உலக மகிழ்ச்சி அறிக்கை 2024 ஓர் அலசல்

மக்களின் மனநலம் மற்றும் சமூக நிலைமைகளுக்கு இடையே உள்ள நெருக்கமான உறவு பெரும்பாலும் மறைக்கப்படுகிறது. மேலும் மனஅழுத்தத்திற்கு பின்னுள்ள சமூக காரணிகள் புறம்தள்ளப்பட்டு வெறுமனே அறிவியல் சொற்களால் அவை மூடப்படுகின்றன.

டந்த மார்ச் 13 ஆம் தேதி மகிழ்ச்சி அறிக்கை (World Happiness Report – WHR) வெளிவந்தது. 2012-ஆம் ஆண்டு முதல் உலக மகிழ்ச்சி அறிக்கை ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் தேதி சர்வதேச மகிழ்ச்சி தினத்தன்று வெளியிடப்பட்டு வருகிறது.

உலக மகிழ்ச்சி அறிக்கை (World Happiness Report) என்பது கால்அப் (Gallup), ஆக்ஸ்போர்டு நல்வாழ்வு ஆராய்ச்சி மையம் (Oxford Wellbeing Research Centre), ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி மற்றும் தீர்வுகளுக்கான அமைப்பு (UN Sustainable Development Solutions Network) மற்றும் WHR (World Happiness Report) ஆசிரியர் குழு ஆகியவற்றின் கூட்டுமுயற்சியில் தயாரிக்கப்படுவதாகும்.

இந்த கூட்டமைப்பு வெளியிட்ட 2024-ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில், தொடர்ந்து ஏழாவது முறையாக பின்லாந்து முதல் இடத்தைப்பிடித்துள்ளது.

143 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 126-ஆவது இடத்தில் உள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ’விஷ்வகுரு’ மோடியின் ஆட்சியின் கீழ் நமது இந்திய மக்கள், பாகிஸ்தான், லிபியா, ஈராக், நைஜர் மற்றும் போர் பதற்றச்சூழலில் சிக்கியிருக்கும் பாலஸ்தீனம் போன்ற நாட்டில் வாழும் மக்களைக்காட்டிலும் மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கின்றனர் என்கிறது இந்த அறிக்கை.


படிக்க: உலக மகிழ்ச்சி அறிக்கை 2022 : 136வது இடத்தில் இந்தியா !


பின்லாந்தை தொடர்ந்து டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், இஸ்ரேல், நெதர்லாந்து, நார்வே, லக்ஸம்பர்க், ஸ்விட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களை பிடித்துள்ளன. ஆஃப்கானிஸ்தான் கடைசியிடத்தில் உள்ளது.

இந்தியாவில் முறையான கல்வியில்லாதவர்கள், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்கள் ஆகியோருடன் ஒப்பிடும்போது, இடைநிலை அல்லது உயர்கல்வி பெற்ற முதியோர்களும், சாதிய அடுக்கில் மேலே உள்ளவர்களும், உயர்ந்த வாழ்க்கைத்தரத்துடன் திருப்திகரமான வாழ்க்கையை வாழ்வதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இந்த ஆய்வில் முதல் முறையாக அமெரிக்கா முதல் 20 இடங்களில் இருந்து பின்னுக்குத்தள்ளப்பட்டுள்ளது பற்றியும், அங்குள்ள குழந்தை மற்றும் இளமைப்பருவங்களில் இருப்பவர்களைக்காட்டிலும் 30 வயதை கடந்தவர்கள் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், வயது வரம்பு கூடும்போது மகிழ்ச்சிக்கான குறியீடுகள் சரிவதையும் இந்த அறிக்கை மூலம் அறியமுடிகிறது.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ஸ்லோவேனியா, செக்கியா மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகளின் செயல்பாடுகளால் அவை முதல் 20 இடங்களுக்குள் வந்துள்ளன. இங்குள்ள இளைஞர்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகளைகாட்டிலும் சிறப்பான வாழ்நிலையை கொண்டுள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியரான ஜான்-இம்மானுவேல் டி நெவ், தெரிவித்துள்ளார்.


படிக்க:ஆக்ஸ்ஃபாம் அறிக்கை: தொடர்ந்து வறுமைக்குத் தள்ளப்படும் உழைக்கும் மக்கள்


மகிழ்ச்சியின் பக்கங்களை காட்டும் குறியீடுகளைக் கடந்து பார்த்தோமேயானால் உலகில் மூன்றில் ஒருவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. மேலும், உலகில் 2.3 கோடி மக்கள் ஸ்கிசோஃப்ரினியாவின் (மனச்சிதைவு நோய்) அறிகுறிகளை அனுபவிப்பதாகவும், அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் எட்டு இலட்சம் பேர் இதனால் தற்கொலை செய்து கொள்வதும் தெரியவந்துள்ளது. மேலும், ஏகபோக முதலாளித்துவ நாடுகளில் ஆயுட்காலம் குறைவதற்கு மனநலக் கோளாறுகள் முக்கிய காரணமாக அமைகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில், பதினெட்டு முதல் அறுபத்தைந்து வயதுக்குட்பட்ட வயது வந்தோரில் 27 சதவிகிதம் பேர் மனநலச் சிக்கல்களை அனுபவிப்பது தெரியவந்துள்ளது. மேலும், இங்கிலாந்தில் மட்டும் கடந்த இருபது ஆண்டுகளாக படிப்படியாக கடுமையான மன அழுத்தம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

மனஅழுத்தம் பற்றி நாம் விவாதிக்கும் போது, முதலாளித்துவ சமூகத்தில் மன அழுத்தத்தை உயிரியல் காரணிகளை கொண்டு ஆராய்வதிலும் அவற்றிற்கான மருந்து விற்பனைகளை அதிகரிப்பதற்குமே அதீத கவனம் செலுத்தப்படுகிறது. மேலும் மனஅழுத்தத்திற்கான மரபணு சார்ந்த ஆராய்ச்சியிலும் பலர் இறங்கியிருக்கிறார்கள்.

இதன் விளைவாக மூளையில் உள்ள இரசாயன மாற்றங்கள் காரணமாகவும், செரடோனின் மற்றும் டோபமைன் போன்ற ஹார்மோன்களின் செயல்பாட்டில் ஏற்படும் தாக்கங்களுமே மனஅழுத்தத்திற்கான காரணிகள் என நிறுவுவதற்கு ஆராய்ச்சியாளர்கள் முயலுகிறார்கள். எனினும் மரபணு ரீதியான காரணம் தான் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது என்பதற்கான எந்த அடிப்படையையும் இவர்களது ஆராய்ச்சிகளால் நிறுவமுடியவில்லை. இது மட்டுமல்ல பலவித மன அழுத்த வடிவங்களுக்கு பொருத்தமான காரணிகளை கண்டடைய முடியாமல், உயிரியல் காரணிகளை கொண்டே இவற்றுக்கான முடிவுரையை எழுதமுற்படுகிறார்கள்.

இதன்மூலம் நாம் அறியமுடிவது என்னவென்றால், மக்களின் மனநலம் மற்றும் சமூக நிலைமைகளுக்கு இடையே உள்ள நெருக்கமான உறவு பெரும்பாலும் மறைக்கப்படுகிறது. மேலும் மனஅழுத்தத்திற்கு பின்னுள்ள சமூக காரணிகள் புறம்தள்ளப்பட்டு வெறுமனே அறிவியல் சொற்களால் அவை மூடப்படுகின்றன.


படிக்க: இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு: ஆக்ஸ்ஃபாம் அறிக்கை


இதன் காரணமாகத்தான் தான் மனஅழுத்தம் குறித்தான காரணிகளை ஆராயுமிடத்தில், குறிப்பிட்ட மக்கள் வாழும் சமூகத்தின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளின் பங்கையும் சேர்த்து ஆராயவேண்டும் என்கிறோம். இந்த காரணிகளை ஆராயும் நமக்கு புலப்படுவது என்னவென்றால் முதலாளித்துவ சமூகத்தில் வாழும் மக்கள் அதிக மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பது தான்.

“சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை இல்லாத சமூகத்தில் மனஅழுத்தம் என்பது அறவேயில்லாமல் நீங்கும்”, என்பதை புகழ்பெற்ற மார்க்சிய அறிஞரான இயன் பெர்குசன் நமக்கு எடுத்துரைக்கிறார்.

ஒரு மனிதன் முறையான மன ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு, அவருக்குத் தேவையான அடிப்படையான பொருட்களை பெறுவதற்கு தேவையான செல்வத்தை ஈட்டுவதில் அவருக்கு எந்த தடைக்கற்களும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது முதற்படி. ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் இது எல்லா மக்களுக்கும் சாத்தியப்படாத ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே.

முதலாளித்துவ சமூகத்தில் வேலை மற்றும் ஓய்வு ஆகிய இரண்டுக்குமான இடைவெளி கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. வேலை மற்றும் ஓய்வு ஆகிய இரண்டின் நோக்கமும், நுகர்வை அதிகரிக்கச் செய்வதைதாண்டி வேறில்லை என்ற கட்டத்திற்கு மக்களை முதலாளித்துவம் நகர்த்துகிறது.


படிக்க:ஹூரன் ஆய்வறிக்கை: பணக்காரர்களை உரமிட்டு வளர்க்கும் மோடி அரசு


ஒரு பொருளானது அவற்றின் பயன்பாட்டிற்காக நுகரப்படுவதில்லை. நுகர்வு என்பது ஒரு தனிநபரின் சமூக நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு வழிமுறையாக மட்டுமின்றி சமூக கௌரவத்தின் அடையாளமாகவும் தற்போது மாறிவிட்டதை நம்மால் காணமுடிகிறது.

பழைய தயாரிப்புகளில் இருந்து புதியவற்றிற்கு மாறுவதற்கான விருப்பமும்கூட அந்த பொருளின் வாழ்நாள் இருப்பைத்தாண்டி, ஒவ்வொருவரும் தன்னுடைய சமூக அந்தஸ்தை வெளிப்படுத்தும் பொருட்டு புதியவற்றை வாங்கியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த முதலாளித்துவ சமூக அமைப்பு. எவ்வாறாயினும், நுகர்வுத்தன்மையானது இறுதியில் அதிருப்தியை மட்டுமே வளர்க்கிறது.

நீங்கள் எவ்வளவு குறைவாகச் சாப்பிடுகிறீர்களோ, தண்ணீர் குடிக்கிறீர்களோ, புத்தகங்கள் வாங்குகிறீர்களோ, சினிமாவுக்கும், சுற்றுலாவுக்கும், சிற்றுண்டி விடுதிக்கும் எவ்வளவு குறைவாகப் போகிறீர்களோ, எவ்வளவு குறைவாகச் சிந்திக்கிறீர்களோ, காதலிக்கிறீர்களோ, பேசுகிறீர்களோ, பாடுகிறீர்களோ, குடும்பத்தோடு நேரம் செலவிடுகிறீர்களோ, விளையாடுகிறீர்களோ அவ்வளவு அதிகமாக நீங்கள் சேமிப்பீர்கள், உங்கள் செல்வம், உங்கள் மூலதனம், நீங்கள் திரட்டியிருக்கும் பொருள்கள் அதிகரிக்கும்.

உங்கள் நுகர்வுத் தேவையை பூர்த்திசெய்ய இப்படியான வாழ்க்கைமுறைக்கு உட்பட்டிருத்தல் வேண்டும் என்று நமக்கான அறிவுரையை முதலாளித்துவ வல்லுநர்கள் எடுத்துரைக்கிறார்கள்.


படிக்க: ஆக்ஸ்ஃபாம் அறிக்கை : இந்திய பட்ஜெட்டோடு போட்டி போடும் பில்லியனர்கள் !


சமூக ஏற்றத்தாழ்வுகள், ஆண்-பெண் சமத்துவமின்மை, நிலையான வாழ்க்கையின்மை, வெறும் 2 சதவிகித பணக்காரர்களிடம் 80 சதவிகித செல்வம் இருப்பது, கடைநிலை 50 சதவிகித மக்களிடம் வெறும் 3 சதவிகித செல்வம் இருப்பது, மனிதர்களை பாகுபடுத்தும் மதவெறி, நிறவெறி, சாதிவெறி, போதிய ஊட்டச்சத்தின்மை, நாடுகளுக்கிடையேயான போர்ப்பதற்றம் என எல்லாமும் முதலாளித்துவ சமுயாதயத்தின் விளைவுகளே.

இப்படிப்பட்ட சுரண்டல்தன்மை கொண்ட, சமத்துவமற்ற இந்த சமூக பொருளுற்பத்தி முறையை புறந்தள்ளிவிட்டு, வெறும் அகக்காரணிகளாக இருக்கும் உயிரியல் காரணிகளை மட்டும் கணக்கில்கொண்டு நம்மால் மனஅழுத்தத்திற்கான தீர்வை எந்தக்காலத்திலும் எட்டமுடியாது.

மனிதனை மனிதன் சுரண்டாத, எல்லாருக்கும் எல்லாமும் என்ற சமத்துவ சமுதாயத்திற்கான பாதையே ஒட்டு மொத்த மனிதகுலத்தின் மகிழ்ச்சியான வாழ்வுக்கான வழியாகும்.


‌லோகு

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க