Thursday, July 31, 2025
முகப்பு பதிவு பக்கம் 243

பாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் !

0

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 05-08-2020 அன்று அயோத்தியில் இராமன் கோவிலுக்கு பூமி பூஜை செய்து வைத்தார். பாபர் மசூதி இருந்த இடத்தில், இந்திய அரசியல் சாசனத்தை அவமதிக்கும் அவமானச் சின்னமாக ராமர் கோவில் கட்டப்பட இருக்கிறது. 1992-ம் ஆண்டில் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சூழலை தனது புகைப்படங்களில் பதிவு செய்திருக்கிறார், தற்போது பிரிண்ட் இணையதளத்தின் தேசிய புகைப்பட ஆசிரியராக இருக்கும் பிரவீன் ஜெயின் என்பவர்.

பாபர் மசூதி இடிப்பு ‘பக்தர்களின்’ ஆவேசத்தால் நடந்தது அல்ல; அது திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட சதி என்பதற்கு இந்தப் புகைப்படங்களை விட வேறு என்ன ஆதாரம் தேவை ?

***

ஜூலை 1992-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் கல்யாண் சிங் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் “சிங்துவார்” எனப்படும் முதன்மை நுழைவாயிலுக்காக திட்டமிடப்பட்ட இடத்தில் அடிக்கல் நாட்டும் விழாவிற்காக கூடியிருந்த கர சேவகர்கள்.

ஜூலை 1992-ம் ஆண்டு அந்த நிலத்தை சீரமைத்து தயாரித்துக் கொண்டிருந்த போது மனித எலும்புகள் கிடைத்தன. வருவாய்துறை ஆவணப் பதிவேடுகளில் அந்த இடம் முசுலீம்களின் இடுகாடு என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

அன்றைய மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் 03, டிசம்பர் 1992 அன்று புது டெல்லியிலிருந்து லக்னோவுக்குக் கிளம்புகையில் ரயில் நிலையத்தில் இருந்து அன்றைய பிரதமர் நரசிம்மராவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அயோத்தியின் நிலைமைகளைக் கண்காணிக்க அங்கு சென்றார்.

பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் டிசம்பர் 5. 1992 அன்று ஒரு கர சேவகர், “நாங்கள் ரத்தத்தைக் கொடுப்போம். நாங்கள் உயிரையும் கொடுப்போம்” என்று ஒரு சுவற்றில் எழுதிக் கொண்டிருக்கிறார்.

ராம ஜென்மபூமி இயக்கத்தோடு ஒருங்கிணைந்த பாபர் மசூதி இடிப்புக்கு ஒரு நாள் முந்தைய ஒத்திகைக்கு மத்தியில், ஒரு உத்தரப் பிரதேச போலீசுக்காரர் கரசேவகர்களுடன் இணைந்து “ஜெய் ஸ்ரீராம்” என்று  முழக்கமிடுகிறார்.

டிசம்பர் 5, 1992 அன்று சம்மட்டிகளோடும் கடப்பாரைகளோடும் வரிசையில் நிற்கும் கரசேவகர்கள்.

முகமூடி அணிந்த ஒரு நபர், ஒத்திகையின் போது கரசேவகர்களுக்கு வழிகாட்டுதல் கொடுக்கிறார்.

பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முந்தைய நாள் இரவு.

உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட குறியீட்டுக் கரசேவைக்காக, டிசம்பர் 6, 1992 அன்று சரயு நதியில் இருந்து நீரும், மணலும் எடுத்து வரும் கர சேவகர்கள்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளன்று காலையில், பாஜக தலைவர் எல்.கே. அத்வானி ராம ஜென்மபூமி இயக்கத்தின் தலைவர்களை சந்திக்கிறார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது பல்வேறு பாஜக தலைவர்கள் அந்த இடத்தில் இருந்தனர். இடமிருந்து வலமாக, அன்றைய பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி, எல்.கே அத்வானி மற்றும் விஜயராஜே சிந்தியா ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர்

ராம் கதா கஞ்ச் எனுமிடத்தில், விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் (நின்று கொண்டிருப்பவர்), உமா பாரதி (சிங்காலுக்கு வலப்புறம் நிற்பவர்) ஆகியோர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர்.

பாபர் மசூதியை இடிக்கும் கர சேவகர்கள்.

புது டெல்லியில் அத்வானி கைது செய்யப்பட்ட போது எடுத்த படம். அவருக்கு வலப்புறம் அவரது மனைவி கம்லா அத்வானி இருக்கிறார். முன்னால் நிற்பது இன்றைய பிரதம மந்திரி நரேந்திர மோடி

படம் : பிரவீன் ஜெயின் (தேசிய புகைப்பட ஆசிரியர், தி பிரிண்ட் இணையதளம்)

தமிழாக்கம் : நந்தன்

நன்றி : தி பிரிண்ட்

மக்கள் அதிகாரம் : தோழர் ராஜு மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும் !

PP Letter head

பத்திரிகைச் செய்தி

06.08.2020

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும் !

ன்பார்ந்த நண்பர்களே!

வணக்கம். கீற்று இணைய தளத்தில் 4-8-2020 அன்று ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக்குழு சார்பில் “சீரழிவு சகதியில் மூழ்கி விட்ட பு.ஜ.தொ.மு மற்றும் சகோதர அமைப்புகள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு மீது திட்டமிட்டு அவதூறு கூறப்பட்டுள்ளது.

“சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவரும், தற்போது மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமைக் குழுவில் இருப்பவருமான திருவாளர் ராஜூ அவர்கள் ஒரு கோடி ரூபாய்க்குச் சொத்து வாங்கியதைப் பற்றி அந்த அமைப்பின் அரசியல் தலைமைக்கு அந்தப் பகுதி தோழர்கள் தகவல் தெரிவித்தார்கள். அதற்குத் தலைமையின் எதிர்வினை “அந்த ஒரு கோடி ரூபாய் பணம் தவறான வழியில் வந்தது என்பதற்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள்” என்று தகவல் தெரிவித்தவர்களிடமே கேள்வி கேட்டதுதான்.”

இது ஆம்பள்ளி ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த திரு.ஜெயகாந்த்சிங் என்பவர் அவர் செயல்பட்டு வந்த விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பில் இருந்து நீக்கப்பட்டபோது ‘சூறாவளி’ எனும் பெயரில் அவர் நடத்திய வலைத் தளத்தில் எழுதிய அவதூறுதான். பல வருடங்களாக சீந்துவாரற்று கிடந்த அவதூறை தூசி தட்டி எடுத்து வேறு இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். தான் எழுப்பிய மாபெரும் குற்றச்சாட்டிற்கு ஒரு ஆதாரத்தைக் கூட இத்தனை ஆண்டுகளாக ஏன் திரட்டவில்லை என அவருடன் சேர்ந்து எழுதும் ஆம்பள்ளி ஒருங்கிணைப்பு குழுவினர் கேள்வி கேட்காமல் அந்த அவதூறை அப்படியே வாந்தி எடுத்துள்ளனர்.

எவ்வித முகாந்திரமும் இல்லாமல் போகின்ற போக்கில் அவர் கோடிகளில் சொத்து சேர்த்துள்ளார் என்று இவர்கள் சொல்வதற்கும் பா.ஜ.க. பாசிஸ்டுகளின் பிரச்சார முறைக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலம் போலீசு எப்.ஐ.ஆர் போட்டுவிட்டால் குற்றசாட்டப்பட்டவர் தான் இனி, தான் தவறு செய்யவில்லை என நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டுமாம்.

இந்த காவி பாசிஸ்டுகளின் ‘நீதி பரிபாலன’ முறையை தான் இவர்களும் முன்வைக்கிறார்கள். நாங்கள் குற்றஞ்சாட்டிவிட்டோம், முகாந்திரம், ஆதாரம் என்று யாராவது அவர்களிடம் கேட்டால், குற்றம் செய்யவில்லை என நீங்கள் நிரூபியுங்கள் எனத் திருப்பி கேட்கிறார்கள்.

தோழர் ராஜு தன் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது யாரும் தெரிந்து கொள்ளக் கூடிய வெளிப்படையானதுதான். திரு.ஜெய்காந்த்சிங்கும் தோழர் ராஜுவும் பல்வேறு போராட்டங்களில் அக்காலத்தில் இணைந்து ஈடுபட்டது விருதாச்சலம் வட்டாரம் அறிந்ததே. அதுமட்டுமன்றி தோழர்.ராஜுவின் குடும்பத்தில் ஒரு நபராகவும் அவர் பழகி வந்துள்ளார். அப்பேற்பட்ட ‘தோழரால்’ ஆதாரத்தைக் காட்ட முடியவில்லையேன்றால் என்னவென்பது. குற்றச்சாட்டு வைத்த ஜெயகாந்த் சிங்கிற்கு இது பொய் என்பது நன்கு தெரியும்.

படிக்க:
அவதூறு பரப்பும் தினமலருக்கு மக்கள் அதிகாரம் எச்சரிக்கை !
கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

தினமலர் போன்று அவதூறுகளை அவிழ்த்துவிட்டால், மக்களுக்காக பணியாற்றும் அமைப்புகளின் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும்தான் அது பயன்படுமே ஒழிய, சொல்பவர்களின் நோக்கத்திற்குகூட அவை பயனளிக்காது. இதை சொல்வதற்கு காரணம் பொதுவாழ்க்கையில் குறிப்பாக புரட்சிகர அரசியலில் ஈடுபடும் அனைவருக்கும், விலைமதிப்பில்லாத ஒரே சொத்து அவர்களின் நேர்மைதான். அதனை அவதூறால் சிதைக்க முயல்வது எத்தகைய அயோக்கியத்தனம்.

கீற்று இணையத் தளம் என்பது முற்போக்கானவர்கள், பகுத்தறிவாளர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் இடமாகவும் அறியப்பட்டு வருகிறது. மக்கள் அதிகாரம் மீதும், அமைப்பிலுள்ள தோழர்கள் மீதும் அரசியல் ரீதியாக அவர்கள் செய்யக்கூடிய தவறுகளை, தனிநபர்களாக நாங்கள் செய்யக்கூடிய தவறுகளை சுட்டிக் காட்டுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. எனினும் கீற்று ஓர் நேர்மையான தளம் என்றால் மக்களுக்காக செயல்படும் அமைப்பின் தலைவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம், அடிப்படை ஆதாரம் என்ன என்பதைக் கேட்டு தீர விசாரித்த பின்னர் தான் இந்த கட்டுரையை பதிப்பித்து இருக்க வேண்டும்.

மேலும் பல்வேறு இடதுசாரி, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களின் சங்கமமாக இருக்கிற கீற்று இணையதளம் தோழர் ராஜு பற்றி விசாரித்து தெரிந்து கொள்வது ஒன்றும் சிரமமான காரியமும் அல்ல. எனவே இது போன்ற அவதூறுகளை பரப்புவதை கீற்று இணையத் தளம் இனியாவது நிறுத்திக் கொள்ளவும், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ மீது அவதூறாக வெளிவந்த பகுதிகளை மேற்கூறிய கட்டுரையில் இருந்து உடனே நீக்கவும் வேண்டும். தங்களது தவறை பரிசீலிக்க வேண்டும்.

தோழர் ராஜு பற்றி குற்றச்சாட்டு முன்வைப்பவர்களிடம் அதுதொடர்பாக ஏதேனும் ஆதாரம் இருந்தால் கேளுங்கள். அதை எடுத்துக் கொண்டு விருத்தாசலம் வாருங்கள். தோழர் ராஜு அவர்களின் சொத்து விபரங்களை பற்றியும், வாழ்வாதாரத்திற்கு அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பற்றியும், எல்லா வகையிலும் பதில் அளிக்க அவர் எப்போதும் தயாராகவே இருக்கிறார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைமைக் குழு
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! திருச்சி பெருவளப்பூர் மக்கள் ஆட்சியரிடம் மனு !!

திருச்சி லால்குடி வட்டம், பெருவளப்பூர் கிராமத்தில் மக்கள் போராட்டதால் டாஸ்மாக் மதுபானக் கடையை தற்காலிகமாக மூடியுள்ளது அரசு. அந்த டாஸ்மாக்கில் பார் நடத்திய நபர்களும். மேலும் தற்போது கள்ளத்தனமாக சரக்கு (டாஸ்மாக்) விற்கும் நபர்களும் சேர்ந்து பொதுமக்கள் சிலரிடம் (10 பேரிடம்) கையெழுத்து வாங்கி மூடிய கடையை திறக்க வேண்டுமென போலீசிடம் மனுவாகக் கொடுத்துள்ளனர்.

இதைக் கண்ட ஊர் பொதுமக்கள் கடையை திறக்கும் நடவடிக்கைக்கு எதிராகவும், டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடக்கோரியும் மக்கள் அதிகாரம் தோழர்களுடன் இணைந்து 1000 பேரிடம் கையெழுத்து பெற்று கோரிக்கை மனுவாக  கொண்டு சென்றனர்.

மேலும் அப்பகுதியில் பல ஏக்கர் விவசாய நிலங்களில் குரங்குகள் மற்றும் காட்டுப் பன்றிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விளைந்த பருத்தி, சோளம் போன்ற பயிர்களை, ஆட்கள் இல்லாத  நேரத்தில் தின்று நாசம் செய்வதனால் பல விவசாயிகள் பெரு நட்டம் ஏற்பட்டு பாதிப்படைகின்றனர். குரங்குகளை பிடிக்கவும், காட்டுப்பன்றிகளை விரட்டவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்த்து 04.08.2020 காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மேற்கண்ட இரண்டு கோரிக்கை மனுக்களும் கொடுக்கப்பட்டன.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுவதற்கு அதிகாரிகளிடம் பேசி உறுதி செய்வதாகவும், மேலும் குரங்குகள் பன்றிகள் தடுக்க வனத்துறை அலுவலரிடம் பேசி கட்டுப்படுத்துவதாக கூறினார்.

பன்றி வளர்க்கும் இடத்தை தடை செய்வதாகவும் பேசினார். மேலும் குரங்குகள் வாழக்கூடிய பகுதியில் நாம் வாழ்ந்து வருகிறோம். குரங்குகளை கட்டுப்படுத்த சோலார் மின்வேலி அமைத்து கட்டுப்படுத்தலாம். அதற்கு ஒரு லட்சம் ருபாய்க்கு 75 ஆயிரம்  மானியமாக அரசு வழங்குகிறது. விவசாயிகள் இதற்கு முன் வாருங்கள் எனவும் பேசினார். அந்த வகையில் வனத் துறை அலுவலர்களை சந்தித்து பேசுமாறு கூறினார். வந்திருந்த விவசாயிகள் ஊர் முக்கியஸ்தர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்வதாக கூறினார்கள்.

படிக்க:
தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராட்டம் !
♦ ஒரே நாளில் டாஸ்மாக்கை மூடிய திருச்சி பெருவளப்பூர் மக்கள் !

தொடர்ந்து லால்குடி பகுதி தாசில்தாரை சந்தித்து டாஸ்மாக் மூட அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக விவசாயிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர். மக்கள் அதிகாரம் இச்செயலுக்கு ஆதரவாக இருக்கும் என்பதை நம்பிக்கையுடன் ஏற்று சென்றனர். இந்நிகழ்விற்கு ஊர் மக்கள் சார்பாக மக்கள் அதிகாரம் தோழர் மணி தலைமை தாங்கினார். இவர்களுடன் திருச்சி மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் மற்றும் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் ஜீவா உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.

தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராட்டம் !

0

“மோடி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

***

விழுப்புரம் :

தேசிய கல்விக் கொள்கை (2019) வரைவு அறிக்கையை மோடி அரசு அறிவித்தவுடன் இந்தியா முழுவதும், குறிப்பாக தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் மாணவர்கள், மாணவர் அமைப்புகள், ஆசிரியர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

எதிர்ப்பின் விளைவாக பின்வாங்கிய மோடி அரசு, கொரோனா பெருந்தொற்று நாட்டையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில் மக்களை முடக்கி வைத்துவிட்டு, ஊரடங்கைப் பயன்படுத்திக் கொண்டு மக்கள் விரோத திட்டங்களை நயவஞ்சகமாக அமல்படுத்தி கொண்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த ஜூலை 29-ம் தேதியில் ஜனநாயக விரோதமான முறையில் மோடி தலைமையிலான அமைச்சரவை, இந்த புதிய கல்விக் கொள்கைக்கு அனுமதி அளித்திருக்கிறது. அதுவும் நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறது.

இந்த கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால் ஏழை, எளிய மாணவர்களான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டு கல்வி என்பது எட்டாக்கனியாக மாறிவிடும். மேலும் சமுக நீதி போன்ற இட ஒதுக்கீடு மறுக்கப்படும். மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி, சமஸ்கிருதம் திணிக்கப்படும்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின்( RSYF) சார்பாக 05.07.2020 அன்று காலை 10.00 மணிக்கு விழுப்புரத்தில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆர்ப்பாட்டம் செய்வதற்கு வந்தபோது போலீஸ் நமது தோழர்கள், பெற்றோர்களை செல்லும் வழியிலேயே தடுத்து நிறுத்தி யாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறினார்கள்.

மேலும் “மூன்று நபர்களுக்கு மேல் மனு கொடுப்பதற்கு அனுமதி இல்லை” என்று தடுத்தார்கள். போலீஸின் நெருக்கடிகளையும் மீறி மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன் பிறகு கல்வி முதன்மை அலுவலரிடம் தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்ற மனுவை அளித்தோம்.

இதில் பெற்றோர்கள், மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விழுப்புரம். தொடர்புக்கு : 91593 51158.

***

கடலூர் :

ழை எளிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும், மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறு! என்ற முழக்கத்தை வலியுறுத்தி 05.08.2020 அன்று கடலூர், மஞ்சகுப்பம், மாவட்ட கல்வி வளாகம் மற்றும் விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலக வளாகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூரில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் தோழர் மணியரசன் தலைமையிலும், விருத்தாச்சலத்தில் பு.மா.இ.மு தோழர் கணேஷ் அவரது தலைமையிலும் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மனுவில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் :

  • மத்திய அரசின் ஹிந்தி, சமஸ்கிருத மும்மொழிக் கொள்கையை கைவிட வேண்டும்.
  • 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும்.
  • 9-லிருந்து+2 வரை உள்ள செமஸ்டர் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்.
  • கலை அறிவியல் கல்லூரிகளுக்கான தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
  • கல்வி வணிகமயமாக்கும் நோக்கில் உள்ள இந்த புதிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் திரும்பப்பெற வேண்டும்.

இந்நிகழ்வில் தோழர் வெண்புறா குமார் (ஒருங்கிணைப்பாளர்) பொது நல இயக்கம் கடலூர், தோழர் பாலசுப்பிரமணியம் (ஒருங்கிணைப்பாளர்) முற்போக்கு சிந்தனையாளர் சங்கம் கடலூர், தோழர் கஜேந்திரன் (மாநில துணை செயலாளர்) தமிழ்நாடு மீனவர் பேரவை, திரு அன்பழகன், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம். ஆகிய பொதுநல இயக்கத்தைச் சார்ந்தவர்கள் மற்றும்
புமாஇமு உறுப்பினர்கள் தோழர்கள் பூங்குழலி, வெங்கடேசன், ஆகாஷ், கார்த்தி, சுகதேவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி.
கடலூர். தொடர்புக்கு : 97888 08110.

***

தருமபுரி :

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, 05.08.2020 அன்று பு.மா.இ.மு. சார்பில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக காலை 11 மணிக்கு தருமபுரி மாவட்ட கல்வி வளாகம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தோழர். ச. அன்பு அவர்கள் தலைமை தாங்கினார். மற்றும் பல தோழர்கள் இணைந்து புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமுல்படுத்த கூடாது என மாவட்ட கல்வி அலுவலர்களிடம் மனு அளித்தனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி.
தருமபுரி.

***

மதுரை :

புதிய கல்வி கொள்கையை எதிர்த்து 05.08.2020 காலை 11.மணியளவில் மதுரை மாவட்ட கல்வி அலுவலரிடம் பு.மா.இ.மு சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில், இந்த கல்வி கொள்கையானது சமூகநீதி, இட ஒதுக்கீடு மற்றும் இயற்கை நீதிக் கோட்பாட்டை அழிக்க கூடியதாகும். குலக்கல்வியை நடைமுறை படுத்துவதாகவும்; பெரும்பான்மையான ஏழை எளிய மாணவர்களின் கல்வி கனவை தகர்ப்பதாகவும் அமைந்துள்ளது.

மேலும் NEET தேர்வு மூலம் எப்படி மருத்துவக் கனவை பறித்தார்களோ! அது போல் NATIONAL TESTING AGENCY வைத்து, பட்டப்படிப்பை கூட மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்படும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொன்டு வர வழி செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் ஆனந்த் தலைமை வகித்தார். தோழர் சினேகா அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார் மற்றும் பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள், தோழமை அமைப்புகள் கலந்து கொண்டனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி.
மதுரை.

***

கரூர் :

ழை, எளிய மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமுல்படுத்தாதே! சூத்திரனுக்கு கல்வி இல்லை என்னும் மனுநீதியும், காசு இல்லாதவருக்கு கல்வி இல்லை! என்ற இரண்டும் சேர்ந்து கார்ப்பரேட் – காவிகளின் நலனுக்காக தான் இந்த கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இதை உடனடியாக ரத்து செய்யக் கோரி கரூரில், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் போலிசின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதற்கு புமாஇமு, அமைப்பாளர் தோழர் சுரேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புதிய கல்விக் கொள்கையையும், அதை அமல்படுத்தத் துடிக்கும் மோடி அரசின் சதித்தனத்தையும் அம்பலப்படுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அதனை தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் – இளைஞர்கள் கரூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் துணை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
கரூர்.

***

திருச்சி :

மிழகம் முழுவதும் 05.08.2020 அன்று மத்திய மோடி அரசு அமல்படுத்தவிருக்கும் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திருச்சியில், பு.மா.இ.மு-வின் மாவட்ட அமைப்பாளர் தோழர் பிருத்திவ் தலைமையில், மரக்கடைப் பகுதியில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்கள் பிற அமைப்பினர் கலந்துகொண்டு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது என முழக்கமிட்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஆர்பாட்டத்தின் இறுதியாக கல்வி அலுவலரிடம் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது என கல்வித் துறை வாயிலாக முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டது. “கண்டிப்பாக உடனே முதல்வருக்கு தகவல் அனுப்புவதாக” கல்வி அலுவலர் கூறினார். இவர்கள் மனுவை அனுப்புவார்கள் என நாம் பெயரளவு நம்பலாம். ஆனால் அனைத்து மக்களும் போராடாமல் இனி நமக்கு கல்வி கிடைக்கும் என சிறிதளவு கூட நம்ப முடியாது. நம்பவும் கூடாது! புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த விடாமல் போராடுவோம்.

கல்வி நமது அடிப்படை உரிமை. அதனை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதனை கார்ப்பரேட்டுகளிடமும் காவிகளிடமும் கொடுப்பதுதான் மோடி அரசின் தன்மை. உரிமைகள் பறி போகும் போது போராட வேண்டியதும் நமது முதன்மையான கடமை!

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சி. தொடர்புக்கு : 99431 76246.

ஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாப் போய்டுவோம் !

டந்த மூன்று மாதங்களுக்கு மேலாகத் தொடரும் ஊரடங்கை நியாயப்படுத்த தான்தோன்றித்தனமான, வயிற்றெரிச்சலை ஏற்படுத்தக்கூடிய வக்கிரம் நிறைந்த வாதங்களை அடுக்கிவருகிறது, பார்ப்பன பா.ஜ.க. கும்பல்.

‘‘பல்லாங்குழி, தாயம், பரமபதம், கல்லாங்கல் ஆகிய ‘பாரம்பரியமான உள்ளரங்கு விளையாட்டு’க்களைக் குடும்பத்தோடு சேர்ந்து விளையாடி வருவதாகவும்; கரோனா போன்ற பெரும் சங்கடம் வந்திருக்கவில்லை என்றால், வாழ்க்கை என்றால் என்ன, வாழ்க்கை ஏன் ஏற்பட்டிருக்கிறது, வாழ்க்கை எத்தகையது ஆகியன பற்றி நாம் சிந்திக்கக்கூட முயன்றிருக்க மாட்டோம்” என்றும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசி, இந்திய மக்கள் அனைவரும் இந்த ஊரடங்கு காலத்தில் ஆனந்தமாகவும் தத்துவவிசாரத்தில் ஈடுபட்டும் பொழுதைக் கழித்து வருவதாகக் குறிப்பிட்டிருக்கிறார், பிரதமர் மோடி.

கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சியையே நாட்டின் வளர்ச்சியாகக் காட்டும் மோடி வித்தை போலவே, புளித்த ஏப்பக்காரனின் அனுபவத்தை இந்திய மக்களின் அனுபவமாக ஊதி விடுகிறார், மோடி. மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கம்கூட அல்லாடிப் போய் நிற்கும் இந்த ஊரடங்கு காலத்தில் அன்றாடங் காய்ச்சிகளின் நிலை என்னவாக இருக்கும்?

உதிரித் தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் கரோனாவையும் ஊரடங்கையும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை தமிழ் இந்து நாளிதழ் நேர்காணல் செய்து வெளியிட்டிருந்தது. அதனை பு.ஜ. வாசகர்களுக்காகச் சுருக்கி வெளியிட்டிருக்கிறோம். அச்சாமானிய மக்களின் ஊரடங்கு அனுபவம் பிரதமர் கூறிய அனுபவத்தை மறுதலிப்பதோடு, கரோனா தொற்றைவிட ஊரடங்குதான் அவர்களின் வாழ்க்கையை அச்சுறுத்துவதை எடுத்துக் காட்டுகிறது.

– ஆசிரியர் குழு

***

எம்.எஸ்.பாண்டி, கிரானைட் கற்களை ஒட்டுபவர்

கழுத கெட்டா குட்டிச்சுவர்ங்கிற மாதிரி, கிராமத்துல விவசாயம் பொய்ச்சுதுன்னா ஒருத்தருக்கு முதல்ல சோறு போடக்கூடிய தொழில் கட்டிடத் தொழில்தான். எந்த வேலையும் தெரியாட்டியும் கல்லை, மண்ணைத் தூக்கிப் போட்டாவது பிழைச்சுக்கலாம். எத்தனை வருஷ சர்வீஸ் இருந்தாலும் இந்தத் தொழில்ல அதிகபட்ச சம்பளமே எண்ணூரு ரூபாதான். அதனால, மாசத்துல இருபது நாளைக்காவது வேலைக்குப் போனாத்தான் குடும்பம் நடத்த முடியும். முழுசா மூணு மாசமா வேலையில்லன்னா, எங்க நிலைமைய யோசிச்சுப் பாருங்க.

எஸ்.சித்தன், கிரேன் ஆபரேட்டர்,  கலவை இயந்திரம் இயக்குபவர்

ஊரடங்குக்குப் பின்னாடி வேலையெல்லாமே குறைஞ்சுடுச்சு. அங்க ஒண்ணு, இங்க ஒண்ணுன்னு வர்ற வேலையையும் அரசாங்கம் விதிக்குற கட்டுப்பாடுகள் நாசமாக்கிடுது. ஒரு நாள் மண்டலம்னு சொல்றாங்க, ஒரு நாள் மாவட்டம்னு சொல்றாங்க; எங்கேயிருந்து சார் எங்களை மாதிரி ஆளுங்க வெளியூர் வேலைக்குப் போறது? எங்களை மாதிரி ஆளுங்களால இ-பாஸ் எல்லாம் எடுக்க முடியுமா?

பாண்டிச்செல்வம், கொத்தனார்

பூராம் வெளிமாநிலத் தொழிலாளிங்களை இறக்கி ருசி கண்டுட்டாய்ங்க நம்மூரு மொதலாளிங்க. சல்லீசுக் கூலியில அவய்ங்க மாடா உழைச்சாய்ங்க. நம்மாளுக்கு வேலை இல்லைங்கிறதைப் பயன்படுத்திக்கிட்டு, முன்னாடி அவய்ங்க வாங்குன கொத்தடிமைச் சம்பளத்துக்கே நம்மளையும் கூப்பிடுறாங்க. வேற வேலை இல்லைங்கிறதால இப்படி நம்மாளும் போறான். இது என்னாகுதுன்னா, எல்லார் கூலியையும் பாதிக்குது. அரைக்கூலி, முக்காக் கூலிக்குத்தான் இப்பம் வேலைக்குப் போக வேண்டியிருக்கு; அரசாங்கம் முதல்ல பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தணும். ஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாப் போய்டுவோம்.

மூக்கையா, செங்கல் சூளைத் தொழிலாளி

நீங்க கட்டிடத் தொழில்னு சொல்ற இந்தத் தொழில்ல குழி தோண்டுறவங்க, கம்பி வளைக்கிறவங்கனு 42 பிரிவு இருக்கு. அந்தத் தொழிலாளர்களிலேயே ரொம்ப ரொம்பக் குறைஞ்ச சம்பளத்துக்கு வேலை பாக்குறது நாங்கதான். கொத்தடிமைத்தனத்துலருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்டுவந்தவங்க நாங்க; இந்த கரோனா திரும்பவும் எங்கள அந்தக் கொத்தடிமைத்தனத்துக்கே கொண்டுபோய் சேர்த்திடும்போல இருக்கு.

குமார், சமையல்காரர்

ஆயிரம் பேருக்குக் குறையாம சமையல் நடக்குற கல்யாணங்கள்ல வெறும் அம்பது பேருக்குத்தான் சாப்பாடுன்னா, எத்தனை பேருக்கு வேலை இருக்கும்? நாற்பது பேர் வேலை பார்த்த இடத்துல, நாலு பேரே அதிகம்னு ஆகிடுச்சி. பலருக்கு விருந்து பரிமாறுன கை அய்யா… இப்படியே போனா என்னாகும்னு இன்னைக்குப் பசியை நெனைச்சுப் பதறுறாங்க. இதெல்லாம் புரியாதவங்க வீட்டுக்குள்ள உட்கார்ந்துக்கிட்டு ‘‘ஊரடங்கு போடு!”ன்னு பேசுறாங்க!

படிக்க:
கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்து சென்னையில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
மோடி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும் !

ராஜேஷ்குமார், புகைப்பட நிபுணர்

போட்டோகிராபர், வீடியோகிராபர் மட்டுமல்லாம, ஆல்பம் டிசைனிங் செய்றவங்க, வீடியோ எடிட்டிங், ஆல்பத்தை பிரிண்ட் செய்யுற அச்சகம், ஒளிப்பதிவுக் கருவிகளை வாடகைக்கு விடுறவங்கன்னு தமிழ்நாடு முழுக்க ஒன்பது லட்சம் குடும்பங்களோட வேலை, வருமானம் சம்பந்தப்பட்ட விஷயம் சார் இது. அரசோ, பொதுச் சமூகமோ எங்களை மாதிரியானவங்க பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு உணர்ந்த மாதிரிகூடத் தெரியலைங்கிறதுதான் பெரிய வருத்தமா இருக்கு!

மூர்த்தி, கல்யாண மண்டப உரிமையாளர்

முக்கியமான சீசனை இழந்துட்டோம். அட, எங்களை விடுங்க… ஒவ்வொரு கல்யாணத்தையும் நம்பி எத்தனை தொழிலாளர்கள் இருக்காங்க? கல்யாணத்துல அம்பது பேருக்குத்தான் அனுமதின்னு ஆயிட்டா, பலரு பத்திரிகைகூட அடிக்கிறதில்லை. ரெண்டு மாலையோடு பூ வேலை முடிஞ்சுடுது. மேளவாத்தியம்கூடத் தவிர்த்திடுறாங்க. அப்படின்னா எத்தனை வகை தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கும்! மூணு மாசமா யாருக்கும் ஒத்த ரூபா வருமானம் இல்லீங்க!

தாவுத் மியான், தள்ளுவண்டி பிரியாணி கடைக்காரர்

நம்ம வியாபாரமே மூணு மணி நேரக் கணக்குதான். பகல் 12 மணிலேர்ந்து 3 மணி வரைக்கும். ஜனத்துகிட்ட காசு இல்லை. இதுலேயும் போலீஸ் கெடுபிடி வேற! போன வாரம் நாற்காலி எல்லாத்தையும் அள்ளி எறிஞ்சிட்டுப் போய்ட்டாங்க. பல நாள் மிச்சப்படுறதை ஏழைபாழைங்களுக்குச் சும்மா அள்ளிக்குடுத்திட்டு வீட்டுக்குப் போறேன். இதே நிலைமைதான் பக்கத்துல இளநீ, கரும்புச்சாறு, டீ விக்குறவங்களுக்கும். ஆனாலும், இடத்தையும் தொழிலையும் இழந்துடக் கூடாதுன்னு வீம்புக்கு யாவாரம் பண்றோம்.

ரவி, உணவக உரிமையாளர்

இது கிராமத்துக் கடை. வியாபாரிங்க, வழிப் போக்கருங்க இந்தச் சாலை வழி போறவங்க சாப்பிட்டுப்போற இடம்…. வர்றவங்ககிட்ட காசு இல்ல, அவங்களுக்கு வியாபாரம் இல்லைங்கிறது நல்லாவே தெரியுது. இட்லி சாப்பிட்டுட்டு ஒரு டீ குடிக்கிறதுக்குக்கூட யோசிக்கிறாங்க. ஆனா, இன்னொரு ஊரடங்கு எல்லாம் போட்டா பெரும் பாதிப்பாகிடும். ஜாக்கிரதையா மக்களை நடந்துக்க அனுமதிக்கிறதுதான் நல்ல வழிமுறை.

வேலவன் – சங்கீதா, வில்லிசைக் கலைஞர்கள்

ஆறு மாத்தைக்கு திருநெல்வேலி, நாகர்கோயில்ல நடக்குற கொடையாலதான் குடும்பங்கள் வாழும். சாமிக்கே கொடையில்லாதப்போ எங்க கதி என்னாகும்? கொல்லை வேலை, கொத்து வேலை, தீப்பெட்டி கம்பெனி, வேட்டு கம்பெனின்னு அவன் வாழ்நாள்லேயும் பார்க்காத வேலைக்கெல்லாம் போவ ஆரம்பிச்சிட்டாங்க. ராவுல முழிச்சிருந்துட்டுப் பகல்ல தூங்குற பழக்கம் உள்ளவன் எப்படிப் பகல் வேலையப்பார்க்க முடியும்? அரசாங்கம் எந்த முடிவை எடுக்கும்போதும் எங்களையெல்லாமும் சேர்த்து யோசிச்சு எடுக்கணும்!

தேன்மொழி ராஜேந்திரன், கரகாட்டக் கலைஞர்

நாட்டுப்புறக் கலைஞர்களைப் பொறுத்தமட்டுல இந்தக் கோடை காலகட்டம்தான் வருஷத்துல வருமானத்துக்குரியது. காவிரிப் படுகையைப் பொறுத்தமட்டுல தொடர்ந்து மூணாவது வருஷமா வாழ்வாதாரம் இழந்து வக்கத்துப்போய்க் கிடக்கிறோம். ரேஷன் அரிசியை வாங்கித் தின்னுட்டுதான் உசுரு வாழ்ந்துக்கிட்டிருக்கோம். அதுவுமில்லைன்னா கதை முடிஞ்சுது.

பி.மணிமேகலை, நாடகக் கலைஞர்

கணவரைப் பிரிஞ்சு ஆறு வயசுப் புள்ளயோட இருக்கிற எனக்கு நாடகம்தான் உறுதுணையா இருந்துச்சு. இப்ப நாடகமும் இல்லன்னதும், ஏதோ அனாதையா ஆதரவில்லாம இருக்கிற மாதிரி இருக்கு. மாசத்துல பத்து நாளு வேலைக்குப் போனாலும்கூட, அதவெச்சு மீதி இருபது நாளை ஓட்டிடுவோம். ஆனா இப்படி மொத்தமா மூணு மாசம் வேலையில்லன்னா என்ன செய்றது? நகையை அடமானம் வெச்சு இப்ப ஓடிக்கிட்டிருக்கு. அதுவும் முடிஞ்சுருச்சுன்னா எப்படிச் சாப்பிடப்போறோம்னு தெரியலை.

படிக்க:
இப்ப 10 ரூபா டீத்தூளுக்குக் கூட கடன் கொடுக்க மாட்டேங்குறான் !
பிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு ! இந்த உசுரு எப்ப போவுதுன்னு தெரியல !

கிரேஸ் பானு, திருநபர்

தமிழ்நாட்டில் உத்தேசமாக 5 லட்சம் திருநபர்கள் இருக்கிறார்கள். பெருநகரங்களில் குழுவாக இருக்கிறார்கள். சிறு நகரங்களிலோ நாங்கள் உதிரிகள். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சமயத்தில் 5 கிலோ அரசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ எண்ணெய் கொடுத்தார்கள். இரண்டு மாதங்களுக்கு ரூ.1,000 கொடுத்தார்கள். ஆனால், இவை யாவும் திருநபர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கானவை. யதார்த்தத்தில் இங்கே திருநபர்கள் அடையாளமற்றவர்கள். அனைவரும் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டவர்கள். பெரும்பாலானோரிடம் இந்தியக் குடிநபர் என்று நிரூபிப்பதற்கான எந்த ஆவணங்களும் கிடையாது. இந்நிலையில், ஆவணத்தைக் காண்பித்தால்தான் உதவிகள் வழங்கப்படும் என்று கூறுவது மனிதாபிமானமற்ற செயல்.

சையது – ஜாகீர் உசேன் சகோதரர்கள், அரிசி வணிகர்கள்

என் அம்பது வருஷ அனுபவத்துல சொல்றேங்க, அழிமானம் தொடங்கிருச்சு. பொன்னி, கிச்சடி சம்பா மாதிரியான உயர்ரக அரிசி வியாபாரம் ரொம்ப விழுந்திடுச்சி. சாதாரண ரகம் போகுது, ஆனா, குறைஞ்சுடுச்சு. அதாவது, புதுசா ஒரு கூட்டம் ரேஷன் அரிசியையும், நிவாரணமா கொடுக்கிற அரிசியையும் சாப்பிடத் தொடங்கியிருக்காங்கன்னு பட்டவர்த்தனமா தெரியுது. அரிசி வியாபாரம் குறைஞ்சதால பாதிப்பு எங்களுக்கு மட்டுமில்லீங்க. கடைக்காரர்கள், மொத்த வியாபாரிகள், மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளர்கள், தரகர்கள்னு ஒரு பெரிய கூட்டத்துக்கே பாதிப்பு.

எம்.காஜா, காய்கறி வணிகர்

தமிழ்நாடு முழுக்க ஒரு விஷயத்தை நீங்க கவனிக்கலாம். காய்கறிக் கடையில கூட்டம் குறைஞ்சிக்கிட்டேபோகுது. அதேபோல தற்காலிகச் சந்தைகள்ல கடைகளோட எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைஞ்சிக்கிட்டே போகுது. வீடு வீடா போய் காய்கறி விக்கிறவங்களும் குறைய ஆரம்பிச்சிட்டாங்க. மக்கள்கிட்ட பணப்புழக்கம் இல்லாததுதான் காரணம். ஒருபக்கம் விவசாயிங்க விலை இல்லைனு காய்கறிகளைக் குப்பையில கொட்டுறாங்க. இன்னொருபக்கம் நாங்க விக்காம குப்பையில கொட்டுறோம்.

மஜீத், கருவாடு வணிகர்

கரோனாவுல கன்னாபின்னானு வியாபாரம் ஆறது கருவாடுதாங்க. முன்னத்தைவிட நாலு மடங்கு இப்ப கருவாடு விக்குது. இது எங்களுக்கு நல்ல சேதி; ஆனா, மொத்த சமூகத்துக்கும் நல்ல சேதியான்னு சொல்லத் தெரியலை. ஏன்னா, ‘‘கருவாடு அதிகம் வித்துச்சின்னா, பஞ்சம் நெருங்கிக்கிட்டிருக்கு”ன்னு கிராமங்கள்ல சொல்வாங்க. இருபது ரூபாய்க்குக்கூட காய்கறி வாங்க முடியாத நிலையிலதான் அஞ்சு ரூபாய் கருவாடு அதிகம் செலாவணி ஆகும். ஏன்னா, ரெண்டு துண்டு கருவாட்டைப் போட்டு, மொத்தக் குடும்பமும் கருவாட்டு வாசத்துலயே சாப்பிட்டு முடிச்சுடலாம். இப்போ அந்தச் சூழல் உருவாகிட்டு இருக்கிறதை உணர முடியுது.

தொகுப்பு: இளங்கதிர்
நன்றி: இந்து தமிழ் திசை
– புதிய ஜனநாயகம், ஜூலை 2020.

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்து சென்னையில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

  • ஊடகத் துறையினரை மிரட்டும், கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்தும் !
  • வரவர ராவ், ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட அறிவுத் துறையினரையும்,
    சி.ஏ.ஏ போராட்டத்தில் சிறைபடுத்திய இஸ்லாமியர்களையும் உடனே விடுதலை செய்யக் கோரியும்!
  • கருப்பர் கூட்டம் தோழர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்!
  • கடவுளுக்காக சவுண்டு விடும் பாசிச பா.ஜ.க.-வே கொரோனாவால் வாழ்விழந்த மக்களுக்கு பதில் சொல்!

ஆகிய முழக்கங்களை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 03.08.2020 அன்று காலை 11:00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

படங்கள் :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் அமிர்தா, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் உமாபதி, தமிழ் தேச மக்கள் முன்னணியின் தோழர் செந்தில் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் குமரன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொடர்புக்கு : 91768 01656.

கருத்துரிமையை நசுக்கும் காவி பாசிசத்துக்கு எதிராக திருச்சி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

டகத் துறையினரை மிரட்டி கருத்துரிமையை நசுக்கும் காவி பாசிசத்தை கண்டித்தும், CAA போராட்டத்தில் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்யக்கோரியும், பழங்குடி மக்களுக்காகவும் , இயற்கை வளங்களைக் காக்கவும்,போராடி கருத்துக்களை கூறும் ஜனநாயக முற்போக்கு அறிவுத்துறையினர், வரவர ராவ், ஆனந்த் டெல்டும்டே போன்ற மக்கள் போராளிகளை விடுதலை செய்யக்கோரியும் மக்கள் அதிகாரம் தலைமையில் ஜனநாயக முற்போக்கு அமைப்புகளுடன் இணைந்து திருச்சியில் 03.08.2020 காலை 11 மணி அளவில் மரக்கடை இராமகிருஸ்ணா பாலம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை திருச்சி மாவட்ட மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பு குழுத் தோழர் சத்யா தலைமையேற்று  முழக்கமிட்டு தொடங்கி வைத்தார்.

சுற்றுச்சூழல் சட்டத்திருத்தத்தை அம்பலப்படுத்தியும், திருச்சி உள்ளிட்ட தமிழக ஆறு, ஏரி, குளங்கள் சீரழிக்கப்படுவதை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் (கட்சி சார்பற்றது) மாவட்டத் தலைவர். ஐயா சின்னத்துரை அவர்கள் கண்டன உரையாற்றினார். கூடுதலாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள EIA 2020-ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும் பேசினார்.

அடுத்து ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பின் தலைவர் தோழர் சம்சுதீன் அவர்கள், கொரோனா காலத்தில் மக்களை தனித்திரு, விழித்திரு, வீட்டிலேயே இரு என சொல்லி மத்திய மோடி அரசு பல சட்ட திருத்தங்களை செய்து மக்கள் விரோத நடவடிக்கைகளை செய்வதை கண்டித்தும், காவி பாசிசத்தின் RSS, BJP காரர்களை சாதிவெறி, மதவெறி கருத்துகளை பரப்புவதை கண்டித்தும் புகார் கொடுக்கும்போது அவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீசுக்கு துப்பில்லை. மாறாக புகார் கொடுக்கும் நபர்களை கூப்பிட்டு விசாரிக்கும் இந்த போலீசு  ஜனநாயகப் பூர்வமாக நடக்கிறதா ? நான் விசாரணைக்கு போக மாட்டேன். என காவல்துறை அடவாடித்தனத்தை அவர்கள் முகத்தில் அறைந்தது போல பேசினார்.

அடுத்து திராவிடர் விடுதலை கழகத்தின் வழக்கறிஞர். தோழர் சந்துரு உரையில் கருப்பர் கூட்டம் பேசிய வீடியோ என்பது கந்த சஷ்டி கவசத்தில் உள்ள விஷயத்தை விளக்கி பேசினார். அதற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்வது தவறு. மாறாக ஆபாசக் குப்பைகளாக உள்ள கந்த சஷ்டி கவசத்தை எழுதியவரைதான்  கைது செய்ய வேண்டும் என பேசியும் ஜனநாயக உரிமையையும், கருத்து சுதந்திரத்தையும் பறிப்பது, ஊடகவியலாளர்களையும் மிரட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்ற வகையில் கண்டன உரையாற்றினார்.

படிக்க:
மோடி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும் !
கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

அடுத்து பேசிய அமைப்பு சாரா தொழிலாளர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் மகேஸ்வரன். அவரது உரையில் இந்தியா ஜனநாயக நாடு, காந்தி தேசம் என்று கூறி இங்கே கொரோனா ஊரடங்கு போட்டு மக்களை வீட்டில் இருக்க வைத்து மக்கள் குழு கடன், வீட்டு வாடகை கொடு என அவர்களை வீட்டை விட்டு நடுத்தெருவுக்கு இந்த அரசு துரத்துகிறது. ஆகஸ்டு 31 வரை பஸ், ரயில் ஓடாது என்றால் எப்படி வேலைக்கு செல்வது கடன் கட்டுவது, இது பற்றியெல்லாம் அரசு மக்கள் மீது அக்கறை இல்லாமல் வாட்டி வதைக்கிறது. பல சட்டங்களை திருத்தி  மக்களுக்கு எதிராக மோடி அரசு சர்வாதிகார போக்குடன் நடந்து வருவதை எதிர்த்து போராட வேண்டும் என்பதை பேசினார்.

அடுத்து பேசிய மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கலைக்குழு பாடகர் தோழர் கோவன் பேசுகையில் இன்று  காவிப் பாசிசம் என்ற இருள் நம்மை சூழ்ந்து வருகிறது. பகுத்தறிவு, சுயமரியாதை, ஜனநாயகபூர்வமான கருத்துக்களை அடக்கி ஒடுக்கி வருகின்றனர். அதன் ஒரு வெளிப்பாடாக கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்தும் அதனுடைய தோழர்களை குண்டர் சட்டத்தில் போட்டுள்ளனர். திருக்குறளுக்கு விளக்கவுரை பலரும் பேசியுள்ளனர். அதேபோல கந்தசஷ்டி கவசத்தில் உள்ள விஷயத்தை விளக்கி கருப்பர் கூட்டத்தில் தோழர்கள் பேசினார்கள். அவ்வளவுதான், உடனே இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி விட்டார்கள் என அவர்கள்  மீது குண்டாஸ் போட்டுள்ளனர். இது ஜனநாயக நாடா? கருத்துரிமை, பேச்சுரிமை என்பது கேலிக்கூத்தாக உள்ளது. அதற்கு எதிராக நாம் தொடர்ந்து போராட வேண்டும் என்றார்.

அடுத்து மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா பேசுகையில் சாக்ரடீஸ் என்ற விஞ்ஞானி பட்டப்பகலில் தீப்பந்தம் ஏந்தி நடந்து சென்றார். காரணம் அறிவுள்ள மனிதர்கள் தேடுவதாக கூறினார். அது போன்றுதான் இங்கு போராட மக்களை தேட வேண்டியுள்ளது முட்டாள்களாகவும், அடிமைகளாக விவரம் அறியாதவர்களாக நாம் இருக்கக் கூடாது. மாறாக பகுத்தறிவுச் சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டினார். அதேபோல இன்று காவிக் கும்பல் பகுத்தறிவற்ற, மதவெறி, சாதிவெறி கருத்துகளை பேசுகின்றனர். அதற்கு மக்கள் மயங்கக் கூடாது. மக்களுக்கு இந்த அரசு மருத்துவ சிகிச்சை கொடுக்க துப்பில்லை. கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகளை 5 நாளில் குணமாகிவிடுகின்றனர் என்று கூறி வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர்.  15 நாள் சிகிச்சை தருவது இல்லை. மாறாக ஒரு நோயாளிக்கு 30 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி அதிலும் கொள்ளையடிக்கிறது இந்த எடப்பாடி அரசு. மக்களுக்கு சரியான முறையில் உணவு, சிகிச்சை கொடுக்காமல் அவர்களை சாகடிக்கிறது  இந்த அரசின் அயோக்கியத்தனத்தை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்றார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அடுத்து  நன்றி உரையாற்றிய மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன்  இரண்டு நாள் முன்பு டெல்லி அரியானா மாநிலத்தில் குர்கான் பகுதியில் மாட்டிறைச்சி ஏற்றி சென்ற லாரி டிரைவரை நடுரோட்டில் பசு குண்டர்கள் தாக்கி உள்ளனர். 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ்காரர்கள் முன்னிலையில் சுத்தியலால் பசு குண்டர்கள் கொலை வெறியுடன் தாக்கியுள்ளனர். தட்டுத்தடுமாறி எழுந்து நின்ற அவரை பலமுறை தாக்கியுள்ளனர். மக்கள் கண்டு கொள்ளவில்லை. போலீசார் கைது செய்யவில்லை. இது போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் செய்ய வேண்டும் என காவி கும்பல் பல வழிகளில் முயற்சிக்கிறது.

2015-ல் ஆட்டிறைச்சி வைத்திருந்த அக்லாக் என்பவரை மாட்டிறைச்சி  வைத்துள்ளார் என பொய் பிரச்சாரம் செய்து அவரை அடித்தே கொன்ற கும்பல், இன்று பசு குண்டர்கள் மூலமாக அதே படுகொலை செய்ய எத்தணிக்கிறது. மோடி அரசு 2015-ல் பசுக் குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என வாய்கிழிய பேசினார். ஆனால் இன்று 2020-ம் ஆண்டு இன்று வரை பசு குண்டர்கள் தாக்குதல் குறையவில்லை. தமிழகத்தில் முற்போக்கான, ஜனநாயகபூர்வமான, சிந்தனை கருத்துக்களை ஒழித்து, திராவிட கருத்துக்களை ஒழித்து, பார்ப்பனிய இந்து மதவெறி கருத்துக்களை, முட்டாள்தனமான கருத்துக்களைப் பரப்பி வட மாநிலங்களைப் போல இங்கும் RSS, BJP கும்பல் கலவரத்தை நடத்துவதற்கு சதி செய்து வருகின்றனர். இதை எதிர்த்து களத்தில் முறியடிக்க வேண்டும் என பேசினார்.

மேலும் கலந்துகொண்டு பேசிய அனைத்து அமைப்புகளின் தோழர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், போக்குவரத்து இடையூறு இல்லாமல் பாதுகாப்பளித்த காவல்துறையினருக்கும் நன்றி கூறி முடித்தார். ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக தோழர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் நடந்த பகுதி மக்கள் இயல்பாகவே வேலை நிமித்தமாக கூடும் பகுதி என்பதால் ஆர்வமாக நின்று கவனித்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.
தொடர்புக்கு : 94454 75157

மோடி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும் !

0
  • மோடி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும்!
  • ஆகஸ்டு -5, புதன்கிழமை தமிழகம் முழுவதும் கல்வித்துறை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்!

ன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே!

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதும் கடுமையாக எதிர்க்கப்பட்டு வந்த புதிய கல்விக்கொள்கைக்கு பாசிச மோடி அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மோடி அரசு மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய 2014-இல் இருந்தே கார்ப்பரேட் – காவிகளின் நலனுக்கேற்ப ஒரு கல்விக் கொள்கையை உருவாக்க தீவிரமாக முயற்சித்து வந்தது.

அதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ் சார்புள்ளவர்களான டி.எஸ்.ஆர் சுப்ரமணியன், கஸ்தூரி ரங்கன் ஆகியோர் தலைமைகளில் இரண்டுமுறை கமிட்டி அமைத்தனர். ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளி ஆசிரியர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்களிடம் கருத்துக்களைப் பெற்று அதையே புதிய கல்விக்கொள்கை என 2016-லும், 2019-லும் முன் வைத்தனர்.

இதனை எதிர்த்து கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக அப்போது பின்வாங்கியவர்கள், தற்போது கொரோனா ஊரடங்கு சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தேசிய கல்வி கொள்கையை திணிக்கின்றனர். இதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

மேலோட்டமாக பார்த்தால் புதிய கல்விக்கொள்கை போல் தெரியும் இதில் வரிக்கு வரி தேன் தடவிய விசம் போல், இந்துத்துவா கொள்கைகளையும், கார்ப்பரேட் திட்டங்களையும் முன் வைக்கிறது.

இது வரை இருந்துவந்த பள்ளிக்கல்வி அமைப்பு முறையை 5+3+3+4 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கன்வாடிகளும் சத்துணவு திட்டமும் ஒழித்துக்கட்டப்படுகிறது. 3 வயதிலேயே பள்ளிக்கல்வி தொடங்குவது குழந்தைகள் மீதான வன்முறை.

3 -வயதில் இருந்தே மும்மொழிக்கொள்கை திணிப்பு. செத்த மொழி சமஸ்கிருதத்திற்கு உயிர் கொடுக்கிறார்கள்.

3, 5, 8 வகுப்புகளும் பொதுத்தேர்வு வைத்து ஏழைகள், தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கல்வியிலிருந்தே விரட்டுகிறார்கள். ‘சூத்திரனுக்கு கல்வி எதுக்கு அவனவன் அப்பன் தொழிலை செய்யட்டும்’ என்ற ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை மோடி அரசு இப்போது நவீன வடிவத்தில் கொண்டு வந்துள்ளது.

சிறு சிறு பள்ளிகளை ஒழித்துவிட்டு 5, 10 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் பெரிய பள்ளிகளை உருவாக்கப் போகிறார்களாம். அதாவது அரசுப் பள்ளிகளை எல்லாம் ஒழித்துக்கட்டிவிட்டு மிகப்பெரிய தனியார் கார்ப்பரேட் பள்ளிகளை உருவாக்கப் போவதையே சாதனையாக சொல்கிறார்கள். இத்தகைய கார்ப்பரேட் பள்ளிகள் வந்துவிட்டால் பல லட்சங்கள் பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் இனி கல்வி.

அடுத்து, உயர்கல்விக்கு செல்ல அனைத்துவிதமான படிப்புகளுக்கும் நீட் போன்று அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு. நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம். இனி அந்தந்த கல்லூரிகளே பட்டத்தை வழங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்புகளாகும். பல்வேறு தேசிய இனங்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை ஒழித்துக் கட்டிவிட்டு, ஒரே நாடு ஒரே கல்வி பிளாட்ஃபார்ம், ஒரே பாடத்திட்டம் என்பதை கொண்டுவரத் துடிக்கிறார்கள். ஏற்கனவே மாநிலப் பட்டியலில் இருந்த கல்வித்துறையை பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்றார்கள். இப்போது மொத்தமாக மையப்படுத்தவே இந்தக் கல்விக் கொள்கை உயர்கல்வி ஆணையத்தை உருவாக்குகிறது.

படிக்க:
♦ ’இந்து ராஷ்டிரத்திற்கான’ கல்விக் கொள்கை – தமிழகம் கிளர்ந்தெழட்டும் !
பள்ளிக் கல்வியை உலகவங்கியிடம் ஒப்படைக்கும் மோடி அரசு !

கல்வியின் மீது மாநில அரசின் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்படுகிறது. சமூக நீதியையும், இடஒதுக்கீட்டையும் அடியோடு குழி தோண்டி புதைக்கப் பார்க்கிறது இந்த தேசிய கல்விக் கொள்கை.

ஏற்கனவே கல்வித்துறையில் தனியார்மயத்தை புகுத்தியதன் விளைவாக பல தனியார் கல்வி நிறுவனங்கள் பல மடங்கு கட்டண கொள்ளையடிக்கின்றனர். இதனால் கட்டணத்தை கட்ட முடியாமல் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். பல மாணவர்கள் இடையில் நின்று விடுகின்றனர். என்ற நிலைமை நீடிக்கிறது இந்த நிலையில் மொத்த கல்வி துறையும் தனியார் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்தால் என்ன நடக்கும்? இனி ஏழை மாணவர்களுக்கு கல்வி கிடைக்காது. ‘தரம்’ என்ற பெயரில் இனி பார்பனர்களுக்கும் பனக்காரன்களுக்கும்தான் கல்வி.

இதுமட்டுமல்ல, கல்வியை மறு கட்டமைப்பு செய்கிறோம் எனக் கூறி UGC, MCI, போன்ற உயர் கல்வி நிறுவனங்களை ஒழித்துக்கட்டுகிறார்கள். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் இனி கடைவிரிக்கலாம். வெளிநாட்டு மாணவர்கள், பேராசிரியகள் இங்கு வருவார்கள். ஆனால் சொந்த நாட்டு பேராசியர்களுக்கு தரமில்லை என வேலை பறிக்கப்படும். இன்னொரு பக்கம், கல்வி டிஜிட்டல் மயமாக்குவது என்ற பெயரில் ஆன் – லைன் கல்வியை கட்டாயமாக்குகிறார்கள்.

மூக்ஸ், பைஜூஸ் போன்ற பெரிய பன்னாட்டு கார்ப்பரேட் ஆன் – லைன் கல்வி நிறுவனங்கள் ஆண்டுக்கு பல லட்சம் கோடிகள் புரளும் இந்திய கல்வித்துறையை கைப்பற்ற ஏற்பாடு செய்துகொடுப்பதுதான் இந்த கல்விக்கொள்கையின் நோக்கம். எனவே, பெரும்பான்மை மாணவர்களின் நலனுக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் எதிரான இந்த கல்விக் கொள்கையை நிராகரிக்க வேண்டும்.

மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைவோம். கார்ப்பரேட் – காவிகளின் நலனைக் கொண்ட இந்த புதிய கல்வி கொள்கையை அமுல்படுத்த விடாமல் தடுத்து நிறுத்துவோம்!

மாணவர் நலனையும், ஜனநாயகத்தையும், விஞ்ஞானப் பூர்வமான கண்ணோட்டத்தையும், பகுத்தறிவையும், தாய்மொழியை வழியையும் அடிப்படையாக் கொண்ட கல்வி கொள்கை வேண்டும். மாணவர்களை வன்முறைக்குள்ளாக்கும் மனப்பாடக் கல்வியும், பாடச்சுமையும், பரிட்சை தொல்லைகளும் ஒழித்துக்கட்டப்பட வேண்டும். கியூபாவிலும், பின்லாந்திலும் உள்ளது போன்ற சிந்தனையாற்றலை வளர்க்கும் கல்வியும், மதிப்பீடு முறையும், மக்கள் நலன் சார்ந்த கல்வியும்தான் வேண்டும்.

பல்வேறு தேசிய இனங்களையும், மொழி, கலாச்சாரங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் கொண்ட நாட்டில் தேசிய அளவில் ஒரே கல்விக்கொள்கை என்பதே அயோக்கியத்தனமானது; சர்வாதிகாரமானது.

அந்தந்த மாநிலங்களின் தன்மைக்கேற்ப வகுத்து அதை ஒருங்கிணைப்பதுதான் சரியானது.

ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வுகள் முன்னெப்போதைக் காட்டிலும் அதிகரித்து வரும் நாட்டில் தனியார் கல்வி நிறுவனங்கள் இருந்தால் எப்படி ஏழைகளுக்கு கல்வி கிடைக்கும். அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்க வேண்டும்.

எனவே, மோடி அரசின் கல்விக் கொள்கையை நிராகரிப்பதோடு, மாணவர்கள் நலன் சார்ந்த மாற்றுக் கல்விக் கொள்கையை உருவாக்கும் போராட்டத்தையும் முன்னெடுப்போம்!

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு.
நெ.7, மாதாகோவில் நகர் முதல் தெரு, நொளம்பூர், சென்னை- 600095
தொடர்புக்கு : 94451 12675, E-mail: rsyfchennai@gmail.com.

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

  • ஊடகத் துறையினரை மிரட்டும், கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்தும்!
  • வரவர ராவ், ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட அறிவுத் துறையினரையும்,
    சி.ஏ.ஏ போராட்டத்தில் சிறைபடுத்திய இஸ்லாமியர்களையும் உடனே விடுதலை செய்யக் கோரியும்!
  • கருப்பர் கூட்டம் தோழர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்!
  • கடவுளுக்காக சவுண்ட் விடும் பாசிச பா.ஜ.க.-வே கொரோனாவால் வாழ்விழந்த மக்களுக்கு பதில் சொல்!

ஆகிய முழக்கங்களை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்நிகழ்வின் தொகுப்பு உங்களுக்காக.

***

மதுரை :

துரை மண்டல மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக, மதுரை மாநகரில் உள்ள ஓபுளா படித்துறையில் 03.08.2020 திங்கள் அன்று காலை 10.30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தில் மக்கள் நல அமைப்புகள், ஜனநாயக சக்திகள் பங்கேற்பதாக நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. பிரசுரங்கள் அச்சிட்டு வினியோகிக்கப்பட்டது. அரண்டு போன காவல்துறை 02.08.2020 ஞாயிறு அன்று இரவு நாம் அனுமதி கோராத ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்வதாக செயல்முறை ஆணையை மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மருதுவிடம் அளித்தனர்.

ஆனாலும் ஊரடங்கு என்பதும், 144 தடை உத்தரவு என்பதும் கொரோனாவை கட்டுப்படுத்த அல்ல, அறிவிக்கப்படாத நெருக்கடி என்பதால் காவல்துறையின் அனுமதி மறுப்பை மீறி நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அதன்படி 03.08.2020 திங்கள் அன்று காலை 10.30 மணி அளவில் மக்கள் அதிகாரம், வனவேங்கை கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட தோழர்கள் ஒன்று கூடினார்கள். அங்கிருந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் ஓபுளா படித்துறை நோக்கி ஊர்வலமாக முழக்கமிட்டபடி சென்றார்கள். போலிசு உடனே ஓடி வந்து சூழ்ந்து கொண்டது. “உங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு விட்டது” அதனால் “அனுமதிக்க முடியாது கைது செய்வோம்” என்றார் துணை கமிஷனர்.

காவல்துறையிடம் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. “அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனாவிலிருந்து சுகமானதைத் தொடர்ந்து. அதிமுக-வினர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே மிகப் பெரிய அளவில் கும்பல் கூடி முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், 144 தடை உத்தரவு எதையும் மதிக்காமல் கொண்டாட்டம் நடத்தியது. அருகில்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. கலெக்டருக்கு அவையெல்லாம் தெரியாதா?” என்று கேள்வி எழுப்பினோம். “அதை பேசாதீர்கள். அது பெரிய இடத்து விவகாரம்” என்று துணை கமிஷனர் முறுமுறுத்தார். இறுதியில் ‘ஐந்து நிமிடம் நடத்துங்கள்’ என்றார்கள்.

அதன்படி முழக்கம் போட்டுக் கொண்டிருக்கும் போதே பாதியிலேயே நிறுத்தி, “முழக்கம் போட்டது போதும், ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள். பிரச்சினையை உருவாக்கிட்டுப் போயிராதிங்க” என்று போலீசு ஆய்வாளர் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தினார். மீண்டும் தோழர்கள் தலையிட்டு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் முழக்கம் போடாமல் ஒருவர் மட்டும் பேசுவதற்கு அனுமதித்து கைது செய்வோம் என்றனர்.

அதை ஏற்று வனவேங்கைகள் கட்சி மாநிலத் தலைவர் தோழர் இரணியன், மத்திய மோடி அரசின் பாசிச போக்குகளுக்கு எதிராகப் போராடுவதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். அடுத்ததாக புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் குமரன், “ஊரடங்கு, 144 தடை உத்தரவு போன்றவை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதுதான். அரசியலமைப்பு சட்டம் அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனால் மோடி அரசு ஊரடங்கை எமர்ஜென்சிக்கான ஒரு முன்னோட்டமாக நடைமுறைப் படுத்துகிறது” என்று அம்பலப்படுத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக மதுரை மாவட்டச் செயலர் தோழர் மணி அமுதன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள், தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் விஜயகுமார், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் நடராசன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஊரடங்கின் போதும் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மக்களிடம் நம்பிக்கையையும் எழுச்சிகர உணர்வையும் ஊட்டியது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
தொடர்புக்கு : 78268 47268.

***

தஞ்சை :

ஞ்சை இரயிலடியில் மக்கள் அதிகாரம் சார்பில் 03.08.2020 (திங்கட்கிழமை) அன்று   காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவ்வார்ப்பாட்டத்திற்கு மக்கள் கலை இலக்கியக் கழக தோழர் இராவணன் தலைமைதாங்கினார்.

அந்நிகழ்வில் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தோழர்.காளியப்பன், தமிழர் தேசிய இயக்கம் பொதுச்செயலாளர் தோழர். அயனாபுரம் முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி‌ (மார்சிஸ்ட்) மாவட்ட செயலர் தோழர்.கோ. நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நகரச்செயலாளர் தோழர் என்.குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டகுழு உறுப்பினர் தோழர். சேவையா, சி. பி. ஐ (எம்.எல்,லிபரேஷன்) தோழர். கே. ராஜன், தமிழ்தேச மக்கள் முன்னணி தோழர். அருண்ஷோரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சம்மேளனச் செயலர் தோழர். துரை.மதிவாணன், சமவெளி விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் நிறுவனர்
தோழர் சு. பழனிராஜன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட  செயலாளர் எஸ்.எம். ஜைனுலாப்தீன், ஆதித்தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் தோழர். நாத்திகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஆர்ப்பாட்டத்தில்  உரையாற்றிய அனைவரும் காவி பாசிச பயங்கர வாதத்தை எதிர்த்து தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர். தஞ்சை  போலிசு மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது இவ்வார்ப்பாட்டம் நடத்தியதற்காக வழக்கு பதிவு செய்துள்ளது.

இறுதியாக ஆர்ப்பாட்டம் முடிந்தத்தை உறுதி செய்து கொண்ட இந்து முன்னணி காவி கும்பல் தங்களது வழக்கமான “ஓம்காளி ஜெய்காளி ” கோஷத்தை கைவிட்டு” இப்போதைய சீசன் கோஷமான “முருகனுக்கு அரோகரா”என்று கூவியபடியே வந்து எதிர் ஆர்ப்பாட்டம் செய்தது.

தகவல் :
மக்கள் அதிகாரம்
தஞ்சை.

***

விழுப்புரம் :

  • ஊடகத் துறையினரை மிரட்டும், கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசம்!
  • வரவர ராவ், ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட அறிவுத்துறையினரையும், சி.ஏ.ஏ போராட்டத்தில் சிறைபடுத்திய இஸ்லாமியர்களையும் உடனே விடுதலை செய்!
  • கடவுளுக்காக சவுண்ட் விடும் பாசிச பா.ஜ.க.வே கொரோனாவால் வாழ்விழந்த மக்களுக்கு பதில் சொல்!

என்ற தலைப்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் 03.08.2020 அன்று காலை 11 மணியளவில், மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மத்திய மாநில அரசுகளின் கருப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.

***

குடந்தை :

க்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக 03.08.2020 அன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களின் ஒரு பகுதியாக, கும்பகோணத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் ஜெயபாண்டியன் தலைமை தாங்கினார். ஜனநாயக சக்திகளின் கண்டன உரையுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் கொரோனா காலத்தில் ஊரடங்கு அமலில் உள்ள சூழலைப் பயன்படுத்தி, சமூகநீதிக்கு எதிரான மனுதர்மத்தை மீட்டெடுக்கும் சட்டங்களை மத்திய அரசு மக்கள் மீது திணிப்பதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
குடந்தை.
தொடர்புக்கு : 97892 61624.

***

விருதாச்சலம் :

டலூர் மண்டலம் விருதாச்சலத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் கீழ்காணும் முழக்கங்களை முன்வைத்து 03.08.2020 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

  • ஊடகத் துறையினரை மிரட்டும், கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசம்!
  • சமூக செயல்பாட்டாளர் வரவர ராவ். ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்டோரை விடுதலை செய்!
  • CAA, NRC, NPR எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்களை விடுதலை செய்!
  • கருப்பர் கூட்டம் தோழர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்!
  • கடவுளுக்காக சவுண்ட் விடும் பாசிச பாஜக-வே கொரோனாவால் வாழ்விழந்த மக்களுக்கு பதில் சொல்!  என்ற முழக்கங்கள் முன்வைக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்நிகழ்விற்கு மக்கள் அதிகாரம் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் ராஜசேகர் திராவிட விடுதலைக் கழகம் தோழர் நடேசன். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் மணியரசன். தமிழ் தேசிய மக்கள் முன்னணி தோழர் ராஜேந்திரன். கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (மக்கள் விடுதலை) தோழர் ராமர். இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி தோழர் கோகுல் ஸ்டீபன் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் மாற்றுக் கட்சித் தோழர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தை முடக்குவதற்காக போலீசு பல்வாறு வழிமுறைகளைக் கையாண்டது. அவற்றையெல்லாம் மீறி வெற்றிகரமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்.

***

திருவாரூர் :

திருவாரூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 03.08.2020 அன்று பல்வேறு அமைப்புகள் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.

***

பாண்டிச்சேரி :

டகத்துறையை மிரட்டும் கருத்து சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை கண்டித்து, புதுச்சேரி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 03.08.2020 அன்று காலை 11 மணி அளவில் நெல்லித்தோப்பு சிக்னல் சுப்பையா சதுக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மக்கள் அதிகாரத்தின் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் தோழர் சாந்தகுமார்  இதற்கு தலைமை தாங்கினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வரவர ராவ், ஆனந்த் டெல்டும்டே, சுதா பரத்வாஜ், சாய்பாபா உள்ளிட்ட அறிவுத் துறையினரை விடுதலை செய்ய வேண்டும். CAA எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்த இஸ்லாமியர்களை விடுதலை செய், கருப்பர் கூட்ட தோழர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டு கருத்துரிமை, ஜனநாயகத்துக்கு எதிரான கார்ப்பரேட் காவி பாசிசத்தை வேரறுக்க சமூக ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை கட்டியமைக்க வேண்டும் என்று அறைகூவல் விடப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

This slideshow requires JavaScript.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

தகவல் :
மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி.

அடாவடி நுண் கடன் செலுத்தும் கால அவகாசத்தை 6 மாதம் நீட்டிப்பு செய் !

  • அடாவடியாக நடந்து கொள்ளும் நுண்கடன் நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடு!
  • கடன் செலுத்துவதற்கான அவகாசத்தை இன்னும் 6 மாதம் வரை நீட்டிப்பு செய் !

கொரோனா பேரிடர், ஊரடங்கு காரணமாக மக்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டதையொட்டி நுண்கடன் உட்பட அனைத்து வங்கி கடன்களை ஆகஸ்டு 31 வரை கட்டுவதற்கு ரிசர்வ் வங்கி அவகாசம் அளித்தது.

இதை தஞ்சை மாவட்ட ஆட்சியரும் உறுதிப்படுத்தினார். ஆனால் இதை எந்த நுண்கடன் நிறுவனமும் சிறிதளவுகூட மதிக்காமல் பெண்களை மிரட்டுவது, நெருக்கடி கொடுப்பது, மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தள்ளுவது என தமது அடாவடித்தனத்தை தொடர்ந்து கொண்டே உள்ளனர்.

குறிப்பாக கிராமவிடியல் (IDFC), எக்விடாஸ், கிராமசக்தி, அயன் டிரஸ்டு பவுன்டேஷன், கூபா, ஆசிர்வாதம், Future Finance, முத்தூட், அரைஸ், ஜனா (தனலெட்சுமி), மதுரா, இதயம்ஜீ, சுமங்கலி, சமஸ்தா, மகளிர் மைக்ரோபைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் ஊழியர்கள் பல இடங்களில் பெண்களிடம் அடாவடியாக நடந்து கொள்வதாகப் புகார்கள் வருகின்றன.

இந்த நிலையில் பிரதானமாக 3 கோரிக்கைகளை முன் வைத்து “பெண்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம்” சார்பாக பல்வேறு கிராமங்களில் உள்ள பெண்களைத் திரட்டி, (வல்லம், கோரிக்குளம், மனோஜிப்பட்டி, ஆப்பிரகாம் பண்டிதர் நகர்) தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும், மாநில மனித உரிமை ஆணையத்திற்கும், மாநில மகளிர் ஆணையத்திற்கும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் புகார் மனுக்கள் நேரிடையாகவும், தபால் மூலமாகவும் அனுப்பப்பட்டன.

படிக்க:
கொரோனா ஊரடங்கால் அவதிப்படும் மக்களுக்கு வேலை கொடு ! சார் ஆட்சியரிடம் மனு !!
நுண்கடன் நிறுவனங்களின் அடாவடிக்கு முடிவு கட்டுவோம் ! மக்கள் அதிகாரம்

கோரிக்கைகள் :

  1. மாவட்ட ஆட்சியர் உத்தரவை மதிக்காமல் நுண்கடன் நிறுவனங்களின் ஏஜென்டுகள், மேலாளர்கள் பெண்களிடம் தவணை கட்டச் சொல்லி நெருக்கடி கொடுப்பது, சட்ட விரோதமாக பெண்களை மிரட்டுவது, அவமானப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  2. வங்கி தவணைகள் கட்ட 6 மாத (ஆகஸ்டு 31 வரை) அவகாசத்தை மேலும் 6 மாதங்கள் நீடிக்க வேண்டும்.
  3. இந்த 6 மாத தவணைகள் கட்டாததற்கு வட்டி மற்றும் வட்டிக்கு மேல் அநியாய வட்டி போடுவதை தடுக்க வேண்டும்.

இன்னும் பல்வேறு கிராம மக்கள் தொடர்ச்சியாக நமது வழிகாட்டுதலின் அடிப்படையில் பல்வேறு விதங்களில் எதிர்கொண்டு போராடி வருகின்றனர். தற்போது பலரும் அடாவடியாக நடந்து கொள்ளும் ஊழியர்களை ஆடியோ, வீடியோ பதிவு செய்து அனுப்பி வருகின்றனர், நாமும் அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராகி வருகின்றோம்.

பல்வேறு கிராமங்களில் தொடர் பிரச்சாரம் செய்ததின் விளைவாக இரண்டு தோழர்கள் தொடர் காய்ச்சலில் இருந்து தற்போது தான் மீண்டுள்ளனர். மற்றொரு தோழருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஒரு வாரமாக மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனாலும் மற்ற தோழர்கள் சளைக்காமல் கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்வதிலும் பெண்களைத் திரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் ஓயாது !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை.

என் கணவர் குவைத்திலிருந்து அனுப்பப்பட்டால் நாங்கள் கிட்டத்தட்ட தெருவில் நிற்போம் !

1

வேலை அல்லது சேமிப்பு இல்லாத நிலையில், இந்திய எலக்ட்ரீஷியன், ஷிபு க்ளெமன்ஸ், குவைத்தில் குடியேறிகளை கடுமையாகக் குறைக்கும் அந்நாட்டு அரசின் முடிவை அறியும் வரை (குவைத்தில்) வேலைக்குத் திரும்பிவிடலாம் என நம்பிக் கொண்டிருந்தார்.

கொரோனா வைரஸ்  நோய்த் தொற்றால் கடந்த பிப்ரவரியில்  வேலை இழந்த பலரில் 38 வயதான ஷிபுவும் ஒருவர். குவைத்தில் உள்ள 44 இலட்சம் வெளிநாட்டினரில், அதிகப்படியான வெளிநாட்டினராக உள்ள பத்து இலட்சத்திற்கும் அதிகமான இந்தியர்களில் இவரும் ஒருவர்.

ஆனால் கொரோனா வைரஸ், எண்ணெய் விலை மற்றும் உள்ளூர் வேலைகளைத் தாக்கிய பின்னர், நாடு புதிய வரம்புகளை பரிசீலித்து வருகிறது. இது சுமார் 800,000 பேரை நாட்டை விட்டு வெளியேறவும், பணம் அனுப்புவதைக் குறைக்கவும் கட்டாயப்படுத்தக்கூடும். இவர்கள் அனுப்பும் பணமே ஊரில் உள்ள குடும்பங்களில் உயிர்நாடி.

மாதிரிப் படம்.

புதிய மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திட்டம் , நாட்டின் மொத்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை 40% குறைக்கும், மேலும் இந்தியர்களின் எண்ணிக்கை குவைத் மக்கள் தொகையில் 15% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது எனவும் கூறுகிறது.

“நான் வளைகுடாவிற்கு வந்து என் குழந்தைகளுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்க கடுமையாக உழைத்தேன். கோவிட் -19 நெருக்கடியும் இப்போது புதிய குவைத் சட்டமும் எனது கனவுகளை சிதைத்துவிட்டன ” என்று கிளெமன்ஸ் தாம்சன் கடலோர நகரமான மங்காஃப்-லிருந்து தொலைபேசி வழியாகப் பேசினார்.

பிப்ரவரியில் அவர் வேலையை இழப்பதற்கு முன்பு, தென்னிந்திய மாநிலமான கேரளாவில் ஒரு நெரிசலான வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசிக்கும் தனது மனைவிக்கு ரூ. 40 ஆயிரத்தை அனுப்பினார்.

கேரளாவில் தனக்கு சொந்தமாக வீடு இல்லாமல், திரும்பி வரும் புலம்பெயர்ந்தோரில் அதிக எண்ணிக்கை கொண்ட மாநிலமான கேரளத்தில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லாமல், க்ளெமன்ஸ் தனது குடும்பத்துடன் திரும்பிச் செல்ல அஞ்சுகிறார்.

படிக்க:
நீதிமன்றத்தின் ஆணவப் படுகொலை !
கொரோனா ஊரடங்கால் அவதிப்படும் மக்களுக்கு வேலை கொடு ! சார் ஆட்சியரிடம் மனு !!

இந்த மசோதாவுக்கு அரசாங்கம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை, ஆனால் பிரதமர் கடந்த மாதம் சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையை குறைக்க விரும்புவதாகக் கூறினார். சட்டமன்ற சபாநாயகர் மர்சவுக் அல்-கானெம் வெளிநாட்டு தொழிலாளர்களை படிப்படியாகக் குறைக்க முன்மொழிந்தார், இது 5% எண்ணிக்கையில் குறைப்புடன் தொடங்கி, நாட்டிற்கு குறைந்த திறமையான புலம்பெயர்ந்தோர் தேவைப்படுவதைக் குறிக்கிறது. நடப்பு அமர்வு அக்டோபரில் முடிவடைவதற்கு முன்னர் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் இறுதி செய்யப்பட்டு, ஒப்புதலுக்காக அரசாங்கத்துக்கு அனுப்பும்.

உலக வங்கியின் தரவுகளின்படி, குவைத்தில் பணிபுரியும் இந்தியர்கள் 2017 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 64.6 பில்லியனை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இது நாட்டின் மொத்த உள்நாட்டு வருவாய் பணப்பரிமாற்றங்களில் 6.7% ஆகும்.

ஆனால் கோவிட் -19 ஐ அடுத்து ஏற்பட்ட உலகளாவிய மந்தநிலை வேலைகளை குறைத்து பணப்புழக்கத்தை குறைத்துள்ளது. இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணம் கடந்த ஆண்டு 83 பில்லியன் டாலர்களிலிருந்து 23% குறைந்து இந்த ஆண்டு 64 பில்லியன் டாலராக இருக்கும் என்று உலக வங்கி மதிப்பிடுகிறது.

குவைத்திலிருந்து மாதாந்திர பணம் வராமல் கிளெமென்ஸின் மனைவி லிட்டி ஷிபுவைப் பொறுத்தவரை, வீட்டை நிர்வகிப்பதும் அவரது பெரிய குடும்பத்தை கவனித்துக்கொள்வதும் கடினமாக உள்ளது.

மாதிரிப் படம்.

“பணம் வருவதை நிறுத்தியதிலிருந்து நாங்கள் உண்மையான சிக்கலில் இருக்கிறோம் … ஒவ்வொரு நாளும் ஷிபு என்னை அழைத்து தனது துக்கங்களை பகிர்ந்து கொள்கிறார். அவருக்கு உதவ  தங்கத்தை விற்க திட்டமிட்டுள்ளேன்” என்கிறார் அவர்.

“என் கணவர் திரும்பி வர நிர்பந்திக்கப்பட்டால் நாங்கள் கிட்டத்தட்ட தெருவில் நிற்போம்.இதைப் பற்றி நினைத்து என்னால் தூங்ககூட முடியாது.”

மேம்பாட்டு கல்வி மையத்தின் 2018 இடம்பெயர்வு கணக்கெடுப்பின்படி, வளைகுடாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பணிபுரியும் தென் மாநிலமான கேரளா முழுவதும் இந்த நிலைமை எதிரொலிக்கிறது.

குவைத்தில்  உள்ள 70% இந்தியர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று மாநில தகவல்கள் தெரிவிக்கின்றன.

1960-களில் இருந்து, வளைகுடாவிலிருந்து பணம் அனுப்புவது கேரள பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வருகிறது, இது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 20% ஆகும்.

குவைத் இந்த மசோதாவை நிறைவேற்றினால், வெளிநாடுகளிலிருந்தும் பிற இந்திய மாநிலங்களிலிருந்தும் திரும்பி வரும் கிட்டத்தட்ட ஐந்து இலட்சம் மக்களால் கேரள மாநிலம் பெரும் பொருளாதார பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

கடந்த மாதம், இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைகளை நிரப்ப உதவும் புலம்பெயர்ந்தோரின் திறன்கள் மற்றும் அனுபவங்களின் தரவுத்தளத்தை இந்திய அரசு உருவாக்கியது. சூழ்நிலையை கருத்தில் கொண்டு கேரளா ஏற்கனவே இவர்களை மீண்டும் இணைப்பதற்கான திட்டத்தை வகுத்து வருகிறது.

படிக்க:
கர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக !
’இந்து ராஷ்டிரத்திற்கான’ கல்விக் கொள்கை – தமிழகம் கிளர்ந்தெழட்டும் !

எதிர்காலத்தில் மக்கள் மீண்டும் குடியேற உதவும் வகையில் திறன்களை மேம்படுத்துதல், 3 மில்லியன் ரூபாய் வரை நிதி மூலம் சொந்த  சொந்த தொழில் தொடங்க உதவிகள், மானியக் கடன்கள் மற்றும் வழிகாட்டுதல் முகாம்கள் உள்ளிட்டவை இதில் அடக்கம்.

குவைத்தில் ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர் மேற்பார்வையாளராக பணிபுரியும் மூன்று குழந்தைகளுக்கு தந்தையான வினோய் வில்சன், இந்தியாவில் ஒரு வேலை கிடைக்கும் என நம்பிக்கை கொண்டிருக்கிறார். அந்த வேலை தனது குழந்தைகளின் கல்விக்கு நிதியளிப்பதற்கும், கேரளாவில் ஒரு புதிய வீட்டிற்கு கடன் வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கும் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு அவரது சம்பளம் 25% குறைக்கப்பட்டிருப்பதால், 40 வயதான அவர் மாதாந்திர செலவுகளை ஈடுகட்டவும், பணத்தை வீட்டிற்கு திருப்பி அனுப்பவும் இன்னும் போதுமானது என்று கூறினார்.

திறன் குறைந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டால், அதில் தானும் முதலாக இருப்போம் என கவலைப்படும் வில்சன், அப்படி ஒரு நிலைமை வந்தால் தனது கனவு வீட்டை விற்க வேண்டியிருக்கும் எனக் கூறுகிறார்.

“நான் எனது வேலையை இழந்தால் நான் எங்கே போவேன் என்று எனக்குத் தெரியவில்லை. நிலையான வருமானம் இல்லாமல் என்னால் திருப்பிச் செலுத்த முடியாத கடன்கள் வேறு உள்ளன” என்கிறார் அவர்.

உள்நாட்டிலேயே கோடிக்கணக்கான மக்கள் பணி இழப்பையும் வருவாய் இழப்பையும் எதிர்கொண்டுள்ள நிலையில், அவர்களை கைகழுவிட்ட அரசு வெளிநாட்டிலிருந்து பணியிழந்து திரும்பும் மக்களுக்கு என்ன திட்டங்களை வைத்திருக்கும்? மொத்தமாக பிரச்சினைகளை மாநில அரசுகளின் தலையில் கட்டிவிட்டு, பெருநோய்தொற்று காலத்தைப் பயன்படுத்தும் மோடி அரசு தனது காவி கரங்களை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது.


– கலைமதி
நன்றி: த வயர்.

பிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு ! இந்த உசுரு எப்ப போவுதுன்னு தெரியல !

கொரோனா நோய்த்தொற்று, குறிப்பாக உழைக்கும் பெண்களை உயிரோடு வதைக்கிறது. குடும்பத்தின் மொத்த பாரத்தையும் தனியொருவராக தன்மீது சுமக்கிறார்கள். எப்போது இந்தப் பாரம் இறங்கும் என்று திசை தெரியாமல் கலங்கி நிற்கிறார்கள்.

***

சத்தியவாணி என்ற அமுலு, இளநீர் விற்பவர்.

வாங்க இளநீர் வேணுமா? என்று கத்தியை லாவகாமக பிடித்தார். நாம் வந்த விசயத்தை அவரிடம் சொன்னோம்.

ஏற்கெனவே சங்கத்துக்காரங்க வெவரமா கேட்டு எழுதிட்டுப் போனாங்க. ஆதார், ரேஷன், சங்கக் கார்டுன்னு எல்லாத்தயும் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்தேன். ஒன்னும் காணல. நீங்க எழுதி என்ன பண்ணப் போறீங்க? என்றார்.

கொரோனா நோய்த்தொற்றுனால சாவுறவுங்க கம்மியா போச்சு என்கிறாரே நம்ம முதலமைச்சர் எடப்பாடி…! உண்மையா? என்றோம்.

ஒரு நாளைக்கு 4, 6 காய்தான் விக்குது. இப்ப பகல் 2 மணியாகுது. இதுவரைக்கும் 2 காய்தான் வியாபாரம் செஞ்சிருக்கேன் என்கிறார், சத்தியவாணி என்ற அமுலு, இளநீர் விற்பவர்.

தொழிலும் பண்ண முடியல, ஒன்னும் செய்ய முடியல. என்னையே எடுத்துக்குங்க. 15 ஆயிரம் ரூபாய்க்கு சரக்கு போட்டு உட்கார்ந்திருக்கேன். ஒரு நாளைக்கு 4, 6 காய்தான் விக்குது. இப்ப பகல் 2 மணியாகுது. இதுவரைக்கும் 2 காய்தான் வியாபாரம் செஞ்சிருக்கேன். சாயாந்திரம் வரைக்கும் உக்காந்து என்னத்த வியாபாரம் பண்றது, எத வீட்டுக்கு எடுத்துப் போறது. இத வச்சு மொத்த குடும்பமும் 3 வேளை எப்படி சாப்பிடுறது?

உழைச்சாலும் சரியான சோறு இல்ல, நாக்கு செத்துப்போயி பல மாசங்களாகுது. ரேசன் அரிசி மொச்சக்கொட்டை மாதிரி இருக்குது. இத சமைச்சமுன்னா நாலே நாள்ல சிலிண்டரு காலியாயிடுது. காரஞ்சாரமா கொழம்பிருந்தா ஒருவழியா சாப்பிட்டு முடிக்கலாம். ரசம் வச்சி சாப்பிட்டா நம்மளுக்கே எறங்க மாட்டேங்குது; குழந்தைங்க எப்படி சாப்பிடும்?

வகைதொகையா கறி சாப்பிடுறத விடுங்க, வாரத்துக்கு ஒரு நாள் மீன் கூட இப்ப வாங்க முடியல. சரி கருவாட்ட வச்சி ஓட்டலாமுன்னு பாத்தா தம்மாத்தூண்டு பாக்கெட் முப்பது ரூபா சொல்றான். ரெண்டு பாக்கெட் வாங்கினாத்தான் கருவாட்டு வாசனையே வருது.

ஒரு வாரம் ஆனா, விக்காத இளநீரின் கண்ணுல இருக்குற தொப்பி கழண்டுரும். அவ்வளவுதான் காய் அழுகிடும். அத குப்பையில போடனுமுன்னாலும்கூட வண்டிக்கு கூலி வச்சாகணும்.

வியாபாரம் இல்ல, வாங்கின சரக்கு அழுகிப் போகுது. இளநீரைப் பொறுத்தவரைக்கும் 5 நாளைக்கு  மேல தாங்காது, தண்ணீ டேஸ்ட் இருக்காது. ஒரு வாரம் ஆனா, விக்காத இளநீரின் கண்ணுல இருக்குற தொப்பி கழண்டுரும். அவ்வளவுதான் காய் அழுகிடும். அத குப்பையில போடனுமுன்னாலும்கூட வண்டிக்கு கூலி வச்சாகணும். இந்த லட்சணத்துல கொரோனாவை நாங்க எங்கே கொல்றது. அதுக்கு முன்னே நாங்க போய் சேந்துடுவோம் போல என்றார்.

படிக்க:
திருச்சி லால்குடி : நுண்கடன் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் தாசில்தாரை கண்டித்து சுவரொட்டி பிரச்சாரம் !
முகக்கவசம் விற்கும் தொழிலாளிகள் ! படக்கட்டுரை

செல்வி (வயது 60), செருப்புத் தைக்கும் தொழிலாளி

இயல்பாகவே நடக்க முடியாதவர். தாங்கித் தாங்கி நடந்து வீட்டுக்கும் வேலைக்கும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்.

என் வீட்டுக்காரருக்கு சுகர் இருந்தது. அதுக்குமேல குடிச்சிக் குடிச்சியே செத்துட்டாரு. அவருக்கும் செருப்பு தைக்கிறதுதான் தொழில். புள்ளைங்களுக்கு மூனு வயசாகும்போதே அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டாரு. நான் இதே எடத்துல உட்கார்ந்து செருப்பு தச்சுதான் அவங்கள கட்டிக்கொடுத்தேன். இந்தத் தொழில்கூட நான் விரும்பி வரல. அது ஒரு பெருங்கதை.

செல்வி (வயது 60), செருப்புத் தைக்கும் தொழிலாளி

என் வீட்டுக்காரரு ஒழுங்காவே வேலை செய்யிறதில்ல. வேலைக்கு வந்தாருன்னா, ஒரு நாளைக்கு நாலு தடவ எழுந்துப் போயிடுவாரு. அந்த நேரமெல்லாம் கடைய நான்தான் பாத்துக்குவேன். அப்போ வர்ற கஷ்டமரை சமாளிக்கிறது பெரும்பாடாயிடும். இப்படியே விட்டா குடும்பத்த காப்பாத்த முடியாதுன்னு, கொஞ்சம் கொஞ்சமா கூட இருந்து கவனிச்சேன். அப்படி கத்துகிட்டதுதான் இந்த வேலை. இப்ப கஞ்சி ஊத்துது.

சைதாப்பேட்டை மாட்டாஸ்பத்திரி காவா ஓரம் ஒரு குடிசையில இருக்கிறேன். ஆம்படியான் சரியில்லன்னு என்னோட பெரிய பொண்ணு கிருஷ்ணாயில் ஊத்திட்டு செத்துட்டா. அவளுக்கு பொறந்த 2 பேரப்பசங்க, என்னோட சின்னப் பையன், கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணு… இவ்வளவு பேரையும் வச்சு நான்தான் கஞ்சி ஊத்தணும்.

இதுவரைக்கும் கவுரவமாத்தான் தொழில் பண்ணி வந்தோம். இப்போ கொரோனா வந்து எங்கள பிச்சை எடுக்க வச்சிடுச்சு. 4 மாசமா ரோட்டுல போறவங்க கொடுக்குற சோறுதான் நாங்க சாப்பிடுறோம். வேலையே இல்லன்னாலும் தினமும் இங்கே வந்து உட்கார்ந்திடுவேன். சின்ன பேரன், எங்கூடவே வருவான். அவன பாக்குறவங்க, மனசு இறங்கி 5, 10ன்னு கொடுப்பாங்க. அத எடுத்துப்போனாத்தான் ஒருவேள சோறு எங்களுக்கு.

இதுவரைக்கும் கவுரவமாத்தான் தொழில் பண்ணி வந்தோம். இப்போ கொரோனா வந்து எங்கள பிச்சை எடுக்க வச்சிடுச்சு. 4 மாசமா ரோட்டுல போறவங்க கொடுக்குற சோறுதான் நாங்க சாப்பிடுறோம் என்கிறார் செல்வி.

லாக்டவுன் எடுத்ததுனால அதுவும் போச்சு. இப்ப யாரும் இங்கே சோறு போடுறதில்லை. ரோட்டுலயும் முன்னமாதிரி யாரும் நடக்குறதில்ல. பல மாதங்களாகுது நல்ல சாப்பாடு சாப்பிட்டு. வாய் காரஞ்சாரமா கேக்குது. ஆனா வீட்டுல ரசம் வக்கக்கூட ஒரு துரும்பு இல்ல. நேத்து நைட்கூட தண்ணி சோறுதான். சாப்பிட புடிக்கல. அதனால சரியான தூக்கமுமில்ல.

ஏற்கெனவே எனக்கு பிரஷரு வேற. ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில அட்டைபோட்டு மாசமானா மருந்து வாங்கி வருவேன். இப்ப பஸ் இல்ல, மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு. இந்த உயிசுரு எப்ப போவுமுன்னு தெரியல. நான் போன பிறகு பேரப்புள்ளைங்க எங்கே போயி நிக்குமுன்னு வேதனையா இருக்கு. அதனால உயிர இழுத்துப் புடிச்சு வச்சிருக்கேன் என்று உடைந்து போயி பேசினார்.

படிக்க:
பறி போகும்  பாரியின்  பறம்பு மலை : வி.இ.குகநாதன்
நான் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பிலிருந்து விலகியது ஏன் ? ஜெய் கோலியாவின் அனுபவம்

ஆயிஷா, துணி வியாபாரம்

நகராட்சி மருத்துவமனையின் பிரசவப் பிரிவு நுழைவு வாயில். அதன் அருகில் உள்ள சிறிய தரைக்கடை.

பிறந்த குழந்தைகளுக்கு, தாய்மார்களுக்குத் தேவையான அவரசத் துணிகளை தட்டுக்கடையில் வைத்து விற்கும் முஸ்லீம் மூதாட்டி. போட்டோவெல்லாம் எடுக்காதீங்க. போங்க என்று நம்மை எரிச்சலுடன் விரட்டினார்.

கொரோனாவுக்கு பயந்துகிட்டு வர்ற சனங்ககூட, இந்தக் கடைய சந்தேகமாவே பாக்குறாங்க. இதுலவேற போலீசு தொந்தரவு, இப்ப நீங்க… என்று இழுக்கிறார், துணி வியாபாரம் செய்யும் ஆயிஷா.

இப்பத்தான் போலீஸ்காரங்க வந்தாங்க, கொரோனா வந்துடப் போகுது, தூக்குத் தூக்குன்னு சொல்லி விரட்டுனாங்க. எவ்வளவு கெஞ்சினாலும் விடல. கொரோனாவே எங்களாலதான் வருதுங்குற மாதிரி அசிங்கப்படுத்துறாங்க. இப்படியே 4 மாசமாக பொழப்பு இல்ல. எதாவது வித்தாத்தான் கொழந்தைங்கள காப்பாத்த முடியும். இப்படியே பண்ணினா சாவுறத தவிர எங்களுக்கு வேற வழியில்லை.

முழுசா 500 ரூபா எடுத்துப் போயி பல மாதங்களாயிடுச்சு. பிரசவம் ஆகி வெளியே போறவுங்க பின்னால ஓடி கெஞ்சினாத்தான் ஏதோ பாவம் பாத்து ஒரு துண்டாவது வாங்குறாங்க. உள்ளே போறவுங்களும் அப்படித்தான்.

இந்தக் கொரோனாவுக்கு பயந்துகிட்டு வர்ற சனங்ககூட, இந்தக் கடைய சந்தேகமாவே பாக்குறாங்க. காலையிலேருந்து இன்னும் பச்சத் தண்ணிகூட குடிக்கல. கண்ணைக் கட்டுது. இதுலவேற போலீசு, இப்ப நீங்க… இப்படியே போனா நான் எப்பத்தான் வியாபாரம் பண்றது என்று சலித்துக்கொண்டார்.

அங்கம்மாள், உதிரிப் பொருட்கள் விற்பவர்

தெருவோரமாகக் கிடந்தார் வயதான மூதாட்டி அங்கம்மாள். அவர்தான் இந்தத் தரைக்கடைக்கு ஓனர். பிளாஸ்டிக், நைலான், ரப்பர் புஸ்கள். நாற்காலி, மேசை, ஸ்டூல், பெஞ்ச், கட்டில் என்று பல வீட்டு – அலுவலக சாமான்களின் கால்கள் தேயாமல் இருக்க, அடியில் போடும் புஸ்களை விற்று வருகிறார். பல வடிவங்களில், பல அளவுகளில் இறைந்து கிடந்தன. வண்ண வண்ண பிளாஸ்டிக் பாட்டில் மூடிகளும் குவிந்து கிடந்தன.

வியாபாரம் சுத்தமா இல்ல. அதான் ரோட்டுலயே சுருண்டு கிடக்கிறேன். யாராவது என்னை எழுப்பி கேட்டா, கேக்குறத கொடுப்பேன் என்கிறார் வயதான அங்கம்மாள்.

இதோட விலையே 5, 10, 20 ரூபாதான். வர்றவங்க அதுக்கும் கம்மியா கேக்குறாங்க, பேரம் பேசுறாங்க. 10 ரூபா பொருள் விக்கிறதுக்குல்ல பேரம் பேசியே தொண்ட தண்ணி வறண்டுபோகுது. இப்ப வியாபாரம் சுத்தமா இல்ல. அதான் ரோட்டுலயே சுருண்டு கிடக்கிறேன். யாராவது என்னை எழுப்பி கேட்டா, கேக்குறத கொடுப்பேன். உடம்பு படுத்துது, தெம்பு போயிடுச்சு. ரோட்டுல நின்னு வியாபாரம் பாக்க முடியல. இப்ப உங்களுக்கு என்ன வேணும். ஏதாவது எடுங்க, நீங்க கொடுக்குறத கொடுங்க என்று அவர் கேட்ட விதம் எவரையும் உலுக்கிவிடும்.

சிறு வியாபாரம் அழிந்து அதன் இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டதை உணர்த்தியது அந்தக் கோரச் சூழல்.

மேலும் படங்களுக்கு :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நீதிமன்றத்தின் ஆணவப் படுகொலை !

டுமலை சங்கர் ஆணவப் படுகொலை மேல்முறையீட்டு வழக்கில், அவ்வாணவக் கொலையின் முதன்மைக் குற்றவாளியும் சங்கரின் காதல் மனைவி கௌசல்யாவின் தந்தையுமான சின்னசாமிக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையையும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த மற்றைய குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து, அவரை விடுதலை செய்திருக்கும் சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பு சம்பிரதாயமான எதிர்ப்புகளைத் தாண்டி, வேறெந்த சலனத்தையும் தமிழகத்தில் ஏற்படுத்தவில்லை.

உயர்நீதி மன்றத் தீர்ப்பு எந்தளவிற்கு அநீதியானதோ, அந்தளவிற்கு தமிழகத்தின் மௌனமும் அநீதியானதுதான். சமூக நீதியைச் சாதித்துவிட்டதாகக் கூறிக்கொள்ளும் தமிழகத்திற்கு, அத்தகைய அருகதையுண்டா என்ற கேள்வியை முன்நிறுத்துகிறது, இந்த மௌனம்.

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட சங்கர்-கௌசல்யா இணையர், மணக்கோலத்தில். (கோப்புப் படம்)

மற்றைய ஆணவப் படுகொலைகளைப் போல, சங்கர் படுகொலை கமுக்கமாக, காதும் காதும் வைத்தாற்போல நடக்கவில்லை. உடுமலைப்பேட்டை நகரின் முக்கிய கடைவீதியில், பகலில், பொதுமக்களின் கண்முன்னே சங்கர் வெட்டிக் கொல்லப்பட்டார். கூலிப்படையால் திரும்பத் திரும்ப வெட்டப்பட்டதால் ஏற்பட்ட 33 வெட்டுக்காயங்களால் துடிதுடித்து உயிரிழந்தார், சங்கர்.

சங்கரை மட்டுமல்ல, வீட்டை எதிர்த்து, சாதியை மறுத்து அவரைக் காதல் மணம் புரிந்துகொண்ட கௌசல்யாவையும் கொல்ல வேண்டும் என்பதும் இந்த ஆணவக் கொலையின் இலக்கு. கூலிப்படையால் வெட்டப்பட்ட கௌசல்யா நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துக்கொண்டார்.

சங்கர் படுகொலையும் கௌசல்யா மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலும் ஆதிக்க சாதி பயங்கரவாதத்தின் வெளிப்படையான எடுத்துக்காட்டு. சாதிக் கட்டுமானத்தை மீறித் திருமணம் செய்துகொள்ளத் துணிவோருக்கு விடுக்கப்பட்ட வெளிப்படையான எச்சரிக்கை, அச்சுறுத்தல். அதனால்தான் கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் தண்டனைகளை உறுதி செய்ய வேண்டும் என்பதோடு, விடுவிக்கப்பட்டவர்களையும் உயர்நீதி மன்றம் தண்டிக்க வேண்டுமெனத் தாழ்த்தப்பட்ட அமைப்பினர் மட்டுமின்றி, ஜனநாயக சக்திகள் அனைவரும் எதிர்பார்த்தனர்.

படிக்க:
உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் !
கர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக !

சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலெட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை உள்ளிட்டு 11 பேர் மீது சதி, கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், கௌசல்யா உள்ளிட்டு 163 பேர் சாட்சியம் அளித்திருந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அலமேலு நடராஜன் இந்த சாட்சியங்களின் அடிப்படையில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்ளிட்ட ஆறு பேருக்குத் தூக்கு தண்டனையும்; 9- குற்றவாளி தன்ராஜுக்கு ஆயுள் தண்டனையும், 11- குற்றவாளி மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் அளித்த அதேசமயம், கௌசல்யாவின் தாய் அன்னலெட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை, கூலிப் படையைச் சேர்ந்த பிரசன்னா ஆகிய மூவரையும் வழக்கிலிருந்து விடுவித்தார். விசாரணை நீதிமன்றத் தீர்ப்பு சங்கர் படுகொலைக்கு முழுமையான நீதியை வழங்கவில்லை என்றபோதும், பத்துக்கு ஒன்பது பழுதில்லை என்ற விதத்தில் அமைந்தது.

அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் கீழமை நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்பதோடு, விடுதலை செய்யப்பட்ட கௌசல்யாவின் தாய் உள்ளிட்ட மூவரையும் தண்டிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடக்கும் சங்கர். (கோப்புப் படம்)

தண்டிக்கப்பட்டவர்கள் விடுதலை கோரி மேல்முறையீடு செய்திருந்தனர்.
இம்மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் அளித்திருக்கும் தீர்ப்போ விசாரணை நீதிமன்றத்தில் நிலைநாட்டப்பட்ட குறைந்த பட்ச நீதியைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது. அத்தீர்ப்பு இவ்வழக்கில் சதிக் குற்றச்சாட்டை அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை எனக் கூறி, முதன்மைக் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமியை விடுதலை செய்துவிட்டது. மேலும், விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட கௌசல்யாவின் தாய் அன்னலெட்சுமி உள்ளிட்ட மூவரின் விடுதலையை உறுதி செய்திருக்கிறது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தன்ராஜும், ஐந்து ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட மணிகண்டனும் விடுதலையாகியுள்ளனர்.

எஞ்சியிருந்த கூலிப்படையைச் சேர்ந்த ஐவரின் தூக்கு தண்டனை, அவர்கள் 25 ஆண்டு காலம் தண்டனைக் குறைப்பின்றிச் சிறையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
சின்னச்சாமி சதி செய்யவில்லை எனில், சங்கர் எதற்காகப் படுகொலை செய்யப்பட்டார்? கூலிப்படையை ஏவிவிட்டது யார்? இந்தக் கேள்விகளுக்கு நீதிமன்றத் தீர்ப்பில் பதில் இல்லை. எய்தவர்களை விடுதலைசெய்துவிட்டு அம்புகளைத் தண்டித்திருக்கிறது, உயர்நீதி மன்றம்.

திருப்பூர் நீதிமன்றம் கௌசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு ஏதோ மேம்போக்காக விசாரணை நடத்தித் தூக்கு தண்டனை அளித்துவிடவில்லை. சங்கர் படுகொலை செய்யப்படுவதற்கு முதல் நாள் மார்ச் 12 (2016) அன்றும் அதற்கு மறுநாள் மார்ச் 14 அன்றும் கௌசல்யாவின் தாய் கூட்டு வங்கிக் கணக்கிலிருந்து ரூ.80,000/- பணம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ரூ.50,000/ சங்கரைப் படுகொலை செய்த கூலிப்படைக் கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்டிருக்கிறது.

படிக்க:
உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பு !
நாய் வாலை நிமிர்த்த முடியாது ! போலிசைத் திருத்த முடியாது !!

சங்கரைப் படுகொலை செய்த கூலிப் படையினரோடு சின்னச்சாமி ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததைக் கண்ணால் பார்த்த இரண்டு பேர் விசாரணை நீதிமன்றத்தில் அது குறித்து சாட்சியம் அளித்தனர்.

இப்படுகொலையில் சம்பந்தப்பட்ட ஐந்தாவது குற்றவாளி மணிகண்டன் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகள் விடுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகளை சின்னச்சாமி செய்து கொடுத்திருக்கிறார். குறிப்பாக, மணிகண்டனும் சின்னச்சாமியும் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். இது தொடர்பான சாட்சியத்தை குற்றவாளிகள் தங்கியிருந்த விடுதி உரிமையாளர் விசாரணை நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.

உயர்நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சின்னச்சாமி, தன்ராஜ், மணிகண்டன் ஆகியோரை சிறை வாசலுக்கே சென்று வரவேற்கும் ஆதிக்க சாதி சங்கத் தலைவர்கள்.

மேலும், சின்னச்சாமி கூலிப்படை கும்பலுடன் பலமுறை கைபேசி வழியாகப் பேசி வந்திருப்பதும் விசாரணை நீதிமன்றத்தில் சாட்சியமாக அளிக்கப்பட்டிருக்கிறது.
இப்படியான நேரடி மற்றும் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில்தான் கூட்டுச் சதி மற்றும் வன்கொடுமைக் கொலை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சின்னச்சாமிக்குத் தூக்கு தண்டனை விதித்தது விசாரணை நீதிமன்றம்.
இந்த சாட்சியங்கள் அனைத்திலும் ஓட்டைகளைக் கண்டுபிடித்து சின்னச்சாமியை சதிக் குற்றச்சாட்டிலிருந்தும் கொலைக் குற்றத்திலிருந்தும் விடுவித்திருக்கிறது உயர்நீதி மன்றம்.

சின்னச்சாமி சங்கரைக் கொலை செய்ய சதி செய்தார் என்ற குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பல்வேறு சாட்சியங்களுள், பிப்ரவரி 6, 2016 தொடங்கி மார்ச் 6, 2016 வரையிலான இடைப்பட்ட நாட்களில் சின்னச்சாமி கூலிப்படையினரோடு கைபேசியில் உரையாடி வந்திருக்கிறார் என்ற சாட்சியத்தைத் தவிர, வேறு எந்தவொரு சாட்சியத்தையும் அரசு தரப்பால் நிரூபிக்க முடியவில்லை எனக் கூறுகிறது, உயர்நீதி மன்றத் தீர்ப்பு.

“சங்கர் படுகொலை செய்யப்பட்டபோது, அந்த இடத்தில் முதன்மைக் குற்றவாளியான சின்னச்சாமியும் இருந்தார் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை.”

“கூலிப்படையினர் தங்க சின்னச்சாமி தனியார் விடுதியில் அறை எடுத்துக் கொடுத்தார், அவர்களுள் ஒருவருடன் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டை நிரூபிக்க அளிக்கப்பட்ட வாய்வழி மற்றும் ஆவண சாட்சியங்கள் போதுமானதாக இல்லை.”
சின்னச்சாமிதான் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்தார், சின்னச்சாமிதான் அந்தப் பணத்தைக் கூலிப்படையினரிடம் கொடுத்தார் என்பதை அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்காததால், அச்சாட்சியத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக, “ஏ.டி.எம். மெஷினிலிருந்து சின்னச்சாமி பணம் எடுத்ததற்கான சி.சி.டி.வி. காட்சிப் பதிவை அரசு தரப்பு சமர்ப்பிக்கவில்லை என்பதால், அரசு தரப்பின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது.”

“சின்னச்சாமி கூலிப்படையினருடன் சேர்ந்து சதி செய்து கொண்டிருந்ததைப் பார்த்ததாகக் கூறும் இரண்டு சாட்சியங்களும் சந்தேகத்திற்கிடமானவை.”
இவையெல்லாம் சதிக் குற்றச்சாட்டை மறுக்க நீதிமன்றம் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கும் காரணங்கள். குறிப்பாக, கொலை நடந்த இடத்தில் சின்னச்சாமி இல்லை; விடுதியில் கூலிப்படையினர் தங்கியிருந்ததற்கான ரசீது சின்னச்சாமி பெயரில் இல்லை; சின்னச்சாமி கூலிப்படையினருடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்ததாகக் கூறும் சாட்சியங்கள், சின்னச்சாமி கூலிப்படையினருடன் சங்கரைக் கொலைசெய்வது குறித்துத்தான் பேசிக் கொண்டிருந்தார் என்பதை நிரூபிக்கவில்லை என நீதிபதிகள் தீர்ப்பில் தர்க்கம் செய்திருக்கிறார்கள்.

இதன்படி பார்த்தால், சின்னச்சாமியும் அன்னலெட்சுமியும் அரிவாளைத் தூக்கிக்கொண்டு சங்கரைக் கொலைசெய்ய பாய்ந்திருந்தால்தான் நீதிபதிகளின் சட்டப் புத்தி அதனை ஆணவக் கொலை என ஏற்றுக்கொண்டிருக்கும் போலும்!

இரகசியமாகத் திட்டமிடப்படுவதுதான் சதி எனும்போது, சின்னச்சாமி சங்கரைக் கொலை செய்வது பற்றித்தான் கூலிப்படையினரோடு பேசினாரா எனக் கேள்வி எழுப்புகிறார்கள் நீதிபதிகள். பிறகென்ன, சின்னச்சாமியும் கூலிப்படையினரும் சாதி ஒழிப்புப் பற்றியா பேசியிருப்பார்கள்?

கூலிப்படையிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.50,000/ சின்னச்சாமி தந்ததுதான் எனக் கூலிப்படையினரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிறகும், அதனைச் சாட்சியமாக ஏற்றுக் கொள்ள மறுத்திருக்கிறார்கள், நீதிபதிகள். இதற்கெல்லாம் கையெழுத்திடப்பட்ட ரசீதை அல்லது புகைப்பட ஆதாரத்தையா காட்ட முடியும்?
கூலிப்படை தங்க அறை எடுத்துக் கொடுத்தற்கான ரசீது சின்னச்சாமி பெயரில் இல்லையாம்! ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேட்டரி வாங்கித் தந்தார் என்ற குற்றச்சாட்டில் பேரறிவாளனுக்குத் தண்டனை கொடுத்த நீதிமன்றங்கள் ஒவ்வொன்றும், அதற்கான ரசீதை, அதுவும் பேரறிவாளன் பெயரில் உள்ள ரசீதைப் பார்த்த பிறகுதான் தண்டனை அளித்தனவா?

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில், அக்குற்றத்தோடு அப்சல் குருவைத் தொடர்புபடுத்த போதுமான சாட்சியங்கள் இல்லை என்ற நிலையில், சட்டத்தைப் புறந்தள்ளி, இந்து சமூகத்தின் மனசாட்சியைத் திருப்திபடுத்துவதற்காகவே தூக்குத் தண்டனையை உறுதி செய்வதாகப் பச்சையாகக் கூறியது, உச்சநீதி மன்றம்.
சங்கர் படுகொலை வழக்கிலும் ஆதிக்க சாதிவெறியர் தண்டிக்கப்பட வேண்டும் எனத் தாழ்த்தப்பட்ட மக்களின், ஜனநாயக சக்திகளின் மனசாட்சி விரும்பியது. ஆனால், உயர்நீதி மன்றமோ ஆதிக்க சாதிவெறியர்களை விடுவிக்க சட்டத்தின் சந்துபொந்துகளைத் தேடி அலைந்திருக்கிறது.

இன்னொருபுறத்திலோ, குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்திற்குப் பொருளாதார உதவி செய்வது குறித்துப் பேசும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 8 மற்றும் 8 ஆகிய இரண்டையும் ஒதுக்கிவைத்துவிட்டு இத்தீர்ப்பை அளித்துள்ளனர், நீதிபதிகள். மேலும், 300 பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்ட இத்தீர்ப்பில் ஒரு இடத்தில்கூட இக்குற்றத்தைச் சாதி அடிப்படையில் அமைந்த ஆணவக் கொலை என நீதிபதிகள் பதிவு செய்யவில்லை.

இவை அனைத்தும் இத்தீர்ப்பின் நடுநிலை குறித்து சந்தேகத்தை எழுப்புகின்றன. சனாதனக் கருத்துக்களையும் ஆதிக்க சாதிவெறியர்களையும் ஆதரித்துப் பாதுகாக்கக்கூடிய இந்து மதவெறிக் கும்பல் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்திருக்கும் இவ்வேளையில் அளிக்கப்பட்டிருக்கும் இத்தீர்ப்பு, சாதிரீதியாகப் பிளவுண்டு கிடக்கும் இச்சமூகத்திற்குச் சொல்லும் செய்தி என்ன? சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி ஒரு சின்னச்சாமியை விடுதலை செய்திருக்கும் இத்தீர்ப்பு, அதன் வழியாக நூறு சின்னச்சாமிகள் உருவாகிட வழிவகுத்துக் கொடுத்துவிட்டது.

மேலும், ஆணவக் கொலைகள், தீண்டாமைக் குற்றங்களில் ஈடுபடும் ஆதிக்க சாதிவெறி பிடித்த குற்றவாளிகளைத் தண்டிக்க சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்பதற்கும் இந்தத் தீர்ப்பு இன்னுமொரு உதாரணமாக அமைந்திருக்கிறது.

இந்நிலையில் இந்தச் சட்டவரம்புகளுக்கு அப்பால், சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பிற்காகப் போராடக்கூடிய ஓர் அமைப்பை மக்கள் மத்தியிலிருந்து உருவாக்கி வளர்க்க வேண்டிய தேவையை இத்தீர்ப்பு சாதி, தீண்டாமையை எதிர்த்துப் போராடிவருபவர்களுக்கு மீண்டும் உணர்த்திச் சென்றிருக்கிறது.

– வேலன்
புதிய ஜனநாயகம், ஜூலை 2020.

கொரோனா ஊரடங்கால் அவதிப்படும் மக்களுக்கு வேலை கொடு ! சார் ஆட்சியரிடம் மனு !!

கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களாக பலரும் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இப்பிரச்சினையை தீர்க்க அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 29.07.2020 அன்று விருத்தாச்சலத்தில் உள்ள சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதில் கிராமப்புறங்களில் வழங்கப்பட்டுவரும் 100 -நாள் வேலையை 300-நாட்களுக்கு வழங்க வேண்டும் மற்றும் அதற்கான கூலியை நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் என உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்.
தொடர்புக்கு : 97912 86994

’இந்து ராஷ்டிரத்திற்கான’ கல்விக் கொள்கை – தமிழகம் கிளர்ந்தெழட்டும் !

3

தேதி : 29.7.2020

பு.மா.இ.மு கண்டன அறிக்கை!

பெரும்பான்மை மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்க வருகிறது ’இந்து ராஷ்டிரத்திற்கான’ கல்விக்கொள்கை – தமிழகம் கிளர்ந்தெழட்டும்!

நாடு முழுவதும் கடுமையாக எதிர்க்கப்பட்ட புதிய கல்விக்கொள்கைக்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கார்ப்பரேட்டுகளின் அடிமை மோடி தலைமையிலான பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பல் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய 2014 இல் இருந்தே கல்விக் கொள்கையை மாற்ற தீவிரமாக முயற்சித்து வந்தார்கள்.

நாடு முழுவதும் கல்வியாளர்களாலும், மாணவர்கள் அமைப்புகளாலும் கடுமையாக எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வந்ததால் அவ்வப்போது பின்வாங்கி வந்தவர்கள் இப்போது கொரோனா – ஊரடங்கு, மற்றும் பள்ளி, கல்லூரி விடுமுறைகளால் மாணவர்கள் ஒருங்கிணைய முடியாத சூழலைப் பயன்படுத்திக் கொண்டு புதிய கல்விக்கொள்கையை நாட்டின் மீது திணிக்கிறார்கள்.

இது கல்வியை சர்வதேச சந்தையில் கடைவிரிக்கும் கார்ப்பரேட் நலனும், ‘சூத்திரனுக்கு கல்வி எதற்கு’ எனும் பார்ப்பனிய மேலாண்மையை நிறுவும் காவிகளின் நலனும் ஒன்றிணைந்த வீரிய ஒட்டுரக புதிய மனுநீதி! பெரும்பான்மை மக்களுக்கு கல்வி உரிமையை மறுக்கும் இந்த புதிய கல்விக் கொள்கையை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இதுவரை இருந்து வந்த பள்ளிக்கல்வி அமைப்பு முறையை 5+3+3+4 என மாற்றியமைக்கப்படுகிறது. 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு. பள்ளிக்கல்விக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வகுக்கப்படுமாம். அனைத்துவிதமான உயர்கல்விக்கும், அதாவது கலை, அறிவியல் உள்ளிட்ட கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேர அகில இந்திய அளவிலான பொது நுழைவுத்தேர்வு, கல்லூரிகளே இனி பட்டம் வழங்கும் என உயர்கல்வி நிறுவனங்களை தன்னாட்சி பெற்றதாக மாற்றுவது, எம்.ஃபில் படிப்பை ஒழித்துக் கட்டுவது, கல்வித் துறையில் மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து அனைத்தையும் மையப்படுத்துவது ஆகியவற்றை இப்புதியக் கல்விக்கொள்கை செய்யப் போகிறது.

ஏற்கனவே கல்வித்துறையில் தனியார்மயத்தை புகுத்தியதன் விளைவாக மாணவர்கள் கல்வி பெறுவதில் ஏற்றத் தாழ்வு அதிகரித்து வருகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் எந்த வரைமுறையும் இன்றி பகற்கொள்ளையடிக்கிறார்கள், கல்விக் கட்டணம் கட்டமுடியாத பெற்றோர்களும், மாணவர்களும் அநியாயமாக தூக்கியெறியப்படுகிறார்கள். இதை எதையும் தடுக்க முடியாதபடி அரசின் சட்டங்களும், விதிமுறைகளும், அதிகாரிகளும், நீதிமன்றங்களும் தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு துணையாக நிற்பது நாடறிந்த உண்மை. இந்நிலையில் கல்வித்துறையை முழுக்க தனியார்மயப் படுத்துவதென்றால் இனி ஏழைகளுக்கு கல்வி இல்லை என்பது நிச்சயம்.

படிக்க:
நாய் வாலை நிமிர்த்த முடியாது ! போலிசைத் திருத்த முடியாது !!
நான் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பிலிருந்து விலகியது ஏன் ? ஜெய் கோலியாவின் அனுபவம்

தரத்தின் பெயரில் பணக்காரர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் மட்டும் உயர்க் கல்வி, ஏழைகளுக்கு 10-ம் வகுப்புக்கு மேல் தொழிற்பயிற்சி. “சூத்திரர்களுக்கு கல்வி இல்லை. அவனவன் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும்” என்ற ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் இந்த புதிய கல்விக் கொள்கை மூலம் மீண்டும் உயிர்ப்பெறப்போகிறது. மும்மொழி திட்டத்தின் பெயரில் இந்தி – சமஸ்கிருதம் திணிக்கப்படபோகிறது.

பாடப்புத்தகங்களில் பல்வேறு தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் அனைத்தும் ஒழிக்கப்படும். இந்திய வரலாற்றை இந்துத்துவ வரலாறாக திரிப்பது, சமஸ்கிருத பண்பாட்டை புகுத்துவது, தொன்மை – பாரம்பரியம் – பண்பாடு எனும் பெயரில் அறிவியலுக்கு புறம்பான வேதம் – புராணம் – இதிகாசம் போன்ற மூட நம்பிக்கைகளை, ஆபாசக் குப்பைகளை பாடத்திட்டமாக்குவதுதான் இவர்களின் நோக்கம். சமுதாய ஒப்படைப்பு என்ற பெயரில் பள்ளிக்கூடங்களை ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக்குவார்கள். உயர்க் கல்வியை மறுகட்டமைப்பு செய்வது என்ற பெயரில் யூ.ஜி.சி, எம்.சி.ஐ போன்ற உயர்க் கல்வி நிறுவனங்களை ஒழித்துக்கட்டிவிட்டு, உயர் கல்வி ஆணையம், உயர் கல்வி கட்டுப்பாட்டு ஆணையம் உருவாக்கி கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்துவிடுவார்கள்.

மொத்தத்தில், இந்திய கல்வியை சர்வதேசியமயமாக்குவது. கெயின், மூக்ஸ் போன்ற ஆன்லைன் படிப்புகள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை மாணவர்களுக்கு வரவைப்பது. அரசு கல்லூரி, பல்கலைக்கழகங்களை தனியார்மயமாக்கி சொந்த நாட்டு மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையை பறிப்பது. இதுதான் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். மாணவர்கள், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் களத்தில் இறங்குவோம். ஒட்டுமொத்த சமூகத்திற்கும் மாணவர் நலனுக்கும் எதிராக உள்ள மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம்!

தோழமையுடன்
த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.