல அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்ற கருத்துக்குத்தான் நம்மை இட்டுச் செல்கிறது.

ஆனால், துக்ளக் சோ போன்ற போலீசின் ஊதுகுழல்கள், “போலி மோதல்கள் நடப்பதெல்லாம் உண்மைதான்; அதன் மூலம்தான் சமூக விரோத சக்திகளை ஒடுக்க முடியும்” என வெளிப்படையாகவே போலீசின் அத்துமீறல்களுக்கும் அதிகாரத்துக்கும் வக்காலத்து வாங்கி வருகின்றனர்.  மனித உரிமை அமைப்புகள் என்ற பெயரில் இயங்கிவரும் குட்டி முதலாளித்துவ அறிவுஜீவிகளோ, “மனித உரிமைகள் பற்றி போலீசாருக்கு வகுப்புகள் எடுப்பதன் மூலம் அவர்களைப் பொதுமக்களின் நண்பனாகத் திருத்திவிட முடியும்” என ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம், “போலீசாருக்கு அதிக ஊதியம் வழங்கி, அதன் மூலம் அவர்கள் வேறு எந்த முறைகேடுகளிலும் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும்.  போலீசாரின் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால், அதன் மூலம் காவல்துறை தனது முழுத்திறனையும் வெளிப்படுத்திச் செயல்பட முடியும்.  இது சமுதாயத்துக்கும் பெரும் நன்மைகளை விளைவிப்பதாக இருக்கும்” எனத் தனது தீர்ப்பொன்றில் குறிப்பிட்டுள்ளது.

போலீசு கேட்ட இலஞ்சத்தை தர மறுத்ததற்காக, நாங்குநேரி போலீசு நிலைய ஆய்வாளர் விஜயகுமாரால் தெருநாயைப்போலச் சுட்டுக் கொல்லப்பட்ட வானுமாமலை
போலீசு கேட்ட இலஞ்சத்தை தர மறுத்ததற்காக, நாங்குநேரி போலீசு நிலைய ஆய்வாளர் விஜயகுமாரால் தெருநாயைப்போலச் சுட்டுக் கொல்லப்பட்ட வானுமாமலை

உயர் நீதிமன்றத்தின் இந்த ஆலோசனையை ஒருவிதத்தில் மூடநம்பிக்கையோடு ஒப்பிடலாம்; இன்னொருவிதத்தில் மோசடித்தனமானது என்றும் குறிப்பிடலாம்.  திருப்பூரில் பொதுமக்களின் சேமிப்பைக் கொள்ளையடித்த பாசி நிதி நிறுவன உரிமையாளர்களை மிரட்டி 3 கோடி ரூபாய் வரை கையூட்டுப் பெற்ற கிரிமினல் வழக்கில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த பிரமோத்குமார்தான் முதன்மைக் குற்றவாளி.  அந்த ஐ.பி.எஸ். அதிகாரியின் சம்பளம் குறைவானதா என்ன?  அரசு ஊழியர்களிலேயே போலீசுதுறைதான் ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளைகளாக இருந்து வருவதோடு, மற்றவர்களைவிட, போலீசாருக்குத்தான் பல்வேறு விதமான சலுகைகள் கொட்டி அழப்படுகின்றன.

இச்சலுகைகள் ஒருபுறமிருக்க, போலீசை சைவப் புலியாகக் காட்டுவதற்கும் அரசு ஏற்கெனவே பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது.  மனித உரிமைகள் தொடர்பாக அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவது தொடங்கி ஒருவரைக் கைது செய்யச் செல்லும்பொழுது என்னென்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பது வரை அவர்களுக்குப் பல வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.  இவற்றையெல்லாம் கீழ்நிலை போலீசுக்காரன் தொடங்கி உயர் போலீசு அதிகாரி வரை யாரும் மயிருக்குச் சமமாகக்கூட மதிப்பதில்லை.  போலீசார் இதனை மீறி நடப்பதை அரசும், ஆளுங்கட்சியும் மட்டுமல்ல, நீதிமன்றமும்கூடக் கண்டு கொள்வதில்லை.

ஒன்றிரண்டு மனித உரிமை மீறல் வழக்குகளில் கிரிமினல் போலீசார் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்றால், அதற்குப் பொதுமக்களின் சமரசமற்ற போராட்டம்தான் காரணமாக இருந்திருக்கிறதேயொழிய, அரசின், நீதிமன்றத்தின் ‘நீதிவழுவாத’ தன்மை காரணமாக இருந்ததேயில்லை.  “தவறு செய்யும் போலீசார் மீது நடவடிக்கை எடுத்தால், போலீசின் தார்மீக பலம் குன்றிவிடும்” எனக் கூறி, போலீசின் கிரிமினல் குற்றங்கள் அனைத்தையும் முடிந்தவரை மூடிமறைத்துவிடவும், கிரிமினல் குற்றம் புரிந்த போலீசாரைக் காப்பாற்றவும்தான் ஆளும் கும்பல் முயலுகிறது.

எனவே, பாலியல் வல்லுறவு, கொட்டடிக் கொலை உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் போலீசாரைத் தண்டிக்கச் சட்டம், நீதிமன்றங்களை நம்புவதைவிட, பொதுமக்கள் தமது சொந்த பலத்தைத்தான் நம்ப வேண்டும்.  போலீசின் அத்துமீறல்களுக்கு எதிராக மட்டுமின்றி, அத்துறைக்கு வழங்கப்படும் மட்டுமீறிய அதிகாரத்தை ரத்து செய்யக் கோரியும் கிளர்ச்சிகளிலும், கலகங்களிலும் இறங்க வேண்டும்; ஜேப்படி திருடர்களின் படங்களை வெளியிட்டுப் பொதுமக்கள் எச்சரிக்கப்படுவது போல, இலஞ்சம், ஊழல், பொறுக்கித்தனம், அத்துமீறல்களில் ஈடுபடும் போலீசாரின் பெயர்களையும் படங்களையும் பகிரங்கமாக வெளியிட்டு, அக்கும்பலை அவமானப்படுத்த வேண்டும்.  பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டால் உடனடியாகத் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தை உருவாக்கி, அக்கும்பலின் அதிகாரக் கொட்டத்தை ஒடுக்க வேண்டும்.

கோவை அவிநாசி சாலையில் வாகனச் சோதனை நடத்திய சமயத்தில் குடிபோதையில் இருந்ததோடு, ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் கருப்பையாவுக்கு பொதுமக்கள் கொடுத்த தர்ம அடி
கோவை அவிநாசி சாலையில் வாகனச் சோதனை நடத்திய சமயத்தில் குடிபோதையில் இருந்ததோடு, ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் கருப்பையாவுக்கு பொதுமக்கள் கொடுத்த தர்ம அடி

போலீசின் அதிகாரங்களையும் தனிஉரிமைகளையும் பறித்து, அதனைப் பல் இல்லாத பாம்பாக ஆக்கிவிட்டால், சட்டம்ஒழுங்கு கெட்டுவிடும் என்ற வாதம் வைக்கப்பட்டு, போலீசுக்கு வக்காலத்து வாங்கப்படுகிறது.  ஆனால், இன்றளவும் நமது நாட்டின் பல்வேறு கிராமங்களில் போலீசு என்ற அமைப்பு இல்லாமலேயே சமூக ஒழுக்கம் பேணப்படுவதையும்; திருட்டு, விபச்சாரம், கள்ளச்சாராயம் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுவரும் ரவுடிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதே போலீசுதான் என்பதையும் மக்கள் தமது சொந்த அனுபவத்திலிந்தே புரிந்து வைத்திருக்கிறார்கள்.  எனவே, அந்த வாதத்தை நாம் ஒரு பொருட்டாக மதிக்க வேண்டியதேயில்லை; போலீசின் வரம்பற்ற அதிகாரங்களை பறிப்பது மட்டுமின்றி, சட்டம் ஒழுங்கைக் காப்பது என்ற பெயரில் மக்கள் அனைவருக்கும் மேலாக, தனிவகை ஜாதியாக இருந்துகொண்டு, மக்களை அடக்கி ஒடுக்கிவரும் போலீசு என்ற அமைப்பே தேவையில்லை என்ற முடிவுக்கும் நாம் வரமுடியும்.

__________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012
__________________________________________________

பட்டுத் தறி… பறி போன கதை!

7

திண்ணையில் உட்கார்ந்து காலை ஆட்டுபவரை கண்டால், ”இங்க ஏம்பா காலை ஆட்டுற, காஞ்சிபுரத்துக்கு போயி காலை ஆட்டினா சோறு கிடைக்கும்” என்பார்கள். காரணம், உழைப்பாளின் உற்பத்திப் பொருட்களின் பளபளப்புக்கு பின்னே இருக்கும், துயரம் தெரிவதில்லை. பட்டு விளம்பரத்தில் வரும் வத்ஸரகலா, சமுத்திரிக்கா என்று ஜொலிக்கும் பட்டின் பின்னாலிருக்கும் சோகம் விடியாத, இருள் போன்றது.  பாவு போல சிக்கலானது. பச்சை பாவுப் போல் நையிந்துப் போனது.

பட்டின் கதையை பட்டுனு சொல்லிவிட முடியாது. இது, பட்டு புழு…. பட்டுபுடவையாகும் நீண்ட…. கதை.

பட்டு புழு, பட்டு இழை,  பட்டு நூல், பட்டு கோறா, பாவு பட்டு, தறிப்பட்டு, தங்கம் வெள்ளியிலிருந்து ஜரிகை. இவை, நெசவுக்கு வெளியே நடக்கும் வேலைகள்.

அடுத்து, நெசவு வேலைகள். இதில் மூன்று நிலைகள். ”நெசவுக்கு முன், நெசவு, நெசவுக்கு பின்”.

நெசவுக்கு முன்; கோறா தலா- எண்ணிக்கை பிரிப்பது,  சாயம் போடுவது, கஞ்சி போடுவது, அச்சுப் பிணைப்பது, பண்ணையில் வாங்குவது, பட்டு இழைப்பது, நான்கு இழைகளாக சோர்ந்து, தார் திரிப்பது – ஜரிகைக்கும் இதே வேலை.

பிறகுதான் நெசவு வேலை; பண்ணையில் வாங்குவது. நெய்யும்போது சரியான இறுக்கத்தில், பாவு கட்டுவது, -எயட்டு கட்டுவது- அச்சு மரம் அடிப்பது, டிசைனுக்கு தகுந்தவாறு பேட்டு குச்சு இழுப்பது, இதில் எதாவது ஒன்று  பிசகினாலும், அனைத்து வேலையும் நாசம். இந்த வேலைகள் ஒருவரால் செய்ய முடியாது.  குடும்பமே உழைக்க வேண்டும். பாவுக்கு கஞ்சிப் போடும்போது, பிற தறிக்காரர்களின் உதவி முக்கியம். இவ்வளவு நுணுக்கமான வேலையினையும், சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும் செய்யும் நெசவாளர்களுக்கு நேரம், காலம் கிடையாது. வாழ்க்கையுடன் தொழிலும் பிணைந்தே இருக்கும்.  குழந்தைகளும் உதவும்.

நெசவாளர்கள் எப்போதும் எளிமையான யதார்த்தமான வாழ்க்கை முறையினை பின்பற்றுவர். சாமி கும்பிடும்போது முதலில் வணங்குவது தறியைதான். அமாவாசை, கிருத்திகையை வீட்டு முருங்கைக்கீரையிலேயே முடித்துவிடுவார்கள். தொழிலுடன் ஒன்றி எளிமையாக வாழும் பட்டு நெசவாளர்களுக்கு கிடைக்கும் கூலியோ சொற்பத்திலும் சொற்பம். இருந்தாலும் பட்டுதான் அவர்கள் சுவாசம்.  குழந்தையைக்கூட ‘பட்டூ’ என்றுதான் வாய் நிறைய  கொஞ்சுவார்கள்.

பட்டு தறி பறிபோகும் நிலை

நெசவாளியிடம், ”உங்கள் குழந்தை என்ன தொழில் செய்ய ஆசைப்படுகிறீர்கள்” என்று கேட்டால்,  ”பட்டு தறியைவிட வேறு எதாவது படிச்சுட்டு செய்யட்டும், இந்த கஷ்டம் என்னோடு போகட்டும்” என்பார்கள். ஆனால், நிலைமை இப்போது அப்படியில்லை.  தறித் தொழிலே எவ்வளவோ ‘மேல்’ என்றாகிவிட்டது. காரணம், வேலை செய்யும் போது யாருடைய ஆணைக்கும் காத்திருக்க தேவையில்லை. வீட்டிலேயே வேலை, சோர்வுற்ற போது ஓய்வு. குழந்தைகளுக்கு, வளரும் போதே தொழிலை கற்றுத் தருவார்கள்.

எனக்கும்  அந்த அனுபவம் உண்டு. 5, 6-ம் வகுப்பு படிக்கும்போதே பக்கத்தில் இருக்கும் வீடுகளுக்கு நானும், என் தோழியும் சாதாவாட்டு, கோர்வை, பிட்னி எடுக்க கூலிக்கு செல்வோம். ஒரு நாளைக்கு ரூ.5 சம்பாதித்து,  நோட்டு, பாக்ஸ், வாட்டர் கேன் வாங்கி பள்ளிக்கு எடுத்துச் சென்றதும்,  பாட்டி நோயுற்றபோது ”காப்பி” வாங்கிக் கொடுத்தது இன்னும் மறக்கவேயில்லை. தறிகார பெண்கள் , கூடவே வீட்டு வேலையும் வாங்குவார்கள், இதனால்,  வீட்டு வேலைகளும் அத்துபடி.  அந்த வேலைகள் எல்லை மீறும்போது பாட்டிகள் அவர்களிடம் சண்டைப் போட்டு மீட்டு வருவார்கள்.

குழந்தைகளைப் போல பெண்களும்  கூலிக்கு செல்வதுண்டு. புடவையின் முந்தானைக்கான கலர் மாற்ற  வேண்டி புது பாவினை இழை, இழையாக அச்சில் ஏற்றுவது – பிட்னி ஏற்றுவது –  குழந்தைகள் பிட்னி எடுத்துக் கொடுக்கும்- பிறகு, முந்தானைக்கான டிசைனை கையினாலயே, பலகை மூலம் பாவுனுள் செலுத்தி தூக்குவது -செல்ப் பாசுவது-. மிகவும் நுட்பமான வேலை, கடினமான வேலையும் கூட. தறிக்குக்கேற்றவாறு உட்கார்ந்து தரையோடு குனிந்து பாச வேண்டும் இவ்வளவு கஷ்டப்பட்டாலும் முறையான கூலி கிடையாது. ஆனால், இந்த வேலை செய்யும்போது ஒரு சந்தோஷம் உண்டு. புடவை முடிவதற்கான கடைசி வேலை.

முக்கியமான பின் நெசவு வேலை

புடவை மடிப்பது.  கண்டிப்பாக இதற்க்கு அனுபவம் வாய்ந்த இருவரின் உதவி தேவை.  குஞ்சம் கட்டி பிசிறு எடுத்து முந்தானை, பார்வையிடம் என்று அனைத்தும் சரியான இடத்தில் மடிக்க வேண்டும். இந்த வேலையை முழுபலத்துடன் இழுத்தவாக்கில் இரண்டுப் பேர் செய்ய வேண்டும்.  நேர்த்தியும், பளப்பளப்பும் இங்குதான் கிடைக்கும். புடவை மின்னும்.

பட்டுக்கு உழைப்பை கொட்டுவது மட்டுமல்ல. தன் வீடு கட்டும்போது கூட  தனக்காக அல்ல, பட்டு தறிக்காகவே வீடு கட்டுவார்கள்.  தறி பொருட்களை  சுத்தமாக, பாதுகாக்க இடம் ஒதுக்குவார்கள். வீடுகட்டியும் படுக்க இடம் இல்லாமல் தறிக்கு அடியிலேயே முடங்கி தூங்குவார்கள். தறி நெய்யும்போது வரும் சத்தம் காது நோகும். நோயுற்றவர்களுக்கு வேதனையாக இருக்கும். இவ்வளவுக்கும், தறி மட்டும்தான் தறிக்காரர்களுக்கு சொந்தம்.  புடவைக்கான பாவு, பட்டு ஜரிகை முதலாளிக்கானது. அற்பமானதுதான் தறிக்காரர்களுக்கு. பட்டு புடவை அல்ல, மீந்த பட்டுஅரைஞாண் கயிறுதான் நெசவாளிக்குழந்தைக்கு.

இன்னமும் 94 ஆம் ஆண்டு  கொடுத்த கூலி ஏறவே இல்லை. தொழில் நுட்ப வளர்ச்சியினால், இயந்திரங்களைக் கொண்டு வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதன் பலனும் முதலாளிக்கே. ஏனெனில், இயந்திரம் முதலாளிக்கு சொந்தம்.

கூட்டுறவு சங்கத்தில் இந்த நடைமுறைகள் வித்தியாசப்படும். ஆனால் நெசவாளர்கள் அனைவரும் அதில் உறுப்பினர்களாக முடியாது.  அதையும் இதே முதலாளிகள்தான் இயக்குகிறார்கள் பினாமி பெயரில்.

தறிக்காரர் வாழ்க்கை

தறிக்குழியில் கால் எட்டும் வரைதான் ஆண்குழந்தைகளுக்கு படிப்பு. பெண் குழந்தைகளுக்கு அதுவும் இல்லை.  இருட்டும் வரை தறியில் இருக்கும் நெசவாளிகள்  டீ குடிக்க காசு தேடுவார்கள். கடைசியில் அன்றைய தினம் விழுந்த ஜரிகை துக்கு, சேட்டுக் கடையில் ரூ.5, 10 ஆக மாறும். அதுதான் டீ,  செலவுக்கு. குழந்தைகளும் அதற்கு காத்திருக்கும்.

தின கூலிக்கு செல்லும் போது பல கஷ்டங்கள். தறியுடன் வீட்டு வேலைகளையும் செய்யணும்.  குழைந்தைகளை ரூபாய்.முண்ணூறு, ஐநூறு மாத சம்பளத்துக்கு விட்டு அதிகபட்சம் ரூபாய் ஐயாயிரம் அட்வானஸ் வாங்குவார்கள்.  சம்பளத்துக்கு போய்ட்டா அடிமைதான். எஜமானர் வீட்டில் வேலையில்லையென்றால், மற்ற வீட்டுக்கு கூலிக்கு சென்று கூலியை பெற்று எஜமானர்களுக்கு கொடுத்து, வீட்டு வேலைகளை முடித்துவிட்டுதான் வரவேண்டும். வேலை காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை. மாதம் அமாவாசை ஒருநாள் மட்டும் தான் லீவு.  சேலை முடியும் தருவாயில் இருந்தால் அதுவும் போச்சு. பொங்கல் பண்டிக்கைக்கு  ஒரு செட்டு துணி உண்டு. இதற்கு மார்கழி முதல் நாளிலிருந்து தை  வரை  அதிகாலை 3.30 லிருந்து இரவு 10.30 மணிவரை நிமிராத வேலை. ஆயுத பூஜையில், தறி சாமானை கழுவி சுத்தமாக்கி பட்டை அடிக்க வேண்டும். கொஞ்சம் பொரியும் துட்டும் இனாமாக கிடைக்கும்.

வயசுக்கு வந்த பெண்களின் நிலைமையோ கொடுமை. வீட்டு குடிகார ஆண்களால் பல தொந்தரவுகள். ஆண்கள், வீட்டில் வேலைக்கு வரும் பெண்கள்  சுறுசுறுப்பா வேலை செய்தால், அவளை இரண்டாவது கல்யாணம் செய்துக் கொள்வதுண்டு. பெண்கள் தங்கள் வீடுகளிலேயே வேலை செய்தால் தப்பித்தார்கள். வயசு பெண்கள் தறி நெய்துதான் கல்யாணத்துக்கு சேர்க்க வேண்டும். கல்யாணமாகிச் சென்றால் அங்கும் தறிதான்.  வீட்டுக்காரன் தன்னை விட்டு ஓடிவிட்டாலும், இறந்துவிட்டாலும்  சொந்த காலில் நிற்பார்கள்.  குழந்தைகள் படிப்பு கனவுதான்.  பெண்கள் நரம்பு புடைப்பு, மூலம்,  மூட்டுவலி, ஆண்கள் விரைவீக்கம் என்று நோயுறுவார்கள். தறிக்குழியில்  கொசு கடித்து யானைக்கால் வந்தாலும்,  அதைப் பெரிசா எடுத்துக்காம நெய்யும் புடவையில் கொசு கரை படிஞ்சா பதறி போயிடுவாங்க.  தறி நெய்ய முடியாத வயதான காலத்திலும் பட்டு, கோறா, கூலிக்கு  இழைப்பது,  சேலைகளுக்கு  தைக்கும் பார்டர் நெய்வது என வாழ்க்கையையே  தறியுடன் முடிப்பார்கள்.

நெசவாளிகளுக்கு மழைகாலம் வேதனைக்காலம்.  குளிரில் குழந்தை அழுதாலும் கவனிக்காமல், தறியின் மீது ஈரக் காற்று படாமலிருக்க  துணிகளையெல்லாம் அதன் மீது போர்த்துவார்கள். மழைப் பெய்த்தால், தறி அச்சுமரம் நகராது. பேட்டு டிசைனும் விழாது, தறி அசையாது. சோறு ஒருவேளை மட்டும்தான்.  நிறைய வீடுகளில் அடுப்பெரிக்கக்கூட விறகு இருக்காது. முடிச்ச சேலையை அறுக்க முடியாது.  சேலை நமுத்து ஒடிஞ்சி போயிடும். விறைப்பா இருக்காது. வெயில் வந்தாதான் சேலையை அறுக்க முடியும்.

ஆயிரம் கஷ்டப்பட்டாலும், தொழில் இருந்தது.  காஞ்சிபுரம் பட்டு என்றாலே  குழந்தைக்கும் தெரியும். காரணம் தலைமுறை தாண்டியும் மின்னும் ஜரிகையின் தரம்.  பலமுறை அணிந்தாலும் கசங்காத, எடைநிறைந்த  பட்டு.   அன்னம், மயில், கலசம், இன்னும் மயக்கும் உருவங்கள். அரக்கு, புவனா, அஜந்தா என்ற கண்ணை பறிக்கும் வண்ணங்கள். புடவையின் ஆயுள்வரை வசிகரிக்கும்.

இப்போது பட்டு தொழில், பட்டு போய்விட்டது. தொழில் பாழாய் போனதற்கு பல காரணம் அதில் ஒரு காரணம்.  பாதிக்கு பாதி இலாபம்  கொழுத்த முதலாளிகள் – புது பணக்கார பொறுக்கிகள் – பட்டு ஜரிகையில் போலியை புகுத்தி பெரும் கொள்ளையடித்தார்கள்.  காஞ்சிபுரம் பட்டு என்றால் கேள்விக்கிடமின்றி,  வாங்கும் நிலை மாறி, போலியால் பட்டு தொழிலே கேலியாகிப் போனது. தரமில்லாத பட்டை மெஷினில் உற்பத்தி செய்து  கொழுத்தனர் முதலாளிகள். இதனால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் நெசவாளிகள். நெசவையொட்டியிருந்த தொழில்களான, வண்ணம் தோய்ப்பது, அச்சு கட்டுதல், பரூட்டம், நாடா சரிபார்ப்பது, பட்டு, கோறா இழைப்பது,  பட்டு, ஜரிகை துக்கு கடைகள், தறிசாமான்கள் செய்யும் ஆசாரிகள், என்று கண்ணுக்கு தெரியாத பல குடும்பங்களும் குலைந்துவிட்டது. 10 ஆண்டுக்களுக்குமுன் 1,00,000 பட்டுதறிகள். இன்று 10,000 க்கும் கீழ் குறைந்து விட்டது.

நெசவாளியின் குடும்பத்தின் வியர்வையால் கொழுத்த முதலாளிகள் ஏ.சி கார்களில் ரியல் எஸ்டேட், டிம்பர் லாரி, வட்டிக் கடை எனப் புதுப்புது தொழிலில் இறங்கிவிட்டனர். ஆனால், நெசவாளிகளோ அந்த சொகுசு கார்களை தயாரிக்கும் பன்னாட்டு கம்பெனிகளில், மெஷின் துடைப்பவர்களாவும், பெருக்குபவர்களாவும்,  காவல்காரர்களாவும் இன்னும் கோரமென்னவென்றால், காஞ்சிபுரத்தில் தறிக் கொட்டகைகள் சாராயபாட்டில்கள் கழுவும் ‘கம்பெனிகளாக’   மாறிவிட்டது. அங்கு பாட்டில் கழுவ பெண்கள் செல்கிறார்கள். ஆண்கள் குடியில், பெண்கள் சாராய பாட்டில் கழுவி குடும்பத்தை காக்கின்றனர்.  தன் குடும்பத்துக்கு கௌரவத்துடன் சோறுப் போட்ட பட்டு தறி, இப்போது அடுப்பெரிக்க பயன்படும் அவலம்.

முன்பெல்லாம் காலையில் குளித்து மஞ்சள் பூசி மங்களகரமாக தொழில், குடும்பம் என்று வீட்டோடு இருந்தவர்கள், இன்று பன்னாட்டு கம்பெனிகளுக்கு  பெருக்கும் வேலைக்கு இரவுபகலாக ஓடுகிறாரகள். 70,100 கி.மி சென்று நடுஇரவு 12 க்கு வீடு திரும்புகிறார்கள். கோலுக்கு ஆடும் குரங்கினைப் போல், தன்  ரூபத்தை மாற்றி தலைமுடிக்கு டை அடித்து சென்றாலும் 35 வயதிற்க்கு மேல் வேலை இல்லை.  துரத்தும் நிலை. பெருக்கி கூட்டும் வேலையும் கனவாகி போன அவலம்.நெசவாளிகள் இடிந்துப் போன நிலையில் இருக்கிறார்கள்.

அரசோ, ஜவுளி பூங்கா என்ற பெயரில் பரம்பரிய காஞ்சிப் பட்டை, பன்னாட்டு  கம்பெனிக்கு  முந்தானை விரிக்கிறது.  பட்டு புடவைகளுக்கு பண்டிகைக் கால தள்ளுப்படியாக அரசு  தரும் மான்யம், சுருங்கிப் போனது.  மலை அளவு விலையால், பட்டு புடவையின் விற்பனையும் தேங்கியது. கையிலே கலைவண்ணம் கண்டவர்கள், ஓட்டுக் கட்சிகளின் பல வண்ணப் பித்தாலாட்டத்தை, பிரித்து அறியமுடியாமல் தவிக்கிறார்கள். படிப்பறிவற்ற பட்டு நெசவாளர்கள் மனக் கணக்கில் வல்லவர்கள். பட்டுபுடவையின்  எடையை  இழை, குளிகை, தார் கணக்கில் நொடியில் சொல்லுவார்கள். இதுபோலவே,  தங்கள் தொழிலை சுறையாடிய எதிரியின் கணக்கை விரைவில் கச்சிதமாக முடிப்பார்கள்.

படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

____________________________________________

-வீரலட்சுமி.
__________________________________________________

இந்தியாவைக் காண வேண்டுமா? சென்னை அரசு மருத்துவமனைக்கு வாருங்கள்!!

31
சென்னை-ஜி-எச்
அரசு பொது மருத்துவமனை, சென்னை

ந்தியா எப்பொழுது வல்லரசு ஆகும்? இந்த கேள்விக்கு பதில்  தெரிந்து கொள்ள வேண்டுமா? அவசியம் சென்னை சென்டரல் அருகில் இருக்கும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பாருங்கள். நிச்சயம் விடை கிடைக்கும்.

நாமும் அந்தக் கேள்விக்கு விடை தேடித்தான் மருத்துவமனைக்கு போனோம்.  வளாகத்தில் நுழைந்தவுடன் செட்டிநாடு மருத்துவமனை விளம்பரத்தில் வருவது போல் யாரும் நம்மை கை கூப்பி வரவேற்கவில்லை. அப்போலோ மருத்துவமனையின் ரிசப்ஷன் போன்று பளபள தரையில் பளிங்கு விநாயகர் சிலை, மணக்கும் பூக்கள் இல்லை.

வளாகத்தைச் சுற்றியும் மக்கள், ஏதோ ஒரு நோய், ஏதோ ஒரு கதையுடன், எதிர்காலம் என்னெவென்ற ஒரு கேள்விக் குறியுடன் மக்கள். முதலில் வெளி நோயாளிகளுக்கான பிரிவில் நுழைந்தோம். மக்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். அழுக்குப் படிந்த கட்டிடம், மக்கள் கூட்டம். அவர்களுக்கு சத்தமாக பதில் சொல்லியபடி இருக்கும் ஊழியர்கள்.

வெளியே மக்கள் ஓய்வெடுக்க உட்காரும் மண்டபத்துக்குள் நோயாளிகளும் உடன் வந்தவர்களும் ஈ மொய்க்க படுத்திருக்கிறார்கள். எங்குமே ஒரு கவிச்சி வாடை, கழிவு பொருட்கள், குப்பைகள் சிதறி விழுந்து கிடக்கின்றன. பக்கத்திலேயே ஒரு கோவில் இருக்கிறது. இந்த மருத்துவமனைக்கு வந்தால் யாருக்குமே கடவுள் நம்பிக்கை வந்துவிடும். கடவுள் நம்பிக்கையும் இல்லை என்றால் நீண்ட நாட்கள் தங்கி சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு தங்கள் சாகிற நாள் தெரிந்து மிச்சம் வாழும் நாள் நரகமாகிவிடும்.

பேசினால் நம்முடன் பேசுவார்களா? நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுவார்களா? என்ற தயக்கத்துடன் பேச தொடங்கினோம். ‘யாராவது நம்முடன் பேசமாட்டார்களா? நம் கவலைகளை பகிர்ந்துக்கொள்ளமாட்டோமா’ அவர்கள் ஏங்கியிருப்பார்கள் போல. நாம் பேச ஆரம்பித்தவுடன் மடமட என பேச ஆரம்பித்து விட்டார்கள்.

கிருஷ்ணகிரியிலிருந்து தங்கள் குழந்தையின் கால் நரம்பு பிரச்ச்னைக்கு சிகிச்சை பெற வந்திருந்தவர்களிடம் பேசினோம். அவர்கள் கட்டிட வேலை செய்கிறவர்கள். கிருஷ்ணகிரியிலிருந்து இரவே கிளம்பி விடியற்காலை 2 மணிக்கு கோயம்பேட்டில் இறங்கி 3 மணிக்கு மருத்துவமனை வந்துவிட்டார்கள்.

“விடியகாத்தாலேயே வந்தோம் அப்பவே எங்களுக்கு முன்னாடி பத்து பேர் லைன்ல நிக்கிறாங்க. காத்தாலேயே வந்தா, டாக்டர பாத்துட்டு பொழுதோட வீடு போய் சேரலாம் இல்லையா?” என்றார்கள்.

“கிருஷ்ணகிரி பக்கத்துல ஆஸ்பெத்திரி இல்லையா?”

“இருக்கு சார், பிரைவேட் ஆஸ்பெத்திரி போனா, காசு கொடுத்து கட்டுப்படி ஆகாது, கெவர்ன்மென்ட் ஆஸ்பெத்திரிக்கு போனா அவங்க சீட்டு எழுதி கொடுத்து இங்க வரச் சொன்னாங்க”

‘இங்க நல்ல தான் சார் பாக்கிறாங்க காசு எதுவும் வாங்கல, எல்லாம் ஃப்ரிதான்’

‘எதற்கும் காசு வாங்கவில்லையா? மாத்திரைகள் எல்லாம் ்ப்ரீயா கொடுக்கிறாங்களா?’

‘மருந்தும் ஃப்ரி தான் சார் சில தவிர, ஒரே ஒரு ஸ்கேன் மாத்திரம் வெளியே எடுக்க சொன்னாங்க 2000 ரூபாய் ஆச்சு’.

‘ஏன் அது இலவசம் இல்லையா’

‘ப்ரைவெட்டுக்கு போயிருந்தா எவ்வளவு செலவாயிருக்கும். டாக்டர் நல்லா பாத்துக்கிட்டாரு, கொழந்தைக்கும் குணமாயிடிச்சி’ என்றபடி விடை பெற்றார்.

வடபழனியில் இருந்து வந்திருந்த ஒரு வயதான பெண்மணியை சந்தித்தோம். அவருக்கு சர்க்கரை வியாதியாம். தொடர்ந்து வருகிராறாம், இலவச மருந்துகள் தான் தருகிறார்கள். ஆனால் ஊசியில் தினமும் போட்டுக் கொள்வதற்கான இன்சுலின் மருந்தை மட்டும் வெளியே வாங்கிக் கொள்ள சொன்னார்கள் என்றார். அவரிடம் இருந்த மருந்துகளை விட இன்சுலின் விலை உயர்ந்தது. அவர் முதலில் ஒரு தனியார் மருத்துவமனையில் தான் பார்த்துக்கொன்டிருக்கிறார், ஆனால் அந்த மருத்துவர் இவர் செலவு செய்ய முடியாதவர் என தெரிந்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு போக சொல்லியிருக்கிறார்.

சர்க்கரை வியாதியுடன் கூடிய ரத்த அழுத்த நோய் என்பது உடலை சிறிது சிறிதாக அழித்து வரும் நோய். அதற்கு சிகிச்சை தனியார் மருத்துவமனை என்றால் தடபுடலாக இருக்கும். மருத்துவரை நன்றாக ‘கவனிக்கும்’ மருந்து கம்பனியின் ரத்த அழுத்தம் குறைக்கும் மருந்தை பரிந்துரைப்பார். தனக்கு வருட சுற்றுலா செலவிற்கு பணம் கொடுக்கும் சர்க்கரை குறைக்கும் மருந்தை கொடுப்பார். இங்கே சில மருந்துகள் அரசே கொடுக்கிறது. முக்கிய மருந்தான இன்சுலினை வெளியே வாங்கிக் கொள்ளச் சொல்லி விட்டார்கள்.

அரசு மருத்துவர்களை குறை சொல்ல முடியாது. மருத்துவர்கள் தங்கக் கொடுத்திருக்கும் அறைகளைப் பார்த்தால், அழுக்கு படிந்த ரத்த வாடை அடிக்கும் மருத்துவமனை வளாகம் எவ்வளவோ மேல். மழை நீர் ஒழுகி கறை படிந்து இன்றோ நாளையோ என்று காத்திருக்கும் சுவர். பராமரிக்கப்படாத படிக்கட்டுகள். மருத்துவர்கள் ஒன்று சேவை மனப் போக்கில் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு வேலை செய்ய வேண்டும, இல்லை என்றால் மனதை கல்லாக்கிக் கொண்டு பணம் சம்பாதித்து வெளியே ஜாலியாக வாழ வேண்டும்.

நடுவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அவர்கள் போராடினால் (போராடுகிறார்களா?) அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். ஏதாவது பிரச்சினை வந்து நோயாளிகள் தாக்கினால் மருத்துவர்கள் ஒன்றுபட்டு எதிர்க்கிறார்களே அன்றி மருத்துவமனை மேம்பாட்டிற்காக போராடுவதில்லை.

மருத்துவமனை வளாகத்தின் பின்பகுதியில் இருந்த கான்டினுக்கு சென்றோம். மரத்தடியில் சிமென்ட் சுவர் மீது உட்கார்ந்திருந்தவர்களிடம் பேச்சு கொடுத்தோம். பக்கத்தில் அமரர் ஊர்திகள் நின்றுக்கொண்டிருந்தன. அழுக்குத் துணி போர்த்தி சூம்பிபோன கால்களை கொண்ட ஒரு அனாதை பிணத்தை எடுத்து சென்றார்கள்.

ஒருவரிடம் பேச்சு கொடுக்க அருகில் இருந்த இரண்டு பேரும் சரளமாக பேச ஆரம்பித்தார்கள். அவர்கள் திருவாரூரை அடுத்த புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், விவசாயக் கூலி செய்பவர்கள். தலையில் அடிபட்டு நரம்பு கோளாறுக்குள்ளான தங்கள் நெருங்கிய சொந்தக் காரரின் மருத்துவ சிகிச்சைக்காக வந்திருக்கிறார்கள்.

அவர் சிறு வயதில் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு நரம்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. கவனிக்காமல் விட்டிருக்கிறார்கள். திருமணமாகி குழந்தைகளும் பிறந்து விட்டன. நாளாக நாளாக உடலில் பல குறைகள், நடக்க முடியவில்லை, கால் வலி என்று படுத்த படுக்கையாகி விட்டிருக்கிறார்.

‘திருவாரூர்ல இதே மாதிரி பெரிய ஆஸ்பெத்திரி கட்டிடம் கலைஞர் பீரியட்ல கட்டிட்டாங்க, இங்க ஒவ்வொரு வகை நோய்க்கும் டாக்டரு இருக்கிறாங்க ஆனா அங்க இவ்வளவு டாக்டரு இல்ல. நரம்பு சிகிச்சைக்கு வெளியேதான் பார்த்துக்கணும்னு சொல்லிட்டாங்க’

‘தனியார் ஆஸ்பத்திரிக்கு போனா இருக்குற கோமணத்தையும் வித்தா கூட நோவு குணமாகுமா தெரியாது அதனால, தஞ்சாவூரில இருந்து திருவாரூர் வந்து வாரம் ஒரு முறை நோயாளிகளை பார்க்கிற டாக்டரைப் பார்த்தோம், ஒவ்வொரு முறைக்கும் 100 ரூபாய் பீசு. அவரு தஞ்சாவூரு போய் ஸ்கேன் எடுத்துட்டு வரச் சொன்னார். வழக்கமாக 5,000 ரூபாய் ஆகுமாம், இவர் சொன்னதால 3,000 ரூபாய்க்கு முடிஞ்சது’

நோயாளி படுத்திருக்கும் படுக்கையிலிருந்து ஸ்ட்ரெச்சரில் எடுத்துக் கொண்டு போய் ஆம்புலன்சில் ஏற்றி, ஸ்கேன் மையத்திற்கு கொண்டு போய், திரும்ப வந்து சேரும் ‘ஆடம்பரம்’ இவர்களுக்கு இல்லை.

நோயாளியை கைத்தாங்கலாக ஆட்டோவில் ஏற்றி ரயில் நிலையம் அழைத்துச் சென்று, ரயிலில் ஏற்றி, தஞ்சாவூரில் இறங்கிய பிறகு மீண்டும் ஒரு ஆட்டோவில் ஸ்கேன் மையம் போய் ஸ்கேன் எடுத்து விட்டு ஆட்டோ, ரயில், ஆட்டோ என்று வீடு கொண்டு வந்திருக்கிறார்கள்.

‘ஸ்கேனைப் பார்த்த டாக்டர் ஆப்பரேசன் செய்யச் சொல்லிட்டாரு, தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு போகலாம்’ தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் ஆபரேஷன் செய்து கொண்ட இரண்டு பேர் இறந்துவிட்டார்களாம். ‘இறந்தால் பரவயில்லை சார் ஆனால் பொறுப்பா ஒருத்தரு கூட பதில் சொல்றது இல்லை. நரக வேதனையா பொயிடுது’

அதனால் சென்னையில் வேலை பார்க்கும் இன்னொரு உறவினர் மூலமாக சென்னை கொண்டு வந்திருக்கிறார்கள். கூட வந்தவர்களுக்கு இரவு படுக்கையெல்லாம் வெளியே ரோடு, ப்ளாட்பாரத்தில் தான். குளியல் அரசு மருத்துவமனை கழிப்பறையில். உணவு ப்ளாட்பார கடையில். அதுவே காசு அதிகமாகிவிடுகிறது என இரண்டு வேளைதான்  சாப்பிடுகிறார்கள். மெனுகார்ட் பார்த்து ஆர்டர் செய்து சாப்பிடுபவர்களுக்கு ப்ளாட்பார கடையில் விலை கேட்டு கேட்டு சாப்பிடும் அவலம் புரியாது.

இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வராமல் விவசாய வேலை இல்லை. வயலெல்லாம் பிளாட் போட்டு விற்பதில் கட்டிட வேலை கிடைக்கிறது. அங்கு போனால் வேலை சிரமம். 100 நாள் வேலைத் திட்டத்துக்குப் போகலாம். 133 ரூபாய் குறைந்த பட்ச கூலி என்று அரசாங்கம் அறிவித்து விட்ட போதும், இவர்களுக்கு கிடைப்பது கமிஷன் போக 80 முதல் 90 ரூபாய் மட்டும்தான். அதுவும் ஒரு வாரத்துக்குப் பிறகுதான் கொடுக்கிறார்கள்.

’90 ரூபா சம்பாதிச்சா எப்படி பொழைக்கிறது, அரிசி கிலோ 37 ரூபாய்க்கு விக்குது. நாங்க நெல்லை 10 ரூபா ஐம்பது காசுக்கு கொடுக்கிறோம். அதை அரிசியாக்கினா 400 கிராம் தேறும். அதுக்கு வெலை 25 ரூபாதான் வரணும். ஆனா நல்ல அரிசி 45 ரூபாய்க்கு விக்குது’

‘ரேஷன் அரிசியை வாங்கி மனுசன் சாப்பிட முடியாது, தஞ்சாவூரில் நாங்க விளைத்து கொடுக்கிற சன்ன ரக அரிசி எல்லாம் தனியார் வியாபாரிகளுக்கு போய் விடுகிறது. எங்களுக்கு மோட்டா அரிசிதான் போடுகிறார்கள்’

’நாம் சோற்றில் கை வைக்க விவசாயி சேற்றில் கால் வைக்க வேண்டும்’ஆனால் உண்மை நிலமை நாம் பிட்சாவில் கை வைக்க விவசாயி புதை சேற்றில் கால் வைத்து புதைந்துவிடுகிறான். இப்படி வாழ்க்கையில் புதைந்துக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு மருத்துவ சிகிச்சை ஒரு கேடா?

இவர்களிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து, நம்முடன் பேச முனைகிறார் ஒரு வயதானவர். அவரிடம் பேசினோம். இவர் வேலூர் அருகில் இருக்கும் திருப்பத்தூரை சார்ந்தவர். தன் மகனுக்கு சிகிச்சை எடுக்க வந்திருக்கிறார். கூலி விவசாயியா? கூலித் தொழிலாளியா? என்று வரையறுத்து அவரால் கூற முடியவில்லை.

”விவசாய வேலைக்கு கூப்பிட்டா போவேன், எல்லா நாளும் கெடைக்காதில்ல, அப்பயெல்லாம் ஏதாவது கூலி வேலைக்கு போவேன். மூட்டை கூட தூக்குவேன்”என்றார். மகனுக்கு விபத்தில் சிக்கி ஒரு பக்கம் உடல் செயலற்று போயிருக்கிறது. எல்லோரும் சொன்னார்கள் என்று கும்பகோணத்தில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போய் சிகிச்சை பார்த்ததில் சொந்தமாக இருந்த நிலத்தை விற்ற மூன்று லட்ச ரூபாய் செலவாகி விட்டிருக்கிறது.

அதன் பிறகு இப்போது இங்கு எடுத்து வந்திருக்கிறார்கள்.

”மூணு நாளா இங்கியே விழுந்து கிடக்கிறேன். பொண்டாட்டி நகை வச்சி கொண்டுவந்த காசு தீந்து போச்சு. இப்ப டாக்டரு ஸ்கான் ஒண்னு எடுக்கணும், வெளியே எடுத்தா 5,000 ஆகும், நான் சொல்லுற இடத்துல எடுத்தா 3,000 தான்னு சொன்னாரு. என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டிருக்கேன்” என்றார்.

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முகத்தில் கேள்வியுடன் ஒரு நிச்சயமற்றத் தன்மையுடன்  அவர் அரசு மருத்துமனையை சுற்றி சுற்றி வருகிறார். ‘ஏதாவது வழி கிடைத்து விடாதா, யாராவது வழி காட்டி விட மாட்டார்களா’ என்ற தவிப்பு முகத்தில்.

அவருக்கு நியாய விலையில் உணவு கொடுக்க விரும்பாத அரசு, அவருக்கு வேலைக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாத சமூகம், அவரை இப்படி உதிரி பாட்டாளியாய் அலையவிட்ட இந்த அரசு  எப்படி அவருக்கு நல்ல மருத்துவ சிகிச்சை மாத்திரம் அளித்துவிடும் என்பதை அவருக்கு எப்படி புரிய வைக்க?

அரசு மருத்துமனை முழுவதும் அனைவரிடமும் ஒரு சோகமும், நிச்சயமற்றத்தன்மையும் காண முடிகிறது. ‘இலவசமாக கிடைக்கிறது, கிடைப்பதை நன்றியுணர்வுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்ற எண்ணம்தான் இருக்கிறது. மருத்துவ வசதிகள் தமது அடிப்படை உரிமை அவற்றுக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் சுத்தமாக இல்லை.

‘நல்ல மருத்துவ சேவை எப்படி இருக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் தேவையான மருத்துவ சேவை எப்படி கொடுக்க வேண்டும்’ இதெல்லாம் அரசுக்கு கவலையளிக்கும் விசயமல்ல. மருத்துவத்துறையை தனியார்மயமாக்கிவிட்டொம். பணம் இருப்பவர்களுக்கு தரமான சிகிச்சை என்ற மாயை. பணம் இல்லாதவர்களுக்கு அந்த மாயையும் இல்லை.

4 வருடங்களுக்கு முன்பு நண்பன் ஒருவனுக்கு காலில் அடிபட்டுவிட்டது. லேசான காயம் தான். அப்பலோ மருத்துவமனையில் ஒரு மைனர் ஆபரேஷன். அவன் உயர் மத்தியவர்க்க குடும்பத்தைச் சார்ந்தவன். நான் தான் அன்று அவனுடன் இருந்தேன். காலை 8 மணிக்கு சென்று ஒரு அறையில் அட்மிட் ஆக சொன்னார்கள். இவன் டிலக்ஸ் அறை ஒன்றை புக் செய்தான் அப்பொழுதே நாள் வாடகை 3,000 ரூபாய் என்று நினைக்கிறேன்.

அந்த அறை குளிரூட்டப்பட்ட அறை, அழகிய டிவி, அட்டாச்சட் பாத்ரூம் இருந்தது. உணவுக் கட்டுப்பாடு பெரிதாக இல்லை என்பதால் இருவரும் தின்பண்டங்களை கொரித்தப்படி டீவி பார்த்தோம். அன்பாக பேசும் உதவியாளர்கள். மத்தியானம் ஒரு ஸ்டெரச்சரில் அழைத்துக்கொண்டு போய், 1 மணிநேரத்தில் அனுப்பிவிட்டார்கள். மாலை டிஸ்சார்ஜ் ஆகலாம் என சொல்லிவிட்டார்கள். அறையில் பினாயில் வாசனை கூட இல்லை. அவ்வளவு சுத்தம்.

புறப்படும் நேரம் வந்த போது, என் நண்பன் ‘இருடா அறைக்கு இன்னும் நேரமிருக்கு ஜாலியா இன்னும் கொஞ்ச நேரம் டீவி பார்க்கலாம்’ என்றான்.

நான் இதை நினைத்தப்படியே அரசு மருத்துவமனையை பார்த்து கொண்டிருந்தேன். எல்லா வகையிலும் வஞ்சிக்கப்படும் உழைக்கும் மக்களுக்கு மருத்துவ வசதி கூட ஒரு தர்மம் போல பிச்சையாகத்தான் போடப்படுகிறது.

சிறு நீர் கழிக்க வேண்டும் என்று கழிவறை தேடினோம். கட்டண கழிவறை. வெளியே 2 ரூபாய் கட்டும் இடத்தில் குளியல் சோப்பு, ஷாம்பூ, துணி துவைக்கும் சோப்பு, என்ணேய் எல்லாம் விற்பனைக்கு இருந்தது. காசு வாங்கும் இடத்தில் அமர்ந்திருந்தவர், கழிவறைக்கு வந்த ஒரு பெண்மணியிடம் சண்டை போட்டபடி இருந்தார். அந்த பெண்மணி சரியாக பணம் கொடுப்பதில்லை போலும், சிறுநீர் என்று சொல்லிவ்ட்டு 2 ரூபாய் கொடுத்துவிட்டு கழிவறைக்கு சென்றுவிடுவாராம் இது தான் சண்டையின் சாரம்.

ஒருவர் ஒரு நாளைக்கு 2 முறை சிறு நீர் கழிப்பார் என்றால், சர்க்கரை வியாதிக்காரருக்கு 4 அல்லது5 முறை ஆகிவிடும். அத்தனை முறை 2 ரூபாய், கழிவறைக்கு 5 ரூபாய் குளிக்க 10 ரூபாய் என்று போனால் ஒரு நாளைக்கு இதற்கு மாத்திரம் 20 ரூபாய் செலவாகிவிடும். 10 ரூபாய்க்கு சாப்பிட்டு 20 ரூபாய்க்கு கழித்து, இதற்கெல்லாம் பணத்திற்கு எங்கே போவது!

கழிவறையோ இன்னும் மோசம். அங்கே சென்றால் இல்லாத நோய்கள் நம்மை தாக்க்கும். இதில் அங்கேயே துணியும் துவைத்துக் கொள்ளலாமாம். ஒரு செட் துணிக்கு 10 ரூபாய் தான். சிறுநீர் கழிக்கக் கூட பொய் சொல்லி ஏமாற்ற வேண்டிய நிலையில் தான் அரசு மருத்துமனைகள் உள்ளன.

ஒருவரின் உயிர் வாழும் உரிமை கூட அவரிடம் இருக்கும் பணத்தை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. மாரடைப்பு வந்து விட்டால் பணம் இல்லாத ஏழைகள் உயிரை விட்டு விட வேண்டியதுதான். ஓரிரு லட்ச ரூபாய்கள் வைத்திருப்பவருக்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்ட் செய்து சரி செய்ய முயற்சிக்கலாம். அதிலும் தேறவில்லை என்றால் பல லட்சங்கள் செலவழிக்க முடிய வேண்டும், ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை நடத்துவதற்கு. அதற்கு அடுத்த கட்டமாக சில கோடி ரூபாய்கள் செலவழித்து வெளிநாடுகளுக்கு அழைத்து போகலாம். வசதி இல்லாதவர்களுக்கு உயிர் வாழும் வாய்ப்பு இல்லை, சிம்பிள்!

சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் எல்லாம் எங்கு இருக்கின்றன? வல்லரசாவதற்கு இவை எல்லாம் தேவை இல்லை போலிருக்கிறது!

______________________________________________

– வினவு செய்தியாளர்.

_______________________________________________

மக்கள் நல அரசு: தோற்றமும் மறைவும் – வரலாற்றுப் பின்புலம்!

1
மக்கள்-நல-அரசு

ல்வி, சுகாதாரம், உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு அவை அனைத்தையும் தனியார் கொள்ளைக்குத் திறந்துவிடுகிறது அரசு. இந்தியாவில் மட்டுமின்றி, மேற்கத்திய நாடுகளிலும்கூட இதுதான் நடக்கிறது. ஏற்கெனவே பெற்றிருந்த சலுகைகளை இழந்து, வாழ்க்கைத் தரத்தில் மென்மேலும் கீழே தள்ளப்படும் மக்கள் இந்நாடுகளிலெல்லாம் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று மக்கள் நலத்திட்டங்களை மறுக்கின்ற அமெரிக்க  ஐரோப்பிய அரசுகள், அன்று சோசலிச நாடுகளில் அமல்படுத்தப்பட்ட மக்கள்நலத் திட்டங்களால் அச்சுறுத்தப்பட்ட காரணத்தினால்தான், தமது நாடுகளில் மக்கள்நலத் திட்டங்களை அமல்படுத்தினர் என்பதை விளக்குகிறார் அமெரிக்க இடது சாரி சிந்தனையாளரான ஜேம்ஸ் பெட்ராஸ்.

‘ஸ்டாலினிய எதிர்ப்பு’ பேசிய மேற்குலக அறிவுத்துறையினர் முதலாளித்துவத்தின் கைக்கருவிகளாகச் செயல்பட்டு, தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கும், முதலாளித்துவத்தின் கொடூர ஆட்சி அரங்கேறுவதற்குமே துணை நின்றிருக்கின்றனர் என்று சாடுகிறார். அவரது கட்டுரையின் சாரத்தை மட்டும் இங்கே தொகுத்து தருகிறோம். முழு கட்டுரையின் ஆங்கில வடிவம் அவரது இணைய தளத்தில் கிடைக்கிறது.

முதலாளித்துவம் பக்குவமடைந்து மென்மேலும் முன்னேறும்போது, உயர் தொழில்நுட்பங்களும் முன்னேறிய சேவைகளும் வளரும்போது, மக்கள் நலனும் அவர்களது வாழ்க்கைத் தரமும் மேம்படும் என்று மரபுவழிப்பட்ட முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்கள் கூறுவார்கள். நாம் தற்போது காண்கின்ற மக்கள் நல அரசின் அழிவு, அவர்களது கருத்தைத் தகர்த்து விட்டது. கணக்கு வைத்துக் கொள்வது, உற்பத்தி மற்றும் நிர்வாகச் செலவுகளைக் கட்டுப்படுத்துவது, அதிகபட்ச இலாபத்தைத் தேடிப்பாயும் ஊக வணிகத்தின் வேகத்தை அதிகப்படுத்துவது ஆகியவற்றுக்கும், சமூகநலத் திட்டங்களுக்கான செலவுகளை இரக்கமின்றி வெட்டுவதற்கும்தான் பொருளாதாரத்தின் கணினிமயமாக்கம் என்ற தொழில்நுட்ப முன்னேற்றம் பயன்பட்டிருக்கிறது.

பின்னோக்கிய பாய்ச்சல் துவங்கியது எப்படி?

‘மக்கள்நல அரசு’ என்ற கருத்தாக்கத்தின் மரணம், மக்களுடைய வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஆகியவற்றுக்கான பின்புலத்தைப் புரிந்து கொள்ள நாம் இரண்டு கோணங்களில் ஆராய வேண்டியிருக்கிறது. முதலாவது, சர்வதேச நிலைமைகளில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்கள் பற்றியது  ஒருபுறம் கிழக்கத்திய முகாமின் மக்கள்நல அரசுகள், இன்னொருபுறம் ஐரோப்பிய முதலாளித்துவ அரசுகள் மற்றும் அமெரிக்கா என்ற இரட்டைத் துருவப் போட்டி நிலையிலிருந்து, தமக்குள் போட்டியிட்டுக் கொண்டிருக்கும் முதலாளித்துவ நாடுகள் செலுத்துகின்ற ஏகபோக ஆதிக்கத்திற்கு வந்திருக்கிறோம்.

இரண்டாவதாக நாம் பரிசீலிக்க வேண்டிய விசயம், முதலாளித்துவ நாடுகளுக்குள்ளேயே நிலவும் சமூக உறவுகள் பற்றியது. தீவிர வர்க்கப்போராட்டம் என்பதிலிருந்து நீண்டகால நோக்கிலான வர்க்க சமரசம் என்பது அங்கே மூலதனத்துக்கும் உழைப்புக்குமான உறவைத் தீர்மானிப்பதாக ஆகியிருப்பது. இவ்விரண்டு போக்குகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.

மேற்கத்திய மக்கள்நல அரசின் தோற்றமும் வளர்ச்சியும்:

நாஜி ஜெர்மனியின் தோல்வியையும் முதலாளித்துவ பாசிச ஆட்சிகளின் தோல்வியையும் தொடர்ந்து, சோவியத் யூனியனும் அதன் கிழக்கு ஐரோப்பிய கூட்டாளி நாடுகளும் பிரம்மாண்டமான மறுகட்டுமானப் பணிகளில் இறங்கின. சமூகப் பொருளாதார நலனை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்களே இந்த மறுகட்டுமானப் பணிகளின் அடிப்படையாக இருந்தன. இதைப் பார்க்கின்ற மேற்கு நாடுகளின் தொழிலாளி வர்க்கம், சோவியத் முன்மாதிரியைப் பின்பற்ற (புரட்சி – மொர்) விரும்பக் கூடும் அல்லது குறைந்தபட்சம் தனது நாட்டில் முதலாளித்துவம் மீண்டு எழுவதைத் தடுக்கின்ற கட்சிகளையும், அத்தகைய நடவடிக்கைகளையும் ஆதரிக்கக்கூடும் என்று மேற்குலக முதலாளித்துவ அரசுகள் பெரிதும் அஞ்சின.

மேற்குலக முதலாளி வர்க்கம் நாஜிகளுடன் வைத்திருந்த கூட்டின் காரணமாகவும், பாசிசத் தன்மை கொண்ட முதலாளித்துவத்திற்கு அவர்கள் காட்டிய எதிர்ப்பு பெயரளவினதாகவும், மிகவும் தாமதமாக காட்டிய எதிர்ப்பாகவும் இருந்த காரணத்தினால், மேற்கத்திய முதலாளித்துவ அரசுகள் அரசியல் ரீதியில் மக்கள் மத்தியில் மதிப்பிழந்திருந்தன. இதன் காரணமாக மக்கள் மீது அவர்களால் அடக்குமுறைகளை ஏவமுடியவில்லை.

எனவே, சோவியத்தின் கூட்டுத்துவ மக்கள் நலச் சீர்திருத்தங்களை எதிர்கொள்வதற்கு அவர்கள் ஒரு உத்தியைக் கையாண்டார்கள். உள்நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகள் மற்றும் தீவிர இடதுசாரிகளை மட்டும் ஒடுக்குவது; மக்கள்நலத் திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் சமூக ஜனநாயகக் கட்சிகள், தொழிற்சங்கங்களின் விசுவாசத்தை விலைக்கு வாங்குவது.  இதுதான் அவர்கள் வகுத்த தந்திரம்.

அனைவருக்கும் வேலை, வேலை உத்திரவாதம், அனைவருக்கும் மருத்துவம், இலவச உயர்கல்வி,  சம்பளத்துடன் கூடிய ஒரு மாதச் சுற்றுலா விடுப்பு, முழுச் சம்பள ஓய்வூதியம், தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச ஓய்வு விடுதிகள், பெண்களுக்கு நீண்ட பேறு கால விடுப்பு  என சோவியத் முகாமின் அரசுகள், தனிநபர் நுகர்வைக் காட்டிலும் சமூகநலத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்தன.

இதனால் சோவியத் முகாமின் மக்கள்நல நடவடிக்கைகளைத் தானும் அமல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு முதலாளித்துவ மேற்குலம் ஆளாக்கப்பட்டது. அதேநேரத்தில், முன்னேறிய தனது பொருளாதாரத்தின் வலிமையைக் கொண்டு, குறைந்த வட்டிக்குக் கடன் கொடுத்தும் தவணை முறைகள் மூலமும் தனிநபர் நுகர்வுப் பண்பாட்டை விரிவுபடுத்தியது.

1940களின் மத்தியிலிருந்து 1970களின் நடுப்பகுதி வரையிலான காலத்தில் மேற்குலகம் இரண்டு இலக்குகளைக் குறிவைத்து சோவியத் முகாமுடன் போட்டியிட்டது. உள்நாட்டில் தொழிலாளி வர்க்கத்தின் விசுவாசத்தைப் பாதுகாத்துக் கொள்கின்ற அதேநேரத்தில், அதன் போர்க்குணமிக்க பிரிவைத் தனிமைப்படுத்துவது; சோவியத்தைப் போன்ற மக்கள்நலத் திட்டங்கள் மட்டுமின்றி, மேலதிகமான தனிநபர் நுகர்வுக்கும் மேற்குலகில் வாய்ப்புண்டு என்று ஆசை காட்டி, கிழக்குலகின் (சோவியத் முகாம்) தொழிலாளி வர்க்கத்தைக் கவர்ந்திழுப்பது  இவையே அந்த இரு இலக்குகள்.

இந்தப்புறம் கூட்டுத்துவம் (ரசிய,கிழக்கு ஐரோப்பிய நாடுகள்), அந்தப்புறம் முதலாளித்துவம் (அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள்) என்று இந்த இரு பிரிவுகளுக்கும் இடையே நிலவிய போட்டியின் காரணமாக, மக்கள்நலத் திட்டங்களைத் திரும்பப் பெறுவதென்ற பேச்சுக்கே இடமில்லாமலிருந்தது. இருப்பினும், அறுபதுகளிலும் எழுபதுகளிலும் நடைபெற்ற மக்கள் எழுச்சிகள் தோல்வியடைந்தன. மக்கள் நலத் திட்டங்கள் அதிகரிக்காமல் தேங்குவதற்கு இது காரணமானது.

மிகவும் முக்கியமாக மேற்குலகிலும் சரி, கிழக்குலகிலும் (போலி சோசலிச நாடுகள் – மொர்) சரி, ஆளும் வர்க்கங்களுக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையிலான உறவு ஒரு தேக்கநிலை அல்லது முட்டுச்சந்தை எட்டிவிட்டது. பொருளாதாரத் தேக்கம் வந்தது. தொழிற்சங்கங்கள் அதிகாரவர்க்கமயமாகியிருந்தன. மக்கள்நல அரசு என்ற கருத்தாக்கத்தையே நிர்மூலமாக்கவும், கூட்டுத்துவ (போலி சோசலிச) முகாமுக்குச் சவால் விடவும் ஆற்றல் படைத்த ஒரு புதிய அரசியல் தலைமை வேண்டுமென்ற கோரிக்கையை முதலாளித்துவ வர்க்கங்கள் எழுப்பத் தொடங்கின.

பின்னோக்கிய பயணம்: ரீகன், தாட்சர் முதல் கோர்ப்பசேவ் வரை:

மக்கள்-நல-அரசுகூட்டுத்துவ முகாமின் (போலி சோசலிச நாடுகள் – மொர்) மக்களை ஒரு மிகப்பெரிய மாயை பற்றியிருந்தது. தாங்கள் நீண்டகாலமாக அனுபவித்து வருகின்ற, அசைக்க முடியாத, மக்கள்நலத் திட்டங்களுடன், மேற்குலகம் ஆசைகாட்டுகின்ற மாபெரும் நுகர்வியத்தையும் இணைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் நம்பத் தொடங்கினார்கள். ஆனால், மேற்குலகிலிருந்து வந்த அரசியல் சமிக்ஞைகளோ இந்த நம்பிக்கைக்கு எதிர்த்திசையில் நகர்ந்து கொண்டிருந்தன.

அமெரிக்காவில் ரீகனும், பிரிட்டனில் தாட்சரும் அதிகாரத்துக்கு வந்துவிடவே, சமூக இயக்கத்தின் திசையைத் தீர்மானிக்கும் சுக்கான் முதலாளி வர்க்கத்தின் முழுக்கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது. தொழிற்சங்கங்களின் போர்க்குணம் ஒடுக்கப்பட்டது. ஆயுதப் போட்டியில் சோவியத் யூனியனை இழுத்து விட்டு, அதனைத் திவாலாக்கும் திட்டம் தொடங்கியது.

அதேநேரத்தில் கிழக்குலகிலேயே மேல்தட்டு வர்க்கமாக வளர்ந்து கொண்டிருந்தவர்கள், படித்த மேன்மக்கள், அதிகாரவர்க்கப் பெருச்சாளிகள், புதிய தாராளவாதிகள், மொத்தத்தில் மேற்கத்திய விழுமியங்களைப் போற்றிய பிரிவினர் அனைவரும் மக்கள்நலத் திட்டங்களைத் தூற்றத் தொடங்கினார்கள். இவர்களுக்குத் தேவையான அரசியல், பொருளாதார ரீதியிலான ஆதரவை மேற்கத்திய உளவு நிறுவனங்களும், அறக்கட்டளைகளும், வாடிகனும் வழங்கினர். இதற்குத் தேவைப்பட்ட ஒரு சித்தாந்த ரீதியான மேற்பூச்சினை, ‘ஸ்டாலினிய எதிர்ப்பு இடதுசாரிகள்’  என்று தம்மை அழைத்துக் கொண்ட நபர்கள் மேற்குலகில் வழங்கினர்.

சோவியத் முகாமின் மக்கள்நலத் திட்டங்கள் அனைத்தும் மேலிருந்து அமல்படுத்தப்பட்டவை. அவற்றின் மீது அதே நாட்டைச் சேர்ந்த அதிகாரவர்க்கப் பெருச்சாளிகள், கொள்ளையர்கள், பாதிரிகள், புதிய தாராளவாதிகள் அடங்கிய ‘ஸ்டாலினிய எதிர்ப்பு முகாம்’ தாக்குதல் தொடுத்தபோது, தம் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளும் அரசியல் பார்வையும், வர்க்க உணர்வும், வல்லமையும் கொண்ட போர்க்குணமிக்க வர்க்க அமைப்புகள் எதுவும் அந்நாடுகளில் இல்லை.

அதேபோல, மேற்குலகின் சமூகநலத் திட்டங்கள் எல்லாம், ஐரோப்பிய சமூக ஜனநாயக கட்சிகள் மற்றும் அமெரிக்க ஜனநாயகக் கட்சியுடன் அரசியல் ரீதியில் பிணைக்கப்பட்டிருந்தன. இக்கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கத் தலைமைகளுக்கு வர்க்க உணர்வோ, வர்க்கப் போராட்டத்தில் ஈடுபாடோ கிடையாது. அவை சந்தா வசூலித்துத் தின்னும் அதிகார வர்க்கத் தலைமைகளாகவே இருந்தன.

மக்கள்-நல-அரசுசோவியத் ஒன்றியம் உடைந்தது. கோர்ப்பசேவ் வார்சா ஒப்பந்த நாடுகளை நேட்டோவின் கையில் ஒப்படைத்தார். இந்நாடுகளிலிருந்த கம்யூனிஸ்டு அதிகாரவர்க்கம் புதிய தாராளவாதிகளாகவும், மேற்குலக கையாட்களாகவும் புதுப்பிறவி எடுத்து, பொதுச்சொத்துகளைத் தனியார்மயமாக்கியதுடன் தொழிலாளர் உரிமைகள் மீது தாக்குதல் தொடுத்தது. போலந்தின் சாலிடாரிட்டி இயக்கத்துக்குப் பின்பலமாக இருந்த கப்பல்கட்டும் துறைத் தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள். மேற்கத்திய உளவுத்துறையின் சன்மானங்களால் உருவாக்கப்பட்ட அவர்களது தலைவர்கள் (லெக் வாலேசா போன்றோர்) வசதியான அரசியல்வாதிகளாயினர், முதலாளிகளாயினர்.

‘ஸ்டாலினிசத்தை ஒப்பிடும்போது வேறு எதுவானாலும் தேவலாம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து, ‘ஸ்டாலினிய எதிர்ப்பு இடதுசாரிகள்’ எனப்படுவோர் (சமூக ஜனநாயகவாதிகள், டிராட்ஸ்கியவாதிகள் மற்றும் இவர்களுக்கு இடைப்பட்ட பல்வேறு அறிவுத்துறை நீரோட்டங்களைச் சேர்ந்தவர்கள்) கூட்டுத்துவ அமைப்புகளை ஒழித்துக் கட்டியது மட்டுமின்றி, கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கும், ஓய்வூதியக்காரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்வளித்த மக்கள்நலக் கட்டமைப்பையும் ஒழித்துக் கட்டியதன் மூலம் முதலாளி வர்க்கத்துக்கு இணையற்ற முறையில் சேவை செய்திருக்கின்றனர்.

கூட்டுத்துவ மக்கள் நல அமைப்புகள் ஒழிக்கப்பட்டு விட்டதனால், அவற்றோடு ஈடுகொடுத்து மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்த வேண்டிய அவசியம் மேற்கத்திய முதலாளி வர்க்கத்துக்கு இல்லாமல் போய்விட்டது. எனவே, மாபெரும் பின்னோக்கிய பாய்ச்சல் முழு வேகத்தில் தொடங்கிவிட்டது.

அடுத்த இரண்டு பத்தாண்டுகளில், லிபரல்கள், பழமைவாதிகள், சமூக ஜனநாயகவாதிகள் என்று மேற்குலகில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொருவரும் தம் பங்குங்கு மக்கள்நலச் சட்டங்களை வெட்டிக் குறைத்திருக்கிறார்கள். பென்சன் குறைக்கப்பட்டது, ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுச் சாகும் வரை உழைக்க வேண்டுமென்பது கொள்கையாகிறது, வேலை நிரந்தரம் காணாமல் போய்விட்டது, தொழிலாளியை வேலைநீக்கம் செய்வது எளிதாக்கப்பட்டிருக்கிறது, முன்னாள் கூட்டுத்துவ நாடுகளில் குவிந்திருக்கும் திறன் வாய்ந்த உழைப்பாளிகளை குறைந்த கூலிக்குச் சுரண்டுவது சாத்தியமாகியிருக்கிறது.

‘ஸ்டாலினிய எதிர்ப்பில்’ ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு இரண்டு உலகங்களின் தீமைகளும் கிட்டியிருக்கின்றன. அவர்கள் தமது கிழக்குலகின் மக்கள்நலத் திட்டப் பாதுகாப்பை இழந்தார்கள். மேற்குலகின் தனிநபர் நுகர்வு மற்றும் வளத்தையும் அவர்கள் பெறவில்லை.

ஸ்டாலினிய எதிர்ப்பு இடதுசாரிகள் என்று கூறப்படும் அறிவுத்துறைப் பேடிகள் படையினரோ, தத்தம் பல்கலைக்கழகங்களில் சொகுசாக அமர்ந்துகொண்டு, புதிய தாராளவாதத்தின் தாக்குதலுக்கு எதிராக, தொண்டை கட்டும் வரை சவுண்டு விட்டார்கள்; பிறகு, “முதலாளித்துவ எதிர்ப்பு போர்த்தந்திரம் ஒன்றின் தேவை” குறித்துப் பேசினார்கள். தொழிலாளி வர்க்கத்துக்குக் கல்வியளித்து, உணவளித்து, வேலைவாய்ப்பும் அளித்த ஒரு மக்கள்நல அமைப்பை இழிவுபடுத்தி ஒழித்துக் கட்டுவதற்குத் தாங்கள் ஆற்றிய பாத்திரம் பற்றி மட்டும் கடுகளவுகூட அவர்கள் பரிசீலிக்கவில்லை.

ஸ்டாலினின் மறைவுக்குப் பிந்தைய பத்தாண்டுகளில், ஏதேச்சாதிகாரமும் மக்கள் நலனும் இணைந்த ஒரு ஒட்டுரகமாக சோவியத் சமூகம் உருவாகி வளர்ந்தது. இருப்பினும் இந்த அரசுகளை இவர்கள் ‘ஸ்டாலினிஸ்டு‘ அரசுகள் என்றே அழைத்தனர். ஸ்டாலினிசம் ஒழிந்தால்தான் புரட்சிகர ஜனநாயக சோசலிசத்துக்கு மிகப்பெரிய பாதை திறக்கும் என்று வாதிட்டனர்.

உண்மையில் நடந்தது என்ன? மேற்கிலும் கிழக்கிலும் மக்கள் நல அரசு என்பதே ஒழிந்தது. வெறிகொண்ட புதிய தாராளவாத முதலாளித்துவம் ஏற்றம் பெற்றிருக்கிறது. ஒரு புதிய தாராளவாத எதிர்ப்புரட்சியின் உந்து பலகையாக, மக்கள் நலச் செலவினங்கள் அனைத்தையும் வெட்டுவதற்கு, மேற்கத்திய முதலாளிகள் நடத்திய போராட்டத்தில் அவர்களுடைய துருப்புச் சீட்டாகத்தான் பயன்பட்டிருக்கிறார்கள் இந்த ஸ்டாலினிய எதிர்ப்பாளர்கள்.

‘ஸ்டாலினிய எதிர்ப்பு இடதுசாரிகள்’ கனவு கண்டதைப் போல, ‘ஸ்டாலினிசத்துக்குப் பிந்தைய சோசலிச ஜனநாயகம்’ எங்கேயும் மலரவில்லை. முந்தைய மக்கள் நல அரசைத் தூக்கி எறிந்தவர்கள் கோடீசுவரர்கள், போதை மருந்து வியாபாரிகள், ஆள்கடத்தல் பேர்வழிகள் ஆகியோர்தான். அவர்களுடைய ஆட்சிதான் மலர்ந்திருக்கிறது.

மக்கள் நல அமைப்பின் அழிவினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பெண் தொழிலாளர்கள்தான். வேலை, பேறுகால விடுப்பு, குழந்தைப் பாதுகாப்பு அனைத்தையும் இழந்தார்கள். பொதுமருத்துவம் அழிந்ததால், குழந்தைகள் சாவு அதிகரித்திருக்கிறது. மணமுறிவும் மரண விகிதமும் அதிகரித்திருக்கிறது. தமது சொந்தச் சகோதரிகளை அடிமைகளாக்குவதற்கும் சீரழிப்பதற்கும் தாங்கள் ஆற்றியிருக்கும் பாத்திரம் பற்றி ‘ஸ்டாலின் எதிர்ப்பு பெண்ணியவாதிகளும்’ மூச்சுவிடுவதில்லை.

மக்கள்-நல-அரசு‘ஸ்டாலினிசத்தைக் காட்டிலும் வேறு எதுவானாலும் பரவாயில்லை’ என்ற அயோக்கியத்தனமான இவர்களது முழக்கத்தால் கிழக்கு ஐரோப்பியத் தொழிலாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தின் ஒரு தலைமுறையே அழிந்து விட்டது. எத்தனை இலட்சம் பேருக்கு வேலையில்லை; காசநோயும் எயிட்ஸும் எத்தனை இலட்சம் பேருக்கு; டெல் அவிவ், புகாரெஸ்ட், ஹாம்பர்க், பார்சிலோனா, புரூக்லின் விபச்சார விடுதிகளில் உருத்தெரியாமல் சிதைந்திருக்கும் இளம் பெண்கள் எத்தனை பேர் என்று இவர்கள் எண்ணிப் பார்க்கட்டும்.

ஸ்டாலினிசத்தின் மீது தாங்கள் பெற்ற வெற்றி குறித்து மேற்கத்திய அறிவுத்துறையினர் இன்னமும் பீற்றிக் கொண்டிருக்க, கிழக்கு ஐரோப்பாவில் இன்று உண்மையாக உயிர்வாழும் தொழிலாளிகளோ, ஓய்வூதியம், பொதுச்சுகாதாரம், வேலை, கல்வி உள்ளிட்ட ‘ஸ்டாலினிய மிச்சசொச்சங்களுக்காகப்’ போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள்நலத் திட்டங்களுக்காக நடைபெறுகின்ற இந்த புதிய வெகுசனப் போராட்டங்கள், முந்தைய கூட்டுத்துவ அமைப்பின் அனுபவங்களைத்தான் நினைவு கூர்கின்றனவேயன்றி, ஸ்டாலினிச எதிர்ப்பு இடதுசாரிகளின் வெற்றுச் சொல்லாடல்களை அல்ல. இவர்கள் காலாவதியானவர்கள்.

ஒரு விசயம் மென்மேலும் தெளிவாகிக் கொண்டே வருகிறது. மக்கள்நலத் திட்டங்கள், தொழிலாளர்நலச் சட்டங்கள், சமூகநலத் திட்டங்கள்  என எவையெல்லாம் சோவியத் முகாமின் தோற்றத்தை ஒட்டி கிடைத்தனவோ, அதன் அழிவை ஒட்டி பறிபோயினவோ, அவைதான் இன்றைய தொழிலாளர் போராட்டங்களை மட்டுமின்றி, எதிர்காலப் போராட்டங்களையும் உந்தித் தள்ளும் இலட்சியங்களாகத் திரும்ப வந்திருக்கின்றன.

(குறிப்பு: இக்கட்டுரையில் ஸ்டாலினுக்குப் பிந்தைய ரசிய, கிழக்கு ஐரோப்பிய அரசுகள் மற்றும் சமூகத்தைக் குறிக்கும் விதமாக “கூட்டுத்துவ அமைப்பு”, “மக்கள் நல அமைப்பு” போன்ற சொற்றொடர்களை பெட்ராஸ் பயன்படுத்தியிருக்கிறார். சோசலிச சமூகத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் சில போலி சோசலிச சமூகத்திலும் தொடர்ந்திருக்க கூடும் எனினும், இவற்றை அதிகார வர்க்க ஆட்சியென்று அழைப்பதே சரியெனக் கருதுகிறோம்.)

__________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012
__________________________________________________

பிச்சை புகினும் கற்கை நன்றே…

2

பிச்சைக்காரர்கள் என்றால் நம்மிடம் இறைஞ்சி ஏதாவது ஒன்றைப் பெறுபவர்கள் என்று மட்டும் நினைத்துவிட முடியாது. வேறு ஏதாவது ஒரு பொருளில் அவர்கள் நமக்கு பிச்சையிடுபவர்களாகவும் இருப்பதுண்டு. அப்படி ஒரு நபரை தற்செயலாக ஒரு உறவினர் வீட்டு வாசலில் சந்திக்க நேர்ந்தது. இதோ நீங்களும்தான் அவரைச் சந்தியுங்களேன்…

“ஏங்க வீட்ல யாரு! கொஞ்சம் நேரத்தோட வாங்க! நாலு எடம் போவணும்!”

கறாரான பேச்சையும் இயல்பான உடையமைப்பையும் பார்த்து “சித்தப்பா யார்னு பாருங்க! ஏதாவது ஈ.பி. ரீடிங் எடுக்குறவரா” என்று அழைக்க, அவசரமாக வாசலை எட்டிப்பார்த்த சித்தப்பாவோ “இவனா, ஏடா கூடம் புடிச்சவனாச்சே! தம்பி பிச்சைக்காரம்ப்பா!” என்று அவரைப் பார்த்து எச்சரிக்கையானார்.

“பிச்சைக்காரர்ங்குறீங்க.. பாத்தா தெரியல!”

“நீ வேற பேச்சு கொடுத்தோம், வளவளன்னு பேசுவாம் பாரு! நீ ஈடு கொடுக்க முடியாது. பத்து அஞ்சோ கொடுத்து ஆள அனுப்பலேன்னா, நம்பள பேசியே பிச்சிருவான்…” என்று சித்தப்பா சொல்ல, அட இப்படியும் ஒரு ஆளா? என பேச்சு கொடுக்க ஆர்வம் வந்து “சித்தப்பா ஏதாவது பேசுங்க பார்ப்போம்” என்று வற்புறுத்தினேன்.

“சொன்னா கேக்க மாட்ட! அவன் டைப்பு உனக்குத் தெரியாது. நல்லா வாழ்ந்தவன்;  இப்ப மெண்டலாட்டம் ஆயிட்டதால வக தொகை இல்லாம பேசுவான்… வேணாம்” என்று பலவாறு மறுத்தவர் எனது விருப்பத்திற்கிணங்க பேச்சுக் கொடுத்தார்.

“என்ன மணி! நகராம பாத்துக்கிட்டே நிக்குற! எவ்ளோ பிச்சை போட்டாலும் நீயும் அப்படியேதான் இருக்க… ஆளு மாறக் காணோமே”

“நீ மட்டும் என்னாவாம்? டீ ஆறு ரூபா விக்குற காலத்துல நீயும் அதே அஞ்சு ரூபாதான் போடுற… நான் அன்னைக்கு பாத்த மாதிரிதான் நீயும் அப்படியே இருக்க… ஒண்ணும் முன்னேறக் காணோம்! விவசாயம் பாத்து நீயே மாற முடியல… நான் மாற முடியுமா?” இதுக்குதான் வேணாண்ணது! என்பது மாதிரி இடையே சித்தப்பா என்னை ஒரு பார்வை பார்த்தார்.

“அதுக்கில்லடா! ஊரு முழுக்க காசு வாங்குறியே! அப்படி என்னதாண்டா உனக்கு செலவு”

“ஒரு ரூபா, ரெண்டு ரூபா போட்டுட்டு ஒட்டு மொத்த வரவு செலவு கேளுங்க! அவளுக்கு ஓட்ட போட்டுட்டு எதையும் கேக்காத.. வூட்டுக்குள்ளயே இருந்துட்டு உலகம் தெரியாம இருக்கண்ணே நீ! கேக்குறியே ஒத்த ஆளுக்கு என்ன செலவுன்னு! ஒரு டீ என்னா வெல? ரெண்டு இட்லி என்னா வெல? உன்னாட்டம் ஒரு எடத்துலயா இருக்கேன்? பத்து எடம் சுத்துறேன். ஒடம்புல தெம்பு வேணாம்; சாங்காலம் டிபன் சாப்பிட வேணாம்; ராச்சோறு வேணாம்… என்னமோ உலகந் தெரியாம கெடந்து பேசுற! சிகரெட்டுக்கு மட்டும் தெனம் இருபது ரூபா ஆவுது; குவார்ட்டரு அறுபது ஆவுது… மனுசன் வாழ வேணாம்!”

வீம்புக்கு பேசுகிறாரா? இல்லை விவரமாகத்தான் பேசுகிறாரா?… என ஒரு கணம் மலைத்தும், திளைத்தும் போன நான் பேச்சு நீளவே நெருக்கமாக வந்து கேட்க ஆரம்பித்தேன். என்னையும் ஒரு முறை உற்றுப்பார்த்து விட்டு… “தம்பி நீதான் ஒரு பத்து ரூவா கொடேன்! பாத்தா படிச்ச புள்ளையாட்டம் தெரியுது! இந்த வூர்க்காரன்கிட்ட பேசிப் புரிய வச்சி பிச்ச எடுக்குறதுக்குள்ள வயிறு காஞ்சு போவுது!” கையை நீட்ட ஆரம்பிக்க, சித்தப்பா இடைமறித்தார்.

“திமிருதாண்டா உனக்கு! எடுக்குறது பிச்சை; இதுல தண்ணி, சிகரெட்டு இல்லாம இருக்க மாட்டியாக்கும்!”

“அதான பாத்தேன்! எப்பவாவது பத்து ரூவா போட்டுட்டு புத்தி சொல்ல ஆரம்பிச்சிடுவீங்களே! நீ போடுற காசுக்கு இப்புடிதான் செலவு பண்ணனும்னு கண்டிசன் வேறயா?

ஏன் கோவிந்தராசு.. நீ இந்த டிவி.ல படம் கிடம் பாக்க மாட்டியா? ஆயி பேச்ச அப்பன் கேக்க மாட்டேங்குறான், அப்பன் பேச்ச மவன் கேக்க மாட்டேங்குறான், பஞ்சாயத்து போர்டு டி.வி.ல போய் பாரு! உலகம் அப்படி போய்ட்டு இருக்கு…! நீ போடுற காசுக்கு நான் உன் பேச்ச கேக்கணுமாக்கும்! தண்ணியும், சிகரெட்டும் இல்லேன்னா எவன் இந்த ரோட்ல கெடக்க முடியும்! ஊராவா வச்சிருக்கீங்க? பன்னி கூட படுக்குமா இந்த ஊர்ல… வாயப் புடுங்காத பேசாம ரூபாயக் கொடு!

“என்னமோ கொடுத்து வச்ச மாதிரி கேக்குற?

“சொன்னா புரிஞ்சுக்கண்ணே! உன்ன மதிச்சு யாராவது சொந்தக்காரன் வந்து கேட்பானா? என்ன மாதிரி பழகுன ஆளு வந்தாதான் உண்டு! எனக்குந் தராம… அப்படி என்னதாண்ணே குடும்பம் நடத்துற?…

“என்னமோ சொன்னியே வாய பாத்தியா?… இவன பாத்தா நீ பிச்சக்காரன்னு சொல்லுவியா… இப்புடிதான் ஊர் பூரா பேசி சமயத்துல அடி வாங்கிட்டும் போவான்” என்னிடம் சித்தப்பா விவரிக்க, அவர் மேலே வானத்தை பார்த்து ஏதோ முனகிக் கொண்டு, வானத்தைக் கண்டிப்பது போல சைகையும் காட்டினார். “பாதிதான் மெண்டல். பாதி டூப்பு” என்று சித்தப்பா என்னிடம் விளக்க, அவரது தடாலடி உண்மைப் பேச்சு என்னை ஈர்த்தது.

“ஏங்க உங்களுக்கு வீட்டுக்காரம்மா இல்லியா? ஏன் இப்படி தனியா கெடந்து சுத்துறிங்க… வீட்ல இருக்கலாம்ல!”

“அதான் தம்பி! ஏண்டி வீட்ல கெடந்து கஷ்டப்படணும், வாடி பிச்சை எடுக்கலாம்னு கூப்பிட போயிதான் சண்டை வந்து என்ன துரத்திட்டா…!”

“அவங்க நெனக்கிறதுதான சரி! உழைச்சி வாழறத விட்டுட்டு, இப்படி பிச்சையெடுக்கலாமா?”

“என்னமோ உழைச்சி வாழறவன இந்த ஊர்ல எவனோ கவுரமா மதிக்குற மாதிரி, என்னா பேசுறீங்க நீங்க?!.. உழைச்ச நாம வாழ முடியாது தம்பி; நம்ம மொதலாளிதான் வாழுவான். என் கையப் பாரு! மோட்டாருக்கு காயில் கட்டி கட்டி கையே காப்புக் காச்சிருக்கு பாரு… நான் பொழுதுக்கும் காயில் கட்டி கட்டி என் மொதலாளி ஒரு கடைய நாலு கடையாக்கிட்டான். பொழுதுக்கும் நான் புரோட்டா பிசைய, மொதலாளி வீட்ட கட்டிட்டான்… உழைக்குறதால பத்து பைசாவுக்கு பிரயோசனமில்ல. நீயும் படிச்சு வேலைக்குப் போயி, எவனோ வாழ கஷ்டப்படாத! என்னப் போல பிச்சையெடுத்துப் பாரு! ப்ரியா இருக்கலாம்… நோட் திஸ் பாயிண்ட்”

“என்னா சித்தப்பா! இங்கிலீசெலாம் பேசுறாரு!?”

“அந்தக் காலத்துல நல்லா படிச்சவம்பா! குடும்பம் கவனிக்க முடியாம மெண்டலாய்ட்டான்.”

அவர் பேச்சில் சில ஏற்கவியலாத கருத்துக்கள் இருந்தாலும் நிச்சயம் அவர் மெண்டல் இல்லை என்று மட்டும் புரிந்தது.

“என்ன தம்பி! பின்னாடி கவலப்படாத… பேசாம எவனுக்கும் சிக்கிடாம பிச்சை எடுத்துப் பொழச்சுக்கோ!” தானே சிரித்தும் கொண்டார்.

“ஏய்! சீ, வீட்டுக்கு வந்த புள்ளய பிச்சை எடுன்னு! போடா! இதான் உங்கிட்ட ரொம்ப வச்சிக்கப்புடாது!”

“யாரு சம்பந்தம் போடச் சொன்னா? ஏதாவது கேக்குறீங்க.. அப்புறம் சொல்லிட்டன்னா பாயுறீங்க… பத்து ரூவா கொடுத்தா நான் பாட்டும் போகப் போறேன்… அண்ணே! குடுண்ணே! தம்பி வேற பாக்குது!”

“எல்லாம் வெலாவாரியா பேசுறீல்ல? பிச்சை எடுக்குறது தப்புன்னு உனக்கு புரியலியா? என்னடா! வீடு வாசல விட்டுட்டு, புள்ள குட்டிய விட்டுட்டு இப்படிச் செய்யறது தப்புன்னு நீ ஒத்துக்குறியா?”

“பாத்திங்களா தம்பி! இதான் இந்த ஊர்க்காரன் கிட்ட.. ஒரு பத்து ரூபா கொடுத்தா நாம அவங்கள ஒத்துக்கணும்பாங்க..!”

“சரி! வீட்ல புள்ளங்களும் வளர்ந்தவங்களா இருக்காங்க; வீட்லயும் மனைவி இருக்காங்க! போய் பேசாம வீட்டோட சேர்ந்துதான் இருங்களேன்.”

“நீங்களுமா தம்பி! சரி, பத்து ரூபா கொடுப்பீங்கன்னா சும்மா கொடுப்பீங்களா? பத்து கேள்வி கேக்கத்தான் செய்வீங்க. உங்களுக்கும் நான் ஆரம்பத்துலேர்ந்து ஹிஸ்டிரிய சொல்லி ஆவணும்.. பிச்சை எடுக்கறத விட கஷ்டம்… பிச்சைக்காரன் கிட்ட கேக்குற கேள்விக்கு அவன் பதில் சொல்றது…” ஏதேதோ பேசி “சரி! இப்ப நீங்க எவ்ளோ தரப் போறீங்க? இவ்ளோ கேள்வி கேக்குறீங்க!”  என்று அவர் சிரித்தபடி கேட்க, எனக்கும் சிரிப்பு வந்து விட்டது. உடனே சித்தப்பா குறுக்கிட்டார். “போ! போ! சும்மா திமிருப்பேச்சு பேசிக்கிட்டு.. பிச்சைக்காரன் மாதிரியா பேசுற நீ!” சித்தப்பா கோபப்பட்டார்.

“பாருங்க தம்பி! இவுங்களாம் ஏதோ கவுரமா குடும்பம் நடத்துற மாதிரி!… ரேசன்ல எலவச அரிசி, டி.வி, பேனு, அடுப்புன்னு… உங்களுக்கு ரேசன் கார்டு இருக்கு, என்கிட்ட இல்ல… அதான் வித்தியாசம். எனக்கொரு ரேசன் கார்டு இருந்தா நான் ஏன் உன்ன தேடி வரப் போறேன்! உன்ன மாதிரி பேசாம வீட்ல கெடக்க மாட்டேன்.” வெடுக்கெனப் பேசியபடி கையை நீட்ட, ஒரு பத்து ரூபாயை எடுத்துக் கொடுக்க, “நல்லா இரு தம்பி! இந்த ஊரோட சேர்ந்து நீயும் கெட்டுறாத!” என்று சிரித்தபடியே நகர்ந்தார்.

“அட ஏம்பா! நீ வேற… அவனே திமிரு புடிச்சவன். இப்புடி பேசித்தான் நேத்து கூட கடத் தெருவுல அடி வாங்கினான். கொடுத்தா திரும்பத் திரும்ப வருவான். ஏன் பணம் கொடுத்தே?!” சித்தப்பா வருத்தப்பட்டார். எனக்கோ கையில் பத்து பத்து ரூபாய் கொடுத்து இவரை எல்லோரது வீட்டுவாசலுக்கும் அனுப்பலாம் போல இருந்தது!

♦ ♦

பிச்சைக்காரர்களை இரங்கத்தக்கவர்களாக மட்டும் பார்த்துப் பழகியவரா நீங்கள்?  சில வேளைகளில் பிச்சைக்காரர்களிடம் வெளிப்படும் சமூக அக்கறை… அது இல்லாத பலரை இரங்கத்தக்கவர்களாக ஆக்கி விடுகிறது! அப்படி ஒரு அனுபவம்….

புதுக்கோட்டை பேருந்து நிலையம்… சிவப்புச் சட்டையுடன், பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு. எனும் அடையாள அட்டைகளுடன் சில தோழர்கள் கையில் ‘போபால்.. நீதி வேண்டுமா? புரட்சிதான் பாதை’ எனும் சிறு நூலுடன்… “கொலைகார ‘டௌ’ வே வெளியேறு!” எனும் முழக்கத்துடன் ஒவ்வொரு பேருந்திலும் ஏறி

“அன்பார்ந்த உழைக்கும் மக்களே! போபால் நச்சுவாயுப்  படுகொலையில் நமது அருமை இந்திய உழைக்கும் மக்கள் 23000 பேரை படுகொலை செய்துவிட்டு, அமெரிக்க யூனியன் கார்பைடு முதலாளி ஆண்டர்சன் இந்திய அரசின் ஆதரவுடன் பத்திரமாகத் தப்பித்துச் சென்று விட்டான். தலைமுறையே மரபணு சிதைந்து… தனிப்பட்ட முதலாளியின் இலாபவெறிக்காக ஆயிரக்கணக்கான மக்கள் விழிபிதுங்கி, முகம் சிதைந்து நீதிக்காக வீதியில் போராடுகிறார்கள். நீதி வேண்டாமா? இந்த  அரசும், சட்டமும்,  பாராளுமன்றமும்

முதலாளிகளுக்குத்தான் ஆதரவானது என்பதைப் போபால் படுகொலை நிரூபித்துள்ளது… பிறந்த குழந்தைகள், கருவிலேயே பிறக்காத குழந்தைகள் சிதைந்த கொடூரங்கள்…” எனத் தோழர்கள் மக்களிடம் பேசியபடி முற்றுகைப் போராட்டத்திற்கான பிரச்சாரம் மற்றும் நிதிவசூல் செய்து கொண்டிருக்க,

ஒவ்வொரு பேருந்திலும் தோழர்கள் பேச ஆரம்பிக்கும்போது இடையே வந்து ஒரு பிச்சைக்கார சிறுமியின் தட்டேந்திய குரலும் குறுக்கிடும். தோழர்கள் எந்தப் பேருந்தில் ஏறினாலும் அந்தச் சிறுமியின் பிச்சைக்கான குரலும் பிரச்சாரத்தின் இடையே குறுக்கிட்டு பின்தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. சிறுமியாக இருந்தபடியால் பிரச்சாரம் செய்த தோழர்கள் அவளை விரட்டாமலும், இடையூறு கண்டு ஆத்திரம் கொள்ளாமலும், ஆனால் சற்று சலிப்படைந்து சிறுமிக்கு எப்படிப் புரிய வைப்பது என்று தவித்தனர்.

அடுத்தடுத்த பேருந்துகளிலும் சிறுமியின் குறுக்கீடு தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. திடீரென ஒரு பேருந்தில் தோழர்கள் வழக்கம் போல பேசிக்கொண்டே போக அந்தச் சிறுமியும், குரலும், குறுக்கீடும் இல்லாமல் அமைதி நிலவக்கண்டு தோழர்களுக்கு ஆச்சரியம்… ஏன் என்ன ஆனது? என்று சுற்றுமுற்றும் பார்த்தனர். பேருந்தின் கடைசிப் பகுதியில் அந்தச் சிறுமி தோழர்களின் போபால் பற்றிய கொடூர விவரணையை உருக்கமாகக் கேட்டபடி, வழக்கத்திற்கு மாறாக அமைதியாக நின்றிருந்தாள்.

தோழர்கள் பேருந்தை விட்டு இறங்கும்போது திடீரென கல்லாய்ச் சமைந்தவள் உயிர்பெற்றது போல அந்தச் சிறுமி அவசர அவசரமாக “அண்ணே! அண்ணே! இதையும் வாங்கிக்குங்கண்ணே!” என்று தான் பிச்சை பெற்ற தட்டில் உள்ள சில்லறைகளைத் தனது கையாலே பெருவிருப்பத்துடன் வாரி தோழர்களின் உண்டியலில் திணித்தாள். தோழர்களோ ஒரு கணம் செய்வதறியாது திகைத்தனர். இது நாள் வரைகாணாத உணர்ச்சிக்கு ஆட்பட்டவர் போல ஒரு கணம் ஆளாகிப் பின் “வேணாம் பாப்பா! நீயே வச்சுக்கோ!” “ஏண்ணே? என்ன மாதிரி எத்தன புள்ளைங்க செத்ததுக்கு நீங்க பேசறீங்க. என்ன மாதிரிதான அவங்களும்.. இந்தாங்கண்ணே வச்சுக்குங்க…” வலியுறுத்தி சிறுமி நிதியளித்தாள்.

யாருமற்ற அநாதையாக்கப்பட்டு, பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு ஆதரவற்ற ஒரு சிறுமி… வர்க்க உணர்வோடு ஒரு அமைப்பின் மீது வைக்கும் நம்பிக்கையும், விருப்பமும், தன் வர்க்கத்தை உணர்ந்து கொள்ளும் அந்தத் தருணமும் மனித குலத்தின் ஆழமான அர்த்தமான உணர்ச்சிகளில் ஒன்று. நிலை மறந்து மரத்துக் கிடக்கும் இந்த சமூகத்திற்கு அந்தச் சிறுமி போட்ட உணர்ச்சியின் பிச்சை அது!

_________________________________________________

புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012

_______________________________________________________

ஓய்வூதியத்தின் பாதுகாப்பின்மை!

1

ஓய்வூதியத்தில் அன்னிய முதலீடு

காப்பீட்டுத் துறைக்கு சமமாக ஓய்வூதிய நிதியிலும் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது மற்றும் ஓய்வூதிய மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வருவதென்ற மத்திய அமைச்சரவை முடிவுகள் மத்திய அரசு ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 4 அன்று மத்திய அமைச்சரவை ஓய்வூதிய நிதி நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க அதிகார (PFRDA) மசோதா 2011ல் அலுவலக ரீதியான திருத்தங்கள் உருவாக்குவதற்கான ஒப்புதல் அளித்தது,  அந்த முடிவென்பது, நிதித்துறை நிலைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என்பது அதன் துவக்கத்திலேயே பட்டவர்த்தனமாக தெரிந்தது.  அத்தகைய நடவடிக்கைகள் ஓய்வூதியத்திற்கு பங்களிப்பவர் நலனுக்கு உகந்தது போல் தெரிந்தாலும், தொழிலாளர்களுக்கான அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆகியவை வேறுவிதமாக புரிந்தறிந்தன/ அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் டிசம்பர் 12ல் இத்தகைய சீரமைப்பு என்ற பெயரிலான நடவடிக்கைகளை எதிர்த்து தேசிய அளவிலான ஒரு வேலை நிறுத்தத்திற்கு செல்ல முடிவெடுத்துள்ளனர்.

மத்திய அரசு, மற்றும் மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்குமான ஓய்வூதியத் திட்டத்தில் “சீர்திருத்தம்” கொண்டு வர வேண்டும் என்ற நோக்கம் விரைவு படுத்தப்பட்டிருக்கும் அந்த நிலையில்தான் இந்த ஓய்வூதிய நிதி நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க மசோதாவின் தோற்றமே உருவெடுத்தது.  அதைத் தொடர்ந்து இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.  இராணுவ சேவையில் உள்ளவர்களை தவிர்த்து, 2004ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பணியிலமரும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் இந்த திட்டம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.  இந்த புதிய ஓய்வூதிய திட்டம் முன்பிருந்த “வரையறுக்கப்பட்ட பயனுள்ள திட்டம்” என்ற நிலையிலிருந்து “வரையறுக்கப்பட்ட பங்களிப்பு திட்டமாக” சாராம்சத்தில் மாற்றப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 2005 மார்ச்-ல் மக்களவையில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் முக்கியமான பிரிவு, 2003ல் உருவாக்கப்பட்ட இந்த “ஓய்வூதிய நிதி நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க மசோதாவிற்கு” சட்ட பூர்வ அந்தஸ்து வழங்கியது.  ஆனால் 14வது மக்களவை முடிவடைந்ததை தொடர்ந்து இந்த மசோதாவும் காலாவதியானது.  இந்த புதிய ஓய்வூதிய திட்டம் மட்டும், எந்த வித ஒழுங்குபடுத்தும் அமைப்பு இல்லா நிலையிலும், தொடர்ந்து இருந்து வந்தது. கிட்டத்தட்ட 27 மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டது.  விதிவிலக்காக, இடது சாரிகள் ஆண்ட மேற்கு வங்கம், திரிபுரா, மற்றும் கேரளா மாநில அரசுகள் மட்டும் இந்த திட்டத்தை ஏற்காமல், ஏற்கனவே இருந்துவந்த “வரையறுக்கப்பட்ட பலன்களுடைய திட்டத்தையே” தொடர்ந்து அமுல்படுத்தி வருகின்றனர்.

2009 ம் ஆண்டு சூலை துவங்கி, மத்திய அரசில் 2ம் முறை ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு அணி இந்த திட்டத்தை சுய தொழில் செய்பவர்களுக்கும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் நீடித்தது.  2010 மத்திய நிதி நிலை அறிக்கையில் சுவாவாலம்பன் திட்டம் என்ற இந்த கூட்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2011ம் ஆண்டு மார்ச் 24ம் நாள் மத்திய அரசு இந்த ஓய்வூதிய மசோதாவை மறுபடியும் மக்களவையில் அறிமுகப்படுத்தியது.  அது பின்னர் நிதிக்கான நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.  அந்த ஆண்டு ஆகஸ்ட் திங்களிலேயே அந்த குழு தனது அறிக்கைகளை சமர்ப்பித்தது.  அந்நிய நேரடி முதலீடு 49 சதத்தை அனுமதிக்கும் மத்திய அமைச்சரவையின் அக்டோபர் 4ம் தேதிய திட்டத்தையே இந்த குழுவின் சிபாரிசும் எதிரொலித்தது.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திய பெருமையை பெற்றிருந்தாலும் உண்மையில் 2003-ல் ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் ஆகஸ்ட் 2003-ல் இந்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு பணியில் சேரும் புதிய நியமனதாரர்களுக்கு அமுல்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

தற்போது இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் 37.45 லட்சம் சந்தாதார்களும், ரூ 20-535 கோடி சந்தாவையும் அடிப்படை நிதியாகவும் கொண்டுள்ளது.  ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக இந்த ஓய்வூதியம் நாட்டின் மக்கள் தொகையில் 12 சதமானவர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாக உள்ளது.  நாட்டில் எல்லோருக்கும் இந்த திட்டத்தை விரிவாக்குவது என்பது மிகப்பெரிய யோசனைதான்.  ஆனால், இந்த திட்டத்தை மத்திய அரசு ஊழியர்கள் இன்றுவரை எதிர்த்து வருகின்றனர்.  “நாங்கள் ஓய்வூதிய திட்டத்தில் அந்நிய முதலீட்டை முற்றாக எதிர்க்கிறோம்.  இப்போது இந்த அந்நிய முதலீட்டை அனுமதித்தோமானால், இந்த நிதியை கையாளுகிறவர்கள் அவர்கள் விரும்பிய தொழிலில் முதலீடு செய்வார்கள்.  இவ்வாறு இந்த நேரடி அந்நிய முதலீடு எதிர்மறையாகிவிடும்.  இந்த ஓய்வூதிய நிதி நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப் பட்டபோது, ஓய்வூதியத்திற்கான நிதி தேவை அதிகமாகிக் கொண்டுவரும் இந்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அவசியம் என்று மத்திய அரசால் கூறப்பட்டது- என்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திரு கே.கே.என்.குட்டி தெரிவித்தார்”.  ஓய்வூதியத்திற்கான நிதியை இவ்வாறு புதிய பணியாளர்கள் வழங்குகிறார்கள்.  2001 – 2009ம் ஆண்டிற்குமிடையே மத்திய அரசில் பணிக்கு எடுக்கப்படும் அளவு குறைந்து விட்டதால், இந்த திட்டத்திற்கான நிதி வரத்தும் குறைந்துவிட்டது.

தொழிலாளர்கள் எதிர்ப்பு

இந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான முக்கிய காரணம் ஓய்வூதியத்திற்கான நிதி நெருக்கடி அதிகமாகி வருவதுதான் என்று சொல்லப்பட்டது.  “ஓய்வூதிய நிதியின் பெரும் பகுதி பங்கு ராணுவ சேவையில் உள்ளவர்களைத்தான் சென்றடைகிறது. ஆனால் அவர்களுக்குத்தான் இந்த திட்டத்திலிருந்து விலக்களிக்கப் பட்டுள்ளது” என்றார் கே.கே.என்.குட்டி.

வரும் 34 ஆண்டுகளில் இந்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் நிதி தற்போதைய ரூ 14,284 கோடியிலிருந்து ரூ 57,088 கோடி ரூபாயாக இருக்கும் என்று பெங்களுரை சேர்ந்த பொருளாதார மாற்றத்திற்கான கொள்கை மையத்திலுள்ள கே.காயத்திரியின் ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி அவர் கூறுகிறார்.  2004-05ம் ஆண்டிற்கான மத்திய அரசின் ஓய்வூதிய செலவினம் தேசிய உள்நாட்டு உற்பத்தியில் 0.51 சதமானமே.  அதில் 0.26 சதமானம் ராணுவ சேவையில் உள்ளவர்களுக்கு செல்கிறது.

தற்போதுள்ள பணியாளர்கள் இந்த திட்டத்தில் இல்லாவிட்டாலும், அரசு எந்த நேரத்திலும் ஒரு ஒப்பந்தம் மூலமாக அனைவரையும் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்திற்குள் கொண்டுவர சுதந்திரமுள்ளது என்கிறார் திரு குட்டி.  இந்த ஓய்வூதிய நிதி நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக திட்ட மசோதா, இந்த திட்டம் மூலம், சந்தை சார்ந்த நன்மையே கிடைக்கும் என்பதுடன், வேறு எந்த விதமான நேரடியான, மறைமுகமாக எந்த பலன் குறித்தும் உறுதி சொல்லவில்லை.  இது சந்தை சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் சந்தாதாரர்களை அதிர்ச்சிக்கு  தள்ளிவிடுகிறது.

கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் 25ல், அரசு ஊழியர் கூட்டமைப்பானது, இந்த “ஓய்வூதிய நிதி நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க மசோதா” முற்றாக விலக்கிக் கொள்ள பிரதமருக்கு கடிதம் எழுதியது.  சந்தை முதலீட்டில் ஏதாவது அதிர்ச்சி ஏற்படும் பட்சத்தில், சந்தாவை வாங்குவதற்கான சக்தி இல்லாத நிலையில், ஏற்கனவே உள்ள அவரது சந்தாவிற்கான உண்மை விலை குறிப்பிடப்படாததால், அதன் மதிப்பு தற்போதுள்ள பண வீக்கத்தால், மிகவும் குறைந்துவிடும் என்கிறார்.  மேலும் கூறுகையில், இந்த சந்தாதாரர் மத்திய அரசு ஊழியர் என்பதால், இந்ததிட்டத்தின்படியே தனது முதலீட்டை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் இருப்பதால், ஒரு தவறான தேர்வில் முடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.

இந்தியா மற்றும் அந்நிய தனியார் முதலீட்டாளர்களின் நியாயமற்ற அப்பட்டமான, தனியார் லாபத்திற்கு பொது மக்கள் பணத்தை திருப்பிவிடும் பங்குச் சந்தையில், இந்த ஓய்வூதிய நிதி முதலீடு செய்யப்படுகிறது என்கிறது அந்த கடிதம்.  இந்த ஓய்வூதிய திட்டத்தை திணிப்பதன் மூலம், அரசு ஊழியர்களிடையே இரண்டு பிரிவினரை உருவாக்குகிறது அரசு.  அதில் ஒரு பிரிவினரை நிச்சயமாக உறுதி செய்யப்படாத சந்தை சார்ந்த விளைவுகளுக்குள் தள்ளிவிடுகிறது.  இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் கொண்டுவரப்பட்டவர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் எவ்வளவு என்று உறுதிசெய்யப்படவில்லை.  ஆனால் அதே நேரத்தில் அவர்களில் ஒரு பகுதியினரான ஏற்கனவே உள்ள பழைய ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் உறுதி செய்யப் படுவதுடன், அவர் மறைவுக்கு பிறகு அவரது சட்டப்படியான வாரிசுகளுக்கு அந்த ஓய்வூதியம் கிடைத்திட உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தால் ஓய்வு காலத்தில் அவர்களுக்கான வாழ்க்கை ஆதாரமான பணவீக்கத்தை ஈடுகட்டிவரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை பறித்துவிடும் என்று அவர்கள் மத்திய நிலைக் குழுவிடம் முறையிட்டனர்.

தொழில்துறையிலிருந்து நெருக்கடி

ஆனால் இந்த ஓய்வூதிய நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க திட்டத்தை உருவாக்கவும் ஓய்வூதிய சீர்திருத்திவரும் தொழில்துறை நிபுணர்களும், வர்த்தக கூட்டமைப்பும் ஆதரவு தெரிவிப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.  அரசும், தொழில்துறையினரும் முன்வைக்கும் ஒரே வாதம், தற்போதைய வரைமுறைப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தால் அரசின் நிதியில் பெரும்பங்கு மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு செலவிடப்படுகிறது என்பதுடன், இது நீடித்திருக்க சாத்தியமில்லை என்பதுடன், அதன் காரணமாக சமூக நலத்திட்டங்களை நாட்டின் எளியவர்களுக்கு கொண்டு செல்ல இயலவில்லை என்பதுதானாம்.

2006ம் ஆண்டு உண்டாக்கப்பட்ட 6வது ஊதியக் குழு, ஓய்வூதியதாரர்களுக்கான நிதி நிலையை ஆய்வு செய்து மாற்று வழிமுறைகளை உருவாக்க ஆலோசனை கூறியுள்ளது.  “இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தியதால் ஏற்கனவே உள்ள திட்டம் சிக்கலுக்குள்ளாகிறது என்பதுடன், ஓய்வூதிய திட்டத்தில் மேலும் சீரமைப்பு என்பது மேலும் பல சிக்கலை உண்டாக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது”.

ஆனால், அமைச்சரவை, நிலைக் குழுவின் யோசனையை / எச்சரிக்கையை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு புதிய ஓய்வூதிய திட்ட அறிமுகத்தை நியாயப் படுத்துகிறது.  மற்றொருபுறம் புதிய ஓய்வூதியதாரர்கள், இந்த நிதியை எங்கு முதலீடு செய்வது என்பதை தீர்மானிக்கும் நிலையில் இல்லாததால், எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் அது எப்போது கிடைக்கும் என்றே தெரியாத நிலையில் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.  இந்த நிதி முதலீடு எங்கு முதலீடு செய்யப்படும் என்பது, புதிய ஓய்வூதியம் நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க திட்டத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ள வழிமுறைகள், விதிகளுக்குட்பட்டே  முடிவெடுக்கப்பட்டு முதலீடு செய்யப்படும்.

உதாரணமாக, அமைச்சரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த குழுவின் முதல் ஆலோசனை, அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட திட்டத்தில் சந்தாதாரர் எங்கு தனக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதி செய்யப்படுகிறதோ, அதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.  ஆனால் பிரச்சனை என்னவென்றால் அனைத்து திட்டங்களும், இந்த ஓய்வூதியம் நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க திட்டத்தால் ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டுவிட்டது,  அவை அனைத்தும் உறுதி சொல்லப்படும் வரவை கொடுக்குமா அல்லது விலைவாசி உயர்வை சமன் செய்யுமா என்பதற்கு உறுதியில்லை.

மேலும் இந்த ஓய்வூதிய நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க திட்டம், சந்தாதாரர் எத்தனை முறை, பணம் எடுப்பது, நோக்கம் மற்றும் எடுக்கும் அளவு குறித்து தீர்மானிக்கும் உரிமையை தன்னிடம் வைத்துள்ளது.  இந்த மசோதாவில் உள்ள ஒரு திருத்தம், ஒரு சந்தாதாரர், அல்லது மொத்த வைப்பிலிருந்து 25 சதமானத்திற்கு மேல் தனது கணக்கிலிருந்து ஓய்வூதியம் எடுத்துக் கொள்ள முடியாது.  எதிர்பாராத அவசர காலத் தேவைக்காக சந்தாதாரர்கள் தேவைப்படும் போது பணம் எடுத்துக் கொள்ளும் வகையில் சில சலுகைகளை நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.  மேலும், சந்தாதாரர்கள் தங்களது ஓய்வூதியத்திற்கான சந்தாவை, அரசின் பங்கில் 100 சதம் முதலீடு செய்ய உரிமை வழங்கி ஒரு திருத்தம் கொடுத்துள்ளது.  ஆனால், குழுவின் இந்த இரண்டு ஆலோசனைகளையும் அமைச்சரவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.  ஓய்வூதிய திட்டத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதலே தற்போதுள்ள மற்றொரு கவலை.  அதே நேரத்தில், இந்த திட்டத்தின் கீழ், “ஓய்வூதியம் நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க அமைப்பு” நெறிமுறைகளை வகுக்க ஆலோசனை கூற, இந்த திட்டத்தில் முதலீடு செய்ய தயாராக உள்ளவர்களின் பிரதிநிதிகளை கொண்ட, “துடிப்புள்ள ஓய்வூதிய ஆலோசனை குழு” ஒன்றை அமைப்பதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.

“உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அரசின் செலவினங்கள் குறைக்கப்படுவதில், ஓய்வூதியமும் அடங்கும்” தொழிலாளர்கள் இந்த பிரச்சனைகள் மீது வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  ஓய்வூதியத் திட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு செய்தால், இந்தியாவின் எளியவர்கள் பயனடைவார்கள் என்பது நகைப்புக் குரியதாக உள்ளது.  நிதி நாட்டுக்குள் வரும் என்றில்லாமல், நாட்டை விட்டு பணம் அதிகமாக வெளியே போவதுதான் சாத்தியம்” என்கிறார் ராஜ்ய சபை உறுப்பினரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியை சேர்ந்த திரு டாபன் சென்.  இவர் இந்திய தொழிற்சங்க மையத்தின் பொதுச் செயலாளர் ஆவார்.  குறிப்பாகச் சொல்லப்போனால், நிலைக்குழு பரிந்துரைத்த பல்வேறு ஆலோசனைகள் மந்திரிசபை ஏற்கவில்லை.  இந்த ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பொதுத்துறை நிறுவனத்தில் இருப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற இந்த குழுவின் யோசனை கூட ஏற்கப்படவில்லை.  இந்த ஓய்வூதிய நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க அமைப்பு தற்போதைய அடிப்படை நிலையிலிருந்த ஆய்வில் பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து ஒரே ஒருவரை மட்டுமே இந்த அமைப்பில் நிதி மேலாளராக வைத்துக் கொள்ளலாம் என்றும், அது காலப்போக்கில் நடைமுறையின் அடிப்படையில் விரிவாக்கம் செய்து கொள்ளலாம் என்று விதி வகுத்துள்ளது என்ற அடிப்படையில் இந்த ஆலோசனையை அமைச்சரவை நிராகரித்துவிட்டது.

அமைப்புசாரா தொழிலில் உள்ள மக்களுக்கான சமூக பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு விரிவான சட்டம் இயற்றப்படவேண்டும் என இந்த குழு பரிந்துரைத்தது.  இந்த நிலைக்குழு அந்நிய நேரடி முதலீட்டை ஆதரிப்பதாக இருந்தாலும், ஓய்வூதிய திட்டத்தைப் பொறுத்தவரை, முதலீடு என்பது நாட்டிற்கு அப்பால் செல்லாத வகையில், தற்போதைய காப்பீட்டுத் துறை முதலீடுகள் போல இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.  இந்த ஓய்வூதிய அமைப்பில் தொழிலாளர்கள் சார்பு அமைப்புகளின் பிரதிநிதிகளும், சந்தாதாரர்களும், சிறப்பு குழுவில் கூட்டு பிரதிநிதிகளாக ஏற்கப்படவேண்டும் என்றும் பரிந்துரைத்தது.  அந்நிய நேரடி முதலீட்டை ஓய்வூதிய திட்டத்தில் 28 சதமானம் அனுமதிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்தக் குழு அறிவுறுத்தியது.  ஏனென்றால், நிதித்துறையில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் / தொழில்மைய அமைப்புகள் போன்றவற்றோடு, இந்த முதுமைக்கால ஓய்வூதிய நிதியை நிர்வகிப்பதை ஒப்பிட முடியாது”. நேரடி அந்நிய முதலீட்டை ஓய்வூதியத் திட்டத்தில் அனுமதிப்பது என்பதை, தற்போதைய சட்டத்தில் பொருத்தமான திருத்தங்கள் கொண்டுவந்த பின்னரே அமுல்படுத்த வேண்டும் என்றும் குழு தங்களது பரிந்துரையில் சிபாரிசு செய்துள்ளது.

இந்த திருத்தங்கள் மக்களவையின் ஒப்புதல் பெற வேண்டும்.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைப்பில் உள்ள சில உறுப்பினர்களே இந்த நேரடி அந்நிய முதலீட்டிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.  எனவே, குறிப்பாக ஓய்வூதிய திட்டம் மற்றும் காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டை ஏற்க மாட்டார்கள்.  பாரதீய ஜனதா கட்சியோ, நேரடி அந்நிய முதலீட்டை எதிர்த்தாலும், ஓய்வூதிய நெறிப்படுத்துதல் மற்றும் விரிவாக்க திட்டத்திற்கும், புதிய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஆதரவாக உள்ளது.  இடது சாரிகள் மட்டுமே இந்த ஓய்வூதிய நெறி மற்றும் விரிவாக்கத் திட்டத்திற்கும், புதிய ஓய்வூதிய திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், ஓய்வூதியத்தில் நேரடி அந்நிய முதலீட்டையும் எதிர்த்து நிற்பர் என்று தெரிகிறது.

_____________________________________________________________

நன்றி : டி.கே.ராஜலட்சுமி, ஃபிரண்ட்லைன்

தமிழில்சித்ரகுப்தன்

_____________________________________________________________________

மலைமுழுங்கி மகாதேவனும் அரசின் ஆமை வேக கண்துடைப்பும்!

6

பல லட்சம் கோடி கிரானைட் ஊழல் !
மலைகளை விழுங்கிய மகாதேவர்களுக்கு 50 ஆயிரம் ஏக்கர் சொத்துக்கள் !
ஆமை வேகத்தில் நகரும் அரசின் கண் துடைப்பு நடவடிக்கை !

ந்தாண்டு மே மாதத்தில் சந்தி சிரிக்கத் தொடங்கிய கிரானைட் ஊழல் கடந்த 5 மாதங்களாக ஊடகங்களுக்குத் தீனியாகவும், வாசகர்களுக்குப் பசியாற்றிக் கொண்டும் ஓடிக் கொண்டிருக்கிறது. ராணித் தேனீயைப் பிடித்துக் கொண்டு போய் கூண்டில் அடைத்து தேன் கூடு கட்டுவது போல் மலை விழுங்கி மகாதேவன் பி.ஆர்.பி.ஐப் பிடித்து உள்ளே வைத்துக் கொண்டு, சிலரைப் பட்டியிலடைத்து விட்டுப் பலரைத் தேடிக் கொண்டிருக்கிறது அரசு.

20 ஆண்டுகளுக்கும் மேலாக இதைக் கண்டு கொள்ளாத அரசுகள், அதிகாரிகள் இப்போது அவர்களாகவே அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டே கிரானைட் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களை அரசு-காவல்துறை-மாவட்ட நிர்வாகம் அடங்கிய கூட்டணி தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தாங்கள் விரும்புகிற அளவுக்குச் செய்திகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். தங்களுக்கு வேண்டிய செய்தியாளர்களுக்கு புள்ளி விப‌ரங்களைக் கொடுத்து விலாவாரியாக வெளியிடச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கிரானைட் கொள்ளை அம்பலமான பின் மத்திய அரசின் நிலக்கரி ஊழல் வெளிவந்து 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி என்று பழைய ஊழல்களையெல்லாம் பீட் அடித்தது. பிரதமர் பொறுப்பிலுள்ள துறையென்பதால் மன்மோகன் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க தலைமையில் எதிர்க்கட்சிகள் வழக்கம் போல் சப்பாணி பாராளுமன்றத்தை மேலும் முடக்கி அல்லோக‌லப்படுத்தின. சந்தடிச்சாக்கில் டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயுக்கு கட்டுப்பாடு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு; அதையெதிர்த்து மம்தா விலகல், தமிழ்நாட்டில் கூடங்குளம் போராட்டம், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – ஆகிய எல்லா பரபரப்புக்கும் மத்தியில் கிரானைட் ஊழல் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு, ஒரு ஓரமாக தமிழ்நாட்டுச் செய்தித்தாள்களில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

கிரானைட் ஊழல் தொடர்பான எல்லாச் செய்திகளையும் திரட்டி வைத்துக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களை அதிகாரிகளே அணுகிச் சென்று, புகார்களைப் பெற்று வழக்குப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். இது ஏதோ மக்கள் திரண்டெழுந்து போய் புகார்களைக் கொடுப்பதைப் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது போலவே செய்தி ஊடகங்களிலும் அன்றாடம் பி.ஆர்.பி. அன் கோ மீது நடவடிக்கை பாய்வது போல் வழக்குகளைத் தொடுத்து விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகளும், அரசும். கே.என்.நேரு, பொன்முடி, துரை தயாநிதி போன்ற திமுக புள்ளிகள் முன் ஜாமீன் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

கிரானைட் முறைகேடு தொடர்பாக இது வரை 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 30 வழக்குகள் பி.ஆர்.பி. மீது. ஆனால் இந்த வழக்குகள் வலுவான பிரிவுகளின் கீழ் தொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை என்று சட்ட வல்லுந‌ர்கள் கூறுகின்றனர். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது தேசத் துரோகம், அரசைக் கவிழ்க்க சதி செய்தது போன்ற 300 வழக்குகளுக்கு மேல் அரசு போட்டு வைத்திருக்கிறது. வழக்குகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போவதைப் பார்க்கிற மக்கள் இந்த மலைக்கள்ளர்கள் மீது கடும் நடவடிக்கை இருக்கும் என்று நம்பத் தயாராக இல்லை.

மேலும் இந்தக் கொள்ளையின் பண மதிப்பீடு எவ்வளவு என்பதை இது வரை அரசு அறிவிக்கவில்லை. முந்தைய மதுரை மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் சுமார் ரூ.16,500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்திருந்தார். அண்மையில் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள தொகை சில கோடிகள் மட்டுமே. நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, காவல்துறைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோருடன் அரசுத்துறை அதிகாரிகளின் எல்லாத் தரப்பும் ஒத்துழைக்க மறுப்பதாகச் செய்திகள் கசிகின்றன. மேலும் இழப்பை மதிப்பீடு செய்வதற்கான பெரும்பாலான தடயங்கள் அழிக்கப்பட்டு விட்டதால், எளிதாக மதிப்பீடு செய்ய முடியாது என்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ஊழல் செய்த அதே அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு அதே ஊழலைக் கண்டுபிடிப்பது இருட்டுக்குள் கருப்புப் பூனையைத் தேடுவதைப் போன்றதே.

இந்தக் கொள்ளைக் கூட்டணி மெகா கூட்டணி மட்டும் அல்ல. பலம் வாய்ந்த கூட்டணியும் கூட. எனவே இதைத் தாண்டி உண்மைகள் வெளி வருவது கடினம். ஜெயலலிதாவுக்கும் பி.ஆர்.பி அன் கோ வுக்கும் இடையே ரகசிய பேரம் தொடங்கி விட்டதாகவும், பேரம் இது வரை படியவில்லை – படிய வேண்டியது மட்டுமே பாக்கி என்றும் சொல்லப்படுகிறது. இந்தப் பிரச்சினையை ஆணி வேர் வரை தோண்டினால் தோண்டுகிறவர்களுக்கே அதிர்ச்சி ஏற்படும் என்பது மக்கள் அறிந்தது தான். கிரானைட் கொள்ளை தொடர்பாக இது வரை ஊடகங்களில் வெளியிடப்படாத செய்திகளும் நிறையவே உள்ளன.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

மேலூரிலிருந்து மதுரை செல்லும் வழியிலுள்ள தெற்குத் தெரு எனும் ஊரில் மிகப்பிரம்மாண்டமாக அமைந்துள்ளது பி.ஆர்.பி எக்ஸ்போர்ட்ஸ் எனும் கிரானைட் தொழிற்சாலை. இங்கு தான் குவாரியிலிருந்து வெட்டியெடுத்துக் கொண்டு வரப்படுகின்ற கற்களை விற்பனைக்கேற்றது போல வடிவமைத்து ஏற்றுமதிக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இந்த ஆலையானது மூன்று கண்மாய்கள் மற்றும் அதனைச் சார்ந்த விளை நிலங்களின் மீது ஆயிரக்கணக்கான டன் மணலைக் கொண்டு வந்து கொட்டி, மூடி நிரவி அதன் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த மணல் மருதூர் கண்மாயிலிருந்து ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் அரசு அனுமதி எதுவுமின்றி அள்ளப்பட்டுள்ளது. ஆலை ஆக்கிரமித்துள்ள விளை நிலங்களின் மொத்தப் பரப்பளவு 400 ஏக்கர் என்று சொல்லப்படுகின்றது.

ஆலையின் கிழக்குச் சுவர் அருகில் சுமார் பத்தடி தூரத்தில் செல்கின்ற பெரியாற்றுப் பாசனத்தின் 10ஆம் எண் வாய்க்காலின் 17ஆவது மடைத் தண்ணீர் முழுவதுமாக கிரானைட் தொழிற்சாலைக்குள் செல்கிறது. இந்த ஆலையின் நச்சுத்தன்மை வாய்ந்த கழிவு நீர் ஆலையின் பின்புறமுள்ள கண்மாயில் நேரடியாகவே வடிக்கப்படுகிறது.

சுமார் 2000 நபர்கள் வேலை செய்கின்ற இந்தத் தொழிற்சாலையில் உள்ளுர்க்காரர்கள் யாருக்கும் வேலை வழங்கப்படவில்லை. உசிலம்பட்டி, ஆண்டிபட்டியில் பி.ஆர்.பி. வேலை வாய்ப்பு அலுவலகம் தொடங்கப்பட்டு, பிரமலைக் கள்ளர் சாதியினைச் சேர்ந்தவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, உள்ளூர் சாதித் தலைவர்களது சிபாரிசுக் கடிதத்தை வைத்து வேலை கொடுத்துள்ளனர். ஆனால் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே இங்கு தொழில்நுட்பப் பணிகளுக்கு அமர்த்தியுள்ளனர். பி.ஆர்.பி க்கு நிலம் கொடுத்த குடும்பங்களைச் சேர்ந்த சில பெண்களுக்கு மட்டும் கழிவறை சுத்திகரிப்பு மற்றும் எடுபிடி வேலை கொடுக்கப்பட்டுள்ளது.

கீழவளவைச் சேர்ந்தவர் முத்தழகு (த/பெ நல்லு). இவர் நாவிதர் சமுகத்தைச் சேர்ந்தவர். விவசாயியான இவர் சலூன் ஒன்றையும் கீழவளவில் நடத்தி வருகிறார். இவருக்குச் சொந்தமாக சின்ன இலங்குளம் கண்மாய்ப் பாசனத்தின் கீழ் சுமார் 2.50 ஏக்கர் நன்செய் நிலம் உள்ளது. இவரது நிலத்தைச் சுற்றிலும் உள்ள நிலங்களை பி.ஆர்.பி கும்பல் வாங்கி விட்டது. இவரது நிலத்தையும் தரச் சொல்லி மிரட்டி வந்தது. ஆனால் இவரும், கருப்பாயி எனும் தலித் சமுகத்தவரும், ராமகிருஷ்ணன், வீரணன் போன்றவர்களும் அதற்கு மறுத்து விட்டபடியால், இவர்களது நிலங்களைச் சுற்றி மூன்று பக்கமும் 20 அடி உயரத்திற்கு கோட்டைச் சுவர் போல கற்களை அடுக்கி, உழுவதற்கு டிராக்டரைப் போக விடாமல் செய்துள்ளனர். இந்நிலங்களுக்கு வருகின்ற கண்மாய் நீர்வரத்து வாய்க்காலை ஜேசிபி ஐக் கொண்டு நிரவி விட்டுள்ளனர். மேலும் இந்நிலங்களிலிருந்து நீர் வடிய முடியாதவாறு ஒரு பக்கத்தில் சாலை போட்டும் அடைத்து விட்டனர்.

கீழவளவு, மலம்பட்டி, திருவாதவூர், இடையபட்டி ஆகிய ஊர்களில் சுமார் 200 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட பஞ்சமி நிலங்களையும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

மலம்பட்டிக்கு அருகில் உள்ள நிலங்களில் கிரானைட் கற்களை அடுக்கி வைப்பதற்கு வசதியாக, மின்வாரியத்தினர் கிராமத்தின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த மின்கம்பங்களைப் பிடுங்கி ஊருக்கு நடுவில் கொண்டு வந்து நட்டு வைத்துள்ளனர்.

அடிக்கடி குவாரிகளில் விபத்து ஏற்பட்டு பலரும் பலவிதமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவையெல்லாம் சாலை விபத்து வழக்குகளாகப் பதிவு செய்யப்பட்டு, உயிரிழந்தவர்களை அநாதைப் பிணங்கள் பட்டியலில் வைத்து வழக்கை மூடியிருக்கிறார்கள் காவல்துறையின் உதவியுடன்.

அம்மன் கோவில்பட்டியில் 48 வயதான வாழமலை என்பவர் குவாரியில் வேலை செய்யும் போது உரிய பாதுகாப்புப் பிடிமானக் கருவிகள் இல்லாததால் பள்ளத்தில் விழுந்து இறந்து போகிறார். அதற்காக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. உரிய நஷ்ட ஈடும் தரப்படவில்லை.

மெயின் பீட்டைச் சேர்ந்த ராஜா என்னும் 21 வயது இளைஞன் குவாரியில் வேலை செய்யும் போது இறந்து போயிருக்கிறான். இதற்கும் உரிய வழக்கு பதிவு செய்யப்படவில்லை. உரிய நஷ்ட ஈடும் தரப்படவில்லை.

கீழவளவைச் சேர்ந்த பழனி என்பவரின் 17 வயது மகன் பாலமுருகன் குவாரிப் பள்ளத்தில் தவறி விழுந்து, இறந்து விடுகிறான். அவனது உடலை பள்ளத்தில் இருந்து எடுக்க முடியவில்லை. உடனே மக்கள் சாலை மறியல் செய்கிறார்கள். எஸ்.பி.யும், மாவட்ட ஆட்சியரும் வருகிறார்கள். ஜெனரேட்டர் வைத்து தண்ணீரை இறைத்து, பின்னர் உடலைத் மீட்கிறார்கள். ஆனால் சட்டப்படி வழக்கும் பதிவு செய்யப்படவில்லை; முறையான நஷ்ட ஈடும் வழங்கப்படவில்லை.

இ.மலம்பட்டி எனும் கிராமத்தில் அன்னக்கொடி என்னும் 72 வயது மூதாட்டி காணாமல் போய் விடுகிறார். அவரது மகள் எல்லா இடங்களிலும் தேடிப் பார்க்கிறார். செய்தித் தாளில் விளம்பரம் செய்கிறார். எங்கு தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. போலீசில் புகார் கொடுக்கிறார். எந்தப் பயனும் இல்லை. சரியாக இரண்டே கால் ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஊரில் ஆடு மேய்க்கும் சிறுமி அங்குள்ள சலவைத் தொழிலாளர் வீட்டுக்கருகில் சாலையின் இருமருங்கிலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கற்கோட்டைச் சுவரின் இடுக்கில் ஒரு சேலை கிடப்பதாகச் சொல்கிறாள். ஊர் மக்கள் போய்ப் பார்க்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அன்னக்கொடி கட்டியிருந்த சேலை, சட்டை, அவர் கொண்டு சென்ற மஞ்சள் துணிப்பை, அவர் போட்டிருந்த சேலைக்கரைத் துணியால் பின்புறமாகக் கட்டப்பட்டிருக்கும் மூக்குக் கண்ணாடி ஆகியவையும், மண்டையோடும் எலும்புகளும் கிடந்துள்ளன.  போலீசுக்குத் தகவல் போகிறது. போலீசும் வந்தது. பி.ஆர்.பி குவாரி டிப்பர் வண்டிகளில் ஏதோ ஒன்று மோதி அதனால் இறந்து போன அன்னக்கொடியின் உடலைத் தூக்கிக் கற்களின் இடையில் போட்டு விட்டுப் போயிருக்கிறார்கள் என்கிற ஊர் மக்களின் சந்தேகத்தை போலீசும் உறுதிப்படுத்தியிருக்கிறது. கிராம மக்கள் வழக்குப் பதிவு செய்யச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், “பி.ஆர்.பியை எதிர்க்க முடியுமா?“ எனப் பதில் சொல்லி விட்டுப் போயிருக்கிறது போலீசு.

மேலுர்-திருப்பத்தூர் சாலை ரெங்கசாமிபுரம் என்னும் கிராமத்தை இர‌ண்டாகப் பிரிக்கிறது. சாலையின் தென்புறமானது பி.ஆர்.பி.யின் ஆக்கிரமிப்பிற்குள் வருகிறது. மக்கள் போராடுகிறார்கள். வருவாய்த் துறையின் கணக்குகளிலிருந்து அந்தக் கிராமத்தையே எடுத்து விடுகிறார்கள். அவர்களுக்கான குடும்ப அட்டையை கீழையூர் எனும் கிராமத்திற்கு மாற்றி விடுகிறார்கள். டாமினின் மேலாளர் ஊரைக் காலி செய்யச் சொல்கிறார். மக்கள் மறுக்கிறார்கள். வீடுகளின் அருகில் பி.கே.எஸ் கிரானைட்ஸ் குவாரியைத் தோண்டுகிறது. வெடிகளால் தகர்க்கப்பட்ட கற்கள் வீடுகளின் கூரைகளில் விழுந்து ஓடுகளை நொறுக்குகிறது. புகார் செய்தும் பலனில்லை. அவர்களின் கோவில் தகர்க்கப்பட்டது. 5 பேரைக் குண்டர் சட்டத்தில் போட்டது போலீசு. இன்று அவர்கள் ஊரை விட்டு வெளியேறி ஆங்காங்கே தற்காலிகமாகத் தங்கியுள்ளனர்.

சின்னமலம்பட்டியினருகில் மயிமுத்தாங்குளம் தெற்குப்பக்கத்தில் வலையர் சமூகத்தைச் சேர்ந்த 23 நபர்களுக்கு அரசால் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் அனைவரையும் மிரட்டி அந்த இடங்களை வாங்கியது பி.ஆர்.பி கும்பல். இப்போது அவர்கள் அனைவரும் பொங்கம்பட்டி பஞ்சாயத்தைச் சேர்ந்த வெளுத்துக்கரைப்பட்டியில் வசிக்கிறார்கள்.

திருவாதவூர் புதுத்தாமரைப்பட்டி அருகே உள்ள ஊர் ஒத்தவீடு எனப்படும் குண்டாங்கல். 45 தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் உட்பட 100 வீடுகள் கொண்ட சிறிய கிராமம். அனைவரும் கூலி விவசாயிகள். அருகில் உள்ள விளைநிலங்களை அதிக விலை கொடுத்து வாங்குகிறார் பி.ஆர்.பி. குண்டாங்கல் மக்களையும் ஊரைக் காலி செய்து விட்டு வெளியேறும்படி நிர்ப்பந்திக்கிறது பி.ஆர்.பி கும்பல். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வரை சென்று புகார் அளிக்கிறார்கள் மக்கள். ஓட்டு வாங்கிய மக்கள் பிரதிநிதிகளை அணுகியும் முறையிடுகிறார்கள். அவர்கள் எல்லோரும் ஒரே குரலில் ஊரைக் காலி செய்து விட்டு ஓடுங்கள், இல்லா விட்டால் உள்ளதும் பறிபோய் நடுத்தெருவில் நிற்க வேண்டியது வரும் என்று ‘ஆலோசனை’ வழங்குகின்றனர். இருந்தபோதிலும் அங்கன்வாடி, மேல்நிலை நீர்த்தொட்டி, பேருந்து நிறுத்தம், தொலைக்காட்சி அறை மற்றும் அருகாமை பள்ளிக்கூடம் ஆகிய வசதிகள் நிறைந்த கிராமத்தை விட்டுப் போக மக்கள் விரும்பவில்லை. அதிகார வர்க்கமும், மக்கள் பிரதிநிதிகளும் ஒதுங்கிக்கொள்ள, பி.ஆர்.பி தன்னுடைய அடியாள் படையை குண்டாங்கலுக்குள் அனுப்புகிறார். நள்ளிரவு நேரங்களில், நிலை கொள்ளாத போதையில் வீடுகளுக்குள் நுழையும் அந்தப் பொறுக்கி நாய்கள் பெண்களின் அருகே சென்று படுத்துக்கொண்டு காலைச் சுரண்டுகின்ற வேலையைச் செய்திருக்கின்றனர். மக்கள் விழித்துக் கொண்டு விரட்டிய போது, குவாரிக்குள் போய் பதுங்கிக் கொண்டுள்ளனர். வீடு புகுந்த பி.ஆர்.பி அடியாட்களைப் பிடித்த கிராம மக்களை கட்டைப் பஞ்சாயத்துக் கும்பல் மிரட்டி, அவர்களை பி.ஆர்.பி. இடம் மன்னிப்புக் கேட்கச் செய்த கொடுமையும் நடந்திருக்கிறது. வேறு வழியில்லாமல் குண்டாங்கல் கிராமம் காலியாகிறது. புதுத்தாமரைப்பட்டி ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக நிலம் வாங்கி அங்கே குடியேறியுள்ளனர். எந்த வசதியும் இல்லாத அந்தப் பகுதியில் குடியிருந்து வரும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீண்டும் குண்டாங்கல்லுக்கே போக விரும்புகின்றனர். அதற்காக மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுக்க அந்த மக்கள் செய்யும் முயற்சியை பி.ஆர்.பி. ஆட்கள் மிரட்டித் தடுத்து வருகின்றனர். இப்போது மனித‌ உரிமைப் பாதுகாப்பு மையம் இந்தப் பிரச்சினையைக் கையிலெடுத்துள்ளது.

முண்டநாயகம் எனும் விவசாயத்தில் தன்னிறைவு பெற்றிருந்த ஊர் பி.ஆர்.பி., பி.ஆர்., பி.கே.எஸ் போன்ற மலை விழுங்கிகளின் குவாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டு, விளைநிலங்களில் கிரானைட் பாறாங்கற்கள் பரப்பப்பட்டு, விவசாயம் என்ற அடிச்சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளது. 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்ற இந்த ஊரின் நிலத்தடி நீர் நஞ்சாகி விட்டது. தண்ணீர் உடம்பில் பட்டால் தோலில் அரிப்பு ஏற்படுகிறது. சமைக்கவும், குடிக்கவும் கூட பயன்பட்டு வந்த நீரை இப்போது தொடுவதற்கே மக்கள் அஞ்சுகின்றனர். அந்த ஊரில் உள்ள ஆண்கள் எல்லோரும் மதுரைக்கு வந்து கட்டுமானக் கூலி வேலை செய்து பிழைக்கின்றனர். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டிய உள்ளாட்சி நிர்வாகம் இதுவரை எதையும் நிறைவேற்றவில்லை.

பி.ஆர்.பி. தனக்கு நிலம் கொடுத்த கிராமத்து மக்களுக்கு எத்தனையோ கொடுமைகளைக் கைமாறாகச் செய்துள்ளார். அவற்றில் எல்லாம் மிகப்பெரிய கொடுமை தெற்குத் தெரு தொழிற்சாலை அருகில் ஓடுகின்ற வைகை ஆற்றுக் கால்வாயில் தன்னுடைய தொழிற்சாலை கக்கூஸ் கழிவுகளைத் திறந்து விட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு ஆகாதவாறு செய்த கொடுமைதான் மிகப்பெரிய கொடுமை என்று அந்தப் பகுதி மக்கள் மனம் வருந்திச் சொல்கின்றனர். இதுபற்றி வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் முறையிட்டபோது, அவர்கள் அதற்கெதிராக ஒரு துரும்பைக் கூட அசைக்க மறுத்து விட்டனர். “அது தான் கேன் தண்ணீர் கிடைக்குதில்ல; காசு குடுத்து வாங்கிக் குடியுங்க” என்று அலட்சியமாக அதிகாரிகள் சொல்லி விட்டனர்.

திருவாதவூர் பாண்டவர் மலை குவாரியிலிருந்து விலையுயர்ந்த சிவ‌ப்பு கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்து தெற்குத் தெரு தொழிற்சாலையில் இறக்குவதற்கான லாரி வாடகை ஒரு நடைக்கு ரூ.25,000. இது அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவிக் கொண்டு வந்து சேர்ப்பதற்கான வாடகை. பிடிபட்டால் அதற்கு ஆகின்ற செலவு முழுவதும் லாரி உரிமையாளரைச் சார்ந்தது என்பது நிபந்தனை. இது லாரி ஓட்டுநர் ஒருவர் சொன்ன தகவல்.

பி.ஆர்.பி இன்றைக்கு பாளையங்கோட்டை சிறையில் பாதுகாப்பாக உறங்கிக் கொண்டிருக்கின்றார். 25,000 ஏக்கர் விவசாயம் பாழடிக்கப்பட்டு விட்டது. பல்லாயிரம் விவசாயிகள் வாழ்விழந்து தவிக்கின்றனர். இனி எப்போதும் திரும்பி வராத சுற்றுச்சூழல், இயற்கை வளம் ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் பி.ஆர்.பி.யும் இதர மலை விழுங்கிகளும் சுமார் 50,000 ஏக்கர் நிலங்களை வாங்கி, குறுநில மன்னர்களைப் போல அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நகமும் தசையுமாக இருந்து உதவி செய்த ஊழல் அரசு அதிகாரிகளும் ஏராளமாகச் சம்பாதித்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் சட்டத்தால் என்ன தண்டனை வழங்க முடியும். அரசு சொத்துக்களை மோசடி செய்து அல்லது திருடி அல்லது நாசம் செய்தவர்களுக்கு இழப்பைப் போல் இருபது மடங்கு அபராதம் விதிக்கலாம் என்று சட்டம் சொல்லுகின்றது. அபராதம் அவர்களுக்கு கெண்டைக்கால் மயிருக்குச் சமம்.

________________________________________________________________

தகவல்மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை.

________________________________________________________________

சமச்சீரான மின்சாரத்தை பெற ஊர் ஊராகப் போராடு!

7

மின்வெட்டு-1

கோவில்களில் அன்னதானம், ஆடு மாடுகள் மீது அக்கறை, யானைகளை சுற்றுலாவுக்கு அனுப்புவது என்று ஜீவராசிகள் மீது பாசம் காட்டும் பாசிச  ஜெயாவின் ஆட்சி என்றாலே தமிழகம் எப்போதும் பின்னோக்கி இருண்டகாலத்திற்கு சென்று விடும். தமிழகம் முழுவதும் தற்போது 16, 17 மணி நேரத்திற்கு விட்டு விட்டு மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

கல்வி, மருத்துவம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட சேவைகளை வழங்குவதிலிருந்து அரசு விலகிக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற மறுகாலனியக்க கொள்கைகளை அமல்படுத்தத்துவங்கிய பிறகு நாடு முழுவதும் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் எதுவும் பெரிய அளவுக்கு துவக்கப்படவில்லை.  மின்சாரம் வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக்கொண்டு தனியார் கொள்ளையர்களை மின் உற்பத்தி துறைக்குள் நுழைப்பது அரசின் திட்டம். அற்கான பல சதி வேலைகளும். சதி ஆலோசனைகளும் நடக்கின்றன.

ஜெயாவின் இருட்டாட்சிக்கு எதிராக தமிழகம் முழுவதும் மக்கள் தன்னிச்சையாக பல போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.  மக்களே தெருவுக்கு வரும் போது மக்களுக்காக உழைக்க காத்திருப்பதாகவும், லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் உறுப்பினர்களை வைத்துக்கொண்டிருப்பதாகவும் பீற்றிக்கொள்ளும் ஓட்டுக்கட்சிகளால் ஏன் அரசை அடிபணிய வைக்கும் போராட்டத்தை நடத்த முடியவில்லை ? மக்களே தெருவில் இறங்கிவிட்ட பிறகும் அமைதியாக இருந்தால் நாறிப்போய்விடுவோம் என்பதாலும், ஜெயா அரசை எதிர்ப்பதற்காகவும் தான் அனைத்து ஓட்டுப்பொறுக்கி கட்சிகளும் பெயரளவுக்கு சில போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

தமிழக மக்கள் கடுமையாக போராடியதன் விளைவாக தான் சென்னையில் 2மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு பிற பகுதிகளுக்கு சிறிது நேரம் கூடுதலாக மின்சாரம் வழங்கப்படுகிறது. பன்னாட்டு கம்பெனிகளுக்கு அளவற்ற மின்சாரத்தை வாரி வழங்கும் அரசு மக்களை இருளுக்குள் தள்ளுவதை எதிர்த்து அனைவரும் தெருவில் இறங்குவது தான் தீர்வு என்று அறைகூவி ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு, வி.வி.மு உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.

அதே போல மனித உரிமை பாதுகாப்பு மையமும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.  விருத்தாசலம் நகரம் முழுவதும் கடந்த ஒருவாரகாலமாக மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு உண்டு என்பதை விளக்கி ம.உ.பா.மை வழக்குரைஞர்கள் தெருமுனைப்பிரச்சாரம் செய்தனர். மின்பற்றாக்குறையை தீர்க்க முடியாது என அவநம்பிக்கையோடு இருந்த மக்களிடம் சமச்சீர் மின்வெட்டை முடக்கியிருக்கும் குத்தாலம், வழுதாவுர், மேட்டுர், வடசென்னை போன்ற அரசு மின் நிலையங்களை போர்க்கால அடிப்படையில் சீர் செய்தாலே மின்வெட்டை பெருமளவு சரிசெய்யமுடியும் என ஆதாரங்களுடன் பேசியதை மக்கள் ஆர்வமாக கவனித்தனர்.

அதைத் தொடர்ந்து கடந்த20 -ம் தேதி காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை விருத்தாசலம் பாலக்கரையில் நடைபெற்ற போராட்டத்தில் பல தரப்பினரும் கலந்து கொண்டனர். மழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் போராட்டம் நடக்குமா நடக்காதா என்கிற சூழல் இருந்தது. எனினும் ஒரு வார காலமாக வீடுவீடாக செய்திருந்த விரிவான பிரச்சாரத்தால் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டம் நடந்தது.

‘பவரை கையிலெடுத்தால் பவர் வரும்’ என்ற முழக்கம் அனைவரையும் ஈர்த்தது. வீட்டுக்கு ஒருவர் வீதியில் இறங்கு விலகும் உடனே மின்வெட்டு என்று போராட்டத்தை ஆதரித்து பேசியவர்கள் அனைவரும் இதற்காக ஒன்றிணைவதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினர். தனியார்மயத்தை கொண்டு வருவதற்காக தான் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. பன்னாட்டு கம்பெனிகளுக்கு 24 மணி நேரம் தடையற்ற மின்சாரத்தை வழங்கும் அரசு சிறுதொழில் நிறுவனங்களுக்கு 18 மணிநேரம் வெட்டுவதை ஏற்கக் கூடாது என்று ரிப்ராக்டரி சங்க தலைவர் திரு.சோமசுந்தரம் பேசினார். அதோடு போராட்ட நிதியை அளித்து அடுத்தடுத்து நடைபெறும் அனைத்து போராட்டத்தில் நாங்கள் கலந்து கொள்கிறோம் என்றும் அறிவித்தார்.

அனைவருக்கும் வேலை இருக்கிறது. பொதுப்பிரச்சினைகளுக்கு தனியாக நேரம் ஒதுக்கிதான் வரவேண்டும். மின்சாரம் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். மின் உற்பத்தியில் தனியார்மயத்தை அகற்ற வேண்டும். பழுதான மின் நிலையங்களை சீர் செய்ய வேண்டும் என தீர்வை சொல்லி நடைபெறும் இந்த மக்கள் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் ஊழலுக்காக நாட்டை பங்கு போட்டு விற்கின்றனர். அனைத்தும் மோசமாகிவிட்டது. பிரதிபலன் பாராமல் உண்மையாக நடத்தப்படும் இந்த போராட்டத்திற்கு நான் தொடர்ந்து ஆதரவளிப்பேன் என முன்னால் நகர் மன்றத்தலைவரும் கண் சிகிச்சை மருத்துவருமான டாக்டர் வள்ளுவன் கொட்டும் மழையிலும் குடையை பிடித்துக்கொண்டே தனது உரையை முடித்தார்.

விருத்தாசலம் வழக்கறிஞர் சங்கத்தலைவர் பட்டி முருகன் பேசும்போது சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்று மின்வாரிய அதிகாரிகள் பேசுகிறார்கள். சட்டியில் இல்லைன்னா பூட்டிட்டு போயேன். ஒன்னும் இல்லைன்னா அப்புறம் எதுக்கு மின்வாரியம், எதுக்கு  ஒழுங்குமுறை ஆணையம். இந்த பக்கம் வத்திய கொளுத்தி வச்சா கொசு அந்தாண்ட காதுல கொய்ன்னு சத்தம் போடுது தூங்க முடியல.  அந்த நேரத்துல பொம்பளைங்க கோவத்துல என்ன சொல்லி ஏசுமோ அதை அப்படியே லட்டரா எழுதி இவனுங்களுக்கு போடனும்.  எல்லோரும் கொசுவலையில தூங்க இடவசதி இல்ல. சட்னி, அரிசி மாவு எல்லாம் கிரைண்டர்ல அரைச்சு அப்படியே பாதியில நின்னு போச்சின்னா இந்த பொம்பளங்க அது இதுன்னு என்னம்மா சொல்லி ஏசுதுவோ தெரியுமா ? அப்படியே அதையெல்லாம் லெட்டர் எழுதி போடனும். சென்னக்கு ஒரு சட்டம் தமிழகத்திற்கு ஒரு சட்டமா ? இவ்வளவு பிரச்சினையிலும் மின்திருட்டு வேற.  இந்த புத்தகத்துல விவரமாக எல்லாம் இருக்கு.  இது கடையில தான் விக்குது மின்வாரிய அதிகாரிகள் படிப்பான்களா மாட்டான்களா ? படிச்சா ஏன் நடவடிக்கை எடுக்கல.

ராஜுவ் காந்தி எங்கேயோ ஓட்டல்ல சாப்பிடும் போது சோனியாவ பார்த்தாராம். அது நம்மோட கேடுகாலம். சுதந்திர போராட்டத்துல தியாகம் செஞ்ச பலபேர் பஞ்சாப்காரங்க.  அங்கயிருந்து வந்த மன்மோகன்சிங் பிளைட்டுல இருந்து எறங்குன கையோட அடுத்த பிளைட்டுல ஏறிபோறாரு. எப்பபார்த்தாலும் அந்நிய மூலதனம், அந்நிய மூலதனம், பன்னாட்டுகம்பெனி கதை தான்.  இந்திய மக்களை பத்தி ஒன்னும் பேசறது இல்ல. எல்லாத்தையும் விற்பதுதான் தனியார்மயம் அதுதான் நாட்டு வளர்ச்சியாம். இதையெல்லாம் மக்கள் கடுமையாக எதிர்த்து போராட ரோட்டுக்கு வரணும் என அரசியலை நகைச்சுவையோடு பேசி மக்களை உற்சாகப்படுத்தி சென்றார்.

அடுத்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர் சேகர் பேசினார். தோழர் குழந்தை வேலு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க வழக்கறிஞர் புஷ்பதேவன் மற்றும் போரட்டத்தை ஆதரித்து பேசிய சிதம்பரம் கலையரசன், முஜுபுர் ரஹ்மான், பெற்றோர் சங்க தலைவர் வெங்கடேசன், கருவேப்பிலங்குறிச்சி நந்தகுமார், செல்வக்குமார் என பலரும் உற்சாகமாக கலந்துகொண்டனர். மதிய உணவு அங்கேயே முடிந்தது. உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் போராட்டம் தொடர்ந்ததை கண்டு மக்கள் வியப்படைந்தனர்.

இறுதியாக மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜு பேசினார். நாங்கள் மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மட்டுமே செய்ய முடியும். அனைவரையும் பாதிக்ககூடிய மின்வெட்டுக்கு எதிராக பெருந்திரளான மக்கள் ஒன்றினைந்து போராடும் போது தான் வெற்றி பெற முடியும். தமிழகம் முழுவதும் மக்கள் போராடியதால் தான்,  ஏன் மின்வாரிய அலுவலகத்திற்கு தீ வைக்கும் அளவிற்கு கூட கொந்தளித்ததால்தான் சென்னையில் 2 மணி நேர மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக-மின்வெட்டு-ஜெயலலிதா-கார்டூன்மின்கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி மின் உற்பத்தி துறையை தனியார்மயமாக்குவதற்காக செய்யப்படும் பலவேலைகளில் இந்த மின்வெட்டும் ஒன்று.  தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் 18500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கு தமிழக அரசு அனுமதியளித்து சலுகைகளையும் வழங்கியுள்ளது. அதற்கு தேவையான நிலக்கரியை தங்கு தடையின்றி வழங்க மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. மக்களின் சிறு சிறு சேமிப்புகளையும் உறிஞ்சி எடுக்கத்தான் பொதுச்சொத்தான மின்சாரத்தை தனியாருக்கு தாரை வார்க்கின்றனர்.

பன்னாட்டு கம்பெனிகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுகிறது. அவர்கள் பெரிய ஜெனரேட்டர்களை வைத்திருக்கிறார்கள் 2,3,மணி நேர மின்வெட்டை அவர்களால் சாதாரணமாக சமாளிக்கமுடியும். ஆனால் அரசு அதை செய்ய மறுக்கிறது. ஆறுமாதத்தில் மின்மிகை மாநிலம் ஆக்குவேன் என வாக்களித்து ஆட்சியில் அமர்ந்த முதல்வர் இதற்கெல்லாம் பதில் சொல்ல மறுக்கிறார். போலீசை அனுப்பி லத்திசார்ஜ் செய்கிறார். நம்பிக்கையோடு வாக்களித்த மக்களுக்கு வாய்கரிசியாக மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.

சுனாமியின் கோரத்தை, தானே புயலின் பாதிப்பை காட்சி படிமங்களாக நாம்மால் பார்க்க முடிந்தது. அது இயற்கையின் சீற்றம். அரசு நிவாரணம் ஓரளவு கிடைத்தது. அனைவரும் ஆறுதல் கூறினோம்,உதவி செய்தோம். அதே போல மின்வெட்டின் கோரத்தை,  பாதிப்பை ஒவ்வொரு பிரிவு மக்களையும் பேசச்சொல்லி கேளுங்கள். மின் வெட்டால் அழிந்த சிறு தொழிலைப்பற்றியும், கருகிய பயிர்களைப்பற்றியும், தினக்கூலிகளான தூக்கமிழந்த தாய்மார்களின் ஆத்திரத்தை, தூக்கம் கெட்டு கொசுக்கடியில் அழும் குழந்தைகளை, ஏற்கனவே பன்றி தொழுவமாக உள்ள அரசு மருத்துவமனைகள் இந்த மழை நேரத்தில் மின்சாரம் இல்லாமல் இருக்கும் நிலையை எல்லாம் அவர்களிடம் பேசிப்பாருங்கள் இந்த அரசின் கோரமுகம் தெரியும். இந்த போராட்டத்தை அனைவரும் ஆதரிக்கிறார்கள் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எப்படி நமது கோரிக்கையை சாதிப்பது ? நமக்கு குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது. நாம் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களாக ஒன்றினைந்து போராடினால் மட்டுமே தற்போதுள்ள மின்வெட்டையும், இனி வரவிருக்கின்ற கட்டண உயர்வையும் தடுத்து நிறுத்த முடியும்.

காலை முதல் இரவு வரை நாம் அனைவரும் வாழ்க்கைக்காக ஓடிக் கொண்டுதான் இருக்கிறோம். நமக்கான அடிப்படை வசதிகள் கூட நிறைவு செய்யப்படவில்லை. உத்திரவாதம் இல்லாத வாழ்க்கைக்காக உயிரை பணயம் வைக்கும் நீங்கள் ஒருமுறை அரசை எதிர்த்து உங்களுடைய கோரிக்கைகளுக்காக போராடி வென்று பாருங்கள். அந்த வெற்றி வாழ்க்கையில் நாம் இதற்கு முன்பு இழந்த அனைத்தையும் பெறச் சொல்லும்.  எங்களுக்கு ஏற்படுகின்ற இந்த மகிழ்ச்சியான அனுபத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ள சொல்கிறோம். மின்வெட்டை மட்டுமல்ல அனைத்தையும் நாம் போராடி பெற முடியும். அடுத்தகட்ட போராட்டத்தை அனைத்து சங்கங்களையும் ஆலோசித்து அறிவிக்கிறோம். விருதை மக்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கு பெறுங்கள் என்று கூறி தனது உரையை முடித்தார்.

இந்த போராட்டம் விருதாச்சலம் பகுதி மக்களுக்கு புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஊட்டியுள்ளது.

_________________________________________________________________

-செய்தி: மனித உரிமைப் பாதுகாப்பு மையம்

__________________________________________________________________

அரவிந்த் கேஜ்ரிவால்: பாம்புகளில் நல்ல பாம்பு!

17
அரவிந்த் கேஜ்ரிவால்
அரவிந்த் கேஜ்ரிவால்
அரவிந்த் கேஜ்ரிவால்
அரவிந்த் கேஜ்ரிவால்

காங்கிரஸ்காரர்கள் ‘பொறுமைக்குப்’ பெயர் போனவர்கள். எதையும் நின்று நிதானித்து, ஆழமாய் ரசித்து, செய்து முடிப்பதில் கில்லாடிகள் என்கிற புகழ் அவர்களுக்கு உண்டு. ஒட்டுமொத்த இந்தியாவையும் ஓட்டாண்டியாக்க வேண்டுமென்கிற ஒற்றை லட்சியத்துக்காக நூற்றாண்டுகளையும் கடந்து கொஞ்சம் கொஞ்சமாய் காய் நகர்த்தும் சாமர்த்தியம் அவர்களுக்குண்டு. சட்டென்று பாய்ந்து குரல்வளையைக் கடித்துக் குதறி ரத்தம் உறிஞ்சும் பாரதிய ஜனதாவின் வழிமுறையும் காங்கிரசின் வழிமுறையும் வேறு வேறானது. முந்தையது ரத்தக்காட்டேறி என்றால் இது ராட்சச அட்டைப்பூச்சி. வலியை உணரக் காலமாகும்.

நிற்க.

இப்படியாப்பட்ட பெருமைக்கும் புகழுக்கும் சமீபமாய் பெரும் ஆபத்து வந்துள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி டீசல் விலையை உயர்த்தியது, சிலிண்டர்களுக்குக் கட்டுப்பாடு விதித்தது, ஓய்வூதியத்தை சூதாட்டத்தில் இறக்கி விட்டது, வால்மார்ட்டை நுழையவிட்டது, இன்சுரன்ஸ் துறை மற்றும் ஊடகத் துறையில் அந்நிய முதலீட்டை அதிகரித்தது, விமான சேவையில் அந்நிய முதலீட்டை அனுமதித்தது மற்றும் இறுதியாக முக்கியமான மூன்று பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முடிவு செய்தது என்று தேசத்தின் மேல் அதிரடித் தாக்குதல்களை காங்கிரஸ் கூட்டணி அரசு தொடுத்துள்ளது. இது மக்கள் மேல் தொடுக்கப்பட்ட ஒரு உள்நாட்டுப் போர்.

தலையே கூத்தாடும் போது வால் துடிக்கவாவது வேண்டுமல்லவா? தில்லி நடுத்தர வர்க்கத்தினரிடையே ஆக்ஸ்போர்டில் படித்தவர், பண்பானவர் என்றெல்லாம் பெயரெடுத்த சல்மான் குர்ஷித் நாலாந்தர ரவுடியைப் போல ‘எங்க ஏரியாவுக்கு வாடா மவனே! முழுசா திரும்பிப் போய்டுவியான்னு பாக்கறேன்’ என்பது போல மிரட்டல் விடுத்துள்ளார். யாருக்கு இந்த மிரட்டல்? அர்விந்த் கேஜ்ரிவால் தான் மிரட்டப்பட்டவர். ஆம், வினவு வாசகர்களுக்கு நன்றாக அறிமுகமான ‘ அண்ணா ஆதரிக்கிறாரு ஆனா ஆதரிக்கலை’ புகழ் கேஜ்ரிவால் தான்.

கேஜ்ரிவால் தனக்கென்று சொந்தமாக ஒரு புத்தம் புதிய அரசியல் கம்பெனி துவங்கி கோதாவில் குதித்திருப்பது வாசகர்கள் அறிந்ததே. புதுப் படமல்லவா, எனவே புரமோஷன் வேலைகள் படு ஜரூராக நடந்து வருகின்றன. நாளொரு ஊழல் குற்றச்சாட்டும், பொழுதொரு முறைகேடு புகாருமாக அம்பலப்படுத்தி டி.ஆர்.பி ரேட்டிங் பெற கடுமையாகப் போராடி வருகிறார், கேஜ்ரிவால். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களின் யோக்கியதைகள் தொடர்ச்சியாக வெளியாகி இந்திய ஓட்டுக்கட்சி ‘ஜனநாயகம்’  ஒளிவீசிப் பிரகாசித்து வருகிறது.

சமீபமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘ஊழல் எதிர்ப்பு’ ரியாலிட்டி ஷோவின் எத்தனாவதோ சீசனில் முதலில் மாட்டியவர் ராபர்ட் வதேரா. ஐம்பது லட்சத்தில் ‘தொழிலைத்’ துவங்கிய நாட்டின் முதல் மருமகனார் ராபர்ட் வதேரா, சூரியவம்சம் லாலாலா பாட்டு முடியும் இடைவெளிக்குள் முன்னூறு கோடியாக அதை வளர்த்தெடுத்ததன் பின்னே இருக்கும் இரகசியங்களை கேஜ்ரிவால் சந்திக்கு இழுத்து வந்தார். இதில் டி.எல்.எஃப் என்கிற கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ராபர்ட் வதேராவுக்கு சும்மா கைமாத்தாக பல கோடி ரூபாய்களைக் கொடுத்ததும், அதைத் தொடர்ந்து தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அரியானாவிலும் அந்நிறுவனம் அடிமாட்டு விலைக்கு நிலங்களை வளைத்துப் போட்டதும் அம்பலமானது.

அதைத் தொடர்ந்து ராபர்ட் வதேரா நேரடியாகவே அடிமாட்டு விலைக்கு நிலங்களை வளைத்துப் போட்டிருப்பதும், பல்வேறு வகையான அசையாத சொத்துக்களை வாங்கிப் போட்டிருப்பதும், இதற்கு அரசு இயந்திரமே முன்னின்று உதவியிருப்பதும் ஒவ்வொன்றாக வெளியாகி காந்தி குடும்பத்தின் மானம் கந்தல் கந்தலானது. நாட்டின் முதல் குடும்பத்தின் முதல் மருமகனாரையே சந்திக்கு இழுத்திருப்பதால் யாவாரம் சூடு பிடிக்கும் என்று கேஜ்ரிவால் எதிர்பார்த்திருப்பார். ஆனால், அவர் நினைத்த அளவிற்கு  செல்ப் எடுக்கவில்லை. தில்லி ஜந்தர் மந்தரில் வழமையாக கூடும் ஊழல்  எதிர்ப்புக் கட்சியினரின் கூட்டங்களுக்கு எப்போதும் வரும் அதே இருநூற்றி பதினேழரை பேர்கள் தான் வந்திருந்தனர்.

திரைக்கதையில் நான்கைந்து சண்டைக்காட்சிகள் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்களோ என்னவோ, ராபர்ட் வதேராவைத் தொடர்ந்து சல்மான் குர்ஷித் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்காரி ஆகியோரும் மேடைக்கு வந்துள்ளார்கள்.

சல்மான் குர்ஷித் மற்றும் அவரது மனைவி நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான என்.ஜி.ஓ அமைப்பு, சுமார் 71 லட்சம் ரூபாய் அளவிற்கு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஜாகீர் ஹுசேன் நினைவு அறக்கட்டளை எனும் பெயரில் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் அவரது மனைவி லூசி பெர்னாண்டஸும் இணைந்து நடத்தி வரும் என்.ஜி.ஓ அமைப்பு, ஊனமுற்றோருக்கு கருவிகள் வாங்கியதில் போர்ஜரி உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டு கொள்ளையடித்திருப்பதாக வட இந்தியாவைச் சேர்ந்த ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாகத் தொடங்கின.

இதையடுத்து, சல்மான் குர்ஷித் மேல் நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமரின் இல்லத்தை மாற்றுத்திறனாளிகளோடு முற்றுகையிட்டுப் போராடப் போவதாக அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து தனது தொகுதியான பரூகாபாத்தில் பேசிய போது தான் சல்மான் குர்ஷித், அரவிந்த் கேஜ்வாலுக்கு மிரட்டல் விடுத்திருந்தார்.

நிதின் கட்காரியைப் பொறுத்த வரை, ஆர்.எஸ்.எஸின் அரசியல் கம்பேனிக்கு மேனேஜர் வேலை பார்ப்பதோடு சொந்தமாக பூர்த்தி சின்ச்சன் கல்யான்காரி சன்ஸ்தா என்கிற தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்திற்கு பெயர் பலகை அமைப்புகள் பலவற்றிடம் இருந்து எந்த முகாந்திரமும் இல்லாமல் கோடிக்கணக்கான முதலீடுகள் வந்து குவிந்துள்ளன.

1995-ம் ஆண்டிலிருந்து 1999-ம் ஆண்டுவரை மகாராஷ்டிராவை ஆட்சி செய்த சிவசேனா – பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த நிதின் கட்காரி, ஐடியல் ரோடு பில்டர் எனும் கம்பெனிக்கு பல்வேறு கட்டுமானக் காண்டிராக்டுகளை வாரி வழங்கியுள்ளார். 1996-ல் 46 கோடி ரூபாயாக இருந்த இந்நிறுவனத்தின் வருமானம் 1999-ம் ஆண்டு வாக்கில் 67 கோடிகளாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஐடியல் நிறுவனம் தனது இன்னொரு துணை நிறுவனமான குளோபல் சேப்டி விஷன் வழியாக நிதின் கட்காரியின் பூர்த்தி நிறுவனத்திற்கு எந்த அடிப்படையும் இல்லாமல் ‘கடனாக’ 165 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. மேலும் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களை நிதின் கட்காரி மகாராஷ்டிர அரசின் துணையோடு ஆக்கிரமித்திருப்பதும் அம்பலமானது.

இப்படியாக கேஜ்ரிவால் தன்னைச் சுற்றி 360 டிகிரியிலும் கற்களை சராமாரியாக எறிந்து வருவது தேசிய ஊடகங்களில் பரபரப்பான செய்திகளாக இடம் பெற்று வருகின்றன.

இதில் பாரதிய ஜனதாவின் நிலை தான் உண்மையிலேயே நகைச்சுவையாய் இருக்கிறது. காங்கிரசு சேற்றில் சிக்கித் தவிக்கிறதே என்று இவர்களால் குதூகலிக்கவும் முடியாதபடிக்கு மலக்குட்டைக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் எதிர்ப்பு ரியாலிட்டி ஷோவிலிருந்து கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆகவில்லை என்பதால் வெளியேற்றப்பட்டுள்ள பாரதிய ஜனதா, வைல்ட் கார்ட் ரவுண்டிலாவது இடம் கிடைக்க வேண்டுமே என்று தவியாய்த் தவிக்கிறது. நடக்கும் நாடகத்தில் எந்த கதாபாத்திரத்தின் வாலைப் பிடித்துக் கொண்டு தொங்கலாம் என்கிற முடிவை வழக்கம் போல் இன்னும் வலது இடது போலி கம்யூனிஸ்டுகள் எடுத்து முடிக்கவில்லை. எடுத்து விட்டாலும் அது அவர்களின் பாரம்பரிய வழக்கத்தின்படி மொக்கையாய்த் தான் இருக்குமென்பதால் அதைப் பற்றி மக்களே கவலைப்பட மாட்டார்கள். போகட்டும்.

அரவிந்த் கேஜ்ரிவாலின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஒரு குறிப்பான பிரச்சினைக்காக போராடும் இயக்கம் என்பதைக் கடந்து பொதுவான அரசியல் கட்சி என்கிற அவதாரத்தை எடுத்துள்ளது. இவர்கள் ஊழல் எதிர்ப்பு மற்றும் அதற்கான தீர்வாக ஜன்லோக்பால் மசோதா என்பவற்றை முன்வைத்து இயங்கிய போதே பிரச்சினைகளைப் பற்றி கொண்டிருந்த கண்ணோட்டம் அபாயகரமானது. ஊழல் ஒழிப்பு என்பதைப் பற்றிப் பேசும் போதே அதற்கான அடிப்படைகளையும் அதன் ஊற்றுமூலம் என்னவென்பதையும் பற்றி பேசாமல் தவிர்த்தே வந்தனர்.

அதன் காரணமாகவே  இந்த நாட்டின் மிகப் பெரிய கிரிமினல் கும்பலான ரிலையன்ஸ் குழுமத்திடமிருந்தும் கூட உதவிகளைப் பெற்றுக் கொண்டனர். அலைக்கற்றை ஊழலில் தின்று வீங்கிய செல்பேசி நிறுவனங்கள் முன்வந்து வழங்கிய உதவிகளை எந்தக் கூச்சமும் இல்லாமல் பெற்றுக் கொண்டே ஊழலை எதிர்த்து முழக்கமிடத் தயங்கவில்லை.

பன்னாட்டு மூலதனத்தின் முன்னும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளிடமும், மேல்நிலை ஏகாதிபத்தியங்களின் பாதார விந்தங்களிலும் இந்தியப் பொருளாதாரமே அடகு வைக்கப்பட்டு விட்ட நிலையில், அவர்களின் லாப வேட்டைக்கும் பகாசுர கொள்ளைக்கும் தேசத்தின் எல்லைகள் அகலமாகத் திறந்து விடப்பட்டுள்ளன. இந்த அடிப்படையிலிருந்தே, இந்நாட்டின் வளங்களை வேண்டிய மட்டிலும் கூடிய விரைவில் உறிஞ்சித் தீர்த்து விட இவர்கள் வெறி கொண்ட முறையில் முயற்சிப்பதிலிருந்து தான், சட்டங்கள் நடைமுறைகள் விதிமுறைகள் மரபுகள் என்று சகலமும் கழிவறைத் தொட்டிக்குள் வீசியெறியப்படுகிறது. ஊழல் துவங்குகிறது.

அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் வெட்டியெடுத்ததாக சொல்லப்படும் கிரானைட் ஊழலைப் பற்றிப் பேசும் போது பி.ஆர்.பிக்கு எந்த வரைமுறையும் இன்றி மலைகளைப் பட்டா போட்டுக் கொடுக்க வகை செய்த அரசின் தனியார்மயக் கொள்கைகளில் இருந்து தான் துவங்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் சொந்தமான இயற்கை வளம் ஒன்றை பி.ஆர்.பி என்கிற தனி நபருக்குச் சொந்தமாக்க வேண்டும் என்பதில் இருந்து தான் ஊழல் துவங்குகிறது. இதில் அனுமதிக்கப்பட்ட அளவு என்பதெல்லாம் வெறும் கேலிக்கூத்து – குரல்வளையை ஒரு இஞ்சு ஆழத்துக்கு அறுக்க அனுமதி; அதற்கு மேல் அனுமதியில்லை என்பதைப் போன்ற வாதம் தான் அது.

கேஜ்ரிவால் ஊழல் பற்றி பேசுகிறார். ஊழல் செய்தவர்களை அம்பலப்படுத்தி பேசுகிறார். சவால் விடுத்துப் பேசுகிறார். ஆனால் இதற்கு யாரெல்லாம் – எதெல்லாம் காரணமோ அவற்றைப் பற்றி மட்டும் பேசாமல் தவிர்க்கிறார். ஊழல் ஒழிப்புக்கான வருத்தமில்லா வாலிபர் சங்கமாக இருந்து அதன் அடித்தளத்தின் மேல் இப்போது அவதரித்திருக்கும் கட்சியின் நிலைப்பாடு இப்படித்தான் இருக்கும் என்பது ஆபத்துக்குரியது.

இன்றைய நிலையில் ஆளும் கும்பல் தேசத்தின் மக்களின் மேல் ஒரு உள்நாட்டுப் போரைத் திணித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயராத நிலையிலும் எந்தக் காரணமும் இன்றி டீசல் விலை உயர்த்தப்பட்டதால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டுமளவிற்கு அதிகரித்துள்ளன. மின் உற்பத்தியும் வினியோகமும் தனியார் நிறுனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டதால் மின்சார கட்டணம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. தண்ணீர் வினியோகமும் கொஞ்சம் கொஞ்சமாக தனியார்களுக்குத் திறந்து விடப்பட்டு விட்டது.

“நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சேன். இப்ப ஜாலியா இருக்கேன். நான் ஏன் போராடணும்” என்று கிண்டலாக கேட்கும் தடித்தோல் கனவான்களுக்கும் ஆப்பு வந்துள்ளது மன்மோகன் மாண்டேக் சிதம்பரம் கும்பலால். உழைப்பால் உயர்ந்த விக்கிரமன் பட ஹீரோக்களின் ஓய்வூதியத்தையும் சேமிப்பையும் காப்பீட்டையும் சூதாட்டத்தில் இறக்கி விட அரசு தயாராகி வருகிறது. இன்று கிரீஸிலும் ஐரோப்பாவின் பிற நாடுகளிலும் நடப்பது நாளை இங்கும் நடக்கும். இதெல்லாம் தாராளமய பொருளாதார சீர்திருத்தத்தின் பல்வேறு கட்டங்களாய் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இன்சுரன்ஸ் துறையில் அந்நிய முதலீடு, ஓய்வூதியத்தை தனியாருக்கும் அந்நியருக்கும் திறந்து விடுவது, பச்சை வேட்டை, வேதாந்தாவின் சுரண்டல், 2-ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் வீட்டு மனை ஊழல், பி.ஆர்.பியின் மலைத்திருட்டு, ப.சிதம்பரத்தின் கள்ளச் சிரிப்பு, மன்மோகனின் கள்ள மௌனம், நிதின் கட்கரியின் நில மோசடி, ராபர்ட் வதேராவின் நில மோசடி, ராகுல் காந்தியின் ஃபிராடுத்தனம், நரேந்திர மோடியின் இதழோரம் வழியும் இரத்தம், விலைவாசி உயர்வு, மின் தட்டுப்பாடு – இவையனைத்தும் வேறு வேறு அல்ல. தேசத்தின் இறையாண்மையை ஒட்டுமொத்தமாக அடகுவைத்து நாட்டை மீண்டும் காலனியாக்கும் ஒரு  மாபெரும் நிகழ்ச்சி நிரலின் சின்னச் சின்ன பகுதிகளாக செயல்படுத்தப்படும் திட்டங்களின் வெளிப்பாடுகள் தான் இவை.

ஆக, இவையனைத்துக்கும் மையமான பிரச்சினையாக விளங்கும் காரணத்தைப் பற்றிப் பேசாமல் தவிர்ப்பதென்பது அதற்குச் சேவை செய்வதில் தான் முடியும். அந்த வகையில் தான் ஊழலின் அடிப்படையை பற்றிப் பேசாமல் தவிர்க்கும் அரவிந்த் கேஜ்ரிவால் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, தனியார்மயமாக்கம், பன்னாட்டு மூலதனத்தின் சுரண்டல் போன்றவைகளையும் பேசாமல் அமைதி காக்கிறார்.

போராடும் மக்களை திசை திருப்புவதற்காக ஏகாதிபத்தியங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட என்.ஜி.வோ பாணியிலான அரசியல் இயக்கம்தான் அரவிந்த கேஜ்ரிவால் மற்றும் அண்ணா ஹசாரேவுடையது. பரபரப்பான முழக்கங்கள், கிளர்ச்சிகள், வாய்ச் சவடால்கள் என்று வடிவத்தில் புரட்சியையும், உள்ளடக்கத்தில் ஆளும் வர்க்க சேவையும்தான் இத்தகைய தன்னார்வக்குழுக்கள் கொண்டிருக்கின்றன.

மாறி மாறி வரும் ஓட்டுக்கட்சிகளின் அரசாங்கங்களின் ஆட்சியின் கீழ் தொடர்ந்து தாம் வஞ்சிக்கப்படுவதை மக்கள் ஒருவேளை உணர்ந்து விழிப்படைந்து விட்டால் அவர்களுக்கு ஒரு மாற்று இருக்கட்டுமே என்பது தான் கேஜ்ரிவாலுக்கு முதலாளிததுவ ஊடகங்களில் கிடைக்கும் முக்கியத்துவத்தின் அடிப்படை. ஒருவேளை காங்கிரசும் பாரதிய ஜனதாவும் தமது ஊழல் மகாத்மியங்களால் மக்களில் ஒரு பிரிவினரிடையே செல்வாக்கிழந்து போனால் அந்த இடைவெளியை அரவிந்த் கேஜ்ரிவால் நிரப்புவது போன்ற மாயையைத் தரக்கூடும். ஆனால் அந்த மாயை எதையும் சாதித்து விடாது என்பதும் ஆளும் வர்க்கத்திற்கு தெரியும். அவர்களுக்குத் தேவை மேடையில் பரபரப்பாக நடிக்கும் ஒரு நடிகன். “நல்ல நடிகன்”.

அதாவது, ‘நல்ல’ தாலிபான்கள்,  ‘நல்ல’ பாம்பு  என்றெல்லாம் சொல்வார்களே அதுபோல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

– தமிழரசன்.

புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

0

புதிய-கலாச்சாரம்-அக்டோபர்-2012

புதிய கலாச்சாரம் அக்டோபர்  2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

1. டூனாயுதம்
ரவியின் கேலிச்சித்திரங்கள்!

2. அரியானா: ஆதிக்கச் சாதிவெறியின் வக்கிர முகம்!
நிலப்பிரபுத்துவக் கொடுங்கோல் நிறுவனமான காப் பஞ்சாயத்து, பெண் சிசுக்கொலை, ஜாட் திமிர், பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைச் சுரண்டல் மீது கட்டப்பட்ட தொழில்துறை வளர்ச்சி – போன்ற பலவற்றுக்கும் இழிபுகழ் பெற்றது அரியானா மாநிலம்.

3. டி.வீ.சீரியல்கள்: எண்ணி மாளாத பன்றிக் குட்டிகள்!
தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு (சீரியல்களுக்கு) அடிமையானவர்களை மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்ட பலி ஆடுகளுக்கு ஒப்பிடுவதா, டாஸ்மாக் அடிமைகளுக்கு ஒப்பிடுவதா என்று தெரியவில்லை.

4.தேவனின் திருச்சபை! மாஃபியாக்களின் கருப்பை!!
தம் வாழ்நாளை ரோம சாம்ராஜ்ஜியத்துக்கு எதிரான கலகங்களோடும், குஷ்டரோகிகளோடும் கழித்து, யூதர்களிடையே சமூக சீர்திருத்தங்கள் கோரி, இறுதியாக சிலுவையில் மரித்துப் போன வெகுளித்தனமும், வெள்ளந்தித்தனமும் நிரம்பிய ஏசு எனும் வரலாற்று மனிதன் என்றோ ஒரு நாள் தனது பெயரால் இப்படியொரு மிருகத்தனமான நிறுவனம் எழுந்து நிற்கும் என்று கற்பனை செய்திருப்பானா?

5. திரை விமரிசனம்: ‘தி சால்ட் ஆஃப் த எர்த்’: மண்ணின் உப்பு! அமெரிக்க அரசின் வெறுப்பு!!
குப்பைகள் முதல் காமக் களியாட்ட வக்கிரங்கள் வரை சகலத்தையும் அனுமதித்து, கருத்துச் சுதந்திரத்தின் சொர்க்கம் என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளும் அமெரிக்கா, இந்தப் படத்தை தடை செய்யக் காரணம் என்ன? அமெரிக்க அரசு பயந்து, தொடை நடுங்கும் அளவுக்கு இந்தப் படத்தில் என்ன இருந்தது?

6. மண்ணிற் சிறந்த மலர்கள்! பு.மா.இ.முவின் போராட்டப் பெண்கள்!!
தாக்குதலுக்குள்ளாகி சிறை சென்ற பு.மா.இ.மு வின் மாணவிகள் மற்றும் இளம் பெண்களைச் சந்தித்தபோது, அவர்கள் போலீசு கொட்டடியில் பெற்ற அனுபவங்களை இயல்பாக விவரித்தனர். தெருவில் தாக்கப்பட்டு வேனில் ஏற்றப்பட்ட நிமிடம் தொடங்கி, சிறைக்கு அனுப்பப்படும் வரையிலும் அவர்கள் போலீசுடன் பெற்ற அனுபவம், அத்தோழர்களின் வலிமைக்கு சான்று கூறுவது மட்டுமின்றி, போலீசுடைய பலவீனத்தின் எல்லாப் பரிமாணங்களையும் நமக்கு காட்டுகிறது.

7. வாழ்க்கை: மாருதி, ஹூண்டாயைச் சுமக்கும் மனிதர்கள்!
பன்னாட்டுக் கம்பெனிகளின் இந்த சொகுசு கார்களில் ஏறிப் பறப்பவர்களுக்கு இந்தக் கார்கள் எத்தகைய கொத்தடிமைக் கூடாரங்களில் தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியாத ஒன்று. இந்நிலையில் அந்தக் கார்களை இந்தியா முழுவதும் கொண்டு செல்பவர்களைப் பற்றியும் பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.  அப்படி இந்தக் கார்களை ஒவ்வொரு ஊரின் சாலைகளிலும் இறக்கி விடும் லாரி ஓட்டுநர்களின் கதை இது.

8. பார்ப்பனர்களின் குத்தாட்டத்தில் பழனி!
பழனி எனும் திருஆவினங்குடி அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாம். இருந்த போதிலும் வருமானத்தில்  இதுதான் முதல் இடமாக இருக்கும். இங்கே முருகன் மட்டும் தான் ஆண்டி – அந்த ஆண்டிக்குச் சேவை செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் பண்டாரங்களெல்லாம் ஃபாரின் ரிட்டர்ன் மாப்பிள்ளைகள் போல ஆடும் ஆட்டம் சொல்லி மாளாது.

9. டி.ஆர்.பி.ரேட்டிங்கும் கல்லாப் பெட்டிச் சண்டையும்!
இது என்.டி.டி.வி.க்கும், ஏ சி நீல்சனுக்கும் இடையேயான கொடுக்கல் வாங்கல் தகராறு மட்டும் அல்ல.  தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காகவும், பொழுது போக்குக்காகவும் மக்கள் கணிசமான நேரத்தைச் செலவிடும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எந்த அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன என்பதைப் பற்றிய வழக்கு இது. ’எத்தகைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக வேண்டும்? அதை யார் தயாரிக்க வேண்டும்? எந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டும்?’ என்பன போன்ற  முக்கிய முடிவுகள் எப்படி எடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றிய வழக்கு இது.

10. உண்மைச் சம்பவம்: மண்ணுள்ளிப் பாம்பிடம் மயக்கம்!
முடிவு என்னவோ எடுத்து விட்டான் – ஆனால் எப்படிச் செயல்படுத்துவது? எப்படி பணக்காரன் ஆவது? என்ன தொழில் செய்வது? எப்படி வேகமாக வளர்வது? சரியாக இந்த இடத்தில் தான் கணேசன் பல சவால்களைச் சந்தித்தான். அம்பானியில் இருந்து பில்கேட்ஸ் வரை பணக்காரர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களையெல்லாம் கோவை டவுண் ஹாலில் இருக்கும் விஜயா பதிப்பகத்தில் காசு கொடுத்து வாங்கிப் படித்துப் பார்த்தான். புரியவில்லை என்பது உடனடி விளைவு.  குழப்பமடைந்தான் என்பது தான் நீண்ட கால விளைவு. கடைசியில் வேறு வழியின்றி கணேசன் எடுத்த முடிவு தான் அவன் வாழ்க்கையின் மாபெரும் திருப்புமுனை.

11. மரணப் படுக்கையில் ஒரு அருவி!
கரடுமுரடான பெரும் பாறைகளைக் கொண்டு கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் மலைத் தொடர். அதன் மேல் உறுதியாகக் கால் பதித்து, எம்பி உச்சியிலே விரிந்து கிடக்கும் பிரகாசமான நீல வானத்தை எட்டிப் பிடிக்க ஆவல் கொண்டு நீளும் ஆயிரமாயிரம் பசுந்தளிர்க் கரங்களாய்  நெடிதுயர்ந்து நிற்கும் கானகம். இதில் இடையீடு செய்ய விரும்பாது அக்கணமே தானுருகித் தரையிறங்கும் கார் மேகம்.  அந்த வானமிழ்தம் போய்ச் சேர தன் வலப்புறத்தில் வழி விலகிய பாறை.  அந்த முகத்துவாரத்தில் இருந்து பொங்கும் பூம்புனலாய்ப் புறப்படும் ஓர் அருவி.

12. அழிபடல் சரியோ அண்ணாச்சிக் கடைகள்?
பசி, நீர் ஒடுக்கி

சிறு நீர் அடக்கி, கிட்னி கெட்டு நல்லது கெட்டது, நாள் கிழமை பார்க்காமல் தெருவை நம்பியே கதியெனக் கிடக்கும் அண்ணாச்சி வாழ்க்கையைக் காவு வாங்க வருகிறது ’வால் மார்ட்’

புதிய கலாச்சாரம் அக்டோபர்  2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)