ண்பர்களே…

பொ.வேல்சாமி
வீரமா முனிவர், டேனியல் புவர், லீவை போல்டிங், மைரன் உவின்சிலோ, எச்.ஆர் ஹொய்சிங்டன், ரேனியஸ், சாமுவேல் பிஸ்க் கிறீன், எல்லீஸ், துரு பாதிரியார், கால்டுவெல், சார்லஸ் கிரால், சாமுவேல் பிள்ளை, சைமன் காசிச் செட்டி, ஜான் முர்டாக், ஹெச் பவார், பர்னல், ஜி.யூ.போப், ஆறுமுகநாவலர், தாமோதரம்பிள்ளை, சதாசிவம்பிள்ளை, உ.வே.சா., ஆப்ரகாம் பண்டிதர், சுவாமி விபுலானந்தர், பாரதியார், பாரதிதாசன், பாண்டித்துரை தேவர், திரு.வி.க., வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீ., ரா.ராகவையங்கார், மு.ராகவையங்கார், ந.மு.வேங்கடசாமி நாட்டார், அவ்வை துரைசாமி பிள்ளை, தண்டபாணி தேசிகர், பொ.வே.சோமசுந்தரனார், மு.அருணாசலம், தி.வே.கோபாலய்யர் இப்படி வெளிநாட்டினரும் உள்நாட்டினருமான பல மனிதர்கள் தங்களுடைய வாழ்நாள் முழுமையும் பாடுபட்டு தமிழ்மொழியை வளர்த்தார்கள். இத்தகையவர்களின் கடுமையான உழைப்பை அரசியல்வாதிகளில் பலர் பிற்காலங்களில் அதிகாரமாகவும் செல்வமாகவும் அறுவடை செய்து தங்கள் குடும்பங்களை வளர்த்தார்கள்.

இன்றைய (26.08.18) இந்து தமிழ் பத்திரிகையில் வை.கோ. வைரமுத்துவைப் பற்றிக் கூறியதாவது….“தமிழ்தான் எங்கள் அடையாளம், பண்பாடு, பூகோளம். அந்த(த்)தமிழுக்கு ஒரு வரலாற்றை உருவாக்கியவர் வைரமுத்து. அவரது எழுதுகோலுக்கு தலை வணங்குகிறேன்..”

அரசியல்வாதிகளும் தமிழ்ப்பிழைப்புவாதிகளும் ஒருவரை ஒருவர் எப்படி வேண்டுமானாலும் பாராட்டிக் கொள்ளுங்கள். அது உங்கள் தொழிலுக்குத் தேவையானது. ஆனால் அத்தகைய பேச்சுகளை பொதுமையாக்காதீர்கள். கேட்பவர்கள் அனைவரையும் “கேனையர்கள்” என்று நினைத்துவிடாதீர்கள்.
சிந்திக்கத் தெரிந்தவர்களும் உண்மையைப் புரிந்துகொள்ளும் திறன் உடையவர்களும் ஒவ்வொரு சமூகத்திலும் கணிசமான அளவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

வைரமுத்து தமிழை வைத்து பாட்டெழுதி பேரும் புகழும் பெற்றார் என்பதை எல்லோரும் அறிவார்கள். அதேசமயம் தமிழுக்கு ஒரு வரலாற்றை உருவாக்கினார் என்று வை.கோ புல்லரிப்பது புரியவில்லை.

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்